Jump to content

அரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரங்கக் கலையின் மைல்கல், ‘மாத்தளையின் ஜீவநதி’

த. நரேஸ் நியூட்டன்

e0aeaee0aebee0aea4e0af8de0aea4e0aeb3e0af

இலங்கையின் அரங்கக் கலையின் முன்னோடிகள் பலரைப் பற்றி நாம் பல ஊடகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் அறிந்திருக்கிறோம். இவர்களுள் மலையகத்திலிருந்து நாடகக்கலையின் வளர்ச்சிக்கும் தமிழ் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி, நாடகத்துறை, போன்றவற்றிற்கும் உரமிட்டவர்களில் மிகவும் பிரபல்யமான ஒருவர் மாத்தளை கார்த்திகேசு என்று அழைக்கப்படுகின்ற கா. கார்த்திகேசு. இவர் படைத்த நாடகங்கள் பல மலையகத்திலும் கொழும்பு போன்ற பகுதிகளிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டு கலை ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவையாகும். இவர் அரங்கக் கலைகளுள் நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அதே வேளை எழுத்துத் துறையிலும் தனது தடங்களைப் பதித்து தமிழ் இலக்கியத்துறையின் பங்களிப்பாளர்களுள் பேசப்படுபவராக மிளிர்ந்தார். தமிழ் இலக்கிய எழுத்துத்துறையில் சிறுகதைகள், இலக்கியம் மற்றும் சமயம்சார் கட்டுரைகள் போன்றவற்றை எழுதுவதிலும் நாட்டம் காட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு நாடக எழுத்தாளராகவே பெரிதும் நோக்கப்பட்டார்.

தை மாதம் 1ஆம் திகதி 1939ஆம் ஆண்டு இலங்கை மலையகத்தின் பெயர் பெற்ற மாவட்டமாகிய மாத்தளையில் பிறந்தார். இவர் மாத்தளை விஜயா கல்லூரியிலும் கிறீஸ்தவ தேவாலய கல்லூரியிலும் கல்வி பயின்றார். தனது கலைப் பயணத்தை 1958ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர் இறுதிக்காலம் வரை அப்பயணத்தை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தார். இதே ஆண்டில் இவர் முதன் முதலில் எழுதிய நாடகம் ‘தீர்ப்பு’ என்பதாகும். இவர் கிறீஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்வி பயின்ற அவரது இளமைக்காலத்திலேயே பல நாடகங்களை எழுதி அவற்றின் பொருட்டு பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு காலப்பகுதியில் மலையக மக்களின் மூத்த பரம்பரையினர் அநேகமாக கல்வியறிவு கிடைக்காத தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் கூலித்தொழிலாளர்களாக பல சவால்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். கல்வியறிவு குறைவானவர்கள் என்பது மட்டுமன்றி பிராந்திய ரீதியான மற்றும் சமூக ரீதியான பாகுபாடுகளுக்கும் இவர்கள் பெரியளவில் முகம் கொடுத்தார்கள். தங்கள் மத்தியில் இருந்த கல்விசார் குறைபாட்டை தாங்களே நிவர்த்தி செய்ய எத்தனித்து பலர் கல்வி  பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு கல்வியறிவு பெற்றுக் கொண்டவர்களுள் அனேகமானவர்கள் தமது குடும்ப வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் நோக்கோடு வேலைவாய்ப்புக்களை தேடி இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்ந்த சம்பவங்களும் உண்டு. இவர்களுள் சிலர் தாம் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் மாற்றம் கருதி தாம் வாழ்ந்த பிரதேசத்திலேயே  தங்கி சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். சமூக பாகுபாடுகளுக்கு முகம்கொடுத்த இவர்களுள் சிலர் அதை சவாலாக எடுத்து தாம் சார்ந்த தோட்டங்களின் பெயர்களை தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழியாக வைத்துக்கொண்டு கம்பீரமாக தலை நிமிர்ந்து வலம் வந்த பல ஆளுமைகளை நாம் காணலாம். அவர்களை போன்றோர் அநேகமாக தெரிவு செய்த துறை தான் கலை இலக்கிய துறை. கலை இலக்கியத் துறையில் தமது பங்களிப்பை நிறைவாக செலுத்த முற்பட்டவர்களுக்குள் பெர்குறிப்பிடக்கூடிய ஒருவர் தான் மாத்தளை கார்த்திகேசு. இவர் தனது ஊரின் பெயரையும் தனது பெயரோடு இணைத்துக்கொண்டே கலையுலகில் கால்தடம் பதித்து பிரபலமானார். இதனாலேயே இவரது பெயர் மாத்தளை கார்த்திகேசு என வழங்கப்படலாயிற்று.

mathalai-karthikesu.png?w=144&h=150

‘அவள் ஒரு ஜீவநதி’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தமை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது 1980ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இந்த திரைப்படத்தை கலைஞர் மாத்தளை கார்த்திகேசுவே திரைக்கதை வசனம் எழுதி தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்திற்காக இவர் பாடல்கள் சிலவற்றையும் எழுதியதோடு தந்தை பாத்திரமேற்று நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. அப்படியிருந்தபோதும் அவர் மனம் சோர்ந்துபோகாது தொடர்ந்தும் தனது கலைப்பயணத்தை தொடர்ந்தார். இவர் 25ற்கும் அதிகமான மேடை நாடகங்களை எழுதி அந்த நாடகங்களை தானே முன் நின்று வழிநடத்தி இயக்கி மேடையேற்றினார். இவரது நாடகங்களில் ‘களங்கம்’, ‘போராட்டம்’ மற்றும் ‘ஒரு சக்கரம் சுழல்கிறது’ போற்ற நாடகங்கள் முறையே 1974, 1975 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மேடையேற்றப்பட்டு தேசிய நாடக விழாவில் அநேகரின் பாராட்டைப் பெற்றதோடு பரிசும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுள் ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் இவரை மிகப்பெரிய அளவில் பிரபல்யப்படுத்திய நாடகமென்றால் அது மிகையாகாது. இந்த நாடகம் யாழ் நகரில் உலகத் தமிழாராட்சி மாநாடு நடைபெற்றபோது தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரினதும் மற்றும் மாநாட்டில் பங்குபற்றிய பல முக்கியமான இலங்கை மற்றும் இந்திய பிரமுகர்களினதும் முன்நிலையில் மேடையேற்றப்பட்டு அநேகரின் பாராட்டைப்பெற்றமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இந்த நாடகத்தை நேரடியாக பார்வையிட்டுக்கொண்டிருந்த காலம்சென்ற பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பாராட்டை நேரடியாக பெற்றதோடு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பாராட்டையும் பெற்றது. இந்த நாடகம் 15 தடவைகளுக்கு மேல் நாட்டின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டு சாதனை புரிந்தது.

திரைப்படத்துறையில் ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் இவர் சலிப்படைந்து போகமல் அடுத்த கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பக்கம் தனது நாட்டத்தை காட்டத்தொடங்கினார். அதன் பயனாக ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம் பின்னர் பெயர் மாற்றப்பட்டு ‘காலங்கள்’ என்ற பெயரில் மலைய மக்களின் வாழ்க்கை பின்புலங்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் தொலைக்காட்சித் தொடராக உருவாக்கப்பட்டு இலங்கை தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளி பரப்பப்பட்டதோடு இலங்கையின் முதலாவது தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர் என்ற பெருமையையும் பெற்றது. இவர் தொலைக்காட்சி ஒளிபரப்பின் பொருட்டு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை மட்டுமன்றி மலையகத்தின் மிகப்பிரபலமான ‘காமன்கூத்து’ எனப்படும் மலையக மக்களின் வழக்கமான முறைமையிலமைந்த நாட்டுக்கூத்தையும் தாமே முன்வந்து தயாரித்து வழங்கினார். இவை மட்டுமன்றி ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற தொலைக்காட்சி நாடகமும் இவரால் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சி நிறுவனத்தினால் ஒளிபரப்பப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியால் நாடாத்தப்பட்ட நாடக விழா ஒன்றில் ‘காலங்கள் அழிவதில்லை’ நாடகத்தினை மேடையேற்றி சிறந்த நாடகம், சிறந்த நாடக ஆசிரியர் மற்றும் சிறந்த நடிப்பு போன்றவற்றுக்கான பரிசையும் தனதாக்கிக்கொண்டார்.

இதைப்போலவே இலங்கையின் திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட ஒரு போட்டியில் இவர் எழுதிய ‘சுட்டும் சுடர்கள்’ என்ற திரைப்படக்கதை பிரதிக்கு இரண்டாவது பரிசைத் தட்டிக்கொண்டமை இவரது கலைப்பயணத்தில் இவர் தாண்டிய மற்றொரு மைல்கல்லாகும். இந்தப் போட்டியில் முதலாவது பரிசை பி. விக்கினேஸ்வரன் அவர்களும் மூன்றாவது பரிசை கே. கே. மதிவாணனும் பெற்றுக்கொண்டனர்.

கலைப்பணிக்காக பல அர்பணிப்புக்களுடன் அயராது உழைத்த இவரது உழைப்பை கவனத்தில் எடுத்த இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு 1993ஆம் ஆண்டு சாகித்திய விழாவில் இவருக்கு ‘கலா ஜோதி’ என்ற விருதை வழங்கி கெரவித்தது.

இவரது படைப்பாகிய ‘வழி பிறந்தது’ என்ற நாவல் தமிழகத்தின் இளவழகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இலங்கை மலையக மக்களின் வாழ்வியல் முறைமைகள், கலாசாரம் மற்றும் பண்பாடு முதலியவற்றை பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் முதல் முதலில் இந்த வெளியீட்டகத்தினால் தமிழகத்திலேயே வெளியிடப்பட்டது. இதற்கு எழுத்தாளர் வல்லிக் கண்ணன் அவர்கள் அணிந்துரை வழங்கியிருந்தார். இலங்கை மலையகத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையையும் அவர்களது பிரச்சனைகளையும் உணர்சியோடு தீவிரமாக எடுத்துக் கூறும் படைப்பு ‘வழிபிறந்தது’ நாவல் என வல்லிக்கண்ணன் தனது அணிந்துரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார். மலையகத்திலிருந்து ஏற்கனவே வெளிவந்த ஏனைய படைப்புகளையும் விட இது மிகவும் வித்தியாசமாக யோசித்து புனையப்பட்டுள்ளதாக அவர் மேலும் விவரிக்கிறார்.

மாத்தளை கார்த்திகேசு அவர்கள் இலங்கையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் பற்றி ஆரம்ப காலங்களிலேயே ஆழமான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அந்தக்கருத்து ஆழமானதென்பதற்கும் அப்பால் உண்மைத் தன்மைகொண்ட ஒரு தீர்க்கதரிசனம் மிகுந்த கருத்தாக தற்கால நிலைமைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் எமக்க புலப்படும். அதனை இங்கு காலத்தின் தேவையாகக்கருதி குறிப்பிடுகிறேன். “நம் நாட்டில் தொலைக்காட்சி நாடகங்கள் வளர வேண்டுமானால் வெளி நாட்டிலிருந்து தொலைக்காட்சி நாடகங்கள் தருவிப்பதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைத் தமிழ் திரைப்படங்களுக்க ஏற்பட்ட நிலைதான் இலங்கைத் தமிழ் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் ஏற்படும்” என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். இக்கருத்து எவ்வளவு தூரம் நிதர்சனமானது என்பது இன்று இலங்கையில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்ற தொலைக்காட்சி நிலையங்களின் நிகழ்ச்சிகளை பார்க்கின்றபோது புலப்படும். இந்நிறுவனங்களால் ஒளிபரப்பப்படுகின்ற நிகழ்ச்சிகளில் அநேகமானவை இரவல் தாயின் பிரசவங்களாகவே இருப்பது கவலையளிப்பது மட்டுமன்றி இலங்கைக் கலைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடக்கூடியது.

இவர் மலையக எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவராகவும் இலங்கை கவின் கலைகள் மன்றத்தின் தலைவராகவும் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் நாடக குழு உறுப்பினராகவும் செயற்பட்டமை இவரது தலைமைத்துவ ஆளுமையை வெளி உலகிற்கு புடம்போட்டு காட்டுகிறது. தமிழ்க் கதைஞர் வட்டத்திலும் அங்கத்துவம் வகித்து சிறந்த கதைகளை தேர்வுசெய்வதில் தனது பூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார். இவர் கடந்த பத்து வருடங்களாக ‘தகவம்’ இலக்கிய அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வந்துள்ளார். மாத்தளை தமிழ் பட்டதாரிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மலையகத்தின் நூல் திரட்டு ஆவணப்படுத்தல் செயற்பாட்டுக்கு மாத்தளையில் அமைந்திருந்த தனது நூலகத்தையும் அக்குழுவினருக்கு பயன்பாட்டுக்கு கொடுத்து பரிபூரணமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அண்மையில் இலங்கையிலிருந்து வெளிவரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் முகப்பை இவரது புகைப்படமே அலங்கரித்திருந்ததோடு அவர் பற்றிய ஒரு கட்டுரையை திரு. மு. நித்தியானந்தன் அவர்கள் ‘மாத்தளையின் ஜீவநதி’ என்ற தலைப்பில் இந்த சஞ்சிகையில் விரிவாக எழுதியிருந்தார்.

இவர் கொழும்பில் ஜம்பட்டா வீதி, கொச்சிக்கடையில் தனது வசிப்பிடத்தைக்கொண்டிருந்தார். தமிழ் இலக்கிய படைப்புலகத்திற்கு குறிப்பாக மலையக இலக்கிய படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாகவும் ஆதர்சமாகவும் திகழ்ந்த ‘மாத்தளையின் ஜீவநதி’ மாத்தளை கார்த்திகேசு கடந்த ஆவணி 6ம் திகதி 2021 அன்று தனது பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டார். இவர் மறைவுக்கு சிலநாட்களுக்கு முன்புதான் ‘ஞானம்’ சஞ்சிகையில் இவரைப்பற்றிய கட்டுரை வெளிவந்திருந்தமை குறிப்பிடப்படக்கூடியது. இந்த கட்டுரையை இவர் படித்திருந்தால் இவர் ஆற்றிய கலைப்பணிக்கு கிடைத்த மிகப்பெரும் சான்றாகக் கருதி ஆத்ம திருப்தியடைந்திருப்பார் என்றால் அது மிகையாகாது.
 

https://padhaakai.com/2021/08/29/mathale-karthikesu/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.