Jump to content

துயர் வெளியில் தனித்தவள்


Recommended Posts

துயர் வெளியில் தனித்தவள் (நெடுங்கதை)

இனியெதுவும் இல்லையென்ற உண்மையும் இனி எதையும் எண்ண முடியாதென்ற வெறுமையும் உறைத்தது. மனவெளியெங்கும் பரவிக்கிடத்திய நம்பிக்கை துகள் துகள்களாய் சிதறித் தூரமாய் தனித்துச் சிதைகிறது.

ஊவென்ற இரைச்சலோடு ஓடிவந்து தழுவும் காற்றும் ஓயாத எறிகணை மழைக்குள்ளும் எல்லாரையும் மிஞ்சிய நம்பிக்கையில் மேமாதத்து நாட்களை நம்பிக்கையோடு நம்பியவள். மனம் தளராமல் மன்னார் போய் கிளிநொச்சியின் தொடராய் முல்லைமண்ணில் எதிரி கால்பதித்த பின்னாலும் முள்ளிவாய்க்கால் மோட்சத்தின் மறைவிடமென்று காவலிருந்த கடைசிக்களம் போலிருந்தது இரவு.

எப்படி….? ஏன்….? எதனால்…? எதுவும் பிடிபடவில்லை…..சூனியம் முற்றிய தெருக்களில் பிணங்கள் குவிவது போல நகர நகர அவர்கள் வெற்றியுடன் பின்தொடர்ந்துவர நம்பிக்கையிழந்து சோர்ந்த தோழர்களின் கடைசிக்கணங்களை நினைவுச் சதுக்கத்திலிருந்து எறிய முடியாமல் வழிவழி சிதறிய தலைகளும் உடல்களும் கண்ணுக்குள் திரும்பவும் திரும்பவும் துரத்திக் கொண்டிருந்தது.

தடாலெனத் தண்ணிருக்குள் யாரோ விழும் சத்தமும் முனகலும் மூச்சுமுட்டக் கண்களைத் திறக்க முயற்சிக்கிறாள். ஏதோவொன்று அவளையும் இழுத்து விழுத்தியது….உதடுகள் மீதுறைந்து சொற்கள் தொடராய் வெளியேறிக்கொண்டிருந்தன படுமோசமான கெட்ட வார்த்தைகளாக…..

தங்கைச்சி…..தங்கைச்சியென்ற குரல் இழுத்து வந்து UNHCR தந்த கூரைக்குக் கீழ் விழுத்தியது. வியர்த்துக் கொட்டிய உடலை விசுக்கவும் ஏதுமற்ற நிலையில் சட்டைக்கொலரை உயர்த்தி வாயால் ஊதினாள். வரிசையில் படுத்திருந்தவர்களில் அவளை எழுப்பிய சுதாஜினியக்கா மட்டும்தான் விழித்திருப்பதை உணர முடிந்தது.

என்னம்மா கனவோ….? என்னாலும் நித்திரை கொள்ளேலாதாம்….றோட்டில விழுந்து சிதறின பிள்ளைதான் ஒரே வந்து கொண்டிருக்கிறாள்…..தலைவெடிக்குமாப்போலையிருக்கு….சுதாஜினியக்கா மூக்கைச்சிறியபடி சொன்னா…..இவளிடமிருந்து ஒரு ஆறுதலான சொல்லை எதிர்பார்த்திருப்பா போல….தன்னையே தைரியப்படுத்த ஆளில்லாமல் தனித்தவளிடம் சுதாஜினியக்கா எதிர்பார்த்த ஆறுதலை இவளால் ஒற்றைச் சொல்லால் கூட ஒரு சொல் சொல்ல முடியாமல் மெளனமாயிருந்தாள்.

வெக்கையும் ஒடுங்கிய அந்தத் தறப்பாள் கொட்டகையும் 19வருடகாலக் களவாழ்வின் கடினத்தையும் விழுங்கிக் கொள்கிறது இரவு…..முள்ளிவாய்க்காலில் முடிந்திருக்க வேண்டிய உயிரை இந்த முகாம்வரை இழுத்துவர எனக்கு அத்தனை பெரிய ஆயுளா…? மதியம் தொடர்பு கிடைத்த தோழியின் சொற்கள் உண்மைபோலத்தான் இருந்தது…..எழுந்து சப்பாணி கட்டிக் கொண்டிருந்தாள். தோழியைத்தேடி தானே தொடர்பெடுத்துவிட்டு அவள் மேல் சினந்ததை நினைக்கச் சற்று மனசுக்குள் ஒரு உறுத்தல்….

இத்தனை அழிவையும் எழுகையென்றதும்…! போராளிகள் தங்கள் இயக்க வளமையை மறந்து சரணடைந்தது எதற்கு என்றதும்…! ஆயிரமாயிரம் பேர் அகதி முகாம்களிலிருந்து எழுவார்கள் போராட என்ற புலத்தமிழ் மனத்தின் வெளிப்பாடுகளைச் சொன்னது கூடப் பறவாயில்லை…..கடைசியில ஒரு சைனைட் கூடவோ கிடைக்கேல்ல உங்களுக்கென்று அவள் கேட்டதுதான் உச்சியில் அறைந்தது போல அவள் காதுகளைக் கிழித்தெடுத்ததை வாய் மூலம் அவளைத் திட்டித் தீர்த்ததை நினைக்க கோபத்தில் தனது குரல் உயர்ந்ததையும் பொறுத்து சொல்லு…..எங்களைத் திட்டு நல்லா…. என்று தன் பெருந்தன்மையை அவள் முன்னிறுத்தி மறுபடி கதைத்ததுதான் அவளைச் சற்று ஆறுதல் அடைய வைத்தது.

000

அடுத்த கூடாரத்தினுள் யாரோ ஒரு குழந்தை வீரிட்டுக்கத்திக் கொண்டிருந்தது….அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த அவள் அம்மா தனது நித்திரையைத் துறந்து விழித்துக் கொண்டாள். பிள்ளைக்குப் பசியோ என யாரோ கேட்டார்கள்…இல்லையென்றவள் சற்று நேரத்தில் அந்தச் சுற்றாடல் முழுவதும் எழுந்துவிடும் வகையில் பெலத்துக் குழறினாள்.

என்ர பிள்ளை….என்ர பிள்ளை…..என்ரை அம்மளாச்சி என்னைப்பாரணை….என்ரை அம்மளாச்சி….அந்தக் குழந்தையின் தாயின் கதறல் ஏதோ விபரீதம் நிகழ்ந்ததற்கான அறிகுறியாய் இருந்தது…..

சுதாஜினியக்கா தடக்குப்பட்டுத் தட்டுத்தடுமாறி எழுந்து போனா…..சுதாஜினியக்கா யாருக்காகவும் காத்திருக்காமல் அந்தக்கொட்டகைக்குள் புகுந்தா…..என்ன பிள்ளை குழந்தைக்கென்ன…..? கேட்டபடி அவளிடமிருந்து குழந்தையை வாங்கினா…..அவளது குழந்தை வாயில் நுரை தள்ளி தலைதொங்கிக் கிடந்தது….. சுதாஜினியக்கா வாங்கிய குழந்தையை நிலத்தில் சரித்துப்படுத்தினா….. தங்கைச்சி இஞ்சை ஓடிவா…..சொல்லியபடி தான் அறிந்த கைவைத்தியம் யாவையும் செய்து முடித்தா….மனம் கேட்கவில்லை அவளுக்கு….அவளும் எழுந்து போனாள்.

சுதாஜினியக்கா தனது கையிலிருந்த மட்டையால் குழந்தைக்கு விசுக்கினா….குழந்தையின் தாய் தலையிலடித்து மார்பிலடித்துக் குழறிக் கொண்டிருந்தாள்….. அந்தக் கொட்டகைக்குள்ளிருந்து அந்தக் குழந்தையின் அம்மம்மா….‘ஐயோ பிள்ளை ஏதோ குத்தீட்டுதணை எனக்கு…‘ என்றபடி வெளியில் எழுந்து போனா முதுகைத் தடவியபடி….அவள் காலுக்குள் ஏதோ நசிபட்டது போலிருந்தது….ஐயோ அங்கை பாருங்கோ பாம்பு…..யாரோ ஒருவர் கத்திய கத்தில் இவள் திரும்பிப்பார்த்தாள். காலுக்குள் நசிபடுமாப்போலிருந்தது இந்தப்பாம்பு தானோ….நினைத்துக் கொண்டாள்.

இப்படித்தான் பயிற்சி முகாமில் ஒரு மாலையில் இவளது பாய்ச்சுருளுக்காய் பாம்பு வெளியேறிப்போனது. அவளது பயிற்சி முகாமில் அது பெரும் பரபரப்பாக ஒருவாரம் வரையும் நீடித்து….இரவில் தோழிகளுன் ஒட்டியபடி விளக்கோடு படுக்கை முழுவதும் பரிசோதித்து யாராவது ஒருத்தியோடு ஒட்டிக் கொண்டிருந்தாள்.

காட்டில இதெல்லாம் வருமெண்டு சொன்னவர்களின் கதைகளை மட்டும் கேட்டவளுக்கு பாம்பை முதல் முதலில் தனது பாய்ச்சுருளிற்குள் பார்த்தது உள்ளுக்குள் பயமும் வெளியில் சிரிப்புமாக இருந்தாள். தோழிகள் நக்கலடித்தார்கள்….

புலிவீராங்கனை பாம்புக்குப் பயமோ ? கேட்ட தோழிகளுக்கு, பாம்பெண்டா படையும் நடுங்குமாம்… முதுமொழி சொல்லி அவர்களது நக்கலுக்கு பதில் சொல்வாள். ஒரு முற்பகல் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த தோழிகள் ஓடிவந்து நாகம் கிணற்றில் என்றதும்….ஓடிப்போய் கைத்துப்பாக்கியால் அந்த நாகத்தைச் சுட்டுவிட்டாள்….குடிதண்ணீர் குளிப்பு என அவர்களுக்கான தண்ணீர் வசதியான அந்தக்கிணற்றில் பாம்பைச்சுட்டதற்காக தண்டனை கிணற்றை இறைத்துச் சுத்தம் செய்வது என்ற போது….கயிறு கட்டிக் கிணற்றில் இறங்கி துப்பரவு செய்து முடிக்கும் வரை வெளியில் நின்ற தோழிகள்….‘அந்தா பாம்பு இந்தா புடையன்…‘ என அவளை அச்சமூட்டினார்கள்.

எல்லாம் முடித்து வெளியில் வந்த பின்னர் மலர் என்ற போராளி சொன்னாள். நீ சுட்டது சோடிநாகத்தின்ரை ஒண்டை…மற்றது சோடியைக் கொண்ட ஆளைத் தேடிக்கடிக்குமாம்….எங்கடை அம்மான்ரை அப்பு முந்தி ஒரு சோடிநாகத்தின்ரை இணையை அடிச்சுக்கொண்டவராம்….பிறகு மற்றது அப்புவைத் தேடிக்கடிச்சுத்தான் அப்பு செத்தவராம்…..பயந்தபடிதான் சொன்னாள் மலர். ஓ….அப்ப அடுத்த நாகத்தை உன்ரை பாயுக்கை பிடிச்சுவிட்டா சரி என்றவளுக்கு எல்லாருமாகச் சேந்து நல்ல கும்முகும்மினார்கள். அதன் பின்னர் நாகபாம்பைச்சுட்ட பெருமையை அவள் பயிற்சி முடித்து காவலரண் வரையும் சொல்லிச் சிரிப்பார்கள்.

பயிற்சியின் பின்னர் அவள் சென்ற முதல் சமர்முனை. யாழ்மாவட்டத்தின் வலிகாமம் பிரிவில் இருந்த கட்டுவன் பகுதிதான். கட்டுவன் குரும்பசிட்டி குப்பிளான் பகுதிகள் அதிகம் பனைவளம் நிறைந்தது. மறந்து போன பாம்பை நினைவுபடுத்தியது அந்தப் பனைமரக்கூடல்கள்.

1990 ஐப்பசிமாதம் தீபாவழிக் கொண்டாட்டத்திற்கான எதிர்பார்ப்பில் மக்கள் ஆரவாரமாக….தீபாவழிக்கு முதல் நாள் இரவு கட்டுவன் வசாவிளான் ஒட்டகப்புலம் பகுதிகளிலிருந்து புலிகளின் தடையரண்கள் நோக்கியும் மக்கள் குடியிருப்புகள் நோக்கியும் ஓயாத எறிகணை வீச்சாயிருந்தது. பெரும்பலமாய் நம்பிய பதுங்குகுளிகளின் உள்ளிருந்து இராணுவ முன்னேற்றத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்குப் பின்புறமாய் துப்பாக்கி வேட்டுகள் வந்தபோது தான் நிலமை புரிந்தது.

முன்பக்கக்காவலில் நின்ற பல போராளிகள் வீரச்சாவடைய பின்னால் நின்றவர்களில் கணிசமானோர் காயமடைந்தனர். அவசர அவசரமாய் காயமடைந்தோர் அப்புறப்படுத்தப்பட்டு வீரச்சாவடைந்தோரில் பலர் காப்பாற்ற முடியாமல் எதிரியின் கையில் அம்பிட்டுப்போனது. அந்தச்சமரில் தனது ஒற்றைக்காலில் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் போயிறங்கினாள். முதற்களம் விழுப்புண்ணோடு களத்திலிருந்து சற்றுக்காலம் தள்ளி நிற்க வேண்டியதில் உள்ளுக்குள் துயர்முட்டிக் கிடந்தது.

களத்திலிருந்து மாறி அரசியல் பணிக்கு மாற்றப்பட்டதில் வேதனையானாலும் யாழ்மாவட்டத்தின் முற்றிலும் வேறுபட்ட சமூக நிலமைக்குள் தன்னை ஒருங்கிணைக்க வேண்டி வந்தது. பள்ளிக்கூடம் ரியூசன் என வீதிகளில் சயிக்கிளில் போகும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தன்னை அறிமுகப்படுத்தி சுதந்தி தமிழீழம் பற்றிய தெளிவை பெண்கள் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய தேவையைச் சொல்ல அவள் எடுத்த முயற்சிகளில் பலதரம் தோற்று எழுந்து மீளவும் அவர்களுடனான தனது உறவைப் புதுப்பித்துப் பல பெண்களைப் போராட்டத்தில் இணைக்க அவள்பட்ட சிரமமும் அம்மாக்களின் உறவுகளின் திட்டலும் இப்பவும் நினைவுச் சேமிப்பில் பதியப்பட்டுள்ளன.

அவளுக்குப் பின்னர் அடுத்தடுத்து அவளது 5தங்கைகளும் போராடப் போகிறோம் எனப் போய்விட்டதாக கிளிநொச்சியிலிருந்து அம்மா அனுப்பிய கடிதங்களைத் தனது மக்கள் தொடர்பாடலில் தொடர்பில் வரும் யாழ்ப்பாணத்து அம்மாமார் பலருக்குக் காட்டினாள். சிலர் அந்தக்கடிதத்தோடே அவளோடு நெருக்கமாயினர். எத்தனையோ அம்மாக்களுக்கு அவள் செல்லப்பிள்ளையாக…… ஆலோசகியாக குடும்பநல நீதிபதியாக அவள் எடுத்த அவதாரங்கள் நிறைய….16வயதில் போராடப்போனவள் 18வயதிற்குள் ஓர் முதிர்ந்த அனுபவப்பட்டறிவாளியாய் அரசியல் பிரிவில் அவள் ஒரு பொறுப்பாளராகினாள்.

5பெண்பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழியில் துவண்ட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ‚‘ஆறுபெண்பெற்றால் வீரப்பெற்றோராவீர்‘ என்று தத்துவார்த்த விளக்கம் சொன்னாள். இவளா நாங்கள் பார்த்த பெண் ? அம்மாவால் அடிக்கடி அதிசயமாக பார்க்கப்பட்ட அதிசயம் அவள்.

ஆனையிறவு ஆகாய கடல் வெளிச்சமர் ஏற்பாடான நேரம். அரசியலில் இருந்தவள் களமுனை போகவிருந்த விருப்பைத் தெரிவித்த போது அவளுக்குக் கிடைத்த பணி விநியோகம். முதலில் மறுத்து பிறகு அதை மகிழ்ச்சியோடு ஏற்று உப்பள முனையில் தன் ஊனமுற்ற காலையும் பலமாக்கி அவள் சமர் முனையில் நின்றாள். கொடு வெயில் சுடுதரை வெட்ட வெளியென விரிந்திருந்த ஆனையிறவை அளந்த ஆயிரமாயிரம் போராளிகளுடன் அவளும் அளந்தாள்.

கடைசிக்கவிதையை ஆனையிறவுக்களமுனையில் எழுதிவிட்டு அந்த உப்பளக்காற்றில் உறைந்து போன கப்டன் கஸ்தூரியின் கவிதைகளை கடமையின் போது தன்கூட நிற்கும் போராளிகளுக்கு கொண்டு விநியோகத்திலிருந்து சமரணியில் இணைந்து வரலாற்றுப் பதிவான மரபுவழிப் படையணியில் போராடிய உத்வேகத்தோடு ஆனையிறவிலிருந்து பின்வாங்கி அடுத்த களமுனைக்கான தயார் நிலையில் காத்திருக்க…..முதல் களம் போன கட்டுவனை அண்டிய குப்பிளான் பகுதிக்குப் போய்ச் சேர்ந்தாள். கட்டுவன் தாண்டி குப்பிளான் வடக்கு சமாதிகோவிலடியில் கடமை அவளுக்கு.

காவரலணில் கடமையில் இருக்கும் நேரங்கள் தவிர்ந்து அந்தப்பகுதிப் பெண்கள் அம்மாக்களுடன் மீளவும் தனது மக்களுடனான பணியிலும் நேரத்தைச் செலவிடத் தொடங்கினாள். அந்த உறவுகளின் அழைப்பில் அவர்களது வீடுகளுக்குச் சென்று வருவது அவர்களுடனான தொடர்பாடலைப் பேணுதல் என அவளை அவள் வயதிலும் அவள் வயதுக்கு குறைந்தோருமென அவள் சேர்த்துக் கொண்ட உறவுகள் ஏராளம். அத்தகைய உறவுகளில் ஒருத்தியே இன்றுவரை இவளது தொடர்பில் இருக்கும் தோழமையாய் தொடர்கிறது.

இவள் களத்தில் நிற்க 1992இல் புலம்பெயர்வதாய் ஒருநாள் அவள் விடைபெற்றுச் சென்றதில் கோபம்தான். ஆனாலும் தொடர்ந்து தொடர்போடு எப்போதாவது கடிதங்கள் இவள்பற்றிய விசாரிப்புகள் என அவ்வப்போது தொடர்ந்த உறவு சமாதான காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 2003இல் கிளிநொச்சி வீதியில் இவள் அவளைச் சந்தித்ததும் அடையாளம் கண்டதும் தொடர்ந்து தொலைபேசி கடிதங்கள் மின்னஞ்சல் என முன்னேற்றம் கண்டது. எத்தனையோ தரம் அவளுடன் உரிமையுடன் கதைத்ததும் பகிர்ந்ததும் இன்று அவள்மீது சினத்துச் சீறித் தொலைபேசியில் திட்டிய தனது மனநிலையை எண்ண அருவெருப்பாக இருந்தது.

ஐயோ….என்ர பிள்ளை…. ஐயோ….என்ர பிள்ளை….நினைவுகளை மீட்டுவந்த குரல் கேட்டுத் திரும்பினாள். பாம்புகடித்த குழந்தை தன் கடைசி மூச்சை இவ்வுலகிலிருந்து நிறுத்திக்கொண்டு கண்கள் நிலைகுத்தியிருக்க அசைவற்றுக் கிடந்தது.

பாத்திய தங்கைச்சி பாம்பு கடிச்சது தெரியாமல் அழுத குழந்தை செத்துப்போச்சுது…..சுதாஜினியக்கா இவள் தோழில் சாய்ந்து அழுதா. என்ரை பிள்ளையைச் சிதறிடிச்சது அநியாயம் பிடிச்சவன்ரை குண்டு…..இப்ப இந்த முகாமில அடைச்சு பாம்பாலும் விசங்களாலையும் சாக்காட்டப்போறானம்மா எங்களை…. நாங்கள் முள்ளிவாய்க்காலிலயே செத்துப் போயிருக்கலாம்…. ஏனிஞ்சை வந்தமம்மா…..சுதாஜினியிக்கா ஒவ்வொரு கதையாய் சொல்லிச் சொல்லித் தன்னுள் அடக்கி வைத்திருந்த அழுகையை வெளிச்சொரிந்தா….

அடுத்தும் பலகுரல்கள் ஒப்பாரி வைத்தது…..இறந்த குழந்தையின் அம்மம்மாவின் உயிரும் பிரிந்துவிட்டதாக அவலக்குரலெடுத்து அழுதார்கள். நாதியற்று நாங்கள் நாறிச்சாகவோ இந்த வதையென்று யாரோ குழறுவது கேட்டது……

தனது கொட்டகைக்குள் புகுந்தாள் இவள். சுதாஜினியக்கா சொன்னமாதிரி முள்ளிவாய்க்காலில் முடிந்து போயிருக்காமல் அல்லது இவளது புலத்துத்தோழி கேட்டமாதிரி ஒரு குப்பி கூடவா கிடைக்கேல்ல என்றமாதிரி ஏதாவது ஒருவழியை அங்கேயே தேடியிருக்கலாம்….அதையெல்லாம் விட்டிட்டு வாழ ஏன் ஆசை வந்தது….? இன்னும் இவள் இனங்காணப்படாமல் இருப்பது எத்தனை நாளைக்கென்ற அவகாசமில்லாத அந்தரம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே…..

நினைவுகள் சுற்றிச் சுழன்றடித்து மீண்டும் முல்லைக்கள முனையில்தான் போய் விழுகிறது. வழிவழியாய் மக்கள் செத்துச் செத்து வீழ வெல்வோம் வெல்வோம் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதென்று நம்பவே முடியாதிருந்தது.

*வாழ்வெனில் போராடுவோம் சாவெனில் சமராடுவோம்* தோழன் ஒருவன் புதுமாத்தளனில் நின்ற போது படுகாயமுற்ற நிலையில் சொல்லிச் சென்ற போது போராடும் வலுவின்னும் உள்ளதாய் தன்னை நம்பிய பிள்ளைகளுக்குச் சொல்லியே நம்பிக்கை கொடுத்த தனது வார்த்தைகள் யாவும் தோற்றுப் போனதாய் உணர்ந்தாள்…..

எத்தனை நம்பிக்கை எத்தனை எதிர்பார்ப்பு எத்தனைபேரின் கனவு எத்தனைபேரின் உயிர் என இழந்தவைக்கெல்லாம் ஓர் புலர்வு வருமென்று காத்திருந்த களம் கையைவிட்டு அவரவரை அவரவரே காப்பாற்றுங்களென கையறு நிலையில் மகனாரும் மகளாரும் என்ன செய்யவென முள்ளிவாய்க்காலில் முடிவெடுக்க முடியாது நின்றதை……யாருக்குப் புரிவிக்க…..? யாருக்குச் சொல்லியழ….?

நாங்கள் தான் வெல்வோமென்று நம்பிக்கை கொடுத்து நமக்குப் பலம் தாருங்களெனத் திரட்டிய படையணியும் போராளிகளும் சரணடைதல் என்பது சாத்தியமா…..? இல்லை நாங்கள் வெடிக்கப்போறம்….இல்லை நாங்கள் குப்பி கடிக்கப்போறம்….என எத்தனையோ பேர் தங்களை அழித்துச் செத்து வீழ்ந்ததும்…..போற நீங்கள் போங்கோ நாங்க வரேல்லயெனக் காற்றோடு காற்றாய் தங்களைக் கரைத்தவர்களென களமுனை கந்தகப்புகையாலும் மனிதப்பிண வாடையாலும் நிறைந்து வழிந்தது.

வேண்டாம் போவம் வாங்கோ….என மக்களுடன் மக்களாய் புறப்பட்டவர்களோடு இவளும் கலந்து கொண்டாள்….வீதியில் சிதறிக்கிடந்த ஆடைகளைச் சேர்த்தெடுத்துக் களவுடையை மாற்றிக்கொண்டு புறப்பட்டாள்……வழி வழி விசாரணைகள்……போராளிகளெண்டு பதிவு செய்யுங்கோ இல்லாட்டி விடமாட்டமெண்ட மிரட்டல்கள்….யாவையும் மறந்து நான் போராளியில்லை நான் பொதுமனிசி பொதுமனிதன் என்ற பலரது கடைசி முடிவில் இவளும் தன்னையொரு பொதுமனிசியாக ஓமந்தையில் பதிவு செய்து கொண்டு வந்து சேர்ந்தாள். குடும்ப விபரம் கேட்ட பதிவாளருக்கு எல்லாரும் செத்துப் போட்டினம் நான் மட்டும்தான் மிஞ்சினனான் என்றே பதிவு கொடுத்தாள். யாருமில்லாமல் தனித்து வந்துவளுக்கு சுதாஜினியக்காதான் ஒற்றை ஆறுதலாக இதுவரையும் தொடர்கிறது.

000

வெயில் முதுகில்படும்வரை மூழ்கடித்த நித்திரையை தண்ணீர்கான்களின் சத்தம் அடித்தாற்போல் எழுப்பியது. வரிசையில் முகம் கழுவ வரிசையில் மலம் கழிக்க வரிசையில் உணவுபெறவென எல்லாம் வரிசையிலேதான்…..படுக்கையிலிருந்து எழுந்து சப்பாணி கட்டிக்கொண்டிருந்தாள். சுதாஜினியிக்கா பக்கத்தில் வந்திருந்து சொன்னா….

பிள்ளை அங்காலை ஆரையோ ஆமிக்காறர் வந்து பிடிச்சுக்கொண்டு போகினமாம்….காதுக்குள் சுதாஜினியக்கா முணுமுணுத்தாள். ஆராம்….? கேட்டவளுக்கு தெரியேல்ல…என்றுமட்டும் சொன்னா. யாரென்பதை அறிய ஆவலாயிருந்தது. தன்போல மக்களாக வந்தவர்களில் யாரோ என்பது மட்டும் புரிந்தது.

வரிசையில் நின்றவர்களின் குரலிலிருந்து அந்தப்பெயர் உச்சரிக்கப்பட்ட போது அதிர்ந்துபோனாள். எத்தனையோ பேரை உருவாக்கிய அந்தத் தோழியை அவர்கள் பிடித்துவிட்டார்களா…? அவளுடன் இவள் செய்த பணிகளும் கடந்த நாட்களில் நடந்தவற்றில் அவளது முடிவுகளுடன் இவளும் முரண்பட்டதும் நினைவோடு சுழன்றது.

எங்கடை பொம்பிளைப் பிள்ளையளையெல்லாம் கொண்டுபோகேக்க உவதானே முன்னிண்டவா…எங்கடை கண்ணீர் தான் இப்ப உவவைப்பிடிச்சிட்டாங்கள்….இன்னும் என்ரை 3பெட்டையளைக் காணேல்ல…..கடைக்குட்டி புதுமாத்தளனில சாவெண்டு வீட்டுவாசலில வாழைத்தண்டு விழேக்கை நான் பட்ட துன்பத்தைவிட காணாமல் போன என்ர குஞ்சுகளை என்னெண்டு மறக்க… கடவுளே யென்மத்துக்கும் மறக்கமாட்டன்……கடவுள் இருக்கிறான் அவன்தான் உவையைக்காட்டிக்குடுத்தவன்…..ஒரு தாயின் திட்டும் அழுகையும் இவள் காதுகளையும் குடைந்தது.

எங்கடை சனத்துக்காகத் தானே நாங்கள் எங்கடை வாழ்க்கையை குடும்பத்தை எல்லாத்தையும் இழந்தம்…. நாங்கள் நம்பிக்கை வைச்ச சனத்திட்டை இப்பிடியொரு கெட்ட பெயரை வாங்கி…..நாங்கள் ஏன் உயிர்வாழுறமக்கா…? சுதாஜினியக்காவைப் பார்த்துக் கண்கலங்கினாள். பிள்ளை நம்பினவங்கள் எங்களை கைவிட்டால் வாற துயரம் தான் இந்தச்சனத்திடை இந்தத்திட்டு….அதுகள் கண்பாக்க வளந்தனீங்கள் அதைத்தான் இந்தச் சனத்தால தாங்கேலாமக்கிடக்கு….அதுதான் திட்டுதுகள் கொட்டுதுகள்….கடைசிநேரத்தில நடந்த பிழையளை நாங்கள் எந்தப்பூச்சாலையும் மறைக்கேலாதக்கா….நாங்கள் செய்தது பிழைதான்…..அதுகளிடை பிள்ளைகளை எங்கடையாக்கள் கொண்டு போய் குடுத்தது பிழைதான்……அதுகளிட பிள்ளையளை அநியாயத்துக்குக் கொண்டு போனா அதுகள் தான் என்ன செய்யும்…..?

இவளது குமுறல் நியாயமானதா…? எதையும் பிரித்துப் பார்க்கவோ நீதி சொல்லவோ சுதாஜினியக்காவால் முடியவில்லை. மெளனமானா சுதாஜினியக்கா. ஒரு போராளின் காதலியாகி துணையாகி மாவீரரின் மனையான சுதாஜினியக்காவால் எதையும் சமாளிக்கவோ சமாதானம் சொல்லவோ முடியவில்லை.

பல்கலைக்கழகம் வரை போன சுதாஜினியக்காவை அவளோடு ஒன்றாய் பல்கலைக்கழகத்தில் சந்தித்த சுதாஜினியக்காவின் அவன் ஞாபகங்களில் வந்தேறி நின்றான்.

யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த அவனும் வன்னிமாவட்டத்தைச் சேர்ந்த அவளும் ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்தும் கொள்கையுமாகவே இருந்தார்கள். அவன் படிப்படியாக சுதாஜினியக்காவுக்குள் காதலால் கவரப்பட்டு கொள்கைகள் யாவையும் அவனுக்காக சுதாஜினியக்கா விட்டுக்கொடுத்தாவென்பதா அல்லது மறந்து போனாவா…? சிலநேரம் குழம்புவதுண்டு இது பற்றிய விவாதத்தில்…..

அவனுக்குப் பக்கத்தில் விரிவுரை கேட்பது அவனோடு ஒட்டியிருந்து அரசியில் பேசுவது என அவனைச் சுற்றியே தனது யாவையும் மாற்றிக்கொண்ட ஒரு நாள் அவன் காணாமல் போனான். அவளுக்காக அவன் விட்டுச் சென்ற ஒற்றைக்கடதாசியில் தான் ஒரு போராளியாவதை மட்டும் தெரிவித்திருந்தான். கடைசிவருடத்தில் கற்கையை விட்டு அவன் போனதில் அவளுக்கு கோபம் தான். இனி எந்தக்காலத்தாலும் மறந்துவிடமாட்டாத வடுவை அவனது அந்த முடிவு ஏற்படுத்தியது.

தனது கற்கையை முடித்த சுதாஜினியக்கா ஆசிரியையாக தனது ஊரிலேயே தன் ஆசிரியப்பணியை ஆரம்பித்தா. திருமணப்பேச்சை வீட்டிலுள்ளோர் எடுக்கும் தருணங்களில் நினைவுகளுக்குள் உறைந்து போன அவனது ஞாபகங்கள் துளிர்விடும்.

*இப்ப வேண்டாம் இல்லது இவனைப்பிடிக்கேல்ல* என்ற ஏதாவதொரு சாட்டைச் சொல்லித் தப்பித்துவிடுவா. எப்போதும் அல்லாமல் அவ்வப்போது அவன்பற்றி நினைக்கும் போது சுதாஜினியினியக்காவால் இயல்பாக இருக்க முடிவதில்லை. பல்கலைக்கழகக் காதலன் பற்றிய எதுவும் அறியாத வீட்டார் தொடர்ந்து மாப்பிளை தேடியபடியிருந்தார்கள். அவளுக்காக லட்சங்களைக் கொட்டிக்கொடுக்க வெளிநாட்டு சகோதரர்கள் தயாராயிருந்தார்கள். ஊரில் வாழுவேன் என்ற இலட்சியத்தில் என்றும் மாற்றமில்லையென்ற தனது முடிவு காதலைத் தன்னுள் விதைத்தவனின் ஞாபகத்தில் என்பதை யாருக்கும் சொல்லவில்லை.

இந்திய இராணுவம் தமிழர் தேசத்தை விட்டுக் கப்பலேறிய மாதத்தில் ஒருநாள் அவன் அவள் வீட்டுவாசலில் வந்து நின்று அழைத்த போது அவன் மீதான கோபம் கேள்விகள் யாவும் தொலைந்து போனது.

விட்டிட்டு வா வெளிநாடு போவம்…..என்றெல்லாம் சொல்லியும் அவன் கேட்கவேயில்லை…..வாழும்வரை போராடுவோம் வரவிரும்பினா வா….என்ற அவனது சொல்லோடு குடும்பத்து உறவுகள் வெளிநாட்டுச் சகோதரங்கள் என எல்லாரையும் சமாளித்து 1995வரை காத்திருந்து சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முந்திய ஒரு நாளில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

வலிகாம இடப்பெயர்வு. திருமணவாழ்வின் முதல் இடப்பெயர்வு. சுதாஜினியக்கா அவனோடும் அவனது தோழர்களோடும் வலிகாமம் விட்டு தென்மராட்சி போய் தென்மராட்சி விட்டு கிளிநொச்சி போய் கிளிநொச்சி விட்டு மல்லாவி அதன் பின் புதுக்குடியிருப்பு வரையும் இடம்பெயர்ந்து 2குழந்தைகளையும் பெற்று இனி இடப்பெயர்வு இல்லையென்ற நம்பிக்கையோடு புதுக்குடியிருப்பில் குடியேறினார்கள்.

அவன் ஒரு படையணியின் பொறுப்பாளராக பல களங்களில் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தான். எப்போதாவது சுதாஜினியக்காவோடு பிள்ளைகளோடு உணவருந்தி உறவாடி மீண்டும் போய்விடுவான்.

2001 அக்கினிகீல நடவடிக்கையில் அவன் தன் ஒரு காலை இழந்து போனான். தலையில் முகத்தில் எறிகணைச்சிதறல்கள் சின்னன் சின்னனாக வெளியில் எடுக்க முடியாதபடி இருந்தன. அதிக இரத்தம் போய் சோர்ந்தவனை மீட்பு அணியினர் மீட்டு வந்து மருத்துவப்பிரிவில் அவன் அனுமதிக்கப்படும் வரை எந்தவித அறிவிப்பும் சுதாஜினியக்காவுக்குத் தெரியாது. வோக்கியில் இடையிடை தொடர்பாடல் பிரிவினர் ஊடாக கேட்டதைத் தவிர எந்தத் தொடர்பும் அற்றிருந்தான். காலின் காயம்மாறி 2வார விடுமுறையில் வீடு வந்த போது சுதாஜினியக்கா முதல் முதலாக அழுதா. காலைக்கெந்திக்கெந்தி வந்திறங்கியவன் களத்துக்கதை சொல்லி அவளது அழுகையை நிறுத்தினான்.

அவன் அங்கிருந்த ஒவ்வொரு இரவும் நீண்ட நேரமாய் அவனோடு பேசிக்கொண்டிருந்ததும் இனி விட்டிட்டு வாங்கோ பிள்ளையளோடை இருப்பம் என்றதும் அவன் ‘போராடுவோம்‘ என்று சொல்லி எதையும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த கடிதங்களைக்காட்டி அக்கா வரட்டாம் அண்ணா வரட்டாமென்ற போது ‚‘இந்த நாட்டைவிட்டிட்டுப் போனா வாழ்ந்திடுவமெண்டா நினைக்கிறீங்கள் சுதா‘‘ என்ற அவனது கேள்வியில் வெளிநாடு வெளிநாட்டுக்கடிதங்கள் எல்லாவற்றையும் மறந்து போனா.

எப்போதாவது வந்துவிட்டுப் போகும் அவன் 2002 முதல் 2005 வரை அவர்களைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து வெளிவேலையில் இருப்பதாக செய்தியனுப்பினான். முல்லைமாவட்டத்தை விட்டு கிழக்கு மாகாணத்துக்கு அவன் பணியில் போயிருப்பதாக அவனே தன்கைப்பட எழுதிய கடிதத்தை அனுப்பியிருந்தான்.

‚‘அப்பா எங்கம்மா‘ எனும் பிள்ளைகளுக்கு அப்பா தூரத்தில நிக்கிறார்….கெதியில வந்திடுவார் என்ற சமாதானம் சொல்லிப் பிள்ளைகளுக்கு அம்மாவும் தானாக அப்பாவும் தானாக குடும்பத்தைத் தனித்து நிர்வகித்து வந்தா.

000

தொடர்பாடல் பிரிவிலிருந்து ஒருநாள் அவன் பேச வரச்சொன்னதாக தகவல் வந்தது. திரும்ப அவன் முல்லைமண்ணுக்கு வரவுள்ளதைத் தெரிவித்தான். உள்ளுக்குள் கொப்பளித்த மகிழ்வை அவன் வரும் நாள் வரையும் யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் பத்திரப்படுத்தியிருந்தா சுதாஜினியக்கா.

ஒரு அமாவாசையிரவு. அவன் வருவதாக அறிந்து அவனுக்குப் பிடித்தவையெல்லாம் சமைத்துவிட்டு விழித்திருந்தா சுதாஜினியக்கா. வாசல் தாண்டிப் போகின்ற ஒவ்வொரு வாகனத்தின் இரைச்சலையும் அவனோ அவனோ என்ற ஆவலில் பார்த்துக் கொண்டிருந்தா. 3வருட நிரந்தர பிரிவு பேசவும் பகிரவும் முப்பதாண்டுக் கதையிருந்தது. இரவு 2மணிக்குப் பின்னால் வாசலில் வந்து நின்ற பஜீரோவுக்குள்ளிருந்து ஊன்றுதடியோடு இறங்கி வந்தான்.

இரவு பத்துமணியோடு நிறுத்தப்படும் சூரியமின் விளக்குகள் அணைந்து ஒற்றைச் சிமினி விளக்கில் அவனைப் பார்த்தா சுதாஜினியக்கா. நித்திரையாயிருந்த பிள்ளைகளைப் போய்ப்பார்த்தான். சின்னமகள் எழுந்துவிட்டாள். அப்பா….கனவுபோலிருந்தது அவளுக்கு….கண்களைக் கசக்கி சோம்பலுடன் மீளவும் அப்பா…என்றபடி உறங்கிப்போனாள். பிள்ளைகள் அருகிலிருந்து ஒவ்வொருவராய் தலைதடவி 3ஆண்டு ஓட்டத்தில் பிள்ளைகளின் வளர்ச்சி மாற்றம் அவனுக்கு அதிசயமாயிருந்தது. நீர் நல்லா மெலிஞ்சிட்டீர்…என்றான் சுதாஜினியக்காவைப் பார்த்து. சிமினி விளக்கொளியில் மினுங்கிய அவளது கண்ணீரில் அவன் தொலைந்து தோழோடு அவளைச் சாய்த்துக் கொண்டான். 3வருடப்பிரிவை ஒரு இரவில் அழுது கரைத்தா சுதாஜினியக்கா.

000

பகலில் பணி மாலையில் குடும்பம் என அவனது அருகாமை பிள்ளைகளுக்கும் சுதாஜினியக்காவுக்கும். வீடு வந்து அவன் சேரும்வரையும் நெஞ்சில் இடிதான் அவளுக்கு….மாறி மாறி கிளைமோர் வெடிப்புகள்…..ஆள ஊடுருவும் படைகளின் நடமாட்டமென்ற தகவல்கள் எல்லாம் சுதாஜினியக்காவை நிம்மதியாய் எதையும் செய்ய இயலாமல் ஒவ்வொரு கணமும் அவன் நினைவுதான்……

சாவை எப்பவும் வரவேற்கத் தயாராத்தான் இருக்கிறன்….என அவன் சொல்லும் ஒவ்வொரு கணமும் சுதாஜினியக்கா செத்துப்பிறப்பதை அவனுக்குப் புரிவிக்க முயன்று தோற்றுவிடுவாள். கிளைமோரால் வீரச்சாவடைந்த ஒவ்வொரு விதைப்பு நாளிலும் சுதாஜினியக்காவும் பெரும்பாலும் போவதுண்டு. துயிலிடத்தில் ஒவ்வொருவரையும் விதைகுழியில் இறக்கும் கணத்தில் அவர்களை இழந்தவர்கள் கதறும் கதறல் தனக்கும் வந்துவிட்டாலென்ற அச்சம் நெஞ்சுக்குள் என்றுமே பெரும்சுமைதான்……

கிளைமோர் தாக்குதலுடன் விமானத் தாக்குதல் ஆரம்பத்தோடு திரும்பவும் வன்னி மீதான போர்முகம் தன் ஊழித்தாண்டவத்தைத் தொடங்கியதை உணர்ந்த சுதாஜியினியக்கா தானாகச் சென்று ஆயுதப்பற்சியை எடுத்தா. காலம் அழைக்கும் போது தானும் களம் செல்லும் நோக்கோடு காத்திருந்தா….

மன்னார் தாக்குதல் ஆரம்பத்தில் அவன் வீரச்சாவடைந்து விட்டதாய் வந்த செய்தி சுதாஜினியக்கா பயந்த கணங்களை நிசமாக்கிவிட்டிருந்தது…..கனவிலும் அந்தச் செய்தியை எதிர்பாராத காலையில் வீட்டுப்படலையைத் தட்டி நுளைந்த அரசியல் போராளிகள்….ஏதோ அலுவலாக வருவதாக நினைத்து வரவேற்ற சுதாஜினியக்காவுக்கு அந்தப்பேரிடி காத்திருந்ததை அவர்கள் முன்னறைக் குந்தில் இருந்து சொன்ன போது…..உலகில் இனி எந்த இடியும் தன்னை இடிக்காது என்பது போல….உறைந்து போனா சுதாஜினியக்கா…..

அவனுடனான காதலும் திருமணமும் வாழ்வுமான குறுகிய காலத்துப் பயணம் முடிந்து…..தனித்துப்போன சுதாஜினியக்காவுக்கு மீதமான சொந்தம் பிள்ளைகள் தான்…..அவனையிழந்த துயரிலிருந்து விடுபட முடியாமல்…..அவன் அவனுடனான வாழ்வு மீளவும் மீளவும் துரத்திக் கொண்டிருந்தது…..அவனது நினைவுகளிலிருந்து விடுபட முடியாமல் தற்கொலை செய்ய ஒருதரம் முயற்சித்து மீட்கப்பட்ட பின்னர்தான் நிதானத்துக்கு வந்தா சுதாஜியினியக்கா….ஏதோ இருளில் உளன்றது போல நாட்களின் விடிதலும் நாட்டு நிலமையும் மாறி கிளிநொச்சியை இராணுவம் முற்றுகையென்ற பின் இருந்த நம்பிக்கை மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. எதையும் வெளிச்சொல்லவோ பகிரவோ துணிச்சலின்றி முல்லைமண்ணை இராணுவம் முற்றுகையிட்டதோடு எல்லாக் கனவும் சிதைந்து போனது.

அவனது தியாகம் அவன்போன்ற ஆயிரமாயிரம் பேரின் தியாகங்களும் இழப்புகளும் வீணாகப் போகிறதா….? அவர்களை இழந்ததற்குப் பதிலாக எங்களுக்கான தாயகம் விடியுமென்ற நம்பிக்கை வேரோடு பிடுங்கப்பட முள்ளிவாய்க்காலில் போயொதுங்கிய சனத்தோடும் விடுதலை வீரர்களோடும் சுதாஜினியக்காவும் பிள்ளைகளும்……மே14அன்று வீதியில் கண்முன்னால் சிதறிய மகளின் இழப்போடு எல்லாம் போய்விட்டது சுதாஜினியக்காவுக்கு…..அதன் பின்னால் முடங்கிய இந்த முகாம் வாழ்வுதான் இன்று மிஞ்சிக்கிடக்கிறது……

ஒன்றாய் ஓமந்தைவரை வந்தவர்களில் பலரைக்காணவில்லை….சிலரைத் தடுப்புமுகாமில் என்கின்றனர்…..இன்னும் சிலரோ தலையாட்டுகின்றனராம்……எத்தனையோ நம்பிக்கையுடன் 30ஆயிரத்துக்கும் மேலான மாவீரங்கள் செய்த தியாகத்தை முட்கம்பி வேலிக்குள்ளால் கனவாய் மட்டுமே காண முடிந்தது சுதாஜினியக்காவால்……இனி யாரும் இந்த இனத்தை மீட்க வரமாட்டார்கள் என்ற உண்மை மட்டும் உறைப்பாயில்லை கசப்பாயிருந்தது……

கடைசிநேரக் களமுனையின் முடிவுகள் மக்களையும் போராளிகளையும் அன்னியமாக்கி…..அவர்கள் தங்களை அழித்துவிட்டார்கள் என்று திட்டவே வழிசெய்து போனது…… இதய அறைகளில் வலியாய் உருவெடுத்து நெஞ்சுக்குள் முட்டிய துயரை எந்தவழியாலும் வெளியேற்ற முடியாது தவித்தா சுதாஜினியக்கா……

அக்கா தலையாட்டி வருதாம்…..சுதாஜினியக்காவின் நீண்ட அமைதியைக் கலைத்துப் போட்டாள் அவள். ஆராம் வாறது….? அரசியல்காறர்தானாம்…..சனம் சொல்லுது…..எதை நம்பிறதெண்டு தெரியேல்ல….தங்களைக் காக்க எங்களை அவனிட்டைப் பிடிச்சுக் குடுப்பினமோக்கா…..கேட்டாள்….. அவளது கேள்விக்கு எந்தப் பதிலையும் சுதாஜினியக்கா வைத்திருக்கவில்லை. நடக்கிறதைக் காணுவம்…..அதையும் மிஞ்சினா என்னத்தைச் செய்யேலும் போக வேண்டியதுதான்……

இவளால் அமைதியாய் இருக்க முடியவில்லை. தலையாட்டிகளின் ஆட்டலில் இவள் அகப்பட்டாலும் என்ற அச்சத்தில் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தை கவிழ்த்துக் குப்புறப்படுத்தாள். அவர்களது கூடாரத்தையண்டிய காலடிகளில் ஒலியில் என்னவும் நிகழ்ந்துவிடும் அபாயம் நெருங்குவதை முன்னெச்சரிப்பது போல சுதாஜினியக்கா தலையைத் திருப்பாதை பிள்ளை….என எச்சரித்துக் கொண்டிருந்தா. வந்த காலடி இவர்களது கூடாரத்தை எட்டிப்பார்க்க இவளுக்கு முதுகைத் தடவிக்கொண்டிருந்தா…..மற்றையவர்கள் முழுசிக்கொண்டிருந்தார்கள். சுதாஜினியக்கா அவர்களைப்பற்றி எதையும் கவனியாதது போல அவளது முதுகை அழுத்திக் கொண்டிருந்தா…..

புலியள் இஞ்சை யாராவது இருந்தா சொல்லீடுங்கோ…..நாங்களாப் பிடிச்சா தண்டனை கூடும்…..சுத்த தமிழில் வந்த குரல். நாங்கள் யாரும் புலியள் இல்லை….புலியளெண்டா நாங்கள் உங்களிட்டைக் காட்டித்தருவம்….சொன்னா சுதாஜினியக்கா. அத்தோடு வந்த காலடியோசை இவர்கள் இடத்திலிருந்து தேய்ந்து தேய்ந்து தொலைந்து போய்க்கொண்டிருந்தது.

அவள் அழுதாள். ஏனக்கா எத்தினை நாளைக்கு இந்தவதை தொடரப்போது…..அந்தத் தமிழ்க்குரல் ஏற்கனவே எங்களுக்கை இருந்த குரலக்கா…..நாங்கள் எங்கடையாக்களாலை தான் சாகப்போறம்….. இவையளை நம்பியெல்லோ நாங்கள் எங்களை இழந்தனாங்களக்கா….என்ரை அம்மாவோடை இருந்தததை விட நான் இயக்கத்தில இருந்த நாள்தானக்கா கூட…எப்பாச்சும் ஒரு 2 இல்லாட்டி 3நாளில விருந்து போறவைமாதிரி வீட்டை போய் அம்மாவைப் பாத்திட்டு ஓடிப்போறனானக்கா…..அவள் பல கதைகள் சொல்லியழுதாள். சுதாஜினியக்காவால் எதற்குமே ஆறுதல் சொல்லித் தேற்ற முடியாதிருந்தது. குடும்பத்தில் ஒரு பிள்ளையும் மிச்சமில்லாமல் போராடப்போன அவளது சகோதரங்கள் பற்றியெல்லாம் சொன்னாள்.

நினைவுகள் பின்னோக்கியெழுந்து போய்க்கொண்டிருந்தது. அது 2000ம் ஆண்டு. ஆளையிறவு முகாம் முற்றுகையில் இருந்த காலம். அவளும் அவளது கடைசித் தங்கையும் ஒரே படையணியில் நின்றிருந்த நேரம். 15வயது நிரம்பிய அவளது தங்கையின் கனவுள்ளிருந்த ஆனையிறவு மீட்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்னர் தடையகற்றும் அணியில் சென்றவள் தடையரண் உடைத்து பின்னால் போனவர்களுக்கு வழிசமைத்துவிட்டு இவளுக்குப் பக்கத்தில் தலைசரிந்து துடிப்படங்கி வீழ்ந்தாள்.

வீட்டில் கடைக்குட்டி எல்லாருக்குமே செல்லக்குட்டி வெற்றுமணலில் வீழ்ந்து மாவீரர் வரிசையில் அடுக்கப்பட்ட போது இவள் அழவேயில்லை. தன் தங்கைக்கு முன் போன எத்தனையோ பேரின் முகங்கள் தான் நினைவில் நின்றது. *விழ விழ எழுவோம்* அடிக்கடி தனக்குள் உச்சரித்துக் கொள்ளும் உச்சாடன வசனமாக உச்சரித்துக் கொண்டு தங்கையின் உடலைப் பின்புறம் அனுப்பி வைத்தாள். அப்போது இவர்களுடன் ஒன்றாய் நின்ற குரல் இன்று தலையாட்டியாக வந்திருந்தது இவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சிறுவர்கள் அணி சேர்க்கப்பட்ட போது அந்த முடிவை விரும்பாத பல போராளிகளுள் அவளும் ஒருத்தியான போது….இதே குரல்தான் சொன்னது. *நாங்கள் மீன்கள் மக்கள் கடல் மக்களை விட்டு எங்களால் எதையும் செய்ய முடியாது* ஆகவே மக்களை கட்டாயமாக இந்தச் சண்டையில் இணைத்தால்தான் வெற்றியென்று முழக்கமிட்ட குரல்…..உயிருள்ள வரையும் போராடுவோம் கடைசிக்கு முந்திய ரவையுள்ளவரை களமாடுவோம் கடைசி ரவையால் எங்களை அழித்துக் கொள்வோம் என்று எத்தனைவிதமான சொற்களால் இவர்களைக் கட்டிப் போட்ட குரல்…..

அம்மாவின் கையைப்பிடித்தும் அப்பாவின் காலைக்கட்டியும் அழுத பிள்ளைகளையெல்லாம் கேட்டுக் கேள்வியின்றி அழைத்துப் போன போது அவர்கள் அழுத அழுகை அவர்களை இழந்து அழுதவர்களின் அழுகை….சிலநாள் பயிற்சியில் பலம் பொருந்திய பகையை அழிக்க முடியாமல் போன நாளில் அல்லது போகும் மறுநாளில் அல்லது சிலநாளில் வெற்றுடல்களாய் வீழ்ந்த உயிர்களை இவளே தன் கையாலை தூக்கிக்கொண்டு போய் இறக்கிய தருணங்களில் அந்த அம்மாக்கள் பட்ட வேதனையை எந்தச் சொற்களாலும் விளக்க முடியாமல் எத்தனையோ தரம் அழுதிருக்கிறாள். இதையெல்லாம் ஒரு நாள் இந்தக்குரலிடம் சொல்லி இவள் அழுத போது…..*நீங்கெல்லாம் என்ன துணிச்சலில வந்தனீங்கள்….விடுதலைக்கான விலையளிவை…..அழுதுவடியாமல் போய் வேலையைப்பாரென்று* அதட்டியனுப்பிய போது இவளுக்குள் ஒரு தளபதியாய்தான் அந்தக் குரல் உயர்ந்து நின்றது.

மே14. வாழ்வில் வடுவையும் துயரையும் அதுவரையுமான நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து விடிந்தது. அவரவர் அவரவரைக் காத்துக் கொள்ளும்படி கிடைத்த தகவல். என்ன செய்யவென விழித்த பலரும் இனி மிஞ்சிய உயிருக்காக வாழவோ என்ற சிலரும் ஆளாளுக்கு ஆலோசனை சொல்லி அழுதழுது அவன்களிடம் போனபோது……*போறனீங்க போங்கோ நாங்க வரேல்ல* சொன்ன கணத்தில் தங்களை அழித்துக் கொண்டவர்களின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றும் கண்ணுக்குள் வந்து நிற்க கடைசியில் இவளும் இவளது பொறுப்பிலிருந்து 56 பேரும் ஒன்றாய்ப் புறப்பட்டார்கள்.

ஒரு கோட்டப்பொறுப்பாளன் போய்க்கொண்டிருந்த மக்களைக் கூவியழைத்தான்.இந்தாங்கோ இந்த மண்ணுக்காக எங்கடை பிள்ளையள் எத்தனைபேரைக் குடுத்தம்….உங்களுக்காகத்தானே நாங்கள் எங்கடை குடும்பம் குழந்தை அம்மா அப்பா எல்லாத்தையும் மறந்த நாங்கள்…..எங்களை விட்டிட்டு போகாதையுங்கோ…..நில்லுங்கோ…..போராடுவோம்…..இந்த மண்ணுக்கை சிந்திக் கிடக்கிறது வெறும் சதைகளில்லை எங்களோடை வாழ்ந்த மாவீரரின் கனவு எத்தனையோ கரும்புலிகளின்ரை மூச்சு…….மக்களே போகாதையுங்கோ நில்லுங்கோ…..தன்னிடமிருந்த சக்தியைலெ்லாம் திரட்டி அந்த மண்ணையள்ளிக் காட்டிக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

போங்கடா நீங்களும் உங்கடை மண்ணும்…..எங்கடை பிள்ளையள் சாகக் கிடக்குதுகள்….நாங்கள் பசியாற ஒரு காக்கொத்து அரிசியில்லை…..இதிலையெங்கடா நாங்கள் போராட….வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நாங்கள் போறம் ராசா எங்களை விடுங்கோ…..ஒரு தந்தையின் கோபம் அவரது வாயிலிருந்து வெளியாக அவர் பின்னே முன்னேயென ஆட்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அந்தக் கோட்டப் பொறுப்பாளர் போராளி முழந்தாழிட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்தான்…..

அடுத்தொரு முனையில் இன்னொரு இளம் போராளி எங்கடை கனவெல்லாம் நீங்கள் தான போகாதையுங்கோ நில்லுங்கோ…..நாங்கள் எல்லாரும் ஒண்டானா எங்களாலை வெல்லேலும் என்று கத்தினான்…..

உலக விஞ்ஞானமெல்லாம் ஒன்றாய் பல நாடுகளின் துணையும் ஆயுதங்களும் திரண்ட களமிது என்பதை அறியாத அப்பாவியாய் மனித வலுவையே பெரிதாய் நம்பிக் கத்தினான் அவன். அவனைத் தள்ளிவிட்டுச் சனங்கள் போய்க் கொண்டிருந்தனர். ஆட்களற்று அந்த இடம் வெளித்தது. சற்றுத் தூரம் போய்விட்டவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்து அந்த இளம் போராளி தன்னைத் தானே வெடிக்க வைத்துச் சிதறினான்.

கண்முன்னே ஒருவன் தன்னைச் சிதறிடித்துச் சாகவும் சனங்கள் போய்க்கொண்டிருக்க இனியும் நாங்கள் வெல்வோமென்ற நம்பிக்கை இவளுக்கும் இவளுடன் சேர்ந்து நின்றவர்களுக்கும் போய்விட்டது. தங்களைத் தாங்கள் அழித்துக் கொள்ளவும் அவகாசமில்லாமல் எல்லாம் எல்லாரும் போக……எல்லாம் ஏதோவொரு சினிமாப்படத்தின் காட்சிகள் போல நிகழ்ந்து கொண்டிருந்தது.

இவளும் அழுதபடி…….கைகளும் வெறுமை அவர்கள் தாங்கிய கனவும் வெறுமையாய் ஏதோ எல்லாம் புலம்பல்களும் துயருமாக போனவர்களுக்குள் இவளும் 56பேரும் கலந்து கொண்டார்கள். யாரையும் யாரும் கவனிக்காமல் தனித்தனியாக சனத்திரளுக்குள் கலந்து அவன்களின் கைகளில் சேர்ந்த போது மிஞ்சியது கண்ணீர்தான்.

பிள்ளை அந்த ஆட்டோக்காரப் பொடியன் வந்திருக்கு…..உமக்கு ரெலிபோனாம்…..நினைவுகளை அறுத்துக் கொண்டு இவள் காதுகளைப் பற்றியது சுதாஜியினியக்காவின் குரல். சில நாளாய் அங்கு ஆட்களை அழைத்துவரும் அந்தவொரு ஆட்டோக்காரன் தனது தொலைபேசியில் வெளிநாட்டுத் தொடர்பில் பேச உதவினான். இன்றும் அவன் வந்திருந்தான். அக்கா பயப்பிடைதேங்கோ கதையுங்கோ என அவன் தனது கைபேசியை இவளிடம் கொடுத்தான். ஏதோவொரு சினிமாப்பாடலில் இருந்த கைபேசியின் ஒலியை சத்தமில்லாத அதிர்வுக்கு மாற்ற உதவி செய்து கொடுத்துவிட்டுப் போனான். அவன் திரும்பி வரமுதல் இவள் தனக்கான அழைப்பை ஏற்று முடித்து கைபேசியை அவனிடம் கொடுக்க வேண்டும். தன்னை அழைத்த அழைப்புக்காக அவள் காத்திருந்த 6வது நிமிடத்தில் கைபேசி அதிர்ந்தது.

எதிர் முனையிலிருந்து வெளிநாட்டிலிருந்து இவளது தோழி அழைத்திருந்தாள். முன்பெல்லாம் சுகம் நலம் விசாரிப்பு அதன் பின்னால் அலுவல் என்ற நிலைமாறி நேரே அவள் விடயத்துக்கு வந்தாள். நாளைக்கு உன்னைக் கூட்டிக்கொண்டு போவாங்களாம். யோசிக்காமல் வெளிக்கிடு சரியோ…..கடன்வாங்கித்தான் இந்தக்காசு குடுத்திருக்கு…பிரச்சனையில்லாமல் வெளியில வந்திட வேணும்……ஒருதருக்கும் ஒண்டும் சொல்லாதை சரியோ……என்னாலை இதைத்தான் உனக்காகச் செய்யேலும்…..அண்டைக்கு நீ பேசினது மனசுக்கு கஸ்ரமாயிருந்தது…..இவளது வெளிநாட்டுத் தோழி மெல்ல விம்மினாள்.

நாங்கெல்லாம் சாகச்சாக உங்கையிருந்து கவிதை படிச்சியள்…..போராடுங்கோ போராடுங்கோண்டு மேடைவைச்சு முழங்கினியள்…..காப்பாற்றுறோம் காப்பாற்றுறோமெண்டு கண்டனம் செய்தியள் ஊர்வலம் போனியள்…..உணர்வாப் பேசினியள்……கடைசிவரை நாங்கள் நம்பின கள நிலமை மாறீனாப்பிறகும் உசுப்பிவிட்டிட்டு இன்னும் ஆருக்காக உங்கை குத்தி முறியிறியள்…..கோபத்தில் கொப்பழித்த சொற்கள் யாவும் இவள் வாயிலிருந்து இவளை அறியாமலேயே கொட்டிக் கொண்டிருக்க…..

நீங்கள் தான சொன்னீங்கள் காசைத்தாங்கோ நாங்கெல்லாம் பாப்பமெண்டு……வேறையென்னத்தைச் செய்யச் சொன்னியள்…..அரைமணித்தியாலம் இருக்க முடியாத ஆளிட்டை அனைத்துலகப் பொறுப்பைக் குடுத்தியள்….அது காணாதெண்டு ஆக்களை அனுப்பினியள் அவையெல்லாம் இஞ்சை வந்து ஊரிலையிருந்து வந்தனாங்களெண்டு நெஞ்சை நிமித்தித் திரிஞ்சினம்….ஆட்கள் மாறிச்சினம் ஆனால் நடந்தவையெல்லாம் பழையமாதிரித்தான் நடத்திச்சினம்….பிழையளைச் சொன்னவையை எல்லாம் நீங்களும் தான் தள்ளி வைச்சியள்…..தவறுகள் நடக்கக் காரணமாயிருந்தியள்…..அப்பெல்லாம் உங்களுக்கு விளங்கேல்லயோ இது அழிவுக்கான பாதையெண்டு……இண்டைக்கு நீங்கள் எடுத்த முடிவை கொஞ்சம் முந்தியெடுத்திருந்தா சனத்திட்டையாவது திட்டு வாங்காம இருந்திருக்கலாம்…..உலகத்தில சொந்தச் சனத்திட்டை திட்டும் வெறுப்பும் வாங்கினது நீங்களாத்தானிருக்கும்……சரி முடிவு அழிவெண்டாப்பிறகு ஏனடியொரு குப்பி கூடவோ கிடைக்கேல்லையென்றதற்கு…..இவள் சொன்ன வார்த்தைகள் கடுமைதான். அத்தோடு விட்டுவிடாமல் நாங்கள் இவ்வளவு நாளும் இந்த இனத்துக்காக போராடினதுக்காகவாவது எங்களை வெளியில எடுத்து விடுங்கோ பாப்பமென்று எகத்தாளமாய் கேட்டது எல்லாம் மறந்து இன்று இவளை வெளியில் எடுக்கும் ஏற்பாடும் செய்துவிட்டு அழைத்திருக்கிறாள்.

இந்த ஏற்பாடு நாலுபேருக்காலை போய்த்தான் செய்திருக்கு…..நேரடியா ஒருதரையும் தெரியாது தெரிஞ்சாக்கள் மூலமாத் தான் செய்திருக்கு…..வேறையாக்கள் கவனமா வெளியில வந்திட்டினம்…..அந்த நம்பிக்கையில இறங்கியிருக்கு……நீ முதல் வா பிறகு பாப்பம் மற்றவையை…….போய்ச் சேந்ததும் ரெலிபோனெடு…..அதுவரையும் நான் நிம்மதியா இருக்கமாட்டேன் சரியோ…..என்றாள். எல்லாவற்றுக்கும் இவள் ஓம் ஓம் என்றாள்.

இரவிரவாய் நடந்து கால்கள் ஓய்ந்துபோனது. எத்தனை வருடங்கள் காட்டில் காட்டு மரங்களுடன் மிருகங்களுடனென வாழ்ந்த காலங்கள்…..களம் போன கால்கள் இன்று காடொன்றின் ஊடாக நடக்க முடியாமல் களைத்துப் போனது. எங்காவது ஓரிடத்தில் விழுந்து படுக்க வேணும்போலிருந்தது. ஓய்வு வேண்டிய கால்கள் கெஞ்சின. அழைத்துப்போனவர்கள் தொடர்ந்து நடக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஏற்கனவே இரண்டுதரம் காயமடைந்த ஒற்றைக்கால் விறைத்துக் கொண்டிருந்தது. பதுங்குகுழியில் இறங்கும் போது முறிந்த மற்றக்கால் எடுத்தடி வைத்த ஒவ்வொரு அடிக்கும் சாவின் வலியாய் வலித்துக் கொண்டிருந்தது.

UNHCR தறப்பாளின் கீழிருந்து வெளியேறியதே பெரியதொரு விடுதலை போலிருந்தது. அந்தச் சிறையிருப்பை விட இந்த நடை பறாவாயில்லையெனச் சமாதானமாகினாள். நெடும் தொலைவு நடந்து போய் விடிந்துவிடச் சற்று முந்திய புலர்காலையில் வாகனமொன்று வந்து ஏற்றிக் கொண்டு பறந்தது.

காட்டுவாசிகள் போன்று கறுத்து ஒடுங்கிய முகமும் உள்விழுந்த கண்ணும் பயணத்தில் தெரியாமல் அழகியல் நிலையத்தில் அழைத்துப்போய் அலங்கரித்தான் அழைத்துப்போனவன். என்ரை அக்காவும் உங்களைமாதிரித்தான் போனவா இதுவரையும் ஒரு தகவலுமில்லை…..உங்களைக் கூட்டிவர எனக்கு அக்காவைக் கூட்டி வந்தமாதிரித்தானிருந்தது…..என்றான் அவன். ஒருவாரம் ஓடி மறைந்தது. ஒரு நாள் இரவுதான் பயண ஒழுங்கென்றான் அவன். பகலில் போகலாமே என்றவளுக்கு அவன் சொன்னான். உங்கடையாக்கள் சிலபேர் பகலில நிண்டு காட்டிக்குடுக்கினம்…..அதுதான் இரவில போறதெண்டான்…..ஆரவை….? கேட்டவளுக்கு அவன் சொன்ன பெயர்கள் தலையே சுற்றியது.

மக்களே போகாதையுங்கோ என மண்ணள்ளிக் கொட்டித் தடுத்தவனின் பெயர் அந்தக் காட்டிக் குடுப்போரின் வரிசையில் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை. அவனா…..? வடிவாத் தெரியுமோ…? கேட்ட இவளுக்குச் சொன்னான். நான் நேரை கண்டனானக்கா….என்றான்.

அவளோடு அவனும் சேர்ந்து விமானமேறிச் சென்னையில் இறக்கிவிட்டுவிட்டுப் போனான் அவன். போகும் போது தனது தனிப்பட்ட தொடர்பிலக்கத்தை எழுதிக் கொடுத்தான். இதுவரையும் கனபேரைக் கொண்டு வந்து விட்டிட்டனக்கா ஆனா ஒருதருக்கும் என்ரை தனிப்பட்ட தொடர்பு குடுக்கேல்ல…..என்னெண்டு தெரியேல்ல உங்களோடை தொடர்ந்து தொடர்பை வைச்சிருக்க வேணும் போலையிருக்கு…..என்றபடி தனது தொடர்பு எண்ணையும் விலாசத்தையும் எழுதிக் கொடுத்தான்.

உதவி ஏதும் தேவையெண்டால் சொல்லுங்கோ….என்றவன் கையில் அவளிடம் 30ஆயிரம் இந்திய ரூபாய்களை நீட்டினான். வாங்கத் தயங்கியவளை…..என்னக்கா இதெல்லாம் கறைபடிஞ்ச துரோகக் கையெண்டு நினைக்கிறியளோ….? நானும் போராடத்தானக்கா போனனான்…..ஆனால் முடிவு என்னை இப்பிடியொரு அணியோடை கூட வைச்சிட்டுது….இதிலும் ஒரு மனச்சந்தோசம் இப்பிடி நாலுபேரை நாங்களும் காப்பாற்றிக் கொண்டு வந்து விடுறோமெண்டது. இந்த வேலையைக் காசுக்குத்தான் செய்யிறம் ஆனால் ஏதோ எங்களால யாரோ சிலர் பயனடையினம் எண்டது ஒரு சின்னத் திருப்தி.

பறவாயில்லை நான் காசு தேவையெண்டா கேக்கிறன். என்றவளின் கையுக்குள் அந்த முப்பதாயிரம் ரூபாவையும் திணித்துவிட்டுத் திரும்பிப் போனான்.

தனது பெருந்தன்மையான செயலால் மனசில் அவன் சிம்மாசனமிட்டு உட்கார்ந்தான். அவனுக்கு நன்றி சொல்லவா இல்லை பணத்துக்காக வேலை செய்யும் துரோகியென்று சொல்லவா…? இல்லை அவன் அவள் நம்பாத கடவுளின் அவதாரம் போலத் தோன்றினான். துரோகியென்ற சொல்லைத் தமிழ் அகராதியிலிருந்தே தூக்க வேணுமென நினைத்துக் கொண்டாள்.

அவள் தோழிக்கு தகவல் அனுப்பினாள். தன்னைக் கொண்டு வந்து விட்டவன் பற்றிச் சொன்னாள். அப்போதுதான் தோழி சொன்னாள் இவளுக்கு…, அவளையும் துரோகியென்கிறார்களாம். கடந்தகாலத் தவறுகளை எழுதுகிறாளாம். வெற்றியில் புகழ்ந்து தோல்வியில் விமர்சனம் செய்கிறாளாமென மண்டையில போட வேணுமெண்டும் யாரோ சில தேசியத் தூண்கள் சொன்னதாகச் சொன்னாள் இவளுக்கு. விமர்சனங்களைத் துரோகம் என்றதும் சுட்டிக்காட்டலைச் சுயநலம் என்றதும் தட்டிக்கேட்டலை ஒத்துவராதவர் என்றதும் ஆலோசனைகளை அதிமேதாவித்தனம் என்றடக்கியதன் பலன் இன்று…., தமிழினத்துக்குத் தந்துவிட்ட முடிவை இனியும் தமிழினம் வாழ்ந்தால் வெற்றி வீழ்ந்தால் வீரம் என்று வீரசபதம் கொள்ளப்போகிறதா ? கேள்விகள் வரிசையாய் நின்றன…..

30வருடத்துக்கும் மேலான ஒரு விடுதலை அமைப்பை அதன் தலைமையை அதன் போராளிகளை நிராயுதபாணிகளாக்கி நி்ர்மூலமானதையும் 3லட்சத்துக்கு மேலான உயிர்களை கம்பி வேலிகளின் பின்னால் தள்ளியதையும் தியாகம் என்ற வார்த்தையால் புனிதப்படுத்த முடியவில்லை.

முள்ளிவாய்க்காலில் மிஞ்சிய மக்கள் மட்டுமா போராடப் பிறந்தார்கள் ? மற்றவர்கள் அவர்களின் தியாகத்தில் வெற்றியில் திழைக்கவும் விசிலடிக்கவும் பிறந்தார்களா…? தவறுகளில் இருந்து தெளிவு பெற்று விமர்சனங்களை உள்வாங்கி கால ஒழுங்கோடு ஒன்றிணையும் தத்துவத்தைத் தமிழ் மூளைகளில் செலுத்த வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

புலிகளின் அழிவோடு தமிழின விடுதலைப் போராட்டம் முடியாமல் ஆயிரமாயிரமாய் தமிழருக்கான தனித்தேசக் கனவில் போனவர்களின் கனவுகள் சிதையாமல் நனவாக ஒரு தீர்வு எங்கள் இனத்துக்காக வேணும் என்ற விருப்பில் முட்கம்பிகளுக்குள்ளும் வெளியிலும் இருக்கும் ஆயிரமாயிரம் பேரின் விருப்போடு இவளும் ஒருத்தியாகிறாள்.

தவறுகள் முடிவுகள் அல்ல…..தோல்வியிலிருந்து எத்தனையோ தரம் தெளிந்து புதுப்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் இந்த வீழ்ச்சி நாளைய எழுச்சியாய் பதியமாக வேண்டுமென்பதில் நம்பிக்கை கொள்கிறாள் இவள்.

(முற்றும்)

Link to comment
Share on other sites

கதை என்று தலையங்கம் சொல்லுது ஆனால் வாசிக்க வாசிக்க தமிழனின் தலைவிதியை நிர்ணயித்த அந்த கடைசி நேர வன்னி மக்களின் மரண ஓலம்தான் காதில் இன்னமும் ஒலிக்கின்றது.சொல்லக்கூடாத பல விடயங்களை சொல்லி இருக்கின்றீர்கள்.தன்னால் நடந்தது நன்மை என்றால் பறை அடிப்பதும் கெட்டது என்றால் மெல்ல அமத்தி விடுவதும் தமிழனின் குணம்.துரோகி என்ற சொல்லையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கின்றீர்கள். அப்படி என்றால் பலரின் பிழைப்பு இங்கு நாறிவிடும்.சிறிது சிறிதாக பல உண்மைகளை உறைக்கக் கூடியதாக சொல்லி இருக்கின்றீர்கள்.யாருக்கு இதைப் பற்றி என்ன‌ அக்கறை, தான் சொல்வது தான் சரி, நினைப்பது தான் சரியென விவாதிப்பதிலேயெ இவர்களினது கவனம்.நாடு,மக்கள் எல்லாம் இரண்டாம் பட்சமே.

முப்பது வருட ஆயுதப் போராட்டம்,முப்பதினாயிரம் மாவீரர்கள்,மூன்று இலட்சம் மக்கள் அகதி முகாமில் முடிவு என்ன?.நடந்தது ஒன்றுமே தெரியாதது போல் புதிதாக என்னவோ ஏதோ எல்லாம் கதைக்கின்றார்கள்

இவர்களையும் தூக்கிப் பிடிக்க ஒரு கூட்டம். தமிழனுக்கு விடிவே இல்லையா.

உங்க‌ள் க‌தையுட‌ன் தொட‌ர்பு இல்லாவிடினும் க‌ருத்துட‌ன் தொட‌ர்புடைய‌ப‌டியால் சொல்லுகிறேன்.இவ்வளவு அழிவிற்கும் காரணம் புலம் பெயர் தமிழன் தான். பொய்.புரட்டு,சுயந‌லம் உடன் நடித்த தமிழனை எம்முள் இனம் காணாமல் விட்டதும்,காசு தருகின்றான் என்று சமூக விரோதிகளை முன்னிலைப்படுத்தியதும் தான் எமது அழிவிற்கு மிகப் பெரும் காரணம்.அந்த‌ நிலை இன்றும் தொடர்கின்றது.

நாம் விழிப்படையாத‌வரைக்கும் எமது இனத்திற்கு விடுதலை இல்லை. ‌

Link to comment
Share on other sites

கதை என்று தலையங்கம் சொல்லுது ஆனால் வாசிக்க வாசிக்க தமிழனின் தலைவிதியை நிர்ணயித்த அந்த கடைசி நேர வன்னி மக்களின் மரண ஓலம்தான் காதில் இன்னமும் ஒலிக்கின்றது.சொல்லக்கூடாத பல விடயங்களை சொல்லி இருக்கின்றீர்கள்.தன்னால் நடந்தது நன்மை என்றால் பறை அடிப்பதும் கெட்டது என்றால் மெல்ல அமத்தி விடுவதும் தமிழனின் குணம்.துரோகி என்ற சொல்லையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கின்றீர்கள். அப்படி என்றால் பலரின் பிழைப்பு இங்கு நாறிவிடும்.சிறிது சிறிதாக பல உண்மைகளை உறைக்கக் கூடியதாக சொல்லி இருக்கின்றீர்கள்.யாருக்கு இதைப் பற்றி என்ன‌ அக்கறை, தான் சொல்வது தான் சரி, நினைப்பது தான் சரியென விவாதிப்பதிலேயெ இவர்களினது கவனம்.நாடு,மக்கள் எல்லாம் இரண்டாம் பட்சமே.

முப்பது வருட ஆயுதப் போராட்டம்,முப்பதினாயிரம் மாவீரர்கள்,மூன்று இலட்சம் மக்கள் அகதி முகாமில் முடிவு என்ன?.நடந்தது ஒன்றுமே தெரியாதது போல் புதிதாக என்னவோ ஏதோ எல்லாம் கதைக்கின்றார்கள்

இவர்களையும் தூக்கிப் பிடிக்க ஒரு கூட்டம். தமிழனுக்கு விடிவே இல்லையா.

உங்க‌ள் க‌தையுட‌ன் தொட‌ர்பு இல்லாவிடினும் க‌ருத்துட‌ன் தொட‌ர்புடைய‌ப‌டியால் சொல்லுகிறேன்.இவ்வளவு அழிவிற்கும் காரணம் புலம் பெயர் தமிழன் தான். பொய்.புரட்டு,சுயந‌லம் உடன் நடித்த தமிழனை எம்முள் இனம் காணாமல் விட்டதும்,காசு தருகின்றான் என்று சமூக விரோதிகளை முன்னிலைப்படுத்தியதும் தான் எமது அழிவிற்கு மிகப் பெரும் காரணம்.அந்த‌ நிலை இன்றும் தொடர்கின்றது.

நாம் விழிப்படையாத‌வரைக்கும் எமது இனத்திற்கு விடுதலை இல்லை. ‌

என்ன சொல்ல ? எல்லாவற்றையும் சொல்லீட்டீங்கள். விழிப்படைய முதல் தெளிவடைதல் வேணும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி இது உங்கள் வலைப்பூவை வாசித்துவிட்டு எழுதியதுபோல் இருக்கிறது என்பார்வையில் தற்செயலாகத் தட்டுப்பட்டது இங்கு இணைத்துள்ளேன். மாலைமலர் ஒக்டோபர் 30 இல் வெளியாகி இருக்கிறது :lol::(:):)

சென்னை, அக் 30-

இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த பயங்கர போரில் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய சுமார் 3 லட்சம் தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மே 18-ந்தேதி சிங்கள ராணுவம் வீசிய கடைசி நாள் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அந்த கொடூர தாக்குதலில் இருந்து சில விடுதலைப்புலிகள் உயிர் தப்பி முகாம்களிலும், வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் கமாண்டர் சாந்தியும் ஒருவர்.

அவர் தமிழ் மணம் இணையத்தளத்தில், உச்சகட்ட போரின் கடைசி நாட்கள் பற்றி தனி பிளாக் உருவாக்கி பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். இது உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களால் படித்து பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.

அந்த இணையத்தளத்தில் சாந்தி எழுதி இருப்பதாவது:-

நான் (சாந்தி) 16 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். தமிழர்களுக்கு என்று தனி நாட்டை உருவாக்க முடியும் என்ற லட்சியத்துடன் நானாகவே விரும்பி படையில் சேர்ந்தேன். எனக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுத்தனர்.

18 வயது இருக்கும்போது சிங்கள ராணுவத்துடன் நடந்த ஒரு போரில் நான் கடுமையாக சண்டையிட்டேன். அதில் படுகாயம் அடைந்தேன். இதனால் நான் போர் படை பிரிவில் இருந்து அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். பெண் புலிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். பெண்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தும் பணியை செய்து வந்தேன்.

மே மாத தொடக்கத்தில் சிங்கள ராணுவம் நச்சுக் குண்டுகளை வீசியது. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக முள்ளி வாய்க்கால் பகுதியில் நாங்கள் பதுங்கினோம். அங்கு உச்சகட்ட சண்டை நடந்தது. மே மாதம் 14-ந்தேதி உங்களை நீங்களே தற்காத்து கொள்ளுங்கள் என்று எங்களுக்கு மேலிட தலைவர்களிடம் இருந்து தகவல் வந்துது. படைப்பிரிவினர் நாலாபுறமும் சிதறி ஓடி தப்பினார்கள்.

நானும் என் தலைமையில் இருந்த 56 பெண் புலிகளும் பாதுகாப்பு பகுதிக்குள் மக்களோடு மக்களாக கலந்தோம். ஓமந்தையில் அமைக்கப்பட்டிருந்த ஐ.நா.சபை முகாமில் தஞ்சம் அடைந்தோம். மே 18-ந்தேதியும் 19-ந்தேதியும் பெரிய அளவில் சிங்கள ராணுவம் குண்டுகளை வீசியது. எங்கள் கண் எதிரிலேயே ஈழம் கனவு கலைந்தது போல ஆகி விட்டது.

மாவீரர்களுக்கு என்றுமே மரணம் இல்லை. கடைசி தமிழன் இருக்கும் வரை அவன் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள். வஞ்சகத்தால் வீழ்ந்த தலைவனுக்கு ஒரு வணக்கத்தைச் செலுத்தத்தடை நிற்கும் வஞ்சகர்களை எமது மக்கள் விலக்கி விட்டு, அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலி செய்வோம்.

எங்கள் கடவுளை காவு கொடுத்த துரோகத்தை உலகறிவிப்பு செய்வோம் எங்கும் போராடித்தான் இயல்பை நிலை நிறுத்த முடிகிறது.

மர்மங்களே தொடர்ந்து ஊடகங்களை நிரப்புகின்றன. மவுனமே இப்போது சிறந்த மொழி. அப்பப்பாவிற்கு ஆத்ம அஞ்சலிகள்

அப்பப்பாவின் நினைவுகளோடு அந்த நாள் நினைவுகளை மீட்டுள்ளீர்கள். மரணத்துக்குப்பின்னான வாழ்வு பலருக்கு மர்மமாக உள்ளது. மர்ம முடிச்சுகள் அறுபடவண்டும்.

சூரியகாந்திகளாக எம் இதயம் உன் உதயம் நாடி காத்திருக்கிறது. சூரிய அஸ்தமனம் என்பது சூரியனின் அழிவன்று.

இவ்வாறு அந்த இணையத்தளத்தில் கமாண்டர் சாந்தி எழுதியுள்ளார்.

http://www.maalaimalar.com/2009/10/30105537/CNI0203001009.html

Link to comment
Share on other sites

சாந்தி இது உங்கள் வலைப்பூவை வாசித்துவிட்டு எழுதியதுபோல் இருக்கிறது என்பார்வையில் தற்செயலாகத் தட்டுப்பட்டது இங்கு இணைத்துள்ளேன். மாலைமலர் ஒக்டோபர் 30 இல் வெளியாகி இருக்கிறது :lol::(:) :

http://www.maalaimalar.com/2009/10/30105537/CNI0203001009.html

எங்கைபோய் தலையை முட்டவென்றிருக்கிறது சகாரா. எனது வலைப்பூவில் இக்கதையை பதிவு செய்திருக்கிறேன். மற்றும்படி இந்த மாலைமலருக்கு எதுவம் அனுப்பவில்லை. கதையில் எழுதப்பட்டதை இப்படியும் திரிக்கிறது இந்த தமிழக ஊடகங்கள். இதைப்பார்க்க கோபம்தான் வருகிறது.இப்படியும் திரித்து ஒரு ஊடகம் செய்தி எழுதுமா ? எனது மற்பொன்றை இந்த இணையத்துக்கு எழுதிப்போடவுள்ளேன்.

நன்றி சகாரா அறியத்தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

mathipukuriya santhi, Thamiz font kidaiththathum virivaka ezuven. ithanai sathiyamana ezuththai vasiththu Nedungkalamakividdathu. enathu thozi Malaimakalaiyum thamizkaviyaiyum ninaiththu vethanaip paddukoNdirukkiRa Nadkkal ithu. ennudaiya thozi thamizini thodarpaka kezvip padukiRa sethikal poyyaka iruka venum ena manasu pirarthikkiRathu. enakku oru kaviyamaka maRRa thonRukiRathu. athika vilaikoduththu nengkal thediya Arralukkum azumaikkum thalai paNikiRen. ungkaL padaippukalai edit panna pirasurikka uthavamudiyumayin makizven.

anpudan

V.I.S.Jayapalan (visjayapalan@gmail.com)

Link to comment
Share on other sites

தவறுகள் முடிவுகள் அல்ல… தோல்வியிலிருந்து எத்தனையோ தரம் தெளிந்து புதுப்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் இந்த வீழ்ச்சி நாளைய எழுச்சியாய் பதியமாக வேண்டுமென்பதில் நம்பிக்கை கொள்கிறாள்

இதுதான் உண்மையும்

Link to comment
Share on other sites

  • 1 month later...

சாந்தி இது உங்கள் வலைப்பூவை வாசித்துவிட்டு எழுதியதுபோல் இருக்கிறது என்பார்வையில் தற்செயலாகத் தட்டுப்பட்டது இங்கு இணைத்துள்ளேன். மாலைமலர் ஒக்டோபர் 30 இல் வெளியாகி இருக்கிறது :unsure: :unsure: :unsure::lol:

சகாரா உங்களது இந்தவரியை என்மீதான அக்கறையில் நீங்கள் எழுதியதாகவே எண்ணினேன்.அதுவும் தற்செயலாக உங்கள் பார்வையில் பட்டதாக எழுதியிருந்தீர்கள். ஆனால் 2மாதங்கள் கடந்து நேற்று ஊர்ப்புதினம் பகுதியில் நடைபெறும் கருத்தாடல் பகுதியில் புகுத்தி உங்களிடமிருந்து இதுவரை சொல்லாத கசப்பை வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

கருத்துக்களோடு முரண்படுதல் என்னைப்பொறுத்தவரை தெளிதல். ஆனால் உங்களைப்பொறுத்தவரை காலம் முழுவதும் வைத்து வைத்து விசமாக்கித் தெளிப்பது என்பதென்றே எண்ணத் தோன்றுகிறது.

மற்றும் நான் எழுதிய கதையை மட்டுமல்ல எனது எழுத்துக்கள் பல இன்றும் வலைப்பூக்களில் வேறுயாரோவெல்லாம் தங்கள் பெயர்களில் பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் தேடித்தேடி இதுதான் சரி இதுதான் சரியென தீக்குழிக்க என்னால் முடியவில்லை.

மாலைமலரில் வந்த சாந்தி நானில்லை ஆக அதற்கான வாய்திறப்பின் வினையெனக்கானதுமில்லை. டெக்கான் குறோணிக்கல் ஆங்கிலத் தினசரியில் வந்ததுகூட எனக்குத் தெரியாது. அதையும் உங்கள் ஊடாகத்தான் அறிந்தேன்.

அகிலன் தனது வலைப்பூவில் போட்டிருந்த நிலாந்தனின் கட்டுரையை அகிலன் எழுதியதாக விளங்கிய சில வாசகர்களின் கருத்தும் அகிலன் மீதான சீறலும் போல இக்கதையில் நீங்களும் கொண்டிருக்கிற வெறுப்பு உள்ளது.

உலகத்தில் ஒரேயொரு சாந்தி அது நான் மட்டும்தானென்ற உங்கள் கண்டுபிடிப்பும் அதையொட்டிய கருத்துக்களுக்கும் நான் பொறுப்பாளியில்லை. வியாபாரப்பத்திரிகைகள் எம்மவர் கருத்துக்கள் படைப்புகளை தமக்கான வருவாயாகப் பயன்படுத்துகின்றனர்.

முல்லைமண் வலைப்பூவிலிருந்து பல படைப்புகள் வேறு நபர்களின் பெயரில் வருகிறது தேடிப்பாருங்கள். ஏன் உங்கள் படைப்புகள் கூட அப்படி வந்திருப்பதை ஒரு திரியில் நீங்களே சொல்லியிருந்தீர்கள்.

இக்கதையின் நாயகி இன்னும் உயிருடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தனது வாழ்வில் அதிக நாட்களை நாங்கள் வாயால் சொல்கின்ற தேசியவிடுதலைக்காகத் தன்னை இழந்தவள். இன்று தன்னையே கவனிக்க முடியாத நிலையில் அவலப்படுகிறாள். அவள் சண்டைக்களம் போகப் புலம்பெயர்ந்த சுயநலவாதியான நான் அவளது அனுமதியுடன் அவளது அனுபவத்தைக் கதையாகப் பதிவு செய்துள்ளேன். மற்றும்படி எந்த வியாபார நிறுவனத்திற்கோ அல்லது பத்திரிகைக்கோ எனது எழுத்துக்களை நான் விற்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கைபோய் தலையை முட்டவென்றிருக்கிறது சகாரா. எனது வலைப்பூவில் இக்கதையை பதிவு செய்திருக்கிறேன். மற்றும்படி இந்த மாலைமலருக்கு எதுவம் அனுப்பவில்லை. கதையில் எழுதப்பட்டதை இப்படியும் திரிக்கிறது இந்த தமிழக ஊடகங்கள். இதைப்பார்க்க கோபம்தான் வருகிறது.இப்படியும் திரித்து ஒரு ஊடகம் செய்தி எழுதுமா ? எனது மற்பொன்றை இந்த இணையத்துக்கு எழுதிப்போடவுள்ளேன்.

நன்றி சகாரா அறியத்தந்தமைக்கு.

சகாரா உங்களது இந்தவரியை என்மீதான அக்கறையில் நீங்கள் எழுதியதாகவே எண்ணினேன்.அதுவும் தற்செயலாக உங்கள் பார்வையில் பட்டதாக எழுதியிருந்தீர்கள். ஆனால் 2மாதங்கள் கடந்து நேற்று ஊர்ப்புதினம் பகுதியில் நடைபெறும் கருத்தாடல் பகுதியில் புகுத்தி உங்களிடமிருந்து இதுவரை சொல்லாத கசப்பை வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

கருத்துக்களோடு முரண்படுதல் என்னைப்பொறுத்தவரை தெளிதல். ஆனால் உங்களைப்பொறுத்தவரை காலம் முழுவதும் வைத்து வைத்து விசமாக்கித் தெளிப்பது என்பதென்றே எண்ணத் தோன்றுகிறது.

சாந்தி என்னிடம் உங்கள் மீதான கசப்பு அதிகமாக இருந்திருந்தால் நீங்கள் எழுதும் ஒவ்வொரு கருத்திற்கும் என்னுடைய உங்கள் மீதான கசப்பான கருத்துகள் வெளிப்பட்டிருக்கும்.

விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது?

என்ற தலைப்பில் கவிதைப்பூங்காவில் ஏற்பட்ட விவாதத்திற்குப் பின்னர் நான் உங்களுடைய பதிவுகளிலோ அல்லது நீங்கள் எழுதியிருக்கும் கருத்துகள் மீதோ எத்தகைய கருத்துகளையும் எழுதியதாக ஞாபகத்தில் இல்லை ஆக இவ்விடத்தில் மட்டுமே மாலை மலரில் வந்ததைப் பதிவு செய்தேன். நேற்று இன்னொரு இடத்தில் இவ்விடயத்தைச் சுட்டிக் காட்டியது உங்கள் மேலான என்னுடைய கசப்புணர்வின் வெளிப்பாடு என்று நீங்கள் கருதினால் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை. சாந்தி நீங்கள் பிள்ளையார் பிடிக்கத்தான் முயல்கிறீர்கள் ஆனால் உங்களின் எழுத்தியல் போக்கு நீங்கள் நினைப்பதற்கு மாறாகவே உருவகப்படுகிறது.

மற்றும் நான் எழுதிய கதையை மட்டுமல்ல எனது எழுத்துக்கள் பல இன்றும் வலைப்பூக்களில் வேறுயாரோவெல்லாம் தங்கள் பெயர்களில் பயன்படுத்துகிறார்கள். இதையெல்லாம் தேடித்தேடி இதுதான் சரி இதுதான் சரியென தீக்குழிக்க என்னால் முடியவில்லை.

மாலைமலரில் வந்த சாந்தி நானில்லை ஆக அதற்கான வாய்திறப்பின் வினையெனக்கானதுமில்லை. டெக்கான் குறோணிக்கல் ஆங்கிலத் தினசரியில் வந்ததுகூட எனக்குத் தெரியாது. அதையும் உங்கள் ஊடாகத்தான் அறிந்தேன்.

முல்லைமண் வலைப்பதிவு உங்களுடையதுதானே.

அகிலன் தனது வலைப்பூவில் போட்டிருந்த நிலாந்தனின் கட்டுரையை அகிலன் எழுதியதாக விளங்கிய சில வாசகர்களின் கருத்தும் அகிலன் மீதான சீறலும் போல இக்கதையில் நீங்களும் கொண்டிருக்கிற வெறுப்பு உள்ளது.

உலகத்தில் ஒரேயொரு சாந்தி அது நான் மட்டும்தானென்ற உங்கள் கண்டுபிடிப்பும் அதையொட்டிய கருத்துக்களுக்கும் நான் பொறுப்பாளியில்லை. வியாபாரப்பத்திரிகைகள் எம்மவர் கருத்துக்கள் படைப்புகளை தமக்கான வருவாயாகப் பயன்படுத்துகின்றனர்.

முல்லைமண் வலைப்பூவிலிருந்து பல படைப்புகள் வேறு நபர்களின் பெயரில் வருகிறது தேடிப்பாருங்கள். ஏன் உங்கள் படைப்புகள் கூட அப்படி வந்திருப்பதை ஒரு திரியில் நீங்களே சொல்லியிருந்தீர்கள்.

இக்கதையின் நாயகி இன்னும் உயிருடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தனது வாழ்வில் அதிக நாட்களை நாங்கள் வாயால் சொல்கின்ற தேசியவிடுதலைக்காகத் தன்னை இழந்தவள். இன்று தன்னையே கவனிக்க முடியாத நிலையில் அவலப்படுகிறாள். அவள் சண்டைக்களம் போகப் புலம்பெயர்ந்த சுயநலவாதியான நான் அவளது அனுமதியுடன் அவளது அனுபவத்தைக் கதையாகப் பதிவு செய்துள்ளேன். மற்றும்படி எந்த வியாபார நிறுவனத்திற்கோ அல்லது பத்திரிகைக்கோ எனது எழுத்துக்களை நான் விற்கவில்லை. சாந்தி நீங்கள் விற்பனை செய்திருக்கிறீர்கள் என்று யாரும் குற்றஞ் சாட்டவில்லை

சாந்தி கருத்தாடலில் விவாதம் செய்யும்போது கசப்பு ஏற்படுமானால் அது கருத்துக்களின் ஆரோக்கியத்தைவிட அலங்கோலங்களையே அதிகரிக்கும். அத்தகைய ஆரோக்கியமற்ற நிலையில் என்னுடைய நிலைப்பாடு இல்லை. இப்போதும் இங்கு உங்கள் கருத்திற்கான என்னுடைய கருத்தைத்தான் பதிவு செய்கிறேன்.

இன்னொரு விடயம் குழுமம் கட்டியோ அல்லது எதிர் தாக்குதல்களைப் பல பெயர்களில் வந்தோ அல்லது யாழ்கருத்துக்களத்தின் நிர்வாகத்தை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியோ எனக்குப் பழக்கமில்லை. அத்தோடு தனி மனிதத் தாக்குதல்களும் நான் செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேனாவும் இரு பக்க கூர் ஆயுதம்தான் என்பது தங்களது ஆக்கத்தில் தெரிகிறது

வேறு எழுதமுடியவில்லை முகம் தெரிந்ததனால்.......

Link to comment
Share on other sites

சகாரா,

பொதுவாக உங்கள் எழுத்துக்களில் நானும் கருத்து எழுதியது குறைவு. ஆனால் நீங்கள் முதலில் உங்களுக்கு ஏதோ எதிர்பாராது தட்டுப்பட்ட செய்தி நேற்றைய கட்டுரையில் எனது கருத்துக்குப் போட வேண்டிய தேவையில்லை. ஆனால் வேண்டுமென்றே போட்டிருந்தீர்கள்.ஆனால் அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. கவலைப்பட வேண்டுமென்று நான் கூறவுமில்லை. எனக்க உங்கள் போல் நீட்டிப்பரப்பி விவாதிக்க விருப்பமில்லை. காரணம் உங்கள் முரண்டுபிடி.

கருத்தில் எனக்கு யாருடனும் கசப்பு இல்லை. நான் கருத்தாடும் பலர் இக்களத்தில் நல்ல நண்பர்கள். அவர்களில் சிலருடன் கடுமையான விவாதங்கள் செய்துள்ளேன். ஆனால் இப்படி உங்கள் போல முரண்பாட்டை வளர்த்தவர்கள் இல்லை. நான் பிள்ளையார் பிடிக்க முயன்று எழுத்தியலில் குரங்காவதில் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் பிள்ளையாரின் உருவாக இருந்து கொள்ளுங்கள்.

இதை எழுது இதைத்தான் எழுது என்ற விதியை யாருக்கும் திணிக்காதீர்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளல் என்வரையில் சரியான தேர்வு.

இதற்கும் உங்கள் நீண்ட சிவப்புமை எழுத்தும் உங்களை நியாயப்படுத்தி எழுதுவீர்கள். அது உங்கள் இயல்பு. உங்களுக்கு ஏற்கனவே கவிதைப்பகுதியில் எழுதியிருக்கிறேன். எனது ஒரு தோழி பற்றி. எந்த விவாதத்திலும் கடைசிச்சொல் தனதாக இருக்க வேண்டுமென்று அவள் அடம்பிடிப்பாள். அதை நாங்கள் விட்டுக்கொடுப்போம். அது இப்படியான விவாதமல்ல. ஆனால் அவள் போல உங்கள் சொல்தான் ஒரு கருத்தின் கடைசியாக இருக்க வேண்டுமென்ற உங்கள் போக்கு அது உங்கள் இயல்பு.

களத்தில் நிர்வாகத்தை சாதகமாக்கி எதையும் சாதிக்கும் களமல்ல இது. பலரது உழைப்பு. எல்லாரும் இலவச சேவைதான் யாழுக்கு செய்கிறார்கள். இதில் நானொரு கொம்புமில்லை.

தனிமனித தாக்குதல்கள் அற்ற உங்கள் நேர்மை பல இடத்தில் பார்த்துள்ளேன். அதிலிருந்து உங்கள் நேர்மையையும் புரிந்து கொண்டேன். ஆக உங்கள் தனிமனித அக்கறை பற்றிய கரிசனையில் நான் பங்குக்கு வரவில்லை.

முல்லைமண் எனது வலைப்பூ. அதில் வருகின்ற ஆக்கங்களை யாராவது எடுத்துப் போடுகிறார்கள் எனது படைப்பை கொள்ளையிடுகிறார்கள் என்று நான் கொதிக்கவில்லை.

ஒரு விடயத்தை சரியாக வாசிக்காமல் புரிந்து கொள்ளாமல் நான்தான் சரியென்ற ஆழுமையாளர்களுக்கு என்னால் நேரம் செலவளித்து பதில் எழுதிக்கொண்டிருக்க முடியவில்லை.

கருத்துக்களுக்கான கருத்தை எழுத உங்களுக்கு தொடர்ந்து எண்ணமிருந்தால் நானும் தொடர்ந்து எழுதலாம். இல்லையென்றால் சொறிவதை நிறுத்திக்கொள்வது நல்லது.

பேனாவும் இரு பக்க கூர் ஆயுதம்தான் என்பது தங்களது ஆக்கத்தில் தெரிகிறது

வேறு எழுதமுடியவில்லை முகம் தெரிந்ததனால்.......

விசுகு,

எனக்கு விளங்கவில்லை உங்கள் கருத்து. நீங்களும் என் வரையில் ஒரு சக கருத்தாளர்தான். மற்றபடி என் எதிரியல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா,

பொதுவாக உங்கள் எழுத்துக்களில் நானும் கருத்து எழுதியது குறைவு. ஆனால் நீங்கள் முதலில் உங்களுக்கு ஏதோ எதிர்பாராது தட்டுப்பட்ட செய்தி நேற்றைய கட்டுரையில் எனது கருத்துக்குப் போட வேண்டிய தேவையில்லை. ஆனால் வேண்டுமென்றே போட்டிருந்தீர்கள்.ஆனால் அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. கவலைப்பட வேண்டுமென்று நான் கூறவுமில்லை. எனக்க உங்கள் போல் நீட்டிப்பரப்பி விவாதிக்க விருப்பமில்லை. காரணம் உங்கள் முரண்டுபிடி.

சாந்தி நீங்கள் மற்றவர்களை அதாவது ஒட்டு மொத்தமாக கிண்டலடிக்கலாம் என்னும்போது உங்களுடைய போக்கின் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு நானாக எதையும் உருவாக்கி உங்கள் கருத்திற்கான கருத்தாக வைக்கவில்லை, ஏற்கனவே உங்களால் அல்லது உங்களுக்கே தெரியாமல் உங்கள் எழுத்தின் சாயலால் உருவாகிய ஒரு பதிவைத்தான் அங்கு வைத்தேன். இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது. நிற்க, கருத்துக்களத்தில் ஒரு பதிவைப் போடும்போது கூடவே எழுதுங்கள் அக்கருத்தைப்பற்றி எவரும் நீட்டிப்பரப்பிக் கதைக்க வருவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு வசனத்தையும் கூடவே பதிந்தால் யாரும் எடுத்து விவாதிக்க வரமாட்டார்கள்(குறிப்பாக என்னைப் போன்ற முரண்டுபிடிப்பவர்கள்)

கருத்தில் எனக்கு யாருடனும் கசப்பு இல்லை. நான் கருத்தாடும் பலர் இக்களத்தில் நல்ல நண்பர்கள். அவர்களில் சிலருடன் கடுமையான விவாதங்கள் செய்துள்ளேன். ஆனால் இப்படி உங்கள் போல முரண்பாட்டை வளர்த்தவர்கள் இல்லை. நான் பிள்ளையார் பிடிக்க முயன்று எழுத்தியலில் குரங்காவதில் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் பிள்ளையாரின் உருவாக இருந்து கொள்ளுங்கள்.

நன்றி ஒரு விடயம் நான் பிள்ளையார் பிடிக்கப் போவதுமில்லை அது குரங்காகும் சங்கடமும் எனக்கு இருக்காது.

இதை எழுது இதைத்தான் எழுது என்ற விதியை யாருக்கும் திணிக்காதீர்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளல் என்வரையில் சரியான தேர்வு.

எப்போதும் ஒருவருடைய எழுத்து என்பது அவருடைய தனித்துவத்தை உடையதாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

இதற்கும் உங்கள் நீண்ட சிவப்புமை எழுத்தும் உங்களை நியாயப்படுத்தி எழுதுவீர்கள். அது உங்கள் இயல்பு. உங்களுக்கு ஏற்கனவே கவிதைப்பகுதியில் எழுதியிருக்கிறேன். எனது ஒரு தோழி பற்றி. எந்த விவாதத்திலும் கடைசிச்சொல் தனதாக இருக்க வேண்டுமென்று அவள் அடம்பிடிப்பாள். அதை நாங்கள் விட்டுக்கொடுப்போம். அது இப்படியான விவாதமல்ல. ஆனால் அவள் போல உங்கள் சொல்தான் ஒரு கருத்தின் கடைசியாக இருக்க வேண்டுமென்ற உங்கள் போக்கு அது உங்கள் இயல்பு.

ஏன் சாந்தி என்னுடைய கருத்தை நியாயப்படுத்த நான் எழுதித்தானே ஆகவேண்டும். நீங்கள் ஏன் விடாப்பிடியாக இங்கு நின்று உங்கள் கருத்தை நியாயப்படுத்துகிறீர்களோ அதேபோல் நானும் எனது கருத்தை நியாயப்படுத்த முனைகிறேன். அத்தோடு கருத்துக் களத்தில் வாசிக்கும் உறவுகளுக்கு எது சாந்தி எழுதியது, எது சகாறா எழுதியது என்று தெரிந்தாலே அவர்கள் இந்த விவாதம் எத்தகையது இதில் எதை எடுக்கலாம், எதை விடலாம் என்று பகுப்பாய்ந்து கொள்ள இலகுவாக இருக்கும் அதுதான் இந்தச் சிவப்பு வர்ணம் கலப்பதற்கான காரணம்.

களத்தில் நிர்வாகத்தை சாதகமாக்கி எதையும் சாதிக்கும் களமல்ல இது. பலரது உழைப்பு. எல்லாரும் இலவச சேவைதான் யாழுக்கு செய்கிறார்கள். இதில் நானொரு கொம்புமில்லை.

தனிமனித தாக்குதல்கள் அற்ற உங்கள் நேர்மை பல இடத்தில் பார்த்துள்ளேன். அதிலிருந்து உங்கள் நேர்மையையும் புரிந்து கொண்டேன். ஆக உங்கள் தனிமனித அக்கறை பற்றிய கரிசனையில் நான் பங்குக்கு வரவில்லை.

மன்னிக்கவும், நீங்கள் கேட்டாலும் நான் தர மாட்டேன். :unsure:

முல்லைமண் எனது வலைப்பூ. அதில் வருகின்ற ஆக்கங்களை யாராவது எடுத்துப் போடுகிறார்கள் எனது படைப்பை கொள்ளையிடுகிறார்கள் என்று நான் கொதிக்கவில்லை.

நீங்கள் கொதிப்படைந்துள்ளீர்கள் என்று யாரேனும் சொன்னார்களா? ஏன் நீங்களாகவே வலிந்து இப்பதிலை இங்கு திணிக்கிறீர்கள்?

ஒரு விடயத்தை சரியாக வாசிக்காமல் புரிந்து கொள்ளாமல் நான்தான் சரியென்ற ஆழுமையாளர்களுக்கு என்னால் நேரம் செலவளித்து பதில் எழுதிக்கொண்டிருக்க முடியவில்லை.

மன்னிக்கவும் ஆழுமையாளர்கள் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை

கருத்துக்களுக்கான கருத்தை எழுத உங்களுக்கு தொடர்ந்து எண்ணமிருந்தால் நானும் தொடர்ந்து எழுதலாம். இல்லையென்றால் சொறிவதை நிறுத்திக்கொள்வது நல்லது.

உங்கள் கருத்துக்களுக்கான கருத்தைத்தான் அதாவது நானும் தொடர்கிறேன் என்று நினைக்கிறேன் ஆனால் உங்கள் பார்வையில் நான் உங்களுடன் விவாதிப்பது தவறானது என்றால் விளக்கம் தாருங்கள். நிறுத்திக் கொள்வோம்.

Link to comment
Share on other sites

சாந்தி நீங்கள் மற்றவர்களை அதாவது ஒட்டு மொத்தமாக கிண்டலடிக்கலாம் என்னும்போது உங்களுடைய போக்கின் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதற்கு நானாக எதையும் உருவாக்கி உங்கள் கருத்திற்கான கருத்தாக வைக்கவில்லை, ஏற்கனவே உங்களால் அல்லது உங்களுக்கே தெரியாமல் உங்கள் எழுத்தின் சாயலால் உருவாகிய ஒரு பதிவைத்தான் அங்கு வைத்தேன். இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது. நிற்க, கருத்துக்களத்தில் ஒரு பதிவைப் போடும்போது கூடவே எழுதுங்கள் அக்கருத்தைப்பற்றி எவரும் நீட்டிப்பரப்பிக் கதைக்க வருவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு வசனத்தையும் கூடவே பதிந்தால் யாரும் எடுத்து விவாதிக்க வரமாட்டார்கள்(குறிப்பாக என்னைப் போன்ற முரண்டுபிடிப்பவர்கள்)

சகாரா,

நான் எனத கருத்துக்களை முன்வைக்கிறேன். இதில் மறுதலிப்பு விவாதத்தை கருத்தாளர்களுடன் வைக்கிறேன். ஆக ஒட்டுமொத்து கிண்டலடிப்பு என்ற உங்கள் அர்த்தப்படுத்தலில் சுட்டிக்காட்ட உரிமையெடுத்துக் கொள்ள உங்களுக்கு எந்த உரிமையுமில்லை.

நீங்கள் சாயலில் மையலில் சுட்டிக்காட்ட ஒன்றும் உங்களிடம் இறைஞ்சி நிற்கவில்லை. களத்தில் கருத்தைப் போடும் போது கருத்தைத்தான் நான் பதிவு செய்கிறேன். நான்தான் தேசியத்தூண் என்னால் தான் எல்லாம் தாங்கப்படுகிறது என்று முரண்டுபிடித்து எழுதவில்லை. கருத்துக்கு கருத்தை எழுதுவது தவறில்லை. அதையே வைத்து வைத்து விசமாய் தெளிக்கிற உங்கள் இயல்பை வெளிப்படுத்த யாவையும் பயன்படுத்தும் ஒரு கருத்துக்கடல் நீங்கள். களத்தில் ஒரு பதிவை இடுவதே பல்பக்கக் கருத்துகளை உள்வாங்கத்தான். உங்கள் உபதேசங்களோடு முரண்பட இல்லை.

நன்றி ஒரு விடயம் நான் பிள்ளையார் பிடிக்கப் போவதுமில்லை அது குரங்காகும் சங்கடமும் எனக்கு இருக்காது.

எப்போதும் ஒருவருடைய எழுத்து என்பது அவருடைய தனித்துவத்தை உடையதாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

பிள்ளையாரைப் பிடித்த கதை சொன்னது நீங்களே நானல்ல.

ஒருவருடைய தனித்துவத்தை எப்படியென்று தேடல் செய்யும் உரிமை உங்களுக்கில்லை. உங்கள் தனித்துவத்தை நீங்கள் காணாததன் காரணமே இந்தப் பம்மாத்து வார்த்தை.

Link to comment
Share on other sites

ஏன் சாந்தி என்னுடைய கருத்தை நியாயப்படுத்த நான் எழுதித்தானே ஆகவேண்டும். நீங்கள் ஏன் விடாப்பிடியாக இங்கு நின்று உங்கள் கருத்தை நியாயப்படுத்துகிறீர்களோ அதேபோல் நானும் எனது கருத்தை நியாயப்படுத்த முனைகிறேன். அத்தோடு கருத்துக் களத்தில் வாசிக்கும் உறவுகளுக்கு எது சாந்தி எழுதியது, எது சகாறா எழுதியது என்று தெரிந்தாலே அவர்கள் இந்த விவாதம் எத்தகையது இதில் எதை எடுக்கலாம், எதை விடலாம் என்று பகுப்பாய்ந்து கொள்ள இலகுவாக இருக்கும் அதுதான் இந்தச் சிவப்பு வர்ணம் கலப்பதற்கான காரணம்.

உங்களை நியாயப்படுத்துவது உங்கள் உரிமை மற்றவர்களை உங்கள் நியாயத்தின்படி தான் எழுத வேண்டுமென்று அடம்பிடிப்பது உங்கள் ஆணவத்தின் வெளிப்பாடு. ஆக எங்கும் விடாப்பிடியும் நான்தான் சரியென்று கருத்தெழுதியதில்லை. எனது கருத்துக்கள் அவை எனது கருத்துக்களாகவே வைத்துள்ளேன்.

சாந்தி என்பது சகாரா என்பது அதிசயங்களில்லை. எல்லாராலும் எல்லாரையும் பிரித்தறிய வாசிக்க அறிவோடுதான் இக்களத்தில் எல்லோரும் கருத்து எழுதுகிறார்கள். பகுப்பாய்வு வகுத்தாய்வு செய்யும் திறன் அனைத்து மனிதர்களிடமும் உள்ளது. அதை உங்களிடம் பிரத்தியேகமாய் உள்ளதாய் கற்பனையில் இருக்கிறீர்கள். சிவப்பையும் மஞ்சளையும் கலந்து பெரும் புரட்சியையும் பண்ணுங்கள். அது உங்கள் புரட்சியின் வடிவம். உங்கள் உரிமை.

Link to comment
Share on other sites

இருந்தால் தானே தருவதற்கு.

கருத்துக்கான கருத்தை தொடர்வதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. விவாதம் என்பதற்கான அர்த்தத்தை புரிந்தால் இப்படி உங்கள் எழுத்துக்கள் முந்தியடித்து நீளாது.

இதில் உங்களுக்கு எழுத 20 நிமிடங்கள் எனக்கு வீண். திரும்பவும் வந்து 3கால் கதைதான் சொல்லப்போகிறீர்கள். அது உங்களுக்கு உள்ள நேரத்தைப் பொறுத்தது.

எனது எழுத்து அல்லது கருத்து அதை நீங்கள் அல்லது வேறு களத்து உறவுகள் சரியென்று ஏற்க வேண்டுமென்ற எந்தக்கட்டுப்பாடுமில்லை. ஆனால் இன்னொருவரின் எழுத்து கருத்து என்னைமாதிரி இருக்க வேண்டுமென்ற உங்கள் பேறறிவுக்கு முன்னால் நின்று வம்பளக்க எனக்கு நேரமில்லை.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா,

நான் எனத கருத்துக்களை முன்வைக்கிறேன். இதில் மறுதலிப்பு விவாதத்தை கருத்தாளர்களுடன் வைக்கிறேன். ஆக ஒட்டுமொத்து கிண்டலடிப்பு என்ற உங்கள் அர்த்தப்படுத்தலில் சுட்டிக்காட்ட உரிமையெடுத்துக் கொள்ள உங்களுக்கு எந்த உரிமையுமில்லை.

நீங்கள் சாயலில் மையலில் சுட்டிக்காட்ட ஒன்றும் உங்களிடம் இறைஞ்சி நிற்கவில்லை. களத்தில் கருத்தைப் போடும் போது கருத்தைத்தான் நான் பதிவு செய்கிறேன். நான்தான் தேசியத்தூண் என்னால் தான் எல்லாம் தாங்கப்படுகிறது என்று முரண்டுபிடித்து எழுதவில்லை. கருத்துக்கு கருத்தை எழுதுவது தவறில்லை. அதையே வைத்து வைத்து விசமாய் தெளிக்கிற உங்கள் இயல்பை வெளிப்படுத்த யாவையும் பயன்படுத்தும் ஒரு கருத்துக்கடல் நீங்கள். களத்தில் ஒரு பதிவை இடுவதே பல்பக்கக் கருத்துகளை உள்வாங்கத்தான். உங்கள் உபதேசங்களோடு முரண்பட இல்லை.

பிள்ளையாரைப் பிடித்த கதை சொன்னது நீங்களே நானல்ல.

ஒருவருடைய தனித்துவத்தை எப்படியென்று தேடல் செய்யும் உரிமை உங்களுக்கில்லை. உங்கள் தனித்துவத்தை நீங்கள் காணாததன் காரணமே இந்தப் பம்மாத்து வார்த்தை.

உங்களை நியாயப்படுத்துவது உங்கள் உரிமை மற்றவர்களை உங்கள் நியாயத்தின்படி தான் எழுத வேண்டுமென்று அடம்பிடிப்பது உங்கள் ஆணவத்தின் வெளிப்பாடு. ஆக எங்கும் விடாப்பிடியும் நான்தான் சரியென்று கருத்தெழுதியதில்லை. எனது கருத்துக்கள் அவை எனது கருத்துக்களாகவே வைத்துள்ளேன்.

சாந்தி என்பது சகாரா என்பது அதிசயங்களில்லை. எல்லாராலும் எல்லாரையும் பிரித்தறிய வாசிக்க அறிவோடுதான் இக்களத்தில் எல்லோரும் கருத்து எழுதுகிறார்கள். பகுப்பாய்வு வகுத்தாய்வு செய்யும் திறன் அனைத்து மனிதர்களிடமும் உள்ளது. அதை உங்களிடம் பிரத்தியேகமாய் உள்ளதாய் கற்பனையில் இருக்கிறீர்கள். சிவப்பையும் மஞ்சளையும் கலந்து பெரும் புரட்சியையும் பண்ணுங்கள். அது உங்கள் புரட்சியின் வடிவம். உங்கள் உரிமை.

கருத்துக்கான கருத்தை தொடர்வதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. விவாதம் என்பதற்கான அர்த்தத்தை புரிந்தால் இப்படி உங்கள் எழுத்துக்கள் முந்தியடித்து நீளாது.

இதில் உங்களுக்கு எழுத 20 நிமிடங்கள் எனக்கு வீண். திரும்பவும் வந்து 3கால் கதைதான் சொல்லப்போகிறீர்கள். அது உங்களுக்கு உள்ள நேரத்தைப் பொறுத்தது.

எனது எழுத்து அல்லது கருத்து அதை நீங்கள் அல்லது வேறு களத்து உறவுகள் சரியென்று ஏற்க வேண்டுமென்ற எந்தக்கட்டுப்பாடுமில்லை. ஆனால் இன்னொருவரின் எழுத்து கருத்து என்னைமாதிரி இருக்க வேண்டுமென்ற உங்கள் பேறறிவுக்கு முன்னால் நின்று வம்பளக்க எனக்கு நேரமில்லை.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

……இனி யாரும் இந்த இனத்தை மீட்க வரமாட்டார்கள் என்ற உண்மை மட்டும் உறைப்பாயில்லை கசப்பாயிருந்தது……

:) புலத்தில் இருந்து நாங்கள் வருவமில்ல :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

எனக்கு விளங்கவில்லை உங்கள் கருத்து. நீங்களும் என் வரையில் ஒரு சக கருத்தாளர்தான். மற்றபடி என் எதிரியல்ல என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

.

நன்றி வணக்கம்.

நன்றி சாந்தி

மற்றவர்களுடன் கதைக்கப் பேசவே தெரியாத உங்களைப் போன்றவர்களால்த்தான் தமிழினத்திற்கு இந்த நிலை.

எதையும் உள்வாங்கவும், உள்வாங்கும் கருத்துகளை ஆய்ந்து பேசவும் முதலில் பழகுங்கள். அதென்ன மஞ்சள் சிவப்பு நிறம் உங்களுக்குப் பிடிக்கவில்லையோ.. பார்த்தாலே வாந்தி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறதா? . யாழ்க்கள நிர்வாகம் சார்ந்த(?) யாரோ உங்கள் பின்னால் நின்று உங்களுக்குச் சாதகமான சில முயற்சிகளை முன்னெடுத்ததையும் நான் மட்டுமல்ல இன்னும் சில உறவுகளும் அறிவோம். . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கவில்லை

புரியவில்லை

கேட்கவில்லை

அல்லது

தெரியவில்லை

என்பது மிகுந்த அனுபவசாலிகளின் வார்த்தை யாலங்கள்

தொடர்ந்து பேசுவது செவிடன் காதில் சங்கூதுவதற்கு எனக்கு நேரமில்லை

அதேநேரம் எந்த விவகாரமாக இருந்தாலும் இன்னதான் முடிவு என்று சொல்லாது

மற்றவர்கள் முடிவு எடுக்கும்வரை மதில்மேல் பூனைபோல் இருப்பதும்

அவர்கள் முடிவு எடுத்தபின் அதை விமர்சிப்பதும்

தங்களைப்போன்றோரின் மிகவும் திட்டமிட்ட செயலாக இருக்கும்போது....

உதாரணமாக

கூட்டமைப்பினர் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்று நான் கேட்டதற்கு இதுவரை பதிலில்லை[/si

Link to comment
Share on other sites

சகாரா நீங்கள் எனக்கு எதிரியல்ல. சக கருத்தாளர். மற்றுபடிகருத்தாடலில் கடுமையாக எழுதப்படும் இடங்களில் நீங்கள் உங்கள் வாதமே சரியென்று நின்றீர்கள். அதற்கான பதில்தான் உங்களுக்கு எழுதினேன். பண்புடன் நீங்களும் கருத்தாடவில்லை என்னுடன். கர்தரை சந்தித்தேன் என்கிற போதகரைப் பார்த்து கர்த்தர் எப்படியிருப்பார் என்று கேட்கும் சாமானிய பக்தனை சாத்தானின் வேதம் என்கிறமாதிரியான உங்கள் வாதத்துக்கு என்னால் எதுவும் செய்யமுடியாது சகாரா.

இங்கு களத்தில் எனக்காக யாருமில்லை. உங்களைப்போல நானும் ஒரு கருத்தாளர்தான். இதைக்கூடப்புரியாது எனக்கு செல்வாக்கு சாதகம் இருப்பதாக சொல்வது உங்கள் புரிதலையே புரிவிக்கிறது சகாரா.

இத்தோடு நானும் நிறுத்திக்கொள்கிறேன். நீங்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.

நன்றி.

விகுசு,

உங்கள் பூடகமான கருத்தை புரிந்து கொள்ள எனக்கு அறிவு போதாது. கூட்டமைப்புப்பற்றி எற்கனவே நான் எழுதிய விடயங்களை வாசித்தால் புரியும். நீங்கள் பெற்றிருக்கும் விடுதலைப்போராட்ட அனுபவம் எனக்கில்லை. உங்கள் தேசிய உணர்விற்கு முன் என்னால் நிற்கமுடியாத வெம்மையுடன் உங்கள் உணர்வு உள்ளது.

நான் ஒரு சாதாரண கருத்தாளர். அதைவிட எந்து செல்வாக்குகளுடனும் களத்தை ஆழும் ஆளில்லை. இந்த உண்மைகூட விளங்காமல் முரண்படுகிற உங்களுக்கு எதையும் சொல்லிப் புரியமாட்டீர்கள். நீங்கள் சொன்ன மொழியைNயு திருப்பி உங்களுக்காகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு சாதாரண கருத்தாளர். அதைவிட எந்து செல்வாக்குகளுடனும் களத்தை ஆழும் ஆளில்லை. இந்த உண்மைகூட விளங்காமல் முரண்படுகிற உங்களுக்கு எதையும் சொல்லிப் புரியமாட்டீர்கள்.

எங்கோ உதைக்கிறது சாந்தியக்கா

எல்லோரிடமும் எல்லாம் தெரிந்தவர்போலும்

போராட்டத்தை கரைத்துக்குடித்து தலைவருக்கே பாடம் எடுக்க புறப்பட்ட தாங்கள்.....

எங்கோ உதைக்கிறது சாந்தியக்கா

Link to comment
Share on other sites

களம் என நான் குறித்தது கருத்துக்களத்தை. இடித்தால் தள்ளி நில்லுங்கோ விசுகு. உங்களுக்குப் புரிந்தபடி ஏதோ எல்லாம் எழுதுகிறீர்கள். சகாரா உட்பட பலரது சந்தேகத்தில் எனக்கு கருத்துக்களத்தில் ஏதோ பெரிய பங்குள்ளதான கணிப்புக்கான பதிலை நீங்கள் வேறெங்கேயோ முடிச்சிடுகிறீர்கள். உங்களுக்கு எதையும் புரியும் தன்மையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கைபோய் தலையை முட்டவென்றிருக்கிறது சகாரா. எனது வலைப்பூவில் இக்கதையை பதிவு செய்திருக்கிறேன். மற்றும்படி இந்த மாலைமலருக்கு எதுவம் அனுப்பவில்லை. கதையில் எழுதப்பட்டதை இப்படியும் திரிக்கிறது இந்த தமிழக ஊடகங்கள். இதைப்பார்க்க கோபம்தான் வருகிறது.இப்படியும் திரித்து ஒரு ஊடகம் செய்தி எழுதுமா ? எனது மற்பொன்றை இந்த இணையத்துக்கு எழுதிப்போடவுள்ளேன்.

நன்றி சகாரா அறியத்தந்தமைக்கு.

LOL :lol::o:D:lol:

மன்னிக்கவும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி இது உங்கள் வலைப்பூவை வாசித்துவிட்டு எழுதியதுபோல் இருக்கிறது என்பார்வையில் தற்செயலாகத் தட்டுப்பட்டது இங்கு இணைத்துள்ளேன். மாலைமலர் ஒக்டோபர் 30 இல் வெளியாகி இருக்கிறது :o:lol: :lol: :(

சென்னை, அக் 30-

இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த பயங்கர போரில் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய சுமார் 3 லட்சம் தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மே 18-ந்தேதி சிங்கள ராணுவம் வீசிய கடைசி நாள் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அந்த கொடூர தாக்குதலில் இருந்து சில விடுதலைப்புலிகள் உயிர் தப்பி முகாம்களிலும், வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் கமாண்டர் சாந்தியும் ஒருவர்.

அவர் தமிழ் மணம் இணையத்தளத்தில், உச்சகட்ட போரின் கடைசி நாட்கள் பற்றி தனி பிளாக் உருவாக்கி பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். இது உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களால் படித்து பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.

அந்த இணையத்தளத்தில் சாந்தி எழுதி இருப்பதாவது:-

நான் (சாந்தி) 16 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். தமிழர்களுக்கு என்று தனி நாட்டை உருவாக்க முடியும் என்ற லட்சியத்துடன் நானாகவே விரும்பி படையில் சேர்ந்தேன். எனக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுத்தனர்.

18 வயது இருக்கும்போது சிங்கள ராணுவத்துடன் நடந்த ஒரு போரில் நான் கடுமையாக சண்டையிட்டேன். அதில் படுகாயம் அடைந்தேன். இதனால் நான் போர் படை பிரிவில் இருந்து அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். பெண் புலிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். பெண்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தும் பணியை செய்து வந்தேன்.

மே மாத தொடக்கத்தில் சிங்கள ராணுவம் நச்சுக் குண்டுகளை வீசியது. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக முள்ளி வாய்க்கால் பகுதியில் நாங்கள் பதுங்கினோம். அங்கு உச்சகட்ட சண்டை நடந்தது. மே மாதம் 14-ந்தேதி உங்களை நீங்களே தற்காத்து கொள்ளுங்கள் என்று எங்களுக்கு மேலிட தலைவர்களிடம் இருந்து தகவல் வந்துது. படைப்பிரிவினர் நாலாபுறமும் சிதறி ஓடி தப்பினார்கள்.

நானும் என் தலைமையில் இருந்த 56 பெண் புலிகளும் பாதுகாப்பு பகுதிக்குள் மக்களோடு மக்களாக கலந்தோம். ஓமந்தையில் அமைக்கப்பட்டிருந்த ஐ.நா.சபை முகாமில் தஞ்சம் அடைந்தோம். மே 18-ந்தேதியும் 19-ந்தேதியும் பெரிய அளவில் சிங்கள ராணுவம் குண்டுகளை வீசியது. எங்கள் கண் எதிரிலேயே ஈழம் கனவு கலைந்தது போல ஆகி விட்டது.

மாவீரர்களுக்கு என்றுமே மரணம் இல்லை. கடைசி தமிழன் இருக்கும் வரை அவன் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள். வஞ்சகத்தால் வீழ்ந்த தலைவனுக்கு ஒரு வணக்கத்தைச் செலுத்தத்தடை நிற்கும் வஞ்சகர்களை எமது மக்கள் விலக்கி விட்டு, அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலி செய்வோம்.

எங்கள் கடவுளை காவு கொடுத்த துரோகத்தை உலகறிவிப்பு செய்வோம் எங்கும் போராடித்தான் இயல்பை நிலை நிறுத்த முடிகிறது.

மர்மங்களே தொடர்ந்து ஊடகங்களை நிரப்புகின்றன. மவுனமே இப்போது சிறந்த மொழி. அப்பப்பாவிற்கு ஆத்ம அஞ்சலிகள்

அப்பப்பாவின் நினைவுகளோடு அந்த நாள் நினைவுகளை மீட்டுள்ளீர்கள். மரணத்துக்குப்பின்னான வாழ்வு பலருக்கு மர்மமாக உள்ளது. மர்ம முடிச்சுகள் அறுபடவண்டும்.

சூரியகாந்திகளாக எம் இதயம் உன் உதயம் நாடி காத்திருக்கிறது. சூரிய அஸ்தமனம் என்பது சூரியனின் அழிவன்று.

இவ்வாறு அந்த இணையத்தளத்தில் கமாண்டர் சாந்தி எழுதியுள்ளார்.

http://www.maalaimalar.com/2009/10/30105537/CNI0203001009.html

:D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி இது உங்கள் வலைப்பூவை வாசித்துவிட்டு எழுதியதுபோல் இருக்கிறது என்பார்வையில் தற்செயலாகத் தட்டுப்பட்டது இங்கு இணைத்துள்ளேன். மாலைமலர் ஒக்டோபர் 30 இல் வெளியாகி இருக்கிறது :o:lol: :lol: :(

சென்னை, அக் 30-

இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த பயங்கர போரில் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய சுமார் 3 லட்சம் தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மே 18-ந்தேதி சிங்கள ராணுவம் வீசிய கடைசி நாள் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அந்த கொடூர தாக்குதலில் இருந்து சில விடுதலைப்புலிகள் உயிர் தப்பி முகாம்களிலும், வெளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் கமாண்டர் சாந்தியும் ஒருவர்.

அவர் தமிழ் மணம் இணையத்தளத்தில், உச்சகட்ட போரின் கடைசி நாட்கள் பற்றி தனி பிளாக் உருவாக்கி பல்வேறு தகவல்களை எழுதியுள்ளார். இது உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களால் படித்து பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.

அந்த இணையத்தளத்தில் சாந்தி எழுதி இருப்பதாவது:-

நான் (சாந்தி) 16 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். தமிழர்களுக்கு என்று தனி நாட்டை உருவாக்க முடியும் என்ற லட்சியத்துடன் நானாகவே விரும்பி படையில் சேர்ந்தேன். எனக்கு பல்வேறு பயிற்சிகள் கொடுத்தனர்.

18 வயது இருக்கும்போது சிங்கள ராணுவத்துடன் நடந்த ஒரு போரில் நான் கடுமையாக சண்டையிட்டேன். அதில் படுகாயம் அடைந்தேன். இதனால் நான் போர் படை பிரிவில் இருந்து அரசியல் பிரிவுக்கு மாற்றப்பட்டேன். பெண் புலிகளுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். பெண்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தும் பணியை செய்து வந்தேன்.

மே மாத தொடக்கத்தில் சிங்கள ராணுவம் நச்சுக் குண்டுகளை வீசியது. மக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக முள்ளி வாய்க்கால் பகுதியில் நாங்கள் பதுங்கினோம். அங்கு உச்சகட்ட சண்டை நடந்தது. மே மாதம் 14-ந்தேதி உங்களை நீங்களே தற்காத்து கொள்ளுங்கள் என்று எங்களுக்கு மேலிட தலைவர்களிடம் இருந்து தகவல் வந்துது. படைப்பிரிவினர் நாலாபுறமும் சிதறி ஓடி தப்பினார்கள்.

நானும் என் தலைமையில் இருந்த 56 பெண் புலிகளும் பாதுகாப்பு பகுதிக்குள் மக்களோடு மக்களாக கலந்தோம். ஓமந்தையில் அமைக்கப்பட்டிருந்த ஐ.நா.சபை முகாமில் தஞ்சம் அடைந்தோம். மே 18-ந்தேதியும் 19-ந்தேதியும் பெரிய அளவில் சிங்கள ராணுவம் குண்டுகளை வீசியது. எங்கள் கண் எதிரிலேயே ஈழம் கனவு கலைந்தது போல ஆகி விட்டது.

மாவீரர்களுக்கு என்றுமே மரணம் இல்லை. கடைசி தமிழன் இருக்கும் வரை அவன் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள். வஞ்சகத்தால் வீழ்ந்த தலைவனுக்கு ஒரு வணக்கத்தைச் செலுத்தத்தடை நிற்கும் வஞ்சகர்களை எமது மக்கள் விலக்கி விட்டு, அந்த மாபெரும் தலைவனுக்கு அஞ்சலி செய்வோம்.

எங்கள் கடவுளை காவு கொடுத்த துரோகத்தை உலகறிவிப்பு செய்வோம் எங்கும் போராடித்தான் இயல்பை நிலை நிறுத்த முடிகிறது.

மர்மங்களே தொடர்ந்து ஊடகங்களை நிரப்புகின்றன. மவுனமே இப்போது சிறந்த மொழி. அப்பப்பாவிற்கு ஆத்ம அஞ்சலிகள்

அப்பப்பாவின் நினைவுகளோடு அந்த நாள் நினைவுகளை மீட்டுள்ளீர்கள். மரணத்துக்குப்பின்னான வாழ்வு பலருக்கு மர்மமாக உள்ளது. மர்ம முடிச்சுகள் அறுபடவண்டும்.

சூரியகாந்திகளாக எம் இதயம் உன் உதயம் நாடி காத்திருக்கிறது. சூரிய அஸ்தமனம் என்பது சூரியனின் அழிவன்று.

இவ்வாறு அந்த இணையத்தளத்தில் கமாண்டர் சாந்தி எழுதியுள்ளார்.

http://www.maalaimalar.com/2009/10/30105537/CNI0203001009.html

:D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.