Jump to content

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
லை 2021
சார்பட்டா பரம்பரை

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

நடிகர்கள்: ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன்

ஒளிப்பதிவு: முரளி.ஜி.; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: பா. ரஞ்சித்; வெளியீடு: அமெஸான் பிரைம்.

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள், இயக்குனர்களுக்கு மிகச் சவாலானவை. படம் பார்ப்பவர்களுக்கு அந்த விளையாட்டு அறிமுகமில்லாவிட்டால், துவக்கத்திலேயே ஆர்வமில்லாமல் போகக்கூடும். அப்படி ஒரு சவாலை ஏற்று களமிறங்கியிருக்கும் பா. ரஞ்சித், முதல் காட்சியிலேயே அந்த சவாலைக் கடந்துவிடுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஆச்சரியம்.

1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை. அந்த காலகட்டத்தில், வடசென்னையில் சார்பட்டா பரம்பரை - இடியாப்ப பரம்பரை என்ற இரண்டு குத்து சண்டைக் குழுக்களிடையே நிலவும் பகைமைதான் படத்தின் அடிப்படை.

சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த ரங்கன் வாத்தியாருக்கு, (பசுபதி) இடியாப்ப பரம்பரை சவால் விடுக்கிறது. அந்த சவாலை ரங்கன் வாத்தியார் எதிர்கொள்வதற்கு உதவும் சிஷ்யனாக வருகிறான் கபிலன் (ஆர்யா). இரு குழுக்களிடையிலான இந்தப் பந்தையத்தில் இறுதியாக ஜெயிப்பதற்கு முன்பாக கபிலன் எதையெல்லாம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது என்பதே படம்.

வட சென்னை, குத்துச் சண்டை என்றவுடன் மனதில் தோன்றும் வழக்கமான டெம்ப்ளேட்களை கலைத்துப் போட்டபடி துவங்குகிறது படம். ஆரம்பித்து ஐந்து நிமிடங்களிலேயே மிக வேகமாக உச்சகட்டத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறது திரைக்கதை.

அடுத்த ஒரு மணி நேரம் 'அட்ரிலின் ரஷ்'தான். அதற்குப் பிறகு, சற்று தொய்வைச் சந்திக்கும் திரைக்கதை, அரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வேகமெடுத்து, ஒரு அட்டகாசமான உச்சகட்ட காட்சியில் நிறைவடைகிறது.

குத்துச் சண்டையை அடிப்படையாக வைத்துவந்த படங்களை Rockyயோடு ஒப்பிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் வரும் குறியீடுகளும் நுண்ணுணர்வும் காட்சிகளில் தென்பட்டு மறையும் அரசியலும் சார்பட்டா பரம்பரையை Rockyஐவிட ஒருபடி மேலே நிறுத்துகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் பல வருடங்களாகவே கதாநாயகன் - வில்லன் என்ற இரண்டு பாத்திரங்களைத் தவிர்த்து மற்ற பாத்திரங்கள் எந்த முகமுமின்றி, கதாநாயகன் அல்லது வில்லனின் துணைப் பாத்திரங்களாகவே வந்து போவார்கள்.

இந்தப் படத்தில் மாரியம்மாள், ரங்கன் வாத்தியார், பாக்கியம், வெற்றிச் செல்வன், டாடி, ராமன், டான்சிங் ரோஸ், வேம்புலி, தணிகை என ஒவ்வொரு பாத்திரமும் ஏதோ ஒரு காட்சியில் கதாநாயகனாகவோ வில்லனாகவோ மிளிர்கிறார்கள்.

படத்தில் பிரதானமாக வரும் ரங்கன் வாத்தியார் பாத்திரத்தை விட்டுவிட்டுப் பார்த்தால்கூட, டாடி, ராமன், வேம்புலி என ஒவ்வொருவருக்கும் கதையில் ஒரு தருணம் இருக்கிறது. 'டான்சிங் ரோஸ்' என்ற பாத்திரம் படத்தின் சில காட்சிகளில் மட்டுமே வருகிறது. ஆனால், படம் முடிந்த பிறகும் மறக்கமுடியாத பாத்திரமாக அமைந்துவிடுகிறது. டான்சிங் ரோஸை மையமாக வைத்தே ஒரு படம் எடுக்கலாமே என்று தோன்றுகிறது.

அதேபோலத்தான் ஜான் விஜய் ஏற்று நடித்திருக்கும் 'டாடி' என்ற பாத்திரம். ஆங்கிலமும் தமிழும் கலந்துபேசும் ஆங்கிலோ இந்தியன் பாத்திரத்தில் வரும் ஜான் விஜய், பல தருணங்களில் ஃப்ரேமில் உள்ள மற்றவர்களைத் தாண்டிப் பிரகாசிக்கிறார்.

இந்தப் படத்திற்கு கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார் ஆர்யா. படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் அதற்கான பலன் தெரிகிறது. அவருடைய கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கக்கூடும். ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி, அந்த பாத்திரமாகவே பிறந்தவர் போல இருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை

பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO

சற்றே குழப்பமான பாத்திரம் என்றால் கலை நடித்திருக்கும் வெற்றிச்செல்வன் பாத்திரம்தான். தி.மு.க. - அ.தி.மு.க., நல்லவன் - பொறாமைக்காரன் என்ற இருமைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது இந்தப் பாத்திரம். கபிலனின் மனைவியாக வரும் துஷாரா விஜயனுக்கு ஒரு சிறப்பான அறிமுகம் இந்தப் படம்.

1975ல் நெருக்கடி நிலை காலப் பின்னணியில் நடக்கிறது கதை. படத்தில் வரும் பல பாத்திரங்கள் அரசியல் சார்புடன் இருக்கின்றன. மஞ்சா கண்ணன் என்று ஒரு பாத்திரம் வருகிறது. அப்படி ஒரு பாத்திரத்தை உருவாக்க, நிச்சயம் துணிச்சல் தேவைப்படும். வடசென்னைக்காரர்கள், அந்தப் பாத்திரத்தின் சாயல், தற்போது யார் முகத்தில் படிந்திருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்.

இந்தப் படத்தில் தனி மனிதர்கள் கோபமடைவதும் சமாதானமாவதும் வேகமாக நடப்பதுபோலத் தோன்றுகிறது. ஒருவகையில் அதுதான் இந்தப் படத்தின் பலமும்கூட. இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தை இன்னும் சற்று சுருக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையும் கலை இயக்குனரின் திறமையும் படத்தை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. வசனங்கள் பல இடங்களில் அசர வைக்கின்றன.

பா. ரஞ்சித், இந்தப் படத்தின் மூலம் அவருடைய ஆரம்ப காலப் படங்கள் ஏற்படுத்திய பரவசத்தைவிட கூடுதலான உணர்வுகளை ஏற்படுத்துகிறார். சார்பட்டா பரம்பரை நிச்சயமாக இந்த ஆண்டின் சிறந்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்.

சார்பட்டா பரம்பரை - சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி, சார்பட்டா பரம்பரை கதாநாயகன் ஆர்யா அவர்கள் ஈழத்து ஜேர்மன் பெண்ணை ஏமாற்றி வாங்கிய 70 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டாரா?

வெளியே ஹீரோ உள்ளே பிராடு, விளங்கி கொள்ளகூடிய கவிதைதான் ஆர்யா.

டெல்லியில் வெளிவிவகார அமைச்சுவரை சென்று புகார் கொடுத்திருக்கா பொலிஸ் தேடுது என்று செய்தி வந்தது, அதுபற்றி பிபிசி செய்தி ஏதும் சொல்லாதா?

ஆனானப்பட்ட ஆர்யாவுக்கு போயும் போயும் 70 லட்சம் விலை நிர்ணயித்தது அவ தப்பு.

மற்றும்படி படம் நல்லாதானிருக்கும் போல கிடக்கு சார்பட்டா பட குழுவிற்கு வாழ்த்துக்கள், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்பட்டா: அடர்த்தியும் நுட்பமுமாக ஒரு திரைப்படம்!

spacer.png

அ.குமரேசன் 

 

 

ஒன்றை ஒப்புக்கொண்டுதான் ‘சார்பட்டா பரம்பரை’ படம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒப்பீட்டளவில் ஓர் அடர்த்தியை இதிலே உணர முடிகிறது. கருத்துக் கட்டமைப்பாகிய தலைச்சரக்கு, உடற் கட்டமைப்பாகிய கலைச்சரக்கு இரண்டிலும் அந்த அடர்த்தி இருக்கிறது. படத்தில் இந்தப் பரம்பரையின் ரங்கண்ணன் வாத்தியார் கை, கால் திறமையைப் போலவே மூளைக் கூர்மையையும் வலியுறுத்துகிறார், இந்த இரண்டையும் கலந்தாடியிருக்கிறார் பா.ரஞ்சித்.

உலக அளவில், இந்தியாவில், தமிழில் இதற்கு முன்பும் குறிப்பிட்ட விளையாட்டுகள், தற்காப்புக் கலைகள் தொடர்பான திரைப்படங்கள் பல வந்திருக்கின்றன. சினிமாப் புகழுக்கான மோதல் மேடையில் புரூஸ் லீ “என்டர்” ஆகிய “டிராகன்” இப்படிப்பட்ட படங்களுக்குப் பெரியதொரு உந்துசக்தியாக அமைந்தது எனலாம். அந்தப் படங்களிலும் பலவற்றில் நாயகப் பாத்திரங்களின் சீரான உடற்கட்டு, பயிற்சியால் வளர்ந்த ஆட்டத்திறன், தடைகளை முறியடித்த வெற்றி ஆகியவற்றுக்கு அப்பால் அரசியல்/சமூக நிலைமைகள் பற்றிய சில கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ‘கலிபோர்னியா டால்ஸ்’ என்ற ஹாலிவுட் படம், குத்துச் சண்டைப் போட்டிக் களத்தில் பெண்களை இறக்கிவிட்டுப் பணம் குவிக்கும் நிறுவன வக்கிரத்தைக் காட்டியது. இந்திப் படமான ‘டங்கல்’ இந்தக் களத்தில் பெண்கள் இறங்குவதற்கே தடையாக உள்ள சமூக மனநிலையைப் பேசியது. ஏன், தமிழின் ‘பிகில்’ கூட, நாயக சாகசங்களோடு கலந்து கால்பந்து மைதானத்தில் சாதிக்கத் துடிக்கும் பெண்கள் சந்திக்கிற திருமணம், குடும்பம், உடல்வாகு போன்ற சவால்களைத் தொட்டுக்காட்டியது. கபடியாட்ட மைதானத்தின் சமூகக் கோடுகளை அழுத்தமாகவே வரைந்து காட்டியது ‘வெண்ணிலா கபடிக்குழு’. கிரிக்கெட் மட்டையிலும் சாதி ஆதிக்கப்புத்தி நூலாகச் சுற்றப்பட்டிருந்த நிலைமையைத் தடவிப் பார்க்க வைத்தது 'ஜீவா'.

இப்படியாக நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் இல்லாத அல்லது அவற்றை விடப் பல மடங்கு அடர்த்தியோடு சார்பட்டா பரம்பரை கோதாவில் குதிப்பதை உணர முடிகிறது. ஆம், உணரத்தான் வேண்டும் – அவ்வளவு நுட்பமாக அதை வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஓடிடி திரை மேடை போலவே கதையும் இந்நேரம் பரவலாகியிருக்கும் என்ற வாய்ப்பாலும், அதைச் சொல்வது விமர்சன நாகரிகமல்ல என்ற என் கருத்தாலும் அதற்குள் செல்லாமல் படம் சார்ந்த சில சிந்தனைகளுக்கு மட்டும் வருகிறேன். மேலோட்டமாகப் பார்த்தால் குத்துச் சண்டையில் வெல்வது யார் என்ற கெத்துச் சண்டைதான் கதை என ஒரு குறுஞ்செய்திக்கான கட்டண வரம்புக்குள் சொல்லிவிடலாம். உள்ளோட்டத்தில் இறங்கினால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு கட்டுரையே எழுதலாம்.

“ரஞ்சித் படங்களில் சாதிப் பிரச்சினை மையமாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவானது சினிமா என்பதால் அப்படிப்பட்ட படங்களை எடுப்பதுதான் நல்லது. இந்தப் படம் அப்படிப் பொதுத்தன்மையுடன் இருப்பது சிறப்பு” என்று பாராட்டுகிறார்கள் ஒரு பகுதியினர். “அப்படிப் பொதுத்தன்மையுடன் இருப்பது சமூக நோக்கத்திலிருந்து பாதை மாறிய சமரசத்தைத்தான் காட்டுகிறது” என்று தள்ளுபடி செய்கிறார்கள் இன்னொரு பகுதியினர்.

சமுதாயத்தின் பொதுவான பிரச்சினை சாதி. அதை மையமாக்குவது பொதுவானதாகத்தானே இருக்க முடியும்? சாதியைச் சுமந்துகொண்டு திரியாதீர்கள் என்று சொல்வதற்கே கூட அதை மையமாக்கத்தானே வேண்டும்? ஆனால், சாதிப் பெருமை பேசுகிற படமென்றால் அதைப் பொதுவானது என்று வரவேற்பதும், சாதியச் சிறுமையைச் சாடுகிற படமென்றால் சினிமா எல்லோருக்கும் பொதுவானது என்று ஒதுக்க முயல்வதும் என்ன மனநிலை? எல்லோருமாகச் சேர்ந்து ஒழித்துக்கட்ட வேண்டிய சாதியத்தைப் பற்றிய படைப்பை எல்லோரும் விரும்பி ஏற்கத்தக்க வகையில் படைப்பாளி தர வேண்டும் என்று கூறுவது வேறு, சாதி பற்றியே பேசாமல் சும்மா பொழுதுபறிப்புப் படமாக எடுக்கச் சொல்வது வேறு.

அதே போல், ஒரு படைப்பாளி குறிப்பிட்ட வகையிலான ஆக்கங்களை மட்டுமே உருவாக்கிக்கொண்டிருக்க வேண்டுமா? பூமியின் நிலம், நீர், ஆகாயம் ஆகிய மூன்று பரப்புகளிலும் பரந்து நிறைந்திருக்கிற மற்ற நிலவரங்களில் ஒன்றை எடுத்துக்கொள்ளக்கூடாதா? அப்படி எதிர்பார்ப்பது, இல்லையேல் சமரசம் என்று தள்ளுவது இரண்டுமே கலையை முடக்கிவிடும். எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதில் கலை நேர்மை இருக்கிறதா, இல்லையா என்று விவாதிக்கலாம் தவறில்லை.

ரஞ்சித் இதிலே கலை நேர்மையோடு, இந்தியாவின் நாற்பத்தைந்தாண்டுகளுக்கு முந்தைய இருட்டு அத்தியாயமாகிய அவசர நிலை ஆட்சி, அன்றைய தமிழகத்தின் அரசியல் களம் இரண்டையும் பின்திரையாக வைத்துக்கொண்டு, ஒரு சிதைக்கப்பட்ட தற்காப்புக் கலை, அதை மீட்பதற்கான போராட்டம் இரண்டையும் முன்னிலைப்படுத்தியிருக்கிறார். முகத்தில்தான் குத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிகளோடு இருந்து வந்திருக்கிற உள்ளூர்க் குத்துச் சண்டை மரபில், வெள்ளையர் ஆட்சியின்போது எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தாக்கலாம் எனக் கலக்கப்பட்ட நெறி மீறல்கள் பற்றிப் பேசுகிறது படம். அது “அடிச்சுக் காலி பண்ணு” என்று (நாயகன், எதிரி என மோதுகிற இரு தரப்பிலுமே) குருதி ருசியில் வெறியூட்டுகிற வேதியலாக்கப்பட்டுவிட்டதையும் சொல்லாமல் சொல்கிறது.

இதற்கு உள்ளேயும் இருந்த சாதிய ஒதுக்கலையும் ஒதுக்கிவிடாமல் சொல்லியிருக்கிறார்கள். “நீயெல்லாம் இந்த இடத்திலே வந்து பேசவே கூடாது” என்று சண்டைக்கள வாக்குவாதத்தில் ஒருவன் கபிலனைப் பார்த்துச் சொல்வது அந்த ஒதுக்கலின் காரணமாகத்தான். அதையெல்லாம் மீறித்தான் அடையாளம் பெற்றிருக்கிறார்கள். அதற்கு, ஒரு சாதியோடு நிற்காமல் யாரையும் இணைத்துக்கொண்டு குறிப்பிட்ட பயிற்சி முறையைப் பின்பற்றுவதே பரம்பரை என்ற புரிதலோடு சார்பட்டா பட்டறை கட்டப்பட்டிருப்பதை வாத்தியார் போகிற போக்கில் சொல்கிறார். அதற்கொரு சான்று அவரது குழுவில் முக்கியமான ஒருவராக, கபிலனைத் தூக்கிக் கொண்டாடுகிறவராக ஆங்கிலோ இந்தியரான டாடி வருவது. போட்டிக் களம் முற்றிக்கொண்டிருக்கிறபோது, “இனிமே நம்ம காலம்தான்” என்று கபிலனின் நண்பன் ஆவேசத்தோடு சொல்கிற இடத்தின் பின்னணியில் அம்பேத்கர் சுவரொட்டி, குடியிருப்பிடத்தில் புத்தர் சிலை உள்ளிட்ட குறியீடுகள் குறிப்பாக உணர்த்திவிடுகின்றன. இப்படிக் குறியீடுகளாகத்தான் உணர்த்த முடிகிறது, சொல்லாமல் சொல்லத்தான் முடிகிறது என்பது ஒருபக்கம் கலையின் நுட்பம் என்றால், இன்னொரு பக்கம் நேரடியாகச் சித்திரிக்க முடியாத ஒரு நெருக்கடியைக் கலைஞர்களுக்கு ஏற்படுத்துவது சமூகத்தின் குற்றம். அடுத்தடுத்த ஆக்கங்களில் ஆழமான சிந்தனைகளுக்குக் கொண்டு செல்வதற்குத் தொடர்ந்து இந்த வணிகக் கட்டமைப்போடும் இருந்தாக வேண்டியிருப்பது பல கலைஞர்களின் சிறகை விரிக்கவிடாமல் செய்திருக்கிறது.

அவசரநிலை ஆட்சியின்போது தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டது, பலர் கைது செய்யப்பட்டது, எம்ஜிஆர் கை ஓங்கத் தொடங்கியது, சிலர் தங்களுக்குக் கிட்டத்தட்ட அடியாட்களாக வேலை செய்வதற்கு ஆள்பிடிக்கிற வேலைகளில் இறங்கியது, மேலும் சிலர் கள்ளச்சாராயத் தயாரிப்பில் இறங்கியது, அதையொட்டி ரவுடிக் கும்பல்கள் வளர்த்துவிடப்பட்டது, இந்தப் போக்குகளோடு சிலர் தங்கள் சொந்தத் திறன்களையும் அடையாளங்களையும் இழந்தது… உள்ளிட்ட அரசியல் பதிவுகளும் இருக்கின்றன. குத்துச் சண்டை மோதல் களம் இதற்கான வேட்டைக் காடாகவும் மாற்றப்படுகிறது. திருமண இணையருக்குப் பரிசாக அம்பேத்கர் படத்துடன் பெரியார், கலைஞர் படங்களும் வழங்கப்படுவதிலும் ஒரு நுட்பமான செய்தி. இப்படி இங்கேயெல்லாம் செல்கிற காட்சியோட்டம் உடனுக்குடன் மையக்கதைக்குத் திரும்பிவிடுகிறது. அது படத்தின் முக்கியமான பலம்.

கபிலனின் சண்டைத் திறனை உற்றார் உறவினர் கொண்டாடினாலும், தாய் பாக்கியம் அதை அங்கீகரிக்கவில்லை. குத்துச்சண்டைக்குப் போகக் கூடாது என்று அடக்குகிறார், மீறிச் சென்றால் அடிக்கிறார். பின்னர் அவரே, “நீயும் குடிகாரனாகிவிடக் கூடாது, ரவுடியாகிவிடக் கூடாது என்றுதான் பாக்ஸிங்குக்குப் போகக் கூடாதுன்னு சொன்னேன். இப்ப, நீ அப்படியெல்லாமல் ஆகாமத் தடுக்கணும்னா பாக்ஸிங்குக்குப் போறதுதான் வழி” என்று தன்னம்பிக்கையூட்டிக் கிளப்புகிறார். இதிலே எத்தனை வாழ்வியல் நுட்பம்!

“விளையாட்டுன்னா ஜெயிக்கவும் செய்யலாம், தோக்கவும் செய்யலாம். அதிலே ஏண்டா பரம்பரைப் பெருமை, மானம்னு சேர்க்கிறீங்க” என்று கேட்கப்படுகிற இடம் நுட்பமானது, அழுத்தமானது. மிகையான சொற்களால் கட்டமைக்கப்படும் மான மயக்கம் பற்றிய இந்தக் கேள்வியை எழுப்புவதும் ஒரு பெண்தான்! ஆசை ஆசையாய் மாமன் கபிலனைக் கட்டிக்கொண்ட மாரியம்மாளிடமிருந்து வரும் இந்தக் கேள்வி அர்த்தமுள்ளதும்கூட. பெண் பாத்திரங்களுக்கு நிறைய இடமில்லாவிட்டாலும் நிறைவான இடம் தரப்பட்டிருப்பது சிறப்பு.

வாத்தியாரின் மகன் சாராயமும் காய்ச்சுகிறான், பழிவாங்கவும் துடிக்கிறான், கடைசியில் துணையாகவும் நிற்கிறான். அவன் நல்லவனா, கெட்டவனா? இந்த வினாவுக்கு ஒரு சொல் விடையாக எழுதிவிட முடியாத எண்ணற்ற ஊசலாட்ட மனிதர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு அந்த வெற்றிச்செல்வன்.

சார்பட்டா குழுவின் பெருமைக்காக இடியாப்பப் பரம்பரைக் குழுவை முழு வில்லன்களாக்கிவிட்டிருப்பது யதார்த்தச் சித்திரிப்பிலிருந்து கொஞ்சம் விலகுகிறது. முழுக்க முழுக்க சூழ்ச்சி செய்கிறவர்களாகவே இருப்பார்களா? அப்படியொரு சதித்திட்டத்தோடு வருகிற தணிகையை, முக்கியப் போட்டியாளனாகிய வேம்புலி “போய்யா” என்று ஒதுக்குவதில் சற்றே ஆட்டநேர்மைப் பண்பு தெரிகிறது. ஆனால் அந்தக் கணத்தோடு அது முடிந்துவிடுகிறது. மோதுகிறவர்கள் ரத்தம் கொட்ட வைப்பதுதான் வீர விளையாட்டு என உயர்த்திப் பிடிக்கலாமா என்ற மனித நேயமும் உரிமையும் சார்ந்த பார்வை சார்ந்த கேள்வியும் எழுகிறது. கபிலன் ஊரைக் காப்பாற்றுவதற்காக அல்ல, தான் வெறியோடு மதிக்கிற வாத்தியாரின் மரியாதையைக் காப்பாற்றுவதற்காகத்தானே கையுறை அணிகிறான்?

எல்லாக் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றிருப்பது போலவே, எல்லா நடிப்புக் கலைஞர்களும் முன்னிலை பெற்றிருக்கிறார்கள். கதையில் வருவோரை அவர்களது பெயர்களிலேயே நினைவில் நிறுத்துகிறார்கள். உடற்கட்டால் அசத்துவதோடு உள்ளத்தின் உறுதியை வளர்த்துக்கொண்டதையும் காட்டுகிற கபிலனாக ஆர்யா, பரம்பரையின் பெருமைக்காகப் போராடுவதோடு அரசியலிலும் போராடி சிறைக்குச் செல்கிற ரங்கண்ண வாத்தியாராக பசுபதி, மாரியம்மாளாக துஷாரா விஜயன், பாக்கியமாக அனுபமா குமார், கெவின் என்ற டாடியாக ஜான் விஜய், மிஸ்ஸியம்மாவாக பிரியதர்ஷினி ராஜ்குமார், வெற்றியாக கலையரசன், வேம்புலியாக ஜான் கொக்கேன், ஊடகவியலாளர்கள் இனி விசாரிக்கப்போகிற டான்சிங் ரோஸ் என்ற நடனக் குத்துச்சண்டையாளராக ஷபீர் கல்லரக்கல், வாத்தியார் துரைக்கண்ணுவாக ஜி.எம். சுந்தர், தணிகையாக வேட்டை முத்துக்குமார், லட்சுமியாக சாஞ்சனா நடராஜன், டைகர் கார்டன் தங்கமாக டைகர் தங்கதுரை, கபிலனின் தகப்பனாக கிஷோர், கௌதமனாக சரவணா, ராமனாக சந்தோஷ் பிரதாப், கோணி சந்திரனாக காளி வெங்கட்… யாரைச் சொல்வது, யாரை விடுவது? கொரோனா தொற்றால் உயிரிழந்த மாறன் படத்தின் வழியே மாஞ்சா கண்ணனாக வாழ்கிறார்.

படத்தின் மற்றொரு முக்கியமான பலம் ரஞ்சித், தமிழ்ப்பிரபா இருவருமாக எழுதியுள்ள உரையாடல். கபிலன் பயிற்சி எடுக்கும் கடல் நீர் பற்றியும், கரையில் ஓடும் நண்டை ஓடிப் பிடிப்பது பற்றியும் மீனவரான பயிற்சியாளர் சொல்லச் சொல்ல அந்த வசனம் மட்டுமல்லாமல், அது உணர்ச்சி மிகுந்ததாக மாறுகிற இடமும் கவித்துவமானது. பேசின் பிரிட்ஜ் பகுதியில் இப்போது காண முடியாத அனல்மின் நிலையக் கோபுரங்கள், நிலக்கரிக் குவியல்கள், மணிக்கூண்டு, சைக்கிள், பைக், கார் என்று பார்க்க முடிவதில் கலை இயக்குநர் ராமலிங்கம் குழுவினரின் உழைப்பு பளிச்சிடுகிறது.

அத்தனை பேரின் உழைப்பையும் உயிரோட்டமாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜி. முரளி. சீராகவும் வேகமாகவும் தவழ்கிற அலை போலத் தொகுத்திருக்கிறார் ஆர்.கே.செல்வா. இத்தகைய படங்கள் என்றால் இசைத் துடிப்புக்கு இவர்தான் என்ற அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயண். அந்த இசைக்கு இதயமாகத் துடிக்கின்றன கபிலன், அறிவு, மெட்ராஸ் மீரான், ஷான் வின்சென்ட் டீ பால் பாடல்கள்.

முதலில் குறிப்பிட்ட அடர்த்திக்காகவும், சில புரிதல்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் படத்தை இரண்டாவது முறை பார்த்தேன். முதல் தடவை பார்த்தபொழுதின் அதே விறுவிறுப்பு மறு பார்வையின்போதும் அப்படியே தொடர்ந்தது தனியொரு அனுபவம்.

https://minnambalam.com/politics/2021/07/25/5/Sarpatta-an-exceptional-movie

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2021 at 14:41, பிழம்பு said:

Rockyஐவிட ஒருபடி மேலே நிறுத்துகிறது.

இந்த தமிழ்பிபிசி காரருக்கு கொரனோ நேரமும் நல்லா பொழுது போகுது போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆர் ரசிகர் பயில்வான் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல நாட்களுக்கு பின்னர் தமிழில் பார்த்த சிறந்த படம்.👍🏾👍🏾👍🏾

பசுபதியின் நடிப்பு அபாரம். டான்சிங் ரோஸ் Fantastic Mr. Fox இல் வரும் the Rat ஐ நினைவூட்டியது.

சார்பட்டாவை பாராட்டிய பிரசன்னா: நன்றி தெரிவித்த ஆர்யா

 
spacer.png
 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'.

அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை திரைக்கலைஞர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாராட்டி சார்பட்டா பட ஆதரவாளர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருவதை போன்று அதற்கு எதிரான விமர்சனங்களும் இடம்பெற்று வருகிறது படக்குழுவினரைப் பாராட்டும் வகையில் நடிகரும் நடிகை சினேகாவின் கணவருமான பிரசன்னா பதிவு ஒன்றை ட்விட்டர் மூலம் வெளியிட்டிருக்கின்றார்.

"சார்பட்டா "திரைப்படமும் அதன் கதாபாத்திரங்களும் இன்னும் நீண்ட காலத்துக்கு நமது மனதில் இருக்கும். இயக்குநர் பா.இரஞ்சித் எழுதியதில், இயக்கத்தில் இதுவரை வந்ததில் சிறந்த படைப்பு. சகோதரர் ஆர்யாவின் நடிப்பில் மிகச்சிறந்த படம். உரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

எனது தம்பி கலையரசனை நினைத்துப் பெருமையடைகிறேன். மற்றவர்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு பசுபதி மற்றும் ஜி.என்.சுந்தரின் நடிப்பு இருந்தது. டான்சிங் ரோஸ் போன்ற அற்புதமான நடிகர்கள், பெண் கதாபாத்திரங்கள் என அத்தனையுமே திரையில் அட்டகாசமாக இருந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாக டாடி கதாபாத்திரத்தில் ஜான் விஜய் நடிப்பு இருந்தது. இந்தப் படம் தொடர்பான அத்தனை விஷயங்களும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. அந்தக் காலகட்டத்தை உருவாக்கிய கலை இயக்குநர் ராமலிங்கம் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளிக்குப் பாராட்டுகள்.

சந்தோஷ் நாராயணின் இசை எப்போதும் போல சிறப்பு. இந்தப் படத்தின் ஒவ்வொரு இடத்தையும் ரசித்தேன். திரையரங்கில் வெளியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று நினைத்தேன். 'சார்பாட்டா பரம்பரை' படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆர்யா, "பிரதர்... உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. உங்கள் பாராட்டு மிக முக்கியமானது பிரதர்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரசன்னா, "நான் என்றுமே உங்களிடமிருந்து, உங்கள் கடின உழைப்பிலிருந்துதான் உந்துதல் பெற்றிருக்கிறேன். இது, உடலுழைப்பைத் தாண்டிய முயற்சி.

நீங்கள் தோற்றதும் உங்கள் அம்மா, மனைவி முன் அழும் காட்சி, அப்படியான உடற்கட்டோடு அழும்போது நீங்கள் இன்னும் குழந்தைதான் என்று என்னை உணரவைத்தீர்கள். அற்புதம். உங்கள் வீட்டுகுட்டி ராணிக்கும் என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/entertainment/2021/07/28/22/sarpatta-barambarai-prasanna-wishes-aarya

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக ஆதரவு படமா சார்பட்டா பரம்பரை?

இதுவரை வெளிவந்த படங்களில் நேரடியாக ஒரு குறிப்பிட்ட கால அரசியல் இயங்குமுறையினைக் கதையோட்டத்திற்கான பின்னணியாகவும் குறிப்பிட்ட அரசியல் நிகழ்வுகளை நேரடியாகக் கதையுடன் பின்னப்பட்டும் வெளிவந்த படங்கள் அரிது. அந்த வகையில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் குறித்த ஒரு பிம்பத்தினை சார்பட்டா பரம்பரை திரைப்படம் நமக்கு வழங்குகிறது. ஏற்கனவே வழக்கமாக நம் மனதில் ஆழ்ந்துள்ள அரசியல் கட்சிகளின் பிம்பத்தினைக் குறித்துப் பேசுகிறது. இதில் இந்தியக் குடியரசு கட்சி, திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நேரடியாக கதையோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவை அரசியல் நிலைபாடுகளாவும் உருகொள்கின்றன. 

பா. ரஞ்சித் படங்களில் வெளிப்படும் அரசியல் தன்மைகள் ஒவ்வொரு படத்திலும் கூர்மைப்பட்டுக் கொண்டே செல்கிறது. ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் என்ற அரசியலைப் பேசிவந்தாலும் நேரடியாக ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது கட்சி போன்றவை முந்தைய படங்களில் பேசப்படவில்லை. ஆனால் சார்பட்டா பரம்பரை படத்தில் நேரடியாக கட்சிகள் குறித்துப் பேசப்படுகிறது. அதாவது கட்சிகள் கதையோட்டத்தின் பின்புலமாக அமைந்திருக்கிறது. இத்துடன் அக்கட்சிகள் நாயகனின் செயல்பாட்டுடன் இடையீடு செய்கிறது. அதன்மூலம் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள் நமக்கு உணர்த்தப்படுகிறது.  

Sarpatta Parambarai movie review: Arya, Pa Ranjith film isn't a giant leap  for the genre, but baby steps for Tamil boxing films | Entertainment  News,The Indian Express

இத்திரைப்படம் திமுக ஆதரவு திரைப்படமாகவும் அதிமுக எதிர்ப்பு திரைப்படமாகவும் காணப்படுவதாகப் பெரும்பாலும் பேச்சுகள் உள்ளன. அத்தகைய தன்மையில் விவாதங்களும் நடைபெற்றன. சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகமீது நுட்பமான விமர்சனங்களை வைத்துள்ளதாகப் பார்க்கிறேன். அவற்றினைக் குறித்து மட்டுமே இவ்வெழுத்துரை அமையப் போகிறது. 

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் அனைவரையும் மிகவும் கவர்ந்தது ஒவ்வொருவருடைய பாத்திர வடிவமைப்பு. பாத்திர வடிவமைப்பின்மூலம் பேசப்படும் வசனங்கள், அப்பாத்திரத்தின் செயல்பாடுகள் ஓர் அரசியல்நிலைபாடுகளைத் தாங்கியுள்ளது. ரங்கன் எனும் பாத்திரவடிவமைப்பு எத்தகைய தன்மையிலானது என்பதைப் பார்ப்போம்.

ரங்கன் வாத்தியார் என்னும் பயிற்சியாளர் கதாபாத்திரம் விளையாட்டுத் திரைப்படங்களுக்கே உரித்தான மிகவும் ஒரு வழமையான பாத்திரம்தான். ஆனால் அப்பாத்திரத்திற்குப் பல்வேறு வகைகளில் ஒளியூட்டுவதன்மூலம் வேறொரு பிம்பம் நமக்கு வழங்கப்படுகிறது. அதில் ஒன்று அவர்தான் கடைசியாக வெற்றி பெற்றவர். அதன்பிறகு அவர் பயிற்சி கொடுத்ததில் யாரும் வெற்றி பெறவில்லை. அதன்மூலம் தொடர்ச்சியாக அவமானத்தினைச் சந்தித்து வருகிறார். அதனை எப்படியாவது போக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பயிற்சியாளர். 

மற்றொன்று அவர் ஒரு திமுககாரர். அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவர். மதிப்பு மிக்கவர். அவரது வீட்டு அருகில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டிருக்கிறது. தினமும் அவர் முரசொலி படிப்பார். அவர் வெள்ளைகாரனுடன் சண்டையிட்டு வென்றவர். அவர் சாதி பார்க்காதவர். யார் நன்றாக விளையாடுகிறாரோ அவரின் பக்கம் நிற்பவர். ராமன் காலில் விழ வரும்போது காலில் எல்லாம் விழாதே என்று தடுப்பவர். சார்பட்டா பரம்பரைகாக யார் சண்டையிடுவது என்று வரும்போது தலித் ஆக இருக்கும் கபிலனைத் தேர்ந்தெடுத்தவர் எனப் பல்வேறு வகையில் ரங்கன் பாத்திரம் முற்போக்காக இருக்கிறார். இதற்கு திராவிட வீரன் என்ற பட்டமும் அவர் திமுகவில் இருப்பதும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதில் திமுக என்பது கதைக்கும் பக்கப்பலமாக உள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்கும் பக்கப்பலமாக உள்ளது.  ஆனால் ஒட்டுமொத்த ரங்கன் கதாபாத்திரம் எத்தகைய தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் முக்கியமானது.  

அனைவரின் எதிர்ப்பை மீறி ரங்கன் தேர்ந்தெடுக்கும் ஒருத்தரே (ராமன்) ரங்கனின் பயிற்சி இதற்குமேல் ஒத்து வராது. அவரின் பயிற்சி கொண்டு வெல்ல முடியாது என்று ரங்கனை அவமானப்படுத்துகிறார். ரங்கனிடம் பயிற்சி பெறாத, ரங்கனைப் பார்த்துக் கற்ற கபிலன், ரங்கனின் தன்மானத்திற்கு இழிவு நேரும்போது தானாக முன்வந்து ரங்கனின் தன்மானத்தினைக் காக்கிறான். அதாவது ராமனை அடித்து வீழ்த்திவிடுகிறார். கபிலனைப் பார்த்து வியக்கும் ரங்கன் இதுவரை தனக்கு நேர்ந்த அவமானத்தினைக் கபிலன்மூலம் மாற்ற முயலுகிறார். கபிலனிடம் அனுமதி கேட்காமலேயே அவன் சண்டையிட பேச்சு வார்த்தை நடத்துகிறார். கபிலன் முடியாது என்று சொல்லவே, திரும்புகிறார். ஆனால் டேடியின் தூண்டுதலால் கபிலன் சண்டையிட சம்மதிக்கிறார். ரங்கன் பயிற்சி கொடுக்கிறார். டான்சிங் ரோசை வெல்கிறார். ஆனால் அது முக்கியமில்லை. வேம்புலியை வெல்ல வேண்டும்.

Sarpatta Parambarai: Arya, John Kokken modelled their roles on Muhammad  Ali, Mike Tyson in boxing drama - Hindustan Times


வேம்புலியுடனான சண்டையின்போது மிசாவினால் சிறை செல்கிறார் ரங்கன். ரங்கன் பாத்திரம், தலைவர் நம்மைக் காப்பாற்றுவார். தமிழகத்திற்கு ஒரு சிக்கலும் இல்லை என்று மேடையில் முழங்கியிருப்பார். ஆனால் அதற்கு எதிராக நிகழ்வு நடக்கிறது.  ஆட்சி கலைக்கப்படுகிறது. முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ரங்கன் சிறைசென்று திரும்புகையில் வரவேற்க கட்சியிலிருந்து 3,4 பேரே வருகின்றனர். வேலூர் சிறையில் முதலியார் வெளிவருவதால் அங்கு எல்லோரும் சென்றுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.  அவருக்கு ஒருசிறிய மாலை இடப்படுகிறது. இதையும் முதலியாருக்கே கொடுங்கள் என்று ரங்கன் பாத்திரம் சொல்லும். 

இதற்கிடையில் கபிலன் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகிறார். அதிமுகவின் எழுகை ஆரம்பிக்கிறது. ரங்கன் வாத்தியார் மகன் அதிமுகவில் இணைகிறார். அதன்பின்பு பல்வேறு சிக்கல்கள் நேர்ந்து விடுகிறது. சாரயம் காய்ச்சுதல், போதைக்கு அடிமையாதல் என்ற நிலைக்கு உள்ளாகிறார் கபிலன். அதன்பின்பு அதிலிருந்து வெளிவர முயல்கிறார். அது போட்டியில் கலந்து கொள்வதன்மூலம்தான் நிகழும் என்பதை உணர்கிறார். இவ்விடத்தில ரங்கன் அவனுக்குப் பயிற்சி கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். கத்தி எடுத்தவனுக்கு குத்துச் சண்டை வராது என்று சொல்கிறார். கபிலன் எதைச் செய்யக்கூடாது என்பதற்காக அவனது தாய் குத்துச் சண்டையினைத் தடுத்தாரோ அதனை அவன் செய்துள்ளான் அதனால் அவனுக்குப் பயிற்சி தர மாட்டேன் என்று சொல்கிறார் ரங்கன். 

இந்த இடத்தில் ஒட்டுமொத்தமாக திமுககாரர் என்ற ரங்கனின் பாத்திரம் சிதைவடைகிறது. அறம்சார்ந்து கத்தி எடுத்தல் தவறு அதனால் பயிற்சி தரமாட்டேன் என்று சொன்னாலும் கபிலன் கத்தி எடுத்தற்குக் காரணம் வளையத்தினுள் அவனுக்கு நிகழ்ந்த நிகழ்வு. அதனைப் போக்குவதற்காகத்தான் அவன் சண்டையிட வருகிறான். இத்தகைய நிலையில் பயிற்சி கொடுப்பவர்தான் ஓர் உண்மையான பயிற்சியாளராக இருக்கமுடியும்.. ஒருவேளை ரங்கன் பயிற்சி கொடுத்து வேம்புலியைக் கபிலன் அடித்திருந்தால் அது திமுககாரர் ரங்கனின் வெற்றியாக இருக்கும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை என்பதுதான் முக்கியமானது.

கபிலனின் அம்மா, பாக்சிங் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா என்ற கேட்பது, கபிலனைப் பாக்சிங் ஆடக்கூடாது என்று சொன்னவர்களை மட்டும் பார்த்துக் கேட்க வில்லை. அவனுக்குப் பயிற்சி தர மாட்டேன் என்று சொன்ன ரங்கனைப் பார்த்தும் மறைமுகமாகக் கேட்கிறார். ரங்கனுக்கும் கபிலனின் அம்மாவிற்கு நல்ல பழக்கம் உண்டு. ஆனால் ரங்கனிடம் பேசாமல் வேறொருவரைப் பயிற்சியாளராக அவனது அம்மா நியமிக்கிறார்.

வெளியில் இருந்து பயிற்சி பெற்று வந்தாலும் இறுதி போட்டியின்போது ரங்கனைக் கபிலன் தேடுகிறான். 4 ரவுண்டுகளுக்குப் பிறகு ரங்கனும் உதவுகிறார். இறுதியில் கபிலன் வென்றபிறகு ‘ரங்கன் வாத்தியார் சிஷ்யன் டா’ என்று சொல்கிறார். உண்மையில் அவர் பயிற்சி கொடுக்கவில்லை. ஆனாலும் ரங்கன் பெருமிதம் கொள்கிறார். இறுதியில் அதிமுகவில் சேர்ந்த தனது மகனையும் கூட ஏற்றுக் கொள்கிறார். 

அதாவது கபிலனின் வெற்றி சார்பட்டா பரம்பரையின் வெற்றி என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது வலிந்து நமக்குநாமே திணிக்கக்கூடியதாக இருக்கும். காரணம், கபிலன் பரம்பரைக்காக சண்டையிட்ட போது நிர்வாணமாக்கப்படுகிறான். பின்னர் நிலைகுலைகிறான். அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள அவன் தனக்காக விளையாடுகிறான். நீலத்தினை அணிந்து கொண்டு விளையாடுகிறான். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று, டான்சிங் ரோசுடன் ஆடும் போது அவன் உதயசூரியன் கொண்ட உடையினை அணிவதில்லை. வேம்புலியுடன் ஆடும்போது உதயசூரியன் கொண்டு உடையினை அணிந்து கொள்கிறான். ஆனால் அவன் நிர்வாணப்படுத்தப்படுகிறான். அவனை உதயசூரியன் காக்க வில்லை.

 டான்சிங் ரோசுடன் சண்டையிடுவதைத் தவிர மற்ற இரண்டு முறை (ராமனுடனும் வேம்புலியுடனும்) வெற்றி கொள்ளும்போதும் அதனையும் ரங்கன் அதனை தனக்கான வெற்றியாகக் கொள்கிறார். கிட்டத்தட்ட இந்தப் பாத்திரங்கள் பலநேரங்களில் ஏகலைவனையும் துரோணாச்சாரியாரையும் நினைவு படுத்துகிறது. அத்தகைய நினைவு படுத்துதல் வேண்டும் என்பதுதான் இந்தப் பாத்திர உருவாக்கத்தின் தன்மை என்று நினைக்கிறேன்.

Sarpatta Parambarai' trailer: Arya's pugilist drama is raw and real - The  Hindu

ரங்கன் வாத்தியாரின் வீட்டில் கருணாநிதி படத்தினைப் பார்க்க முடியாது ஆனால் அதற்குப் பதிலாக நாம் எம்ஜிஆரின் படத்தினைப் பார்க்கலாம். தனது சொந்த மகன் ஒரு கட்டத்தில் அவரை நம்புவதில்லை. மற்றொரு கட்டத்தில் அதிமுகவில் சேர்கிறான். அடிப்படையில் இத்தகைய தன்மையிலானதுதான் திமுக என்ற விமர்சனமும் இதில் அடங்கியுள்ளது.

“இது நம்ம ஆட்டம்” “இங்கு வாய்ப்பு எளிதில் கிடைக்கப்படுவது இல்லை. இறங்கி ஆடு”, “இது உன்னோட வெற்றி மட்டும் இல்ல நம்ம சனங்களோடு வெற்றி”  முதலியவற்றிலிருந்து உத்வேகம் பெற்றுதான் கபிலன் வெல்கிறான். இப்படத்தினை உருவாக்கியவர்களும் அதனைத்தான் முன்னிறுத்தி உள்ளனர் என்று தோன்றுகிறது. உண்மையில் இத்திரைப்படம் திமுக சார்பு படமோ திமுகவை நல்லமுறையில் காண்பிக்கப்பட்ட படமோ அல்ல. திமுகவின்மீது நுட்பமான விமர்சனங்களை வைத்துள்ள படம்.   

https://utattam.wordpress.com/2021/07/27/திமுக-ஆதரவு-படமா-சார்பட்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திமுக அதிமுக கதையை தூக்கி எறிந்துவிட்டு  மூன்று நான்கு தடவை பார்த்தேன் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாய் பார்ப்பது போல் இருந்தது அவ்வளவுக்கு காட்சிகளில் சிரத்தை எடுத்துள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் என்ற பெயரில் விழல் ஞாயம் கதைக்கிறார்கள்........அதுசரி விழலுக்கு "ள " வா   "ழ " வா போடுவது......!   🤔

Link to comment
Share on other sites

கனகாலத்துக்கு பிறகு நல்ல தமிழ் படம் சார்பட்டா பரம்பரை, மூன்று முறை பார்த்து விட்டேன். பிரதான பாத்திரம்( ஆரிய) மாத்திரம் அல்லாமல் துணை பாத்திரங்களுக்கும் ( Kevin Daddy, Dancing Rose, ரங்கன் வாத்தியார்,  மாரியம்மா) முக்கியத்துவம் கொடுத்து அழகாக வடிமமைத்து உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் தான் உள்ளது, அதில் ஒருபாடல் புலம்பெயர்ந்த எம்மவரின் துணையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இந்த திமுக அதிமுக கதையை தூக்கி எறிந்துவிட்டு  மூன்று நான்கு தடவை பார்த்தேன் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாய் பார்ப்பது போல் இருந்தது அவ்வளவுக்கு காட்சிகளில் சிரத்தை எடுத்துள்ளார்கள் .

அது சரி நீங்கள் வேங்கைப் புலி👍 பரம்பரைக்குத் தானே சப்போட் பண்ணோணும் 😂🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

விமர்சனம் என்ற பெயரில் விழல் ஞாயம் கதைக்கிறார்கள்........அதுசரி விழலுக்கு "ள " வா   "ழ " வா போடுவது......!   🤔

நான் படத்தை பாதி பாதியாகப் பார்த்தேன். 

மிகவும் பிடித்ததால் வந்த விமர்சனங்களையெல்லாம் படித்துக்கொண்டிருக்கின்றேன்😌

-

பா.இரஞ்சித்தின் ‘சார் பட்டா பரம்பரை’ :  எதிர்ப்பரசியலின் நிகழனுபவம் : கல்யாணராமன்

துறைமுகம், மண்ணடி, சூளை, காசிமேடு, பெரியமேடு, வண்ணாரப்பேட்டை, கிணத்துக்கடவு, ராயபுரம், யானைகவுனி, வியாசர்பாடி, ஏழுகிணறு, கொத்தவால் சாவடி மார்க்கெட், புளியந்தோப்பு, பெரம்பூர் முதலிய பல பகுதிகள் சேர்ந்த ஒரு முக்கியமான வட்டாரம் வடசென்னை. இது நன்கு வளர்ச்சியடைந்த தென்சென்னையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பின்தங்கிய ஒரு பகுதி. இங்கே பெரும்பாலும் உழைக்கும் மக்களே வாழ்கின்றனர். கூலித் தொழிலாளர்கள் அதிகமாய் வாழும் பகுதி என்பதால், விளிம்புநிலை வாழ்வியலின் (நடுத்தர வர்க்கத்திடமிருந்து) மிகவும் வேறுபட்ட பண்பாட்டம்சங்கள் வடசென்னையின் (North Madras) தனித்துவமாக உள்ளன. இங்குப் பல தசாப்தங்களாக (1990களின் தொடக்கம் வரையில்) நிலவிவந்த ஆங்கிலக் குத்துச்சண்டைக் கலாச்சாரத்தினைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ள சினிமாதான், இயக்குநர் பா.இரஞ்சித்தின் (மெட்ராஸ், ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா முதலிய புகழ்பெற்ற படங்களை இயக்கியவர்) ‘சார் பட்டா பரம்பரை’ என்ற படம். மத்திய சென்னையிலும் (Central Madras) ஆங்கிலக் குத்துச்சண்டைக்கு இடமுண்டு என்றாலும், இப்போட்டிக்கான உணர்வுபூர்வமான ஆதரவும் வரவேற்பும் அதிகமுள்ள பகுதி வடசென்னைதான் என்பதாலேயே, இப்பகுதியைக் களமாகக் கொண்டு இப்படத்தைப் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார் எனலாம்.

இப்படத்தில் ‘ஆர்யா’ நாயகனாக நடித்துள்ளார். தமிழின் முக்கியமான நவீன நாடக ஆசிரியராகிய அமரர் ந.முத்துசாமியின் ‘கூத்துப்பட்டறை’ என்ற நவீன நாடகக் குழுவில் பயிற்சி பெற்ற நடிகர் பசுபதி, ஒரு தத்ரூபமான குத்துச்சண்டை வாத்தியாராகவே இப்படத்தில் வாழ்ந்துள்ளார். இப்படம், ஒரு நீண்ட குத்துச்சண்டைப் பாரம்பரியத்தின் வரலாற்றுப் பின்னணியைக் கலைநயத்துடன் பதிவுசெய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசித் தசாப்தங்களில், வடசென்னைப் பகுதிகளில் ஒரு மிக முக்கியமான சமூக நிகழ்வாகியிருந்த குத்துச்சண்டைப் போட்டிகள், 1970களில் அதன் உச்சத்திலிருந்தன. இக்காலமே இப்படம் நிகழும் காலமாகும். எமர்ஜென்சி காலப் பின்னணியில், எப்படிக் குத்துச்சண்டை வடசென்னை மக்களின் அன்றாட வாழ்வின் ரத்தநாளங்களில் ஒன்றிக் கலந்திருந்தது என்பதற்கான ஒரு பண்பாட்டு ஆவணமாக இப்படம் உருப்பெற்றுள்ளது. 

spacer.png

சில இடங்களில் ரேக்ளா ரேஸ், சில இடங்களில் கால்பந்துப் போட்டிகள், சில இடங்களில் ஜல்லிக்கட்டு, சில இடங்களில் கோழிச் சண்டை, சில இடங்களில் கபடி, சில இடங்களில் படகுப் போட்டிகள், சில இடங்களில் கம்புச் சண்டைகள் என்று வட்டாரத்திற்கு வட்டாரம் பல பிரத்யேகமான கலாச்சார அடையாளங்களைக் காண்கிறோம். அப்படியோர் அடையாளமாக, வடசென்னையின் பெருமிதமாகப் பார்க்கப்பட்டதுதான் குத்துச்சண்டை. இதில் ஆங்கிலோ இந்தியர்கள், மீனவர்கள், நாயக்கர்கள், வன்னியர்கள், செட்டியார்கள், தலித்கள், நாடார்கள், இஸ்லாமியர்கள், பிற உழைக்கும் சாதிகள் எனப் பலரும் ஈடுபட்டதற்கான வரலாற்றுச் சான்றாதாரங்கள் உள்ளன. எனினும், இப்படத்தில் விளிம்புநிலை மக்களைப் பிரதானப்படுத்தியே குத்துச்சண்டை சித்திரிக்கப்பட்டுள்ளது. இதைக் குறையாகக் கருத வேண்டியதில்லை. ஆகக் கூடுதலான சமூக ஒடுக்குமுறையைச் சந்தித்த ஒரு சமுதாயக் குழுவின் காத்திரமான எதிர்வினைக்குக் குத்துச்சண்டை உதவிய விதத்தின் தீவிரமான களச் சித்திரிப்பு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தியச் சூழலில் புனையப்படும் ஒவ்வொரு கலைப் படைப்பிலும் (அது நாவலோ, நாடகமோ, சினிமாவோ எதுவாக இருந்தாலும்கூட) ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளம் அழுத்தமாக மேலெழுவதே இயல்பாயிருப்பதைப் பார்க்கிறோம். அதற்காகக் கலைஞனைச் சாதியவாதியாகச் சுருக்கத் தேவையில்லை. தனக்கு நன்கு பழக்கமான ஒரு வாழ்வியலைச் சித்திரிப்பதன் மூலமாகவே, ஒரு குறிப்பிட்ட வட்டாரப் பின்னணியைக் களமாகக் கலைஞன் கொள்ளும்போதே, அவன் படைப்பு நம்பகத்தன்மையைப் பெறுகிறது. பிராமணச் சமூகத்தில் பிறந்த ஒரு எழுத்தாளர் பிராமணச் சமூகத்தினர் பற்றி விரிவாக எழுதுவதைப்போலவும், கிறிஸ்தவ அல்லது இஸ்லாமியச் சமூகத்தில் பிறந்த ஒரு கலைஞர் தத்தம் மக்களைப் பற்றிப் பிரதானமாக எழுதுவதைப் போலவும்தான், தலித் சமூகத்தில் சந்தர்ப்பவசமாகப் பிறந்த ஒரு படைப்பாளியும் தம் மக்களை அடையாளப்படுத்தி எழுதுகிறார். பிறர் எழுதும்போது, அதைக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் சமூக மனம், தலித்தாகப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அந்த உரிமையைத் தலித் படைப்பாளிகளுக்கு வழங்க மறுப்பது ஏற்கத்தக்கதில்லை. இதைப் புறந்தள்ளிவிட்டுப் படத்துக்குள் இனிப் போவோம்.

பகத் பாசிலின் ‘மாலிக்’ சினிமாவில் எப்படிக் காங்கிரஸ் கட்சியின் அடையாளங்கள் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனவோ அப்படித்தான் இத்திரைப்படத்திலும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் அடையாளங்களும் வெளிப்படையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன என்று சினிமா பார்வையாளர்கள் கூறுகின்றனர்.  சார்பட்டா பரம்பரையின் பழைய சாம்பியனாக வரும் ரங்கன் வாத்தியார் (நடிகர் பசுபதி), தி.மு.க. கரைவேட்டியுடன் வருவது மட்டுமல்லாமல், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியைப் படிப்பவராகவும், எமர்ஜென்சியை விமர்சித்துத் தலைவர் கலைஞருக்கு ஆதரவு தெரிவிப்பவராகவும் படத்தில் காட்டப்படுகிறார். எழுபதுகளில் புதிதாகக் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆரைக் கிண்டலாக அணுகும் சில வசனங்களும் படத்தில் இருக்கின்றன. ஆனால், ஒருபாற்கோடலுடன் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகளாக இவையில்லை; அன்றைக்கு வாத்தியார் ரங்கனைப் போன்ற பலர் வடசென்னைப் பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்பதன் நிஜமான காட்சிப் பிரதிபலிப்புகளாகவே (factual representations) உள்ளன.

‘மாஞ்சா கண்ணன்’ என்ற பாத்திரத்தில், எம்.ஜி.ஆர். போன்ற ஒப்பனையுடன், அ.தி.மு.க. பிரமுகராகப் படம் முழுக்க நடிகர் மாறன் (அண்மையில் கரோனாவுக்குப் பலியாகிவிட்டார்!) வருகிறார். தி.மு.க.வின் எமர்ஜென்சி எதிர்ப்பும், அ.தி.மு.க.வின் இந்திராகாந்தி ஆதரவும் படத்தில் கோடி காட்டப்பட்டுள்ளன. ஆங்கிலோ இந்தியராக வரும் ஜான் விஜயும், டான்சிங் ரோஸாக வரும் ஷபீரும், ஹீரோயின் மாரியம்மாளாக வரும் துஷாரா விஜயனும் படத்திற்கு விறுவிறுப்பூட்டுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் வழக்கம்போல், இப்படத்திலும் பெண் பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைந்தேயிருக்கிறது. ஆண்களைத் தட்டிக் கேட்கிறவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், பெரிதும் ஆண்களைச் சார்ந்து வாழ்பவர்களாகவே இவர்கள் காட்டப்பட்டுள்ளனர். கேமரா, உடல் மொழி, எடிட்டிங், இயக்கம், சண்டைக் காட்சிகள், பின்னணி இசை, காட்சி நுட்பங்கள் எனப் பலவும் இப்படத்தில் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றன. சாதி, மதம் போன்ற அடிப்படைவாதங்களையும் பொறாமை, பூசல், வன்முறை, தூண்டிவிடல், பழிவாங்கல்  போன்றவற்றையும் குத்துச்சண்டைப் போட்டிகள் எப்படிக் காலி செய்துவிடுகின்றன என்பதையும் ‘சார்பட்டா பரம்பரை’ அழுத்தமாக முன்வைக்கிறது.

spacer.png

ஆங்கிலேயர்களின் மூலம் பாக்சிங் வடசென்னை மக்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். ஆனால், இந்த விளையாட்டை, இந்தப் பகுதியின் சாதாரண மக்கள், தம்முடைய சமூகப் பெருமிதத்தின் அடையாளமாகக் கருதி வாழ்ந்ததைப் படம் நுட்பமாகவும் கொண்டாட்டமாகவும் காட்டுகிறது.  (எல்லப்ப செட்டியாரின் பரம்பரையையும் உட்செரித்துக் கொண்ட) இடியாப்பப் பரம்பரையிடம் தோற்ற (சுண்ணாம்புப் பரம்பரையையும் உள்ளீர்த்துக்கொண்ட) சதுர்சூர்ய சார்பட்டா பரம்பரையினர்,  மீண்டுவந்து இழந்த தம் தன்மானத்தை மீட்டெடுக்கப் போராடுவதுதான் இப்படத்தின் கதை. சார்பட்டா பரம்பரைக்கு வாத்தியார் ரங்கன் என்றால், இடியாப்பப் பரம்பரைக்குத் துரைக்கண்ணு வாத்தியார். முடிசூடா மன்னனாகத் திகழும் இடியாப்பப் பரம்பரையின் வேம்புலியைப் பத்துப் பதினொரு சண்டைகளில்  தம் அணியைச் சேர்ந்த பலரும் தோற்றபிறகு இறுதித் தேர்வாகக் களமிறங்கும் கபிலன் தன் முயற்சியில் வெல்லப் போகிறான். அத்தருணத்தில் அது ஒரு மாபெரும் நிகழ்வாக வெடிக்கப்போகிறது.  ஆனால், யாருமே எதிர்பாராதவிதமாகக் கபிலனின் வெற்றிக்குச் சற்று முன்பாக மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் எமர்ஜென்சி அறிவிப்பால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சில எதிரிகள் செய்யும் வன்முறைகளால், குத்தச்சண்டைப் போட்டி முடிவடையாமல் கடைசித் தருணத்தில் நின்றுபோய்விடுகிறது. சார்பட்டா வாத்தியார் ரங்கன், தி.மு.க.வின் தீவிர உறுப்பினர் என்பதால் சிறையில் தள்ளப்படுகிறார். இக்காட்சியமைப்பு, எளிய மனிதர்களின் அன்றாட வாழ்விலும் அரசியல் எப்படி வலிமையாகக் குறுக்கிடுகிறது என்பதற்கான சான்றாகிறது.

பின் எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் – சற்றே மாறிய ஒரு சமூகச் சூழலில் – நிறுத்தப்பட்ட குத்துச்சண்டை மீண்டும் நடந்து முடிவதாகக் காட்சிச் சித்திரிப்புள்ளது.இங்கிலீஷ் குத்துச்சண்டையின் பாரம்பரிய மதிப்புகளை உள்ளூர் மக்கள் எவ்வாறு பேணித் தங்கள் சுய அடையாளங்களுள் ஒன்றாக அதை மாற்றிக்கொள்கிறார்கள் என்ற பரிணாம வளர்ச்சியைத் தன் தொனியாக இக்கதை கொண்டுள்ளது என்றும் இப்படத்தைப் பார்க்க முடியும். பாக்ஸிங் ரிங்குக்குள்ளும் வெளியிலும் பின்னப்பட்ட சதி வலைகளினூடாகக் காட்சிகள் அரங்கேறிப் பார்ப்பவர்களைக் கதைக்குள் கவர்ந்திழுக்கின்றன. கதாநாயகனுக்குக் கபிலன் என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர். இது அடித்தட்டு மக்களிடம் காலம் காலமாகப் புழங்கிவரும் ஒரு பெயர் என்பதுடன், புகழ்பெற்ற சங்ககாலப் புலவரான (குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்) கபிலரின் பெயருமாகும். இப்படத்தின் முதல்பாதியைப் பாக்ஸிங் ரிங் ஆக்கிரமிக்கிறது என்றால், இரண்டாம் பாதியைச் சாராயமும்  அது தொடர்பான வன்முறை வெறியாட்டங்களும் ஆக்கிரமிக்கின்றன. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் சாராயம் தமிழ்நாட்டு இளைஞர்களைச் சூறையாடிய சமூக அவலத்தின் சாட்சியமாகப் படத்தின் இரண்டாம் பாதியிருக்கிறது. இவற்றுக்கிடையில்தான் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் போராட்டக்குரலாகப் படம் ஒலிக்க முனைகிறது என்று கருதுகிறேன். பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நின்று ஒரு சினிமா பேசும்போது, அதைப் பார்க்கும் ஒரு சமூகத்தின் சாதாரண மனிதர்களுக்கு அது எவ்வளவு பெரிய ஆத்ம பலத்தைத் தருகிறது என்பதற்கும் இப்படம் வகைமாதிரியாகிறது.

படத்தின் ஹீரோவாக வரும் குத்துச்சண்டையின் பெருங்காதலன் ஆர்யாவுக்கும், குத்துச்சண்டையைக் கட்டோடு வெறுக்கும் ஆர்யாவின் அம்மாவாக வரும் (வன்முறைக்குக் கணவனைப் பலிகொடுத்த) அனுபமா குமாருக்கும் இடையிலான காட்சிகளில் பாசமும் இறுக்கமும் ஒருசேர மிளிரக் காண்கிறோம். படத்தின் பின்பாதியில், மகனாகவும் காதலனாகவும் சீடனாகவும் தான் தோற்றுவிட்டதாகக் குடித்துவிட்டு ஆர்யா புலம்பும்போது, உன்னை மீட்டெடுக்கக் குத்துச்சண்டை வீரனாக நீ மறுபடியும் மாறுவதுதான் ஒரே வழி என்கிறார் அம்மா. இதேபோல், “உனக்கு நான் இருக்கிறேன் மாமா” என்று சொல்லி மனைவி மாரியம்மாளும் ஆர்யாவுக்குப் பக்கபலமாக நிற்கிறாள். அடித்தட்டு மக்களுக்குக் குடும்பத்தினரே பெரிய ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் இந்தக் காட்சியமைப்பைப் பார்க்கலாம்.

கபிலனும் ரங்கன் வாத்தியாரும் மட்டுமல்லாமல், டான்சிங் ரோஸ், கபிலனுடன் மோதித் தோற்கும் ராமன், அவனின் மாமன், எதிரணி வீரன் வேம்புலியாக வரும் ஜான் கொக்கேன், டான்சிங் ரோஸாக வரும் ஷபீர் கல்லரக்கல், இடியாப்பப் பரம்பரையின் வாத்தியாராக வரும் ஜி.எம். சுந்தர், குத்துச்சண்டை போட்டிகளின் அமைப்பாளராக வரும் காளி வெங்கட், சார்பட்டா பரம்பரை வாத்தியாரின் மகனாக வரும் வெற்றிச்செல்வன், ஆர்யாவின் மனைவியாக வரும் மாரியம்மாள், ஆர்யாவின் தாய், பீடி ராயப்பன் எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். இவர்களின் நடிப்பு, படத்தின் கனத்தைக் கூட்டுகிறது.

மனக்குமுறலைக்கூடப் பிரதிபலித்துவிடும் சந்தோஷ் நாராயணனின்  பின்னணி இசையும், ஜி.முரளியின் இயற்கைப் பின்னணியிலான கண்ணுறுத்தாத ஒளிப்பதிவும் படத்திற்கு வலிமை சேர்க்கின்றன. கதையின் முக்கியமான நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையைக் கலைநுட்பங்கள் மூலம் இயக்குநர் சாதித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோ × வில்லன் என்ற வழமையான இருமை எதிர்மை கைவிடப்பட்டுள்ளது. இங்குக் கபிலனும் வேம்புலியும் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதில்லை. இவர்களைச் சுற்றி இயங்கும் பல துணைநடிகர்களும்கூட முக்கியத்துவம் பெற்றுள்ளார்கள். மிகத் தரமான படங்களிலேயே நாலைந்து வலுவான கதாபாத்திரச் சித்தரிப்புகள் இடம்பெறுவதுதான் வழக்கம். இப்படத்திலோ, பத்துப் பன்னிரண்டு வலுவான கதாபாத்திரங்களை உருவாக்கி ஒன்றோடொன்றைத் தீவிரமாக மோதவிட்டும் பிணைத்தும் உணர்வு ஜாலம் காட்டியுள்ளார் இயக்குநர். படம் முழுவதும் மனிதர்களின் கூட்டம் இருந்துகொண்டேயிருக்கிறது. இதையும் ஒரு முக்கியமான அம்சமாகவே நான் காண்கிறேன். பெரிய கூட்டத்தைப் பல காட்சிகளில் அமைத்துப் படம் பண்ணுவது சுலபமான காரியமில்லை. சினிமாவை மக்கள்வயப்படுத்துவது என்பது பல்வேறு மனிதர்களையும் கூட்டமாகச் சேர்த்து மிக இயல்பாகச் சினிமாவுக்குள் நடமாடவிடுவதும்தான் என்று உறுதியாக நினைக்கிறேன். நாயக வழிபாட்டைத் தாண்டித் தமிழ் சினிமா நகர்கிறது என்பதற்கான உறுதியான தடயமாக இப்படத்தைச் சொல்லலாம்.

spacer.png

திருவிழாக்கள், பண்டிகைக் கொண்டாட்டங்கள், பண்பாட்டுத் தொடர்ச்சியிலான பல்வேறு சமூக  நிகழ்வுகள், வெகுசன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உள்ளூர்த்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட விளையாட்டுகள் முதலிய இவை ஒரு சமூகத்திற்கு ஏன் தேவைப்படுகின்றன? இவையே ஒரு சமூகத்தை உயிர்த்துடிப்புடன் இயங்க வைக்கின்றன. இவையில்லாமல் போனால், சமூகத்தில் குடியும் லாட்டரியும் பிற சூதாட்டங்களும்தான் பெருகிப் போகும். இப்பிரக்ஞையைப் படத்தின் பின்பகுதியால் தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொள்கிறோம்.

சாலைத்தெருச் சுவர்களில் எழுபதுகளில் பிரபலமான பல தமிழ் சினிமாக்களின் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். கோபால் பல்பொடி, ரோஜா பாக்கு விளம்பரங்கள் காணப்படுகின்றன. இளைஞர்கள் பலரும் தொளதொளப்பான பேண்ட்கள் போட்டு, இன் பண்ணிக்கொண்டு, ஸ்டெப் கட்டிங்குடன் இருக்கிறார்கள். சிவப்புக் கலரில் பல்லவன் எனப் பெயரிட்டு அரசு பஸ் ஓடுகிறது. சென்னைத் துறைமுகம் மற்றும் எண்ணூர் அனல் மின்நிலையப் பின்னணியில் பல காட்சிகள் பின்னப்பட்டிருப்பதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். குத்துச்சண்டை உள்ளரங்கம், உலகளாவிய விளையாட்டு போட்டிகளில் இருப்பதுபோல் தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எழுபதுகளின் வடசென்னைப் பகுதிகளின் புறத்தோற்றத்தையும், அங்கு வாழ்ந்த எளிய மக்களின் ஆசாபாசங்களையும் பிரத்யேகக் குணச்சித்திரங்களையும் நம்பகத்தன்மையுடன் திரைமொழிக்குள் திறமையாகக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள்.

நான்கு எண்ணி முடிப்பதற்குள் எதிராளியை நாக் அவுட் செய்வது என்பதால், ‘சார்’ என்ற இந்திச் சொல்லுடன் பொருத்தி, ‘சார்பட்டா’ என்பதற்குப் பொருள் சொல்கிறார்கள். இடிபோல் தாக்குபவர்கள் என்பதால், இடியாப்பப் (நாயக்கர்) பரம்பரையினர் எனப்படுகின்றனர். இவ்விரு குழுக்களுக்கும் சில தலைமுறைகளாகத் தொடரும் குத்துச்சண்டைப் போட்டியாக, ‘சார்பட்டா பரம்பரை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லப்ப செட்டியார் பரம்பரை, சுண்ணாம்புப் பரம்பரை என்ற வேறு இரண்டு குத்துச்சண்டைக் குழுக்களும் வடசென்னையில் இருந்திருக்கின்றன என்றாலும், எழுபதுகளில் ‘சார்பட்டா’ பரம்பரைக்கும் ‘இடியாப்ப’ப் பரம்பரைக்கும்தான் பெரும் போட்டி நடந்திருக்கிறது. இதில், விளிம்புநிலை வாழ்வியலிலிருந்து உருவாகிவரும் ஓர் இளைஞனின் மூலமாகச் ‘சார்பட்டா பரம்பரையின்’ தன்மானம் மீட்கப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லும் வடசென்னையின் ‘பண்பாட்டு ஆவணம்’தான் இப்படம்.

‘காஷியஸ் க்ளே’ என்கிற ‘முகமது அலி’ புகழின் உச்சிக்கேறிய காலமும் எழுபதுகளின் நடுப்பகுதிதான். இப்படத்தின் கடைசிக் காட்சியில், சென்னைக்கு முகமது அலியை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அழைத்துவந்து பெருமைப்படுத்திய நிகழ்வும் காட்டப்படுகிறது. அடித்தட்டு மக்களின் வெற்றியைத் தடுக்க முனையும் இடைநிலைச் சாதிகளின் சாதிய மனோபாவங்களும் இப்படத்தில் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. சார்பட்டா வாத்தியார் ரங்கனின் மகன், இடியாப்பப் பரம்பரையின் வாத்தியார் துரைக்கண்ணு, அவரின் சீடன் வேம்புலி, வேம்புலியை எதிர்க்க முதலில் ரங்கன் வாத்தியார் தேர்ந்தெடுக்கும் ராமன், அவனின் மாமன் எனப் பலராலும் கபிலன் (ஆர்யா) இகழப்படுகிறான். அதற்குச் சாதிய மனோபாவமே முக்கியக் காரணமாகிறது என்பதைப் படம் மறைக்கவில்லை. அதனால்தான் இறுதியில் கபிலன் வெற்றி பெறும்போது, அது ஏதோ ஒருவகையில் ஒரு குத்துச்சண்டை வீரனின் தனிப்பட்ட வெற்றியாக இல்லாமல், விளிம்புநிலை மக்கள்திரளின் கூட்டுவெற்றியாகக் கொண்டாடப்படுமிடத்திற்குப் படம் உயர்கிறது. இறுதியில் முகமது அலி எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஒரு விழா மேடையில் தோன்றுவதுகூட, அவர் கறுப்பின மக்களின் முக்கியப் பிரதிநிதி என்ற அவ்வகையில், எம்.ஜி.ஆரின் கவர்ச்சி அரசியலுக்கும் அப்பாற்பட்டுப் படத்தில் வரும் கபிலனின் வெற்றியோடு ஒன்றிணையும் ஒரு வலுவான சமூகப் பதிவாகிவிடுகிறது. இதில் ஐம்பதாண்டுக்காலத் தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு துருவ அரசியலில் தி.மு.க. சார்பு நிலையைப் படம் எடுத்திருப்பதுபோல் ஒரு காட்சி மயக்கமிருந்தாலும், கேரளத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று வரும்போது கம்யூனிஸ்ட்களுக்கு எப்படிக் கருத்தியல் தளத்தில் ஒரு கூடுதல் மதிப்புச் சாய்விருக்கிறதோ, அப்படித்தான் தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கும் ஒரு கூடுதல் மதிப்புச் சாய்விருக்கிறது என்றும் நாம் அவதானிக்கலாம். வெகுமக்களிடம் எம்.ஜி.ஆருக்குக் கவர்ச்சியுண்டு என்பதற்கான சிறிய தடயங்களும் படத்தில் இருக்கவே செய்கின்றன. இவ்விரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கிடையில்தான் இன்றுவரை விளிம்புநிலையினர் ஊசலாட வேண்டியுள்ளது என்பதையும் படம் இந்தியக் குடியரசுக் கட்சி, அம்பேத்கர் படம் காட்டப்படுதல், நீல நிறம் போன்ற குறியீடுகள் மூலம் சூசமாகச் சொல்லிவிடுகிறது. 

spacer.png

முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்திருக்கிறது என்பதையும், மறைந்த கபிலனின் தந்தையின் (ஒரு தகராறில் கொல்லப்படுகிறார்) நண்பரான மீனவர் பீடி ராயப்பனின் பயிற்சியின் மூலம் ஒரே பாடலில் குடிக்கு அடிமையான கபிலன் மீண்டும் உடல் வலுப்பெற்றுக் குத்துச்சண்டை வீரனாக முழுத்தகுதி பெற்றுவிடுவதாகக் காட்டுவதையும் படத்தின் சிறிய குறைகளாகச் சொல்லலாம். ஆனால், இப்படம் மிக வேகமாக நகர்வதால், இக்குறைகள் எதுவும் நம் மனதில் ஒட்டுவதில்லை. மேலும், கபிலனின் வெற்றிக்கு, மீனவரான பீடி ராயப்பனிடம் அவன் பெறும் புதிய பயிற்சியும் முக்கியக் காரணம் என்ற நுண்கோணத்திலிருந்து நோக்கும்போது, இப்படத்தின் குத்துச்சண்டைப் போட்டிகளில் மீனவர்களின் பங்களிப்பு சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற விமர்சனமும் வலுவிழந்துவிடுகிறதல்லவா! இங்கு யார் ஒருவருடைய நடிப்பையும் லேசாகச் சொல்லிவிட முடியாது என்பதுதான் இப்படத்தின் பெரிய பலம். வசனங்களை நம்பியிராமல் காட்சி ரூபமாகப் படம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துவிடுகிறது. ஆனால், வசனங்களும்கூடச் சோடை போவதில்லை. கோமாமிசத்துக்குத் தடைபோடும் இந்துத்துவ அரசியல் சூழலின் பின்னணியில், மாட்டுக்கறி பிரியாணியை வாங்கியுண்பது பற்றிப் பெருமிதத்துடன் மாரியம்மாள் பேசுவதை, எதிர்ப்பரசியலின் குறியீடாகப் பார்க்கத் தவறிவிடக்கூடாது. “வீசும்போதெல்லாம் வலையில் மீன் விழுந்துவிடாது. மீன் விழுவதற்காக நாம்தான் காத்திருக்கணும்” என்பது போன்ற வசனங்களில், இயக்குநரின் புத்திசாலித்தனம் நன்றாகவே பளிச்சிடுகிறது.

அடித்தட்டு மக்களின் அரசியல் பிரதியாகச் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தைப் பார்க்க முடியும். அதேவேளையில், அரசியல் விழிப்பற்ற சாதாரண மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஒரு யதார்த்த வாழ்வியல் படமாகவும் இதை ரசிக்க முடியும். ‘குத்துச்சண்டை’ என்ற விளையாட்டை மையமாக வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் ஆன்மாவை அதன் அனைத்துச் சாத்தியமான கோணங்களிலிருந்தும் காட்டிவிடும் ஒரு படம் இது என்று தயக்கமின்றிச் சொல்லலாம். வழக்கமாகச் சமூகப் பிரச்சினைகளைக் குறிப்பாக விளிம்புநிலையினரின் எதிர்ப்பரசியலைச் சித்திரிக்க முனையும் சினிமா உள்ளிட்ட கலையிலக்கியப் பிரதிகளின் மீது பிரச்சார முத்திரையைக் குத்திவிட அதிகார வர்க்கத்தினர் துடிப்பர். ஆனால், அவர்களும் வாய்திறக்கவே முடியாத வகையில்,  விளிம்புநிலையினரின் வலிமையான எதிர்ப்பரசியலைக் கலைநுட்பங்களுடன் கூடிய அழகியல்ரீதியிலான திருப்தியைச் சகலதரப்புப் பார்வையாளர்களுக்கும் நிகழனுபவமாக்கும் அருமையான காட்சிப்படங்களாகத் தொடர்ந்து பா.இரஞ்சித் உருவாக்கிவருகிறார். அதன் இன்னொரு காத்திரமான வெளிப்பாடே இப்படமும் எனலாம்.

https://uyirmmai.com/news/news-articles/an-article-about-the-pa-ranjiths-movie-sarpatta-by-professor-kalyanaraman/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அது சரி நீங்கள் வேங்கைப் புலி👍 பரம்பரைக்குத் தானே சப்போட் பண்ணோணும் 😂🤣
 

"ஒரு குத்து சண்டை வீரன் தனது குருவை எள்ளி நகையாடியவர்களை மண்கவ்வ வைத்து வெற்றி வாகை சூடுகின்றான் " இப்படி ஒத்தை  வரி கதையை படமாக்கியவிதத்தை பாருங்கள் .

இன்னுமொரு விடயம் படத்தில் வேங்கை புலி அல்ல வேம்புலி தமிழக கிராமங்களின் காவல் அம்மனின் பெயர் அது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

விமர்சனம் என்ற பெயரில் விழல் ஞாயம் கதைக்கிறார்கள்........அதுசரி விழலுக்கு "ள " வா   "ழ " வா போடுவது......!   🤔

கடைசியா ஒருத்தரும் அமேசனை புறக்கணிக்கவில்லை என்பது மட்டும் தெட்டதெளிவாக தெரியுது🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

"ஒரு குத்து சண்டை வீரன் தனது குருவை எள்ளி நகையாடியவர்களை மண்கவ்வ வைத்து வெற்றி வாகை சூடுகின்றான் " இப்படி ஒத்தை  வரி கதையை படமாக்கியவிதத்தை பாருங்கள் .

இன்னுமொரு விடயம் படத்தில் வேங்கை புலி அல்ல வேம்புலி தமிழக கிராமங்களின் காவல் அம்மனின் பெயர் அது .

படம் பார்க்காதவர்கள் விமர்சனத்தை வாசிக்க வேண்டாம் .
ஆர்யா கீரோ என்பதை தவிர்த்து விட்டு பார்த்தால் , அவருடைய டீமை விட,அவரை விட வேம்புலி சோ டிசிப்பிளின் ...பொக்சிங் நடக்காத காலத்தில் கூட குடி என்று போய் சீரழியவில்லை..விளையாட்டே முக்கியம் என்று வாழ்கிறார் ...அவருடைய கோச்சும் ஆர்ப்பாட்டமோ,தலைக்கணமோ இல்லாமல் ஆரம்பத்தில் இருந்து சிம்பிளாய் இருக்கிறார்...வேம்புலியின் நண்பர் கூட ஆர்யாவிடம் தோத்தும்,தான் எதனால் தோத்தேன். நீ கவனமாய் இரு என்று சொல்லிக் கொடுக்கிறார்...இறுதியில் வேம்புலி தோத்தும்  போய் கையை குடுத்து வாழ்த்தி அடுத்த மட்ச்சில் வெல்லலாம் என்று வாழ்த்த்துகிறார். இதே ;
ஆர்யா முதல் போட்டியிலேயே வென்று விடுகிறார் ....அவருக்கு பொக்சிங் இரத்தத்தில் ஊறியது ...பசுபதி டிரெயினிங் கொடுத்து அவர் வெல்லவில்லை...அப்படியிருந்தும் அவர் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தன்னை விட்டால் கோச் இல்லை என்ற தலைக்கணம் பிடித்தவராகவே வருகிறார்..இறுதிப் போட்டியில் ஆர்யாவை தயார்படுத்தி அனுப்பியது மீனவ தாத்தா ...வேண்டாம் என்று ஆர்யாவை ஒதுக்கி வைத்து விட்டு கடைசி மட்ச்க்கு  கடைசி வரிசையில் இருந்து போட்டு, ஆர்யா வெல்லுகின்ற அறிகுறி தெரிந்ததும்  முன்னுக்கு வந்து வெற்றியில் வெட்கமேயில்லாமல் பங்கெடுக்கிறார்....ஆர்யாவின் டீமை சேர்ந்தவர்களே பொறாமையினால் அவருக்கு குடியினைபழக்குகின்றனர் ...அவர் குடிக்கு அடிமையானதும் அவரை ஒதுக்குகின்றனர்...வென்றதும் வெற்றியில் பங்கு போடுகின்றனர் .
தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்த சர்ப்பட்ட பரம்பரையினர் போன்றோர் தான் ...எங்கள் வாழ்வியலோடு இந்த படம் நன்றாய் ஒத்து போகின்றது...இயக்குனர் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

படம் பார்க்காதவர்கள் விமர்சனத்தை வாசிக்க வேண்டாம் .
ஆர்யா கீரோ என்பதை தவிர்த்து விட்டு பார்த்தால் , அவருடைய டீமை விட,அவரை விட வேம்புலி சோ டிசிப்பிளின் ...பொக்சிங் நடக்காத காலத்தில் கூட குடி என்று போய் சீரழியவில்லை..விளையாட்டே முக்கியம் என்று வாழ்கிறார் ...அவருடைய கோச்சும் ஆர்ப்பாட்டமோ,தலைக்கணமோ இல்லாமல் ஆரம்பத்தில் இருந்து சிம்பிளாய் இருக்கிறார்...வேம்புலியின் நண்பர் கூட ஆர்யாவிடம் தோத்தும்,தான் எதனால் தோத்தேன். நீ கவனமாய் இரு என்று சொல்லிக் கொடுக்கிறார்...இறுதியில் வேம்புலி தோத்தும்  போய் கையை குடுத்து வாழ்த்தி அடுத்த மட்ச்சில் வெல்லலாம் என்று வாழ்த்த்துகிறார். இதே ;
ஆர்யா முதல் போட்டியிலேயே வென்று விடுகிறார் ....அவருக்கு பொக்சிங் இரத்தத்தில் ஊறியது ...பசுபதி டிரெயினிங் கொடுத்து அவர் வெல்லவில்லை...அப்படியிருந்தும் அவர் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தன்னை விட்டால் கோச் இல்லை என்ற தலைக்கணம் பிடித்தவராகவே வருகிறார்..இறுதிப் போட்டியில் ஆர்யாவை தயார்படுத்தி அனுப்பியது மீனவ தாத்தா ...வேண்டாம் என்று ஆர்யாவை ஒதுக்கி வைத்து விட்டு கடைசி மட்ச்க்கு  கடைசி வரிசையில் இருந்து போட்டு, ஆர்யா வெல்லுகின்ற அறிகுறி தெரிந்ததும்  முன்னுக்கு வந்து வெற்றியில் வெட்கமேயில்லாமல் பங்கெடுக்கிறார்....ஆர்யாவின் டீமை சேர்ந்தவர்களே பொறாமையினால் அவருக்கு குடியினைபழக்குகின்றனர் ...அவர் குடிக்கு அடிமையானதும் அவரை ஒதுக்குகின்றனர்...வென்றதும் வெற்றியில் பங்கு போடுகின்றனர் .
தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்த சர்ப்பட்ட பரம்பரையினர் போன்றோர் தான் ...எங்கள் வாழ்வியலோடு இந்த படம் நன்றாய் ஒத்து போகின்றது...இயக்குனர் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்  

உங்களின் சிந்தனைகளில் மாற்றம் வந்தால் அது உலக அதிசயம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உங்களின் சிந்தனைகளில் மாற்றம் வந்தால் அது உலக அதிசயம் .

இதில் எனது சிந்தனையில் மாற்றம் வாறதிற்கு என்ன இருக்கு?...படத்தை பார்த்து எனது விமர்சனத்தை சொன்னேன் ...ரஞ்சித்துக்கு ஈழத் தமிழர்களோடு தொடர்பு இருக்குமோன்று நினைக்கிறேன்.
நான் மேலே எழுத நினைத்து மறந்த விடயம் கடைசி காட்சியில்  அடி  மேல் அடி  வாங்கிய ஆர்யா எழ முடியாமல் இருக்கும் போதும் கூட வேணாம் விட்டுட்டு வா என்று ஒருத்தரும் சொல்லவில்லை மனைவி ,தாய் உட்பட எழும்பி அடி என்று தான் சொன்னவை ..அவர் செத்தாலும் பரவாயில்லை கெளரவம் முக்கியமாய் போயிட்டுது .
நீங்களும் 2009யில் உதைத் தானே செய்தீர்கள்....யார் செத்தாலும் பரவாயில்லை  தோத்திடக் கூடாது🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்த சர்ப்பட்ட பரம்பரையினர் போன்றோர் தான் ...எங்கள் வாழ்வியலோடு இந்த படம் நன்றாய் ஒத்து போகின்றது

👆🏼👇

12 hours ago, goshan_che said:

கடைசியா ஒருத்தரும் அமேசனை புறக்கணிக்கவில்லை என்பது மட்டும் தெட்டதெளிவாக தெரியுது🤣.

 

Link to comment
Share on other sites

 
கடந்த சில வரிசங்களாக தமிழக ஊடகங்களால், தமிழக சமூக வலைத்தள விமர்சகர்களால் நல்ல படம் என்று hype கொடுத்ததை நம்பி நான் பார்த்த படங்கள் பெரிய ஏமாற்றத்தை தான் எனக்கு தந்தது. அப்படி ஏமாற்றம் தந்ததில் சில மாதங்களுக்கு முன் வந்த தனுஷின் 'கர்ணண்' படமும் இரு வாரங்களுக்கு முன் வெளியான 'வாழ்' படமும் அடக்கம்
 
இவை தந்த வெறுப்பால் இப்போது விமர்சன ரீதியில் வரவேற்கப்படும் 'சார்பட்டா பரம்பரை' படத்தை பெரிய எதிர்ப்பார்ப்பு எதுவும் இன்றி மட்டுமல்ல, இதுவும் ஏமாற்ற போகுது என முன்முடிவு எடுத்து பார்க்க தொடங்கி 10 நிமிடங்களில் என் முன்முடிவு தவறாகிப் போய் பல காட்சிகளக் பல தடவை rewind பண்ணி பண்ணி, அனுபவித்து அனுபவித்துப் பார்த்தேன்.
 
மழைக்கு கூட sports பக்கம் ஒதுங்காத, ஒரு போதுமே குத்துச்சண்டையை ரசிக்காத என்னைக் கூட இவற்றை ரசிக்க செய்துவிட்டது இப் படம்.
 
மிகவும் detail ஆக எடுக்கப்பட்ட இப் படத்தின் பல characters எமக்கு நெருக்கமான உறவுகள் போல எண்ணத் தோன்றுகிறது.
 
வேம்புலியும், டாடியும், டான்ஸிங் ரோசும் ஏதோ பல நாட்கள் பழகியவர்கள் போல் தோன்ற, ரங்கன் வாத்தியார் எமக்கு படிப்பித்த எல்லா நல்ல master களின் ஒட்டுமொத்த பிம்பமாகவே வாழ்கின்றார்.
 
ஆர்யா.... ஒகே நடிப்பு.
 
பின்னனி இசை, ஒரு album ஆக வந்தால் கட்டாயம் காசு கொடுத்து தரவிறக்கம் செய்வேன். அவ்வளவுக்கு அருமை.
 
நீண்ட நாட்களின் பின் நல்ல படம் ஒன்றை தமிழில் பார்த்த திருப்தி.
இன்னும் சில தடவைகள் மீண்டும் பார்ப்பேன்.
4 hours ago, ரதி said:

படம் பார்க்காதவர்கள் விமர்சனத்தை வாசிக்க வேண்டாம் .
ஆர்யா கீரோ என்பதை தவிர்த்து விட்டு பார்த்தால் , அவருடைய டீமை விட,அவரை விட வேம்புலி சோ டிசிப்பிளின் ...பொக்சிங் நடக்காத காலத்தில் கூட குடி என்று போய் சீரழியவில்லை..விளையாட்டே முக்கியம் என்று வாழ்கிறார் ...அவருடைய கோச்சும் ஆர்ப்பாட்டமோ,தலைக்கணமோ இல்லாமல் ஆரம்பத்தில் இருந்து சிம்பிளாய் இருக்கிறார்...வேம்புலியின் நண்பர் கூட ஆர்யாவிடம் தோத்தும்,தான் எதனால் தோத்தேன். நீ கவனமாய் இரு என்று சொல்லிக் கொடுக்கிறார்...இறுதியில் வேம்புலி தோத்தும்  போய் கையை குடுத்து வாழ்த்தி அடுத்த மட்ச்சில் வெல்லலாம் என்று வாழ்த்த்துகிறார். இதே ;
ஆர்யா முதல் போட்டியிலேயே வென்று விடுகிறார் ....அவருக்கு பொக்சிங் இரத்தத்தில் ஊறியது ...பசுபதி டிரெயினிங் கொடுத்து அவர் வெல்லவில்லை...அப்படியிருந்தும் அவர் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தன்னை விட்டால் கோச் இல்லை என்ற தலைக்கணம் பிடித்தவராகவே வருகிறார்..இறுதிப் போட்டியில் ஆர்யாவை தயார்படுத்தி அனுப்பியது மீனவ தாத்தா ...வேண்டாம் என்று ஆர்யாவை ஒதுக்கி வைத்து விட்டு கடைசி மட்ச்க்கு  கடைசி வரிசையில் இருந்து போட்டு, ஆர்யா வெல்லுகின்ற அறிகுறி தெரிந்ததும்  முன்னுக்கு வந்து வெற்றியில் வெட்கமேயில்லாமல் பங்கெடுக்கிறார்....ஆர்யாவின் டீமை சேர்ந்தவர்களே பொறாமையினால் அவருக்கு குடியினைபழக்குகின்றனர் ...அவர் குடிக்கு அடிமையானதும் அவரை ஒதுக்குகின்றனர்...வென்றதும் வெற்றியில் பங்கு போடுகின்றனர் .
தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்த சர்ப்பட்ட பரம்பரையினர் போன்றோர் தான் ...எங்கள் வாழ்வியலோடு இந்த படம் நன்றாய் ஒத்து போகின்றது...இயக்குனர் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்  

வித்தியாசமான பார்வை ரதி. இதுக்கு இப்படியும் ஒரு கோணம் இருக்கு என்பதை உணர்த்தியுள்ளீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்களும் 2009யில் உதைத் தானே செய்தீர்கள்....யார் செத்தாலும் பரவாயில்லை  தோத்திடக் கூடாது

சுருக்கமாக சொல்வது என்றால் பேச்சுவார்த்தை நேரமே  சப்பிளை கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடி வாங்கும்போதே அவர்களுக்கே தெரியும் போராட்டத்தின்  முடிவுபற்றி .

இதில் எவ்வளவோ அரசியல் ஆக மூன்றாம்பட்ச தலைமுக்கு ஆசை காட்டப்பட்டது மனிசன் இறங்கவில்லை  அப்போ அழுதுகொண்டு இருந்தோம் ஆனால் நல்ல காலம் இறங்கி  இருந்தால் இதே உங்கள்  நாக்கு என்ன சொல்லி இருக்கும் என்பது தெரிந்தே குடும்பத்துடன் சண்டையில் போய்க்கொண்டார் .

சாமுராய்கள் ஜப்பனில் மட்டும் அல்ல எங்களிடையேயும்  ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாழ்ந்தார்கள் .

இதில் உங்க அண்ணண் சொன்னதை செய்தால் நான் வணக்கம் செலுத்தி இருப்பேன் கிழக்கை மீட்டிருந்தால்  நடந்தது என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுருக்கமாக சொல்வது என்றால் பேச்சுவார்த்தை நேரமே  சப்பிளை கப்பல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடி வாங்கும்போதே அவர்களுக்கே தெரியும் போராட்டத்தின்  முடிவுபற்றி .

இதில் எவ்வளவோ அரசியல் ஆக மூன்றாம்பட்ச தலைமுக்கு ஆசை காட்டப்பட்டது மனிசன் இறங்கவில்லை  அப்போ அழுதுகொண்டு இருந்தோம் ஆனால் நல்ல காலம் இறங்கி  இருந்தால் இதே உங்கள்  நாக்கு என்ன சொல்லி இருக்கும் என்பது தெரிந்தே குடும்பத்துடன் சண்டையில் போய்க்கொண்டார் .

சாமுராய்கள் ஜப்பனில் மட்டும் அல்ல எங்களிடையேயும்  ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாழ்ந்தார்கள் .

இதில் உங்க அண்ணண் சொன்னதை செய்தால் நான் வணக்கம் செலுத்தி இருப்பேன் கிழக்கை மீட்டிருந்தால்  நடந்தது என்ன ?

2009யில் பின் வாங்கி காட்டுக்குள் போயிருந்தாலும் , நாங்கள் ஏதும் சொல்லியிருக்க மாட்டோம்[ஏன் இதற்கு முன் பின் வாங்கி காட்டுக்குள் போகவில்லையா?]...ஆனால் அந் நேரம் பின் வாங்கி போயிருந்தால் உங்களை மாதிரி ஆட்களிடம் இருந்து தப்ப முடியாது என்று தலைவருக்கு தெரியும் ...உங்கட அதே குணத்தை தான் இந்த படத்தில் காட்டி இருக்கார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

2009யில் பின் வாங்கி காட்டுக்குள் போயிருந்தாலும் , நாங்கள் ஏதும் சொல்லியிருக்க மாட்டோம்[ஏன் இதற்கு முன் பின் வாங்கி காட்டுக்குள் போகவில்லையா?]...ஆனால் அந் நேரம் பின் வாங்கி போயிருந்தால் உங்களை மாதிரி ஆட்களிடம் இருந்து தப்ப முடியாது என்று தலைவருக்கு தெரியும் ...உங்கட அதே குணத்தை தான் இந்த படத்தில் காட்டி இருக்கார் 

கடைசிகட்ட சண்டைகளில் பாவிக்கப்பட்ட தொழில்நுட்பம் வன்னிக்காடுகளை இரவிலும் துல்லியமாய் காட்டும் வல்லமை கொண்டிருந்தார்கள் .

இந்தியன் ஆமி வயருடன் உள்ள தொடர்பாடலுடன் உள்ள கருவிகள் உடன் வந்திறங்க இயக்கம் 150 மைல் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் இருந்தனர் . வடமராட்சி பக்கம் இருந்து வன்னிக்கு பகலில் சப்பிளை கொடுக்க வேண்டிய நேரம்களில் அருகில் உள்ள கிராமங்களில் வீதியால் போகும் இந்திய இராணுவ வயர்களை அறுத்துவிட்டால் காணும் தேவையற்று கரவெட்டிக்குள்  கிடந்து உழுதுகொண்டு கிடப்பினம் .சப்பிளை எந்த சேதராமும் இன்றி போய் சேரும் 

கடைசி சண்டை அது போல் அல்ல சாட்டிலைட் போன் பாவிக்கப்பட்ட இடங்களை நோக்கி மல்ரி பரல் மழையாக விழுந்தது நின்றவர்கள் சொல்லியது .

வெற்றி பெற்று இருந்தால் தமிழர் எல்லோரும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஜெயசுக்குருவில் ஆனையிறவில் வெல்லும்போது திரிந்தார்கள் . தோல்வி என்றால் இலகுவாக ஒருத்தர் மீது அதான் தலைமீது  போட்டுவிட்டு போய் விட்டார்கள் போதாக்குறைக்கு சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்ற பழமொழியை தேடிசொல்கினம் . இதெல்லாம் அவர்களை உங்களை  அந்நியப்படுத்த அன்று எல்லாத்தமிழரையும் போல் எதிர்பார்ப்பு மனதுள் இருந்தது தோல்வி என்றதும் சகிக்க முடியாமல் உளறி கொட்டுகினம் அவ்வளவே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

வெற்றி பெற்று இருந்தால் தமிழர் எல்லோரும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஜெயசுக்குருவில் ஆனையிறவில் வெல்லும்போது திரிந்தார்கள் . தோல்வி என்றால் இலகுவாக ஒருத்தர் மீது அதான் தலைமீது  போட்டுவிட்டு போய் விட்டார்கள் போதாக்குறைக்கு சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்ற பழமொழியை தேடிசொல்கினம் . இதெல்லாம் அவர்களை உங்களை  அந்நியப்படுத்த அன்று எல்லாத்தமிழரையும் போல் எதிர்பார்ப்பு மனதுள் இருந்தது தோல்வி என்றதும் சகிக்க முடியாமல் உளறி கொட்டுகினம் அவ்வளவே .

முற்றிலும் உண்மை.

ஒரு காலத்தில் அவங்களை வெல்லேலாது என வீராவேசம் பேசியவர்கள் தான் இன்று  அவங்களாலைதான்  இவ்வளவும் என புலம்பிக்கொண்டு திரிகின்றார்கள்.

சரி ஈழத்தமிழர்களுக்கு இப்ப என்ன பிரச்சனை என்று அவர்களை கேட்டால் அதுவும் அதுகளுக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

கடைசிகட்ட சண்டைகளில் பாவிக்கப்பட்ட தொழில்நுட்பம் வன்னிக்காடுகளை இரவிலும் துல்லியமாய் காட்டும் வல்லமை கொண்டிருந்தார்கள் .

இந்தியன் ஆமி வயருடன் உள்ள தொடர்பாடலுடன் உள்ள கருவிகள் உடன் வந்திறங்க இயக்கம் 150 மைல் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் இருந்தனர் . வடமராட்சி பக்கம் இருந்து வன்னிக்கு பகலில் சப்பிளை கொடுக்க வேண்டிய நேரம்களில் அருகில் உள்ள கிராமங்களில் வீதியால் போகும் இந்திய இராணுவ வயர்களை அறுத்துவிட்டால் காணும் தேவையற்று கரவெட்டிக்குள்  கிடந்து உழுதுகொண்டு கிடப்பினம் .சப்பிளை எந்த சேதராமும் இன்றி போய் சேரும் 

கடைசி சண்டை அது போல் அல்ல சாட்டிலைட் போன் பாவிக்கப்பட்ட இடங்களை நோக்கி மல்ரி பரல் மழையாக விழுந்தது நின்றவர்கள் சொல்லியது .

வெற்றி பெற்று இருந்தால் தமிழர் எல்லோரும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஜெயசுக்குருவில் ஆனையிறவில் வெல்லும்போது திரிந்தார்கள் . தோல்வி என்றால் இலகுவாக ஒருத்தர் மீது அதான் தலைமீது  போட்டுவிட்டு போய் விட்டார்கள் போதாக்குறைக்கு சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது என்ற பழமொழியை தேடிசொல்கினம் . இதெல்லாம் அவர்களை உங்களை  அந்நியப்படுத்த அன்று எல்லாத்தமிழரையும் போல் எதிர்பார்ப்பு மனதுள் இருந்தது தோல்வி என்றதும் சகிக்க முடியாமல் உளறி கொட்டுகினம் அவ்வளவே .

பெருமாள் , நான் எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கிறன் ,,,இங்கு புலிகளைப் பற்றி கதைக்கவில்லை...பெரும்பான்மை தமிழரின் மனநிலை குறித்தே கதைக்கிறேன் ....அது இந்த படத்தோடு எப்படி ஒத்து போகின்றது என்பதை தான் நான் சொல்கிறேன்.
உங்களுக்காக,   புலிகள் இறுதி யுத்தத்தில் வென்று இருந்தால் சந்தோசப்பட்டு இருப்பன்...ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சண்டை பிடித்து கொண்டு இருக்க போறார்கள் ....இன்னும் எத்தனை உயிர்கள் போக போகின்றது என்ற கவலையும் இருக்கும் .
புலிகளது தோல்விக்கு நாங்கள்  தலைவரை குற்றம் சாட்டவில்லையே....அப்பவும் சரி , இப்பவும் சரி புலிகளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு உங்களே போல் வாலுகள் தான் காரணம் ...இதை விட இத் திரியில் எழுதுவதற்கு ஒன்றுமில்லை .
திரும்பவும் ஒருக்கால் படத்தை பாருங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.