Jump to content

ஈழத்தில் தமிழ்


theeya

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை தொடர்பான அறிமுகமும்

தேவதடசனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப்பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்கு காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அமைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. 'ஈழம்' என்ற பெயரால் பண்டைய காலத்தில் இலங்கை அழைக்கப்பட்டமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருளாய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதேவேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் 'ஈழத்துணவும் காழகத்தாக்கமும்' என்ற வரி முக்கியம் பெற்று விளங்குகின்றது. ஈழம் என்றால் 'பொன்' என்றும் பொருள்படும்.

இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்களில் பலர் அரசியல் உள்ளீர்ப்பினால் உந்தப்பட்டவர்களாக, வரலாற்றுடன் தொடர்பு படுத்தியே இலக்கியங்களினை உழுதியுள்ளனர். ஓர் இலக்கியம் காலத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் தோற்றம் பெறுகின்றது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. எந்தவொரு இலக்கியத்தினையும் ஊன்றிக் கற்கும் வாசகன் ஒருவன் அவ்விலக்கியத்தினூடாக அது தோன்றிய காலகட்டத்தையும் இனங்கண்டு கொள்ள முடிகிறதெனில், எந்தவொரு இலக்கியமும் வரலாறாகி விடுகின்றமை தவிர்க்கமுடியாததாகின்றது.

இலக்கிய வரலாற்றுக்கு காலத்துக்கு காலம் தரப்பட்ட பல்வேறு பகுப்புக்களையும் கூர்ந்து கவனிக்கின்ற போது இலக்கிய வளர்ச்சி பற்றிய அறிவெல்லை விரிந்து செல்வது தவிர்க்க முடியாது போகின்றது. பொதுவாக தமிழ் இலக்கியப் பரப்பினை பகுக்க முற்பட்டோர் அரசியலடிப்படையிலான இலக்கிய வரலாற்றுக்காலப் பகுப்பினையே முன்வைத்துள்ளனர். எனவே ஈழத்து இலக்கிய வரலாற்றினையும் இத்கைய அரசியல்சார் அடிப்படையில் அமைத்துக் கொள்வதே சிறப்பான தெரிவாக அமையும்.

யார் அந்த ஈழத்து பூதந்தேவனார்?

இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றினை ஈழத்துப்பூதந்தேவனாருடன் தொடங்குவது மரபாகக் காணப்படுகின்றது. ஈழத்துப்பூதந்தேவனார் என்பவர் சங்ககால இலக்கியத்தில் வரும் ஒரு புலவராவார். இப்புலவர் சங்க இலக்கியங்களிலே நான்கு வகைப் பெயர்களினால் அழைக்கப்பட்டிருக்கிறார்.

குறுந்தொகை 343, அகநானூறு88 - ஆகியவற்றில் ஈழத்துப் பூதந்தேவன் என்றும்,

நற்றிணை 366 ஆம் பாடலில் ஈழத்துப் பூதந்தேவனார் என்றும்,

குறுந்தொகை 189, 360 ஆகிய பாடல்களில் மதுரை ஈழத்துப் பூதன்தேவன் என்றும்,

அகநானூறு 231, 307 ஆகிய பாடல்களில் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்றும் வரும் குறிப்புக்களிலிருந்து ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய தகவல்களினை அறிய முடிகின்ற போதிலும் இவர் ஈழத்தவர் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இந்நூல்களில் இடம்பெறவில்லை. 'ஈழத்து' என்ற அடைமொழியை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ஈழநாட்டினராக இருக்கலாம் எனக் கருதுவோரும் உள்ளனர். உண்மையில் இவர் ஈழ நாட்டவர் தானா என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எவையாவது உள்ளனவா என்று தேடவேண்டியுள்ளது.

'ஈழத்து' என்ற அடைமொழியுடன் இரண்டு இடங்களிலும், 'மதுரை ஈழத்து' என்றஅடைமொழியுடன் இரண்டு இடங்களிலுமாக அழைக்கப்பட்ட இவர் ஈழத்தவரா என்பதற்கான ஆதாரங்களைத் தேட பலர் முற்பட்டுள்ளனர். சிலர் ஊகங்களின் அடிப்படையில் சில தரவுகளை முன்வைத்தனர். வேறு சிலர் 'ஈழம்' என்ற அடைமொழியின் அடிப்படையில் வரலாற்று ரீதியிலான ஆதாரங்களினைத் தேட முற்பட்டு, இலங்கைக்கு வழங்கிவரும் பெயர்களில் இதுவும் ஒன்றாகைளால் இவர் ஈழத்தவரே எனச் சுட்டிக்காட்டினர்.

இவர் ஈழத்திலிருந்து மதுரைக்கு சென்று வசித்த காரணத்தால் காலப் போக்கில் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு. 'இவர் ஈழ நாட்டில் நின்று மதுரையில் வந்து தங்கிய பூதன் மகன் தேவன் எனப்படுவார்' என்று நற்றிணை நூலுக்கு தௌிவுரை எழுதிய தமிழ்நாட்டவரான அ.நாராயணசாமி ஐயர் குறிப்பிடுகின்றார். அவர் தொடர்ந்து கூறுகின்றபோது ஏடெழுதுவோருடைய பிழையினால் 'ஏற்றத்துப் பூதந்தேவனார்' எனவும் குறிப்புக்கள் காணப்படுவதாகவும் ஒரு சாண்றினைத் தருகின்றார்.

மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் குறிஞ்சி, பாலை திணைகளுக்கான ஏழு அகத்திணைப் பாடல்களைப் பாடியிருக்க, பூதந்தேவனார் என்ற பிறிதொரு புலவர் மருதத் திணையை சிறப்பித்து பாடியிருப்பது நோக்கத்தக்கது. குறுந்தொகை 285, நற்றிணை 80 ஆகிய இரு செய்யுள்களும் இவரால் பாடப்பட்டிருக்கின்றன. மருதத் திணையை சிறப்பித்துப் பாடி, அகத்திணையிலே களவு நிகழ்ந்திருப்பதை கூறுவதாக இவருடைய பாடல்கள் காணப்பட, மதுரை ஈழத்து பூதந்தேவனாரோ ' வாடை வீசும் குளிர் காலத்தில் தலைவியை பிரிந்து செல்வோன் மடமையுடையவன்' என்ற பொருள்பட குறிஞ்சித்தணைப் பாடல்களைப் பாடியுள்ளார். எனவே பாடல்களை திணை அடிப்படையில் நோக்குகின்றபோது இருவரும் வெவ்வேறு புலவர்கள் எனக் கருத இடமுண்டாயினும், மதுரை ஈழத்து பூதந்தேவனாரும் ஈழத்து பூதந்தேவனாரும் ஒருவரே எனக் கொள்ளும் நாம் 'ஈழத்து' அல்லது 'மதுரை ஈழத்து' என்ற அடைமொழி இல்லாத காரணத்தால் இவரை மதுரை ஈழத்து பூதந்தேவனாரல்லர் என இலகுவாக ஒதுக்கிவிட முடியுமா? என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஈழத்து பூதந்தேவனார் கடைச்சங்க புலவராக இருக்க வேண்டும் என்ற கருத்து வலுவுடையதாக உள்ளது. 'பசும் பூட் பாண்டியனை' பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இவர் பாடிய (அகநானூறு 231) பாடல் ஒன்றின் மூலம் இவருடைய காலம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பசும் பூட் பாண்டியனை பரணர், நக்கீரர், மதுரைக் கணக்காயர் முதலியோரும் பாடியிருக்கின்றனர். எனவே இவர்கள் எல்லோரும் சமகாலத்தினரா? என்ற ஐயமும் எழுகின்றது. எனினும் பசும்பூட் பாண்டியனின் காலத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஈழத்து பூதந்தேவனாரின் காலத்தை வரையறை செய்வதென்பதும் கடினமானதே. எது எப்படியாக இருப்பினும் இவர் பசும்பூட் பாண்டியனுக்கு பிற்பட்டவர் அல்லது சம காலத்தவர் எனபது புலனாகின்றது. அதே போல் 'பரணர், நக்கீரர்,மதுரைக் கணக்காயர், மதுரை ஈழத்து பூதந்தேவனார் ஆகியோரும் சமகாலத்தவர்கள் என்று கூறுவதும் பொருத்தமானதல்ல' என ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் தனது 'ஈழநாட்டு புலவர் சரிதம்' என்ற நூலில் கூறுகின்றார்.

ஈழநாட்டை சேர்ந்த புலவரான ஈழத்து பூதந்தேவனார் கி.பி 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என போராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் பல சான்றுகளை முன்வைத்து 1998இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் சங்கப் புலவரான முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழநாட்டைச் சேர்ந்தவர் எனவும் மன்னாரில் முசலி(முரஞ்சி) கிராமத்தவர் எனவும் 'ஈழநாட்டு புலவர் சரிதத்தில்' ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான வணிக நிலைத் தொடர்பினை நாம் பட்டிணப்பலையில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. நீண்ட காலந்தொட்டு ஈழத்துக்கும் தமிழகத்துக்குமிடையில் இடையறாத் தொடர்பு இருந்து வருவதனை அவ்வப்போது வரலாற்று, புவியியல் ஆய்வுகள் நிறுவியுள்ளமையினையும் மறந்துவிடக் கூடாது. எனவே நீண்ட காலமாக வணிக, பண்பாட்டு, மொழித் தொடர்புகளினால் பிணைக்கப்பட்ட தமிழகத்துக்கு ஈழத்தமிழ் புலவர் ஒருவர் சென்று வாழ்வதென்பது இயலாத ஒன்றல்ல. அவ்வாறே ஈழத்து பூதந்தேவனாரும் மதுரையில் சென்று வசித்திருக்க முடியும். நிறுவன ரீதியாக (சங்கம்) புலவர்களை அனுசரித்து போற்றிய மதுரையில் இருந்து கொண்டு தனது இலக்கிய பணியினை மேற்கொண்டிருக்கலாம் எனப் பல தளங்களினூடே இவரைப்பற்றிய ஆய்வினை முன்னெடுக்க முடிகின்றது. இவ்வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றினை ஈழத்து பூதந்தேவனாருடன் தொடங்குவதே சிறப்பானதாக அமையும்.

ஈழத்தின் ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய சில தேடல்கள்

ஈழநாட்டில் மகாசேனன் (கி.பி.275-310) ஆட்சி செய்த காலப்பகுதியில் தமிழ் நாட்டில் சங்ககாலம் முடிவுறும் கட்டத்தினை நெருங்கி இருந்தமையினை இலக்கியங்கள் மூலம் அறிய முடிகின்றது. மகாவம்சம் தமிழ் இலக்கியங்கள் தொடர்பான செய்திகளினை விரிவான முறையில் முன்வைக்கத் தவறிவிட்டது. இந்நிலையில் ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவதாக எடுத்துக்கொண்டால், அதற்கு அடுத்த கால கட்டமாக கி.பி.1216இல் தொடங்கும் ஆரிய சக்கரவர்த்திகளின் காலத்தையே கொள்ள முடிகின்றதெனில், கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை வரை ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லையா? என்ற ஐயப்பாடு எழுகின்றது. இந்த நீண்ட இடைவெளியில் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றினை தொடர்பின்றி காட்டுவதனால் ஈழத்தவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு யாதென அறிய முடியாமலுள்ளது.

கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் பதுளைக் கல்வெட்டில்

'தெமழன்டரடனா தென்தரு ஆவா நொதென இசா..' என்ற செய்தியொன்று காணப்படுகின்றது. தமிழர்களுக்கு நாட்டின் தலைவர்களின் புதல்வர்களை திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்பதே இதன் கருத்தாகும்.தமிழர்கள் அரசியலில் மேலாதிக்கம் பெறுவதை தடுக்கும் நோக்கில் இத்தகைய செய்திகள் பொறிக்கப் பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழர்களின் ஆதிமூலங்களைத் தேடுவதென்பதும் கடினமான பணியாகவே அமையும்.

வௌ்ளம், தீ முதலிய இயற்கை அனர்த்தங்களாலும், அடிக்கடி நிகழ்ந்த படையெடுப்புக்களாலும், திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டமையினாலும், கறையான் முதலியனவற்றாலும், தொகுத்தல்-தொகுப்பித்தல் முயற்சிகள் இன்மையாலும், நிறுவன ரீதியான முயற்சிகள் இன்மையாலும் எனப் பல காரணங்களால் அக்கால இலக்கியங்கள் பேணிப் பாதுகாக்க முடியாமல் போயிருக்கலாம்.ஏனெனில் பழமை வாய்ந்த ஓர் இனம் தமக்கென ஒரு இலக்கிய பாரம்பரியத்தை கொண்டிருக்கும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

மிகப் பழமையான காலத்தில் இருந்தே தமிழ் மக்கள் ஈழநாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை தொல்லியல் சான்றுகள் பல நிறுவியுள்ளன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இத்தகைய சான்றுகள் பல ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஈழத் தமிழரிடையே வழங்கிவரும் சடங்குகள், வழிபாட்டு மரபுகள், போன்றவற்றின் 'ஆதிமூலங்களை'யும் தமிழ்-சிங்கள மக்களிடையே நிலவி வரும் வாய்மொழிப் பாடல்களையும் தொன்மங்களையும் துல்லியமான முறையில் எடுத்து தொகுத்து ஒப்பீட்டு முறையில் ஆய்வுகளை மேற்கொள்ளுமிடத்து இந்த இடைவெளி சிலவேளைகளில் நிரப்பப்படலாம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் ‘புத்ததத்தர்’ உட்படப் பல அறிஞர்கள் இலங்கையின் மகா விகாரையில் தங்கியிருந்து பாளி மொழியிலிருந்த நூல்களைக் கற்று தமிழில் உரை எழுதினர் எனத் தெரிகின்ற போதிலும் அவை எவையும் இன்னும் கிடைக்கவில்லை. எனினும் நீண்ட காலமாக தமிழ் இலக்கியத்துடன் பௌத்த மதக் கருத்துக்கள் தொடர்பு படுவதை இதனூடாக அவதானிக்க முடிகின்றது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் ஈழத்துக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் இலக்கியத் தொடர்புகள் இருந்தன என்பதற்கு தேவாரங்கள் சான்றாக உள்ளன. இலங்கையின் புகழ் பெற்ற சிவத் தலங்களான திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்பன மீது திருநாவுக்கரசரும் திருஞான சம்மந்தரும் தேவாரங்கள் பாடியமை மூலம் இத் தொடர்பு நிலை நிறுவப்பட்டது.

மும்முடிச் சோழ மண்டலங்களில் ஒன்றாகச் சோழர்கள் இலங்கையை அரசு புரிந்த வேளையில் புலத்தி நகரில் (பொலநறுவையில்) இருந்து கொண்டு சோழர்கள் தமிழை வளர்த்தனரா என்பதையும், சோழர் காலப் புலவர்கள் யாராவது இலங்கைக்கு வந்தனரா என்பதையும் அறிய முடியாத நிலையில் அக்காலக் கவிச்சக்கரவர்த்தியான ஒட்டக்கூத்தர் இலங்கைக்கு வந்து தங்கிச் சென்றார்(7) என மரபுவழிக் கதை ஒன்று நிலவி வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.

பொலநறுவைக் காலக் கல்வெட்டுக்களில் வெண்பா, விருத்தம் முதலிய தமிழ்ப் பாவினங்களின் செல்வாக்கினை அவதானிக்க முடிவதுடன், அக்காலத் தமிழ் உரைநடைக்கான இடத்தினையும் ஓரளவு ஊகித்து அறிய முடிகின்றது. அனுராத புரத்தின் வடபகுதியில் இந்து சமயக் கட்டிட அழிபாடுகளுக்கிடையே கண்டெடுக்கப்பட்ட நான்கு நாட்டார் கல்வெட்டும் கி.பி. 9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்பட்ட நிலையில் அதன் இறுதியில் காணப்படும் வெண்பா வருமாறு

“போதி நிலமமர்ந்த புண்ணியன் போலெவ்வுயிர்க்கும்

நீதி லருள் சுரக்குஞ் சிந்தையா – னாதி

வருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை

யொரு தர்ம பாலனுளன்”

இவ் வெண்பா அக்காலச் செய்யுள் யாப்பின் உன்னத நிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளதுடன், அனுராதபுரப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றாகவும் இதனைக் கொள்ள முடிகின்றது.

நிஸங்க மல்லன் (கி.பி.1187-1196) என்பவன் பொலநறுவையைத் தலைநகரமாகக் கொண்டு ஒன்பது ஆண்டுகள் மிகச் சிறப்பான ஆட்சி புரிந்தான். இவனுடைய காலத்துக் கல்வெட்டு ஒன்று விருத்தப் பாவினால் பொறிக்கப் பட்டுள்ளது. அனுராதபுரம், பொலநறுவை ஆகிய இராச்சியங்களிலே தமிழ் மொழி வழக்கில் இருந்தமைக்கு மேற்படி கல்வெட்டுக்களில் உள்ள வெண்பா, விருத்தம் முதலிய தமிழ் யாப்பு வடிவங்கள் கையாளப் பட்டு செய்திகள் பொறிக்கப் பட்டமை சான்றாகின்றன. இதேபோல கேகாலையில் கோட்டகம என்ற இடத்தில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் ஈழத் தமிழர்களின் இலக்கியப் பாரம்பரியத்தையும் அவர்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர் என்ற செய்தியினையும் அறிய முடிகின்றது.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் உண்மையான பூர்வீக வரலாறு இலங்கையிலும், தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆய்வுகளினால் தெளிவு பெறவேண்டியுள்ளது. இதில் இலங்கைத் தமிழருக்குரிய சான்றுகள் காணக்கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை என்ற குறைபாடும், கிடைத்த சில சான்றுகள்கூட முழுமையாக ஆராயப்படவில்லை என்ற குறைபாடும் நியாயமான குற்றச்சாட்டாகவே தெரிகின்றது. இந்த வகையில் சரசோதிமாலை என்ற நூலின் தோற்றத்துக்கு முன்னதான தமிழ் இலக்கியம் பற்றிய உதிரியான சில தகவல்களைத் திரட்டி அவற்றினூடே அக்காலத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியினை ஊகித்தறிய வேண்டிய அல்லது நிறுவ வேண்டிய கடப்பாடும் மேலெழுகின்றது.

வளரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயல் - 2

ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1621)

கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் தமிழ் மன்னர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு பெரியதொரு இராட்கியத்தை நிறுவி கட்டிக்காத்தனர். வடக்கே நிலைமை இவ்வாறிருக்க சமகாலத்தில் நாட்டின் திசையெங்கும் தமிழர் செறிந்து வாழ்ந்தனர். மன்னர்களான செயவீரசிங்கனும் எதிர்மன்னசிங்கனும் புலவர்களாக விளங்கியதுடன் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் கட்டிக் காத்தனர்.

பதினெட்டு தமிழ் மன்னர்கள் மாறிமாறி ஆட்சி செய்த அக்காலமானது ஈழத்து இலக்கியத்தின் பொற்காலமாக விளங்கியதனையும் அவதானிக்க முடிகின்றது. தாம் புலவர்களாக இருந்து தமிழை வளர்த்த போதிலும் தமிழகத்தில் இருந்து வந்த புலவர்களை ஆதரித்து, இருப்பிடம் வழங்கியும் கௌரவித்தனர். “சரஸ்வதி பண்டாரம்”(5) என்ற நூல் நிலையத்தினை யாழ்ப்பாணத்தில் அமைத்து தொண்டாற்றினர். இது பின்னர் போத்துக்கேயரினால் தீக்கிரையாக்கப் பட்டது.

இலக்கியங்களும் அவற்றின் போக்கும்

யாழ்ப்பாண மன்னர் கால இலக்கியங்களினை பொருள், வடிவ, பண்பு என்ற நெறிகளுள் எதனடிப்படையில் ஆராய்வதென்பதில் பலரும் பல்வேறு சிக்கல்களினை எதிர்கொண்டுள்ளனர்.எனினும் ஆய்வு வசதி கருதி ‘பண்பு’ அடிப்படையில் பின்வருமாறு பகுத்து ஆராயலாம்.

1. சமய சார்புடைய நூல்கள்

2. சோதிட நூல்கள்

3. வைத்திய நூல்கள்

4. தழுவல் நூல்கள் ஃ காவியம்

5. வரலாறு சார்புடைய நூல்கள்

சமய சார்புடைய நூல்கள்

யாழ்ப்பாணக் கலாசாரம் ‘கந்தபுராணக் கலாசாரம்’ என்னுமளவிற்கு இந்துசமயச் செல்வாக்கானது நிலைபெற்றிருந்ததனை அறிய முடிகின்றது. அக்காலத்தில் அரசோச்சிய மன்னர்களும் மக்களும் மதப்பற்று மிக்கோராகவும் கோயிற் பண்பாட்டுடன் ஈடுபாடுடையவர்களாகவும் விளங்கினர். ஆலயத் தொண்டர்கள் ஆலயங்களிலேயே குடியமர்த்தப்பட்டனர். ஆட்சிப் பரப்புக்குள் ஆலயங்களும், வழிபாட்டு மரபுகளும் நன்கு வேரூன்றி இருந்தமையினால் சமயச் சார்புடைய இலக்கியங்களும் தோற்றம் பெற்றன.

அக்காலத்தில் எழுந்த சமயச் சார்புடைய இலக்கியங்களினை இரண்டு பிரிவுகட்கு உட்படுத்தி ஆய்வு செய்ய முடிகின்றது.

1. கற்றோரை மையமாகக் கொண்டெழுந்தவை.

2. அடிநிலை மக்களை மையமாகக் கொண்டவை.

என்பனவாம். எனினும் இன்றுள்ளவற்றுள் அடிநிலை மக்களுக்குரியனவான இலக்கியங்களினைக் காண முடியவில்லை என்பது வேதனைக்குரியது. இதற்குக் காரணம் அடிநிலை மக்களுக்குரிய இலக்கியங்கள் பலவும் வாய்மொழி மரபினவாக இருந்தமையே எனலாம்.

அ. தக்கிண கைலாய புராணம்

ஆ. கதிரமலைப் பள்ளு

இ. கண்ணகி வழக்குரை

ஈ . திருக்கரைசைப் புராணம்

என்பன சமயச் சார்புடைய நூல்களாகும்.

அ. தக்கிண கைலாய புராணம்

தக்கிண கைலாய புராணத்தின் ஆசிரியர் யாரென்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

1. ஐந்தாம் செகராச சேகரன்(செயவீரசிங்கை ஆரியன்) இதை எழுதினான், என கா.சிதம்பரஐயர், சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் போன்றோர் கூறினர்.

2. பண்டிதராசனால் எழுதப்பட்டதென பு.பொ.வைத்தியலிங்க தேசிகர், சி.கணேசையர் போன்றோர் கூறினர்.

3. தனது குருவாகிய சைவராச பண்டிதர் வேண்டியதால் ஐந்தாம் செகராச சேகரன் தக்கிண கைலாய புராணத்தைப் பாடினான் என அரசகேசரி தனது சிறப்புப் பாயிரச் செய்தியில் கூறியுள்ளார்.

இவ்வாறான சிக்கல்கள் இருப்பினும் இது யாழ்ப்பாண இராச்சிய கால நூல் என்பதில் ஒருமித்த கருத்ததையே எல்லோரும் கொண்டுள்ளனர். 7சருக்கங்களினையும் 635செய்யுட்களினையும் கொண்டு கோணேச்சரப் பெருமான் சமேத மாதுமை அம்மையை வாழ்த்திப் பாடிய தல புராணமாக விளங்குகின்றது. கற்பனை நயம் செறிந்த இந்நூல் சிறந்த நாட்டுப் பற்றுக்கும் எடுத்துக்காட்டாகவுள்ளது.

ஆ. கதிரமலைப் பள்ளு

கதிரையப்பர் பள்ளு என்று அழைக்கப்பட்ட இப் பிரபந்தமானது எமக்குக் கிடைத்த காலத்தால் முற்பட்ட பள்ளு இலக்கியமாகும். 1906 ஆம் ஆண்டில் முதன்முதலாக இது நூலுருப்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த தா.கைலாசபிள்ளை என்பவரே அப்பணியைச் செய்தார்.

இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் முள்ளியவளையில் எழுந்தருளியுள்ள காட்டு விநாயகர் ஆலயத்தைப் பாடுவதாக அமைந்துள்ளது. இதற்கும் ஓர் காரணம் உண்டு. கதிர்காம யாத்திரிகர்களின் நடைப் பயண வழியில் காட்டு விநாயகர் ஆலயம் அமைந்திருப்பதே அதுவாகும். பன்றிப் பள்ளு, குருவிப் பள்ளு வரிசையில் கதிரமலைப் பள்ளும் இப்பகுதிக்குரியதாக இருக்கலாமோ? என்ற ஐயம் வலுவுடையதாகவுள்ளது.

இ. கண்ணகி வழக்குரை

ஐந்தாம் செகராச சேகரனால் எழுதப்பட்ட நூல் கண்ணகிவழக்குரை ஆகும்.(7) இதன் பதிப்பாசிரியர் வீ.சி.கந்தையா, ‘காங்கேயன்’ என்பவர்தான் நூலாசிரியர் என்று கூறியுள்ளார். கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை என்ற இரு பெயர்களில் வழங்கப்பட்டு வரும் இந்நூலின் ஆசிரியரை இனங்காண ஆரியர் கோன், அதியரசன், தேவையர்கோன், காங்கேயன், சகவீரன்; போன்ற பெயர்கள் நூலில் அகச் சான்றுகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. போர்த்துக்கேயரால் சிறைப் பிடிக்கப்பட்ட ‘வெற்றிவேற் சட்டம்பியார்’ இதைப் பாடினார் என்ற கருத்தும் வலுவுடையதாகவுள்ளது. இந்நூல் இரண்டு கதைப் பதிப்புக்காளாக வெளிவந்தமையினால் ஒரே நோக்கில் அவற்றை நோக்குவது பயனுடையதாகும்.

கோவலனார் கதை கண்ணகி வழக்குரை

1. கோவலர் கண்ணகை அம்மன் 1. வரம்பெறு காதை

அ. கோவலனார் பிறந்த கதை

ஆ. அம்மன் பிறந்த கதை

2. தூரி ஓட்டம் 2. கப்பல் வைத்த காதை

அ. மீகாமன் கதை

ஆ.தூரியோட்டு

இ. கப்பல் வைத்தல்

3. கடலோட்டுக் காதை 3. கடலோட்டு காதை

அ. வெடியரசன் போர் அ. வெடியரசன் போர்

ஆ. நீலகேசரி புலம்பல் ஆ. நீலகேசி புலம்பலும்

வீரநாராயணன் கதையும்

இ. வீரநாராயணதேவன் போர் இ. மணி வாங்கின கதை

ஈ . விளங்கு தேவன் போர் ஈ . விளங்கு தேவன் போர்

4. மணமாலை 4. கலியாணக் காதை

5. அரங்கேற்றுக் காதை 5. மாதவி அரங்கேற்று காதை

6. கோவலரைப் பொன்னுக்கு - 6. பொன்னுக்கு மறிப்புக் காதை

மறித்த காதை அ. பொன்னுக்கு மறிப்பு

ஆ. இரங்கிய காதல்

7. சிலம்பு கூறல் 7. வழிநடைக் காதை

அ. வயந்தமாலை தூது

ஆ. வழிநடை

8. உயிர் மீட்சிக் காதை 8. அடைக்கலக் காதை

9. வழக்குரை-மதுரை தகனம் 9. கொலைக் களக் காதை

அ. சிலம்பு கூறல்

ஆ. கொலைக் களக் கதை

இ. அம்மன் கனாக்கண்ட கதை

ஈ . உயிர் மீட்புக் கதை

10. குளிர்ச்சி 10. குளிர்ச்சிக் காதை

அ. குளிர்ச்சி

ஆ. வழக்குரைக் காவியம்

என இரண்டு பதிப்பும் வைப்பு முறையில் மாறுபாட்டுடன் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஏட்டு வடிவில் பேணப்பட்டு வரும் இந்த நூலானது பெரும்பாலும் சிலப்பதிகாரக் கதையினைப் பின்பற்றி அமைந்திருப்பதனைக் காணமுடிகின்றது.

ஈ . திருக்கரைசைப் புராணம்

திருகோணமலையின் வெருகல் ஆற்றங்கரையிலுள்ள ‘கரைசை’ என்னும் இடத்தில் குடிகொண்ட சிவனைப் பாடும் தலபுராணமே இதுவாகும். இந்நூலை யார் பாடினார் என அறிய முடியவில்லை. சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரின் பொழிப்புரையுடன் திருகோணமலை வே.அகிலேசபிள்ளை அவர்கள் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்புராணத்தில் காப்புச் செய்யுள் நீங்கலாக பாயிரத்தில் 14 செய்யுட்கள் உள்ளன. அதைவிட நான்கு சருக்கங்களிலும் மொத்தம் 155 செய்யுட்கள் காணப்படுகின்றன.

சிலேடையணி மிகையாகப் பயன்படுத்தப்பட்டு வர்ணனை மிகுந்து விளங்கும் இந்நூலில் விருத்தப்பாவே பயன்படுத்தப் பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ‘மாவலி’ ஆற்றினை “அகத்தியத் தாபனம்” என்ற சிறப்புப் பெயரினால் இந்நூல் சுட்டுகின்றமை விசேடமானது.

வைத்திய நூல்கள்

ஈழத்தில் மருத்துவ நூல்களின் தொடக்கத்தினை ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து அறிய முடிகின்றது. செகராசசேகரம் பரராசசேகரம் ஆகிய இரு நூல்களுமே தொடக்க காலத்து வைத்திய நூல்களாக இனங்காணப்பட்டன. இவை இரண்டும் வடமொழி ஆயுர்வேத நூல்களைத் தழுவி எழுந்தன என்றும் இந்நூல்கள் எழுந்த காலத்தில் இலங்கையில் மருத்துவ அறிவு பரவியிருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.(9)

அ. செகராசசேகரம்

இந்நூல் நோய்களையும் அவற்றுக்கான சிகிச்சை முறைகளையும் கூறுகின்றது. 15 வகையான சுரம் பற்றியும், 13 வகையான சன்னி பற்றியும், 85 வகையான வாத வகைகளினையும், 21 வகையான மூல வியாதிகளினையும் அவை எல்லாவற்றுக்குமான மூலிகைகளினையும் இந்நூலில் விரிவாகக் காண முடிகின்றது.

ஆ. பரராசசேகரம்

40 வகையான சன்னி, 40 வகைப் பித்தரோகம், 64 வகைச் சுரம், 96வகைச் சிற்பனரோகம், 40 வகை மேகரோகம், 108 வகை உதரரோகம், 13வகை மூலரோகம் போன்றவற்றையும் அவற்றுக்கான ஆயுர்வேதக் குறிப்புக்களையும் இதில் காணமுடிகின்றது. நீரிழிவு, கரப்பான், பிளவை, கிரந்தி, விக்கல், வலி, கசம், வாந்தி போன்ற வியாதிகளுக்கும் இதில் தீர்வு கூறப்பட்டுள்ளது.

தழுவல் நூல் அல்லது காவியம் அல்லது மொழிபெயர்ப்பு நூல்

ஈழத்தில் முதல் காவியத்தைச் செய்த பெருமை ஆரியச்சக்கரவர்த்திகள் மரபில் வந்த நீர்வேலி அரசகேசரிக்கே உரியது. யாழ்.நல்லூரில் பிறந்த இவர் 1616இல் இக்காவியத்தைப் பாடினார் என்பர். வடமொழியில் காளிதாஸ மகாகவியினால் எழுதப்பட்ட இரகுவமிசத்தின் மொழிபெயர்ப்பே அரசகேசரியின் காவியமாகும்.

இரகுவம்சம்

திலீபமகாராசா காமதேனுவை வழிபட்டு ‘இரகு’ என்பவனைப் புத்திரனாகப் பெற்ற கதையும், இரகு, அயன், தசரதன், இராமன், குசன் போன்றோரின் குல வரலாறும் இக்காவியத்தில் சொல்லப்பட்டுள்ளது. பொதுக் காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச் சிறப்புக் காண்டம் என முக்காண்டங்களை உடைய இக்காவியம் முறையே 16, 6, 4 படலங்களை ஒவ்வொரு காண்டத்துக்கும் உரியதாகக் கொண்டு காப்புச்செய்யுள், பாயிரச்செய்யுள் உட்பட 2444பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது.

சொல்லணி, பொருளணிகள் மிகுந்து அரிதான சொற்கள் பயின்று வருவனவாக இதன் செய்யுட்கள் அமைக்கப்பட்டுள்ளமை அரசகேசரியின் புலமைக்குச் சிறந்த சான்றாக உள்ளது. நாவலரின் மருமகனான வித்துவ சிரோன்மணி பொன்னம்பல பிள்ளை இக்காப்பியத்தை கி.பி.1887இல் பதிப்பித்து வெளியிட்டார். வித்துவான் சரவணமுத்து அவர்கள் இதற்குப் பொழிப்புரை எழுதினார்.

இக்காப்பியத்தினை ஆதாரமாகக் கொண்டு சுன்னாகம் அ.குமாரசுவாமி புலவர் அவர்கள் ‘இரகுவமிச கருப்பொருள்’ ‘இரகுவமிச சாராமிர்தம்’ என்ற இரண்டு வசன நூல்களினை எழுதினார்.

சோதிட நூல்கள்

நாட்டு வளத்தைப் பேணுவதற்கும் அரச கருமங்களினை நாள், கோள், நிமிர்த்தம் பார்த்துத் தொடங்கவும் அக்கால மன்னர்கள் சோதிடக் கலையினைப் பேணி வந்திருக்கலாம். என்ற கருத்து நிலவுகின்ற நிலையில் மன்னர்கள் தமது எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தவும் இக்கலை பெரிதும் உதவியதனை அறிய முடிகின்றது.

இந்நிலையில்;: சரசோதிமாலை, செகராசசேகரமாலை ஆகிய இரு சோதிட நூல்களும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உரியனவாகக் கொள்ளப்படுகின்றது.

அ. சரசோதி மாலை

தம்பதெனியாவில் அரசு புரிந்த நாலாம் பராக்கிரமபாகுவினுடைய அரச சபையில் கி.பி.1310இல் அரங்கேற்றப்பட்ட சரசோதிமாலை( என்னும் காலத்தால் முந்திய சோதிட நூலானது தேனுவரைப்பெருமாள் என அழைக்கப்பட்ட போசராச பண்டிதரால் இயற்றப்பட்டது என்பதற்கும் அவரது குலம், அரங்கேற்றம் நிகழ்ந்த இடம் எது என்பதற்கும் தகுந்த ஆதாரங்களை இந்நூலின் இறுதிச் செய்யுள் வழங்குகின்றது.

ஈழத்துப்பூதந்தேவனாருக்குப் பின்னர் ஈழத்து இலக்கியம் என அறியப்பட்ட முதல் நூல் இதுவாகும். பாண்டியப் பேரரசுக்குப் பயந்து ஆட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் நான்காம் பராக்கிரமபாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது. இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன.

ஆ. செகராசசேகர மாலை

யாழ்ப்பாண மன்னர்காலத்தில் எழுந்த மற்றொரு சோதிட நூல் இதுவாகும். உவமை, சிலேடை, உருவகம் என்பன நிறைந்து இலக்கிய நயம் தோன்ற இந்நூல் பாடப்பட்டுள்ளது.

படலம் என்னும் பகுப்பு முறைக்கமைவாக மகளிர் வினைப் படலம், மைந்தர் வினைப் படலம், மணவினைப் படலம், கூழ் வினைப் படலம், வேந்தர் வினைப் படலம், கோசரப் படலம், யாத்திரைப் படலம் என்னும் 7படலங்களும் பொருட் பகுப்புக்கு ஏற்ப அடுக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

வாக்கிய பஞ்சாங்க ஆசான் கொக்குவில் சி.இரகுநாதஐயர் இதற்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். செகராசசேகரனின் புகழ் இந்நூலில் ஆங்காங்கே விளித்துக் கூறப்பட்டிருக்கின்றது. ஆரியச் சக்கரவர்த்திகள் பிராமண குலத்தினர் என்பதற்கு இந்நூலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. மக்களுக்கு வேண்டிய நற்கருமங்களை ஆற்றவேண்டிய நாள், கோள் தொடர்பான கருத்துக்களும் இதில் நிறைய உண்டு.

வரலாற்று நூல்கள்

யாழ்ப்பாண மன்னர் காலத்து வரலாறு கூறும் நூல்களாக எமக்கு இன்று கைலாயமாலையும் வையாபாடலும் கிடைக்கின்றது. கோணேசர் கல்வெட்டு எழுந்த காலம் பற்றி பலரும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டு காணப்படுகின்றனர்.

அ. கைலாயமாலை

கைலாயமாலை என்ற வரலாற்று நூலானது முத்துராயர் என்னும் புலவரினால் அருளப்பட்டது என்பதற்கு அந்நூலில் வரும் வெண்பா ஒன்று சான்றாக அமைகின்றது.எனினும் இவ்வெண்பா நூலாசிரியரால் எழுதப்பட்டதா? இடைச் சொருகலா? என்பதில் பலரிடையேயும் சந்தேகங்கள் நிலவுகின்றன.

யாழ்ப்பாண மன்னர் காலத்து அரசுக்கு அனுசரனை புரிந்த நிலவுடைமை வர்க்கத்தினரின் தொன்மையும் சிறப்பும் விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளமையினால் இது ஆளும் வர்க்கத்துக்குச் சார்பான ஓர் நூல் என்பதை உணர முடிகின்றது. குறிப்பாக இந்நூலில் வரும் நல்லூர் சட்டநாதர் ஆலய வரலாறும் அதைக் கட்டுவித்த சிங்கையாரியனின் வரலாறும் இதை எமக்குத் தெளிவாக உணர்த்தி நிக்கின்றன.

ஆ. வையாபாடல்

செகராசசேகரனின் அவைப்புலவரான வையாபுரிஐயர் செய்த இந்த நூலானது இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களையும் அவர்களின் குலம், குடிகள் பரவிய விதம் போன்றவற்றை உரைக்கின்றது. கூலங்கைச் சக்கரவர்த்தியின் பெருமையினை உரைப்பதனூடாக ஆரியச்சக்கரவர்த்திகளைப் புகழும் நூலாகத் திகழ்கின்றது.

வன்னி அடங்காப்பற்றில் வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றிய செய்திகளையும் இந்நூல் தருகின்றது. ஈழத்தில் நாச்சிமார் வழிபாடு எப்போது? எப்படி? பரவியது என்ற செய்தியையும் இதிலிருந்து அறிய முடிகின்றது. அதேநேரம் இந்நூலில் இடைச் சொருகல்கள் உள்ளன. என்ற ஆ.சதாசிவம் அவர்களின் கருத்தினையும் எளிதில் நிராகரிக்க முடியாமல் உள்ளது.

இ. கோணேசர் கல்வெட்டு

‘கல்வெட்டு’ம் தனித்துவமான ஓர் இலக்கிய வடிவமாக நிலவி வந்தமையினை நாம் ‘கோணேசர் கல்வெட்டின்’ மூலம் தெளிவாக உணரலாம் குளக்கோட்டு மன்னனால் கோணேசர் கோயில் கட்டப்பட்டமை, அவனது குலமரபு, சந்ததி பற்றிய விவரம், பணிகள் தொடர்பான விடயங்களினை இந்நூல் விரிவாகத் தருகின்றது. இந்நூலில் பல இடங்களில் இடைச்சொருகல் காணப்படுவதாக இதை ஆய்வுசெய்த ஈழத்தறிஞர் பலரும் குறிப்பிடும் அதேயிடத்து பேராசிரியர் சி.பத்மநாதன் இதனை ஓர் தொகுப்பு நூல் எனக் கருதுவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இதன் காலம் தொடர்பாகச் சர்ச்சைகள் நிலவுகின்ற போதிலும் 17ஆம் நூற்றாண்டில் ‘கவிராஜவரோதயன்’ என்பவரால் பாடப்பட்டது என பேராசிரியர் சி.பத்மநாதன் கருதுகின்றார். ‘கவிராஜன், இராஜவரோதயன்’ என இருபெயர்கள் இந் நூலாசிரியருக்கு இருந்தன. எனப் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளமை ஆய்வுக்குரியதாகும்.

ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள்

யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்களும் பெரும் செல்வாக்குடன் காணப்பட்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்துக்கு உரியனவாகவே கொள்ளப்படுகின்றன.

கி.பி.1310இல் தம்பதெனியாவில் அரங்கேற்றப்பட்ட ‘சரசோதிமாலை’ என்னும் நூலே ஈழத்துக்குரியதென இனங்காணப்பட்ட முதல் நூல் ஆகும். சோதிடக்கலை பற்றிய பல்வேறு நம்பிக்கைகளினை இந்நூல் தருகின்றது. பின்னர் எழுந்த செகராசசேகர மாலையும் சாஸ்திர, நாள், கோள், நற்பயன் உரைக்கும் பண்புடன் திகழ்கின்றது.

வைத்தியம் தொடர்பான நூல்களும் இக்காலத்துக்குரியனவாக இனங்காணப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்பன சிறந்த வைத்திய நூல்களாக இருப்பினும் ‘விசகடி’ வைத்தியம் பற்றிய குறிப்பெதனையும் அவற்றிலிருந்து பெறமுடியாமை ஓர் குறைபாடே எனலாம். ‘தாயைக் கொன்றான் சாறெடுத்துத் தடவிக்கொண்டால் தீர்ந்திடுமே’ என நெருப்புச் சுட்ட புண்ணுக்கான மருந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சிலருக்கு மட்டுமே விளங்கக்கூடிய (தாயைக் கொன்றான்-வாழை) மொழி நடையில் கடினமான இறுகிய சொற்களுடன் இத்தகைய நூல்கள் விளங்கியமையானது மரபுரீதியாக அல்லது செவிவழியாக மருத்துவம் சார் கருத்துக்கள் பயின்று வந்திருக்கலாம் என்ற கருத்துக்கு வலுவூட்டுவனவாக உள்ளன.

வரலாறு என்பது எழுந்தவன் சார்பாக எழுதப்படுவது என்ற கூற்றுக்கு அமைய, ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திலும் கைலாயமாலை, வையாபாடல், கோணேசர் கல்வெட்டு போன்றன நிலவுடைமை வர்க்கத்தினரையும் பிரபுக்கள், அரசர் போன்றோரையும் மகிழ்விப்பனவாகவும் அவர்களின் குலமரபு கூறுவனவாகவும் தோற்றம் பெற்றிருப்பதைக் காணலாம்.

கண்ணகி வழக்குரையும் கதிரமலைப்பள்ளும் சமய நூல்களாக இருப்பினும் அவற்றில் சமூகக் கருத்துக்கள் செறிவுடையனவாகக் காணப்படுகின்றன. கிராமிய வழிபாட்டு முறை, கப்பல் கட்டுதல், கப்பல் ஓட்டம், மீன்பிடித்தல், போன்ற கிராமிய நடவடிக்கைகள் நிறைந்த நூலாக கண்ணகி வழக்குரை விளங்குகின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய குறிப்புக்களையும் இதிலிருந்து அறிய முடிகின்றது.

‘பள்ளு’ இலக்கிய வடிவங்களில் எல்லாம் காலத்தால் முந்திய இலக்கியமாகக் கதிரமலைப் பள்ளு விளங்கக் காணலாம். தமிழ் நாட்டில் முக்கூடற்பள்ளு தோன்ற முன்னரேயே ஈழத்தில் கதிரமலைப்பள்ளு தோன்றி விட்டது என இலக்கிய ஆய்வாளர்கள்கள் குறிப்பிடுவர். கற்பனை வளம் பொருந்திய வர்ணனைகளுடன் பாடல்கள் காணப்படுகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

தக்கிணகைலாய புராணத்தின் வரவுடன் ஈழத்தில் புராணம் ஓர் இலக்கிய அந்தஸ்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து திருக்கரைசைப் புராணமும் தோன்றி தலப் பெருமையைக் கூறியது. திருக்கரைசைப் புராணத்தில் உமாபதிசிவாச்சாரியார் பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன.

இரகுவம்சம், கண்ணகி வழக்குரை ஆகிய இரண்டும் ‘காவிய’ அமைப்புடையன என்று சிலர் கூற, வேறுசிலர் இரகுவம்சம் மட்டுமே காவியம் என்பர். இருப்பினும் இவற்றுக்கிடையிலான இன்னோர் ஒற்றுமையினையும் மறுப்பதற்கில்லை. உண்மையில் இவை இரண்டுமே தழுவல் நூல்கள் ஆகும். காளிதாஸமகாகவியின் இரகுவமிசம் தமிழில் அரசகேசரியால் மொழிபெயர்க்கப்பட்டது. சிலப்பதிகாரக் கதையினைத் தழுவிக் கண்ணகி வழக்குரை எழுதப்பட்டது. இரகுவம்சம் இராமாயணக் கதையின் தழுவலாகும்.

ஆரியச்சக்கரவர்த்திகால இலக்கியங்களினை ஓருமித்த பார்வையில் நோக்கிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் “பொதுவாக இலக்கியம் என்று முன்னர் குறிப்பிட்டோர் சிருஸ்டி இலக்கியத்தை மாத்திரமன்றி, சமயம், தத்துவம், சாஸ்திரம், அறிவியல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்களையும் கருத்திற் கொண்டனர். ஆதிகாலத்தில் வாய்மொழிப் பாடல்கள் வழங்கிய போது வாகட நூலில் இருந்து வம்ச வரலாறு வரையில் செய்யுள் வடிவிலேயே அமைந்து நிலவியது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.”(10) எனக் கூறியதையும் இவ்விடத்தில் நினைவிற் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

அடிக்குறிப்பு

1. பட்டினப்பாலை, வரி, 190-192

2. கழகத் தமிழ் அகராதி, தென்னிந்திய நூற்பதிப்புக் கழகம், பக்144

3. நாராயணசாமி ஐயர், நற்றிணை நானூறு மூலமும் உரையும், கழக வெளியீடு, பக் 62

4. முத்துத்தம்பிப்பிள்ளை.ஆ, ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், நாவலர் அச்சுக் கூடம், பக் 2

5. மேலது, பக் 2

6. விமல் சுவாமிநாதன், புராதன சிங்கள இலக்கியங்களில் தமிழின் செல்வாக்கு (கட்டுரை)

7. மேலது,

8. சிவலிங்கராஜா.எஸ், ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, பதிப்பு-2, பக்12

9. நடராசா. எவ் .எக்ஸ் .சி, ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு, பக்59

10. மேலது, பக்33

11. நடராசா.க.செ, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, பக்06

12. அனந்தராஜ்.ந, ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள், பக்71

13. கைலாசபதி.க, ஈழத்து இலக்கிய முன்னோடிகள், பக்14

வளரும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.