Jump to content

படித்ததும் பகிர்ந்ததும் - வீணா


Recommended Posts

இரத்தத்தில் உறைந்த வைரம்

வைரக் கற்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்று. தாது பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நிய செலாவணியை ஈட்டும் நாடு. 'டைட்டானியம்', 'பாக்சைட்' மற்றும் தங்கம் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. உலகின் மூன்றாவது பெரிய இயற்கை துறைமுகத்தைக் கொண்ட நாடும் கூட...ஆனாலும் அதன் எழுபது சதவித மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். அந்நாடு 'சியரா லியோன்' (Sierra Leone).

மேற்கு ஆப்பிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலின் கடற்கரையை ஒட்டியமைந்த ஒரு சிறு நாடு. மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே எல்லா இயற்கை வளங்களையும் கொண்டது. சுரங்கத் தொழிலை ஆதாரமாக கொண்ட நாடு, குறிப்பாக வைரக் கற்களை அதிகமாக தோண்டி எடுக்கும் நாடு. ஐம்பத்தி நான்கு லட்சத்திலிருந்து அறுபத்தி நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அறுபது சதவிதம் முகமதியர்களும், அதிக அளவு கிருத்துவ சிறுபான்மையர்களும் வாழுகிறார்கள். பதினாறு சிறு இனக்குழுக்கள், சமவிகிதத்தில் நாட்டின் முப்பது சதவித மக்கள் தொகையாக வாழ்ந்தாலும், அவர்களிடையே இனப்பிரச்சனையோ, மதப்பிரச்சனையோ எழுவதில்லை. உலகின் 'மத சகிப்புத்தன்மை' கொண்ட நாடுகளில் ஒன்றாக சியரா லியோன் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இயற்கை வாரி வழங்கி இருந்தாலும் அந்நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்..நாம் நன்கு அறிந்த காலனிய ஆதிக்கமும் அந்நிய நிறுவனங்களின் கொள்ளையும் தான்.

blooddiamond2.jpg

'சியரா லியோனும்' மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலவே பல அந்நிய ஆட்சிகளுக்கு உட்பட்டு, பிரித்தானியர்களின் காலனிகளில் ஒன்றாக இருந்து 27, ஏப்ரல் 1961-இல் விடுதலை அடைந்தது. அதன் முதல் பிரதமரான 'சர் மில்டன் மார்க்கே' (Milton Margai)-வில் துவங்கி அவருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் யாரும் அந்நாட்டிற்கு நல்லாட்சியை வழங்கி விடவில்லை. ஊழல், நிர்வாக சீர்கேடு, தேர்தலில் வன்முறை, அதிகார கயமைத்தனம் போன்றவை நாட்டை சீர்குலைத்தது.

1968-இல் ஆட்சிக்கு வந்த 'சைக்கா ஸ்டிவன்ஸ்' (Siaka Stevens)-இன் காலத்திலேயே அந்நாட்டின் இயற்கை வளங்கள், பெரும் அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. வைரங்கள் பெரும் அளவில் கிடைக்க கூடிய வாய்ப்பே அந்நாட்டை பெரும் துயரத்திற்கு தள்ளியது எனலாம். வைரத் தொழிலில் பெரும் நிறுவனமான 'டிபியர்ஸ்' (DeBeers)-உடன் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கை, பெரும் கொள்ளையாக இருந்தது. ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வசதிகளை பெருக்கவே அவை உதவியன. 1984-இல் 'டி பியர்ஸ்' அரசாங்கத்துடனான உடன்படிக்கையை முறித்துக் கொண்டது என்றாலும் கள்ளத்தனமாக வைரங்கள் கடத்தப்பட்டன. அரசாங்கத்திற்கு வரவேண்டிய பணம் முழுவதும் தனியாரின் வசம் குவிந்தது.

இதன் தொடர்ச்சியாக நாட்டின் கருவூலம் சிதறுண்டு போனது. அரசாங்க ஊழியர்களுக்குக்கூட ஊதியம் தரமுடியாத நிலை உண்டானது. கல்வி, வேலை வாய்ப்பு என எதுவும் மக்களுக்கு கிடைக்க வில்லை. தலைநகரமான பிரிடவுனிலேயே (Freetown) எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாடு மிக மோசமான நிலையை அடைந்ததும், அதன் மேல்மட்ட வர்க்கமும், தொழில்முறை வர்க்கமும் (professional class) வெளிநாடுகளுக்கு ஓடிப்போயின. 1991-இல் 'சியரா லியோன்' உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக மாறிப்போனது.

m86106.jpg RUF

நாட்டின் இந்நிலைக் கண்டு எழுந்து நின்ற இளைஞர் கூட்டம் ஒன்று, 'புரட்சிகர ஐக்கிய முன்னணி' - Revolutionary United Front'(RUF) என்ற அமைப்பின் பெயரில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியது. 'போடே சங்கா' (Foday Sankoh) என்பவரால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு மக்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

'அடிமையும் இல்லை, முதலாளியும் இல்லை, அதிகாரமும் செல்வமும் மக்களுக்கே' ('No More Slaves, No More Masters. Power and Wealth to the People') என்று 'RUF' முழங்கியது. இலவச கல்வி, சுகாதாரம் மற்றும் வைர வருமானத்தில் சரிவிகித பங்கு என்பது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருந்தது. மக்கள் 'RUF'-ஐ வரவேற்றார்கள், இணைந்தார்கள்.

இருண்ட அரசாங்கத்தை காய் அடிப்பதும், மக்கள் அரசை நிறுவுவதும் மக்களின் பெரும் கனவாகிப்போனது. அது கொடுத்த உத்வேகம் அத்தேசத்தை 'உள்நாட்டுப் போரில்' உற்சாகமாக ஈடுபட தூண்டியது.

'RUF'துவக்கி வைத்த இப்போர் பல கட்டங்களை கடந்து வர வேண்டியதாக இருந்தது. புரட்சிக்குழு அடைந்த வெற்றியும் பெற்ற ஆதரவும், அரசாங்க படைத்துறையின் ஒரு பிரிவை 'RUF'-வோடு இணைய தூண்டியது, இவ்விரண்டு படைகளை சமாளிக்க உருவான மக்கள் படை, இவற்றை அடக்க வந்த வெளிநாட்டுப்படை, அமைதிப்படை, தனியார் படை, ஐநா படை என பல பெரும் படைகள் பங்கு கொண்ட இப்போர், அம்மக்களுக்கு பெரும் இன்னல்களை கொண்டுவந்தது.

மற்ற எந்த உள்ளாட்டு போரிலும் நிகழாத ஒரு கொடுமை இங்கே நடந்தது. பொது மக்களின் கை கால்களை துண்டிப்பது. ஆம்..ஒருபுறம் 'RUF' மக்கள் தேர்தலில் ஓட்டு போடாமல் இருக்க அவர்களின் கைகளை துண்டித்தது. மறுபுறம் அரசு படை 'RUF'-இல் இணையாமல் இருக்க மக்களின் கை கால்களை துண்டித்தது. மேலும் சிறுவர்களை போரில் ஈடுபத்தியதும், வைரம் தோண்ட மக்களை அடிமைப்படுத்தியதும் நிகழ்ந்தது. சிறு பிள்ளைகளின் கைகளும் வெட்டப்பட்டன. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்கொடுமைகளை விளக்க ஒரு புத்தகமே எழுதவேண்டும். இங்கே அதற்கு இடம் போதாது.

amputee.jpg

23 மார்சு 1991-இல் துவங்கிய 'சியரா லியோனின்' உள்நாட்டுப் போர், பதினோறு ஆண்டுகளுக்குப் பிறகு 18 ஜனவரி 2002-இல் முடிவுக்கு வந்தபோது அது எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தி இருந்ததா என்றால்.. இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனில் பதினோறு ஆண்டு கால போராட்டத்தின் பயன் என்ன?..

வேறன்ன.. கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் பேர், முழுமையாக சீர்குலைந்து போன உள்கட்டமைப்பு, இருபது லட்சம் பேர் பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயர்ந்தது, பல்லாயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்தது மற்றும் மீண்டு வர முடிய வறுமையும் தான்.

நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாள் வருமானம் என்பது ஒரு டாலருக்கும் கீழ்தான். போதிய ஆகாரம் இன்மையால் நான்கில் ஒரு குழந்தை ஐந்து வயதுக்குள்ளாகவே இறந்து போகிறது. இன்றும் அந்நாட்டின் வளம் அந்நியர்களின் கைகளில் தான் இருக்கிறது.

egch_03_img0248.jpg

இதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில்..நாம் அறிந்ததுதான். அரசியல் அயோக்கியத்தனம், உலகப்பொருளாதாரம், ஐக்கிய நாட்டு சபை, உலகயமைதி, பன்னாட்டு சமூகம், துரோகம், பேராசை.. என நீண்டுக் கொண்டே போகும் காரணங்கள் பல.

இப்போரில் ஈடுபட்ட 'RUF'-க்கு பணம் எங்கிருந்து வந்தது? அது அந்நாட்டின் வளங்களில் ஒன்றான வைரங்களை கள்ள சந்தையில் விற்றதில் வந்த பணம். அப்பணத்தைக் கொண்டு ஆயுதங்கள் வாங்கப்பட்டன.

இப்படி வைரங்களை கள்ள சந்தையில் விற்று போருக்கான ஆயுதங்களை வாங்கப்படுகிறது என்பது 'அங்கோலிய உள்நாட்டுப் போரின்' (Angolan Civil War) போதுதான் உலகத்தாருக்கு தெரியவந்தது. அடிமைகளால் தோண்டி எடுக்கப்பட்ட அவ்வைரங்கள் 'இரத்த வைரங்கள்' (Blood Diamond) என அழைக்கப்படுகின்றன. உலக வைரத் தொழிலில் இவ்வைரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

blood_diamond_ver5.jpg

2006-இல் வெளியான 'Blood Diamond' என்னும் படம் 'சியரா லியோனின் உள்நாட்டுப் போர்' நடந்த காலகட்டத்தில் நிகழும் கதை ஒன்றின் மூலமாக, 'இரத்த வைரங்கள்' பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

'RUF' படையிடம் தன் மகனை பறிகொடுத்துவிட்டு, அடிமையாக சிக்கிக் கொண்டு சுரங்கத்தில் வைரம் தோண்டும் ஒரு தகப்பன். இரத்த வைரங்களை கடத்த முயன்று மாட்டிக்கொள்ளும் கதாநாயகன். இப்போரை கட்டுரையாக்க வந்த செய்தியாளராக கதாநாயகி. மூவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அப்போரை விவரிக்கிறார் அதன் இயக்குனர்.

'The Empire in Africa'(2006) என்னும் ஆவணப்படம் இப்போரை களக்காட்சிகளோடு விவரிக்கிறது. இப்போரில் அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இப்படம் பாரபட்சம் இன்றி அலசுகிறது. இரு தரப்பு படைகளும், பன்னாட்டு சமூகமும் இம்மக்களுக்கு செய்யத்தவறியதை, செய்த துரோகத்தை இப்படம் பதிவுசெய்திருக்கிறது.

http://blog.vijayarmstrong.com/2012/02/blog-post.html

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

எரியும் தியாகம்

1963.+Thich+Quang+Duc.jpg

ஜூன் 11,1963 ஆம் ஆண்டு வியட்நாமின் தலைநகரான சாய்கான் நகரில் ‘Thich Quang Duc’ என்னும் இந்த புத்தத் துறவி தன்னைத்தானே எரியூட்டிக் கொண்டார். அப்போது தெற்கு, வடக்காக பிரிந்திருந்த வியட்நாமில், தெற்கு வியட்நாமை ஆண்ட ‘Diem’(Ngo Dinh Diem) அரசாங்கம், புத்தமதத்தின் மீதும் புத்த துறவிகள் மீதும் நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிராக இதை அவர் செய்தார். இப்படத்தை எடுத்த ‘மால்கம் பௌரவுன்’(malcolm Browne) இப்படத்திற்காக புலிட்சார் விருதுப் பெற்றார்.

Ngo Dinh Diem அரசாங்கம்:

1954 ஆம் ஆண்டு வியட்நாமை விட்டு பிரான்ஸ் வெளியேறியப் பிறகு தெற்கு வியட்நாமின் முதல் சனாதிபதியாகப் பதவியேற்றவர் இந்த ‘Ngo Dinh Diem’. பொதுவுடமை சித்தாந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததினால், வட அமெரிக்காவின் உதவி பெற்று தன்னை வியட்நாம் குடியரசின் முதல் சனாதிபதியாக நிலை நிறுத்திக்கொண்டவர். ஊழலும் சீர்கெட்ட ஆட்சி முறையும் கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய இவர், வியட்நாமின் பூர்விக மதங்களயும், பரவலாக பரவி இருந்த புத்தமத்தையும் அழிக்க நினைத்தார். பல முறைகளில் மதத் துவேசத்தை வெளிப்படுத்தினார். புத்தத் துறவிகளின் மீது எண்ணிலடங்கா அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. இது மதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இப்போராட்டத்தத்தின் போதுதான் அந்த புத்தத்துறவி தன்னை எரித்துக்கொண்டார். பிறகு வட அமெரிக்கா தன் ஆதரவை விளக்கிக் கொண்டது. நவம்பர் 2, 1963-இல் ஒரு படைத்துறை தளபதியால் ‘Diem’ கொல்லப்பட்டார்.

புத்தத்துறவி ‘Thich Quang Duc’:

ஏழுவயதிலேயே ஆன்மீக வாழ்க்கைக்கு வந்த இவர், தன் இருபதாவது வயதில் ஒரு முழுமையான புத்தத்துறவியானார். மதபோதனைகளும் பாடங்களையும் நடத்திக்கொண்டிருந்தவர். புத்த மாடாயங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.

‘Diem’ ஆட்சிக்காலத்தில் புத்தபிட்சுக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்தும், புத்தமதத்தை காக்கும் பொருட்டும் தன்னை எரியூட்டிக்கொண்டார். தன்னை எரியூட்டிக்கொண்டதின் மூலம் உலகத்தாரின் கவணத்தை பெறமுயன்றார்.

ht-quangduc-chandung.gif

ஜூன் 11, 1963-இல் சாய்கானின் முக்கிய வீதி ஒன்றுக்கு, இரண்டு சக துறவிகளோடு ஒரு காரில் வந்து இறங்கினார். நடுவீதிக்கு சென்று அமைதியாக தியான நிலையில் அமர்ந்துக் கொண்ட இவர் மீது அவரின் சக துறவி ஒருவர் பெட்ரோலை ஊற்றினார். பிறகு தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டார். நான்கு அடி உயரம் தீ கொழுந்துவிட்டு எரிந்த போதும் சத்தம் போடாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது வீதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் இதை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

காவல்துறையினர் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் சுற்றி நின்ற புத்த பிட்சுகளை மீறி அவர்களால் செல்ல முடியவில்லை. ஒரு காவல்துறை அதிகாரி தரையில் பயபக்தியோடு மண்டியிட்டு, எரிந்துக்கொண்டிருந்த துறவியை தொழுக துவங்கினார். பெரும்பாலானோர் அதிர்ச்சியில் அமைதியாக இருக்க, சிலர் அலறவும் சிலர் பிராத்தனைச் செய்யவும் துவங்கினார்.

Tuthieu.jpg

அங்கே குழும்பி இருந்த புத்தத்துறவிகளும் அந்த வழியாக கடந்துச்சென்ற பொதுமக்களும் எரிந்துக்கொண்டிருந்த துறவியின் முன் மண்டியிட்டு வணக்கத்துவங்கினார்கள். ஒலிபெரிக்கியில் துறவிகள் தொடர்ந்து முழக்கமிடத்துவங்கினர் “ஒரு புத்தத்துறவி தன்னை எரித்துக்கொண்டார், ஒரு புத்தத்துறவி தியாகி ஆகிறார்” என்று.

தியான நிலையிலேயே பத்துநிமிடங்கள் எரிந்த அவரின் உடல், முழுமையாக எரிந்தப் பின்பு மெதுவாக முன்பக்கமாக சாய்ந்தது. அங்கே இருந்த புத்தத்துறவிகள் ஒரு மஞ்சள் துணியில் அவரின் சாம்பலையும் மற்ற பாகங்களையும் எடுத்து சவப்பெட்டியில் அடைத்தனர். பின்பு அருகில் இருந்த புத்த மாடாயலத்திற்கு எடுத்துச் சென்றனர். பல்லாயிரக்கணக்கான மக்களும் துறவிகளும் அங்கே கூடத்துவங்கினர். அன்று மாலை சூரியன் மறைந்த நேரத்தில் வானில் அழுதபடி இருந்த புத்தரில் உருவத்தை பார்த்ததாக ஆயிரக்கணக்கான மக்கள் சொன்னார்கள். துறவியின் உடல் ஜூன் 19 ஆம் தேதி மீண்டும் எரியூட்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

huyenquangquangduc.jpg எரியாத இதயம்

ht-quangduc-traitim.gif

ஆனால் அவரின் இதயம் மட்டும் தீயினால் எரியாமல் அப்படியே இருந்தது. அந்த இதயம் ஒரு குடுவில் வைக்கப்பட்டு ‘தியாகத்தின் குறியீடாக’ இன்றும் போற்றப்படுகிறது.

புகைப்படக்காரர் ‘மால்கம் பௌரவுன்’ எடுத்த இப்படம் உலகம் முழுவதும் பரவியது. மறுநாள் செய்தித்தாள்களில் பார்த்த மக்கள் மிரண்டுப் போனார்கள். அப்போதைய வட அமெரிக்க அதிபர் ஜான் எப்.கென்னடி இப்படத்தைப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னாராம் “வரலாற்றில், இதற்கு முன்னால் எந்தவொரு செய்திப் புகைப்படமும் உலகத்தாரிடையே இந்த அளவிற்கு உணர்ச்சியை உருவாக்கியதில்லை”.

அங்கே வியட்நாமில் அரசாங்கம் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. அடக்குமுறைகள் அதிகரித்தன. போராட்டாமும் அதிகரித்தது. பல புத்ததுறவிகள் தங்களை எரித்துக்கொள்ளத்துவங்கினர். வட அமெரிக்க அரசாங்கம், ‘Diem’-மிற்கு கொடுத்து வந்த தன் ஆதரவை நிறுத்திக்கொண்டது. அதன் பின் நவம்பர் 2, 1963-இல் ஒரு படைத்துறை தளபதியால் ‘Diem’ கொல்லப்பட்டார்.

பிற்காலத்தில் வியட்நாம் போரை எதிர்த்து வட அமெரிக்காவில் இதே முறையில் வியட்நாமிகள் கிட்டத்தட்ட நூறுபேர் தங்களை எரித்துக் கொண்டுள்ளனர். இப்படி தங்களை தாங்களே எரித்துக்கொள்வதின் மூலம் எதிர்ப்பைக் காட்டும் இந்த முறை, உலகமுழுவதும் பின்பற்றப்படுகிறது.

1968-இல் சோவித் யூனியனியனில், மத்திய கிழக்கு நாடுகளில், 2010-இல் துனுசிய எழுச்சியின் போது, 2011-இல் அல்ஜீரியா, எகிப்து, சவுதி அரேபியா மற்றும் சிரியா போராட்டங்களிலும் இப்படியான எரியூட்டிக் கொள்ளும் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது

.

ragiv_gosvami.jpg

ராஜிவ் கோஸ்வாமி

1990-இல் வி.பி.சிங் காலத்தில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவர முயன்ற போது, அதை எதிர்த்து ‘ராஜிவ் கோஸ்வாமி’ என்ற கல்லூரி மாணவன் டெல்லியில் தன்னை எரித்துக் கொள்ள முயன்றான். அப்போது காப்பாற்றப்பட்ட அவன் 2004-ஆம் ஆண்டு தன் முப்பத்தி மூணாவது வயதில் அதன் பாதிப்பில் இறந்து போனான்.

தமிழகத்தில் ‘முத்துக்குமார்’ மற்றும் ‘செங்கொடி’-இன் வடிவில் இந்த போராட்ட வடிவம் இன்று தொடரப்படுகிறது. இப்படியான மரணங்களை வரவேற்போர் யாருமில்லை, நியாயப்படுத்தி விட முடியாது. அதேநேரம் அலைச்சியப்படுத்தி விடவும் கூடாது.

muthukumar29january.jpg

முற்றும் துறந்த ஞானி புத்தபிட்சு முதல் பால பருவத்திலிருக்கும் செங்கொடி வரை நிகழ்ந்த இந்த மரணங்கள் வெளிப்படுத்தும் செய்திகள் இரண்டு. ஒன்று அரசாங்கத்திற்கு எதிராக விடப்பட்ட அரைக்கூவல். மற்றொன்று தன் சக மனிதனை நோக்கி வைக்கப்பட்ட மன்றாடல்.

இத்தகையத் தியாகங்கள் ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் அதே நேரம், சுரனையற்ற தன் சக மனிதனையும் கண்டிக்கிறது.

இவர்களின் செயலை முட்டாள் தனம் என்று வரையறுக்கும் அதே நேரம், அதன் பின்னே இருக்கும் தியாகத்தையும் உன்னத லட்சியத்தையும் வீரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%259F%25E0%25AE%25BF.jpg

இத்தகைய மரணங்கள் நிகழாவண்ணம் தடுக்க ஒரே வழி, அத்தகைய சூழ்நிலைகளுக்கு அவர்களைக் கொண்டுச்செல்லாமலிருப்பதுதான். அந்தப் பொறுப்பு ஆளுபவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ சக மனிதர்களாகிய நமக்கு இருக்கிறது.

மீண்டும் இப்படியான ஒரு மரணம் நிகழ்ந்தால் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் நீங்களும் நானும் தான்

http://blog.vijayarm.../blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வீணா நீண்ட நாட்களுக்குப் பிறகு :) உங்கள் திரியை நிர்வாகத்திடம் சொல்லி சமூக சாளரம் பகுதிக்கு மாற்றவும்

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா :)

நீங்க தான் மறக்காமல் வந்து வந்து போறீங்க வேறு யாருமே எட்டி கூட பார்க்கிறார்கள் இல்லை :lol:

நிர்வாகத்தினை கேட்டிருக்கிறேன் நகர்த்துவார்கள் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணா....யாழுக்குள்ள இருக்கிற குட்டி விக்கிப்பீடியா உங்கள் திரி..அருமையான திரி நன்றிகள் இணைப்பிற்கு...தொடர்ந்து இணையுங்கள்...

Link to comment
Share on other sites

வணக்கம் அக்கா :)

நீங்க தான் மறக்காமல் வந்து வந்து போறீங்க வேறு யாருமே எட்டி கூட பார்க்கிறார்கள் இல்லை :lol:

நிர்வாகத்தினை கேட்டிருக்கிறேன் நகர்த்துவார்கள் என்று நினைக்கிறேன்

ஹலோ.. நாங்களும் வாறனாங்களாக்கும்.. :D ஆனால் பெரிய பத்திகளை வாசிக்கப் பஞ்சி வந்தால் ஒண்டும் எழுதிறேல்ல.. :unsure:

Link to comment
Share on other sites

புரட்சி நாயகன் லெனின் - வரலாற்று நாயகர்!

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் வரலாறு இதுவரை சந்தித்திருக்கும் மிகப் பெரிய புரட்சிகளுள் ஒன்று அதன் உச்சகட்டத்தை தொட்ட தினம் அன்று. நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த தீ விஸ்வரூபம் எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை சந்தித்த நாடு ரஷ்யா."இந்த நாட்டிற்க்கு இப்போதைய தேவை யுத்தம் இல்லை, அமைதியும், உணவும், வேலையும்தான். உலகப் போரிலிருந்து ரஷ்யா உடனடியாக விலக வேண்டும். பசித்த வயிற்றுடன் நம் இராணுவத்தினர் இனிமேல் வீம்புக்காக போர் முனைகளில் சாகக்கூடாது. மக்களுக்கு அமைதி, உண்ண உணவு, விவசாயம் செய்ய நிலம், இந்த மூன்றுதான் இந்த நாட்டின் இப்போதைய தேவை".

என்ற ஆவேசமான பிரச்சாரத்துடன் தன் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி அந்த நவம்பர் புரட்சிக்கு வித்திட்டு ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி மலர வழி வகுத்த அந்த வரலாற்று நாயகர் லெனின். கம்யூனிச சித்தாந்தம் கார்ல் மார்க்ஸின் சிந்தனையில் உதித்த ஒன்று என்றாலும் அந்த சித்தாந்தத்தை வரலாற்றில் முதன் முதலில் செயல்படுத்தி காட்டிய புரட்சி வீரர் லெனின்தான்.

lenin.jpg

1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் நாள் ரஷ்யாவின் வால்கா (Volga River) நதிக்கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் (Simbirsk) எனும் நகரத்தில் பிறந்தார் விளாடிமிர் இலீச் உல்யானவ் (Vladimir Ilyich Ulyanov) என்ற லெனின். அந்த நகரம் இப்போது லெனினின் நினைவாக உல்யானவ்ஸ் (Ulyanov's) என்று அழைக்கப்படுகிறது. லெனினுக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் இருந்தனர். அவரது தந்தை நம்பிக்கைக்குரிய அரசாங்க அதிகாரியாக இருந்தாலும், லெனினின் மூத்த சகோதரர் அலெக்ஸாண்டர் முற்போக்கு கொள்கையும், தீவிரவாத கொள்கையும் உடையவராக இருந்தார். அப்போது ரஷ்யாவை ஆண்டு வந்த ஷா மன்னன் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாதவனாக இருந்தான்.

மன்னனைக் கொல்வதே ரஷ்ய மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க ஒரே வழி என்று நம்பிய அலெக்ஸாண்டர் அதற்காகத் திட்டமிடத் தொடங்கினார். அந்தத் திட்டத்தை அறிந்த மன்னனின் அதிகாரிகள் அலெக்ஸாண்டரையும், அவரது நண்பர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி 1887-ஆம் ஆண்டு மே 8-ஆம் நாள் அவர்களை தூக்கிலிட்டுக் கொன்றனர். அப்போது லெனினுக்கு வயது பதினேழுதான். சிறு வயதிலிருந்தே தன் அண்ணனோடு நெருங்கிப் பழகியவர் லெனின். பெற்றோர் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். ஆனால் அலெக்ஸாண்டருக்கும், லெனினுக்கும் மதப்பற்று இருந்ததில்லை. குடும்பம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலயம் செல்லும்போது அவர்கள் இருவர் மட்டும் ஆலயம் செல்ல மறுத்தனர். பிள்ளைகளின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட விரும்பாததால் குழந்தைப் பருவத்திலிருந்தே புதுமைக் கருத்துகளோடும், சுயமாக சிந்தித்து செயல்பட்டு முடிவெடுக்கும் வாய்ப்போடும் வளர்ந்தார் லெனின்.

vladimir_lenin.jpg

விளையாட்டிலும், படிப்பிலும் பள்ளியில் முதல் மாணவனாக திகழ்ந்த அவர் உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். அண்ணனின் மரணம் அவரை பெரிதாக பாதித்தாலும் தன் நாட்டுக்கு புதிய ஆட்சி தேவை என்ற எண்ணம் அவரிடம் வேரூன்றி வளரத் தொடங்கியது. கஸான் நகரில் உள்ள (Kazan University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பயின்றார் லெனின். ஒரு தீவிரவாதியின் தம்பி என்று கூறி முதலில் அவரை சேர்த்துக் கொள்ள மறுத்தது பல்கலைக்கழகம். ஆனால் அவரது கல்வி தேர்ச்சியைக் கண்டு பின்பு மனம் மாறி ஏற்றுக்கொண்டது. பல்கலைக்கழகத்தில் தன்னுடம் படித்த முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களுடன் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால் லெனினை பல்கலைக்கழகம் வெளியேற்றியது. ஆனால் வைராக்கியத்துடன் சுயமாகவே படித்து 1891- ஆம் ஆண்டில் சட்டத்தில் பட்டம் பெற்றார் லெனின்.

அந்தக் காலகட்டத்தில் தான் கார்ல் மார்க்ஸின் புகழ்பெற்ற 'மூலதனம்' என்ற நூலை படிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தொழிலாளர்களுக்காக பாடுபட வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் கருத்துகளை அவர் பரப்பத் தொடங்கினார். அதனை அறிந்த ஷா மன்னன் லெனினை கைது செய்து மூன்று ஆண்டு சிறை தண்டனையுடன் ஷைபீரியாவுக்கு நாடு கடத்தினான். தண்டனை முடிந்ததும் 1900-ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்ற லெனின் அங்கிருந்து ஒரு பத்திரிக்கை நடத்தத் தொடங்கினார். அடுத்த பதினேழு ஆண்டுகள் அவர் ஐரோப்பாவிலேயே தங்கியிருந்து ஷா மன்னனின் கொடுங்கோன்மை பற்றியும், ரஷ்ய தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிறைய எழுதினார். லெனினின் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.

leninpravda%5B1%5D.jpg

ஷா மன்னனின் ஆட்சியில் நிலக்கரி தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொல்லும் அளவுக்கு உணவு பஞ்சம் கோர தாண்டவம் ஆடியது. மன்னன் தன் மனைவி அலெக்ஸாண்ட்ராவின் கைப்பாவையாக விளங்கினான். மனைவியோ ரஷ்புட்டின் என்ற காமுக சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்தாள். மன்னனும், ராணியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் இருந்ததால்தான் மன்னனைக் கொல்ல திட்டம் தீட்டினார் லெனினின் அண்ணன் அலெக்ஸாண்டர். தங்கள் பிரச்சினைகளை சொல்ல அரண்மனை நோக்கி ஊர்வலமாக சென்ற அப்பாவி மக்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். பொறுத்தது போதும் என்று ஒரு தேசமே பொங்கி எழுந்தது.

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீதிகளில் திரண்ட ரஷ்ய மக்கள் மன்னனுக்கு எதிராக எழுப்பிய கோஷங்களால் ரஷ்யாவே அதிர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மிதவாத சோசியலிஸ்ட் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றியது. பெரும் கோபத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஷா மன்னனையும், அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர். ஆனால் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களாலும் உணவு தட்டுப்பாட்டைப் போக்க முடியவில்லை. ஷா மன்னன் மறைந்தாலும் நாட்டின் அவலங்கள் மறையவில்லை. அதுதான் சரியான தருணம் என்று நம்பிய லெனின் தன் தாய்நாடு நோக்கி புறப்பட்டார். அவருடைய சகாக்கள் உருவாக்கியிருந்த செஞ்சேனியைக் கொண்டு அதே ஆண்டு அதாவது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் தலைநகர் பெட்ரோகிராடை (Petrograd) சுற்றி வளைத்தது லெனினின் படைகள்.

110.jpg

இடைக்கால ஆட்சியின் வீரர்கள் துப்பாக்கிகளை கீழே போட்டு விலகி நிற்க, ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல், வன்முறை நிகழாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் லெனின். ரஷ்யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பிரச்சாரத்தில் கூறியிருந்ததைப் போலவே ஆட்சிக்கு வந்த மறுநாளே நில பிரபுக்களின் விளை நிலங்களை கைப்பற்றி விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுத்தார் லெனின். தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. லெனின் ரஷ்யாவின் கம்யூனிஸ்டு ஆட்சியை அமைத்த பிறகுதான் பெரும்பாலான நாடுகளில் கம்யூனிசம் பரவத் தொடங்கியது. கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை அவர் பின்பற்றினாலும் அடக்கு முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.

நிறைய புத்தகங்களை படிக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. தனது புரட்சிகரமான கருத்துகளை அவர் புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துகள் 55 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டு மே மாதம் லெனினை முடக்குவாதம் தாக்கியது. உடல் செயலிழந்தது. இரண்டு ஆண்டுகளில் அதாவது 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் தனது 54-ஆவது வயதில் அவர் காலமானார். அவரது பதப்படுத்தபட்ட உடல் இன்றும் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அடக்கு முறையையும், முறையற்ற ஆட்சியும் நடந்தபோது நம்மால் என்ன செய்ய முடியும்? என்று மற்றவர்களைப்போல் லெனினும் ஒதுங்கியிருந்திருந்தால் அவரால் வரலாற்றில் அவ்வுளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது.

index.png

கம்யூனிசம் கொள்கைகளின் நிறை, குறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், எல்லொருக்கும் வேலை கிடைக்க வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்றும் சிந்தித்ததாலேயே வரலாற்றில் அழியா இடத்தைப் பெற்றிருக்கிறார் லெனின். அவரைப் பற்றியும், ரஷ்ய புரட்சியைப் பற்றியும் வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்....

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்

கடைக்கண் வைத்தாள், அங்கே,

ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,

கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,

வாகான தோள்புடைத்தார் வானமரர்,

பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்

போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,

வையகத்தீர், புதுமை காணீர்!

என்று கவிதை வடித்திருக்கிறார். நம்மால் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அசைக்க முடியா நம்பிக்கையும், தன் இலக்கை நோக்கி இரவு, பகல் பாராமல் உழைக்கும் மனஉறுதியும், எல்லோருக்கும் எல்லாமும் வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும்தான் லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்கு வானத்தை வசப்படுத்த உதவிய பண்புகள். அதே பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியாவிட்டாலும், குறைந்தது நம் தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம்

http://urssimbu.blogspot.com

வீணா....யாழுக்குள்ள இருக்கிற குட்டி விக்கிப்பீடியா உங்கள் திரி..அருமையான திரி நன்றிகள் இணைப்பிற்கு...தொடர்ந்து இணையுங்கள்...

நன்றி சுபேஷ்.. :)

ஹலோ.. நாங்களும் வாறனாங்களாக்கும்.. :D ஆனால் பெரிய பத்திகளை வாசிக்கப் பஞ்சி வந்தால் ஒண்டும் எழுதிறேல்ல.. :unsure:

ஏதும் எழுதினால் தானே வந்தீங்க எண்டு நேக்கு தெரியும் அவ்.. :D

நன்றி அண்ணா உங்க வருகைக்கு எழுதாட்டிலும் இடைக்கிடை read பண்ணுங்க அதுவே போதும்

ஹலோ.. நாங்களும் வாறனாங்களாக்கும் :D

நன்றி உடையார் அண்ணா அடிக்கடி வாங்க இந்த பக்கம்.. :)

Link to comment
Share on other sites

விண்வெளியில் உள்ள ’பறக்கும் மலைகள் ‘ யாருக்குச் சொந்தம்?

பூமியும் சந்திரனும் இருக்கின்ற வட்டாரத்தை நோக்கி ‘பறக்கும் மலைகள்’ என்று சொல்லத்தக்க பெரும் பாறைகள் அவ்வப்போது ‘சர், சர்’ என்று வேகமாக வரும். ஆனால் அவை பூமியின் மீது அல்லது சந்திரன் மீது மோதாமல் தமது சுற்றுப் பாதையில் வேகமாகச் சென்று விடும். இவற்றுக்கு ‘ஆபத்தை உணடாக்கக்கூடிய் அஸ்டிராய்டுகள்’ என்று பெயர். உதாரணமாக மே 19 ஆம் தேதியன்று 31 மீட்டர் நீளம் கொண்ட அஸ்டிராய்ட் சுமார் 9 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்ல இருக்கிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியிலான நிலவரப்படி இப்படியான அஸ்டிராய்டுகள் மொத்தம் 1287 உள்ளன. இந்த அஸ்டிராய்டுகள் காலம் காலமாக வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பூமியுடன் மோத வாய்ப்பில்லை தான். ஆனாலும் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸா பல்வேறு வழிகளில் இவற்றைக் கண்காணித்து வருகிறது.

asteroid+Ida.jpg

அஸ்டிராய்ட் ஐடா

நாம் இந்த அஸ்டிராய்டுகள் குறித்து கவலைப்படுவதற்குப் பதில் இந்த அஸ்டிராய்டுகள் இனி மனிதனைக் கண்டு பயப்படலாம் .காரணம். அமெரிக்காவின் கோடீஸ்வர முதலாளிகள் இந்த அஸ்டிராய்டுகள் மீது கண் வைத்து விட்டனர்.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் போன்ற அரிய உலோகங்களை வெட்டி எடுத்து வரும் நோக்கில் இப்போது அமெரிக்காவில் தனி கம்பெனி அமைக்கப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் கோடீஸ்வரருமான ஜேம்ஸ் கேமரான், கூகுள் நிறுவனர் லாரி பேஜ், கூகுள் சேர்மன் எரிக் ஷ்மிட் முதலானோர் முதலீடு செய்து Planetary Resources என்னும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

அஸ்டிராய்டுகளில் நிறைய உலோகம் அடங்கிய அஸ்டிராய்ட், பெரிதும் பாறையால் ஆன அஸ்டிராய்ட் என பல வகைகள் உண்டு. பெரிதும் உலோகத்தால் ஆன அஸ்டிராய்டில் பிளாட்டினம், தங்கம் போன்ற விலையுயர்ந்த உலோகங்கள் அடங்கியிருக்கும்.

asteroids_3554_Amun_.jpg

பிளாட்டினமும் தங்கமும் நிறைய உள்ளதாகக் கூறப்படும் அஸ்டிராய்ட் 3554 அமுன்

இரண்டு கிலோ மீட்டர் குறுக்களவு கொண்ட 3554 அமுன் எனப்படும் அஸ்டிராய்டில் இரும்பு மற்றும் நிக்கல் உலோகங்கள் 8 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு உள்ளன. கோபால்ட் எனப்படும் உலோகம் 6 லட்சம் கோடி டாலர். பிளாட்டினம், தங்கம் ஆகிய உலோகங்களின் மதிப்பு மேலும் 6 லட்சம் கோடி டாலர் என்று ஜான் லூயிஸ் என்ற நிபுணர் கூறுகிறார்.

இந்த அமெரிக்க நிறுவனத்தினர் அஸ்டிராய்டுகளிலிருந்து தண்ணீரையும் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். இத்தண்ணீரிலிருந்து ஆக்சிஜனையும் ஹைட்ரஜனையும் தனித்தனியே பிரித்து அவற்றைத் திரவமாக்கி விண்வெளியிலிலேயே பெரிய டாங்கிகளில் சேமித்து வைக்கவும் திட்டம் உள்ளது. உயரே செல்கின்ற ராக்கெட்டுகளுக்கு அவற்றை எரிபொருட்களாக விலைக்கு விற்க முடியும்.

அஸ்டிராய்டுகளிலிருந்து உலோகங்களை எடுப்பது என்பது ஏதோ புதிதாகத் தோன்றிய கருத்து அல்ல. விண்வெளி ராக்கெட் இயலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ரஷிய மேதை கான்ஸ்டாண்டின் சியோல்கோவ்ஸ்கி 1903 ஆம் ஆண்டிலேயே இது பற்றிய கருத்தை வெளியிட்டார்.

asteroid+belt+nasa+image.jpg

சூரிய குடும்பத்தில் அஸ்டிராய்ட் மண்டலம்

சூரிய மண்டலத்தில் அஸ்டிராய்டுகள் தனி வகை. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே அஸ்டிராய்ட் மண்டலம் உள்ளது. அங்கு லட்சோப லட்சம் அஸ்டிராய்டுகள் உள்ளன. குடியரசு தின விழாவில் அணிவகுத்துச் செல்லும் ராணுவ வீரர்கள் போல இவை அனைத்தும் ஓர் ஒழுங்குடன் அணிவகுத்துச் செல்பவையாக சூரியனைச் சுற்றுகின்றன.

இந்த அஸ்டிராய்ட் மணடலத்திலிருந்து பல ஆயிரம் அஸ்டிராய்டுகள் தனியே கிளம்பி பூமிக்கு அருகே வந்து செல்கின்றன. இவ்விதமான அஸ்டிராய்டுகள் மீது தான் குறிப்பாக கவனம் செலுத்தப்படும்.

விண்வெளித் துறையில் இன்று எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சந்திரனுக்குச் சென்று வருவதை விட அஸ்டிராய்டுக்குச் சென்று வருவது சுலபமானதே. சந்திரனுக்கும் அத்துடன் கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. ஆகவே அவற்றில் போய் இறங்கினால் ஈர்ப்பு சக்தி காரணமாக அங்கிருந்து எளிதில் உயரே கிளம்ப முடியாது. ராக்கெட் உயரே கிளம்புவதற்கு நிறைய எரிபொருள் தேவைப்படும். அவற்றுடன் ஒப்பிட்டால் அஸ்டிராய்டுகளில் போய் இறங்குவதும் அங்கிருந்து கிளம்புவதும் எளிது. வடிவில் அவை சிறியவை என்பதால் அஸ்டிராய்டுகளின் ஈர்ப்பு ச்கதி மிகக் குறைவாக இருக்கும். ராக்கெட் உயரே கிளம்புவதற்கு கொஞ்சம் எரிபொருள் இருந்தாலும் போதும்.

நாஸா அனுப்பிய டான் (Dawn) என்னும் செயற்கைக்கோள் பூமியிலிருந்து சுமார் 18 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெஸ்டா என்னும் அஸ்டிராய்டை அடைந்து அதைச் சுற்றி வருகிறது.

asteroid+vesta+26000miles+from+Dawn+2011july.jpg

அஸ்டிராய்ட் வெஸ்டா

பூமியில் பல நூறு டன் எடை கொண்ட ஒரு பொருளின் எடை அஸ்டிராய்ட் ஒன்றில் மிக அற்ப அளவில் இருக்கும். ஆகவே அங்கிருந்து அரிய உலோகங்கள் அடங்கிய பாறையை எடுத்துக் கொண்டு உய்ரே கிளம்புவது எளிது. சொல்லப் போனால் அவற்றை பூமியில் கொண்டு வந்து இறக்குவது தான் மிகக் கடினமான வேலையாக இருக்கும்.

இத்திட்டத்தை மேற்கொள்வோர் முதலில் தகுந்த அஸ்டிராய்டுகளைத் தேர்ந்தெடுக்க பூமிக்கு மேலே பல டெலஸ்கோப்புகளைப் பறக்க விடுவர். இது இரண்டு ஆண்டுகளில் சாத்தியமாகி விடும் என்று கருதப்படுகிறது. அடுத்த கட்டப் பணி அஸ்டிராய்டுகளுக்கு அனுப்புவதற்காகத் தானியங்கி ரோபாட்டுகளை உருவாக்குவதாகும். மூன்றாவது கட்டத்தில் தான் அஸ்டிராய்டுகளில் ரோபாட்டுகளை இறக்கி அரிய உலோகங்கள் அடங்கிய பாறைகள் வெட்டி எடுக்கப்படும்.

புதிய நிறுவனம் ஏற்கெனவே 25 எஞ்சினியர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டுள்ளது. இவர்களில் பலர் முன்னர் அமெரிக்க நாஸா அமைப்பில் வேலை பார்த்தவர்கள்.

எடுத்த எடுப்பில் இவர்கள் ஒரு முக்கிய பிரச்சினையை சமாளிக்க வேண்டியிருக்கும். சந்திரன், கிரகங்கள், விண்வெளி பற்றி 1967 ஆம் ஆண்டில் சர்வதேச சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி எந்த நாடும் விண்வெளியில் உள்ள சந்திரன் மற்றும் கிரகங்கள் மீது உரிமை கொண்டாட முடியாது. இதில் அஸ்டிராய்டுகளும் அடங்கும். சர்வதேச சட்டத்தில் அரசுகள் பற்றித் தான் கூறப்பட்டுள்ளதே தவிர, தனியார் கம்பெனிகள் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்று வாதிக்கப்படுகிறது.

அஸ்டிராய்டுகளிலிருந்து பிளாட்டினம், தங்கம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உலோகங்களை எடுத்து வருவது என்பது நல்ல திட்டம் தான். ஆனால் இப்படி அஸ்டிராய்டுகளிலிருந்து ஏராளமான அளவில் பிளாட்டினம், தங்கம் ஆகியவை பூமிக்கு வரும் போது உலக மார்க்கெட்டில் இவற்றின் விலை ஒரேயடியாகச் சரிந்து போக வாய்ப்புள்ளது.உதாரணமாக தங்கத்தின் (ஒரு பவுன்) விலை ரூ 20 ஆயிரத்திலிருந்து ஒரு பவுன் ரூ 2000 ஆகக் குறைந்து போனால் என்ன ஆகும்?

http://www.ariviyal....0&max-results=1

Link to comment
Share on other sites

இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ரிசாட்-1

இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் பெயர் ரிசாட்- 1 என்பதாகும்(RISAT-1). இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்(PSLV) மூலம் உயரே வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

முதலில் ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும். உலகில் எந்த நாடும் தங்களிடம் வேவு செயற்கைக்கோள் இருப்பதாக அல்லது வேவு செயற்கைக்கோளை செலுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொள்வதில்லை.

polar+orbit+image+two.jpg

இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தும்

பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுகின்றன.

அந்த வகையில் ரிசாட்-1 செயற்கைக்கோளை இந்திய அரசு தொலையுணர்வு செயற்கைக்கோள் என்றே வர்ணிக்கிற்து. குறிப்பாக பயிர் விளைச்சலை, அதுவும் நெல் விளைச்சலை, மதிப்பிட இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் மீடியா இந்த செயற்கைக்கோளை வேவு செயற்கைக்கோள் என்றே வர்ணிக்கின்றன.

இந்தியா கடந்த பல ஆண்டுகளில் பல தொலையுணர்வு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தியுள்ளது. இவை அனைத்தும் பூமியை வடக்கு தெற்காகச் சுற்றுபவை. உயரே இப்போது இந்தியாவின் 11 தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறான திறன் கொண்ட காமிராக்களைப் பயன்ப்டுத்தி உயரே இருந்து படங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இவ்விதப் படங்களை வெவ்வேறு பணிகளுக்கு இந்தியா பயன்படுத்தி வருகிறது.

cartosat+2+imagery.jpg

கார்ட்டோசாட் 2 இந்தியாவின் தொலையுணர்வ செயற்கைக்கோள்களில் ஒன்றாகும் (CARTOSAT-2).இது அந்த செயற்கைக்கோள் எடுத்த படம்.

தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தும் வடக்கிலிருந்து தெற்காகப் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 90 நிமிஷம் ஆகும். இப்படி சுற்றுகையில் அந்த செயற்கைக்கோள் இந்தியாவைப் படம் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த செயற்கைக்கோள் ஒரு தடவை சுற்றி முடித்து விட்டு அடுத்த ரவுண்ட் வருவதற்குள் அந்த செயற்கைக்கோளுக்கு கீழே அமைந்த நிலப் பிராந்தியம் இந்தியாவாக இருக்க வேண்டுமென்பதில்லை.

resourcesat.1+satellite+image.jpg

இந்தியாவின் ரிசோர்சாட் 1 செயற்கைக்கோள் (Resourcesat-1).

இதுவும் ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோளாகும்.

பூமி தனது அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுவதை மறந்து விடக்கூடாது. ஆகவே அந்த செயறகைக்கோள் மூன்றாவது அல்லது நான்காவது ரவுண்ட் சுற்றும் போது செயற்கைக்கோளின் கீழே இருப்பது ஆப்பிரிக்க கண்டமாகவும் இருக்கலாம். அட்லாண்டிக் கடலாகவும் இருக்கலாம். அமெரிக்காவாகவும் இருக்கலாம்.

வேறு விதமாகச் சொல்வதானால் இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் உலகில் எல்லா நாடுகள் மீதும் பறந்து படங்களை எடுக்கின்றன. பிற நாடுகள் கேட்டால் அவற்றின் மீதாகப் பறக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை இந்தியா உரிய கட்டண அடிப்படையில் அவற்றுக்கு விற்கிறது.

இப்படியாக இந்தியா இப்படங்களை விற்பனை செய்து வருவதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கிறது. தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விஷயத்தில் இந்தியா முன்னணியில் உள்ள நாடு என்றும் கூறலாம். இவ்விதம் உயரே இருந்து எடுக்கும் படங்களை நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த இயலும். எனினும் இந்த தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தையும் வேவு செயற்கைக்கோள்கள் என்று வர்ணிக்க முடியாது.

இந்த தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விஷயத்தில் சில குறைபாடுகள் உண்டு. பூமியில் பகலாக இருக்கும் பகுதிகளை மட்டுமே இவற்றினால் படம் எடுக்க இயலும். இரவில் படங்களை எடுக்க இயலாது. தவிர, மேக மூட்டமாக இருந்தால், மழை பெய்தால் தெளிவான படங்கள் கிடைக்காது.

RISAT+2+isro.jpg

ரிசாட் 2 செயற்கைக்கோள்.

ஆனால் செயற்கைக்கோளில் Synthetic Aperture Radar எனப்படும் மிக நவீன கருவியைப் பொருத்தினால் அது மைக்ரோ வேவ் எனப்படும் அலைகளைக் கீழே அனுப்பி எதிரொலித்து வரும் அலைகளைக் கொண்டு படம் எடுக்கும். இந்த் முறையின் மூலம் இரவிலும் பூமியின் பல்வேறு பகுதிகளை படம் எடுக்க முடியும். மேக மூட்டம் அல்லது பனி மூட்டம் இருந்தாலும் படம் எடுக்கலாம்

நிலத்தில் ராணுவ டாங்கிகள் அல்லது விமானங்கள் மீது இலை தழைகளைப் போட்டு மறைத்திருந்தாலும் அவற்றை ஊடுருவிப் படம் எடுக்க முடியும். சுருங்க்ச் சொன்னால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை அவசியமானால் பிற பகுதிகளை வானிலிருந்து கண்காணிக்கும் திறன் இந்த வகை செயற்கைக்கோளுக்கு உண்டு.

risat+1+launch+april+26+2012.jpg

ரிசாட் 1 உய்ரே செலுத்தப்படுகிறது.

படம்: நன்றி ISRO

இவ்விதத் திறனுள்ள செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் இந்தியா கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டுள்ளது. ராடார் மூலம் படம் எடுப்பதால் இவ்வகை செயற்கைக்கோளுக்கு Radar Imaging Satellite என்று பெயர். இதன் சுருக்கமே Risat. இந்தியா உருவாக்கி வந்த இவ்வித ராடார் செயற்கைக்கோளுக்கு ரிசாட் 1 என்றும் பெயர் வைக்கப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் படகுகள் மூலம் மும்பையில் வந்திறங்கி கடற்க்ரை ஓரமாக அமைந்த தாஜ் ஓட்டலில் நுழைந்து பலரைக் கொன்றது நினைவிருக்கலாம்

வானிலிருந்து இந்தியாவின் கரைகளைக் கண்காணிக்க ரிசாட் 1 செயற்கைக்கோளைத் தயாரித்து முடிக்க மேலும் சில காலம் ஆகும் என்பதால் இஸ்ரேலிடமிருந்து அவசர அடிப்படையில் ரிசாட் வகை செயற்கைக்கோள் ஒன்று வாங்கப்பட்டு அது 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்திய பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது.

RISAT+1+ISRO.jpg

இந்தியா சொந்தமாக உருவாக்கிய

ரிசாட் 1 செயற்கைகோள்

இந்தியா உருவாக்கும் கண்காணிப்பு செயற்கைக்கோளுக்கு ஏற்கெனவே ரிசாட் -1 என்று பெயர் வைக்கப்பட்ட காரணத்தால் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு செயறகைக்கோளுக்கு ரிசாட் -2 என்று பெயரிடப்பட்டது. இவ்வாறாக ரிசாட் -2 முந்திக்கொள்ள ரிசாட்-1 இப்போது தான் உயரே செலுத்தப்படது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

ரிசாட் 1 செயற்கைக்கோள் மூலம் பல்வகையான அளவுகளில் படம் எடுக்க முடியும். ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் படம் எடுக்க முடியும். இந்தியாவின் வடமேற்கு எல்லைகளில் உள்ள பள்ளததாக்குகளில் ஆக்கிரமிப்பாளர் நடமாட்டம் இருந்தால் ரிசாட் 1 படங்கள் அதைக் காட்டிக் கொடுத்து விடும். இந்தியாவைச் சுற்றியுள்ள் கடல்களில் சந்தேகப்படும் வகையில் கப்பல்கள், படகுகள் நடமாடினால் கண்டுபிடித்து விடலாம். ஓரளவில் சப்மரீன்களின் நடமாட்டத்தையும் கண்டுபிடித்து விட முடியும்.

ரிசாட் வகை செயற்கைக்கோள்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டும் இருந்தால் போதாது. ஆகவே வருகிற நாட்களில் மேலும் பல ரிசாட் வகை செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுவது நிச்சயம்.

வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவும் ரஷியாவும் நீண்ட காலமாக பல்வேறு வகையான செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த இரு நாடுகளிலும் ராணுவத் துறையினர் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே தனி செயற்கைக்கோள்கள் உள்ளன.

அமெரிக்காவில் இப்போது வேவு செயற்கைக்கோள்களை செலுத்தி அவற்றை இயக்குவதற்குத் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அந்த செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்களை விற்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அப்படங்களை விற்கலாகாது என அமெரிக்க அரசு தடுக்க முடியும்.

இந்தியாவில் ராணுவத் துறையினர் தங்கள் பயன்பாட்டுக்கென தனி செயற்கைக்கோள்கள் வேண்டும் என கடந்த சில காலமாகக் கோரி வருகின்றனர்

http://www.ariviyal....1&by-date=false

Link to comment
Share on other sites

ஆழ்கடலுக்குள் இறங்குவது எப்படி?

பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரான் மார்ச் 26 ஆம் தேதி(2012) விசேஷ நீர்மூழ்கு கலததில் ஒண்டிக் கொண்டு உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடு எனப்படும் கடலடிப் பகுதிக்குச் சென்று சாதனை படைத்துள்ளார். அங்கு கடலின் ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர். உலகின் கடல்களில் அதுவே மிக ஆழமான இடம்.

மனித வரலாற்றில் இதற்கு முன்னர் 1960 ஆம் ஆண்டில் கடல் ஆராய்ச்சியாளர், ஜாக் பிக்கா, அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ் ஆகிய இருவரும் ட்ரீயஸ்ட்(Trieste) என்னும் நீர்மூழ்குகலம் மூலம் சேலஞ்சர் மடுவுக்குச் சென்றனர். இப்போது கேமரான் மூன்றாவது நபராகச் சென்றுள்ளார்.

Trieste+bathyscape.jpg

ட்ரீயஸ்ட் நீர்மூழ்கு கலம் கடலுக்குள் இறக்கப்படுகிறது. மேற்புறம் பெரிய வடிவில் இருப்பது பெட்ரோல் டாங்க்.அதன் அடிப்புறத்தில் உள்ள கோளத்துக்குள் தான் இருவர் அமர்ந்திருந்தனர்.

முன்னர் பிக்கா பயன்படுத்திய ட்ரீயஸ்ட் நீர்மூழ்கு கலம் வடிவில் பெரியது. அதன் நீளம் 60 அடி. ஆனால் கேமரான் பயன்படுத்திய டீப்சீ சேலஞ்சர் (Deepsea Challenger) எனப்படும் நீர்மூழ்கு கலத்தின் நீளம் 24 அடி. கடந்த 50 ஆண்டுக்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப முன்னேற்றத்தை இது காட்டுகிறது. ட்ரீயஸ்ட், டீப்சீ சேலஞ்சர் ஆகிய இரண்டும் கடலில் மிக ஆழத்தில் இறங்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை.

கடலில் மேலும் மேலும் ஆழத்தில் இறங்கும் போது அழுத்தம் பயங்கரமாக அதிகரிக்கும். சேலஞ்சர் மடுவில் கடலடித் தரையில் அழுத்தமானது கடல் மட்டத்தில் உள்ளதைப் போல 1100 மடங்கு இருக்கும். தகுந்தபடி வடிவமைக்கப்படாவிட்டால் அது அப்பளம் போல நொறுங்கி விடும். கடலடித் தரையில் நீரின் அழுத்தம் மிக அதிகம் என்பதால் நீர்மூழ்கு கலத்திலிருந்து வெளியே வருவது என்பது சிந்தித்துப் பார்க்க முடியாத விஷயம்.

நீர்மூழ்கு கலங்கள் கடலுக்குள் இறங்குவதைப் பொருத்த வரையில் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ள அதே முறை தான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. கரையையொட்டி ஆழம் குறைந்த கடல் பகுதியில் முத்தெடுப்பதற்காக உள்ளே இறங்குபவர்கள் கடந்த காலத்தில் இடுப்பில் பெரிய கல்லைக் கட்டிக் கொள்வர். முத்துச் சிப்பிகளைச் சேகரித்த பின்னர் கல்லைத் தூர எறிந்து விடுவர் பின்னர் மேலே வந்து சேருவர். கல்லைக் கட்டிக்கொண்டால் கல்லின் எடை காரணமாக எளிதில் உள்ளே இறங்க முடியும்.

ஜாக் பிக்காவின் ட்ரீயெஸ்ட், கேமரானின் டீப்சீ சேலஞ்சர் கலம் ஆகிய இரண்டிலும் அடிப்படையில் இதே முறை தான் பயன்படுத்தப்பட்டது. அதாவது உள்ளே இறங்குவதற்கு அக்கலங்களில் எடை சேர்க்கப்பட்டது.

deepsea+challenger+vertical.jpg

கேமரான் பயன்படுத்திய டீப்சீ சேல்ஞ்சர் கலம். இது கடலுக்குள் செங்குத்தாகத்தான் இறங்கியது

ட்ரீயெஸ்ட் எடை மிக்கது எனபதுடன் வடிவிலும் பெரியது என்பதால் அது 9 டன் அளவுக்கு உருக்கு (இரும்பு) உருண்டைகளை ஏற்றிச் சென்றது. இந்த எடை காரணமாகவே அது நீருக்குள் மிக ஆழத்துக்கு -- சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கியது. கேமரான் பயன்படுத்திய நீர்மூழ்கு கலத்தில் சுமார் 500 கிலோ எடைக்கு இரும்பு வில்லைகள் ஏற்றிச் செல்லப்பட்டன.

நீங்கள் ஒரு மரத் துண்டை தண்ணீர் நிரம்பிய வாளியில் போட்டால் அது மிதக்கும். ஆனால் அந்த மரத்துண்டுடன் ஒரு சிறிய கல்லைக் கட்டி வாளியில் போட்டால் மரத்துண்டு அடி மட்டத்துக்குப் போய்ச் சேரும். மரத்துண்டுடன் இணைந்த கல் தனியே அகன்று விடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே அந்த மரத்துண்டு மேலே வந்து மிதக்க ஆரம்பித்து விடும்.

இந்த இரு நீர்மூழ்கு கலங்களிலும் கடலுக்குள் இறங்குவதற்கோ அல்லது கடலடிக்குச் சென்ற பின்னர் மேலே வருவதற்கோ எஞ்சின் எதுவும் கிடையாது. ஆகவே தான் எடை சேர்க்க வேண்டியுள்ளது. சரி, இவை கடலடியில் பணியை முடித்த பின்னர் மேலே வருவது எப்படி?

james+cameron+afer+coming+out+of+mariana+trench+march+26+2012.jpg

சேலஞ்சர் மடுவிலிருந்து மேலே வந்தவுடன் கேமரான் பேட்டி அளிக்கிறார்

ட்ரீயஸ்ட் கலத்தைப் பொருத்தவரை அதன் மேற்புறத்தில் நீர் புகாத பெரிய தொட்டி இணைக்கப்பட்டிருந்தது. அதில் சுமார் 85 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்த்து. பெட்ரோல் நீரை விட லேசானது. சேலஞ்சர் மடுவுக்குச் சென்ற பின்னர் பணி முடிந்து ட்ரீயஸ்ட் மேலே வரவேண்டும் என முடிவு செய்யப்பட்டதும் பெட்ரோல் டாங்கின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டிருந்த இரும்பு உருண்டைகள் வெளியேற்றப்பட்டன. இதனால் டிரீயஸ்டின் எடை குறைந்தது. அத்தனை இரும்பு உருண்டைகளும் வெளியேற்றப்பட்ட பின்னர் பெட்ரோல் டாங்க் காரணமாக டிரீயஸ்ட் மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது.

கேமரானின் டீப்சீ சேலஞ்சர் நீழ்மூழ்கு கலம் மேலே வருவது என்று முடிவு செய்யப்பட்டவுடன் அதில் இருந்த இரும்பு வில்லைகள் இதே போல வெளியேற்றப்பட்டன. அந்த நீர்மூழ்குக் கலம் கெட்டியான விசேஷ நுரைப் பொருளால் ஆனது. அது நீரில் மிதக்கும் தன்மை கொண்டது. ஆகவே இரும்புத் வில்லைகள் வெளியேற்றப்பட்டதும் அது மரத்துண்டு போல மேலே வந்து மிதக்க ஆரம்பித்தது.

deepsea+challenger+vessel.jpg

டீப்சீ சேலஞ்சர் நீர்மூழ்கு கலத்தின் இன்னொரு தோற்றம்

நீர்மூழ்கு கலத்திலிருந்து இரும்பு வில்லைகள் வெளியே தள்ளப்படுகின்ற ஏற்பாடு செயல்படாமல் போனால் அவ்வளவு தான். ஆகவே கேமரானின் நீர்மூழ்கு கலத்தில் மாற்று ஏற்பாடு ஒன்று இருந்தது. ஒரு வித மின் முறையில் உலோகங்களை பொடிப்படியாக உதிரவைத்து விட முடியும். இந்த முறையின் கீழ் 500 கிலோ இரும்புத் வில்லைகளையும் இப்படிப் பொடியாக வெளியேற்றி விட முடியும். ஆனால் இதற்கு 11 மணி நேரம் ஆகலாம். ஆனால் நிச்சயம் மேலே வந்து விட முடியும் என்ற உத்தரவாதம் உண்டு. வேறு வித ஏற்பாடுகளும் உள்ளன.

கேமரானின் நீர்மூழ்கு கலத்தில் தனி ஏற்பாடாக மின்சார மோட்டார் இருந்தது. கடலடித் தரையை அடைந்த பின்னர் அதை சற்று முன்னே செலுத்தவும் பக்கவாட்டில் திரும்பச் செய்யவும் ஏற்பாடுகள் உள்ளன. இந்த ஏற்பாடுகள் செயல்படுவதற்காகவே மின்சார மோட்டார். ட்ரீயஸ்ட் கலத்துடன் ஒப்பிட்டால் டீப்சீ சேலஞ்சர் மிக நவீனமானது என்பதில் ஐயமில்லை.

டைட்டானிக் உட்ப்ட பல பிரபல சினிமாப் படங்களை எடுத்தவரான ஜேம்ஸ் கேமரான் கேமராவைப் பயன்படுத்தி ஜாலவித்தை செய்ப்வர். டீப்சீ சேலஞ்சர் அவருக்காகவே உருவாக்கப்பட்டது . அந்த அளவில் அதன் வெளிப்புறத்தில் பல கேமராக்களும் மின்சார பாட்டரிகளால் இயங்கும் சக்திமிக்க மின் விளக்குகளும் உள்ள்ன. இவை கடலுக்கு அடியில் முப்பரிமாணப் படங்களை எடுக்க உதவுபவை. ஒரு விமரிசகர் கூறுகையில் டீப்சீ சேலஞ்சரில் ஒரு டிவி ஸ்டுடியோவே அடங்கியுள்ளது என்றார்.

பொதுவில் நீர்மூழ்கு கலங்களால் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு செல்ல முடியாது.கடலுக்குள் இறங்குவதானால் இவை ஒரு கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் குறிப்பிட்ட இடத்தில் கிரேன் மூலம் இறக்கப்படும். அதே போல பணி முடிந்து மேலே வந்ததும் மறுபடி கப்பலில் ஏற்றப்படும். தவிர, நீர்மூழ்கு கலம் மறுபடி கடலுக்குள் இறங்குவதானால் புதிதாக இரும்பு வில்லைகள் நிரப்பப்பட வேண்டும்.

ஜேம்ஸ் கேமரான் போலவே ரிச்சர்ட் பிரான்சன் என்ற மற்றொரு கோடீஸ்வரர் ஆழ் கடலுக்குச் செல்ல நீர்மூழ்குக் கலம் ஒன்றை உருவாக்கி வருகிறார் (படம் கீழே). பிரான்சன் வசதி படைத்தவர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல விசேஷ விண்வெளி வாகனம் ஒன்றை உருவாக்கி வருபவர். ஆழ் கடல் மீதும் அவர் கண் வைத்துள்ளார. சேலஞ்சர் மடுவை எட்டிப் பிடிப்பதிலான போட்டியில் கேமரான், பிரான்சனை முந்திக் கொண்டு விட்டதாகவும் கூறலாம்.

richard+branson+deepflight+challenger+crediit+virgin+oceanic.jpg

இது கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் பயன்படுத்த இருக்கும் நீர்மூழ்கு கலம். இதில் விமானத்துக்கு உள்ளது போன்ற இறக்கைகள் உண்டு.

Courtesy: Virgin Oceanic

இவர்களுடைய நீர்மூழ்கு கலங்களுடன் ஒப்பிட்டால் சப்மரீன்கள், அதுவும் போர்ப் படைகளில் இடம் பெற்றுள்ள சப்மரீன்கள், நினைத்த மாத்திரத்தில் கடலுக்குள் இறங்குபவை. தேவையான போது மேலே வரக்கூடியவை. சப்மரீன்கள் கடலுக்குள் இறங்குவதற்கு இரும்புத் துண்டு அல்லது இரும்பு உருண்டைகள் தேவையில்லை. மிதக்கும் நிலையிலிருந்து நீருக்குள் இறங்கவும் மறுபடி மேலே வரவும் சப்மரீன்களில் வேறு வித உத்தி கையாளப்படுகிறது

http://www.ariviyal.in

Link to comment
Share on other sites

சப்மரீன்களில் இரட்டைச் சுவர்

சப்மரீன் (Submarine) எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் கேப்டன் ஒரு பொத்தானை அழுத்துகிறார். அது உடனே கடலுக்குள் மூழ்கிறது. ஒத்திகை பார்ப்பது போல அவர் சற்று நேரம் கழித்து இன்னொரு பொத்தானை அழுத்துகிறார். உடனே சப்மரீன் மேலே வந்து மிதக்க ஆரம்பிக்கிறது.

சப்மரீன் என்பது நன்கு மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் மாதிரி. ஒரு காலி பாட்டிலை நீரில் போட்டால் அது மிதக்கும். மூடப்பட்ட அந்த பாட்டிலுக்குள் காற்று உள்ளது என்பதே அதற்குக் காரணம். சில இரும்புத் துண்டுகளை அந்த பாட்டிலுடன் சேர்த்துக் கட்டி நீருக்குள் போட்டால் பாட்டில் மூழ்கி விடும்.

ஆனால் சப்மரீனின் கேப்டன் ஒரு பொத்தானை அழுத்தியதும் சப்மரீன் --எடை எதுவும் சேர்க்கப்படாமல் -- எப்படி நீருக்குள் மூழ்கியது? அவர் எடை சேர்க்கத் தான் செய்தார். அதாவது சப்மரீனின் எடையை அதிகரிக்க கடல் நீரே பயன்படுத்தப்படுகிறது

submarine+akula+class.jpg

மிதக்கும் நிலையில் சப்மரீன்

நீங்கள் ஓர் அலுவலகத்தில் கண்ணாடியால் ஆன தடுப்பின் மறுபுறம் நிற்கிறீர்கள். இப்போது அந்தத் தடுப்புக்கு சில செண்டி மீட்டர் அருகே இன்னொரு கண்ணாடித் தடுப்பை அமைக்கலாம். இரு புறங்களையும் அடைத்து விட்டு இந்த இரு தடுப்புகளுக்கும் நடுவே தண்ணீரை ஊற்றுவதாக வைத்துக் கொள்வோம். சமரீன் இவ்விதமாகத் தான் இரட்டைச் சுவர்களால் ஆனது. இந்த இரட்டைச் சுவர்களின் நடுவே கடல் நீர் புகும்படி செய்தால் சப்மரீனின் எடை கூடும். நாம் சுவர் என்று குறிப்பிட்டாலும் சப்மரீனின் இரு சுவர்களும் வலுவான உருக்குத் தகடுகளால் ஆனவை.

submarine+nr+diagram.png

நீரில் மிதக்கும் நிலையில் சப்மரீன் குறுக்கு வெட்டுத் தோற்றம்.

1. வெளிப்புறச் சுவர்

2. உட்புற்ச் சுவர்

3. காற்று வெளியே செல்வதற்கான வால்வுகள்

4. கடல் நீர் உள்ளே செல்வதற்கான திறப்பு.

நடுவே உள்ள பகுதி யந்திரங்கள் மற்றும் மாலுமிகளுக்கானது.

சப்மரீனின் வெளிப்புறச் சுவரில் வால்வுகள் உள்ளன. கேப்டன் பொத்தானை அழுத்தியதும் வால்வுகள் திறந்து கொள்கின்றன. மேற்புறத்திலுள்ள வால்வுகளின் வழியே காற்று வெளியேறுகிறது. அதே சமயத்தில் அடிப்புற வால்வு வழியே கடல் நீர் உள்ளே செல்கிறது. இதன் விளைவாக சப்மரீனின் எடை அதிகரித்து அது நீருக்குள் இறங்கும்.

இரட்டைச் சுவர்களுக்கு நடுவே முழுவதுமாக நீரை நிரப்புவதா, அரை வாசி நிரப்புவதா, முக்கால் வாசி நிரப்புவதா என்பதற்கெல்லாம் கணக்கு உள்ளது. சப்மரீன் இறங்க வேண்டிய ஆழத்துக்கு ஏற்ப நீர் நிரப்பப்படுகிறது. வால்வுகள் மூடப்படுகின்றன

. submarine+nr+diagramtwo.png

நீரில் மூழ்கிய நிலையில் சப்மரீனில் இரண்டு சுவர்களுக்கு இடையே

கடல் நீர் உள்ளதைக் கவனிக்கவும்

சப்மரீன் எப்படி மறுபடி மேலே வருவது? சப்மரீனுக்குள் மிகுந்த அழுத்தத்தில் காற்று நிரப்பப்பட்ட தொட்டிகள் உள்ளன. கேப்டன் அடுத்த பொத்தானை அழுத்தும் போது சக்தி மிக்க பம்புகள் செயல்படும். அதன் விளைவாகக் இக்காற்று சப்மரீனின் இரட்டைச் சுவர்களுக்கு நடுவே உள்ள பகுதிக்குச் சென்று அங்குள்ள கடல் நீரை வெளியேற்றும். இரட்டைச் சுவர் பகுதி காலியானதும் வால்வுகள் மூடப்பட்டு சப்மரீன் மறுபடி மேலே வந்து விடும்.

சப்மரீன்களின் நோக்கம் கடலுக்குள் எட்டு கிலோ மீட்டர் பத்து கிலோ மீட்டர் ஆழத்துக்குச் செல்வதல்ல. அந்த கடல் பிராந்தியத்தில் நடமாடக்கூடிய எதிரிக் கப்பல்கள், விமானங்கள் கண்ணில் படாமல் இருந்தால் போதும். ஆகவே சப்மரீன்கள் கடலுக்கு அடியில் சில நூறு மீட்டர ஆழத்துக்கு கீழே இறக்குவதில்லை. அப்படி செய்யவும் முடியாது.

submarine+under+water+three.jpg

நீருக்குள் மூழ்கிய நிலையில் சப்மரீன்

கடலுக்கு அடியில் சுமார் 11 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள நீர்மூழ்கு கலங்கள் பற்றி மேலே கவனித்தோம். அவ்வகைக் கலங்களில் நீருக்குள் மூழ்க இரும்பு உருண்டைகள் அல்லது இரும்பு வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் கவனித்தோம்.

இதற்குப் பதில் சப்மரீனில் செய்வது போல இரட்டைச் சுவர்களை அமைத்து கடல் நீரையே எடையாகப் பயன்படுத்த இயலாது. அதற்குக் காரணம் உண்டு. எட்டு கிலோ மீட்டர் அல்லது பதினோரு கிலோ மீட்டர் ஆழத்தில் நீரின் அழுத்தம் பயங்கரமான அளவுக்கு இருக்கும் .உள்ளே நுழைகின்ற நீரை வெளியேற்றுகின்ற அளவுக்குத் திறன் படைத்த பம்புகளை மனிதனால் ஒருபோதும் உருவாக்க இயலாது.

சப்மரீன்களின் பின்புறத்தில் சுழலிகள் உண்டு. அந்த சுழலிகளின் உதவியால் சப்மரீன் நீருக்குள்ளாக எந்த இடத்துக்கும் செல்ல இயலும். சப்மரீனில் உள்ள சுழலிகள் உட்பட அனைத்தும் பாட்டரிகள் மூலம் இயங்குபவை. இந்த பாட்டரிகள் அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டும். ஆகவே சப்மரீனில் டீசலினால் இயங்கும் மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் உண்டு. இக்காரணத்தால் இந்த வகை சப்மரீன்கள் டீசல்--எலக்ட்ரிக் சபமரீன்கள் என வர்ணிக்கப்படுவதுண்டு.

submarin+wih+parts.jpg

சப்மரீனின் பின்புறத்தில் சுழலிகள் உள்ளதைக் கவனிக்கவும்

நீர்ப்பரப்பின் மேல் மிதக்கின்ற நிலையில் டீசல் ஜெனரேட்டர்கள் இயங்கும். நீருக்குள் இறங்கியதும் எல்லாமே பாட்டரிகள் மூலம் தான் இயங்கும். நீருக்குள் இருக்கின்ற நிலையில் ஒரு சப்மரீன் எவ்வித சத்தத்தையும் எழுப்பலாகாது. அப்படி சத்தம் எழுப்பினால் அது தான் இருக்கின்ற இடத்தைத் தானே காட்டிக்கொடுத்து விடுவதாக ஆகிவிடும். அதன் விளைவாக அது எதிரி சப்மரீனால் தாக்கப்படுகின்ற ஆபத்து உள்ளது. ஒரு சப்மரீன் இருக்கின்ற இடம் வெளியே தெரியக்கூடாது என்பது தான் சப்மரீன் இயக்கத்தின் முதல் விதியாகும்.

தவிரவும், நீருக்குள்ளாக இருக்கும் போது டீசல் எஞ்சினை இயக்குவதானால் அவை இயங்க ஆக்சிஜன் (காற்று) தேவை. டீசல் எஞ்சின்கள் வெளியிடும் புகையை நீருக்கு மேலே வெளியேற்ற ஏற்பாடு தேவை. தவிர்க்க முடியாத சமயங்களில் ஒரு சப்மரீன் சில அடி ஆழத்தில் மூழ்கிய நிலையில் டீசல் எஞ்சின்கள் இயக்கப்படும். அப்போது வெளிக் காற்று உள்ளே நுழைவதற்கு ஒரு குழாயும், டீசல் புகை வெளியேற ஒரு குழாயும் பொருத்தப்பட்டிருக்கும். இவை நீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்களிலும் டார்பிடோ(torpedo), ஏவுகணை முதலான ஆயுதங்கள் இருக்கும். எனினும் இவ்வகை சப்மரீன்களால் அதிக தொலைவு செல்ல முடியாது .தவிர, அதிக ஆழத்துக்கும் செல்ல இயலாது. மிஞ்சிப் போனால சுமார் 300 அடி ஆழம் வரை செல்லும்.

submarine+diese+engines+in+a+submarine.jpg

சப்மரீன் ஒன்றின் உட்புறத்தில் டீசல் எஞ்சின்கள்

பாட்டரிகளை இயக்க டீசலை ஒரு அளவுக்கு மேல் எடுத்துச் செல்ல முடியாது. அந்த அளவில் பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்கள் எல்லையோரக் கடல்களில் ஈடுபடுத்துவதற்கு ஏற்றவை.

டீசல், பாட்டரி என எதுவும் தேவையில்லாமல் அணுசக்தியால் இயங்குகின்ற சப்மரீன்கள் உள்ளன. அணுசக்தி சப்மரீன் ஒன்று மாதக் கணக்கில் நீருக்குள்ளிருந்து வெளியே தலைகாட்டாமல் உலகின் கடல்கள் அனைத்திலும் சுற்றி வரலாம். வல்லரசு நாடுகளிடம் மட்டுமே உள்ள இவை பிரும்மாஸ்திரங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன

http://www.ariviyal.in/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.