நிழலி பதியப்பட்டது October 31, 2021 Share பதியப்பட்டது October 31, 2021 கொழும்பைப் பற்றிய வரலாற்று வழித்தடத்தை தேடும் ஆய்வு இது. சற்று விரிவாக கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றியும், அதன் மானுடப் பண்பாட்டைப் பற்றியும் பல சுவாரசியமான கதைகளுடனும், ஆதாரங்களுடன் தொடராக இத்தொடரில் நீங்கள் சுவைக்கலாம். கோல் பேஸ் (Galle face) என்று நாம் அழைக்கும் காலிமுகத்திடலை அனுபவித்திராத இலங்கையர் அபூர்வம் எனலாம். இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவரும் கொழும்பில் காலிமுகத்திடலுக்கு ஒரு தடவையாவது சென்று வரவேண்டும் என்று நினைப்பார்கள். கொழும்பில் பிரதான மையப் பகுதியில் மிகப்பெரிய விஸ்தீரணம் கொண்ட கடற்கரைப் பகுதியாக அது இருப்பதாலும், பழைய பாராளுமன்றக் கட்டிடம், கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட பல முக்கிய கேந்திர மையங்களை ஒருங்கே அருகாமையில் உள்ள பகுதியாக இருப்பதாலும் அது மேலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்திய சமுத்திரத்தின் பக்கமாக மாலை சூரிய அஸ்தமனத்தை கண்கொள்ளாமல் பார்ப்பதற்காக பின்னேரம் பலர் நிறைந்திருப்பார்கள். அதிகாலையில் உடல் அப்பியாசத்துக்காக ஓடுவது, உடற் பயிற்சி செய்வது, கடும் வெய்யிலிலும் காதலர்கள் ஒன்று கூடுவது, மாலையில் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ ஒன்றுகூடுவது, பட்டம் பறக்கவிட்டு, பற்பல விளையாட்டுக்களை விளையாடி, உண்டு, களித்துச் செல்லும் இடம் அது. கொழும்பில் பெரிய விஸ்தீரணத்தைக் கொண்ட வேற்று நிலமாக பேணப்படுகின்ற ஒரே இடமாக இதைச் சொல்லலாம். சுதந்திர தினம், இராணுவ அணிவகுப்புகள், இராணுவக் கண்காட்சி உள்ளிட்ட பல முக்கிய அரச நிகழ்வுகள் அங்கே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. மாபெரும் மே தின நிகழ்வு, மாபெரும் அரசியல் பொதுக் கூட்டங்களும், மட்டுமன்றி ஒரு காலத்தில் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் செய்யும் இடமாகவும் இது இருந்தது. ஒரு காலத்தில் தமிழரசுக் கட்சியின் பிரபல சத்தியாக்கிரக போராட்டங்களும் அங்கே தான் நடந்தன. இன்றைய காலிமுகத்திடல் ஐந்து ஹெக்ராயர் பரப்பைக்கொண்டது. ஆனால் இன்று காண்பதை விட மிகப் பெரிதாக ஒரு காலத்தில் அது இருந்தது. அப்போது கிரிக்கெட், ரக்பி, கொல்ப், உதைப்பந்தாட்டம் மட்டுமன்றி, குதிரையோட்டம், காரோட்டப் பந்தயப் போட்டிகளும் நிகழ்த்தப்பட்ட இடம் அது. காலிமுகத்திடல் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பு கோட்டையைப் பாதுகாப்பதற்கான இராணுவ தந்திரோபாய இடமாக பேணப்பட்டு வந்தது. போர்த்துக்கேயர்கள் கடல்வழி ஆக்கிரமிப்பை நடத்தினால் அதை எதிர்கொள்வதற்காக பீரங்கிகளை கொண்டு வந்து வரிசையாக இங்கே நிறுத்தினார்கள். இன்றும் காலிமுகத்திடலின் கரைகளில் கடலை நோக்கியபடி காணப்படும் பீரங்கிகள் ஒரு காலனித்துவ காலத்தில் எப்பேர்பட்ட போர்களையும், போர் தயார் நிலையிலும் இது இருந்திருக்கிறது என்பதை நமக்கு விளக்கும். முன்னர் கொழும்பு கோட்டையின் வாயிற் பகுதியாக காலிமுகத்திடல் இருந்தது. டச்சு மொழியில் Gal என்றால் Gate அல்லது வாயில் என்று பொருள். அதுபோல faas என்றால் முகப்பு என்று பொருள். இரண்டும் சேர்ந்து Galle face காலிமுகத் திடல் என்று தமிழில் பின்னர் அழைக்கப்பட்டது. சிங்களத்திலும் கூட தமிழில் உள்ள அதே அர்த்தத்துடன் ගාලු මුවදොර පිටිය என்றே அழைக்கப்படுகிறது. இன்னொரு பெயர்க் காரணமும் கூறப்படுகிறது. அதாவது “கல் பொக்க” (கல் வாயில்) என்கிற சிங்களச் சொல் தான் ஆங்கிலத்துக்கு Galle face என்று ஆனது என்கிற கதையும் உண்டு. காலிமுகத்திடல் பற்றிய பல உண்மைகள் புதைந்தே போய்விட்டன. இல்லை... இல்லை... அது சடலங்களின் புதைகுழியாகவே ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. காலிமுகத்திடல் ஒரு காலத்தில்; மரணித்தவர்களை புதைக்கின்ற மயானமாக இருந்தது என்றால் நம்ப சிரமப்படுவீர்கள். ஆனால் அது தான் உண்மை. பேறை வாவியோடு ஒட்டியிருக்கும் பகுதியே மயானம் (Galle Face Burial Ground) இருந்த சரியான இடம். 1865-75 அளவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எந்தக் கட்டிடங்களும் இல்லாத காலம். சடலங்களை புதைக்கின்ற மயானமாக ஆங்கிலேயர்கள் இலங்கையின் கரையோரங்களை ஒல்லாந்தர்களிடம் இருந்து 1796 இல் கைப்பற்றியபோதும் கண்டியை 1815 இல் கைப்பற்றியபின் தான் முழு இலங்கையையும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த இடைக்காலப் பகுதியில் கண்டியுடன் கடும் போர் நடத்தியிருந்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் இரு தசாப்தங்கள் தான் அதிக பிரிட்டிஷார் கொல்லப்பட்ட காலம். இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தான் கண்டியுடனான முதல் போர் 1803 இல் ஆரம்பமானது. அந்தப் போர்களில் எல்லாம் கடும் தோல்வியை சந்தித்தது பிரிட்டிஷ் படைகள். அதில் கொல்லப்பட்ட உயர் இராணுவ அதிகாரிகள் பலரது சடலங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றன. காலிமுகத்திடலை 1803 ஆம் ஆண்டிலிருந்து மயானமாகப் பயன்படுத்தத் தொடங்கியது ஆங்கிலேய அரசு. 1805 ஆம் ஆண்டு தான் அதற்கான எல்லை மதில்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. முதல் கல்வெட்டு 1809 இல் இருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை ஜெபித்து புனிதப்படுத்த 1821 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து பேராயர் (Middleton) வரவழைக்கப்பட்டிருக்கிறார். 1809 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இராணுவத்தைச் சேர்ந்த டேவிட் டேன் (David Dunn) என்கிற 24 வயது இளைஞன் கொழும்பு பேறை (Beira Lake) வாவியில் தற்செயலாக மூழ்கி இறந்துள்ளார் அவ்விளைஞனின் பிரேதம் தான் முதலாவது தடவையாக காலி முகத்திடலில் புதைக்கப்பட்டிருகிறது. இதே 1821 ஆம் ஆண்டு தான் அன்றைய தேசாதிபதி எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barnes) காலி முகத்திடலை பரந்துபட்ட நில அமைப்புடன் “Galle Face Green” திட்டம் என்கிற பெயரில் அமைத்தார். ஒரு குதிரைப் பந்தயத் திடலை அந்த இடத்தில் அமைப்பதை இலக்காகக் கொண்டே இந்தத் திடலை அவர் அமைத்தார். குதிரைப்பந்தயப் போட்டி விளையாட்டு இலங்கையில் இங்கிருந்து தான் அறிமுகமானது. எட்வர்ட் பார்ன்ஸ் இலங்கையில் பிரதான பெருந்தெருக்களை அமைத்ததில் முன்னோடியானவர். “இலங்கைக்கு முதலாவது தேவையானது தெருக்கள் தான். இரண்டாவது தேவையானதும் தெருக்கள் தான். மூன்றாவது தேவையானதும் தெருக்கள் தான்” என்று 1819 அவர் இலங்கை வந்த வேளை கூறியவர். அவர் இலங்கையின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் தெருக்களால் ஒன்றினைத்தார். கொழும்பில் அவர் பெயரிலும் ஒரு வீதி (Barnes place) இன்றும் உள்ளது. கொழும்பு – கண்டி வீதி அமைக்கப்பட்டதன் பின் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. இலங்கையில் 1823இல் கோப்பித்தோட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் பெருந்தோட்டத்துறையை அறிமுகப்படுத்தியவர் எட்வர்ட் பார்ன்ஸ். இந்தியத் தொழிலாளர்களை தோட்டத்தொழிலுக்காக இலங்கையில் முதலில் இறக்கியவரும் அவர் தான். அதற்கு முன்னரே காலிமுகத் திடலோடு இருக்கிற வீதி 1814 இல் அமைக்கப்பட்டது. இன்றும் அது அமைக்கப்பட்டதற்கான கல்வெட்டு இன்றைய தாஜ் சமுத்திரா ஹோட்டலின் பாதையோர மதிலோடு அது பற்றிய ஒரு கல்வெட்டு இருப்பதைக் காணலாம்.. பிற்காலத்தில் தென்னிலங்கையில் காலி வரை நீள்கிற A2 பாதையின் ஆரம்பம் காலிமுகத்திடலில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. 1830 களில் ஒன்றரை மைல் தூரத்துக்கு இது குதிரையோட்டப் போட்டி நடத்தும் இடமாகவும் காலிமுகத்திடல் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதனை கொள்ளுப்பிட்டி குதிரைப் பந்தயத் திடல் Colpetty Race Course என பெயர் பெற்றிருந்தது. 22.09.1835 ஆம் ஆண்டு தான் முதல் குதிரைப் பந்தயம் அங்கு நிகழ்ந்திருக்கிறது. 1893 ஆம் ஆண்டு கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதிக்கு (Cinnamon Garden) பகுதிக்கு அது மாற்றப்படும் வரை இங்கே தான் அந்தப் பந்தயங்கள் நிகழ்ந்தன. பிற்காலத்தில் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்க இறப்பதற்கு காரணமான குதிரை சவாரி விபத்து இங்கு தான் நிகழ்ந்தது என்பதையும் இங்கே கொசுறாக நினைவுக்கு கொண்டு வரலாம். அந்தக் காலத்து குதிரைப்பந்தையத் திடல் (1865-75 கால படம்) பசுமை காலிமுகத்திடல் திட்டம் 1856 ஆம் ஆண்டு அன்றைய ஆளுநர் சேர் ஹென்றி ஜோர்ஜ் வார்ட் (Sir Henry George Ward - 1797–1860) காலிமுகத்திடலின் கடற்கரையோடு அண்டிய பகுதியை ஒரு மைல் தூரம் அளவுக்கு பசுமையான திடலாக புதுப்பிக்கும் இன்னொரு Galle Face Green திட்டத்தை ஆரம்பித்தார். அவரது அத்திட்டம் 1859 இல் நிறைவடைந்தது. காலி முகத்திடல் இன்றைய தோற்றத்தை அடையப்பெற்றது இந்தத் திட்டத்தின் மூலம் தான். இன்றும் காலிமுகத்திடலில் அதன் நினைவுக் கல்லை காணலாம். முற்றிலும் பெண்களும் குழந்தைகளும் காற்று வாங்கி கூடிக் களிக்கும் இடமாக மாற்றுவதே அவரின் திட்டமாக இருந்தது. கூடவே குதிரைச் சவாரி செய்வதற்கும், கோல்ப் விளையாடுவதற்குமான பெரிய திடலாக அமைப்பது தான் அவரின் நோக்கம். ஒரு புறம் பேறை வாவியை (Beira lake) எல்லையாகக் கொண்டு தான் அந்த மயானம் இருந்தது என்று லூவிஸ் பென்றி குறிப்பிடுகிறார். அதாவது சில ஆண்டுகள் வரைக்கும் இராணுவத் தலைமையகம் இருந்த இடமாகவும் இப்போது பிரபல சங்கிரில்லா ஓட்டல் கட்டப்பட்டிருக்கும் பகுதியில் இருந்து தொடங்குகிறது அந்த காலிமுகத்திடல் மயானம். சங்கிரில்லா ஓட்டல் கட்டுவதற்கான பணிகளுக்காக தோண்டும் போது அங்கிருந்து எலும்புக் கூடுகளும், சவப்பெட்டிகளின் எச்சங்களும், சவப்பெட்டிகளின் இரும்புக் கைப்பிடிகளும் கண்டெடுக்கப்பட்டது பற்றி செய்திகளில் வெளிவந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். அந்த எச்சங்களை ஆராய புறக்கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ போன்றார் அங்கே சமூகமளித்திருந்ததையும் அச்செய்திகள் குறிப்பிட்டிருந்தன. 1866 ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பின்னர் வுல்பெண்டால், ஸ்லேவ் ஐலன்ட் ஆகிய இடங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயம், ஸ்லேவ் ஐலன்ட்டில் உள்ள மலே மயானம் என்பவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும், காலிமுகத்திடல் மயானத்தை தனித்து ஐரோப்பியர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தும்படியும் ஒரு தீர்மானம் 1866 யூன் 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அது மயானமாக பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு இராணுவப் பாவனைக்காக அது பயன்படுத்தப்பட்டது. அடுத்த இதழில்... தினகரன் வார மஞ்சரி - 31.10.2021 ------------------------------------------------------ என்.சரவணனிடம் எழுத்து மூலம் அனுமதி பெறப்பட்டு யாழில் இத் தொடரை பகிர்கின்றேன் - நிழலி 5 Link to comment Share on other sites More sharing options...
tulpen Posted November 1, 2021 Share Posted November 1, 2021 பகிர்வுக்கு மிக்க நன்றி நிழலி. இலங்கையின் இவ்வாறான வரலாற்று விடயங்களை வாசிப்பது சுவார்ஸ்யமானது. Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted November 8, 2021 தொடங்கியவர் Share Posted November 8, 2021 காலிமுகத்திடல் மயானமாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் மயானமாக பயன்படுத்தப்பட்டது புறக்கோட்டை மயானம் தான். ஆம் இலங்கையின் நெருக்கடியான சந்தைப் பகுதியாக இன்று இருக்கிற புறக்கோட்டையில் இன்னும் சொல்லப்போனால் கெய்சர் வீதி (Keyzer street), மெயின் வீதி (Main street) அமைந்திருக்கும் பகுதியில் தான் அன்றைய பெரிய மயானம் இருந்தது. வுல்பெண்டால் மயானம் அப்போது மிகவும் சிறியதாக இருந்ததால் அங்கே புதைப்பதற்கான கட்டணமும் அதிகமாக இருந்தது. BALDAEUS 1672இல் வரைந்த கொழும்பின் வரைபடம் எனவே புறக்கோட்டை மயானம் தான் மாற்று மயானமாக அன்றைய ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அப்போது “கொழும்பு கோட்டை”யின் மதில்களுக்கு வெளிப்புறமாக இருந்த இந்தப் பகுதியில் மயானம் இருந்தது. இப்படியான மயானங்களை மேற்கத்தேய கிறிஸ்தவர்கள் தேவாலயத்தோடு தேவாலயத்தின் அங்கமாக வைத்துக்கொள்வது வழக்கம். இறந்தவரின் இறுதிக் கிரியைகள், பூசைகள் தேவாலயத்தில் நிகழ்த்தப்பட்டு அத்தேவாலயத்துகுரிய மயானத்தில் புதைக்கப்பட்டபின் அது பற்றி தேவாலயக் குறிப்புகளில் குறித்து வைத்துக்கொள்வது நெடுங்காலமாக இருக்கும் வழக்கம். பிறப்பு, இறப்பு, திருமண, திருமுழுக்கு போன்ற குறிப்புகளைக் குறித்து வைத்துக்கொள்வதால் இன்றும் பலர் பற்றிய விபரங்களை அறிய முடிகிறது. மேலும் இந்த மயானங்கள் சுதேசிய சாதாரணர்களைப் புதைக்கும் மயானமாக இருக்கவில்லை. இவை காலனித்துவ நாட்டு சிவில், இராணுவ, அதிகாரிகளையும், நிர்வாகிகளையும், ஊழியர்களையும், அவர்களின் குடும்பங்களையும், கிறிஸ்தவ பாதிரிகளையும் புதைக்கும் மயானங்களாகவே இயங்கின. ஒரு காலத்தில் அதிகமான இறுதிக்கிரியைகளை செய்தவராக அங்கிலிக்கன் பாதிரியாரான பெய்லி (Anglican Archdeacon Bailey) பிரபலம் பெற்றிருந்ததால் பகிடியாக ‘Padre Bailey’s Go-Down’ என்று அந்த இடத்தை அழைத்தார்களாம். அன்றைய ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி லூவிஸ் பென்றி (Lewis, J. Penry) பிற்காலத்தில் காலனித்துவ காலத்தில் இருந்த மயானங்களில் புதைக்கப்பட்டவர்கள் பற்றிய தேவாலயப் பதிவுகளை தொகுத்து “List of inscriptions on tombstones and monuments in Ceylon, of historical or local interest, with an obituary of persons uncommemorated” என்கிற ஒரு பயனுள்ள நூல் ஒன்றை 1913ஆம் ஆண்டு அரசாங்க அச்சகப் பதிப்பின் மூலம் வெளியிட்டார். பல ஆய்வுகளுக்கும் பயன்பட்ட நூல் அது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கண்டி ஒப்பந்தம் நிகழ்ந்து மூன்றாண்டுகளில் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்ட கெப்பட்டிபொல தலைமையில் ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சி ஆங்கிலேயர்களை எதிர்த்து நிகழ்ந்ததை அறிவீர்கள். அதில் கொல்லப்பட்ட சில ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளின் நினைவுக் கல்லறைகளும் காலிமுகத்திடலில் இருந்ததாக லூவிஸ் பென்றி குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்களைப் புதைக்கும் மயானமாகத் தான் இது பேணப்பட்டது. 1866 ஆம் ஆண்டு பொரல்லை கனத்தை மயானம் இலங்கை வாழ் பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்படும்வரை கொழும்பில் சுதேசிகளுக்கான ஒரு முறைப்படுத்தப்பட்ட மயானம் இருக்கவில்லை. இந்து, முஸ்லிம்களும், ஏனைய சகல கிறிஸ்தவ பிரிவினரும் கூட எந்த வர்க்க வேறுபாடுமின்றி அடக்கம் செய்யும் இடமாக பொரல்லை கனத்தை மயானம் ஆனது. 1870 இல் காலிமுகத்திடல் இராணுவப் பாவனைக்கு ஆங்கிலேயர்கள் ஒரு கட்டத்தில் காலிமுகத்திடல் பகுதியின் இராணுவ மூலோபாயப் பெறுமதியையும் முக்கியத்துவத்தையும் கருதியும், மயானத்தில் அங்கு உடல்களைப் புதைப்பதை நிறுத்தி அங்கிருந்த கல்லறைகளை பொரல்லைக்கு இடம்மாற்றிவிட்டு அதை அப்படியே மூடிவிட்டார்கள். அந்த இடத்தை இராணுவப் பாவனைக்காக பயன்படுத்தினார்கள். முதலாம் உலக யுத்தம் முடியும் வரை அது இராணுவத் தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. அதே இடத்தில் தான் பிற்கால இலங்கையின் இராணுவ தலைமையகமும் அமைக்கப்பட்டது. அதுபோல கடற்படைத் தலைமையகமும் அங்கிருந்து அத்தனைத் தூரமில்லை. இராணி மாளிகையும் (இன்றைய ஜனாதிபதி மாளிகை) மிக அருகாமையில் தான் அமைந்திருக்கிறது. இதைச் சூழத் தான் பிற்காலத்தில் இலங்கையின் பாரளுமன்றம் (இன்றைய ஜனாதிபதிச் செயலகம்), பல ஹோட்டல்கள், மத்தியவங்கி, உள்ளிட்ட இலங்கையின் பல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையப் பகுதியும் அமைந்தது. அதுபோல கண்டி ராஜ்ஜியத்தை வீழ்த்துவதற்கு பிரதான சூத்திரதாரியாக இயங்கிய ஜோன் டொயிலி தனது நாட்குறிப்பில் பலர் பற்றிய விபரங்களையும் பதிவிட்டிருக்கிறார். அதில் மேஜர் பெய்லட் பெய்லி பெயிலி (Major Bayley Bayly) பற்றி குறிப்பிடும்போது; 1779 இல் பிறந்த அவர் பிரெஞ்சுப் போரில் ஈடுபட்டபோது கைதுக்குள்ளாகி விடுதலையானார். பின்னர் எகிப்தில் இருந்த ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்து விருதுகளைப் பெற்றார். 88 வது படைப்பிரிவில் லெப்டினன்டாக கடமையாற்றி 1814 இல் இந்தியாவிலும் பின் இலங்கையில் 1815 கண்டிப் போரிலும், 1817இல் ஊவா கிளர்ச்சியை எதிர்த்தும் போரிட்டு தளபதி நிலைக்கு உயர்ந்தார். 1818 இல் மூன்று கோரளைகளின் அரசாங்க பிரதிநிதியாக ஆகி இறக்கும் வரையிலும் அப்பதவியில் இருந்தார் என்றும் அவர் 10.02.1827 அன்று இறந்தார் என்றும் அவர் காலிமுகத்திடல் மயானத்தில் புதைக்கப்பட்டார் என்றும் டொயிலி தனது நாட்குறிப்பில் குறிப்பிடுகிறார். (1) Christ Church - Galle Face காலிமுகத்திடல் மயானத்தின் தேவாலயமாக 1853 இல் CMS சேர்ச்சுக்கு சொந்தமான தேவாலயம் அன்றைய காலிமுகத்திடலில் இருந்தது. இன்றும் அந்த Christ Church - Galle Face தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு பின்னால் உள்ளது. ஆக அப்போது இறந்தவர்கள் பலரது இறுதிப் பூசைகள் அங்கே நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த தேவாலயம் அதிக காலம் தமது மயானமாக காலிமுகத்திடலைப் பயன்படுத்த முடியவில்லை. 1862 ஆம் ஆண்டு அரசாங்க சபையின் 9வது இலக்கத் தீர்மானத்தின்படி கொழும்பு பாதுகாப்பு அரணுக்குள் இருக்கிற காலிமுகத்திடல் மயானத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.(2) 1862 நவம்பர் 19 அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் (Government Gazette) இதைப் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அன்றைய United Church க்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம் என்கிற விதிகளை நீக்கி பிரிட்டிஷ் குடிமக்களின் அதிகரிப்பு காரணமாக, ஐரோப்பியர்களுக்கு மட்டுமே காலி முகத்திடல் மயானத்தில் அடக்கம் செய்ய முடியும் என்று ஆளுநர் மூலம் அறிவிக்கப்பட்டது. காலிமுகத்திடல் மயானம் மூடப்பட்டபோது அங்கே இருந்த பல நினைவுக் கல்லறைக் கற்கள் கனத்தை மயானத்துக்கு மாற்றப்பட்டது. இன்றும் கொழும்பு கனத்தை மயானத்தில் காலிமுகத்திடல் பிரிவு என்கிற ஒரு பிரிவு இருப்பதை அவதானிக்கலாம்.(3) விக்ரர் ஐவன் “அர்புதயே அந்தறய” என்கிற தலைப்பில் இலங்கையின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் புகைப்படங்களைத் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டார். அதில் காலிமுகத் திடல் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். “ஜனவரி 1803 இல், பிரிட்டிஷார் கண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்தனர், படையெடுக்கும் படைகளை தோற்கடித்து அவர்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். போரில் ஏராளமான ஆங்கில வீரர்கள் கொல்லப்பட்டனர், அதுமட்டுமன்றி பின்வாங்கிய இராணுவம் மலேரியா நோய்க்கு இலக்காகி இறந்தனர். மலேரியாவால் இறந்த வீரர்களுக்கு அடக்கம் செய்ய இடம் இல்லாததால், தற்போது காலி முகத்திடல் வளாகம் அமைந்துள்ள பகுதி மயானமாக மாற்ற வேண்டியிருந்தது...” வுல்பெண்டால் மயானம் டச்சு ஆட்சியில் கொழும்பு கோட்டையின் தேவாலயமாக வுல்பெண்டால் தேவாலயம் (Wolvendaal Church) இருந்தது. வுல்பெண்டால் தேவாலயம் 1749 இல் தான் டச்சு அரசின் கீழ் அமைக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து பார்த்தால் மேட்டில் அமைந்திருக்கும் இந்த தேவாலயம் தெரியும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. கொழும்பு விவேகானந்தா மேட்டில் பலரும் வுல்பெண்டால் தேவாலயம் தான் அது. கோட்டையிலிருந்து ஒரு மைல் தொலைவில் அது அமைக்கப்பட்டிருந்து. இந்த தேவாலயத்தோடு ஒட்டி இறந்தவர்களுக்கான மயானமும் இருந்தது. அடுத்த இதழில்.... உசாத்துணை Diary Of Mr. John Doyly, Journal Of The Ceylon Branch Of The Royal Asiatic Society 1917 Vol.25 “No. 9 of 1862: As Ordinance for restricting use of the Galle Face Burial Ground to the Garrison of Colombo, and to make other provision in respect thereof” (A Revised Edition of the Legislative Enactments of Ceylon: Volume I 1656-1879, Colombo, George J.A.Skeen, Gevernment Printer, Ceylon, 1900) Napoleon Pathmanathan, The History of Christ Church, Galle Face, (Formerly called the Colombo Mission Church of C.M.S ) நன்றி - தினகரன் 07.11.2021 https://www.namathumalayagam.com/2021/11/Colombo2.html?fbclid=IwAR1gdUdDOzEqozEIgOVY0lBdS6mpSD1txAKSCqSpFvai_zINJ4wtLN9PZIs 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted November 8, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 8, 2021 அன்றைய காலப் படங்களுடன்... சுவராசியமான கதை. நன்றி நிழலி. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted November 8, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 8, 2021 அருமையானதொரு இணைப்பு நன்றி நிழலி . Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted November 13, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 13, 2021 வரலாற்றை நினைத்து வாசிக்கக் கூடிய பதிவாக இது வருகிறது.......! பகிர்வுக்கு நன்றி நிழலி .....! Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted November 16, 2021 தொடங்கியவர் Share Posted November 16, 2021 “கோர்டன் கார்டன்” (Gordon Gardens) பகுதிக்குள் தான் டச்சுக் காலத்தில் கொழும்பின் பிரதான தேவாலயம் இருந்தது. “கோர்டன் கார்டன்” என்பது இன்றைய ஜனாதிபதி மாளிகையாக இருக்கின்ற அன்றைய “இராணி மாளிகை” (Queens house)க்குள் தான் இருந்தது. வுல்பெண்டால் தேவாலயம் பிரதான தேவாலயமாக அமையும்வரை இது தான் அன்றைய தேவாலயமாக இருந்தது. பிற்காலத்தில் ஆங்கிலேயர் இலங்கையை தம் வசமாக்கியதன் பின்னர் சிதைவுற்றிருந்த வுல்பெண்டால் தேவாலயத்தை திருத்தி 1813 செப்டம்பர் 4 அன்று விழாக்கோலமாக புறக்கோட்டை மயானத்தில் இருந்த முக்கிய கல்லறைக் கற்களைக் கொண்டு வந்து சேர்த்தனர்.(1) இன்னும் சில கல்லறைக் கற்கள்; இன்று புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள டச்சு மியூசியத்திலும் காட்சிக்காக வைக்கப்பட்டன. 1662 – 1736 க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முக்கிய பதினான்கு கற்கள் தேவாலயத்தின் உள்ளேயும், ஐந்து கற்கள் தேவாலயத்துக்கு வெளியேயும் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருக்கும் மிகப் பழைய கல்லறைக் கல் 1662 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றால் உங்களால் அதன் பழைமையை விளங்கிக்கொள்ள முடியும்.(2) போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றுவதற்கான போர் நிகழ்ந்தபோது பாணந்துறை, களுத்துறை போன்ற பகுதிகளில் போர் நிகழ்த்தி அவற்றைக் கைப்பற்றியவர் ஜெனரல் அல்ஃப்ட் (Gerard Pietersz. Hulft), அடுத்ததாக கொழும்புக் கோட்டையுடனான போரின் போது காயப்பட்டு 10 ஏப்ரல் 1656 அன்று மரணமானார். அவரின் உடல் பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு காலிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொழும்பு கைப்பற்றப்பட்டு டச்சுக் கட்டுபாட்டுக்குள் வந்ததன் பின்னர் மீண்டும் கொழும்பு கோட்டையில் (அப்போது வுல்பெண்டால் தேவாலயம் அமைந்த இடத்தையும் சேர்த்து கொழும்பு கோட்டை என்று தான் கூறுவார்கள்.) வுல்பெண்டால் தேவாலயத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறைக் கல்லும் இங்கு தான் இருக்கிறது. இவரின் நினைவாகத் தான் அப்போது டச்சுத் தலைமையகம் இயங்கிய பகுதிக்கு அல்ஃப்ட்'ஸ் டோர்ப்" (Hulft's Dorp, அல்ஃப்ட்டின் கிராமம்) என்று பெயரிடப்பட்டது. இன்று இலங்கையின் உயர்நீதிமன்ற வளாகம் அமைந்திருக்கும் பகுதி தான் அது. அதுமட்டுமன்றி கத்தோலிக்க மதத்துக்கு மாறிய கோட்டை மன்னன் தொன் யுவான் தர்மபாலாவின் கல்லறையும் இங்கே தான் வைக்கப்பட்டு பின்னர் அது மாயமானதாக குறிப்புகள் கூறுகின்றன. (Lewis, J. Penry). அவர் இலங்கையின் முதலாவது கிறிஸ்தவ அரசன். 1580 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருக்கு கோட்டை ராஜ்யத்தை ஒப்பமிட்டு எழுதிக்கொடுத்தவர் அவர் தான். அதுமட்டுமன்றி நான்கு டச்சு ஆளுநர்களும் இந்த வுல்பெண்டாலில் தான் அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் பாதுகாக்கப்பட்டன. இலங்கையை இறுதியாக ஆண்ட இரு டச்சு ஆளுநர்களுமான வில்லெம் யாகோப் (Willem Jacob van de Graaf) யொஹான் வான் அங்கெல்பீக் (Johan van Angelbeek) ஆகியோரின் கல்லறைகளும் பிற்காலத்தில் வுல்பெண்டலுக்கு இடம்மாற்றப்பட்டது. புறக்கோட்டை மயானத்தை (Colombo Pettah Burial Ground) முதலில் மயானமாக பயன்படுத்தத் தொடங்கியவர்கள் ஒல்லாந்தர்கள் தான் அதன் பின் ஆங்கிலேயர்களும் அதனைப் பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில் இடமில்லாமல் போன போது தான் ஒல்லாந்தர்கள் இன்றைய காலிமுகத் திடலையும் ஆரம்பத்தில் மயானமாகப் பயன்படுத்தத் தொடங்கி பின்னர் காலக் கிராமத்தில் புறக்கோட்டை மயானத்தை மெதுமெதுவாகக் கைவிட்டனர். அதையே ஆங்கிலேயர்கள் இன்னும் விஸ்தீரணப்படுத்திய மயானமாகப் முழுமையாகப் பயன்படுத்தினார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று புறக்கோட்டை பொலிஸ் நிலையம் உள்ள பகுதி அந்த புறக்கோட்டை மயானத்தின் மீது தான் இருக்கிறது. இன்று பரபரப்பான, சனநெருக்கடிமிக்க அந்த “பஜார்” பகுதியின் நிலத்தினடியில் பலர் ஏராளமானோர் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கண்டியில், மன்னாரில், யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில் நிகழ்ந்த போரில் கொல்லப்பட்ட அன்றைய காலனித்துவ இராணுவ அதிகாரிகளின் உடல்களும், அன்றைய அரச அதிகாரிகள், அவர்களின் மனைவி, பிள்ளைகள், சகோதர்கள் என பலரும் இந்த புறக்கோட்டை மயானத்தில் புதைக்கப்பட்டார்கள். காலிமுகத்திடலில் உள்ள கோல் பேஸ் ஹோட்டல் ஒரு காலத்தில் கொழும்பின் குறியீடாக இருந்த காலமொன்று இருந்தது. காலிமுகத்திடலை எல்லைப்படுத்தும் ஒரு கட்டிடமாக அது இருந்தது. 250 அறைகளைக் கொண்ட அந்தக் காலத்து சொகுசு ஹோட்டல். அன்று இலங்கை வரும் பிரபுக்களையும், ஆங்கிலேய கனவான்களையும் வரவேற்று உபசரிக்கும் ஹோட்டலாக நெடுங்காலம் அமைந்திருந்தது. 1862 ஆம் ஆண்டளவில் காலிமுகத்திடல் மயானத்தின் பாவனையை மட்டுப்படுத்தத் தொடங்கி, அதனை பொதுப் பொழுதுபோக்குப் பாவனைக்கு பயன்படுத்தத தொடங்கியதும் அடுத்த இரண்டாவது வருடம் 1864 இல் இந்த ஹோட்டல் கட்டப்பட்டது. அதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில் இலங்கையில் ரயில் போக்குவரத்தும் 1866 இல் அறிமுகப்படுத்தப்பட்டபின் இந்த ஹோட்டலின் முக்கியத்துவமும் பெருகியது. இலங்கையில் முதன்முதலில் மின்சாரத்தைப் பயன்படுத்திய முதற் கட்டிடங்களில் ஒன்று. அங்கே தான் முதற்தடவை உயர்த்தி (Elevator / Lift) பயன்படுத்தப்பட்டது. காலிமுகத்திடல் பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளுக்கு கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாக அது முக்கிய பல பெரும் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்ட இடம். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதற்தடவை அங்கு தான் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகள் சுதந்திர தின நினைவின் பிரதான நிகழ்வுகள் அங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. பெரிய இராணுவ மரியாதை , ஊர்வலங்கள், விமான வீரர்களின் சாகசங்கள் எல்லாமே இங்கு நிகழ்த்திக் காட்டப்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதற்தடவையாக ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதும் இங்கு தான். முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஏராளமானவர்கள் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்யும் இடமாக இது இருந்து வருகிறது. 1929 ஆம் ஆண்டு ரல்ப் ஹென்றி (Ralph Henry Bassett) வெளியிட்ட Romantic Ceylon என்கிற நூலில் காலிமுகத்திடலில் ஆப்கான் முஸ்லிம்கள் பலர் ஹஜ்ஜுபெருநாள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டதைப் பற்றி குறிப்பிடுகிறார். அப்படியென்றால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்த வழக்கம் இருந்து வருவதை அறிய முடிகிறது. 1939இல் ஜவஹர்லால் நேரு வந்திருந்தபோது காலிமுகத்திடலில் அவரின் மாபெரும் கூட்டம் நடந்தது. அன்று அதை எதிர்த்து அன்றைய சிங்கள மகா சபையின் சார்பில் பிரபல தொழிற்சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்க இலங்கை இந்தியர் காங்கிரசை நேரு உருவாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அதுபோல பாராளுமன்றம் அருகில் இருந்ததால் பல அரசியல் வாதிகளின் ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நிகழ்ந்தபடி இருந்திருக்கின்றன. தமிழரசுக் கட்சியின் பல அகிம்சைவழி சத்தியாக்கிரகப் போராட்டங்கள் காலிமுகத்திடலில் தான் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குள் இலங்கையைப் பற்றிய பயணக் கட்டுரை எழுதிய எவரும் காலிமுகத்திடலைப் பற்றி எழுதாமல் விட்டதில்லை என்றே கூற முடியும். Ali Foad Toulba 1926 இல் வெளியிட்ட “Ceylon : The land of eternal charm” என்கிற நூலில் காலிமுகத்திடலின் அழகிய அனுபவங்களை தனி அத்தியாயமாக தொகுத்திருக்கிறார். காளிமுகத்திடலைப் பற்றிய அனுபவங்களை விலாவாரியாக எழுதியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். முதலாம் உலகப் போர் முடிந்ததும் அதன் நினைவாக 120 அடிகள் உயரமுள்ள வெற்றிக் கோபுரம் ஒன்று 1923ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் நிறுவப்பட்டது. அதை ஆங்கிலத்தில் Cenotaph War Memorial என்று அழைப்பார்கள். இரண்டாம் உலகப் போரின்போது கொழும்பின் மையம்; ஜப்பானின் குண்டுத்தாக்குதலுக்கு இலகுவாக ஜப்பானியர்களால் அடையாளம் காணப்படக்கூடும் என்கிற பீதியால் அந்தக் கோபுரம் அங்கிருந்து அது கழற்றப்பட்டு விகாரமகாதேவி பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்டவர்களின் பெயர்களும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்றும் அது விகாரமகாதேவிப் பூங்காவின் பின்னால் அமைந்துள்ள கொழும்பு பொதுநூலக நுழைவாயின் அருகில் காணலாம். அது அப்போது எங்கு இருந்தது என்பதை சரியாகச் சொல்வதானால்; இன்று பண்டாரநாயக்கவின் பெரிய சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் அந்த நினைவுக் கோபுரம் இருந்தது. காலிமுகத் திடல் ஒரு மயானமாக மட்டுமல்ல அதற்கு முன் அது ஒரு கொலைக்களமாகவும் இருந்திருக்கிறது. ஒல்லாந்தர் காலத்தில் பலர் தூக்கிட்டும், சுடப்பட்டும், கழுவில் ஏற்றியும் கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டார்கள். அப்படி இலங்கையில் செய்த கொலைகளுக்காக பாதக ஆளுநர் ஒருவர் ஒல்லாந்து அரசால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவமும் நிறைவேறியது. அதை அடுத்த வாரம் பார்ப்போம். உசாத்துணை: Lewis, J. Penry, List of inscriptions on tombstones and monuments in Ceylon, of historical or local interest, with an obituary of persons uncommemorated (1854-1923), Colombo, H.C.Cottle, Government printer, Ceylon, 1913. Dr. K.D. Paranavitana, That church in the Valley of Wolves, Sundaytimes, 24.10.1999 நன்றி - தினக்குரல் https://www.namathumalayagam.com/2021/11/Galleface.html?fbclid=IwAR2JA8n2EyedYiNSFwGTiKlx4a-bQCcsLzYaBqha2b8LFlkKeQkQmuU5YqU Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புரட்சிகர தமிழ்தேசியன் Posted November 17, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 17, 2021 பகிர்வதற்கு நன்றிகள் தோழர். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted November 19, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 19, 2021 பகிர்வுக்கு நன்றிகள் நிழலி .........! Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted November 25, 2021 தொடங்கியவர் Share Posted November 25, 2021 காலிமுகத்திடலை கொலைக்களமாக ஆக்கிய ஆளுநர் வுய்ஸ்ட்! (கொழும்பின் கதை - 4) - என்.சரவணன் Johannes Hertenberg இலங்கையின் 19 வது டச்சு ஆளுநர். அவர் 12.01.1725இலிருந்து 19.10.1725 வரை ஆளுநராக இருந்தார். பதவியில் இருக்கும் போதே கொழும்பில் திடீர் மரணமானார். அவரின் கல்வெட்டு இன்னமும் வுல்பெண்டால் தேவாலயத்தில் உள்ளது. அவரின் திடீர் மறைவைத் தொடர்ந்து அவசரமாக ஆளுநராக அனுப்பப்பட்டவர் தான் பேதுருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst 1691 -1732).(1) தனக்கு ஒரு பெரிய நாட்டை ஆளத்தரவில்லை என்கிற ஏமாற்றத்துடனும், எரிச்சலுடனும் 1726 ஆம் ஆண்டு ஆளுநராக இலங்கை வந்து சேர்ந்தார். ஒரு கையால் தன் ஒரு கண்ணை மறைத்தபடி தான் அவர் எதிரிலுள்ளவர்களை விழிப்பார். இந்த சிறிய நாட்டு முட்டாள்களைப் பார்ப்பதற்கு ஒரு கண்ணே போதும் என்பது தான் அவரின் விளக்கம். மூன்றே மூன்று ஆண்டுகள் தான் அவர் இலங்கையை ஆட்சி செலுத்தினார்.(2) 1729 வரையான அந்த மூன்றாண்டுகளுக்குள் அவர் மேற்கொண்ட அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஒல்லாந்து ஆட்சியை டச்சு ஆட்சி என்றும் அழைப்போம். அன்றைய ஒல்லாந்து காலனித்துவ ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு அரச ஆக்கிரமிப்பாக நிகழவில்லை. வர்த்தக, வியாபார கம்பனியாகத் தான் நாடுகளைப் பிடிப்பதையும், வர்த்தகம் செய்வதையும், ஆட்சி செய்வதையும் புரிந்தனர். குடியேற்றவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக டச்சு அரசாங்கத்தால் அனுமதிபெற்ற அன்றைய பல்தேசிய நிறுவனம் என்று கூறலாம். உலகின் முதலாவதுபல்தேசிய கம்பனியும் (Multi-national company) அதுதான். அக் கம்பனியின் மீது ஒல்லாந்து அரசின் அனுசரணையும், அதிகாரமும் இருந்தது. அரசு அதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது. அவ்வரசு பெரும்பகுதி வரியைப் பெற்றுக்கொண்டது. சுமார் 450 வருடங்களாக இலங்கையை ஆக்கிரமித்து தலா சுமார் ஒன்றரை நூற்றாண்டுகள் ஆட்சி செய்த மூன்று நாடுகளும் கம்பனிகளின் மூலம் தான் இந்த ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தின. உதாரணத்துக்கு: போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி (Portuguese East India Company), போர்த்துக்கீச கம்பனியை ’Vereenigde Oost-Indische Compagnie’ (United East India Company)என்றும் கூறுவார்கள் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி (The Dutch East India Company (VOC)), பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி (British East India Company) என்கிற நிறுவனங்களை நினைவுக்குக் கொண்டு வரலாம். இலங்கையைப் பொறுத்தளவில் முதலாவது ஆங்கிலேய ஆளுநராக பிரடறிக் நோர்த் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து முழுமையாகவும், நேரடியாகவும் பிரித்தானிய முடியின் கீழ் இலங்கையைக் கொண்டுவந்தார். போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் 1640–1796 வரை சுமார் 156 ஆண்டுகள் ஆண்டார்கள். இன்னமும் சொல்லப்போனால் போர்த்துகேயரை விட, ஆங்கிலேயர்களை விட அதிகமான காலம் ஆண்டவர்கள் ஒல்லாந்தர்கள் தான். அவர்களின் ஆட்சிக்காலத்தில் மொத்தம் 42 ஆளுநர்கள் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் 24 வது ஆளுநர் தான் இந்த பேத்ருஸ் வுயிஸ்ட். 1723 இல் ஆளுநர் ரம்ப் (Isaak Augustijn Rumpf) தனது அலுவலகத்தில் திடீர் என்று இறந்து விடுகிறார். அடுத்த மூன்று ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் ஆர்னோல்ட் (Arnold Moll -1723 இல்), யோஹன்னஸ் (Johannes Hertenberg -1724இல்)(3), ஜோன் போல் (Joan Paul Schaghen – 1725இல்)(4) மூன்று ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு நிரந்தர ஆளுநரை நியமிப்பதில் இருந்த இழுபறியின் போது தான் அந்த இடத்துக்கு பேத்ருஸ் வுயிஸ்ட் (Petrus Vuyst) விண்ணப்பித்திருந்தார். பேத்ருஸ் வுயிஸ்ட் வாழ்க்கைப் பின்னணி வுயிஸ்ட் பத்தாவியாவில் இருந்து தான் வந்தார். அன்றைய பத்தாவியா (Bataviya என்பது இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நகரம்) என்பது டச்சு கிழக்கிந்திய கம்பனியின் தலைமையகமாக இருந்தது. பல முடிவுகள் அங்கிருந்து தான் எடுக்கப்பட்டன. வுயிஸ்ட்டின் தந்தை Hendrik Vuyst டச்சு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தாய் Maria de Nijs இந்தோனேசிய ஜாவா பின்னணியைச் சேர்ந்தவர். தந்தை ஹென்றிக் வுயிஸ்ட் (Hendrik Vuyst (1656–1705)) கிழக்கிந்திய கம்பனியின் நீண்ட சேவைக்காலத்தைக் கொண்ட ஒரு அதிகாரி. வுயிஸ்ட் பிறந்ததும் பத்தாவியாவில் தான். 1691 இல் பிறந்த வுயிஸ்ட் தந்தையின் ஒல்லாந்து நாட்டில் தான் கல்வி கற்று தேறினார். கல்வியின் பின் ஒரு வரி வழக்கறிஞராக தொழிலைத் தொடங்கினார். ஒல்லாந்தைச் சேர்ந்த பார்பரா என்கிற பெண்ணை 1714இல் மணம் செய்துகொண்டார்.(5) பின்னர் 1717 இல் பத்தாவியா வந்து சேர்ந்த அவர் அங்கும் ஒரு வரி வழக்கறிஞராக கடமை புரிந்தார். பார்பராவின் குடும்பத்தினர் கிழக்கிந்திய கம்பனியில் செல்வாக்குள்ள குடும்பம் என்பதால் அதன் மூலம் வுயிஸ்ட்டும் பணியில் இணைந்து கொண்டார். 1721 இல் அவர் கிழக்கிந்திய கம்பனியின் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டார். 1722 இல் அவர் வங்காளத்துக்கு பொறுப்பான இயக்குனராக பொறுப்பேற்று இந்தியாவில் கடமையாற்றினார். இரண்டு ஆண்டுகளில் பத்தாவியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அங்கே அவருக்கு அரசாங்கத்தின் உயர் வழிகாட்டுனராக ஆனார்.(6) 1724 ஆம் ஆண்டு கவுன்சிலுக்கும் தெரிவானார். 1725 ஆம் ஆண்டு மே மாதம் அவர் நகரசபையின் தலைவராகவும் (president van Schepenen) தெரிவானார். சரியாக ஒரு வருடத்தில் அதாவது மே 1726 இல் அவர் இலங்கைக்கான ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை சென்றடைந்து செப்டம்பரில் இருந்து ஆதிகாரம் செலுத்தத் தொடங்கினார். அதன் பின் இலங்கையில் 1726 ஆம் ஆண்டு வுயிஸ்ட் இலங்கையின் கவர்னராக நியமிக்கப்படும்போது அவருக்கு முப்பது வயது தான் நிரம்பியிருந்தது. ஆரம்பத்தில் நல்லவராக வளர்ந்தாலும் இந்த பருவத்தின் போது அவர் மிகவும் குரூர குணம் உள்ளவராக மாறியிருந்தார். அவர் காலியை வந்தடைந்த போது ஒரு கண்ணை கறுப்புத்துண்டால் மூடியபடியே இருந்தார். அவரை வரவேற்ற ஒரு உயர் அதிகாரி அவரைப் பார்த்து உங்கள் கண்களுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரித்தபோது, இலங்கை போன்ற ஒரு சின்ன குட்டிமுட்டை நாட்டை ஆள்வதற்கு இரண்டு கண்கள் தேவையில்லை என்றும் ஒரு கண்ணே தனக்குப் போதும் என்று திமிராக கூறித்திருந்தார்.(7) அடுத்த வாரம்... அடிக்குறிப்புகள் 1727 இல் ஆளுநர் வுயிஸ்ட் வெளியிட்ட ஒரு ஆவணத்தின் அன்றைய தமிழ் கையெழுத்துப் பிரதியில் (Plakkaat) “பெதுருஸ் பொயிஸ்த்” என்றே குறிப்பிடுவதைப் பார்க்கலாம். இந்த ஆவணத்தின் விரிவான உள்ளடக்கம்; தனிநாயகம் அடிகளார் தொகுத்து, சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் 2014 இல் வெளியிடப்பட்ட “Tamil culture Vol.XI – 1964” என்கிற நூலில் எஸ்.தனஞ்சய ராஜசிங்கம் எழுதிய “A Phonological and Morphological Study of a Tamil Plakkaat” என்கிற கட்டுரையில் காணக் இருக்கிறது. Anczewska, Malgorzata , Sri Lanka, Singapore : APA Publications, 2015 19.10.1725 அன்று ஆளுநர் யோஹன்னஸ் திடீர் மரணமுற்றார். இன்றும் அவரது கல்லறை கல் வுல்பெண்டால் தேவாலயத்தில் காணலாம். ஜோன் போல் 19.10.1725 – 16.09.1726 வரையான ஒரே ஒரு மாதம் மட்டுமே தற்காலிக ஆளுநராக பதவி வகித்தார். A.K.A. Gijsberti Hodenpijl, De overgang van het bestuur van Ceylon van gouverneur Stephanus Versluys in handen van mr. diderik van Domburgh; 1732-1733, Nijh VI,, 1919. https://www.vocsite.nl/ David Hussly, Ceylon and World history II (1505 A.D. TO 1796 A.D), W.M.A.Wahid & bros, Colombo, 1932. நன்றி - தினகரன் 21.11.2021 https://www.namathumalayagam.com/2021/11/colomboVuyst.html?fbclid=IwAR3jOB_I6Rb2NgRBzBMGaKv4vReHOup1xY0u_Jx8a8HKt2Gck8c-T9nQbFU 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nochchi Posted November 26, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted November 26, 2021 நிழலியவர்களே இணைப்புக்கு நன்றி. படைப்பாளருக்குப் பாராட்டுகள்! Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted November 30, 2021 தொடங்கியவர் Share Posted November 30, 2021 ஒரு மனநோயாளி ஆட்சியாளனானால்...!? (கொழும்பின் கதை - 5) - என்.சரவணன் இலங்கையைப் பற்றி டச்சு மொழியில் பதிவு செய்தவர்கள் சிலர் இலங்கையைப் பற்றி அவ்வளவு இழிவாக பதிவு செய்திருக்கக் கூடும். அல்லது அப்படி இழிவாக பதிவு செய்திருப்பதை மட்டும் வுயிஸ்ட் பார்த்திருக்கக் கூடும். எனவே தான் வுயிஸ்ட் இலங்கையர்கள் பற்றிய மட்டமான எண்ணங்களைக் கொண்டிருந்தார். பல நூல்களில் வுயிஸ்ட் ஒரு மனநிலை பிறழ்ந்து இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன என்றே குறிப்பிடுகின்றன. பிரபல டச்சு வரலாற்றாசிரியர் குடீ மொல்ஸ்பெர்கன் (E.C.Godée Molsbergen) எழுதிய “Tijdens de O.-I. Compagnie” என்கிற டச்சு மொழி நூலில் 47 வது அத்தியாயம் வுயிஸ்டின் ஆட்சியைப் பற்றி எழுதியிருக்கிறார். அவ்வத்தியாயத்துக்கு அவர் வைத்திருந்த தலைப்பு “De krankzinnige Gouverneur” (பைத்தியைக்கார கவர்னர்) என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நூலில் வுயிஸ்ட் மேற்கொண்ட அட்டூழியங்கள், சித்திரவதைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக மூன்று அத்தியாயங்களில் விளக்கப்பட்டிருக்கிறது .(1) வுயிஸ்ட் காயங்களினால் வெளியாகும் இரத்தத்தைப் பார்த்து இன்பமடைந்தார். இரவு விருந்துக்காக கொண்டுவரப்படும் விலங்குகளை இறைச்சியாக கொண்டு வராமல் உயிருடன் அவற்றைக் கொண்டு வந்து அவற்றை தீயில் இடும் போது கேட்கும் சத்தத்தில் இன்பமடைந்தார். Sadist என்கிற துன்பூட்டுவேட்கை மிகையாகவே அவரிடம் இருந்தது. அது போல பாலியல் இன்பத்தையும் அப்படித்தான் அவர் அனுபவித்தார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த ஏனையோரும் வுயிஸ்டின் இயல்பையும், போக்கையும் பற்றி உணர்ந்துகொண்டனர். தன்னைப் பற்றிய மிகை மதிப்பு அவரிடம் இருந்தது. அவரின் ஆட்சி காலத்தில் கடும் தண்டனைகளை நிறைவேற்றினார். நீதியற்ற முறையில் விசாரணைகளை நடத்தினார். டச்சு காலத்தில் 1658 வரை காலி தான் இலங்கையின் தலைநகராக இயங்கியது. 1658 இலிருந்து தான் கொழும்பு தலைநகராக ஆனது. ஏனென்றால் கொழும்பு 1656 இல் தான் போர்த்துகேயரிடமிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். அப்போது டச்சு காலத்து ஆளுநர் வாசஸ்தலமாக இருந்தது இப்போது கொழும்பு கோட்டை புலனாய்வுப்பிரிவு தலைமையகத்துக்கு பின் புறமுள்ள புனித பீட்டர் தேவாலயம். போர்த்துகேயர் அதுவரை ஒரு தேவாலயமாக பயன்படுத்திவந்த அழகிய கட்டிடத்தைத் தான் தமது வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இன்று கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிற் பகுதிக்கு எதிரில் இருக்கும் Grand Oriental Hotelக்கு வலது புறமாக அந்த தேவாலயம் இன்றும் இருக்கிறது. ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய சில ஆண்டுகளில் 1804 இல் அதனை தமது படையினர் வழிபடுவதற்காக St Peter’s Church ஆக ஆக்கினார்கள். ஆளுநர் வுயிஸ்ட்டின் வாசஸ்தலமாகவும் இது தான் இருந்தது. வாசஸ்தலத்திலிருந்து அருகாமையில் தான் காலிமுகத்திடலும் இருக்கிறது. இதுவும் படைமுகாம்கள், நிர்வாக இயந்திரம் அனைத்தும் அன்றைய கொழும்பு கோட்டைக்குள் தான் இருந்தன. தண்டனைகளை பகிரங்கமாக நிறைவேற்றும் இடமாக அன்று காலிமுகத்திடலை பயன்படுத்திக்கொண்டார் ஆளுனர். அங்கே நிரந்தமாக தூக்குமேடை இருந்தது. தூக்கிடுவதை நிறைவேற்றுகின்ற அலுகோசுமாரும் நிறைந்தமாக அங்கே பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். கசையடி, சுட்டுக் கொல்வது உட்பட பல அங்கே தண்டனைகள் அங்கே நிறைவேற்றப்பட்டன. அதை வேடிக்கை பார்ப்பதற்கு பல மனிதர்கள் காலிமுகத்திடலில் கூடினார்கள். தூக்கிடப்பட்டவர்களின் பிணங்கள் நாய்கள் பிய்த்துத் திண்ணுவதும், அழுகி சிதைந்து சின்னாபின்னமாகி நாற்றமெடுக்கவும் செய்தன. அதுபோல அப்படி கொல்லப்பட்டவர்கள் அதே காலிமுகத் திடலிலேயே அடக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் வுயிஸ்டுக்கு முன்னரே நிகழத் தொடங்கிவிட்டன. (2) வுயிஸ்ட் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார். அவரின் ஊழலும் துஷ்பிரயோகமும் நீதித்துறையைக் கூட பாதித்தது. ஆளுநரின் பிழையான வழிகாட்டுதலின் மூலம் டச்சு சிவில் அதிகாரிகளும், படையில் அதிகார மட்டத்தில் இருந்தவர்களும் சாதாரணர்களும் கூட மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். டச்சு ஆட்சியில் கொழும்பை மையப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கியபின் குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் களமாக காலிமுகத் திடல் இருந்தது. ஆட்சிக்கவிழ்ப்பு பீதியின் விளைவு வுயிஸ்ட் தனக்கு எதிராக ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதிமுயற்சி பற்றிய ஒரு வதந்தியை நம்பினார். அதைப் பற்றிய அதீத பீதியாலும் கற்பனைகளாலும் அவர் இந்த சதி முயற்சி குறித்து சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கைது செய்து அடைத்தார். காலி கோட்டையில் அன்று தளபதியாக இருந்த யொவான் பால் ஷாகென் (Joan paul schaghen) குற்றவியல் விசாரணைக்கு நடத்தப்பட்டு மோசடி குற்றமும் சுமத்தப்பட்டார். அவரை நீக்கி கொழும்பு கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். பணியில் இருந்த சில முக்கிய போதகர்களும் இன்னும் சில அதிகாரிகளும் கூட பணிநீக்கம் செய்யப்பட்டு பத்தாவியாவுக்கு அனுப்பப்பட்டனர். அதேவேளை தனது ஆக்கிரமங்களை அவர் மேலும் அதிகரித்தார். 1729 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காவலர்களை ஓய்வில்லாமல் வேலை வாங்கினார். இரவுக் காவலுக்கு திடீர் என்று எழுப்பப்பட்டு வேலைவாங்குவது வழமைக்கு கொண்டுவரப்பட்டது. அது இரவு நேரக் கொள்ளையைத் தடுப்பதற்காக என்று அவரால் அறிவிக்கப்பட்டது. தூக்கமிழந்த இராணுவத்தினர் தமது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கினார்கள். அப்படி எதிர்த்தவர்கள் அனைவரும் தடியால் தாக்கப்பட்டார்கள் அதன் பின்னர் கொழும்பு கரையோரத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்களில் சிறைவைக்கப்பட்டார்கள். அவருக்கு எதிராக வளர்ந்து வந்த எதிர்ப்புகளை காலப்போக்கில் அவர் தனக்கு எதிரான அரச கவிழ்ப்பு சதியென நம்பத் தொடங்கினார். தான் நம்பிய புனைவுக்கு உருவகம் கொடுத்து காண்பவரையெல்லாம் சந்தேகம் கொள்ளும் மனநோய்க்கு ஆட்பட்டார். அவருக்கும் கிழக்கிந்திய கம்பனிக்கும் எதிராக சதி செய்வதற்காக உளவு பார்க்கும் ஒரு பரந்த வலையமைப்பு இயங்கியதாக அவர் நம்பினார். அப்படிப்பட்ட சந்தேகநபர்களை வரிசையாக தண்டித்தார். அவர்களை விசாரிப்பதற்காக ஒரு இராணுவ நீதிமன்றத்தை கொழும்பில் அமைத்தார். கிழக்கிந்திய கம்பனியின் எந்த அனுமதியுமின்றி விசேட இராணுவ நீதிமன்றத்தை (Blood council) அமைத்து அங்கே விசாரணைகளை நடத்தினார். அவரே அந்த விசேட நீதிமன்றத்தின் தலைவராகவும் தன்னை ஆக்கிக்கொண்டார். இந்த நீதிமன்றத்தின் மூலம் ஏராளமான டச்சு இராணுவத்தினரும், டச்சு பணியாளர்களும் கூட தண்டிக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் அவர் ஒரு மிக மோசமான சித்திரவதைகளை செய்கிற ஒரு சாடிஸ்ட் ஆட்சியாளராக ஆனார். உண்மைகளை வெளிக்கொணர்வது என்கிற பேரில் அவர் மிகவும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை மேற்கொண்டார். நகங்களைப் பிடுங்குதல் மற்றும் சூடான மெழுகை உடலில் ஊற்றுதல், காயச் சிதைவுகளில் அரிப்புகளைப் பயன்படுத்துதல், கால்களின் எலும்புகளையும் உடைத்தல் மட்டுமன்றி சந்தேக நபர்களின் தலைகளைத் துண்டிப்பது வரை அவர் அட்டூழியம் செய்தார். காலிமுகத்திடலை ஒரு கொலைக்களமாகவே ஆக்கினார். சில அழகிய யுவதிகள் காணாமல் போனார்கள். குற்றவாளிகள் மர்மமான முறையில் சாவடைந்தார்கள். இதை பற்றிய கதைகள் நாட்டுக்குள்ளும் அரசல்புரசலாக கதைகள் உலவின. கேள்வி கேட்ட அதிகாரிகள் பதவியுயர்களால் சலுகைகளாலும் வாயடைக்கபட்டார்கள். இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் பற்றிய விபரங்களும், அறிக்கைகளும் தொடர்ச்சியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒல்லாந்துக்கு சென்றடைந்தன. 1727 யூன் 7 அன்று இலங்கையில் இருந்த டச்சு அரசியல் சபையால் இரகசிய முறைப்பாடு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் பத்தாவியா தலைமையகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன் பின் அதே மாதம் 30 ஆம் திகதி இன்னொரு முறைப்பாடும் சென்றது. ஆனால் வுயிஸ்ட் தனது ஆட்சியில் உள்ள வளர்ச்சியை அறிக்கையாக அனுப்பினார். குறிப்பாக அவர் சென்றதன் பின்னர் மிளகு உற்பத்தி எந்தளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது பற்றியெல்லாம் அறிக்கை எழுதினார். அவரின் காலத்தில் மிளகு உற்பத்தி விவசாயிகளின் நிலங்களில் ஒரு பகுதி டச்சுக் கம்பனியிடம் ஒப்படைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர் ஓகஸ்ட் மாதமும் விரிவான ஒரு இரகசிய முறைப்பாடு அவருக்கு எதிராக அனுப்பப்பட்டது. அதில் வுயிஸ்ட் நடத்தும் காட்டுத் தர்பார் பற்றிய விபரங்கள் அடங்கியிருந்தன. தொடரும் உசாத்துணை E.C.Godée Molsbergen, Tijdens de O.-I. compagnie, Amsterdam, Swets, 1932. වජිර ලියනගේ - ඕලන්දයේදී එල්ලා මැරූ ලංකාවේ සිටි ඕලන්ද ආණ්ඩුකාරයා, லங்காதீப – 13.06.2018 (இக்கட்டுரையில் வுயிஸ்ட் ஒல்லாந்தில் மரணதண்டனை அளிக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருகிறது. ஆனால் அவர் பத்தாவியாவில் தான் மரண தண்டனை அளிக்கப்பட்டார்) நன்றி - தினகரன் 28.11.2021 https://www.namathumalayagam.com/2021/11/ColomboDutch.html?fbclid=IwAR143w7JET4seBGxwc7D1O1vyts1xycbaXVOYUD2-xNe1bDFtaDwQrIHCuw 1 Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted December 7, 2021 தொடங்கியவர் Share Posted December 7, 2021 கொழும்பு பெய்லி வீதியின் ஒரு டச்சுகால சோகக் கதை! (கொழும்பின் கதை - 6) என்.சரவணன் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் 1601 மே 05 ஒல்லாந்தைச் சேர்ந்த கடற்படை அட்மிரல் ஜோரிஸ் வான் ஸ்பில்பெர்கன் (Joris van Spilbergen) தனது நீண்டகால கடற் பயணத்தில் இலங்கைத் தீவை வந்தடைந்தார். இலங்கையின் முதலாவது டச்சு தூதுவரும் அவர் தான். உயர் தரம் மிக்க கருவா இலங்கையில் அவர் கண்ட பின்னர் அன்றைய கண்டி மன்னன் முதலாம் விமலதர்மசூரியவுடன் 1602 இல் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டது பற்றிய வரலாற்றுப் பதிவை அறிவீர்கள். ஸ்பில்பெர்கன் அவரின் நெடும் பயணம் பற்றி ஏராளமான குறிப்புகள் எழுதிவைத்திருக்கிறார். அவை சிங்களத்தில் நூலாகவும் இப்போது கிடைக்கிறது. அவரின் குறிப்பில் அந்த அற்புதத் தீவுக்கு செல்வது தனது வாழ்க்கையின் அதிசிறந்த பாக்கியம் என்று குறிப்பிடுகிறார். அவர் இலங்கை வந்த காலத்தில் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பித்திருக்கவில்லை. அவர் டச்சு நாட்டுக்கு திரும்பியதும் இலங்கை பற்றி அவர் வெளியிட்ட கருத்துக்களால் கவரப்பட்ட வியாபாரிகள் இலங்கைத் தீவுக்குச் செல்ல ஆர்வம் காட்டினர். அவர் இலங்கை வந்திருந்தபோது போர்த்துக்கேயர் கரையோரங்களை ஆண்டுகொண்டிருந்தார்கள். அதன் பின் நான்கு தசாப்தங்களின் பின்னர் டச்சுக்காரர்கள் போர்த்துகேயருடன் சண்டையிட்டு இலங்கையைக் கைப்பற்றிய கதையும் அறிவீர்கள். அன்று டச்சு கிழக்கிந்திய கம்பனியின் மத்திய நிர்வாகத்தை மேற்கொள்கின்ற நிறுவனமாக Heeren XVII (பதினேழு கனவான்கள்) என்கிற அமைப்பு இயங்கியது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை நேரடியாக தன் தரப்பு நியாயங்களை வுயிஸ்ட் அனுப்பினார். சதி பற்றிய வுயிஸ்டின் பிரம்மையை கவுன்சிலும் நம்பவில்லை. இலங்கையில் இருந்த போர்த்துக்கேய வம்சாவளியினரும், மக்களும் ஒன்று சேர்ந்து தன்னைக் கொன்றுவிட்டு கொழும்பு கோட்டையை கோவாவில் தரித்திருக்கின்ற போர்த்துக்கேயரிடம் ஒப்படைப்பதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக ஒரு மாயைக்குள் சிக்கினார். மலபாரில் இருந்த தளபதி ஜேக்கப் டி ஜாங் ஒரு கடிதத்தின் மூலம்; அப்படிபோர்த்துகேயர்களின் கப்பல்கள் எங்கும் காணப்படவில்லை என்றும், கோவாவில் ஒரே ஒரு கப்பல் மட்டுமே இருப்பதையும் மார்ச் மாதம் அறிவித்தார். தனக்கு எதிரான சதியில் இருந்து தப்பிச் செல்வதற்காக கப்பலில் தனது பொருட்களையும் ஏற்றி முடித்திருந்தார். ஆனால் வுயிஸ்ட் சந்தேகநபர்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். அதே மார்ச் மாதம் அவர் பலரைக் கைது செய்து மேற்கொண்ட அட்டூழியங்களை எதிர்க்க எவரும் துணியவில்லை. மார்ச் ஏப்ரல் மாதங்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானோர் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். அவரது குண்டர்கள் சந்தேகத்திற்குரிய குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று 19 பிரதேச அதிகாரிகள் கைது செய்தனர், அவர் அளித்த மரணதண்டையின் குரூரத்தால் நிர்வாகமே நடுநடுங்கிப் போயிருந்தது. 1929ஆம் ஆண்டு பெப்ரவரி 11 க்கும் ஏப்ரல் 30க்கும் இடையில் மொத்தம் 19 பேர் இவ்வாறு இந்த விசாரணையின் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டார்கள். இவர்களில் ஆறு பேர் தூக்குமேடையில் தூக்கிடப்பட்டார்கள். ஆனால் எட்டு பேர் மரத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். சிலரது கைகால்கள் உடைக்கப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டன. அப்படிப் பலியானவர்களில் ஒருவரின் மார்பு பிளக்கப்பட்டு அவரின் இதயம் நீக்கப்பட்டது. மூவர் அடித்து எலும்புகள் நொறுக்கப்பட்டு தலைகள் தனியாக வெட்டப்பட்டு அத்தலைகளை ஈட்டிகளில் வைத்து நடப்பட்டன. அதாவது கழுவேற்றம் செய்யப்பட்டனர். நூறாண்டுகளுக்கு முன்னர் (1907) கொழும்பு இல் கொழும்பு அரசாங்க சுவடிகூடத் திணைக்களம் வெளியிட்ட The dutch Records என்கிற டச்சு ஆவணத் தொகுப்பில் இப்படி குறிப்பிடப்படுகிறது. “ஆனால் அவர்களில் மூன்று பேருக்கு, ஃபிரடெரிக் ஆண்ட்ரிஸ் (Frederick Andriesz,), ஜான் டி காவ் (Jan de Cauw), பேரன்ட் ஷூர்மன் (Barent Schuurman), ஆகிய மூவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை இந்த அனைத்து படுகொலையிலும் அதி கொடூரமான காட்டுமிராண்டித்தனமாக இருந்தது. அவர்களின் எலும்புகள் உடைக்கப்பட்டு, அவற்றின் சதை கிழிந்து, அவர்களின் தலைகள் கோடரியால் கொத்தப்பட்டு பிறகு, உடல் பகுதிகள் கிழித்து இழுக்கப்பட்டு, அவர்களின் தலைகள் கொய்யப்பட்டு இருப்புக் கம்பிகளில் குத்தி நிறுத்தப்பட்டன . இந்த அட்டூழியங்கள் பற்றிய செய்தி தொடர்ச்சியாக பதாவியாவை எட்டின. மேலும் ஒரு புதிய ஆளுநரை அங்கே அனுப்பிவதற்கு காலம் தாமதிக்கவில்லை. அந்தக் கொடுங்கோலரைக் கைது செய்து பத்தாவியாவுக்கு சங்கிலியால் பிணைத்து கொண்டுவர உத்தரவிடப்பட்டது. டச்சு ஆட்சியிலேயே இது தான் இருண்ட காலம்.” (Anthonisz, R. G) டச்சு லெப்டினன்ட் பெஞ்சமின் பகலொட்டி (Lieutenant Benjamin Pegalotty), லெப்டினன்ட் அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ் (Lieutenant Andries Swarts) ஆகியோர் பெயிலிஸ் வீதி கட்டிடத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் சதிகாரர்களாக குற்றம்சாட்டப்பட்டார்கள். 12 மார்ச் 1729 அன்று லெப்டினன்ட் அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் நெஞ்சைக் குத்திக் கிழித்து இதயத்தை வெளியே எடுத்து அவரின் முகத்திலேயே எறிந்தார். அதன் பின்னர் ஆளுநர் வுய்ஸ்ட்டால் “இரத்த நீதிமன்றம்” (Blood Council) என்று அழைக்கப்பட்ட அவரின் கொண்டுங்கோன்மைச் சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர். பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார் பெஞ்சமின். இந்த தண்டனைக்குப் பிறகும் ஆளுநர் திருப்தியடையவில்லை. இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றார். அவர் தன்னிஷ்டமாக உருவாக்கிய அரசியல் சபையில் தீர்மானம் கொண்டு வந்து அந்த கட்டிடத்தை இடிக்கத் தீர்மானம் நிறைவேற்றினார். அது பற்றிய தீர்மானம் இப்படித்தான் நிறைவேற்றப்பட்டது வியாழன் மதியம், ஜூன் 23, 1729 இன்றைய தினம்: ஆளுநர் த Petrus Vuyst ஹூயிட் நிர்வாகி, டிர்க் பைரன்ஸ். திசாவ, பீட்டர் கார்னெலிஸ் டி பாடோட். செயலாளர், ருடால்ப் பைசெலார். நிதிப் பொறுப்பாளர், ஜோஹன் பெர்னார்ட் வெயிட்னாவ். முதன்மை கிடங்கு காப்பாளர், கார்னெலிஸ் வான் ஏர்டன். இரண்டு பரம துரோகிகளான அந்திரிஸ் ஸ்வார்ட்ஸ் மற்றும் பெஞ்சமின் பெகலோட்டி ஆகியோருக்கு எதிராக கடந்த மார்ச் 11 ஆம் தேதி இங்குள்ள இராணுவ நீதிமன்றம் வழங்கிய தண்டனையின் மூலம், குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்குவது மட்டுமல்லாமல், ஏனைய தண்டனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டைக்குள் உள்ள “கோர்னொன்தே ஸ்ட்ராட்” (பெய்லி தெரு) என்று அழைக்கப்படும் முதலில் பெயரிடப்பட்டவருக்குச் சொந்தமானது. அடுத்தது நகரத்தில் (பெட்டா (இன்றைய புறக்கோட்டை)) இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சொந்தமானது; அவை இடிக்கப்பட்டு இந்த இரண்டு கட்டிடங்கள் உள்ள இடத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட வேண்டும், அது கவர்னர் அது எங்கு வைக்கப்பட வேண்டும் என்று கணிப்பார். மாண்புமிகு ஆளுநர் ஏழு அடியுள்ள நான்கு பக்க கல் தூண்கள் தயார் செய்து, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தலைகளை இரும்பு ஈட்டியில் குத்தி நிறுத்த வேண்டும். அதில் பின் வரும் வாசகம் கல்வெட்டாகப் பொறிக்கப்பட வேண்டும். 1729 ஆம் ஆண்டில், தூக்கிலிடப்பட்ட துரோகி ஆண்ட்ரீஸ் ஸ்வார்ட்ஸின் சபிக்கப்பட்ட நினைவாக இந்த நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது - அவர் இடிக்கப்பட்ட வசிப்பிடத்தின் தளத்தில் - நீதிமான்களுக்கு கடவுள் அவருடைய நலனுக்காக இடைவிடாத நன்றியின் அடையாளமாகவும், துன்மார்க்கருக்கும், தீமைக்கு எதிராகவும் நிரந்தர எச்சரிக்கையாகவும் இருக்கும். “மேற்கூறிய இரண்டு இடங்களிலும், மற்ற தேசத் துரோகி பெஞ்சமின் பெகலோட்டியின் பெயருக்கான கல்வெட்டில் தேவையான மாற்றங்களுடன் இரண்டு தூண்களை அமைக்கின்ற வகையில் அமைப்பது தொடர்பாக அவையின் உறுப்பினர்களுக்கு ஆளுநர் முன் வைத்தார். டச்சு, சிங்களம் மற்றும் மலபார் (தமிழ்) மொழிகளில் உள்ள கல்வெட்டு, அனைவரும் படித்து புரிந்து கொள்ளக் கூடிய வகையில் மும்முமொழியிலும் அது வைக்கப்படவேண்டும் "மேற்கூறியவை அனைத்தும் உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, மாண்புமிகு ஆளுநரின் நோக்கத்துடன் அவர்கள் தங்கள் முழு உடன்பாட்டையும் அறிவித்து, ஒவ்வொரு மொழியிலும் மேற்கூறிய மூன்று மொழிகளிலும் மேற்கூறிய கல்வெட்டுடன் அத்தகைய தூணை அமைக்க தீர்மானிக்கப்படுகிறது. தேசத் துரோகி பெஞ்சமின் பெகலோட்டியின் பெயர்களில் தேவையான மாற்றங்களுடன் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” (1) இந்தத் தீர்மானத்தின் படி அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு அவர்கள் வசித்த பகுதியில் கல்வெட்டை நிறுவி மரணதண்டைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் தலைகள் அங்கே ஈட்டியில் குத்தி காட்சிக்கு வைக்கப்பட்டதுடன். வாசகம் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் நிறுவப்பட்டது. இக்கட்டிடம் பற்றி ஓரளவு அறிந்தவர்கள் கூட ஆளுநர் வுய்ஸ்ட்டால் அழிக்கப்பட்டு பின்னர் மீள கட்டப்பட்டது என்கிற சாராம்சக் கதையை மட்டும் தான் பெரும்பாலும் அறிந்திருப்பார்கள். ஆனால் அதை விட குரூரமான நிகழ்வுடன் தொடர்புபட்டது இக் கட்டிடம். இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் எங்கே என்று கேட்கிறீர்களா? பெஞ்சமின், அந்திரிஸ் இருவரும் வசித்த அந்தக் கட்டிடம் பின்னர் கட்டப்பட்டது. அதைக் கொழும்பில் இப்போதும் காணலாம். அது கொழும்பு கோட்டையில் பெயிலிஸ் வீதி (Baillie Street) அமைந்திருந்ததாக பல ஆவணங்களில் காணக் கிடைக்கின்றன. இன்று அப்படி ஒரு வீதி இல்லை. ஆம் அந்த வீதி இன்று முதலிகே மாவத்தை என்கிற பெயரில் காணலாம். இன்றைய ஜனாதிபதி மாளிகைக்கு எதிரில் இந்த வீதி அமைந்துள்ளது. அதில் 41 வது இலக்கக் கட்டிடம் இன்றும் அப்படியே உள்ளது. வூயிஸ்டை பதவி நீக்கம் செய்த பிறகு, அவரின் கொடுங்கோல் சட்டத்திற்குப் பலியானவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நடவடிக்கையை அதன் பின்னர் வந்த ஆளுநரும் அதிகாரிகளும் மேற்கொண்டார்கள். அதன்படி அதற்கு முன் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்வது, அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுக்கொடுப்பது என்பன மேற்கொள்ளப்பட்டன. வுயிஸ்டுக்குப் பின் பெஞ்சமின், அந்திரிஸ் ஆகியோர் வாழ்ந்த வந்த பெயிலிஸ் வீதி கட்டிடம் புதிய ஆளுனரால் அந்தக் காணி உரிமையாளருக்கே திருப்பி அளிக்கப்பட்டது. அதை அவர் முன்னர் இருந்த அதே வடிவத்தில் அதைக் கட்டி முடித்தார். அக்கட்டிடத்தின் வாயிலில் இப்படி ஒரு கல்வெட்டை பதித்தார். ‘DOOR GEWELT GEVELT, DOOR’T REGT HERSTELT’ (அநீதியால் அழிக்கப்பட்டது... நீதியால் மீண்டும் எழுப்பப்பட்டது) இன்றும் முதலிகே மாவத்தையில் அக்கட்டிடத்தையும் இந்த வாசகத்தையும் அப்படியே நம்மால் காணமுடியும். சுமார் முன்னூறு வருட கால பழமைவாய்ந்த டச்சு கல்வெட்டு அது என்று கூட நாம் கூறலாம். இன்றும் அந்த வாசகத்துடன் அக்கட்டிடத்தைப் பார்க்கலாம். இப்போது கடற்படையினர் அக்கட்டிடத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்று அவர்களிடம் கேட்டால் கூட இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய வரலாறு பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். இறுதியில் வுய்ஸ்டுக்கு கொடூரகரமான மரண தண்டனை எப்படி எங்கே நிறைவேற்றப்பட்டது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம் தொடரும் நன்றி - தினகரன் 12.12.2021 https://www.namathumalayagam.com/2021/12/ColomboPetrusVuyst.html?fbclid=IwAR2oMWoMtZHcZGsLlQd-u5pJP5kojLZoP44ymfyJoIVxWNmk-qLh6OOiodg 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 7, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2021 நல்ல வாசிப்பு.... ஆனால் ஒரு நுண்ணிய விசயத்தை தவிர்க்கிறார்கள்.... அல்லது கவனிக்கவில்லை போல் தெரிகிறது. வடபகுதியை, தென்பகுதியில் இருந்து தனியாகவே ஆண்டார்கள். இடையே வன்னியும், நடுவே மலையகமும்.... பிரிட்டிஸ்காரர் காலம் வரை சுதந்திரமாகவே இருந்தன. ஆனாலும் இலங்கைத்தீவு என்று முழுவதுமாக என்பது போல கருத்து எழுதுகிறார்கள். Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted December 14, 2021 தொடங்கியவர் Share Posted December 14, 2021 ஆளுநர் வுயிஸ்ட்டுக்கு வழங்கப்பட்ட கொடூரமான மரண தண்டனை (கொழும்பின் கதை - 7) - என்.சரவணன் வுயிஸ்ட்டை கைது செய்வதற்காக ஒல்லாந்திலிருந்து ஒரு குழு இலங்கைக்கு வந்தது. அவர் 3ஆம் திகதி மே, 1729இல் கொழும்பில் சிறைபிடிக்கப்பட்டு பத்தாவியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டு தொடர் விசாரணைகள் நடந்தன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை அது. மே 1729 இல் உச்சநீதிமன்றம் மூன்றாண்டுகாலம் ஆளுநர் பதவி பதவி வகித்த வுயிஸ்டை அப்பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. 1730 பெப்ரவரி 28 அன்று வுயிஸ்ட் 19 பேர் கொல்லப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையில் இருந்து விசாரணைக்காக பத்தாவியாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல ஓவியர் Simon Fokke இந்த தண்டனை பற்றி அன்றே வரைந்த ஓவியம் இது. இரண்டு ஆண்டுகள் வுயிஸ்ட் இரும்பு விலங்குகளால் கட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார். வுயிஸ்ட் மீது நடந்த விசாரணை பற்றிய நான்கு விரிவான ஆவணங்களை டச்சு அரசாங்கம் வெளியிட்டது. தமது கண்டிப்பான நீதித்துறைக்கு முன்னுதாரணமாக டச்சு அரசாங்கம் இந்த வழக்கு பற்றியும், அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு, நிறைவேற்றப்பட்ட தண்டனை என்பவற்றை உள்ளடக்கிய ஆவணத்தைத் தயாரித்து வெளியிட்டது. சிறு நூல் வடிவில் அமைந்த அறிக்கைகள்; பல விபரங்களை உள்ளடக்கியது. அந்த மூல ஆவணங்களை இந்தக் கட்டுரைக்கான ஆய்வின் போது தேடிக் கண்டெடுக்க முடிந்தது. (1, 2, 3) 1. Sententie gewezen by den wel ed: RAADE van india, tegens den heere en mr. Petrus Vuyst, gewezene gouverneur van Ceylon. Geëxecuteert tot Batavia, den 19 mey, 1732. Waar agter gevoegt is de lyst der opontboden en particuliere perzoonen, die met deze in den jare 1733. Ingekomene elf Oost-Indische retourschepen zyn gerepatriëert., 1733. – என்கிற தலைப்பைக் கொண்ட ஆவணம் இது. மே 19, 1732 அன்று பேத்ருஸ் வுய்ஸ்டுக்கு எதிரான மரணதண்டனைத் தீர்ப்பு, பத்தாவியா நீதி மன்றத்தால் அறிவிக்கப்பட்டது. வூயிஸ்ட் 19 அப்பாவி மக்களுக்கு மரண தண்டனை விதித்தது, இன்னும் பலரைத் தவறாக நடத்தியது, பலரை சித்திரவதை செய்தது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரணையை எதிர்கொண்டார், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதன் விளைவாக 3 ஜூன், 1732 அன்று பத்தாவியாவின் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். தீர்ப்பை வழங்கிய எட்டு ஜூரிகளின் பெயர்களும் இறுதியில் உள்ளன. Mr.Gualter Schutten. Mr. Jacob Van Den Bosch. Mr. Jan Blaaukamer. Mr. Jan Rudolph Sappius Mr. Jacob Lakeman. Mr. Bernard Jacob De Lavaille. Mr. David Joan Bake, Mr. Joan Sautyn. 2. De onregveerdige justitie, uytgevoert door den gouverneur petrus vuyst, tot Ceylon, nevens het regtveerdig vonnis en regt, aan hem gouverneur gedaan, door den achtbaren Raad van Justitie, des casteels Batavia. (gedrukt naar de origineele copye), 1733. – அநீதி வழங்கிய இலங்கை ஆளுநர் பேத்ருஸ் வுயிஸ்ட் தொடர்பாக பத்தாவியா கோட்டையில் கனம்பொருந்திய நீதிக்கவுன்சில் வழங்கிய தீர்ப்பு. – 1733 3. Sententie gepronuncieert ende geëxecuteert op ende jegens mr. Petrus Vuyst op dingsdag den 3. Juny 1732. Tot Batavia in Oost-Indien. (na een origineel copy van Batavia zoo ende gelyk het den gevange is voorgelese, getrouwelyk gedrukt 1733.), 1733. – என்கிற தலைப்பைக் கொண்ட ஆவணம் இது. பேத்ருஸ் வுய்ஸ்டுக்கு எதிரான மரணதண்டனைத் தீர்ப்பை, பத்தாவியா நீதி மன்றத்தில் அறிவிக்கப்பட்டது பற்றியும் வூயிஸ்ட் 19 அப்பாவி மக்களுக்கு மரண தண்டனை விதித்தது, இன்னும் பலரைத் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக அவர் விசாரணையை எதிர்கொண்டு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு பின்னர் 3 ஜூன், 1732 அன்று பத்தாவியாவின் கோட்டையில் தூக்கிலிடப்பட்டது பற்றியது. 4. Kort en naauwkeurig verhaal, van ’t leven en opkomst van den heer en mr. Petrus Vuyst. Gewezene gouverneur op ’t eiland Ceilon. Als mede een waaragtig berigt, van alle zyne gepleegde gruwelstukken : als ook de namen van die geene die door hem onschuldig ter dood zyn gebragt, 1732. இலங்கைத் தீவின் முன்னாள் ஆளுநர் பேத்ருஸ் வுயிட்ஸ் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய கொடூரங்கள் பற்றியும் விளக்கும் நூல். – 1732 (டச்சு தேசிய நூலகம்) (4) இறுதியில் மூன்றாண்டுகளின் பின் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று கண்டறிந்து 1732 மே 22ஆம் திகதி அவரின் குற்றங்களை தேசத்துரோகக் குற்றமாக அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. அந்தத் தண்டனை மிகக் கொடூரமான தண்டனையாக இருந்தது. மேற்படி மூன்றாவது அறிக்கையில் வுயிஸ்டுக்கு எப்படிப்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டது என்பது பற்றி விபரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த 19 அப்பாவிகள் மீது அவர் மேற்கொண்ட சித்திரவதைகள், மரணதண்டனைகள் பற்றிய தீர்ப்பு இது.(5) இலங்கைத் தீவு அவரின் ஆட்சியின் கீழ் மோசமான கொடுங்கோன்மைக்கு உட்பட்டது என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.(6) வுயிஸ்டுக்கு அளிக்கப்பட்ட அந்த மரண தண்டனையை நேரில் கண்ட சாட்சியொருவரின் பதிவை பிற்காலத்தில் E.C.Buultjens மொழிபெயர்த்தார்.(7) 1732 யூன் 3 ஆம் திகதி பத்தாவிய நகரத்தில் குழுமியிருந்த பொது மக்கள் முன்னிலையில் இந்த மரண தண்டனையை நிறைவேற்ற பிரேத்தியேகமாக செய்யப்பட்டிருந்த மேடையில் ஒரு நாற்காலி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை நான்கு மணியிலிருந்து இதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இறுதி நேரத்தில் வுயிஸ்ட் தான் செய்த அத்தனையும் கம்பனியின் பாதுகாப்புக்காகவும், நலனுக்காக்கவுமே செய்தேன் என்று தெரிவித்தார். காலம் கடந்துவிட்ட அறிவிப்புகளாக அவை இருந்தன. மதப் பிரார்த்தனை முதலில் நிகழ்ந்தது. அது முடிந்ததும். ஜூரிகளும், மக்களும் பார்த்திருக்க அவரை நிர்வாணப்படுத்தி, மேடையில் இருந்த கதிரையில் அமர்த்தி இறுகக் கட்டினார்கள். பின்னர் கத்தியுடன் வந்த தண்டனை நிறைவேற்றுபவர் வுயிஸ்டின் தலையை பின்புறமாக இழுத்துப் பிடித்து தொண்டையை அறுத்தார். வுயிஸ்ட் துடித்து இறந்தார். அதன்பின் அப்படியே கழுத்தெலும்போடு அறுத்து துண்டித்தார். அதன் பின் உடல் ஒரு பலகையின் மேல் எறியப்பட்டது. உடல் பாகங்களை வெட்டி கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு வாளியில் அப்பாகங்களை இட்டார். அப்பாகங்கள் அங்கிருந்த அடிமைகளிடம் கொடுக்கப்பட்டன. அவர்கள் அங்கே எரிந்துகொண்டிருந்த தீயில் அவற்றை எறிந்தனர். அதே தீயில் அக்கதிரையும், பலகையும் உடைத்து போடப்பட்டன. வுயிஸ்டின் உடைகளும் அதிலேயே போட்டு எரிக்கப்பட்டன. இவையணைத்தும் காலை எட்டு மணிக்கு முன்னர் முடிந்துவிட்டன. மதியம் வுயிஸ்ட் இருந்த இடமும் தெரியாமல் சாம்பலாகிப் போயிருந்தார். எரித்த அஸ்தி கூட ஒல்லாந்துக்கு போகக்கூடாது என்று அந்த அஸ்தியை அள்ளிக்கொண்டு சென்று அன்றே பத்தாவியா கடலில் கொட்டினார்கள். அவரின் மனைவி பிள்ளைகளும் பத்தாவியாவில் தான் தங்கியிருந்தனர். கிறிஸ்தவ முறைப்படி வுயிஸ்தை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு அவரின் சாம்பலைக் கூடக் கொடுக்கவில்லை. (8) தொடரும் அடிக்குறிப்புகள் : Sententie, gewezen by den Wel Ed: Raade van India, tegens den Heere en Mr. Petrus Vuyst, gewezene gouveneur van Ceylon, Geexecuteert tot BATAVIA, den 19 mey, 1732. – Netherland, 1732 De onregtveerde justitie, uytgevoert door den Gouverneur Petrus Vuyst, tot Ceylon, nevens het regtveerdig vonnis en regt, aan hem Gouverneur gedaan, door den Achtbaren Raad van Justitie des Casteels Batavia, Samperman -1733 Kort en naauwkeurig verhaal van ʹt leven en opkomst van... Petrus Vuyst, gewezen Gouverneur op ʹt Eiland Ceilon: alsmede een waaragtig berigt, van alle zijne gepleegde gruwelstukken, Volume 1, 1732 இந்த மூன்று நூல்களும் அன்றைய பழைய டச்சு மொழியைக் கொண்டவை. இன்று புழக்கத்தில் இல்லாதவை. அவற்றை இன்றைய நெதர்லாந்து மக்கள் புரிந்துகொள்ளக் கடினப்படுவார்கள். இதனை நெதர்லாந்திலிருந்து எனக்காக நாட்கணக்காக கடின உழைப்புடன் பொறுமையாக வாசித்து விளக்கம் பல தந்த Cornolis Broers அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வுயிஸ்டுக்கு வழங்கப்பட்ட தண்டனையை சித்திரிக்கின்ற ஒரு ஓவியத்தை அதே காலத்தில் வரைந்தார் பிரபல ஓவியர் சிமோன் பொக்க (Simon Fokke - 1712–1784). பத்தாவியாவில் கிழக்கிந்திய டச்சுக் கம்பனியினர் 1729-1739 இடப்பட்ட பத்தாண்டு காலப்பகுதிக்குள் பொதுவெளியில் மேற்கொண்ட தண்டனைகள் பற்றிய ஒரு ஆய்வை A Distant Mirror: Violent Public Punishment in the VOC Batavia, 1729-1739” என்கிற தலைப்பில் Leiden பல்கலைக்கழகத்திற்காக Muhammad Asyrafi என்பவர் 2020 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் சிமோன் பொக்கவின் ஓவியங்கள் பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன. இந்த ஆவணங்கள் எல்லாமே டச்சு ஆவணக் காப்பகத்தில் தொகுக்கப்பட்டிருப்பதையும், அவை எந்தெந்த இலக்கங்களைக் கொண்டு அங்கு வைக்கப்பட்டிக்கின்றன என்பது பற்றி ஒரு தொகுப்பை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். அதில் இலங்கை தொடர்பான பல ஆவணங்களின் பட்டியல் உள்ளன. அங்கே செல்ல வாய்ப்புள்ளவர்கள் சென்று அவற்றைப் பார்வையிடலாம். - Inventaris van het archief van de Verenigde Oost-Indische Compagnie (VOC), 1602-1795 (1811) Versie: 25-09-2018 - P.E.Pieris, sinhale and the Patriots, 1815-1818, Sri Lanka Apothecaries Company, Limited, colombo, 1950. Henry Charles Sirr, Ceylon and the Cingalese, Vol. 1: Their History, Government, and Religion, the Antiquities, Institutions, Produce, Revenue, and Capabilities of the Island, London, William Shoberl Publisher, 1850. நன்றி - தினகரன் 12.12.21 https://www.namathumalayagam.com/2021/12/ColumboVuyst.html?fbclid=IwAR0CmZS4V-MmDw7u0EubcVUBq6hfJGyYTlP8sNOVT_L_McqIRC2Jw2-96sg 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted December 15, 2021 கருத்துக்கள உறவுகள் Share Posted December 15, 2021 கொடுங்கோலர்கள் ஏதோ ஒரு வகையில் கேவலமான மரணத்தையே அடைந்திருக்கின்றார்கள்......! Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted December 23, 2021 தொடங்கியவர் Share Posted December 23, 2021 முகத்துவாரம் விஸ்ட்வைக் பங்களாவில்: வுயிஸ்டின் ஆவி! (கொழும்பின் கதை - 8) என்.சரவணன் ஆளுநர் வுயிஸ்ட் இலங்கையில் மேற்கொண்ட குற்றங்களுக்காக டச்சு இராணுவ நீதிமன்றம் (Heeren XVII) நிறைவேற்றிய கொடூரமான மரண தண்டனையைப் பற்றிப் பார்த்தோம். வுயிஸ்ட் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரின் மனைவி பார்பரா வுயிஸ்டைக் காப்பாற்றுவதற்காக ஒல்லாந்திலிருந்த Heeren XVII இடம் சென்று உதவி கோரினார். ஆனால் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. யொஹான் (Johan de Mauregnauld) என்பவர் தலைமையில் விசாரித்து முடிக்கப்பட்ட இந்த வழக்கின் அறிக்கை 400 பக்கங்களை விட அதிகமானது. சட்டவிரோதமாக இராணுவ நீதிமன்றத்தை அமைத்தது, அதற்குத் தன்னைத் தானே தலைவராக நியமித்துக்கொண்டது, தண்டனை நிறைவேற்றுபவராக தன்னை ஆக்கிக்கொண்டது, அதன் மூலம் அப்பாவிகள் 19 பேரை ஈவிரக்கமின்றி கொன்றது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கு அன்றைய டச்சு நீதித்துறைக்கு ஒரு பெருமதிப்பைக் கொடுத்தது. இதைப் பற்றி 1735 இல் ஒல்லாந்திலுள்ள ரோட்டர்டாமில் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது. "ஆளுநர் பெட்ரஸ் வுயிஸ்ட் இலங்கையில் சட்டவிரோதமாக நீதியைக் கையாண்டார். அப்படிப்பட்ட ஆளுநருக்கு பத்தாவியா நீதித்துறை தகுந்த தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டியது.” இந்த வழக்கின் விளைவாக இனிமேல் எந்தவொரு நாட்டு டச்சு ஆளுநரும், தளபதியும் நீதிச்சபையின் கூட்டங்களில் பங்குபற்றக்கூடாது என்றும், நீதித்துறை விவகாரங்கள் உயர் அதிகார தலையீடு இன்றி இயங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் வுயிஸ்டின் அக்கிரமங்களுக்கு ஆதரவளித்த இராணுவ நீதிமன்றத்தைச் சேர்ந்த பதினைந்து பெரும் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய போதும் அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள். சிலர் சிறையிலேயே இறந்துபோனார்கள். சிலர் தொடர்ந்தும் சிறையில் சில வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அரசின் பொது மன்னிப்பு பெற்று 1736 ஆம் ஆண்டு எஞ்சிய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். வுயிஸ்டின் மனைவி பார்பராவும், மகள்மாரும் 1733 ஆம் ஆண்டு வுயிஸ்டின் சொந்த இடமான ஒல்லாந்திலுள்ள ஹார்லம் (Haarlem) திரும்பினார்கள். பார்பரா 1746ஆம் ஆண்டு அவரின் 53 வது வயதில் இறந்தார். பொதுவாக ஆளுநர்கள் இடமாற்றம் பெற்று இன்னும் சில நாடுகளை ஆளும் தகுதியையும் பெற்று ஆள்வார்கள். ஆனால் வுயிஸ்ட் இளம் வயதிலேயே தனது கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார். அவ்வளவு ஆஸ்தியும், அந்தஸ்தும் இருந்தும் தனது குற்றங்களால் அவர் 41 வயதிலேயே அவர் கொல்லப்பட்டுவிட்டார்.இலங்கையை அவர் மூன்றே மூன்று ஆண்டுகள் மட்டும் ஆளுநராக வாழ்ந்தார். வுயிஸ்டின் ஆட்சிக் காலத்தை டச்சு ஆட்சிக்காலத்தின் கறைபடிந்த பக்கம் என்று குறிப்பிடுவார்கள். இலங்கையின் சரித்திரத்தில் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஆளுநர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆட்சிசெய்துள்ளனர். அவர்களே அதிகாரம் படைத்த முதன்மை ஆட்சியாளர்களாக இருந்திருக்கின்றனர். அவர்களில்; இப்படி விசாரணை செய்யப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, கொல்லப்பட்ட ஒரேயொருவர் பேத்ருஸ் வுயிஸ்ட் தான். இலங்கையில் பல ஆளுநர்கள் கொடுங்கோலர்களாக இருந்திருகின்றனர். ஆனால் இங்கே தமது அதிகார வரம்புகளை மீறியதற்காவும், சொந்த அதிகாரிகளையே துன்புறுத்திக் கொன்றமைக்காகவும் அதிகமாக அவர் சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்துக்கு உள்ளானார். Kasteel Batavia - வுயிஸ்ட் சிறை வைக்கப்பட்டிருந்த அன்றைய பத்தாவியா கோட்டை. வுய்ஸ்ட் விக் ஆவி வுய்ஸ்ட் தனது ஆட்சிக் காலத்தில் காலத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்மாவத்தை வழியாக மட்டுக்குளி சென்றடையும் பாதையை வுயிஸ்ட் தான் அமைத்தார். 1720களில் அமைக்கப்பட்ட அந்த வீதியின் வரலாறு இப்போது முன்னூறு ஆண்டுகளை எட்டுகிறது. கொழும்பின் நீளமான வீதிகளில் ஒன்று அது. இன்று அது ஒரு முக்கியமான பாதையாக ஆகியிருப்பதை அறிவீர்கள். கொழும்பு - மட்டக்குளியில் காக்கைத்தீவு வழியாக களனி கங்கையின் முகப்பு வரை செல்லுகிறது வுய்ஸ்ட்விக் வீதி (Vuystwyk Road). வுயிஸ்ட் அளுத்மாவத்தை முடிவில் தனக்கான ஒரு பங்களாவைக் கட்டினார். நீச்சல் தடாகத்துடன் அமைக்கப்பட்ட அந்த பங்களாவில் உல்லாசமாக களித்தார் அவர். அதற்கு Vuystwijk என்கிற பெயரைச் சூட்டியிருந்தார். வுய்ஸ்ட் கிராமம் என்று அதற்குப் பொருள். அந்த பங்களாவுக்கு குதிரை வண்டிலில் செல்வதற்கு சரியான பாதை இருக்கவில்லை. அதற்காகவே போடப்பட்ட வீதி தான் அது. முகத்துவாரத்தில் (Mutwal) அழகான காட்சி அமைப்புடன் கூடிய இடமாக அப்போது அவருக்கு பிடித்திருந்த இடத்தில் தான் அவர் அந்த பங்களாவைக் கட்டினார். கோட்டையிலிருந்து முகத்துவாரம் வரையிலான பாதையை உருவாக்குவதற்காக கற்களை கைமாற்றி கைமாற்றி இரு மருங்கிலும் பாதையோரங்கள் அமைக்கப்பட்டது. இன்றும் கொழும்பில் விஸ்ட்வைக் பார்க்கை (பூங்கா) அறியாதவர்கள் வெகு சிலராகத் தான் இருப்பார்கள். ரசமுன கந்த என்கிற மேட்டில் தான் வுயிஸ்டின் பங்களா அன்று அமைக்கப்பட்டிருந்தது. இன்று பல வீடுகளும், கடைகளும், தொழிற்சாலைகளும் நிறைந்த சூழல் அது. வான் டோர்ட் (Van Dort) இலங்கையின் முக்கியமான ஓவியர்களில் ஒருவர். இலங்கையின் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் வெளிவந்த கேலிச்சித்திர சஞ்சிகையான “முனியாண்டி” சஞ்சிகையில் அவர் வரைந்த ஓவியங்களும் கட்டுரைகளும் இன்று பேசப்படுகின்றன. அதில் அவர் எழுதிய கட்டுரையில் பதினாறு வயதையுடைய கொழும்பு அக்காடமி மாணவன் வுயிஸ்ட் முன்னர் வாழ்ந்த வீட்டிலிருந்து சுமார் 300 யார் தூரத்தில் அமைந்திருந்த நீச்சல் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். "இரவும் பகலும் புலம்பல்களும் பெருமூச்சுகளும், அழுகையும் கேட்கின்றன" என்று உள்ளூர்வாசிகள் அந்த இளைஞனுக்குத் தெரிவித்ததை வான் டோர்ட்திடம் தெரிவித்திருக்கிறார். தனிமையும், கடற் காற்றின் சலசலப்பும் குளத்தைச் சுற்றி வளரும் மூங்கில்களால் உருவாகும் சத்தமாக அது இருக்கக்கூடும் என்று வான் டோர்ட் எண்ணினார். அவர் 1894 இல் Vuyst Wyk ஐ சென்று பார்வையிட்டபோது, கிணறும் குளமும் சிதைந்து கிடப்பதைக் கண்டார், மேலும் மூங்கில்கள் கூட எப்போதோ இல்லாமல் போயுள்ளன. அப்படியிருக்க எவ்வாறு இந்த சத்தம் வருகின்றன என்று சற்று வியப்புற்றார், உள்ளூர்வாசிகள் சிலர் அவரிடம், கவர்னர் வுயிஸ்ட்டின் ஆவி எழுப்புகின்ற சந்தம் தான் அவை என்றும் உறுதியாக நம்புகின்றனர். வுயிஸ்ட் அங்கே தனது மலே நாட்டு சமையல்காரருடன் சேர்ந்து மனித இறைச்சிகளை உண்டதாக அதற்கு முன்னர் ஒரு கதையும் நிலவிருக்கிறது. அது உண்மையோ பொய்யோ. ஆனால் அவரின் காணியில் இருந்து மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை வான் டோர்ட் பதிவு செய்திருக்கிறார். வுய்ஸ்ட் வைக் பகுதியில் ஆவிக் கதைகளை நம்புபவர்கள் இன்றும் உள்ளார்கள். அவர் கண்மூடித்தனமாக செய்த அராஜகங்களின் இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிட வேண்டும். 1738 இல் சிங்களத்தில் வெளிவந்த முதலாவது நூல் Singaleesch belydenis boek - சிங்கள எழுத்துருவாக்கத்துக்கு தடை இலங்கையில் முதன் முதலில் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணி குறித்து இதற்கு முன்னர் விரிவாக எழுதியிருக்கிறேன். கிழக்கிந்திய கம்பனியின் ஆயுதப் பொறுப்பாளராக இருந்த கேபிரியேல் ஷாட் (Gabriel Schade) என்பவரிடம் தான் சிங்கள எழுத்துக்களை உருவாக்கும் பணியை ஆளுநர் ஜாகோப் (Jacob Christian Peilat) 1725 ஆம் ஆண்டு கேபிரியேல் ஷாட்டிடம் ஒப்படைத்திருந்தார். நுணுக்கமான உலோக வேலைகள் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்தார் ஷாட். 1726 இல் வுயிஸ்ட் ஆளுனராக பதவியேற்றதும் இலங்கைக்கு அப்படியொரு அச்சுப்பணிகள் தேவையில்லை என்று கூறி ஷாட்டை சிறையில் அடைத்துவிட்டார். சுதேச மொழி எழுத்துவார்ப்புப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. பல சித்திரவதைகளுக்கும் உள்ளானர் ஷாட். அந்தப் பணிகள் நின்று விடுகின்றன. வுயிஸ்டுக்குப் பின் ஆளுநர் Gustafi Willem Baron Van Imhoff பதவியேற்றதன் பின்னர் தான் ஷாட் விடுதலையானார். சிறை-சித்திரவதையை அனுபவித்துவிட்டு விடுதலையான ஷாட் அதன் பின் வந்து உருவாக்கிய எழுத்து வார்ப்புக்களைக் கொண்டு தான் 1737 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சிங்கள நூல் (“The Singaleesch Gebeede-Boek”) வெளியானது. இன்னும் சொல்லப்போனால் அது தான் இலங்கையின் முதலாவது சுதேச மொழி நூல் எனலாம். சில வேளை வுயிஸ்ட் ஷாட்டை சிறையிடாமல் இருந்திருந்தால் இலங்கையின் முதலாவது சுதேசிய மொழி நூல் 1720களிலேயே வெளிவந்திருக்கக் கூடும். கேபிரியேல் ஷாட் தான் இலங்கையில் முதலாவது அசையும் சிங்கள எழுத்துக்களின் பிதா என்று தான் கூற வேண்டும். பின்னாட்களில் இதைப் பற்றிய விபரங்களை பதிவு செய்த Dutch Burgher Union வெளியிட்ட சஞ்சிகையில் வுயிஸ்ட் ஒரு பயங்கரவாத ஆட்சியாளன் என்று வர்ணித்தது. அடுத்த இதழில் கொழும்பின் புதிய கதை. நன்றி - தினகரன் - 19.12.2021 https://www.namathumalayagam.com/2021/12/VuystGhost.html?fbclid=IwAR1fCxJhly1GYIoMuoxZxWm_FFG0ZMFAqz3DYXxekjFpCx_47K49ibPF4TY 1 Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted January 4 தொடங்கியவர் Share Posted January 4 பேட்டை – புறக்கோட்டையான கதை (கொழும்பின் கதை - 9) - என்.சரவணன் இலங்கையின் இதயம் கொழும்பு என்போம். கொழும்பின் இதயமாகத் திகழ்வது கோட்டையும், புறக்கோட்டையும் தான். ஆட்சித் தலைமையக மையமாகவும், இலங்கையின் பொருளாதார மையமாகவும் நிமிர்ந்து நிற்கும் இடங்கள் இவை. டச்சு காலத்தில் அவர்களின் மொழியில் புறக்கோட்டையை “oude stadt” என்றார்கள். ஆங்கில அர்த்தத்தில் “outside the fort” எனலாம். ஆங்கிலேயர்கள் அதன் பின்னர் “பெட்டா” (Pettah) என்று அழைத்தார்கள். பேட்டை என்று தமிழ் பேச்சு வழக்கு சொல்லில் இருந்து தான் ஆங்கில “பெட்டா” வந்தது. பேட்டை” என்பது “ஆங்கிலோ இந்திய” தமிழில் இருந்து மருவிய சொல்லாகும். ஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்து பெண்களை மணமுடித்து உருவான கலப்பின மக்களின் வழிவந்தவர்களையே ஆங்கிலோ இந்தியர்கள் என்று நாம் அழைப்போம். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் “ஜான் விஜய்” ஆங்கிலமும் அல்லாத தமிழும் அல்லாத ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவார் அல்லவா அது தான். ஆங்கிலேயர்கள் “பேட்” என்பார்கள் அதுவே காலபோக்கில் பேட்டை என்று ஆனது. இலங்கையில் பேட்டை என்பது பெட்டா என்று ஆனது. பேட்டை என்பது தொழில் மற்றும் தொழிற்சந்தைகள் நிறைந்திருந்த இடங்களைக் குறிப்பதாகும். சிறுவணிகர்களும், அதிகளவு நுகர்வோரும் ஒன்றுகூடித் தொழில் செய்யும் இடமென்றும் கூறலாம். அதே வேளை பெட்டா என்று டச்சுக் காரர்களும், ஆங்கிலேயர்களும் அழைத்த அந்த இடத்தை சிங்களத்தில் “பிட்டகொட்டுவ” (கோட்டைக்கு வெளியில்) என்றும் தமிழில் “புறக்கோட்டை” என்றும் அழைத்தார்கள். அதற்கான காரணம் அன்று கொழும்பு கோட்டை இருந்த மதிலுக்கு வெளியில் இருந்த பிரதேசம் இது. எனவே கோட்டைக்கு புறமாக (வெளியில்) இருந்ததால் அதை புறக்கோட்டை என்றே அழைத்ததில் அர்த்தம் இருக்கவே செய்கிறது. பால்தேயுஸ் (Philippus Baldaeus) 1600 களின் நடுப்பகுதியில் அவரின் நூலில் வெளியிட்டிருந்த ஓவியம் இது. இதில் வலது புறத்தில் கொழும்பு கோட்டைப் பகுதியையும் புறக்கோட்டயையும் பிரிக்கும் ஆறும், புறக்கோட்டையின் ஒரு பகுதி மரங்கள் செறிந்த இடமாக இருப்பதையும், புதிய குடியிருப்புத் தொகுதியையும் பார்க்கலாம். (மேலதிக விபரத்துக்கு பிற்குரிப்பைப் பார்க்கவும்) ஒல்லாந்தர்கள் உலகில் பல நாடுகளைக் கைப்பற்றி கிழக்கிந்தியக் கம்பனி Dutch East Indian Company (VOC) மேற்கிந்தியக் கம்பனி Dutch West Indian Company (WIC) என்று நிர்வகித்து காலனித்துவ ஏகபோகத்தில் கோலோச்சிய காலத்தில் அவர்கள் நகரங்களையும், அங்கே குடியிருப்புகளையும் அழகுற வடிவமைத்தார்கள். அவர்கள் அந்த நாடுகளை விட்டுவிட்டுப் போவதற்காக அதனை செய்யவில்லை. மாறாக அவர்களின் நாடுகளாக ஆகிவிட்டதாக எண்ணி நிரந்தர டச்சு காலனித்துவ நாடுகளாகத் தான் பலப்படுத்தினார்கள். கொழும்பை ஒரு நகரமாக உருவாக்கிய டச்சுக்காரர்கள் (Dutch East India Company VOC) ஒரு காலத்தில் தென்னாசியாவின் தலைமையகமாக கொழும்பைப் பயன்படுத்தி வந்தார்கள். அன்றிலிருந்தே புறக்கோட்டையை ஒரு நகர மையமாக இயங்கத் தொடங்கிவிட்டது. போர்த்துக்கேயர்கள் 1518 இல் முதன் முதலாக கொழும்பில் முக்கோண வடிவத்தில் கோட்டையை வடிவமைத்த போது அதற்கு Senhora das Vutudes என்று பெயரிட்டார்கள். ஒல்லாந்தர் காலத்தில் கோட்டைப் பகுதியை காலப்போக்கில் அபிவிருத்தி செய்தபோது நடுவில் செல்லும் ஆறு பிரிக்கக் கூடிய வகையில் கோட்டையையும், புறக்கோட்டையையும் வடிவமைத்தார்கள். இன்றைய சுங்கத் திணைக்கள தலைமையகத்தோடு ஓட்டிச் சென்று துறைமுகத்தில் விழும் ஆறு தான் அது. குறிப்பாக அவர்களுக்கான குடியிருப்புகள் உள்ள வீதிக் கட்டமைப்பை கோட்டைக்கு வெளியில் அமைத்தார்கள். 1600 களில் கொழும்பு - புறக்கோட்டையும், கோட்டையும் 1600 களில் கொழும்பு - புறக்கோட்டையும், கோட்டையும் Baldaeus,-Philippus (பால்தேயுஸ் - 1632-1672.) எழுதிய Naauwkeurige-beschryvinge-van-Malabar-en-Choromandel நூலில் இருந்து... 1659 இல் கோட்டை அப்போதைய டச்சு ஆளுநர் ரிக்கோப் வான் கொயன்ஸ் (Ryckloff van Goens) வழிகாட்டலில் மறுகட்டுமானத்துக்கு உள்ளான போது டச்சு கிழக்கிந்திய கம்பனியினரின் குடியிருப்புகள் கோட்டைக்கு உள்ளேயும், ஏனைய ஐரோப்பியர்கள் மற்றும் வர்த்தகர் – வியாபாரிகளுக்கான குடியிருப்புகளை கோட்டைக்கு வெளியில் புறக்கோட்டையிலும் அமைத்தனர். புறக்கோட்டை குடியிருப்பு பகுதி 1658-1796 காலப்பகுதியில் டச்சு கட்டிடக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. போர்த்துகேய – ஒல்லாந்தர்களின் சந்ததியினர் அங்கே அங்கிலேயர் காலத்திலும் வாழ்ந்தார்கள். பல அழகான வீடுகள், அழகான தோட்டங்கள், நிழலான நடைபாதைகள் பல அங்கிருந்தன. ஒரே மாதிரியான பிரகாசமான மஞ்சள், சிவப்பு, ஒரஞ்சு நிற கோடுகள் உள்ள கதவுகளையும்ம் ஜன்னல்களையும் கொண்ட வீடமைப்பைக் கொண்டிருந்தன, பாதைகள் நேராகவும், கிடையாகவும், இருந்த அந்த வீதிகள் தான் இன்று முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் குறுக்குத் தெருக்களாகவும், அவை ஒல்கொட் மாவத்தையில் சேருவதாகவும் இருக்கிறது. கிடையில் மெயின் வீதி, கெய்சர் வீதி (டச்சு ஆளுநர் Kaiser என்பவரின் பெயர்), பிரின்ஸ் வீதி, மெலிபன் வீதி என இருக்கும் அமைப்பைக் கற்பனை செய்து பாருங்கள். இது தான் படிப்படியாக வியாபார, வர்த்தக, விற்பனை கடைகளாக அப்படியே பரிமாற்றமடைந்தது. இன்றும் பழைய கட்டிடங்களின் எச்சங்களை சில இடங்களில் காணலாம். இன்றைய கெய்சர் வீதியிலுள்ள புறக்கோட்டை பொலிஸ் இருந்த பகுதி இந்தக் குடியிருப்பில் இருந்தவர்களுக்கான மயானமாக இருந்தது. Pettah Cemetery என்றும், Pettah Burial Ground என்றும் அது அழைக்கப்பட்டது. அங்கே புதைக்கப்பட்ட டச்சு அதிகாரிகளின் விபரங்களை tombstones and monuments in Ceylon என்கிற நூலில் பென்ரி லூயிஸ் (J. Penry Lewis) விபரித்திருக்கிறார். அன்று இருந்த கொழும்பு கோட்டையை இணைக்கும் பாதையாக விளங்கிய இன்றைய மெயின் வீதி டச்சு காலத்தில் “King’s Street” (அரச வீதி) என்று அழைத்தார்கள். முதலில் இருப்பது கொழும்பு மையத்தின் புதிய தோற்றம். கீழே இருப்பது 1756 இன் தோற்றம். மேற்படி இரண்டு வரைபடங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மொத்தத்தில் இது சுதேசிகளின் குடியிருப்புகளாக இருக்கவில்லை. வுல்பெண்டல் பகுதி வரை புறக்கோட்டையை அபிவிருத்தி செய்திருந்தார்கள். 1796 இல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின்னர் தான் இது ஐரோப்பியர் அல்லாதவர்களும் வாழும் பகுதியாக ஆனது. கோட்டையும், புறக்கோட்டையும் (Fort, Pettah) இப்படித்தான் பின்னர் பெயரிடப்பட்டன. ஆங்கிலேயர்கள் தான் புறக்கோட்டையை ஒரு வர்த்தக – வியாபாரத் தளமாக மாற்றியெடுத்தார்கள். 1885 அளவில் கொழும்புத் துறைமுகச் சுற்றாடல் பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சியின் காரணமாக சந்தைக்கான இடமாகவும், ஏற்றுமதித் தளமாகவும் வளர்ச்சியுற்றது. 1900 களின் ஆரம்பத்தில் சிறு வணிகர்கள், சில்லறைக் கடைகள் இல்லாமல் போய் மொத்த விற்பனை வணிகஸ்தளமாக அது மாற்றம் கண்டது. டச்சுக் காலத்திலேயே தமிழ், முஸ்லிம்கள் இந்தப் பகுதியில் வியாபாரத்தில் ஆளுமை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இங்கே உள்ள சில வீதிகளின் பெயர்கள் அங்கே வாழ்ந்த சில சமூகக் குழுவினரின் பெயர்கள் சூட்டப்பட்டன. பார்பர் தெரு, செட்டியார் தெரு, சோனகர் தெரு, மலே வீதி, சைனா வீதி, போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். மெசேஞ்சர் வீதி என்பது அன்று தகவல்களை கொண்டு சென்று சேர்க்கும் பணி நிகழ்ந்த இடம். டச்சுக்காரர்கள் அவ்வீதியை “Rue de massang” என்று அழைத்தார்கள். அப்பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் வாழ்ந்த பகுதி அது. இன்னும் சொல்லபோனால் அவர்கள் அன்றைய தபால்கார்கள். புறக்கோட்டை கொழும்பின் வடகிழக்குப் பகுதியில் களனி நதி வந்து விழும் பகுதி தான் ஒரு வர்த்தக துறைமுகமாக பதினோராம் நூற்றாண்டில் தொற்றம்பெறத் தொடங்கியது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவே அந்த பகுதி தெரிவானது. அங்கே இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் குடியிருப்புகள் அப்போது அமைந்தன. இலங்கையில் ஐரோப்பிய காலனித்துவம் காலூன்றுவதற்கு முன்னரே வெளிநாட்டு முஸ்லிம் வர்த்தகர்கள் கொழும்புக்கு பரீட்சயப்பட்டுவிட்டார்கள். 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் புறக்கோட்டையின் தோற்றம் பெரும் மாற்றம் கண்டது எனலாம். கொழும்பின் நகராக்க வளர்ச்சி, வர்த்தக – வியாபார வியாபகத்தின் காரணமாக நகரத்தில் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டார்கள். நகரத்தை நோக்கி குடிபெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. பல்லின, பன்மொழி, பன்மதங்களைச் சேர்ந்த சகல வர்க்கத்தினரும் புழங்கி வாழும் பகுதியாக இப்பகுதி மாற்றம் பெற்றதுடன் காலப்புக்கில் சனப்பெருக்கத்தோடு, சன நெரிசல்மிக்க பகுதியாக வளர்ச்சி கண்டது. அதனால் ஆங்கிலேயர் காலத்திலேயே இப்பகுதியில் சன நெரிசல் உள்ள குடியிருப்புகள், தோட்டங்கள் (வத்த), என்றும், முடுக்கு என்றும் அழைக்கப்படத் தொடங்கின. புறக்கோட்டையில் உள்ள காப்பிரி முடுக்கு (Kafari Muduku) 18 ஆம் ஆண்டிலிருந்தே அழைக்கப்படத் தொடங்கிவிட்டதாக பேராசிரியர் ஷுஜி பூனோ (Shuji FUNO) கூறுகிறார். டச்சு கால கட்டிடத்துக்கு சாட்சி கூறும் முழு உருவமாக “புறக்கோட்டை”யில் எஞ்சியிருக்கும் இரு கட்டிடங்களைக் கூறலாம். ஒன்று; 1600களில் கட்டப்பட்ட டச்சு கவர்னராக இருந்த தோமஸ் வான் ரீ(Thomas van Rhee 1692-1697) என்பவரின் வாசஸ்தலம். அது இன்று பிரின்ஸ் வீதியில் உள்ள டச்சு மியூசியமாக திகழ்கிறது. இரண்டாவது 1757 இல் கட்டப்பட்ட வுல்பெண்டால் சேர்ச் என்று அழைக்கப்படும் டச்சு சீர்திருத்த தேவாலயம். கொழும்புக்கு செல்பவர்களும், கொழும்பில் இருப்பவர்களும் பிரின்ஸ் வீதியில் உள்ள டச்சு மியூசியத்தை ஒரு தடவையாவது சென்று பாருங்கள். அது உருவான கதையை தனியாக எழுதுகிறேன். கொழும்பு கோட்டைக்கு என்ன ஆனதென பின்னர் விரிவாகப் பார்ப்போம். அடிக்குறிப்புகள் Brohier, RI., Changing Face of Colombo,(Covering the portuguese, Dutch and British Period) A Visidunu Publication, 2007 Kyouta YAMADA, Masahiro MAEDA, Shuji FUNO, "Considerations on Spatial Formation and Transformation in Pettah (Colombo, Sri Lanka)" Journal of Architecture and Planning (Transactions of AIJ) April 2007 தினகரன் - 26.12.2021 https://www.namathumalayagam.com/2021/12/PettahStory.html?fbclid=IwAR3feX-QpaRYdYuVEpYH2WdHmtIne4vO8khzBgkjYOJGf53V9d7WIoXU2FI 1 1 Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted January 12 தொடங்கியவர் Share Posted January 12 இலங்கையின் வத்திக்கான் கொட்டாஞ்சேனை புனித லூசியா (கொழும்பின் கதை - 10) - என்.சரவணன் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள புனித லூசியா பேராலயம் (ST. LUCIA’S CATHEDRAL) மிகவும் பிரசித்தி பெற்றது. அது இலங்கையின் ரோமன் கத்தோலிக்கப் பேராயத்தின் பேராயரின் இருப்பிடம் ஆகும். இலங்கையின் மிகப் பழமையானதும், பிரமாண்டமானதுமான திருச்சபை (Parish) அது. இரு நூற்றாண்டு வரலாற்றை உள்ளூர அமைதியாக வைத்திருக்கும் தேவாலயம் அது. கொழும்பு நகரின் வடக்குப் பகுதியில் உள்ள கொட்டாஞ்சேனை அமைந்துள்ளது. 18,240 சதுர அடி பரப்பளவையும் மேலே கூரை வரை 151 அடிகள் உயரத்தையும் கொண்டது. இந்த தேவாலயத்தில் சுமார் ஆறாயிரம் பேர் வரை கூடக்கூடியது. இப் பேராலயம், புனித லூசிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் (டச்சு) காலத்தில் கத்தோலிக்கரின் வணக்கத்தலமாக சிறிய கட்டிடமாகவே இது இருந்தது. இந்த தேவாலயத்தின் முக்கியத்துவமே அது வத்திகானிலுள்ள உலக கிறிஸ்தவர்களின் தலைமைப் புனித தேவாலயமான புனித பேதுரு பேராலயத்தின் சாயலைக் கொண்டிருப்பது தான். அதுபோல பண்டைய கிரேக்க கட்டிட தூண்களை நினைபடுத்தும் வகையில் முகப்பின் தூண்கள் காணப்படுகிறது. கத்தோலிக்க மதத்தின் புனிதர்களில் ஒருவராக கருதப்படும் கன்னி புனித லூசியின் (Saint Lucia) பெயரில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இலங்கையின் மிகப் பழமையான, மிகப்பெரிய திருச்சபை பேராலயமாக கருதப்படுகிறது. ஏழு சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட உயரமான குவிமாடத்திற்கு முடிசூட்டப்பட்டப பட்டது போல வளைந்த அரைப்பந்து கான்கிரீட் கூரையின் மீது வானத்தை நோக்கி பார்த்தபடி நிற்கின்ற சிலுவையும் இந்த தேவாலயத்தின் மீது ஒரு பிரமாண்ட உணர்வை ஏற்படுத்திவிடும். டச்சு காலத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் ஆங்கிலேயர் காலத்தில் பெரிய அளவில் கட்டிமுடிக்கப்பட்டு புதுப்பொழிவு பெற்றது. இந்த தேவாலயத்தின் ஒரு பகுதி சேவையாக 1856இல் தொடங்கப்பட்டது தான் அருகில் உள்ள புனித பெனடிக் வித்தியாலயம் (இப்போது கல்லூரி). அதுபோல அருகில் உள்ள கன்னியாஸ்திரி மடமும் 1869 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். உள்ளே உள்ள சிலைகள் எல்லாமே மிகவும் கலைநுட்பத்துடன் அமைக்கப்பட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்னைய சிலைகள். 1924 ஆம் ஆண்டு சிற்பக் கலை அறிந்த பாதிரியார் ஜே.மிலினர் (Fr. J Milliner) தான் இதனை முடித்தார். ஐரோப்பிய நாடுகளில் இருந்து கப்பல்களின் மூலம் எடுத்து வரப்பட்ட சிலைகள் உள்ளே வைக்கப்பட்டுள்ளன. வழமைக்கு மாறான விசித்திரமாக; இருண்ட நிறத்தினாலான கன்னி மேரியின் சிலை இங்கே உள்ளது. அதை கொட்டாஞ்சேனையின் புனிதப் பெண்மணியாக ("Our Lady of Kotahena") கொண்டாடப்படுகிறது. அந்தச் சிலையை ஆண்டுதோறும் மே மாதம் கொட்டாஞ்சேனை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் புனித லூசிய தேவாலயத்தின் தோற்றம் இந்தத் தேவாலயத்தின் உயரத்தில் வைக்கப்பட்டுள்ள மணி சுமார் இரண்டு டன் எடையைக் கொண்டது. 1903 ஆம் ஆண்டு பிரான்சிலுள்ள மர்சீலஸ் (Marseilles) என்கிற தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. கிறிஸ்தவ சின்னங்களால் ஆன வேலைப்பாடுகளுடன் மிகுந்த கலைநுணுக்கத்துடன் செய்யப்பட்ட மணி அது. ஒரு வகையில் கொட்டாஞ்சேனை ரோமன் கத்தோலிக்க நகரம் என்று கூறினால் அது மிகையாகாது. 18ஆம் நூற்றாண்டில் கொட்டாஞ்சேனை கொச்சிக்கடைப் பகுதிகளில் கத்தோலிக்கர்களின் செறிவை கருத்திற்கொண்டு ஒரு தேவாலயம் ஒன்றின் தேவையை டச்சு ஆட்சியாளர்களும், மிஷனரிமாரும் உணர்ந்தனர். அங்கே அதற்கு முன் ஒல்லாந்தர் காலத்தில் ஓரத்தோரியன் மிஷனரிகளால் (Orathorian Missionary) கட்டப்பட்டிருந்த ஒரு தேவாலயம் (St. Lucia’s chaple) 1760 அளவில் கட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கொஸ்மோ அந்தோனியோ (Cosmo Antonio) (Miguel de Alburquerque) மிகேல் அல்புர்குவர்க் போன்ற ஓரத்தோரியன் பாதிரியார்கள் இங்கே பூஜைகள் நடத்தியுள்ளனர். டச்சு கிழக்கிந்தியக் கம்பனியினரின் நெருக்கடிகளின் காரணமாக அவர்கள் தென்னிந்தியாவில் கோவாவுக்கு திரும்பிவிட்டனர். அப்போது இங்கே தென்னை ஓலைகளால் முதன் முதலில் கட்டப்பட்டிருந்தது. அப்போதெல்லாம் கட்டிடங்கள் இல்லாமலும், பெரும்பாலும் காடுகளாலும் காணப்பட்டதால் கொட்டாஞ்சேனையில் இருந்த இந்த மேட்டுபகுதி உயரமான இடமாக இருந்ததால் தேவாலயத்தின் அமைவிடத்துக்குப் பொருத்தமாக இருந்தது. எனவே தான் ஒல்லாந்தர் இங்கே ஒரு ஒழுங்கான தேவாலயத்தை 1779 ஆம் ஆண்டு நிறுவினர். நிக்கலஸ் ரொட்ரிகோ என்கிற பாதிரியார் தான் இங்கே நிரந்தர தேவாலயத்தை நிறுவம் பணியை 1782இல் மேற்கொண்டார். 1834 இல் தான் கோவாவிலிருந்த ஆயர்களின் அதிகாரத்திலிருந்து இலங்கை விடுபட்டபின் பாதிரியார் வின்சன்ட் ரொசாரியோ (Fr. Vincente Rozairo) அவர்கள் முதலாவது ஆயராக நியமிக்கப்பட்டதுடன் இலங்கையின் முதலாவது கதீட்ரல் தேவாலயமாக 1838 இல் ஆனது. இலங்கையில் ரோமன் கத்தோலிக்க, அங்கிலிக்கன் கதீட்ரல் தேவாலயங்கள் பிற்காலத்தில் பல கட்டப்பட்டபோதும். கொட்டாஞ்சேனை லூசியா தேவாலயம் தான் இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது கதீட்ரல் தேவாலயம். 1820இலும் 1834இலும் மேலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல மாற்றங்களுக்கு உள்ளானது. 1852 இல் முதலாவது அடிக்கல் நாட்டப்பட்டு 1873 இல் எச்.டிசில்லானி (H D Sillani), எஸ்.தப்பரானி (Fr. S Tabarrani) ஆகிய திறமையான பாதிரிமார்களின் திட்டத்தின் பிரகாரம் அழகிய வடிவம் கண்டது. 1887 டிசம்பரில் சிறந்த முழுமையான வடிவமைப்பைப் பெற்றது இது. ஆகவே 1887 ஆம் ஆண்டைத் தான் இது உருவாகிய வருடமாக கணக்கிற் கொள்கிறார்கள். சில்லானியைத் தான் இதன் வடிவமைப்புக்கு உரியவராக கருதப்படுகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அன்றைய ஆயர் கிறிஸ்தோப்பர் பொன்ஜீன் (Christopher Bonjean), பாதிரியார் தங்கநெல்லியிடம் (Tanganelli) ஒப்படைத்தார். ஆயர் கிறிஸ்தோப்பர் ஓராண்டுக்குள்ளேயே ரோமுக்கு அழைக்கப்பட்டுவிட்டார். ஆனால் திரும்பி வந்து இலங்கையில் பல முக்கியப் பணிகளை முன்னெடுத்தார். அன்றைய பாப்பரசர் லியோ (Pope Leo XIII) புனித லூசியா தேவாலயத்தை கொழும்பின் மறை மாவட்டமாக 1885 இல் அறிவித்தார். பேராயரான பொன்ஜீன் புனித லூசியாவின் சிறிய எலும்புப் பகுதியை அதிகாரபூர்வமாக கொண்டுவந்து தேவாலயத்தில் சேர்த்தார். அது இன்றும் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்று தான் அவரால் உருவாக்கப்பட்ட புனித ஜோசப் கல்லூரி. அவர் இலங்கைக்கு 1855 இல் முதன் முதலில் வந்ததே யாழ்ப்பாணத்திற்குத் தான். அங்கே செய்த பணிகள் தனியாக தொகுக்கப்படவேண்டியது. அங்கே சிறிய பாடசாலைகள் பலவற்றை கல்லூரிகளாக மாற்றியது அவர் தான். புனித பற்றிக் கல்லூரி அதற்கொரு உதாரணம். கொட்டாஞ்சேனை புனித லூசிய தேவாலயத்தை உருவாக்குவதில் அவர் காட்டிய அக்கறையின் காரணமாக அந்த தேவாலயம் அமைந்திருக்கும் வீதி (கொட்டாஞ்சேனை பஸ் நிலையம் வரையானது) பொன்ஜீன் வீதி என்று தான் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. பாதிரியார் பொன்ஜீன் அவர்களின் காலத்தை இலங்கை கத்தோலிக்க தேவாலய வரலாற்றின் பொற்காலமென பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். தேவாலயத்தின் இன்றைய முழுமையான தோற்றம் 1902 இல் தான் பூர்த்தியானது. ஆரம்பத்தில் இதன் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தபோது அன்றே சுமார் 160,000 ரூபா செலவளிந்திருந்தது. இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களின் நிதிப் பங்களிப்பை செய்திருந்தனர். குறிப்பாக மீனவ சமூகத்தின் உதவியே அதிகளவு பங்களிப்பைத் தந்தது. 1956 ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய பாதிரிமார்களே தலைமை பாதிரிமார்களாக இருந்தனர். 1956 ஆம் ஆண்டு நெருவஸ் பெர்னாண்டோ (Fr. Nereus Fernando) இலங்கையின் முதலாவது கதீட்ரல் பாதிரியாராக தெரிவானார். 1987 ஆம் ஆண்டு முதலாவது நூற்றாண்டு பாதிரியார் ருபுஸ் பெனடிக் (Fr. Rufus Benedict) அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடத்து கொண்டிருந்த போது கொழும்பில் இலகுவாக தெரியக் கூடிய இடங்கள் பல ஜப்பானின் விமானத் தாக்குதலுக்கு உள்ளானது. அப்படியான தாக்குதலை தவிர்ப்பதற்காகவே கொழும்பு காலிமுகத்திடலில் முதலாம் உலக யுத்த நினைவுக்காக கட்டப்பட்டிருந்த மிகவும் உயரமான தூபியையே கழற்றி ஒளித்தனர். தேவாலயத்தைத் தான் அப்படி ஒளிக்க முடியுமா என்ன. 1942ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை தேவாலயம் ஜப்பானின் தாக்குதலுக்கு உள்ளானது. டோம் என்று கூறக்கூடிய பிரதான குவிமாடம் சேதமுற்றது. பின்னர் மக்களின் நிதிப் பங்களிப்புடன் அது சீர் செய்யப்பட்டது. புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் போது 1995 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி இங்கே வந்து பூசை செய்தார். கொழும்புவாழ் லட்சக்கணக்கான கத்தோலிக்கர்கள் இங்கே தமது திருமணச் சடங்குகளை செய்துள்ளனர். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழி பூசைகளும், சேவைகளும் நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாலையில் தேவாலயத்தின் பின்னால் இருந்து சூரியன் உதித்தெழும் போது அந்த ஒளியில் தெரியும் தேவாலயம், பின்னேரத்தில் சூரியன் மறையும் போது அழகான வெளிச்சத்தில் எவரையும் கவரும் பிரமாண்டத் தோற்றத்தில் இந்த இந்த தேவாலயத்தை ஒரு முறையாவது கண்டு களியுங்கள். இலங்கையில் நிகழ்ந்த முதலாவது வகுப்புக் கலவரமும் இங்கிருந்து தான் தொடங்கியது. “1883 கொட்டாஞ்சேனை கலவரம்” என்று அது அழைக்கப்படுகிறது. அதில் ஒரு பௌத்தரும் ஒரு கத்தோலிக்கரும் கொல்லப்பட்டதுடன் முப்பது பேர் காயமடைந்தார்கள். இந்த தேவாலயத்தின் வரலாற்றிலும் இலங்கை, கொட்டாஞ்சேனை என்பவற்றின் வரலாற்றிலும் செலுத்திய தாக்கத்தை அடுத்த வாரம் பார்ப்போம். நன்றி - தினகரன் https://www.namathumalayagam.com/2022/01/KotahenaStLucia.html?fbclid=IwAR30dkHcRSdqfLnjKNZvVWDvM2ZmgFXo1i_S6hQ9fUZgJp8zY7sSkCQ7e3w 1 Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted January 18 தொடங்கியவர் Share Posted January 18 1883 : கொட்டாஞ்சேனையில் இலங்கையின் முதல் மதக் கலவரம் ( கொழும்பின் கதை - 11) - என்.சரவணன் கொட்டாஞ்சேனையின் வரலாற்றைப் பேசும்போது “கொட்டாஞ்சேனை கலவரம்” பற்றி பேசாமல் இருக்க முடியாது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் அதாவது 1883இல் இலங்கையில் முதலாவது வகுப்புவாத கலவரம் நடந்தது. முதலாவது மதக் கலவரமாகவும் அதனைக் குறிப்பிடுவார்கள். “கொட்டாஞ்சேனை கலவரம்” ஆங்கிலேய ஆட்சி கால அரச பதிவுகளில் “Kotahena Riots” என்றே அழைக்கப்படுகிறது. இந்த கலவரம் நிகழ்ந்து முடிந்த பின்னர் இதனை விசாரிப்பதற்காக ஆங்கிலேய அரசினால் அமைக்கப்பட்ட குழு “The Kotahena Riots” என்கிற ஒரு அறிக்கையையும் வெளியிட்டது. 19 ஆம் நூற்றாண்டில் வடக்கில் சைவசமயத்தினரும் தெற்கில் பௌத்த சமயத்தினரும் தமக்கெதிரான கிறிஸ்தவ பிரச்சாரங்களை எதிர்த்து எதிர்ப்ப்ரச்சாரங்களிலும், பகிரங்க விவாதங்களிலும் ஈடுபட்டார்கள். அப்படி தென்னிலங்கையில் நடந்த பஞ்சமகா விவாதங்கள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவை. அவற்றில் ஒன்று 1873 இல் பாணந்துறை நகரத்தில் நடந்த விவாதம். . இந்த விவாதம் பிரபல பௌத்த பிக்கு மீகெட்டுவத்தே குணானந்த தேரரின் (மொஹட்டிவத்தே குணானந்த என்றும் அழைப்பார்கள்) தலைமையில் ஹிக்கடுவ சிறீ சுமங்கல தேரர் போன்றோரும் இணைந்து கிறிஸ்தவ மதப் போதகர்களுடன் நடந்தது. அந்த விவாதத்தின் உள்ளடக்கம் பல நூல்களாக வெளிவந்துள்ளன. மிசனரி மதமாற்ற நடவடிக்கையை முறியடிக்க பௌத்த பாடசாலை இல்லாததும் பெரிய குறைபாடாக பௌத்தர்கள் கருதினர். 1880 இல் பிரம்மஞான சங்கத்தைச் (Theosophical Society) சேர்ந்த கேர்ணல் ஒல்கொட் இலங்கைக்கு வரும் வரையில் இந்த நிலைமைகளில் அதிகம் மாற்றம் ஏற்படவில்லை. "1873 இல் பாணந்துறையில் நடைபெற்ற பிரபலமான பகிரங்க விவாதமே கேர்ணல் ஒல்கொட் இலங்கை வருவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அவர் இலங்கை வந்ததும் நேராக கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரை வந்து குணானந்த தேரரை சந்தித்தார். கூடவே அவர் பௌத்த மதத்தை தழுவவும் செய்தார். கிறிஸ்தவ சக்திகளை எதிர்கின்ற எதிர்ப்பியக்கங்கள் ஒருபுறம் பலமடையத் தொடங்கியது. ஆரம்பத்தில் காலனித்துவ எதிரிப்பின் சாயலைக் கொண்டிருந்தாலும் அதன் உள்ளடக்கம் பௌத்த மறுமலர்ச்சியும் கிறிஸ்தவ எதிர்ப்புமே என்று குமாரி ஜெயவர்த்தனா தனது நூலில் குறிப்பிடுகிறார். மேலும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்கள், மது ஒழிப்பு உட்பட பல்வேறு பொது பிரச்சினைகளையும் கையில் எடுத்தார்கள். சில இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் இடம்பெற்றன. இலங்கையின் போக்கை இனவாத திசையில் வழிநடத்தியதில் அநகாரிக தர்மபாலாவின் வகிபாகம் என்னவென்பது அனைவரும் அறிந்ததே. அந்த அநகாரிகவை உருவாக்கிய சம்பவம் இந்த கொட்டாஞ்சேனைக் கலவரமாகும். இத்தகைய பின்னணியில் வளர்ச்சியடைந்த பௌத்த மறுமலர்ச்சியின் உந்துதலால் பௌத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் விரிசல் அதிகரித்ததுடன், பரஸ்பர சந்தேக உணர்வும், ஆங்காங்கு முறுகல் நிலையும் வளரத் தொடங்கின. பௌத்த வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள் போன்றோர் பௌத்த எழுச்சியை ஆதரிக்கத் தொடங்கியதுடன் கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்கு எதிர்த்து செயல்பட்டனர். கொட்டாஞ்சேனை தீபதுத்தாமாறாமயவில் தலைமை மதகுருவாக இருந்த மீகெட்டுவத்தே குணானந்த தேரர் அந்த விகாரையில் உள்ள புத்தர் சிலைக்கு கண்களை வைப்பதற்கான வைபவத்தை 1883 பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிருந்தபோது பிரதான அரச வைத்திய அதிகாரி ஒரு அறிக்கையை அனுப்பி வைத்திருந்தார். அதன்படி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பரவி வரும் நோயொன்றின் காரணமாக இந்த வைபவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பதற்கு குணானந்த தேரர் ஒப்புக்கொண்டபோதும் இந்த செய்தியின் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகித்தார். இதற்கு முன்னரும் 1872இல் கொச்சிக்கடையிலும் 1880இல் மாதம்பிட்டியிலும் பௌத்த பெரஹரவின் போது கல் எறிந்து குழப்ப முயற்சித்ததையும் முகத்துவாரத்தில் பாதையை மறித்த சம்பவத்தையும் அவர் நினைவுபடுத்தினார். சிலைகளுக்கு கண் வைக்கும் வைபவத்துக்கு ஊர்வலமாக வந்து பூஜைகளை செய்யும்படி பெளத்தர்களைக் கேட்டுக்கொண்ட குணானந்த ஹிமி அதற்கான போலிஸ் ஒப்புதலையும் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து பலர் தீபதுத்தமாறாமய விகாரைக்கு சென்றார்கள். அந்த விகாரையின் ஒரு பகுதியில் கந்தசுவாமி கோவில் ஒன்று இருந்ததாகவும் அதற்கும் பௌத்த துறவிகள் திருவிழா நடத்தியதாகவும் 1887இல் வெளிவந்த ரிவிரெச பத்திரிகை கூறுகிறது. பெளத்தர்கள் இவ்வாறு அணிதிரள்வது தம்மை சீண்டும் நடவடிக்கையாக சந்தேகித்தனர். ஏற்கெனவே பாணந்துறை விவாதத்தில் குணானந்த தேரர் தலைமையிலான பௌத்த தரப்பே வென்றிருந்ததும் அதிருப்தி நிலையை உருவாக்கியிருந்தது. கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயம் கட்டப்பட்டுகொண்டிருந்த காலம் அது. தீபதுத்தமாறாமய விகாரைக்கும் புனித லூசியாஸ் தேவாலயத்திற்கும் ஏறத்தாழ ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே உள்ளது. அன்றைய மிசனரி திருத்தூதர் ஜே.மாசிலாமணி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு 6ஆம் திகதியே சில எச்சரிக்கையை எழுத்து மூலம் செய்திருந்தார். ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் பெரிய வெள்ளி மற்றும் குருத்து ஞாயிறு ஆகிய தினங்களில் பௌத்த பெரஹரவுக்கு அனுமதி வழங்குவது முறுகலை ஏற்படுத்தும் என்றும் சில அசம்பாவிதங்கள் நடக்கவிருப்பதாக கதைகள் உலவுவதாகவும், வழமைபோல ஈஸ்டர் காலத்து புனித ஊர்வலத்தை இடையூறு இல்லாமல் நடத்திமுடிக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடித விபரங்கள் “The Kotahena Riots” அறிக்கையில் இடம்பெற்றிருக்கிறன. பெரிய வெள்ளிக்கு முன்னர் நடந்த பெரஹர நிகழ்வுகளுக்கு போலீசார் பந்தோபஸ்து வழங்கியிருக்கிறார்கள். சில கத்தோலிக்கர்கள் கல்லெறிந்தார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதும் செய்யப்பட்டிருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பெரிய வெள்ளியன்று நடத்தப்படவிருந்த புனித ஊர்வலத்துக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டது. மார்ச் 25 குருத்து ஞாயிறன்று மதியம் 12 வரை தேவாலய பூஜைகளுக்குப் பின்னர் பெரஹரவுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டிருந்தன. இலங்கையில் எந்த மூலையிலும் எந்த நேரத்திலும் பௌத்த பெரஹர நடத்துவதற்கான அனுமதியை பிரித்தானிய இராணியிடமிருந்து குணானந்த தேரர் பெற்று வந்திருப்பதாகவும் நாடு முழுதும் வதந்தி பரப்பப்பட்டதுடன் அது பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. கலவரம் அன்று இரவு பொலிஸ் பந்தோபஸ்துடன் பெரஹர பொரல்லையிலிருந்தும் கொள்ளுப்பிட்டியிலிருந்தும் வந்த ஊர்வலம் மருதானையில் இணைந்துகொண்டு கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமய விகாரையை நோக்கி நகர்ந்தது. இதனை தடுத்து நிறுத்த கத்தோலிக்க தரப்பு மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் இருந்துள்ளனர். குணானந்த தேரர் இந்த பெரஹரவில் பல வித ஆட்டங்களை சேர்த்துக்கொண்டார். தாள வாத்திய அணி, சாட்டையடி, புலியாட்டம், மரபான பேயாட்டம், தீ விளையாட்டு, வில் அம்பு தரித்தவர்கள், பெரிய உருவப்பொம்மை என பலதும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் பெரிய உருவப்பொம்மை குறித்து மின்னல் வேகத்தில் ஒரு வதந்தி பரவியது. அதாவது ஒரு குரங்கொன்றை சிலுவையில் அறைந்து ஊர்வலமாக கொண்டு வருகிறார்கள் என்பதே அது. அன்னை மரியாளைக் கேலி செய்யும் பொம்மைகள் உள்ளன என்றும் பிழையான வதந்தி பரப்பட்டிருந்தது. அதுபோல மறுபக்கம் பெரஹரவைத் தாக்குவதற்காக கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்கள் தயாராக நிற்கிறார்கள் என்று ஊர்வலத்தில் ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டிருந்தது. பெரஹரவில் இருந்து பெண்களும் சிறுவர்களும் அகற்றப்பட்டார்கள். ஊர்வலத்தில் கற்களையும். பொல்லுகளையும் தாங்கியவர்கள் இடையில் இணைந்து கொண்டார்கள். பெரஹர கொட்டாஞ்சேனையை நெருங்கியபோது திடீரென்று புனித லூசியாஸ் ஆலயத்தின் மணிகள் பலமாக அடிக்கத் தொடங்கியதும் அனைவரும் குழம்பிப்போனார்கள். பலர் தேவாலயத்தை சூழ்ந்தனர். அந்த மணியை யார் எதற்காக அடித்தார்கள் என்பது பற்றி போலீசாரால் இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அனால் அந்த ஒலி ஒரு பெரிய கலவரத்தையே உண்டு பண்ணியிருந்தது. பரஸ்பர சந்தேகங்கள், ஊகங்கள், வதந்திகள், பய உணர்ச்சி, தூண்டுதல், எதிர்பாரா திடீர் சம்பவங்கள் எல்லாம் சேர்ந்து ஆளையால் கொலைவெறிகொண்டு தாக்கிக்கொண்டனர். கட்டுப்படுத்துவதர்க்காக அழைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் வந்து சேர்ந்தபோது அனைத்தும் ஓய்ந்திருந்தது. இந்த கலவரத்தில் பௌத்த தரப்பை சேர்ந்த ஜூவன் நைதே என்பவர் கொல்லப்பட்டார். 12 உட்பட 30 பேர் மோசமான காயத்துக்கு உள்ளானார்கள். அதே நாள் பலங்கொட, கண்டி போன்ற இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. அன்றைய தேசாதிபதி கொட்டாஞ்சேனை விகாரைக்கு விரைந்து குனானனந்த தேரருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக தொடர்ந்தும் 30ஆம் திகதி வரை பெரஹர நடத்த அனுமதி வழங்கினார். சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்த சிறு தேவாலயங்கள் தீயிடப்பட்டன. அதுபோல பௌத்த பெரஹரக்களும் குழப்பப்பட்டன. தீபதுத்தமாறாமய விகாரையை கொளுத்தி குணானந்த தேரரை கொல்வதற்காக நீர்கொழும்பிலிருந்து 3000 பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வதந்தியும் வேகமாக பரப்பபட்டிருந்தது. இந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கையை வெளியிட்டதோடு சரி. இந்த சம்பவத்துக்காக எவரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குணானந்த தேரர் பௌத்தர்களை மத ரீதியில் தூண்டுவதற்கு எப்படிப்பட்ட பிரசாரங்களை எல்லாம் மேற்கொண்டார் என்பதற்கு அதன் பின் வெளிவந்த அவரது வெளியீடுகள் சாட்சி. கொட்டாஞ்சேனை சந்தியில் சில வருடங்களுக்கு முன்னர் குணானந்த தேரருக்கு சிலை கட்டப்பட்டது. நன்றி - தினகரன் 16-012022 https://www.namathumalayagam.com/2022/01/Kotahens.html?fbclid=IwAR3akrHEjS1Rx1gzGuUsCEsPAnwKPK09Zddy3u8WPbhjjW7F5jl1tMWdveM 1 Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted January 25 தொடங்கியவர் Share Posted January 25 கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வரலாறு (கொழும்பின் கதை - 12) - என்.சரவணன் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆட்சி செய்த போதே அந்தோனியார் வழிபாடும், அந்தோனியார் ஆலயங்களும் இலங்கையில் தோன்றிவிட்டன. 1597இல் கோட்டை இராச்சியத்தையும், 1618இல் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றிய பின்னர் இந்தப் பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக அந்தோனியார் தேவாலயங்கள். புனித அந்தோனியார் பாதுவாவில் தனது இறுதிக் காலத்தைக் கழித்திருந்தாலும் அவர் போர்த்துக்கலின் லிஸ்பன் நகரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். எனவே போர்த்துகேயர் கைப்பற்றிய நாடுகளில் புனித அந்தோனியார் வழிபாடு பிரசித்தம் பெற்றிருந்தது. கொழும்பு கோட்டைக்குள் இருந்த அந்தோனியார் தேவாலயமானது; அந்தோனியார் வழிபாட்டை இலங்கை முழுவதும் பரப்பி வந்த பிரான்சிஸ்கன் சபை மிஷனரிகளின் தலைமையகமாக இருந்தது. 1597 இல் கோட்டை அரசன் தொன் ஜூவான் தர்மபால இறந்தபோது அவரின் உடலையும் இந்த தேவாலயத்தில் தான் அடக்கம் செய்தார்கள். 1580 ஓகஸ்ட் 12 அன்று மன்னர் தொன் ஜூவான் தர்மபால போர்த்துக்கேயரின் நிர்பந்தத்தின் விளைவாக கோட்டை ராஜ்ஜியத்தை போர்த்துக்கேயருக்கு பரிசாக அளிப்பதாக உயில் (மரண சாசனம்) எழுதி கொடுத்த கதையை அறிவீர்கள். கத்தோலிக்க மதத்துக்கு மாறி கத்தோலிக்கப் பெயரை சூட்டிக்கொண்ட முதல் இலங்கை மன்னர் அவர். அது போல மன்னர் பரராஜசேகரனின் மனையையும், அவரின் மகன், இரு மகள்மாரையும், மன்னர் குடும்பத்தினர் பலரும் இந்த தேவாலயத்தில் தான் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்கள். கொழும்பு கோட்டைக்குள் இருந்த போர்த்துகேய அந்தோனியார் கோவில் தலைமையகம். 1656 ஆண்டு வரைபடம். (Changing Face of Colombo – R.L.Brohier) ஒல்லாந்தர்கள் கத்தோலிக்க மதத்தவர்களைக் கொன்றார்கள். அவர்களிடம் இருந்து தப்பிய கத்தோலிக்கர்கள் இரண்டாம் இராஜசிங்கன் (1635 - 1687)ஆட்சி செய்த கண்டி இராச்சியத்தில் தஞ்சம் புகுந்தார்கள். வஹாகோட்டே என்கிற இடத்தில் புனித அந்தோனியாருக்கு ஒரு சிறிய சிலையை வைத்து வணங்கினார்கள். இன்றும் வஹாகொட்டேயில் அந்த அந்தோனியார் தேவாலயம் இருக்கிறது. அதன் பின்னர் கண்டி மன்னன் இரண்டாம் விமலதர்மசூரியன்; பாதிரியார் ஜோசப் வாஸ்ஸுக்கு (Joseph Vaz) அந்தோனியார் வழிபாட்டுக்கு பூரண சுதந்திரம் வழங்கினார். கண்டியில் அந்தோனியாருக்காக பாதிரியார் ஜோசப் வாஸ் எந்த கெடுபிடியுமின்றி திருவிழா நடத்தினார். அதன் பின்னர் திறைசேரியில் களவு போயிருந்தவேளை மன்னர் ஸ்ரீ வீர நரேந்திர சிங்கனும் புனித அந்தோனியாரை வழிபட்டார் என பதிவுகள் உண்டு. இலங்கையில் உள்ள புனிதர்களின் ஆலயங்களிலேயே அந்தோனியார் வழிபாடு தான் மிகப் புகழ்பெற்ற வழிபாடாக வளர்ந்திருக்கிறது என்கிறார்; இலங்கையில் அந்தோனியார் வழிபாடு குறித்து ஆராய்ந்த சாகர ஜயசிங்க. இவாறு போர்த்துகேயரிடம் இருந்து இலங்கையை ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் போர்த்துக்கேயரின் காலத்தில் கத்தோலிக்க மதத்தையும் கத்தோலிக்கப் பாதிரிமார்களையும் தடை செய்திருந்தார்கள். அவர்களின் பிரதான வழிபாடான அந்தோனியார் தேவாலயங்களையும் கூடவே தடை செய்திருந்தார்கள். ஒல்லாந்தர்கள் (டச்சு) புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். டச்சு ஆட்சி 1796 இல் முடிவு பெற்ற போதும் ஆங்கிலேயர்கள் 1806 ஆம் ஆண்டு தான் “கத்தோலிக்கத் தடை” யை நீக்கினார்கள். ஆளுநர் தோமஸ் மெயிற்லான்ட் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். டச்சு ஆக்கிரமிப்பின் நிறைவுக் காலத்தில், கொழும்பில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்ததால், இலங்கை ஒராடோரியர்களின் தலைமைப்பதவியில் இருந்த ஜாகோம் கோன்சால்வேஸ், அங்கு நிரந்தரமாக வசிக்கும் ஒரு பாதிரியாரின் தேவையை உணர்ந்தார். கொச்சினியிலிருந்து அந்தோணி (Friar Antonio) என்ற கத்தோலிக்க ஒராடோரியன் முன்வந்து கொழும்பை வந்தடைந்தார். ஆனால் துன்புறுத்தல் காரணமாக அவரால் பாதிரியாராக செயல்பட முடியவில்லை. அதனால், வியாபாரி போல் மாறுவேடமிட்டு, பகலில் (இன்றைய மாலிபன் தெருவில் உள்ள) கடையில் மீன் விற்றார். இரவில் அவர் கத்தோலிக்கர்களை அடையாளம் கண்டு பூசைகளை செய்தார். ஒரு வருடம் கழிந்தது. இரகசிய கத்தோலிக்க பூசை நிகழ்வதை அறிந்த டச்சுக்காரர்கள் அந்தோணியைத தேடினர். மீனவ சமூகத்தினர் அதிகமாக வாழ்ந்த முஹுதுபொடவத்தை என்ற பகுதியை அவர் கடந்து சென்று கொண்டிருந்தார். இந்த நேரத்தில், கடல் அரிப்பு கடற்கரையை தாக்கி மீனவர்களின் இருப்பிடங்களை சுருக்கியது. வள்ளங்கள் அலையில் அடித்துச் சென்றன. அந்தோணி பாதிரியார் அதிசயம் நிகழ்த்திய நிகழ்வு அந்தோணியை வழியில் சந்தித்த மீனவர்கள் தமக்கு தீர்வு தேடி அந்தோணியை அணுகினார்கள். கடல் அரிப்பைத் தடுக்க பிரார்த்தனைகளை வழங்குமாறு அவர்கள் அவரிடம் கோரினார்கள். அந்தோணி அதை செய்துவிட்டால் டச்சு வீரர்களிடமிருந்து அவருக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். பின்னர் அந்தோணி மணலில் ஒரு சிலுவையை நட்டு, மண்டியிட்டு மூன்று நாட்களாக உண்ணா நோன்பிருந்து பிரார்த்தனை செய்தார். அவர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, கடல் பின்வாங்கத் தொடங்கி, அரிப்பைத் தடுக்கும் மணல் அணையை உருவாக்கியது. டச்சு வீரர்களும் இதைக் கண்டு பின்வாங்க வேண்டியிருந்தது. அதைக்கண்டு வியப்படைந்த மீனவர்கள் அந்தோனியைச் சுற்றித் திரண்டனர். அவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். அந்த இடம் தான் இன்றைய கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் அமைந்திருக்கும் இடம். "அந்தோனியின் அதிசயம்" பலராலும் அப்போது பேசப்பட்டது. டச்சு ஆளுநர் வில்லெம் மௌரிட்ஸ் ப்ரூய்னின்க் (Willem Maurits Bruyninck - 1739-1742) அந்தோணியின் பிரார்த்தனையின் சக்தியை அறிந்தார். கத்தோலிக்கர்கள் மீதும் அவர் தாராளவாத அணுகுமுறையைக் கொண்டிருந்தார். அந்த அதிசயம் நிகழ்ந்த நிலத்தை அந்தோணிக்கு வழங்கினார் அங்கே அவர் சிறு தொழிலையும் தெய்வீகப் பணியையும் மேற்கொள்வதற்கு ஆளுனரால் அனுமதி வழங்கப்பட்டது. 1656ஆம் ஆண்டிற்குப் பின்னர் கத்தோலிக்கர்கள் கொழும்பு நகரத்திற்குள் மத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது நன்றியை வெளிக்காட்டுமுகமாகவும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கும் முகமாகவும் சிலுவையை நாட்டிய இடத்தில் சிறிய தேவாலயத்தை அமைத்தார் அந்தோணி. அந்த சிலுவை நட்டிய இடத்தில் தான் இன்றும் பலர் வரிசையாக சென்று வழிபடும் அந்தோனியாரின் நாவின் பகுதி வைக்கப்பட்டிருக்கிற “புதுமைச் சுருவம்” இருக்கிறது. அந்தோணி முதலில் அந்த நிலத்தில் ஒரு சிறு கடையை ஆரம்பித்தார். அது கடை “கடே” என்றே அழைக்கப்பட்டது. கொச்சினில் இருந்து வந்தவரின் கடை என்பதால் “கொச்சியாகே கடே” காலப்போக்கில் “கொச்சிக்கடை” என்று நிலை பெற்றது. டச்சு கிழக்கிந்திய கம்பனியால் அந்தோனியார் தேவாலயம் இருந்த நிலம் எழுதிக்கொடுக்கப்பட்ட ஆவணம் இந்த நிலமனை அதிகாரப்பூர்வமாக டச்சு கிழக்கிந்திய கம்பனியால் ஜனவரி 20, 1790 அன்று, பத்திரம் இல 31 இன் மூலம் தேவாலயத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. இதில் கிழக்கிந்திய கம்பனியின் உத்தியோகபூர்வ இலட்சினை பொறித்திருப்பதைக் காண்பீர்கள். பின்னர் அந்தோணி இறந்தபோது அவரின் உடலும் இந்த ஆலயத்தினுள் தான் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது தேவாலயத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள புனித அந்தோனியின் புனிதச் சிலை 1822 ஆம் ஆண்டு கோவாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். 1806 ஆம் ஆண்டு அடித்தளம் இடப்பட்டு 1834ஆம் ஆண்டு புதிய தேவாலயம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அந்த ஆண்டைத்தான் ஆலயத்தின் தொடக்க நாளாக இன்றுவரை கணிக்கப்பட்டுவருகிறது. 1934இல் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. 1938 ஆம் ஆண்டு பெரிய ஆலயமாக பெருப்பிக்கப்பட்டது. இன்று இலங்கையில் புனித அந்தோணியார் ஆலயம் மிகப்பெரிய புனித தேவாலயமாக மாறியுள்ளது. பாதுவா நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித அந்தோனியாரின் நாக்கின் ஒரு சிறிய பகுதி இங்கே விசேடமாக வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் அதனை வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். 1912 ஆம் ஆண்டு கவர்னர் சேர் ஹென்றி மெக்கலம் கொழும்பு துறைமுகத்திற்காக இந்த நிலத்தை கையகப்படுத்த முயற்சித்தபோது ரோமன் கத்தோலிக்க மக்களின் தெய்வீக வழிபாட்டுத் தளமெனக் கூறி அவரின் ஆலோசகர்கள் பலர் அதனை எதிர்த்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. லலித் அத்துலத் முதலி துறைமுக அமைச்சராக இருந்த காலத்தில் துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான துறைமுகக் காணியின் ஒரு பகுதியை அந்தோனியார் தேவாலய விஸ்தரிப்புக்கு வழங்கினார். அந்தோனியார் ஆலயம் துறைமுகத்தின் எல்லையோர காப்பரண் போலவே நிலைத்து நிற்பதை நீங்கள் அறிவீர்கள். 90 ஆம் ஆண்டு பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் அந்தோனியார் ஆலயத்தை கொழும்பு உயர் மறை மாவட்டப் பங்காக ஆக்கும்படி விடுத்த கோரிக்கை; ஆயரால் எற்றுகொள்ளப்படாத நிலையில் ஆலய நிர்வாகம் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியது. முதற் தடவையாக மூன்று மாதங்கள் ஆலயம் மூடிவைத்த கதை நாட்டின் முக்கிய பேசுபொருளாக அப்போது இருந்தது. இறுதியில் 15.08.1990 அன்றிலிருந்து சுதந்திர ஆலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதுவரை கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலய நிர்வாகத்தின் கீழ் தான் இது இயங்கிவந்தது. கொழும்பில் அதிகளவிலானோர் கலந்து கொள்ளும் கிறிஸ்தவ திருவிழா “அந்தோனியார் திருவிழா தான். பல தடவைகள் சன நெருக்கடியால் விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. அந்தளவுக்கு கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை ஜிந்துப்பிட்டி, விவேகானந்தா மேடு, செட்டியார் தெரு, என தேவாலயத்தின் சுற்றுவட்டாரப் பகுதியெங்கும் திருவிழாக்கோலம் பூண்டு, எங்கெங்கும் விளக்கொளியில் கொண்டாட்டமாகக் காட்சித் தரும். இந்து, பௌத்த, முஸ்லிம் மக்களும் கூட ஒன்றாக கூடிக் கொண்டாடும் நிகழ்வு அது. வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் இந்து பக்தர்கள் பலர் கூட அங்கே சென்றுவிட்டு அப்படியே அந்தோனியார் கோவில் தமிழ்ப் பூசையில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி இந்தப் பகுதியில் உள்ள புனித வியாகுல மாதா, புனித வேலாங்கன்னி, புனித அந்தோனியார், புனித லூசியாஸ் ஆகிய ஆலயங்கள் 1996 இலிருந்து ஒன்றாக இணைந்து விபூதிப் புதன் நாளில் “கொழும்பு பெரிய சிலுவைப் பாதை” என்கிற ஊர்வலத்தை செய்து வருகின்றனர். இதுவும் கொழும்பில் மிகப் பெரிய அளவினர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக ஆகியிருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி மோசமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலுக்கு அந்தோனியார் ஆலயமும் இலக்கானது. 93 பேர் இங்கே கொல்லப்பட்டார்கள். பல நூற்றுகணக்கானோர் படுகாயமுற்றார்கள். பலத்த சேதத்துக்கு உள்ளான தேவாலயம் யூன் 12 ஆம் திகதி தான் மீண்டும் திறக்கப்பட்டது. அந்தோனியார் தேவாலயத்தின் வளவில் மிஷனரிமார்களால் கொச்சிக்கடை புனித அந்தோனியார் பாடசாலை (இப்போது கல்லூரி) 1945 இல் 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1958 இல் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு இன்று ஆயிரம் மாணவர்களுக்கும் மேல் கற்கும் கல்லூரியாக இயங்கி வருகிறது. அந்தோனியார் தேவாலயத்தின் வரலாற்றைக் கூறும் சிறு நூதனசாலையொன்று 2013 ஜனவரி 13 அன்றிலிருந்து இயங்கி வருகிறது. அங்கே இந்த வரலாற்று விபரங்களை மேலும் அறியலாம். இந்த கட்டுரைக்காக எனக்கு உதவிய வண. அன்புராசா அடிகள், வண ஆனந்த அடிகள் உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றிகள். மேலும் அந்தோனியார் தேவாலயத்தோடு 48 வருடங்கள் கடமையாற்றி, தமிழ் வழிபாட்டுப் பொறுப்பாளராக இருந்து இன்று பிரான்சில் வசிக்கும் அம்புரோஸ் பீட்டர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். நன்றி - தினகரன் - 23.01.2022 https://www.namathumalayagam.com/2022/01/kochchikadeStanthonys.html?fbclid=IwAR3ZeHeMxda5u3dpb-9LnVB3_AfjxFBofV97HEqc7v4f2GAeOZsW42jNyGg 1 Link to comment Share on other sites More sharing options...
நிழலி Posted January 31 தொடங்கியவர் Share Posted January 31 கொழும்பின் பெயர் எப்படி உருவானது? ( கொழும்பின் கதை - 13) என்.சரவணன் கொழும்பின் உருவாக்கம் எங்கிருந்து தொடங்கியது, அது எத்தனை அந்நிய சக்திகளிடம் சிக்குண்டு மாற்றம் கண்டு இந்த நிலையை அடைந்தது என்பதைப் பற்றிய விரிவான ஆய்வை இத்தொடரில் இனி வரும் வாரங்களில் செய்வோம். அதே வேளை “கொழும்பு” என்கிற பெயர் உருவானதன் காரணங்களை இங்கே ஆராய்வோம். தமிழில் – கொழும்பு ஆங்கிலத்தில் – கொலொம்போ சிங்களத்தில் – கொலம்ப என்று இப்போது பயன்பாட்டில் உள்ளது. கொழும்பு என்கிற பெயர் வருவதற்கான ஏதுவான உறுதியான காரணம் என்ன என்பது தொடர்பாக இன்றும் குழப்பகரமான விளக்கங்களே நீடிக்கின்றன. அதிகமான விபரங்கள் வாய்மொழிக் கதைகளாக நீல்பவையாக்கவுமே உள்ளன. போர்த்துக்கேயரின் வருகையோடு தான் “கொழும்பு” என்கிற பதம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஒரு கருத்து இருந்து வருகிறது. அதேவேளை கொழும்பு என்கிற பதத்துக்கு ஏறத்தாள நிகரான பதங்கள் அதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் கொழும்பு என்கிற பெயரானது சுதேச இலங்கையரால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக காலனித்துவ காலத்தில் காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது தான். இலங்கைத் தீவானது உலகின் மேற்குக்கும் கிழக்குக்குமான கடற்பயணத்தின் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாக ஆவதற்கு அதன் அமைவிடம் முக்கியமானதொரு காரணம் என்பதை நாமறிவோம். அது தவிர்க்கமுடியாத தரிப்பிடமாக அது எப்போது உலக நாடுகளால் உணரப்பட்டதோ அப்போதிருந்தே இலங்கையின் பொருளாதார, அரசியல் கேந்திர முக்கியத்துவமும் உறுதியாயிற்ற என்றே கூறலாம். அந்த கேந்திர முக்கியத்துவத்துக்கு மேலும் பலமூட்டிய இடம் கொழும்பு தான். இந்துசமுத்திரத்தின் முத்து என்று இலங்கையை ஒரு குறியீடாக கூறினாலும்; இந்து சமுத்திரத்தின் அதி முக்கியமான கேந்திர மையமாக கொழும்பு அமையப்பற்றது. 13 ஆம் நூற்றாண்டில் இன்னும் சொல்லப்போனால்தம்பதெனிய காலப்பகுதியில் கொழும்பை ஒரு துறைமுகத் துறையாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்கிற குறிப்புகள் உண்டு.சீனாவினூடாக இலங்கைக்கு வந்த மார்கோ போலோ இந்தியாவின் மலபார் பிரதேசங்களுக்கு செல்லுமுன் கொழும்பிலிருந்து அல்லது அதற்கு அருகாமையிலிருந்து தான் புறப்பட்டிருக்ககூடும் என்கிற ஐயங்கள் உண்டு. ஆனால் மார்கோ போலோவின் குறிப்புகளில் குறிப்பாக கொழும்பு துறைமுகம் பற்றி குறிப்பிடப்படவில்லை.. இலங்கையைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளைப் பொறுத்தளவில்; 1344 இல் மொரோக்கோவிலிருந்து இருந்து இலங்கைக்கு வந்த இபன் பதூதா எழுதிவிட்டுச் சென்ற பதிவுகளையும் வரலாற்றாசிரியர்கள் முக்கிய கவனத்திற்கெடுப்பர். அவர் அன்றைய பதிவுகளில் “கலம்பு” (Kalanbu) என்றே பயன்படுத்தியிருக்கிறார். கொழும்பையும், மேற்கு தொடர்ச்சி கப்பற்துறை பற்றிய விபரங்களையும் அவர் பல விபரங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர் “ஜலஸ்தி” என்கிற முஸ்லிம் இனத்தவர் ஒருவரே இந்த கொழும்பு நகரின் ஆட்சியாளராக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மலே இனத்தைச் சேர்ந்த ஒரு கடற்கொள்ளையர் அவர் என்று இந்தக் காலப்பகுதியில் கொழும்பு கரையோரங்களில் முஸ்லிம் வர்த்தகர்களின் செல்வாக்கு அதிகம் இருந்ததை நாம் அறிவோம். முதன்முதலில் போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரங்களைக் கைப்பற்றிய போது கொழும்பு போன்ற இடங்களில் அவர்கள் சண்டையிட்டது சுதேசியர்களுடன் அல்ல. முஸ்லிம் வர்த்தகர்களுடன் தான். முஸ்லிம் வியாபாரிகளை அகற்றிவிட்டுத் தான் அந்த இடத்தை அவர்கள் கைப்பற்றிக்கொண்டார்கள். ஏறத்தாள அதே காலப்பகுதியில் சீனப் பேரரசரின் கடற்படைத் தளபதியான வாங் - தா – யுவான் (Wang – ta - Yuan), கொழும்பு நகரத்தைப் பற்றி விவரித்திருக்கிறார். அவர் இந்த இடத்தை "கொலாப்பு" என்று குறிப்பிட்டிருக்கிறார். இபன் பதூதா அதை "கலங்பு" என்று குறிப்பிட்டார். அழைத்தார். ஆனால் அவர்களின் உச்சரிப்பு எந்த அளவிற்கு இதில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைக் குறிப்பாக உறுதிசெய்துவிட முடியாது.. 16 நூற்றாண்டுக்கு முன்னர் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், அதே வேளை இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் கொழும்பு விளங்கியது. கொழும்பு இவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளுக்கான வரலாற்று வழித்தடங்களை கடந்து தான் வந்துள்ளது. கொழும்பு ஒரு வர்த்தகத் தலை நகரமாகவும் நிர்வாகத் தலைநகராகவும் போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்னரே ஆகிவிட்டது. ஆனால் போர்த்துக்கேயர்கள் தான் அதை உறுதியாக பலப்படுத்தினார்கள். போர்த்துக்கேயரின் காலத்துக்கு அண்மைய காலத்தில் தான் சிங்கள ராஜாவலிய நூலும் எழுதப்பட்டது. மகாவம்சம், தீபவம்சம், பூஜாவலிய போன்ற இலங்கையின் வரலாற்று நூல்களின் வரிசையில் ராஜாவலியவும் முக்கியமானது. அதில் “களன் தொட்ட” என்று இந்த இடத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. “களனி கம்தொட்ட” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு என்கிற பெயர் நிலைபெறுவதற்கு முன்னரே களனி என்கிற பிரதேசமும், களனி அரசும், (களனியை கல்யாணி என்றும் சிங்களத்தில் அழைப்பார்கள்.) களனி விகாரையும், களனி கங்கையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு பிரசித்தி பெற்றிருந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். பழங்காலத்தில் “கொலன் தொட்ட” என்று சிங்களத்தில் அழைக்கப்பட்டு வந்தது தான் மருவி கொழும்பு என்கிற பெயர் ஆனதாகவும் கூறப்படுவதுண்டு. கொலன் தொட்ட என்றால் கெலனி (களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பில் இருந்த அந்த களனி ஆறு அன்று மிகவும் பிரபல்யமானது. களனி கங்கை கொழும்பில் வந்து கலக்கும் இடங்களான இன்றைய முகத்துவாரம், காலிமுகத்திடல் போன்ற இடங்களையொட்டித் தான் அன்றைய சிறு துறைமுகம் அமைந்திருந்தது. பிரபல வரலாற்றாசிரியர் எமர்சன் டெனன்ட் (Emmerson Tennent) கொழும்பு என்கிற பெயரின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும்போது; “களன் தொட்ட” என்கிற பெயரைத் தான் போர்த்துக்கேயர் தமது உச்சரிப்புக்கு ஏற்ற ஒலியுடன் “கலம்பு” என்று மாற்றினார்கள் என்கிறார். அந்த வரிசையில் நீர்கொழும்பின் பெயரையும் போர்த்துக்கேயர் தான் “நெகம்பு” (Negombo) என்று மாற்றியதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார். கொழும்பு என்கிற பெயர் எப்படி உருவானது என்கிற கதைகளில் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியது என்கிற கருத்தும் உண்டு. (கொள-பச்சை, அம்ப-மாம்பழம், தொட்ட - துறைமுகம்). மாந்தோப்புள்ள துறைமுகம் என்கிற அர்த்தத்தை அது குறிப்பதாக பல நூல்கள் குறிப்பிடுகின்றன. அதேவேளை சிங்கள இலக்கியங்களிலும் சிங்கள நிகண்டுகளிலும் “கொழும்பு” என்கிற பெயர் பிற்காலத்தில் இடம்பெற்றிக்கிறது. குறிப்பாக சிங்கள மொழியில் (ஹெல மொழியில்) கொழும்பு என்கிற பெயர் இடம்பெற்ற முதல் நூலாக தம்பதெனிய காலத்துக்கு உரிய பிரபல இலக்கியங்களில் ஒன்றான “சிதத் சங்கராவ”என்கிற இலக்கியத்தில் முதன் முதலாக அடையாளம் காணமுடிகிறது. பாளி மொழியில் “கதம்ப” என்று “கொலன் மரத்தைக்” குறிப்பிடுவார்கள். அதுவே காலப்போக்கில் சிங்களத்தில் மருவி “கொலம்ப” என்று ஆகியிருக்கலாம் என்கிற கருத்தும் கூட நிலவுகிறது. இதன் பிரகாரம் கொழும்பு என்கிற சொல் போர்த்துக்கேயர் வருவதற்கு முன்னரே பிறந்துவிட்டதாக வாதிப்பவர்களும் உள்ளார்கள். ஒருவகை படகுக்கு “கலம்பு” என்று மலையாள மொழியில் குறிப்பிடுவதாகவும், அடிக்கடி இங்குள்ள துறைமுகத்துக்கு கேரளாவில் இருந்து அந்த படகு போக்குவரத்தில் இருந்ததால் “கலம்ப” என்று இந்த இடத்துக்கு பெயர் வந்திருக்கலாம் என்கிற ஒரு கருத்துமுண்டு. இதை பிரபல சிங்கள மொழிப் புலவரான முனிதாச குமாரதுங்கவும் உடன்படுகிறார். தமிழின் “களப்பு” என்கிற சொல்லில் இருந்து “கலம்ப” உருவாகியிருக்கலாம் என்கிற கருத்தும் உண்டு. குறிப்பாக கொழும்பு பேறை வாவி ஒரு களப்பு போன்ற தோற்றத்தில் இருந்ததால் இந்த இடத்துக்கு கலப்பு என்று அழைக்கப்பட்டு அது திரிந்து காலம்ப என்று ஆகியிருக்கலாம் என்கிற வாதமும் இருக்கிறது. ஆனால் பேறை வாவி பிறகாலத்தில் தான் திருத்தப்பட்டு இந்த வடிவத்தைப் பெற்றது என்பதால் அந்த வாதமும் அத்தனை பலமானதாக இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் முக்கிய இடங்களின் பெயர்களைப் பற்றி ஆராய்ந்த யூலியஸ் த லெனரோல் ராஜரீக ஆசியர் கழகத்தின் ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் கொழும்பு துறைமுகத்தை ஊடறுத்துச் செல்லும் “கொலன்னாவ நதி” கடலில் விழுந்த இடத்தைத் தான் “கொலொன்தொட்ட” என்றார்கள் என்று குறிப்பிடுகிறார். 14 நூற்றாண்டில் கம்பளை இராச்சிய காலத்தைச் சேர்ந்த “நிக்காய சங்கிரஹா” என்கிற நூலில் கோட்டை அரசன் நடத்திய பௌத்த தீட்சை (உபசம்பத்தா) நடத்திய இடத்தை”கலம்பு” என்கிறார். அது “கொலன்னாவ ஆற்றைத் தான்” குறிப்பிடுவதாக அவர் தனது ஆய்வில் தெரிவிக்கிறார். கொழும்பு நகரத்தின் வரலாற்றைத் தேடிச்சென்ற இன்னொரு ஆய்வாளரான எஸ்.ஜே.பெரேரா என்கிற பாதிரியாரும் இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறார். களனி ஆற்றின் நிரம்பி வழியும் நீரை எடுத்துக்கொண்டு மாளிகாவத்தை சதுப்பு நிலங்கள் வழியாக மருதானை புனித செபஸ்தியான் மேட்டுக்கடியில் ஊடுருவி புறக்கோட்டை கைமன் வாசல் (ஐந்துலாம்புசந்தி) வழியாக, ரேக்லமேஷன் வீதிக்கு சமாந்திரமாக வந்து கடலில் விழுவதாக குறிப்பிடப்படுகிறது. போர்த்துக்கேயர்கள் “புனித ஜோன்ஸ் ஆறு” என்று பெயரிட்டதுடன், பேறை வாவியை உருவாக்க இது பெரும்பங்கை வகித்ததாம். இதைவிட பிரசித்திபெற்ற இன்னோர் கதையுமுண்டு. மாம்பழம் இல்லாத மாமரம் ஒன்று கொழும்பு துறைமுகப்பகுதியில் (குறிப்பாக கோட்டை commissariat street பகுதியில்) இருந்ததாம். ஆனால் அதில் மாம்பழங்கள் இருந்ததில்லையாம், பதிலாக பச்சைநிற இலைகளால் பெருகிப் போய் இருந்ததாம். அந்த மரத்துக்குத் தான் “கொல – அம்ப” (பச்சை மாம்பழம்) என்று பெயரிடப்பட்டதாம். அதேவேளை கொலம்பஸின் நினைவாக போர்த்துக்கேயர் “கொலம்ப” என்கிற பெயரை இந்த இடத்துக்குப் பெயராக இட்டார்கள் என்கிற ஒரு பிரபல கதை உண்டு. கொழும்புத் துறையை அடையும் கப்பல் சிப்பாய்களுக்கு இந்த மரம் இலகுவாக தூரத்தில் இருந்து அப்போது தென்படுமாம். இதன் உண்மை பொய்யை நாம் உறுதிசெய்ய முடியாது போனாலும் இதற்கு கிட்டிய விபரமொன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஒல்லாந்தர்கள் கொழும்பு கோட்டையைக் கைப்பற்றிய பின்னர் கொழும்பு கோட்டைக்கென ஒரு சின்னத்தை உருவாக்கினார்கள். இலங்கையில் ஒல்லாந்த கைப்பற்றிய சகல கோட்டைகளுக்கும் ஒவ்வுறு விதமான சின்னங்களை உருவாக்கிக் பேணினார்கள். கொழும்பு கோட்டையின் சின்னத்தில் மாம்பழம் இல்லாத வெறும் இலைகளை மட்டுமே கொண்ட மாமரத்தில் ஒரு புறாவொன்று வசிப்பதாக சின்னத்தை வடிவமைத்துப் பயன்படுத்தினார்கள். இன்றும் இந்த சின்னத்தை கொழும்பில் உள்ள டச்சு மியூசியத்தில் பெரிதாகக் காணலாம். கண்டி ராஜ்ஜியத்திலிருந்து கொழும்புக்கு தப்பிவந்த ரொபர்ட் நொக்ஸ் தனது குறிப்புகளில் போர்த்துக்கேயரால் உச்சரிக்கப்பட்டது போலவே “கொழும்பொ” என்று தான் உச்சரித்தார். அதே உச்சரிப்பு தான் ஆங்கிலேயராலும் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டு நிலைபெற்றது. நன்றி - தினகரன் - 30.02.2022 கொழும்பின் பெயர் எப்படி உருவானது? ( கொழும்பின் கதை - 13) என்.சரவணன் - நமது மலையகம் (namathumalayagam.com) 2 Link to comment Share on other sites
Recommended Posts