Jump to content

"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை" - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை"

நிலாந்தன்

நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. 'பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் இன்னும் நூலாக்கப்படாமலேயே உள்ளன. துரதிஸ்டவசமாக தனது பெருமளவான படைப்புக்களை யுத்த இடப்பெயர்வுகளின்போது இழந்துவிட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டம் தொடர்பில் நேர்மறை என்ற இருதுருவங்களாக உருவாகியுள்ள அணிகள் மத்தியகு களப்பணியாளர்களில் ஒருவர். தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் சமாந்தரப்பயணிகளில் ஒருவர். அந்தப் போராட்டத்தின் எழுச்சி, வீழ்ச்சி, அதற்கான பின்னனி, தமிழ்தேசியம், அதன் அவசிய திருத்தங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார். தற்போது யாழ்ப்பாணத்தில் வசிக்குமிவர், எப்பொழுதும் எதையும் அச்சமின்றி பேசும் சூழல் இலங்கையிலில்லை என்றுணர்வதால் சில கேள்விகளை தவிர்க்குமாறு கேட்டிருந்தார். சில சந்தர்ப்பங்களில் சுய பாதுகாப்பிற்காக, இருண்மையான வார்த்தைகளை உபயோகித்திருக்கிறார்.

கேள்வி : நீங்கள் பல்துறை சார்ந்த ஆளுமை. உங்கள் இளமைக்காலம் பற்றி, குறிப்பாக உங்கள் ஆளுமை உருவாக்கத்தில் அந்தச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றி சொல்லுங்கள்?

interview2-a.jpg

நிலாந்தன் : யுத்தம்தான் என்னை கண்டுபிடித்தது. அல்லது யுத்தத்தை நான் கண்டு பிடித்தேன் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். வீட்டில் யாரும் என்னை கண்டுபிடிக்கவில்லை. பாடசாலையிலும் யாரும் என்னை கண்டுபிடிக்கவில்லை. ஏடு தொடங்கப்பட்ட அன்றே அடிக்கப்பட்டவன் நான். அப்பொழுது எனக்கு மூன்று வயதிருக்கும். எனக்கு ஏடு தொடக்குவதற்காக ஊரிலுள்ள சிறு பாடசாலைக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கிருந்த ஆசிரியர் எனக்கு ஏடு தொடக்க முற்பட்டார். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். நீண்ட நேர முயற்சிக்கு பின் அவர் சலித்து போய் ‘உங்களுடைய பிள்ளைக்கு என்னால் ஏடு தொடக்க முடியாது. நீங்களே கொண்டு போய் ஏட்டை தொடக்குங்கள்' என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். இயலாமையுடனும் அவமானத்துடனும் என்னை வீட்டுக்கு கூட்டி வந்த தகப்பனார் தானே எனக்கு ஏடு தொடக்க முயற்சித்தார். எங்களுடைய வீட்டில் ஒரு சிறு காளி கோயிலுண்டு. அதில் வைத்து எனக்கு ஏடு தொடக்க முயற்சித்தார். அப்பொழுதும் நான் உடன்படவில்லை. நயத்தாலும் பயத்தாலும் முயற்சித்தார்கள். நான் மறுத்துவிட்டேன். பொறுமையிழந்த எனது தந்தை என்னை தாறுமாறாக அடித்துவிட்டு ‘இதோ நான் கொழும்பிற்குப்போகிறேன்' எனக் கூறி தனது பயணப்பையையும் எடுத்து கொண்டு வீட்டை விட்டு போகலானார். அப்பொழுது அவர் கொழும்பில் வேலைபார்த்து கொண்டிருந்தார். அவர் வீட்டு வாசலை கடக்கும் போதுதான் நான் ஏடு தொடக்க சம்மதித்தேன். அப்பொழுது கூட எனது தகப்பனார் ஏடு தொடக்கியதாக ஞாபகமில்லை. நானே எதையோ அரிசியில் எழுதினேன்.

இப்படித்தான் தொடங்கியது எனது கற்றல். இதிலிருந்து தொடங்கி அதிகாரத்திற்கும் தண்டனைகளுக்கும் எற்றுக் கொள்ளப்பட்ட நம்பிக்கைகளுக்கும் ஸ்தாபிக்கப்பட்ட புனிதங்களுக்கும் எதிராக உருவானேன். எல்லாருமே, எல்லாமுமே என்னை, எனது இயல்பிற்கு மாறாக வளைக்கவோ முறிக்கவோ முயற்சிப்பதாகவே எனக்குத்தோன்றியது. இதனால் தொடக்கத்திலிருந்தே ஒரு முரணியாக, ஒத்தோட மறுப்பவனாக, புனிதங்களை இகழ்பவனாக வளரத் தொடங்கினேன். வீட்டிலும் யாரும் என்னைக்கண்டுபிடிக்கவில்லை. பாடசாலையிலும் யாருமென்னைக் கண்டுபிடிக்கவில்லை. யுத்தம்தான் என்னை கண்டுபிடித்தது. எனக்குள்ளிருந்த தீராக்கோபத்திற்கு யுத்தம்தான் ஒரு பொருத்தமான அரங்கத்தை உருவாக்கித்தந்தது. யுத்தம் என்னை செதுக்கியது. மு.திருநாவுக்கரசு. சு. வில்வரத்தினம், மு..பொன்னம்பலம் போன்ற பலரையும் யுத்தம்தான் எனக்கு அறிமுகப்படுத்தியது. இவர்களினூடாகவே அ.யேசுராசாவும்; பத்மநாப ஐயரும் மாற்குவும் ஏனையவர்களும் அறிமுகமானார்கள்.

இவர்கள் எல்லோருமே என்னை ஏதோ ஒரு விதத்தில் செதுக்கினார்கள். யுத்தம் என்னை சனங்களிற்குள் இறக்கியது. அது என்னை சனங்களின் மொழியிலேயே பேசத்தூண்டியது. நான் வழமைகளையும் மரபுகளையும் மீறத்தேவையான துணிச்சலையும் கோட்பாட்டு விளக்கத்தையும் பெற்றேன். இங்கிருந்து உருவானவைகள்தான் எனது பரிசோதனைகள். யுத்தம் எனது வேர்களை அறுத்தது. சதா இடம்பெயர வைத்தது. பாண்டவரை விட பெரிய வனவாசம் எனக்கு. வயதுகளை இழந்து வனங்களிடை திரிந்தேன். கனவுகளை நம்பி யாகக் குதிரைகளைத் தொலைத்தேன். அஞ்ஞானவாசங்கள், வனவாசங்கள் தலைமறைவுக்காலங்கள் உறங்குகாலங்கள் என எழுச்சியும் வீழ்ச்சியும் மாறிமாறி வந்தன. இத்தகைய மறைவுகாலங்கள் உறங்குகாலங்கள் முடியும் போதெல்லாம் எதையாவது எழுதிக்கொண்டோ, எதையாவது சொல்லிக் கொண்டோ எதையாவது வரைந்து கொண்டோ வெளிப்படுவேன். எதைச்சொல்கிறேன், எப்படிச்சொல்கிறேன் என்பதையெல்லாம் குறிப்பிட்ட மறைவுகாலமே தீர்மானிக்கிறது. சிலசமயம் நிறங்களினூடாக வெளிப்படுவேன். சில சமயம் வார்த்தைகளினூடாக வெளிப்படுவேன். சில சமயம் நாடகத்தினூடாக வெளிப்படுவேன். ஆனால் அதற்காக நானொரு கவிஞனோ, ஓவியனோ, காட்டூனிஸ்டோ, ஆய்வாளனோ அல்ல. நான் இன்னமும் செதுக்கி முடிக்கப்படாத ஒரு சிற்பம். அவ்வளவுதான்.

கேள்வி : ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற ஈழக்கவிஞர்களின் தொகுப்பில் இடம்பெற்ற 'கடலம்மா' என்ற கவிதைதான் முதன்முதலில் உங்கள் பற்றிய பரவலான கவனத்தை ஈர்த்தது. ஈழத்தமிழர்களின் பெரும் சோகங்களில் ஒன்றான ‘குமுதினி படகுபடுகொலை’ பற்றிய அந்தக் கவிதையே, அந்தச் சம்பவம் குறித்த அதிக அதிர்வை ஏற்படுத்திய படைப்பாக பரவலாக குறிப்பிடப்படுகிறது. அதை எழுதியதற்கான சூழ்நிலை மற்றும் அந்த நாட்கள் பற்றி சொல்லுங்கள்?

நிலாந்தன் : குமுதினிப்படகில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச்சடங்கில் உதவுவதற்காக தீவுப்பகுதி வர்த்தகர்களிடம் இருந்து பணம் சேர்க்கப்பட்டது. இந்தப் பணத்தில் செலவளிக்கப்பட்டது போக எஞ்சிய மிகுதியை என்ன செய்வது என்று யோசிக்கப்ட்டது. அந்தச் சிறுதொகைக்கு அஞ்சலித்துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதில் மூத்த கவிஞர்களாக சு.வி , மு.பொ போன்றவர்களது கவிதையை போட்டு எஞ்சியிருந்த இடத்தை நிரப்புவதற்காக 'கடலம்மா' போடப்பட்டது. இடத்தை நிரப்ப எழுதப்பட்டதே அது. மு.பொவும், சு.வியும் அதை பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினார்கள். யேசுராசா அதை அலையில் போட்டார். ஐயர் அதை மரணத்தில் வாழ்வோம் தொகுப்பில் போட்டார். ஆனால் இப்பொழுது திரும்பி பார்க்கையில் தெரிகிறது, அந்த எழுத்தின் கடைசி வரிகளில் நம்பிக்கை வலிந்து செருகப்பட்டிருக்கிறது. அது இயல்பாக முடியவில்லை.

கேள்வி : 'மரணத்துள் வாழ்வோம்’ உக்கிரமாய் வலுப்பெற்ற 1980களின் நடுப்பகுதியை பிரதிபலித்த இலக்கிய பிரதி. அந்த தொகுதியில் எழுதிய பல கவிஞர்களுள் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு சிலரைத்தவிர, பலரும் மரணத்துள் வாழ முடியாமல் புலம்பெயர்ந்து போயினர். மரணத்துள் வாழ்ந்து, இறுதிப்போர் வரை யுத்தத்தினுள் வாழ்ந்த உங்களது அனுபவத்தில் மரணத்துள் வாழ்வது என்பது என்னவாய் அர்த்தப்பட்டது? களத்தில் போர் நடக்காத இன்றைய பொழுதில் அதை எவ்வாறு எதிர் கொள்ள முடிகிறது?

நிலாந்தன் : மரணத்தின் ருசி மிகத்தெரிந்த மக்களில் நானுமொருவன் என்பதினால் சொல்கிறேன். வாழ்க்கை மகத்தானது. இன்பமானது. வாழ்ந்து கடக்கப்பட வேண்டியது. எவ்வளவுக்கெவ்வளவு மரணத்தின் ருசி தெரிகிறதோ அவ்வளவிற்கவ்வளவு உயிரின் பெறுமதியும் தெரியவரும். ரொட்ஸ்கி கூறியது போல “ஒரு விடுதலை போராட்டத்திற்காக சாகத்தயாரக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”

கேள்வி : ஈழவிடுதலை போராட்டத்தில் யாழ்ப்பாணத்தை மையமாய்க் கொண்டிருந்த-யாழ்ப்பாணத்தை மையமாய் வைத்து சிந்தித்த தலைமைகளின் தவறுகள் மாற்று அரசியல் தரப்புக்களின் கடும்விமர்சனத்திற்கு உள்ளனவை. போர்நிறுத்த காலத்தில் கூட பிரதேசவாதம் போராட்டத்தில் பாரியதொரு விழ்ச்சிக்கு காரணமாய் அமைந்திருந்தது. இந்த விமர்சனங்கள் குறித்த உங்கள் பார்வை என்ன?

interview2-b.jpg

நிலாந்தன் : ஈழத்தமிழ் ஆயுத போராட்டத்தின் தொடக்கம், அது வளர்த்தெடுக்கப்பட்ட களம், அது வளர்த்தெடுக்கப்பட்ட விதம் மற்றும் அது அதிகம் பிரதிநிதித்துவப்படுத்திய படித்த மத்தியதர வர்க்கம் எது என்பவற்றின் அடிப்படையில் பார்த்தால் யாழ்ப்பாண மைய கண்ணோட்டம் எனப்படுவது தொடக்க காலங்களில் ஒரு சமூக பொருளாதார அரசியல் யதார்த்தம் என்றோ அல்லது அது ஒரு படைத்துறை யதார்த்தம் என்றோதான் கூற வேண்டும்.

படைத்துறை தீர்மானங்களிற்கு கீழ்ப்படிந்தே அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற தலைகீழ் சமன்பாட்டின்படி நிகழ்த்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தில் படைத்துறைப் பெரும் செயல்களை பொறுத்தவரை அதாவது நவீன தமிழ் வீரம் மற்றும் தமிழ் தியாகத்திற்கு மேற்படி யாழ்ப்பாண மைய கண்ணோட்டம் இடைஞ்சலாக இருக்கவில்லை.

ஆனால் ரணில்-பிரபா உடன்படிக்கைக்கு பின் உருவாகிய புதிய சூழ்நிலையில் பிரதேச வேறுபாடுகள் பிரதேச வாதமாக மாறக்கூடிய ஏதுநிலைகளை உய்த்துணர்வதில் போதியளவு தீர்க்கதரிசனம் காட்டப்படவில்லை. அது போலவே பிரதேச வாதமானது ஒரு அருவருப்பான ஆயுத மோதலாக அல்லது சகோதர சண்டையாக வெடித்தெழுவதை தடுப்பதிலும் போதியளவு தீர்க்கதரிசனம் காட்டப்படவில்லை. இதுவே நாலாம் கட்ட ஈழப்போரின் தோல்விக்குரிய பிரதான காரணங்களில் ஒன்றாக மாறியது.

யாழ்ப்பாண மைய கண்ணோட்டம்; அல்லது படைத்துறை தீர்மானங்களிற்கு கீழ்படியும் அரசியல் தீர்மானம்; பிரதேச வேறுபாடுகள் பிரதேச வாதமாக வெடித்து கிளம்பியமை அல்லது பிரதேச வாதத்தை ஆயுதமோதலாக வளர விட்டமை போன்ற எல்லா அம்சங்களும் ஒரே வேரிலிருந்து வெளிக்கிளம்புகின்றன. அது என்னவெனில் தமிழ் தேசியத்தின் போதாமைகளே. அது பற்றி பின்வரும் கேள்வி ஒன்றிற்கு விரிவாக சொல்லப்பட்டுள்ளது

கேள்வி : யாழ்ப்பாண இடப்பெயர்வு உள்ளிட்ட கடந்தகாலத்தின் பல இடப்பெயர்வுகளை உங்கள் படைப்புகள் உச்ச படைப்பெழுச்சியுடன் பதிவு செய்திருக்கின்றன. அவற்றில் மக்களது பாடுகளை, அவர்கள் கொண்ட இழப்பின் துயரங்களை எல்லாம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிந்திருக்கிறது. உங்கள் படைப்புகளில்-அந்த நம்பிக்கை நீங்கள் நம்பிய அரசியலில் இருந்து வந்தது. இறுதிப்போர் உக்கிரமாய் தொடர்ந்த போது கூட உங்களது வரிகள் நினைவிற்கு வந்திருந்தன.

காடே

நல்ல காடே

அவர்களை கைவிடாதே.

கடலே

நல்ல

கடலே

அவர்களை கைவிடாதே

மழை

நீச மழை

எனது மக்களை நெருக்குகிறதே

குற்றமற்ற எனது மக்கள்

துக்கத்தால்

சித்தப்பிரமை பிடித்தவர்

போலாயினரே

வனப்பெலா மிழந்து

விதவைகள் போலவே

மண்நகரின் தாழ்வாரத்தில்

மழையில் நனைந்து நனைந்து…

இப்படியான பாதிப்பூட்டும் பதிவுகள் வன்னி மான்மியத்தில் குறிப்பாக மண்பட்டினங்கள் போன்ற கவிதைகளில் இருந்தன. ஆனால் காடும் கடலும் சகலதரப்புக்களும் கைவிட்டு முள்ளிவாய்க்காலுக்குள் வந்தடங்கிய மக்களின் இடப்பெயர்வு, இறுதிப்போர் மற்றும் அதன் முடிவு- இவ்வாறான ஒரு மனித அழிவை கண்ட உங்களால் - உங்கள் படைப்புக்களாய் அந்த அனுபவத்தை எவ்வாறு எதிர்கொள்ள முடிகிறது? முக்கியமாக நீங்கள் நம்பிய ஒரு அரசியலின் வீழ்ச்சியின் பிற்பாடு? எதிர்காலம் குறித்த உங்கள் நம்பிக்கைகள் எதுவும் புலப்படாத காலத்தில்?

நிலாந்தன் : நாம் நம்பிய அரசியல் வீழ்ச்சியுற்றதாக யார் சொன்னது? நாம் நம்பிய அரசியல் என்று நீங்கள் கருதுவது எதனை? எல்லா படைத்துறை தோல்விகளும் அரசியல் தோல்விகளாகிவிடுவதில்லை. எல்லா பிரச்சனைகளிற்கும் யுத்தகளமே இறுதி தீர்வாக அமைந்து விடுவதுமில்லை. ஆயுதபோராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக உருவாகிவரும் புதிய பிராந்திய மற்றும் சர்வதேச சூழலானது தமிழர்களிற்கு பிரகாசமான வாய்ப்புகளை திறந்து வைத்திருக்கிறது. வீரத்தை தூக்கியது ஒரு காலம், அது ஒரு வீரயுகம். அது முடிந்து விட்டது. இனி அறிவை தூக்க வேண்டும். இனி அறிவுதான் ஆயுதம். அறிவுதான் சக்தி. அறிவுதான் பலம். புத்திமானே பலவான்.

கேள்வி : யாழ் சமூகத்தின் சாதிய அதிகார கட்டுமானங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தினால் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வர முடிந்தது என்ற நம்பிக்கையை வைத்திருக்க கூடியதாக உள்ளதா இன்றைய சூழல்?

நிலாந்தன் : சுமார் முப்பத்தெட்டு ஆண்டுகால ஆயுத போராட்டமானது ஆயிரம் ஆண்டுகால சாதியின் வேர்களை எப்படி அதிரடியாக அறுக்க முடியும்? ஆனால் சாதி மைய சிந்தனைகளில் அது திரும்பிச் செல்லவியலாத அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கேள்வி : உங்களது பிள்ளையார் ஒவியங்களை பார்த்திருக்கிறேன். உங்களது ஓவியங்களது கருப்பொருளாக பிள்ளையார் வந்தது எப்படி அமைந்தது? அவரை வரைதலிலும் போரின் தாக்கம் இருக்கிறதா? அல்லது யுத்தப்பிண்ணனி மனநிலையிலிருந்து விடுபட விரும்பும் மனதின் குறியீடாக இருந்தாரா பிள்ளையார்?

நிலாந்தன் : எனது பிள்ளையார் ஓவியங்கள் அனைத்தும் போர் ஓவியங்களே.

கேள்வி : உங்களது ஓவிய முயற்சிகள் தற்பயிற்சியில் வந்தவை என்று கூறியிருக்கிறீர்கள். ஓவியத்தின் மீதான ஈர்ப்பிற்கு மாற்கு மாஸ்டர் போன்றவர்களின் காலம் காரணமாய் அமைந்ததா?

நிலாந்தன் : என்னுடைய தாத்தா நன்றாக படம் வரைவார். அவரிடம் இருந்து பெற்றதே இது. பாடசாலையில் அ.ராசையாவிடம் தனியே சில ஆண்டுகள் ஒவியம் பயின்றேன். அப்பொழுது எனது வகுப்பில் நான் ஒருவன்தான் ஒவியத்தை ஒரு பாடமாக எடுத்திருந்தேன். பின்னாளில் யேசுராசாவினூடாக மாற்குவிடம் நெருக்கம் எற்பட்டது. நான் அவரது மாணவன் அல்ல. ஆனால் என்னை செதுக்கியவர்களில் அவரும் ஒருவர்.

கேள்வி : உங்களது ஒவியங்கள் இப்போது கைவசம் இருக்கின்றனவா?

நிலாந்தன் : அனேகமாக இல்லை. இருபத்திமூன்று தடவைகளிற்கு மேல் இடம்பெயர்ந்துள்ளேன். இந்த இடப்பெயர்வுகளின் போது எனது படைப்புக்கள் எதனையுமே நான் எடுத்து வரவில்லை.

கேள்வி : உங்களை பாதித்த பாதிக்கிற ஒவியர்களை பற்றி?

நிலாந்தன் : நிறங்கள் வடிவங்களினூடாக நிறங்கடந்த வடிவங்கடந்த அனுபவங்களை பகிரும் எல்லா ஓவியர்களையும் எனக்கு பிடிக்கும்.

கேள்வி : முகாமிலிருந்து வெளியே வந்ததும் உங்களை போன்றவர்கள் எழுதிய கருத்துக்கள் தமிழ்தேசிய மனநிலையால் எடுத்து கொள்ளப்பட்ட விதத்தை எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? குறிப்பாக யுத்தத்தின் சாட்சிகள் எவ்வித பரிசீலனையுமின்றி துரோகிகள் ஆக்கப்பட்டமை. மற்றது துரதிஸ்டவசவமாக அத்தகையதொரு மனநிலையே நீங்கள் நம்பிய தேசியவாத கலாச்சாரத்தின் கூறு என்கிற போது?

interview2-c.jpg

நிலாந்தன் : முதலாவதாக ஒன்றைச்சொல்ல வேண்டும். விமர்சனங்கள் வரட்டும். அவை அறிவு பூர்வமானவையோ இல்லையோ ஆக்கபூர்வமானவையோ இல்லையோ முதலில் அபிப்பிராயங்கள் வரட்டும். ஏனெனில் மாறுபட்ட அபிப்ராயங்களும் அவற்றின் மீதான விமர்சனங்களுமே அரசியலின் அடித்தளத்தை அறிவுபூர்வமானதாக மாற்றும். மாறுபாடுகளே பன்மைத்துவத்தின் அடித்தளம். பன்மைத்துவமே ஜனநாயகத்தின் அடித்தளம். எனவே ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்மையான அக ஜனநாயகத்தை உருவாக்க விமர்சனங்கள் வரட்டும்.

இரண்டாவது - நீங்கள் குறிப்பிடும் தமிழ்த்தேசிய மனோநிலை பற்றியது. உண்மையில் அது ஒரு தேசிய மனோநிலையல்ல. அது ஒரு கறுப்பு வெள்ளை மனோநிலை. ஒரு சராசரி தமிழ் மனம் தனது பக்தி இரத்தத்திலிருந்து பெற்ற கறுப்பு வெள்ளை சிந்தனா முறையது. பக்தி இரத்தமானது எதையுமே தேவர்-அசுரர், கதாநாயகன்-வில்லன், தியாகி-துரோகி என்று வகிடு பிரித்து பார்க்கவே முயலும்; அது எதையுமே இந்த அளவுகோல்களிற்கு தோதாக தட்டையாக்கியே பார்க்கும். இந்த கறுப்பு வெள்ளை சிந்தனை முறையைதான் பலரும் தேசிய உணர்வாக மாறாட்டம் செய்கிறார்கள். இல்லை. இது ஒரு தேசிய மனோநிலையே அல்ல. நாங்கள் என்றைக்குமே இதை நம்பியதும் இல்லை. எங்களுடைய இந்த நிலைப்பாடு விடுதலை புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்திற்கு நன்கு தெரியும். வன்னியிலிருந்த எதையும் புத்திபூர்வமாக அணுகும் எவருக்கும் இது தெரியும்.

ஆயின் உண்மையான தேசிய மனோநிலையென்றால் என்ன? இதை இன்னும் ஆழமாக பார்க்க வேண்டும்.

கேள்வி : தேசியம் என்றால் என்ன?

நிலாந்தன் : நான் விக்கிபீடியாவின் வரைவிலக்கணங்களின் உள்ளேயோ அல்லது அரசறிவியல் கோட்பாடுகளின் உள்ளேயோ அதிகம் நுழைய விரும்பவில்லை. பதிலாக தேசியத்தை அதன் பிரயோக வடிவத்திலேயே வியாக்கியானம் செய்யவும் வரைவிலக்கணம் செய்யவும் விளைகிறேன். அதாவது தூய தேசியத்தை பற்றியல்ல. மாறாக பிரயோக தேசியத்தைப்பற்றியே நான் கதைக்க முற்படுகிறேன்.

தேசியம் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் ஒரு மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை ஆகும்.

அது இனப்பிரக்ஞையாகவோ மொழிப்பிரக்ஞையாகவோ மதப்பிரக்ஞையாகவோ அல்லது பிராந்திய பிரக்ஞையாகவோ அல்லது வேறெந்த பிரக்ஞையாகவோ கூட இருக்கலாம். முக்கியமாக அது வேர் நிலையில் முற்போக்கானதாகவே இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால் அந்த பிரக்ஞையை நெறிப்படுத்தி தலைமை தாங்கும் அரசியல் இயக்கம் அல்லது கட்சி அதை முற்போக்கானதாக பண்பு மாற்றம் செய்ய வேண்டும்.

உதாரணமாக, தனது வேரில் இனவெறியாக அல்லது மதவெறியாக அல்லது பிராந்திய வெறியாக அல்லது மொழி வெறியாக உருவாகும் ஒரு அடி நிலை தேசிய உணர்வை அதாவது கீழிருந்து மேலெழும் அந்த கூட்டு பிரக்ஞையை மேலிருந்து கீழிறக்கப்படும் ஜனநாயகத்தின் மூலம் ஒளிபாய்ச்சி புதிய ஊட்டச்சத்தை இறக்கி அதில் இருக்ககூடிய வேர்நிலை நோய்க்கூறான அம்சங்களை மெல்லமெல்ல இருள் நீக்கம் செய்ய வேண்டும்.

அதாவது மேற்கத்தைய ஆய்வாளர்கள் கூறுவது போல “தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும்.”

அத்தகைய ஒரு தேசியம்தான் எப்பொழுதும் சர்வதேசியமாக விரியும் தன்மையுடையதாக காணப்படும். இல்லையெனில் அது தனக்குள் உட்சுருங்கும் குறுந்தேசியமாக இறுகிக்கட்டி பத்திவிடும்.

இதெல்லாம், குறித்த தேசிய பிரக்ஞைக்கு தலைமை தாங்கும் அமைப்பின் மனவிரிவில்தான் தங்கியுள்ளது. வெளிவிரியும் தேசியம்தான் எப்பொழுதும் சமயோசிதமான வெளியுறவு கொள்கைகளை கொண்டிருக்கும். மாறாக உட்சுருங்கும் தேசியமானது, கையாளப்பட வேண்டிய தரப்புக்களை எல்லாம் பகை நிலைக்குத்தள்ளி ஒரு கட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிடும்;. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து நீங்கள் கேட்ட கேள்விக்குரிய விடையை கண்டுபிடிக்கலாம்.

கேள்வி : இறுதிப்போரின் தோல்வி-விடுதலைப்புலிகளின் வீழ்ச்சி புலத்திலும் பலரை பாதித்தது. புலிகள் மீது விமர்சனங்களை கொண்டிருந்தவர்கள் உட்பட. இவை இந்த போராட்டத்தில் தமது வாழ்வின் ஏதோ ஒரு பகுதியை, இளமையை, நண்பர்களை, உறவுகளை இழந்தவர்களது தாக்கமாக இருந்தது. கிட்டத்தட்ட உங்கள் வாழ்வின் பெரும்பகுதியையே போருக்குள் செலவழித்த உங்களது தலைமுறை இந்த தோல்வியை- உங்கள் கண்முன் நிகழ்ந்த மனித அழிவை அதன் தாக்கத்தை எப்படி எடுத்து கொண்டீர்கள்? அதிலிருந்து மீளல் இந்த சமூகத்தில் சாத்தியப்படுகிறதா?

நிலாந்தன் : மரணத்துள் மெய்யாகவே வாழ்ந்த எவருக்கும், மரணத்தின் ருசி மிகத்தெரிந்த எவருக்கும் மரணம் ஒரு முடிவல்ல எனத்தெரியும்.

வரலாற்று பிரக்ஞை அல்லது வரலாற்ற உணர்வு எனப்படுவது மரணத்தை ஒரு முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ள மறுப்பதிலிருந்தே முகிழ்ந்தெழுகிறது. மரணத்தை ஒரு முடிவாக ஏற்றுக் கொண்டால் வரலாறு எனப்படுவது வெறுமனே நாயகர்கள் அல்லது தலைநகரங்களின் பெயர்ப்பட்டியலாக சுருங்கி போய்விடும்.

எனவே வரலாற்று பிரக்ஞை உடைய எந்த ஈழத்தமிழரும் நந்திக்கடலை ஒரு முடிவாக அல்லது நந்திக்கடலோடு ஈழத்தமிழர்களின் வரலாறு உறைந்து போய் விட்டதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பதிலாக அதை அவர்கள் ஒரு யுக மாற்றமாகவே பார்ப்பார்கள்.

நந்திக்கடலின் பின் ஈழத்தமிழ் அரசியலில் நான்கு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலாவது, இந்தியாவிற்கும் ஈழத்தமிழ் அரசியலிற்குமிடையிலிருந்த சட்டப்பூட்டு திறக்கப்பட்டு விட்டது.

இரண்டாவது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஈழத்தமிழர்களை நோக்கி அதிகம் நெருங்கி வருகின்றன.

மூன்றாவது, பிராந்திய இழுவிசைகளிற்கிடையில் சிக்கியே ஈழப்போராட்டம் சின்னாபின்னமாகியது. இப்பொழுது ஈழப்போராட்டம் இல்லாத வெற்றிடத்தில் இரு பிராந்திய பேரரசுளிற்குமிடையிலான இழுவிசைக்குள் கொழும்பு சிக்கியிருக்கிறது.

நாலாவது, ஈழத்தமிழர்களின் அரசியலானது ஒரு புதிய பன்மைத்துவத்தை நோக்கி அதாவது அக ஜனநாயகத்தை நோக்கி செல்ல தேவையான கதவுகள் போதியளவு திறக்கப்பட்டு விட்டன.

எனவே தமிழர்கள் உள்ளேயும் வெளியேயும் தங்களுடைய புதிய பலங்களை ஒருங்கு திரட்ட வேண்டிய ஒரு காலகட்டம் இது. இத்தருணத்தில் ஒரு பழைய யுகத்தின் புதைமேட்டில் குந்தியிருந்து இறந்த காலத்தை மம்மியாக்கம் (mummfy) செய்யவதை கைவிட்டு, வரலாற்று பிரக்ஞை மிக்க எல்லா ஈழத்தமிழர்களும் இறந்த காலத்திலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு புதிய யுகத்தின் புதிய பாடுபொருளை தேடத்தொடங்க வேண்டும்.

கேள்வி : ஆரம்ப கட்டத்தில் இடதுசாரி சிந்தனைகளின், தலைவர்களின், நாடுகளின் தாக்கம் பெரும்பாலான இயக்கங்களில் இருந்திருக்கிறது. புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றன இதில் முதன்மையானதாக இருப்பினும், புளொட் அதிதீவிரமாக இருந்ததென நினைக்கிறேன். வர்க்க விடுதலையின் வழியேதான் தேசியவிடுதலை சாத்தியமென்ற பார்வை அவர்களிற்கிருந்தது. இப்படியான தத்துவார்த்த சிக்கலெதுவும் புலிகளிற்குள் அதிகமிருக்கவில்லை. இந்த தன்மைதான் புலிகளை நீண்டகாலம் தாக்குபிடிக்க வைத்ததென சொல்லலாமா? பிற இயக்கங்களிலிருந்து புலிகள் வேறுபட்ட இடங்களெவை?

interview2-d.jpg

நிலாந்தன் : இலங்கைத்தீவில் வர்க்க முரண்பாட்டை விடவும் இனமுரண்பாடே மேலோங்கி நிற்கிறது. இத்தகைய ஓர் அரசியல்களத்தில் இனச்சாய்வுடைய ஓர் அமைப்போ கட்சியோதான் பெருந்திரள் வெகுசன அரசியலுக்குத்தலைமை தாங்க முடியும். மாறாக வர்க்க முரண்பாட்டை மையப்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் சிறுதிரள் இலட்சியவாதிகளின் மாற்று அரசியலைதான் முன்னெடுக்கலாம். இது தமிழ் மார்க்சியர்களிற்கும் பொருந்தும்; சிங்கள மார்க்சியர்களிற்கும் பொருந்தும்.

எனவே வர்க்க முரண்பாட்டை முதன்மைபடுத்தியது போல தோன்றிய இயக்கங்கள் ஒரு கட்டத்தில் இனமுரண்பாட்டை மையப்படுத்த தொடங்கின. சில இயக்கங்கள் ஈரூடக தன்மையுடன் காணப்பட்டன.

ஆனால் புலிகளிடம் இத்தகைய குழப்பங்கள் ஏதும் இருக்கவில்லை. அவர்கள் கோட்பாட்டு விளக்கங்களில் அதிகம் இறங்கியதில்லை. அதற்கு அவர்களிற்கு கால அவகாசமும் இருக்கவில்லை. அது ஒரு ‘அக்சன் ஓரியன்டட்’ இயக்கம். அவர்களுடையது ஒரு செயல் மைய அரசியல். செயல்படாது சித்தாந்த விவாதங்களில் ஈடுபட்டவர்களை விடுதலைப்புலிகள் சாகப்பயந்தவர்கள் என்றோ கதைகாரர் என்றோ இகழ்ந்தார்கள். செயலுக்கு போகாத அறிவை அவர்கள் சாக பயந்த கோழைகளின் அறிவென்று கூறி நிராகரித்தார்கள். நவீன தமிழ் வீரத்தையும் தமிழ் தியாகத்தையும் விடுதலைப்புலிகளே அதன் உச்சத்திற்கு இட்டு சென்றார்கள். அதே சமயம் தமிழ் வீரமும் தமிழ் அறிவும் ஒன்று மற்றதை இட்டு நிரப்பும் அரசியல் பொறிமுறை ஒன்றை உருவாக்க அவர்களால் முடியாது போய்விட்டது.

தமிழில் இது ஒரு சோகமான பாரதூரமான இடைவெளி. அதாவது கோட்பாட்டாளர்களிற்கும் செயற்பாட்டாளர்களிற்குமிடையில் காணப்பட்ட இடைவெளி. கோட்பாட்டாளர்களால் செயலிற்கு போக முடியவில்லை. செயற்பட்டவர்களிற்கு கோட்பாட்டு ஆழங்களிற்குள் இறங்க அவகாசம் இருக்கவில்லை. இந்த இரு வேறு ஒழுக்கங்களிற்கிடையிலான துரதிஸ்டமான இடைவெளி இன்று வரை தொடர்கிறது. சுமார் மூன்று இலட்சம் உயிர்களை கொடுத்த பின்னும் தொடர்கிறது. இதை வியட்நாமிய புரட்சியின் உதாரணத்திற்கு ஊடாக சொன்னால், தமிழில் கோசிமினும் ஜெனரல் ஹியாப்பும் சந்திக்கவேயில்லை எனலாம்.

கேள்வி : எமது சூழலில் இடதுசாரித்துவம் பெரும்பாலும் சிந்தனை சார்ந்த ஒரு முறைமையாகவே நிலவி வருகிறது. விதிவிலக்குகள் தவிர்த்து, செயற்பாட்டு ரீதியான அடையாளங்கள் மிகக்குறைவு. இந்த விபத்து எவ்வாறு நேர்ந்தது? பல இயக்கங்களின் தோல்விக்கு இதனையொரு காரணமாக கொள்ளலாமா?

நிலாந்தன் : இந்த உலகத்தின் அறிவனைத்தையும் கிரகித்து கொண்டாலன்றி ஒருவன் மார்க்சிஸ்டாக உருவாக முடியாதென்று மார்க்சிய மூலவர்கள் கூறுவார்கள். இத்தகைய தகைமையுடைய மார்க்சிஸ்ட்டுகள் இலங்கைத்தீவில் மிக அரிதாகவே தோன்றினார்கள். ஆனால் யாராலும் இலங்கைத்தீவில் இன யதார்த்தத்தை மீறிப் போக முடியவில்லை. இது தமிழ் இயக்கங்களிற்கும் பொருந்தும். ஆனால் புலிகள் அல்லாத தமிழ் இயக்கங்களின் தோல்விக்கு இது ஒரு காரணம் அல்ல. ஏனெனில் தமிழ் இயக்கங்கள் மத்தியில் மார்க்சிய சொல்லாடல்கள் இடம்பெற்ற அளவிற்கு மார்க்சிய உள்ளடக்கம் இருக்கவில்லை.

கேள்வி : இயக்கங்களினுள் உருவான மோதலின் அடிப்படை என்ன? வெறுமனே அதிகாரத்தை நிலைநிறுத்தும் செயற்பாட்டினால் நிகழ்ந்ததா? அல்லது வேறெதுவும் நிகழ்ச்சி நிரலின் விளைவா?

நிலாந்தன் : தமிழ் தேசியத்தின் உள்ளடக்கமாக ஜனநாயகம் இருக்கவில்லை. இந்த வெற்றிடத்திலிருந்தே மேற்படி உட்பகைகளும் அசிங்கமான சகோதர சண்டைகளும் தோன்றின. இத்தகைய பகை முரண்பாடுகள் எப்பொழுதும் வெளிசக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கே வசதியாக முடிவதுண்டு. இதைப்பற்றி பின்னரும் விரிவாகக்கூறப்படுகிறது

கேள்வி : ஈழத்தில் முதல்முதல் நிகழ்த்தப்பட்ட தெருவெளி நாடகம்-விடுதலைக்காளி. அதுவரை அந்த வெளிப்பாட்டு முறைமை இங்கு நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை. விடுதலைகாளியின் உருவாக்கத்திற்கு மூலகாரணமாக இருந்திருக்கிறீர்கள். இந்த முறைமையில் நிகழ்த்தனருக்கும் பார்வையாளர்க்குமிடையிலான இடைவெளி மிகக்குறைவானதாயிருக்கும். இந்த முறைமை இங்கு செயற்படுத்தப்பட்ட போது, மக்களிடையே தீவிர எழுச்சியிருந்த காலகட்டம். ஆயுத இயக்கங்கள் மக்களிடையே செல்லப்பிள்ளையாக இருந்தனர். அன்றைய சூழல். உங்களை இந்த முறைமை பற்றி சிந்திக்க தூண்டியது என கொள்ளலாமா? மாறுபட்ட வடிவமொன்றை சிந்திக்க வேண்டிய சூழல் ஏன் உருவானது?

நிலாந்தன் : அது திம்பு பேச்சுவார்த்தைக்காலம். அப்போதிருந்த யுத்தநிறுத்தம் நிச்சயமற்றது என்றும் சமாதானம் ஒரு மாயை என்றும் வெகுசனங்களிற்கு எடுத்து கூறவேண்டிய ஓர் உடனடித்தேவை எற்பட்டது. அதாவது சனங்கள் ஈழப்போரின் முதலாவது சமாதான முயற்சியை நம்பி அதில் கரைந்து போய்விடக்கூடாது என்ற அவசரம் எல்லா இயக்கங்கள் மத்தியிலும் காணப்பட்டது. எனவே சனங்களிற்கு அதிகம் பரிச்சயமான ஏதாவதொரு வடிவத்தினூடாக செய்தியை எப்படி கூறலாம் என்று சிந்தித்த போதே விடுதலைக்காளி உருவானது.

கோயில்களில் உருவேறிக்கலையாடும் ஒரு பாத்திரத்தின்; மத உள்ளடக்கத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் அரசியல் உள்ளடக்கத்தை வைத்தேன். கலையாடியை உருவேற்றும் மற்றும் பலன் கேட்கும் பக்தர்களின் வழமையான பாடல்கள் மற்றும் சொல்லாடல்களிலும் இவ்விதம் உள்ளடக்கத்தை மாற்றினேன். அதோடு வடிவம் கருதி சில நாட்டாரியல் கூறுகளையும் இணைத்தேன். அவ்வளவுதான். மையத்தில் நின்றாடும் கலையாடியும் அவரை சுற்றி வட்டமாக நின்றாடும் பக்தர்களுமாக ஒரு வடிவம் உருவாகியது.

அப்போதிருந்த யுத்த நிறுத்த சூழல் அதை தெருக்களில் இறக்க மிக வசதியாக இருந்தது. மாறிய புதிய அரசியல் சூழலின் உடனடி தேவை கருதி அவசரமாக உருவாக்கப்பட்டதே விடுதலைக்காளி. அது ஒரு நாடகமா இல்லையா என்பதை விடவும் அது குறிப்பிட்ட செய்தியை சனங்களிடம் உடனடியாக கொண்டு செல்கிறதா என்பதே உடனடித்தேவையாக இருந்தது. அந்த தேவைதான் வடிவத்தையும் தீரிமானித்தது. மற்றும்படி அதன் கலைத்துவ முழுமை குறித்து எனக்கும் விமர்சனங்கள் உண்டு.

கேள்வி : உங்கள் நோக்கம் அப்போது வெற்றியடைந்ததாக நினைக்கிறீர்களா?

நிலாந்தன் : யுத்தநிறுத்தம் பொய்யானது என்ற செய்தியை எவ்வளவு கெதியாக, பரவலாக, அதிரடியாக சொல்ல முடியுமோ அவ்வளவு கெதியாக சொல்வது என்ற நோக்கத்தில் அது வெற்றி பெற்றது.

கேள்வி : விடுதலைப்புலிகள் உட்பட்ட எல்லா அமைப்புக்களின் மீதும் வாய்ப்பாடாக சுமத்தப்படும் பிரதான குற்றச்சாட்டு- போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவில்லை என்பது. ஆயுத போராட்டத்தின் செல்நெறி குறித்த உங்கள் பார்வை அப்போது எப்படியிருந்தது? பொதுவான பார்வை தவிர்ந்த வேறுவிதமான எண்ணங்களிருந்தனவா? (ஏனெனில் ஆச்சரியமளிக்கும் விதத்தில் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே விடுதலை செயற்பாடுகள் சார்ந்து கலையை மக்களிடம் எடுத்து செல்ல முயன்றிருக்கிறீர்கள்)

interview2-e.jpg

நிலாந்தன் : அவை முதிரா இளம்பிராயத்தின் இறுதி வயதுகளும் அதற்கடுத்து வந்த வயதுகளுமாகும். எதையும் ஒரு கோட்பாட்டு வெளிச்சத்தில் வைத்து விளங்கிக்கொள்ள தேவையான முதிர்ச்சியோ அனுபவமோ அப்போது இருக்கவில்லை. ஆனால் நீதிநெறிகளின் பாற்பட்டும் மனச்சாட்சிக்குப்பயந்தும் முடிவுகளை எடுக்க முடிந்தது. குறிப்பாக மு. தளையசிங்கம் அணியுடனான நெருக்கம் அந்நாட்களில் எதையும் அறிவுபூர்வமாக சுய விமர்சனம் செய்யும் ஓர் ஒழுக்கத்தை உருவாக்கி தந்தது. ஒப்பீட்டளவில் நீதியாகவும் மனச்சாட்சியோடும் நடந்திருக்கிறோம் என்றால் அதற்கு பிரதான காரணங்களில் ஒன்று மு.த அணியுடனான சேர்க்கையும்தான்.

இலங்கைதீவின் அரசியல் யதார்த்தத்தின் படி இனமுரண்பாடு மிகக்கூர்மையாக இருந்த யுத்தகளத்தில் இனத்தனித்துவத்தையும் மொழித்தனித்துவத்தையும் இனமானவீரத்தையும் போற்றும் ஒரு யுத்த பொறி முறையே மேலோங்கி சென்றது. எதையும் கோட்பாட்டு வெளிச்சத்தில் வைத்து விளங்கிக் கொள்ளும் ஓர் ஒழுக்கம் பின்தள்ளப்பட்டிருந்தது

அது ஒரு தலைகீழ் சமன்பாடு. அதாவது இராணுவதீர்மானங்களிற்கு கீழ்படியும் ஒன்றாக அரசியல் தீர்மானம் இருந்தது என்பது. ஆனால் உலகில் வெற்றி பெற்ற எல்லா போராட்டங்களிலும் அரசியல் தீர்மானத்தை செயற்படுத்தும் ஒரு கருவியாகத்தான் தாக்குதல் பிரிவு இருந்திருக்கிறது.

எனவே ஈழப்போரில் பலமடைந்த வந்த தலைகீழ்சமன்பாடு காரணமாக முதலில் செயல் பின்னர் அதற்கு கோட்பாட்டு விளக்கம் என்ற போக்கே முன்னுக்கு வந்தது. இதற்கு சமாந்தரமாக நிக்கரகுவா உதாரணத்தை இங்கே கூறலாம். நிக்கரகுவா புரட்சியில் ஒரு போராளித்தலைவனாக இருந்து பின்னாளில் புரட்சி அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த ஒருவர் ஒரு பேட்டியின் போது பின்வரும் தொனிப்பட கூறியிருந்தார்... “நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்த போது எங்களிற்கு எந்த கோட்பாடும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் எதிரியை தாக்கினால் முன்னேறலாம் என்பது அனுபவத்தில் தெரிந்தது. அது வெற்றிபெற வெற்றிபெற விளக்கம் தானாய் கிடைத்தது. அதாவது கல்லை மேலே எறிந்தால் அது கீழே வரும் என்பது ஓர் அனுபவம். அதற்கு புவியீர்ப்பு விசை பற்றி ஏதும் தெரிந்திருக்க தேவையில்லை.”

ஈழப்போரிலும் மேற்சொன்ன விளக்கத்திற்கே கூடுதல் ஆதரவு காணப்பட்டது. முதலில் செயல் என்பது முதலில் சண்டை என்றே பொருள் கூறப்பட்டது. எனவே படைத்துறை சாதனைகளே எல்லாவற்றையும் தீர்மானித்த ஒரு களமது. அதில் கோட்பாடுகளை முன்னிறுத்தியவர்கள் கதைகாரர்கள் என்றோ சாகப் பயந்தவர்கள் என்றோ இகழப்பட்டார்கள். முதிராஇளம்வயதிலிருந்த என்னை போன்ற எல்லாருமே அந்த யுத்த சாகச அலைக்குள் ஒரு கட்டம் வரைக்கும் அள்ளுண்டு போனவர்கள்தான்..

கேள்வி : இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்பாக வேகமாக உருக்கொண்ட தமிழ்தேசியம் குறித்த பார்வை, ஆயுத போராட்ட காலத்தில் மிக தீவிரமாக தன்னை வடிவமைத்துக் கொண்டது. பின்னாட்களில் புலிகளும் தமிழ்தேசியமும் பிரிக்க முடியாத அடையாளங்களாகி விட்டிருந்தன. இப்போது புலிகள் இல்லை. இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். மே.18இன் பின்னான தமிழ் தேசியத்தின் நிலையென்ன? அது காலாவதியாகி விட்டதாக நினைக்கிறீர்களா?

நிலாந்தன் : தேசியம் என்பது ஒரு சமூகத்தின் கூட்டு பிரக்ஞையாகும். ஒரு சமூகம் எந்தெந்த பொது அடையாளங்கள் தனித்துவங்கள் காரணமாக ஒரு திரளாக உருவாகிறதோ அந்த அடையாளங்கள் சிதைக்கப்படும் போதோ அல்லது அந்த அடையாளங்கள் காரணமாகவே நசுக்கப்படும் போதோ தோற்கடிக்கப்படும் போதோ அந்த அடையாளங்களின் மீதான விழிப்பு மேலும் தீவிரமாகும். இலங்கைத்தீவின் அனுபவத்தின்படி நந்திகடலின் பின்னரும் தீவு இரண்டாக பிளவுபட்டேயிருக்கிறது. அது வென்றவர்களிற்கும் தோற்றவர்களிற்குமிடையிலான பிளவாகும். விடுதலைபுலிகள் அதிகாரத்திலிருந்த போது அவர்களை விமர்சித்தவர்களும் எதிர்த்தவர்களும் கூட நந்திகடலின் பின் அந்த தோல்வியை தங்களுடையதும் கூட என்று உணர தலைப்பட்டுள்ளார்கள். எனவே தமிழ் தேசிய உணர்வு முன்னரை விட கூர்மையடைந்திருக்கிறது என்பதே கள யதார்த்தம்.

கேள்வி : ஆயுதப்போராட்டத்தின் வீழ்ச்சிக்கு காரணங்கள் என்னவாக இருக்கின்றன?

நிலாந்தன் : ஆயுதப்போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் புற காரணிகளும் அகக்காரணிகளுமுள்ளன.

புறக்காரணிகளாவன...

ஓன்று, சீனா இலங்கைக்குள் ஆழக்காலூன்றி விடும் என்ற அச்சத்தை அமெரிக்காவும் இந்தியாவும் பகிர்ந்து கொண்டமை.

இரண்டு, செப்ரெம்பர் பதினொன்றுக்கு பின்னர் உலகில் உள்ள தீவிரவாத இயக்கங்களிற்கெதிராக உருவாக்கப்பட்ட உலகளாவிய வியூகம்.

மூன்று, பலசாலிகளிற்கு சேவகம் செய்யும் தொழில்நுட்ப வளர்ச்சி.

இவற்றைச்சிறிது விரிவாக பார்க்கலாம்.

முதலாவதின்படி, யுத்தம் தொடங்கியதும் அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ எட்ட நின்றால் சிறிலங்கா சீனாவை நோக்கிப்போய்விடும் என்ற அச்சம் காரணமாக இரு சக்தி மிக்க நாடுகளும் சிறிலங்காவை பலப்படுத்துவதென்ற முடிவை எடுத்தன.

கடைசிக்கட்ட யுத்தத்தில் என்ன நடந்தது என்பது உலகின் பலசாலி நாடுகள் அனைத்திற்கும் தெரியும். சானல்4 இல் வெளியில் வந்ததை விட பல மடங்கு ஆவணங்கள் அவர்களிடம் உண்டு. இதை இப்பொழுது விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திவருகிறது. சீனாவின் உள்நுழைவு விகிதத்தை இயன்றளவு மட்டுப்படுத்துவதற்காக தமிழர்கள் பலியிடப்பட்டார்கள் என்பதே உண்மை

இரண்டாவது காரணம், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட உலகாவிய யுத்த வியூகம். செப்ரெம்பர் 11க்கு பின் மேற்கு நாடுகள் எதிர்கொண்ட அச்சுறுத்தல் எனப்படுவது உலகளாவியது. அல்கெய்தா ஓர் உலகளாவிய இயக்கம். அது திறந்த போர்க்களமும் உலகளாவியது. இந்த உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகின் சக்திமிக்க நாடுகள் அனைத்தும் தமது தெரிந்தெடுக்கப்பட்ட வளங்கள், மூளைகள் என்பவற்றை ஒன்று திரட்டி உலகளாவிய வியூகம் ஒன்றை வகுத்தன. படைத்துறை, புலனாய்வு மற்றும் தகவல் பரிமாற்றதுறைகளில் உருவாக்கப்பட்ட இந்த உலகளாவிய வியூகத்திற்கெதிராக உள்நாட்டில் தமது அரசுகளிற்கெதிராக போராடிய அமைப்புக்கள் நின்று பிடிக்க முடியவில்லை.

விடுதலைப்புலிகள் ஒரு உலகளாவிய நிகழ்ச்சி நிரலை உடைய இயக்கமல்ல. அதனது போர்ப்பரப்பு உலகளாவியதுமல்ல. இது அமெரிக்காவிற்கும் தெரியும். இந்தியக்கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் விடுதலைப்புலிகள் அதிகமதிகம் மேற்கை நோக்கிச்சாய்ந்தார்கள். மேற்கில் எழுச்சி பெற்று வந்த கவர்ச்சி மிக்க துடிப்பான நிதிப்பலமுடைய புலம்பெயர் சமூகமும் இதற்கு ஒரு காரணம். இதனால் மேற்கு நாடுகள் விடுதலைப்புலிகளுடன் ஒரு வித மென்போக்குடன் நடந்து கொண்டன.

ரணில்-பிரபா ஒப்பந்தத்தில் விடுதலைப்புலிகள் ஒரு தரப்பாக எற்றுக் கொள்ளப்பட்டமையை இங்கு சுட்டிக்காட்டலாம். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் நிலைமை அப்படி இருக்கவில்லை.

ஆனால் சமாதானம் முறிக்கப்பட்டதும் நிலைமை தலைகீழானது. ரணில் தோற்கடிக்கப்பட்டதால் இச்சிறு தீவில் தமது நிலை பலவீனமடைந்ததுடன் சீனா உள்நுழைவதற்குரிய கதவு அகல திறக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் கருதின.

மேலும் சமாதானத்தின் மூலம் விடுதலைப்புலிகளை பன்மைத்துவத்தை எற்றுக்கொள்ள செய்வதோடு தற்கொலைப்படையை கலைக்குமாறு தூண்டுவதுதே மேற்கு நாடுகளின் உள்விருப்பமாக இருந்தது.

ஆனால் சமாதானத்தை முறித்ததன் மூலம் இலங்கைத்தீவில் தமது நிகழ்ச்சி நிரல் தலைகீழாக்கப்பட்டு விட்டதாக அவைகருதின. எனவே இலங்கையரசாங்கம் சீனாவில் தங்கியிருந்த யுத்தம் செய்யும் ஒரு நிலை தோன்றுவதை தடுப்பதற்காக இந்தியாவும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளும் கொழும்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமகாவோ விகித வேறுபாடுகளுடன் கையாளத்தொடங்கின.

இது தவிர்க்க முடியாதபடி ஏற்கனவே மேற்கு நாடுகள் உருவாக்கி வைத்திருந்த உலகளாவிய வியூகத்தினுள் விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் சிக்க வைத்து விட்டது.

மூன்றாவது, பலசாலிகளிற்கு சேவகம் செய்யும் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்பம் ஒரு கீழ்ப்படிவுள்ள சேவகன். ஆனால் கண்டுபிடிக்க கடினமான உளவாளி. அது ஒரு வலையமைப்பு. அந்த வலையமைப்பை பயன்படுத்தி மீன்பிடிக்கும் எவனையும் மீனாக மாற்றவல்ல ஒரு வலையமைப்பு. கூகிள் ஏர்த் போன்ற வளர்ச்சிகளின் பின் உலகம் நிர்வாணமாக்கப்பட்டுவிட்டது. அரசல்லாத எந்த ஓர் ஆயுத அமைப்பும் கடலிலோ வெட்ட வெளிகளிலோ சண்டை செய்வது கடினமாகி வருகிறது. ஜி.பி.எஸ் பின்தொடரும் தொழில்நுட்பமானது போராட்ட இயக்கங்களை நிழல் போல பின்தொடர்ந்து வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் தகவல்தொழில்நுட்பத்தை கெட்டித்தனமாக கையாண்ட ஓர் இயக்கம். ஆனால் இறுதியில் அந்த வலையமைப்பிற்குள் அவர்களும் சிக்குண்டார்கள்.

இனி அகக்காரணிகளை பார்க்கலாம்...

அகக்காரணம் ஒன்றுதான். இந்த தாய்க்காரணத்திலிருந்தே ஏனைய எல்லா காரணங்களும் கிளை விடுகின்றன. அது என்னவெனில் தமிழ்தேசியத்தின் உள்ளடக்கத்தை ஜனநாயகத்தால் நிரப்ப தவறியமைதான்.

எந்த ஒரு தேசிய பிரக்ஞையும் அதன் வேர்நிலையில் இனமானம், இனத்தூய்மைவாதம், இனவீரம், இனஎதிர்ப்பு மொழித்தூய்மை, பிராந்திய, சாதி வேறுபாடுகள், பால்அசமத்துவம் போன்ற இன்னோரன்ன அம்சங்களின் சிக்கலான உணர்ச்சிகரமான கலவையாகவே காணப்படுகிறது. தமிழ் தேசியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால் இந்த வேர்நிலை உணர்ச்சிகரமான அம்சங்களை படிப்படியாக அறிவுபூர்வமான ஜனநாயகத்தால் மாற்றீடு செய்ய வேண்டிய பொறுப்பு அந்த தேசியவிடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புக்கே உரியது. ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அப்படி செய்வதற்கு தேவையான அகபுற காரணிகள் பலவீனமாக காணப்பட்டன. இவற்றில் மூன்று முக்கிய காரணிகளை பார்க்கலாம்

1. போதுவான தமிழ் உளவியல் எத்தகையது என்பது. அது எப்பொழுதும் பக்தி இரத்தத்தின் பாற்பட்ட உணர்ச்சிகரமான ஒரு மனோநிலைதான். அது எதையும் கறுப்பு வெள்ளையாகவே பார்க்கும். ஆனால் கறுப்பு வெள்ளை அணுகுமுறை பன்மைத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு தடையானது.

2. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு இராணுவ மையசிந்தனையுடையதாக காணப்பட்டது. பொதுவாக சராசரி தமிழ் உளவியலின் ஒரு கூறாக காணப்படும் ‘மிலிட்டரி மென்ராலிற்றி’யை விடுதலைப்புலிகள் சரியாக அடையாளம் கண்டு தலைமை தாங்கினார்கள்.

பிரிட்டிஸ் ஆள்பதிகளால் பாராட்டப்பட்டதும் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டதுமான மேற்சொன்ன ‘மிலிற்றரி மென்ராலிற்றி’க்குத்தலைமை தாங்குவது என்று முடிவெடுத்த ஓர் இயக்கத்தில் அரசியல் எனப்படுவது இராணுவ தீர்மானங்களிற்கு கீழ்படியும் ஒன்று என்ற ஒழுக்கமே மேலோங்கி காணப்படும். அப்படிப்பட்ட ஓர் ஒழுக்கத்தைப் புனிதமாகப்பேணி தமிழ் வீரத்தையும் தமிழ் தியாகத்தையும் அவற்றின் நவீனகால உச்சங்களிற்கு கொண்டு போன ஓர் இயக்கம் கறுப்பு வெள்ளை சிந்தனை முறைக்கு வெளியே வருவது இலகுவானதல்ல.

3. இந்திய காரணி. முதலாம் கட்ட ஈழப்போர் எனப்படுவது பெருமளவிற்கு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்குள் நடந்ததொன்றுதான். விடுதலைப்புலிகள் அதனை சில சமயங்களில் வெற்றிகரமாக குழப்பிய போதும் கூட அந்த குழப்பங்களை தனக்கு சாதகமாக்கி தனது இலக்கை இந்தியா அடைந்தது. அதாவது அமெரிக்கா சார்பு ஜெயவர்த்தனவை தன்னிடம் மண்டியிட வைத்தது.

எனவே இந்திய தலையீடு காரணமாக 83 ஜூலைக்கு பின் தமிழர்களின் போராட்டம் திடீரென வீங்கியது. இது ஏற்கனவே சில ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படிப்படியான வளர்ச்சியின்றி திடீரென புடைத்து வீங்கியதால் எதையும் நிதானிக்க முடியவில்லை. 83 யூலைக்கு பின்னரான பெரும் உணர்ச்சிச்சூழலில் எல்லா இயக்கங்களும் நிதானமிழந்து வீங்கின. ஜெயவர்த்தன அரசை பணிய வைப்பதென்ற இந்திய நிகழ்ச்சி நிரலின்படி படைத்துறை சாதனைகளும் சாகசங்களும் உடனடித்தேவைகளாக காணப்பட்டன. இதுவும் இயக்கங்களிற்குள் தாக்குதல் பிரிவானது அரசியல் பிரிவை விட அதிகாரம் உடையதாக மாறக்காரணமாகியது. இதனால் உட்கட்சி ஜனநாயகம் செழித்தோங்க முடியாது போயிற்று. இது போன்ற பல காரணங்களினாலும் தமிழ் தேசியத்தின் உள்ளடக்கத்தை ஜனநாயகத்தால் நிரப்ப முடியாது போயிற்று.

படைத்துறை சிந்தனையே முதன்மை பெற்றதால் அரசியல் பிரிவென்பது சக்தி மிக்க யுத்த எந்திரத்தி;ன் ஒரு முக்கியத்துவம் குறைந்த அலகாக மாறியது. இதனால் தமிழ் வீரத்திற்கும் தமிழ் அறிவிற்குமிடையில் சமநிலைகாண்பது கடினமாகியது. இது காரணமாக ஒரு ஸ்திரமான தீர்க்கதரிசனமுடைய வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடியாது போயிற்று.

மேலும் சகோதரச்சண்டைகளும் நேசமுரண்பாடுகளும் பகை முரண்பாடுகளாக வளர்ச்சியடைவதை தடுக்க முடியவில்லை.

உட்கட்சி ஜனநாயகமின்மையால் உட்கட்சி மோதல்களையும் தலைமைத்துவ போட்டிகளையும் வெளிச்சக்திகள் இலகுவாக கையாள முடிந்தது.

முஸ்லீம்கள் தொடர்பாகவும் பிரதேசவாதம் தொடர்பாகவும் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு தேசிய கொள்கையை வகுக்க முடியாது போயிற்று. எல்லாவற்றிலும் இறுதியாக நாலாம் கட்ட ஈழப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இடம்பெற்ற எல்லா அனர்த்தங்களிற்கும் கொடுமைகளிற்கும் இதுவே காரணம். அதாவது “தமிழ் தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக” இருக்க தவறியமை.

இந்த இடத்தில் ஒன்றைச்சொல்ல வேண்டும். விடுதலை புலிகளின் இடத்தில் வேறு எந்த இயக்கம் இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். சிலசமயம் இதை விட மிக மோசமாகவும் நடந்திருக்க கூடும்.

மேற்சொன்ன அனைத்து பிரதான காரணங்களையும் சொல்லப்படாத உப காரணங்களையும் சமயோசிதமாகக்கையாண்டு சிறிலங்கா அரசாங்கமானது யுத்தகளத்தில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி செயற்படுவதற்கான லைசன்சையும் முன்னைய எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கிடைத்திராத அரிதான வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டது. இதுவே நந்திக்கடல் விழ்ச்சிக்கு காரணம்.

கேள்வி : ஈழத்தமிழ் சமூக அமைப்பை பார்த்தீர்களானால் சாதியரீதியில், பிரதேச ரீதியில், மத ரீதியில் ஆழமாக பிளவுகளை தன்னக்தே கொண்டுள்ள சமூகம். அரசியல்,சமூக ரிதியிலான எந்த முடிவு மேற்கொண்டாலும் இதில் ஏதாவதொன்றுடன் சேர்த்தே அடையாளப்படுத்தப்பட்டது. அல்லது, ஒன்றிலிருந்து எதிர்க்குரல் கிளம்பியது. ஆக அக முரண்பாடுகளுடன் கூடிய சமூகமாகவே அதிருந்தது. இந்த குழப்பம், நமது பொதுப்பிரச்சனையான இன ஒடுக்கலிற்கெதிரான போராட்டத்தில் என்ன விதமான தாக்கங்களை செலுத்தியது?

நிலாந்தன் : தமிழ் தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இல்லாத வெற்றிடத்தில் அக முரண்பாடுகள் பிரதான வெளிமுரண்பாடுகளை மேவியெழுவதை தவிர்ப்பது கடினம்.

கேள்வி : தமிழ் தேசியம் தன்னை சுதாகரித்து கொண்டு மிண்டெழும் என நம்புகிறீர்களா? ஆமெனில். அது தன்னை சுயவிமர்சனம் செய்து மீளுருவாக்கம் பெருகையில் என்னவிதமான அம்சங்களை களைய வேண்டியிருக்கும்? ஏவற்றை இணைத்த கொள்ள வேண்டியிருக்கும்? சமகால சூழலில் அதற்கான ஏதுநிலையுண்டா?

நிலாந்தன் : மீண்டும் மீண்டும் சொல்லுவேன். தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை. அதை முன்னெடுத்த ஒரு ஆயுதம் ஏந்திய அமைப்பே வீழ்ச்சியுற்றிருக்கிறது. அந்த வீழ்ச்சியால் தமிழ் தேசிய உணர்வுகள் மேலும் கூராக்கப்பட்டிருப்பதே யதார்த்தம்

கேள்வி : ஆயுத போராட்ட வரலாற்றை பார்த்தீர்களானால் 1980 களில் களத்தில் சுமார் நாற்பது இயக்கங்களிருந்தன. 1990களில் அது ஒற்றையிலக்கமாகி விட்டது. இரண்டாயிரத்தில் புலிகள் மட்டுமேயிருந்தன. இப்போது புலிகளுமில்லை. எனக்கு இரண்டு கேள்விகளுண்டு. 1) ஈழத்தின் சமூக அமைப்பு ஆயுத போராட்டத்திற்கு ஏற்ற ஒன்றில்லையா? 2) நமது பூகோள அமைவிடத்தின்படி ஆயுத போராட்டமோ தனிநாடோ சாத்தியமில்லையா?

interview2-f.jpg

நிலாந்தன் : முதலாவது கேள்விக்கான பதில் எற்கனவே கூறப்பட்டுள்ளது. சராசரி தமிழ் உளவியலின் ஒரு கூறாக காணப்படும் ‘மிலிற்றரி மென்றாலிற்றி’ ஆயுத போராட்டத்திற்கு எப்பொழுதும் சௌகரியமாக இருந்தது. இந்த சராசரித்தமிழ் உளவியலிற்கே விடுதலைப்புலிகள் இயக்கம் தலைமை தாங்கியது. ஆனால் ஈழத்தமிழர்கள் ஒரு சிறிய இனம் என்பதால் ஆயுத போராட்டத்தை ஆக குறைந்த காலத்திற்குள் உச்சத்திற்கு கொண்டு போய்விட வேண்டும் என சில ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் பிராந்திய தலையீடுகளினாலும் எற்கனவே கூறப்பட்ட அகக்காரணங்களினாலும் போராட்டம் அதன் சக்திக்கு மீறி நீண்டு செல்ல தொடங்கியது.

சிறிய இனமாகிய ஈழத்தமிழர்களில் ஏறத்தாள மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து போய்விட்டனர். அவர்களிடம் இருந்து டொலர்கள் வந்தன. படையணிகள் வரவில்லை. ஆனால் டொலர்களினால் சண்டை செய்ய முடியாது. எவ்வளவு டொலர்கள் வந்தாலும் சண்டை செய்ய மனிதர்கள்தானே வேண்டும்?

புலம்பெயர்ந்த தமிழர்கள் போக எஞ்சிய சனத்தொகையில் பெரும்பகுதி அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் போய்விட்டது. இவை தவிர கிழக்கில் இருந்து கிடைத்து வந்த ஓர்மம் மிக்க ஆட்பலமும் இல்லை என்றாகியது.

இந்நிலையில் வன்னியில் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சத்து இருபதாயிரம் சனங்களே இறுதிகட்டத்தை எதிர் கொண்டார்கள். சாவினால் சப்பித்துப்பப்பட்டார்கள். எனவே நாலாம் கட்ட ஈழப்போரில் ஏற்பட்ட ஆட்பற்றாக்குறைகாரணமாக மேற்கொண்டவாறு கேட்க முடியாது.

இரண்டாவது கேள்விதான் முக்கியமானது. அதாவது இந்தியா. இந்தியா இந்த பிராந்தியத்தின் பேரரசு. இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த எல்லா ஆயுதபோராட்டங்களின் இறுதி முடிவையும் இந்தியாதான் தீர்மானித்தது. தீர்மானிக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான சுமார் அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்த பிராந்தியத்தில் நிகழ்ந்த எல்லா ஆயுதபோராட்டங்களையும் எடுத்துப்பார்த்தால் ஒன்றில் இரத்தகளரியில் முடிந்திருக்கும். அல்லது இரத்தகளரியின் பின் வலிந்து திணிக்கப்பட்ட ஓர் அரை குறை தீர்வில் முடிந்திருக்கும்;.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, போராடும் இனங்களின் புதைகுழியாகவே இந்த பிராந்தியம் காணப்படுகிறது. இந்த அரைநூற்றாண்டு கால பகை பிராந்திய யதார்த்தத்தை உள்வாங்கி தீர்க்கதரிசங்களுடன் முடிவுகளை எடுக்க தவறின் தோற்கடிக்கப்பட்ட போராட்டங்களின் பட்டியலில் இணைய வேண்டியதுதான்.

இந்திய மாநிலங்களில் தோன்றிய எல்லா ஆயுத போராட்டங்களும், இலங்கை தீவில் நிகழ்ந்த இரண்டு ஜே.வி.பி கிளர்ச்சிகளும், தமிழர்களின் ஆயுத போராட்டமும் இதற்கு போதிய உதாரணங்களாகும்.

எனவே சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலான பகை பிராந்திய வியூகத்துள் தமிழீழ விடுதலைப்போராட்டம் சிக்குண்டுள்ளது. இந்த வியூகத்தை தமக்கு சதகமானதாக மாற்ற தேவையான ராஜீய நுட்பங்களில் தமிழர்கள் இன்னமும் தேறக்கிடக்கிறது.

இந்தியா இலங்கை தீவை ஒரு முழு அலகாகத்தான் பார்க்கிறது. இதில் கொழும்பை ஒரு மையமாகக்கருதி கையாள்வதே இந்தியாவின் ராஜதந்திர செயற்தந்திரமாக உள்ளது. கொழும்பைக்கையாள முடியாத ஒரு நிலை வரும்போது தமிழர்களை ஒரு துருப்புச்சீட்டாக பயன்படுத்தி கொழும்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவார்கள். ஜெயவர்த்தன காலத்திலும் இதுதான் நடந்தது. ஜெயவர்த்தன கைக்குள்வந்ததும்; தமிழர்கள் கைவிடப்பட்டனர். பின்னர் நந்திக்கடலிலும் இதுதான் நடந்தது. கொழும்பை அரவணைக்க தவறினால் கொழும்பு சீனாவை உள்ளே கொண்டு வந்துவிடும் என்ற அச்சம் காரணமாகவும் தமிழர்கள் கைவிடப்பட்டனர். நந்திகடலின் முன்னரும் இதே நிலைதான். நந்திக்கடலின் பின்னரும் இதே நிலைதான். அதாவது கொழும்பை மட்டும் ஒரு மையமாகக்கருதி கையாள்வதன் மூலம் முழு இலங்கை தீவையும் இந்தியா கையாள முனைகிறது.

இந்த பல தசாப்பத கால இராஜதந்திர நடைமுறையில் தமிழர்களையும் ஒரு மையமாக கையாள வேண்டிய தேவை புதுடில்லிக்கு இன்று வரை ஏற்படவில்லை. அப்படி ஒரு நிலைமையை உருவாக்கும் முயற்சிகளில் அதாவது தங்களையும் இந்தியாவால் தவிர்க்கப்பட முடியாத ஒரு மையமாகக் கட்டியெழுப்பவதில் ஈழத்தமிழர்கள் எப்பொழுது வெற்றி பெறுகிறார்களோ அப்பொழுதுதான் இலங்கை தீவில் இப்போதுள்ள கள நிலைமைகளில் மாற்றம் எற்படும். அல்லது தென்னாசிய பிராந்தியத்தின் இப்போதுள்ள கள நிலைமைகளில், அதாவது பிராந்திய இழுவிசைகளிற்கிடையிலான சமநிலையில் ஏதும் திடீர்திருப்பம் ஏற்பட வேண்டும்.

நேர்காணல் : பிரதீபா, யோ.கர்ணன்

http://www.vallinam.com.my/issue36/interview2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், முழுவதும் வாசித்தேன்!

குமுதினிப் படகுத் தாக்குதலில் எனது உறவுகள் சிலர் இறந்து போயினர்.

மு.பொ. உடனும், சு.வி. உடனும், ஊரவன் என்ற முறையில் பழக்கம் இருந்தது.

நான் சிறியவன், என்பதால் என்னை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை. :D

இப்போது இருவருமே இல்லை!

நல்லதொரு பேட்டியை இணைத்தமைக்கு நன்றிகள், கிருபன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பேட்டி..நிலாந்தன் தன் படைப்புக்களின் மூலம் என் சிறுவயதுகளிலேயே எனக்கு அறிமுகமானவர்..எல்லோரும் சொல்லும் சூழ்நிலை என்ற சாட்டை நிலாந்தன் சொல்லாமல் தன் எழுத்துக்களில்,சிந்தனைகளில் இப்பொழுதும் தடம்பிரளாமல் இருக்கிறார்..தமிழ்தேசியத்தின் உள்ளடக்கத்தை ஜனநாயகத்தால் நிரப்ப தவறியமைதான் பல தோல்விகளுக்கு காரணம்...நிதர்சனமான வார்த்தைகள்..நன்றி கிருபன் அண்ணா ஒரு அருமையான பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பேட்டியைக் கொடுத்திருக்கிறார்...இணைப்பிற்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

நல்ல பேட்டி,இணைத்த கிருபனுக்கு நன்றிகள்.

சில இடங்கள் நடந்து முடிந்ததை நியாயப்படுத்துவதாக அமைந்திருந்தது.ஆரம்பத்திலேயே (80,81) இதே முரண்பாட்டால் வெளியேறியவர்களும் இருக்கின்றார்கள் .ஐயரின் பதிவுகள் சாட்சி சொல்லும் .

Link to comment
Share on other sites

போராட்ட அரசியலை ஜனநாயகத்தால் நிரப்பிய திபெத்தின் நிலை என்ன? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் போராட்ட அரசியலை ஜனநாயகம் ஆக்கவில்லை என்ற குற்றச்சாட்டு.. அவ்வளவு பொருத்தமாக இல்லை. விடுதலைப்புலிகள்... போராட்ட அரசியலை நேரடியாக ஜனநாயகமாக்கி நிற்கக் கூடிய சூழ்நிலையை சிங்களப் பேரினவாத தேசிய களம் இலங்கைத் தீவில் அளித்திருக்கவில்லை. இந்திய வல்லாதிக்க களமும் அப்படி ஒரு நிலை உருவாவதை விரும்பி இருக்கவில்லை. ஜே வி பி தொடர்பில் காண்பிக்கப்பட்ட அந்தக் கரிசணையை.. விடுதலைப்புலிகள் சார்பில்.. சிங்களமோ.. இந்திய வல்லாதிக்கமோ காட்டவில்லை.

அந்த நிலையிலும்.. விடுதலைப்புலிகள்.. தமக்குள் இல்லாது வெளியில் இருந்து செயற்படக் கூடிய தமிழ் தேசிய தளத்தில் இயங்கக் கூடிய ஜனநாயகவாதிகளை இனங்காணவும் இயக்கவும் தவறவில்லை. இந்த அடிப்படையை அவர்கள் 1987 இல் இந்தியப் படைகள் காலத்திலும்.. அப்புறம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்திலும் காட்டியுள்ளனர்.

இந்தப் பேட்டி எங்கனும்.. அதிகம் பாவிக்கப்பட்டுள்ள புறச் சக்தி.. சீனா. இந்தச் சீனாவை மையமாக வைத்தே எல்லாம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க தமிழர் விரோத நிலைப்பாடும் சரி.. இந்திய தமிழர் விரோத நிலைப்பாடும் சரி.. இப்படி எல்லாவற்றிற்கும் சீனா காரணமாக நிற்கிறது.. அல்லது சீன - சிங்கள உறவு காரணமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரே மண்ணை இயங்கு தளமாகக் கொண்ட சிங்களவர்களால் முடிந்ததில் ஒரு சிறிய அளவைக் கூட தமிழர்கள் சீனாவை நெருங்க ஏன் பாவிக்கவில்லை.... மாறாக.. தமிழர் விரோத நிலைப்பாட்டை எடுத்த போதும்... ஏன் இந்தியாவை நெருங்குகின்றனர்.. நெருங்கினர்..என்ற கேள்வி முதன்மையான ஒன்றாகி நிற்கிறது.. ??! இந்தியாவின் தமிழர் சார்ப்பு... எதிர்ப்பு நிலைப்பாடு என்பது கூட சீன - சிங்கள உறவு சார்ந்து நிற்கிறது எனும் போது.. ஏன்.. தமிழர்கள் சீனாவோடு.. சிங்களத்திற்கு சமனாக.. அல்லது அதற்கு மேலாக ஒரு உறவை வேண்டிக் கொள்ளச் செய்யவில்லை..!

அது தமிழர் - இந்திய பகையை வளர்க்கும்.. நீட்டிக்கும் என்றால்.. எப்படி.. சீனாவை ஆதரித்த சிங்களம்.. இந்தியாவின் நண்பனாகியது...??!

அடிப்படையில் எமது போராட்ட வீழ்ச்சிக்கு.. எம்மிடம் இருந்த சரியான வெளியார் இராஜதந்திரத்தை துணியாத .. செயற்படுத்தாத காரணிகளே வெளிச்சக்திகள் எம்மை இலகுவாக கையாளவும் கட்டுப்படுத்தவும் செய்துள்ளது. இதனைத் தவிர.. வேறு பலமான காரணிகள் அங்கு இருக்க முடியாது.

எமது ஆயுதப் போராட்டம் சிங்களத்தால் வெல்லப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டாலும்.. அது வெளியாரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப.. அவர்களின் தேவையோடு ஒன்றியே நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வியூகத்தை தமிழர்கள் சரியாக கடக்க முடியாத படிக்கு அவர்களிடம் பல தரப்பு நிலையிலும் காணப்பட்ட பலமான இந்திய பக்தி அல்லது.. நட்புத் தேவை.. இருந்திருப்பதும்.. அதுவே பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்கும் வழி சமைத்துள்ளது.

1989/90 களில் சிறீலங்கா தீவிர இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்து.. இந்தியப் படைகளை கலைக்க... படை இருப்பை எதிர்க்க.. பாகிஸ்தான்.. சீனா என்று வெளிப்படையாக ஆதரித்து நின்ற போதிலும்.. இந்தியா சிங்களத்தின் நட்பை புதிப்பித்து வளர்ப்பதிலேயே அதிக அக்கறை காட்டியது. இந்த இடத்தில் விடுதலைப்புலிகள் செய்த காரியம்.. சிங்களத்தின் தேவைகளோடு தங்களின் தேவைகளையும் ஒரு நேர்கோட்டில் நிறுத்திக் கொண்டது தான். அதனால் பெறப்பட்ட வெற்றியே இந்தியப் படைகளின் வெளியேற்றம். ஆனால் அப்படி ஒரு நிலையை அவர்களால் பின்னாளில் ஏற்படுத்த முடியவில்லை.

விடுதலைப்புலிகள்..புலம்பெயர் மக்களை டொலர்களை நம்பி மேற்குலகை நெருங்கிய அளவிற்கு.. இந்தியாவின் தேவைகளுக்கு அப்பால்.. அதன் மீது செல்வாக்குச் செய்யக் கூடிய சர்வதேச உறவுகளை பலமாக்கிக் கொள்ளவில்லை அதுவே பின்னாளில்.. அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியும் ஆகியது. இன்றும் அந்த நிலை அப்படியே தான் காணப்படுகிறது.

ஆனால் இந்தியாவோ..சிங்களத்தைப் பகைக்காமல்.. தமிழர்களை அரவணைக்க முயலவில்லை. இதற்கு அதன் உள்ளார்ந்த.. அரசியல் நிலைப்பாடுகள்.. பிராந்திய தேவைகள்.. அதிகம் செல்வாக்குச் செலுத்தி நின்றன. அதற்காக தமிழர்களுடனான நட்பை அது ஏறக் குறைய முறித்துக் கொள்ளக் கூடிய நிலைப்பாட்டையும் எடுத்தது.

இந்தியா நம்முடனான நட்பை முறித்துக் கொண்ட போதும் கூட நாம், சீனாவின் நட்பை பலப்படுத்தி.. தனது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்ட சிங்களத்தின் இராஜதந்திரத்தை வெல்ல அல்லது கடக்க முயற்சிக்கவில்லை. மாறாக இந்தியா தமிழர்களுடனான நட்பை முறிக்க நின்ற போதும்.. தமிழர்கள் அதன் நட்பை வலிந்து நாடி நின்றனர்.. அல்லது அதிலேயே அதிகம் கவனம் செலுத்தினர். அது தமிழர்களின் பலவீனத்தை அப்பட்டமாக இனங்காட்டியது. அதுவே...இன்றைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணமும் கூட.

எமது வீழ்ச்சிக்கு அகக்காரணிகளை விட புறக்காரணிகள் சார்ந்த இராஜதந்திர உறவுகளில், நகர்வுகளில் இருந்த இடைவெளிகளே.. பலவீனங்களே முதன்மைக் காரணிகளாக இருந்துள்ளன.. இருக்கின்றன. இன்றும் அவை எம்மால் நிரப்பப்படுவதாக இல்லை..!

இந்த நிலையில்.. எமது விடுதலைத் தேவை என்பதை முயற்கொம்பெனக் காட்டவும்.. சமரச அரசியல் பற்றி போதிக்கவுமே இன்று அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதன் பின்னாலும்.. இந்த தமிழர் விரோத வெளியாரின் தேவைகளே அதிகம் நிறைவு செய்யப்படப் போகின்றன. இவை எதுவுமே தமிழர்களின் நீண்ட கால நலனுக்கு உதவப் போவதில்லை.

தமிழர்கள்.. இந்தியாவை கடந்து பிராந்தியத்தில்... ஒரு போட்டிச் சூழலை உருவாக்கவல்ல.. ஒரு பலமான இராஜதந்திர உறவு வட்டத்தை உருவாக்காதவரை அது சிறீலங்காவின் இந்தியாவின் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் கவனம் கொண்டுள்ள பிற வெளியாரின் தேவைகளில் செல்வாக்குச் செய்யக் கூடிய நிலை வராதவரை.. எமது விடுதலை என்பது.. குழப்பங்களின் விளை நிலமாகவே இருக்கும்..! தமிழர்களின் வீழ்ச்சிகளுக்கு தோல்விகளுக்கு அங்கு பஞ்சம் இருக்காது. :icon_idea:

Link to comment
Share on other sites

உலகில் எந்த அரச அதிகாரமும் ஆயுத பலத்தின் மூலமே நிலை நாட்டப்பட்டது நாட்டப்படுகிறது.எந்த அரசியலும் ஆயுத பலத்தின் அடிப்படையில் அமைந்த்த அரச அதிகாரத்தின் மூலமே நடாத்தப்படுகிறது.இதில் தமிழர்கள் விதிவிலக்கல்ல.புலிகளின் இராணுவ வலிமையே தமிழர்களின் அரசியல் வலிமையாகப் பரிணமித்தது.

அரசியல் வலிமையின் ஆணிவேரான இராணுவச் சம நிலையை இந்தியா சமாதானம் என்னும் சதி நடவடிக்கை மூலம் குலைத்து புலிகளை அழித்தது.இதில் இந்திய அரசின் கபடத்தனங்களைப் புரியாது புலிகள் , சமாதான நடவடிக்கைகளில் சிதைந்து போனதே அவர்களின் தவறு.

தமக்குச் சாதகமான காலத்தில் புலிகள் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டிரிந்தால் இந்த நிலை வைந்திருக்க முடியாது.புலிகள் பிராந்தியத்தில் உருவாகிய சீன இந்திய முரண்பாட்டை தமக்குச் சாதகமாகப் பாவிக்கவில்லை.இதற்க்கு தமிழர்களின் ஆண்டாண்டு காலமான இந்திய சார்பு நிலையே காரணம்.ஆனால் மகிந்த்த இந்த முரண்பாட்டைத் தனக்குச் சாதகமாகப் பாவித்தான்.

நாம் என்று இந்திய மாயையில் இருந்து வெளிவருகிறோமோ அன்று தான் எம்மால் சர்வதேச அரசியலைச் செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

//மேலும் இன்னுமொரு அவதானத்தை இங்கே இப்போது எழுதலாம் என்று நினைக்கிறேன்.இது எனது சொந்த அவதானம் மட்டுமே.புலிகள் தற்காப்பு நிலை எடுதிருப்பதற்கு அடிப்படைக் காரணம் இலங்கை அரசை ஒரு இராணுவ ஆக்கிரமிப்பை நோக்கித் தள்ளும் நோக்கமே.சர்வதேசம் புலிகள் மேல் அழுத்தங்களைப் பிரயோகித்து எதாவது ஒரு அரைகுறைத் தீர்வை திணித்துவிடலாம் என்று வேலை செய்கிறது.இந்த நேரத்தில் சிறிலங்கா சிங்கள பவுத்தபேரினவாதமானது போரை நோக்கி சிங்கள அரசைத் தள்ள வைத்துக்கொண்டிருக்கிறது. புலகள் தாங்கள் இராணுவ ரீதியக பலவீனமான ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுவது இவர்களை ஊக்கப் படுத்தவே.// Posted 20 September 2006 - 06:43 PM 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார்

நாரதர் ஐந்து வருடங்களுக்கு முன் உலக ஒழுங்கை விளங்கிக்கொள்ளாது எவ்வாறு அபத்தமான அரசியல் பேசினாரோ சற்று ஏறக்குறை அவ்வாறுதான் இப்பவும் இலங்கைத் தமிழர் இந்தியாவுக்கு எதிராக கோவணத்தை வரித்து கட்ட வேணும் என்பதுபோன்ற அடிப்படை அரசியல் அறிவே இல்லாமல் அலம்புகின்றார்.

தற்போது கனிந்து வரும் தமிழருக்கு சார்பான சர்வதேச அரசியல் என்பது சாரம்சத்தில் அமெரிக்க மேற்குல அரசியலே ஆகும். ஆசியக் கண்டத்தில் சர்வதேச அரசியல் என்பது இந்தியாவை இணைத்ததாகவே இருக்கிறது. இனி வரும் காலங்களில் அமெரிக்க ஐரோப்பிய நேச அணியில் இந்தியா ஒரு முதன்மை பாத்திரம் வகிக்கும். பாகிஸ்தானுக்கு பதிலாக மியன்மார் நோக்கி அமெரிக்க ராஜதந்திர ந்கர்வுகள் தீவிரமாக தொடங்கி விட்டன. மியன்மார் என்பது சீனாவுக்கு எதிரான ஒரு வலுவான துருப்புச் சீட்டு.

வரும் ஆண்டுகளில் இந்திய உபகண்டத்தில் பாரிய அரசியல் நிகழ்வுகள் நடந்தேறப் போகின்ற சூழலை விளங்கிகொள்ளக் கூடிய அடிப்படை அரசியல் அறிவற்றர்கள் தமிழருக்கு அரசியல் வழிகாட்ட முற்படுவது மாபெரும் முட்டாள் தனம்.

Link to comment
Share on other sites

இங்கு சிலருக்கு புலிகள் செய்ததை சரி என்பதைத்தவிர வேறெதிலும் அக்கறையில்லை இவ்வளவு அழிவிற்கு பின்னரும்,விட்டால் உலகிலேயே ஜனநாயகமான விடுதலை அமைப்பே புலிகள் என்றும் சத்தியம் பண்ணவும் இவர்கள் தயார்.

Link to comment
Share on other sites

இங்கு சிலருக்கு புலிகள் செய்ததை சரி என்பதைத்தவிர வேறெதிலும் அக்கறையில்லை இவ்வளவு அழிவிற்கு பின்னரும்,விட்டால் உலகிலேயே ஜனநாயகமான விடுதலை அமைப்பே புலிகள் என்றும் சத்தியம் பண்ணவும் இவர்கள் தயார்.

சிறு பிள்ளை கக்கா இருக்கா விட்டாலும் அதற்கும் புலிகள் தான் என கூற இவரை போன்றவர்கள் ஆளுக்கொரு இணையம் வைத்து ஓதுவதையும் கடந்த 30 வருடமாக தான் பார்த்து வருகிறோம். கேட்டால் விமர்சனமாம்.மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்றால் பூச்சியம் தான்.அதற்குள் விமர்சனம் என்று சொல்லி தமது தவறுகளை மறைப்பதே இவர்களின் பிழைப்பாகி விட்டது.

Link to comment
Share on other sites

'ஜனநாயகத்தால் நிரப்பாதது தவறு' என்ற கூற்றுத் தொடர்பில் பின்வருவனவற்றைக் கூறத்தோன்றுகின்றது.

முற்றிலும் நேரெதிரான கருத்துக்களை மேசையில் இருந்து ஆவி பறக்க விவாதித்துவிட்டு, கலந்துரையாடல் முடிந்தபின் விவாத்தித்தவர்கள் தமிழர்களாக, விவாதிக்கப்படவற்றை இரைமீட்டுக்கொண்டு, நட்புணர்வுடன் தேனீர் பரும் அளவிற்கு எங்களின் மனவெளியில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதில் எனக்கும் வெறித்தனமான ஆசை உண்டு. நிலாந்தனிற்கும் ஏறத்தாள இப்படி ஒரு உள்ளுரவான ஆசை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கடந்தகாலம் தொடர்பான அவரது விளக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

பள்ளியில் அத்தனைபாடத்திலும் தப்பாமல் தவறிப்போய், ஏழாவதோடோ எட்டாவதோடு பளிப் பக்ககம் போக மறுத்த ஒரு மாணவன் இன்று வளர்ந்து குடும்பஸ்த்தன் ஆகி அவனது குடும்பம் இன்று வறுமையில் வாடுவதைக் காணநேர்ந்ததும், அவர்களது வறுமைக்குக் காரணம் அந்த மாணவனைத் தகவற்தொழில்நுட்பப்பட்டதாரி ஆக்காத பெற்றோரே என்று எவராவது கூறின் என்னைப் பொறுத்தவரை அந்த விளக்கத்தைப் படிப்பது நேரவிரயமாகவே தோன்றும். நாட்டில திடீரென கணனிசார் தொழில்வாய்ப்புக்கள் நிறைந்த சம்பளத்துடன் காணப்படுகின்றன என்ற ஒரே காரணத்தை மட்டும் கண்டு கொண்டு, மேற்படி வறுமை மாணவனின் பெற்றோர் திட்டமிட்டு அந்த மாணவனைத தகவல்தொழில்நுட்பப் பட்டாதாரி ஆக்காமையில் மொத்த விளக்கத்தையும் கொடுத்து ஒரு விளக்கம் தரப்படின் அதைப் பாராட்டுவது அத்தனை இலகுவல்ல.

குறித்த மாணவன் பள்ளிக்கூடப் படிப்பை வெறுத்தமைக்குப் பலகாரணங்கள் இருக்கலாம்: மட்டமான ஆசிரியர்கள், காலத்திற்கேற்காத புராதன கற்பித்தல் சிந்தனைகள் என ஏகப்பட்ட காரணங்கள் இருக்கலாம். பள்ளிக்கூடத்தை வெறுத்த மாணவன் மக்காகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால், இன்று தகவல் தொழில் நுட்ப வேலைகள் நிறைந்து கிடக்கின்றன என்பதை மட்டும் கண்டு, ஏழாவதோடு பள்ளியை நிறுத்தியவனின் குடும்பத்தின் இன்றைய வறுமைக்கு ஒரே வியாக்கியானம் அவனைத் தகவல் தொழில் நுட்பம் படிக்கவைக்காத பெற்றோரே என்று மட்டும் கூறுவது .....

குறிப்பு: மாறுகின்ற தொழில் நிலவரங்கள் சார்ந்து வறுமை நோக்கப்படவேண்டியதும், தொழில் பயிற்ச்சிகளில் கற்பித்தல் சிந்தனைகளில் உள்ள புராதனங்கள் பிறழ்வுகள் கழையப்பட்டு கற்பித்தல் தயார்படுத்தல் என்பன புதுப்பிக்கப்படவேண்டியதும் ஏன் மாணவர்கள் படிப்பதை வெறுக்கிறார்கள் என்பன போன்ற பல்வேறு முனைகள் ஆராயப்படுவதும் அவ்வாராய்ச்சிகள் சாhந்து மாற்றங்களிற்காக உழைப்பதும் எதிர்காலத்திற்கான அவசியம் என்பது அடுத்தகருத்திற்கு இடமற்றது. ஆனால் அத்தகைய ஆராட்சிகளிற்கான அவசியம் பற்றி துளியும் குறிப்பிடாது, படிக்காத மாணவன் தான் வறுமைக்ககுக் காரணம் என்று கூறும் ஆய்வினால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இருப்பதாக எனக்குப் படவில்லை.

எமது போராட்டம் ஜனநாயகத்தால் நிரப்பப்படாமல் நடந்தது என்றால் அதற்கான மூலகாரணம் ஜனநாயகத்தைப் பற்றிக் கொள்ளும் ஏதுநிலை உடைய மக்களாக நாங்கள் இருக்கவில்லை என்பதே. மக்கள் ஜனநாயகத்திற்காக ஏங்கினார்கள் என்றால், ஜனநாயகப் பண்புகள் முதிர்ச்சி அடைந்த குழுமமாக நாங்கள் இருந்திருந்தால், எங்களிற்குள் ஜனநாயகத்தை நிரப்பும் பொறுப்பு எவரது தலையிலும் விழுந்திருக்காது. இன்னமும் சொல்வதானால், ஜனாநாகத்திற்கான ஏதுநிலை உடைய மக்கள் கூட்டமாக நாங்கள் இருந்திருந்தால் பசப்பிற்கேனும் தங்களை ஜனநாயக வாதிகளாகக் காட்டிக்கொள்ளாத எவரும் தலைமைத்துவம் பெற்றிருக்கமுடியாது. கடைசி இரு தசாப்த்தத்தைப் போல எப்பவும் இயக்கம் பலமாய் வரியுடையில் திரியவில்லை. உண்மையில் மக்களை நீராகவும் தம்மை மீனாகவும் நினைத்த போராளிகள் தான் முதல் ஒன்றரை தசாப்த்தத்து நிலவரம். மக்கள் ஜனநாயகம் வேணும் என்று அடித்துச் சொன்னால் அது கிடைத்தே இருக்கும். கோவிலிற்குள் "சாதிகுறைந்தவர்கள்" செல்லமுடியாது என்ற ஊhரின் கட்டுப்பாட்டை பல ஊhர்களில் இயக்கத்தால் வெல்லமுடியாது போனது 'நீர் மீன்' விடயத்திற்கு ஒரு உதாரணம். ஆக, ஜனநாயகக் காத்து நிரம்பாத பலூன்களிற்கான முதற் காரணம் பலூன்களின் ஓட்டை. அத்தோடு, இயக்கம் என்பது இதே மக்கள் கூட்டத்திற்குள் இருந்து வந்தது தான் என்பதும் மறக்கப்படக்கூடாது.

அடுத்து, உலகில் ஜனநாயகம் தவிர்க்கமுடியாத விடயமாக இருப்பதற்கான முக்கிய காரணம் ஆட்சியில் பங்கு வேண்டும் நடுத்தரவர்க்கத்தின் புறக்கணிக்கப்படமுடியாத ஆசையே. போராட்டத்தைப் பொறுத்தவரை, ஆட்சி என்பது போராட்டத்தில் பங்கெடுப்பது. களத்தில் இறந்தவனிற்குப் போடுவதற்குப் பூ பிடுங்குவதையே தனது தோட்டத்தின் அழகு சாhந்து மறுத்த சமூகம் போராட்டத்தில் ஜனநாயக ரீதியில் பங்கு கேட்டா முண்டியடிக்கப்போகிறது? போராட்டம் வெற்றிபெற்றால் நடக்கக்கூடிய ஆட்சி வேறு. போராட்டம் வேறு.

இறுதியாக, கனரக ஆயுதங்கள் கரும்புலி என எல்லாத்தையும் உச்சிப்போட்டே காழ்ப்புணர்ச்சியாலும் கதிரைச்சண்டையாலும் எதிரியோட சேர்ந்து குழி பறித்த கூட்டமும் எங்களிற்குள் இருந்து தான் வந்தது. இந்த லச்சனத்தில், ஜனநாயகத்தால நிரப்பினால் மட்டும் கதிரையில குந்தியிருந்து கனவான் கணக்கில பேசித்தீர்ப்பமாக்கும்? புலத்தில இப்ப பட்டொளிவீசிப் பறக்காத ஜனநாயத்தையாக அங்க ஊத்திவிட்டிருக்கலாம் என்று நிலாந்தன் சொல்லுறார்?

போராட்ட வடிவத்தை எதிரியே தீர்மானிக்கிறான் என்பது நெல்சன் மண்டேலாக்குச் சரியாப் பட்டிருக்கலாம். ஆனால் கொழுக்கட்டை மாவையும் இனிப்பு உள்ளுடனையும் மட்டும் வைச்சுக் கொண்டு, எதிரிக்கு மசால் வடையும் கட்ட சம்பலும் என்றால் பயம் எண்டிட்டுட்டு வடை சுட முடியாது. போராட்ட வடிவத்தை நிர்ணயிப்பது எதிரி மட்டுமல்ல போராடுற கூட்டமும் தான்.

Link to comment
Share on other sites

முன்னர் மு.தி தொடர்பாக வேறு ஒரு தளத்தில் எழுதிய பின்னூட்டத்தை வரலாற்றுதேவை கருதி மீளிடுகின்றேன்.

மு.தி ஒரு போதும் பிரபாகரனின் ஆலோசகராக இருந்ததில்லை.முதி யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து புலிகளின் அனுதாபியாக இருந்து வந்தவர்.மாத்தையா புலிகள் இயக்கத்தில் இருக்கும் வரைநெருக்கமாக உறவு வைத்திருந்தவர்;பரா;யோகி;பாலகுமாரன் எனப்பலர் முதியிடம் அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதுண்டு; மாத்தையா பிடிபட்டதும் யாரும் இவரிடம் போவதில்லை.1996 இடம்பெயர்வுடன் வவுனியா ஒமந்தை பகுதியில் விவசாயம் செய்த இவர் அந்த காலப்பகுதியில் தனது பல்கலைக்கழக மாணவியை திருமணம் செய்தும்கொண்டவர்.இந்த காலத்தில் மனைவியின்நெருங்கிய உறவு முறையான வவுனியா கிராமசேவகர் ஒருவர் புலிகளின் பகிரங்க மரணதண்டனைக்குள்லானதில் மனைவி புலிகளை திட்டி தீர்த்துவந்தவர்;மனைவி ஒரு ஆசிரியையும் கூட. பின்னய இடம்பெயர்வுகளுடன்

மல்லாவிக்கு வந்த முதியும் நிலாந்தனும் யோகபுரம் வளன் நகரில் ஒரு ஆங்கில பட்டறை( இங்கிலீஸ் ரியூசன் சென்ரர்)

என்று தான் அழைத்துக்கொண்டார்கள்; வழமையான கல்வி முறையில்லாமல் எல்லோரும் வட்டமாக கூடியிருந்து படிக்கும் முறையை கையாண்டார். இந்த ஆங்கில வகுப்பில் முதி கணிசமான விடயங்களை அரசியலுடன் சம்பந்தப்படுத்தியே வகுப்பை கொண்டும் சென்றார். இந்த வகுப்பில் பல்வேறு புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் காசு கொடுத்து கல்வி கற்றனர். அப்போது புலிகளுக்கு ஆங்கில அறிவின் தேவை இருந்ததால் கணிசமானோர் கல்வி கற்றதுடன் முதியிடமிருந்து இடையிடையே அரசியலையும் கற்றுக்கொண்டனர். இதில் நிலாந்தனும்; முதியும்; முதியின் மனைவியும் ஈடுபட்டனர்.

சமாதானம் தொடங்கும் வரை மல்லாவியில் நீடித்த இந்த ஆங்கிலப்பட்டறை நடத்திய நிலாந்தன் முதிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டினால் இருவரும் பிரிந்துகொண்டனர். அதேவேளை ஆங்கிலபட்டறைக்கு வந்த ஒரு நடன ஆசிரியையை காதலித்த நிலாந்தன் திருமணமும் செய்துகொண்டார். நிலாந்தன் முதிக்கு எதிராக வட்டக்கச்சியில் ஒரு ஆங்கிலப்பட்டறையை நிறுவினார். இதனால் ஆத்திரம் கொண்ட முதி கிளிநொச்சியில் மஞ்சுளா பேக்கறி சந்தியில் ஒரு ஆங்கில பட்டறையை தொடங்கினார்.

இந்த காலத்தில் தான் தனியாக செயற்படவேண்டிய சூழலில் முதி மோட்டார்சைக்கிள் ஓடவும் கற்றுக்கொண்டார் என்பது இன்னொரு விடயம்; இதை இந்த இடத்தில் சொல்லவேண்டிய தேவையுள்ளதால் இதனையும் சொல்கிறேன்; புலிகலின் அரசியல் பிரிவினர் முதியை தமது அரசியல் பிரிவினருக்கான அரசியல் வகுப்புக்களுக்கு பயன்படுத்தினர்; இவரை அவ்வாறு பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது; அதாவது வகுப்பு என்றால் இவரை ஒரு வாகனத்தில் ஏற்றி இறக்க ஒருவர் முதி மோட்டார் சைக்கிள் பழகும்வரை தேவைப்பட்டார்.

அடுத்து சமாதானம் மெல்ல நகரத்தொடங்க ஆரம்பத்தில் நிலாந்தனும்; பின்னர் போட்டியாக முதியும் ஈழ நாதத்தில் மீண்டும் புலிகளால் எழுத வைக்கப்பட்டனர். முன்னர் யாழில் ஈழ நாதம் இயங்கிய போது ஈழ நாதத்துக்கு அழகன் பொறுப்பாக இருந்தபோது முதி; நிலாந்தன் இருவரும் எழுதிவந்தனர்; ஆனால் நிலாந்தன் ஒரு கறார் பேர்வழி தனது கட்டுரையில் கத்தரிப்பதை விரும்பாதவர் இந்த சிக்கலால் புலிகளுக்கு இசைவாக எழுதுவதில் இருந்த சிக்கலில் எழுதுவதை நிறுத்தினார்; அடுத்து முதிக்கும் அவரது நண்பரும் ஈழ நாதம் ஆசிரியருமான ஜெயராஜ்க்கும் எழுந்த முரண்பாட்டில் முதியும் எழுதுவதை நிறுத்தினார்; அதே நேரத்தில் மாத்தையாவின் கைதும் நிகழ்ந்தகாலம் முதி புலிகளால் பாவிக்காமல் விடப்பட்டார்.

இந்த நீண்ட இடைவெளியின் பின்னர் 2003 காலத்தில் மீண்டும் முதி ; நிலாந்தன் ஆகியோர் புலிகளின் ஊடகங்களில் இடம்பிடித்தனர்; மீண்டும் யோகியும்; பாலகுமரனும்; பராவும்; என ஒரு நீண்ட புலிப்பட்டியல் இவர்களை நாடியது. இங்கு இன்னொரு மிகமுக்கிய விடயத்தையும் சமாதான தூதர்களை சந்திக்கும் புலிகளின் உயர் மட்டத்தினர் பலர் முதியிடம் ஆங்கிலம் கற்க தனியான வகுப்புகளுக்கும் சென்றனர்; இதில் நடேசன்; தமிழேந்தி கூட சென்றனர்.

சமாதான காலத்தில் வன்னிக்கு சென்ற பாலசிங்கமும் முதியை சந்தித்துக்கொண்டார்; உண்மையில் பாலசிங்கத்துக்கு முதியின் பல கருத்துக்களுடன் உடன்பாடு இருந்ததில்லை. இவங்கள் குழப்பவாதிகள் மாக்சிசம் மண்ணாங்கட்டி என்று சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் என்ற கண்னோட்டத்துடன் பாலா இந்த குழுவினரை பார்ப்பதுண்டு.

எனினும் இவர்களின் அரசியலை பயன்படுத்தும்படி சிபார்சு செய்ததில் பாலசிங்கமும் ஒருவர்; இதனால் புலிகளின் தேசிய தொலைக்கட்சியிலும் தோன்றினர்; மூத்த அரசியல் ஆய்வாளர் ஆகினர். இதுவே பிரபாகரனின் அரசியல் ஆலோசகராக வெளிக்காட்டியது; நான் நினைக்கிறேன் பிரபாகரன் இவரை சந்தித்ததில்லை என்றே; அப்படி சந்தித்திருந்தாலும் ஒரு மரியாதையின் நிமிர்த்தமே. ( நான் சொல்வது சந்தித்ததில்லை என்பது அருமை பெருமையாக சில தடவைகள் சந்தித்திருக்க வாய்ப்புண்டு. இங்கு கருத்து எழுதியவர்கள் சொல்வது போன்று ஆலோசகராக கொள்கைவகுப்பாளராக இருப்பின் பல டசின் கணக்கான சந்திப்பாக இருந்திருக்கும்)

இதுதான் முதியின் உண்மையான வரலாறு. தேவைப்பட்டால் இந்த அடிபடைதரவுகளை வைத்து யாரிடமும் விசாரித்துப்பார்த்து எழுதுங்கள்.

மேலும் சில தரவுகள்……

முதி ஆரம்பகாலத்தில் வரதருடன் சேர்ந்து புலிகளுக்கும் வேலை செய்தவர். வரதர் ஈபிஆர் எல் எவ் க்கு வேலை செய்வதற்கு முன்னர் குலமக்காவின் குரு நகர் இல்லத்தில் வைத்து மாத்தையாவுக்கு அறிமுகமாகி ஆரம்பத்தில் புலிகளுக்கு வேலை செய்தவர் என்பதை நான் அறிவேன்.

முதியின் அறிமுகம் ஆரம்பத்தில் புலிகளுக்கு பண்டிதர், சுகந்தன் மூலமாக ஏற்பட்டிருக்கவேண்டும். சுகந்தன் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்த போது சுற்றிவளைப்பில் சயனைட் அருந்து மரணமானவர். இந்த சுகந்தனின் பெயரிலேயே முதியும் வேறு சிலரும் ( தனினாயகம், சிவரஞ்சித் என நினைவு) சுகந்தன் வெளியீட்டாக தான்பரீன், மற்றும் வேறு சில வெளியீடுகளை செய்தனர். அக்காலத்தில் புலிகளுடன் கருத்தியல் ரீதியாக முதி குழுவினர் 1984க்கு பிற்பகுதியில் முரண்பட்டிருந்தனர். எனினும் முதி புலிகளின் கிட்டு, திலீபன், மாத்தையாவுடன் தொடர்பில் இருந்தவர்.

மாத்தையா, யோகி போன்றோர் தமிழீழத்தின் சிறந்த சிந்தனையாளராகவே மு.தியை கருதி வந்தனர். இதனை பிரபாகரன் கிரகித்துக்கொண்டாரே தவிர ஏற்றுக்கொண்டவர் அல்ல. இவ்வாறான சிந்தனைபோக்கு கொண்டவர்கள்தான் புலிகள் இயக்கத்தின் ஆரம்பத்தில் புலிகள் அமைப்பை உடைத்தவர்கள் என்ற எண்ணப்பாங்கு எப்போதும் பிரபாகரனிடம் இருந்துவந்தது. இதனை பிரபாகரன் எல்லோருக்கும் சொல்வதில்லை. தன்னை முற்றாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு சொல்லிக்கொண்டவர் என்பது நான் அறிந்தது.

மு.தி; நிலாந்தன் போன்றோர் புலிகளை ஆதரிக்கும் எல்லாக்கூட்டங்களையும் போன்று பிரபாகரனை , அண்ணை என்றோ தேசியத்தலைவர் என்றோ அழைப்பது கிடையாது. எப்போது பிரபாகரன் என்றே விழித்து பேசுபவர்கள். இதனை அவதானித்த புலிகளின் போராளி எனக்கு கூறியது.

மு.தி வவுனியா முகாமில் இருந்து தப்பி மன்னார் கடல் வழியாக தப்பி வருவதற்கு பண உதவி புரிந்தவர்களையும் நான் அறிவேன். இவர்கள் எல்லோரும் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள். எனினும் எதேட்சையாக படகோட்டி தீடையில் விட்டுவிட்டதால் மு.தி ஆரம்பத்தில் கடலோர காவற்படையிடம் மாட்டிக்கொண்டாலும் மேலதிக விசாரணையில் இவரை அடையாளம் கண்டுகொண்டதால் சிபிஜ; றோ ; கியூபிரிவுகளின் அதி உயர்பீடம் வரை விசாரணைகளை மேற்கொண்டது என்பது உண்மைதான். எம்மவர்களுக்கே இருக்கும் மு.தி தொடர்பான குழப்பம் அதாவது மு.தி பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் என்ற கோதா இந்திய புலனாய்வாளர்களுக்கும் மு.தியை அந்தக்கோணத்தில் வைத்து விசாரிக்கவேண்டிய தேவை இருந்திருக்கும். அதே நேரம் மு.தியின் இந்திய எதிர்ப்புவாதம் பற்றியும் அப்புலனாய்வாளர்களுக்கு மு.தியை கையாள வேண்டிய தேவை இருந்திருக்கும் என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்கே தெரியும்.

இங்கு மு.தி வெள்ளாடு; கறுப்பாடு என்ற கற்பனாவாதங்கள் வெறும் இட்டுக்கட்டல்கள்தான். மு.தி எங்கு எப்படி இருக்கிறார் என்பது தெரியாதவர்களுக்கு தெரியாது தானே. மு.தி கூடுதல் கண்காணிப்பில் தமிழ் நாட்டில் இருக்கிறார் என்பது மட்டும் வெளிப்படையான உண்மை.

http://inioru.com/?p=18902

Link to comment
Share on other sites

அண்மைய நோர்வே அறிக்கை பகிரங்கமாக இந்தியாவைக் குற்றம் சாட்டியது, சொல்கையுமும் இந்தியாவை நடந்த்த அழிவுகளுக்கெல்லாம் பங்குதாரர் என்பதாகவே சொன்னார்.அமெரிக்கா கூட்டமைப்பை நேரடியாகாக் கூப்பிட்டுக் கதைக்கிறது.

புலிகளை அழிப்பதால் சிறிலங்கா மீதான தமது பிடி தளரும் என்பதை அறிந்தே இந்தியா புலிகளை அழித்தது.

இந்தியாவிற்காகவே மேற்குலகம் ஒன்று பட்ட இலங்கைக்குள்ளான தீர்வு என்று சொல்லி வருகிறது.

இந்தியாவுக்கும் புலிகளுக்குமான பகை ‘ஒன்று பட்ட இலங்கை ` என்னும் கோட்பாட்டை மறுத்து புலிகள் சுய நிர்ணயத்தில் உறுதியாக நின்றமையே.

இந்திய ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை அது தன்னுடைய இருப்பில் கைவைக்கும் சுய நிர்ணய உரிமைப் போரையே முதலில் அழிக்கும்.அதன் பின்னரே அதற்க்கு எல்லாம்.இதனால் தான் அது சிறிலங்கா எவ்வளவுக்கு சீனாவின் பக்கம் சாய்ந்தாலும் தொடர்ந்த்தும் அதற்க்கு ஆதரவு தெருவித்து வருகிறது.

மேற்குலகைப் பொறுத்தவரை அவர்களுக்கு சீனாவைக் கட்டுப்படுத்துவதே பிரதான இலக்கு.அதற்காக இந்தியாவை அவை பயன் படுத்தப் பார்க்கின்றன.இந்த நிலையில் மேற்குககிற்க்கும் இந்தியாவிற்க்கும் இடையில் சிறிலங்கா தொடர்பில் கருத்து முரண்பாடுகள் உண்டு.

சிறிலங்காவில் சிங்கள அரசும், தமிழர்களும் சீனாவின் பக்கம் சாய்ந்த்தால் , இந்தியா தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்க்கும்.ஆனால் தமிழர்கள் தலமை நான் உன்னை முதுகில் எத்தினை தரம் குத்தினாலும் உன் காலடியில் தான் கிடப்பேன் என்று அரசியல் செய்வதால் ,இந்தியாவுக்கு தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்த அவசியமும் இல்லை.மாற்றாக அது தமிழர் தரப்பை தொடர்ந்த்தும் பாவித்த படி தனது பேரம் பேசல்களை சிறிலங்கா அரசுடன் நடத்தும்.

என்று தமிழர்கள் இந்தியாவை மீறிச் செயற்படுகிறார்களோ அன்று தான் இந்தியா யோசிக்கும்.அதுவரை தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பத்து அவர்களுக்கு உபயோகம் அற்ற ஒரு விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி தான் இயக்கத்திற்குப் போனதைப் பற்றிய குறிப்பில் நிலாந்தனைக் குறிப்பிட்டிருந்தார்.

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லட்டுமா! ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிலிருந்து இயக்கத்துக்கு ஓடிப்போன ஆளல்ல நான். என்னுடைய 'மூவே' வேறு. யூலைக் கலவரத்தைத் தொடர்ந்து எனக்கு மாகேஷ் என்ற புலிகள் இயக்க உறுப்பினரோடு தொடர்பு ஏற்படுகிறது. (நான் அப்போது அரைக்காற்சட்டை போடும் பொடியன்) இரண்டு மாதங்களுக்கு மாகேஷ் எனக்கு சிறுசிறு பணிகளைத் தந்தவாறிருந்தார். நான் வீட்டிலிருந்தவாறே அவற்றைச் செய்து வந்தேன். என்மீது ஓரளவு நம்பிக்கை வந்தபின்பு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு 18 வயது மதிக்கத்தக்க கடுகடுத்த முகமும் கட்டையான தோற்றமுள்ள ஒரு இளைஞரை எனது வீட்டுக்கு மாகேஷ் அழைத்துவந்தார். சாரமும் முரட்டுத்துணியிலான சட்டையும் அணிந்திருந்த அந்த இளைஞரின் கையில் ஒரு துணிப்பை. அதற்குள் சில துண்டுப்பிரசுரங்களும் ஒரு துருவேறிய ரிவோல்வரும். அந்த இளைஞருக்கு அப்போது எழிலன் என்று பெயர். இப்போது அவருக்கு நிலாந்தன் என்று பெயர்.

அதன்பின்பு நான்கு மாதங்கள்வரை நிலாந்தன் என்னிடம் வருவதும் அல்லது எங்காவது குறிப்பிட்ட இடங்களில் நாங்கள் சந்திப்பதும் சில வேலைகளை அவர் என்னிடம் ஒப்படைப்பதாகவும் நாட்கள் கழிந்தன. இதற்குள் நான் எங்களது ஊரில் இன்னும் சில பொடியன்களை இயக்கத்துக்கு திரட்டிவிட இயல்பாகவே நான் அந்த ஏரியா பொறுப்பாளனானேன். எங்களது கிராமத்திற்கே டானியல் மாஸ்டரை அழைத்துவந்து சில அடிப்படை ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றோம். அந்தப் பயிற்சியின்போதுதான் நாங்கள் முறையாகப் புலிகள் இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களானோம். அந்தக்காலத்தில் தீவுப்பகுதியில் புலிகளுக்கு முகாம்கள் இல்லாததால் எல்லோரும் அவரவர் வீடுகளிலேயே இருந்தோம். இதற்குப் பின்னாகதான் நான் வீட்டைவிட்டு முழுவதுமாக வெளியேறி ஆயுதப் பயிற்சி பெறுவதற்காகச் சென்றேன். பயிற்சிக்கு நான் செல்லும்போதே நான் புலிகள் இயக்க உறுப்பினன்தான்.

http://www.facebook.com/?ref=hp#!/note.php?note_id=10150342375377911

Link to comment
Share on other sites

ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி

பெப்ரவரி 22, 2006

- முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல், வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுவது எதைக்காட்டுகிறது?

- முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

“உங்களுக்குச் சமாதானம் வேண்டுமானால் உங்களை அதற்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று ஒரு லத்தீன் வாசகம் உண்டு. கொழும்பில் கடந்தசில வாரங்களாக நடைபெற்றுவரும் ஏற்பாடுகளை வைத்துப்பார்த்தால் ஒன்றில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக மிகவும் கத்துக்குட்டி நிலையில் உள்ளது என்ற முடிவுக்கு வரநேரிடும். அல்லது அரசாங்கம் சமாதானத்துக்கு விசுவாசமில்லை என்ற ஒரு முடிவிற்கும் வரலாம்.

அரசாங்கம் உண்மையாகவே பேச்சுவார்த்தைக்கு தன்னை விசுவாசமாக ஆயத்தப்படுத்திவருகிறது என்று ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் அதற்காக அவர்கள் தருவித்திருக்கும் நிபுணர்களால் எவ்வளவுதூரத்துக்கு அவர்களை ஆயத்தப்படுத்த முடியும்?

இச்சிறு தீவில் கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரியாத ஒரு நிலையிலேயே, அதாவது இது விஷயத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசாங்கத்தின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுகிறார்கள் என்பது எதைக்காட்டுகிறது?

பிரச்சினையில் ஆழ அகலத்தைப் புரிந்துகொள்வது என்றால் முதலில் அவர்கள் உள்ளுரிலேயே அணுகக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். முதலாவதாக அவர்களுடைய அமைச்சரவையிலேயே ஒரு உறுப்பினராக இருக்கும் டி. குணசேகரவிடம் வகுப்பு எடுக்கலாம். ஒற்றையாட்சி முறைக்குள் ஏன் பிரச்சினையைத் தீர்க்க முடியாதுஎன்பதை அவரிடம் கேட்டுத்தெளியலாம். அவரைத்தவிர பேராசிரியர் ஜெயதேவஉயாங்கொட இருக்கிறார். பேராசிரியர் சுசரித்த கமலத் இருக்கிறார். விக்ரர் ஐவன் இருக்கிறார். இவர்களைப் போன்ற உள்ளுர் நிபுணர்களை அழைத்து ஆலோசனை கேட்கலாம்.

ஜீ.எல்.பீரிஸோ அல்லது மிலிந்த மொறகொடவோ வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர்கள் அல்லர். அவர்கள்செய்த சமாதானம் ஆறு சுற்றுப்பேச்சுக்களின் பின் இறுகிப்போய் நின்று விட்டதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

மற்றது நாராயண சுவாமியிடம் வகுப்பு எடுப்பது பற்றியது. நாராயண சுவாமி விடுதலைப் புலிகளின் உள் வட்டங்களுக்குள் தொடர்ச்சியாக பழகிய ஒருவரல்லர். றொகான் குணரட்ணவைப்போல அவரும் இரண்டாங்கை, மூன்றாங்கை தகவல்களை வைத்துக்கொண்டு எழுதுபவர்தான். அவரும் அவரையொத்த எல்லாருமே விடுதலைப் புலிகளை தமது நோக்கு நிலையிலிருந்து பார்ப்பவர்கள்தான். விடுதலைப் புலிகள் இயக்கத்தை, அதை அதுவாகப் பார்க்கத் தயாரில்லாத இவர்களுக்கு புலி மனம் எனப்படுவது எளிதில் பிடிபடாது வழுக்கிச் செல்லும் ஒன்றாகவே – ‘இலூசிவ்’ ஆகவே – தோன்றமுடியும்.

நாராயணசுவாமி மட்டுமல்ல றொகான் குணரட்ண மட்டுமல்ல புதுடில்லியில் இருந்துகொண்டு தமது பிராந்திய பேரரசு நலன்களுக்கூடாக தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பார்க்கும் எவருக்குமே புலிகள் இலூசிவ் ஆகத்தான் இருப்பர். கொழும்பிலிருந்துகொண்டு புலிகளை தமது நோக்குநிலையில் இருந்து பார்க்கும் எல்லா அறிவுஜீவிகளும் ஊடகக்காரர்களும் என்றைக்குமே புலிமனத்தைக் கண்டுபிடிக்கப்போவதில்லை. யாரெல்லாம் புலிமனதை, அதை அதுவாகப் பார்க்க முடியாதிருக்கிறார்களோ, அல்லது அதை அதுவாகப் பார்க்க மறுக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அது ‘இலூசிவ்’ ஆகத்தான் இருக்கும்.

புலிமனதை அதை அதுவாகப் புரிந்துகொள்வது என்பது தமிழர்களை தமிழர்களிற்கேயான பிரச்சினைகளுக்கூடாகப் புரிந்துகொள்வதுதான். தமிழர்களின் பிரச்சினைகளை அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கூடாக புரிந்துகொள்ளும் எவரும் அந்தப் பிரச்சினைகளின் தவிர்க்கவியலாத ஒரு விளைவே புலிகள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.

எனவே புலிமனதைக் கண்டுபிடிப்பது என்பது அதன் ஆழமான அர்த்தத்தில் தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதுதான். இதற்கு ஹவார்ட்டில் படித்து பட்டம்பெற வேண்டியதுமில்லை நாராயண சுவாமியிடம் வகுப்பெடுக்க வேண்டும் என்றுமில்லை.

பிரித்தானியக் கடற்படையின் புகழ்பெற்ற தளபதியாக இருந்தவர் நெல்சன். இவருக்கு ஒரு கண் இல்லை. தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்திராத அந்நாட்களில் கடற்கரையிலிருந்து காட்டப்படும் சமிக்ஞைகளே சமர்களை வழிநடத்தின.

தளபதி நெல்சன் சமர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் போது கள யதார்த்தத்திற்கேற்ப முடிவுகளை எடுக்க விரும்பினால் கரையை நோக்கி பார்வையிழந்த தனதுகண்ணை வைத்துக்கொள்வாராம். இதன் மூலம் கரையில் காட்டப்படும் சமிக்ஞைகள் தனக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு தன்முடிவுப்படி சண்டையை வழிநடத்துவாராம்.

நெல்சனின் சகோதரர்கள் இப்பொழுதும் புதுடில்லியிலும், கொழும்பிலும் இருக்கிறார்கள். அவர்கள் எதையாவது புரிந்துகொள்ள விரும்பவில்லை என்றால் அதைப்பார்க்காமலேயே விட்டுவிடுகிறார்கள். ஜெனிவாவுக்குப் போகவிருக்கும் அரச தரப்புப் பிரதிநிதிகளும் இப்படி நெல்சனின் கண்கொண்டே பிரச்சினைகளைப் பார்க்க விரும்புவது தெரிகிறது. மெய்யாகவே அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்களாயின் அவர்கள் ஆலோசனை பெற்றிருக்கவேண்டியது வேறு ஆட்களிடமே.

எனவே கொழும்பில் நடந்தவை அனைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறைகள் அல்ல. மாறாக பிரச்சினைகளைக் காலம் கடத்தவும் விடுதலைப்புலிகளை ஒரு புதிய பொறிக்குள் சிக்கவைப்பதற்குமாகத்தான் அவர்கள் புலிமனதைப் படிக்கிறார்கள்.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் ஒத்துப்போய் அல்லது அதிகம் விட்டுக்கொடுப்பதுபோல ஒரு போக்கைக்காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளை மேற்கு நாடுகளுடன் முரண்பட வைக்கும் விதத்தில் ஒருபொறி கொழும்பில் தயாராகி வருகிறது. இது 1987இல் ஜெயவர்த்தன இந்தியாவுடன் சேர்ந்து செய்த ஒரு பொறியைப்போன்றதே. அந்தப் பொறி நடுவராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக்கியது. முடிவில் அது தமிழர்களையும் இந்தியாவையும் மோத விட்டது.

ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி நடத்தினார். அதிலிருந்து தொடங்கி சிதையத்தொடங்கிய இந்திய -ஈழத்தமிழ் உறவுகள் முற்றாக வழமைக்குத் திரும்பிவிடாத ஒரு பின்னணியில் இப்பொழுது புலிகளையும் மேற்குநாடுகளையும் மோதவிடும் விதத்தில் ஒரு புதியபொறி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது முன்பு ரணில் வைத்திருந்த பொறியின் திருத்தப்பட்ட ஒரு வடிவமாகவும் இருக்கலாம். முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ் காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த தன்னுடைய யுத்தத்தை யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

முன்பு ரணில் ஒஸ்லோவிலும், டோக்கியோவிலும் பொறிவைக்க முயன்றார். இப்பொழுது மஹிந்த ஜெனிவாவில் பொறி வைக்க முயல்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டம் இது வரை எத்தனையோ பொறிகளைக் கண்டுவிட்டது. முதலாவது பொறி திம்புவில் வைக்கப்பட்டது. அங்கிருந்து தொடங்கி டோக்கியோ வரையிலும் விதம்விதமான பொறிகள் வைக்கப்பட்டன. சில பொறிகள் தர்மர்பொறிகள். சிலபொறிகள் வீமன்பொறிகள். சிலபொறிகள் தர்மர்பொறிபோல உருமறைக்கப்பட்ட வீமன்பொறிகள். இப்பொழுது ஒரு புதிய பொறி ஜெனிவாவில் காத்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் எத்தனை பொறிகளைக் கடக்கவேண்டியிருக்கும்?

-நிலாந்தன்-

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 19-022006

கணனித் தட்டச்சு: திருமகள் (தமிழீழம்)

குறிப்பு: நிலாந்தன் அவர்கள் தமிழீழத்திலிருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் தொடர்ச்சியாக அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருவதுடன், புலிகளின் குரல்வானொலியிலும் தனது அரசியல் ஆய்வுகளை வழங்கிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

Link to comment
Share on other sites

For the first time in memory, the Burmese leadership has shown an interest in engaging with the United States, and we intend to explore that interest. In addition, concerns have emerged in recent days about Burma and North Korea’s relationship that require greater focus and dialogue.

What are the strategic goals and interests of this approach? We have reaffirmed our fundamental goals in Burma. We support a unified, peaceful, prosperous, and democratic Burma that respects the human rights of its citizens. To that end, we will continue to push for the immediate and unconditional release of Aung San Suu Kyi and all political prisoners, an end to conflicts with ethnic minorities and gross human rights violations, and initiation of a credible internal political dialogue with the democratic opposition and ethnic minority leaders on elements of reconciliation and reform.

We will also press Burma to comply with its international obligations, including on nonproliferation, ending any prohibited military or proliferation-related cooperation with North Korea, and full compliance with United Nations 1874 and 1718.

If Burma makes meaningful progress towards these goals, it will be possible to improve the relationship with the United States in a step-by-step process. We recognize that this will likely be a long and difficult process, and we are prepared to sustain our efforts on this front.

Burma’s continued estrangement from the international community harms the country and has direct negative consequences beyond Burma’s borders. Burma’s engagement with the outside world has the potential to encourage new thinking, reform, and participation in the work of the international community.

//http://www.state.gov/p/eap/rls/rm/2009/09/129698.htm

Link to comment
Share on other sites

Realpolitik and the Myanmar Spring

Wondering why Hillary Clinton is in Myanmar right now? Hint: it's all about China.

China, which long had coveted Myanmar's forests, rich mineral and natural gas deposits, and its hydroelectric power potential, took full advantage of the situation. In fact, it had already made its intentions clear in the Sept. 1985 edition Beijing Review, an officially sanctioned news magazine and a mouthpiece of the government. An article titled "Opening to the Southwest: An Expert Opinion," written byPan Qi, a former vice minister of communications,outlined the possibilities of finding an outlet for trade for China's landlocked southern provinces of Yunnan and Sichuan through Myanmar to the Indian Ocean. It also mentioned the Burmese railheads of Myitkyina and Lashio in the north and northeast, and the Irrawaddy River as possible conduits for Chinese exports. It was the first time the Chinese outlined their designs for Myanmar, and why the country was so important to them economically. Until then, China had supported the Communist Party of Myanmar and other insurgent groups, but after the death of Mao Zedong in 1976 and Deng Xiaoping's ascendance to power, Beijing's foreign policy shifted from supporting revolutionary movements in the region to promoting trade. This was the first time this new policy towards Myanmar was announced, albeit rather discreetly, by the Chinese authorities.

The first border trade agreement between Myanmar and China was signed in early August 1988, days before the uprising began in earnest. After the movement had been crushed and sanctions were put in place, China moved in and rapidly became Myanmar's most important foreign trade partner. It helped Myanmar upgrade its antiquated infrastructure -- and supplied massive amounts of military hardware. In the decade after the massacres, China exported more than $1.4 billion worth of military equipment to Myanmar. It also helped Myanmar upgrade its naval facilities in the Indian Ocean. In return, the junta gave Beijing access to signals intelligence from key oil shipment sealanes collected by the Burmese Navy, using equipment supplied by China. The strategic balance of power in the region was being upset in China's favor.

But the real resource play came later, and in spades. A plan to build oil and gas pipelines was approved by China's National Development and Reform Commission in April 2007. In Nov. 2008, China and Myanmar agreed to build a $1.5 billion oil pipeline and $1.04 billion natural gas pipeline. In March 2009, China and Myanmar signed an agreement to build a natural gas pipeline, and in June 2009 an agreementto build a crude oil pipeline. The inauguration ceremony marking the start of constructionwas held on Oct. 31, 2009, on Maday Island on Myanmar's western coast.The gas pipeline from the Bay of Bengal to Kunming, in China's Yunnan province,will be supplemented with an oil pipeline designed to allow Chinese ships carrying fuel imports from the Middle East to skirt the congested Malacca Strait. And in September of last year, China agreed to provide Myanmar with $4.2 billion worth of interest-free loans over a 30-year period to help fund hydropower projects, road and railway construction, and information technology development.

Western sanctions did not cause Myanmar's economic -- and strategic --push into "the hands of the Chinese," as many foreign observers have argued. But Western policies certainly made it easier for China to implement its designs for Myanmar. This has, in return, caused the West to rethink its Myanmar policy -- at the same time as the country's growing dependence on China has caused considerable consternation within Myanmar's military leadership. U.S. strategic concerns were outlined as early as June 1997 in a Los Angeles Times article by Marvin Ott, an American security expert and former CIA analyst. "Washington can and should remain outspokenly critical of abuses in [Myanmar]. But there are security and other national interests to be served...it is time to think seriously about alternatives," Ott concluded.

But the turn took some doing. When it was revealed in the early 2000s that Myanmar and North Korea had established a strategic partnership, Washington was alarmed. North Korea was providing Myanmar with tunneling expertise, heavy weapons, radar and air defense systems, and -- it is alleged by Western and Asian intelligence agencies -- even missile and nuclear-related technology. It was high time to shift tracks and start to "engage" the Burmese leadership, which anyway seemed bent on clinging on to power at any cost, no matter the consequences.

The 2010 election in Myanmar, no matter how fraudulent it was, was just the opportunity that Washington needed. Myanmar suddenly had a new face and a country run by a constitution, not a junta. It was the perfect time for Myanmar's generals to launch a charm offensive in the West, and for the United States and other Western countries to begin the process of détente -- and of pulling Myanmar from its uncomfortable Chinese embrace and close relationship with North Korea. Hardly by coincidence, Clinton visited South Korea before continuing on to Myanmar. For more than a year, it has been known in security circles that the United States wants South Korea to lure Myanmar away from its military cooperation with North Korea. The much richer South would be able to provide more useful assistance to Myanmar than the North, the argument goes.

At the same time, many staunchly nationalistic Burmese military officers have become dissatisfied with their country's heavy dependence on China as well as uncontrolled immigration by Chinese nationals into the north of the country. The first blow against China came in Oct. 2004, when the then-prime minister and former intelligence chief Lt.-Gen. Khin Nyunt was ousted. The Chinese at first refused to believe that their man in Myanmar, Khin Nyunt, had been pushed out. How could the generals dare to move against a figure so key to the relationship? Nevertheless, both sides managed to smooth over the incident, and bilateral relations appeared to be returning to normal. Then, in 2009, Burmese troops moved into the Kokang area in the northeast, pushing more than 30,000 refugees -- both Chinese nationals and local, ethnic Chinese -- across the border back into China.

Still, China did not get the message -- until Sept. 30 of this year, when Thein Sein announced that a China-sponsored, $3.6 billion hydroelectric power project in the far north of the country had been suspended. The dam was going to flood an area in Myanmar bigger than Singapore, and yet 90 percent of the electricity was going to be exported to China. Now, China has threatenedto take legal actions against the Burmese government for breach of contract. This was the final straw. Today, it is clear that Sino-Burmese relations will never be the same.

To strengthen its position vis-à-vis China, Myanmar has turned increasingly to its partners in the Association of Southeast Asian Nations (ASEAN), which it is due to chair in 2014. Even more significantly, when Gen. Min Aung Hlaing, who was appointed commander-in-chief of Myanmar's military in March, went on his first foreign trip in mid-November, he did not go to China -- but instead to China's traditional enemy, Vietnam. Myanmar and Vietnam share the same fear of their common, powerful northern neighbor, so it is reasonable to assume that Min Aung Hlaing had a lot to discuss with his Vietnamese hosts.

But the strategic change in Myanmar didn't happen overnight. In the same year as Khin Nyunt was ousted, an important document was compiled by Lt. Col. Aung Kyaw Hla, a researcher at Myanmar's Defense Services Academy. His 346-page top secret thesis, titled "A Study of Myanmar-U.S. Relations," outlined the policies which are now being implemented to improve relations with Washington and lessen dependence on Beijing. The establishment of a more acceptable regime than the old junta provided has made it easier for the Burmese military to launch its new policies, and to have those taken seriously by the international community.

As a result, relations with the United States are indeed improving, exactly along the lines suggested by Aung Kyaw Hla in 2004. While paying lip service to human rights and democracy, there seems to be little doubt that Sino-Burmese relations -- and North Korea -- will be high on Clinton's agenda when she visits Myanmar this week. On a visit to Canberra in November, President Barack Obama stated that, "with my visit to the region, I am making it clear that the United States is stepping up its commitment to the entire Asia-Pacific region." The United States is a Pacific power, Obama said, and "we are here to stay." But he was quick to add: "The notion that we fear China is mistaken. The notion that we are looking to exclude China is mistaken."

That statement was about as convincing as Thein Sein's assurance that he had suspended the dam project in the north because he was concerned about "the wishes of the people."

The two old adversaries, Myanmar and the United States, may have ended up on the same side of the fence in the struggle for power and influence in Southeast Asia. Frictions, and perhaps even hostility, can certainly be expected in future relations between China and Myanmar. And Myanmar will no longer be seen by the United States and elsewhere in the West as a pariah state that has to be condemned and isolated.

Whatever happens, don't expect relations to be without some unease. Decades of confrontation and mutual suspicion still exist. And a powerful strain in Washington to stand firm on human rights and democracy will complicate matters for Myanmar's rulers -- who are still uncomfortable and unwilling to relinquish total control. And last of all, there's China. Myanmar may be pleased that the reliance on a dominant northern neighbor might be lessened shortly, but with so many decades of ties and real, on-the-ground projects underway, the relationship with Beijing isn't nearly dead yet.

http://www.foreignpolicy.com/articles/2011/11/30/democracy_myanmar_china_clinton?page=0,3

Link to comment
Share on other sites

//Frost emphasized that ASEAN leaders are seeking to maximize their collective voice in the region and in the wider world. "They calculate that giving China a leading role in regional organizations makes it more likely that other powers will pay more attention to the region and engage with ASEAN countries on even more attractive terms," said Frost.//

http://www.atimes.com/atimes/Southeast_Asia/LC10Ae01.html

Moreover, the Obama administration has now reversed popular anti-Americanism during the [George W] Bush administration and the widespread perception of US neglect through several symbolic gestures, including signing ASEAN's Treaty of Amity and Cooperation. The US Pacific Command has built a dense network of military-to-military ties, particularly in maritime Southeast Asia," said Percival, who called for the US to "shift its focus in Southeast Asia from humanitarian issues such as Burma to critical security issues such as the South China Sea.

"We don't know if Beijing is launched on a process of 'nibbling imperialism' in the South China Sea, but preventing Chinese domination of this sea and maintaining free passage for US armed forces and for energy supplies is critical for US alliances in Northeast Asia and, indeed, for the maintenance of the entire US position in East Asia." he said.

Link to comment
Share on other sites

//சிறிலங்காவில் சிங்கள அரசும், தமிழர்களும் சீனாவின் பக்கம் சாய்ந்த்தால் , இந்தியா தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்க்கும்.

ஆனால் தமிழர்கள் தலமை நான் உன்னை முதுகில் எத்தினை தரம் குத்தினாலும் உன் காலடியில் தான் கிடப்பேன் என்று அரசியல் செய்வதால் இந்தியாவுக்கு தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்த அவசியமும் இல்லை.

மாற்றாக அது தமிழர் தரப்பை தொடர்ந்த்தும் பாவித்த படி தனது பேரம் பேசல்களை சிறிலங்கா அரசுடன் நடத்தும்.// narathar

சிங்கள அரசும் தமிழ்த்தரப்பும் சீனாவின் பக்கம் சாய்ந்தால் இந்தியா எமது பிரச்சினையை தீர்க்குமென நாரதர் அம்புலிமாமா கதைபோல் ஒரு இனத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் முடிவுகளை சும்மா அள்ளி வீசுகிறார். உண்மையில் நாரதர் போன்றவர்கள் முதலில் கற்றுக்குட்டித்தனமான அரசியல் சுலோகங்களை கண்ட இடமெல்லாம் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

முதலில்' தமிழர் தரப்பில் தீர்க்கமான சில அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமாயின், புலிகளின் அரசியல் இராணுவ தலைமைத்துவம் இல்லாத சூழலில், எமதுபலம் என்னஎன்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். வெறும் கை முழம் போடாது. ஆக 14 கூட்டமைப்பு பாராளுமன்ற அரசியல் உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆகாயத்தில் கோட்டை கட்ட முடியாது. இந்நிலையில் சீனா சார்பான ஒரு நிலையை தமிழர் தரப்பு எடுக்க வேண்டுமென்பது இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக இருக்கும்.

அடுத்து, சிங்கள தரப்பில் அரசு (State) சார்ந்த மற்றும் ஆளும் அரசாங்கம் (Government) சார்ந்த உள்ளார்ந்த இயங்கு சக்திகளையும் அதன் திசைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். 70களில் இருந்த வெளியுறவுக்கொள்கை 77களுக்கு பின் தலைகீழாக மாறியது. 1990களில் சோவியத் பொறிவின் பின் சந்திரிகா-கதிர்காமர் காலத்தில் உருவாக்கிய இந்தியாவையும் சீனாவையும் சமாந்திரமாக கையாளும் வெளியுறவுக்கொள்கையின் ஒரு நீட்சிதான் மகிந்த சிந்தனையின் இரகசியம். அடிப்படையில் சிங்கள ஆளும் அரசாங்கங்கள் காலம்காலமாக ஒரே அயலுறவுக்கொள்கைகளை பின்பற்றியதில்லை.

ஆனால், சிங்கள அரச இயந்திரம் (State machine) என்பது மிகத்தெளிவான கொள்கைகளை தொடர்ச்சியாக பின்பற்றியே வருகிறது. அரசியல் அதிகார பகிர்வில் இம்மியளவும் தமிழர்கள் பெற்றுவிடாத இராஜதந்திர வழிமுறைகளை காலகாலமாக மிக நுணுக்கமான அரசியல் நகர்வுகள் மூலம் கடந்த 2009 மே வரை நகர்த்தி வந்துள்ளது.

தமிழர் தரப்பு ஒரு நெகிழ்ச்சி இல்லாத 1வீதம் விட்டுக்கொடுப்பு இல்லாத ஒரு அரசியல் கோரிக்கை முன்வைப்பதையே சிங்கள அரச இயந்திரத்தின் இராஜதந்திரம் மிக அதிகமாக விரும்புகிறது.

Link to comment
Share on other sites

ராஜ குரு திரும்பித் திரும்ப எதுவித உள்அடக்கமும் இன்றி எழுதுவதால் எவருக்கும் எதுவித பிரியோசனும் இல்லை.

இப்போது தமிழர்கள் என்ன செய்யலாம் என்று கூற வருகிறீர்கள்?

தமிழரிடம் இருந்த பேரம் பேசும் பலமான இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் இருக்கும் பலம் , பலசாலிகளுக்கிடையேயான போட்டியில் ஒருவரைக் காட்டி மற்றவரின் தயவைப் பெறுவதே.அதைத் தான் முரண்களின் கையாள்கை என்பார்கள்.அதைத் தான் நான் சொல்லி வருகிறேன்.

நீங்கள் எதையுமே சொல்லாது எதையும் தர்க்கரீதீயாக நிரூபிக்காமல் கற்றுக் குட்டி சின்னக் குட்டி என்று அர்த்தமில்லாமல் எழுதிக் கொண்ட்டிருக்க வேண்டாம்.எதாவது தெரிந்தால் எழுதினால் உரையாடலாம்.

Link to comment
Share on other sites

மிகவும் கனதியான ஒரு பேட்டி.. நிதானமாக முழுமையாக வாசித்தேன். இன்னுமொருவனின் எம் சமூகத்தினைப் பற்றிய குறிப்பு ஆச்சரியத்தையும் உண்மையையும் தருகின்றன. குடும்ப அமைப்பில் இருந்து சகல முறைகளிலும் சனநாயகத்தை விரும்பாத சமூகமாகவே நாம் இருக்கின்றோம் என்பது உண்மைதான்

Link to comment
Share on other sites

இனி அகக்காரணிகளை பார்க்கலாம்...

அகக்காரணம் ஒன்றுதான். இந்த தாய்க்காரணத்திலிருந்தே ஏனைய எல்லா காரணங்களும் கிளை விடுகின்றன. அது என்னவெனில் தமிழ்தேசியத்தின் உள்ளடக்கத்தை ஜனநாயகத்தால் நிரப்ப தவறியமைதான்.

எந்த ஒரு தேசிய பிரக்ஞையும் அதன் வேர்நிலையில் இனமானம், இனத்தூய்மைவாதம், இனவீரம், இனஎதிர்ப்பு மொழித்தூய்மை, பிராந்திய, சாதி வேறுபாடுகள், பால்அசமத்துவம் போன்ற இன்னோரன்ன அம்சங்களின் சிக்கலான உணர்ச்சிகரமான கலவையாகவே காணப்படுகிறது. தமிழ் தேசியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஆனால் இந்த வேர்நிலை உணர்ச்சிகரமான அம்சங்களை படிப்படியாக அறிவுபூர்வமான ஜனநாயகத்தால் மாற்றீடு செய்ய வேண்டிய பொறுப்பு அந்த தேசியவிடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்புக்கே உரியது. ஆனால் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அப்படி செய்வதற்கு தேவையான அகபுற காரணிகள் பலவீனமாக காணப்பட்டன. இவற்றில் மூன்று முக்கிய காரணிகளை பார்க்கலாம்

1. போதுவான தமிழ் உளவியல் எத்தகையது என்பது. அது எப்பொழுதும் பக்தி இரத்தத்தின் பாற்பட்ட உணர்ச்சிகரமான ஒரு மனோநிலைதான். அது எதையும் கறுப்பு வெள்ளையாகவே பார்க்கும். ஆனால் கறுப்பு வெள்ளை அணுகுமுறை பன்மைத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு தடையானது.

2. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு இராணுவ மையசிந்தனையுடையதாக காணப்பட்டது. பொதுவாக சராசரி தமிழ் உளவியலின் ஒரு கூறாக காணப்படும் ‘மிலிட்டரி மென்ராலிற்றி’யை விடுதலைப்புலிகள் சரியாக அடையாளம் கண்டு தலைமை தாங்கினார்கள்.

பிரிட்டிஸ் ஆள்பதிகளால் பாராட்டப்பட்டதும் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் வெற்றிகரமாக கையாளப்பட்டதுமான மேற்சொன்ன ‘மிலிற்றரி மென்ராலிற்றி’க்குத்தலைமை தாங்குவது என்று முடிவெடுத்த ஓர் இயக்கத்தில் அரசியல் எனப்படுவது இராணுவ தீர்மானங்களிற்கு கீழ்படியும் ஒன்று என்ற ஒழுக்கமே மேலோங்கி காணப்படும். அப்படிப்பட்ட ஓர் ஒழுக்கத்தைப் புனிதமாகப்பேணி தமிழ் வீரத்தையும் தமிழ் தியாகத்தையும் அவற்றின் நவீனகால உச்சங்களிற்கு கொண்டு போன ஓர் இயக்கம் கறுப்பு வெள்ளை சிந்தனை முறைக்கு வெளியே வருவது இலகுவானதல்ல.

3. இந்திய காரணி. முதலாம் கட்ட ஈழப்போர் எனப்படுவது பெருமளவிற்கு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்குள் நடந்ததொன்றுதான். விடுதலைப்புலிகள் அதனை சில சமயங்களில் வெற்றிகரமாக குழப்பிய போதும் கூட அந்த குழப்பங்களை தனக்கு சாதகமாக்கி தனது இலக்கை இந்தியா அடைந்தது. அதாவது அமெரிக்கா சார்பு ஜெயவர்த்தனவை தன்னிடம் மண்டியிட வைத்தது.

எனவே இந்திய தலையீடு காரணமாக 83 ஜூலைக்கு பின் தமிழர்களின் போராட்டம் திடீரென வீங்கியது. இது ஏற்கனவே சில ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. படிப்படியான வளர்ச்சியின்றி திடீரென புடைத்து வீங்கியதால் எதையும் நிதானிக்க முடியவில்லை. 83 யூலைக்கு பின்னரான பெரும் உணர்ச்சிச்சூழலில் எல்லா இயக்கங்களும் நிதானமிழந்து வீங்கின. ஜெயவர்த்தன அரசை பணிய வைப்பதென்ற இந்திய நிகழ்ச்சி நிரலின்படி படைத்துறை சாதனைகளும் சாகசங்களும் உடனடித்தேவைகளாக காணப்பட்டன. இதுவும் இயக்கங்களிற்குள் தாக்குதல் பிரிவானது அரசியல் பிரிவை விட அதிகாரம் உடையதாக மாறக்காரணமாகியது. இதனால் உட்கட்சி ஜனநாயகம் செழித்தோங்க முடியாது போயிற்று. இது போன்ற பல காரணங்களினாலும் தமிழ் தேசியத்தின் உள்ளடக்கத்தை ஜனநாயகத்தால் நிரப்ப முடியாது போயிற்று.

படைத்துறை சிந்தனையே முதன்மை பெற்றதால் அரசியல் பிரிவென்பது சக்தி மிக்க யுத்த எந்திரத்தி;ன் ஒரு முக்கியத்துவம் குறைந்த அலகாக மாறியது. இதனால் தமிழ் வீரத்திற்கும் தமிழ் அறிவிற்குமிடையில் சமநிலைகாண்பது கடினமாகியது. இது காரணமாக ஒரு ஸ்திரமான தீர்க்கதரிசனமுடைய வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடியாது போயிற்று.

மேலும் சகோதரச்சண்டைகளும் நேசமுரண்பாடுகளும் பகை முரண்பாடுகளாக வளர்ச்சியடைவதை தடுக்க முடியவில்லை.

உட்கட்சி ஜனநாயகமின்மையால் உட்கட்சி மோதல்களையும் தலைமைத்துவ போட்டிகளையும் வெளிச்சக்திகள் இலகுவாக கையாள முடிந்தது.

முஸ்லீம்கள் தொடர்பாகவும் பிரதேசவாதம் தொடர்பாகவும் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு தேசிய கொள்கையை வகுக்க முடியாது போயிற்று. எல்லாவற்றிலும் இறுதியாக நாலாம் கட்ட ஈழப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இடம்பெற்ற எல்லா அனர்த்தங்களிற்கும் கொடுமைகளிற்கும் இதுவே காரணம். அதாவது “தமிழ் தேசியத்தின் உள்ளடக்கம் ஜனநாயகமாக” இருக்க தவறியமை.

இந்த இடத்தில் ஒன்றைச்சொல்ல வேண்டும். விடுதலை புலிகளின் இடத்தில் வேறு எந்த இயக்கம் இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். சிலசமயம் இதை விட மிக மோசமாகவும் நடந்திருக்க கூடும்.

மேற்சொன்ன அனைத்து பிரதான காரணங்களையும் சொல்லப்படாத உப காரணங்களையும் சமயோசிதமாகக்கையாண்டு சிறிலங்கா அரசாங்கமானது யுத்தகளத்தில் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி செயற்படுவதற்கான லைசன்சையும் முன்னைய எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கிடைத்திராத அரிதான வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டது. இதுவே நந்திக்கடல் விழ்ச்சிக்கு காரணம்.

இந்தக்கருத்துக்களில் சரி பிழை என்பதற்கு அப்பால் பின்னடைவுக்கான அகக் காரணிகள் குறித்து பரந்துபட்ட புரிந்துணர்வு ஏற்படுவது அவசியமானது. அடிப்படையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1987 ஆயுதங்களை கொடுத்துவிட்டு ஜனநாயகத்தை நிலை நாட்டுங்கள் என்றபோது வல்லாதிக்க ரவுடிகள் செய்தது என்ன?

ஆயுத ஒப்படைப்பு எதற்காக செய்யபட்டது?

இசைகலைஞன் கேட்ததுபோல் ஆயுதத்தை தொட்டும்பாரத தாலை லாமாவுக்கும் திபத்திட்கும் கிடைத்ததுதான் என்ன?

நிலந்தான் அரசியலில் புடுங்கிய புல் என்ன? தண்ணியில கோலம் என்றால் இதைவிட ஆழகாக போடலாம். நிலாந்தன் பாவம் அரசியலை அந்தளவுக்கு தெரிந்திருக்கவில்லை. நிஜத்தில் ஒரு புல்லை என்றாலும் குனிந்து புடுங்கினால் தெரியும் ஜெனநாயகத்தின் விலை.

இது புலிகள் இல்லை என்றால் நாம் ஈழம் அமைத்திருப்போம் என்ற பில்டப்பில் ஒரு கூட்டம் திரியுது அதுகளுக்கு இது நல்ல சக்கரை. ஆனால் புலிகள் இப்போது இல்லை என்பதை யாரவது சொல்லித்தான் தெரியவேண்டிய நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் மட்டுமல்ல பல தவளைகளும் ஆமைகளும் தலை நீட்டுவது தாங்கள் புத்திசாலிகள் என்பதை நிரூபிக்கவே.

ஆனால் இனி எவரும் இவர்களுக்கு அவலாக கிடைக்கப்போவதில்லை. இருந்ததை மெல்லவேண்டியது தான். எத்தனை நாளைக்கு இது வியாபாரமாகும்....???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.