Jump to content

வடிவேலு: 'யானையா, குதிரையா?'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு: 'யானையா, குதிரையா?'

 
vadivelu-759.jpg
 
தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆம். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்பட்ட 'ரெட் கார்ட் தடை' நீங்கியது' என்கிற செய்திதான் அது. 'கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா...' 'தலைவன் is back' என்று ரசிகர்கள் இணைய வெளியில் உற்சாக மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள். வடிவேலுவின் மீள்வருகை காரணமாக இதர நகைச்சுவை நடிகர்கள் திகைத்து நிற்பதைப் போலவும் வெறித்தனமான 'மீம்ஸ்'கள் கிளம்புகின்றன.

ஒருவர் நடிப்பதை நிறுத்தி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் ஆதரவும் நினைவும் சற்றும் குறையாமல் இருப்பதென்பது மிக ஆச்சரியமான விஷயம். அந்த அளவிற்கு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தினம் தினம் மீள்நினைவு செய்யப்படுகின்றன. 'என்னை வாழ வைத்த மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு நன்றி' என்று வடிவேலுவே நன்றி சொல்லுமளவிற்கு 'மீம்ஸ்' உலகம் வடிவேலுவால் 99% நிறைந்திருக்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் வடிவேலுவின் ஏதோ ஒரு தோற்றமும் அசைவும் வசனமும் கச்சிதமாகப் பொருந்திப் போவதும் ஆச்சரியம்தான்.

வடிவேலுவின் இந்த இரண்டாம் இன்னிங்க்ஸ் அவருக்கு பழைய செல்வாக்கை மீட்டுத் தருமா?

*

தமிழ் சமூகத்தை வடிவேலு பாதித்தது போல் வேறு எந்தவொரு நடிகரும் பாதித்ததில்லை என்று உறுதியாகச் சொல்லி விடலாம். வடிவேலுவின் ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்து ஒவ்வொரு வசனமும் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.


இந்த அளவிற்கு தமிழ் சமூகத்துடன் இறுக்கமாக பின்னிப் பிணைந்த நடிகர் வேறு எவருமே இல்லை.  வேறு எந்த நடிகராவது நடிப்பில் இத்தனை வருடங்கள் இடைவெளி விட்டிருந்தால் நிச்சயம் தொலைந்து போயிருக்கக்கூடும் ஆனால் மக்கள் மறக்காமல் வடிவேலுவை தினம் தினம் நினைவுகூர்வது மட்டுமல்ல, அவரது மறுவருகையையும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இது மிக மிக அரிதான நிகழ்வு.

*

ஆனால் வடிவேலுவின் இந்த இடைவெளிக்கு யார் காரணம்? இதனுள் பல உள்விவகாரங்கள் இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அவரின் இந்த வீழ்ச்சிக்கு பெரும்பாலும் அவரேதான் காரணம் என்று தோன்றுகிறது. ஆம், வடிவேலு என்னும் பிரம்மாண்ட நகைச்சுவை யானை, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கதை இது.

உச்சியில் இருக்கும் எந்தவொரு பிரபலமான நடிகருக்கும் வீழ்ச்சி ஏற்படுவது இயல்பு. வளர்ச்சி என்று ஒன்றிருந்தால் வீழ்ச்சியும் அதன் கூடவே இணைந்திருக்கும். ஆனால் தன்னம்பிக்கையுள்ள நடிகர்கள்  எப்படியாவது முட்டி மோதி  மீண்டும் உச்சியை அடைந்து விடுவார்கள். ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் தோல்வியை அடைந்தவுடன் 'அவ்வளவுதான்.. ரஜினியின் சகாப்தம் முடிந்து விட்டது' என்பது போல் பேச்சுகள் கிளம்பின. ஆனால், அடுத்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'நான் யானை இல்லை, குதிரை.  கீழ விழுந்தா டக்குன்னு எழுந்திருப்பேன்' என்று ரஜினி பேசினார். பிறகு அது உண்மையும் ஆயிற்று. (சந்திரமுகியின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடியும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறந்து விடக்கூடாது).

ஆனால் வடிவேலுவின் வீழ்ச்சி இயல்பானதல்ல. அவராக வரவழைத்துக் கொண்டது என்றுதான் தோன்றுகிறது.. அதே நகைச்சுவை மொழியில் சொன்னால் 'சொந்த செலவில் சூனியம்'. ஒரு மனிதனுக்கு புகழ் பெருகும் போது அதை சரியானபடி கையாளும் நிதானம்  தேவை. இல்லையென்றால் எந்த புகழ் அவரை உச்சிக்கு கொண்டு செல்கிறதோ, அதுவே கீழேயும் தள்ளி விடும்.

ஒரு முன்னணி நடிகருடன் ஏற்பட்ட தனிப்பட்ட பூசலை அரசியல் பகையாக மாற்றிக் கொண்ட வடிவேலு, எவ்வித தீர்மானமும் இல்லாமல் திடீரென அரசியலில் குதித்து தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசினார். அரசியல் மேடையையும் தன் தனிப்பட்ட சண்டையை தீர்த்துக் கொள்ளும் வகையில் பேசியதை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. இப்படி வம்பாக சென்று அரசியல் கோதாவில் குதித்தது அவருக்கு சில 'ஏழரைகளை' கொண்டு வந்திருக்கலாம். இதுவொரு காரணம்.

இன்னொன்று, தனக்கு அதீதமாக கிடைத்த புகழையும் செல்வாக்கையும் தலையில் ஏற்றிக் கொண்ட வடிவேலு, தன்னை வாழ வைக்கும் சினிமாத்துறையில் பல பிரச்சினைகளைச் செய்தார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு வைப்பது, திடீரென சம்பளத்தை உயர்த்துவது, விமானத்தில் பயணிக்கும் நேரத்தைக் கூட கணக்கிட்டு பணம் கேட்பது என்று அவரைப் பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டேயிருந்தன.

இதன் உச்சம்தான் 'இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகசேி - பகுதி 2' ல் நிகழ்ந்த சர்ச்சைகள். இயக்குநர், தயாரிப்பாளர் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேருடனும் சர்ச்சையை ஏற்படுத்தி, நடிக்க வராததால் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க வடிவேலுவின் மீது 2018-ல் தடை விதிக்கப்பட்டது.

வடிவேலுவின் திரைப்பயணத்தில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' மிக முக்கியமானதொரு திரைப்படம். இதை இயக்கிய சிம்பு தேவன் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட். 'இம்சை அரசன்' என்பது அவரது புகழ்பெற்ற கதாபாத்திரங்களுள் ஒன்று. அதை வைத்து விதம் விதமான கார்ட்டூன்களை உருவாக்கியிருந்த சிம்புதேவனுக்கு, அதை திரைப்படமாக மாற்றுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரியாக இருந்திருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. அவரது மனதில் இருந்த பாத்திரத்திற்கு வடிவேலு கச்சிதமாக உயிரூட்டினார். 'இம்சை அரசனின்' ஒவ்வொரு காட்சியும் இன்றளவிற்கும் ரசிக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார் சிம்புதேவன்.

பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக வெற்றி பெறுவது அரிது. கவுண்டமணியே முயன்று மண்ணைக் கவ்விய ஏரியா அது. ஆனால் சிம்புதேவனின் திறமையான இயக்கம் காரணமாக 'இம்சை அரசனை' மக்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டனர். கொண்டாடித் தீர்த்தார்கள்.  இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டான வெற்றி காரணமாக இதே சாயலில் அமைந்த மன்னன் பாத்திரங்களில் சிலவற்றிலும் பிறகு வடிவேலு நடித்தார். ஆனால் அவை வெற்றியை அடையவில்லை. வடிவேலு ஹீரோ போன்று நடித்த 'எலி' திரைப்படத்தையும் மக்கள் நிராகரித்தனர். ஆனால் இதில் இருந்தெல்லாம் வடிவேலு பாடம் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லை.

தனக்கு மகத்தான வெற்றியைப் பெற்று தந்த சிம்புதேவனின் மீது வடிவேலு நன்றியுணர்ச்சியுடன் இருந்தாரா. இல்லை என்றுதான் தோன்றுகிறது. இம்சை அரசனின் பாகம் இரண்டின் படப்பிடிப்பின் போது திரையில் 'புலிகேசி' செய்த அதே இம்சைகளை வடிவேலுவும் செய்தார் என்று சொல்லப்படுகிறது.  'நான் சொல்லும் காஸ்ட்யூம் டிசைனரைத்தான் உபயோகிக்க வேண்டும்' என்பது துவங்கி பல இடையூறுகளை அவர்  செய்தார் என்கிறார்கள். படம் நின்று போனது.  தன்னுடைய முக்கியமான வெற்றித் திரைப்படத்தை இயக்கியவராயிற்றே என்று சிம்புதேவனுக்கு எவ்வித மரியாதையையும்  வடிவேலு அளிக்கவில்லை.  இயக்குநரையும் தயாரிப்பாளரையும் நேர்காணல்களில் மலினமாக குறிப்பிட்டார்.

தன்னுடைய இந்த வீழ்ச்சிக்கு தானும் ஒரு காரணம் என்பதை வடிவேலு உணரவேயில்லை. மாறாக, ' திரைத்துறையிலிருந்து என்னை ஒதுக்க சதி நடக்கிறது' 'இனிமேல் OTT -ல் நடிப்பேன்' என்றெல்லாம் தொடர் பேட்டிகளாக தந்து கொண்டிருந்தார் . 'அதெல்லாம் இருக்கட்டும்யா.. நீ திரும்பி வந்துருய்யா' என்று மக்கள் ஒருபக்கம் உள்ளூற கதறிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஏரியாவில் வடிவேலு ஏற்படுத்திய வெற்றிடம் ஏறத்தாழ அப்படியேதான் இருக்கிறது. இன்னொரு முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம், ஹீரோவாக மாறி விட பரோட்டா சூரி, யோகிபாபு, சதீஷ் போன்றவர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டியிருந்தது. நடிகர் விவேக் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததுதான் இதிலிருந்த பெரிய ஆறுதல். ஆனால் அவரும் சமீபத்தில் மறைந்து விட்டார்.

இந்த நிலையில் வடிவேலுவின் இந்த மறுவருகை எப்படியிருக்கும்?

ஓர் இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்த 'கத்தி சண்டை' என்கிற திரைப்படம் வெளியான போது, வடிவேலுவை பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் அதில் பழைய வடிவேலுவின் இயல்பான நகைச்சுவை பெரிதும் தொலைந்து போயிருந்தது. கூடவே அவரது தோற்றத்திலும் கணிசமான மாற்றம் இருந்தது. 'வெள்ளந்தியான' தோற்றத்தில் இருந்த பழைய வடிவேலு ஏறத்தாழ காணாமல் போயிருந்தார். எனவே மக்கள் இதற்கு பெரிய வரவேற்பை அளிக்கவில்லை. அதற்குப் பிறகு வெளியான 'சிவலிங்கா', 'மெர்சல்' போன்ற திரைப்படங்களுக்கும் இதுதான் கதி. 'கிணத்தைக் காணோம்யா' என்கிற காமெடி மாதிரி 'எங்க வடிவேலு எங்கய்யா' என்று மக்கள் கதற வேண்டியிருந்தது.

இந்த இரண்டாம் இன்னிங்க்ஸை வடிவேலு புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டால் ஒருவேளை இழந்த செல்வாக்கை அவர் மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் முன்பிருந்த வடிவேலுவை இப்போது அவராலேயே தர முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அது நிகழ்ந்தால் தமிழக மக்களைப் போல் மகிழ்ச்சியடைபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவரின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு அத்தகையது.

ரசிகர்களின் விருப்பம். வடிவேலு குதிரையைப் போல டக்கென்று எழுந்து கொள்வாரா? அல்லது யானையைப் போல் மீண்டும் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வாரா என்பதை காலம்தான்  சொல்ல வேண்டும்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.