Jump to content

தேசியத் தலைவரின் பரம்பரை வரலாறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

'சமூகச்சிற்பி' திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை

thirumeniyar1.jpg

 

1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை. வல்வெட்டித்துறையின் புகழ்பெற்ற கடல்வணிகக் குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த “திருமேனியாரின்” மைந்தனாக 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக் கிழமை இவர் வல்வெட்டித் துறையில் அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்களித் திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்க இலக்கணத்திற்கு உரியதாகும். சோதிட நூற்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசி சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் நவக்கிரகங்களிற்கு நாயகராக விளங்குபவர் மட்டுமல்ல. பால் வீதியில இருக்கும் பல்லாயிரம் நட்சத்திர கூட்டங்களிலும் சூரியக் குடும்பமே மிகவும் பெரியது. உலகின் பேரொளியாகவும் யாரும் அண்டமுடியாத அக்கினிக்கோளமாகவும் விளங்குவதும் சூரியக்கிரகமே ஆகும். கிரகம் என்பது இருத்தல் என பொருள்படும். இத்தகைய சூரியனின் பார்வை பெற்ற சிங்க இலக்கணத்தில் பிறந்த இவருடைய முன்னோர்களும் பின்னோர்களும் பெருமைபெற்ற வரலாறுடையவர்கள்.

திருவேங்கடம் பூட்டன்

இவர் திருவேங்கடம் பாட்டன் ஆவார்.

இவ்வாறு பெருமைமிகு குடும்பத்தில் அவதரித்த இவரின் பிறப்பை நூறுவருடங்களிற்கு முன் வாழ்ந்த வல்வெட்டித் துறையின் மூத்த தமிழ் அறிஞரும் வல்வெட்டித்துறை வைத்திலிங்கப்புலவரின் சகமாணவரும் உடுப்பிட்டி சிவசம்புப்புலவரின் மாணாக்கனுமான பொன்னையா உபாத்தியாயர் என்றழைக்கப்பட்ட புலவர் நா.பொன்னம்பலம்பிள்ளை அவர்கள்,

மல்லிகை முல்லை மலரிருவாட்சியாம்
நல்லபைந்தருநிறை நந்தவனமுஞ்
சூழ்ந்திடவதிவளந் துலங்குமிவ்வல்வையில்
ஆழ்ந்திடு கடல்சூழ்வணிகனின் மாக்கள்
வல்வினைப்பிறவியா மறிகடல்நீந்தி
எல்லையில்லா பேரின்பந்துய்ந்திட
கருமேனிகொள்ளாக் கரையறுபுண்யத்
திருமேனிவள்ளல் செய்தவத்துதித்த
தருவேங்கிடநிதித் தாரைபொழிகைத்
திருவெங்கடாசல சீதெந்தரியசிகாமணி!

என சிறப்பாகப் பாடியுள்ளார்.

வல்வை சிவன்

திருமேனியாருடைய முதல் மைந்தனாக அவதரித்த இவருக்கு குழந்தைவேற்பிள்ளை தம்பிப்பிள்ளை, தம்பையா, இராமசாமி, அப்பாச்சாமி, என ஐந்து இளைய சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். இதனால் மூத்தவர் என்கின்ற காரணப்பெயர் கொண்டு  “பெரியதம்பியார்” என அழைக்கப்படலானார். இளமைப்பருவம் முதல் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரும் தமது பரம்பரைத்தொழிலான கடல்வணிகம் மூலம் பெரும்பொருள் ஈட்டியவர்களில் முதன்மையானவர். உரியபருவம் வந்ததும் திருமணம் முடித்து குடும்பஸ்தரான இவருக்கு வேலுப்பிள்ளை, திருமேனிப்பிள்ளை, அருணாசலம் எனும் மூன்று ஆண்மக்களும் பொன்னம்மா எனும் ஓரு பெண்மகவும் வாரிசாகினர்.

ஆரம்பத்தில் தென்கிழக்காசிய நாடான மலேசியாவின் துறைமுக நகரங்களான பினாங். போர்ட்வேலோ, பன்கூர், கிள்ளான் என்பவற்றுடன் அரிசி வர்த்தகத்தில் ஈடுபட்டார். இக்காலத்தில் தென்னிங்லங்கை நகரான காலியில் அமைந்திருந்த சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பலதிருப்பணிகளை மேற்கொண்டதுடன் அதன் புனருத்தான பணிகளிலும் பெரும்பங்காற்றினார்.

1850 – 1870 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான மலையாள நாடென்று அழைக்கப்பட்ட இன்றைய கேரளாவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமான புகையிலை வியாபாரமானது பெரு விருத்தியடைந்தது. தந்தைவழியில் கப்பல் உரிமையாளராகவும் சிறந்த கடலோடியாகவும் இருந்ததனால் மலையாளத்தேச வியாபாரிகளினாலும் இந்தியாவின் நாட்டுக்கோட்டை செட்டிகளினாலும் யாழ்ப்பாணத்தில் கொள்வனவு செய்யப்படும் புகையிலையையும் அதன் உற்பத்திப்பொருட்களான சுருட்டையும் ஏனைய நுகர்வுப்பொருட்களையும் மலையாள நாட்டின் கொச்சினிற்கும் திருவாங்கூருக்கும் ஏற்றிச்சென்று கொடுப்பதன் மூலம் அதிக வருவாயைப் பெருக்கினார்.

1856ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு சொந்தமான “King of Atlantic” என்ற கப்பல் திருகோணமலைக்கு வடக்காக முல்லைத்தீவுக்கு கிழக்கே வங்கக்கடலில் மூழ்கிவிட்டது. ஆங்கிலேயரின் கட்டிட நிர்மாணப் பணிகளிற்காக கொண்டு வரப்பட்ட சுண்ணாம்பு மூடைகளுடனேயே அக்கப்பல் மூழ்கியிருந்தது. பல நாட்களாக அதனை மீட்க முயற்சி செய்த கப்பலின் உரிமையாளரான ஆங்கிலேயர்கள் செய்வதறியாது மூழ்கிய நிலையிலேயே அதனை விற்றுவிட முடிவு செய்தனர். ஆங்கிலேய நாட்டிலிருந்து இலங்கை வரை பயணம் செய்த இரட்டைப்பாய் மரக்கப்பலான அதனை மூழ்கிய நிலையிலேயே விலைக்கு வாங்கிய வெங்கடாசலம்பிள்ளை எல்லோரும் ஆச்சரியப்படும் படியாக அதனை நீரிலே மிதக்க விட்டார். கப்பற் சாத்திரம் என்னும் மாலுமி சாஸ்திரத்திலும் வான சாஸ்திரத்திலும் பூரணஅறிவு கொண்ட இவர் இதற்காக பல நாட்கள் முல்லைத்தீவில் கள்ளப்பாடு என்னும் கடற்கரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து மேற்படிமூழ்கிய கப்பலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த சுழியோடிகள் மூலமாக கப்பலில் இருந்த பொருட்களை சிறிது சிறிதாக வெளியே எடுத்தார். கப்பலில் ஏற்றப்பட்டிருந்த சுண்ணாம்பு மூடைகளை கடலில் இட்டு கப்பலின் பாரத்தைக் குறைத்தார். பின்னர் மூழ்கிய கப்பலுடன் நேராகப் பிணைக்கப்பட்டு மிதந்து கொண்டிருக்கும் பாரிய மரக்குற்றிகளை பக்கவாட்டாக நகர்த்துவதன் மூலம் மூழ்கிய கப்பலை நீர்மட்டத்திற்கு கொண்டு வந்து ஆங்கிலேயரும் மெச்சும் வகையில் தனது பொறிமுறை அறிவினைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். “அத்திலாந்திக் கிங்” என்னும் அக்கப்பல் மூழ்கியதும் அதிலிருந்த சுண்ணாம்பு மூடைகளை வெளியே கொண்டு வரமுடியாமல் அச்சுண்ணாம்புகள் அவ்விடத்திலேயே கடலில் இடப்பட்டன. முல்லைத்தீவிற்கு அண்மையில் வங்காள விரிகுடாக் கடலில் இன்றும்கூட “கப்பல் தட்டு“என அவ்விடம் அழைக்கப்படுகின்றது.
 
இக்காலத்தில் தன்னைப்போன்ற கடல்வணிகனான “மாநாயக்கன்” னின் மகளான கண்ணகியின் பெயரில் சிறுகொட்டிலாக இருந்த “வற்றாப்பளை கண்ணகி அம்மன்” ஆலயத்தை கற்கட்டிடமாக இவர் புனரமைத்ததுடன் கோயிலுக்கு அண்மையில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடத்தையும் தனது பெயரில் இவர்அமைத்திருந்தார். அத்துடன் கள்ளப்பாட்டில் இருந்து வற்றாப்பளை வரை உள்ள வீதியின் இரு மருங்கிலும் ஒவ்வொருவருடைய வருணாச்சிர தர்மங்களிற்கு ஏற்றதான மடங்களை அமைத்து பக்தர்கள் தங்கிச் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினார். (யாழ்பாண வைபவக் கொளமுதி பக்கம்) சில வருடங்களிற்கு முன்புவரை வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் முன்றலில் இவர் பெயரில் அமைந்திருந்த யாத்திகர்களிற்கான தங்குமடம் அடையாளம் காணக்கூடியவாறு காணப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது. முறையான வீதிப் போக்குவரத்துகள் அற்ற அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கடற்பயணம் செய்து வரும் பக்தர்கள் வற்றாப்பளை கண்ணகியம்மனை வழிபடும் வசதிகளையும் இவ்வாறு ஏற்படுத்திக் கொடுத்தார். அத்துடன் கள்ளப்பாட்டில் ஒரு பிள்ளையார் கோயிலையும் அமைத்திருந்தார். பாய்க்கப்பல் மூலமாகவும் நடந்தும் கதிர்காமம் செல்லும் யாத்திரிகள் ஓய்வெடுப்பதற்காக கள்ளப்பாடு கடற்கரையில் ஓருமடத்தினையும் அமைத்தார். அக்காலத்தில் கள்ளப்பாடு கடற்கரையில் வேறு கற்கட்டிடங்கள் ஏதுமற்ற நிலையில் இவரால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரே காணியில் இவை இரண்டும் அமைந்திருந்ததனால் அப்பிள்ளையார் கோவில் “மடத்தடிப்பிள்ளையார்” கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் சிதைவடைந்த அப்பிள்ளையார் கோவில் உள்ளூர் மக்களினால் புனரமைக்கப்பட்டதன் பின்பு இன்று கள்ளப்பாடு பிள்ளையார் கோவில் என அழைக்கப்படுகின்றது.
 
மீழ்க்கப்பட்ட கப்பலை வல்வெட்டித்துறைக்கு கொண்டு வந்து தமது பரம்பரை வாடியில் (வாடி என்பது கப்பல்கள் மற்றும் படகுகளை உற்பத்தி செய்யவும் அவைகளைப் பழுதுபார்க்கவும் பயன்படுத்தும் இடமாகும்) அதனைச்சீரமைத்து மீண்டும் கடற்பிரயாணம் செய்யும் வகையில் மாற்றியமைத்தார். இவ்வாறான அவருடைய வாடியமைந்திருந்த இடமே இன்றைய முத்துமாரியம்மன் கோவிலுக்கு வடக்காக அமைந்திருக்கம் வாடியொழுங்கைப் பகுதியாகும். “அத்திலாந்திக் கிங்” என அழைக்கப்பட்ட இக்கப்பல் கெச்(ketch)சுக் கப்பல் எனப்படும் வகையைச் சேர்ந்தது. இவ்வகைக் கப்பல்களின் பாய்மரங்களின் உயரம் அதுவரை இலங்கை இந்தியா போன்ற கீழைத்தேச நாடுகளில் கட்டப்பட்ட சமஅளவு கொண்ட பாய்மரங்கள் போலன்றி முன்னிருக்கும் பாய்மரம் எப்பொழுதும் உயர்ந்ததாகவே காணப்படும். இதனால் பருவக்காற்றுக்களின் மூலம் நகரும் இவ்வகைக்கப்பல்கள் ஏனைய கப்பல்களைவிட விரைவாக நகரும் தன்மை கொண்டவையாக விளங்கின. இவ்வாறு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கப்பலை வாங்கி திருத்தியதன் மூலம் ஆங்கிலேயரின் கப்பல் கட்டும் நுட்பட்தையும் நன்கு அறிந்து கொண்டார். இத்தகைய பட்டறிவின் மூலம் தமிழரின் பாரம்பரிய கப்பல் கட்டும் முறையினைச் சீர்திருத்தினார். இதன் மூலம் புகழ்பெற்றிருந்த வல்வெட்டித்துறையின் கப்பல் கட்டும் கலையினை மேலும் மெருகூட்டினார். இவ்வாறு எமது நாட்டின் கடலையும் அது தொடர்பாக இவருக்கு இருந்த நுண்ணிய அறிவையும் பொதுச்செயலில் இவருக்கு இருந்த பரந்த மனப்பாங்கையும் கண்ட ஆங்கிலேயரும் தமது கடல் பயணத் தேவைகளுக்காக பலசமயங்களில் இவரின் உதவியைப் தொடர்ந்து பெற்றுக்கொண்டனர். இதுபற்றிய சிறுகுறிப்பொன்று முருகர் குணசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட “இலங்கையில் தமிழர் முழுமையான வரலாறு” என்ற புத்தகத்தில் 343 ஆம் பக்கத்தில் காணப்படுகின்றது. அது பின்வருமாறு

 

“திரு சாண்டஸ்(sanders) உடன் சாவகச்சேரியிலிருந்து போதகர் ஹன்ட் (HAND) இரு வினாவிடை உபதேசிமார், ஒரு ஆசிரியர் என நான்கு சுதேசிகளும் ஆனி 16ந் திகதி வல்வெட்டித்துறையிலிருந்து மட்டக்களப்புக்கு பயணித்து எமது மத்திய நிலையமான புளியந்தீவில் தங்கினர்.” எனத் தொடரும் இக்குறிப்பானது 1864ம் ஆண்டிற்கு உரியது. இது அமெரிக்க கிறிஸ்தவமிசனரிமாருடைய(A.C.M) report voi.7 reei 451 – 1857 – 1871 batticaioa 20oct1864 என காணப்படுகின்றது. 1864 இல் வல்வெட்டித்துறையின் எசமானாக விளங்கிய இவரைவிட வேறுயாரால் இது முடியும்.

 

தந்தையிடமிருந்து இரண்டு கப்பல்களை மட்டுமே பெற்றிருந்த இவர் சிவன்கோயிலைக் கட்ட ஆரம்பித்த காலத்தில் 12 கப்பல்களுக்கு சொந்தக்காரராக இருந்தார். என 1967ம் ஆண்டு வெளியிடப்பட்ட சிவன்கோயில் குடமுழுக்கு விழா மலரில் 17ம் பக்கத்தில் வல்வையின் மூத்த எழுத்தாளரும் விழாமலரின் ஆசிரியருமாகிய பண்டிதர் சங்கரவைத்திலிங்கம் எழுதியுள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.

பன்னிரண்டு கப்பல்களிற்கு அதிபதியாக இருந்த வெங்கடாசலம் பிள்ளையவர்கள் 1852இல் பிரிட்டன் பர்மாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பர்மாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்திலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டிய வல்வையர்களில் இவரே முதன்மையானவர். இவரால் மேற்படி “கெச்சுக்கப்பல்கள்” வல்வெட்டித்துறையில் கட்டப்படத் தொடங்கியதும் பர்மா வியாபாரம் மேலும் சூடுபிடித்தது. ஆரம்பத்தில் இங்கிருந்து சென்ற கடலோடிகளும் வியாபாரிகளும் அங்கே தரித்திருந்து அரிசியையும் நெல்லையும் கொள்வனவு செய்வதினால் கப்பல்கள் அங்கிருந்து திரும்புவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்த்து செல்லும் கப்பல்களில் உடனடியாகவே பொதிகளை ஏற்றக்கூடியவாறு எம்மவர்கள் சிலரை அங்கேயே தங்கவைத்தார். இவர்கள் எப்பொழுதும் “மேலாளர்“களாக பர்மாவில் தங்கியிருந்து உற்பத்தியாளர்களிடமும் வியாபாரிகளிடமும் பேரம்பேசி குறைந்த விலைகளில் அரிசியை வாங்கி மூட்டைகளாக கட்டி தயாராக வைத்திருப்பர். வல்வெட்டித்துறையில் இருந்து செல்லும் கப்பல்கள் உடனடியாக அவைகளை ஏற்றிக்கொண்டு வல்வெட்டித்துறைக்கு மீண்டும் திரும்பிவிடும். இவ்வாறு மேலாளர்களாக இவரால் அனுப்பப்பட்ட ஊழியர்கள் தங்குவதற்காக “அரக்கனில்” ஓர்இடத்தை வாங்கி மடம், கிணறு என்பவற்றுடன் அவ்விடத்தில் ஒரு முருகன் கோவிலையும் இவர் உருவாக்கினார். 1853 முதல் பர்மாவுடனான அரிசி வர்தகத்தை இவர் ஆரம்பித்தது முதல் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தபலரும் இவ்வியாபாரத்தில் குதித்தனர். இவ்வாறாக வல்வெட்டித்துறைக் கடலோடிகளின் அதீத தொடர்பினால் பர்மாவின் அரக்கன், இறங்கூன் துறைமுகங்களில் இருந்து வல்வெட்டித்துறைக்கு நேரடியாகவும் விரைவாகவும் வரும் கடற்பாதை ஒன்று உருவாயிற்று. ஆரம்பத்தில் கோரமண்டலக்கரை என அழைக்கப்படும இந்தியாவின் கிழக்குக்கரை துறைமுகங்களை ஒட்டியே பர்மாவை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சென்றடைந்தன. இப்புதிய கடற்பாதை கண்டுபிடிக்கப்பட்டவுடன் வங்காளவிரிகுடாவின் 9346 அடி ஆழமுள்ள கடற்பகுதியை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சர்வசாதாரணமாக ஊடறுத்து பயணம் செய்தன. பதினோராம் நூற்றாண்டில் இராஜேந்திரசோழனது காலத்தில் “சோழர்களின் ஏரி” என வங்கக்கடல் வர்ணிக்கப்பட்டதுண்டு. அதனையும்விட அதிகமாகவே 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியிலும் 20 நூற்றாண்டின் முன்னரைப்பகுதியிலும் வல்வெட்டித்துறை கப்பல்கள் வங்காளவிரிகுடாவை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. இத்தகைய நிலைக்கு ஈழத்தமிழரின் “கடலாளுமையை” வளர்த்த பெருமை “பெரியவர்“ வெங்கடாசலம்பிள்ளையையே சாரும்.

இந்தியாவின் நாட்டுக்கோட்டைச் செட்டிகளுடனும் ஆந்திராவின் சிறந்த வியாபாரிகளான நாயுடுக்களுடனும் வர்த்தகத் தொடர்புகளை இவர் வைத்திருந்தார். பர்மாவின் புகழ்பெற்ற தேக்குமரங்களையும் 'புட்டரிசி' என்னும் சிறந்தரக அரிசினையும் தனது கப்பல்களில் கொண்டுவந்து பெரும் பொருள் ஈட்டியதுடன் தானதர்மங்கள் செய்வதிலும் முன்னின்றார். அத்துடன் எமது மக்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதிலும் பெரும் பங்காற்றினார். இவ்வாறு பல கப்பல்களை வைத்திருத்திருந்து கடல்வணிகம் செய்த இவரின் கப்பல்கள்,

 

அரு(ர)க்கன்போர்மான் வந்தேரிரங்கூன்
காக்கை நாடு வங்காளஞ் சென்னை
கூடலூர் கொற்றங் குடிநாகைத்தலம்
திண்டுக்கல்காரைக்கால் புதுச்சேரி
பறங்கிப்பேட்டை பம்பாய்குற(றி)ச்சி
மலையாள மாலபள்ளிதூத்துக்குடி
கொச்சிகள்ளிக்கோடு கொல்லம்
தகைசெறி திருவனந்தபுரம் கொழும்பு
மானார்(நகர்) திருகோணமலை மட்டக்
களப்பெனும் பலபதி

அன்னைபூரணி அன்னைபூரணி மாலுமிகள்

அன்னபூரணி அம்மாள் Brigantine / கடலோடிகள்

ஆகிய இடங்களிற்கு சென்று வர்த்தகத்தில் ஈடுபட்டன என கெச்சுக்கப்பலின் தண்டயைல் ஆகப் பணியாற்றிய நா.வேலுப்பிள்ளையின் சமரகவியில் (1904) குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்தில் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் மணியமாக விளங்கிய இவர் கோயிலின் சுற்று மதிலைக்கட்டியதுடன் கோவிலுக்கு தெற்குப்புறமாக ஒரு குளத்தையும் வெட்டுவித்தார். பன்னிரண்டு கப்பல்களுக்கு அதிபதியாக விளங்கிய இவரிடம் கப்பல் தண்டையல் (கப்ரன்), சுக்கானியர் (மாலுமிகள்), பண்டாரங்கள் (சமையல்காரர்), கிலாசுகள் (பாய்மரம் கட்டுவோர்) எனப்பலர் வேலைசெய்தனர். அது போல் கப்பலுடன் சம்மந்தப்பட்ட பொருட்களை ஏற்றுவது இறக்குவது எனத் தொழில் புரிந்த பலரும் கப்பலுக்கு தேவையான கயிறுகள் திரிப்போர் மற்றும் கப்பல் வாடியில் வேலை செய்வோர் என ஏறத்தாழ 300 பேர்களுக்கு மேல் இவரிடம் ஊழியம் புரிந்தனர். இவ்வாறு இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்த 300பேருடைய குடும்பத்தினரின் வாழ்க்கையினை இவர் தாங்கியுள்ளார். 1946ம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பின்படி வல்வெட்டித்துறை மக்களின் மொத்தத் தொகை 6015 என 30.7.1950 இல் வித்துவான் வ.மு கனகசுந்தரம் வீரகேசரிவார வெளியீட்டில் எழுதிய “வல்வெட்டித்துறை வரலாறு“என்னும் கட்டுரை தெரிவிக்கின்றது. இதில் சைவர்கள் 5035 பேரும் கிறிஸ்தவர்கள் 85 பேரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அப்படியானால் அதற்கு 100வருடங்களுக்கு முன் எத்தனைபேர் வலவெட்டித்துறையில் வாழ்ந்திருப்பர். அவர்களில் 300குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள்? எனக் கணக்கெடுத்தால் அம்மக்களுக்கான இவரின் சேவை என்பதை அர்ப்பணிப்பென்றோ அல்லது அளவிடற்கரியது என்றோ கூறலாகாது. அம்மக்களுக்கு அனைத்துமே இவராகத்தான் இருந்திருக்கும். அதனால்தான் தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு எசமானாக விளங்கியது போலவே ஊர் மக்கள் அனைவருக்கும் எசமானகவே மக்களால் கருதப்பட்டு “எசமான்” என அம்மக்களால் அழைக்கப்படலானார். இன்றும் கூட அவர் வாழ்ந்த வீடு “எசமான் வீடு” என்றே அழைக்கப்படுகிறது. இதன் மூலம் வல்வெட்டித்துறை மக்களினை வழிநடத்தும் தலைமைப்பதவி இயல்பாகவே கைவரப்பெற்றார். அவர் மறைந்து நூற்றிப்பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவரை குறிப்படும்போது ”எசமான்” எனவும் அவருடைய வழிவந்த குடும்பத்தினரை “எசமான் குடும்பத்தினர்” எனவும் அளவிறந்த மரியாதையுடன் வல்வெட்டித்துறை மக்கள் இன்றும் அழைக்கின்றனர். என்பதனைக் கொண்டே அந்த மண்ணில் அவருடைய ஆளுமையானது அழிக்க முடியாதவாறு எவ்வளவு தூரம் ஆழவேருன்றி இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு கிராமத்தின் அல்லது பட்டினத்தின் முதல் மனிதராக முன்னுரிமை பெற்றிருந்த வெங்கடாசலம்பிள்ளை அவர்களின் வாழ்வில் 1867ஆம் ஆண்டு பாரிய மாற்றம் உண்டாயிற்று. வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் “தர்மகர்தா” என்னும் கோயில் மணியமாக அக்காலத்தில் கடமையாற்றிவந்த இவர் கண்ட கனவில் இவரது தந்தையார் வல்வட்டித்துறையில் சிவபிரானுக்கு கோயில் ஒன்றை எடுத்துத்தருமாறு பணித்திருந்தார். இவரது தந்தையராகிய “திருமேனியார்” மறையும் போது வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தவர். இவற்றுடன் அவருடைய பூட்டனாரான திரு. “வேலர்” ஆரம்பித்து வைத்த நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவில், புட்கரணிப் பிள்ளையார் கோவில், மற்றும் வைகுந்தப் பிள்ளையார் கோவில் எனும் நான்கு கோயில்களுக்கும் மணியமாக இருந்து பெருந்தொண்டு ஆற்றியவர்.

(கடலோடுவதால் கிடைத்த பெரும் செல்வத்தில் திளைத்த வல்வெட்டித்துறையில் திரும்பிய இடமெல்லாம் கோயில்களே எனினும் அவைகளில் பெரும்பாலனவை பிள்ளையார் கோவில்களாகவும் வைரவர் கோயில்களாகவுமே காணப்பட்டன. முழு முதற்கடவுளான சிவபிரானை வழிபடுவதாயின் பருத்தித்துறையில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கே மக்கள் செல்ல வேண்டியிருந்தது. வல்வை மக்களின் வாழ்வே தனது வாழ்வாக நினைத்து வாழ்ந்து வந்த திரு. வேங்கடாசலம்பிள்ளைக்கு இது குறையாகவே பட்டிருக்கும் இந்த நினைவே கனவாக வெளிவந்து அவரின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.)
 
அக்கனவினைக் கண்ட நாள்முதலாய் பெரியதம்பியார் இதே நினைவிலேயே இருக்கலானார். சிவன் கோவிலை எங்கே அமைப்பது என தவிக்கலானார்! இக்காலத்தில் இவரிடம் ஊழியம் புரிந்த கம்பர்மலையைச்சேர்ந்த ஒருவர் தனது வேலைமுடிந்து தினமும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு தெற்குப்புறமாக அமைந்திருந்த கற்களும் பற்றைகளும் பலவித செடிகொடிகளும் மரங்களும் வளர்ந்திருந்த நடைபாதை வழியூடாக வீட்டுக்கு திரும்பிச்செல்வது வழக்கம். மின்சாரவசதியற்ற அக்காலத்தில் முன்னிரவில் சிறுபற்றைகளினுடாக நடந்து செல்லும் அவர் ஒருநாள் அப்பகுதியில் நின்ற கொன்றை மரத்தடியில் சிறிய வெளிச்சம் ஒன்றைக் கண்டார். தொடர்ந்து சிலநாட்கள் இவ்வாறு தான்கண்ட விபரத்தை தனது எசமானான வெங்கடாசலம்பிள்ளையிடம் அவர்கூறினார். நம்ப முடியாத வெங்கடாசலம்பிள்ளையும் அடுத்தநாள் அந்த ஊழியரையும் உடனழைத்துக் கொண்டு அவ்விடத்துக்கு சென்று பார்த்தார். ஆம் அந்த ஊழியர் காட்டிய இடத்தில் நின்ற கொன்றைமரத்தடியில் பசுவின் சாணம் எரிந்து கிடக்கக்கண்டார். அத்துடன் கொன்றை மரத்தின் பூக்கள் எல்லாம் அதனைச்சுற்றி விழுந்திருக்கவும் கண்டார். அவ்விடத்தில் நின்று நிமிர்ந்து பார்த்த போது நேர்வடக்காக இருந்த முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானத்தைக் கண்டார். தந்தையார் கனவில் சொன்ன பொருளைப் புரிந்து கொண்ட வெங்கடாசலம்பிள்ளையும் அவ்விடத்திலேயே சிவபிரானுக்கு கோயில் கட்டமுடிவெடுத்தார்.
 
கப்பல் வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டி புகழ்பெற்ற வர்த்தகராய் இருந்த வெங்கடாசலம்பிள்ளை முன்பிருந்த சைவநாயன்மார்கள் போன்று எக்கணமும் முழு முதற்கடவுளாம் சிவபிரானை நினைத்து அவருக்கு கோயில் கட்டும் முடிவில் செயற்படலானார். கொன்றை மரத்தில் ஜோதி தோன்றிய இடத்தில் கோயில் அமைப்பதற்கு கொன்றை மரங்கள் நிறைந்திருந்த அம்மன் கோவிலுக்கு தெற்காகவும் புட்கரணிப்பிள்ளாயா கோவிலுக்கு மேற்காகவும் அமைந்திருந்த 60 பரப்புக்காணியை விலைக்கு வாங்கிக் கொண்டார். இந்நிலப்பகுதி வெங்கடாசலம்பிள்ளையின் பெரிய தந்தையாராகிய் புண்ணிய மூர்த்தியாருக்கே சொந்தமாக இருந்தது. அந்நிலப்பகுதியில் கற்பாறைகள் அதிகமாகக் காணப்பட்டன. ஊருக்கே எசமானாக வழிவந்து வாழ்ந்து காட்டிய குடும்பத்தில் வந்த பெரியவர் ஆனாலும் இறைவனுக்கு ஊழியம்புரியும் அடியவனாகி தனது கையினாலேயே பெரும் பாறைகளைப் புரட்டியும் தகர்த்தும் “புட்கரணி” என்னும் அந்நிலத்தைச் செம்மைப்படுத்தினார்.

புட்கரணி” என்பது தாமரை அல்லது தாமரைக்குளம் எனத்தமிழில் பொருள் தருவதால் அதற்கு அண்மையில் அமைந்திருந்த பிள்ளையார்கோவில் புட்கரணிப்பிள்ளையார் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் பின்நாட்களில் புட்கரணி என்பது புட்டணி என திரிபடைந்துள்ளது. “தீருவில்க்குளம்” எனஅழைக்கப்படும் குளமானது முன்பு தாமரைக்குளம் என்னும் கருத்தில் புட்கரணிக்குளம் என அழைக்கப்பட்டு ஈற்றில் குளமானது தூர்ந்த காலத்தில் தீர்ந்த அல்லது முடிந்த என்றும் பொருள் தரும் தீரு-என்னும் அடியாகப்பிறந்து வில் எனப்படும் குளத்துடன் கூடி தீருவில் என அழைக்கப்பட்டுள்ளது பின்னாட்களில் ஒரேபொருள்தரும் இரு சொற்களும் வில் ஸ்ரீ குளம் இணைந்து தீருவில் என அழைக்கப்படவேண்டிய அக்குளம் தீருவிற்குளம் எனவும் குளம் அமைந்துள்ள அப்பகுதி தீருவில் எனவும் இன்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு முத்துமாரியம்மன் கோவிலுக்கு தெற்கில் இருந்த மடத்தில் வாழ்ந்த இவர் அங்கிருந்த படியே சிவனுக்கு கோவில் அமைக்கும் வேலையில் இரவும் பகலும் தன்னை ஈடுபடுத்தினார். இவர் 1867ம் ஆண்டு கோயில் கட்டுவதற்காக ஆரம்பிக்கப்படும் சங்கத்தாபனத்தைச் செய்து கோயிலினைக் கட்ட ஆரம்பித்தார். இவ்வாறு கோயில் கட்ட ஆரம்பித்த வேளையில் தான் அதுவரை வகித்து வந்த வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் நெடியகர்டு திருச்சிற்றம்பலப் பிள்யையார், வைகுந்தப்பிள்ளையார், புட்கரணிப்பிள்ளையார் என்னும் கோயில்களில் மணியம் என்று அழைக்கப்பட்ட “அறங்காவலர்” பதவியினை தனது ஒன்றுவிட்ட சகோதரனான ஆறுமுகத்தார் முருகுப்பிள்ளையிடம் ஒப்படைத்துவிட்டு சிவபிரானுக்கு கோயில் கட்டுவதில் தனது முழுநேரத்தையும் செலவிட்டார்.

கோயில் என்பது இந்துக்களின் வணக்கத்தலங்களைக் குறிக்கும் பொதுப்பெயராக விளங்கியபோதும் கோவில் என்பது சிதம்பரத்தின் சிறப்புப்பெயராகும். பல்லவர்காலமான கி.பி 7ம் நூற்றாண்டு தொடக்கம் இன்றுவரை காசி, இராமேஸ்வரம், சிதம்பரம் ஆகிய தலங்களே சிவனுடைய தலங்களில் பெருமைபெற்றவையாக விளங்குகின்றன. காசியிலும் இராமேஸ்வரத்திலும் இறந்தவர்களும் அந்திமக்கிரியை செய்யப்பட்டவர்களும் முத்தியை அடைவார்கள் என்பது ஜதீகம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை தரிசித்தவர்களே முத்தியடைவார்கள் என்பதே இவ்வாலயத்தின் பெரும் சிறப்பிற்கு காரணமாகும்.

இவ்வாறு பெருமைபெற்ற சிதம்பரம்கோயிலினை அடியொற்றியதாக மூன்றுவீதிகள் கொண்டதாகவும் பிருதிவிலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாயலிங்கம் என்றும் ஐவகை லிங்கங்களை தனித்தனியாக அமைத்தார். மூலஸ்தானத்தில் பாணலிங்கம் உட்பட மற்றும் அண்ணாமலை ஈஸ்வரர் மகாவிஸ்ணு என பல வகைத்தெய்வங்களுடன் நவக்கிரகங்களும் சைவ நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார் என்பவர்களுடன் மாணிக்கவாசக சுவாமிகள் என்பவர்களுக்கும் தனித்தனியாக விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்தே இக்கோயிலினை பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் அமைத்தார்.

இச்சிவன்கோவிலின் மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட வேண்டிய மூலலிங்கமான பாணலிங்கத்தை காசியில் இருந்து நேரடியாக கடல்வழி மூலம் வல்வெட்டித்துறைக்கு கொண்டுவந்து பிரதிஸ்டை செய்தார். “பாணலிங்கத்திற்கு” இயற்கையிலேயே பூணூல் அணிவது போன்ற இரேகை அமைப்பு படர்ந்திருக்கும். ஆயிரம்கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிகலிங்கம் சமன் 12இலட்சம் ஸ்படிகலிங்கங்களிற்கு ஒரு பாணலிங்கம் சமனாகும். பாணலிங்கம் வடித்தெடுக்கப்படுவதில்லை. புpரமா. விஷ்ணு முதலிய தேவர்கள் பூஜித்த புண்ணிய நதிகளான கங்கை. யமுனை. நர்மதை போன்றவற்றில் இலிங்கவடிவில் இயற்கையாகவே உருண்டோடி வரும் சிறப்பு வாய்ந்தவையே பாணலிங்கமாகும்.”

இவ்வாறு காசிவரை சென்று இப்புனிதலிங்கத்தைக் கொண்டு வந்தவர் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளையின் ஒன்றுவிட்ட சகோதரனான ஆறுமுகத்தார் விஸ்வநாத பிள்ளையாகும். இங்கு கூறப்பட்ட ஆறுமுகத்தாரும் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளையின் தந்தையான திருமேனியாரும் உடன்பிறந்த சகோதராகள் ஆவார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாணலிங்கத்தை மட்டுமல்லாது உற்சவ மூர்த்தியாகிய நடேசர் மற்றும் சந்திரசேகரர் ஆகியேரின் திருவுருவங்களையும் விஸ்வநாதபிள்ளையவர்கள் காசியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு மிகுந்த பொருட்செலவில் கொண்டு வந்துள்ளார். இங்கு கூறப்படும் விஸ்வநாதபிள்ளையின் மகனான சரவணமுத்துப்பிள்ளை அவர்களே பின்நாட்களில் சிவன்கோவிலுக்கு தங்கத்தகடுமருவிய தூபியை இயற்றுவித்தார். என1884 ஆம் ஆண்டு வெளிவந்த வைத்திலிங்கப்புலவருடைய “சைவாபிமானி” பத்திரிகை தெரிவிக்கின்றது இவ்வாறு காசிக்கு சென்று சிவலிங்கத்தைக் கொண்டு வந்த கப்பலின் பெயர் “அன்னபூரணி” என்பதாகும். இதனால் இக்கப்பல் பின்னர் “காசிஅன்னபூரணி” என அழைக்கப்பட்டது. விஸ்வநாதர் வாழ்ந்திருந்த வீட்டின் பெயரும் “அன்னபூரணி” ஆகும். வல்வெட்டித்துறை கிழக்குவீதியில் இலக்கம் 84 இல் அமைந்திருக்கும் இக்காணியின் பெயரும் “விஸ்வநாதர் வளவு” என்பதாகும். விஸ்வநாதபிள்ளையின் மகனான சரவணமுத்துப்பிள்ளையின் மறைவின்பின் அவர் மனைவியாகிய “சின்னத்தங்கம்” உடைய காலத்திலும் மேற்கூறப்பட்ட கப்பல் வர்த்தகத்தில் ஈடுபட்டமை தெரியவருகின்றது.

இக்கோவிலை சிறப்புற அமைத்து வரும் வேளையில் 1877ம் வருடம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் பஞ்சமும் வாந்திபேதி நோயும் ஏற்பட்டது. இறப்புக்கள் வேகமாக அதிகரிக்க உணவுப்பொருட்கள் கிடைப்பதே அரிதாகியது. பசியாலே பலர் பரிதாபமாக இறந்தனர். இக்காலத்தில் பர்மாவிலும் இந்தியாவின் பலபகுதிகளில் இருந்தும் அரிசி மற்றும் உணவுத் தானியங்களை கொண்டு வந்து குடாநாட்டு மக்களின் பஞ்சத்தைப் போக்குவதில் பெரியவர் பெருமுயற்சி செய்தார். யாழ்ப்பாண மக்களிடைய வியாபார நோக்கில் வந்து குடியேறிய பல செட்டிமாரும் சுதேச பணமுதலைகளும் வறியோரை மேலும் வாட்டி தமது பணப்பைகளை நிரப்ப முற்பட்டபோது தனது சேமிப்புக்கிடங்கில் இருந்த அனைத்து அரிசியையும் தனது கப்பல்களில் வரும் அரிசியையும் பஞ்சமென வந்தவர்களுக்கு இல்லையெனாது அள்ளிக்கொடுத்த வள்ளல் இவர். இதன்மூலம் தன் பொருள் எல்லாம் இழந்தார். இதனால்கோயில் கட்டுவதிலும் பலசிக்கல்கள் பொருளாதார ரீதியாக ஏற்பட்டன. எனினும் இவருடைய தம்பியார் குழந்தைவேலு இராமசாமி மற்றும் ஒன்றுவிட்ட சகோதரன் விஸ்வநாதபிள்ளை என்பவர்களின் உதவியுடன் தனது தந்தையின் சொல்போலவே வல்வெட்டித்துறைமண்ணில் சிவபிரானுக்கு உரிய கோவிலை சிறப்பாகக்கட்டிமுடித்தார்.

காசியில் இருந்து பாணலிங்கமாக கொண்டுவரப்பட்ட இலிங்கேஸ்வரர் வல்வெட்டித்துறை கோயிலில் பிரதிஸ்டை செய்யப்பட்ட பின் “வைத்தீஸ்வரப்பெருமான்” என்னும் பெயரைப்பெற்றார். இவருடன் எப்பொழுதும் கூடஎழுந்தருளியிருக்கும் அம்பிகையின் பெயர் வாலாம்பிகை இதனால் “வாலாம்பிகா சமேத ஸ்ரீவைத்தீஸ்வரபெருமாள்” தேவஸ்தானம் என இக்கோயில் அழைக்கப்படலாயிற்று.

கோயில் கட்டிமுடித்தபின் 08.06.1883 (சுபானுவருடம் வைகாசிமாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை) முதலாவது நூதனபிரதிஸ்டா கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றது. அக்காலத்தில் இலங்கையில் பிரபல்யமிக்கவராக விளங்கிய நா.குமாரசாமிக்குருக்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடத்தப்பெற்ற இக்கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்றே ஆறுகாலப் பூசையையும் ஆரம்பமாயிற்று. புலோலியைச்சேர்ந்த சண்முகக்குருக்கள் கோவிலின் முதலாவது பூசகராக நியமிக்கப்பட்டார்.

சைவ ஆகமவிதிப்படி நடைபெறும் இப்பூசைகளை “ஆறுகாலப்பூசைகள்” என்பர் இவைபின்வருமாறு.

 

அதிகாலைப்பூசை 5.45 மணி அதிகாலை
காலைப்பூசை 9.30 மணி அதிகாலை
மத்தியானப்பூசை 11.45 மணி நண்பகல்
மாலைமுதற்காலப்பூசை 6.00 மணி பிற்பகல்
மாலைஇரண்டாம்காலப்பூசை 7.30 மணி முன்னிரவு
அர்த்தசாமம் 8.30 மணி.

இக்கோவிலில் நடைபெறும் மகோற்சவம் எனப்படும் பிரமோற்சவம் 16 நாட்கள் என கணிக்கப்பட்டதெனினும் மகோற்சவம் எனப்படும் இத்திருவிழாக்காலம் முழுமையாக முடிவுற மூன்று வாரங்களாகும். இக்கோயிலில் தனியாக சூரிய பூசை நடைபெறுவது போலவே சூரியக்கதிர்கள் இக்கோவிலின் மூலஸ்தானத்தில் மீது நேரடியாக விழுகின்ற நிலையில் தெளிவான வானத்துடன் சூரிய வெப்பம் மக்களை வாட்டாத பங்குனி மாதத்திலேயே மகோற்சவநாட்கள் பெரியவரால் தெரிவுசெய்யப்பட்டு இன்றுவரை நடைபெற்று வருகின்றன.

கொடியேற்றத் திருவிழாவிற்கு முதல்நாளில் சிவன்கோவிலின் பிரதமகுரு கோவிலின் இடது புறத்தில் அமைந்திருக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று “ஊரின் குல தெய்வமான” முத்துமாரியம்மனிடம் மகோற்சவத்தைச் செய்வதற்கு அனுமதியையும் ஆசியையும் பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெறுகின்றது. சிவனுக்கு தனிக்கோயில் அமைத்த பெரியவர் முத்துமாரிஅம்மன் கோவில் தர்மகத்தாவாக இருந்தவேளையிலேயே சிவன்கோயிலை நிர்மாணிக்க ஆரம்பித்தார். அப்பெருந்தாயின் அனுமதியைப் பெற்றே இன்றும் வல்வெட்டித்துறை மக்கள் எக்காரியத்தையும் செய்வர். “அவள் அனுமதியின்றி எக்காரியமும் செய்தல் கூடாது. அனுமதியின்றிச் செய்தால் அக்காரியம் சித்திக்காது” என்பது பலகாலமாக வல்வெட்டித்துறை மண்ணில் தொடர்ந்து வரும் பெரு நம்பிக்கையாகும். இதனை உறுதிப்படுத்தும் தக்கசான்றாக இந்நிகழ்வை நாம்கொள்ளலாம். மறுநாள் மாணிக்கவாசகர் ஊர்முழுக்கச் சென்று சிவன்கோவிலின் கொடியேற்றத்திற்காக கட்டியம் கூறுவார். தொடர்ந்து வரும் அமவாசைத்திதியன்று சிவபிரானின் கொடியேற்றத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் அன்றுமுதல் மூன்று நாட்களுக்கு விநாயகப்பெருமானின் சக்தியை அதிகரிக்க விசேடபூசையும் தொடர்ந்து வரும் மூன்று நாட்களுக்கு முருகப்பெருமானுக்கும் வள்ளிதெய்வானைக்குமுரிய விசேடவழிபாடும் நடைபெறும். தொடர்ந்து வரும் நாட்களில் மகாயாகத்துடன் வசந்த மண்டபத்தில் சிவபெருமான் வாலாம்பிகை விநாயகர் முருகன் சண்டேஸ்வரர் என்பவர்களுக்கான விசேடபூசைகளுடன் மூலமூர்த்திக்கு சந்திரசேகரப்பட்டமும் வழங்கப்படும். இவ்வாறு தொடரும் மகோற்சவநாட்களில் பங்குனிப் பூரணை நாளுக்கு முன்நாளில் தேர்த்திருவிழாவும் இறுதிநாளான பூரணைநாள் காலையில் வெள்ளியிலான இடபவாகனத்தில் கோவிலுக்கு ஒருமைல் கிழக்குத்திசையில் அமைந்திருக்கும் ஊறணி தீர்த்தக்கடற்கரையான வங்கக்கடலில் சுவாமி தீர்த்தமாடுவார். பின்னர் நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் தங்கயிருந்து இரவு முழுநிலவில் உமையவளுடன் கல்யாணசமோதரராய் ஆலயம் திரும்புவார். அதன்பின் கொடியிறக்கம் நடைபெறும்.

இதற்கு அடுத்தநாள் சிவபெருமான் உமாதேவி சுந்தரமூர்த்தி நாயனார் பங்குகொள்ளும் ஊடல் திருவிழா நடைபெறும். அடுத்த நாள் சண்டேஸ்வரருக்கு சிறப்பான அலங்காரங்களுடன் குறிப்பாக உற்சவமூர்த்திக்கு அணியப்பட்ட ஆபரணங்களையும் சண்டேஸ்வரருக்கு அணிவித்து இறைவன் வீதி உலாவந்த வாகனம் என்னும் விமானத்தில் சிறப்பான அலங்காரங்களுடன் சண்டேஸ்வரர் வீதி உலா வருவார். இறுதியில் ஆலவட்டம் கொடி என்பனவற்றுடன் மேளதாளம் நாதஸ்வரம் முழங்க சண்டேஸ்வரரை மையப்படுத்தி கோயில்வாசலில் சுற்றிச்சுற்றி வருதல் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இறுதிநாளில் வைரவர்மடை எனக் கூறப்படும் வைரவர் பூசை நடைபெறும். இத்திருநாளில் ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வைரவருக்கு நடைபெறும் விசேடபூசையுடன் மகோற்சவ காலம் முடிவடையும்.

16வருடங்கள் தனது திரண்டசெல்வத்தையெல்லாம் செலவழித்து ஆகமவிதிகளிற்கு அமைய வல்வெட்டித்துறை மக்களுக்காக வைத்தீஸ்வரப்பெருமான் பெயரில் கோவில் அமைத்த “பெரியதம்பியார்” என்னும் திரு. வெங்காடசலம்பிள்ளை பிறப்பிலே கடல்வணிகராகப் பிறந்திருந்தார். எனினும் சிவன்கோவிலை பிரதிஸ்டாபிஷேகம் செய்தபின் சிவதீட்சைபெற்று உருத்திராட்சமாலை அணிந்து நாள்முழுதும் மேலாடையற்ற உடலில் திருநீறணிந்து எந்நிலையிலும் சிவமந்திரம் ஓதும் சிவனடியாராகவே மாறியவர். அவ்வாறே தன் இறுதிநாள்வரை கழித்தவர்!

வலவெட்டித்துறை மக்களிற்க்கும் அதன் அயலூர் மக்களுக்கும் தன்திரண்ட செல்வங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்த வள்ளல் திரு. வெங்கடாசலம்பிள்ளை அம்மக்களின் அருட்கொடைக்காக ஆண்டவனின் சன்னிதானத்தையும் அமைத்துக் கொடுத்தார். இவரின் அள்ளிக்கொடுக்கும் வள்ளண்மையை “வல்வைக்கலித்துறை” பாடிய எமது அயலூரவரான உடுப்பிட்டியைச்சேர்ந்த சிவசம்புப்புலவர் உயர்ந்தும் வியந்தும் பாடியுள்ளார். 1829 – 1910ம் ஆண்டுகளை தனது வாழ்க்கைக்காலமாக கொண்டிருந்த உடுப்பிட்டி சிவசம்புப்புலவர் நாவலரின் கடினநடைப் பிரசங்களையும் எளிய நடையில் சாதாரணமக்களும் விளங்கும்படி விளக்கிக்கூறும் அற்புத சொல்லாட்சி மிக்கவர். இத்தகைய சிறப்புமிக்க இவர் வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோவில் பிரதிஸ்டை செய்யப்பட்டதன்பின் பாடிய வல்வைக்கலித்துறையில்.

 

நீதிமரபிற்றிருத் தொண்டரோடு திகழும் பத்திச்
சோதிமலர்முக வெங்கடாசலத்துங்க வள்ளல்
பாதிமதிச் சடையான் தேவி யோடு பயிலத்தந்த
சேதிமமொன்றையும் வல்வைச் சீரைத் தெரிந்திடவே………..

விண்ணியல்செல்வத்தின் மண்ணியல் செல்வமிதக்கத் துய்க்க
புண்ணிய சீலத்திருவெங்கடாசலப் பூபன்வந்து
நுண்ணியவான் குலத்தார் வாழும் வல்வை நகரினூடங்
கொண்ணியல் போக நகர் வேறிங்கியாவதி சைந்திடவே ……..

கார்காமர் கண்டத்து நம் வைத்தியேசர் கருணையினாற்
தீர்காயுளு மிட்டிசித்தியுமெய்திச் செறிந்தருள
நீர்க்காகலெலா முத்த சங்கினமுர்ந்து நிறைந்த வல்வை
ஊர்க்காவவலர்வைகிலெங்களுக்கே பெரிநூதியமே!………..

எனப்பாடியுள்ளமை 19ம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் வல்வெட்டித்துறையில் வாழ்ந்த மக்களின் சிறப்பையும் அவர்களுடைய முதல்வனாகவும் முழுமையானவராகவும் திகழ்ந்த வெங்கடாசலம்பிள்ளையின் சீரையும் சிறப்பையும் தெரிந்து கொள்ள இது ஒன்றே போதுமானது அல்லவா!………. வல்வெட்டித்துறையில் வைத்தீஸ்வரர் கோவிலை அமைத்ததுடன் அபிஸேக ஆராதனைகளை புரியும் அந்தணப் பெருமக்கள் தமது குடும்பத்துடன் தங்கி வாழ்வதற்காக கோயிலின் தெற்குவீதியில் குடிமனை ஒன்றையும் அமைத்துக் கொடுத்தார். இதேபோல காலம் தவறாது கோவிலில் தேவாரதிருவாசகங்களை பாடும் “ஓதுவார்” களுக்காக கோவிலின் தென்மேற்கு மூலையில் ஒரு குடிமனையையும் அமைத்திருந்தார். இன்றும் கூட “ஓதுவார் வீடு” என்பது சிதைந்த நிலையிலும் அடையாளம் காணக்கூடியவாறே காணப்படுகின்றது. இவ்வாறு ஆலயத்தின் நித்திய கருமங்களிற்கு இடையூறு நேராது கவனித்துக்கொண்டார்.

கோவிலின் நித்தியபூசைகளின் போது நாதஸ்வரகானம் இசைப்போர் சிவ மந்திரத்திற்கு கட்டியம் கூறும் மேளம் அடிப்போர் மற்றும் ஆஸ்தானவித்துவான்களை இந்தியாவில் இருந்து வரவழைத்து கோவிலுக்கு அண்மையில் தனக்குரிய காணியில் அவர்களை குடியமர்த்தினார். (இக்காணியிலேயே பின்நாட்களில் “குமரகுரு மீன்பதனிடும் நிலையம்” அமைந்திருந்தது) அத்துடன் எப்பொழுதும் தெய்வங்களையே மயக்கும் ஆஸ்தான புல்லாங்குழல் விற்பன்ரையும் சேவைக்கு அமர்த்தி இருந்தார். மக்களுக்கு அருள் புரியும் ஆண்டவன் வாழும் கோயில் என்பது அதற்குரிய அனைத்து தேவைகளையும் தன்னகத்தே பூர்திசெய்யும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும். அதுவே பூரணமான கோயிலாகும். அதற்கேற்பவே வாலாம்பிகா சமோத ஸ்ரீவைத்தீஸ்வரர் கோயிலை அமைத்தவர் பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள்.

கடல்வணிகனாய்ப் பிறந்து கடலோடியாய் வாழ்ந்த போதும் கோவிலின் தேவைக்கான நெல்லைத்தானே உற்பத்தி செய்துகொண்டார். கோயிலிற்கு அருகாமையில் இருந்த தீருவில் வயலில் சிவன் கோவிலைச் சார்ந்தவர்களினால் உற்பத்தி செய்யப்படும் நெல் விளைச்சலின் நடைபெறும் கதிர்அறுப்பென்பது பெரும் திருவிழாவாக அக்காலத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. ஒவ்வொரு தைப்பொங்கலிற்கு அடுத்த நாள் கோவிலில் இருந்து வயலிற்கு செல்லும் மாணிக்கவாசகப்பெருமான் கதிர்அறுப்பில் ஈடுபடுவார். நாள் முழுக்க அறுவடைசெய்தபின் அறுவடை செய்த நெல்லுடன் பிற்பகலில் மாணிக்கவாசகப்பெருமான் கோவிலுக்குத்திரும்புவார் “புதிர் எடுத்தல்” என்னும் பெயரில் பெரியவர் வெங்கடாசலாம்பிள்ளையால் நடத்தப்பெற்று வந்த இந்த நிகழ்வும் திருவிழாவும் திரு.சபாரத்தினம் எசமான் காலம் வரையில் கொண்டாடப்பட்ட தெனினும் பின்பு ஏனொ கைவிடப்பட்டுவிட்டது.

தனது தந்தையின் கனவையும் ஊர்மக்களின் தேவைகளையும் நாடிப்பிடித்தறிந்த வெங்கடாசலம் பிள்ளையவர்கள் ஆகம விதிக்கமைய சிவன்ஆலயம் அமைத்ததுடன் தனது சமூகக்கடமை முடிந்துவிட்டது என எண்ணாமல் வல்வெட்டித்துறை மக்கள் தொடர்ந்து ஆசாரசீலராய் இருக்கவும் வாழவும் வழிவகுத்தார். பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் 1883ம் ஆண்டில் சிவன் கோவில் நிர்மாணம் செய்யப்பட்டதன் பின் சிவபூமியாக விளங்கிய வல்வெட்டித்துறையில் சிவனின் வாகனமானதும் சைவமக்களின் பூசைக்கேற்றதுமான “கோமாதா” என அழைக்கப்பட்ட பசுவதையை முற்றுமுழுதாக தடைசெய்தார். சமூகத்தில் தனக்கிருந்த “எசமான்” என்னும் தலைமைப்பதவியின் பெயரால் பொதுமக்களிடம் எந்தவித கண்டிப்பையும் காட்டாத பெரியவர் உணவுக்காக மாடுவெட்டுவதற்கு தன்னுடைய கடும் எதிர்ப்பைக் காட்டி அதனை மறுத்தார். அன்று முதல் இன்று வரை வல்வெட்டித்துறையில் இறைச்சிக்காக மாடு வெட்டப்படுவதில்லை. பர்மாவிலும் இந்தியாவின் பலபகுதிகளிலம் இருந்து வல்வை மக்களினால் கப்பலில் கொண்டு வரப்படும் அரிசி தேங்காய் மற்றும் சிறு தானியங்கள் என்பனவற்றைக் கொள்வனவு செய்யவரும் பல ஊர் வியாபாரிகளும் உள்ளூர் மீனவர்களினால் பிடிக்கப்படும் மீன்களை வாங்கவரும் சிறுவியாபாரிகளும் கலந்து வல்வெட்டித்துறையில் தங்க முற்படுவதால் ஏற்படும் பல் சமூகச் கலாச்சாரம் தான் நேசித்த தனித்துவம் மிக்க குடும்பமான வல்வெட்டித்துறையில் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் தீர்க்கதரிசனத்தில் வியாபார நோக்கமாகவோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வல்வெட்டித்துறைக்குள் எவர் வந்தாலும் இரவுப்பொழுதுக்கு முன் ஊரைவிட்டு போய்விட வேண்டும் என்பதிலும் சமூகத்தலைவரான பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை எந்த சமரசத்தையும் ஏற்றக்கொள்ளவில்லை. ஊருக்குள் ஏற்படும் எப்பிணக்குகளையும் ஊரவர்களே தீர்த்துக்கொள்ளும் விதியினையும் வல்வைச் சமூகத்தில் இவரே ஆழவேரூன்றியுள்ளார் என அறியமுடிகின்றது. இதன் காரணமாகவே வல்வெட்டித்துறை மக்கள் என்பது பல்லின சமூகம் அல்லது ஓரு சமூகம் என்றில்லாமல் ஒரு குடும்பம் என்பதே ஒரு ஊராக இன்றுவரை நின்று நிலவுகிறது (இதனால்தான் வல்வெட்டித்துறை என்னும் ஒரு குடும்பத்தில் இருந்து வந்து உலகத்தமிழரையே “தமிழ்த்தேசியம்” என்னும் ஒரு கொடியில் இணைத்த பெரும் தலைமையை நாம் காண முடிந்தது)

சமூகம் அல்ல ஒரு குடும்பம் என்னும் நிலையில் காணப்படும் வல்வெட்டித்துறைக்கான தலைமைப்பதவியினை எவ்விதசலனமுமின்றி இவர் முன்னெடுத்தார். அதேவேளை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈழத்தமிழரின் அரசியல் வழிகாட்டலிலும் இவரின் முன்னெடுப்பு குறிப்பிடக்கூடியதாகவே இருந்துள்ளது. இவ்வகையில் 1879இல் சட்டநிரூபணசபையின் கௌரவஉறுப்பினரான முத்துக்குமாரசாமியின மறைவின் பின்னர் அவரது வெற்றிடத்திற்கான போட்டியில் கத்தோலிக்கரான “கிறிஸ்தோபர் பிறிற்ரோவிற்கு” இவர் வழங்கிநின்ற ஆதரவைக்குறிப்பிடலாம். தேசாதிபதியின் நியமனத்தின்மூலம் நியமிக்கப்படும் உறுப்பினராக பொதுசேவையில் நீண்டஅனுபவமும் பிரபல சமூகசேவையாளராகவும் ஒரு மாவட்டநீதிபதியாகவும் அறியப்பட்ட கத்தோலிக்கரான பிறிற்றோவை நியமிப்பதன் மூலம் இலங்கைத்தமிழரிடையே மதரீதியான காழ்ப்புணர்வை தவிர்ப்பதுடன் மக்களிடையேயான ஒற்றுமையும் அவர்களிற்கான சேவையும் பூரணமாக்கப்படும் என இவர் நம்பினார். எனினும் அப்போட்டியில் “சைவவேளாளர்” என்னும் கோசத்தினை முன்னிறுத்திய ஆறுமுகநாவலரின் அதீத பிரச்சாரத்தினால் பொன்னம்பலம் இராமநாதன் எனும் உயர்குடி வேளாளரே தேசாதிபதியால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரும் தனது பதவிக்காலம் முழுமையுமே தனக்காகவும் கொழும்பை மையமாகக் கொண்ட தன்னைப்போன்ற உயர்குடிகளான தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிற்காகவுமே குரல்கொடுத்து வந்துள்ளார். தனது சொந்த இனமான ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளிலோ அல்லது பொருளாதார அபிவிருத்திகளிலோ எவ்வித ஆர்வத்தையும் காட்டாத அவர் தனது தனிப்பட்ட நலனிற்காகவே ஆங்கில அரசை அதிகம் எதிர்பார்த்ததாக பேராசிரியர் வில்சன் கூறுகின்றார். இராமநாதன் தனது “சேர்”பட்டத்திற்காக அக்காலத்தில் தேசாதிபதியாக இருந்த Sir Arthur Gordon மூலம் ஆங்கில அரசை வேண்டிக்கொண்டதையும் திரு.வில்சன் வெளிக்கொணாந்தார் (a.j.wilson 2000.op.cit. pa46) பின்வந்த காலங்களில் படித்தவர்களிற்கே வாக்குரிமை என சர்வஜன வாக்குரிமையை மறுத்த இந்த சேர் பொன். இராமநாதனின் செயலின் மூலமே அவரின் உண்மைத்தன்மையை யாரும் உணர்ந்து கொள்ளலாம். தமது இனத்தையும் மொழியையம் சிந்திக்கமறுக்கும் இராமநாதன் போன்ற அரசியல்வாதிகளினாலேயே இன்றும் ஈழத்தமிழினம் அழிவுகளைச்சந்தித்து வருகின்றது. இவ்வகை அரசியல்வாதிகளிற்கு எதிராக 130 வருடங்களிற்கு முன்பே போர்க்கொடி தூக்கிய திரு.வெங்கடாசலம்பிள்ளையின் அரசியல் தீர்கதரிசனமும் போர்க்குணமும் ஆச்சரியயப்படத்தக்கது அல்ல என்பதை வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கின்றது. இவ்வகையில் வல்வெட்டித்துறையின் சமூகமட்டத்தில் மட்டுமல்லாது ஈழத்தமிழருக்காக அரசியல் அரங்கிலும் போராடிய “தமிழ்த்தேசியவாதி” யாகவே இவரை நாம் பார்க்கலாம். இன்றுவரை ஆறுமுகநாவலரையும் சேர்.பொன்.இராமநாதனையம் வல்வெட்டித்துறை மக்கள் ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கும் வெறுப்பதற்கும் ஆறுமுகநாவலரின் சிலைகூட வல்வெட்டித்துறை வீதியால் வரமுடியாமல் திரும்பி சென்றதற்கும் இதுவே காரணமாயிற்று.

தான் வாழும் போது மட்டுமல்லாமல் தான் வாழ்ந்த காலத்தின் பின்னும் சீரானபாதையில் ஒருசமூகத்தின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுவது என்பது இலகுவானதல்ல. ஓரிரு வருடங்கள் அல்ல 100வருடங்களுக்கு மேல் நீண்ட தான்…… தனதுசமூகம்…… என்னும் அவருடைய நேரிய பாதை என்பது அவருக்கு முன்பிருந்ததைவிட அவரது சமகாலத்தைவிட அவருக்குப்பின் எமது மண்ணிற்கு அதி உயர்ந்த பெரும் கௌரவத்தை பெற்றுக்கொடுத்தது என்றால் மிகையாகாது. அதனால் தான் 1822ம் ஆண்டில் அவதரித்த அவரின் வாழ்க்கையை இன்றும் நாம் தேடுகின்றோம்.

பெரியவர் தான் தேடிய சொத்துக்களையும் நிலபுலங்களையும் தான் கட்டிய கோவிலின் பெயரில் எழுதிவைத்து அக்கோயிலானது எக்காலத்திலும் நெறிபிரளாது இருப்பதற்காக அதன் நிர்வாகத்தை மட்டுமே தொடரும் தனது ஆண்சந்ததிக்காக எழுதிவைத்தார். இதன்மூலம் பல ஏக்கர் நிலங்கள் பின்வந்த காலங்களில் இவரது பரம்பரையினருக்கு பயன்பட்டதைவிட கோயில்க்காணி என்னும் பெயரில் யார் யாரோ என சமூகத்தின் பலதரப்பட்வர்களுக்கும் பயன்பட்டன. 1956ம் ஆண்டில் முல்லைத்தீவில் நீரில்மூழ்கிய நிலையில் இருந்த ஆங்கிலேயக்கப்பலான “King of Atlatic” கப்பலை வாங்கிய காலத்தில் ஆங்கிலேய அரசினரிடமிருந்து இவரால் விலைக்குவாங்கப்பட்டிருந்த வற்றாப்பளைமுதல் இரட்டைவாய்க்கால் வரையிலான நந்திக்கடலின் கிழக்கு மற்றும்தெற்குப் பகுதிகளில் இருந்த காணிகளும் தென்னந்தோப்புகளும் என 90 ஏக்கர் வரையானநிலங்களில் பலவும் பின்வந்தகாலங்களில் உரிமைகேரப்படாத நிலையில் பின்வந்த அரசாங்கத்தினாலும் தனியார்களினாலும் சுவீகரப்படுத்தப்பட்டமை தனக்கென வாழாது பிறருக்கென வாழ்ந்த இவரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டான உதாரணமாகலாம்?

தனதுநீண்ட நெடுங்கனவை 1883இல் நிறைவேற்றியதுடன் நில்லாமல் தொடர்ந்தும் கப்பல்கள் மூலம் கடல்வணிகம் புரிந்த இவரின் கப்பல்களில் ஒன்றைப்பற்றிய சிறுகுறிப்பொன்று பின்வருமாறு 18.march.1892 The brig Annalachchemy  Belonging Tirumani periathamby  A Wealthy  merchant of valvettithurai. Capaized off mandaitivu in the offing. என 1923 வெளியிடப்பட்ட Notes on Jaffna என்னும் நூலில் பக்கம் 55இல் காணப்படுகின்றது. இக்குறிப்பின் மூலம் தனது இறுதிக்காலம் வரை கடல்வழி வணிகம் புரிந்தவராக இவரை நாம் அறியக்கூடியதாக உள்ளது. ஏனெனில் அக்கோவிலின் திருப்பணியிலேயே தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த “பெரியவர்” திரு.வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் நந்தன ஆண்டு ஐப்பசிமாதம் 11ம் நாள் அதாவது 24.10.1892 ஆங்கிலநாளில் தன்பூதவுடல் நீங்கி புகழுடன் இறைவன் திருப்பாதம் அடைந்தார்.

 

“குடிதழிஇக் கோலோச்சு மாநிலமன்னன்
அடிதழிஇ நிற்குமுலகு”

என்னும் திருவள்ளுவரின் வாக்கிற்கமைய வல்வெட்டித்துறையில் வாழ்ந்து “திசையெலாமிசை பரப்பிய திருமேனியார் வெங்கடாசலமெனும் பெரியதம்பியார்” ( Notes on  Jaffna பக்கம் 321) எனப்புகழப்பட்டு அவர் வாழ்ந்திருந்தபோது மட்டுமல்லாமல் அவர் வாழ்ந்து நூறாண்டுகள் கடந்தபின்னும் அவர் பெயரையும் அவர் வழியையும் அவர் வழிவந்தவர்களையும் இந்த உலகம் அன்போடு ஆதரித்து நிற்பது தொடரும் புதியவரலாறாகும். வல்வெட்டித்துறையின் “சமூகத்தலைவராக” விளங்கிய வெங்கடாசலம்பிள்ளையின் சொந்த நிலத்திலேயே (கரையா(ர்) முள்ளிவாய்கால்) அவர் வழியில் வந்து ஈழத்தமிழினத்தின் “தேசியத்தலைவராக” உயர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனது புகழுடலையும் கண்டெடுத்தது என இலங்கைஅரசு கூறமுற்படுவது எதன் தொடர்ச்சி!... வரலாறுகள் மீண்டும் மீண்டும் வரும் என்பதற்கு இவர்களின் வாழ்க்கையே சாட்சி.

 

கிட்டிப்பு(credits):

ஆய்வும் ஆக்கமும்: தமிழ்நீ” பொன்.சிவகுமாரன்

மூலம்: வல்வை இணையம்

எனக்கு கிடைக்கப்பெற்றது: https://ourjaffna.com/சமூகச்சிற்பி/

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சிவமயம்

 

வல்வைச் சிவன்கோவிற் திருவேங்கடாசலப்பிள்ளை பேரிற் சரமகவி (1822 – 1892) யாழ்ப்பாணம் உடுப்பிட்டி சுப்பிரமணியசுவாமி தொண்டராகிய ஸ்ரீ அ.சிவசம்புப்புலவரவர்களாலியற்றப்பட்டவை.

 

வெண்பா

சேக்கிழா ரில்லைச் செழுங்கம்ப நாடனிலை
மீக்கிளார் பாவாணரிலை வேறரன்றா – ணோர்க்குந்
திருவேங்கடாசலப் பேர்ச்செல்வனியல் பாவிற்
றருவேங்கொ லம்ம தனித்து.

செந்திருவாழ் மார்பத் திருவேங்கடாசலமா
லைந்துமுகன் பொற்புரத்தி லன்பொடுற்றா – னந்தனயாண்
டைப்பசியிற் பன்னொன் றரத்தனன்றில் சுக்கிலமேற்
றப்படையாப் பஞ்சமியிற் றான்.

 

கலிவெண்பா

சீர்பூத்த செங்கமலச் செல்வி திருமுகமாய்ப்
பார்பூத்த பல்வளமும் பல்கிமிகும் – பேர்பூத்த
வல்வைத் திருப்பதியின் மாதவன்போல் வாழ்;வுகந்த
செல்வத் திருமேனிச் செம்மலணி – வில்வைத்த
காமர்நுதன் மாதருக்கோர் கட்டளையாய்க் கற்பிய
லேமமுறச் சாலிக்கிசைப்பவளாய் – மீமருவும்
வண்ண மனைவிளக்கா மாதேவி யானகுணப்
பெண்ணரசி யோடு பெரும்பகலாய்க் – கண்ணுதலோன்
வேதச் சிலம்படியில் வீழ்ந்தொழியா மெய்ப்பத்தி
போதவரம் வேண்டிப் புலனடக்கி – யேதமறுஞ்
சித்திரபானுத் தனுவிற் சேராறிற் சீவன்போர்
சுத்தமுறும் பூருவப்பாற் றோய்ந்தசட்டி – யுத்தமமெய்த்
திட்பமறை யாகமமுஞ் செய்யவற முந்தழைக்கப்
பெட்புமிகப் பெற்ற பிறைக்கொழுந்து – விட்புலமான்
வேந்தனிகர் குழந்தைவேற்பிள்ளை முன்னாகச்
சாந்தமுறுஞ் சீராமசாமி பின்னாக – மாந்தரங்க
மைந்த ரெழுவர்களு மாமகளி ரொன்பதின்மருந்
துணைமை யாக வுடனுதித்தோ – னிந்திரையொத்
தாவியொன்றாய்க் காயமிரண் டானவருள் வள்ளியம்மைத்
தேவியொடு வாழ்விற் றிருந்தவைகி – மேவிறுசீர்
மேதகுவேற்பிள்ளை திருமேனிநம்பி முன்னான
காதலரோ ரெண்மருடன் கற்றவர்க – ளோதுமிய
லென்பவற்றிற் றாழ்வொன்று மெய்தாத சேயிழையா
ரொன்பதின்மர்த் தந்த மகிழ்வும்பரான் – வன்புமிகக்
காணுமொரு பன்னிரண்டு கப்பலமைத் தில்லமெல்லா
நீணிதி வெற்பாக நிரப்பினோன் – காணிகளாய்ப்
பண்டுள்ள பின்னீட்டப் பட்டவற்றி லெஞ்ஞான்றுந்
தண்டுறா தெய்துந் தனிவளத்தான் – றிண்டிறல்சேர்
காவலரும் வாழ்த்திக் கவினுறு நல்லாசனத்தின்
மேவவைத்துப் பாராட்டு மேதகையோன் – னேவர்களும்
பேணு முலகுடையாபிள்ளையார் கோவிலைமே
னாணினைவிற் பாலிய நாணாட்கொண்டோன் – சேணமர்வோ
ரன்னமடப் பூசிக்க வாயிழையார் வைகவுண்ண
வென்னமர போர்க்கு மியலிடங்க – டுன்னியிடச்
சாகர தீரத்துத் தட முல்லைத்தீவினெடி
தாகு மடமொன்றியற்றி யாயிடையி – னீகமொடு
பன்னந்தோ வாத படுகர்களுங் கூவல்களுந்
தென்னந்தோப் புந்தந்த சீராளன் – முன்னந்தோன்
நூரினிடைக் குளங்களோடைவகை கூவல்பல
நேரின் மடங்களி ணிரப்பினோன் – றாரவகத்
தைந்து முகனாறு முகத்தம்மான் புராணங்கள்
சந்ததமு மாய்ந்துருகுஞ் சால்பினோன் – சிந்தைசுடும்
வெய்ய சினங்கணமும் வேண்டாமென் றோங்குகுணச்
சையமிசை நின்றோர்க்குஞ் சாற்றினோ – னுய்யுநெறிப்
புண்ணியங்களெல்லாம் புரிந்து மவைதானொன்றும்
பண்ணினேனென்று சொலாப் பண்பினோ – னுண்ணெகிழ்வி
னாவலழுக் காறுவினை யத்தனைக்கு மூலமென
யாவருக்கு நாளு மினிதுரைத்தோன் – றீவளர்வின்
வெம்பசிமே லெய்தினுமவ் வேளை யலர்ந்தசுக
வம்புயப்போ தைச்சிரிக்கு மானனத்தா – னம்பிலந்தோ
ராவிருத்தர் பாலரநாதர் பி;;;;;;;ணியோர் துறந்தோர்
பாவைய ரென்றின்னோரைப் பாலித்தோ – னாவலுறத்
தென்புலத்தார் பாசனத்தார் தெய்வம் விருந்தினரை
யின்பு உலவாமற்புரந்த வீகையினான் – மன்புனையுங்
கூவல் குளங்கேணி மடங்கோவிலமைப் பார்பிறர்க்கும்
யுhவை யெனினும் பிறழாதீந்தவன்பன் – றாவகலும்
வேலை யெவற்றெவற்றும் வித்தகரு முண்ணாணச்
சாலவ வைமுழுதுந் தான்புரிந்தோன் – வேலையிடை
யாண்ட புரண்ட கப்பலற்றமற யந்திரத்தின்
மீண்டெழுமா செய்த விரகினோன் – சேண்டிகழு
மங்களவாரம் வெள்ளி வாரத்தி னொந்தாரை
யெங்குமெங்குங் கடயன்ன மீந்திட்டோன் – பொங்குமய
னேருங் கருப்பிலு முன்னின்றபடி யன்னமுடற்
கோர மறயார்க்குங் குழைந்தளித்தோ – னேரியலு
மாடை பலவு மளியொடு தீபாவலியில்
வாடுநர்க் கெல்லாமீந்த வண்மையினான்
னீடுசுவையான சுகநீர்ப்பந்த லாதீண்டு குற்றிவழி
மேனிழலார் தாருவிரவவைத்தோ – னீனமிலாச்
சத்திய மெய்ஞ்ஞானத்தகைய சிவமந்திரத்துச்
சித்தி யறாத செபத்தினா – னத்தியுரி
யண்டர்பிரான் கண்ணிலடைந்து பவங்கழுவுங்
கண்டிகை மாமாலைதிகழ் கந்தரத்தான் – பண்டைய
மும்மலமுஞ் சுட்டெரித்து முற்றுயிர்க்கு மோக்கவின்பச்
செம்மைதரு நீறொளிர் மெய்த்தேகினா – னம்மையருண்
மேலார் கதையமுத வெள்ள முறப்பருகிக்
காலாறா யாறொழுக்குங் கண்ணிணையான் – பாலாகு
மெத்தகையார் மாட்டு மிதைய நெகிழ்ந்துரைக்குந்
தித்திப் பறாததண்ணென் றேமொழியா – னெத்திசையுஞ்
சொற் பெரியதம்பியெனத் தொன்றுதொட்ட காரணமா
நற்பெயரே யாகு நவிலநின்றோன் – மற்பொலிதோட்
கோலவரிச் சந்திரனாங் கோமானோ டுண்மைக்கு
ஞாலமித ரேதரமாய் நாட்டவுற்றோன் – மேலறன்சே
யேய்ந்த பொறைய னெனும்பேர் புனைந்துரையா
வாய்ந்தெதிர் நல்லோர்புகலற் காம்பொறையன் – வாய்ந்தபுகழ்
துன்னு திருத்தொண்டத் தொகைப் பதிகத்தான்றவர்கண்
முன்னிருந்தாற் சேர்க்கு முறைத்தொண்டன் – பின்னவரப்
பாலுமடிச் சார்ந்தவெனப் பன்னியுள மெய்க்குழுவிற்
கோலமுதற் றொண்டனெனக் கொள்ளநின்றோன் – வாலியசீர்
மேத்தியவான் சைவநெறி மெய்கண்டோர் பூத்தினந்தூ
யாத்தனென வேத்தியிடு மற்புதத்தோன் – சூர்த்தவிட
மையுலாங் கண்டன் மணிக்கோவிற் றொண்டுஞற்றி
வெய்யிலாற் கன்றியிடு மெய்யினான் – மையலற
வேன்ற வடக்காமரம் வைத்தேற்ற கல்லுத்தூண் சுமந்து
தோன் றுதிரக்காயமறாத் தோட்டுணையா – னான்றவன்
பினென்;றும் பெருங்கல்லினங்கள் புரட்டித்தகர்த்துக்
கன்றுந் தழும்பு கிளர் கைம்மலரான் – குன்றரிய
செல்வவுடை வேடங்கடீர்ந்து திறற் கூலியாட்
கொல்வதுடுத்துத் தொண்டுஞற்றினோன் – சில்வரிய
வண்டாலு மாலைமுடி மன்னவரோர் மூவர்களுங்
கண்டாலு முட்கிக் கருத்தயர – விண்டாவிக்
கானடர்ந்து நீண்டகன்ற கற்பாறை வன்னிலத்தை
மானமறாக் கூலிவினை மாக்களொடு – தானுமொரு
கூலித் தலைவனாய்க் கோரமுறும் வெய்யில்பனி
யாலித் திறத்துக் கயராமன் – மேலைக்க
ணாற்றிவைத்த நல்லவினை யாங்கெதிர்ந்து நன்றூக்கக்
கூற்றுதைத் தான் றுய்யவருள் கூட்டிவிடத் – தேற்றமுட
னாறாமல் வேலை யகோராத் திரம்புரிந்து
மாறா மருதநில மாண்பாக்கி – நூறான்றேர்
சிற்பர்களைச் சோதிடரைச் செய்ய குரவர்களை
யற்புடன் கூய்க் கோவிற் கடியிட்டுப் – பொற்பு
பெறச்செய்து முடித்துத் திருக்கூவல் வீதிமதி
லெய்து பிறவு மினிதமைத்து – மெய்தழுவ
வெண்ணுஞ் சுபானுவினி லேற்றி லிருபத்தேழின்
மண்ணுறுமா னந்தவனமென்னும் – புண்ணியமார்
காசிலிங்கந் தாபித்துக் காணு மபிஷேகமுடன்
பூசை வகையும் புரிவித்துக் – காசினியில்
வந்தவர வொக்க மகோற்சவமுஞ் செய்வித்து
முந்து பரமானந்த மூழ்கினோன் – கந்தியுடன்
வாழைசுவைக் கன்னல்கிளர்மா மாதுளம்வருக்கை
தாழை பிறவுந் தழைக்கவைத்தோன் – சூழமலர்
சாருமணி நந்தன வனத்தை விண்ணவர்காப்
பாருமிது வென்றெவரும் பண்ணவைத்தோன் – மாரி முன்னோன்
கோவிற்கிலந் திருத்திக் குன்றாவதிபதியாய்
மேவிப் புரந்த விதியினோன் – றீவியதே
னிஞ்சி பற்பஞ் சிந்தூர மெண்ணெயொடு மாத்திரைக
ணெஞ்சுவந்து நோய்க்கு நெடிதளித்தோன் – விஞ்சியசீர்த்
தென்னிலங்கைக்கோ விந்தியாவுக்குந் தாதாவா
யன்னையாய் வீற்றிருந்த வாக்கத்;தா – னன்னயஞ்செய்
திங்கிருந்த வாண்டோ ரெழுபதினு முற்றகவாய்ப்
பிங்கலன்போ லுற்ற பெரும்பிரபு – துங்கமிகுஞ்
சீலத் துணைவர்மக்கள் செல்வமுதல் யாவினுந்தன்
போலத் திகழமகிழ் பூத்திருந்தோன் – சாலுநிதி
மாணிமிருஞ் சைவம் வழிவழியா யோம்பிவரு
மேணிமிருந் தொல்குடிச்சீ ரேற்றத்தான் – பூணுமுந்நூல்
வேதியரில் லங்களினு மேலாஞ் சுசிகுலவி
மாதுகிள ரின்ப மனைச்;சிறப்போன் – சோதியயிற்
சேந்தனுக் குள்ளான திருவேங்கடாசலப்பேர்
வாய்ந்த சனக மகராஜன் – பாந்தடலைத்
தாங்குசக வாழ்வைத் தணந்து சுகவாழ்வடைந்தா
னோங்கு சிவபுரத்தி லுற்று.

 

கலித்துறை

திருகற்ற சிந்தைத் திருவேங்கடாசலச் செல்வன்பொற்பூந்
தருகற் பகத்தனி நாட்டினைக்காத்தருள் சண்முகத்தெம்
முருகற் பயந்தவன் கோவிலுக்காக முழுமனத்தி
னொருகற் றகர்த்ததற் குப்போது மோமுற் றுலகமுமே. (1)

ஏதுசெய்தான் புண்ணியம் வேங்கடாசல வேந்தலென்போர்
சாதுக ளல்லர் தவத்தின ரல்லர் மெய்ச்சைவரல்லர்
காதுகண் ணற்றழுக் காற்றழன் மூளக் கருத்துநொந்து
தீது நினைந்தறஞ் செய்வாரை யௌ;ளுந் திருடர்களே. (2)

பனித்தாழ் தரங்கம் பரவை யுடுத்த படியவர்க்கு
நுனித்தா யிரஞ்சொல்ல வேண்டுவதோ செம்பொனோன்கிரியைக்
குனித்தானை யேத்துந் திருவேங்கடாசலக் கோனிங்கில
னினித்தான் றெரிந்திடு நல்லோரில்லாத விருந்துயரே. (3)

பெரியாரென் றேவரு மேத்துஞ் சிறப்புப் பெயரதனுக்
குரியாரை வல்வைத் திருவேங்கடாசல வுத்தமரைத்
தெரியா தவருள ரோவுள ரேலவர் செய்யகதிர்
விரியா தவனையுந் தாந்தெரி யாரெனு மேதினியே. (4)

அற்பமுற் றாலும் பொருளெவர் மாட்டிலு மாழியெனத்
தற்ப நிரம்பிடு மேசற்று மன்னது சார்ந்திலது
வெற்பன செல்வத் திருவேங்கடாசல வேந்தனிடைக்
கற்பக லாப்பெரி யாரெனு முண்மைக்குக் காட்டொன்றிதே. (5)

வெள்ளத் திரவியம் பெற்றுஞ் செருக்கற்ற மேன்மையையோ
வள்ளற் றகைமையை யோவேங்க டாசல மாபிரபு
கொள்ளைக் கருணையையோ குறையாத குணக்குன்றையோ
வுள்ளப் பொறுமையை யோபெரி தென்ன வுரைப்பதுவே. (6)

வென்று புலனைந்துந் தீர்ந்தார்க்குங் கோபம் விடுநெறியை
நன்று தெரிக்குந் திருவேங்கடாசல நம்பிபொன்னார்
மன்று ணடிக்குஞ் சிவபெருமான் பொன் மலரடிக்கீ
ழென்று மிருக்க விறந்தா னெனச் சொல்வதென்னுலகே. (7)

மடங்காட்டு மம்பொற் சிவாலயங் காட்டும் வனசமலர்த்
தடங்காட்டுங் காட்டிடுங் கடவல்கள் காட்டுஞ் சலப்பந்தர்கள்
படங்காட்டும் பன்னக வேணிப் பிரானைப் பணிந்துநெஞ்சி
னிடங்காட்டும் பத்தித் திருவேங்கடாசல வேந்தலையே. (8)

பேர்செய்த புண்ணிய மெல்லாஞ்செய் தான்பொற் பிறங்கலினை
நேர்செய்த மாநிதி பெற்றுஞ் செருக்கினை நீங்கிநின்றான்
கார்செய்த வண்கைத் திருவேங்கடாசலக் காவலன்போ
லார்செய்தனர் புண்ணியஞ்செய் தடங்க வருந்தவமே. (9)

எண்ணிய வெண்ணிய யாவர்க்கு மீந்திடு மீகையுட
னண்ணிய செல்வத் திருவேங்கடாசல நம்பியவ
மண்ணியல் சைவத் தமிழ்நாடு தோறும் வழங்கிவந்த
புண்ணிய முற்றுற மாண்ட தென்றாய்ந்து புகலுதுமே. (10)

தேவி னுணர்த்த முடியவொண் ணாதெனிற் செந்தமிழோர்
பாவி னுணர்த்த முடியவற் றோவெண் பருப்பதநேர்
சேவி லிவருஞ் சிவனம்மை யோடு திகழ்ந்திடும்பொற்
கோவி லுணர்த்துந் திருவேங்கடாசலக் கோன்றன்மையே. (11)

துறந்தார் பரவும் பொறைவேங்க டாசலத் தூயனைப்போற்
பிறந்தாரு மில்லை யறத்தொகை யாவையும் பேணச்செய்து
சிறந்தாரு மில்லைச் சுகபோக நெஞ்சுறத் தேங்கநுகர்ந்
திறந்தாரு மில்லை யிதுபோற் பெருந்தவம் யார்க்குள்ளதே. (12)

மேதா வியர்பர வும்வேங்கடாசல வேந்தனரன்
பாதார விந்த நிழலின்ப மேவிடப் பல்லுயிர்;தாந்
தாதா வெனவுமெய்த் தாதை யெனவுந் தகுங்கருணை
மாதா வெனவு மினியாரை யேத்து மனமகிழ்ந்தே. (13)

தாமங்கொண் டார்சடைச் சங்கர னாலையந் தன்னுடைய
வேமங்கொண் டாற்றியமால் வேங்கடாசல னென்ற திரு
நாமங்கொண் டான்முயன் மாதவந் தான்முன்னை நாளில் வைப்புச்
சேமங்கொண் டாலையஞ் செய்தர் தவத்தினிற் சீர்பெற்றதே. (14)

கற்றார் கவிபுனையும் வேங்கடாசலக் காவலனுட்
பற்றாய் முயலு முயற்சிக்கெல் லாமுடன் பாடெய்திய
பெற்றாரை யில்லுக் கினியாளை மக்களைப் பின்னவரை
யுற்றாரை யுற்றது மந்நாட்டவத்தி லொருதவமே. (15)

இலங்கா புரமெனுஞ் சிங்கார வேம விரவிமுடித்
துலங்கா டகமணித் தூண்டா விளக்கெனச் சொல்லுவமோ
தலங்கா முறுமிரு கைப்பாரி சாத தருவென்பமோ
விலங்காத வாய்மைத் திருவேங்கடாசல வேந்தனையே. (16)

தரவுக் கொச்சகக் கலிப்பா

தக்கசிவ பத்தி தழைந்த பொறைமுதலா
மிக்ககுணம் புண்ணியங்கண் மெய் வேங்கடாசலனோ
டொக்கவுடன்; சங்கரனாரூர் புகத்தன்னந்தனியாப்
புக்கனனென் றாரோ புகன்றார் புலமிலரே. (1)

வெண்ணீ றழியாத மெய் வேங்கடசலமா
லெண்ணீடு சங்கரனூ ரெய்தவரு மூரெல்லா
முண்ணீடு துன்பினா லோவென்றழ நிறைந்த
கண்ணீரே மாசு கழுவிடுமா றானதுவே. (2)

மெய்வேர்வை யற்று விழியிருளற் றச்சமொரீஇ
யைவே தனையற் றருள் வேங்கடாசலமால்
செவ்வேல னத்தன் சிவபுரத்து வாழ்வடைந்தா
னெவ்வேலையும் புண்ணியம்புரிந்த பேறிதுவே. (3)

ஆங்காரங் கோப மழுக்காறின் னாமொழிதாந்
தீங்காவ வென்றெவர்க்குந் தேற்றியக மும்புறமு
நீங்காத சுத்த நிலைநின்ற நின்பெருமை
யீங்கா ரறியா ரெழில் வேங்கடாசலனே. (4)

தாயையொத்த நின்னிற்; றழைத்திருந்த பல்லுயிர்கள்
பேயையொத்து வாடுவதுன் பேரருளுக் கேற்றதுவோ
வேயையொத்த தோளுமையாண்; மென்முலைப்பாலுண்ட செவ்வாய்ச்
சேயைவத்த சித்தத் திருவேங்கடாசலனே. (5)

உள்ளும் புறமு மொருங்கொத்து வெங்கபடக்
கள்ளம் படையாக் கன வேங்கடாசலனே
வெள்ளம் படர்சடையோன் மெய்க்கணங்க ணின்னெதிர்ந்துன்
றெள்ளும் புகழ்பரவிச் செங்கைதொழீஇச் சூழ்ந்தனரோ. (6)

கண்ணருணோக் கான்மந்த காசத்தாற் காமர்முகத்
தண்ணளியா லின்மொழியாற் றாழ்நடையால் வான்கொடையால்
மண்ணகமுற் றாண்ட வர வேங்கடாசலன்போல்
விண்ணவரை யோகியரை வேறுளரைக் கேட்டிலமே. (7)

மக்கட் டுணைவர் மனை மற்றெவருஞ் சூழ்ந்தேங்கி
யொக்க வழும்போது முளங்கலக்க மெய்தாமற்
பக்குவமாந் துய்யவருட் பாத்தேனீ யார்ந்தது தான்
தக்கதெனக் கண்டேந் தனி வேங்கடாசலனே. (8)

பாரியருண் மக்கடுணைப் பாலார் கிளைகடமை
நாரியலுஞ் சேம்பிலையி னாரமெனக் கொள்ளலையே
லாரியனே மாவேங்க டாசலனே நின்னுடைய
பேரியலுஞ் செல்வமெலாம் பிஞ்ஞகனுக் கீயாயே. (9)

தாடலைக் கூட்டந்தெரிந்தோர் தம்முளம்வாழ் சங்கரனா
ராடலைப்பா ராட்டு மருள்வேங்க டாசலன்போ
னீடலைக்கார் கோணிலத்து நேயமுற்றெம் போலியர்கள்
பாடலைக்கேட் டார்தான் பரிசிலினி யீவாரே. (10)

 

ஆசிரியவிருத்தம்

உரையேறு பரசிவப் பிரணீத நிகமாக
மோக்தமெய்ச் சைவசமையத்
துயர்வேறு பதிபாச பசுலட் சணத்திற
முளங்கொளவி னாயயோகி
விரையேறு நந்தன வனங்கூவல் கேணிகுளம்
விதியேறு மடமாலயம்
விழைவுறத் தந்தவதி பிரபல்ய மாராஜன்
விரிவுறுஷா மாபூஷணன்
திரையேறு பரவைக் கணித்துறு சிவேதையிற்
றிகழ்வல்வை நகரவாசன்
றிருவேங்க டாசலப் பெரியதம் பிப்பெயர்த்
தீனரட் சகதயாளு
தரையேறு சாதுசன சங்கமேத் தும்புகழ்
சமாப்தமு மளந்துபுகலச்
சதுர்முகப் பிரமற்கு மரிதெனி லியற்கவிஞர்
சாற்றவெழு மாறென்னையே.

 

மூலம்: https://eelamaravar.wordpress.com/2012/12/21/prabakaran-grand-father/, Dec 21, 2022

 

 

 

http://tccqatar.blogspot.com/2013/01/3.html

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"தமிழினத்தின் தேசியத் தலைவரை இந்த உலகிற்கு தந்த
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அம்மா"

 

 

எழுத்தாக்கம் - வருண குலத்தான்
 

வல்வையில் குழந்தையாய் 07.08.1931
வானுலகில் அன்னையாய் 20.02.2011

 

அன்னை பார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதி அம்மா……அண்ணரின் அம்மா அல்லது அண்ணையின் அம்மா என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விழிக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பது வயதான பெண்ணே பார்வதி அம்மா ஆவார். வேலுப்பிள்ளை யின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர் இவரை அறிமுகப்படுத்த போதுமானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே உலகம் முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத் தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலை நடுக்கத்தை மறைத்துக்கொண்டமை உலகம் கண்டுகொண்ட உண்மையாகும்.

மேற்படி பெருமைபெற்ற மைந்தனைப்பெற்ற பார்வதிஅம்மா வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையில் வாழ்ந்த வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் புதல்வி யாவார். வல்லிபுரம், பருத்தித்துறை யைச் சேர்ந்த சம்பானோட்டிக்கரையார் எனப் புகழ்பெற்றவரும் ‘மெத்தைவீட்டு’ நாகலிங்கம் என அழைக்கப்பட்ட ‘தெய்வர் நாக லிங்கத்தின்’ மைந்தனாவார். நாகலிங்கம் ஆங்கிலேய அரசினால் ‘முதலியார்’ பட்டம் பெற்ற பெருமைக்குரிய கப்பல் உரிமையாளர் மட்டுமன்றி பலகப்பல்கள் மற்றும் பெரும்நிலபுலம்களிற்கு சொந்தக்காரரானவர். இவர் தனது பேத்தியான பார்வதியம்மா பிறப்பதற்கு முன்னரே 26 நவம்பர் 1909ஆம் ஆண்டில் மறைந்து விட்டார். பார்வதியம்மாவின் புகழ்பெற்ற மைந்தனான மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் 26 நவம்பர் 1956 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. என்னே! அதிசய ஒற்றுமை. வரலாறுகள் திரும்பும்போது விருட்சமாகின்றனவா?

வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினருக்கு பார்வதியம்மாவிற்கு முன் பிறந்த பெண்குழந்தை ஒன்று மலேசியாவில் சிறுவயதில் காலமானது. இதனால் இரண்டாம் முறையாக ‘சின்னம்மா’ கற்பமுற்றதும் சின்னம்மா வின் தாயார் மகளான சின்னம்மாவை வல்வெட்டித்துறைக்கு அழைத்து தன்னுடன் வைத்திருந்து பத்தியம் பார்த்தகாலத்தில் பிறந்தவரே பார்வதி அம்மா ஆவார். இவரிற்கு ஐந்துவருடங்கள் பின்பாக பிறந்தவரே இவரின்தம்பி வேலுப்பிள்ளை. பார்வதி அம்மாவின் வீட்டுப்பெயர் ’குயில்’ என்பதாகும். இவர் வல்வெட்டித்துறையின் பழம்பெருமைமிக்க திண்ணைப் பள்ளிக்கூடமானதும் பின்னாட்களில் அமெரிக்கன் மிஸன் தமிழ்கலவன் ஆரம்ப பாடசாலை என அழைக்கப்பட்ட அரியகுட்டிப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றுக் கொண்டார். 7 ஆவணி 1931 இல் பிறந்த இவர் தனது பதினாறாவது வயதில் வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையில் வாழ்ந்து வந்த வல்வெட்டித்துறையின் முதன்மைக் குடியானதும் பாரம்பரியபெருமை மிக்கதுமான திருமேனியார் குடும்ப வழித்தோன்றலும் ‘அக்கிரகாரத்துத்தம்பி’ என அழைக்கப்பட்டவருமான திருவேங்கடம் வேலுப்பிள்ளையை தனது வாழ்க்கைத்துணையாகக் கொண்டார்.

இங்கு கூறப்படும் திருவேங்கடம் மற்றும் இவரது தந்தையாரான வல்லிபுரம் என்போர்கள் மலேசியாவில் இருந்து ஊருக்கு திரும்பிவந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அத்துடன் ஆரம்பத்தில் கொத்தியால் ஒழுங்கையிலேயே அருகருகான வீடுகளில் வாழ்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது இதனால் உறவு முறையாலும் ஏற்கனவே நன்கு அறிமுகமான இரண்டு குடும்பங்கள் மற்றும் ஊராரின் நல்ஆசியுடனும் இவரது இல்லறவாழ்வு இனிதே ஆரம்பமாயிற்று.

வேலுப்பிள்ளையின் காதல்மனைவியாக வாழ்ந்த இவர் 9.3.1948இல் மனோகரன் என்னும் மகனைப் பெற்றதன் மூலம் இனியதாயாகவும் மாற்றமடைந்தார்;. காலவேட்டத்தில் மனோகரனைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி, வினோதினி என்றும் இரண்டுபெண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இந்நிலையில் கணவரான வேலுப் பிள்ளையின் கடமை நிமிர்த்தம் 1953ம் ஆண்டு செப்ரம்பரில் அநுராதபுரத்தில் இவரது குடும்பவாழ்க்கை ஆரம்பமாயிற்று. இலங்கையின் புராதனநகரான அநுராதபுரமே முதலாவது தமிழ் அரசர்களான சேனன் குத்திகன் என்பவர்களினால் ஆளப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்கது.

அத்துடன் அரசன் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய எல்லாளன் எனப்படும் ஈழாளன்(ஈழத்தை ஆண்டதனால் ஈழாளன் என்ற காரணப்பெயரால் அழைக்கப்பட்ட இவரின் பெயர் காலவோட் டத்தில் எல்லாளன் என மாற்றமடைந்து காணப்படுகின்றது) நாற்பத்துநான்கு ஆண்டுகள் செங்கோலோச்சிய புனித பூமி யாகவும் வரலாற்றில் இப்பிரதேசம் காணப்படுகிறது. இவ்வாறான சிறப்புமிக்க அநுராதபுரத்தில் கிறிஸ்து விற்கு முன் 101 ஆண்டளவில் ஈழாளனின் நினைவாக கட்டப்பட்ட சேதியமான ஈழாளனின் நினைவுத்தூபி அமைந்திருந்த Elala Sona (sona என்பது பாளி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் ‘அருகாமை’ எனப்பொருள்படும்) என்னும் பகுதியிலேயே வேலுப்பிள்ளைக்குரிய அரசாங்க உத்தியோகஸ்தர் தங்கும் விடுதியும் அமைந்திருந்தது.

மகாவிகாரை என அழைக்கப்படும் ருவான் வெலிசாயா தாது கோபத்திற்கு அண்மையில் A12 வீதி என அழைக்கப்படும் அநுராதபுரம் புத்தளம் வீதி மற்றும் A28 வீதி என அழைக்கப்படும் அநுராதபுரம் குருநாகல் வீதி என்பன ஆரம்பிக்கின்றது. இக் குருநாகல்வீதியில் தெற்குநோக்கிச் செல்லும் போது கால்மைல் தூரத்திற்குள் சிற்றம்பலம் தியேட்டரை அடுத்து காணப்பட்ட இடமே Elala sona எனப்படும் பிரதேசமாகும். இவ்வீதியின் வலதுபுறமாக அமைந்திருந்ததே Elala Tomb என்றழைக்கப்படும் ஈழாளனின் நினைவுத் தூபியாகும். இத்தூபியின் வடக்குப்புறமாக ஆரம்பமாகும் தக்குணதகோபாவீதி என இன்றழைக்கப்படும் வீதி யொன்று A12 வீதியான புத்தளம்வீதியுடன் சென்று இணைகின்றது. இவ்வீதியில் குருநாகல் அனுரதபுரவீதிக்கு அண்மையில் அமைந்திருந்த அரசாங்க ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிற்கான விடுதிகளி லொன்றிலேயே வேலுப்பிள்ளை அப்பாவிற்கான விடுதியும் அமைந்திருந்தது. தமிழர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த அப்பிரதேசம் அநுராதபுரத்தின் நகர முதல்வராக இருந்த தமிழரான சிற்றம்பலத்திற்கும் பண்டாரநாயக்கா விற்கும் ஏற்ப்பட்ட மோதலையடுத்து பண்டாரநாயக்காவின் அரசாட்சிக்காலத்தில் புனிதநகராக்கப்பட்டு தமிழ்மக்களின் குடியிருப்புகள் திட்ட மிட்டு அங்கிருந்து அகற்றப்பட்டன. 1958கலவரத்துடன் தமிழர்களினால் முற்று முழுதாக கைவிடப்பட்ட அப்பிரதேசம் இன்று காடுமண்டிய அடையாளம் தெரியாத பூமியாகிவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி, விடுதியில் மூன்று குழந்தைகளுடன் இனியவாழ்க்கையைத் தொடங்கிய பார்வதி அம்மா மிகவும் சந்தோசமாக அக்காலத்தைக் களித்திருந்தார். வீட்டு வேலைகளை முடித்து விட்டு காத்திருக்கும் இவரும் வேலைமுடிந்து பிற்பகலில் வீடுதிரும்பும் வேலுப்பிள்ளையும் குடும்பசமோதரராக தமது விடுதியின் முன் அமைந் திருந்த ஈழாளனின் நினைவுத்தூபியுடன் அமைந்திருந்த புல்வெளியில் அமர்ந்து தமது மாலை நேரங்களைக் கழித்திருப்பர். ஐந்து வயதான மனோகரனும் நாலு வயதான ஜெகதீஸ்வரியும் ஓடியாடி விளையாடும் போது கைக்குழந்தையான வினோதினி தாயின் மடியிலும் தந்தையின் மடியிலும் மாறிமாறி தவழ்ந்த வண்ணமிருப்பார்.

ஈழாளனின் நினைவுத்தூபியின் எதிரே அமைந்திருந்த இவர்களின் தங்கும் விடுதி, நினைவுத்தூபியின் அடியில் கழிக்கும் மாலை நேரங்கள் இவை எல்லாம் இருபத்திரண்டு வயதுடைய இளம்தாயான பார்வதி அம்மாவின் பார்வையில் தினம்தினம் தெரிவதும் ஈழாளனின் வீரதீரக்கதைகளைக் கேட்பதுமாக இவரது உள்ளுணர்வுகள் ஈழாளனையே(எல்லாளன்) சுற்றிச்சுழன்று உவகைகொள்ளும் வேளையிலேயே புதியகரு இவரின் வயிற்றில் உருவானது.

1954ம் ஆண்டு ஆரம்பமாதங்களில் உருவாகிய அக்கருவே 2011ம் ஆண்டு ஆரம்பமாதங்களில் இக்கட்டுரையை எழுத எனக்கு ஏதுவானது. அக்கருவே 1954 கார்த்திகை 26ம் திகதி இணுவில் மகப்பேற்று நிலையத்தில் பிரபாகரன் என்னும் தெய்வீகக் குழந்தையாக ஜனனமானது. ஈழாளனின் நினைவில் பிறந்த அக்குழந்தைக்கு என்னபெயர் வைக்கலாம் எனக் குடும்பத்தினர் சிந்தித்தபோது தந்தையார் வேலுப்பிள்ளை சிவனையும் விஸ்ணுவையும் இணைத்து மூத்தமைந்தனின் மனோகரன் என்னும் பெயரின் தொடராக அரிகரன் என பெயரைக்கூறினார். குழந்தையின் தாய்மாமன் வேலுப்பிள்ளையோ சூரியதேவனின் பெயரான ‘பிரபாகரன்’ எனப் பெயரைச் சூட்டினார்.

பார்வதியம்மாவின் தந்தையாரான வல்லிபுரம் போல் தோற்றமளித்த அக்குழந்தையினை தாய்வழிப்பேத்தியான சின்னம்மா தனது கணவரின் அழைபெயரான ‘துரை’ என கொஞ்சலாக அழைக்கமுற்பட்டார். அதுவே அக்குழந்தையின் வீட்டுப் பெயராக மாற்றமடைந்தது. மனோகரன், பிரபாகரன் என்னும் இனிய சந்தங்களினால் இணையும் பெயர்கொண்ட குழந்தைகளுடன் முன்கூறிய ஜெகதீஸ்வரி மற்றும் வினேதினி என்னும் பெண்குழந்தைகளுடனும் மேலும் பதினொருமாதங்கள் அநுரதபுரத்தின் ஏலாளசோணாவில் இவர் வாழ்ந்திருந்தார். 1955 ஒக்டோபர் மாதம் கணவரான வேலுப்பிள்ளை உத்தியோக இடமாற்றம் காரணமாக புத்தளத்திற்கு மாற்றலாகிச் சென்றார்.

அக்காலத்தில் ஒருவயது பிரபாகரன் மற்றும் மூன்று குழந்தைகளுடனும் தாயார் சின்னம்மா சகோதரன் வேலுப்பிள்ளை என்பவர்களுடன் கூட்டுக்குடும்பமாக வல்வெட்டித்துறை ஆலடியில் பார்வதி அம்மாவின் வாழ்கை இனிதாகத் தொடர்ந்தது. விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் கணவர் வேலுப்பிள்ளை எப்பொழுதும் குறும்புசெய்யும் குழந்தை பிரபாகரன் மற்றும் குழந்தைகளும் வீட்டு வேலைகளினை முன்னெடுத்துச் செய்யும் அன்னையாரும் என பார்வதிஅம்மாவின் அக்காலம் மிக இனிமையானது.

1958இல்; வேலுப்பிள்ளை அப்பாவிற்கு மட்டக்களப்பிற்கு மாற்றம் கிடைத்தது. மீண்டும் குடும்பத்துடன் பார்வதியம்மா மட்டக்களப்பில் குடியேறினார். தாமைரைக்கேணி குறுக்குவீதீயில் 7ம் இலக்க வீட்டில் நான்குவயது பிரபாகரனுடன் பார்வதிஅம்மா குடிபுகுந்தார். இக்காலத்தில் தமதுவீட்டின் பின்புறம் குடியிருந்த ஆசிரியையான இராசம்மா என்பவருடன் மிகவும் நட்பாகப்பழக ஆரம்பித்தார். வெலிமடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் ஆசிரியையாக பணியாற்றியவர் இராசம்மா என்ற அன்னப்பாக்கியம் ஆவார்.

அதே பாடசாலையில் பணியாற்றியவர் இவரது கணவரான அரியக்குட்டி செல்லத்துரை ஆசிரியராவார். இவர் மட்டக்களப்பு ஆரையம்பதி 2ம்குறுக்குவீதியை பிறப்பிடமாகக் கொண்டவர். தாமரைக்கேணியைச் சேர்ந்த நல்லையா முதலியாரின் மகளான இராசம்மா என்ற அன்னம்மாவை மணமுடித்து தாமரைக்கேணியை தமது வாழ்விடமாகக் கொண்டிருந்தார்.

குழந்தையான பிரபாகரன் வளரும் பருவத்திலேயே இராசம்மாவுடனான பார்வதி அம்மாவின் அன்பானநட்பும் வளர்ந்து கொண்டது. இந்நிலையிலேயே 1958ம்ஆண்டு மே 25ந் திகதி மட்டக்களப்பு பதுளைவீதீயில் தொடங்கிய இனக்கலவரம் நாடளாவிய ரீதியில் தமிழினப்படுகொலையாக மாற்றமடைந்து. இலங்கையின் இனக்குழும வரலாற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய இக்கலவரம் நடைபெற்று 57 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதன் பாதிப்புக்கள் இன்றுவரை தொடரவே செய்கின்றன. ‘பண்டாரநாயக்கா அரசாங்கம்’ தமது அதிகாரத்தினால் கட்டுப்படுத்த அல்லது தடுத்து நிறுத்த மறுத்ததனால் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்திய இக்கலவரத்தின் ஆரம்பம் நிச்சயமாக இனப்பகையல்ல.

1958ம் ஆண்டில் நுவரெலியாவின் முன்னால் மேயரான செனிவிரட்ணா என்பவர், தமது பதவியை கைவிட்டுவிட்டு மட்டக்களப்பில் தென்னந்தோட்டம் ஒன்றைக் கொள்வனவு செய்து அங்கேயே வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் அங்கிருந்த உள்ளூர்ப் பெண்ணொருத்தியுடன் இவருக்கு தகாதஒழுக்கம் உருவாயிற்று. இதனால் இவர் மீது பகமைகொண்ட அப்பெண்னின் கணவர் 25 மே 1958 இல் செனி விரெட்ணாவை சுட்டுக்கொன்றுவிட்டார். 26 மே 1958 இல் இவரது உடலை பதுளை வீதிவழியாக நுவரெலியாவிற்கு எடுத்துச்செல்லும் பாதையிலேயே ‘சிங்களவனை தமிழன் கொன்றுவிட்டான்’ எனப் பரவியசெய்தி தமிழர்களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலையாக மாற்றமடைந்தது.

இக்காலத்தில் 27 மே 1958 இல் செவ்வாய்க்கிழமை வெலிமடையில் இருந்து பதுளைவழியாக மட்டக்களப்பிற்கு தனது நண்பர்களான வேலுச்சாமி மற்றும் தங்கவேல் என்பவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த செல்லத்துரை ஆசிரியர் ‘மகாஓயா’ என்ற இடத்தில் சிங்கள இனவெறியரால் கொல்லப்பட்டார். இதன்பின் எப்படியே மட்டக்களப்புக்கு தப்பிவந்த ஆசிரியையான இராசம்மா மட்டக்களப்பிலேயே தனது ஆசிரியத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டார். இதனால் பார்வதிஅம்மா மற்றும் இராசம்மாவின் அந்நியோன்னியம் அதிகமாகியது.

அதேவேளை கணவனை இழந்ததனால் பலசிக்கல்களை எதிர்நோக்கிய இராசம்மாவின் கதைகளை அமைதியாகச் செவிமடுத்து அவருக்கு ஆறுதல்கூறி உதவிகள் புரிவதில் பார்வதியம்மா நிறைவடைவார். இராசம்மா என்னும் அப்பெண்னின் கதைகளை தாயுடன் இருந்து சிறுவன் பிரபாகரனும் கேட்பார். இவ்வாறே அவரின் சிறுவயதில் இராசம்மாவினாலும் தாயாரான பார்வதி அம்மாவாலும் விதைக்கப்பட்ட இவ்விதைகளே அநாதரவான நிலையில் சிங்கள இனத்தினரால் படுகொலை செய்யப்படும் ஈழத் தமிழர்களக்கு சிங்கள இனத்திடம் இருந்து சலுகைகள் பெறுவதைவிட விடுதலை பெறுவதே தீர்வாகலாம் என்னும் உணர்வு அவரின் மனதில் மையம்கொள்ள காரணமாயிற்று. (தினக் குரல் வாரஇதழ் 26 நவம்பர் 2004)

மட்டக்களப்பில் பார்வதி அம்மாவுடன் சிறுவன் பிரபாகரன் வாழ்ந்த இக்காலத்தில் அவரிடம் குடிகொண்ட இவ்விடுதலை உணர்வே பின்னாட்களில் ஈழத்தமிழருக்கான தனிநாட்டிற்காக அவரை போராடத்தூண்டியது. இதனையே அவர்; 1984 பங்குனி மாதம் 11 மற்றும் 17ந்திகதிகளில் வெளிவந்த இந்தியாவின் Sun Day ஆங்கில வாரஇதழுக்கு ‘அனிதாபிரதாப்’ என்ற செய்தியாளரின் இரண்டாவது கேள்விக்கு பதிலாகக் கூறியிருந்தார். குறிப்பிட்ட இச்செவ்வி 46 கேள்விகளைக் கொணடிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில் தாயைப்போலவே மற்றவர்களின் உரையாடலை ஆழ்ந்து செவிமடுக்கும் தனயனாக சிறுவயதிலேயே தலைவர் பிரபாகரன் உருவெடுத்தார். அத்துடன் விதவைத்தாயான இராசம்மா போல் மேலும் ஈழத்தமிழ்த்தாய்மார் கண்ணீர் விடக்கூடாது அவர்களிற்காக தன்னாலான ஏதாவது உதவிகளை செய்யவேண்டும் என்ற உணர்வுடன் செயற்பட்ட தாயான பார்வதிஅம்மாவின் உணர்வுகளும் செயல்களும் அவ்வாறே மகனான பிரபாகரனையும் உந்தித்தள்ளி செயற்படத்தூண்டின என்றால் மிகையல்ல.

சிறுவன் பிரபாகரனின் மனதில் இத்தகைய உணர்வுகள் கனன்று கொண்டிருந்த காலமான 1963இல் பார்வதி அம்மா சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு திரும்பியிருந்தார். வல்வெட்டித்துறை ஆலடிப்பகுதியில் அமைந்திருந்து அண்மையில் நிர்மூலமாக்கப்பட்டு கற்குவியலாக காணப்படும் வீட்டிலேயே இவரின் வாழ்கை தொடர்ந்தது. பார்வதியம்மா வின் மூத்தமகளான ஜெகதீஸ்வரியின் பெயரில் அமைக்கப்பட்ட இவ்வீடு ‘ஈஸ்வரி வாசா’ என்னும் பெயர் கொண்டதாகும்.

வல்வெட்டித்துறைக்கு வந்த நாள்முதல் சாதாரண சிறுவர்கள் போல் காணப்பட்ட பிரபாகரனின் நாளாந்த செயற்பாடுகள், அவரின் பதினான்காவது வயதில் மாற்றமடைந்ததை முதலில் கண்டுபிடித்தும் பார்வதி அம்மாவே ஆவார். 1968ம் ஆண்டில் சிறுசிறுபோத்தல்கள் மற்றும் பால்ப் பேணிகளை எங்கிருந்தோ கொண்டுவந்து அவற்றைச் சுத்தப்படுத்தி காயவைப்பதும் பின்னர் அதனை எடுத்துச்செல்வதையும் கண்ட பார்வதி அம்மாவிற்கு ஏனென்ற காரணம் புரியவில்லை. எனினும் தொடர்ந்த நாட்களில் தீவிரவாதப்போக்குடைய சின்னச்சோதி, மற்றும் நடேசுதாசன் என்பவர்களுடன் மகனிற்கு ஏற்பட்டிருந்த தொடர்பைத் தெரிந்துகொண்டார். இதனை உறுதிப்படுத்துவது போல் சின்னச்சோதி, நடேசுதாசன் மற்றும் அவர்களை யொத்த நண்பர்களும் பிரபாகரனைத்தேடி வீட்டிற்கு வருவதும் அவரை அழைத்துச்செல்வதும் அவருடைய சந்தேகத்தை அதிகரிக்க காரணமாகியது. வவுனியா கச்சேரியில் பணிபுரியும் கணவன் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வீட்டில் நிற்கும் போது அவருடன் அன்பொழுக ஒட்டிஉறவாடும் மகன் ஏனைய நாட்களில் வீட்டில் நிற்பதை தவிர்ப்பதும் இவர் மனதில் மேலும் பல கேள்விகளை உருவாக்கியது. இதனைவிட மூத்தமகன் மனோகரனின் வகுப்புத்தோழர்களான குட்டிமணி, சின்னச்சோதி போன்றோருடனான வயதிற்கு மீறிய தொடர்பும் அன்னை பார்வதி அம்மாவின் கேள்விகளுக்கு மேலும் விடைகூறின.

எப்பொழுதும் தம்பியின் நடவடிக்கைகளை பாசத்துடன் கண்காணித்து வந்த பொறுப்புள்ள சகோதரரான மனோகரன் கூறும் செய்திகளும் இவரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தின. இந்நிலையிலேயே 1969இல் எழுச்சிபெற்ற ‘தமிழரின் சுயாட்சி’ என்னும் கோசத்துடன் மகனும் ஐக்கியமாகிவிட்டதை பார்வதி அம்மா புரிந்து கொண்டார். மேற்படி மகனின் எண்ணங்களும் செயல்களும் இவருக்கு ஆச்சரியமளித்தன. போலித்தனமான அரசியல் அபிலாசைகளை வெறுத்து எந்த அரசியல் கட்சிக்கும் எப்பொழுதுமே வாக்களிக்காமல் கடமையை மட்டுமே கண்ணாகக் கருதும் உண்மையான அரசாங்க ஊழியரான வேலுப்பிள்ளைக்கு இப்படியொரு மகனா? இதனை எப்படிக் கணவரிடம் கூறுவது? காலங்கள் கழிந்தன. மகனிடம் மாற்றமில்லை. 1970 பொதுத்தேர்தலின் பின் சுயாட்சியும் தமிழரின் ஒற்றுமைக்குள் ஒன்றாகிய அதேவேளையில் வல்வெட்டித்துறையில் ஏற்பட்ட கூட்டணி அலையுடன் ‘தமிழரின் விடுதலைக்கு தமிழீழமே தீர்வு’ என்ற அரசியல் விழிப்புணர்வும் அந்த மண்ணில் வளர ஆரம்பித்தது. பெரிய தந்தையார் சண்முகம்பிள்ளை ஞானமூர்த்தி வீட்டில் கூட்டணியாகக்கூடும் கூட்டங்களுடன் மகனும் ஐக்கியமாகி விட்டதனை அறிந்துகொண்டார். படிக்கவேண்டிய வயதில் எதற்காக இப்படி செல்லமகனின் சிந்தனையில் மாற்றம் வராதா?

1970 டிசம்பரர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் தேற்றியபின் மகனின் செயல்களில் மேலும் வேகம்கூடியது. 1971 ஜனவரியில் வேம்படியில் கட்டப்பட்டிருந்த அன்றைய கல்வி அமைச்சரான பதியுதீன் முகமட்டின் கொடும்பாவியில் காணப்பட்டது காக்கிநிறக்காற்சட்டை கேள்விப்பட்டவுடன் தேடிப்பார்த்தார் தங்கள்வீட்டில் இருந்ததே. சுதந்திரகாலம் முதல் வல்வெட்டித்துறையில் எப்பொழுதும் காணப்பட்ட அரச எதிர்ப்புணர்வும் 1970 பொதுத்தேர்தலின் பின் இலங்கை அரசியலில் ஏற்பட்டமாற்றங்களும் தமிழ்மாணவர் மீதான தரப்படுத்தலும் தனது மகனிலும் மாற்றங்களை ஏற்ப் படுத்தியதைப் புரிந்துகொண்டார். மூத்தவன் மனோகரனுடன் இணைந்து ஓய்வுநாளில் வீட்டிற்குவந்த கணவனிடம் விளக்கமாகக் கூறினார்.

தமிழருக்கான அரசியல் சித்தாந்தங்களுடன் விளங்கிய தமிழர்கூட்டணி ஸ்தாபகர் ஞானமூர்த்தி அப்பா வீட்டில் 1971 மார்ச் மாதமளவில் பிரபாகரனைக் கண்டுகொண்ட தந்தையிடம் ‘என்னை என்வழியில் விட்டுவிடுங்கள். நான் தமிழ் இனத்திற்காக போராடப்போகின்றேன்’ எனக்கூறிய மகனிற்காக தாய்மனம் வேதனைப்பட்டது. சிறுவன் விபரம் புரியாமல் விளையாட்டுத்தனமாக கூறினானா? ஏது செய்யலாம்? ஆனால் தொடர்ந்த நாட்களில் மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போயின. ஆயுதம் வாங்க அலைந்த மகனின் செயல்கள் மேலும் வியப்பை அளித்தன. வவுனியாவில் தந்தையுடன் தங்கியிருந்த மகன் பாடசாலைக்கும் செல்லாமல் தந்தையிடமும் கூறாமல் 1971 செப்டெம்பரில் ஊருக்கு திரும்பிவந்தது. பொறுக்கமுடியாமல் ஒருநாள் மகனிடம் நேரடியாகவே கேட்டார்? நாலு மொட்டையர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்யமுடியும்? நாலுமொட்டை நாளைக்கு நாற்பது மொட்டையாகும். நாற்பது மொட்டையும் பின்னர் நானூறு மொட்டையாகும். சிரித்துக்கொண்டே மகன் கூறியது அன்னையை சிந்திக்கத் தூண்டியது. மகனை மாற்றமுடியாது. மகனின் உறுதியில் முடிவுகண்டார். மகன் வீட்டிற்கு வருவது குறைந்தது. மீண்டும் ஒருநாள் அவன் வந்தபோது காலில் எரிகாயம் அம்மாவின் மனது துடித்தது. ஆனாலும் அது மகனிற்குள் எரிந்து கொண்டிருக்கும் அந்தவேட்கை. தமிழினத்தின் விடுதலையில் மகன் கொண்டிருக்கும் காதலின் அடையாளம் என முடிவுசெய்தார். மகனை அவன் வழியில் விட்டுவிடுவோம்.

விளைவு 1973 மார்ச் மாதம் 22ந் திகதி பகலில் மகனைத்தேடி பொலிசாருடன் வந்த பெயர்தெரியாத நண்பனும் (சிறிசபாரத்தினம்) 23ந்திகதி அதிகாலை வீட்டைச் சல்லடை போட்டுத் தேடிய சி.ஐ.டி பொலிஸ் அதிகாரியான பஸ்தியாம்பிள்ளை குழுவினரும் தனது ஆசைமகனைத்தான் தேடிவந்தனர். புரிந்து கொண்டார்! மகன் இனிமேல் எப்பொழுதும் வீட்டில் உறங்க முடியாது. அதுசரி இரவு சினிமா பார்த்துவிட்டு உறங்கச்சென்ற மகன் அதிகாலை பஸ்தியாம்பிள்ளை வந்தபோது எங்கே போனான்? எப்படிப்போனான் மனது அலைபாய்ந்தது. அன்று முதல் மகன் வீட்டிற்கு வரவில்லை. ஆனால் பொலிசார் அடிக்கடி வந்தார்கள். அவர்கள் இவ்வாறு வருவது பார்வதி அம்மாவிற்கு பிடித்திருந்தது. காரணம் மகனைப்பிடிக்க முடியாது அவர்கள் தவிக்கின்றனர். பெருமிதம் கொண்ட மனதுடன் வருபவர்களை எதிர் கொள்ளத்தயாரானார். நாட்கள் நகர்ந்தன. நாற்பத்திரண்டு நாட்களின் பின் அலைகடலை தாண்டிவிட்டான் மகனென்ற சேதிவந்தது. மகனுடன் சென்று வேதாரணியத்தில் விட்டுவிட்டு வந்த ‘மோகன்’ இற்கு மனதாலே நன்றி சொன்னார் அமைதி கொண்டார். மகனிற்கு இனி ஆபத்தில்லை, ஆனால் பஸ்தியாம்பிள்ளையும் அவன் பரிவாரங்களும் தொடர்ந்து வந்தார்கள் தொல்லை கொடுத்தார்கள். பார்வதி அம்மா பயப்படவில்லை. ஏனெனில் மகனில் இருக்கும் பயத்தினால்த்தானே அவர்கள் வருகின்றார்கள். பயத்தினால் வருபவர்களைப்பார்த்து பயங்கொள்ளலாமா?.

1975 சித்திரை மாதத்தில் தம்பி வேலுப்பிள்ளை கூறினார். உனது மகன் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றான். துள்ளிக்குதிக்கும் சந்தோசத்தில் மகனைப்பார்கத் துடித்தார். ஆனால் மகன் இப்பொழுதும் வீட்டிற்கு வரவில்லை. ஆடி மாதம் வந்தது. மாதம் முடியுமுன்னே 'துரையப்பா கொலை' என்ற சேதியுடன் வந்தது, ஆவணி மாதம். பஸ்தியாம்பிள்ளை பயங்கரகோபத்தில் அடிக்கடிவந்தார். எங்கே உனது பிள்ளை? கேள்வியும் அவரே கேட்பார். எப்படியும் பிடித்துக்காட்டுகின்றேன் பார்! பதிலும் அவரே தருவார். இப்பொழுது தாமோதரம்பிள்ளையும் வரத்தொடங்கினார். வாலிபனான மகன் தமிழரின் நல்வாழ்விற்காக தனதுவழியில் நடக்கத் தொடங்கிவிட்டான். மகனிற்காக மனது பிராத்திற்கத் தொடங்கியது. செல்லுமிடமெல்லாம் கோயில்களில் மகனிற்காக அர்ச்சனை. தனக்காக எதையும் வேண்டாது மகனிற்காக வேண்டுவதே தாயுள்ளம். அதன் அடையாளம் பார்வதி அம்மாவின் செயல்களே.

துரையப்பாவில் தொடங்கியது துரிதமாக வளர்ந்தது. எங்கும் ‘புதிய புலிகள்’ பற்றிமக்கள் பேசத்தொடங்கினர். யாழ்ப்பாணத்தில் துரையப்பா, கொழும்பில் கனகரட்ணம். தமிழினத் துரோகிகளிற்கு தொடரான பரிசுகள். அரண்டுபோனது சிங்கள அரசு. பஸ்தியாம்பிள்ளைக்கு புதிய பொறுப்பு. பார்வதி அம்மாவின் பிள்ளையை வேட்டையாட வெறிகொண்டு அலைந்தார். அடிக்கடி ஆலடி வீட்டிற்கு வந்து மிரட்டிப் பார்த்தார். வாசல்படியிலே இருந்து பவ்வியமாகவும் கேட்பார். எப்படியோ ஒருநாள் அவரும் வேட்டையாடப்பட்டார். விடுதலைப்புலிகள் வெளிச்சத்திற்கு வந்தனர்.

சிறுவன் பிரபாகரன் ஏறி விளையாடிய ‘உயிரற்ற புலிப் பொம்மை’ பார்வதி அம்மாவின் வீட்டிற்குள் பலவருடங்களாக அசைவின்றியே நின்றிருந்தது. எப்படியோ வெளியில் வந்து வல்வெட்டித்துறை பொலிஸ்நிலையத்திற்குள் சென்றது. ஆரியபாலாவிற்கும் அதனோடு விளையாட ஆசைபோலும். விடுதலைப் புலிகளின் உயிராய் இருந்த பிரபாகரனைப் பிடிப்பதற்குப் பதிலாக அவருடைய விளையாட்டுப் புலியை பிடித்ததில் ஆரியபாலாவிற்கு ஏதோ பெருமை. வல்வெட்டித்துறைக்கு வந்த நாள் முதலாய் அவரும் அடிக்கடி வரத்தொடங்கினார். பொறுப்பதிகாரி அல்லவா? மேலிடத்துக் கட்டளை எதுவோ? ஆனால் மென்மையாகக் கதைப்பார். அதிலே மிரட்டலும் இருக்கும். பதகளிப்பில்லா பார்வதி அம்மாவிற்கு இவைகள் பழகிப்போன விடயங்கள். அதனால் வாசல்படியில் நின்றே பதிலைக்கொடுப்பார். எத்தனை நாள்தான் இப்படி நடக்கும். ஒருநாள் ஆரியபாலாவால் அழைத்துச் செல்லப்பட்டார் பார்வதி அம்மா. வீட்டினில் வெடிமருந்து இருந்ததாக குற்றச்சாட்டு மறுநாள் வரையும் பொலிஸ் நிலையத்தில் அன்னை. மகனிற்காக கோயில்களில் தெய்வங்களின் அனுக்கிரகத்தை வேண்டிய அம்மா அதே மகனிற்காக இரவு முழுக்க பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். மகனிற்காக தாயை வருத்தியது அதிகாரம் அசைந்து கொடுக்கவில்லை பார்வதி அம்மா. ஏனெனில் அவருக்கத்தானே தெரியும் பிரபாகரன் தனது மகனல்ல, அவன் தமிழ்த்தாயினுடைய மகனென்று. தன்னைப் பிடித்து அடைத்துவைத்தால் அம்மா என அவன் வருவானா? அலட்சியமாகவே அன்றைய இரவைக் கழித்தார். அடுத்தநாள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டமும் புலித் தடைச்சட்டமும் அன்னைக்கு முன்னால் அகங்காரம் கொண்டன. இராசாயனப் பகுப்பாய்வுக்கு வெடிமருந்து செல்ல அம்மா வீடுவந்தார். ஓரிருவாரங்களில் ஆபத்தற்ற இராசாயனப் பொருள் என பயங்கரவாதச் தடைச்சட்டம் வாலைச்சுருட்டிக் கொண்டது. இதன்பின் வீட்டிற்கு உறவினர் கூட வருவதில்லை. எனெனில் எந்தக்கணத்திலும் ஆயுதப்படைகள் வரலாம். ஆனால் தனித்திருந்தாலும் பார்வதியம்மா மட்டும் பயப்படுவதில்லை.

எப்படி எப்படியோ நாட்கள் நகர்ந்தன. 1983 ஆடிக்கலவரத்தின் பின்னர் ஒருநாள் வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் வீட்டை தீயிட்டுக்கொழுத்தினர். எல்லாம் எரிந்து போயின. எரியுண்ட பொருட்களிடையே எரியாத ஒரேயொரு பொருள் ‘யாமிருக்கப் பயமேன்’ அபயம் அளிக்கும் முருகனின் திருவுருவம் கொண்ட கட்டம் போட்ட கண்ணாடிப் படம். மகனை நினைத்தார். இருவரும் ஒருவரா? இருப்பதற்கு ஏதுவான இடமின்றி பல இடம் அலைந்தாலும் இறுதியில் அபயம் அளிக்கும் முருகனின் கந்தவன மடத்திலே வாழ்கை. நாடுமீட்கப் புறப்பட்ட மகனால் இருந்த வீட்டையும் இழந்து அலைந்த பெற்றோர்கள் ஏதேச்சையாக நடந்ததா? அல்லது இறைவன் கட்டளையா? இவர்கள் இருந்த மடத்திற்கு சிலநூறுயார் தூரத்தில் மகனின் மறைவிடம் அறியாத பெற்றோர் அறிந்தபோது மகன் அலட்டிக்கொள்ளாமல் கூறினார். ‘அவர்கள் மடத்திலே. நான் றோட்டிலே. நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்’ நண்பர்கள் திகைத்தார்கள். பாரதத்தில் கண்ணன் சொன்ன பகவத்கீதை, ‘எதிரேபார் உறவினர்களா? கவலைப்படாதே! வில்லை எடு, அம்பைத் தொடு’. இங்கே அண்ணன் சொன்னதை நண்பன் சொன்னபோது என் வார்த்தைகளிற்கு சக்தியில்லை. இதற்கு ஏற்றவொரு வசனத்தை என்னால் அமைக்கமுடியாது.

1983இன் இறுதியில் ஈழத்தில் வாழமுடியாது தமிழ்நாட்டிற்குப் பயணம். பத்திரிகைகளில் படமாய்வரும் மகனைப்பார்த்து தினமும் பரவசம். திருச்சியில் நடந்த கண்காட்சியொன்றில் எத்தனைவிதமாய் எத்தனை பெரிதாய் மகனின் படங்கள். அத்தனையும் கலர்கலராய் அப்பப்பா! பன்னிரண்டு வருடங்களின் முன்னால் வீட்டில இருந்த மகனின் ஒவ்வொரு படத்தையும் மகனே அழித்ததை நினைத்துப் பார்த்தார். ஆச்சரியம் அளவு கடந்தது. ‘தம்பி’ என அழைத்தவர்கள் போய் இப்பொழுது ‘தலைவர்’ என அழைக்கின்றார்கள், நெஞ்சுநிறைந்தது. ஆனாலும் நேரேபார்க்க தாய்மனம் தவித்தது.

1986 செப்டெம்பர் மாதம் தம்பி வேலுப்பிள்ளையின் மகளின் திருமணத்தில் அப்படியொரு எதிர்பாராத இனியசந்திப்பு! மகன் வருவானா? என்றொரு எதிர்பார்ப்பு. அப்படியே கொஞ்சி விளையாடும் பேரன் சார்ள்ஸைக் கொண்டுவந்தாள், முன்னே வந்த மருமகள் மதி. கணவன் வேலுப்பிள்ளையை கேட்காமலேயே அள்ளிஎடுத்தார் பார்வதி அம்மா. யாருக்கும் கோபமில்லை. தந்தையுடன் கதைத்தபின் தாயுடன் மைந்தன் அளவளாவினான்; அன்புசொரிந்தான். அவனே இப்போது தந்தையாகி விட்டான் அல்லவா! பதின்மூன்று வருடங்களுக்கு பின்னர் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? கொண்டாட்டம், குதூகலம், அன்பான அரவணைப்பான பேச்சுக்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தீர்ந்த நிம்மதியான நாட்கள்.

1987ம் ஆண்டு ஆரம்பநாட்கள். ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ தனயனின் நம்பிக்கை வீண்போகவில்லை. தமிழகத்தில் இருந்த தமிழீழத்திற்கு களம்காண சென்றுவிட்டார். என்னவோ ஏதோ தாய்மனது தவித்தது. அதுபோலவே வடமராட்சியில் சிங்கள இராணுவத்தின் 'விடுதலைச்சிகிச்சை டாக்டர்' டென்சில் கொப்பேகடுவா. மயிரிழையில் தப்பினார் மகன் என்ற செய்தி. மகனைப்பார்க்க மனசு துடித்தது. எப்படி முடியும்? இந்திய அரசின் விருப்பமென்று கூறி டில்லிக்கல்லவா தந்திரமாக அழைத்துச்சென்றனர். அசோகா விடுதியில் நாலைந்து நாட்கள் அடைக்கப்பட்டார் மகனென்ற சேதி கசிந்தது. மனது வலித்தது. இங்கேயும் பிரச்சனை ஆரம்பமானதா? ஒப்பந்தம் ஒன்று இலங்கையில் நடந்ததும் இரண்டுநாட்களின் பின் அவசர அவசரமாக சென்னைக்குத்திரும்பிய மகனை சிலநிமிட நேரங்கள் வாஞ்சையுடன் பார்த்தார். வேகம்விரைந்தது பேச முடியவில்லை. டெல்லியின் பிரச்சனை யாழ்ப்பாணத்தில் மீண்டும் போர்தொடங்கியது. சிங்கள இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவத்தினர். ஜேயார் சிரித்துக்கொண்டிருந்தார். மகனைப்பற்றிய செய்திகள் தொடர்ந்தன. இறுதியில் மணலாற்றுக்காட்டில் நித்திகைக்குளத்தில் முற்றுகையாம். கலங்கவில்லை அன்னையிவள். மகனோ முன்வைத்தகாலைப் பின்வைக்கவில்லை. 1990ம் ஆண்டு இந்திய இராணுவம் திரும்பி ஓடியது. அது வந்தபோது இருந்ததைவிட சென்றபோதே எல்லைகள்விரிந்தன. ஈழத்தில் மகனின் நேரடி ஆட்சி திருச்சியில் அன்னையின் சிக்கனவாழ்க்கை. எப்பொழுதும் மகனைப்பற்றியே சிந்தனை.

தனயனைக் கண்டு புன்னகை கொண்டாள்.

காலங்கள் நகர்ந்தன. 2000ம் ஆண்டு பார்வதி அம்மாவின் கால்கள் மட்டும் நகரமறுத்தன. ஆரம்ப பாரிசவாதமென மருத்துவர் கையைவிரித்துவிட்டார். மகனின் தந்தையே தாய்க்குத் தாயும் தந்தையுமானார். வேலுப்பிள்ளை அப்பாவின் மனைவி வேலுப்பிள்ளை அப்பாவிற்க்கு பிள்ளையுமானார். அன்பான அவரின் பாராமரிப்பில் தாய் தமிழ்நாட்டின் முசிறி யில் அகமகிழ்ந்திருக்க மைந்தனோ! ஓயாத அலையாய் ஈழத்தில் களமாடினான். வெற்றிகள் குவிந்திட ஆனையிறவும் அடிபட யாழ்பாணத்திற்குள் மீண்டும் புலிகள் புகுந்தனர். அகில உலகமும் விழித்துக் கொண்டது. கூடிப்பேசி கொள்கை வகுத்தன. முதுகில்குத்தவே முக்காடுபோட்டன. கொழும்பிற்கு இணையாக கிளிநெச்சிக்கும் உலக இராஜதந்திரிகள் என சொல்லிக்கொண்டு ஓடித்திரிந்தனர். போர் நடந்த பூமிக்கு ஓய்வுநாள் வந்தது. ‘ஓயாத அலைகள்’ ஓய்ந்துகொண்டது.

2003ம் ஆண்டு மே மாதம் இறுதிவாரம் எப்படியோ அன்னை தாயகம் வந்தாள். தனயனைக்கண்டு புன்னகை கொண்டாள். முப்பதுவருட அன்னையின் தவம் முழுமைபெற்றது. தடைகளும் தகர்ந்தன. மகன் பிரபாகரன் பார்வையில் பார்வதி அம்மா வாழ்ந்தார். மகனின் பாசத்தின் முன்னால் பாரிசவாதம் தன்வலி இழந்தது. அன்னையின் நோயை எங்கள் மன்னவன் தீர்த்தான். முன்னைநாள் தான் கொண்ட ஆயுதக்காதல் அன்னைக்கு பிடிக்குமா தந்தைக்குப் பிடிக்குமா? தாய்தந்தையின் முன்னால் வெறும்கையுடனே மகன் போவான். மகனிடம் தாயைச் சேர்த்ததால் தந்தையும் மகிழ்ந்தார்.

ஆறுவருடங்கள் எப்படிப்போனதோ?

சர்வதேசத்தின் சூழ்சிவலையில் சின்னஞ்சிறு தமிழர்தேசம் சிக்கிக்கொண்டது. வன்னியின் வான்பரப்பில் வல்லூறுகளின் வட்டம் ஓடிஒதுங்க இடம் இன்றி ஓடும் மக்கள். யாருக்கு யார்தான் காவல். பிணங்களின் மேலே இன்னொருபிணமாய் யார் யாரோ சரிந்தனர்? மக்களைப்பிரியா மன்னவனும் மன்னனைப் பிரியா அன்னையிவளும் சொற்களால் இங்கே சொல்லமுடியாது. அத்தனை கனமாய் சொல்லேது? அன்னையும் தந்தையும் மைந்தனைப் பிரிந்தனர்.

2009 ஆண்டு வைகாசிமாதம் 16ம் நாளில் வட்டுவாகல் பாலத்தை கடந்தனர், பெற்றோர். மெனிக்பாம் முகாமில் ‘பிரபாகரனின் தந்தை நான்தான்’ கணவன் வேலுப்பிள்ளையின் வெண்கலக்குரலின் பின்னால் பார்வதி அம்மா மெதுவாகத்தான் சென்னார். ‘நான்தான் அன்னை’. பரபரத்த இராணுவம் அன்னையையும் அப்பாவையும் பனாகொடைக்கு கொண்டுபோனது! ஏழுமாதங்கள் எப்படிப்போனதோ? காராக்கிருகத்தில் கண்தெரியா இருளில் கட்டியநாள்முதல் கண்ணான கணவனுடன் கைபிடித்த இவரும். யாருக்கும் தெரியாது? எங்கே இவர்கள்? உலகம் முழுக்கக் கேள்வி பிறந்தது. விடையாய் வந்தது அந்தச் செய்தி. பனாகெடை முகாமில் காலனின் அழைப்பில் வேலுப்பிள்ளை அப்பா! அப்படியானால் பார்வதி அம்மா எங்கே? செத்தும்கொடுத்த ‘சீதக்காதி’ வேலுப்பிள்ளை அப்பா! பார்வதி அம்மாவுடன் வெளியேவந்ததும் மீண்டும் வல்வெட்டித்துறையில்…

…பிறந்தமண்ணில் இந்திராணி வைத்தியசாலையில் பார்வதி அம்மா… சிறுநடை நடந்தமண்ணில் இன்று சிந்தனைமறக்கும் பார்வதி அம்மா உங்களை எழுத என்னால் முடியாது.

 

நன்றியுடன்,
அன்புள்ள அம்மாவின் நினைவில்,
வருணகுலத்தான்.

(10 மாசி, 2011)

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

திருவேங்கடம் வேலுப்பிள்ளை 

 

 

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் 

10/01/1924 -- 06/01/2010

 

 

எழுத்தாக்கம் - சிவவதனி பிரபாகரன் | 6 சனவரி 2013

 

இந்த ஆண்டு தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம்.

இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை.....

யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும்.

வல்வெட்டித்துறை என்னும் பெயர் அப்பிரதேசத்துக்கு வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இலங்கையை ஆண்டபோது `வெல்வெட்` என்னும் ஒரு வகை துணி அப்பிரதேசத்தில் இருந்த ஒரு துறைமுகம் மூலமாக ஏற்றுமதியானது.

வெல்வெட் + துறை தான் பிற்காலத்தில் மருவி வல்வெட்டித்துறையானது.

வல்வெட்டித்துறையில் வசித்த பெரும்பாலான மக்களின் பரம்பரைத் தொழிலாகவிருந்தது மீன் பிடியாகும். ஆனாலும் அங்கிருந்த மக்களில் சிலருக்கிருந்த கடல் பற்றிய அறிவு காரணமாக தூர நாடுகளுக்கான கப்பல் பயணத்தின் மாலுமிகளாகவும் செயற்பட்டனர். ஆரம்பகாலத்தில் கடத்தலுக்கும் பெயர் போன ஒரு ஊர் அது. ஆனாலும் கெடுவாய்ப்பாகவும் நியாயமற்ற வகையிலும் வல்வெட்டித்துறை கடத்தலுடன் மட்டுமே தொடர்புபடுத்தி பேசப்பட்டது.

வல்வெட்டித்துறையும் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளைப் போன்றே பெரும் எண்ணிக்கையிலான கல்வியாளர்களையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் உருவாக்கிய ஒரு ஊராகும்.

அவ்வாறாக வல்வெட்டித்துறையில் மிக்க சிறப்போடு வாழ்ந்த ஒரு குடும்பம் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையினதும் அவரது மூதாதையர்களினதும் குடும்பமாகும்.

`திருமேனியார் குடும்பம்` என்றுதான் வேலுப்பிள்ளை அவர்களது மூதாதையர்கள் வழி வந்தவர்களை மரியாதையோடு அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள்.

வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் வேலுப்பிள்ளையின் தந்தை வழி வந்த குடும்பத்தினர்தான். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் தான் கட்டப்பட்டது.

பிரபாகரனின் மூதாதையர்களே சிவன் கோயிலை கட்டுப்படுத்தி வந்தவர்கள் என்ற காரணத்தால் எசமான் குடும்பம் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல் வழியாகப் இந்தியாவின் கடற்கரையை அண்டிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தவர்.

இடச்சுக்காரர்கள் (ஒல்லாந்தர்) இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பல மடங்கு பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். அத்துடன் ஒரு கொடை வள்ளல்.

அந்தக் காலத்தில் விவசாயக் காணிகளையும் பெரும் பண்ணைகளையும் சொந்தமாகக் கொண்டவர். அப்படியான ஒரு 90 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்தது. இங்குதான் புலிகளும் இராணுவத்தினரும் இறுதிப்போரில் மோதிக் கொண்டனர் என்பது மிகவும் அதிசயத்தக்க ஒரு நிகழ்வு.

அவரை வல்வெட்டித்துறை மக்கள் `பெரிய தம்பி` என்று அன்போடு அழைப்பார்கள். 1822ல் வெங்கடாசலத்தின் மறைந்த தந்தை வேலாயுதம் ஒருநாள் அவரின் கனவில் வந்து சிவனுக்காக ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே அந்தக் குடும்பத்துக்கு பிள்ளையார் மற்றும் அம்மன் கோயில்களுடன் தொடர்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து அதை தனது வைராக்கியமாகவே கொண்டிருந்தார் அவர். சிறிது சிறிதாக கோயில் கட்டுவதற்கான பணத்தைச் சேர்க்கத் தொடங்கினார். விரைவிலேயே பெருந்தொகைப் பணத்தைச் சேர்த்துவிட்டார்.

முதன் முதலாக அம்மன் கோயிலுக்கு அருகாக 60 `பேர்ச்` அளவு கொண்ட காணி ஒன்றை வாங்கினார். தான் கொண்ட வைராக்கியம் காரணமாக அன்றிலிருந்து சிவன் கோயில் கட்டி முடியும்வரை தன் உடம்பில் மேலாடை உடுத்தாமல் ஒரு தவம் போன்று இருந்த காரணத்தால் `திருமேனியார்` என்று அவரையும், `திருமேனியார் குடும்பம்` என்று இவருடைய சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.

வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து. அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் `திருமேனியார்` வெங்கடாசலம்!

வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். அத‌னால் அவர்களது குடும்பமே அந்தக் கோயிலின் பரம்பரை சொந்தக்காரர்களாகவும் தர்மகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

ஒருவாராக 1867-ம் ஆண்டு சிவன் கோயில் கட்டப்பட்டு அந்த ஆண்டே குடமுழுக்கும் செய்யப்பட்டது.

வெங்கடாசலமும் அவரது சகோதரர் குழந்தைவேல்பிள்ளையும் சேர்ந்து கொழும்பு செக்குத் தெருவிலும் கீரிமலையிலும் ஏன் பர்மியத் தலைநகர் ரங்கூனிலும் கூட கோயில் கட்டினார்கள்.

வெங்கடாசலத்தின் மகனின் பெயரும் வேலுப்பிள்ளை தான். இந்த வேலுப்பிள்ளையாரின் மகனான‌ திருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. திருவேங்கடம் தனது ஒரே ஒரு மகனுக்கு தன் தந்தையின் ஞாபகார்த்தமாக வேலுப்பிள்ளை என்றே பெயரிட்டார்.

பிரபாகரனின் அப்பாவான வேலுப்பிள்ளையும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்டவராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

இலங்கையை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் இலங்கை அரசுப் பணியில் எழுத்தராகச் சேர்ந்தார் வேலுப்பிள்ளை. முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில்தான் அவர் பணி ஓய்வு பெற்றார். 1982 ல் அவர் மாவட்ட நில அதிகாரியாக ஓய்வு பெற்றபோது இலங்கையின் காணி அமைச்சராக இருந்தது காமினி திசாநாயக்காவாகும்.

அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

வேலுப்பிள்ளை தனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது 1947ல் பார்வதி அம்மாளை மணம் முடித்தார்.

வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள்.

மூத்தவர் மனோகரன் 1948ல் பிறந்தார். கப்பலில் வானொலி அதிகாரியாகப் பணியாற்றியவர். தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்.

அடுத்தவர் ஜெகதீஸ்வரி 1949ல் பிறந்தார். பின்னாளில் அப்போதிக்கரியாக இருந்த மதியாபரணத்தை கல்யாணம் செய்தார். ஐரோப்பாவில் வசித்த இவர்கள் தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கிறார்கள்.

அடுத்தவர் வினோதினி 1952ல் பிறந்தார். பின்னாளில் வர்த்தகப் பட்டதாரியான ராஜேந்திரனை கல்யாணம் செய்து கொண்டவர். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் கனடா சென்ற அவர் தற்போதும் அங்கேதான் வசிக்கிறார்.

கடைக்குட்டியாகப் பிறந்தவர் சாட்சாத் பிரபாகரனே தான். 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

இக்குழந்தையின் பிறப்பின் பின்னாளும் முன்னாளும் ஒரு பெரும் வரலாறே அடங்கிக் கிட‌க்கிறது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.

அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் - புத்தளம் பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு சமீபமாக அமைந்தது.

இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.

ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.

ஈழாளனுடைய காலமான கி.மு 145 – 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஈழம் என்னும் அடியாகப் பிறந்த பெயரே இலங்கா என்பதாகும் இதுவே பின்பு இலங்கை என தமிழில் மாற்றமடைந்தது. இங்கு குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஈழம் என்னும் இடத்தைக் குறிப்பிடும் பல தொல்லியல் சான்றுகளை INSCRIPTIONS OF CEYLON – VOLUME 1 என்னும் புத்தகத்திலும் ANNUAL RE-PORT ON SOUTH INDIAN EPIGRAPHY – VOLUME 1(1908) என்னும் புத்தகங்களிலும் நாம் காணமுடியும்.

இங்கு கூறப்பட்டவை யாவுமே 2000 வருடங்களுக்கு முற்பட்ட வையாகும். ஆரம்ப காலங்களில் முழு இலங்கையையும் குறிக்கப்பயன்பட்ட இச்சொல்லா னது இன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது பெரு வரலாறாகும்.

ஈழ” என்பதன் அடியாகப் பிறந்த “இலங்கா” என்பது முழு நாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியினையே இன்று குறித்து நிற்கின்றது.

இன்றைய உலகின் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி குறிக்கப்படுவதுபோல அன்றும் ஈழத்தில் “ஈழஊர்” என்னும் ஓரிடத்தை வரலாற்றில் நாம் காணமுடியும். இது இன்றைய பூநகரிப் பகுதியின் “வேரவில்”; எனப்படும் பகுதியாகும். அதன் அருகில் இருக்கும் குடா “ஈழவன் குடா” என அழைக்கப்பட்டது.

இவ்வாறு போர்த்துக்கேயர் காலம்வரை குறிப்பாக 1621ம் ஆண்டு இப்பகுதி ஈழ ஊர் என அழைக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் எம்மிடம் உண்டு. (THE TEMPRAL AND SPIRITUL CONQUEST OF CEYLON,FERNAO DE QUEYROZ) அநுராதபுரத்திற்கு வடக்கே இருந்து வருபவர்களை குறிக்கும் சொற்களாக சோழ, ஈழ என்பன பௌத்த இதிகாசங்களில் காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த மத இலக்கியமான மகாவம்சத்திலும் மேற்கூறிய ஈழாளனை சோழ நாட்டிலிருந்து வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலநூலான தீபவம்சத்தில் இவனுடைய பெயர் (ஈ)ஏலார எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர சோழநாட்டில் இருந்து வந்தவன் என்ற குறிப்பேது மில்லை.

இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால் இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது எல்லாளன் என மாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும் இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (Tomb) எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. “சோண” என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.

இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது. இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும். இந்நிலையில் பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.

இக்கருவே பிரபாகரனாக பின்பு அவதாரமானது. தினம் தினம் ஈழாளனுடைய அந்த நினைவுத்தூபியினைத் தரிசித்து வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு தமிழ் ஈழம் என்னும் நாட்டைஉருவாக்க முயன்ற மகன் பிறந்தது ஆச்சரியமில்லை. கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனைக் கவனமாக மிக உள்ளுணர்வுடன் பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோ அவ்வாறே குழந்தையின் உணர்வுகளும் உருவாகும் என்பது இக்கால நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு.

1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு மட்டக்களப்பிற்கு வேலையின் நிமித்தம் மாற்றல் கிடைத்தது. அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் ஈழாளனின் நினைவில் பிறந்த குழந்தையுடன் அதாவது நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினார்.

முன்பு வேறு இடத்தில் இருந்த வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இம்முறை மட்டக்களப்பு தாமரைக்கேணி குறுக்கு வீதியில் 7ம் இலக்க வீட்டில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்த வீதியில் குடியிருந்த அனைத்துக் குடும்பங்களுடனும் நல்லுறவை வைத்திருந்த இவர்கள் அமைதியானவர்கள் மற்றும் பிரச்சனை ஏதுவும் இல்லாதவர்கள் என்பதாலும் அவ்வீதியின் அனைத்து வீடுகளிலும் சிறுவனாகிய தலைவர் பிரபாகரனுக்கு நிரம்ப மரியாதை.

குறிப்பாக அவ்வீதியில் 10ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த பண்டிதர் சபாபதி என்பவர் வீட்டிலேயே சிறுவயதுப் பிரபாகரன் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டார். எதிர் எதிராக இருந்த வீடுகள் என்பதைவிட பண்டிதர் சபாபதியின் மகளான முத்துலெட்சுமிக்கு சிறுவன் பிரபாகரன் மீது அளவுகடந்த வாஞ்சை.

இளம் ஆசிரியரான அவர் பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் பிரபாகரனைத் தூக்கிச் சென்று விளையாடுவார். இவ்வாறே பாடசாலை செல்லும்வரை பண்டிதர் சபாபதியின் வீட்டில் ஆசிரியையான முத்துலெட்சுமியுடன் தனது நேரங்களை கழித்ததினால் பாடசாலை செல்லுமுன்னேயே பண்டிதர் சபாபதியிடமும் முத்துலெட்சுமியிடமும் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்துவிட்டார்.

பண்டிதர் சபாபதி என்பவர் மட்டக்களப்பு தந்த சிறந்த கல்விமான். இலக்கியவாதி. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்ற இவர் மதுரை ஆதினத்தால் கவிராஜகேசரி என்னும் பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டவர். “மாரியம்மன் மான்மியம்” மற்றும் “விடுதலை வேட்கை” போன்ற நூல்களை எழுதி வெளியிட்ட இவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்த அதிஷ்டசாலியே தலைவர் பிரபாகரனாவார்.

இவ்வாறே தமிழ்க்கவியை கசடறக் கற்ற மட்டக்களப்பு பண்டிதர் வீட்டில் மழலைமொழி பயின்ற தலைவரிடம் தமிழ் உணர்வு குடிகொண்டதில் ஆச்சரியமில்லை. இவ்வாறே வீட்டில் கடைக்குட்டியான செல்லம் முன்வீட்டில் பண்டிதர் குடும்பத்தின் செல்லம் என விளையாட்டும் பொழுதுபோக்குமாகக் கழித்தான் சிறுவன் பிரபாகரன். 1960ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு அரசடி வித்தியாசாலை (இன்றைய மஹஜனாக் கல்லூரி) தனது பாலர் வகுப்பினைப் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு மட்டக்களப் பில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் 1963லேயே தனது ஒன்பதாவது வயதில் தனது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்து சேர்ந்து வல்வெட்டித்துறை சிவகுருவித்தியாசாலையில் தனது 3ம் தரத்தினை படிக்க ஆரம்பித்தார். இந்நிலையிலேயே வெள்ளைச்சாமியால் முதன்முதலாக புரியாத புதிராக அடையாளம் காணப்பட்டார்.

இவ்வாறு மட்டக்களப்பு தாமரைக்கேணியில் குறுக்குவீதியில் பண்டிதர் சபாபதியின் 7ம் இலக்க வீட்டில் இவர்கள் குடியிருந்த பொழுது இவர்களுடைய வீட்டிற்கு பின்புறமாக குடியிருந்தவர்களே அரியகுட்டி செல்லத்துரை ஆசிரியர் குடும்பமாகும். மட்டக்களப்பு ஆரையம்பதி 2ம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு தாமரைக் கேணியைச் சேர்ந்த நல்லையா முதலியாரின் மகளான இராசம்மா என அழைக்கப்பட்ட அன்னப்பாக்கியத்தை திருமணம் முடித்திருந்தார். பீமன் என்னும் நாடக பாத்திரத்தில் முன்பு நடித்ததனால் இவரை பீமன் செல்லத்துரை என்றும் குறியீட்டுப் பெயராலும் அழைப்பர். (1999 இலும் தலைவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை இந்தக் குறியீட்டுப் பெயரையே பயன்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.)

நான்கு பெண்பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொண்ட இவர்களிருவருமே வெலிமடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகத் தொழில் புரிந்து வந்தனர்.

இந்நிலையிலேயே 1958 மே 26ம் திகதி ஆரம்பித்த அப்பாவித் தமிழர்களின் மீதான கொடூரத்தாக்குதல் வேளையில் தனது நண்பர்களான வேலுச்சாமி மற்றும் தங்கவேல் என்பவர்களுடன் வெலிமடையிலிருந்து புறப்பட்டு பதுளை வழியாக மட்டக்களப்பை நோக்கி காரில் வந்து கொண்டிருக்கும்போது மாஓயா என்னும் இடத்தில் சிங்கள இனவெறியரால் படுகொலை செய்யப்பட்டார்.

மலையகத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள வியாபாரி மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டார் எனப்பரவிய வதந்தியைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது ஆனால் நடந்த கொலை இனரீதியானது அல்ல அது தனிப்பட்டகொலை…. நடந்தது இதுதான்.

செனிவிரட்ணா” இவர் நுவரெலியாவின் முன்நாள் மேயராவார். இவர் பின்நாட்களில் அரசியலைக் கைவிட்டுவிட்டு மட்டக்களப்பிற்கு வந்து தென்னந்தோட்டமொன்றைக் கொள்வனவு செய்து அங்கேயே வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் அங்கிருந்த உள்ளூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் அவருக்கு கூடாவொழுக்கம் உருவாயிற்று. இதை அறிந்ததும் அப்பெண்ணின் கணவர் செனிவிரெட்ணாவை 25 மே 1958ல் சுட்டுக்கொன்று விட்டார்.

செனிவிரட்ணாவின் உடலை மட்டக்களப்பில் இருந்து பதுளை வழியாக நுவரெலியாவிற்கு கொண்டு செல்லும் வழியில்தான் சிங்களவனை தமிழன் சுட்டுக்கொன்று விட்டான் எனப் பிரச்சாரம் பரவியது. இதனைத் தொடர்ந்து பற்றியெரிந்த இனத்தீ தமிழர்களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலையாக மாற்றமடைந்தது.

அப்பாவித்தமிழ் மக்கள்மீதான கொடூர சிங்கள இனவெறித் தாக்குதலில் குறிப்பாகத் தெனிலங்கை நகரங்களான மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை, இங்கினியாகல, கல்லோயா போன்ற இடங்களும் பதுளை போன்ற மலையக நகரங்களுமே ஆரம் பத்தில் பாதிப்பிற்கு உள்ளாகின.

இவைகளைத் தொடர்ந்து காலி, பாணந்துறை, கொழும்பு என நாடளாவிய ரீதியில் இக்கலவரம் கோரத்தாண்டவம் ஆடியது இங்கு குறிப் பிடத்தக்கது.

1958 வைகாசி மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை இவ்வாறு செல்லத்துரை ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டபோது வெலிமடையில் அவரது மனைவியான ஆசிரியை இராசம்மா 4 பிள்ளைகளுடன் தங்கியிருந்த அவர்களது வீடு சிங்கள இனவெறியினரால் தாக்கி எரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் இருந்து தனது சிறுபிள்ளைகளுடன் தப்பியோடிய திருமதி அன்னப்பாக்கியம் பின்பு எப்படியோ மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்தார்.

பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையரன இவர் மட்டக்களப்பில் தனது தாயாருடன் இருந்த ஏனைய இரு குழந்தைகளுடன் இணைந்து தாமரைக்கேணியில் வேலுப்பிள்ளை குடும்பம் இருந்த வீட்டிற்குப் பின்புறமாக தமது வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

ஆறு குழந்தைகளுடனும் தனது ஆசிரியத் தொழில்மூலம் கிடைத்தசொற்ப வருவா யில் மிகுந்த பொருளாதார சிக்கலில் வாழ்ந்தபோதும் தனது அயலவர்களுடன் நல்ல உறவைத் தொடர்ந்து பேணிவந்தார். இதன்மூலம் அயலவர்களும் உறவினர்களும் இவரின் நிலை கண்டு உதவி புரிந்தே வந்தனர்.

மிகவும் சுவாரசியமாகவும் தத்ரூபமாகவும் உரையாடக்கூடிய இவர் அடிக்கடி நமது மேதகு தலைவர் பிரபாகரன் வீட்டிற்கு வந்து தலைவரின் தாயான பார்வதிப்பிள்ளையுடன் உரையாடுவதுடன் அந்நேரங்களிலெல்லாம் சிங்கள இனவெறியால் தனக்கு நேர்ந்த அவலத்தையும் கண்ணீர் மல்கக்கூறி ஆறுதலடைவதும் வழக்கம்.

மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்களின் பேச்சில் இடையூறு செய்யாமல் அமைதியாகக் அதனைக்கேட்டு உள்வாங்கிக்கொள்வது தாயாரிடமிருந்து தேசியத்தலைவர் பெற்றுக்கொண்ட அருங்கொடையாகும்.

இவ்வாறாக நான்கு வயதிலிருந்து எட்டு வயதுவரை தாயாருடன் கூட இருந்து அன்னப்பாக்கியம் ரீச்சரின் ஆதங்கத்தை செவிமடுத்த தலைவரின் பிஞ்சு மனதில் அந்தத் தாயின் சோகமும் அதற்குக் காரணமான சிங்கள இனவெறியும் ஆழப்பதிந்து கொண்டன.

அன்று பிஞ்சு மனதில் பட்டகாயம் பின்பு அவர் வளர வளர சிங்கள இனவெறியின் பல்வேறு முகங்களும் இனவாத அடக்குமுறையினூடாகவே நடக்கின்றன என அவர் புரிந்து கொண்டபோதும் சிறு வயதில் மட்டக்களப்பில் தாமரைக்கேணியில் சந்தித்த அந்த விதவைத்தாயையும் அவரின் சோகத்தையும் எக்காலத்திலும் தலைவரால் மறக்கமுடியவில்லை.

1963இல் மட்டக்களப்பைவிட்டு அவர் வெளியேறிவிட்ட போதும் 1984ல் முதன் முதலாக இந்தியாவின் பிரசித்தமான `Sunday` ஆங்கில வார ஏட்டிற்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். 1973 மார்ச் 23ம் திகதி அதிகாலை பஸ்தியாம்பிள்ளை குழுவினர் இவர் வீட்டைச் சுற்றிவளைத்து இவரைக் கைது செய்ய முயன்றபோது சுவரேறித் தப்பிக் கொண்ட இவருடைய 11 வருட தலைமறைவு வாழ்க்கையின் பின் 11, 17 மார்ச் 1984 அன்று இப்பேட்டி பிரசுரமானது.

பிரபல பெண் பத்திரிகை நிருபரான அனிதா பிரதாப்பின் 46 கேள்விகளுக்கு விரிவாகத் தலைவர் வழங்கிய பதில்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தன்னைப் பற்றியதுமான பலவிடயங்களை முதன் முதலாகப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்தச் செவ்வியின் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே தனது உள்ளத்தில் பதிந்திருந்த விதவைத்தாயான இராசம்மாவினை நினைவு கூர்ந்தே அவருடைய பதில் பின்வரு மாறு அமைந்துள்ளமையை நாம் காணலாம்.

 

  • கேள்வி : இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டமே ஒரு வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவிற்கு நிர்ப்பந்தித்த அனுபவங்களை சற்றுக் கூறுவீர்களா? கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்களா?

 

  • பதில் : நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958ம் ஆண்டின் இனக்கலவரங்களில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம்மக்கள் ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உருக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத்தாயை நான் ஒரு முறை சந்தித்தபோது அவர் இந்த இனவெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயர அனுபவங்களை என்னிடம் சொன்னார்.

இனக்கலவரத்தின்போது சிங்களக்காடையர்கள் அவர் வீட்டைத்தாக்கினார்கள். அவருடைய வீட்டிற்குத் தீவைத்து அவரது கணவரையும் குரூரமாகக் கொலைசெய்தனர். அவரும் அவருடைய பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரின் உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கொதிக்கும் தாருக்குள் சிறு குழந்தைகளை உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.

அநாதரவான அப்பாவித்தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதை எல்லாம் கேட்கும்போது எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்படுகின்றது. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம்மக்களை மீட்டெடுக்க வேண்டுமென பெரும் உந்துதல் எனக்குத் தோன்றியது.

நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியுமென நான் ஆழமாக உணர்ந்தேன்.

இவ்வாறே அன்று தலைவர் பிரபாகரன் கண்ட மட்டக்களப்புத் தாயின் கண்ணீர்த் துளிகளே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூல ஊற்றாகி உலகமெல்லாம் பொங்கிப் பிரவாகிக்கும் ஓயாத அலைகளாக பின்பு உருவெடுத்தன.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”

எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே.

வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது.

தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத்தை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

சீர்மிகு செந்தமிழனை தமிழினம் தலைவனாக கொண்டதற்காக அத்தகைய வீரப்புதல்வனின் தாய் தந்தையர் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவருடைய துணைவியார் பார்வதி அம்மையாரும் தம் தள்ளாத வயதினிலே சிறிலங்கா அரசின் அரக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் சொல்லொணாத் துன்பங்களுக்கெல்லாம் ஆளாகி சிறைப்படுத்தப்பட்ட நிலையில் காலமாகினார் எனும் செய்தி தமிழினத்தின் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது.

தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் பேரழிவுப் படுகொலைக் காலங்களில் இறுதி வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து கைதாகி உறவினர்களைக் கூட பார்க்கமுடியாத வகையில் தடுத்து சிறை வைக்கப்பட்டு உரிய மருத்துவ பராமரிப்புகளின்றி சாவடைந்த இப்பெருமகனின் மரணம் இயற்கையானது என ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

தமிழினத்தின் மீதும் தமிழர் தலைவன் மீதும் சிங்கள வெறியர் கொண்டுள்ள வெறித்தனமான கோபத்தின் அடையாளமாகவே இந்த மென்போக்காளரின் அநியாயமான அநீதியான மரணம் சுட்டி நிற்கிறது. தமிழினத்தின் விடுதலைக்காக தன் குடும்பத்தையே துறந்து போராடிய தமிழீழ தேசியத்தலைவர் மீது சிங்கள வெறிகொண்ட அரசு காட்டிய அரக்கத்தனத்தின் வெளிப்பாடே தள்ளாத வயதினரான இவ்விணையர்க்கு நேர்ந்திட்ட உச்சக்கட்ட இன்னல்கள் எனலாம். இதனை மனிதம் பேசும் சர்வதேச சமூகங்கள் எவையுமே வழமைபோல் இனியும் தட்டிக்கேட்கப் போவதில்லை என்பதும் நாம் அறிந்ததே.

இப்பெருமகனார் பற்றிய சில எனக்குக் கிடைத்த வாழ்வாதாரத் தகவல்கள் சிலவற்றை இக்கட்டுரையூடாக தர விளைகின்றேன்:

1800 களில் வல்வட்டித்துறை கடலில் சுமார் 87 கப்பல்களோடு வணிக சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவி இந்தியா, பேர்மா ஆகிய நாடுகளோடு வணிகம் நடாத்திய கப்பலோட்டிய தமிழர் பரம்பரையில் உதித்தவரே திருவேங்கடம் வேலுப்பிள்ளை என்பது ஊரவர் போற்றும் சிறப்பாக இன்றும் உள்ளது. பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களும் சிங்கள ஆக்கிரமிப்பாளரும் சட்டவிரோதம் என கட்டிப்போட முயன்ற போதும் அடங்காத் தமிழர்களாய் அடக்குமுறைகளுக்கும் தடைகளுக்கும் தளராமல் சுதந்திரமாக கடலில் வணிகம் செய்து கடலோடு மோதி விளையாடும் வீரத்தின் பிறப்பிடமாக வாழ்ந்தவர்கள் இவரது முன்னோராவார்.

சிக்கல்களை எதிர்கொண்டு வெல்லும் ஆளுமையும் வீரமும் மிக்க பரம்பரையில் பிறந்தவர் திரு வேலுப்பிள்ளை அவர்கள் என்பதற்கு உச்சக்கட்ட சான்றாகத் திகழ்பவர்கள்; அவரது மகனான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அவரது வழித்தோன்றல்களும் என்பதை உலக வரலாறு நன்கறியும். தரைப்படை, கடற்படை, வான்படையும் மட்டுமன்றி; புலம்பெயர் தமிழர் படையையும் கட்டி எழுப்பிய முதற் தமிழ்த்தலைவனைத்தந்த பெரியார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் என்றால் மிகையில்லை.

வல்வட்டித்துறையில் ‘இராமநாதபுரம் ஜமீன் பரம்பரையினர் வழித்தோன்றல்கள்’ எனக் கருதப்படும்; ‘எசமான் பரம்பரையில்’ கோவில் கட்டிய நற்குடி பெருமகனான வேலாயுதத்தின் மகன் திருமேனியார் அவர்களாவார். அவரது மகனான கோவில் கட்டிய பெருமை பெற்ற வெங்கடாசலம் என்னும் பெருமகனார் 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்த அதே ஆண்டில் பிறந்து 1892 இல் மறைந்தவர்.

அவரது மகன் வேலுப்பிள்ளையின் மகன் தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கும் பெயரான திருவேங்கடம் என்னும் பெயர் கொண்டவர். இவர் மலேசியா சென்று தொடர்வண்டித் திணைக்களத்திள் பணியாற்றிய காலத்தில் பல தமிழீழ தமிழர்களை மலேசியாவுக்கழைத்து வேலை வாய்ப்புகள் எடுத்துக் கொடுத்து உதவினார. இவர் தனது மகனுக்கு தன் தந்தையின் பெயரான வேலுப்பிள்ளை என்னும் நற்பெயரைச் சூட்டினார்.

மலேசியாவில் திருவேங்கடம் தம்பதியினருக்கு 1924 சனவரி 10 அன்று அருந்தவ மகனாக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பிறந்தார். சிறுவயதிலேயே தன் தாயை இழந்திட்ட இவர் தன் தந்தையாருடன் சிறுவயதிலேயே (சுமார் 5 வயதில்) வல்வட்டித்துறைக்கு தாயகம் திரும்பினார்.

இவரது முன்னையோர் கட்டிய வல்வை வைத்தீஸ்வரன் என்னும் சிவன் கோவில் சூழலில் தனது பிள்ளைப் பிராயத்தைக் கழித்த இவர் சிதம்பரா வித்தியாலயத்தில் தனது இளமைக்கல்வியைக் கற்றார்.

மென்மையுள்ளத்தோடும் நேர்மைப் போக்கோடும் வாழ்ந்த இவர் இலங்கை அரசியலில் ஈடுபாடு இல்லாதவராகவே வாழ்ந்தார். பொய் பேசாத சட்டவிதி முறைகளுக்கு கட்டுப்பட்ட நேர்த்தியான வாழ்வை கட்டுப்பாட்டோடு கடைப்பிடித்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அலுவலராக (Dளோ- Dஇச்ட்ரிcட் ளன்ட் ஓffஇcஎர்) முல்லைத்தீவு, மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் அரச கடமையாற்றினார். தமிழ்ப்பாண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த இவர் நேர்மையின் சிகரம் எனப் போற்றப்பட்டார்.

மரபுவழிச்சிந்தனையோடு அரசபணி பொறுப்பேற்று அரசிற்கு விசுவாசமான அரச ஊழியராகவே காலம் முழுவதும் வாழ்ந்த இவருக்கு சிங்கள அரசு புகட்டிய பாடம் என்ன? நேர்மையும் உண்மையும் அகிம்சையும் போற்றினாலும் தமிழர்க்கு இலங்கைத்தீவில் நிம்மதியான நீதியான வாழ்வு என்றுமே இல்லை என்பதே இலங்கை அரசு இவர் போன்ற அப்பாவித் தமிழர்களுக்கு புகட்டுகின்ற பாடமாகும்.

இவரது தன்னடக்கமான சுபாவத்திற்கு சான்றாக இவரது முன்னோர் கட்டிய ஆலயத்தில் அறங்காவலர் குழுவில் தலைமைப் பொறுப்பேற்க இவரை கோரியபோது மறுத்த நிகழ்வைக் கூறமுடியும். பின்னாளில் ஓய்வு பெற்றபின் சிலகாலம் ஆலயநிர்வாகப்பணியை ஏற்று நடாத்தினார்.

1946 ஆம் ஆண்டு பார்வதி அம்மையாரை கைப்பிடித்த இப்பெருமகனார் அம்மையாருடன் ஈருடல் ஓருயிர் என மனமொத்து இல்லறவாழ்வின் இலக்கணமாக இறுதிவரை வாழந்தவர் என்பது உலகறிந்த உண்மை.

இவ்விணையர் ஆற்றிய இனிய இல்லறத்தின் அரும்பயனாக 1948 இல் இவர்களுக்கு மனோகரன் என்னும் அருமை மகனும் அவரைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி, வினோதினி, என்னும் அருமை மகள்களும் நான்காவதாக பிரபாகரன் என்னும் செல்ல மகனும் மகவுகளாக வந்துதித்தனர்.

வேலுப்பிள்ளை ஜயா அவர்கள் தன் செல்ல மகனாம் பிரபாகரன் மீது கொண்டிருந்த பாசத்தின் அடையாளமாக அவர் மதிக்கும் தமிழின உணர்வாளர் திரு. வை.கோ. அவர்களின் பேரனுக்கு ‘பிரபாகரன்’ என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்ததிலிருந்து காணலாம்.

இப் பெருமகனார் அரசியல் வாடையையே விரும்பாதவர். எத்தகைய வாக்களிப்புகளிலும் வாக்களிக்கச் செல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இயல்பாகவே வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட இப்பெருமகனார் தன் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களோடு சரித்திரம் பற்றி அளவளாவ விருப்புடையவராக திகழ்ந்தார். எனினும் அரச விதிகளை மீறுவதை அவர் சரியெனக் கொள்ளவில்லை.

ஆனால் அவரது செல்வப் புதல்வனான தமிழீழ தேசியத் தலைவரோ தமிழினம் சிங்கள ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டு அல்லல்பட்டு மடிவதை விரும்பவில்லை. கடந்த கால வரலாற்றில் அகிம்சை வழி கற்றுத்தந்த கசப்பான பாடங்களில் பயனேதும் இல்லை என்பதைக் கண்ட பெருந்தலைவர் அநீதியைத் தடுத்து நிறுத்த ஆயுதப் போராட்டமே ஒரே வழியென உணர்ந்து குடும்பத்தைப் பிரிந்து நீதிக்கான போராட்டப் பாதையை தனதாக்கிப் புறப்பட்டார்.

சமூகத்தலைவர்கள் வம்சத்தில் உதித்திட்டதனால் அவருள் மிகுந்திருந்த ஆளுமையானது அவரை ஒரு இனத்தின் தேசியத் தலைவராக்கியது. வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வனார் ஈழத்தமிழினத்தினது மட்டுமன்றி உலகத்தமிழினத்தினதும் அருந்தவச்சேயாக காலங்காலமாக தாயவர் நோற்றிட்ட தவப்பயனாக வந்துதித்த அவதாரத் தெய்வவடிவாக பல்லாயிரம் வரலாறுகள் படைத்திட்ட சரிதங்கள் தனியானவை. அவற்றை விரிக்கின் பெருகும் என அஞ்சுகிறேன்.

தமிழினத்தினைக் காக்க தலைவர் புறப்பட்டதைக் காரணமாக்கி, காரணமின்றி அவரது பெற்றோர்கள் பலதரப்பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். குறிப்பாக துரையப்பா மறைவின் பின் தன் மகனைத் தேடி வரும் சிறிலங்கா காவலரிடம் தந்தையார் சொல்லும் பதில், “நானும் என் மகனைத் தேடிக் கொண்டுதானிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடித்தால் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்பதாகும்.

அரச படையின் சித்திரவதை தாங்காமலும் அயலவர்களுக்கு தம்மால் சிக்கலிருக்கக் கூடாது எனக் கருதியும் 1983 காலப்பகுதியில் பொலிகண்டியில் ‘கந்தவனக் கடவை’ கோவில் மண்டபத்தில் சிலகாலம் வாழ்ந்த வேலுப்பிள்ளை அவர்களும் பார்வதி அம்மையார் அவர்களும் பின் அங்கும் வாழ முடியாத சூழலில் இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்தனர். அக்காலத்தில் எம். ஜி. ஆர். உட்பட்ட பல தமிழின உணர்வாளர்களுடன் உறவு கொண்டு அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று மகிழ்ந்திருந்தனர்.

அக்காலத்தில் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் சிறிது சுகயீனமுற்ற போதும் விரைவில் அவர் தேறினார். ஆனால் பார்வதி அம்மையார் பாரிச வாதத்தால் தாக்குண்டு ஒரு காலும் ஒரு கையும் செயலிழந்து அவதியுற்ற நிலையில் அவரை தாய்க்குத் தாயாக உற்ற துணையாக அரவணைத்து பராமரித்த பெருமை திருவாளர் வேலுப்பிள்ளை அவர்களைச் சாரும். அத்தோடு தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒரு குடும்ப மருத்துவர் அவர்களை தன் பெற்ற தாய் தந்தையருக்கு ஒப்பாக மதித்து பேணிக்காத்தமையை நாம் நன்றியுணர்வோடு நவில விரும்புகின்றோம்.

இலங்கையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் 2002 இன் பின் “இனியேனும் தாயகத்தில் அமைதியாக வாழ முடியும்” என்ற நம்பிக்கையோடு தமிழீழம் திரும்பிய இவ்விணையர்கள் வன்னியில் தமது இறுதிக்காலத்தை கழித்தனர். சில காலமேனும் சுதந்திரத் தமிழீழத்தில் இனிதாக வாழ்ந்த பெருமை இவர்களுக்கு உண்டு.

பெருந்தலைவரின் தந்தையார் என்ற எந்த சலுகைகளும் இன்றி மக்களோடு மக்களாக எளிமையாக கிளிநொச்சியில் தனிக்குடித்தனம் ஆற்றிய இப்பெருமகனார் கொள்கைப்பற்றாளராக இறுதிவரை வாழ்ந்தார என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். பார்வதி அம்மையாரும் இவரும் கூடி வாழ்ந்த அழகான வாழ்வு அழகான கவிதைக்கு ஒப்பானது. இணைபிரியாத அன்றில்கள் போல் வாழ்ந்த இவர்களுக்கு சொந்த மண் கொடுத்த சுகம் தனியானது. பிரிந்து வாழ்ந்த மகவோடு இணைந்து உறவாடும் இன்பம் தந்தது.

அந்த இனிய காலம் நீடிக்கவில்லை. இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து மாபெரும் தமிழின அழிப்பை கோரத்தனமாக செய்து முடித்த கொலை பாதக சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றது.

மதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவரது துணைவியாரும் கடந்த 18-05௨009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து வெளியேறி பொது மக்களுடன் சேர்ந்து ஓமந்தைப் பகுதிக்குச் சென்றபோது ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டு பனாகொடை தலைமை முகாமில் கடந்த 8 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கனடாவில் வசிக்கும் அவர்களது புதல்விஇ தாம் வசிக்கும் கனடா நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என சிங்கள அரசைக் கேட்டுஇ எவ்வளவோ முயற்சித்தும்இ சிங்கள அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.

இந் நிலையில் 6-01-2010 அன்று தனது 86வது அகவையில்; வேலுப்பிள்ளை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசலையில் இறந்துவிட்டதாக அரசாங்கம் காலம் தாழ்த்தி அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் மக்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவ வசதிகள் இன்றியும் உணவு இன்றியும் முகாம்களுக்குள் சாகடிக்கப்பட்டார்கள் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

திரு வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மையாரும் போராளிகளல்ல. முதுமையிலும் இயலாமையிலும் தள்ளாடும் இவர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தியது எவ்விதத்தில் நியாயம்? பக்கவாத நோயால் பாதிப்புற்ற துணைவியாரைப் பராமரிக்க ஏற்ற வசதிகளின்றி மருந்து வசதிகளின்றி தம் உறவுகளோடோ பிள்ளைகளோடோ தொடர்பு கொள்ளவிடாமல் 8 மாதங்கள் சிறை வைத்து உடலாலும் உள்ளத்தாலும் சொல்லொணாச் சித்திரவதைகளை சிங்கள அரசு இம்முதியவர்களுக்குக் கொடுத்து ஈற்றில் இப்பெருமகனைக் கொன்றும் விட்டது. இதற்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்லியேயாக வேண்டும். உச்சக்கட்ட மனித உரிமை மீறல்களை தடைகளேதுமின்றி சிங்கள அரசு செய்து கொண்டிருக்கையில் இனியும் தட்டிக் கேட்காது போகுமா அனைத்துலக நாடுகள்? உலகை உலுப்பிக் கேட்க உலகத்தமிழினம் கிளர்ந்தெழ வேண்டும்.

இரக்கம் இல்லா அரக்கராக சிங்கள அரசு வெறியாட்டம் ஆடுவதற்கு மற்றுமொரு சாட்சியமாக மண்டியிடா வீரராகவே வீரச்சாவெய்திவிட்டார் எம் தலைவனை தரணிக்குத் தந்த இந்த மாதந்தை. அவரைப்பிரிந்து அரக்கர்கள் மத்தியில் எங்ஙனம் தன் உயிரைக் காப்பரோ பார்வதி அம்மையார் என எண்ணுகையில் நெஞ்சம் நடுங்கிக் கலங்குகின்றது. அருகிருந்து ஆறுதல் கூற கோடானு கோடி தமிழுறவுகள் உலகெங்கும் காத்திருக்க எங்கள் அன்னை அநாதரவாக எத்தகைய துன்பங்களுக்கெல்லாம் அரக்கர் குகைக்குள் உள்ளாகி துடி துடிக்கின்றாரோ என எண்ணும் எண்ணத்திலேயே செத்துக் கொண்டிருக்கிறது தமிழினம். அடிப்படை மனித உரிமை விதிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு மனிதநேயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இம்மாதந்தையின் உயிர் பிரிந்துள்ளது. சிங்கள அரசின் இக்கொடும் பாதகச் செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்க மாட்டாது.

ஈழத்தமிழினத்தின் சொல்லொணாச் சோக சரிதங்களுள் ஒன்றாக இப்பெருமகனின் சாவும் அமைந்து விட்டது. எனினும் அவரது நித்திய உறக்கம் நீதிக்காக எழுந்து போராட உலகத் தமிழினத்தை தட்டி எழுப்பியுள்ளது என்பது உறுதி. உலகத்தமிழினத்தின் அன்புத் தந்தை இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் வரலாற்றில் “மாதந்தையாக” நிரந்தரமாக நிலைத்து வாழ்வார். அவரது துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லும் உலகத்தமிழினமாகிய நாம் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற மீண்டு எழுவோமாக.

நீதி செத்துவிட்டதாக கொட்டமடிக்கும் கயவர் கொட்டமடக்கி நீதி வெல்ல உழைத்திடுவோம். தமிழினத்தின் சோகம் துடைத்து தமிழீழம் வென்றெடுக்கும் பணி தொடர்வோமாக.


 

மூலம்: http://tccqatar.blogspot.com/2013/01/3.html

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்:

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.