Jump to content

நடைப் பயிற்சி எனும் அற்புதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நடைப் பயிற்சி எனும் அற்புதம்

 

spacer.png
 

வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் என்கிறார் கவிஞர் தாராபாரதி. எத்தனை விரல்கள் இருந்தாலும் கட்டை விரல்தான் பிரதானம். அதுபோலத்தான் பருத்த உடலைக் குறைக்க கார்போ வேண்டாம், புரோட்டீனைக் கூட்டு, கொழுப்பைக் குறை, நொறுக்குத் தீனிகளுக்கு டாட்டா என்று எத்தனை ரகசியங்களைச் சொன்னாலும், ‘உடற்பயிற்சி’ என்கிற ரகசியம்தான் ரொம்பவும் அவசியம். ஆனால், அதற்குத்தான் பலருக்கும் இல்லை அவகாசம்.

நலம் நல்கும் நடை

உடற்பயிற்சிகளின் அரசன் நடைப்பயிற்சி. காசு செலவில்லை; தனிக்கருவி தேவையில்லை; காலையில் சீக்கிரம் எழுந்தால் போதும்.  துணைக்கு ஓர் ஆள் கிடைத்தால் நல்லது. ‘காரியம்’ கைகூடும்.

ஆனால், ‘காலையில் எழுந்தால் சமைக்கவும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் நேரம் சரியாக இருக்கிறது’ என்று பெண்களும், ‘படுக்கவே லேட் நைட் ஆகிவிடுவதால், அதிகாலையில் எழுவது கஷ்டம்’ என்று ஆண்களும் ‘நடையைக் கட்ட’ சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். என்னதான் நீங்கள் டயட்டில் சினிஸ்டார் மாதிரி சரியாக இருந்தாலும், வாக்கிங், ஜாக்கிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், பருத்த உடல் எந்தக் காலத்திலும் குறையாது.

நடைக்குத் தேவை அரை மணி நேரம்தான். அதிகாலை நடை ஆரோக்கியம் காக்கும். அது முடியாது என்றால், எப்போது முடிகிறதோ அப்போதெல்லாம் என்பதே பதில்! முடியவில்லை என்றால், வாரத்துக்கு ஐந்து நாளாவது தேவை. திறந்தவெளி நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்கே சாத்தியமோ அங்கே நடக்கலாம்.

நல்ல நடை எது?

நடைப்பயிற்சி எளிமையான பயிற்சிதான் என்றாலும், இதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால்தான் இதன் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். அவை:

·          ஆமை வேகமும் ஆகாது; குதிரை வேகமும் கூடாது.  மித் வேகம் மிகவும் நல்லது. இது எல்லா வயதுக்காரர்களுக்கும் பொதுவானது.
·          தூய காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில்/பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியமானது. 
·          அதிகாலை ஐந்து மணி முதல் ஏழரை மணி வரை அல்லது மாலை ஐந்து மணி முதல் ஆறரை மணி வரை நடைப்பயிற்சிக்கு ஏற்ற நேரங்கள்.
·          வெறுங்காலில் நடக்க வேண்டாம். சரியான அளவுள்ள, மென்மையான ஷூவையும் வியர்வையை உறிஞ்சும் பருத்தித் துணியாலான காலுறைகளையும் அணிந்து நடக்க வேண்டும்.
·          தினமும் குறைந்தது 30 நிமிடங்கள், அதிகபட்சமாக 1 மணி நேரம் நடக்க வேண்டும். தினமும் நடக்க முடியாதவர்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி குறைந்தது வாரத்தில் 5 நாட்கள் அல்லது 150 நிமிடங்கள் நடந்தாலும் நன்மைதான்.
·          நடைப்பயிற்சியின்போது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 120-க்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
·          ‘பிரிஸ்க் வாக்கிங்’ என்று சொல்லக்கூடிய ‘வேகநடை’யும் நல்லது. கை, கால்களுக்கு வேகம் கொடுத்து நடக்கிற பாணி இது. உடலில் வேறு பிரச்சினை இல்லாதவர்களும் உடல் எடையைச் சீக்கிரத்தில் குறைக்க விரும்புபவர்களும் இதைப் பின்பற்றலாம்.      
·          இந்த நடையில் 200 கலோரி எரியும். நிதானமாக எடை குறையும்.
·          இளைஞர்கள் / இளம்பெண்கள் ‘ஜாக்கிங்’ என்று சொல்லக்கூடிய ‘துள்ளோட்டம்’ ஓடலாம்.
·          இதில் 400 கலோரி எரியும். இப்படித் தினமும் ஓடினால் சீக்கிரமே ஓடிப்போகும் உடற்பருமன்.

இது மிக முக்கியம்.

உணவு சாப்பிட்டதும் நடக்கக் கூடாது; உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், நெஞ்சுவலி ஏற்படுபவர்கள், இதய நோயாளிகள், சீறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், ரத்தசோகை உள்ளவர்கள், அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் வருபவர்கள், முழங்கால் மூட்டுவலி, குதிகால் வலி போன்ற பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுதான் நடக்க வேண்டும்.

இரண்டாவது இதயம்!

உடற்பருமன் இதயநலத்துக்கு எதிரி. ஆகவே, அவர்கள் இதயத்துக்கும் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியம். அதற்கும் நடைப்பயிற்சிதான் கைகொடுக்கிறது. எப்படி? தினமும் முறையாக நடைப்பயிற்சி செய்கிறவர்களுக்குக் கால் தசைகள் இரண்டாவது இதயம் போல் செயல்படுகின்றன. வேகமாக நடக்கும்போது, கால்களில் ரத்தக்குழாய்களுக்குப் பக்கத்தில் உள்ள தசைகள் தூண்டப்பட்டு, இதயம் செயல்படுவதுபோல் வலுவான அழுத்தத்துடன் ரத்தத்தை உடல் முழுவதும் அனுப்பிவைக்கின்றன. ஆகவே, நடைப்பயிற்சி செய்பவர்கள் இரண்டு இதயங்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிறார்கள். அதன் பலனால் பலமிழந்த இதயம்கூட வலிமை பெறுகிறது. மாரடைப்புக்கு ‘நோ’ சொல்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்கள் என்னென்ன?

கவனியுங்கள். நடப்பதும் ஓடுவதும் கலோரிகளைக் குறைப்பதற்கு மட்டுமல்ல! உடலில் உறங்கி வழியும் ஹார்மோன்களை உசுப்பிவிடவும்தான். உதாரணத்துக்கு, அரை மணி நேர நடை மூளைக்குள் ‘என்டார்ஃபின்’ ஹார்மோனைச் சுரக்க வைக்கிறது. இது தசைகளையும் நரம்புகளையும் முறுக்கிவிடுகிறது. ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைபோல் நாள் முழுக்க நமக்கு குதூகலம் வந்துவிடுகிறது. செரிமானம் உற்சாகமடைகிறது. மூச்சு மேம்படுகிறது. ரத்த ஓட்டம் சீரடைகிறது. மன அழுத்தம் மறைகிறது. இதுவரை உறக்க நிலையில் இருந்த இன்சுலின் இப்போது சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. நீரிழிவு விடை பெறுகிறது. இத்தனை பலன்களும் காலாற நடப்பதால் சுலபமாகக் கிடைக்கிறது. இவை எல்லாமே ஒழுங்காக நடக்கும்போது, தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர் துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று தொகுதியைவிட்டே ஓடிப்போவதைப்போல் உடற்பருமனும் நம் உடலைவிட்டு ஓடிப்போகிறேன் என்கிறது.

உதவிக்கு வரும் யோகா

நடைப்பயிற்சி தவிர வேறு வழி இல்லையா எனக் கேட்பவர்களுக்கு யோகா இருக்கிறது; ஜிம் இருக்கிறது; டிரெட் மில் இருக்கிறது. சைக்கிள் மிதி இருக்கிறது. உடற்பருமனைக் குறைப்பதற்கு என்றே தனிப்பயிற்சிகள் உண்டு. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

நீங்கள் டயட்டில் மட்டும் இருந்தால், ஆரம்பத்தில் ஆறேழு கிலோ எடை உடனே குறையும். அதற்குப் பிறகு எடை குறைய சண்டித்தனம் செய்யும். என்ன செய்வது? உடற்பருமனைக்  குறைக்க வேண்டுமே! அப்போதெல்லாம் உங்களுக்குக் கைகொடுப்பது உடற்பயிற்சி மட்டுமே! இதுதான் உடற்பருமனைக் குறைப்பதற்கான கடைசி ரகசியம்.


https://www.arunchol.com/dr-ganesan-article-on-obesity-and-walking-arunchol

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.