Jump to content

நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                   நூல் அறிமுகம்
                                                                                                                   - சுப.சோமசுந்தரம்
         

           எனது நெருங்கிய நண்பர் பேரா.ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலத்துக்கேற்ற எளிய உரையொன்று அளித்திருக்கிறார்கள். இவ்வுரைநூல் இம்மாதம் (ஜூலை 2022) 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அடியேன் அளித்துள்ள அணிந்துரையும், நூலாசிரியர் பேரா.ச.தில்லைநாயகம்  அளித்துள்ள நூன்முகமும் நூலுக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

                                                                                     

                                                                                     அணிந்துரை
             இவ்வையத்திற்கு வாழ்வியல் பாடம் சொன்ன நூல் திருக்குறள் என்பதும், அது காலந்தோறும் காலத்திற்கு ஏற்ப சான்றோரால் பல மொழிகளில் உரை செய்விக்கப்பட்டது என்பதும் உலக அளவில் அறிஞர் பெருமக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் பாமரரும் கூட அறிந்த ஒன்று. அவ்வாறு நம் காலத்திற்கு உகந்த பார்வையுடன் பேராசிரியர் ச. தில்லைநாயகம் அவர்கள் பாமரரும் உணரும் செவ்விய உரையினைத் தமிழிலும்  ஆங்கிலத்திலும் தர வருகிறார் எனக் கட்டியம் கூறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை என் பேறு.
        இவ்வுரையின்   சிறப்பியல்புகளான  எளிமையையும், காலம் தழுவியமையையும் எடுத்தியம்புவது இந்த அணிந்துரையின் மூலமாக எனது சீரிய பணியாக அமையும் என நம்புகிறேன். அதிலும் இங்கு எளிமை எனும் பண்பு உள்ளங்கை நெல்லிக்கனியாய்க்  காணக் கிடைக்கும் ஒன்று. தமிழானாலும் ஆங்கிலமானாலும் உரையினை வாசித்தவுடன் பொருளுணர்ந்து வாசகன் ஒவ்வொரு குறளையும் சரளமாகக் கடந்து செல்லுகையில் உணரற்பாலது இந்த இனிமை கலந்த எளிமை.
           எனவே இது காலத்துக்கேற்ற உரை எனும் கருத்தினை ஒன்றிரண்டு  மேற்கோள்களுடன் சுட்டுவது இந்த அணிந்துரைக்குப்  பொருந்தி அமையும். இஃது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்க்கும் முயற்சியாம்.

          "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
          சான்றோன் எனக்கேட்ட தாய்"

        "மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
         என்நோற்றான் கொல்எனும் சொல்"

என நவிலும் 'மக்கட்பேறு' அதிகார உரைகளில் பரிமேலழகர், மணக்குடவர் போன்ற பழம்பெரும் உரையாசிரியர்களும், மு. வரதராசனார், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற சில இக்கால உரையாசிரியர்களும் உள்ளது உள்ளவாறு 'மகனை'யே குறிக்கின்றனர். சிற்பி பாலசுப்பிரமணியம் போன்ற தற்கால அறிஞர் பெருமக்கள் மகனுக்குச் சொன்னவாறே உரைத்து, மகளுக்கும் பொருந்தும் எனச்  சுட்டுகின்றனர். நம் உரையாசிரியர் பேரா. தில்லைநாயகம் அவர்கள்  'மகன்' என்ற இடத்தில் பிள்ளைகள் என்று உரைக்கும் உரிமையை எடுத்துக் கொள்வது குறிக்கத்தக்கது.
 குறள் தோன்றிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விதிவிலக்குகள் தவிர சான்றோர் அவையிலும், சமர் களத்திலும் ஆண்மகனே வந்து நின்றான். எனவே இவ்வகை அறங்களை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்பது அன்றைக்கு செயற்கையானதொரு  படைப்பிலக்கியத்திற்கு வழி கோலுவதாய் அமைந்திருக்கும். 
"இலக்கியம் காலம் கடந்து நிற்க வேண்டியதில்லை" என்று யவனிகா ஸ்ரீராம் என்ற தற்காலக் கவிஞர் 'தடம்' ஏட்டின் நேர்காணலில் சொன்னதை வாசித்த ஞாபகம். படைப்பாளி தன் காலத்திற்குத்தானே எழுத முடியும்? ஊகத்தின் அடிப்படையில் எதிர்காலத்தை எப்படி அவன் நிர்ணயிக்க முடியும்? படைப்பு அவனது காலத்தைக் கடந்து நின்றால், அது அவனை மீறிய தற்செயல் நிகழ்வாகத்தானே அமையும்? காலச்சிறையில் வள்ளுவனே  கட்டுண்ட சில இடங்களில் அவனை விடுவிப்பதற்கான நமது உரையாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது. அவ்விடுதலையே தற்காலச்  சமூக விடுதலைக்கு வித்திடும் என உணர்வது ஒரு உரையாசிரியரின் கடமையாகிறது. 
அதேவேளை பண்பாட்டு மாற்றத்தை அளவறிந்தே செய்துள்ள விதமும் குறிக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக 'வாழ்க்கைத் துணைநலம்' அதிகாரத்தில் பெண்ணுக்கு சொல்லப்பட்டதே ஆணுக்கும் என்று ஆசிரியர்  மெனக்கெடவில்லை. அக்கனவு மெய்ப்படும் வருங்கால உரையாசிரியர்களுக்கு  அதனை முன்பதிவு செய்து வைப்பதே இயற்கையானதாய் அமையும்; ஈண்டு  அமைந்துள்ளது. மேலும், திருக்குறள் கூட அனைத்து இடங்களிலும் காலத்தைக் கடந்து யோசிக்க இயலாது என்பதை வாசகனுக்கு எங்காவது உணர்த்தத்தானே வேண்டும்!

                 "தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
                       பெய்யெனப் பெய்யும் மழை"
 என்ற குறளுக்கு, "இத்தகையவள் பெய் என்றவுடன் மழை பெய்யும்" என்று உயர்வுநவிற்சியாகப்  பெரும்பாலும் ஏனையோர் கூற, நம் உரையாசிரியர், "இத்தகையவள் கணவன்  விரும்பும்போதெல்லாம் பெய்யும் மழை போன்றவள்"  என்று இயல்பு கூட்டுகிறார். அவ்விடத்தில், "இத்தகையவள்,  வேண்டும் நேரத்தில் வேண்டிய அளவு பெய்யும் மழை போன்றவள்" என்று மெருகேற்றலாமோ என்று நம் சிந்தனைக்கும் வித்திடுகிறார்.
          தன் காலத்தின்  பகுத்தறிவுவாதியான வள்ளுவன், பெரிதும் ஆணாதிக்க சமூகமாக இருந்த கால கட்டத்தில் ஆணுக்குச் சொன்னதை இப்போது பொதுவில் வைப்பது வள்ளுவனுக்கு உடன்பாடாகத்தான் இருக்க வேண்டும். எனவே அவனை, காலத்தை வென்று நிற்க வைத்துள்ளது கருத்து வேறுபாடு ஆகாது என்பதையும் குறித்தாக வேண்டும்.
           காலம் கருதிய பொருள் கொண்டமைக்கு மேலும் சில மேற்கோள்கள் இவ்வணிந்துரைக்கு அணி சேர்க்கும் என நினைக்கிறேன்.
“மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ 
டியைந்துகண் ணோடா தவர்” (அதிகாரம்: கண்ணோட்டம்; குறள் 576)

     "உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃ தில்லார்
     மரம்மக்க ளாதலே வேறு" (ஊக்கமுடைமை; குறள் 600),

    "அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண் பில்லா தவர்" (பண்புடைமை; குறள் 997)

என்ற மூன்று குறட்பாக்களிலும் அநேகமாக உரையாசிரியர்கள் அனைவரும் இரக்கமற்ற, ஊக்கமில்லாத மற்றும் பண்பாற்றோருக்கு மரத்தையே உவமையாகக் கூறியுள்ளனர். இயற்கையில் மரத்தின் மேன்மை கருதிய நம்  உரையாசிரியர், வள்ளுவர் இவ்விடங்களில் கூறிய 'மரம்' என்பதை பட்டமரம், மரக்கட்டை என்று விரிவுரைத்தமை  அவரது நுண்மாண் நுழைபுலத்திற்குச் சான்று பகர்வது.
              பெண்வழிச்சேறலில்  (அதிகாரம் 91) மனைவி சொற்படி நடப்பவரைப்  பொத்தாம் பொதுவாக இழிவாகக் கூறாமல், பண்பற்ற மனைவியின் சொற்படி நடத்தலை இழிவு எனக் கூறுவது நம் கருத்தினைக்  கவர்வது. 
     "மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
     வேண்டாப் பொருளும் அது"
என்பதில், "மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார்" என்று கூறும் உரைகளுக்கு மாறாக, "இல்லற சுகத்தில் அளவுக்குமீறி ஈடுபடுவோர் புகழ்பெறார்"  என்று உரையாசிரியர் ச. தில்லைநாயகம் அவர்கள் கூறுவது சமூகத்தில் மனையாளின் மாண்பினையும் காத்து நிற்கும் திறம்.
             வரைவின் மகளிரையும்  (அதிகாரம் 92) தற்கால நோக்கில் பாலியல் தொழிலாளர்களாக அணுகும் பாங்கினைக் காணமுடிகிறது.  அதே சமயம் அவர்களிடம் மதிமயங்குவதை  எக்காலத்திலும் நியாயப்படுத்த இயலாது என்பது மட்டுமின்றி, சில இடங்களில்  நியாயப்படுத்துதல் கருத்து வேறுபாடு ஆகும் என்பதையும் உணர்ந்து கயிற்றின் மேல் திறம்பட நடக்கிறார் நம் ஆசிரியர்.
           ஆங்கிலப் பேராசிரியரான ச. தில்லைநாயகம் அவர்கள், ஓரளவு சுமாரான ஆங்கிலம் அறிந்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் உரை செய்திருப்பது இவ்வுரைக்கு அணி  சேர்ப்பதாகும். மேலும், தமிழ் உரைக்கும் ஆங்கில உரைக்கும் இடையே, சொற் தேடலில் பொருள் சிறிதளவும் வேறுபடவில்லை என்பது சிறப்பு. உதாரணமாக, ஜி.யு. போப் அவர்கள்,
       "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
       மன்னுயிர்க் கெல்லாம் இனிது" எனும் குறளுக்கு

"தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்" என்று கொண்டு கூட்டித் தமிழிலும்,

"Their children's wisdom greater than their own confessed through the wide world is sweet to every human breast" என்று ஆங்கிலத்திலும் தந்துள்ளார். இந்த இரண்டிலும் உள்ளது போன்ற  பொருள் வேறுபாடு நமது உரையாசானிடம் தென்படவில்லை.
          எனவே பொய்யாமொழிக்குத்  தற்காலத்தில் எழுதப்பட்ட சிறந்த உரைகளின் வரிசையில் புதிய பரிமாணங்களுடன் இந்நூல் மிளிரும் என்பதில் ஐயமில்லை. இச்சீரிய இலக்கியப் பணியை சமூகப் பணியாகச் சிரம் மேற்கொண்ட பேரா.ச. தில்லைநாயகம் அவர்களுக்கு நம் பாராட்டும் வாழ்த்தும். 


சுப.சோமசுந்தரம்
கணிதப் பேராசிரியர் (ஓய்வு)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி.

 

                                                                                     நூன்முகம் 

 அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
     குறுகத் தறித்த குறள்.    
திருக்குறளின் செழுமையையும் செறிவையும் பலநூற்றாண்டுகளுக்கு முந்தைய தமிழ் மூதாட்டி அவ்வையின் குறட்பா அமைப்பில் அமைந்த இவ்வரிகளைவிட  சுருக்கமாகவும் திருத்தமாகவும் யாராலும் சொல்லிவிட முடியாது. இதற்கும் மேலாக  இக்குறட்பா பண்டைத் தமிழர்களின் கவித்துவத்துக்கும் அறிவியல்  தொழில்நுட்பத்திறனுக்கும் தலைசிறந்த சான்று.
 பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மணக்குடவர், பரிமேலழகர் போன்றோர் முதல் இன்றைய பல்வேறுபட்ட தமிழ்ச் சிந்தனையாளர்களும் தமிழர் அல்லாதவர்களும் திருக்குறளுக்கு உரை எழுதுவதிலும் பிறமொழிகளுக்குப் பெயர்த்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் பேராசிரியர் மு. வ. வின் “திருக்குறள் தெளிவுரை” தற்காலத் தேவைக்கேற்ப எளிமையான மாற்றம் பெற்றது. கடந்த பலபத்தாண்டுகளில் தமிழாசிரியர்கள் மட்டுமின்றிப் பிறதுறை தமிழறிஞர்களும் பிறமொழி தமிழ்ப்பற்றாளர்களும் திருக்குறளுக்கு  எண்ணற்ற உரைகள் எழுதியுள்ளனர்.  பரிமேலழகரைப்போலவே இவர்களும்  தாம் புரிந்து கொண்டவாறு பொருளும், தம் நோக்கத்திற்கு உகந்தவாறு விளக்கங்களும் கொடுத்துள்ளனர்.
    அயல்மொழிகளில் திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு மலையாளத்தில் 1595இல் தோன்றியது. வீரமாமுனிவர் 1730இல் லத்தீன் மொழியில் அறிமுகப்படுத்தினார். 1794இல் கிண்டெர்ஸ்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல்வராகிறார். தொடர்ந்து பிற மொழி பேசும் இந்திய மற்றும் அயலகத் தமிழ் ஆர்வலர்களும்  இதன் மொழிபெயர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். உலகப்பொதுமறை என்ற புகழுக்கு ஏற்ப பைபிளுக்கும், குரானுக்கும் அடுத்தபடியான இடத்தை மொழிபெயர்க்கப்பட்ட உலகமொழிகளின் எண்ணிக்கையிலும்  மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையிலும் பெற்றுள்ளது. திருக்குறளுக்கு எனது சிறிய பங்களிப்பாக தமிழ், ஆங்கில உரைகளோடு ஒருசில வரிகளில் ஒவ்வொரு அதிகாரத்தின் கருத்தையும் கொடுத்துள்ளேன்.  .
    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தும் இன்றளவும் தமிழில் வெளியாகும் நூல்களில் திருக்குறளே அதிக அளவில் எடுத்தாளப்படும் பெருமைக்குரியதாக இருக்கின்றது. ஆண்டுதோறும் திருக்குறளை மையமாக வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவருகின்றன. தமிழகக் கோவில்களிலும் பொதுவெளிகளிலும்  திருக்குறள் சொற்பொழிவுகள் பெருமளவில் நடைபெறுகின்றன. ஒரு சில குறள்களையாவது மனத்தில் இருத்தி வேண்டிய வேளைகளில் பொருத்தமாகப் பயன்படுத்தாத தமிழர்களே இல்லை எனலாம். ஒருவரை அறிவுரை சொல்லித் திருத்த வேண்டிய வேளையில் திருக்குறளின் துணையை நாடுவோரை எங்கும் பார்க்கலாம். குறள்களில் காணப்படும் கருத்தைக் கவித்துவத்துடன் எளிதாக விளக்கிச்சொல்லும் பல சொற்றொடர்கள் தமிழ்ப் பேச்சுவழக்கில் எண்ணிலடங்கா. எடுத்துக்காட்டாக, ‘நீர் இன்றி அமையாது உலகு’, ‘கற்க கசடற’, ‘கற்றனைத்தூறும் அறிவு’, ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
    தமிழகத்தின் தலையாயச் சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் தாம் திருக்குறள் வாசிப்பிலிருந்து பெற்ற பயன்களை மிகச்சிறப்பாக இயம்புகின்றனர். பல அறிஞர்களின் நுட்பமான, புதுமையான, வியக்கத்தக்க விளக்கங்கள் நம்  சிந்தனையைத் தூண்டிப் பரவசப்படுத்துவதாக இருக்கின்றன. 
    அதேநேரத்தில் தமிழகத்தை ஆளத்துடிக்கும் அரசியல்வாதிகள் தமிழக மக்களைத் திசைதிருப்பி  தம்வயம் கொண்டுவருவதற்கும் திருக்குறளைப் பயன்படுத்துகின்றனர்.
      இன்றைய சூழலில் நானும் திருக்குறளின் பெருமைகளைப் புகல்வது மிகையானது. ஆனால் இந்நூலை முயன்று முடித்ததற்கான காரணம் என்னிடமும் சில புதிய விளக்கங்கள் உள்ளதால் தான். “தொட்டனைத்தூறும் மணற்கேணி” எனும் வள்ளுவர் வாய்மொழிக்கு வள்ளுவமே நிகரற்ற சான்று.. 
       திருக்குறளை அறிந்துகொள்ள ஆர்வம் அதிகரித்து வரும் இச்சூழலில் நான் பல தமிழ், ஆங்கில உரைகளைப் படித்த போது அவற்றைவிட இன்னும்  எளிமையாக, தெளிவாக, சுருக்கமாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொல்லமுடியும் என்று தோன்றிய நம்பிக்கையும் இம்முயற்சிக்கு மற்றொரு காரணம். 
    இந்நூலின் தனித்துவம், திருக்குறளை இன்றைய முற்போக்குக் கருத்துக்களுக்கும் பெண்ணுரிமைச் சிந்தனைகளுக்கும் இடம்கொடுத்து முற்போக்காளர்களும் பெண்ணியமும் முன்னெடுத்தச் சொற்களைப் பயன்படுத்தி உரை காணமுடியுமென்று காட்டியுள்ளதே. எந்தவொரு பிரதியும் வாசகனின் வாசிப்பில் தான் பொருள் கொள்கிறது. இவ்வழியில் அறநூல்களின் எல்லாக்காலத்துக்குமான பொருத்தப்பாட்டையும் தேவையையும் நிலைநாட்ட முடியும்.
இந்நூல்வழி தமிழக மக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். உரையாடலில் முடிந்தளவு ஆங்கிலக்கலப்பைத் தவிருங்கள். தமிழிதழ்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் முதலாக எங்கும் எதிலும் காணப்படும் கட்டுப்பாடற்ற ஆங்கிலக்கலப்பு தமிழ்மொழியை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்பது திண்ணம். “சூப்பர்”, “ரீட்பன்னி”, “ரைட்பன்னி” போன்ற சொல்லாடல்களையாவது முற்றிலும் நீக்கிவிடுங்கள் என வேண்டி நிற்கிறேன்.
                                                                                                                                                                                                                                                                   அன்புடன்,
                                                                                                                                                                                                                                                             ச. தில்லைநாயகம்


 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 3
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.