Jump to content

திராவிடர்


Recommended Posts

திராவிடர் ஆதிவரலாறும் பண்பாடும்

வி. சிவசாமி

B. A. Hons. (London.), M. A. (Ceylon)

வரலாற்று விரிவுரையாளர்

பட்டதாரித் திணைக்களம்

யாழ்ப்பாணக் கல்லூரி

வட்டுக்கோட்டை

முதற் பதிப்பு - ஜனவரி 1973

அச்சுப்பதிவு:

சிறீ சண்முகநாத அச்சகம்,

யாழ்ப்பாணம்.

------------------------------------------------------------

சமர்ப்பணம்

இலங்கைப் பல்கலைக் கழகத்திலே

பல்லாண்டுகளாக

வரலாற்றுத்துறைத் தலைவராக விளங்கியவரும்

என்னுடைய ஆசிரியப் பெருந்தகையும்

வரலாற்றிலீடுபாட்டினை

ஏற்படுத்தியவருமான

கலாநிதி ஹேமச்சந்திர ராய்

அவர்களின் நினைவிற்குச்

சிறுகாணிக்கை

------------------------------------------------------

நூலாசிரியரின் முன்னுரை

திராவிடரின் பழையகால வரலாறு பற்றிச் சுருக்கமாக இக் கட்டுரையில் எடுத்துக் கூறப்படுகிறது. ஆரியர் பற்றிக் கோர்டன் சைல்ட் என்ற பேரறிஞர் எழுதியது போன்று, திராவிடர் பற்றிய விரிவான ஆராய்ச்சி நூல் இன்றுவரை வெளிவந்திலது; அத்தகைய நூல் இனிமேலாவது வெளிவர வேண்டும். குறிப்பாகத் திராவிடர் பற்றிய தொல்பொருளியலாராய்ச்சி இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ இன்றுவரை விரிவாக நடைபெறவில்லை. தொல்பொருளியலாராய்ச்சியாளர் காலத்திற்குக் காலம் அகழ்வாராய்ச்சிகள் சில நடாத்தி அறிக்கைகளையும், பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளனர். திராவிட மொழிநூல், மொழியியல் பற்றியும் அறிஞர் எழுதியுள்ளனர்; எழுதி வருகின்றனர். திராவிட இலக்கியம், கலாச்சாரம் பற்றிப் பலர் எழுதி வருகின்றனர். மேற்குறிப்பிட்டனவற்றுள்ளே பலவற்றினைத் தொகுத்துக் கூறுவதே கட்டுரை எழுதுவதற்கான நோக்கமாகும். திராவிடவியல் பற்றிய நூல்களையும், பிரசுரங்களையும் எழுதிய பேரறிஞர்களுக்கு நூலாசிரியர் பெரிதும் கடமைப்பட்டுள்ளார்.

திராவிடரைப் பற்றி இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், குறிப்பாக யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரித் திணைக்களத்திலும் மாணர்களுக்குச் சில காலமாக எடுத்துக் கூறும் வாய்ப்பு ஏற்பட்டது. எனவே, இவ்விடயம் பற்றிச் சற்று விரிவாக வாசித்ததற்கும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. இவ்விடயத்திலே நெடுங்காலமாக ஈடுபாடு கொண்டிருந்தேன். இவ்விடயம் பற்றிய விரிவான கட்டுரைகள் தமிழிலே மிகக் குறைவாக உள்ளன. என்னுடைய மாணவமணிகள் சிலரும் இத்தகைய கட்டுரைகள் சிலவற்றையாவது எழுதுமாறு வற்புறுத்தி வந்தனர். எனவே, இக்காலம்வரை அறிஞர் பலர் இவ்விடயம் பற்றி ஆராய்ந்தனவற்றைத் தமிழிலே தொகுத்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இத்தருணத்திலேயே உதயதாரகையின் தமிழ்ப் பத்திராசிரியராய் விளங்கியவரும், என்னுடைய நண்பருமான திரு. சு. செபநேசன் B. A., Dip. in Ed. அவர்கள் இக்கட்டுரையினை அப்பத்திரிகையிலே பிரசுரிக்க வேண்டுமென ஊக்கப்படுத்தி எழுதுவித்தார். அவருடைய ஊக்கத்தின் விளைவாக இக்கட்டுரை சென்ற ஆண்டு உதயதாரகையிலே வெளிவந்தது. இதன் சில பகுதிகள் புதுக்கியும், விரித்தும் தற்போது அடிக்குறிப்புகளுடன் கூறப்பட்டுள்ளன. இவ்விடயம் மேலும் ஆராயப்பட வேண்டியதாகும். இதில் ஏதாவது தவறுகள், குறைகள் காணப்படின், அறிஞர் உலகம் அவற்றை எடுத்துக்காட்டின், அவை அடுத்த விரிவான பதிப்பிலே நிவிர்த்தி செய்யப்படும்.

இக்கட்டுரையினை எழுதுவதற்குப் பல அறிஞர்களின் நூல்களும், பிற பிரசுரங்களும் உதவியாயிருந்தன. அவர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி உரித்தாகுக. இக்கட்டுரை எழுதுவதற்குப் பல நூல்களையும், வசதிகளையும் தந்துதவிய இலங்கைப் பல்கலைக்கழக நூலக அதிபருக்கும், உதவியாளருக்கும், குறிப்பாக, யாழ்ப்பாணக் கல்லூரிப் பட்டதாரிப் பிரிவு நூலக அதிபருக்கும், உதவியாளருக்கும் என் மனமுவந்த நன்றி.

இச்சிறுநூலிற்கு அணிந்துரை எழுதிச் சிறப்பித்துள்ள வண. பிதா எக்ஸ். எஸ். தனிநாயக அடிகள் அவர்களுக்கு என் இதயம் கனிந்த ந்ன்றி. இதனைப் பிரசுரிப்பதற்கு ஊக்கப்படுத்திய அன்பர் அனைவருக்கும், இதனை ஆரம்பத்திலே பிரதி செய்து உதவிய அன்பருக்கும், இதிலேயுள்ள தேசப்படங்களை வரைவதிலுதவி செய்த அன்பருக்கும், இதனை மனமுவந்து பிரசுரித்துதவிய சிறீ சண்முகநாத அச்சகத்தாருக்கும் இதய பூர்வமான நன்றி.

"காய்த லுவத்த லகற்றியொரு பொருட்கண்

ஆய்த லறிவுடையார்க் கண்ணதே"

வி. சிவசாமி

யாழ்ப்பாணக் கல்லூரி,

வட்டுக்கோட்டை.

தை 1973

-----------------------------------------------------------

வண. பிதா தனிநாயக அடிகளார் அளித்துள்ள

அணிந்துரை

யாழ்ப்பாணக் கல்லூரியின் வரலாற்றுத்துறை விரிவுரையாளர் திரு.வி. சிவசாமி அக்கல்லூரியின் மரபிற் கொப்ப, திராவிடர் பற்றிய கட்டுரையொன்றினை வரைந்துள்ளார். இப்பொருள் பற்றித் தமிழில் முதல்முதல் வெளிவரும் இவ்வாராய்ச்சிக் கட்டுரை ஆழமும், நிறைவும் கொண்டுள்ளது. திராவிட மொழிகள் பற்றியும், திராவிட மக்கள் பற்றியும் இதுகாறும் வெளிவந்துள்ள கருத்துக்கள் யாவற்றையும் நன்கு ஆராய்ந்து, திராவிடரின் பிறப்பிடம், அன்னாரின் புலப்பெயர்ச்சிகள், வரலாற்றுத் தொடர்புகள் முதலியவற்றை வரலாற்றுக் கட்டுரைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் பான்மையில் செறிந்த மேற்கோள்களுடன், குறிப்புகளுடனும் எழுதியுள்ளார். இவர் கடைப்பிடிக்கும் மொழிநடை பொருளோடு பொருந்தும் அடக்கமும் அமைதியுமுள்ள அறிவு நடை.

இச்சிறு நூலைப் பாராட்டும்பொழுதே, தமிழர் வரலாற்றைப் பற்றி இன்னும் பல நூல்களை இந்நூலாசிரியர் வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.

சே தனிநாயகம்

ஆயர் இல்லம்,

வளலாய்,

அச்சுவேலி.

8-1-1973

Link to comment
Share on other sites

திராவிடர்

திராவிடர், திராவிடம்

திராவிடர் என்னும் பதம் ஒரு குறிப்பிட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் மக்களைக் குறிக்கும் பதமாகவே தற்போது பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. “ஆரியர்” என்ற பதம் போன்று இதுவும் ஒரு குறிப்பிட்ட இனத்தவரைக் குறிக்கும் பதமாகவும் கையாளப்பட்டு வந்தது. இக்காலத்திலும் சிலர் கையாளுகின்றனர். ஆனால், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலே இன்றைய திராவிட மொழிகளின் தாய்மொழியான ஆதித் திராவிடம் குறிப்பிட்ட இனத்தவர் மத்தியிலே வழங்கப்பட்டிருக்கலாம்: அத்தகைய கருத்திலே இனத்தினைக் குறிக்கும் பதமாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம். இவ்வினத்தவர் மத்தியிலே கலாச்சார, சமய, பொருளாதார நிலைகளிலும் ஒற்றுமை நிலவியிருக்கலாம். ஆதித் திராவிடர் பற்றிக் குறிப்பிடும்போது மேற்குறிப்பிட்ட இன, சமய, கலாச்சார ஒற்றுமைகளைக் குறிப்பிடல் அவசியமாகின்றது. ஆனால், பொதுப்படக் கூறும் போது, தூய இனமோ, மொழியோ ஒன்று நிலவுவதாகக் கொள்ளமுடியாது. மனிதன் மிகப் பழைமையான காலம் தொட்டுப் பிறரோடு உறவாடியே வந்துள்ளான். இன்று நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினாலே முன்னொருபோதுமில்லாத வகையிலே உறவுகள் ஏற்பட்டுப் பரந்த உலகமே சுருங்கிக்கொண்டு வருதலைக் காணலாம்.

திராவிட எனும் பதம் வடமொழி நூல்கள் சிலவற்றிலே வருகின்றது. மனுஸ்மிருதியிலே (10.22 , 44) ‘திராவிட’ என்பது தென்னிந்தியாவிலே வாழ்ந்த மக்களைக் குறிப்பதாகக் காணப்படுகின்றது. கி. பி. எட்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த மீமாம்ச தத்துவ ஆசிரியரான குமாரிலபட்டர் “ஆந்திர- திராவிட பாஷா” எனும் பதத்தினைக் கையாண்டுள்ளார். இப்பதம் தெலுங்கு, தமிழ் பிரதேசங்களின் மொழிகளைக் குறிப்பதாக இருக்கலாம். 1 மேலும், கி. மு. இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டினைச் சேர்ந்த காரவெலனின் ஹாதிகும்பா சாசனம் அவன் திரமிததேச சங்காதம் (தமிழரசுகளின் கூட்டணி)2 ஒன்றினைத் தோற்கடித்தமையினைக் குறிப்பிடுகின்றது. திராவிடம் எனும் பதத்திலிருந்தே தமிழ் வந்ததென்பர் ஒரு சாரார். பொதுவாக நோக்கும் போது வடநாட்டவர் முக்கியமாகத் தமிழ் அல்லது தமிழரையே குறித்த பதமாக இது காணப்படுகிறது. சிலர் ‘த்ரு’ (ஓடுதல்) எனும் வடமொழிப் பதவழியாகவே, திராவிட என்ற பதம் வந்ததென்பர். அவ்வாறாயின், ஆரியர் வடஇந்தியாவிற்குள் வரத் திராவிடர் தெற்கே ஓடினர் என்பர். இக்காலத்திலே திராவிடர் எனும் பதம் குறிப்பிட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் மக்களைக் குறிக்கும் பதமாகவே பொதுவாகக் கொள்ளப்படுகின்றது

.

திராவிட கலாச்சார முக்கியத்துவம்

இந்திய துணைக் கண்டத்திலே நிலவும் கலாச்சார வளர்ச்சிக்கு ஆரியர் போன்று திராவிடரும் அயராது உழைத்தவர். ஆரிய- திராவிட நாகரிக சங்கமமே இந்திய நாகரிகமாகப் பரிணமித்தது எனப் பல அறிஞர் கருதுவர். திராவிட நாகரிகத்தின் முக்கிய அம்சங்கள் இன்றும் தொடர்ந்து நிலவி வருகின்றன. ஆதித் திராவிடர் தாய்வழி உரிமைச் சமுதாயத்தினர். அம்மன் வணக்கத்திற்கு மிக முக்கியத்துவமளித்தனர். இதனால் ஆண் தெய்வத்தினை வணங்கிலர் என்பதன்று. அம்மனும் சிவனும் திராவிடத் தெய்வங்கள் என்பதே எஸ். கே. சட்டர்ஜி போன்ற அறிஞரின் கருத்தாகும். 3 இத் தெய்வங்களை விட, விநாயகன், முருகன், கிருஷ்ணன், ஐயனார் போன்ற தெய்வங்களும் திராவிடத் தெய்வங்கள் எனக் கருதப்படுகின்றன. 4 ஆனால், காலப்போக்கிலே ஆரியர் போன்ற மக்களின் தொடர்பாலே இத்தெய்வங்களில் அவ்வவ் மக்களிடையில் நிலவிய தெய்விகக் கருத்துக்களும் படிந்து இன்றைய நிலை ஏற்பட்டுளது எனலாம். கிராமப் புறங்களில் உயர்ந்து படர்ந்த மரங்களிலே தேவதைகள் இருப்பதாக நம்பினர். மிருகங்களிற் சிலவும் பறவைகளிற் சிலவும் தெய்வீகத் தன்மையுள்ளனவாக கருதப்பட்டன. இவை தெய்வங்களின் ஊர்திகளாக விளங்கின. எடுத்துக் காட்டாக, சிவபெருமான் இடப வாகனர்; முருகன் மயில் வாகனன்; சேவற் கொடியோன். இக்கால ஆராய்ச்சியாளரில் ஒரு சாரார் இத்தெய்வங்களிலே புலப்படும் சில அம்சங்களும் அவர்களின் வாகனங்களும் குறிப்பிட்ட கால மனித நாகரிக வளர்ச்சியினைக் குறிப்பதாகவும் கூறுகின்றார்கள். இஃது எவ்வாறாயினும் மனித நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப, உலகிலே பல்வேறு சமயங்களும் வளர்ந்து வந்துள்ளமையினைக் காணலாம். திராவிடர் தமது பெரும் தெய்வங்களைக் கோவில்களிலே வணங்கினர். கோவில்கள் தோன்றுமுன் இயற்கையை வணங்கினர். மலைகள் காடுகளிலே வணங்கினர். மிகப் பழைய நிலையில் இயற்கை வழிபாடு நிலவிற்று எனலாம். ஆரியர் தெய்வங்களை வேள்வி மூலம் வணங்கினர். திராவிடர் பூசை மூலம் பிரார்த்தித்தனர். பூஜா என்னும் வடசொல் பூ (மலர்) எனும் திராவிடச் சொல்லடியாகப் பிறந்ததென மொழிநூல் அறிஞர் எஸ். கே. சட்டர்ஜி கருதுவர். 5 உருவ வழிபாடு திராவிடர் மத்தியிலே மிகப் பழைய காலத்திலேயே நிலவிற்று எனலாம். திராவிடர் பிற மக்களோடும் உறவாடி அவர்களிடம் இருந்தும் கருத்துக்கள் பலவற்றைப் பெற்றுக்கொண்டனர்.

திராவிட மொழிப்பரம்பல்

இந்திய துணைக் கண்டத்திலே திராவிட மொழிகள் பல நிலவுகின்றன. பேராசிரியர் ரி. பரோவும் எம். பி. எமெனொவும் தாம் தொகுத்த திராவிட மூலச் சொல்லகராதியிலே 6

19 திராவிட மொழிகளிலிருந்து பதங்களைத் தெரிந்து ஒப்பிட்டுள்ளனர். இதுவரை நடத்தப்பட்டு வந்துள்ள திராவிட மொழியாராய்ச்சியின்படி 25 திராவிட மொழிகள் (கிளை மொழிகளும் சேர்த்து) அறியப்பட்டுள்ளனவாகக் கமில்ஸ் வலபில் எனும் அறிஞர் கூறுவர். 7 மேலும் சில திராவிட மொழிகள், குறிப்பாக மத்திய இந்தியாவிலும், ஆகத் தென்மேற்கிலும் கண்டுபிடிக்கப்படலாம். மேற்படி இம் மொழிகளைப் பிரதேச வாரியாகப் பாகுபடுத்திக் கூறினால், இந்தியாவின் தென்பகுதியிலே தான் இலக்கிய வளமுள்ள பிரதான திராவிட மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்பனவும், இலக்கிய வளமற்ற தோட, கோத, படக், கோடகு, துளு, சவர, கோலமி, நயிகி ஆகியனவும், மத்திய இந்தியாவின் நடுப்பகுதி, கிழக்குப் பகுதியில் பர்ஜி, கட்பி(ஒல்லரி), கட்பி (சலூர் போய), குய், குவி, கொண்ட், பென்கோ, கோய, டோர்லி, கொண்டி, குருக், மல்டோ (வங்காளத்தின் மேற்கு எல்லையில்) ஆகியனவும், வடமேற்கு இந்திய எல்லையிலே பிராகூயி மொழியும் நிலவுவதை அவதானிக்கலாம். இம்மொழிகளின் பரம்பலும், வளமும் கவனிக்கத்தக்கன. பிரதான மொழிகளும், பெரும்பாலான மொழிகளும் விந்திய மலைக்குத் தெற்கே பெருமளவு தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. மராத்தி, ஓரிய மொழிகள் பேசப்படுமிடங்கள் தவிர்ந்த ஏனையவை திராவிட மொழிகள் நிலவுமிடங்களே. மத்திய இந்தியாவில் வழங்கும் திராவிட மொழிகள் அனைத்தும் இலக்கிய வளமற்றவை. நாகரிகத்தில் பின் தங்கிய மக்களாற் பேசப்படுபவை. இவற்றுட் சிலவற்றிற்கும், தெற்கே பேசப்படும் எழுத்து வடிவம் பெறாத மொழிகள் சிலவற்றிற்கும் ஐரோப்பிய பாதிரிமாரும் அறிஞரும் எழுத்து வடிவம் கொடுத்துள்ளனர். பிராகூயி மொழியும் இலக்கிய வளமற்றதே.

இவ்வாறு நோக்கும்போது சுமார் 2000 ஆண்டுகளுக்குச் சற்று மேலாக இலக்கிய வளமுள்ள தமிழும், இலக்கிய வளமுள்ள பிற திராவிடமொழிகள் மூன்றும் தெற்கே அருகருகாக நிலவுவதையும், அவற்றையடுத்து இலக்கியவளமற்ற திருந்தா மொழிகளும் நிலவுவதைக் காணலாம். தெற்கே வாழ்ந்த திராவிடரிற் பலர் மேன்மையான நாகரிகமுள்ள வராகவும், மேலான நாகரிகத் தொடர்புள்ளனராகவும் திகழ்ந்தனர். வடக்கே வாழ்ந்தோரில் ஒரு சாரார் ஆரியர் போன்றோரின் வருகையினாலே தெற்கே புலம்பெயர வேறொரு சாரார் வந்தவருடன் ஒன்றுபட்டிருப்பர். மத்திய பகுதியில் வாழ்ந்தோர் மேலான நாகரிக அலைகள் வீச, இயற்கை அரணுள்ள (மலை, காடுகள்) இப்பகுதியில் தங்க நேரிட்டிருக்கலாம். பொதுவாக இரு நாகரிகங்கள் சங்கமிக்கும்போது மேலான நாகரிகத்துடன் மற்றைய நாகரிகத்தின் மேலான அம்சங்களும் சேரலாம். பிற அம்சங்கள் இயற்கை அரணுள்ள பிற இடங்களிலே தஞ்சம் புக நேரிடும். இத்தகைய நிலை இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கலாம். மத்திய பகுதியிலே ஆரியமொழிப் பிரதேசங்களுக்கு இடையில் திராவிட மொழிகளிற் பின்தங்கியவை சில காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வடமேற்கு எல்லையில் உள்ள பிரதான கணவாய்களில் ஒன்றான போலன் கணவாய்க்கு அருகாமையிலேயே பிராகூயி மொழி நிலவுகின்றது. இவ்வழியாகத் திராவிடர் நடமாட்டம் நிலவியதை இஃது எடுத்துக் காட்டுகின்றது.

கால்டுவெலின் தொண்டும்

திராவிட மொழிகளின் முக்கிய அம்சங்களும்

திராவிட மொழிகளின் தனிச் சிறப்பினை உலகிற்கு நன்கு எடுத்துக் காட்டியவர் வண. கலாநிதி கால்ட்வெல் ஆகும்.8 அவர் இங்கிலாந்திலிருந்து தமிழகத்திற்குக் கிறிஸ்தவத் தொண்டு செய்ய வந்த காலத்திலும், அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரும், ‘வடமொழியும், தமிழும் ஒரே இலக்கணம் கொண்டவை, தமிழ் தனித்து இயங்காது’ என்னும் கருத்துகளும் நிலவி வந்தன. எடுத்துக்காட்டாக ஈசானதேசிகர் தமது இலக்கணக் கொத்து என்னும் நூலின் பாயிரத்திலே,

“அன்றியும் தமிழ் நூற்களவிலை யவற்றுள்

ளொன்றே யாயினு தனித் தமிழுண்டோ?

அன்றியும் மைந்தெழுத்தா லொரு பாடையென்

றறையவு நாணுவரறி வுடை யோரே:

ஆகையால் யானுமதுவே அறிக:

வடமொழி தமிழ்மொழியெனு மிரு மொழியினும்

இலக்கண மொன்றே யென்றே யெண்ணுக”

எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தவறான கருத்துக்கள் கால்டுவெலின் ஆராய்ச்சியின் விளைவாகக் கைவிடப்பட்டன.

திராவிட மொழிகள் ஆரிய மொழிகளைப் போலன்றி ஒட்டு மொழிகளாம் (agglutinative). ஆரிய மொழிகளைப் போல வேற்றுமை உருபுகள் ஏற்கும்போது சொல்லுருவ மாறுபாடுகள் (inflexional forms) ஏற்படா. திராவிடத் தாயின் தனித் தன்மைகளை இக்காலத்திற்கூட எழுத்து வடிவம் பெறாத திராவிட மொழிகளிலும் காணலாம். ஆரிய மொழிகளைப் போன்று திராவிட மொழிகள் விரைவாக வளர்ச்சி அடைந்தன அல்ல, மிகப் பழமையான சொல் வடிவங்கள் பல இன்றும் வழக்கில் உள்ளன. வடமொழியில் உள்ள ‘ட’ வர்க்க எழுத்துக்கள் திராவிட மொழித் தொடர்பால் ஏற்பட்டதென மொழி நூலறிஞர் பலர் கருதுவர்.

Link to comment
Share on other sites

ஆதித் திராவிடர் தாயகம், நாகரிகம், புலப்பெயர்ச்சி

ஆதித் திராவிடரின் தாயகம் பற்றி அறிஞரிடையே பல வகையான கருத்துக்கள் நிலவுகின்றன. இவற்றை இருவகையாகக் குறிப்பிடலாம். இந்தியாவே இவர்களின் தாயகம் என்பர் ஒரு வேறொரு சாரார் இவர்கள் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தனர் என்பர். வரவாறு, மொழிநூல் முதலியன பற்றிய ஆராய்ச்சி வளர்ச்சி அடையாத காலத்தில் வாழ்ந்த அறிஞர் சிலர் இந்தியாவிற்குத் தெற்கே ஆபிரிக்கா தொடக்கம் அவுஸ்திரேலியா வரை வரியடைந்திருந்து கடல் கொண்ட லெமுரிக் கண்டத்தில் இருந்துதான் அப்பகுதியைக் கடல்கொள்ளத் தமிழர் (திராவிடர்) வடக்கே தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்பர்.9 இக்கருத்து புவிச் சரிதவியற்படி பொருத்தமாகக் காணப்படினும் வரலாற்று ரீதியிற் கொள்ளமுடியாது. லெமுரிக் கண்டம் மறைந்து இந்து சமுத்திரத்தின் பெரும் பகுதி எற்படவும், வடக்கே இருந்த கடல் மறைந்து இமயமலை தோன்றவும் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் சென்றன.

சில ஆண்டுளுக்கு முன் ஹைனே கெல்டேர்ன் என்பவர் தென்னிந்தியாவில் வாழ்ந்த புதிய கற்கால மனிதரே திராவிடர் என்றார்.10 திராவிடர் தென்னிந்தியாவிலே நெடுங்காலமாக வாழ்ந்தவரெனினும் அவர்கள் தொன்றுதொட்டு இவ்விடத்திலேயே வாழ்ந்து வந்தன ரெனத் திடமாகக் கூறிவியலாது. வண. ஹெரஸ் என்பவர் சிந்து சமவெளி நாகரிக மக்களே திராவிடரென்பர்.11 இம்மக்கள் திராவிடரெனக் கொள்ளினும் ஹெரஸ் கூறுவது போன்று அவர்கள் செந்தமிழை உபயோகித்தனரெனக் கொள்ளமுடியாது. மேலும், ஹரப்பா கலாச்சாரத்திற்கும் 12 (சிந்து சமவெளி நாகரிகம்) சங்க காலத்திற்கும் இடையில் ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால இடைவெளி உண்டு. மேலும், இந்நீண்ட காலத்திலே மொழி வளர்ச்சி நன்கு ஏற்பட்டிருக்கலாம். சேர் ஜோன் மார்சால்13 பேராசியர் பசாம்14 போன்ற அறிஞரும் ஹரப்பா மக்கள் திராவிடரெனக் கருதி உள்ளனர். பசாம் என்பவர் ஹரப்பா மக்கள் வடமேற்கு இந்தியாவிலே தமது நாகாPகம் அழிவுற அங்கிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு பின்னர் தக்கணத்தின் மேற்குக் கரையொரமாக வந்து தென்னிந்தியாவிற்குள் புகுந்திருப்பர் என்பர்.15 மேலும், தற்போது ஸ்கண்டிநேவியாவில் உள்ள ஆசியக் கல்வி நிலையத்திலே ஹரப்பா எழுத்துப் பற்றி ஆராய்ந்து வரும் கலாநிதி அஸ்கோபர்போல, திரு. செப்போ கொஸ்கென்னீமி, திரு. சமோபர் போல, பேராசிரியர் பெந்தி அல்தோ ஆகிய வின்னிஸ் அறிஞர்16 மேற்குறிப்பிட்ட எழுத்து, அதிலுள்ள மொழி பற்றிச் சில முன்னோடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவர்களின் கருத்துப்படி ஹரப்பா மொழி ஆதித் திராவிட மொழியாம். தமது ஆராய்ச்சிக்கு உதவியாகக் கலாநிதி பன்னீர்ச்செல்வம் என்னும் தமிழறிஞரின் சேவையையும் பெற்றுள்ளனர். இவர்கள் ஹெரஸ் கூறிய வழிச் சென்றிருப்பினும், அவருடைய கருத்துக்கள் சிலவற்றைத் திருப்பிக் கூறினும், முடிவுகளிலே இரு சாராருக்கும் இடையிலே சில முக்கிய வேறுபாடுகள் உள. இவர்கள் மின் மூளைக் கருவி (கொம்பியூட்டர்) மூலமாராய்ந்து வருகின்றனர். இவர்களின் முன்னோடியான சில பிரசுரங்களை அறிஞர் சிலர் கண்டித்திருப்பினும், முழுமையான ஆராய்;;ச்சி முடிவுகள் இன்னும் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை வெளியான பின் திராவிட நாகரிகச் சிறப்பு மேலும் தெளிவாகலாம். இவர்களைப் போன்றே நொறொஸொவ் தலைமையிலான ரூசிய ஆராய்ச்சிக் குழுவினரும் இந்நாகரிகம் திராவிட நாகரிகமெனக் குறிப்பிட்டுள்ளனர்.16அ. ஆரியர் போன்று திராவிடரும் தாம் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்தனர் என எவ்விடத்திலாவது குறிப்பிட்டிலர். ஒருவேளை மிக நீண்ட கால இந்திய வாசத்தினாலே புலப்பெயர்ச்சி நினைவுகளை மறந்துவிட்டனர் போலும். மேலும் சுமேரிய மொழி திராவிட மொழியெனவும் ஒரு சாரார் கருதுவர்.17 திராவிடர் இந்தியாவுக்கு வெளியேதான் இருந்து வந்தனர் எனக் கொள்ளின் இந்தியாவுக்கு மேற்கே உள்ள நாடுகளையே நோக்கவேண்டியுள்ளது. இதற்கு ஆபுகானிஸ்தான், பாரசீகம், அராபியா, ஈராக் (மெசப்பத்தோமியா), சீரியா, பலஸ்தீனம், சின்னாசியா, ஆர்மேனியா முதலிய மேற்காசிய நாடுகளில் உள்ள பழைய கால இடம்பெயர்கள், தொல்பொருட்கள், மொழி, இனம், கலாச்சாரம் முதலியவற்றை உற்று நோக்குவது அவசியமாம்.

முதலில் இடப்பெயர்களைக் குறிப்பிடலாம்.18 ‘ஆறு’ என்னும் பதம் சில இடப்பெயர், ஆற்றுப் பெயர்களிலே காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாகக் கர்மன் என்னும் நகரத்தின் தென்மேற்கிலே ‘ஆறு’ என்பது ஓர் ஆற்றின் ஊற்று முகத்தினைக் குறிப்பதாம். ‘தலர்’ ஆபுகானிஸ்தானுக்கு அருகில் உள்ள இரு குன்றுகளைக் குறிப்பதாம். ‘பர்வார்’ ‘சின்னர்’ முதலிய பெயருள்ள ஆறு, சிற்றாறு, ஆபுகானிஸ்தானில் உள்ளன. திராவிட மொழிகளிலே வரும் விகுதியொன்றான ‘ஆர்’ என்பது யூப்பிரற்றீஸ், ரைக்கிறீஸ் ஆறுகளின் சமவெளிகளில் உள்ள இடப்பெயர், ஆற்றுப் பெயர்களிலே வருகின்றது. இவ்விரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதி ‘சினார்’ எனப்படும். இவ்விடம் கிறிஸ்தவ வேதத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஊத்து’ எனும் திராவிடச் சொல் ‘அரக்குத்து’ என்னும் ஆற்றுப் பெயரிலே காணப்படுகின்றதுபோலும். ‘மலை’ எனும் சொல் பல குன்றுகள், மலைகளின் பெயர்களில் வருகின்றது. உதாரணமாக ‘ரஸ்மலான்’ என்பது பலுக்கிஸ்தானிலுள்ள சிகரமொன்றின் பெயராம். லூறிஸ்தானில், மலஜன் எனும் குன்று உள்ளது. மேலும், திராவிடச் சொல்லான ;கஸ்’ என்பது அமுர்தர்யவிற்கு அண்மையில் உள்ள ‘கல் அதரி’ லும் பலுக்கிஸ்தானில் உள்ள ‘கலக்’ என்பதிலும் காணபடுகின்றது. ‘உர்’ என்பது கிராமம், நகரம், தேசம் ஆகியவற்றின் பெயர்களில் உள்ளது. எடுத்துக்காட்டாக, கெட்றோசியாவிலுள்ள ‘பம்புர்’ பபிலோனியாவிலுள்ள ‘நிரப்புர்’ ‘உரு’ முதலியவற்றில் காணலாம். ‘உர்’ என்பதே சுமேரிய நகரங்களில் ஒன்றாகும். சுமேரியாவிலே முற்காலத்தில் ஆண்ட ஒரு மன்னனின் பெயர் சார்கோன் என்பதாம். ‘சின்னர’ பாரசீகத்தில் உள்ள சிறு கோட்டையொன்றின் பெயராம்.

மானிடவியல் அறிஞர் திராவிடர் மத்திய தரைக்கடற் பிரதேச இனத்தவர் என்பர். மத்தித் தரைக்கடற் பிரதேச இனத்தவரை மூவகையாகக் குறிப்பிடலாம். 19 இவர்கள் யாவரும் நீண்ட கழுத்தினர். முதல்வகையினரை ஆதி மத்தித் தரைக்கடற் பிரதேசத்தவர் என்பர். இவர்கள் நடுத்தர உயரமும், கறுத்த நிறமும், சிறுத்த உடலும் பொருந்தியவர்கள். பெரும்பாலும் கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகள் பேசப்படும் பிரதேசங்களில் இன்று வாழுகின்றனர். இரண்டாம் வகையினரை உண்மையான மத்தித்தரைக் கடற் பிரதேச இனத்தவர் என்பர். இவர்கள் முன்வகையிரிலும் பார்க்க உயரமும் வெண்ணிறமும் உடையவர்கள்: ஆரியர் வருமுன் வட இந்தியாவிலே வாழ்ந்த நாகரிகமுள்ள மக்களாவர். அங்கு இந்து கலாச்சராம் உருவாக நன்கு துணையுரிந்தவர்கள் இவர்களேயாம். மூன்றாம் வகையினர் நீண்ட மூக்கும், வெண்ணிறமும் உரையவர். இவர்களைக் கீழ்நாட்டினத்தவரெனவும் கூறுவர். இவர்கள் பஞ்சாப், சிந்து, ராஜ்புத்தானம், உத்தர பிரதேசத்தில் மேற்குப் பகுதி முதலியவற்றிலும் பிற இடங்களிலும் காணப்படுகின்றனர். இவர்களுடன் ஆதி-ஒஸ்ரலோயிட், ஆர்மனோயிட் போன்ற பிற இனத்தவர்களின் கலப்புகளும் நன்கு ஏற்பட்டுவிட்டன.

சின்னாசியாவில் இந்து ஐரோப்பியருக்கு முன் வாழ்ந்த லிசியன்ஸ் தம்மைத் ‘திரிம்மலி’ என அழைத்தனர். 20 கிறிற்தீவிலே இந்து ஐரோப்பியருக்கு முன் வாழ்ந்த ஆசிய மக்கள் ‘தேர்மலி’ என அழைக்கப்பட்டதாகக் கிரேக்க ஆசிரியரான ஹெரொடற்றஸ் கூறியுள்ளார். இந்தியாவுக்கு வந்த ஆதித் திராவிடர் மத்தித்தரைக் கடலின் கிழக்கில் உள்ள பிரதேசங்களிலிருந்து வந்திருப்பர். அவர்களின் ஒரு சாராராவது தமது தேசிய அல்லது ஜனக்குழுப் பெயரான தேர்மலி-திரிம்மலி- திரமிழ- தமிழ் எனும் பதத்தையும் கொண்டு வந்திருப்பர் எனவும் கொள்ளலாம். கலாநிதி கால்டுவெல் சுசிய, திராவிட மொழிகளின் அமைப்பிற் காணப்படும் ஒற்றுமை அம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 21 மேலும், கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும், உறாலிய மொழிகளுக்கும், உறாலிய மொழிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கலாமெனக் கூறியுள்ளமையினை ஸ்கிரேடர், பரோ 22 அன்ட்றனோவ் 23 ஆகியோரும், அஸ்கோ பர்போல முதலிய வின்னிஸ் அறிஞரும் 24 வற்புறுத்தி உள்ளனர். பேராசிரியர் கார்ல்மெங்கெஸ் அல்தாய் மொழி, திராவிடமொழித் தொடர்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.25 மேலும், கோர்டன் சைல்ட், எச். டி. சங்காலியா போன்ற அறிஞர் வின்னோ-உக்ரிய, திராவிட மொழித் தொடர்புகளுக்குத் திடமான சான்றுகளிதுவரை கிடைக்காவிடினும், அத்தொடர்பு ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்ற வகையிலே குறிப்பிட்டுள்ளனர்.26 மேற்காசியாவில் உள்ள ஹ{ரியன், கஸ்ஸைட் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்குமிடையில் ஒற்றுமை காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. 27 எலமிதிய மொழிக்கும் பிராகூயி மொழிக்கும் தொடர்பு உளதாம்.28

மேற்காசிய நாடுகளிலே முற்காலத்திலே தாய்வழி உரிமைச் சமூக அமைப்பு நிலவிற்று. எடுத்துக்காட்டாக, எலமிதியர் மத்தியிலே நிலவிற்று.29 திராவிட சமூகத்திலும் இத்தகைய முறை நிலவியது. இன்றும் திராவிட இந்தியாவில் நிலவுகின்றது. நாக வழிபாடு, லிங்க வழிபாடு மேற்காசிய நாடுகள் பலவற்றிலே நிலவின. ஆதிகால உலகின் பல இடங்களிலே லிங்க வணக்கம் நிலவிற்று. இன்றும் இந்தியாவிலே இவ்விரு வழிபாடுகளும் இந்து சமயத்திலே நிலவி வருகின்றன. லிங்க வழிபாடு ஹரப்பா கலாசாரத்திலே இடம் பெற்றிருந்தது. ஆனால், இருக்கு வேதகால ஆரியர் லிங்க (சிஷ்ண தேவ) வழிபாட்டினை நன்கு கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 30 அம்மன் வழிபாடு மேற்காசியாவிலே முற்காலத்திலே சிறப்புற்றது. இந்தியாவிலே, ஹரப்பா கலாச்சாரத்திலிடம் பெற்றது. இன்றும் இந்தியாவிலே முக்கியமாகத் தென்னிந்தியாவிலே நிலவுகின்றது. சிவன், சத்தி போன்ற ஆண், பெண் தெய்வங்கள் மேற்காசியாவிலே முற்காலத்திலே வணங்கப்பட்டன. லிசியரின் சாசதனங்களிலே வரும் ‘திர்க்கஸ்’ என்னும் தெய்வப் பெயர் துர்க்கை எனும் பதத்தினைப் போன்றிருக்கிறது. 31 பாரசீகப் பெண் தெய்வமான இன்னிமி-இஸ்தர், எகிப்திய இஸ்தர்-அஸ்ரட் முதலிய பெண் தெய்வங்களைக் குறிப்பிடலாம். இஸ்தர்-அஸ்ரட்டின் ஆண் தெய்வமான ‘தெசுப்’ குறிப்பிடத்தக்கவர். இவர் இடிமுழக்கத் தெய்வம். எருது வாகனமும், முத்தலைச் சூலமும் கொண்டவர். கப்படோசியாவிலே வணங்கப்பட்ட. ‘மா’ எனும் முக்கியமான பெண் தெய்வம் குறிப்பிடத்தக்கவர்: போகஸ்கோயிலுள்ள சிற்பங்களிலே பெண் சிங்கம் அல்லது புலிமேல் வீற்றிருக்கிறார். இவரோடுள்ள இளமையான ஆண் தெய்வத்திடம் கோடரியும், தடியுமுள்ளன. 32 இவ்விரு தெய்வங்களிலே அம்மன், சிவனிடம் காணப்படும் சில பிரதான அம்சங்கள் உள்ளன.33 மேலும் ‘மா’ எனும் பதம் அம்மனைக் குறிக்கும் ‘உமா’ எனும் பதத்தினை நினைவூட்டுகின்றது.34 மெசப்பத்தோமியாவிலே மலைப் பெண் எனும் பெயருடன் அம்மன் வணங்கினர். உர் நகரத்தில் உள்ள சந்திரத் தெய்வத்துடன் அவருக்கும் ஆண்டுதோறும் நடைபெற்ற திருமண விழா தென்னிந்தியாவிலே உமையம்மை யாருக்கும் பல வடிவங்களிலே நடைபெறும் திருக்கல்யாணத் திருவிழாவினை நினைவூட்டுகிறது. 35 சுமேரியரின் கோவிலமைப்பு, கோவில் ஒழுங்கு, பூசை முறைகள், திருவமுது படைத்தல் முதலியன தென்னிந்தியக் கோவில்களை நினைவூட்டுகின்றன. சுமேரியக் கோவில்களில் நடைபெற்ற சந்திர வணக்கம் குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் சந்திர வணக்கம் நிலவி வந்துள்ளது. இளங்கோவடிகள் ‘திங்களைப் போற்றுதும்’ என்று சிலப்பதிகாரத்தினைத் தொடங்குகிறார். 36 ஆதி மக்களிடையிலே நிலவிய சூரிய, பூமி வணக்கமே காலப் போக்கிலே ஆண், பெண் தெய்வ வணக்கமாக, சிவன், சக்தி வணக்கமாக மலர்ந்திருக்கலாம். சைவர்களின் மூல மந்திரத்திலே வரும் ‘சிவ சூரியனுக்கு வணக்கம்’ என்பது கவனித் தற்பாலது. தென்னிந்தியக் கோவில்களில் இன்றும் அருகி நிலவி வரும் ‘தேவரடியார் முறை’ சுமேரியாவிலும் நிலவிற்று. தென்னிந்தியக் கோவில்களிலே இன்று தெய்வத்திற்கு நடைபெற்றுவரும் ‘ராஜோபசாரம்’ சுமேரியாவிலே அரசருக்குச் செய்த உபசாரங்களை நினைவூட்டுகின்றது. தேவாலயத்தினைக் குறிக்கும் கோயில் என்னும் தமிழ்ச் சொல்லும், பிராசாதம் எனும் வட சொல்லும் அரச மாளிகையையும் குறிப்பன. கோவில் வழிபாடு இருக்குவேத காலத்திலே நிலவியதாக தெரியவில்லை.

தென்னிந்தியாவிற் கிடைத்துள்ள வர்ணம் தீட்டிய மட்பாண்டங்கள் பல இரானிலுள்ள ரேப்கிசாரிற் கிடைத்துள்ளனவற்றினை ஒத்துள்ளன. மலையாள தேசத்திலே எகிப்திய வெண்சலவைக் கற்சாடிகள் (யுடயடியளவநச எயளநள) கிடைத்துள்ளன. காலுள்ள அல்லது இல்லாத சுட்ட மண், கற்பிணப் பெட்டிகள் சீரியாவிலுள்ளவற்றினைப் போன்றன. இறந்தோரை அடக்கம் செய்யும் முறையிலும் ஒருமைப்பாடு ஓரளவாவது காணப்படுகின்றது. 37 மேலும், தென்னிந்தியாவிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் திராவிட நாகரிகச் சார்பானவை.38 இச்சின்னங்கள் 13-ம் வடஅட்சரேகைக்குத் தெற்கே பெருமளவு காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மைசூர் மாநிலத்திலுள்ள பிரமகிரி, சந்திரவல்லி முதலிய இடங்களிலும், தமிழ் நாட்டிலுள்ள செங்கற்பட்டு மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், புதுக் கோட்டை முதலிய இடங்களிலும், கேரளத்திலுள்ள கொச்சி, போர்க்களம் முதலிய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இறந்தோருடைய ஈமச் சடங்குகள் சம்பந்தமானவை. இச்சின்னங்களிலே, மனித எலும்புக்கூடுகள், சாம்பல் ஆகியனவும், பொன், இரும்பு, வெண்கலம் முதலிய உலோகப் பொருள்களும், குயவனின் சக்கரத்தினாலே வனையப்பட்ட கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்களும் இடம் பெற்றுள்ளன.

இறந்தோரை அடக்கம் செய்யப்பட்டிருக்கும் விதம், கல்லறைகளின் அமைப்பு முதலியனவற்றினை நோக்கும்போது இப் பண்பாட்டு மக்களின் ஒழுங்கு முறை, சமூக ஒழுங்கு திறம்பட நிலவியிருக்கலாம் என்பது பொதுவான ஊகமாம். இம்முயற்சியிலே சிற்பி, சிறு கருவித் தொழிலாளி, மத குருமார், குயவன் முதலிய பலரும் ஈடுபட்டிருந்தனர் எனலாம். செங்கற்பட்டுப் போன்ற இடங்களிலே குளங்கள், தடாகங்களுமிவற்றின் அயலின் உள்ளன. நெல் நன்கு விளைவிக்கப்பட்டது. நீர்ப்பாசனமும் நன்கு இடம் பெற்றிருக்கலாம். பிரிமகிரியில் மட்டும் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 36 அ. பெருந்தொகையான பொன் மணிகள், இரத்தினக் கற்கள் கிடைத்துள்ளன. எனவே, இம்மக்கள் செல்வச் செழிப்பும், திட்டவட்டமான ஒழுங்கு முறைகளும் கொண்டிருந்தனர் எனலாம். பழந்தமிழ் நூல்களிலே சித்திரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை இதுவென கே. ஆர். சிறிநிவாசன், எச்.டி. சஙடகாலியா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இப் பண்பாட்டு மக்கள் உயர்ந்த நாகரிகத்தவர்கள் என்பது தெளிவு. தற்போதைய ஆராய்ச்சி நிலையிலே இவை கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிந்தியனவாக வீலர் போன்றோராலே கொள்ளப்படினும் இப்பண்பாட்டு மக்கள் திராவிட மொழிகளைப் பேசினர் என்பதிலோர் ஐயமில்லை. இச் சின்னங்களுக்கும், தெற்கு, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகிய நாடுகளிலுள்ள பெருங் கற்பண்பாட்டுச் சின்னங்களுக்குமிடையிலே ஒற்றுமை காணப்படுகின்றது. 39 குறிப்பாக இச்சின்னங்களைச் சேர்ந்த கல்லறைகளுக்குச் சிறு துவாரமொன்று வடக்கு அல்லது கிழக்குப் பகுதியிலே காணப்படுகின்றது. ஆனால், காலவரையறையிலே பெரும் இடைவெளி உண்டு. தென்னிந்திய சின்னங்கள் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவை. மற்றயவை கி. மு. 1500க்கு முற்பட்டவையாம்.40 தென்னிந்தியாவிலுள்ள ஆதிச்ச நல்லூரிற் கிடைத்துள்ள தொல்பொருட்கள் குறிப்பிடத்தக்கவை. இங்கு பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களைவிட அவற்றிற்கு முற்பட்டனவும் கிடைத்துள்ளன. தென் இந்தியாவிலே, பிறவிடங்களிலிதுவரை கிடைக்காத வெண்கலப் பொருட்கள், பொன்னாலான மகுடங்கள், வாய்ச் செடில்கள் கிடைத்துள்ளன. இவை பலஸ்தீனம், சீரியா, சைப்பிறஸ் ஆகிய நாடுகளிலே சுமார் கி. மு. 1200 அளவினைச் சேர்ந்த சின்னங்களைப் போன்றவை. பலஸ்தீனாவிலே ஆதி இரும்புக் காலத்தைச் சேர்ந்த சொலமன் காலத்திய கல்லறைகளிலே கிடைத்த குறிப்பிடத்தக்க இரும்புச் சூலமொன்று ஆதிச்சநல்லூர் இரும்புச் சூலங்கள் ஒத்துள்ளது.41

ஆதிச்ச நல்லூர்ச் சின்னங்கள் மூலம் பழந் தமிழர் மத்தியிலே முருக வழிபாடு நன்கு நிலவியதை அறியலாம். அக்கடவுளுக்குப் பிரியமான வேலாயுதமும், சேவற் கொடியும் குறிப்பிடத்தக்கவை. இரும்புச் சூலங்கள் கொடியினடிப் பகுதிகளோடு வெண்கலத்தான சேவல்களும் கிடைத்துள்ளன.42 இன்றும் காவடி ஆடும் பக்தர்கள் வாய்ச்செடில்கள் தரிப்பதைக் காணலாம்.

நீலகிரியிலுள்ள கல்லறை மேடுகள், கற்குவியல்களிலேயுள்ள வெண்கலக் கிண்ணங்கள் நிம்றுத் (அசீரியா), வன் (ஆர்மேனியா) ஆகியவற்றிலுள்ளவற்றினை ஒத்துள்ளன.43 மேலும், இங்குள்ள வெண்கலச்சாடிகள், கிண்ணங்கள் உரிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொற்கிண்ணமொன்றினைப் போன்றுள. ஒரே மாதிரியான பிற தொல்பொருட் சின்னங்கள் இவ்விரு இடங்களிலும் காணப்படுகின்றன.44 என். லகோவரி என்னும் கங்கேரிய அறிஞர் பாஸ்க், கோக்கஸியன், திராவிடம் ஆகியவை ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்டுள்ளன என்பர்.45 இந்து ஐரோப்பியர் நடமாட்டம் ஏற்படுமுன் இவைகளுக்கிடையிலே மேற்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பாவிலே நெடுங்காலத் தொடர்புகள் இடையறாது நிலவியதாகக் கருதுவர்: திராவிடர் கி. மு. 4000 அளிவிலே மெசொப்பொத்தேமியாவிலிருந்து புலம்பெயர்ந்தனர் என்பர்.

மேலும், மிக அண்மைக்காலத்திலே கலாநிதி சபோநிஸ் கோவ என்ற ரூசிய ஆராய்ச்சியாளர், திராவிடர் மத்தித்தரைக் கடற் பிரதேசத்திலிருந்து வந்தனரெனவும், அவர்கள் கி. மு. 5000 அல்லது 6000 ஆண்டளவிலே, இரான், மெசொப்பொத்தேமியா அடங்கிய பரந்த இடத்திலே வாழ்ந்தனரெனவும், மொஹெஞ்சதாரோ நாகரிகம் அவர்களுடையதெனவும் குறிப்பிட்டுள்ளார். இவருடைய கருத்துப்படி, நீலகிரியிலே வாழும் தோடர்தான் மிகப் பழைமையான திராவிட நாகரிகத்தினைப் பிரதிபலிக்கின்றனர்: அவர்களுடைய தெய்வங்கள் சிலரின் பெயரும், கிரியைகள் (கோலங்கள்) சிலவும் சுமேரியாவிலே காணப்படுவனவற்றினை ஒத்துள்ளனவாம்: இராக்கிலுள்ள ஜனக் குழுக்கள் சிலவற்றின் குடிசைகள் தோடருடையவற்றினைப் போன்றுள.46 மானிட நூல், தொல்பொருளியல், மொழியியல் சான்றுகள் சிலவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஜே. ரி. கோர்ணேலியஸ் என்ற அறிஞர், “வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலே மத்தித் தரை கடற் பிரதேங்களிலே வாழ்ந்த இனத்தைச் சேர்ந்த லிபியரைப் போன்று திராவிடரும் வட ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருந்தனர்” என்பர்.46அ. “எகிப்தியரின் கோவிற்கலை, விவசாயப் பழக்க வழக்கங்கள். மரபுகள் முதலியன திராவிடருடையனவற்றைப் பெரிதம் ஒத்துள்ளன” எனச் சேர்ஜி குறிப்பிட்டுள்ளார்.46ஆ. “வட ஆபிரிக்கா, மத்தித்தரைக் கடலின் மேற்குக் கரையோரம், தென் மேற்கு ஆசியா, இரான், இந்தியா ஆகிய நாடுகள் புதிய கற்காலம் தொட்டு அசீரியர் காலம்வரை பெருநிலக் கலாச்சாரக் களஞ்சியமொன்றாக விளங்கின”. 46இ.

மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் இருவருடைய கருத்துக்களை முற்றாக ஏற்றுக்கொள்ளாவிடினும், அவற்றிலே சிலவற்றையாவது ஏற்றுக்கொள்ளலாம்;. இதுவரை கிடைத்துள்ள நம்பகமான பல்வேறு சான்றுகளைத் தொகுத்து நோக்கும்போது திராவிடர் பன்னெடுங் காலத்திற்கு முன் இந்தியாவுக்கு மேற்கேயுள்ள மேற்காசிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தனர் போலக் காணப்படுகின்றனர். எனவே, “திராவிட நாகரிகம், கலாச்சாரமும் அனட்டோலியா, ஆர்மேனியா, இரான் ஆகிய நாடுகளின் மேட்டு நிலங்களிலிருந்து பரவின” எனப் பேராசிரியர் கே. எ. நீலகண்ட சாஸ்திரி கூறுவது குறிப்பிடத்தக்கது.47 ஆரியரைப் போலவே, பற்பல நூற்றாண்டுகளிலே திராவிடரின் இந்தியப் புலப்பெயர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். இவர்களின் புலப்பெயர்ச்சி கடல் மார்க்கமாவும், தரை மார்க்கமாகவும் ஏற்பட்டிருக்கலாம். தரை வழியாக வந்தமைக்குப் பலுக்கிஸ் தானிலுள்ள பிராகூயி ஒரு சான்றாம். இதன் நிலையத்தினையும், பேசும் மக்களையும் கவனித்தல் அவசியம்.48

திராவிடர் இந்தியாவிலே ஆரியருக்கு முன் வந்தனரா அல்லது பின் வந்தனரா என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள். நிலவுகின்றன. எவ்வாறு வந்தாலும், இரு சாராரும் இந்தியாவுக்கு வெளியேயும் சந்தித்திருப்பர். பல இடங்களை ஒருவர் பின் ஒருவராகக் கடந்து சென்றிருப்பர். இதனாலும், ஒரேவிதமாகச் சில அம்சங்கள் இருவர் கலாச்சாரத்திலும் ஏற்பட்டிருக்கலாம். வொன்வியூரர் ஹைமன்டோர்வ் என்பவர், பெருங்கற் பண்பாட்டு மக்கள் திராவிடர் என்றும், இவர்கள் இப்பண்பாட்டுடன் சுமார் கி. மு. 500 அளவிலே தென்னிந்தியாவுக்கு வந்தனர் என்பர்.49 கலாநிதி கே. கே. பிள்ளை போன்றோர் ஹைமன்டோர்வின் கருத்துக்களைச் சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.50 இவர்களின் கருத்துப்படி ஆரியரும் திராவிடரும் முதன்முறையாகத் தக்கணத்திலே தான் சந்தித்தனர் என்பதாம். மேலும், ஹைமன்டோர்வின் கருத்திற்குத் தொல்பொருள், மொழி நூற் சான்றுகள் அரண் செய்வதாகத் தோன்றவில்லை, மேலும், இந்தியாவிலே குறிப்பாகத் திராவிட இந்தியாவிலே, முற்றான தொல்பொருளாராய்ச்சியின்றி முடிவான கருத்துக்களைக் கூறவியலாது.

மேலும், இதுவரை பெருங்கற் பண்பாட்டு மக்களின் எலும்புகள் நன்கு ஆராயப்பட்டில. இவ்வாராய்ச்சி மூலம் இவர்களை இனவாரியாக வகுக்கலாம். தக்கணத்தின் வடமேல் பகுதியிலே, தற்கால மஹாராஷ்டிரம், தென் குஜராத் ஆகியவற்றிலே பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் இதுவரை கிடைத்திலே, இத்தகைய சான்றின்றி இவ்வழியாகப் பரோடா இடைவெளியூடாக இம்மக்கள் வந்தனரென எவ்வாறு கொள்ளமுடியும்? தக்கணத்தின் கிழக்குப் பகுதியிலும் இச்சின்னங்கள் கிடைத்தில.

அண்மைக் காலத்திலே எச். டி. சங்காலியா, வெயர்சேவிஸ் ஆகிய தொல்பொருளறிஞரின் கண்டுபிடிப்புகள் இப்பிரச்சினைகளைப் பற்றி ஆய்வதற்கு துணைபுரிகின்றன. மார்ட்டிமர் வீலர் கருதியவாறு பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் கி. மு. மூன்றாம் நூற்hண்டிற்குப் பிற்பட்டன எனக் கூறமுடியாதென்றும் பெல்லாறி, பிஜப்பூர் மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற தொல்பொருளாராய்ச்சிப்படி, இக்கலாச்சாரம் கி. மு. 900 அளவில் இதற்கு முந்திய புதிய கற்கால நாகரிகத்துடன் தொடர்புற்றிருக்கலாம் எனவும் சங்காலியா குறிப்பிட்டுள்ளார். ஆனால், இக்கால வரையறையுறுதிப்படுத்த வேண்டுமெனவும், கிடைத்துள்ள சான்றுகளின் படி இப்பண்பாடு கி. மு. 700 அல்லது 900க்கு மேற்பட்ட தன்று எனவும் கூறியுள்ளார்.51

வெயர்சேவிஸ் பலுக்கிஸ்தானிலுள்ள கிழக்கு லஸ்பெலா என்னுமிடத்திலே கல்லறைகள் சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளார். இவை பொதுவாகக் கிழக்கு மேற்கானவை, மூன்று அடி உயரமுள்ள நேரான கற்பாளங்கள் கொண்டவை: சில கல்லறைகளிலே தொப்பிக் கல்லும் உண்டு. ஆனால், சிந்து, பலுக்கிஸ்தானிலுள்ள கல்லறைகள் அகழ்ந்து ஆராயப்பட்டில. இந்திய-இரானிய எல்லைப்புறப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலே பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் பல பரந்து காணப்படுவதாக, வெயர்சேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.52 ‘பெருங்கற் பண்பாட்டு மக்களின் எலும்புக்கூடுகளிலே மத்தித் தரைக்கடற் பிரதேசத்தவர், ஆதி-ஒஸ்ரலோயிட் மக்கள் ஆகியோரின் கலப்பினைக் காணலாம். இன்றைய திராவிட மொழி பேசும் மக்களிலே இவ்வியல்பு காணப்படுகின்றது. எனவே, இவர்களின் முன்னோர் தென்னிந்தியாவிற்கு இரும்பின் உபயோகத்தினைக் கொண்டுவந்தனர். வடஇந்தியாவிலே, இரும்பின் உபயோகம் புறம்பாக ஏற்பட்டது’ எனச் சங்காலியா குறிப்பிட்டுள்ளார்.53 பெருங்கற் பண்பாட்டு மக்கள் திராவிட மொழிகளைப் பேசினார்: இரும்பின் உபயோகத்தினை மேற்கொண்டிருந்தனர் என்பதிலே கருத்துவேறு பாடில்லை. இப்பண்பாட்டு மக்களே திராவிட மொழிகளைப் பேசிக்கொண்டு இரும்பின் உபயோகத்துடன் இந்தியாவுக்கு வந்தனர் என்பதே பிரதான பிரச்சினையாம்.

பெருங்கற் பண்பாட்டிற்கு முன்னரே தென்னிந்தியாவிலே, புதிய கற்கால நாகரிகம் கி. மு. 2500-900 வரை நன்னிலையிலே நிலவியதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளதாகச் சங்காலியா குறிப்பிட்டுள்ளார்.54 இதைத் தொடர்ந்து பெருங்கற் பண்பாடு பரவிற்று. புதிய கற்காலத்திலே திராவிடரும் வாழ்ந்தனர் என்று பொதுவாகக் கொள்ளலாம். இக்காலத்திய மனித எலும்புக் கூடுகளிலே தென்னிந்தியாவின் ஆதிக்குடிகள், இரான், மேற்கு ஆசிய மக்கள் ஆகியோர் வாழ்ந்ததற்குச் சான்றுண்டு.55

மேலும், பேராசிரியர் எச். டி. சங்காலியா என்பவர் ஆதித் திராவிடர் ஐரோப்பாவிலிருந்த மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்குத் தக்க சான்றுகளில்லையெனக் கோர்டன் சைல்ட் என்ற பிரசித்தி பெற்ற தொல்பொருளறிஞர் தமக்குப் பிரத்தியேகமாகக் கூறியதாகக் கூறியுள்ளார்.55அ. பெருங்கற் பண்பாட்டினைச் சேர்ந்த சாந்து உபயோகம், தாழி அடக்கம் முதலியன அதற்கு முற்பட்ட புதிய கற்கால நாகரிகங்களிலிருந்தன எனவும், பெருங்கற் பண்பாட்டினர் இவற்றினைத் திருத்தி முன்னேற்றமாக்கினர் எனவும், புதிய கற்கால மக்களே ஆதித் திராவிடராயிருப்பர் எனவும் கலாநிதி சங்காலியா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.55ஆ. இப் பிரச்சினையினை மானிட நூலாசிரியர், மொழி நூலாசிரியர், தொல்பொருளாராய்ச்சியாளர் ஆகியோர் வருங்காலத்திலே தெளிவாகத் தீர்க்க வேண்டுமெனவும் அவர் வற்புறுத்தியுள்ளார்.55இ.

பிறிட்ஜெற், றேமன்ட் அல்ச்சின் ஆகிய இரு அறிஞரின் கருத்துக்கள் சிலவகையிலே சங்காலியாவின் கருத்துக்களை நினைவூட்டுவன. வடஇந்தியாவிற் போலவே, தீபகற்ப இந்தியாவிலும், ஏறக்குறையச் சமகாலத்திலே, கி. மு. 1050-950 வரையில், இரும்பின் உபயோகம் பரவியிருக்கலாம். இதுவரை கிடைத்துள்ள பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் தக்கணத்தின் வடபாலுள்ள, நக்பூருக்குச் சமீபத்திலுள்ளஜுனபனி தொடக்கம் தெற்கே தமிழகத்திலுள்ள ஆதிச்ச நல்லூர் வரையுள்ள பரந்த நிலப்பகுதியிலே காணப்படகின்றனவாம். இப்பண்பாட்டின் சில அம்சங்கள் மத்திய ஆசியா, இரான், கோக்கஸஸ், அராபியா போன்ற இடங்களிலிருந்தும், சில முன்னைய புதிய கற்கால நாகரிகத்திலிருந்தும் பெறப்பட்டனவாயிருக்கலாம்.55ஈ. மேற்குறிப்பிட்டோரின் ஆராய்ச்சிப்படி தக்கணத்தின் வடபகுதியிலும் மேற்குறிப்பிட்ட சின்னங்கள் ஓரளவாவது காணப்படுவது குறிப்பிடற்பாலது.

Link to comment
Share on other sites

வரலாற்றிலே பல இனங்கள் தமது தாய் மொழிகளைக் கைவிட்டுப் பிற மொழிகளை ஏற்றுள்ளனர். இந்து-ஆரிய, திராவிட மொழிகளிலே விற்பன்னரான பேராசிரியர் ரி. பரோ என்பவர் ஆரியரின் ஆதி ஏடான இருக்கு வேதத்திலே, சுமார் 25 திராவிடச் சொற்கள் இடம் பெற்றுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார்.56 எடுத்துக்காட்டாக, உலூகல, கடுக, குண்ட, கல, தண்ட, பிண்ட, பல, மயூர முதலியவற்றினைக் குறிப்பிடலாம். ஆகவே இச் சொற்கள் இருக்கு வேதப்பாடல்கள் பெரும்பாலுமியற்றப்பட்ட பஞ்சாப் பகுதியிலே ஆரியர், திராவிடர் சந்திப்பின்போது கலப்புற்றிருக்கலாம். மேலும், இவ் அறிஞர் கருத்துப்படி வேத காலத்தின் பிற்பகுதி தொடக்கம் பிற்கால வடமொழியின் (ஊடயளளiஉயட ளுயளெமசவை) முற்காலப் பகுதி வரையிலேதான் ஆரியரும், திராவிடரும் கூடுதலாகப் பரஸ்பரம் தொடர்புற்றனர். இத்தொடர்பு தென்னிந்தியாவிலன்றி வட இந்தியாவிலேயே ஏற்பட்டது என்பர்.57 மேலும், மிகப் பழைய காலத்திலே ஆரியர் வருமுன் திராவிட மொழிகள் வட இந்தியாவிலே பல இடங்களில் நிலவியதற்கு மல்டோ, குருக் மொழிகள் போன்றவை வடகிழக்கு, மத்திய இந்தியப் பகுதிகளிலே நிலவுவதும், மேற் குறிப்பிட்ட கருத்தும் சான்றுகளாம் என்பர்.58 மேலும், இருக்கு வேதத்திலும், பிற்கால வடமொழி நூல்களிலும் திராவிடச் சொற்கள் தொடர்ந்து இடம் பெற்றுள்ளமையினை நோக்கும்போது இன்று இந்து-ஆரிய மொழிகள் நிலவும் வடஇந்தியா, மேற்கு இந்தியாவின் பெரும் பகுதியிலே முற்காலத்திலே திராவிட மொழிகள் நிலவின எனக் கொள்ளுதல் அவசியமாகின்றது.59 சிறிய அளவிலே திராவிடமொழி (கள்) நிலவியிருப்பின் மேற்குறிப்பிட்ட அளவிலே பெருந்தாக்கம் வடமொழியிலேற்பட்டிராது.60

ஆகவே ஆரியர் வருமுன்னரே திராவிடர் இந்தியாவிற்கு வந்திருப்பர். முன்னேற்றமான உலோகக் (இரும்பு) கருவிகள், குதிரை முதலியவற்றினைக்கொண்ட ஆரியரின் வருகையினைத் தொடர்ந்து, திராவிடருக்கும் அவர்களுக்குமிடையிலே போராட்டங்கள் இனம், கலாச்சாரம் முதலியவற்றினடிப்படையிலே நடைபெற்றிக்கலாம். இவற்றின் எதிரொலிகள் இருக்குவேதத்திற் காணப்படுவதாக அறிஞர் பலர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், வேறுபல நாடுகளிலே இரு வேறுபட்ட நாகரிகமுள்ள மக்களிடையிலேற் பட்ட போராட்டங்கள் வெற்றியாளருக்கும் வெல்லப்பட்டோருக்குமிடையிலே நடைபெற்றிருக்கலாம். இவற்றினைத் தொடர்ந்து இணக்கமுறைகள், நாகரிகச் சங்கமங்கள் அல்லது நெருங்கிய தொடர்புகள் ஏற்படுவது போன்று இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கலாம். ஒருசாரார் வந்த ஆரியரோடு ஒன்றுபடவும், வேறொருசாரார் புலம்பெயர்ந்து தெற்கே வரவும், இன்னொருசாரார் இயற்கையரணுள்ள பகுதிகளைத் தேடிச் சென்று நாகரிக முன்னேற்றமின்றி வாழ்ந்துவந்தனர் எனலாம். மேலும், திராவிடரின் புலப்பெயர்ச்சி அலையலையாக ஏற்பட்டபோது பல தரப்பட்ட நாகரிகமுள்ள மக்களும் வந்திருப்பர். இவர்களில் ஒரு சாரார் ஏற்கனவே தெற்கேயும் வந்திருப்பர். அவ்வாறாகில், வடஇந்தியாவில் வாழ்ந்த திராவிடர்தான் ஆரியரை முதலிற் சந்தித்திருப்பர். அவர்களில் ஒருசாரார் புலம் பெயர்ந்து மத்திய இந்தியப் பகுதிகளுக்குச் சென்றிருப்பர். மேலும், தக்கணத்தில் வாழ்ந்த திராவிடரில் ஒருசாரார் மேலான நாகரிக அலைகள் வீச இயற்கை அரண்களில் ஒதுங்கியிருப்பர் எனவும் கொள்ள இடமுண்டு.

இந்தியாவின் புவியியலமைப்பும் மேற்குறிப்பிட்ட கருத்திற்குச் சான்றாகவுளதெனலாம். புவியியலறிஞர் ஸ்பேற்றினைப் பின்பற்றி சுப்பராவ் எனும் தொல்பொருளறிஞர் இந்தியா-பாக்கிஸ்தானை (i) மையப்பகுதிகள் (ரேஉடநயச சநபழைளெ) (ii) ஓரளவு தனிப்படுத்தப்பட்ட பகுதிகள் (யசநயள ழக சநடயவiஎந ளைழடயவழைn) (iii) தனிப்படுத்தப்பட்ட பகுதிகள் (யசநயள ழக ளைழடயவழைn) (iஎ) அண்மைக் காலத்தில் பிரவேசித்த பகுதிகள் (pநநெவசயவநன in சநஉநவெ வiஅநள) என நான்கு பிரிவாக வகுத்துள்ளார்.61 இவற்றுள், நாலாவது பிரிவு மூன்றாவதிலடங்கும். இம்மூன்றாம் பிரிவிலே, வட இந்தியாவிலேயுள்ள ராஜஸ்தானம், மத்திய இந்தியப் பகுதிகள், வட கிழக்கு எல்லைப் பகுதி ஆகியனவும், தக்கணத்திலேயுள்ள மேற்குத் தொடர்மலையும் கிழக்குத் தொடர்மலையின் நடுப்பகுதி, வட பகுதியுமடங்குவன. இவற்றுள், வட கிழக்கும், ராஜஸ்தானமும்62 தவிர்ந்த பிறவிடங்களிலே பொதுவாகப் பின்தங்கிய நிலையிலுள்ள திராவிட மொழிகள் பலவும், ஆதி ஒஸ்ரலோயிட் மொழிகளும்63 நிலவுவது கவனிக்கற் பாலது. நிலவுவது கவனிக்கற் பாலது. இவ்விடங்கள் மலை, மலைசார்ந்த நிலம், அடர்ந்த காடுகள் கொண்ட இயற்மைப் பாதுகாப்புப் பொருந்தியவை. ஆரியரின் தாக்கத்தாலோ, அல்லது மேலான நாகரிக அலைவீசலாலோ பாதிக்கப்பட்டோரில் ஒருசாரார் இவர்களாயிருக்கலாம். மேலும், தமிழகத்தின் மேற்குப் பகுதியிலிருந்த சேரநாட்டிலே மலையாளமென்னும் கிளைமொழி ............. இயற்கையெவ்வளவு உதவிற்று என்பதையும் .......... கலாம்.64

மேலும், வட இந்தியாவிலுள்ள இடப்பெயர்களிலே திராவிடச் சொற்கள் காணப்படுகின்றனவாம்.65 இவ்விடயம் நன்கு ஆராயப்பட வேண்டியது தீபகற்ப இந்தியாவிலும் தொல்பொருளாதாரய்ச்சி முக்கியமான விடங்களிலாவது போதிய அளவு நடைபெறவில்லை. வடஇந்தியாவிலும், ராஜஸ்தானம் போன்ற இயற்கைப் பாதுகாப்புள்ள விடங்கள் நன்கு ஆராயப்பட வேண்டியவை. மேலும், ஹரப்பா கலாச்சாரம் திராவிடர் உடையதென வின்னிஸ் அறிஞர் வற்புறுத்தி உள்ளமை குறிப்பிடத் தக்கது. இது முடிவான கருத்தாயின் திராவிடர் ஆரியருக்கு முன் வந்தனர் என்னும் கருத்து நன்கு நிலைபெறும். மேலும், தமிழ்மொழி, தமிழிலக்கியம் ஆகியவற்றின் வரலாறும் திராவிடர் மிகப் பழைய காலத்திலே தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்ற கருத்தினை வலியுறுத்துவன. “திராவிட மொழிகள் தொடர்ந்து நிலவுவதே ஹைமன்டோவின் கருத்துக்குத்தக்க பதிலாகும்” எனச் சுப்பராவ் எனும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார்66 பொதுவாக, நோக்கும் போது, பல அறிஞர் ஆரியருக்கு முன் திராவிடர் வந்திருப்பர் என்று கருதுகின்றனர்.67 இந்து ஆரியர் இந்தியாவிற்குச் சுமார் கி. மு. 2000-1500 அளவிலே வந்தனரெனக் கொள்ளின் திராவிடர் அதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாக புலம் பெயர்ந்து வந்திருப்பர் எனலாம். மேலும், வடஇந்தியா ஆரியமயமானது போன்று விந்தியமலைக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதி ஆரியமயமாகவில்லை. போராட்டங்கள் இடையிடையே நடைபெற்றாலும், பெரும்பாலும், ஆரியக்குடியேற்றங்கள், நாகரிகக் கருத்துக்கள் பரவுதல் மூலமாகவே தென்னகம் சமாதான முறையில் ஆரியமயமாயிற்று. இப்பரந்த பிரதேசத்திலே, பெரும்பாலும், நிலவிய திராவிட கலாச்சாரத்தின் அம்சங்கள் பலவற்றை ஆரியர் ஏற்று ஆரியப் போர்வையிட்டனர். புதிய போர்வையிலே, திராவிடத் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், அரசர்கள் காணப்படினும் அவற்றின் உண்மையான இயல்பினை எளிதிற் புரிந்து கொள்ளலாம். ஆரிய வருணாஸ்ரம தருமம் திராவிட இந்தியாவிலும் ஏற்பட்டது. திராவிடக் கோவிற்கலை, வழிபாட்டுமுறைகள் ஆகமங்களிலே வெளிப்படலாயின.

திராவிடர் காலப்போக்கிலே ஆரியரோடு பிறரோடும் .................. சேர்ந்துவிட்டாலும் அவர்களின் தனிப்பண்புகள் இன்னும் திராவிட மொழிகள் நிலவாக பிற இந்தியப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆரிய மொழிகளின் செல்வாக்குத் திராவிட மொழிகளிற் காணப்படுவது போன்று திராவிடச் செல்வாக்கு ஆரிய மொழிகளிலும் காணப்படுகின்றது

Link to comment
Share on other sites

ஆதித்திராவிடமும் அதிலேற்பட்ட கிளைகளும்.

இந்தியாவிற்கு வந்த திராவிடர் தொடக்கத்திலே ஒரு மொழியினைப் பேசியிருந்தாலும் சில வேறுபாடுகள் இடத்திற்கிடம் நிலவியிருந்திருக்கலாம். மொழியடிப்படையிலே ஒரே தன்மையிருந்தாலுமிவர்கள் ஒரே இனத்தவர்களோ அல்லது ஒரே விதமான, தரமான நாகரிகமுள்ளவராயிருந்தனரோ எனத் திடமாகக் கூறமுடியாது. இவர்கள் இந்தியாவின் பல இடங்களுக்கும் புலம் பெயர்ந்து குடியேற்றங்களேற்படுத்த ஆதி ஒஸ்ரலோயிட் போன்ற பிற இனத்தவர்களின் தொடர்புகள் ஏற்பட்டிருப்பன. புவியியற் பிரதேச அடிப்படையிலே, சூழ்நிலைக்கேற்பத் தனித்தனியான மொழிகளும், கிளை மொழிகளும் ஆதித் திராவிடத்திலிருந்து முகிழ்த்தன எனலாம் இந்தியாவிற் பரவிய இந்தோ-ஆரிய மொழியிலிருந்து பிற்காலத்திலே வடஇந்தியாவின் பிரதேச மொழிகள், தக்கணத்தின் வடபகுதியில் நிலவும் மராத்தி, ஒரிய என்பன தோன்றின போல ஆதித் திராவிடத்திலிருந்து பிற்காலத் திராவிட மொழிகள் கிளைத்தன எனலாம். ஆனால், எல்லாம் ஒரே நேரத்திற் கிளைத்திரா. தேசம், காலம், மக்களின் சூழ்நிலைக்கேற்பப் பலவாறு மாற்றங்கள், வளர்ச்சிகள், இம்மொழிகளிலோ, கிளைமொழிகளிலோ தோன்றியிருக்கலாம். ஆதித் திராவிடத்திலே வட திராவிடம், மத்திய திராவிடம், தென் திராவிடம் ஆகிய பிரிவுகள் இருந்தன எனலாம். 68 முன்னைய இரண்டும் பின்வந்த இந்து ஆரிய நாகரிகத்தினாலே நன்கு பாதிப்புற்றன. புவியியற் காரணியினாலும், பிறவற்றாலும் தென் திராவிடம் பெரிதும் பாதிப்புற்றிலது எனலாம்.

“ஆதித் திராவிடத்திலிருந்து தென் திராவிடம் கி. மு. 15 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே பிரிந்திருக்கலாம். தென் திராவிடத்திலிருந்து தெலுங்கு மொழியும் அதன் சார்பான கிளைமொழிகளும் கி. மு. 9-6 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையிலே பிரிந்திருக்கலாம். கி. மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தென் திராவிடம் பெரும்பாலும் ஒரே தன்மையுள்ள தாயிருந்திருக்கலாம். இதிலே ஆதிக் கன்னடம், ஆதித் தமிழ் ஆகிய இரு குறிப்பிடத்தக்க கிளை மொழிகளிலிருந்திருக்கலாம். ஆதிக் கன்னடத்திலிருந்து பிற்காலக் கன்னடமும் அதன் சார்புக் கிளைமொழிகளான படகு. கோடகு முதலியனவும் உருவாகின. ஆதித் தமிழிலிருந்து பழந் தமிழும் அதன் சார்பான தோட, மலையாளம் முதலியன கிளைமொழிகளும் உருவாகின. கி. மு. 4-3 ஆம் நூற்றாண்டளவிலே ஆதிக் கன்னடமும், ஆதித் தமிழும் முற்றாகப் பிரிந்துவிட்டன. 69 எனப் பேராசிரியர் கமில் ஸ்வலபில் தென் திராவிட மொழிகளின் வரலாறு பற்றிக் குறிப்பிட்டுள்ளமை கவனித்தற்பாலது.

இக்கூற்றினைத் திடமான சான்றுகளின்றி முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. தென் திராவிட மொழிகளிலே ஆக வடக்கே நிலவுவது தெலுங்கு மொழியாம் தெலுங்கு மொழி பேசும் ஆந்திரரைப்பற்றி மிகப் பழைய பிராமணங்களிலென்றான ஐதரேய பிராமணத்திலே (கி. மு. 1000 அளவில்) குறிப்பு வருகின்றது. ஆரியர் தெற்கே வந்த போது முதற் சந்தித்த தென் திராவிடர் இவர்களெனலாம். ஆந்திரர் அக்காலத்திலே தற்கால ஆந்திர மாநிலத்திற்கு வடக்கேயும் வாழ்ந்திருப்பர். எனவே, ஆரியர் நாகரிகத்தின் முதற் தாக்கம் தென் திராவிட மொழிகளிலே தெலுங்கிலேற்பட்டது எனலாம் இதன்பின் கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய பிற பிரதான திராவிட மொழிகளிலேற்பட்டிருக்கலாம். ஆதித் தமிழ், ஆதிக் கன்னடம் என்பன கி. மு. 3-ஆம் நூற்றாண்டளவிலே இறுதியாகப் பிரிந்தன என்ற கருத்தினை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகம், தமிழ் மொழி, தமிழலக்கியம் பற்றிய வரலாறு இம்முடிபினை நன்கு உறுதிப் படுத்துவதாகத் தெரியவில்லை.

திராவிட மொழிகளிலே மிகப் பழமையான இலக்கிய, இலக்கண மரபும், வளமும் கொண்டது தமிழே. காலத்தால் முந்திய இலக்கிய நூல்களான சங்க நூல்கள் பொதுவாகக் கி. மு. முதல் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்தன,70 என அறிஞரில ஒருசாரார் கொள்ளினும் அவற்றுட்சிலவாவது கிறிஸ்துவிற்கு முன்னரும் இரண்டு அல்லது குறைந்தது முதல் நூற்றாண்டினையாவது சேர்ந்தனவாயிருக்கலாம். இந்நூல்கள் (எட்டுத்தொகை, பத்துப் பாட்டு) யாவும் திடீரென மலர்ச்சி பெற்ற மரபினைச் சேர்ந்தன எனக்கொள்ள முடியாதிருக்கின்றது. பல நூற்றாண்டுகளாக வளர்ந்து பரிணமித்த இலக்கிய மரபினைக் கொண்டுள்ளன.71 இம்மரபு தோன்றிவளர மேலும் சில நூற்றாண்டுகள் சென்றிருப்பன. இக்கருத்திற்குத் தொல்காப்பியமும் சான்றுபகருகின்றது. தொல்காப்பியம் சங்க காலத்திற்குப் பிற்பட்ட நூலென ஒருசாரார் கருதினும், அந்நூலிலே தற்போது கிடைத்துள்ள சங்க நூல்களிற் காணப்படாத முற்பட்ட கால வழக்குகளும், மரபும் இடம் பெற்றிருப்பதை எளிதிலே மறுக்க முடியாது. தமிழக வரலாறு, தொல்லெழுத்தியல் ஆராய்ந்த பேராசிரியர் ரி. வி. மகாலிங்கம் தொல்காப்பியம் கி. மு. முதலாயிரமாண்டின் முற்பாதிக் காலத்தது எனக் கொள்ளாவிடினும், பிற்பாதிக் காலத்தது எனக் கொள்ளலாம். என்பர் 72 “இலக்கியம் கண்ட தற்கே இலக்கணம்” ஆகையாலே, தொல்காப்பியத்திற்கு முன்னரே அதிற் காணப்படும், சங்க நூல்களிற் காணப்படாத விதிகளுக்கு, முன்னரும் தமிழலக்கிய மரபுகள் நிலவியமை தெளிவாம்.

மேலும் சங்க காலம் கிறிஸ்து ஆண்டிற்கு முன்னரும் இரண்டொரு நூற்றாண்டுகள் நிலவியதென்று கருத்தினை 1970-ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிலே பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் வற்புறுத்தியுள்ளார். அவர் அம்மகா நாட்டில் ஆற்றிய ‘சங்க இலக்கியங்களின் கால அடைவுகள்’ என்னும் விரிவுரையில் குறுந்தொகை, ஐங்குறு நூறு ஆகிய காலத்தால் முந்திய சங்க நூல்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தன என்றும் கலித்தொகை, பரிபாடல் முதலிய பிந்திய நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தன என்றும், ஏனையவை இடைப்பட்ட காலத்தன என்றவாறு கூறியுள்ளார். தமது முடிவுகள் கொம்பியூட்டர் துணைகொண்டு ஆராயப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்73 இக்காலவரையறையிலுள்ள சில குறைபாடுகளைப் பேராசிரியர் மு. வரதராசன் போன்றோர் கண்டித்திருப்பினும் இக்காலவரையறை குறிப்பிடற்பாலது.

தமிழகத்திலே கிடைத்துள்ள காலத்தால் முந்திய தமிழ்ப் பிராமி சாசனங்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி. நாலாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தன.74 இவற்றைவிடத் தமிழகத்தின் முடியுடை மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர் பற்றிய குறிப்புகளும் ஆராயப்பட வேண்டியவை. கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழகம் தவிர்ந்த பிற இந்தியப் பகுதிகள் யாவற்றையும் ஒன்றுபடுத்தி ஆண்ட மௌரியப் பேரரசரான அசோகர் தமது 2-ஆம், 13-ஆம் பாறைக் கல்வெட்டுகளிலே குறிப்பிடும் எல்லைப்புற மன்னர்களிலே சேர, சோழ, பாண்டியருமிடம் பெற்றுள்ளனர். அசோகரின் தருமத் தூதுக்களிவ் வரசுகளுக்கும் அனுப்பப்பட்டன. அக்காலத்திலே மூவேந்தர் குலங்கள் நன்கு நிலைபெற்றிருந்தன என்பதற்கு இஃது ஓர் ஆணித்தரமான சான்றாகும். கி. மு. 4-ஆம் நூற்றாண்டளவிலே வாழ்ந்த காத்யாயனர் என்ற வடமொழி இலக்கண ஆசிரியர் சேர, சோழ, பாண்டிய என்ற பதங்களையும் குறிப்பிட்டுள்ளார்.75 இவர் தென்னாட்டவரெனவும் கருதப்படுகின்றது. இஃது எவ்வாறாயினும், இவருடைய காலத்திலே சேர, சோழ, பாண்டிய அரச குலங்கள் நன்கு வேரூயிருந்தமையாற்றான் இப்பதங்களை விளக்கியுள்ளார். கி. மு. 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ஆசிரியரான மெகஸ்தனீஸ் பாண்டிய நாடு பற்றித் தாம் சேள்விப்பட்ட சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.76 பொதுவாக, மூவேந்தரையும் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து நோக்கும்போது இவர்கள் கி. மு. 4-ஆம் நூற்றாண்டிலேதான் தம்மை ஒழுங்கு படுத்தினரெனக் கொள்ள முடியாது. காத்யாயனருக்கு முன்னரே சில நூற்றாண்டுகளாவது இவ்வரச குலங்கள் நிலைபெற்றுத் தனித் தனியாக நிலவியிருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஊகமாம். இல்லாவிடில், இவற்றைக் கூட்டாக ஒரே பெயரால் அழைத்திருப்பர் போலும். இச்சான்றுகளைத் தொகுத்து நோக்கும்போது கி. மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே ஆதித் தமிழ் தனிமொழியாக மாறியிருக்க வேண்டுமெனத் தெரிகின்றது.

தமிழுக்கு அடுத்தபடியாகப் பிற பிரதான திராவிட மொழிகளிலே கன்னட மொழியிலேதான் காலத்தால் முந்திய இலக்கிய நூல்கள் கி. பி. 9-ஆம் நூற்றாண்டு தொடக்கம் எழுந்தன, சாசனங்களிலே கன்னடம் கி. பி. 4-ஆம் நூற்றாண்டு தொட்டுப் பயன்படுத்தப்பட்டது. தெலுங்கு மொழியிலே சாசனங்கள் கி. பி. 5-ஆம் நூற்றாண்டு தொடக்கமும், இலக்கிய நூல்கள் கி. மு. 11-ஆம் நூற்றாண்டு தொடக்கமும் எழுதப்படலாயின. மலையாள மொழியிலே கி. பி. 11-ஆம் நூற்றாண்டு தொடக்கம் சாசனங்களும், 13-ஆம் நூற்றாண்டு தொடக்கம் இலக்கிய நூல்களும் எழுதப்பட்டன.77 விந்தியமலைப் பிரதேசத்திலும், தெற்கேயுமுள்ள இந்தியப் பகுதியிலும் பல சிறிய, பெரிய பிரிவுகளிலே திராவிட மூல மொழி சில வேறுபாடுளுடன் நிலவத் தொடங்கிக் காலப்போக்கிலே, சிறிய, பெரிய பிரதேசமையங்களை அடிப்படையாகக்கொண்டு தனித்தனி மொழிகளாகவும், கிளைமொழிகளாகவும் கிளைத்தது எனலாம். குறிப்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பிரதான மொழிகள் நிலவும் மாநிலங்களைக் கூர்ந்து கவனிக்கும்போது இவ்வியல்பு நன்கு தெளிவாகும் பெருமளவு இம்மாநிலங்களை மையமாகக்கொண்டு பிரதேச வாரியான அரசுகள் தோன்றிப் பிரதேசவாரியாக இப்பகுதிகளை ஒன்றுபடுத்தின் மொழிகளைப் பேணின் நாகரிகத்தினை வளர்த்தன. பிதேசவாரியான தேசியமும் எழுந்தது. வருடநாட்டிலே ஆரிய நாகரிகத் தாக்கம் நன்கு ஏற்பட்டபடியினாலே வடதிராவிட மொழிகளுக்கேற்பட்ட விளைகளைத் தெளிவாகக் கூறமுடியாதுள்ளது. இப்பாதிப்பினாலே எஞ்சியோர் இயற்கையரண்களை நாடிச் சென்று ஓரளவுவாவது தப்பிக்கொண்டனர்போலும், மற்றையோர் ஆரியருடன் ஒன்றுபட்டு இந்திய நாகரிகத்தினை வளர்க்கலாயினர் எனலாம். மொழிவாரியாக வடநாட்டிலே ஆரியமொழி வெற்றி பெற்றாலும், கலாச்சார ரீதியிலே ஆரியர் திராவிடரிடமிருந்து பலவற்றைப் பெற்றுக்கொண்டனர்; பொதுச் சொத்தாக்கிக் கொண்டனர் எனலாம்.

ஆரிய நாகரிகக் கருத்துக்கள் தெற்கே பரவத் தென் திராவிட மொழிகளும் பிறவுமவற்றின் தாக்கத்திற்குட்பட்டன. வடநாட்டுச் செல்வாக்குத் தெற்கே வரவரக் குறைந்து போவதைக் காணலாம். தமிழகத்தைப் பொறுத்த அளவிலே இரு தடைகளிருந்தன. தமிழ்நாடு தூர தெற்கே தென்கோணத்திலிருப்பதால், இயற்கைத் தடைகள் வடநாட்டவரை எளிதில் வரவிடாது தடுத்தன. இரண்டாவதாக, வடநாட்டுத் தாக்கம்-குறிப்பாக, மொழித்தாக்கம் தமிழகத்திலே நன்கு ஏற்படுமுன் பிரதேசவாரியான மூன்று தமிழரசுகளும் எழுந்துவிட்டன. பிரதேசவாரியான நாகரிகம், தேசிய உணர்ச்சி ஓரளவு ஏற்பட்டுவிட்டன. இவற்றை விடத் தமிழில் இலக்கிய, இலக்கண மரபுகள், பாதுகாப்புகள் ஏற்கனவே தோன்றிவிட்டன. எனலாம். இக்காரணங்களினாலேயே பிற திராவிட மொழிகளிலும் பார்க்கத் தமிழில் வடநாட்டுத்தாக்கம் குறிப்பாக வடமொழித் தாக்கம் குறைவாகக் காணப்படுகன்றது எனலாம். ஏனைய மூன்று பிரதான திராவிட மொழிகளிலே வடமொழித் தாக்கம் நன்கு காணப்படினும், மொழிநூலார் கூறும் திராவிட மூல மொழியினடிப்படையியல்புகள் அவற்றிலே மறைந்தில் இன்றும் காணப்படுகின்றன.

விந்திய மலைக்குத் தெற்கே ஆரியர் நடமாட்டம் ஏற்பட்டபோது அதற்கு எதிர்ப்புகளிருந்தன. ஆனால், வடநாட்டிற் போன்று தென்னாட்டில் நிலவிய பாரம்பரியங்கள் பல ஆரியர் வருகையினாலவ்வளவு பாதிப்புற்றில. பல வேளைகளில் ஆரியர் இணக்க முறைகளைக் கையாண்டனர்: தெற்கே நிலவிய வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றையும் ஏற்று, வைதிக மரபிலவற்றிற்கு இடமளித்தனர் என்பதைப் பௌதாயனதர்ம சூத்திரம் போன்ற நூல்களிற் காணலாம். அரசர், முனிவர், பிராமணர், இருஷிகள், சமண, பௌத்த ஆஜீவிகத்துறவிகள், வண்கர், விவசாயிகள், பணியாட்கள் முதலியன பலருக்கும் ஊடாக வடநாட்டுத்தாக்கம் ஏற்பட்டது. தெற்கே நிலவிய சமய நம்பிக்கைகள், சமய பழக்க வழக்கங்கள் பவவற்றையும் வைதிக சமயத்தவர் ஏற்றனர்; பொதுச் சொத்தாக்கினர். தெற்கே உள்ள பிரதான திராவிடமொழி மாநிலங்களிலே பிரதேச மொழினகளுடன் வடமொழியும் சமமாகப் போற்றப்படலாயிற்று, ஆரிய-திராவிட சங்கமம் நன்கு ஏற்பட்டு. இந்திய ஒருமைப்பாடு கலாச்சார ரீதியிலே உருவாகிற்று எனலாம்.

Link to comment
Share on other sites

அடிக்குறிப்புகள்

1. Caldwell R. A Comparative Grammar of the Dravidian Languages. London 1913. ப.4.

2. Sircar D.C. Select Inscriptions. Calcutta 1965. ப. 217. காரவேலன் கலிங்கநாட்டரசன்.

3. Majumdar R. C. (Ed.) The Vedic Age - Bombay 1965. ப. 164-5

4. மேற்படி.

மேலும், திராவிட கலாச்சாரமென ஒரு சாரார் கருதும் ஹரப்பா கலாச்சாரத்திலே ஆதி விஷ்ணு, காமன், பிரமன், சிவன், கணேசன், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்கள் வணங்கப்பட்டனவாக அண்மைக் காலத்திலே ஆராய்ச்சி செய்துவரும் ஸ்காந்திநேவிய அறிஞர் குழுக்கூறியிருப்பது குறிப்பிடற்பாலது. News Letter of the Scandinavian Institute of Asian Studies No. 3. January 1970 Copenhagen ப. 6-8.

5. Majumdar R.C. (Ed.) மே. கு. நூ. ப. 163. வடமொழி ‘பூஜ்’ எனும் மூலச்சொல் ‘பூஜ்’ விலிருந்து வந்தது. இஃது இந்து-ஐரோப்பிய மொழிகளிலே காணப்படவில்லை. தமிழ்-பூசை; கன்னடம்-பூக் தெலுங்கு-பூசே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, கட்ப முதலிய திராவிடமொழிகளிலே ‘பூ’ எனும் பதம் ‘மலர்’ என்னும் பொருளிலே நிலவுகின்றது. மேலும், கோத, தோட, கோடகு ஆகியவற்றிலே ‘பு’ எனவும், கோலமி, நயிகியில் ‘பூத’ எனவும், குய்யிலே ‘பூஜ்’ எனவும், குருக்கல் ‘பூப்’ எனவும், மல்டோவிலே ‘பூப்’ எனவும் வருகின்றது.

Burrow T. and Emeneau M.B. A Dravidian Etymo logical Dictionary- Oxford University Press 1961. ப.288.

6. (i) மேற்படி. ப. xxi.

(ii) ஜி. கிரியேர்ஸன் தாம் எழுதிய நூலிலே (Linguistic Survey of India Vol. IV. Calcutta 1906. ப.286) 15 திராவிட மொழிகளைக் குறிப்பிட்டுள்ளார். வண. ஆர். கால்ட்வெல் தமது நூலிலே (A Comparative Grammar of the Dravidian Languages ப. 6) 12 திராவிடமொழிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

7. Thaninayagam X. S. (Ed.) Tamil Culture and Civilization Asia Publishing House- Bombay 1970. ப. 44.

8. Caldwell R. மே. கு. நூ.

9. Purahnalingampillai M. S. Tamil Literature- South India. ப. 7-4.

10. (i) Subbarao B. Personality of India-Baroda 1958. ப. 121.

(ii) Bridget and Raymond Allchin-The Birth of Indian Civilization-Great Britain 1968 ப. 226.

11. (i) Heras H. Studies in Proto-Mediterranean Culture Bombay 1953.

(ii) கலாநிதி டி. சி. சேர்காரும் சிந்து சமவெளி நாகரிக எழுத்துத் திராவிடருடையதென்பர். Sircar D. C. Dravidian Problem - Man in India Vol. 35. No. 1 1955.

12. தற்காலத் தொல்பொருளியலார் சிந்து சமவெளி நாகரிகத்தினை ஹரப்பா கலாச்சாரமெனப் பொதுவாகக் குறிப்பிடுவர்.

13. Marshall Sir John-Mohenjodaro and the Indus Civilization-London 1931. Vol. I-III.

14. (i) Bulletin of the Institute of Traditional Cultures- Madras Part II. 1963. ப. 225-234

(ii) Basham A. L. Studies in Indian History and Culture - Culcutta 1964. ப. 20-30.

15. (i) மேற்படி.

(ii) கெஸ் என்ற அறிஞரும் இதுபோன்ற கருத்தினைத் தெரிவித்துள்ளார். Goetz M. India-Five thous- and years of Indian Art. London 1959 ப. 33.

(iii) Thaninayagam X. S. (Ed.) மே. கு. நூ. ப. 36.

16. (i) News Letter of the Scandinavain Institute of Asian Studies. No. 1-5.

(ii) Journal of Studies. Vol. II. No. I May 1970. ப. 89-109

இவ்வாராய்ச்சியாளர் குழுவிலே அஸ்கோபர்போல வடமொழி கற்றவர்: வேதமொழி நூலறிஞர். அவரின் சகோதரரான சிமோபர்போல செமெத்திய மொழிநூல் (குறிப்பாக அசீரிய மொழிநூல் விற்பன்னர்: பென்திஅஸ்தோ அல்தாய்- இந்து ஐரோப்பிய மொழி நூலியலிற் தேர்ச்சியுள்ளவர். செப்போ கொஸ் கென்னீமி கணக்கியற் புள்ளி விபர நூலறிஞர்.

16. அ. Journal of Tamil Studies Vol. II. No. 1. 1970. ப. 13-28.

17. (i) Sathasivam A. Sumerian. A Dravidian Language Berkley 1965.

(ii) Vaidyanatha Ayyar R. S. The Sumero-Dravidian and the Hittite Aryan.

Quarterly Journal of the Mythic Society Vol. XIX. 1929.

18. Ramasamy Ayer V. Dravidian place names on the plateau x of Persia-Quarterly Journal of the Mythic Society Vol. XX. 1929-30.

19. Majumdar R. C. (Ed.) மே. கு. நூ. 144-6.

20. (i) மேற்படி. ப. 161.

(ii) Nilakanta Sastri K. A. A History of South India Oxford University Press 1966. ப. 63.

21. Caldwell R. மே. கு. நூ. ப. 610.

22. Burrow T. Collected Papers on Dravidian Linguistics Annamalainagaer 1968. ப. 65-112.

23. Andronov M. Two Lecture on the Historicity of Language Families-Annamalainagar 1968. ப. 14-32.

24. Journal of Tamil Studies. Vol. II. No I. 1970 ப. 55.

25. மேற்படி. Vol. I. No. I. ப. 35-39.

26. மேற்படி. Vol. I. No. II. ஐஐ. ப. 54.

27. Nilakanta Sastri K. A. மே. கு. நூ. ப. 63.

28. மேற்படி.

29. மேற்படி.

30. Rgveda VII. 21-5. சிஷ்ணதேவனை (லிங்கத்தினை) த் தெய்வமாகக் கொண்டோர் எமது புனித (வழிபாட்டிற்கு) இடத்திற்கு வராதிருக்கக் கடவர்.

31. Majumdar R. C. (Ed.) மே. கு. நூ. ப. 165.

32. Calcutta Review. Vols. 116-117, 1950. ப. 151-167.

33. குறிப்பாக, எருது, சிங்கம், புலி வாகனம், கோடரி, சூலம் முதலியவற்றினைக் கவனிக்கலாம்.

34. Majumdar R. C. (Ed.) மே. கு. நூ. ப. 165.

‘அம்மா’ என்ற தமிழ்ச் சொல் குறிப்பிடற்பாலது வடமொழியிலே அம்பா என வருகிறது. பிற இந்து-ஐரோப்பிய மொழிகளிற் காணப்படாதது: திராவிட மொழிகள் பலவற்றில் உண்டு.

35. (i) Ramachandra Diksitar- Origin and Spread of the Tamils-Madras 1947.

(ii) Nilakanta Sastri K. A. மே. கு. நூ. ப. 64.

(iii) Thaninayagam X. S. மே. கு. நூ. ப. 36

36. சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்துப் பாடல்.

37.Goetz M. மே. கு. நூ. ப. 33-34.

Thaninayagam X. S. (Ed.) மே. கு. நூ. ப. 36.

38. (i) Ancient India No. 2. 1946: No. 5. 1949: No. 9. 153.

(ii) Von Furer Haimaanndort-‘New Aspeacts of the Dravidian Problem.’ Tamil Culture. Vol> II. No. 2. April 1953.

(iii) Wheeler R. E. M. Early India and Pakistan. London 1959. ப. 150-169.

(iv) இரண்டாவது உலகத் தமிழ் மகாநாடு-கையேடு சென்னை 1968. ப. 108-111.

38. அ. Journal of Tamil Studies. Vol. 1. No. II. 1969. ப. 53. இதுவே பழைய இசில நகரமாம்.

39.(i) Ancient Inda. No. 2. 1946: No. 5. 1949: No. 9. 1953.

(ii) Journal of Tamil Studies. Vol. 1. No. II. g. 51-55>

(iii)Wheeler R. E. M. மே. கு. நூ.

40. (i) மேற்படி.

(ii) Daniel Glyn-The megalithic builders of Western Europe.

Great Britain 1962.

41. (i) Goetz M. மே. கு. நூ.

(ii) Nilakanta Sastri K. A மு. யு. மே. கு. நூ. 57.

(iii) Thaninayagam (ed.) மே. கு. நூ.

42. (i) Goetz M. மே. கு. நூ.

(ii) Nilakanta Sastri K. A மு. யு. மே. கு. நூ. 57-58

(iii) Thaninayagam (ed.) மே. கு. நூ.

43. Thanninayagam X. S. (Ed.) மே. கு. நூ. ப. 37.

44. Nilakanta Sastri மே. கு. நூ. ப. 58.

45. Lahovary N. Dravidian Origin and the West-Madars 1963.

‘பாஸ்க்’ மொழி பிரினீஸ்மலையிலே நிலவுகின்றது.

46. Indian Express Date22-8-70 Quoted in the Journal of Tamil Studies. Vol. II. No. II. Part II.

46. அ. Tamil Culture Vol. III. II. ப. 92-102: ப. 22.

46. ஆ. மேற்படி.

46. இ. Tamil Culture. Vol. X. No.; 4. ப. 132-133.

47. (i) Nilakanta Sastri K. A. மே. கு. நூ. ப. 64.

(ii) கில்பேர்ட்சிலேற்றரும் திராவிட நாகரிகம் எகிப்து. மெசொப்பொத்தேமியா ஆகிய

இடங்களிலிருந்து தோன்றியதெனலாம் என்பர். The Dravidian Element in Indian Cultire. London 1924. ப. 80,

48. திராவிடமொழிகளிலே பிராகூயி சிலவகையிற் கவனித்தற்பாலது: பலுக்கிஸ்தான்-சிந்துக் குன்றுகளிலே சுமார் இரண்டு இலட்சம் மக்கள் பேசுகின்றனர்: பிற திராவிட மொழிகளிலிருந்து தனிப்படுத்தப்பட்டுள்ளது. மிக அண்மையிலுள்ள திராவிடமொழி 800 மைல் தொலைவிலுள்ளது. மக்கள் யாவரும் ஸ்லாமியர். Emeneau M. B. Brahui and the Dravidian Comparative Grammar. 1962.

49. Von, Fure Haimandorf. மே. கு. நூ. ப. 134. டி. எச. கோடன் என்பர் கி. மு. 700-400க்கு மிடையிலே தென்னிந்தியாவிற்கு இரும்பு உபயோகித்த மனிதர் வந்தனர் என்பர். மேற்படி. ப. 131-132.

50. (i) கலைக் களஞ்சியம் தொகுதி 5. சென்னை 1953-ப. 703-705.

(ii) பிள்ளை கே. கே. தென்னிந்திய வரலாறு-1-ம் பாகம். சென்னை 1958. ப. 27.

இவ் ஆசிரியர் பிரமகிரியிலுள்ள பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்கள் கி. மு. 10-ம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்பர். பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் மேற்குறிப்பிட்ட கருத்தினை ஓரளவு ஏற்றுள்ளார். அவர் எழுதிய Develoment of Religion in South India. Calcutta 1963. ப. 2-4. பார்க்க.

51. Jourenal of Tamil Studies. Vol. I. No. II. Part I. 1969. ப. 52.

52. மேற்படி. ப. 54.

53. மேற்படி. ப. 55.

54. மேற்படி. ப. 50-51.

55. மேற்படி. ப. 51.

55. அ. Sankalia H. D. Indian Archaeology Today.-Bombay 1962. 104.

55. ஆ. மேற்படி.

55. இ. மேற்படி. ப. 105.

55. ஈ. Bridget and Raymnd Allchin. மே. கு. நூ. ப. 216-223.

56. Burrow T. (i) Collected paerts on Dravidian Linguistics. Annamlaingar 1968. ப. 309-311.

(ii)Sanskrit lanuage. ப. 387.

உலூகல-உலக்கை: கடு-கடுமையான, கூர்மையான, அதிகமான: குண்ட-குண்டு, பள்ளம்: கல-களம்: தண்ட-தடி: பிண்ட-துண்டு, உருண்டை, திரட்சி: மயூர-மயில்.

57. Burrow T. (i) Collected papers…… ப. 311, 323.

(ii) Sankrit Language, ப. 387.

58. (i) மேற்படி.

(ii) Emenau M. B. Dravidian Linguistics and Folklore- Annamalainager. 1967. ப. 163.

59. Burrow T. Collected Pape……. ப. 311, 324-326.

60. மேற்படி. ப. 324-326.

61. Subbarao B. மே. கு. நூ. ப. 19.

62. ராஜ்புத்தானிலும் இமயமலைச் சாரலிலும் பின்தங்கிய திராவிட மொழிகள் நிலவுவதாக அறிஞர் கருதுகின்றனர். Thaninayagam X. S. Tamil Humanism-The Classical Period. Vaddukkoddai-1972. இவை பற்றிய விரிவான ஆராய்ச்சி தேவை.

63. இம்மொழிகளை முண்டா மொழிகளெவும் குறிப்பிடுவர். இவற்றனைப் பேசும் ஒஸ்ரலோயிட் மக்கள் திராவிடருக்கு முன் வந்தனரெனப் பல அறிஞர் கருதுவர். இவர்களின் செல்வாக்குத் திராவிட நாகரிகத்திலும், ஆரிய நாகரிகத்திலும் ஏற்பட்டது.

64. கலாநிதி சுப்பரால் மேற்கொண்ட பிரிவுகளைக் கவனிப் பின் தமிழகத்திலே சோழ, பாண்டிய நாடுகள் மையப் பகுதிகளாகவும், சேரநாடு தனிப்படுத்தப்பட்ட பகுதியாகவுமிருத்தலைக் காணலாம். இத்தகைய நிலை சேரர் ஆதிக்க விஸ்தரிப்பிற்குத் தடையாக இருந்தது மட்டுமன்றிக் காலப்போக்கிலே கி. பி. 10-ம் நூற்றாண்டளவிலே மலையாளம் தோன்றவும் காரணமாயிற்றுப் போலும்.

65. Sricar D. C. The Dravidian Problem-Man in India Vol. 35. no. 1. 1935.

66. Subbarao B. மே. கு, நூ. ப. 122.

67. (i) Andronov M, மே. கு, நூ. ப. 122.

(ii) Sircar D. C. மே. கு.

68. Thaninayagam X. S. (Ed.) Tamil Culture and Civilization. Asia Publishing House-Bombay 1970. ப. 44-45.

வடதிராவிடம் வட இந்தியாவிலும், வடமேற்கு எல்லையிலும் நிலவும் மல்கோ, குருக், பிராஹ{யி ஆகியவற்றின் மூல மொழியாம். மத்திய திராவிடம் இந்தியாவின் நடுப்பகுதி, தக்கணத்தின் வடபகுதி, வடகிழக்குப் பகுதியிலே நிலவும் கோலமி, நயிகி, பர்ஜி, கட்ப (முல்லரி), கட்ப(சலூர்-போய), குய், குவி, கொண்ட, பென்கோ, கோய, தோர்லி, கொண்டி முதலிய 12மொழி, கிளை மொழிகளின் மூலமொழியாம். தென்திராவிடம் தமிழ், மலையாளம், தோட, கோத, கன்னடம், படக, கோடகு, துளு, தெலுங்கு, சவர முதலியனவற்றின் மூலமொழியாம்.

69. மேற்படி. ப. 48.

70. (i) Nilakanta Sastri K. A. A History of South Undia. 1966. ப.117. இவர் சங்க காலம் கி. பி. 100-250 வரை என்பர்.

(ii) Vaiyapuripillai S. History of Tamil lauguage and Literture. Madresa. 19956.ப. 38.

இவ் ஆசிரியர் சங்க காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு தொடக்கம் மூன்றாம் நூற்றாண்டு முடியும்வரையென்பர்.

71. Nilakanta Sastri K. A> (Ed.) A Comprehensive History of India. Vol. II. g. 675.

72. Mahalingam T. V> Early South Indian palaeography- University of madras> 1967. g. 117.

73. பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியத்தின் விரிவுரை பற்றித் திரு. கி. வா. ஜகந்நாதன், கலைமகள் மே. 1971. ப. 466-467-ல் மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

74. Irtvatham Mahadevan-Tamil Brashmi Inscripton of the Sangam Age. Madras. 1968. g. 15.

75. Srinvas Iyengar P. T. History of the Tamils from the Earliest times to 600 A. D. madras. 1959.

76. Nilakanta Sastri K. A. Foreign Notices of South Inda. -Madras. 1939.

77. Nilakanta Sastri K. A> A history of South India-1966 g. 393-420.

சுருக்கக் குறியீடுகள்

ப. -பக்கம்.

மே. கு. -மேற்குறிப்பிட்டது.

மே. கு. நூ. -மேற்குறிபிட்ட நூல்.

http://www.noolaham.net/library/books/01/48/48.htm

Link to comment
Share on other sites

//மேலும், மிக அண்மைக்காலத்திலே கலாநிதி சபோநிஸ் கோவ என்ற ரூசிய ஆராய்ச்சியாளர், திராவிடர் மத்தித்தரைக் கடற் பிரதேசத்திலிருந்து வந்தனரெனவும், அவர்கள் கி. மு. 5000 அல்லது 6000 ஆண்டளவிலே, இரான், மெசொப்பொத்தேமியா அடங்கிய பரந்த இடத்திலே வாழ்ந்தனரெனவும், மொஹெஞ்சதாரோ நாகரிகம் அவர்களுடையதெனவும் குறிப்பிட்டுள்ளார். இவருடைய கருத்துப்படி, நீலகிரியிலே வாழும் தோடர்தான் மிகப் பழைமையான திராவிட நாகரிகத்தினைப் பிரதிபலிக்கின்றனர்: அவர்களுடைய தெய்வங்கள் சிலரின் பெயரும், கிரியைகள் (கோலங்கள்) சிலவும் சுமேரியாவிலே காணப்படுவனவற்றினை ஒத்துள்ளனவாம்: இராக்கிலுள்ள ஜனக் குழுக்கள் சிலவற்றின் குடிசைகள் தோடருடையவற்றினைப் போன்றுள.46 மானிட நூல், தொல்பொருளியல், மொழியியல் சான்றுகள் சிலவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஜே. ரி. கோர்ணேலியஸ் என்ற அறிஞர், “வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலே மத்தித் தரை கடற் பிரதேங்களிலே வாழ்ந்த இனத்தைச் சேர்ந்த லிபியரைப் போன்று திராவிடரும் வட ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருந்தனர்” என்பர்.46அ. “எகிப்தியரின் கோவிற்கலை, விவசாயப் பழக்க வழக்கங்கள். மரபுகள் முதலியன திராவிடருடையனவற்றைப் பெரிதம் ஒத்துள்ளன” எனச் சேர்ஜி குறிப்பிட்டுள்ளார்.46ஆ. “வட ஆபிரிக்கா, மத்தித்தரைக் கடலின் மேற்குக் கரையோரம், தென் மேற்கு ஆசியா, இரான், இந்தியா ஆகிய நாடுகள் புதிய கற்காலம் தொட்டு அசீரியர் காலம்வரை பெருநிலக் கலாச்சாரக் களஞ்சியமொன்றாக விளங்கின”. 46இ.//

மேற் குறிப்பிட்ட தொல்பொருட்வியற் சான்றுகள் தற்போதைய நவீன மரபணுவியல் ஆய்வுகளுடன் பெரிதும் ஒத்துப்போவதை அவதானிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படித் தான் கதை எழுதப் படிச்சுக் கொண்டினமோ?

Link to comment
Share on other sites

எப்படித் தான் கதை எழுதப் படிச்சுக் கொண்டினமோ?

கொன்சம் மினக்கெட்டுப் படிச்சா நீங்களும் உருப்படியா எதாவது எழுதலாம்,இல்லாட்டி இப்படி வெறுமையான வரிகளைத் தான் எழுதலாம், கொன்சம் முயற்சி செய்து படிக்கப் பாருங்கோ, நீங்களும் உருப்படியா எதாவது பதிற் கருத்து எழுதலாம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.