Jump to content

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் - ஜெயமோகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் - ஜெயமோகன்

June 5, 2021

Stalin-1-e1577959474544-300x191.jpgபுதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள தெரியும்.

இதில் விவாதிப்பவர்கள் ’திமுக அரசு எழுத்தாளர்களை கொண்டாடவில்லை’ என்ற ஒற்றைவரியை வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாகத் தடவித்தடவிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவை சார்ந்து மிகத்தெளிவாக பேசப்பட்டவற்றை படிப்பதில்லை. மீண்டும் அதே ஒற்றைவரி உழப்பல்கள். சவடால்கள்.

devade.jpg தேவதேவன்

திமுக அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடவில்லை என்று எவரும் சொல்லவில்லை. கொண்டாடியிருக்கிறார்கள். எந்த அரசும் அவர்களுக்கு உகந்தவர்களைக் கொண்டாடத்தான் செய்யும். அவர்கள் இருவகை. அந்த அரசை அமைத்துள்ள கட்சிகளின் கருத்தியல் அடிப்படைகளை உருவாக்கியவர்கள், அந்த அரசுடன் ஒத்துப்போகிறவர்கள்.

திமுக அரசு மு.கருணாநிதி அவர்கள் பதவியேற்ற நாள்முதல் அவ்விரு சாராரையும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறது. பாரதிதாசன் பெயரில் பல்கலைக் கழகம் உள்ளது.தேவநேயப் பாவாணர் பெயரில்தான் மாவட்ட மைய நூலகம் உள்ளது. மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் பெயரில்தான் பெண்களுக்கான நலத்திட்டம் உள்ளது. அரசுடன் ஒத்துப்போனமையால்தான் சுரதாவுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்படி விருதுகளும் பரிசுகளும் பெற்ற பலர் உண்டு.

devi.jpg தேவிபாரதி

குற்றச்சாட்டுகளாகக் கூறப்படுபவை இரண்டு. ஒன்று, திராவிட இயக்க முன்னோடிகள் எனும்போதே அவர்களில் எவர் உகந்தோர் எவர் அல்லர் என்ற தெரிவு திமுக அரசிடம் இருந்தது. அந்த தெரிவு மு.கருணாநிதியின் தனிப்பட்ட கசப்புகள் விருப்புகள் சார்ந்ததாகவே இருந்தது. ஆகவே கா.அப்பாத்துரை, எஸ்.எஸ்.தென்னரசு போன்ற பலர் புறக்கணிக்கப்பட்டார்கள். அவ்வாறு ஒரு புறந்தள்ளப்பட்டோர் பட்டியல் திராவிட இயக்க எழுத்தாளர்களுக்குள்ளேயே உண்டு.

நாம் பேசிக்கொண்டிருப்பது நவீன இலக்கியம் பற்றி மட்டுமே. அரசியலெழுத்து பற்றி அல்ல. அவற்றின் இடம் தெரியுமென்றலும் இலக்கியமுன்னோடிகள் நவீன இலக்கியத்தை மட்டுமே முன்வைத்தனர். நவீன இலக்கியத்திற்கு இங்கே ஆதரவும் புரலவலரும் வாசகரும் இல்லை என்பதனால். என் தலைமுறையில் ஓரளவு வாசகர்கள் வந்துவிட்டனர். ஆகவே இன்னும் கொஞ்சம் விரிவாக அரசியலெழுத்தையும் உள்ளே கொண்டுவந்து இலக்கியத்தின் இலக்கணங்களை அமைத்துக்கொண்டேன். எஸ்.எஸ்.தென்னரசு அல்லது விந்தன் பற்றிப் பேசிய இலக்கியவிமர்சகன் நான்தான்.

Vikram.bmp விக்ரமாதித்தன்

இரண்டாவது குற்றச்சாட்டே முக்கியமானது. அரசு என்பது அரசை அமைக்கும் கட்சிக்கு மட்டும் உரியது அல்ல. தான் ஆட்சி செய்யும் நிலத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டிற்கும் பொறுப்பேற்பதுதான் அரசின் கடமை. அப்பண்பாட்டைப் பேணவும் வளர்க்கவும் முயலவேண்டியது அதன் பணி. அரசின் நடவடிக்கைகள் அந்நோக்கிலேயே அமையவேண்டும். ஏனேன்றால் அக்கட்சிக்கு வாக்களித்தவர்களின் வரிப்பணத்தை மட்டும் அது செலவுசெய்யவில்லை. அது ஒட்டுமொத்த மக்களின் வரிப்பணத்தால் இயங்குகிறது.

ஜனநாயகத்தின் அடிப்படை ஒன்று உண்டு. ஆட்சியைப் பிடிப்பது வரைத்தான் கட்சி அரசியலின் பார்வை இருக்கவேண்டும். அதற்குப் பிறகு இருக்கவேண்டியது அனைவருக்குமான ஆட்சியாளரின் பார்வை. கட்சிச்சார்புப் பார்வை இருந்தால் அது பண்பாட்டுக்குச் செயல்பாடுகளுக்குப் பேரழிவாக முடியும். அந்த ஒட்டுமொத்தப் பண்பாட்டையே கட்சிக்கருத்தியலாகச் சுருக்கிவிடுவதில் முடியும். திமுக ஆட்சியில் நடந்தது அதுவே.

sra.jpg எஸ்.ராமகிருஷ்ணன்

ஆகவேதான் புதுமைப்பித்தனுக்குக் கூட சென்னையில் ஒரு பண்பாட்டு நினைவகம் இல்லை. நவீன இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டது. இங்குள்ள நவீன இலக்கியம் தமிழ்மொழி அடைந்த வெற்றிகளில் ஒன்று. தமிழ்ப்பண்பாடு என்றும் பெருமை கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் ஐம்பதாண்டுகளாக அது அரசாலும், அரசின் கல்விநிறுவனங்களாலும், முற்றாகவே கைவிடப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகளுக்கான பதிலாக திராவிட இயக்க எழுத்தை நவீன இலக்கியம் ஏற்றுக்கொண்டதா என்ன என்று கேட்கிறார்கள். அபத்தமான கேள்வி அது. இது கொடுக்கல்- வாங்கல் அல்ல. நவீன இலக்கியத்திற்கு அதற்கான அழகியல் கொள்கைகள், அதற்கான வாழ்க்கைப்பார்வைகள் உண்டு. அவற்றையே அது முன்வைக்கும். அதனடிப்படையிலேயே அது தன்னை வரையறை செய்துகொள்ளும். அதனடிப்படையிலேயே அது பிற இலக்கியங்களை மதிப்பிடும். அந்த அளவுகோல்களை இழந்தால் அதன்பின் அது நவீன இலக்கியமே அல்ல. அப்படி அது தன்னை அழித்துக்கொண்டு அடைவதற்கொன்றும் இல்லை.

kala.jpg கலாப்ரியா

திராவிட இயக்க இலக்கியப் போக்கு நவீன இலக்கியத்தை ஏற்காமல் போகலாம், அது இயல்பானதே. மு.கருணாநிதிக்கு அவை ஒவ்வாமையை அளிக்கலாம். திராவிட இயக்க அமைப்புகள் அளிக்கும் விருதுகள் நவீன எழுத்தாளர்களுக்கு வழங்கப்படவேண்டுமென எவரும் எதிர்பார்ப்பதில்லை. இங்கே பேசப்படுவது அரசைப் பற்றி, கல்வித்துறை பற்றி. அனைவரின் வரிப்பணத்தால் அனைவருக்குமாக அமைந்துள்ள அரசு செய்யவேண்டிய பண்பாட்டுப் பணிகள் பற்றி.

ஓர் உதாரணம் சொல்கிறேன். கேரளத்தில் நேர்ப் பாதி ஆட்சிக்காலம் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியே ஆட்சியில் இருந்துள்ளது. மிகத்தெளிவான அரசியல்கொள்கையும், திட்டவட்டமான இலக்கியக்கொள்கையும் கொண்ட கட்சி அது. அதில் சமரசமே இருப்பதில்லை. ஆனால் அது அரசில் இருந்த காலகட்டத்தில் மார்க்ஸிய எழுத்தாளர்களை மட்டும் முன்னிறுத்தவில்லை. அதற்காக அரசுநிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ளவுமில்லை.

sure3-300x199.jpg சுரெஷ்குமர இந்திரஜித்

மாறாக கேரள இலக்கியச் சூழலில் உள்ள மிகச்சிறந்த ஆளுமைகளை நடுவர்களாக, ஆலோசகர்களாகக் கொண்ட குழுக்களே பண்பாட்டுச் செயல்பாடுகளை நடத்தின. கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் பழுத்த காங்கிரஸ்காரர்கள், தீவிர கம்யூனிஸ்டு எதிரிகள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நினைவகங்கள் அமைந்துள்ளன. அரசுமரியாதைகள் அமைந்துள்ளன. முதல்வரே நேரில் சென்று அவர்களை பாராட்டிய, நோய்நலம் உசாவிய தருணங்கள் உண்டு.

ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சியின் அமைப்புகள் அளிக்கும் விருதுகள் அவர்களுக்குரிய எழுத்தாளர்களுக்கே அளிப்பட்டன.பொதுவெளியில் அவர்களை மட்டுமே மிகத்தீவிரமாக முன்வைத்தனர் கம்யூனிஸ்டுகள். அவர்களுக்காக மாநாடுகளையே நடத்தினார்கள். கம்யூனிசத்தை ஏற்காத எழுத்தாளர்களை கட்சியின் விமர்சகர்கள் கடுமையாக மறுத்து  கட்சி இதழ்களில் எழுதினர். இதுதான் வேறுபாடு.

imaiyam.jpg இமையம்

டெல்லியில் ஆண்ட சென்ற காங்கிரஸ் அரசுகளையே உதாரணமாகக் கொள்ளலாம். காங்கிரஸ் அரசு இருந்த காலகட்டத்தில் தேசிய அளவிலேயே சாகித்ய அக்காதமி விருதுகளைப் பெற்றவர்கள் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள், சோஷலிஸ்டுகள். காங்கிரஸ் அதில் தலையிடவில்லை.

இன்றும் சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் வரையிலான பாரதிய ஜனதா எதிர்ப்பாளர்கள் சாகித்ய அக்காதமி விருது பெறுகிறார்கள். அரசு அதில் தலையிடுவதில்லை. திராவிட இயக்க எழுத்தாளரான இமையம் பெற்ற ஒரே விருது பாரதிய ஜனதா ஆளும் மத்திய அரசு அளித்தது.  இன்றைய ஆட்சியாளர்களுக்கு உகந்தவர்களுக்கோ ஆளும் கட்சியின் கொள்கையைச் சார்ந்தவர்களுக்கோ அவ்விருதுகள் வழங்கப்படுவதில்லை — இப்போதைய சூழலைப் பார்த்தால் எவ்வளவுநாள் அது நீடிக்குமென தெரியவில்லை என்பது வேறுவிஷயம். ஏனென்றால் சுதந்திரமாகச் செயல்பட்ட பல பண்பாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே சீரழிக்கப்பட்டுவிட்டன.

charu-nivedita-600.jpg சாரு

இதுவே முறைமை. இந்த வகையான ஒரு நடுநிலைமை, அரசையும் கட்சியையும் ஆட்சியாளர்களையும் பிரித்துப்பார்க்கும் பார்வை, கலாச்சாரச் செயல்பாடுகளையும் அரசியல்செயல்பாடுகளையும் வேறுவேறாகப் பார்க்கும் நிதானம் இதுவரை திமுகவில் இருந்ததில்லை. திரும்பத் திரும்பச் சுட்டப்படுவது அதைத்தான். திமுக எழுத்தாளர்களை ஏற்றதில்லை என்று சொன்னதுமே திமுக கொண்டாடிய கட்சிசார் எழுத்தாளர்கள், குற்றேவல் எழுத்தாளர்களின் பெயர்பட்டியலுடன் வருபவர்களிடம் இதைச் சொல்லி புரியவைக்க முடியாது

இங்கே தமிழ் என்றென்றும் பெருமைகொள்ளவேண்டிய மாபெரும் படைப்பாளிகள் எந்த ஏற்புமின்றி, எந்த வசதியுமின்றி ஏங்கி மறைந்தனர். அவர்களை கௌரவிக்க, அவர்களை விருதளிப்பவர்களுக்குச் சுட்டிக்காட்ட என்னைப் போன்ற எழுத்தாளர்களே இறங்கி நண்பர்களிடம் பணம் திரட்டியும், கைப்பணம் போட்டும் விருதுகளை அமைக்கவேண்டியிருந்தது. பலநூறுகோடி ரூபாயில் அரசின் ‘இலக்கிய மாநாடு’கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில ஆயிரம் ரூபாய் செலவில் வெளியிடப்பட்ட சிற்றிதழ்களை நம்பி நவீன இலக்கியம் வாழ்ந்தது.

yuvan-199x300.jpg யுவன்

11.jpg

iramu.jpg இரா முருகன் paraa.jpg பா.ராகவன்

அரசுக்கும் அரசமைப்புகளுக்கும் அணுக்கமாக ஆகும் கலையறிந்தோர் அறிஞர் என்றும் ஆய்வாளர் என்றும் முன்னிறுத்தப்பட்டனர். வெற்று மேடைப்பேச்சாளர்கள் மேடைமேடையாக மு.கருணாநிதியை வெட்கமின்றி புகழ்ந்து வெகுமதிகளை பெற்றுக்கொண்டனர். மெய்யான அறிஞர்கள் மூர்க்கமாக புறந்தள்ளப்பட்டனர். அவர்களில் திராவிட இயக்கச் சார்புள்ள பேரறிஞர்களும் உண்டு.

கோவையில் திமுக நடத்திய சென்ற உலகத்தமிழ் மாநாட்டை எண்ணிப்பாருங்கள். அ.கா.பெருமாளுக்கு அங்கே இடமில்லை என்றால் தமிழகத்தில் வேறெந்த ஆய்வாளர் மேடையேறத் தகுதி கொண்டவர்? கோவையிலேயே  இருந்த நாஞ்சில்நாடனுக்கு கோவையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பில்லை என்றால் அது என்ன இலக்கியமாநாடு?

சுவே சு.வேணுகோபால்

சென்ற திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலர் நினைவில் இருக்காது. எழுத்தாளர்களுக்கு அரசுக் குடியிருப்புகளில் வீடு, நிரந்தரப் புத்தகக் கண்காட்சி அமைத்து அங்கே அனைவருக்கும் நிரந்தரமான கடைகள், சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு, திரைத்துறையின் ஊழியர்களுக்கு வீடு… எவையும் நிறைவேறவில்லை. சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு அளிப்பதற்கான ‘கூப்பன்’களை அளிக்க ஒரு திமுக செயல்பாட்டாளர் பணம் வசூல் செய்து எடுத்துக்கொண்டார் என்று பேசப்பட்டது.

இவையெல்லாமே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மேடையில் அறிவித்தவை. ஆனால் அரசாணைகளாக ஆகவில்லை. அரசாணைக்காக எதிர்பார்த்து, பின்னர் நேரில் சென்று கேட்ட பதிப்பாளர்களிடம்  ”அவர்தான் சொல்கிறார் என்றால் உங்களுக்கு தெரியவேண்டாமா? அரசிடம் வீடுகட்ட ஏது நிலம்? பெருநகர்நிலமும் வனநிலமும் தவிர சென்னையில் நிலம் எங்கே இருக்கிறது? அரசூழியர் குடியிருப்புக்கே நிலம்தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று ஸ்டாலின் நிலைமையை விளக்கியதாகச் சொல்வார்கள்.

deva_2401337f-300x224.jpg தேவதச்சன்

இப்போது திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களின் செயல்முறை எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. அறிவிப்புக்கு அப்பால் சென்று நடைமுறையாகும் என்றாலும்கூட சென்றகால மனநிலைகளே நீடிக்குமென்று நம்பவே சூழல் உள்ளது. ஏனென்றால் கட்சியோ அமைப்போ பெரிதாக மாறவில்லை. ஊடகங்களில் கூச்சலிடும் உடன்பிறப்புகளும் திடீர் உடன்பிறப்புகளும் தரத்தில் பழையவர்களைவிட இன்னும் பின்னால் சென்றுவிட்டிருக்கிறார்கள் – சென்ற கால உடன்பிறப்புகளுக்கு திராவிட இயக்க எழுத்தாவது கொஞ்சம் அறிமுகம் இருந்தது. நான்கு முன்னோடிகளைச் சொல் என்றால் சொல்வார்கள். இவர்கள் தற்குறிகள்.

ஆகவே விருதுகள் இணையத்தில் கூச்சலிடும் திராவிட இயக்கத்து மொண்ணைகளுக்குச் சென்றுசேரவே வாய்ப்பு மிகுதி. பென் டு பப்ளிஷ் போன்ற விருதுகளையே அமைப்பாகத் திரண்டு வென்ற அரைவேக்காடுகள் இவற்றை விட்டுவைக்கப் போவதில்லை. அவர்களில் பலர் கவின்கலை விருதுகளுக்காக கோழிமுட்டைகள், தென்னைமரங்கள் என படங்கள் வரைய ஆரம்பித்திருப்பதாகவும் செய்தி.

rasu.bmp புலவர் செ இராசு

ஒரு ஜனநாயகத்தில் நாம் எதிர்பார்க்கவேண்டிய செயல்பாடு என்பது கேரளத்தில் நிகழ்வதுபோல தகுதியானவர்களைக் கொண்டு அமைக்கப்படும் சுதந்திரமான அமைப்பு. அதன் வெளிப்படையான செயல்பாடு. அந்த தகுதி கட்சிச்சார்பு அல்ல, அறிவியக்கத் தகுதி. திட்டவட்டமான வெளிப்படையான சாதனை.எந்த அரசு வந்தாலும் தமிழகத்தில் ஒரு சிறு ‘அறிஞர்’குழு உள்ளே சென்று அமர்ந்துவிடும். என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தால் பொருட்படுத்தத் தக்க ஒரு புத்தகம்கூட இருக்காது. சரியான குழுவே சரியான ஆளுமைகளை தெரிவுசெய்யமுடியும். கௌரவிக்கப் படுபவர்களும் நிறுவப்பட்ட இலக்கியத் தகுதி கொண்டிருத்தல் அவசியம்.

ஆனால் இன்று தமிழகத்தில் அதற்கான வாய்ப்புண்டு என நான் நினைக்கவில்லை. இந்த இலக்கியப்பரிசுகள் அறிவிக்கப்பட்டிருப்பதே இந்த அரசு பதவிக்கு வந்ததில் அதை ஆவேசமாக ஆதரித்த சில எழுத்தாளர்களுக்கு ஒரு பங்குண்டு என்பதனாலும், அவர்களுக்கு பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதனாலும்தான் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே அவர்கள் கணக்குபேச ஆரம்பித்துவிட்டனர்.  கட்சியும் ஆட்சியும் வேறுவேறு என்றெல்லாம் இங்கே இவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

pavannan.jpg பாவண்ணன்

ஆகவே இங்கே அதிகபட்சம் நான் எதிர்பார்ப்பது, திமுக மீது சாய்வு கொண்டவர்களிலேயே கொஞ்சம் இலக்கிய முக்கியத்துவம் உடையவர்கள் கௌரவிக்கப்படுவதுதான். உதாரணமாக எஸ்.ராமகிருஷ்ணன், விக்ரமாதித்யன், இமையம், கலாப்ரியா, சுரேஷ்குமார இந்திரஜித், பாவண்ணன், தேவிபாரதி,சுப்ரபாரதி மணியன், சு.வேணுகோபால், எஸ்.செந்தில்குமார், தமிழ்மகன், அ.வெண்ணிலா போன்றவர்கள். கட்சிச் சார்பு இல்லையென்றாலும் இவ்வரசு மேல் நல்லெண்ணம் கொண்ட சாரு நிவேதிதா போன்றவர்களையும் பரிசீலிக்கலாம்.

இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பூமணி போன்று ஏற்கனவே உரிய அங்கீகாரம் பெற்ற முன்னோடிகளை விட்டுவிடலாம். அரசின் நிதியுதவி உடனடியாகத் தேவையாகும் இடத்தில் இருக்கும் ரமேஷ் பிரேதன், யூமா வாசுகி, கீரனூர் ஜாகீர்ராஜா, கண்மணி குணசேகரன், ஃப்ரான்ஸிஸ் கிருபாபோன்றவர்களுக்கு அது கிடைக்குமென்றால் அதன்பொருட்டு இந்த அரசை மனமுவந்து பாராட்டுவேன். தொடர்புகள் ஏதும் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களும் திமுக- இடதுசாரி ஆதரவு மனநிலை கொண்டவர்களே.

raj2.jpg ராஜ் கௌதமன்

மெய்யாகவே பண்பாட்டியக்கம் மேல் ஆர்வம் கொண்ட ஒரு நவீன அரசு உவந்து கௌரவிக்கவேண்டும் என்றால் அதன் முதல் தெரிவு தேவதேவன் ஆகவே இருக்கும். அவரோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மனிதமுகங்களை நினைவுக்கூர்வதுமில்லை. ஆகவே தொடர்புகளும் இல்லை. ஒரு பொதுச்சூழலில் கருத்துக்களை முன்வைப்பவராகவும் அவர் இல்லை. ஆனால் அவரைத் தேடிச்செல்லும்போதே எந்த விருதும் பெருமை கொள்கிறது. தேவதச்சன் ஒரு முன்னோடியின் இடம் கொண்டவர்.

திமுக எப்படியும் பிராமணர்களை பொருட்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே காழ்ப்புக் கூச்சல்கள் எழத் தொடங்கிவிட்டன. ஆகவே யுவன் சந்திரசேகர், பா.வெங்கடேசன்,இரா.முருகன், பா.ராகவன்ஆகியோரை முன்வைத்துப் பயனில்லை. இருந்தாலும் இப்படி ஒரு பட்டியலில் அவர்களைச் சொல்லி வைக்கவேண்டும்—வாசகர்களுக்காக.

162.jpg அ.கா பெருமாள்

இந்த அரசு பண்பாட்டுச் செயல்பாடுகளுக்காக, அறிவுச் செயல்பாடுகளுக்காக ஏதாவது மெய்யாகவே செய்யவேண்டும் என்றால் செய்யவேண்டிய சில உள்ளன. நோபல்பரிசு பெற்ற தமிழகத்து அறிவியலாளர்களுக்கான நினைவகங்களை இங்கே உருவாக்கவேண்டும். சர்.சி.வி.ராமன், சுப்ரமணியம் சந்திரசேகர். கணிதமேதை ராமானுஜனுக்கு ஒரு நினைவகம் உருவாகவேண்டும். அவை அவர்களின் துறை சார்ந்தவையாக இருக்கவேண்டும். அவர்களின் சாதி காரணமாக அவர்கள் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டனர். அந்த கீழ்மையிலிருந்து திமுக வெளிவரவேண்டும்.

கட்சிச் சார்புக்கு அப்பாற்பட்ட நோக்குடன்  கலைக்களஞ்சியம் உருவாக்கிய பெ.தூரன், பேரகராதி உருவாக்கிய எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோர் இனிமேலேனும் நினைவகங்கள் வழியாக அங்கீகரிக்கப்படவேண்டும். தமிழிசை இயக்கத்தின் முன்னோடியாகிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இங்கே இன்னும்கூட அங்கீகரிக்கப்படவில்லை. அவருடைய நினைவு நிலைநிறுத்தப்படவேண்டும்.

kudava.jpg குடவாயில் பாலசுப்ரமணியம்

எப்போதுமே நம் ஆசைகள் இவை. இவற்றை நமக்குநாமே சொல்லிக்கொண்டே இருக்கிறோம். புதுமைப்பித்தனுக்கு சென்னையில் ஒரு சிலையை நானே நிதி திரட்டி வைக்கவேண்டும் என்னும் கனவு எனக்கு பத்தாண்டுகளாக உள்ளது. சொந்தமாக அமையும் சிறு இடத்தில். கோவையில் வைக்கலாமென்று சொல்லும் பல நண்பர்கள், புரவலர் இன்று உள்ளனர். அது ஒரு படைப்பூக்கமற்ற நிர்வாகச் செயல்பாடு என்பதனால்தான் தொடங்குவதற்குத் தயங்குகிறேன். அவ்வாறு அமையும் என்றால் அதுவே புதுமைப்பித்தனுக்குக் கௌரவம்.

எந்த அரசு இருந்தாலும் அவ்வரசு நோக்கி இவற்றையெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இந்த தளத்தில் ஒவ்வொரு விருதின்போதும் இதையெல்லாம் எழுதுகிறேன். ஒவ்வொரு விவாதத்திலும் குறிப்பிடுகிறேன். நம்பிக்கைதான், எதிர்பார்ப்புதான். ஒரு புதிய அரசு அமையும்போது அதைக் கோரலாம். சென்ற ஐந்தாண்டுகளில்தான், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்த பின்னர்தான், ஒரு முதல்வர் ஓர் இலக்கியமுன்னோடி மறைவுக்கு நான்குவரி அஞ்சலியை முன்வைக்கும் வழக்கமே ஆரம்பித்தது. அது இந்த ஆட்சியில் இன்னும் விரிவாக, இன்னும் பயனுள்ளதாகவேண்டும். இவ்வறிவிப்புகளை அவ்வண்ணம் நம்ப விரும்புகிறேன்.

so-dharman.jpg சோ.தர்மன்

ஆனால் அந்நம்பிக்கைகள் நிறைவேறும் இன்றில்லை என்றே தோன்றுகிறது. இணையவெளியில் திமுகச் சில்லறைகள் இங்குள்ள எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மேல் பெய்துகொண்டிருக்கும் காழ்ப்புக் கூச்சல்கள் செவிகூச செய்கின்றன. இது தாங்கள் வேட்டையாடிப்பெற்ற இரை, தாங்களே பிய்த்துக்கிழித்து தின்போம் என்ற வெறியை மட்டுமே அதில் காணமுடிகிறது. அவர்கள் வெறும் தொண்டர்கள், அவர்களின் மனநிலை எப்போதும் அதுதான்.

ஆனால் அவர்களின் வெறிக்கூச்சலை சாதாரணமாகக் காணமுடியாது. அதற்கு மிகப்பெரிய செல்வாக்குண்டு. மெல்லமெல்ல அவர்களில் சிலரையே அறிஞர் என்றும் படைப்பாளர் என்றும் அரசு அங்கீகரிக்கவே இந்த பரிசுகள் வழிவகுக்கும். அந்த இரையை அடையும்பொருட்டு பிற அனைவரையுமே அவர்கள் கூட்டாக இழிவுசெய்வார்கள். அனைவரையும் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவார்கள். விளைவாக தமிழுக்குப் பெரும்பங்களிப்பாற்றியவர்கள் அவமதிக்கப்பட்டு இச்சில்லறைகள் அரங்கிலேறும் சூழல் அமைந்தால் அதைவிட கீழ்மை வேறில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இங்கேதான்.

sta-245x300.jpg ஸ்டாலின் ராஜாங்கம்

இது முன்பும் நிகழ்ந்ததுதான். அவ்வாறு அரசால் வெற்றுக்கூச்சலிடும் கட்சிக்காரர்கள் இலக்கியவாதிகளாக, சிந்தனையாளர்களாக, ஆய்வாளர்களாக முன்னிலைப் படுத்தப் படும்போது அவர்கள் இலக்கியவாதிகளோ, சிந்தனையாளர்களோ ஆய்வாளர்களோ அல்ல என்று சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

அது விருதை எதிர்ப்பது அல்ல. அவ்விருதின் வழியாக நிறுவப்படும் ஒரு மதிப்பீட்டை எதிர்ப்பது. அடுத்த தலைமுறையினரிடம் எது இலக்கியம், எது சிந்தனை, எது ஆய்வு என்று சுட்டிக்காட்டுவது. அதைச் செய்யாவிட்டால் தவறான முன்னுதாரணங்கள் உருவாகி நிலைபெறு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால்சென்று அதைச் செய்வது விமர்சகர்களின், இலக்கியச் செயல்பாட்டாளர்களின் கடமை.

pa..sara_.jpg ப.சரவணன்

இந்த அளவுகோல்கள் மிகக்கறாரானவை அல்ல. எவரைவிட எவர் மேல் என்றெல்லாம் துல்லியமாக எவரும் சொல்லிவிடமுடியாது. ஆனால் இப்படிச் சொல்லலாம், பொதுவாக தீவிர வாசிப்புச் சூழலிலும் ஆய்வுச்சூழலிலும் ஏற்கப்பட்ட இலக்கியப் படைப்பாளிகளும் ஆய்வாளர்களுமே முக்கியமானவர்கள். அங்கே வெற்றுக்கூச்சலிடும் அரசியலாளர்கள் இடம்பெறலாகாது. அவர்களே ஓசை கிளப்புபவர்கள், எங்கும் முண்டியடிப்பவர்கள், கும்பலாகச் செயல்படுபவர்கள். அவர்கள் அங்கே சென்று அமரவே வாய்ப்பு மிகுதி. ஆட்சியாளர்களின் விவேகமே அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும்.

கொரோனா ஒழிப்பு உட்பட பலதளங்களில் இந்த அரசின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது. இதை நேரடியான அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இத்தனை திறன்மிக்க நிர்வாகத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிதானமும் அன்பும் கொண்ட முதல்வர் என ஸ்டாலின் இன்று தென்படுகிறார். நம்பிக்கையூட்டும் விஷயம் இது. இது நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். குறைந்தபட்ச நல்லதேனும் நிகழும் என எண்ணுகிறேன்.அவ்வாறெனில் பாராட்டுவதும் அல்லவென்றால் விமர்சிப்பதுமே என் பணி.

karu-300x290.jpg கரு ஆறுமுகத்தமிழன்

பண்பாட்டு ஆய்வாளனாக, இலக்கிய விமர்சகனாக என்னை எப்போதுமே அந்நிலையில்தான் நிறுத்திக்கொள்வேன். க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் தன்னை நிறுத்திக்கொண்ட இடம் அது. எந்த புதிய அரசையும் நம்பிக்கையை அளித்தே எதிர்கொள்ளவேண்டும். இன்று அதையே செய்கிறேன்.

மேலே சொல்லப்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்களின் பட்டியல் என்பது நான் எப்போதும் முன்வைப்பது. இவர்களைப்பற்றி எப்போதும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். விமர்சனம் மட்டுமல்ல, பரிந்துரையும் இலக்கியச் செயல்பாட்டின் பகுதியே. ஆகவே இதை முன்வைக்கிறேன். இதையே மலையாளத்திலும் செய்வதுண்டு.

senthilkumar.jpg எஸ்.செந்தில்குமார்

இவற்றைப் பேசும்போது இப்படி பரிந்துரை செய்வதிலுள்ள சிக்கல்களையும் சொல்லியாகவேண்டும்– ஒரே கட்டுரையில் எல்லாம் இருந்தால் நல்லது என்பதனால். ஆய்வுகள் போன்றவற்றுக்கு புறவயமான அளவீடுகள் உண்டு. அ.கா.பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியம். புலவர் செ.இராசு பேராசிரியர் பா.ஜம்புலிங்கம், ஆ.சிவசுப்ரமணியம், ஆ.இரா.வேங்கடாசலபதி, ப.சரவணன். கரு.ஆறுமுகத்தமிழன், ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களின் பணி தெளிவானது, மறுக்கமுடியாதது. அவர்களின் நூல்களே சான்று.

ஆனால் இலக்கியத்தின் தரமதிப்பீடுகள் அகவயமானவை. அவை புறவயமாக நிறுவப்படுவது தொடர்ச்சியான விமர்சனச் செயல்பாடுகள் வழியாகத்தான். இந்திரா பார்த்தசாரதியைவிட  இந்திரா சௌந்தரராஜனை அறிந்தவர் பல மடங்கு. இந்திரா பார்த்தசாரதியைவிட  இந்திரா சௌந்தரராஜனை மேலான எழுத்தாளர் என நினைப்பவர்களும் பற்பல மடங்கு இருப்பார்கள். ஆகவே ஜனநாயக அடிப்படையில், மக்களின் ஏற்பின் அடிப்படையில் விருது அளித்தால் இந்திரா சௌந்தரராஜனே இலக்கிய விருதுகளை எல்லாம் பெறவேண்டும்.

A-R-Venkatachalapathy-300x300.jpg அ.இரா.வேங்கடாசலபதி

ஆனால் இலக்கிய அழகியலை முன்வைக்கும் விமர்சனம் இந்திரா பார்த்தசாரதியை முன்வைத்து அவரே சிறந்தவர் என கூறுகிறது. அந்த இலக்கியவிமர்சனக் கருத்தும் ஒரு சிறுவட்டத்திலேயே திகழும்.  அதன் செல்வாக்கு இலக்கியவாசகர் நடுவே மட்டும்தான். ஆனால் மெல்லமெல்ல அந்தத் தரப்பு நிலைகொள்கிறது. அப்படித்தான் இலக்கியவாதிகள் நிலைபெறுகிறார்களே ஒழிய ‘மக்கள் ஏற்பினால்’ அல்ல.

கி.ராஜநாராயணன் நூறாண்டு வாழ்ந்தார். அவரை அறிந்தோர் ரமணிசந்திரன் வாசகர் எண்ணிக்கையில் நூறிலொருவரே இருப்பார்கள். ரமணிச்சந்திரன் இலக்கியவாதி அல்ல, கி.ராஜநாராயணன் இலக்கியவாதி. இந்த வேறுபாடு என்றுமுள்ள ஓர் உண்மை. அதை ஜனநாயகப் பண்புகளால் நிறுவவில்லை, அழ்கையலால்தான் நிறுவியிருக்கிறோம்.

இச்சூழலில் ஓர் அரசு எவருக்கு விருதளிக்கவேண்டும், கௌரவிக்க வேண்டும்? மக்கள் கருத்தையா அது பொருட்படுத்தவேண்டும்? இல்லை, அங்கே அரசு மக்களுக்கு தந்தை எனும் இடத்தில் உள்ளது. எது மக்களுக்கு பிடிக்கிறதோ அதையல்ல, எது மக்களுக்குத் தேவையோ அதை அளிக்கவேண்டும்.

ramesh-225x300.jpg ரமேஷ் பிரேதன் keeranur.jpg கீரனூர் ஜாகீர்ராஜா yuma.jpg யூமா வாசுகி kanmani.jpg கண்மணி

ஆகவேதான் உலகமெங்கும் அரசுகள் மக்கள் அறியாத கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் விருதளித்து அவர்களை முன்னிறுத்துகின்றன. சத்யஜித் ரே விருது பெறுகிறார், ரமேஷ் சிப்பி விருது பெறுவதில்லை. அடூர் விருது பெறுகிறார், ஐ.வி.சசி விருது பெறுவதில்லை.

அவ்வகையான அங்கீகாரம் நிகழ்வதற்கு இரண்டு அடிப்படைகள் தேவையாக உள்ளன. ஒன்று, மதிப்பீடுகளை முன்வைத்து அதை நிறுவும் விமர்சன இயக்கம். இரண்டு, அவ்விமர்சன இயக்கத்திற்கு அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த அங்கீகாரம். விமர்சன இயக்கம் தர்க்கங்களை உண்டுபண்ணுகிறது. அதற்கு தீவிர வாசகர்களின் ஏற்பு உருவாகிறது. கல்வித்துறை தொடர்ந்து வரவேண்டும். [அது நிகழாததனாலேயே இங்கே கி.ரா போன்ற இலக்கியமுன்னோடிகளுக்கு ஞானபீடம் போன்ற விருதுகள் வந்தமையவில்லை.]

a.si_.jpg ஆ.சிவசுப்ரமணியம்

தமிழில் விமர்சன இயக்கம் சென்ற தலைமுறை வரை வலுவாக இருந்தது. இன்றும் வாசகர்களிடம் அந்த விமர்சன இயக்கத்தின் செல்வாக்கு உள்ளது, ஆனால் அதற்கு அரசு அல்லது கல்வித்துறை அங்கீகாரம் இல்லை. அரசு தன் கட்சிச்சார்பாலும் கல்வித்துறை அதன் சாதியரசியல்- ஆள்பிடிப்பு அரசியலாலும் இலக்கியத்தை அணுகுகிறது.

ஆகவே இன்று நவீன இலக்கியச் சூழலில் உள்ள மதிப்பீடுகளுக்கு எந்த புறவய மதிப்பும் இல்லை. தேவதேவனோ தேவதச்சனோ மாபெரும் கவிஞர்கள் என்பதில் இலக்கியவாசகனுக்கு ஐயமே இல்லை. ஆனால் அதை இந்தச் சின்ன வட்டத்திற்கு வெளியே கொண்டுசெல்ல முடியவில்லை. ஆகவே அரசு அல்லது கல்வித்துறையின் ஏற்பு அவர்களுக்கு அமைவதே இல்லை.

subrabharathimanian.jpg சுப்ரபாரதிமணியன்

சூழல் இப்படி இருக்கையில் நாம் நம் கலைஞர்கள்  சமூக ஏற்பின்றி சிறுமை கொள்வதைப்பற்றி குறைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. சமூக ஏற்போ, கல்வித்துறை ஏற்போ இல்லாமல் அரசின் ஏற்பு இயலவேண்டுமென எதிர்பார்ப்பதிலும் பயனில்லை. அதை மாற்றுவது இந்த அறிவுச்சூழலில் இருந்து எவரேனும் அரசில் பங்குபெற்றால்தான் இயலும்.

கேரளத்தில் கலைப்பண்பாட்டு துறை என்ற ஒரு துறையும் அதற்கு அமைச்சரும் உள்ளனர். அதில் இலக்கியவாதிகள் அமைச்சராவதில்லை. இலக்கிய ஆர்வம் கொண்ட, இலக்கியஅறிவு கொண்ட அரசியல்வாதி ஒருவர் அமைச்சராகிறார்

[இலக்கியவாதி அதற்கு முற்றிலும் தகுதியற்றவன். அவன் அந்த இடத்தை ஓர் இலக்கிய அதிகாரமாக ஆக்கிக்கொள்வான். அவ்வண்ணம் ஓர் இடம் ஓர் இலக்கியவாதிக்கு அளிக்கப்படும் என்றால் அவன் தன்னை இலக்கியவிமர்சகனாக, வெளிப்படையான அளவுகோல்களுடன் தன் தெரிவை முன்வைத்து நிறுவியவனாக, இருக்கவேண்டும். கேரளத்தில் அவ்வாறு அமைச்சரான இலக்கிய விமர்சகர் ஜோசப் முண்டச்சேரி. அகில இந்திய அளவில் டாக்டர் ஸ்ரீகாந்த் வர்மா, டாக்டர் கரன்சிங் மற்றும் கே.நட்வர்சிங்]

jampu-237x300.jpg ஜம்புலிங்கம்

கேரள கலாச்சார அமைச்சர்களில் எம்.ஏ.பேபி [கம்யூனிஸ்ட்]  ஜி.கார்த்திகேயன் [காங்கிரஸ்]  போன்றவர்கள் கட்சி எல்லை கடந்து நீடித்த பங்களிப்புக்காக இன்றும் நினைக்கப்படும் ஆளுமைகள். அப்படி எவரும் திராவிட ஆட்சி உருவானபின் இருந்ததில்லை.

அதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் கலைக்களஞ்சியம் [பெ.தூரன்] தமிழ்ப்பேரகராதி [எஸ்.வையாபுரிப்பிள்ளை] போன்ற பெரும்பணிகள் நிகழ்ந்தன. [ஆனால் தமிழ்வழிக் கல்வி என்னும் தளத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன், அரங்கநாயகம் மூவருமே பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்]

ABRAHAM-PANDITHAR.jpg தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

உண்மையான பண்பாட்டுச் செயல்பாடுகள் அரசியலுக்கு அப்பால் நின்றிருக்கும் அளவுகோல்களால் மதிப்பிடப்பட்டு, கௌரவிக்கப்படும் ஒரு சூழல் தமிழில் மெல்லமெல்ல உருவாகலாம். அவ்வண்ணம் உருவானால் இலக்கிய விழுமியங்கள் விருதுகளுக்கான அளவுகோல்களாக ஆகலாம். அதற்குரிய காலம் இன்னும் கனியவேண்டும்.

சரி, என்னை எங்கே வைத்துக்கொள்வேன்? ஏற்கனவே சொன்னதுதான். எந்த அரசுக்கும் என் பணிவை, முழுதேற்பை அளிக்க முடியாது. குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. எந்த மேடையிலும் எவர் முன்பும் கொஞ்சம் தணிந்து, சிலரில் ஒருவனாக நிற்க முடியாது. கொஞ்சம் மோசமான ஆணவம்தான். ஒன்றும் செய்வதற்கில்லை.

ஜெ

 

 

https://www.jeyamohan.in/147882/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
D12ED59D-1E31-4F14-A452-12FD76918432.webp
 

 

 

“தமிழக அரசின் இலக்கிய விருதுகள்” கட்டுரையில் ஜெயமோகன் இங்குள்ள இடதுசாரி, திராவிட சார்பு படைப்பாளிகள் பற்றி ஒரு பட்டியல் அளிக்கிறார். இதில் இரண்டு சுவாரஸ்யமான விடுபடல்கள் உண்டு:

 

1) நிஜமான இடதுசாரி படைப்பாளிகளை புறக்கணிக்கிறார். அவர்களிடத்தில் எஸ்.ரா போன்றோரை இடதுசாரி, திராவிட மனச்சாய்வு கொண்டவர்கள் என்கிறார். நான் ஒருபோதும் எஸ்.ராவை இப்படிக் கண்டதில்லை; இத்தனைக்கும் அவரது கணிசமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். இடதுசாரி பார்வை, சாய்வு என்பது ஒரு எழுத்தாளன் அந்தரங்கமாக தன் நண்பனிடம் மட்டும் வெளிப்படுத்துவது அல்ல தானே? அவர் அளிக்கிற திமுக சார்பு எழுத்தாளர் பட்டியலும் அப்படித்தான் இருக்கிறது. பாமககாரரான கண்மணி குணசேகரனை திமுக பட்டியலில் கொண்டு சேர்த்து விட்டார். எனில் இமையத்தையும் கண்மணியையும் பக்கத்தில் பக்கத்தில் வைக்க முடியுமா, கொள்கை அளவில்?

 

ஆசான் இவ்விசயத்தில் ஒரு தனித்துவமான கொள்கை கொண்டவர் - அவர் எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை உற்று கவனித்து அதை வைத்து ஒரு முடிவுக்கு வந்து விடுவார். அதில் உடலமைப்பு, தோல் நிறம், சாதி, குடும்பப் பின்னணி, செய்த வேலை, அதில் சம்பாதிக்கும் பணம், குடி, சிகரெட் உள்ளிட்ட ஒழுக்கம் சார்ந்த பழக்கங்கள் என பல விசயங்களும் இருக்கும். இவற்றை வைத்தே அவர்கள் எழுதும் எழுத்தை அவர் மதிப்பிடுவார். அப்படித்தான் மனுஷ்யபுத்திரனின் ஊனமே அவரை இடதுசாரி ஆதரவாளர் ஆனதாக சொன்னார். அப்படித்தான் மாதவிக்குட்டி தனது தோற்றம் குறித்த தாழ்வுணர்ச்சியால் ஆணாதிக்கவாதத்தை எதிர்த்து, பெண் தரப்பில் இருந்து பாலியல் சித்திரங்களை எழுப்பியதாக எழுதினார். அப்படித்தான் தன்னுடைய ‘மூர்க்கமும்’ தனது போர்வீர சாதிப்பின்னணியில் இருந்து மரபணு வழியாக உருவாகி வந்தது என்றார். அப்படித்தான் “ஆசானே இடதுசாரிகள், முற்போக்காளர்கள் ஏன் இந்து வைதீக மரபை மட்டும் எதிர்க்கிறார்கள், அவர்கள் ஏன் கிறித்துவத்தை, இஸ்லாத்தை தாக்குவதில்லை?” என அமிர்தம் சூர்யா ஒரு பேட்டியில் கேட்பதற்கு “அவர்களுக்கு அதை செய்வதற்காக என்.ஜி.ஓக்கள் வழி வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது சூர்யா” என அவர் சொல்கிறார்.

 

இப்படியான விசித்திரமான ஏதாவது ஒரு தர்க்கத்தைக் கொண்டு அவர் தான் தரும் பட்டியலில் உள்ளவர்கள் இடதுசாரிகள், திராவிடர்கள் எனச் சொல்லுகிறார் எனலாம். இதில் இருந்து அவர் விடுவிப்பவர்கள் பெரும்பாலும் பிராமண எழுத்தாளர்கள் என அவரே அடையாளப்படுத்துவர்கள். அவர்கள் அப்பட்டியலில் இருப்பதில்லை பாருங்கள். உ.தா., பா.ராகவன் தொடர்ந்து வெளிப்படையாகவே திமுகவை ஆதரித்து பதிவிடுகிறார், தனது தற்போதைய “கபடவேடதாரி” தொடரில் சங்கிகளை கலாய்க்கிறார். ஆனால் அவருக்கெல்லாம் திமுக பரிசளிக்காது, அவர் ஒரு பிராமணர் என்கிறார் ஜெயமோகன். அதாவது ஒருவர் எந்த அரசியலை சார்ந்திருக்கிறார் என்பதையும் சாதியைக் கொண்டே முடிவு செய்கிறார். ஒருவர் என்னவிதமான அரசியல் கொண்டிருந்தாலும் அவருடைய சாதியை வைத்து சிண்டு முடிந்து விடுகிறார்.

 

இன்னொரு பக்கம், இது வலதுசாரிகளுக்கே உள்ள ஒரு பிரமை எனலாம். அமெரிக்காவில் இடதுசாரிகள் அனேகமாக இல்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டு முழுக்கவே அமெரிக்காவில் அமைதிக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் இடதுசாரிகளின் சதி என முழக்கம் போடுவார்கள். அரசுக்கு விரோதமானவர்களை இடதுசாரிகள் என்று சொல்லியே அப்பாவிகளுக்கு மரண தண்டனை கொடுத்த வரலாறு அவர்களுக்கு உண்டு. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஜெர்மனியில் ஆரிய இனவாதிகள் தமது பிரதான விரோதிகளாக இடதுசாரிகளையே முன்வைத்தனர். ஹிட்லர் தன் பிரச்சாரங்களில் மிக அதிகமாக முழங்கியது யூதர்களுக்கு எதிராக அல்ல, இடதுசாரிகளுக்கு எதிராகவே. இப்போதைய பாஜக ஆதரவாளர்களும் இஸ்லாமியரை விட பிரதான விரோதியாக நினைப்பது இடதுசாரிகளையே. இத்தனைக்கும் இங்கு இடதுசாரிகளின் அணி மிக பலவீனமானது. இந்த இடதுசாரி phobia ஆசானுக்கும் உள்ளது. அவர் இதற்காகவே “பின் தொடரும் நிழலின் குரல்” எழுதினார். அதைப் படித்து விட்டு சு.ரா சொன்னதாக சொல்வார்கள்: “ஜெயமோகன் நியாயமாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைப் பற்றியே எழுதி இருக்க வேண்டும்; ஏனென்றால் குமரியில் இடதுசாரிகளுக்கு அப்படி ஒரு வலுவான இருப்பு இல்லை. அவருக்கு செயல்பாட்டு அனுபவமும் இடது அணியை விட ஆர்.எஸ்.எஸ்ஸிலே அதிகம்.”  ஆனால் இடதுசாரி phobia காரணமாக தன்னை சூழ்ந்துள்ள இலக்கியவாதிகள் எல்லாரும் இடதுசாரிகள், தான் மட்டுமே ஒரே வலதுசாரி என அவருக்குத் தோன்றுகிறது.

 

 2) இந்த கட்டுரையில் ஜெயமோகன் வலதுசாரி, திராவிட வெறுப்பு எழுத்தாளர்களின் பட்டியலையே அளிக்கவில்லை, கவனியுங்கள். இடதுசாரிகள் இருக்கும் போது வலதுசாரிகளும் இருந்துதானே ஆக வேண்டும். இது ஒரு தந்திரமான அரசியல் - இடதுசாரிகள் vs வலதுசாரிகள் என்பதை அவர் இடதுசாரிகள் vs தீவிர இலக்கியவாதிகள் என்று மடைமாற்றுகிறார். அடுத்து இந்த தீவிர இலக்கியவாதிகளில் கணிசமானோர் மறைமுக திமுக ஆதரவாளர்களே என்கிறார். இப்படி வலதுசாரிகளை மறைப்பதன் மூலம், அரசியல் நீக்கம் செய்வதன் மூலம். அவர்களை ஆதரவற்றவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, உருவற்றவர்களாக கட்டமைக்கிறார். இல்லையென்றால் வலதுசாரி எழுத்தின் நியாயப்பாட்டை அவர் உருவாக்க வேண்டுமே. அதற்கு அவகாசம் இல்லை அவருக்கு. அதனால் ஒரு மந்திர வித்தைக்காரனைப் போல தன் அணியினரை நைசாக ஒளித்து வைத்து விடுகிறார். தமிழ் இலக்கியத்தின் வலதுசாரிகளை ஒரு பட்டியலிடுவோமா? எனக்குத் தெரிந்தவர்களை நான் சொல்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் கூறுங்கள். என் நோக்கம் வலதுசாரி இலக்கியவாதிகள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள், இலக்கிய தகுதி அற்றவர்கள் எனக் கூறுவதல்ல. இலக்கியப் பிரதியில் ஒருவரின் அரசியலுக்கு முரணான போக்குகளும் இடம்பெறுமென்றே நம்புகிறேன். ஆகையால் என் பட்டியல் இந்த எழுத்தாளர்களின் கட்டுரைகள், கருத்துக்களை, அரிதாக இலக்கியத்தையும் சார்ந்தே இருக்கும்.

1. பாரதியார் - இவரது வைதீக, சாதிய இந்து தேசியவாதத்துக்கு ஏகப்பட்ட சான்றுகளை கவிதைக்குள்ளே காணலாம். 

 

2. புதுமைப்பித்தன் - இவரது கட்டுரைகளில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் மீது பிற்போக்கான சிந்தனைகள் வெளிப்படும். சில கதைகளிலும் இவை உண்டு. இது குறித்து தமிழ்ச்சூழலில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இன்னொரு பக்கம் பு.பி தனது புனைவுகளில் இந்த வலதுசாரித்தனத்தை கடந்தும் சென்றிருக்கிறார். 

 

3. வெங்கட்சாமிநாதன் - வெளிப்படையாகவே திராவிடத்தை, இடதுசாரிகளை எதிர்த்து எழுதியவர். அதே நேரம், நாட்டார் வழக்காற்றியலில் ஆர்வம் கொண்டதும் தான். தனிப்பட்ட வாழ்வில், நான் அறிந்து, சாதிய பாகுபாடு பாராமல் பழகியவர்.

 

4. கோவை ஞானி - இவர் தமிழ் தேசியத்தையும் வைதீகம் சார்ந்த கலாச்சார இந்துத்துவாவையும் இணைக்க முயன்று, அதை வைத்து இலக்கிய விமர்சனம் எல்லாம் முயன்று பரிதாபமாகத் தோற்றவர்.

 

5. க.நா.சு - தமிழ் நவீனத்துவத்தில் பார்ப்பனியத்தை நைசாக கலந்தவர். தமிழ் இலக்கியத்தை தனிமனிதவாதம், பெரும்போக்கு அரசியல் மறுப்பின் பெயரில் திராவிட எதிர்ப்பு மனநிலை என மாற்றியவர். இதுவே பின்னர் இங்கு சிறுபத்திரிகை மனநிலையாக உருப்பெற்றது. பகுப்பாய்வின் இடத்தில் ரசனையை முன்நிறுத்தி இலக்கிய வாசிப்பை தன்னிலையின் வெளிப்பாடாக மட்டுமே கண்டவர். உ.தா., ‘இந்த கதை ஒரு உன்னதமான கதை என என் வாசிப்பு எனக்குக் காட்டுகிறது. அது ஏன் எனக் கேட்காதீர்கள், ஏனென்றால் அந்த உணர்வு தர்க்கத்துக்கு உடன்படாது, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்பதே க.நா.சுவின் ரசனை விமர்சனம். (மோடி நல்லவர், நாங்களே இந்துக்களின் பாதுகாவலர்கள், ஏனென்று கேட்காதீர்கள், நம்புங்கள் என சங்கிகள் கோருவதைப் போன்றே இது இருப்பதை கவனியுங்கள்.)   இவருடைய கதைகள், நாவல்களில் உள்ள இந்த போக்கைக் குறித்து நான் எனது முனைவர் பட்ட ஆய்வில் எழுதியிருக்கிறேன். ஆனால் இவரை தீவிர நவீனத்துவராக மட்டும் பார்க்கிற திராவிட சித்தாந்தத்தில் வரும் (தமிழவன் போன்ற) விமர்சகர்களும் இங்கு உண்டு.

 

6. ஜெயகாந்தன் - இதை நான் விளக்கத் தேவையில்லை. ஜெ.மோவின் கலாச்சார இந்துத்துவத்திற்கு முன்னோடி இவர் தான்.

 

7. அசோகமித்திரன் - மோடி 2014இல் ஆட்சி அமைத்த போது “என்ன செய்யப் போறீங்க மிஸ்டர் மோடி?” என நான் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் மோடி குறித்த ஏற்பட்டுள்ள மிகைப்படுத்தப்பட்ட சூப்பர் மேன் பிம்பம் விரைவில் சரியும் என வாதிட்டிருந்தேன். அதைப் படித்து விட்டு அசோகமித்திரன் என்னிடம் ஒரு இலக்கிய கூட்டத்தில் வைத்து சற்று புண்பட்ட குரலில் “மோடி இப்போ தான் ஆட்சிக்கு வந்திருக்கிறார். ஏன் அவருக்கு அவகாசமே அளிக்காமல் அவசரமாக ஒரு முடிவுக்கு வரீங்க?” என வருத்தப்பட்டார். அவரது “பதினெட்டாவது அட்சக்கோடு“ முழுக்க இஸ்லாமிய வெறுப்பு விரவிக் கிடக்கும். ஆனால் கதைசொல்லியின் நோக்கில் இறுதியில் மனிதநேயத்தின் உச்சத்தில் அவன் அந்த சிறுபான்மை வெறுப்பைக் கடப்பதாக காட்டியிருப்பார். ஆனால் நாவலில் உள்ள வேறு விஷமத்தனங்களுக்கு எங்கும் மறுப்போ முரணான கருத்துக்களோ இராது.

 

8. ஜெயமோகனே தான் - இவர் ஒரு கலாச்சார இந்துத்துவவாதி. பொருளாதாரரீதியாகவும் பொதுத்துறைகள் ஒழிந்து அந்த இடத்தில் தனியார்மயம் வர வேண்டும் என்கிறவர். தக்கலையில் இவர் வேலை பார்த்த போது ஆர்.எஸ்.எஸ் பெரியவர்களுடன் நல்லுறவில் இருந்தார். அரவிந்தன் நீலகண்டனை ஒரு இளைஞராக இவரது வீட்டில் வைத்து பார்த்திருக்கிறேன். “விஷ்ணுபுரம்” நாவலை ஒரு ஆர்.எஸ்.எஸ் பதிப்பகம் விற்றது, விளம்பரப்படுத்தியது என காலச்சுவடு விமர்சன நிகழ்ச்சியில் எஸ்.ரா கடுமையாக விமர்சித்தது நினைவிருக்கும். சாராம்சமான ஒரு இந்திய உளவியல், ஓர்மை, அடையாளம் உண்டு என நினைக்கும் இவர் அதை ஒருவர் கண்டடைய இந்திய காவிய மரபில் இருந்து கதைகூறும் வடிவம் உருவாக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறார். இதற்காகவே “வெண்முரசு” எனும் பிரம்மாண்டமான நாவல் தொடரை நீண்ட காலமாக எழுதினார். மென் இந்துத்துவ அணுகுமுறை கொண்ட வாசகர்களையும், இந்துத்துவா என்றால் என்னவென்றே அறியாத, இந்து மத ஈர்ப்பு கொண்ட வாசகர்களையும் ஒரு சேர இப்படைப்பால் தன் பக்கம் ஈர்த்தார்.  திராவிடம் மீதான அவருக்கு வெறுப்புக்கு அது வைணவத்தை தாக்குகிறது (என்றோ ஒருநாள் தாக்கியது) என்பதே காரணம். இடதுசாரிகளுக்கு எதிர்த்தரப்பாக வெளிப்படையாகவே தன்னை முன்வைப்பவர். இந்த வெளிப்படையான மதவாதமே ஜெயமோகன் மீதான் ஈர்ப்புக்கு முக்கிய காரணம் என பொ.வேல்சாமி நிறப்பிரிகை கட்டுரையில் சொல்கிறார். அது ஒரு நல்ல அவதானிப்பு என்பேன். வைணவ இந்து மதம் கலாச்சார ரீதியாக ஒடுக்கப்படுகிறது, அது இலக்கியத்துக்கும், நம் பண்பாட்டுக்கும், இந்தியா எனும் தேசிய ஓர்மைக்கும் பாதகமானது என நம்புகிறவர். இவர் சாதீயவாதி அல்ல என்பதை என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதே போல இறை நம்பிக்கையற்றவர் என நினைக்கிறேன். அவருடைய வீட்டிலோ அலுவலக அறையிலோ சாமி படங்களை நான் கண்டதில்லை. மதச்சின்னங்களை பெரும்பாலும் அணியவும் மாட்டார். அதனாலே இவரை கலாச்சார இந்துத்துவர் என்கிறார்கள். சாவர்க்கரைப் போன்ற இந்துத்துவர்கள் இறைமறுப்பாளர்களாக, மத சடங்குகளுக்கு எதிரானார்களாக இருந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆக, வரலாற்றில் இதற்கு ஒரு தொடர்ச்சி உண்டு.

 

9. ஜெயமோகனின் ‘மடமான’ விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை சேர்ந்த அவரை எழுத்தில் அப்படியே பிரதி எடுக்க முயல்கிற சுரேஷ் பிரதீப், அனோஜன் போன்றவர்கள். சுரேஷ் பிரதீப்பின் முதல் நாவலில் ஒரு பின்நவீன தன்மை இருந்தது. ஆனால் அண்மைக் கட்டுரைகளில் அப்பட்டமான கலாச்சார இந்துத்துவாவே வெளிப்படுகிறது. அவர் அயோத்திதாசரைக் கூட இந்துத்துவ பாதையில் கைபிடித்து அழைத்து செல்ல முயல்வதை, அயோத்திதாசரின் வைதீக எதிர்ப்பை மறைத்து அவரை வெறுமனே ஒரு தலித் அரசியல் தலைவராக மட்டுமே சித்தரிக்க முயல்வதை பார்க்கலாம். ஜெ.மோ ஆரம்பித்து வைத்த புரோஜெக்டை அப்படியே அட்சரம் பிசகாமல் முன்னெடுக்கும் சீடர் இவர். இவர்கள் இருவரையும் போன்று வேறு சிலரும் இருக்கிறார்கள் என்றாலும் அறியப்பட்ட பெயர் எனும் அளவில் குறிப்பிடுகிறேன்.

10. வண்ணநிலவனின் அரசியல் கட்டுரைகளை நான் படித்ததில்லை. ஆகையால் அவரைப் பற்றி உறுதியான கருத்தை சொல்ல இயலவில்லை. ஆனால் அவரைப் பற்றி அப்படியும் ஒரு பார்வை உண்டு. சோ. தர்மன், கி.ராவின் புனைவுகளில் உள்ள சிறுபான்மையினர் மீதான காழ்ப்பு குறித்தும் விமர்சனங்கள் எழுந்ததுண்டு. சோ. தர்மனைப் பொறுத்தமட்டில் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் வரும் வரையில் அவர் பேஸ்புக்கில் ஒருவித இந்துத்துவ சாயலுடன் எழுதினார் என்பதும் உண்மையே. கி.ராவைப் பொறுத்தமட்டில் அவருடைய நாவலான கோபல்ல கிராமத்தில் வரும் இஸ்லாமிய படையெடுப்பு ஒரு வெறுப்பு மனநிலையை வெளிப்படுத்துகிறது எனும் விமர்சனம் உண்டு. கி.ரா சொல்லும் இந்த இஸ்லாமிய படையெடுப்பே வரலாற்றுரீதியாக உண்மையல்ல, அது ஒரு பொதுப்புத்தி கருத்து மட்டுமே என நிறுவுகிற கட்டுரை ஒன்றை படித்திருக்கிறேன் (கலிபோர்னியா பல்கலையின் வரலாற்று பேராசிரியரான சஞ்சய் சுப்பிரமணியம் எழுதியது). ஆனால் கி.ராவுடைய இடதுசாரி பார்வையையும் அவரது கதைகளில், அபுனைவுகளில் கண்டிருக்கிறேன். ஆகையால் இவர்களை வெளிப்படையான இந்துத்துவர்கள் என உறுதிபட கூற நான் சற்று தயங்குவேன். என்னிடம் அதற்கான தரவுகள் இல்லை. இனி உங்கள் பட்டியலைக் கொடுங்கள்!

 

 

http://thiruttusavi.blogspot.com/2021/06/blog-post_6.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.