Jump to content

ஆ(வா)ய்வுத் தொல்லையும் `ஆ´ என்ற வாய்களும்


Recommended Posts

ஈழத்தின் வடபகுதி, வன்னியில் சிறிலங்கா அரச பயங்கரவாதப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் பெறுபேறாய் நடந்தேறும் சொல்லொணாத் துயர் மிகும் மனிதப் பேரவலங்கள் மனதிற்குள் விரக்தி வெறுப்பு ஓர்மம் கையறு நிலையென உணர்வுக் கலவையின் திரளென உருவாகித் தணிந்தெழுகின்றன. வீடும் ஊரும் இழந்து உறவுகளைத் திக்கொன்றாய்த் தொலைத்துவிட்டு இலக்கின்றி வரும் அயல் தேசத்தின் அன்பளிப்புக் குண்டுகளுக்கும் வானிருந்து உயிர்குடிக்கும் எமப் பறவைகளின் கொலைக் கொத்தல்களிலிருந்தும் தன்னை மனைவியை சின்னஞ்சிறு குழந்தைகளை காப்பாற்றி இளைப்பாற எங்காவது ஒரு மரநிழல் கிடைக்காதா என ஓடிய இடம்பெயர்வு வாழ்வின் அவலத்தினை வருடங்கள் கடந்து விட்ட பின்னரும் இன்றும் உலகின் எங்கெங்கோ தெருக்களில் திரியும் ஆடும் பாடும் வேலை செய்யும் விளையாடும் குழுச் சண்டைகள் பிடிக்கும் எந்த ஈழத்தமிழர்களும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில் இடப் பெயர்வுகளும் அதன் வலி மிகுந்த வாழ்வும் ஈழத்தமிழர் எல்லோருக்கும் பொதுவானது. அனுபவித்தவர்கள் அனுபவிக்கின்றவர்கள் என்ற இரு பிரிவுகளே இருக்கும் வித்தியாசம். இனி அனுபவிக்கப் போகிறவர்கள் என ஒரு பிரிவை உருவாக்கலாமோ..?

000

தற்போதைய யுத்த நிலைமையும் அதில் புலிகளின் நில இழப்புக்களும் இங்கே புலம் பெயர் நாடுகளில் பார்க்குமிடமெங்கும் பேசும் பொருட்களாகி விட்டிருக்கின்றன. நிலங்களை இழத்தலில் ஏற்படும் யுத்தம் சாரா மக்களின் மானுட துயரத்தினைத் தவிர (தவிர என்று சொல்வதினூடாக அதனை குறைத்து மதிப்பிடவில்லை. ) வேறைதையும் சொல்வதற்கு எனக்கு ராணுவ ஆய்வுத் தகுதி இல்லை.

ஒருவகையில் அதுவும் நல்லதுக்குத் தான். அல்லது நானும் என் பங்குக்கு விரக்தியை விதைத்து விட்டுச் செல்ல வேண்டியிருக்கும்.

000

கொசுக்கள் போல அதிகரித்து விட்ட ராணுவ ஆய்வுகளை ஏகத்துக்கும் இணையப் பக்கங்களில் பார்க்க முடிகிறது. ஒரு வகையில் மக்கள் மனதில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்ட அல்லது சுதியேற்றிய ஆய்வுகள் இவைதான். புலிகள் போர்நிறுத்தத்திலிருந்து விலகிய இரண்டாவது நாளே யாழ்ப்பாணம் வீழும் எனச் சொன்ன ஆய்வுகள் முதல் கடந்த நான்காம் திகதி சார்க் மாநாட்டிற்கென அறிவித்திருந்த அரசியல் சார் யுத்த நிறுத்தம் முடிவடைவதோடு புலிகளின் ஆறு வருட யுத்த நிறுத்தமும் முடிவடையக் கூடும் என எழுதிய ஆய்வுகள் வரை..

அப்பப்பா.. எத்தனை ஆய்வுகளடா.. அதில்த்தான் எத்தனை கதைகளடா..

வாராந்த ஆய்வுகளின் இறுதி வரிகளில் தப்பாமல் ஒரு பஞ்ச் டயலொக் இடம்பெறும். எது எவ்வாறெனினும் அடுத்த நாட்களில் புலிகள் தமது பாய்ச்சலை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களே உள்ளன. என்றவாறு அது அமையும்.

இவ்வாறு யதார்த்தத்தைப் புறக்கணித்து (என்னளவில் யதார்த்தம் என்ன என்பதனை புலிகளின் இராணுவ மையம் நன்றாகவே உணர்ந்திருந்தது என நம்புகிறேன். ) ஊதப்பட்ட சங்கொலிகளும் பேரிகைகளும் தான் இன்றைய மக்களின் சோர்வு நிலைக்கு காரணமாயிருந்திருக்க முடியும். (இதில் வெற்றிச் செய்தியினை எதிர்பார்த்தலையும் மக்களின் இத்தகைய மனநிலை super hit திரைப்படங்களை எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஒப்பானது என்ற ஒரு குற்றச் சாட்டும் உண்டு. )

ஆயுத வளத்திலும் ஆளணி வளத்திலும் அரச இயந்திரத்தை விட குறைவான வலுவுடைய புலிகள் இதுவரை காலமும் பெற்று வந்த வெற்றிகள் அவர்களது மூலோபாயத்தின் வெற்றிகளே. அந்த யதார்த்தத்தினை மக்களுக்கு கூறாமல் வெட்டுறம் புடுங்கிறம் வெற்றிக் கொடி நாட்டுறம் என ராணுவ ஆய்வுகளை புறநானூற்றுக் கணக்கில் எழுதினால் பின்னால் மக்கள் புறுபுறுக்கத்தான் செய்வார்கள்.

000

மேற்கூறிய ஆய்வுகள் தவிர்த்து இன்னொரு வகையான ஆய்வுகள்.. அல்லது அடிமன விருப்பின் எழுத்துரு வெளிப்பாடுகளையும் காண நேர்கிறது. வெம்பி வீங்கி விபசாரம் பாசிசம் என கலந்து கட்டி ஒரே விசயத்தையே பல்வேறு கட்டுரைகளில் எழுதும் இவைகளும் சுவாரசியாமன எழுத்துக்கள் தான்.

சிறிலங்கா அரச இராணுவத்தின் முன்னேற்ற வன் முயல்வுகளின் போது சில இடங்களில் சண்டையற்றும் சில இடங்களில் சண்டைகளின் போது இராணுவத்தினரின் கை ஓங்கிய நிலையிலும் புலிகள் நிலங்களை விட்டுப் பின்வாங்குகின்றனர். இதனை மக்களின் துயர் புலிகளைத் தோற்கடிப்பதாக தீவிர மார்க்சிஸ்ட்டுக்களாக உணரப் படுபவர்கள் குறிப்பிடுவது வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்னும் அல்லது தெய்வம் நின்று கொல்லும் போன்ற நம்பிக்கைகளின் வழி சொல்வது போலத் தோன்றுகிறது.

20 வருடங்களாக புலிகள் மக்களுக்கு ஏற்படுத்திய துயரே இன்று புலிகளைத் தோற்கடிக்கின்றது எனில்.. 50 வருடங்களாக சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய துயர் ஏன் அவர்களைத் தோற்கடிக்க வில்லை? யாருக்குத் தெரியும்.. யுத்த களத்தில் புலிகளின் கை ஓங்கினால்.. பேரினவாதத்தை தோற்கடிக்கும் மக்களின் துயர் எனத் தலைப்பிட்டு எழுதுவார்களோ என்னவோ..?

000

மாவீரர் தினத்திற்கு தலைவரின் உரை எப்படி இருக்கும் என ஒருவர் கேட்டார். மாவீரர் தினத்து உரை தொடர்பான அதீத ஆர்வத்தினையும் எதிர்பார்ப்பினையும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் பார்க்கின்றேன். குறிப்பாகச் சொல்லப் போனால் 2004 மாவீரர் தின உரையின் போது போர் நிறுத்தத்திலிருந்து புலிகள் விலகும் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பினை ஊடகங்கள் உருவாக்கியிருந்தன. மாவீரர் தின உரையென்பது சமகால நிகழ்வுகள் தொடர்பான புலிகளின் தலைமைப் பீடத்தின் அதிகாரபூர்வ பார்வையென்பதற்கும் அப்பால் அவ்வுரையில் அதிரடியான திடுக்கிடும் முடிவுகளை அதில் தலைவர் பிரபாகரன் அறிவித்ததாக நான் அறிந்திருக்கவில்லை.

மாவீரர்தின உரை குறித்து எந்த எதிர்வு கூறலையும் என்னால் கூற முடியவில்லை. ஆனாலும் பொதுவாக தற்போதைய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்கள் தொடர்பாக பாரா முகமாக இருக்கும் உலக நாடுகள் மீதான விசனத்தை வரிகளுக்கிடையில் மென் தீவிரத்தைப் புகுத்தி அவர் சொல்லக் கூடும் என்றேன்.

அப்ப சண்டையைப் பற்றிச் சொல்லமாட்டாரோ என்றார் அவர்.

நான் நடையைக் கட்டினேன்.

http://blog.sajeek.com/?p=358#comment-2685

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.