கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted March 10 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 10 மக்கள் வாழிடங்களிடையே அமைக்கப்பட்ட சித்திரவதைகளின் தலைமைக் காரியாலயம் வீரதுங்கவின் பயங்கரவாதத்தின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டு முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டது. தனக்கு மிகவும் நெருக்கமான, தமிழர் எதிர்ப்பு மனோபாவம் கொண்ட சில அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு, யாழ்நகரின் இதயப்பகுதிகளில் ஒன்றான சுண்டுக்குளி பழைய பூங்காவில் தனது பாதுகாப்புப் படைகளின் தலைமைப் பீடத்தை அமைத்தார் "காளைமாடு" வீரதுங்க. 1979 ஆம் ஆண்டின் ஆடி மாதம் , மூன்றாம் வாரத்தில் இந்தச் சித்திரவதைக் கூடம் வீரதுங்கவினால் அமைக்கப்பட்டது. இப்பகுதியின் பாதுகாப்புக் கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்டதுடன், இப்பகுதியில் வசிப்பவர்களுக்கென்று அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இப்பகுதிக்குள் வந்துசெல்வோர் அவதானிக்கப்பட்டு வந்ததுடன் அனுமதியும் கடுப்படுத்தப்பட்டது. ஒருகாலத்தில் அரசாங்கத்தின் இராணுவப் பேச்சாளராகக் கடமையாற்றிய முனசிங்கவுடன் செய்தியாளன் என்கிற வகையில் நான் அவ்வப்போது சில விடயங்கள் குறித்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பலாலியில் இயங்கிவந்த இராணுவப் புலநாய்வுத்துறையின் பொறுப்பாளராக பணிபுரிந்த முனசிங்க இந்த விசேட அடையாள அட்டை குறித்துக் கூறுகையில், "மூன்று விதமான அடையாள அட்டைகள் அப்பகுதியில் வசித்துவந்த மக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டன. சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் இவை விநியோகிக்கப்பட்டன. சிவப்பு நிற அடையாள அட்டைகளை வைத்திருப்போர் சுதந்திரமாக இப்பகுதிக்குள் வந்து செல்ல முடியும். இவர்கள் ராணுவ தலைமைப் பீடத்திற்குள்ளும், பழைய பூங்கா சித்திரவதைக் கூடத்திற்குள்ளும் சுதந்திரமாகச் சென்றுவர முடியும். வெள்ளை அடையாள அட்டை வைத்திருப்போர், தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இருக்கும் இரண்டாம் நிலை காவலரண் வரையே செல்ல முடியும். இந்தத் தலைமைக் காரியாலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பிரித்தானிய அரச பிரதிநிதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமாக விளங்கியிருந்தது" என்று கூறினார்.. பழைய பூங்காவின் அருகில் அமைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியனின் சிலை முனசிங்க வடமாகாணத்திற்கான இராணுவ அதிகாரிகளின் உதவித் தலைவராகவும், இராணுவத்தின் பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய மூத்த தளபதி. உளவுப்பிரிவிற்கு பச்சை அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. இதுபற்றி முனசிங்க தனது புத்தகம் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார், ஒரு ராணுவ வீரனின் பார்வையிலிருந்து : "எனக்கு பச்சை அடையாள அட்டையொன்று வழங்கப்பட்டிருந்தது. அதனைப் பாவித்து, பிரதான வாயிலின் உட்பக்கமாக அமைந்திருந்த ராணுவக் காவலரண் வரையே செல்லமுடியும். இதற்கப்பால் செல்லவேண்டுமென்றால் நியமனம் ஒன்றை முன்பதிவு செய்தபின்னரே செல்ல முடியும்". "1979 இல், இராணுவத் தலைமையகம் இப்பகுதியில் அமைக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்களை கைதுசெய்து விசாரணைக்கு இழுத்துவந்தோம். அவர்கள் அனைவருமே விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு விடயம் மட்டும் எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்திருந்தது, யாழ்ப்பாணத்து மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்துவந்தார்கள். பழைய பூங்காவில் நடக்கும் கொடூரமான சித்திரவதைகள் பற்றி அவர்கள் தமக்குள் பேசிவந்தார்கள். இரவானதும் இப்பகுதியின் தெருக்கள் வெறிச்சோடி விட்டிருக்கும்". ஆனால், முனசிங்கவிற்கு அங்கு நடந்தவைபற்றி நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடிய அந்தக் கொடூரமான மாதங்களான ஆடி முதல் மார்கழி வரையான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணத்திலேயே இருந்தார். வட மாகாண ஒட்டுமொத்தத் தளபதி வீரதுங்க மற்றும் வடமாகாண ராணுவத் தளபதி ரணதுங்க ஆகியோரின் கீழ் முனசிங்க அக்காலப்பகுதியில் செயற்பட்டு வந்தார். மேலும், இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவத்தின் விசேட பிரிவொன்றும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட விசேட ராணுவப் பிரிவை தனது திட்டத்திற்கு முழுமையாக வீரதுங்க பயன்படுத்திக்கொண்டார். கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டதுடன், இராணுவத்தினர் மிகக்கொடூரமாக போராளிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இந்தத் தேடியழிக்கும் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் கொல்லப்பட்டு, யாழ்ப்பாணத்து வீதிகள் வீசியெறியப்பட்டனர். இந்த சித்திரவதை முன்னெடுப்புக்கள் போராளிகள் மீது கடுமையான அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தன. 1979 ஆம் ஆண்டி முதல் அரைப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் குட்டிமணியும், தங்கத்துரையுமே என்று அரசு நம்பியதால், அவர்களே வீரதுங்கவின் பிரதான இலக்காக இருந்தார்கள் என்று முனசிங்க கூறுகிறார். மார்கழி 5 ஆம் திகதி இடம்பெற்ற தின்னைவேலி வங்கிக் கொள்ளையின் பின்னர் பிரபாகரன் சற்று அமைதியாகிவிட்டிருந்தார். தனது கெரில்லா அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பும் பணியில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். வவுனியா பூந்த்தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது பயிற்சி முகாமில் தங்கியிருந்த பிரபாகரன் ஆயுதங்களைச் சேகரிப்பதிலும் தனது போராளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். அதைவிடவும் அவருக்கு மேலும் சில பிரச்சினைகள் இருந்தன. முதலாவது ஈரோஸ் அமைப்புடனான பிணக்கு. சங்கர் ராஜீ நான் முன்னர் இத்தொடரில் குறிப்பிட்டது போல, ஈரோஸ் அமைப்பு லெபனானில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்துடன் பயிற்சி தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தது. ஆகவே, ஆக்காலப் பகுதியில் ,செயற்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகியவையும் இந்தப் பயிற்சிகள் மூலம் பலன் பெறவேண்டும் என்று ஈரோஸ் அமைப்பு விரும்பியிருந்தது. வன்னியில் தங்கியிருந்த அருளர் மற்று சங்கர் ராஜீ ஆகிய ஈரோஸ் முக்கியஸ்த்தர்கள் பிரபாகரனிடமும் உமா மகேஸ்வரனிடமும் லெபனான் பயிற்சிகள் குறித்துப் பேசி அவர்களின் விருப்பத்தினையும் பெற்றிருந்தனர். புலிகளின் மத்திய குழு இதுபற்றிக் கலந்தாலோசித்து, முதலாவதாக லெபனான் பயிற்சிக்குச் செல்வதற்கு உமா மகேஸ்வரனையும், விஜேந்திராவையும் தெரிவு செய்தது. இவர்களுக்கான பயிற்சிகள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் மேலும் சில போராளிகளை அனுப்பி வைக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். மேலும், இந்தப் பயிற்சிகள் மூலம் ஆயுதங்களைத் தருவிப்பதற்கான வழியொன்றும் தமக்குக் கிடைக்கும் என்று பிரபாகரன் எண்ணினார். ஆகவே, லெபனான் பயிற்சிக்காக ஈரோஸ் அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார். சுமார் மூன்று மாதகால லெபனான் பயிற்சியை முடித்துக்கொண்டு உமா மகேஸ்வரனும், விஜேந்திராவும் நாடு திரும்பியிருந்தார்கள். அங்கு வழங்கப்பட்ட பயிற்சி அவர்களுக்குத் திருப்தியைத் தந்திருக்கவில்லை. லெபனானில் நடைபெற்ற சண்டைகளில் அவர்கள் பங்கேற்க விடப்படவில்லை என்பதுடன், புதிய ரக ஆயுதங்களைக் கையாளவும் அனுமதிக்கப்படவில்லை. "பெரும்பாலான நேரங்களில் நாம் முகாமில் தூங்கினோம், பெரிதாக எதனையும் கற்றுக்கொள்ளவில்லை" என்று அவர்கள் கூறினார்கள். இதனை மத்தியகுழுவில் உமாமகேஸ்வரன் முறைப்பாடாக முன்வைத்தார். அவர்கள் எந்த ஆயுதங்களையும் தம்முடன் கொண்டுவந்திருக்கவுமில்லை. பணவிடயத்தில் மிகவும் கண்டிப்பானவராக விளங்கிய பிரபாகரன், ஈறோஸ் அமைப்பினரை அழைத்து, பயிற்சி ஒப்பந்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்ததுடன் மீதிப்பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறும் கேட்டார். ஈரோஸ் அமைப்பு அப்பணத்தை முற்றாகச் செலவழித்திருந்ததுடன், அதனை மீளச் செலுத்தும் முகாந்திரங்களும் அதற்கு இருக்கவில்லை. அனால், பிரபாகரன் விடாப்பிடியாக மீதிப்பணத்தினைச் செலுத்துமாறு அழுத்தம் கொடுக்கவே, அவருக்கும் ஈரோஸ் அமைப்பின் சங்கர் ராஜீக்கும் இடையே பிணக்கொன்று உருவாகியது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சங்கர் ராஜீ ஏமாற்றிவிட்டதாக பிரபாகரன் கருதியதால், புலிகளின் மத்திய குழுவின் முன்னால் வந்து ஈரோஸ் பக்க நியாயத்தைக் கூறவேண்டும் என்று சங்கர் ராஜீயை அவர் கேட்டார். ஆனால், சங்கர் ராஜி இதனை முற்றாக நிராகரித்து விட்டார். ராஜி இதுதொடர்பாக என்னிடம் பின்னர் பேசும்போது, "பிரபாகரன் இந்தப் பிரச்சினையை அமிர்தலிங்கத்திடம் கொண்டுபோனார். அமிர்தலிங்கம் ஒரு இணக்கப்பட்டை ஏற்படுத்தினார். நான் 285 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் பணத்தை சிவசிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தேன்" என்று கூறினார். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted March 12 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 12 புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுக்காக பணம் சேர்க்கிறதென்றும், சிவசிதம்பரத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு வெளிநாடுகளிலிருந்து தமிழ் மக்கள் பணம் அனுப்பிவருகிறார்கள் என்றும் சங்கர் ராஜி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைத்த பணத்தைக் காட்டி அரசாங்கம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தது. ஈழம் எனும் தனிநாட்டினை உருவாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு உதவும்படி புலம்பெயர் தமிழ் மக்களிடம் அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் இணைந்து எழுதிய கடிதம் ஒன்றும் அரசாங்கத்திடம் சிக்கியிருந்தது. இக்கடிதத்தினையும் வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கெதிரான பிரச்சாரத்தினை அரசாங்கம் முடுக்கிவிட்டிருந்தது. 1979 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி எழுதப்பட்ட இக்கடிதம் புலம்பெயர் தமிழர்களை நோக்கி பின்வரும் வேண்டுகோளினை முன்வைத்திருந்தது, அன்பான நண்பர்களே, எமது விடுதலைப் போராட்டம் முக்கியமான தருணம் ஒன்றை அடைந்திருக்கும் வேளையில் தாயகத்திலும், சர்வதேச நாடுகளின் தலைநகரங்களிலும் வாழ்ந்துவரும் ஒவ்வொரு தமிழரும் தமது பங்கினை செய்யவேண்டிய தேவை வந்திருக்கிறது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஈழத்தமிழர்கள் இதுவரை செய்துவந்த முயற்சிகள் போல், இன்னும் பல விடயங்களில் அவர்கள் செயற்பட முடியும் என்றும், எமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சுதந்திரத்திற்காகவும், எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் அரச செயற்பாடுகளில் திட்டமிட்ட வகையில் புகுத்தப்பட்டிருக்கும் புறக்கணிப்பிற்கு எதிராகவும் சர்வதேச அளவில் தொடர்ந்தும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். லண்டனில் இருந்து இயங்கிவரும் எமது சகோதரகள் இதுவரை காலமும் எடுத்துவந்த தம்மாலான முயற்சிகளுக்கு நாம் நன்றிகூறும் அதேவேளை, எமது புலம்பெயர் தமிழர் சமூகம் குழுக்களாகப் பிரிந்து இயங்குவதையும், தனிமனிதர்களுக்கிடையிலான பிணக்குகளால் பிரிந்து நின்று செயற்படுவதையும் பார்த்துக் கவலையடைகிறோம். எமக்கு முன்னால் நடந்த சரித்திரம் எமக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. நாம் எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும், முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளும் எமக்குள் ஒற்றுமையின்மையால் எமக்குக் கிடைக்கவேண்டிய சுதந்திரம் கைநழுவிப் போவதற்குக் காரணமாக அமைந்தது என்பதையும் பார்த்திருக்கிறோம். நாம் இன்று தாயகத்திலும் இதனைக் காண்கிறோம். பலமான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இன்று இந்த ஐக்கியத்தின் அவசியத்தை வேண்டி நிற்கிறது. இந்த வேண்டுகோளினை புலம்பெயர்ந்து வாழும் எமது சகோதர்களிடம் மிகவும் தாழ்மையாக முன்வைக்கிறோம். சரியான திசையில் முன்னெடுத்து வைக்கப்பட்ட எமது முயற்சிகளில் ஒன்றாக ஈழ விடுதலை அமைப்பு மற்றும் தமிழர் விடுதலைப் பரணி ஆகிய அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து முடிவுகளை எடுப்பதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரூடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முன்வந்திருக்கின்றன. தனிநபர்களாகவும், குழுக்களாகவும் ஈழம் எனும் பொது இலட்சியம் நோக்கிச் செயற்படும் அனைவரையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் சேர்ந்து செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவானது ஜனநாயக ரீதியில் செயற்படும் என்று நாம் நம்புவதுடன், அனைவரும் தமது கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரமும், சுதந்திரமான முறையில் கருத்துக்களை விவாதித்து கருத்தொருமைப்பாட்டிற்கு வரும் வழிமுறைகளையும் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். நாம் பலதரப்பட்ட, கடுமையான கடைமைகளையும் சவால்களையும் எதிர்நோக்கி நிற்கிறோம். எமது இலட்சியமான விடுதலை நோக்கிய பயணம் மிக நீளமானது. அதனை அடைவதற்கு எம்மிடம் இருக்கும் வளங்கள் மிகவும் குறைந்தவை. எம்மிடமிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும், பொன்னான நேரத்தையும் எமக்கிடையே வரும் தனிப்பட்ட பிரச்சினைகளில் செலவழிக்காதிருப்போமாக. எம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, எமது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஊடாக எமது பணிகளை முன்னெடுப்போமாக. இக்கடித்தத்தை கைப்பற்றிக்கொண்ட அரசாங்கம், இதனை வைத்து அமிர்தலிங்கத்தையும், சிவசிதம்பரத்தையும் அச்சுருத்தி அடிபணியவைத்து, மாவட்ட சபைகளுக்கான சட்டவாக்கல் நடவடிக்கைகளுக்கு அவர்களை உடன்பட வைப்பதன் மூலம் சர்வதேசத்தில் தமிழர்களை தனது அரசு அரவணைத்து நடப்பதாக பிரச்சாரப்படுத்தலாம் என்று எண்ணியது. அதேவேளை போராளி அமைப்புக்களுக்குள் , குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் சில உள்முறண்பாடுகள் உருவாவதையும் அரசாங்கம் அறிந்துகொண்டது. யாழ்க்குடாநாட்டில் வீரதுங்கவால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான படுகொலைகளும், சித்திரவதைகளும் போராளி அமைப்புக்கள் மீது கடுமையான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தன. பாதுகாப்பான மறைவிடங்களுக்கான தேடலும், உணவினைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. போராளி அமைப்புக்களுக்கு உற்ற துணையான இருந்த ஆதரவாளர்களும் தற்போது உதவுவதற்கு அஞ்சினர். இவ்வைகையான அழுத்தங்கள் போராளி அமைப்புக்களின் தலைமைப்பீடங்களுக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்கத் தொடங்கின. ஆவணியில் இடம்பெற்ற புலிகளின் மத்திய குழுக் கூட்டத்திலும் இந்த கருத்து வேறுபாடுகள் தலைக்காட்டத் தொடங்கின. உமா மகேஸ்வரன் தலைமையிலான பெரும்பான்மையான மத்திய குழு உறுப்பினர்கள் பிரபாகரனை இரு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விமர்சித்திருந்தனர். முதலாவது இயக்கத்தின் கட்டமைப்பு, இரண்டாவது போராட்ட வழிமுறை. இரத்திணசபாபதி கடந்தவருடம் முன்வைத்திருந்த அதேவகையான கருத்துக்களையே இம்முறை மத்தியகுழு உறுப்பினர்களும் முன்வைத்தனர். அவர்களைப்பொறுத்தவரை இயக்கத்தின் கட்டமைப்பு மக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். இப்படிச் செய்வதன் மூலம் இராணுவத்தினர் போராளிகளைக் கண்டுபிடிப்பதைக் கடிணமாக்கிவிடலாம் என்று அவர்கள் வாதாடினர். மறைந்திருந்து தாக்கிவிட்டு மறையும் உத்தி, தலைமைப்பீடத்தை இராணுவத்தினரின் இலக்காக மாற்றிவிடும் என்று அவர்கள் கூறினர். ஆனால், பிரபாகரன் தனது வழிமுறையில் தீர்மானமாக இருந்தார். மக்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் போராட்டம் என்பது மக்களின் பின்னால் ஒளிந்திருந்து நடத்தும் போராட்டமாகும் என்று அவர் கூறினார். ஆகவே, வெற்றிகரமான விடுதலைப் போராட்டம் மக்களின் பின்னால் ஒளிந்து நின்று நடப்பதிலிருந்து வெளியேறி நடைபெறவேண்டும் என்று அவர் வாதிட்டார். மிகவும் சிக்கலான தாக்குதல்களுக்கான பொறுப்பினை தலைவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் அவர்களின் பின்னால் ஒன்றுதிரண்டு துணைநின்றால் போதுமானது என்றும் அவர் கூறினார். இந்தத் தருணத்தில் தான் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான பிணக்கு ஆரம்பித்தது. இப்பிணக்கின் அடிப்படை போராட்டத்தில் கோட்பாடுகளிலிருந்தே ஆரம்பமானது. உமாமகேஸ்வரன் மார்க்ஸிய கோட்பாடுகளைக் கொண்டிருந்தவேளை பிரபாகரன் தேசியவாத நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். உமா மகேஸ்வரன் தத்துவார்த்த ரீதியில் கருத்துக்களை முன்வைத்தாலும், அவற்றை முன்வைக்கும்போது மற்றையவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து வாதாடும் மனோநிலையினைக் கொண்டிருந்தார். தனது கருத்துக்களை மற்றையவர்கள் மீது திணிக்க அவர் முயன்றார். பிரபாகரனோ யதார்த்தவாதியாக இருந்ததுடன், மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க ஆர்வம் காட்டியிருந்தார். மற்றையவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்து ஏற்றுக்கொள்வதிலும் பிரபாகரன் தன்னை ஒரு சிறந்த தலைவராக வெளிப்படுத்தியிருந்தார். இயக்கத்தின் இரு பிரதான தலைவர்களுக்கிடையே இருந்த இந்த முரண்பாடான நிலைப்பாடு இயல்பாகவே இயக்கத்திற்குள் பிளவினை உருவாக்கக் காரணமாகியது. ஆனாலும், புலிகள் இயக்கத்திலிருந்து உமாமகேஸ்வரன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் இயக்கத்தின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக உமா மகேஸ்வரன் நடந்துகொண்டதால் உருவானது. புலிகளின் களையெடுத்தல் தொடர்பான உரிமை கோரலினை தட்டச்சுச் செய்த ஊர்மிளா எனும் பெண்ணுடன் உமா மகேஸ்வரன் வைத்திருந்த பாலியல் ரீதியான தொடர்பே இதற்கான ஒற்றைக் காரணமாக அமைந்தது. உமா மகேஸ்வரன் அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்டிருந்த பயங்கரவாத நடவடிக்கைகளும், புலிகளின் தலைமைப் பீடத்திற்குள் உருவாகியிருந்த கருத்து முரண்பாடும், போராளி அமைப்புக்களின் தலைவர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடையத் தொடங்கியிருந்தமையும் யாழ்க்குடா நாட்டில் போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே மார்கழி 31 ஆம் திகதி வீரதுங்க, அரச படைகளின் தளபதியான ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பிவைத்த செய்தியில் தனக்கு இடப்பட்ட ஆணையான பயங்கரவாதத்தை முற்றாக அழித்தலை தான் செவ்வணே செய்து முடித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனைக் கொண்டாடும் முகமால கொழும்பு முகத்துவாரத்தில் அமைந்திருந்த "ரொக் ஹவுஸ்" எனப்படும் உல்லாச விடுதியில் பாரிய களியாட்ட நிகழ்வொன்றினை ஒழுங்குசெய்தார் வீரதுங்க. அவரின் வெற்றியை பாராட்டும் விதமாக ஜெயாரும் இந்த களியாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்தார். வீரதுங்கவினால் ஈட்டப்பட்ட வெற்றிக்குச் சன்மானமாக அப்போது பதவியிலிருந்த இராணுவத் தளபதி டெனிஸ் பெரேரா ஓய்வுபெறும்பொழுது, வீரதுங்கவே இராணுவத்தளபதியாக நியமிக்கப்படுவார் என்று ஜெயவர்த்தன அறிவித்தார். ஆனால், அனுபவத்திலும், தகமை அடிப்படையிலும், ஏனைய இராணுவத் தளபதிகளால் பரிந்துரை செய்யப்பட்டவருமான ஜஸ்டஸ் ரொட்ரிகோ எனப்படும் தளபதிக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய இராணுவத் தளபதி எனும் தகமையினை உதாசீனம் செய்த ஜெயார், தனது மருமகனான "காளைமாடு" வீரதுங்கவுக்கு வழங்க முடிவுசெய்தார். இலங்கையின் ராணுவத்தின் சரித்திரத்தில் அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்பட்ட முதலாவது இராணுவ பதவியுயர்வு நிகழ்வு இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. வீரதுங்கவை இராணுவத் தளபதியாக நியமித்ததன் மூலம் இராணுவத்தின் மீதும், பொலீஸார் மீதும் தான் கொண்டிருந்த அதிகாரத்தினை மேலும் பலப்படுத்திக்கொண்டார் ஜெயவர்த்தன. இராணுவத் தளபதி வீரதுங்க ஜெயவர்த்தனவின் மருமகன் என்பதும், பொலீஸ் மா அதிபர் அனா செனிவிரட்ண வீரதுங்கவின் மைத்துனர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted March 12 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 12 (edited) தன்னை எதிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்டுதல் தனது ஆட்சியை எதிர்க்கும் எந்தத் தமிழருக்கும் பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்தார். ஜெயவர்த்தனவின் அரசாட்சியின் இலக்கணமே தன்னை எதிர்ப்பவர்களுக்குக் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் பாடத்தினைப் புகட்டுவதுதான். தன்னை எதிர்த்த தமிழர்களுக்கு, சுதந்திரக் கட்சியினருக்கு, தொழிற்சங்கவாதிகளுக்கு மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஜெயாரினால் பாடம் புகட்டப்பட்டது. 1993 இலிருந்து 1994 வரையான காலப்பகுதியில் லங்கா கார்டியன் எனும் ஆங்கிலப் பத்திரிக்கையில் ஆர்டன் என்பவரால் வன்முறைகளையே தனது ஆயுதமாக நம்பி ஜெயவர்த்தன புரிந்த ஆட்சி ஆளமாக அலசப்பட்டிருந்து. தனது அரசியல் எதிரிகளான சுதந்திரக் கட்சியையும், எதிரிகளான தமிழர்களையும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும் ஜெயவர்த்தனா எவ்வாறு வன்முறைகள் மூலம் அடக்கி ஆண்டார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். மக்களின், தொழிற்சங்கங்களின் நீதியான கோரிக்கைகள் கூட ஜெயாரினால் மிகவும் மூர்க்கத்தனமாக வன்முறைகள் கொண்டு அடக்கப்பட்டன. தனது குண்டர்களான ஜாதிக சேவக சங்கமய அமைப்பினரைப் பாவித்து தொழிற்சங்கப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகளை ஏவிவிட்டார். தொழிற்சங்கங்கள் வழமையாக இடதுசாரிகளின் பின்புலத்திலேயே இயங்கிவந்தன. இத்தொழிற்சங்கங்கள் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காக செயற்பட்டன. ஜெயார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வந்தவுடன் தனது கட்சியின் தொழிற்சங்கமாக ஜாதிக சேவக சங்கம யவை உருவாக்கியதுடன் இதன் தலைவராக பிரபல இனவாதியான சிறில் மத்தியூ நியமிக்கப்பட்டார். இத்தொழிற்சங்கம் சிங்கள தேசியவாத அடிப்படையில் உருவாக்கப்பட்டதுடன் சிங்கள மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவது அதன் முக்கிய நோக்கமாக உருவாக்கப்பட்டது. மகதிர் மொஹம்மட் சிறில் மத்தியூ, மலேசிய அதிபரான மகதிர் மொஹம்மட்டின் பூமி புத்ரா கட்சியின் அடிப்படையினைப் பின்பற்றி ஜாதிக சேவக சங்கமயவை வழிநடத்தினார். மகதிர் மொஹம்மட் ஒரு காலத்தில் எழுதிய தனது சுயசரிதையான "மலே மக்களின் தடுமாற்றம்" எனும் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சுதந்திர வர்த்தகப் பொருளாதாரத்தை ஆதரித்துவந்த மகதிர், தனது நாட்டின் மக்களான மலேயர்களுக்கு ஏனைய இன மக்களைக் காட்டிலும் பொருளாதார நலன்களை அனுபவிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்றும் , வர்த்தகப் போட்டியிலிருந்து மலே மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். இஸ்லாம் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும், அம்மதத்தைப் பரப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்றும் அவர் கருதினார். மலே மக்களே மலேசியாவின் பூர்வகுடிகள் என்று அவர் கூறியதுடன், மலே மக்களுக்கு மலேசியாவை விட்டால் வேறு நாடொன்றில்லை என்றும் அவர் வாதிட்டார். மேலும், மலேசியாவில் வாழும் சீனர்கள் சீனாவுக்கும், அங்குவாழும் இந்தியர்கள் இந்தியாவுக்குச் செல்லமுடியும் என்றும் அவர் வாதிட்டார். மகதிர் முகம்மட்டின் பூமி புத்ரா கட்சியின் கொள்கைகள் மலேசியாவைக் காட்டிலும் இலங்கைக்கே பொருந்தும் என்று சிறில் மத்தியூ கூறினார். மலேசியச் சனத்தொகையில் மலே மக்கள் 53 வீதமும், சீனர்கள் 35 வீதமும், தமிழர்கள் 10 வீதத்திற்குச் சற்றுக் குறைந்த எண்ணிக்கைய்லும் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், இலங்கையிலோ சிங்களவர்கள் 74 வீதமாக இருக்க தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 17 வீதம் மட்டுமே என்று மத்தியூ வாதாடினார். சனத்தொகை எண்ணிக்கையில் தமிழர்கள் மிகவும் குறைந்த இருந்தபோதும் தொழில் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் இந்த வீதாசாரத்தைக் காட்டிலும் மிக அதிகமான தாக்கத்தை தமிழர்கள் கொண்டிருப்பதாக மத்தியூ கருதினார். தமிழர்கள் வேண்டுமென்றால் தமிழ்நாட்டிற்குத் திருப்பிச் செல்ல முடியும், ஆனால் சிங்களவர்களுக்கு இலங்கையை விட்டால் வேறு நாடு கிடையாது என்று மத்தியூ வாதாடினார். ஆகவே சிங்களவரின் மேன்மை வன்முறைகளற்ற வழிமுறைகளிலோ அல்லது வன்முறைகள் மூலமாகவோ அடைந்தே தீரவேண்டும் என்று அவர் வாதிட்டார். ஜாதிக சேவக சங்கம தனது இனவாத வன்முறைகளுக்காக தனது தொழிற்சங்கமான ஜாதிக சேவக சங்கமயவினை மத்தியூ தயார்ப்படுத்தினார். கொள்ளுப்பிட்டிய பகுதியில் அமைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிறி கோத்தாவின் பின்புறத்தில் இருந்த மைதானத்தில் இச்சங்கத்தைச் சேர்ந்த குண்டர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அரச அதிகாரிகளை அச்சுருத்தி வந்த இத்தொழிற்சங்கக் குண்டர்களுக்கு அரசால் வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. பிறின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியராகக் கடமையாற்றிய பேராசிரியர் ஞானரத் ஒபேசேகர அவர்கள் இத்தொழிற்சங்கக் குண்டர்களின் செயல்ப்பாட்டினை மிகவும் விரிவாக இரு தலைப்புக்களான, "அரசியல் வன்முறைகளும் இலங்கையின் ஜனநாயகத்தின் எதிர்காலமும்" மற்றும் "இலங்கையில் சமூக உரிமைகளுக்கான அமைப்பு" ஆகியவற்றில் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட 35 வன்முறைகளை ஆராய்ந்திருந்தார். சிறி கோத்தா இதனைப் படிக்கும் ஒருவருக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு வந்த வன்முறைக் கலாசாரத்துடனான அரசியல் சூழ்நிலையினை ஓரளவிற்குப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இச்சூழ்நிலை மேலும் மோசவடைவதை இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றதன் பின்னர், அரச வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், அங்குபணிபுரிந்து வந்த எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட கலைஞர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தனர். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்திறங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்கள் வாட்களாலும், தடிகளாலும் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். அப்படி விரட்டப்பட்டவர்களில் பிரபல சிங்கள நாடகக் கலைஞர் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. 1978 ஆம் ஆண்டு ஆனி மாதம் 15 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு தமது கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்ற காரணத்தினால் துல்கிரிய ஆடைத்தொழிற்சாலை தலைவர்களான நால்வரை சுமார் 400 பேர் அடங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் குண்டர்கள் அடித்து விரட்டியதுடன், அவர்கள் தமது பதவிகளை இராஜினாமச் செய்யும்படியும் வற்புறுத்தப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான நான்கு அதிகாரிகள் அவ்விடங்களுக்கு நியமிக்கப்பட்டனர். 1980 ஆம் ஆண்டு ஆடி 4 ஆம் திகதி, மகரகமை ஆசிரியர் கலாசாலையில் வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் வந்திறங்கிய ஜாதிக சேவக சங்கமய குண்டர்கள் இறப்பர் நார்களாலும், சைக்கிள் சங்கிலிகளைக் கொண்டும் கடுமையான தாக்குதலை நடத்தினர். பெண் ஆசிரியர்கள் நிலத்தில் இழுத்து வீழ்த்தப்பட்டு அவர்கள் மேல் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டது. ஜெயவர்த்தனா எவ்வாறு ஒரு தொழிற்சங்கத்தைப் பயன்படுத்தி இன்னொரு தொழிற்சங்கத்தை வன்முறையால் அடக்கினார் என்பதை ஆர்டன் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஜெயாரினால் கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையினால் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து பல தொழிலாளர்களின், குறிப்பாக அரச ஊழியர்களின் சம்பளம் கடுமையான சரிவினைச் சந்தித்தது. ஆகவே, எதிர்க்கட்சியின் ஆதரவு பெற்ற ஒருமித்த தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தொழிலாளிகளுக்கு மாதாந்தம் 300 ரூபாய்கள் சம்பள உயர்வு கோரி அரசுக்கு வேண்டுகோள் ஒன்றினை 1980 ஆம் ஆண்டு பங்குனியில் முன்வைக்கத் தீர்மானித்தது. இதனை வலியுறுத்தி ஆனி 5 ஆம் திகதி அடையாள ஆர்ப்பாட்டமாக அரைநாள் வேலை நிறுத்தத்தில் அது ஈடுபட்டது. இதற்குப் பதிலளிக்க விரும்பிய ஜெயார், தனது கட்சியின் தொழிற்சங்கத்தை ஆனி 5 ஆம் திகதியை கூட்டுறவுக்கான நாளாக அனுஷ்ட்டிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்கப் பணியாளர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே ஜெயார் இதனைச் செய்ததோடு, அன்றைய வன்முறையில் பல எதிர்க்கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் காயமடைந்ததோடு சோமபால எனும் தொழிற்சங்கவாதியும் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். ஆடி 5 ஆம் திகதி இரத்மலானை ரயில்வே தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த 12 ஊழியர்கள் ஆனி 5 ஆம் அன்று பணிக்கு வராமையினால் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். ரயில்வே தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் பேசி சூழ்நிலையினைத் தணிக்க முயற்சித்தன. ஆனால், பிடிவாதமாக பேச மறுத்த நிர்வாகம் தாம் மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தொழிலாளர்களை பதவிநீக்கம் செய்ததாகத் தெரிவித்தது. இதையடுத்து ஆடி 7 ஆம் திகதி ரயில்வே தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், பணிநீக்கம் செய்யப்பட்ட 12 ஊழியர்களுக்கும் மீளவும் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என்றும், தமது சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்றும் கோரினர். இதற்கும் நிர்வாகம் பதிலளிக்காது விடவே, ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆடி 14 ஆம் திகதி பொது வேலை நிறுத்தம் ஒன்று பற்றி ஜனாதிபதிக்கு அறிவித்ததுடன், ஆடி 18 வேலை நிறுத்தம் ஆரம்பிக்கும் என்றும் கூறியது. ஜெயவர்த்தன இதற்குப் பதிலளிக்கும் விதமாக அரசு ஆடி 16 அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தை அமுல்ப்படுத்தியது. இதன்படி அரச மற்றும் தனியார் அத்தியாவசிய சேவைகளில் தொழில் புரிபவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாதென்றும், அவ்வாறு வேலைநிறுத்தம் செய்தால் அவர்கள் தமது பதவிகளை தாமே இராஜினாமாச் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. ஆனால், தொழிற்சங்கம் கூறியதன்படி வேலை நிறுத்தம் ஆடி 18 ஆரம்பித்தது. அன்றைய தினம் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ஜெயார், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரும் தமது பதவிகளை இழந்துவிட்டதாகவும், எக்காரணம் கொண்டும் அரசு அவர்களை மீளவும் பணிக்குச் சேர்த்துக்கொள்ளாது என்றும் அறிவித்தார். மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினாலும் கூட, இதனால் எந்தப் பலனும் கிடைக்காது போயிற்று. ஒரு சாதாரண சம்பள உயர்வுக் கோரிக்கை ஜெயாரினால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு, தொழிற்சங்கங்களுக்கும் தனக்குமிடையிலான மோதலாக உருவாக்கப்பட்டு, ஈற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் வேலைநிறுத்தப் போராட்டம் நசுக்கப்பட்டுப் போனது. இவ்வாறே ஜெயார் தனது ஆட்சிக் காலத்தில் தொழிற்சங்கங்களை நசுக்கி வந்திருந்தார். ஜெயாரினால் பணிநீக்கம் செய்யப்பட்ட பல தொழிலாளர்கள் பின்னர் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. Edited March 12 by ரஞ்சித் Picture attached 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted March 14 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 14 உச்சநீதிமன்றத்தைப் பணியவைத்த ஜெயார் இவையெல்லாவற்றைக் காட்டிலும் உச்சநீதிமன்றத்துடன் ஜெயார் நடந்துகொண்ட விதமே மிகவும் மோசமாகக் காணப்பட்டது. 1978 ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஜெயார் அமைத்ததிலிருந்தே இந்தப் பிணக்கு உருவானது. இந்த ஆணைக்குழு சிறிமாவையும், அவரது அமைச்சரவையில் முக்கியவராகக் கருதப்பட்ட பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவையும் விசாரிக்கவே உருவாக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் சட்டபூர்வமான தன்மையினைக் கேள்விகேட்டு சிறிமாவோ உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்த அதேநேரம், பீலிக்ஸ் பண்டாரநாயக்கவோ இந்த ஆணைக்குழுவிற்கும் அதன் நீதிபதிகளுக்கும் எதிரான அதிகார வினாப் பேராணைகளை தாக்கல் செய்திருந்தார். இந்த ஆணைக்குழுவின் நீதிபதிகளில் ஒருவரான அல்விஸ், ஊழலில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்ட கொழும்பு நகர மேயரான ஏ எச் எம் பெளசியுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டார் என்பதை முன்வைத்து, விசாரணைக் குழுவில் இடம்பெற அல்விஸுக்குத் தகமை கிடையாதென்று வாதிட்டிருந்தார். அல்விஸின் மகனிடமிருந்து பெளசியின் மகளுக்கு கொள்வனவுசெய்யப்பட்ட நிலத்திற்கு பெளசி பணம் செலுத்தியது மற்றும் அல்விஸின் மகனின் வீடொன்றில் வாடகைக்கு பெளசியின் மனைவி அமர்ந்துகொண்டது ஆகிய இரு நடவடிக்கைகளிலும் அல்விஸே பெளசியின் மகன் சார்பில் சட்டத்தரணியாகச் செயலாற்றியிருந்தார். ஏ எச் எம் பெளசி பீலிக்ஸின் வழக்கினை விசாரித்த பிரதம நீதியரசர்களான சமரகோன், விமலரட்ண மற்றும் கொலின் தொம்மே ஆகியோர் அளித்த தீர்ப்பின்படி ஜெயாரின் விசேட ஆணைக்குழுவின் நீதிபதி அல்விஸ் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒரு நீதிபதியாகத் தொழிற்பட தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயார், அல்விஸை நீதியரசர்கள் விமலரட்னணைக்கும், கொலின் தொம்மேக்கும் எதிராக, "தன்மீதான தனிப்பட்ட காரணங்களுக்காக தனக்கெதிராகத் தீர்ப்பளித்தார்கள்" என்கிற குற்றச்சாட்டுடன் ஜனாதிபதியான தன்னிடம் முறைப்பாட்டு மனுவொன்றினைத் தருமாறு கூறினார். தனது எடுபிடியான காமிணி திசாநாயக்காவைக் கொண்டு பாரளுமன்றத்தில் அல்விஸின் மனுவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தீர்மானம் ஒன்றையும் ஜெயார் கொண்டுவந்தார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் பேசும்போது, தான் நீதித்துறைக்கும் சட்டங்களுக்கும் மேலானவர் என்றும், தான் விரும்பியதைச் செய்யும் அதிகாரம் தனக்கிருப்பதாகவும் பேசினார். ஈவிரக்கமற்ற கொலைகாரன் என்று அறியப்பட்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரேமதாச உடுகம்பொல தான் கூறியதுபோலவே செய்யவும் தலைப்பட்டார் ஜெயார். 1982 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுவந்த வேளையில் மதகுருக்களின் குரல் எனும் பெயரில் சில பெளத்த பிக்குகளும், கத்தோலிக்க குருக்களும் எதிர்க்கட்சியின் வேட்பாளரான ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைப்பின் தலைவராக தெரமிடிபொல ரட்னசார தேரோ எனும் பிக்கு கடமையாற்றினார். இந்த அமைப்பால் வெளியிடவென அச்சடித்து வைக்கப்பட்டிருந்த 20,000 துண்டுப்பிரசுரங்களையும், அச்சகத்தையும் இழுத்து மூடினார் பொலீஸ் அத்தியட்சகர் உடுகம்பொல. இதற்கெதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்த ரட்னசார தேரர், பேச்சுச் சுதந்திரத்தின் மீதான தலையீடு என்று தனது அமைப்பின் துண்டுப்பிரசுரங்கள் பொலீஸாரால் கையகப்படுத்தப்பட்டதைக் குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடுகம்பொல செயல்ப்பட்ட விதம் பேச்சுச் சுதந்திரத்திரத்தைப் பறிக்கும் செயல் என்றும், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு நட்ட ஈடாக 10,000 ரூபாய்களையும், வழக்கிற்கான செலவுகளையும் உடுகம்பொல செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செயற்பட்ட ஜெயார், உடுகம்பொலவை சிரேஷ்ட்ட பொலீஸ் அத்தியட்சகராகப் பதவியுயர்வு கொடுத்ததுடன், வழக்கின் இழ்ப்பீட்டுச் செலவுகளை அரசே வழங்கும் என்றும் கூறினார். விவியேன் குணவர்த்தன ஜெயாரின் இந்த செயல், அரசுக்குச் சார்பாக தாம் எதைச் செய்தாலும், அரசு தமக்குப்பின்னால் நிற்கும் எனும் தைரியத்தைப் பொலீஸாருக்குக் கொடுத்திருந்தது. இதன்படி, சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர் கொள்ளுப்பிட்டிய பொலீஸார் சட்டத்தை தம் கைகளில் எடுத்துச் செயற்பட்டிருந்தனர். 1982 ஆம் ஆண்டு, பங்குனி 8 ஆம் நாள், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு லங்கா சம சமாஜக் கட்சியின் உறுப்பினர் விவியேன் குணவர்த்தன தலைமையிலான பெண்கள் குழுவினர் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அமெரிக்க தூதுவராலயத்திற்கு மனுவொன்றைனைக் கையளிக்கச் சென்றிருந்தனர். அது ஒரு அமைதியான ஊர்வலமாகத்தான் இடம்பெற்றிருந்தது. தமது மனுவினை அமெரிக்க உயர்ஸ்த்தானிகரின் பிரதிநிதியிடம் கையளித்துவிட்டு திரும்பும் வழியில் அவர்கள் மேல் பாய்ந்து தாக்குதல் நடத்திய கொள்ளுப்பிட்டிய பொலீஸார், அவர்கள் கொண்டுவந்திருந்த பதாதைகளைப் பறித்து கிழித்தெறிந்தனர். பெண்கள்மீது பொலீஸாரால் நடத்தப்பட்ட தாக்குதலைப் படம்பிடித்த புகைப்படக் காரர் ஒருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். பேரணியில் பொலீஸார் நடந்துகொண்ட விதம் பற்றிப் பேசுவதற்காக விவியேன் கொள்ளுப்பிட்டிய பொலீஸ் நிலையத்திற்குச் சென்றார். பொலீஸ்நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்ட விவியேன், பொலீஸாரினால் கீழே விழுத்தப்பட்டு கால்களால் உதைக்கப்பட்டார். பின்னர் அவரையும் பொலீஸார் கைதுசெய்திருந்தனர். உச்ச நீதிமன்றில் பொலீஸாரின் அடாவடித்தந்திற்கெதிராக வழக்கொன்றைத் தாக்கல் செய்தார் விவியேன். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்று, விவியேனின் கைது சட்டத்திற்குப் புறம்பானதென்றும், இழப்பீடாக 2500 ரூபாய்களை பொலீஸார் செலுத்த வேண்டும் என்றும் மேலும் விவியேன் மீதும், பேரணி மீதும் தாக்குதல் நடத்திய பொலீஸார் அனைவரின்மீதும் பொலீஸ் மா அதிபர் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறித் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்று தீர்ப்பளித்த மறுநாளான ஆனி 9 ஆம் திகதி, பேரணி மீது தாக்குதல் நடத்திய பொலீஸ் குழுவின் அதிகாரியான உதவிப் பொலீஸ் பரிசோதகர் ஜெயாரின் உத்தரவின் பெயரில் பதவியுர்வு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டு இருநாட்களின் பின்னர், தீர்ப்பினை வழங்கிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளினதும் வீடுகளுக்கு அரச வாகனங்களில் சென்ற காடையர்கள், அவர்களைக் கொல்லப்போவதாக மிரட்டியதுடன், ஆபாசமாகவும் திட்டிவிட்டுச் சென்றனர். காடையர்கள் தமது வீடுகளைச் சுற்றி கோஷமிட்டுக்கொண்டிருக்கும்பொழுது, பொலீஸாரின் உதவியினை நீதிபதிகள் தொலைபேசி மூலம் கேட்க எத்தனித்தபோது, பொலீஸாரின் அனைத்துத் தொலைபேசி இணைப்புக்களும் மெளனமாக காணப்பட்டன. சர்வதேச நீதிபதிகளின் அமைப்பின் தலைவர் போல் சைகிரெட் இந்த பொலீஸ் அத்துமீறல்கள் குறித்தும், நீதித்துறை எதிர்நோக்கியிருந்த அச்சுருத்தல்கள் குறித்தும் ஜெயாரிடம் வினவினார். இதற்குப் பதிலளித்த ஜெயார், இரு பொலீஸ்காரர்களினதும் பதவியுயர்விற்கு தானே பரிந்துரை செய்ததாகவும், நட்ட ஈடுகளை செலுத்தும்படி அரச திறைசேரிக்கு தானே உத்தரவிட்டதாகவும் கூறியதுடன், பொலீஸாரின் மனவுறுதியை நிலைநாட்ட இவை அவசியமாகச் செய்யப்படவேண்டியன என்றும் வாதிட்டிருந்தார். போல் சைகிரெட்டின் கூற்றுப்படி, உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு சரியான பாடமொன்றினைப் புகட்டவேண்டும் என்று ஜெயார் திடசங்கற்பம் பூண்டிருந்ததுடன், தனது நிறைவேற்றதிகாரம் பொருந்திய ஜனாதிபதிப் பதவிக்கு உச்ச நீதிமன்றும், நீதியரசர்களும் அடிபணிந்திருக்கவேண்டும் என்றும் எதிர்ப்பார்த்தார் என்றும் கூறினார். இந்த நிகழ்வுகளின் அடிப்படையிலிருந்தே தமிழர்கள் மீது ஜெயார் கட்டவிழ்த்து விடவிருக்கும் அக்கிரமங்கள் நோக்கப்படல் வேண்டும். தலைவருடன் இந்தியச் செய்தியாளர் அனித்தா பிரதாப் ஜெயாரை ஆதரிப்பவர்கள், பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகள் சிலவற்றின் அழுத்தத்தினாலேயே ஜெயார் தமிழருடன் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியதாகியது என்று ஜெயாரின் கொடுங்கோண்மையினை நியாயப்படுத்தி வந்தனர். ஆனால், ஜெயார் குறித்த பிரபாகரனின் கணிப்போ மிகவும் வித்தியாசமானது. 1984 இல் முதன் முதலாக பிரபாகரன் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில், "ஜெயார் தனது விருப்பத்தின்படியே நடக்கிறார். அவரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கின்றன. பாராளுமன்றத்தில் இருக்கும் கழுகுகளும், பெளத்த பிக்குகளும் அவருக்குப் பக்கபலமாக பின்னால் நிற்கின்றனர்" என்று அந்தச் செய்தியாளரான அனீட்டா பிரதாப்பிடம் கூறியிருந்தார். மேலும், "ஜெயவர்த்தனா உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால், நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவை இருந்திருக்காது " என்றும் அவர் கூறினார். பிரபாகரனின் கணிப்பு எவ்வளவு உண்மையானது என்பது இத்தொடரினைத் தொடர்ந்து படிக்கும்போது தெளிவாகும். 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted March 15 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 15 புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவு உமா மகேஸ்வரனிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உமா மகேஸ்வரனும் ஊர்மிளாவும் பாலியல் ரீதியில் தொடர்பில் உள்ளார்கள் என்று தோழர்கள் தன்னிடம் கூறியபோது பிரபாகரனால் அதனை நம்பமுடியவில்லை. ஆனால், அச்செய்தி உண்மைதான் என்று அறிந்தபோது அவர் மிகவும் கோபமடைந்தார். இயக்கத்தின் தலைவரான ஒருவரே தான் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு கொள்கையினை மீறுவதென்பது பிரபாகரனினால் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு குற்றமாகக் கருதப்பட்டது. உமாவை இயக்கத்திற்குள் கொண்டுவந்து, அவரையே அரசியல்த் தலைவராக உருவாக்குவதில் பிரபாகரன் ஆற்றிய பங்கு அளப்பரியது. பிரபாகரனுக்கெதிரான பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட இந்த நகர்வு காரணமாக அமைந்திருந்தது. வெளியார் ஒருவரை இயக்கத்திற்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், அவரையே தலைவராகவும் அமர்த்தியது இயக்கத்திற்குள் இருந்த பல மூத்த உறுப்பினர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை. அது பிரபாகரனின் இரண்டாவது பிழை என்று அவர்கள் முணுமுணுத்து வந்திருந்தார்கள். முதலாவது தவறு எதுவென்றால், செட்டி தனபாலசிங்கத்தை புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவராக பிரபாகரன் நியமித்திருந்தது அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. செட்டி வங்கிக்கொள்ளைப் பணத்தைச் சுருட்டிக்கொண்டதுடன், இறுதியில் புலிகள் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கும் உளவாளியாகவும் மாறிப்போனார். செயலில் இறங்கும் போராளிகளை எப்போதுமே மதித்து வந்த பிரபாகரன், செட்டியின் செயல்த்திறனிற்காக அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார். உமா மகேஸ்வரன் விடுதலைப் போராட்டம் குறித்து முற்றான முற்றான அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையினாலும், அமிர்தலிங்கம் உமாவையும் இயக்கத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டிருந்தமையினாலும் பிராபாகரன் உமாவை இயக்கத்தினுள் சேர்த்திருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவான தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையின் காரியாதரிசியாக இயங்கிவந்த உமா, அமைப்பு வேலைகளில் மிகவும் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தார். உமா சர்வதேச விடுதலைப் போராட்டங்கள் பற்றி அதிகளவு விடயங்களைத் தெரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கியதாலும், தன்னை விடவும் 10 வயது அதிகமாக இருந்ததனாலும் பிரபாகரன் அவரை தலைவராக பதவியில் அமர்த்தினார். தன்னைக் காட்டிலும் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக உமா காணப்பட்டதும், அவரே தலைவராக இருக்கத் தகுதியானவர் என்று பிரபாகரன் முடிவெடுத்தமைக்கு இன்னுமொரு காரணம். . 1978 ஆம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டம் ஒன்றிற்கு உமாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த பிரபாகரன், அங்கிருந்தவர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்த பின்னர், அவரைத் தலைவராக பரிந்துரை செய்வதாகக் கூறினார். உமா கொண்டிருந்த சர்வதேசத் தொடர்புகள் மற்றும் அவரது தொடர்பாடல் ஆற்றல் ஆகியவற்றை இயக்கம் உபயோகித்துக்கொள்ள முடியும் என்று பிரபாகரன் அங்கிருந்தவர்களிடம் கூறினார். புலிகள் இயக்கத்தின் கொள்கைகளை தான் முற்றாகக் கடைப்பிடிக்கப்போவதாக உறுதியளித்த உமா, குடும்ப வாழ்க்கை, பாலியலுறவு, மாற்றியக்கங்களுடன் சேர்தல் அல்லது புதிதாக இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தல், மதுபானம் புகைப்பிடித்தல் ஆகியவை உட்பட இன்னும் பல விடயங்களை முற்றாகத் தவிர்த்து இலட்சியத்திற்காக உழைப்பேன் என்று அவர் உறுதியளித்தார். உமாவிற்கும் ஊர்மிளாவுக்கும் இடையிலான பாலியல் உறவு உறுதிப்படுத்தப்பட்டபோது, இயக்கத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகுமாறு உமாவிடம் கூறினார் பிரபாகரன். "நீங்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறீர்கள். நீங்களே இயக்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு விடயத்தைச் செய்தீர்களென்றால், மற்றையவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள். நான் கட்டி வளர்க்கும் இயக்கத்தை நீங்கள் அழிக்க நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். ஆகவே உடனடியாக விலகிச் செல்லுங்கள்" என்று உமாவைப் பார்த்து கர்ஜித்தார் பிரபாகரன். ஆனால், உமா மாறவில்லை. தனது எதிரிகள் தனக்கெதிராக சதித்திட்டம் ஒன்றை நடத்திவருவதாகவும், தான் எந்தத் தவறும் இழைக்காததால் , தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப்போவதில்லை என்றும் பிடிவாதம் பிடித்தார். உமாவின் காரணங்களை பிரபாகரன் ஏற்கும் நிலையில் இல்லை. யாழ்க்குடா நாட்டில் வீரதுங்கவின் அட்டூழியங்கள் பெருகிவந்த நிலையில், இயக்கத்தின் மத்திய குழு 1979 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கூடியது. அங்கு கூடிய மத்தியகுழு உமாவிடம் இரண்டு தெரிவுகளை முன்வைத்தது, 1. திருமணம் முடியுங்கள் அல்லது 2. தலைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்யுங்கள். என்பவையே அவையிரண்டும். ஆனால், உமா இதில் எதனையும் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இதனால், உமாவை இயக்கத்திலிருந்து விலக்கும் முடிவினை மத்திய குழு எடுத்தது. மத்திய குழுவின் ஏனைய மூன்று உறுப்பினர்களான பரா, நாகராஜா மற்றும் ஐய்யர் ஆகியோர் உமாவை விலக்கும் முடிவிற்கு ஆதரவாக நின்றார்கள். இயக்கத்தின் தலைவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இயங்கவேண்டும் எனும் பிரபாகரனின் கொள்கையினை அவர்கள் முற்றாக ஆமோதித்தார்கள். "தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது எள்ளளவு சந்தேகம் வரினும், அவர் உடனடியாக விலக வேண்டும்" என்று நாகராஜா வாதாடினார். 1984 ஆம் ஆண்டு, பிரபாகரன் முதன்முதலாக வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டியளித்திருந்தார். அந்தச் செய்தியாளரான அனித்தா பிரதாப்பிடம் பேசும்போது "ஒரு புரட்சிகர அமைப்பின் தலைவராக இருப்பவர் தனது அமைப்பின் ஒழுக்கத்திற்கு தன்னை முற்றாக அர்ப்பணித்தவராக இருக்கவேண்டும். தலைவரே அடிப்படை விதிகளையும், கொள்கைகளையும் மீறிச் செயற்படும்போது , இயக்கத்திற்குள் குழப்பகரமான சூழ்நிலை தோன்றுவதோடு, ஈற்றில் அதுவே இயக்கத்தை முற்றாக அழித்து விடும்" என்று கூறினார். மேலும், இயக்கத்திற்குள் உருவான பிரச்சினையினை, தான் புலிகள் இயக்கத்திற்கும், உமா மகேஸ்வரன் எனும் தனிநபருக்கும் இடையிலான வேறுப்பாடக் கருதுவதாகக் கூறினார். "இந்தப் பிரச்சினைக்கு நான் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது. உமா மகேஸ்வரனே இந்த பிரச்சினையை உருவாக்கினார். இயக்கத்தின் ஒழுக்கக் கோட்ப்பாட்டினை மீறியவர் உமா மகேஸ்வரனே. ஆகவே, ஒழுக்காற்று நடவடிக்கையாக அவரை மத்தியகுழுவினூடாக இயக்கத்திலிருந்து வெளியேற்றினோம். இந்த இயக்கத்தை ஆரம்பித்தவன் என்கிற வகையிலும், உமா மகேஸ்வரனை இயக்கத்திற்குள் கொண்டுவந்தவன் என்கிற வகையிலும், மத்திய குழு எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவதைத்தவிர எனக்கு வேறு எந்த வழிகளும் இருக்கவில்லை" என்றும் கூறினார் பிரபாகரன். அனித்தா பிரதாப் மேலும், புலிகளின் லண்டன் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, உமா பற்றிய குற்றச்சாட்டுக்கள பற்றி விளக்கமளித்தார் பிரபாகரன். லண்டனில் வசித்துவந்த புலிகளின் உறுப்பினரான கிருஷ்ணனிடம் பேசும்போது, உமா ஈழம் எனும் இலட்சியத்திற்கு தகுதியற்றவர் என்று கூறினார். "ஒழுக்கமற்ற ஒரு தலைவனால், மக்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது" என்று அவர் கூறினார். இதனைக் கேட்டுவிட்டு பின்னர் பேசிய கிருஷ்ணன், "பிரச்சினையினைப்பேசித் தீர்க்கலாம், நான் அன்டன் ராஜாவை உவ்விடம் அனுப்புகிறேன்" என்று பிரபாகரனிடம் கூறியிருக்கிறார். உமா பதவி விலகுவதற்குப் பிடிவாதமாக மறுத்துக்கொண்டே இருந்தார். இது நீண்ட உள் விவாதங்களுக்கு வித்திட்டது. சில மூத்த உறுப்பினர்கள் பிரபாகரன் தொடர்ந்தும் உமாவை வற்புறுத்தத் தேவையில்லை என்று எண்ணம் கொண்டிருந்தனர். சூழ்நிலைகளின் தாக்கத்தால் உமா தவறு செய்திருப்பதால், அவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். ஆனால், பிரபாகரன் அசரவில்லை. "ஒழுக்கம் என்று வரும்போது விட்டுக்கொடுப்புகளுக்கு இடமில்லை. எல்லோரும் இயக்க விதிகளை முழுமையாகப் பின்பற்றியே ஆகவேண்டும்" என்று தனது முடிவில் உறுதியாக நின்றார் பிரபாகரன். கிருஷ்ணன் இந்தப் பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வொன்றை எட்டவே விரும்பினார். கிருஷ்ணனும், அன்டன் ராஜாவும் அப்போதுதான் மூன்றாம் உலக விடுதலைப் போராட்ட அமைப்புக்களிடம் தொடர்பினை ஏற்படுத்தி புலிகள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் விழிப்புணர்வினை உருவாக்கும் நடவடிக்கைகளில் லண்டனில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். உமா மகேஸ்வரனையே புலிகளின் தலைவராகவும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர். "நாங்கள் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் போய், எமது தலைவர் இயக்க விதிகளுக்கு முரணாக பாலியல் உறவில் ஈடுபட்டதனால் அவரை விலக்கிவிட்டோம் என்று எம்மால் சொல்ல முடியாது" என்று கிருஷ்ணன் பிரபாகரனிடம் கெஞ்சினார். தாம் எதிர்நோக்கும் இந்தச் சிக்கல் குறித்து சென்னையில் பிரபாகரனைச் சந்தித்தபோது அன்டன் ராஜா விளங்கப்படுத்தினார். "இது ஒரு பெரிய பிரச்சினையா?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார் அன்டன் ராஜா. இதைக் கேட்டதும் கோபமடைந்த பிரபாகரன், "லண்டனில் வாழும் உங்கள் போன்ற ஆட்களுக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இங்கு, எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சினைதான். இயக்கத்தில் சேரும் தமது பெண்பிள்ளைகளை தலைவர்கள் பாலியல் வன்புணர்ந்து வருகிறார்கள் என்று தெரிந்தால், எந்தப் பெற்றோராவது தமது பெண்பிள்ளைகளை இயக்கத்திற்கு அனுப்புவார்களா?" என்று ஆவேசத்துடன் அன்டன் ராஜாவைப் பார்த்துக் கேட்டார். ஊர்மிளா என்று அறியப்பட்ட கந்தையா ஊர்மிளாதேவியே புலிகள் இயக்கத்தின் முதலாவது பெண்போராளியாகும். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளையில் ஈடுபாட்டுடன் பணிபுரிந்து வந்த ஊர்மிளா, உமாவுடன் நெருங்கிப் பழகிவந்தார். உமாவின் பரிந்துரையின் பேரிலேயே ஊர்மிளா புலிகள் இயக்கத்திற்குள் இணைத்துக்கொள்ளப்பட்டார். அன்டன் ராஜாவை பல வருடங்களுக்குப் பின்னர் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னிடம் பேசிய அவர், "பிரபாகரன் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை, நான் லண்டனுக்கே திரும்பிச் சென்றுவிட்டேன்" என்று கூறியிருந்தார். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினையினை தீர்க்கும் தனது முயற்சியை லண்டன் அலுவலகம் கைவிட விரும்பவில்லை. ஆகவே, இன்னொருமுறை முயன்று பார்க்கலாம் என்று கிருஷ்ணன் எண்ணினார். இம்முறை, தன்னுடன் மத்தியஸ்த்தத்திற்கு இன்னுமொருவரையும் அழைத்துச் சென்றார் கிருஷ்ணன். அவர்தான் அன்டன் பாலசிங்கம். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத ரீதியிலான போராட்ட முன்னெடுப்பினை நியாயப்படுத்தி பிரசுரங்களையும், புத்தகங்களையும் பாலசிங்கம் வெளியிட்டு வந்ததனால் பிரபாகரனால் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஆனால், அந்தக் கட்டத்தில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. மத்தியகுழுவினரால தன்னை விலக்குவதாக எடுக்கப்பட்ட முடிவினை முற்றாக நிராகரித்திருந்த உமா, பின்னர் தானே புலிகள் இயக்கத்தின் தலைவர் என்றும், தனது இயக்கமே உண்மையான புலிகள் இயக்கம் என்றும் உரிமை கோரத் தொடங்கினார். உமாவின் விசுவாசிகளில் ஒருவரான சுந்தரம் என்று அழைக்கப்பட்ட எஸ் சிவசண்முகமூர்த்தி, புலிகளால் சேமித்துவைக்கப்பட்ட ஆயுதங்களைத் திருடி வேறிடங்களுக்கு மாற்றத் தொடங்கியபோது, உமாவின் உரிமைகோரலுக்கான காரணம் வெளித்தெரியவந்தது. இது பிரபாகரனை மிகவும் சினங்கொள்ள வைத்திருந்தது. உடனே செயலில் இறங்கிய பிரபாகரன் ஏனைய மறைவிடங்களிலிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்தியதுடன், அவை உமாவின் கைகளுக்குக் கிடைப்பதையும் தவிர்த்துவிட்டார். 1979 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், புலிகள் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன், பாலசிங்கத்தையும், அவரது இரண்டாவது மனைவியான அவுஸ்த்திரேலியப் பெண்மணி அடேலையும் அழைத்துக்கொண்டு மும்பாயூடாக சென்னைக்குப் பயணமானார் கிருஷ்ணன். அக்காலத்தில் தமிழ்நாட்டில் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமாகவே இயங்கிவந்தது. பாலசிங்கம் உள்ளே நுழைவதை மீனாம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் அதிகம் விரும்பியிருக்கவில்லை. அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்த பேபி சுப்பிரமணியம் தூரத்தில், மக்களுடன் மக்களாக நின்று நடப்பதை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு நின்றார். பின்னர் ஒருவாறு சுங்க அலுவல்களை முடித்துக்கொண்டு கிருஷ்ணனுன், பாலசிங்கம் தம்பதிகளும் வாடகை வண்டியொன்றில் ஏறி அவர்களுக்கென்று முன்பதிவு செய்யப்பட்டிருந்த விடுதி ஒன்றிற்குச் சென்றனர். மிகவும் அழுக்காக, துப்பரவின்றி, ஒழுகும் மலசலகூடத்தைக் கொண்டிருந்த அந்தச் சிறிய அறையில் பாலசிங்கம் தம்பதிகளைத் தங்கவைத்துவிட்டு கிருஷ்ணன் அவசர அவசரமாகப் பிரபாகரனைச் சந்திக்கச் சென்றார். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted March 16 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 16 (edited) பிரபாகரனைச் சந்தித்த பாலசிங்கம் பாலசிங்கம் தமிழ்நாட்டிற்கு வந்திறங்கிய இரவு இரு சந்திப்புக்களில் கலந்துகொண்டார். முதலாவது உமா மகேஸ்வரனுடனும் அவரது குழுவுடனும் இடம்பெற்றது. புலிகள் இயக்கத்திற்காக பாலசிங்கம் உருவாக்கியிருந்த துண்டுப்பிரசுரங்கள் பற்றியே அந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. புலிகள் பற்றிய பாலசிங்கத்தின் ஆவண்ங்கள் உமா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமையவே எழுதப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதியவுடன் உமாவுக்கு அதனை அனுப்பிவைத்த பாலசிங்கம், உமா அவற்றைத் திருத்திச் சரி பிழை பார்த்தபின்னர் மீண்டும் பாலசிங்கத்திற்கு இறுதிவடிவமாக்க அனுப்பி வைப்பது வழமை. ஆகவே, அன்றைய சந்திப்பு ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பாகவே இருந்தது. அடேல் பாலசிங்கம் ஆனால், பிரபாகரனுடனான பாலசிங்கத்தின் சந்திப்பு வித்தியாசமானதாக இருந்தது. மிகவும் தோழமையாக, நட்புறவுடன் அச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. சரித்திரத்தின் இரு முக்கிய கதாப்பாத்திரங்களின் முதலாவது சந்திப்பாக அது அமைந்தது. நள்ளிரவளவில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி பிரபாகரனும், பேபி சுப்பிரமணியமும் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். பிரபாகரன் நீளக் காற்சட்டையும், மென்மையான நிறத்தில் அச்சிடப்பட்ட மேற்சட்டையினையும் அணிந்திருந்தார். பேபி சுப்பிரமணியம் வழமை போல வெண்ணிற வேட்டியும், நஷணல் மேலாடையும் அணிந்திருந்தார். கூடவே தன்னுடன் ஒரு பை நிறைய ஆவணங்களையும், அரசியல் கட்டுரைகளையும் எடுத்து வந்திருந்தார். அடேல் பாலசிங்கம் தான் எழுதிய விடுதலைக்கான வேட்கை எனும் புத்தகத்தில் இந்தச் சந்திப்புக் குறித்து எழுதும்பொழுது, அன்று தான் பிரபாகரனிடம் அவதானித்த ஆளுமையின் பண்புகள் எப்படி அவரை உலகத்தின் தலைசிறந்த்ச கெரில்லாத் தலைவராக உருவாக்கியிருந்தது என்பதுபற்றி எழுதுகிறார். "பயங்கவராதிகள் என்றழைக்கப்பட்ட, இளமையான, அப்பாவிகளாகத் தோற்றமளித்த அந்த இரு இளைஞர்களையும் பார்த்தபோது ஒருகணம் எனது கண்களை என்னால் நம்பமுடியாது போய்விட்டது. அவர்கள் பற்றி நான் அறிந்துகொண்டவைக்கும் அவர்களின் உருவ அமைப்புக்களுக்கும் இடையே எந்த ஒற்றுமையினையும் நான் காணவில்லை. சற்றுக் குட்டையான, நேர்த்தியாக உடையணிந்து காணப்பட்ட அந்த இரு இளைஞர்களைப் பார்த்தபோது, மிகவும் அப்பாவிகளாகத் தெரிந்தார்கள்" என்று அவர் எழுதுகிறார். பிரபாகரன் நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். பின்னர் வல வருடங்களாக பிரபாகரனின் விடுதலைப் பயணத்தில் பயணித்த அடேல் பின்வருமாறு கூறுகிறார், "தலைமுடியினை சீராக வாருவது அவருக்கே உரித்தான ஒரு பண்பு. உடையணிதல் என்பது வழக்கமான சம்பிரதாயங்கள் போன்று உடுத்தோமா, கிளம்பினோமா என்பது போல அல்ல பிரபாகரனுக்கு. அவரைப்பொறுத்தவரையில் அது ஒரு நிகழ்வு. அன்றிரவு எம்மைச் சந்திக்க வந்தபோது அவர் முழுமையாக ஆயுதம் தரித்திருந்தார். மிகவும் தளர்வான மேற்சட்டைக்குள் இடுப்பில் பத்திரமாக செருகப்பட்டிருந்த அவரது பிரத்தியேக ஆயுதத்தை கூர்ந்து கவனித்தாலன்றி, சாதாரணமாகத் தெரிந்துவிடாது. தனது மேலாடையினை இலகுவாக கழற்றி தனது ஆயுதத்தை துரிதமாக வெளியே எடுக்கும்வகையில் அழுத்தப் பொத்தான்களை அவர் தனச்து மேலாடைக்குப் பாவித்திருந்தார்". பிரபாகரனின் இளமையான முகம் நேர்த்தியாகச் சவரம் செய்யப்பட்டு, பிரகாசமாகவும் தெளிவாகவும் இருந்தது. அவரின் ஊடுருவிப் பார்க்கும், அகன்ற கறுத்த விழிகள் பற்றி அடேல் பின்வருமாறு எழுதுகிறார், " அவர் உங்களைக் கூர்ந்து பார்க்கும்போது அவரது பார்வை உங்களின் உள்ளத்தை ஊடுருவிப் போவது உங்களுக்குப் புலப்படும். அவரது பார்வையின் ஆளம் அவரின் மனதையும், எண்ணங்களையும் வெளிக்காட்டும். பிரபாகரனுடனான எனது வாழ்க்கையில் அவரது ஆள ஊடறுத்து நோக்கும் பார்வை பல விடயங்களை எனக்குச் சொல்லித் தந்திருக்கிறது". தலைவருடன் எங்கள் தேசத்தின் குரல் அந்தச் சந்திப்பு நள்ளிரவில் இருந்து அதிகாலைவரை தொடர்ந்தது. அடேலைப் பொறுத்தவரை பிரபாகரனும் பாலசிங்கமும் ஒருவரை ஒருவர் அனுமானிக்கவும், கணிப்பிடவும், புரிந்துகொள்ளவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்துக்கொண்டார்கள் என்று எழுதுகிறார். ஒவ்வொருவரும் ஈழம் எனும் தனிநாட்டிற்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை நாடிபிடித்தறிவதே அவர்கள் இருவரினது நோக்கமாக இருந்தது. பாலசிங்கத்தின் முகபாவனைகள் ஊடாகவும், அவரை அரசியல் ரீதியிலான கேள்விகளைக் கேட்பதன் மூலமாகவும் அளவிடத் தொடங்கினார் பிரபாகரன். தன்னுடன் பேசும்போது, பாலசிங்கத்தின் முகபாவனையின்போது அசைந்த ஒவ்வொரு தசையினையும் பிரபாகரன் கூர்ந்து கவனித்தார். பாலசிங்கத்தின் பின்புலம், அவரது நம்பிக்கைகள் குறித்து பிரபாகரன் அறிந்துகொள்ள விரும்பினார். சேகுவேரா மற்றும் மாஒ சேதுங் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை பாலசிங்கம் மொழிபெயர்த்தது பற்றியும், தானாக எழுதிய அரசியற் கட்டுரைகள் பற்றியும் பிரபாகரன் கேட்டுத் தெரிந்துகொண்டார். சரித்திரப் பெருமைமிக்க உறவொன்றினை அன்று ஆரம்பித்துக்கொண்ட அவர்கள் இருவரும் அதனை இறுதிவரை தொடர்ச்சியாகப் பேணிவந்தனர். அந்தச் சந்திப்பு நிறைவுபெறும் நேரம் வந்ததும், பாலசிங்கம் இரு விடயங்கள் குறித்து பேசலாம் என்று எண்ணினார். முதலாவது பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான முறுகல் நிலையினைச் சரிசெய்வது. இரண்டாவது புலிகளின் உறுப்பினர்களுக்கு அரசியல்ப் பாடங்களை நடத்துவது. அரசியல்ப் பாடங்களை எடுப்பதற்கு உடனேயே சம்மதித்த பிரபாகரன், தானும் அதில் கலந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். ஆனால், முறுகல் நிலையினைத் தளர்த்துவது குறித்துப் பிடிவாதமாக இருந்தார். "தனது கொள்கைகளை காற்றில்ப் பறக்கவிட்ட ஒருவருடன் என்ன சமரசம் வேண்டிக் கிடக்கிறது?" என்று அவர் பாலசிங்கத்திடம் கேட்டார். "இது எமது போராட்டத்தையே அழித்துவிடும்" என்ற அவரே தொடர்ந்தார். தமிழர்கள் மிகவும் பலவீனமான நிக்லையில் இருப்பதாகப் பிரபாகரன் கூறினார். அடிமை வாழ்வை நோக்கி தமிழர்கள் தள்ளப்பட்டுவருவதாக அவர் கூறினார். அரச படைகளைக் கொண்டும், தமது சனத்தொகைப் பலத்தைக் கொண்டும் ஆளும் சிங்கள வர்க்கம் தமிழர்களை அடிமைகளாக நடத்த எத்தனிக்கிறது என்று அவர் கூறினார். தமிழர்களின் சமாதான வழியிலான போராட்டங்கள் முற்றாகத் தோற்றுவிட்டன என்று அவர் கூறினார். பெரும்பான்மையினரின் விருப்பங்களை சிறுபான்மையினர் மேல் திணிக்கும் அளவிற்கு சனநாயகம் விபச்சாரப் பொருளாக மாறியிருப்பதாக அவர் கூறினார். ஆகவே, தமிழர்களுக்கு முன்னாலிருக்கும் ஒரே வழி ஆயுத ரீதியிலான போராட்டம் மட்டுமே என்று பாலசிங்கத்திடம் அவர் எடுத்துக் கூறினார். பாலசிங்கம் உடனடியாகப் பிரபாகரனின் பேச்சில் கவரப்பட்டுப் போனார். தனது பின்வரும் கூற்றின்மூலம் பிரபாகரன் பாலசிங்கத்தை தன்பக்கம் இழுப்பதில் பூரண வெற்றி கண்டார். "இலங்கை அரசாங்கம் ஒரு அடக்குமுறை அரசாகும். இந்த அரசு சிங்கள இனவாதிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது. தமிழர்களை அடக்குமுறைக்கு உட்படுத்த தனது ஆயுதங்களான இராணுவத்தையும், பொலீஸாரையும் அது பாவிக்கிறது. ஆகவே, தமிழர்களின் முன்னால் உள்ள முதலாவது எதிரிகளாக இருப்பது சிங்கள இராணுவமும், பொலீஸும்தான். தமிழர்களின் சமாதான ரீதியிலான போராட்டங்களையும், வன்முறை ரீதியிலான போராட்டங்களையும் இவை கொடுமையாக நசுக்கி வருவதோடு, சிங்களவரின் கீழ் முற்றான அடிபணிதலுக்கும் தள்ளி வருகின்றனர்". "இராணுவமும், பொலீஸாரும் தமது எதிரிகள் என்பதை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கெதிராக அவர்கள் போராட வேண்டும்". "ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கும் முகமாக தமிழர்கள் ஒன்றுதிரளவேண்டும். கற்பித்தல் வழிகள் மூலமும், பிரச்சாரம் மூலமும் இதனைச் செய்வதென்பது சாத்தியமில்லாததுடன், நேர விரயமும் ஆகும். இராணுவம் மீதும் பொலீஸார் மீதும் மிகவும் கடுமையாகத் தாக்க வேண்டும். அவர்கள் பதிலுக்கு தமிழர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வார்கள். இது மக்களை தமது தேசம் மீது, விடுதலை மீது அக்கறை கொள்ளவைக்கும். மக்கள் போராளிகளிடம் அடைக்கலம் தேடி வருவார்கள்". "இராணுவத்தையும், பொலீஸாரையும் தமிழர்களின் எதிரிகளாகக் காட்டுவதன் மூலம், போராளிகளை அவர்களின் பாதுகாவலர்களாக காட்ட முடியும். இதன்மூலம் ஆயுதப்போராட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்". "மக்களின் நம்பிக்கையினை வளர்த்தெடுப்பதும், அதனைத் தக்கவைப்பதும் மிகவும் கடிணமான ஒரு காரியம். ஒழுக்கமே இவை எல்லாவற்றிற்கு மிக அவசியமானது. மக்களின் காவலர்கள் ஒழுக்கமின்றிச் செயற்பட முடியாது. ஒழுக்கமின்றிப் போனால், எமது ஆயுதப் போராட்டம் முற்றாக உருக்குலைந்துபோகும்". என்று பிரபாகரன் பாலசிங்கத்திடம் கூறினார். Edited March 16 by ரஞ்சித் Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted ஞாயிறு at 10:00 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted ஞாயிறு at 10:00 இயக்கத்தை விட்டு வெளியேறிய பிரபாகரன் பிரபாகரனின் நிலைப்பாட்டிற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் பாலசிங்கம். ஆனால், பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் சிக்கலை எப்படியாவது தீர்த்துவிடவேண்டும் என்று அவர் தொடர்ந்தும் முயற்சிசெய்தார். ஆகவே, மத்திய குழுவின் முதலாவது தீர்மானத்தின்படி உமாவும் ஊர்மிளாவும் தமக்கிடையே இருக்கும் பாலியல் உறவினை ஒத்துக்கொண்டு வெளிப்படையாகத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவர்களை பாலசிங்கம் கேட்டார். ஆனால், இதனை உமாவும், ஊர்மிளாவும் முற்றாக மறுத்துவிட்டனர். சரி, உடனடியாக இல்லாவிட்டாலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகாவது திருமணம் முடிப்பதாக ஒப்புதல் தாருங்கள் என்று கேட்டார் பாலசிங்கம். அதற்கும் அவர்கள் இருவரும் மசியவில்லை. பாலசிங்கம் கூறுவதுபோல் எதிர்காலத்தில் திருமணம் முடிக்க தாம் ஒத்துக்கொண்டால், தாம் குற்றமிழைத்தவர்கள் என்பதை ஒத்துக்கொள்வதாக இருக்கும் என்பதால், தாம் ஒருபோதும் பாலசிங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கப்போவதில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர். உமாவின் ஆதரவாளர்கள் பாலசிங்கத்தை, பிரபாகரன் உமா மகேஸ்வரனுக்கு எதிராகத் தூண்டிவிடுவதாக விமர்சிக்கத் தொடங்கினர். பாலசிங்கத்திற்கு சிறப்பான தங்குமிட வசதிகளைச் செய்துகொடுத்ததன் மூலம், அவரை தன்பக்கத்திற்குப் பிரபாகரன் இழுத்துவைத்திருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினர். ஆனால், பாலசிங்கத்திற்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தங்குமிடம் எவ்வளவு அசெளகரியமானதென்பதை பாலசிங்கத்தின் சந்திப்பின்போதே பிரபாகரன் முதன் முதலில் அறிந்துகொண்டார். ஆகவே, பாலசிங்கம் தம்பதிகள் தங்குவதற்கென்று ஓரளவிற்கு வசதியான விடுதியொன்றினைத் தேடுமாறு தனது சகாக்களுக்குப் பணித்தார் பிரபாகரன். புதிதாக ஒழுங்குசெய்யப்பட்ட விடுதி குறித்து அடேல் திருப்தி தெரிவித்தததுடன், அதனை ஒழுங்கு செய்தமைக்காக பிரபாகரனுக்கு நன்றியும் தெரிவித்தார். தனது போராளிகளின் செளகரியங்கள் குறித்து பிரபாகரன் கொண்டிருந்த அக்கறையே ஏனைய போராளித் தலைவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. தனது போராளிகளுக்கு சிறந்த உணவு, சுத்தமான உறைவிடம், தரமான குடிநீர் ஆகியவற்றை வழங்குவதில் பிரபாகரன் கவனமெடுத்துச் செயற்பட்டு வந்தார். அவரின் பரம வைரிகளான இலங்கை இராணுவத்தினர் இதுகுறித்துக் குறிப்பிடுகையில், "பிரபாகரனின் இந்த அக்கறையே புலிப் போராளிகளை உத்வேகத்துடன் போராட ஊக்குவித்திருந்தது" என்று கூறுகிறார்கள். அருளர் தனது அனுபவம் பற்றிக் குறிப்பிடுகையில், பூந்தோட்டம் பயிற்சி முகாமிற்கு ஒருமுறை பிரபாகரனைச் சந்திக்க மதிய வேளைக்குப் பின்னர் அவர் போயிருந்தார். காட்டிற்குச் சென்ற பிரபாகரன் இரு காட்டுக் கோழிகளை வேட்டையாடி வந்து அவருக்குச் சமைத்து உணவளித்ததாக கூறுகிறார். மேலும் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடிப்பது பிரபாகரனின் வழக்கம். தனது போராளிகளுக்கும் இதனையே பிரபாகரன் சொல்லிவந்தார். தன்னோடு எப்போதுமே கொதிக்கவைத்து ஆறிய நீரைப் போத்தலில் இட்டு வைத்துக்கொள்வார் பிரபாகரன். தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் கொதித்தாறிய நீரை எடுத்துவைத்துக்கொள்வதும் ஒரு அங்கமாக இருந்தது. பிரபாகரனும், பாலசிங்கமும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளத் தொடங்கியதுடன், கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினர். தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்கும் விடுதியில் செஞ்சி ராமச்சந்திரனின் அறையில் பாலசிங்கம் நடத்திய அரசியல் வகுப்புக்களில் பிரபாகரனும் கலந்துகொள்வார். உமாவும் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டதுண்டு. பாலசிங்கத்தின் வகுப்பில் அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் பிரபாகரன் ஒருபோதும் அவரைக் குறுக்கிட்டுக் கேள்வி கேட்டதில்லை என்று கூறும் அடேல் பாலசிங்கம், உமாவோ அடிக்கடி பாலசிங்கத்தைக் குறுக்கிட்டு அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டு வந்ததாகவும் குறிப்பிடுகிறார். சிலவேளைகளில் பாலசிங்கம் கூறுவதைத் தவறென்றும் உமா வாதாடியதாகவும், இது பாலசிங்கத்தை பலமுறை எரிச்சலடைய வைத்திருந்ததாகவும் அடேல் கூறுகிறார். பிரபாகரன் நோக்கி பாலசிங்கம் சாய்வதற்கும் பிரபாகரனின் இந்த நற்குணம் ஒரு காரணமாக அமைந்திருந்ததாகவும் அடேல் மேலும் கூறுகிறார். பிரபாகரனுக்கும், உமா மகேஸ்வரனுக்கும் இடையிலான பிணக்கினைத் தீர்க்கமலேயே பாலசிங்கம் லண்டன் திரும்பினார். உமாவை இயக்கத்தை விட்டு வெளியேறுமாறு பிரபாகரன் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வந்தார். இப்பிணக்கு நீட்டிக்கப்பட்டு வந்தமையினால் சலிப்படைந்த சில மூத்த உறுப்பினர்கள் உமாவிடம் சென்று பிரபாகரனை நேரில் சந்தித்து பிணக்கினை சுமூகமாகத் தீர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் அந்த சமரச முயற்சியும் தோல்வியைச் சந்தித்தது. ஊர்மிளாவின் பாதம் மீது பிரபாகரன் காறி உமிழ்ந்தபோது ஊர்மிளா அழத் தொடங்கியதுடன், "என்னை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்? இப்படி என்னை நடத்துவது நியாயமா?" என்று அவர் கேட்டார். பிரபாகரனின் செயலுக்காக அவர் ஊர்மிளாவிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று சில மூத்த உறுப்பினர்கள் கேட்டனர், பிரபாகரன் மறுத்துவிட்டார். பிரபாகரனின் கோரிக்கையான இயக்கத்தை விட்டு விலக வேண்டும் என்பதை பிடிவாதமாக மறுத்துவிட்ட உமா, பிணக்கு இன்னமும் ஆளமாகக் காரணமானர். இயக்கத்திற்குள் உருவாகிவந்த சிக்கலை தீர்ப்பதற்கு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் மீண்டும் இலங்கைகு வந்தார். ஊரில் இருந்த தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்ட உமா மகேஸ்வரன், தனது முன்னைய புகார்களான போராட்டத்தின் வழிமுறை, உள்ளக ஜனநாயகம் குறித்துத் தொடர்ந்தும் வாக்குவாதப்படும்படி கோரியிருந்தார். அவரின் திட்டத்தின்படி அவரது ஆதரவாளர்கள் இவற்றிற்கு மீளவும் உயிர்கொடுத்து அமைப்பினுள் சர்ச்சைகள் தொடர்ச்சியாக உருவாகக் காரணமாக இருந்தனர். உமா இன்னுமொரு சர்ச்சையினையும் உருவாக்கினார். அதாவது பிரபாகரன் அமிர்தலிங்கத்தின் கட்டளைப்படியே ஆடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது ஓரளவிற்கு உண்மைதான், பிரபாகரன் அமிர்தலிங்கம் மீது அபிமானம் வைத்திருந்தார். அமிர்தலிங்கத்திற்கும் பிரபாகரனைப் பிடித்திருந்தது. ஈழத்திற்காகப் பிரபாகரன் கொண்டிருந்த அர்ப்பணிப்பை மெச்சிய அமிர்தலிங்கம், ஆயுதப்போராட்டம் ஒன்றினைத் தலைமைதாங்கி நடத்தும் ஆளுமை பிரபாகரனிடம் இருப்பதாக முழுமையாக நம்பியிருந்தார். அமிர்தலிங்கத்துடன் சிறந்த நட்புறவைப் பிரபாகரன் பேணிவந்தார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அமிர்தலிங்கம் செய்த தியாகங்களை பிரபாகரன் பெரிதும் மதித்தார். ஈழ விடுதலைக்காக அமிர்தலிங்கம் கொண்ட அர்ப்பணிப்பை மெச்சிய பிரபாகரன், "இந்த குணாம்சமே எம் இருவரையும் பிணைத்து வைத்திருக்கிறது, இந்த பொதுவான இலட்சியம் உயிர்ப்புடன் இருக்கும்வரை எமது சிநேகம் தொடர்ந்திருக்கும்" என்று தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்போது பிரபாகரன் தனக்கும் அமிர்தலிங்கத்திற்கும் இருக்கும் சிறப்பான சிநேகம் குறித்து குறிப்பிட்டிருந்தார். பிரபாகரன் மீது விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பழைய சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் பேசி வந்ததுடன், அவரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும் முயன்று வந்தனர். பற்குணராஜா மற்றும் மைக்கேல் (மட்டக்களப்பு) ஆகியோரின் கொலைகள் பிரபாகரனின் தவறுகளாலேயே நடத்தப்பட்டதாகக் அவர்கள் கூறினர். பற்குணராஜாவே அல்பேர்ட் துரையப்பா கொல்லப்பட்டபின்னர் தப்பிச்செல்லும்போது காரை ஓட்டிச் சென்றவர் என்பதுடன், ஆரம்பக் காலங்களில் புலிகளுக்கும் ஈரோஸ் அமைப்பிற்கும் இடையே உறவினை ஏற்படுத்துவதில் முக்கியமானவராகவும் கருதப்பட்டவர். அவரும், மைக்கேலும் மத்திய குழுவின் ஒருமித்த தீர்மானத்திற்கமைய இயக்க ஒழுக்கத்தை மீறியதற்காகக் கொல்லப்பட்டிருந்தனர். மத்திய குழுவின் இந்த முடிவினை முதலில் ஆதரித்து வக்களித்த நாகராஜ இறுதியில் அக்கொலைகளுக்கான பழியினைப் பிரபாகரன் மீது சுமத்தினார். புலிகள் இயக்க ஆரம்ப உறுப்பினர்களின் தகவல்களின்படி பற்குணராஜாவை வவுனியாவிற்கு அழைத்துச் சென்று கொன்றதே நாகராஜா தான் என்று கூறுகிறார்கள். பிரபாகரன் இலங்கைக்கு மீள வந்ததன் பிறகு, உருவாகிவந்த சிக்கலான சூழ்நிலைபற்றி விவாதிக்க, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலுமாக மத்திய குழு இருமுறை கூடியிருந்தது. இரு கூட்டங்களும் மிக காரசாரமாக இடம்பெற்றிருந்தன. முதலாவதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்திய குழுவிற்கு புதியதாக 5 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு தானே இறுதியான முடிவினை எடுப்பேன் என்று பிரபாகரன் மத்திய குழுவினரிடம் உறுதிபடத் தெரிவித்தார். மற்றையவர்கள் இதனை எதிர்த்தார்கள். அனைத்து முடிவுகளும் கூட்டாகவே எடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அதற்கு ஏளனத்துடன் பதிலளித்த பிரபாகரன், "அப்படியானால், நாமும்கூட இன்னொரு அரசியல்க் கட்சியாக மாறிவிடுவோம். பேசிக்கொண்டிருப்பதுடன், செயலில் ஒருபோதும் இறங்கப்போவதில்லை" என்று கூறினார். வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நாகராஜா, பரா மற்றும் ஐய்யர் ஆகியோர் புலிகள் இயக்கத்தை பாரிய போராட்ட அமைப்பாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பிரபாகரனைப் பொறுத்தவரை அக்கோரிக்கை மிகையானதாகத் தெரிந்தது. ஆயுதப் போராட்ட கரந்தடிப்படை ஒன்றினை உருவாக்கும் தனது திட்டங்கள் உடையத் தொடங்குவதாக பிரபாகரன் உணரத் தலைப்பட்டார். இதனால் அவர் வெறுப்படைந்தார். கண்களில் கண்ணீருடனும், தழுதழுத்த குரலுடனும் பிரபாகரன் பின்வருமாறு கூறினார், "இந்த இயக்கத்திற்காக நான் பல விடயங்களைச் செய்திருக்கிறேன். ஆனால், எவரும் அதனை உணர்ந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை. இன்றுடன் நான் புலிகள் அமைப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினார். அங்கிருந்த பலருக்கு அது பாரிய அதிர்ச்சியைக் கொடுத்ததுடன், சிலர் அவரின் கைகளைப் பற்றிச் செல்லவேண்டாம் என்று வேண்டத் தொடங்கினர். ஆனால், பிரபாகரன் எவரின் சொல்லையும் கேட்கத் தயாராக இருக்கவில்லை. கூட்டத்தில் இருந்த ஒருவர் தனது கைத்துப்பாக்கியினை பிரபாகரனிடம் நினைவுச் சின்னமாகக் கொடுக்க முனைய, பிரபாகரன் அதனை ஏற்க மறுத்து விட்டார். அவர் வெளியேறி சென்றார். வெறுங்கைய்யுடன், ஆனால் புதிய சரித்திரம் ஒன்றினைப் படைக்கும் திடமான உறுதியுடன் அவர் சென்றார். அங்கிருந்து சென்ற பிரபாகரன், தின்னைவேலியில் அமைந்திருந்த தனது மாமனாரின் வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து தனது எதிர்காலம் குறித்துச் சிந்தித்து வந்தார். தன்னுடன் ஆரம்பத்தில் இணைந்த தோழர்களும், சேர்த்த ஆயுதங்களுமின்றி பிரபாகரன் இருந்தபோதிலும், தான் அப்படியே தொடர்ச்சியாகப் பயணிக்க முடியாதென்பதை அவர் உணர்ந்தே இருந்தார். தன்னுடன் சேர்ந்து பயணிக்க அர்ப்பணிப்புள்ள சில இளைஞர்களையும், சில ஆயுதங்களையும் சேகரித்துக்கொண்டு, தனது உறவினர்கள் தலைமையேற்று நடத்திவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துடன் கூட்டணியொன்றினை அமைத்து சேர்ந்து பயணிக்கலாம் என்று அவர் எண்ணினார். தனது மாமனாரின் உதவியுடன், அவரது வீட்டில் டெலோ இயக்கத்தின் தங்கத்துரை, குட்டிமணி மற்றும் நடேசுதாசன் ஆகியோருடன் இதுகுறித்துப் பேசுவதற்காக கூட்டமொன்றினை ஒழுங்குசெய்தார். தங்கத்துரையிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய பிரபாகரன், "நான் அன்று உங்களின் தம்பியாக விட்டு விலகிச் சென்றேன். இன்று அதே தம்பியாக உங்களிடம் மீளவும் வந்திருக்கிறேன்" என்று கூறினார். பிரபாகரன் தனித்துச் சுதந்திரமாகச் செயற்பட தாம் அனுமதியளிப்பதாகவும், அவருக்கு சில ஆயுதங்களைத் தரவிரும்புவதாகவும் குட்டிமணி கூறினார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் பிரபாகரனை தமது இயக்கத்தினுள் மீள உள்வாங்குவதன் மூலம் இரு அமைப்புக்களும் சேர்ந்தியங்கலாம் என்று தங்கத்துரை தீர்மானித்தார். தமிழ்நாட்டில் டெலோ அமைப்பினருக்குப் பயிற்சியளிக்க உருவாக்கப்படடவிருந்த முகாம்களுக்கு பொறுப்பாக பிரபாகரனை நியமிக்கலாம் என்கிற தங்கத்துரையின் விருப்பத்திற்கு பிரபாகரனும் சம்மதித்தார். திருச்சிக்குச் சென்ற பிரபாகரன் பயிற்சி முகாம்களை உருவாக்கினார்.அவரும், அவரின் தோழர்களும் இணைந்து காட்டிற்கு அருகில் அமைந்திருந்த மேய்ச்சல் நிலங்களைத் துப்பரவு செய்து கொட்டகைகளை அமைத்தனர். தமது உணவைத் தாமே தயாரித்ததுடன், பாய்களில் படுத்துறங்கினர். பிரபாகரன் இரண்டாவது முகாமை மதுரையில் உருவாக்கினார். இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளின் உதவியினை பயிற்சிகளுக்குப் பிரபாகரன் பயன்படுத்தினார். புலேந்திரனுடன் சந்தோஷம் மாஸ்ட்டர் ஆனாலும் பிரபாகரனின் மனது அமைதியடையவில்லை. யாரோ ஒருவரின் அமைப்பிற்கு பயிற்சிகளை ஒருங்கிணைப்பதும், பயிற்றுவிப்பதும் அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. தான் தனித்துச் செயற்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். தனக்கு விசுவாசமான அமைப்பொன்று தனக்குத் தேவை என்பதை அவர் உணர்ந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அரியாலையைச் சேர்ந்தவரும் பின்னாட்களில் திருகோணமலை மாவட்டத்தின் புலிகளின் தளபதியாகப் பணியாற்றியவருமான சந்தோஷம் என்னிடம் அன்றைய காலம் குறித்துக் கூறுகையில், பிரபாகரன் 1978 இலிருந்து 1980 வரையான காலப்பகுதியில் இரு முக்கியமான விடயங்களைக் கற்றுக்கொண்டதாக என்னிடம் கூறினார். முதலாவது , தனக்கு முற்று முழுதான விசுவாசத்தைக் காட்டும் அமைப்பொன்றினை உருவாக்க வேண்டும் என்பது. இரண்டாவது, இயக்கத்தின் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கும் அதிகாரம் தன்னிடத்திலேயே இருக்க வேண்டும் என்பது. சந்தோசம் மேலும் என்னுடன் பேசுகையில், ஆரம்பத்தில் தன்னுடன் இணைந்த பல உறுப்பினர்களிடமிருந்து பெருமளவு பிரச்சினைகளை பிரபாகரன் எதிர்கொண்டதாகக் கூறினார். "அவர்களில் பெரும்பாலானவர்கள் பேச்சில் மட்டுமே ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு சின்னப்பிரச்சினையினைக் கூடத் தீர்க்க முடியாமல் விதண்டாவாதங்களில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொருவரும் தத்தமது திசையிலேயே இயக்கம் இயங்கவேண்டும் என்று ஒருவருக்கொருவர் எதிராகச் செயற்பட்டனர். அப்படியானவர்களைக் கொண்டு எந்த விடுதலை இயக்கமும் வெற்றிபெற முடியாது" என்று பிரபாகரன் தன்னிடம் கூறியதாகக் கூறினார். முத்துக்குமாரசாமி தலைமையில் தமிழ் விடுதலைக் கழகம் என்கிற பெயரில் சில காலம் மட்டுமே அமைப்பாகவிருந்து, செயற்பாடுகள் ஏதுமின்றி காணாமற்போன ஒரு குழுவினர் குறித்துப் பிரபாகரன் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்ததாகவும், சமூக சீர்திருத்தம் ஒன்றின்மூலமே அவர்கள் விடுதலையினை வேண்டி நின்றதாகவும் கூறினார். தனக்கு விசுவாசமாகவிருந்த முன்னாள் போராளிகள் சிலருடன் பிரபாகரன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். பேபி சுப்பிரமணியம், பண்டிதர், ராகவன், கிட்டு, செல்லக்கிளி மற்றும் சீலன் ஆகியோர் அவருடன் இருந்தனர். அத்துடன் ஆயுதங்களையும் சேகரிக்கத் தொடங்கினார் பிரபாகரன். அவர் முதலில் வாங்கிய ஆயுதம் 0.38 மி மீ கைத்துப்பாக்கியாகும். 1970 இல் தயாரிக்கப்பட்ட 0.38 கொல்ட் வகை துப்பாக்கி ஜி - 3 ரக ரைபிள் அத்துப்பாக்கியினை இந்தியர் ஒருவரிடமிருந்து 300 ரூபாய்களுக்கு அவர் வாங்கினார். பின்னர் ஓய்வுபெற்ற இந்திய இராணுவ அதிகாரி ஒருவரிடமிருந்து 3000 ரூபாய்களுக்கு ஜி - 3 ரக ரைபிள் ஒன்றினை வாங்கினார். அப்பணத்தைச் சேகரிப்பதற்கு அவர் அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. இந்தத் துப்பாக்கியைக் கொள்வனவு செய்வதில் பிரபாகரனுடன் சேர்ந்து செயற்பட்ட கிட்டு, விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மடலான "விடுதலைப் புலிகள்" இல் பேட்டியளிக்கும்போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் சிரமங்களைச் சந்தித்த பிரபாகரன், "நாம் இப்படியே ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொண்டிருக்க முடியாது. எதிர்காலத்தில் எதிரியிடமிருந்தே நாம் ஆயுதங்களைக் கைப்பற்ற வேண்டும்" என்று பிரகடணம் செய்ததாகக் கூறியிருக்கிறார். அச்செவ்வியில் கிட்டு மேலும் கூறும்போது, எதிரியிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவது என்பது எமது கொள்கையில் ஒரு திருப்புமுனையான தீர்மானமாக இருந்தது. அதன் பின்னர் தாக்குதல்களின்போது எதிரியின் ஆயுதங்களைக் கைப்பற்றுவதென்பது முக்கிய கடமையாகவும் ஆகிப்போனதென்றும் கூறுகிறார். தலைவருடன் கிட்டு, சொர்ணம் மற்றும் போராளிகள் பிரபாகரன் தனது அமைப்பினை மீளுருவாக்கம் செய்வதிலும், தங்கத்துரையும் குட்டிமணியும் தமது போராளிகளுக்கு பயிற்சியளிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்க 1980 ஆம் ஆண்டு பெரும்பாலும் சம்பவங்கள் அற்ற அமைதியான ஆண்டாகவே கடந்து சென்றது. இந்த அசாதாரண அமைதி ஜெயாருக்கும், அமிர்தலிங்கத்திற்கும் மிகவும் தவறான செய்தியொன்றைச் சொல்லியிருந்தது. ஜெயாரைப்பொறுத்தவரை வீரதுங்கவின் சுற்றிவளைப்பு மற்றும் தேடியழித்தல் நடவடிக்கைகள் தமிழ் ஆயுதக் குழுக்களை முழுமையாக ஒடுக்கிவிட்டதாக நினைத்திருந்தார். அதேவேளை, அமிர்தலிங்கமும் ஜெயாரின் ராணுவ நடவடிக்கைகளால் போராளி அமைப்புக்கள் பலவீனமாகிவிட்டதாகவும், ஆகவே இனிமேல் அவர்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது சுலபமாகிவிடும் என்றும் நம்பத் தலைப்பட்டார். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் Posted திங்கள் at 05:23 கருத்துக்கள உறவுகள் Share Posted திங்கள் at 05:23 தொடருங்கள், ரஞ்சித்..! ஆவலுடன் பின் தொடருகின்றேன்..! 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted திங்கள் at 06:26 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted திங்கள் at 06:26 யாழ் நூலக எரிப்பு யாழ்ப்பாணம் நூலகம் பிரிகேடியர் வீரதுங்கவின் சுற்றிவளைப்பு மற்றும் தேடியழித்தல் இராணுவ நடவடிக்கைகளினால் போராளிகள் அடங்கி ஒடுங்கிவிட்டார்கள் என்று நினைத்த ஜெயார், தனது அரசியல் இருப்பினை மேலும் பலப்படுத்தும் முகமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பிரேரிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த விழைந்தார். இந்த விசேட ஆணைக்குழு ஜெயாரினால், நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் திகதி அமைக்கப்பட்டிருந்தது. தனது பிரேரணைகளை ஆணைக்குழு 1980 ஆம் ஆண்டு சித்திரை மாதம் ஒரு அறிக்கையாகச் சமர்ப்பித்திருந்தது. தென்னக்கோனின் இந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும், தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் இடையே உருவாகி வந்த விரிசலும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான அறிவிப்பை ஜெயார் வெளியிட்டிருந்த காலப்பகுதியில் , 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கெதிராக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காதது குறித்து அக்கட்சியின் இளைஞர் பிரிவு தனது ஆட்சேபணையினை வெளியிட்டிருந்தது. வட மாகாணத்தின் பலவிடங்களிலும் தமது தலைமையினை விமர்சித்து சுலோககங்கள் எழுதப்பட்டிருந்தன. "நீங்கள் பெற்றுத்தருவதாகக் கூறிய ஈழம் இதுதானோ?" என்று ஒரு வாசகம் தலைமையைக் கேள்வி கேட்டிருந்தது. தந்தை செல்வாவின் இளைய மகனும், இந்தியக் கைக்கூலியுமான எஸ் சி சந்திரகாசன் 1979 ஆம் ஆண்டு மார்கழி 27 ஆம் திகதி அவசரகாலச் சட்டம் தற்காலிகமாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட வேளை மாவை சேனாதிராஜா சிறையிலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்ததும், சுதந்திரன் அமைப்பினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தார். சுதந்திரன் பத்திரிக்கை தந்தை செல்வாவினால் தனது சமஷ்ட்டிக் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் இப்பத்திரிக்கை தமிழர் ஐக்கிய முன்னணியின் கொள்கைகளையும் முன்னெடுத்துச் சென்றிருந்தது. 1977 ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் மரணத்திற்குப் பின்னர் அவரது இளைய மகனான எஸ் சி சந்திரகாசன் நடத்தி வந்தார். 1980 ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி இப்பத்திரிக்கை மிகவும் காரசாரமான தலையங்கத்தைத் தாங்கி வெளிவந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினைக் கடுமையாக விமர்சித்திருந்த இப்பத்திரிக்கை, போலியான மாவட்ட அபிவிருத்திச் சபைகளைக் காட்டி தமிழரை ஏமாற்றாமல் தாம் உறுதியளித்தவாறு சுதந்திரத் தனிநாடு நோக்கிய பயணத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது. அக்காலத்தில் சுதந்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக கோவை மகேசனே செயற்பட்டு வந்தார். கோப்பாயைச் சேர்ந்த மகேஸ்வர ஷர்மா தனது பெயரைக் கோவை மகேசன் என்று மாற்றியிருந்தார். அரசியல் மடல் எனும் தலைப்பில் அவர் எழுதிவந்த தீவிர அரசியல் கட்டுரை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது. அவ்வாறானதொரு அரசியல் கட்டுரையில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கோவை மகேசன் அதனை எள்ளி நகையாடியுமிருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் உத்தியோகபூர்வப் பத்திரிக்கையாக இருந்தபோதும், கோவை மகேசனின் அரசியல் கட்டுரைப்பகுதியில் தலையிடுவதில்லை என்கிற தந்தை செல்வாவின் முடிவினால் அமிர்தலிங்கமோ அல்லது முன்னணியின் தலைவர்களோ கோவை மகேசன் முன்வைத்து வந்த விம்ர்சனங்களை கட்டுப்படுத்த முடியாமல்ப் போயிற்று. மேலும், முன்னணியினரின் கருத்துப்படி கோவ மகேசனுக்கு தந்தை செல்வாவின் மகனான சந்திரகாசனின் பலமான ஆதரவு இருந்தமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது என்கிறர்கள். ஆகவே, கோவை மகேசனின் கடுமையான விமர்சனங்களுக்குப் பதிலளிக்க அமிர்தலிங்கம் உதயசூரியன் எனும் பெயரில் இன்னொரு பத்திரிக்கையினை ஆரம்பித்தார். அப்பத்திரிக்கையை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ பத்திரிக்கை என்றும் அவர் அழைக்கத் தொடங்கினார். அப்பத்திரிக்கை பறவைகளே பறவைகளே எனும் தலைப்பில் விசேட பகுதியொன்றைத் தாங்கி வெளிவந்தது. இப்பகுதியை கோவை மகேசனின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ஒரு களமாக அமிர்தலிங்கம் பாவித்து வந்தார். இவ்விரு பத்திரிக்கைகளினதும் ஏட்டிக்குப் போட்டியான அரசியல் விவாதங்கள் வாசகர்களான தமிழ் மக்களை பெரிதும் ஈர்த்திருந்தன. உதாரணத்திற்கு, கோவை மகேசன் ஒருமுறை சுதந்திரனில் பின்வருமாறு எழுதியிருந்தார், "சோறு வேண்டாம் சுதந்திரமே வேண்டும் பாலம் வேண்டாம் ஈழமே வேண்டும்" அதற்கு உதயசூரியனில் பதிலளித்த அமிர்தலிங்கம் பின்வருமாறு எழுதுகிறார், "சோறும் வேண்டும் சுதந்திரமும் வேண்டும் பாலமும் வேண்டும் அந்தப் பாலத்தை வைத்தே ஈழத்தை உருவாக்கும் விவேகமும் வேண்டும்". அவ்வேளை மாவை சேனாதிராஜாவும், உணர்வெழுச்சிகொண்ட இளையவர்களான ஈழவேந்தன், தர்மலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய கோவை மகேசன் அமைப்பும் ஒருங்கிணைந்து வெளியிட்ட தீர்மானத்தில் 1980 ஆம் ஆண்டு வைகாசி 31 ஆம் திகதிக்குள் தனிநாடு நோக்கிய பயணத்தை முன்னணியினர் ஆரம்பிக்காதுவிடில், தாம் பிரிந்து சென்று அதனைச் செய்யப்போவதாக அச்சுருத்தியிருந்தனர். சிறிது நாட்களின் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் ஒருபோதுமே செயலில் இறங்கமுடியாது என்று விமர்சித்துவிட்டு மாவை சேனாதிராஜா அக்கட்சியிலிருந்து விலகிச் சென்றார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், அதன் இளைஞர் பிரிவுக்கும் இடையிலான விரிசல் 1980 ஆம் ஆண்டு மேதினத்தில் அப்பட்டமாக வெளித்தெரிந்தது. அன்றைய நாளை முன்னணியினர் வழமையான மேதின பேரணியாக அனுஷ்ட்டித்தபோது, அதில் பங்கேற்ற தமிழ் இளைஞர் பேரவையினர், முன்னணியினரின் தலைமைப்பீடத்திற்கெதிராகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர். "தமிழ் மக்களுக்கு உறுதியளித்ததன்படி எப்போது தமிழ் ஈழத்திற்கான பாராளுமன்றத்தை உருவாக்கப்போகிறீர்கள்?", "உங்கள் பாராளுமன்றப் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு தனிநாட்டிற்கான விடுதலைப் போராட்டத்தை உடனே ஆரம்பியுங்கள்", "அதிகாரப் பலம் தளபதியையே பாதை மாற வைத்துவிட்டதோ?" என்று சுலோகங்கள் எழுப்பப்பட்டன. இது அமிர்தலிங்கத்திற்கு சினத்தை ஏற்படுத்தியது. ஆகவே, பேரணியின் நிறைவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக அவர் பேசினார். அவ்வுரையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமையினை விமர்சிப்பவர்கள் மீதும், போராளிகள் மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். போராளி அமைப்புக்களை எள்ளி நகையாடிய அமிர்தலிங்கம், "சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று பகிரங்கமாக ஏளனம் செய்தார். தொடர்ந்து உரையாற்றிய அமிர்தலிங்கம், "நீங்கள் சிறு குழுக்களாக அலைந்து திரிகிறீர்கள். நீங்கள் அழிவுகளையே எம்மீது கொண்டுவரப்போகிறீர்கள்" என்று கடிந்தும் கொண்டார். அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக இருந்த சிவசிதம்பரம் அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்துப் பேசினார். தலைமையினை விமர்சிப்பவர்களைப் பார்த்து, "அமிர்தலிங்கத்தை அகற்றிவிட்டு உங்களால் எதையாவது சாதிக்க முடியுமா?" என்று அவர் கேட்டார். 1 hour ago, புங்கையூரன் said: தொடருங்கள், ரஞ்சித்..! ஆவலுடன் பின் தொடருகின்றேன்..! உங்களின் ஆதரவிற்கு நன்றியண்ணா 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vasee Posted திங்கள் at 06:42 கருத்துக்கள உறவுகள் Share Posted திங்கள் at 06:42 நல்ல ஒரு முக்கிய வரலாற்றினை ஆவணப்படுத்துகின்ற உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, தொட்ருங்கள்... 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted திங்கள் at 06:51 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted திங்கள் at 06:51 8 minutes ago, vasee said: நல்ல ஒரு முக்கிய வரலாற்றினை ஆவணப்படுத்துகின்ற உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது, தொட்ருங்கள்... நன்றி வசி ! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரஞ்சித் Posted திங்கள் at 07:56 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted திங்கள் at 07:56 அமிர்தலிங்கத்திற்கு ஜயவேவா ! 1980 ஆம் ஆண்டு ஆவணி 8 ஆம் திகதி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான பிரேரணையினை பிரதம மந்திரியான பிரேமதாசா பாராளுமன்றத்தின் முன்வைத்தபோது பிரச்சினை இன்னும் சிக்கலானது. அதனை உடனடியாகவே நிராகரிக்க வேண்டும் என்று இளைஞர்கள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பிரேரணையினை பாராளுமண்ரத்திலேயே நிராகரித்துவிட்டு, வெளியே வந்து தனிழ்நாட்டிற்கான விடுதலைப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். ஆனால், இளைஞர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்க முன்னணி மறுத்துவிட்டது. பிரேமதாசவினால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை பிரேரணையினை ஆதரிப்பதென்றும், அதனை நடைமுறைப்படுத்த ஜெயாருக்கு தமது முழு ஆதரவினையும் வழங்குவதென்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழு முடிவெடுத்தது. எரிக்கப்பட்டுக் காட்சிதரும் யாழ்ப்பாண நூலகம் சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் வவுனியாவில் கூடிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் பொதுச்சபை, அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பான தமது தீர்மானத்தை கலந்தாலோசித்திருந்தது. சுமார் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் "இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமாகும்" என்று கூறியதுடன் தமது கட்சி இதனை முற்றாக ஆதரிக்கும் என்றும் கூறினார். இச்சட்டத்தை தானும், தனது கட்சியும் ஏற்றுக்கொள்வதற்கு மூன்று காரணங்களை அமிர்தலிங்கம் முன்வைத்திருந்தார். முதலாவதாக, இச்சட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கலை நாடு முழுவதற்கு விஸ்த்தரிக்க முடியும் என்று அவர் கூறினார். அபிவிருத்திப் பணிகளில் மக்களையும் இதன்மூலம் ஈடுபடுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இரண்டாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரிக்காவிட்டாலும் கூட, பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கும் அரசாங்கம் நிச்சயம் அதனை நிறைவேற்றியே தீரும். ஆகவே, அதனை எதிர்த்து அரசுடன் பகைமையினை வளர்ப்பதைக் காட்டிலும், ஆதரித்து நட்புப் பாராட்டலாம் என்று அவர் கூறினார். மூன்றாவதாக, தமது கட்சி இந்தப் பிரேரணையினை ஆதரித்து சட்டமாக்க உதவுவதன் மூலம், தமிழ் மாவட்டங்களில் அபிவிருத்தியினை மேற்கொள்ள முடியும் என்றும், அவ்வாறில்லாமல் இதனை எதிர்த்தால் வடக்குக் கிழக்கில் இன்றுவரை அரசால் அபிவிருத்திப்பணிகளில் காட்டப்பட்டுவரும் மாற்றாந்தாய் மனப்பான்மை இனிமேலும் தொடரும் என்றும் அவர் வாதிட்டார். ஆனால், அமிர்தலிங்கத்தின் இந்த யோசனைக்குப் பலமான எதிர்ப்பு இளைஞர் மத்தியில் இருந்து வந்தது. அவரை விமர்சித்தவர்கள் இச்சட்டம் மிகவும் பலவீனமானதென்றும், இதனால் தமிழருக்கென்று நண்மைகள் ஏதும் இல்லையென்றும் வாதிட்டனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் டட்லி சேனநாயக்கவினால் வரையப்பட்ட பிராந்திய சபைகள் அடிப்படையிலான தீர்வினைக் காட்டிலும் ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மிகவும் பலவீனமானவை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர். டட்லியின் பிராந்திய சபைகளையே தமிழ் இளைஞர்கள் "மிகைப்படுத்தப்பட்ட நகர சபைத் தீர்வு" என்று ஏளனம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது. மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தினை விமர்சித்தவர்களின் கருத்தின்படி சட்டவாக்கல் மற்றும் வரி அறவிடல் ஆகிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குப் போதுமானதாக இல்லையென்றும், மத்திய அரசாங்கத்தின் விருப்பின் அடிப்படையிலேயே இவை தீர்மானிக்கப்படும் என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தனர். மேலும், இந்த சட்டத்தினை தமிழர்களுக்கான தீர்வாக சர்வதேசத்திற்கு காட்டுவதே ஜெயாரின் உண்மையான நோக்கம் என்றும், இச்சட்டத்தினை அவர் ஒருபோதும் உண்மையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ஈழவேந்தன் தமிழர் ஐக்கிய முன்னணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வவுனியா நகர மண்டபத்திற்கு வெளியே இளைஞர் குழுவொன்று சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றில் இறங்கியது. அந்த இளைஞர்கள் பதாகை ஒன்றினை ஏந்தியிருந்தனர். "எமது இலட்சிய
Recommended Posts