Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள்

மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் முகமாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம்,  வி.என்.நவரட்ணம், கே.பி.ரட்ணம், கே.துரைரட்ணம் , எம்.சிவசிதம்பரம் ஆகியோர் வைகாசி 21 ஆம் திகதி யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் கூடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததோடு, மறுநாள் நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். பன்னாலையிலிருந்த அவரது வீட்டிற்கு அமிர்தலிங்கத்தை அழைத்துச் சென்ற பொலீஸார் அவரது வீட்டைச் சோதனை செய்தனர்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேசியப் பிரச்சினையாகக் காட்டிய பிரதமர் சிறிமாவும் அவரது அரசாங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டினை உருவாக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். வைகாசி 23 ஆம் திகது தம்புள்ளை மகாவித்தியாலயத்தில் சிங்களவர்களிடம் பேசிய சிறிமா சமஷ்ட்டிக் கட்சியினர் பல்லாண்டுகளாக தனிநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்துவருவதாகவும் நாட்டில் ஒற்றுமையின்மையினை ஏற்படுத்த முயன்றுவருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நாட்டின் குடியரசு யாப்பினைக் காக்கவும், நாட்டின் அமைதியினைக் காக்கவும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தான் எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

z_page-07-The-lesson-01.jpg

ஜி ஜி பொன்னம்பலம்

தமிழரிடையே பிரிவினையினை உண்டாக்க நினைத்த அரசாங்கம், சிவசிதம்பரத்தை விடுதலை செய்ததுடன், ஏனைய தமிழ்த் தலைவர்களை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தியது. மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தலைவர்களையும் ஜூரிகளின் முன்னால் நிறுத்துவதைத் தவிர்த்து மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்தி விசாரிக்கத் தீர்மானித்தது. இது, தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தமது ஆதரவினைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் குடியரசு யாப்பின் நியாயத்தன்மையினைக் கேள்விகேட்கும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த நான்கு தமிழ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாட ராணியின் ஆணை பெற்ற வழக்கறிஞர் ஜி ஜி பொன்னம்பலம் உட்பட 61 வழக்கறிஞர்கள் முன்வந்தார்கள்.

தமது பிரதான ஆட்சேபணையாக அவசரகாலச் சட்டத்தினை தவறானது என்று வாதாடிய வழக்கறிஞர்கள் குடியரசு யாப்பின் அடிப்படையில் நான்கு தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவது செல்லுபடியற்றது என்று வாதாடியதோடு, அவர்கள் நால்வர் மீதும் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் கூறினர்.

"சட்டத்திற்குப் புறம்பான குடியரசு யாப்பின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதால் எனது கட்சிக்காரர்கள்  எந்தவிதத்திலும் குற்றமற்றவர்கள் என்று கூறுகிறேன்" என்று வாதிட்டார் ஜி ஜி பொன்னம்பலம் .

அவசரகாலச் சட்டத்தினை குடியரசு யாப்பில் அரசு குறிப்பிட்ட விதத்தில் இருந்த தவறினைப் பயன்படுத்தியே பொன்னம்பலம் இந்த வழக்கு தவறானது என்று வாதிட்டார். வைகாசி 22 வரை அமுலில் இருந்த சோல்பரி யாப்பின்பிரகாரம் ஆளுநரே அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்த முடியும். ஆனால், குடியரசு யாப்பின்படி பிரதமர் இதனைச் செய்ய முடியும் என்று இருந்தது. சோல்பரி யாப்பின் இறுதிநாளும், குடியரசு யாப்பின் ஆரம்பநாளும் ஒரே நாளான வைகாசி 22 ஆக குறிப்பிடப்பட்டிருந்தமையினால், இக்கைதுகள் செல்லுபடியற்றதாகிவிடும் என்று பொன்னம்பலம் மிகவும் திறமையாக வாதாடியிருந்தார். ஆகவே, அவசரகாலச் சட்டத்தினைப் பாவித்து வைகாசி 22 இற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படியவேண்டியவர்கள் என்கிற நிலை உருவாகியது.

இந்த விசாரணையின் இரண்டாவது ஆட்சேபணைப் பகுதியில் வாதாடிய திருச்செல்வம் குடியரசு யாப்பின்படி அமைக்கப்பட்ட இந்த நீதிமன்ற வழக்கு செல்லுப்படியற்றது என்று வாதாடினார். அவர் தனது வாதத்தினை இரு முனைகளூடாக முன்வைத்தார். முதலாவதாக சோல்பரி யாப்பு சிறு மாற்றங்களைச் செய்யவே அனுமதியளித்திருந்ததுடன், முற்றான யாப்பு மாற்றத்திற்கு ஆங்கீகாரம் வழங்கியிருக்கவில்லை என்று கூறினார். ஆனால், எதிர்த்து வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சிவா பசுபதி, நடைமுறை அரசான ஐக்கிய முன்னணி மக்களிடமிருந்து யாப்பில் பெருமளவு மாற்றங்களைக் கொண்டுவரும் ஆணையினைப் பெற்றிருப்பதாக வாதாடினார். இதற்குப் பதிலளித்து வாதாடிய திருச்செல்வம், யாப்பினை மாற்றுவதென்பது கைதுசெய்யப்பட்ட தலைவர்களின் போராட்ட நோக்கங்களில் ஒன்றாக இருக்கவில்லை என்று கூறினார். 

திருச்செல்வம் முன்வைத்த இரண்டாவது வாதம் முக்கியமானது. அரசாங்கம் கூறுவதுபோல அரசியலமைப்பினை முற்றாக மாற்றுவதற்கு மக்களின் ஆணையினைப் பெற்றிருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அது தனியே சிங்கள மக்களின் ஆணை மட்டுமே அன்றி, தமிழ் மக்களின் ஆணை அல்ல என்று அவர் கூறினார். மேலும் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கான தேவையினை உணரத் தொடங்கிவிட்டதாகவும் 1956 ஆம் ஆண்டிலிருந்து சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றிற்காக அவர்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருவதாகவும் அவர் கூறினார்.

பொன்னம்பலம் முன்வைத்த முதலாவது வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் அவசரகாலச் சட்டம் வைகாசி 22 உடன் முடிவிற்கு வரவேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்ட அரசியல்த் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. இதே தீர்மானத்தில், குடியரசு யாப்பின் நியாயத்தன்மைபற்றிய கேள்விகளை அது நிராகரித்திருந்தது. நீதியற்ற குடியரசு யாப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு அந்த யாப்பின் நியாயத்தன்மைபற்றி விசாரிக்கும் உரிமை இல்லை என்று அது கூறியது.

யாப்பினைக் கேள்விகேட்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று நழுவியதன் மூலம் தமிழர்களின் நலன்களைக் காக்கும் தேவையோ அல்லது அதிகாரமோ இலங்கையின் நீதித்துறைக்குக் கிடையாது என்பது அம்பலமாகியது. ஆனால், இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரச தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்மூல இலங்கையின் சட்டத்துறை தொடர்பாக தமிழர்கள் தவறான கருத்தினைக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதனால், இத்தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும், அவசர காலச் சட்டத்தினைப் பயன்படுத்தி இலங்கையின் காவல்த்துறையும், இராணுவமும் வடக்கில் பல கிளர்ச்சியடக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதால், இத்தீர்ப்பின்மூலம் இச்செயற்பாடுகள் பாதிப்படையலாம் என்றும் வாதிட்டார்.  அதன்படி நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் கூடிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து அரசுக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கு மாசி 1977 ஆம் ஆண்டுவரை நடைபெற்று வந்தது. இதனால் விடுதலைப் போராட்டம்பற்றிய எண்ணத்தினையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் முற்றாக மறந்துவிட்டிருந்தனர். ஆனால், ஆயுத அமைப்புக்கள் போராட்டம் தொடர்பாக தொடர்ச்சியாகச் செயற்பட்ட வண்ணமே இருந்தனர். வட்டுக்கோட்டைத்தீர்மானம் தொடர்பாக அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர். போராட்டத்தை ஆரம்பிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். பணத்தினைச் சேர்த்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், போராளிகளைச் சேர்த்தல், பயிற்சியளித்தல் என்று பல முனைகளில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.

1976 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆயுத அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடுவதை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இளைஞர் அமைப்புக்களை அடியோடு அழித்துவிடுங்கள் என்று அமைச்சர் செல்லையா குமாரசூரியர் பொலீஸார் மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். வெள்ளவத்தையில் அமைந்திருந்த தனது வீட்டில் குமாரசூரியர், பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மனாதன் ஆகியோருடன் பல ரகசிய திட்டமிடும் கூட்டங்களை நடத்தியிருந்தார். தமது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை ஆயுத அமைப்புக்களின் இளைஞர்கள் உணரத் தலைப்பட்டனர். பிரபாகரனும் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. ஆகவே, பொலீஸ் வலையமைப்பினை அழிக்கவேண்டிய தேவை இளைஞர்களுக்கு ஏற்பட்டது.

பிரபாகரன் எப்படியாவது ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்துவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். அமிர்தலிங்கத்தையும், நவரட்ணத்தையும் அவர் தொடர்ச்சியாக சந்தித்து போராட்டத்தினை முன்னெடுக்கும்படி கேட்டுவந்தாலும்கூட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்டம் பற்றி உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார். ஆகவே, தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தார். இதன் முதற்கட்டமாக இருவிடயங்களைச் செய்ய அவர் தீர்மானித்தார்.

முதலாவது பொலீஸ் அதிகாரிகள் பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பதமனாதன் ஆகியோரால் பின்னப்பட்டிருக்கும் உளவாளிகளின் வலையினை அழிப்பது. இரண்டாவது, துரையப்பாவின் கொலையினை விசாரிக்கும் பொலீஸ் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இளைஞர் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வரும் அதிகாரிகளைக் கொல்வது. 

பொலீஸாருக்குத் தகவல் வழங்கும் உளவாளிகளையும், விசாரிக்கும் அதிகாரிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தனது அமைப்பில் உளவுப் பிரிவொன்றை அவர் உருவாக்கினார். தனது போராளிகளுக்கான பயிற்சிகளின்போது உளவுத்தகவல்களைச் சேகரிக்கும் விதத்தினையும் அவர் கற்றுக்கொடுத்தார். புதிதாக இணையும் போராளிகள் தாக்குதல் அமைப்புக்களில் சேர்க்கப்படுமுன்னர் உளவுத்தலகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளிகளில் பிரபாகரன் முதலாவதாகக் கொல்லத் தீர்மானித்தவரின் பெயர் என். நடராஜா. இவர் உரும்பிராய் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நடாத்தி வந்ததுடன், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தார். இவரை பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், போராளி சிவகுமாரன் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கியது இவரே. தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலவாது கொலை அதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரன் தனது அமைப்பின் இரு உறுப்பினர்களை இந்த நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். நடராஜாவின் வீட்டிற்குச் சென்ற அந்த உறுப்பினர்கள் இருவரும் அவரை வெளியே வரும்படி அழைத்து அங்கேயே சுட்டுக் கொன்றனர்.

இந்த நடவடிக்கையே 1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களை விடுதலை வேட்கை நோக்கி நகர்த்தியதுடன், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு தமிழீழத்தை அமைப்பதற்கான ஆணையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கினர்.

 

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Replies 535
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி எல்லாம் வாதடி வென்ற எமது சமூகம் ! 

மனதுக்கு பாரமாக உள்ளது.

தொடருங்கள் ரஞ்சித்.நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கீகரிக்கப்பட்ட மக்கள் ஆணை

தந்தை செல்வாவின் இறுதிப் பிரகடணம்

ஐந்து காரணங்களுக்காக "1977" ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வருடத்திலேயே இலங்கையின் இரு முக்கிய சிங்களக் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையில் தமிழருக்கு இனப்பிரச்சினை என்று ஒன்று இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொண்டன. இந்த வருடத்திலேயே தந்தை செல்வா இலங்கைத் தமிழருக்கிருக்கும் ஒரே தெரிவு சுதந்திரமான தனிநாடு மட்டுமே என்று பிரகடணம் செய்திருந்தார். இந்த வருடத்திலேயே இலங்கைத் தமிழர்கள் தனிநாட்டிற்கான தமது விருப்பத்தினை ஏகமனதோடு தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். இந்த வருடத்திலேயே ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பொலீஸ் ராணுவ அமைப்புக்களையும், காடையர்களையும் வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கும் கைங்கரியத்தினை ஆரம்பித்திருந்தார். இந்த வருடத்திலேயே தமிழ் ஆயுத அமைப்புக்கள் அரச ராணுவத்திற்கெதிரான தமது ஆயுத நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. இது ஒரு தேர்தல் ஆண்டாகும். இந்த வருடத்திலேயே சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்பின் மூலம் நடைமுறைக்கு முரணாக தனது 5 வருட ஆயுட்காலத்தை இன்னும் இரு வருடங்களால் நீட்டித்து, ஏழு வருடங்களை நிறைவு செய்திருந்த ஆண்டு. 

ஜெயவர்த்தனாவிற்கு சிங்கள மக்களிடையே அதிகரித்துவரும் செல்வாக்கினைக் கண்ணுற்று அச்சமடைந்த சிறிமாவோ, தமிழ் மற்றும் முஸ்லீம் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட முயற்சித்துக்கொண்டிருந்தார். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக பாராளுமன்றத்தில் இவ்வின மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, அம்மக்களின் குறைகளையும், தேவைகளையும் அறிந்துகொள்ள கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பினை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடனேயே பார்த்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழ் மக்களால் தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி ஒன்றுதான். அது தம்மை ஒருவிடுதலைப் போராட்ட அமைப்பாக உருவாக்கி தனிநாட்டிற்கான வரைபினை வரைவது மட்டும்தான், நீங்கள் சிறிமாவின் கூட்டத்தில் பங்கேற்க எந்தத் தேவையுமில்லை  என்று அவர்கள் வாதாடினர்.  தமிழ் இளைஞர் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எந்தவொரு அரசியற் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாதென்றும், தனிநாட்டினை உருவாக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று கேட்டிருந்தது. தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளை இந்தப் பிரச்சினையினை தந்தை செல்வாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தது. சுமார் 79 வயது நிரம்பிய, அனுபவம் மிக்க சிவில் வழக்கறிஞரான தந்தை செல்வா தன்னைச் சந்திக்க வந்திருந்த தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்களிடம் பின்வருமாறு கூறினார். 

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தயவுசெய்து ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறார்கள் என்றால் ஒருபோதும் அதனை நிராகரிக்க வேண்டாம். அக்கூட்டத்தில் பங்குபற்றுவதனால் மட்டுமே அவர்கள் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடாது. ஒரு கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் கூற விரும்புவதைக் கூறுவதற்கான சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் எங்கள் கவலைகளை செவிமடுக்கத் தயாரில்லாததனால், நாம் எம் வழியில் செல்லப்போகிறோம் என்பதை இந்த அரசாங்கத்திற்கு நான் சொல்லப்போகிறேன். எமக்கான தனிநாடான தமிழ் ஈழத்தை அமைப்பதில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் இடமில்லை என்பதையும் நான் அங்கு சொல்லப்போகிறேன்" என்று அவர் கூறினார். 

felix.jpg

பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்க


சிறிமாவோ தலைமையில் 1977 ஆம் ஆண்டு மாசி 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தந்தை செல்வா இதனையே கூறினார். தமிழருக்கான தனிநாடு என்கிற பேச்சினை கேட்கவே அரசு தயாரில்லை என்று கடும் தொணியில் அமைச்சர் பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்கா பேசியதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த தந்தை செல்வா அவர்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் ஈழம் எனும் தமது இலட்சியத்தில் எதனையும் விட்டுக் கொடுக்க தாம் தயாரில்லை என்றும், ஆனால் இடைக்கால ஒழுங்காக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அவலங்களுக்கான தீர்வுகளை ஆராய ஒரு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார்.

அன்று நடந்த கூட்டத்திலும், அதற்குப் பின்னர் பங்குனி 16 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலும் பங்குபற்றிய சிறிமாவோ தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அவலங்களை செவிமடுக்கத் தயாராகவே இருந்தார். இவ்விரு இனங்களையும் பாதித்து வந்த முக்கியமான ஆறு விடயங்கள் அடையாளம் காணப்பட்டன. 

தமிழ் மொழியின் பாவனை
பல்கலைக்கழக அனுமதி
வேலையில்லாப்பிரச்சினை
தமிழ் அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் 
ஆதிகாரப் பரவலாக்கப்பட்ட நிர்வாகம்
இந்தியத் தமிழர்கள் மலையகத் தோட்டங்களில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள்

சிறிமாவோ இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தான் தர விரும்புவதாகக் கூறினார். தமிழ் மொழியினை தேவைக்கேற்றாற்போல் பாவிக்கும் அனுமதியை யாப்பினூடாக உருவாக்குவது, பல்கலைக்கழக அனுமதி முறையினை மாற்றுவது, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வேலையில்லாப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது, தமிழ் அரச ஊழியர்களின் பிரச்சினைக்கான தீர்வு, மலையகத் தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு  என்று பல விடயங்களில் சாதகமான சிந்தனையினை அவர் கொண்டிருந்தவராகக் காணப்பட்டார். மேலும், அதிகாரப் பரவலாக்கம் என்பது தனது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் கூறினார். தந்தை செல்வா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி சாதகமான மனநிலையினைக் கொண்டிருந்தபோதும், ஏனையவர்கள் அதனை நம்பத் தயாராக இருக்கவில்லை. கூட்டத்தின் முடிவுபற்றி கருத்துத் தெரிவித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் செல்வா பின்வருமாறு கூறினார்,  
 

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இவ்வளவு காலமும் தமிழர்களுக்கென்று எந்தப் பிரச்சினையுமில்லை என்று சிங்களவர்கள் உலகத்தை ஏமாற்றி வந்திருக்கின்றனர். சிங்களவர்களை விடவும் தமிழர்களே அதிக சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்றும் கூறிவந்தனர். ஆனால், அவர்களால் இதனை இனிமேல் கூறமுடியாது. ஏனென்றால், அரசாங்கம் தமிழர்களுக்குத் தனியான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அவற்றினை அடையாளம் காணவும் அவர்களால் முடிந்திருக்கிறது. ஒரு தனிநாட்டிற்கான முயற்சியினை ஆரம்பிப்பதற்கு எமக்குப் பலமான அடித்தளம் ஒன்று கிடைத்திருக்கிறது" என்று கூறினார்.

ஆனால் தமிழ் இளைஞர்களோ இந்தப் பதிலினால் திருப்தியடையவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனிநாட்டிற்கான முயற்சிகளை எடுக்காமல் தாமதித்துவருவதாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டினர். ஆகவே, அவர்களை பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறு கோரிய தந்தை செல்வா, வரப்போகின்ற தேர்தலினை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகக் கணித்து, தனிநாட்டிற்கான ஆணையினை மக்களிடமிருந்து பெற்றுவிட வேண்டுமென்றும், பின்னர் படிப்படியாக தனிநாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார்.

தந்தை செல்வா தனது இரண்டாவது செயற்பாட்டினை திருகோணமலை இந்துக் கல்லூரியில் பங்குனி 1977 இல் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் முன்னெடுத்தார். அங்கு பேசிய தந்தை செல்வா அவர்கள்,

"1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் தொடர்பான மாற்றப்படமுடியாத தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. சிங்களத் தலைவர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால், எங்களை எமது வழியில் செல்ல விடுங்கள் என்பதுதான். எமக்கிடையே கசப்புணர்வு ஏதுமின்றி, அமைதியாகப் பிரிந்துசெல்ல எம்மை அனுமதியுங்கள். சம அந்தஸ்த்துள்ள இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பின்மூலம் இந்த நாடுகளின் இருப்பினை நாம் மேம்படுத்திக்கொள்ளலாம்.  தமிழர்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் கிடையாது. எமது இளைய சந்ததியினரிடம் கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. இந்தக் கசப்புணர்வினை மேலும் வளரவிட்டு, மோதல்களாக்கி, ஈற்றில் வேற்று நாட்டு தலையீட்டினை இந்த நாட்டில் உருவாக்குவதைக் காட்டிலும் சமாதான முறையில் எமக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் வழிவகைகளை நாம் கையாள வேண்டும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை நாம் நம்புவதோடு, இந்தக் கடுமையான பயணத்தில் நாம் வென்றே தீருவோம் என்பதையும் இக்கணம் கூறிக்கொள்கிறேன்" என்று கூறினார்.

 

தமிழரின் பிரச்சினைக்கான அங்கீகாரம்

1977 ஆம் ஆண்டு, சித்திரை 29 ஆம் திகதி தந்தை செல்வா மரணமானார். அவருக்குப் பின்னர் அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக வந்தபோதும் தந்தை செல்வாவினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட தந்தை எனும் ஸ்த்தானத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. தந்தை செல்வா அவர்கள்  தனக்கு முன்னால் வைக்கப்படும் சகல விவாதங்களையும் அமைதியாகக் கண்களை மூடிச் செவிசாய்த்துவிட்டு, அவற்றுக்கான தனது தீர்வுகளை அவர் முன்வைக்கும்போது  எல்லோருமே கேள்வியின்றி அதனை ஏற்றுகொண்டார்கள். ஆனால், அமிர்தலிங்கம் வித்தியாசமானவர். பிரச்சினைகளைக் கிளப்பிவிடுவதும், மக்கள் முன் தன்னை பிரபலப்படுத்துவதும் அவருக்கு பிடித்திருந்தது. மக்கள் தந்தை செல்வா மீது வைத்திருந்த மரியாதையும், மக்கள் மீது செல்வா அவர்கள் கொண்டிருந்த கட்டுப்பாடும் அமிர்தலிங்கத்திற்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. அமிர்தலிங்கம் ஒரு மக்கள் தலைவன் என்பதை விடவும் ஒரு அரசியல்வாதியாகவே செயற்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டபின்னர் அமிர்தலிங்கத்தின் ஒரே கரிசணையாக இருந்தது தேர்தலினை எதிர்கொள்வது எவ்வாறு என்பதும், தேர்தலின் பின்னர் தான் செயற்படவேண்டிய முறை என்னவென்பது பற்றி மட்டும் தான்.

ஜெயவர்த்தன தேர்தலில் அமோக வெற்றியீட்டுவர் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தினைச் செய்யலாம் என்று அமிர்தலிங்கம் விரும்பியிருந்தார். வெளிப்படையாகவும், ரகசியமாகவும் ஜெயவர்த்தனவின் விருப்பினை நாடிபிடித்தறிய அமிர்தலிங்கம் சில செயல்களைச் செய்தார். வெளிப்படையாக அவர் செய்த விடயம் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஊடாக பேச்சு ஒன்றுனை வழங்கியது. நாளிதழான வீரகேசரிக்குப் பேட்டியளித்த துரைரட்ணம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆலோசிக்கவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி விரும்புவதாகக் கூறியிருந்தார். இதே மாதிரியான கருத்தையே அமிர்தலிங்கம் ஊர்காவற்றுரையில் தான் பேசிய கூட்டத்திலும் தெரிவித்தார். ரகசியமான செயற்பாட்டினை தொண்டைமான் ஊடாக அவர் நடத்தினார். 

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

front.jpg

 

றோயல் கல்லூரி, கொழும்பு

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான தனது சந்திப்பு ரகசியாமக இருக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனா விரும்பினார். ஆகவே கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்னால் அமைந்திருந்த தனது தொடர்மாடி வீட்டிற்கு தோசை விருந்தொன்றிற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் தொண்டைமான் அழைத்திருந்தார். 

ஜெயவர்த்தனா, எம் டி பண்டா மற்றும் எஸ்மொண்ட் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியையும், அமிர்தலிங்கம் , சிவசிதம்பரம் மற்றும் கதிரவேற்பிள்ளை ஆகியோர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட்டால் சிறிமாவின் அரசாங்கத்தினை வீழ்த்த முடியும் என்று தொண்டைமான் கூறவும் அங்கிருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர். 

"ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைக் காத்திட வேண்டும்" என்று ஜெயவர்த்தனா கூறினார். 

 இதற்குப் பதிலளித்த கதிரவேற்பிள்ளை, "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, அதனைக் காப்பாற்றும் உங்களின் முயற்சிக்கு நாம் ஆதரவாய் இருப்போம்" என்று கூறினார்.

இதனால் மகிழ்ந்த ஜெயவர்த்தனா, "நாங்கள் இருவரும் ஒரே ஆவர்த்தனத்தில் பேசுகிறோம்" என்று கூறினார். பின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப்பார்த்து, "நான் பதவியேற்றதும் எந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஜே ஆர். அப்போது தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்னவென்பதை இரு பகுதியினரும் ஆராய்ந்தார்கள். அதன்படி பின்வரும் பிரச்சினைகள் அவர்களால் அடையாளம் காணப்பட்டன.

தமிழ் மொழியின் பாவனை
தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுத்துவது
வேலைவாய்ப்பு
பல்கலைக்கழக அனுமதி
இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை

தந்தை செல்வா கைக்கொண்ட அணுகுமுறைக்கும் அமிர்தலிங்கம் கைக்கொண்ட அணுகுமுறைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருந்தது. செல்வா அவர்கள் 1957 இல் பண்டாரநாயக்காவுடன் பேசும்போதும், 1977 இல் சிறிமாவுடன் பேசும்போதும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றைப்பற்றியே அவர் பேசினார். தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காது ஆனால், தமிழ்மக்கள் எதிர்கொண்டு நிற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளைப்பற்றி அவர் பேசினார். இதன்படி பண்டாரநாயக்காவுடன் சமஷ்ட்டி அலகு அடிப்படையிலான தீர்வு பற்றியும், சிறிமாவுடன் தனிநாட்டுக்கான அமைப்புப் பற்றியும் அவர் பேசியிருந்தார். ஆனால், அமிர்தலிங்கமோ தனிநாட்டிற்கான தேவை பற்றி ஒருபோதும் ஜெயவர்த்தனாவுடன் பேசியதில்லை, மாறாக பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி மட்டுமே அவர் பேசினார். 

19010471.jpg
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்

தொண்டைமானின் இல்லத்தில் அன்று நடந்த சம்பாஷணைகளில் ஒரேயொரு முறை மட்டுமே தனிநாடு எனும் பதம் பாவிக்கப்பட்டது. அதுகூட ஜெயவர்த்தனாவினாலேயே கூறப்பட்டது. அனைவரும்  இந்திய கோப்பிப் பாணத்தை அருந்திவிட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்து பின்வருமாறு கூறினார் ஜெயவர்த்தனா, " நீங்கள் தனிநாட்டிற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எனக்குத் தேவையானதெல்லாம் நீங்கள் 15 ஆசனங்களை வெல்வது மட்டும் தான். அப்படி வென்றால் மட்டுமே என்னால் அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியும்" என்று கூறினார்.

தனிநாட்டிற்கான தேவையினை அந்தச் சந்திப்பில் முன்வைப்பதில் அமிர்தலிங்கம் தோல்விகண்டிருந்தாலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சி தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பதில் வெற்றி கண்டிருந்தார். 

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை தமது 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழருக்குப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்ததுடன், அவற்றுக்குத் தீர்வு காணவேண்டிய அவசியம் பற்றியும் கூறியிருந்தன. தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை, அவர்கள் சிங்களவரைக் காட்டிலும் அதிக சலுகைகளை அனுபவிக்கிறார்கள், தாம் அனுபவிக்கும் சலுகைகளைத் தொடர்ச்சியாக தக்கவைக்கவே கூக்குரலிட்டு வருகிறார்கள் என்று உலகின் முன் பிரச்சாரம் செய்துவந்த சிங்களவர்களின் கடும்போக்கில் இது பாரிய திருப்பம் என்றால் அது மிகையில்லை.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனியான பகுதியொன்றை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக வரைந்திருந்தது. தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இது உருவாக்கப்பட்டிருந்தது.

"தமிழ் பேசும் மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே தமிழ் பேசும் மக்கள் தனியான நாட்டினை உருவாக்கும் இளைஞர் அமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையின் ஒருமைப்பாட்டினைக் காத்திடவும், பொருளாதார அபிவிருத்தியை அடையவும் இந்தப் பிரச்சினைகள் காலம் தாழ்த்தாது தீர்க்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. எமது ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைகளையும் கவலைகளையும் தீர்க்கக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்ளும் என்று கூறிக்கொள்வதுடன், பிரச்சினைகள் இருக்கக் கூடிய விடயங்களாக பின்வருவனவற்றை இனங்கண்டுள்ளது",

" கல்வி - தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் - தமிழ் மொழியின் பாவனை - அரச மற்றும் தனியார் துறைகளில் தமிழ் பேசும் மக்களுக்கான வேலைவாய்ப்பு" 

"நாம் சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதோடு இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க முயற்சி எடுப்போம்" என்றும் கூறியிருந்தது.

 

சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் "தேசிய ஒருமைப்பாடும் தேசியப் பிரச்சினைகள்" என்கிற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறது,

"இலங்கையில்  இன, மொழி, சமூக, கலாசார வழிகளில் தேசிய மட்டத்தில் சிறுபான்மையினக் குழுக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு  தீர்வுகளை எடுக்கும் வகையில் நாட்டில் இருக்கும் அனைத்து இனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைச் சபை ஒன்றினை எமது அரசு உருவாக்கும்" என்று கூறியிருந்தது.

 

அதேபோல், இடதுசாரிக் கூட்டணியாகக் களமிறங்கிய கம்மூனிஸ்ட் கட்சி மற்றும் சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய சிறுபான்மையின மக்கள் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்தது, 

"நாட்டின் ஒருமைப்பாட்டினைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, பொதுத் தேசிய மாவட்டங்களுக்கான வலையமைப்பின் மூலம் பிராந்தியங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலினை நாம் ஏற்படுத்துவோம். ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் மொழி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக அமுல்ப்படுத்தும் அதேவேளை, தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியினை உத்தியோக பூர்வ மொழியாகவும் நாம் ஆக்குவோம். ஏற்கனவே தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நிர்வாக அந்தஸ்த்தினை, குடியரசு யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் உறுதிப்படுத்துவோம்.   அரசியலமைப்பில் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எனும் அந்தஸ்த்தினை பாதிக்கா வண்ணம் தமிழ் மொழிக்கு யாப்பினூடாக தேசிய மொழி எனும் அந்தஸ்த்தினை நாம் வழங்குவோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இன, மத, குல ரீதியான பாகுபாட்டினை நாம் முற்றாக தடைசெய்வோம். இன மத ரீதியிலான கலகங்களைத் தூண்டுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும்". 

வாக்கெடுப்பு

 ஆகவே அனைத்துச் சிங்களக் கட்சிகளும் தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கிறது, அவற்றினைத் தீர்க்க அரசியல் ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியபடியே 1977 ஆம் ஆண்டிற்கான தேர்தலை எதிர்கொண்டன. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தேசியக் கட்சிகள் இந்த அடிப்படையிலேயே தேர்தலில் பங்குகொண்டன. இதேவேளை இத்தேர்தலில் பங்குகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா அல்லது தனிநாட்டினை நோக்கி நகரப்போகிறார்களா என்பதனை உறுதிப்படுத்த இத்தேர்தலினை தமிழ் மக்கள் பாவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனி 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அதனைத் தொடர்ந்து பாரிய பேரணி ஒன்றையும் நடத்தியது. மக்களின் முன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அமிர்தலிங்கம், இத்தேர்தல் தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறதென்றும், இத்தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் சுதந்திர மக்கள் கூட்டமாக வாழவிரும்புகிறார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.

 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டிலிருந்து அரச ஆதரவிலான குண்டர்கள் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியிருந்ததுடன், இதன் விளைவாக தமிழர்கள் உரிமைகளோ, பாதுகாப்போ அற்ற இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற வாதத்தினை முன்வைத்திருந்தார். 

"தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களக் காடையர்களாலும், அரச ஆதரவுடனான சிங்கள அமைப்புக்களாலும், ராணுவ பொலீஸ் பிரிவுகளாலும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படு தாக்கப்பட்டு வருகின்றனர். திட்டமிட்ட இத்தாக்குதல்கள் மூலம் தமிழர்களும் முஸ்லீம்களும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருவதுடன், அவர்களது  சொத்துக்கள், வியாபார நிலையங்கள், வாழிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டும் வருகின்றன. உயிரிழப்புக்கள், உடல்ரீதியிலான துனுபுருத்தல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் என்று மிகவும் கொடூரமானஅட்டூழியங்களுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்" என்று அந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது.  

அத் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் கூறுகையில், "தமிழ் மொழிக்கான உரிமைகளைக் கோரி 1961 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சை முறையிலான ஒத்துழையாமை போராட்டங்களை ராணுவப் பயங்கரவாதம் கொண்டு சிங்கள அரசுகள் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வருகின்றன. 1976 ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 7 முஸ்லீம்களை சிங்களப் பொலீஸார் மிகவும் குரூரமான வகையில் கொன்றுதள்ளியிருந்தனர். இக்கொலைகள் பற்றி விசாரிக்க அரசாங்கம் இன்றுவரை மறுத்தே வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் கூறும் செய்தி என்னவென்றால், சிங்கள அரசாங்களின் கீழ் தமிழர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ சுதந்திரமாக வாழ முடியாதென்பதும், அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுவார்கள் என்பதும் தான்".

 மேலும், இந்த விஞ்ஞாபனம் கேள்வியொன்றினையும் வாக்காளர்களை நோக்கி முன்வைத்திருந்தது, "சிங்கள அரசாலும், அதன் காடையர்களாலும் தொடர்ச்சியாக கொலைகளுக்கும், சொத்துச் சூறையாடல்களுக்கும், அழிவுகளுக்கும் முகங்கொடுத்துவரும் தமிழ் பேசும் மக்கள் முன்னால் உள்ள மாற்றுத் தேர்வுதான் என்ன? இருட்டினுள் தமது அடையாளத்தைத் தேடிக்கொண்டும், அழிவின் விளிம்பிலும் நின்றுகொண்டிருக்கும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தனியான தமிழ்த் தேசத்தினைத் தவிர வேறு மார்க்கம் ஏதாவது இருக்கின்றதா? " என்று கேட்டிருந்தது.

 இக்கேள்விக்கான பதிலையும் அந்த விஞ்ஞாபனமே முன்வைத்திருந்தது.

 "இதற்கு நம்மிடம் இருக்கும் இறுதியானதும், துணிவானதுமான ஒரே முடிவு, எமது தந்தையர் ஆண்ட எமது தேசத்தை மீண்டும் நாமே ஆள்வதுதான். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் தமிழர்கள் தனிநாட்டு நோக்கிப் பயணிக்கவே முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதனை தமிழர்  விடுதலைக் கூட்டணி சிங்கள அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறது. நீங்கள் எமக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசம் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்புகிறதென்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தும்".

 தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலின் பின்னர் எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கும் எனும் கேள்விக்கான பதிலையும் இத்தேர்தல் விஞ்ஞாபனம் கொடுத்திருந்தது. 

"இத்தேர்தலினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்படும் தமிழ்பேசும் உறுப்பினர்கள் இலங்கையின் தேசிய சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அதேவேளை, தேசியத் தமிழ் ஈழச் சபையிலும் உறுப்பினர்களாகத் தொழிற்படுவர். மேலும், இந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் ஈழத்திற்கான அரசியலமைப்பினை வரைவதுடன், அதனை நடைமுறைப்படுத்த அகிம்சை வழியிலும், தேவையேற்பட்டால் நேரடி நடவடிக்கைகள் மூலமாகவும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பர்".

 

Edited by ரஞ்சித்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A. Amirthalingam

 

ஆனால், இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் உறுப்பினர்களுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் செயல்ப்படும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதை தமிழ் இளைஞர்கள் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாக மக்கள் முன்னால் தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்த வாக்குறுதியான இறையாண்மையுள்ள சுதந்திரமான தமிழீழத்தினை உருவாக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவோம் என்பதற்கு முரணான வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் செயற்படுவதாக விஞ்ஞாபனம் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை இத்தேர்தலின் மூலம் மக்கள் ஆணையாக மாற்றவேண்டும் என்பதே தமது முதலாவது குறிக்கோளாக அன்று இருந்தமையினால், இதுபற்றி அப்போதைக்கு அதிகம் முரண்படுவதை அவர்கள் தவிர்த்தார்கள்.

 இளைஞர்கள், குறிப்பாக ஆயுத அமைப்புக்களில் செயற்பட்டு வந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றியடையவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தார்கள். சுய கெளரவத்துடனும், மரியாதையுடனும் , சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்றால் எமக்கு ஈழமே தீர்வு என்று கூறியதுடன், ஆகவே, நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் ஈழத்தை உருவாக்க உதவும் என்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் தேர்தல் பரப்புரைகளுக்குத் தலைமை தாங்கிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களின் உதவியினை முழுமையாக உபயோகித்திருந்தார். 

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் இறுதிநாளான ஆடி 19 ஆம் திகதி நடைபெற்ற மிகப்பெரும் பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு பிரகடணம் செய்தார்,

 "எமது பிரச்சினை வெறுமனே ஒரு தேசியப் பிரச்சினையல்ல. அது இரு இனங்களுக்கிடையிலான பிணக்காகும். ஆகவே நாளை மறுநாள் நடக்கவிருக்கும் தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல, மாறாக அது ஒரு மக்கள் ஆணையாக இருக்கும். இத்தேர்தல் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டுமா அல்லது தனித்துச் சென்று தமக்கான தனிநாட்டினை உருவாக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்".

  வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தனிநாட்டிற்காக வாக்களித்திருந்தார்கள். வடக்கில் தாம் போட்டியிட்ட அனைத்து 14 தொகுதிகளிலும் வெற்றியீட்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கிழக்கில் மேலும்தொகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் நடைபெற்ற பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் மூலம் இன்னொரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆசனங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இந்தத் தேர்தல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், அமிர்தலிங்கத்திற்கும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. தந்தை செல்வாவின் தொகுதியான காங்கேசந்துறையில் போட்டியிட்டிருந்த அமிர்தலிங்கம் மிகப்பெரிய வெற்றியினை ஈட்டியிருந்தார். 1975 ஆம் ஆண்டின் இடைத்தேர்தலில் தந்தை செல்வா பெற்ற 25,927 வாக்குகளைக் காட்டிலும் 5228 வாக்குகளை அதிகமாகப் பெற்று 31,155 வாக்குகளுடன்  அமிர்தலிங்கம் வெற்றிபெற்றிருந்தார்.

 அமிர்தலிங்கத்தின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் அதிகாரி விஜேபால தேர்தல் முடிவினை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் தனது வெற்றிப் பேச்சை வழங்கிய அமிர்தலிங்கம்,"இத்தேர்தல் வெற்றியின்மூலம் தமிழ் மக்கள் இறையாண்மையுள்ள, சுதந்திர தனிநாடான தமிழ் ஈழத்தில் வாழவே விரும்புகிறார்கள் என்பது உறுதியாகிறது" என்று கூறினார். பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் தனது பேச்சினைத் தொடர்ந்த அமிர்தலிங்கம் இழந்த தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தம்மாலான அனைத்துத் தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

 அவர் மேலும் பேசுகையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அமோக ஆதரவினைத் தமிழர்கள் வழங்கியிருப்பதன் மூலம் தனிநாட்டிற்கான ஆணையினைத் தந்திருக்கிறார்கள் என்று கூறினார். "இனித் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை வென்றெடுக்க  முன்னோக்கி அணிவகுத்துச் செல்வோம்" என்று அவர் முழங்கினார்.

 தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 165 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 138 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள சிறிமாவின் சுதந்திரக் கட்சி வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தைப் பெற்றிருந்தது. இடதுசாரிக் கட்சிகள் முற்றான தோல்வியினைத் தழுவியிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 3,179,221, இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 50.9 வீதமாகும். சிறிமாவின் சுதந்திரக் கட்சி 1,855,331 வாக்குகளைப் பெற்றிருந்தது, இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 29.7 வீதமாகும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெற்ற வாக்குகள் 421,488, இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 6.4 வீதமாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 62,707 வாக்குகளைப் பெற்றுகொண்டது, இது மொத்த வாக்குகளில் 1 வீதமாகும்.

 ஜெயவர்த்தனே அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார். ஆனால், மக்கள் தனக்கு வழங்கிய ஆணையினை முற்றாக மறந்துவிட்ட அமிர்தலிங்கம், தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து செயற்பட முடிவெடுத்தார். தேசியப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பினை, இலங்கை அரசியலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், ஜனநாயகம் செழிப்புடன் செயற்பட தான் முழுமையாக ஒத்துழைக்கப்போவதாக வாக்குறுதியளித்தார் !

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிதவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஆணை

எதிர்க்கட்சித் தலைவர்

image_e266fbc47d.jpg

ரொனி டி மெல், அமிர்தலிங்கம், ஜெயவர்த்தன, ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் - பாராளுமன்ற விருந்துபசாரத்தின்போது

1975 ஆம் ஆண்டு, மாசி மாதம் 6 ஆம் திகதி நடத்தப்பட்ட காங்கேசந்துறை இடைத்தேர்தல்க் காலத்திலிருந்தே வடக்குக் கிழக்கு மக்கள் தமது சொந்தத் தாயகத்தில் தம்மைத் தாமே ஆளும் வகையில் தனியான நாடொன்று தமக்குத் தேவை என்பதைத் தொடர்ச்சியாகவகே பிரகடணம் செய்து வந்திருக்கிறார்கள். தந்தை செல்வா தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் கூறியதுபோல, தமிழர்கள் தமது விருப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்கள்.

தமது விருப்பத்தை 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் திகதியன்று நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மீண்டும் தெளிவுபடுத்திய தமிழ் மக்கள், 1977 ஆம் ஆன்டுப் பொதுத் தேர்தலில் தமது விருப்பினை மக்கள் ஆணையின்மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்கள். வட்டுக்கோட்டைப் பிரகடணத்தின் பின்னரான காலப்பகுதியில் பிரதமர் சிறிமாவைச் சந்தித்த தந்தை செல்வா அவர்கள் தனியான நாடு எனும் தமது நிலையிலிருந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எந்த விட்டுக்கொடுப்பினையும் செய்யாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதேபோன்றே அமிர்தலிங்கமும் தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் தந்தை செல்வாவின் நிலைப்பாட்டினை "எமது இலட்சியமான ஈழத்தை அடையும் வரை முன்னோக்கிச்ச் செல்வோம்" என்று கூறியதன் மூலம்  மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார்.

தனிநாட்டிற்கான போராட்டத்தினை ஆரம்பிக்கப்போவதாக தனது தேர்தல் வெற்றிப் பேச்சில் சூளுரைத்த அமிர்தலிங்கமும், ஏனைய தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களும் சரியாக ஏழு நாட்களின் பின்னர் தாம் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடிவெடுத்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியே இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக இருந்தமையினால் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பு அவர்களின் மடியில் தானாகவே வந்து வீழ்ந்தது. அப்பதவியினை இழக்க அக்கட்சியினர் சிறிதும் விரும்பவில்லை. அந்தப் பதவிக்காக தமது இலட்சியமான தனிநாடு நோக்கி முன்னெறுவேம் என்று மக்களுக்குக் கொடுத்த சத்தியத்தைப் பிற்போட அவர்கள் முடிவெடுத்தனர். தேர்தலின் மொத்தப் பெறுபேறுகளும் வெளிவந்த நாளான ஆடி 23 ஆம் திகதியன்று எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதென்று கட்சி உத்தியோகபூர்வமாக முடிவெடுத்தது. யாழ்ப்பாணத்தின் கட்சி அலுவலகத்தில் கூடிய அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், கதிரவேற்பிள்ளை, யோகேஸ்வரன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் அடங்கிய குழு இந்த முடிவினை எடுத்திருந்தது.

இக்கூட்டத்தில் பேசிய கதிரவேற்பிள்ளை பின்வருமாறு கூறினார், "இது எமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பொன்னான சந்தர்ப்பம். இதனை நாம் தவறவிடக் கூடாது" என்று மற்றையவர்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அமிர்தலிங்கமோ சிறிது தயங்கியவராகக் காணப்பட்டார். தமது இந்த முடிவிற்கு இளைஞர்களின் எதிர்வினை எப்படியாக இருக்குமோ என்று பயந்தார். "நாம் இளைஞர்களின் உணர்வுகுறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார். வழக்கமாக இளைஞர்களை அழைக்கும் "பையன்கள்" எனும் சொல்லிற்குப் பதிலாக "பெடியன்கள்" எனும் சொல்லை அவர் அங்கு பாவித்தார்.

அதற்குப் பதிலளித்த சிவசிதம்பரம், "அவர்கள் சில நாட்களுக்குக் கத்துவார்கள், அதன்பின்னர் எல்லாம் அடங்கிவிடும்" என்று ஏளனமாகக் கூறினார்.

ஆடி 30 அன்று, வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை ஏற்றுக்கொள்வதான தீர்மானம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக அமிர்தலிங்கமும், உப தலைவராக சிவசிதம்பரமும் தெரிவுசெய்யப்பட்டார்கள். தலைவர்கள் தேர்வின் பின்னர், எந்தவித கேள்விகளுமின்றி,  கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு எதிர்க்கட்சித் தலைவர்ப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது என்று முடிவாகியது.

இதனை அறிந்தபோது இளைஞர்கள் கொதிப்படைந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் அணி இம்முடிவுக்கெதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன் மக்கள் ஆணைக்கு எதிராகக் கட்சித் தலமைப்பீடம் செயற்படுவதாகவும் விமர்சித்தனர். மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் இந்தப் பாராளுமன்றக் குழு தனி ஈழத்திற்கான பாராளுமன்றக் குழுவினை உருவாக்கி, தமிழ் ஈழத்திற்கான அரசியல் யாப்பினை  வரைந்து, தனிநாடு நோக்கிய பயணத்தினை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது.

இக்கண்டனங்களுக்கு அறிக்கை ஒன்றின்மூலம் பதிலளித்த கதிரவேற்பிள்ளை பின்வருமாறு கூறியிருந்தார்,

"எமது பாராளுமன்றக் குழு பாராளுமன்றத்தினை தனிநாட்டிற்கான பிரச்சாரத்தைச் செய்யும் களமாகப் பாவிக்கும்".

 

ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு செவ்வியொன்றினை வழங்கிய அமிர்தலிங்கம் தமது முடிவிற்கான மேலும் இரு காரணங்களை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவியின் வாயிலாக தமிழர்கள் தமது செய்தியினை முழு உலகிற்கும் தெளிவாகச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அத்துடன் சர்வதேச அளவில் முக்கிய அமைப்புக்களுடனும், தனிநபர்களுடனும் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பத்தினையும் இப்பதவி வழங்கியிருக்கிறது என்றும் அவர் தமது முடிவினை நியாயப்படுத்தினார்.

ஆவணி 3 ஆம் அதிகதி, தொண்டைமானின் வாசஸ்த்தலத்தில் மீண்டும் கூடிய பாராளுமன்றக் குழு, மறுநாள் நடைபெறவிருந்த பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பநாள் நிகழ்வுகளில் பங்கேற்பது என்று எடுத்த முடிவு இளைஞர்களுக்கு மேலும் கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. புதிதாகப் பதவியேற்கும் பிரதமர் ஜெயவர்த்தனேயுடன் சிநேகபூர்வமாக பணிபுரிந்து, அவருக்குத் தேவையான கால அவகாசத்தினை வழங்குவதற்காக தனிநாட்டிற்கான கோரிக்கையின அப்போதைக்கு தள்ளிவைக்கலாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எடுத்த தீர்மானமே இளைஞர்களுக்கு அதிக சினத்தினை ஏற்படுத்தியிருந்தது.

ஆவணி 4 ஆம் திகதி சபாநாயகரைத் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பிற்காக பாராளுமன்றம் கூடியவேளை, அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரது கட்சியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பினை முற்றாக ஏற்றுக்கொள்வதாக அதன் மீது சத்தியம் செய்து தமது பாராளுமன்றப் பொறுப்புக்களை அன்று காலை ஏற்றுக்கொண்டதோடு, சபாநாயகருக்கான வாக்கெடுப்பிலும் கலந்துகொண்டனர். பின்னர் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்ட பிரேமதாசா, ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் பெயரை சபாநாயகர் பதவிக்குப் பிரேரிக்க, எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் அதனை வழிமொழிந்தார். பின்னர் பிரேமதாசாவும், அமிர்தலிங்கமும் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சபாநாயகரை அழைத்துச் சென்று சபாநாயகர் ஆசனத்தில் அமரவைத்தனர். சபாநாயகரிடம் அப்போது பேசிய அமிர்தலிங்கம், தானும், தனது கட்சியும் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒழுங்காக நடந்தேறுவதற்கு சபாநாயகருக்குத் தம்மாலான முழு ஆதரவினையும் வழங்குவதாகவும், அவ்ருடன் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

1957 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக தமது கண்டனத்தைப் பதிவு செய்யும் முகமாக அதுவரை பாராளுமன்ற திறப்பு நிகழ்வில் பங்கேற்பதனைப் புறக்கணித்து வந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்று நடைபெற்ற பாராளுமன்ற உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். அமிர்தலிங்கத்தின் ஒத்துழைப்பிற்கு நன்றியுடன் பதிலளித்த ஜெயவர்த்தனா தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தான் குறிப்பிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் எனும் பதத்தினை நினைவுகூர்ந்தார். தமது செயற்பாடுகளால் இளைஞர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதனை நன்றாகப் புரிந்திருந்த அமிர்தலிங்கம், ஆவணி 7 ஆம் திகதி அவர்களின் சீற்றத்தினைத் தணிக்கும் முகமாக அறிக்கயொன்றினை வெளியிட்டார்.

அமிர்தலிங்கத்தின் ஒத்துழைப்பிற்கு பிரதியுபகாரமாக ஜெயவர்த்தனா எதிர்க்கட்சித் தலைவர் எனும் பதவிக்கு தகுந்த கெளரவத்தினை வழங்கினார். அமிர்தலிங்கத்திற்கு உத்தியோகபூர்வ வாசஸ்த்தலம், பொலீஸ் பாதுகாப்பு, உத்தியோகபூர்வ மோட்டார் வண்டி, காரியதிரிசி எனபன ஜெயவர்த்தனவினால் வழங்கப்பட்டன. அரசியல் தந்திரத்தில் மிகவும் சூட்சுமமானவராகத் திகழ்ந்த ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்திற்கும், அவரது கட்சிக்கும் தொடர்ச்சியான சலுகைகளை வழங்குவதன் மூலம்  தனிநாட்டிற்கான அவர்களது இலட்சியத்தை அவர்களாகவே  கைவிட்டுவிட  திட்டமிட்டுச் செயற்பட்டு வந்தார். அமிர்தலிங்கம் தொடர்ந்தும் சிங்களவர்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயவர்த்தனா எடுத்தார்.

தமது கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் ஏமாற்றுவேலையினை இளைஞர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர். அதுவரை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது இருந்த அதிருப்தி மொத்தமாக அமிர்தலிங்கம் மீது திரும்பியது. இளைஞர்களால் யாழ்ப்பாணதில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன,

"கேட்டது தமிழ் ஈழம், கிடைத்தது எதிர்க்கட்சித் தலைவர் பதவி" என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் யாழ் நகரில் பரவலாக ஒட்டப்பட்டன.

மேலும், தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு அக்கட்சியினர் துரோகமிழைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்கிற துண்டுப்பிரசுரங்களையும் இளைஞர்கள் விநியோகித்தனர். ஒரு துண்டுப்பிரசுரம் பின்வருமாறு கேள்விகேட்டிருந்தது,

"தமிழ் ஈழத்தின் தேசிய பாராளுமன்றத்திற்கு என்ன நடந்தது?" என்றும் "மக்கள் உங்களுக்குத் தந்த ஆணையினை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமையினையும் கேட்டிருந்தது.

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலீஸாரின் வன்முறை

EelaNadu newspaper building after 1981 torching

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பாராளுமன்றக் குழுவிற்கெதிராக இளைஞர்கள் தமது செயற்பாடுகளை அதிகரிக்கத் தொடங்க இலங்கை வரலாற்றில் முதலாவது பொலீஸ் அட்டூழியத்தினை யாழ்ப்பாணக் குடாநாடு கண்டது. அது ஒரு சிறிய சம்பவமாகவே ஆரம்பித்தது. பொலீஸார்  பேரூந்துகளில் பயணம் செய்யும்போதோ அல்லது களியாட்ட நிகழ்வுகளுக்குச் செல்லும்போதோ அனுமதிச் சீட்டினை வாங்குவதில்லை என்பது பொதுவான நடைமுறையாகவே இருந்துவந்தது. அதன்படி, ஆவணி 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற கார்னிவல் நிகழ்வுக்கு சிவில் உடையில் பொலீஸாரின் குழுவொன்று சென்றிருந்தது.

The College building

 புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்

கண்பார்வையற்றவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் யாழ்ப்பாண புற்றுநோய் வைத்தியசாலைக்கான உபகரணங்கள் என்பவற்றுக்காக நிதிசேகரிப்பு நிகழ்வே அன்று புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வாயிற்கடமையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சிவிலுடையில் வந்த பொலிஸார் நுழைவுச் சீட்டினை வாங்கினால் ஒழிய உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். சில நேர வாக்குவாதங்களுக்குப் பின்னர் பொலீஸார் நுழைவுச் சீட்டுக்களை வாங்கினர். உள்ளே நுழைந்து மதுபானங்களை அருந்திவிட்டு, வெளியே போகும் போது வாயிலில் கடமையிலிருந்தவர்கள் மீது கடுமையான தாக்குதலினை அவர்கள் மேற்கொண்டனர். அந்த களியாட்ட நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களில் ஒருவரான வைத்தியர் பிலிப்ஸ் அவர்கள் பொலீஸ் உயரதிகாரிகளைத் தொடர்புகொண்டு பொலீஸ் கொன்ஸ்டபிள்களை களியாட்ட நிகழ்வுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், மறுநாள் ஆவணி 13 அன்று யாழ்ப்பாணத்தின் ஏனைய பொலீஸ்நிலையங்களிலிருந்து இந்த நிகழ்வுக்குச் சென்ற பல பொலீஸார்  மதுபோதையில் பொதுமக்களுடன் கடுமையான கைகலப்பில் ஈடுபட்டனர்.   சீருடையில் அங்கு சென்றிராத பொலீஸார் மீது திருப்பித் தாக்கிய பொதுமக்கள் அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். இதற்குப் பதிலடியாக வன்முறையில் இறங்கிய பொலீஸார் மறுநாள், ஆவணி 14 ஆம் திகதி தமது பொலீஸ் நிலையங்களிலிருந்து வெளியே வந்து வீதிகளில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினர். சைக்கிள்களில் சென்றவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், அவர்கள் தமது சைக்கிள்களைக் காவிச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். புத்தூர்ப் பகுதியில் சைக்கிள்களில் சென்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்களை வழிமறித்து பொலீஸார் தாக்கத் தொடங்கவே ஒரு இளைஞர் தான் மறைத்துவைத்திருந்த கைத்துப்பாக்கியினால் பொலிஸார் மீது சுடவும் ஒரு பொலீஸ்காரருக்குத் தொடையில் காயம் பட்டது.

மறுநாளான ஆவணி 15 அன்று யாழ்ப்பாணப் பொலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொலீஸ் குழுவொன்று தம் கண்ணில் பட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தொடங்கியது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 4 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 21 பேர் காயமடைந்தனர். தமது துப்பாக்கிச் சூட்டினை நியாயப்படுத்திய பொலிஸார், ஆயுதம் தரித்த இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களைத் தாம் களைய எத்தனித்தபோது அவர்கள் எதிர்த்தமையினாலேயே தாம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டி ஏற்பட்டதாக அது கூறியது. யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் வி. யோகேஸ்வரன் இத்தாக்குதல் தொடர்பாக கொழும்பு  பொலீஸ் தலைமைச் செயகலத்தில் முறையிட்டபோதும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களை பொலீஸார் நிறுத்தவில்லை.

ஆவணி 16 இலும் பொலீஸாரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. டிரக் வண்டிகளில் யாழ்ப்பாணவீதிகளில் வலம் வந்த பொலிஸார் கடைகளுக்குத் தீவைத்துக்கொண்டே சென்றனர். ஆவணி 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொலீஸ் அணி யாழ்ப்பாணம் சந்தைக்கும் அருகிலிருந்த வியாபார நிலையங்களுக்கும் தீவைத்துக்கொண்டு சென்றது. சந்தையின் ஒருபகுதி முற்றாக எரிந்துபோக பல கடைகளும் முற்றாக எரிந்து நாசமாகின. வீதியில் சென்ற தமிழர்கள் மீது பொலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்றும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவங்கள் ஆரம்பித்த வேளை அமிர்தலிங்கம் கொழும்பிலேயே தங்கியிருந்தார். ஆனால், பொலீஸாரின் வன்முறைகள் தொடர்ந்ததையடுத்து ஆவணி 17 அன்று இரவு யாழ்ப்பாணம் வந்த அவர், மறுநாள் காலை, எரிந்துபோன யாழ்ப்பாணச் சந்தைப்பகுதியினைச் சென்று பார்வையிட்டார். சந்தைப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் அத்தியட்சகரைக் கண்ட அமிர்தலிங்கம் அவர் அருகில் சென்று "ஏன் அப்பாவிகளைக் கொல்கிறீர்கள்?" என்று கோபத்துடன் கேட்கவும், அந்த அதிகாரி அமிர்தலிங்கத்தை தகாத வார்த்தைகளால் வையத் தொடங்கினர். அந்த அதிகாரியின் பின்னால் நின்றிருந்த இன்னொரு பொலீஸ் கொன்ஸ்டபிள், தான் வைத்திருந்த துப்பாக்கியின் பிடியால் அமிர்தலிங்கத்தின்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினான்.

தமிழ் மக்கள் மீது பொலீஸார் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துவைத்த வன்முறைகள் தெற்கிற்கும் பரவத் தொடங்கின. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த சிங்கள மாணவர்கள் கலவரத்தைத் தூண்டிவிட, பொலீஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். 1964 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் - சிங்கள நல்லுறவை வளர்க்கவென்று வருடா வருடம் ஒருதொகை சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். ஆனால், தமது வாழிடங்களிலிருந்தான தொலைவு, புதிய சமூகம், மொழி, மதம், பழக்கமில்லா கலாசாரம் என்பவற்றிற்காக  சிங்கள மாணவர்கள் தாம் யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதை  விரும்பியிருக்கவில்லை. ஆகவே தமது வீடுகளுக்கு அண்மையாக கொழும்பு, பேராதனை, வித்யோதயா மற்றும் வித்யாலங்கார ஆகிய பகுதிகளில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றம் பெற்றுச் செல்லவே அவர்கள் முயன்று வந்தனர். அதைவிடவும் 1977 ஆம் ஆண்டு இன்னொரு தனியான சம்பவம் ஒன்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்திருந்தது. தமிழ் மாணவி ஒருவரை சில சிங்கள மாணவர்கள் சீண்டியதையடுத்து, அம்மாணவியின் உறவினர்கள் அந்தச் சிங்கள மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதுவும் ஒரு காரணம் சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினை வெறுத்ததற்கு. ஆகவே, நடந்துவந்த வன்முறைகளைப் பாவித்து தாம் வீடுசெல்ல முடிவெடுத்தனர் சிங்கள மாணவர்கள். யாழ்ப்பாணத்தில் நிலவிவந்த வன்முறைச் சூழலினால் தமது உயிருக்கு அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதால், தாம் உடனடியாக வீடு செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டனர்.

ஆகவே, இந்த சிங்கள மாணவர்கள் விசேட பேரூந்துகளில், பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் ஆவணி 17 ஆம் திகதி அநுராதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அநுராதபுரத்தினை இப்பேரூந்துகள் அடைந்தவுடன், அம்மாணவர்களின் தலைவனான ஒருவன் பேரூந்தின் கூரையின் மீது ஏறி தன் முன்னே திரண்டிருந்த சிங்கள மக்கள் கூட்டத்தை நோக்கி "யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் சிங்களவர்களைத் தாக்குகிறார்கள்" என்று கூக்குரலிடத் தொடங்கினான். மாணவனின் பேச்சைக் கேட்டு வெறியேறிய அந்தச் சிங்களக் கூட்டம் உடனடியாக வன்முறைகளில் இறங்கியது. அநுராதபுரத்தில் வாழ்ந்துவந்த பல தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, பல வியாபார நிலையங்கள் சூறையாடப்பட்டபின் தீக்கிரையாக்கப்பட்டன. தெருக்களிலும் வீடுகளிலும் தமிழர்கள் தேடித்தேடித் தாக்கப்பட்டார்கள். தமிழர் மீதான தாக்குதல்களை பொலீஸார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். உயிரச்சம் காரணமாக பொலீஸ் நிலையங்களை நாடி ஓடிவந்த பல தமிழர்களை பொலீஸார் விரட்டியடித்தனர். பொலீஸாரே தமிழர்களை எதிரிகளாக நடத்தத் தொடங்கினர். ஆவணி 18 ஆம் அன்று தமிழருக்கெதிரான வன்முறைகள் குருநாகல, மாத்தளை மற்றும் பொலொன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும், ஆவணி 19 ஆம் திகதி கண்டி மற்றும் ஏனைய மலையகப் பகுதிகளிலும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு திரும்பிய அமிர்

ஆவணி 19 அன்று கொழும்பு திரும்பிய அமிர் பாராளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையில் பேசும்போது யாழ்ப்பாணத்தில் பொலீஸார் நடத்திவரும் அராஜக வன்முறைகளைப் பற்றி முறையிட்டார். இந்த விவாதத்தில் பேசிய அமிர், "என்னை நோக்கிச் சுடுவதற்காக பொலீஸார் துப்பாக்கியை நீட்டினர். இன்று நான் உயிருடன் இருப்பதே எனது அதிஷ்ட்டம் தான். அவர்கள் எல்லோருமே பொலீஸ் சீருடையில்த்தான் இருந்தார்கள், தம்மை அடையாளம் காண்பதைத் தவிர்த்துக்கொள்ள அவர்களது இலக்கங்கங்கள் சீருடையிலிருந்து அகற்றப்பட்டிருந்தன. எதற்காக அப்பாவிகளைக் கொல்கிறீர்கள் என்று நான் அவர்களை வினவியபோது என்னை தூஷண வார்த்தைகளால் வைததோடு, துப்பாக்கியின் பின்புறத்தாலும் அடித்தார்கள்" என்று கூறினார்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சில ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், "எங்கே, அந்த தூஷண வார்த்தைகளைச் சொல்லுங்கள் கேட்கலாம்" என்று ஏளமாக அமிரைப் பார்த்துக் கேட்டார்கள்.

"இல்லை சபாநாயகர் அவர்களே, இந்த கெளரவமான அவையில் அந்த அருவருக்கத்தக்க, இனவாதத் தூஷணச் சொற்களைக் கூறப்போவதில்லை. பாராளுமன்றத்தில் பேசப்பட முடியாத கீழ்த்தரமான சொற்கள் அவை" என்று அமிர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றினை அமிர் பாராளுமன்றத்தில் வழங்கியதோடு, இவற்றுக்கெல்லாம் காரணம்  பொலீஸாரே என்பதையும் உறுதிப்படுத்தினார். பின்னர் பிரதமரைச் சுட்டிக்காட்டி, "இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடும் பொலீஸாரைக் கொண்டு ஒரு நாட்டினை எப்படி நடத்துவீர்கள்?" என்று அவர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ஜெயவர்த்தனா, "மிக அண்மைக்கலம் வரை போலீஸார் தமிழர்களிடமிருந்து தாக்குதலை எதிர்கொண்டே வந்திருக்கிறார்கள், ஆகவேதான் திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

ஒத்திவைப்புப் பிரேரணையில் இறுதியாகப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா அமிர்தலிங்கத்தின் குற்றச்சாட்டுக்களைக் கடுமையாக மறுத்ததுடன், சினமேலீட்டுடன் பதிலளித்தார். புத்தூர் சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட ஜே ஆர், "என்ன துணிவிருந்தால் உங்கள் பையன்கள் எமது பொலீஸாரை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவார்கள்?" என்று கேட்டார். இலங்கையில் பிரிவினையினை உருவாக்க அமிர்தலிங்கம் முயல்கிறார் என்று ஜே ஆர் கூறியபோது பாராளுமன்றமே அதிரும்வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆரவாரமிட்டனர்.

"இலங்கையில் தனியான நாடொன்றினை உருவாக்கப்போகிறார்கள், திருகோணமலையினையே அதற்குத் தலைநகராக்கப் போகிறார்கள் என்று கூறும்போது மக்கள் அமைதியிழக்கிறார்கள். திருக்கோணமலையினைக் கைப்பற்றினால் ஆசியாவுக்கான வாயில் திறக்குமென்று நெப்போலியன் கூறியதாகவும், அந்தத் திருகோணமலையினையே தமிழர்கள் தலைநகராக்கப்பார்க்கிறார்கள் என்றும் பத்திரிக்கைகளில் செய்திகள் வரும்போது சிங்களவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை.  அடுத்ததாக, நெப்போலியன் அப்படியொன்றைச் சொன்னார் என்பதைக்கூட நாம் நம்பவில்லை".

"நீங்கள் வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்று கூறிக்கொண்டே வன்முறைகளில் ஈடுபடும்போது நாட்டிலுள்ள ஏனைய மக்கள் இதற்கு எந்தவிதத்தில் பதிலளிப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? உங்களுக்குச் சண்டைதான் வேண்டுமென்றால், வாருங்கள், தாராளமாகச் சண்டை செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்யலாம். தமிழர்களுக்கு நான் கூறவிரும்புவது இதைத்தான், சிங்கள மக்களும் இதைத்தான் சொல்கிறார்கள்" என்று ஜே ஆர் ஆவேசமாகக் கூறினார்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயரவும், அவர்களின் சொத்துக்கள் நாசமக்கப்படவும் காரணமாக இருந்த பொலீஸாரின் வன்முறைகள் பற்றி ஜே ஆர் சிறிதும் வருத்தமடையவில்லை. வேண்டுமென்றால், ஒரு விசாரணைக் கமிஷனை அமைக்கலாம், அதைவிட வேறு எதுவும் என்னால் செய்யமுடியாது என்று அவர் கையை விரித்து விட்டார்.

பாராளுமன்றத்தில் ஜே ஆரின் ஆக்ரோஷமான பேச்சினையடுத்து கொழும்பில் வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தன. கொழும்பு, பாணதுறை, களுத்துறை ஆகிய பகுதிகளில் ஆவணி 19 அன்றிரவு வன்முறைகள் ஆரம்பித்திருந்தன. வீதிகளின் முக்கிய சந்திகளில் கூடிய சிங்கள மக்கள் கூட்டம் பொலீஸார் பார்த்திருக்க தமிழர்களின் வீடுகள் கடைகள் என்று ஒவ்வொன்றாகத் தேடித் தேடித் தாக்கத் தொடங்கியது. 1958 ஆம் ஆண்டுக் கலவரத்தைப் போலல்லாமல், இம்முறை தமிழர்களின் வீடுகளுக்குச் சென்ற சிங்களவர்கள் அங்கிருந்தவர்களை அடித்துத் துன்புறுத்தியதுடன், பலரைக் கொன்றதோடு, அவர்களின் வீடுகளைக் கொள்ளையடித்தபின் எரியுமூட்டினர். இந்தத் தாக்குதல்களின்போது சிங்களவர்கள் பல சைவக் கோவில்களையும் எரியூட்டியபடியே சென்றனர்.

கலகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மறுநாளான ஆவணி 20 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அரசாங்கம் 35 மணிநேர ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்ததுடன் இராணுவத்தினரையும், கடற்படையினரையும் நகரங்களில் நிறுத்தியது. ஆவணி 22 ஆம் திகதியன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படத் தொடங்கியதுடன் 30 ஆம் திகதி முற்றாக விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆவணி 29 அன்று வெளியான டெயிலி நியூஸ் பத்திரிக்கை இத்தாக்குதல்களில் 112 தமிழர்களே கொல்லப்பட்டதாகக் கூறியதோடு சுமார் 25,000 தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், சுயாதீன தரப்புக்கள், வைத்தியசாலைகளின் விபரங்களின்படி கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்தது 300 ஆவது இருக்கும் என்று கணிக்கப்பட்டதுடன் 30,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாகவும், 300 சைவக் கோவில்கள் எரியூட்டப்பட்டதாகவும் தெரியவந்தது. தெற்கின் பல இடங்களிலும் தமிழ் அகதி முகாம்களைத் திறந்த அரசாங்கம் அங்கிருந்த தமிழர்களை படிப்படியாக கப்பல்கள் மூலம் வடக்குக் கிழக்கிற்கு அனுப்பி வைத்தது.

தமிழர்கள் கொல்லப்பட்டும் அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டும் உள்ளதை அறிந்தபோது தமிழ் மக்களும் இளைஞர்களும்  கொதித்துப்போனார்கள். மேலும்  வடக்கில் வாழ்ந்துவந்த சிங்களவர்கள் மீது பதில்த்தாக்குதல்கள் நடைபெறலாம் என்கிற வதந்தியும் அப்போது உலாவி வந்தது. ஆனால், வடக்கில் வாழ்ந்துவந்த எந்தச் சிங்களவர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படாத போதிலும், பல வருடங்களாக வடக்கில் வாழ்ந்துவந்த சிங்களவர்கள் தமக்கு அருகிலிருந்து பொலீஸ் நிலையங்களில் அடைக்கலம் புகுந்தார்கள். சிங்கள மக்களுக்கான அகதி முகாம்களை பொலீஸார் சிங்கள மகா வித்தியாலயத்திலும், நாகவிகாரையிலும் திறந்திருந்தனர்.

இலங்கையில் தமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழ்நாட்டில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததுடன், அவர்களைக் கோபங்கொள்ளவும் செய்திருந்தது. தாக்குதல்களுக்கான தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்த தமிழ் நாடு பாராளுமன்றம், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் உடனடியாக ஒரு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வன்முறைகள் பற்றிய விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், ஜே ஆருடன் மிகவும் நெருக்கமான மொரார்ஜியோ, தனது வெளிவிவகார அமைச்சரின் மூலம் இந்தியாவின் கரிசணையினை தில்லியிலிருந்த இலங்கை உயர்ஸ்த்தானிகரிடம் கூறச் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டார். சென்னையில் ஆளும் தி மு அரசு தமிழர்களுக்கு ஆதரவு தேடி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சென்னையில் அமைந்திருந்த இலங்கை பிரதி உயர்ஸ்த்தானிகரலாயத்தில் மனுவொன்றும் பேரணியில் கலந்துகொண்டவர்களால் கொடுக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டின் தமிழர் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் இவ்விரு இனங்களுக்கிடையிலான உறவின் முக்கிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. தமிழர் மீதான வன்முறைகள் பல்வேறு வழிகளில் நடத்தப்பட்டதுடன், கடுமையான பின்விளைவுகளையும் ஏற்படுத்தியிருந்தன. இந்த வன்முறைகளின் விளைவுகளை பின்வருமாறு சாராம்சப்படுத்தலாம்,

தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள் ஜே ஆரின் மீது வைத்திருந்த நம்பிக்கையினை முற்றாக இழந்தனர்

தமிழர்கள் இலங்கைப் பொலீஸார் வைத்திருந்த நம்பிக்கையினை இழந்ததுடன் அவர்களை சிங்களப் பொலீஸார் என்று அழைக்கவும் ஆரம்பித்தனர்

தனிநாட்டிற்கான தேவை மேலும் மேலும் உறுதியடைந்தது

மிதவாதத் தலைவர்கள் தமிழ் மக்கள் மீது கொண்டிருந்த செல்வாக்கு பாரிய வீழ்ச்சியைக் காண, ஆயுத அமைப்புக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தொடங்கின

பிரபாகரனின் சுலோகமான திருப்பியடி எனும் கொள்கை மக்களிடையே வரவேற்பினைப் பெறத் தொடங்கியது

தமிழர்களின் பிரச்சினையில் தமிழ்நாடும், இந்தியாவும் உள்வாங்கப்பட்டன

மிதவாதிகள் இலக்குவைக்கப்பட்டார்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மிதவாதிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியது. பொலீஸ் அராஜகத்தினை ஜே ஆர் நியாயப்படுத்தியிருந்ததும், தமிழர்களுடான போருக்கான அவரின் அறைகூவலும் தமிழ் இளைஞர்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்திருந்தன. ஆகவே, ஆயுத அமைப்புக்கள் தாமும் மோதலுக்கு ஆயத்தம் என்கிற ரீதியில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டனர். ஜே ஆருக்கு யுத்தமே வேண்டுமென்றால், நாமும் அதனைத் தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று அவர்கள் கூறியிருந்தனர். 

தமிழருக்கெதிரான வன்முறைகளின்போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் அத்தாக்குதல்களுக்காகப் பதிலடி வழங்கியே தீரவேண்டும் என்கிற மனநிலையில் இருந்தனர். தாம் தமிழர் என்பதற்காகவே சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களில் சிலர் தங்கத்துரையின் அமைப்பிலும், பிரபாகரனின் அமைப்பிலும் இணைந்துகொண்டனர். கொழும்பில் இயங்கிவந்த குற்றச்செயல் விசாரணைப் பிரிவு அரசுக்கு அனுப்பிய உளவுக் குறிப்பில் இவ்விரு அமைப்புக்களிலும் இணைந்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 30 இலிருந்து 50 வரை இருக்கலாம் என்றும், அனுதாபிகளின் எண்ணிக்கை 100 இலிருந்து 200 வரை இருக்கலாம் என்று கூறியிருந்தது. இதேவேளை மக்களின் அனுதாபம் இளைஞர்களின் பக்கம் திரும்பியிருந்தது.

ஆயுத அமைப்புக்கள் உடனடியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்ன்ணையினர் மீது, குறிப்பாக அமிர்தலிங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். அரசுக்கெதிராக கடுமையான நிலைப்பாட்டினை எடுக்குமாறு அவர் கோரப்பட்டார். இளைஞர்களின் அழுத்தத்திற்குப் பணிந்துபோவதைத்தவிர ..வி.மு தலைமைத்துவத்திற்கு வேறு வழி இருக்கவில்லை.  அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை புரட்டாதி முதலாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்றவேளை, அதற்குத் திருத்தம் ஒன்றினை முன்வைத்த ..வி.மு தலைமைப்பீடம், தமிழ் மக்களுக்கான தனிநாட்டினை அரச கொள்கை உரையில் இணைத்துக்கொள்ளாமைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் கொதிப்படைந்த அரசுதரப்பு அமிர்தலிங்கம் இனங்களுக்கிடையே பகைமையுணர்வினை உருவாக்கும் பேச்சுக்களில் ஈடுபடுகிறார் என்று குற்றஞ்சாட்டியது. மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்க அமிர்தலிங்கம் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததுடன், அமிர் முற்கரண்டி நாக்குக் கொண்டவர் என்றும், இருமுகம் கொண்டவர் என்றும் சாடினார்.  தெற்கில் சிங்களவருக்கு ஒரு முகத்தினையும், வடக்கே சென்றவுடன் தமிழருக்கு இன்னொரு முகத்தினையு காட்டுபவர் என்றும் கூறினார். அமிர்தலிங்கத்தின் இனவாதப் பேச்சே சிங்கள மக்களை கலவரங்களில் ஈடுபடத் தூண்டியதாகவும் அவர் நியாயப்படுதினார்.

புரட்டாதி 22 ஆம் திகதி சபாநாயகரின் அதிகாரத்தைப் பலப்படுத்தி குடியரசு யாப்பில் திருத்தங்களைச் செய்யக்கூடியவகையில் தீர்மானம் ஒன்றைப் பாராளுமன்றத்தி ஜே ஆர் சமர்ப்பித்தார். இதன்மூலம் யாப்பு,  அதனோடிணைந்த ஏனைய சட்டங்களையும் சீர்செய்யும் குழுவினரையும், அதன் தலைவரையும் உருவாக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படும். இத்தீர்மானம் மறுநாளே பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இளைஞர்களிடமிருந்து கடுமையான அழுத்தத்தினச் சந்தித்துவந்த அமிர்தலிங்கமும் அவரது கட்சியும், அரசியலமைப்பை மாற்றும் குழுவின் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவிற்கு வந்தனர். அனால், 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 4 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை நிலைநாட்ட கடும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை உலகிற்கு "அரசுக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சி" என்று காட்டியும் தன்னைப் பலப்படுத்த நினைத்திருந்த ஜே ஆருக்கு அமிர்தலிங்கத்தின் இந்தப் புறக்கணிப்பு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வருவதன் மூலம் சிறிமாவின் அரசியல் பலத்தை முற்றாக முடக்கிவிடலாம் என்று அவர் எண்ணியிருந்தார்.

See the source image

செளமியமூர்த்தி தொண்டைமான்

அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் தெரிவுக்குழுவின் அங்கத்தவர்களின் விபரம் கார்த்திகை 3 ஆம் திகதி வெளியானது. ..வி.மு இனரின் பிரதிநிதி எவரையும் இத்தெரிவுக்குழு கொண்டிராதபோதும், தொண்டைமான் இக்குழுவில் பங்கேற்றிருந்தார். இத்தெரிவுக்குழுவின் அங்கத்தவர் விபரங்கள்,

ஜே ஆர் ஜெயவர்த்தனா - தலைவர், ஆர் பிரேமதாசா, லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்கா, ரொனி டி மெல், கே. டபிள்யூ தேவநாயகம், எம் எச் எம் நைனா மரிக்கார், சிறிமாவோ பண்டாரநாயக்கா, மைத்திரிபால சேனநாயக்கா மற்றும் தொண்டைமான்.

அமிர்தலிங்கத்தை மையப்படுத்தி, மொத்த ..வி. மு இனர் மீது மிகக்கடுமையான பிரச்சாரத்தை ஜே ஆர் கட்டவிழ்த்து விட்டிருந்தார். லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள், ரூபவாகினி எனப்படும் தேசியத் தொலைக்காட்சி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைக் கைவசம் வைத்துக்கொண்டு ஜே ஆர் இந்தப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருந்தார்.

ஊடகத்துறையின் சுயாதீனமான செயற்பாட்டிற்காக முன்னர் குரல்கொடுத்த ஜே ஆர், ஆட்சிக்கு வந்தவுடன் அரச ஊடகத்துறையினை தனது சொந்த கருத்து வெளியிடும் சாதனங்களாக மாற்றினார். தனது முன்னாள் காரியதரிசி ரனபால பொடினாகொடவை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக அமர்த்தியதுடன், அவரூடாகவே பத்திரிக்கைத் துறையினைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பொடினாகொட ஒவ்வொரு காலையிலும் ஜே ஆரின் வாசஸ்த்தலத்திற்குச் சென்று, ரூபவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர்களுடன் ஜே ஆரைச் சந்தித்து, அங்கு ஜே ஆர் கூறும் செய்திகளை அப்படியே தத்தமது ஊடகங்களில் பிரச்சாரப்படுத்தி வருவது வழமையானது.  ஆரம்பத்திலிருந்தே அமிர்தலிங்கமும், சிறிமாவோவுமே ஜே ஆரின் முக்கிய இலக்குகளாக இருந்து வந்தனர். அமிர்தலிங்கத்தை தட்டி, அடக்கிவைப்பது, சிறிமாவின் அரசியல் எதிர்காலத்தைச் சிதைப்பது ஆகிய இரண்டுமே ஜே ஆரின் குறிக்கோளாக அன்று இருந்தன. அமிர்தலிங்கத்திற்கெதிரான பிரச்சாரம் அவரை ஒரு பூதமாக சிங்களவர் மத்தியில் காட்டியதோடு, தமிழ் ஆயுதக்குழுக்களை பின்னாலிருந்து தூண்டிவிட்டு பிரிவினைவாதத்தை வளர்த்தெடுக்கும் ஒரு தமிழ் இனவாதியாகவும் சித்தரித்திருந்தார்.

அமிர்தலிங்கத்திற்கு இருபுறத்திலும் இருந்து அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருந்தது. அவரது அன்றைய நிலையினை முன்னிறுத்தி அவரை 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி பேட்டி கண்டேன். பாராளுமன்றத் தெரிவுக்குழுவைப் புறக்கணித்ததன் காரணம் ஜே ஆர் இன் ஜனாதி அதிகாரத்தை புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்தவில்லையென்றும், ஜே ஆர் ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்தாலென்ன, தமிழர்கள் அதுபற்றிக் கவலைப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறினார். "உங்கள் முழு வீடுமே தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது யன்னல்களின் திரச்சீலைக்கு என்ன வர்ணம் பூசுவது என்று உங்களால் கவலைப்பட முடியுமா? " என்று அவர் கேட்டார். மத்தளத்திற்கு இருபக்கமும் அடிபோல தனது நிலை இருப்பதாக இச்செவ்வியில் அவர் கூறினார். "நான் ஜே ஆரின் பக்கம் நிற்பதாக இளைஞர்கள் எண்ணி என்மீது விமர்சனம் செய்கிறார்கள். ஜே ஆரோ நான் இளைஞர்களின் பக்கம் நிற்பதாக நினைத்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்" என்று அவர் கூறினார். என்னிடம் தனிப்பட்ட ரீதியில் கூறும்போது, "இவர்கள் இருவரில், ஜே ஆரே மிகவும் ஆபத்தானவர், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர். நாம் அவரை பிழையான வழியில் அணுகினோம் என்றால், தமிழர்களை முற்றாக அழித்துவிடுவார்" என்றும் அவர் கூறினார்.

ஜே ஆரின் பழிவாங்கும் குணத்தைப்பற்றி நான் கேள்விப்படுவது இதுவே முதற்தடவையல்ல. 1950 களில் ஜோன் கொத்தலாவலை ஜே ஆரைப் பற்றிக் கூறும்போது, "புல்லுக்குள் மறைந்திருக்கும் பாம்பு" என்று விளித்திருந்தார். சிறிமா பலமுறை ஜே ஆர் ஐப் பழிதீர்க்கும் மனிதர் என்று அழைத்திருந்ததுடன், அவர் கையால் பலமுறை துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கிறார். தமிழர்களைப்பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டின் கலவரங்களைத் தூண்டிவிட்டது ஜே ஆரே என்று உறுதியாக நம்புகின்றனர். யாழ்ப்பாண மக்களால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக ஜே ஆர் கருதியதாலேயே தமிழினத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் அவர் ஈடுபட்டு வருவதாக அவர்கள் உறுதியாக நம்பினர்.

ஜே ஆர் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கும் சம்பவம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் இடம்பெற்றிருந்தது. தே வை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய  ஜே ஆர் யாழ்ப்பாண பிரச்சாக் கூட்டம் ஒன்றிற்கு போயிருந்தார். யாழ் முற்றவெளியில், துரையப்பா அரங்கிற்கு அருகில்  தற்காலிக மேடையொன்று அமைக்கப்பட்டிருந்தது. ஜே ஆர் மேடையில் ஏறியபொழுது மேடை சரிந்து வீழுந்து குழப்பகரமான நிலையொன்றினை அங்கு ஏற்படுத்தியிருந்தது. ஜே ஆரும், மேடையில் அவருடன் இருந்தோரும் கீழே விழுந்தனர். அதன்பின்னர் கூட்டம் நிறுத்தப்பட்டது. இது தனக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக ஜே ஆர் கருதினார். 

மேடையினை பலவீனமாக்கிய செயலின் பின்னால் இருந்தவர்கள் தமிழ் ஈழ மாணவர் அமைப்பான ஈரோஸ் அமைப்பின் அன்றைய உறுப்பினர்களும், இன்று கொழும்பில் பி டி பி அமைப்பில் செயல்ப்பட்டு வருகிறார்களுமான சிலரே. என்னிடம் அவர்கள் இதுகுறித்து ஒருமுறை பேசியபோது,  மேடையைச் சுற்றி நிலையாக நடப்படும் குற்றிகளை, அவை வீழ்ந்துவிடாமலிருக்கக் கட்டும் கயிற்றை தாம்  அறுத்துவிட்டதனாலேயே மேடை சரிந்து வீழ்ந்ததாகக் கூறினர்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்த போராளிகள்

1977ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரச காவல்த்துறையினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள், நாடு முழுவதும் தமிழர்மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்களவர்களின் தாக்குதல்கள் மற்றும் அமிர்தலிங்கம் மீது ஜே ஆரினால் செய்யப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் ஆகியன மிதவாத தமிழர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டிருந்ததோடு, ஆயுத அமைப்புக்கள் முன்னுக்கு வரவும் காரணமாக அமைந்தன. தனது நடவடிக்கைகள் மூலம் தமிழ்மக்கள் அச்சமடைந்து அடங்கிவிடுவார்கள்,  போராட்டங்களைக் கைவிட்டு விடுவார்கள் என்று ஜே ஆர் நிணைத்தது மிதவாத தமிழ் அரசியல்வாதிகளான அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உறுப்பினர்களைப் பொறுத்தவரை உண்மையாகவே இருந்தது. 

1977 ஆம் ஆண்டின் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் பற்றி அரசுடன் கலந்துரையாடுவதற்கு தமிழர் ஐக்கியமுன்னணி பலமுறை சென்றிருந்தது. இந்தக் கூட்டங்களின் மூலம் அரச பதவிகளில் பணிபுரிந்த தமிழ் உத்தியோகத்தர்கள் இக்கலவரங்களினால் பாதிப்படைந்தது பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தை த.ஐ.வி. மு பாவித்துக்கொண்டது. முன்னணியின் கரிசணைகளை ஜே ஆர் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

1977 ஆம் ஆண்டு, மார்கழி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் செயகலத்தில் வர்த்தக அமைச்சரான லலித் அத்துலத்முதலி தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் குழுக் கூட்டத்தில் முன்னணியும் கலந்துகொண்டது. முன்னர் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்கிற தமது முடிவை மாற்றிக்கொண்டு அமைச்சர் நடத்திய இக்கூட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி கலந்துகொண்டது இளைஞர்களுக்குக் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. முன்னணியின் இந்தத் திடீர் முடிவினை எதிர்த்து யாழ்ப்பாணம் முழுவதும் கண்டனச் சுவரொட்டிகள் இளைஞர்களால் ஒட்டப்பட்டிருந்தன. யாழ்ப்பாணச் செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆகவே, மிதவாதிகளான முன்னணியின் தலைவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உலாவுவதற்கு பொலீஸ் பாதுகாப்பு அரசால் வழங்கப்பட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாணச் சமூகத்திலிருந்து மெதுமெதுவாக அந்நியப்பட்டுப் போகத் தொடங்கினார்கள்.  

அதுலத் முதலியின் யாழ்ப்பாணப் பயணத்தை பதிவிடுவதற்காக நான் அப்பொழுது யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தேன். அமிர்தலிங்கத்தின்  திறமையான பேச்சினை நான் டெயிலி நியூஸ் பத்திரிக்கையில் பிரசுரித்திருந்தேன்.

Amirthalingam.gif

ஏ. அமிர்தலிங்கம்

அவர் இப்படிக் கூறினார்,

"தமிழ்ச் சமூகத்தால் எதிர்நோக்கப்படுகின்ற பல பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துவைக்க பிரதமர் ஜே ஆர் ஜெயவர்த்தனா எடுத்துவரும் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் தமது முழு ஆதரவினையும் வழங்கவேண்டியது அவர்களின் கடமையாகும். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் நீதியுடனும் நேர்மையாகவும் தீர்த்துவைக்கப்போவதாக பிரதமர் எம்மிடம் உறுதியளித்திருக்கிறார். அவருக்கு நாம் தேவையான கால அவகாசத்தினையும் சந்தர்ப்பத்தினையும் வழங்கவேண்டும். பரஸ்பர நல்லெண்ணமே இன்று தேவையானது. எமது சார்பில்  முழு ஆதரவினையும் நல்லெண்ணத்தையும் நாம் அரசுக்கு வழங்கியிருக்கிறோம். எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் செயல்வடிவில் நிகழ்த்தும் என்று நாம் முழுமையாக நம்புகிறோம்" என்று பேசியிருந்தார்.

பாராளுமன்றத்திலும் த.ஐ.வி. மு அரசுக்கான தனது ஆதரவினை வழங்கி வந்தது. 1977 ஆம் ஆண்டு மார்கழி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார்,

"எதிர்க்கட்சியின் வேலை அரசு செய்யும் எல்லா விடயங்களையும் எதிர்ப்பது என்பது அல்ல. மாறாக தாம் நியாயம் என்று நினைக்கும் விடயங்களை ஆதரிப்பது, தவறென்று நினைப்பதை சுட்டிக்காட்டி, ஆட்சி சிறந்தவகையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வதுமே ஆகும்". 

மார்கழி 26 இல் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவரது அரச ஆதரவு நிலை பற்றி வினவியபோது, "இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே? எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்க் கூட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எமது கட்சி அரசுக்கு ஆதரவு வழங்கும் என்று கூறியிருந்தோமே?" என்று பதிலளித்தார். 

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் அமிர்தலிங்கம் விளக்க முனைந்தமை ஜே ஆருக்கு மகிழ்வினைக் கொடுத்திருந்தது. 

Pirpaharan_Chapter_13_Oct07_Jeyawardene.gif
ஜே ஆர் ஜெயவர்த்தனா

தமிழர்களை நீதியாகவும், சமமாகவும் நடத்தும் ஒரு தலைவர் எனும் பெயரினை சர்வதேசத்தில் பெற்றுக்கொள்ளவே ஜே ஆர் முயன்று வந்தார். ஆகவே அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி செயற்படவேண்டும் என்று ஜே ஆர் விரும்பினார். அவர் நினைத்தவாறே அமிரும் அவரது மிதவாத அரசியல் சகாக்களும் அப்போது செயற்பட்டு வந்தனர். விளைவுகள் எப்படியாக இருப்பினும் தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் தான் நிச்சயம் தீர்த்துவைப்பேன் என்று ஜே ஆர் 1978 ஆம் ஆண்டு கூறியிருந்தார். அரசுக்கு எதிரான நிலைப்பாட்டினை படிப்படியாகத் தளர்த்தி வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜே ஆரின் இந்தப் பேச்சோடு முழுவதுமாக தனது எதிர்ப்பினைக் கைவிடும் நிலமைக்கு வந்திருந்தது. ஒவ்வொரு சுதந்திர தின நிகழ்வையும் கறுப்புக்கொடி காட்டிப் புறக்கணிப்புச் செய்துவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் 1978 ஆம் நடைபெற்ற 30 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பதில்லை என்கிற முடிவை எடுத்தனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே ஆர் பதவியேற்கும் நாளன்று பேசிய அமிர், ஜே ஆர் மீது தாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் அவருக்கெதிரான எந்தவித புறக்கணிப்புப் போராட்டங்களையும் கைக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார். 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பினை மாற்றியமைத்தே ஜே ஆர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு, சித்திரை 22 ஆம் திகதி, அனைத்துப் பாராளுமன்ற செயற்குழுக்களிலும் அங்கம் வகிப்பதன் மூலம் அரசுக்கு ஆதரவாக நெருங்கிச் செயற்படும் முடிவினை அமிர்தலிங்கமும் அவரது கட்சியும் எடுத்திருந்தார்கள். 

அமிர் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசுக்கு ஆதரவான செயற்பாடுகளை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடன் அவதானித்துக்கொண்டிருந்தனர்.


 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்த புலிகள்

 பொலீஸ் வலையமப்பை அழித்தல்

அல்பிர்டெ துரையப்பாவின் கொலை தனக்கு விடுக்கப்பட்ட சவாலாக சிறிமாவின் அரசாங்கம் கருதியது. துரையப்பாவின் மரணச் சடங்கிற்கு முன்னதாக கொலையாளிகள் கைதுசெய்யப்படவேண்டும் என்று சிறிமாவின் அரசு பொலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தப் பொறுப்பு பொலீஸ் அதிகாரிகளான பஸ்டியாம்பிள்ளை - பதமநாதன் தலைமையிலான பொலீஸ் குழுவினரிடம் வழங்கப்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் இந்த இரு தமிழ் பொலீஸ் அதிகாரிகளும் அவர்களது திறமைக்காகவும், குரூரத்திற்காகவும் பேர்பெற்றிருந்தார்கள். துரையப்பா கொலையுடன் சம்பந்தப்பட்ட நால்வரில் இருவரை அவர்கள் கைதுசெய்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் கலபதியும் கிருபைராஜாவும் ஆகும். கொலை நடந்து மூன்று மாதங்களின் பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். மீதி இருவரான பிரபாகரனையும், பற்குணராஜாவையும் பொலீஸாரால் கைதுசெய்ய முடிந்திருக்கவில்லை.

 ஆனால், பொலீஸார் இவர்கள் இருவரையும் தொடர்ச்சியாகத் தேடியே வந்தனர். இவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட பொலீஸ் குழுவில் கொன்ஸ்டபிள் ஏ. கருநாநிதியும் இருந்தார். இவர் காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு, மாசி 14 ஆம் திகதி மாவிட்டபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கருநாநிதியே தமிழ் ஆயுத அமைப்புக்களால் முதன் முதல் சுட்டுக்கொள்ளப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் ஆவார். அவரது கொலை பொலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய்ருந்தது. 

மேலும் தேடுதல்களில் பங்கெடுத்த இரு கொன்ஸ்டபிள்களான ஒரே பெயரைக் கொண்ட சண்முகநாதன், சண்முகநாதன் ஆகியோர் 1977 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுள் ஒருவர் காங்கேசந்துறை பொலீஸ் நிலையத்தையும், மற்றையவர் வல்வெட்டித்துறைப் பொலீஸ் நிலையத்தையும் சேர்ந்தவர்கள். தமக்கு கிடைக்கப்பற்ற நம்பகமான தகவல் ஒன்றினையடுத்து இவர்கள் இருவரும் இனுவில் நோக்கி சிவில் உடையில் பஸ்ஸில் பயணித்திருக்கிறார்கள். உந்துருளியொன்றில் இவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டு வந்த இரு இளைஞர்களில் ஒருவரான பாலா, காங்கேசந்துறை வீதி, இணுவில் சந்தியின் அருகில் இவர்களை சுட்டுக் கொன்றார். 

 பிரபாகரன் எதிர்பார்த்திருந்த தாக்கத்தினை இந்த இரு பொலீஸாரின் கொலையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கொலைகளின் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணிக்கவும், தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமிழ்ப் பொலீஸ் அதிகாரிகளை அமர்த்துவதென்பது அரசிற்குக் கடிணமாகிப் போனது. அப்படி அமர்த்தப்பட்ட தமிழ் அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியிடங்களுக்கு மாற்றல்களை கேட்டுச் சென்றனர்.

பிரபாகரனின் போராளிகள் பொலீஸாரைக் கொன்றதன் மூலம் ஏற்பட்ட தைரியம் மற்றும் மக்களிடையே அக்கொலைகளுக்குக் கிடைத்த வரவேற்பினையடுத்து தங்கத்துரையின் அமைப்பும் செயற்பாட்டில் இறங்கியது. அவ்வருடம் ஆவணியில் தெற்கில் தமிழர் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையடுத்து இவ்விரு குழுக்களும் செயலில் இறங்கின. ஆவணி 31 ஆம் திகதி, நீலநிற மொறிஸ் மைனர் காரில் மானிப்பாயில் இயங்கிவந்த மக்கள் வங்கிக்குச் சென்ற நான்கு இளைஞர் அணியொன்று அங்கிருந்த ஊழியர்களை பயமுறுத்தி 26,000 ரூபாய்களை கொள்ளையிட்டுச் சென்றது. அதே நாள் வேறு இளைஞர் அணியொன்று யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த சுங்கத்திணைக்கள அலுவலகத்திற்குச் சென்று  8 ரைபிள்களை எடுத்துச் சென்றது. பல பாடசாலைகளிலிருந்து இரசாயணங்கள் களவாடப்பட்ட சம்பவங்களும் இக்காலப்பகுதியில் நடந்தேறின. தொழிற்சாலைகளில் சேமித்து வைக்கப்பட்ட டைனமைட் குச்சிகளும் காணாமற்போயின.

See the source image

திருநாவுக்கரசர்

தங்கத்துறை மிகுந்த இறைபக்தி கொண்டவர். தனது அமைப்பின் உறுப்பினர்களுடன் பேசு முன் திருநாவுக்கரசரின் "நாம் யார்க்கும் குடியல்லோம்" என்கிற மந்திரத்தை ஓதியபின் பேச ஆரம்பித்தார். நாம் சுமார் பத்து வருடங்களாக ஒழுங்கான கட்டமைப்பின்றி இயங்கி வருகிறோம். ஆனால், அதனை உருவாக்கவேண்டிய தேவை இப்போது வந்துவிட்டது. அவருக்கு ஆதரவாக சிறி சபாரட்ணம், சின்ன சோதி, பெரிய சோதி ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர். 

அரசியல் விடயங்களைக் கவனிப்பதற்கு அரசியல்ப் பிரிவும், இராணுவ விடயங்களைப் பார்த்துக்கொள்வதற்கு ராணுவப் பிரிவுமாக ஐரிஸ் விடுதலை இராணுவத்தை ஒத்த கட்டமைப்பொன்றினை உருவாக்கவேண்டும் என்று தங்கத்துரை விரும்பியிருந்தார். அதன்படி தனது இராணுவப் பிரிவிற்கு தமிழ் ஈழ விடுதலை இராணுவம் ( டெலா) என்றும், அரசியல்ப் பிரிவிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( டெலோ) என்று பெயரிடலாம் என்று யோசனையினை அவர் முன்வைத்தார். சிறி சபாரட்ணம் அதனை வழிமொழிந்தார்

 Sri Sabaratnam.jpg

சிறி சபாரட்ணம்

 டெலோ அமைப்பின் சில உறுப்பினர்கள் தமது அமைப்பே முதலில் உருவாக்கப்பட்ட அமைப்பென்று உரிமை கோருகிறார்கள். டெலோ அமைப்பின் பாடல்களில் ஒன்றும் இதனையே சொல்கிறது. ஆனால், இது உண்மையல்ல. 1973 இல் தமிழ் இளைஞர் பேரவையினை விட்டு வெளியேறிய முத்துக்குமாரசாமி ஈழம் விடுதலை இயக்கம் (எலோ) எனும் அமைப்பினை உருவாக்கினார் என்றும், அவ்வமைப்பே காலப்போக்கில் டெலோவாக மாற்றம்பெற்றதென்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், 1976 ஆம் ஆண்டு புலோலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கொள்ளையின் பின்னர் எலோ அமைப்பு முற்றாக அழிந்து போய்விட்டது. ஆகவே, அதன் தொடர்ச்சியாக டெலோ இருக்கிறதென்பது உண்மையில் தவறான கருத்தாகும்.

 

கனகரட்ணம் மீதான கொலைமுயற்சி

1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்களின் அதிகரித்த ராணுவச் செயற்பாட்டினக் கண்ட ஆண்டாகும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளும் (அப்போதுவரை பிரபாகரன் அமைப்பு என்றே அறியப்பட்டு வந்தது) டெலோ அமைப்பும் செயற்படத் தொடங்கியிருந்த காலம் அது.

 அவ்வருடம் சித்திரை மாதத்தில் கனகரட்ணம் மீதான கொலை முயற்சி மற்றும் பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளை கொலை ஆகியவற்றின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புப் பற்றிய செய்திகள் பரவலாக அடிபடத் தொடங்கின. பின்னர், எயர் சிலோன் என்றழைக்கப்பட்ட விமானச் சேவையின் அவ்ரோ 748  விமானத்தைத் தகர்த்தெறிந்தது மற்றும் திருநெல்வேலி மக்கள் வங்கிக் கொள்ளை ஆகிய நடவடிக்கைகளையும் புலிகள் செய்திருந்தனர். டெலோ அமைப்பும் தன் பங்கிற்கு பொலீஸ் பரிசோதகர் பத்மநாதனையும், பொலீஸ் உளவாளி "தடி" தங்கராஜாவையும் கொன்றிருந்தனர். அரசாங்கம் உடனடியாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அவர்களையொத்த ஏனைய அமைப்புக்களையும் தடைசெய்வதாக அறிவித்தது.

1978 ஆம் ஆண்டு தை மாதம் 26 ஆம் திகதி சனநெரிசல் மிக்க இரவு தொடரூந்தொன்றில் பிரபாகரன் கொழும்பிற்குச் சென்றார். அவரை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் உமாமகேஸ்வரன் வரவேற்றார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், இராணுவத் தளபதியும் புகையிரத நிலையத்திற்கு முன்னாலிருந்த ஆனந்த பவன் எனும் விடுதிக்குச் சென்றனர். பிரபாகரன் அங்கு குளித்தவுடன் அவ்விடுதியிலேயே காலையுணவையும் உட்கொண்டனர். அங்கிருந்து பொத்துவில் தொகுதியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான எம்.கனகரட்ணம் வசித்துவந்த கொல்லுப்பிட்டி நோக்கி பேரூந்தில் பயணமானார்கள். 

1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தல்களில், இரு ஆசனங்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் எம். கனகரட்ணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாகப் போட்டியிட்டிருந்தார். சுயேட்சை வேட்பாளரின் மரணத்தையடுத்து அத்தொகுதிக்கான தேர்தல் புரட்டாதி 12 ஆம் திகதியே நடைபெற்றிருந்தது. இத்தேர்தலில் கனகரட்ணம், .தே. உறுப்பினர் ஜலால்தீனுக்கு அடுத்ததாக  அடுத்ததாக தெரிவுசெய்யப்பட்டார். ஜலால்தீனின் 30,315 வாக்குகளுக்குப் பதிலாக கனகரட்ணம் 23,990 வாக்குகளைப் பெற்றிருந்தார். தனிநாட்டிற்கான ஆணையினை முன்வைத்தே கனகரட்ணம் தேர்தலில் வாக்குக் கேட்டிருந்ததால் பெரும்பான்மையான தமிழர்கள் அவருக்கு வாக்களித்திருந்தனர். 

கனகரட்ணம் நிலச்சுவாந்தராக இருந்ததுடன், நெடுங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். கிழக்கு மாகாணத் தமிழர்களும் தனிநாட்டிற்கே தமது விருப்பைத் தெரிவித்திருக்கிறார்கள் எனும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் கருத்தினை உடைத்து அதனைத் தவறென்று நிறுவ, கனகரட்ணத்தை எப்படியாவது தனது கட்சிக்குள் இழுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தார் ஜெயவர்த்தனா. கனகரட்ணத்தின் கட்சித் தாவல் செய்தி எனது காதுக்கு எட்டியபோது மார்கழி 18 ஆம் திகதி காலை அவரை பழைய பாராளுமன்றக் கட்டிடத்தில் சந்தித்துப் பேசினேன். அதனை உறுதிப்படுத்திய கனகரட்ணம் தான் நாளையே கட்சி தாவப்போவதாகவும், அதற்கான காரணத்தை தான் விளக்கி அறிக்கையொன்றினை வெளியிடவிருப்பதாகவும் என்னிடம் கூறினார். 

"நீங்கள் என்ன விளக்கத்தைக் கொடுக்கப் போகிறீர்கள் ?" என்று அவரிடன் வினவினேன்.

 "நான் பிரேமதாசவின் உதவியாளர் சண்முகலிங்கத்திடம் இதுபற்றிக் கூறிவிட்டேன், நீங்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று கூறினார்.

 சண்முகலிங்கத்தை எனக்குத் தெரிந்திருந்தது. அவர் அதிபரின் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பிரேமதாசாவே அந்த அலுவலகத்திற்குப் பொறுப்பாகவிருந்தார். நான் அவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, தயாரிக்கப்பட்ட அறிக்கையின் நகல் ஒன்றினை எனக்குக் காட்டினார். மறுநாள் காலை, 19 ஆம் திகதி டெயிலிநியூஸ் பத்திரிக்கை இச்செய்தியைப் பிரசுரித்தது.

 கனகரட்ணம் தனது அறிக்கையில் தான் கட்சி தாவுவதற்கான இரு காரணங்களைத் தெரிவித்திருந்தார். முதலாவது காரணம், ஜெயவர்த்தனா தமிழர் பிரச்சினைக்கு முடிவொன்றினைத் தருவார் என்று தான் பூரணமாக நம்புவதாகத் தெரிவித்தார். இரண்டாவது, கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வக்களித்திருந்தாலும்கூட, தனிநாட்டினை உருவாக்க அவர்கள் ஆதரவு வழங்கவில்லை என்று அவர் கூறினார். 

பாராளுமன்றத்தில் கனகரட்ணம் சமூகமளித்தவேளை அவரைத் துரோகி என்று அமிர்தலிங்கமும் ஏனையோரும் எள்ளி நகையாடினர்.

மார்கழி 22 அன்று கூடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மத்தியகுழு கனகரட்ணம் ஒரு துரோகியென்று பிரகடனம் செய்ததுடன், துரோகிகளுக்குப் பாடம் கற்பிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. அதுவரையில் புலிகள் அமைப்பு பொலீஸ் உளவாளிகள், பொலீஸார் மற்றும் அரசியல்வாதிகளுக்கே மரண தண்டனையை நிறைவேற்றி இருந்தது. அதுவரையில் அல்பிரெட் துரையப்பாவே மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதியாகும். அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கொல்லப்படும்போது யாழ்நகர மேயராகவே இருந்தார். தியாகராஜாவின் மீதான கொலைமுயற்சி தமிழ் மாணவர் பேரவையாலும், அருளம்பலம் மீதான கொலை முயற்சி தங்கத்துரை அமைப்பாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவர்கள் எல்லோருமே வடமாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள். கனகரட்ணமே புலிகளின் மத்திய குழுவினரால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். கிழக்கு மாகாணத்திலிருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் முதலாமவரும் அவரே. 

கனகரட்ணத்தின் நடமாட்டங்களை உமா மகேஸ்வரன் இருவாரங்கள் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார். கனகரட்ணம் ஒவ்வொரு நாள் காலையும் 9 மணிக்கு வீட்டிலிருந்து காரில் புறப்பட்டுச் செல்வது வழமை. ஒருகாலை, பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் கனகரட்ணத்தின் வீட்டிற்கு அருகில் இருந்த பற்றைக்குள் அவருக்காகக் காத்திருந்தனர். கனகரட்ணம் தனது காரை நோக்கி நடந்துவருகையில் அவர்களில் ஒருவர் கனகரட்ணம் மீது சுட்டார். குண்டுபட்டு கீழே விழுந்த கனகரட்ணத்தை உதவியாளர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அவர் தப்பிவிட்டார். அவருக்கு நெஞ்சிலும், கழுத்திலும், விலாப் பகுதியிலும் குண்டு பாய்ந்திருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இரு இளைஞர்கள் தன்னை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பியோடுவதைக் கண்டதாக கனகரட்ணம் பொலீஸாரிடம் கூறினார். அவர்களில் ஒருவர் உயரமானவர், மற்றையவர் சற்று உயரம் குறைந்தவர் என்றும் அவர் கூறினார். விசாரணகளின்போது அந்த உயரம் குறைந்தவர் பிரபாகரன் என்பதையும், உயரமானவர் உமாமகேஸ்வரன் என்பதையும் பொலீஸார் அறிந்துகொண்டனர். பிரபாகரன் அன்றே கோட்டை புகையிரத் நிலையத்தினூடாக யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட, உமாமகேஸ்வரன் கொழும்பிலேயே தங்கிவிட்டார்.

பிரபாகரனின் புகைப்படத்தினை பொலீஸார் அதுவரை கொண்டிருக்காமையால், அவர் கடுமையாகத் தேடப்பட்டு வந்தபோதும், அவரால் இயல்பாக கொழும்புவரை வந்து செல்ல முடிந்தது. தனது வீட்டை விட்டுப் புறப்படும்பொழுது, வீட்டிலிருந்த தனது அனைத்துப் புகைப்படங்களையும் அழித்துவிட்டே அவர் சென்றிருந்தார். குழுவாக எடுத்த புகைப்படங்களில் இருந்தும் தனது படத்தை அவர் வெட்டி அகற்றியிருந்தார். 

சிறுநீரக வியாதியால் அவதிப்பட்ட கனகரட்ணம் சுடப்பட்ட அன்று உயிர் பிழைத்திருந்தாலும், அச்சம்பவத்தின் தாக்கத்தினால் மூன்று மாதங்களில் இறந்துவிட்டார். இச்சூட்டுச் சம்பவம் இரு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருந்ததுடன் இரு வேடிக்கையான பொலீஸாரின் தவறுகளையும் உருவாக்கியிருந்தது.

முதலாவது சிக்கல், கனகரட்ணத்தைச் சுட்டது யாரென்பது. பிரபாகரன் குறிபார்த்துச் சுடுவதில் நிபுணர் என்பது பலரும் அறிந்த விடயம். ஆனால், கனகரட்ணம் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறியிருந்தது. ஆகவே, கனகரட்ணத்தைச் சுட்டது உமா மகேஸ்வரன் தான் என்று பேசப்பட்டது. இரண்டாவது வாதம், பிரபாகரனே தாக்குதலை மேற்கொண்டார், ஆனால் உமா மகேஸ்வரன் ஒத்துழைக்காததால் பிரபாவின் குறி தப்பி விட்டது என்பது. 

ஆனால், எவர் சுட்டிருந்தாலும், நடத்தப்பட்ட தாக்குதல் மிகக்கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. புலிகள் கொழும்பிற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்கள். இத்தாக்குதலையடுத்து கடும் கோபமுற்றிருந்த ஜெயவர்த்தனாவின் கேள்விகளுக்குப் பொலீஸாரால் பதிலளிக்க முடியவில்லை. 

இத்தாக்குதலையடுத்து சினமும், ஏமாற்றமும் ஒருங்கே ஜெயவர்த்தனாவை ஆட்கொள்ள, கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். தனது கட்டுப்பாட்டிலிருந்த ஊடத்துறையைப் பாவித்து தான் எதிரியென்று கருதியவர்கள் மீது விஷமப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டார். தனது ஊடகத்துறைப் பொறுப்பாளரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த நடவடிக்கைக்குப் பாவித்தார். அவரது நெருங்கிய ஆதரவாளரான வீரவன்னி சமரவீர எனும் பாராளுமன்ற உறுப்பினரை பாராளுமன்றத்தில் கனகரட்ணம் மீதான கொலைமுயற்சிபற்றிப் பேசுமாறு அவர் ஏவிவிட்டார். வைகாசி 2 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய வீர்வன்னி அமிர்தலிங்கமே இக்கொலை முயற்சியின் பின்னாலிருப்பதாகவும், ஏனென்றால் கனகரட்ணத்தைத் துரோகி என்று அமிர்தலிங்கம் அழைத்து ஒரு மாத காலத்தின் பின் இது நடத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். 

அமிர்தலிங்கம் இந்த விஷமத்தனமான கருத்துப்பற்றி சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ் டி அல்விஸிடம் முறையிட, வீரவன்னியின் கூற்று பாராளுமன்றப் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. சபாநாயகரின் கட்டளைப் பணிந்த வீரவன்னி, கனகரட்ணம் மீதான கொலையினை அமிர்தலிங்கமும் கண்டிக்க வேண்டும் என்று சவால் விட்டார். 

எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளை கூறும்படி கேட்டதன் மூலம் வீரவன்னி பாராளுமன்றத்தில் சரித்திரம் ஒன்றை உருவாக்கிவிட்டுள்ளதாகக் கூறினார் அமிர்தலிங்கம். உடனேயே ஆளுந்தரப்பும் உறுப்பினர்கள் அமிரை நோக்கி கூக்குரலிடத் தொடங்கவே, "உங்கள் கூச்சல்களுக்கு நானோ எனது கட்சியோ அஞ்சப்போவதில்லை" என்று பதிலுக்குக் கூச்சலிட்டார்.  ஆனால், அடக்கத்துடன் வீரவன்னியின் கோரிக்கைக்குச் சம்மதித்த அமிர்தலிங்கம் கனகரட்ணம் மீதான தாக்குதலை தானும் தனது கட்சியும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார். 

இக்கொலையின் பின்னால் இருப்பவர்களைத் தேடிக் கைதுசெய்ய பொலீஸார் அதிகாரி பஸ்டியாம்பிள்ளை தலைமையில் பொலீஸ் குழுவொன்றினை உருவாக்கினார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உயரமானவர் என்பதை வைத்துக்கொண்டு தமிழ் மாணவர் பேரவையின் உறுப்பினரான மாவை சேனாதிராஜாவே அது என்று எண்ணிக்கொண்டு அவரைக் கைதுசெய்யுமாறு பஸ்டியாம்பிள்ளை பொலீஸாருக்கு உத்தரவிட்டார். 

மேலும் நான்கு தேடப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகளையும் ஒட்டினார்  பஸ்டியாம்பிள்ளை . அந்த நால்வரும் உமா மகேஸ்வரன், நாகராஜா, வாமதேவன் மற்றும் கண்ணாடி ஆகியோராகும். ஆனால் 1973 இல் கண்ணாடி கொல்லப்பட்டது அப்போது பஸ்டியாம்பிள்ளைக்குத் தெரிந்திருக்கவில்லை. தமிழர் வாழும் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் சுவரொட்டிகளை ஒட்டிய பஸ்டியாம்பிள்ளை, இவர்களைக் காட்டித் தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலீஸார் புலிகளைத் தேடிக்கொண்டிருக்கையில், தங்கத்துரையின் அமைப்பு மீண்டும் செயலில் இறங்கியது. சித்திரை முதலாம் திகதி தாடி தங்கராஜா எனும் பொலீஸ் உளவாளியை அவர்கள் கொன்றனர். இவர் முன்னாள் நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் சி. அருளம்பலத்தின் நெருங்கிய ஆதரவாளர். தங்கத்துரை, அருளம்பலத்தையும் கொல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் கொழும்பிலேயே தங்கிவிட்டதனால் அது சாத்தியமாகவில்லை. அருளம்பலம் சிறிமாவினால் கொண்டுவரப்பட்ட 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பிற்கு ஆதரவளித்திருந்தார். காங்கிரஸ் கட்சியூடாக அரசியலில் பிரவேசித்த அருளம்பலம் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் சமஷ்ட்டிக் கட்சியின் வேட்பாளரான நாகதனை 13,116 வாக்குகளுக்கு 12,508 வாக்குகள் என்ற அடிப்படையில் தோற்கடித்திருந்தார். ஆனால் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட அருளம்பலம் மிக்கடுமையான சரிவைச் சந்தித்து  வெறும் 1042 வாக்குகளையே பெற்று மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதே தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேட்பாளர் சிவசிதம்பரம் 29858 வாக்குகளைப் பெற்று, 28137 வாக்குகளால் வெற்றிபெற்றிருந்தார். 

கொக்குவில் பகுதியில் அமைந்திருந்த தங்கராஜாவின் வீட்டிற்குச் சென்ற தங்கத்துரையும் ஜெகனும் அவரை பெயர் சொல்லி வெளியே அழைத்தபின்னர் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆனால் தன்னைத் தாக்கவந்தவர்கள் மீது தங்கராஜா திருப்பிச் சுட்டபோது அவர்களுக்குக் கால்களில் காயம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில் தங்கராஜாவின் நாய்களைக் கொன்றுவிட்டு தங்கத்துரையும் ஜெகனும் தப்பிச் சென்றனர். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்டியாம்பிள்ளையின் கொலை

lt_sellakili-with-prabakaran.jpg?ssl=1

தலைவருடன் செல்லக்கிளி அம்மான்

 கனகரட்ணம் மீதான தாக்குதல் ஜெயவர்த்தனாவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன் பொலிஸாரை அவமானத்திற்குள்ளும் ஆழ்த்தியிருந்தது. ஆகவே, யாழ்ப்பாணத்திலேயே முகாமிட்டு தங்கத்துரை அமைப்பையும், பிரபாகரனின் அமைப்பையும் அழித்துவிடவேண்டும் என்று பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளைக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டது. பஸ்டியாம்பிள்ளைக்கு உதவியாக பரிசோதகர் பத்மநாதனும், உதவிப் பரிசோதகர் பேரம்பலமும் அமர்த்தப்பட்டார்கள். இந்தத் தமிழ் பொலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய சிங்கள அதிகாரிகளின் கருத்துப்படி இவர்கள் விசாரணைகளை மேற்கொள்வதில் சிறந்து விளங்கியவர்கள் என்றும், கடுமையான சித்திரவதைகளும், குரூரமான தண்டனைகளும் இவர்களுக்கு மிகவும் பரீட்சயமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். அப்படியிருந்தபோதும்கூட பஸ்டியாம்பிள்ளைக்கும் பதம்நாதனுக்கும் இடையே போட்டி மனப்பான்மை இருந்துவந்ததையும் அவர்கள் சொல்லத் தவறவில்லை. 

தனது ரகசிய உளவு வலையமைப்பூட்டாக, பிரபாகரனும் அவரது தோழர்களும் மன்னார் மாவட்டத்தின் வட மேற்குப் பதியான மடுக் காட்டுப்பகுதியில் ரகசிய பயிற்சிமுகாம் ஒன்றினை நடத்தி வருவதை பஸ்டியாம்பிள்ளை அறிந்துகொண்டார். இந்த ரகசியத் தகவலை தன்னிடமே வைத்திருந்த பஸ்டியாம்பிள்ளை சித்திரை 4 ஆம் திகதி நள்ளிரவு  தனது உதவியாளர்களான கொன்ஸ்டபிள் பேரம்பலம், கொன்ஸ்டபில் பாலசிங்கம் மற்றும் சாரதி சிறிவர்த்தனா ஆகியோரை திடீர் சோதனை ஒன்றிற்குத் தயாராகுமாறு உத்தரவிட்டார். ஆனால், எங்கு செல்லாப்போகிறார்கள் என்பதை அவர் கூறவில்லை. பஸ்டியாம்பிள்ளையின் உத்தியோகபூர்வ வாகனமான பேஜோ 404 காரில் இந்த நால்வரும் 9 வீதியூடாக வவுனியா நோக்கிப் பயணமானார்கள். தம்முடன் ஒரு துணை இயந்திரத் துப்பாக்கி, இரண்டு ரைபிள்கள், மற்றும் கைத்துப்பாக்கிகள் சுழற்துப்பாக்கிகள் என்று ஒரு தொகை ஆயுதங்களையும் கொண்டு சென்றனர்.சித்திரை 7 ஆம் அதிகதி, காலை புளரும் வேளை புலிகளின் முகாமினை அண்மித்த பகுதியை அவர்களின் கார் அடைந்தது.

முருங்கன் - மடு வீதியிலிருந்து காட்டினுள் செல்லும் ஒற்றையடிப் பாதையினைப் பார்த்தவுடன் அவர்கள் காரை நிறுத்திக்கொண்டார்கள். அங்கிருந்துகொண்டே தடயங்கள் ஏதாவது தென்படுகின்றனவா என்று தேடத் தொடங்கினார்கள். அவர்கள் இறங்கி நின்றுகொண்டு தேடிய இடம் புலிகளின் முகாமிலிருந்து சில நூறு மீட்டர்கள் தூரத்திலேயே இருந்தது. புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அன்று அங்கிருந்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்களில் உமா மகேஸ்வரன், நாகராஜா, செல்லக்கிளி, சிவகுமார், ரவி, கணேச ஐய்யர் ஆகியோரும் உள்ளடக்கம். பிரபாகரன் மட்டுமே அங்கிருக்கவில்லை. முகாமிற்கருகிலிருந்த உயரமான மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு நிலையில் உமா மகேஸ்வரனும், நாகராஜாவும் மறைந்திருந்தார்கள். ஏனையவர்கள், அருகிலிருந்த கொட்டகையினுள் இருந்தார்கள். 

1987 ஆம் ஆண்டு நடைபெற்றுவந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பில் உமா மகேஸ்வரனைச் சந்தித்த நான், பஸ்டியாம்பிள்ளையின் கொலை தொடர்பாக டெயிலி நியூஸ் பத்திரிகைக்காகப் பேட்டி கண்டேன். 

"நானும் நாகராஜாவும் கண்காணிப்பு நிலைக்குப் போனோம். காலை 6 மணியளவில் ஒரு காரின் விளக்கு வெளிச்சம் கண்களுக்குத் தெரிந்தது. அக்கார் மிக மெதுவாக ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் எதுவுமற்ற அந்த வீதியில் இப்படி ஒரு வாகனம் மெதுவாக ஊர்ந்து வருவது மிகவும் அசாதாரணமாக எமக்குத் தெரிந்தது. எமக்குச் சந்தேகம் வந்துவிட்டது. எமது முகாமுக்கு வரும் நடைபாதையின் அருகில் அக்கார் நிறுத்தப்பட்டது. நாம் கீழே முகாமினுள் இருந்தவர்களுக்கு உடனே தகவல் அனுப்பினோம். செல்லக்கிளி நிலைமையினைப் பொறுப்பெடுத்தார்என்று உமா கூறினார்

 காரிலிருந்து பஸ்டியாம்பிள்ளையும், பேரம்பலமும் இறங்கியபோது அவர்களது சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. "நாம் அதிர்ச்சியில்  உறைந்துபோனோம். இந்த ராஸ்கல்கள் இங்குவரை எம்மைத் தேடி வந்துவிட்டார்களே என்று நாகராஜாவிடம் ரகசியமாகக் கூறினேன். நாம் காரில் வந்தவர்கள் பற்றி செல்லக்கிளியிடம் தகவல் சொன்னோம்" என்றும் உமா கூறினார்.

பொலீஸாரால் தேடப்படாத தனது இரு உதவியாளர்களை நடைபாதையூடாக செல்லக்கிளி அனுப்பினார். அவர்களில் ஒருவர் கட்டைக் காற்சட்டையும், மற்றையவர் சரம் ஒன்றினையும் அணிந்திருந்தனர். அவர்கள் இருவரும் பொலீஸாரைக் கடந்து செல்ல முற்பட்டவேளை, பொலீஸார் அவர்களை மறித்தனர். அவர்கள் யாரென்பதை பஸ்டியாம்பிள்ளை அறிய விரும்பினார்.

 "நாங்கள் பண்ணையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள்" என்று அவர்கள் கூறினார்கள்.

 "நீங்கள் சட்டவிரோதமான மரத் தறிப்பில் ஈடுபட்டு வருகிறீர்களா?" என்று அவர்களைப்பார்த்து பஸ்டியாம்பிள்ளை கேட்கவும், அவர்கள் இருவரும் "இல்லை" என்று பதிலளித்தார்கள்.

 "அப்படியானால் எதற்காகக் காட்டிற்குள் கொட்டகை அமைத்திருக்கிறீர்கள்?" என்று மீண்டும் அவர்களைப் பார்த்துக் கேட்டார் பஸ்டியாம்பிள்ளை.

 "ஏனென்றால், அங்கே நல்லதண்ணிக் கிணறு ஒன்று இருக்கிறது. அதனாலேயே அங்கு கொட்டகை அமைத்தோம்" என்று இளைஞர்கள் பதிலளித்தார்கள்.

தாம் முருங்கன் பொலீஸ் நிலையத்திலிருந்து வருவதாகக் கூறிய பஸ்டியாம்பிள்ளை, தமக்கு இப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் தறிக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களது கொட்டகையினைப் பார்க்க வேண்டும் என்று பஸ்டியாம்பிள்ளை கேட்டபோது, அந்த இளைஞர்கள் இருவரும் அவர்களைக் கூட்டிக்கொண்டு கொட்டகை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கொட்டகை வாயிலில் செல்லக்கிளி பொலீஸாரை வரவேற்றார். பஸ்டியாம்பிள்ளை செல்லக்கிளியை உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டாலும், அவர் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. கையில் உப இயந்திரத் துப்பாக்கியுடன் பஸ்டியாம்பிள்ளை கொட்டகையினுள் தேடுதல் நடத்த, பேரம்பலமோ கைத்துப்பாக்கியுடன் கொட்டகையின் சுற்று வட்டாரத்தை அலசிக்கொண்டிருந்தார். கையில் ரைபிளுடன், பஸ்டியாம்பிள்ளைக்குப் பாதுகாப்பாக அருகிலேயே நடந்து கொண்டிருந்தார் பாலசிங்கம். நடைபாதையினை மறித்து சாரதியான சிறிவர்த்தனா நின்றிருந்தார்.

"சரி, சரி, நாங்கள் எங்கள் கடமையினைச் செய்ய வேண்டும். நீங்கள் எங்களுடன் பொலீஸ் நிலையத்திற்கு வந்து ஒரு அறிக்கையொன்றினைத் தாருங்கள். கடமைக்காக இதனைச் செய்யவேண்டியிருக்கிறது. அது முடிந்தவுடன் நாங்கள் உங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிடுகிறோம்" என்று பஸ்டியாம்பிள்ளை செல்லக்கிளியிடமும், அங்கிருந்த ஏனைய இளைஞர்களையும் பார்த்துக் கூறினார்.

 செல்லக்கிளியும் அதற்கு ஒத்துக்கொண்டார். "அவர்கள் தேநீர் போட்டுவிட்டார்கள், குடித்துவிட்டே போகலாம்" என்று செல்லக்கிளி தனது தோழர்களை சிலரைக் காட்டி பஸ்டியாம்பிள்ளையிடம் கூறினார். இளைஞர்களில் ஒருவர் தேனீர்க் குவளையை பஸ்டியாம்பிள்ளையிடம் கொடுக்கவும், பஸ்டியாம்பிள்ளை தனது இயந்திரத் துப்பாக்கியை அருகில் வைத்துவிட்டு தேனீர்க் குவளையினைப் பெற்றுக்கொள்ள தனது கையை நீட்டினார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய செல்லக்கிளி பாய்ந்து பஸ்டியாம்பிள்ளையின் இயந்திரத் துப்பாக்கியைக் கைப்பற்றி அதனைக் கொண்டு பஸ்டியாம்பிள்ளையின் தலையில் ஓங்கி அடித்தார். பிரபாகரனின் மெய்க்காப்பாளராக பணியாற்றி வந்த செல்லக்கிளிக்கு இயந்திரத் துப்பாக்கியை இயக்குவது கடிணமானதாக இருக்கவில்லை, நிலைகுலைந்து கீழே சரிந்த பஸ்டியாம்பிள்ளை மீது அவரது இயந்திரத் துப்பாக்கியினாலேயே சரமாரியாகச் சுடத் தொடங்கினார் செல்லக்கிளி. அவ்விடத்திலேயெ விழுந்து உயிர் விட்டார் பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளை. மீண்டும் தனது இயந்திரத் துப்பாக்கியை பொலீஸ் கொன்ஸ்டபிள் பாலசிங்கம் நின்றிருந்த திசை நோக்கிச் சுழற்றிய செல்லக்கிளி அவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார். கொன்ஸ்டபிள் பேரம்பலத்தை ஏனைய இளைஞர்கள் மடக்கிப் பிடித்துச் சுட்டுக் கொன்றனர். நடைபாதையில் நின்றபடியே நடப்பதை அவதானித்த சாரதி சிறிவர்த்தனா தப்பியோட எத்தனிக்க, அவரைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் வழியிலேயே சுட்டுக் கொன்றனர். 

"எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. தமிழர்கள் தமது ஆயுதப் போராட்டத்தினை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருந்தார்கள்" என்று சிரித்துக்கொண்டே கூறினார் உமா. ஆனால், அவர் கூறத் தவறிய இன்னொரு விடயம் இந்தத் தாக்குதலில் புலிகள் ஒரு தானியங்கித் துப்பாக்கியையும் கைப்பற்றிக்கொண்டதுதான்.

இவை நடந்து முடிந்ததும், மரத்திலிருந்து இறங்கிவந்த உமாவும், நாகராஜாவும் பேரம்பலத்தின் உடலை கிணற்றில் வீசிவிட்டு, ஏனைய மூவரின் உடல்களையும் காட்டிற்குள் எறிந்தார்கள். பின்னர் கொட்டகையை தீமூட்டிவிட்டு பஸ்டியாம்பிள்ளையின் பேஜோ 404 இல் அங்கிருந்து கிளம்பினார்கள். சில நாட்களுக்குப் பின்னர் அந்தக் கார் எரிந்த நிலையில் கிளிநொச்சிக் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் மடுக் காட்டுப்பகுதியில் விறகுவெட்டச் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து தேடியபோது உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட மூன்று உடல்கள் பற்றி பொலீஸுக்கு அறியத் தந்திருந்தார். விசாரணைகளின்போது அந்த மூவரும் பஸ்டியாம்பிள்ளை, பாலசிங்கம், சிறிவர்த்தனா என்பதைக் கண்டுகொண்ட பொலீஸார், கிணற்றுக்குள் இருந்து தாம் மீட்ட சடலத்தின் சட்டைப்பையிலிருந்த அடையாள அட்டையினைக்கொண்டு அவர் பேரம்பலம் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டனர். 

புலிகளின் முகாமைச் சல்லடை போட்டுத் தேடிய பொலீஸார், அங்கிருந்த 300 வெற்றுத் தோட்டாக்கள், குறிபார்த்துச் சுடும் பயிற்சிக்காகப் பாவிக்கப்பட்ட மனித தலையின் உருவப்படம், தகர டப்பாக்களின் அடைக்கப்பட்ட உணவு மற்றும் சமையல்ப் பாத்திரங்கள் என்பவற்றைக் கண்டுபிடித்தனர். 

மேலும் அப்பகுதிக்கு அருகாமையில் இயங்கிவந்த ஈரோஸ் அமைப்பின் பயிற்சி முகாமையும் அவதானித்த பொலீஸார், அங்கே சில இளைஞர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததையும் கண்டனர். அந்த இளைஞர்கள் ஆயுதங்கள் எவையுமின்றி தடிகளை வைத்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைக் கைதுசெய்து கடுமையாகத் தாக்கிய பொலீஸார், ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று விசாரிக்கத் தொடங்கினர். 

பஸ்டியாம்பிள்ளையின் கொலை அரசாங்கத்திற்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. 1963 ஆம் ஆண்டு உப பரிசோதகராக கடமையேற்ற பஸ்டியாம்பிள்ளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், அவர்களோடு தொடர்புபட்ட ஆயுத அமைப்புக்களின் இளைஞர்களையும் கண்காணிக்கும் உளவுப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்தார். பஸ்டியாம்பிள்ளையின் கொலை நடந்து சரியாக மூன்று வாரங்களின் பின்னர், சித்திரை 25 ஆம் திகதி புலிகள் முதன்முதலாக வெளியே வந்தனர். புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையைக் கொண்ட கடிதத் தலைப்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அல்பிரெட் துரையப்பா, பொலீஸ் உளவாளி நடராஜா (உரும்பிராய் எரிபொருள் விற்பனையாளர்) மற்றும் பஸ்டியாம்பிள்ளை உட்பட ஒன்பது பொலீஸ் அதிகாரிகளின் கொலைக்கு தாமே பொறுப்பேற்பதாக அறிவித்தனர். 

புலிகள் இனிமேலும் புறக்கணிக்கக் கூடிய சக்தியல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டது.

 பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் அணியினரை அழித்ததன் மூலமும் பின்னர் தாமே அதற்கான பொறுப்பினை வெளிப்படையாக உரிமை கோரியதன் மூலமும் சிங்கள ஆதிக்க அரசாங்கத்திற்கு புலிகள் கடுமையானா சவால் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை மட்டுமே நடத்திக்கொண்டிருக்கமாட்டார்கள், தமது உரிமைக்காக ஆயுதமேந்திப் போராடவும் தயாராகி விட்டார்கள் என்பதனை இந்த நிகழ்வு அப்பட்டமாகக் காட்டியிருந்தது.

 

 

 

 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆர் இன் பரிசு - தடை

 அமிர்தலிங்கத்தின் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்யப்பட்ட புலிகளின் கடிதம்

 

பஸ்டியாம்பிள்ளையைக் கொன்ற புலிகளின் குழு அவரின் காரில் கிளிநொச்சி வரை சென்றுவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியில் அதனை எரித்துவிட்டுத் தலைமறைவாகியது. சிறு குழுக்களாகப் பிரிந்து சென்ற அவர்கள் இறுதியில் வவுனியா பூந்தோட்டம் முகாமை அடைந்தார்கள். தாக்குதலில் ஈடுபட்ட குழுவை முகாமில் பிரபாகரன் வரவேற்றார். செல்லக்கிளியைக் கட்டித் தழுவிய பிரபாகரன் அவரைப் பார்த்து, "தமிழர்கள் உன்னால் பெருமையடைந்துவிட்டார்கள்" என்று கூறியதாக உமா என்னிடம் தெரிவித்தார்.

 தமது இயக்கம் வெளிப்படையாக இயங்குவதுபற்றிய விவாதத்தினை மத்திய குழுவில் தான் ஆரம்பித்துவைத்ததாக உமா என்னிடம் கூறினார். "நாம் தொடர்ந்தும் இரகசிய அமைப்பாக இயங்கிக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் வெளியே வரவேண்டும். இதுவே அதற்கான சரியான தருணம். நாடுமுழுவதுமே எம்மைப்பற்றிப் பேசுகிறார்கள்" என்று மத்தியகுழுவில் தான் கூறியதாக அவர் என்னிடம் தெரிவித்தார். பல தாக்குதல் சம்பவங்களின் பிறகு மக்கள் மத்தியில் வெளித்தெரிந்த பல கெரில்லா இயக்கங்களை உமா சுட்டிக்காட்டிப் பேசியதாகத் தெரிகிறது. 

தான் கூறியதை பிரபாகரனும் ஏற்றுக்கொண்டதாகக் கூறிய உமா, "பலஸ்த்தீன விடுதலை இயக்கம், ஐரிஸ் விடுதலை இராணுவம் போன்று நாமும் இப்போது தெரியவந்திருக்கிறோம்" என்று பிரபாகரன் கூறியதாக உமா மேலும் தெரிவித்தார். ஆகவே, தம்மால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு உரிமை கோரும் முடிவினை அவர்கள் எடுத்தார்கள். கொலைக்கான காரணங்கள் அடங்கிய கடிதத்தினை வரைவது மற்றும் அதனைப் பிரசுரிப்பது ஆகிய கடமைகள் அமைப்பின் அரசியல்த்துறைத் தலைவரான உமாவிடம் வழங்கப்பட்டது.

 கொழும்பிற்கு இரகசியமாகச் சென்றிறங்கிய உமா, லண்டனில் இருக்கும் தனது தொடர்பாளருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். லண்டனுக்குத் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதென்பது அந்நாட்களில் அவ்வளவு இலகுவான காரியமல்ல. கொழும்பிலிருக்கும் மத்திய தொலைத்தொடர்புப் பரிவர்த்தனை நிலையத்திற்குச் சென்ற உமா, லண்டனுக்கான தனது தொலைபேசி அழைப்பிற்கு அனுமதியைப் பெற்று சுமார் 3 மணித்தியாலங்கள் காத்திருந்து பேசினார். லண்டனிலிருந்த புலிகளின் ஆதரவாளர்கள் உமாவை உற்சாகப்படுத்தியிருந்தனர். உலகிலுள்ள மற்றைய கெரில்லா அமைப்புக்கள் செய்த விடயங்களை அவர்கள் உமாவுக்குத் தெரியப்படுத்தினர்.

 1976 ஆம் ஆண்டு சென்னையில் புலிகளால் உருவாக்கப்பட்ட கடிதத் தலைப்பில் உமா தண்டனைக்கான விளக்கக் கடிதத்தினைத் தயாரித்தார். கடிதத் தலைப்பின் இடதுபக்க மேற்புறத்தில் புலிகளின் இலட்சினையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பெயரும் தடித்த எழுத்துக்களில் பதியப்பட்டிருந்தது. கீழே ஆங்கிலத்திலும் அப்பெயர் இருந்தது.

தன்னால் தயாரிக்கப்பட்ட கடிதத்தையும், புலிகளின் இலட்சினைக் கொண்ட கடிதத் தலைப்பையும் தன்னுடன் வைத்திருந்த உமா, கொழும்பில் கண்ணாடிக் கடையொன்றில் பணிபுரிந்து வந்த ஊர்மிளா தேவி எனும் தனது தூரத்து உறவுப் பெண் ஒருவரைச் சந்தித்தார். விவாகரத்தாகியிருந்த அந்தப் பெண் கொழும்பில் இயங்கிவந்த தமிழர் இளைஞர் பேரவையில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வந்ததுடன், பொன் சிவகுமாரனின் தாயாரான அன்னலட்சுமி பொன்னுத்துரையின் தலைமையில் இயங்கிவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மகளிர் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார். இந்த மகளிர் அமைப்பின் செயலாளராக அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையற்கரசி பதவி வகித்தார்.

தான் கையில் கொண்டுவந்திருந்த கடிதத்தினை ஊர்மிலா தேவியிடம் காட்டிய உமா, அக்கடிதத்தின் 8 நகல்கள் தனக்கு வேண்டுமென்று கூறியதுடன், இது ஒரு இரகசியமான பணி என்றும் கூறினார். அதனை வாங்கிக்கொண்ட ஊர்மிளா, பழைய பாராளுமன்றக் கட்டிதத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகத்திற்குச் சென்றார். அமிர்தலிங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நன்கு பரீட்சயமான ஊர்மிளா, அங்கு பல தடவைகள் சென்றிருந்ததுடன், அமிருக்கும், அவரின் செயலாளரான பேரின்பநாயகத்திற்கு பல தட்டச்சு வேலைகளை முன்னர் செய்து கொடுத்திருக்கிறார். ஆகவே, உமா தன்னிடம் கொடுத்த கடிதத்தினைத் தட்டச்சுச் செய்வதற்கு, அமிரின் அலுவலகமே பாதுகாப்பானது என்று அவர் நினைத்தார். ஆகவே, பாராளுமன்றம் இயங்காத வேளை ஒன்றில் அமிருக்கோ பேரின்பநாயகத்திற்கோ தெரியாமல் அங்குசென்று புலிகளின் கடிதத்தினைத் தட்டச்சுச் செய்தார். கணிணிகள் அக்காலத்தில் பாவனையில் இருக்கவில்லை, போட்டோப் பிரதி இயந்திரங்களும் அதிகம் புழக்கத்தில் அப்போது இருக்கவில்லை. அமிர்தலிங்கத்தின் அலுவலகத்தில் இரு தட்டச்சு இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. அமிர்தலிங்கத்தின் காரியதரிசி உபயோகிக்கும் தட்டச்சியந்திரத்தையே ஊர்மிளா அன்று பாவித்தார். பிரதிகளை எடுக்க காபன் தாள்களை அவர் பாவித்தார். கடிதங்கள் தயாரிக்கப்பட்டதும், செயலகத்திற்கு அருகில் பேரூந்து நிலையத்தில் காத்து நின்ற உமாவிடம் அவற்றைக் கொடுத்தார். 

 ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்திற்கு முன்னால் அமைந்திருந்த கொழும்பு பெரிய தபாலகம் நோக்கி நடந்துசென்ற உமா, அக்கடிதங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், காங்கேசந்துறைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணை திணைக்களத்தின் இயக்குநர் மற்றும் வீரகேசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியோருக்கு அனுப்பி வைத்ததுடன், மூலப் பிரதியை தன்னுடனேயே வைத்துக்கொண்டார்.   

சித்திரை 28 இல் இக்கடிதத்தினை சிறிய செய்தியாக வீரகேசரி பிரசுரித்திருந்தது. "சம்பந்தப்பட்டவர்களுக்கு" என்று தலைப்பிடப்பட்டு, சித்திரை 25, 1978 அன்று வரையப்பட்ட இக்கடிதம் பின்வருமாறு கூறியது.

"புதிய தமிழ்ப் புலிகள் எனும் ஆரம்பப் பெயரினையும், தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் புதிய பெயரையும் கொண்ட நாம் பின்வரும் கொலைகளுக்கு உரிமை கோருகிறோம்".

 திரு அல்பிரெட் துரையப்பா - யாழ்ப்பாண மேயரும், சுதந்திரக் கட்சியின் வடமாகாண ஒருங்கிணைப்பாளரும்

திரு என். நடராஜா - உரும்பிராய் எரிபொருள் நிலைய உரிமையாளரும் சுதந்திரக் கட்சியின் கோப்பாய்ப் பகுதியின் ஒருங்கிணைப்பாளரும், குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

திரு . கருநாநிதி - காங்கேசந்துறைப் பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார்

திரு சண்முகனாதன் - காங்கேசந்துறைப் பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார்

திரு சண்முகனாதன் - வல்வெட்டித்துறை பொலீஸ் நிலைய உளவுப்பிரிவு, சுட்டுக் கொல்லப்பட்டார்

திரு தங்கராஜா - முன்னாள் நல்லூர் சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அருளம்பலத்தின் செயலாளர்

திரு கனகரட்ணம் - முன்னாள் பொத்துவில் தொகுதி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும்,

 திரு பஸ்டியாம்பிள்ளை - பொலீஸ் பரிசோதகர், உளவுப்பிரிவு

திரு பேரம்பலம் - உப பொலீஸ் பரிசோதகர், உளவுப்பிரிவு

திரு பாலசிங்கம் - பொலீஸ் சார்ஜெண்ட், உளவுப்பிர்வு

திரு சிறிவர்த்தனா - பொலீஸ் சாரதி

 

1978 ஆம் ஆண்டு சித்திரை 7 ஆம் திகதி, பஸ்டியாம்பிள்ளையும் அவரது குழுவினரும் புலிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கை ஒன்றிற்காக உப இயந்திரத் துப்பாக்கி, ரைபிள்கள், சுழற்துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் சகிதம் வந்திருந்தனர். ஆனால், தமக்கு உயிரிழப்போ, காயங்களோ ஏற்படாவண்ணம் அக்குழுவை முற்றாக புலிகள் அழித்துவிட்டனர். அவர்கள் பயணம் செய்த காரும் புலிகளால் எரியூட்டப்பட்டது.

 

"வேறு எந்தச் அமைப்புக்களோ, தனிநபர்களோ இந்தத் தாக்குதல்களுக்காக உரிமை கோர முடியாது. புலிகளைத் தவிர  இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரினால் கடும்னையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை"

இப்படிக்குச் செயலாளர், மத்திய குழு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 உமா எதிர்பார்த்துபோலவே வீரகேசரி பிரசுரித்த இச்செய்தி பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. பொதுமக்கள், குறிப்பாகத் தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்துப் போராடுவதற்கு அமைப்பு ஒன்று உருவாகிவிட்டதை அறிந்துகொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் வெளியாகி வந்த ஈழநாடு மற்று Saturday Review ஆகிய பத்திரிக்கைகளின் ஊடகவியலாளர்கள் இச்செய்தி மக்களிடம் பெருமையுடன் உள்வாங்கப்பட்டிருந்ததாக என்னிடம் கூறினார்கள். "எங்கட பெடியன்கள் செய்துபோட்டாங்கள்" என்கிற பெருமையான உணர்வே அனைவரிடம் காணப்பட்டது. உளவுப்பிரிவிற்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் ஜனாதிபதியின் பார்வைக்கும் கொண்டுசெல்லப்பட்டது.

புலிகளின் கடிதத்தைக் கண்ணுற்றபோது ஜே ஆர் மிகவும் ஆத்திரப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நின்றுவிடாமல் உள்ளூர் அலுவல்கள் அமைச்சரான தேவநாயகத்திடம் புலிகளையும் அவர்களைப்போன்ற ஏனைய அமைப்புக்களையும் தடைசெய்யும் சட்டத்தினை உடனடியாக வரையுமாறு உத்தரவிட்டார். தனது இன்னொரு அமைச்சரும் பெயர்போன சிங்கள இனவாதியுமான சிறி மத்தியூவிடம் தமிழருக்கெதிரான தாக்குதல்களை ஒருங்கிணைக்குமாறும் உத்தரவிட்டார்.

 தாக்குதலில் இறங்கிய டெலோ அமைப்பு

 புலிகளின் நடவடிக்கைகளால் தாம் ஓரங்கட்டுப்பட்டுவிடுவோமோ என்று தங்கத்துரை குழுவினர் நினைத்திருந்த வேளை, குட்டிமணியின் மீள்வருகை அவர்களுக்குப் புதுதெம்பினை அளித்திருந்தது. ஜெயவர்த்தனா பிரதமராகிய பின்னர் ரோகண விஜேவீரவுடன் குட்டிமணியையும் விடுதலை செய்திருந்தார். 

பொலீஸ் பரிசோதகர் பத்மநாதன் புலிகளால் கொல்லப்பட்ட பஸ்டியாம்பிள்ளைக்கு அடுத்தபடியாக தமிழ் ஆயுத அமைப்புக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர். தமிழ் இளைஞர்கள் தொடர்பாக அதிகம் அறிந்துவைத்திருந்தவர். ஆகவே பஸ்டியாம்பிள்ளையின் இழப்பின் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலனாய்வுத்துறையின் வேலைகளுக்குப் பொறுப்பாக பத்மனாதன் நியமிக்கப்பட்டார். ஆகவே பதமானதனைக் கொல்வதன் மூலம் தமிழ் ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களை வேட்டையாட பொலீஸார் அமைத்திருந்த கட்டமைப்பு பாதிப்படையும் என்று தங்கத்துரை எண்ணினார்.

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தனாக மாறிய காளிமுத்து சிவானந்தன்

வைகாசி 6 ஆம் திகதி மாலைவேளை, நல்லூர் முடமாவடிப்பகுதியில் அமைந்திருந்த பத்மனாதனின் வீட்டிற்கு அருகில் தனது அமைப்பின் உறுப்பினர்கள் சிலரை தங்கத்துரை வேவுபார்க்க அனுப்பியிருந்தார். இருள் பரவத் தொடங்கியவேளை பத்மானாதனும் அவரது மனைவியும் காரில் ஏறிச் சென்றதாக அவருக்கு உறுப்பினர்கள் செய்தியனுப்பினர். அதனையடுத்து பத்மனாதனின் வீட்டிற்குச் சென்ற தங்கத்துரையும் அவரது உறுப்பினர்கள் சிலரும், அங்கிருந்த பத்மனாதனின் பிள்ளைகள் ஒருவரிடம் தாம் பத்மனாதனின் மனைவியிடம் திருமணம் ஒன்றை பதிவுசெய்வது தொடர்பாகப் பேச வந்திருப்பதாகக் கூறினர். பத்மனாதனின் மனைவி திருமணப் பதிவாளராகச் செயற்பட்டு வந்திருந்தார். தமது பெற்றோர், நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருப்பதாகவும், விரைவில் வந்துவிடுவார்கள் என்றும் பிள்ளைகள் தங்கத்துரையிடம் கூறினர். இதனைத் தொடர்ந்து, தாம் வீதியின் ஓரத்தில் அவர்கள் வரும்வரைக் காத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வெளியே சென்றனர் தங்கத்துரையும் உறுப்பினர்களும். 

பத்மனாதன் திரும்பிவரும்வரை அவரது வீட்டு முகப்பில் அவர்கள் காத்திருந்தனர். பத்மனாதன் காரை விட்டு இறங்கி வாயிற்கதவை திறக்க எத்தனித்தபோது ஜெகன் தனது கைத்துப்பாக்கியினால் பத்மனாதனின் நெற்றிப்பொட்டில் சுட்டார். 55 வயது நிரம்பியிருந்த பத்மனாதன் நிலைகுலைந்து வீழ்ந்து அவ்விடத்திலேயே மரணமானார். அவரைக் கொன்றவர்கள் எதுவித தடயமும் இன்றி இருட்டினுள் மறைந்துபோனார்கள்.

பத்மனாதனின் கொலையுடன், வடக்கில் பொலீஸாரின் கட்டமைப்பை அழிக்கவே போராளிகள் முயல்கிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட அரசு, தேவநாயகம் தயாரித்து வந்த போராளிகளுக்கெதிரான சட்டங்களை உடனடியாக உருவாக்கி நடைமுறைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டியது. அதன்படி புலிகளையும், அவர்களின் அமைப்பினை ஒத்த ஏனைய அமைப்புக்களையும் தடை விதிக்கும் சட்டத்தின் வரைவினை தேவநாயகம் முன்வைத்தார். இந்த வரைபு அரசியலமைப்புச் சட்ட ஆணைக்குழுவினரிற்கு ஜே ஆர் இனால் அனுப்பப்பட்டதோடு, அதனை உடனடியாக சட்டமாக்கும்படியும் அவரால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஒரு பகுதியில் இயங்கிவந்த நீதிமன்றிற்குச் சென்ற தேவநாயகம் இத்தடை சட்டமாக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். இந்த வழக்குத் தொடர்பான சில தகவல்களை நான் டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் பதிவிட்டிருந்தேன். 

இச்சட்டத்தின் ஊடாக பொலீஸாருக்கும், இராணுவத்திபருக்கும் வழங்கப்படவிருக்கும் அதீத அதிகாரம் குறித்து நீதிமன்றம் அச்சம் கொண்டிருந்தது. இச்சட்டம் பொலீஸாருக்கும், இராணுவத்தினருக்கு சந்தேக நபர்களைக் கைதுசெய்தல், தடுத்து வைத்தல், அவர்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல், மரண தண்டனை வழங்கல் உட்பட பல தங்குதடையின்றிய அதிகாரங்களை வழங்கியிருந்தது. இசாட்டத்தினைப் பாவித்து அரசாங்கம் எதிர்க்கட்சிக்குச் சார்பான தொழிற்சங்கங்களைக் கூட துன்புறுத்த முனையும் என்றும் சிறிமாவின் வழக்கறிஞர் தனது கட்சியின் அதிருப்தியினைத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தேவநாயகம் எதிர்க்கட்சியினரது அச்சம் தேவையற்றது என்றும், இச்சட்டம் ஒருவருட காலத்திற்குள் அகற்றப்பட்டுவிடும் என்றும் உறுதியளித்தார். இந்தச் சட்டத்தை அரசாங்கம் நீட்டித்துக்கொள்ளும் உத்தேசம் இருக்கிறதா என்று நீதிபதிகள் வினவியபோது, தேவநாயகம் பின்வருமாறு பதிலளித்தார்,

"நாம் இந்தச் சட்டத்தினை ஒருவருடத்திற்கு மேலாக நீட்டிக்க வேண்டிய தேவை இருக்காது. இந்த ஒருவருட காலத்திற்குள் பயங்கரவாதிகளை முற்றாக அழித்துவிடுவோம் என்று எமது அரசாங்கம் உறுதியாக நம்புகிறது" என்று கூறினார்.

இதனையடுத்து இச்சட்ட நகலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இச்சட்டத்தின் மூல அரசியல் யாப்பிற்கு பாதிப்பேதும் ஏற்பட்டுவிடாதென்று கூறியதோடு, இதனை பாராளுமன்றத்தில் விவாதப்பொருளாக்கவும் அனுமதியளித்தது. பாராளுமன்றத்தில் இந்த வரைபு பலத்த ஆதரவுடம் வைகாசி 18 ஆம் திகதி சட்டமாக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் சேர்ந்து சுதந்திரக் கட்சியினர் இந்த சட்டத்திற்கு எதிராக வக்களிக்க 131 ஆதரவு வாக்குகளுக்கு 25 எதிர் வாக்குகள் என்கிற அடிப்படையில் இந்தத் தடை சட்டமாக உருவாக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தனக்கிருந்த அறுதிப்பெரும்பான்மையினைப் பாவித்து மிக இலகுவாக இச்சட்டத்தினை ஜே ஆர் நிறைவேற்றினார்.

See the source image

காசி ஆனந்தன்

 இச்சட்டத்தினைப் பாவித்து பொலீஸார் பிரபாகரன் தலைமையிலான 38 போராளிகளின் பெயர்களை தேடப்படுபவர்களாக அறிவித்தனர். இந்த போராளிகளின் படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் அடங்கிய சுவரொட்டிகளை கொழும்பிலும், தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளிலும் பொலீஸார் ஒட்டினர். இவ்வாறு தேடப்பட்ட போராளிகளில் பலர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இளைஞர் பிரிவின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பதும், இவர்கள் முன்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. தேடப்பட்டு வந்த 38 இளைஞர்கள் 26 இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் வழக்கறிஞர்களின் ஆலோசனைக்கிணங்க வைகாசி 26 ஆம் திகதி பொலீஸாரிடம் சரணடைந்தனர். இவர்களுள் காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன், புஸ்பராஜா, நடேசானந்தன், சிறி சபாரட்ணம், சபாலிங்கம் மற்றும் சந்ததியார் உற்பட பலரும் இருந்தனர். இவர்கள் எவருமே பஸ்டியாம்பிள்ளையின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லையென்பதும், அக்கொலையில் ஈடுபட்ட எவருமே சரணடையவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. 

தேடப்படும் இளைஞர்களின் பட்டியலில் காசி ஆனந்தனின் பெயரும் சேர்க்கப்பட்டது கேலிக்குரிய விடயமாக பல தமிழ் ஊடகவியலாளர்களால் அன்று பார்க்கப்பட்டது. அவரது உண்மையான பெயர் காளிமுத்து சிவானந்தன் ஆக இருந்தபோதும், கவர்ச்சிக்காக தனது பெயரை அவர் காசி ஆனந்தன் என்று மாற்றியிருந்தார். அவர் மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் கவிதைகளை  எழுதிவந்ததோடு, சமஷ்ட்டிக் கட்சியின் கூட்டங்களில் தனது கவிதைகளைப் பாடியும் வந்தவர். சமஷ்ட்டிக் கட்சி வன்முறையற்ற போராட்டங்களை ஆரம்பித்த 60 களின் காலப்பகுதியில் அவர் எழுதிய இரு கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. 

#################################

"பத்துதடவை படை வராது,

பதுங்கிப் பாயும் புலியே தமிழா'

செத்து மடிதல் ஒரு தரம் அன்றோ?,

சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!"

 #################################

"வெறிகொள் தமிழர் புலிப்படை,

அவர் வெல்வார் என்பது வெளிப்படை"

 

காசி ஆனந்தனின் கவிதை எழுதும் விருப்புப் பற்றிப் பொலீஸார் அறிந்திருக்கவில்லை. இவை புலிகள் அமைப்போ அல்லது அவர்களின் முன்னைய அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் அமைப்போ உருவாகும் முன்னரே வெளிவந்திருந்த கவிதைகள். தனது கவிதைகளில் புலி எனும் பதத்தினைப் பாவித்தமைக்காகவே காசி ஆனந்தனையும் தேடப்படுவோர் பட்டியலில் பொலீஸார் சேர்த்திருந்தனர். சோழர்களின் வழித்தோன்றல்கள் என்றும் தம்மை கூறிக்கொள்ளும் இலங்கைத் தமிழர்கள் புலியினை தமது இலட்சினையாக வரிந்துகொள்வது அக்காலத்தில் இயல்பாக இருந்தது.

என்னிடம் உமா பேசும்போது பஸ்டியாம்பிள்ளையின் கொலைக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து பிரபாகரன் திருப்தியுடன் காணப்பட்டதாகக் கூறினார். பஸ்டியாம்பிள்ளையின் கொலைச் சம்பவத்தினூடாக பொலீஸாரிடமிருந்து புலிகள் கைப்பற்றியிருந்த உப தானியங்கித் துப்பாக்கியை பிரபாகரன் பொக்கிஷம் போலப் பாதுகாத்து வைத்திருந்ததாக உமா கூறினார். சமூக விரோதிகளின் கொலைகளுக்கான உரிமை கோரல்கள் மற்றும் தம்மீதான தடை ஆகியவற்றின் மூலம் உலகில் அடக்குமுறைக்குள் அகப்பட்டிருக்கும் மக்களின் விடுதலைக்காககப் போரிடும் போரட்ட அமைப்புக்களில் ஒன்றாக புலிகளும் ஆகிப்போனார்கள்.  

தம்மீதான தடையினை ஜே ஆர் தமக்களித்த பரிசாக பிரபாகரன் கருதியதாக உமா கூறினார். "தமிழ் ஆயுதக் ககுழுவுக்கெதிராக தமது அரசாங்கம் போராடுவதாக ஜே ஆர் உலகிற்கு அறிவித்தார். இதைவிட மேலான பரிசொன்றினை ஜே ஆரினால் புலிகளுக்கு வழங்கியிருக்க முடியாது. ஆகவே, ஜே ஆர் எமக்கு வழங்கிய கெளரவத்திற்கு நாம் தகுதியுடையவர்கள் தான் என்பதை நிரூபிக்க நாம் ஏதாவது பாரிய நடவடிக்கை ஒன்றினைச் செய்யவேண்டும் என்று எண்ணினோம். இங்கிருந்தே அவ்ரோ விமானத்தைத் தகர்க்கும் திட்டம் உருவானது" என்று உமா மேலும் கூறினார். 

புலிகளையும் ஏனைய தமிழ் ஆயுத அமைப்புக்களையும் தடை செய்யும் தீர்மானத்தை ஜே ஆர் நிறைவேற்றியபின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனமை போராளிகளுக்குக் கடுமையான ஏமாற்றத்தினை அளித்திருந்தது. ஆத்திரமடைந்த இளைஞர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர். இத்தலைவர்களுக்கு எதிராக யாழ் வைத்தியசாலை மதிலில் எழுதப்பட்டிருந்த வாசகம் இவ்வாறு கூறியது,

 " கேட்டது தமிழ் ஈழம்,  கிடைத்ததோ ஜப்பான் ஜீப்"

 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜே ஆரினால் வழங்கப்பட்ட ஜப்பானிய ஜீப் வண்டிகளை முன்வைத்தே மேற்படி வாசகம் எழுதப்பட்டிருந்தது. தந்தை செல்வா இருக்கும்வரை அரசாங்கத்திடமிருந்து வந்த சலுகைகள் எல்லாவற்றையும் வேண்டாம் என்று உதறித்தள்ளியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அவற்றை மிகுந்த ஆவலுடன் பெற்றுக்கொள்ளும் நிலைமைக்கு இறங்கியிருந்தனர். 

அமிர்தலிங்கத்திடம் இதுகுறித்த அவரது நிலைப்பாடுபற்றிக் கேட்டேன், 

"அவர்கள் இன்னும் வெறும் பையன்கள் தான். சூழ்நிலையின் நுணுக்கங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை" என்று என்னிடம் அவர் கூறினார். 

மேலும், தான் கூறப்போவதை வெளியே பதிவிட வேண்டாம் என்று என்னைக் கேட்டுக்கொண்டபடியே, "உங்களின் எதிரி யாரென்பது குறித்து நீங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். எங்கள் மீது பாய்வதற்கு அவர் தயாராகிக்கொண்டு இருக்கிறார்" என்றும் அவர் கூறினார்.

உண்மையாகவே அப்படியான பாரிய திட்டம் ஒன்றில் ஜே ஆர் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரது திட்டம் கடுமையான தோல்வியினைச் சந்தித்தது. அவரது நோக்கம் தமிழர் ஐக்கிய முன்னணியினரை தமிழர்கள் மத்தியிலும், தேசிய அளவிலும் பலவீனப்படுத்துவதாகவே இருந்தது. இதன் மூலம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் அடங்கிப்போய், தன்னிடம் பணிந்து வந்து தனது தயவினை நாடுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். இதன்மூலம் சர்வதேசத்தில் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும் என்றும், தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்துவிட முடியும் என்றும் அவர் நம்பினார். 

தமிழர்களைத் தாக்குவதற்கென்றே ஜே ஆரினால் அரவணைக்கப்பட்டு வந்த சிறில் மத்தியூ எனும் சிங்கள இனவாதியை அமிர்தலிங்கத்தின்மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கும்படி ஜே ஆர் ஏவிவிட்டார். இதனையடுத்து விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய சிறில் மத்தியூ புலிகளுக்குப் பின்னால் இருந்து தூண்டிவிடுவது அமிர்தலிங்கமே என்று அடித்துக் கூறினார். புலிகளின் உரிமைகோரல் கடிதமே அமிர்தலிங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்பினை வெளிப்படுத்துகிறது என்று அவர் வாதிட்டார். இதன்ம்முலம், அமிர்தலிங்கத்தை தற்காப்பு நிலைக்குத் தள்ள சிறில் மத்தியுவினால் முடிந்தது. அமிர்தலிங்கமும் சிறில் மத்தியூ வைத்த பொறிக்குள் வீழ்ந்ததுடன், புலிகளால் வெளியிடப்பட்ட கடிதம் போலியானது என்றும், பொலீஸாரே இந்த கடிதத்தினைப் புலிகளின் பெயரில் வெளியிட்டனர் என்றும் கூறத் தலைப்பட்டார். "சகல சந்தேகங்களுக்கும் அப்பால், இக்கடிதம் பொலீஸாரின் உயர்மட்டத்தின் திட்டப்படி வெளியிடப்பட்டது என்பதை முழு அத்காரத்துடன் என்னால் கூறமுடியும். புலிகளால் வரையப்பட்ட கடிதம் என்று போலியாக அனுப்பப்பட்ட இக்கடிதம் அரச அதிகாரத்திலிருக்கும் சில சக்திகளால் உருவாக்கப்பட்ட நாடகம்" என்று  பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் கூறியதோடு, புலிகள் என்கிற அமைப்பே இல்லையென்றும் வாதிட்டார்.

 மேலும், அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையற்கரசிக்கெதிரான விஷமப் பிரச்சாரத்தில் இறங்கிய சிறில் மத்தியூ, தமது கனவான ஈழத்தை அடைய சிங்களவரின் குருதியில் குளிக்க தமிழர் தயாராக இருப்பதாக மங்கையற்கரசி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாகவும் அவர் கூறினார். மேலும், சிங்களவர்களின் தோலில் செருப்புக்களைச் செய்து தாம் அணியப்போவதாக மங்கையற்கரசி பேசியதாகவும் அவர் கூறினார். இவ்விரு குற்றச்சாட்டுக்களையும் அமிர்தலிங்கம் முற்றாக மறுத்திருந்தார்.

ஜே ஆர் பின்னர் இன்னொரு பொறியினையும் அமிர்தலிங்கத்திற்கெதிராக வைத்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை ஆனி 10 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன், இதற்கு மிகப்பெரிய பிரச்சாரத்தினையும் வழங்கினார். போராளிகள் இதனால் சினமடைந்தனர். ஆகவே, இந்த அழைப்பினை ஏற்கவேண்டாம் என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அவர்கள் கூறினர். ஆனால், அவர்களின் வேண்டுகோளை அமிர்தலிங்கம் நிராகரித்தார். 

 தங்கத்துரை அணியினர் மீண்டும் தாக்குதலில் இறங்கினர். பஸ்டியாம்பிள்ளைக்குப் பின்னர் தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கண்காணித்து வந்த இன்னொரு தமிழ் பொலீஸ் அதிகாரியான  உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் குட்டிப்பிள்ளை குமார், வெள்ளிக்கிழமை அன்று கோயிலிக்குச் செல்லும்போது தனது கைத்துப்பாக்கியைக் கொண்டுசெல்வதில்லை என்பதை தங்கத்துரை அணியினர் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே ஆனி 9, வெள்ளிக்கிழமை அன்று கோயிலில் பூஜைக்காக வாழைப்பழங்களையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்ய வல்வெட்டித்துறை நகர்ப்பகுதிக்கு கால்நடையாக குமார் வந்தார். அப்பகுதியில் மறைந்திருந்த குட்டிமணியும் ஜெகனும் குமார் மீது பாய்ந்து அவரை கீழே வீழ்த்திக் கொன்றனர். குமாரின் கொலை ஜே ஆருக்கும், அமிர்தலிங்கத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் கருதப்பட்டது. ஜே ஆரின் தடைபற்றி தாம் சிறிதும் கவலைகொள்ளவில்லை என்று டெலோ அமைப்பு அறிவித்திருந்தது. ஆனால், அமிர்தலிங்கத்திற்கு அனுப்பப்பட்ட எச்சரிக்க மிகத் தெளிவானது, "ஜே ஆர் உடன் எந்த தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம்" என்பதே அது. 

அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், சம்பந்தனும் ஆனி 10 ஆம் திகதி அழைக்கப்பட்ட கூட்டத்தில் ஆஜராகியிருந்தனர். அங்கு பேசிய ஜே ஆர், மாவட்ட ரீதியிலான நிர்வாகத்தை மக்கள் முன் எடுத்துச் செல்வது குறித்து தான் கவலைப்படுவதாகவும், ஆகவே மாவட்ட மட்டத்திலான அமைச்சர்களை நியமிப்பது குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் கூறினார். மேலும், இந்த மாவட்ட அமைச்சர்கள் திட்டம் வெற்றிபெற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும் தனக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

"உங்களுக்கு நான் சில மாவட்ட அமைச்சர் பதவிகளைத் தரப்போகிறேன், நீங்களே அந்த மாவட்டங்களை நடத்திக்கொள்ளுங்கள். ஆகவே, இதுபற்றிச் சிந்தித்து, இத்திட்டம் வெற்றிபெற நாம் ஒன்றிணைந்து வேலை செய்யலாம்" என்று அவர்களைப் பார்த்து ஜே ஆர் கூறினார். இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "இதுபற்றி மேலதிக விபரங்களைத் தாருங்கள், நாம் இதுகுறித்து சாதகாமன் முறையில் பரிசீலிக்கிறோம்" என்று கூறினார். இந்தப் பேச்சுவார்த்தையின் தகவல்கள் லேக் ஹவுஸ் பத்திரிக்கைகளான டெயிலி நியூஸ், தினகரன் மற்றும்  தினமின ஆகிய நாளிதழ்களுக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்டன.

தான் செய்ய விரும்பியதை ஜே ஆர் செய்துகொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் போராளிகளுக்கும் இடையே பகைமையினை இதன்மூலம் அவர் உருவாக்கினார். அமிர்தலிங்கத்தின் இந்த செயற்பாடு போராளிகளை மிகவும் ஆத்திரப்பட வைத்திருந்தது, குறிப்பாக டெலோ இதுகுறித்து கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தது. ஆகவே அவர்களின் பிரச்சாரக் கிளை ஜே ஆர் மீதும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீதும் மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியது. இதே காலப்பகுதியில் தமிழ் மக்களிடமிருந்து போராளிகள் பற்றிய தகவல்களைத் தமக்கு வழங்கிவருபவர்களின் எண்ணிக்கை வற்றுப்போனதையும், தமிழ் மக்கள் பொலீஸாரிடமிருந்தும், இராணுவத்திடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்பதையும் பொலீஸார் தெளிவாக அறிந்துகொண்டனர்.  தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான பிளவு இங்கிருந்து விரிவாகத் தொடங்கியிருந்தது.

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய் அல்லது செய்ய விடு 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் மூன்றாவது மாநாடு ஆவரங்காலில் ஆடி 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இளைஞர்களின் ஆத்திரத்தினை முன்னணியினர் அப்போது மிகவும் தெளிவாக உணர்ந்திருந்தனர். "நீங்கள் செய்யுங்கள், அல்லது எங்களைச் செய்ய விடுங்கள்" எனும் மனநிலைக்கு இளைஞர்கள் வந்திருந்தனர். பேரணிகளுக்கு எதிராகப் பொலீஸார் விதித்திருந்த தடைகளையும் மீறி முத்துக்குமாரசாமி தலைமையில் சுமார் 300 இளைஞர்கள் அச்சுவேலிச் சந்தியிலிருந்து மாநாடு நடைபெற்ற ஆவரங்கால் நோக்கி பேரணியாக "செய் அல்லது எம்மைச் செய்ய விடு" எனும் கோஷத்தினையும் எழுப்பியவாறு சென்றனர்.

 மாநாடு நடைபெற்ற மைதானத்தினுள் உள்நுழைந்த இளைஞர்கள், அந்த மைதானத்தைச் சுற்றிக் கோஷமிட்டவாறே சென்றதுடன், அங்கிருந்தவர்களுக்கு தாம் கொண்டுசென்ற துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர். அதில், 1977 ஆம் ஆண்டு மக்களால் வழங்கப்பட்ட  ஆணைக்கு அமைவாக தமிழீழ தனிநாடு நோக்கிய பயணத்தை முன்னணியினர் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் இநத நடவடிக்கையினால் அதிருப்தியடைந்து காணப்பட்டதுடன், இளைஞர் மேல் தனக்கிருந்த கட்டுப்பாடு முற்றாக இல்லாமற்போனதையும் உணர்ந்துகொண்டார். மைதானத்தில் அடாத்தாக உள்நுழைந்திருந்த இளைஞர்கள் மீது அமிர்தலிங்கத்தின் அடியாட்களில் ஒருவரான ஜனசேகரன் எனப்படும் "பரந்தன் ராஜன்" தாக்குதலில் ஈடுபட்டதுடன், இளைஞர்களின் கைகளிருந்த துண்டுப்பிரசுரங்களையும் பறிக்க முனைந்தார். ஆனால் இதே பரந்தன் ராஜன் சில காலத்திற்குப் பின்னர் அமிர்தலிங்கத்தைக் கைகழுவி விட்டு ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி எனப்படும்  ஈ பி ஆர் எல் எப் அமைப்பில் இணைந்துகொண்டதுடன், அதற்குப் பின்னரான காலத்தில் இந்திய அணுசரணையுடன் ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி எனப்படு ஈ என் டி எல் எப் எனும் ஆயுதக் குழுவையும் ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

மைதானத்தினுள் நுழைந்திருந்த இளைஞர்கள் மீது அமிர்தலிங்கத்தின் அடியாட்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே "தளபதி" என்று அழைக்கப்பட்ட அமிர்தலிங்கம் மேடையில் வீற்றிருந்தார். இளைஞர்களுக்கும் அமிரின் ஆட்களுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த கைகலப்பில் மக்களின் கவனம் சென்றிருக்க, அதனைத் திசைதிருப்பும் முகமாக பெண்ணொருவர் மேடையில் ஏறி பாடத் தொடங்கினார். அவளது பாடல் பலரின் கரகோஷத்தினையும் பெற்றது.

 "துவக்கு போரைத் துவக்கு

துவக்கும் போரைத் துவக்கு"

என்று அவள் பாடினாள். நீ திட்டமிட்ட போரை உடனே தொடங்கு என்பது போலவும் துவக்கினைக் கொண்டு ஆயுதப்போராட்டத்தினைத் தொடங்கு என்பது போலவும் இரட்டை அர்த்தத்தில் அப்பாடல் அவளால் பாடப்பட்டது. 

அங்கிருந்த பெரும் எண்ணிக்கையான இளைஞர்களின் மனோநிலையினை அப்பாடல் வெளிக்காட்டியது. மாநாட்டில் கலந்துகொண்ட தமது உறுப்பினர்கள் மூலம் முன்னணியினருக்குக் கடுமையான செய்தியொன்றினைச் சொல்ல இளைஞர்கள் விழைந்திருந்தனர். மக்கள், முன்னணியினர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட்டதாக இளைஞர்கள் விமர்சித்தனர். முன்னணியினரின் தலைமை எடுக்கும் முடிவுகளை கண்டிக்கும் இரு தீர்மானங்களையும் இளைஞர்கள் நிறைவேற்றினர். 

முதலாவது தீர்மானம், தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக தமிழீழப் பாராளுமன்றத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், தமிழீழத்திற்கான அரசியல் யாப்பினை வரையவேண்டும் என்றும் கேட்டிருந்தது. இரண்டாவது தீர்மான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை உடனடியாக வரையவேண்டும் என்றும் கேட்டிருந்தது.

இளைஞர்களால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானங்களை அமிர்தலிங்கத்தின் ஆதரவாளர்களான வண்ணை ஆனந்தன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரே ஆதரித்திருந்தனர். பரமேஸ்வரன் கோப்பாயைச் சேர்ந்தவர் என்பதும், தமிழ் மாணவர் பேரவையினால் கோப்பாய் வங்கி மீது நடத்தப்பட்ட தோல்வியடைந்த கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. முன்னணியினருடனான அவரது நெருக்கத்தையடுத்து ஆவரங்கால் மாநாட்டினைத் தலைமையேற்று நடத்தும் பொறுப்பு அவருக்கு முன்னணியினரால் வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது தலைமை உரையில், "தலைவர்கள் உடனடியாகச் செயற்படவேண்டும். அவர்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது. மக்கள், தலைவர்களின் செயற்பாட்டிற்காகக் காத்திருக்கிறார்கள், அதற்காக எந்தத் தியாகத்தினையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எமது செயற்பாட்டிற்கான திட்டத்தினை தலைவர்கள் உடனடியாக வரைய வேண்டும். அதனைப் பிந்தொடர்ந்து வர நாம் காத்திருக்கிறோம்" என்று பரமேஸ்வரன் கூறினார். வண்ணை ஆனந்தன் பேசும்போது, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தாம் செய்யவேண்டிய கடமையிலிருந்து விலகாது பயணிக்கவேண்டும் என்று நினைவுறுத்திப் பேசினார்.

 See the source image

 

வி யோகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்

 

முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவுருத்தும் பேச்சு இரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே முன்னர் ஏற்பட்ட  பிணக்கு ஒன்றினை அடிப்படையாக வைத்தே பேசப்பட்டது. ஆவரங்கால் மாநாட்டிற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக  அரசின் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் யாழ்ப்பாணத்தில் தனது கிளை ஒன்றினைத் திறந்திருந்தது. இந்த திறப்பு நிகழ்வுக்கு அமிர்தலிங்கம் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் தனது சார்பாக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் வி யோகேஸ்வரனையும், உடுவில்த் தொகுதி உறுப்பினர் எஸ் தர்மலிங்கத்தையும் அனுப்புவதாகத் தீர்மானித்திருந்தார். இந்தச் செய்தி வெளியில் பரவவே, பெருமளவு இளைஞர்கள் யோகேஸ்வரனின் வீட்டின் முன்னால் திரண்டு, அந்நிகழ்விற்குச் செல்லவேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால், அங்கு பேசிய யோகேஸ்வரன், " அமிர் அண்ணா எங்களுக்கு இட்ட கட்டளைக்கு அமைய நாம் அந்நிகழ்வில் பங்கெடுப்போம், இதில் சமரசத்திற்கு இடமில்லை" என்று இளைஞர்களைப் பார்த்துக் காட்டமாகக் கூறினார்.

 இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அவரின் வீட்டு வாயிலின் முன்பாக அமர்ந்து அவரது பயணத்தைத் தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் எதிர்பாராத தருணத்தில் தனது வீட்டின் மதிலை தாண்டிக் குதித்த யோகேஸ்வரன், இளைஞர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். இன்னொரு இளைஞர் குழு காப்புறுதி நிறுவனத்தின் கிளையின் அருகே காத்திருந்து அங்கு வந்த தர்மலிங்கத்தைக் கைகளில் பிடித்துக்கொண்டதுடன், நிகழ்விற்குச் செல்லவிடாமல்த் தடுக்கும் முகமாக அவரை வெளியே இழுத்துவர முற்பட்டது. அவர்களைத் தள்ளி வீழ்த்திவிட்டு தர்மலிங்கமும் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். 

ஆனால், அமிர்தலிங்கத்தினால் மற்றைய இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் போல இளைஞர்களைத் தள்ளிவிட்டுச் செல்ல முடியவில்லை. ஆகவே, இளைஞர்களை அப்போதைக்குச் சமாளிக்க அவர்களின் தீர்மானங்களைப் பரிசீலிக்க இரு குழுக்களை அமைப்பதாகக் கூறினார். எது எப்படி இருந்தாலும், ஆவரங்கால் மாநாடு இளைஞர்களின் வளர்ந்துவரும் அதிருப்தியினை முன்னணியினருக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது. அழுத்தம் கொடுக்கும் சக்தியாக அதுவரை இருந்த இளைஞர்கள் தற்போது தீர்மானம் எடுக்கும் சக்தி எனும் நிலைக்கு வளர்ந்திருந்தனர். மேலும், ஜெயவர்த்தனவினால் முன்வைக்கப்பட்ட மாவட்ட சபைகளுக்கான அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளும் முன்னணியினர் உத்தேச தீர்மானத்திற்குத் தமது கடுமையான எதிர்ப்பினை இளைஞர்கள் காட்டியிருந்தனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது விமானத் தகர்ப்பு

Colombo-Ratmalana | Bureau of Aircraft Accidents Archives

1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பினை அமுல்ப்படுத்திய நிகழ்வினை கெளரவிக்க புரட்டாதி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நிகழ்வொன்றினை அரசு ஒழுங்குசெய்திருந்தது. இந்நிகழ்வில் பங்குபற்றும் முன்னணியினரின் விருப்பு இளைஞர்களின் கடுமையான அழுத்தத்தினையடுத்து கைவிடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு அமுல்ப்படுத்தப்பட்ட குடியரசு யாப்பின்மூலம் தமிழர்களின் கழுத்தில் கட்டப்பட்ட தூக்குக் கயிற்றினை 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு மேலும் இறுக்கியிருக்கிறது என்று இளைஞர்கள் வாதிட்டு வந்தனர். 1978 ஆம் ஆண்டி யாப்பு ஒற்றையாட்சி முறையினை மேலும் உறுதிப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள மொழிக்கும் பெளத்த மதத்திற்குமான அதியுயர் இடம் இந்த யாப்பிலும் மேலும் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதுடன், பெளத்த மதத்தினை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் பெளத்த சாசன அமைச்சு எனும் அதிகாரம் மிக்க அமைச்சுப் பொறுப்பும் இந்த யாப்பின்மூலம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த சிங்கள மொழிக்கான உத்தியோகபூர்வ அந்தஸ்த்து இந்த யாப்பின்மூலம் மேலும் விரிவாக்கப்பட, தமிழ் மொழியிலான நிர்வாகம் தமிழ் பேசும் பகுதிகளுக்கு மட்டுமே என்று சுருக்கப்பட்டது. வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்கள் தமது நிர்வாகத் தேவைகளை சிங்கள மொழியிலேயே செய்துகொள்ளவேண்டிய நிலையினையும் இந்த யாப்பு ஏற்படுத்தியது. 1972 ஆம் ஆண்டி யாப்பினை அடிமைச் சாசனம் என்று அன்று கூறிய நீங்கள் இன்று அதனைவிடவும் அநீதியான யாப்பினை எப்படி ஆதரிக்க நினைக்கிறீர்கள்? என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இளைஞர்கள் கேள்வியெழுப்பி வந்தனர்.

 அமிர்தலிங்கத்திடம் பதில் இருக்கவில்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம் அரசியல் யாப்பு நிகழ்வினைப் புறக்கணித்த தீர்மானத்தை அடக்கி வாசிப்பதும் இளைஞர்களால் முன்வைக்கப்பட்ட கறுப்புக்கொடி போராட்டத்தை நிராகரித்ததும் மட்டும்தான். ஜெயவர்த்தனவின் அரசுக்கெதிராக இளைஞர்கள் செய்யும் எந்தப் போராட்டமும் இன்னொரு இனக்கலவரத்தை ஏற்படுத்திவிடும், ஆகவே அரசியல் யாப்பிற்கெதிரான எந்தப் போராட்டத்திலும் இறங்கி ஜெயவர்த்தனவை ஆத்திரப்படுத்த வேண்டாம் என்று கூறி இளைஞர்களை அடக்கி வைக்க முயன்றார்.

 ஆனால், அமிர்தலிங்கத்தின் பயமுருத்தல்களை இளைஞர்கள் சட்டை செய்யவில்லை. வடக்குக் கிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் அரசியல் யாப்பு நிகழ்விற்கெதிராக கறுப்புக் கொடிகளை தமிழர்கள் பறக்கவிட்டார்கள். மட்டக்களப்பில் பஸ் வண்டிமீது குண்டுவீசப்பட்டதுடன் ஊர்காவற்றுரையில் இன்னொரு பஸ் வண்டி எரியூட்டப்பட்டது. இன்னொரு குண்டு பஸ் வண்டியினுள் வெடிக்கவைக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக மட்டக்களப்பில் வாழ்ந்துவந்த காசி ஆனந்தனை அரசு கைது செய்தது.

 இவை சிறிய சம்பவங்கள் மட்டுமே. புலிகள் இந்த சம்பவங்கள் எவற்றிலும் ஈடுபட்டிருக்கவில்லை. எயர் சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றினைத் தகர்க்கும் திட்டத்தில் புலிகள் அப்போது ஈடுபட்டிருந்தார்கள். விமானங்களைக் கடத்துவதோ அல்லது குண்டுவைத்துத் தகர்ப்பதோ அன்றைய காலத்தில் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்த சம்பவங்களாக இருந்தமையினால், தாமும் அவ்வாறான தாக்குதல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்று பிரபாகரனும் உமாவும் திட்டமிட்டனர். பாலஸ்த்தீனியர்கள் இதனைச் செய்திருந்தனர். வேறு சில கெரில்லா அமைப்புக்களும் இவ்வாறான விமானத் தகர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆகவே, தாமும் அதனைச் செய்ய வேண்டும் என்று புலிகள் முடிவெடுத்தனர். இத்தாக்குதல் நடவடிக்கைக்கு நால்வர் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் பிரபாகரன், உமா மகேஸ்வரன், பேபி சுப்பிரமணியம் மற்றும் ராகவன் ஆகியோராகும்.

பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் நேரம் குறித்து வெடிக்கும் குண்டினைத் தயாரிப்பதில் ஈடுபட உமா மகேஸ்வரனும் ராகவனும் விமானத்தை தெரிவுசெய்தல், தாக்குதலின் பின்னரான பிரச்சார நடவடிக்கைகளைத் திட்டமிடல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். மேம்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரிப்பதில் வல்லுனராக பிரபாகரன் இருந்தார். அவ்வாறே, குண்டுகளை நேரம் குறித்து வெடிக்கவைக்கும் பொறிமுறையினை பேபி சுப்பிரமணியம் என்று அழைக்கப்படும் இளங்குமரன் அறிந்துவைத்திருந்தார். ஆகவே, இருவரும் இணைந்து  ஒரு நேர வெடிகுண்டினைத் தயாரித்து முடித்தனர்.

பாராளுமன்ற அமர்வின் உத்தியோகபூர்வ ஆரம்ப நாளான புரட்டாதி 7 ஆம் திகதியே  குண்டினை வெடிக்கவைப்பது என்று மத்திய குழு முடிவெடுத்திருந்தது. இரத்மலானையிலிருந்து பலாலிக்கு நடத்தப்படும் விமான சேவையில் அமர்த்தப்பட்டிருந்த  அப்ரோ 748 ரக விமானத்தில் இரு ஆசனங்கள் புலிகளால் பதிவுசெய்யப்பட்டன. அன்று இரத்மலானையில் 35 பயணிகளுடன் விமானம் வந்திறங்கியது. பேபி சுப்பிரமணியமும், ராகவனும் குண்டின் நேரப் பொறியை அமுக்கிவிட்டு இறுதியாக விமானத்தை விட்டு இறங்கி, விரைவாகவே விமான நிலையத்திலிருந்தும் வெளியேறிச் சென்றனர். மாலைதீவுக்கான பயணிகள் விமானத்தில் ஏறுவதற்குச் சற்று முன்னதாக குண்டு வெடித்தது. குண்டுவெடிப்பினை விசாரணை செய்த பொலீஸார், மாலைதீவிற்குச் செல்லும் வழியிலேயே குண்டினை வெடிக்கவைக்க புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்று கூறியபோதும், புலிகள் அதனை முற்றாக மறுத்துவிட்டனர்.

main-qimg-29d98f55316eda8c5bb07e7ba5219847-lq

பாலகுமாரன், பேபி சுப்பிரமணியம், தங்கன்

 

பேபி சுப்பிரமணியம் தற்போது புலிகளின் நிர்வாகத்தில் கல்வித்துறைக்குப் பொறுப்பாக இருந்துவருகிறார். புலிகளிடமிருந்து விலகிய ராகவன் இன்று இங்கிலாந்தில் வாழ்ந்துவருகிறார்.

 லண்டனில் இருந்த தனது தொடர்பாளர்கள் மூலம் விமானத்தைத் தகர்த்தது புலிகளே என்று உமா மகேஸ்வரை உரிமை கோரி அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.

"எமது விடுதலைப் போராட்டத்தினை நசுக்கி, இலட்சியத்தைத் தகர்த்து, சலுகைகள் மூலம் எமது விடுதலைத் தீயை அணைத்துவிடலாம் என்று கனவுகாணும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்த விமானத் தகர்ப்பு ஒரு பாடமாக இருக்கட்டும்" என்று என்று அந்த அறிக்கை கூறியது.

 இத்தாக்குதலின் மூலம் இணக்க அரசியலை நடத்திவந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று ஜெயவர்த்தனா கொண்டிருந்த திட்டம் ஆட்டம் காணத் தொடங்கியது.

 கொழும்பில் இதேவகையான உரிமைகோரும் அறிக்கையினை வெளியிட்டிருந்த உமா மகேஸ்வரன் அந்தக் கடிதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று கையொப்பம் இட்டிருந்தார்.

 தம்மீதான தடையினூடாகவும், விமானத் தகர்ப்பு நடவடிக்கை மூலமும் சர்வதேசத்தில் விமானத் தகர்ப்பில் ஈடுபடக்கூடிய வல்லமையினைப் பெற்றிருந்த ஒரு சில விடுதலை அமைப்புக்களில் ஒன்றாக புலிகளும் ஆகிப்போனார்கள். தமது முதலாவது நேர வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் இந்த நிலையினை அடைந்தார்கள் புலிகள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பறித்தல்

இத்தொடரை எழுதும்போது நான் சேகரித்த விடயங்களை எனது வாசகர்களோடு பகிரும் அதேவேளை அவர்களிடமிருந்து இத்தொடர் குறித்த தகவல்கள், திருத்தங்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதன் மூலம் எமது வாழ்நாளில் தமிழ் இனம் கண்ட ஒப்பற்ற ஆளுமை பற்றி எமது வருங்கால சந்ததியினரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆவணம் ஒன்றைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

வாசகர்களின் கருத்துக்களை எனது தொடரினுள் உள்வாங்குவது எனது நோக்கமல்ல, மாறாக அவற்றினை எனது தொடருக்குச் சமாந்தரமாக குறிப்பிட்டுச் செல்வதன்மூலம் எதிர்கால எழுத்தாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் தமது பதிவுகளை மேற்கொள்ள உதவுவதே எனது நோக்கமாகும். பிரபாகரன் ஒரு தனி மனிதன் அல்ல, அவன் ஒரு நிகழ்வு. உலகின் ஒப்பற்ற கெரில்லா தலைவர்களுள், விடுதலைப் போராட்ட வீரர்களுள் முதன்மையானவன். அவன்பற்றி எழுதப்படுவதும், ஆராயப்படுவதும் கருத்தாடப்படுவதும் மிக மிக அவசியம்.

இதுவரை எனக்குக் கிடைக்கப்பெற்ற வாசகர்களின் கருத்துக்களில் ஒரு சிலவற்றைப் பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்,

******************************************************************************************************

எனது அக்கத்தில் நான் இட்ட முக்கியமான வழு ஒன்று பற்றி கனடாவில் வசித்து வரும் அம்பலவானர் செல்லத்துரை தெரிவித்த கருத்திலிருந்து ஆரம்பிக்கலாம்,

அவரது மின்னஞ்சலின இங்கே பிரசுரிக்கிறேன்,

ஐயா,

உங்களின் பதின் நான்காவது அத்தியாயத்தில் புனித மாணிக்கவாசகரின் சுலோகமான நாம் யார்க்கும் குடியல்லோம் என்பதை தங்கத்துரை பாடியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், இந்த சுலோகம் திருநாவுக்கரசரால் பாடப்பட்டதே ஒழிய, மாணிக்கவாசகரினால் அல்ல, ஆகவே தயவுசெய்து திருத்தி விடுங்கள்.

நான்கு சைவ புனிதர்களுள். அப்பரே முதன்மையானவர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருமே அவர்களாகும். நான் ஒரு இந்து. இந்தப் பெயர்கள் எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. எனது சிறுவயதில் முதியோரிடமிருந்து குட்டுக்களை வாங்காது இவற்றை நான் மனப்பாடம் செய்துவைத்திருக்கிறேன். இந்தத் தவற்றினை நான் எவ்வாறு செய்தேன் என்று எனக்கே புரியவில்லை. அதற்காக வருந்துவதோடு, அதனை திருத்தியும் விட்டேன்.1957 ஆம் ஆண்டிலிருந்து ஒரு செய்தியாளனாக வலம்வரும் எனக்கு எனது தரவுகளில் ஏற்படும் தவறுகள் மிகுந்த அச்சத்தினை ஏற்படுத்தி விடுகின்றன.

***********************************************************************************************************

சங்கம் இணையத்தின் ஆசிரியரின் கருத்து,

"உங்களின் பிரபாகரன் பற்றிய தொடரினை தொடர்ச்சியாக வாசித்துவரும் ஒருவரை சங்கம் இணையத்தள உறுப்பினர் கூட்டத்தில் சந்தித்தேன். அவர் என்னிடம் கேட்ட முதலாவது கேள்வி, "சபாரட்ணம் இத்தொடரினை எழுதி முடித்தபின்னர் அதனை ஒரு புத்தகமாக வெளியிடப் போகின்றாரா?" என்பதுதான். உங்களின் தொடரினை வாசித்து தான் பெற்ற அனுபவத்தினைத் தொடர்ச்சியாக அவர் விபரித்துக்கொண்டு சென்றார். அத்தொடரினை பக்கச்சார்பில்லாத, உண்மையான தகவல்களைக்கொண்ட, நேர்த்தியாக அமைக்கப்பட்ட முழுமையான ஆவணம் என்று அவர் என்னிடம் கூறினார். நீங்கள் எழுதும் விதத்தினைப் பார்க்கும்போது அச்சம்பவங்களினை நேரில் கண்ட அனுபவம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். இத்தொடரினை தான் தொடர்ச்சியாக வாசித்துவருவதாகவும் தனது நண்பர்களுக்கும் இத்தொடர் குறித்து கூறிவருவதாகவும் என்னிடம் பேசும்போது அவர் கூறினார்"

பிரபாகரனின் இளமைக் காலத்தில் தானும் சைக்கிளில் பிரபாகரன் சென்ற பேரணிகளுக்குச் சென்றதாகக் கூறும் அவர், உங்களின் தொடரினை வாசிக்கும்போது தனது பழைய நினைவுகளை மீட்கக்கூடியதாக அமைந்ததாகக் கூறினார்" என்று சங்கம் இணைய ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார்.

அந்த மனிதருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டே, அவர்கூட தனது அனுபவங்களை எழுதலாமே என்று கேட்டுக்கொண்டேன். பிரபாகரன் தனது இளமைக் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீள அகலங்களுக்கெல்லாம் சைக்கிளில் பயணித்து  குடாநாட்டின் வீதிகள், ஒழுங்கைகள், குச்சொழுங்கைகள் என்று சகல பகுதிகளையும் தெளிவாக அறிந்துவைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. பிரபாகரன் பேரணிகளுக்கும், அரசியல்க் கூட்டங்களுக்கும் சைக்கிளிலேயே சென்று வந்தார். ஆகவே, அவர் பயணித்த இடங்கள், நிகழ்வுகள் மற்றும் அவருடனான சம்பாஷணைகள் என்பனவற்றை ஆவணப்படுத்தி வைத்திருப்பது எமக்கு உதவியாக இருக்கும். ஆகவேதான் அந்த மனிதரிடம் பிரபாகரன் குறித்த விடயங்களை எழுதுமாறு கேட்டிருந்தேன்.

**********************************************************************************************************

இவ்வாறே இன்னொரு கடிதம் ஒன்று கனடா கார்ள்ட்டன் பல்கலைக்கழகத்தில் இரசாயணவியல் கற்கும் மாணவர் ஒருவரிடமிருந்து வந்திருந்தது. அவரது கடிதத்திலிருந்து சில பகுதிகள்,

"இத்தொடரை எழுதுவதற்காக சபாரட்ணம் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இத்தொடர் மூலம் பல விடயங்களை நான் அறிந்துகொள்ள முடிந்ததோடு, அவர் எழுதும் விதமும் மிகவும் நன்றாக இருக்கிறது" என்று கூறியதோடு, இந்தத் தொடரினை தனது பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் இணையத் தளத்திலும் தரவேற்றம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். 

இவ்வாறான ஊக்கப்படுத்தல்கள் எனக்கு மனநிறவினைத் தருகின்றன. மற்றையவர்களும் இதுபோன்ற செயல்களைச் செய்யலாம்.

இவர்களைப்போன்றே இன்னும் பலரும் இதுகுறித்து எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் தமது கருத்துக்களை சங்கம் இணையத்தின் ஆசிரியருக்கு அனுப்பி வைக்கலாம்.

நன்றி

டி. சபாரட்ணம்

************************************************************************************************************* 

இரண்டு விதிகள்

1978 ஆம் ஆண்டி இரண்டாவது அரைப்பகுதியில் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கிடையில் பாரிய அறிவுசார் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்தன. இரு பிரச்சினைகளான தனிநபர் தீவிரவாதம் மற்றும் வங்கிக்கொள்ளை என்பன பேசுபடுபொருளாக இருந்தன. மாக்ஸியச் சிந்தனையைக் கொண்டிருந்த ஆயுத அமைப்புக்கள் இந்த இரு செயற்பாடுகளையும் ஒழுக்கக்கேடானவை என்றும் சமூகக் கோட்பாடுகளுக்குப் புறம்பானவை என்றும் விமர்சித்தன. தனிநபர்களைக் கொல்வது விடுதலைப் போராட்டம் ஆகாது என்றும் அவர்கள் வாதிட்டனர். அவர்களைப்பொறுத்தவரை வங்கிக்கொள்ளை என்பது மக்களின் பணத்தினைக் கொள்ளையடிப்பதுதான் என்று கருதப்பட்டது.

மக்கள் புரட்சிக்காக அணிதிரட்டப்படவேண்டும் என்றும், போராட்டத்தினைச் சுமக்கும் நிலையினை மக்கள் உருவாக்கவேண்டும் என்றும் அவர்களால் கூறப்பட்டது.

ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளர்களே இந்த விவாதங்களை ஆரம்பித்து வைத்திருந்தார்கள். அவ்வியக்கத்தின் ஸ்த்தாபகரான ரத்ணா எனப்படும் ரத்திணசபாபதி யாழ்ப்பாணத்தில் அப்போது தங்கியிருந்தார். அவர் ஏற்கனவே லெபனானில் ஆயுதப் பயிற்சியை முடித்திருந்தவர். அவரது கனவு தத்துவார்ந்த அடிப்படியில் அமைந்திருந்ததோடு, மிகவும் விரிவானதாகவும் இருந்தது. மேலும், பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதப்போராட்டமாகவே அவர் விடுதலைப் போராட்டத்தை விளங்கிக்கொண்டிருந்ததுடன், மத்திய மலைநாட்டில் வசித்துவந்த மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கியதாக போராட்டம் அமையப்பெறவேண்டும் என்றும் அவர் விரும்பினார். அவர் தன்னுடன் தமிழீழத்திற்கான வரைபடம் ஒன்றையும் கொண்டுவந்திருந்தார். அதில் வடக்குக் கிழக்கு மாகாணங்களுடன் மத்திய மாகாணமும் இணைக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரபாகரனோ மிகவும் எளிமையான யதார்த்தவாதியாக இருந்தார். ஆதலால், மார்க்ஸிய தத்துவவாதிகளிடமிருந்து அவர் வேறுபட்டவராகக் காணப்பட்டார். தமிழீழத்தின் பகுதிகள் மட்டுமல்லாது போராட்டத்தின் தத்துவார்த்த அடிப்படை தொடர்பிலும் வேறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருந்தார். அவரைப்பொறுத்தவரை தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் வடக்கும் கிழக்கும் இணைந்த நிலப்பகுதியே தமிழீழம் என்று கருதப்பட்டது. மத்திய மலைநாடு கண்டிய சிங்களவர்கள் சரித்திர காலம் தொட்டு வாழ்ந்துவரும் ஒரு பகுதி என்று பிரபாகரனினால் உணரப்பட்டது. அவர் தன்னை ஒரு மார்க்ஸியவாதியாக அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. தொழிலாளர் பற்றியோ, பாட்டாளி வர்க்கம் பற்றியோ, வர்க்கவேறுபாடற்ற சமுதாயம் பற்றியோ அவர் ஒருபோதும்  பேசவில்லை. தனது சிறுபராயம் முதல் அவருக்கிருந்த ஒரே கவலை தமிழினத்தின் பாதுகாப்பு மட்டும்தான். தமிழர்கள் சிறுமைப்படுத்தப்பட்ட இனமாக கருதப்படுவதை அவர் வெறுத்தார். அவர்கள் சுதந்திரமாகவும், சுயகெளரவத்துடனும் பாதுகாப்புடனும் வாழவேண்டும் என்று அவர் விரும்பினார். சிங்களக் காடையர்களாலும், இராணுவத்தாலும் அவர்கள் அச்சுருத்தப்படுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சோசலிசம் தொடர்பான பிரபாகரனின் நிலைப்பாடு என்பது தமிழினத்தை சாதிய வேற்றுமைகள் அற்ற சமூகமாக மாற்றவேண்டும் என்கிற விருப்பிற்கு அப்பால் வேறு எதுவாகவும் இருக்கவில்லை. சாதிய வேறுபாடுகள் போராட்டத்திற்குப் பாதகமாக அமையும் என்று அவர் நம்பினார். சாதிய வேற்றுமைகள் தமிழர்களின் ஒற்றுமையினைக் குலைத்துவிடுவதோடு, பலமான ஆயுதப் போராட்ட அமைப்பொன்றினை உருவாக்குவதையும் தடுத்துவிடும் என்று அவர் கருதினார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் பிரபாகரனுடன் ஒருமுறை பேசும்போது, ஆயுதப் போராட்டத்திற்கு முதல் மக்கள் அரசியல்மயப்படுத்தப்படவேண்டும் என்று கூறியிருந்தார். அதனை உடனடியாக கையை வீசி மறுத்த பிரபாகரன், "என்ன அரசியல்மயப்படுத்தல்?" என்று கேட்டார். "மக்களுக்கு இன்று தேவையானது செயல்கள் மட்டுமே. நாம் செயலில் முதலில் இறங்கவேண்டும். மக்கள் எம்மைப் பிந்தொடர்வார்கள்" என்று அவர் கூறினார். அதையேதான் அவர் செய்தும் காட்டினார். அவரது போராட்டத்தின் முறையாகவும் அதுவே இருந்தது. திருப்பியடி, கடுமையாகத் திருப்பியடி, மீண்டும் மீண்டும் திருப்பியடி, இடைவேளையின்றி திருப்பியடி, மக்கள் உன்னுடன் இருப்பார்கள் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

தனது நிலைப்பாட்டிலிருந்து இரு முக்கிய விதிகளை அவர் வரைந்தார். போராட்டத்திற்கான ஆயுதங்களை உனது எதிரியிடமிருந்தே பறித்துக்கொள். எதியிடமிருந்தே உனது போராட்டத்திற்குத் தேவையான பணத்தினைக் கொள்ளையடி என்பதுதான் அவையிரண்டு விதிகளும். புலிகள் இராணுவத்தினரிடமிருந்தும், பொலீஸாரிடமிருந்துமே தமது பெரும்பாலான ஆயுதங்களைக் கைப்பற்றியிருந்தனர். எந்தவொரு ராணுவ நடவடிக்கையினதும் முக்கிய குறிக்கோளாக இருப்பது எதிரியிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவதுதான் என்று பிரபாகரன் தனது போராளிகளுக்குச் சொல்லிவந்தார். போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் தமக்குத் தேவையான பணத்தின் பெரும்பகுதியை இரு அரச வங்கிகளான மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றைக் கொள்ளையிட்டதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தின்னைவேலி வங்கிக்கொள்ளை

மக்களை எப்படி அணிதிரட்டுவது, தனது போராட்ட அமைப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது என்கிற பிரபாகரனின் சிந்தனைகளை அடிப்படையாக வைத்தே தின்னைவேலி வங்கிக்கொள்ளை திட்டமிடப்பட்டது. சர்வதேச கவனத்தினை ஈர்ந்திருந்த இரத்மலானை விமானத் தகர்ப்பிற்குப் பின்னர் பாரிய வங்கிக்கொள்ளை ஒன்றினை நடத்தவேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார். இதனைத் தயார்ப்படுத்துவதற்கு அவருக்கு ஒருமாதகாலம் தேவைப்பட்டது. வங்கியில் காவலுக்கு நிற்கும் பொலீஸ் அதிகாரியின் உப இயந்திரத் துப்பாக்கியினைக் கைப்பற்றுவதே அவரது திட்டத்தின் முதலாவது இலக்கு. இதற்கு செல்லக்கிளியை அவர் பொறுப்பாக நியமித்தார். பிரபாகரன் உட்பட 6 பேர் கொண்ட அணியின் தலைவராக செல்லக்கிளியே பிரபாகரனால் நியமிக்கப்பட்டார். தின்னைவேலியில் இயங்கிவந்த மக்கள் வங்கியின் காசாளரான சபாரட்ணத்துடன் நட்பாகப் பேசத் தொடங்கினார் செல்லக்கிளி. செல்லக்கிளியுடன் பேசும்போது சபாரட்ணம் தமது கிளைகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளின்போதும் தமது வங்கியிலிருக்கும் பணத்தினை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரதான அலுவலகத்திற்குக் கொண்டுசெல்வதாகக் கூறியிருந்தார்.  வங்கிக் கிளைகளில் சேரும் பணம் நேர்த்தியாக சூட்கேஸுகளில் அடுக்கப்பட்டு, பிரதான காசாளரின் அறையில் வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பகல்வேளைகளில் பிரதான அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. வங்கியின் வரைபடம், உள்நுழையும், வெளியேறும் வாசல்கள் குறித்த தகவல்களை சபாரட்ணம் செல்லகிளிக்கு வழங்கினார். வங்கியில் மேலாளர் உட்பட 8 ஊழியர்கள் வேலைபார்த்து வந்தார்கள். செல்லக்கிளியே ஒருமுறை நேரே வங்கிக்குச் சென்று நடைமுறைகளை அவதானித்து வந்தார்.

See the source image

தமிழீழத்தின் எல்லைகள்

 

1978 ஆம் ஆண்டு மார்கழி 5 ஆம் திகதி, வங்கி தனது அலுவல்களைத் தொடங்கி சரியாக ஒரு மணிநேரத்தின்பின்னர் வங்கி நோக்கி நகர்ந்தது புலிகளின் அணி. வங்கியின் வாயிற்கதவருகே உப இயந்திரத் துப்பாக்கியுடன் காவலுக்கு நின்ற பொலீஸ் கொன்ஸ்டபிள் கிங்ஸ்லி பெரேரா அருகில்ச் சென்று அவர்மீது தாக்குதல் நடத்திய செல்லக்கிளி அவரது இயந்திரத் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டதோடு, அதனாலேயே அவரைச் சுட்டார். வாயிலின் மறுபுறத்தில் நின்றிருந்த ரிசேர்வ் கொன்ஸ்டபிளான சச்சிதானந்தம் நடப்பதைக் கண்டவுடன் ஓடத் தொடங்கினார். அவரையும் சுட்டுக்கொன்ற செல்லக்கிளி, அவ்விடத்திலேயே காவலுக்கு நின்றுகொண்டார்.

பிரபாகரனும் மற்றைய நான்கு போராளிகளும் ஊழியர்களை மேலாளரின் அறைக்குள் இட்டுச் சென்றதோடு, சூட்கேசுகளில் இருந்த பணத்தினை உரைப்பைகளில் நிரப்பிக்கொண்டனர். தாம் அங்கிருந்து கிளம்பிச் செல்லும்வரை ஊழியர்களை அசையவேண்டாம் என்று அவர்கள் எச்சரித்திருந்தனர். அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் வேளை கோப்பாய் பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஜீப் வண்டியொன்று தற்செயலாக அப்பகுதியூடாக வந்தது. கோப்பாய் பொலீஸ் நிலைய அதிகாரி, ஜெயரட்ணம் எனும் கொன்ஸ்டபிளை காசோலை ஒன்றை மாற்றுவதற்காக வங்கிக்கு அனுப்பியிருந்தார். ஜீப் வண்டியிலிருந்து ஜெயரட்ணம் கீழிறங்கவே அவர்மீது செல்லக்கிளி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். மற்றையவர்கள் ஜெயரட்ணத்தை இழுத்து வெளியே வீசிவிட, புலிகளின் அணி கொள்ளையிட்ட பணத்தோடு பொலீஸ் வண்டியில் தப்பிச் சென்றது. கொன்ஸ்டபிள் ஜெயரட்ணம் காயங்களுடன் தப்பித்துக்கொண்டார்.

மிகப்பெரிய வங்கிக்கொள்ளையினை கச்சிதமாக முடித்துக்கொண்ட புலிகளின் அணி, தமது இரண்டாவது இயந்திரத் துப்பாக்கியையும் இந்த நடவடிக்கையில் கைப்பற்றிக்கொண்டது. கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி 1,180,000 ஆக இருந்ததோடு, அக்காலத்தில் இது பெருந்தொகையாக கணிக்கப்பட்டது.

அன்று புலிகளுக்கு உதவிய வங்கியின் காசாளரான சபாரட்ணம் இன்று வன்னியில் புலிகளின் நிதிச் சேவைக்கு தலைவராக இருக்கிறார். இன்று புலிகளின் நிதிப்பொறுப்பாளராக இருக்கும் சபாரட்ணம் ஒரு காலத்தில் ரஞ்சித்தப்பா என்று அழைக்கப்பட்டதுடன் இன்று தமிழேந்தியென்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

 

இயக்கத்தில் இணைந்த திறைமையுள்ள இளைஞர்கள்

தின்னைவேலி வங்கிக்கொள்ளையினையடுத்து தமிழேந்தி எனப்படும் சபாரட்ணம் புலிகளுடன் இணைந்துகொண்டார். பிரபாகரனின் செயல்வீரமும், மனதை வசீகரிக்கும் ஆற்றலும் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் பெற்றுக்கொடுத்தது. பல திறமைசாளி இளைஞர்கள் புலிகள் இயக்கம் உருவக்கப்பட்டபின்னர் அதனோடு இணையத் தொடங்கினார்கள். 

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே பேபி சுப்பிரமணியம் எனும் இளங்குமரன் இயக்கத்தில் இணைந்துகொண்டார். மேலும் இரத்மலானை விமானத் தகர்ப்பிலும் அவர் பங்கெடுத்திருந்தார். 1977 இல் குமரப்பாவும் பண்டிதரும் இணைந்தார்கள். 1978 இல் கிட்டு, மாத்தையா, ரகு ஆகியோர் இணைந்தார்கள். இவர்கள் எல்லோருமே மிகவும் திடகாத்திரமாக இருந்ததுடன் வெற்றித்தளபதிகளாகவும் வலம்வந்தார்கள். ஆனால், பேபி சுப்பிரமணியம் இராணுவத்துறையிலிருந்து விலகி கல்வித்துறைக்குப் பொறுப்பாக இயங்கிவருகிறார். மாத்தையா தலைமைக்கெதிரான துரோகத்திற்காக மரணதண்டனை வழங்கப்பட ஏனைய தளபதிகள் மாவீரர்களாகிவிட்டதுடன் இன்றுவரை புலிகளாலும், தமிழ் மக்களாலும் மிகவும் அன்பாக நினைவுகூறப்பட்டு வருகின்றனர்.

இரத்மலானை விமானத் தகர்ப்பின் பின்னரான காலத்தில் கிட்டு, மாத்தையா மற்றும் ரகு ஆகியோர் இயக்கத்தில் இணைந்துகொண்டனர். அவர்கள் எல்லோரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள். கிட்டு பிரபாகரனுக்கு நெருங்கிய உறவினராக இருந்ததுடன், அவருக்கான பயிற்சியினை பிரபாகரனே வழங்கினார். சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் எனும் இயற்பெயரைக் கொண்ட கிட்டு வல்வை சிதம்பராக் கல்லூரியில் கல்விகற்றவர். அவரது தந்தை நெல்லியடியில் அச்சகம் ஒன்றை நடத்திவந்தவர், சமஷ்ட்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளர், தந்தை செல்வாவின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த சீடர். கிட்டுவின் தாயாரான இராஜலட்சுமியும் சமஷ்ட்டிக் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்ததுடன் 1961 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யாழ்ப்பாணச் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற சத்தியாக்கிரக நிகழ்வில் ஒரு வயதுப் பாலகனான கிட்டுவையும் சுமந்துகொண்டு கலந்துகொண்டவர்கள். கிட்டு, குடும்பத்தின் கடைசிப்பிள்ளயாக 1960 ஆம் ஆண்டு தை 2 ஆம் திகதி பிறந்தார். மகாத்மா காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் மிகவும் நாட்டம் கொண்டிருந்த கிட்டுவின் பெற்றோர்கள் தமது மூத்த மகனுக்கு காந்திதாசன் என்று பெயர் வைத்தனர். இன்று அவர் இந்தியாவில் வாழ்ந்துவருகிறார். காந்திதாசனுக்குப் பின்னர் இரு பெண்பிள்ளைகள் பிறக்க, இறுதியாக கிட்டு பிறந்தார். கிட்டுவின் மரணம் மிகவும் சோகமான முறையில் நடந்தது. 

ராஜலட்சுமி தனது தள்ளாத வயதிலும் சமூகத்தில் தாழ்த்தப்பட்டுவாழும் பெண்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கிருஷ்ணகுமார் இயக்கத்தில் இணையும்போது  வெங்கட் என்று அழைக்கப்பட்டு பின்னர் வெங்கட் அண்ணா என்று செல்லமாக அழைக்கப்படலானார். இறுதியில் எல்லோராலும் செல்லமாக கிட்டண்ணா என்று விரும்பி அழைக்கப்பட்டார். பிரபாகரனினால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்ட கிட்டு பிரபாகரனோடும், கலபதியோடும் தோளுக்குத் தோள் நின்று செயற்பட்டவர். துரையப்பா மீதான தாக்குதலில் புலிகள் அணியின் குறிபார்த்துச் சுடும் வீரராகவும் பங்கெடுத்தவர். துரையப்பாவின் கொலையின்பின்னர் பிரபாகரனுடன் கிட்டுவும் 1979 இல்  தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்தார். 

மாத்தையாவின் இயற்பெயர் கோபாலசாமி மகேந்திரராஜா. அவர் 1956 ஆம் ஆண்டு பருத்தித்துறையில் பிறந்ததோடு சிதம்பராக் கல்லூரியில் கல்விகற்றவர். அவரையும் பிரபாகரனே பயிற்றுவித்தார். இயக்கத்தின் உபதலைவர் நிலைக்கு உயர்ந்த மாத்தையா வன்னிப்பகுதிக்குப் பொறுப்பாகச் செயற்பட்டிருந்தார். கிட்டுவுடனான மாத்தையாவின் தனிப்பட்ட குரோதமே அவரின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது.

ரகு பொலீஸ் துறையில் சேர விண்ணப்பித்திருந்தார். அவர் வல்வெட்டித்துறையில் பிறந்தமையினால் பொலீஸார் அவரை சேர்க்க மறுத்துவிடவே அவர் புலிகளுடன் சேர்ந்துகொண்டார்.

பிரபாகரன் தனது முழு நேரத்தையும் தனது போராளிகளைப் பயிற்றுவித்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், பணத்தினைச் சேகரித்தல் என்பதிலேயே செலவிட்டார். அவர் தனது போராளிகளை அர்ப்பணிப்பு மிக்க, இலட்சியத்தினால் உந்தப்பட்ட, குற்றமேதுமற்ற, ஒழுக்கம் மிக்க, தலைமைக்கு விசுவாசமான வீரர்களாக உருவாக்கினார். ஒழுக்கமும் விசுவாசமுமே வெற்றிகரமான விடுதலை அமைப்பை உருவாக்கும் என்று பிரபாகரன் உறுதியாக நம்பினார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒற்றுமை

 தின்னைவேலி வங்கிக்கொள்ளையினையடுத்து ஜெயவர்த்தன மிகுந்த சீற்றம் கொண்டார். பொலீஸ்      மாதிபர் ஸ்டான்லி சேனநாயக்கவையும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஸ் பெரேராவையும் உடனடியான கூட்டம் ஒன்றிற்கு அவர் அழைத்தார். இக்கூட்டத்திற்கு பணாகொடை பகுதியில் அமைந்திருந்த மேற்குக் கட்டளைப்பிரிவின் தளபதியான பிரிகேடியர் சிறில் ரணதுங்கவையும் டெனிஸ் பெரேரா அழைத்துச் சென்றார். அவர்களைப் பார்த்து ஜெயவர்தன பின்வருமாறு கூறினார், "இதனை இப்படியே அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது, ஆனால் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார். 

பொலீஸ் அதிபரும், இராணுவத் தளபதிகளும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை மேலும் இறுக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனவிடம் கேட்டுக்கொண்டார்கள். புலிகளைத் தடை செய்ய அமுல்ப்படுத்தப்பட்ட விசேட சட்டம் அவர்களை அடக்கப் போதுமானதல்ல என்று அவர்கள் வாதிட்டனர். இதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட ஜெயவர்த்தன, தனது செயலாளரான மனிக்டிவெலவை அழைத்து சட்டமா அதிபரை உடனடியாக தொடர்புகொண்டு பொலீஸாருக்கும் இராணுவத்திற்கும் தேவையான சட்டத்தினை உடனடியாக வரையும்படி உத்தரவிட்டார். புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைக்கு பிரிகேடியர் சிறில் ரணதுங்கவை பொறுப்பாக நியமிக்குமாறு இராணுவத் தளபதி ஜெயவர்த்தனவிடம் சிபாரிசு செய்தார்.

General Cyril Ranatunga.jpg

சிறில் ரணதுங்க

1979 ஆம் ஆண்டு தை மாதம், போராளிகளைத் தேடிக் கைதுசெய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக சிறில் ரணதுங்க ஜெயவர்த்தனவினால் நியமிக்கப்பட்டார். அவரது முதற்பணி, தனது நடவடிக்கைகளுக்கு உதவியாக யாழ்ப்பாணத்தில் இராணுவ உளவுத்துறையின் அமைப்பொன்றினை உருவாக்குவதாக இருந்தது. இப்பணிக்கு அவர் கப்டன் சரத் முனசிங்கவை பொறுப்பாக அமர்த்தினார். பலாலி இராணுவப்படைத் தளத்தில் சரத் முனசிங்க தனது உளவுப் பிரிவை ஆரம்பித்ததுடன் யாழ்ப்பாணத்தில் பொலீஸாருக்கும் இராணுவத்தினருக்கும் பலவீனமான பகுதிகள் என்று கண்டறியப்பட்ட வல்வெட்டித்துறை உட்பட பல பகுதிகளின் வரைபடங்களை அவர் தயாரித்தார். யாழ்ப்பாண இராணுவத் தளபதியாக சிறில் ரணதுங்க 1979 ஆம் ஆண்டு மாசி மாதம் நியமிக்கப்பட்டார்.

 தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கெதிராக தனது இராணுவத்தைத் தீவிரமாகப் பலப்படுத்திவந்த அதேவேளை, தனது அரசியல் விளையாட்டான போராளிகளுக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான விரிசலை தொடர்ந்தும் அதிகரிக்கும் காரியத்திலும் ஜெயவர்த்தன ஈடுபட்டு வந்தார். மாவட்ட அமைச்சர் பதவிகளைக் காட்டி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனது வலைக்குள் வீழ்த்திவிடலாம் என்று ஜே ஆர் போட்ட திட்டம் அவ்வளவாகப் பலனளிக்கவில்லை என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். இளைஞர்களிடமிருந்து தமது செயற்பாடுகளுக்கு அதிகரித்துவந்த எதிர்ப்பினையடுத்து ஜே ஆர் இன் மாவட்ட சபை அமைச்சர்ப் பதவிகளுக்கான தமது விருப்பத்தினை முன்னணியினரால் உறுதிபடக் கூற முடியவில்லை. ஆகவே, ஆவணி 2 ஆம் திகதி தொண்டமானுடன் பேசிய ஜெயவர்த்தனா, உத்தேச மாவட்ட சபை அமைச்சரவையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு மூன்று அமைச்சுப் பதவிகளை தான் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.   

"நான் அமிர்தலிங்கத்திடம் எனது மாவட்டசபை அமைச்சர்கள் திட்டம் பற்றிக் கூறியிருந்தேன். அவர் இதுகுறித்து உங்களிடம் ஏதாவது பேசினாரா?" என்று தொண்டைமானைப் பார்த்து அப்பாவியாகக் கேட்டார் ஜெவர்த்தன.

 மறுநாள் அமிர்தலிங்கத்தைச் சந்தித்த தொண்டைமான் இதுகுறித்துக் கேட்டார். அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "நாம் ஜெயவர்த்தனவின் சலுகையினைப் பற்றிச் சிந்தித்து வருகிறோம், ஆனால் இதுவரை எந்த முடிவினையும் எடுக்கவில்லை" என்று கூறினார். அமிர்தலிங்கத்துடன் தொடர்ந்தும் பேசிய தொண்டைமான், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவின் மாவட்ட சபை அமைச்சுப் பதவிகளை ஏற்க முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு மூன்று அமைச்சர்களை வழங்க ஜெயவர்த்தன தயாராக இருப்பதாகக் கூறினார்.

மறுநாளான ஆவணி 4 ஆம் திகதி தொண்டைமானுடன் பேசிய ஜே ஆர், தான் கேட்ட விடயம் குறித்து அமிர்தலிங்கத்துடன் பேசினீர்களா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த தொண்டைமான், ஜே ஆரின் கோரிக்கையினை தான் அமிர்தலிங்கத்திடம் முன்வைத்ததாகவும், அதனை அவர் எற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கும் ஒரு அமைச்சுப்பதவி வழங்கப்படும் என்று தான் கூறியதாகவும் அவர் சொன்னார்.

 இந்தச் சந்தர்ப்பத்தினைப் பாவித்துக்கொண்ட ஜெயவர்த்தன தொண்டைமானைப் பார்த்து, "உங்களுக்கு ஒரு அமைச்சுப்பதவியினைத் தந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மாவட்டசபை அமைச்சரவையில் என்னவிருக்கிறது? ஆகவே அதைவிடுத்து எனது அமைச்சரவையில் இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னை அழைத்தால், நானும் உங்களை அழைக்கிறேன், என்னுடன் இணைந்துகொள்வீர்களா? " என்று மீண்டும் தொண்டைமானிடம் வினவினார் ஜே ஆர். தொண்டைமானும் மறுபேச்சின்றி ஒத்துக்கொண்டார். ஆனால், தனது தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் தன்னுடன் தொடர்ந்தும் வைத்திருக்க ஜே ஆர் அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜெயவர்த்தனாவுக்கு இது மிகெப்பெரிய வெற்றியாக அமைந்தது. தமிழ் இனத்தின் ஒரு பகுதியை அவர் தன்பக்கம் இழுத்துவிட்டிருந்தார். தமிழ் மக்களின் போராட்டத்தினைப் பலவீனப்படுத்தி, குறிப்பிடத்தக்களவு பாதிப்பினை அதற்கு அவர் இதன்மூலம் ஏற்படுத்தினார். 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் தனது வலைக்குள் எப்படியாவது வீழ்த்திவிடவேண்டும் என்று அவர் முயன்று வந்தார். இதனையும் செய்துவிட்டால், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் முன்னால் தான் பக்கச்சார்பற்ற ஒரு அதிபர் என்றும், சிறுபான்மையின மக்களையும் அரவணைத்துச் செல்லும் தலைவர் என்று காட்டிவிடலாம் என்று அவர் எண்ணினார். 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மிகவும் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. அதன் பெருமளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுவிட மிகவும் ஆவலாக இருந்தனர், ஆனால் இளைஞர்கள் இவர்களின் விருப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைக் காட்டி வந்தனர். இறுதியாக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்ப் பீடம் தமக்கு 5 மாவட்ட அமைச்சுப்பதவிகள் தரப்படுமிடத்து ஜே ஆர் இன் கோரிக்கையினை ஏற்றுக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

ஜெயவர்த்தனவுடன் பேசிய அமிர்தலிங்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய வடமாகாண மாவட்ட அமைச்சுப்பொறுப்புக்களை தமக்குத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், ஜே ஆர் பிடிவாதமாக மூன்று மாவட்ட அமைச்சுப்பதவிகளைத்தான் தரமுடியும் என்று மறுக்கவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அவரின் காலை வாரிவிட்டது.

ஐப்பசி 5 ஆம் திகதி ஜெயவர்த்தன 24 மாவட்டங்களுக்கான அமைச்சர்களின் பெயர்களை அறிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட அமைச்சர் பொறுப்பினை காலியாக விட்டிருந்த ஜே ஆர், அது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ஆனால், இதனை முன்னணியினர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடவே குருநாகல் மாவட்ட உறுப்பினரான உக்கு பண்டா விஜேக்கோனை இப்பதவிக்கு ஜே ஆர் நியமித்தார். யாழ்ப்பாண மாவட்ட அமைச்சரான விஜேகோனின் செயலாளராக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் எதிர்ப்பாளாராக இருந்த வைத்திலிங்கம் துரைசாமியை அவர் நியமித்தார். 

இதேவேளை, தனது அடியாளும் பிரபல சிங்கள இனவாதியுமான சிறில் மத்தியூவை தமிழர் ஐக்கிய முன்னணியினருக்கு எதிராகவும், தமிழினத்திற்கெதிராகவும் தொடர்ச்சியான இனவாதப் பிரச்சாரங்களை நடத்தும்படி ஜே ஆர் முடுக்கி விட்டார். தமிழர்களுக்கெதிரான இனவாதப் பேச்சுக்கள், துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் என்று மிகத்தீவிரமாக தமிழருக்கெதிரான விஷமப் பிரச்சாரத்தில் சிறில் மத்தியூ இறங்கியிருந்தார். தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள மக்களை மிகவும் சாதுரியமான வகையில் திருப்பிக்கொண்டிருந்ததுடன், சிங்கள இனவாதத்தினையும் தொடர்ந்தும் தூண்டிக்கொண்டிருந்தார். கைத்தொழில் அமைச்சராகவிருந்த சிறில் மத்தியூ தனது அமைச்சில் பணிபுரிந்த பலரையும் இந்த இனவாதப் பிரச்சாரத்திற்கு முழுமூச்சுடன் ஈடுபடும்படி பணித்திருந்தார். தமிழர்களைப் பேய்கள் என்று விழித்து அவராலும் அவரது உதவியாளர்களாலும் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் அரச அச்சகக் கூட்டுத்தாபானத்தில் அச்சிடப்பட்டு, கைத்தொழில் அமைச்சினூடாக சிங்கள மக்கள் மத்தியில் அரச வெளியீடுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தன.

சிறில் மத்தியுவினால் வெளியிடப்பட்ட முதலாவது இனவாதம் கக்கும் புத்தகம் "சிங்களவர்களே, பெளத்த சமயத்தைக் காத்திட எழுந்திருங்கள்" என்று தலைப்பில் வெளிவந்தது. 1979 ஆம் ஆண்டில் மத்தியுவினால் மேற்கொள்ளப்பட்ட இனவாதப் பிரச்சாரங்களைத் தாங்கிவந்திருந்த அப்புத்தகம், ஈரோஸ் அமைப்பினரால் அமைக்கப்பட்ட மத்திய மாகாணத்தினையும் இணைத்த தமிழீழ வரைபடத்தினையும்  கொண்டிருந்தது. அந்த வரைபடத்தின்படி சிலாபம் வரையிலான வடமேற்குக் கரைகளையும் மத்திய மலைநாட்டின் தமிழர் அதிகமாகச் செறிந்துவாழும் பகுதிகளையும் சேர்த்து தமிழரின் தாயகமான தமிழீழம் என்று அது அடையாளப்படுத்தியிருந்தது.

டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளன் என்கிற வகையில் நான் கைத்தொழில் அமைச்சரான  சிறில் மத்தியூவுடன் அவரது இளைப்பாறும் விடுதிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கு நான் நின்ற நாளில், அவரது அமைச்சகத்தின் அதிகாரிகள் சிறில் மத்தியூவினால் எழுதப்பட்ட முதலாவது புத்தகத்தின் பிரதிகளை கொண்டுவந்து கொடுத்தார்கள். அவர் புத்தளம் சீமேந்துத் தொழிற்சாலைக்கு பரிசோதனை தொடர்பாகச் சென்றிருந்தார். என்னிடம் புத்தகத்தின் ஒரு பிரதியைத் தந்துவிட்டு, "இந்த வரைபடத்தைப் பாருங்கள், இதனை உங்களது நாடென்று நீங்கள் உரிமைகோருவது நியாயமா?" என்று என்னைக் கேட்டார்.

அவர் எழுதிய முதலாவது புத்தகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சிங்களவர்களின் புராதன வாழிடங்கள் என்று கூறியிருந்தார். அப்பகுதிகள் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்ட பகுதிகள் என்றும், சிங்கள மக்களே அங்கு வாழ்ந்துவந்ததாகவும் அவர் எழுதியிருந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கி பி 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை மீது படையெடுத்து, அங்கு வாழ்ந்த சிங்களவர்களை தெற்குநோக்கித் துரத்திவிட்டதாக அவர் மேலும் கூறுகிறார். சரித்திர கால சிங்களச் சின்னங்களை முற்றாக அழித்துவிட்டு தமிழர்கள் இன்று வடக்கையும் கிழக்கையும் தமது நாடென்று அநீதியாக உரிமைகோருவதாக அவர் சாடுகிறார். தான் எழுதிய புத்தகத்தின் பிரதிகளை ஒவ்வொரு பெளத்த விகாரைகளூடாகவும் மக்களுக்கு விநியோகிக்க அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

அவரது இரண்டாவது புத்தகம் தமிழர்களின் கடைகளைப் புறக்கணிக்குமாறு சிங்களவர்களைக் கேட்டிருந்தது. இலங்கையின் பொருளாதாரத்தினை தமிழர்கள் அதன் கழுத்தில் பிடித்து வைத்திருப்பதாக அவர் எழுதியிருந்தார். "சில்லறை வியாபாரமும், மொத்த வியாபாரமும் முற்றிலுமாக தமிழர்களின் கைகளில் சிக்கியிருப்பதாக" அவர் கூறினார். "புறக்கோட்டை சந்தையில் தமிழர் மொத்தவியாபாரத்தின் மீது வைத்திருந்த கட்டுப்பாட்டை சிங்களவர்கள் அழிக்கவேண்டும்" என்று அவர் கேட்டிருந்தார். மேலும், "சிங்களவர்கள், சிங்களவர்களின் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்கவேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்தப் புத்தகமும், துண்டுப்பிரசுரங்களும் சிங்கள வியாபாரிகளூடாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இன்னொரு புத்தகம் மலையக தோட்டத் தொழிலாளர்களை இலக்குவைத்து எழுதப்பட்டிருந்தது. பெளத்த சிங்கள கலாசாரத்திற்கு அச்சுருத்தல் கொடுக்கும் வகையில் இந்திய தமிழ்த் தொழிலாளர்கள் வளர்ந்துவிட்டதாகவும், மலையகமெங்கும் இந்துக் கோயில்களை அவர்கள் கட்டிவருவதாகவும், இதுவே முதன்மையான அச்சுருத்தலாக மாறியிருப்பதாகவும் ஆது கூறியது. சரித்திரப் பழமைவாய்ந்த கண்டி இராச்சியத்திற்குற்பட்ட மலையகத்திலிருந்து பெளத்த மதமும், சிங்களக் கிராம வாழ்க்கையும் இந்தியத் தமிழர்களால் அழிக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியது. இந்தப் புத்தகமும் மலை நாட்டிலுள்ள அனைத்து பெளத்த விகாரைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

நான்காவது புத்தகம் "புலிகள் யார்" என்கிற தலைப்பில் வெளிவந்தது. உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எல்லாத்தமிழர்களையும் புலிகள் என்று நிறுவுவதே இப்புத்தகத்தின் நோக்கம். மகாவம்சக் கதையினை சிங்களவர்களுக்கு மீள நினைவுபடுத்திய இப்புத்தகம் சிறிலங்கா பெளத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே உரியது என்றும், தமிழர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களே என்றும் கூறியது.  தமிழர்கள் ஒன்றில் தமிழ்நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும், அல்லது சிங்கள பெளத்தர்களில் தயவிலேயே இங்கு வாழமுடியும் என்று வாதிட்டது. இப்புத்தகமும் சிங்கள வியாபாரிகள், சமூக அமைப்புக்கள், பெளத்த விகாரைகள் ஊடாக சிங்கள மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டது.

தமிழர்கள் மீது மிகவும் திட்டமிட்ட முறையில் தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக சிங்களவர்களைத் தயார்செய்து வந்த அதேவேளை, சிறில் மத்தியூ தன்பங்கிற்கும் சிங்கள  பெளத்தர்களின் ஆவேசத்தை கட்டியெழுப்ப முயன்றார். சிறிமாவினால் கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழர்களின் எதிர்ப்பினால் பின்வாங்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதி முறையினை மீளவும் தான் கொண்டுவருவேன் என்று அவர் சூளுரைத்தார். தமிழர்களின் அழுத்தத்திற்குப் பயந்தே சிறிமா பல்கலைக்கழக அனுமதி முறையில் மாற்றங்களைச் செய்திருந்தார் என்று சிங்களவர்கள் மத்தியில் இருந்துவந்த கசப்புணர்வை மீளவும் தட்டியெழுப்புவதே அவரது நோக்கமாக இருந்தது. 

ஆவணி 4 ஆம் திகதி, 1977 ஆம் ஆண்டு அரசால் கொண்டுவரப்பட்ட கொள்கைப் பிரகடணத்தை சிங்கள இனவாதிகளும், ஆசிரியர்களும், கல்விமான்களும் கூட்டாக எதிர்க்கத் தொடங்கியிருந்தார்கள். 1972 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட சலுகைகள் இரத்துச் செய்யப்படுவதை அவர்கள் முற்றாக நிராகரித்தார்கள். சிங்களத் தேசிய அமைப்புக்கள் மெரிட் முறையில் பல்கலைக்கழக அனுமதியினை வழங்குவதை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பிரகடணம் செய்தார்கள். மெரிட் முறை மூலம் மீளவும் பெருமளவு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழையும் அபாயம் இருப்பதாக அவர்கள் வாதிட்டார்கள். பொறியியல் மற்றும் மருத்துவ பாடநெறிகளுக்கு உள்வாங்கப்படும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை சிங்கள மாணவர்களைக் காட்டிலும் அதிகமாகிவிடும் என்று அவர்கள் எச்சரித்தார்கள். 1978 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் புதிய மெரிட் முறைக்கு எதிராக பாடசாலைகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக உயர்கல்வி மாணவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை இறுதிநேரத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர்களை அரசால் கைதுசெய்யப்பட்டதனால் இடம்பெறாது போனது.

தன்னை ஒரு சிங்களத் தேசியவாதியாக நிறுவுவதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் மத்தியூ. 1977 ஆம் ஆண்டு மார்கழி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமிழ் பரீட்சையாளர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருவதாக மீண்டும் கூறிய அவர், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவற்றினை மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காண்பிக்கப்போவதாகவும் கூறினார். 

இதற்குப் பதிலளித்த சிவசிதம்பரம், தமிழர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் எனும் மத்தியூவினது குற்றச்சாட்டினை தாம் முற்றாக நிராகரிப்பதாகக் கூறினார். 

தான் கூறியவாறே, மார்கழி 12 ஆம் திகதி தனது கஒத்தொழில் அமைச்சின் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை மத்தியூ கூட்டினார். நான் டெயிலிநியூஸ் பத்திரிகைக்காக அந்த பத்திரிகையாளர் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரசாயணவியல்ப் பேராசிரியர் பி பி ஜி எல் சிறிவர்த்தனவும் இம்மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல்ப் பிரிவில் பரீட்சையெழுதிய இரு தமிழ் மாணவர்களின் விடைத்தாளகளை மத்தியூ பத்திரிக்கையாளர்களுக்குக் காண்பித்து, நுளம்பொன்றின் வாழ்க்கைச் சக்கரம் தொடர்பான கேள்வியொன்றிற்கு ஒதுக்கப்பட்ட புள்ளிகளைக் காட்டிலும் அதிகமான புள்ளிகள் அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். 

மனித நாகரீகத்திற்கு முரணான வகையில் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகள் தமிழ்ப் பரீட்சையாளர்களால் வழங்கப்பட்டுவருவதாக அவர் கூறினார். தமிழ்ப் பரீட்சையாளர்கள் நேர்மையற்று நடப்பதாகவும், இதன் விளைவாக பெருமளவு சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் வாய்ப்பினை இழந்திருக்கிறார்கள் என்றும், இந்தச் சூழ்ச்சி 1968 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருவதாகவும்  அவர் மேலும் கூறினார். 

ஆனால், மாணவர்களின் விடைத்தாள்கள் இரகசியமாக வைக்கப்படும்போதும், சிறில் மத்தியூ அவ்விடைத்தாள்களை எங்கணம் பெற்றார் என்று சில பத்திரிக்கையாளர்கள் அவரைக் கேட்டபோது அவர் பதிலளிக்கது மெளனம் காத்தார். ஆனால், அரச ஆதரவு சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் மத்தியூவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தமது தலைப்புச் செய்தியாக மறுநாள் வெளியிட்டன மகிழ்ந்தன.

தனது பத்திரிக்கையாளர் மாநாட்டினைத் தொடர்ந்து இன்னொரு விஷமத்தனமான துண்டுப்பிரசுரத்தை "ஒரு கொடூரமான சதி" எனும் பெயரில் வெளியிட்டார். அதில் தமிழ் பரீட்சையாளர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகப்படியான புள்ளிகளை வழங்குவதன் மூலம் பெருமளவு தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொடுக்கிறார்கள் என்று புனையப்பட்டிருந்தது.  

இது தமிழத் தேசியத்தின் சதி என்று நிறுவ அவர் மும்முரமாக முயன்றுவந்தார். இதனை பாரிய பிரச்சினையாக உருவாக்கிவிட்ட அவர்,  சிங்கள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனதில் கடுமையான தாக்கத்தினை இந்தச் சதி ஏற்படுத்திவிட்டிருப்பதாக  பிரச்சாரப்படுத்தினார். 

இதன் பின்னர் அரசாங்கம் மாவட்ட ரீதியிலான ஒதுக்கீட்டு முறையினை அறிமுகப்படுத்தியது. இதன்படி 30 வீதமான பல்கலைக்கழக அனுமதிகள் மெரிட் முறை மூலமும், 55 வீதமானவை மாவட்டத்தின் சனத்தொகை அளவின் அடிப்படையிலும், மீதி 15 வீதமானவை பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. 

ஆனால், மாவட்ட ரீதியில் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் முறையினை அறிமுகப்படுத்தவே சிறில் மத்தியூவின் பிரச்சார நாடகத்தினை அரசாங்கம் பாவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைச் செய்ய அரசு நினைத்திருந்தால், தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தது செய்திருக்க முடியும். ஆனால், தமிழ் மக்களின் எண்ணங்களுக்கோ, உணர்வுகளுக்கோ மதிப்பளிக்காத அரசும் சிங்கள ஊடகங்களும் இதனைத் தெரிந்தே செய்துவந்தன. இதுவும் ஒரு முக்கிய காரணம் தமிழர்கள் தாம் அந்நியப்படுத்தப்படுவதாக எண்ணுவதற்கு.  தமிழர்கள் தமிழ்த் தேசியம் நோக்கி நகரத் தொடங்கியதோடு, தமக்குள் ஒற்றுமையின் அவசியத்தையும் உணரத் தலைப்பட்டனர்.

இவை நடப்பதற்கு சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் சூறாவளி அநர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. இதன்போது சிறில்மத்தியூ நடந்துகொண்ட விதமும் தமிழர்கள் தாம் தனித்து வாழவேண்டும் என்கிற எண்ணக்கருவை மேலும் உறுதிப்படுத்தியிருந்தது. பாரிய அலைகளுடன் கூடிய சூறாவளியொன்று கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை கடுமையாகச் சேதப்படுத்திக்கொண்டு பொலன்னறுவை ஊடாகக் கடந்து சென்றிருந்தது. இப்பகுதிகளில் இயங்கிவந்த அரச கூட்டுத்தாபனங்களில் பணிபுரிந்து வந்த சிங்கள் அதிகாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் நிவாரண உதவிகளை திசை திருப்பி பாதிப்படையாத பொலொன்னறுவை உட்பட்ட பல சிங்களப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். சூறாவளியினால் கடுமையான அழிவுகளைச் சந்தித்திருந்த தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அவரச உதவிகள் இதனால் மறுக்கப்பட்டன. சர்வதேசத்திலிருந்து கிடைத்த நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த பாரவூர்திகளை வீதிகளில் தடைகளையிட்டு மறித்த சிங்களக் காடையர்கள், அவற்றினை சிங்களப் பகுதிகளுக்குத் திருப்பிவிட்டனர்.

கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழருக்கு அனுப்பப்பட்ட பொருட்களை அரசும், சிங்களக் காடையர்களும் இணைந்து பாதிக்கப்படாத சிங்களப் பகுதிகளுக்கு அனுப்பியதை அறிந்தபோது வடபகுதித் தமிழர்கள் கொதித்துப் போயினர். ஆகவே, கிழக்கின் தமிழர்களுக்கான நிவாரண உதவிகளை தாமே செய்ய முடிவெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் ஆயுத அமைப்புக்கள் இந்த நிவாரண ஒருங்கிணைப்புப் பணியில் முன்னின்று செயற்பட்டன. ஆயுத அமைப்புக்களில் புலிகளும் ஈரோஸ் அமைப்பும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினைச் செய்திருந்தன. சிறிய குழுக்களாக செயற்பட்ட இந்த அமைப்புக்கள் கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களின் வாழிடங்களைத் திருத்தவும், வாழ்க்கையை மீள ஒருங்கிணைக்கவும் உதவிசெய்தனர். இவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒரு இளைஞரின் பெயர் இன்பம். விஸ்வஜோதி எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் நிவாரண உதவிகளை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திருபியிருந்தவேளை  இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்ட அவரது உடல்  பண்ணைப் பாலத்தின் கீழிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. 1979 ஆம் ஆண்டின் காலப்பகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டை பாரிய கொலைக்களமாக ஜெயவர்த்தனா மாற்றியிருந்தார்.  இதுபற்றிய செய்திகளை பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

சூறாவளி அநர்த்தத்தின்பொழுது சிங்கள அதிகாரிகளும் அரசும் நடந்துகொண்ட விதம் பாராளுமன்றத்திலும், தமிழ்ப் பத்திரிக்கைகளிலும் வெளிவரத் தொடங்கியபோது, சிங்கள அதிகாரிகள் மீதிருந்த நம்பிக்கையினை தமிழர்கள் இழக்கத் தொடங்கினர். 

கிழக்குத் தமிழர்களுக்கென்று இந்தியாவினால் வழங்கப்பட்ட தரம்வாய்ந்த சேலைகள் கொழும்பு தெருவோரக் கடைகளில் மிகவும் குறைந்த விலைக்கு சிங்களவர்களால் விற்கப்பட்டன. இதுபற்றி அரச அதிகாரிகளிடம் வினவியபோது, இந்தியச் சேலைகளை விற்றுப் பெற்ற பணம் அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டதாகக் கூறினர். மேலும், சூறாவளியினால் வீடுகளை இழந்து தங்க இடமின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு சர்வதேசத்தால் அனுப்பப்பட்ட கூடாரங்கள் கொழும்பின் அரச கிட்டங்கிகளில் குவிக்கப்பட்டு பழுதடைந்து போயின. தமிழர்கள் தங்களைத் தாமே இனிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தமிழரிடையே வளர ஆரம்பித்திருந்தது. குறிப்பாகக் கொழும்பில் வாழ்ந்துவந்த தமிழரும் இதனை உணரத் தடலைப்பட்டனர். சூறாவளி நிவாரணச் செயற்பாடுகளில் கொழும்புத் தமிழரும் இணைந்துகொண்டனர்.

ஜெயவர்த்தன அரசானது தனது நடவடிக்கைகளாலும், மாற்றாந்தாய் மனப்பாங்கினாலும் 1978 - 79 காலப்பகுதியில் தமிழ் ஆயுத அமைப்புக்களின் வளர்ச்சிக்கு வழிகோலியிருந்தது. புலிகள் மற்றும் டெலோ அமைப்புகள் மீது ஓரளவுக்குச் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவதிலேயே ஜெயவர்த்தனா தனது கவனத்தைச் செலுத்தி வந்திருந்தார். பிரபாகரன், உமா மகேஸ்வரன், தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோ அன்றுவரை அமிர்தலிங்கம் - சிவசிதம்பரம் ஆகியோரின் அறிவுரைகளைக் கேட்டும் மதித்தும் வந்திருந்தனர். 

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கொண்டு தமிழ் ஆயுத அமைப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, முன்னணியினருக்கும் ஆயுத அமைப்புக்களுக்கும் இடையே பகைமையினை வளர்த்து அதனை விரிவாக்குவதிலேயே ஜெயவர்த்தன தனது முழுக்கவனத்தையும் செலுத்தியிருந்தார். 

ஜெயவர்த்தனா வன்முறையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆதரவாளர்களுக்கு தான் வழங்கிய அதே தண்டனையினைத்தான் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு அவர் வழங்க விரும்பினார். அது அரச பயங்கரவாதம் !

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் வளரத் தொடங்கிய முறுகல் நிலை

 இனவாதப் பிரச்சாரம்

 

தின்னைவேலி வங்கிக்கொள்ளை ஜெயவர்த்தனவை ஆத்திரப்படுத்தி விட்டிருந்ததுடன் பொலீஸாரையும், இராணுவத்தினரையும் வெகுவாக அலைக்கழித்திருந்தது. ஜெயவர்த்தனவும் அவரது ஆதரவாளர்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தமிழருக்கும் எதிரான விஷமப் பிரச்சாரத்தை முடுக்கிவிட, இராணுவமும் பொலீஸாரும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தனர். இதற்குப் பதில் வழங்க விரும்பிய தமிழ்ப் போராளிகளும் செயல்களில் இறங்கத் தொடங்கினர், குறிப்பாக டெலோ அமைப்பு செயலில் இறங்கியது. 1979 ஆம் முதற்பாதியில் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான முறுகல் நிலை அதிகரிக்கத் தொடங்கியிருந்ததுடன் இரண்டாம் பகுதியில் நடைபெறப்போகும் படுகொலைகளுக்கான களத்தையும் அது திறந்துவிட்டிருந்தது. 

தின்னைவேலி வங்கிக்கொள்ளை நடந்து ஏறத்தாள 10 மணிநேரத்திற்குப் பின்னர், 1978 ஆம் ஆண்டு மார்கழி 5 ஆம் திகதி இராணுவமும் பொலீஸும் தமிழர் மீதான தாக்குதல்களில் இறங்கினர். யாழ் நகரில் அமைந்திருந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு சாதாரண உடையில் சென்ற இரு சிங்களப் பொலீஸார் மது அருந்தியபின்னர் அந்த மதுபான விற்பனை நிலையத்திற்கு அருகிலிருந்த வியாபார நிலையம் ஒன்றிற்குள் புகுந்து அதனை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த பணத்தையும் ஏனைய பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றனர். அதே இரவு பலாலி நிலையத்தில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் அருகிலிருந்த வியாபார நிலையம் ஒன்றிற்குச் சென்று இலவசமாக சிகரெட்டுக்களைக் கேட்க, உரிமையாளர் தரமறுத்துவிட்டார். எதுவும் கூறாது அங்கிருந்து அகன்ற ராணுவத்தினர் சில நேரத்தின்பின்னர் தமது சகாக்களை முகாமிலிருந்து ஆயுதங்களுடன் அழைத்துவந்து அக்கடையினை அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றனர்.

 மார்கழி 14 ஆம் திகதி இரவு படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மக்களை வழிமறித்து இராணுவத்தினர் தாக்கியதுடன் 18 ஆம் திகதி இரவு வல்வெட்டித்துறையினுள் நுழைந்து மக்களின் வீடுகளையும் கடைகளையும் தாக்கிச் சேதப்படுத்தினர். 

தமிழர்கள் அநியாயமாக இராணுவத்தினராலும் பொலீஸாராலும் தாக்கப்படுவது குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அமிர்தலிங்கம், இத்தாக்குதல்கள் குறித்து விசாரணை நடக்கவேண்டும் என்று கோரினார். இதற்குப் பதிலளித்த சிங்கள இனவாதியான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூ, இராணுவமும் பொலீஸாரும் நடத்திவரும் தாக்குதல்களை நியாயப்படுத்தியதோடு, தமிழ் ஆயுதக் குழுக்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரே பாதுகாத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். "நீங்கள் பயங்கரவாதிகளையும், கொலைகாரர்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்து அவர் கர்ஜித்தார்.

அமிர்தலிங்கம் சிறில் மத்தியூவின் குற்றச்சாட்டினை மறுத்தார். மத்தியூவின் குற்றச்சாட்டுக்களை மீளப்பெறவேண்டும் என்று அவர் கோரினார். மத்தியு தனது கருத்துக்களை மீளப்பெற பிடிவாதமாக மறுக்க, அதனை ஆதரித்துப் பேசிய சபாநாயகர் , "மத்தியூ தனிப்பட்ட ரீதியில் எவரையும் குறிப்பிடவில்லை, பொதுவாக ஒரு அரசியல் கட்சியினை குறித்தே பேசியதனால், அவர் கூறியதை மீளப்பெறவேண்டியதில்லை" என்று கூறினார். ஆனால், தொடர்ந்தும் அமிர்தலிங்கம் இதனை எதிர்த்துக்கொண்டிருந்துவிட்டு இறுதியில் தனது கட்சியினருடன் வெளிநடப்புச் செய்தார். 

1979 ஆம் ஆண்டு பங்குனியில் அரசாங்கத்திற்கும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் இடையில் இன்னொரு முறுகல் உருவாகியது. அந்த மாதத்தில் அமிர்தலிங்கமும், அவரது துணைவியார் மங்கையற்கரசியும் இந்தியாவுக்குச் சென்றிருந்தனர். ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக்கழகத்தினர் சென்னையில் அவர்களுக்கு மகத்தான பொதுமக்கள் வரவேற்பொன்றினை அளித்திருந்தனர். அங்குபேசிய அமிர்தலிங்கம் சிங்கள இராணுவத்தினரும் பொலீசாரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்களை அழித்துவிட்டதாகவும், பல தமிழர்களைக் கொன்றிருப்பதாகவும் கூறினார். "பாதுகாப்பாக வாழ்வதென்பது தமிழர்களைப்பொறுத்தவரையில் மிகவும் சவாலான விடயமாக மாறியிருக்கிறது. எமக்கான ஒரே தெரிவு தனியான நாடு மட்டுமே" என்று அவர் அங்கு கூடிநின்ற மக்களைப் பார்த்துக் கூறினார்.

 மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அங்கு பேசிய மங்கையற்கரசி, 1977 ஆம் ஆண்டு தமிழர்மீது நடத்தப்பட்ட அரச ஆதரவு வன்முறைகளில் பெருமளவு தமிழ்ப்பெண்கள் சிங்கள இராணுவத்தாலும் சாதாரணச் சிங்களவர்களாலும் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டதாகவும், தமிழ்ப்பெண்கள் இரவு வேளைகளில் வீதிகளில் நடமாடுவது என்பது இனிமேல் முடியாது என்றும் கூறினார். 

பங்குனி மாதம் 21 ஆம் திகதி அமிர்தலிங்கம் சென்னை பத்திரிக்கையாளர் அமைப்பினரின் கூட்டத்தில் பேசும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பென்பது உண்மையில் இல்லையென்றும் தமிழினத்திற்கெதிரான பலரின் கொலைகளுக்காக புலிகளால் வெளியிடப்பட்ட உரிமைகோரலே பொலீஸாரால் வேண்டுமென்றே கட்டவிழ்த்துவிடப்பட்ட சதிதான் என்று பேசினார். தமிழர்கள் சுய கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான ஒரே வழி அவர்கள் தமக்கான தனிநாட்டினை உருவாக்குவது மட்டும் தான் என்றும் கூறினார். தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவார்களா என்று அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.  அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "இல்லை நாம் ஜனநாயக வழியிலேயே எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வோம்" என்று கூறினார். உங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான கால அட்டவணை ஒன்றினை வைத்திருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது,"எமக்கான தனிநாட்டினை இன்னும் பத்து வருடங்களில் உருவாக்குவோம்" என்று அவர் பதிலளித்தார் (அதாவது 1989 ஆம் ஆண்டில்).

 See the source image

இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தியுடன் அமிர்தலிங்கம்

 

அதன் பின்னர் தலைநகர் தில்லிக்குப் பயணம் செய்த அமிர்தலிங்கம் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாயையும் இந்திரா காந்தியையும் சந்தித்தார். பிரதமர் தேசாய் தமிழர்களின் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை, அதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லை என்று தலையிடாமை எனும் தனது முடிவில் தீவிரமாக இருந்தார். இந்த முடிவினால் சற்று அதிருப்தியடைந்த அமிர்தலிங்கம், இந்திரா காந்தியிடம் இதுபற்றிப் பேசினார். அதற்குப் பதிலளித்த இந்திரா பின்வருமாறு கூறினார், " தேசாயும் ஜெயவர்த்தனாவும் இரு கிழட்டு நரிகள், அவர்கள் குறித்து நீங்கள் மிக்க அவதானமாக இருக்கவேண்டும்".

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆரின் வன்முறை மீதான விருப்பு

ஜெயவர்த்தனா தான் நீதிக்கு எதிரானவர், பழிவாங்கும் குணம் கொண்டவர், அரசியல் தில்லுமுள்ளுகளில் கைதேர்ந்தவர், வன்முறையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் எனும் பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார். 2003 ஆம் ஆண்டு இலங்கையில் போரும் சமாதானமும் எனும் தனது இரண்டாவது நூலை எழுதிய டி. டி. எஸ் . திசாநாயக்கா என்பவர் ஜெயவர்த்தனாவின் இந்த மனோநிலையின் உறுதிப்படுத்த இரு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த இரு நிகழ்வுகளும் 1944 இல் சிங்களத்தினை ஆட்சிமொழியாக்கும் தனது தீர்மானத்தினைப் பாராளுமன்றில் ஜெயவர்த்தன முன்வைத்த காலத்தில் இடம்பெற்றவை. இந்த பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்தின்பொழுது ஜி ஜி பொன்னம்பலம் பின்வருமாறு கூறினார்.

G.G.-Ponnambalam-lt-and-S.J.V.-Chelvanayakam-rt-circa-1947-130x300.jpg

 ஜி ஜி பொன்னம்பலமும் தந்தை செல்வாவும்

"மிகுந்த  மரியாதைக்குரிய உங்களின் தகப்பனாரான நீதிபதி . டபிள்யு ஜெயவர்த்தனவின் முன்னால் வழக்காடுவது பெரும் பாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால், நீங்களோ நீதிக்கு நேர்முரணானவர்" என்று கூறியபோது சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பாரிய செற்போர் உருவாகியது. நிலைமையினைக் கட்டுப்படுத்த முடியாமல்த் திணறிய சபாநாயகர் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். தனது புத்தகத்தை எழுதும்போது ஜெயவர்த்தனவே இந்தத் தகவலை தன்னிடம் கூறியதாக டிசாநாயக்க கூறுகிறார். அவர் இலங்கையில் போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் இரண்டாவது பகுதியினை "இலங்கையின் ஜே ஆர் ஜெயவர்த்தன" எனும் பெயரில் எழுதியிருந்தார். 

இரண்டாவது சம்பவமும் ஜே ஆரின் 1944 தீர்மானத்தின்போதே இடம்பெற்றது. 1972 இல் "இலங்கையின் டட்லி சேனநாயக்க" எனும் புத்தகத்தை எழுதும்போது டிசாநாயக்க இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஜே ஆர் தனது சிங்களத்தினை அரசாட்சி மொழியாக உருவாக்கக் கோரும் தீர்மானத்தினை முன்வைத்தபோது அவையின் தலைவராக இருந்த டட்லி கொதித்துப் போயிருந்தாராம். தனது மகனை ஜே ஆரிடம் அனுப்பிய டட்லி, "நீங்கள் தீர்மானத்தை மேலும் முன்கொண்டு சென்றால் உங்களின் கழுத்தை முறிப்பேன்" என்று எச்சரித்திருக்கிறார்.

 உள்ளூர் அலுவல்கள் அமைச்சராக இருந்த தேவநாயகம் ஒருமுறை திசாநாயக்கவுடன் பேசும்போது ஜே ஆரின் வன்முறை மீதான வெறுப்பு மற்று அரசியல் தில்லுமுள்ளுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவில் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்னர் விவாதிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார். ஜே ஆரின் இந்த மூர்க்கத்தனமான நிலைப்பாடு தேர்தலின்பொழுது தமது கட்சிக்கு பாதகமாக அமையலாம் என்று பல மூத்த கட்சி உறுப்பினர்கள் அச்சமடைந்திருந்தனர் என்றும் அவர் கூறினார். எஸ்மண்ட் விக்கிரமசிங்க எனும் உறுப்பினர் இதற்குப் பரிகாரமாக யோசனை ஒன்றினை முன்வைத்ததாக தேவநாயகம் குறிப்பிட்டிருந்தார். அதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மதம் கூறும் விதிகளின்படி நடத்தல், இன மத பேதமற்ற ஆட்சியினை உருவாக்குதல் ஆகிய விடயங்களைப் புகுத்தலாம் என்ற ஆலோசனை . "இப்படித்தான் வன்முறையாளரான ஜே ஆர் ஒரு தர்மிஸ்ட்டராக மாறினார்" என்று கூறிச் சிரித்தாராம் தேவநாயகம். ஆனால், ஜே ஆர் இன் பழிவாங்கும் முகம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின் மீண்டும் வெளித்தெரிய ஆரம்பித்தது. சிறிமாவின் ஆதரவாளர்களின்மீது ஜே ஆர் தனது குண்டர்களை ஏவித் தாக்குதல் நடத்தத் தொடங்கினார். அவரின் வன்முறை மீதான விருப்பு அடுத்த மாதத்திலும் தொடர்ந்தது. 1979 ஆம் ஆண்டு ஆவணியில் பொலீஸார் மீது டெலோ அமைப்பினர் தாக்குதல்களை நடத்தியதையடுத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மீது தனது விஷமத்தனமான பிரச்சாரத்தினை முடுக்கி விட்ட ஜே ஆர், தனது சட்டவல்லுனர்களின் மூலம் மிகவும் கொடூரமான பயங்கவாதத் தடைச் சட்டத்தினை உருவாக்கியதுடன் இராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் அளவிற்கதிகமான அதிகாரத்தை வழங்கி தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வினை இராணுவ ரீதியில் வழங்கத் தயரானார்.

கொலைக்களத்திற்கான ஆயத்தங்களைச் செய்தல்

அமிர்தலிங்கத்தின் மீதான தனது விஷமத்தனமான பிரச்சாரங்களின் மூலம்  கொடூரமான சட்டங்களை உருவாக்கி, இராணுவத்தினரின் கடுமையான அடக்குமுறைகளை ஜே ஆர் மிகவும் திட்டமிட்ட முறையில் வகுக்கத் தொடங்கினார். அமிர்தலிங்கம் சென்னையில் ஆற்றிய உரையினை தனது பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக ஜே ஆர் பாவித்தார். பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சிறில் மத்தியூ புலிகள் இயக்கம் என்று அமைப்பு இருப்பதை மறுப்பதன் மூலம் அமிர்தலிங்கம் புலிகளைப் பாதுகாக்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டினார். இந்தக் காலத்தில் அமிர்தலிங்கத்தின் பேச்சுக்களைப் பற்றி பாராளுமன்றம் தொடர்ச்சியாக விவாதித்து வந்தது. 

தன்மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த பிரச்சாரங்களினால் அமிர்தலிங்கம் தற்காப்பு நிலையினை எடுக்கவேண்டியதாயிற்று. தனது பேச்சுக்களை விளக்கப்படுத்தி அமிர்தலிங்கம் ஒரு விரிவான அறிக்கையினை வெளியிட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தமிழீழத்திற்கான ஆணையினை முன்வைத்தே தேர்தலில் தமிழ் மக்களால் தேர்வுசெய்யப்பட்டதாக அவர் கூறினார். ஆகவே தனது பேச்சுக்களில் இதனையே தான் வலியுறுத்திப் பேசிவந்ததாக அவர் கூறினார். ஆனால், அறிக்கையின் முடிவில் அவர்  இறங்கிப் பேசவேண்டியதாயிற்று,

 "ஆனாலும், அரசாங்கம் மாற்றீடான தீர்வொன்றினை முன்வைக்குமிடத்து அதனைப் பரிசீலிக்கவும் நாம் தயாராகவே இருக்கிறோம்" என்று அவர் முடித்திருந்தார். 

அரசாங்கத்தின் பேச்சாளரான அத்துலத் முதலியிடம் அரசாங்கம் தனிநாட்டிற்கான மாற்றீட்டுத் தீர்வை முன்வைக்குமா என்று நான் வினவியபோது, லலித் பின்வருமாறு பதிலளித்தார், 

"தனிநாட்டிற்கான ஒரே மாற்றுத்தீர்வு இராணுவ ஆட்சி மட்டுமே. அதனைத்தான் நாம் இப்போது செய்து
கொண்டிருக்கிறோம்"

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.