Jump to content

சின்னப்பன்றி: அகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பன்றி: அகரன்

Sinnapantry.jpg?resize=838%2C1184&ssl=1

அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும்.

பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை யார் உனக்கு சொல்லித் தந்தார்கள் ? ‘’ என்றேன். அவள் மீண்டும் ஒருமுறை அதை சொல்லிச்சிரித்தவாறு ‘என் நண்பி கிளாரா ‘ என்றாள்.

என்னை வெற்றி கொண்டு விட்டதான முகச் சாயலில் ஒரு படி மேல் சென்று ‘’ réveille-toi papa grenouille ‘’ (அப்பா தவக்கிளையே ! எழுந்திரு.) என்றாள். எனது மனதெங்கும் பஞ்சில் ஊறும் இரத்தம் போல் வேதனை படர்ந்தது. ‘’மகளே அந்த வார்த்தைகள் சொல்லக் கூடாது ! அது மகிழ்ச்சியற்ற வார்த்தைகள். மீண்டும் சொன்னால் அப்பா கவலைப்படுவேன்’’ என்றேன்.

அவள் ‘’ இல்லை அப்பா ! இது கெட்ட வார்த்தை இல்லை’’ என்றாள். என்னால் ஒருபோதும் அதை நம்ப முடியாது. இரண்டு வருடமாக பள்ளிக்குச் செல்லும் இயல் ஒரு போதும் இப்படி வார்த்தையை பயன்படுத்தவில்லை. அதைவிட நாளை அவளுக்கு இரண்டாவது ஆண்டில் முடிவுக்கான பெரிய விடுமுறை ஆரம்பிக்கிறது. இந்த நேரம் பார்த்து கிளாரா கெடுத்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டேன்.

எனது பெயரை பிரான்சில் முழுமையாக ‘’முத்துலிங்கம் தயாளநேசன்’’ என்று உச்சரிக்கும் இயலின் ஆசிரியரான எமிலியிடம் இயல், கொடும்சொல் சொல்லப்பழகியதை பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்து பள்ளிக்குச் செல்லத் தயாரானேன்.

நிறைந்து வழியும் இளமையும், நிறுத்தாத புன்னகையும், மெல்லிய சங்கிலிகள் போன்ற கட்டம் கட்டப்பட்ட அளகமும், வைத்திருந்தாள் எமிலி. பார்ப்பவர் எல்லோரையும் பாடாய்ப்படுத்தும் அழகு. இடியமீன்கள்கூட சின்ன மீன்குஞ்சுகள் போல ஆகிவிடுவார்கள். இளங்கோ அடிகள் இவளைப்பாடி இருந்தால் ‘’ புரிகுழல் அளகத்து நகை !’’ என்றிருப்பார். தமிழ்ப்பெண்களின் நீண்ட கருங்குழல் பேரழகென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொன்போன்று மினுங்கும் முடியை வைத்திருப்பவளுக்கு ‘பொன்நகை’ தேவையற்றுப் போய்விடுகிறது. கம்பர் எமிலியைக் கண்டிருந்தால் ‘’ கஞ்சா இருக்கும் மலர்க்கூந்தல்’’ என்றிருப்பார். என்ன செய்வது ? இளங்கோ, கம்பர், இன்னும் பெண்களை ஆராதித்த புலவர்பெருமக்களுக்கு வாய்த்தது அவ்வளவுதான் ! அவர்கள் மேற்குநாடுகளுக்கு ஏதிலியாகியிருந்தால் எத்தனை புதுச்சொற்கள், அழகுப்பாடல்களை தமிழ் கண்டிருக்கும் ? .

எமிலியிடம் பேசுவதில் ஒரு ஆபத்து இருந்தது. இயலைக் கண்டதும் ‘mon cœur’ (என் இதயமே) ஓடி வா’ என்று அவளை அணைத்து விட்டு என்னைப் பார்த்து உலகின் அற்புதமான சிரிப்பை உற்பத்தி செய்வாள். ஒரு கவிதை சொல்வது போல நளினமாக ‘முத்துலிங்கம் தயாளநேசன் çava ? (நலமா ?) என்பாள். நான் பேச நினைத்ததை எல்லாம் மறந்துவிடுவேன்.

பள்ளி வாசலில், எல்லாப்பிள்ளைகளும் திரும்பி திரும்பி தாய்க்கோ, தந்தைக்கோ கைகாட்டி உதடுகளில் வலது கையை வைத்து முத்தங்களை அனுப்புவார்கள். பெற்றோரும் அனுப்புவார்கள் எனக்கு அந்த வாய்ப்பு வருவதில்லை. இயல் எமிலியை கண்டதும் என்னை முழுவதுமாக, மறந்து விடுவாள். ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதில்லை. மற்றப் பிள்ளைகளின் முத்தங்களை இரவல் வேண்டி இயலி முதுகை நோக்கி முத்தத்தை அனுப்புவேன். அது திரும்பி வராது. எதிர்காலத்தில் அவள் ‘சின்னப் பன்றி’ என்ற வார்த்தையை எல்லோருக்கும் முன்னால் அனுப்பாமல் இருந்தால் போதும் என்று நினைத்து கொண்டேன்.

அந்தப்பள்ளியில் எல்லோருக்கும் தெரிந்தவளாக இயல் இருந்தாள். அவளது நிறம் அங்கு புதுமையாக இருந்தது. வீட்டைவிட பள்ளியை விரும்பும் ஒருத்தியாகவும் இயல் இருந்தாள். பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாலையும் 04 மணி 30 நிமிடத்துக்கு அழைத்துப் போவேன். எல்லா பிள்ளைகளும் பெற்றோரிடம் பசுவைத்தேடும் கன்றாக கண்களை நிமிர்த்தி காத்திருப்பார்கள். இயல் மட்டும் எமிலியிடம் ஏதேதோ கேட்டுக் கொண்டிருப்பாள். இறுதியாக எமிலி ‘’ உன் அப்பா வந்துவிட்டார், அங்கேபார்’’என்ற பின்னரும் என்னை பார்த்துவிட்டு எமிலியுடன் பேச்சை நீட்டிக்கொண்டிருப்பாள்.

எமிலி என் கரங்களில் இயலைத்தரும்போது ‘’ உங்கள் மகள் என்னோடு வந்துவிடுவாள்போல் இருக்கிறது’’ என்பாள். நான் எமிலிக்காக சிரிப்பேன். என்னிடம் நடுக்கடலில் தத்தளிக்கும் அகதியின் மனநிலை இருக்கும்.

அன்று எந்தத்தடைகளுமற்று சூரியன் வந்த காலையில் எமிலியிடம் இயலை கொடுத்ததும் ‘’எமிலி உங்களிடம் இரண்டு நிமிடம் இருக்குமா ? பேசவேண்டும் ! ‘’ என்றேன். ‘’என்னவிடயம்பற்றி முத்துலிங்கம் தயாளநேசன் ? என்று என்பெயரை பாடிக்கொண்டிருந்தாள்.

‘’இயல் இன்றுகாலை ’Petit cochon réveille-toi’’, réveille-toi papa grenouille என்ற வார்த்தைகளை கூறுகிறாள். அதிர்ச்சியாக இருக்கிறது இந்த வார்த்தைகள்.. ‘என்று முடிக்க முதல் இரண்டு நிமிடம் முடிந்து விடும் என்ற அவசரத்தில் ‘’ஓ.. நேசன் அது ஒரு செல்ல வார்த்தை. அன்பானவர்களை பிரஞ்சு மொழியில் அப்படி அழைப்பது வழக்கம். நீங்கள் பயப்படத்தேவையில்லை ‘’ என்றாள். என்னால் இரண்டு வெட்கங்களைத் தாங்கவேண்டி இருந்தது.

சிரித்துக்கொண்டே வேலைக்குச் சென்றேன். என் எதிரே சென்றவர்கள் தனியே சிரிப்பதை கடைக் கண்ணால் பார்த்துச் சென்றார்கள். சிரிப்பது வீதியில் அதிசயமாகத் தான் இருந்தது. எனக்கும் இது புது வகை பழக்கமாக தோன்றிவிட்டிருந்தது. சொல்லிச் சிரிக்க யாரும் இல்லாததால் தனியே சிரிப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் எல்லை தாண்டினால் வைத்தியசாலை செல்ல வேண்டி வரலாம். அவ்வளவுதான்.

எனது வேலை நேரத்தை அந்த நிறுவனம் இரண்டாக வெட்டித் தந்திருந்தது. அது ஒரு மகளை வைத்திருக்கும் எனக்காக செய்த விதிவிலக்கு. காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை. பின்னர் மாலை 07 மணியிலிருந்து இரவு 11 மணி வரை. இயலை பள்ளியில் விடவும் பின்பு அழைத்து வந்து பணிவிடைகளையும் உலகத்தின் உன்னத பொறுமையை எனக்குக் கற்றுத்தந்த உணவூட்டும் பணியையும் செய்ய அது பொருத்தமாக இருந்தது.

மாலை 6 மணிக்குப் பின்னர் அந்த தீப்பெட்டி போன்ற வீட்டில் நான் செய்வது சட்டப்படி குற்றமானது. ஒரு குழந்தையை தனியே விட்டு விட்டு செல்வது. ஆனால் என்னிடம் வேறு தீர்வு இருக்கவில்லை. அந்த நகரத்தில் அறிந்த தமிழர்களோ, இரவில் பிள்ளையைப் பார்க்கும் பணியாளர்களோ இல்லை. பணம் கொடுத்து பிள்ளையை பார்க்கும்படி வங்கி நிலுவையும் இல்லை. கோடைகால கிணறு போல் மாத முடிவில் ஆழம் சென்றிருக்கும்.

இயல் தான் பிறந்து பதினோராவது நாளில் இருந்து எனக்கு இந்த விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை தருகிறாள். அவள் இரண்டு வயதை தொட்ட போது ஒரு நாள் மட்டுமே என்னை அதிரச் செய்தாள்.

அன்று மாலை வேலைக்குச்சென்றபோது வீட்டுக்கதவை பூட்டாமல் சென்றுவிட்டேன். இரவு 11 மணி கடந்து நான் வீட்டை அடைந்த போது, அவள் வீட்டை விட்டு வெளியேறி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். (யாரும் பார்க்கவில்லை.) வாரி அணைத்து அறையில் சென்று அவளுக்கு மொழி புரியாத போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவள் என் கண்களை தடவி நீரைத் தொட்டு விளையாடினாள்.

அன்றிலிருந்து இரவு பசித்தால் குடிக்க அருகே அவளது பால்புட்டியும், உறவினர்களான பூனைப்பொம்மை, மிக்கிமௌஸ், க்கோன், டெடிபியர், நூனூஸ்பொலர், பேர்நுவல், புலி, யானைக்குட்டி, என அவளுக்கு மட்டும் பெயர் தெரிந்த இன்னும் பல பொம்மைகளையும் கட்டில் அருகில் வைப்பேன். இயல் பேசி, பாடி, பாடம்சொல்லி, தூங்க அவர்கள் துணை வேண்டும். கடவுளுக்கு கொடுக்க வைத்திருந்த முத்தத்தையும் கொடுத்த பின்னர் கதவை பூட்டி விட்டு சிலநிமிடம் கதவில் காதுவைத்து கேட்பேன். தன் பொம்மைகளுக்கு கட்டளையிடும் சத்தம் கேட்கும். இந்தச் சீதையை கடத்த எந்த புட்பக விமானமும் வரமுடியாதென்று நினைப்பேன். இவள் இராவணன் வளர்க்கும் சீதை ! என்று எனக்குள் நம்பிக்கை ஊட்டிவிட்டு வேலைக்குச் செல்வேன்.

இரவு 11 மணி கடந்து வரும்போது பால் புட்டி தீர்ந்திருக்கும். பொம்மைகள் இயலுக்கு மேலும் அருகிலும் தூங்கியிருப்பார்கள். இயல் ஒரு இளவரசியின் தோரணையில் தூங்கியிருப்பாள்.

நான் ஒவ்வொரு இரவும் சில நிமிடங்கள் அந்த காட்சியை தினமும் குடித்து விட்டுத்தான் குளிக்கச் செல்வேன்.

எனக்கு எந்த விதத்திலும் துன்பத்தை தராமல் தனிமையில் இரவின் பாதியைக் கழித்து வளரும் இயல் ஓர் இரும்பு பெண்ணாக கரும்புபோல் வளர்வாள் என எண்ணிக்கொள்வேன். அவள் எனக்கு சசியை நினைவூட்டிக்கொண்டே வளர்ந்தாள்.

சசியின் வயிற்றுக்குள் இயல் வளர்ந்தபோது தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்று நான் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன். ஆனால் என்னால் ஒரு பெயரைக்கூட தேடிப்பெற முடியவில்லை. ஒருநாள் மாலை 14 ம் லூயி மன்னன் கட்டிய சிலுவைக் குளத்தினருகே இருவரும் புல்வெளியில் இருந்தபோது « ‘இயல்’ என்ற பெயரை வைப்போமா ? » என்று இயல்பாகக் கேட்டாள். அதிகமாக பேசிக்கொண்டு கனவுகளில் வாழ்ந்து கொண்டு நான் இருப்பேன். சசியோ செயல்களிலேயே எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருப்பாள். நான் வேலைக்கு போகும் போது வாசலில் ஒரு பவுத்த புன்னகை நிறைத்து பார்த்துக் கொண்டிருப்பாள்.

இயல் பிறந்து பதினோராவது நாள் அந்த நதி தீர்ந்தது. இரவு 11 மணிக்கு ஆவலோடு வீடு வந்தேன். இயலை மடியில் வைத்து சசி காத்திருந்தாள். ‘’இயலை பிடியுங்கோ எனக்கு ஏதோ செய்கிறது.’’ என்றாள். ‘’ எனக்கு தலை சுற்றுகிறது’’ என்று விட்டுச் சென்றாள். முழுமையாக மணிக்கூட்டின் பெரிய கம்பி ஒருமுறை சுற்றிவர முதல் ஒரு அலறல் சத்தம் கேட்டது. யுத்தம் நடந்த நிலத்தில் இருந்த எனக்கு ஒரு போதும் கேட்டிராத கதறலாக அது இருந்தது. ச….. சி என்று மனமெங்கும் மிரண்டிருக்க கதவை திறந்தேன். சசி இரத்தத்திற்கு மேல் இரண்டாக மடிந்து கிடந்தாள். சசிக்கு தலைவலிப்பு வந்து தூக்கி வீசியதில் அந்த மலசலகூடத்தின் வெள்ளைமாபிள் மேல் விழுந்ததால் அவள் முறிந்துவிட்டாள்.

‘ஐ..யோ…ஓ..’ என்ற நீண்ட ஒலியைமட்டும் எழுப்பிவிட்டு நான் அமைதியாகி போனேன். எதிர் வீட்டு ‘கினே’ என்ற நாட்டைச் சேர்ந்த அரேபியாவும், சிண்டாவும் அந்த அறையில் இருந்து சசியை தூக்க முயன்றார்கள்,. முடியவில்லை. பின்னர் அவசர வைத்திய உதவியை அழைத்தார்கள. ஒரு சிவப்பு நிற வைத்திய அவசர வண்டியில் வந்தவர்கள் கடும் முயற்சியில் கதவை கழற்றியபின்னர்தான் சசியை வெளியே எடுத்து பெரும்படைசூழ கொண்டு சென்றார்கள். நான் இடியேறு விழுந்த தென்னை போல மடியில் இயலுடன் சரிந்து இடந்தேன்.

 அப்படித்தான் நானும், இயலும் வாழ ஆரம்பித்தோம். இயலுக்கு ஏதும் தெரிந்திருக்காது. அவள் எதிர்காலத்தில் அறிவாள். சசியின் அம்மா மட்டக்களப்பில் இருந்து பேசும் போது அடிக்கடி சொல்வார்- ‘ஒரு கரைச்சலும் உங்களுக்கு தராத இயல் தெய்வக்குழந்தை, சின்ன வயதில் பெரியவள் போல் வளர்கிறாள்’ என்று. நான் நினைப்பேன், குழந்தைகள் எல்லாம் தெய்வமாக பிறக்கிறது. நாம் ஏன் மனிதராக மாற்றுகிறோம் ?

அன்று வழமைபோல மாலை இயலை அழைத்து வரச் சென்றேன். இயலின் முகம் முற்றாக இருட்டியிருந்தது. மூன்று மாதம் பள்ளி இல்லை என்ற தகவல் அவள் மகிழ்ச்சி உலகத்தை குலைத்திருந்தது. எமிலி தன் குழந்தையை பிரிவது போல பல நிமிடங்கள் இயலைக் கட்டி அணைத்துக் கொண்டிருந்தாள். எமிலி முகத்திலும் முதன்முதல் சிரிப்பைக் காணமல் இருந்தேன்.

இயல் படலை தாண்டிய போதும் மீண்டும் ஓடிப்போய் இரு கைகளாலும் இதயத்தை செய்து காட்டினாள். எமிலியும் பதிலுக்கு செய்தாள். அந்த இதயங்களை பார்க்க மட்டுமே முடிந்தது.

இயல், தொட்டால் கலைந்துவிடும் தேன்கூடு போல முகத்தை வைத்திருந்தாள். நான் பேச்சை தொடுக்கவில்லை. பாதி வழியில், தன்னால் நடக்க முடியாது, கால் வலிக்கிறது என்றாள். அவளை தூக்கித் தோள் மீது இருத்தினேன். என் தலையைப் பிடித்தபடி ‘papa on peut retourner à l’école’ என்றாள். நான் வந்த பாதையில் மீண்டும் பள்ளிக்கு சென்றேன் எல்லோரும் சென்று சென்றுவிட்டிருந்தார்கள். பள்ளி தனித்திருந்தது. தோளில் இருந்தவாறு பள்ளிப்படலையை பிடித்தவாறு ‘ஏமிலி.. ஏமிலி.. ‘என்று தன் ஆசிரியரை அழைத்தாள். பள்ளி பதிலளிக்கவில்லை.

மழை திடீரென வந்து சேர்ந்தது. என்னிடம் குடை இல்லை. என் தோளில் இயலும் நானும் நனைந்து கொண்டே வீடு வந்தோம். அந்த மழை எனக்கு வசதியாக இருந்தது. இயலுக்கும்.

குளிப்பு தொட்டியில் இயலை இறக்கி தோயவார்த்தேன். தலை துவட்டி கட்டிலில் இருத்தினேன். பொம்மையை மடியில் இழுத்து வைத்து அதன் தலையைத் தடவினாள். ‘இயல் அப்பா தோய்ந்துவிட்டு வருகிறேன் இருங்கோ’ என்றேன். பொம்மையை பார்த்தவாறு தலையை ஆட்டினாள்.

தோய்ந்து விட்டு வந்து சூடாக்கிய பாலுடன் இயலின் கட்டிலை நெருங்கினேன். சசி யாழ்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற புகைப்படம் ஒன்று தான் வீட்டில் தொங்கியது. அதை இறுக கட்டியவாறு தன் தாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இயல். çva va (நலமா ?) இயல் ? என்றேன். தலையைத் தடவியவாறு ‘papa je veux maman’(அப்பா, எனக்கு அம்மா வேணும் ! ) என்றாள்.

Mon ‘petit cochon’ je veux toi ! ’(என் சின்னப்பன்றியே ! எனக்கு நீ வேண்டும் !) என்றேன். எமிலியை கட்டி அணைத்ததுபோல பாய்ந்து என்னை இறுகக் கட்டி அணைத்தாள்.

மழைபெய்த வானம் தூர நின்றது. வெள்ளை முகில்கள் பிய்ந்து அலைந்தது. கிழக்கில் கருமேகங்கள் திரண்டு கொண்டிருந்தன, மேற்கில் சூரியன் பின்வாங்கிக் கொண்டிருந்தது. விடுபட்ட இடமெல்லாம் நீலம் நின்றது. இன்று மாலை வேலைக்குச் செல்வது என் வலுவுக்கு ஏற்றதில்லை என்று வானம் சொன்னது.

 

அகரன் 

 

பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

 

https://akazhonline.com/?p=3572

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quelle magnifique histoire .......என்ன ஒரு அழகான கதை.......!  🌹

நன்றி கிருபன்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அழகான ஒரு அப்பா மகள் கதை. பகிர்வுக்கு நன்றி . எழுதியவருக்கு என் பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இவை யாவும் கற்பனை” என இறுதியில் எழுதியிருந்தால் மனம் ஆறுதல் அடைந்திருக்கும்.. அவ்வளவுதான்.. 

எவ்வளவுதான் அருமையாக எழுதியிருந்தாலும் கதையை பாராட்ட முடியவில்லை.. என்னைப்பொறுத்தவரை மிகவும் தவறான உதாரணத்தை இந்த கதை கூறுகிறது.. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதை கற்பனை கதையாக இருந்தாலும் கூட எனக்கு இந்த கதையில் வரும் சம்பவம்/செயல் சந்தேகத்தையும் வேதனையையும் தருகிறது.. 

என்னதான் பணம் உயிர் வாழ தேவை என்றால் கூட இந்த மாதிரி குழந்தையை தனியே விட்டு போவார்களா? கற்பனை என்றாலும் கூட ஏன் இந்த மாதிரி செயல்களை எழுதவேண்டும்? சமூகபொறுப்புணர்வு எழுத்தாளர்களுக்கு வேண்டாமா? 

இல்லை கற்பனைக்கு பஞ்சம் ஏற்பட்டு எதை எழுதுவது என தெரியாமல் எழுதுவது, நியாயப்படுத்துவது!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கதை கற்பனை கதையாக இருந்தாலும் கூட எனக்கு இந்த கதையில் வரும் சம்பவம்/செயல் சந்தேகத்தையும் வேதனையையும் தருகிறது.. 

என்னதான் பணம் உயிர் வாழ தேவை என்றால் கூட இந்த மாதிரி குழந்தையை தனியே விட்டு போவார்களா? கற்பனை என்றாலும் கூட ஏன் இந்த மாதிரி செயல்களை எழுதவேண்டும்? சமூகபொறுப்புணர்வு எழுத்தாளர்களுக்கு வேண்டாமா? 

இல்லை கற்பனைக்கு பஞ்சம் ஏற்பட்டு எதை எழுதுவது என தெரியாமல் எழுதுவது, நியாயப்படுத்துவது!!!

 

நீங்க என்ன குற்றம் கண்டீர்கள் கதையில் என்று நேற்றைய பின்னூட்டத்தை பார்த்து நினைத்தேன். இப்போது விளங்கிக் கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

நீங்க என்ன குற்றம் கண்டீர்கள் கதையில் என்று நேற்றைய பின்னூட்டத்தை பார்த்து நினைத்தேன். இப்போது விளங்கிக் கொண்டேன்.

அரைகுறையான கருத்தை எழுதியதற்கு மன்னிக்கவேண்டும் ஏராளன்..பெரும்பலான சமயங்களில் நான் நினைப்பதை முழுமையாக எழுதுவதில்லை, வீண் விவாதங்கள்-கல்லெறி படக்கூடாது என்பதற்காக🙂.. ஆனாலும் சில சமயங்களில் எழுத நினைப்பதை எழுதாமலும் இருப்பதில்லை.. அப்படியான ஒரு நிலைதான் இந்த கதையில் என் கருத்து..

முதலில் இந்த கதைபற்றிய எனது எண்ணத்தை எழுதிவிட்டு பின்பும் மனத்திருப்தி ஏற்படாதமையாலேயே மீண்டும் எனது கருத்தை பதிந்தேன்.. 

அப்பா-மகள் பாசம் என்பதை அழகாக எழுதியிருப்பதாக கூறினாலும் எந்த பெற்றோரும் செய்யக்கூடாத விடயத்தை , குழந்தையை தனியே விடுவது - கற்பனை என்றாலும் கூட நல்ல எடுத்துக்காட்டு இல்லை என்பதால் இந்த கதையே நல்லதொரு கதை என கூறமுடியாது.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.