Jump to content

அகதிப்பெருந்துயர்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகதிப்பெருந்துயர்...

வாடி இலை சொரிந்து

வனப்பிழந்து

கூடிக்குலாவிடக்குருவிகளற்று

ஆடையிழந்து அம்மணமாய் நின்ற

மரஞ்செடிகொடிகள் எல்லாம்

வாடைக்காற்று வருடிட

வலிமை பெற்று

பூவும் கனியுமாய் பூத்துக்குலுங்கி

புன்னகை செய்யும்

இளவேனிற் காலங்களில்

நீலம் ஒளித்திட

நிலைகொண்ட இருள்கிளித்து

பால்வெளி விந்தைகளாய்

பரவிக்கிடக்கும் விண்மீன்களும்

பால்நிலவும்

வானில் உலாவரும்

வசந்தகால இரவுகளில்

நீலம் உடுத்திவந்து

நிலவுடன் கொஞ்சிடும்

நீரலைகள் தாலாட்டும்

பேரழகுக்கடலின்

பெருநீளக்கரைகளில்

ஊரே கூடியிருக்கும்

உல்லாச நாட்களில்

உணர்வுகள் கிளர்ந்தெழுந்து

உயரப்பறக்கும்

இனிமைகள் நிறைந்த

இரவுப்பொழுதுகளில்

நான்மட்டும் தனித்திருந்து

உயிர் வதைக்கும் துயர் சுமந்து

கூனிக்குறுகி கூடிழந்த பறவையாகி

வாழ்வை வெறுப்பதேனோ...?

வலி மிகக்கொள்வதேனோ...?

அரும்ப அரும்ப பிடுங்கப்படும்

தேயிலைக்கொழுந்துகள் போல்

திரும்பத்திரும்ப போர்தின்று நலிந்த

என் இனத்தின் பெருந்துயராலா...?

அழுகையால்கூட எதிர்ப்பைக்காட்டமுடியாமல்

அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு

ஏதிலிகள் ஆக்கப்பட்ட என் இனத்தின்

எதிர்காலத்தை நினைத்ததாலா...?

இனவெறி தலைக்கேறிய இலங்கை வேந்தர்களால்

அனுப்பப்பட்ட அனுமார்களால்

மீண்டும் மீண்டும் தீயிடப்பட்ட

என் தேசத்தின் உதிரம் வடியும் றணங்களாலா...?

எங்களுக்காய் சிலுவைசுமந்து

தங்களையே ஏணிகளாக்கிய ஏசுநாதர்கள்

காட்டிக்கொடுக்கப்பட்டு கருவறுக்கப்பட்ட

துரோகத்தாலா...?

பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழச்சிகளின்

கண்ணீரை எழுதவல்ல

வார்த்தைகள் என்னிடம்

இல்லை என்பதாலா...?

ஊரிழந்து நாடிழந்து

உலகமெல்லாம் சிதறிக்கிடந்தும்

பிரிவினைகள் பல பேசி பிரிந்துகிடக்கும்

என் இனத்தின் சிறுமை கண்டதாலா...?

ஈழத்து வானில்

பேயிருள் கவிழ்ந்து

பெருந்துயர் நீண்டு

தமிழ் நிலத்தை வாட்டி வதைப்பதாலா?

பித்துப்பிடித்தவன் போல்

பிடிப்பற்று வாழும்படி

இத்துயரில் எனைப்பிடித்த

பெருந்துயர் எத்துயரோ...?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.