Jump to content

இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும்

-என்.கே.  அஷோக்பரன்

அண்மையில் வௌிவந்த, இரண்டு இந்திய சலனச் சித்திரப் படைப்புகள், புலத்தில் வாழும், அதைவிடக் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதில், முதலாவது அமேஸன் ப்ரைம் தளத்தில் வௌியான ‘ஃபமிலி மான்’  தொடரின் இரண்டாவது பகுதி. அடுத்தது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வௌிவந்த ‘ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படம்.
இந்திய சினிமாவில் ஈழத்தமிழர்களும் ஈழத்தமிழர் பிரச்சினையும் கையாளப்படுவது இது முதன் முறையல்ல; அதுபோல, இது கடைசிமுறையாகவும் இருக்கப்போவதில்லை. 

ஆனால், ஒவ்வொரு முறையும், ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர்களின் அரசியலையும் ஈழத்தமிழர் பிரச்சினையையும் காட்சிப்படுத்தும் போது, இந்திய சினிமா, ஈழத்தமிழர்களுக்கு பெரும் அநீதி இழைப்பதான உணர்வு, பல ஈழத் தமிழர்கள் இடையே எழுந்துவிடுகிறது. 

“சினிமாவைச் சினிமாவாகப் பாருங்கள்; அது, பொழுதுபோக்கு மட்டும்தான்” என்று சொல்லி, இதை அமைதியாகக் கடந்து செல்லக் கூறும் அறிவுரைகள், தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் இடையேயும் எழுவதையும் அவதானிக்கலாம். அதில் ஒருவகை நியாயமும் தென்படலாம். 

ஆனால், கலையும் எழுத்தும் பேச்சும் மனித இனத்தை ஆளும் மிகப் பலமான ஆயுதங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஒன்று, உலகமெங்கும் வாழும் தமிழர்களை, ஆளும் கலையாக, சினிமாவே இருக்கிறது. தென்னிந்திய தமிழ்ச் சினிமா மொழி, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்களின் மொழிப் பயன்பாட்டில், இன்று தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது, தமிழ்ச் சினிமா கொண்டுள்ள ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. 

ஆகவே, அத்தகைய ஆதிக்கம் மிக்கதொரு கலைவடிவம், ஒருவகையான கருத்தியலை முன்னிறுத்தும் போது, அது அந்த மனிதக் கூட்டத்தினிடையே செல்வாக்கைப் பெறுவதாகவும் மற்றைய மனிதக் கூட்டங்களிடையே, குறிப்பிட்ட அந்த மனிதக் கூட்டத்தைப் பற்றி, அறிமுக அடையாளமாகவும் மாறிவிடுகிறது. 

இந்த அடிப்படையில்தான், ஈழத் தமிழர்கள் பற்றிய இந்தியப் படைப்புகள் மீதான, ஈழத் தமிழர்களின் அதிருப்தியும் எதிர்ப்பும் எழுவதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மறுபுறத்தில், இந்தியப் படைப்புகள் என இந்தப் படைப்புகளை ஒரே வகைக்குள் அடக்குதலும் பொருத்தமானதல்ல. மேற்கூறிய இரண்டு உதாரண படைப்புகளை எடுத்துக்கொண்டால் கூட, அவற்றின் படைப்பாளிகள், அவை பேசும் அரசியல், அந்தப் படைப்புக்கான நோக்கங்கள் ஆகியன வேறுபட்டவை. ஆகவே, இவையும் வெவ்வேறாக நோக்கப்பட வேண்டியவை. 

இதற்குள் குறைந்தபட்சம் மூன்று வகையான படைப்புகளை நாம் அடையாளம் காணலாம். குறித்ததொரு திரைப்படைப்பில், ஈழத் தமிழர்களைப் பற்றிய வௌிப்படுத்தல்களையும் ஈழத் தமிழ் கதாபாத்திரங்களையும் கொண்ட படைப்புகள் ஒருவகை. கமலஹாசன் நடித்த ‘தெனாலி’, சூர்யா நடித்த ‘நந்தா’, மாதவன் நடித்த ‘நளதமயந்தி’ உள்ளிட்ட படைப்புகள், இந்த வகையைச் சார்ந்தவை. 
இவற்றில், ஈழத்துத் தமிழ் என்று கருதி, இவர்கள் பேச முயற்சித்த மொழி பற்றிய விமர்சனங்களைத் தாண்டி, பெருமளவான அரசியல் முக்கியத்துவம் இவற்றுக்குக் கிடையாது. இத்தனை வருடங்கள் கடந்தும், தென்னிந்திய தமிழ் சினிமாவால், ஈழத்தமிழை முறையாக உச்சரிக்கக் கூட முடியாதிருப்பது, ஒரு புரியாத புதிர்தான்.

இரண்டாவது வகை, ஈழத் தமிழர் அரசியலை அல்லது இலங்கையில் நடந்த போராட்டத்தைத் தொட்டுச் செல்லும் திரைப்படங்கள். ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை இந்த வகைக்குள் உள்ளடக்கலாம். அடிப்படையில், இது ஒரு தாதாக்கள் பற்றிய திரைப்படம் (ganster film). இரண்டு தாதாக்களிடையேயான கருத்தியல் வேறுபாடாக, ‘வந்தேறுகுடிகள்’ எதிர் ‘பூர்வக் குடிகள்’ என்பது முன்வைக்கப்படுகிறது. 

இங்கிலாந்தை மையப்படுத்திய கதைக்கு வசதியாக, இங்கிலாந்தில் அகதிகளாகக் குடியேறிய ஈழத் தமிழர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் கதையை எடுத்துக்கொண்டால், இங்கு ஈழத் தமிழர்களுக்குப் பதிலாக, போரால் பாதிக்கப்பட்டு, மேற்கு நாடுகளில் அகதிகளாகக் குடியேறிய வேறு எந்த இனமும் சித்திரிக்கப்பட்டு, இந்தக் கதை படம்பிடிக்கப்பட்டிருக்க முடியும். ஏனென்றால், கதைக்குத் தேவைப்படுவது, வேறுநாட்டிலிருந்து போரால் பாதிக்கப்பட்டு, எப்படியோ தப்பி வந்து, மேற்கில் அகதிகளாகக் குடியேறி, அங்கு கஷ்டப்பட்டு உழைக்கும் ஓர் இனக்கூட்டம் ஆகும். 

அதை எதிர்க்கும் பூர்வக்குடி அமைப்பு; அந்த எதிர்ப்பை முறியடிக்கும் நாயகன். இந்த வகை திரைப்படங்களில், உண்மைக்கு மாறான காட்சிப்படுத்தல்கள் பற்றிய பிரச்சினைகள் எழுந்தாலன்றி, இவற்றின் அரசியல் தாக்கம், முக்கியத்துவம் பெருமளவுக்கு இல்லை. 

ஆனால், மூன்றாவது வகையைச் சார்ந்த படைப்புகள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், அவை அரசியல் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசும் படைப்புகளாக அமைகின்றன. அதனால்தான், அவை பிரச்சினைக்கு உரியவையாகவும் சிக்கலானவையாகவும் கருதப்படுகின்றன என்பதோடு, கடும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளாகின்றன. இந்த வகைக்குள் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படமும் ‘ஃபமிலி மான் 2’ திரைப்படமும் வருகின்றன. 

இந்த இந்தியப் படைப்புகளிடையே, ஓர் ஒற்றுமையை நாம் அவதானிக்கலாம். இவை இந்திய தேசியவாதத்தை முன்னிறுத்தும், இந்திய அரசின் நலன் மையப் பார்வையை முன்னிறுத்தும் அரசியலை, நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தமாகச் சொல்லும் படைப்புகள் ஆகின்றன. 

அவை முன்னிறுத்தும் அரசியலுக்கும் கருத்தியலுக்கும் முரணானவற்றைப் பிழையானதாகச் சித்திரிக்கின்றன. அதனைச் செய்வதற்கு, அவை பாதி உண்மைகளை மட்டுமல்ல, பொய்களையும் பொய்யான கற்பனைகளையும் பயன்படுத்துகின்றன. இந்த இடத்தில்தான், அவற்றுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் தலைதூக்குகின்றன. 

இந்திய அரசாங்கத்துக்குத் தேவையான பகடைக் காய்களாக, ஈழத்தமிழர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘இலங்கை’ என்ற இந்தப் பூகோள தந்திரோபாயம் மிக்க தீவில், இந்தியா தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள, வசதியான துருப்புச் சீட்டு ஈழத்தமிழர்களும் இலங்கையின் இனப்பிரச்சினையும்தான். அதேவேளை, ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வு, இந்தியாவுக்குக் கடத்தப்படுவதை இந்திய தேசியவாதம் விரும்புவதில்லை. அது, இந்திய நலன்களுக்கு விரோதமானது என்று, இந்திய தேசியவாதம் கருதுவதாக நாம் ஊகிக்கலாம். 

ஆகவே, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் ஒன்றிணைவை, இந்திய தேசியவாதம் ஐயத்துடனேயே அணுகியது. ராஜீவ் காந்தியின் படுகொலையுடன், ஈழத்தமிழர்களின் விடுதலை உணர்வு, இந்தியாவுக்குக் கடத்தப்படுவதைத் தவிர்க்க, ஒரு புறநிலை தார்மிக நியாயப்படுத்தல் (objective moral justification) கிடைத்தது; அதுதான் பயங்கரவாதம். 

ஒரு மக்கள் கூட்டத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதுதான், அந்த மக்கள் கூட்டத்தை ஏனையோர் அச்சத்துடன் அணுகச்செய்வதற்கும், அந்த மக்கள் கூட்டத்தின் அரசியலை, சட்டவிரோதமாக்குதவற்கு அல்லது, நம்பகத்தன்மை அற்றதாக்குவதற்கான இலகுவான குறுக்கு வழியாகும். 

இந்த மூன்றாவது வகையிலான படைப்புகள், இதைத்தான் செய்கின்றன என்பதுதான், ஈழத்தமிழர்கள் பலரும் இவற்றை விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்குமான அடிப்படைக் காரணம் ஆகும். நிற்க!

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்தியப் படைப்புகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்று அவர்களால் கட்டளையிட முடியாது. அதுபோலவே, கற்பனைகளைத் தணிக்கை செய்வது, இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான ஏற்புடைய வழிமுறையும் அல்ல. 

படைப்பது ஒருவரது சுதந்திரம் என்றால், அதற்கான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைப்பது, மற்றவருடைய சுதந்திரம். ஆனால், வெறும் எதிர்ப்போடும் விமர்சனத்தோடும் நின்றுவிடாது, மாற்றுப் படைப்புகளை முன்வைப்பதுதான், நீண்டகாலத்தில் பயனுள்ள தீர்வாக அமையும். 

இந்த இடத்தில்தான், ஈழத் தமிழ் திரைப்படத் துறையின் மறுமலர்ச்சி பற்றி, ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சாத்தியப்படக் கூடியதே!

படைப்பு, மக்களைக் கவர்வதாக அமைகின்ற போது, அது அனைவரையும் வெற்றிகரமாகச் சென்றடையக்கூடிய, திறந்த வாய்ப்புகள் உள்ள ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மாற்றுப்படைப்புகள்தான் கருத்தியல் சமநிலையை உருவாக்குவதற்கான முதற்படி. அதுபற்றிப் பேசுதல், சிந்தித்தல், முயற்சிகளை முன்னெடுத்தல் என்பனதான் பயன்தருவன.

கார்த்திக் சுப்பராஜ், தனது வசனத்தில் எழுதியதுபோல, “இலங்கைல போர்னா, என்ன கொடுமைடானு உச்சு கொட்டீட்டு, அடுத்த வேலையப் பார்க்கிற கூட்டங்க நாங்க... எனக்கெப்டீங்க இதெல்லாம் புரியும்... எப்டீங்க இதெல்லாம் ஒறைக்கும்” என்பதாகத்தான், ஈழத்தமிழர்கள் பற்றிய இரக்கம் மிகுந்த தமிழக உறவுகளின் நிலையே இருக்கிறது. 

ஆகவே, இந்திய சினிமாவில், ஈழத் தமிழர்களைப் பற்றிய முழுமையான புரிதல் மிக்க படைப்புகளை வழங்கவேண்டும் என்று எண்ணுவது அதீத எதிர்பார்ப்பாகவே அமையும். அவர்கள் விசுவாசமாக, அதை முயன்றாலும் கூட, அது கடினமானதே! ஆகவேதான், தனக்கான குரலாகத் தானே இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

‘தொப்புள் கொடி உறவுக்கு’ என்று ஒரு தார்ப்பரியம் இருக்கிறது. தொப்புள்கொடி என்பது, பிறந்தவுடன் வெட்டிவிடப்படும் ஒன்று. அது, இருந்ததற்கான அடையாளம் மட்டும் இருக்கும். பாசம் இருக்கலாம்; பற்றும் இருக்கலாம். ஆனால், தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு; அதுதான் யதார்த்தம்!
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-சினிமாவும்-ஈழத்தமிழர்களும்/91-274639

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//தென்னிந்திய தமிழ் சினிமாவால், ஈழத்தமிழை முறையாக உச்சரிக்கக் கூட முடியாதிருப்பது, ஒரு புரியாத புதிர்தான்.//

- உண்மைதான், ஆனால் இந்திய தமிழ் சினிமா, தொலைகாட்சி சீரியல்கள், சிறுவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்து அவர்களைப்போல கதைக்கும் ஈழதமிழர்களை காணக்கூடியதாக இருக்கும். 

//உலகமெங்கும் வாழும் தமிழர்களை, ஆளும் கலையாக, சினிமாவே இருக்கிறது. தென்னிந்திய தமிழ்ச் சினிமா மொழி, ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் தமிழர்களின் மொழிப் பயன்பாட்டில், இன்று தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது என்பது, தமிழ்ச் சினிமா கொண்டுள்ள ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. //

- அந்த ஆதிக்கத்தை கொடுத்தது பார்வையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பணத்தை கொடுப்பவர்கள்.. இவர்களுள் ஈழத்தமிழர்களும் அடங்குவார்கள்.. இந்த ஈழத்தமிழர்கள் இதை உணர்ந்து விலகதொடங்கினால் தென்னிந்திய சினிமாவும் எங்களை ஆதிக்கம் செலுத்தாது.. ஆனால் பெயருக்கும் புகழுக்கும் போட்டிக்கும் இடையில் சிக்கி எங்களுடைய ஈழத்தமிழ் தொழிலதிபர்கள் தொடங்கி சாதராண மனிதர்கள் வரை இதற்குள் போகிறார்கள்.. 

 

//ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்தியப் படைப்புகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்று அவர்களால் கட்டளையிட முடியாது. அதுபோலவே, கற்பனைகளைத் தணிக்கை செய்வது, இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான ஏற்புடைய வழிமுறையும் அல்ல. 

படைப்பது ஒருவரது சுதந்திரம் என்றால், அதற்கான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் முன்வைப்பது, மற்றவருடைய சுதந்திரம். ஆனால், வெறும் எதிர்ப்போடும் விமர்சனத்தோடும் நின்றுவிடாது, மாற்றுப் படைப்புகளை முன்வைப்பதுதான், நீண்டகாலத்தில் பயனுள்ள தீர்வாக அமையும். 

இந்த இடத்தில்தான், ஈழத் தமிழ் திரைப்படத் துறையின் மறுமலர்ச்சி பற்றி, ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது புலத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சாத்தியப்படக் கூடியதே!

படைப்பு, மக்களைக் கவர்வதாக அமைகின்ற போது, அது அனைவரையும் வெற்றிகரமாகச்சென்றடையக்கூடிய, திறந்த வாய்ப்புகள் உள்ள ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மாற்றுப்படைப்புகள்தான் கருத்தியல் சமநிலையை உருவாக்குவதற்கான முதற்படி. அதுபற்றிப் பேசுதல், சிந்தித்தல், முயற்சிகளை முன்னெடுத்தல் என்பனதான் பயன்தருவன//

- உண்மைதான்..ஆனால் இன்னமும் பணத்தை கொண்டே, பொன்னியின் செல்வனிற்கும், இந்திய இசைகலைஞர்களை பூப்புனித நீராட்டு விழா, திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கும் அழைத்தும், இந்தமாதிரி படங்களை எடுத்தும் அவர்களை வளர்த்துவிடுவேமே தவிர வேறுவிதமாக யோசிக்கமாட்டோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.