Jump to content

சிவசங்கர் பாபா யார்? பாலியல் தொந்தரவு புகார்களும் சர்ச்சைகளும் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • எம்.ஏ. பரணி தரன்
  • பிபிசி தமிழ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவசங்கர் பாபா என்று அழைக்கப்படும் சிவசங்கருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவிகள் அளித்துள்ள பாலியல் தொந்தரவு புகார்கள், நாளுக்கு நாள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்து வருகின்றன. யார் இந்த சிவசங்கர் பாபா? இவருக்கு எதிராக வலுத்து வரும் சர்ச்சைகள் என்ன?

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1949ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தவர் சிவசங்கர். இவரது தந்தை நாராயண சர்மா, தாய் விஜயலட்சுமி. இவரது தந்தை பள்ளி ஆசிரியர். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த இவர், வேதியியல் துறையில் பட்டப்படிப்பும், சரக்குகள், போக்குவரத்து கையாளல் பிரிவில் முதுகலை படிப்பும் படித்தார்.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு சொந்தமாக போக்குவரத்து நிறுவனமொன்றை நடத்திய சிவசங்கர் 1978 முதல் 1983 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், கட்டட ஒப்பந்ததாரர், ஆவணப்பட தயாரிப்பாளர் போன்ற பன்முக அடையாளங்களுடன் தொழில் உலகில் வலம் வந்தார். இவரது தொழிற்துறை தொடர்புகள் மற்றும் செல்வாக்கு இவருக்கு ரோட்டரி கிளப் ஆஃப் அண்ணாநகர், ஆந்திர வர்த்தக சம்மேளன நிர்வாகக் குழு, இந்தியன் வங்கி நிர்வாக குழு, ரயில்வே ஆலோசனை வாரியம் ஆகியவற்றில் உறுப்பினர் அந்தஸ்தையும், சரக்கு போக்குவரத்து சங்க தலைவர் போன்ற பதவிகளையும் பெற்றுக் கொடுத்தது.

இடையே திருமணம் செய்து கொண்ட சிவசங்கருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். 1980களின் பிற்பகுதியில், சென்னை மண்ணடியில் சிறிய இடத்தை நிறுவி அங்கு தன்னை நாடி வருவோருக்கு போதனைகளை வழங்கினார் சிவசங்கர்.

உடல்நலம், திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தைப்பேறு என தன்னை நாடி வந்த பலருக்கும் அருளுரை எனப்படும் தமது போதனைகளை வழங்கிய அவர், ஏற்கெனவே தமக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கு மூலம் வேண்டியவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க பாலமாக செயல்பட்டார். இதனால், இவரது புகழ் பல நிலைகளில் பரவியது.

விரிவடைந்த சிவசங்கரின் சாம்ராஜ்ஜியம்

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்,@SRISIVASHANKARBABA

இந்த கால கட்டத்தில் சென்னை நீலாங்கரையில் தனி பங்களாவில் குடியேறிய அவர், சிறு வயதிலிருந்தே ஆன்மிக ஈடுபாடு உள்ளதாகவும் அதற்கு ரத்னகிரி கோயிலில் உள்ள பாலமுருகன் சுவாமியின் அருளே காரணம் என்றும் கூறத் தொடங்கினார். தமது ஆன்மிக பாதையை வலுப்படுத்தும் நோக்குடன் சம்ரட்சணா என்ற இயக்கத்தை இவர் தொடங்கினார்.

இவரது ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு 1990களில் தனி ஆதரவாளர்கள் இருந்தனர். இவரது வீட்டுக்குள்ளேயே கோயில் அமைத்திருந்ததால் அவரது வீட்டுக்கு அருகே இருப்பவர்கள், நண்பர்கள், அவர்கள் மூலம் அறிமுகமானவர்கள் என வருகை தந்த பலருள் சிலர் இவரது பக்தர்களாயினர். ஆன்மிக தொடர்புடன் அரசியல் தொடர்பும் இவருக்கு அதிகமானதால், 2001இல் சென்னை கேளம்பாக்கத்தில் சர்வதேச உறைவிட பள்ளியொன்றை எழுப்பினார் சிவசங்கர். பிறகு அதே கேளம்பாக்கத்தில் பல்நோக்கு மருத்துவமனையை கட்டினார் சிவசங்கர்.

ரியல் எஸ்டேட் தொடர்பும் பின்புலமும் இருந்ததால், சிவசங்கரின் ஆன்மிக இயக்கத்துக்கு நன்கொடைகள் பல முனைகளில் இருந்து குவிந்தன. அதனால், கேளம்பாக்கத்தில் இவரது இயக்கத்தின் தொண்டுக்காக இவர் எழுப்பிய கட்டுமானங்கள் விரிவடைந்தன.

இது தவிர முதியோர் இல்லம், கிராமப்புற பயிற்சியகம், வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை அடிக்கடி நடத்தினார் சிவசங்கர்.

இறைவனின் அவதாரம் என்று தன்னை அழைத்துக் கொள்ளத் தொடங்கிய அவர், ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இறைவனுடன் கலப்பதை ஆன்மிகம் என்று போதித்தார். அவரது போதனையால் கவரப்பட்டவர்கள், அவரது பெயருடன் சேர்த்து சிவசங்கர் பாபா என அழைக்கத் தொடங்கினர்.

சிவசங்கரை எதிர்த்த யாகவா முனிவர்

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்,@SRISIVASHANKARBABA

1990களில் யதார்த்தமான ஆன்மிகத்தில் ஈடுபாடு மிக்கவராக அறியப்பட்ட யாகவா முனிவர் சென்னை மேடவாக்கத்தில் வசித்து வந்தார். ஆடம்பரமும் ஆர்ப்பரிப்பும் மிக்கவராகவும் ஆடிப்பாடி ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தக் கூடியவராக சிவசங்கர் பாபா இருக்க, யாகவா முனிவர், மிகப்பெரிய பங்களாவில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். தனது வீட்டுக் கிணற்றில் புண்ணிய தீர்த்தம் உள்ளதாகவும் பட்சிகளுடன் பேசுவேன் என்றும் கூறி யதார்த்த கருத்துகளை தன்னை பார்க்க வருவோரிடம் வழங்கினார் யாகவா முனிவர்.

இந்த இருவரும் கொள்கை, கருத்துகளில் முரண்பாடு கொண்டிருந்த வேளையில், 1990களின் கடைசி காலகட்டத்தில் இருவரையும் ஒரு நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எதிரெதிரே அமரவைத்தார் தனியார் ஊடக நிகழ்ச்சி இயக்குநரும் தொகுப்பாளருமான வீரபாண்டியன்.

அந்த நிகழ்ச்சியில் சிவசங்கரின் கருத்துகளை கடுமையாக எதிர்த்த யாகவா முனிவர், ஒரு கட்டத்தில் தனது கையில் வைத்திருந்த துண்டால் அவரை அடிக்கவும் செய்ய, அந்த நிகழ்ச்சி, அன்றைய காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசக்கூடியதாக மாறியது. அதன் பிறகு இந்த இருவரின் புகழும் பட்டி, தொட்டியெல்லாம் பரவியது.

இதன் பிறகு சில ஆண்டுகளில் யாகவா முனிவர் காலமானார்.

யாகவா முனிவருக்குப் பிறகு சிவசங்கர் பாபாவை எதிர்த்தவர் பேராசிரியரும் திரைப்பட நடிகருமான பெரியார்தாசன். இருவரும் நேருக்கு நேராக சந்திப்பதை தவிர்த்தபோதும், இவர்களின் கருத்து மோதல்கள் தொடர்பான பல கட்டுரைகளை இந்த செய்தியை எழுதிய நிருபர் 2000ஆம் ஆண்டுகளில் பதிவு செய்திருக்கிறார்.

பெரியார் தாசன் எழுப்பிய பல கேள்விகளுக்கும், தன்னை இறைவனின் அவதாரம் என்பதை தன்னை நம்புபவர்கள் உணர்வார்கள். பெரியார்தாசன் அதை நேரில் அனுபவிக்க வேண்டும் என்று கூறுவார் சிவசங்கர்.

அந்த காலகட்டத்திலேயே சிவசங்கர் மீது ஆள் கடத்தல், பாலியல் புகார்கள் போன்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு பிறகு திடீரென அவை அடுத்த கட்டத்துக்கு போகாமல் மறைந்த நிகழ்வுகள் அதிகம்.

இது குறித்து பெரியார்தாசன் எழுப்பிய கேள்விக்கு, சிவசங்கர் நேரடியாக பதில் தரவில்லை. தொழில்களில் போட்டி இருப்பது போல தனக்கு ஆன்மிக உலகில் நிலவும் போட்டியால் பரப்பப்பட்ட வதந்திகளே அவை என்று சிவசங்கர் கூறினார்.

இப்போது சிவசங்கர் மீது என்ன சர்ச்சை?

@SriSivaShankarBaba

பட மூலாதாரம்,@SRISIVASHANKARBABA

சிவசங்கர் நடத்தி வரும் தனியார் உறைவிட பள்ளியில் மாணவிகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும், வரம்பு மீறி அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தரப்படும் புகார்களை அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலர் எழுத்துபூர்வமாக தற்போது கொடுத்துள்ளனர்.

சென்னை நகர காவல்துறையிடமும் தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவினரிடமும் இது தொடர்பான புகார்களை அந்த மாணவிகள் அளித்துள்ளனர்.

பல மாணவிகள் தங்களுடைய பதின்ம வயதில் அனுபவித்ததாக கூறப்படும் பள்ளிகால பாலியல் கொடுமைகளை இப்போது மனம் திறந்து வெளிப்படுத்த முன்வந்துள்ளதாக கூறுகின்றனர். சமூக ஊடகங்களில் பலர் இது குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.

சிவசங்கர் பாபா

பட மூலாதாரம்,@SRISIVASHANKARBABA

சில மாணவிகள், சிவசங்கரின் சர்ச்சை செயல்பாடுகள் தொடர்பாக பல பெற்றோருக்கும் தெரியும் என்று கூறியுள்ளனர். தமிழ் புலனாய்வு இதழின் யூட்யூப் பக்கத்துக்கு முன்னாள் மாணவி ஒருவர் அளித்த நேர்காணலில், சிவசங்கரின் அழைப்புக்கு இணங்க மாணவிகளுக்கு பல வகையில் அழுத்தம் தரப்படும் என்றும் உதாரணமாக, முதல் இரண்டு பருவ தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைத்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த மாணவிகளிடம், சிவசங்கர் பாபாவின் ஆன்மிக சத்சங்கத்துக்கு சென்று அவரை வணங்குமாறு வற்புறுத்தப்படுவார்கள் என்றும் அவ்வாறு செல்லும் மாணவிகளிடம் நெருங்கிப் பழகி பாலியல் தொந்தரவு கொடுப்பதை சிவசங்கர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் அந்த முன்னாள் மாணவி கூறியுள்ளார்.

பெரும்பாலான மாணவிகள் உறைவிட பள்ளி விடுதியில் தங்கிப்படித்ததால் அவர்களே சிவசங்கரால் அதிகமாக இலக்கானதாகவும் இது பற்றி பள்ளி ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தபோது, அவர்கள், சிவசங்கரை இறைவனின் அவதாரம் என்றும் அவரே கிருஷ்ணர் என்றும் கூறியதாக அந்த முன்னாள் மாணவி கூறியுள்ளார்.

வேறு சில முன்னாள் மாணவிகள், சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்று அழைத்துக் கொள்வதாகவும், அவரை தேடி வரும் பெண்கள் கோபிகைகள் என்றும் தங்களை கருதி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற புகார்கள், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளன. புகார்களின் தீவிரம் கருதி அவற்றில் சில தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த புகார்கள் ஆபாசத்தை தூண்டும் வகையிலும் பாலியல் செயல்களுக்கு முகாந்திரமாக இருப்பதாக கருதுவதால், சிவசங்கரை விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் திட்டமிட்டனர்.

ஆனால், சிவசங்கர் விசாரணைக்கு ஆஜராகாவில்லை. இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்குகளில் ஜாமீன் கேட்டு அவரது தரப்பு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிவசங்கருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையின் தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, சிவசங்கருக்கு எதிரான புகார்கள் அதிகரித்து வருவதால், அவர் டேராடூனில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க அவரது கடவுச்சீட்டை முடக்கவும், அவரை விமான நிலையங்களில் வேறு மாநில காவலர்கள் பார்த்தால் தமிழக காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கும் வகையிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகளில் பணியாற்றி வந்த சில ஆசிரியர்கள், தற்காப்புக்கலை பயிற்றுநர் போன்றோருக்கு எதிராக பல்வேறு பாலியல் தொந்தரவு வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், 72 வயதாகும் சிவசங்கருக்கு எதிராகவும் வலுத்து வரும் பாலியல் சீண்டல் புகார்கள், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சிவசங்கர் பாபா யார்? பாலியல் தொந்தரவு புகார்களும் சர்ச்சைகளும் என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவசங்கரை இறைவனின் அவதாரம் என்றும் அவரே கிருஷ்ணர் என்றும் கூறியதாக அந்த முன்னாள் மாணவி கூறியுள்ளார்.

, சிவசங்கர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்று அழைத்துக் கொள்வதாகவும், அவரை தேடி வரும் பெண்கள் கோபிகைகள் என்றும் தங்களை கருதி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு மதத்தையே இவ்வாறு பெருமையாக வைத்துக்கொண்டு 

அவ்வாறு மனிதர்கள் உருவாக கூடாது என்று 
எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு சொல்வது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிவசங்கர் பாபாக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? : ஆர். அபிலாஷ்

 

இன்று (17 ஜூன் 2021) மறு ஒளிபரப்பான யாகவா முனிவர்-சிவசங்கர் பாபா குடுமிப்பிடி சண்டையை நான் என் பதின்வயதில் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு யாகவா முனிவர் மீது ஒரு மனச்சாய்வு இருந்தது. ஏதோ சக்தி படைத்தவரோ அல்லது குழப்புகிறாரோ, ஒருவேளை சித்தரோ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அடுத்து என் அனுபவங்களும் ஓரளவுக்கு வாசிப்பும் அதெல்லாம் இல்லை, இவரும் ஒரு பொய்யர் எனக் காட்டிக் கொடுத்தது. ஏனென்றால் எந்த ஆன்மீகவாதியும் அடிப்படையில் பொய்யரே என்பது என் திடமான நம்பிக்கை. ஆன்மாவே பொய் எனும் போது ஆன்மீகவாதி என்பது எப்படி நிஜமாக இருக்க முடியும்?

202106170036304882_Shiva-Shankar-Baba-ar

நம்முடைய தேசமெங்கும் பரவியிருக்கும் அத்வைதம் இந்த பொய்யர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்மைத் தடுக்கிறது. ஒருவன் பொதுவிடத்தில் ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டால் அவன் ஒரு பொறுக்கி என அந்த இடத்திலேயே முடிவு செய்து விடுவார்கள். அவன் என்னதான் உன்னதமான சிந்தனையாளன், பெரும் பணக்காரன், தியாகி, வள்ளல் என்றாலும் மக்களுக்கு இவ்விசயத்தில் குழப்பமே வராது. ஆனால் ஆன்மீகம் என்றதும் ஒரு குழப்பம் வந்து விடுகிறது – ஆன்மீகவாதி நான் அந்த ‘நோக்கத்தில்’ தொடவில்லை, ஒரு ஆசீர்வாதமாக, என்னுடள் நான் உணரும் ஆன்ம அதிர்வை கடத்திடவே அப்படி செய்தேன் என்றால் மக்களுக்கு ஒருவேளை இது உண்மையோ எனும் குழப்பம் வந்து விடும். இந்த குழப்பத்தை தான் சிவசங்கர் பாபாக்களும், நித்யானந்தாக்களும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த குழப்பமே நம் மண்ணில் எண்ணற்ற சாமியார்கள் தோன்றக் காரணமாகிறது. இவர்களுக்கும் மெய்யியல் தேடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது முழுக்க வேறொரு பிரச்சனை.

சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பழங்குடிகள் இறைவனை உருவாக்கிய போது அவனை தம் முன்னோர்களாக, செடி, கொடிகள், கற்களாகக் கண்டார்கள். அந்த இறைவன் நம்முடன் திரியும் மற்றொரு மனிதன், அதே நேரம் அவனுக்கு ஏதோ ஒரு சிறப்பியல்பும் உண்டு. சாமியாடிகள் நம் பூர்வப் பண்பாடுகளில், பழங்குடிகள் மத்தியில் இப்படியே தோன்றுகிறார்கள். வரலாற்றின் ஒரு கட்டத்தில் இவர்கள் பூசாரிகள், போதகர்கள் ஆகிறார்கள், மதம் ஒரு நிறுவனமாகிறது. தெய்வம் மனிதனில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உச்சாணிக்கொம்பில் வைக்கப்படுகிறது. மறுபிறவி, பாவம், புண்ணியம் போன்ற சிந்தனைகள் தோன்றி, நிலப்பிபுத்துவ சூழலின் ஏற்றத்தாழ்வுகளின் கொடுமைகள் மக்களுக்கு புலப்படாத படி மறைத்திட உதவுகிறது. தொழில்மயமாக்கலும், காலனிய ஆதிக்கமும், பின்னர் ஜனநாயகமும் தோன்றிய காலங்களில் மக்களிடம் பரவலாக மதத்தைக் கொண்டு போவது, மத விசுவாசிகளின், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஆதிக்கவாதிகளுக்கு, அதிகாரவர்க்கத்துக்கு அவசியமாகிறது.

 இந்தியாவில் அத்வைதம் இன்னொரு மாயத்தை நிகழ்த்துகிறது – தெய்வீகம், ஆன்மீகம், பிரம்மம் போன்றவை எல்லாரிடமும், எங்கும் உள்ளவையே, ஆனால் அது சாராணமானது அல்ல, அசாதாரணமானது, அதை உணர ஒரு மனநிலை, வாழ்க்கைமுறை வேண்டும் என்கிறது. இது அடிப்படையில் முரணான ஒரு பார்வை – மனிதனைப் படைத்தவன் கடவுள் என்றால், அனைத்துக்கும் அப்பாலானது பிரம்மம் என்றால், அந்த பண்புகள் ஏதுமில்லாத மனிதனுக்கு அத்தெய்வம் எப்படி தன்னை புலப்படுத்தவோ, மனித வாழ்வில் தன்னை வெளிப்படுத்தவோ முடியும்? (அத்வைதத்துக்கு எதிரான நாகார்ஜுனரின் முக்கியமான கேள்வி இது) ஆனால் இந்த முரணை தத்துவார்த்தமாக சரியாக நிறுவாமலே மக்களை நம்ப வைத்து விட்டார்கள். இதை வைத்து தான் இன்று பாபாக்களால் மிக கழிசடையானவர்களாக, அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை பதுக்குகிறவர்களாக, பல நூறு பெண்களை, குழந்தைகளை தம் தேவைக்காக துன்புறுத்துகிறவர்களாக, மக்களின் சொத்துக்களை மிரட்டிப் பிடுங்குகிறவர்களாக இருந்தபடி தம்மை அனைத்தையும் கடந்த பிரம்மம், தெய்வப்பிறவி எனக் கூறி ஏமாற்ற முடிகிறது. “ஆம் நான் ஒரு பெண்ணை என் படுக்கைக்கு வற்புறுத்தி கொண்டு சென்றேன், அது ஏன் என்றால் நான் அவளுக்கு கிருஷ்ணனின் அவதாரத்தைக் காட்டிக் கொடுத்தேன்” என்று சிவசங்கர் பாபா கூறுவது எனக்கும் உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம், ஆனால் பக்தர்களுக்கு அது உண்மையென்றே தோன்றும். ஏனென்றால் அத்வைதத்தின் அடிப்படையே பணம் சேர்ப்பது, வன்முறையில் ஈடுபடுவது, காமத்தை வெளிப்படுத்துவது போன்றவற்றை பிரம்மத்தை உணர்ந்தவன் செய்யும் போது அவை கீழ்மையாக இருக்காது என்பதே. இது ஆன்மீகவாதிகளை அனைத்து மதிப்பீடுகளுக்கும் அப்பாலானவர்களாக மாற்றி விடுகிறது. இது அவர்களை தண்டனைகளுக்கு அப்பாலானவர்களாகவும் ஆக்குகிறது.

 

Sri-Siva-Shankar-Baba-Old-Interview-1170

ஒரு உதாரணத்துக்கு நீங்கள் பகவத் கீதையில் கண்ணன் தன்னை தேரோட்டியாகவும், யுத்த தந்திரங்களை வகுப்பவராகவும், பாண்டவர்களுக்கு உறவுக்காரராகவும், மந்திர வித்தை செய்கிறவராகவும், தசாவதார காட்சி அளிப்பவராகவும் இருந்ததை கவனியுங்கள். நீ யார் என கண்ணனைக் கேட்டால் “நான் புல்லும் அல்ல பூண்டும் அல்ல, கல்லும் அல்ல, மலையும் அல்ல” என ஒவ்வொன்றாக கழித்தபடி செல்வார். அர்ஜுனன் கண்ணனிடம் நான் யாரென்றால் “பார்த்தா, நீ இப்போது என்ன செய்கிறாயோ அதுவே நீ. உன் அறம் இப்போது நீ கொல்ல வேண்டும் எனச் சொன்னால் அதை நீ செய்ய வேண்டும். உன் உறவினர்கள், நண்பர்கள் இப்போது இந்த இடத்தில் உன் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. அது அவர்கள் சுமக்கிற உடலெனும் கூடு மட்டுமே. மனிதன் தன் ஆன்மாவை தன் செயலில் மட்டுமே உணர்கிறான், அடையாளங்களிலோ உறவுமுறைகளிலோ அல்ல.” என அவர் ஒரு வாதத்தை கட்டமைப்பார். இதிலுள்ள முரண்: நான் “என்னை” உணர்கிற செயலில் என்னவாக இருக்கிறேன், ஆன்மாவாகத் தானே? செயலில் தோன்றி செயலில் மறைகிற ஆன்மா எப்படித் தோன்றுகிறது? இன்மையில் இருந்து “நான்” தோன்றவே முடியாது. தோன்றிய ஒன்று காணாமல் மறையவும் முடியாது. அதே போல செயலில் ஒன்று தானாக தோன்றவும் முடியாது. இது பௌத்தம் தரும் மறுப்பு. பௌத்தம் ஆன்மாவுக்கு எதிராக வைத்த மறுப்புகளை எதிர்கொள்ள இயலாமல், வைதீகவாதிகள் உருவாக்கிய குழப்பமான, உள்முரண் கொண்ட ஒரு தத்துவப் பிரதியே பகவத் கீதை. அதன் தாக்கத்தை நாம் நீண்ட காலமாக உணர்ந்து வருகிறோம்.

சிவசங்கர் பாபா ஒரு பொய்யர் என தொடர்ந்து பெரியார் தாசன் நிறுவ முயன்ற போது அவரது கேள்விகள் எவற்றுக்கும் பதிலளிக்காமல் “என்னிடம் பெரியார் தாசன் வந்து என் தரிசனத்தை உணர்ந்து கொண்டால் நான் கடவுள் என ஏற்றுக் கொள்வார்” என பதிலளித்தார் சிவசங்கர் பாபா. அதை எப்படி உணர்ந்து கொள்வது? உணரவே முடியாது. ஆனால் அப்படி கற்பனை தான் பண்ண முடியும். உணரும் வரை உங்களுக்கு ஆன்ம முதிர்ச்சி இல்லை என மறைமுகமாக உங்களை மிரட்டுவார்கள். ஒரு கட்டத்தில் நீங்கள் ஒத்துக்கொள்ளவோ அல்லது வாயை மூடிக்கொள்ளவே செய்வீர்கள். நிர்வாண ஆடை அணிந்த மன்னரின் கதை தான்.

 நான் நாளை திருட்டு வழக்கில் கைதானால் என்னை என் நண்பர்கள் கூட வந்து பார்க்க மாட்டார்கள். ஆனால் நான் ஒரு சாமியாராக இருந்து கொலை வழக்கில், பல பெண்களை பலாத்கார செய்த வழக்கில் கைதானாலும், என் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் என்னைப் பார்ப்பதற்காக திரளுவார்கள். பக்தர்களின் இந்த பயங்கர குழப்பத்துக்கு காரணம் முழுக்க முழுக்க அத்வைத சிந்தனையே.

இம்மாதிரியான சுரண்டல்கள், ஏமாற்றுகள் கிறித்துவத்தில், இஸ்லாத்தில் இல்லையா என்றால் சாராம்சவாதத்தை ஏற்கிற எல்லா மதங்களிலும் ஏமாற்று இருக்கவே செய்யும் என்பேன். கிறித்துவத்தை பொறுத்தவரையில் அதுவும் ஆன்மாவை ஏற்கிற மதம் தானே. இஸ்லாமும் அல்லா எனும் ஒரு சாராம்சமான சக்தியை முன்வைக்கிறது. அல்லாவின் கீழே அனைத்து மனிதரும் இருப்பதாக எனும் படிநிலையை உண்டுபண்ணுகிறது. புனிதமாக்கல் இதனால் தோன்றுகிறது. அதே நேரம் கிறித்துவமும், இஸ்லாமும் நிறுவனமயமான மதங்கள் என்பதால் இந்த தில்லுமுல்லுகள் ஓரளவுக்கு கட்டுப்படுத்த வாய்ப்புண்டு. தப்பு நடந்தால் அந்த நிறுவனங்கள் அதற்கு பதில் கூற வேண்டும் எனும் சூழல் உண்டு. இந்து மதம் அப்படியான கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத ஒரு திறந்த வீடு. ஆகையால் புற்றீசல் போல டுபாக்கூர் சாமியார்கள் புறப்பட்டு வந்தபடியே இருக்கிறார்கள். கூடவே சாமியார்களின் ஆசிரம சொத்துக்கு, நிதி பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாதபடி நம் சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்விஸ் வங்கியில் வைத்திருப்பதை விட இவர்களிடம் கொடுத்து வைப்பது சுலபம் என்பதால் பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாகவும் கணக்கற்ற அரசியல் செல்வாக்கு கொண்டவராகவும் ஒரு சாமியார் சில வருடங்களிலேயே இங்கு மாற முடிகிறது.

artworks-000553701489-chnyul-t240x240.jp

இந்த விசயத்தில் யாகவா முனிவர் ஒரு பெட்டிக்கடை நடத்தினால், தன்னை ஒரு சாமான்ய மனிதனாக கண்டு ஒரு சித்தனாக கற்பனை பண்ணினால், பாபா ஒரு கார்ப்பரேட் கம்பனி நடத்தி தன்னை வைதீக அவதாரமாக கற்பனை பண்ணிக் கொண்டார். லாபம் சம்பாதிப்பதில் சிவசங்கர் பாபாவுக்கு கூடுதலாக பேராசையும் கனவுகளும் இருந்தன. யாகவா முனிவருக்கு ரஜினிகாந்த் போன்ற சில நட்சத்திர பக்தர்கள், ஊடகப் புகழ், கூடவே சாமான்ய மக்களின் ஆதரவு போதுமாக இருந்தது. இருவருமே ஒரே வியாபாரத்தில் இருந்ததால் பரஸ்பரம் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்கிறார்கள் எனும் உள்விவகாரங்களை தெரிந்து வைத்திருந்தார்கள். சன் டிவி பேட்டியில் இதையே போட்டுடைத்தார்கள். சிவசங்கர் பாபா பெண்களை பாலியல் சுரண்டல் செய்கிறார் என்பதை யாகவா முனிவர் தன் நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டதாகவே பேட்டியில் சொல்கிறார். ஆகையால் ஒருநாள் சிவசங்கர் பாபா கைதாவார் என அவர் கணித்தது ஒன்றும் பெரிய தீர்க்கதரிசனம் அல்ல. ஒரு திருடனைப் பார்த்தால் ஒருநாள் மாட்டிக்கொள்வாய் எனக் கூற ஆறாவது அறிவு எல்லாம் தேவையில்லை. யாகவா முனிவர் கொலை செய்தவர், அபின் பயன்படுத்துகிறவர், கடத்தல்காரர் என சிவசங்கர் பாபா கூறியதும் ஊரில் அப்போது இருந்த கிசுகிசுக்களே. இதில் அபின் விசயத்தில் உண்மை இருக்கலாம் – ஏனென்றால் ஆன்மீக ஆர்வலர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்துவது நம் மரபிலேயே நீண்ட காலமாக இருக்கிறது. (கொலை, கடத்தல் எல்லாம் உண்மையா எனத் தெரியவில்லை.)

இது போன்ற தில்லுமுல்லுப் பேர்வழிகளை ஒழிப்பதற்கு முதல் வழி ஆன்மா என ஒன்றில்லை எனும் கருத்தை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்ப்பது மட்டுமே. அடுத்தது, கார்ப்பரேட் சாமியார்கள் தம் வரவு செலவுகளுக்கு அரசிடம் கணக்கு சமர்ப்பித்து, அதற்கான சான்றுகளையும் காட்டி தம்மிடம் சேரும் பணம் சட்டபூர்வமானது என நிரூபிக்கும்படி சட்டத்தை மாற்ற வேண்டும். இப்போதுள்ள ஓட்டையை வைத்து மிகப்பெரிய அளவில் கறுப்புப்பணத்தை கைமாற்றி விடும் ‘ஆன்மீக வங்கிகளாக’ இவர்கள் செயல்படுகிறார்கள். சத்ய சாயி பாபா இறக்கும் போது அவருடைய சொத்து மதிப்பு 64,000 கோடிகள். ஜக்கி வாசுதேவின் சொத்து மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு 10,000 கோடிகள்.  ஸ்ரீஸ்ரீயின் மதிப்பு 5 லட்சம் டாலர்கள். சிவசங்கர் பாபா ஒரு சின்ன மீனே – அவருடைய மதிப்பு   5 மில்லியன் டாலர்கள். இந்த ஆன்மீக வங்கிகள் ஒரு சில வருடங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் வாங்கி பிரம்மாண்டமாக கோயிலளை அமைத்து, அங்கும் வியாபாரம் பார்க்கிறார்கள். ஹெலிகாப்டர், சொந்த விமானங்கள், பிரம்மாண்டமான பங்களாக்கள் என சொகுசாக இருக்கிறார்கள். இந்த சாமியார்கள் எதை செய்தாலும் அதை ஒரு கணக்குவழக்குக்கு உட்பட்டு செய்ய வேண்டும், வெளிப்படையாக இருக்க வேண்டும், முக்கியமாக அது ‘வெள்ளைப் பணமாக’, சொந்தப் பணமாக இருக்க வேண்டும். கேட்டால் இது எங்கள் பணமல்ல, பக்தர்களின் பணம் என கைவிரித்து விடுவார்கள். யாரந்த பக்தர்கள், கணக்கு காட்டு என்றால் அமைதியாகி விடுவார்கள். நாங்கள் இந்து மதத்தை பரப்புகிறோம் (ஜக்கி) அல்லது மக்களுக்கு தொண்டு செய்கிறோம் (சிவசங்கர் பாபா) என சப்பைக்கட்டு கட்டுவார்கள். இதற்கும் முடிவு கட்ட வேண்டும்.

பின்குறிப்பு: அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் பொருந்தும்படி இச்சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் இந்துமதம் மட்டும் தாக்கப்படுகிறது எனக் கூக்குரலிட்டு அதன் பின்னால் போய் ஒளிந்து கொள்வார்கள். அத்தோடு, சிறுபான்மை மத நிறுவனங்களும் தொண்டு எனும் பெயரில் வணிகத்தில் ஈடுபட்டு தம்மை அசைக்க முடியாத பொருளாதார, அரசியல் சக்திகளாக உருமாற்றிக் கொள்கிறார்கள். மக்களாட்சியில் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகிறார்கள். இது சமூகத்தை ஒரு போதும் விடுபட முடியாத சகதியில் தள்ளி விடுகிறது. மதம் என்பது மதமாக மட்டுமே இருப்பது, ஒரு மெய்யியல் விசாரணைக்கான இயக்கமாக மட்டுமே இருப்பது தான் ஆரோக்கியமானது.

 

https://uyirmmai.com/news/society/which-gives-the-space-to-the-origin-of-sivasankar-babas/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவர் போன்றவர்களின் வளர்ச்சி  என்பது

மக்களின் அறியாமையை நாடி  பிடிக்க  தெரிந்த வல்லமையில்  இருந்தே  தொடங்குகிறது

மக்கள் சின்ன  சின்ன  விடயங்களை  கூட நம்பும்  நிலையில் இருக்கையில்........

இவர் போன்றவர்கள் தோன்றிக்கொண்டே  தான்  இருப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரே பகிடிதான் ☺️.😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

உண்மையில் இவர் போன்றவர்களின் வளர்ச்சி  என்பது

மக்களின் அறியாமையை நாடி  பிடிக்க  தெரிந்த வல்லமையில்  இருந்தே  தொடங்குகிறது

மக்கள் சின்ன  சின்ன  விடயங்களை  கூட நம்பும்  நிலையில் இருக்கையில்........

இவர் போன்றவர்கள் தோன்றிக்கொண்டே  தான்  இருப்பார்கள்

அப்படி மக்களின் அறியாமையால் என்றில்லை என்று அபிலாஷ் (மேலுள்ள கட்டுரையில்) சொல்கின்றார்.

👇🏾

39 minutes ago, கிருபன் said:

நான் நாளை திருட்டு வழக்கில் கைதானால் என்னை என் நண்பர்கள் கூட வந்து பார்க்க மாட்டார்கள். ஆனால் நான் ஒரு சாமியாராக இருந்து கொலை வழக்கில், பல பெண்களை பலாத்கார செய்த வழக்கில் கைதானாலும், என் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் என்னைப் பார்ப்பதற்காக திரளுவார்கள். பக்தர்களின் இந்த பயங்கர குழப்பத்துக்கு காரணம் முழுக்க முழுக்க அத்வைத சிந்தனையே.

 

40 minutes ago, கிருபன் said:

நம்முடைய தேசமெங்கும் பரவியிருக்கும் அத்வைதம் இந்த பொய்யர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் நம்மைத் தடுக்கிறது. ஒருவன் பொதுவிடத்தில் ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டால் அவன் ஒரு பொறுக்கி என அந்த இடத்திலேயே முடிவு செய்து விடுவார்கள். அவன் என்னதான் உன்னதமான சிந்தனையாளன், பெரும் பணக்காரன், தியாகி, வள்ளல் என்றாலும் மக்களுக்கு இவ்விசயத்தில் குழப்பமே வராது. ஆனால் ஆன்மீகம் என்றதும் ஒரு குழப்பம் வந்து விடுகிறது – ஆன்மீகவாதி நான் அந்த ‘நோக்கத்தில்’ தொடவில்லை, ஒரு ஆசீர்வாதமாக, என்னுடள் நான் உணரும் ஆன்ம அதிர்வை கடத்திடவே அப்படி செய்தேன் என்றால் மக்களுக்கு ஒருவேளை இது உண்மையோ எனும் குழப்பம் வந்து விடும்.

 

அத்வைதம் என்றால் பிரம்மம் மட்டுமே உண்மை. ஏனையவை அத்தனையும் மாயை. 

துவைதம் என்றால் துவைத நிலையில் உயிர் பிரம்மம் ஆகிய இரண்டும் உண்மையே. அல்லது இறைவன் இவ்வுலகம் இரண்டும் உண்மையே. அத்வைத நிலையில் பிரம்மம் மட்டுமே உண்மை என்பதை மறக்கலாகாது.

விசிஷ்டாத்வைதம் ஒரு விஷேஷ அத்வைதம். அதாவது அத்வைதம் என்னும் கொள்கையோடு ஒரு விஷேஷத் தன்மை கொண்டது. இறைவனும் உயிரும் அல்லது இறைவனும் இயற்கை உலகும் இணைந்து மாற்றத்தோடு கூடிய அழிவற்ற நிலையில் உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள், நித்தியானந்தாவை புனிதர் ஆக்கிப்போட்டார்.

நித்தியானந்தர், வளர்ந்த பெண்களை தான் மேய்த்துக் கொண்டு திரியுறார்.

உந்த, காமாலை, பச்சை மண்ணுகளை, வதைத்து இருக்குது. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அப்படி மக்களின் அறியாமையால் என்றில்லை என்று அபிலாஷ் (மேலுள்ள கட்டுரையில்) சொல்கின்றார்.

👇🏾

 

 

அத்வைதம் என்றால் பிரம்மம் மட்டுமே உண்மை. ஏனையவை அத்தனையும் மாயை. 

துவைதம் என்றால் துவைத நிலையில் உயிர் பிரம்மம் ஆகிய இரண்டும் உண்மையே. அல்லது இறைவன் இவ்வுலகம் இரண்டும் உண்மையே. அத்வைத நிலையில் பிரம்மம் மட்டுமே உண்மை என்பதை மறக்கலாகாது.

விசிஷ்டாத்வைதம் ஒரு விஷேஷ அத்வைதம். அதாவது அத்வைதம் என்னும் கொள்கையோடு ஒரு விஷேஷத் தன்மை கொண்டது. இறைவனும் உயிரும் அல்லது இறைவனும் இயற்கை உலகும் இணைந்து மாற்றத்தோடு கூடிய அழிவற்ற நிலையில் உள்ளது.

 

ஐயோ குழப்புறீயளே....இதுதான் பிரச்சனை .....தெரியாத ,விளங்க முடியாத. புரியாத விடயங்களை மக்களுக்கு புகட்டுவதால் மக்கள் குழம்பி போய் இந்த போலிகளிடம் சரண் அடைகிறார்கள்🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.