-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nochchi · பதியப்பட்டது
இலங்கையும் வல்லரசுகளும் By DIGITAL DESK 5 13 AUG, 2022 | 12:13 PM லோகன் பரமசாமி தமிழ்தேச மக்கள் மத்தியில் இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற அரசியல் பொருளாதார நெருக்கடி மாற்றங்களை சிங்கள தேசத்தோடு இணைந்து கூட்டாக ஒரு குடையின் கீழ் அணிவகுத்து நின்று பார்ப்பது பொருத்தமற்றது என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் தம்மை இறைமையுள்ள ஒருதேச மக்களாக நிலைநிறுத்தி வைத்துக்கொள்ளவே அதிகளவில் பிரயத்தனம் செய்கின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாக பரிணமித்துள்ளது. ஆட்சித்தலைவர்களை மக்கள் நாட்டை விட்டு தப்பியோடும் அளவிற்கு வேட்கை கொண்டதாக உள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள ஆட்சியாளரையும் பதவி விலகுமாறு கோரும் வலியுறுத்தல்களும் தீவிரமடைந்து வருகின்றன. எனினும், பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டின் பணவீக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் பொருட்களின் விலைவாசி அதிகரித்துச் செல்கின்றது. அத்துடன், அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லாத நிலைமையில் தீவு தேசம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலும், உலக வல்வரசுகள் இலங்கை ஆட்சி நிர்வாகத்தில் தமது செல்வாக்கை வலுப்படுத்தி கொள்வதில் இருந்து சற்றும் விலகவில்லை என்பது முக்கியமான விடயமாகும். இது தீவு தேசத்தில் மேலும் பதற்றமான நிலைமையை அதிகரிப்பிற்கான காரணியாகவே அமையும் என்பது பலரதும் கரிசனையாகவுள்ளது. இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு முதல் இருந்தே இந்தியா அரச நிர்வாகக் கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் கடன் உதவிகளை வழங்கியிருந்தது. ஏறத்தாழ 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை இது வரையில் புதுடில்லி தனது உதவித்தொகையாக வழங்கியுள்ளது. இந்த உதவிக்தொகை உணவு, எரிபொருள், மருந்துவகைகள், மற்றும் பயிர்செய்கைக்கான உர வகைகளை இறுக்கமதி செய்யும் நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது. இதற்கும் மேலாக இந்தியா, கடன் அடிப்படையிலும் நாணய பரிமாற்று அடிப்படையிலும் 3.8பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிதொகையைக் காட்டியிருக்கிறது. இதன்மூலம் கொழும்பு நிர்வாகத்துக்கு எப்பொழுதும் எத்தகைய நிலையிலும் புதுடில்லி தனது முதன்மை நிலையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. புதுடில்லியின் இந்தச் செயற்பாடுகளுக்கு ஈடுசெய்யும் வகையில பீஜிங் தனது உதவித்தொகையாக சுமார் 500மில்லியன் யுவான்களை (75மில்லியன் டொலர்கள்) வழங்கியுள்ளது. பீஜிங், உதவியாக கொடுத்துள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கு கடன் பெற்று தரும் விவகாரத்தில் ஆக்கபூர்வமான வகையில் நடந்து கொள்வதாக உறுதிமொழி அளித்துள்ளது . ஆக, இந்தியாவும் சீனாவும் இலங்கையில் உள்ள ஆட்சி நிர்வாகத்துடன்- அது எந்த ஆட்சியாளராக இருந்தாலும் தமது செல்வாக்கை வலுப்படுத்தி கொள்வதில் முக்கிய கவனம் செலுத்துகின்றன. ஆனால், இலங்கையில் சீனாவின் அதிகரித்த முதலீடுகளும் தனது சொந்த வியாபார வசதிக்கேற்ப பாரிய உட்கட்டமைப்புகள் மீதான அதிகரித்த ஈடுபாடும் இலங்கையை சீனாவின் கைகளில் இருந்து நழுவமுடியாத நிலைக்கு தற்போதுதள்ளிவிட்டுள்ளது. உதாரணமாக சீன உதவியுடன் கட்டப்பட்ட வீதி கட்டமைப்புக்களும் துறைமுகக் கட்டமைப்புக்களும், விமான நிலையங்களும் மின்நிலைய கட்டமைப்புக்களும் சீன ஆதிக்கத்தை இலங்கைத்தீவில் உறுதி செய்துள்ளது. இந்த நிலையிலேயே அரசியல், நிர்வாக சமநிலை, பொருளாதார காரணங்களால் தளம்பலைக் கண்டுள்ளது. சீனாவின் செல்வாக்கு நிலையை குலைப்பது மட்டுமல்லாது. இலங்கைத் தீவிலிருந்து சீனாவை வெளியேற்றித் தனது நிலையை தக்க வைத்து கொள்வதற்கு சீன போட்டியாளர்களான அமெரிக்க இந்திய யப்பானிய பெருவல்லரசுகள் நகர்வுகளில் ஈடுபடும் நிலைக்கு வந்துள்ளன. சீனா தனது பார்வையில் ‘கடன் பொறி இராஜதந்திரம்’ என்ற சொல்லை மேலை நாடுகள் பயன்படுத்தி தனது வியாபார அபிவிருத்தி திட்டங்களை தீய நோக்கம் கொண்டவையாக சித்தரிக்க முனைகிண்றன என்று கூறி வருகிறது. அதேவேளை இலங்கையில் போராட்டங்களில் ஈடுபடும் போராட்டகாரர்களை கைது செய்வது ஜனநாயக விரோதச்செயலாகும் என்று அமெரிக்க தூதரகம் நேரடியாகவே அழுத்தம் பிரையோகித்துள்ளது. சர்வதேசங்களில் மனித உரிமை ஜனநாயகம், சர்வதேச நிறுவனங்கள் ஊடான கடன் உதவித்திட்டம், ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் அமெரிக்கா செயற்படுவது வழக்கம். தனக்கு சாதகமான அரசியல் நிலையை உருவாக்கும் வரை மேலைதேய உதவிகள் போராட்டக்காரர்களுக்கு இருக்கும். தேவை முடிந்ததும் பலரும் அரச இயந்திரத்திடம் பலிக்கடாக்களாக ஆக்கப்படுவர் இந்தியா உள்ளகப் பொறிமுறைகளை உபயோகப்படுத்தும் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் நிதி உதவிகளும் உறுதி மொழிகளும் உற்சாக வார்த்தைகளும் வழங்கப்பட்டு வருவதை பல்வேறு அரசியல் தலைவர்களின் பேச்சுகளும் உறுதி செய்கின்றன. ஆக வல்லரசுகள் தமது இலக்கை அடைவதற்கு ஏற்ற வகையில் தமது செல்வாக்கின் அடிப்படையில் உள்@ர் கூறுகளை நகர்த்துவதில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை உள்@ரில் உள்ள கூறுகளும் தமது இருப்பையும் நலன்களையும் உறுதி செய்வதில் கவனம் கொண்டுள்ளன. முதலில் அரசாங்கம் தனது இருப்பை உறுதி செய்யும் வகையில் போராட்டகாரர்களை கட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்தில் பாதுகாப்புப்படைகளை உபயோகிப்பதில் மும்முரமாக செய்பட்டு வருகிறது. அடுத்ததாக புதிதாக பதவியில் அமர்ந்துள்ள ஆட்சியாளர்களை ஆசீர்வதிக்கும், ஆலோசனை வழங்கும் பௌத்த பீடங்கள் போராட்டக்காரர்கள் மத்தியிலும் தமது பிரசன்னத்தைக்காட்ட தயங்கவில்லை. ஒருவேளை போராட்டம் காரணமாக ஏதாவது மாற்றம் ஏற்பட்டு விட்டாலும் அங்கே தாமும் நின்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆக, எந்த பகுதியிலும் பேரினவாதத்தின் செல்வாக்கை வைத்திருக்க வேண்டும் என்பதில் பௌத்த பீடங்கள் கவனமாக செயற்பட்டு வருகிறன. மேலும் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் மேலத்தேய முத்திரை குத்தப்பட்ட சர்வதேச அமைப்புகளினால் இனங்காணப்பட்டு உள்ளனர். இவர்கள் இன்னமும் ஜனநாயகத்தின் போர்வையில் போராடி வருகின்றனர். போராட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி வன்முறையை தூண்டும் பணிகளில் ஈடுபடக் கூடியவர்கள் பலர் தலைமறைவாக சென்ற விட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரச பாதுகாப்பு படைகள் இது வரைகாலமும் பொறுப்புக்கூறலில் இருந்த பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த யுத்த காலத்தில் உதிரிகளை இல்லாது அழிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றனர் என்பதை மறந்து விடலாகாது. இலங்கை அரசியல் தலைவர்கள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதில் தயக்கம் காட்டி வருவதையும் கூட காணகூடியதாக உள்ளது. வங்குரோத்து நிலையில் அரசியல் செய்வது என்பது இலாபமற்ற பொதுச்சேவை அரசியலே செய்ய வேண்டிய கட்டத்தில் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த வகையில் பொறுப்புகள் அதிகமாகும் நிலை காணப்படுவதால் பலரும் தயக்கம் காட்டும் தன்மை உள்ளது. இவை அனைத்துக்கும் மத்தியில் எரியும் வீட்டில் பிடிங்கினால் அமைச்சர் பதவி, எட்டாப்பழம் புளிக்கும் என்ற நிலையில் பதவி கிடைக்காவிட்டால் தமிழ் தேசியவாதி என்ற வகையில் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் நடமாடி வருகின்றனர். ஆனால் இங்கே பொருளாதார முடக்கத்தால் அடிபட்டு போயிருப்பது அன்றாடம் உழைத்து வாழும் அப்பாவி சிங்கள மக்களே ஆகும். இருந்த பொழுதிலும் தமிழினத்தை இன அழிப்பிற்குள் உள்ளாக்கியது தொடர்பான பொறுப்பு ஒட்டுமொத்த சிங்கள தேசத்திற்கும் ஒருசமுதாய பொறுப்பாக உள்ளது என்பதை மறந்து விடலாகாது. இலங்கையும் வல்லரசுகளும் | Virakesari.lk -
By nochchi · பதியப்பட்டது
சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5 By VISHNU 10 AUG, 2022 | 09:12 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் - 5 கண்காணிப்பு கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து குவாட் அமைப்பு நாடுகளும் பாதுகாப்பு சார் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் முதலாவது வெளிக்கள இராணுவ தலத்திற்கான இலக்கை மையப்படுத்தியதாகவா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனா நகர்த்துகின்றது என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபூட்டியில் சீனா ஏற்கனவே இராணுவத்தளம் ஒன்ஐ உருவாக்கியுள்ள நிலையில் இந்தோ - பசிபிக் பகுதியிலும் உருவாக்கி விட வேண்டும் என்ற இலக்கில் சீனா பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இலங்கை, கம்போடியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் துறைமுகங்களை பயன்படுத்தி இராணுவ தளம் ஒன்றை உருவாக்கலாம் என்ற சந்தேகம் பல தரப்புகளாலும் வெளியிடப்பட்டு வந்தன. அந்த வகையில் கம்போடியாவில் ஒரு கடற்படை தளத்தை இரகசியமாக உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. ஆனால் அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. ஆனால் மியன்மாரின் ஷட்வே துறைமுகம் மற்றும் கம்போடியாவின் நான்கு முக்கிய துறைமுகங்களில் ஒன்றும் சீனாவின் இலக்காக காணப்பட்டுள்ளது. இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் ' யுவான் வோங் - 5' எனும் சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா இந்த கப்பலை ஓர் உளவுக் கப்பலாக சுட்டடிக்காட்டி இலங்கையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தக் கப்பலிலிருந்து 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பகுதியினை கண்காணிக்க முடியுமென இந்திய இராஜதந்திர தடங்கள் அனைத்தும் கொழும்பை நோக்கி அழுத்தங்களை பிரயோகித்தன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் யுவான் வோங் - 5 சீன கண்காணிப்பு கப்பல் நங்கூரமிட்டால் இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள பல முக்கியமான கேந்திர நிலையங்களை கண்காணிப்பது மாத்திரமன்றி தேவையான உளவு தகவல்களையும் சேகரித்து விடும். இவ்வாறானதொரு அச்சுறுத்தல் மிக்க நிலைமை இலங்கையால் இந்தியாவிற்கு ஏற்பட அனுமதிக்க முடியாது என்பதுடன் அதனை தடுக்க எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்பதே டெல்லியின் இறுதி தீர்மானமாக அமைந்தது. கடும் இந்திய அழுத்தங்களுக்கு மத்தியில் யுவான் வோங் - 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான விஜயத்தை ஒத்திவைக்குமாறு சீன தூதரகத்திடம் இலங்கை எழுத்து மூலமாக கோரியது. கோரிக்கை கடிதத்திற்கு எவ்விதமான நேரடி பதிலையும் வழங்காத சீனா, கப்பல் விடயம் குறித்து உயர் மட்ட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மறுப்புறம் பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிப்பது அர்த்தமற்றது என சீனா வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. அதே போன்று இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக ஏனைய நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வளர்க்க இலங்கைக்கு உரிமையுள்ளதென கப்பலின் வருகையை எதிர்க்கும் அனைத்து தரப்புகளுக்கும் சீனா பதிலளிப்பதாக கூறியது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இவ்வகையான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விட கூடாது என்பதில் எந்தளவிற்கு இந்தியா உள்ளதோ அதே போன்று சீனாவின் மேலாதிக்க போக்கு இருக்க கூடாது என்பதில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் உள்ளன. எனவே தான் யுவான் வோங் - 5 கப்பலின் வருகை குறித்து 'குவாட்' அமைப்பு நாடுகளும் கவனத்தில் கொண்டன. இந்தோ - பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து 2007-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் இந்த 'குவாட்'. இந்த அமைப்பின் அடுத்த நிலையாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பையம் உருவாக்கியுள்ளன. இதுவும் சீனாவின் ஆதிக்கத்தை பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் வகையிலேயே தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனையில் குவாட் அமைப்பு ஊடாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது யுவான் வோங் - 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை துறைமுக விஜயத்தை தடுப்பதற்கு சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான கூட்டணி ஒன்றிணைந்தது. இதற்கு பிரதான காரணம் இந்தியாவின் பாதுகாப்பு சூழலுக்குள் இலங்கையின் கடல் எல்லைப் பகுதிகள் இருக்கின்றமையால் மாத்திரம் அல்ல. ஹம்பந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட போது பல நாடுகள் இலங்கையை எச்சரித்தன. அதாவது சீனாவின் மற்றுமொரு வெளிக்கள இராணுவ தளமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் மாறலாம் என்பதே எச்சரிக்கையாகும். அதே போன்று தனது இராணுவ நலன்களுக்காக இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை, கம்போடியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் துறைமுகங்களை பயன்படுத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டன. எனவே அவ்வாறானதொரு நோக்கத்திற்காக தான் சீனா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி நகர்த்துகின்றதா என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பிற்கு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் காணப்பட்டதாகவே இராஜதந்திர மட்ட தகவல்கள் கூறின. எனவே உலகளாவிய சக்தியாக மாறும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே வெளிக்கள இராணுவ தளங்கள் அமைவதாக சுட்டிக்காட்டப்படுகின்றன. சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5 | Virakesari.lk -
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கிருபன். குமாரசாமியண்ணை. மற்றும் புத்தன் 🤝
-
By nochchi · பதியப்பட்டது
உக்ரேன் ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களம் ? By DIGITAL DESK 5 13 AUG, 2022 | 12:13 PM சுவிசிலிருந்து சண் தவராஜா ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்களைக் காப்பதற்காகவும், ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் போர் புரிவதாக உக்ரேன் தரப்பிலும், அந்த நாட்டுக்கு ஆதரவாகச் செயற்படும் மேற்குலகின் சார்பிலும் முன்வைக்கப்படும் பிரசாரங்களைப் பொய்ப்பிக்கும் வகையிலான அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது. 'உக்ரேன்: குடிமக்களைப் பாதிக்கும் உக்ரேனின் போர்த் தந்திரங்கள்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணாக உக்ரேன் நாட்டுப் படையினர் பல சந்தர்ப்பங்களில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜுலை வரையிலான காலப்பகுதியில் கிழக்கு உக்ரேனின் கார்கிவ், டொன்பாஸ் மற்றும் மைகொலைவ் ஆகிய பிராந்தியங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளன. இந்த ஆய்வுகளில், உக்ரேன் படையினர் பொதுமக்கள் வாழும் இடங்களின் அருகாமையில் இருந்து படை நடவடிக்கைகளை மேற்கொண்டது முதல் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் படைத்தளங்களைப் பேணி வந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவமனைகளைப் போர் நடவடிக்கைகளுக்குப் பாவிப்பது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு அமைவாகத் தடைசெய்யப்பட்ட விடயம். பாடசாலைகளை படைத்தளங்களாகப் பயன்படுத்துவது சட்டத்துக்கு முரணான விடயமாக இல்லாவிடினும், அவ்வாறு பயன்படுத்துவதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது சர்வதேச மன்னிப்புச் சபையின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்தக் காலப்பகுதியில் 5 மருத்துவமனைகள் உக்ரேன் படைகளினால் படைத்தளங்களாகப் பாவிக்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி மன்னிப்புச்சபையின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 29 பாடசாலைகளில் 22 பாடசாலைகள் ஆய்வுவேளையில் படைத்தளங்களாகப் பாவிக்கப்பட்டு வந்துள்ளமை அல்லது முன்னர் பாவிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. பாக்முற் என்ற இடத்தில் ஒரு பல்கலைக்கழகம் கூட படைமுகாமாகப் பனப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, 19நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்களில் இருந்து ரஷ்யப் படைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்தவேளைகளில் இடம்பெற்ற பதில் தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டமை சாட்சியங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்து. அதிலும் கூட குறித்த இடங்கள் போர்முனையில் இருந்து பல கிலோ மீற்றர் தொலைவில் இருந்தமையும், அருகே காடுகள் இருந்த போதிலும், படையினர் அங்கே நிலைகொள்ளாமல் மக்கள் வாழிடங்களின் மத்தியில் இருந்துகொண்டே தாக்குதல்களை நடாத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரேன் மீதான தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்த நாள் முதலாக ரஷ்யப் படைகள் மீது போர்க்குற்றச்சாட்டுகளை உக்ரேனும், மேற்குலகும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவது தெரிந்ததே. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுதலித்துவரும் ரஷ்யா, தான் வேண்டுமென்றே பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதில்லை எனப்பதிலளித்து வருகின்றது. அதேவேளை, உக்ரேன் படையினர் - குறிப்பாக அவர்களோடு இணைந்து செய்படும் நவீன நாசிக்கள் - ரஷ்யா மீது பழியைப் போடுவதற்காகத் திட்டமிட்டு சில விடயங்களை அரங்கேற்றி வருகின்றனர் என்றும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. ரஷ்யாவின் இந்தக் கூற்றுகள் ஓரளவு உண்மை என்பதையே தற்போதைய மன்னிப்புச் சபையின் அறிக்கை சுட்டி நிற்கின்றது. மறுபுறம், அண்மைக் காலமாக ரஷ்ய எதிர்ப்புப் பரப்புரையை அளவுக்கு அதிகமாக மேற்கொண்டுவரும் ஜேர்மனிய ஊடகமான 'டெர் ஸ்பீகல் ஆகஸ்ட் 5ஆம் திகதி வெளியிட்ட செய்தியொன்றில் தமது ஆய்வில் கூட மன்னிப்புச்சபை வெளியிட்ட தகவல்களுக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், உக்ரேன் படையினரின் நடவடிக்கைகள் சட்ட அடிப்படையிலான கேள்விகளை எழுப்புவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக அரங்கில் ரஷ்யாவை படுமோசமான வில்லனாகவும், உக்ரேனை மனிதாபிமானம் மிகுந்த சிறந்த கதாநாயகனாகவும் காட்சிப்படுத்தி வந்த மேற்குலகிற்கும், அதன் ஊடகங்களுக்கும் மன்னிப்புச்சபையின் அறிக்கை பேரிடியாக அமைந்திருந்ததை மறுப்பதற்கில்லை. சில ஊடகங்கள் வழமை போன்று இந்த அறிக்கையைக் கண்டுகொள்ளவேயில்லை. அதிலொன்றும் ஆச்சரியம் இருக்க முடியாது. அதேவேளை, உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஷெலன்ஸ்கி, 'மன்னிப்புச் சபையின் அறிக்கை ஆக்கிரமிப்பாளரை விட்டுவிட்டு பாதிக்கப்படுவோர் மீது குற்றம் சுமத்துவது போல உள்ளது" எனத்தனது வழக்கமான பாணியில் தெரிவித்துள்ளார். மறுபுறம், சர்வதேச மன்னிப்புச் சபையின் உக்ரேன் நாட்டுக்கான பிரதிநிதியாகப் பணியாற்றிவந்த ஒக்சானா பொகல்சுக் பதவி விலகலை அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறித்த அறிக்கை ரஷ்யாவின் பரப்புரையை ஒப்புவிப்பது போல் உள்ளது எனத்தெரிவித்து உள்ளார். இந்த ஆய்வு நடப்பது தொடர்பில் முன்னர் ஒருமுறை ஊடகங்களுக்குச் செய்தி வழங்கியிருந்த அவர், உக்ரேனில் நடைபெறும் ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பிலேயே தாம் ஆய்வு நடத்தி வருவதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, இந்த அறிக்கை வெளிவருவதைத் தடுத்துவிட அவர் இறுதிநேரம் வரை முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜுன் மாதத்தில் உக்ரேன் போர் தொடர்பில் மன்னிப்புச் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில் ரஷ்யப் படைகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் உட்பட, தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளைப் பாவித்ததாகவும் ரஷ்யப் படைகள் மீது சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம் சுமத்தியிருந்தது. அப்போது சர்வதேச ஊடகங்கள் அந்த அறிக்கையைத் தமது பரப்புரைக்குத் தாரளமாகவே பயன்படுத்தியிருந்தன. எனினும் தற்போதைய அறிக்கை வெளிப்படையான மற்றும் மறைமுகமான கண்டனங்களுக்கு ஆளாகியிருப்பதைப் பார்க்க முடிகின்றது. இதன் விளைவாக தனது அறிக்கை தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு(?) சர்வதேச மன்னிப்புச் சபை தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கல்லமார்ட், தங்கள் அறிக்கையின் விளைவாக ஏற்பட்டுள்ள கவலை மற்றும் துன்பம் என்பவற்றுக்காக வருந்துவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் தமது அறிக்கையை மீளப்பெறப் போவதில்லை எனத்தெரிவித்துள்ள அவர், உக்ரேன் படையினரின் செயற்பாடுகள் ரஷ்யப் படையினரின் மீறல்களை நியாயப்படுத்துவதாக ஆகாது என்றும் கூறியுள்ளார். என்னதான் இருந்தாலும், மன்னிப்புச் சபையின் அறிக்கை நடப்பு நிலவரங்களை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்தி உள்ளமையை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், உக்ரேன் போரில் 5,000 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், சற்றொப்ப 7,000 வரையானோர் காயமடைந்தும் உள்ளனர். இவர்கள் ரஷ்யப் படையினரின் தாக்குதல்களால் உயிரிழந்தோ, காயமடைந்தோ இருந்தாலும் இதற்கான முழுப்பொறுப்பையும் ரஷ்யப் படைகள் மீது மட்டும் சுமத்துவது நியாயம் இல்லாதது என்பதையே மன்னிப்புச் சபையின் அறிக்கை உணர்த்துகின்றது. சர்வதேச மன்னிப்புச் சபை ஒன்றும் முற்று முழுதாக நீதியின் அச்சில் செயற்படும் ஒரு அமைப்பு அல்ல என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். மூன்று தசாப்த காலப்போர் தொடர்பில் மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எவ்வாறு நடந்து கொண்டன என்பது தமிழ் மக்களின் மனதில் இன்றும் பசுமையாக உள்ளது. ஆனாலும், தமது வழக்கமான பாதையில் இருந்து விலகி இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு உண்மை நிலையை உலகிற்குக் காட்டியமைக்காக அந்த அமைப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலக்ஸி றெஸ்னிக்கோவ், தமது நாடு மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களமாக மாறியிருப்பதாக அண்மையில் கூறியிருந்தார். அவரது கூற்றின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை உதவியாக இருக்கின்றது. உக்ரேன் ஆயுத உற்பத்தியாளர்களின் பரீட்சைக் களம் ? | Virakesari.lk -
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர
By தமிழ் சிறி · Posted
இலங்கைக்கு... நேர்ந்த நிலைமையை... அழகாக கருத்து ஓவியம் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்கள். பார்க்க சிரிப்பு வந்தாலும், உண்மை அதுதான். 😂
-
Recommended Posts