Jump to content

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?


Recommended Posts

 

மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் கதை போல

அமெரிக்கா பசில் ராஜபக்ஷ ஊடாக தமிழர் தரப்புடன் இரகசியப் பேச்சு நகர்வா?

சுரேனும் சுமந்திரனும் முன்னோடி ஆலோசனையா? சுமந்திரன் மறுக்கிறார்
 
 
Sumanthiran-Suren-Namal
 
 
ஒரு வாரத்துக்கு முன்பதாக, கடந்த ஞாயிறன்று பரம இரகசிய இணையக் கூட்டமொன்றை பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை எனும் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூட்டினார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான திரு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் என்ன விடயம் பற்றியது தெரியுமா? அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் மறைமுக ஒழுங்கில் பசில் ராஜபக்ஷவுடன் தமிழர் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தி ஓர் உடன்பாட்டுக்கு வருவது தொடர்பானது. அதேவேளை இந்தியாவும் புலம்பெயர் சமூகத்துக்குள் 'மறுசீரமைப்பு' என்ற பெயரில் ஊடுருவுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
 
ஈழப்போரின் இறுதி முடிவாக இலங்கை அரசின் போர் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு மேற்குலகத்தை விடவும் இந்தியத் தரப்பினால் அழுத்தம் ஏற்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் இலங்கைத் தரப்புக்கு இருந்தது

 

மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'பிரதிநிதி'களுடனான அந்தக் கூட்டத்திலே கூட ஒருவர் மீது கணினித் தொடர்பு குறித்த ஐயம் ஏற்பட்டதால் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இவ்வாறான ஏதேனும் சந்திப்பில் அண்மையில் திரு சுமந்திரன் அவர்கள் பங்குபற்றியதை அவரிடமே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் அவரிடம் தொடர்புகொண்டு வினாவியபோது இந்த விதமான எந்தக் கூட்டத்திலும் தான் பங்குபெறவில்லை என்று அவர் கூர்மை ஆசிரிய பீடத்தவருக்குத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

அதேவேளை, இந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவராக விளங்கிய எஸ். ஜே. இமானுவல் அடிகளார் யாழ்ப்பாண மறைமாவட்டத்திலே தற்போது தங்கியிருக்கிறார். அவரிடமும் கூர்மை ஆசிரிய பீடம் தொடர்புகொண்டு அவரது பதவி குறித்து வினாவியபோது தான் அந்த அமைப்பில் இருந்து பதவி விலகிவிட்டதாகவும், அரசியற் சிக்கல்களுக்கு உள்ளாகத் தான் விரும்பவில்லை என்றும் மக்கள் சேவை என்பதில் மட்டுமே தனது கவனத்தைத் தான் தற்போது செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அடிகளாருக்குப் பின்னர் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பதவி இன்னமும் இட்டுநிரப்பப்படாது காலியாக இருப்பதாகவும் சுரேன் சுரேந்திரன் மாத்திரமே அதனை இயக்கிவருவதாகவும் அறிய முடிறது. அவரோடு சில விடயங்களைத் தெளிவுபடுத்தும் முகமாக தொடர்பு கொள்ள நாம் முயற்சி எடுத்தபோதும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

எனினும், ஆதாரபூர்வமாக அந்தச் சந்திப்பு ஒரு கணனியின் மூலையில் இருந்து பதிவுசெய்யப்பட்ட ஒளிப்பதிவு ஆதாரத்தை கூர்மையின் ஆசிரியபீடம் நேரடியாகப் பார்வையிட்ட பின்னரே இந்தக் கட்டுரை வரையப்படுகிறது.

கடந்த மாதம் திடுமென பசில் ராஜபக்ஷ கோவிட் பயண நெருக்கடிக்குள்ளும் அமெரிக்கா பயணமாகத் தயாராகிய வேளையில் இறுதிக்கணத்திலேயே அந்தப் பயண விடயம் அவரது சகோதரர்களான இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியவந்ததாகவும் இது குறித்து அவர்கள் ஓர் அவசர கூட்டத்தையே நடாத்தவேண்டியிருந்ததாகவும் கொழும்பில் வெளிவரும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் கசிந்திருந்தன. தனது வைத்தியம் தொடர்பான விடயமாகவே அவர் அமெரிக்காவுக்கு சகோதரர்களுக்கும் அறிவிக்காமல் பயணிக்க ஒழுங்கு செய்திருந்ததாகவும் குறித்த செய்திகள் சிலாகித்திருந்தன.

இதேவேளை ராஜபக்ஷ சகோதரர்களுக்கிடையில் மனக்கசப்புகள் தோன்றியிருப்பதான ஒரு தோற்றப்பாடும் பத்திரிகை உலகில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரர்களுக்கிடையே முரண் நிலை தோன்றியிருப்பதான ஒரு தோற்றப்பாட்டை வேண்டுமென்றே சில இராஜதந்திர நகர்வுகளுக்காக அவர்கள் உருவாக்கி அதைத் தென்னிலங்கை வட்டாரங்களும் நம்பும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார்களா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

ராஜபக்ஷ சகோதரகள் தமக்கு அரசியல் நெருக்கடிகள் தோன்றும் போது அமெரிக்காவுக்கு வைத்தியத்துக்காக பயணிப்பது முன்னரும் பல தடவைகள் நடந்திருக்கிறது என்பது நாம் அறியாத ஒன்றல்ல.

குறிப்பாக, 2009 இன அழிப்புப் போராக ஈழத்தமிழர்களால் குறிப்பிடப்படும் யுத்தகாலத்தின் இறுதி நாட்களில் தமிழர் தரப்புடன் தொடர்புடைய அரசியற் பிரமுகர்களுடன் பசில் ராஜபக்ஷ சில சமிக்ஞைகளைப் பரிமாறியதும் வாக்குறுதிகளை வழங்கியதும் அதேவேளை அச்சமிக்ஞைகளையும் வாக்குறுதிகளையும் நன்கு அறிந்திருந்த அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான அவரது இளைய சகோதரரின் உத்தரவு எப்படி இருந்தது என்பது தொடர்பான தகவல்களை இலங்கை இராணுவத் தரப்பின் தளபதியாக இருந்தவர்களும் சணல் நான்கு போன்ற சர்வதேச ஊடகங்களும் மனித உரிமைத் தரப்புகளும் 2009 இன் பின்னான சில வருடங்களுக்குள் ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தன.

அதேவேளை, ஈழப்போரின் இறுதி முடிவாக இலங்கை அரசின் போர் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு மேற்குலகத்தை விடவும் இந்தியத் தரப்பினால் அழுத்தம் ஏற்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் இலங்கைத் தரப்புக்கு இருந்தது. தமிழ் நாட்டின் ஊடாக காங்கிரஸ் ஆட்சி மீது ஏற்படக்கூடிய தேர்தல் கால அரசியல் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சவாலை கோட்டபாய ராஜபக்ஷவும் அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷவும் ஆழமாக உணர்ந்திருந்ததால் மூவர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை (troika) இந்தியாவுடனான தொடர்புக்காக பரஸ்பரம் இலங்கை அரசின் பிரேரிப்புக்கு அமைவாக இரண்டு நாடுகளும் நியமித்து மணித்தியால இடைவெளிகளுக்குள் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்தனர். இதுவே தமது போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது என்று அதற்குச் சாட்சியமான லலித் வீரதுங்க தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

அமெரிக்கப் பிரஜாவுரிமை கொண்ட அந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர் இலங்கைத்தீவிற்கு வந்து தனது முதிய வயதில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். இவர் முன்னை நாள் வடமாகாண ஆளுநராக விளங்கிய இலங்கை இராணுவத்தளபதியான ஜீ. ஏ. சந்திரசிறீ என்பவருக்கு ஆலோசகராகவும் 2013 காலகட்டத்தில் முன்னைய ராஜபக்ஷ அரசின்போது பங்காற்றியிருந்தார்

 

இதே கருத்தை கோட்டபாய ராஜபக்ஷவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதாவது போர்நிறுத்தம் ஒன்றை உருவாக்கும் படியான அழுத்தம் எங்கிருந்தாவது இலங்கை மீது வரும் ஆயின் அது இந்தியா ஊடாக வருவதற்கே சாத்தியம் அதிகம் என்றும் அதனால் இந்தியாவை சமாளித்து போரின் முடிவைத் தமக்கேற்ற வகையில் கட்டமைக்க இலங்கை அரசுக்கு இந்த துரொய்கா அவசியமாக இருந்தது.

இந்த மூவர் கொண்ட உயர்குழுவில் பசில் ராஜபக்ஷ தனது இரண்டு சகோதரர்கள் சார்பான ஆழமான விளக்கமுள்ளவராகப் பங்கேற்றார் என்று லலித் வீரதுங்கா எழுதியிருக்கிறார்.

ஆக, பசில் ராஜபக்ஷ தனது சகோதரர்களுக்காக சர்வதேச மற்றும் தமிழ் அரசியற் தொடர்புகளைப் பயன்படுத்துவதில் மிகவும் கைதேர்ந்தவர் என்பது தெளிவாகிறது. அதற்காக அவர் எந்த எல்லையையும் தொடக்கூடியவர்.

இந்தச் சூழலில் தான் தற்போது ஒரு மாதமாக அவர் அமெரிக்காவில் தங்கியிருப்பதும் இவ்வாறான இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்த அமெரிக்க-பிரித்தானிய தரப்புகள் முனைவதும் வெளிப்பட்டிருக்கிறது.

இலங்கைச் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்த நோர்வே போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறையின் முக்கிய அதிகாரிகளும் தமது பழைய தமிழ்த் தொடர்புகளை அண்மையில் புதுப்பித்து மீண்டும் 2015 நல்லிணக்க முயற்சி போன்ற ஒரு புதிய முயற்சிக்கான முத்தாய்ப்புகள் ஆரம்பிக்கவுள்ளதாக புலம் பெயர் தரப்புகளுக்கு அறியத் தந்ததாகவும் ஐரோப்பிய புலம்பெயர் வட்டாரங்கள் தெரிவித்தமையையும் இத்தோடு இணைத்து நோக்கவேண்டும்.

அதாவது, ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஏற்படுத்தப்படும் அழுத்தம் மீண்டும் ஒன்றரை வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டமை மூலம் இலங்கை அரசு மேற்குலகுடன் ஒரு பேரம் பேசலை நடாத்துவதற்கான கால எல்லையை நீடிப்பதற்கான வாய்ப்பை பிரித்தானியா தலைமையிலான கருக்குழு நாடுகள் ஏற்படுத்தியிருந்தன.

இந்தச் சூழலில், சீனாவுடனான பொருளாதார ஒப்பந்தங்களை ஒருபுறம் தீவிரமாக ஏற்படுத்தி, இந்தியாவை விடவும் மேற்குலகுடன் நேரடியாக ஒரு பேரம் பேசலை மேற்கொள்ளும் நோக்கில் ராஜபக்ஷ சகோதரர்கள் இயங்கவேண்டிய சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, புதிய மறைமுகப் பேச்சுவார்த்தைக்கான நகர்வு என்பது மிகவும் ஆழமான அவதானத்துடன் நோக்கப்படவேண்டியது.

இந்தப் போக்கிலேயே இரண்டு விடயங்களை நாம் கூர்மையாக நோக்கவேண்டியிருக்கிறது.

முதலாவது, மேற்குலக நாடுகள் தமது முன்னைய பாணியில் புலம் பெயர் தமிழ் அமைப்புகளை உலகத் தமிழர் பேரவை ஊடாகவே அணுக முயல்வது என்பது.

இரண்டாவது, இந்தியா, தனது மாநிலங்களுக்குள் வந்து தங்கியிருக்கும் முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களதும் புலிகளது மறைமுக முன்னாட் செயற்பாட்டாளர்கள் மூலமாகவும் புலம் பெயர் அமைப்புகளைத் தமது வியூகத்துக்குள் தமிழ்த் தேசியம் என்ற மாயத் தோற்றுப்பாட்டின் ஊடாக மறுசீரமைத்து வியூகப்படுத்தி வருகின்றமை என்ற விடயமாகும்.

உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு பிரித்தானியாவில் 2009 நவம்பரில் பதியப்பட்டு இயங்கிவருகின்ற ஒரு அமைப்பு. ஆனால், பிரித்தானிய தமிழர் பேரவை என்று மக்களால் அறியப்பட்ட அமைப்பில் இருந்தே அது உருவாகி இருந்தது.

தற்போது அமெரிக்க அரசுடன் பேச்சுக்களை நடாத்தவேண்டும் என்ற முனைப்பில் உலகத் தமிழர் பேரவை செயற்படும் அதேவேளை, மறுசீரமைக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பு அமெரிக்காவில் பதியப்பட்டுவருகிறது. இந்த அணியில் இந்தியத் தொடர்புள்ள ஒரு சில புலம் பெயர் அமைப்புகள் பங்கெடுத்துள்ளன. இவை தமிழ்த் தேசியம் தமிழ் உரிமை பேசும் அமைப்புகளாகவும் தமிழ் இன அழிப்புக்கான நியாயம் கோரும் போக்கையும் கொண்டுள்ளன. எனினும் இந்த முயற்சியின் மூலக்கயிறு எங்குள்ளது என்பது இன்னும் தெளிவாகப் புரியவில்லை. ஆனால், பரந்தன் இராஜன் தொடர்புகள், தமிழ்நாட்டில் உள்ள சில முன்னாள் வன்னி மாஸ்டர்களின் தொடர்புகள் உள்ள நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.

கரட்டும் குச்சியும் (carrot-and-stick) என்ற தந்திரோபாயத்தை இலங்கைத் தீவின் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் அரசை நோக்கி மேற்குலகும் இந்தியாவும் இணைந்தும் தனித்தனியாகவும் தீவிரப்படுத்தியிருக்கின்றன என்பது வெள்ளிடைமலை.

அதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசும் விடாப்பிடியான சீனசார்புப் போக்கை மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் காட்டி மிரட்டுவதன் ஊடாக ஆழமான ஆபத்துக் கலந்த - ஆனால் துணிகரமான - பேரம்பேசலுக்கான அடிப்படைகளைச் செதுக்கிவந்துள்ளது (இதை அறியாத தமிழர் தரப்பு ஆய்வாளர்கள் பலர் இலங்கை அரசு சீனாவிடம் இருந்து மீள முடியாத பிடிக்குள் ஏற்கனவே சென்று விட்டதாக முன்கூட்டியே முடிவெடுத்த நிலையில் தமது கருத்துகளை வெளியிட்டு தமிழர் தரப்பைத் தவறாக வழிநடாத்திவருவது கவலைக்குரியது).

 

வெளிச்சக்திகளின் தலையீட்டால் தமது ஸ்ரீலங்கா இறைமை பங்கமடைந்தாலும் ஈழத்தமிழர் உரிமை பெற்றவர்களாகவோ பேரம் பேசுபவர்களாகவோ அரசியற் சம அந்தஸ்தை எட்டிவிடக் கூடாது என்பதில் தென்னிலங்கைப் பேரினவாதச் சக்திகள் கவனமாயிருக்கும் என்பது கண்கூடான ஒன்று மட்டுமல்ல வரலாற்று உண்மையும் கூட

 

தென்னிலங்கை, மேற்குலம் மற்றும் இந்தியத் தரப்பின் செயற்பாடுகளை மேலெழுந்தவாரியாக அன்றி, ஆழமான முறையில் கூர்மையாக நோக்கவேண்டும். இந்தவகையில் கோட்டாபய எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.

இந்தியாவுடன் அல்ல, அமெரிக்காவுடன், அதாவது பைடன் நிர்வாகத்துடன், தான் ஒரு நேரடியான புரிந்துணர்வை அடுத்த ஜெனீவா மைல் கல்லுக்கு முன்னதாக (15 மாதங்களுக்குள்) எட்டிவிடவேண்டும் என்ற அடிப்படை நோக்குடன் சீனாவின் பட்டை ஒன்று பாதை ஒன்று (One Belt One Road / Belt and Road Initiative) திட்டத்தின் ஊடாக தனது பொருளாதார ரீதியான உறவுகளைச் சீனாவுடன் பலப்படுத்தி, மேற்குலகு மற்றும் இந்தியாவின் கரட்டும் குச்சியும் அணுகுமுறையைத் தனது பெயரளவிலான அணிசேரா அணுகுமுறை என்பதனூடாக இந்தோ-பசிபிக் பாதுகாப்பு என்ற புள்ளியில் ஓர் அச்சநிலையை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் தோற்றுவித்து, ஈழத்தமிழர் மற்றும் மனித உரிமை தொடர்பான சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசை நிரந்தரமாக விடுவித்துக்கொள்ளும் அணுகுமுறையை அவர் எடுத்திருக்கிறார் என்பது ஊகிக்கப்படக்கூடிய ஒன்று.

வெளிச்சக்திகளின் தலையீட்டால் தமது ஸ்ரீலங்கா இறைமை பங்கமடைந்தாலும் ஈழத்தமிழர் உரிமை பெற்றவர்களாகவோ பேரம் பேசுபவர்களாகவோ அரசியற் சம அந்தஸ்தை எட்டிவிடக் கூடாது என்பதில் தென்னிலங்கைப் பேரினவாதச் சக்திகள் கவனமாயிருக்கும் என்பது கண்கூடான ஒன்று மட்டுமல்ல வரலாற்று உண்மையும் கூட.

இந்த அடிப்படையில் தான், இலங்கையில் இனங்களுக்கிடையான நல்லிணக்கம் என்பது தீவின் மீதான பெரும்பான்மையின் முதன்மைத் தன்மையையும் ஏகத்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்களாக, சிறுபான்மையாகத் தமிழர்கள் தம்மைக் கருதி, பெரும்பான்மையின் காருண்யத்தில் தங்கியிருக்கும் ஒரு சமூகமாகத் தங்களைத் தாங்களே கட்டமைத்துக் கொள்வதன் மூலமே எட்டப்படக்கூடியது என்ற நிலைப்பாட்டை மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் தென்னிலங்கைத் தரப்புகள் புகட்டிவந்துள்ளன.

இதையே இலங்கை தொடர்பான மெய்-அரசியல் (realpolitik) உண்மை என்று சிங்களப் பெருந்தேசியவாதம் மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல இணக்க அரசியலில் ஈடுபடும் தமிழர் தரப்புகளுக்கும் உணர்த்துவதில் முனைப்புக் காட்டிவருகிறது.

இந்த அடிப்படையிலேயே உள்ளகமாய்ப் பிறக்கும் தீர்வு (home-grown solution) என்ற சொற்பிரயோகத்தை ராஜபக்ஷ தரப்பினர் தமது முன்னைய ஆட்சியிலும் சரி தற்போதைய ஆட்சியிலும் சரி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த உள்ளகமாய்ப் பிறக்கும் தீர்வுக்கு புலம் பெயர் ஈழத்தமிழர் மத்தியில் காணப்படும் தமிழ்த் தேசிய அரசியல்-வெளியே (diaspora political space) முதன்மையான ஆபத்தாக தென்னிலங்கைப் பேரினவாதிகளுக்குத் தெரிகிறது.

அதிலும் குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் ஒற்றுமையான ஒன்றிணைந்த ஒரு தலைமை இல்லாதிருப்பது இலங்கை அரசுக்கும் மேற்கு மற்றும் இந்தியத் தரப்புகளுக்கும் தான் பெரும் கவலையாக இருக்கிறது. இந்த உண்மையையும் தமிழர் தரப்பு இன்னமும் சரிவர அறிந்துகொள்ளவில்லை.

ஒன்றிணைந்த தலைமை ஒன்று இருந்தால் அதை ஒரேயடியாக வளைத்துப் போட்டுவிடலாம்.

ஒன்றிணைந்த கூட்டாக புலம்பெயர் சமூகம் இல்லாதபடியால் அதை வளைத்துப் போடுவது மேற்குலகுக்கும் இந்தியாவுக்கும் பெருத்த சவாலாகவும் சிரமமானதாகவும் புலம்பெயர்க் களநிலைமை காட்சியளிக்கிறது.

இது தொடர்பான தனது ஐயங்களை இலங்கைத் தரப்பும் இந்தியாவுக்கும் மேற்குலகுக்கும் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருக்கும் என்பதையும் நாம் ஊகிக்கலாம்.

இதே நிலைதான் தற்போது இலங்கைத் தீவுக்குள்ளும் பாராளுமன்ற அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.

தமிழர் தரப்பை, குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இலங்கையில் வந்து சந்திக்கும் இந்தியத் தரப்பு ஏனைய தமிழ்த் தேசியத் தளத்தில் தேர்வாகியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்ததாக ஒன்றிணைந்த வகையில் தம்மை அணுகுமாறு வலியுறுத்திவருவதன் மூலமும் இந்தப் போக்கை நாம் காணமுடிகிறது.

புலம்பெயர் ஈழத்தமிழர் ஒன்றிணைந்த கட்டமைப்பாக இல்லாவிடினும் கருத்து ரீதியில் அவர்களின் பெரும்பான்மை ஒன்றியைந்திருக்கும் தன்மை நிலவுவதை இந்தச் சக்திகள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளன.

இதனால், புலம்பெயர் அமைப்புகளை தனித்தனியாகவும் வேறு வேறு குழுமங்கள் என்ற ரீதியிலும் அணுகி, அவற்றை தமிழ் நாட்டிலுள்ள ஈழத்தமிழ் வழிகாட்டிகள் ஊடாக வளைத்துப் போட்டு தேவையான இடத்தில் அந்த அமைப்புகளிடையே ஒன்றிணைந்த தன்மையை உருவாக்கும் முயற்சிகளில் இந்திய மத்திய உளவு மற்றும் இராஜதந்திர அமைப்புகள் அண்மைக்காலத்தில் தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்க-பிரித்தானிய தரப்புகளும் அதேபோன்ற கைங்கரியங்களில் ஈடுபட்டுவருகின்றன.

புலம்பெயர் அமைப்புகள் ஊடாகவே தாயகத்திலும் சில போக்குகளைத் தீர்மானிக்க இயலும் என்று இந்தச் சக்திகள் விளங்கிக்கொண்டுள்ளன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட நகர்வை ஆரம்பிப்பதிலும் நெறிப்படுத்துவதிலும் இந்தியாவின் வகிபாகம் இந்த அடிப்படையிலேயே இருந்தது. எனினும் போராட்டத்தின் முடிவில் அது தமிழ்த் தேசிய நீரோட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது என்பது வேறு ஒரு சுருக்கமான கதை.

தற்காலிக உற்சாகம் தரும் சுருக்கமான கதைகளை விட அவற்றின் தொடர்கதை கொண்டுவரும் ஆபத்துக் குறித்தே தமிழர் தரப்பு அவதானமாக இருக்கவேண்டும். தமிழர்கள் அவ்வப்போது சுருக்கமான உற்சாக பானங்களை அருந்துவது குறித்து வெளிச்சக்திகள் பெருமளவு அலட்டிக்கொள்வதில்லை. அவற்றைப் பொறுத்தவரை எதைப் பயன்படுத்தி எதை அடையலாம் என்பதே முக்கியமானது.

2009 இன அழிப்புப் போரின் முடிவிற்குப் பின்னர் பதின் நான்கு புலம் பெயர் அமைப்புகளின் பேரவையாக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் பேரவை (Global Tamil Forum, GTF) என்ற அமைப்பு தனது பேரவைத் தன்மையை உருவாக்கப்பட்ட சிலவருடங்களுக்குள்ளேயே இழந்துவிட்டிருந்தது.

பின்னாளில், பெயரளவில் உலகத்தமிழர் பேரவை என்று இயங்கினாலும் ஒரு பேரவைக்குரிய தன்மைகளைக் கொண்டிராத வெறும் குறியீட்டு அறிக்கை அமைப்பாகவே சுரேன் சுரேந்திரன் என்பவரால் இயக்கப்படும் இந்த அமைப்பு இயங்கிவந்திருக்கிறது என்பது பல புலம் பெயர் தமிழ்ச்செயற்பாட்டாளர்களின் கருத்து.

இந்த அமைப்புடன் இயைந்த போக்கைக் கொண்ட ஒரு சில அமைப்புகளே புலம்பெயர் சூழலில் தற்போது உள்ளன. அவையும் ஜனநாயக, மற்றும் தமிழ்த்தேசியத் தன்மைகள் அருகிப்போயுள்ள அமைப்புகளாகவே காணப்படுகின்றன.

தனிநபர்களாக இலங்கைத்தீவில் தமது சொத்துகளையும் முதலீடுகளையும் எதிர்காலத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிற சந்தர்ப்பவாத - ஆனால் தமிழ்தேசிய முகமூடி அணிந்த - நபர்கள் தனிப்பட்ட குழுமங்களாக ஆங்காங்கே இந்தக் குழுவோடு கைகோத்துள்ளனர்.

ஈழத்தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் இருந்து விடுபட்டு மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு இணைவான ஓர் இணக்க அரசியலை இந்த அமைப்பும் இதன் சிநேக அமைப்புகளும் தழுவிக்கொண்டுள்ளன.

உலகத்தமிழர் பேரவை உருவாகுவதற்குக் காரணமான பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamil Forum, BTF) எனும் அமைப்பும் தனது செல்வாக்கை கணிசமாக இழந்திருக்கிறது. எனினும் தமிழ்த்தேசிய அடிப்படைகளில் இருந்து அச்சு விலகிவிடாத ஒரு நிலைப்பாட்டை அது வெளிப்படுத்திவருகிறது. அது மட்டுமல்ல, பிரித்தானிய தமிழர் பேரவையானது உலகத் தமிழர் பேரவை என்ற இந்தப் பெயரளவு அமைப்போடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதும் இல்லை. அப்படியிருந்தபோதும் தனது அங்கத்துவ அமைப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்தும் இருந்துவருவதான ஒரு பாவலாவை உலகத்தமிழர் பேரவை வெளிச்சக்திகளுக்கு அவ்வப்போது காட்டிவந்திருக்கிறது.

 

சீனாவுடனான பொருளாதார ஒப்பந்தங்களை ஒருபுறம் தீவிரமாக ஏற்படுத்தி, இந்தியாவை விடவும் மேற்குலகுடன் நேரடியாக ஒரு பேரம் பேசலை மேற்கொள்ளும் நோக்கில் ராஜபக்ஷ சகோதரர்கள் இயங்கவேண்டிய சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது

 

பெரும்பான்மைத் தமிழ்த் தேசிய ஓட்டத்திலிருந்து அச்சுவிலகியிருக்கும் இந்தப் புலம்பெயர் குழுவானது அமெரிக்க மற்றும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சுகளின் நிகழ்ச்சிநிரலுக்கு ஒத்திசைந்து செயற்பட்டுவருகிறது. குறிப்பாக, இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் மேற்குலம் இலங்கைத் தீவு தொடர்பான தனது கேந்திரத் தேவைகளை ஒட்டிய பேரம்பேசலை மேற்கொள்ளும்போது ஈழத்தமிழர்களை இலங்கை ஒற்றையாட்சியின் தற்கால அல்லது எதிர்கால ஆட்சியாளர்களுடன் இணக்க அரசியலுக்குப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளில் தமிழர் சார்பான எந்தவிதப் பேரம்பேசல்களும் இல்லாமல் பிற சக்திகளின் நலன்களுக்குப் பறிபோகும் அரசியலை முன்னெடுக்கும் ஒரு குழுவாகவே இது இயங்கிவருகிறது.

ஈழத்தமிழர்களை இணக்க அரசியலுக்கு உட்படுத்தி தமிழ்த்தேசிய அடிப்படைகளைப் பலவீனமாக்கும் வேலைத்திட்டங்களுக்குப் பலிபோகும் இந்த அமைப்பின் முதலாவது தலைவராக அமெரிக்காவில் புலம்பெயர்ந்திருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராகச் செயற்பட்ட கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் என்பவர் 2009 ஓகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் 5 மாதங்கள் செயற்பட்டார்.

இவரை இலங்கையில் தேர்தலில் பங்குபற்றி புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான இணக்க அரசியலை முன்னெடுக்குமாறு அமெரிக்கத் தரப்பு ஆலோசனை வழங்கியது. இதனை அறிந்துகொண்ட அப்போதைய பேரவையின் உறுப்பு அமைப்புகள் அவரைப் பேரவையில் இருந்து விலகிக்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தன. அதன் பின்னர் எதிர் என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பிரஜாவுரிமை கொண்ட அந்தப் புலம்பெயர் செயற்பாட்டாளர் இலங்கைத்தீவிற்கு வந்து தனது முதிய வயதில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருகிறார். இவர் முன்னை நாள் வடமாகாண ஆளுநராக விளங்கிய இலங்கை இராணுவத்தளபதியான ஜீ. ஏ. சந்திரசிறீ என்பவருக்கு ஆலோசகராகவும் 2013 காலகட்டத்தில் முன்னைய ராஜபக்ஷ அரசின்போது பங்காற்றியிருந்தார்.

எதிரின் பின்னர் உலகத்தமிழர் பேரவைக்கு முற்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன், குறிப்பாக அதன் தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவரும் நீண்ட கால மனித உரிமைச் செயற்பாட்டளராக விளங்கியவருமான எஸ். ஜே. இமானுவல் அடிகளார் நியமிக்கப்பட்டார்.

நீண்ட காலமாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல்கொடுத்துவந்த இமானுவல் அடிகளார் உலகத் தமிழர் பேரவைக்குத் தலைவராக இருந்தபோதும் சுரேன் சுரேந்திரன் என்பவரே அதன் அரசியலைத் தீர்மானிப்பவராக இருந்துவந்தார். இதன் தொடர்ச்சியாக இமானுவல் அடிகளாரும் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானார். தற்போது தனது முதிய வயதில் தீவுக்குத் திரும்பியிருக்கும் அவர் யாழ் மேற்றிராணியாரின் அலுவலகத்தில் வதிந்துவருகிறார். மக்களுக்குச் சேவை செய்வதில் மட்டும் தான் தற்போது நாட்டம் செலுத்துவதாக அவர் கூர்மைக்குத் தெரிவித்தார்.

உலகத்தமிழர் பேரவையானது அமெரிக்க, பிரித்தானிய, தென்னாபிரிக்க மற்றும் இந்திய சக்திகளுடன் இணக்க அரசியலை ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்தும் மேற்கொண்டுவருகிறது. இதனால், இலங்கைத்தீவில் இயங்கும் ஆங்கிலப் பத்திரிகைகள் அடிக்கடி உலகத் தமிழர் பேரவையின், குறிப்பாக சுரேன் சுரேந்திரனின் நேர்காணல்களை அவ்வப்போது முக்கியத்தும் கொடுத்து பிரசுரித்துவருகின்றன. இதனாலே தனது குறியீட்டு முக்கியத்துவத்தை பலம் பொருந்த மற்றைய புலம் பெயர் அமைப்புகளையும் விஞ்சியதாக ஊடகப் பரப்பில் உலகத் தமிழர் பேரவை பேணிவருவதில் வெற்றி கண்டிருக்கிறது.

இந்த அமைப்பின் செயற்பாடு குறித்த பலத்த விமர்சனங்களின் பின்னர் பல புலம்பெயர் அமைப்புகள் இதிலிருந்து தமது வருடாந்த உறுப்புரிமைக் கட்டணத்தைச் செலுத்தாமல் விலகிக்கொண்டன.

எனினும், நல்லிணக்க ஆட்சி என்ற பெயரில் 2015 இல் மேற்குலகினதும் இந்தியாவினதும் உந்துதலினால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம் என்ற நிகழ்ச்சிநிரலுக்குப் பின்னால் அணிவகுப்பதில் மங்கள சமரவீரவுடன் ஒத்துழைத்து ரணில் விக்கிரமசிங்ஹா, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்கா ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட ஆரம்பித்த 2013க்குப் பின்னான காலகட்டத்தில் அதே நிகழ்ச்சிநிரலில் புலம்பெயர் சூழலில் இதே உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு செயற்பட்டிருந்தது.

தமிழ் உரிமைகளுக்காக சர்வதேசத் தளத்தில் ஓங்கிக் குரல்கொடுத்திருக்கக்கூடிய எதிர் மற்றும் இமானுவேல் அடிகளார் போன்றவர்களை இலங்கைத் தீவிற்குள் தமது முதிர்ந்த வயதில் ஒதுக்கிவிட்டுள்ள அரசியல் என்பது இலங்கை ஆளும் தரப்புக்கு கிடைத்த அரசியற் புலனாய்வு மற்றும் இராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படவேண்டியது என்று ஐரோப்பிய தளத்தில் செயற்பட்டுவரும் மனித உரிமை மற்றும் அரசியற் செயற்பாடு சார்ந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்கு இவ்வாரம் தெரிவித்தன.

நல்லிணக்க ஆட்சி தனது நம்பகத்தன்மையை முழுமையாக இழந்தபோது இந்த உலகத்தமிழர் பேரவை தமிழ்த்தேசியப் பரப்பில் இருந்து தற்காலிகமாகக் காணாமற்போய்விட்டிருந்தது.

எனினும், மீண்டும் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு இணக்க அரசியலுக்கான பின்கதவுகள் தட்டப்படுகின்ற சூழலில் புலம்பெயர் சூழலில் தூசி தட்டப்பட்டு மீண்டும் இந்த அமைப்பு களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பைடன் ஆட்சிமாற்றம் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் சூழலில் ஒபாமா மற்றும் ஹிலரி கிளின்ரன் காலத்து அமெரிக்க இராஜதந்திர வட்டாரங்களில் தனக்கிருந்த தொடர்புகளை மீண்டும் புதுப்பித்து இலங்கை அரசு மீது ஜெனீவாவில் ஏற்படுத்தப்பட்டுவரும் அழுத்த அரசியல் என்ற நாணயத்தின் மறுபக்கமான இணக்க அரசியலுக்கு பயன்படும் அரசியல் வெளியை இந்த அமைப்புத் தேடிப்பிடித்திருக்கிறது என்பது புலனாகிறது. இந்த அரசியல் வெளிக்குள் பிரித்தானியாவும் 2002 சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட வடதுருவ நாடான நோர்வே போன்றவையும் தென்னாபிரிக்க தரப்புகளும் அமெரிக்காவின் நெருங்கிய இந்தோ-பசுபிக் பங்காளிகளான இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற தரப்புகளும் பின்னிப்பிணைந்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த அமைப்பு கடந்த மே மாதம் ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்ட தருணம் வெளியிட்ட தனது ஆங்கில அறிக்கையில் தமிழர் சமூகமும் தனது முன்னைய அரசியல் வரலாறு சார்ந்த வெற்றிகளையும் தோல்விகளையும் ஆழமாக மீள்தரிசனம் செய்து தமிழர் பெயரில் முற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் மற்றைய சமூகங்கள் அனுபவித்த துன்பங்களையும் துயரங்களையும் ஒப்புக்கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை வழங்கியிருந்தது (Tamil community also need to reflect deeply - its political history and its successes and failures - and acknowledge the pain and suffering endured by all communities due to actions carried out on behalf of them).

அது மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திலும் இலங்கைத் தீவுக்குள்ளும் தற்போதுள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் கணக்கிலெடுத்து தீவுக்குள் உள்ள அனைத்து சமூகங்களிடையே தீர்மானிக்கவல்ல பங்காளிகளாயுள்ள சக்திகளுடனும் சர்வதேச சமூகத்தில் ஆளுமைபெற்றுள்ள பங்காளிகளுடனும் நடைமுறைக்கேற்ற சாத்தியமான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான தமிழர் வேணவாக்களை நிறைவுசெய்யும் நோக்குடனான ஆதாயங்களைப் பெற்றுக்கொள்ள முன்வருவது கடந்த கால நினைவேந்தலுக்கு கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்துக்கு ஒப்பானது என்ற கருத்தையும் வலியுறுத்தியிருந்தது. இந்த அறிக்கையைக் கொழும்பில் வெளிவரும் தி ஐலண்ட் எனும் ஆங்கிலப் பத்திரிகை சுரேன் சுரேந்திரினின் படத்தோடு தனிக்கட்டுரையாக வெளியிட்டிருந்தது (It is important that the Tamil community remains conscious and sensitive to the immense suffering and sacrifices made by large sections of our community during the decades-long struggle. Equally important is that the Tamil people and their leaders take stock of the challenges and opportunities in the present political climate and act strategically by forming partnerships with stakeholders across all communities in Sri Lanka and in the international community. The importance and urgency of securing pragmatic and tangible gains, with the objective of fulfilling the political and economic aspirations of the Tamil people, cannot be overstated).

இதற்கு ஒப்பான ஒரு கருத்தையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு முக்கிய பேச்சாளரான திரு சுமந்திரன் அவர்களும் வெளியிட்டிருந்தார். தமிழ் மக்களின் தியாகங்களை மட்டுமல்ல இலங்கை இராணுவத்தினர் உள்ளிட்ட உயிரிழப்புகளையும் நினைவு கூருவதான காலமாக முள்ளிவாய்க்கால் நினைவுநாளைத் தான் நோக்குவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமல்ல, தென்னிலங்கைச் சக்திளுடன் தமிழர்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய உரிமைகள் தொடர்பான புரிதலை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சக்திகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் அல்லது இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற தோரணையில் சர்வதேச நாடுகளுக்கோ அல்லது இந்தியாவுக்கோ விஜயங்களை மேற்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விண்ணப்பங்களை முன்வைக்கும் அரசியலை மேற்கொள்ளக்கூடாது என்றும் தீவுக்குள்ளேயே எவ்வாறு தமிழர் அரசியலை தென்னிலங்கைப் பங்காளிகளுடன் மேற்கொள்வது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரிசனை காட்டுவதே தமது ஒளியியற் பார்வை என்றும் சுமந்திரன் அவர்கள் வெளிப்படையாகவே கூறிவந்திருக்கிறார்.

உரிமை சார்ந்த கட்சியாக தந்தை செல்வாவினாலும் வ. நவரத்தினம் அவர்களாலும் உருவாக்கப்பட்டு வளர்ந்த கட்சியான தமிழரசுக் கட்சி 2009 இன் பின்னர் கைக்கொண்டிருக்கும் பிறழ்வு அரசியல் ஆங்கில மொழியில் இவர்கள் வெளிப்படுத்தும் அறிக்கைகளில் அப்பட்டமாகத் தென்படுகிறது.

 

இலங்கைத் தீவிற்குள்ளும் வெளியேயும் சர்வதேசச் சக்திகளால் முன்னெடுக்கப்படும் இணக்க அரசியலும் உரிமை அரசியல் போலத் தோற்றமளிக்கும் ஏமாளி அல்லது மாற்று அரசியலும் ஈழத்தமிழர்களின் உரிமை அரசியலை மென்று தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றன

 

ஆனால், மேலோட்டமாக செய்திகளை வெளியிட்டுவரும் தமிழ் ஊடகங்களின் கண்களுக்கும் வெறும் பிரதியாக்கம் செய்யும் (copy-paste reporting) ஊடகங்களுக்கும் இவையெல்லாம் தென்படுவதில்லை. தமிழ்த் தேசிய்க்கூட்டமைப்புக்கு தாங்களே மாற்று என்று மார்தட்டிக்கொள்ளும் கட்சிகளும் உன்னிப்பாக நோக்கவேண்டிய இவ்வாறான அரசியற்போக்குகளை தவறவிட்டுவிடுகின்றன.

சிதறுண்டிருக்கும் தமிழர் தரப்புகளை ஒருபுறம் மேற்குலகும் மறுபுறம் இந்தியாவும் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திவிட்டு எறிந்துவிட்டுச் செல்லும் சூழ்நிலையே மீண்டும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மறைபொருளாக மறைந்திருக்கும் சிலர், குறிப்பாக பி.ஜே.பியின் ஆர். எஸ். எஸ், இந்திய வெளிவிவகார உளவுப் பிரிவு மற்றும் புது தில்லியின் தென் கட்டிடத் தொகுதி (South Block) விற்பன்னர்களின் தொடர்புடன் இயங்கும் முன்னாள் வன்னி 'மாஸ்டர்'கள் சிலரின் தொடர்புகளால் நெறிப்படுத்தப்படும் புலம் பெயர்க் குழுக்கள் ஊடாக தமிழ்த் தேசியக் கோரிக்கைகளை முன்வைத்து 'மறுசீரமைக்கப்பட்ட' அமைப்புகளை புலம்பெயர் சூழலில் உருவாக்குவதில் தீவிரம் காட்டுவதாக புலம்பெயர் அவதானிகள் கருதுகின்றனர்.

பரந்தன் ராஜன் குழுவினரும் இந்த விடயங்களில் முஸ்தீபு காட்டிவருவதையும் இவ்வாறான குழுக்களால் உருவாக்கப்படும் 'மறுசீரமைக்கப்பட்ட' அமைப்புகளில் ஒன்றாகத் தற்போது அமெரிக்காவில் பதியப்பட்டுவரும் ‘மறுசீரமைக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை’ (RGTF) அமைந்திருக்கும் ஆபத்து இருப்பதாகவும் அந்த முயற்சியில் பங்கேற்றிருக்கும் அமைப்புகளின் நெறிப்படுத்துநர்களை கூர்மையாக ஆராய்ந்துவரும் அரசியல் அவதானிகள் சிலர் எச்சரித்துள்ளனர்.

இந்தப் புலம் பெயர் போக்குகளை நோக்கும் போது 'இரண்டு கிராமங்களைத் தின்ற ஆடு' என்று தமிழ் மலரில் நாம் படித்த சிறுவர் கதையே நினைவுக்கு வருகிறது.

ஆக, இலங்கைத் தீவிற்குள்ளும் வெளியேயும் சர்வதேசச் சக்திகளால் முன்னெடுக்கப்படும் இணக்க அரசியலும் உரிமை அரசியல் போலத் தோற்றமளிக்கும் ஏமாளி அல்லது மாற்று அரசியலும் ஈழத்தமிழர்களின் உரிமை அரசியலை மென்று தின்று ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை உள்ளும் வெளியிலுமான தமிழர் தரப்புகள் உணர்ந்து செயற்பட இனியாவது முன்வரவேண்டும்.

https://www.koormai.com/pathivu.html?vakai=4&therivu=1797&fbclid=IwAR1EDorvTYXXuYF8H2XRnCw-meFQlgWK3OXgjI-978LZOvusWN3N6oRbztE

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.