Jump to content

இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலத்தீன் அமெரிக்காவில் அதிவலதுசாரி அலையின் புதிய கட்டம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 19: 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகள், இலத்தீன் அமெரிக்கா பற்றிப் பேசுகின்ற போது முக்கியமானவையாகும். 

முதலாவது, இப்பிராந்தியத்தில் அதிகூடிய மக்கள் தொகையையும் மிகப்பெரிய நிலப்பரப்பையும் கொண்ட நாடான பிரேஸிலில், ஜனவரி மாதம் எட்டாம் திகதி, தேர்தலில் தோல்வியடைந்த அதிவலதுசாரி முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், தலைநகர் பிரேஸிலியாவில் அரச கட்டடங்களைச் சூறையாடி, மிகப்பாரிய சேதத்தை விளைவித்தார்கள். இது, சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்ததை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் விளைவித்த சேதத்துக்கு ஒப்பானது. 

image_02a1099603.jpg

பிரேஸிலில் அதிவலது வன்முறை அரங்கேறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர், அதாவது, ஜனவரி ஆறாம் திகதி, பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ கஸ்டிலோ, ஓர் அதிவலதுசாரிகளின் சதித்திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டார். இவை, இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரிகளின் நடவடிக்கைகள், இன்னொரு கட்டத்தை நோக்கி நகர்வதைக் காட்டி நிற்கின்றன. 

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இலத்தீன் அமெரிக்காவில் ஓர் இடதுசாரித்துவ அலை வீசியது. அதன் குணவியல்புகளின் அடிப்படையில், அதை ‘இளஞ்சிவப்பு அலை’ (pink tide) என்று எல்லோரும் அழைத்தார்கள். 

பல இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இடதுசாரிச் சார்புள்ளவர்கள், தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார்கள். இது, இப்பிராந்தியத்தில் ஜனநாயகம், பொருளாதாரம் ஆகியவற்றில் மீது பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. 

கிட்டத்திட்ட அரை நூற்றாண்டு காலத்தின் பின்னர், இன்று நிலைமை முற்றிலும் வேறாக மாறிவிட்டது. தேர்தல்களில் இடதுசாரிகள் சிறப்பாக செயற்படாதபடி பார்த்துக் கொள்ள, எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. 

இந்த எதிர்ப்புரட்சி செயற்பாடுகளின் பிரதான அம்சமாக, தீவிர அதிவலதுசாரித்துவத்தின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது.  இலத்தீன் அமெரிக்காவில், தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு இரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு உண்டு. ஆனால், இப்போதைய மீள்எழுச்சியானது, இடதுசாரி முற்போக்கு சக்திகளை ஒழித்துக் கட்டுவதை நோக்காகக் கொண்டது. இலத்தீன் அமெரிக்காவில், இந்தப் புதுப்பிக்கப்பட்ட அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சியானது, உலக அளவில் அதிதீவிர வலதுசாரித்துவத்தின் ஒருங்கிணைப்பால் உந்தப்படுகிறது.

image_9640edef27.jpg

இடதுசாரிச் சார்பு எழுச்சிக்குக் காரணம், அவர்கள் சாதாரண மக்களை, பழங்குடிகளைப் பிரதிநிதித்துவம் செய்தார்கள்; அவர்தம் நலன்களை முன்னிறுத்தினார்கள். இதனால், பல்தேசிய கம்பெனிகளை, செல்வந்த உயரடுக்கை எதிர்த்தார்கள். இன்று, அதிவலதுசாரி செல்வந்தர்களினதும் பல்தேசிய கம்பெனிகளினதும் அடியாளாக உள்ளது. 

இன்றைய போராட்டம் என்பது, உண்மையில் கிராமப்புற விவசாயிகள், பாரம்பரியமாக நிலத்தின் பராமரிப்பாளர்களாக இருந்த பழங்குடியினருக்கும் அவர்களை இடம்பெயரச் செய்து, அவர்களின் நிலத்தை எடுக்க விரும்புகின்றவர்களுக்கு இடையிலானது. இது உற்பத்தி வழிமுறைகளைப் பற்றியது.  

இந்தப் பெரிய நிலங்களை கையகப்படுத்துவதற்கான போராட்டத்தின் பகுதியே, அதிவலதின் எழுச்சியாகும். அதனால்தான், நிச்சயமாக, இங்குள்ள மக்கள் இயக்கங்கள் நிலத்தை ஜனநாயகமயமாக்குவதற்குப் போராடின; உற்பத்தி செய்ய நிலத்தை அணுகுவதற்குப் போராடின. இவற்றைச் சாத்தியமாக்குவதன் ஊடு, மக்கள் எங்காவது வாழ, எங்காவது வளர மற்றும் உற்பத்தி செய்ய உரிமை உண்டு. அவர்கள் இடம்பெயர்ந்து வீடற்றவர்களாக இருக்காது, தமக்கான உணவு உற்பத்தியைச் செய்ய முடியும்; ஏற்றுமதி செய்ய முடியும். மற்றும், பொருளாதார ரீதியாக முன்னேற, மற்ற விடயங்களைச் செய்ய முடியும். 

ஆனால் இதை தங்களது நிலங்களாகக் கையகப்படுத்தி, தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்த செல்வந்தர்களும் பல்தேசிய கம்பெனிகளும் அதிவலதுசாரிகளும் கைகோர்த்துள்ளன.  

image_f1e4331b1b.jpg

இலத்தீன் அமெரிக்காவில், நாம் பெரும்பாலும் பார்ப்பது, கறுப்பின மக்களுக்கும் பணக்கார வெள்ளையர்களுக்கும் இனத்தின் அடிப்படையில் நடக்கும் வெறும் கலாசாரப் போரை மட்டுமல்ல! இது, நிலம் மற்றும் வளங்களுக்கான போராட்டம். 
இயற்கை வளங்களின் மீது இறையாண்மை, நிலத்தின் மீது இறையாண்மை, அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, அவற்றை உற்பத்தி செய்ய விரும்பும் மக்களுக்கு எதிராக, இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக, அந்தப் பகுதிகளுக்கு அணுகல் தேடும் நாடு கடந்த நலன்களுக்கு எதிரான போராட்டம் ஆகும். 

அவர்களின் சொந்த நலனுக்காக, தங்களுக்கு வாய்ப்பான ஆட்சியாளர்களை உருவாக்கும் எதிரான ஆட்சியாளர்களை அகற்றும் நடவடிக்கைகளுக்கு, எதிரான போராட்டம். இந்தப் பின்புலத்திலேயே அதிவலதுசாரித்துவத்தின் புதிய அலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

இலத்தீன் அமெரிக்க தீவிர அதிவலதுசாரித்துவத்துக்கு ஒரு வரலாறுண்டு. சர்வாதிகாரத்தன்மை, கவர்ந்திழுக்கும் ஆற்றலுடைய இராணுவத் தலைவர்கள், இதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் மூன்று அலைகளை நாம் அடையாளம் காண முடியும். 

இதன் முதலாவது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தோடு தொடங்கியது. 1930இல் ‘வோல் ஸ்ட்ரீட்’ நெருக்கடியுடன், ஆர்ஜென்டினா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில் ‘பாரம்பரிய ஜனரஞ்சகவாதம்’ வெளிப்பட்டது. இது கம்யூனிசத்துக்கு எதிரான தற்காப்பாக உயரடுக்கினரால் புரிந்து கொள்ளப்பட்ட அதேவேளை, தொழிலாளர் வர்க்கத்தால் சமூக நிலைமைகளின் முன்னேற்றத்துக்கான வழி என்று ஏற்கப்பட்டது. 

image_9414db7b8b.jpg

இராணுவத்தின் ஆதரவுடன், அர்ஜென்டினாவில் ஜுவான் பெரோன், பிரேஸிலில் கெட்டுலியோ வர்காஸ் ஆகியோர், தீவிர வலதுசாரி, பாசிச அறிவுஜீவிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் கூட்டணிகளை நிறுவி ஆட்சிக்கு வந்தனர். இது, இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் மீது, ஐரோப்பிய பாசிச செல்வாக்கைக் காட்டிய ஒரு முக்கியமான தருணம்.பெரோன் (முன்னாள் ஜெனரல்) மற்றும் வர்காஸ் (இராணுவத்தின் நெருங்கிய கூட்டாளி) ஆகிய இருவரும் ஐரோப்பிய பாசிச ஆட்சிகளின் அபிமானிகளாக இருந்தனர். ஆனால், கூட்டணிகளை நிறுவி, நகர்ப்புற தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை கிராமப்புற சமூகங்களுக்கு சில உரிமைகளை வழங்கினர். 

இந்தச் சர்வாதிகார ஜனநாயகம், பாரம்பரிய மற்றும் பிரபுத்துவ உயரடுக்குகளை மாற்றியது. அவர்களது செயற்பாடுகளின் மீது, தங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வலிமையை இழந்தனர். பெரோன், வர்காஸ் ஆகிய இருவரும், சர்வாதிகார ஆட்சிகளை நிறுவினர். கம்யூனிசத்துக்கு எதிராக சிறந்த போராளிகளாக தங்களை முன்வைத்தனர். இந்நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாகினர். 

தீவிர வலதுசாரிகளின் இரண்டாவது அலை, 1959ஆம் ஆண்டு கியூபப் புரட்சிக்குப் பின்னர், இலத்தீன் அமெரிக்காவில் கெடுபிடிப்போரின் தாக்கத்தோடு தொடங்கியது. 

மேல்தட்டு மக்களிடையே கம்யூனிசம் பற்றிய அச்சம், மற்றும் இடதுசாரி தீவிரமயமாக்கலுக்கு எதிரான அமெரிக்காவின் ஆதரவு ஆகியவை, இந்தச் சூழலை வரையறுத்தன. 60கள், 70களில் தீவிர வலதுசாரி சர்வாதிகாரங்களின் ஒரு சக்திவாய்ந்த சுழற்சி தோன்றியது. இது, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத் தலைவர்களைத் தாக்கியது, 

குறிப்பாக, தெற்குமுனை நாடுகளில் (அர்ஜென்டினா, பிரேஸில், சிலி, உருகுவே) மற்றும் மத்திய அமெரிக்காவில் கொடூரமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தின் சிறந்த பிரதிபலிப்பு, சிலியில் (1973-1990) இருந்த அகஸ்டோ பினோஷேயின் சர்வாதிகாரமாகும். 

image_741a858d0b.jpg

இது இப்பகுதியில் புதிய தாராளமயம் மற்றும் சர்வாதிகாரத்தின் முதல் கூட்டிணைவுக்கு உதாரணமானது. இராணுவ ஜெனரல் பினோஷே, இலத்தீன் அமெரிக்க அதி வலதின் மிக முக்கியமான தலைவராக இருந்தார், மேலும், அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பிறகும், அவர் ஒழுங்கமைத்த அதிவலது ஒழுங்கு, சிலி சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. 

இலத்தீன் அமெரிக்க தீவிர வலதுசாரிகளின் மூன்றாவது அலையில், நாம் தற்போது இருக்கிறோம். முற்போக்கான நவதாராளவாத எதிர்ப்பு, இடதுசாரி ஜனரஞ்சக அரசாங்கங்களின் உருவாக்கத்துக்கு எதிரானதாக, இந்த அலை இப்போது இருக்கிறது.  ஒட்டுமொத்தமாக, இலத்தீன் அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகளின் வரலாறு, இராணுவ சக்தி, நவதாராளவாதத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவதாராளவாதமே, இன்று மக்களின் பரந்துபட்ட எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது. 

‘இளஞ்சிவப்பு அலை’ ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வும் போராடுவதற்கான உந்துதலும், நவதாராளவாதத்துக்கு பெரிய சவாலாகவுள்ளது. இன்று இலத்தீன் அமெரிக்கா எங்கும் அதிவலதுசாரிகளுக்கு ஆதரவு பெற்ற வளச்சுரண்டலுக்கு எதிராக, மக்கள் போராடுகிறார்கள். இது, இடதுசாரிச் சார்புள்ள ஆட்சிகள் மீள்வதற்கு வழி செய்துள்ளது. இடதுசாரிகளின் இந்த மீள்எழுச்சிக்கு விடையிறுக்கும் வகையில், பிராந்தியத்தில் அதிவலதுசாரி இயக்கங்கள், கட்சிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மறுஉருவாக்கமும் அவை பலப்படுத்தப்படுவதையும் நாம் காண்கிறோம். 

இதன் விளைவுகளின் ஒரு பகுதியே, இவ்வாண்டு தொடக்கத்தில் அரங்கேறிய நிகழ்வுகள். பிரேஸிலில் 2018இல் அதிவலதுசாரி நபர் ஜனாதிபதியானமை முக்கியமானது. இது, இலத்தீன் அமெரிக்க அதிவலதுக்கு மிகப்பெரிய ஊக்க மருந்தானது. இதில் இலத்தீன் அமெரிக்காவின் அதிவலசாரித்துவத்தின் வரலாற்றுக்கும் பங்குண்டு.  

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலத்தீன்-அமெரிக்காவில்-அதிவலதுசாரி-அலையின்-புதிய-கட்டம்/91-314210

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலத்தீன் அமெரிக்க அதிவலதின் வரலாறு

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 20:

இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தின் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி என்பது, அதனது வரலாற்றோடு தவிர்க்க இயலாத தொடர்பைக் கொண்டுள்ளது. ஒருவகையில், இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரித்துவத்தின்  மறுமலர்ச்சி, ஆசியா, ஐரோப்பா முதல் உலகின் பிற நாடுகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளோடு ஒத்துப் போவதாக உள்ளது. 

பழைமைவாதிகள், விளிம்புநிலை மக்கள், மையநீரோட்டத்தில் பயணிப்பவர்கள், ஒரு புதிய ‘சிலுவைப் போரை’க் காண்கிறார்கள். பாலின சமத்துவம், சமூக நீதி,  பண்பாட்டு மார்க்சியம், பொருளாதார அசமத்துவத்தை நீக்கல் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர். நாம் - அவர்கள் என்ற பிரிகோட்டை உருவக ரீதியிலும் உடலியல் ரீதியாகவும் ஏற்படுத்தி எல்லைகளை அவர்கள் வலுவாக்குகிறார்கள். 

இவற்றின் செல்வாக்கால், ஜனநாயகமாக்கல் தொடர்ச்சியாக பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இம்முயற்சியில், அதிவலதுசாரிகள் வெற்றிகாணும் போதெல்லாம், சர்வாதிகாரம், நவதாரளவாதத்தோடு இணைந்து, பிற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து ஆட்சிகளைக் கைப்பற்றுகின்றன. இந்தப் பொதுவான பண்புகள் உலகளாவிய ரீதியானதாக இருந்தபோதும் கூட, இலத்தீன் அமெரிக்க அதிவலதுசாரித்துவத்தின் பல பண்புகளில், பிராந்தியத்தின் பின்கொலனித்துவ வரலாறு முக்கிய பங்குபெறுகிறது. அவ்வகையில், அவை தனித்துவமானவை. 

இலத்தீன் அமெரிக்க அதிவலதுசாரித்துவத்தின் இயங்கியலுக்கு கிறிஸ்துவம், ஆணாதிக்கம், ‘ஹிஸ்பானிக்’ வெண்மை, சர்வாதிகாரம் (மதச்சார்பின்மை, ஓரினச்சேர்க்கை, பூர்வீகம், கறுப்புத்தன்மை, ஜனநாயகம் ஆகியவற்றை வன்முறையோடு நிராகரிப்பது) என்பன எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளங்குவது முக்கியமானது. 

இது இலத்தீன் அமெரிக்காவின் கொலனித்துவ நீக்கம் எவ்வாறு வெளிப்பட்டது என்பதையும் அதன் முன்னாள் கொலனித்துவத்துடன் (ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்) அதன் உறவுகளின் தன்மையை, எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள உதவும். 

இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலிருந்தே ‘இஸ்லாமோஃபோபியா’வை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும் வலதுசாரிகளின் அரசியல் கதையாடல்கள், அமெரிக்காவில் செல்வாக்குப் பெறத் தொடங்கின.  ஆனால், இலத்தீன் அமெரிக்காவில் இத்தகைய சொல்லாட்சிகள் புதிதல்ல. இது நீண்டகாலமாகவே அதிவலதுசாரித்துவத்தின் அறிவார்ந்த நீரோட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் இனவாத அடையாளத்தால் வகைப்படுத்தப்படுகிறது. 1930களில் இருந்து, அது ‘கம்யூனிஸ்ட்’களுக்கு எதிரான வன்முறை பிரசாரங்களுக்கான மத நியாயங்களையும் வலுப்படுத்தியுள்ளது.

இப்போதைய அதிவலதுசாரித்துவத்தை நோக்கிய திருப்பத்தை, 1930களில் உருவான உலகளாவிய பாசிசத்துடன் ஒப்பிடவியலுமா என்பது விவாதத்துக்கு உரியது. ஆனால், இன்றைய நிலைமைகள் பல வழிகளில் 1930 காலகட்டத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. இருப்பினும், இலத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் அத்தகைய தருணங்களுக்கு இணைப்புகளை வரைவதானது, ஒப்புமைப்படுத்துவதற்கு மாறாக, வரலாற்று தொடர்ச்சிகளை வரைபடமாக்குவதற்கே உதவும். 

இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளை விட முன்னதாகவே - வேறுபட்ட சூழ்நிலைகளில், ஐரோப்பிய கொலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தை வென்றன. ஐபீரிய சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்திய பொருளாதார, இனப்பண்பாட்டுப் படிநிலைகளை மாற்றுவதற்குப் பதிலாக, இலத்தீன் அமெரிக்காவின் 19ஆம் நூற்றாண்டு கிளர்ச்சியாளர்கள் அவற்றைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர். 

அவர்களின் குறிக்கோள், ஆழமான சமத்துவமற்ற நிலையை சிதைப்பது அல்ல; ஆனால், மிகவும் அடக்கமாக, அதன் அமலாக்குபவர்களாக தங்களை நிறுவிக் கொள்வதாகும். அவர்கள் வென்ற புரட்சிகள், தங்களை அதிகாரத்துக்கு கொண்டு வருவது பற்றியவையேயன்றி, சமூக மாற்றத்தை நோக்காகக் கொண்டவை அல்ல!

இதையே இத்தாலிச் சிந்தனையாளர் அந்தோனியோ கிராம்சி, ‘செயலற்றவை’ என்று குறிப்பிடுகிறார். தொலைதூர தீபகற்ப முடியாட்சிகளுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கிரியோல்ஸ் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கொலனித்துவவாதிகளின் வழித்தோன்றலாக இலத்தீன் அமெரிக்காவில் பிறந்த சந்ததியினர் தம்மைத் தாமே ஆண்டனர். அவர்கள், கொலனித்துவ மேலாண்மையை தாம் பேணுவதற்கு வழிசெய்யும் வகையில், புதிய தேச அரசுகளில் அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பை நிறுவினர்.

கொலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த பின்னர், ஆட்சிக்கு வந்தவர்களிடையே ஆட்சியை முன்னெடுப்பதில் கருத்தொற்றுமை இருக்கவில்லை. இது எந்தக் கொலனித்துவ கால நிறுவனங்களின் நடைமுறைகளை வைத்திருப்பது, எதைப் புதுப்பிப்பது, எதை  நிராகரிப்பது  என்பதில் கசப்பான மோதல்களை உருவாக்கியது. 

சிலர் தங்கள் முன்னாள் கொலனித்துவவாதிகளுடன் நெருங்கிய உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினர். மற்றவர்கள், அறிவொளி தாராளவாதத்தால் ஈர்க்கப்பட்டு, தூய்மையான இடைவெளியை விரும்பினர். ஆட்சியாளர்கள் இவ்வாறு முரண்பட்டுக் கொண்டிருந்தாலும், இந்நாடுகளின் உயரடுக்கினரிடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அது கட்டற்ற சுரண்டலையும் செல்வம் சேர்ப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. 

இந்த எண்ணம், பிராந்திய ரீதியாகவே உயரடுக்கினரின் பொதுப்பண்பாக இருந்தது. கொலனித்துவக் கட்டமைப்பில் ஆட்சியாளர்கள், மாற்றங்களை விரும்பினாலும் உயரடுக்கின் கருத்தொற்றுமையால் எதுவித மாற்றமும் நிகழ அனுமதிக்கப்படவில்லை. கொலனித்துவ கட்டமைப்புகளுடனேயே பின்கொலனிய அரசாங்கங்கள் செயற்பட்டன. 

சாதி அமைப்பொன்று நடைமுறையில் இருந்தது. அதில் அவர்களின் தோல் நிறம், கத்தோலிக்க நம்பிக்கை, பரம்பரை, மொழி ஆகியவற்றால் ஐரோப்பிய சந்ததியினர் என்று அடையாளம் காணக்கூடியவர்கள், சமூகக் கட்டமைப்பின் மேல் அமர்ந்து தங்கள் மேலாதிக்கத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்காணித்தனர். 

இந்த அச்சுறுத்தல்களில் அந்தீஸ் பகுதியில் ஏற்பட்ட பழங்குடிகளின் எழுச்சி, ஹெயிட்டியில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி என்பன முக்கியமானவை. கிரியோல்ஸ் நேரடியான ஐபீரிய ஆட்சியை நிராகரித்தாலும் ‘ஐபீரியன்’ எனப்படும் மேன்மையை தொடர்ந்து நிலைநிறுத்தினார். அப்பட்டமாக இனரீதியாக அடுக்கடுக்கான பின் கொலனித்துவ சமூகங்களில், கிரியோல்களின் அரசியல் அதிகாரம், ஐரோப்பிய மரபுரிமைக்கான அவர்களின் உரிமைகோரல்களில் துல்லியமாக இருந்தது.

இந்த ஒழுங்குக்கு எதிரான சவால்கள் தவிர்க்க முடியாமல் வெளிப்பட்டபோது, அந்த ஆட்சியின் பயனாளிகள் மத்தியில் ஏகாதிபத்திய கால ஏக்கத்தை அவை தூண்டிவிட்டன. அவர்கள் முழுமையான வெளிநாட்டு ஆதிக்கத்தை விரும்பாவிட்டாலும்; முன்னாள் கொலனித்துவ திட்டங்கள் நிறுவிய விதிமுறைகள் மற்றும் மதிப்பு அமைப்புகளை பராமரிப்பதற்கு விரும்பினர். 

இலத்தீன் அமெரிக்காவில், அந்த ஏக்கத்தின் மிகவும் புலப்படும் வெளிப்பாடு ‘ஹிஸ்பானிடாட்’ அல்லது ‘ஸ்பானிஷ்’ என்ற கருத்தாகும். ஸ்பானிஷ் மொழி மற்றும் ஹிஸ்பானிக் கலாசாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மக்கள், நாடுகள் மற்றும் சமூகங்களின் குழுவானது ‘ஹிஸ்பானிடாட்’ என்று அழைக்கப்படுகிறது. 

ஹிஸ்பானிடாட்டின் பழைமைவாத ஆதரவாளர்கள், உலகின் ஸ்பானிஷ் மொழி பேசும் சமூகங்கள், அவர்களின் பொதுவான கொலனித்துவ அனுபவத்திலிருந்து உருவான கலாசார, ஆன்மீக அடித்தளங்களை பகிர்ந்து கொண்டனர். இது அட்லாண்டிக் கடல்கடந்த குடும்பத்தை உருவாக்கியது. (பிரேசிலில், லூசோ-பிரேசிலிய தேசியவாதிகள், போர்த்துக்கல் உடனான உறவை மையப்படுத்தினர். ஆப்ரோ-சந்ததி அல்லது பழங்குடியினரின் தன்மையைக் காட்டிலும் தாங்கள் ஐரோப்பியர்கள் என்று வாதிட்டனர்.) 

இந்த ஹிஸ்பானிக் குடும்பம் ஒரு தனித்துவமான இனம். இது காஸ்டிலியன் ஸ்பானிஷ் மற்றும் கத்தோலிக்க நம்பிக்கையில் இருந்து உருவான ஒரு ரசவாதமாக மத வெற்றியாலும் பொற்கால ஏகாதிபத்திய விரிவாக்கத்தாலும் உருவாக்கப்பட்டது. 

இந்தக் கடைசி பகுதி முக்கியமானது: ஸ்பெயின் தன் இருப்புக்கு மீள்வெற்றிகாணலுக்குக்  கடன்பட்டுள்ளது. ஏனெனில், ஆரம்பகால நவீன கிறிஸ்தவ இராஜ்யங்களான காஸ்டிலும் அரகோனினும்  முஸ்லிம் கலிபாவை தோற்கடித்து, ஐபீரிய தீபகற்பத்தில் இருந்து முஸ்லிம்களையும் யூதர்களையும் விரட்டினார்கள். இது, 1492இல் முஸ்லிம்களுக்கு எதிரான மீள்வெற்றிகாணலாகும். இந்த மீள்வெற்றிகாணல் என்ற கருத்தாக்கம் சிலுலைப்போர், புனிதப்போர் என்பதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட கதையாடலாகும். 

இந்த மீள்வெற்றிகாணல் நிகழ்ந்த அதே ஆண்டில், தற்செயலாக பஹாமாஸில் கிறிஸ்டோபர் கொலம்பஸின் எதிர்பாராத தரையிறங்கல் நிகழ்ந்தது. இரண்டும் ஒருங்கே குடியேறிய கொலனித்துவம், சுவிசேஷப் பணி, வெள்ளைநிற மேன்மை, நவீன ஐபீரியாவின் தேசியஅரசுகளின் தோற்றம் ஆகியவற்றைச் செய்து முடித்தன. 

இவை அனைத்தும் இனவெறியோடு மற்றவர்களை வெளியேற்றுதல், ஒழித்தல் அல்லது ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் பிரிக்கமுடியாத வகையில் ஏகாதிபத்திய விரிவாக்கமும் மதமும் ஒன்றாக இணைக்கப்பட்டன. 

இந்தப் பின்புலத்திலேயே இலத்தீன் அமெரிக்கா சுதந்திரத்தின் விடியலை சுவாசித்தபோது, தங்களை ஐபீரியத் தன்மையை மரபுரிமையாகச் சொந்தம்  கொண்டாடுபவர்களாக அடையாளம் கண்ட கிரியோல்களும் அந்தக் கருத்தியலோடே சுதந்திர நாடுகளில் இணைந்தனர். 

இந்த வரலாற்றுப் பின்புலம் இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் அதிவலதின் வரலாற்றைப் புரிந்து கொள்ள அவசியமானது. கொலனியாதிக்க விடுதலையானது, புதிய அடக்குமுறையாளர்களை கொண்டு வந்தது, செல்வந்தர்களின் நலன்களுக்கு எதுவித பங்கமும் விளையவில்லை. 

புதிதாக தோற்றம் பெற்ற கிரியோல்கள் தங்களை மேன்மையானவர்களாக் கண்டனர். இது நிறவெறி, இனத்துவ ஆதிக்கம், கிறிஸ்தவ மத மேலாண்மை என்பவை அடிப்படையாகக் கொண்டது. இவையே பின்னர் அதிவலதுசாரிகளின் பிரதான ஆயுதங்களாகின. 
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலத்தீன்-அமெரிக்க-அதிவலதின்-வரலாறு/91-314919

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபதாம் நூற்றாண்டின் நெருக்கடி

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 21:

கடந்தவாரம், இலத்தின் அமெரிக்காவில் அதிவலது தோற்றம் பெற்ற வரலாற்றைப் பார்த்தோம். கொலம்பஸ்ஸின் வருகையுடன் இலத்தின் அமெரிக்காவின் முகம் மாறத் தொடங்கியது. பிரேஸிலும் இன்னும் சில சிறிய தீவுகளும் தவிர்ந்த ஏனைய பகுதிகள் ஸ்பெயினின் கொலனிகளாகின. அங்கு குடியேறிய ஸ்பானியர்கள் புதிய அதிகாரம் மிக்க இனக்குழுவாக உருவெடுத்தார்கள். அவர்கள் தங்களை 16/17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் செல்வாக்குச் செலுத்திய ஐபீரிய ஏகாதிபத்தியத்தின் வழித்தோன்றல்களாகக் கருதினார்கள். கிறிஸ்தவத்தையும், நிறவெறியையும் தமது ஆயுதமாக்கினர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐபீரிய ஏகாதிபத்திய மகிமையின் தொன்மங்கள் மிகப்பாரிய நெருக்கடியை எதிர்நோக்கின. 1898இல் ஸ்பெயின் அதன் எஞ்சியிருந்த கரீபியன் பகுதிகளையும் பிலிப்பீனியக் கொலனிகளையும் இழந்தது. இவ்விழப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதுவே ஒரு காலத்தில் பரந்து விரிந்திருந்த உலகப் பேரரசின் கடைசித் துண்டுகளாகும். 

ஐபீரிய ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி, அமெரிக்காவின் ஏகாதிபத்திய எழுச்சியுடன் இடைவெட்டியது. இது தீபகற்ப ஸ்பானியர்களிடையே ஓர் ஆழமான நெருக்கடியை உருவாக்கியது. அவர்கள் தங்கள் பண்பாட்டுத் தேசியவாதத்தை அமெரிக்காவால் ஏற்பட்ட தோல்வியின் அவமானத்துடன் சமரசம் செய்யப் போராடினர். 

தெளிவாகச் சொல்வதானால், இந்த உடைவிலிருந்து இரண்டு அறிவுசார் நிலைகள் வெளிப்பட்டன. ஒன்று, இலத்தீன் அமெரிக்காவின் பின்கொலனித்துவ தாராளவாதச் சிந்தனைகளுக்கு வழிவகுத்தது. பின்கொலனித்துவ தாராளவாதிகள், ஸ்பெயின் தப்பிப்பிழைக்க வேண்டுமானால், முடியாட்சி, மதகுருமார்கள் மற்றும் பிரபுத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவத்தைத் தூக்கி எறிந்து நவீனமயமாக வேண்டும் என்று வாதிட்டனர். 

மற்றொன்று, இலத்தீன் அமெரிக்காவின் பின்கொலனித்துவ பழைமைவாதச் சிந்தனைகளாக வெளிப்பட்டது. இப்பழைமைவாதிகள், ஸ்பெயின் அதன் முக்கிய இலட்சியங்களிலிருந்து விலகியதால் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், நம்பிக்கை, அதிகாரப் படிநிலை, பேரரசு, பாரம்பரியம் ஆகியவற்றில் கூடிய கவனம் செலுத்தி, அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டனர்.

இவ்விரு கருத்துகளுக்கும் இடையில் ஓர் ஒருமைப்பாடு ஏற்படவில்லை. மாறாக, இருதரப்பினரும் தமது கருத்துகளை மேலும் உறுதியாக்கியதோடு மற்றையதைக் பகைமையோடு நோக்கினர். இதனால், இரண்டு கருத்துகளுக்கும் இடையிலான இடைவெளி சில தசாப்தங்களுக்குப் பிறகு ஸ்பானிய உள்நாட்டுப் போராகப் பேரழிவு தரும் வடிவத்தை எடுத்தது. 

1936இல் ஸ்பெயினை ஆளும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணியின் கூட்டணியானது, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் தன்னலக் குழுக்களையும் மத கட்டமைப்புகளை அகற்றுவதற்கான அதன் முயற்சிகளுக்காக வலதுசாரிகளின் கோபத்தையும் பெற்றது. 

கத்தோலிக்க திருச்சபையை முடக்குவதற்கும் நிலப்பிரபுத்துவத்தை உடைப்பதற்கும், விவசாய சீர்திருத்தங்களை நிறுவுவதற்கும் மேற்கொண்ட நகர்வுகள் துருவமுனைப்பை ஏற்படுத்தியது. முற்போக்கான தன்மையை பெறமுயன்ற அரசுக்கு எதிராக, பிற்போக்குச் சக்திகள் ஓரணியில் திரண்டன. இதனால் மக்கள் ஆதரவு பெற்றிருந்த அரசு நெருக்கடிக்காளானது. 

அதேவேளை, அரசால் மக்கள் விரோத வன்முறையைத் தடுக்க இயலாமல் போனது. முற்போக்கு நிலைப்பாடுகள் பழைமைவாதப் பிரிவுகளின் ஒன்றிணைவைச் சாத்தியமாக்கியது. இவை அனைத்தும் சேர்ந்து அரசாங்கத்தைத் தூக்கியெறியச் செய்தது. 

இலத்தீன் அமெரிக்கர்கள் ஸ்பெயினின் மூன்று வருட இரத்தக்களரியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஏனெனில், அங்கு போராட்டத்துக்கு உரியதான பிரச்சினைகள், தங்கள் சொந்த சமூகங்களைப் பிளவுபடுத்தும் பிரச்சினைகளுக்கு இணையாக இருந்தன. குறிப்பாக, தீவிர சமத்துவமின்மை, தேவாலயத்துக்கும் அரசுக்குமான உறவு, அதிகரித்து வரும் தொழிலாளர் போர்க்குணம், பாலினஞ்சார் சிந்தனைகளில் மாற்றம் என்பன ஸ்பெயினில் இருப்பது போலவே இலத்தீன் அமெரிக்காவெங்கும் இருந்தது. ஸ்பானிய வலது இறுதியாக 1939இல் வெற்றி பெற்றது. 

image_b0fed5c49d.jpg

கிளர்ச்சிக்கான தேசியவாதப் படைகளின் தலைவரும், மேற்கத்திய கிறிஸ்தவத்தின் மீட்பராகத் திகழ்ந்தவரும் நாஜி ஆதரவு பெற்றவருமான ஜெனரல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோ, நவீன ஐரோப்பாவின் மிக நீண்ட கால சர்வாதிகாரத்தை நிறுவினார். ‘வெள்ளைப் பயங்கரம்’ என அறியப்பட்ட இவரது சர்வாதிகாரம் இரண்டு இலட்சம் மக்களைக் காவுகொண்டது. 1975இல் இவர் இறக்கும்வரையும் இது தொடர்ந்தது. இவரது ஆட்சி அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்றதாக இருந்தது. 

ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் போது தேசியவாதிகளை எதிர்த்த பாஸ்க் நகரமாக குவேர்னிகா மீது 1937இல் மோசமான குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு, அந்நகர் தரைமட்டமாக்கப்பட்டது. இதைக் குறிக்கும் வகையிலேயே ‘பப்லோ பிக்காசோ’ புகழ்பெற்ற குவேர்னிகா ஓவியத்தை வரைந்தார். இன்றும் போருக்கெதிரான முக்கிய குறியீடாக இவ்வோவியம் அறியப்படுகிறது. இன்றும் இவ்வோவியத்தின் பிரதி ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது.  

ஸ்பெயினைப் போல உள்நாட்டுப் போர் ஒன்று ஏற்படாமல் இருக்க போர்த்துக்கல்  தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால், அன்டோனியோ டி ஒலிவேரா சலாசர் தலைமையில் அமைந்த கத்தோலிக்க, கம்யூனிச எதிர்ப்பு சர்வாதிகார ஆட்சி, பிராங்கோவை ஆதரித்ததோடு பிராங்கோவின் ஆட்சியின் பல நடைமுறைகளைப் பின்பற்றியது. 

சலாசரால் தொடக்கப்பட்ட சர்வாதிகார ஆட்சி 1974 வரை போத்துக்கலில் நிலைத்தது. சர்வாதிகாரி சலாசர் உலகின் மிகப்பழைய பல்கலைக்கழகங்களில் ஒன்றான கொயம்பரா பல்கலைக்கழகத்தின் அரசியல் பொருளாதார பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலத்தீன் அமெரிக்க பழைமைவாதத்தின் பரிணாம வளர்ச்சியில் ஸ்பானிய உள்நாட்டுப் போர் முக்கியமானது. ஏனெனில், இது இருபதாம் நூற்றாண்டின் மிகவும் ஆபத்தான மற்றும் நீடித்த அரசியல் ஆயுதங்களில் ஒன்றாக இருந்தது. அதிகாரபூர்வ கிறிஸ்தவம் மற்றும் கம்யூனிசத்துக்கு எதிரான பின்னல் ஆகிய இரண்டும் முக்கியமானதாய் கருதப்பட்டன. இவ்விரண்டினதும் இணைப்பு முக்கியமான அரசியல் இயங்கியலாக அடையாளம் காணப்பட்டது. இது கெடுபிடிப்போருக்கு வெகுகாலம் முன்பே, அமெரிக்காவின் சி.ஜ.ஏ அமைப்பு உருவாக்கப்பட்டிருக்காத காலப்பகுதியில் நடந்தது என்பதையும் நாம் நினைவிலிருத்த வேண்டும்.

ஃபிராங்கோவின் படைகள் சிலுவைப்போர் மற்றும் மீள்வெற்றிகாணல் போன்ற வரலாற்று ஒப்புமைகளை தாராளமாக பயன்படுத்தின. இருப்பினும், அவர்களின் புதுப்பிக்கப்பட்ட கதையாடலில், தேசத்தின் உயிர்வாழ்வுக்காகத் தூய்மைப்படுத்த வேண்டிய வெளிநாட்டு ‘படையெடுப்பாளர்கள்’ முஸ்லிம்கள் அல்ல; களையெடுக்கப்பட வேண்டியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று அறிவித்தார்கள். தேசியவாதிகள் கம்யூனிசத்தை இனமயமாக்கினர். ஹிஸ்பானிக்கின் சீரழிவுக்கு அச்சுறுத்தலாக பாலியல் சுதந்திரத்துடன் ‘சிவப்பு மரபணு’ என்று அழைக்கப்படுவதைக் குற்றம் சாட்டினர். 

வத்திக்கான், அதன் பங்குக்கு, இந்த விடயத்தில் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தியது. 1937 மார்ச்சில் வெளியிடப்பட்ட போப்பாண்டவரின் கலைக்களஞ்சியமான ‘டிவினி ரிடெம்ப்டோரிஸ்’, போர் மூளும் போது, கம்யூனிசத்தை சாத்தானிய தர்க்கத்திற்கு கீழ்ப்படிந்த ‘ஆன்மீக ஒழுங்கின் தீமை’ என்று விவரித்தது. சமூகத்தையும் அதன் அஸ்திவாரங்களையும் அசைக்கும் கடவுள்-எதிர்ப்பு பிரசாரத்தின் அழிவுகளை தங்கள் எல்லைக்குள் தடுக்க அனைத்து விடாமுயற்சியும் நாடுகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. 

திருத்தந்தை 11ஆவது பயஸின் இந்தக் கருத்தின் எதிரொலியாக, ஸ்பானிய ஆயர்களின் குழு ஜூலை 1937 இல் ஒரு கடிதத்தை எழுதியது. இது இலத்தீன் அமெரிக்க மதகுருமார்களிடையே பரவலாக விநியோகிக்கப்பட்டது. இது ஸ்பெயினில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை அகற்றுவதற்கான கிளர்ச்சியாளர்களின் செயல்களை வரவேற்று அவர்கட்கு தமது ஆதரவை நல்கியது.  தேசத்தின் வாழ்க்கையைக் காலங்காலமாக உருவாக்கி வந்த மதக் கொள்கைகளையும் கிறிஸ்தவ நீதியையும் பாதுகாக்க, உள்நாட்டுப் போரை ஒரு நியாயமான போராக அறிவித்தது. அக்காலகட்டம் முதல் எதிரி ‘கம்யூனிசம்’  என்றால் அதற்கெதிரான கிளர்ச்சி வன்முறை நியாயமானது மட்டுமல்ல;  அது புனிதமானது என்று பொருள்கொள்ளப்பட்டது. இதை இலத்தீன் அமெரிக்க வலதுசாரிகள் கவனித்தனர். 

அர்ஜென்டினா பாதிரியார் ஜூல்ஸ் மெய்ன்வில்லேயை உற்சாகப்படுத்தியபடி, ‘ஸ்பானிஷ் போருடன் துரோக உலகத்தின் மீதான கிறிஸ்தவ வெற்றி தொடங்குகிறது’ என்ற கருத்தைக் கட்டமைத்தனர். அனைத்து பகுதிகளின் பழைமைவாதிகளும் தங்கள் கருத்துகளில் மிகவும் கண்டிப்பானவர்களாக இல்லாவிட்டாலும் குரல்கொடுத்தோர், விடாமுயற்சியுடன் தங்கள் தேசிய அடையாளங்களை நம்பிக்கை, ஒழுக்கம், இனம், மொழி மற்றும் சித்தாந்தம் ஆகியவற்றின் பழைமைவாத ஸ்பானியக் கருத்துகளுடன் இணைக்க முயன்றனர். முக்கிய அரசியல் உரையாடலின் எல்லைகளை வலதுநோக்கி மாற்றினர். 

இது அதிவலதிற்கான ஆதரவுத்தளத்தை உருவாக்குவதற்குப் பயன்பட்டது. இலத்தீன் அமெரிக்காவில் ‘கம்யூனிச எதிரி’யைக் கருவறுப்பதற்கு அதிவலது முக்கிய கருவியானது.

 அதிதீவிர வெறுப்புத் தேசியவாதம், கிறிஸ்தவ அடிப்படைவாதம், இவையிரண்டையும் உந்தித் தள்ளும் சர்வாதிகாரம் என்பன நல்ல கலவையாகின. இதனால் இலத்தின் அமெரிக்கா எங்கும் அதிவலது சர்வாதிகாரங்கள் அமெரிக்க ஆதரவுடன் அதிகாரத்துக்கு வந்தன. 
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இருபதாம்-நூற்றாண்டின்-நெருக்கடி/91-315323

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலத்தீன் அமெரிக்க அதிவலது: கெடுபிடிப்போரில் அறுவடை செய்தல்

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலது தீவிரவாதத்தின் நிழலில் - 22

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலத்தீன் அமெரிக்க அதிவலதின் இருப்புக்கு 1930களில் ஸ்பெயினில் சர்வாதிகாரி ஃபிராங்கோவின் எழுச்சி முக்கிய உந்து சக்தியாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பாதியில் நவீனமயமாக்கல், அதிவலதுக்கு நெருக்கடியை உருவாக்கியது. 

ஃபிராங்கோவின் எழுச்சியைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், அதிவலது சக்திகள் தங்கள் ஐபீரிய நாயகர்களிடம் இருந்து (ஸ்பெயினின் ஃபிராங்கோ மற்றும் போத்துகல்லின் சலாசர்) தார்மிக மற்றும் நிதிரீதியான ஆதரவைப் பெற்றனர். 

இரண்டாம் உலகப் போரின் முடிவில், அனைத்து பாசிசத்தையும் நசுக்கியதாக நேச நாடுகள் சொல்லிவந்த போதும், ஸ்பெயினிலும்  போத்துக்கல்லிலும் 1970கள் வரை பாசிச சர்வாதிகாரம் நீடித்தது. அது அதிவலது கத்தோலிக்க அமைப்புக்கான உலகளாவிய மையமாக மாறியது. 

இந்த இரு நாடுகளிலிருந்தும் பழைமைவாத பாதிரியார்கள், கல்வியாளர்கள், வெளியீடுகள், இராஜதந்திரிகள் மற்றும் கண்காட்சிகள் ‘கலாசார பரிமாற்றம்’ என்ற பெயரில் இலத்தீன் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர்.  அவை அந்நாடுகளில் அதிவலதின் செயற்பாடுகளை ஊக்குவித்தன. 

வாக்குரிமையோ, அரசியல் கட்சிகளோ, மனித உரிமைகளோ இல்லாத ஆரம்பகால நவீன சமுதாயத்தின் ஏக்கம் நிறைந்த பார்வையில் தங்கியிருந்த பிராங்கோயிஸ்ட் கதையாடலானது, நவீன ஜனநாயகத்தின் குழப்பமான கோரிக்கைகளை விரைவில் கைவிடக்கோருவோருக்கு ஸ்பெயினை ஒரு பயனுள்ள குறியீட்டுப் புள்ளியாக மாற்றியது. 

எந்த வகையான அரசியல் ஆட்சியும் ‘கம்யூனிசம்’ அல்லது அதை நோக்கி நகர்த்தக்கூடிய எதையும் விட விரும்பத்தக்கது என்ற பார்வையை பொதுப்புத்தி மனநிலைக்கு அளித்தது. அதேவேளை தேவாலயம், இராணுவம் மற்றும் பிரபுக்களின அதியுயர்நிலை ஆகிய மூன்று நிறுவனத் தூண்கள் மீதான தாக்குதலாகக் கருதப்படும் எதுவும் அழிக்கப்படுவதற்குத் தகுதியானது என்பதை நியாயப்படுத்தியது.   

கெடுபிடிப்போர் காலம் முழுவதும் இலத்தீன் அமெரிக்காவெங்கும் அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்டு பிரதான ஆயுதமாக்கப்பட்டு, அரசியல் வன்முறையைப் பிராந்தியம் முழுவதும் தூண்டியது. பல ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், முறியடிக்கப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் அவை ஸ்பானிய உள்நாட்டுப் போரின் வலதுசாரி தொன்மங்களை வெளிப்படையாக வரைந்தன. 

உதாரணமாக, குவாத்தமாலாவில் 1954இல், மதகுருமார்கள் விசுவாசிகளை அணிதிரட்டி ஜாகோபோ ஆர்பென்ஸை பதவியை விட்டு விரட்டுவதை ‘மீள்வெற்றிகாணல்’ என்று  அழைத்தனர். பொலிவியாவில், 1959இல், ஸ்பெயினின் புரட்சிகர அரசாங்கத்தை தூக்கியெறிய முயன்று இறந்தவர்கள் நினைவாக, பொலிவியன் சோசலிஸ்ட் ஃபாலாஞ்சை நிறுவினார் ஆஸ்கார் உன்சாகா டி லா வேகா. 

ஃபிராங்கோ ஆட்சியின் பெண்களின் கீழ்ப்படிதல், பாலினம், பாலியல் இணக்கமின்மையின் கடுமையான அடக்குமுறை ஆகியவை பிரேஸிலில் எதிரொலித்தன, அங்கு இருபது ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி, பாலினம் மற்றும் பாலியல் இணக்கமற்ற தன்மையை சமன் செய்து, கிறிஸ்தவ தார்மிகச் சிதைவை இராணுவ ஆட்சியால் மட்டுமே நிறுத்த முடியும் என்று வாதிட்டது. 

அர்ஜென்டினாவின் இராணுவ சர்வாதிகாரம் 1970 களின் நடுப்பகுதியில் ‘புனிதப் போர்’ என்ற கருத்தை அதிகமாகப் பயன்படுத்தினர். இடதுசாரிகளின் வெகுஜனக் கொலைகளை புனிதப்படுத்த ‘ஜேசுவுக்காக’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்கள், 

அதேநேரத்தில் அண்டை நாடான சிலியில், கத்தோலிக்க புராணங்கள் மற்றும் புகழ்பெற்ற ஹிஸ்பானிக் கலாசாரக் கருத்துகளில் மூழ்கியிருந்த கிரேமலிஸ்டா சிவிலியன் எதிர்ப்பு இயக்கம், சால்வடார் அலெண்டேவின் சோசலிச அரசாங்கத்தை அகற்றுவதில் மையமாக இருந்தது. 

எல்-சால்வடாரில், 1970களின் நடுப்பகுதியில், ஒரு கொலைக் குழுவானது, ஃபாலாஞ் என்ற சுருக்கத்தை உருவாக்குவதற்காக, அதன் முன்னெழுத்துகளைக் கொண்ட அசாத்தியப் பெயரைத் தனக்கு உருவாக்கிக் கொண்டது.

தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை சித்திரவதை செய்தல், மாணவர்களை விமானத்தில் இருந்து கடலில் வீசுதல், பழங்குடி சமூகங்களை படுகொலை செய்தல் போன்ற பல வழிகளை இந்த அதிவலது ஆட்சிகளும் குழுக்களும் இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் கண்டுபிடித்தன. இவை ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் அழிவு, தேவையான விவசாய சீர்திருத்தங்களை இடைநிறுத்துதல் அல்லது மாற்றியமைத்தல், தேவாலயத்துக்குள் முற்போக்கான போக்குகளுக்கு தண்டனை வழங்குதல், பலவீனமான, திணிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களை எதிர்த்துப் போராடக்கூடிய சமூக இயக்கங்களை அகற்றுதல் போன்றவற்றை சாதித்தன. 

இன்றைய மத்திய மற்றும் தென் அமெரிக்கச் சந்தைகளை பிரதான வணிக வாய்ப்புகளாகக் கூறும், சுரண்டும் சர்வதேச முதலீட்டாளர்கள் பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட பழைமைவாத அடக்குமுறைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். எளிமையாகச் சொன்னால், இலத்தீன் அமெரிக்கா இன்று உலகின் மிகவும் சமத்துவமற்ற பிராந்தியமாக இருப்பது ஒரு விபத்து அல்ல.

1990களின் இறுதியில் அதிவலது சர்வாதிகார ஆட்சிகளின் சரிவு இலத்தீன் அமெரிக்கா எங்கும் தொடங்கியது. இது இளஞ்சிவப்பு அலை என்று அறியப்பட்டது. சந்தையின் புதிய தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக இது தோற்றம் பெற்றாலும் அது கடந்தகால இரத்தத்தில் நனைந்த பிற்போக்குத்தனமான தசாப்தங்களின் மறுதலிப்பாகவும் இருந்தது. 

இது சிலியின் மைக்கேல் பேச்லெட், பிரேஸிலின் தில்மா ரூசெஃப் போன்ற முன்னாள் சித்திரவதைக்கு ஆளானவர்களின் உயர்வின் அடையாளமாவும் அவர்களை நாட்டின் தலைவர்களாகக் கொண்டு வந்தது. வேரூன்றிய அதிகாரக் கட்டமைப்புகளை அகற்றுவதில் புரிந்து கொள்ளக்கூடிய தோல்விகளை இந்தப் புதிய அரசாங்கங்கள் கண்டபோதும்,  இளஞ்சிவப்பு அலை ஒரு புதிய சகாப்தத்தின் உதயத்தை பரிந்துரைத்தது.

image_921b537f55.jpg

பிரேஸிலின் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவைப் போலவே, புத்துயிர் பெற்ற வெகுஜன அமைப்புகள் தங்கள் தலைவர்களை அரசியல் அதிகாரத்துக்குள் தள்ள முடியும். அர்ஜென்டினா போன்ற சர்வதேச கடன் வழங்குனர்களுக்கு மிகவும் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் தளைகளை தூக்கி எறியலாம். பொலிவியா போன்ற பெரும்பான்மையான பழங்குடி சமூகங்கள், நவீன அரசை பன்முகத்தன்மை கொண்டதாக மறுவரையறை செய்யத் துணிந்த ஒரு பூர்வகுடி ஜனாதிபதியால் ஆளப்படலாம் போன்றவற்றைக் காட்டி நின்றது. 

இந்தக் கட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் தீவிர வலதுசாரிகள் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தபோதிலும், இளஞ்சிவப்பு அலை வீசிய நாடுகள் எதிர்கொண்ட பெருகிய சவால்கள் - பண்டங்களின் விலை வீழ்ச்சி, ஊழல், அமெரிக்க தலையீடு, பிரித்தெடுக்கும் தூண்டுதலின் பிரித்தெடுத்தல் -  வேலைநிறுத்தம் செய்வதற்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. அதன் மூலோபாய நோக்குநிலை எப்போதும் வெற்றியடையவில்லை என்றாலும், அடிப்படையில் அதிவலது பல முயற்சிகளை மேற்கொண்டது. 

எடுத்துக்காட்டாக, வெனிசுலாவின் ஹ்யூகோ சாவேஸூக்கு எதிரான 2002 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்தது ஒரு  பழைமைவாதக் கூட்டணியாகும். அதன் முக்கிய பங்காளியாக அதிவலது இருந்தது ஆச்சரியப்படத்தக்கவொன்றல்ல. 

இளஞ்சிவப்பு அலையின் கலவையான முடிவுகள் பிரதிபலிப்பது யாதெனில், இவ்வலை வீசிய நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையாகும். 

அதேவேளை, இந்த அலை வீசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் புரட்சிகரமானதாகவன்றி  மிகவும் சீர்திருத்தவாதமாக மாறியது. உண்மையிலேயே புரட்சிகரமாக இருந்தது அடிமட்ட அடிப்படை இயக்கங்களாகும். இந்த இயக்கங்கள் காலப்போக்கில் தங்கள் செல்வாக்கை இழந்ததோடு அவர்களின் கோரிக்கைகள் கேட்பாரற்றுப் போயின. 

அதிகாரத்துக்கு ஆட்சியாளர்களைக் கொண்டு வந்த இவ்வியக்கங்கள் கட்சிக் கட்டமைப்புகளில் இருந்தே அந்நியப்பட்டுவிட்டன. இதனால் பிரேஸில், ஹொண்டுராஸ் மற்றும் பராகுவேயில் நடந்த நீதித்துறை சதிகள் உட்பட, வலதுசாரி சவால்களில் இருந்து இளஞ்சிவப்பு அலையில் ஆட்சிக்கு வந்தோர் தங்களைத் தற்காத்துக் கொள்ள இயலாமல் போனது. 

அடித்தட்டு மக்கள் இயக்கங்களில் இருந்து அந்நியப்பட்டவையாக குறித்த ஆட்சிகள் மாறியிருந்தன. அடித்தட்டு மக்கள் இயக்கங்கள் உயிர்ப்போடு இருந்திருக்குமாயின் அதிவலதின் சதிகள், ஆட்சிக்கவிழ்ப்புகளை முறியடித்திருக்க இயலும்.  இளஞ்சிவப்பு அலையின் விளைவால்  பெறப்பட்ட சில வெற்றிகள், வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட தொகுதிகளுக்கு அதிகாரமளிப்பதை உள்ளடக்கியது.

லூலாவின் கீழ் பிரேஸிலின் உயர்கல்வி அமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட தீவிரமான உறுதியான செயற்றிட்டங்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கும் பிராந்தியத்தின் அலை ஆகியவை இதற்குச் சான்றாகும். 

1990வரை இலத்தீன் அமெரிக்காவில் அதிவலது மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. கெடுபிடிப்போர் அதற்கு மிகுந்த வாய்ப்பானது. 1990களின் இறுதியில் அதிவலதுக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிராக இலத்தின் அமெரிக்க மக்கள் எழுந்தார்கள். அது இளஞ்சிவப்பு அலையானது. ஆனால் 2000இன் இறுதியில் அமெரிக்கா அதிவலதின் துணையோடு திருப்பித் தாக்கியது. 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இலத்தீன்-அமெரிக்க-அதிவலது-கெடுபிடிப்போரில்-அறுவடை-செய்தல்/91-315641

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மதத்தைத் துணைக்கு அழைத்தல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 23 

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசியல் அதிகாரத்துக்கான அதிவலதின் போர் ஒவ்வொரு நாளும் மேலும் தீவிரமடைந்து வருகிறது. கண்டம் முழுவதும் இந்த எழுச்சிமிக்க வலதுசாரி இயக்கங்களை இயக்குவது எது? எந்தச் சர்வதேச சக்திகள் அவர்களை இணைக்கின்றன, ஏன் இணைக்கின்றன? அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவுகிறார்கள்? அரசாங்கத்துக்கு உள்ளும் அதற்கு அப்பாலும் இடதுசாரிகளின் பதில் என்னவாக இருக்க வேண்டும்? இவை இன்றைய முக்கிய கேள்விகளாகும்.

சமீபத்திய தசாப்தங்களில் இலத்தீன் அமெரிக்காவில் சுவிசேஷ தேவாலயங்கள் அரசியல், சமூக, பொருளாதார அரங்கில் முன்னிலைக்கு வந்துள்ளன. தேவாலயத்தையும் அரசையும் பிரிக்கும் எல்லைகளை ஊடுருவி, பொதுமக்களின் ஒரு பகுதியினர் ஆதரிக்காத நிகழ்ச்சி நிரல்களை அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.

image_dda3c4d5d8.jpg

குறிப்பாக குடும்பம், பாலினம் அல்லது பாலியல் தொடர்பான பிரச்சினைகள் என்று வரும்போது, இலத்தீன் அமெரிக்க சமூகங்களில், இத்தேவாலயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. கடந்த காலங்களில், இந்தத் தேவாலயங்களின் செல்வாக்கு, அவர்களின் சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. 

இன்று, அரசியல் மையநீரோட்டத்தில் அவர்களின் அரசியல் கட்சி அல்லது தேர்தல் பிரதிநிதித்துவம், எச்சரிக்கை மணிகளை அடிக்க ஆரம்பித்துள்ளன. இது ஜனநாயகம் மற்றும் சில நிறுவப்பட்ட உரிமைகளுக்கு அச்சுறுத்தலாகவும், அதிவலதின் வளர்ச்சிக்கு வாய்ப்பானதாகவும் அமைந்து விடுகிறது. 

இலத்தீன் அமெரிக்காவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 22 சதவீதம் பேர் சுவிசேஷகர்களாக அடையாளப்படுத்துகிறார்கள். இது நீண்ட காலமாக தன்னை கத்தோலிக்கராகக் கருதும் ஒரு பிராந்தியத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும். பெரும்பான்மையானவர்கள் (56 சதவீதம் பேர்) கத்தோலிக்கராக இருந்தாலும், ஒருபுறம் இந்த மதத்துடன் அடையாளம் காண்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. மறுபுறம், சுவிசேஷ தேவாலயங்களை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு கேள்வி யாதெனில், ஏன் இந்தத் தேவாலயங்கள், சிறுபான்மையினராக இருந்தாலும், பிராந்தியத்தில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றன. இவை, எவ்வாறு அதிவலதின் வளர்ச்சிக்கு உதவுகின்றன? 

இவை வெவ்வேறு உள்நோக்கங்களைக் கொண்ட குழுக்கள், சமீப ஆண்டுகளில், குறிப்பாக அரசியல் நடவடிக்கைகளின் அடிப்படையில், பெந்தகோஸ்தே, நியோ-பெந்தகோஸ்தே குழுக்கள் மிகவும் வளர்ச்சியடைந்தவை. இவற்றுக்கும் அதிவலதுக்கும் நெருக்கமான உறவுண்டு. இந்தக் குழுக்கள் தங்கள் நம்பிக்கை, பேய்கள் மீதான நம்பிக்கை, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டத்தின் கருப்பொருளை அற்புதங்களின் கருப்பொருளைக் கொண்டு வகைப்படுத்துகின்றன.

இவர்களிடம் செழிப்பு இறையியல் (prosperity theology) என்ற விடயமும் செல்வாக்குச் செலுத்துகிறது. இது பொருளாதார செழுமைக்காக கடவுளுடன் ஓர் உடன்படிக்கையை நிறுவுவதைக் குறிக்கிறது. விசுவாசிகள் தேவாலயத்துக்கு எந்த அளவுக்கு நன்கொடை அளிக்கிறார்கள் என்பது அவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 

இது இலத்தீன் அமெரிக்காவில் தொழில்முனைவோர் பிரச்சினையுடன் தொடர்புடையது. மேலும், தொழில்முனைவோராக கருதப்படும் மக்கள், குறிப்பாக குறைந்த நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் இது மிகுந்த செல்வாக்குடையதாக மாறியுள்ளது.

image_55a8c13ab2.jpg

‘பெந்தேகோஸ்தலிச’ இயங்கியல் என்பது, உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை தேவாலயங்களுக்குள் கொணர்ந்து, மக்களை நெருங்கும் நெகிழ்வுத்தன்மையில்  தனித்து நிற்கிறது. அவர்களின் தேவாலய சேவைகள், ஆராதனைகள் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய மொழியைப் பயன்படுத்தி நடத்தப்படுகின்றன. போதகர்கள் பொதுவாக அவர்கள் பிரசங்கிக்கும் சமூகங்களில் வாழ்கிறார்கள்; சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். 

கத்தோலிக்க மதகுருக்களைப் போலல்லாமல், அவர்களால் திருமணம் செய்துகொள்ள முடிகிறது, அதனால்தான் அவர்கள் மக்களுடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் சமூக ஊடகங்களை மிகவும் விரிவாகப் பயன்படுத்துகின்றனர். சுவிசேஷ போதகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர். 

சமுதாயத்தில் புதுமைக்கான ஆதாரங்களை அங்கிகரிப்பது மற்றும் வழிபாட்டில் அவர்களை இணைத்துக்கொள்வது போன்றவற்றில் அவர்களின் நெகிழ்வுத்தன்மை மிகுந்த பலனளிக்கிறது.  ‘சுவிசேஷ ராக்’ இசைக்குழுக்கள் இதற்கு சிறந்ததோர் உதாரணம். இசைக் கச்சேரிகள், ஆடல்பாடல்கள், களியாட்டங்கள் இந்தக் குழுக்களுக்கு மிகவும் வலுவான உணர்ச்சிகளை தூண்டுபவையாகவும் அணிதிரட்டல் உபாயங்களாகவும் பயன்படுகின்றன. 

இந்தத் தேவாலயங்கள் பெரும்பாலும் வணிக நிறுவனங்களைப் போலவே செயற்படுகின்றன; பின்பற்றுபவர்களுக்காக போட்டியிடுகின்றன. மேலும், அவர்களின் தேவாலயங்களுடன் உணவு மைதானங்கள், விளையாட்டு மைதானங்கள், குழந்தை பராமரிப்பு வசதிகளும் உள்ளன. 

இந்தப் பொழுதுபோக்கு மற்றும் பராமரிப்பு வசதிகள், குடும்பங்கள் மத போதனைகளைப் பெறும் இடங்களாகும். இந்தத் தேவாலயங்கள் இவ்வாறுதான் தமக்கான சமூகத்தை உருவாக்குகின்றன. பாரம்பரிய கத்தோலிக்க சமயத்தின் இறுக்கமான நடைமுறைகள் நிலவிவந்த சமூகங்களில், இந்தச் சுவிசேஷ தேவாலயங்கள், புதுமையாகவும் நெகிழ்வுத் தன்மையுடையனவாகவும் இருந்தமை மிகுந்த கவர்ச்சிகரமானதாக இருந்தது. 

இந்தத் தேவாலயங்கள் பொதுவாக சர்வாதிகார அரசியல் தலைவர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, பிரேஸிலில் போல்சனாரோ, அமெரிக்காவில் டிரம்ப், பெருவில் ஆல்பர்டோ புஜிமோரி  ஆகியோர் சில உதாரணங்கள். இவர்களின் எதேச்சதிகாரப் போக்குகள் மற்றும் பாலினம், பாலியல் தொடர்பான பிரச்சினைகளில் பொதுவாக மிகவும் பழைமைவாத நிகழ்ச்சி நிரல் என்பன இத்தேவாலயங்களின் இயங்கியலோடு பொருந்திப்போகின்றன. 

பெந்தேகோஸ்தே சுவிசேஷகர்கள் தங்கள் அரசியல் ஈடுபாடு மற்றும் குடும்பத்தைப் பாதுகாப்பதில் ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைப்பதன் மூலம் அவர்களின் இருப்பில் தனித்து நிற்கிறார்கள். ஏனெனில், குடும்பப் பிரச்சினை ஒரு தார்மிக நிகழ்ச்சி நிரலைப் பாதுகாப்பதில் வெளிப்புறமாக மட்டுமல்ல, உள்நாட்டிலும் மையமாக உள்ளது. 

போதகர்களின் குடும்பங்கள் முன்மாதிரியாகக் காணப்படுவதால், அவர்கள் தேவாலயங்களைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு வகையான தலைவர்களாக மாறுகிறார்கள். உதாரணமாக, நல்ல குடும்பத்தை முன்னுதாரணமாக பின்பற்ற வேண்டிய உதாரணபுருஷர்களாக இப்போதகர்கள் உள்ளார்கள். 

அதிவலது அரசாங்கங்களை உருவாக்குவதற்கு, இந்தத் தேவாலயங்கள் கடுமையாக உழைக்கின்றன. அதிவலது அரசாங்கங்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஒரு பொருளாதார பரிமாற்றம் உள்ளது. எடுத்துக்காட்டாக, போல்சனாரோவின் ஆட்சியிலிருந்து, அவர்களின் தேவாலயங்கள் பொருளாதார ரீதியாக பயனடைந்தன. பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பழைமைவாத தார்மிக நிகழ்ச்சி நிரலை நோக்கி அரசை இட்டுச் சென்ற உறுதியான கொள்கைகளில் இவர்களின் பங்களிப்புப் பெரியது. 

மற்றொரு எடுத்துக்காட்டு, பெருவிய தலைநகர் லிமாவின் அதிவலது மேயர் ரஃபேல் லோபஸ் அலியாகா; இராணுவம், பழைமைவாத கத்தோலிக்கர்கள் மற்றும் சுவிசேஷ போதகர்கள் ஆகியோரை இணைத்து  ஒரு கூட்டணியை அமைத்து, தனது அதிவலது கட்சியை நிறுவினார். 

இங்கு கத்தோலிக்கர்களும் சுவிசேஷ போதகர்களும் இருவேறு துருவங்களாக இருந்தாலும், எவ்வாறு கூட்டணி அமைக்கிறார்கள் என்ற வினா எழுவது இயல்பானது. பழைமைவாதமும் அதிவலதும் இக்கூட்டணியை சாத்தியமாக்குகின்றன. 

2018ஆம் ஆண்டு அர்ஜென்டீனியத் தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில், கருக்கலைப்புக்கு எதிரான போராட்டத்தில் இவ்விருவரும் கரங்கோர்த்துப் போராடினார்கள். இலத்தீன் அமெரிக்காவில் கவனிக்க வேண்டியது யாதெனில், பழைமைவாத கத்தோலிக்கர்களுக்கும் சுவிசேஷகர்களுக்கும் இடையே சில சமயங்களில் அரசியல் கூட்டணிகள் உருவாகின்றன. பழைமைவாதக் கத்தோலிக்கர்களும் சுவிசேஷகர்களும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து ஒற்றுமையுடன் செயற்படும் நேரங்களும் உள்ளன. இடதுசாரிகளுக்கு எதிராக, கம்யூனிசத்துக்கு எதிராக, தொழிலாளர்களுக்கு எதிராக எனப் பலவற்றில் இவ்விரு குழுக்களும் கைகோர்த்துள்ளன.

கடந்த இரு தசாப்தங்களில் இந்தச் சுவிசேஷ சபைகள், அரசுகளில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துவனவாக மாறியுள்ளன. சுவிசேஷ சபைகளின் ஆதரவு இல்லாமல் இலத்தீன் அமெரிக்காவில் ஆட்சி செய்ய முடியுமா என்ற கேள்வி இப்போது கேட்கப்படுகிறது. 

இவ்வினாவை ஆழ்ந்து நோக்கின், உருகுவேயில் அது சாத்தியமாகலாம். அர்ஜென்டினாவில் இன்னும் சாத்தியமாகலாம். பிரேஸிலில் அது சாத்தியப்படாமல் போகலாம். மெக்ஸிகோவில் இது சாத்தியமில்லை. சமூகத்தில் எத்தனை கத்தோலிக்கர்கள் மற்றும் சுவிசேஷகர்கள் உள்ளனர் என்பதில் அவர்கள் சுவிசேஷகர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமூகம் எவ்வளவு மதம் சார்ந்தது என்பது ஒரு முக்கியமான காரணியாகும். 

எடுத்துக்காட்டாக, மெக்சிகோ மதச்சார்பின்மையை மிகவும் பாதுகாக்கும் சட்டத்தைக் கொண்டிருப்பினும் மக்கள்தொகையில் 95 சதவீதமானோர் தங்களை மதம்சார்ந்து அடையாளப்படுத்துகிறார்கள். எனவே அதிவலதின் முக்கியமான ஆதரவுத்தளமாக தொடர்ந்து மதம் திகழ்கிறது. 

பிரேஸிலில் அதிவலதின் எழுச்சி, கொலம்பிய சமாதான உடன்படிக்கையைச் சீர்குலைத்தது. பிராந்தியமெங்கும் பாலின வேறுபாடுகளுக்கு எதிரான வெறுப்பரசியல், பெரு, சிலி, குவாட்டமாலா, ஹொண்டூரஸ் ஆகிய நாடுகளில் அதிவலதின் அரசியல் செல்வாக்கு என சுவிசேஷ சபைகளும் அதிவலதும் இணைந்து புதிய திசையில் இலத்தின் அமெரிக்காவை நகர்த்த முனைகின்றன. 
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மதத்தைத்-துணைக்கு-அழைத்தல்/91-316214

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான கட்டுரையினை இணைத்த கிருபனுக்கு  நன்றி,

உலகு பன்முக பொருளாதார அச்சு நோக்கி நகர்ந்து செல்கிற சூழ்நிலையில், மீண்டும் பல சிறந்த சிந்தனைகளை மனித குலம் திரும்பி பார்க்க தொடங்கியுள்ளது.

உலக மயமாதல் என்ற கொள்கை உலக துரித பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததனை மறுக்க முடியாது, அதே சமயம் அது உருவாக்கிய சுரண்டல் பல போர்களையும், பட்டினை சாவுகளையும், வர்க்க வேறுபாடுகலையும், மக்களின் சிந்தனை ஆற்றலையும் மழுங்கடித்திருந்ததனை மறுக்க முடியாது.

மக்களிடையே வளங்களும் பொருளாதார பலஙளும் ஏற்றத்தாழ்வின்றி பங்கிடப்படும் போது தேவையற்ற போர்கள், வறுமை, பட்டினி சாவுகள், வர்க்க பேதங்கள் மறைந்து போகும், உலகில் அமைதியும் நிம்மதியும் வரும்.

உலக மயமாக்கல் (திறந்த பொருளாதார) நன்மைகளும் வேண்டும் அதே நேரம்சுரண்டல் அற்ற சமத்துவ சமுதாயமும் உருவாகினால் மனித குல வரலாற்றில் முக்கியமான காலகட்டமாக இந்த காலப்பகுதி மாறும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.