Jump to content

புதுச்சேரியில் ரூ.1,000 கோடியை கடந்த மது விற்பனை - அரசுக்கு வருவாய், சர்ச்சையாகிறதா ‘போதை’ வியாபாரம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரியில் ரூ.1,000 கோடியை கடந்த மது விற்பனை - அரசுக்கு வருவாய், சர்ச்சையாகிறதா ‘போதை’ வியாபாரம்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எஸ். நடராஜன், புதுச்சேரி
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 26 நிமிடங்களுக்கு முன்னர்
புதுச்சேரி போதை மது வியாபாரம்

புதுச்சேரியில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ. 1000 கோடியை கடந்திருக்கிறது. அதே சமயம், மது விற்பனையால் அரசுக்கு வருவாய் கிடைத்தாலும் மறுபுறம் அதை அருந்தும் மக்களின் போதைப்பழக்கம் மற்றும் அதன் விற்பனையை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு சர்ச்சை ஆகியிருக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மது விற்பனைக்குப் பெயர் பெற்ற பகுதி. தமிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்சேரியில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் கிடைப்பதும், அழகிய கடற்கரை நகரமாக அது இருப்பதும் தான், மதுப்பிரியர்களை பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி ஈர்க்க முக்கிய காரணம்.

புதுவையின் அடையாளங்களில் மதுவுக்கு ஓர் இடம் உண்டு என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக மது விற்பனைத் துறையின் வருவாய் அதிகரித்து வருகிறது.

மதுபான விற்பனை மூலமாக அரசுக்குக் கிடைத்த வருவாய், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.600 கோடி முதல் 850 கோடி வரை என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு அது  ரூபாய்  1,100  கோடியாக  உயர்ந்துள்ளது.

 

இந்த ஆண்டில் மது வியாபாரம் மூலம் கிடைக்கும் வருவாய் ரூபாய் 1,500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார் புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர். 

  தென்னிந்தியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியும் உள்ளது.    ஆன்மிக சுற்றுலா, உல்லாச சுற்றுலா என்ற இரண்டு வகைகளிலும் புதுச்சேரிக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது. சுற்றுலா வளர்ச்சியின் தாக்கத்தை தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது மது. 

ஒரு காலத்தில் புதுச்சேரி மாநில வருவாய்க்கும்,  புதுச்சேரி வாழ் மக்களின் முன்னேற்றத்திற்கும் பஞ்சாலைகள், கைத்தறி  நெசவு, சர்க்கரை ஆலைகள்,  விவசாயம் ஆகியவை முக்கிய பங்காற்றின. 

ஆனால் தற்போது வணிகம், சுற்றுலா மற்றும் மது விற்பனை மூலம் கிடைக்கும் கலால் வரி  ஆகியவை புதுச்சேரி அரசின் வருவாயின் மையமாக உள்ளன.

எத்தனை மதுபான கடைகள் புதிதாக வந்துள்ளது? 

தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

சுதாகர், துணை ஆணையர்

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளில் எவ்வளவு மதுபான கடைகள் அதிகரித்துள்ளன என்பது குறித்து அறியக் கலால் துறையின் துணை ஆணையர் சுதாகரிடம் பிபிசி விளக்கம் கேட்டது.   அது குறித்து விளக்கிய அவர், "புதுச்சேரியைப்  பொருத்தவரை  மதுபான கடைகளுக்கு உரிமம் புதிதாக வழங்குவதில்லை. மொத்த விற்பனை மற்றும்  சில்லறை விற்பனை என இரண்டு  வகையான  மதுபான கடைகளுக்கும் 1989இல் இருந்து உரிமம் வழங்குவதில்லை. ஏற்கெனவே உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை மதுபான விற்பனை கடைகள்  இடத்தை மட்டுமே மாற்றியுள்ளன. 

தற்போது சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கக் கூடிய உணவும், மதுபானமும் வழங்கும்  ரெஸ்ட்ரோ பார்களுக்கும்  உரிமங்கள் வழங்கியுள்ளோம்.    குறிப்பாக, புதுச்சேரி சுற்றுலா பகுதி என்பதால் இங்கே வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, வெளிநாட்டவர்களும் அதிகம் வருகை தருகின்றனர். அதிலும் புதுச்சேரிக்கு வருவாய் தருவதில் சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது.  அதன் காரணமாக சுற்றுலாவை  மேம்படுத்த,  சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கக் கூடிய  மதுபான வசதிகளுடன் இயங்கக்கூடிய  உணவகங்களுக்கு மட்டுமே தற்போது உரிமம் வழங்கப்படுகிறது," என்றார் அவர்.

மதுக்கடைகள் திறக்க விதிகள் என்ன?

மது பாட்டில்கள்

"மொத்தம் மற்றும் சில்லறையாக மதுபானம் விற்பனை செய்யக்கூடிய கடைகள் நகரப் பகுதிகள், வளர்ச்சியடைந்த பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவில் அமைத்திருக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் இத்தகைய இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில்  அமைத்திருக்க  வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அடிப்படையில் மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உணவகம் மற்றும் மதுபான வசதிகளுடன் இயங்கக்கூடிய ரெஸ்டோ பார்களுக்கு  சில்லறையை  மதுபானங்கள்  விற்பனை  செய்யக்கூடாது  என்ற  நிபந்தனை  தவிர  மேற்கூறிய  நிபந்தனைகள்  பொருந்தாது,"  என்றார்  துணை ஆணையர்.   சுற்றுலாவை மையப்படுத்திய ரெஸ்டோ பார்கள் அரசின் வழிகாட்டுதல் படியே இயங்க அனுமதிக்கப்படுகின்றன. புதுச்சேரி, கோவா ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவை பொருத்தவரை  நிறைய ஒற்றுமைகள்  உள்ளன. அவ்வாறு நினைத்துத்தான் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளும் வருகை தருவதாகக் கூறுகிறார். 

ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி 

மதுபாட்டில்கள்

மதுபான கடைகள் இடம்பெயரும் போது கல்வி நிலையம் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து கொடுக்கப்பட்ட இடைவெளியில் அமைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னரே அனுமதியும் வழங்குகிறோம். 

இதில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு இருப்பதாகக் கூறினால், அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வோம். அது உறுதியானால், அதனை கலால் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் 

முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவருடைய பரிந்துரைக்கு ஏற்ப வேறு இடத்திற்கு மாற்றுவதற்குப் பரிசீலனை செய்வதாக கலால் துறை துணை ஆணையர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் எத்தனை மதுபான கடைகள் உள்ளன?

"புதுச்சேரியில் 39 மொத்த விற்பனை மதுபான கடைகள், சுமார் 150  சில்லறை விற்பனை மதுபான கடைகள், 170 ரெஸ்டோ பார்கள் ஆகியவற்றுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.   புதுவை ஆட்சிக்கு உட்பட்ட காரைக்காலில், 12 மொத்த விற்பனை  மற்றும்  36 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.  மஹேவில், 27 மொத்த விற்பனை மற்றும் 33 சில்லறை விற்பனை கடைகளும் உள்ளன. ஏனாமில், 7 மொத்த விற்பனை மற்றும் 7 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன," என்றார் அவர்.

"ரூபாய் 1500 கோடி வருவாய் இலக்கு"

"புதுச்சேரியில் 2019ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய 5 ஆண்டுகள் வரை சராசரியாக மதுபான விற்பனை மூலமாக வரக்கூடிய வருவாயானது ரூபாய் 600-லிருந்து  850 கோடி வரை  இருந்தது.

 பின்னர் கொரோனா காலத்தில் ரூபாய் 750 கோடியாக குறைந்தது. தொடர்ந்து மதுபான விற்பனையை ஒழுங்குமுறை செய்து, விலையை முறையாக நெறிமுறைப்படுத்தினோம். 

இதையடுத்து கடந்த ஆண்டு வருவாய் ரூபாய் 1,100 கோடியை எட்டியது. இந்த ஆண்டு ரூபாய் 1400லிருந்து 1500 கோடி ரூபாய் வரை இலக்கு வைத்துள்ளோம்," என்று கூறினார் சுதாகர்.    இதற்கிடையே மொத்த மற்றும் சில்லறை விற்பனை மதுபான கடைகள் இடம்பெயரும் போது அதனால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் அரசு  நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி ஒரு மலிவான சுற்றுலா நகரம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வருவதற்குக் கரணம் தங்கும் விடுதிகள், உணவுகள் மற்றும் மதுபானங்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் சுமார் 250 வகையான மதுபானங்கள் கிடைக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் 1000-கும் மேற்பட்ட மதுபான வகைகள் கிடைக்கின்றன.  இவையும் புதுவைக்கு மதுபானத்தை நாடி பயணிகள் வருவதற்கு காரணமாகின்றன.

"மலிவான விலையில் மதுபானம்"  

மது பானம்

மலிவான விலையில் மதுபானம், உணவு, தங்கும் விடுதிகள் கிடைப்பதால் சுற்றுலா பயணத்துக்குப் புதுச்சேரியைத் தேர்வு செய்வதாக சுற்றுலா பயணி விஷ்ணு ஆதித்யா கூறுகிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "புதுச்சேரியில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் இருப்பது மட்டுமின்றி இங்கே மலிவான மதுபானங்கள் கிடைக்கின்றன. பிற பகுதிகளைக் காட்டிலும் நிறைய விதவிதமான மதுபானங்கள் மற்ற பகுதிகளைக் காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

புதுச்சேரியை தென் இந்தியாவின் கோவா போலதான் பார்க்கிறோம். பிற சுற்றுலாத் தளங்களை காட்டிலும் புதுச்சேரியில் செலவு குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஹோட்டலில் தங்குவது, வெளியே சென்று உணவு சாப்பிடுவது, மது அருந்துவது ஆகிய அனைத்துக்குமான செலவு இங்கே குறைவு.

பிரெஞ்சு டவுன் பகுதிகளுக்குச் சென்று உணவு மற்றும் மது அருந்த விரும்பினாலும் அதிக பணம் செலவழிக்காமல் அதை மிதமான விலையில் பெற முடிகிறது. இதனால்தான் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் புதுச்சேரி வர விரும்புகிறோம்," என்று கூறுகிறார் விஷ்ணு.

கலாசாரம் முற்றிலுமாக சீரழிந்துவிட்டது

புதுச்சேரி போதை மது வியாபாரம்
 
படக்குறிப்பு,

எஸ். காயத்ரி

ஒருபுறம் புதுவை அரசின் வருவாய்க்கு சுற்றுலாத்துறை பெரிய அளவில் பங்களித்தாலும், பிற மாநிலத்தவர்களை ஈர்க்கும் ஒரே விஷயமாக மதுபானம் உள்ளதாக தமது கவலையைப் பகிர்ந்து கொள்கிறார் தனியார் தகவல் தொழில்நுட்ப துறையில் மனிதவள மேலாளரும், 'பெண்கள் சமூகத்தை மேம்படுத்துதல்' அமைப்பின் நிறுவனருமான எஸ்.காயத்ரி பிபிசியிடம் பகிர்ந்துள்ளார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவதற்குக் காரணம் இங்குள்ள இயற்கை வளம் அல்ல. அவ்வாறு அவர்கள் ரசிக்க விரும்பினால் அதற்கு நிறைய இடங்கள் உள்ளன.

ஆனால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி மற்றும் கோவாவை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். இதற்குக் காரணம் இங்கு மதுபானங்கள் மலிவான விலைக்குக் கிடைப்பதுதான். மற்றொன்று இங்கே எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

இங்கே தான் அனைத்து விதமான மது அருந்தும் இடங்கள் உள்ளன. அதற்கேற்ப மகிழ்ச்சி தரக்கூடிய இடங்களும் உள்ளன. முக்கியமாகப் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமே வருகின்றனர். அப்படி வரும்போது அவர்கள் இங்குள்ளவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி புதுச்சேரி நகரத்தில் கலாச்சாரத்தைக் கெடுக்கின்றனர்," என்கிறார். புதுச்சேரியில் பிறந்த வளர்ந்த தனக்கு தற்போது 45 வயதாகிறது என்று கூறும் காயத்ரி, ஆனால் தனது இளமையில் தாம் மகிழ்ந்து அனுபவித்த புதுவையைப் போல இப்போது இல்லை என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c72ndzew8y7o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.