Jump to content

இரவு 7 மணிக்கு பின் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரவு 7 மணிக்கு பின் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 

By NANTHINI

22 JAN, 2023 | 04:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்கு  பின்னர் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக துண்டிப்பை அமுல்படுத்தாமல் இருப்பது சாத்தியமற்றது. 

குறித்த காலப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டுமாயின், மேலதிகமாக 4 பில்லியன் ரூபாய் மின்னுற்பத்திக்காக செலவிட நேரிடும் என இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக துண்டிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக தடையை அமுல்படுத்தாமல் இருக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்தது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரிந்துரையை பரீசிலனை செய்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரீட்சை இடம்பெறும் நாட்களில் மின்விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அல்லது இரவு 7 மணிக்கு பிறகு நாடளாவிய ரீதியில் மின்விநியோக துண்டிப்பை அமுல்படுத்துவதை இடைநிறுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது.

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டுமாயின், மின்னுற்பத்திக்கு மேலதிகமாக 4 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இந்த நிதியை மேலதிகமாக திரட்டிக்கொள்ள எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின், அதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபானம் மேலதிகமாக எரிபொருளை விநியோகிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/146427

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை மின்சாரத்தை தடையின்றி வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

By T. SARANYA

23 JAN, 2023 | 04:54 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் திங்கட்கிழமை (23) முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் மாணவர்களின் நலன் கருதி தடையற்ற மின் விநியோகத்தை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு மின் அமைச்சு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் றோகிணி மாரசிங்க , மின்சக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பி இதனை வலியுறுத்தியுள்ளார். 

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகளுக்கு 331,709 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர். இந்த பரீட்சைகள் ஜனவரி 23 ஆரம்பமாகி பெப்ரவரி 17 வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நாளாந்தம் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் அது மாணவர்கள் பரீட்சைக்கு தயாராவதற்கு தடையை ஏற்படுத்தும்.

அதற்கமைய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் அடிப்படை மனித உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

எனவே உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.' என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

https://www.virakesari.lk/article/146521

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையை மின்சார சபை செயற்படுத்தவில்லை - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

By DIGITAL DESK 5

24 JAN, 2023 | 08:55 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையை மின்சார சபை செயற்படுத்தவில்லை.

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் மின்பாவனையை இயலுமான அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்,அத்துடன் வீதி விளக்குகள் மாலை 06 மணிமுதல் இரவு 10 மணியரை அணைக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் தடையின்றி மின்விநியோகத்தை வழங்க ஆணைக்குழு அனுமதி வழங்கியது.

இதற்கமைய பரீட்சை முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு மணித்திலாயத்திற்கு பின்னர் மின்விநியோகத்தை துண்டிக்க ஆணைக்குழு பரிந்துரைத்தது.பரீட்சை முடிவடைந்ததன் பின்னர் மாலை மற்றும் இரவு வேளையில் இரு கட்டமாக மின்துண்டிப்பை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை பொதுப்பயன்பாட்டுக்கு முன்வைத்த பரிந்துரைகளை மின்சார சபை அமுல்படுத்தாத காரணத்தினால் நேற்றைய தினம் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி முடிவடையும் வரை மின்பாவனைக்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அந்த செயற்திட்டத்திற்கு அமைய மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் மின்பாவனைக்கான கேள்வியை குறைத்து 350 மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

350 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை இரவு வேளைகளில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க ஆணைக்குழு விசேட அவதானம் செலுத்தியுள்ளது.பரீட்சாத்திகளின் நலனை கருத்திற் கொண்டு தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொது மக்களும்,அரச மற்றும் தனியார் தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வீட்டு மின்பாவனையாளர்கள் மாலை 06 மணிமுதல் 09 மணிவரையான காலப்பகுதியில் மின்பாவனைக்கான கேள்வியை 50 சதவீதத்தால் குறைத்துக் கொள்ள வேண்டும்,தனியார் நிறுவனங்கள் மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் தமது சேவை நிறுவனங்களின் மின்பாவனையை இயலுமான அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்,

உள்ளுராட்சிமன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள வீதி விளக்குகள் மாலை 06 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் அணைக்க வேண்டும்,பரீட்சாத்திகளின் நலனை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மின்பாவனையை இயலுமான அளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.

https://www.virakesari.lk/article/146532

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை நிறைவடையும் வரை மின்சாரத்தை துண்டிக்காமலிருக்க முடியாது ; அதற்கு மேலதிகமாக 5 பில்லியனை திரட்ட வேண்டும் : அரசாங்கம்

24 JAN, 2023 | 08:59 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில் மேலதிகமாக 5 பில்லியன் தேவையாகும். தற்போதுள்ள நிதி நெருக்கடியில் இவ்வாறானதொரு பாரிய தொகையை திரட்ட முடியாது என்பதால் , நாளாந்தம் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாலை மற்றும் இரவில் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உயர்தர பரீட்சைகள் திங்கட்கிழமை (23) முதல் ஆரம்பமாகின. பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் கருதி குறித்த காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்காமலிருக்குமாறு கல்வி அமைச்சு, பரீட்சை திணைக்களம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களினால் மின்சாரசபையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் கடந்த இரு தினங்களும் வழமை போன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டமையால் பல தரப்பினராலும் இதற்கு அதிருப்தியும் வெளியிடப்பட்டது.

இந்நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணத்தை அதிகரிக்காமலிருக்க முடியாது. அதே போன்று தடையற்ற மின் விநியோகத்தை வழங்கவும் முடியாது. அனல் மின் உற்பத்திக்கான நிலக்கரி இறக்குமதி தொடர்பில் கடும் நெருக்கடி நிலவுகின்றது.

நிலக்கரியுடன் நாட்டை வந்தடையும் கப்பல்களுக்குரிய கொடுப்பனவை செலுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் காணப்படுகிறது.

கப்பல்களுக்கான கொடுப்பனவு மாத்திரமின்றி , உரிய நேரத்தில் கொடுப்பனவை செலுத்தாத காரணத்தினால் தாமதக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறான நிலைமையில் உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் 14 நாட்களும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில் மேலதிகமாக 5 பில்லியன் தேவைப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு தெளிவபடுத்தினார். தற்போதுள்ள நிதி நெருக்கடியில் இந்த 5 பில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்வது இயலாத காரியமாகும்.

எவ்வாறிருப்பினும் உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களின் நலன் தொடர்பிலும் அக்கறை காண்பிக்க வேண்டியுள்ளது.

எனவே நாளாந்தம் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் அதாவது மாலை 5 மணிக்கு பின்னரும் , இரவிலும் தலா ஒவ்வொரு மணித்தியாலங்கள் என இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கான செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக ஆர்ப்பாட்டங்களிலோ அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டிய தேவை கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/146605

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின் விநியோகத்தை தடையின்றி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்

 

PUCSL-1.jpg

உயர் தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தடையின்றி மின் விநியோகத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கி, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் என்பனவற்றின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரும் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்பதன் மூலம் தீர்க்கமான முடிவொன்றை எட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/235801

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமலிருக்க இணக்கம்

By T. SARANYA

26 JAN, 2023 | 12:31 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி பெப்ரவரி 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்குமாறு வலியுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாக அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மின்சக்தி அமைச்சின் செயலாளர்மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை நேற்று புதன்கிழமை முற்பகல் 10.30 க்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் மின் சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரியொருவர் ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர். இதன் போது பரீட்சை நிறைவடையும் வரை எவ்வாறு மின் விநியோகத்தை துண்டிக்காமலிருப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எனினும் இந்த பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை மீண்டும் மின் சக்தி அமைச்சின் செயலாளருக்கும் , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இவர்களுக்கு மேலதிகமாக இலங்கை மின்சாரசபை தலைவர் , பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் , இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றின் தலைவர்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததது.

இதன் போது பரீட்சை காலத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பன பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளன.

அதற்கான செலவுகளை உத்தேச மின் கட்டண அதிகரிப்பின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதற்கமைய இதற்காக செலவை முதல் 60 நாட்களுக்குள் செலுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒருங்கிணைப்புக்கள் மற்றும் வசதிகளை வழங்குவற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கமைய உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நிபந்தனையாக முன்வைத்துள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146739

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

By T. SARANYA

27 JAN, 2023 | 11:57 AM
image

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டை நடைபெறும் நிலையில்,  எவ்வித தடையுமின்றி  தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்குமாறு  மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு  விடுத்துள்ள உத்தரவை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  நேற்று (ஜன 26) எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளது. 

இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் நேற்று  அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/146817

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின் துண்டிப்பு விவகாரம் : இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்த தவறியமையால் உயர் நீதிமன்றத்தை நாடியது மனித உரிமைகள் ஆணைக்குழு

27 JAN, 2023 | 07:49 PM
image

 

(எம்.மனோசித்ரா)

மின் துண்டிப்பு  விவகாரத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக செயற்பட்டமையின் காரணமாக, இணக்கப்பாட்டை தெரிவித்த நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு இலங்கை மின்சாரசபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அரச வங்கிகள் என்பன இணக்கம் தெரிவித்துள்ளதாக கடந்த புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தது.

எவ்வாறிருப்பினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பின் பின்னரும் வழமை போன்று மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே 1996 இல 21 மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய , மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை செயற்படுத்த தவறியமை மற்றும் ஆணைக்குழுவிற்கு பதிலளித்தலை உதாசீனப்படுத்தியமை என்பன ஆணைக்குழுவை அவமதிக்கும் குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் மின் சக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டீ.யு.கே.மாபா பதிரண மற்றும் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எஸ்.இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எனினும் உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தடையற்ற மின் விநியோகத்திற்கான எரிபொருளை வழங்குவதற்கு , தமது அதிகாரிகளின் நிலைப்பாட்டை கவனத்தில் கொள்ளாது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கையெழுத்தினைப் பெற்றுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின் செயலாளர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஆணைக்குழுக்கள் , நிறுவனங்களுக்கிடையிலான வேறுபட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில் வழமையான மின் துண்டிப்பின் காரணமாக பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 மின் துண்டிப்பினால் முதல் நாள் இரவு பரீட்சைக்கு தயாராவதில் தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் , விரைவில் இதற்கான தீர்வினை உரிய தரப்பினரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையிலேயே பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் , 'பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி எரிபொருளை வழங்க முடியாது என்றும் , மனித உரிமைகள் ஆணைக்குழு தன்னிச்சையாக இதற்கு இணப்பாட்டைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் கலந்துரையாடல்களில் பங்குபற்றிய தமது அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/146865

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின் துண்டிக்கப்பட்டால் முறைப்பாடளிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

By T. SARANYA

28 JAN, 2023 | 02:01 PM
image

(எம்.மனோசித்ரா)

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை. அவ்வாறு ஒப்புதல் வழங்காத மின்வெட்டுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0775687387 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் , consumers@pucsl.gov.lk  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் ,  0112392641 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்குமாறு கடந்த 25 ஆம் திகதி முதல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்து வருகிறது. அதற்கான பல தரப்பு பேச்சுவார்த்தைகளையும் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. எவ்வாறிருப்பினும் அவை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் மின்சாரசபை தொடர்ந்தும் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் , அதனை மீறி மின்சாரம் துண்டிக்கப்பட்டமையால் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.  

மின் துண்டிப்பு  விவகாரத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக செயற்பட்டமையின் காரணமாக , இணக்கப்பாட்டை தெரிவித்த நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் மின் சக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டீ.யு.கே.மாபா பதிரண மற்றும் இலங்கை மின்சாரசபையின் தலைவர் எம்.எஸ்.இளங்ககோன் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/146929

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் கதைத்து முடிவதற்கிடையில் உயர்தரப் பரீட்சை நிறைவடைந்து விடும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மின்சார சபை மூன்று மாதங்களில் 108 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது -சம்பிக்க

 

மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 108 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் அதிக உற்பத்தி செலவை காரணம் காட்டி இலங்கை மின்சார சபை கட்டணங்களை கணிசமாக அதிகரித்தது.

கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை தனது வருவாயை கணிசமான அளவு அதிகரித்துள்ளமை புலனாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே நிதிப் பிரச்சினைகள் மற்றும் சபைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக மின்சார சபைக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/236175

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை பதவி நீக்க தீர்மானம்

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக்க ரத்னநாயக்கவை நீக்குவதற்கு அரசாங்கத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/236361

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் மின்சாரம் குறித்து அமைச்சர் காஞ்சன கருத்து

 

புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஜனவரி 1 முதல் தொடர் மின்சாரம் வழங்குவதற்கான திட்டங்களை சமர்ப்பித்தோம். பொதுப் பயன்பாட்டு ஆணையம் தரவில்லை. அனுமதி கிடைத்தால், நாளை முதல் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம்.” என்றார்.

https://thinakkural.lk/article/236372

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

By DIGITAL DESK 5

02 FEB, 2023 | 02:53 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு , இலங்கை மின்சார சபைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளைக் கருத்திற் கொண்டு மின் துண்டிப்புக்களை தடுக்கும் வகையில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதிக்கவில்லை.

இந்த காலகட்டத்தில் இதுபோன்ற மின்வெட்டுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமானதாக கருதப்படும் என்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் பல சந்தர்ப்பங்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டை அமுல்படுத்தாமலிருப்பதற்கு இலங்கை மின்சாரசபை, மின்சக்தி அமைச்சு உள்ளிட்ட தரப்பினர் இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், மின்வெட்டை அமுல்படுத்த மாட்டோம் என்று ஒப்புக்கொண்ட போதிலும் அடுத்த இரண்டு நாட்களில் பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைகளின் போது மின்வெட்டைத் தடுக்கத் தவறியதற்காக பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/147254

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனுவை மறுபரிசீலனைக்குட்படுத்தப்படும் வரை மின் துண்டிப்பு இல்லை - மின்சாரசபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

By DIGITAL DESK 5

02 FEB, 2023 | 09:21 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்ததாகக் குறிப்பிட்டு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வெள்ளிக்கிழமை (03) மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதாக இலங்கை மின்சாரசபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருக்குமாறு தம்மால் வழங்கப்பட்ட அறிவிப்பை மீறி , இலங்கை மின்சாரசபை அதிகாரிகள் செயற்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தது.

குறித்த மனு வியாழக்கிழமை (02) பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குனரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது , மின்சாரசபையின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலகேவா இந்த உத்தரவாதத்தை நீதிமன்றத்திற்கு வழங்கியதோடு , திட்டமிடல்களுக்கு அப்பால் குறித்த காலப்பகுதியில் இதுவரையில் மின்சாரசபை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்பதையும் மன்றுக்கு தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/147297

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின் உற்பத்திக்கு மேலதிக நீரை வழங்க முடியாது - மகாவலி அதிகாரசபை

By VISHNU

03 FEB, 2023 | 04:41 PM
image

(எம்.மனோசித்ரா)

மின் உற்பத்திக்காக வழமையாக வழங்கப்படும் நீரை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை , மின்சக்தி அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமையின் காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியான மின் உற்பத்திக்கு தேவையான மேலதிக நீரை வழங்க முடியாது என்றும் மகாவலி அதிகாரசபை அறிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மகாவலி அதிகாரசபை இதனைக் குறிப்பிட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்காக , மேலதிகமாக நீரை வழங்குவது தொடர்பில் நீர் முகாமைத்துவ குழுவில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

எவ்வாறிருப்பினும் எதிர்பார்த்தளவிற்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாமை மற்றும் விவசாயம் , குடிநீர் தேவைகளைக் கருத்திற் கொண்டு வழமையைப் போன்று நீர் மின் உற்பத்திக்கான நீரை வழங்க இதன் போது தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/147371

இன்று 03/02/2023 இரவு 6.10 - 7.10 வரை மின்தடை அமுலாகியது. வடமாகாண மின்சாரசபை 0212024444 முறைப்பாட்டு இலக்கத்திற்கு அழைத்த பின்னர் தான் மின்வெட்டுப் பற்றி தெரியவந்தது. அட்டவணை மாலை 5.45 இற்கு தான் தங்களுக்கு வந்ததாக கூறினார்கள்.
நீதிமன்றத்தில் 2 நாட்களுக்கு மின்வெட்டு இல்லை என்று உறுதி கூறியது பொய்யானது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.