Jump to content

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   

இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்.   

இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.   

இலங்கையை இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தாரைவார்த்தாலும் சீனாவை இலங்கையில் அனுமதிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்.   

இவ்வாறு, சீனா குறித்த பல கருத்துகளை நாளும் நாம் கேட்கவும் வாசிக்கவும் கிடைக்கிறது. இங்கு மூன்று கேள்விகள் எழுகின்றன.   

முதலாவது, நாம் சீனாவை விளங்கி இருக்கிறோமா?   

இரண்டாவது, ஏற்கெனவே இருக்கின்ற சட்டகங்களின் வழி, சீனாவை விளங்கிக் கொள்ளவியலுமா?   

மூன்றாவது, சீனாவுக்கு நாம் எவ்வாறு எதை எப்போது வினையாற்றுவது?  

இந்த மூன்று கேள்விகளையும் சற்று விரிவாக, பகுதிகளாக ஆராயும் முயற்சியின் தொடக்கமிது.   

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறித்து, இலங்கையின் முதன்மையான அரசறிவியலாளரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட, “இலங்கையில் சீனாவின் அதிகரிக்கும் கரிசனை, அரசியலை விடப் பொருளாதார நோக்கங்களை அதிகமாகக் கொண்டது. சீனா பொருளாதார தர்க்கத்தின் (economic logic) அடிப்படையிலேயே செயற்படுகிறது. அதனடிப்படையில் அது இலங்கையில் அதிகளவான பொருளாதார மூலதனத்தை விரும்புகிறது. இலங்கையர்கள், அமெரிக்க கண்ணுடன் சீனாவைப் பார்க்கக்கூடாது. சீனாவை வில்லனாக்குவது அதிகளவில் இடம்பெறுகிறது. சீனாவை வில்லனாகச் சித்திரிப்பது அமெரிக்காவின் புதிய கெடுபிடிப்போரின் வெளிப்பாடு. சீனாவுடனான இந்தியாவின் முரண்பாடு இதன் ஒரு பகுதியே” என்று கூறுகின்றார்.   

பேராசிரியர் உயன்கொட, சில முக்கியமானதும் ஆழமானதுமான செய்திகளை இங்கே சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.   

மாஓ சேதுங் தனது வழிகாட்டலில் முன்னகர்த்திய சீனாவுக்கும் அவரது மறைவுக்குப் பின்னர், டென்சியோபிங் முன்னெடுத்த முதலாளித்துவத்தை நோக்கிய பொருளாதார அரசியல் மாதிரியில் அமைந்த சீனாவுக்கும் வேறுபாடுகள் அதிகம். இந்த வேறுபாட்டை உணராதவர்கள் தான், இன்னமும் ‘சோசலிச சீனா’ என்று சொல்கிறார்கள்.   

சீனாவின் வரலாற்றின் முக்கிய அம்சம், 1949ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட புரட்சியாகும். உலக வரலாற்றில் ரஷ்ய புரட்சிக்குப் பின்னரான அதிமுக்கிய அரசியல் நிகழ்வு சீனப் புரட்சியாகும்.   

1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அந்நிய ஆட்சியைத் தூக்கியெறித்து நிகழ்த்திய சீன விடுதலைப் பிரகடனம், சீனாவின் விடுதலையை மட்டுமன்றிக் கொலனி ஆட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் வருவதற்கிருந்த விடுதலை எழுச்சிகளையும் எடுத்துரைப்பதாக அமைந்தது.   

சீனா பற்றிய தகவல் திரிபு, இந்தியாவில் 1961ஆம் ஆண்டு முதல் தீவிரமாக இருந்து வந்துள்ளது. சீனாவிலிருந்து வெளிவருகிற நூல்கள், சஞ்சிகைகள் மீது தடை இருந்து வந்துள்ளது. இவை, அண்மைக் காலங்களில் கணிசமான நெகிழ்வுக்கு உட்பட்டாலும் சீனாவைப் பகைமையாக நோக்குகிற போக்குக்குப் பின்னால், இந்திய மேலாதிக்க நிறுவனமும் இப்போது அமெரிக்காவுடனான நெருக்கமும் பெரிய காரணங்களாக உள்ளன.   

இந்தப் போக்கு, ஈழத்தில் தமிழர்கள் மத்தியிலும் இருந்தது. இந்தியாவின் கண்களின் ஊடாக, சீனாவைப் பார்க்கும் போக்கின் விளைவு இது. ஈழத்தில் தமிழ்த் தேசியவாதிகளிடையே, சீன எதிர்ப்புக்கு முக்கியமான காரணம் இத்தேசியவாதிகளின் சமூகநீதி மறுப்பையும் உயர்வர்க்க நடைமுறைகளையும் எதிர்த்தும் அம்பலப்படுத்தியும் வந்தவர்கள் இடதுசாரிகளாவர்.   

கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜக் கட்சியும் சீரழிந்து போன பிறகு, ‘சீன சார்பு’ கம்யூனிஸ்ட்டுகள் எனப்பட்டோரே, இலங்கையின் வடக்கில் காத்திரமான இடதுசாரிகளாக இருந்தனர். இதுவே தமிழ்த் தேசியவாதிகளுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்தது. 1960கள் தொட்டு, தமிழர்களிடையே சீனவிரோதம் தீவிரமாகப் பரப்பப்பட்டது.   

இதில் கவனிக்கத்தக்க விடயமொன்றுண்டு. சீனா ஏகாதிபத்திய எதிர்ப்பின் அதி முக்கியமான சக்தியாக இருந்த 1960களிலும் 1970களிலும் தமிழ்த் தேசியவாதிகளின் சீன எதிர்ப்பு, மிகத் தீவிரமாக இருந்தது. அந்த எதிர்ப்பை நாம், அவர்களது ஏகாதிபத்தியச் சார்பான பார்வையிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. அது, உலகின் சகல கொலனிய எதிர்ப்புப் போராட்டங்களிலும் அக்கறையின்மையாக வெளிப்பட்டது.   

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான போரட்டங்களைக் கம்யூனிச வன்முறையாகவும் அமைதியைக் குலைக்கும் கலவரங்களாகவும் அது காண முற்பட்டது. உலகின் எந்த மூலையில் நடந்த விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க முன்வராத தமிழ்த் தேசியவாதம் சீனாவிலும் சோவியத் யூனியனிலும் கிளறிவிடப்பட்ட கலவரங்களை மெச்சத்தவறியதில்லை. உலகின் பல நாடுகளில் நடந்த விடுதலைப்போராட்டங்களை அங்கிகரிக்காத ஆதரவு வழங்காத வரலாறு தமிழ்த் தேசியவாதிகளின் வரலாறு.   

சீனாவை விளங்குவதற்கு சீனாவின் அயலுறவுக் கொள்கைகளை விளங்குவது பிரதானமானது. அதன்வழியே சீனாவின் நடத்தையை விளங்கிக் கொள்ள முடியும். சீனாவின் அயலறலுக் கொள்கை சீனப் புரட்சியைத் தொடர்ந்து 1950களில் ஐந்து அடிப்படைகளில் உருவாக்கப்பட்டது. 

1.நாடுகளது இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பரஸ்பரம் மதித்தல்
2. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை 
3. ஒருநாடு மற்றதன் உள் அலுவல்களில் தலையிடாமை 
4. சமத்துவமும் பரஸ்பர நன்மையும் 
5. சமாதானமாக உடனிருத்தல்   

இவையே சீனாவின் அயலுறவுக் கொள்கைகளைக் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இந்த அணுகுமுறை, மேற்குலக நாடுகளினதும் இந்தியாவினதும் அணுகுமுறையிலிருந்து மிகவும் வேறுபட்டது.   

இன்று, சீனா சோசலிசத்திலிருந்து நகர்ந்துவிட்டபோதும் இதன் அம்சங்களே இன்றும் சீனாவை வழிநடத்துகின்றன. இவ்வடிப்படைகளே கெடுபிடிப்போர் உச்சமடையத் தொடங்கியதன் பின்னர், உருவான மூன்றாவது அணியான அணிசேரா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச உறவுகளுக்கான அடிப்படையாயிற்று.  

இங்கு கவனிக்க வேண்டியது, சீனாவின் அயல் உறவுகளின் தன்மை கடந்த கால் நூற்றாண்டுக்குள் சீனாவின் பொருளாதாரம் கண்ட பெரும் மாற்றத்தாலும் அதன் விளைவான பெரிய ஆனால் சமனற்ற வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 

சீனா இன்று எண்ணெய் உட்பட பல்வேறு மூலப் பெருட்களின் உற்பத்தியின் மீது தங்கியுள்ளது. அதை விடச், சீனாவின் வணிக நிறுவனங்கள் மூன்றாமுலக நாடுகளில் பெருமளவில் அளவில் முதலீடுகளைச் செய்துள்ளன. எனவே சீனாவுக்குத் தனது அயல் வணிகத்தையும் முதலீடுகளையும் காப்பாற்றும் ஒரு நிர்ப்பந்தம் உள்ளது. இன்றுவரை சீனா இராணுவ முறையில் அதைக் கையாள முற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவ்வகையில் அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையில் இருந்து சீனா வேறுபட்டு நிற்கிறது.   

இலங்கையுடனான சீனாவின் உறவு மிக நீண்டதும் முக்கியமானதுமாகும். கொரியப் போரின் போது அமெரிக்கா சீனாவுக்கு எதிரான வணிகத் தடையை விதித்திருந்த நிலையில் அதை மீறி, இலங்கையின் அன்றைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க சீனாவுடன் ‘அரிசி- இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’ ஒன்றை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1952ஆம் ஆண்டு செய்து கொண்டது. 

இலங்கைக்கு மிகவும் சாதகமான முறையில் சீனா வாங்கும் விலையை உலகச் சந்தையை விடக் கூடுதலாகவும் இலங்கை வாங்கும் விலையைக் குறைவாகவும் நிர்ணயித்தது. இதன் பலன்களை இருபதாண்டுகளுக்கு மேலாக இலங்கை அனுபவித்தது. இதுவே இலங்கை-சீன நட்புறவின் அத்திவாரமாகியது. இன்றுவரை இலங்கை செய்துகொண்ட வர்த்தக உடன்படிக்கைகளில் இலங்கைக்கு மிகுந்த பயன்விளைவித்ததும் நீண்டகாலம் நிலைத்ததுமான உடன்படிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த உடன்படிக்கையையொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள் இலங்கை வரலாற்றை அறிய விரும்புபவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எஸ்.பி. அமரசிங்கம் எழுதிய ‘Rice and Rubber: The Story of China-Ceylon Trade’ இது குறித்த விரிவான தகவல்களைத் தருகிறது.   

(அடுத்தவாரம் தொடரும்)
https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையில்-சீனா-விளங்கிக்-கொள்ளலும்-வினையாற்றலும்/91-276240

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் - 02

-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வதாயின், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவின் அடிப்படையையும் அதன் நீட்சியாக, சீனாவின் அயலுறவுக் கொள்கை எவ்வாறானதாக அமைந்து வந்திருக்கிறது என்பதையும் நோக்குவது அவசியம். 

கடந்தவாரம், சீனாவின் அயலுறவுக் கொள்கையின் அடிப்படைகள் என்ன என்பதையும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை உறுதிபட வைத்த ‘அரிசி, இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’ பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, 1950களிலும் 1960களிலும் சீனாவின் அயலுறவு நடத்தை பற்றிய பார்வை முக்கியமானது. அதிலும் குறிப்பாக, இந்தியாவுடனான உறவு முக்கியமானது.  

சீனாவின் அயலுறவுக் கொள்கை, தொடர்ச்சியாக இந்தியாவினதோ அமெரிக்காவினதோ கொள்கைகளில் இருந்து மிகவும் வேறுபட்டதாக இருந்து வந்திருக்கின்றது. இந்த வேறுபாட்டை, சீனப் புரட்சியின் பின்னரான முதல் மூன்று தசாப்தங்களில் அதன் நடத்தையினூடு அவதானிக்கலாம். 

கொலனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றை மையப்படுத்திய விடுதலைப் போராட்டங்களை, சீனா நிபந்தனையின்றி ஆதரித்து வந்தது. அதேவேளை, தான் ஆதரித்த விடுதலைப் போராட்டம் வெற்றிபெற்ற பின்னர், யார் ஆட்சி அமைக்கவேண்டும் என்று எங்கேயும் எவரையும் வற்புறுத்தியதில்லை. இதை, பங்களாதேஷிலும் இலங்கையிலும் இந்திய நடத்தையுடன் ஒப்பிட்டால், முக்கியமான வேறுபாடுகள் விளங்கும். 

அதேபோல, எந்தச் சுதந்திர நாட்டினதும் இறைமையை மதித்தே, சீனா நடந்து வந்தது. எந்த நாட்டிலும் ‘ஆட்சி மாற்றம்’ ஒன்றைச் சீனா பரிந்துரைத்ததில்லை; அதற்கான காரியங்களில் இறங்கியதுமில்லை. இதை அமெரிக்காவின் கடந்த அரைநூற்றாண்டு கால அயற்கொள்கையுடன் ஒப்பிடுவது தகும். 

1949ஆம் ஆண்டு சீன விடுதலையின் போது ஹொங்கொங், மக்காவ் ஆகிய கரையோரப் பகுதிகள் முறையே பிரித்தானியாவிடமும் போர்த்துக்கல்லிடமும் இருந்தன. சீனா அவற்றை விடுவிக்க அவசரப்படவுமில்லை; அதற்காகப் போர்தொடுக்க முயலவுமில்லை. அப்பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே, சீன அணுகுமுறையாக இருந்தது. 

ஏழு நூற்றாண்டுகளாகச் சீனாவின் பிரதேசமாக இருந்து வந்துள்ள திபெத் மீது, சென்ற நூற்றாண்டு முதல், பிரித்தானியாவுக்கு இருந்துவந்த விருப்பு இரகசியமல்ல. பிரித்தானிய கொலனிய விஸ்தரிப்பு வாதிகளது அணுகுமுறையைப் பின்பற்றிய இந்திய ஆட்சியாளர்கள், திபெத்தைப் தமது பூரண செல்வாக்குக்கு உட்படுத்த விரும்பினர். இதுவே, சீன -  இந்திய நல்லுறவின் சிதைவுக்குத் தொடக்க காரணமாயிற்று. 

சீனாவும் இந்தியாவும் உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடுகள். கொலனி ஆட்சியில் இருந்து இந்தியாவும் அயல் ஆதிக்கத்திலிருந்தும் பிரபுத்துவத்திலிருந்தும் சீனாவும் பெற்ற விடுதலைகள், கொலனி ஆட்சியிலிருந்து விடுபட்ட நாடுகளுக்கும் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த நாடுகளுக்கும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தன. 1950களில் விருத்திபெற்ற இந்திய-சீன நட்பும் அணிசேரா நாடுகளின் உருவாக்கமும் அந்நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்தின. ஆனால், பின்னர் இந்திய-சீன உறவில் ஏற்பட்ட கசப்பு, நம்பிக்கைகளின் தளர்வுக்கும் முன்னாள் கொலனி ஆதிக்க நாடுகளின் களிப்புக்கும் காரணமாயின.

spacer.png


பிரித்தானிய கொலனி ஆட்சி, பல நாடுகளுக்கு இடையில் விட்டுச் சென்ற எல்லைப் பிரச்சினைகள் போல், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாக்கிய பிரச்சினையை இரு நாடுகளும் தீர்க்கத் தவறியமை, இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை மோதல்களுக்கும் ஈற்றில் 1962இல் ஓர் எல்லைப் போருக்கும் காரணமானது. அதன் விளைவுகளிலிருந்து, இரு நாடுகளும் இந்து சமுத்திரப் பிராந்தியமும் இன்னமும் விடுபடவில்லை. இவ்விடத்தில், ஒரு விடயத்தை நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது. இந்திய-சீனப் பகையாகத் தெரிவதன் அடிவேரெனச் சிலர் கருதும் எல்லைப் பிரச்சினையையும் போரையும், திறந்த மனதுடன் விசாரிக்கும் தேவை நமக்குண்டு. 

எல்லைத் தகராறைப் பேசித் தீர்த்திருக்க இயலாதா? போரைத் தவிர்த்திருக்க இயலாதா? மோதல்களும் போரும் ஏன் தவிர்க்கப்படவில்லை? இவை இரு நாடுகளின் மக்களும் விசாரிக்க வேண்டிய உண்மைகள் மட்டுமல்ல, இப்பிராந்திய மக்கள் அனைவரும் அறிந்து, அக்கறை காட்டவேண்டிய உண்மைகள் ஆகும்.

இந்தப் பிரச்சினை தொடர்பான உண்மைகள், தொடர்ச்சியாக மறைக்கப்பட்டு வந்துள்ளன. இது குறித்து ஆய்வாளரான ஏ.ஜி. நூரானி, சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய India-China war: A true story என்ற கட்டுரை வாசிக்கத் தகுந்தது. அதில், அவர் சுட்டிக் காட்டுகின்ற ஓர் அம்சம், ‘அந்தப் போர், இந்தியாவின் போர் அம்சத்தை விட, இராஜதந்திர அம்சத்தைப் பற்றிய பல விடயங்களைச் சொல்கின்றன. பேசித் தீர்த்திருக்கக்கூடிய பிரச்சினை ஒன்றைப் போரால் தீர்ப்பதென்ற நேருவின் முடிவு, இந்திய அயலுறவுக் கொள்கையின் மனநிலையைக் காட்டுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதே மனநிலை இன்னமும் இந்திய அயலுறவுக் கொள்கையை ஆளுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சீனாவுக்கு ஏனைய நாடுகளுடன் முரண்பாடுகள் இருந்துள்ளன. ஆனால், அவை தீர்க்கவியலாத பகையாக மாறாத வண்ணம், அதன் அயலுறவுக் கொள்கை இருந்துவருகிறது. மிகவும் நெருக்கடியான காலத்தில்கூட, அயலுறவுக் கொள்கை அடிப்படைகள் தக்கவைக்கப்பட்டுள்ளன. 

உதாரணமாக, 1968 இல் செக்கோஸ்லாவாக்கியா மீதான சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பை, சீனா வன்மையாகக் கண்டித்தது. தத்துவார்த்த ரீதியில் சோசலிசத்துக்கான பாதை பற்றிய விவாதத்தின் விளைவான, சீனாவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான முரண்பாடு, 1961 இல் முற்றிய பின்னணியில், சீனாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை, சோவியத் ஒன்றியம் எடுத்த போதும், 1969 வரை இராணுவ மோதல் நிகழவில்லை. 

சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பை விமர்சிப்பதில், சீனாவின் நிலைப்பாடு மூன்றாமுலகிலும் வரவேற்பைப் பெற்றது. அதன் விளைவாகவே சீனாவின் வடக்கு எல்லையில் உள்ள வுசூலி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு தீவைப் பற்றிய தகராறை, சோவியத் ஒன்றிய அரசாங்கம், சீனாவுக்கு எதிரான தாக்குதலுக்கு ஒரு வசதியாக்கியது. இம்மோதல் மூலம் சீனா, சோவியத் ஒன்றிய உறவு மேலும் முறுகலுக்கு உள்ளானது.

இதேபோலவே, ஹோசிமின் காலத்தில் மிக நெருக்கமாயிருந்த சீனா-வியட்நாம் உறவு, 1970இல் சோவியத் ஒன்றிய சார்பாளர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்பு குறிப்பாக, 1975 இல் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்ட பின்பு, வியட்நாமில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கு வலுப்பட்டது. 

அதுமட்டுமன்றி, தென்கிழக்காசியாவில் சீனச் செல்வாக்கைத் தடுக்கின்ற விதமாக, வியட்நாமைப் பயன்படுத்த சோவியத் ஒன்றியம் முற்பட்டது. வியட்நாமியப் படைகள், கம்போடியாவுக்குள் நுழைந்தமை அதில் நடுப்பகுதியாகும். இப்பின்னணியில் 1978 இல் சீன - வியட்நாமிய மோதல் ஒன்று நிகழ்ந்தது. 

இந்த இரண்டு உதாரணங்களும் சொல்கின்ற யதார்த்த அரசியல்  யாதெனில், போரை முதன்மைப்படுத்தாத, விரும்பாத அயலுறவுக் கொள்கையில் கூட, சில சந்தர்ப்பங்களில் போர் தவிர்க்க முடியாதாகி விடுகிறது. ஆனால், அப்போரிலிருந்து சுமூகமான உறவுக்கு எவ்வாறு மீள்வது என்பது, அயலுறவுக் கொள்கையிலும் அதன் நடைமுறைப்படுத்தலிலும் தங்கியுள்ளது. இவ்விடயத்தில், சீனா கவனமான நடந்துள்ளது. 

எந்த மோதலும், நிரந்தரமாக நீடித்த எல்லை மோதலாகாமல் கவனித்துக் கொள்ளப்பட்டதோடு, அவை குறுகிய காலத்திலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. அதைவிடச் சீனாவை அண்டியுள்ள பாகிஸ்தான், மியான்மார், கொரியா, வியட்நாம், லாரஸ், தாய்லாந்து, மொங்கோலியா, ரஷ்யா உட்பட்ட எல்லா நாடுகளுடனும் தரை எல்லைகள் பற்றிய முரண்பாட்டைச் சுமூகமாகவே தீர்த்துள்ளது எனலாம்.

1976இல் மாவோவின் மறைவைத் தொடர்ந்து, முதலாளித்துவப் பாதையில் சீனா நடக்கத் தொடங்கியது. இது சீனாவின் உள்ளார்ந்த சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலியது. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு அவை அப்போது நடைமுறையில் இருந்த சீனாவின் அயலுறலுக் கொள்கையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. 

அதேவேளை, 1978இல் இலங்கையில் ஏற்பட்ட பாரிய அயலுறவுக் கொள்கை மாற்றம், முழுமையான அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை, இலங்கை எடுக்க வழிகோலியது. இது சீனாவை ஒருபுறமும் இந்தியாவை மறுபுறமுமாக எதிர்த்தது. 

இலங்கையின் அமெரிக்கச் சார்பு நிலைப்பாடும் திறந்த பொருளாதாரக் கொள்கையின் அறிமுகமும் சீன-இலங்கை உறவில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தின. இதில் முக்கியமானது, 1952 முதல் இருந்து வந்த ‘அரிசி, இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை ஆகும். 

spacer.png

அரிசி உற்பத்தியில், இலங்கை தன்னிறைவு அடைந்துவிட்டது என்ற காரணம் காட்டப்பட்டு, 1982இல் அது நிறைவுறுத்தப்பட்டது. அதேயாண்டு, இலங்கையில் இனமுரண்பாட்டின் புதிய அத்தியாயம் தொடங்கியது. 

இருநாடுகளுக்கும் இடையிலான ‘அரிசி - இறப்பர் வர்த்தக உடன்படிக்கை’யை சாத்தியமாக்கிய ஆர்.ஜி. சேனாநாயக்க, இதுதரப்புப் பேச்சுவார்த்தை குறித்து அமைச்சரவைக்கு வழங்கிய குறிப்பில், சீனாவின் நடத்தை குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்:‘சீனத் தரப்பு குறித்த உடன்படிக்கை பற்றிப் பேரம்பேசுவதில் அக்கறை காட்டவில்லை. ஆனால், சின்னச் சின்ன விடயங்களும் சரியாக இருக்க வேண்டும் என்று அடம்பிடித்தார்கள் என்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அதேவேளை, அவர்கள் தங்கள் நடத்தையூடாக, பெரிய மனது உடையவர்களாகவும் வௌிப்படையானவர்களாகவும் இருந்தார்கள்’.     

  (அடுத்தவாரம் தொடரும்)

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையில்-சீனா-விளங்கிக்-கொள்ளலும்-வினையாற்றலும்-02/91-276796

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் - 3

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு, ஆபத்தானது என்பதில் ஐயமில்லை. அதேவேளை, அந்நியர் எவரதும் செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்பதும் இலங்கைக்கு ஆபத்தானது என்ற உண்மையை நாம் உணரவேண்டும். 

அமெரிக்காவின் செல்வாக்குப் பரவாயில்லை; இந்தியாவின் செல்வாக்கு தமிழருக்கு நல்லது போன்ற எடுகோள்களும் எதிர்பார்ப்புகளும், அபத்தமானவை மட்டுமன்றி, ஆபத்தானவையும் கூட! சர்வதேச சமூகத்தின் மீதான அளவுகடந்த நம்பிக்கையொன்றைத் தமிழ் அரசியல் கட்சிகளும் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பகுதியினரும் தொடர்ந்தும் கட்டியெழுப்புகின்றனர். ஆனால், இவர்கள் வருந்தி அழைக்கின்ற சர்வதேச சமூகத்தின் கடந்த கால்நூற்றாண்டுகால நடத்தையை, நாம் கடந்தே வந்திருக்கின்றோம்.  

இலங்கையில் செல்வாக்கு மிக்க நாடாக, சீனாவின் உருவாக்கம் புதியதாயினும், இலங்கையின் உள்விவகாரங்களில், சீனாவின் தலையீடு ஒப்பீட்டளவில் குறைவு. இலங்கையின் கடந்த அரைநூற்றாண்டுகால வரலாற்றில், அந்நியத் தலையீடுகள் மோசமான விளைவுகளைத் தந்துள்ளன. 

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையின் தொடக்கத்துக்கு, பல்வேறு வரலாற்று வேர்கள் உள்ளன. அதன் அண்மைக் கால விருத்தியும் போராக அதன் பரிணாமமும் போரிலிருந்து மீள இயலாத தவிப்பும், வெறுமனே தமிழ்-சிங்கள இனப் பகையின் அடிப்படையில் மட்டும் விளக்கக் கூடியதல்ல. 

அந்நியத் தலையீடுகள், கடந்த கால் நூற்றாண்டுக்குள் மிகவும் அதிகரித்துள்ளன. இந்தியாவின் தலையீடு மறைமுகமாகவும் நேரடியாகவும் இருந்து வந்துள்ளமை இரகசியமல்ல. இந்தியாவின் தலையீட்டை எஸ்.ஜே.வி செல்வநாயகம், 1970களில் விரும்பியதாக அவரது மருமகனும் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு நெருக்கமானவராக இருந்தவருமான ஏ.ஜே. வில்சன் எழுதியிருக்கிறார். 

எனினும், 1978 வரை இலங்கை அரசுக்கு எதிராக, இந்தியா தலையிடும் வாய்ப்பு இருந்ததில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இந்தியாவுக்கு வழங்கவில்லை.  

இலங்கையில் சுதந்திரக்கட்சி ஆட்சி நடத்திய 1956-65, 1970-77 காலங்கள், ‘மிதவாத’த் தமிழ்த் தலைவர்கள், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற சக்திகளின் மதிப்புக்கு உரியவர்களாய் இருந்த காலங்கள் ஆகும். 

ஐ.தே.கவுடன் இணைந்து தமிழரசுக் கட்சி ஆட்சி நடத்திய 1965-68 காலமும், ஐ.தே.கவுடன் பகைக்காமல் அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்த 1968-70 காலமும் நல்லுறவுக்கு உரியவையாகவே இருந்தன. 

எனவே, தமிழ்த் தேசியவாதத் தலைமைகள், சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான மோதலில், அமெரிக்க ஜனநாயகம் தங்கள் பக்கத்தில் நிற்கும் என்று எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியவாதிகள் வலிந்து ‘சோசலிச நாடுகளை’, குறிப்பாகச் சீனாவை எதிர்த்தன. 

1978ஆம் ஆண்டு முதல், இலங்கையின் அயற்கொள்கையில் ஏற்பட்ட அமெரிக்க சார்புப் பெயர்ச்சி, இந்தியத் தலையீட்டுக்கான நியாயங்களை ஏற்படுத்தியதுடன் தெற்காசிய அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கத்துக்கான போட்டியில் இலங்கையை ஒரு முக்கியமான களமாகவும் மாற்றியது.

1983க்கு முன்னரே, இந்திய ஆட்சியாளர்கள், தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆதரவு வழங்கியதோடு, தனி நாட்டுக் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கும் என்ற மயக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தனர். இன்றும் கூட, இந்திரா காந்தி உயிரோடு இருந்தால், இந்தியா வேறு விதமாக நடந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். 

இன்று, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தெற்காசிய மேலாதிக்கத்துக்கான போட்டியில், சில உடன்பாடுகள் காணப்பட்டுள்ளன. அமெரிக்கா, சீனாவையும் ரஷ்யாவையும் தனிமைப்படுத்துவதற்கான உபாயங்களில் காட்டுகின்ற கவனம், சீன-இந்திய, ரஷ்ய-இந்திய நல்லுறவுக்கும் ரஷ்யா-சீனா-இந்தியா ஆகியவற்றின் நெருங்கிய பொருளாதார-இராணுவ ஒத்துழைப்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில்,   இந்தியாவுடன் தனது ‘நட்பை’ கடந்த பத்தாண்டுகளில் வலுப்படுத்தியுள்ளது. இன்று சீனாவைப் பொது எதிரியாகக் கட்டமைப்பதில், இந்திய-அமெரிக்கக் கூட்டு ஒன்றுபட்டுள்ளது. இந்தக் கூட்டு என்றென்றைக்குமானதல்ல. 

இலங்கையின் இறைமை, 1978 இல் தொடங்கிய திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் வலுவிழக்கத் தொடங்கியது. இக்கொள்கை, இலங்கையின் தேசிய பொருளாதாரம் வளரத் தடையாக இருந்ததுடன், நுகர்வுப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி கோலியது. தவறான பொருளாதாரக் கொள்கைகளால், இலங்கை இன்று பெரிய கடனாளி நாடாக மாறியுள்ளது. 

1977ஆம் ஆண்டு முதல் அயற்கொள்கையில் ஐ.தே.க ஆட்சி மேற்கொண்ட அமெரிக்கச் சார்பு நிலைப்பாடு, இந்தியாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்தியது. அதன்பின்பு, தேசிய இனப்பிரச்சினையைப் போராக்கியதன் மூலம், இலங்கை பல்வேறு நாடுகளினதும் இராணுவ உதவியை நம்பியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இவை மகிழ்ச்சிக்குரிய விடயங்களல்ல. 

எனினும், இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்கக் கைகொடுத்த மேற்குலகும் இந்தியாவும், இலங்கை அரசாங்கத்தின் மீது இன்று கடுப்புடன் உள்ளன. எனினும், அவற்றால் இங்கு ஓர் ஆட்சிக் கவிழ்ப்பையோ நேரடித் தலையீட்டையோ மேற்கொள் இயலாதுள்ளது. 

மேற்குலகு விரும்பும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்குச் சாதகமான அரசியல் சூழ்நிலை இன்று இங்கில்லை. இந்தியா நினைத்தவாறு, இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் இயலுமானதாக இல்லை.

இன்றைய இலங்கை அரசாங்கம், அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பலவீனங்களை அறிந்து, அவற்றைப் பயன்படுத்துகிறது. சீனாவுடனான அதன் நெருக்கம், அதற்கு வாய்ப்பாக உள்ளது. ஆனால், தன்னால் இலங்கையை என்றுமே காப்பாற்றமுடியாது என்ற உண்மையை சீனாவும் நன்கறியும். 

image_eaecc3943a.jpg

இதேவேளை, இலங்கையின் சீனாவுடனான நெருக்கத்தை, அமெரிக்கா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் விரும்பாமைக்குக் காரணம், சீனாவை மிரட்டிப் பணிய வைப்பதற்கு, அமெரிக்கா வகுத்து வரும் திட்டங்களைச் சீன ராஜதந்திரமும் பொருளாதார உதவிகளும் முறியடித்து வருகின்றன. இலங்கையை மிரட்டிப் பணிய வைப்பதற்கு, சீனா ஒரு தடையாக உள்ளது என்பது அமெரிக்காவினது கவலை மட்டுமல்ல அது இந்தியாவின் கவலையுமாகும். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கையில் நேரடிப் போட்டி, இறக்குமதி வணிகத்  துறையில் உள்ளதல்ல; இராணுவத் துறையிலும் சீன-இந்தியப் போட்டியென எதுவுமில்லை. இலங்கையின் அபிவிருத்தி முதலீடுகள் சார்ந்து, போட்டிகள் உள்ளன. அவற்றின் பொருளாதாரப் பரிமாணங்கள் ஒருபுறம் இருக்க, இலங்கை அரசின் மீதான செல்வாக்குப் பற்றிய போட்டியுள்ளது.

இலங்கை மீதான செல்வாக்கு எதற்கானது என்பதில் வேறுபாடுண்டு. இந்தியாவுக்குத் தனது தெ‌ற்காசிய மேலாதிக்கத்துக்கு, இலங்கை மீது செல்வாக்கு அவசியம். 

சீனாவுக்குத் தனது கடல் வணிகம், பாதுகாப்புப் போன்றவற்றுக்கு எதிரான அமெரிக்க மிரட்டலையும் முற்றுகையையும் தவிர்க்க, இந்து சமுத்திரப் பிரதேசத்தில் நட்புச் சக்திகள் தேவை. சீனாவுக்கு எதிராக, இலங்கையை அமெரிக்கா பாவிக்க இயலாமல் இருப்பது சீனாவுக்குப் போதுமானது. 

கடந்த 60 ஆண்டுகளாக, இலங்கையின் எந்த ஆட்சி மாற்றமும் சீனாவின் எந்தத் திசைமாற்றமும் இலங்கை -சீன உறவைக் குலைக்காமல் பாதுகாப்பதில், சீனா கவனமாக இருந்துள்ளது. எனவே, சீன நோக்கங்களை இந்திய, அமெரிக்க நோக்கங்களினின்று விலக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கைக்குச் சீன இராணுவ அதிகாரிகளும் கடற்படைக் கலங்களும் வந்து போவதைப் பற்றிக் கவலைப்படுவோருக்கு அதே காலப்பகுதியில் அவுஸ்திரேலிய, ஜப்பானியக் கடற் படைக்கலங்கள் வந்து போனதோ அமெரிக்கக் கடற்படை தனது பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து நடத்தியதோ கவலை தரவில்லை.

 சீன-இலங்கை நெருக்கம் பற்றிய கவலைகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, இலங்கை மீது மேற்குலகினதும் முக்கியமாக அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆதிக்கத்துக்குச் சீனா ஆப்பு வைக்கிறது. மற்றையது, ராஜபக்‌ஷர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குத் தடையாகச் சீனா இருக்கிறது.

சீனாவின் பொருளாதார ஆதிக்கம்,  இராணுவச் செல்வாக்கு, அரசியல் தலையீடு ஆகியவை இலங்கைக்கு நல்லதல்ல. வேறு வல்லரசு எதுவுமே, தலையிடுவதை எதிர்ப்பவர்கள், சீனச் செல்வாக்கை விமர்சிப்பது நேர்மையானது. 

ஒர் அந்நிய ஆதிக்கத்தை வரவேற்க வேண்டி, இன்னொன்றின் ஆதிக்கம் வரக்கூடும் என்று மிரட்டுவது, இலங்கையை நேசிக்கும் எவரதும் நிலைப்பாடாகாது. ராஜபக்‌ஷ ஆட்சி கவிழாமல் தடுப்பது, சீனாவின் தேவையல்ல. மக்கள் கொதித்தெழுந்தால் சீனாவாலும் அந்த ஆட்சியைக் காப்பாற்ற இயலாது. ஆனால், ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்குலகின் நோக்கங்கள், இலங்கையின் நலன்கள் சார்ந்ததல்ல. 

இலங்கையில் மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தால் ஏற்படாத எந்த ஆட்சிமாற்றமும், நாட்டின் நெருக்கடிகளை மேலும் மோசமாக்குமே ஒழிய, நாட்டைக் காப்பற்றப் போவதில்லை. எனவே, சீன நோக்கங்கள் பற்றி விழிப்புடன் இருப்பது வேறெந்த அந்நிய வல்லரசின் நோக்கங்களும் பற்றிய விழிப்பின் அளவுக்கு முக்கியமானது. 

( தொடரும்)

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலங்கையில்-சீனா-விளங்கிக்-கொள்ளலும்-வினையாற்றலும்-3/91-277381

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனத் தூதரகத்திடமிருந்து எவ்வளவு காசு வாங்கினார் என்பதையும் அடுத்த புனைவுட இணைத்துவிடுங்கள் கிருபன்.

Link to comment
Share on other sites

 

புதிய போக்குகளுக்கு அடித்தளமிடும் பூகோள அரசியல் நகர்வுகள்

 

 

image_c0bd4e65d3.jpg

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் - 4

 

உலக அலுவல்களில் தவிர்க்கவியலாத சக்தியாக, சீனா இன்று மாறியுள்ளது. இந்த மாற்றம், புதியதோர் உலக அரசியல் அரங்கைக் கட்டமைத்துள்ளது. கெடுபிடிப் போர்க் கால அரசியல் சட்டகத்துடன், இதை விளங்கிக் கொள்ளவே பலர் முனைகிறார்கள். இது சீனாவைப் பற்றி மட்டுமன்றி, தற்போதைய உலக ஒழுங்கு குறித்த தவறான சித்திரத்தையே வழங்குகிறது. 

பலரது ஆய்வுகள், சோவியத் ஒன்றியத்தின் இடத்தில் சீனாவைப் பொருத்தி, அமெரிக்கா எதிர் சீனா என்பதை, கெடுபிடிப் போர் சட்டகத்தில் விளங்கியதன் ஆபத்துகளில் ஒன்றே, இலங்கையில் சீனாவின் செல்வாக்கைச் சரியாகப் புரிந்துகொள்ளாமைக்குக் காரணம் எனலாம். 

சில நாள்களுக்கு முன்னர், தலிபான் அமைப்பின் பேச்சாளர், டுவிட்டரின் ஊடாகத் தெரிவித்த செய்தி முக்கியமானது. ‘ஆப்கானின் உள்விவகாரங்களில் தலையிடாமல், ஆப்கான் மக்களின் நலன்களுக்காகவும் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்கும், சீனா எடுத்துள்ள முயற்சிகளை நாம் வரவேற்கிறோம்’. 

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளை, முழுமையாக விலக்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தலிபான் பேச்சாளரின் இந்தத் ‘டுவிட்’ முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த இரண்டு தசாப்தகால சீனாவின் நடத்தையை விளங்கிக் கொள்வதற்கு, இதுவொரு பயனுள்ள எடுத்துக்காட்டு.   

ஆப்கானில் தலிபான் ஆட்சியை ஒழித்து, ஜனநாயகத்தை நிலைநாட்ட 2001ஆம் ஆண்டு நிலைகொண்ட அமெரிக்கப் படைகள், 20 ஆண்டுகளின் பின்னர், அவமானகரமான தோல்வியுடன் வெளியேறுகின்றன. 

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலின்  (9/11) பின்னணியில், விரிந்த உலக ஒழுங்கைக் கட்டமைத்த முதல் நிகழ்வு, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலும் படைகளின் நிலைகொள்ளலும் ஆகும். எதை அமெரிக்கா செய்ய நினைத்ததோ, அதைச் செய்யவியலாமல் இன்று வெளியேறுகிறது. அந்த இடத்தைச் சீனா நிரப்புகிறது.

நாடுகளுடனான வேறுபட்ட அயலுறவு அணுகுமுறையின் பலன்களையே, சீனா அனுபவிக்கிறது. அச்சுறுத்தல் பாணியில் அமையாத நட்புறவு, உள்விவகாரங்களில் தலையிடாமை, பொருளாதார ஒத்துழைப்பு என்பன ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு உவப்பானதாக இருக்கின்றன.

எந்தவொரு நாடும், தனது உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையிடுவதை விரும்புவதில்லை. இவ்வாறான தலையீடுகள் என்றுமே பயன் விளைவித்தவையல்ல!  

அதேவேளை, இராணுவக் கூட்டுறவை மையமாகக் கொண்ட நாடுகளுடனான உறவுகள், ஒருவகையான அதிகாரச் சமமின்மையை ஏற்படுத்துகின்றன என்பதை மூன்றாமுலக நாடுகள் நன்கறியும். இதனால் சீனாவின் வேறுபட்ட அயலுறவு அணுகுமுறை, மூன்றாமுலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு உவப்பானதாக இருக்கின்றது. 

அமெரிக்காவின் அயலுறவு அணுகுமுறையில், இராணுவ வலிமையும் மிரட்டலும் உள்ளார்ந்த அம்சங்களாக இருந்து வந்திருக்கின்றன; இன்றும் இருக்கின்றன.  உலகின் முதலாவது அணு ஆயுத வல்லரசு அமெரிக்கா. மக்களைக் கொன்றொழிப்பதற்காக அணு ஆயுதங்களை இதுவரை பயன்படுத்தியுள்ள ஒரே நாடும் அமெரிக்கா தான். 

1950களின் பிற்பகுதியில், சீனாவுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலை, அமெரிக்கா விடுத்த போது, “அணுகுண்டு ஒரு காகிதப்புலி” என்று, மாஓ  தைரியமாகக் கூறினார். அதேவேளை, அமெரிக்கா சீனாவைத் தாக்க முற்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்க, சீனாவைத் தயார்படுத்தும் தேவையை அறிந்திருந்தார். 

சோவியத் ஒன்றியத்தில், குருஷ்ச்சொவ் அதிகாரத்துக்கு வந்தபின்னர், அமெரிக்காவுக்கு எதிராக, சீனாவைப் பாதுகாக்க சோவியத் ஒன்றியத்துக்கு வாய்ப்பில்லை என்பதால், சீனா தனது பாதுகாப்பை தானே  உறுதிப்படுத்துகிற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. நிலத்துக்குக் கீழான நீண்ட சுரங்க அறைகளும் பாதைகளும் மக்களின் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டன. 

image_cb947a4a27.jpg1963ஆம் ஆண்டளவில் சீனா தனது அணு ஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியவுடன், ஏற்கெனவே அணு ஆயுதங்களை வைத்திருந்த அமெரிக்காவும் பிரித்தானியாவும் அதைக் கண்டித்தன. சோவியத் ஒன்றியமும் தனது அதிருப்தியைத் தெரிவித்தது. அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் முரண்பட்டிருந்த பிரான்ஸ், அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தச் சீனாவுக்கு இருந்த உரிமையைக் கேள்விக்கு உட்படுத்த மறுத்தது. அதேவேளை, எந்த நிலையிலும் அணு ஆயுதங்களை, எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக, முதல் முதலாகப் பாவிக்கப் போவதில்லை என்று, சீனா அன்று அளித்த உறுதிமொழி இன்றுவரை தொடர்ந்தும் இருக்கிறது. 

கடந்த அரைநூற்றாண்டுகால சீனாவின் நடத்தையும், உலக அலுவல்களில் சீனாவுக்கு வாய்ப்பாக உள்ளது. இந்த நடத்தை என்றென்றைக்குமானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், இன்று மூன்றாமுலக நாடுகள், ஏன் சீனாவை நட்பாக நோக்குகின்றன என்ற வினாவுக்கான பதிலைப் புரிய இதுவும் அவசியமானது. 

சீனா, ஒரு வலுவான பொருளாதார வல்லரசாக மட்டுமன்றி, அரசியலிலும் விரிவான நட்பை (ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில்) உருவாக்கிப் பேணுகிறது. சீனாவின் பொருளாதாரச் செயற்பாடுகள், அதற்குத் துணையாக உள்ளன. 

அமெரிக்க வணிக மிரட்டல்களுக்குப் பணிய மறுக்கும் சீனா, தனது ‘ஒரு வார் ஒரு வழி’ (One Belt One Road) திட்டத்தை முன்னரிலும் முனைப்பாக முன்னெடுக்கிறது. சீனாவின் 21ஆம் நூற்றாண்டுக்கான பிரதான எதிர்பார்ப்பாக இத்திட்டம் உள்ளது.  

உடனடியாகப் பாரிய பொருளாதாரப் பயனைத் தராவிடினும், உலக நாடுகளைத் தரை வழியாகவும் கடல் வழியாகவும் இணைக்கும் சீனத் திட்டம், துரிதமாக நனவாகிறது. இது, புதிய வணிக முறைகளுக்கும் தொடர்புகளுக்கும் நிலைமாறும் வாய்ப்பை உருவாக்கும். இதில் இலங்கை ஓர் அங்கமாக இருக்கிறது.  

ஆசியாவில் அதிகரிக்கும் சீனாவின் இருப்பு, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியா, தனது கொல்லைப்புறங்களில் சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கை வெறுக்கிறது. 

ஆசியாவில் அமெரிக்காவின் அங்கிகரிக்கப்பட்ட ‘அடியாள்’ ஜப்பான், சீனாவால் மிகுந்த சங்கடங்களுக்கு உள்ளாகிறது. ஆசியப் பிராந்தியத்தில் அதிகரிக்கும் சீனச்செல்வாக்கு, அப்பாலும் எதிரொலிக்கும் என அவுஸ்திரேலியா அஞ்சுகிறது. இது சீனாவுக்கு எதிரான ‘ஆசியக் கூட்டை’ உருவாக்கியுள்ளது. 

இன்னொருபுறம், சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி, மத்திய கிழக்கில் அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்‌ரேலியக் கூட்டணிக்கு எதிராகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று, சீனா பல நட்பு நாடுகளைத் தன்வசம் கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதார வலிமை, அதைச் சாத்தியமாக்கி உள்ளது. இதனாலேயே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், பாரிய தாக்கத்தை சீனாவில் ஏற்படுத்தவில்லை.  

இவ்வாறு சீனா நடந்துகொண்டாலும், நாடுகளுடன் முரண்பாடுகள் இன்னமும் தொடர்கின்றன. தென் சீனக்கடலில் உள்ள தீவுகள் பற்றிய முரண்பாடுகள் உள்ளன. சில தீவுகளுக்கு வியட்நாம், தாய்வான், பிலிப்பைன்ஸ் உட்பட்ட பல நாடுகளும் பிரதேசங்களும் உரிமை கோருகின்றன. இதுவரை குறிப்பிடத்தக்க பெரிய மோதல் எதுவும் நிகழவில்லை என்றாலும், இப்பிரதேசங்களின் நிறைந்த கடல்வளமும் எண்ணெய் பற்றிய எதிர்பார்ப்புகளும் தீர்வுக்குத் தடையாக உள்ளன. எவ்வாறாயினும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பதே, இதுவரை சீனாவின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. 

இந்தப் பிரச்சினையை நீண்ட போராகவோ, அமைதியின்மையாகவோ மாற்ற, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்க முயற்சிக்கிறது. இதுவரை, அது சாத்தியமாகாமைக்கு சீனாவின் நெகழ்வான அயலுறவுக் கொள்கை முக்கிய காரணமாகும். தனது வலிமையால் எதையும் நிறுவுவதை, இதுவரை சீனா செய்யவில்லை.  

இவை அனைத்தின் மத்தியிலும் கவனிக்க உகந்த முக்கியமான ஓர் அம்சம்,  சீனா இன்று வரை வேறெந்த நாட்டின் மண்ணிலோ கடற்பகுதியிலோ தனது படைத்தளம் எதையும் நிறுவவில்லை. வேறு நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற போரில்கூட, இதுவரை சீனாவின் படைகள் அயல்நாடுகளில் நிலைகொண்டு இருந்ததில்லை. இது சீனாவை மற்ற எந்த வல்லரசிலிருந்து  வேறுபடுத்திக் காட்டுகிறது. இதுவரை இராணுவ மிரட்டல் மூலம், தனது தேவைகளை சீனா நிறைவேற்றிக் கொண்டதும் இல்லை. வலிமை குறைந்த நாடுகளை, வலிந்து மிரட்டுவதைச் சீனா எப்போதுமே நிராகரித்து வந்துள்ளது. 

 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவமும் திறந்த சந்தையும் சந்தித்த சரிவு, மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தேசியவாத எழுச்சி, கொவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றின் பின்னணியிலேயே சீனாவின் எழுச்சியை நோக்க வேண்டியுள்ளது. 

(அடுத்த வௌ்ளிக்கிழமை தொடரும்) 


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் இருக்கும்  அநேகமான விடயங்களில், சீனா  நேரெதிராக இருக்கிறது, அல்லது கட்டுரை நிலைய திரித்து கூறி உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

கட்டுரையில் இருக்கும்  அநேகமான விடயங்களில், சீனா  நேரெதிராக இருக்கிறது, அல்லது கட்டுரை நிலைய திரித்து கூறி உள்ளது.  

உதாரணங்களைக் காட்ட முடியுமா ? 

சும்மா அங்க இருக்கு இங்கயிருக்கு என்று கூற வேண்டாம். சரியான தரவுகள் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, Kapithan said:

உதாரணங்களைக் காட்ட முடியுமா ? 

சும்மா அங்க இருக்கு இங்கயிருக்கு என்று கூற வேண்டாம். சரியான தரவுகள் வேண்டும். 

 

8 hours ago, nunavilan said:

இவை அனைத்தின் மத்தியிலும் கவனிக்க உகந்த முக்கியமான ஓர் அம்சம்,  சீனா இன்று வரை வேறெந்த நாட்டின் மண்ணிலோ கடற்பகுதியிலோ தனது படைத்தளம் எதையும் நிறுவவில்லை.

 

சிறிய உதாரணம், சீனாவின்  படைத்தளம் இருக்கும் Djibouti.

இதில் எல்லாரும் (us, uk, france, china, வேறு யாரும் இருக்கவும் கூடும் ), Djibouti ஐ பங்கு போட்டு இருக்கினம்.

Djibouti க்கு, திரௌபதை மாதிரி எப்பவும் கொண்டாட்டம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளின் அளப்பறை தாங்கமுடியவில்லை. சீனாவை தேவதூதர்கள் ரேஞ்சுக்கு தூக்கிவைச்சுக் கொண்டாடுகிறார். 

- தனது சிறுபான்மையின முஸ்லீம்களை நடத்தும் விதம்
- சீனாவிலும், ஹாங்காங்கிலும் ஜனநாயகவாதிகளை அடக்கும் விதம்
- இனக்கொலையாளிகளுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் நண்பனாக இருந்து மக்களைக் கொல்ல உதவும் விதம்
- தீபெத்து, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச்ம், இமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் ஆக்கிரமித்து நிற்கும் விதம்
- உலகின் வறிய நாடுகளை கடன்கள் மூலம் கட்டிப் போட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் விதம்
- 1987 ஆம் ஆண்டின் தியனன்மின் சதுக்க மாணவர் படுகொலை நடத்தப்பட்ட விதம்

இப்படிப் பல இருக்க, இந்தச் சீனச் செம்புதுக்கிக்கு அவர்கள் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்.

முடிந்தவர்கள் இதனையும் படித்துப் பாருங்கள், செம்புதூக்கி உட்பட !

https://taiwantoday.tw/news.php?unit=4&post=6782

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரஞ்சித் said:

இந்தாளின் அளப்பறை தாங்கமுடியவில்லை. சீனாவை தேவதூதர்கள் ரேஞ்சுக்கு தூக்கிவைச்சுக் கொண்டாடுகிறார். 

- தனது சிறுபான்மையின முஸ்லீம்களை நடத்தும் விதம்
- சீனாவிலும், ஹாங்காங்கிலும் ஜனநாயகவாதிகளை அடக்கும் விதம்
- இனக்கொலையாளிகளுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் நண்பனாக இருந்து மக்களைக் கொல்ல உதவும் விதம்
- தீபெத்து, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச்ம், இமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் ஆக்கிரமித்து நிற்கும் விதம்
- உலகின் வறிய நாடுகளை கடன்கள் மூலம் கட்டிப் போட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் விதம்
- 1987 ஆம் ஆண்டின் தியனன்மின் சதுக்க மாணவர் படுகொலை நடத்தப்பட்ட விதம்

இப்படிப் பல இருக்க, இந்தச் சீனச் செம்புதுக்கிக்கு அவர்கள் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்.

முடிந்தவர்கள் இதனையும் படித்துப் பாருங்கள், செம்புதூக்கி உட்பட !

https://taiwantoday.tw/news.php?unit=4&post=6782

சிலர் உண்மையான நிலையை அறிவதில்லை.

சீனாவும், அமெரிக்காவும் தமது போட்டியில் பிரச்சாரத்தையும் உள்ளடக்கி இருக்கிறார்கள்.

சீனாவின் இப்போதைய வெளிமுகம், அமெரிக்காவிலும் பார்க்க உலக அளவில் அதிகாரத்தை பிரயோகிக்க மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் பொது. மாறாக, சீன இப்பொது இருப்பது போல், அமெரிக்கா இப்பவும் இருக்குமாயின், நினைத்து பார்க்க முடியதளவில் அழிவுகளும், கொடுமைகளும் நடக்கும்.  
   
எதை எவர் சொன்னாலும்,  கொடுமையான உலகை  அமெரிக்கா தனது பலத்தால், அழிவுகள் ஊடக இ போதையா நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதே உண்மை. இதற்காக  அமெரிக்கா ஒன்றும் தேவதை என்று சொல்லவில்லை. அதற்கும், உள்ளேயும், வெளியேயும் கொடுமையான வரலாறு இருக்கிறது.

உ.ம். எமது பிரச்சனையில், அமெரிக்காவின் நிலைப்பாடு, கிந்தியவை விட மிகவும் உயர்வானது. கிந்திய இல்லாவிட்டால், இது எப்போதோ தீர்க்கப்பட்டு இருக்கும், அமெரிக்கா தலையீட்டால்.   

சீன வின் நோக்கம், அமெரிக்கா கொண்டு வந்த இந்த முன்னேற்றைகங்களை, சுருட்டி பின் தள்ளி வைத்து விட்டு, தனது மேலாண்மையை கொண்டு வருவது. இதை ஒரு பகுதியாக கொண்டு தான், உள்நாட்டில் தலையிடுவது இல்லை என்று சீனவெளியில் சொல்கிறது.

அனால், தலையிடுகிறது. உ.ம். இலங்கையில் சிங்கள கட்சிகளுக்கு சீனாவின் பல்வேறு அரவணைப்பு. செக்யூரிட்டி கவுன்சில் இல் இந்த பிரச்னை வர விடாமல் சிங்களத்தை பாதுகாப்பது; அதற்கு கிந்தியா மௌனமாக ஆதரவு என்பது, கிந்தியா எவ்வளவு பிற்போக்கு  தனமான சக்தி என்பதை நாங்கள் வெளி உலகுக்கு சொல்ல வேண்டும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/7/2021 at 21:17, கிருபன் said:

 

 

On 20/7/2021 at 21:17, கிருபன் said:

ஏழு நூற்றாண்டுகளாகச் சீனாவின் பிரதேசமாக இருந்து வந்துள்ள திபெத் மீது, சென்ற நூற்றாண்டு முதல், பிரித்தானியாவுக்கு இருந்துவந்த விருப்பு இரகசியமல்ல. பிரித்தானிய கொலனிய விஸ்தரிப்பு வாதிகளது அணுகுமுறையைப் பின்பற்றிய இந்திய ஆட்சியாளர்கள்,

ஏழு நூற்றாண்டுகளாக சீனாவின் பிரதேசமாம் அதனால் சீனா ஆக்கிரமிப்பு செய்வது சரி என்றால்......70 வருடமாக தமிழர் பிரதேச ஆக்கிரமிப்.பு  செய்யும்....சிங்கள ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழ்தேசியாதிகள் போராடுவதும் சரியாக தான் இருக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2021 at 18:26, nunavilan said:

உலக அலுவல்களில் தவிர்க்கவியலாத சக்தியாக, சீனா இன்று மாறியுள்ளது. இந்த மாற்றம், புதியதோர் உலக அரசியல் அரங்கைக் கட்டமைத்துள்ளது

எனது நண்பர் ஒருத்தர் இருக்கின்றார் அவரும் இதே மதிரி எழுதுவார் இதே மாதிரி பேசுவார் ....அவர் முன்னாள் புரட்சிகர போராளி ....இவர்கள் மகிந்தாவுடன் கூட்டு சேர்ந்து உலக ஒழுங்கை மாற்றப்போகிறார்கலாம் என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்

4 hours ago, ரஞ்சித் said:

இந்தாளின் அளப்பறை தாங்கமுடியவில்லை. சீனாவை தேவதூதர்கள் ரேஞ்சுக்கு தூக்கிவைச்சுக் கொண்டாடுகிறார். 

- தனது சிறுபான்மையின முஸ்லீம்களை நடத்தும் விதம்
- சீனாவிலும், ஹாங்காங்கிலும் ஜனநாயகவாதிகளை அடக்கும் விதம்
- இனக்கொலையாளிகளுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் நண்பனாக இருந்து மக்களைக் கொல்ல உதவும் விதம்
- தீபெத்து, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச்ம், இமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் ஆக்கிரமித்து நிற்கும் விதம்
- உலகின் வறிய நாடுகளை கடன்கள் மூலம் கட்டிப் போட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் விதம்
- 1987 ஆம் ஆண்டின் தியனன்மின் சதுக்க மாணவர் படுகொலை நடத்தப்பட்ட விதம்

இப்படிப் பல இருக்க, இந்தச் சீனச் செம்புதுக்கிக்கு அவர்கள் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்.

முடிந்தவர்கள் இதனையும் படித்துப் பாருங்கள், செம்புதூக்கி உட்பட !

https://taiwantoday.tw/news.php?unit=4&post=6782

தாய்வான் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சொந்தம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2021 at 13:02, Kadancha said:

 

 

 

சிறிய உதாரணம், சீனாவின்  படைத்தளம் இருக்கும் Djibouti.

இதில் எல்லாரும் (us, uk, france, china, வேறு யாரும் இருக்கவும் கூடும் ), Djibouti ஐ பங்கு போட்டு இருக்கினம்.

Djibouti க்கு, திரௌபதை மாதிரி எப்பவும் கொண்டாட்டம் தான். 

அங்கு தளம் அங்கு ஏன் அமைக்கப்பட்டுள்ளது ? 

6 hours ago, ரஞ்சித் said:

இந்தாளின் அளப்பறை தாங்கமுடியவில்லை. சீனாவை தேவதூதர்கள் ரேஞ்சுக்கு தூக்கிவைச்சுக் கொண்டாடுகிறார். 

- தனது சிறுபான்மையின முஸ்லீம்களை நடத்தும் விதம்
- சீனாவிலும், ஹாங்காங்கிலும் ஜனநாயகவாதிகளை அடக்கும் விதம்
- இனக்கொலையாளிகளுக்கும், போர்க்குற்றவாளிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் நண்பனாக இருந்து மக்களைக் கொல்ல உதவும் விதம்
- தீபெத்து, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச்ம், இமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களில் ஆக்கிரமித்து நிற்கும் விதம்
- உலகின் வறிய நாடுகளை கடன்கள் மூலம் கட்டிப் போட்டு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் விதம்
- 1987 ஆம் ஆண்டின் தியனன்மின் சதுக்க மாணவர் படுகொலை நடத்தப்பட்ட விதம்

இப்படிப் பல இருக்க, இந்தச் சீனச் செம்புதுக்கிக்கு அவர்கள் தேவ தூதர்களாகத் தெரிகிறார்கள்.

முடிந்தவர்கள் இதனையும் படித்துப் பாருங்கள், செம்புதூக்கி உட்பட !

https://taiwantoday.tw/news.php?unit=4&post=6782

யார் தேவ தூதர் ? இந்தியா ? EU ? USA ? 

கட்டுரையின் சாரம் என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அங்கு தளம் அங்கு ஏன் அமைக்கப்பட்டுள்ளது ? 

அதை நீங்கள் சீனாவிடம் தான் கேட்க வேண்டும். நான் சொல்வது, நாடி பிடித்து சொல்வது போல இருக்கும்.

ஆனால் ,நீங்கள் கேட்ட உதாரணம், சரியான தரவு  .  

On 1/8/2021 at 14:37, Kapithan said:

உதாரணங்களைக் காட்ட முடியுமா ? 

சும்மா அங்க இருக்கு இங்கயிருக்கு என்று கூற வேண்டாம். சரியான தரவுகள் வேண்டும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2021 at 03:02, Kadancha said:

 

 

 

சிறிய உதாரணம், சீனாவின்  படைத்தளம் இருக்கும் Djibouti.

இதில் எல்லாரும் (us, uk, france, china, வேறு யாரும் இருக்கவும் கூடும் ), Djibouti ஐ பங்கு போட்டு இருக்கினம்.

Djibouti க்கு, திரௌபதை மாதிரி எப்பவும் கொண்டாட்டம் தான். 

இப்படி ஒரு நாடு இருப்பதை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.. அதன் புவிசார் இருப்பிடத்தினால் அங்கு உலக வல்லரசு நாடுகள் தமது படைத்தளத்தை ஏன் அமைக்க விரும்புகின்றன என்பதையும் ஓரளவிற்கு விளங்கிக்கொள்ளமுடிகிறது.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரங்கில் சீனாவின் அணுகுமுறை

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் - 05

சீனாவின் இன்றைய எழுச்சி தற்செயலானதல்ல; அது, நீண்டகாலத் திட்டமிடலின் விளைவு. 

கெடுபிடிப்போரின் முடிவில், தோற்றம் பெற்ற அமெரிக்க மைய உலக ஒழுங்கில், சீனா பலத்த சவால்களைச் சந்தித்தது. ஆசியாவின் மீதான அமெரிக்காவின் பிடி, முழுமையாக இறுகியிருந்த நிலையில், சீனாவின் எல்லையோர நாடுகளில் அமெரிக்க ஆதிக்கம், சீனாவையும் அசைத்துப் பார்க்க முயன்றது. 

சீனாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த, அமெரிக்கா விரும்பியது; ஆனால், அது சாத்தியமாகவில்லை. சீனாவின் உழைப்பாளர்களின் எண்ணிக்கையும் அவர்தம் உழைக்கும் வலுவும், மெதுமெதுவாக உலகப் பொருளாதார சந்தையில், சீனாவுக்கு ஓர் இடத்தைக் கொடுத்தன. 

மோதல்போக்கற்ற அயலுறவுக் கொள்கையின் தொடர்ச்சி, உலகப் பொருளாதார சந்தையில், சீனாவை மேலும் விரிவாக்கியது. அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலும் அதைத் தொடர்ந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரும்’ உலகை ஆக்கிரமித்திருக்கையில், மெதுமெதுவாக சீனா வளர்ந்தது. 

மூன்றாம் உலக நாடொன்றான சீனாவின் வளர்ச்சியை, ஏனைய மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சியோடு, மேற்குலக அறிஞர்கள் ஒப்பிட்டார்கள். ‘பிரிக்ஸ்’ நாடுகள் என அவற்றை அழைத்தார்கள். பிரேஸில், இந்தியா, தென்னாபிரிக்கா ஆகியவற்றின் வரிசையில் வைத்தே சீனாவையும் நோக்கினார்கள். அமெரிக்காவுக்குப் போட்டியான ஒரு கூட்டமைப்பாக இது கருதப்பட்டது. 

‘பிரிக்ஸ்’ நாடுகளில், தமக்குச் சார்பான ஆட்சிகளை உருவாக்க அமெரிக்கா முண்டியடித்தது. பிரேஸிலில் லூலா டி சில்வா அகற்றப்பட்டார்; தென்னாபிரிக்காவில் ஜேக்கப் சூமா ஆட்சிக்கு வந்தார். இந்தியாவுடன் ஆயுத உடன்படிக்கைகளை செய்து கொண்டது. ரஷ்யாவில் புட்டினை அகற்ற, இன்னும் அமெரிக்கா முயன்றவண்ணம் உள்ளது. 

இதன்வழி, சீனாவைத் தனிமைப்படுத்தி விட முயற்சிகள் நிகழ்ந்தன. கொஞ்சக் காலத்துக்கு முன்னரிலிருந்து, ஈரான் எத்தகைய மிரட்டலாகக் காட்டப்படுகிறதோ, 10 ஆண்டுகளுக்கு முன்னர் லிபியாவும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்கும் எத்தகைய மிரட்டல் என்று காட்டப்பட்டதோ, அப்படியே சீனாவும் அன்று காட்டப்பட்டது. 

சீனாவைத் தனிமைப்படுத்த, பல்வேறு தளங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வணிகத் தடைகள் விதிக்கப்பட்டன; அவற்றைத் தாண்டியே சீனா முன்னேறியது. சீனா, பல மூன்றாம் உலக நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளை அதிகரித்தது. பல நாடுகளில் முதலிட்டது; கட்டமைப்பு விருத்திக்கு கடன்களை வழங்கியது. இந்நிலையிலேயே, 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி, சீனாவின் இடத்தை உறுதி செய்தது. 

இன்று, உலக ஆதிக்கத்துக்கான போட்டியில், சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக மோதுகின்றன. அதன் களங்கள் வேறானவை; முறைமைகள் வேறானவை. கெடுபிடிப்போர் காலச் சட்டகத்தில் இருந்து, மிகவும் வேறுபட்ட ஒரு போரில் இரண்டு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இருந்தபோதும், இரு நாடுகளையும் ஒரேமாதிரி அணுகிவிட முடியாது. 

அமெரிக்கா போல சீனாவும் ஏகாதிபத்தியம் என்று சிலர் அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால், சீனாவை விளங்கிக் கொள்வதன் அடிப்படைகளில் ஒன்று, அமெரிக்கா போல, சீனாவும் ஏகாதிபத்தியமா என்பதை விசாரிப்பதாகும். சீனா, ஏகாதிபத்தியத்தை நோக்கிய பாதையில் நகர்கின்றது என்பதில் ஐயமில்லை. ஆனால், இன்னமும் அது அந்நிலையை எட்டவில்லை. சிலர், சீனாவுடன் ரஷ்யாவையும் இணைத்து, ‘ஏகாதிபத்தியங்கள்’ என்று அழைக்கிறார்கள். 

சீனாவினதும் ரஷ்யாவினதும் முதலாளித்துவத்தின் பாதை, அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளினதும் பிராந்திய வல்லரசுகளாகத் துடிக்கும் இந்தியா, பிரேஸில், தென்னாபிரிக்கா உட்பட்ட நவகொலனிகளினதும் முதலாளித்துவப் பாதையில் இருந்து மிகவும் வேறுபட்டது. 

ரஷ்யாவிலும் சீனாவிலும், இன்றைய முதலாளித்துவ முறைமைகள், சோஷலிசத்துக்குக் குழிபறித்தே உருவாகின. சீனாவில் 1978ஆம் ஆண்டு தொட்டு, சோஷலிசக் கட்டமைப்புகள் திட்டமிட்டுக் குலைக்கப்பட்டுள்ளன. இலவசக் கல்வியும் இலவச உடல்நலச் சேவையும் சரிந்துள்ளபோதும், அவை முற்றாகக் கைவிடப்படாமையால், சீனா இன்றும் பொருளாதார நெருக்கடிகளையும் இயற்கை அனர்த்தங்களையும் கையாளுகிறது. எனினும், கிராமிய வறுமை, வேலைவாய்ப்பின்மை, குறைந்த ஊதியம், தொழிலாளரின் உரிமை மறுப்பு ஆகிய முதலாளித்துவ பாணியிலான பிரச்சினைகள் அங்குள்ளன. 

சீனாவின் சனத்தொகையில் எல்லாமாக ஏழு சதவீதமளவில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களும் தேசிய சிறுபான்மையினரும், பலவேறான பிரதேச சுயாட்சிகளுக்கு உரித்தானோராக உள்ளனர். இது, எழுச்சியின் விளைவாக அல்லாது, சீனத்தின் தேசிய இனக்கொள்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட விடயமாகும். எந்த இனத்தினதும் மொழியுரிமையோ பிரதேச உரிமையோ மறுக்கப்படவில்லை; மாறாக வலியுறுத்தப்பட்டது. 

இத்தகைய ஒரு சூழலில், சவூதி அரேபியாவின் உதவியுடன், 1990ஆம் ஆண்டுகளில், முஸ்லிம் தீவிரவாதம் சீனாவின் வடமேற்கில் தூண்டிவிடப்பட்டது. திபெத்திய பிரிவினை வாதமும், அதேகாலத்தில் ஊக்குவிக்கப்பட்டது. தலாய் லாமாவின் சமாதானம் போதிக்கும் துறவி, தீவிர திபெத்திய தேசியவாதி ஆகிய இரண்டு முகங்கள், இடத்துக்கு ஏற்றபடி காண்பிக்கப்பட்டன; கலகங்கள் தூண்டிவிடப்பட்டன. கலகக்காரர்களது வன்செயல்கள் காட்டப்படாது, அவர்களுக்கு எதிரான அரச நடவடிக்கை உலகுக்குக் காட்டப்பட்டது. நேபாளப் புரட்சியில் கூட, சீனாவின் கை இருந்ததாகக் கூறப்பட்டது. இவ்வாறு, ஒவ்வொரு பற்றைக்குப் பின்னாலும் ஒரு சீனப் பாம்பு காண்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, இந்தியாவுக்கு எதிரான சீன மிரட்டல் பற்றிப் பேசப்படுகிறது. 

சீனா, பகைமையற்ற ஓர் உலகில் இல்லை. சீனாவைக் ‘கம்யூனிச அல்லது சிவப்பு மிரட்டல்’ என்று அமெரிக்கா அழைத்துள்ளது. நிறவாதப் பண்புடன் ‘மஞ்சள் ஆபத்து’ என்றும் அழைத்துள்ளது. கொரோனா வைரஸை, முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி ‘சீன வைரஸ்’ என்று தொடர்ந்து அழைத்ததும் தற்செயலானதல்ல. 

சீனாவின் கடந்த இரண்டு தசாப்த பொருளாதார வளர்ச்சி, அதை எண்ணெய் உட்பட்ட மூல வளங்களின் மீது தங்கியிருக்கச் செய்துள்ளது. சீனாவின் அந்நிய முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பெருகி வருகின்றன. அமெரிக்காவும் மேற்குலகும் புறக்கணித்து வந்த, வறிய ஆபிரிக்க நாடுகளும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும், சீனாவின் புதிய சந்தைகளாகவும் முதலீட்டுக் களங்களாகவும் மூலப்பொருள் ஏற்றுமதியாளர்களாகவும் அமைந்தன. 

இது, உலக அரசியல் அரங்கில் புதியதோர் அணுகுமுறை. நாடுகளைப் பிடித்தல், ஆட்சி மாற்றங்களைச் செய்தல்  என்பனவே, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான அரசியல் அரங்கில், நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் செல்வாக்குச் செலுத்துவதற்குமான வழிகளாக இருந்தன. 

spacer.png

சீனாவின் இந்தப் புதிய அணுகுமுறை, அதற்கு உலகெங்கும் நண்பர்களைத் தேடிக் கொடுத்துள்ளது. ஆட்சிகள் மாறினாலும் நிலையான ஒன்றாக, சீனாவின் செல்வாக்குத் தொடர்கிறது. இதற்குச் சிறந்த உதாரணம் இலங்கை. 2015இல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்த போது ஏற்பட்ட பெரிய எதிர்பார்ப்பு, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு குறையும் என்பதாகும்.  ஆட்சிமாற்றம், துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்தும் என்ற நம்பிக்கை, மேற்குலகிடம் வலுவாக இருந்தது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. எனவே, ஆட்சிமாற்றம் என்ற மேற்குலக ஆயுதம், சீனாவின் விடயத்தில் பலனளிக்கப் போவதில்லை. 

கடந்த ஒரு தசாப்தகாலமாக, பொருளாதாரத் தடைகள் என்ற பெயரில், சீனாவுடன் ஒரு மறைமுகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. மேற்குலக நாடுகள் வணிகத்தடை, கப்பல் போக்குவரத்துத்தடை என்ற பெயர்களில் சீனக் கப்பல் மார்க்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது அதிகரித்து வந்துள்ளது. சீனாவைக் கட்டுக்குள் கொண்டுவரும் இயலாமையின் விளைவுகள் இவை. 

இந்தச் சவால்களுக்கு முகங்கொடுப்பது, சீனாவுக்கு அவசியமானது. அமெரிக்கா, உலக மேலாதிக்க நோக்கங்களுக்காகச் கடற்படை, இராணுவத் தளங்களை நிறுவுவது போல சீனாவும் செய்யலாம். இந்தியா செய்வது போன்று, அண்டை நாடுகள் மீது, தனது அரசியல் இராணுவ, வணிக ஆதிக்கத்தைத் திணிக்கலாம். இலங்கையின் போரிலும் அமைதியின் பேரிலான தலையீட்டிலும், இரண்டு நாடுகளும் இலங்கையின் இறைமையை சீரழித்துள்ளன என்பதை மறுக்கவியலாது. 

சீனா, இதுவரை எந்த நாட்டிலும் இவ்வாறு செய்ததில்லை; இனிச் செய்யாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், அவ்வாறு நடக்கும் வரை, நாம் வெறும் ஊகங்களினது அடிப்படையில், சீனா பற்றிய சரியான முடிவுகளுக்கு வர இயலாது.

சீனா முன்னெடுத்துவரும் ‘ஒருபட்டி; ஒருவழி’ திட்டமானது, உலகை புதிய வழிகளில் இணைக்கிறது; புதிய ஒழுங்கை நோக்கி நகர்த்துகிறது. இந்த நகர்வு இலகுவானதல்ல. பொருளாதார ரீதியில் நாடுகள் பிணைக்கப்பட்டுள்ள உலக நிலைவரத்தில், இந்த அணுகுமுறை சவாலானது. சீனாவுடன் பொருளாதார உறவுகளைப் பேணும், சீனாவின் பொருளாதார வலிமையில் தங்கியுள்ள நாடுகளின் எதிர்காலம், இந்தத் திட்டத்தின் வெற்றியில் தங்கியுள்ளது. 

ஆதிக்கவாதிகள், காலனியாதிக்க காலத்தில் பிடுங்கித் தின்றார்கள்; இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அடித்துப் பறித்தார்கள்; இனி என்ன செய்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

  

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உலக-அரங்கில்-சீனாவின்-அணுகுமுறை/91-278287

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திமிங்கிலங்களின் சண்டையில் சின்ன மீன்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் - 06

சீனாவில் ஆட்சிமாற்றத்தை அமெரிக்க அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருபகுதியினர் விரும்புகிறார்கள். இன்னொரு பகுதியினர், ஆட்சிமாற்றத்தை விட, சீனா செல்வாக்குச் செலுத்தும் நாடுகளில், அமெரிக்கச் செல்வாக்கை அதிகரிப்பதன் ஊடு, சீனாவை ஓரங்கட்ட வேண்டும் என்று வாதிடுகிறார்கள். 

இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கும் இடையில், சீனாவை எவ்வாறு கையாளுவது என்ற வினாவுக்கான பதிலை, அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

 அமெரிக்க-சீன முரண்பாடு, அமைதியான முறையில் தீர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இதற்கான பிரதான காரணம், நீண்டகாலமாக வகித்து வந்த முதன்மையான இடத்திலிருந்து இடம்பெயர, அமெரிக்கா தயாராக இல்லை. அடாவடியாகவேனும் அந்த இடத்தைத் தக்கவைக்க, அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. 

அமெரிக்காவின் முதன்மையான அயலுறவுக் கொள்கைவகுப்பு இதழான Foreign Affairs, ஜூலை, ஓகஸ்ட் மாத இதழின் தொனிப்பொருள், ‘சீனாவால் தொடர்ந்தும் உயரவியலுமா?’ (Can China keep Rising?). இவ்விதழில் இடம்பெற்றுள்ள கட்டுரையொன்றின் தலைப்பு, ‘ஆட்சிமாற்றம் என்பது சீனா விடயத்தில் ஒரு தெரிவல்ல’. இக்கட்டுரை சில முக்கியமான விடயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. 

முதலாவது, சீனா, சோவியத் யூனியன் அல்ல. சீனாவைக் கையாளுவது, அமெரிக்க அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு இன்றுவரை இயலாததாகவே இருந்து வருகிறது. கெடுபிடிப்போர் உச்சத்தில் இருந்தபோது, மொஸ்கோவைக் கையாண்டது போல, பீஜிங்கைக் கையாள இயலவில்லை.  இரண்டாவது, உலகெங்கும் சீனாவின் தடம், குறிப்பாக பொருளாதார வழித்தடம் எல்லா இடங்களிலும் உண்டு. இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாகும். 100க்கு மேற்பட்ட நாடுகளுடன் பிரதான வர்த்தகப் பங்காளியாக சீனா இருக்கிறது. இந்நாடுகளில் பல அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைக் கொண்டவை. 

மூன்றாவது, அமெரிக்காவும் சீனாவும் போட்டிபோட்டாலும், ஒன்றில் ஒன்று தங்கியிருக்கின்றன. 

மேற்குறித்த கட்டுரை, அமெரிக்காவின் நன்கறியப்பட்ட இன்னோர் அயலுறவுக் கொள்கை இதழான Foreign Policy இல், மார்ச் மாதம் ‘சீனாவில் ஆட்சிமாற்றம் மூலமே அமெரிக்காவின் வெற்றி சாத்தியம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டதாகும். இக்கட்டுரை, சீனாவில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏதோவொரு வழியில் ஏற்படுத்துவதன் மூலமே, அமெரிக்காவின் தலையாய நிலையைத் தக்கவைக்க முடியும் என வாதிடுகிறது. 

இக்கட்டுரைக்கு ஆதரவாக, முன்னாள் பிரித்தானிய இராஜதந்திரி ரொஜர் கார்சைட், ஒரு கட்டுரையை கனடாவில் இருந்து வெளிவரும் The Globe and Mail பத்திரிகைக்கு எழுதியுள்ளார். ‘சீனாவில் ஆட்சிமாற்றம் சாத்தியமானது மட்டுமல்ல தவிர்க்கவியலாதது’ என்று தலைப்பின்கீழ், சீனாவில் ஆட்சிமாற்றத்துக்கான இரண்டு சாத்தியமான வழிகளை எதிர்வுகூறுகிறது. 

முதலாவது, ஒரு சதி மூலம், ஆட்சியை அகற்றுவதற்கான வாய்ப்பு. இரண்டாவது, அடுத்தாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், ஜனாதிபதி ஜீ சிங்பிங்கின் பதவிக்காலத்தை நீட்டிக்காமல் தடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம். 

இந்த மூன்று கட்டுரைகளும், ஒரு விடயத்தில் உடன்படுகின்றன. சீனாவைக் கையாளுவது என்பது இலகுவானதல்ல. சீனாவின் உலகளாவிய செல்வாக்கைக் குறைக்காமல், தற்போதைய களநிலைவரத்தின் அடிப்படையில், சீனாவைக் கட்டுப்படுத்த இயலாது. அவ்வகையில், சீனா செல்வாக்குச் செலுத்தும் நாடுகள்மீது, தனித்தோ அல்லது சேர்ந்தோ, அமெரிக்கா தனது மேல்நிலையை நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

எனவே, சீனாவின் கொல்லைப்புறமாக இருக்கும் ஆசிய நாடுகளில், அமெரிக்கா, தனது நட்பு நாடுகளுடன் இணைந்து, சீனாவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்டாக வேண்டும். அவ்வகையில், இலங்கையும் கவனம் பெறுகிறது. 

image_fbd9b06bf4.jpg

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அதற்கான புதியதொரு வாய்ப்பை அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் வழங்கியுள்ளது. ‘சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை’ என்பது, தொடர்ந்து சொல்லப்படுகின்ற ஒன்று. ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. 

அமெரிக்காவும் மேற்குலகும், எப்படியாவது இலங்கையின் மோசமான பொருளாதார நிலைவரத்தை வாய்ப்பாக்கி, இலங்கையை சர்வதேச நாணய நிதியத்தின் கடன்வலைக்குள் சிக்க வைக்க முயல்கின்றன. இதன்மூலம்,இலங்கையில் செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பைப் பெறவியலும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உண்டு. ஆனால், இன்றுவரை இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை. 

சீனாவின் ‘ஒருபட்டி; ஒரு வழி’ திட்டத்தில், இலங்கையின் வகிபாகம் பல வழிகளில் வாய்ப்பாக உள்ளது. இலங்கை வங்குரோத்தை அறிவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவின் உதவி இலங்கையைத் தற்காலிகமாகப் பாதுகாத்துள்ளது. 

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனா காரணமல்ல. இலங்கையின் தவறான கொள்கை முடிவுகளும் செயற்பாடுகளுமே, இலங்கையை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன. 

அண்மையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துகள் கவனிக்கத் தக்கவை. மேற்குலகின் ‘நம்பகரமான ஆள்’ என்று இவர் அறியப்பட்டவர். இவர், சீனாவின் ‘ஒருபட்டி; ஒரு வழி’ திட்டத்தில் இலங்கை இணைந்தது, பயன் விளைவிக்க வல்லது என்றும் சீனாவுடனான இலங்கையின் உறவு, வரலாற்று ரீதியானதும் தவிர்க்கவியலாததும் என்றார். அவரது கருத்துகளில், அடிக்கோடிடப்படுகின்ற விடயம் ஒன்றாக, இலங்கையில் சீனாவின் செல்வாக்கை, இலகுவில் இல்லாமலாக்கி விட  முடியாது என்பதாகும். 

மேற்குலகக் கொள்கைவகுப்பாளர்கள், இலங்கையில் சீனாவின் செல்வாக்கை மிகுந்த அச்சத்தோடு நோக்குகிறார்கள். சீனாவின் ‘ஒருபட்டி;ஒரு வழி’ திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நாடு இலங்கை. பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற தென்னாசிய நாடுகளுடன் இன்னும் பல நாடுகளும் இத்திட்டத்தில் உள்ளன. 

இலங்கையின் பூகோள அமைவிடம், ஏனைய தென்னாசிய நாடுகளை விட, இலங்கையை முக்கியத்துவமாக்கி உள்ளது. சீனாவின் ‘ஒருபட்டி; ஒரு வழி’ திட்டத்தை மேற்குலகு எவ்வாறு நோக்குகிறது என்பதை அறிய, கடந்தாண்டு வெளியான The Emperor’s New Road: China and the Project of the Century (சக்கரவர்த்தியின் புதிய பாதை: சீனாவும் இந்த நூற்றாண்டுக்கான திட்டமும்) என்ற புத்தகத்தை வாசிக்க வேண்டும். 

இந்த நூலின் ஆசிரியர் ஜொனதன் ஹில்மான், இலங்கை குறித்து வெளியிடுகின்ற அச்சம் யாதெனில், இலங்கையின் ஊடாக தென்னாசியாவில் செல்வாக்குச் செலுத்த சீனா முனையும். அவ்வகையில், இலங்கை மேலும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லாமல் காப்பாற்றுவது முக்கியமானது என்பதாகும். 

சீனாவின் இத்திட்டமானது, பல வழிகளில் புதிய உலக ஒழுங்கைக் கட்டமைக்கும் பணியை முன்னெடுக்கிறது. இந்தத் திட்டம், மேற்குலகுக்கு ஏற்படுத்தியுள்ள பிரதான சவால் யாதெனில், எந்தத் திறந்த சந்தைப் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையை மேற்குலகு முன்தள்ளுகிறதோ, அதையே பயன்படுத்தி சீனா தனது வலுவை நிறுவியுள்ளது. 

கட்டற்ற வர்த்தகத்தையும் உலகமயமாக்கலையும் அனைவருக்கும் உரியதாக சீனா சாத்தியமாக்கி உள்ளது. இது மேற்குலகுக்குப் பெருத்த அச்சுறுத்தலாக உள்ளது. எந்தச் சட்டகத்தின் உதவியுடன், கடந்த சில தசாப்தங்களாக உலகக் கட்டுப்பாட்டை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பேணி வந்தார்களோ, இன்று அதே சட்டகத்தின் உதவியோடு, தனது அதிகாரத்தை சீனா முன்னிறுத்தும் போது முரண்பாடுகள் தவிர்க்கவியலாதவை. 

image_b28c81e811.jpg

பாகிஸ்தானில் சீனப் பணியாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில், ஒன்பது சீனப் பணியாளர்கள் இறந்துள்ளார்கள். இந்நிகழ்வுகள், பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சீனாவுக்கு எழுப்பியுள்ளன. தென்னாசியப் பிராந்தியத்தில், புதியதொரு சவாலை சீனா எதிர்கொள்கிறது. ஒருபுறம் இது பிராந்தியத்தின் அமைதி சார்ந்தது; சீனாவின் இருப்புச் சார்ந்தது. 

மற்றையது, தொடக்கத்தில் சொன்னதுபோல, சீனாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையா என்ற கேள்வியாகும்.

ஒருவகையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தை அடுத்து ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மையின் விளைவு என்று ஒருசாரார் சொல்கிறார்கள். இன்னொரு சாரார் இது, சீனாவுக்கு எதிரான புதிய மேற்குலக எதிர்வினையின் ஒரு பகுதி என்கிறார்கள். மொத்தத்தில், இது பிராந்தியப் பாதுகாப்பு குறித்த அடிப்படையிலானதாகும். இந்த மோதலில் இலங்கையும் சிக்கிச் சீரழியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திமிங்கிலங்களின்-சண்டையில்-சின்ன-மீன்கள்/91-278808

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சீனாவை நம்பலாமா?

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் - 07

இந்தத் தொடரை எழுதத் தொடங்கிய நாள் முதல், ஒரு கேள்வி பின்தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. பலவகையான கோணங்களில், பார்வைகளில் விமர்சனங்களில் அக்கேள்வி எதிரொலித்துக் கொண்டே இருந்தது. 

அக்கேள்வி, கடந்த ஒரு தசாப்தகால இலங்கை அரசியல் செல்நெறியின் விளைபொருள். அந்தக் கேள்வி: ‘தமிழர்கள் சீனாவை நம்பலாமா' என்பதாகும். இந்தக் கேள்வி, ஒருவகையில் அபத்தமாகத் தெரியலாம்; அல்லது, கையறுநிலையின் விளைவாகத் தோன்றலாம்; அல்லது, இயங்கை அரசியலின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். 

ஆனால், இந்தக் கேள்வி ஈழத்தமிழர் அரசியலின் நீண்ட வரலாற்று உற்பவிப்பின் பகுதியின் பாற்பட்டது. பின்கொலனிய இலங்கையில், ஈழத்தமிழர் அரசியலின் நடத்தையின் தொடர்ச்சியாகவே இக்கேள்வி எழுகிறது. இன்று, உலக அரங்கில் சீனாவின் எழுச்சியை கண்கூடாகப் பார்க்கிறோம். ஆசியப் பிராந்தியத்தில், சீனா தன்னைத் தன்னிகரற்ற சக்தியாக நிலைநிறுத்தி உள்ளது. 

இந்தியாவின் கொல்லைப்புறம் என அறியப்பட்ட நாடுகள் எதுவும், இப்போது இந்தியாவின் முழுமையான செல்வாக்குக்குள் இல்லை. அதேவேளை, ஒபாமா காலந்தொட்டு அமெரிக்கா முன்னெடுத்து வரும் ‘ஆசியாவை மீள்சமநிலைப்படுத்தல்', இப்பிராந்தியத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் இல்லை. 

இந்தியாவும் அமெரிக்காவும் இப்பிராந்திய நாடுகளுடன் பேணுகின்ற அயலுறவுவை விட, வேறுபட்ட வகையில் சீனா, தனது அயலுறவைப் பேணுகிறது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றியோ, மனித உரிமை மீறல்கள் பற்றியோ, போர்க்குற்றங்கள் பற்றியோ மேற்குலகு காட்டிய அக்கறைகள், தமிழ் மக்கள் சார்பானவை அல்ல என்ற உண்மை, இப்போதைக்காவது புரிந்திருக்க வேண்டும். புரிய மறுப்பவர்களும் அதன்வழி வயிற்றுப் பிழைப்பைப் பார்ப்பவர்களும், தொடர்ந்தும் ஜெனீவாக் கூத்துகளை அரங்கேற்றலாம். 

பிராந்திய மேலாதிக்கத்துக்கான இந்திய-அமெரிக்கப் போட்டி, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் குலைவுக்குப் பின்னர், தெட்டத் தெளிவாக வெளிப்பட்டது. இலங்கை மீதான மேற்குலக நெருக்குவாரம், இந்தியாவுடனான போட்டியின் வெளிப்பாடென்பதற்குப் போர்நிறுத்தம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் மாறிமாறி மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்து வந்ததிலும் ஆதாரங்களைக் காண இயலும். எனவே, போர் நிறுத்தமும் அதைத் தொடர்ந்த பேச்சுகளும் மக்கள் நல நோக்கில் இடம்பெற்றவையல்ல. 

இலங்கை, அமெரிக்காவின் ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்குத் தென்னாசியாவில் முதல்முதலாக வாய்ப்பை ஏற்படுத்திய நாடு. இலங்கையில் தனது இராணுவ, கடற்படைத் தளங்களை நிறுவும் நோக்கம் இன்னமும் அமெரிக்காவிடம் உள்ளது. 

எனவே அமெரிக்காவினதும், மேற்குலகினதும் இலங்கை மீதான அவா தொடர்கிறது. எனினும் அதன் நோக்கமோ விளைவோ, தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக அமையாது என்பது உறுதி. 

இந்தியா, இலங்கையில் விரும்புகின்ற தீர்வு, இந்திய மூலதனத்தின் தடையற்ற வளர்ச்சியையும் இந்திய மேலாதிக்கத்தையுமே மனதில் கொண்டுள்ளது. திறந்த பொருளாதாரக் கொள்கை, இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைக்கத் தொடங்கிய நாளிலிருந்து, இந்தியப் பொருளாதார ஊடுருவலும் வணிக ஆதிக்கமும் வளர்ந்தே வந்துள்ளது. போருக்குப் பின்பு அது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முதலீடாகவும், நிலையான இந்திய மூலதன மேலாதிக்க இருப்பாகவும் அமைந்துள்ளது. 

கடந்த அரைநூற்றாண்டாகத் தமிழர்கள் நம்பிய, நம்ப வைக்கப்பட்ட இரண்டு தரப்புகள் அமெரிக்காவும் இந்தியாவும் ஆகும். இவ்விரண்டும் தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்று இன்னமும் சொல்லப்படுகிறது. மோடிக்குக் கடிதம் எழுதும் மோடுகள் இன்னமும் நம்மத்தியில் இருக்கிறார்கள் என்பதை,  நகைச்சுவை உணர்வோடு கடந்து செல்வது நல்லது. தமிழர்கள் யாரை நம்பினார்களோ, அவர்களின் கடந்த கால நடத்தை, அவர்களின் நோக்கங்களைத் தௌ்ளத் தெளிவாகக் காட்டிநிற்கிறது.     

சீனா, கடந்த மூன்று தசாப்தங்களில் மிகவும் மாற்றமடைந்துள்ளது. மாவோ காலத்தில் சோசலிச நாடாக இருந்தவரை விடுதலைப்போராட்டங்களை சீனா ஆதரித்தது. 

இன்று முதலாளித்துவ நாடாக மாறிய பிறகு, ஆக்கிரமிப்பு அரசுகளுக்கு ஆயுதங்களை விற்பதாக ஆகிவிட்டது. இறுதிப்போரின் போது இலங்கைக்கு, ஆயுதங்களை சீனா வழங்கியிருந்தது. ஆனால், அதைவிடப் பன்மடங்கு ஆயுத, ஆளணி, புலனாய்வு உதவிகளை இந்தியா வழங்கியது. 

சீனா, ஒருபுறம் தனது பொருளாதார தர்க்கத்தின் அடிப்படையில் செயற்படுகிறது. மறுபுறம், நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது.

 இலங்கையைப் பொறுத்தவரையில், ஆட்சியில் யார் இருப்பது என்பது சீனாவுக்குப் பொருட்டல்ல. இலங்கை போலவே, சீனா செல்வாக்குச் செலுத்துகின்ற ஏனைய நாடுகளிலும் நிலைப்பாடு அவ்வாறுதான். சீனாவின் வலுவான பொருளாதாரப் பிடி, அரசுகளைக் கட்டுப்படுத்தப் போதுமானது. 

அமெரிக்காவின் மனித உரிமைகள் பூச்சாண்டியோ, இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு அல்லது குழுக்களை ஆயுதபாணியாக்குதல் போன்ற நடைமுறைகளை, இலங்கையில் சீனா பின்பற்றாது. தமிழர்களுக்கான ஆதரவு என்ற போர்வையில், இலங்கையைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்காவும் இந்தியாவும் முயற்சித்தன; இன்றும் முயற்சிக்கின்றன. சீனாவுக்கு அது தேவைப்படாது.   

தென்னாசியப் பிராந்தியத்தில் ஆதிக்கப் போட்டி தொடரப்போவது உறுதி. இதில் ஏதாவதொரு சக்தியுடன் இணைந்து, விடுதலையைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கும் மனப்பாங்கின் வெளிப்பாடே, அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்புவதும் இப்போது சீனாவை நம்பலாமா என்ற கேள்வியும் ஆகும். 

எந்த வல்லரசையும் நம்பி, விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம். வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில், விடுதலைப் போராட்டங்கள் சில்லறைக் காசுகள் மாதிரி. 

வல்லரசு அரசியலிலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப் போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலமுமே, தேசிய இன விடுதலையை வெல்ல இயலும்.

கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள்,  எதையுமே கற்கவில்லை என்று நம்பவில்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன், ஐ.நா சபையினதும் அதன் அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர், முற்றிலும் அறியாமையால் சொல்லவில்லை. சரியானதைச் செய்யும்படி, மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத் தடுக்கிறது எது என்று சிந்திக்க வேண்டும்? 

அரசியல் தலைமைகள், மேலாதிக்கவாதிகளினதும் ஏகாதிபத்தியத்தினதும் முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவு நிலைமைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. 

எனவேதான், ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை, தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி, அவர்களது உடன்பாட்டைப் பெறாமல், அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும் இழைக்கின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்கு உட்படுத்துவது, நம் ஒவ்வொருவரினதும் உரிமையும் கடமையுமாகும்.

தமிழ் மக்கள், எப்போதோ கற்றிருக்க வேண்டிய பாடங்களைக் கசப்பான அனுபவங்களின் மூலமே கற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று வரை, தமிழ் மக்களின் உண்மையான நண்பர்களையும் நட்பு வேடம் பூண்டவர்களையும் வேறுபடுத்த இயலாத விதமாகப் பல்வேறு புனைவுகள் நம்முன் காட்சிக்கு வைக்கப்பட்டு வந்துள்ளன. அந்தப் புனைவுகளைக் களையாத வரை, விடுதலை வெகுதொலைவில். 

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அதி முக்கியமான சக்தி, தமிழ் மக்கள்தான். இதை மறக்கும் போதுதான் அந்நிய உதவிக் கரங்களுக்காகத்  தவங்கிடக்கின்ற அவலமும் அவசியமற்ற ஏமாற்றங்களும் நமக்குக் கிடைக்கின்றன. 

அமெரிக்காவை நம்பிய ஆப்கானியர்களுக்கு இன்று நடந்ததும் குர்திஸ்களுக்கு நேற்று நடந்ததும், இந்தியாவை நம்பிய அனைவருக்குமான கடந்த நான்கு தசாப்தகால அனுபவங்கள் சொல்கிற செய்தி ஒன்றுதான். 

விடுதலை என்பதும் போராட்டம் என்பதும் மக்கள் சார்ந்தது. அந்நிய சக்திகள் சார்ந்ததல்ல. உரிமைக்கான போராட்டத்தை, மக்கள் தங்கள் தோள்களில் ஏந்திச் சுமக்காதவரை விடுதலை வெல்லக்கூடியதல்ல. 

ஓநாய்கள், ஆட்டுக்குட்டிகளைக் கவரக் காத்திருக்கின்றன. ஆட்டுக்குட்டிகள் ஓநாய்களை எதிர்க்காமல் சிங்கங்களையும் சிறுத்தைகளையும் துணைக்கழைப்பது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் விடுதலைக்காக அந்நியர் தயவுக்காகக் காத்துக்கிடப்பது ஆகும்.  
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்கள்-சீனாவை-நம்பலாமா/91-279222

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.