Jump to content

இந்து மதமும் பெண்களும்


Recommended Posts

இந்து மதமும் பெண்களும் (பாகம் 1)

இங்கே மந்திரங்களின் மூலம் செய்யப்படுகின்ற மோசடிகள் பற்றிய தகவலை இணைத்த போது வசம்பு ஒரு கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தார்.

இந்த மந்திரங்கள் இவ்வளவு மோசமானவை என்றால், இவைகளை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் அவர்களும் கேவலப்படுகிறார்கள் அல்லவா?

இந்த அர்த்தத்தில் அவருடைய கேள்வி அமைந்திருந்தது.

இது நல்ல ஒரு கேள்வி. இதற்கான பதிலை சற்று நீளமாகவும் ஆழமாகவும் பார்க்க வேண்டும். ஒரேயடியாக நீளமாக எழுத மாட்டேன். தொடராக எழுதி இணைக்கிறேன்.

மற்றவர்களின் கருத்துக்களையும் உள் வாங்கியபடி எழுதுவதற்கு அது ஏதுவாக இருக்கும்.

இங்கே நான் இரண்டு விதமான மந்திரங்களை இணைத்திருத்தேன்.

1.திருமணத்தில் சொல்லப்படும் சில மந்திரங்கள்

2.ஈமச் சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்கள்

சற்றுக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். திருமண மந்திரங்களில் மணமகள் இழிவுபடுத்தப்படுகிறாள். மணமகன் மீது எந்த இழிவுபடுத்தல்களையும் இந்த மந்திரங்கள் செய்யவில்லை.

திவசம் கொடுக்கும் போது சொல்லப்படும் மந்திரங்களிலும் பெண்தான் இழிவுபடுத்தப்படுகிறாள். தந்தையின் இறப்பிற்கு திதி செய்யும் போதும் தாய்தான் இழிவுபடுத்தப்படுகிறாள். தாயின் இறப்பிற்கு திதி செய்யும் போதும் தாய்தான் இழிவு படுத்தப்படுகிறாள். ஆண் இழிவுபடுத்தப்படவில்லை.

இது ஏன்?

விடை மிக இலகுவானது. இந்த மத வேதங்களின் படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றும், சில இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையிலும்தான் பெண்ணை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றன.

இந்த இடத்தில் சுருக்கமாக இன்னும் ஒரு விடயத்தைப் பார்ப்போம்.

இஸ்லாமியர்கள் குர்ரானையும் கிறிஸ்தவர்கள் பைபிளையும் கொண்டு இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்த பொழுது, பார்ப்பனியர்களுக்கு அதைப் போன்று எந்த நூலை தங்களுடைய பார்ப்பனிய இந்து மதத்தின் மதநூலாக காட்டுவது என்று தெரியவில்லை.

பொதுவான இந்து மதம் என்கின்ற ஒன்று இல்லாத பொழுது, அதற்கு என்ற எப்படி ஒரு பொதுவான மதநூல் இருக்க முடியும்?

என்றாலும் பார்ப்பனர்கள் மனுதர்மத்தையும், பகவத்கீதையையும் இந்து மத "பைபிளாக" முன்வைத்தார்கள். பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் என்று பார்க்கின்ற போது இது ஒரு சரியான செயல்தான். மனுதர்மம், பகவத்கீதை போன்றவைகள் வேறு மொழிகளிலும் அச்சிடப்பட்டன.

இந்து மதம் என்பது மனுதர்மம்தான் என்று இங்கே நண்பர் நெடுக்காலபோவனும் கூறியிருந்தார். மனுதர்மத்தை நியாயப்படுத்தும் ஒரு இணைப்பையும் தந்திருந்தார்.

உண்மையில் இன்று வரை இந்து மதம் மனுதர்மத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஆலய வழிபாடுகள், விழக்கள், சடங்குகள் என்று அனைத்துமே மனுதர்மம் வகுத்துக் கொடுத்தன்படிதான் இயங்குகிறது. பார்ப்பனர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வதும் மனுதர்மத்தின்படிதான். சூத்திரர் சிறுதெய்வங்களுக்கு சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லமலோ, வாயைக் கட்டிக் கொண்டோ பூசை செய்வதும் மனுதர்மத்தின்படிதான். இந்து மதம் முற்று முழுதாகவே மனுதர்ம முறையில்தான் இயங்குகிறது.

(ஒரு உப தகவல்: பார்ப்பனர்களால் 1919ஆண்டு தமிழில் வெளியிடப்பட்ட "மனுதர்ம சாஸ்திரம்" என்னிடம் இருக்கிறது)

மனுநீதி சோழன் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். மனுதர்மம்தான் மனுநீதி. மனுதர்மத்தின் படி பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்த சோழனை "மனுநீதிச் சோழன்" என்று அழைத்தார்கள்.

இந்த இடத்தில் இன்னும் ஒரு சிறு தகவல். பல நாடுகளை வென்று ஆசியாவின் பெரும் வல்லரசாக விளங்கிய சோழப் பேரரசு வீழ்ந்ததும் இந்தப் பார்ப்பனர்களினால்தான். பல போர்களைப் புரிந்ததால், பல பாவங்கள் சேர்ந்து விட்டதாக சோழ மன்னன் நம்பவைக்கப்பட்டான். அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பார்ப்பனர்களுக்கு நிறைய தானங்கள் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பனர்களால் அவனிடம் சொல்லப்பட்டது. பார்ப்பனர்களுக்கு பொன்னும், பொருளும், நிலமும் வழங்கி, மிகுதிப் பணத்தில் கோயில்களும் கட்டி சோழப் பேரரசு தன்னுடைய பலத்தை இழந்து வீழ்ச்சி கண்டது. இதை பின்பு தனியாகப் பார்ப்போம்.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.

மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.

இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது?

சொல்கிறேன். நாளை சொல்கிறேன். ஆர்வத்தோடு காத்திருங்கள். பெண்ணைப் பற்றிய சர்ச்சையால் இந்து மதத்தில் ஒரு பெரும் பிளவே ஏற்பட்டது பற்றிய விடயங்கள் எல்லாம் இந்தத் தொடரில் வரும்.

காத்திருங்கள்!

Link to comment
Share on other sites

இந்து மதமும் பெண்களும் (பாகம் 2)

மனுதர்மமத்தின் ஆரம்பம் ஏறக்குறைய பைபிள் போன்று இருக்கிறது. பைபிளைப் போன்றே உலகம் உருவான கதையில் தொடங்குகிறது. பின்பு ஒவ்வொரு வர்ணத்தினருடைய கடமைகள், குணங்கள், பாவங்கள், தண்டனைகள் என்று விரிகிறது.

இதிலே 9வது அத்தியயாம் பெண்களைப் பற்றி பேசுகிறது. 9வது அத்தியாயத்திலே மனுதர்மம் பெண்கள் பற்றி சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.

பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.

(சுலோகம் 3)

பெண்கள் கற்புநிலையற்றவர்களாகவும், நிலையாத மனம் உள்ளவர்களாகவும், நட்பின்மை உள்ளவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

(சுலோகம் 15)

இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது

(சுலோகம் 16)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது

(சுலோகம் 17)

பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்

(சுலோகம் 18)

மனுதர்மம் பெண்கள் பற்றிச் சொல்கின்ற சில சுலோகங்கள் இவைகள். அதவாது பெண்கள் சுயமாக இயங்குகின்ற தன்மை அற்றவர்கள். பெண்கள் இயற்கையாகவே நிலையான மனம் அற்றவர்கள். கற்பு நிலை அற்றவர்கள். காமம், கோபம், துரோகம் அனைத்தும் பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகைள எல்லாம் பெண்களைப் படைக்கும் போது பிரம்மன் அவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாவங்களை மாற்ற முடியாது. அதற்கான மந்திரங்கள் எதுவும் எல்லை. பெண்கள் மந்திரங்களை ஓதவும் கூடாது.

இதை விட ஒரு பெண் ஒவ்வொரு ஜாதிக்காரனுடன் உறவு வைத்தால் என்ன தண்டனை, கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால் என்ன தண்டனை என்று மற்றைய சுலோகங்கள் நீண்டு, பெண்களை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் மனுதர்மம் அசிங்கப்படுத்துகிறது.

பெண் குழந்தைகளை மட்டும் ஒரு பெண் பெறுவதை குற்றம் என்று மனுதர்மம் சொல்கிறது.

ஒரு ஆண் எப்பொழுது தன்னுடைய மனைவியை "விவாகரத்து" செய்யலாம் என்று மனுதர்மம் விளக்குகிறது.

மலடியான மனைவியை எட்டு வருடத்திற்குப் பின்பும், ஊனம் உள்ள பிள்ளையை பெறுபவளை பத்து வருடத்திற்கு பின்பும், பெண்களையே பெறுபவளை பதினொரு வருடத்திற்குப் பின்பும், தீங்கு சொல்பவளை உடனடியாகவே நீக்கி விட்டு வேறு விவாகம் செய்து கொள்க. நீக்கப்பட்ட மனைவியர்களுக்கு எந்தப் பொருளும் கொடுக்கத் தேவை இல்லை.

(சுலோகம் 81)

இந்து மத வேதங்கள், சாத்திரங்களின் படி பெண் இயற்கையாகவே கற்புநிலை அற்றவள். நிலையான மனம் அற்றவள். காமம் உடையவள். பெண் பிறப்பு ஒரு இழிவான பிறப்பு. அதை மந்திரங்களால் மாற்ற முடியாது.

இப்பொழுது ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். திருமணத்தில், ஈமச் சடங்கில் பெண் கற்பு அற்றவள் என்ற அடிப்படையில் சொல்லப்படும் மந்திரங்கள் எங்கிருந்த வந்தவை என்று புரிகிறது அல்லவா?

(ஆயினும் உங்களுக்கு வேறு சில கேள்விகள் எழக் கூடும். இந்தத் தொடரை தொடர்ந்து படிக்கின்ற போது அவைகளுக்கான பதில்களையும் நீங்கள் பெறுவீர்கள்)

இதிலே இன்னும் ஒன்றை சிந்தித்துப் பாருங்கள். இந்து மதத்திற்காக வாதாடுகின்ற ஒருவரே, மனுதர்மத்தையும் ஆதரித்து, அத்துடன் பெண்களுக்கு எதிரான துவேசக் கருத்துக்களை பரப்புவதையும் இங்கே கூட நாம் கண்டிருக்கிறோம். மனுதர்மம் பெண்களுக்கு கொடுக்கின்ற இயல்புகளையே அந்த ஒருவரும் பெண்களின் இயல்புகளாக பட்டியில் இடுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.

இந்தச் சிந்தனை எங்கிருந்து வருகிறது என்று இப்பொழுது புரிகிறது அல்லவா?

மனுதர்மத்தை நல்ல புத்தி உள்ள யாருமே ஆதரிக்க மாட்டார்கள். அதை படிக்கின்ற போது குமட்டிக் கொண்டு வரும். ஆனால் மனுதர்மச் சிந்தனைதான் பார்ப்பனியத்தின் அடிப்படைச் சிந்தனை ஆகும்.

மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதை பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம். பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவது ஏன் என்பதற்கு இந்துமதம் சொல்கிற விளக்கத்தையும் இந்தத் தொடரில் பார்ப்போம்.

தொடரும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்.

(சுலோகம் 18)

வாவ் என்ன அற்புதமான உண்மையை அப்பவே சொல்லிட்டாங்க. இதைத்தானே இப்ப கவிஞர்களும் சொல்லினம்.. "பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் புடவை கட்டிப் பெண்ணானது" என்று. புடவைக்குப் பதிலா சல்வார்.. சுடி மிடி..ஜீன்சு....... என்றும் போட்டுக்கலாம்..! :icon_mrgreen:

மலடியான மனைவியை எட்டு வருடத்திற்குப் பின்பும், ஊனம் உள்ள பிள்ளையை பெறுபவளை பத்து வருடத்திற்கு பின்பும், பெண்களையே பெறுபவளை பதினொரு வருடத்திற்குப் பின்பும், தீங்கு சொல்பவளை உடனடியாகவே நீக்கி விட்டு வேறு விவாகம் செய்து கொள்க. நீக்கப்பட்ட மனைவியர்களுக்கு எந்தப் பொருளும் கொடுக்கத் தேவை இல்லை.

இதுவும் சூப்பராத்தான் இருக்கு. சும்மா காதல் தோல்வி என்று தாடி வளர்த்துத் திரியுற ஆண்கள் சிந்தியுங்க.

இதில என்ன பிரச்சன எண்டா.. உந்தக் காலங்கள் நீண்டு போச்சுது. ஒரு எம் எஸ் என் சற்றோ.. இல்ல டேற்றிங்கோ செய்திட்டு.. ஒரு மாதத்துக்க விசயங்களை முடிச்சிட்டு.. ஆக்களை நீக்கி விட்டிட்டு.. அப்புறம் அடுத்ததுக்கு பாய்ஞ்சுடனும்.

அப்புறம் இப்படியான பெண்களுக்காக விடுதலைக் குரல் கொடுத்து.. அவங்க பாலுணர்வுத் தேவைகளை அவையே பூர்த்தி செய்யுற சுதந்திரத்தை வழங்க செய்யனும். அதுதாங்க.. விபச்சார விடுதிகளை திறந்து சட்டம் அங்கீகாரத்தோட பெண்களை அங்க ஒப்படைச்சிடனும்..! நல்ல ஊதியமும் கொடுக்கனும். பிற்காலத்துக்கு ஓய்வூதியமும் கொடுக்கனும். அதுதான் இப்ப உடனடித் தேவை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தொடர் தோழர் சபேசன்

தொடருங்கள் கைகோர்க்க காத்திருக்கிறேன்.

இந்து மதம் பெண்களை எப்படி எப்படி எல்லாம் வேட்டையாடியது என்பதை இவர்கள் காவித்திரியும் புனித நூல்களே புடம் போட்டுக் காட்டுகின்றன.

மனைவிக்குத் தெரியத்தக்கவே வைப்பாட்டி வைத்துக் கொள்ள அனுமதிக்கும் இந்து மதம் பெண்கள் கணவனுக்கு செய்யும் பணிவிடைகளிலிருந்து தவறினால் என்ன தண்டனை தெரியுமா???

வேட்டை நாய்களால் அவளைக் கடிக்க வைத்து தின்ன வைக்க வேண்டுமாம்! [Manu VIII - 371]

மதங்கள் அனைத்துமே பெண்களுக்கு எதிரானவை அதிலும் மிகக் குரூரமானது இந்து மதமே!

பெண்களை சமமாக நடத்தி அவர்களுக்கும் உரிமைகளை வழங்கியவை பௌத்தமும் சமணமும்தான். அவர்களின் சங்கங்களில் பெண்கள் எந்தத் தடையும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். அதனால்தான் மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி என பெண்களை வைத்தே காப்பியங்கள் எழுந்தன. மதச் சார்பற்ற பகுத்தறிவுவாதியாக சமயங்களை ஆராய்ந்தபோது அறிந்து கொண்ட உண்மை.

Link to comment
Share on other sites

இந்து மதமும் பெண்களும் (பாகம் 3)

இப்பொழுது பகவத் கீதை பெண்கள் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய

ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்

அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்கள். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது.

கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது.

முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்து மத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

"இந்து மதமும் பெண்களும்" என்ற தொடர் முடிந்த பிற்பாடு பகவத் கீதை பற்றியும் தொடராக எழுத இருப்பதால், தற்பொழுது பகவத் கீதையைப் பற்றி நான் அதிகம் எழுதாது மிகுதியை தொடர்கிறேன்.

இந்து மதத்தைப் பற்றி அறிந்தவர்கள் ராமானுஜர் பற்றி அறிந்திருப்பார்கள். குறிப்பாக வைணவ சமய மக்களால் ராமானுஜர் கடவுளின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். அவர் எழுதிய "ஸ்ரீபாஸ்யம்" என்ற நூல் பெண்கள் பற்றி என்ன சொல்கிறது?

பகவத் பலன தானக்ருதாம்

விஸ்தீரணாம் ப்ரம்ம சூத்ர வ்ருத்திம்

பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி

தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ

வ்யாக்யாஸ்யந்தே....

அதாவது மோட்சம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு. சூத்திரர்களுக்கோ பெண்களுக்கோ இல்லை. சூத்திரர்களும் பெண்களும் முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனாகத்தான் அவர்கள் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பிறப்பில் புண்ணியம் செய்து அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்து பின்பு மோட்சம் அடையலாம் என்பதுதான் இதன் பொருள். அத்துடன் இதை பிரம்மசூத்திரத்தை உருவாக்கிய ஆச்சாரியர்கள் சொன்னதையே தான் சொல்வதாகவும் ராமானுஜர் குறிப்பிடுகின்றார்.

பெண் குறித்த இந்து மதத்தின் பார்வை இதுதான். இத்தனையும் சொல்கின்ற இந்து மதம் பெண்களுக்கு கல்வியையும் தடைசெய்தது. ஒரு பெண் மந்திரங்களோ, வேதங்களோ, சாத்திரங்களோ எதுவும் கற்கக் கூடாது என்று கல்வியையும் பெண்ணுக்கு மறுத்தது.

பெண்கள் இழிபிறப்பினர் என்ற இந்து மத கருத்தின்படி மந்திரங்களிலும் பெண் இழிவுபடுத்தப்பட்டாள். பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டதால், அவளால் அதை புரிந்து கொள்ளவோ தட்டிக் கேட்கவோ முடியவில்லை. இதே நிலையில்தான் சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் இருந்தனர்.

இப் பொழுது இந்து மதத்தின் புராணம் சொல்கின் கதை ஒன்றைப் பார்ப்போம்.

ஒரு முறை இந்திரன் விஸ்வரூபன் என்பவனைக் கொன்று விட்டான். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனத் தந்தைக்கும் அசுர குல தாய்க்கும் பிறந்தவன். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனின் பிள்ளை என்பதால், அவனைக் கொன்ற இந்தரனுக்கு தோசம் உண்டாகி விட்டது.

தோசம் பிடித்ததால் இந்திரன் மிகவும் விகாரமான உருவோடு மிக அருவருப்பாகக் காட்சி அளித்தான். தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைக்கலாம் என்று அவன் தேடித் திரிந்தான்.

இந்திரன் தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைத்தான் தெரியுமா?

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகவத் கீதை தெரியல்லை என்றா பொத்திக்கிட்டு இருக்கனும் சார், அதுக்காக தவறான அர்த்தங்களை கொடுத்து அதின்ர புனிதத்தை கொடுக்க கூடாது. நடக்காது மூட நம்பிக்கைகளை நம்புற முட்டாள்கள் நடந்ததுகளை ஏற்க மறுப்பது மடவை.

ஏதோ மேதை என்ற கணக்கில கட்டுரை எழுதுறது சரி ஆனால் அதில யாதாாத்தத்தையும், உண்மையையும் எழுதனும் உங்கட பெளத்தறிவுக்குள்ள அதை தொலைச்சிட்டு பூனை கண்ணை மூடிட்டு உலகம் இருட்டு என்று சொன்ன மாதிரி எழுத கூடாது.

கீதை மட்டுமில்ல,

பைபிள், குர்ஆன் இன்னும் இருக்கு எடுத்து படிச்சிட்டு கட்டுரையை எழுதுங்க. இந்து மதத்தை தவறாக பார்ப்பவன் கண் நடுநிலையான ஆய்வுகளைத்தராது. உங்களால சமூகம் முன்னேறாட்டியும் பரவாயில்லை. நீங்கள் சமூகத்தை கெடுக்காமல் இருக்கோ..!

Link to comment
Share on other sites

பறவைகள்!

பகவத் கீதை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றால், நீங்கள் எனக்கு சொல்லித் தாருங்கள். இந்தத் தொடரை முடித்ததும் பகவத் கீதை பற்றி எழுத இருக்கிறேன். நீங்கள் எனக்கு கொஞ்சம் கற்றுத் தந்தால், எழுதுவதற்கு உதவியாக இருக்கும்.

அனைத்தும் இங்கே ஆதாரங்களோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். சரி! இப்பொழுது தொடருக்குப் போவோம்.

இந்து மதமும் பெண்களும் (பாகம் 4)

பார்ப்பனன் ஒருவனுடைய மகனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து விட்டது என்று கடந்த தொடரில் பார்த்தோம் அல்லவா? இப்பொழுது தன்னுடைய தோசத்தை இந்திரன் எப்படி தீர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம்.

இந்திரன் மிகவும் விகார உருவத்தோடும் செல்வம், பொலிவு அனைத்தும் இழந்து அலைந்து கொண்டிருந்தான். தன்னுடைய தோசத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால், தன்னுடைய தோசம் போய்விடும் என்று இந்திரனுக்கு தோன்றியது.

முதலில் இந்திரன் பூமாதேவியிடம் போனான். தன்னுடைய தோசத்தை பெற்றுக் கொள்ளும்படி வேண்டினான். பூமாதேவி தோசம் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். வேண்டுமென்றால் தோசத்தில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதாக கூறினாள். பதிலுக்கு தான் கேட்கும் வரத்தை தரவேண்டும் என்று பூமாதேவி சொன்னாள்.

இந்திரன் சம்மதித்து ஒரு பகுதி தோசத்தை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான். பூமிக்கு இப்படி பிரம்மஹத்தி தோசம் வந்ததனால்தான் பூமியில் பல பாலைவனங்கள் உருவாகினதாம். தோசத்தை பெற்றுக் கொண்ட பூமாதேவி பூமி பிளந்தால் மீண்டும் ஒன்றாக சேருகின்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.

இந்திரன் அடுத்ததாக மரங்களிடம் போனான். மரங்களிடம் ஒரு பகுதி தோசத்தை கொடுத்தான். மரங்களிற்கு தோசம் வந்ததால்தான் அதில் இருந்து பசை வடிகிறதாம். மரம் தன்னுடைய கிளைகள் வெட்டுப்பட்டால் மீண்டும் முளைக்கும் வரத்தை கேட்டுப் பெற்றது.

கடைசியாக இந்திரன் பெண்களிடம் போகிறான். தன்னுடைய நிலையை சொல்லி பெண்ணிற்கு தன்னுடைய மிகுதி தோசத்தை கொடுக்கிறான்.

பெண் பிரம்மஹத்தி தோசத்தை கொண்டதால் என்ன ஆனது தெரியுமா? பார்ப்பனனின் மகனை கொலை செய்த தோசத்தை பெண்கள் பெற்றுக் கொண்டதால், அவர்களுக்கு மாதவிடாய் வரத் தொடங்கியது.

தோசத்தை பெற்றுக் கொண்ட பெண் கேட்ட வரம் என்ன தெரியுமா? கர்ப்பமாய் இருக்கும் காலத்திலும் ஆண் சுகம் வேண்டும் என்பது. வரத்தை இந்திரன் அருளினான். பொதுவாக மிருகங்கள் கர்ப்ப காலத்தில் ஒன்று சேராது. ஆனால் மனிதர்களுக்கு அப்படியில்லை. மனிதர்களால் கர்ப்பமாக இருக்கும் காலங்களிலும் சேர முடியும். இதற்கு காரணம் தோசத்தைப் பெற்றுக் கொண்ட பெண் அதற்கு ஈடாக இந்திரனிடம் பெற்ற வரந்தானாம்.

இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனிய மதத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். அந்த மதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களுமே பார்ப்பனர் உயர்ந்தவர் என்றும் மற்றவர் இழிபிறப்புகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும்.. இதற்கு விளக்கம் கேட்டால் வேதங்களில் புராணக் கதைகளை காட்டுவார்கள்.

மனுதர்மம், பகவத் கீதை, வேதங்கள், சாத்திரங்கள் இந்து மத இதிகாசங்கள் என்று அனைத்தும் பெண்கள் பற்றிச் சொல்கின்ற கருத்துக்களை இந்தப் புராணக் கதையும் சொல்கிறது.

நாம் மனுதர்மத்திலும் பகவத் கீதையிலும் சில உதாரணங்களைப் பார்த்தோம். அவைகளின் கருத்துப் படி பெண் இழி பிறப்பானவள். காம குணம் உள்ளவள். கற்பு நிலையற்றவள்.

ஏன் பெண் இழிபிறப்பானவள்? அவள் பிரம்மஹத்தி தோசத்தை பெற்றிருக்கிறாள்

பெண் காம குணம் உள்ளவளா? ஆம், அவள் மாதவிடாயால் மூன்று நாட்கள் ஆண்சுகத்தை பெற முடியாது என்று அறிந்து அதற்குப் பதிலாக, கர்ப்ப காலத்திலும் ஆண்சுகத்தை பெறுவதற்கு வரம் வேண்டியிருக்கிறாள்

ஏற்கனவே நாம் பார்த்த சுலோகங்கள் சொல்கின்ற அதே கருத்தை இந்தக் கதையும் திருப்பிச் சொல்வதை கவனித்துப் பாருங்கள்.

இப்படி பெண்களை இழிபிறப்புகளாகவும் காமப்பிசாசுகளாகவும் இந்து மதம் கருதுவதால்தான், மந்திரங்களில் பெண்ணிற்கு நிறையக் கணவர்கள் உண்டு என்றும், பெண் அவளுடைய பிள்ளையை வேறு ஆடவனுக்கு பெற்றிருக்கக்கூடும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்து மத ஆச்சாரியார்களுக்கு பெண் மீது இத்தனை வெறுப்பு வந்ததற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன காரணம் என்ற கேள்வி உங்களுக்கு வரக் கூடும். வர வேண்டும். கேள்விகள் வந்தால்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்

அதற்கு பதிலை சொல்வதற்கு முன்பு இன்னும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பெண் பற்றிய பிரச்சனையால் இந்து மதத்தில் ஒரு பெரும் பிளவே ஏற்பட்டது என்று சொன்னேன் அல்லவா? அதை முதலில் பார்ப்போம்

தொடரும்.....

Link to comment
Share on other sites

சபேசன்

இன்றைக்காவது எனது வினாவிற்கு விளக்கம் தருவீர்களென ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து எனது கண்கள் பூத்துப் போனது தான் மிச்சம். நீங்கள் என்னடாவென்றால் முகத்தில் இருக்கும் மூக்கைத் தொட தலையின் பின் பக்கத்தினால் கையை விடுகின்றீர்கள்.

இந்து சமயம் ஆண்களைப் பற்றி உயர்வாகவே சொல்வதாக எழுதுகின்றீர்களே?? திருமணத்தின் முன் திருமண நிச்சயதார்த்தத்தின் போது ஏன் ஆணின் வீட்டில் கன்னிக்காலாக முள்முருங்கைமரம் நடுகின்றார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா?? அதற்குக் கூட இந்திரனை வைத்தே ஒரு கதை இருக்கின்றதே?? அதையும் நீங்கள் அறியவில்லையா???

Link to comment
Share on other sites

ஆண்களை இந்து மதம் உயர்வாக சொல்வதாக நான் சொல்லவில்லை. நான் எழுதியவற்றிற்கு அப்படி அர்த்தம் நீங்கள் எடுக்கக் கூடாது.

பார்ப்பன ஆண்கள் உயர்வானவர்கள். இப்படித்தான் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களோ பெண்களோ சூத்திரர்கள் அனைவரும் தாழ்ந்த பிறப்புக்கள். அதே போன்று எந்த வர்ணத்தில் இருந்தாலும் பெண் என்பவளும் ஒரு தாழ்ந்த பிறப்பு. இப்படித்தான் நான் எழுதியிருக்கிறேன்.

இந்த மதத்தில் அனைத்து ஆண்களும் உயர்வானவர்கள் என்று நான் சொல்வதாக புரிந்து கொள்வது தவறானது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று பாகங்களில் முடித்து விடுவேன்.

நீங்கள் சொன்ன முள்முருங்கை மரம் நடும் பின்னணிக் கதையை நான் அறியவில்லை. அதை சொல்வீர்களா? அறிய ஆவலாக இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்ன முள்முருங்கை மரம் நடும் பின்னணிக் கதையை நான் அறியவில்லை. அதை சொல்வீர்களா? அறிய ஆவலாக இருக்கிறேன்.

சபேசன்

இதையும் நீங்கள் வெட்டியெடுக்கும் இடங்களில் அறிந்து கொள்ளலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர் மிக நன்றகப் போகிறது. வாழ்த்துக்கள்!

இது மேலும் தொடரட்டும். புராணங்கள் இதிகாசங்கள் அனைத்திலும் பெண்ணானவள் எவ்வாறு இழிவு படுத்தப்பட்டுள்ளாள் என்பதையும் விளக்குங்கள்.

நேற்று இது தொடர்பாக என் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்து மதத்தில் நம்பிக்கை கொண்ட பெண் அவர். அவர் பின்வருமாறு கூறினார்.

இந்து மதத்தில் எல்லாம்பிடிக்கும்! :lol::lol: ஆனால் பாஞ்சாலியை மட்டும் பிடிக்காது. பெண்ணிற்கே கேவலம் என்றார் அவர்

அவளது கணவன் அருச்சுனன் மற்றும் உடன் பிறவாச் சகோதரன் கண்ணன் செயத பலதார மணங்கள் மட்டும் நியாயமா? பாஞ்சாலி (கதைப் படி. இவைகளை உண்மை என்று நான் நம்பவில்லை) சரியான பாவம் என்றேன் நான்.

உண்மைதான் பாஞ்சாலி பாவம்தான். அவளது விருப்பத்திற்கு மீறித்தான் அவளை ஐவரும் பங்குபோட்டுக் கொண்டார்கள்.

உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் பின்வருமாறு எழுதினார்

எப்படியும் இருக்கலாம் ஆணின் திமிர்

அருச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

திரௌபதிக்கு கணவன் ஐந்தாகவும்

நறுக்கென்று தைக்கிறது கவிஞரின் வரிகள்

Link to comment
Share on other sites

இந்து மதமும் பெண்களும் (பாகம் 5)

புராணங்களை கதைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படையில்தான் தமது சடங்குகளையும் விழாக்களையும் இந்துக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதம் என்பது வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. அதன் மூலம் இந்த வேதங்கள் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டோம்.

மனுதர்ம சாத்திரத்தையும் உதாரணம் எடுத்துப் பார்த்தோம். பகவத்கீதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். பின்பு ஒரு புராணக் கதையைiயும் உதாரணத்திற்கு எடுத்தோம். எல்லாமே பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண் தாழ்ந்த பிறப்பு என்று சொல்கின்றன. கற்பு அற்றவர்கள் என்கின்றன. தோசம் உள்ளவள் என்கின்றன.

நாம் பார்த்த புராணக் கதையின் படி பெண்ணினுடைய தோசம்தான் மாதவிடாயாக வெளிப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி தள்ளி வைப்பதன் காரணம் இதிலிருந்துதான் வந்தது.

பெண்களை மூன்று நாட்களும் தள்ளி வைப்பதற்கு இன்றைக்கு சிலர் அசுத்தம், ஆரோக்கியம், அது, இது என்று விஞ்ஞான விளக்கங்கள் தருவார்கள். ஆனால் அவைகள் உண்மை இல்லை.

மேற்குநாட்டுப் பெண்கள் வீட்டில் தள்ளி இருப்பது இல்லை. அங்கு யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை. இன்றைக்கு பெண்கள் தமது மாதவிடாய் காலங்களிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகளிற்கு சென்று வேலை செய்கின்றார்கள். அங்கும் யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை.

ஆனால் இன்றைக்கும் மாதவிடாய் உள்ள ஒரு இந்துப் பெண்ணால் ஒரு கோயிலிற்கு சென்று வழிபட முடியாது. கோயிலில் யாரும் இல்லாத நேரத்தில் கூட போக முடியாது. தீட்டு என்று சொல்லி தடுத்து விடுவார்கள். மாதவிடாய் என்பது பெண்ணினுடைய தோசத்தின் வெளிப்பாடு என்று இந்து மதம் உறுதியாக நம்புவதே இதற்கு காரணம். ஒரு புராணக் கதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு உதாரணம்.

புராணங்களை வெறும் கதைகள் என்று தூக்கி எறியாது, அதை உண்மை என்று நம்பி இந்து மதம் தொடர்ந்தம் அவைகளை கடைப்பிடித்து வருவதாலேயே நாமும் அது குறித்து பேச வேண்டி உள்ளது.

இந்து மதம் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதே.

இந்த மதத்தில் பெண்ணை வைத்து ஒரு பிளவு ஏற்பட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம்.

இந்து மதத்தில் பல பிரிவுகள் இருப்பதாக சொல்வார்கள். அதிலே சைவம், வைணவம் போன்றவைகள் முக்கியமானவை. சைவத்திலும் வீரசைவம், சிந்தாந்த சைவம் என்ற பிரிவுகள் இருக்கின்றன. வைணவத்தில் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் இருக்கின்றன.

வீரசைவம், சைவசிந்தாந்தம் போன்ற பிரிவுகளுக்கிடையில் பெரியளவில் சச்சரவுகள் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் வடகலைக்கும் தென்கலைக்கும் நடந்த பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். இன்றுவரை பல இடங்களில் இவர்களுக்குள் சர்ச்சைகள், பகையுணர்வுகள் உண்டு. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு வெகு குறைவு.

வடகலை, தென்கலை பிரிவுகளை நாமங்களை வைத்துத்தான் இனம் காண்பார்கள். வடகலையினர் "Y" வடிவத்திலே நாமம் கீறி நடுவில் ஒரு கோடு போடுவார்கள். தென்கலையினர் "U" வடிவத்தில் நாமம் கீறி ஒரு கோடு போடுவார்கள்.

இந்த நாமம் பற்றி இரு தரப்பும் தருகின்ற விளக்கம் ஒன்றுதான். நாமத்தின் இரு கரையும் உள்ள கோடுகள் பெருமாளின் பாதங்களாம். இரண்டு கோடுகளும் பெருமாளின் பாதங்கள் என்றால், நடுவில் சிவப்புக் வண்ணத்தில் உள்ள குறி எதுவென்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

சைவர்கள் ஆண்குறியை லிங்கம் என்று வணங்குவார்கள். வைணவர்கள் நெற்றியில் பூசுவார்கள். இதை பின்பு சந்தர்ப்பம் வரும் போது தனியாகப் பார்ப்போம்.

இந்த வடகலை, தென்கலை நாமம் பற்றிய ஒரு சர்ச்சை வெகுபிரசித்தம். சிறிரங்கம், காஞ்சிபுரம் பெருமாள் கோயில்களில் நின்ற யானைகளுக்கு எந்த நாமம் போடுவது என்ற பிரச்சனை வந்து அது நீதிமன்றத்தில் நீண்ட காலம் இழுபட்டது.

வெள்ளைக் காரர் காலத்தில் தொடங்கிய வழக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. சில நேரங்களில் ஒரு நாமத்திற்கு சார்பாக தீர்ப்பு வரும். ஆனால் அதற்குள் அந்த யானை இறந்து போயிருக்கும். இப்பொழுது புதிய யானைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி நாமம் சாத்த மறு தரப்பு விடாது. அது பழைய யானைக்குத்தான் பொருந்தும், புதிய யானைக்கு எமது நாமத்தை சாத்தத்தான் வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் போவார்கள். அனேகமாக தீர்ப்பு வருவதற்கு முதல் அந்த யானையும் இறந்து போயிருக்கும்.

இங்கிலாந்து நீதிமன்றங்கள் வரை இந்தப் பிரச்சனை போனது. வெள்ளைக்கார நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இதை "Y,U" பிரச்சனை என்றுதான் அழைப்பார்கள்.

இப்படி பல வேடிக்கைகளையும் பகைகளையும் உருவாக்கிய இந்த "Y,U" பிரிவுகள் ஏன் உருவாகின என்று தெரியுமா? இதற்கு காரணம் பெண் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

தொடரும்.....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 6)

இந்து மதம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறது என்று சிலர் புருடா விட்டுக் கொண்டு திரிவார்கள். இன்றைக்கு உள்ள பெரிய மதங்களில் பெண் வழிபாடு உள்ள ஒரே மதம் இந்து மதம் என்று பெருமை வேறு பேசுவார்கள். இவர்கள் வணங்குகின்ற இந்தப் பெண் தெய்வங்களையே இந்து மதம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்பதை அறிந்தால் இவர்கள் இப்படிப் பேச மாட்டார்கள்.

வைணவத்தில் உள்ள வடகலை, தென்கலை பிளவிற்கு காரணமும் பெண்தான் என்று சொல்லியிருந்தேன். அப்படிச் சொன்னதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம். வடகலை, தென்கலை என்கின்ற இந்த இரண்டு பிரிவுகளிலும் ஏறக்குறைய 40 விதமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு பிரிவினரும் நிறத்தில் கூட சற்று வேறுபட்டிருப்பார்கள் என்று கூட சிலர் சொல்வது உண்டு.

வடகலை, தென்கலை வேறுபாடுகள் உருவாவதற்கான காரணங்களாக பிரபந்தங்கள் பற்றிய சர்ச்சை, ராமானுஜர் மற்றைய சாதியனரையும் பூணுல் அணிவித்து பார்ப்பனர் ஆக்கியதால் உருவாகிய வேறுபாடுகள் போன்றவைகளை காரணங்களாக சொல்வார்கள். ஆனால் இவைகளை விட இவர்களுக்குள் பிளவு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது பெருமாளின் துணைவியாராகிய பிராட்டியார் பற்றிய சர்ச்சைதான்.

வைணவர்கள் வணங்கும் பெருமாளோடு பக்கத்திலேயே பிராட்டியார் அமர்ந்திருக்கிறார். இந்தப் பிராட்டியாருக்கு பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்கும் சக்தி இருக்கிறாதா என்பதில்தான் வைணவர்களுக்குள் சர்ச்சை ஆரம்பமானது. "பரமாத்மா", "ஜீவாத்மா" போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். இராமாயணத்தை போதிக்கின்ற சிலர் இராமனை "பரமாத்மா" என்றும் சீதையை "ஜீவாத்மா" என்றும் கூறுவதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

பரமாத்மா என்று கடவுளையும் ஜீவாத்மா என்று மனிதப்பிறப்பையும் சொல்வார்கள். பெருமாளின் துணைவியாக இருந்தாலும், பிராட்டியார் ஒரு ஜீவாத்மா மட்டுமே என்பது ஒரு பிரிவினரின் வாதம். "பிராட்டியாரால் பக்தர்களுக்கு மோட்சத்தை வழங்க முடியாது, அவர் ஒரு பெண், பெண்ணிற்கு மோட்சம் வழங்கும் சக்தி இல்லை, வேண்டுமென்றால் பக்தருக்கு மோட்சம் வழங்கச் சொல்லி பெருமாளிடம் சிபாரிசு செய்யலாம்" என்ற கருத்தோடு அவர்கள் உறுதியாக நின்றார்கள்.

கடவுளின் மனைவியாக இருப்பதால், அவருக்கும் கடவுளின் அம்சம் வந்துவிடுகிறது என்றும், அதனால் அவராலும் பக்தர்களுக்கு மோட்சம் வழங்க முடியும் என்று மறுபிரிவினர் வாதிட்டார்கள். இப்படி ஆரம்பித்த பிரச்சனை வடகலை, தென்கலை என்று பிளவில் போய் முடிந்தது.

கடவுளுக்குப் பக்கத்தில் துணைவியாக அமர்ந்திருந்தாலும், பெண் என்பதால் அவருக்கு மோட்சம் வழங்கும் சக்தி உண்டா என்ற விடயத்தில் இந்து மதத்தால் ஒருமித்த கருத்தை காண முடியவில்லை என்பதைத்தான் இங்கு கவனிக்க வேண்டும். ஒரு புறம் அகிலாண்டேஸ்வரி, லோகநாயகி என்றெல்லாம் பெண் தெய்வங்களை புகழ்ந்து கொண்டே, மறுபுறம் ஒரு மோட்சம் வழங்குகின்ற சக்தி கூட இல்லை என்று சொல்லப்படுகின்ற நிலையில்தான் இந்தப் பெண் தெய்வங்களை இந்து மதம் வைத்திருக்கிறது.

ஆண் தெய்வங்களால் அழிக்க முடியாத அசுரர்களை பெண் தெய்வங்கள் அழித்ததாக புராணங்கள் இருக்கின்றனவே என்ற கேள்வி இந்த இடத்தில் உங்களுக்கு வரலாம். அந்தப் புராணங்களை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்களின் பலத்தைப் பெற்றுத்தான் அசுரர்களை அழித்திருப்பார்கள்.

பெண் தெய்வங்களுக்கு என்றே பெரும் எடுப்பில் கொண்டாடப்படுகின்ற நவராத்திரி பற்றிய புராணக் கதையிலும் இந்த விடயம் அடங்கியிருக்கிறது. பெண்ணால் மட்டுமே கொல்லப்படக் கூடிய வரம் பெற்ற மகிசாசுரனை அழிப்பதற்கு பராசக்தி தன்னுடைய பலத்தோடு மட்டும் செல்லவில்லை. ஒரு பெண்ணாகிய அவளால் அது முடியாது என்று, பராசக்தி அனைத்து ஆண் தெய்வங்களின் பலத்தையும் கேட்டுப் பெறுகிறாள். சிவன், விஸ்ணு, பிரம்மன், இந்திரன், தேவர்கள் என்று அனைத்து ஆண்களின் பலத்தையும் பெற்று மகிசாசுரனை அழிக்கிறாள். பெண்ணிற்கு தனித்து எந்த சக்தியும் இல்லை என்பதுதான் இங்கு உணர்த்தப்படுகிறது.

ஆண் தெய்வத்தோடு போட்டி போட்டு பெண் தெய்வங்கள் தோற்றுப் போன கதைகளை சொல்கின்ற ஓராயிரம் புராணங்கள் இந்து மதத்தில் உண்டு. பெண்கள் பொதுவாக நடனத்தில், நளினத்தில் வல்லவர்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அப்படியான நடனத்திலும் சிவன் பார்வதியை வென்றுவிடுகிறார். அதுவும் எப்படி சிவன் வெற்றி பெறுகிறார் தெரியுமா?

சிவனிற்கும் பார்வதிக்கும் நடனப் போட்டி உச்சக் கட்டத்தை அடைகிறது. பார்வதி வெற்றி பெற்றுவிடும் நிலையில் இருக்கிறார். அப்பொழுது சிவன் வலதுகாலை நிலத்தில் ஊன்றியபடி இடது காலை மேலே தூக்கினார். நடனத்தில் ஒரு வகை என்று பார்வதி நினைத்துக் கொண்டிருக்க சிவனுடைய இடது கால் மேலும் உயர்ந்து கொண்டே போனது.

இடது காலை மேலே உயர்த்தி தன்னுடைய ஆண் குறி பார்வதியின் கண்ணில் படுவது போன்று சிவன் செய்தார். பார்வதி அதைக் கண்டு திகைத்துப் போய் செய்வதறியாது நின்றார். பார்வதி அதிர்ச்சியில் நிற்க, சிவன் இடது காலை தூக்கியபடியே தொடர்ந்து ஆடி வெற்றி பெற்றார். நடராஜர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

பெண் பலவீனமானவள் என்பதையும், பெண்ணை தோற்கடிக்க எந்த வழியையும் கையாளலாம் என்பதையும் இந்து மதம் இந்தப் புராணக் கதையின் மூலம் சொல்கிறது. தன்னுடைய கணவனின் ஆண்குறியைக் கண்டு செய்வதறியாது சிலை போல் நின்ற அதே பார்வதி ஒரு குதிரையின் குறியைக் கண்டு விரகதாபத்தில் துடித்த கதையும் உண்டு.

ஒரு முறை பார்வதி ஒரு குதிரையின் நீளமான குறியைக் கண்டு விட்டார். அதைக் கண்டு மோகித்து விரகதாபத்தில் பார்வதி துடித்தார். பார்வதி நிலையை உணர்ந்த சிவன் தானே ஒரு குதிரையாக மாறி பார்வதியை புணர்ந்து, அவருடைய விரகதாபத்தை தீர்த்து வைத்தார்.

இந்து மதம் சாதரண மானிடப் பெண்களைத்தான் இழிவுபடுத்துகிறது என்று யாரும் நினைத்து விட வேண்டாம். தெய்வங்கள் என்றாலும் அவைகள் பெண்களாக இருக்கின்ற போது, அந்தப் பெண்களையும் சேர்த்தே இந்து மதம் இழிவுபடுத்தி வந்திருக்கிறது.

பெண் தெய்வம் என்பவள் இறந்தவர்களுக்கு மோட்சம் வளங்கும் சக்தி அற்றவள், ஆணின் பலம் இல்லாமல் எதையும் செய்ய முடியாதவள், ஆண் தெய்வத்திற்கு அடங்கி இருக்க வேண்டியவள், கணவனிடமோ, குதிரையிடமோ, அல்லது வேறு யாரிடமோ ஆண்குறியை கண்டு விட்டால் வாய்பிளந்து நிற்பவள்.... இப்படித்தான் இந்து மதம் பெண் தெய்வங்களை "போற்றுகிறது".

பெண் தெய்வங்களுக்கு என்று நடத்தப்படுகின்ற விழாக்கள் கூட அருவருப்பான ஆணாதிக்க சிந்தனையை கொண்டவைதான். விழாக்களுக்கான காரணங்களை தேடிப் பார்த்தால், அவைகள் புரியும். எத்தனையோ கோயில்களில் இன்றைக்கும் ஆண் தெய்வங்களுக்கு விசேடமான நெய்வேத்தியமும், பெண் தெய்வங்களுக்கு மிகச் சாதரண படையலும் படைக்கப்படுகின்றன.

பெண் தெய்வங்களையே இந்து மதம் இழிவு படுத்துகின்ற போது, சாதரண மானிடப் பெண்களை மந்திரங்களிலும், நடைமுறையிலும் இழிவுபடுத்துவது குறித்து இனியும் உங்களுக்கு ஏதும் ஆச்சரியம் உண்டா?

பெண் பற்றி இந்து மதம் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை இதுவரை ஓரளவு பார்த்தோம். பெண் மீது இந்து மதம் இப்படி வெறுப்பை கொட்டுவது ஏன் என்பதை இனிப் பார்ப்போம்.

தொடரும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகவத் கீதை தெரியல்லை என்றா பொத்திக்கிட்டு இருக்கனும் சார், அதுக்காக தவறான அர்த்தங்களை கொடுத்து அதின்ர புனிதத்தை கொடுக்க கூடாது. நடக்காது மூட நம்பிக்கைகளை நம்புற முட்டாள்கள் நடந்ததுகளை ஏற்க மறுப்பது மடவை.

ஏதோ மேதை என்ற கணக்கில கட்டுரை எழுதுறது சரி ஆனால் அதில யாதாாத்தத்தையும், உண்மையையும் எழுதனும் உங்கட பெளத்தறிவுக்குள்ள அதை தொலைச்சிட்டு பூனை கண்ணை மூடிட்டு உலகம் இருட்டு என்று சொன்ன மாதிரி எழுத கூடாது.

கீதை மட்டுமில்ல,

பைபிள், குர்ஆன் இன்னும் இருக்கு எடுத்து படிச்சிட்டு கட்டுரையை எழுதுங்க. இந்து மதத்தை தவறாக பார்ப்பவன் கண் நடுநிலையான ஆய்வுகளைத்தராது. உங்களால சமூகம் முன்னேறாட்டியும் பரவாயில்லை. நீங்கள் சமூகத்தை கெடுக்காமல் இருக்கோ..!

அழகான பறவை அவர்களே............

உங்கள் அழகான கருத்தில் கொஞ்சம் அழகாக காரணத்தையும் காட்டினால்?? உங்கள் கருத்தும் உங்களைப்போல் அழகாக இருக்குமல்லவா???

அதைவிடுத்து இந்து மதம் புனிதமானது புனிதமானது புனிதமானது

என்று உங்களுக்கு முன்கூட்டியே பிறந்த பலர் கூறியதை நம்பி நாமும் புனிதத்தை தேடி சென்றால்

எல்லாம் மேல் நாட்டு கலாச்சாரத்திலும் கேவலமாக கிடக்கிறது என்று சற்றே வாயை திறந்தால்

உடனே ஓடி வருகிறீர்கள் "புனிதமானது .... புனிதமானது..... புனிதமானது

அந்த புனிதத்தை சற்றே விளக்கலாமே??

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்??? சபேசன் அண்ணா எழுதுவது மனுதர்மத்தில் இல்லை என்கிறீர்களா??

அல்லது மனுதர்மத்தில் பெண்கள் என குறிக்கப்பட்டிருப்பது............. வேறு ஏதாவது என்கின்றீர்களா??

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 7)

இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை இதுவரை சான்றுகளோடு பார்த்த நாம், அதற்கான காரணத்தை இனிப் பார்ப்போம்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவைகள் ஆரியர்களின் வருகையோடு சம்பந்தப்பட்டவை. மத்திய ஆசியாவில் இருந்து பாலைவனங்களையும், மலைகளையும் கடந்து நெடிய பயணம் மேற்கொண்டு இந்தியாவிற்கு ஆரியர்கள் வந்த போது, அவர்கள் பெண்களை அழைத்து வரவில்லை.

எந்த மக்களை அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் ஆரியர்கள் இழிவுபடுத்தினர்களோ, அந்த மக்களிடம் இருந்துதான் தமது பெண் துணைகளை பெற்றுக் கொண்டார்கள். அந்த வகையில்தான் பெண்களும் சூத்திரர்களும் ஒன்று என்று இந்து ஆரிய வேதங்கள் குறிப்பிடுகின்றன.

ஆரியர்கள் இந்தியாவிற்கு நுழையும் போது பெண்களை அழைத்து வரவில்லை என்பதை பல வரலாற்று அறிஞர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளார்கள். இந்த ஆய்வுகளை ஆரியர்களின் புராணங்களும் மறைமுகமாக ஒத்துக் கொள்கின்றன.

புராணங்களிலும் வேதங்களிலும் மன்னர்களும், ரிசிகளும் தமது துணைகளை பழங்குடி மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்கின்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதையும் கவனிக்கலாம். ஆரியர்களின் வெற்றியைப் பாடும் இராமாயணத்தின் கதாநாயகியாகிய சீதையும் மண்ணில் இருந்து தோன்றியவள் என்பதையும் இங்கு நினைவுபடுத்துகின்ற பொழுது, இவைகள் சொல்கின்ற உட்கருத்துக்கள் புரியும்.

இப்படி தாம் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியவர்களிடம் இருந்து பெற்ற பெண்களையும் சூத்திரர்களைப் போன்றே இழிவாக வரையறுக்கு வேண்டிய தேவை ஆரியர்களுக்கு உருவாகிவிட்டது. இதை விட பெண்களை இழிவுபடுத்துவதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, இந்தியாவில் இருந்த வழிபாட்டு முறைதான் அந்தக் காரணம்.

உலகின் முதலாவது சமூகம் தாய் வழிச் சமூகமாகவே இருந்தது. பெண்களை மதித்து, பெண்களுக்கு கீழ்படிந்து, பெண்களை தெய்வமாக வழிபட்ட சமூகமாகவே அன்றைய சமூகம் இருந்தது. பின்பு ஆணாதிக்க சமூகம் உருவான போது பெண்களை மதிப்பதும், வணங்குவதும் இல்லாது போயின அல்லது குறைந்து போயின.

அதே வேளை பெண்களை சமமாக மதித்தார்களோ இல்லையோ, பெண் தெய்வங்களை முதற் தெய்வமாக வழிபடுவது மட்டும் பல இடங்களில் தொடர்ந்தது. பண்டைய நாகரீகங்களில் பெண் தெய்வ வழிபாடுகளே முதன்மை பெற்றிருந்தன. அதே போன்று சிந்து வெளிநாகரீகத்திலும் பெண் தெய்வ வழிபாடு உச்சம் பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தை கண்டுபிடித்த தொல்லியல் வல்லுனரான சேர் ஜோன் மார்ஸல் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாடு முதன்மையானதாக இருந்ததற்கான சான்றுகள் பலவற்றை கண்டுபிடித்தார். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். ஒரு இலச்சனையில் இரண்டு அரச மரக் கிளைகளுக்கு இடையில் ஒரு பெண் தெய்வம் நிற்கின்றது. அந்தப் பெண் தெய்வத்தை வணங்கியபடி மக்களும் மிருகங்களும் நிற்கின்றன. இப்படி எல்லோரும் வணங்கும் முழு முதற் தெய்வமாக பெண் தெய்வமே இருந்தது என்பதற்கு சான்றாக பல ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிந்து வெளிநாகரீகத்தை தொடர்ந்து ஆராய்ந்தவர்களும் சிந்து வெளியில் பெண் தெய்வ வழிபாட்டு சமூகமே இருந்தது என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

அப்படியே தமிழகம் நோக்கி எமது பார்வையை திருப்பினால், அங்கும் பெண் தெய்வ வழிபாடே முதன்மை பெற்றிருந்ததைக் காணலாம். சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்தை "பெருங்கற்படைக் காலம்" என்று அழைப்பார்கள். இக் காலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டுத் தெய்வமாக "கொற்றவை" என்கின்ற பெண் தெய்வம் விளங்கி வந்தது.

பெருங்கற்படைக் காலத்து மக்கள் ஆநிரை கவர்கின்ற எயினர்களாகவும், வேட்டுவர்களாகவும் வாழ்ந்தனர். இந்த மக்கள் ஆநிரை கவரச் செல்கின்ற போதும், வேட்டைக்கு செல்கின்ற போதும் முதலில் கொற்றவையை வணங்கிய பின்பே செல்வர். இவர்களுடைய அனைத்து சடங்குகளிலும் கொற்றவை வழிபாடு இடம்பெற்றிருந்தது.

சிந்து வெளிநாகரீகத்தில் மக்களாலும், மிருகங்களாலும் வணங்கப்படுவது போன்று காட்சி தருகின்ற பெண் தெய்வம் ஆநிரை கவர்கின்ற எயினர்கள் வணங்கிய கொற்றவையா என்பது ஆய்வுக்கு உரியது.

சங்க இலக்கியங்கள் கொற்றவையை முருகனின் தாய் என்று குறிப்பிடுகின்றன. முருகனைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலும் "கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் கொற்றவை முதன்மைப்படுத்தப்படுகிறாள். ஆனால் சங்க காலத்தில் கொற்றவை வழிபாடு அருகிவிட்டது. கொற்றவையை வைத்து செய்யப்பட்ட சில வழிபாடுகள் சங்க காலத்தில் முருகனைக் வைத்து செய்யப்பட்டதை காணக் கூடியதாக இருக்கிறது.

சங்க காலத்தில் தமிழர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்களவு ஆரியர்களின் செல்வாக்கு ஊடுருவி விட்டதை இங்கே குறிப்பிட வேண்டும். அதுவரை தாய்வழிச் சமூகமாக இருந்த தமிழர்கள் அதன் பிறகு பெண் தெய்வங்களை தவிர்த்துக் கொண்டு, ஆண் தெய்வங்களை வழிபடத் தொடங்கினார்கள்.

இங்கே ஒரு விடயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஏறக்குறைய ஒரு ஆயிரம் ஆண்டுகள் கொற்றவையை மக்கள் வணங்கினார்கள். பின்பு கொற்றவை இருந்த இடத்தில் முருகன் வந்து விடுகின்றான். அப்படி முருகனைக் கொண்டு வருவதற்கு "கொற்றவையின் மகனே முருகன்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சில நூறு ஆண்டுகள் கழிந்த பின்பு முருகன் இருந்த இடத்தில் "ஸ்கந்தன்" வந்து உட்கார்ந்து கொள்கிறான். இங்கே "முருகனும் ஸ்கந்தனும் ஒன்றுதான்" என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

(பெண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக இருந்த தமிழர்கள், பின்பு ஆண் தெய்வ வழிபாட்டுச் சமூகமாக மாறி, பின்பு ஆரிய வழிபாட்டுச் சமூகமாக மாறிவிட்டதை கொற்றவை, முருகன், ஸ்கந்தன் என்கின்ற மூன்றையும் வைத்து இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.)

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். ஆண் தெய்வ வழிபாட்டினை உடைய ஆரியர்கள் இந்தியாவிற்குள் தமது தெய்வங்களை பரப்புவதற்காக, அந்த மண்ணின் மக்களுடைய தெய்வங்களை இழிவுபடுத்தினார்கள். பெண் தெய்வ வழிபாட்டை கேவலப்படுத்தும் நோக்கோடு, பெண்களையே கேவலப்படுத்தினார்கள். பெண் தெய்வங்கள் பற்றி காமம் சார்ந்த கதைகளையும் புனைந்தார்கள்.

ஆரம்பத்தில் ஆரியர்கள் பெண்கள் விடயத்தில் ஒரு சமரசப் போக்கை கடைப்பிடித்ததை சில இடங்களில் காணக் கூடியதாக இருக்கிறது. இந்திய மண்ணிலே பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். சங்க இலக்கியங்களை படைத்த புலவர்களில் ஏறக்குறைய 50 பேர் பெண்கள் என்பதை இங்கே நினைவில் கொள்க. பெண்கள் கல்வி கற்றவர்களாக இருந்ததோடு மக்கள் தமது முதற் தெய்வங்களாக பெண் தெய்வங்களையும் வழிபட்டார்கள்.

ஆரியர்களும் இவைகளைப் பார்த்து "பெண் ஆணை விட நான்கு மடங்கு அறிவானவள்" என்று கூட தமது வேதங்களில் எழுதினார்கள். ஆணை விட பெண் பலம் மிக்கவள் என்றும் எழுதினார்கள். பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்த ஆதே ஆரியர்கள் தமது புராணத்தில் வாதில் ஆண்களை வென்ற அறிவு மிக்க ஒரு பெண்ணையும் படைத்திருக்கிறார்கள்.

உலகில் இருந்து வந்த அனைத்து அறிஞர்களையும் வாதம் செய்து வென்று, தன்னுடைய துணையை தானே தேர்ந்தெடுத்து, தன்னுடைய துணைக்கு வழிகாட்டியாக இருந்து, பின்பு கணவனோடு சேர்ந்து துறவும் மேற்கொண்ட மைத்ரேயி என்கின்ற ஒரு பெண் பாத்திரமும் வேதங்களில் வருகிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த போது, அங்கே இருந்து அறிவு மிக்க பெண்களைக் கண்டு இப்படி ஒரு பாத்திரத்தை அவர்கள் தமது கதைகளில் உருவாக்கியிருக்கக் கூடும்.

ஆனால் பின்பு மெது மெதுவாக அவர்கள் மைத்ரேயிக்களை இல்லாது செய்து, ஆணுக்கு அடங்கி நடக்கின்ற முட்டாள்தனமான சீதைகளையும் நளாயினிகளையும் உருவாக்கினார்கள். பெண்களுக்கு கல்வியை தடை செய்து அடக்கி ஒடுக்கினார்கள்.

இதற்கான காரணம் தமது மதத்தை (ஆண் தெய்வ வழிபாடு) இந்தியாவில் பரப்புவதுதான். அதற்கு தடையாக நின்ற பெண் தெய்வங்களையும், பெண்களின் அறிவையும் இழிவு செய்து இல்லாது ஒழித்தார்கள். ஒழிக்க முடியாத சில இடங்களில் சமரசம் செய்து கொண்டார்கள். பெண் தெய்வங்களை தம்முடைய ஆண் தெய்வங்களுக்கு அடங்கி நடக்கின்ற மனைவிகளாகவும், துணைவிகளாகவும் மாற்றினார்கள்.

(அடுத்த பாகத்துடன் முடிவுறும்)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்து மதமும் பெண்களும் (பாகம் 8)

இந்தியாவின் மண்ணின் மைந்தர்களிடம் இருந்த பெண் தெய்வ வழிபாட்டை சிறுமைப்படுத்தும் நோக்கில் ஆரியர்கள் பெண்களை சிறுமைப்படுத்தினார்கள் என்பதை கடந்த பாகத்தில் பார்த்தோம்.

இன்றைக்கு வரைக்கும் தமிழ் மக்களிடம் இந்தப் பெண் தெய்வ வழிபாடு முக்கிய இடம் பிடித்திருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ கிராமங்களின் காவல் தெய்வமாக பெண் தெய்வங்களே இருக்கின்றன. பல இடங்களில் "அம்மன் வழிபாடு" ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தமிழர்களை கவனித்தால் கூட அங்கும் பெண் தெய்வ வழிபாடு இருப்பதை பார்க்க முடியும். ஈழத்தில் மடுமாதாவும் தமிழ் நாட்டில் அன்னை வேளாங்கண்ணியும் மிக அதிகமாக வழிபடப்படுவதை கவனிக்கலாம்.

இன்றைய நிலையே இப்படி இருக்கின்ற போது, கொற்றவை காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லிப் புரிய வேண்டியது இல்லை. இப்படி உச்சம் பெற்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டை இல்லாது செய்வதற்காக ஆரியர்கள் பெண்களை மிக மிக இழிவுபடுத்தினார்கள்.

நாம் இந்தத் தொடர் முழுவதும் இரண்டு விடயங்களைப் பார்த்தோம். இந்து மதம் எப்படியெல்லாம் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பதையும், ஏன் இழிவுபடுத்துகிறது என்பதையும் பார்த்தோம்.

எப்படியெல்லாம் இழிவுபடுத்துகின்றன என்பதை பல்வேறு சான்றுகளோடு தந்திருக்கிறேன். இந்தச் சான்றுகள் எவையும் எந்த ஒரு கடவுள் மறுப்பு நூல்களில் இருந்து பெறப்பட்டவை அல்ல என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைத்து சான்றுகளுமே இந்து மதத்தை சேர்ந்த மத நம்பிக்கையாளர்களால் வெளியிடப்பட்ட நூல்களில் இருந்தே பெறப்பட்டன.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். மனுதர்மத்திலிருந்து சில தரவுகளை தந்திருக்கிறேன். இவைகள் 1919ஆம் ஆண்டு இளையவல்லி கௌசிக இராமானுஜசாரியார் என்பவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட "மனுதர்ம சாஸ்திரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. சமஸ்கிருதபாசையில் இருப்பதால், இதனால் சிலர் மட்டுமே பயன்பெறுகிறார்கள் என்றும், அதனால் எல்லோரும் பயன்படும் வண்ணம் தமிழில் மொழி பெயர்ப்பதாக அவர் எழுதியுள்ளார். இந்த மொழி பெயர்ப்பு சரியானது என்று சமஸ்கிருத பண்டிதராகிய வே. வேதாந்தசாரியார் என்பவர் உறுதி மொழி வழங்கி கையொப்பம் இட்டுள்ளார்.

திராவிட கழகங்கள் போன்ற கடவுள் மறுப்பு இயக்கங்கள் வெளியிட்ட நூல்களில் இருந்து தரவுகளைப் பெறும்போது, அந்தத் தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் வழமை போன்று சந்தேகம் எழுப்பக்கூடும் என்பதனால், அவ்வாறான நூல்களை தவிர்த்து முற்று முழுதாக கடவுள் நம்பிக்கையாளர்கள் எழுதிய நூல்களை மட்டுமே என்னுடைய தொடருக்கு பயன்படுத்தியுள்ளேன். அதுவும் சமஸ்கிருதம் நன்கு அறிந்த பார்ப்பனர்கள் எழுதிய நூல்களையே பயன்படுத்தியிருக்கிறேன்.

ஆகவே இதிலே உள்ள தரவுகள் குறித்து கடவுள் நம்பிக்கையாளர்கள் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

திருமணத்தில், இறுதிச் சடங்கில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் பெண்ணை மிகவும் இழிவுபடுத்துவதன் காரணத்தை ஆராயப் புகுந்ததில் இந்தத் தொடர் உருவாகியது. இந்து மதத்தின் கருத்தின்படி பெண் என்பவள் இழி பிறப்பு. சூத்திரர்கள் என்று தம்மால் அடையாளப்படுத்தப்பட்டவர்களி

Link to comment
Share on other sites

"இந்து மதமும் பெண்களும்" என்ற தொடர் இத்தோடு முடிந்து விட்டது.

சில நாட்கள் கழித்து "பகவத் கீதை" பற்றி புதிய தொடர் எழுதப் போகிறேன்.

Link to comment
Share on other sites

"இந்து மதமும் பெண்களும்" என்ற தொடர் இத்தோடு முடிந்து விட்டது.

சில நாட்கள் கழித்து "பகவத் கீதை" பற்றி புதிய தொடர் எழுதப் போகிறேன்.

பெரியார் தாசன் அவர்களை கேட்டீர்கள் எண்டா எங்கை இருந்து சுட்டார்கள் எண்டு சொல்லுவாரே....!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.