Jump to content

ஆயிரம் பொய் சொல்லி - Dr.T.கோபிசங்கர்


Recommended Posts

“ ஆயிரம் பொய் சொல்லி ”

“சித்தப்பா சொல்லப் போப் போறாராம் நீயும் போப்போறியே “ எண்டு சின்ன மாமி கேக்க , நானும் ஏதோ அம்மா சொன்னாத்தான் போவன் எண்ட மாதிரி அம்மாவைப் பாக்க , “ வா வந்து இந்த சட்டையை மாத்தீட்டுப் போ” எண்டா அம்மா. ஒற்றை விளப் போகோணுமாம் எண்டு ஆள் கணக்குக்கு என்னை ஏத்தி விட்டது எண்டது பிறகு விளங்கிச்சு.

“ உவனை உண்ட மடியில வைச்சிரு அண்ணை “ எண்டு பெரிய மாமி சொல்ல சித்தப்பாவும் காரின்டை முன் சீட்டில இருந்த படி என்னை மடீல தூக்கி வைச்சிருந்தார். “தம்பி காரை கொக்குவிலுக்கு விடும் முதலாவதா பெரியப்பருக்கு சொல்லிப்போட்டுத்தான் மற்றாக்களுக்கு சொல்ல வேணும்” எண்டு சித்தப்பா சொல்ல காரும் பெரிய அப்பப்பா வின்டை வீட்டை போச்சுது.

Morris Oxford காருக்கால என்னை விட ஆறு பேர் இறங்கிச்சினம் . அந்தக்காருக்க எப்பிடி எல்லாரும் வந்தது எண்டு தெரியாது. “வா வா வா “ எண்டு அப்பப்பா கேட்டடீல வந்து கூப்பிட்டார் . நாலு கதிரையிலும் பெரியாக்கள் இருக்க மற்றவை குந்தில இருந்திச்சினம் . சித்தப்பா தொடங்கினார் “இது பொம்பளையின்டை தமக்கையும் புருசனும் , இது இன்னார் எண்டு” ஆக்களை அறிமுகப்படுத்த.

கலியாண வீடெண்டால் காட் அடிச்சாலும் அப்ப போய்ச் சொல்லுறது தான் முறை. அதுகும் மாப்பிள்ளை பொம்பிளை ரெண்டு பகுதியும் போக வேணும் . சொந்தத்தில மூத்த ஆளுக்கு முதல் சொல்லித்தான் பிறகு மற்ற ஆக்களுக்கு சொல்லுறது. அதே முறை சபை தொடங்க செம்பு குடுக்கிறது , முதல்ல ஆசீர்வாத்த்திற்கு ஏத்திறது கட்டினாப் பிறகு பொம்பிளை மாப்பிளை முதல் விருந்துக்கு போறது வரை தொடரும்.

அப்பாச்சியை பாத்து அப்பப்பா கோப்பி போடுமன் எண்டு சொல்ல, “இல்லை பரவாயில்லை நாங்கள் இன்னும் கன இடம் போகோணும் “ எண்டு ஆரோ சொல்ல முதல், “ கலியாணத்துக்கு சொல்ல வந்தா ஏதும் குடிச்சிட்டுப் போகோணும் இல்லாட்டி சொல்லிறாக்கள் சபையில வந்து சாப்பிடமாட்டினம்” எண்டபடி அப்பாச்சி கோப்பியோட வந்தா. எல்லா அலுவலும் சரியே எண்டு அப்பாச்சியும் முக்கியமான எல்லாத்தையும் ஞாபகப் படுத்தினா . “சரி நாங்கள் வாறம் “ இருவத்தி மூண்டு பொன்னுருக்கு காலமை ஒம்பதுக்கு, இருவைத்தஞ்சு காலமை பாலறுகு வைச்சு தோய வாக்கிறது, முகூர்த்தம் பத்தரையில இருந்து பன்னிரெண்டரை வரை , நல்லூரான் மணி பன்னிரெண்டடிக்க தாலி கட்ட வேணும், ரெண்டு நாள் முதலே வாங்கோ நீங்க தான் தாலி கட்டேக்க தேங்காய் உடைக்க வேணும்“ எண்டு சொல்லீட்டு வெளிக்கிட்டம்.

கலியாணத்துக்கு சொல்ல வந்தா ஏதாவது குடிக்கோணும் எண்டு சொல்லிச்சொல்லி வெய்யில் நேரம் தேசிக்காய் தண்ணி தாறன் , இந்தாங்கோ பால் தேத்தண்ணி குடியுங்கோ எண்ட கேட்டவை வீட்டை எல்லாம் வாங்கிக்குடிச்சிட்டு வீட்டை திருப்பி வர பசியே இல்லை. முக்கியமா சண்டைக்காரர் வீட்டில வாய் நனைக்காட்டி அவை சபையில கை நனைக்க மாட்டினம்.

கலியாணத்துக்கு சொல்லேக்கேம் முறை இருக்கு. வீட்டுக்குள் போய் ரெண்டு பேரையும் கூப்பிட்டு சொல்லிறது , வயது போன ஆக்கள் இருந்தால் தனிய அவைக்கும் சொல்ல வேணும். தகப்பன் இல்லாத வீடுகளில மூத்த பெடியனை கூப்பிட்டு அப்பா இல்லாத்தால முறைக்கு உனக்கு சொல்லிறம் எண்டு சொல்லிறது. RSVP எல்லாம் போட்டு அவமானப்படுத்திறேல்லை உரிமையோட வா எண்டு தான் சொல்லிறது.

பெரிய அப்பாச்சி வீட்டை போய் சொல்லீட்டு வெளிக்கிட ,அவ சித்தப்பாவை கூட்டிக்கொண்டு போய் சொன்னா “ வந்தனீ ஒரு எட்டுப் போய் சிவா அத்தானுக்கும் சொல்லன் , என்ன தான் இருந்தாலும் உனக்கு அக்கா அத்தான் முறை தானே” எண்டு தொடங்கினா. காணிப்பிரச்சினை ஒண்டில தொடங்கின சண்டை , இன்னும் முகம் பாத்துக் கதைக்கிறதில்லை. சித்தப்பாவும் “ ஒருக்கா அக்காவை கேக்க வேணும் எண்டு இழுக்க” , அவளவைக்கு நான் சொல்லிறன் எண்ட படி எல்லாரையும் வரச்சொல்லீட்டு முன்னால நடக்கத் தொடங்கினா. ஏதோ எதிர் பாத்துக்கொண்டிருந்த மாதிரி எங்களக்கண்டிட்டு அக்காவும் அத்தானும் சந்தோசமாக உள்ள கூட்டிக்கொண்டு போய் கதைச்சிட்டு வெளிக்கிட, “ வாசல்ல கட்டிற வாழைக்குலை , பந்திக்கு வாழையிலை ,வாழைப்பழம் எல்லாம் என்ட கணக்கு ,அவளுக்கு நான் செய்யாம யார் செய்யிற எண்டு “ உரிமையா அத்தான் சொல்ல தன்டை கடமையை முடிச்ச அப்பாச்சி அடுப்பில வைச்ச உலை ஞாபகம் வர திருப்பி வீட்டை வெளிக்கிட்டா. ஓவ்வொரு கலியாணத்தோடேம் பல சண்டைகள் தீந்து சமாதானம் திரும்ப வரும் அதோட ஒரு புதுச்சண்டையும் தொடங்கும்.

நாங்கள் திரும்பி வர இன்னொரு Cambridge கார் வெளிக்கிட்டிச்சு சாமாங்கள் எடுத்துக் கொண்டர, Cambridge காருக்கு உள்ளையும் மேல பூட்டின கரியரிலேம் எவ்வளவும் சாமாங்களும் அடுக்கலாம். கலியாணம் , சடங்கு எண்டு ஏதாவது வந்தால் நிறைய சாமாங்கள் தேவைப்படும். கரணடீல இருந்து கம்பளம் வரை , கிடாரத்தில இருந்து படங்கு வரை ஒண்டும் வாடைக்கு எடுக்கிறேல்லை. சமையல் கிடாரங்கள் ,பெரிய தாச்சிகள் கரண்டிகள் எல்லாம் ஊருக்க ஆற்றேம் இருக்கும் இல்லாட்டி கோயில்களில இருக்கும் . மற்றச்சாமாங்கள் எல்லாம் ஆக்களைக் கேட்டு தேடி வீடு வீடாய்ப் போய் எடுக்கிறது.

கொண்டு வாற சாமாங்களை பெரிசு , சின்னன் , வட்டம் , சதுரம் எண்டு tray ஐ களையும் , எவசில்வர் பேணி சின்னன், பெரிசு எண்டும் எந்தெந்த அன்ரி வீட்டு சாமாங்கள் எண்டும் எழுதி அது மாறுப்படாம இருக்க ஒரு அடையாளம் பெயின்ற்றில போட்டு வைக்கிறது. பந்திப்பாய் , ஓலைப்பாய், கரண்டி கம்பளம் , பாட்டு கசற், ரேடியோ, மேளக்கச்சேரி கசற் எண்டு எந்தெந்த வீட்டை என்ன எடுத்த எண்ட விபரம் எல்லாம் கொப்பீல பதிஞ்சு வைக்கிறது.

கலியாண வீடு வந்தோண்ணை ஒரு கொப்பி எடுத்து உ, சிவமயம் எல்லாம் எழுதி வைக்கிறது. நாள்கூறை எடுக்கிற , நாள் பலகாரம் சுடுறது, முகூர்த்தம், கால் மாறிற நேரங்கள் , தோயவாக்கிறது ,பொன்னுருக்கு ,எழுத்து நேரங்கள் ராகு காலம் எல்லாம் எழுதி வைக்கிறது. கலாயாணத்துக்கு ஆரார் எவ்வளவு காசு என்னென்ன தந்தது, வாழைக்குலையில இருந்து பலகாரம் எண்டு எல்லாம் கணக்கில வரும். ஆராருக்கு சொல்லிறது , எந்தெந்தக் குடும்பத்தில எத்தினை பேர் எண்ட கணக்கு எல்லாம் எழுதி வைக்கிறதும் இந்தக் கொப்பீல தான் .

அது மட்டுமில்லை கலியாணம் முடிஞ்சாப்பிறகு நடக்கிற சண்டைக்கும் அது தான் சாட்சி, ”அவர் இது செய்தார், உன்டை கொண்ணர் என்னத்தைக் கொண்டந்தார் “ எண்டு மாறி மாறி சண்டைக்குள்ளேம் கிழியாதது இந்தக் கொப்பி தான்.

எல்லாம் முடிய டிறங்குப் பெட்டிக்குள்ள திருப்பி கவனாமா எடுத்து வைக்கிறது அடுத்த முறையும் தேவை எண்டு.

ஒரு கொப்பியால இவ்வளவு சண்டை எண்டால் மிச்சச் சண்டைகள்………

ஆயிரம் தரம் போய்ச் சொல்லிச் செய்யிறது கலியாணம்.

Dr.T.கோபிசங்கர் - யாழ்ப்பாணம் 

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to ஆயிரம் பொய் சொல்லி - Dr.T.கோபிசங்கர்
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி டாகடர் நல்ல பழுத்த அனுபவசாலி போல இருக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

பகிர்வுக்கு நன்றி டாகடர் நல்ல பழுத்த அனுபவசாலி போல இருக்கிறார் 

ஆளை இனி யாழில் நேரே எழுத வைத்தால் நல்லது போல் இருக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.