Jump to content

கல்வியில் வீழ்ச்சியுறும் வடக்கு, கிழக்கு: பரிகாரம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியில் வீழ்ச்சியுறும் வடக்கு, கிழக்கு: பரிகாரம் என்ன?

வ. திவாகரன்

ஒரு சமூகத்தின் இருப்பு, அபிவிருத்தி ஆகிய இரண்டுக்கும் மிகவும் முக்கியமானது கல்வி ஆகும். இழந்தவற்றை வென்றெடுப்பதற்கும், போட்டி இட்டு முன்னேறுவதற்குமான ஊடகம் கல்வியே! 

இலங்கையில் அமல்படுத்தப்பட்டு வரும் இலவசக்கல்வியால் அனைத்துத் தரப்பினரும் கற்க கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இவ்வாறான இலவசக் கல்விமுறைமையின் கீழ், மாணவர்களுக்கு தேசிய ரீதியில் பொதுப்பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, உயர் தரப் பரீட்சை போன்றவை  முக்கியமான பரீட்சைகளாகும். இவற்றுள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொடுப்பனவு மற்றும்  தேசிய பாடசாலைகளில் கற்பதற்கான அனுமதிக்காக உதவுகின்றது. சாதாரண தரப் பரீட்சை உயர்தரம் கற்பதற்கான பரீட்சையாகவும் உயர்தரப் பரீட்சை பல்கலைக்கழக தெரிவுக்கான பரீட்சையாகவும் அமைந்திருக்கின்றன. 

இப்பரீட்சைகளில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. இப்பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வினையும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டிருந்தது. அத்தரவுகளின் அடிப்படையில், சாதாரண தரம் சித்தியடைந்து, உயர்தரம் கற்பதற்கு சித்தியடைந்தவர்கள் என்ற தரப்படுத்தலில்,  ஒன்பது மாகாணங்கள் உள்ள இலங்கைத்தீவில், தமிழ் பேசுகின்றவர்கள் செறிந்து வாழ்கின்ற  கிழக்கு, வடக்கு மாகாணங்கள் முறையே எட்டாம், ஒன்பதாம் இடங்களைப் பெற்றுள்ளன. இந்நிலை மிகவும் கவலைக்குரியதே.

2014ஆம் ஆண்டில் இருந்து, 2020ஆம் ஆண்டு வரையான பெறுபேற்று பகுப்பாய்வை அவதானிக்கின்ற போது, தொடர்ச்சியாக வடக்கு மாகாணம் ஒன்பதாவது மாகாணமாக உள்ளதுடன், 2018ஆம் ஆண்டு மாத்திரம் 69.99 சதவீதத்தினைப்பெற்று எட்டாவது இடத்திலும், கிழக்கு மாகாணம் 69.97வீதத்தைப் பெற்று ஒன்பதாவது இடத்தையும் வகித்துள்ளது. 

அவ்வாறெனின் 2014ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை வடக்கு மாகாணம் இறுதி மாகாணமாகவே உள்ளமை மிகவும் வேதனையான விடயமாகும். அதேபோன்று 2014ஆம் ஆண்டு தொடக்கம், 2020ஆம் ஆண்டு வரையான பகுப்பாய்வின் அடிப்படையில், கிழக்குமாகாணம் 2014இல் ஐந்தாம் இடத்தையும், 2019 இல் ஏழாவது இடத்தையும் 2018இல் ஒன்பதாவது இடத்திலும் ஏனைய ஆண்டுகளில் எட்டாவது இடத்தையும் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. கடந்த ஏழு வருட பகுப்பாய்வின் மூலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இறுதிநிலையில் இருக்கின்றமையை விளங்கிக்கொள்ள முடிகின்றது.

2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் நான்காம் இடத்தையும் 2011ஆம் ஆண்டு ஆறாம் இடத்தையும் பின்வந்த 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் இடத்தையும் வகித்த கிழக்கு மாகாணம், 2015இல் இருந்து எட்டாம் இடத்துக்குச் சென்றமையை பெரியளவிலான வீழ்ச்சியாகவே பார்க்க முடிகின்றது.

கடந்த மூன்று தசாப்த யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்கள், பின்நிலையை தழுவுகின்றமைக்கு பல்வேறு காரணங்களும் உள்ளன. 

பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் இம்மாகாணங்களில் வாழ்கின்றனர்.  இதனால் பிள்ளைகள் தொடர்ச்சியான கற்றலில் ஈடுபடுவதும் சவாலாகவே உள்ளது. மாணவர்களின் வரவு வீதக்குறைபாடும் பரீட்சைப் பெறுபேற்றில் வீழ்ச்சியை கொண்டுவருகின்றது. 

சமூகத்தில் இடம்பெறுகின்ற சீர்கேடுகளும் சட்டவிரோத செயற்பாடுகளும் ஒழுக்கமின்றிய செயற்பாடுகளும் பெறுபேற்றில் குறைவை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இவற்றிற்கு தந்தையர்கள், சகோதரர்கள் அடிமையாதல்; இதனால் வீடுகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளும் மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இதேவேளை, அரசினால் வழங்கப்படுகின்ற புத்தகங்களை கற்காது, வெறுமனே ஆசிரியர்கள் வழங்குகின்ற வினா விடைகளைக் கற்றல்,  சுயமாக கற்கின்ற வீதம் குறைவடைந்து செல்லல், கற்பதற்கான சூழல் வீட்டில் இன்மை, பாடசாலைக் கற்றல், கற்பித்தலில் மாத்திரம் தங்கியிருத்தல் போன்ற பிரச்சினைகளும் மாணவர்களின் பெறுபேறு வீழ்ச்சியடைவதற்கு காரணமாகின்றதெனலாம். 

image_5d4d1ff258.jpgஅநேக பகுதிகள் கஸ்ட, அதிகஸ்ட பகுதிகளாகவே உள்ளன. இதனால் வளப்பற்றாக்குறைகளும் உள்ளன. சமூகத்தில், மாணவர்களிடத்தில் உள்ள பிரச்சினைகளால் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. இலவசக் கல்வியை முறையாக எல்லா இடங்களுக்கும் வழங்காமையும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வீழ்ச்சியடையக் காரணமாக உள்ளன. 

குறித்த இரு மாகாணங்களிலும், முக்கிய பாடங்களுக்கான வெற்றிடங்கள் இன்றும் நிலவிக்கொண்டே இருக்கின்றன. இதனால் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் கற்கமுடியாமல், அவ்வாறான பாடங்களில் சித்திபெறத் தவறுகின்றனர். 

குறிப்பாக, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்கள் முக்கிய பாடங்களாக இருக்கின்ற போதிலும், அப்பாடங்களுக்கு இன்றுவரை வெற்றிடங்கள் நிலவிக்கொண்டே இருக்கின்றன. கணிதபாடம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. உயர்தரம் கற்பதற்கு மிகவும் அவசியமாக உள்ளது. 

அவ்வாறான நிலையில், கணித பாடத்திற்கு ஆசிரியர்கள், சில பாடசாலைகளில் இல்லாமையால், பாடசாலையை மாத்திரம் நம்பியுள்ள பிள்ளைகள் மிகவும் பாதிப்படைகின்றனர். இப்பாதிப்பு மாகாண பெறுபேற்று பகுப்பாய்வில் வீழ்ச்சியை உண்டுபண்ணுகின்றது.

மேலும், பொருத்தமான இடமாற்றங்கள் நடைபெறாமையும் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. குறிப்பாக, சமமப்படுத்தல்கள் இன்றி மாகாண இடமாற்றங்கள் நடைபெறுகின்றமையால், ஒருசில வலயங்களில் இருந்து பலரும், இன்னும் சில வலயங்களில் இருந்து சிலரும் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் ஒருசில வலயங்களில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாகவும், இன்னும் சில வலயங்களில் ஆசிரியர்கள் இன்றியும் உள்ளமை மாணவர்களின் பெறுபேற்றை உயர்த்துவதற்கு சவாலாக உள்ளது. 

ஆசிரியர் இடமாற்றம், அதிகாரிகள் நியமனம் போன்றவற்றில் அரசியல் தலையீடுகளும் கல்வியின் வீழ்ச்சிக்கு காரணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பாடசாலைகளை வழிநடத்துபவர்களாக ஆசிரியர்களே உள்ளனர். அதிபர்கள் இன்மையினால் ஆசிரியர்கள் பாடசாலையை பொறுபேற்று நடத்தவேண்டிய நிலையேற்பட்டிருக்கின்றது.  நிரந்தரமில்லா பதவியில் இருத்தப்பட்டமையால் முழுமனதுடன் அப்பொறுப்பினையேற்று நடத்துவதில் குறித்த ஆசிரியர்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளமையும் பெறுபேற்று அதிகரிப்பில் தாக்கத்தினை செலுத்துகின்றது.

பாதிக்கப்பட்ட சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கான ஆயுதமாக கல்வி உள்ளமையினால் இதனை முறையாக பயன்படுத்தி உயர்நிலையை மாணவர்கள் அடைவதற்காக பல்வேறு செயற்றிட்டங்களை வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது. 

பெற்றோர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை ஒவ்வொரு கிராமங்களிலும் முன்னெடுக்க வேண்டும். தொடர்ச்சியாக மாணவர்கள் பாடசாலைக்கு அனுப்புவதை சமூகமட்டத்திலான அமைப்பினரும், அதுசார்ந்த உத்தியோகத்தர்களும் உறுதிப்படுத்த வேண்டும். 

வீடுகளில் கற்பதற்கான சூழலையும், சட்டவிரோத செயற்பாடுகள் அற்ற கிராமங்களையும் ஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தினையும் கட்டியெழுப்ப ஒவ்வொரு கிராம மட்டத்திலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். சுய கற்றலை ஊக்கப்படுத்துடன், பாடப்புத்தகங்களை வாசிக்கும் திறனை மாணவர்களிடத்தில் வளர்க்க வேண்டும். 

அரசியல் தலையீடின்றி நியமனங்கள் வழங்கப்படுவதுடன், இடமாற்றங்களும் நடந்தேற வேண்டும். பாடசாலைகளை பொறுப்பேற்று நடத்துகின்ற ஆசிரியர்களுக்கு அங்கிகாரத்தை வழங்கி, அவர்களின் மூலமாக உச்சவிளைவினை பெற்றுக்கொள்ள வேண்டும்.  

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்ச்சியாக பின்நிலை வகிப்பதனை தவிர்த்து, முன்நிலை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை, செயற்பாடுகளை அனைவரும் கூட்டாக இணைந்துசெயற்படுத்த வேண்டும்.

இதன்மூலமாக வடக்கு, கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்ப முடியும். இல்லையாயின், கல்வியில் பின்னோக்கு சமூகமாக வடக்கு, கிழக்கினை பார்க்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுவிடும்.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வியில்-வீழ்ச்சியுறும்-வடக்கு-கிழக்கு-பரிகாரம்-என்ன/91-282854

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிகாரங்களில் ஒண்டு -: பிள்ளை ஓலெவல்/ ஏலெவல் றிசல்ட்ட பாத்திட்டு புடிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவம்.. தமையன்/தமக்கை/தேப்பன்/மாமன்/மாமி/சித்தி/சித்தப்பன் அங்கான நிக்கினம்.. தாங்கள் காசுகட்டி எடுக்கிறம் எண்டவை.. அவையோட போய் பிள்ளை நிக்கட்டும்… படிச்சு என்ன பெரிசா இஞ்ச உழைக்கிறது..  இஞ்ச ஒரு வருசம் உழைக்கிற காச ஒருமாதத்தில அங்க உழைப்பான்… எண்டுற இந்தமாதிரியான விசர்க்கதைகளை பிள்ளையளுக்கு முன்னால தாய்தகப்பன் கதைக்கிறதை நிப்பாட்டுறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தனது இலக்கை விரைவாக அடைவதற்கான வழியை அது அடைந்துவருவதையே காட்டுகிறது. 70காலப்பகுதியில் சிங்களம் சட்டமாக்கிச் செய்ததை இன்று தொலைநோக்கற்ற பார்வையால் தமிழினம் செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிகாரம் 2

எமது ஊர், எமது பாடசாலை என்ற குறுகிய வட்டத்தில் நிற்காமல் வெளிநாடு வாழ் சங்கங்கள் - ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வியையும் மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்தல். 

வடக்கு கிழக்கின் பிரபல்யமான பாடசாலைகள் ஒவ்வொன்றும் ஒரு பின்தங்கிய ஆனால் பெரிய பாடசாலையை satellite school ஆக தத்து எடுத்து, அதற்கு வெளிநாட்டு சங்கங்களின் உதவியும் கிடைத்தாலே சாதிக்கலாம்.

பரிகாரம் 3

வளைவுகள் கட்டும் பணத்தை ஒரு இலவச டியூசன் வகுப்பை நடத்த பாவிக்கலாம். திறமையான இளம் ஆசிரியர்களை இனம் கண்டு கோவில்/சனசமூக மண்டபங்களில் ஆண்டு9-11 பெரிய எண்ணிக்கையில் டியூசன் நடத்தலாம். ஓ எல் போட்டி பரீட்சை அல்ல. அதில் சிம்பிள் பாஸ் எடுப்பது மிகவும் இலகு. சிம்பிளாக செய்யலாம்.  

 

 

22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பரிகாரங்களில் ஒண்டு -: பிள்ளை ஓலெவல்/ ஏலெவல் றிசல்ட்ட பாத்திட்டு புடிச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவம்.. தமையன்/தமக்கை/தேப்பன்/மாமன்/மாமி/சித்தி/சித்தப்பன் அங்கான நிக்கினம்.. தாங்கள் காசுகட்டி எடுக்கிறம் எண்டவை.. அவையோட போய் பிள்ளை நிக்கட்டும்… படிச்சு என்ன பெரிசா இஞ்ச உழைக்கிறது..  இஞ்ச ஒரு வருசம் உழைக்கிற காச ஒருமாதத்தில அங்க உழைப்பான்… எண்டுற இந்தமாதிரியான விசர்க்கதைகளை பிள்ளையளுக்கு முன்னால தாய்தகப்பன் கதைக்கிறதை நிப்பாட்டுறது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைகள், புள்ளிகள் மட்டுமல்லாமல் கல்வி கேள்விகளில் ஊக்கத்தைக் கூட்டும் வேறு நடவடிக்கைகளும் தேவையென நினைக்கிறேன். வாசிப்பு, விஞ்ஞான, கணித, சமூகக் கற்கைகள் மீது ஆர்வத்தைத் தூண்டும் செயல் திட்டங்கள் என்பன சில உதாரணங்கள்.

தமிழ் மாணவர்களின் வாசிப்பார்வத்தின் நிலை பற்றி நான் அறிந்த ஒரு சம்பவம்:

1995 இல் நின்று போன நங்கூரம் என்ற மாத இதழை ஐங்கரன் வாத்தியார் 2012 இல் மீள உயிர்ப்பிக்க முயன்றார். அடிக்கும் ஆயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்து விடும் நிலை தான் 90 களில் இருந்தது. 2012 இல் மூன்று இதழ்கள் வந்தன - கல்லூரிகளில் ஒரு நூறு பிரதிகள் கூட விற்கவில்லை. பின்னர், சூழலியல் சம்பந்தமாக ஒரு போட்டி வைத்து, போட்டியில் வென்ற மாணவர்களுக்கு இலவசமாக ஒரு வருட சந்தாவை பரிசாகக் கொடுக்க தீர்மானித்தார். வடக்கில் இவ்வாறு இலவச சந்தா பரிசாகக் கிடைத்த நூறு மாணவர்களில் மூவர் மட்டும் அதைப் பெற்றுக் கொள்ள முன் வந்தனராம் - இலவசமாகக் கிடைத்தாலும் ஒரு மாத இதழை வாசிக்க மாட்டேன் என்கிற நிலை! இது வாசிப்பின் தற்போதைய நிலை!

இது இணையவழி வாசிப்பு வடக்கில் அதிகரித்ததன்  விளைவென சிலர் சொல்லக் கூடும்! ஆனால், இணையவழி வாசிப்பினால் மக்கள் அறிவை வளர்க்கிறார்களா அல்லது மொட்டையாக்கிக் கொள்கிறார்களா என்ற கேள்விக்கு விடை எங்கள் பலருக்குத் தெரியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடா நாட்டில் இப்போது யாரும்  பாடம்சம்பந்தமான, நீண்ட விளக்கமான விடையங்களைப் படிக்க விரும்புவதில்லை மீம்ஸ் வடிவிலான விளக்கங்களையே விரும்புகிறார்கள் 

மற்றப்படி படிப்பம் ஆனால் எங்கட இஸ்டத்துக்குத்தான் இல்லாவிட்டால் காணிபூமியை அடகுவத்தோ வித்தோ வெளிநாட்டுக்கும் போயிடுவம் பெண்களும் இப்படித்தான். 
தொண்ணூறுகளில் பிறந்த அனேகமான ஆண்கள் கலியான வயது வந்தும் எதுவுமே அமையாமல் முதிர் கண்ணஙளாகத் திரிகையில்  2000 கிட்ஸ் குடும்பமும் குட்டியுமாகி குடியும் குடித்தனமுமாகை இப்போ திரியுதுகள் காரணம் படித்துத்தான் வாழ்க்கையைச் செம்மையாக்கலாம் என்பதிலருந்து விலகி இப்போதைய சந்ததிகள் வேறமாதிரிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

தவிர இப்போது பள்ளிக்கூட வாத்தியார் வகுப்பில் பாடம் சொல்லித்தருவதை விட்டு டுயூட்டரிக் கொட்டிகளிலேயே அதிக கவனத்தை அதே வாத்தியார் செலுத்துகிறார். இன்னுமொரு விடையம் யாழ்பாணத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலை எனக் கந்தர்மடத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருந்தது கந்தர்மடம் பள்ளிக்கூடம் எனப் பெயர் அப்பாடசாலைக்கு மாணவர் வரத்துக்குறைவு என்பதால் பள்ளிக்கூடத்தை மூடிவிட்டார்கள் நான் அறிய இது ஒரு பாடசாலை இப்படிப் பல பாடசாலைகள் மூடப்படுகின்றன.

மேல்தர வர்க்கம் நடுத்தர வர்க்கம் கீழ் நடுத்தர வர்க்கம் ஏழைகள் எனப்பாகுபாடு இப்போது பாடசாலைகளிலும் வந்துவிட்டது என்னுடைய பிள்ளையை நான் கூலிக்கரரும் சாதி குறைந்தவர்களும் படிக்கும் பாடசாலையில் படிக்கவிட விரும்பவில்லை என யார் நகரில் டுயூட்டரிகளில் டுயூசன் கொடுக்கும் பிரபல வாத்தியார் ஒருவர் எனக்குச் சொன்னது இப்போதும் என் காதுகளுக்குள் ஒலிக்குது. ஆனால் அப்படிச்சொன்னவர் அதே பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பக்கல்வியைப் படித்தவர்.

இப்படியாகப் பிள்ளைகளை வளர்த்தால் படிப்பு வருமா வராதா.

இப்போதெல்லாம் மூன்றுவயதுப் பிள்ளைகளையும் இந்தியாபோல யூ கே ஜிக்கு விடுகிறார்கள் பின்னேரம் ஏகப்பட்ட படிப்பு அதே பிள்ளைக்கு என வேற கொட்டில்கள் ஆனால் ஒரு தரவளிவரைக்கும்தான் பிள்ளைகள் அப்பன் ஆத்தை சொல் எடுபடும் பிறகு தங்கட விருப்பம். முதலாம் வகுப்பிலேயே கைத்தொலைபேசி வந்திடும் அதுகள் நித்திரைக்குப்போகும்மட்டும் அதை விடுவதில்லை. வயது வர பெடி பெட்டை சகவாசம் லிவிங் டூ கெதர் என்பது சாதாரணம்

அப்ப படிப்பு.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலக் கொடுமை இது. இலங்கைத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்விச் சீரழிவை எப்படித் தடுக்க முடியுமோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவும், யாழ் வேம்படியும் நன்றாக செய்கின்றன பரீட்சையில். வடக்கு, கிழக்கு பிள்ளைகள் எல்லாரையும் இங்கு கொண்டு போய் சேர்ப்பது இன்னொரு பரிகாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்ததொரு குமுகாயத்தின் வளர்ச்சிக்குக் கல்வியே கால்கோள் என்பதை அறியாமலா வட-கிழக்குக் கல்வியிலாளர்கள், அறிவாளார்கள், அரசியல்வாதிகள் இருக்கின்றனர். 

இந்தச் சூழலை வென்றிட..............

சனசமூக நிலையங்கள், நூலகங்கள், ஆலயங்கள், தேவாலாயங்கள், மசூதிகள், கடைகள், அரச மற்றும் அரசுசாரா நிறுவனங்கள்  என அனைத்தும்,  அனைத்து நிலைகளிலும்  ஒரு கருத்தியற் பரப்புரையொன்றை செய்வதோடு, புலம்பெயர் தளத்திலே இருந்து பொருண்மிய உதவிகளை வழங்கி அடுத்த ஐந்து ஆண்டுகள் என்ற அடைவு இலக்கைக் கொண்டு செயற்பட்டால் வெற்றிபெற வாய்ப்புண்டு. சாதி, சமயங்களைக் களைந்து இனமாக ஒன்றிணைவது மிகவும் முதன்மையானதாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது சமூகத்தில் உள்ள ஒரு விடயம், 9A எடுத்த கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு மட்டுமே உதவ நினைப்பது அல்லது பல்கலைகழகத்திற்கு தெரிவான கஷ்டப்பட்ட மாணவர்களை தெரிவு செய்து உதவுவது.. இதை பிழையென கூறவில்லை ஆனால் படிக்க கூடிய ஆற்றல் இருந்தும் குடும்ப சூழ்நிலைகளால் குறைந்தளவான புள்ளிகளை எடுத்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தாமல் விடுவதும் தவறு என நினைப்பதுண்டு.. 

இரண்டாவது, நாங்கள் பிள்ளைகளுக்கு கல்விகற்க உதவுகிறோம், அது ஒரு வழியாகவே மட்டும் உள்ளது.. திரும்ப அவர்கள் தங்களது சமூகத்திற்கு என்ன செய்கிறார்கள் என்பதை கவணத்தில் கொள்வதில்லை.. உதவியை பெற்றவர்கள், அவர்கள் கல்வி கற்று முடிந்து அவர்களும் இதுபோன்று கல்வியில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சமூக பொறுப்புணர்வை வளர்க்கவில்லையோ என நினைப்பதுண்டு.. அப்படி ஒரு சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை வளர்த்திருந்தால் தங்கள் தங்களது ஊர்களிலாவது கல்வியை வளப்படுத்தியிருப்பார்கள் என நினைப்பதுண்டு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெட்டிக்கார பிள்ளைகளுக்கு மட்டும் ஆதரவு கொடுக்காமல் படிப்பில் ஆர்வம்  இருக்கும் படிக்க கூடிய பிள்ளைகளுக்கும் உதவ வேண்டும் ...குறைந்தது 5ம்  ஆண்டில் இருந்தாவது படிப்பதற்கான ஆக்கத்தையும்,ஊக்கத்தையும் கொடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.