Jump to content

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 12: ஆசியாவில் அதிவலதின் எழுச்சி


Recommended Posts

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 12: ஆசியாவில் அதிவலதின் எழுச்சி

 

image_a0cc19f960.jpg

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

 

அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு. 

குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதத்துக்கு ஆசியாவும் விலக்கல்ல; ஆனால், அவை கவனம் பெறுவது குறைவு. 

இந்தியாவில் மோடியின் இந்து தேசியவாதம், பிலிப்பைன்ஸில் டுடெர்ட்டின் போதைப்பொருள் போரும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும்,  தாய்லாந்து அரசியலில் இராணுவம் மற்றும் முடியாட்சியின் மறுபிரவேசம், ஜப்பானில் ஷின்சோ அபேயின் பழைமைவாதம் நோக்கிய திருப்பம், ஜைனிச்சி கொரியர்கள் (பின்கொலனித்துவ ஜப்பானில் வசிக்கும் கொரிய சிறுபான்மையினர்) மீதான வெறுப்பரசியல் - எதிர்ப்புப் போராட்டங்கள், தென் கொரியாவில் மத்திய இடது அரசாங்கத்துக்கு எதிராக அதிவலதுசாரி டேகியூக்கி (தென் கொரிய தேசிய கொடி) அமைப்பால் அணிதிரட்டப்பட்ட பேரணிகள் போன்றவை, தீவிர வலதுசாரிகளின் அரசியல் செயற்பாட்டிலிருந்து, ஆசியா விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 

மேற்சொன்ன இவ்வரசியல் முன்னேற்றங்கள் உதாரணங்கள் மட்டுமே! ஆசிய ஜனநாயக நாடுகளின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் வகையில், அதிவலதுசாரிகளின் எழுச்சி, புதிய அரசியலை நோக்கி நகர்த்துகிறது. இது தீவிரவாதத்தை நியாயப்படுத்தி, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிராகரிக்கின்றது. 

இந்தப் பிராந்தியத்தின் எதேச்சதிகாரப் போக்கின் மையப் பங்குதாரர்கள் யார்? அவர்கள் எந்த வகையான அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் கதையாடல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? ஜனநாயக அரசியலில் அவற்றின் தாக்கங்கள் என்ன ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில், எங்களின் அறிவு கணிசமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

அதிவலதுசாரி அரசியலை ஆதரிக்கும் நிறுவன உயரடுக்குகள், தமக்கான அடிமட்ட அமைப்புகளை ஆதரிக்கின்றன. அவை பெரும்பாலும் கீழ்மட்ட சிவில் சங்கங்கள் போல அணிதிரட்டுகின்றன. இந்த இயக்க வகை குழுக்கள், ஜனநாயகச் சீரழிவுடன் தொடர்புடையவை. இவ்வகைப்பட்ட அதிவலதுசாரி குழுக்களின் எழுச்சிக்கு, ஜனநாயகச் செயற்பாட்டில் அக்கறையற்ற மக்கள் திரளும் பங்களிக்கிறது.  
உலகெங்கிலும் தீவிரவாதம் மற்றும் ஜனநாயக பலவீனத்தின் தொந்தரவான அரசியலைப் பற்றி பேசும்போது, ஆசிய சூழலில் தீவிர வலதுசாரி என்பதன் அர்த்தம், விளக்கத்தை வேண்டி நிற்கிறது. 

மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் உள்ள அதிவலதை, ஜனரஞ்சக, தேசியவாத, இனவெறி என விவரிக்கின்றனர். இந்தியாவின் வலதுசாரி அரங்காடிகள் பற்றிய ஆய்வுகளில், இதே போன்ற விளக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இந்தக் கருத்தியல் கட்டமைப்புகள், ஆசியா முழுவதும் உள்ள தாராளவாத சக்திகளுக்கு சமமாகப் பொருந்துமா? ஆசியா முழுவதிலும் உள்ள தீவிர அதிவலதுசாரி குழுக்கள் மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகோரல்கள், மற்ற நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள அவர்களது சகாக்களுக்கு ஒத்ததா அல்லது வேறுபட்டதா? அவர்களின் கூற்றுகள், சித்தாந்தங்கள் வேறுபட்டால், அவை எங்கிருந்து பெறப்படுகின்றன?

இந்த வரலாற்று தருணத்தில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தீவிர வலதுசாரி அணிதிரட்டலை ஏற்படுத்தும் செயல்முறைகள் மற்றும் காரணங்கள் என்ன? தென்னாசியா எவ்வாறு ஏனைய ஆசியப் பிராந்தியங்களில் இருந்து வேறுபடுகிறது? மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் தற்போதைய ஆய்வுகள், நவீன தாராளமய உலகமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை மாற்றத்தால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இன வெறுப்பு ஆகியவையே அதிவலதின் எழுச்சியின் பின்னணியில் இருப்பதாக வாதிடுகின்றன. 

அடிப்படையில் இவை அனைத்தும், ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளின் பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய பிற ஆய்வுகள், அரசியல் கட்சிகளின் உத்திகள், இடதுசாரி-முற்போக்குக் கட்சிகளின் தோல்விகள், கவர்ச்சியான தலைவர்களின் பங்கு போன்ற மேல்-கீழ் செயல்முறைகளில் கவனம் செலுத்துகின்றன. 

கேள்வி யாதெனில், ஆசியாவில் தீவிர அரசியலை செயற்படுத்துவதற்குப் பின்னால், இதே போன்ற காரண காரியங்களும் சக்திகளும் செயற்படுகின்றனவா அல்லது தாராளவாத சித்தாந்தத்தின் ஒரு குறிப்பிட்ட பாதிப்பைத் தூண்டும் தனித்துவமான நிலைமைகள் உள்ளதா? இந்தப் பிராந்தியத்தின் அதிவலதை ஒரு பரந்த ஒப்பீட்டு அளவுகோலில் எவ்வாறு வைக்கலாம்?

இந்த வினாக்கள் முக்கியமானவை. இவற்றை விளங்க, ஆசியா என்ற பெருங்கண்டத்தின் பிராந்தியப் பிரிவுகளை மனங்கொண்டு, அதனடிப்படையில் வலதுசாரி தீவிரவாதத்தின் இயங்குதிசைகளை இனங்காணவியலும். 

ஒருதளத்தில் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்தில் தீவிர தாராளவாத அரசியலின் வெளிப்பாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த மூன்று ஆசிய நாடுகளும், தீவிர வலதுசாரி அணிதிரட்டலின் வடிவங்களைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான நிகழ்வுகளை முன்வைக்கின்றன.

image_f57b45a192.jpg

ஏனெனில் அவற்றின் புவிசார் அரசியல் வரலாறுகள், அதற்கான பொதுவான தளத்தை வழங்குகின்றன, அதேநேரத்தில், நிறுவன வேறுபாடுகள் தனித்துவமான நிலைமைகளை அமைக்கின்றன. மிக முக்கியமாக, அவை அனைத்தும் பிராந்தியத்தில் கெடுபிடிப்போரின் குறிப்பாக கடுமையான மோதல்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

கெடுபிடிப்போர் காலத்தில், ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளிகளாக, மூன்று நாடுகளும் ஓர் அரசியல் நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. அவை, கெடுபிடிப்போர் கூட்டணி உறவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் விருப்பத்திலிருந்து, இந்நாடுகளில் அரசியல் நிறுவனங்களை உருவாக்குவதிலும், உலகளாவிய கம்யூனிச எதிர்ப்பு திட்டத்துடன் இணைந்த அரசியல் உயரடுக்குகளை வளர்ப்பதிலும் ஆழ்ந்த ஈடுபாடு காணப்பட்டது. 

ஜப்பான், தாய்லாந்தில் பழைமைவாத தாராளவாத அரசியலுக்கான முடியாட்சி மரபுகள், சித்தாந்தத்தின் மையத்தன்மையை கெடுபிடிப்போர் புவிசார் அரசியல் ஏற்பாடுகள் இல்லாமல் புரிந்து கொள்ள முடியாது. கொலனித்துவ மற்றும் போர்க் குற்றங்களின் பொறுப்புக்கூறலில் இருந்து, ஜப்பானின் ஹிரோஹிட்டோ பேரரசரை அமெரிக்கா காப்பாற்றியது, மேலும், ஜப்பானில் உள்ள தீவிர வலதுசாரிகளின் மைய அரசியல் சின்னமாக, பேரரசர் பணியாற்றினார். 

தாய்லாந்தில், இராணுவ ஜெனரல்களுடனும் முடியாட்சியுடனும் அமெரிக்கா  கூட்டுச் சேர்ந்தது. 1932இல் முழுமையான முடியாட்சியைத் தூக்கியெறிந்த பிரிடி பானோமியோங்கின் நாடுகடத்தலுக்கு உதவியதோடு, அவரது ஆதரவாளர்களின் அடக்குமுறைக்கும் ஒத்துழைத்தது. தாய்லாந்தில் ஓர் அரசியலமைப்பு முடியாட்சி, இராணுவத்துடன் தனது கூட்டாண்மை மூலம் மாநில விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. 

சமகால ஆசியாவில் தீவிர தாராளவாத அரங்காடிகளை அடிபணிய வைக்க, அமெரிக்கா இராணுவத்தைப் பயன்படுத்துவது கெடுபிடிப்போர் அரசியலின் மற்றொரு மரபு. ஜப்பானிய ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைத்த இராணுவத் தலைவர்களின் கறைபடிந்த சாதனைகளை மீறி, தாய்லாந்திலும் தென் கொரியாவிலும் இராணுவத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எப்போதும் தயாராக இருந்தது. 

எனவே, அமெரிக்கா இந்த எதேச்சதிகார நிறுவனங்களை பலப்படுத்தியது. அவை அரசியலில் அடிக்கடி தலையிட்டு, அரசாங்க அதிகாரத்தை ஏற்றுக்கொண்டன. போருக்குப் பிந்தைய தாய்லாந்தில் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் இராணுவ சதிப்புரட்சிகளுக்கு இடையே நீண்ட கால ஊசலாட்டம் தொடர்ச்சியாக இருந்தது. 

இராணுவம் சமீபத்தில் மீண்டுமொருமுறை அதிகாரத்துக்குத் திரும்பியது. இவையனைத்தும் கெடுபிடிப்போரின் விளைவிலான புவிசார் அரசியலின் உறுதியான தன்மையை நிரூபிக்கின்றன. இருந்தாலும், 1980களின் பிற்பகுதியில் தென்கொரியா, பல தசாப்தங்களாக நீடித்த இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு மாறியது. 21ஆம் நூற்றாண்டின் வலதுசாரி அரங்காடிகள், 1960களில் தென்கொரியாவை ஆண்ட பார்க் சுங் ஹீ போன்ற எதேச்சதிகார இராணுவத் தலைவர்கள் மீது, தங்கள் அரசியல் பார்வையை மையப்படுத்தினர். 1970களில் அவரது மகள் பார்க் கியூன்-ஹே இதன் நீட்டிப்பாகக் கருதப்பட்டார். 

அமெரிக்காவின் வலுவான தலையீட்டின் கீழ், இந்த மூன்று நாடுகளிலும் கெடுபிடிப்போர் ஒழுங்கு வெளிப்பட்டது. பாகுபாடான விவாதங்கள், அரசியல் ‘மற்றவர்களை’ உருவாக்கும் தீவிர வலதுசாரி நிகழ்ச்சிநிரல் ஊக்குவிக்கப்பட்டது.  மேற்குலகில் உள்ள தீவிர வலதுசாரி சக்திகளைப் போல், பெரும்பாலும் மக்கள் என்ற பெயரில் அணிதிரளும் ஜனரஞ்சக சொல்லாட்சியுடனான அரசியலில், ஆசியாவில் உள்ள தீவிர வலதுசாரிக் குழுக்கள் இயங்கவில்லை. 

மாறாக, ஜப்பானில் உள்ள தீவிர வலதுசாரிகள், கொலனித்துவ காலத்தில் ஜப்பானுக்கு முதன்முதலில் குடிபெயர்ந்த இன சிறுபான்மையினரின் உடல் ரீதியாக வேறுபடுத்த முடியாத ஜைனிச்சி கொரியர்களைத் தாக்குகிறார்கள். தென் கொரிய தீவிர வலதுசாரிகள், கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும்  இடையிலான இராணுவக் கூட்டணியின் தீவிர ஆதரவாளர்களாக, பல தசாப்தங்களாக ‘மக்கள்’ என்ற பெயரில் ஜனநாயகத்துக்காகப் போராடிய மத்திய-இடது முற்போக்காளர்களை சட்டபூர்வமற்றதாக மாற்றுவதற்கு கம்யூனிச எதிர்ப்பு கட்டமைப்பைப் பயன்படுத்துகின்றனர். 

தாய்லாந்தில், முடியாட்சி மற்றும் இராணுவத்தின் கூட்டணி மன்னராட்சிக்கு விசுவாசமற்றவர்கள் என, இராணுவ அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அனைவரையும் தண்டிக்கிறது. இவ்வாறு ஆசியாவில் அதிவலது, ஆழமான விசாரணையை வேண்டி நிற்கிறது. 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வலதுசாரி-தீவிரவாதத்தின்-நிழலில்-12-ஆசியாவில்-அதிவலதின்-எழுச்சி/91-311474

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் உலகமும் இன்று எதிர்கொள்ளும் அதிவலதுசாரித் தனத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று (தனக்குத் தானே) நிறுவிக் கொண்டார் மீநிலங்கோ!😎 self-fulfilling prophecy!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மேற்குலகநாடுகள் தான் உலக தீமைகளுக்கான காரணங்கள் என்று இலங்கை பத்திரிக்கைளில் போதிக்கபடுகின்றதாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 13: ஜப்பானில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 2021 ஜூலை எட்டாம் திகதி, ஜப்பானிய மேலவைத் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் பிரசார நிகழ்வில், வீதியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது சுடப்பட்டு இறந்தார். இது ஜப்பானில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்றுவரை, இக்கொலைக்கான காரணங்கள் குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை. 

ஆனால், ஜப்பானில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியை விளங்கிக் கொள்ள இக்கொலைக்கான காரணியைப் புரிந்து கொள்வது முக்கியமானது. 41 வயதான சந்தேக நபர், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் அபேயை சுட்டதாக ஒப்புக்கொண்டார். அவர், ‘மதக்குழு’ ஒன்றின் மீது வெறுப்பு கொண்டிருந்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார். 

image_6ec9894097.jpg

தனது தாயார், குறித்த குழுவுக்கு பெரும் நன்கொடைகளை வழங்கியதன் காரணமாக, இறுதியில் திவாலான நிலைக்குச் சென்றதாகவும், அதனால்  குறித்த மதக் குழுவின் தலைவரை தாக்க திட்டமிட்டதாகவும் கூறினார்.

கொலை நடந்து சில நாள்களின் பின்னர், சந்தேகநபரின் தாய், தம் மதக் குழுவைச் சேர்ந்தவர் என்றும் 1998ஆம் ஆண்டு தாயார் குழுவில் சேர்ந்து, 2002ஆம் ஆண்டில் திவாலானார் என்றும் ‘யூனிஃபிகேஷன் சர்ச்’ என்று பரவலாக அறியப்படும், உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான குடும்பக் கூட்டமைப்பு கூறியது. 

ஜப்பானிய அரசியல் கட்சிகளும் ஊடகங்களும், இக்கொலையை ‘ஜனநாயகத்துக்கு சவால்’ அல்லது ‘பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்’ என்று முத்திரை குத்தின. பொலிஸாரினதும் ஊடகங்களினதும் அறிக்கைகள், இந்தக் கொலை அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்று குறிப்பிடுகின்றன.

image_c34fae279a.jpgஇருப்பினும், ஜப்பானில் இதுவரை சொல்லப்படாத ஒரு வலதுசாரி தேசியவாதியாக அபேயின் கடந்த காலத்தை, இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியது. மேலும், அவரது ‘ஒரு வலிமையான’ அரசியல் பிம்பத்தால், அவரது கடந்தகாலம் இருளில் புதைக்கப்பட்டது என்ற உண்மை பொதுவெளிக்கு வந்தது. 

‘யூனிஃபிகேஷன் சர்ச்’க்கும் அபேயின் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான நெருங்கிய உறவு, ஜப்பானில் விவாதிக்கப்படாத ஒன்று. இச்சேர்ச்சானது 1954இல் தென் கொரியாவில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர் சன் மியுங் மூனால் நிறுவப்பட்டது. ஜப்பானிய கிளை 1959 இல் திறக்கப்பட்டது. மேலும், 1990களில், உலகம் முழுவதும் தீவிரமாக விரிவடைந்தது. 

கம்யூனிசத்துக்கு எதிரான, தாராளவாத ஜனநாயகக் கட்சியின் நம்பகமான கூட்டாளிகளில் இந்தக் குழுவும் ஒன்றாகும். குறித்த சர்ச் தொடர்பான நிகழ்வுகளில், செப்டெம்பர் 2021இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடன் வீடியோ இணைப்பு மூலம், அதிவலதுசாரி ஆதரவாளர்களிடையே பேச்சாளராக அபே தோன்றினார். குறித்த சேர்ச்சை கம்யூனிச எதிர்ப்பு வலதுசாரி குழுவிலிருந்து பிரிக்க முடியாது என்ற வகையில், இரண்டுக்குமான உறவு இருந்தது. 

image_7ee4a57e5a.jpg

‘அசோசியேஷன் ஒப் ஸ்பிரிச்சுவல் லீடர்ஷிப்’ என்ற மற்றொரு வலதுசாரி மதக் குழுவுடன் அபே ஷின்சோ தொடர்புகளைக் கொண்டிருந்தார். இம்மதக்குழு, ஏகாதிபத்திய ஜப்பானின் (1868 முதல் 1945 வரை) அதிகாரபூர்வ சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறது. இது 1997 இல் நிறுவப்பட்ட தீவிர வலதுசாரி தேசியவாத அமைப்பான ‘நிப்பான் கைகி’ (ஜப்பான் மாநாடு) உடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. 
ஜப்பானின் வரலாற்றில் மிக அதிககாலம் பிரதமராக இருந்தவர் என்ற வகையில், ஜப்பானிய அரசியல் பண்பாட்டை அபே வழிப்படுத்தினார். அதில் அதிவலதுசாரித்துவத்தின் சாயல் மிகத் தெளிவாக இருந்தது. 

இந்தப் பின்புலத்திலேயே ஜப்பானின் அதிவலதுசாரித்துவத்தின் வரலாற்றையும் சமகாலச் செயற்பாடுகளையும் நோக்க வேண்டியுள்ளது. ஜப்பானிய வலதுசாரிகளின் சித்தாந்தங்கள், வரலாறு முழுவதும் தொடர்ந்து உருவாகி வந்தாலும், ஜப்பானிய வலதுசாரி அரசியலின் பரிணாம தளத்தை வடிவமைத்த அரங்காடிகளின் பன்முகத்தன்மை கொண்ட குழுக்கள், பேரரசர் மீதான அவர்களின் ஒற்றை பக்தி, மரியாதை ஆகியவற்றில் ஒன்றுபட்டுள்ளன. 

ஜப்பானிய வலதுசாரி இயக்கங்கள் முதலில், ‘ஐரோப்பிய மயமாக்கல்’  நோக்கிய போக்குகளுக்கு எதிரான ஓர் இயக்கமாகவும், பின்னர், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானிய ஏகாதிபத்திய விரிவாக்கத்தை நியாயப்படுத்தும் ஓர் அணிதிரட்டல் சக்தியாகவும் உருவெடுத்தன.

1895 முதல் 1945 வரை, ஐந்து பெரிய போர்களின் (சீன-ஜப்பானியப் போர், ரஷ்ய-ஜப்பானியப் போர், முதலாம் உலகப் போர், இரண்டாம் சீன-ஜப்பானியப் போர், பசிபிக் போர்) விளைவாக, ஆசியாவில் கொரியா, தாய்வான், மஞ்சூரியா, தென்கிழக்கு ஆசியா முழுவதும், கடலோர சீனாவின் பெரும்பகுதி, மேற்கு பசிபிக் பகுதியின் பெரும்பாலான தீவுகள் முழுவதும் பரந்து விரிந்த அகண்ட பேரரசை ஜப்பான் உருவாக்கியது. ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்குச் சவால் விடும் ஆசியர்களின் ஒரு பெரிய குடும்பத்தின் தந்தையாக சித்திரிக்கப்பட்ட ஜப்பானிய பேரரசரின் கீழ், பான்-ஆசியவாதத்தின் வலதுசாரி சித்தாந்தங்கள், கொலனித்துவ விரிவாக்கத்தில் முன்னணியில் இருந்தன.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஒரு நிறுவனமாக பேரரசர் அமைப்பு இருந்தபோதும், பேரரசரது அதிகாரமும் மற்றும் தெய்வீக அந்தஸ்தும் பறிக்கப்பட்டது. மேலும், பேரரசரை ஒரு வெறும் பிரமுகராக புதிய ஜப்பானிய அரசியலமைப்பு மாற்றியது. இது போருக்கு முந்தைய அதிவலதுசாரிக் குழுக்களின் ‘பேரரசருக்கான விருப்பு’ என்ற அடிப்படையை சரித்தது. 

இருந்தபோதும் ஜப்பானில் ‘கம்யூனிச அபாயம்’ குறித்து, அமெரிக்கா கவலைகொண்டது. ஜப்பானில் கம்யூனிசம் காலூன்றாமல் பார்த்துக் கொள்ள, இந்த அதிவலதுசாரி குழுக்களை பயன்படுத்தியது. இக்குழுக்கள் கட்டற்ற வன்முறையில் ஈடுபட்டன. இடதுசாரித் சித்தாந்தத்தைப் பின்பற்றுவோர் தாக்குதலுக்கு உள்ளாகினர். 

1960ஆம் ஆண்டு, ஜப்பானிய சோசலிசக் கட்சியின் தலைவர் அசனுமா இனெஜிரோவ் அதிவலதுசாரி செயற்பாட்டாளர்களால் கொலை செய்யப்பட்டார். 1970களில் மெதுமெதுவாக அதிவலதுசாரித்துவம் நிறுவனமாகத் தொடங்கியது. 

1980களில், அதிவலதுசாரி செயற்பாட்டாளர்கள், சிறியளவில் அமைப்பாகத் தொடங்கினர். இடதுசாரிகள் செயற்படுவது போல, அவர்கள் அடிமட்ட அணிதிரட்டல் செயற்பாடுகளில் இறங்கினர். பரந்துபட்ட பொதுமக்கள் ஆதரவுத்தளத்தை உருவாக்க முனைந்தனர். 

இவ்வமைப்புகளின் தலைவர்களில் இனவாதிகளும் அடங்குவர். இவர்கள் 1960, 1970களில் மாணவர் இயக்கங்களின் இடதுசாரிகளின் எழுச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். இவர்கள் சிறிய அமைப்புகளாகிய போது, அவர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. ஆனால் இவர்களின் பணிகள், அபேயின் எழுச்சிக்கு உதவின. 1990களின் ஆரம்பத்தில் இந்த அடிமட்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கின. இத்தோடு அபேயின் அரசியல் எழுச்சி இடைவெட்டுகிறது. 

பிரதான குடிமக்கள் மத்தியில் அதிகாரத்தையும் செல்வாக்கையும் குவிப்பதில் வெற்றி பெற்ற முதல் பெரிய வலதுசாரி அமைப்பு ‘ஜப்பான் மாநாடு’ ஆகும். இது 1997இல் மதம் மற்றும் இராணுவம் சார் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து, ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியது. 

‘ஜப்பான் மாநாடு’ 1995இல் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவத்தின் பின்னர் மிகுந்த செல்வாக்குள்ளதாக மாறியது. அவர்கள் கொலனித்துவம் மற்றும் போரில் ஜப்பானின் பங்குக்கு மன்னிப்பு கேட்கும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடும் அப்போதைய பிரதம மந்திரி முராயமா டோமிச்சியின் முயற்சியை வெற்றிகரமாகத் தடுத்தனர். 

அபேயின் எழுச்சியுடன், ‘ஜப்பான் மாநாடு’ ஒரு சக்திவாய்ந்த அரசியல் அமைப்பாக மாறியது. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் குவித்து, அபேயின் தாராளவாத ஜனநாயகக் கட்சி மற்றும் அடிமட்ட அமைப்புகளுடன் வலுவான தொடர்புகளைப் பெற்றுள்ளது. அபேயின் அமைச்சரவையில் பெரும்பாலானோர் ஜப்பான் மாநாட்டைச் சேர்ந்தவர்கள். 

இந்தப் போக்குக்கு முரண்பாடாக, ஜனநாயக ஆட்சிகள் மற்றும் சமத்துவத்துவத்துக்கான இடதுசாரி அழைப்புகள், 1970 களுக்குப் பிறகு முக்கியத்துவத்தை இழந்தன. அதிவலது செயற்பாட்டாளர்களால் ஏகாதிபத்திய சித்தாந்தங்களை பொது ஆர்ப்பாட்டங்கள், அரசாங்க பரப்புரை, ஒன்லைன் மனுக்கள் போன்ற ஜனநாயக வழிமுறைகள் மூலம் பிரபலப்படுத்த முடிந்தது. 

இடதுசாரிகளாலும் ஜனநாயகவாதிகளாலும் பயன்படுத்தப்படும் மக்கள்நோக்கு ஆயுதங்கள், இன்று ஜப்பானிய அதிவலதுசாரிகளால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது கடந்த தசாப்தத்தில் சிறுபான்மையினரைத் தாக்கும் அடிமட்ட இயக்கங்களின் அமைதியான பெருக்கத்துக்கும் திடீர் எழுச்சிக்கும் களம் அமைத்தன. 

அதிவலதுசாரி சிந்தனையில் இந்த முக்கியமான மாற்றத்தைப் புரிந்து கொள்வது அவசியம். ஜனநாயக வழிமுறைகளை ஆசிய அதிவலதுசாரித்துவம் வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறது. இதன் நீட்சியை இலங்கை, இந்தியா போன்ற பல ஆசிய நாடுகளில் காணலாம். 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வலதுசாரி-தீவிரவாதத்தின்-நிழலில்-13-ஜப்பானில்-அதிவலதுசாரித்துவத்தின்-எழுச்சி/91-311899

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 14: வரலாற்றில் களமாடும் தென்கொரியா

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

தென் கொரிய சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு புத்தகம், 2019ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகியிருந்து. ‘ஜப்பான் எதிர்ப்பு பழங்குடிவாதம்’ (பனில் சோங்ஜோக்சுசி) என்ற தலைப்பில் பல வலதுசாரி எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இப்புத்தகம், ஜப்பானிய கொலனித்துவம் பற்றி பல ஆத்திரமூட்டும் பொய்களைக் கட்டமைத்தது. 

கொலனித்துவத்தின் அம்சங்களான கட்டாய உழைப்பு, அரிசியைக் கொள்ளையடித்தல், பெண்களைச் சுரண்டுதல் போன்ற அம்சங்களைப் பற்றிய தற்போதுள்ள கொரிய வரலாறானது, இடதுசாரி மற்றும் இடது தேசியவாத தென்கொரிய வரலாற்றாசிரியர்களின் கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டது என்று இந்நூலின் ஆசிரியர்கள் வாதிட்டுள்ளனர். 

ஜப்பானிய சுரண்டலை விமர்சிக்கும் தென்கொரிய கல்வியாளர்களும் குடிமக்களும், ஜப்பான் எதிர்ப்பு பழங்குடிவாத - வலிமையான ஜப்பானிய எதிர்ப்பு உணர்வுகளாலும் தேசியவாத அரசியல் பிரசாரத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இப்புத்தகம் குற்றம் சாட்டியுள்ளது. 

தென்கொரியாவில் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியின் புதிய அத்தியாயமாக, இந்தப் புத்தகத்தின் வரவு பார்க்கப்படுகிறது. வரலாற்றாசிரியர்கள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் எனப் பலரும் இப்புத்தகம் வரலாற்று உண்மைகளைத் திரித்து, ஜப்பானில் தீவிர வலதுசாரிகளால் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆதரிப்பதாக விமர்சித்தனர். ஆனால், இது 2019இல் தென்கொரியாவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக மாறியது. 

தென்கொரியாவில் தீர்க்கப்படாத வரலாற்று விடயங்கள் இன்றளவும் இடதுசாரி - வலதுசாரி மோதலின் முக்கிய களமாக இருந்து வருகிறது. சமகால அரசியல் உரையாடல்களில், வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து பேசப்படுகின்றன. இது அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் கடுமையான விவாதங்களை அடிக்கடி தூண்டுகின்றன. 

புதிய வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சியினூடு, தென்கொரியாவில் தீவிர அதிவலதுசாரி, தனது செல்வாக்கைச் செலுத்த முனைகிறது. இடதுசாரிகளால் எழுதப்பட்ட ‘பொய்யான வரலாறு’ என்ற பொய்யை இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். 

பழைமைவாத அறிவுஜீவிகள், கல்வியியலாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்போர் பழைமைவாத வரலாற்றுக் கதைகளை உருவாக்குவதிலும் அதிவலதுசாரி இயக்கங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவதிலும், முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தேசிய பெருமையை ஊக்குவித்து, சிதைந்த இடதுசாரிக் கருத்துகள் என்று அவர்கள் கருதுவதை எதிர்த்து, தென்கொரிய அறிவுசார் வலதுசாரிகள் ‘தாராளவாத ஜனநாயகத்தின்’ பாதுகாவலராக தம்மை நிலைநிறுத்திக் கொள்வதனூடு, அதிவலதுசாரித்துவத்துக்குக் களமமைத்துக் கொடுக்கிறார்கள்.

கம்யூனிச நாட்டில், ‘சுதந்திரம்’ அடைய முடியாதது என்று வலதுசாரிகள் நம்புவதால், தென்கொரியாவில் ‘தாராளவாத ஜனநாயகம்’ என்பது கம்யூனிசத்துக்கு எதிரானது என்று புரிந்து கொள்ளப்பட்டது. வட கொரியாவுடனான மோதல், அந்நாட்டின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கம்யூனிசத்தையும் வடகொரியாவையும் எதிர்ப்பது, தென்கொரியாவில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அடிப்படையில் ஒத்ததாக இருக்கிறது என்று வலதுசாரிகள் வாதிடுகின்றனர்.

தேசிய பிரிவினை மற்றும் கொரியப் போரின் அனுபவங்கள், தென்கொரியாவின் அரசியல் கதையாடலை ஆழமாகப் பாதித்துள்ளன. வடகொரியாவுடனான மோதல், தென்கொரிய அரசுக்கு மகத்தான சக்தியைக் கொடுத்தது. கம்யூனிச எதிர்ப்பு என்பது அதிகாரபூர்வ அரச சித்தாந்தமாக மாறியது. வடகொரியா ‘முழுமையான தீமை’ என்று அடையாளம் காணப்பட்டது. கம்யூனிசத்தை தோற்கடிப்பது, தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட்டது. 

தென்கொரிய அரசு ‘தேசிய பாதுகாப்பு’ என்ற பெயரில் மக்களின் நடத்தைகளை எளிதில் ஒழுங்குபடுத்தலாம். எதிர்க்கட்சி நடவடிக்கைகளை அடக்கலாம். தென்கொரிய அரசாங்கத்தை விமர்சிக்கும் எவரையும் தென்கொரிய சமூகத்தை அழிக்கும் ‘கம்யூனிஸ்டுகள்’ மற்றும் ‘வடகொரிய உளவாளிகள்’ என்று முத்திரை குத்துவதற்கு தேசிய பாதுகாப்பு சட்டம் ஒரு சக்திவாய்ந்த வழிமுறையாக மாறியது. இதனால், பேச்சு சுதந்திரம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.

இதன் பின்புலத்தில் தோற்றம்பெற்ற சர்வாதிகார அரசு, வரலாற்று நினைவுகளின் உற்பத்தியை ஏகபோகமாக்கியது. சில நிகழ்வுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. மேலும் வரலாற்றின் குறிப்பிட்ட பதிப்புகளை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான அரச வன்முறையானது, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யும் அவசியமான ஒடுக்குமுறையாக அடிக்கடி சட்டப்பூர்வமாக்கப்பட்டது. 

உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் தாங்களும் குற்றம் சாட்டப்படுவோம் என்ற பயத்தில் அமைதியாக இருக்க வேண்டியிருந்தது, இழப்பீடு அல்லது மன்னிப்புக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இதுதான் தென்கொரிய யதார்த்தமாக இருந்தது.  

பல வரலாற்று சம்பவங்கள், பொதுமக்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை; அல்லது, தேச விரோதம் மற்றும் கம்யூனிசச் சார்பானது என்று தவறாக குறிப்பிடப்பட்டன. 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் திகதி நிகழ்ந்த ஜெஜு எழுச்சியும் 1980 ஆம் ஆண்டு தோன்றிய  குவாங்ஜு ஜனநாயக இயக்கம் ஆகியவை இங்கு குறிப்பிடத்தகுந்தவை. 

ஏனெனில், சர்வாதிகார அரசு சாதாரண மக்களின் எதிர்ப்பை எவ்வாறு சட்டவிரோதமானதாகவும் முற்றிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவிலுள்ளதாகவும் அடையாளம் கண்டது என்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன. இவை இன்னொரு வகையில் அதிவலதுசாரித்துவத்தின் கதையாடல்கள் மைய அரசியல் நீரோட்டத்தில் செல்வாக்குச் செலுத்த வழிவகுத்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

அதிவலதுசாரித்துவத்தின் முக்கிய எதிரிகளாக கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள். இதனால் அதிவலதுசாரிக்கான தார்மீக ஆதரவு தென்கொரியாவைக் கட்டுப்படுத்திய அமெரிக்காவால் மறைமுகமாக வழங்கப்பட்டது. இதன்வழி இடதுசாரிகளையும் அவர்தம் சிந்தனைகளையும் ஒழித்துக்கட்டவியலும் என்று அமெரிக்க உளவுத்துறை நம்பியது.  

2004ஆம் ஆண்டில் புதிய அதிவலதுசாரித்துவத்தின் தோற்றமும் தென்கொரிய வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான அதன் முயற்சியானது ஒரு கருத்தியல் போரை நடத்துவதற்கும் பழைமைவாத குடிமக்களை பெரிய அளவில் அணிதிரட்டுவதற்குமான ஒரு பழைமைவாத திட்டமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது உண்மையில் தீவிர அதிவலதுகளின் முதல் தீவிர அறிவுசார் இயக்கமாகக் கருதப்படலாம். 

கடந்த காலத்தில், அரசு அல்லது பழைமைவாதக் கட்சியால் மேல்-கீழ் கருத்தியல் பிரசாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், புதிய வலதுசாரி இயக்கம் அரசு சாரா அரங்காடிகளால் தன்னிச்சையாகத் தொடங்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது. பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கிறிஸ்தவ போதகர்கள் ஆகியோருடன் பழைமைவாத அரசியலுக்கு உள்ளீர்க்ப்பட்ட முன்னாள் மாணவர் ஆர்வலர்கள் தலைமையில், புதிய வலதுசாரி பழைமைவாதத்தின் புதிய, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சர்வதேச அளவில் மரியாதைக்குரிய ஒரு தனித்துவமான அடையாளத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

பழைமைவாத எண்ணம் கொண்ட பதிப்பகங்களை நிறுவுதல், புதிய பத்திரிகைகளை உருவாக்குதல், சிவில் அமைப்புகள், வலையமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கெனவே உள்ள பழைமைவாத ஊடகங்களைப் பயன்படுத்தி, புதிய வலதுசாரி அறிவுஜீவிகள் பழைமைவாத மதிப்புகளை ஊக்குவிக்கவும் பழைமைவாத அரசியலைப் புதுப்பித்தல் போன்றன மேற்கொள்ளப்பட்டன. 

புதிய வலதுசாரி அமைப்புகளின் சில நிறுவன உறுப்பினர்கள், 1980களில் மாணவர் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் முந்தைய அனுபவங்கள், பொதுக் கருத்தை வடிவமைப்பதில் மற்றும் அணிதிரட்டுவதில், கலாசார மேலாதிக்கத்தை ஒழுங்கமைத்து கட்டியெழுப்புவதில் அடிமட்ட மக்கள் முக்கியமானவர்கள் என்ற பாடத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தன.

கருத்தியல் ரீதியாக, புதிய அதிவலதுசாரியானது, கம்யூனிச எதிர்ப்பு பழைய வலதுசாரி மற்றும் பிடிவாதமான தேசியவாத பழைய இடதுசாரி இரண்டிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒரு மாற்று அரசியல் சக்தியாக தன்னை முன்வைத்தது. ஒருபுறம், புதிய அதிவலதுசாரித்துவத்தின் தீவிர பழைய வலதுசாரிகளிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டது. அது கம்யூனிச எதிர்ப்பு, வடகொரியா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் தெளிவான அரசியல் அல்லது பொருளாதாரப் பார்வை இல்லாமல் இருந்தது. 

மறுபுறம், மறுபகிர்வு மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் பழைய மற்றும் நம்பத்தகாத சோசலிச கொள்கைகளை பின்பற்றுவதற்காக இடதுசாரிகளை புதிய அதிவலதுசாரித்துவம் விமர்சித்தது. வடகொரியாவுடன் சீர்திருத்தவாத அரசாங்கங்களின் கொள்கை, ஊக்குவிப்பு குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். கொரிய தீபகற்பத்தில் அமைதி, வடகொரிய ஆட்சியின் முடிவுடனேயே சாத்தியம் என்ற அமெரிக்க கொள்கைளையே அதிவலதுசாரித்துவம் பின்பற்றுகிறது. 

தென்கொரிய அதிவலதுசாரித்துவத்தின் செயற்பாடுகள், பல ஆசிய நாடுகளில் புத்தெழுச்சி பெற்றுள்ள அதிவலதுசாரி சக்திகளின் செயற்பாடுகளுக்கு இணையானவை. தென்கொரிய அதிவலதுசாரித்துவம் சொல்கின்ற முக்கிய செய்தி, இன்று அதிவலதுசாரி தன்னைப் புதிதாகத் தகவமைத்து, மைய அரசியல் நீரோட்டத்தில் தன்னை முக்கியத்துவப்படுத்துகிறது. இதற்கு ஜனநாயக முகமூடி உதவுகிறது.  

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வலதுசாரி-தீவிரவாதத்தின்-நிழலில்-14-வரலாற்றில்-களமாடும்-தென்கொரியா/91-312225

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்காசியாவில் கெடுபிடிப்போர் - அதிவலதுவாதத்தின் அடிநாதம்

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 15: 

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தீவிரவலதுசாரிகளின் அணிதிரட்டலும் கிழக்காசிய அதிவலதுசாரி அரங்காடிகளின் நடத்தையும் அரசியல் உபாயங்களும், ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள அவர்களது சகாக்களிடமிருந்து வேறுபடுகின்றன என்பதை, கடந்த இருவாரங்களில் பார்த்தோம். 

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவலதுசாரி சக்திகள், கடந்துபோன எதேச்சதிகார அல்லது கொலனித்துவ காலத்தை மகிமைப்படுத்துவதில், அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமாக உள்ளனர். 

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் இருந்து மாறாத கருத்தியல் கூற்றுகளை, தங்கள் அடிப்படைகளாகக் கொண்டுள்ளனர். இதன்வழி, ‘மற்றவர்களை’ பற்றிய வெறுப்புணர்வும் வரலாறு பற்றிய மாற்றுப்பார்வையும் கம்யூனிச எதிர்ப்பும், இவர்களது ஆதார சுருதியாகவுள்ளது. 

ஆசியாவில், அமெரிக்கா தலைமையிலான கெடுபிடிப்போர் தோற்றுவித்த புவிசார் அரசியலால், இந்த வேறுபாட்டை விளக்கவியலும். 

போருக்குப் பிந்தைய ஜப்பானிலும் தென்கொரியாவிலும் தீவிரவலதுசாரி உயரடுக்குகள் பலப்படுத்தப்பட்டன. ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவுக்கு எதிராக ஆசியாவில் முடிவடையாத கெடுபிடிப்போர், தீவிரவலதுசாரிகளின் நிறுவன நிலைத்தன்மையையும் அதன் பழைய கம்யூனிச எதிர்ப்பு மற்றும் கொலனித்துவ இனவெறியின் அரசியல் அதிர்வலையையும் அனுமதித்தது. எனவே, கிழக்கு ஆசியாவில் ஜனநாயக அரசியல் என்பது, கெடுபிடிப்போரின் அடிநாதத்தை முன்னிறுத்துகிறது.

தென்கொரியாவின் தீவிரவலதுசாரிகள், முதன்மையாக சர்வாதிகார உயரடுக்கினரையும் வயதான குடிமக்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த எதேச்சதிகார தலைவர்களை மகிமைப்படுத்துகிறார்கள். வடகொரிய சார்பு கம்யூனிஸ்டுகள் என்று முத்திரை குத்துவதன் மூலம் ஜனநாயக, முற்போக்கு சக்திகளை கொச்சைப்படுத்துகிறார்கள். 

image_90643c3cb1.jpg

ஜப்பானில், நிறுவன மற்றும் நிறுவனத்துக்கு அப்பாற்பட்ட தீவிரவலதுசாரி குழுக்கள் இரண்டும் கொலனித்துவ தவறுகளை மறுப்பதில் ஒன்றுபட்டுள்ளன. பல தலைமுறைகளாக ஜப்பானில் வாழும் பழைமையான ‘ஜைனிச்சி கொரியர்’களை இலக்காகக் கொண்டுள்ளனர். 

இருநாடுகளிலும் உள்ள தீவிரவலதுசாரிகள் ஜனரஞ்சகத்தை நாடவில்லை; ஊழல் நிறைந்த அரசியல் ஸ்தாபனத்தை நிராகரிக்கவில்லை. மாறாக, தென்கொரியாவில் ஜனநாயகத்தையும் மக்கள் இறைமையையும்  நிலைநாட்டப் போராடும் முற்போக்கு சக்திகளை இலக்கு வைக்கின்றன. 

தென் கொரியாவில் உள்ள சீர்திருத்தவாத முற்போக்குக் குழுக்கள், மக்கள் இறையாண்மையை மீறி, தங்கள் சொந்தப் பைகளை செழுமைப்படுத்திக் கொண்ட சர்வாதிகார உயரடுக்குகளுக்கு எதிராக, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதிலும் ஆழப்படுத்துவதிலும் பொது மக்கள் பங்கை வலியுறுத்தி நீண்ட காலமாகப் போராடுகிறார்கள்.  இவர்களே தென்கொரியாவில்  ஜனநாயகமயமாக்கலுக்கு வழிசெய்து, 1987இல் இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மக்கள் எழுச்சிகளை ஏற்பாடு செய்தனர். இவர்களை ஜனரஞ்சகவாதிகள் என்றும் ‘அரசின் எதிரிகள்’ என்றும்  தீவிரவலதுசாரிகள் முத்திரை குத்துகிறார்கள்.

கிழக்கு ஆசியாவில் தீவிரவலதுசாரிகள் தேசியவாத சாய்வுகளை எச்சரிக்கையோடு  பயன்படுத்துகிறார்கள். தேசியவாதம் என்பது, தென்கொரிய வலதுசாரிகளுக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல; ஏனெனில், மத்திய-இடதுசாரி சக்திகளும் கொலனித்துவ அநீதிகளை சரிசெய்வதற்கும் அமெரிக்காவுடனான சமமற்ற உறவுகளை சரிசெய்வதற்கும், அவர்களின் விருப்பத்தில் தேசியவாதத்தின் சமத்துவத் தன்மையை ஆதரிக்கின்றன. 

பசுபிக் போரின்போது, ஜப்பானிய இராணுவத்தின் இராணுவ பாலியல் அடிமை முறை (‘ஆறுதல் பெண்கள்’) போன்ற தீர்க்கப்படாத கொலனித்துவ பிரச்சினைகள் வரும்போது, தென்கொரிய முற்போக்குவாதிகள் தீவிர வலதுசாரிகளை விட, தேசியவாதிகளாக உள்ளனர். 

ஜப்பானில் உள்ள தீவிரவலதுசாரிகள், ஜப்பான்-அமெரிக்க இராணுவக் கூட்டணிக்கு எதிரான, தங்கள் போராட்டத்தில் ஓர் அமைதிவாத தேசியவாதத்தை நாடியுள்ளனர். இது அமெரிக்க மேலாதிக்க சக்தியின் திணிப்பாகவும் ஜப்பானின் தேசிய இறையாண்மையின் சமரசமாகவும் பார்க்கப்படுகிறது. ஜப்பானிய தீவிர வலதுசாரிகளின் முக்கியமான அம்சம், அவர்களின் ஏகாதிபத்திய தேசியவாதமாகும். கொலனித்துவ தவறுகளை மறுப்பது, ‘ஜைனிச்சி கொரியர்’களை குறிவைப்பது ஆகியன அவர்களின் முக்கிய பணியாகவுள்ளது. 

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவலதுசாரிகள், தங்கள் மேற்கத்திய சகாக்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். இவர்கள் கொலனித்துவ கடந்த காலத்தை மகிமைப்படுத்த, ‘திருத்தல்வாத’ வரலாற்றுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்களின் கருத்தியல் கூற்றுகள், போருக்குப் பிந்தைய தசாப்தங்களில் இருந்து மாறாமல் உள்ளன. 

இதை ஆழமாக அவதானித்தால், அவர்கள் கெடுபிடிப்போரின் போது நிறுவப்பட்ட தங்கள் அரசியல், பொருளாதார, கருத்தியல் மேலாதிக்கம் ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்த விரும்புகிறார்கள். ஏனெனில், அவர்களின் அரசியல் பார்வை, கெடுபிடிப்போர் சகாப்தத்தின் உச்சக்கட்டத்துக்குத் திரும்புகிறது. அவர்களின் எதிரிகள், அந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நீண்டகால உள்நாட்டு அரங்காடிகள். 

தென்கொரிய தீவிரவலதுசாரிகள், தாராளவாத ஜனநாயகத்துக்குத் திரும்புவதை ஆதரிக்கிறார்கள். இது கெடுபிடிப்போரின் போது, நிறுவப்பட்ட கம்யூனிச எதிர்ப்பு சர்வாதிகார அமைப்பைத் தவிர வேறில்லை. இதனால்தான் அவர்களின் கருத்தியல் அமைப்பு, இன்னும் வடகொரிய எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு, மக்கள் ஜனநாயகத்துக்காக வாதிடும் சீர்திருத்த-முற்போக்கு சக்திகளுக்கு கடுமையான எதிர்ப்பாக உள்ளது. 

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவலதுசாரிகள் தனிப்பட்ட உரிமைகள், சமத்துவம், பன்மைத்துவம் போன்ற தாராளவாத நெறிமுறைகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானவர்கள், இவர்கள், வன்முறை வழிகளில் தங்கள் எதிரிகளை அகற்றுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். இது, அவர்களின் வாய்மொழி அவதூறுகள், தனிப்பட்ட தாக்குதல்கள், உடல்ரீதியான ஊறுவிளைவிப்பு, போர்க்குணம்மிக்க முறைகளைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல் ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்டது.

மேற்கத்திய ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஆசியாவில் கெடுபிடிப்போர் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை ஆராய்வதன் மூலம், கிழக்கு ஆசியாவில் தீவிரவலதுசாரிகளின் கருத்தியல் உள்ளடக்கம் மற்றும் 21ஆம் நூற்றாண்டில் அவர்களின் அணிதிரட்டல் ஆகிய இரண்டும் விளக்கப்படலாம். 

இடதுசாரி-வலதுசாரி நிலைகள் என்பது, காலத்திலும் நாடுகளிலும் மாறுபடும் வரலாற்று மற்றும் சமூகக் கட்டமைப்பாகும். சமகால ஐரோப்பாவில், வெவ்வேறு உரிமைகோரல்களுடன் தீவிரவலதுசாரிகளின் மறுமலர்ச்சி, கிழக்கு ஆசியாவில் தற்போதைய தாராளவாதிகள் மத்தியில் அதே தீவிர சித்தாந்தங்களின் எதிரொலியை செயற்படுத்துகிறது. 

ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு, கெடுபிடிப்போர் என்பது 1989இல் பெர்லின் சுவரின் வீழ்ச்சியுடன் முறையாக முடிந்தது, அதேவேளை, அது குளிர்ந்த நெருக்கடியில்லாத போராக இருந்தது. கெடுபிடிப்போர் நிர்ப்பந்தங்கள் நாசிச அட்டூழியங்களை முழுமையாக விசாரிக்கவோ, நாஜி ஒத்துழைப்பாளர்களின் தண்டனையை நடைமுறைப்படுத்தவோ அனுமதிக்கவில்லை. 

கெடுபிடிப்போரின் இத்தகைய வித்தியாசமான அனுபவம், தீவிரவலதுசாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. கம்யூனிச எதிர்ப்பின் பெயரால் எந்தவொரு கொடுமையையும் செய்ய முடிந்தது. 

பல கொலனித்துவ நாடுகளுக்கு, கெடுபிடிப்போர் என்பது கொடூரமான உள்நாட்டுப் போர்கள் மற்றும் பிற அரசியல் வன்முறைகளை உள்ளடக்கிய சூடான போர்களின் சகாப்தமாக இருந்தது. கெடுபிடிப்போர் தொடங்கியவுடன், கிழக்காசியப் பிராந்தியத்தில் கம்யூனிச விரிவாக்கத்துக்கு எதிராக, வலுவான அரண் அமைப்பதற்கு அமெரிக்கா முன்னுரிமை அளித்தது. இந்த மேலாதிக்க நலன்களிலிருந்து, தென்கொரியாவில் கொலனித்துவ அரசையும் அதற்கு ஏதுவான சட்டக் கட்டமைப்புகளையும் மீண்டும் நிலைநிறுத்துவதை ஆதரித்தது. 

ஜப்பானிய பேரரசரையும் மற்றைய போர்க் குற்றவாளிகளையும் அரசியல் பொறுப்புக்கூறலில் இருந்து அமெரிக்கா காப்பாற்றியது. கிழக்கு ஆசியாவில் இராணுவவாதம், அரச வன்முறை மற்றும் இன-தேசிய ஒற்றுமையை இயல்பாக்குவதன் மூலம் கொலனித்துவத்துக்குப் பிந்தைய தீவிர வலதுசாரி அமைப்புகள் கம்யூனிசத்துக்கு எதிராக ஒரு முதலாளித்துவக் காட்சிப் பொலிவை உருவாக்குவதற்குப் பயன்பட்டன. இது பழைமைவாத ஸ்தாபனத்தின் வலுவூட்டலுக்கும் சட்டபூர்வமாதலுக்கும் மேலும் பங்களித்தது. 

கெடுபிடிப்போர் உத்தரவின் கீழ், தென்கொரியாவின் எதேச்சதிகார அரசு கம்யூனிச வடகொரியாவுக்கு எதிரான போராட்டத்தில், அதன் அரசியல் சட்டபூர்வமான தன்மையை உருவாக்கியது. அதேநேரத்தில் கம்யூனிச ஆதரவாளர்களை ஒழிக்கும் பெயரில், அரசியல் அதிருப்தியாளர்களை, விமர்சனத்தை  வன்முறை கொண்டு  அடக்குவதை நியாயப்படுத்தியது. இவற்றின் வழி கட்டற்ற வலது தீவிரவாதத்தை ஆசிர்வதித்தது. 

போருக்குப் பிந்தைய ஜப்பானை நிர்வகித்த சக்திவாய்ந்த பழைமைவாதக் கூட்டமானது, முதலாளித்துவ விரிவாக்கம் மற்றும் ஒற்றை இனத்துவக் கட்டுமானத்தில் வெறித்தனமாக இருந்தது. அதன் கீழ், ‘ஜைனிச்சி கொரியர்’கள் பரவலான சட்ட மற்றும் சட்டத்துக்குப் புறம்பான இனவெறிக்கு ஆளாகினர். 

சுருக்கமாக, கிழக்காசியாவில் கெடுபிடிப்போர் ஒழுங்கின் தொடர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல், தென்கொரியா மற்றும் ஜப்பானில் சமகால தீவிரவலதுசாரிகளின் கருத்தியல் கூற்றுகளையும் அணிதிரட்டல் முறைகளையும் எம்மால் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது.

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்காசியாவில்-கெடுபிடிப்போர்-அதிவலதுவாதத்தின்-அடிநாதம்/91-312897

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்கிழக்கு ஆசியாவின் ஆழமான வேர்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 16: 

தென்கிழக்கு ஆசியாவில் அதிவலதுசாரி தீவிரவாதமும் அதன் சித்தாந்த ரீதியில் உந்தப்பட்ட வன்முறையும், இன்றுவரை குறைவான கவனம் பெற்றதொன்றாகவே இருக்கிறது. 

‘ஆசியான்’ (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) பிராந்தியத்தில், அரசியல் வன்முறை என்பது, கொலனித்துவ காலத்தில் இருந்து, இடதுசாரி பயங்கரவாதம், கம்யூனிசம், போர்க்குணம் மிக்க இஸ்லாமியவாதத்தை மையமாகக் கொண்டது. 
இஸ்லாமிய அரசின் (IS) தோற்றம் மற்றும் ஜ.எஸ்சுக்கும் பிராந்திய இஸ்லாமியத் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே வளர்க்கப்பட்ட உறவுகளால், பிராந்தியத்தின் கவனம், அல்-கொய்தா சார்பு ஜெமா இஸ்லாமியா போன்ற வன்முறை ஜிஹாதிச இயக்கங்கள் மீதேயிருந்தது. 

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபட்டுள்ள மேற்கத்திய நாடுகளைப் போலவே, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் ஈடுபட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளும், தங்கள் சொந்த கொல்லைப்புறத்தில் அதிவலதுசாரி தீவிரவாதத்தின் அறிகுறிகளைப் புறக்கணித்தன. 

நியூசிலாந்தில் 2019 கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலால் ஈர்க்கப்பட்ட 16 வயது சிங்கப்பூர் இளைஞனை பொலிஸார் கைது செய்தமையானது  பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், இது போன்ற அதிவலதுசாரி வன்முறை எண்ணம் கொண்டோர் கைது செய்யப்படுவது, இது முதல் முறை அல்ல. 

ஜூன் 2020இல், 19 வயதான சிங்கப்பூர் குடிமகன் ஒருவர், AR-15 ரக தாக்குதல் துப்பாக்கியால் முஸ்லிம்களை சுட்டுக் கொல்லும், தனது  கனவு பற்றி, தனது இன்ஸ்டாகிராமில் இடுகையிட்ட பிறகு, வன்முறையைத் தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவங்கள் மேற்கத்திய பாணியிலான தீவிர வலதுசாரி தீவிரவாதத்தின் திடீர் அதிகரிப்பைக் குறிப்பதாகத் தோன்றின் அது தவறானது.

image_39b347f0d1.jpg

பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய ஆய்வாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் தீவிர வலதுசாரி தீவிரவாதத்தை ஏற்கெனவே இருக்கும் தீவிர இஸ்லாத்தின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே பார்க்கிறார்கள். அதை ‘பரஸ்பர தீவிரமயமாக்கல்’ என்று அணுகுகிறார்கள். 

பாசிசத்தை, குறிப்பாக தேசிய சோசலிசத்தை பிராந்தியத்தில் ஒரு புதிய நிகழ்வாகக் கருதுகின்றனர். இது வரலாற்றின் மிகை எளிமைப்படுத்தலாகும். இது நீண்டகால தீவிரவாத போக்குகளையும் உறவுகளையும் மறைக்கிறது. 

தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் மற்றும் சமூக சூழல்களைப் பொதுமைப்படுத்துவது ஆபத்தானது. அதேவேளை, நாஜி தாக்கங்கள் அல்லது பாசிச சித்தாந்தம் செல்வாக்குப் பெற முன்னரே, அதிவலதுசாரிகளின் செல்வாக்கு, இப்பிராந்தியத்தில் இருந்தது என்ற உண்மையை, ஏற்கெனவே புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை முற்றிலுமாக அழிக்கும் பணியைச் செய்யும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. 

ஏகாதிபத்திய ஜப்பானியர்கள், 1940இல் தான் ஆளும் முகாமை ஒருங்கிணைக்க ‘ஆசியாவுக்கான ஆசியர்’ என்ற பான்-ஆசியக் கருத்தை பிரசாரம் செய்வதற்கும், நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலியுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் நீண்ட காலத்துக்கு முன்பே, இந்தோனேசியாவில் பாசிசக் கட்சிகள் இருந்தன. 

அடல்ப் ஹிட்லர் 1933இல் ஆட்சிக்கு வந்த பிறகு, டச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் (இப்போது இந்தோனேசியா) உள்ள டச்சு-இந்தோ நாஜி அனுதாபிகள் பட்டேவியாவில் (இப்போது ஜகார்த்தா) Nederlandsche Indische Fascisten Organisatie நிறுவினர். ப்ரிபூமி (பூர்வீகவாசிகள்) உடன் சில உடன்பாடுகளைக் கண்டனர். 

பின்னர், இந்தோனேசிய அறிவுஜீவியும் ஜாவானிய பிரபுவுமான Raden Pandji Wirasmo Notonindito பெர்லினில் பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் முனைவர் பட்டம் பெற்று தாயகம் திரும்பி, இந்தோனேசிய தேசிய கட்சியில் சேர்ந்தார். ஹிட்லர் மற்றும் பெனிட்டோ முசோலினி இருவராலும் ஈர்க்கப்பட்டு, பின்னர் அவர் தனது சொந்தக் கட்சியை 1933 இல் பாண்டுங்கில், இந்தோனேசிய பாசிஸ்ட் கட்சியை நிறுவினார். ஜாவா மக்களுக்கான அரசியலமைப்பு முடியாட்சியின் கீழான சுதந்திரம் என்ற அதன் சித்தாந்தம் எந்த மக்கள் ஆதரவையும் பெறத் தவறியதால் கட்சி குறுகிய காலமே நீடித்தது. 

ஜலசந்தியின் குறுக்கே, தாய்லாந்து இரண்டாம் உலகப் போரில் ஓர் அச்சு நட்பு நாடாக நுழைந்தது, மேலும் 1938இல் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் பீல்ட் மார்ஷல் ப்ளேக் பிபுன்சோங்க்ராம் கீழ் ஒரு கலாசாரப் புரட்சியினுள் நுழைந்தது. அவர் தனது  இலட்சிய இராணுவவாத பாசிச அரசு என்ற கோட்பாட்டில், தாய்லாந்தை நவீனமயமாக்க முனைந்தார். 

image_c6607e123f.jpg

உலகளாவிய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலின் சகாப்தத்தில், பாசிசம் ஆசிய சீர்திருத்தவாதிகளுக்கு அவர்கள் போட்டியிட விரும்பிய ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளைப் போலவே கவர்ச்சிகரமானதாக இருந்தது. அது தேசிய வலிமை, இராணுவ சக்தி, இன மேலாதிக்கம், கலாசார மேன்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.

பாசிசத்துடனான தென்கிழக்கு ஆசியாவின் ஊர்சுற்றல்கள் அங்கு முடிவடையவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகு, நாசிசம் தென்கிழக்கு ஆசியாவில் ‘Nazi chic’ (நாஜி சிக்யைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நோக்கலாம்) மற்றும் நவநாசிசத்தின் வடிவத்தில் எதிர்பாராத மறுமலர்ச்சியை அனுபவித்தது. 

ஐரோப்பிய இரண்டாம் உலகப்போரின் அனுபவத்தின் வரலாற்று விழிப்புணர்வு இல்லாமை, பல ஆசிய பதின்ம வயதினரை நாஜி அழகியலுடன் நிலைநிறுத்துவதற்கு பங்களித்தது. நியோ-நாஜி இயக்கம் மலேசியாவின் ஹெவி மெட்டல் மற்றும் பங்க் இசைக் குழுக்களின் வழி 1990களில் இருந்து மலாய் இசைக்குழுக்களின் வடிவத்தில் தோன்றியது. 

1980கள் மற்றும் 1990களின் பிற்பகுதியில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இசைக் குழுக்களைப் போலவே, இந்தத் தேசிய சோசலிச இசைக்குழுக்கள் மலாய் பாசிச எதிர்ப்பு ஸ்கின்ஹெட் சமூகத்துடன்  மோதல்கள் நிகழ்ந்தன. 

மியான்மரில், 969 இயக்கம் எனப்படும் தேசியவாத பௌத்தக் குழு 2013 இல் ரோஹிஞ்கியா எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது.

image_81b3562267.jpg

இவ்வியக்கம் வன்முறை தந்திரோபாயங்களைக் கையாள்வதனூடு தங்களை ஒரு நவநாஜி அமைப்பாக வெளிப்படையாகவே அறிவித்தார்கள். அதேபோன்று தாய்லாந்தில், ஒருபுறம் கடுந்தேசியவாத பௌத்த துறவிகள் இஸ்லாமிய வெறுப்புக் கதைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தார்கள். இதற்கு எதிர்வினையாக  மறுபுறம் தேசிய புரட்சிகர முன்னணி (வடக்கு மலேசியாவில் உள்ள இஸ்லாமிய பதானி விடுதலை இயக்கம்)  தென் தாய்லாந்தில் உள்ள பௌத்த மதகுருமார்களை குறிவைத்தது.  

தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் தீவிர வலதுசாரி, மாற்று வலதுசாரி இயக்கங்கள், பிராந்தியத்தில் வாழும் மக்களைப் போலவே பன்முகத்தன்மை கொண்டவை; வேறுபட்டவை என்பதை அங்கிகரிப்பது முக்கியம். 

இதன் ஒரு பகுதியாக, தென்கிழக்கு ஆசியாவில் அதிவலதுசாரி சித்தாந்தத்தை முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகக் கருதலாகாது. சில காலமாக இருந்துவரும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே விளங்க வேண்டும். 

கம்யூனிசம் சோசலிசத்தின் மீதான பொதுவான விரோதம், முக்கியமாக ஆசியான் நாடுகளில், தீவிர வலதுசாரி மற்றும் மாற்றுவலதுசாரி கருத்துகளை சாத்தியமான பிரச்சினைகளாகக் கருதுவதை கடினமாக்குகிறது, குறிப்பாக, சமீபத்திய மேற்கத்திய தீவிர வலதுசாரி எண்ணங்களிலிருந்து பல கருத்துகள் கடன் வாங்கப்பட்டு அவை உள்மயமாக்கப்பட்டன. 

இவை இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு பதில் ‘மேற்கத்திய பாணி தீவிர வலதுசாரி தீவிரவாதத்தை’ அதிவலதுசாரித்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று முடிவு செய்யத் தூண்டுகிறது. என்றாலும், இது மேலோட்டமான விளக்கம் மட்டுமே. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து அல்லது வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதுவாக இருந்தாலும், தற்போதைய அரசியலில் ஆழமாக மூழ்குவது அவசியம். 

தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு நாடுகளில் இருக்கும் தீவிர வலதுசாரி இயக்கங்கள், அந்தந்த தேசங்களின் தூய்மையைப் பாதுகாக்க இன-மத அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. 

மேற்கில் உள்ள வெள்ளை மேலாதிக்க தீவிரவாதத்தைப் போலவே, இப்பிராந்தியத்தில் உள்ள இனவாதிகள், தங்கள் தாயகத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் இறையாண்மையின் மீது அதிகாரத்தை விரும்புகிறார்கள். 
உதாரணமாக, இயன் ஸ்டூவர்ட் மற்றும் அவரது ப்ளட் ரூ ஹானர் நெட்வொர்க்கால் ஈர்க்கப்பட்ட மலாய் சக்தி இயக்கம், ‘நுசந்தரா ராயா’ (மலாய் பவர்), மலாய் மேலாதிக்கத்தின் கருத்தை ஊக்குவிக்கிறது. 

சிங்கப்பூரில், தீவிர வலதுசாரி தீவிரவாத சித்தாந்தம் எவ்வளவு ஆழமானது அல்லது பரவியது என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண், ஒரு தீவிர கிறிஸ்தவரான இந்திய இனத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இவர்கள் எல்லோரும் தத்தம் நாடுகளில் சமத்துவத்தைக் கோரும்; சிறுபான்மையினரின் முன்னிலையில் தங்கள் இருப்பு, உயிர்வாழ்வு, சலுகை ஆகியவை அச்சுறுத்தப்படுகின்றன என்று நம்புகிறார்கள்.
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தென்கிழக்கு-ஆசியாவின்-ஆழமான-வேர்கள்/91-313117

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தென்கிழக்காசியாவில் அதிவலதின் இயங்குதளங்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 17:

இன்றைய நவீன காலத்தில் அதிவலதின் இயங்குதளங்கள் மாறி வருகின்றன. குறிப்பாக, ஆசிய சூழலில் இவை புதிய சவால்களாக உருவெடுத்துள்ளன. 

நவ-நாசிச சிந்தனைகள், வெள்ளை மேலாதிக்க அரசியல் என்பன ஆசிய இளைஞர்களால் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவர்கள் புவியியல் எல்லைகளால் வரம்பற்ற ‘ஒன்லைன்’ பயனர்களாக உள்ளனர். இதனால் அவர்களால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடப்பதை இலகுவில் உள்வாங்க முடிகிறது. 

ஆனால், இங்கு கவனிப்புக்கு உள்ளாக வேண்டியது யாதெனில், இவ்வாறு மேற்குலக அதிவலது சித்தாந்தத்தால் கவரப்படுகின்ற இவ்விளைஞர்கள் வெள்ளையர்களோ ஆரியர்களோ அல்ல. நவ-நாசிசம், வெள்ளை இனம் அல்லது ஆரிய இனமே இனப்படிநிலையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற வலியுறுத்தலில் தன்னைக் கட்டமைத்தது. ஆனால் வெள்ளையராகவோ ஆரியராகவோ இல்லாத இளைஞர் கூட்டத்தை, இக்கருத்தாக்கம் எவ்வாறு கவர்ந்தது? 

இந்த வினா மிகவும் முக்கியமானது. இதை விளங்கிக் கொள்வது இலங்கையின் அதிவலதின் இயங்குதளங்களையும் புரிந்து கொள்ள உதவும். ஏனெனில், இலங்கையிலும் அதிவலதின் செல்வாக்கு கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது. அவை பெரும்பாலும் மதரீதியாகக் கட்டமைக்கப்பட்டாலும் அதன் இயங்கியல் பெரும்பாலும் ஏனைய ஆசிய நாடுகளின் அதிவலதின் பாணியை ஒத்திருக்கிறது. 

ஆரிய வெள்ளை நிறவெறியை மையமாகக் கொண்ட நவ-நாசிசச் சிந்தனைகள், உள்ளூர் சூழலுக்கு ஏற்றவகையில் எளிதில் மாற்றி அமைக்கப்படுகின்றன. ஆரிய மேன்மை என்பது, தேசியவாத மேன்மையாக முன்னெழுகிறது. இனத்தூய்மை என்ற கருத்தாக்கம் அதற்குப் பயன்படுகிறது. 

இவ்வாறு  மாற்றியமைக்கவும் பரப்பவும் இச்சிந்தனைகள் பாசிசவாத எண்ணம் கொண்டோரை அடையவும் இணையம் மிகப்பெரிய வாய்ப்பாயுள்ளது. இந்த வாய்ப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது; எவ்வாறு இளைஞர்களைக் கவருகிறது என்பதே இந்தக் கட்டுரை பேசவிளைகின்ற புதிர்.  இந்தப் புதிருக்கு நான்கு முக்கியமான அம்சங்கள் உள்ளன. 

முதலாவதாக, கொலனித்துவ காலத்துக்குப் பின்பு வெள்ளை நிறத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றிய புரிதல் இன்னமும் எட்டப்படவில்லை. அது முக்கியமானது. குறிப்பாக கொலனியாதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளின் அனுபங்களின் வழி, இது ஆழமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். 

உதாரணமாக, இந்தோனேசியாவில் வளர்ந்த முந்தைய பாசிச இயக்கங்கள் கொலனித்துவ எதிர்ப்புப் பிரதிபலிப்பாக வளர்ந்தன. தீவிர தேசியவாதத்தின் வடிவத்தில் அரசை ஆட்சிசெய்வது என்ற நிலைப்பாட்டை எடுத்தன. அது வெள்ளைக் கொலனியவாதிகளுக்கு எதிரான இயக்கமாக இருந்தது. ஆனால், கொலனியாதிக்க விடுதலையின் பின்னர் தோற்றம்பெற்ற அதிவலது வேறுபட்டதாக இருந்தது. அது மேற்கத்தைய அதிவலது சித்தாந்தத்தை அடியொற்றியது. வெள்ளை நிறவெறியைத் தனது உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இனவாத, மதவாத, பிரதேசவாத வெறியாக உருமாற்றியது. இவை இன்னமும் பரந்த தளத்தில் ஆய்வுக்குட்படவில்லை. 

இலங்கை சூழலில் அநகாரிக தர்மபாலவின் பௌத்த மீளெழுச்சியின் அடித்தளம், கொலனியாதிக்க எதிர்ப்பு. அவரது தொடர்ச்சி இன்று, ‘சிங்கலே - சிகல - ராவண- பொதுபலசேனா’ ஆகியவற்றின் இயங்கியல் தொடர்ச்சியாக உருமாறியுள்ளதை இந்தோனேசியாவுடன் ஒப்பிட்டு நோக்கவியலும். 

அநகாரிக தர்மபால போலவே ஆறுமுகநாவலரின் இயங்கியலும் கொலனியாதிக்க எதிர்ப்பில் மையம்கொண்டது. இலங்கை அனுபவம் தருகின்ற பாடம் யாதெனில், அநகாரிக தர்மபாலவும் ஆறுமுகநாவலரும் கொலனிய அடக்கமுறைக்கு எதிரான எதிர்ப்புக்கு எடுத்துக்கொண்ட கருவிகளும் காலப்போக்கில் அடக்கமுறையின் ஆயதங்களாகின என்பதாகும்.

இரண்டாவதாக, கலாசார அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாக பேரினவாத தூண்டுதல்கள் எவ்வாறு எழுகின்றன என்பதை சிந்திக்க வேண்டும். ‘நவீனத்துவத்தை’ நிராகரிப்பதற்கும் தூய்மையானதாகவும் பாரம்பரியமானதாகவும் கருதப்பட்ட இனத்தைக் காத்துக் கொள்ளவும் நாட்டுக்குரிய விசுவாசத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாயமாக அதிவலதை ஏற்றுக்கொள்வதற்கும் இடையில் ஆழ்ந்த தொடர்பு உள்ளது. 

உதாரணமாக, 2021இல் நடந்த சதிப்புரட்சியின் வழி பதவிக்கு மீண்ட மியன்மாரின் இராணுவ ஆட்சிக் குழுவை, மியன்மார் தேசபக்திச் சங்கம் (அதிதீவிர பௌத்த பிக்குக்களின் அமைப்பு) அரவணைத்துக்கொண்டது. 2015இல் இராணுவ ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஜனநாயக அடிப்படைகள் மெதுமெதுவாக மீண்ட நிலையில், சமத்துவமும், நீதியும் நிலைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தோற்றம் பெறத் தொடங்கின. இதை அதிதீவிர பிக்குகள் விரும்பவில்லை. அவர்கள் 2015 முதல் நாட்டை மாற்றியமைத்த நவீனமயமாக்கலைத் திரும்பப் பெற விரும்புகிறார்கள். 

இலங்கையில் ‘வியத்மக’வின் வழிகாட்டலில் ஆட்சிபீடம் ஏறிய கோட்டாபயவின் கதையும் மியன்மாரிய உதாரணம் போன்றதே. இந்த உதாரணங்கள், தெளிவாக எடுத்துரைப்பது யாதெனில், தென்கிழக்காசிய தீவிர வலதுசாரிகள் மற்றும் தீவிர தேசியவாதிகள் சமத்துவம், பெண்ணியம் போன்ற மதிப்புகள் நிராகரிக்கப்படும். அந்நியர்கள் வெளியேற்றப்படும் ஒரு தேசத்தை கற்பனை செய்கிறார்கள். அந்தத் தேசத்தை உருவாக்குவதற்காக வன்முறையை வரன்முறையின்றிப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறார்கள். 

அதேனநேரத்தில் பாரம்பரிய ஆண்பால் மதிப்புகள் மேநிலையாக்கம் அடைந்து சமூகத்தில் நிலைநிறுத்தப்படுகின்றன; போற்றப்படுகின்றன. ஆண்மேலாதிக்கத்தை சர்வவியாபகமான ஒரு சூழலை நோக்கி நகர்த்துகிறார்கள். இவை தீவிர வலதுசாரி மற்றும் வலதுசாரி ஜனரஞ்சக சித்தாந்தங்களின் மிக உடனடியாக அடையாளம் காணக்கூடிய அம்சங்களாகும். 

இதற்கு ஓர் உதாரணத்தை நோக்கலாம். 2014இல் கலிபோர்னியாவில் ஆறுபேரை கொலைசெய்த அதிவலது கொலையாளி எலியட் ரோட்ஜர், மலேசிய வேர்களைக் கொண்டிருந்தார். அவரது தாயார் சீன இனத்தைச் சேர்ந்த மலேசியர்; அவரது தந்தை வெள்ளை பிரிட்டிஷ். ரோட்ஜர் தனது சிக்கலான இன அடையாளம் மற்றும் ஆண்மையை இலட்சியப்படுத்துவது பற்றிய ஆழமான சமூக கவலைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் அவர், தீவிரமான பெண் வெறுப்பைக் கொண்டிருந்தார். அவரது அறிக்கையானது, அவரது ஆசிய அடையாளத்தை நிராகரித்தது. வெள்ளை மேலாதிக்கத்தை உள்வாங்கியதைப் பிரதிபலித்தது. அவ்வறிக்கை இனப் படிநிலைக் கருத்துடன் ஆரோக்கியமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. 

கலாசாரம் குறித்த அதீத கரிசனையும், கலாசாரம் நெருக்கடியில் இருக்கிறது. கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டியது என்ற கவலையும் ஒருங்கே பலரை அதிவலதுடன் இணைகின்றது. அதற்கு சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், படங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை தவறானவையாக இருந்தபோது அப்புரிதல் பொதுவில் மக்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் அத்தகவல்களைக் கண்டு உணர்ச்சிபொங்கி இன்னும் பலருக்கு அச்செய்தியைப் பகிர்கிறார்கள். இவ்வாறுதான் அதிவலது தனது ஆதரவுத்தளத்தைப் பெற்றுக்கொள்கிறது. 

இளைஞர்களை கவருகின்ற மூன்றாவது அம்சம் மிக முக்கியமானது. இது அதிவலதின்  ‘தாயகம்’ என்ற பழைமைவாத கற்பனாவாதத்தில் கவனம் செலுத்துகிறது. இது உண்மையாக தேசியவாதிகளின் முக்கியமான களம். அங்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மதம் உயர்ந்ததாக இருக்கும். மற்றும் பாரம்பரிய மதிப்புகள் எந்தவொரு வெளிப்புற தாக்கத்தினாலும் சவால் செய்யப்படாத, கறைபடாத மற்றும் அழிக்கப்படாமல் இருக்கும். 

இத்தாயகத்திற்கு ஊறுவிளைவிப்பர்கள், வெளிநபர்கள், இத்தாயகத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்கள் அனைவருமே அதிவலதின் எதிரிகளாகிறார்கள். தாயகம் என்ற அதிவலதின் சித்தாந்தத்தை எதுவித கேள்விகளுமின்றி ஏற்றுக்கொண்டவர்கள், போற்றுபவர்கள் ‘தேசபக்தர்கள்’. எதிர்க்கேள்வி கேட்பவர்கள், ஏற்கமறுப்பவர்கள், விமர்சிப்பவர்கள் ‘துரோகிகள்’. சாமுவல் ஜோன்சனின் ‘தேசபக்தி, அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்ற வரிகளை இங்கு நினைவூட்டுவது பொருத்தம்.    

நான்காவதாக, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அதிவலது அரங்காடிகளும் தீவிர தேசியவாதிகளும் ‘விழிப்பு’, ‘பெண்ணியம்’, ‘மனித உரிமைகள்’ ஆகியவை பாரம்பரிய ஆசிய மதிப்புகளுக்கு இணங்காத மற்றும் அவற்றுடன் ஒத்துப்போகாத தாராளவாத மேற்கத்திய கசப்பு என்று விளக்கமளிக்க முயலுகின்றனர். 

ஆணாதிக்க கடுந்தேசியவாத கடும்பழைமைவாத மதிப்புகள் செல்வாக்குப் பெற்றுள்ள பகுதிகளில் இந்தப் பிரசாரம் வெற்றியளிக்கிறது. இது நகர்புறமாக அன்றி கிராமப்புற இளைஞர்களைக் கவர்வதற்கான முக்கிய அம்சமாயுள்ளது. பாரம்பரிய சமூகச் சிந்தனைகளில் இருந்து விடுபடும் புதிய கருத்தாக்கங்கள் அவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றன. ‘சமூகத்துக்கு ஒவ்வாத’ என்ற அதிவலதின் கதையாடல் இவர்களை ஈர்க்கிறது. அதேவேளை மேற்சொன்ன தாயகம் குறித்த கற்பனை, கலாசாரம் குறித்த கரிசனை ஆகிய இரண்டும் இக்கதையாடலுக்கு வலுச்சேர்க்கின்றன.  

மறுபுறத்தில், இந்தக் கதையாடல் பெரும்பாலும் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கும் எந்தவொரு பார்வையையும் கட்டுப்படுத்தும் தணிக்கை செய்யும் எதேச்சாதிகார அரசியல் நிறுவனங்களின் முயற்சிகளுடன் ஒன்றுடன் ஒன்று இணைகின்றது. இதன் காரணமாக, தேச அரங்காடிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கு அதிவலது உதவுகிறது.   
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தென்கிழக்காசியாவில்-அதிவலதின்-இயங்குதளங்கள்/91-313668

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியத் தமிழரும் அதிவலதில் அள்ளுண்ணலும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலது தீவிரவாதத்தின் நிழலில் - 18:

சதிக் கோட்பாடுகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அக்கோட்பாடுகள் பெரும்பாலும் தேச, பிரதேச, இனத்துவ, அடையாள எல்லைகளுக்கு உட்பட்டவை. சதிக் கோட்பாடுகள் அரசியல் அரங்கில் முக்கியமான கருவியாக உள்ளன. அரசியலை அறிவுபூர்வத் தளத்தில் இருந்து அகற்றி, உணர்வுபூர்வத் தளத்திற்குத் தள்ளுகின்ற போது அரசியல் அரங்காடிகளுக்கு சதிக்கோட்பாடுகள் பயன்படுகின்றன. 

உலகெங்கும் சதிக்கோட்பாடுகளும் அதிவலது தீவிரவாதமும் இடைவெட்டும் நிகழ்வுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன; இப்போதும் நிகழ்கின்றன. சதிக் கோட்பாடுகள் வலதுசாரி தீவிரவாதத்திற்கு உந்து சக்தியாக இருக்கின்றன. சமகால சதிக் கோட்பாடுகள் பொதுவாக அதிகாரம் குறித்தோ அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அதிகார நலன்கள் குறித்தோ சுழல்கின்றன. 

இந்தச் சித்தாந்தத்துக்கு ஆட்படுபவர்கள் உண்மைகளை சிதைத்து, வழக்கமான உண்மையை அவர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மீதான உடனடி தாக்குதலாக சித்திரிக்கின்றனர். சதிக் கோட்பாடுகளை கதைகளை இயக்கவும், மேலாதிக்க குழுக்களின் நிலையை சட்டப்பூர்வமாக்கவும், துருவமுனைப்பை அதிகரிக்கவும் பயன்படுத்துவது புதிதல்ல. 

image_24d5f93cf3.jpg

மலேசியா ஒரு பல்லின, பல் மதங்களைக் கொண்ட நாடாகும். இது கூட்டாட்சி அரசியலமைப்பைக் கொண்ட முடியாட்சியால் ஆளப்படுகிறது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மலேசியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாகக் கருதினாலும், இஸ்லாம் உத்தியோகபூர்வ மதமாகும்.  மலாய் மக்களுக்கான சிறப்புச் சலுகைகளைக் கொண்டுள்ளார்கள். நாட்டின் பெரும்பான்மையான மலாய் வாக்காளர்கள் மலேசியாவை ஒரு இஸ்லாமிய இறையாட்சி கொண்ட நாடாகக் கருதுகின்றனர்.

மலேசியாவில், மலாய்-முஸ்லிம்கள் ‘ஒரு பாதிக்கப்பட்ட சமூகம்’ என்ற கதையாடலை நம்புகிறார்கள். அதற்கு அவர்களது சில சிந்தனைகள் காரணமாகின்றன. அவர்களது உலகக் கண்ணோட்டமானது,  யூத-எதிர்ப்புக் கருத்தியலாலும் சீன சிறுபான்மையினருக்கு எதிரான தப்பெண்ணங்களாலும்; வடிவமைக்கப்பட்டது. அவர்களிடம், சீனர்கள் மலாய் அரசியல் மேலாதிக்கத்தை அங்கிகரிக்கும் ‘சமூக ஒப்பந்தத்தை’ ஏற்றுக்கொள்ளவோ அல்லது கடைப்பிடிக்கவோ மறுக்கிறார்கள் என்ற நிலையான நம்பிக்கை உள்ளது. மேலும் சீனர்கள் ‘வரவேற்கப்படாத விருந்தினர்கள்’ என்று இழிவான முறையில் முத்திரை குத்தப்படுகிறார்கள். 

இந்தத் தப்பெண்ணங்கள் மதச்சார்பின்மை, உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியம் மற்றும் மலாய்-முஸ்லிம் விழுமியங்களைத் தகர்க்க முயலும் யூத-கிறிஸ்தவ மேலாதிக்கத்தை உள்ளடக்கிய புதிய உலக ஒழுங்கு என்று அழைக்கப்படும் ‘ஒரு கற்பனை எதிரி’ தொடர்பான கூக்குரல்களை உருவாக்குகின்றன. 

image_56c1928036.jpg
இந்துப் பெரும்பான்மைவாதத்தை வலியுறுத்தி நாட்டின் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட உதவும் இந்துத்துவா சித்தாந்தத்தை இந்தியா முன்னெடுப்பதானது, மலேசியாவில் உள்ளூர்மயமாக்கப்பட்ட ‘பெரிய மாற்றீடு’ (Great Replacement) என்ற சதிக்கோட்பாட்டுக் கதையாடலைத் தூண்டியது. அண்மையில், இந்தியாவின் கொந்தளிப்பான அரசியலானது, மலாய் தீவிர வலதுசாரி பழைமைவாதிகள் மத்தியில் ஏற்கெனவே இருக்கும் சந்தேகங்களைப் புதுப்பித்தது. 

அவர்கள் பெரும்பாலும் தமிழ் இனத்தவர்களான உள்ளூர் இந்திய சமூகங்களை ‘நன்றியற்ற தாழ்ந்தவர்கள்’ என்று நம்புகிறார்கள். இத்தமிழர்கள் ஒருநாள் மலாய் முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்ற விரும்புகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். 

இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் தனிநாடு கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான மலேசியத் தமிழர்களின் ஆதரவு, மிகுந்த சந்தேகக் கண்ணோடும் அச்சத்தோடும் பார்க்கப்பட்டது. அதேவேளை மலேசியாவில் சிறுபான்மைச் சமூகமாக உள்ள இந்தியத் தமிழர்கள், தங்கள் நியாயமான குறைகளை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, இந்த விரோதம் இன்னும் அதிகரித்தது.

2005இல் மலேசியாவில் உள்ள 29 இந்திய அமைப்புகள் சேர்ந்து, இந்து உரிமைகள் நடவடிக்கைப் படை (Hindu Rights Action ForceHINDRAF) என்றதோர் அமைப்பை உருவாக்கி அவர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிராகவும் அரசின் கோவில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராகவும் போராடினார்கள். விடுதலைப் புலிகளின் மலேசிய அனுதாபிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நோக்கப்பட்டனர். 

இத்தனைக்கும் மலேசியர்களையோ மலாயர்களையோ குறிவைக்கும் நோக்கம் விடுதலைப் புலிகளுக்கு இல்லை என்பது வெளிப்படையானது.  2009இல் விடுதலைப் புலிகள்  ஒழிக்கப்பட்டபோதிலும், மலேசியாவின் தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு இது உதவவில்லை. மாறாக, மலேசியாவில் புலிகளை மீண்டும் உயிர்த்தெழுப்ப முயல்வதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்தன.

image_ef37957abe.jpg

பல தசாப்தங்களாக, மலாய் அரசியல் அரங்காடிகள் இந்த முற்றுகை மனநிலையைப் பயன்படுத்தி, தங்கள் வாக்குகளை நிறைக்கிறார்கள். சிறுபான்மையினத்தவர் பற்றிய பொய்ப்பிரசாரங்களும் சதிக்கோட்பாடுகளும் இதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.  இது 2018 ஆம் ஆண்டில் அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் நீக்குவதற்கான ஐ.நா.வின் சர்வதேச பட்டயத்தை (International Convention on the Elimination of All Forms of Racial Discrimination) மலேசியா அங்கிகரிப்பதற்கு எதிரான எதிர்ப்பையும் தூண்டியது. அதிவலது சக்திகள் தேர்தலில் கணிசமான வாக்கைப் பெறுவதற்கு, இந்தப் பட்டயத்திற்கு எதிரான பிரசாரம் முக்கிய பங்காற்றியது.  

சமீபத்தில், மலாய் இனவாதிகள் ஒன்லைனில் மலேசியாவின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்கள். ஆரம்பகால மலாய் இராச்சியத்தில் பண்டைய இந்தியச் செல்வாக்கு இருக்கவில்லை என்றும் மலேசியாவுக்கு இந்து-பௌத்த கடந்த காலம் இல்லை என்றும் மலேசியா எப்போதுமே இஸ்லாமியர்களுடையதாகவே இருந்தது என்றும் கூறி வருகின்றனர்.

கடந்தாண்டு இறுதியில் இடம்பெற்ற பொதுத்தேர்தலும் அக்காலத்து அரசியல் கதையாடல்களும் எவ்வாறு அதிவலது செல்வாக்கு இன்று மலேசியாவின் மையநீரோட்டத்தை ஆட்சிசெய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். பொதுத் தேர்தலின் போது, சமூக ஊடகங்களின் வழி, தவறான தகவல்களைப் பயன்படுத்தி, முரண்பாட்டைத் தூண்டி, தவறான தகவல்களைப் பரப்பி, கடுமையான துருவமுனைப்புக்கான நிலைமைகளை மேம்படுத்துவதற்காக சதி கோட்பாடுகளை உருவாக்கினர்; இது வன்முறையில் முடிந்தது. 

தேர்தல் பிரசாரத்தின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகளும் கவனம் பெற்ற குறைபாடுகளும் புதுமையானவை அல்ல. எவ்வாறாயினும், இம்முறை, உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற நெருக்கடிகள் காரணமாக அதிவலது சக்திகள் மிகவும் தைரியமடைந்துள்ளனர்.

இப்போதே பலர், மலேசியா ‘வலதுசாரி தீவிரவாதத்தின் திடீர் எழுச்சியுடன்’ போராடிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தாலும், இந்த நிகழ்வு புதிதல்ல. இதை விளங்க நீண்டகாலம் எடுத்துள்ளது என்பதே உண்மை. மலேசியாவில் அதிவலதுக் கோட்பாடுகள் மற்றும் சதி கோட்பாடுகளின் முக்கிய நீரோட்டமானது, சமூக ஊடகங்கள் மற்றும் வழிமுறைகளின் பெருக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 
அதே சமயம், சமூகக் கலவரங்களைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் ஸ்தாபனங்களுக்கும் தலைவர்களுக்கும் அதிவலது சித்தாந்தம் பயன்விளைவிக்கிறது.

image_4bd7cc2bcf.jpg
வீரியம் மிக்க அரசியல் அரங்காடிகள தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களைத் தங்களின் பிரசாரங்கள், செய்தி பரப்புதல், கதையாடல்களை உருவாக்கல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்துவதில் அதிக நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மேலும், தற்போதுள்ள இன மோதல்களையும் கடுமையான உள்நாட்டு அரசியலை ஸ்திரமின்மையையும்  பயன்படுத்திக் கொண்டு - ஒரு சட்டபூர்வமான அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் நோக்கத்துடன் - தவறான தகவல் மற்றும் சதி கோட்பாடுகளுக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். 

அண்மைய மலேசியத் தேர்தல்களின் போது, தவறான தகவல் தந்திரோபாயங்கள் பெரும்பாலும் மூன்று இலக்குகளை அடையப் பயன்படுத்தப்பட்டுள்ளன:

1) அவநம்பிக்கையின் சூழலை உருவாக்குவதன் மூலம் தேர்தல் முடிவுகளைத் திசைதிருப்பல்.

2) துருவமுனைக்கும் சித்தாந்தங்களை ஊக்குவித்தல்.

3) வாக்காளர் எண்ணிக்கையைக் குறைத்தல்.

இவை மூன்றையும் சதிக்கோட்பாடுகளும் அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் சமூகவலைத்தளப் பயனர்களும் (சைபர்ட் ரூப்பர்கள்) திறம்படச் செய்கின்றனர். தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், போட்டியாளர்களை இழிவுபடுத்துவதற்கும், அரசியல் கதையாடல்கள் தடம் புரளுவதற்கும், ஒன்லைனில் பொதுக் கருத்தைக் கையாளுவதற்கும், அரசியல் கட்சிகள் அல்லது பிற அமைப்புகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நபர்கள் ‘சைபர்ட் ரூப்பர்கள்’ எனப்படுகிறார்கள். 

வாக்குகள் மற்றும் தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதில் தவறான தகவல் பெருகிய முறையில் பரப்புவதானது, சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், கட்சிகள் பொதுக் கருத்தை பாதிக்கவும், அவநம்பிக்கையின் சூழலை உருவாக்கவும் முடியும். இது மிகப்பாரியளவிலான துருவப்படுத்தப்பட்ட அரசியல் பார்வைகளுக்கு வழிவகுப்பதோடு சமூகங்களை பிளவுபடுத்தும். இன்னொரு வகையில் இது ‘சிவப்பு-குறியிடல்’ எனப்படும் கம்யூனிச அபாயம் என்று ஓரங்கட்டவும் பயன்படுகிறது.

இது நபர்களையும் அமைப்புகளையும் கம்யூனிஸ்டுகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது, அவர்களுக்கு எதிரான கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்வது, அதை நியாயப்படுத்துவது அவர்களை இழிவுபடுத்துவது என்பன எல்லாம் அதிவலதினதும் சதிக்கோட்பாட்டினதும் இணைவால் தென்கிழக்காசியாவில் சாத்தியமாகிறது.   
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மலேசியத்-தமிழரும்-அதிவலதில்-அள்ளுண்ணலும்/91-314010

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.