Jump to content

ஐயனின் எஸ்.எல்.ஆர்


Recommended Posts

இக்கதையானது யோ.கர்ணனின் இன்னொரு வித்தியாசமான கதை. தாடிக்காரர் செய்த அரசியல் பற்றிய கருத்தோடு இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஐயர் என்றழைக்கப்பட்ட ஒரு முன்னாள் விடுதலைப்போராளியின் காலங்களோடு தாடிக்காரரின் அநியாயம் இன்றைய அரசியல் பற்றியும் இக்கதை பதிவிட்டிருக்கிறது.

அரசியல்துறையில் பணியாற்றி யோ.கர்ணன் விடுதலைப்புலிகளின் வெளியீடுகள் பலவற்றில் எழுதிய ஒருவர். தற்போது யுத்தமுடிவின் பின்னர் எழுதும் எழுத்துகள் மிகவும் முன்னைய காலத்துக்கு வேறுபட்ட கதைகள். படித்ததை இங்கு பகிர்கிறேன்.

ஐயனின் எஸ்.எல்.ஆர்

slr2.jpg

எங்கட தமிழ்ச் சினிமாவில அனேகமாக ஒரு கட்டம் வரும். ஹீரோவுக்கு கோபம் வந்தால் கையைத் தான் காட்டுவினம். அவர் கையைப் பொத்த, நரம்பு புடைச்சு இரத்தம் ஓடும். இந்த சீன் வைக்காத ஹீரோக்கள் இல்லை. இந்த செக்கனில நீங்கள் அப்படி ஒரு சீனை எனக்கும் வையுங்கோ. ஆனால் என்ன அவையள் மாதிரி நான் எழும்பின ஆம்பிளை இல்லை. அவையள் மாதிரி சிக்ஸ் பேக் எல்லாம் கிடையாது. சிங்கிள் பேக்தான்.

பல்லை நெருமிக் கொண்டு பொறுமையாக இருக்கிறன். என்னுடைய கோபத்தை முன்னுக்கிருக்கிற ஆக்கள் காணக்கூடாது. குடும்பத்துக்காக தன்ர அவமானங்களை கஸ்ரப்பட்டு தாங்கிக் கொள்ளுற ஒரு ஹீரோ எப்படியான ரியாக்சனுகளை காட்டுவார் என்பது உங்களுக்கு தெரியும்தானே. பல்லைக்கடிச்சு, கூரையைப் பார்த்து என்று ஓவர் அக்சன் காட்டுவார். இப்படியெல்லாம் இல்லாமல் நோமலான அக்சனுகளோட இன்னுமொரு சீன் வையுங்கோ.

முன்னுக்கு வாய் நிறைய வெத்திலையோட எச்சில் பறக்க கதைச்சுக்கொண்டிருக்கிற வேலுப்பிள்ளை சாத்திரியின்ர அலகு பறக்க அடிக்க வேணும் மாதிரியிருக்குது. என்னால ஒரு நல்ல காரியம் கெடக்கூடாது. அம்மா சாத்திரிக்குப் பின்னால நின்று பேசாமலிருக்கச் சொல்லி கை காட்டினா. அம்மாவின்ர சைகைக்காக இல்லாவிட்டாலும் சித்தியின்ர முகத்துக்காக பேசாமல் இருந்தன். எனக்கு அம்மாவை விடவும் சித்தியில பாசம் கூட.

ஒரு கிழமையாக சாத்திரியை காணுற இடத்தில அடிக்கிறதென்ற முடிவோட தான் திரிஞ்சன். ஆள் அகப்படவில்லை. வழமையில ஒரு நாளைக்கு இரண்டு தரம் முட்டுப்படுற சாத்திரி இந்தக்கிழமை கண்ணிலயே படயில்லை. சாத்திரிக் கிழவனின்ர நல்ல காலம். தப்பி விட்டான். கோயிலிலயோ சந்தியிலயோ எங்கயென்றாலும் ஆள் எத்துப்பட்டிருக்க வேணும். அந்த இடத்தில கிழவனின்ர அலகு பறந்திருக்கும். அந்தாளுக்கு ஒன்றும் செய்து போடாதை என அம்மாதான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தா. நான் அடிச்சு சாத்திரி சாகப்போறதில்லை. இது அம்மாவுக்கென்ன, இந்த உலகத்துக்கே தெரியும். ஆனால் பிறகு “இந்த கூறுகெட்ட குடும்பத்தின்ர சகவாசமே வேண்டாம்” என்று சித்தியின்ர குறிப்பைச் சுழட்டி எறிஞ்சுபோடும் கிழவன் என்று அம்மா பயப்பிடுறா. கிழவனை விட்டால், சித்திக்கு கலியாணம் செய்து வைக்கவல்ல சீவன் இந்த அகில உலகத்திலயே இல்லையென்பது அவவின்ர நிலைப்பாடு. கொஞ்சம் வயசான பொம்பிளையென்டால் கலியாணம் செய்து வைக்கிறது கஸ்ரம்தான்.

இப்பிடித்தான் பத்து நாளைக்கு முதல் சாத்திரி சங்கக்கடையில நின்றிருக்கிறான். கிழவனுக்கு நல்ல வெறி. சங்கக்கடை மனேஜர் ஏதோ கேட்க, கதை வளர்ந்து வளர்ந்து போய் சித்தியில நின்றிருக்குது. சாத்திரி ஒரு கெக்கட்டச் சிரிப்பு சிரிச்சுப்போட்டு சொன்னானாம் “அது ஒரு முத்தல் முருங்கைக்காய்….. ஏன் இவ்வளவு நாள் கட்டாமல் இருக்கிறாள்…. நான் நினைக்கிறன் ஏதோ கேஸ் போல……” சங்கக்கடையில இன்னும் நாலைஞ்சு பேர் நின்றிருக்கினம். அதில ஒராள்தான் எனக்கு சொன்னது. உண்மையில அந்த சங்கக்கடைக்கு முன்னாலயிருக்கிற பருத்தித்துறை யாழ்ப்பாணம் மெயின் றோட்டில சாத்திரியை உருட்டி உருட்டி அடிக்கிறது மாதிரியான ஒரு அடிபாட்டு சீனை எப்பவோ நீங்கள் வச்சிருக்க வேணும். என்னால அது முடியாமல் போயிற்றுது.

சித்தி ஊருக்கு வர முன்னர் ஒரு மாப்பிளையை பிடிக்க வேணுமென்றுதான் அம்மாவின் பிளான். சித்தி வந்திறங்க தாலியோட மாப்பிளை போய் நிற்பார். ஆனால் சித்திக்கு நாற்பது வயது கடந்ததுதான் பிரச்சனையாயிருக்குது. ஆனால் இதொரு சிக்கல் இல்லை. வெளிநாட்டு சிற்றிசன் உள்ள பொம்பிளைக்கு சுகமாக மாப்பிளை எடுக்கலாமென்று சாத்திரி சொல்லுறான்.

எனக்கு ஏழு வயசாயிருக்கேக்க சித்தி கனடா போனவ. கனடாவில இருக்கிற மாமாதான் எடுத்தவர்.

சித்தி கனடா போற செலவைப் பற்றி அந்த நேரம் ஒருதரும் யோசிக்கயில்லை. அந்த நேரம் அவவுக்கு அப்பிடியொரு பிரச்சனை. அப்ப அவ ஒரு பப்ளிக் ஸ்ரேற்மென்ற் விட்டிருந்தா “இனி என்ர லைப்பில சிறிலங்கா என்ற பெயரிருக்காது…” என்று. ஆனால் நாட்டு நிலைமை என்ன மாதிரி மாறிவிட்டுது. மகிந்த ராஜபக்சவே யாழ்ப்பாணம் வந்து பொங்கிப்படைச்சிட்டு போறார். சித்தி கொஞ்சம் யோசிச்சா தான். அவ அங்க இருந்த காலத்தில நடந்த ஆர்ப்பாட்டங்கள் பேரணியளில ஒன்றும் விடாமல் கலந்து கொண்டிருக்கிறா. இலங்கைக் கொடியெல்லாம் பப்ளிக்கில கிழிச்செறிஞ்சும் இருக்கிறா.

எனக்கு சித்தியென்டால் உயிர். நான் முந்தி அவவோடதான் படுக்கிறனான். ஒவ்வொரு வருச வித்தியாசத்தில நானும் அண்ணரும் பிறந்ததால அம்மா ஆரைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு படுக்கிறதென்ற பிரச்சனை வந்திட்டுது. ஏன் சகோதர யுத்தம் செய்வான் என்று நான் விட்டுக்குடுத்து சித்தியிட்ட போயிற்றன். இந்த இணக்க அரசியல் என்ற சொல்லெல்லாம் பிறகுதான் வந்தது. அம்மாவை விட சித்தியோட படுக்கிறது எனக்கும் பிடிச்சிருந்திது. என்ர தலையைத் தடவி நித்திரை கொள்ள வைப்பா. அவவுன்ர கை நல்ல மென்மை. எனக்கது பிடிக்கும். ஒவ்வொருஇரவிலயும் கதையளும் சொல்லுவா. நான் வலு சின்னப்பொடியனாக இருக்கேக்க, பேய் வந்து அப்புவின்ர பிடரியில தட்டினது, சீனித்தாத்தாவின்ர சைக்கிள் கரியரில இருந்து வந்தது என்ற மாதிரியான கதையள் சொல்லுவா. பிறகு நான் கொஞ்சம் வளர்ந்து கள்ளன் பொலீஸ் விளையாடத்தொடங்க, ஐயன், காமினி ஆக்களின்ர கதையள் சொன்னா.

நான் பிறந்தது இந்தியன் ஆமி நேரம். நான் அவையளை கண்டதில்லை. அவையளின்ர ஊரடங்குச்சட்ட நேரம் காரில வெள்ளைக்கொடி கட்டிக் கொண்டு தான் அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனவையாம். ஒரு அசுமாத்தமும் இல்லாமல் ஊர் அடங்கி இருக்கேக்கதான் நான் பிறந்தனானென்டும், அதாலதான் ஒரு அசுமாத்தமும் இல்லாமல் கள்ள வேலையள் செய்யிறனெண்டும் இப்பவும் வீட்டில அபிப்பிராயப்படுகினம். ஊருக்குள்ள இந்தியன் ஆமி வரேக்க, வரிசையில நின்று வந்தே மாதரம் பாடி பூப்போட்ட ஆக்களில சித்தியும் ஒராள். ஓவசியர் தாத்தா தான் அவையளுக்கு மாலை போட்டு “வங்கத்தை வென்றாள் அன்னை. இன்று சிங்கத்தை வெல்வான் அவள் பிள்ளை” என்று தான் எழுதிய பஞ்ச் டயலாக் பாணி கவிதையையும், இந்த சம்பவங்களுக்கு முதல் கிழமை முரசொலி பேப்பரில வந்த கம்பன் கழக ஜெயராஜ் எழுதிய “வந்தே மாதரம் என்போம்- அது வந்தே மா தரும் என்போம்” (இந்திய விமானங்கள் இங்கு போட்ட உணவுப் பொதிகளிற்காக எழுதப்பட்டது) கவிதையையும் வாசித்து கைதட்டல் வாங்கினாராம். சண்டை தொடங்கினதுக்குப் பிறகு ஒருநாள் இரவு, மூத்திரம் பெய்யுறதுக்காக வீட்டுக்குள்ளயிருந்து வெளியில வந்தவர் இந்தியன் ஆமி சுட்டுத்தான் செத்தார்.

அந்த நேரம் எங்கட ஊரில பேமசான இயக்கக்காரர் என்றால் ஐயன், குணபால், காமினி, சுருளி ஆக்கள்தான். அப்ப ஏராளம் இயக்கம் இருந்திருக்குது. ஆனாலும் சனம் இயக்கமென்று சொல்லுறது “இயக்கத்தை” தான். இதிலயும் ஐயன்தான் பேமஸ். ஐயனின்ர சாகசங்களால என்ர இரவுகள் நிரம்பி வழியும். இந்தியன்காரன் ஒருவேளை பிரபாகரனைப் பிடிச்சிருந்தாலும் ஐயனைப் பிடிச்சிருக்கவே முடியாதென்று சித்தி அடிச்சுச் சொன்னா. ஆள் அவ்வளவு சுழியன். இப்ப எங்கட ஊர் ரவுண்ட் அப் என்று வையுங்கோவன் . ஊருக்கு உள்ளுக்கு வாற பாதை, சுத்தியிருக்கிற பாதையெல்லாம் இந்தியன் ஆமி நிப்பினம். ஆனால், ஊரின்ர நடுச் சென்ரரில ஒரு இந்தியனுக்கு வெடி விழுந்திருக்கும். பிறகு பார்க்க, புகையிலையோ, அலம்பலோ ஏத்தின வண்டிலிலை மாட்டின்ர வாலை முறுக்கி வண்டிலை ஊருக்கு வெளியில ஐயன் கொண்டு போய்க் கொண்டிருக்கும்.

இப்பிடித்தான் ஒருநாள் குலனைப்பிள்ளையார் கோவிலடியில துவக்கைக் கழட்டி வைச்சிட்டு ஆள் குளிச்சுக் கொண்டிருக்கிறார். ஆரோ சொல்லிக் குடுத்து இந்தியன் ஆமி வந்திட்டுது. துவக்குக்குப் பக்கத்தில ஆமி. ஒன்றும் செய்யேலாது. ஆள் துவக்கை விட்டிட்டு பனங்கூடலுக்குள்ள பாய்ந்து விட்டது. ஆளுக்கு சரியான கவலையாம். இந்தியனிட்டயிருந்து ஒரு துவக்கு எடுத்துப் போட்டுத்தான் சாப்பிடுவன் என்று முடிவாயிருந்தாராம். மூன்றாம் நாள் நெல்லியடிச் சந்தி செக் பொயின்றுக்கு குண்டெறிஞ்சு ஒரு புது எஸ்.எல்.ஆர் எடுத்துப் போட்டுத்தான் சாப்பிட்டவராம்.

ஐயன் சுட்டது. ஐயன் குண்டடிச்சது, ஐயன் வெட்டியது என்று வெகுகாலம் நீடித்து வந்த கதை ஒருநாள் ஐயன் விலத்தி வெளிநாட்டுக்குப் போச்சுது என்றதோட முடிஞ்சுது.

கிட்டத்தட்ட சித்தி கதையில ஐயனை வெளிநாட்டுக்கு அனுப்ப, யாழ்ப்பாணத்தை இலங்கைஆமி பிடிக்குது. அப்ப எனக்கு எட்டு வயசு. சித்தி படிப்பிக்கிற பள்ளிக்கூடத்திலதான் படிக்கிறன். இரண்டு பேரும் ஒன்றாக போய் ஒன்றாக வருவம். ஒரு ரீச்சரின்ர கையைப் பிடிச்சுக் கொண்டு போய் வாறதில எனக்கு பெரிய புளுகு. ஒரு பொடியனும் கொளுவலுக்கு வரமாட்டினம்.

இந்தியன் ஆமி மாதிரி இல்லாமல், இலங்கை ஆமி ஒவ்வொரு சந்திக்குச் சந்தி பொயின்ற் போட்டினம். நெல்லியடி ரவுணில பெரிய காம்ப் வந்திது. அதுக்குப் பக்கத்தில இன்னொரு தமிழ் இயக்கத்தின்ர காம்ப். அனேகமாக ஒவ்வொரு முக்கிய பொயின்றிலையும் இந்த இரண்டு பார்ட்டியும் சேர்ந்துதான் நிப்பினம். அந்தக் காம்ப் கடந்துதான் பள்ளிக்கூடம் போக வேணும். பொயின்றில இருந்து சித்தியை நக்கல் பண்ணுவினம். ஸ்ராட்டில “சுது நங்கி” “லஸ்ஸன நங்கி” என்று சொல்லிக் கொண்டிருந்தவை தமிழ் மொழியில பரிச்சயமாகி “தங்கச்சி இங்க பாருங்க” “என்ன பேரூ” என்று கதைக்க தொடங்கிச்சினம்.

இப்பிடித்தான் ஒரு நாள் பள்ளிக்கூடத்தால வரேக்க பொயின்றில இருந்து ஒருத்தன் மறிச்சான். அவனின்ர நடை பேச்சை பார்க்க ஆள் ஒரு சுத்த தமிழன் என்றது விளங்குது. சித்தியைப் பார்த்து “நீர்தானே ஐயனை லவ் பண்ணின்னீர்?” என்று கேட்டான். சித்தி மற்றப் பக்கம் பார்த்துக் கொண்டு “இல்லை” என்றா. அவன் சிரிச்சுக் கொண்டு சொன்னான். “நாங்களும் இயக்க காரர்தானே. என்னை லவ் பண்ண மாட்டீரோ”.

எனக்கென்றால் பத்திக்கொண்டு வந்திது. எங்கிட சித்தி என்ன மாதிரி ஒரு டீசன்ட்டான ஆள். இந்தக் காவாலி என்ன கதைக்கிறான். சித்தி என்ர கையைப் பிடிச்சிழுத்துக் கொண்டு வேகமாக வந்திட்டா.

அடுத்த நாள் சித்தியை பள்ளிக்கூடம் போக வேண்டாமென்று அம்மா மறிச்சா. தான் காவாலியளின்ர கதையை கணக்கில எடுக்கிறதில்லை என்று சித்தி வெளிக்கிட்டா. பொயின்றைக் கடக்கேக்க தாடிக்காரன் எட்டிப் பார்த்து “புலியின்ர லவ்வர் போறா” என்று சொல்லி சிரிச்சான். ஐயன் இந்தியன் ஆமியிற்ற எடுத்த எஸ்.எல்.ஆர் துவக்கால அவனை அந்த இடத்திலேயே போட்டுத்தள்ள வேணும் மாதிரியிருந்தது. சித்தி றோட்டை விட்டு பார்வையை திருப்பவேயில்லை.

பள்ளிக்கூடம் முடிஞ்சு வீட்ட திரும்பி வரேக்க நாலைஞ்சு ஆமிக்காரனோட தாடிக்காரன் றோட்டில நிக்கிறான். விமலா என்று சித்தியின்ர பேரைச் சொல்லிக் கூப்பிட்டினம். நாங்கள் நிற்க, தாடிக்காரன் வந்து சொன்னான் “தங்கச்சி உம்மை சின்ன இன்குவாரி பண்ண வேண்டியிருக்குது. ஒருக்கால் காம்புக்கு வாங்கோ…”நான் அழத் தொடங்கினன். ஒரு ஆமிக்காரன் சொன்னான். “பிரச்சனை இல்ல தங்கச்சி. வந்திட்டு உடனே போங்கோ…” என்று. தாடிக்காரன் என்ர கையைப் பிடிச்ச அங்கால கூட்டிக்கொண்டு போய்ச் சொன்னான். “இதில நின்டு கத்தாத… அடிச்சே கொல்லுவன். வீட்டுக்குப் போ…”

நான் போகவில்லை. இன்னும் சத்தம் போட்டு அழத்தொடங்க, தாடி என்ர கன்னத்தில விட்டான் ஒன்று. சித்திக்கு கோபம் வந்திட்டுது. “ஐசே… அவனை அடிக்காதையும்” என்று உறுமினா. சித்தி அப்பிடி கதைச்சு நான் இதுவரை கண்டதில்லை. என்ர கன்னத்தை தடவி, வீட்டுக்கு ஓடிப்போய் அம்மாவிட்ட சொல்லச் சொன்னா .

ஒரு இடமும் நிற்காமல் வீட்டுக்கு ஓடினன். அம்மா முதல் வேலையாக கனடாவில இருக்கிற மாமாவுக்கு ரெலிபோன் அடிச்சா. கனடாவில இருக்கிற மாமா லண்டனுக்கு, நோர்வேக்கு, பரிசுக்கு, இத்தாலிக்கு, இந்தியாவுக்கு அடிச்சு அங்கயிருக்கிற சொந்தக் காரருக்கு சொன்னார். குட்டி நெல்லியடியில சிறீலங்கன் ஆமியாலயும் அவையளோட இருக்கிற ஒரு தமிழ் இயக்கத்தாலயும் சித்தி பிடிக்கப்பட்டது இன்ரநசனல் லெவலில எதிரொலிச்சுது.

அம்மாவையும் என்னையும் சைக்கிளில ஏத்திக் கொண்டு அப்பா ஆமிக்காம்புக்குப் போனார். ஆமிப் பெரியவன் தாங்கள் பிடிக்கயில்லை என்று இரண்டு கையையும் விரிச்சான். பிறகு “உங்கட தமிழ் ஆக்கள்தானே பிடிச்சவை. பிறகேன் எங்களிட்ட வாறியள்” என்றான். அவையளும் எங்கட தமிழ் ஆக்கள் தானே,போய் கதைச்சுப் பார்ப்பம் என்று போனம். எங்களை உள்ளுக்கு விடமாட்டம் என்று விட்டினம். கேற்றடியிலயே நிற்பாட்டி விசாரிச்சினம். எங்களோட கதைச்சவனும் பெரிய தாடி வைச்சிருந்தான். அம்மா அழுதழுது விசயத்தைச் சொன்னா. அவன் சொண்டை பிதுக்கி கொஞ்ச நேரம் வலு சீரியசாக யோசிச்சான். பிறகு சொன்னான் “நாங்கள் ஒருதரையும் பிடிக்கிறதில்லையம்மா. எதுக்கும் முன்னாலயிருக்கிற ஆமிக்காம்பில கேட்டுப் பாருங்கோ.”

அம்மா இலேசுப்பட்ட ஆள் இல்லை. அவையளின்ர காம்ப் கேற்றைப் பிடிச்சு உலுக்கி சத்தம் போட்டு அழத் தொடங்கிற்றா. றோட்டால போறவாற சனம் நின்று பார்க்க பயத்தில மெதுவாக பார்த்துக் கொண்டு போயினம். அவன் பேசாமல் உள்ளுக்குப் போயிற்றான். சித்தியில்லாமல் போறதில்லையென்ற முடிவோட அதிலயே இருந்திட்டம்.

கன நேரத்துக்குப்பிறகு இன்னொருத்தன் வந்தான். இன்ன இன்ன மாதிரியென்று அம்மா விசயத்தைச் சொன்னா. அவன் சொன்னான் “அவவை ஒரு சின்ன டவுட்டிலதான் பிடிச்சனாங்கள். ஒரு பிரச்சனையுமில்லை. விசாரிச்சிட்டு நாளைக்கு விடுவம்” என்று. அன்றைக்கு எங்கட வீட்டில சமைக்கவில்லை. செத்தவீடு நடந்த வீடு மாதிரி இருந்திது. நான் மட்டும் பணிஸ் சாப்பிட்டுப் படுத்திட்டன்.

அடுத்த நாள் நான் பள்ளிக்கூடம் போகயில்லை. மூன்று பேரும் காம்புக்குப் போனம். வெளியில நிற்கச் சொல்லிச்சினம். எனக்கென்றால் அவையளின்ர காம்புக்கு முன்னால நிக்க வெக்கமாயிருக்குது. தலையைக் குனிஞ்சு கொண்டு நிக்கிறன். இன்னும் பெரியவன் வரயில்லை. கொஞ்சம் பொறுங்கோ… கொஞ்சம் பொறுங்கோ என்று சொல்லிக் கொண்டிருக்கினம். வரப்போற பெரியவனாவது எங்களில இரங்கிச் சித்தியை விடவேணும் என்று கடவுளை கும்பிட்டன். பத்து மணி இருக்கும் அப்பதான் உள்ளுக்குக் கூப்பிட்டு இருத்திச்சினம். அதொரு பெரிய வீடு. அந்த வீட்டுக்காரச் சனம் வெளிநாட்டில எங்கேயோ இருக்க வேணும். இப்ப இவையள் காம்ப் போட்டிருக்கினம். வீட்டின்ர ஹோலில இருக்கிறம். சுவர் முழுக்க அவையளின்ர நோட்டீஸ் ஒட்டிக்கிடக்குது. அதில நிறைய பழைய ஆட்களின்ர படங்களிருந்தது. எல்லோரும் தாடியோட தான் நிக்கினம். படத்துக்குக் கீழ தோழர் என்று போட்டு அவையளின்ர பேர் கிடக்குது. அங்கால அவையளின்ர அரசியல் இலக்கு என்று பெரிய நோட்டீஸ் ஒட்டிக் கிடக்குது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் வாசிச்சன். ஒருத்தன் வந்து கேட்டான் “தம்பி சின்ன ஆளின்டாலும் கெட்டிக்காரன் போல… பொலிற்ரிக்சில இன்ரஸ்றோ” என்று. அப்பர் முகத்தை இறுக்கி வைச்சுக்கொண்டு சொன்னார். “பேப்பரெல்லாம் வாசிப்பான்”. அவன் கேட்டான் “சரி தம்பி இதில வாசிச்சதில விளங்கியிருக்கும்தானே எங்கட கொள்கை… சொல்லும் பாப்பம்…”

நான் திரும்பவும் ஒரு முறை நோட்டீசைப் பார்த்தன் .எதுகை , மோனையாக இரண்டு வசனம் அதில எழுதிக் கிடக்குது. கூட்டாட்சி , சுயாட்சி என்று கடைசிச் சொல்லுகள் முடியுது. நான் சொன்னன் “கூட்டாட்சியும் சுயாட்சியும்” என்று. அவனுக்கு வலு சந்தோசம். முதுகில தட்டிப்போட்டுச் சொன்னான். “ஆள் இன்ரலியனான ஆள்” என்று. இன்ரலியனான இந்தப் பொடியனின்ர சித்தியை எப்ப விடுவினம் என்று தெரியாமல், ஒரு மெல்லிய ரென்சனில இருந்தன்.

பன்னிரண்டு மணிக்குக் கிட்டவாக ஒருத்தன் வந்து சொன்னான் “அவவை விசாரிச்சு முடிஞ்சுது. கூட்டிக்கொண்டு போங்கோ. சந்தோசம்தானே” என்று .சித்தி உள்ளுக்கிருந்து வாறா. அது சித்தி மாதிரியேயிருக்கவில்லை. அவகுனிஞ்ச தலை நிமிருறா இல்லை. தலை ஒழுங்கில்லாமல் கிடக்குது. முகம் காய்ந்து போய்கிடக்குது. ஒரு கதையுமில்லாமல் வெளியில வந்தம். வாசலில வைச்சு அம்மா கேட்டா “என்னடி ஏதும் பிரச்சனையே…” .சித்தி இல்லையென்று தலையாட்டினா. எனக்கு சித்தியைப் பார்க்க அந்தரமாயிருக்குது. அவவும் என்னைப் பார்க்கிறா இல்லை.

அதுக்குப் பிறகு அவ பள்ளிக்கூடம் போகயில்லை. நான் தனியாக போய் வந்தன். சித்திக்கு இஞ்சயிருக்கப் பிடிக்கயில்லை. ஒரு நாள்க்கூட இஞ்ச இருக்கமாட்டன் என்றா. அடுத்தகிழமை சித்தியைக் கூட்டிக்கொண்டு அப்பா கொழும்பு போனார். சிவம் மாமாதான் ஏஜென்ஸி. கொஞ்ச நாளில கனடாவில இருந்து ரெலிபோன் பண்ணி, என்னைக் கொஞ்சினா.

சித்தி கனடாவில இருக்கேக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரெலிபோன் எடுப்பா. ஒவ்வொரு முறையும் கதைச்சு முடியேக்க கொஞ்சுவா. நானிப்ப இளந்தாரியென்றாலும் கொஞ்சுறதை நிற்பாட்டயில்லை.

அவ பதினைஞ்சு வருசம் கழிஞ்சு யாழ்ப்பாணம் வரும் போதும் அவவில பெரிய வித்தியாசம் இருக்கிற மாதிரி எனக்குப் படயில்லை. அப்படியேதானிருந்தா. அவவின்ர கண் நல்ல வடிவு. அது முகலுக்கை இன்னும் கூட்டிச்சுது. அந்த லுக்கை கனடா இன்னும் கூட்டியிருக்கிற மாதிரி எனக்குப்பட்டது. சித்தியை வரவேற்க சொந்தம், பந்தமென்று முப்பது சொச்சப் பேர் கூடியிருந்த இடத்தில என்னைப் பப்ளிக்காகக் கொஞ்சினா. நான் நெளிஞ்சன்.

இஞ்ச வந்ததுக்குப் பிறகுதான் இந்த கலியாண ஏற்பாடு அவவுக்கு தெரியும். அவவுக்கு கோபம் வந்திட்டுது. பெரியசத்தம் போட்டு பேசினா. கலியாண கதையே எடுக்க வேண்டாம் என்றா. இப்பிடி தெரிஞ்சிருந்தால் கனடாவில இருந்து வந்திருக்க மாட்டன் என்றா. அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அப்ப இனி சாத்திரி தேவையில்லை. அந்த வெறிக்குட்டியை பருத்தித்துறை றோட்டில நான் உருட்டி எடுக்கிறது மாதிரியான ஒரு சீனை இந்தக் கிழமை நீங்கள் கட்டாயம் வைக்க வேணும்.

நானும் சித்தியும் தான் யாழ்ப்பாணம் சுத்திப்பார்த்தம். யாழ்ப்பாணத்தில் மினக்கெட்டு பார்க்கிறதுக்கு அப்பிடிப் பெரிய புதினமாக ஒன்றுமிருப்பது மாதிரி எனக்கு தெரியவில்லை. சித்திதான் ஒருநாளைக்கு கசூரினா பீச்என்டுவா, மற்ற நாள் நிலாவரைக் கிணறு என்டுவா, பிறகொருநாள் நல்லூர் கோயில், சுப்ரமணியம் பூங்கா, கோட்டை என்டுவா. அனேகமாக இரண்டு பேரும் யாழ்ப்பாணத்தை சல்லடை போட்டம். சித்தி நல்ல மொடேன் ரைப் பொம்பிளைதானே. அவவோட போறதில எனக்கும் பெரிய சந்தோசம்.

இப்பிடித்தான் ஒருநாள் யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்த்திட்டு ரவுணுக்கு வந்து ஸ்ரான்லி றோட்டால நடந்து வந்து கொண்டிருக்கிறம். யாழ்ப்பாணக் கோட்டையை இடிச்சது சரியோ பிழையோ என்று இரண்டு பேரும் ஆர்க்கியூ பண்ணிக் கொண்டுவாறம். முன்னால ஒரு சலசலப்பு. ஆறேழு ஆம்பிளையள் ஒரு குழுவாக வந்து கொண்டிருக்கினம். கிழக்கு சொந்தங்களிற்கான வெள்ளநிவாரணம் என்றெழுதிய பனரை ஒருத்தன் பிடிச்சுக் கொண்டு முன்னுக்கு வாறான். அந்த கூட்டத்தில சிலர் பெரிய தாடி, மீசையோட வருகினம். சித்தி பல்லை நெருமிப் போட்டுச் சொன்னா – “சனியனுகள் இன்னும் திருந்தயில்லை”. பிறகு சொன்னா – “இவங்களுக்கு ஒரு சதமும் குடுக்கக்கூடாது. நீ பேசாமல் வா. நான் கதைக்கிறன்” என்று.

எனக்கென்றால் ஒன்றும் விளங்கவில்லை. இவங்கள் ஆர், ஏன் சித்தி பல்லை நெறுமினா என்று யோசிக்கிறன். ஒரு வேளை இந்த கோஷ்டி கனடாவிலயும் காசு சேர்த்துக்கொண்டு ஓடிவந்திட்டுதோ. அந்த முகங்களை பார்க்க, யாழ்ப்பாணத்து கிராமப்புறங்களை விட்டு வெளியில வராத முகங்கள் மாதிரியிருக்குது. பார்த்த உடனேயே சித்தி என்ன அடையாளத்தில ஆர் என்று பிடிச்சா என்று மண்டை குழம்பத் தொடங்கிவிட்டது. எதுக்கும் ஏன் சோலியை என்று விட்டு சித்திக்குப் பின்னால போனன்.

முன்னுக்கு வந்தவன் வலு கிளீனாக சிரிச்சான். சில மூஞ்சையளுக்குத் தான் சிரிப்பு பொருந்தும். கருணாநிதி மாஸ்ரருக்கு, எங்கட பெரியப்பருக்கு, தமிழ்ச்செல்வனுக்கு என்று எனக்கு தெரிஞ்ச சில சிரிச்ச முகங்கள் இருக்குது. இவனின்ர சிரிப்பும் நல்லாத்தான் இருக்குது. அன்ரி பல்லை நெருமுறதோ திட்டுறதோ அவசியமில்லாதது என்றும் யோசிக்க தொடங்கினன்.

“வணக்கம் அக்கா” என்றான் இன்னும் சிரிச்சபடி

“ம்…”

“நாங்கள் கிழக்கு வாழ் சொந்தங்களுக்கு உதவ வெள்ள நிவாரணம் சேர்க்கிறம். உங்களால முடிஞ்சதை செய்யுங்கோ…”

சித்தி வலு நிதானமாக அந்த குழுவினரின் முகங்களை பார்த்தா. பிறகு சொன்னா – “அப்பிடி உதவுற அளவுக்கு என்னட்ட வசதியில்லை…”

“என்னக்கா இப்பிடிச் சொல்லுறியள்… பாக்க வெளிநாட்டுக்காரர் மாதிரி இருக்கிறியள்…”

“ஓ… வெளிநாடுதான் தம்பி. அது என்ர பிரச்சனை. ஆனால் கண்ட காவாலியளிட்டயெல்லாம் காசு குடுக்கிற அளவில நானில்லை…”

அவனின்ர முகம் கறுத்ததை நான் பார்த்தன். இப்ப எங்கட நாடு கெட்டுப் போய்கிடக்குது. உடம்பின்ர ஏதாவது ஒரு பகுதிக்குள்ளாயிருந்து பிஸ்டலை எடுத்து வெடி வைக்கிறானோ என்றும் பார்த்தன். சித்திக்கு ஏன் தேவையில்லாத கதை. குடுக்கிறதென்றால் நூறு ரூபாவை குடுத்திட்டு வாறது. இல்லையெண்டால்இ கஸ்ரமென்டிட்டு வாறது. இதென்ன கஸ்ரகாலமென்று நான் நினைக்க அவன் முகத்தை பழையபடி சிரிப்புக்கு கொண்டுவந்திட்டு சொன்னான்.

“இஞ்ச பாருங்கோ அக்கா… உங்களைமாதிரித்தான் கனதமிழ் ஆக்கள் நினைக்கினம். ஆனால் நாங்கள் அப்பிடியான ஆக்கள் இல்லை. நாங்கள் ஜனநாயக வழிக்கு திரும்பினதே உங்களுக்காகத்தான். நாங்கள் காசை கொள்ளையடிச்சு என்ன செய்ய போறம்?… எங்கிட தலைவரைப் பாருங்கோ… அவர் கலியாணமே கட்டயில்லை. தனக்கொரு வாரிசையே உருவாக்காமல் இருக்கிறார்…” என்று நீளமாக கதைச்சுக் கொண்டிருந்தவனை சித்தி இடைவெட்டி நிற்பாட்டினா.

“தம்பி நீ நட” என என்னை முன்னுக்கு நடக்கச் சொன்னா. சரி. ஏதோ பிரகண்டம் நடக்கப் போகுது. அதை நான் கேட்கக் கூடாது என்று அவநினைக்கிறா என்றது விளங்குது. அந்த இடத்திலிருந்து போவது போல பாவனை பண்ணி மிக மெதுவாக நடந்தன். என்னுடைய கேட்கும் சக்தி முழுவதும் சித்தியின்ர பக்கம் குவிஞ்சிருக்குது.

அவவின்ர குரல் வலு நிதானமாக பின்னுக்கு கேட்டுது – “உன்ர தலைவனின்ர சீத்துவம் எனக்குத் தெரியும்… நான் அபோர்சன் செய்திருக்காட்டில் என்ர வயித்திலையும் உன்ர தலைவனின்ர பிள்ளை வளர்ந்திருக்கும்…

http://yokarnan.blogspot.com/2011/05/blog-post_3546.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்பிற்கு நன்றி சாந்தி அக்கா, எம் இன கயவர்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கு யாழில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்!

Link to comment
Share on other sites

இக்கதையானது யோ.கர்ணனின் இன்னொரு வித்தியாசமான கதை. தாடிக்காரர் செய்த அரசியல் பற்றிய கருத்தோடு இக்கதை எழுதப்பட்டுள்ளது ஐயர் என்றழைக்கப்பட்ட ஒரு முன்னாள் விடுதலைப்போராளியின் காலங்களோடு தாடிக்காரரின் அநியாயம் இன்றைய அரசியல் பற்றியும் இக்கதை பதிவிட்டிருக்கிறது.

இதுல எது கதை? எது நிஜம்?

தாடிக்காரரோட அநியாயம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.. ஆனா அந்த முன்னாள்போராளி ஐயர் எங்கிறவரும் & அவரை காதலித்தவர் என்ற பேர்ல , சீரழிக்கப்பட்ட , அந்த பொண்ணு இருவருமே பாத்திரப்படைப்புத்தானா?

இந்தக் கதைக்கு யாழில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம்!

ஆமாமா,வரவேற்பு நெறையவே கெடைக்கும்!

இந்த கதைகளில் உள்ள உங்க ,ஆர்வகோளாறு புரிந்து கொள்ளப்படக்கூடியதாகவே உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதைகளில் உள்ள உங்க ,ஆர்வகோளாறு புரிந்து கொள்ளப்படக்கூடியதாகவே உள்ளது!

இப்படியான கதைகளில் ஆர்வம் உள்ளது உண்மைதான். அதை ஆர்வக்கோளாறாகப் புரிந்துகொள்ளும் உங்களையும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது <_<

Link to comment
Share on other sites

இக்கதையானது யோ.கர்ணனின் இன்னொரு வித்தியாசமான கதை. தாடிக்காரர் செய்த அரசியல் பற்றிய கருத்தோடு இக்கதை எழுதப்பட்டுள்ளது ஐயர் என்றழைக்கப்பட்ட ஒரு முன்னாள் விடுதலைப்போராளியின் காலங்களோடு தாடிக்காரரின் அநியாயம் இன்றைய அரசியல் பற்றியும் இக்கதை பதிவிட்டிருக்கிறது.

இதுல எது கதை? எது நிஜம்?

தாடிக்காரரோட அநியாயம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.. ஆனா அந்த முன்னாள்போராளி ஐயர் எங்கிறவரும் & அவரை காதலித்தவர் என்ற பேர்ல , சீரழிக்கப்பட்ட , அந்த பொண்ணு இருவருமே பாத்திரப்படைப்புத்தானா?

ஆமாமா,வரவேற்பு நெறையவே கெடைக்கும்!

இந்த கதைகளில் உள்ள உங்க ,ஆர்வகோளாறு புரிந்து கொள்ளப்படக்கூடியதாகவே உள்ளது!

இல்லை உண்மைச் சமபவம்( ஜயர் எனபவர் தற்ப்போது ப்ரான்ஸில் இருக்கிறார்.)

Link to comment
Share on other sites

ஐயன் சுட்டது. ஐயன் குண்டடிச்சது, ஐயன் வெட்டியது என்று வெகுகாலம் நீடித்து வந்த கதை ஒருநாள் ஐயன் விலத்தி வெளிநாட்டுக்குப் போச்சுது என்றதோட முடிஞ்சுது.

ஜயன் வெளியேறி வெளிநாடுவந்துவிட்டார், சுருளி எதிர்பாரதவிதமாக இந்தியாஆமியை சந்தித்து சுடப்ப்ட்டார். குணபால் சிலதவறுகளுக்கு தண்டிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளாது புலிகள் அமைப்பை விட்டு வெளியேறி தற்ப்போது சிங்கள இரானுவத்துடன் இருப்பதாக கேள்வி..............

Link to comment
Share on other sites

ஜயன் வெளியேறி வெளிநாடுவந்துவிட்டார், சுருளி எதிர்பாரதவிதமாக இந்தியாஆமியை சந்தித்து சுடப்ப்ட்டார். குணபால் சிலதவறுகளுக்கு தண்டிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளாது புலிகள் அமைப்பை விட்டு வெளியேறி தற்ப்போது சிங்கள இரானுவத்துடன் இருப்பதாக கேள்வி..............

ஜயன் இப்பொழுது பிரான்சில் இல்லை .குணபாலன் அரபு நாடு ஒன்றிற்கு போனதாக தகவல்.

Link to comment
Share on other sites

இல்லை உண்மைச் சமபவம்( ஜயர் எனபவர் தற்ப்போது ப்ரான்ஸில் இருக்கிறார்.)

தகவலுக்கு நன்றி சசி!

Link to comment
Share on other sites

ஜயன் இப்பொழுது பிரான்சில் இல்லை .குணபாலன் அரபு நாடு ஒன்றிற்கு போனதாக தகவல்.

இது வேறையா?

உயிர்ரோட வாழ்ந்துகிட்டு இருக்குற , அந்த ஐயன் போராளி பத்தி "வித்தியாசமாக கதை" எழுத அவர் அனுமதி பெற்றீர்களா.. யோ(வ்) கர்ணன்?

Link to comment
Share on other sites

ஜயன் இப்பொழுது பிரான்சில் இல்லை .குணபாலன் அரபு நாடு ஒன்றிற்கு போனதாக தகவல்.

இருக்கலாம் சாத்திரி அண்ணை. ஜயனுக்கு ப்ரன்ஸ் அரசு விசா கொடுக்காத்துக்கு ஜயனை பற்றிய தகவல்கள் தான் காரனம் என்றார்கள்( விசாகொடுத்தார்களோ டெஹ்ரியா)

இது வேறையா?

உயிர்ரோட வாழ்ந்துகிட்டு இருக்குற , அந்த ஐயன் போராளி பத்தி "வித்தியாசமாக கதை" எழுத அவர் அனுமதி பெற்றீர்களா.. யோ(வ்) கர்ணன்?

கரவட்டியில் இந்தியன் ஆர்மி காலத்து சண்டைகளை பற்றி எழுதும் போதும் சரி சில இளைஞர்களை இந்திட இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய குழுக்களின் அட்டகாசத்தை பற்றி எழுதும் போது அதில் ஜயனை பற்றி ஏதவது எழுதவேண்டியவரும்......

ஜயன் இயக்கத்தில் இருக்கும் போது 14 15 16 வயது பெடியங்களுக்கும் பிரச்சனை ஆரம்பித்து விட்டது ஏன் எனில் ஜயனை பார்த்தால் அப்படி தான் ஒல்லியாக இருப்பார்,

மேலே எஸ் எல் ஆர் எடுத்த கதை போல பல காதைகள் ஜயனை பற்றி இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.