Jump to content

Recommended Posts

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

நான்

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை

திருநெல்வேலி பேட்டை

--------------------------------------------------------------------------------

இ·தொரு பரந்த வுலகம். இதன் விசித்திரம் அளவிடற் கரியது. வெறுங் கண்ணுக்கே இ·த்ப்படியிருக்கிறது. அறிவுக்கண்கொண்டும் இதனை நோக்க்குக். இதனை விட்டுச் செல்ல மனமே வராது. அதனை அவ்விசித்திரம் அத்துணைக் கவரக் கூடியதா யிருக்கிறது. அவ்வியல்பினதாகிய இவ்வுலகம் ஒரு 1 காரியப் பொருளா? அல்லது ஒரு 2 முலப்பொருளேயா? (காரியப்பொருள் - செய்யப்பட்ட பொருள்.) மனிதன் அதனை யாராய்ந்தான். இவ்வுலகுக்குப் பல மூலப் பொருள்களுள, அவற்றிலிருந்து உண்டானது இவ்வுலகம்: அவன் கண்டதது. அம் மூலப்பொருள்களின் தொகையையும் இவ்வளவென அவன் கணக்கிட்டான். அம்மட்டோ? ஒவ்வொரு மூலப்பொருளும் நுண்ணிது, பல சத்திகளையுடையது என்பதும் அவனுக்குத் தெரியலாயிற்று. அவ்வாராய்ச்சி இன்னும் நடந்து வருகிறது. அதனால் மனித சமூகம் அடைந்த நலன் யாது? அதுவும் பலவாயிற்று. வான வூர்திகள் பறந்தன. மின் விளக்குகள் ஒளிர்ந்தன. பேரூர்கள் போர் கப்பல்கள் நீந்தின. போர்க் கருவிகள் குமுறின. வானொலிகள் அலறின. இன்னும் எத்தனையோ அற்புத எந்திரங்கள் வெளிப்பட்டன. இவ்வுலக மூலப்பொருள்களின் உண்மையையும், பன்மையும், நுண்மையையும், வன்மையையும், பயப்பாட்டையும் எவ்வளவுக்கு அதிகங் கண்டான் அவ்வளவுக்கு இவ்வுலக வின்ப நுகர்ச்சியில் தன்னையே மறந்தான் அவன். ஏன்? அவன் தன்னையே சாகடித்துக் கொண்டான். எப்படி? அவன் ஆராய்ந்த இவ்வுலகம் சடம். (சடம் - அறிவற்றது.) அவன் சித்து (சித்து - அறிவுள்ளது.) சடமுஞ்சித்தும் மாறுபட்ட இயல்பின.&nbssp; அவன் இவ்வுலகை ஆராய்கிற 3 வினை முதல். இவ்வுலகம் அவனால் ஆராய்ப்படுகிற காரியம். அவன் சடவுலகை ஆராய ஆராய இன்பம் பெறுகிறதென்றான். சித்தாகிய தன்னையும் அவன் அங்ஙனமே ஆராயலாம். அதனால் உளதாகு மின்பம் உயர்தர முடையதாயும், இன்னும் மிக்கதாயும் இராதா? சடவாராய்ச்சியால் வரு மின்பத்தைவிடச் சித்தாராய்ச்சியால் வருமின்பம் சாலச் சிறந்ததே. அவன் தன்னை 'நான்' யார்? என்று வினவி யாராய்ந்தானா? இல்லை. ஆராய்ந்தானெனவே கொள்க. சிரத்தையற்ற ஆராய்ச்சியே அது. அவன் தீவிர ஆராய்ச்சியை உலகின்பாற் செலுத்தினான்; மந்த வாராய்ச்சியைத் தன்பால் வைத்துக் கொண்டான். அதனால், நான் யார்? என்பதற்கு அவன் கண்ட விடையென்ன? 'நான் யாராயிருந்தாலென்ன? என்னை இன்னானெனத் தெரிந்து கொண்டாற்றான் என்னால் உலக வின்பத்தை யனுபவிக்க முடியுமா? இல்லாவிட்டால் முடியாதா? நான் யாரோ? எனக்குத் தெரியாது. தெரியவேண்டுமென்ற ஆவசியகமும் எனக்கில்லை' என்றான் அவன். அது தற்கொலை. அவன்றான் நடைப்பிணம். உலக வின்ப மயக்க மருந்தை அவன் மிதமிஞ்சி யுண்டுவிட்டான். அதனால் அந்தோ! அவன் செத்தான். தன்னை இன்னானெனத் தெரியாத அவனுக்கு உலகைத் தன்னதெனவும், தான் உலகில் வாழ வந்தானெனவும் சொல்லிக்கொள்ள என்ன வுரிமை யிருக்கிறது? ஆகவே இவ்வுலகை யாராய்கிற ஒவ்வோரறிஞனும் 'இவ்வுலகை யாராய்ந்து அறிந்து அனுபவிக்கிற நான் யார்?' என்கிற ஆராய்ச்சியிலும் புக வேண்டும். உயிருள்ள மனிதனுக்கு அவ்வாராய்ச்சியே இன்றியமையாதது; மானத்தைக் காப்பாற்றக் கூடியது.

Link to comment
Share on other sites

அம்மூலப் பொருள்களுள் ஒன்றற்கேனும் அறிவுண்டா? இல்லை. அவற்றிலிருந்து இவ்வுலகம் உண்டாகுமுன் பல அவாந்தர (இடைப்பட்ட) காரியங்கலும் உளவாயின. அவற்றுள்ளும் எதற்காவது அறிவுண்டா? இல்லை. ஆனால் அறிவுடைமை எங்கே காணப்படுகிறது? சாவாத வுடம்பு உயிருள்ளதெனச் சொல்லப்படும். அன்ன வுடம்புகள் பல. அவற்றுள் ஒவ்வொன்றிலும் அறிவுடைமை காணப்படுகிறது. அதுவே நான் என்பதன் உண்மைக்கு அடையாளம். தொலைபொருளைத் தொலைநோக்காடி கொண்டு காணலாம். நுண்பொருளைப் பூதக் கண்ணாடியாற் காணலாம். உடம்புகளிருக்கிற உறுப்புக்களையும், நோய்களையும் எக்ஸ்ரே மூலங் காணலாம். மலையினுயரத்தையும், கடலினாழத்தையும் அதற்கதற்குரிய கருவிகளைக்கொண்டு கண்டுவிடலாம். ஆனால் நான் என்பதை எந்தக் கருவி கொண்டு காண்பது? அக்கருவியை யிதுவரையெவன் கண்டுபிடித்தான்? எவனுமிலன். இனியும் எவனுங் கண்டுபிடிக்க மாட்டான். கருவிகளெல்லாஞ் சடம். நான் என்பதோ சித்து. அதனைக் காண அவை சிறிதும் உதவா. கருவிகள் கொண்டு அதைக் காண அவை சிறிதும் உதவா. கருவிகள் கொண்டு அதைக் கண்டுவிட்டதாகக் கூறுகிறவன் ஏமாறியவனே. ஆனால் அது காணப்படாத பொருளா? அன்று. உலகிய லறிஞருக்கு அதைக் காண்பது அசாத்தியம். காண்பதற்கெனப் பிறதோ ரறிவுக் கண் வேண்டும். அதனைப் பெற்றார் பட்டணத்துப் பிள்ளையார். அதனால்

'யானு நின்பெருந் தன்மையுங் கண்டேன் கண்டது

மென்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டே - னின்னிய

லனைத்தையுங் கண்டே னென்னே-நின்னைக் காணாமாந்தர்

-தன்னையுங் காணாத் தன்மை யோரே' (11 ம் திருமுறை)

என்றாரவர். ஆனாற் சாத்திர வாராய்ச்சியைப் பற்றி நிற்பார் பலர். அவரும் அவ்வுண்மையைத் தெளிய வேண்டும். அதற்கான வூகங்களும் பல. சுருதியே (வேதம்) அவற்றை யெடுத்துக் காட்டிற்று. இந்தக் கட்டுரை அதை யனுசரித்து நான் என்பதை ஆராய முயலுகின்றது. 'இவ்வுடம்பில் நான் என்பது உண்டு. அறிவுடைமை காணப்படுதலால்; எங்கே அறிவுடைமை காணப்படாது அங்கே நான் என்பதில்லை, குடத்திற் போலும்' என்பது நான் என்ப துண்டெனச் சாதிக்கிறவோ ரூகம். 4 அளவை நூலில் அ·து 5 எதிர்மறையனுமான மாகும்.

உலகிர் பல மதங்களுள. அவற்றினை ஆசிரியன்மார் நான் என்பதைப்பற்றி ஆராய்ந்துளார். தலையாய சமயம் சைவ மொன்றே. அதுவும் அவ்வாராய்ச்சி செய்திருக்கிறது. யுக்திக்குப் பொருத்தமான முடிவை எவ்வாராய்ச்சி தந்துளது? அதனை யிங்கே காணலாம்.

Link to comment
Share on other sites

முதலாமவன் 6 சூனியான்ம வாதி

அவன் நான் என்பதை யாராய முற்பட்டான்; தன்னுடம்பில் துருவினான், தேடினான். அவன் கண்டன யாவை? மயிர், தோல், எலும்பு, இரத்தம், நரம்பு, முளை, வழும்பு (வழுவழுப்பான அழுக்கு), மலம், மூத்திரம், புழு முதலியவையே; நான் என்பதைக் கண்டிலன். அவன் கண்டவற்றுள் எதுவும் நானாக முடியாது. நான் மயிர், நான் தோல், நான் மலம், நான் மூத்திரம், என அவன் சொல்லமாட்டான். சொன்னால் அவன் மானம் போம். ஆகையால் இம்மயிர் நானில்லை, இத் தோல் நானில்லை. என அவன் அப் பகுதிகளை யெல்லாம் கழித்து விட்டான். உடம்பிற் கண்ட பொருள்களும் நானல்ல, நான் என்பதுங் காணப்படவில்லை; ஆகையால் நான் என்பது இல்பொருள், சூனியம் என வாதிக்கிறான் அவ்வாதி. ஏதோவொரு பொருள் வினைமுதலாய் நின்று அம்மயிர் முதலியவற்றை இது நானில்லை, அது நானில்லை யென்று கழித்தது. அ·து இல்பொருளா? உள்பொருளா? இல்பொருளாயின் அது வினைமுதலாகாது. ஆகுமெனின், வினைமுதலாய் நின்று முயற்கொம்பு முட்டும்; மலடி மகன் மணப்பான்; ககனாரவிந்தங் (ஆகாயத் தாமரை) கமழும். அவை நிகழுமா? நிகழா. ஆகவே அங்ஙனம் கழித்த அ·து உள்பொருளாய்த் தானிருக்க வேண்டும். அ·தெது? அது தான் இல்லையென்கிற வுணர்வு. அ·து அப்பொருள்களையெல்லாந் தாண்டி ஸ்திரமாயிருந்து வருகிறது. அவ்வுணர்வையும் இது நானில்லை யெனக் கூறிக் கழிக்க முடியாது. அப்போதும் இல்லையென்கிற வுணர்வே மேலிட்டு எஞ்சி நிற்கும். அது கழிக்கப்படவே மாட்டாது. அதுவே வினை முதலாக நின்று ஏனையவற்றைக் கழிப்பது. அதற்கிருப்பிட மெது? அது தான் உடம்புக்கு வேறாய் உடம்பிலுள்ளதாகிய நான் என்பது. மயிர் முதலிய எப்பொருளும் நானில்லை. அ·துண்மை. ஆனால் நான் என்கிற பொருளுமில்லையென்று சொல்லுவதாலேயே அவ்வில்லை யென்கிற வுணர்வுடைய நான் என்பது உடம்பிலுண்டு.

Link to comment
Share on other sites

இரண்டாமவன் 7 தேகான்ம வாதி

ஆனால் முயலுக்குக் கொம்பில்லை. இல்லையென்று சொல்வதாலேயே அதற்குக் கொம்புண்டென முடிக்கலாமா? மேலும் அவன் வினவுவ தது. முயற்கொம்பு இல்பொருள், அதுவே நானில்லை யெனச் சொல்லவில்லை. சொன்னால் அதுவும் உள்பொருள்தான். இல்பொருள் நானில்லையென்று தன்னைச் சொல்லிக்கொள்ளாது. முயலுக்குக் கொம்பில்லையெனச் சொல்பவன் அக்கொம்புக்கு வேறானவனே.

நான் பருத்தேன், நான் சிறுத்தேன், நான் கரியேன் என வழங்குவ துண்டு. அவ்வழக்குகளை யெடுத்தான், ஆராய்ந்தான் அவ்வாதி, பருத்தும், சிறுத்ததும், கரியதும் ஆன தெது? உடம்புதானே, ஆகையால் நான் என்பது உடம்பே, பிறிதில்லை, அப்படி வாதிக்கிறான் அவன். வழக்குகளைக் கொண்டு உடம்பே நானென அவன் சாதிக்கிறான். வழக்குக்களைக்கொண்டே அவனை மறுக்க வேண்டும். அதுவே முறை. நான் பருத்தேன் என்பது முதலிய வழக்குகள் மெய்யே. ஆனால் என் உடம்பு, என் கை, என் கால் என்ற வழக்குகளு முள. அவை என் வீடு, என் துணி, என் புத்தாம் என்பபோ லாகும். என் வீடு என்பதால் நான் வேறு, வீடு வேறு என்பது தெரிகிறது: மற்றவற்றாலும் அதுவே யாம். அப்படியே என் உடம்பு என்பது முதலியவற்றாலும் நான் வேறு, உடம்பு கை கால்கள் அதனில் வேறு என்பதும் அறியக் கிடக்கிறது. அதனால் அந்த நான் என்பது உடம்பிலிருந்தாலும் உடம்புக்கு வேறான பொருளேயாம். உடம்போ அசுசிமயம் (அசுத்தம்). அது மடவோனுக்குந் தெரியும். தேகமே நான் என்கிற அவ்வாதி சிறப்ப தெப்படி? அசுசி சிறப்பதுமுண்டோ? நான் பருத்தேன் என்பது முதலிய வழக்குகள் அவனை ஏமாற்றின. பருத்த லாதியன உடம்பின் குணவிசேடங்கள். அவ்வழக்கள் 8 தற்கிழமைச் சம்பந்தமுடையன. அதனால் உடம்பின் குண விசேடங்களை உடம்பிலுள்ள நானென்பது தனக்கேற்றி நான் பருத்தேன், சிறுத்தேன், கரியேன் என்றெல்லாஞ் சொல்லிற்று. ஆனால் என் உடம்பு என்பது முதலிய வழக்குகள் 9 பிறிதின் கிழமைச் சம்பந்த முடையன. அதுவே உடம்புக்கு வேறாய் நான் என்ப துண்டெனக் காட்ட வல்லது.

Link to comment
Share on other sites

இராகு ஒரு கிரகம். அது தலை மாத்திரமா யிருப்பது, பிற வுறுப்புக்கள் அதற் கில்லை. அதனை இராகு வென்பதே போதும். ஆனால் மிகச் சிலர் அதனை இராகுவின் தலையெனவும் வழங்குகின்றனர். அதில் இராகு வேறு, அதன் தலை வேறு என்பது தொனிக்கிறது. ஆயினும் இராகுவேதான் தலை. ஆகலின் இராகுவின் தலை யென்பது பிறிதின்கிழமைத் தொடரா யிருந்தாலும் தற்கிழமைப் பொருளையே யுடையது. ஆனால் என் புத்தகம் என்பதில் நான் என்பது உடையது, புத்தகம் அதன் உடைமை, அவ்வுடையதும் உடைமையும் தம்முள் வேறாதல் புலப்பட நிற்கிறது, ஆகலின் என் புத்தகமென்பது பிறிதின் கிழமையாதல் சாலும்; என் உடம்பு என்பதில் நான் என்பது உடையது, உடம்பு அதன் உடைமை, அவை தம்முள் வேறு என்பது புலனாகவில்லை. ஆதலின் என் உடம்பு என்பதால் உடம்பை நானன் றென்றல் சாலாது, அப்படிப் பேசுகிறானவன். என் புத்தகம் என்பது முதலிய வழக்குகள் பெரும்பான்மை. இராகுவின் தலையென்பது மிகச் சிறுபான்மை வழக்கே. பின்னதற்கு முன்னையதை விட வலியில்லை. அது கிடக்க. ஆடை யாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது ஓ ருடம்பு. அது 'நான் அழகா யிருக்கிறேன்' என்கிறது. அந்த நான் என்பது உடம்பு மாத்திரந்தானா? அன்று. அவ்வாடை யாபரணங்களும் அந்நான் என்பதாற் கவரப்பட்டு அதுவே யாகிறது. இன்றேல் நான் அழகா யிருக்கிறேன் என் அந்நான் என்பது தன்னை விசேட முறையிற் புகழ்ந்து கொள்ளாது. உண்மையில் அவ்வாடை யாபரணங்களுமா உடம்பு? அல்ல. அது அவற்றை நானென மய்ங்கிற்று. அவை உடைமையே. அவன் கருத்து உடம்பே நான் என்பது. அதுவே அவற்றையுடையது. அ·தவற்றைக் கழற்றித் தூர வைத்துப் பார்க்கட்டும். நான் என்பதால் அவை கவரப்பட்டாலும் அவ்வுடம்பாகாமை அப்போது தெரியும். அவன் உலகாயத நூலைப் படிக்கு முன் உலகமே நானெனக் கொண்டவன். பிறகு அவன் அந்நூலைப் படித்தான். அதனால் உடம்பே நான் என்பது, அதுவே அனுபவிப்பது; உலகம் எனக்கு வேறு, அதுவே அனுபவிக்கப்படுவது என்ற கொள்கை அவனுக் குண்டாயிற்று. அப்படியே நான் என்பது பற்றிய நூலை அவன் ஆராய்க. அப்போது உடம்புக்கு வேறான பொருளே நான் என்பது என்ற வுண்மை அவனறிவிற்படும்.

மயிர், நகம், குருதி, பல் முதலிய அனைத்துஞ் சேர்ந்ததே உடம்பு. அவை அவயவங்கள். அது அவயவி. அவன் நான் என்பது அதுவே. மயிர் கழிகின்றது. நகம் கழலுகின்றது. குருதி யொழுகுகின்றது. பல் விழுகின்றது. அவை நான் என்பதை விட்டு விலகுகின்றன. அவயவங்கள் விலகுமாயின் அவயவியும் விலகும். ஆதலின் உடம்பு, நான் என்பதற்கு வேறாய்க் கழிவதும் உறுதி. கழித்த மயிரையும், கழன்ற நகத்தையும், ஒழுகிய குருதியையும், விழுந்த பல்லையும் அவன் என் மயிர், என் நகம், என் குருதி, என் பல் என வழங்குகின்றான். அவ்வழக்கு இராகுவின் தலை யென்பது போலும் 10 அபேதத் தொடரா? அன்று. 11 பேதத் தொடரே. என் உடம்பு வேறு என்ற பொருளையே அது தரும்.

Link to comment
Share on other sites

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இருக்கின்றன. அவற்றைக் கூட்டி மெல்க. சிவப்பு நிறம் வெளிப்படும். அப்படியே உடம்பின் அவயவங்களுந் தனித்தனிப்பொருள்களே. அவை ஒவ்வொன்றும் வெவ்வே றியல்பின. அவை கூடுகின்றன. அக் கூட்டத்தில் ஒரு சத்தி யுண்டாகிறது. அதுவே அறிவு. அதுவே நான் என்பது அப்படியும் வாதிக்கிறான் அவன். வெற்றிலை யாதியவற்றை மெல்லும் போது முன் இல்லாத நிறமே பின் தோன்றிற்றா? ஆமெனின், சிவப்பே தோன்ற வேண்டு மென்ற அவசியமில்லை. மஞ்சள் நீலம் முதலிய பிற நிறங்களுந் தோன்றலாம். அ·தில்லை. சிவப் பொன்றே தோன்றுகிறது. ஏன்? அந்நிறம் பாக்கிலுள்ளது. மெல்லுமுன் பாக்கில் அது சூக்குமமா(விளங்கித் தோன்றாத நிலை) யிருந்தது. மென்றதும் அது விளங்கித் தோன்றியது. அவ்வளவே. இல்லாதவொன்று என்றும் எப்படியுந் தோன்றாது. அப்படியே உடம்பின் அவயவங்களெல்லாஞ் சடங்களே. அவற்றுள் ஒன்றற்காவது அறிவில்லை. அவை கூடினால் மாத்திரம் அறிவு எப்படி வந்திடும்? மேலும் அச்சிவப்புஞ் சடமே. அதன் தோற்றம் அறிவின் தோற்றத்துக்கு உவமையாகாது. சடக்கூட்டத்திலிருந்து எத்தனை அற்புத எந்திரங்களை ஆக்கினான் மனிதன்? அவற்றுள் ஒன்றாவது அறிவுள்ளதாமா? இனியும் அறிவுள்ள எந்திரம் எதனைத்தான் எவனாற்றான் ஆக்கமுடியும்? அறிவு எவ்வாற்றானும் ஆக்கப்படாத தொன்று. ஆகவே சடக்கூட்டமாகிய உடம்பில் புதுவதாக அறிவுச்சத்தி தோன்று மென்றல் மடமை. சவமூஞ் சரீரந்தானே. அதிலும் எல்லா அவயவங்களு முள. அறியுஞ்சத்தி மாத்திரமில்லை. ஏன்? அதற்கும் விடை தருகிறான் அவ்வாகி. சவத்தில் மூச்சில்லை, அதனால் அறியுஞ் சத்தி போயிற்று என்பது அது. உறக்கத்தில் மூச்சிருக்கிறதே. அறிவு எங்கே?

Link to comment
Share on other sites

மூன்றாமவன் 12 இந்திரியான்ம வாதி

உடம்பில் ஐந்து இந்திரியங்களுள. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன அவை. விடயங்களை அறிந்து வருவன அவைதான். அவற்றுள் ஒவ்வொன்றும் நான் தொட்டேன், நான் சுவைத்தேன், நான் கண்டேன், நான் மோந்தேன், நான் கேட்டேன் என்று சொல்லுகிறது. அவ்வழக்குகள் தற்கிழமை. அவை மிகுதியுமாம். என் மெய் தொட்டது, என் வாய் சுவைத்தது என்பவாதிய வழக்குகள் பிறிதின்கிழமை. அவை குறைவு. அம் மிகுதி பற்றி இந்திரியங்களே நான் எனப்படும். அப்படி வாதிக்கிறானவன். என் மெய் தொட்டது என்பதாதி பிறிதின்கிழமை வழக்குகளும் மிகுதிதான். அதனை அவன் குறைவெனக் கூறி மறுக்கிறான். தொலையட்டும். இந்திரியங்களின் தொகுதியே ஒரு நான் என்பதா? அல்லது ஒவ்வோ ரிந்திரியமும் ஒவ்வொரு நான் என்பதா? இந்திரியத் தொகுதியே நான் என்கிறான் அவன். ஆனால் மெய் தொடவே செய்யும்; சுவைத்தல் முதலியவற்றைச் செய்யாது. வாய் சுவைக்கவே செய்யும்; காண்டல் முதலியவற்றைச் செய்யாது. அப்படியே மற்ற இந்திரியங்களு மாம். அத் தொகுதியே நான் என்பதெனின், அவை அங்ஙனம் தனித்தனி வெவ்வேறு விடயங்களை மட்டில் அறியலாமா? மெய் சுவைக்கவும் வேண்டும். வாய் காணவும் வேண்டும். கண் மோக்கவும் வேண்டும். அப்படியே பிற விந்திரியங்களும் வரம்பின்றி விடயங்களைக் கிரகிக்க வேண்டும். அ·தில்லை. அத்தொகுதியை நானென்றல் யாங்ஙனம்? நான் உற்றேன், நான் சுவைத்தேன், நான் கண்டேன் என்பவாதிய வழக்குகள் ஐந்து. அவ்வைந்திலும் நான் என்பது எழுவாய், அ·தொன்றே. அதுவே மெய்யை அதிட்டித்து (நிலைக்களமாகக் கொண்டு) உற்றறிகிறது; வாயை அதிட்டித்துச் சுவைக்கிறது; கண்ணை அதிட்டித்துக் கண்டறிகிறது; பிற விந்திரியங்களை யதிட்டித்து அவ்வப் புலன்களை யறிகிறது. ஆகலின் அதற்கு வேறாவனவே இந்திரியங்கள்.

Link to comment
Share on other sites

அவ்வாதியைச் சேர்ந்தா னொருவனுளன். ஒவ்வோரிந்திரியமும் ஒவ்வொரு நான் என்கிறான் அவன். எப்படி? சூரன், பதுமன் என அசுர ரிருவர். ஒவ்வொருவனும் ஒவ்வொரு நான். அவ்விரண்டு நான்களும் ஓருடம்பிற் புக்கன. அவையும் அதுவுமே சூரபதும னென்பவன். அவனுடம்பில் அவ்விரண்டு நான்களும் ஒரு நானே யென்னுமாறு ஒற்றித்திருந்தன. அப்படியே ஐந்து நான்களாகிய ஐந்து இந்திரியங்களும் ஒரு நான்போ லுள்ளன. மெய்யாகிய நான் 'நான் இக்குடத்தைத் தொட்டேன்' என்கிறது. அக்கணமே வாயாகிய மற்றொரு நான் 'நான் இப்பாலைச் சுவைத்தேன்' என்கிறது. ஒற்றுமை நயத்தால் அவ்விரண்டு நான்களும் ஒரு நான்போல் தெரிகின்றன. ஐந்து நான்களுமே அங்ஙனந்தான். அப்படி வாதிக்கிறா னவன். இந்திரியங்களுள் ஒன்றறிந்ததனை மற்றொன் றறியாது. அ·தவனுக்குஞ் சம்மதம். இன்றேல் அவ்வைந்தையும் ஐந்து நான்களென அவன் சொல்லான். ஆனால் மெய் தொடும்; தொடுந்தொழில் தனக்குண்டென்று உணராது. வாய் சுவைக்கும்; சுவைக்குந்தொழில் தனக்குண்டென்று உணராது. அப்படியே மற்றை யிந்திரியங்களு மாம். தொடுதலறிவும், தொடுதற்றொழில் தனக்குண்டென்னு முணர்வும் ஒன்றாகா. சுவைத்தலறிவும், சுவைத்தற்றொழில் தனக்குண்டென்னு முணர்வும் ஒன்றாகா. பிறவும் அப்படியே. அவ்வுணர்வு உள்ளதா? இல்லதா? உள்ளதாயின், மெய் வாய் முதலியவற்றுக்கு வேறான தொன்றையே அது சார்ந்த தாகும். அதுவே நான் என்பது. அ·து அத்தொழில்களை யுணர்ந்து அப்பொறிகளைச் செலுத்திப் பயன்கொள்ளும். இல்லாதாயின், அதற்கு வெளிப்பா டில்லை.

இன்னும் என் கண் குருடாயிற்று, என் காது செவிடாயிற்று என்ற வழக்குகளும் பிரசித்தம். அவற்றிலிருந்து கண்ணுங் காதுமாகிய இரண்டு நான்கள் இலவாயின வென்பது தெரிகிறது. குருடனுஞ் செவிடனு மாகிய வொருவனிடம் எஞ்சியிருப்பன மூன்று நான்கள் தான். உண்மை அப்படியா? அவ்வழக்குகளிலுள்ள என் என்ற நான் எது? தொலைந்துபோன கண்ணோ காதோ தன்னை என் என்று சொல்லாது. சொல்லுமெனின், குருட்டுக் கண்ணுமா நான்? செவிட்டுக் காதுமா நான்? ஆகவே அக்குருட்டுக்கண் செவிட்டுக் காதுகளைக் கொண்டாவது அந்த என் என்பதிலுள்ள நான் என்பது எல்லா இந்திரியங்களுக்குமே வேறான தென்பதைக் கருதிக்கொள்க.

மேலும் இந்திரியங்கள் அறியவே செய்கின்றன, அவை யிச்சிப்பது மில்லை, செயல் புரிவது மில்லை. ஆனால் நான் அறிகிறேன், இச்சிக்கிறேன், செய்கிறேன் என்ற பிரஞ்ஞைகளும் உடம்பி லுள்ளன. அறிதலொன்றேயுடைய இந்திரியங்கள் அறிதல் இச்சித்தல் செய்தல் என்னும் மூன்று முடைய நானாதல் சிறிதும் பொருந்தாது.

உறக்கத்திலும் இந்திரியங்களுள. அப்போது அவை அறிகின்றில. அவை நானாயின் அப்போது அப்படி யிருப்பானேன்? அவை ஓய்வடைகின்றன என்கிறானவன். சொப்பனத்தில் அவற்றின் வியாபாரம் (செயல்பாடு, தொழில்) இல்லை. ஆயினும் ஆண்டு அறிவு நிகழ்கிறது. அதற் கிருப்பிடம் எது? அது தான் நான் என்பது.

Link to comment
Share on other sites

நாலாமவன் 13 சூக்கும தேகான்ம வாதி

தூல தேகத்துட் சூக்கும தேகமென வொன்றிருக்கிறது. அது வெளியில் தலைக்காட்டாது. இந்திரியங்களை வெளியிற் செலுத்தி அவற்றின் மூலம் விடயங்களை யறிவது அதன் தொழில். ஆகலின் அதுவே நான் என்பது. அப்படிச் சொல்கிறானவன். சூக்கும தேகமாவது கனவு நிலை. அதிலும் பல விடயங்கள் நிகழும். அவற்றை அறிவது சூக்கும தேகந்தான். ஆயின் அதுவே நனவிலும் அறிய வேண்டும். ஆனால் அவற்றைக் கனவி லறிந்தபடி நனவிலும் அ·தறிவதில்லை. கனவு கண்டு விழித்தவன் அவற்றுட் பலவற்றை மறக்கிறான்; மாறி யறிகிறான்; முதலில் மறந்து பிறகு நினைவிற்குக் கொண்டுவருகிறான். அப்படி மயங்கி யறிவதே பெரும்பான்மை. கனவுகண்ட சூக்குமதேகம் கனாநிகழ்ச்சிகளை அப்படி மயங்கி யறிதற்கு ஏது ஒன்றுமில்லை. ஆகலின் அது நான் என்ப தாகாது.

ஆனால் நான் என்பது மயங்கும். அதற்கு ஏது (காரணம்) வுண்டு. ஐம்பொறிகளுந் தூலதேகத்தைச் சேர்ந்தவை. அவை தொழிற்படுவது கனவு ( சாக்கிரம்). நான் என்பது அந்நனவை விட்டுக் கனவுக்குச் (சொப்பனம்) செல்கிறது. செல்லும்போது அதற்கு எவ்வித சிரமமுங் கிடையாது. பிறகு அப்பொறிகள் தொழிலற்றுக் கிடக்கின்றன. அந்நான் என்பது வெளிவிஷயங்களை யறிவது நின்று விடுகிறது. ஆனாற் கனாவுடலிலும் அது கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று விளையாடும். அதன்பொருட்டு அங்கு அதற்குக் கருவியாக உதவுவது ஆங்கார தத்துவம். அது ஐம்பொறிகளுக்கும் 14 முதற்காரணம். அக்கனவுநிலை அதற்குத் தூக்கநிலையுமாகாது. தூக்கநிலை கனவையுங் கடந்தது. அது சுழுத்தி (உறக்கம்) துரியங்களாம். (பேருறக்கம்) நான் என்பது அங்குச் சென்று அயர்ந்து தூங்குகிறது. கனவு அங்கில்லை. சூக்கும தேகமும் அங்குச் செய லறுகின்றது. அப்படி நனவிலிருந்து துரியத்துக்குச் செல்வதும், துரியத்திலிருந்து நனவுக்குத் திரும்புவதும் நான் என்பதற்கு இயல்பு. துரியத்துக்குச் செல்லுதல் அகத்துச் சேறல். நனவுக்குத் திரும்புதல் புறத்துச்சேறல். நான் என்பது அச்சஞ்சாரத்தில் கருவிகளை விடுதலும் பற்றுதலுஞ் செய்யும், 15அப்பற்று வீடுகளே அம்மயக்கத்துக்கு ஹேது. சூக்குமதேகத்துக்கு அச்சஞ்சார மில்லை. அது சொப்பனத்தானத்தில் மாத்திரந் தொழிற்படும். அத்தொழிபட்டுண்மை அவனுக்குஞ் சம்மதம். அத்தேகம் நனவில் மயங்கக் காரணமில்லை. கனவிற் கண்டவற்றை நனவில் மயங்கி யறிவது அத்தேகத்துக்கு வேறாய் நான் என்பதே.

Link to comment
Share on other sites

ஐந்தாமவன் 16 பிராணான்ம வாதி

நனவில் தூலதேகம் இயங்குகிறது. கனவில் இயங்குவது சூக்குமதேகம். சுழுத்தி துரியங்களில் அவையியங்கா. ஆகையால் அவை நான் என்பதல்ல, அது சரி. ஆனால் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியங்களில் இயங்குவ தொன்றுண்டு. அது பிராணவாயு. அது உள்ளே போகிறது, வெளியே வருகிறது. உடலிலுள்ள கருவிகளை விரிப்பதும் ஒடுகுவது அதுவே. கருவிகள் ஒடுங்கினால் அ·தறியாது. விரிந்தால் அ·தறியும். அறிவது அது தான். ஆகலின் அதுவே நான் என்பது. அப்படி வாதிகிறனவன். சாத்தன் உறங்குகிறான். அப்போது அவன் இன்பத் துன்பங்களை நுகர்வதில்லை. தொழில்களையுஞ் செய்யான். பிராணவாயு அப்போதும் இயங்கிக்கொண்டுதானிருகிறது. அப்படியிருந்தும் அவனிடம் நுகர்ச்சிகளும் தொழில்களும் ஒழிந்தன. ஏன்? ஆகலின் பிராணவாயுவை யியக்கியும், கருவிகளை யொடுக்கி விரித்து விடயங்களிற் செலுத்தியும் அறிந்து வருகிற வேறொரு பொருள் உடம்பிலுண்டென்பது விளங்குகிறது. அதுவே நான் என்பது.

ஆனால் அவ்வாதி அதனை ஏற்கவில்லை. உடல் சடம். அது நுகராது. தொழில் புரியாது. பிராணவாயுத்தான் அவற்றைச் செய்யக்கூடும். உறங்கி விழிக்கிறான் சாத்தன். நான் சுகமாகத் தூங்கினேன் என அவன் சொல்வதில்லையா? தூக்கத்திற் சுகானுபவ முண்டென்பது அதனால் வெளி. அச்சுகத்தை யனுபவித்தது பிராணவாயுவே யாம். அவ்வியக்கமே அது செய்யுந் தொழில். அங்ஙனமாக, நுகர்ச்சியுந் தொழிலும் உறக்கத்தி லில்லை, ஆகலிற் பிராணவாயு நானன் றென்பது தவறு. அதுவும் அவன் வாதம். உறங்குஞ் சாத்தன் உலகத்தை யிந்திரியங்களால் அறிந்து 17 தூலவுடம்பின்கண் நுகரவில்லை. அவ்வுடம்பில் வாசனைப் பொடி தூவப்படுகிறது. அவன் அவ்வாசனையை ஏற்று மகிழ்கிறானா? அவ்வுடம்பின் மேல் பாம்பு ஊர்ந்து செல்கிறது. அவன் நடுங்குகிறானா? அவன் என்ன புண்ணியஞ் செய்கிறான்? என்ன பாவஞ் செய்கிறான்? அவன்பால் எதுவும் நிகழவில்லை. அவ்வுடம்பு செயலற்றுக் கிடக்கிறது. நுகர்ச்சியு மில்லை, தொழிலு மில்லை யென்பதற்குத் தூல வுடம்பின்கண் அவை யில்லை யென்பதே கருத்து. அவை தூலவுடம்பில் உளவாயின அதுவே சாக்கிரம். பிராண வாயு இயங்கியும் அவ்வவத்தை அப்போதில்லை. அ·தேன் என்பதே வினா. அந்நுகர்ச்சியும் செயலும் தூலவுடம்பில் இல்லையானாலும் துரியத்திலுள என்றான் அவன் அவ்விடை சரியன்று. தூக்கத்தில் தூலவுடம்பில் அவ்வாயு இயங்கியும் அவ்வுடம்பில் நுகர்ச்சியும், செயலும் இல்லாமைக்கு அவனால் காரணங் கூறமுடியாது. உண்மையாவ தென்னை? நுகர்ச்சிக்குஞ் செயலுக்கும் வினைமுதல் அவ்வாயுவுக்கு வேறான தென்பதே. அதுதான் நானென்பது. உறக்கத்தில் அது துரியத்துக்குப் போய்விட்டது. நுகர்ச்சியுஞ் செயலும் தூலவுடம்பி லில்லை. அது நனவுக்குத் திரும்பும். அப்போது அவை அவ்வுடம்பில் நிகழும். இன்பத் துன்ப நுகர்ச்சியாவது உண்டி. செயலாவது வினை.

உறக்கததில் தூலவுடற் கருவிகள் ஒடுங்குகின்றன. உண்டியும் வினையும் அவ்வுடம்பி லில்லாமைக்கு அவ்வொடுக்கமே காரணம். அவனது அடுத்த வாதம் அது. அவனுக்குப் பிராணவாயுவே நான் என்பது. அ·து அரசன் போல்வது. துரியத்திற்போலச் சாக்கிரத்திலும் அது சமமாகவே யியங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒடுக்கம் எப்போது மில்லை. உடற் கருவிக ளெல்லாம் அதன் வயத்தவே. அவை அமைச்சர் முதலியோர் போல்வன. அரசன் எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கிறான். அமைச்சராதியோர் வேலையின்றி ஓய்ந்து கிடக்கலாமா? அப்படியே ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருக்கிற பிராணவாயுவின் முன் ஏனைக் கருவிகள் ஒடுங்க நியாய மில்லை. ஆனால் அவ்வாயுவுக்கு வேறான நான் என்பது உலகத்தை (சாக்கிரத்தில்) நனவிலறியும், துரியத்தி லறியாது. அம்மாற்றம் அதற்குண்டு. ஆகலின் கருவிகள் அதன்முன் ஒடுங்கலாம்.

Link to comment
Share on other sites

ஆறாமவன் 18 பிரமான்ம வாதி

அவன் மாயாவாதி, அகம்பிரமவாதி, ஏகான்மவாதி எனவும் படுவான். பிரமம் அறிவுடையது. நான் என்பதும் அறிவுடையது. ஆகலின் பிரமமே நான் என்பதாம். அவன் வாதம் அது. அவ்விரண்டும் அறிவுடையன தான். ஆனால் அவ்வறிவுகளில் வித்தியாச முண்டு. என்னை? நான் என்பது அறிவுடையதாயினும் அதற்கு அறிவற்றுக் கிடக்கும் நிலையுமிருக்கிறது. அதுவே துரியாதீதம். அந்நிலையிற் கிடந்து உறங்குகிறா னொருவன். அவன்முகத்திற் கறியுமிழ்க. அவ்வுமிழ்நீரை அவன் அறிய மாட்டுவானா? மாட்டான். பிரமமே அந்த நான் என்ப தாயின் அம்மூடம் அவனுக்கு வரலாமா?

பிரமம் 19 அவிச்சையிற் கட்டுடது. அந்த நிலைதான் துரியாதீதம். அதில் அப்பிரமத்துக்குக் கருவிகளின் துணை யில்லை. ஆகையால் அம்முடம் உளதாயிற்று. அதைக் காரணமாகக் காட்டி நான் என்பதைப் பிரம மன்றெனல் கூடாது. கருவிகள் கூடினால் அ·தறியும். அவ்வாதி கூறுகிற சமாதானம் அது. நான் என்பது சிற்றறிவுடையது. அது கருவிகளைக்கொண்டே யறியும். பிரமமோ பேரறிவுடையது. பேரறிவு அறிதற்குக் கருவிகளின் துணை அநாவசியம். நான் என்பதைப் பிரமமெனின் நானென்பதுங் கருவிகளின் துணையின்றியே யறிய வேண்டும். அ·தில்லை. மேலும் கருவிகளோடு கூடிய பிறகாவது அந்நான் என்பது தன்னைப் பிரமென் றறியலாம், அதுவுமில்லை. நான் என்பதற்கு வேறானது பிரமம், அல்லது நானே பிரமம், அப்பிரமம் பேரறி வுடையது என அப்போதும் வேதாகமங்கள் உணர்த்த வேண்டுவது அவசிய மாகிறது. அம்மட்டோ? நான் பிரமம் என்ற ஞானம் பிறந்தற்குக் குருவினுபதேசமும் வேண்டு மென்கிறானவன். நான் என்பது கருவிகளோடு கூடிய நிலை சாக்கிரம். அதிலும் அந்நான் என்பது அவ்வுண்மையைப் பிறர் உணர்த்தியா உணர வேண்டும்? பிரமத்தினியல்பு ஒருவருணர்த்தாமலே உணர்வதாம். நான் என்பது பிரமமாயின் அதுவும் அப்படியே உணரவேண்டும். அதுவுங் கிடையாது. உணர்த்த உணர்வதும், தானே உணர்வதும் முற்றிலும் வேறுபட்ட இயல்புகள். ஆகலின் நான் என்பது வேறு, பிரம்ம வேறு என்பதே உண்மை.

அவ்வாதி மேலும் வாய் திறக்கிறான். எப்படி? பிரமம் அவிச்சையிற் கட்டுண்டு நான் என்ப தாயிற்று. அந்நான் பிறகு கருவிகளைக் கூடினது. ஆயினும் அப்போதுண்டான அறிவு சிறியதே. அதனால் அவ்வவிச்சை நீங்கவில்லை. நீங்கினாற்றான் அந்நான் என்பதற்கு நான் பிரமமென்ற ஞானம் வரும். நீங்குவதற்காகவே சாஸ்திராப்பியாசமும், குருபதேசமும் வேண்டப்பட்டன. அந் நான் என்பது கருவி கரணங்களின் ஞானத்தால் உலக விடயங்களைத்தான் அறியக்கூடும். அவன் வாதம் அது. உலக விடயங்களையாவது நான் என்பது தன் பிரமத்தன்மைக் கேற்ப நன்றா யறிய வேண்டாமா? அ·து ஒன்றை யறிகிறது. ஒன்றை யறியத் தொடங்குகிறது, அறிந்ததை மறுக்கிறது, மீண்டும் அறிகிறது, மயங்குகிறது, பின்புற மிருப்பதையும் தொலைவி லிருப்பதையும் அறிகின்றிலது, ஏக காலத்தில் இரண்டு விடயங்களைத்தானும் அறியமாட்டாது, ஒருமுறை உணர்த்தினால் உணர்கிறது. பலமுறை உணர்த்தின பிறகும் உணர்கிறது, எத்தனைமுறை உணர்த்தினாலும் உணரமாட்டாமல் விழிக்கிறது. உலக விடயங்களையும் அ·தப்படி அறை குறையாக அறிய வேண்டுமா? ஏன்? ஆகலின் பிரமமே நான் என்றல் செல்லாது. பிரமத்தினறிவு ஒன்றிலுந் தோயாது. அது தனி. நான் என்பதனறிவு அப்படியன்று. அது சார்ந்ததன் வண்ணமாந் தன்மையது. அது சடங்களாகிய கருவி கரணங்களைச் சார்ந்து அவற்றின் வண்ணமாய் நின்றது. அதனால் அது சிற்றறிவுடையதென்றாயிற்று. அது உலக விடயங்களில் தோய்ந்தே அவற்றை யறியும். அத் தோய்வால் அது ஒன்றை யறியும்போது மற்றொன்றை யறியாது. அவ்வாறிருப்பதற்கு அத்தோயுமியல்பே காரணம். அவ்வறிவு சிவத்தைச் சார்ந்தால் அதன் வண்ண மாகி முற்றறிவாதலும் உண்மை. நான் என்பதன் சார்ந்ததன் வண்ணமா மவ்வறிவே சிற்றறிவு. பிரமத்தின் தோய்விலா வறிவு முற்றறிவு. அவ்வேற்றுமை பெரிது. ஆகலின் அறிவுடைமை யொன்றே பற்றி நான் என்பதும் பிரமும் ஒன்றென்பது தவறு. அவை வெவ்வேறு பொருள்களே.

Link to comment
Share on other sites

ஏழாமவன் 20 சமூகான்ம வாதி

சமூகம் - சமுதாயம். தூலவுடல், இந்திரியங்கள், சூக்கும வுடல், பிராணவாயு, பிரமம் என்பன தனித்தனி நான் என்பதாகா. அவை கூடித் தொழிற்படுகின்றன. அப்போது அறிவு உளதாகின்றது. ஆகலின் அக்கூட்டமே நான் என்பது. அப்படி வாதிக்கிறானவ்வாதி. பெளத்தரில் ஒருவகையா னுளன். அவனும் பஞ்சகந்தங்களின் சமுதாயமே நான்என்ப தென்கிறான். பலமரங்கள் கூடி வளர்ந்துள்ளன. அக்கூட்டம் காடெனப் பெயர் பெறும். அப்படியே நான் என்பதும் அத்தூலவுடலாதி பதார்த்தங்களின் தொகுதிப் பெயரே. இ·தவன் தரும் எடுத்துக் காட்டுடன் கூடியது. இருக்கட்டும். ஒருபொருள் கூட்டப் பெயர் பெறாது. கூட்டமாவது பொருள்களின் பன்மை. மேலும் தூலவுடல் முதலிய அக்கூட்டப் பொருள்கள் ஆராய்ந்தறியப்படுவன. அவற்றை அப்படி யறியும் வினைமுதல் எது? அது தான் நான் என்பது. அறியும் பொருளும் அறியப்படும் பொருளும் ஒன்றாகா, எந்தப் பொருளுந்தன்னை யறியமாட்டாது. கண் பிறவற்றைக் காணும், தன்னைக் காணாது. ஆகலின் நான் என்பது வேறு, தூலவுடலாதியவற்றின் கூட்டம் வேறு என்க.

மேலும் கருவிகளெல்லாங் கூடிய நிலை சாக்கிரம், அவை கழன்ற நிலை (நீங்கிய நிலை) துரியாதீதம் பேருறக்க மென்பதும் அது. அதிலொரு சுகம் அனுபவிக்கப்படுகிறது. நான் சுகமாகத் துயின்றே னென்றொரு வாசகம் விழித்ததும் பிறக்கும். அச்சுக முண்டென்பதற்கு அவ்வாசகமே சான்று. கருவிகள் நீங்கிய அவ்வதீதத்தில் அவ்வனுபவத்தைக் கொண்டது எது? அது தான் நான் என்பது. அது தூலவுடலாதியவற்றின் கூட்டமாத லில்லை.

இன்னுங் கூட்டப் பொருள்களில் ஒவ்வொன்றற்கும் வெவ்வேறு பெய ருண்டு. ஒவ்வொரு பொருளும் வெவ்வே றியல்புடையது. கருவி கரணங்களிலும் அவ்வுண்மையைக் காணலாம். அவையெல்லாம் மாயாகாரியங்கள், நிலையற்றன. அவற்றின் கூட்டத்திற்கு உடம்பென்பது பெயர். அது நாடென்பது போலும். நான் தீபத்துக்கு வேறானது கண். அக்கண்போல்வது நான் என்பது. அது அவ்வுடலாதிய வற்றின் சமூகத்துக்கு வேறானது.

Link to comment
Share on other sites

எட்டாமவன் 21 அந்தக்கரணான்ம வாதி

22சமஷ்டி நான் என்ப தாகாது. அது சரி. அப்படியே அந்தக்கரணங்களின் சமஷ்டியும் நான் என்ப தாகாது தான். ஆனால் சித்தம் நான், மனம் நான், ஆங்காரம் நான், புத்தி நான் என்று சாத்திரம் பல விடங்களிற் கூறுகின்றது. 23ஆகுபெயரென்னும் இலக்கணம்பற்றி அ·தப்படிச் சொல்லியிருக்குமா? ஆமெனின், அதற்குரிய சம்பந்தம் அக்கரணங்களுக்கும் நான் என்பதற்கும் இருக்கவேண்டும். அ·துண்டா? ஆயின், அதுபற்றி இந்திரியங்களையும் நான் எனச் சொல்லலாம். சாத்திரத்தில் அவ்வழக் கில்லை. ஆகலின் சாத்திர வழக்குப்பற்றி ஒவ்வோ ரந்தக்கரணமும் ஒவ்வொரு நான் என்றல்தான் சரி. அப்படி வாதிக்கிறான் அவ்வாதி. உலக விஷயங்களை முதலில் அறிவன இந்திரியங்கள். பிறகு அவ்விஷயங்கள் அந்தக்கரணங்களுக்கு வருகின்றன. எப்படி? அவற்றைச் சித்தம் சிந்திக்கின்றது, அடுத்து மனம் 24சங்கற்பித்து 25விகற்பிக்கின்றது, பிறகு ஆங்காரம் துணிய ஒருப்பட்டெழுகின்றது, இறுதியில் புத்தி நிச்சியிக்கின்றது. அக்கரணங்கள் அத்தொழில்களைச் செய்யும்போது நான் சிந்தித்தேன், நான் சங்கற்ப விகற்பங்கள் செய்தேன், நான் ஒருப்பட் டெழுந்தேன், நான் நிச்சயித்தேன் என்றுஞ் சொல்லுகின்றன. அப்போது சித்தம் தன்னையே நான் என்கிறதா? மனம் தன்னையே நான் என்கிறதா? ஆங்காரம் தன்னையே நான் என்கிறதா? புத்தி தன்னையே நான் என்கிறதா? அவையெல்லாம் வெவ்வேறு தொழில்களைச் செய்வன. மேலும் சித்தஞ் செய்வதை மனஞ் செய்யமாட்டாது. மனஞ் செய்வதை ஆங்காரமும், ஆங்காரஞ் செய்வதைப் புத்தியும், புத்தி செய்வதைச் சித்தமுஞ் செய்யமாட்டா. ஆயினும் ஒரே நான் தான் அத்தனையையுஞ் செய்வதாக வுணர்கிறது. அனுபவ மெல்லாம் அந்த ஒன்றற்கே யாம். அவ்வொன்று அவ்வந்தக்கரணங்களுக்கு வேறாமென்பது அவ்வனுபவங்கொண்டு அறியப்படும்.

இன்னும், அக்கரணங்கள் தூல வுடலிலும் சூக்குமவுடலிலும் ஒன்று போலவே தொழிற் படுகின்றன. அவையே நான் என்பதாயின் நனவிற் கண்ட காட்சிகளைக் கனவில் மயங்கி யறிவானேன்? ஆகையாலும் அவை நான் என்பதல்ல என்க.

இன்னும் அக்கரணங்களுட் புத்தியும் ஒன்றன்றோ? நிச்சயித்தல் அதன் தொழில். அவ்வளவில் அது நிற்பதில்லை. உலக விஷயங்கள் பல. அவற்றுட் சில சுகரூபம். சில துக்க ரூபம். சில மோக ரூபம். எல்லா விஷயங்களும் அம்மூன்றிலடங்கும். புத்தி அவற்றை நிச்சயிப்பதோடு அந்தந்த ரூபங்களாகவும் 26பரிணமிக்கும். உடனே நான் என்பது அப்புத்தியை விட்டு விலகி நின்று அப்பரிணாமத்தை இது சுகம், இது துக்கம், இது மோகம் எனக்காண்பதோடு நான் சுகித்தேன், நான் துக்கித்தேன், நான் மோகித்தேன் என அனுபவிக்கவுஞ் செய்கிறது. அப்போது அந்நான் என்பதற்குக் கருவிகளாக உதவுவன எவை? அவை தான் கலை, வித்தை, அராகம், காலம், நியதியென்ற தத்துவங்கள். நான் என்பது உலக விஷயங்களை முதலில் இந்திரியங்களால் அறிகிறது. அது 27இந்திரியக் காட்சி, பிறகு அந்தக்கரணங்களா லறிகிறது. அது 27மானதக்காட்சி. இறுதியில் புத்தி பரிணாமத்தைக் கலையாதிகளாலறிகிறது. அது 27தன்வேதனைக் காட்சி. அத்தன்வேதனைக் காட்சியில், நான் என்பது அந்தக்கரணங்களுக்கு வேறாவதை யறிக.

Link to comment
Share on other sites

புத்திதத்துவமுஞ் சடமே. சடத்துக்கு அறிவேது? அது விளக்குப்போ லிருந்து நான் என்பதன் அறிவை விளக்கும். அத்தனையே. ஆனால் அத்தத்துவத்தில் அவ்வறிவு பிரதிபிம்பிக்கும், அதனால் அத்தத்துவம் அறிதல் கூடும் என்பர் சிலர். அது தவறு. கண்ணாடியில் கண்பிரதிபிம்பிக்கிறது. ஆயினுங் காண்பதெது? கண்ணாடியா? அன்று கண்ணே காண்பது. அப்படியே புத்தி தத்துவத்தில் எதிர்விம்ப மாய நான் என்பதே அறியும். அத் தத்துவம் அறியாது. பூவிற்கு வாசனை யுண்டு. அவ்வாசனை மற்றொரு பொருளிலும் போய்ப் பற்றலாம். பற்றினால் பூவில் வாசனை குறையும். இல்லாமலும் போம். அப்படியே நான் என்பதனறிவும் புத்திதத்துவத்திற் பற்றினால் நான் என்பதிற் குறையும். இல்லாமலும் போம். ஒன்றன்குணம் இன்னொன்றிற் போய்ப் பற்றுவதைச் 28சங்கிரமித்தல் என்பர் சிலர். குணத்துக்குச் சங்கிரமமில்லை. அறிவு குணம், ஆகலிற் சங்கிரமியாது. ஆகவே புத்திதத்துவத்தை நான் என்பது மயக்கம். அம்மயக்கம் 29அத்தியாச மெனப்படும். அவ்வத்தியாசத்தை யெல்லாருமே யிகழ்வர்.

இந்திரியங்கள் வெளியிலுள்ளன. 30 அந்தக் கரணங்கள் உள்ளுக் கிருப்பன. (அந்தம் - உள்) கண்ணாடி போன்றது புத்தி. அதில் நான் என்பதனறிவு பிரதிபிம்பிக்கும் ஆதலால் அதுவும் அறிவுடையதுபோற் புலப்படும். அதனாற் புத்தியுஞ் சித்து என்று நூல் சொல்லும். இந்திரியங்களை நோக்க அது சித்து. ஆயினும் அதனைச் சித்தென்றல் 31 உபசாரமே. அவ்வுபசாரம் இனம்பற்றிச் சித்தமாதி மற்றைக் கரணங்களையுந் தழுவும். ஆகவே அந்தக்கரணங்களை நான் என்பது அவ்வுபசாரம் பற்றியே யென்க.

மேலும் அமைச்சரானோர் அரசனுக்குச் சமீபத்திலிருந்துகொண்டு யோசனை கூறுகிற ஊழியர். அதனால் அவரையும் அரசனென உபசரிப்ப துண்டு. அப்படி அந்தக்கரணங்களும் நான் என்பதற்குச் சமீபத்தி லிருந்து கொண்டு சூழ்ச்சித்துணை புரிந்துவருகின்றன. அதனாலும் அவை நான் என்ப தாம். அப்படிச் சாத்திரம் சில விடங்களிற் பேசும். அந்தக் கரணங்களை நான் என்றல் அச்சமீபத்தாலுமாம். உண்மையில், இந்திரியங்கள் போன்று அந்தக்கரணங்களும் அசித்தே. இந்திரியங்கள் உபசாரத்தாலுஞ் சித்தெனப்படா. உபசாரத்தளவில் அந்தக்கரணங்கள் சித்தாயின. ஆனால் நான் என்பதன்முன் அவையும் அசித்தே. நான் என்பது என்றுமே சித்து. ஆகலின் அக்கரணங்களுக்கு வேறாயதே நான் என்பது என்க. நான் என்பதற்கும் இந்திரியங்களுக்கு முள்ள சம்பந்தம் அரசனுக்கும் அமைச்சரல்லாத ஏனைப் பரிசனங்களுக்கு முள்ள சம்பந்தம் போல்வது. அப்பரிசனங்கள் அரசனென உபசரிக்கப்பட்டார். அப்படியே இந்திரியங்கள் உபசாரத்தாலும் நான் எனப் பெயர் பெறா

Link to comment
Share on other sites

1, 2. குயவன் மண்ணால் பானை வனைந்தான் என்பதில்

குயவன் - வினைமுதல்; மண் - மூலப்பொருள்; பானை - காரியப் பொருள்.

3 வினை முதல் - தொழிலுக்குக் கர்த்தா, குயவன் பானை செய்தான் என்பதில் குயவன்

வினை முதல்

4. அளவை நூல் - தருக்கசாஸ்திரம் - உலகத்துப் பதார்த்தங்களை எண்ணல், எடுத்தல் முகத்தல், நீட்டல் என்னும் அளவினால் அளந்தறியுமாறுபோல, பதி, பசு, பாசம் முதலிய பொருள்களைப் பக்குவான்மாக்கட்கு அளந்து அறிவிக்கையின் பொருட்டு, பிரத்தியக்ஷ்ப் பிரமாணம் (காட்டியளவை) அனுமானப் பிரமாணம் (கருதலளவை) ஆகமப் பிரமாணம் (உரையளவை) முதலிய பிரமாணங்களைப் பற்றிக் கூறும் நூல்.

5. எதிர்மறையனுமானம்; அனுமானப் பிரமாணத்தின் உட்பிரிவுகளில் ஒன்று, எதிர்மறை, வெதிரேகம், விபக்கம் ஒவ்வாத பக்கம் மீட்சிமொழி என்பன ஒரு பொருளைக் குறிப்பன. இம்மலையில் நெருப்பில்லை; ஆதலால் புகையில்லை என்பது போல.

6. சூனியான்ம வாதி - ஆன்மா இல்லை என்று வாதிப்பவன்.

7. தேகான்ம வாதி - உடம்பை ஆன்மா என்று வாதிப்பவன்.

8. தற்கிழமைச் சம்பந்தம் - தன்னோடு ஒற்றுமையுடைய பொருளோடு சம்பந்தம் சாத்தனது கை, கண்ணனது கருமை என்பவை போல.

9. பிறிதின்கிழமைச் சம்பந்தம் - தன்னில் வேறாகிய பொருளோடு சம்பந்தம். சாத்தனது வீடு, கண்ணனது பசு என்பவை போல

10 அபேதத்தொடர் - இராகுவின் தலை என்பதில் இராகுவுக்குத் தலையன்றி வேறு உறுப்பு இல்லை

11 பேதத்தொடர் - என் தலை என்பதில் உள்ள நான் வேறு தலை வேறு

12. இந்திரியான்ம வாதி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை ஆன்மா என்று வாதிப்பவன்.

13. சூக்குமதேகான்ம வாதி - விளக்கித் தோன்றாத துண் உடம்பே ஆன்மா என்று வாதிப்பவன்.

14. முதற்காரணம் - காரணம் மூன்று வகைப்படும். அவை முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம்; குடத்திற்கு மண் முதற் காரணம், தண்டசக்கரங்கள் துணைக்காரணம், குயவன் நிமித்த காரணம்.

15. அப்பற்று வீடுகளே - அந்தப் பற்றுதலும் விடுதல்களுமே

Link to comment
Share on other sites

16. பிராணான்ம வாதி - பிராண வாயுவை ஆன்மா என்று வாதிப்பவன்

17. தூலவுடம்பு - பருவுடல் [தூலம் - விளங்கித் தோன்றிய நிலை] - §தோல், இரத்தம், என்பு, இறைச்சி, மேதை மச்சை சுவேத நீர் முதலிய தாதுக்களால் இயற்றப்பட்டது.

18. பிரமான்ம வாதி - பிரமமே ஆன்மா என்று வாதிப்பவன்.

19. அவிச்சை - அவித்தை, அஞ்ஞானம், ஒன்றை மற்றொன்றாகத் திரியா¡க்காணும் உணர்வு. கயிற்றைப் பாம்பு என்று எண்ணுவதற்குக் காரணமாயிருப்பது.

20. சமூகான்ம வாதி - உடல் முதலிய எல்லாக் கருவிகளின் கூட்டமே உயிர் எனக் கொள்பவன்.

21. அந்தக் கரணான்ம வாதி - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்களை ஆன்மா என்று வாதிப்பவன்.

22. சமஷ்டி - சமூகம், பலபொருள் கூட்டம் அல்லது தொகுதி

23. ஆகுபெயர் என்னும் இலக்கணம் - ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர் - ஊரடங்கிற்று என்பதில், ஊர் என்னும் இடப்பெயர் ஊரிலிருக்கிற மனிதருக்காதல்போல.

24. சம்கற்பித்தல் - எண்ணுதல், நினைத்தல், கண்ட ஒரு பொருளை இது யாது எஎன்று அதன் குணங்களைத் தூக்கிச் சிந்தித்துப் பின்னர் முன் அனுபவித்தறிந்த வாதனை பற்றிக் குணங்கள் இன்னவாகலின், இக்குணங்களை யுடைய பொருள் குடம் அல்லது ஆடை என்று ஒன்றனை நினைக்கும் நினைவு.

25. விகற்பித்தல் - அங்ஙனம் நினைத்த பின்னர், இது குடமோ அன்றோவென்றுறு எண்ணும் ஐயம்.

26. பரிணமித்தல் - ஒன்று பிரிதொன்றாதல்.

சூக்கும பரிணாமம் - சேலை கூடாரமாதல் போல்வது

தூல பரிணாமாம்

முற்றும் பரிணாமம் - பால் தயிராதல் போல்வது

ஏகதேச பரிணாமம் - நெய்யில் புழு உண்டாதல்

27. இந்திரியக் காட்சி, மானதக் காட்சி, தன்வேதனைக் காட்சி - அளவை இலக்கணத்தில் பிரத்தியக்ஷப் பிரமாணத்தில் (காட்சி அளவையின்) உட்பிரிவுகள், கண் முதலிய பொறிகளையும் தேயு முதலிய பூதங்களையும் உருவம் முதலிய தன் மாத்திரைகளையும் ஆதாரமாகக்கொண்டு உருவ முதலிய விடயங்களை நிருவிகற்பமாய் அறியுந் அறிவுஇந்திரியக் காட்சி: அவ்வாறு அறிந்தபின்னர் அக்காட்சியை மீள மறத்தலின்றி, பெயர் ஜாதி முதலியவற்றால் விபரீதமாதலின்றி உள்ளவாறு நிச்சயமாய் புத்திதத்துவத்தின் கண் வருதலாகிய சவிகற்ப உணர்வு மானதக்காட்சி. மானதக்காட்சியால் பகுத்தறியப்பட்ட விஷயங்களில் உண்டாகிய சுகதுக்கங்களை அராகம் முதலிய ஐந்து தத்துவங்கள் ஆன்ம ஞானத்தினிடத்திலே செலுத்த நான் சுகி, நான் துக்கி என்பது முதலாக அறியும் ஞானசக்தி தன்வேதனைக் காட்சி அல்லது சுவேதனாக் காட்சி.

28. சங்கிரமித்தல் - கலத்தல்; நீரும் பாலும் கலத்தல்போல

29. அத்தியாசம் - இப்பியை வெள்ளி என்பது போல ஒன்றை மற்றொன்றாகக்க் கொள்வது.

30. அந்தக் கரணங்கள் - மனம், புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கு தத்துவங்கள்

Link to comment
Share on other sites

உலக விஷயங்கள் இந்திரியங்களுக்கு வருகின்றன. அங்கிருந்து அவை அந்தக் கரணங்களிற் பிரவேசிக்கின்றன. முடிவில் அவை நான் என்பதன் அறிவிற்போய்ப் பதிகின்றன. அப்படி இந்திரிய மானச சுவவேதனாக் காட்சிகளில் அவை வரிசையாகப் 32பரம்பரையிற் போவதென்று நூல்கள் சொல்லும். கடலில் அலைகள் செல்வது அதற்கு உவமை. உலக விஷயங்கள் இந்திரியக் காட்சியிலிருந்து மானதக் காட்சிக்குப் போகின்றன. அதனால் இந்திரியங்களையே அந்தக்கரண மென்றிடலாமா? அப்படியே மானசக் காட்சியிலிருந்து சுவவேதனாக் காட்சிக்கு அவை போகின்றன. அதனால் அந்தக்கரணங்களை நான் என்றலும் பொருந்தாது. ( சுவவேதனா - தன்வேதனை)

விஷயங்கள் அந்தக்கரணங்களிலும் கடலலை போலவே பரம்பரையிற் செல்லுவன. எப்படி? விஷய தரிசனத்தில் நான் என்பது முதலில் அந்தக்கரணங்களோடு இயையாது. அது வித்தியாதத்துவத்தைக் கருவியாகப் பற்றி நேரே இந்திரியங்களை யதிட்டிக்கும். அப்போது ஒருபொருள் இந்திரியங்களுக்கு விடயமாகும். அதனை இ·தொரு பொருள் என்ற அளவில் அந்நான் என்ப தறியும். அவ்விந்திரியக் காட்சியே நிருவிகற்பக்காட்சி. அடுத்து அந்நான் என்பது மனத்தை யதிட்டிக்கும். 33 மனம் சித்தமாய் மாறும். அந்நான் என்பது அச்சித்தமாய் நின்று அவ்விடயத்தைக் குறித்து இ·தென்ன பொருள்? என்று சிந்திக்கும். பிறகு அது மனமாய் நின்று வாசனை வயத்தால் அப்பொருளை இன்ன பொருளென ஒருவாறு நினைக்கும். அந்நினைப்பே சங்கற்பம். உடனே அந்நான் என்பது இ·து அப்பொருள் தானோ? அன்றோ? என அதனைச் சந்தேகித்தும்விடும். அச்சந்தேகமே விகற்பம். அப்பால், அந்நான் என்பது ஆங்காரத்தை யதிட்டிக்கும். அப்போது அ·து இன்னபொருள் என நான் துணிவேன் என்ற ஊக்கம் அந்நான் என்பதற்கு வரும். பிறகு அது புத்தியை யதிட்டிக்கும். அப்போது அது அப்பொருளை இன்ன பொருள்தா னென்று நிச்சயிக்கும். உடனே அப்புத்திதத்துவம் அப்பொருளின் வடிவமாகப் பரிணமிக்கும். அதுவரை அந்தக்கரணங்களில் அப்படி ஒன்றன்பின் ஒன்றாய்க் கடலலைபோற் பிரயாணஞ் செய்யும் விஷயஞானமே சவிகற்பக் காட்சி. சிந்தித்தல்முதல் நிச்சயித்தல்வரை முறையே ஏதுவும் பயனுமாய் வருவது அது. அவ்வரவு வெகு துரிதமானது. ஆகலின் அ·து ஏககாலத்தில் நடப்பது போல் தோன்றும். நான்என்ப தொன்றே அங்ஙனம் அவற்றையெல்லாம் அதிட்டித்து அறிவது. ஆகலின் அ·து அவற்றிற்கு வேறு. காலம் என்பது ஒரு தத்துவம். அது சூரிய சந்திரரோடு இசைகிறது. அதனால் வருஷம், மாதம், நாள் முதலிய காலப் பாகுபாடுகள் உளவாகின்றன. நான் என்பது அக்கால தத்துவம் போல்வது. அந்தக்கரணங்கள் அச்சூரிய சந்திரரை யொக்கும். விஷயஞானம் அவ்வருஷ மாதாதிகளுக்குச் சமம். காலமோ சூரியாதிகளுக்கும் வருஷாதிகளுக்கும் வேறு. அப்படியே நான் என்பதும் சித்தமாதிகளுக்கும் விஷயஞானங்களுக்கும் வேறாகும். விஷயஞானமாவது புத்திபரிணாமம்.

நான் என்பது கருத்தா. அந்தக்கரணங்கள் கருவியே. ஆனால் அக்கருவி தானே கருத்தா வென்னும்படி அக்கருத்தாவோடு இயைந்து நிற்கும். கண்ணுக்குத் தீபம் கருவியே. அப்படி நான் என்பதற்கு அந்தக்கரணங்களாம். அவ்வுண்மையை யறிக.

நான் என்பது 34புருடதத்துவமென நிற்கும். அப்போது அது 35பஞ்சகஞ்சுகத்தையும், 36பஞ்சகிலேசத்தையும் உடையது. அந்நிலையில் அதற்குப் பொதுவகையான் உணர்வு நிகழும். அது போதாது. சிறப்பு வகையாலும் அவ்வுணர்வு நிகழவேண்டும். அதற்காகவே அந்தக் கரணங்கள் உளவாயின. ஆண்டுள்ள மானதக்காட்சியில் நிகழ்வது சவிகற்ப வுணர்வு. சவிகற்பவுணர்வு பாஷையின்றி யுண்டாகாது. வாக்குக்கள் அவ்வுணர்வு நிகழ்ச்சிக்கு முக்கிய சகாயம். ஆகலின் சப்தப்பிரபஞ்சமும் அந்தக் கரணங்களை உடனின்று செலுத்துமென்பது பெறப்படும். சப்தங்கள் ஐந்து. அவை சூக்குமை, பைசந்தி, மத்திமை, சூக்குமவைகரி, தூல வைகரி யென்பன. தூலவைகரிக்கு எழுத்து அசுரம், சூக்குமவைகரிக்கு உகரம், மத்திமைக்கு மகரம், பைசந்திக்கு விந்து, சூக்குமைக்கு நாதம். அவ் வைந்தெழுத்தும் சூக்கும பஞ்சாக்கரம். அகாரம் அல்லது தூல வைகரி அகங்காரத்தைச் செலுத்தும். உகாரம் அல்லது சூக்குமவைகரி புத்தியையும், மகாரம் அல்லது மத்திமை மனத்தையும், விந்து அல்லது பைசந்தி சித்தத்தையும், நாதம் அல்லது சூக்குமை புருடதத்துவத்தையும் செலுத்தும். அச்சூக்கும பஞ்சாக்கரத்தின் பரிணாமமே 37அசபை யென்னு மந்திரம். அது பிராணவாயுவை யடக்கியும் விட்டும் நின்று விஷயங்களை யுணர்த்தும். அதனால் நினைப்பு மறப்புக்கள் கணந்தோறும் மாறி மாறி வரும். நினைப்பாவது விஷயங்கள் புதிது புதிதாகத் தோன்றுதல். மறப்பாவது அவை மீள வொடுங்குதல். நினைப்புச் சகலம். மறப்புக் கேவலம். அம்மாறுதல்கள் கடலிற் புதிதாக அலைகள் தோன்றுவதும், தோன்றிய அலைகள் ஒடுங்குவதும் போன்றன.

இனி, அவ்வெழுத்துக்களுஞ் சடம். அவை தம்மளவில் அந்தக்கரணாதிகளை யியக்கமாட்டா. அவ்வெசுத்துக்களை யதிட்டிக்குங் கடவுள ருவர். அவர் அவற்றின் அதி தெய்வங்கள். அவர் அவ்வெழுத்துக்களை யியக்குவர். அவை அந்தக்கரணாதிகளை யியக்கும். நான் என்பது அவற்றால் விஷயங்களை யுணரும். அவ்வளவே. அக்கடவுளர் நாதத்திற் சதாசிவனும், விந்துவில் மகேசுரனும், மகாரத்தில் உருத்திரனும், உகாரத்தில் விட்டுணுவும், அகாரத்தில் பிரமனும் ஆவர். இந்த 38பிரம விட்டுணு உருத்திரர் சுத்த வித்தையிலிருக்கின்றவர். (பிரகிருதி மாயையில் குறித்த பிரம, விட்டுணு அல்லர்)

Link to comment
Share on other sites

31. உபசாரம் - இல்லாத உரிமையை இயைபு பற்றி ஏற்றிக் கூறும் புகழ்ச்ச்சி.

32. பரம்பரையில் தோன்றுதல் - ஒன்றன் பின் ஒன்றாக வருதல். கடலில் தோன்றி கரை சேரும் அலைபோல முன்னர் வாயிற் காட்சி யுணர்வு தோன்றி அதன்பின் மானதக்காட்சி யுணர்வு தோன்றி, அதன் பின் தன் வேதனைக் காட்சி யுணர்வு உயிரின் கண் வந்து தோன்றுதல். [சிவஞானபாடியம் 4ம் சூ 1ம் அதி]

33. மனம் சித்தமாய் மாறும் - கண்ட ஒரு பொருளை இ·து யாது எனக் குணங்களைத் தூக்கி சிந்திக்கும் நினைவிற்கு நிருவிகற்பகக் காட்சி மாத்திரையே காரணம். இன்னது என்னும் சங்கற்ப நினைவிற்குத் தூக்கிச் சிந்திக்கும் நினைவின் பின் வெளிப்படும் வாதனை காரணம். இவ் விருவகை நினைவும் காலத்தாலன்றி காரணத்தாலும் தம்முள் வேறுபாடு உடைமையின் இவ்விரண்டிற்கும் மனம் ஒன்றே கருவியாதல் சாலாது எனின், பயனால் வேறுபாடின்மையின், மனமே அவத்தை விசேடத்தால் சித்தமென விருத்திப்பட்டு நின்று அங்ஙனம் தூக்கிச் சிந்திக்கும். [சிவஞானபாடியம் 2ம் சூ 2ம் அதி]

34. புருடதத்துவம் - கலை முதலிய பஞ்சகஞ்சுகத்துடன் கூடிப் பொதுமையால் போத்திருத்துவம் எய்தி நின்ற ஆன்மாப்பிரகிருதி மாயைப் போக நுகர்ச்சியின் உன் முகத்திற்கு ஏதுவாகிய அவிச்சை முதலிய பஞ்சக்கிலேசமென்னும் பும்ஸ்துவ மலமுடையனாய்ப் புருடதத்துவமென நிற்பன் ஆன்மா.

35. பஞ்சகஞ்சுகம் - அராகம், வித்தை, கலை ஆகிய மூன்று தத்துவங்களும் ஆன்மாவின் இச்சா ஞானக் கிரியைகளை விளக்கிப் போக நுகர்தற் பொருட்டுப் புத்திதத்துவத்திற் செலுத்தியும், நியதிதத்துவம் இதனையே நுகர்க எனப் போகத்தின்கண் ஆன்மாவை நியமித்து நிறுத்தியும், காலதத்துவம் இதனை இத்துணைப் பொழுது மாத்திரம் நுகர்க எனப் போகத்தின்கண் வரையறுத்துச் செலுத்தியும் இவ்வாறு இவ்வைந்தும் ஆன்மாவுக்கு உபகாரமாய், ஏனைக் கருவிகள் போல அவத்தைப்படுதற்கு ஏதுவாய் இடையிடையே கூடுதலும் நீங்குதலுமின்றி எக்காலத்தும் ஆன்மாவின் உடனாய்க் கஞ்சுகம்போலப் பந்தித்து நிற்றலின், இவை பஞ்சகஞ்சுகம் என்று உபசரித்துக் கூறப்படும்.

36. பஞ்சக்கிலேசம் - அநித்தத்தை நித்தமென்றும், அசுத்தத்தைச் சுத்தமென்றும்,, துன்பத்தை இன்பமென்றும், தானல்லாத பொருளைத் தானென்ருந் திரியக்காணும் உணர்வாகிய அவிச்சையும், அதுபற்றி அவற்றை யானென மதிக்கும் ஆங்காரமும், அது பற்றி எனக்கிது வேண்டுமென்னும் அவரவும், அது பற்றி அப்பொருட்கட்செல்லும் ஆசையும் அது பற்றி அதன் மறுதலைக்கட் செல்லுங் கோபமுமென இவை. இப்பஞ்சக்கிலேசமே பும்ஸ்துவமலமென்றோதப்படும். இவ்வைந்தினையும் மூன்றாயடக்கிக் "காமம் வெகுளி மயக்கமிவை மூன்ற-னாமங் கெடக் கெடு நோய்" என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும். [சிவஞானபாடியம் 2ம் சூ 2ம் அதி]

37. அசபை - அம்ஸமந்திரம்

"நான்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து"

- (ஒளவையார் விநாயகரகவல்)

"ஆசுதீர் உடம்பின் முன்புபோல் இருத்தி

அங்கண்ஆ தாரபங் கயத்துத்

தேசுறும் வன்ன ரூபியாய் நிறைந்த

தேவியை முறைவழா தமைத்துப்

பேசிரு பத்தோ ராயிரத் தறுநூ றுயிர்ப்பினைப்

பிரித்து அசபையினான்

மாசுறும் ஆனை முகப் பிரான் முதலோர் மகிழ்வுறும்

படியவர் குதவி

- (காஞ்சிப் புராணம், சனற்குமாரப் படலம்)

38. பிரமவிட்டுணு உருத்திரர் சுத்தவித்தையில் இருக்கின்றனர் - சுத்தவித்தை தத்துவங்கள் 36ல் 32வது தத்துவம். சுத்தவித்தியாதத்துவம் என்றும், தூல ஈசுரதத்துவம் என்றும் தூல அதிகாரதத்துவம் என்றும் தூலப் பிரவிருத்தி தத்துவம் என்றும் தூல சகள தத்துவம் என்றும் தன்னை அதிட்டிக்கும் முதல்வனுக்குரிய பெயரனைத்தும் பெற்று நிற்கும்.

இது தூலமாய் நின்ற ஈசுரனுக்கும் தூலவைகரிரூபமாய் நின்ற சிவாகம முதலிய சாத்திரங்கட்கும், ஏழு கோடி மந்திரங்கட்கும், நந்தி முதலிய கணங்கட்கும், வாமை முதலிய ஒன்பது சத்திகட்கும், முத்தி பெற்று மலவாசனை மாத்திரமுடையவராய்க் கீழுள்ள உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோரைத் தொழிற் படுத்துவோராகிய உருத்திரன், மால், அயன், இந்திரன் முதலியோர்க்கும், அவர் தநுகரணாதிகட்கும் இடமாம் என்றுணர்க.

- (சிவஞானபாடியம் 2சூ, 2 அதி)

Link to comment
Share on other sites

ஒன்பதாமவன் 39 விஞ்ஞானான்ம வாதி

அன்ன பிராண மனோமய கோசங்கள் உயிரல்ல, உயிர் அவற்றின் வேறு என்பது 40முன்னரே ஆராய்ந்து காணப்பட்டது. அம்முடிவுக்குப் பேதத்தொடராகிய என் உடல் என்ற வழக்கும் ஒரு ஹேதுவா யிருந்தது. ஆனால் என் உயிர் என்றொரு வழக்கு முண்டு. அது பேதத்தொடரன்று, இராகுவின் தலை என்பது போன்ற அபேதத் தொடரே. என் உயிர் என்பதிலுள்ள என் என்பதற்குரிய நானும் உயிரும் ஒன்றே. அப்படியே என் விஞ்ஞானமய கோசம் என்ற வழக்கிருந்தாலும், அதுபற்றி என் என்பதற்குரிய நானும் விஞ்ஞானமய கோசமும் ஒன்றென்றே கொள்ள வேண்டும். ஏன்? அறிவே விஞ்ஞானம். உயிர் அறிவுப்பொருள். ஆகலின் விஞ்ஞானமய கோசமே உயிர். அப்படி வாதிக்கிறான் அவன். விஞ்ஞானமய கோசத்துக்குக்கும் ஆனந்தமய கோசத்துக்கும் வேற்றுமை சிறிதே. ஆகலின் விஞ்ஞானமய கோசமே உயிர் என்ற வாதத்தில் ஆனந்தமய கோசாமே உயிர் என்றவாதமும் அடங்கும்.

அன்னமய முதலிய ஐந்து கோசங்களும் முறையே ஒன்றினொன்று சூக்குமம். உயிர் அவற்றுள் ஒவ்வொன்றிலும் அதுவதுவாய் 41 வசிப்புண்டு அதையதை வியாபித்து நின்று செலுத்தும். எப்படி? உயிர் அன்னமய கோசத்தைச் செலுத்துவது பாகன் தேரைப் பாரிற் செலுத்துவது போலாம். அவன் தன் கை கால் கண்முதலிய பல வுறுப்புக்களையும் அறிவையுங் கொண்டு தேரைச் செலுத்துவான். அப்படியே உயிர் அன்னமய கோசத்தைச் செலுத்தும்போது எல்லாத்தத்துவங்களுந் தொழிற்படும். உயிர் பிராணமய கோசத்தைச் செலுத்துவது மரப்பாவைக் கூத்தன் மரப்பாவையை யியக்குவது போலாம். அவன் தன் கை, கயிறு, தன்னறிவு ஆகிய இவற்றைக் கொண்டு மரப்பாவையை ஆட்டிவைப்பான். அவனுக்குக் கருவிகள் அதிகம் வேண்டாம். அப்படியே உயிர் பிராணமய கோசத்தைச் செலுத்தும்போது அன்னமய கோசதத்துவங்களை விடக் குறைந்த தத்துவங்களே தொழிற்படும். உயிர் மனோன்மயகோசத்தைச் செலுத்துவது தோற்பாவைக் கூத்தன் தோற்பாவையையியக்குவது போலாம். அவன் அதைத் தன் கையிற் பிடித்துக்கொண்டு சாமர்த்தியமாக ஆட்டுவான். அவனுக்குக் கையும் அறிவுமே போதும். கயிறுதானும் வேண்டாம். அப்படியே உயிர் மனோன்மய கோசத்தைச் செலுத்தும் போது பிராணமய கோசத்துவங்களை விடக் குறைந்த தத்துவஙகளே தொழிற்படும். உயிர் விஞ்ஞானமய கோசத்தைச் செலுத்துவது யோகி 42 பரகாயப் பிரவேசஞ் செய்வது போலாம். அவனுக்கு அவனுடம்பு அகம் மற்றவனுடம்பு புறம். அவன் தன்னறிவின் துணையொன்றே கொண்டு தன்னுயிரைப் புறத்திற் செலுத்துகிறான். அவனுக்கு வேறு துணைகளில்லை. அப்படியே உயிர் விஞ்ஞானமய கோசத்தைச் செலுத்தும்போது மனோமய கோச தத்துவங்களை விடக் குறைந்த தத்துவங்களே தொழிற்படும். உயிர் ஆனந்தமய கோசத்தைச் செலுத்தும்போது மனோமய கோச தத்துவங்களை விடக் குறைந்த தத்துவங்களே தொழிற்படும். உயிர் ஆனந்தமய கோசத்தைச் செலுத்துவது கூத்தன் தானே வேடங்கட்டி யாடுவது போலாம். அவனுக்கும் அவனறிவு தான் துணை. ஆனாலும் அவன் தன்னுயிரைத் தனக்குப் புறமாகிய மற்றவனுடலிற் செலுத்தாமல் தன்னகத்திலேயே வைத்து இயக்குகிறான். அவனுக்கு அந்தப்புறமு மில்லை. அப்படியே உயிர் ஆனந்தமய கோசத்தைச் செலுத்தும் போது விஞ்ஞானமய கோச தத்துவங்களைவிடக் குறைந்த தத்துவங்களே தொழிற்படும்.

நிற்க. என் உயிர் என்பது இராகுவின் தலை யென்பது போல் சிறுபான்மை வழக்கே. அன்றியும் சூனியமுதலியவற்றின் வேறாய் உயிரென வொருபொருளுண் டென்பது முன் பல ஹேதுக்களால் நிறுவப்பட்டது. அவற்றுள் என் உடல் என்ற வழக்கும் ஒன்று. அதுபற்றி முன் தேகான்மவாதத்தில் விசாரித்தபடி இங்கும் விசாரித்துக் கொள்க. அப்படிப் பல ஹேதுக்களாலும் சாதிக்கப்பட்ட உயிருண்மையை என் உயிர் என்ற ஒரு வழக்குப் பாதித்து விடாது. மேலும் அவ்வழக்குக்குப் பொருள் வேறு. இலக்கணத்தில் ஆகுபெயரென ஒன்றுண்டு. அதன்படி ஒரு பெயர் தன் பொருளோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்கு வழங்கப்படும். அம்முறையில் என் உயிர் என்பதிலுள்ள உயிர் என்னும் பெயர் தன் பொருளோடு தொடர்புடைய பிராண வாயுவுக்கு வழங்கப்பட்டு ஆகுபெயராய் நின்றது. அதனால் என் உயிர் என்பது என் பிரணவாயு என்பதாயிற்று. என் என்பதற்குரிய உயிர் வேறு, உயிர் என்கிற பிராணவாயு வேறு என்பது அது பற்றித் தெரிக. ஆகவே என் உயிர் என்ற வழக்கைக்கொண்டு உயிரும் விஞ்ஞானமய கோசமும் ஒரு பொருளெனல் தவறு.

Link to comment
Share on other sites

வேதம் ஐந்து கோசங்களையுமே உயிரெனச் சில விடங்களிற் கூறும். அதுவும் ஆகுபெயரென்னும் இலக்கணம் பற்றியதேயாம்.

இனி, என் அறிவு, என் ஆனந்தம் என்ற வழக்குகள் உள. அவை பெரும்பான்மையுமாம். அவற்றால் நான் வேறு, என் விஞ்ஞான ஆனந்தமய கோசங்கள் வேறு என்பது புலனாம். அவ்வழக்குகளை அபேதம்பற்றிய தொடர்களெனச் சொல்லமுடியாது. ஏன்? என் உயிர் என்பதை அபேதத் தொடரெனச் சொல்லிக்கொண்டு அதுபோன்று என் அறிவு, என் ஆனந்தம் என்பனவும் அபேதத்தொடர்கள்தா னென்றால் அறிவும் ஆனந்தமும் என்னைவிட்டு நீங்காமலிருக்க வேண்டும்; ஆனால் துரிய துரியாதீதங்களாகிய மூர்ச்சையில் நீங்குகின்றன. அதனாலும் ஐங்கோசங்கள் உயிரல்லவாகும்.

இன்னுங் கோசங்களே உயிரென்றால் அந்தந்தக் கோசத்தின் அனுபவம் அந்தந்தக் கோசத்திலேயே புலனாக வேண்டும். அப்படியில்லை. உயிர் அதீதத்துக்குப் போய்ச் சாக்கிரத்துக்கு திரும்பும். அப்போது அது சொப்பனத்தைச் சொல்லியறியும் சுழுத்தியிற் சுக மிருந்தது. உயிர் அதை விளக்க மாட்டாமல் நினைப்பளவில் உணரும். துரியமுந் துரியா தீதமும் மூர்ச்சைநிலைகள். துரியத்திற் சுகமுமில்லை. உயிர் சுழுத்தியாகிய சுகானுபவத்தின் மறுதலையின் வைத்துச் சுக மின்மையாகிய துரியத்தை யறியும். துரியாதீதத்தில் மூச்சு அடங்கிவிடும். அதற்கு மறுதலை பிராணவாயுவின் இயக்கம். அம்மறுதலையின் வைத்து அவ்வடங்கிய துரியாதிதத்தை உயிர் அறியும். அப்படி உயிர் எல்லாக் கோசங்களின் அனுபவங்களையும் சாக்கிரத்தில் நின்றே அறிவதால் எல்லாக் கோசங்களுமே நானல்ல, நான் என்பது அவற்றுக்கெல்லாம் வேறான பொருள் என்பது நன்கு பெறப்படும்.

சூனியான்ம வாதிமுதல் விஞ்ஞானான்ம வாதி யீறாகவுள்ள ஒன்பது மதவாதிகளும் தம் மதத்துக்கேற்ப நான் என்பது சூனியமே யெனவும், தேகமே யெனவும், இந்திரியமே யெனவும், சூக்குமதேகமே யெனவும், பிராணவாயுவே யெனவும், பிரமமே யெனவும், சமூகமே யெனவும், அந்தக்கரணமே யெனவும், விஞ்ஞானமய கோசமே யெனவுங் கூறலாயினர். அத்தனையும் பிழை. நான் என்பது அச்சூனிய முதலியவற்றுக் கெல்லாம் வேறான பொருள். அதுதான் உயிரென்னும் பெயரது. அதற்கு இருப்பிடம் உடம்பு. இதுவரை ஆராய்ந்து அவ்வுண்மை நிறுவப்பட்டது.

இனி, வேதாகமங்கள் உயிரை உள் பொருளென்றன. அது உத்தேச மாத்திரையாற் சொன்னதாகும். [உத்தேசம் - பெயர்]. இதுவரை ஆராய்ந்ததில் பெயரளவில் உயிரெனவொன்றுண்டென்பது தெரிந்தது. [பெயரளவில் - பொருளவில்]. அடுத்துத் தெரியவேண்டுவது உயி¢ரென்ற அப்பொருளின் இலக்கணம். மூன்றாவது பரீட்¨க்ஷயெனவொன்றிருக்கிறது

. உத்தேசத்தையும், இலக்கணத்தையும் தெரிந்த பிறகு பரீ¨க்ஷ வேண்டும். பரி¨க்ஷயாவது யாது? உயிரென்னும் பெயருடைய பொருளில் அதன் இலக்கணங்களெனச் சொல்லப்பட்டவை உளவென்பதை நேரிற் காண்டலே அது. அ·து அனுபவ விஷயம். ஆகலின் அது பற்றிய பேச்சு இங்கு விடப்படுகிறது. உயிரின் இலக்கண சம்பந்தமாயும் மத மறுப்புக்களுள. அவற்றுட் சிலவற்றை இங்காராய்ந்து உண்மை காணலாம்.

Link to comment
Share on other sites

39. விஞ்ஞானான்ம வாதி - ஞானமே ஆன்மா என்று வாதிப்பவன்

40. முன்னரே - தேகான்மவாதி, பிராணான்மவாதி, அந்தக்கரணான்மவாதி என்ற தலைப்புள்ள பாடங்களில்.

41. வசிப்புண்டு- ஆன்மாவானது இறைவன்போல் பூரண வியாபகமும் அதிசூக்கும சித்தாதலுமின்றி சார்ந்தபொருளிடத்து அப்பொருள் அளவாக வியாபித்திருக்கும் ஏகதேச வியாபியாய் இச்சாஞானக்கிரியை என்னும் குணங்களை உடைத்தாய்.

[தண்ணீர் உப்பைச் சாரும்போது கைத்தும், வெல்லத்தைச் சாரும்போது இனித்தும், புளியைச் சாரும்போது புளித்தும் இருப்பதுபோல]

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாரும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாரும் அறிவு

என்ற திருக்குறளின் கருத்து ஈண்டு உற்றுநோக்கத் தக்கது.

42. பரகாயப் பிரவேசம் - கூடுவிட்டுக் கூடு பாய்தல், ஓர் உடம்பு விட்டு மற்றோர் உடம்பு புகுதல்.

Link to comment
Share on other sites

முதலாமவன் பரிணாம வாதி

பிரமமும் சீவனும் முறையே தீபமும் சூடும்போலக்குணி குணசம்பந்த முடையன. அப்படிப் பிரமமே சீவனாயப் பரிணமித்தது. தீயாகிய செம்பிழம்பும் அதன் சூடும் பிரியா; ஆகலின் அபேதம். ஆயினும் அச்செம்மையுஞ் சூடுந் தம்முள் வேறு; ஆகலின் பேதமுமாம். அத்தகைய பேதாபேதப் பொருளே பிரமமஞ் சீவனும். பிரமத்தின் குணமாகிய சீவன் அறிவு, இச்சை, செயல்களைப் பொருந்தும், அவை பலவாய் விரிவன. அவையெல்லாஞ் சிவனின் குணமே. அப்படி வாதிக்கிறான் அவ்வாதி. பிரமத்தின் குணமாகிய சீவனுக்குப் பிறிதொரு குணமுண்டா? குணத்துக் கொரு குணமுண் டென்றல் புதுமை. அது கிடக்க. இந்திரிய அந்தக் கரணங்களோடு சீவன் கூடினால் அதற்கு அறிவு இச்சை செயல்கள் தொழிற்படும், கூடாவிடில் தொழிற்படா. பிரமமே சீவனாபின் அவை அக்கூட்டமின்றியுந் தொழிற்படவேண்டுமே. அ·தில்லை, பிரமம் பேரறிவுடையது. அது தானே அறிந்து இச்சித்துச் செய்யவல்லது. அது சீவனாய்ப் பரிணமித்த தென்பது அபத்தம்.

Link to comment
Share on other sites

இரண்டாமவன் சாங்கியன்.

ஆனாம் குணியாகவும் (குணி - குணமுடையது), தொழில் அறிவு இச்சைகள் அதன் குணமாகவும் இருப்பதில்லை; அது தனித்த அறிவு மாத்திரையா யிருப்பது; அப்படி யிருப்பது அத னியல்பு; அதன் சந்நிதியில் கரணங்கள் உடம்பி லிருந்துகொண்டு தொழிற்படும்; அதனால் தொழில் அறிவு இச்சைகள். உடம்பில் நிகழ்வன என்கிறான் அவன்.

ஆன்மாவின் 43சந்நிதி சைதன்ய மாத்திரையே. அதில் உடம்பு தொழிற்படும் என்றானவன். அவ்வுடம்பில் அறிவு மாத்திரமே நிகழவேண்டும்; ஆன்மாவினிட மில்லாத இச்சையுங் கிரியையும் நிகழ்கின்றனவே. அவை நிகழலாமா? அச்சந்நிதியில் பிணவுடலுங் கிடக்கிறது, உறங்கு முடலுங் கிடக்கிறது. அச்சந்நிதிக்குங் கேடில்லை. அ·து எங்குமாயுள்ளது. அப்படியிருந்தும் அவ்வுடலில் அறிவு இச்சை செயல்கள் சூனியம். ஆகலின் ஆன்ம சந்நிதியில் உடலின் கண் அவை நிகழுமென்பது பிழை. ஆனால் அதற்கு அவன் கூறுஞ் சமாதானமும் உண்டு. அச்சந்நிதியிருந்தும் அவ்வுடலில் 44 அக்கிடையின்போது கரணங்கள் ஒடுங்கிவிடுகின்றன, அதனால் அவை நிகழவில்லை என்பதே அச்சமாதானம். அச் சந்நிதி யிருக்கும்போது கரணங்கள் ஒடுங்க ஏதுமில்லை. ஆகலின் அச்சமாதானம் பொருந்தாது.

மேலும் எல்லா விடங்களுமே ஆன்மாவுக்கு சந்நிதிதான். அதில் கடம், படம் முதலிய பல பொருள்களுள, அவற்றுக்கும் உடலுக்கும் பேதங் கிடையாது. அவையெல்லாஞ் சடங்களே. அச்சந்நிதியால் அறிவு இச்சை தொழில்கள் உடலிற் செயற்படு மென்பது உண்மையானால் அக் 45கடபாதிகளிலுஞ் செயற்பட வேண்டும். அ·தில்லை. ஏன்?

ஆன்மசைதன்யம் எங்குமாய் நிற்பதாலேயே ஆன்ம சந்நிதி யாய்விடாது; இரும்பு தொழிற்படுதற்கு ஏதுவான வகையில் காந்தத்தின் சந்நிதி யிருக்கிறது; அங்ஙனமே உடம்பு தொழிற்படுதற்கு ஏதுவாயதொரு விசேட குணம் அச்சைதன்னியத்திற்கு உண்டு; அதுவே ஆன்ம சந்நிதி என்கிறான் அவன். இழுத்தலும் விடுதலும் எதிர்வினைகள். காந்தசந்நிதி இரும்பைத் தன்மாட் டிழுக்கும்; தன்னிடமிருந்து விடாது. வேறு செயலுஞ் செய்யாது. ஒன்றுக்கு மேற்பட்ட வினைகளையோ தம்முள் மாறுபட்டவினைகளையோ செய்வதுமில்லை. அவ்வுவமைப்படிதானே உயிரின் சந்நிதியுமிருக்க வேண்டும்? ஆனால் அச்சந்நிதியில் உடல் இயங்குவது ஒருவகை யன்று. அது நினைக்கிறது, மறக்கிறது, ஓடுகிறது, ஒடுங்குகிறது, இருக்கிறது, கிடக்கிறது. இன்னும் எத்தனை? அவை தம்முள் மாறுபடவுஞ் செய்கின்றன. அப்படி ஆவது ஏன்?

இன்னும், காந்த சந்நிதியி லகப்பட்ட இரும்பு தொழிற்படாம லிராது. அ·தியங்கியே தீரும். ஆனால் உடம்புக்கு உறக்கக் கிடையும், கரணங்களுக்கு ஓய்வுக் கிடையும் உள. அவை இயங்கா நிலை. ஆன்ம சந்நிதியில் அந்நிலை வரலாமா? ஆகலின் ஆன்மாவின் குணமாகிய தொழில் அறிவு இச்சைகளாலேயே உடலிலுள்ள கரணங்கள் செய்ற்படுகின்றன, ஆன்மாவின் சந்நிதி மாத்திரையா லல்ல என்ப தறிக.

Link to comment
Share on other sites

மூன்றாமவன் யெளராணிகன்

உயிர் உருவப் பொருள் என்கிறா னவன். அப்படியானால், உடம்பினுள் அது கண்ணுக்குத் தெரியக் கூடியதாயிருக்க வேண்டும். அதனைக் கண்டார் யார்? காட்டினார் தான் யார்? அது தந்தைகருவில் நுழைவதையுந், தாய் கருவிற் பாய்வதையும் அவனாவது காட்டுவானா? மாட்டான்.

உருவப்பொருள்க ளெல்லாம் பரிணமித்தலும் அழிதலுமாகிய இயல்பை யுடையன. 'உயிர் அவ்வியல் புடையதா யிருக்க முடியாது. ஏன்? நித்தமா யிருப்பதே அதனியல்பு. ஆகலின் அ·து உருவப்பொரு ளன்று.

உயிர் உருவப்பொருள் தான், ஆனால் அவ்வுருவம் கண்ணாற் காணமுடியாத தொன்று என்பானவன். கண்ணாற் காணப்படுவதே உருவம். இன்றேல் அ·துருவ மன்று. கண்ணாற் காணமுடியா தென்பதும், உருவப்பொரு ளன்றென்பதும் ஒன்றே.

சூக்கும வுடம்பு கண்ணுக்குத் தெரிதலின்று. அது போல் உயிரும் கண்ணுக்குக் காணவாராத சூக்கும வுருவப் பொருள் என்கிறானவன். சிலபல முதல் (உபாதானங்) களிலிருந்து உண்டாவதே உருவம். அது காரியம். காரியம் அழியும். தூலவுடலுக்குச் சூக்குமவுடல் முதற்காரணம். அதுவுந் தன் முதல்களிலிருந்து தோன்றிய காரியம். அதற்கும் அழிவு நிச்சயம். உயிரும் அதுபோல்வ தெனின் அழிவது தான்.

பிறகு அவன் உயிரைச் சூக்கும தேகத்துக்குள்ளிருக்கும் அதிசூக்கும உருவப்பொருள் என்கிறான். உயிருக்குப் பரவுடம்பெனவும் ஒன்றுண்டு. அது அதிசூக்கும வுருவுடையது. அதுவும் அழியும். அதனையே உயிரெனக் கொண்டு உயிர் அதிசூக்கும வுரு வென்கிறானவன். உயிர் உருவப்பொருளுமன்று, சூக்கும வுருவப்பொருளு மன்று, சுசூக்கும வுருவப்பொருளு மன்று. (சுசூக்குமம் - அதிசூக்குமம்)

Link to comment
Share on other sites

நாலாமவன் கவுளன்

காணப்படும் பொருள்களெல்லாம் உருவங்கள். கண்ணுக்குத் தெரியாதன அருவங்கள். கட்டை கண்ணுக்குத் தெரிகிறது. அ·துருவம். அதற்குள் தீ யிருக்கிறது. கடையுமுன் அது கண்ணுக்குத் தெரிகிறதில்லை. அ·தருவம். தீயையுங் கட்டையயுந் தொகுதியாக அருவுருவப் பொருள் என்னலாம். உயிரும் அருவமாயிருந்து உடம்புருவத்தை யடைகிறது. செத்தும் அது மீண்டும் அருவமாகும். ஆகவே அதை அருவுருவப் பொருளென்பதே சரி. அப்படி வாதிக்கிறா னவன். கட்டை உருவ பாகம், தீ அருவ பாகம் என்பது அவன் கொள்கை. கண்ணுக்குக் கட்டை தெரிகிறது. அதுபோல் உயிரின் உருவப் பாகந் தெரிய வேண்டும். அதனைத் தெரிவார் யார்? உடல் தெரிகிறதேயென அவன் சொல்லலாம். அப்படியானால் அருவபாகத்துக்கு இலக்கண மென்னை? அப்பாகத்துக்குத் தீ யுவமை கூறப்பட்டதே. கட்டையாக மாறினது தீயா? கட்டையுந் தீயாக மாறுமா? தீ அருவப் பொருளா? இல்லையே. ஆகலின் அவ்வுவமை பொருந்தாது.

பிறகு சந்திரனை உவமை காட்டுகிறா னவன். சந்திரன் அமாவாசையில் தெரிகிறதில்லை. அப்போது அ·தருவம். அப்பால் அதன் கலைகள் வளர்கின்றன. பெளர்ணமியில் முழுமதியும் புலனாம். அப்போது அ·துருவம். அவ் வருவும் உருவுங் கலந்த பொருள் சந்திரன். அப்படியே உயிருங் கருவுட் பதியும் போது அருவம். அப்போது அதனைக் காண முடியாது. பின்னர் அது வளர்ந்து உடலான போது உருவம். அதனைப் பார்க்கலாம். ஆகலின் சந்திரன் போன்ற அருவுருவப் பொருள் உயிர். அப்படிச் சொல்கிறானவன். உயிர் சித்து, நித்தம், பந்தப்பட்டது, முத்தியிற் செல்லுதற் குரியது. உடல் அசித்து, அநித்தம், உயிரைப் பந்திப்பது, முத்தியில் உயிருக்கு வேறாய் விலகுவது. இவ்வேறுபாடுகளை யுடையன உயிரும் உடலும். அவை அருவுருவ சம்பந்தம் பெறுதல் யாங்ஙனம்?

மேலும் அருவப்பொருள் உருவமாகாது. உருவப்பொருள் அருவ மாகாது. ஆகாயம் அருவம், பூமி உருவம் ஆகாயம் பூமியாகாது. பூமி ஆகாயமாகாது. அருவுயிர் உருவுடலானது எப்படி? அருவும் உருவும் மாறுபட்ட தன்மைகள். அவை ஒரு பொருளின் இயல்பாதல் கூடாது. ஆகலின் உயிர் அருவுருவப் பொருளன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.