Jump to content

உயிரின் அடுத்த நிலை என்ன..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 சித்தாந்த அத்துவிதம்

(சைவம் -வைணவம்)

maxresdefault.jpg

அடிப்படையாக இரண்டு வகைய அத்துவிதக் கருத்துக்கள் உண்டு.

அ) அறிவத்துவிதம்,

ஆ) பொருளத்துவிதம்

என்றவாறு இவை அழைக்கப்படும். அறிவத்துவிதம் என்பது, வெவ்வேறாகிய உயிர்கள் பிணைக்கப்பட்டு அறிவில் எவ்வித வேற்றுமைகளும் தோன்றாது ஒன்றென நின்று இயங்குவது, இது ஆழ்ந்த காதலால் கவரப்பட்டு ஈருயிரும் ஓருயிராய் இயங்கும் தம்பதிகளிடையே இருக்கின்ற உறவு போன்றது.

அவன் விரும்புவதே அவள் விருப்பமாகவும் அவன் செயலே அவள் செயலும், அவன் இன்பமே அவள் இன்பம் அவன் உடமையே அவள் உடமை என்றவாறு உணர்வு நிலையில் முற்றிலும் ஒன்றுபட்டு ஒருங்கியங்குதலே அறிவத்துவிதம் எனும் இரண்டற்ற ஒருமை நிலையாகும்.

இனி பொருளத்துவிதமாவது, ஒரேப் பொருள் பல்வேறு சூழ்நிலைகக்ட்கு ஏற்ப வெவ்வேறாகத் தோன்றுவது என்பர். ஒரே வெள்ளைக் காகிதம் அல்லது தனக்கென்று ஓர் வண்ணம் இல்லாத படிகம், அதன் மேல் விழும் ஒளியின் வண்ணத்திற்குக் ஏறபவே தன் வண்ணமென அவ்வண்ணத்தைக் காட்டி நின்று வெவ்வேறு பொருள் என்றவாறு ஓர் பொருள் வெவ்வேறாகத் தோன்றி நிற்கும். இதுபோலத்தான் இப்பிரபஞ்சம் வெவ்வேறு பொருட்களின் தொகுதி என்று தோன்றுவதும் ஆகும்.

இப்படி உலகை அறிந்து உண்மையில் வண்ணங்களை நெதித்துவிட்டால் பேதமில்லை என்று உணராது தோற்றத்தில் மயங்கிக் கிடப்பதே மித்தியா ஞானம். இவ்வாறு கருதச் செய்வது ஓர் வகைய மாயா சத்தி. இந்த தோற்ற வேறுவாடுகளை நெதித்து மூலத்தில் பொருள் ஒன்றே அது பிரமம்மே என்று உணர்வதே மெய்ஞானம் என்று செல்லும் இந்த பொருளத்துவிதம் மாயாவாத வேதாந்தத்திற்கு அடிப்படையானது

இனி இன்னொருவகையான பொருளத்திவிதமும் உண்டு

இதனை விசிட்டாத்வைதம் என்பர். ஒரே பொருள் பிளந்து பிளந்து விருத்தியடைந்து சித்தும் அசித்துமாய் பலவாகி பரிணமித்து நிற்கும். மண்ணே சட்டி பானை குடம் தட்டு என்று பலவாகப் பரிணமிப்பது போல இவ்வுலகும். இத்தகையப் பரிணாமங்கள் மூலப்பொருளின் வெவ்வேறு அங்கங்களே.

அவ்வகையில் ஓர் பொருள் அங்கமெனும் போது தனித்ததோர் பொருள் எனினும், ஒன்றின் கிழமைப் பொருளாக திகழ்தலின் அது தனித்த சுயம்பு அல்ல.

இவ்வாறு சித்தும் அசித்துமாய் விளங்கும் உலகப் பொருட்கள் ஒரே முலப்பொருளின் வெவ்வேறு வளர்ச்சிகள்- சித்தாகிய சிலந்தி தன்னுளிலிருந்தே அசித்தாகிய வலையை உருவாக்குவதுபோல, ஈசுவரன் தன்னுளிருந்தே சித்தும் அசித்துமாகிய இந்த உலகை உருவாக்குகின்றான் என்று கூறுவதே விசிட்டாத்வைதம் எனும் கோட்பாடு ஆகும்.

அநாதிப்பொருளாக பதி பசு பாசம் எனும் முப்பொருளுண்மையை வற்புறுத்தும் சைவம் கூறும் அத்துவிதம் அறிவத்துவிதமாகும்- எத்தகையப் பொருளத்துவிதமும் அல்ல. இந்த அறிவத்துவிதமே முத்தி நிலையில் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் அந்நியமின்மையைக் கூறும் சுத்தாத்வைதமும் ஆகும். பொருள் வகையில் ஆன்மாவும் இறைவனும் வேறு என்ற உணர்வு இருந்தாலும் அறிவில் வேறல்ல ஒன்றே அந்நியமின்மையின் என்ற உனர்வும் உண்டு. மலங்களை எல்லாம் போக்கிய சுத்தமாகிய அமலனாகிய ஆன்மாதான் இவ்வாறு இறைவனோடு ஒன்றித்து பொருளில் வேறென்றாலும் அறிவில் வேறல்ல என்று நிற்க முடியும்

இந்த வேதாந்தப் பொருளத்துவிதங்கள் எவ்வாறு தோன்றி இருக்கலாம்?

முதலில் அநாதிப்பொருளியலில் பதியினைப் போல பசுவும் பாசமும் அநாதி எனும் சைவங் கூறும் அறிவத்துவித விளக்கத்தைக் காண்போம்

ஆணவ மல பந்தத்தால் அஞ்ஞான இருளில் கிடக்கும் ஆன்மாக்கள், இறைவனின் திருவருள் என்னும் ஒளிப் பாய்ந்து அந்த ஞான அந்தகாரத்தை கிழித்து துமித்து ஒருபுடை நீக்க, ஆன்மாக்கள் இச்சா ஞான கிரியா சொரூபிகளாக எழுந்து அசுத்தமாயையின் ஈர்ப்புக்கு ஆளாகி மயங்கி பசுவாகி தனக்கென பல செயல்களை ஆற்றி கன்ம ஈட்டத்தையும் மெய்யாக்குகின்றன. இலிங்கவுருக்களாகிய மந்திரத் திருமேனிகளை அகத்தே பிரதிட்டை செய்து தனது இச்சாஞானக் கிரியா சத்தியினால் அந்த ஆன்மாக்கள் பல்வேறு வினைகள் ஆற்ற வழிசெய்து, அந்த அருளது வீழ்ச்சியை மிகுக்கும் புண்ணிய வினைகளினால் இச் சத்தியை வளர்த்து அதன்வழி உயர்ந்த இலிங்கவுருக்களைப் பெற அடிகோலி அதன்வழி ஆணவ இருளை சிறிது சிறிதாக அகற்றவும் உதவுகின்றான் அமலனாகிய பரசிவனாகிய இறைவன். இந்த ஞான அந்தகாரத்தின் ஆணவ மலம் நீங்க நீங்க ஆன்மா சுத்தமாகி அசுத்தமாயையின் ஈர்ப்புக்கு மயங்கி வீழ்வது போக்கி அதனால் ஆகாமிய கன்மம் ஈட்டுவதும் இல்லாதாக்கி அதனால் எல்லா மலங்களிலிருந்தும் நீங்கி சுத்தமாகி அமலமாகி சிவத்துவம் பெற்று சிவபெருமானுடன் ஒன்றித்து அந்நியமின்றி அறிவத்துமாய் நின்று வீடுபேறு மகிழும் ஆன்மா.

இனி இம் முப்பொருள் உணமையில் குறையிருந்தால் என்னவாகும்?

இனி இந்நிலையில் ஆன்மாக்களும் சுத்தாசுத்த மாயை கன்மம் இலங்கவுருக்களாகிய தெய்வடிவங்களாகிய மந்திரசொரூபங்கள் அறிவிற் பட ஆனால் ஆணவ மலம் படாதொழிய, ஆன்மா ஆணவத்தால் பந்திக்கப்பட்டு சமலனாக, அமலனாகிய பதியிடமிருந்து பொருள் வகையில் வேறாகி நிற்கின்றது என்ற கருத்தும் தோண்றாது போகின்றது. இறைவன் அநாதியே அமலன் என்ற கருத்தும் எழாது போகின்றது. போகவே மாயை முக்குணத்து பிரகிருதி மாயையாகி, சித்தாகிய ஆன்மா முக்குணங்களில் தாமத குணத் தாக்கத்தால் ஞான அந்தகாரத்தில் கிடக்கின்றது, அதுபொழுது இராசதம் சாத்வீகம் போன்ற குணங்கள் மேம்பட இந்த அந்தகாரம் நீங்கும் என்றும் கூறப்படும். மேலும் இறைவனை திருமாலாக்கி இந்த மாயையை தனது உடம்பாகக் கொண்டு சர்வேச்வரனாக்கி தனது உடம்பிலிருந்து சித்து அசித்தாகிய அனைத்தையும் படைக்கின்றான என்று கூறி விசிட்டாத்வைத பொருளத்துவிதம் கூறுவர்.

வீடுபேறு என்பது, தனது சுதந்திரத்தை முற்றிலும் இழந்து இறைவனது திருவுடம்பில் முற்றிலும் அடங்கி ஒன்றாகி வேறற நிற்பதுவே என்றும் கூறுவர். இதனால் ஆன்மா தன் சுதந்திரத்தை முற்றிலும் இழக்க வற்புறுத்தும் பிரபத்தி மார்க்கத்தையே தக்க சாதனமாகவும் வற்புறுத்துவர்.

இனி ஆணவ மலத்தோடு கன்மமும் மாயையும் அநாதிபொருட்களே என்று அறிவிற்படாது போக என்னவாகும்? ஆன்மாவும் இறைவனும் தான் அநாதிப் பொருட்களாக நிற்கும். இங்கு இறைவன் பிரமன் ஆகி ஆன்மாவும் அந்த பிரமமே, வேறாகத் தோன்றுவது மித்தை என்றும் பகரப்படும். மேலும் உலகம் பலவாறாகத் தோன்றுவதும் கற்பிதங்களே, அகம் பிரமம் அஸ்மி போன்ற உபநிடத மகாவாக்கியங்கள் இதைத் தான் கூறுகின்றன, வேதங்கள் சுருதி என்பதால் அவை பொயல்ல என்றவாறு ஆதி சங்கரரின் மாயாவாத வேதாந்த பொருளத்திவிதம் செல்லும்.

இதனால் ‘வேதாந்தத் தெளிவு சைவ சித்தாநதம்’ என்று கூறுவது அவ்வளவு சிறப்பல்ல. சித்தாந்தத்து முழுமையான உண்மையான அநாதிபொருளியலை பிழையாக குறையாக உணர்ந்தமையாலேயே வேதம் தந்த பொருளத்துவிதங்கள் தோன்றியுள்ளன என்று கூறுவதே சிறப்பு.

சைவத்தின் முப்பொருள் உண்மை வேதங்களுக்கும் முற்பட்ட சுமேருத் தமிழ் இலக்கியங்களில் காணகிடக்கின்றது என்பதால், அதனின் குறைவான பிறழ்ச்சி அறிவுகளே வேதாந்தப் பொருளத்துவிதங்கள் என்பது தெளிவு,

இனி இந்திய தரிசனங்களில் சைவ சிதாந்தத்தோடு ஒப்பிட்டுக் காண வேறு பல பிறழ்ச்சிகளும் அதனால் குறைகள் பலவுள்ள தரிசனங்களும் உண்டு. அவை யாவை என இனி சிறிது காண்போம்

இனி பசுவாகிய ஆன்மாவும் பதியாகிய சிவசத்தியும் அநாதிப் பொருட்களாக காண வராது போக என்னவாகும்? உயிர்களின் குணங்களும் இறைவனது ஐந்தொழில்கள் போன்றவையும், அநாதியே உள்ளதாக காணவரும் மாயை மேல் ஏற்றப் பட அது தானே இயங்கும் பிரகிருதி மாயையாகக் காணவும் வரும். இந்த முக்குணத்து மாயையே தானே திரிந்து திரிந்து பிளந்து பிளந்து பலவாகி உயிர்களைப் போன்றும் அவற்றின் குணங்களைப் போன்றும் பல விருத்திகளைத் தரும். எப்படி வெற்றிலையும் சுண்ணாம்பும் சேர இவற்றில் இல்லாத சிவப்பு வண்ணம் தோன்றுகின்தோ அதேப் போல ஆன்மாக்கள் தெய்வங்கள் என்றெல்லாம் பல இந்த விருத்திகளில் தோன்றும். இவை எல்லாம் வெற்றுத் தோற்றமேத் தவிற உண்மையில் அநாதியாக அப்படி ஒன்றும் இல்லை என்றும் கூறுவர்.

இதுவே நிரீச்சுர சாங்கியம் எனப்படும் பண்டைய ஓர் இந்திய தரிசனத்தின் அடிப்படையாகும்.

தானியங்கி முக்குணத்து பிரகிருதி மாயை என்பது ஓர் வியக்கத்தக்க தற்கால அறிவியல் கருத்துப் போன்று விளங்குவது ஓர் அதிசயம் தான்.

இனி இதன் இன்னொரு வடிவமே புத்தர்களில் ஒரு சாரார் போற்றி மகிழும் கணபங்க வாதமாகும். இவர்கள் மாயையைக் கூட மறுத்து எல்லாப் பொருட்களளயும் தோன்றியவுடன் அழிந்து போகும் கணங்களின் ஓட்டத்திற்கு இறக்க , இருப்பது எல்லாம் இந்த கணங்களின் தோற்ற மறைவே, ஒன்று அழிய பிரிதொன்று அதன் சார்பினில் தோன்றி நித்தியமான ஓர் பொருள் உண்டு-- ஆன்மா இறைவன் மாயை என்றெல்லாம் அநாதிப் பொருட்களாகப் பல உண்டு எனும் பொருள் மயக்கத்தை உண்டு பண்ணி மலைவிக்கும். ஆழ தியானித்து இருப்பதெல்லாம் கணங் கணம் தோன்றி மறைவனவே என்று உணர வீடு பேறு என்பதாக இவர்கள் விளக்கம் செல்லும்.

இவர்களில் சித்து-அசித்து என்ற பேதத்திற்கு காரணமும் விளக்கமும் தேடிச் செல்வோர் ஈசுர சாங்கியவாதிகளாக வைபாடிக யோகாசார புத்தசமயிகளாக எழுவர். சுத்த சைதன்யமே எல்லாம் என்ரவாறு இவர்களில் சிலர் சொல்லிச் செல்வர். தாறுமாறாக ஓடும் இந்த சைதன்ய ஓட்டத்தை தியானத்தின் வழி நிதானப் படுத்தி அமைதி அடைவதே நிர்வாணம் என்றெல்லாம் கூறிச் செல்வர்.

உலகில் இயங்கும் அனைத்தும் சித்து என்றும் அசித்து என்றும் பேதப்பட்டு இருப்பது உண்மை என்றாலும், அநாதியே ஆணவ மலத்தால் பந்திக்கப்பட்ட ஆன்மாக்கள் இல்லை என்றால், எப்படி உலகில் விளங்கும் சித்துப் பொருட்களுக்கு விளக்கம் காண்பது?

அநாதியே இருப்பதாக புருடன் பரகிருதி என்ற இரண்டு உண்டு. இந்த புருடனே பரபிரம்மம் அதன் மாயையில் தோன்றும் பிரதிபிம்பங்களே உயிர்களாகிய சித்துப் பொருட்கள் என்றவாறு சாங்கியம் தழுவிய ஓர் தரிசனம் போதிக்கப்படுகின்றது. இது சித்தாந்த சிகாமணி போன்ற வீர சைவ நூற்களில் காணக் கிடக்கின்ற கருத்துமாகும்

இங்கு சாங்கீயத்தின் கைவல்யம் எனும் வீடுபேறு பற்றிய கருத்தையும் சிறிது தெரிவிக்க வேண்டும். ஆன்மாவே புருடன். அது பிரகிருதி மாயையோடு கலந்து புனர்ந்து பந்தப்பட்டு கிடக்கும்போதே பலவகையான துக்கங்கள் துயரங்கள் வேதனைகள் போன்றவை. ஓர் ஆடவன் ஓர் பெண்ணுடன் காமவேட்கையின் காரணமாக இன்பங் கருதி இணைந்து வாழப் புகும் போது, அந்த பந்தமே துக்கத்தின் துயரத்தின் காரணமும் ஆகின்றது. காமம் போக்கி துறவு தலைப்பட்டு பிரிந்து சென்றாலே அப்படிப்பட்ட துக்கங்களிலிருந்து விடுதலை. அதேப் போலத்தான் இந்த புருடனாகிய ஆன்மா பிரகிருதி மாயையின் பிடியிலிருந்து விடுபட்டு தனித்து நிற்க, துக்கங்கள் துயரங்கள் யாதுமில்லாத சுதந்திர நிலை அமையும் அதுவே கைவல்யம் என்றும் இதனை அடைவதே வாழ்க்கையின் நோக்கு என்றும் கூறுவர். இதனால் இந்த சாங்கீயத்தின் தாக்கத்தால் துக்க விசாரணை இந்திய தரிசனங்களில் ஓர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

அநாதிப்பொருளாக ஆன்மா உள்ளது, அதேப் போல எல்லா துக்கங்களுக்கும் மூல காரணமாக ஆணவ மலம் உண்டு அது அநாதியே ஆன்மாவை பந்தித்திருக்கின்றது என்ற உண்மை கிட்டாது போக, கைவல்யம் போன்ற இப்படிப்பட்ட பிறழ்ச்சி துறவு விளக்கங்கள் என்று காண்க. உண்மையானத் துறவு ஆன்மா சுத்தமாகுவது என்ற கருத்தும் அன்பேத் தானாகுவது ஏன்ற கருத்தும் இல்லாது போவதைக் காண்க.

மேலே சைவத்தின் அறிவத்துவிதம் எவ்வாறு முப்பொருள் உண்மையை ஏற்றுக்கொள்ளும் அநாதிப்பொருளியலோடு தொடர்புடையது என்று கண்டோம். பிற தரிசனங்கள் இதனைத் திரித்தும் குறையாகவும் கொண்டிருப்பதாலேயே அவை அறிவத்துவம் கூற முடியாது வீழ்வதையும் கண்டோம்.

இனி இதனோடு தொடர்புடைய நியாய அல்லது நய விசாரணக்கு வருவோம்

முப்பொருள் உண்மையை நன்றாக உணர்ந்த சைவம், புண்ணியம் பாவம் என்ற இருவினைகட்கும் நல்ல ஓர் தெளிவினைக் கொண்டுள்ளது. புண்ணியங்களைச் செய்யச் செய்ய ஆன்மா சுத்தமாகி சலோகம் சாமீப்பியம் சாரூப்பியம் என்றவாறு இறைவனை நெருங்கி முடிவில் சாயுச்சியமாகி அணுத்துவம் போக்கி சிவத்துவம் பெற்று இறைவனோடு ஒன்றித்து நின்று வீடுபேறு மகிழும். அதுபொழுது இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ளத் தொடர்பு அறிவத்துவித நிலையாகும். இந்த ஞான வளர்சிக்கு பக்குவ முதிர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது நயவிசாரணயாகும். நந்நயம் எது அந்நயம் எது என்று விசாரித்து அகத்தே செறிந்திருக்கும் மலங்களைப் போக்குவதே நந்நயம் அதாவது புண்ணியம் அதற்குப் புறம்பாக மலங்களின் தொடக்கை அதிகரிப்பதுவே அந்நயம் அதாவது பாவம் என்ற தெளிவில் வாழவைப்பதே சைவமாக இருக்கின்றது. ஆணவ மலம் அநாதிப்பொருள் அது அநாதியே ஆன்மாக்களை பந்தித்திருக்கின்றது என்ற ஞானத் தெளிவு இல்லையெனில் இத்தகைய நயவிசாரணை சைவத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்க முடியாது.

அப்படி என்றால், இத்தகைய அநாதிபொருளியலைக் கொண்டிராத ஏனைய இந்திய தரிசனங்கள். எப்படிப்பட்ட நயவிசாரனையைக் கொண்டுள்ளன?

முதலில் ஆதி சங்கரரின் மாயாவாத வேதாந்தத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு அநாதிபொருளாக ஒரே ஒரு பொருள் தான் உண்டு__ பரப்பிரம்மமே எல்லாம், ஆன்மாவும் உணமையில் இந்த பிரம்மமே, வேறாகத் தோன்றுவதெல்லாம் மித்தை. அநிர்வசனமாகிய, இஃதென்று கூறமுடியாத ஓர் மாயாசக்தி இப்படிப்பட்ட மயக்க அறிவினை உண்டாக்கி வேதங்கள் கூறும் பிரம்மஞானத்திலிருந்து மக்களை பிறழ்ந்துச் செல்ல வைக்கின்றது. இந்த மயக்கதிலிருந்து விடுபட்டு ஆன்மா உண்மையில் பிரம்மமே என்று உணர்வதற்கு உதவுதே நந்நயம், அதற்குப் புறம்பாகச் செல்வதே அந்நயம் என்றவாறு இங்கு நய விசாரண செல்லும்.

இதனால் நந்நயங்களாகிய புண்ணிய காரியங்கள் தான் எவை? எனில் இப்பாறு அதன் விளக்கம் செல்லும்

வேதங்களை ஓதுதல், ஓதுப்படும்போது அவற்றை செவிமடுத்தல் வைராக்கியமாக இருந்து வேறு யாதையும் நோக்காது வேதப் பொருளையே சிந்தித்தல் என்றவாறு வேதமயமாகிய வாழ்க்கையே புண்னிய வாழ்க்கை, இவ்வாறு வாழ்ந்தால் முடிவில் மயக்கமெல்லாம் இழந்து தான் உண்மையில் பிரம்மமே என்று உணர்ந்து அத்வைதம் மகிழும் மகா வாக்கியங்களாகிய ‘அகம் பிரமம் அஸ்மி’ ,'தத் துவம் அசி’ என்பன போன்ற வேத வாக்கியங்களின் பொருளை செவ்வே உணர்ந்து பொருளத்துவிதம் மகிழும்

இப்படிப்பட்ட வேதாந்த விளக்கத்தில் பல சிக்கல்கள் உண்டு. முதலில் நாம் காண வேண்டியது ‘நந்நயம்__அந்நயம்’ என்ற நய பேதம் உலகப் பொது, மக்களாக பிறந்த அனைவரும் கொண்டாடி தமது வாழ்க்கையை செவ்வே நடத்தி உயர முயற்சிக்கின்றனர். வேதங்களைப் பற்றியும் இன்னும் இதுபோன்ற வேறு சுருதிகளை அறியாத மக்களும் நயவிசாரணையில் ஈடுபடுவது ஓர் மறுக்க முடியாத உலகியல் உண்மையாகும். ஆதி சங்கரரின் அத்துவித வேதாந்தம் இந்த உலக உண்மைக்கு விளக்கம் தராது வீழ்கின்றது.

உண்மையில் அத்துவித வேதாந்தத்தில் நயவிசாரணையே இல்லை, புண்ணியம் எது பாவம் எது என்று விளக்கமுடியாத பயனற்ற தரிசனமே இந்த மாயாவாத வேதாந்தம்.

இந்தக் குறைபாடு சைவத்திற்கு இல்லை. ஆணவமலம் எல்லா ஆன்மாக்களையும் பந்தித்திருக்கின்றது எனும் போதும் அதனோடு தொடர்புடையதே நய விசாரனை எனும் போதும், அப்படிப்பட்ட ஒழுக்கம் உலகப் பொதுவாகவே கொள்ளப்படுகின்றது. இந்த உண்மை வேதங்களையோ ஆகமங்களையோ பிரமாணமாகக்கொண்டு நிறுத்தப்படுவதும் இல்லை. சைவத்திற்கு சுருதி எனப்படும் பிரமாண நூற்கள் யாதுமில்ல. இந்த பரந்த விரிந்த உலகே ‘அவன் அவள் அது எனும் அவை” எனச் சுட்டபப்டும் உலகே ஞானமறை, சுருதி என்பதொடு அது உலக உயிர்கள் அனைத்திற்கும் பொது என்றிருக்க, நய விசாரணையும் உலகப் பொதுவாகவே திகழ்கின்றது.

இனி விசிட்டாத்வைதம் கூறும் வேதாந்த பொருளத்வைதத்தைக் காண்போம். சர்வேஸ்வரனாகிய இறைவன் மாயையை தன் உடம்பாகக் கொண்டு தன்னுள்ளிருந்தே ஒர் சிலந்தி போல சித்தும் அசித்துமாக இந்த உலகினைப் படைத்து சித்தாகிய ஆன்மாக்கள் தன் உடலில் ஒட்டாது தூரமாக இருப்பதைப் போக்கி முற்றாக ஒடுங்கி தன்னின்று வேறிலாது இருப்பதே முத்தி என்று விளக்கம் தரும் இதுவே விசிட்டாத்வைதம் என்று கண்டோம். இதனாலேயே தன் சுயத்தை முற்றிலும் இழக்கத் தரும் பிரபத்தியே சிறந்த மார்க்கம் என்று பரிந்துரைக்கப்டுவதையும் கண்டோம்.

இனி இங்கு சித்தாகிய ஆன்மாக்கள் அநாதியல்ல, இறைவனது படைப்பே எனில், பல பிரச்சினைகள் எழுகின்றன. அவ்வாறு இறைவனே ஆன்மாக்களை சித்தும் அசித்துமாகிய தன்னிடமிருந்தே உருவாக்கி உலகில் உலாவிடுகின்றான் எனில், ஏன் அவற்றை தூரமாக்கி அந்நியமாக்கி அல்லற்பட வைக்க வேண்டும்? இதுவொரு லீலை, சர்வேஸ்வரனது ஆனந்த விளையாட்டு எனில், அதுவும் பொருந்துமாறில்லை. துக்கம் துயரம் கலக்கம் வெறி கொடூரம் கொலைவெறி போன்றவை ஏன் ஆன்மாக்களின் குணங்களாக இருக்கவேண்டும் என்பதற்கு இங்கு விளக்கம் இல்லை. சைவர்கள் அநாதியாயுள்ள ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பந்திக்கப்பட்டு இருப்பதாலேயே இறையருள் பதிய இச்சாஞானக் கிரியா சத்திகள் கூடி வர புண்ணியம் பாவம் என்ற முறையில் வினைகள் ஆற்றி அதற்கேற்ப இன்பமும் துன்பமும் அனுபவிக்கின்றன என்று கூறி தெளிந்து பிறரையும் தெளிவிப்பர்.

இனி விசிட்டாத்வைதத்தின் இந்த சிக்கலிலிருந்தும் சித்தாந்தத்திற்கு வேறாக இருக்கும் வகையில் ஓர் மாற்றத்தை அநாதிபொருளியலில் கொண்டு வரலாம். மாயையை தன் உடம்பாக கொண்டிருக்கும் சர்வேஸ்வரனுக்கு வேறாகவும் அநாதியாகவும் சித்தாகவும் ஆனால் மாயையில் கிடப்பதாகவும் ஆன்மாக்கள் இருக்கின்றன, அவை மாயையின் தாமதகுண மேலீட்டால் பாவங்கள் செய்து துன்பப்படுகின்றன, இவற்றை இரட்சிக்கவே சர்வேஸ்வரன் அவற்றை மேலேற்றி சாத்வீக குணமே மேலோங்கி நிற்குமாறு உதவி தன்னுள் பிரிப்பின்றி வேறின்றி இருத்திகொள்கின்றான் என்றவாறு இந்த நயவிசாரணைக்கு விளக்கம் கூறலாம்.

ஆயினும் இதுவும் சிக்கலைத் தீர்த்தபாடில்லை. தாமத குணம் ஓர் ஆன்மாவை மந்தனாக்கும், அறிவிலே தெளிவின்மையைக் கொண்டு வரும் ஆனால் கொலைவெறி போன்ற கொடூர எண்ணங்களைக் கொண்டு வராது. ஒன்றினை அழித்து இல்லாது போக்க வேண்டும் என்ற அழிப்பு வெறி தாமத குணத்திற்கு இல்லை. தாமத குணம் மிக்கிருக்க மந்தம் சோம்பல் செயலற்ற நிலை போன்றவையே மிக்கிருக்க கடுஞ்சினம் பொல்லா வெறுப்பு கொலைவெறி போன்றவை தோன்றா.

இப்படிப்பட்ட அழிப்புச் சிந்தனைகளை உற்பவிப்பது ஆணவமலமே யாகும். இதுவே அந்தகாரத்தைக் கொண்டு வரும் வகையில் அழிக்கவும் செய்யும், ஆன்மாக்கள் பால் மேலோங்கி நிற்க கொலைவெறியையும் உண்டு பண்ணும். ஆணவ மலம் தாமத குணம் அல்ல, எவ்வித குணமும் எழாவகை ஓர் ஞான அந்தகாரத்தை இயல்பாய் உண்டு பண்ணுவதாகும்.

இனி பிராமணர்களால் பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று எனப் போற்றப்படும் பகவத் கீதை எவ்வாறு நந்நயம் அந்நயம் என்பவற்றை விசாரித்து நந்நயமே செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு வரும் நயவிசாரணையை எப்படி விளக்கும்?

இங்கும் சிக்கல் இல்லாமல் இல்லை.
பகவத் கீதை இரண்டு கருத்துக்கள் இங்கு மிகவும் முக்கியம்.ஒன்று ஆன்மாவை பற்றியது, பிறிதொன்று நிஷ்காமிய கர்மத்தைப் பற்றியது.

6523_1.gif

ஆணவ மலத்தால்ல் பந்திக்கப்பட்ட பசுவே ஆன்மா என்றிலாது, ஆன்மா என்பது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை, கொல்வதும் இல்லை கொல்லப்படுவதும் இல்லை. பிறப்பு என்பது ஓர் ஆடையை எடுத்து உடுத்துவதுபோல, மாயையால் ஆகிய ஓர் உடம்பை அணிந்துகொண்டு உலகில் உலாவுவது. மரணம் என்பது நைந்துபோன ஆடையை கழற்றி வீசுவதுபோல, பாழாகும் இந்த உடலை வீசி எறிந்துவிட்டு இன்னொரு உடலை மலைவது. இவ்வாறு பிறந்தும் இறந்தும் வரும் ஆன்மா என்றும் மாறாது ஒரே படித்தாய் இருக்கும். அதற்குப் பிறப்பும் இறப்பும் இல்லை, அது கொல்லப்படுவதும் இல்லை கொல்வதும் இல்லை.
இனி கொலைபோன்று தோன்றும் ஓர் வினையைச் செய்ய வேண்டி இருக்கும் போது, அர்ச்சுனன் போரின் காரணமாக தன் உறவினர்களையே கொல்ல வேண்டியிருப்பதை நினைத்து கவல்வது துக்கிப்பது துயர் அடைவது என்பதற்கெல்லாம் காரணம் உலகப் பற்றே, அந்த பற்றையெல்லாம் போக்கி தன் பிறப்பின் வர்ணத்தின் கருமத்தை நிஷ்காமிய கரமமாக ஆற்றினால், போரில் தன் எதிரிகளைக் கொன்றால் அது புண்னியமுமல்ல பாவமும் அல்ல, அவற்றிற்கு அப்பாற்பட்டது. இந்த பற்றற்ற நிலையை எப்படித் தலைபடுவது?

பற்றற்ற நிலை ஏன்  தன் இயல்பாக கொண்டிருக்கும் இறைவனையே முற்றிலும் சார்ந்து அவனையே பற்றிக்கொண்டு நின்றால் அது மெய்யாகும். ஆக இறைவனை முற்றிலும் சார்ந்து, எதை செய்தாலும், கொலை செய்தாலும் கூட அது பாவம் ஆகாது, துக்கத்தைத் தராது.

இந்த கீதாவுபதேசத்திலும் சிக்கலகள் இல்லாமல் இல்லை. முதலில் நாம் காணவேண்டியது கீதை கூறும் கர்ம விளக்கமே. நிஷகாமிய கர்மம் எனும் போது, காமிய கர்மமும் உண்டெனப் பெறுகின்றோம். பலனை எதிர்ப்பார்க்காது செய்யபப்டுவது நிஷ்காமியம் என்றால், ஓர் பலனை எதிப்பார்த்து அதன் காரணமாகச் செய்யப்படுவது காமிய கர்மமாகின்றது, இதுவே சாதாரண முறையில் மக்களும் பிற உயிர்யினங்களும் செய்யும் வினைகள் ஆகும். நோக்கு ஒன்றினைத் தேற்றி( intentions), அதை அடைவான் பொருட்டே தக்க செயல் ஒன்று செய்யப்படுகின்றது. இப்படிப்பட்ட வினைகளே அந்த நோக்கங்களுக்கு ஏற்ப புண்ணியம் என்றும் பாவம் என்றும் ஆகி, இன்பம் தரும் இதமென்றும் துன்பம் தரும் அகிதமென்றும் ஆகின்றது.

பகவத் கீதை பற்றுற்ற நிலையில் செய்யப்படும் இத்தகைய வினைகளை எவ்வாறு விளக்கும்? ஆன்மாக்களுக்கு பற்றுத் தலைப்படுதல் எவ்வாறு ஆகின்றது? அநாதியே ஆன்மாக்களை ஆணவமலம் பந்தித்திருக்க இந்த ஆன்மாக்கள் அஞ்ஞான அந்தகாரத்தால் சார்ந்ததின் வண்ணமாக நின்று காணவருவதையெல்லாம் பற்றிக்கொண்டு பற்றுற்று வாழும் என்றவாறு சைவ சித்தாந்தம் விளக்குதல் போன்று பகவத் கீதையும் ஆங்கு விளங்கும் சாங்கீயத் தரிசனமும் விளக்கமுடியாது வீழ்வதைக் காண்க.

மேலும் இன்னொரு பெருங்குறையும் உண்டு: மரணம் என்பது நைந்துபோன சட்டையைக் கழற்றி வீசுவதுபோன்ற ஓர் சாதாரண விசயமா? மேலும் எல்லா மரணங்களும் ஒரே தன்மைத்தா? போரில் எதிரிகளை ஒருவன் கொன்று குவித்தால் அவன் மாவீரன் என்று போற்றப்படுகின்றான். ஆனால் சாதாரண நிலையில் ஒருவன் நகைகளைத் திருடுவதற்காக ஓர் மாதின் கழுத்தை அறுத்துக் கொன்றால் ஏன் அவன் கடுமையாகத் தண்டிக்கபடுகின்றான்? ஏன் இவ்வாறு கொலையும் அதனால் ஆகும் மரணமும் வெவ்வேறு ஆகின்றது? ஏன் ஒன்று புண்ணியமாக பிரிதொன்று பெரும் பாவமாகின்றது?

பகவத் கீதையின் சாங்கிய தரிசனம் இதற்கு விளக்கம் தருவதாக இல்லை. சைவத்தில் இது இவ்வாறு விளக்கபடும் ஆணவ மலத் தாக்கத்தின் ஒருவன் அரக்கனாக பல அட்டூழிய்ங்களைச் செய்ய அவனை கொன்று மரணமடையுமாறு செய்தல் ஓர் பெரும் புண்ணியமே, அச்செயலும் ஓர் பெரும் வீரச்செயலே! எந்த பாவமும் செய்யாத நல்ல பல மக்களை அழிக்கும் இத்தகைய அரக்கர்களை அழிப்பது ஓர் அருட் செயலே ஆகும், புண்ணியமே ஆகும். ஆனால் ஒருவன் உள்ளத்தில் ஆணவ மலம் மிக்கிருக்க கொலைவெறி கொண்டு சொத்து நகைபோன்றவற்றை அபகரிக்க மக்களைக் கொல்வது பெரும் பாவமாகும். ஆணவ மல மிக்கீட்டால் அரக்க குணத்து செயல்கள் யாவும் பாவமே, கண்டிக்கத் தக்கவையே!

இவ்வாறு தான் கொண்டிருக்கும் முப்பொருளுண்மையின் அநாதிபொருளியலை கொண்டிருக்கும் சைவ சித்தாந்தம் தக்க முறையில் உலக இயற்கைக்கு முரண்படாது அறிவிற்கு பொருந்தி வருகின்ற விளக்கங்களைத் தந்து மகிழ்விக்கின்றது.

முடிவுரையாக ஒன்று இங்கு கூறுதல் வேண்டும். இந்து சமயம் இந்திய தரிசனங்கள போன்ற துறைகளில் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி நிற்பதாலும், மிகப் பழையான சாத்திரங்களாக வேதங்களும் உபநிடதங்களும் இதுவரை கருதப்படுவதாலும் வேதங்களிலிருந்தே இந்திய தத்துவ தரிசனங்கள் அனைத்தும் தோன்றி வளர்ந்துள்ளன என்ற பிழையான கருத்து பரவி ஓர் வலுவான இடத்தைப் பெற்றுவிட்டது. ஆயினும் இது ஓர் உண்மை அல்ல. வேத வேதாங்களுக்கும் முற்பட்டும் அவற்றின் தோற்றுவாய்க்கு காரணமாகவும் சுமேருத் தமிழ் இலக்கியங்கள் உண்டு. இந்த உண்மை இப்பொருழுதே அறியப்பட்டு வருகின்றது என்பதொடு, ஆங்கு ‘சூருப்பாகின் நெறி’ ‘ஈன்னன்னை சீர்பியம்’ ‘கேசி கோயில் பாட்டு’ என்பன போன்ற பல நூல்களின் சைவ சித்தாந்தம் சார்ந்த ஆழ்மான தத்துவக் கருத்துகளும் பதிவாகி உள்ளன. இதனால் இங்கு கூறுவதுபோல, சைவ சித்தாந்தத்தின் அநாதிபொருளியல் மிகப்பழமையானது, அதன் பல்வேறு பிறழ்ச்சி வடிவங்களே வேத வேதாதங்களும் சாங்கீயம் போன்ற பிற தரிசனங்களும் ஆகும்.

http://www.heritagewiki.org/index.php?title=சித்தாந்த_அத்துவிதம்

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி விவேகானந்தர் பார்வை

( தர்மன் எமதர்மனுடன்  உரையாடியது .) 🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பு , உயிர், ஆன்மா !  -- வள்ளலார்

valalaar.gif

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

"என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதின் பின் மகிழ்ந்தே தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெருஞ் சுடரே மண் உயிருக்கு உயிராகி இன்பமு மே நிறைந்தே மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே மன்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்தரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே ! "

என்னும் பாடலில் ஒரு பெரிய உண்மையை வள்ளலார் தெரியப் படுத்தி தெளிவுபடுத்தி உள்ளார் . உடம்பு ,உயிர் .பொருள் அனைத்தையும் இறைவனிடம் ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும் ...என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் சாகாக் கல்வி என்ன என்பதையும் மரணம் இல்லாமல் வாழும் வழியையும் தெரிந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆன்மா வாழ்வதற்கு என்ன தேவை ?

ஆன்மா இந்த உலகத்திற்கு வந்து வாழ்வதற்கு ,உயிர் என்னும் ஜீவன் தேவைப் படுகின்றது உயர் இயங்குவதறகு ,உடம்பு தேவைப் படுகின்றது உடம்பு இயங்குவதற்கு கருவிகள் என்னும் கண்,மூக்கு,காது ,வாய்,உடல் உறுப்புக்கள் என்னும் பொருள்கள் தேவைப்படுகின்றது !

அந்த ஆன்மா உயிர்,உடம்பு மூன்றும் இந்த உலகில் வாழ்வதற்கும் ,எவையும் தடையின்றி பெறுவதற்கும், ,அனுபவிப்பதற்கும் சுதந்திரம் என்னும் முழு உரிமை வழங்கப் படுகின்றது.அதற்கு ஜீவ சுதந்திரம், தேக சுதந்திரம்,போக சுதந்திரம் என்பதாகும் . இந்த உரிமையைக் கொடுப்பதுதான் இந்த பஞ்ச பூத அணுக்கள் .

இந்த அணுக்களை இயக்குவதுதான் மாயை ,மாமாயை,பெருமையை என்னும் அதிகாரத்தில் உள்ள நிர்வாகிகளாகும்,அதாவது அதிகாரத் தலைவர்களாகும் ....இந்த மாயைகள் தான் உடம்பையும் .அவற்றை இயக்கும் இயங்கும் பொருள்களான கண்,காது,மூக்கு,வாய் உடம்பு என்னும், கருவிகள் அனைத்தையும் பூத அணுக்களைக் கொண்டு பொருத்திக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டு உள்ளவைகளாகும் ..

அதனால் தான் இந்த உலகம் மாயை உலகம் என்பதாகும். ஆன்மா இந்த மாயை உலகிற்கு வந்ததும் ஆன்மாவில் இருந்து உயிர் தோன்றும்,ஆன்மாவும் உயிரும் சேர்ந்து வாழ்வதற்கு பஞ்ச பூத அணுக்களைக் கொண்டு பின்னப்பட்ட பூத பிரக்கிருதி அணுக்களால் தான் அதாவது அணுக் கருவிகளைக் கொண்டு மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட அழகான வீடு என்பது தான் உடம்பு என்பதாகும்....அதற்கு ஜீவ தேகம் என்று பெயராகும்.

வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் பதிவு செய்துள்ளது ;-- ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூத காரிய தேகங்களே உரிமையாகி இருக்கின்றன என்றும்,அந்தத் தேகங்களில் ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம்,மறைபடும்,அது மறையில் அருள் விளக்கம் வெளிப்படாது என்றும்,வெளிப்படாத போது மூடம் உண்டாகும் என்றும்,அதுவே ஆன்மாக்களுக்குப் பந்தமாகும் என்றும்,அது பற்றி அவசியம் பூத காரிய தேகம் வேண்டும் என்றும், பூத காரிய தேகங்களுக்கு மாயை முதற் காரணம் ஆதலால் அந்த மாயையின் விகற்ப ஜாலங்களே பசி,கொலை,தாகம்,பிணி,ஆபத்து,பயம்,இன்மை,இச்சை என்பவைகளால் அந்த தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடும் என்றும்,தெளிவாக வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .

மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டில் வாழ்வது தான் உயிர் ,ஆன்மா என்பதாகும்...இவை இரண்டும் கணவன் மனைவி போன்றது .கணவன் மனைவி என்ற இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் பிரச்சனை இல்லை .இங்குதான் பிரச்சனை ஆர்மபமாகின்றது .உயிர் என்னும் ஜீவன் சொல்கின்றது ..இந்த தேகம் எனக்காகவே கட்டிக் கொடுக்கப் பட்டு உள்ளது அதனால் என்னுடைய விருப்பத்தின் படிதான் செயல்படவேண்டும்,நான் விரும்பியதை தான் செய்வேன்,அதற்கு நீ துணையாக இருக்க வேண்டும் என்கின்றது,

அதற்கு ஆன்மா சொல்லுகின்றது;-- .நான் தான் இறைவன் அனுப்பிய ஆன்மா ,நான் வாழ்வதற்குத் தான் உயிர் உடம்பு கொடுக்கப்பட்டு உள்ளது .எனவே நான் சொல்லியபடிதான் நீ கேட்க வேண்டும் என்று சொல்லுகின்றது . ( இதைத்தான் சமயங்கள் மதங்கள் சிவன் இல்லையேல் சத்தி இல்லை .சத்தி இல்லையேல் சிவன் இல்லை என்பார்கள்.) (ஆன்மா சாட்சியாக உள்ளது என்பார்கள்)...

(இதைத்தான் வள்ளுவர் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்கின்றார் )...(ஜீவன் என்னும் உயிர் பொருளை விரும்பும் .ஆன்மா அருளை விரும்பும்.....) ஆன்மா சொல்லுகின்றது;--- சரி உன்னுடைய விருப்பம் போல் செய்து கொள் என்று ஆன்மா விட்டுக் கொடுத்து விடுகின்றது..அதனால் உயிர் தன்னுடைய விருப்பம் போல் வாழ்ந்து ,பிறந்து பிறந்து இறந்து இறந்து ,தேகம் எடுத்துக் கொண்டே இருக்கின்றது ..ஆன்மா சாட்சியாக பார்த்துக் கொண்டே உள்ளது .இறுதியாக உயிர் என்னும் ஜீவன் இவ்வுலகில் வாழ்வதற்கு சலிப்பு உண்டாகி வருத்தம் அடைந்து தான் செய்த தவற்றை உணர்ந்து ஆன்மாவிடம் சரண் அடைகின்றது ..

சரண் அடைந்து விட்டபடியால் உயிரைக் காப்பாற்ற வேண்டும்,உயிரைத் தன் வசமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருணைக் கொண்டு ஆன்மா சில கட்டளைகளை உயிருக்கு சொல்லிக் கொடுக்கின்றது .

அந்த கட்டளை எதுவென்றால்;-- ஜீவ காருண்யம் ..சத் விசாரம் என்னும் இரண்டு கட்டளைகளாகும்.....ஏன் ஜீவ காருண்யம் செய்ய வேண்டும் ? ஏன் சத்விசாரம் செய்ய வேண்டும். ஜீவ காருண்யம் ஏன் செய்ய வேண்டும் ? ஜீவன் என்னும் உயிரானது தன்னுடைய அறியாமையாலும், அஜாக்கரதையாலும் மற்ற ஜீவன் களுக்கு துன்பம் கொடுத்து இன்பம் அனுபவித்து உள்ளது, அவற்றை நிவர்த்தி செய்து ஈடு கட்ட வேண்டும் .என்பதற்காகவே ஜீவ காருண்யம் செய்ய வேண்டும்.

.. வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் ;---

"காடு வெட்டி நிலம் திருத்தி காட்டு எருவும் போட்டுக் கரும்பை விட்டுக் கடுகு விரைத்தக் களிக்கின்ற உலகீர் கூடு விட்டுப் போயின பின் எது புரிவீர் எங்கே குடி இருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே பாடு பட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வருதருணம் ஈடு கட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர் எண்மை உரைத்தேன் அலன் நான் உண்மை உரைத்தனனே ! "

அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழும் வாழ்க்கை பெறுவதற்காகவே இந்த மனித தேகம் கொடுக்கப் பட்டு உள்ளது ...எதைப்போல என்றால் ,கற்கள்,காடு ,மேடு ,பள்ளம்,நிறைந்த இடம். புன்செய் பயிர் வைக்க கூட தகுதி இல்லாத இடத்தை திருத்தி சமப்படுத்தி ,அங்கே தண்ணீர் உண்டாக்கி நன்செய் பயிர் விளைவிக்கும் அழகான நன்செய் பயிர் செய்யும் நிலமாக மாற்றி ,நெல் ,கரும்பு,வாழை,போன்ற பயன் தரும் பயிர்களை வைக்காமல்,கடுகு போன்ற விஷப் பயிரை வைத்துள்ளீர்களே இது என்ன நியாயம்,?

அறிவு இருந்தும் அறிவு இல்லாமல் செய்யும் செய்கைபோல் உள்ளது உங்கள் அறிவு என்கின்றார் வள்ளலார் . அதேபோல் ஜீவன் என்னும் ஜீவ அறிவானத்து ,ஆன்ம அறிவைத் தொடர்பு கொள்ளாமல்,ஜட அறிவான கரண அறிவையும்,இந்திரிய அறிவையும்,தொடர்பு கொண்டு கருணை இல்லாமல்,உலக உயிர்களுக்கும் தன்னுடைய உயிருக்கும் தீங்கு செய்து அபாயங்களை உண்டாக்கிக் கொண்டு உள்ளது .

அதனால் அந்த அபாயங்களை நீக்கிக் கொள்ளவும்,அதில் இருந்து விடுபடவும்,அவற்றை ஈடு கட்டவும் தான் ஜீவ காருண்யம் செய்ய வேண்டி உள்ளது.அதாவது .வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்பதே ஜீவ காருண்யம் ,அதுவே உயிர் இரக்கம் என்பதாகும். ஜீவ காருண்ய ஒழுக்கத்தில் வள்ளலார் பதிவு செய்து உள்ளது ;--

பசி,கொலை,தாகம்,பிணி,,பயம்,இச்சை,எளிமை,என்பவைகளால் தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடுகின்றது .அந்த அபாயங்கள் நேரிடாமல் கரணம் இந்திரிய சகாயங்களைப் பெற்று தம்முடைய அறிவைக் கொண்டு சர்வ ஜாக்கிரதையோடு முயற்சி செய்து தடுத்துக் கொள்வதற்குத் தக்க சுதந்திரம் சீவர்களுக்கு அருளால் கொடுக்கப் பட்டது என்றும், அந்த சுதந்தரத்தைக் கொண்டு சீவர்கள் எல்லாம் தேகங்களில் இருந்து அபாயங்களை நீக்கி ஆன்ம லாபத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யக் கடவார்கள் என்றும் வள்ளலார் ஜீவ காருண்யத்தின் வல்லபத்தை ,அதன் விளக்கத்தைத் தெரிவித்து உள்ளார் .

எந்த சுதந்திரத்தால் தவறு செய்தீர்களோ அந்த சுதந்தரத்தாலே நிவர்த்தி செய்ய வேண்டும் அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும்.எனவே இடைவிடாது ஜீவ காருண்யமே விரதமாக கொண்டு உயிர்களுக்கு உபகாரம் செய்து வந்தால் உண்மையான ஆன்ம அறிவு விளக்கம் தோன்றும்... திறவு கோல் ! ஆன்ம அறிவு விளக்கம் மறைந்து உள்ளது,அந்த.மறைப்பை நீக்கும், திறக்கும் திறவு கோல் தான் ஜீவ காருண்யம் என்னும் சாவி என்பதாகும்.இதுவே மரணத்தை வெல்ல முடியுமா என்றால் முடியாது...கதவைத் திறக்க மட்டுமே முடியும்.உள்ளே செல்வதற்கு முடியாது..

ஜீவ காருண்யத்தால் ஜீவன் என்னும் உயிரை உலக வாழ்க்கையில் இருந்து விடுவித்து .. ஆன்மா பக்கம் செல்ல வைக்கும் செயலாகும்...உயிர் ஆன்மாவை நோக்கி சென்றால் கரணங்களும்,இந்திரியங்களும்,தானே ஆன்மாவை நோக்கி சென்று விடும்...

https://m.facebook.com/vallalarkandameiporul/posts/1214253048616692

டிஸ்கி :

மற்ற மகான்கள் போல் அல்லாது இறைவன் ஜோதி வடிவானவன் என்றதோடு (இதனால் யாழ்பாணம் ஆறுமுக நாவலரும் இவரும் முட்டி கொண்டது தனி கதை ) பஞ்ச பூத அணுக்களால் ஆனா இத்தூல உடம்பை மனத்தினால் கரைக்க முடியும் என்றும் (அதாவது காணாமல் போக செய்தல்) நிரூபணம் செய்து   ஜோதி வடிவான இறைவனில் அல்லது பிரபஞ்சத்தில் கலக்க செய்தவர் . இதற்கு முன்னரும் ஆண்டாள் போன்றோர் இவ்வாறு உடலை காணாமல் போக செய்த நிலையில்  கால சக்கரத்தில் நமக்கு மிக அருகாமையில் இருப்பவர் இவரே !

அன்னார் மரணம் பற்றிய குறிப்புகள் :

http://www.siththarkal.com/2013/04/vallalar.html?m=1

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தூல உடல் .. காரண உடல் .. சூட்சும உடல் .

aanma-ethu.jpg

முதலில் இந்த Out of body experince என்றால் என்ன என்பது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது. இது இறப்பிற்குப் பின் உயிரின் அனுபவத்தைக் குறிக்கிறதா என்றால்.. இல்லை. நாம் உயிரோடு இருக்கும் போதே, நம் உடலை விட்டு சற்று நீங்கிய நம் ஆத்மாவின் அனுபவம் அல்லது பயணமே Out of body experince என்று கருதலாம்.

சரி! உடலுக்கு வெளியே ஆத்மாவின் பயணங்களும் அனுபவங்களும் எங்ஙனம் சாத்தியம்? அப்பொழுது இந்த உடலின் நிலை என்ன?. நாம் இறந்து விடுகிறோமோ?… இல்லை… இயக்கமில்லாமல் இருக்கின்றோமா?. உயிர் வெளியேறுவது உண்மையா?. அப்பொழுது வேறு ஏதாவது உயிர் இந்த உடலை ஆக்ரமித்து விட்டால்….???? உண்மையில் இது நிஜமா? இல்லை.. கற்பனையா?…

ஒரு வேளை வெறும் கனவா? முனிவர்கள், ரிஷிகள் போன்றோருக்கு மட்டும் தான் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டுள்ளதா? இல்லை. இந்த மாதிரி அனுபவங்கள் மனிதர்கள் எல்லோருக்கும் சாத்தியமா? உயிர்கள் என்றால் மிருகங்களும் தானே அவற்றில் அடக்கம். அவற்றுக்கும் இவ்வகை உணர்வுகள், அனுபவங்கள் ஏற்படுமா?…. கேள்விகள்… இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்.. நாம் முதலில் நம் உடலையும், உயிரையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். முதலில் நாம் உடல் என எண்ணும் இந்த சரீரம் வெறும் ஒரே உடல் மட்டுமன்று.

இதனுள் மொத்தம் மூன்று அடுக்குகள் உள்ளன. சொல்லப் போனால் மூன்று வகை சரீரம் நமக்குள் உள்ளது என்பதே உண்மை. அவை

1. தூல உடல் (அன்னமய கோசம்) 2. காரண உடல் (ஆனந்தமய கோசம்)

3. சூட்சும உடல் (பிராணமய, விஞ்ஞானமய, மனோமயகோசம்) -என்பனவாகும்

. தூல உடலானது நம் கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒன்றாகும். நம் கண்ணால் மற்றவரின் தூல உடலைப் பார்க்க இயலும். ஆனால் சூட்சும உடலைக் காண இயலாது. இது நம்முள் ஒளிரூபமாக வியாபித்து இருக்கக் கூடிய ஒன்றாகும். சித்தர்கள், முனிவர்கள் போன்றோரால் இந்த சூட்சும உடலையும், அது வெளிப்படுத்தும் ஒளியை வைத்து, அந்த ஆத்மாவின் உண்மை பரிபக்குவ நிலையையும் அறிய இயலும். பொதுவாக, கர்மாவாலும், பாவச் சுமையாலும் பாதிக்கப்பட்ட ஆத்மாக்கள் கருமை நிற ஒளியை வெளிப்படுத்தும்.

புண்ணிய ஆத்மாக்களின் உடலில் இருந்து வெண்மை நிற ஒளிவரும். கோள்களையும், வினைகளையும் வேரறுத்த, தேவ நிலை ஆன்மாக்கள் பொன்னிற ஒளியை வெளிப்படுத்தும் என்பதே உண்மை. இவற்றைச் சாதாரண மனிதர்களால் கண்டறிய இயலாது.

காரண உடல் என்பது காரண, காரியங்களுக்காக, நம்மை செயல்படத் தூண்டி, கர்ம வினைப் படி நம்மை வழிநடத்துவதாகும். காரண உடலே தூல உடலை செயல்படுத்துகிறது. அனைத்து வகைக் காரண காரியங்களுக்கும் காரணமாகிறது. இந்த காரண உடல் பற்றி மனிதன் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றாலும் இது பற்றி ஓரளவேனும் அவன் அறிந்திருக்கிறான் என்பது உண்மை.

625.320.560.350.160.300.053.800.868.160.

. ஆனால் சூட்சும உடலை ஒருவன் இந்தத் தூல, காரண உடல் நிலையைத் துறந்து அல்லது முற்றுமாக அவை பற்றி அறிந்த பின்னரே அறிய முடியும். இந்த சூட்சும சரீரத்தையும் துறப்பதே ஜீவன் முக்தி. மேலும் இந்தத் தூல உடல் மூலம் தனது கர்மவினைகளைத் தீர்த்துக் கொண்டு, பின்னர் எஞ்சிய சூட்சும சரீரத்தால், சூட்சும உலகங்களில் சஞ்சரித்து பரிபக்குவ நிலை எய்திய பின்னரே ஜீவன் முக்தி எனப்படும் பிறவா நிலையை எய்த முடியும்.

விளக்கமாகச் சொல்லப் போனால், இந்த சூட்சும உடலே ஒருவனது அந்தராத்மா. அதற்கு எல்லாமும் தெரியும். இப்பிறப்பு, இதற்கு முற்பிறப்பு என அனைத்தையும் அறியும். ஆனால், சாதாரண நிலையில் மனிதனால் இது பற்றி எதுவும் அறிய இயலாது. அது இவனுள் மறைந்து, அனைத்தையும் ஓர் சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தூல மற்றும் காரண உடல்களின் செயல்பாட்டால் கர்மவினைகளுக்கும் காரணமாகிறது. ஒருவன் பிரம்ம நிலையை அல்லது முற்றும் துறந்த ஞான நிலையை அடையும் பொழுது தனது சூட்சும உடலைத் தானே காண்கிறான். இதற்கு நமது யோக முறைகளும் பெருமளவு உதவுகின்றன. தியாச·பிகல் கூறும் ஏழு உலகங்களுக்கும், ஏழு அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மனிதருக்கும், யோக சாத்திரங்களின் ஏழு சக்கரங்களுக்கும் ஒரு விதமான தொடர்பு உள்ளது என்பதே உண்மை.

பொதுவாக தூல உடல் அனுபவம் என்பது நனவு நிலையில் புலன்கள் மற்றும் எண்ண ஓட்டத்தினால் ஏற்படுவது. ஆனால் சூட்சும உடல் அனுபவம் என்பது கனவா இல்லை நனவும் கனவுமற்ற விழிப்பு நிலையில் ஏற்படுகிறதா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை. ஒருவிதமான குழப்பம் நிலவுவதாலும், ஆழ்மனம் அதனைக் கனவு என நினைப்பதாலும், அவற்றின் படிமங்கள் நினைவில் இருந்து புறமாக இருப்பதாலும் மனிதனால் இது பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலுவதில்லை.

https://m.facebook.com/horrific/posts/1048116278655584

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மாண்டூக்ய உபநிஷதம்

OMMM.jpg

( ஓங்காரம் விளக்கம் ..)

ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கிய பிரிவுகளைக்கொண்டது. ’சம்ஹிதை’ என்பது வெவ்வேறு தேவதைகளிடம் மனிதன் செலுத்தும் பிரார்த்தனைகள்பற்றியது. ’பிராம்மணம்’ என்பது ஒரு குறிக்கோள்கொண்டு செய்யப்படும் யாகங்களின் முறைகள், நியமங்கள் பற்றிச் சொல்வது. மூன்றாவது பகுதியே உபநிஷதங்கள் – சராசரி நிலையிலான பிரார்த்தனைகள், வேண்டுதல்களைத் தாண்டி, மனிதன் ஞானநிலை நோக்கித் திரும்புகையில் இவை வழிநடத்துகின்றன. பிரும்மம் அல்லது இறுதி உண்மை எனும் ஆன்மீகத்தின் உச்சப்புள்ளிபற்றி அவனோடு நின்று ஆய்பவை, அறியாத உன்னதத்தின் பாதையற்ற பாதையில்   அழைத்துச்செல்பவை..

அணுவின் அணுவாக, சூட்சுமத்தின் சூட்சுமமாக, வெளியின் வெளியாக இப்படி ஏதோ ஒரு மர்மம் இந்த பிரபஞ்சமுழுதும் விரவிக்கிடக்கிறது.. அதற்குள் இருக்கிறது எல்லா ரகசியங்களும் . எதனை அறிந்தால் எல்லாவற்றைப்பற்றியும் அறிந்ததாக ஆகிவிடுமோ, அதனை நோக்கி மனிதனை அழைத்துச் செல்வது உபநிஷதம் ‘என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

‘ஓங்காரம்’  என்பது இறைசக்தியின் சாரம் எனச் சொல்கிறது இந்த மாண்டூக்ய உபநிஷதம். அதர்வண வேதத்தின் இறுதியில் வரும் உபநிஷதம்  இது. ஓங்காரம், பிரணவம் என அழைக்கப்படும் ’ஓம்’ எனும் ஒலியே ஆதி ஒலி. ஆதிமந்திரம். அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்று ஒலிநிலைகளை (primordial acoustic forms) தன்னகத்தே கொண்டது. மிகச் சரியாக, உணர்வுபூர்வமாக  உச்சரிக்கப்படவேண்டிய மந்திரம். மேலோட்ட உச்சரிப்பில் பிரயோஜனமில்லை. ‘அ’ எனும் ‘அகரம்’ நாக்கின் அடிப்பகுதியான தொண்டைக்குழியில் ஆரம்பிக்கிறது. அகர சப்தம் பிற சப்தங்களில் இருந்து விலக்கமுடியாமல் ஒன்றியிருப்பதால் அதிமுக்கியமானது, ஆதாரமானது. கீதையில் தன்னைப்பற்றி அர்ஜுனனிடம் சொல்கிறான் கருநீலக்கண்ணன் : ’அக்ஷராணாம் அகாரோஸ்மி’. (அட்சரங்களில் நான் ’அ’  எனும் அகரம்!)  ‘உ’ எனும்  ‘உகரம்’  நாக்கின் மேல் கடக்கிறது. ’ம்’ எனும் ’மகரமாக’ உதட்டு நுனியில் வந்து முடிகிறது ’ஒம்’  எனும்  மந்திரம். அகரத்தில் மென்மையாகத் துவங்கி, உகரத்தில் ஒலி மிகுதியாகி, பின் மென்மையாக   ..ம்.. என முடியும் ஒலிநிலைகள். பிரும்மம், பிரபஞ்சம், மனிதன் என்கிற தத்துவத்தை தன்னுள்ளே கொண்டு,  ’ஓம்’ என ஒலித்து அதிர்வலைகளை உள்ளும் வெளியுமாக  எழுப்பும் உன்னதம்.

யாராலும் எழுப்பப்படாத அனாஹத த்வனி (ஆதியும் அந்தமுமில்லா சப்தம்) ஓங்காரம். இந்தப் பிரபஞ்சத்தில் பூதம் (Bootham) அதாவது கடந்தவை அல்லது மறைந்தவை, பவத் (Bhavath) எனப்படும் இருப்பவை, பவிஷ்யத்  (Bhavishyath) எனப்படும் ‘இனி வரவிருப்பவை’ மற்றும் ஸர்வம்  (அனைத்தும்) ஓங்காரமே  என்கிறது தன் முதலாவது ஸ்லோகத்தில் இந்த உபநிஷதம். பிரபஞ்சத்தில் ஓங்கார சப்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருப்பதாயும், தவயோகிகளால் அதனைக் கேட்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

{சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் ..

–இது திருமூலர். அதாவது கோவிலென இருக்கும்  இந்த நல்லுடம்பில் சிரத்தை, இறையுணர்வோடு இடது வலமாகப் பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) நெடுங்காலம் முறையாகச் செய்துவந்தால், பகலிலும் இறைஒலி கேட்கும்  எனச் சொல்லிச்சென்றார்.}

அடுத்த ஸ்லோகத்தில் ’ஸர்வம் ஹ்யேதத் ப்ரஹ்ம, அயமாத்மா ப்ரும்ஹ, ஸோயமாத்மா சதுஷ்பாத்…’ என விஷயத்தைத் தெளிவாக்க முயல்கிறது. இந்த ஆன்மா ப்ரும்மம், இப்படி (பிரபஞ்சத்தில் காணப்படுகிற) எல்லாமும் ப்ரும்மமே (பரம்பொருளே) எனச் சொல்கிறது.  எந்த மூலத்திலிருந்து ஒன்று உண்டாக்கப்படுகிறதோ அது, அந்த மூலத்தின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். ஆதலால் இந்தப் பிரபஞ்சம் முழுதும் மனிதன் உட்பட எல்லா உயிர்களும், ஜடப்பொருட்களும்கூட அந்த இறையின் குணக்கூறுகளைக்கொண்டுதானிருக்கும். அதனால்தான் அனைத்தும் ப்ரும்மமே எனச் சொல்லப்படுகிறது இங்கே. இறைசக்தி மனிதனில் பிரகாசிக்கையில் அது ’ஆன்மா’ என அழைக்கப்படுகிறது.

(தேனுக்குள் இன்பம் கருப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

-திருமூலர் இங்கே சிவவாக்கியர் மொழியில் நறுக்குத்தெறித்தார்போல் பேசுகிறார்)

இந்த மாண்டூக்ய உபநிஷதத்தில் வரும் ’அயமாத்மா ப்ரும்ஹ’ ( ’(எனக்குள்ளிருக்கும்) இந்த ஆன்மா ப்ரும்மம்’) என்பது மஹாவாக்கியம் எனக் கொள்ளப்படுகிறது.

அடுத்த ஸ்லோகம் ஆன்மாவின்  நான்குவித பரிமாணங்களைக் குறிப்பிடுகிறது. ‘ப்ரதம: பாத: வைஸ்வானர.. ‘ – அதாவது ஆன்மா தன் முதல் பரிமாணத்தில் ‘வைஸ்வானரன்’ என அழைக்கப்படுகிறது.. வைஸ்வானரன் என்பது விழிப்புநிலையில் உள்ளவன். இரண்டாவது நிலையை ‘தைஜஸன்’ அதாவது ‘கனவுநிலையில் இருப்பவன்’ என்கிறது. மூன்றாவது பரிமாணமாக ப்ராஜ்ஞன் – ஆன்மா ’ஆழ்ந்த உறக்கநிலை’யில் இருப்பவனாகக் கொள்ளப்படுகிறது.

ஆன்மாவின் விழிப்புநிலை உணர்வுபூர்வமாக, புறவயமாக இருக்கிறது.  தான் வாழ நேர்ந்திருக்கிற வெளி உலகை, அதன் சூழ்வெளியான மாபெரும் பிரபஞ்சத்தை ஆன்மா, இந்நிலையில் அனுபவிக்கிறது. ஆதலால் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியுமாகிறது.

இரண்டாவது நிலையான தைஜஸன் (கனவுநிலை), தன் உணர்வுகளை அகமுகமாகத் திருப்பிவிடுகிறது. இங்கே புறவுலகு மறைந்து, மனவுலகு தெரிய,  அதனை அனுபவிக்கிறது ஆன்மா.

மூன்றாவது பரிமாணமாக சொல்லப்படுவது,  ‘ப்ராஜ்ஞன்’ (ஆழ்உறக்கநிலை)- இதனை, புறஅனுபவங்கள் ஒடுங்கி, உணர்வு உட்புறமாகத் திரண்ட நிலை என்கிறது. அனுபவங்கள், உணர்வுகள் ஒடுங்கிய, மறைந்துவிட்ட நிலையில் ஆன்மா ‘ஆனந்தமய:’ –ஆனந்த ரூபமாக, ‘ஆனந்தபுக் ஹி’ – ஆனந்தத்தை அனுபவிப்பதாக இருக்கும் நிலை என்கிறது.

இதன் நான்காவது நிலையாக ஒன்றுள்ளது. ஆழ்ந்த கவனிப்பை, அறிதலை அது வேண்டுகிறது. இதனை இந்த உபநிடதம் இப்படி விளக்குகிறது: நான்காவது நிலை எனப்பட்டாலும், முதல் மூன்று நிலைகளை உள்ளடக்கியதும், அதே சமயம் அவற்றைத் தெளிவாகக் கடந்தநிலையுமாகும். இது புறமுக நிலையல்ல, அகமுகநிலையல்ல, இரண்டும் கலந்த உணர்வுகுவிந்த நிலையுமல்ல. இதனைக் காண இயலாது. புரிந்துகொள்ளமுடியாது. அடையாளங்கள் இல்லாத, விளக்கமுடியாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு உன்னத நிலை. மங்கலமானது, சாந்தமே வடிவானது, ’த்வைதம் இல்லாதது’, அதாவது ‘இரண்டற்றது’. {‘த்வைதம்’ (state of duaity) என்பது : நல்லது, கெட்டது/ பாவம், புண்ணியம்,/ நிலையான, நிலையற்ற/ போன்ற இரண்டிரண்டாக, ஒன்றுக்கெதிராக இன்னொன்றைப் பார்க்கும்/புரிந்துகொள்ளும் மனநிலை}. அத்வைதம் (state of non-duaity) இது . மனிதனின் உண்மையான ‘இயற்கை நிலை’ ஆதி நிலை இதுவே. தனக்குள்ளிருக்கும் ஆன்மாவை இவ்வாறு ‘அறிபவன்’ இந்நிலையில் ஒளிர்கிறான்.. ப்ரும்ஹத்தை உணர்ந்தவனாக ஆகிறான். ..

வர்ணனையை மிஞ்சிய இந்த ஆன்மாவை (ப்ரும்மத்தை) எழுத்துக்களில், சொல்லாகக் குறிப்பிட நேர்ந்தால், அதுவே ’ஓம்’ எனும் அகர, உகர, மகர ஒலி அடுக்குகளைக்கொண்ட ஓங்காரம்.

மேலும் ஓங்காரத்தை விளக்கிச் செல்கிறது:

ஓம் எனும் மந்திரத்தின் முதற்பகுதியாகிய ’அ’ என்கிற அகரம், ஆன்மாவின் முதல்நிலையான விழிப்புநிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அகரம் எல்லா சொற்களிலும் கலந்துள்ளது. அதேபோல, விழிப்புநிலையும் மற்ற இரண்டு நிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. கனவுகளாக வெளிப்படும் ஆழ்மனப்பதிவுகளுக்கு விழிப்புநிலை அனுபவங்களோடு தொடர்புண்டு. ஆழ்ந்த உறக்கத்திலும் விழிப்புநிலை அனுபவங்கள், தனித்தனியாகத் தெரியாமல் உணர்வுத் திரளாக மறைந்திருக்கின்றன. அகரம் ஓங்காரத்தின் ஆரம்பநிலையாக இருப்பதுபோல, விழிப்புநிலை ஆன்மாவின் (பிரும்மத்தின்) ஆரம்பநிலையாக உள்ளது.

ஓங்காரத்தில் இரண்டாவது நிலையாக வரும் ’உ’ எனும் ‘உகரம்’ உரக்க உச்சரிக்கப்படுகிறது. ஆன்மாவின் இரண்டாவது நிலையான கனவுநிலையோடு ஒப்பிடப்பட்டுள்ள இது, உயர்வானதாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில், கனவுநிலையில், உணர்வு மனம் (Conscious mind) ஓய்ந்துவிடுகிறது. ஆழ்மனம் (Subconscious mind) எனும் மனதின் பெரும்பகுதி கனவுநிலையில் பிரதான பங்கு வகிக்கிறது. இதன் எல்லைகள் மிகப் பரந்தவை. இது விழிப்பு நிலையின் வெளிஉலக அனுபவங்களோடும், மனதின் ஆசைகள், லட்சியங்கள், பயங்கள் என்பதோடு, எதிர்காலம், இறைவன் என்றெல்லாம் விஸ்தாரமாக வெவ்வேறுதளங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. இதைப்போலவே ஓங்காரத்தின் நடுவில் வரும் ’உ’ எனும் உகரம், ’அ’ எனும் ஆரம்ப, மற்றும் ‘ம்’ எனும் இறுதிநிலைகளோடு சம்பந்தப்பட்டுள்ளது.

ஓங்காரத்தின் ‘ம்’ என்பது மூன்றாவது பகுதி. இது , ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஆன்மாவின் மூன்றாவது நிலைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. ஓம் எனும் மந்திரத்தின் ‘அ’வும், ‘உ’வும்,  ‘ம்’-ல் இணைகின்றன. கலக்கின்றன. அதைப்போலவே, ஆன்மாவின் முதல் இரண்டு நிலைகளான விழிப்புநிலை, கனவுநிலை ஆகியவை, மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒடுங்குகின்றன, நிரம்புகின்றன. ஓம் எனும் மந்திரத்தில் ‘ம்’ –ஆனது,  ‘அ’ –வையும், ‘உ’வையும் தனக்குள் அடக்கிக்கொள்கிறது. அதைப்போலவே,  ஆன்மாவின் ஆழ்ந்த உறக்கநிலை – விழிப்பு மற்றும் கனவு நிலைகளை தன்னகத்தே கிரகித்துக்கொண்டு, தனக்குள் நிரப்பி, திரளாக வைத்திருக்கிறது.

இவற்றைத்தாண்டியும் பிரணவ மந்திரத்தின் நான்காவது பகுதி ஒன்றிருக்கிறது. ஒலி இல்லாததாய்த் தெரிவது. ‘பகுதி’ என மற்றவற்றைப்போல் அளவிட, விளக்கிவிடமுடியாது. சொல், செயல், உணர்வு கடந்தது. பிரபஞ்ச உணர்வையும் கடந்ததாக, மங்கலமானதாக இது அறியப்படுகிறது. ’ஓம்’ என மந்திரத்தை உச்சரித்து முடித்தபின் மீண்டும் ’ஓம்’ என ஆரம்பிக்குமுன் வரும் இடைவெளி இது. சாந்தநிலை. ‘ஓம்’ எனும் ஓங்காரம் ‘அ’, ‘உ’, ‘ம்’ மற்றும் நான்காவதான  ‘சாந்திநிலை’ (அமைதிநிலை)யும் கூடியது. இதனை இவ்வாறு அனுபூதியாக அறிபவன், உணர்பவன் ஆன்மாவை ஆன்மாவால் (ப்ரும்மத்தை ப்ரும்மத்தால்) அடைந்தவனாகிறான் என்கிறது இந்த உபநிஷதம்.

https://aekaanthan.wordpress.com/2018/11/21/மாண்டூக்ய-உபநிஷதம்/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மகான் எப்படி இருப்பார்.?

ramana.jpg

இந்த தேசத்தில் மனித தெய்வங்கள் அதிகம். அதிலும் சமீப காலங்களில் நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மனித தெய்வங்களை நாம் மேலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. திருவள்ளுவர் மழித்தலும், நீட்டலும் வேண்டா என்றார்.

அது முக்கியமல்ல என்பது அவர் கருத்து. ஆனால் பார்க்க மற்ற மனிதர்களைப் போலவே தோற்றம் இருந்தால் அவர்கள் வந்து வணங்குவார்களா? எனவே மழித்தல், நீட்டல், ஆசிரமம் வைத்தல், மேஜிக் காட்டுதல், கூட்டம் சேர்த்தல் என்று பல வழிகளிலும் முயன்று கோடிக்கணக்கில் இந்த தெய்வங்கள் காசு பார்க்கின்றன. புகழ் தேடுகின்றன.

அடுத்ததாக மகான்கள். கடவுள் என்று சொல்லிக் கொள்வது "ரொம்பவும் ஓவர்" என்று தீர்மானித்து அதற்கு அடுத்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் இது. இவர்கள் பல சித்திகள், மகாசக்திகள் தங்களுக்கு இருப்பதாக பிரகடனப்படுத்திக் கொண்டு மேலே சொன்ன தெய்வங்களைப் போலவே தாங்களும் 'உழைத்து' கோடிக் கணக்கில் செல்வம் சேர்க்கின்றன.

ஆனால் உண்மையான மகான்கள் பெரும்பாலும் நம் கவனத்திற்கு வராமலேயே இருக்கிறார்கள். மற்றவர் வணக்கம், புகழ், பணம் என எதுவும் அவர்களுக்குத் தேவையில்லாததால் அவர்கள் எந்த பிரகடனமும் செய்வதில்லை. நம்முடைய அங்கீகாரமோ, அலட்சியமோ அவர்களைப் பாதிப்பதில்லை. தங்களுடைய ஞானத்தை வஞ்சனையின்றி மக்களுக்கு வழங்கிய வண்ணம் வாழும் அவர்கள் எந்த பிரதிபலனையும் எவரிடத்தும் எதிர்பார்ப்பதில்லை.

போலிகளையே அதிகம் கண்டு பழக்கப்பட்ட நமக்கு உண்மை எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் காட்ட ரமண மகரிஷி இருந்திருக்கிறார்.

இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் பிரபலமாக இருந்தாலும் துளியும் கர்வமில்லாது, சலனப்படாமல் ஜீவன்முக்தனாக வாழ்ந்து மறைந்த ரமண மகரிஷி அப்படிப்பட்ட ஞானி. தன்னிடம் மேலான சக்திகள் இருப்பதாக எப்போதும் அவர் காட்டிக் கொண்டதில்லை. யாரையும் விட தான் உயர்ந்தவன் என்பதை சூசகமாகக் கூட அவர் தெரிவித்ததில்லை.

திருச்சுழியில் வெங்கடரமணனாகப் பிறந்த ரமண மகரிஷி ஆன்மீகத் தேடலில் திருவண்ணாமலைக்கு இளம் வயதிலேயே வந்து விட்டார். ஆரம்பத்தில் இருந்தே அதிகம் பேசாமல் மோன நிலையில் அமர்ந்திருக்கும் ரமணர் பால் ஈர்க்கப்பட்ட சிலர் அவரிடம் திரும்பத் திரும்ப வர ஆரம்பித்தார்கள்.

அவருடைய ஞான சக்தி சிறிது சிறிதாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பலரையும் வர வைத்தது. ·ப்ராங்க் ஹம்ப்ரீஸ் (Frank H.Humphreys) என்ற ஆங்கிலேயர் வந்து ரமண மகரிஷியால் வசீகரிக்கப்பட்டு, ரமணாசிரமத்தில் சில நாட்கள் தங்கி மகரிஷியிடம் உபதேசம் பெற்று அதை எழுதி லண்டனில் வசிக்கும் தன் நண்பனுக்கு அனுப்ப அவர் அதை The International Psychic Gazetteல் 1911ஆம் ஆண்டு பிரசுரித்தார். சிறிது சிறிதாக அவர் புகழ் மேலை நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. வெளிநாட்டிலிருந்தும் அவரைத் தரிசிக்க பலர் வர ஆரம்பித்தனர்.

ஒரு முறை ரமண மகரிஷி மரத்தடியில் அமர்ந்து சந்திக்க வந்தவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரைத் தரிசிக்க வந்த ஒரு வெளிநாட்டு அன்பர் காலை மடித்து நம்மைப் போல் கீழே உட்கார முடியாததால் வேகமாகச் சென்று வெளியே போட்டிருந்த ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து அதில் உட்கார்ந்து கொண்டார்.

ரமணரை விட உயரமான இடத்தில் அவர் அமர்வது ஆசிரம நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அந்த மனிதரிடம் ஏதோ சொல்ல அவர் வெளியேறி விட்டார்.

இதைக் கவனித்த ரமணர் என்ன என்று விசாரிக்க அவர்கள் "உங்களை விட உயரமான இடத்தில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்" என்று சொல்ல ரமணர் மரத்தில் அமர்ந்திருந்த ஒரு குரங்கைக் காண்பித்து "இதுவும் என்னை விட உயரத்துல தானே இருக்கு.. இதை என்ன செய்யப் போறீங்க?" என்று வேடிக்கையாகக் கேட்டு "இதில் உயர்வென்ன ? தாழ்வென்ன ? " என்று சொன்னார்.

தன்னை அவர் என்றுமே உயர்த்திக் கொண்டதில்லை. தன்னை முன்னிலைப் படுத்த அவர் முயன்றதுமில்லை. ஒரு முறை அவர் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட நினைத்த அன்பர்கள் அவரிடம் அனுமதி கேட்டனர். "பிறந்த நாள் தெரிந்தால் தானே கொண்டாடறதுக்கு" என்று ரமணர் மறுத்து விட திருச்சுழியில் அவர் பிறந்த நாளை அவர்கள் கண்டு பிடித்துக் கேட்டனர். ரமணர் சிரித்தபடி சொன்னார்.

"இது இந்தப் பிறவி. முதல் பிறவி எப்ப ஆரம்பிச்சது என்று தெரிந்து கொண்டாடுவது தானே நியாயம். அது தானே உண்மையான பிறந்த நாள் ? "

சமையலுக்காக காய்கறிகளை சுத்தம் செய்து அரிந்து தருவது, பக்தர்களின் ஆன்மீகப் படைப்புகளைப் பிழை திருத்துவது என்று எந்த வேலையானாலும் உயர்வு தாழ்வு பார்க்காமல் செய்யக் கூடியவராக ரமணர் விளங்கினார். வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை விடப் பெரிய வித்தியாசம் இல்லா விட்டாலும் அவர் கண்களில் ஞான தீட்சண்யமும், அவரைச் சுற்றி சக்தி அலைகளும் இருந்ததாக சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.

பல சமயங்களில் அவரைக் காண வந்தவர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்காமலேயே அவர் முன்னிலையில் விடைகளை உணர்ந்தனர். எண்ண அலைகளாலேயே அவற்றைப் பெற முடிந்தவர்களுக்கு பதிலளிக்கும் சக்தி அவருக்கு இருந்ததாக உள்நாட்டு வெளிநாட்டு அன்பர்கள் கூறுகின்றனர். இதை பால் பிரண்டன் (Paul Brunton) என்ற மேலை நாட்டு தத்துவஞானியும் ரமணரிடம் தன் அனுபவமாக ஒரு நூலில் (A search in secret India) எழுதினார்.

அந்த நூலில் ரமண மகரிஷியின் பக்தர்களுள் ஒருவரான யோகி ராமையா என்பவருடன் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் பால் பிரண்டன் குறிப்பிட்டுள்ளார்.

கொடிய விஷம் கொண்ட பெரிய பாம்பு ஒன்று பால் பிரண்டன் அறையில் வந்து விட பலரும் அதை அடிக்க கம்புகளை எடுக்க விரைந்த போது ராமையா அவர்களைத் தடுத்து நிறுத்தி அந்த பாம்பை தன் கைகளால் மெல்ல எடுத்து அதைத் தடவிக் கொடுக்க அதுவும் சீற்றத்தை அடக்கி சாந்தமாகி விட ராமையா அதைக் கீழே இறக்கி விட்டதாகவும், அந்த பாம்பு அங்கிருந்து யாருக்கும் எந்தத் தொந்திரவும் செய்யாமல் போய் விட்டதாகவும் பால் பிரண்டன் குறிப்பிடுகிறார்.

பால் பிரண்டன் பிறகு பயமாக இருக்கவில்லையா என்று ராமையாவிடம் கேட்டாராம். நான் அதை அன்புடன் அணுகுகையில் அது என்னை ஏன் துன்புறுத்தப் போகிறது என்று ராமையா சொன்னாராம். அந்த அளவு பண்பட்ட யோகிகளும், ஞானிகளும் கூட ரமணரின் பக்தர்களாக இருந்தார்கள் என்றால் ரமணரைப் பற்றி இனி என்ன சொல்ல ?

அவருடைய இறுதிக் காலத்தில் இடது தோளில் கட்டி ஒன்று வந்து பெரிதாகத் தொடங்கியது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் அது குணமாகவில்லை. அதையும் கூட மகரிஷி பற்றில்லாமல் கவனிக்கலானார்.

மற்றவர்கள் துக்கப்பட்டபோது "தான் அந்த உடல் அல்ல என்றும், உடல் அதன் இயற்கையான முடிவுக்கு வருவதில் வருந்த ஒன்றுமில்லை " என்றும் புன்னகையுடன் கூறினார். சிலர் மகரிஷி தன் தவசக்தியால் அதைக் குணப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போதும், சிலர் தங்களுக்கே அந்த சக்தி உள்ளது என்று மகரிஷியைக் குணப்படுத்த முயன்ற போதும் அவர்களைப் புன்னகையோடு பார்த்தாரே தவிர வேறொன்றும் செய்யவில்லை. கீதையில் கிருஷ்ணர் சொன்ன ஸ்திதப்ரக்ஞனும், குணாதீனனும் இவரல்லவோ !

 

ரமண மகரிஷியின் அருளுரைகளில் சில -

* ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் மூலத்திற்கே கொண்டு செல்லுங்கள். எண்ணங்கள் மேன்மேலும் ஓட அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் அதற்கு முடிவே இல்லை. மறுபடியும் மறுபடியும் உற்பத்தி ஸ்தானத்திற்கே அழைத்துச் சென்றால் மனம் செயலற்று இறந்து போகும்.

* சித்திகள் உண்மையான ஞானத்தின் அடையாளமல்ல. சமத்துவமே உண்மையான ஞானத்தின் அடையாளம். சமத்துவம் என்பது வேறுபாடுகளை மறுப்பதன்று. மாறாக ஒன்று படும் ஏகத்துவத்தை உணர்தல்.

* மூலமாம் இதயத்தில் அகந்தை கரைதலே உண்மையான சரணாகதி. வெளிச்செயல்களால் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் பார்ப்பதெல்லாம் இன்னும் எவ்வளவு அகந்தை பலமாக எஞ்சி நிற்கிறது என்பதும், எவ்வளவு அழியும் நிலையிலிருக்கிறது என்பதும் தான்.

* ஆத்மஞானத்தையே நான் வலியுறுத்துகிறேன். நம்மை அறிந்த பின்னரே உலகையும் கடவுளையும் அறிதல் வேண்டும்.... ஆத்மாவைத் தேடி ஆழ்ந்து செல்லச் செல்ல உண்மை ஆத்மா உங்களை உள்ளிழுக்கக் காத்திருக்கிறது. பின் செய்ய வேண்டியவற்றை எல்லாம் வேறு ஏதோ ஒன்று செய்கிறது. உங்களுக்கு அதில் பங்கு இல்லை.

என். கணேசன்

http://enganeshan.blogspot.com/2009/05/blog-post_19.html?m=1

டிஸ்கி :

Ramanashram-14.jpg

-- ரமணா ஆசிரம தியான மண்டபம்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்..!

ச.நாகராஜன்

kanyakumari-thiruvalluvar-statue-1493554

திருக்குறளில் திருவள்ளுவர் ஹிந்துக்களின் மறுபிறப்புத் தத்துவத்தை மட்டும் சுட்டிக் காட்டி நின்று விடவில்லை. பிறவிச் சுழல் ஏன் ஏற்படுகிறது, அதை எவ்வாறு போக்குவது என்பதையெல்லாம் விரிவாக விளக்குகிறார்.

ஒரு பெரிய மஹரிஷியின் போதனைகளாக அவை அமைந்துள்ளன.தத்துவஞானிகள் பெரிய விளக்கவுரைகளில் பல நாட்கள் பேசுவதையெல்லாம் அவர் சூத்திர வடிவில் தந்து விடுகிறார்.ஆகவே தான் உபநிடத, வேதத்திற்கு சரி நிகராக தமிழ் மறை போற்றப்பட்டு வருகிறது.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி   விழிப்பது போலும் பிறப்பு   (குறள் 339)

உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.

எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!

பிறப்பு என்பது துன்பம்.  எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது  தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை  மற்றது வேண்டாமை வேண்ட வரும்   (குறள் 362)

பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?

அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                            இறைவனடி சேராதார்    (குறள் 10)

இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர  முடியும். இல்லையேல் இல்லை தான்!

பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார்.முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை    (குறள் 345)

பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு கருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்..! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்    (குறள் 349)

ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்                     மருளான் ஆம் மாணாப் பிறப்பு     (குறள் 351)

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால்  தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு    (குறள் 357)

உபதேசப் பொருளை ஒருவன் நன்கு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு   (குறள் 358)

பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.

பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது? இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு என்னும் வித்து   (குறள் 361)

எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர் முத்தான ஒன்பது குறள்கள்!

பிறப்பிற்குக் காரணம் அவா.அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு.

அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி! மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது.

இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும்.பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான்.பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும்.இந்த உலகில் நீ  ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு.! ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத்தான்!

சிறந்த தத்துவஞானியான ம்ஹரிஷி வள்ளுவரின் பிறப்பறுக்கும் உபநிடத மொழிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

இரகசியத்திற்கெல்லாம் மேலான இரகசியத்தை தெளிவாக எளிய பாக்களில் தருகிறார் வள்ளுவர்; அதை அமிழ்தினும் இனிய தமிழில் பெறுகிறோம் நாம்!

எவ்வளவு பாக்கியசாலிகள்!

ஹிந்துப் பண்பாட்டின் ஆணிவேரை இதை விட வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக சூத்திர வடிவில் தர முடியும்.

வாழ்க வள்ளுவர், வாழ்க தமிழ்!

https://tamilandvedas.com/tag/மறுபிறப்பு/

டிஸ்கி :

இங்கு ஹிந்து என்பதை "சைவம்" என பொருள் கொள்க.. 🙂

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மரணத்திற்கு பின் வாழ்க்கை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

lifeafterdeath-05-1470403611.jpg

மனித வாழ்க்கை சார்ந்த ஆயிரமாயிரம் அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டாலும், மனிதனின் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கிறது..? என்னவாகும்..? என்ற மர்மமான அதே சமயம் சுவாரசியமான கேள்விக்கு நிகராக எந்த ஆய்வும் இல்லை என்பதே நிதர்சனம்.

அப்படியான ஒரு தேடுதலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வின் படி , இறந்த பிறகு என்னவாகும் என்ற கேள்விக்கான விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

4 ஆண்டு :

பிரிட்டன் நாட்டை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வாளர்கள் அணி மாரடைப்பு நோயாளிகளை தொடர்ச்சியாக அதாவது கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர்.

40 சதவீதம் பேர் :

மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர், மருத்துவ ரீதியாக அவர்கள் இறந்துவிட்டனர் என்று அறிவித்துவிட்ட குறிப்பிட்ட நேரத்தில் விழிப்புணர்வில் இருந்ததாகவும் சில வடிவங்கள் கண்டதாகவும் விவரித்துள்ளனர்.

20 முதல் 30 நொடிகளில் :

நிபுணர்கள்படி, இதய துடிப்பு நின்ற அடுத்த 20 முதல் 30 நொடிகளில் மூளை இயக்கம் நின்று போகும், அதன் பின்பு எதை பற்றிய விழிப்புணர்விற்கும் சாத்தியமே இல்லை . குழப்பம் : அப்படியிருக்க உயிர்பிழைத்தவர்கள் கூறும் அந்த விழிப்புணர்வு என்பது என்ன..? எதை பற்றிய எச்சரிக்கையாக அது இருக்க வேண்டும்..? என்ற குழப்பம் எழுந்தது.

மூன்று நிமிடங்கள் வரை :

சமீபத்திய ஆய்வின் மூலம் மருத்துவ ரீதியான இறப்பிற்கு பின்னர் நோயாளிகள் மூன்று நிமிடங்கள் வரையிலாக உண்மையான நிகழ்வுகள் ஏற்படுவதை உணர்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஒரு முறை மட்டுமே :

உடன் நோயாளிகள் புத்துயிரளிக்கப்பட்ட பின்பு ஒரு முறை மட்டுமே தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றிய நினைவை துல்லியமாக பெறுகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

புதியதொரு கோணம் :

பொதுவாக இதுபோன்ற ஆய்வுகளில் உருவெளித்தோற்ற நிகழ்வுகளை மட்டுமே நோயாளிகள் காண்பார்கள் ஆனால் சமீபத்திய ஆய்வு முற்றிலும் புதியதொரு கோணத்தை வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார் நியூயார்க்கின் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், இந்த ஆராய்ச்சியை முன் நடத்துபவருமான டாக்டர் சாம் பரினா.

நோயாளி :

இந்த ஆய்வில் ஒரு நோயாளியை மீள் உயிர் பெற வைக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் முயற்சி செய்த போது அவர் (நோயாளி) என்ன நடக்கிறது என்ற ஒரு மிகவும் நம்பகத்தனமான தகவலை அளித்துள்ளார்.

அறையின் ஒரு மூலையில் :

அதாவது மருத்துவ அறையின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு நான் சுவாசம் செய்துகொண்டிருந்தை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

விழிப்புணர்வு நிலை :

வழக்கமாக இதயம் நின்ற பின்பு மூளை செயல்பட முடியாது. ஆனால், இந்த விஷயத்தில், விழிப்புணர்வு நிலை சுமார் மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்துள்ளது.

2060 நோயாளிகள் :

இதன் மூலம் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை ஒன்று இருப்பதின் துப்பு கிடைக்கப் பட்டுள்ளதாகவே கருதப் படுகிறது. இந்த ஆய்வில் இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 15 மருத்துவமனைகளில் இருந்து 2,060 நோயாளிகள் உட்படுத்தபட்டுள்ளனர்.

46 சதவீதம் :

அவர்களில் உயிர் பிழைத்த 46 சதவீதம் பேர் ஒரு பரந்த அளவிலான மன நினைவுகளின் அனுபவம் பெற்றுள்ளனர்.

2% பேர் :

அவர்களில் ஒன்பது சதவீதம் மரணத்தின் அருகாமை அனுபவத்தின் பாரம்பரிய வரையறைகளை அனுபவித்துள்ளனர், 2% பேர் உடலுக்கு வெளியே உள்ள அனுபவங்களை அதாவது தன் உடலை தானே பார்ப்பது போன்ற வெளிப்படையான விழிப்புணர்வு நிகழ்வுகளை அனுபவித்துள்ளனர்.

https://tamil.gizbot.com/miscellaneous/largest-study-ever-concludes-that-there-is-life-after-death-tamil-011803.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மோட்சம்

PO10.jpg

உயிர் தியானம் என்பது மனதை உறங்க வைத்துவிட்டு அறிவை செயல்படுத்தல்தான், அப்படி மனம் உறங்கும்போது அறிவு உயிரை தொடர்பு கொள்கிறது, உயிர் தியானத்தால் ஒன்றுக்குள் ஒன்று ஒவ்வொன்றாக ஒடுங்கி அப்படியே உயிராகிறது. மொட்டு எப்படி மலர்ந்ததோ அப்படியே சுருங்கி மீண்டும் மொட்டாகிறது.

ஊண் உடலில் உள்ள உயிரணுக்கள் அனைத்தும் உயிர் உடலை சென்றடைவதே மோட்சம்.உயிருடலை உயிரணுக்கள் சென்றடைந்தவுடன் ஊண் தேகம் உயிர் தேகமாக மாற்றம் பெறுகிறது.அதுவே கல்ப்ப தேகம், நோய்கள் நீங்கிய நிலை. எலும்பு மஜ்ஜை ஜோதிநிறம் ரத்தத்தின் சிவப்பு அணுக்களே ஜோதியாக மாறுகிறது, அந்நிலை ஒளி தேக நிலை.

மனம் அசைகிறது, மானுடம் அசைகிறது.அதுவே அசையா நிலைக்கு வரும்போது ஞானமாகிறது. ஞானத்தில் மனம் அடங்கும்போது உயிராகிறது. நீயே கடவுளாகிறாய், அதுவே முக்தி மோட்சம். உன் பொருளை நீஅடைவதற்கு மதம் எதற்கு மார்க்கம் எதற்கு? மெய் குரு மட்டுமே போதும்.

மனிதன் தனது பாப கணக்குகளை பார்த்து பார்த்து அவைகளை எல்லாம் தீர்த்துவிட்டு, பின்பு புண்ணிய லோகம் செல்ல நினைத்து புண்ணியங்களைசெய்து சரி செய்து முடிப்பதற்குள், காலன் வந்து சொல்லாமல் கொள்ளாமல் அவன் கணக்கை முடித்துக் கொண்டு சென்று விடுகிறான்.

தீர்வு? திருவடி ஞானம்….

நம் அண்டம் எனும் பிண்டத்தில் திருவடி எதுவென குரு முகமாக அறிய வேண்டும்
உயிர் உணவு உயிர் வாழ்க்கை என எப்போதும் உயிர் கவனத்தில் வாழ பழகி கொண்டால் நம் கவனத்தில் எதுவாக இருக்கிறோமோ அதுவாகவே மாறி போவோம். உயிராகும் கலையே மரணத்தை வெல்லும் உயிர் கலை. நம்மை படைத்த கடவுளை நம்மால் கற்பனையில் கூட உருவாக்க இயலாது.மனிதனுக்கு புதியதை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு.அவனது புதிய படைப்புகளில் மயங்கி அவன் மெய் பொருளை மெய் கடவுளான உயிரை மறந்து விட்டான்.மெய் பொருளை மறைத்த புதிய உருவங்கள், அதுவே மாயை.

நம்மால் படைக்கப்பட்டவைகளை நாம்தான் காக்க வேண்டும். நம்மை படைத்தவனால் மட்டுமே நம்மை காக்க முடியும்.

சரியான திட்டமிட்ட அறிவு அறிவுக்கு கட்டுப்பட்ட மனம், மனதுக்கு கட்டுப்பட்ட சரீரம் ஆக இருப்போரை இவ்வுலகம் வணங்கும், அவரே ஞானி. உன்னை நீ சரீரமாக பாவிக்காது உன்னை எப்போதும் உயிராக பாவிக்கவேண்டும், உடலை விட்டு கவனத்தை உயிரில் நிறுத்த வேண்டும்.

உன் கவனம் உயிராக மாறவேண்டும். அதுவே மனம் அசைவற்ற பரவச நிலை. பின் கவனத்தை உயிராக மாற்றினால் உயிருக்கு கவனம் ஏற்ப்படும். உன் உடலை நீ கவனிக்கும் வரை உயிர் உடலை கவனிக்காது.
உயிரை நீ கவனித்தால் உயிர் உடலை தன கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இதுவே நோய் எனும் சரீர சாபத்தில் இருந்து விடுபடும் உயிர் கலையின் முதல் நிலை.

http://sammatham.com/மோட்சம்/

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சரியாக இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் சமர்பித்த மர்மம் வெளியானது.!

earth-like-planets-is-possible-main-1525

கடந்த 2018 மார்ச் 14 ஆம் தேதியன்று, இனி இந்த உலகத்திற்கான எச்சரிக்கை மணி ஒலிக்காது என்று வருத்தப்படும் அளவிற்கு ஒரு மரணம் நிகழ்ந்தது. அது, அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்-ன் (Stephen William Hawking) மரணமாகும்.

கேட்டதும் சிரிப்பு அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும், ஆனால் ஆழமான அர்த்தங்களை கொண்ட, விசித்திரமான கருத்துக்களையும், அதன் விளைவாய் ஏற்படப்போகும் ஆபத்துகளையும் வெறும் வாய் மொழியாய் மட்டுமில்லாது, கோட்பாடுகளாய் முன்வைப்பதில் அவருக்கு நிகர் அவரே ஆவார்.! அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய கடைசி ஆய்வுக் கட்டுரை எதை பற்றியது.?

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், தனது இறுதி மூச்சுவரை பல வகையான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தார், கண்டிப்பாக நிகழ்த்தி இருப்பார் என்பது வெளிப்படை என்கிற பட்சத்தில், அவர் கடைசியாக எந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தார் என்பது சார்ந்த விவரங்கள் மர்மமாகவே இருந்தன. அந்த மர்மம் தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆம், ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய கடைசி ஆய்வுக் கட்டுரை என்ன.? அது எதை பற்றிய விளக்கங்களை கொண்டுள்ளது என்பது சார்ந்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர்.!

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையானது, இந்த பிரபஞ்சம், நமது பூமி கிரகத்தை போன்றே இருக்கும் பல கிரகங்களை கொண்டு இருப்பதாகக் கூறுகிறது. சரியாக ஹாக்கிங் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஜர்னல் ஆப் ஹை-எனர்ஜி பிசிக்ஸ் (Journal of High-Energy Physics) பத்திரிகைக்கு இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆய்வுக்கட்டுரையானது, பேரலல் யுனிவர்ஸ் (parallel universes) எனப்படும் இணை பிரபஞ்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வழிகளை, விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கிறது.

இணை பிரபஞ்சமா.? அப்படி என்றால் என்ன.?

நாம் இருக்கும் பூமி, அந்த பூமி இருக்கும் சூரிய குடும்பம், அந்த சூரிய குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலம் (மில்கி வே கேலக்ஸி), அந்த பால்வெளி மண்டலத்தை சுற்றி இருக்கும் இதர பால்வெளி மண்டலங்கள் என எல்லாமும் சேர ஒரு பிரபஞ்சம் உருவாகும்.

அப்படியான பிரபஞ்சம் ஆனது தனியாக இல்லை, தன்னை போன்றே உள்ள பல நூற்றுக்கணக்கான பிரபஞ்சங்களை கொண்டுள்ளது என்று நம்புமொரு கோட்பாடு தான் - பேரலல் யுனிவர்ஸ் அல்லது மல்டிவெர்ஸ் (Multiverse).! இந்த இடத்தில் ஒரு அடிப்படையான கேள்வி எழும்.!?

இணை பிரபஞ்சங்கள் என்பது உண்மை என்றால், அங்கு நம்மை போன்றே உயிர்கள் வாழுமா.? என்கிற ஒரு அடிப்படையான கேள்வி இங்கு எழுகிறது அல்லவா.? அங்கு உயிர்கள் நிச்சயமாக இருக்கலாம் அல்லது சுத்தமாக இல்லாமல் கூட போகலாம். ஏனெனில் எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமான பிக் பேங்க் (Big Bang) வெடிப்பில் சிதறிய அத்துணை பிரபஞ்சங்களிலும் அணு உற்பத்தி ஆகியிருக்கும் என்று கூற முடியாது.

அது நம்மை போன்றதொரு அறிவார்ந்த உயிரினமாக இருக்குமா.?

அணு இல்லையேல் மூலக்கூறுகள் இல்லை, மூலக்கூறுகள் இல்லை என்றால் நட்சத்திரங்கள் உருவாகி இருக்காது. நட்சத்திரங்கள் உருவாகவில்லை என்றால் நிச்சயமான கிரகங்கள் உருவாகி இருக்காது. கிரகங்கள் இல்லை என்றால் நிச்சயமாக உயிர்கள் இல்லை என்று தானே அர்த்தம். சரி ஒருவேளை, அணுக்கள் உருவாகி இருந்தால், அதன் வழியாக கிரங்கங்கள் உருவாகி இருந்தால், உயிர்களும் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது தானே என்று கேட்டால் - ஆம் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அந்த உயிரினம் நம்மை போன்றதொரு அறிவார்ந்த உயிரினமாக இருக்குமா.? அல்லது நம்மை மிஞ்சியதொரு உச்சத்தை அடைந்து இருக்குமா.? என்கிற கேள்விக்கு பதில் இல்லை.

ஐன்ஸ்டீனின் கோட்பாட்டில் இருந்த சிரமங்களை மட்டும் குழப்பங்களை தீர்த்தது.!

இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை, 1980 களில் ஹாக்கிங் தேட தொடங்கினார். அவருக்கு துணையாக அமெரிக்க இயற்பியலாளர் ஆன ஜேம்ஸ் ஹார்டில் பணியாற்றினார். இந்த கூட்டணி, பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றி ஒரு புதிய கருத்தை உருவாக்கியது. அது, பிரபஞ்சம் ஆனது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்கிற ஐன்ஸ்டீனின் கோட்பாட்டில் இருந்த சிரமங்களை மட்டும் குழப்பங்களை தீர்த்தது.

நம்மை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும்.?

ஹார்டில் - ஹாக்கிங் கூட்டணியானது, குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற ஒரு கோட்பாட்டை பயன்படுத்தி, எதுவுமே இல்லாத ஒரு வெற்றிடத்தில் இருந்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விளக்கியது. அந்த புதிய விளக்கத்தை பகுப்பாய்வு செய்தபோது, பிக் பேங் எனும் பெருவெடிப்பானது ஒரே ஒரு பிரபஞ்சத்தை மட்டும் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை, முடிவில்லாத எண்ணிக்கையின் கீழ் பல பிரபஞ்சங்களை உருவாக்கி இருக்கும் என்கிற ஒரு உறுதிப்பாடு கிடைத்தது.

தனது கடைசி நாளை கடந்து விட்டார்.!

இந்த கோட்பாட்டின் படி, நமது சொந்த பிரபஞ்சத்தைப் போலவே மற்றொரு பிரபஞ்சம் இருக்கும் என்று சிலர் நம்ப, மறுகையில் உள்ள சிலர், மற்ற பிரபஞ்சங்கள் நம்மை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள்.

இணை பிரபஞ்சங்கள் மீதான நம்பிக்கையை விதைத்த ஹாக்கிங், அது நம்மை போன்றே இருக்குமா.? அல்லது விசித்திரமாக இருக்குமா.? என்கிற இரண்டு நம்பிக்கையில் எது உண்மை என்பதை கண்டறியாமலேயே தனது கடைசி நாளை கடந்து விட்டார் என்பது அறிவியல் ஆர்வலர்களுக்கான வேதனை.!

https://tamil.gizbot.com/scitech/stephen-hawking-s-final-research-paper-revealed/articlecontent-pf133110-017647.html

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் சீக்கிரம் விஷத்தை குடுடா! நான் சாகனும்.... மேதையின் கடைசி தருணம்.!

abc.jpg

ஏதென்ஸ் நகரத்தின் சிந்தனைவாதி சாக்ரடீஸ் தன் கடைசி நிமிடத்தில், சாகும் தருணத்தில் கூட, சிறைச்சாலையில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணாக்காமல் தனது நண்பர்களுடன் இறப்பு, ஆன்மா, வலி, இன்பம், துன்பம் போன்ற பகுத்தறியும் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததாக ப்ளேட்டோ (சாக்ரடீஸின் பிரதம சீடர்) தனது Great Dialogues புத்தகத்தில் உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

விஷம் அருந்தும் சற்று நேரத்துக்கு முன், அவரைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டதால, தன் கால்களை தேய்த்துவிட்டுக் கொண்டு சற்று சவுகரியமாக மேடையில் அமர்ந்து கொண்டு ஆன்மாவுக்கு மரணமுண்டா, மறு பிறவி என்பது இருக்கிறதா? என்று தத்துவ விசாரணைகளில் தனது சீடர்களுடன் ஈடுபட்டாராம்.

இடிந்துபோய் அமர்ந்திருந்த சீடர்களோ அவரிடம் நுணுக்கமாக கேள்வி ஏதும் கேட்க முடியாமல் தவித்தனராம். சாகும் தருவாயில்கூட சீரிய பகுத்தறிவுத்தனம் என்பதன் உச்சத்தை சாக்ரடீஸிடம் நாம் பார்க்க முடிகிறது.அவரின் கடைசி நிமிடத்தில் சிறையதிகாரி அவரிடம் வந்து, என்னை மன்னித்து விடுங்கள் சாக்ரடீஸ், இந்த சிறைக்குள் நான் பார்த்த எத்தனையோ கைதிகளுள் நீங்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடிகிறது!

வேறு ஏதும் என்னால் சொல்ல முடியவில்லை. என் மீது உங்களுக்கு கோபம் ஏதும் இல்லையே? என்று குரல் உடைந்து அழுதார்.எழுந்து அவரிடம் சென்று அவரை அணைத்தவாறே பழுத்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியுமான சாக்ரடீஸ் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?.

எனக்கு விஷம் தயாராக இருக்கிறதா? சீக்கிரம் கொடு முட்டாள் நண்பனே..என்றார்.அவருடைய முதன்மை சீடர் க்ரீட்டோ கண்ணில் நீர்வழிய, அவசரமில்லை சாக்ரடீஸ், இன்னும் அஸ்தமனம் கூட ஆகவில்லை.சட்டப்படி நள்ளிரவு வரை நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்றார் பதற்றமாக.

நான் கடைசிவரை ஆர்வத்துடன் உயிரைப் பாதுகாத்துக் கொண்டதை வரலாறு பதிவு செய்ய வேண்டுமா க்ரீட்டோ? அது சற்று முட்டாள்தனமாகத் தோற்றமளிக்காதா? என்று கூறிவிட்டு உடனே விஷக் கோப்பையை கொண்டுவரச் சொன்னாராம். தன் மரணம் பற்றி எவ்வளவு துல்லியமான, தெளிவான அறிவு அவருக்கு இருந்திருந்தால் மரணம் எனும் வாழ்வின் ஒருமுறை நிகழ்வுக்கு அவ்வளவு தயாராய் இருந்திருப்பார்?.

தன் மரணம் - நிச்சயமான ஒன்று என்கிற அறிவு, அதிகார வர்க்கம் அவருக்கு அளித்திருந்த தண்டணையே சாவு என்கிற பகுத்துப் பார்க்கிற அறிவு, அவருக்கு இருந்ததால்தான் அவரால் மரணம் என்பது ஒரு வாழ்வின் (கடைசி) நிகழ்வு என்கிற சாவகாசத் தன்மையோடு அமைதி காக்க முடிந்திருக்கிறது.

அது மட்டுமல்ல! விஷத்தை அருந்திய சாக்ரடீஸ், அது முறையாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என்று அதிகாரியிடம் கேட்டிருககிறார்.பின்னர் அதிகாரி சொன்னபடி விஷத்தை குடித்துவிட்டு கால்கள் மரத்துப் போகும்வரை சற்று முன்னும் பின்னும் நடந்தார். அதுவரை சோகத்தை அடக்கி வைத்துக் கொண்டிருந்த சீடர்கள் ஓவென்று கதற, என்ன இது? மரணத்தின்போது அமைதி நிலவுவது அழகாக இருக்குமே!’ என்றாராம்.

என்ன ஒரு மனிதர்? என்று பிரமிக்கத் தோன்றுகிறதல்லவா?அதனால்தானோ என்னவோ அவர் இறந்த பிறகு நாமெல்லாம் சொல்வதுமாதிரி, அவர் இறந்துவிட்டார் என்றோ, பரலோக ப்ராப்தி அடைந்தார் என்றோ, இறைவனடி சேர்ந்தார் என்றோ சொல்லாமல், அவரது மரணத்தை சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார் என்று அவரது சீடர்கள் அறிவித்தனர்.ஏதென்ஸ் நகரமே களையிழந்து போனதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு இருக்கிறது…!

https://www.manithan.com/history/04/128509

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் இறப்பதற்கு முன் அவனுடைய கண்ணுக்கு முன்னால் என்னவெல்லாம் தெரியும்?

Ghosts.jpg

இப்படி ஒரு கேள்வியை நாம் என்றாவது நமக்குள்ளேயே கேட்டுப் பார்த்திருக்கிறோமா?...

பிறப்பு என்பதைக் கூடு எப்படி உருவாகிறது என்று அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்துவிட்டோம். ஆனால் இறப்பு என்பது இந்த உலகத்தில் நிகழும் ஒரு மர்ம முடிச்சாகவே இருக்கிறது. யாருக்கு எப்போது மரணம் வருமென்றே தெரியாது.ஒருவர் இறப்பதற்கு முன் ஏதோ ஒருவித பயம், இனம் புரியாத நிலை எல்லாம் இருக்கும்பொழுது தான், மனிதன் இதற்கு முன் தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறான்.

பொதுவாக ஒருவருடைய உயிர் ஊசலாடும்போது, மற்றவர்கள் சாதாரணமாக அவர் இறக்கப் போகிறார் என்று சொல்வார்கள். ஆனால், ஆய்வாளர்கள் அது பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா?குறிப்பாக, மரணப் படுக்கையில் இருக்கும்போது மரணம் என்பது மிக சாதாரணமாக எல்லாம் நடப்பதில்லை. அப்போது அவர்களுடைய சிந்தனை ஓட்டம் இந்த பிரபஞ்சத்தையே சுற்றி வரும். இதுபோல் மரணம் பற்றி இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.

அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் அவர்களுடைய எண்ணங்களும் பார்வையும் மிக சாந்தமாகவும் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மீது அக்கறையும் வெளிப்படும். தான் இதுவரை யாருக்காக வாழ்ந்தோமோ அவர்களைப் பற்றிய எதிர்காலம் கண் முன்னே வந்து நிற்கும். சிலருக்கோ யாருக்காகவும் இல்லாமல் தனக்காக மட்டுமே வாழ்ந்திருப்பார்கள்.

அவர்களுக்குக் கூட தான் இறக்கும் தருவாயில், யாருக்காக வாழ்திருக்க வேண்டுமோ அவர்களை எண்ணி மனம் வருந்துவார்கள்.இறப்பதற்கு முன் அவர்களுடைய கைகளை ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி பிடித்துக் கொண்டிருக்கும். அப்போது இதுவரை தான் வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பார்கள். வருத்தப்படுவார்கள்.

சிலருக்கு கண்ணீர் மட்டுமாவது வரும். தன்னுடைய தவறுக்கு தானே சாட்சியாக இருந்து மன்னிப்பு கேட்பார்கள்.அந்த கருணையும் அவர்களுடைய பார்வையும் அந்த அறை முழுக்க பரந்து விரிந்து, அவர்களுடைய ஆன்மாவின் உருவில் உலவிக் கொண்டிருக்கும்.மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பலரும் இந்த தருவாயில், தன்னுடைய தாயை மனதுக்குள் நினைத்துக் கொள்வார்கள்.

ஏனெனில் அவர் தான் தன்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். அவர்தான் இதுவரை தான் வாழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான மூலக்காரணமாக செயல்படக் கூடியவர். அதேபோல், தனக்கு முன் மரணத்தைத் தழுவிய தாயும் தன்னுடைய பிள்ளைகளைப் பற்றித்தான் யோசித்திருப்பார் என்ற எண்ணம் தோன்றும். நான் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அவர்களுடைய ஆன்மா தாயின் ஆன்மாவுடன் பேச முயற்சித்துக் கொண்டிருக்கும்.

மரணப் படுக்கையில் அந்த அறைக்குள்ளாகவே தன்னுடைய அம்மா, அப்பா, நெருங்கிய ஆன்மாக்களுடன் இவர்களுடைய ஆன்மா பேசிக் கொண்டிருக்கும். அவருக்கு நெருங்கிய ஆன்மாக்களும் அந்த அறையில் உலவும். இவரை தங்களுடைன் அழைத்துச் செல்ல காத்திருக்கும். இந்த மனநிலையை இறக்கும் தருவாயில் உள்ள அவர்கள் மட்டும் தான் உணர முடியும். மற்ற சுற்றி நிற்கிற உறவினர்களோ அன்பு கொண்டவர்களோ கூட உணர முடியாது.

திடீரென விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள், அதேபோல் வயது முதிர்ந்து இயற்கை மரணம் நிகழாமல் திடீரென மரணம் நேர்பவர்களுக்கு இதுபோன்ற சிந்தனைகள், எண்ணங்கள் ஏதும் தோன்றாது. இயற்கையாக மரணிப்பவர்கள், அதாவது வயது முதிர்ந்த பின், நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களால் இதுபோன்ற விஷயங்களை உணர முடியும்.

https://www.manithan.com/living/04/176140?ref=view-thiraimix

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மாவின் பயணம்

😢

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது.

1555916177-8561.jpg

மரணத்திற்குப் பின்  வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.என்கிறார்.

இருந்தாலும் ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த 2011 ஆம் வருடம். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இதய நோய் காரணமாக ஒரு நோயாளியை ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.

அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.

அதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான் வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில் நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலை மருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானே பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

அவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாக மருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா? அதான் ஆச்சரியம்!

இன்னொரு சம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரே கூறுகிறார்

என் உடலைவிட்டு நான் அப்படியே மேலே போனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒரு செருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது என அவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள் பார்த்த போது உண்மையிலேயே அங்கு அந்த பொருட்கள் இருந்துள்ளது.

இது போல பல உண்மை சம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த 101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம் கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர் இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள் அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பது தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மறுபடி நடத்தல் போன்ற பல விஷயங்கள்  தாங்கள் உணர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்படியான பல தனி மனித உதாரணங்கள், பல மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இறந்தவர்கள் அதன் பின்னர் என்ன ஆவார்கள் என்பதை முற்றிலுமாக யாராலும் கணிக்கமுடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.

http://www.vanakkamlondon.com/v-12-03-16/

டிஸ்கி

கோரோனோவின்ர இந்த சூழ்நிலையில் எல்லோரும் ஆன்மா குறித்து ஆராய்ச்சி செய்வது சால சிறந்தது 👌

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு ஏன் முற்பிறவி நினைவு வருவதில்லை.? முன்ஜென்மம் உண்மையா.?

universe-300x236.jpg

1.நாம் குழந்தைகளாக இருந்தபோது என்ன நடந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.?

2.நினைவு தான் ஆதாரம் என்றால் நம் நினைவில் இல்லாத நாட்கள் நாம் வாழாத நாட்கள் என்று ஆகிவிடும்.

சிலர் ஹோமாவிற்கு சென்றுவிடுகிறார்கள்.எதுவும் நினைவில் இருப்பதில்லை .அவர்கள் நினைவில் இல்லாத காலங்கள் அவர் வாழாத காலம் என்று சொல்ல முடியுமா?

3.முற்பிறவியில் உள்ள மூளை அழிந்து விட்டது.இப்போது உள்ளது புதிய மூளை.ஒருவன் புதிய மூளையுடன் தான் மறுபிறவி எடுக்கிறான்.

4.ஆனாலும் சிலருக்கு முற்பிறவி நினைவு வருகிறது.இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

எந்த பிறவியில் ஒருவன் முக்தனாக ஆவானோ அந்த பிறவியில் ஒருவனுக்கு முற்பிறவி நியாபகம் வருகிறது.(நமது முற்பிறவியை நியாபகப்படுத்தி கூறும் மனோவியல் மருத்துவர்களும் இருக்கிறார்கள்)

5.ஒரே பெற்றோருக்கு பிறக்கும் இரட்டைக்குழந்தையில் ஒன்றிற்கு அதிக அறிவு உள்ளது.இன்னொன்றிற்கு குறைவாக உள்ளது.இரண்டுபேரும் ஒரே போல் வளர்க்கப்ட்டலாலும்,சிறுவயதிலேயே வேறுபாடு இருப்பதை நாம் காண்முடியும். அறிவை வளர்த்துக்கொள்வதில் மனிதர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை இந்த மறுபிறவி கோட்பாடே விளக்கமுடியும்.

6.கம்பியூட்டர் ஹார்ட்டிஸ் முழுவதும் பார்மர்ட் செய்யப்பட்டிருந்தாலும்கூட,அந்த ஹார்ட்டிஸ்க் பற்றிய அடிப்படை தகவல் அதற்குள்ளே இருக்கும்.அது இருப்பதால்தான் புதிக தகவல்களை அதற்குள் பதியமுடியும். அந்த அடிப்படை தகவல் இல்லாவிட்டால் ஹார்ட்டிஸ்க்கில் புதிய தகவலை ஏற்ற முடியாது. அறிவே இல்லாமல் ஒருவன் பிறந்தால் புதிதாக எந்த அறிவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒப்பீடு மூலமே புது அறிவு உருவாகிறது.

7.அறிவை அனுபவத்தின் மூலம் மட்டுமே பெற முடியும்.பழைய அறிவுடன் புதிய அறிவை பொருத்திப்பார்ப்பதன் மூலமே புது அறிவு ஏற்படுகிறது.இந்த பிறவியில் அந்த அறிவை பெற்றிருக்காவிட்டால் வேறு பிறவியில் அதை அனுபவத்தின் மூலம் பெற்றிருக் வேண்டும்.அறிவே இல்லாமல் ஒருவன் பிறந்தால் புதிதாக எந்த அறிவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. .

8.கோழியால் அடை காக்கப்பட்ட வாத்துக்குஞ்சு தண்ணீரை கண்டவுடன் அதில் குதித்து நீந்துகிறது.இதற்கு முன்பு அது தண்ணீரில் நீந்தியதே இல்லை. இதை எவ்வாறு விளக்குவீர்கள்?

இயற்கை என்று நீங்கள் பதிலளித்தால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது அர்த்தம்.

9.இயற்கை என்பது என்ன? நாம் முதலில் பியானோ வாசிக்க கற்றுக்கொள்ளும்போது,பல தவறுகளுக்கு பிறகு சரியாக வாசிக்க கற்றுக்கொள்கிறோம்.நன்றாக வாசிக்க தெரிந்த பிறகு அது தானாகவே நிகழும் செயல்போல ஆகிவிடுகிறது.அதன்பின் தவறாக வாசிக்க வாய்ப்பே இல்லை.அதேபோல் நமது அனுபவங்கள் எல்லாம் பல தவறுகளுக்கு பிறகு படிப்படியாக தானாகவே ஒழுங்காக நிகழும் அனிச்சை செயலாக மாறுகிறது.இதையே இயற்கை என்கிறோம்.இந்த இயற்கைக்கு பின்னால் தொடர்ந்த பயிற்சி இருப்பதை காணலாம்

10.உடல் அழியும் போது ஆன்மாவிற்கு வழிகாட்டுவது எது?அது முதலிலிருந்து செய்த செயல்கள்,நினைத்த எண்ணங்கள் ஆகியவற்றின் மொத்த பலனே.இந்த பலன் மனம் இன்னும் அனுபவம் பெறுவதற்காக புதிய உடலை எடுக்கும் அளவுக்கு இருந்தால்,அந்த உடலுக்கு தேவையான மூலப்பொருளை தருவதற்கு தயாராக இருக்கும் பெற்றோர்களை நாடிச்செல்கிறது.

இவ்வாறு அது ஓர் உடலை விட்டு இன்னோர் உடலுக்கு தாவுகிறது.சில வேளைகளில் மிருக உடலை எடுக்கிறது.தான் யார் என்னும் உண்மை நிலையை அறியும் வரை இவ்வாறு மறுபடி மறுபடி பிறந்து இறக்க வேண்டியுள்ளது.

11.கடவுள் மீது பழியைப்போட்டு தண்டிப்பவராகவோ பரிசளிப்பவராகவோ அவரை உருவகப்படுத்துவதற்கான நமது முயற்சியெல்லாம் வீண்.

12.நாம் எப்படி இருக்க வேண்டுமோ அது நம் கையில் தான் உள்ளது.நான் அனுபவிக்கும் இந்த துன்பத்திற்கு நானே தான் காரணம்.உங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஆற்றல் உங்களிடமே உள்ளது.

விதி என்கிறார்களே அந்த விதி என்பது என்ன? நாம் விதித்ததைத்தான் நாம் அறுக்கிறோம்.நம் விதிக்கு நாமே காரணம்.நாம் துன்பப்படுவதற்கு நாமே காரணம்.இன்று நல்ல காரியம் செய்தால் நாளை நல்ல பலன் விளையும்.

13. சூன்யத்திலிருந்து எதையும் படைக்க முடியாது.மனிதன் சூன்யத்திலிருந்து படைக்கப்பட்டான் என நினைப்பது அறிவற்ற செயல்.

சூன்யத்திலிருந்து படைக்கப்ட்ட மனிதன் என்றென்றும் நிலையாக வாழ்வான் என நினைப்பது அறியாமை.

14.மனிதன் என்பவன் முதலில் வெளிப்போர்வையாக உடல்,அதன் பின்னால் சூட்சும உடல் இவற்றால் ஆக்கப்படவன் என்பதைக்காண்கிறோம்.

இவற்றிற்கு பின்னால் தான் மனிதனின் உண்மையான ஆன்மா உள்ளது.துால உடலின் சக்தி சூட்சும உடலிலிருந்து பெறப்படுகிறது.சூட்சும உடல் அதன் சக்தியை ஆன்மாவிலிருந்து பெறுகிறது.

15.ஆன்மா படைக்கப்பட்டதல்ல.அது சுய ஒளி உடையது.ஆன்மா இல்லாத காலமே இல்லை.ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பு இல்லை.

16.பரம்பரை கருத்தை நாம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்கிறோம்

உடலை எடுப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை தங்கள் பெற்றோரிடமிருந்தே ஒருவன் பெறுகிறான்.பெற்றோர்கள் உடலுக்கு தேவையானவற்றை மட்டுமே கொடுக்கிறார்கள்.

17.நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் செய்யும் ஒவ்வொர் செயலும் மனத்தில் துட்பமான உருவங்களாக பதிகிறது.இதை சம்ஸ்காரம் என்கிறார்கள்.நான் இறக்கும் போது இந்த சம்ஸ்காரத்தின் பலனே அடுத்த பிறவி எடுப்பதற்கு காரணமாக அமைகிறது.

18.வேதாந்திகளின் கருத்து படி,இந்த உடல் விழுந்த பின்னர் மனிதனின் உயிர் சக்திகள் மனத்திற்கு திரும்பிப்போகின்றன.மனம் பிராணனில் ஒடுங்குகிறது.

பிராணன் ஆன்மாவில் ஒடுங்குகிறது. சூட்சுமசரீத்தை உடைய ஆன்மா உடலை விட்டு வெளியேறுகிறது.இநத சூட்சும சரீரத்தில்தான் மனிதனின் சம்ஸ்காரங்கள் அனைத்தும் இருக்கின்றன.

19.கடவுள் ஏன் இந்தப்பிரபஞ்சத்தை படைத்தார்?முழுமையானர்,தேவையற்றவர் குறைவுடைய இந்த உலகத்தை ஏன் படைத்தார்?இந்த கேள்விக்கு ஒருபோதும் பதிலளிக்க முடியாது.ஏனெனில் இத்தகைய கேள்விகள் நியாயமற்றவை.மனத்தையும் உடலையும் கடந்து இருக்கும் இறைவனை அறிய வேண்டுமானால் மனத்தை கடந்து செல்ல வேண்டும்.அப்போது தான் இதற்கான விடை கிடைக்கும்.மனத்தை கடந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை அறிய அப்போது மனம் இருக்காது.

20.இந்த பிரபஞ்சத்தை இறைவன் திட்டமிடடே படைத்தார்.இயற்கையில் காணப்படும் ஒழுங்கு முறையே இதற்கு சான்று என்றெல்லாம் பேசுவது குழந்தைபேச்சு.

குழந்தைகளுக்கு இவ்வாறு போதிக்கலாம், அதற்குமேல் இதனால் பயன் இல்லை. கடவுளுக்கு உள்ள படைப்பு சக்தியை இயற்கை காட்டுகிறது என்றால்.அதற்கு திட்டமிடுவது அவருடைய பலவீனத்தை காட்டுகிறது.அவர் எல்லாம் வல்லவராக இருந்தால் அவருக்கு எந்த திட்டமிடுதலும் தேவையில்லை.எனவே இயற்கையில் இறைவனின் திட்டமிடுதல் எதுவும் இல்லை.எங்கும் நிறைந்த இறைவன் எதையும் அடைவதற்காகவோ மனிதர்களை சோதிப்பதற்காகவோ படைத்தார் என்ற பேச்சிற்கே இடமில்லை.

21.படைப்பு மனிதனின் தேவைக்காக தானே தவிர இறைவனின் தேவைக்காக அல்ல.

22.உலகின் ஆரம்பம்,மனிதனின் ஆரம்பம் என்றெல்லாம் மக்கள் பேசுகிறார்கள்.ஆரம்பம் என்பதற்கு யுகத்தின் ஆரம்பம் என்றுதான் பொருள்.படைப்பிற்கு ஓர் ஆரம்பம் இருப்பது இயலாத காரியம்.ஆரம்பகாலம் என்ற ஒன்றை நீங்கள் யாரும் கற்பனை செய்ய முடியாது.

ஆரம்பம் உள்ள எதற்கும் முடிவு இருந்தேயாக வேண்டும்.ஆன்மாவுக்கு ஆரம்பம் இல்லை.அதே போல் முடிவும் இல்லை.இந்த உலகத்திற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.அது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது

23.முதல் உயிரணுவிலிருந்து(ஒருசெல் உயிரி) பரிபூரண நிலை அடைந்த மனிதன் வரையில் உண்மையில் ஒரே உயிர்தான் இருக்கிறது.அந்த உயிர்தான் படிப்படியாக பரிணமித்து மனிதனாகியுள்ளது.

24.பரிணாமம் என்பது சூன்யத்திலிருந்து வருவதில்லை.அப்படியானால் அது எங்கிருந்து வந்தது?

அதற்கு முந்தைய ஒடுக்கத்திலிருந்து தான்.அதாவது விதையிலிருந்து மரம் மரத்திலிருந்து விதை என்று ஒரு வட்டம்போல உள்ளது. எது முதல்?எது முடிவு? முதலும் இல்லை.முடிவும் இல்லை

25.இந்த பிரபஞ்சம் முழுவதும் சூன்யத்திலிருந்து வெளிவந்திருக்க முடியாது.காரணம் இல்லாமல் காரியம் இல்லை.காரணம் காரியத்தின் வேறு உருவம்.இந்த பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியது.அது இதற்கு முன்பாக இருந்த நுட்பமான ஒடுங்கியிருந்த பிரபஞ்சத்திலிருந்து தோன்றியது

--சுவாமி விவேகானந்தர்.

https://m.dailyhunt.in/news/india/tamil/punnagai-epaper-punnagai/namakku+aen+murbiravi+ninaivu+varuvathillai+munjenmam+unmaiya-newsid-87375153

டிஸ்கி :

f9.jpg

'மனத்தையும் உடலையும் கடந்து இருக்கும் இறைவனை அறிய வேண்டுமானால் மனத்தை கடந்து செல்ல வேண்டும்.அப்போது தான் இதற்கான விடை கிடைக்கும்.

மனத்தை கடந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை அறிய அப்போது மனம் இருக்காது."

டிஸ்கிக்கு டிஸ்கி

ஆக குறைந்த கருத்துகளை இந்த திரியில் எழுதி ஊக்குவித்த தோழர்கள் நுணாவிலான் , புங்கையூரான் ஆகியோரையும் காணவில்லை..😢

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரணத்திற்கு பின்னான அனுபவம் ராமணருக்கு வாய்த்ததா..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் துகளா ஆன்மா.?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலில் உயிர் எங்குள்ளது.?

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மா என்றால் உணர்வா..?

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

"தற்கொலை" செய்து கொண்டால் ஆன்மாவிற்கு மறுபிறவி உண்டா.?

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

முற்பிறவி பற்றி கதைத்த குழந்தைகள் ..💐

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனம் - ஆன்மா .. 

universe.jpg பிரபஞ்ச #இரகசியம் .

1. ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம்

2. இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ அதுவே இன்றைய பிரபஞ்சம்

3. இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் புதைந்து கிடக்கிறது அதுவே பிரபஞ்ச மனது

4. பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே

5. பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம்

6. இயற்கை எதை உணர்கிறதோ அதை மனத்தின் வழி கட்டமைக்கிறது

7. நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கபட்டது எனவே நாமும் இயற்கைதான்

8. நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கபடுகிறது

9. மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம், அண்டத்தில் உள்ளதே இந்த பிண்டத்தில் ..

10. பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த மனித மனமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது

11. மனித மனம் இப்படி பல்வேறு மாயையில் சிக்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால் பிரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது

12. கவனம் குவியும் இடத்தில் அதை நோக்கி சக்தி பாயும்.

13. எதை பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் .

parallel-universe01-750x375.jpg

14. நாளை  உனக்கு நடக்க போகும் விபத்தும் என்றோ ஓர் நாள் ஏற்பட்ட நிகழ்ச்சியின் தாக்கமே

15. மனது எண்ணங்களை உருவாக்கி உடல் அணுக்களை குறிப்பிட்ட அலைவரிசையில் அதிர செய்து பிரபஞ்ச அணுக்களின் தன்மையை மாற்றி தனக்கு தேவையானதை வடிவமைத்துக் கொள்கிறது .

16.  மனிதன்தான் இயற்கையால் கட்சிதமாக வடிவமைக்கபட்ட மேம்பட்ட சக்தி என்பது புரிகிறது .

https://m.facebook.com/ulmugapayanam/photos/a.1563139250678600/2394401157552401/?type=3&source=57

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பிரியும் முன் செய்ய வேண்டுபவை என்ன.?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.