Jump to content

தமிழ் வாசகர்களுக்கு இது துயரத்தின் பருவமோ... கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெருங்கவிஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார். பல்லாண்டுகளாக மிகவும் தீவிரமான தளத்தில் இயங்கிய கிருபாவின் மரணம் மிகவும் துயரம் தருவதாக அமைந்துவிட்டது. உடல் உபாதைகளும், தேடிக்கொண்ட விட்டொழிக்க முடியாத போதையும் அவரை வாழ்வதற்கு வேறு நோக்கங்களே இல்லாத துயரமான தனிமைக்குள் தள்ளிவிட்டது.


மிகக் காத்திரமான கவிதைகளையும் யாராலும் பிரதியெடுக்க முடியாத 'கன்னி'யையும் தந்தார். சிற்றிதழ்களில் தொடங்கியவர், திரைப்படங்களில் பாடல்கள் எழுத முனைப்புக் காட்டினார். எழுத்தின்மீது ஆர்வம் கொண்டவர். கவிஞனாக, இருந்ததை விற்று காசாக்கியவர் இல்லை. சில வெற்றி பெற்ற கவிஞர்களைப் போல தன்னையோ தன் படைப்புகளையோ முன்னிறுத்தாதவர். உலக சாதூர்யங்களைத் துறந்தவர். தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், நிகாகரிப்புகளால் ஆனது அவரது வாழ்க்கை. இருப்பினும் ஆழ்ந்த பிரியத்தின் சுடரை இடைவிடாமல் தன் கவிதைகளில், நாவலில் எரியச் செய்தவர் அவர். அதனால் அவர் படைப்புகளில் வன்முறையில்லை. முளைத்தெழும் குரூரம் இல்லை.

பிரான்சிஸ் கிருபா
 
பிரான்சிஸ் கிருபா


கிருபாவுக்கு சினிமாவின்மீது பெரும் விருப்பம் இருந்தது. படிப்பில் பெரிய ஆர்வமில்லாமல் பிளஸ்டூ முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்துவிட்டார். தொடக்கத்தில் சினிமாவுக்கான முயற்சிகளில் இருந்தவர், சோர்வுற்ற தருணங்களில் போதைக்கு மாறினார். மொழியில் விளையாடி நுட்பமான விவரணைகளில் மெருகூட்டியதால் சுசீந்திரன் போன்ற இயக்குநர்கள் அவரைப் பயன்படுத்த எத்தனிக்கும்போது கிருபா தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்.

கன்னி நாவலுக்குப் பிறகு அவர் சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத வாய்ப்புப்பெற்றார். அதுவும் பாதியளவில் நின்றுவிட்டது. தொடர்ந்து அவரது பிரான்சிஸ் கிருபா மொத்தக் கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தது. கவிஞர் தேவதேவனின் கவிதைகள் குறித்து மருதம் என்ற பெயரில் ஒரு தீர்க்கமான ஆவணப்படம் எடுத்தார். அதனால் அவரால் நல்ல திரைப்படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.
கடைசியாக அவர் எழுதிய 'ஏறக்குறைய இறைவன்' என்ற நாவல் இறுதி நிலையை எட்டியிருந்தது. அதேபோல் 'நட்சத்திர பிச்சைக்காரன்' என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிடத் தயார் நிலையில் இருக்கிறது.

பிரான்சிஸ் கிருபா
 
பிரான்சிஸ் கிருபா

அவரது முதல் கவிதைத் தொகுதி 'மெசியாவின் காயங்கள்'. 'வலியோடு முறியும் மின்னல்', 'நிழலன்றி ஏதுமற்றவன்', 'சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்' போன்றவையும் அவர் எழுதி வெளிவந்த தொகுப்புகள். சுந்தர ராமசாமி விருது, மீரா விருது, சுஜாதா விருது, விகடன் விருது போன்ற அங்கீகாரங்களை படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.

இறுதியில் நோயின்பிடியில் சிக்கி பொறுக்க முடியாமல் நொறுங்கினார். அவரது படைப்புகள் மல்லிகைக் கிழமைகள் என்ற பெயரில் தொடராக வெளிவந்திருக்கின்றன. மலர் மாலைகளும் அழுகைக்குரல்களும் ஆறுதல் அஞ்சலியும் கூடி இன்று அவரது உடலடக்கம் சொந்த ஊரான பத்தினிப்பாறையில் நடைபெறுகிறது.

தமிழ் வாசகர்களுக்கு இது துயரத்தின் பருவமோ, பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார்! | demise of francis kiruba - Vikatan

Link to comment
Share on other sites

ஒரு நாள் முடிய
இன்னும் ஒரே ஒரு வினாடியே மீதமிருக்கிறது
ஒரு இரவு விடிய
சேவலின் ஒரே ஒரு கூவல் மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு கனவு கலைய
இன்னும் ஒரே ஒரு பார்வை மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு உறவு முறிய
இன்னும் ஒரே ஒரு சொல் மாத்திரமே மீதமிருக்கிறது
மண்டியிட்டால் மன்றாடினால்
உன் கடிகாரப் பைக்குள் கை நுழைத்து
அள்ளி எறியக்கூடும்
சில சில்லறை வினாடிகளை...
வேண்டாம்
ஒரு வாழ்வு முடிய
இன்னும் ஒரு உயிர் மீதமிருக்கிறது.
 
©️ ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா 🌺
 
----------
 
விருந்துக்கு வந்தவனை கூலிக்கு பேசி வேலைக்கு அமர்த்தும் இந்த வாழ்க்கையோடு இன்னும் விவாதித்து விசனப்பட்டுக் கொண்டிராமல் ஒரு பூஞ்செடியை நட்டு அதன் வேர்களில் என்னுயிரூற்றை பின்னிவிட்டு போகவே விரும்புகிறேன் என்னைவிட்டு.
- பிரான்சிஸ் கிருபா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தினமும் ஒரு இரங்கல்களை எழுதிக் கொண்டு இருக்கிறோம்! ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி” நாவலைப் படிக்க ஆரம்பித்து இன்னும் முடிக்கவில்லை. கவிஞர் என்பதால் கவிதையாகவே நாவல் தெரிகின்றது!

“வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”

______________

மழை பெய்து கொண்டேயிருந்தது. கரையில் விரியும் கடலலைகள் மேல் மழைத்துளிகள் அதே தீவிரத்துடன் பாய்ந்தன. ஆண் கடலிலும் பெண்கடலிலும் அதே மழை. கனவும் நிஜமும் ஒரே திசையில் எதிரும் புதிருமாக வந்துகொண்டிருந்தன. நெடும் மௌனமும் குகையின் அமைதியும் மென் திகிலூட்டியது. அதிலிருந்து விடுபட வேண்டுமென்றே பேசத் தொடங்கினான். “வார்த்தைப் பாடு எடுத்ததுமே தலைமுடியை வெட்டிருவாங்களாக்கா?” அவன் கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவள் கூந்தலில் சூடிய தாழம்பூ லேசாக வாடியிருந்தது. அனிச்சையாக இடது கையால் அதைத் தொட்டுப் பார்த்தாள். சிறு புன்னகையோடு கண்கள் ஒளிர்ந்து தணிந்தது. ஆறுதலூட்டும் தொனியில் “அதெல்லாம் பதினைஞ்சு இருபது வருஷத்துக்கு முன்னாடி. இப்பலாம் முடிவெட்டுறது அங்கி போடுறதெல்லாம் கிடையாது. நெனச்சா சேலை கட்டிக்கலாம். வட்டக் கொண்டை போட்டுக்கலாம்.”

வெளியே மழை வலுத்தது. நீர்ச்சரங்கள் பாய்ந்திறங்கி வெண் திரையாயின. அப்பால் கடல் தென்படவில்லை. மழையிரைச்சலில் அவள் குரல் மெதுவாகக் கேட்டது. “பிரான்ஸிஸ் சேவியர் வாழ்ந்த குகையில நிக்கிறோம். அவர் என்ன நெனப்பாரு!” வலிந்து சிரிக்க முயன்று பாண்டியின் முகத் தீவிரத்தைக் கண்டு இயல்பானாள்.

காற்று உரத்து அடிக்கும்போது சாரல் குகைக்குள் வீசியது. ஈரம் படாமல் விலகி சுவர் அருகே நகர்ந்தான். மழைக்குளிரில் குகையில் இளம் இருட்டு வியாபித்திருந்தது. அந்த மௌனம் தாங்கமுடியாததாக இருந்தது.

_______________

சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி இது.

_______________

இரண்டே இரண்டு விழிகளால் அழுது எப்படி இந்தக் கடலை கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்!

என் கனவும் கற்பனைகளும் என் இதயமும் குருதியும் கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது எப்படி நான் அழாமலிருக்க முடியும்! கண்ணீரின் ஒரு துளியை அவித்த முட்டையைப்போல் இரண்டு துண்டாக அறுத்துவிட முடியவில்லை. அன்பும் இங்குதான் தொலைகிறதோ என்னவோ. நண்பர்களே தோழிகளே துரோகிகளே, ஆறுதலுக்கு பதில் ஓர் ஆயுதம் தாருங்கள்.

கடலைக் கப்பலின் சாலையென்று கற்பித்தவனைக் கொன்று விட்டுப் போகிறேன்.

________________

கூன் குருடு நொண்டி முடமென இற்றுச் சருகான பெரும் மனிதத் திரள், நெடியதொரு கேலி தொனித்த கூட்டுச்சிரிப்பில் புகைந்து கலகலத்து கலைந்து மறைய, பதுமபீடிகை ஆங்கொரு ஆழி சூழ்ந்த தீவாயிற்று.

அதன் நடுவே துலக்கமான செம்பவளப் பாறைப் பீடத்தில் துக்கமே உருவாக திடமிழந்த கதியில் உடல் நடுக்கத்தை அடக்க முனைந்தவளாக இளநங்கை ஒருத்தி அமர்ந்திருந்தாள். வளைகளற்ற அவள் கைகளில் ஒரு பாத்திரமிருந்தது. பிச்சைப் பாத்திரம் போலிருந்தது. வயிற்றோடு அதை அணைத்துப் பிடித்திருந்தாள். நாட்டையும் கோட்டையையும் முப்படைகளோடு மக்களையும் தானமிட்டுவிட்டு பிரதிப்பயனாக இச்சிறிய பிச்சைப் பாத்திரத்தை பெற்று வந்த இளவரசியாகக் காட்சியளித்தாள். புலன்கள் ஐந்தும் உணர்ந்தறிய எத்தனையுண்டோ, அத்தனையும் பொருந்தியவளாக இருந்தாள். துயரத்தில் பூத்த தூயமலரென்று மனம் நினைக்கத் தகைந்தது.

“பவளச் செவ்வாய் தவளவாள் நகையும் அஞ்சனஞ்சேராச் செங்கயல் நெடுங்கணும், முரிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும், குவிமுட் கருவியும், கோணமும், கூர்நுனைக் கவைமுட் கருவியும்…” பாடல் ஒலிநிழலாய் ஒளித்து மறைந்தது. எவ்வளவுதான் கூர்ந்து பார்த்து குறிப்புகள் தேடியும் அவளை அடையாளம் கண்டுகொள்ள வழியின்றித் தவித்தபோது காதருகே கிழட்டுப் பெண்குரல் சிரித்தது. பாண்டி எங்கே நின்றுகொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியவில்லை.

“இவளை யாரென்று தெரியவில்லையா? நன்றாகப் பார். முடியவில்லையா? இப்போது ஞாபகம் வருகிறதா? வரவில்லையா… இவள்தான் மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி, மாயக்கள்ளி…”

வானத்தில் ஏழுவகை மேகங்கள் ஒரே நேரத்தில் சுற்றிச் சூழ்ந்து நேருக்கு நேர் மோதி பெரும் முழக்கம் உண்டானது. மின்னல் கொடிகள் கொதிநிலையில் நெளிந்து மறைந்தன. ஒளியும் இருளும் விரிந்தும் சுருங்கியும் பிரிவதும் சேர்வதுமாக காட்சியை மாறிமாறிக் கிழிப்பதும் தைப்பதுமாக… எல்லாம் சீர்கெட்டுவிட்டிருந்தன. மழைத்துளிகளின் முதல் வரிசை விழத் தயாராகி உச்சியில் துடித்தது. ஆழியில் புயல் வளிமுற்றி பேயாட்டம் போடத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாக காகங்கள் பறந்து வந்து அவளைச் சூழ்ந்து நின்றன. அவள் முகத்தில் அச்சமயம் தன் சுய துக்கங்களிலிருந்து மீளும் தெளிவு தென்பட்டது.

தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து அன்ன உருண்டைகளை உருட்டியெடுத்து விசிறி காகக்கூட்டத்தை பசியாறச் செய்தாள். அவளைச் சுற்றி கருப்புக் கம்பளம் விரித்தாற்போல சூழ்ந்து பரவியிருந்த ஆயிரக்கணக்கான காகங்களில் ஒன்றுகூட கரைந்து குரல் எழுப்பவில்லை. காகங்கள் நீங்கிச் சென்றபின் சிதறிய சோற்றுப்பருக்கைகளைத் தின்னக் கொழுத்து பன்றிக் குட்டியளவிருந்த எறும்புகள் சாரை சாரையாக வந்து பற்றியெடுத்தபடி புற்றுக்குத் திரும்பின.

“மக்தலேன்… மக்தலேன்…” என ஈனஸ்வரத்தில் விளிப்புக் குரல் கேட்டது. ஆண் குரல். அதைக் கேட்டதும் இளம்பெண் துணுக்குற்றாள். விலகிப் போயிருந்த வாட்டம் இரட்டிப்பாக இப்போது அவள் முகத்தில் குடிகொண்டது. அவள் எழுந்து சிறு தொலைவு நடந்து குரல் வந்த மரத்தடியை அடைந்தாள். அங்கே, அவன் நீள் முகமும் தாடியும் பச்சைக்கண்களுமாக மரத்தில் சாய்ந்து பாதி செருகிய விழிகளுடன் காயங்களில் குருதி கொப்பளிக்க உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவன் வாய் நுரைத்து ரத்தம் பொங்கி வழிந்தது.

“என்னோடு வா என்னோடு வா” என்று அவளை நாக் குழற அழைத்தான். மூடித்திறந்த அவன் கண்களில் வாழ்வும் சாவும் ஒன்றன்பின் ஒன்று நின்று உற்று உற்று அவளைப் பார்த்தன. துயருற்ற இளம் பெண் தன் ஆடை நுனியால் அவன் வாயை முகத்தை மார்பைத் துடைத்து நேர்த்தி செய்து தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவன் வாயில் புகட்டினாள். அப்போது அவளிடம் பொங்கிய பிரியத்தில் அவள் கையிலிருந்த அன்னமணிகள் நெற்பாலாகி அவன் நாவில் இறங்கியது.

———-

குரல் முறுகி சிரிப்பாகி அதிர்ந்தது.

சீற்றத்துடன் பாய்ந்த உரத்த காற்று செடிகொடிகளைப் பிடுங்கி எறியப் புறப்பட்டது போல் திருகிச் சுழித்தோடி பழுப்பிலைகளைப் பிய்த்தெறிந்தது. பழஞ்சருகுகளை வாரியிறைத்தது. மேகங்கள் மோதுவதும் முழங்குவதும் தொடர்ந்தது. மழைத்துளிகள் பாறையில் தெறித்துச் சிதறின.

உவவனத்துள்ளிருந்து குதிரைகள் வெளிப்பட்டன. குதிரைகளின் மேல் வேடர்கள் அமர்ந்திருந்தனர்.

உடல் வலிமையும் இளமையும் கூடி வார்த்தாற் போலிருந்த இளைஞன் வெள்ளைக் குதிரையில் முன்னால் வர பின்தொடர்ந்த குதிரைகளின் மேலிருந்தவர்கள் மாயமாகி மறைந்து போயினர். குதிரைகள் நிதானமாக நடந்தபோதும் தலைகள் மேலும் கீழும் பலமாக ஆடின.

முகத்தில் வந்து மோதிய சருகுகளைத் தடுத்தாண்ட இடது கையை இறக்கியபோது வெள்ளைக் குதிரையிலிருந்த இளைஞனின் முழுகம்பீரமும் பளிச்சிட்டது. கூர்நாசியும் மீசையும் பரந்த நெற்றியும் செதுக்கிய முகமும், செருக்கும், பிடரி வரை வளர்ந்து படிந்து கிடக்கும் சிகையுமாக வந்தான்.

குதிரைகள் செம்பவளப் பாறையருகே வந்தபோது, இருள் மண்டிய முகத்துடன் இளம்பெண் எதிர்ப்பட்டாள். அவளைக் கண்ட இளைஞனின் கண்கள் சட்டென ஒளிர முகம் மலர்ந்தான். வெள்ளைக் குதிரை மீது அவனைக் கண்ட இளம்பெண் சில கணங்கள் திகைத்து… நிலை கலையாமல் சிலைத்து நின்றாள். குதிரையிலிருந்து ஒரு துள்ளலோடு குதித்து இறங்கிய இளைஞன் அவளெதிரே மிக அருகே வந்து இரண்டு கைகளையும் அகல விரித்தான்.

“உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்தென் நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி… வா.”

அவள் கண்கள் அவன் கண்களை ஊடுருவிப் பார்த்து தேனுண்ணும் தும்பியாகப் படபடத்து அவன் முகமெங்கும் அலைந்தது.

‘உவவன மருங்கில் உன்பால் உள்ளம் தவிர்விலேன்.’

விரித்த கைகள் விரித்தபடியிருக்க, அவள் அவன் மீது பாய்ந்து மார்பில் புதைந்துகொண்டாள். வலுவான கரங்கள் அவளை இறுகத் தழுவின. மற்ற குதிரைகள் திசைக்கொன்றாக நாற்புறமும் நழுவி மறைந்தன.

மின்னல்கள் பதறி மின்னி மறைந்தன. ஒளி துடிதுடித்தது. அணைத்துக் கொள்ளத் தாவியபோது விடுபட்ட அமுதசுரபி கீழே விழுந்து உருண்டோடி பாறை பக்கத்தில் கிடந்தது. கைவிடப்பட்ட தகரக்குவளை போல.

இளைஞனும் யுவதியும் தழுவித் திளைத்து மேலும் நெகிழ்ந்த போது தலையை நிமிர்த்திப் பார்த்த அவள் அவனுக்குப் பின்னால் கண்ட காட்சி பதற வைத்தது. வெள்ளைக் குதிரையின் முதுகில் ஒரு கொழுத்த கழுகு அமர்ந்திருந்தது. அதன் வாயிலிருந்து மனிதக் கண்ணொன்று அவளை வெறித்துப் பார்த்தது. ‘ஐயோ’ என அவள் கதறவும் கண்ணை கழுகு விழுங்கிவிட்டது. இளைஞனிடமிருந்து திமிறித் தன்னை விடுவித்தவள் மரத்தடிக்கு ஓடினாள். மரத்தடியில் கழுகுகள் கூடி நின்றன. அவளைக் கண்டதும் சற்று தொலைவு ஓடி பின் எழுந்து மறைந்தன.

ஐந்து வயது பெறுமான சிறுவனுக்குரிய சின்ன மண்டை ஓடும் எலும்புக்கூடும் பச்சை ரத்தக் கறையுடன் மரத்தடியில் கிடந்தது. பதைப்புற்றவள் பாறையருகே ஓடி வந்தாள். இளைஞனைக் காணவில்லை. வெருண்ட கண்ணுடன் நின்றிருந்த வெள்ளைக் குதிரையின் உடலெங்கும் ரத்தத்துளிகள் தெறித்துக் கோடாக வடிந்து நின்றன. பாறையின் மறுபுறத்தில் இளைஞனின் உடல் கிடந்தது. பாத்திரத்தின் அருகே துணித்த தலை ஒருக்களித்துக் கிடந்தது. “போதி மாதவா…” என்று அலறியவாறு தலையை இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு அண்ணாந்தாள்.

அங்கே சிவந்த கண்களும் உருவிய பட்டயமுமாக ஆர்ச் ஏஞ்சல் கப்ரியேல் அந்தரத்தில்  நின்றிருந்தான். கூடவே நீளும் குந்தம் ஏந்திய மிக்கேல். இளம்பெண்ணைப் பார்த்து “ம்… புறப்படு என்னோடு” என்று அதட்டலாகக் கட்ளையிட்டான். அவள் கண்கள் மயங்கின. உடல் குழைந்தது. தரையில் விழுந்தாள். பாறையில் மோதவிருந்த அவள் தலையை தடுத்துக் காக்கப் பதைத்துப் பாய்ந்த பாண்டி கட்டிலிலிருந்து சிமிந்து தரையில் விழுந்தான்.

___________

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்

ஜெயமோகன்

September 18, 2021

f1.jpg

பிரான்ஸிஸ் கிருபா மறைந்த செய்தி 16 மாலை வந்துசேர்ந்தது. உண்மையில் அது எதிர்பாராத ஒன்று அல்ல. அவருடைய உடல்நிலை சீர்கெட்ட நிலையிலேயே சில ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது. வலிப்பு அவ்வப்போது வந்துசென்று கொண்டிருந்தது. அவருடைய உடல் விடியற்காலையில் அவருடைய சொந்த ஊரான பத்தினிப்பாறைக்கு கொண்டுவரப்படும் என்று கவிஞர் நரன் சொன்னார்.

நேரில் செல்லவேண்டும் என முடிவுசெய்தேன். எப்போதும் அந்த முடிவையே உடனே எடுப்பேன். ஏனென்றால் இலக்கியவாதி மறைந்தால் சொல்லஞ்சலிகள் நிறைய வரும். நேரில் மிகக்குறைவான கூட்டமே வரும். ’ஊரில் இருந்தீர்களே, ஏன் செல்லவில்லை?’ என்று கேட்டால் பெரும்பாலானவர்களுக்கு அந்த எண்ணமே வந்திருக்காது என்பதை காணமுடியும். சிலர் சில்லறை காரணங்களால் கடைசியில் தயங்கிவிடுவார்கள். “அங்க நான் போய் எதுக்கு?” என்று சொல்பவர்கள் உண்டு. இதனால்தான் எழுத்தாளர்களின் இறுதிநிகழ்வுகள் பெரும்பாலும் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டதுபோலத் தோன்றுகின்றன.

f.jpg

இலக்கியவாதிகளின் இறுதிநாளை கௌரவிக்க ஆள்திரட்டிவர அமைப்புகள் இருப்பதில்லை. குழுவாக எவரும் கிளம்பி வருவதுமில்லை. பிறதுறைகளின் ஆளுமைகள் மேல் அவர்களின் ரசிகர்களுக்கு இருப்பதுபோன்ற பற்று பெரும்பாலும் இலக்கிய வாசகர்களிடம் இருப்பதில்லை. இசை, கலைத்துறை ஆளுமைகள் மேல் பற்று கொண்டவர்கள் தங்கள் ஆணவத்தை முன்வைக்காதவர்கள். அர்ப்பணிப்பு கொண்டவர்கள். இலக்கியவாசகர்களுக்கு உண்மையில் தாங்கள்தான் முக்கியம், இலக்கியவாதி இரண்டாம்பட்சம்தான். இலக்கியமே கூட அவர்களுக்கு அவ்வளவு முக்கியமல்ல. அரிதான விதிவிலக்குகள் சிலரே.

பெரும்பற்று கொண்டவர்களே இலக்கியத்திலும் உண்மையில் சாதனையாளர்களாகிறார்கள். வாசகர்கள் என்னும் நிலையில் இலக்கியத்தை ஆழமாக பெற்றுக்கொள்பவர்கள் பற்று கொண்டவர்களே. பிரான்ஸிஸ் கூட அத்தகையவர்தான். அவரை நான் எங்கெல்லாம் பார்த்திருக்கிறேன் என எண்ணும்போது பல இறுதிநாட்களும் அஞ்சலிகளும் நினைவுக்கு வருகின்றன. பாலகுமாரன் மறைந்தபோது எங்கிருந்தோ நெடுந்தூரம் நடந்து வந்தவர் போல வியர்த்து களைத்து ஓரமாக நின்றிருந்தார். நான் அவர் தோளை மட்டும் தட்டிவிட்டு வெளியே நடந்தேன்.

ஜெயகாந்தன் பொதுவான சமூக ஆளுமை. ஓர் இலக்கிய ஆளுமைக்கு தானாகவே இறுதிநாள் அஞ்சலிக்கு இலக்கியவாசகர்கள் பெருமளவுக்குத் திரண்டது என்றால் கடைசியாக சுந்தர ராமசாமிக்குத்தான். எவ்வகையிலோ இலக்கிய வாசகனின் ஆணவத்தை கடந்து எழுந்து நிற்பதாக அவருடைய ஆளுமை இருந்தது. வேறெந்த எழுத்தாளருக்கும் பெருமளவில் வாசகர்கள் இறுதிநாள் செலவுக்கு திரண்டதில்லை. எனக்கு எப்போதும் உருவாகும் அச்சம் என்பது படைப்பாளியின் இறுதிநாள் நிகழ்வுக்கு இலக்கிய வாசகர்கள் என ஒருவர்கூட வரவில்லை என்னும் நிலை அமைந்துவிடக் கூடாது என்பதுதான். ஆகவே தொலைபேசியில் அழைத்து அருகிலிருப்பவர்களிடமெல்லாம் செல்லும்படி மன்றாடுவதுண்டு. கூடுமானவரை நான் சென்றுவிடுவேன்.

வாசகர்களிடம் சொல்ல விரும்புவது இதுதான், ஒரு படைப்பாளியின் இறுதிநாளுக்குச் செல்வதென்பது வாசகனின் கடமைகளில் ஒன்று. ஒருவேளை அவன் அவருக்குத் திருப்பிச் செய்யக்கூடுவதும் அது ஒன்றுதான். படைப்பாளியை ஊராரும் வீட்டாரும் கொண்டாடாமல் போகக்கூடும். வாசகனும் அவனை புறக்கணித்தான் என்றால் அது அப்பண்பாட்டுக்குப் பெரும்பழி. அது ஒருபோதும் நிகழலாகாது. சென்னையில் ஞானக்கூத்தன் மறைந்தபோது நான் ஒவ்வொருவராகக் கூப்பிட்டுச் சொல்லியும்கூட என் சென்னை நண்பர்களில் பலர் செல்லவில்லை. அவர்கள்மேல் அந்த மனத்தாங்கல் இன்றும்கூட எனக்கு தீரவே இல்லை.

f5.jpg

பிரான்ஸிஸ் கிருபாவின் இறுதிநாள் அஞ்சலிக்கு நல்லவேளையாக சென்னையில் இருந்து சாம்ராஜ் போன்று பிரான்ஸிஸின் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். நெல்லையிலும் நாகர்கோயிலிலும் பிரான்ஸிஸை அறிந்த இலக்கிய நண்பர்கள்  பத்துப்பதினைந்துபேர் இருந்தனர். மற்றபடி அரசியல்சார்ந்த இலக்கிய அமைப்புகளோ, அவற்றின் உறுப்பினர்களோ கண்ணில் படவில்லை. வாசகர்கள் என்றும் எவருமில்லை. ஆனால் இந்தச் சிறுதிரளே நிறைவளித்தது.

நான் காலையில் தொலைபேசியில் அழைத்து நான் இறுதிநாள் நிகழ்வுக்குச் செல்வதாகவும், வரவிரும்புவோரைச் சேர்த்துகொள்வதாகவும் நண்பர்களிடம் சொன்னேன். நட்புக் குழுமங்களிலும் தெரிவித்திருந்தேன். ஆனந்த்குமார் திருவனந்தபுரத்தில் இருந்தார். சுஷீல்குமாருக்கு காய்ச்சல். லக்ஷ்மி மணிவண்ணனின் மாமியார் ஆஸ்பத்திரியில் இருந்தார். போகன் மட்டும் வருவதாகச் சொன்னார்

கிளம்பும்போது மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு லக்ஷ்மி மணிவண்ணன் வந்துவிட்டார். லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தவர். அவர்களுக்கிடையே இருந்த நட்பு இனிமையும் சித்திரவதைகளும் நிறைந்த ஒன்று. லக்ஷ்மி மணிவண்ணன் பிரான்ஸிஸ் கிருபாவை கூடுமானவரை தாங்கிக் கொண்டவர்களில் ஒருவர்.

மதியம் கிளம்பி வள்ளியூர் சென்றபோது சிறில் அலெக்ஸ் அழைத்தார். அவர் வடக்கன்குளத்தில் அவருடைய அன்னையைப் பார்க்க வந்திருந்தார். அவரும் வருவதாகவும், பேருந்தில் வரும் ஜெயராம், அருள் இருவரையும் சேர்த்துக்கொள்ள காத்திருப்பதாகவும் சொன்னார். வள்ளியூரில் அவர்களை இணைத்துக்கொண்டு பத்தினிப்பாறைக்குச் சென்றோம்.

f7.jpg

பிரான்ஸிஸ் கொண்டு வரப்பட்டிருந்தார். வாங்கிக்கொண்டு சென்ற மலர்வளையத்தையும் மலர்மாலையையும் அவருக்கு வைத்து அஞ்சலி செலுத்தினோம். அவருடைய நண்பர்களான கவிஞர்கள் ஒவ்வொருவராக வந்து அவர் அருகே நின்று அவர் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின் உடல் மாதாகோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பத்தினிப்பாறை சின்னஞ்சிறு ஊர். எழுபது வீடுகள்தான். ஏரிப்பாசனம் இருந்தாலும் ஒரு பாலைவனத்தன்மை தோன்றிய நிலம். 1930ல் கோஸ்தா குடும்பம் என்னும் நிலவுடைமையாளர்களால் கட்டப்பட்ட சிறிய மாதாகோயில் பழைய பாணியில் அமைந்தது. சுதையாலான வளைவுகளுக்குமேல் ஓட்டுக்கூரை. வட்டமான ஓளிச்சாளரங்கள்.

ஐம்பதுபேர் அமரக்கூடிய அளவுள்ளது அக்கோயில்.புனித ஜார்ஜியார் ஆலயம் என நினைக்கிறேன். பெஞ்சுகள் இல்லை, தரையில் அமரவேண்டும். அழகிய ஆல்டர். பிரான்ஸிஸின் உடல் அங்கே வைக்கப்பட்டது. அங்கே அரங்கு நிறைய அமர்ந்து கொண்டோம். அங்கும் கவிஞர்கள் பிரான்ஸிஸின் கவிதைகளை வாசித்து அஞ்சலி செலுத்தினர். ஒருவேளை பிரான்ஸிஸின் கவிதைகள் அவர் மண்ணில் ஒலிப்பது அதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.

f2.jpg

நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் ஓரிரு சொற்கள் சொல்லவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டோம். நான் “பிரான்ஸிஸ் துன்பப்பட்ட ஆத்மா. துன்பப்படுபவர்கள் கிறிஸ்துவுக்கு அணுக்கமானவர்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. பிரான்ஸிஸ் இன்னும் கிறிஸ்துவுக்கு அணுக்கமாகிவிட்டிருக்கிறார். அவருக்கு அஞ்சலி” என்று நான்கு சொற்றொடர்கள் சொன்னேன். லக்ஷ்மி மணிவண்ணனும் சில சொற்கள் சொன்னார். சிறில் அலெக்ஸ் பைபிளில் இருந்து சில வசனங்களை வாசித்தார்.

பாதிரியார் பிரார்த்தனையையும் ஜெபத்தையும் நிகழ்த்தினார். தரையில் அமர்ந்து அந்த சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். வழக்கமாக அனல்கொளுத்தும் நிலம். அன்று மழைத்துளிகளுடன் குளிர்காற்று எல்லா ஜன்னல்கள் வழியாகவும் பீரிட்டுக்கொண்டிருந்தது. வானம் இருண்டு முகில்படர்ந்திருந்தது. அந்தவேளையில் அச்சொற்கள் ஒரு நிறைவை அளித்தன. நிறைவுதான், வழக்கமாக இறப்புகளில் மெல்ல மெல்ல துயர் விலகும்போது அந்நிறைவு வரும். பிரான்ஸிஸ் ஏற்கனவே எல்லா துயரையும் பிறருக்கு அளித்துவிட்டவர்.

எல்லா மதங்களிலும் சாவுச்சடங்குகளின் சொற்றொடர்கள் ஏறத்தாழ ஒன்றே. சாவு என்பது அழிவு அல்ல, அது அழிவற்ற ஒன்றுடன் இணைதல். அழிவின்மை கொள்ளுதல். சாவு என்பது முறிந்துபோதல் அல்ல, அது ஒரு முழுமை. திரும்பத் திரும்ப மானுடம் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. சாவு என்பது என்ன என அறியவே முடியாது. இந்த சொற்கள் அந்த அறியமுடியாமைமேல் நாம் அமைத்துக்கொள்பவை. அவற்றின் அர்த்தம் நாம் இங்கு வாழ்ந்து திரட்டிக்கொள்வது.

f3.jpg

கிறிஸ்தவ இடுகாடு சற்று தொலைவில் இருந்தது. அறுவடை முடிந்த வயல்கள் வழியாக நடக்கவேண்டும். மழை பெய்யுமென தோன்றியதென்றாலும் அந்நிலத்தில் மழை அவ்வாறு எளிதில் பெய்துவிடுவதில்லை. முள்மண்டிய இடுகாட்டில் இந்த ஓராண்டுக்குள் புதைக்கப்பட்டு, இன்னும் கல்லறை எழுப்பப்படாத பல புதைமேடுகள் தென்பட்டன.

பிரான்ஸிஸுக்காக தோண்டப்பட்ட குழி அவ்வளவு ஆழமில்லை. செம்மண் பாறைபோல இறுகிய தரை. குழியெடுப்பது எளிதல்ல என்று தோன்றுகிறது. பாதிரியார் ஜெபித்தபின் பிரான்ஸிஸின் பெட்டி கயிறுகளில் பெட்டி கட்டப்பட்டு மண்ணுக்குள் இறக்கப்பட்டது. மூன்றுமுறை மண் அள்ளிப்போட்டு விடைகொடுத்தேன்.

இந்த நிகழ்வின் நிறைவுக்குக் காரணம் பாதிரியார் ஜோ. இலக்கியம் அறிந்தவர். தன் உரையிலேயே புதுமைப்பித்தனைக் குறிப்பிட்டார். நெல்லையில் வழக்கறிஞர் வேலைபார்ப்பவர் இங்கே பாதிரியார் இல்லாததனால் பகுதிநேரப்பணியாக வந்திருந்தார். ஆழ்ந்த குரலில் பாடி பிரார்த்தனை செய்தார். அவருக்கு எங்கள் வணக்கங்களையும் மரியாதையையும் தெரிவித்துவிட்டு திரும்பி நடந்தோம்.

கிறிஸ்டியேன் என்னும் நண்பர் கூட நடந்தபடி பேசிக்கொண்டு வந்தார். பிரான்சிஸ் ஒரு கவிஞர் என அந்தச் சிற்றூரில் அறிந்தவர் அவரே. பிரான்ஸிஸ் விருதுபெற்ற போது அந்த விழாநிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறார். அந்த ஊரே மணப்பாடு ஊரைச்சேர்ந்த மீனவர் குடியினரான நிலச்சுவான்தார்களான கோஸ்தா குடும்பத்துக்கு சொந்தமானது. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர். ஊரில அனைவரும் அவர்களின் வேலைக்காரர்கள் என்றார்.

f6.jpg

சுதந்திரத்துக்குப்பின்  நிலச்சீர்திருத்தத்தின்போது அக்குடும்பத்தின் நிலம் கைப்பற்றப்பட்டு உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கோஸ்தா குடும்பம் நீதிமன்றம் சென்றது. வழக்கு நடக்கும்போதே நிலத்தை விற்றுவிட்டு ஊரைவிட்டுச் சென்றுவிட்டது. இன்று நிலத்தின் பட்டா நிலத்தை வாங்கியவரிடமும் நிலஉரிமை ஊராரிடமும் உள்ளது. ஆகவே இடுகாட்டுக்கு வழியை அடைய முடியவில்லை. பிரான்ஸிஸ் கூட சில சாவுகளின்போது அதைப்பற்றி பேசியிருக்கிறார் என்றார்.

ஊர் நடுவே கோஸ்தா குடும்பத்தின் நூறாண்டுப் பழமையான மாளிகை உள்ளது. அது கைமாறி இன்று ஒரு பண்ணை விடுதியாக இருக்கிறது. பெரிய சுற்றுவேலியுடன், காவலுடன் வேறொரு உலகமாக ஊர் நடுவே நின்றிருக்கிறது. அதற்குள் சென்று பார்த்ததே இல்லை என்றார் கிறிஸ்தியோன். பிரான்ஸிஸும் அதைப் பார்த்ததில்லை. அவர்கள் அணுகமுடியாத ஒரு மிதக்கும் கலம் போல அது.

அந்தி சாயத் தொடங்கியபோது விடைபெற்று திரும்பி வந்தோம். ஒரு கவிஞனின் இறுதிநாள். அவனுடைய எளிய ஊர். அவன் உறவினர்கள் முன் ஒலித்த அவர்கள் அறிந்தே இராத அவனுடைய கவிதையின் சொற்கள். அந்த மாதாகோயிலில் அவனுக்காக ஒலித்த புனித வேதாகமத்தின் அழிவற்ற சொற்கள்.

[புகைப்படங்கள் இணையத்திலிருந்து]

 

https://www.jeyamohan.in/156718/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்........!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.