Jump to content

கசகறணம் பற்றி ஷோபா சக்தியிடம் சில கேள்விகள் - விமல் குழந்தைவேல் -


Recommended Posts

வல்லினம் இணைய இதழில் எனது கசகறணம் நாவல் சம்பந்தமாக ஷோபா சக்தியின் கேள்வி - பதில் வந்த நாளிலிருந்து இதுவரையிலும் முகபுத்தகத்தில் வந்துகொண்டிருக்கும் கருத்துக்களையும் கருத்து மோதல்களையும் அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் என்மீது பாய்ந்த மூன்று அஸ்திரங்க...ள் இவைகளென்றும், அவைகளுக்கு விளக்கம் தருகிறேன் என்று கூறிக்கொண்டு வந்திருக்கும் ஷோபா, மீண்டும் மீண்டும் என்னையும் என்நாவலையும் கேலிக்குள்ளாக்குகின்றார் என்பதனாலேயே நானும் மௌனம் கலைய வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன்.

சசீவன் சொன்னதுபோல தானே கேள்வி தானே பதில் என்றாகக்கூட இருக்கலாம். அதற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ள ஷோபா சொல்லுகின்ற நொண்டிச்சாட்டுகள்தான் நகைப்பூட்டுகின்றது. எத்தனை தழுவல்கள் - நழுவல்கள், எத்தனை எடுத்துக் காட்டுக்கள். அப்போது கசகறணப்படுத்திய மட்டக்களப்பு மொழி இப்போது இனிக்கிறதாமென்கின்றார். எதற்குமே தனது முன்னைய படைப்புக்களையே உதாரணம் காட்டுகிறார்.

கசகறணத்தைத்தான் பிடிக்கவில்லையென்றேனே தவிர எனக்குப் பிடித்த பத்து நாவல்கள் பட்டியலில் ஆர்.எம். நௌசாத்தின் பெயரையும் சொல்லியிருக்கின்றேனே என்று தனது தள்ளாட்டத்துக்கு ஊன்றுதடியாக நௌசாத்தை பிடிக்க முற்படுகின்றார். அதுசரி ஷோபா உங்களை தரவரிசைப்படுத்தவும் நீங்கள் மற்றவர்களை தரவரிசைப்படுத்தவும் உங்களுக்கும் அவர்களுக்கும் அதிகாரம் தந்தது யார்? தீரா நதியும் ஆனந்த விகடனும் குமுதமும் ஜெயமோகன்களும் உங்களை அறியப்படுத்தியதற்காக ஈழத்து இலக்கியங்களுக்கு மத்தியஸ்தம் வகிக்க அதுவே தகுதியென்று நினைத்துவிட வேண்டாம்.

நீங்கள் காத்திரமான ஜனரஞ்சகமான, அறியப்பட்ட எழுத்தாளனென்றால் ஏன் இந்தக் கசகறணம் உங்களை சங்கடப்படுத்துகின்றது. அதிலும் லங்காராணி போன்ற ஓர் சாதாரண புத்தகம் ஏன் இந்த மலையை அசைக்கின்றது. எங்கோ ஏதோ ஒன்று உங்களை ஆட்டுவிக்கின்றது ஷோபா. கசகறணத்தின் அரசியலை இருபது வருடங்களுக்கு முன்பே அறிந்தவன் நான் என்ற உதாசீனம் வேறு உங்களுக்கு. அப்படியானால் கொரில்லாவில் நீங்கள் சொன்ன அரசியல் மட்டுமென்ன கி.மு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்து இதுவரையில் யாருமே அறிந்திராத அரசியலா? உங்களின் ஒவ்வொரு சிறுகதைகளிலும் நீங்கள் சொன்ன அரசியல் மட்டுமென்ன ஒவ்வொரு நள்ளிரவிலும் முகடு கிழித்து வந்த ஒளிவட்டம் கொண்டிறக்கிய அரசியலா? ஈழப் போராட்டத்துக்கும் அதன்பின்பான பதிவுகளுக்குமான ஆயுட்கால நிரந்தரப் போராட்டத்துக்கும் அதன் பின்பான பதிவுகளுக்குமான ஆயுட்கால நிரந்தரக் காப்புரிமை உங்களிடம்தான் உள்ளதுபோல் உரைப்பது சரியா ஷோபா ?

கசகறணம் என்கின்ற தலைப்பில் ஒரு கதை எழுதிவா என்று நீங்கள் பணித்தது போலவும் உங்களுக்காகவே நான் எழுதி வந்தது போலவும் எழுதிவந்தது சரியில்லை இப்படித்தான் எழுதவேண்மென்று பிரம்போடு நின்று பாடம் நடத்துவது மட்டுமன்றி இலக்கிய விரிவுரையாளராகவும் மாறி நிற்கின்றீரே இது தேவையா ஷோபா ? நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊர்மக்களின் மொழி எனது மொழி. நான் பேசும் மொழியை வழிமறித்து வேறுவழிகாட்டி திசை திரும்பிப் போகச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் உண்டா ஷோபா ? எனது கதையின் மொழி... மொழியென்ற... உங்களின் கூப்பாடு மருவி... மறுகி இதைத்தான் குறிப்பிடுகின்றீர்கள் என்பதை 01-01.2012 இல் கிருத்திகன் எழுதிய பதிவில், கிருத்திகனுக்கு நீங்கள் கொடுத்த 02-01-2012 இன் பதிலிருந்து அறிந்து கொண்டேன்.

(கேள்வி உபயம் கிருத்திகன்) ஒரு இலக்கியப் பிரதியில் கதை சொல்பவரின் மொழிக்கும் கதை சொல்பவரால் உருவாக்கப்படும் கதைமாந்தர்களின் மொழிக்குமுள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கதை சொல்பவர் தனது ஒவ்வொரு சொற்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும். கதை மாந்தர்கள் அவர்களது இயல்பின்படியே பேசிச்செல்லவும் அவன் அனுமதிக்க வேண்டும். எல்லாமே கத்திமுனையில் நடக்கின்ற வித்தைதான். (இது உங்களின் பதில்) ‘டீ... வப்பனோளி வா இஞ்சால. என்று சொல்லி மைலிப்பெத்தாவின் கையைப் புடிச்சி இழுத்துவந்தா வெள்ளும்மா (இது கதை மாந்தர்களை இயல்பாக பேச விடுவது) வப்பனோளி மைலிய இஞ்சால வாடியென்று கையப்புடிச்சி வெள்ளும்மா இழுத்துவந்தா (இது கதைசொல்பவரின் மொழி. இங்குதான் மொழி கறைபடிந்து ஆணாதிக்கம் பெறுகின்றது.) இது கத்தி முனையில் அல்ல ஊசிமுனையில் நடக்கின்ற வித்தை.

கசகறணத்தில் எங்காவது இத்தவறு நடந்திருக்கின்றதா ஷோபா? உங்களின் சொற்சித்துக்களில் ஒருசிலர் மயங்கிக் கிடக்கின்றார்களென்றால் நீங்கள் எல்லோரையும் அப்படி நினைத்து விடலாமா ஷோபா? புதுவை ரெத்தினத்துரையையும் பத்மநாத ஐயரையும் விமர்சித்த என்னைப் பார்த்தா யாழ்ப்பாண மையவாதம் பேசுகின்றேன் என்கின்றீர்கள். என்று கேட்கின்றீர்கள். கேள்வியே அதுதானே ஷோபா. அன்று அப்படிப் பேசிய நீங்களா இன்று இப்படிப் பேசுகிறீர்கள் என்பதுதானே கேள்வி.

பலருக்கும் பிடித்த வெள்ளாவியை, அதில் ஒன்றுமே இல்லையென்றீர்கள். பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கசகறணத்தையும் தூக்கி எறிந்தீர்கள். இங்கேதான் உங்கள் ஆளுமையின் அடி அத்திபாரம் கொஞ்சம் ஆட்டம் காணுகின்றதென்பதை சிறுபிள்ளைகள் கூட உணர முடியுமே ஷோபா ! 'வாசிப்பின்போது வாசகனும் பாதிப் படைப்பாளி ஆகிவிடுகிறான்' என்ற உங்கள் கருத்தோடு நூறு சதவிகிதம் ஒத்துவருகின்றேன். ஆனால் சக படைப்பாளி என்ற வகையில் கருத்து சொல்வதற்குரிய பண்புமா இல்லாமல் போய்விட்டது. எனது படைப்பை பிடிக்கவில்லையென ஒதுக்குவதென்பது அது உங்களின் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரம். ஆனால் எனது பிரதேசத்தில் நான் பேசுகின்ற மொழியை இந்த நீள அகல உயரத்தில்தான் பேச வேண்டுமென்று கணக்குக் காட்டும் முழக்கோலை உங்கள் கையில் தந்தது எந்த இலக்கிய அரசியல் ஷோபா ? உங்களை நீங்களே ஜாம்பவான் என்றும் இலக்கியப் பிதாமனென்றும் நினைத்துக் கொண்டு இப்படிச்சட்டாம் பிள்ளைத் தனமாக எனது நாவலை அலம்பல் என்ற ஒற்றைச் சொல்லால் ஓரம்கட்ட முயற்சிப்பது அழிச்சாட்டியத்தின் உச்சக்கட்டம்

ஷோபா உங்களிடம் சில கேள்விகள்

* உங்களின் முதல்வருடிகளின் அரசியலுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமான என் கிராமத்தினதும் மக்களுடையதும் துன்பமும் துயரமும் அலம்பலா ?

* முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் உறவுப்பாலமாக இருந்த சந்தையும் அதன் எரிப்புக்குப் பின்பான சிதைந்து பிரிந்துபோன தமிழ் முஸ்லீம் உறவுகளும் உங்களுக்கு அலம்பலா ?

* அன்றாட வயிற்றுப் பசிக்கு வாழ்க்கைப் போராட்டம் நடத்திய அப்பிரதேச விளிம்புநிலைப் பெண்களின் பாடுகள் உங்களுக்கு அலம்பலா ?

* வடக்கில் நடந்த சம்பவங்கள் சரித்திரமாக வேண்டும். கிழக்கில் நடந்தால் அலம்பலாக வேண்டுமா ?

ஒரு இரவுக்குள் ஒரு நூறு முஸ்லீம்களை புட்டம்பைக் கிராமத்திலிருந்து துரத்தி அடித்த சம்பவம் அலம்பலா ?

* யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தியடிக்கப்பட்வர்கள் முஸ்லீம்கள் என்றால் புட்டம்மையிலிருந்து துரத்தியடிக்கப்பட்வர்கள் யார் ?

* எங்கள் மலை, மண், சந்தை, சேனை, வயல்வரப்பு, வாய்க்கால், குளம், கோயில், காடுமேடு பற்றியெல்லாம் சொன்ன ஒரு பிரதியை நீங்கள் அலம்பல் என்ற ஒற்றைச் சொல் கோட்பாட்டுக் கோவைக்குள் அடக்க முற்பட்டால் புலிப் பாசிசத்தின் எச்சம்தான் நீங்களென்று உங்களைச் சந்தேகிப்பதில் தவறென்ன சோபா ?

எல்லோருள்ளும் தான்தான் பலசாலி என்று நினைப்பவர் தனக்கும் ஒரு எதிராளி இருக்கிறான் என்று அறியும்போதுதான் அவன் பலவீனப்படுகிறான். ஷோபா வல்லினத்தில் அப்படி வலிந்து பதிலளித்திருக்கவும் தேவையில்லை. இப்படி மெல்லினமாக குழைந்து குனிந்து விளக்கம் தந்திருக்கவும் தேவையில்லை.

அவசரப்பட்டு விட்டீர்கள் என்றே நினைக்கின்றேன். உங்களின் எதிர்வினைகளுக்கான உங்களின் விளக்கங்களை உங்களை நன்றாக அறிந்தவர்கள் யாரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. இரண்டு பேர் தன்னை முட்டாளென்று எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை 1. புத்திஜீவி . 2. முட்டாள் .

முட்டாள் எப்போதும் தன்னை முட்டாளென்று ஏற்றுக் கொள்வதில்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்தால் அவன் ஏன் முட்டாளாக இருக்கப் போகின்றான் (உபயம் : றியாஸ் குறானா 02.01.2012 8.03 )

ஆக இறுதியாக தோழர் ஷோபாவுக்கு ஒன்று ஈழத்து இலக்கியத்தின் பிதாமகன், பீஸ்மர் என்றெல்லாம் உங்களைப்பற்றி நீங்களே நினைத்துக்கொள்ளலாம். உங்களை துரோணராகவும் சிலர் மானசீகமாக ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இவனை எனது ஏகலைவனாக்கி இவனின் விரல்களை வெட்டி எடுத்து விடலாமென்று நீங்களாகவே நினைத்தால் அது எப்படி சாத்தியமாகும் ஷோபா ? - விமல் குழந்தைவேல்

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி நாரதர்.

80 களில் அக்கரைபற்று கோளாவில் கிராமத்தைச் சுற்றி நடந்த கதை. அதிகமானவை உண்மைச் சம்பவங்கள். அதில் வரும் இயக்கம் EPRLF ஆக இருக்க வேண்டும். சிறிதாக புகைந்து கொண்டிருந்த பிரச்சனைகளை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப்பைப் பாவித்து விசேட அதிரடிப்படையினரின் பக்க உதவியுடன் தமிழ்க் கிராமங்களில் தாக்குதல் நடத்தியது இலங்கை அரசு.

செறிவான வட்டார வழக்கில் கதை கூறப்பட்டிருப்பதால், மற்றைய பிரதேச வாசகர்களுக்கு புரிந்து

கொள்வது சிரமமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

வட்டார வழக்குப் புடுங்குப்பாடு ஒரு முகமூடியே தவிர , கதையின் அரசியல் சோபாவின் அரசியல் புனைவோடு ஒத்துப் போகவில்லை, அதனாலையே இந்த நிராகரிப்பு.

சோபாவின் உண்மை முகமும் அவரின் அரசியலும் இன்று பல மட்டங்களில் அம்பலப்பட்டு வருகிறது.தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்

‘வல்லினம்’ இணைய இதழில் விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல் குறித்துக் கேட்கப்பட்டிருந்த ஒரு கேள்விக்கு நான் அளித்த பதில் பல தோழர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றது. தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் Face bookல் பதிவு செய்யப்பட்ட தருணத்தில் நான் இந்தியாவில் இருந்ததால் என்னால் அந்த விவாதத்தில் பங்கெடுத்து எனது தரப்பை முன்வைக்க முடியாமல் போயிற்று. இப்போது பிரான்ஸ் திரும்பிவிட்டேன். தோழர்களின் எதிர்வினைகள் குறித்து இப்போது பேசிவிடலாம்.

தோழர்களின் பல்வேறு எதிர்வினைகள் வெவ்வேறு முகப் புத்தகங்களின் திரிகளிலே காணக் கிடைக்கின்றன. எனினும் அந்த எதிர்வினைகளின் அடிச்சரடுகளான கருத்துகளாக மூன்று கருத்துகளைத் தொகுத்துக்கொள்ளலாம்.

1. எனது பதிலில் தெரிவது யாழ் மேலாதிக்கவாதம்.

2. எனது பதிலில் அதிகாரத் தொனியுள்ளது.

3. எனது பதில் இலக்கிய அறிவின்மையால் சொல்லப்பட்டது.

எனது தரப்பை நான் சொல்வதற்கு முன்பாக “கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா? நாவல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?” என்ற கேள்விக்கு நான் அளித்த பதிலை ஒருமுறை படித்துவிடுங்கள்:

“படித்துவிட்டேன். அது பயங்கரமான கசகறண அனுபவமாயிருந்தது. ஒரு நாவலில் அல்லது கதையில் கதைசொல்லி வட்டார வழக்கைக் கையாள்வது கதைசொல்லிக்கு ஒரு வகையில் வசதிதான். அந்த வசதியை நான் பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன். கதையின் மடிப்புகள் அறுபடும் போதும், தாவிச் செல்லவும், முன்னே பின்னே கதையில் காலங்களில் ஊடாடவும் வட்டார வழக்கு வசதியானதுதான். முக்கியமாக வட்டார வழக்கு கதைக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழக்குகிறது. ஆனால் வட்டார வழக்கில் கதை சொல்வதில் ஒரு எல்லையுமுண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும். வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா. வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால். வட்டார வழக்கால் நாவலுக்கு உருவாகும் ஒருவித நம்பகத்தன்மை நாவலை இறுக்கமாகக் கட்டியமைப்பதாலேயே சாத்தியமாகும். நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது.”

எனது பதிலில் மட்டக்களப்பு வட்டார வழக்குப் புரியவில்லை என்று நான் சொல்லவில்லை. மட்டக்களப்பு வட்டார வழக்கென்றில்லை எந்த வட்டார வழக்கென்றாலும் எனக்குப் புரிந்துவிடும். கரிசல் காட்டு, நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கையே படித்து புரிந்துகொள்ளும் ஓர் ஈழத்து இலக்கிய வாசகனுக்கு மட்டக்களப்பு வட்டார வழக்கை விளங்கிக்கொள்வதிலோ அதன் இனிமையை அனுபவிப்பதிலோ எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை. வட்டார வழக்குக்கு நாவலின் பின்னிணைப்பாக ‘சொல் அகராதி’ கூடத் தேவையற்றது. அது இல்லாமலேயே ஒரு தேர்ந்த வாசகரால் தனது சொந்த கற்பனை வளத்தோடு இடைவெளிகளை நிரப்பி நாவலைப் படித்துச் செல்ல முடியும். ‘கொரில்லா’ நாவலின் முதற்பகுதி முழுக்க முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டது. வாசகர்களின் தீவிரத்தின் மீதுள்ள நம்பிக்கையால் நான் சொல் அகராதியை நாவலில் இணைக்கவில்லை.

விமலின் முந்தைய நாவலான ‘வெள்ளாவி’ குறித்து நான் முன்பொருமுறை எழுதிய கருத்தொன்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தம். “மட்டக்களப்பு வட்டார மொழி கையாளப்பட்டிருக்கிறது என்பதற்கு அப்பால் அந்த நாவலில் சிறப்புகள் ஏதுமில்லை” என்று நான் சொல்லியிருப்பேன் (வேலைக்காரிகளின் புத்தகம் பக்:44). இதே வல்லினம் இதழில் கசகறணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்த கேள்விக்கான பதிலில் எனக்குப் பிடித்த பத்து ஈழத்து நாவல்களைக் குறிப்பிட்டிருப்பேன். அதிலொன்று ஆர்.எம்.நெளசாத் எழுதிய ‘நட்டுமை’ (காலச்சுவடு வெளியீடு). நௌசாத்தின் நாவலின் தலைப்பும் ‘கசகறணம்’ போல வட்டார வழக்குத்தான். நட்டுமையிலும் பின்னிணைப்பாக சொல் அகராதி உள்ளது. நட்டுமையின் கதை மாந்தர்கள் முழுக்க முழக்க கிழக்கின் இஸ்லாமியத் தமிழ் வட்டார வழக்கையே பேசுகிறார்கள். அதுவும் 50 வருடங்களுக்கு முந்தைய மொழி வழக்கு. ஆக எனக்கு மட்டக்களப்பு வட்டார வழக்குத்தான் பிரச்சினையெனில் ‘நட்டுமை’ நாவலை எனக்குப் பிடித்த 10 நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கமாட்டேன் அல்லவா. பிரச்சினை குறிப்பான மட்டக்களப்பு வட்டார வழக்கல்ல.

யாழ்/ மட்டக்களப்பு/ கரிசல் எந்த வட்டார வழக்கெனினும் வட்டார வழக்கில் கதை சொல்லிச் செல்வதில் சில எல்லைகளுள்ளன, ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும் என்பதுதான் எனது கருத்து. இதை நான் போகிற போக்கில் உதிர்த்துச் செல்லவில்லை. முற்று முழுவதுமாக வட்டார வழக்கைக் கையாண்டு ஆகக் குறைந்தது அய்ந்து சிறுகதைகளும் ‘கொரில்லா’ வின் முதற் பகுதியையும் எழுதிய எனது சொந்த அனுபவத்திலிருந்தே இந்தக் கருத்தை நான் உருவாக்கிக்கொண்டேன்.

வட்டார வழக்கு என்பது ஒரு குமுகத்துக்கு உரித்தானது. கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொன்னால் அந்தக் குமுகத்துக்குள்ளான சங்கேதக் குறிகளின் தொகுப்பு என்று கூடச் சொல்லலாம். நமது நிலங்களின் அனைத்து வட்டார மொழிகளும் சாதியக் கறைபடிந்தவை, ஆணாதிக்கக் கறைபடிந்தவை. இந்தக் கறைபடிந்த மொழியைக் கையாண்டு கதைசொல்வதில் சில தடைகளுள்ளன. எடுத்துக்காட்டாக திருநங்கை ஒருவர் குறித்து கதைசொல்லி தனது பிரதியில் வட்டார வழக்கில் எழுதிச் செல்கிறார் என வைத்துக்கொள்வோம். யாழ் வழக்கோ, மட்டக்களப்பு வழக்கோ, கரிசல் வழக்கோ ‘அலி’, ‘பொண்ணையன்’, ‘ரெண்டுங்கெட்டான்’ என்ற சொற்களில் திருநங்கையை சித்திரிக்கும் எல்லைகளைக் கொண்டவை. திருநங்கை என்ற சொல்லோ அரவாணி என்ற சொல்லோ நமது வட்டார வழக்குகளில் இதுவரை கிடையாது. எனவே நாம் தவிர்க்க முடியாமல் வட்டார வழக்கைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. அவ்வாறு கடக்க முடியாமல் வட்டார வழக்கையே ‘அலி’யென்றும் ‘பொண்ணைய’னென்றும் கட்டிப்பிடித்து அழுதால் நாம் பெரும் அநீதி இழைத்தவர்களாவோம். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சாதி குறித்து எழுதும் போதும் பெண்கள் மற்றும் விளிப்பு நிலையினர் குறித்து எழுதும் போதும் வட்டார வழக்கு இந்தச் சிக்கலை எதிர்கொண்டேயாகும். ‘நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி’ எனப் பெரியார் சொன்னதை நாம் எப்போதும் கவனம் கொள்ள வேண்டும்.

இதுதவிர மொழியின் எல்லையற்ற சாத்தியங்களை படைப்பாளி உருவாக்கிக்கொள்ளவும் தனது பிரதியூடே படைப்பாளி புதிய மொழியைக் கண்டறிந்து செல்வதற்கும் வட்டார வழக்கு தடை என்பதே எனது கருத்து. அதனால்தான் “வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா” என நான் சொன்னேன். இதற்கு எதிர்வினையாக வட்டார வழக்கில் எழுதப்பட்டதாக என்.டி.ராஜ்குமாரின் ஒரு கவிதையை ஒரு தோழர் சுட்டிக்காட்டினார். ராஜ்குமாரின் கவிதை மொழி வட்டார மொழியல்ல என்றே நான் கருதுகிறேன். தொன்மங்களிலிருந்து உருவாக்கப்பட்ட மந்திரவாதியின் அல்லது சித்தனின் மொழி அவருடையது. சரி அவரது மொழி வட்டார வழக்கே என தோழர் சொல்வதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் வட்டார வழக்கை இலக்கியமாக்குவதிலுள்ள சவாலை ராஜ்குமார் எதிர்கொண்டு வெற்றிபெற்றிருக்கிறார் எனச் சொல்லலாம். இதைத்தான் நான எனது பதிலில் “வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால்” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்;

வட்டார வழக்கை இலக்கியத்திற்கான கருவியாக விமல் குழந்தைவேல் மாற்றிச் செல்லவில்லை என்பதே எனது எளிமையான கருத்து. கசகறணத்தைப் படித்தபோது விமல் பிரதியில் மொழியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திராமல் மொழியின் வசீகரத்தில் அவர் மொழியைத் தொடர்ந்து செல்வதாக நான் உணர்ந்தேன். அதனால்தான் நாவல் இறுக்கமாக அமையாமல் வளவளத்துச் செல்வதாக நான் கருதுகிறேன். இதைச் சொன்னால் இது யாழ்ப்பாண மையவாதமா? அவ்வாறானால் நான் புதுவை இரத்தினதுரையையும் பத்மநாப ‘அய்யரை’யும் விமர்சித்து எழுதியதெல்லாம் எந்த மையவாதம் தோழர்களே? ஒருவேளை தீவு மையவாதம் என்பீர்களோ. அப்படிக் கூட சொல்ல முடியாதே.. ஏனெனில் நான் கி.பி. அரவிந்தனையும், க.வாசுதேவனையும் கூட விட்டு வைத்தேனா என்ன.

உமா வரதராஜனின் நாவலுக்கு சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. அவற்றை யாழ் மையவாதம் எனவும் யாழ்ப்பாணத்தாரின் வயிற்றெரிச்சல் எனவும் சொல்வீர்களா? அல்லது காசி.ஆனந்தனின் கவிதைகளையும் கருணாவின் அரசியலையும் விமர்சித்தால் அது யாழ் மையவாதப் பார்வை என்பீர்களா? சொல்லுங்கள் தோழர்களே! இங்கே காசி ஆனந்தனையும் விமலையும் நான் ஒரே தட்டில் வைத்து எடைபோடுகிறேன் எனத் தயவு செய்து தோசையைத் திருப்பிப்போட்டு விடாதீர்கள் தோழர்களே. ஒரு கருத்தை அளவிடுவதற்கு வெறும் பிரதேசப் பின்னணியை மட்டுமே அளவுகோலாக நீங்கள் கொண்டால் காசி. ஆனந்தனை விமர்சிப்பதையும் யாழ் மையவாதக் கூற்று எனச் சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்பதையே நான் உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்.

கசகறணத்திலுள்ள அரசியல் முக்கியத்துவம் உனக்கு உறைக்கவில்லையா என்பது இன்னொரு கேள்வி. கசகறணத்தில் பேசப்பட்டுள்ள அரசியல் எல்லாம் எனக்கு உறைத்து இருபது வருடங்களாகின்றன. தமிழ் - முஸ்லீம் முரண்பாடுகள் குறித்து நான் ஓயாமல் பேசிக்கொண்டுதானுள்ளேன். நாவலிலுள்ள அரசியல் முக்கியமானதுதான். அனால் அந்த அரசியல் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ போல இலக்கியமாக மாற்றப்படாமல் அருளரின் ‘லங்காராணி’ போல வெறும் தகவல்களாகவே எஞ்சிவிட்டது என்பதுதான் எனது வாசிப்பு.

தோழர்களே இங்கே நாங்கள் ஒரு இலக்கியப் பிரதியைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. இலக்கியத்தை மதிப்பிட ஒற்றை அளவுகோல் ஏதுமில்லை. ஒவ்வொரு வாசகரும் தனது தன்னிலை சார்ந்தும் வாசிப்புச் சார்ந்தும் அவர்களுக்கே உரிய தனித்துவமான பார்வைகள் மூலமும் ஓர் இலக்கியப் பிரதியை மதிப்பிடலாம். அதேபோல கசகறணம் நாவல் குறித்த என்னுடைய பார்வையும் மதிப்பீடும் இது. அதனால்தான் “நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது” என்றேன்.

எனது பதிலில் தொனிப்பது அதிகாரத் தொனி என்ற விமர்சனத்திற்கு நான் எனது தலையை எங்கே போய் முட்டிக்கொள்ள! என்னிடம் என்ன அதிகாரமுள்ளது? அதை யார் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். ஒருவேளை நான் ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளனாக இருப்பதால் கற்பனையான அதிகாரத்தை நானே சுவீகரித்துக்கொண்டு தீர்ப்புகள் வழங்குபவனாக என்னை மாற்றிக்கொண்டேன் எனச் சில தோழர்கள் கருதுகிறார்களோ தெரியவில்லை. நான் அவ்வளவாக அறியப்படாத காலத்திலேயே வெட்டொன்று துண்டு இரண்டாகப் பேசித்தான் எனக்குப் பழக்கம். ‘கல்வெட்டு’ , ‘ஆண்டாள் மார்க் அளவுநாடா’ கதையெல்லாவற்றையும் பழைய தோழர்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒரு நாவலைக் குறித்து ஒரு கருத்தைச் சொன்னால் அது அதிகாரமா? அவ்வாறெனில் விமர்சனக் கலாசாரம் என்பது என்ன? அவ்வாறானால் கசகறணம் நாவலுக்காக ஏன் விமர்சனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன? ஒரு கருத்தைச் சொன்னால் அவர்கள் ‘துரோகி’ என்கிறார்கள் இவர்கள் ‘அதிகாரம்’ என்கிறார்கள். வார்தைகள்தான் வேறு, ஆனால் வார்த்தைகளை ஏவும் நோக்கம் ஒன்றே. அது சகிப்பின்மை.

ஒரு இலக்கியப் பிரதியில் படைப்பாளிக்கு மட்டுமல்ல வாசகருக்கும் இடமிருக்கிறது. படைப்பாளியின் பிரதியை வாசகர் தனது பட்டறிவுக்குள்ளால் எடைபோட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். ஒருவகையில் வாசகர் இலக்கியப்பிரதியின் இணைப் படைப்பாளியே. ஒரு பிரதியில் கதைசொல்லிக்கு இருக்கும் அதே உரிமை வாசகருக்கும் உண்டு. இதை அதிகாரம், அது, இது எனச் சொல்வதெல்லாம் என்ன நியாயம் என்று கேட்கிறேன். ஓர் இலக்கியப் பிரதியை நான் விமர்சிப்பது அதிகாரம் சார்ந்தது என்றால் ஓர் இலக்கியப் பிரதியை நான் கொண்டாடுவதும் அதிகாரம் சார்ந்ததாகத்தானே இருக்க வேண்டும். அவ்வாறால் நான் என்ன செய்ய வேண்டும். வாயை இறுக மூடிக்கொண்டு ‘முட்டப்பனாக’ இருக்கட்டுமா?

தீராநதி இதழில் வெளியான எனது நேர்காணலில் ஒரு கேள்விக்கு நான் இவ்வாறு பதிலளித்தேன்:

தீராநதி: உங்கள் நண்பரான எழுத்தாளர் கற்சுறா ‘கொரில்லா’வை இன்னொரு ‘ஹே ராம்’ என்றும் விடுதலைப் புலிகள் சார்பு நாவலென்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் மற்றொரு நண்பரான சாருநிவேதிதா சென்னையில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் அது இலக்கியமே அல்ல என்றார். இந்த விமர்சனங்கள் பற்றி?

ஷோபா: கற்சுறாவின் வாசிப்புக்கும் சாத்தியமுள்ளது. நம்முடன் இணைந்து பல வருடங்களாக சனநாயத்துக்காகக் குரல் கொடுத்தக்கொண்டிருக்கும் தோழர் அவர். அது அவருடைய பார்வை. சென்னையில் நடந்த கூட்டத்தில் சாருநிவேதிதா, இந்நாவலின் அரசியலுடன் நான் உடன்படுகிறேன் ஆனால் இது இலக்கியமல்ல வெறும் செய்திப் பதிவாக இருக்கிறது என்றார். அது அவரது பார்வை, வாசிப்பு. அதற்கும் சாத்தியமுள்ளது. எல்லோரும் நம்முடைய பார்வையையும் அறிதல் முறையையும்தான் கொண்டிருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தன்னிலை சார்ந்த பார்வைகள் சாத்தியம்தானே. (ஜுன் 2004)

யாழ்மையவாதம், அதிகாரம் என்ற இரு விமர்சனங்களுக்கான எனது தரப்பை மேலே சொல்லியள்ளேன். மூன்றாவதாக ஒரு விமர்சனம் எஞ்சியுள்ளது. அது எனக்கு இலக்கிய அறிவில்லை என்ற விமர்சனமே. முதலிரண்டு விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள மறுத்த நான் இந்த மூன்றாவது விமர்சனத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒன்று! அறிஞர்களுக்கு மட்டுமல்ல அறிவிலிகளுக்கும் கருத்துச் சொல்லும் உரிமையுள்ளது தோழர்களே. அதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். யாழ் மையவாதம், அதிகாரம் போன்ற கருத்தாங்கங்கள் மிகவும் ஆழமானவை. துரோகி என்ற சொல்லைப் போலவே அவற்றையும் சும்மா சும்மா எடுத்தடிமடக்காய் பயன்படுத்தித் தொலைக்காதீர்கள்… கக்கிசமாயிருக்கிறது!

http://www.shobasakthi.com/shobasakthi/?p=940

Link to comment
Share on other sites

ஒருத்தர் தந்த இந்த நாவலை, பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனும் முறையில் சம்பவங்களை உணர்ந்து கொண்டு வாசித்தேன். இது குறிப்பிட்ட காலங்களில் நடந்த சில சம்பவங்களைச் சொன்ன கதை. கிழக்கில் இனங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில், இதற்கு முன்னாலும் பின்னாலும் பல கதைகள் உண்டு.

நாரதர் இணைத்த இந்தப் பதிவைப் பார்த்த பின் 'எதிர்வினைகளை' இணையங்களில் பார்த்தேன்.

பிளவுகளை தீமூட்டி வளர்த்து குளிர் காய்வதே இன்றைய இலக்கியமும் வாசிப்புமாக இருக்கிறது.

தங்களையே விமர்சிக்கிறோம் எனும் போர்வையில் தமிழர்கள் மனதில் நஞ்சை விதைத்து இனத்திற்குள்ளேயே ஆப்பிறுக்கும் இலக்கியங்கள்.

Link to comment
Share on other sites

Novel Writing Manual By Shobasakthi

how%2Bto%2Bwrite%2Ba%2Bnovel.png

கசகறணம் நாவல் தொடர்பாக வல்லினம் இதழில் சோபாசக்தி தெரிவித்திருந்த கருத்துக்களைத் தொடர்ந்து ஏராளமான உரையாடல்கள் இணைய வெளிகளெங்கும் நடைபெற்றன. வட்டார வழக்கு மொழிப்பாவனை தொடர்பானதே சோபாசக்தியின் கருத்து என்ற கருதுகோள்களுடனேயே வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சோபாசக்தியின் தரப்பில் இருந்து நீண்ட காலமாக பதில்கள் எதுவும் வராத நிலையில், மிக அணமையில் அவ்விடயம் சார்ந்து 'கசகறணம்: பதிலும் எதிர்வினைகளும்' என்ற பதிவின் மூலம் சோபாசக்தி தனது பக்க விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

சோபாசக்தி இவ்வளவு காலமும் மக்கள் சார்ந்து செயற்பட்டு வருபவர். ஏராளமான புனைவுகளையும், அ-புனைவுகளையும் தமிழ்ச்சூழலுக்கு கொடுத்துள்ளார். கொடுத்துக் கொண்டிருக்கின்றார். தமிழ்ச்சூழலின் தவிர்க்க முடியாத சிந்தனையாளரே சோபாசக்தி என்பதற்கு இப்பதிவு சான்றாகி நிற்கின்றது.

வட்டார வழக்கு, இலக்கியம், நாவல் என்ற பரப்புக்களில் நீண்டகாலமாக அவிழக்கபப்டாமல் இருந்த முடிச்சுக்களை சோபாசக்தி மிக எளிதாக தனது பதிவில் அவிழ்த்துச் செல்கின்றார் சோபாசக்தி. இலக்கிய பிரதிகளில் வட்டார வழக்கின் இடம் எத்தகையது அல்லது வட்டார வழக்கின் ஊடாட்டம் எந்தளவு இடம்பெறலாம் என்பதை மிக எளிதாக வரையறை செய்து செய்வது அற்புதமாக உள்ளது.

முக்கியமான இரண்டு கருத்துக்களைப் பட்டியலிடுகின்றேன்.

* மொழியின் எல்லையற்ற சாத்தியங்களை படைப்பாளி உருவாக்கிக்கொள்ளவும் தனது பிரதியூடே படைப்பாளி புதிய மொழியைக் கண்டறிந்து செல்வதற்கும் வட்டார வழக்கு தடை.

* வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால்.

சோபாவின் இப்பதிவு 'ஒரு நாவலை எப்படி எழுத வேண்டும்?' அல்லது 'ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்?' என்ற புரிதலை பலருக்கும் ஏற்படுத்திவிட்டிருக்கும் என்று நம்புகின்றேன்.

சோபாவின் பதிவில் 'வட்டார வழக்கு நாவலில் வரலாம். ஆனால், அதிகமாக வரக்கூடாது.' போன்ற சில முக்கியமான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை விரிவாக்கி எவ்வளவு சதவீதம் வரலாம்? அல்லது நூறு பக்க நாவலுக்குள் எத்தனை சொற்கள் வரலாம் என்பதை மிகச்சரியாகக் குறிப்பிட்டால் எதிர்காலத்தில் நாவல்களை எழுதுவோருக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அப்பதிவை இன்னமும் விரிவாக்கி 'ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும்?' என்று எழுதி ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். எதிர்காலத்தில் யாராவது 'Novel Writing Manual' என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டால் ஆங்கில வாசகர்களும் அதனால் பயன் பெறுவார்கள்.

மேலதிக தகவல்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்க்ழகத்தின் வாய்மொழி மூலமான இலக்கியச் செயற்றிட்ட தளத்தைப் பார்வையிடுங்கள்.

http://shaseevanmicroblog.blogspot.com/2012/01/novel-writing-manual-by-shobasakthi.html

Link to comment
Share on other sites

நாரதருக்கும் கிருபனுக்கும் இணைப்புகளுக்கு நன்றிகள். கசகறணம் இன்னும் வாசிக்கவில்லை. மனைவி ஊருக்கு போய் விட்டு வரும் போது பூபாலசிங்கம் புத்தகக்கடையில் இருந்து வாங்கி வரச்சொல்லி இருக்கின்றேன். ரமணிச் சந்திரனதும், ராசி பலன்களதும் புத்தகங்கள் பெருவாரியாக விற்கும் கனடா தமிழ் கடைகளில் இது கிடைக்கும் என்று நினைக்கவில்லை

Link to comment
Share on other sites

நாரதர் இணைத்துள்ள இந்த தொலைகாட்சி விமர்சனத்திலும் ஒரு பக்கப் பிழைகளே தூக்கிப் பிடிக்கப்பட்டு 'குய்ய வாதம்' நோக்கி கை நீட்டப்படுகிறது. அந்தக் காலத்தில் அக்கரைப்பற்று சந்தை எரிப்பிற்கான மூல காரணிகள், தமிழ் முஸ்லிம் பிரிவினைக்கு நிரந்தரமாக வித்திட்ட 'கசவாரம் தோழர்கள்' இயக்கத்தைப் பற்றிய விமர்சனங்கள் இல்லை. அதிகமாக அதுவும் புலிகளின் தலையில் போய்ச் சேரும் என நினைக்கிறேன்.

பொதுவாகவே தமிழர்களின் குற்றங்களை இலக்கியமாக்கும் selective amnesia இலக்கியவாதிகள், பெரியாரிடம் இருந்து கடன் பெற்ற 'பகுத்தறிவுக் கொள்கைகளையும் சமயத்திற்கேற்ப மறந்து விட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு இது ஒரு வரப்பிரசாதம்.

Link to comment
Share on other sites

கசகறணம் எனக்கு பரீட்சையமல்லாதா வட்டார வழக்கு மொழியில் எழுதப்படிருந்தாலும் கதையை புரிந்துகொள்ள அந்த வட்டார வழக்கு எதுவித தடையாகவும் இருக்கவில்லை.

எனக்கு முன்னர் எப்போதும் இல்லாத ஒரு சுக அனுபவமாகவே இந்த கதை இருந்தது.

சோபாவின் விமர்சனம் குறித்து நடைபெறும் வாக்குவாதங்களையும் ஒரு இலக்கிய ரசனையுடன் தான் நான் வாசித்து வருகின்றேன்.சோபாவின் இந்த பதில் தான் பலவிமர்சனங்களுகான முற்றுப்புள்ளி

"

தீராநதி: உங்கள் நண்பரான எழுத்தாளர் கற்சுறா ‘கொரில்லா’வை இன்னொரு ‘ஹே ராம்’ என்றும் விடுதலைப் புலிகள் சார்பு நாவலென்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் மற்றொரு நண்பரான சாருநிவேதிதா சென்னையில் நடந்த விமர்சனக் கூட்டத்தில் அது இலக்கியமே அல்ல என்றார். இந்த விமர்சனங்கள் பற்றி?

ஷோபா: கற்சுறாவின் வாசிப்புக்கும் சாத்தியமுள்ளது. நம்முடன் இணைந்து பல வருடங்களாக சனநாயத்துக்காகக் குரல் கொடுத்தக்கொண்டிருக்கும் தோழர் அவர். அது அவருடைய பார்வை. சென்னையில் நடந்த கூட்டத்தில் சாருநிவேதிதா, இந்நாவலின் அரசியலுடன் நான் உடன்படுகிறேன் ஆனால் இது இலக்கியமல்ல வெறும் செய்திப் பதிவாக இருக்கிறது என்றார். அது அவரது பார்வை, வாசிப்பு. அதற்கும் சாத்தியமுள்ளது. எல்லோரும் நம்முடைய பார்வையையும் அறிதல் முறையையும்தான் கொண்டிருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தன்னிலை சார்ந்த பார்வைகள் சாத்தியம்தானே. (ஜுன் 2004)

சோபாவிற்கு மட்டுமாக விமல் இந்த நாவலை எழுதவில்லை.அவருக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே .மு .நித்தியானந்தன் அளவிற்கு அதிகமாக இதே நாவலை புகழ்ந்து தள்ளியிருக்கின்றார்.

நல்லது கூடாது இரண்டையும் மிகைப்படுத்திய அலங்காரம்செய்பவன் தான் இலக்கியவாதி.

இதற்குள் வந்து அவன் இவன் முகங்களை,அரசியலை அம்பலப்படுத்துவோம் என்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

Link to comment
Share on other sites

நாரதர் இணைத்துள்ள இந்த தொலைகாட்சி விமர்சனத்திலும் ஒரு பக்கப் பிழைகளே தூக்கிப் பிடிக்கப்பட்டு 'குய்ய வாதம்' நோக்கி கை நீட்டப்படுகிறது. அந்தக் காலத்தில் அக்கரைப்பற்று சந்தை எரிப்பிற்கான மூல காரணிகள், தமிழ் முஸ்லிம் பிரிவினைக்கு நிரந்தரமாக வித்திட்ட 'கசவாரம் தோழர்கள்' இயக்கத்தைப் பற்றிய விமர்சனங்கள் இல்லை. அதிகமாக அதுவும் புலிகளின் தலையில் போய்ச் சேரும் என நினைக்கிறேன்.

பொதுவாகவே தமிழர்களின் குற்றங்களை இலக்கியமாக்கும் selective amnesia இலக்கியவாதிகள், பெரியாரிடம் இருந்து கடன் பெற்ற 'பகுத்தறிவுக் கொள்கைகளையும் சமயத்திற்கேற்ப மறந்து விட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு இது ஒரு வரப்பிரசாதம்.

இந்த நாவலை அவர் அவர் அவர்களுக்குத் தேவையான அரசியலை முன் நகர்த்தப் பாவிப்பார்கள் என்பது உண்மையே. இலக்கியம் என்னும் வகையில் இந்த நாவல் அதன் காலத்தையும் அதன் கதை மாந்தரையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.சோபாவைப் போல் தனது அரசியலுக்க்கு அமைவாக கதை புனையவில்லை விமல். மேலும் இது ஒரு வெகு சிறந்த நாவல் என்று பல தரப்பாலும் கூறப்படுகிறது.

இதில் பெரியார் எங்கிருந்து வந்தார் என்று புரியவில்லை. தப்பிலி இதில் நீங்கள் நாவலைப் படித்து அதில் எவை விடுபட்டுள்ளன என்பது பற்றி எழுதவும்.விடயம் அறிந்தவர் என்னும் வகையில்.

எல்லா விழைவுகளையும் வெளியால் இருந்து வந்தவர்கள் மேல் போட்டுப் போகும் அரசியலை வசந்தி அந்தப் பேட்டியில் சுட்டிக் காட்டி இருந்தார்.இந்த நாவல் பற்றிய கூர்மையான விமரிசனமாக எனக்குப் பட்டது.

போராளிகளை வரவேற்றார்கள் என்றால் அந்த மக்களும் அவர்களின் வரவை அங்கிகரித்தார்கள் என்று தான் பொருள்படும்.ஆகவே அம் மக்களும் அப் போராளிகளின் கனவுகளை ஆதரித்தனர் என்று தான் நாம் பார்க்க முடியும்.இதில் பவுசர், அனஸ் போன்றோருக்கு என்று ஒரு அரசியல் இருக்கிறது.அவர்கள் அதனையே முன் நிறுதுவர். கசவாரம் தோழர்கள் என்றால் யார்?

சோபாவின் மோசடி அரசியலை நாங்கள் அவரின் ஒவ்வொரு சொல்லிலும் , அசைவிலும் அம்பலப்படுத்துவோம்.

சோபா இரசிகர் மன்றத்துக்கு அது பிரச்சினையாக இருக்கலாம், எமக்கல்ல.

Link to comment
Share on other sites

விமல் குழந்தைவேல் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் சகோதரர் என்பது மேலதிக தகவல் .

இனி பலரின் பார்வை வேறுவிதமாக மாறிவிடும் .

Link to comment
Share on other sites

இந்தக் கதை 83 கலவரத்தின் பின் காளான்கள் போல பரவிய இயக்கங்களால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை விளக்கியுள்ள கதை. மீட்பர்கள் என நினைத்தவர்கள, மக்களை மிக மோசமான இன்னல்களுக்குள் தள்ளியது வடகிழக்கின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நடந்தது. ஒவ்வொரு கிராமத்திற்கும் நிறையச் சோகக் கதைகள் உண்டு.

இதில் இயக்கங்களைப் பற்றி என்னுரையில் கூறியுள்ளது மாதிரிதான் வடகிழக்குத் தமிழர்களின் அனுபவம்.

தேவதூதர்களைப்போல் வந்தார்கள்

ராஜகுமாரர்கள் போல் உபசரிக்கப்பட்டார்கள்

மாய மந்திரம் செய்ததுபோல் மறைந்தே போனார்கள்

சரி அதை விடுவோம். இந்தப் புத்தகத்தை வைத்து நடக்கும் விமர்சனச் சர்ச்சைகளைப் பார்க்கையில், பிரதேசவாதத்தை நெய்யூற்றி வளர்க்கவே பார்க்கிறார்கள் எனப்படுகிறது. பொதுவாகவே இப்பெல்லாம் தமிழர்களுக்குள் எங்கெல்லாம் பிரிவினைகள் உருவாக்கலாமோ அங்கெல்லாம் பிளக்கும் வேலை நன்றாகவே நடக்கிறது.

இந்த நாவலை அவர் அவர் அவர்களுக்குத் தேவையான அரசியலை முன் நகர்த்தப் பாவிப்பார்கள் என்பது உண்மையே. இலக்கியம் என்னும் வகையில் இந்த நாவல் அதன் காலத்தையும் அதன் கதை மாந்தரையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.சோபாவைப் போல் தனது அரசியலுக்க்கு அமைவாக கதை புனையவில்லை விமல். மேலும் இது ஒரு வெகு சிறந்த நாவல் என்று பல தரப்பாலும் கூறப்படுகிறது.

இதில் பெரியார் எங்கிருந்து வந்தார் என்று புரியவில்லை. தப்பிலி இதில் நீங்கள் நாவலைப் படித்து அதில் எவை விடுபட்டுள்ளன என்பது பற்றி எழுதவும்.விடயம் அறிந்தவர் என்னும் வகையில்.

எல்லா விழைவுகளையும் வெளியால் இருந்து வந்தவர்கள் மேல் போட்டுப் போகும் அரசியலை வசந்தி அந்தப் பேட்டியில் சுட்டிக் காட்டி இருந்தார்.இந்த நாவல் பற்றிய கூர்மையான விமரிசனமாக எனக்குப் பட்டது.

போராளிகளை வரவேற்றார்கள் என்றால் அந்த மக்களும் அவர்களின் வரவை அங்கிகரித்தார்கள் என்று தான் பொருள்படும்.ஆகவே அம் மக்களும் அப் போராளிகளின் கனவுகளை ஆதரித்தனர் என்று தான் நாம் பார்க்க முடியும்.இதில் பவுசர், அனஸ் போன்றோருக்கு என்று ஒரு அரசியல் இருக்கிறது.அவர்கள் அதனையே முன் நிறுதுவர். கசவாரம் தோழர்கள் என்றால் யார்?

சோபாவின் மோசடி அரசியலை நாங்கள் அவரின் ஒவ்வொரு சொல்லிலும் , அசைவிலும் அம்பலப்படுத்துவோம்.

சோபா இரசிகர் மன்றத்துக்கு அது பிரச்சினையாக இருக்கலாம், எமக்கல்ல.

நாரதர்

கசவாரம் தோழர்கள் என்று கூறியது EPRLF இயக்கத்தினை. முக்கியமாக அவர்களே அந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்குத் தொல்லைகள் கொடுத்து முஸ்லிம் தமிழ் பிரச்சனைகளை உருவாகினார்கள். அதுவே அஸ்ரப்பிற்கும் இலங்கை அரசிற்கும் இனமோதல்களை உருவாக்க இலகுவாக இருந்தது.

ஷோபாசக்தியைத்தான் குறிப்பிட்டேன். நான் ஷோபாசக்தியின் ரசிகன் அல்ல.அவரின் எழுத்துக்கள் தமிழர்களால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களைப் பற்றித்தான் இருக்கும். (காத்தான்குடி, யாழை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றம்). தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்து விடுவார். பகுத்தறியாமல் ஒரு பக்கப் பார்வை.

நீங்கள் கூறியபடி இந்த விமர்சனச் சர்ச்சைகளை வைத்து பவுசர் போன்றவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை முன் நிறுத்துகின்றனர்.

Link to comment
Share on other sites

//நான் ஷோபாசக்தியின் ரசிகன் அல்ல.அவரின் எழுத்துக்கள் தமிழர்களால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களைப் பற்றித்தான் இருக்கும். (காத்தான்குடி, யாழை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றம்). தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்து விடுவார். பகுத்தறியாமல் ஒரு பக்கப் பார்வை.

//

மன்னிக்கவும் ரசிகன் என்று உங்களைச் சொல்லவில்லை.எல்லாத் தலைப்புக்குள்ளும் வந்து காச்சலைக் காட்டும் உங்களின் பின் கருத்து எழுதியவருக்கு அது எழுதப்பட்டது.

சோபாசக்தியும், அ மார்க்சும் எல்லா பிழைகளையும், இசுலாமியர் மீதான வன் முறைகள் அனைத்துக்கும் புலிகள் தான் காரணம் என கூறுபவர்கள்.அதனை மறுதலிக்கும் வகையில் இந்த நாவலில் சில தகவல்கள் வந்திருப்பதால் அவர்களுக்கு இதில் அரசியல் ரீதியான பிரச்சினை இருக்கிறது.

எது எப்படியோ மீள இசுலாமியத் தமிழர்களுக்கும், தமிழருக்குமான உறவு கட்டி எழுப்பப் பட வேண்டும்.அதற்கு இந்த நாவல் உதவலாம்.

Link to comment
Share on other sites

ஷோபாசக்தியை எனி எவராலும் ஒண்ணும்பண்ணமுடியாது. ஏனென்றால் அவர் தனக்கான இடத்தை அடைந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

முடிவுறா இன்னல்களையிட்டு ஒரு முறையீடு – கசகறணம் நாவல்
 தர்மினி

kasakaranam


சில புத்தகங்கள், அவற்றைப் படித்தவுடன்  மற்றவர்களுடன் பகிரச் சொல்லுகின்றன. ஒரு புத்தகம் அது தானாகவே என்னைத் தொடர்ந்து வாசிக்க வைப்பதைப் போல, பிறரோடு அதைப் பற்றி உரையாடவேண்டும் என்ற மனநிலையில் மதிப்புரையோ விமர்சனமோ அறிமுகமோ ஏதாவதொரு பெயரில் எழுதச்செய்கிறது. இன்னும் சில புத்தகங்களைப் பற்றி எழுத நினைத்தாலும் எவ்விதம் அதை எழுதுவது என்ற பாரமோ போதிய எழுத்து வல்லமை இல்லையென்ற உணர்வோ அமைதியாக இருக்கவும் செய்திருக்கின்றன.


                      விமல் குழந்தைவேல் எழுதிய ‘கசகறணம்’ நாவல் என் வாசிப்பிற்குக் கிடைத்துச் சில ஆண்டுகளாகி விட்டன. உடனே படித்தும் விட்டேன். ஆயினும், அதை முன் வைத்து விமர்சிப்புகள் வந்த போது , திரும்பவும் எதை நான் எழுதப்பேகிறேன் என்ற எண்ணமும் ஏற்பட்டது. மேலும், கசகறணத்திலே இரண்டாம் அத்தியாயத்தின் அரசியல் தொடர்பான விடயங்களெல்லாம் மனதிற்குக் கனதியைத் தருவதாயிருந்தன.  மட்டக்களப்பு மாவட்டத்தின் பேச்சொலியின் இனிமை கதையோடு இழுத்துச்சென்றது. அதை விமர்சனத்தை முன்னிட்ட வாசிப்பாக என்னால் மேற்கொள்ள முடியவில்லை. அவர்களது பேச்சுத் தமிழும் சொற்களும் ஒரு விதமான இரசிப்பு மனநிலையை எனக்கு ஏற்படுத்தியது எனலாம். எப்போது உரையாடினாலும் மட்டக்களப்பு நண்பர்களின் கதை சங்கீதம் போலிருப்பதாக எனக்குத் தோன்றும். வாசித்துவிட்டு வைத்த கசகறணத்தைப் பற்றி உடனடியாக எழுதாமல் போனது கூட நல்லதென, இப்போது திரும்பவும் நாவலை எடுத்து வாசித்த போது தோன்றியது. இந்தக் கால இடைவெளி இன்னுமதிகமான தெளிவைத் தந்ததாகவே கடந்துள்ளது.


                     ‘கசகறணம்’ என்ற சொல் புதிதாயிருந்தது. அதன் அர்த்தத்தைத் தேடிய போது இந்நாவலின் கடைசிப் பக்கத்திலிருந்த பின்னிணைப்பின் இறுதியான நூறாவது சொல்லாக அது -‘தொடர்ச்சியான தொந்தரவு’ ‘முடிவுறா இன்னல்கள்’ எனப் பதிலைத் தந்தது.
          சிறியதொரு தீவான இலங்கையிலுள்ள மற்றொரு மாவட்டத்தின் பேச்சு வழக்கு எனக்கு அந்நியமாகவா இருந்தது என்றால் ஒரேயடியாக அவ்வாறு சொல்ல முடியாது. மிகச்சில சொற்களே அறியாதவையாகவோ நான் புழங்காதவையாகவோ இருந்தன. அதிகமும் எமது பேரன்-பேத்தி பேசிய சொற்களை ஞாபகப்படுத்தின. சில சொற்களை கண்ணால் பார்த்து வாசிக்கும் போது அந்நியம் போலிருந்தாலும், அதை ஒரு தரம் வாயால் உச்சரித்து வாசித்துப் பார்க்க  இது நான் கதைத்த சொல் தானே எனத்தோன்றுவதாக இருந்தன. அவ்வாறாகப் பல சொற்களை உச்சரித்துப் பார்த்தேன்.


                   அக்கரைப்பற்றுச் சந்தையில் என்னவெல்லாம் நடக்கின்றது என்பதை  அங்கு போய் தூர நின்று, மனிதர்களையும் சம்பவங்களையும் உற்றுக்கவனித்து இரசித்த ஒருவரது எழுத்தாக இது இருக்கிறது. சந்தையில் தம் விளைபொருட்களை விற்கும் சிறு வியாபாரிகளான இக்கதையின் பிரதான மாந்தர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதும் கேலியும் கிண்டலுமாக கதைப்பதும் மனிதர்கள் இனவேறுபாடற்று வாழ்ந்த அந்தக்காலத்து அழகை, அந்நியோன்னியத்தைக் காட்டுகின்றது. அக்கால வாழ்வும் இனங்களுக்கிடையிலான உறவுகளும் பற்றி அறியாத ஒரு தலைமுறையாக இப்போது இருக்கும் எமக்கு மட்டக்களப்பில் மூன்று இனங்களும் பக்கத்துப் பக்கத்துக் கிராமங்களில் ஒருவருக்கொருவர் நட்போடு வாழ்ந்தனர் என்பதெல்லாம் ஆச்சரியமாகவேயிருக்கும்.

 

                    வெள்ளும்மா, மைலிப்பொத்தா, குறட்டைக்காக்கா, குலத்தழகி என்ற நான்கு பேரில் ஆரம்பிக்கும் முதலாவது வரியிலிருந்து கதை சொல்லத் தொடங்கி விடுகிறார் நாவலாசிரியர். உவமான உவமேயங்களும் பழமொழிகளும் சிலேடைகளுமாக அவ்வெளிய மனிதர்களின் கதைகள், உறவுகள், வாழ்க்கை முறைகள் என அச்சந்தையைக் களமாக்கி ஒரு சினிமா போலக் காட்சிகள் கண்களுக்குத் தெரிகின்றன. அங்குள்ள கடைகள்  அவர்களது உலகை வேறாக்கிவிடுகின்றன.

 

எல்லா ஊர்களிலிருக்கும் சினிமாப் பித்தர்கள் போலவே குலத்தழகி என்ற சிறுவியாபாரியான பெண்ணும் புதுப்படத்தட்டிகயைக் கண்டால் தன் வியாபாரத்தை மறந்துவிடுவதும் அதே சிந்தனையாகி, பக்கத்திலிருப்பவர்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுப் படம் பார்க்கத் தியேட்டருக்குச் செல்வதும் சுவாரசியமாய் சொல்லப்படுகிறது. சினிமா ரசனையன்றி வேறு பொழுது போக்கோ இரசனையோ அற்ற இவர் போன்றவர்களுக்கு அது மிகப்பெரும் ஆறுதலே. அது அவர்களது அன்றாடச் சுமைகளைத் தாங்கும் திறனை அதிகரிக்கும் உற்சாக மருந்து. குலத்தழகி படம் பார்த்துவிட்டு வந்து கதைசொல்லும் திறமையைப் பற்றி இப்படியாக வசனம்—‘படம் எடுத்தவன் கூட அதே கதையஅவள் மாதிரி சொல்லுவானெண்டா அது சந்தேகம்தான்….குலத்தழகி கதை சொல்லுற நேரத்தில அடிநுனி தெரியாம இடைநடுவுல ஆரும் காது குடுத்தாங்களெண்டா, அது அவங்களுக்குப் படக்கதை மாதிரியே தெரியாது. ஏதோ தன்ர சொந்தக்கதையையோ இல்லாட்டி பக்கத்துவீட்டுக் கதையையோ சொல்லுற மாதிரித்தான் இருக்கும்’ என நாவலாசிரியர் எழுதியிருப்பதைப்போன்ற சுவாரசியமான வசனங்கள் மற்றும் ஆளையாள் கேலி செய்வதைப் போன்ற வார்த்தையாடல்கள் என புத்தகத்தில் ஏராளம் வரிகளுள்ளன. இது வரை கேள்விப்படாத ஏட்டிக்குப்போட்டியான பாடல்கள், வாக்கியங்களெல்லாம் வாசிப்பை நகர்த்திச் செல்லுகின்றன எனலாம்.ஆனாலும் அதிகமும் பேச்சுவழக்குகளைக் கொண்டதாக கதை செல்வது சில வாசகர்களுக்குத் திகட்டிவிடும் நிலையைக் கூட ஏற்படுத்தலாம். ஆனால் அந்நிலத்தின் இயல்பே அதுவாயிருக்குமோ எனத் தோன்றுகிறது.

 

            அக்கரைப்பற்றுச்சந்தையில் இம்மனிதர்கள் நட்போடும் அன்போடும் கேலியோடும் உறவாடுபவர்களாக இருக்கிறார்கள். அங்கு கனகவேல் என்ற மூன்றாம் பாலினத்தவர் பற்றிய புரிதலோடு இந்நால்வரும்  நட்பைப்பேணுவதும், கனகவேல் பற்றிய நம் புரிதல்கள் எவ்விதமாகவேண்டும் என்ற கரிசனையுமாக கனகவேலின் உணர்வுகளை…. ‘ஆண்டவன் குடுத்த உடல் கூறுப்படி அவனுக்குண்டாகுற  உணர்ச்சியால, அவன் ஆம்புளையளத்தான் பார்த்துச் சிரிக்க வேண்டியிருந்திச்சி. சந்தைக்கு வந்தானெண்டா, அவன ரகசியமாகக் கூப்பிடவும் ஆக்களில்லாமலில்ல. அவனும் கூப்புடுற ஆக்களோடவெல்லாம் போறவனாயுமில்ல. தன்னைப் புரிஞ்சி கொண்டு தன்னோட பழகுறதுக்கெண்டு மட்டும், தன்ர அலைவரிசையோட இணைஞ்சி போற ஆராகுதல் ஒருத்தன் கிடைக்கமாட்டானா எண்டுறது தான் கனகவேலுட தேடல்’ என்ற விதமாய் எழுதுகிறார் விமல் குழந்தைவேல்.


                       கே.எஸ்.ராஜா பற்றிய விபரணைகள் இதற்கு முன்னரும் வாசிக்கப்பட்ட தகவல்களாயிருந்தது ஓரளவு சலிப்பைத் தந்த போதும் அவர் முட்டியோடு கள்ளுத் தூக்கிக் குடித்தது. அவரது சிறிய மெலிந்த உருவத்திற்குச் சம்பந்தமில்லாத குரலையிட்டு ஊர்ச்சனங்கள் ஆச்சரியப்பட்டது போன்றவை எங்கள் ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த போது நடந்தவற்றையும் ஞாபகப்படுத்தின. இரசிகர்கள் கே.எஸ்.ராஜாவின் குரலை ஒரே விதமாக எதிர்கொண்டதைப் போலவே ஏமாற்றங்களையும் கொண்டிருக்கின்றனர் போலிருக்கிறது.


அதைத் தொடர்ந்து ஊருக்குள் நடக்கும் கோஷ்டிச்சண்டை பற்றிய விபரணமும் நம் வாழ்வை மீளவும் நினைத்துப் பார்க்க வைக்குமளவு யதார்த்தமும் சுவாரசியங்களுமானவை.   ‘ஊருக்குள் நடக்கும் சண்டையும் ஒருநாள் ரெண்டு நாள் சண்டையாக இருக்காது. ஏழுநாள் தொடரும் அரைப் பாரதப் போராகத்தான் இருக்கும். இரவுச் சோத்துக்கும் படுக்கைக்கும் வீடுகளுக்குப் போயிற்றுக் காலையில திரும்பவும் தொடங்கும் சண்டையில ஆம்பிளையளுக்கு வன்முறை ஆயுதம் பொல்லும் தடியுமெண்டா, பொம்புளையளுற வன்முறை ஆயுதம் கல்லும் மண்ணும் சேர்ந்த புனா…சூனா…வார்த்தைகள் தான். எப்பிடியும் பொலிசின்ர காதுக்குச் செய்தி போய் அவங்க வந்து ரெண்டு பக்கத்தாரயும் கூப்பிட்டு விலத்தியுட்டாலொழியச் சண்டை நிக்கவே நிக்காது’ என ஊர்ச்சண்டை பற்றிய வர்ணனையும் ஒரு காட்சியைத் தோற்றுவித்துவிடுகிறது.


                         இப்படியாக வாழும் இம்மக்களின் வாழ்வை நாட்டுக்குழப்பம் எப்படியெப்படியெல்லாம் குலைத்துப் போட்டுவிடுகிறது. அது எவ்விதம் இனங்களுக்கிடையிலான மோதலாக ஏதாவதொரு காரணத்தைக் கொண்டு உருவாகி விடுகிறது. சாதாரண சம்பவங்களெல்லாம் சக மனிதர்களை வெறுப்போடும் பயத்தோடும் பார்க்கச் செய்துவிடுகிறது. அமைதியான வாழ்வு மெல்ல மெல்லப் போர் சூழ்ந்து அங்கு இயக்கங்களின் வளர்ச்சியோடு அது வேறு விதமாகி இனங்களிடையில் சந்தேகங்களையும் பிரிவுகளையும் ஏற்படுத்தியதை கதையாகச் சொல்கிறது கசகறணம்.
கேசவன், முஹமட் என்ற இரு நண்பர்கள் படம் பார்க்கத் தியேட்டருக்குச் சென்ற இரவில் தற்செயலாக ஒரு சண்டை ஏற்பட அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட கேசவனே அறியாமல் கலவரமாக அது மாறுவதும் இதற்கு உதாரணம் கூட.


இரண்டாம் அத்தியாயம் இவ்விதமாய் ஆரம்பமாகிறது…’ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் தவறென்ன?” சோனகவட்டைச் சுவர்களில் பல இடத்தில இந்த வாசகம் தானாம் எழுதியிருக்கு….. என்பதாக எழுதப்பட்ட வரிகள். இனக்கலவரமும் அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் வீடுகளை விட்டு இயக்கங்களுக்கெனப் புறப்படுவதும் என்ன மாதிரியாக ஒரு ஊரில் நடக்கிறது? கிழக்குமாகாணம் எந்தளவு பங்களிப்பைச் செய்தது? இயக்கங்களின் வருகை இம்மக்களின் வாழ்வை என்ன விதமாகச் சிதைத்தன என்பதும் நமது நாட்டின் வடக்கு- கிழக்கு கிராமங்களின் அனுபவங்களின் ஒரு சிறு பதிவாகவாவது இந்நாவல் இருக்கிறது எனலாம். இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் இவ்விதமே அச்சிறுதீவைக் கலைத்துப்போட்டதும் இதன் பரிணாமமே.


இயக்கங்கள் தொடங்கப்பட்ட இலட்சியங்கள் மாறிப் போய் அவர்கள் ஆளுக்காள் சுடுபட்டுக் கொண்டு அழிவதும் குடும்பத்திலுள்ள பெண்கள் பலியெடுக்கப்படுவதுமாக அப்போராட்டம் எப்படி மாறிப்போனது என நாவல் முடியும் போது ஒரு வரலாறு படித்தது போல அது நம் கதையைச் சொல்லிவிடுகிறது.

https://thoomai.wordpress.com/2016/01/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.