Jump to content

அவனும் அவர்களும் - சிறுகதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பறை (இசைக்கருவி) - Wikiwand      அக்கினிக்குஞ்சு   இணையத்தில் இம்மாதம் வெளியாகியிருந்தது .

அந்த மேளச் சத்தத்தின் அதிர்வில் கண்விழிக்கிறார் தேவர்.

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண்  

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண்  டாடாண்டு டண் டண்

பறை மேளத்துக்குச் சொல்லியிருக்கு எண்டல்லோ சொன்னவை. இதென்ன கர்ண கடூரமான ஒரு அடி. சத்தத்தைக் கேட்டால் பறை மேளச் சத்தம் போல இல்லையே. மெதுவாக யார் அடிக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தார் தேவர். அதில் ஒன்றே ஒன்றுதான் பறை மேளம். மற்ற இரண்டும் வேறு வடிவத்தில் இந்தியாவில் கிந்திக் காரங்கள் அடிக்கிற மேளத்தின்ர வடிவில இருக்க, எல்லாமே இப்ப மாறிக்கொண்டேதான் வருகுது என்னைத் தவிர என எண்ணிக்கொண்டார்.  தாளக்கட்டுப்பாட்டோட தான் மூன்றுபேரும் மேளத்தை அடிக்கினம். ஆனாலும் முன்னைய இசை எங்கோ தொலைந்து ........... சனங்களுக்கும் அதுபற்றி எல்லாம் யோசிக்க எங்க நேரம். காசைக் குடுத்துக் கடமையைச் செய்தாச் சரி என்ற மனநிலை.

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு 

டாண் டாண் டாண் டாண் டாண் டாண்

டாங்கு டுக்குடு டுக்குடு டுக்குடு

முன்னரெல்லாம் செத்தவீடுகளுக்கு அடிக்கும் இசை நினைவில் வந்து மனதை நிறைக்க பெரிய பெருமூச்சு வெளிவருகிறது அவரிடம் இருந்து.

உடலை அசைக்க முடியாமல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் படுத்த படுக்கைதான். எட்டு மாதங்களுக்கு முதல் சைக்கிளால விழுந்து ஆஸ்பத்திரியில கொண்டுபோய் போட்டதுதான். கோதாரி விழுந்த கொறோனா அங்க தொத்தி தனி வாட்டில கொண்டேப் போட்டு ஒருத்தரும் கொறோனா வந்தவையைப் பாக்க வரேலாது எண்டுபோட்டு, “இவரைப் பார்க்க தனி ஆள் போடுவம். ஒரு நாளைக்கு 2000 ரூபா தரவேணும்” எண்டு சொன்னார்கள். அங்க போய் ஆரிட்டைக் கதைக்க முடியும்? உடனேயே வீட்டுக்காறரும் வேற வழியில்லாமல் ஓம் என்று தலையாட்ட, ஒழுங்கான சாப்பாடுகூட அவங்கள் தராமல்த்தான் நான் சரியாய் இளைச்சுப்போனன் என எண்ணியவருக்கு மானச்சாட்சி உறுத்தியது.

காலையில இடியப்பமும் சொதியும் சம்பலும் கட்டிய பார்சல் கொண்டுவந்து குடுத்தவங்கள் தானே. மத்தியானமும் இரண்டு கறியோட சோறு, இரவிலும் என்ன வேணும் எண்டு கேட்பாங்கள். சிலவேளை பக்கத்துக் கட்டில்காரர் சாப்பிடும்போது அவிச்ச முட்டை கூடக்கண்ணில் பட்டதுதான். இவர் தான் வீட்டில இருந்து சாப்பாடு வாறேல்லை என்ற கோபத்தில வேண்டாம் எண்டு தலையாட்டிவிட்டுச் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிச்சது. சாப்பிடாமல் விடவிட வயதுபோன இவரின் குடல் இன்னும் சுருங்கிப்போய் இவரால ஒழுங்காச் சாப்பிடவே முடியாமல் போச்சு.  

ஒரு மாதத்தின் பின்னர்தான் அவரை வீட்டுக்குக் கூட்டிப் போக அனுமதித்தார்கள். இவரைப் பார்த்த ஆளுக்கு வீணாக அறுபதாயிரம் கட்ட மருமகன் தான் தன் இருப்பிலிருந்த பணத்தைக் கொடுக்கவேண்டியதாகிவிட்டது. இவர் மருமகன் இவரைக் கூட்டிக்கொண்டு போக வந்து பார்த்து என்ன இப்பிடி மெலிச்சு போனார் மாமா என்று ஏங்கித்தான் போனான்.

வீட்டை போனதும் இவர் மனைவி சந்திரா ஐயோ என்னப்பா இப்பிடி ஆயிட்டிங்களே என்று கத்திக் குளறி அழ, மாமி அவருக்கு வருத்தம் இல்லை மாமி. நீங்கள் அழுது அவரைப் பயப்படுத்தாதேங்கோ எண்டதோடை மகள்களின் சத்தம் வராத அழுகையும் நிண்டு போச்சு.  

வெளிநாட்டில இருக்கிற இவற்றை மருமகன் அனுப்பின காசில உயத்திப் பதிக்கிற கட்டில் வாங்கி அவரை அதில கிடத்திச்சினம். பேரப்பிள்ளையள்  எல்லாம் இவரில நல்ல உயிர். சுற்றிவர வந்து நின்று இவரின் கையைப் பிடிச்சுக்கொண்டு தாத்தா என்று விக்கியபடி இருக்கினம்.   

“எனக்கு ஒண்டும் இல்லை. அதுதான் நான் வீட்டை வந்திட்டன் தானே அழாதேங்கோ அப்பனவை”

“சந்திரா உன்ர கையால இடியப்பமும் சம்பலும் சொதியும் செய்துதா”   

தலையைத் திருப்பி மனைவியிடம் கேட்க “வருத்தமாக கிடந்தாலும் அவற்றை குரலிலை இருக்கிற கம்பீரம் குறையேல்லை” என எண்ணியபடி  எழுபத்தி ஐந்து வயதுக் குமரி மகிழ்வுடன் சமையலறைக்கு ஓடுகிறார்.

 

 

************************************************

 

 

பணக்காரக் குடும்பத்தில இந்திரன் மூத்த மகன். மூன்று பெயரை ஒன்றாகச் சேர்த்து பெற்றவர்கள் ஏன் அவனுக்கு வைத்தார்களோ என்று அவன் அடிக்கடி விசனப்பட்டதுண்டு. பள்ளிக்கூடத்தில சேரந்தபோது மார்க்கண்டு வாத்தியார் ஆரடா உனக்கு உந்தப் பெரிய பேரை வச்சது எண்டு சொல்லிக்கொண்டு அவனின் பெயரை உச்சரிக்க மற்றப் பிள்ளையள் எல்லாம் சிரிக்க இவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. என்ர பேர் நல்லாத்தானே இருக்கு என்று இவன் சொல்ல, “எனக்கு வாய் காட்டிறியோ. கையை நீட்டடா என்று சொல்லி தான் வைத்திருந்த பெரிய பிரம்பால் போட்ட அடியில் கை வீங்கியதுகூட இந்திரனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இந்த வாத்தியிட்டை இன்னும் எத்தனை நாட்கள் படிக்கவேணுமோ என்ற கவலையே பெரிதாக ஏற்பட்டது. அன்று மாலையே வீட்டுக்குப் போய்,

“ஏனமா இப்பிடிப்பெரிய பெயர் வச்சனீங்கள்” என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்க,

“எல்லாரும் ஒரேமாதிரிப் பேர் தானே வைக்கிறவை. உன்ர பெயர் ஆருக்காவது இருக்கோ சொல்லு. மற்றவைக்கு ஒரேஒரு பேர்தான் இருக்கு. உனக்கு மூண்டுவிதமாக கூப்பிடலாம்”

தாய் கூறியது சரியாகவே பட அவனுக்கு ஆறுதல் ஏற்பட்டது. வளர வளர பெயரைக் குறுக்கிச் சிலர் தெய்வா என்றும் சில நண்பர்கள் இந்திரன் என்றும் அழைக்க இவனுக்கு இந்திரனே பிடித்துப்போனது.

பணக்காரச் செல்லர் என்ற தந்தையின் பட்டமே இவனைப் படிக்கவிடாது பின் தள்ளியது. உனக்கென்ன நல்ல சொத்துப்பத்து என்று நண்பர்கள் சொல்லும்போது இவனையறியாமலே ஒரு கர்வம் இவன் முகத்தில் வந்தமர்ந்துவிடும். இத்தனைக்கும் இந்திரனின் தந்தை ஒன்றும் உழைத்துப் பணக்காரர் ஆனவர் கிடையாது. பெரிதாகக் கல்வியறிவும் கிடையாது.

“அந்தக் காலத்தில வழியிலாத சனங்களின்ர காணியளைக் காசு குடுத்து எழுதிவாங்கினதும், விதானை, புரக்கராசி எல்லாம் சேர்ந்து கன காணியளை உப்பிடித்தான் காலாலை அளந்தே வாங்கினவை” என்று இவனின் தந்தையின் தாய்க்கிழவி பேரப்பிள்ளைகளை இருத்திவைத்துக் கதை சொல்லும் வேளைகளில் கூறும்போது,

“அதுக்கும் ஒரு திறமை வேணும் எல்லோ மாமி. எல்லாராலையும் அது முடியுமே” என்று மாமனாருக்கு இவன் தாயார் வக்காலத்து வாங்குவதையும் சிறு வயதில் கேட்டிருக்கிறான். ஊரில கால்வாசித் தோட்டக்காணி இவர்களதாய்த் தான் இருந்தது. தோட்ட வேலை செய்யவும் நிறையப்பேர் இருந்தார்கள்.

ஆனால் இந்திரனின் வீடு அத்தனை பெரிதாக இல்லை. வளவுதான் எட்டுப் பரப்பு. அந்தப்பக்கம் இரண்டு அறைகளுடன் ஒரு கட்டடம். பக்கத்தில சமையலறை. இந்தப்பக்கம் ஒரு அறை. மூண்டும் ஆண்பிள்ளைகள் என்றதால தானோ என்னவோ செல்லர் பெரிதாக வீட்டைக் கட்டவில்லை. பிள்ளைகளுக்கும் அந்த இரசனையும் இல்லை. இப்படியான விடயங்களில் பெண்கள் எல்லாத்துக்கும் ஆசைப்படுபவர்கள் என்ற குற்றச்சாட்டு இவனின் தாயோ அதற்கு எதிர்மாறாக இருந்தார். அதற்கு யாவரும் பெரிதாகப் படிக்காததுகூடக் காரணமாக இருக்கலாம். இருந்தாலும்  முற்றத்தில் தனியாக ஒரு கட்டடம். நாலு பக்கமும் குந்துகளேயன்றி சுவர் எழுப்பாமல் கத கத என்று நான்கு பக்கமும் காற்று வருவதுபோல் கட்டியிருந்தது நன்றாகத்தான் இருந்தது.

மூத்த பிள்ளை எண்டதாலை அவரை நன்றாகப் படிப்பிக்க வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்பட்டாலும் அவனால் முன்னிலை மாணவனாகவே முடியவில்லை. தந்தையும் நல்ல பள்ளிக்கூடங்கள் என்று இரண்டு மூன்றில் மாற்றிமாற்றிச் சேர்த்தும் பார்த்தார். ஆனால் நூல்கள் வாசிப்பதிலும், சமய அறிவுப் போட்டிக்களில் கலந்து பரிசுகள் எடுப்பதிலும் காட்டிய உற்சாகத்தையும் அக்கறையையும் படிப்பில் காட்டவே இந்திரனால் முடியவில்லை. தகப்பன் ஆசைப்பட்டதுபோல் பல்கலைக் கழகம் செல்லவும் முடியவில்லை.

சிறிய கதைகள் கட்டுரைகள் என்று எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்ப அவை வரவேற்புப் பெற்றன. “வெடிப்புக்கள்” என்ற பெயரில் அவர் எழுதிய சிறுகதை உதயன் பத்திரிகையில் வந்து சிறந்த பாராட்டைப் பெற்றது. பெண்கள் உட்பட எத்தனையோ பேர் இவனை உற்சாகப்படுத்தி உதயன் பத்திரிக்கைக்குக் கடிதம் எழுதினர். அவற்றை அவர்கள் இந்திரனுக்கு  அனுப்பியிருந்தனர். கடிதங்களைப் பார்த்தபோது அவனுக்கு வானில் மிதப்பதுபோல் மகிழ்வேற்பட்டது. இன்னும் எழுதவேணும் என்ற உத்வேகமும் எழ அவன் எழுதிக் குவித்தான். இந்திரனின் கதை வருகின்றது என்றாலே பத்திரிகை வாங்குவோரும் அதிகரித்தனர்.

“சேற்றில் ஒரு செந்தாமரை” என்ற பெயரில் அவன் எழுதிய தொடர்கதை மிகப் பிரசித்தமானது. பிரபல எழுத்தாளராக இருந்த “செங்கை ஆழியான்” கூட தன்னை வந்து பார்க்கும்படி இந்திரனுக்குக் கடிதம் போட, அக்கடிதத்தை தன் நண்பர்களிடம் எல்லாம் காட்டி அவர்களைப் பொறாமை கொள்ள வைத்ததை எண்ணி இப்பவும் இந்திரன் சிரிப்பதுண்டு. ஆனாலும் அவன் செங்கை ஆழியான் கூப்பிட்டவுடன் ஓடவுமில்லை. இன்றுவரை போக நினைத்ததுமில்லை.   

நண்பர்களை விடுங்கள். அதன்பின் வந்த பெண் விசிறிகளின் கடிதங்களை வாசித்து முடிக்கவே அதிக நேரம் தேவைப்பட்டது. அந்த நேரம் வொலிங்டன் திரையரங்கில் வெளியாகிய “பலே பாண்டியா” திரைப்படத்தை நண்பர்களுடன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அப்படத்தில் வந்த பாடல் வரிகளைத் தலைப்பாக்கி “நான் என்ன சொல்லிவிட்டேன்” என்னும் தலைப்பில் தொடர்கதையை வீரகேசரியில் ஆரம்பித்து அதை அவர்களே நாவலாகவும் வெளியிட்டு இரண்டாம் பதிப்பும் பதிப்பிக்கவேண்டி வர, முக்கியமான ஒரு எழுத்தாளராக இந்திரன் அறியப்பட, எழுதுவதிலும் அவனுடைய பெண் விசிறிகளைச் சமாளிப்பதே பெரும் பாடாகிப் போனது.

அவனின் எழுத்தாற்றலைக் கண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இவனை வேலையில் இணைந்துகொள்ளும்படி அழைத்தார்கள். இந்திரனின் பெருமை சொல்ல முடியாததாக, அவனுக்கே தாங்க முடியாததாக இருக்க, விண்வெளிக்குச் செல்லும் ஒருவன் போல தன்னை எண்ணிக்கொண்டு கற்பனைகளுடன் வேலைக்குக் கிளம்பினான்.

அவன் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலை அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தானே முன்னிலை வகிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றவரை ஏறி மிதித்தபடி போய்க்கொண்டிருந்தனர். பெண்களுக்கு பேயும் இரங்கும் எண்டதால் அவர்கள் கலகலப்போடு தம் அலுவல்களைச் சாதித்துக்கொண்டனர். இவர் நினைத்ததற்கு நேர்மாறாக இவரை யாருமே ஒரு பெரிய எழுத்தாளர் என்று சட்டை செய்யவே இல்லை என்பது இவரின் தன்மானத்தைச் சீண்ட, நீங்களும் உங்கள் வேலையும் என்றுவிட்டு ஒரு மாதம் முடிய முன்னரே மீண்டும் இவரின் ஊருக்கு வந்துவிட்டார்.

கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கலாமே என நண்பர்கள் அங்கலாய்த்ததுக்கு “இவையிட்டையெல்லாம் பல்லைக்காட்டி வேலை செய்யவேண்டிய தலையெழுத்து எனக்கு இல்லை. அப்பர் சேர்த்து வைத்த  முதிசமே எவ்வளவு இருக்கு. என்ர பிள்ளையளுமே சும்மா இருந்து சாப்பிட ஏலும்” என்று திமிராகப் பதிலளிக்க, நண்பர்கள் வாயை நெளித்தும் கண்ணைக் காட்டியும் ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டதை இந்திரன் கவனிக்கவில்லை.  

வந்ததும் வாராததுமாக தன்னைச் சந்திக்க வருமாறு தூது அனுப்பிய அளவெட்டி வனஜா மூன்று மாதம் கற்பமாக இருப்பதாகக் கூற, பெரும் இடி ஒன்று தன்னைத் தாக்கியதுபோல் நிலைக்குலைந்தான் இந்திரன்.  

 

 

************************************************

  

 

 

திடீரென்று செத்தவீட்டில் சலசலப்பு அதிகமாக தேவர் கண்ணைத் திறந்து பார்க்கிறார். முன் வீட்டு கணபதிப்பிள்ளையின் மகள் சுகிர்தா “ ஐயோ எங்களை எல்லாம் விட்டுட்டுப் போட்டியளோ” என்று தலையிலடித்து அழுதபடி வருகிறாள். அவளைப் பார்த்தவுடன் எழும்பி இருந்து பார்க்கவேண்டும் போல இருக்க எழ முயற்சிக்கிறார். அவரின் கையைத் தவிர எதையுமே அசைக்க முடியவில்லை.

இப்ப உவளுக்கு அறுபது வயது இருக்கும் என்று எண்ணிய தேவர் இந்த வயதிலும் இன்னும் கட்டுக்குலையாமல்த்தான் இருக்கிறாள். சுருள் முடியும் இறுகிய உடலும் அவளின் வயதில் பத்தைக் குறைத்தே மற்றவர் மதிப்பிடுவதாய் இருக்கின்றது. தேவண்ணை தேவண்ணை என்று இந்த வீட்டு முற்றத்தைச் சுற்றியவள் தானே. இண்டைக்கு குழந்தை கணவன் பொறுப்புகள் எண்டு மட்டுமில்லை, மட்டுவிலுக்குக் கலியாணம் கட்டிப் போனபிறகு நெருங்கின உறவுகளின் திருமணத்தைத் தவிர வேறு எதுக்கும் இந்த ஊர்ப் பக்கம் அவள் எட்டியும் பாரக்கேல்லை. அப்படி எப்பவாவது தாயைப் பார்க்க வந்தாலும் புருஷனோட வந்திட்டு அப்பிடியே போய்விடுவாள். பிள்ளைகள் பேர்த்தியாரைப் பார்க்க சிலவேளை வாறதுதான். பெட்டை உரிச்சுவச்சு சுகிர்தா போலவே இருக்க, தேவர் பார்த்துவீட்டுப் போய்விடுவார்.

பிரேதத்துக்கு மேலே விழுந்துகட்டி அழுதுவிட்டு பக்கத்தில் கதிரையில் இருந்த சந்திராவைக் கட்டிப்பிடித்து அழத்தொடங்க, சந்திராவுக்கு வந்த கோபத்தில் சுகிர்தாவைத் தள்ளிய தள்ளில் சுகிர்தா ஒருவாறு சமாளித்து காலை ஊன்றி அப்பால் நகர்ந்துபோக, அதைக் கவனித்த தேவருக்கு சுகிர் தாவின் மேல் இரக்கமும் சந்திராவின் மேல் ஒருவித பச்சாதாபமும் எழுந்தது. கூடவே ஒரு பயமும் எழுந்தது. சந்திராவுக்கு அந்த விஷயம் தெரியுமோ? என்னட்டை ஒருநாளுமே தெரிஞ்சமாதிரி இதுவரை  காட்டிக்கொள்ளேல்லையே. சரியான அமசடக்கி தான் சந்திரா என்று எண்ணியவர் முந்தி நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் கொண்டுவர முயன்றார்.  

அக்கம் பக்கத்தவர் எல்லாம் இவர்கள் வீட்டுக்கு வந்து போவார்கள். வாசிப்பில் இவருக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக ஒரு அறை முழுவதும் கதைப்புத்தகங்கள் நிறைந்த அலுமாரிகள் நிறைந்திருக்க பலரும் வந்து வாங்கி இவரின் வீட்டுக் குந்தில் இருந்து வாசித்துவிட்டுப் போவார்கள். எவருக்குமே இவர் கொண்டுபோய் வாசிக்க அனுமதித்ததில்லை. இவர் பெற்றோர் உட்பட வீட்டில் உள்ள மற்றவர்கள் கூட அந்த அறையுள் இவர் அனுமதியின்றி நுழைவதே இல்லை. இவருக்கு அது கோவில் போல.

கோயில் திருவிழாக்கள் எண்டால் சொல்லி வேலையில்லை. சுவாமி தூக்குவது தொடக்கம் எல்லாமே இவர்கள் தலைமையில் நடக்கும். ஆண்கள் எல்லாம் வேட்டி கட்டி பார்க்கவே பக்தி மயமாக இருக்கும். இவர் வேட்டி கட்டி இடுப்பில் நிறத் துண்டு ஒண்டும் கட்டி யானைப்பல் வைத்துக் கட்டிய பென்ரன் கோர்த்த நாலு பவுன் சங்கிலியையும் கழுத்தில போட்டுக்கொண்டு றோட்டால போனால் ஆரெண்டாலும் திரும்பிப் பார்க்காமல் விடாயினை. அத்தனை கம்பீரமாகவும் அழகாகவும் இருப்பார். எத்தனையோ பெண்கள் எல்லாம் கண்களால் கதை சொல்லிவிட்டுக் கடந்து போவார்கள். ஊருக்குள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்பதில் இவர் கவனமாக இருந்தபடியால் நல்லகாலம் பல இடங்களில் தப்பிவிட்டார்.

சுகிர்தாவுக்கு அப்ப பதினேழு வயது தான் இருக்கும். இவருக்கு முப்பத்திமூன்று கடந்திட்டுது. தளதளவென பெரிய கண்களும் நீண்ட முடியுடனும் இருந்த அவள் அடிக்கடி கதைப் புத்தகம் வாங்க இவரிடம் வந்து நின்றாள். இவர் ஓரிருதடவை எடுத்துக் கொடுத்தார்தான். எப்பிடித்தான் அத்தனை விரைவாக வாசிச்சு முடிக்கிறாளோ என்று ஆச்சரியப்பட்டாரே ஒழிய படிக்கிற வயதில ஏன் இத்தனை புத்தகம் வாசிக்கிறாய் என்று ஒருமுறை கூட அவளைக் கண்டிக்காவோ கேட்கவோ செய்யவில்லை. அடிக்கடி வந்து வந்து அவள் புத்தகம் கேட்டதால் அவருக்கும் புத்தகங்களை எடுத்துக்  குடுக்கப் பஞ்சிப்பட்டு நீயே போய் எடு என்று கூறிவிட்டார்.

முன்னரெல்லாம் மற்றவர்கள் நிற்கும்போது வந்து நூல்களை வாங்கும் சுகிர்தா இப்போதெல்லாம் மற்றவர்கள் இல்லாத நேரமாகப் பார்த்து வருவதையும் நீண்ட நேரமாக அந்த அறையுள் நின்று நூல்களை எண்ணுவதையும் இவர் சில காலம் செல்லத்தான் உணர்ந்துகொண்டார்.  

இவரும் பாலை விரும்பிக் குடிக்கும் பூனைதானே. தானாக வந்து விழுவதை ஏன் வேண்டாம் என்பான். கோவிலில் மாலை நேரப் பூசை நடக்கும் போது மனைவியும் தாயும் சென்றுவிட இவர்கள் வீட்டிலும் ஆராதனை நடந்தது. சுகிர்தா இன்னும் பூப்பெய்தாததும் இவருக்குச் சாதகமாய்ப் போனது. பதினெட்டு வயதாகியும் அவள் அப்படியே இருக்க இன்னும் உன்ர மேள் பெரிசாகேல்லையே என்று கேட்போரின் வாய்க்காக அவளை பள்ளிக்கும் செல்லாமல் தடுத்ததும் நல்லதாயிற்று.

இவரோ எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி தொடர்ந்தும் தான் விருப்பப்படி இருக்கத் தலைப்பட்டார். பத்தொன்பது வயதில அவள் பெரிதானபின் கண்டபடி வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கட்டுப்பாடுகளும் அவளைக் கண்காணித்தபடி தாயோ அம்மம்மாவாரோ இருக்க அவரைப் பார்க்கவேணும் என்ற தவிப்பு உண்டானது. பெரிதான பிறகு எதுக்குத் தேவையில்லாத பிரச்சனை என்று தேவரும் அவளைப் பற்றிய சிந்தனை இல்லாமல் இருந்தார்.

ஆனால் ஒருநாள் இவர் வீரகேசரியை வாசித்துக்கொண்டு இருந்தபோது திடுதிப்பென்று சுகிர்தா இவர் முன்னால் வந்து நின்றாள். நீங்கள் என்னை ஒரேயடியா கைகழுவி விட்டுட்டியளோ. என்னை ஏமாத்திப்போட்டியள் என்று அவள் கூற தேவர் வெலவெலுத்துப்போய் கதிரையை விட்டு எழுந்தார்.

“உனக்கு என்ன விசரே. வீட்டில ஆக்கள் நிக்கினம். நான் பிறகு கதைக்கிறான். முதல்ல வெளிய போ” என்று உறுக்க,

“இண்டைக்கு நீங்கள் ஒரு முடிவு சொல்லுமட்டும் நான் போக மாட்டான்” என்று வீம்புடன் நிக்க, மனைவியும் தாயும் வீட்டில் தான் என்னும் எண்ணத்தில் தவிப்புக் கூடி முதல்முறையாக கைகால்களில் நடுக்கமும் பதட்டமும்  ஏற்பட்டது.

“எளிய நாயே. அவன் கலியாணம் கட்டினவன் எண்டு தெரிஞ்சும் இப்பிடி வந்து நிண்டு கதைக்க உனக்கு வெக்கம் இல்லையே” என்றபடி தாய் சுகிர்தாவை தலைமயிரில பிடிச்சு இழுத்துக்கொண்டு போய் அவளின் வீட்டுக்குள் தள்ளிவிட்டு வந்ததும், மனைவிக்கு ஏதும் கேட்டிருக்குமோ என்ற பதட்டத்துடன் சுற்றுமுற்றும் பார்க்க, மனைவியின் தலை தெரியாததில் இவர் நின்மதிப் பெருமூச்சு விட்டதும் இவருள் இப்பவும் ஒரு உலுக்கத்தை ஏற்படுத்த நடுக்கத்துடன் பெருமூச்சொன்று வெளிவந்தது. சந்திராவுக்குத் தெரிந்தும் அவள் ஒருநாள்க்கூட என்னை எதுவும் கேட்கவே இல்லை என்னும் எண்ணம் எழுந்ததும் அவரை அறியாமல் கண்கள் நிறைகின்றன.

 

 

************************************************

இந்திரனின் நண்பன் மாறனுக்கு நேற்றுத்தான் அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்று முடிந்திருந்தது. வந்தவர்களுக்கு உணவு பரிமாறுவதில் இருந்து எல்லோரையும் தண்ணி வென்னி எல்லாம் குடுத்து உபசரிப்பது உங்கள் வேலை என்று மாறன் கட்டன் றைற்றாகக் சொன்னதால எல்லா நண்பர்களும் ஒரு குறையும் விடாமல் வந்தவர்களை உபசரித்து அனுப்பி ஒருவாறு எல்லாம் முடிந்தாயிற்று. பெண் வீட்டில் நாலாம் சடங்கு. கட்டாயம் எல்லாரும் வந்திடுங்கோடா என மாறன் சொன்னதைத் தட்டாமல் இந்திரனும் மற்ற நண்பர்களுடன் செல்லத்தான் எண்ணியிருக்கின்றான்.

“உனக்கும் முப்பத்தைந்தாகுது. எத்தனை நாளைக்குத்தான் சாக்குப்போக்குச் சொல்லப்போறாய். நீ கட்டினாத்தானே உன்ர தம்பிமாருக்கும் கட்டிவைக்கலாம்” என்ற வழமையான தாயின் புலம்பலுக்கு,

“அம்மா என்னைப் பார்க்கவேண்டாம். எனக்கு எப்ப முடிக்கவேணும் என்று தோன்றுதோ அப்ப உங்களிட்டைச் சொல்லுறன். முதல்ல தம்பிக்கு பாருங்கோ”

“அப்ப அதுவரை ஊர் மேஞ்சு கொண்டு இருக்கப்போறியோ”

தாய் கூறியதைக் காதில் வாங்காதவன் போல சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் இந்திரன்.

அன்று மாலை நாலாம் சடங்குக்கு நல்லா வெளிக்கிட்டுக்கொண்டு போய் நண்பனுக்குப் பக்கத்தில் இவர்களுக்கும் கதிரை கொண்டுவந்து போடுகிறார்கள். பெண்கள் எல்லாம் அப்போது கதிரைகளில் இருப்பதில்லை. அழகிய பாய்கள் நிலத்தில் விரிக்கப்பட்டிருக்கும். வருபவர்கள் குழுவாகவோ அல்லது குடும்பத்துடனோ அமர்ந்திருக்க எவசில்வர் தட்டிலோ அல்லது பித்தளைத் தாம்பாளத்திலோ பலகாரங்கள் வைக்கப்பட்டிருக்கும். சில்வர் தேநீர் குவளைகளில் சுடச் சுடப் பரிமாறப்படும் டரின்பால் விட்ட தேனீரும் கூட சுவையாக இருக்கும்.

ஆண்களுக்கு பந்தலினுள்ளே கதிரைகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் போகும்போது மட்டும் மாப்பிளையையும் பெண்ணையும் எட்டிப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தபடி போட்டுவாறன் என்று கூறிவிட்டுச் செல்வார்கள். இவர்கள் நண்பர்கள் என்பதனால் பக்கத்தில் கதிரைபோட்ட உபசரிப்பு.

இந்திரன் வெள்ளை பெல்பொட்டமும் செம்மஞ்சள் நிற சேர்ட்டும் போட்டு வந்துள்ளான். அடர் மீசையும் மேலே சிறிது திறந்துவிட்ட அங்கியூடாகத் தெரியும் சங்கிலியும் மாப்பிள்ளைபோலவே தெரிக்கிறான். மற்ற நண்பர்கள் கூட நன்றாகவே இருக்கின்றனர். இரு குமர்ப்பெண்கள் ஓடியாடி எல்லோருக்கும் சிற்றுண்டியும் தேனீரும் பரிமாறுகின்றனர். தேவதைபோல் ஒருத்தி இவர்களுக்கு சிறுசிறு தட்டுக்களில் பழக்காரவகைகளுடன் இவர்களை நோக்கி வந்து ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டை எடுத்துக் கொடுக்கிறாள். ஒவ்வொருவரிடமும் கொடுக்கும்போதுகூட அவள் யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த நிறமும் அமைதியான அழகிய முகமும் அவளின் ஆடையும் அவளின் பண்பைச் சொல்லி நிறக்கின்றது.

“எடேய் மச்சான். சினிமாவில நடிக்க வைக்கலாம் போல இவ்வளவு அழகாய் இருக்கிறாள். ஆரடா இது” என்று நண்பனிடம் முணுமுணுக்கிறான் இந்திரன். “எனக்குத் தெரியாதடா இவவைத்தான் கேட்கவேணும். இப்ப கேட்டு என்ர குடும்பத்தைக் குழப்ப ஏலாது. கொஞ்சம் பொறுமையாய் இரு” என்கிறான்.

வீட்டுக்கு வந்த பின்னரும் அந்தப் பெண்ணின் நினைப்பாகவே இருக்கிறது.

எவ்வளவு அமைதியும் அழகும். எத்தனை பெண்கள் என் மேல் வந்து விழுந்திருக்கிறார்கள். இவளை விடக்கூடாது. எனக்கானவள் இவள்தான் என்று எண்ணிக் கனவுகளுடன் மனம் கனக்க, யாரும் இவளைக் கொத்திக்கொண்டு போக முதல் நான் முந்தவேண்டும் என்பதுவாய் மூன்று நாட்கள் சென்றபின் வெட்கத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு நண்பன் வீட்டுக்குச் செல்கிறான்.

“நான் இவாவிட்டைக் கேட்டனான். இவவின் மாமியின் மகளாம். ஆனா என் மனிசியின்ர குடும்பம் மாதிரி வசதி ஒண்டும் இல்லை. ஒரு சீதானமும் எதிர்பார்க்கேலாது மச்சான். மூண்டு பெட்டைகளில இது கடைசிப் பெட்டையாம். மற்ற இண்டுபேரும் கலியாணம் கட்டீட்டினம். ஆனா இப்பவே சொல்லிப்போட்டன்.  என்னை ஒண்டுக்கும் சாட்டப்படாது. நல்ல பிள்ளையாம். ராமநாதன் கொலிச்சில படிச்சிட்டு வேலை தேடிக்கொண்டிருக்குதாம். யூனிவேசிற்றி கிடைக்கேல்லையாம்” கிளார்க் வேலை ஒண்டுக்கு அப்பிளிக்கேசன் போட்டுட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறாவாம். வதானா எண்டு கூப்பிடுறவையாம்”

சிவம் சொல்லி முடிக்கமுதலே தகப்பன்ர பெயரைச் சொல்லு. எங்க இருக்கிறவை? என்று அவதிப்பட்டான் இந்திரன்.

உடுவில் லேடீஸ் கொலிச்சுக்குப் பக்கத்தில குலத்தார் வீடு எங்கே எண்டால் காட்டுவினமாம்.

“சரியடா வாறன்” என்றுவிட்டு சைக்கிளை மிதித்தவன் தாயின் முன் வந்து நின்றான்.

“அம்மா எனக்கு அந்தப் பிள்ளையை நல்லாப் பிடிச்சிருக்கு. நான் இப்ப கலியாணம் செய்ய ரெடி. மிச்ச அலுவலை நீங்கள் தான் கெதியாப் பார்க்கவேணும்” என்று முடித்தான்.

ஒரு மாதத்திலேயே திருமணப் பேச்சு முடிந்து திருமணமும் முடிந்து வதானா குனிந்ததலை நிமிராமல் இவர்கள் வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள். அதிர்ந்து பேசத் தெரியாத வதானாவை எல்லோருக்கும் பிடித்துப்போனது. அண்ணி அண்ணி என்று இந்திரனின் சகோதரர்கள் அன்பையும் மரியாதையையும் காட்டினார்கள்.

மாமியார் தான் பெரிதாக வதானாவை மதிக்கவில்லை. எல்லா வேலைகளையும் இவள் தலையில் சுமத்திவிட்டு அங்கும் இங்கும் வலம் வந்துகொண்டிருந்தாள். அவவுக்கும் வயது போட்டுது தானே என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டு இது என் வீட்டு வேலைதானே என எண்ணியபடி எந்தவித முகச்சுழிப்புமின்றி வேலை செய்தாள் வதானா.

திருமணமாகி ஒரு மாதத்திலே இவளுக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக இவளின் தாயார் கொண்டுவந்து கொடுத்தபோது ஏனோ தானோவென அதை உடைத்தவளுக்கு முகம் முழுதும் விளக்கெரிந்தது.

“அம்மா எனக்கு வேலைக்கு அழைப்பு வந்திருக்கு” என்று மகிழ்வுடன் கூறும் மகளை அம்மா பார்த்த பார்வையில் எவ்வித பூரிப்பும் இருக்கவில்லை.

“ஏனம்மா எனக்கு வேலை கிடைச்சது உங்களுக்கு சந்தோசம் இல்லையோ”

கவலையுடன் கேட்ட மகளுக்கு என்னத்தைச் சொல்வாள் அவள்.

“கலியாணம் கட்டின பிறகு அவர் என்ன சொல்லுவாரோ எனக்குத் தெரியாது. எதுக்கும் கேட்டுப் பாரம்மா. சம்மதிச்சால் போ. இல்லையெண்டாலும் என்ன. முந்தி எண்டால் வேலைதான் முக்கியம் எண்டு சொல்லியிருப்பன். இப்ப நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதோடை திருப்திப்பட்டுக் கொள்ளம்மா” என்று புத்திசொல்லிவிட்டுப் போகும் தாயை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இந்திரன் வந்தவுடன் மகிழ்ச்சியுடன் தனக்கு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வாங்கிப் பார்த்தவன் மனதிலும் மகிழ்ச்சி ஏற்பட “வாழ்த்துக்கள் வதானா. ஆனால் மட்டக்களப்புக்குப் போய் நீர் வேலை செய்ய நான் இங்க தனிய இருக்கேலுமே. இங்கினேக்கை எண்டால் கட்டாயம் போம் என்று நானே அனுப்பியிருப்பன்” என்று கூறிவிட்டு அவளைப் பார்க்கத் துணிவின்றி அப்பால் நகர வதானாவுக்கு அழுகை வந்தது.

பெலத்து அழக்கூட என்னால் முடியவில்லையே. இந்த வேலை ஒரு மாதத்தின் முன்னம் கிடைத்திருந்தால் கலியாணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றாவது கலியாணம் காட்டாது வேலைக்குப் போயிருப்பன். என் விதி இதுதான் போல என மனதைத் தேற்றிக்கொண்டாள்.

அடுத்த வாரம் தமக்கை தாய் வீட்டுக்கு வருகிறாள் எனக் கேள்விப்பட்டு கணவனின் அனுமதியுடன் அங்கு சென்றவள் தமக்கையைக் கட்டிப்பிடித்து “சின்னக்கா வேலை கிடைத்தும் என்னால போக முடியேலையே” என விக்கி விக்கி அழுபவளை ஆறுதல் படுத்த அவளின் முதுகை ஆதரவாக வருடிக்க கொடுத்தபடி இருந்தாள் வதானாவின் இளைய சகோதரி.

அவள் கச்சேரியில் வேலை பார்க்கிறாள். கணவனும் பேராசிரியராக இருப்பதனால் இருவரும் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கின்றனர். மூத்த சகோதரிக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. ஆனாலும் கடைசித் தங்கைமேல் பாசம் இருக்கிறதா இல்லையா என்பதுபோல் நடந்துகொள்வாள். பெரிதாக யாரையுமே தன்னுடன் ஒட்ட விட்டது கிடையாது. வசதியாகத்தான் வாழ்கிறாள். ஆனாலும் தங்கையின் திருமணத்துக்கு ஒரு அட்டியல் செய்துபோடுமாறு தாய் கேட்டும், தந்தை வேலை செய்யும்போது  கிளிநொச்சியில் வாங்கிப்போட்ட மூன்று ஏக்கர் காணியை தனக்கு எழுதுங்கோ என்று விடாப்பிடியாய் நிண்டு தான் பேருக்கு மாற்றிய பிறகுதான் தங்கையின் திருமணத்துக்கு நகையைச் செய்து கொடுத்தாள்.

வதானாவின் சின்னக்கா “அப்புவுக்கும் ஆச்சிக்கும் சரியான விசர். அரசாங்க உத்தியோகம் பாக்கிற மாப்பிளை எண்டு எல்லாக் காணியளையும் அக்காவுக்கே சீதானமாய்க் குடுத்திட்டு எங்கள் இரண்டு பேரையும் அனாதைகள் போல விட்டிட்டினம் என்று அடிக்கடி வதானாவிடம் மட்டும் அங்கலாய்ப்பாள். அந்தக் கோபத்துடனேயே படித்து கச்சேரியில் வேலை கிடைத்ததும் தகப்பன் ஈடுவைத்த மூன்று பரப்புக் காணியை மீண்டு, அதில் வீடு ஒன்றும் கட்டி நன்றாகத்தான் வாழ்கிறாள்.

“எனக்கு இங்கே எங்காவது வேலை கிடைச்சிருந்தால் நான் கட்டாயம் விட்டிருப்பன். நீ இல்லாமல் நான் எப்பிடித் தனிய இருக்கிறது எண்டு சொன்னவர்” என்று தன் கணவனையும் விட்டுக்கொடுக்காது கூறியவளை அன்பொழுகப் பார்த்தாள் தமக்கை.

 

 

****************************************** 

 

 

வதானாவுக்கு எல்லாமே பழகிவிட்டது. இந்திரன் இப்பொழுதெல்லாம் எழுதுவதுக்கூட இல்லை. சும்மா இருக்காமல் ஏதும் எழுதுங்கோ எண்டால் எனக்கு நீ புத்தி சொல்லாதை, எனக்கு என்ர அலுவல் தெரியும் என்பான்.

முன்புபோல இல்லை இப்ப எல்லாம். செல்லருக்கும் தோட்டங்களைப் பராமரிப்பது கடினமாக இருந்தது. இரண்டாவது மகன் முன்பு இவருடன் தோட்ட வேலைகளைப் பார்த்துக்கொண்டான். இப்ப அவனும் ஆசிரியர் வேலை கிடைச்சு மட்டக்களப்புக்குப் போய்விட்டான். அவனுக்கும் நிறையச் சம்மந்தம் வருகிறது. வேளைக்கு அவனுக்கும் திருமணம் செய்து வைக்கவேணும் என்று எண்ணியபடி இந்திரனை அழைத்தார் செல்லர்.

“தம்பி எவ்வளவு நாளைக்குத்தான் இப்பிடிப் பொறுபில்லாமல் இறுக்கப்போறாய். ஏதேனும் வேலைவெட்டி தேடவேணும். இல்லாட்டில் தோட்டங்களையாவது பாக்கவேணும். உவன் கடைசி குகனும் இவ்வளவுநாள் தோட்டவேலையளுக்கு உதவி செய்தவன். இப்ப அவன் யூனிவேசிற்றிக்குப் போப்போறான். இனி நீதான் எல்லாத்தையும் பாக்கவேணும்” என்று தகப்பன் கூறிய பிறகு மறுத்து எதுவும் சொல்ல முடியாது தலையாட்டிவிட்டுச் சென்றான் இந்திரன்.

மற்றவரிடம் சென்று கையேந்தி வாழ அவனுக்குத் துளிகூட விருப்பம் இல்லை. வதானாவுக்கு சீதனம் என்று இவன் கேட்கவில்லையே ஒழிய, ”உங்களால முடிஞ்சதைச் செய்து போடுங்கோ” என்று இவனின் தாயார் சொன்னதாலை மட்டுமில்லை, சும்மா தங்கச்சியை அனுப்பக் கூடாது எண்டு வதானாவின் சின்னக்கா சொல்லி இரண்டு சோடி காப்புகளும் பதக்கமும் தானே செய்து போட்டு தமக்கை கொடுத்த அட்டியலோடு தங்கையைச் சிறப்பாய் அனுப்பி வைத்தார்கள்.

வதானா திருமணமாகி மூன்று மாதங்களில் கர்ப்பமாகி அயலட்டையாரின் வெறும் வாய் மெல்ல சந்தர்ப்பம் கொடுக்காது எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினாள். ஆனாலும் அவளை ஆசைக்கு இரு வாரம் கூட அவள் வீட்டில் இருக்க விடாது இங்கே வேலைகள் குவிந்திருந்தன. எட்டாம் மாதம் நடக்கும்போது சின்னக்காவும் தாயாரும் தம்முடன் அழைத்துப் போகிறோம் என்றதற்கு “ஏன் நாங்கள் ஒழுங்காப் பார்க்க மாட்டமோ” என்று மாமியார் கூறியதில் வதானாவின் ஆசையும் மதுக்குள்ளேயே அடங்கிப்போக தமக்கையும் தாயும் வேறு வழியின்றித் திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று.

மாமியார் உதவிகள் செய்தார்தான். ஆனாலும் இந்திரன் தன் வேலையில் ஒன்றைக் கூட தான் செய்ய முன்வரவில்லை. 

ஒன்பதாம் மாதத்தில் ஒருநாள் நோவெடுக்க சொக்கனின் காரைப் பிடிச்சு யாழ்ப்பாணம் பெரியாசுபத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். மாமியாரும் கூடவே வந்திருந்தது வதானாவுக்குத் தெம்பாக இருந்தது. இரண்டு மணிநேர வாதைக்குப் பின்னர் ஆண் குழந்தை எவ்வித அசுமாத்தமும் இன்றி வெளியே வர வதானாவுக்கு அரை மயக்கமாய் இருந்தது.

“இவான்ர புருஷன் வெளியில நிண்டாக் கூட்டிக்கொண்டு வாங்கோ” என்று அந்தப் பெண் மருத்துவர் கூற, மனப் பதைப்புடன் தாய் சென்று மகனை அழைத்து வந்தார். சொறி குழந்தை பிறக்கேக்குள்ளையே செத்துத்தான் பிறந்தது. ஒருக்கா வடிவாப் பிள்ளையைப் பாருங்கோ. தாய்க்கு மயக்கம் தெளியமுதல் பிள்ளையை எடுத்துக் கொண்டுபோய்விட வேண்டும்  என்றுவிட்டு மருத்துவர் அகல..  

“அளவெட்டிக் காறியின்ர பிள்ளையையும் கலைப்பிச்சு அவளைக் கைகழுவி விட்டதுக்குத் தான்ரா உனக்கு உந்தத் தண்டனை கிடைச்சிருக்கு” தாய் கூறப் பதட்டத்துடன் “வாயை மூடெணை” எனத் தாயை உறுக்கியவன் வதனா கேட்டிருப்பாளோ என்று துணுக்குற்றான்.

தாய் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்ல வதனா என்று மெதுவாகக் கூப்பிட்டான். அவளுக்கு எல்லாமே நன்றாகக் கேட்டதுதான். ஆயினும் கண்களை தொடர்ந்தும் மூடியபடி மயக்கத்தில் இருப்பதுபோல் இருந்தாள். மனதில் எழுந்த வெறுமையும் ஏக்கமும் கவலையும் கண்ணீராக மூடிய கண்களினூடாக வழிந்தபடி இருக்க எதுவும் செய்வதற்று தொய்ந்துபோய்க் கிடந்தாள் வதானா.

அவன் சிறிது நேரத்தில் அப்பால் செல்ல வெடிக்கும் மனதுடன் அசையாது கிடந்த குழந்தையை எடுத்து நெஞ்சோடு அணைக்கவேண்டும்போல் இருக்க மெதுவாகக் கைகளை ஊன்றியபடி எழும்ப எத்தனிக்க, அதற்குள் பெண் தாதியும் அவனின் தாயாரும் உள்ளே வந்து அவளை எழும்பவேண்டாம் என எச்சரித்துவிட்டு பிள்ளையை இவளுக்குக் காட்டிவிட்டு உடனே வெளியே கொண்டுசெல்ல எப்படித் தன் கவலையை வெளிப்படுத்துவது என்று கூடத் தெரியாமல் படுத்துக்கிடந்தாள் வதனா.   

குழந்தை அதுவும் ஆண்குழந்தை இறந்துவிட்டது அனைவருக்கும் மிகக் கவலையாக இருக்க இந்திரனுக்கு நரக வேதனையாக இருந்தது. அவளை எங்களோடை அனுப்பியிருந்தால் இப்பிடி நடந்திருக்காது என்று ஏசிவிட்டு அவளை வைத்தியசாலையிலிருந்தே தன்னுடன் சின்னக்கா கூட்டிச் சென்றாள். மனதிலை கவலையளை வச்சிருக்காமல் இணக்கை ஏந்தாலும் வடிவா அழுதிடு என்று அவளுக்கு ஆறுதல் கூறி அவளை நன்றாகத் தேற்றி ஒரு மாதம் சென்றபிறகே இந்திரனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வதானாவைக் கண்டதும்தான் இந்திரனுக்கு உயிர் வந்தது போல இருந்தது. வதானாவுக்கு எதுவுமே சொல்லாமலேயே அதது அவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. “எங்கிருந்தோ வந்தாள். எனக்காகவே வந்தாள்” என்றுதான் அவள் இவனுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்யும்போதெல்லாம் இந்திரன் எண்ணிக்கொள்வதுண்டு.

அவள் இல்லாமல் தாய் வைத்துக் கொடுத்த சுரணைகெட்ட தேனீரும் உணவுகளும் அயன் செய்யாத ஆடைகளும் எல்லாமே அவளின் அருமையை உணரவைத்தன.

உடையவன் உழைத்தால் தான் தோட்டமும் தொழிலும். இந்திரனுக்கு மண்வெட்டி பிடித்து வாய்க்காலில் நீர் கட்டக்கூடத் தெரியாமல் இருந்தது. எல்லாத்துக்கும் கூலிக்கு ஆள் வைத்து விவசாயம் செய்ததில் பெரு நட்டமே ஏற்பட்டது. வதானாவின் நகைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்க் காணாமல் போயின. அடுத்த ஆண்டிலேயே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து மூக்கும் முழியுமாக எல்லாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இன்னொரு பெண் குழந்தை. அவர்கள் எல்லாம் ஆண்பிள்ளைகள் என்றதாலோ அல்லது முதல் முதல் வதானாவுக்குப் பிறந்தது ஆண் குழந்தை என்பதாலோ என்னவோ இந்திரனோ தாயோ கூட ஆண் குழந்தை என்ற பெயரை மறந்துபோயும் உச்சரிப்பதுமில்லை. ஆண் பிள்ளைக்கு ஆசைப்பட்டதும் இல்லை.

பிள்ளைகள் வளர வளர பணம் தேவைப்பட “உவ்வளவு காணிகளை வச்சு என்ன செய்யப்போறம்” என்று சில நிலங்களையும் அப்பப்ப விற்றுக்  குடும்பத்தை நடத்தினாலும் எந்தவிதக் குற்ற உணர்வும் இந்திரனுக்கு ஏற்பட்டதே இல்லை. 

அதன் பிறகும் இந்திரன் சில நாவல்களை எழுதினான்தான். ஒரு நாவலுக்கு சாகித்திய விருதும் கிடைத்ததுதான். ஆனால் அதனால் கிடைத்த சொற்ப வருமானம் அவரின் குடும்பத்துக்குப் போதுமானதாக இருக்கவில்லை. மண்வெட்டி எடுத்துத் தோட்டம் கொத்தவோ வேறு வேலை செய்யவோ இந்திரனால் முடியாதது அவன் குற்றமா என்ன? சிறுவயதில் இருந்தே எனக்குப் பொறுப்பைப் பழக்கியிருக்க வேணும். பிழை விட்டது அம்மாவும் அப்பரும் தான். இன்னும் காணியள்  கிடக்குத்தானே. பார்த்துக்கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டான்.

அப்பப்ப இவனின் கதைகளை வாசித்த பல்கலைக் கழக மாணவர்கள் இவனை வந்து பார்த்துச் செல்கிறார்கள். அவர்களுடன் பலவிடயங்களையும் விவாதிக்குமளவு பொது விடயங்களையெல்லாம் கரைத்துக்குடித்து வைத்திருந்தான் இந்திரன். வதானாவுக்கு இவர் வேலை எதுவும் செய்யாது திண்ணையில் இருந்து விவாதிப்பது எரிச்சல் கொடுத்தாலும் பெருமையாகவும் இருந்ததுதான். எனக்கு அந்தளவு அறிவு இல்லை. விஷயமில்லாமலோ அவரைத் தேடி வரீனம் என தமக்கையாருடன் கதைக்கும் போது கூறுவதை தமக்கையோ சிரித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாளேயன்றி தங்கையின் மனதைப் புண்படுத்தக் கூடாது என எதிர்மறையாகக் கதைத்ததில்லை..

வதானா வெறுங்கையுடன் வந்ததைப் பொறுக்க முடியாமல் தன் காப்புகளில் ஒரு சோடியை வேண்டாம் என்று சொன்ன தங்கைக்குப் போட்டே அனுப்பினாள். எக்காரணம் கொண்டும் இதை உன்ர கையைவிட்டுக் கழட்டவே கூடாது என்றும் சத்தியம் வாங்கிக்கொண்டும் தான் இவளை அனுப்பினாள்.

ஆனால் அக்காப்பு ஆறு மாதங்களின் பின்னர் அடக்குக் கடைக்குப் போனதையும் அதேபோன்ற கிலிட்டுக் காப்பு ஒன்றைக் கணவன் அவளுக்கு மாற்றிச் செய்து கொடுத்ததையும் அவளும் தெரிந்ததுபோல் இந்திரனுக்குக் காட்டிக்கொள்ளவில்லை. மறந்துபோய்த்தன்னும் தமக்கைக்கு மட்டுமல்ல யாருக்குமே கூறவில்லை.

 

 

*****************************************************

 

 

ஐயர் வந்து கிரியைகள் எல்லாம் முடிந்து பிள்ளைகள் வாய்க்கரிசி போட்டு பேரபிள்ளைகள் எல்லாம் சுற்றி நின்று நெய்ப்பந்தம் பிடித்து முடிய ஊரில் உள்ள பெரியவர்கள் சிலரும் இலக்கிய கர்த்தாக்கள் சிலரும் அவரைப்பற்றி ஆகா ஓகோவென்றெலாம் புகழ, கேட்டுக்கொண்டிருந்த சில உறவினர்களுக்குப் பெரிய இம்சையாக இருந்தது. சிலருக்கோ அட இப்பிடி எல்லாம் கூட நடந்திருக்கா. எங்களுக்குத் தெரியாமல் போட்டுதே இவ்வளவு நாளும் என எண்ணியபடி வாய்பிளந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர்.  

“இவர் இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எம்மூரில் பிறந்தது நாம் செய்த பாக்கியம். இத்தனை விரைவில் இவர் மரணமடைந்தது எமக்கெல்லாம் பெரிய இழப்பு” என்று கூறிவிட்டு அமர்ந்தார் ஒருவர்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவருக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல் இருந்தது.

“இவன் எண்பத்தைந்து வயதுவரை இருந்து எழுதினதைத் தவிர என்னத்தைச் சாதிச்சுக் கிழிச்சான் என்று இன்னும் இருந்திருக்க வேண்டும் என்று உப்பிடிக்க கதைக்கிறாங்கள்”

“பிள்ளையளுக்கும் பெண்டிலுக்கும் சோறு போட்டதும், உடம்பை வளர்த்ததும், பிள்ளையளைக் கலியாணம் கட்டிக் குடுத்ததும் தகப்பன் சேர்த்து வச்ச சொத்துக்களை விற்றுத்தான்” இவர் மனதில் எண்ணி முடிய முதல் அடுத்தவர் ஆரம்பித்துவிட்டார்.

“இவரைப்போல ஒருவரை நான் இதுவரை காணவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கிடைத்த அரசாங்க வேலையைக் கூட வேண்டாம் என்று கூறிவிட்டு இந்த மண்ணுக்காக உழைக்கவேண்டும் என்று தோட்டம் செய்து உழைத்துச் சாப்பிட்ட உழைப்பாளி இவர்”

“எடேய்.. செத்தவீட்டில ஒருத்தரும் வந்து சொல்ல மாட்டினம் எண்டு இப்பிடி எல்லாமா புழுகுவியள். தோட்டத்தைப் பாக்கிறன் எண்டு தோட்டத்துக்குப் பக்கத்தில இருந்த சுகுணாவைப் பார்க்கப் போறது உவங்களுக்குத் தெரியாது போல” மனதுள் எண்ணியவுடனேயே இவருக்கு வாய்விட்டுச் சிரிக்கவேண்டும் போல இருந்ததை அடக்கிக்கொண்டார்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வேலை அரச வேலையோ இல்லையோ எண்டு இவருக்கு இப்ப சந்தேகம் வந்தது. “இப்ப கோதாரி ஆரிட்டைக் கேட்கமுடியும்” என்று தன்மனதை அடக்கிக் கொண்டார்.

எண்டாலும் உந்தக் கொறோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தின பிறகு செத்ததால ஊரிப்பட்ட சனம். ஒரு இருநூறு முன்னூறு பேராவது இருக்கும். இரண்டு கிழமைக்கு முதல் செத்த பாக்கியத்துக்கு இருபது பேர் கூடப் போகேல்லையாம். பாடை கட்டவும் ஆட்கள் வரேல்லை. ஐயரும் பயத்தில போகாமல் ஒரு இருபது பேரோடை வானிலதான் கொண்டு போய் எரிச்சதெண்டு இவரை வருத்தம் பார்க்க வந்த கந்தசாமி சொன்னவன்.

பெரிய வடிவான பாடைகட்டி தென்னோலையெல்லாம் பின்னி, பூமாலை எல்லாம் கட்டி பார்க்கவே அழகாய்த்தான் இருக்கு. எனக்கே ஏறிப் போய்ப் படுக்கவேணும் போல இருக்கு என்று எண்ணித் தன்பாட்டில் சிரித்துக்கொண்டார் தேவர்.

திடீரென பெருங் குரலெடுத்து எல்லோரும் அழுகின்றார்கள். திடுக்கிட்ட தேவர் என்ன நடக்குது என்று நினைவுகளைத் தள்ளிவிட்டுப் பார்க்கிறார். சவப்பெட்டியை மூடுகிறார்கள். மூடவிடாது பிள்ளைகளும் மனைவியும் பிடித்துக்கொண்டு கத்த, அவர்களை பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக மூடியபின் உரித்துடையவர்கள் ஆறுபேர் நான் முந்தி நீ முந்தி என தள்ளுப்பட்டு அவரின் பிரேதப் பெட்டியைக் கொண்டுபோய் பாடையில் வைத்துவிட்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள்.

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் 

டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண்

டாடாண்டு டண் டண்  டாடாண்டு டண் டண்

மேளச் சத்தம் காதைப் பிளக்கும்படி இருக்கிறது. தேவரின் எரிச்சல் அதிகரிக்கப் பாடை நகர்ந்தபடி இருக்கின்றது.

“என்றாலும் நான் குடுத்துவைத்துத்தான் பிறந்திருக்கிறேன். இத்தனை நாட்கள் இராசா மாதிரி இருந்தேன். எந்தக் குறையும் இல்லாமல் மனைவி பிள்ளைகள் பார்த்துக்கொண்டார்கள். இறந்தபின்னும் சிறப்பாகப் பாடைகட்டி இத்தனைபேர் பின்தொடரச் செல்கிறேனே. பாவம் சந்திரவதனா நானில்லாமல் என்ன செய்யப்போறாளோ. என்னோடை அவளையும் கூட்டிக்கொண்டு போனால் எவ்வளவு நல்லாய் இருக்கும்” என்று எண்ணியபோதே உடலெங்கும் விசுக்கென இழுபட, தன் செத்தவீட்டை இத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்த இந்திரன், தேவர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட தெய்வேந்திரத் தேவரின் உயிர், மிகுதி இறுதி ஊர்வல நிகழ்வைப் பார்க்க முடியாதவாறு எங்கோ வேகமாக இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.    

 

 

முடிந்தது.  

 

 

 

 

                

         

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்பம் என்றால் ஒரு புத்தகமே இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அழகாக சொல்லப்படட கதை . கிராமத்து நினைவுகளோடு  பழைய வாழ்வியலும் சேர்ந்து நன்றாக எழுதியுள்ளீர்கள்." தெய்வ இந்திரா தேவர் "...பாராட்டுக்கள் . ஒரே மூச்சில் வாசித்தேன். அருமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது கதை......எல்லா வசதியான இடங்களிலும் மூத்த பிள்ளை ஆண் என்றால் செல்லம் குடுத்தே பழுதாக்கி விடுவார்கள்......இந்திரனும் அதற்கு விதிவிலக்கல்ல.......!   👍

நன்றி சகோதரி......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வாசிப்பம் என்றால் ஒரு புத்தகமே இருக்கு.

பரவாயில்லை. ஆறுதலாக வாசியுங்கள் அண்ணா.

2 hours ago, நிலாமதி said:

 அழகாக சொல்லப்படட கதை . கிராமத்து நினைவுகளோடு  பழைய வாழ்வியலும் சேர்ந்து நன்றாக எழுதியுள்ளீர்கள்." தெய்வ இந்திரா தேவர் "...பாராட்டுக்கள் . ஒரே மூச்சில் வாசித்தேன். அருமை. 

நன்றி அக்கா

1 hour ago, suvy said:

நன்றாக இருக்கின்றது கதை......எல்லா வசதியான இடங்களிலும் மூத்த பிள்ளை ஆண் என்றால் செல்லம் குடுத்தே பழுதாக்கி விடுவார்கள்......இந்திரனும் அதற்கு விதிவிலக்கல்ல.......!   👍

நன்றி சகோதரி......!  

மிக்க நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் அழகு...!

ஒரு கிராமத்தின் வாழ்வு அப்படியே கதையில் பிரதிபலிக்கப் படுகின்றது!

பற மேளம் கூட வழக்கொழிந்து போகின்றது என்பதை இந்தக் கதை மூலம் தான் அறிந்து கொண்டேன்!

வாழ்த்துக்கள் சுமே...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெரிய வடிவான பாடைகட்டி தென்னோலையெல்லாம் பின்னி, பூமாலை எல்லாம் கட்டி பார்க்கவே அழகாய்த்தான் இருக்கு. எனக்கே ஏறிப் போய்ப் படுக்கவேணும் போல இருக்கு என்று எண்ணித் தன்பாட்டில் சிரித்துக்கொண்டார் செல்லர்

தேவரா? செல்லரா? நல்ல கிராமத்துக் கதை , வாழ்த்துக்கள் அன்ரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் அழகு...!

ஒரு கிராமத்தின் வாழ்வு அப்படியே கதையில் பிரதிபலிக்கப் படுகின்றது!

பற மேளம் கூட வழக்கொழிந்து போகின்றது என்பதை இந்தக் கதை மூலம் தான் அறிந்து கொண்டேன்!

வாழ்த்துக்கள் சுமே...!

மிக்க நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.

3 hours ago, வாதவூரான் said:

தேவரா? செல்லரா? நல்ல கிராமத்துக் கதை , வாழ்த்துக்கள் அன்ரி

அடடா தவறு நேர்ந்துவிட்டதா. திருத்தவும் வழியில்லை. நன்றி வரவுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை வழங்கிய ஏராளன், நிலாமதியக்கா, யாயினி, புங்கையூரன், குமாரசாமி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

நான் எழுதிய கதைகளில் எனக்குத் திருப்தியைத் தந்த கதை இது. ஆனால் குறைவானவர்களால் பார்க்கப்பட்டும் , கருத்து எழுதப்பட்டுமிருப்பதுவும் இதுதான். விந்தை மனிதர்கள் 😀

Link to comment
Share on other sites

கிராமிய மணம் வீச அற்புதமான கிராமிய மொழிநடையில் எழுதப்பட்ட கதை அருமை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல படைப்பை பார்த்த திருப்தி. வாழ்த்துகள் தோழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரியின்ரை கதை வாசிக்கிறதெண்டால் ஒரு நாள் லீவு எடுக்கவேணும். பாப்பம் வாற கிழமை. 😎

Link to comment
Share on other sites

மிக நீண்டதாக இருந்தாலும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அக்கா.

பறை அடிப்பவர்கள் அடிக்காமல் விட்டதால் தான் அது இல்லாமல் போனது என்று கேள்விப்பட்டேன். உண்மையா??

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2022 at 22:54, nige said:

கிராமிய மணம் வீச அற்புதமான கிராமிய மொழிநடையில் எழுதப்பட்ட கதை அருமை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல படைப்பை பார்த்த திருப்தி. வாழ்த்துகள் தோழி

மிக்க நன்றி சகோதரி.

On 23/1/2022 at 00:10, குமாரசாமி said:

அன்ரியின்ரை கதை வாசிக்கிறதெண்டால் ஒரு நாள் லீவு எடுக்கவேணும். பாப்பம் வாற கிழமை. 😎

உங்களுக்கும் அன்ரியோ. தாங்கள் இளசுகள் எந்த நினைப்பு. வயசு போனதால வாசிக்க முடியேல்லை எண்டு ஒத்துக்கொள்ளுங்கோ😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2022 at 02:20, nunavilan said:

மிக நீண்டதாக இருந்தாலும் அருமையாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் அக்கா.

பறை அடிப்பவர்கள் அடிக்காமல் விட்டதால் தான் அது இல்லாமல் போனது என்று கேள்விப்பட்டேன். உண்மையா??

மிக்க நன்றி நுணா. அடிப்பவர்களும் குறைந்துவிட்டனர் தான். ஆனாலும் அதை ஒரு களையாகப் பார்க்காது சாதீய முத்திரை குத்தியதாலும் அதைப் பழகுபவர்கள் குறைவு. நான் என் உறவினர் ஒருவரின் மரண நிகழ்வில் லைவ்வில் பார்த்த பறை மேல அடியை வைத்தே எழுதினேன். எனக்குச் சகிக்கவே முடியாமல் போய்விட்டது.

தற்போது லவந்தனில் பலரும் சீக்கிய மக்களின்  றபான்என்று சொல்லப்படும் மேளத்தை திருமண,மற்றும் மங்கள நிகழ்வுகளுக்கும் பிடிக்கின்றனர். ஆனால் அவர்கள் அடிப்பதும் பறை மேள  இசை போலத்தான். எம்மவர்க்கு இப்போது எதை எதை எப்போது செய்யவேண்டும் என்பதுக்கூட மறந்துவிடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கும் அன்ரியோ. தாங்கள் இளசுகள் எந்த நினைப்பு. வயசு போனதால வாசிக்க முடியேல்லை எண்டு ஒத்துக்கொள்ளுங்கோ😀

யூத்ஸ் எல்லாம் போறாமைப்படுற அளவுக்குத்தான் நாங்கள் இருக்கிறமாக்கும்..:cool:

என்ன ஒண்டு நான் இன்னும் இந்த கதையை வாசிக்கேல்லை 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

யூத்ஸ் எல்லாம் போறாமைப்படுற அளவுக்குத்தான் நாங்கள் இருக்கிறமாக்கும்..:cool:

என்ன ஒண்டு நான் இன்னும் இந்த கதையை வாசிக்கேல்லை 😊

கெதியா வாசிச்சிட்டு கருத்தைச் சொல்லுங்கோ 😀

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதையை யாரையோ மனதில வைச்சு எழுதியிருக்கிறா சுமே ஆன்ரி..😁

அரச இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் பொறாமைகொண்டவரா?😬

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2022 at 19:06, கிருபன் said:

கதையை யாரையோ மனதில வைச்சு எழுதியிருக்கிறா சுமே ஆன்ரி..😁

அரச இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் பொறாமைகொண்டவரா?😬

 

ஒருவரை மனதில் வைத்தே தான் எழுதினேன். ஆனால் நீங்கள் கூறிய ஆட்களில்லை. 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.