Jump to content

பண்டிதர் கோப்பை - ஜூட் பிரகாஷ்


Recommended Posts

அறுபதிகளிலும் எழுபதுகளிலும் ஆடிய பலமான பரி. யோவான் உதைபந்தாட்ட அணிகளிற்குக் கிட்டாத ஓரு அரிய சாதனையாக, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்பியனாகும் பெருமை, 1986ம் ஆண்டில் பார்த்திபன் தலைமை தாங்கிய பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட  அணிக்குக் கிட்டியது. 
 
இன்று பரி. யோவானின் Principal ஆகத் திகழும் துஷிதரன் அவர்களும், அண்மையில் காலமான நேசகுமார் அண்ணாவும் கூட அந்த உதைபந்தாட்ட அணியில் ஆடியிருந்தார்கள். 1986ல் பரி யோவானின் 1st XI உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் வேறு யாருமல்ல, 1979 இல் பரி. யோவானின் உதைபந்தாட்ட அணிக்குத் தலைமை தாங்கிய அருள்தாசன் மாஸ்டர் தான்.
 
விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பான SOLT (Students Organisation of Liberation Tigers), யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளிற்கிடையிலான இந்தச் சுற்றுப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். SOLT அமைப்பின் பொறுப்பாளராக முரளி இருந்த அந்தக் காலப்பகுதியில், பரி. யோவான் மைதானத்தில் இடம்பெற்ற கப்டன் பண்டிதர் நினைவுக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை SOLT அமைப்பின் நிரஞ்சன் ஒருங்கிணைத்து முன்னின்று நடாத்தினார்.
 
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளிற்குப் பின்னர் அனைத்து யாழ்ப்பாணப் பாடசாலைகளும் பங்கெடுத்த, உண்மையை சொல்லப் போனால் பங்கெடுக்க வைக்கப்பட்ட, உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பரி. யோவான் கல்லூரி அணி வெற்றியீட்டியது.
 
பண்டிதர் கோப்பையை வென்ற 1986 ஆம் ஆண்டின் பரி. யோவான் கல்லூரி அணியை, கல்லூரியின் வரலாற்றில் இடம்பிடித்த பலமான உதைபந்தாட்ட அணிகளில் ஒன்றாக கருதமுடியாது. ஆனாலும், சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலுடன்,  ஒற்றுமையாகவும், தன்னம்பிக்கையோடும், வெல்ல வேண்டும் என்ற ஓர்மத்துடனும் விளையாடியதால்தான், 1986 டிசம்பர் மாதம் இடம்பெற்ற பண்டிதர் கோப்பைக்கான சுற்றுப் போட்டியை பரி. யோவான் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
 
1984 இல் பரி. யோவான் கல்லூரியின் First XI உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வெளிநாடு சென்றுவிட, அந்த இடத்திற்கு கல்லூரியின் இன்னுமொரு புகழ்பூத்த உதைபந்தாட்ட வீரரான அருள்தாசன் மாஸ்டரை அதிபர் ஆனந்தராஜா அழைத்து வந்தார்.
 
1979 இல் பரி. யோவான் கல்லூரியின் First XI உதைபந்தாட்ட அணியை தலைமை தாங்கிய அருள்தாசன் மாஸ்டர், பின்னர் 1981 இல் Greenfield கழக அணிக்கும், பின்னர் 1984 இல் யாழ்ப்பாண பல்கலைக்கழக உதைபந்தாட்ட  தலைமை தாங்கியிருந்தார்.  வழமையாக உதைபந்தாட்டத்தில் முன்னனி வகிக்கும் பற்றிக்ஸ் மற்றும் மகாஜனா பாடசாலை பழைய மாணவர்களே யாழ் பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணிக்கு தலைமை தாங்குவார்கள். அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உதைபந்தாட்ட அணிக்குத் தலைமை தாங்கிய முதலாவது ஜொனியன், அருள்தாசன் மாஸ்டர்தான். 
 
1985 இல் அருள்தாசன் மாஸ்டர் கல்லூரியில் ஆசிரியராக இணைந்த பொழுது எங்களது Grade 6B  வகுப்பிற்கு அவர்தான் வகுப்பாசிரியர். அத்தோடு எங்களிற்குக் கணிதப் பாடமும் கற்பித்தார். 
 
Captain பார்த்திபன் அண்ணா தலைமை தாங்கிய 1986 ஆம் ஆண்டு கல்லூரியின் உதைபந்தாட்ட அணிக்கு கோல் காப்பாளராக இருந்த ராஜ்குமார்  தான் Vice Captain. 
 
பண்டிதர் கோப்பையில் விளையாடிய பரி. யோவான் அணியின் வியூகம் பின்வருமாறு அமைந்திருந்தது. 
 
Forwards: 
Left extreme - ஜோனதாஸ்
Left in - செந்தில்நாதன் 
Centre forward - கேதீஸ்வரன்
Right In - லோகராஜ் 
Right Extreme - தேவபிரியன் 
 
Centre half - நேசகுமார் 
Left half - துஷிதரன்
Right half - பார்த்திபன்
 
Right-back சுரேந்திரா 
Centre back முரளி 
 
Goal Keeper ராஜ்குமார் 
 
யாழ்ப்பாணத்தின் சில பிரபல பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணியில் பாடசாலையில் கற்காத மாணவர்களும் விளையாடும் பழக்கம் இருந்தது. பாடசாலை அணியில் விளையாடும் மாணவர்கள் வழமையாக 19 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சில பாடசாலை அணிகளில் 19 வயதிற்கு மேற்பட்டவர்களும் அந்தக் கல்லூரிகளின் உதைபந்தாட்ட அணிகளில் விளையாடுவது அனைவரும் அறிந்த ரகசியம். 
 
சில பாடசாலைகள் பலமான உதைப்பந்தாட்ட அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காகச் சிறந்த வீரர்களை ஊர் ஊராகத் தேடி தங்கள் பாடசாலைகளில் சேர்த்து விடுதி வசதிகள் செய்து கொடுத்த வரலாறுகள் யாழ்ப்பாணத்தில் நிறையவே இருக்கிறது . 
 
புலிகள் நடாத்திய பண்டிதர் கோப்பைச் சுற்றுப்போட்டியில் இந்த 19 வயதெல்லை கடுமையாக அமுல்படுத்தப்பட, சில பாடசாலை அணிகளில் விளையாடிய பலமான சில வீரர்கள் பண்டிதர் கோப்பைச் சுற்றுப் போட்டியில் ஆட முடியாமல் போய்விட்டது. 
 
பண்டிதர் வெற்றிக்கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டியின் format ஐச் சரியாக உறுதி செய்யமுடியவில்லை. ஆனால், அந்தச் 
சுற்றுப் போட்டியில் பரி.யோவான் கல்லூரி அணி ஆடிய முக்கிய மூன்று ஆட்டங்கள் இன்றுவரை பேசப்படுகிறது. ஸ்கந்தவரோதயா கல்லூரியுடனான இறுதியாட்டம், சென். ஹென்றீஸ் கல்லூரியுடனான அரையிறுதி ஆட்டம் மற்றும் மகாஜானாக் கல்லூரியுடனான ஆட்டம் என்பவையே அந்த முக்கிய மூன்று போட்டிகளாகும். 
 
சுற்றுப் போட்டியின் ஆரம்ப ஆட்டங்கள் ஒன்றில் யாழ்ப்பாணத்தில் பலம் பொருந்திய மகாஜனாக் கல்லூரி உதைபந்தாட்ட அணியுடன் பரி. யோவான் கல்லூரி அணி மோதியது.
 
“மோதியது” என்ற சொற்பிரயோகம் இந்த ஆட்டத்திற்கு சாலவும் பொருந்தும். ஏனென்றால், இரு கல்லூரியின் வீரர்களின் உடல்கள் ஆளோடு ஆள் பொருதி, மோதி, உதைபந்தாட்டத்தில் நிகழ்ந்த ஒரு மல்யுத்தம் போலவே, ஒரு physical game ஆகவே, இந்த ஆட்டம் இன்றும் நினைவு கூறப்படுகிறது. 
 
ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே மகாஜனா அணி rough game விளையாடத் தொடங்கியது. “நான் நிலத்தில விழுந்து கிடக்க.. என்ர நெஞ்சில பூட்ஸ் காலால மிதிச்சாங்கள்” இப்போது கனடாவில் வசிக்கும் லோகராஜ் அண்ணா இன்றும் மகாஜனாவுடனான அன்றைய ஆட்டத்தை மறக்கவில்லை. இந்த லோகராஜ் தான் அடுத்து வந்த Semi finals போட்டியிலும் Finals போட்டியிலும் கோல்கள் அடித்த பரி. யோவான் அணியின் legend. 
 
பரி. யோவான் கல்லூரியில் படிக்கும் போதே யாழ்ப்பாண உதைபந்தாட்டக் கழக அணிகளிற்கு விளையாடிக் கொண்டிருந்த பார்த்திபன், சுரேந்திரா, ராஜ்குமார் போன்ற பரி. யோவான் வீரர்கள் மகாஜனாவின் உத்தியை உடனடியாக உணர்ந்து கொண்டு பதிலடிக்குத் தங்கள் அணியைத் தயாராக்கினார்கள்.
 
“அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் coach பண்ணேக்க மற்ற Team rough game விளையாடினால் நாங்க அதை எப்படி handle பண்ணுறது என்றதைச் சொல்லித் தந்திருந்தவர்” பார்த்திபன் அண்ணா மகாஜனாவுடனான ஆட்டத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
 
“எங்களில் சில பேருக்கு club experience உம் இருந்ததால நாங்கள் அவங்கள் விளையாடின rough game ஐ counter பண்ணி விளையாடத் தொடங்கினோம்” என்று descent and discipline ஆகவும் “ Johnians always play the game” எனும் பரி. யோவானின் தாரகமந்திரத்துடன் விளையாடும் பரி.யோவான் அணி, மகாஜனாவுடனான ஆட்டத்தில் தனது விழுமியங்களில் இருந்து வழுவாமல் களத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்ட பரிணாமத்தின் பின்னனியைப் பார்த்திபன் அண்ணா விளங்கப்படுத்தினார். 
 
ஆட்டத்தின் முக்கிய திருப்பங்களில் ஒன்றாக மகாஜனாக்காரர் தெரியாத்தனமாக பரி. யோவானின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான  சுரேந்திராவோடு தனகினார்கள். 
 
“எங்கட defence ஐ மீறி அவயலால போக முடியாமல் போச்சு” சுரேந்திரா அண்ணாவும் மீண்டும் 1986 இற்கு கூட்டிக் கொண்டு போனார். “அப்ப தான் என்னை தள்ளுறது, இடிக்கிறது என்று அவயல் foul போட்டவ.. பார்த்திபன்.. நாங்கள் எல்லாம் ஒழுங்காத் தான் விளையாடிக் கொண்டிருந்தனாங்கள்” மகாஜனாவுடனான அந்தப் போட்டியை சுரேந்திரா விவரித்துக் கொண்டு போனார்.
 
மகாஜனா வீரரொருவர் பந்தை விட்டு விட்டு சுரேந்திராவின் காலை உதைய, சுரேந்திரா பந்தோடு துரத்திக் கொண்டு போய் தனக்கு உதைத்தவருக்கு பதிலடி கொடுத்த காட்சியை   யாராலும் இன்றும் மறக்க முடியாது.
 
அதற்குப் பிறகு தான் அந்தப் பிரளயம் நடந்தது. ஏற்கனவே சூடேறிப் போயிருந்த ஆட்டத்திடலில் பார்த்திபன் அண்ணா போட்ட foul இல் மகாஜானாக் கல்லூரி வீரனான சீவரத்தினம் பிரபாகரன் மைதானத்தில் விழுந்து நினைவின்றி கிடந்தக் காட்சியை இன்று நினைத்தாலும் உள்ளம் பதறும்.
 
Slip shot அடித்துப் பந்தை எடுக்க, மைதானத்தில் சாய்ந்து கொண்டே சரிந்த சீவரத்தினம் பிரபாகரனின் முதுகைப், பார்த்திபன் அண்ணா பந்தை நோக்கி உதைந்த உதை பதம் பார்த்தது. பார்த்திபன் உதைந்த உதை பந்தில் படாமல் சீவரத்தினம் பிரபாகரனின் முதுகில் ஓங்கி விழ, சீவரத்தினம் பிரபாகரன் நினைவிழந்து மைதானத்தில் முகம் குப்புற விழுந்தார். 
 
விறு விறு என்று ஓடிவந்த referee சுடர் மகேந்திரன் பார்த்திபன் அண்ணாவிற்கு red card காட்டி அவரை மைதானத்தை விட்டு வெளியறும் உத்தரவை வழங்கிக் கொண்டிருக்க, மகாஐனாக் கல்லூரி ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் பாய, ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. நினைவின்றி கிடந்த சீவரத்தினம் பிரபாகரனை உடனடியாக வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். 
 
மைதானத்தின் நடுவில், கிரிக்கெட் பிட்ச் அடியில், பரி. யோவான் கல்லூரி அணியைச் சூழ பாதுகாப்பு வளையமாக பரி. யோவான் ஆதரவாளர்கள் நின்று கொள்ள, மைதானத்தில் நின்ற புலிகள் இயக்கப் பெடியள் துரிதமாக இயங்கி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கலவரத்தைத் தடுத்தார்கள். 
 
இந்த சம்பவத்தி்ல் பாதிக்கப்பட்ட மகாஜனா சீவரத்தினம் பிரபாகரன் வேறுயாருமல்ல, பின்னாட்களில் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளாராக இருந்து, இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட புலித்தேவன்.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புலித்தேவன் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அந்த சம்பவத்தை தன்னோடு நினைவு மீட்டதாக அதிபர் துஷிதரன் தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். 
 
பதற்றமான அந்தச் சூழ்நிலை தணிந்து, இரு கல்லூரி அணிகளும் இடைநிறுத்தப்பட்ட ஆட்டத்தை மீண்டும் தொடங்கி  போட்டி நிறைவடைந்த போது, மகாஜனாவுடனான அந்த ஆட்டத்தில் பரி. யோவான் கல்லூரி அணி 1-0 கணக்கில் வெற்றியீட்டியது.
 
மறக்க முடியாத அந்த ஆட்டத்தில் பரி. யோவான் அணிக்கு கோல் அடித்தது யாரென்று மட்டும் யாருக்கும் சரியாக ஞாபகம் இல்லை. “நேசா இருக்கேக்க எழுதியிருக்கோணுமடா.. அவனுக்கு தான் எல்லாம் ஞாபகம் இருந்திருக்கும்” என்ற ஒற்றை வசனத்தையே இன்றைய அதிபர் துஷிதரன், அன்றைய கப்டன் பார்த்திபன், அன்றைய கோச்சர் அருள்தாசன் மாஸ்டர் மூவரும் சொன்னார்கள். 
 
பண்டிதர் கிண்ண சுற்றுப் போட்டியில், மகாஜனாக் கல்லூரிக்கு எதிரான போட்டியின் பின்னர், மானிப்பாய் இந்துக் கல்லூரியுடனான ஆட்டத்திலும் பரி. யோவான் கல்லூரி அணி வெற்றியீட்டி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. 
 
பண்டிதர் கோப்பையை பரி. யோவான் அணி வெற்றி பெற்றதில் பார்த்திபன் அண்ணாவின் தலைமைத்துவப் பண்பு பெரும்பங்காற்றியிருந்தை அவரோடு விளையாடிய சக வீரர்களும், அந்த அணியின் பயிற்றுவிப்பாளரான அருள்தாசன் மாஸ்டரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
 
“எங்களுக்கு அந்தக் காலத்தில கொலிஜ் jersey மட்டும் தான் தந்தது.. எல்லோரும் விரும்பின விரும்பின shorts தான் போட்டவ” பார்த்திபன் அண்ணா பண்டிதர் கோப்பை ஆட்டங்களின் பின்னியில் நிகழ்ந்த விடயங்களை பகிரத் தொடங்கினார்.
 
“அப்பயடாப்பா.. நாங்கள் Old Boys, Teacher என்று எல்லார்டயும் காசு சேர்த்து team இற்கு black shorts வாங்கினாங்கள்.. அதோட எல்லோருக்கும் Red & Black stockings உம் எடுப்பிச்சனாங்கள்” என்று பண்டிதர் கோப்பையில் ஆடிய பரி. யோவான் அணி ஒரு professional அணியைப் போல மாறியதன் பின்புலத்தை பார்த்திபன் அண்ணா விளக்கினார்.
 
“சொன்னா நம்ப மாட்டாயடாப்பா.. stocking முழங்காலடியில் இருந்து சறுக்கி விழாமல் இருக்க.. எல்லோருக்கும் plaster tape வேற வாங்கிக் கொடுத்தனாங்கள்” பார்த்திபன் அண்ணா அடுக்கிக் கொண்டே போனார். 
 
“Training இற்கு Register வச்சு mark பண்ணினாங்கள்.. யார் வந்தது யார் வரேல்ல என்று பார்த்து.. எல்லாரையும் கட்டாயம் practice இற்கு வரப் பண்ணினாங்கள்” என்றார் பார்த்திபன் அண்ணா.
 
“பார்த்திபன் என்ன செய்வான் என்றா.. match முடிஞ்சு அடுத்த நாள் practice இற்கு வந்தால் team ஐ நிற்பாட்டி வச்சு.. முதல் நாள் game ஐ analyse பண்ணுவான்” அன்று அந்த அணியில் ஆடி இன்று கல்லூரியின் அதிபராகத் திகழும் துஷிதரன் அவர்களும் பார்த்திபனின் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விபரித்தார்.
 
“என்ன சரியாச் செஞ்சனாங்கள்.. என்ன பிழை விட்டனாங்கள்.. எங்க improve பண்ணோனும் என்று ஒரு பதினஞ்சு இருபது நிமிஷம் பார்த்திபன் கதைப்பான்” என்று தொடர்ந்தார் அதிபர் துஷிதரன் அவர்கள்.
 
பண்டிதர் கோப்பைக்கு முன்னர், சென். ஹென்றீஸ் அணியுடன் இடம்பெற்ற சிநேகபூர்வ ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் பரி. யோவான் அணி வாங்கிக் கட்டியிருந்தது. சென். ஹென்றீஸ் அணியில் பயஸ் (No 7) பென்ஜமீன் ( No 10) என்று இரண்டு திறமான விளையாட்டு வீரர்கள் ஆடினார்கள். இருவரும் எதிரணியின் தடுப்பு வியூகங்களுக்குள் லாவகமாக புகுந்து கோல்கள் அடிப்பதில் கில்லாடிகள். 
 
சென். ஹென்றீஸ் அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் பரி. யோவான் அணியின் வெற்றிக்கு பயிற்றுவிப்பாளரான அருள்தாசன் மாஸ்டர் வகுத்த Game plan உம் ஒரு பிரதான காரணமாக இருந்ததாம். 
 
Aggressive ஆக விளையாடும் சென். ஹென்றீஸ் அணியை எதிர் கொள்ள பரி. யோவானின் defence பலப்படுத்தப்பட்டது. அதன் ஒரு அங்கமாக பரி. யோவான் அணியில் திடகாத்திரமான உடலோடு ஓடி விளையாடிக் கூடிய நேசக்குமாரையும் கேதாவையும் வைத்து சென். ஹென்றீஸ் அணியின் பயஸை lock பண்ணும் திட்டத்தை அருள்தாசன் மாஸ்டர் வகுத்திருந்தார். அந்த strategy நன்றாகவே வேலை செய்து பயஸை கோல் அடிக்க விடாமல் முடக்கிப் போட்டது. 
 
ஆட்டத்தின் முதல் பாதியில் சென். ஹென்றீஸ் அணியின் கையே ஓங்கியிருந்தது. “எங்கட half இற்குள் தான் அவங்கள் 1st half முழுக்க ball ஐ வச்சிருந்தவங்கள்.. என்னட்ட ball ஏ வரேல்ல..”என்று பரி. யோவான் அணியில் forward விளையாடிய லோகராஜ் அந்த முதற் பாதி ஆட்டத்தில் தான் அடைந்த விரக்தியை பதிவு செய்தார். 
 
“Penalty box இற்குள் வைத்து இரண்டு  முறை அடிச்சாங்கள்..இரண்டையும் என்ற உடம்பை கொடுத்துத் தான் மறிச்சனான்” அந்த ஆட்டத்தில் பரி. யோவான் அணியின் தடுப்புச் சுவராக விளங்கிய அதிபர் துஷிதரன் அவர்களும் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். “Match முடிய அருள்தாசன் மாஸ்டர் வந்து அப்படியே என்னை கட்டிப் பிடிச்சதை மறக்கேலாது” என்று அன்றைய ஆட்டத்தில் தானாற்றிய பங்களிப்பிற்கு பயிற்றுவிப்பாளரிடமிருந்து தனக்குக் கிடைத்த பாராட்டை அதிபர் துஷிதரன் அவர்கள் இன்றும் உணர்வுடன் நினைவுகூர்ந்தார். 
 
“Half time முடிஞ்சு திரும்ப தொடங்கினாப் பிறகு.. பின்னுக்கு வந்து பந்தை எடுத்துக் கொண்டு போய் தான் அந்த கோல் அடிச்சனான்” சென். ஹென்றீஸ் அணியை உலுக்கிய அந்த ஒற்றைக் கோல் அடித்த லோகராஜ் சொல்லிக் கொண்டே போனார். Principal Bungalow பக்கம் இருந்த  Goal Post இற்குள் விழுந்த அந்த கோல் அடித்ததும் பரி. யோவான் பக்கமிருந்து மைதானத்தில் எழுத்த ஆரவாரம் உண்மையில் பரி. யோவான் வளாகத்தில் வரலாறு காணாதது.
 
“அந்த கோலோட match மாறிட்டுது.. எங்கட ஆக்களுக்கு ஒரு வெறி வந்திட்டுது.. அதுக்கு பிறகு நாங்க aggressive ஆக விளையாடத் தொடங்க அவங்க defensive ஆகிட்டாங்கள்” பண்டிதர் கோப்பையின் இறுதியாட்டத்திற்கு பரி. யோவான் அணியை தகுதிகாணச் செய்த அந்த ஒற்றைக் கோலின் பின் விளைவுகளை லோகராஜ் மீண்டும் நினைவிறுத்திக் கொண்டார். 
 
சென். ஹென்றீஸ் அணியை 1-0 கணக்கில் வென்று யாழ்ப்பாணத்தாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பரி. யோவான் அணி, பண்டிதர் கோப்பையின் இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.
 
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, முழு இலங்கையிலும் பலமான அணியாக கருதப்பட்ட பற்றிக்ஸ் அணி, யாழ்ப்பாணக் கல்லூரியுடனான காலிறுதி ஆட்டத்தில் தோற்று சுற்றுப் போட்டியில் இருந்து வெளியேறியிருந்ததாம். சம். பத்திரிசிரியார் vs யாழ்ப்பாணக் கல்லூரி காலிறுதி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு கிடைத்த ஒரு controversial ஆன penalty kick ஐ, யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் தலைவர் ஜெயராஜா கோலாக மாற்ற, 1-0 கணக்கில் யாழ்ப்பாணக் கல்லூரி அணி வெற்றி பெற்கது.
 
யாழ்ப்பாணக் கல்லூரி அணியை அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி கொண்ட ஸ்கந்தவரோதயா அணி, பரி. யோவான் கல்லூரியுடனான இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது. 
 
ஸ்கந்தவரோதயாக் கல்லூரியுடனான இறுதியாட்டம் கிட்டத்தட்ட  Big Match மாதிரியான ஒரு சூழலிலேயே அரங்கேறியது. A/L படித்துக் கொண்டிருந்த அண்ணாமார், பிரதான வீதி - கண்டி வீதி- பழைய பூங்கா வீதி வழியாக கத்திக் கொண்டும், பாடிக் கொண்டும் ஊர்வலமாகக் கல்லூரி வளாகத்துக்குள் வந்தார்கள். 
 
அட்டகாசமாக அண்ணாமார் கல்லூரிக்குள் வந்திறங்கிய நேரம், Old Park பக்கமிருந்த பொன்னுதுரை பவிலியனடியில் மகளிர் கல்லூரிகளிற்கிடையிலான Netball இறுதியாட்டம் நடந்து கொண்டிருந்தது. Netball இறுதியாட்டத்தில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அணி ஆடிக் கொண்டிருந்ததால் பரி. யோவான் அண்ணாமாரின் அட்டகாசம் எல்லை கடந்தது.
 
பரி. யோவான் வளாகத்துக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிகளை கல்லூரி எப்பவும் இறுக்கமாகவே கடைபிடிக்கும், அதை எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் அந்த ஒழுக்க விதிகளை நிர்வாகம் தளர்த்தவே தளர்த்தாது. அன்று Netball court அடியில் எல்லை மீறிய அண்ணாமாரும் உப அதிபராக இருந்த பஞ்சலிங்கம் மாஸ்டரின் முறையான கவனிப்பிற்கு உள்ளானார்கள். 
 
Netball சுற்றுப் போட்டிக்கான ஞாபகார்த்தக் கிண்ணம் புலிகள் இயக்கத்தின் எந்த மாவீரர் பெயரில் இருந்தது என்பது சரியாகத் தெரியவில்லை, ஆனால் அந்த வெற்றிக்கிண்ணத்தை பரி. யோவான் கல்லூரியின் சகோதரப் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி வென்றது மட்டும் எல்லோருக்கும் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.
 
பண்டிதர் கோப்பைக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் physical game ஆகவே இருந்தது. ஆனால் இந்த முறை பரி. யோவான் அணியின் தந்திரோபாயம் (strategy) வேறுவிதமாக இருந்தது. 
 
“எங்களுக்கு இந்த game உம் physical ஆகத் தான் இருக்கும் என்று தெரியும், ஆனால் நாங்க ஏலுமானளவு முட்டாமல் விளையாடுவம் என்று முடிவெடுத்தனாங்கள்” அதிபர் துஷிதரன் அவர்கள் அந்த இறுதிப் போட்டியில் பரி. யோவான் அணி ஆடிய வித்தையின் விபரத்தை
விபரித்தார்.
 
இறுதி ஆட்டத்திலும், half time இற்கு பிறகு, அதே Principal bungalow முனையில், அதே லோகராஜ், அதே ஒற்றைக் கோலைப் போட, அதே 1-0 கோல் கணக்கில், பரி. யோவான் கல்லூரி அணி பண்டிதர் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தை வென்றது.
 
பண்டிதர் கிண்ணச் சுற்றுப் போட்டியில் பரி. யோவான் அணிக்கு எதிராக எந்த அணியாலும் ஒரு கோலைக் கூடல் போட முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். அந்தளவிற்கு பரி. யோவானின் ஸ்டைலிஷான கோலியான ராஜ்குமாரின் பங்களிப்பும்  பரி. யோவான் கல்லூரி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பிரதான காரணங்களில் ஒன்று. 
 
“Finals இன்ட கடைசி நிமிடங்களை என்னால பார்க்கேலாமல் போட்டுது.. அவ்வளவு டென்ஷன்” அந்த இறுதிப் போட்டியின் இறுதிக் கணங்களின் பரபரப்பான பொழுதுகளை பரி.யோவான் அணியின் இளம் பயிற்றுவிப்பாளரான அருள்தாசன் மாஸ்டர் நினைவுகூர்ந்தார்.
 
“நான் Fleming Hostel அடியில் நின்று தான் கடைசி நிமிடங்களைப் பார்த்தனான்.. match முடிய players, students, old boys எல்லாம் ஓடிவந்து என்னை தங்கட தோளில தூக்கிட்டாங்கள்” அருள்தாசன் மாஸ்டர் சொல்லிக் கொண்டு போகும் போது அவரது குரல் தழுதழுத்தது.
 
 “நேசகுமாராத்தான் இருக்கோணும்.. அவன்ட தோளில என்னைத் தூக்கிக் கொண்டு principal bungalow க்கு கொண்டு போய்ட்டாங்கள்” என்று தொடர்ந்தார் அருள்தாசன் மாஸ்டர்.
 
இறுதி ஆட்டம் முடிந்ததும், பரி. யோவான் மாணவர்களும், பழைய மாணவர்களும், ஆதரவாளர்களும் பரி. யோவான் மைதானத்தில் ஆடிய ஆனந்தக் கூத்தைக் கண்டுகளித்துக் களைத்துப் போன சூரியன் ஓய்வெடுக்கப் போக, கடைசியில் பெற்றோல் மக்ஸ் வெளிச்சத்தில் தான் இயக்கம் பரிசளிப்பு விழாவை நடாத்த வேண்டியதாகி விட்டது.
 
பண்டிதர் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை, 
சம்பத்திரிசிரியார் கல்லூரி Rector வணபிதா பிரான்சிஸ் யோசேப்பு அவர்கள் பரி யோவான் அணியின் தலைவர் பார்த்திபன் அண்ணாவிற்கு வழங்கினார். வணபிதா பிரான்சிஸ் யோசேப்பு இறுதியுத்ததில் காணாமால் ஆக்கப்பட்டவர்களில் அடங்குவார். 
 
இருள் கவிழ்ந்து விட்ட அந்த நேரத்திலும் பண்டிதர் கோப்பையை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற அவாவோடு அலைமோதிய மாணவர்கள் அந்தப் பொழுதை என்றும் மறக்க மாட்டார்கள். அப்படித் தொட்டுப் பார்க்க பாஞ்சடிச்சு விழுந்து எழும்பியதில் தனக்கு கையில் ஏற்பட்ட தழும்பை 1990 ஆம் ஆண்டு பரி. யோவான் உதைபந்தாட்ட மற்றும் கிரிக்கெட் அணிகளிற்குத் தலைமை தாங்கி, இலங்கை தேசிய பாடசாலைகள் உதைபந்தாட்ட அணியின் Poolற்கும் தெரிவான, சதீசன் இன்றும் மகிழ்வோடு காட்டி பெருமைப்படுவார். 
 
பண்டிதர் கிண்ணத்தை வென்ற பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட அணியை கெளரவிக்க, மறைந்த சேவியர் மாஸ்டர் ஏற்பாடு செய்த மதியபோசன விருந்துபசாரத்தையும் அருள்தாசன் மாஸ்டர் ஞாபகப்படுத்தினார். 
 
மகாஜனாக் கல்லூரியுடானா பரி. யோவான் கல்லூரியின் போட்டியில் அதிகளவான fouls போடப்பட்டதால் அடிக்கடி சுடர் மகேந்திரன் referee இன் விசில் ஊதப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆட்டத்தின் இடைவேளை நேரம், ref சுடர் மகேந்திரன் சோடா குடித்துக் கொண்டிருக்க, மைதானத்துக்கு வெளியே இருந்த யாரோ ஒருவர் “referee இற்கு கனக்க சோடா குடுக்காதீங்கோடா.. பிறகு சோடால இருந்த gas எல்லாம் விசுலுக்கால வெளில வந்திடும்” என்று நக்கலடித்தது ref சுடர் மகேந்திரத்தின் காதில் விழுந்து விட்டது. 
 
Principal Bungalow பக்கம் இருந்து நக்கலடித்த பார்வையாளரை நோக்கி கிடு கிடுவென ஓடிவந்த ref சுடர் மகேந்திரன், “அப்ப இந்தா நீ வந்து ஊதேன்” என்று ஏறுபட்டதையும் ஞாபகப்படுத்தினார்கள். Ref சுடர் மகேந்திரன் பின்னாட்களில் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபராக இருந்தவர். 
 
இன்றும் பரி. யோவான் கல்லூரி என்றால் எல்லோருக்கும் கிரிக்கெட் தான் உடனடியாக நினைவில் வரும், ஆனால் பரி. யோவானில் காலத்திற்கு காலம் உருவான பலமான உதைபந்தாட்ட அணிகளின் வரலாறும் சாதனைகளும் கிரிக்கெட் அணிகளிற்கு இணையானவை, எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல என்பதற்கு ஆதாரமாக, பண்டிதர் வெற்றிக்கிண்ணம் வென்ற பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட அணியின் சாதனையும் நினைவுகளும், கம்பீரமான அந்தப் பென்னாம் பெரிய பண்டிதர் வெற்றிக் கிண்ணத்தைப் போல காலமெல்லாம் வீற்றிருக்கும்.
 
378f4a6f-88e3-4fd2-938c-85cfc40bbe91.jpg

 

 

https://kanavuninaivu.blogspot.com/2022/03/blog-post.html?fbclid=IwAR1a-nPIoPKgUCD5b6q9XLaU2uOXUdcLB6xltwJu2Qcpwrcuj7qZMYTZW3c&m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.