Jump to content

சடம் - ஜெயமோகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புத் துறப்பு: கதையைப் படித்து மனவுளைச்சல் ஏற்பட்டால் இணைத்தவர் பொறுப்பில்லை.
 

சடம் - ஜெயமோகன்

olaichuvadiJanuary 1, 2022
wp6002767-1024x576.jpg

“சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள்.

சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?”

“அவரு மஹான்” என்றார் தரகு நாராயாணன். “சாமி தத்துவம் சொல்லுது”

“மயிரு தத்துவம்… அள்ளையிலே ஒரு சவுட்டு சவுட்டினா அண்டி உருண்டு அண்ணாக்கிலே கேறி இருக்கும்… அப்ப பேச்ச நிப்பாட்டுவான்… ஏல நாம கேக்குத கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியுமாண்ணு கேளு”

“சாமி, போலீஸ் ஏமான் என்ன கேக்குதாருண்ணா, இங்கால ஒரு குட்டி வந்துதுல்லா? வலிய வீட்டிலே குட்டியாக்கும். தலைக்கு சுகமில்லை… அத எங்கிணயாம் கண்டியளா?” என்றார் நாராயணன்.

“சிஜ்ஜடம்…” என்றார் சாமியார். சுட்டுவிரலை வான்நோக்கி நீட்டி, மிக ஆழமாக எதையோ சொல்வதுபோல “சிஜ்ஜடம்” என்றார்.

“லே இவனாக்கும் அசல் அக்கூஸ்டு. இந்த தாயளிய கஸ்டடியிலே எடுத்து கொஸ்டின் பண்ணினா மணிமணியாட்டு சொல்லுவான்… லே எந்திரிலே தாயளி…” என்று சுடலைப் பிள்ளை கையை ஓங்கினார்.

“அய்யோ அவரு மஹானாக்கும்!” என்றார் நாராயணன்.

“அப்ப அவன் சொல்லுகது என்னான்னு கேட்டுச் சொல்லுடே… எளவு என்னமோ மந்திரம்லா சொல்லுகான். அவனுக்க அம்மைக்க அரணாக்கயிறு கண்டவனாக்கும் நான்… தாயளி, வெளையாடுதானா?”

சாமியாரைப் போலவே அரைக்கிறுக்கனாக தோன்றிய இன்னொருவன் குடிசைக்கு வெளியே நின்றிருந்தான். அவன்தான் சாமியாருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்பவன். தன்னை பாந்தன் என்று சொல்லிக்கொண்டான். வேறு பெயர் சொல்ல மறுத்தான். பாந்தன் என்றால் நடந்து அலைபவன் என்று பொருள் சொன்னான்.

குடிசைமுன் அவனைப் பார்த்ததுமே சுடலைப் பிள்ளை சொல்லிவிட்டார் “ரெண்டு பயக்களும் நல்ல கஞ்சாப் பார்ட்டியாக்கும். கண்ணப்பாத்தா தெரியாதா?  குரங்குக்கு வாலு குமாரனுக்கு கோலுன்னு சொல்லுண்டுடே… நம்ம கோலுக்கு தெரியாத ஒண்ணுமில்ல. நாம ஆளு ஆருண்ணு நினைச்சே?”

நாராயணன் கை காட்டியதும் அவன் உள்ளே வந்தான்

“இந்த நாயிமகன் என்னலே சொல்லுதான்?”

“சாமி அதை மட்டும்தான் சொல்லும்… சிஜ்ஜடம்…” என்றான் அவன்.

“அது தெரியுது. அந்தக் கோப்புக்கு என்ன அர்த்தம்? அதச்சொல்லு” அவனைக் கூர்ந்து பார்த்து “புதையலு கிதையலு ஒளிச்சு வச்சிருக்கானாடே இவன்?”

“சிஜ்ஜடம்னாக்க சித் கூட்டல் ஜடம்… ரெண்டும் சேந்தா சிஜ்ஜடம்னு ஒரே சொல்லு. சித்னா நம்ம சித்தம். அதாவது நமக்கு உள்ள இருக்கப்பட்டது. ஜடம்னா வெளியே இருக்கப்பட்ட இந்த அன்னமய லோகம்… அதுக்க சமன்வயமாக்கும் இந்த உலகம்”

“மயிரு உலகம்… போரும்டே… டேய் நான் கேட்டதுக்கு பதில் சொல்லச் சொல்லு. இல்லேன்னா ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போயி அவனுக்க ரெண்டு அண்டியையும் சவிட்டிப் பிதுக்கி சட்டினியாட்டு எடுப்பேன்ன்னு சொல்லு”

“சாமி பேசமாட்டாரு”

“அலறுவாண்டே… அலறி காலைப்பிடிப்பான்… பாக்குதியா?”

அவன் பேசாமல் நின்றான்

நாராயணன் “நான் கேக்குதேன்” என்றார். “அதாவது, இங்க ராத்திரி ஒரு சின்னக்குட்டி வந்ததா? ஒரு பதினாறு பதினேளு வயசு இருக்கும்… பேச்சிப்பாறை சங்சனிலே ராத்திரி ஒம்பது மணிக்கு பஸ்ஸிறங்கியிருக்கா…எஞ்சீனியருக்க மகளாக்கும்னு நினைச்சுப்போட்டாக. அவ எங்க போனாண்ணு இப்ப தெரியல்ல. அவ டாக்டர் அனந்தன் மேனோனுக்க மகளாக்கும். கொஞ்சம் வட்டு எளகின கேஸு… இப்பம் அவள கொண்டுவான்னு எங்க தாலிய அறுக்கிறாங்க”

”அதுக்கு சாமிகிட்ட கேட்டு பிரயோஜனமில்ல”

“தாயளி, இவன் மட்டும்லாடே இந்தக் காட்டிலே இப்டி குடிலும் கெட்டி இருக்கான்…வேற இங்க காட்டுலே நாய்நரிகள் கிட்ட கேக்கணுமோ?” என்றார் சுடலைப் பிள்ளை.

”சாமி எதையும் பாக்குறதில்ல”

“பின்ன? பின்ன ஆருடே இங்க பாக்குதது?”

“தடம்பிடிச்சு பாருங்க… அங்க பஸ் ஸ்டாப்பிலே எறங்கினா போறதுக்கு மூணு வளிதான். ஒண்ணு அப்டியே மேலேறிப்போனா அணைக்கெட்டு வருது… இன்னொண்ணு வலத்தாலே திரும்பி நேரா கோர்ட்டர்ஸு. மூணாம் வளி இங்க வந்து சேருது…”

“அங்கல்லாம் கேட்டாச்சு” என்றார் சுடலைப்பிள்ளை.

“அப்ப இந்த வளியே காட்டுக்குள்ள போற மட்டும் போயி பாருங்க… இப்ப மழை இல்ல. அதனாலே கால்த்தடம் இருக்காது. ஆனா வழியிலே அங்கங்க பூழி மண்ணு உண்டு… அங்க கால்த்தடம் இருக்கான்னு பாருங்க… ஓடையிலே எறங்கி நின்னா கால்தடம் தெரியும். அதையும் பாருங்க. அப்டியே போங்க”

“நீயும் வாடே”

“இல்ல, நான் வாறதில்ல”

“வாறதில்லியா? டேய் ஆருகிட்ட பேசுதே நீ? இது போலீஸாக்கும்… மூஞ்சிப்புல்ல கையால பறிச்சு எடுத்திருவேன்” சுடலைப் பிள்ளை கூவியபடி எழுந்தார். “அவனும் அவனுக்க குடிலும்…” என்று அங்கிருந்த சிறிய கல்விளக்கை உதைக்க காலை எடுத்தார்.

“டேய், வெளியே போடா” என்றபடி பாந்தன் கையை ஓங்கிக்கொண்டு அருகே வந்தான். முகம் சிவந்து கண்கள் இடுங்கியிருந்தன. உடலே நடுங்கிக்கொண்டிருந்தது. “போ வெளியே… அழிச்சிருவேன்”

“டேய்!” என்றபோது சுடலைப் பிள்ளையின் குரல் நடுங்கியது

“ம்” என்றான் பாந்தன்

நாராயணன் “வாங்க பிள்ளைவாள்…” என்று சுடலைப் பிள்ளை கையை பிடித்து வெளியே இழுத்து வந்தார்

“என்னலே சொல்லுதான்?” என்று சுடலைப் பிள்ளை கலக்கமாக கேட்டார்

“என்ன எளவோ, நாம என்ன கண்டோம்? பேசாம போயிருவோம்”

“நீ சொன்னதனாலே வாறேன்” என்று சட்டையை இழுத்து விட்டபடி, வியர்வை வழிய, மூச்சு வாங்க, சுடலைப் பிள்ளை நடந்தார். “இது  நம்ம ஜூரிஸ்டிக்சன் இல்ல… இல்லேன்னா இவனுக்கு இவன்  அம்மை குடுத்த அம்மிஞ்ஞப்பால பிளிஞ்சு வெளிய எடுத்திருப்பேன்… ஏங்கிட்ட வெளையாடுதான்… சூறத்தாயளி”

“நாம பொடிநடையா அப்டியே போயி பாப்பம் பிள்ளைவாள்”

“உனக்கு காடு தெரியுமாடே?”

“தெரிஞ்சவரை போவம்…”

“பிறவு?”

“பிள்ளைவாள், ஒரு கணக்குண்டு…அதுக்குமேலே காட்டுக்குள்ள ஒரு குட்டி போய்ட்டா பிறகு அது நம்ம கணக்குல்ல. கேஸை அப்டியே  ஃபாரஸ்டுக்காரனுக கணக்கிலே தள்ளிவிட்டிருவோம்… நமக்கு அது காட்டுக்குள்ள போனதுக்கான தடம் வேணும்…இல்லியா?”

“அது நியாயம்” என்றார் சுடலைப் பிள்ளை. ஒரு பீடி எடுத்து பற்றவைத்தபடி “அப்டியே பாத்துட்டுப் போவம்… ஃபாரஸ்டு எல்கைக்குள்ள ஒரு கால்தடம் கிட்டினாப்போரும்டே, திரும்பிருவோம்”

“ஒரு பீடி குடுங்க”

நாராயணனும் பீடி பற்றவைத்துக்கொண்டார்.

“தண்ணி இருக்காடே?”

“இருக்கு. தேவைன்னா ஓடையிலே தண்ணி பிடிச்சுக்கலாம்… திங்கிறதுக்கு வேண்டியதும் காட்டுக்குள்ளே உண்டு… நல்ல ஏத்தன் வாழைப்பழமும் காயும் உண்டு… காய்னா சுட்டு திங்கணும். மரசீனியும் காய்ச்சிலும் உண்டு… பிள்ளைவாள், ஒரு மாசம் ஒருத்தனுக்க தயவும் இல்லாம இந்தக் காட்டிலே ஜீவிக்கலாம்”

“நீ இருந்திருக்கியோ?”

“நான் இருந்ததில்ல. நம்ம அம்மாவன் ஒருத்தரு மாசக்கணக்கிலே உள்ள இருப்பாரு”

“ஆனை உண்டுல்லா?”

“ஆனை அதுக்க சோலிய பாக்குது…”

“ஏம்லே பீடி வாசத்துக்கு ஆனை வருமா?”

“பிள்ளைவாள், பீடின்னா அக்கினியில்லா?”

“ஆமா… குளிருக்கு பீடியாக்கும்டே தொணை… பீடி இல்லேன்னா நான் எப்டி இந்த உத்தியோகம் பாத்திருப்பேன். எம்பிடு எடங்கள், எம்பிடு பிரச்சினைகள். நாம செத்தா நம்ம சமாதியிலே பீடிதாண்டே வைக்கணும்”

“சாவுறதப்பத்தி என்ன பேச்சு?”

காடு அடர்த்தியில்லாமல், உயரமற்ற செடிகளாலும் ஆங்காங்கே நின்ற உயரமான அயனி, இலுப்பை, காட்டுநாவல் மரங்களாலும் ஆனதாக இருந்தது. நடுவே அந்த பாதை ஒரு பெரிய சிவப்பு கொடிபோல கிடந்தது.

“பாதையிலே கிளை ஒண்ணும் பிரியல்ல. நல்ல வேளை” என்றார் நாராயணன்.

“காலடித்தடம் தெரியுதாடே?”

“காலடித்தடம் விளுந்திருந்தாலும் அதுக்க மேலே காத்து அடிச்சிருக்கும். பல மிருகங்கள் நடந்திருக்கும்…”

“அதென்னதுடே?”

“கொரங்கு…கருங்கொரங்கு”

“சவம், நான் கரடீன்னுல்லா நினைச்சுப்பிட்டேன்… கொரங்குக்கு என்னடே அம்பிடு அதுப்பு?”

“அதுக்க எடம்லா?”

“நம்மள கொரங்கா நினைக்குமோ?”

“நினைக்கும்போல. பொம்புளையக் கண்டா கத்தி உறையிலே இருந்து வெளியே வரும்லா?”

“ஏம்டே, இந்த குட்டிய கொரங்கு என்னமாம் செய்திருக்க வாய்ப்புண்டா?”

“செய்தாலும் செய்யும்…”

சட்டென்று சுடலைப் பிள்ளை சிரித்தார். “அந்த மேனோன் குட்டிக்கு கொரங்குக்குட்டி பிறந்தா நல்ல சேலாட்டு இருக்கும் இல்லவே?”

நாராயணன் “ஹிஹிஹி” என்று ஓசையிட்டு சிரித்தார்

“இந்தக் காட்டிலே நல்ல குட்டிகள் கிட்டுமாடே?”

“காணிக்காரக் குட்டிகளா? அவனுக நம்ம அண்டிய வெட்டி கொண்டுபோயி சுட்டு திம்பானுக”

“பைசா குடுக்கலாம்டே”

“பைசா அவனுக்கு எதுக்கு?”

“நான் போற எடத்திலே ஒரு மாதிரி சுமாரான சரக்கு இருந்தாக்கூட கைய வைக்காம வந்ததில்ல பாத்துக்க. பாதிவேல மிரட்டல் உருட்டலிலேயே நடந்துபோடும்…”

“பைசா குடுக்கணும்லா?”

“பைசாவா? போலீசுகாரனா? நல்ல கத…ஹெஹெஹெ”

”எப்டி, ஒரு அம்பது தேறுமா சர்வீஸிலே?”

“அம்பதா? டேய், ரெண்டாயிரம் கொறையாது”

“அம்மாடி!”

“பின்ன? இது சர்க்கார் சர்வீஸிலே இருக்கப்பட்ட நயம் லாத்தியில்லா?”

“தங்கத்திலே பூண் போடணும்”

சுடலைப் பிள்ளை உரக்கச் சிரித்தார். “நான் சர்வீஸிலே சேந்த மூணாம் மாசமாக்கும் முதல் குட்டி… நல்ல பாவப்பட்ட குட்டி. பதினாறு வயசு இருக்கும். அப்பன் சாராயம் காய்ச்சுத ஆளு. நாங்க போனப்ப காட்டுக்குள்ள ஓடிப்போட்டான். அம்மைக்காரிக்கு தீனம்… அது குடிலுக்குள்ள நடுங்கி அழுதுகிட்டு நிக்குது. ஏட்டு கிட்டப்பன் உள்ள போயிட்டு வந்து எங்கிட்ட  நீயும் வேணுமானா போடேன்னான்”

“ஓகோ” என்று நாராயணன் சொன்னார்.

“உள்ள அது அரைச்சவமாட்டு கிடக்குது. பாயில நல்ல ரெத்தம் வேற… கிட்டப்பன் ஆளு நல்ல எருமை மாதிரியாக்கும். அவன் அடிச்ச அடியிலே அப்டியே குட்டிக்குப் போதம் போயிட்டுது.  நான் போனப்ப முளிச்சுக்கிட்டு பயந்து அலறுது… எந்திரிச்சு ஓடப்பாத்துது. பிடிச்சு போட்டு ஏறிட்டேன்…அது ஒரு அனுபவம்டே… அவ அலறிகிட்டே இருந்தா. அறுக்கப்போற கோளி சிறகடிச்சு கத்துறது மாதிரி…”

“அய்யோ!” என்றபடி நாராயணன் நின்று விட்டார். முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

“அப்ப ஒரு நாலஞ்சு நாளு அதை நினைக்கிறப்ப ஒருமாதிரி இருந்தது. பிறவு பழகிப்போச்சு. பிறவு அது ஒரு சொகமா ஆச்சுடே… குட்டி நல்லா பயந்து கதறி அழுது கூப்பாடுபோட்டு துள்ளிச்சாடி மறிஞ்சாத்தான் ஒரு ரெசம். சும்மா செத்த சவம் மாதிரி கிடக்குத பொட்டைகளை வச்சு என்ன செய்ய?”

“அடிப்பியளோ?”

“கெட்டினவள்னா அடிச்சாத்தானே எளகும்? மத்ததுக அதுகளே பயந்துகிடும்… இப்ப பின்ன நாலஞ்சு வருசமா என் பெஞ்சாதிக்கு உடம்பு செரியில்ல. வாதம் உண்டு… அதனாலே சவத்த நான் சீண்டுறதில்ல… என்னைய கண்டா அவளும் பாதிசெத்துப்போனதுமாதிரி கிடப்பா…” சுடலைப் பிள்ளை இன்னொரு பீடியை பற்றவைத்துக் கொண்டார்.

“பீடி தீந்துபோயிடப்பிடாது” என்றார் நாராயணன்

“இந்தக் குட்டி எப்டிடே, நல்ல சரக்கா? நீ கண்டிருக்கியா?”

“நான் கண்டிட்டுண்டு. மேனோனுக்க குலதெய்வம் இங்க எங்கியோ இருக்கு. வனதுர்க்கை. அங்க குடும்பத்தோட ஆண்டோடாண்டு வருவாக. வேண்டிய ஏற்பாடை நான் செய்யணும். முட்டன் கறுப்பு ஆடு பலி குடுக்கணும்… கறுப்பாடு தேடி பிடிக்கிறது எளுப்பம் இல்லை பாத்துக்கிடும். ஒரு சின்ன வெள்ளையாவது இல்லாத ஆடுக்கு நாயா அலையணும். ஆனா ஒண்ணு, மேனோன்மாரு சொன்ன விலை தருவாக”

”சவம், இங்க காட்டுக்குள்ள என்ன எளவுக்கு வருது அது?”

“இங்க வந்திருக்கான்னே தெரியல்ல… ஒரு காலடித்தடம்கூட காணுமே”

“பின்ன எப்டி, பறந்திருக்குமோ?”

“மரத்துமேலே போயிருக்குமோ? குரங்கு ஜென்மமாக்கும்”

பீடியை ஆழ இழுத்தபடி சுடலைப் பிள்ளை குனிந்து நடந்தார். காடு செறிவாகிக் கொண்டே வந்தது. மரங்கள் மேலே எழுந்து கிளைகள் பின்னி, தழைகள் அடர்ந்து நிழலை இருட்டளவுக்கு கொண்டுசென்றன.

“அது என்னவே சத்தம்?”

“கொரங்குக…காட்டுக்குள்ள ஆளு வந்திருக்கம்ல?”

“அதுக்கு அதுகளுக்கு என்ன?”

“மத்த சீவராசிகளுக்கு சங்கதிய தெரியப்படுத்தணும்ல?”

“செண்ட்டிரி டூட்டி பாக்குதோ?” என்றார் சுடலைப் பிள்ளை “எளவு, சிரட்டைய வச்சு தட்டின மாதிரில்ல சவுண்டு விடுது”

“ஆனா நமக்கு நல்லதாக்கும். புலியோ ஆனையோ வருதுண்ணா சொல்லிப்போடும்”

“இங்க புலி உண்டா?”

“எல்லா மயிரும் உண்டு…காடுல்லா?”

”நல்ல நெருக்கமான காடுடே…இவ்ளவு சத்தம் இருந்தாலும் அப்டி ஒரு அமைதி. பாத்தியா?”

“அதுபின்ன காடுல்லா? காடு தபஸ் செய்யுது. அதனாலேதான் தபஸ் செய்யுதவனும் காட்டுக்குள்ள வாறான்”

“அந்த ரெண்டு கஞ்சாக்குடிக்கிகளும் தபஸ் செய்யுதானுகளாடே?”

“ஆரு கண்டா?”

“அவன் கண்ணக்கண்டா பயந்து வருதுடே… அதில ஒரு கிறுக்கு தெரியுது பாத்துக்க. கிறுக்கனுக்கு இடமா வலமா… கொரவளய கடிச்சுப்புட்டான்னா? என் சங்கு நடுங்கிப்போட்டுது பாத்துக்க”

“நமக்கு என்னத்துக்கு வம்பு?” என்றார் நாராயணன்.

அதன்பின்னர் அவர்கள் பேசவில்லை. காடு மேலும் மேலும் அடர்ந்து சரிந்து இறங்கிக்கொண்டே போயிற்று. பாதையில் இருந்த பெரிய வேர்கள் படிகள் போலிருந்தன.

“ஒரு ரெண்டு மணிக்கூர் நடந்திருப்போமாடே?”

“இருக்கும்”

“ஒண்ணும் காணுமே…திரும்பிருவோமா?”

“அதாக்கும் நல்லது…”

“ஒரு ஃபர்லாங் நடந்து பாப்பம்…வந்தது வந்தாச்சு”

மேலும் நடந்தபோது சட்டென்று சுடலைப் பிள்ளை பார்த்துவிட்டார். “வேய் தரகு… அந்தாலே பாரும்வே”

“எனக்க சாஸ்தாவே!” என்றார் நாராயணன்

அங்கே பெரிய பாறைக்கு கீழே இன்னொரு பாறைமேல் அந்தப்பெண் கிடந்தாள். சிவப்புச் சுடிதார் போட்டிருந்தாள்.

“உறங்குதாளோ?” என்றார் நாராயணன்.

“ஆளு செத்தாச்சு… எனக்கு பாத்தாலே தெரியும். நான் பாக்காத பொணமா?”

அவர்கள் பாறையின் அருகே வேர்கள் வழியாக தொற்றி, கொடிகளை பற்றிக்கொண்டு மெல்ல இறங்கினார்கள்.

“பாத்து, பாறையிலே வளுக்கினா கபால மோச்சமாக்கும்”

“ரெத்தம் காணுமே?”

“மண்டையிலே அடிபட்டிருக்கும்டே”

அவர்கள் அந்த தட்டையான பாறையில் இறங்கினார்கள். மேலே அவர்கள் நின்றிருந்த பாறை உச்சி உயரமாக தெரிந்தது.

“நல்ல உசரம்” என்றார் நாராயணன் மேலே பார்த்தபின்.

கீழே ஓடை சலசலத்துச் சென்றது. அதன் இரு விளிம்புகளிலும் தழைத்த நாணல் காற்றில் அலைபாய்ந்தது.

“தண்ணி குடிக்க வந்திருக்கா…விளுந்துபோட்டா”

“பாரும்வே” என்றார் நாராயணன் “நமக்கு அத தொட ஏலு இல்ல”

சுடலைப் பிள்ளை குந்தி அமர்ந்து அவள் முகத்தில் கைவைத்துப் பார்த்தார். கன்னத்தை மெல்ல தட்டி பார்த்தார். மூச்சும் உயிர்ச்சூடும் இல்லை. இதயத்துடிப்பு இல்லை.

தலையை தூக்கி பின்பக்கம் பார்த்தார். மண்டையோடு உடைந்து குழைந்து உள்ளே அதுங்கியிருந்தது. மூக்கில் சிறிது ரத்தம் வந்து உறைந்து கருஞ்சிவப்பாக துளித்திருந்தது.

“விளுந்ததுமே உயிரு போயிருக்கு. ஆனா  மூணுமணிநேரம் ஆகல்ல. சூடு போயாச்சு, ஆனா சதை இறுக ஆரம்பிக்கல்ல” என்றார் சுடலைப் பிள்ளை

“பாவம், நல்ல குட்டி. சிரிச்சுகிட்டே இருக்கும்”

சுடலைப் பிள்ளை எழுந்து சுற்றிலும் பார்த்தார். காட்டு ஓடையில் நாணல்களின் அசைவு வெள்ளம் அலைகொள்வதுபோலிருந்தது. இலைசெறிந்த மரத்தழைப்பினூடாக பெரிய அருவி விழுவது போல காற்று ஓடும் சத்தம்.

“எப்டியானாலும் கேஸு முடிஞ்சாச்சு. நமக்கென்னவே, காணமப்போனவ உசிரோட கிடைச்சாலும் பிணமாக் கிடைச்சாலும் நமக்கு ஒண்ணுதான்…” என்ற சுடலைப் பிள்ளை மீண்டும் அவளைப் பார்த்து “நல்ல அளகுபோல குட்டி. சினிமா ஸ்டார் கணக்கால்ல இருக்கா..என்ன நெறம், என்ன முடி…மூக்கும் உதடும் செதுக்கின மாதிரி இருக்குடே”

“இப்ப என்ன செய்ய?”

“பிறைவேட் பிராப்பர்ட்டின்னா ஓனர பிடிச்சு மெரட்டி நாலஞ்சு லெச்சம் தேத்திப்பிடலாம். இது ஃபாரஸ்டு”

“நாம இப்ப என்ன செய்ய?” என்றார் நாராயணன் எரிச்சலுடன்

“ஆமா, நாம நம்ம சோலிகள பாப்பம்” என்றார் சுடலைப் பிள்ளை தன் நோட்டு புத்தகத்தை எடுத்தார். அதில் இருந்த சிறிய பேனாவை எடுத்ததும் அவருக்கு குழப்பம் வந்தது. திரும்பி நாராயணனை பார்த்தார்.

“நான் இங்கதான் இருக்கணும். இங்க நாயிநரி வாற எடம். பாடிய போட்டுட்டு போகமுடியாது. உம்மை உக்கார வைக்கவும் முடியாது”

“ஆமா”

“நீரு கெளம்பிப்போயி சங்சனிலே இருந்து ஸ்டேசனுக்கு போன் செய்யும்… போலீஸு வந்துதான் பாடிய கொண்டுபோகணும்… போஸ்ட்மார்ட்டம், ஸ்பாட் வெரிபிகேசன், சடங்கு சாங்கியம்னு ஆயிரம் இருக்கு. நான் இங்க இருந்துகிடுதேன்”

“சரி, நான் கெளம்புறேன்”

“இரும்வே… நான் ஒரு குறிப்பு தாறேன். அதை அப்டியே இன்ஸ்பெக்டர்கிட்ட படிச்சு காட்டும்…” 

“செரி”

“இங்க ராத்திரி இருக்க முடியாது. போலீஸு அந்திக்குள்ள வந்தாகணும் கேட்டுக்கிடும்…”

“ஆமா, ராத்திரியானா நாயிநரி வந்திரும்”

“போய்ட்டு சீக்கிரம் வாரும்…”

“செரி”

குறிப்பை அவர் எழுதித்தர அதை வாங்கிக்கொண்டு நாராயணன் மேலேறிச் சென்றார். அவர் செல்வதைப் பார்த்தபின் ஒரு சிறுபாறையில் அமர்ந்தார். தொப்பியை கழற்றி முழங்கால் மடிப்பில் மாட்டி வைத்தபின் பிணத்தை கூர்ந்து பார்த்தார். “நல்ல பக்கா குட்டி” என்று முனகிக்கொண்டு காட்டை பார்த்தார்.

எத்தனை நேரமாகுமென தெரியவில்லை. எழுந்து நின்று சோம்பல் முறித்தபோது முழுமையாக முதல்குறிப்பை எழுதிவிடலாம் என்று தோன்றியது. வெயில் சீக்கிரமே மறையலாம்.

குறிப்பேட்டை எடுத்து அந்த இடத்தை வரைய ஆரம்பித்தார். அதன்பின் பிணத்தைச் சுற்றிவந்து ஒவ்வொரு தகவலாக குறித்தார். பிணம் தூங்குவதுபோலவே கிடந்தது.

“நல்ல குடும்பத்து ஐட்டமாக்கும்…உள்ளங்காலு பட்டுமாதிரி வெள்ளையா இருக்கு” என்றார்.

விரல்களில் சிவப்பு நகச்சாயம். “கிளிமூக்கு மாதிரில்லா இருக்கு”. கைகளிலும் சிவப்பு நகச்சாயம். விரல்கள் தளிர்கள் போலிருந்தன. முகத்தில் ஒரே ஒரு சிவப்புப் பரு. சிவந்த சிறிய உதடுகள் உலர்ந்து, மெல்லிய சுருக்கங்களுடன், சிவப்பு பாலிதீன் போல தெரிந்தன. அவற்றின் இடைவெளியில் உப்புப்பரல்போல தெளிந்த வெண்ணிறத்தில் இரண்டு பற்களின் நுனிகள்.

மூக்குக்கு கீழே மெல்லிய மயிர்ப்பரப்பு இருந்தது. அவர் அவள் காதுகளின் அருகே மென்மயிர் கீழிறங்கியிருப்பதை கண்டார். ஒரு கணத்தில் அவர் உடலை கற்பனை செய்துவிட்டார்.

குந்தி அமர்ந்து அவள் சுடிதாரின் மேல்சட்டையை தூக்கி தொப்புளையும் அடிவயிற்றையும் பார்த்தார். அவர் நினைத்ததைப்போலவே மென்மயிர்ப்பரவல். மயிர்ச் சுழிகள்.

அவருடைய நெஞ்சு படபடத்தது. எழுந்து அப்பால் சென்று நின்று ஓடையைப் பார்த்தார். மீண்டும் திரும்பி பிணத்தைப் பார்த்தார். அவர் உடலே நடுங்கிக்கொண்டிருந்தது. புட்டியை எடுத்து தண்ணீர் குடித்தார். மீண்டும் பாறையில் சென்று அமர்ந்தார்.

மீண்டும் எழுந்து பிணத்தருகே வந்து குனிந்து நடுங்கும் கைகளால் அதன் கீழாடையை பற்றி நாடாவை இழுத்து அவிழ்த்தார். அவள் பார்ப்பதுபோல உணர்ந்து நிமிர்ந்து முகத்தைப் பார்த்தார். பிணத்தின் முகம் மெழுகாலானதுபோல் இருந்தது. மூக்கின் சிறிய துளைகள். கீழுதட்டுக்கு அடியில் இருந்த சிறிய குழி. கழுத்தின் சிவந்த ரேகைகள்.

ஒரே இழுப்பில் கீழாடையை தாழ்த்தினார். அவர் அடிவயிற்று மென்மயிர் பரவலை ஏற்கனவே நன்கு பார்த்திருந்தார் என்று தோன்றியது. சுற்றுமுற்றும் பார்த்தபின் கீழாடையை நன்றாக இழுத்து கால்வழியாகக் கழற்றி அப்பாலிட்டார். உள்ளாடையையும் உருவினார்.அவள் பெண்குறியை பார்த்து விட்டு  எழுந்துகொண்டார்.

கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. மீண்டும் தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருந்தது. சட்டென்று ஒரு சீற்றம் வந்து அந்த உடலை காலால் உதைத்தார். அது அசைந்தது. தலை ஆடியபோது அது ஏதோ பேசமுனைந்தது போல் இருந்தது.

மேலேறிச் சென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் உடனே திரும்பிப் பார்க்கத்தான் தோன்றியது “நாறச்சிறுக்கி” என்றபடி பிணத்தை பார்த்தார். அதன் முகத்தில் புன்னகை தோன்றியிருக்கிறதா?

மீண்டும் அருகே சென்று அதன் மேல்பகுதி ஆடையை கழற்றினார். உள்ளே இளஞ்சிவப்பு நிற பிரா. அதன் கொக்கியை தேடி கழற்றினார். உடல் சற்று உப்ப ஆரம்பித்திருந்தமையால் ஆடை இறுகி விலாவில் சிவப்பாக தடம் தெரிந்தது.

சிறிய பீங்கான் கிண்ணம்போன்ற முலைகள். இரு மச்சம்போல முலைக்காம்புகள். காம்பின் மொட்டுகள் மிகச்சிறிதாக உள்ளடங்கியிருந்தன.

“நாற முண்ட…சாவடிக்குதா” என்றார். முனகியபடி அப்பால் சென்று இன்னொரு பீடியை பற்றவைத்துக்கொண்டார். கைகள் நடுங்கியதில் தீப்பெட்டியைப் பற்றவைக்க முடியவில்லை.

புகையை இழுக்க முடியாமல் மூச்சு வாங்கியது. பீடியை வீசி விட்டு கமறி துப்பியபடி ஓடை நோக்கி இறங்கினார். இரண்டு பாறைகளில் தாவி இறங்கியதும் அவருக்குள் ஏதோ நிகழ்ந்தது. என்ன ஏது என உணர்வதற்குள் அவர் தாவி மேலேறி, வெறியுடன் தன் பூட்ஸ்களையும் ஆடைகளையும் களைந்து வீசிவிட்டு அவள் மேல் கவிந்தார்.

அவருக்குள் அவரே திகைப்புடன் விலகி நின்று அவர் செய்வதை பார்த்துக்கொண்டிருந்தார். “நாற முண்ட, நாற முண்ட” என்று சொல்லிக்கொண்டே பசிவெறிகொண்ட விலங்கு வேட்டையின் உடலை உண்பதுபோல செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

சுற்றிநின்ற மரங்கள் எல்லாம் விரைப்படைந்தன. பாறைப்பரப்புகள் சருமம்போல் உயிர்பெற்றன. இலைகள் கண்ணிமைகள் என ஆயின.

சட்டென்று ஒரு முனகலோசையுடன் அவள் உடல் அசைவுகொண்டது. கைகள் அவரை வளைத்து இறுக்கிக் கொண்டன.

https://olaichuvadi.in/story/sadam-jeyamohan-story/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமம் அக்கம் பக்கம் சுற்றம் சூழ்நிலை பார்க்காது தன் பசி தீர்த்துக் கொள்ளும்.......!  😢

பொறுப்புத் துறப்பு: கதையைப் படித்து மனவுளைச்சல் ஏற்பட்டால் இணைத்தவர் பொறுப்பில்லை.

மனவுளைச்சலாவது மண்ணாங்கட்டியாவது,  இதுக்கு ஒரு பொறுப்புத்  துறப்பு.........!   😂 

நன்றி கிருபன்.........!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மனவுளைச்சலாவது மண்ணாங்கட்டியாவது,  இதுக்கு ஒரு பொறுப்புத்  துறப்பு.........!

சுவி ஐயாவைப் போல இரும்பைத் திண்டு தண்ணி குடிச்சாக்களுக்கு ஒன்றும் உளையாது! ஆனால் எல்லோரும் அப்படியா!

Link to comment
Share on other sites

என் நண்பர் ஒருவரின் நண்பர் அவர். கடும் மதுப்பழக்கம். திடீர் என்று மது குடிப்பதை அறவே நிறுத்தி விட்டார். அப்படி நிறுத்தி சில நாட்கள் போன பின் மதுவுக்கு அடிமையான அவர் உடல் திடீரென மதுவும் போதையும் இல்லாமல் ஆனாதால் சமநிலை தவறி ஆடிக் கொண்டே இருந்தது. வீதியில் போகும் போது செருப்பு ஒன்று கழற, அவர் கழன்ற தன் செருப்பை அணிய முற்பட, மீண்டும் சமநிலை தவறி பிரடி அடி பட வீதியில் விழுந்தார். 

கொண்டு போய் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். இரவாகி விட்டதால் நாளை மதியம் வருவோம் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் மாலை தான் போனோம். அதற்குள் ஆள் இறந்து மோர்ச்சரியிற்கு கொண்டு சென்று விட்டார்கள்.

ஆஸ்பத்திரியில் தெரிந்த சில மருத்துவ நண்பர்கள் இருந்ததால் அவர்களின் செல்வாக்குடன் உடனே மோர்ச்சரிக்குள் போனோம். வாங்கு ஒன்றில் நிர்வாணமாக அவர் உடல் கிடந்தது. உடலை உறவினர் பொறுப்பு எடுக்கும் வரைக்கும் வாங்குகளில் தான் வைத்திருப்பினம். அருகில் இன்னும் சில உடல்கள் வாங்குகள் மீது வளர்த்தப்பட்டு இருந்தன. ஒரு வயதான பெண்ணின் உடலுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு இளம் பெண்ணின் உடல். தற்கொலை என்று சொன்னார்கள். எந்த உடலிலும் ஆடை எதுவும் இருக்கவில்லை. 

பார்த்து விட்டு உடனே போய் விடுங்கள் ...இரவாகி விட்டது என்றார் அங்கிருந்த காவலாலிகளில் ஒருவர். ஏன் என்று கேட்டோம்.

மாலையானதும் வெளியார் எவரையும் விடுவதில்லையாம். ஏனென்றால் இவ்வாறு இறந்த உடல்கள் மீது தம் காம இச்சையை தீர்க்கவென்றே பலர் திருட்டுத்தனமாக உள்ளே வந்து விடுவார்களாம். காசு வாங்கிக் கொண்டு அனுமதிக்கும் காவலாளிகளும் உள்ளனர் என்றார். 

காமத்தால் உலகில் பிறந்த உயிர்களில் சில காம இச்சையை தீர்க்க எந்தளவுக்கு கீழே இறங்கி வருகின்றன என்று அறிந்து கொண்ட தருணங்களில் அதுவும் ஒன்று.

*****************************

இந்தக் கதையை " ஒரு கை அவரது கழுத்தையும் மறு கை உடலையும் இறுக்கிக் கொள்ள தொடங்கின.." என்று முடித்து இருந்தால் இன்னும் கொஞ்சம் அமானுஷமாக இருந்திருக்குமோ என நினைக்கின்றேன்.

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் எழுதியது போன்ற சில நிகழ்வுகள் தெரிந்தும் இங்கு எழுதுவதை தவிர்பதுண்டு......எங்கு என்ன ஆதாரம் என்றால் எதைத்தான் சொல்ல முடியும்.....!  🤔

நன்றி நிழலி .....! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.