Jump to content

பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்


Recommended Posts

பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்

கலாநிதி க. கைலாசபதி

பகுதி 1

---------------------------------------------------

பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்

கலாநிதி க. கைலாசபதி

--------------------------------

கையுறை

வழிவழிவரும் கீழைத்தேயக் கல்வியையும் மேலைநாட்டு ஆராய்ச்சி முறைகளையுமிணைத்து அமைதி கண்டு விளங்கிய ஆசான் கலாநிதி. க.கணபதிப்பிள்ளை அவர்களுக்கு இச்சிறு நூல் கையுறை.

---------------------------------------

முதல் பதிப்பு

முகவுரை

இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகள் பல்வேறு காலங்களில் எழுதப்பட்டவை: தனித்தனிக் கட்டுரைகளாக வெளி வந்தவை. எனினும் அவற்றிற்கிடையே ஓர் ஒற்றுமை நிலவுகிறது என எண்ணுகிறேன். பொருளாதார நிலை என்னும் அடித்தளத்தின் மேலேயே கலை, இலக்கியம், மொழி, தத்துவம், சமயம் முதலாய மேற்றளங்கள், அதாவது வடிவங்கள் அமைகின்றன என்னும் நம்பிக்கையே கட்டுரைகளுக் கூடாக இழையோடி அவற்றிற்கு ஒருமைப்பாட்டை அளிக்கிறது.

பல்கலைக்கழகத்திலே பயின்றபோதும் பின்னர் ஆசிரியனாக அமர்ந்தபோதும், தமிழிலக்கியம், தமிழர் வரலாறு, திராவிடர் நாகரிகம் ஆகியவற்றைப் படிக்கவும் அவை குறித்துச் சிந்திக்கவும் நேர்ந்தது. எமது கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகள் பற்றி எழுதுவோரிற் பெரும்பாலானோர் அவற்றிற்கும் சமுதாயத்திற்குமுள்ள பிணைப்பை வற்புறுத்துவதில்லை; அல்லது வேண்டுமென்றே கூறுவதில்லை. "இந்நிலையில் மாணவருக்குப் பயன்படுமெனக் கருதி அவர்கள் வெளியிடும் ஏடுகளிலே அவ்வப்போது சில கட்டுரைகள் எழுதி வந்தேன். எளிமையாக எழுதவும் முயன்றிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இக்கட்டுரைகள் பரிžலனைகளே. இத்துறைகளில் இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து எழுத வேண்டும் என்பது என் அவா.

தமிழிலக்கியம் கற்பிப்பவன் என்ற காரணத்தால், பெரும்பாலான கட்டுரைகளிலே 'இலக்கியச் சார்பு' தென்படும். அது தவிர்க்க முடியாததொன்றே. ஆயினும் இலக்கிய உலகிற்கு அப்பாலும் எனது பார்வை சென்றிருப்பதைக் காணலாம். மற்றெல்லாத் துறைகளைப் போலவே எமது இலக்கிய உலகிலும் மூட நம்பிக்கைகள் நிறையவுள்ளன. விஞ்ஞான நோக்குடனும் துணிவுடனும் பிரச்சினைகளை அணுகிளாலன்றி நாம் முன்னேறப் போவதில்லை. சமூகவியல், மனிதவியல், அகழராய்ச்சி, வரலாறு இலக்கியத்தை ஆய்வது இன்றைய நிலையில் மிகவும் பயனுள்ள செயல் என்பது எனது கருத்தும் நம்பிக்கையும். அதன் வெளிப்பாடே இக் கட்டுரைகள் என்று கூறலாம்.

உதிரியாகக் கிடந்த இக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும்படி அடிக்கடி தூண்டியவர் நண்பர் செ.கணேசலிங்கம். விடாப்பிடியாக நின்று வேலை வாங்குவதிற் கைதேர்ந்தவர் அவர். அவருக்குப் பெரிதும் கடப்படடையேன். பல்லாண்டுகளாக எனது இலக்கியத் தோழனாக இருந்துவரும் திரு.கா. சிவத்தம்பி M.A., ஒரு சாலை மாணவருமாதலின் உரிமையுடன் எனது எழுத்துக்களை விமர்சிப்பவர்; குறைநிறை கூறுபவர். கட்டுரைகளைத் தொகுக்குங்கால் ஆலோசனைகள் கூறியவர். அவருக்கு நன்றி கூறுவது கடன். இக்கட்டுரைளை வெளியிட்டுதவிய ஏடுகளின் ஆசிரியருக்கும் எனது நன்றி உரியதாகும்.

பேராதனை

6.12.66 க.கைலாசபதி

------

பொருளடக்கம்

பக்கம்

முதல் பதிப்பு முகவுரை IV

"தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி..." 1

அழிவும் ஆக்கமும் 20

வீர வணக்கம் 35

பேய் மகளிர் 49

நாடும் நாயன்மாரும் 71

அறமும் அரசியலும் 107

பேரரசும் பெருந்தத்துவமும் 123

பொய்மையும் மெய்ம்மையும் 169

--------------------------------------------------

"தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி..."

"சைவ சித்தாந்தமானது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரிய தமிழர் சமயமாகும். தென்னிந்தியாவிலே வரலாற்றுக் காலத்திற்க முற்பட்ட பழம் பெருஞ்சமயம் சைவம். ஆசிரியர் வருகைக்கு முற்பட்ட இச்சமயம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நிறைந்து விளங்குகிறது."

-டாக்டர் ஜி.யூ. போப்பையர்.

"தென்னாடுடைய சிவனே போற்றி" என்று திருவாசகம் போற்றுகின்றது. "சிவனொடொக்குந் தெய்வம் தேடினுமில்லை" என்று திருமந்திரம் கூறுகின்றது. எனினும் சைவ சமய வரலாற்றைத் தேடி நாம் பின்னோக்கிச் செல்லும்போது தென்னாட்டை விட்டுச் சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கிறித்துவிற்கு முன் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு சிற்ப்புற்று விளங்கிய நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு. சக்தி வழிபாடு, சிவ (பசுபதி) வழிபாடு முதலியன சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞரின் துணிவாகும்.

சிந்துநதி தீரத்திலே அகழ்ந்து 'கண்டு பிடிக்கப்பட்ட' சில சித்திரங்கள், களிமண்படிவங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த சேர் ஜோன் மார்ஷல் மேல் வருமாறு கூறினார்.

"யோகிகளுக்கெல்லாம் தலையாக யோகி சிவன். அதனாலேயே அவருக்கு மஹாதபஸ், மஹாயோகி என்னும் பெயர்கள் அமைந்தன... சைவத்தைப் போலவே யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும் ...சிவன் தலையாய யோகி மட்டுமல்லர்; விலங்குகளுக்கெல்லாம் தலைவர்; (பசுபதி) சிவனின் இந்தப் பண்பினையே சிவனைச்சுற்றி நான்கு மிருகங்கள் நிற்பது காட்டுகின்றது. யானை, புலி, காண்டாமிருகம், எருது சிவனைச் சுற்றி நிற்கின்றன.... சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள். பிற்காலத்தில் சிவனின் விசேட முகூர்த்தமொன்றைக் குறித்தும் திரிசூலமாக மாறியது. அவற்றையெல்லாம் நோக்கும்பொழுது பிற்காலத்திலே சிவனுக்கமைந்த பல அம்சங்கள் தோற்ற நிலையிலே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன என நாம் கருதலாம்."

சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள் சிந்துவெளி நாகரிகத்திலே காணப்பட்டாலும், சிந்துவெளி நாகரிகத்திலே முதலிடம் பெற்று விளங்கியது பெண் தெய்வ (அன்னை) வழிபாடே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்ஷல், முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும், மூன்றாவதாக இலிங்கம் அல்லது குறியையும் எடுத்துக் கூறியுள்ளார்.

சிந்துவெளி நாகரிகத்தை வளர்த்த மக்கள் பெண் தெய்வ வழிபாட்டை யுடையாரயிருந்தனர் என்பது விந்தையான தன்று. சிந்துவெளி நாகரிகத்துச் சமகாலத்தனவான சிரியா, சின்னாசிய, எகிப்திய நாகரிகங்களிலும் பெண் தெய்வங்கள் முக்கியமானவையாக விளங்கின. மார்ஷல் புதை பொருளாராய்ச்சியின் விளைவாகச் சில கருத்துக்களைக் கூறுமுன்னர் சந்தா1 என்பவர் இவ்வுண்மையைத் தொட்டுக் காட்டியுள்ளார். அவர் கூறினார்:

"சிரியாவிலே அகத்தாத் என்னும் தத்துவமும், சின்னாசியாவிலே சிபெலேயும், எகிப்திலே இசிஸ் கோட்பாடும் தோன்றிய அதே சமுதாய நிலையிலேதான் இந்தியாவில் சக்தி வழிபாடு தோன்றியிருத்தல் வேண்டும்."

பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர் காட்டும் உண்மையாகும்.2 சிரியா, சின்னாசியா, எகிப்து முதலிய இடங்களில் பெண்தெய்வ வழிபாடு தோன்றியதற்கும் இத்தகைய சமுதாய முறையே காரணமாகும். பண்டைய திராவிட மக்களிற் பெரும்பகுதியினர் தாய்வழி உரிமை, தாயமுறை முதலியவற்றைக் கடைப்பிடித்தனர். இதன் காரணமாகப் பெண்தெய்வ வழிபாடு திராவிட மக்களிடையே பெரு வழக்காயிருந்தது என்று சமூகவியல் அறிஞர் கொள்வர்.

சிவசம்பந்தம் உடையதால் பற்றியே தமிழர் மதம் சைவம் என்னும் பெயர் பெற்றது. சிவம் என்பதற்கு மங்கலம், சுகம், பாக்கியம், பேரானந்தம் என்னும் இன்பப் பொருளை யெல்லாம் அடக்கும் தத்துவார்த்தப் பொருள் கூறப்படும்.3 எனினும் பிற்காலச் சமயத்திலே சிவம் ஆண்தெய்வமாகவே வழிபடப்பட்டு வந்துள்ளது. சிவன் என்னும் ஆண்தெய்வ சம்பந்தமான சைவ சமயத்தின் தோற்றம் தேடிச் சிந்துவெளி நாகரிகத்தை அடையும் நாம், அங்கு அன்னைத் தெய்வமே முழுமுதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். இதனைச் சிறிது கவனித்தல் தகும்.

கிறித்துவிற்கு முன் 2,500 ஆண்டளவில் சிறப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகம் கி.மு.1,500-ம் ஆண்டளவில் žர்குலைந்து சிதைவுற்றது. சிந்துவெளி நாகரிகத்துக்கும் திராவிடருக்கும் நெருங்கிய தொடர்புண்டு எனச் சில வரலாற்றாசிரியர் கூறுவர். அக்கூற்றுக்குச் சாதக பாதகமான சான்றுகள் உள. முடிந்த முடிவான உண்மையென்று அறுதியிட்டுக் கூறல் முடியாது. எனினும் சிந்துவெளி நாகரிகத்தின் சிதைவிற்குப் பின்னர் வரலாற்றுத் தொடர்ச்சியானது அறுந்து காணப்படுகின்றது. கிழக்குப் பஞ்சாப்பில் உருபர் என்னுமிடத்திலும், சௌராட்டிரத்தில் ரங்கபூர், லொதால் என்னுமிடங்களிலும் சமீப காலத்தில் அகழ் ஆராய்ச்சி நடை பெற்றதன்பயனாகச் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிப் பின்னலின் சின்னங்கள் காணப்பட்டன என்பது உண்மையே. எனினும் தென்னிந்தியாவிலே சிந்து வெளி நாகரிகத்தின் தொடர்ச்சியோ, வளர்ச்சியோ, தொடக்கமோ இதுகாலவரை காணப்படவில்லை.

அதாவது மொகஞ்சதரை, ஹரப்பா, லொதால் முதலிய இடங்களில் காணப்பட்ட நகர நாகரிகம், இதுவரை தென்னிந்தியாவில் அகழ் ஆராய்ச்சியின் மூலம் புலப்படவில்லை.

வெளித் தோற்றத்திற்குப் புலப்படும் நகர நாகரிகச் சின்னங்கள் தென்னிந்தியாவிற்கும் சிந்துவெளி நகரங்களுக்கும் நேரடியாக தொடர்பைக்காட்டாவிட்டாலும், சமய நம்பிக்கை சம்பந்தமான தொடர்புகள் இருப்பதையே இங்கு நாம் கவனிக்க வேண்டும். பெண்தெய்வ (சக்தி) வழிபாடும் மூலச்சிவ வழிபாடும் இருந்ததைப் பார்த்தோம். இவற்றின் பிணைப்பாக இலிங்க வழிபாடு நிலவியது. மொகஞ்சதரையிலும், ஹரப்பாவிலும் கணக்கற்ற, நீண்டு குவிந்த அல்லது முக்கோணக் கற்களும் களிமண் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டன. மார்ஷல் அவற்றைச் சிவலிங்கங்கள் என எடுத்துக்காட்டினார். இலிங்க வழிபாடானாது உழவுத் தொழிலை மேற்கொண்டிருந்த புராதன நாகரிகங்களிற் காணப்படும் வழிபாட்டு முறையாகும். "நீண்டு குவிந்த கல்வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும், அக்கல்லைச் சூழ்ந்தவட்டக் கல்வடிவு பெண்குறியின் அடையாளமாகவுமே முன்னையோராற் கருதப்பட்டது"4 சிந்நுவெளி நாகரிகத்திற்குச் சமமான பிற நாகரிக மக்களிடையும் இவ்வழிபாட்டு முறை நிலவியது. ஆண் பெண் குறிச் சேர்க்கையே பண்டைக் காலந்தொட்டு இலிங்க வடிவில் அமைந்தது என்பது பிற்காலச் சைவ சித்தாந்த சாத்திர நூலானும் அறியக்கிடக்கின்றது.

"சக்தியுஞ் சிவமுமாய தன்மையில் வுலகமெல்லாம்

ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியுமாக

வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம்

இத்தையும்அறியார்பீடலிங்கத்

Link to comment
Share on other sites

நந்தி, நாகம் முதலியவற்றோடு (இவை ஆரியருக்கு முற்பட்ட குலங்களின் சின்னங்கள்) தொடர்பு படுத்தப்பட்டுச் சிவன் தோன்றும் போது பௌராணிக வழக்கு வலுத்துவிடுகிறது. இந்தக் காலப்பகுதிற்குரிய சிவனையே தமிழிலக்கியங்களிலே நாம் காண்கிறோம்.

பத்துப்பாட்டிலே நான்கு இடங்களிற் சிவனைப் பற்றிய குறிப்புகளைக் காண்கின்றோம்.26 அக்குறிப்புகள் பௌராணிக மரபை நன்குணர்ந்து காணப்படுகின்றன. முப்புரம் எரித்தமை, கண்டத்திலே நீலநிறம் பெற்றிருத்தல், திங்களைத் தலையிலே தரித்தமை, நெற்றிக்கண் உள்ளமை, இடபக்கொடியை உடையராயிருத்தல், உமையொரு பாகனாயிருத்தல், ஐம்பூதங்களைப் படைத்தவனாயிருத்தல், ஆகியன சங்க இலக்கியங்களிலே சிவனைப்பற்றிக் கூறப்படும் குறிப்புகள். முக்கண்ணனாகிய சிவனது கோயில் ஒன்றும் புறநானூற்றிலே கூறப்படுகின்றது. எனினும் தெய்வங்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை அளவுகோலாகக் கொண்டு பார்க்கும்போது சங்க இலக்கியங்கள் காட்டும் அக்காலப் பகுதியிலே சிவ வழிபாடு மக்கள் மத் யிலே "அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை"என்னும் முடிவிற்கு குடிகளாகவும் (Tribes and Clans) மக்கள் வாழ்ந்த புராதனக் கூட்டுமுறை வாழ்க்கையிலே கொற்றவை, வேலன், வருணன் முதலிய தெய்வங்களே சிறப்புடையனவாயிருந்தன. பூசாரிகள், குருமார் எவருமின்றி மக்கள் பலியிடுதல், வெறியாடல் முதலிய முறைகளினால் தாமே கூட்டாக வழிபட்ட நிலையிலே சமுதாயக் கடவுளர் தேவையாயிருந்தனர். ஓரளவிற்கு, இந்திரன், பிரஜாபதி முதலிய தெய்வங்கள் வேதகால ஆரியருக்கு உகந்தவராயிருந்ததைப் போல, சமூகத்திலே தனி உடைமையும், ஆட்சி நிலைமையும் தோன்றியபோது தனிப்பட்ட இட்ட தெய்வங்களும் வகுப்புகளுக்கான தனிப்பட்ட தெய்வங்களும் உருப்பெற்றன. அந்த நிலையிலேயே சிவன், விட்டுணு முதலிய தெய்வங்கள் சிறப்புறத் தொடங்கின. கோயில் வழிபாடும், புறச்சமயங்களின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பக்திமார்க்கமும், சமுதாயத்திலே ஏற்பட்ட வர்க்க முரண்பாடுகளும் தனித்தெய்வங்கள் தோன்றுவதற்கு அனுசரணையாக விருந்தன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் இப்பண்புசங்கமருவிய காலத்தில் அதாவது கிறித்துவிற்குப் பின் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் தோன்றுகிறது. சிவன், விட்டுணு ஆகிய இருதெய்வங்களைப்பற்றி இன்னோர் உண்மையையும் நாம் இவ்விடத்தில் அவதானிக்கலாம். சிவன், விட்டுணு ஆகிய இரு தெய்வங்களும் சிறப்புற்ற காலையிலே, அவ்விரண்டும் தமக்கு முன்னிருந்த பல சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், தெய்வங்களையும் தம்முடன் பல்வேறு வகைகளிலே தொடர்புபடுத்தி இணைத்து ஈடுணையற்ற தனிப்பெருந் தெய்வங்களாகப் பரிணமித்தன. இதற்கு கருவியாகப் பிராமணர் அமைந்தனர். ஆரியரல்லாத கூட்டத்தைச் சேர்ந்த, கிருஷ்ண (கறுப்பு)னும், சுமேரியத் தெய்வங்களோடு ஒப்பிடக்கூடிய நாராயண, வேதக்கடவுள், விஷ்ணு ஆகிய மூன்று வேறுபட்ட தெய்வங்களும் மகாபாரதத்திலே ஒரு தெய்வமாக இணைக்கப்பட்டு ஒன்றுசேர்க்கப்படுகின்றன. அன்றைய இந்தியாவிற்கு இத்தகைய முயற்சிகள் கலாசார ஒருமைப்பாட்டை அளித்தன.27 இதைப்போலவே சிவனும் புதிய பழைய பண்புகளையெல்லாம் சேர்த்துத் தனிப்பெருந் தெய்மாகத் தோன்றுவதையும் நாம் கவனிக்க வேண்டும். சிந்துவெளி நாகரிகத்தில் உதித்த சிவன் மிருகங்கள் புடைசூழப் பசுபதியாகி, கூட்டு வாழ்க்கையில் கணங்கள் சூழப் பூதகனங்களுக்குத் தலைவனாகி, பழைய பெண் தெய்வத்தை மணந்து மலைகள் மணாளனாகி, பழைய பெண் தெய்வத்தை மணந்து மலைமகள் மணாளனாகி, மாதொரு பாகனாகி, கார்த்திகேயன் தந்தையாகி, பழைமையையும் புதுமையையும் தன்னுள்ளடக்குவதை நாம் காணலாம். தனியுடைமையை யடிப்படையாகக் கொண்டு சைவமும், வைணவமும் செழித்தோங்கிய படியாற்றான், உடைமைகளுக்கு எதிராக இருந்த சமண, பௌத்த சமயங்களுடன் மோதின. எனினும் இந்திய வரலாற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது காலப்போக்கிலே சிவ வழிபாடு பெரிய நிலக்கிழார்கள், பிரபுக்கள் முதலியவர்களுக்கு உரியதாவும், வைணவம் சிறுபொருள் உற்பத்தியாளர், விவசாயிகள் முதலியோர் மத்தியில் பெருவழக் குள்ளதாயும் இருப்பதைக் கவனிக்கலாம். சிவ-வைணவ மதப்பூசலின் எதிரொலி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது.28

சங்க காலத்தைப் பார்க்கும் போதும் இவ்வுண்மை தெளிவாகும். திராவிடரின் ஆரியருக்கு முற்பட்ட, வேறுபட்ட வழக்குகளும், ஆரியரின் வேதவழக்கும் முட்டிமோதிக்கலப்பதைச் சில சங்ககால, சங்கமருவியகால இலக்கியங்கள் எமக்குக் காட்டுகின்றன என்பதுண்மையே. அது இயல்பான கலாசார இயக்கவிதியின் பாற்படுவது, எனினும் சமணம், பௌத்தம் தமிழ்நாட்டிலும், மெல்ல மெல்லப் பெருவழக்குற்றத்தைத் தொடர்ந்து வைதிக சமயமும் வலுவடைவதற்குரிய வழி வகைகளைக் கண்டது. அந்தப் பண்பின் விளைவாகவே பக்திமார்க்கமும், இட்டதெய்வமும், தனிப்பெருந் தெய்வமும் தமிழகத்திலும் தோன்றின. காரைக்காலம்மையார் பிரபந்தங்களில் தெளிவாக இப்பண்பினைக் காணலாம். அதற்கு முதற்படியாகப் பத்துப் பாட்டிலும் "இரட்டைக்" காப்பியங்களான சிலப்பதிகாரம்-மணிமேகலையிலும் சமயங்கள் அருகருகே யிருந்து "போட்டி"யிடுவதை நாம் காணலாம். கோயில்கள். விகாரைகள், பள்ளிகள் பெருமளவில் கட்டப்பட்டதும் போட்டிக்கு ஏதுவாக இருந்தது. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலே அந்தணர் பள்ளியும், சமணப்பள்ளியும், பௌத்தப்பள்ளியும் சிறப்புற்று விளங்கும் மதுரை மாநகரை நாம் காண்கின்றோம். சிலப்பதிகாரத்திலும் இதன் தருக்க ரீதியான வளர்ச்சியைக் காணலாம்.

இவ்வாறு "உடனிருந்து வாழும்' நிலையைப் பயன்படுத்திச் சமணமும், பௌத்தமும் ஒருபடி மேற்சென்றபோதுதான் வைதிக சமயங்களுக்கும் அவைதிக சமயங்களுக்கும் இடைய நேரடியான துவந்தயுத்தம் மூண்டது. அதற்குரிய அடிப்படைக் பொருளாயதக் காரணங்களை ஆராய இது சந்தர்ப்பமன்று. எனினும், ஒன்றுமட்டும் கூறலாம்.

ஓயாத போர், கொள்ளை, மரணம், கட்டுப்பாடற்ற ஆண்பெண் உறவு. மிதமிஞ்சிய மது, மாமிச ஊண் முதலியவற்றின் இருப்பிடமான புராதனத் தமிழகம், சமணம், பௌத்தம் ஆகியன கொண்டு வந்த சாந்தம், சமாதானம், ஒழுக்கம், பெண் வெறுப்பு, அரசுநெறி, கட்டுப்பாடு, புலால் மது வெறுப்பு, பொருளாசை வெறுப்பு முதலிய பண்புகளைத் தொடக்கத்தில் இலகுவாகவும் விருப்பத்துடனும் ஏற்றது. காலத்தின் தேவையை, வந்த சமயங்கள் நிறைவேற்றின. எனினும் இதே துறவறச் சமயங்கள் ஒழுங்கு, ஒழுக்கம் என்னும் அடிப்படையில் மன்னருக்கு ஆதரவு அளித்துத் தமது பள்ளிகள், விகாரைகள் முதலியவற்றிற்காகப் பெரும் அளவில் பொருளும் நிலமும் சேர்த்த போது-தமது முற்போக்கையிழந்து போது- அது தமிழக மக்களுக்குச் "சுமை"யாக மாறியது. பள்ளிகள் பெரிய நிலவுடைமை நிறுவனங்களாக மாறின. சமணத்தையும் பௌத்தத்தையும் சிறப்பாக ஆதரித்தவர் அக்காலத் தமிழக வணிக வர்க்கத்தினர். ஏனெனில் பலம் வாய்ந்த அரசாட்சியில் பொருளீட்டி வாணிபஞ் செய்யும் வாய்ப்பு இருந்தது. அதே சமயத்தில் கொல்லாமையையும் கடைப்பிடிக்க முடிந்தது. நிதிக்குப்பை நிறைந்த செல்வர் சமணத்தை ஆதரிப்பதைச் சிலப்பதிகாரம் காட்டும். சமண, பௌதத பள்ளிகள்பெரும் நிலவுடைமை நிறுவனங்களாகிச் செல்வாக்குப் பெற்றிருப்பதைப் பல்லவ அரசன் மகேந்திரவர்மன் எழுதிய அங்கதநாடக நூலாகிய "மத்த விலாசப் பிரகசனம்" என்னும் நூல் மூலம் அறியலாம். தமது செல்வாக்கினால் அவர்கள் (சமண பௌத்தர்) நீதி பரிபாலனத்திற்கூடத் தலையிட்டனர் எனத் தெரிகிறது.

சமயக்குரவர் சமண பௌத்தரைத் தாக்கும் போது காணப்படும் வேகத்தின் அடிப்படை இங்கேதானிருக்கிறது. "ஆனைமாமலை ஆதியானிடங்களிற் பல அல்லல் சேர் ஈனர்கள்" என்றும், நாயன்மார் பின்னார் தாக்குவது இதன் காரணமாகவே என்பது தெளிவு.

இதற்கு முன்னோடியாக, விடிவெள்ளியாகத்தான் காரைக்காலம்மையார் தமது திருப்பதிகங்களிலே சிவனைக் கருணையின் பிழம்பாகவும், கோபத்தின் சின்னமாகவும், அழிவின் சக்தியாகவும் கொண்டாடுகின்றார். பொது மக்களும் பங்கு கொண்டு வழிபடும் வண்ணம் சிவனது பண்புகளைத் தமிழகத்து வழிபாட்டு முறைகளுக்கேற்ப பாடுகிறார் அம்மையார். அதுமட்டுமன்று. சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலே வரிப்பாடல்களைக் காணப்படும் கிராமியக் கவிதைகளையும் அனுசரித்துக் கட்டளைக் கலித்துறை விருத்தம் முதலிய பாமரச் சுவை பொருந்திய இசைப்பாடல்களையும் பாடத் தொடங்கினார். சைவ சமய மறுமலர்ச்சி பக்திப் பிரவாகமாகத் தமிழகத்திலே ஓடப் போகிறது என்பதைக் காட்டி நிற்பவர் அம்மையார். அவர் வழியிலேயே நாயன்மார் சென்று பக்தி நிலையை உச்சிக்குக் கொண்டு சென்றனர். தமிழகத்திலே பக்தியானது பொருளாதார-சமூக-அரசியல்-சமயப் பேரியக்கமாக மாறியது. அது கண்டு மன்னரும் பக்கம் மாறினர்.

"வீடறியாச்சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த

காடவனும் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப்

பாடலிபுத்திரத்தி லமண் பள்ளியொடு பாழிகளுங்

கூடவிடித்துக் கொணர்ந்து குணதர வீச்சரமெடுத்தான்"

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப் பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கள் கட்டினான் என்று பெரிய புராணம் பாடும். எனினும் அது பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்துக்குரிய உண்மையாகும்.

"ஆபுரித்துத் தின்றுழலும் புலையரேனும்

கங்கைவார்சடைக்கரந் தார்க்

கன்பராகில் அவர்கண்டீர்

நாம் வணங்கும் கடவுளாரே"

என்னும் நிலை ஏற்பட்டதும், சிவன் தென்னாடுடைய தனிப் பெருந் தெய்வமாகமாறி விடுகிறான்.

பெயர் தெரியாச் சிந்துவெளிக் கடவுள் பெயரும் குணமும் பெற்றுச் சிதம்பர நாதனாகி விடுகிறான்.

அடிக்குறிப்புகள்

1. Chandra, R.P. Indo-Aryan Races, P.150

2. Encyclopaedia of Religion and Ethics, P 115

3. மறைமலையடிகள், சைவசித்தாந்த ஞானபோதம், பக்.18

4. மறைமலையடிகள் சை.சி.ஞா.பக்.217. எனினும் அவர் சிவலிங்க உண்மைக்கு வேறு விளக்கங்கொடுக்க முனைவர். அது வரலாற்று நோக்கோடு இயைபற்றுக் காணப்படுகின்றது.

5. K.N. Sastri: New Light on the Indus Civilizaiton p.15

6. D.D. Kosambi: An introduction to the Study of Indian History. P.60

7. G.Subramaniapillai: Tree worship and Ophiolatary p.3

8. S.K. Dikshit: The Mother Goddess p.2

9. Wheeler: The Indus Civilization 18 Kosambi ISIH p.68. D.Chattopadhyaya; Lokayata p.58.

10. V. Gorden Child: The Aryans

11. C.f. Haimendorf: Man in india xxix (1949) 152-57

12. சு.வித்தியானந்தன்: தமிழர் சால்பு பக்.106

13. J.Marshal: Mohenjodaro and the Indus Civilization Vol.1 p.51

14. O.R. Ehrenfels: Mother Right in India p.79-80

15. வித்தியானந்தன் : தமிழர் சால்பு பக்.121

16. திருமுருகு: அடி 258

17. திருமுருகு: 259

18. பெரும்பாணா: 458-9

19. கி.லக்குமணன்: இந்திய தத்துவ ஞானம பக்.369

20. C.V. Narayana Iyyer: Origin and Early History of Saivism in South India p.105

21. பி.கோதண்டராமன்: "பண்டைத் தமிழரின் வெறியாடடு" கோபாலகிருஷ்ணமாசார்யர் அறுபதாண்டு நிறைவுவிழா மாலை பக்.3-166

22. கோதண்டராமன்: பக். 3-167

23. வித்தியானந்தன் பக்.124

24. வித்தியானந்தன்: பக்.115

26. வித்தியானந்தன்: பக்.126

27. Kosambi: ISIH: p.245-46

28. Kosambi: ISIH : p.246

-------------

http://noolaham.net/library/books/01/97/97.htm

Link to comment
Share on other sites

நல்லதொரு தகவல்களை இணைத்து இருக்கின்றீர்கள் நாரதர்.

இதைப்பற்றி கதைக்க அவ்வளவாக தெரியாது என்றாலும் மக்களின் வாழ்க்கை நிலைக்கு ஏற்பற்ற தங்கள் தெய்வங்களையும் அமைத்து வாழிப்பாட்டு இருக்கிறார்கள் என்பது விளங்கின்றது.

இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

பேரரசும் பெருந்தத்துவமும்

தென்னிந்தியாவிலே சோழப் பேரரசு தோன்றிய காலம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலப் பகுதியாகும். கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள நிலப்பகதிகள் யாவும் முதன் முறையாக வலுவுள்ள தமிழ்ப் பேரரசொன்றின் கீழ் அமைந்து சிறப்புமிக்க மாவட்டங்களாக ஒரு குடைக் கீழ் ஆளப்பட்டன. சோழப் பேரரசின் புகழ் உச்ச நிலையில் பட்டொளி வீசிய போது கங்கையும் கடாரமும் கலிங்கமும் இலங்கையும் அதன் அடிபணிந்து நின்றன. அராபியரும் žனரும் அதன் வாணிபச் சிறப்பிற் பங்கு கொண்டிருந்தனர் இத்தகைய சிறப்புமிக்க காலப்பகுதியிலேதான் தமிழகத்திலே "சைவ சித்தாந்தம்" என்னும் பெருந்தத்துவம் சாத்திர வடிவம் பெற்றது. சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு. அவற்றுள் தலையாயது எனக் கொள்ளப்படும் சிவஞானபோதம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே எழுந்தது. மெய்கண்டார் காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டென்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை1. திருவுந்தியர், திருக்களிற்றுப் படியார் என்னும் இரண்டனைத் தவிர, ஏனைய சித்தாந்த சாத்திர நூல்கள் பதினொன்றும் சிவஞான போதத்தின் வழி வந்தனவே. எனவே தென்னகத்திலே சைவ சித்தாந்தத்தின் முறையான வரலாறு ஒருவிதத்தில் இங்குதான் தொடங்குகிறது எனக் கொள்ளலாம்.2 பேரரசு ஒன்று நிலவிய காலத்திலே பெருந்தத்துவம் ஒன்றும் வடிவம் பெற்றவை குறிப்பிடத்தக்கவை உண்மையாகும்.

பல்லவர் காலத்திலே பொங்கிப் பிரவகித்த பக்தி இயக்கமானது ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைத் தோற்றுவித்தது. ஆனால் திருவுந்தியாரோடு தோத்திர முறைமை நீங்கிச் சாத்திர முறைமை தோன்றுகின்றது.3 திருவுந்தியாரை முழுமையான சாத்திர நூலெனக் கொள்ளுதல் முடியாது. திருக்களிற்றுப் படியார் உந்தியாரினும் அதிகமாகச் சாத்திரப் பண்பு அமையப் பெற்றது. சிவஞான போதமே முழுமையான சாத்திரப் பெருநூலாகம். எனவே இவற்றுள் ஒருவிதமான வளர்ச்சியை நாம் காணலாம். தத்துவத் துறையில் இவ்வகையான வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்த பொழுது சமய நிறுவனங்களும் உருமாறிக் கொண்டிருந்தன. இதுபற்றிப் பேராசிரியர் நீல கண்ட சாத்திரியார் மேல்வருமாறு கூறியுள்ளார்.

"......மத்திய கால இந்து சமயம் தென்னிந்தியாவிற்கு அளித்த இருபெருங் கொடைகள் கோயிலும் மடமும் ஆகும். சோழரின் ஆட்சிக்காலப் பகுதியிலேயே இவ்விரு நிறுவனங்களும் மெல்ல மெல்ல வளர்ந்து சூழ்நிலைக்கேற்க மாற்றுமடைந்துள்ள; இவை பொதுமக்களின் கற்பனையைக் கவர்ந்தன; பணக்காரரின் ஆதரவைப் பெற்றன. இக்கவனமும் ஆதரவும் கிடைக்கவும், இந்நிறுவனங்கள் பௌத்த விகாரைகளையும், சமணப்பள்ளிகளையும் மிஞ்சியெழுந்து, உறுதியான நிலைமையை அடைந்தன; இன்றுவரை இந்த உயர்நிலையை அவை பெற்றுவந்துள்ளன; சியாலயன் மரபுச்சோழர் ஆட்சியிலே தென்னிந்தியாவிற் சைவசமயத்தின் பொற்காலம் தொடங்குகிறது எனக் கூறுலாம்."4

பேராசிரியர் சோழர்கால வரலாற்றறிஞர் முதுபெரும் புலவர். அவர் கூற்று நமது ஆழ்ந்த கவனத்திற்குரியது. சோழர் காலத்தில் உயர் நிலைசெய்திய சைவம், பெரிய கோயில்களையும் மடங்களையும் கண்டது; புதிய சூழ்நிலைக்கேற்ப மாறியது. நுணுக்கமான முறையிலே சோழர்காலப் பகுதியிலே சைவசமயம் பெற்ற சிறப்பையும் மாற்றத்தையும் கூறிவிட்டார் பேராசிரியர். ஆனால் இந்த நிலைமை ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்னுஞ் கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை. விடை காணு முயல்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

நமது கேள்விகளை முதலிலே தெளிவாக்கிக் கொள்வோம். பேரரசு ஒன்று தோன்றிய பொழுது உடனிகழ்ச்சியாகப் பெருந்தத்துவம் ஒன்றும் தோன்றியது தற்செயலாக ந€பெற்ற நிகழ்ச்சியா? அல்லது பேரரசிற்கும் அத்தத்துவத்திற்கம் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா? இருந்தால் அவ்வுறவு எத்தகையது? தத்துவம் தோன்றியதால் ஏற்பட்ட விளைவு யாது? அது மக்கள் வாழ்க்கையின் என்ன பாத்திரமும் பங்கு வகித்தது? இவையே நம்மை எதிர்நோக்கும் சில முக்கியமான கேள்விகள். வரலாறு என்பது தற்செயலாக நிகபம் சம்பவங்களின் கட்டுக்கணக்கு அன்று. சமுதாயத்திலே ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சிகள் சில திட்டவட்டமான நியதிகளுக்கேற்ப அமைகின்றன. சோழர் காலத்தில் ஏற்பட்ட இம்மாற்றங்களைத் தருக்க ரீதியான சில இயக்கங்களின் விளைவாக ஏற்பட்ட வளர்ச்சிகள் என்று நாம் காணமுடியுமாயின், நமது கேள்விகளுக்குத் தக்க விடைகள் கிடைத்துவிடும்.

சோழர் காலத்திற்திலேற்பட்ட மாற்றங்களை நன்கறிந்து கொள்ள வேண்டுமாயின் அவற்றிற்கு வித்திட்ட பல்லவர் காலத்திலிருந்து நாம் நமது ஆராய்ச்சியைத் தொடங்கல் வேண்டும். பல்லவர் ஆட்சிக் காலத்திலே தமிழ் நாடெங்கும் உயிர்த்துடிப்புள்ள இயக்கமொன்று நடந்தேறியது.5 அவ்வியக்கம் பெரும்பாலும் சமணராகவிருந்த வணிக வர்க்கத்தினருக்கும், வைதிகர்களாக (சிறப்பாகச் சைவராக) இருந்த நிலவுடைமை வர்க்கத்தினருக்கு மிருந்த பொருளாதார முரண்பாட்டின் விளைவாகும். பல்லவ மன்னர் சிலரும், பாண்டிய மன்னரும் சமண, பௌத்த மதத் தத்துவங்களுக்கு அடிமைப்பட்டு, வணிக வர்க்கத்தினருக்கு நாட்டின் பொருளாதார வாழ்விற் பெரும் பாத்திரத்தைக் கொடுத்திருந்த காலையில் நிலவுடைமை வர்க்கத்தினர், சமுதாயத்திலே கீழ் நிலையிலிருந்த பல சாதி மக்களையும் ஒன்று திரட்டி ஓரணியிலே நிறுத்திப் போர்" தொடுத்தனர். இந்த வர்க்கப் போரே, தத்துவ உலகில் சமண-சைவ மோதலாகத் தோன்றியது. "புறச்" சமயத்தவருக்கு எதிராகக் கலகக் கொடியை உயர்த்திப் பிரசார முழக்கஞ் செய்த அரனடியாரும், ஆழ்வாரும், தமிழகமெங்கும், தமிழுணர்ச்சியையும், தமிழ் நிலப்பற்றையும் பெருக்கினர். தமிழரல்லாரான பல்லவர் ஆட்சி புரிந்ததுவும், வடமொழி, பிராகிருதம் முதலிய பிறமொழிகள் அம்மன்னரால் உயர்த்தப்பட்தாகவும் பல்லவர் காலத்திலே தமிழ்நாட்டிலே ஒரு விதமான "தேசிய" உணர்வு தோன்றக் காரணமாக இருந்தன எனக் கொள்ளலாம். சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கோனாடு, மழ நாடு முதலியவற்றிலிருந்தெல்லாம் சிவனடியார்கள் பல்லவர் காலப் பக்தி இயக்கத்திலே பங்கு பற்றினர் என்பதைப் பெரிய புராணவாயிலாக நாமறிவோம்; அந்தணர், குறுநில மன்னர், சைவர், இடையர், ஏகாலியர், குயவர், சாலியர், பாணர், புலையர், செக்கார், சான்றார், நுளையர், வேடர், மாத்திரப் பிராமணர், மற்றும் மரபறியாதவர் பலரும் ஒன்று சேர்ந்து கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகி நின்றனர், என்றும், திருத்தொண்டர் புராணத்தின் மூலம் நாம் அறிகின்றோம். சுருங்கக் கூறின் தென்னகத்திலே வலுவுள்ள சோழராச்சியம் தோன்றுமுன்னரே அதற்கான தேவைகள் தோன்றிவிட்டன. அந்தத் தேவைகளின் காரணமாகவே சோழப் பேரரசு அமைந்தது எனலாம். விசயாலயன் அரசுகட்டிலேறிய காலத்திலே இது தொடங்கி விட்டது. இதனை இன்னுஞ் சிறிது விளக்குவோம். பல்லவர் காலத்திலே தமிழ் நாடெங்கும் நிலவுடைமையாளர் வணிகருக்கெதிராகப் போர் தொடுத்தனர்.

Link to comment
Share on other sites

அது எதற்காக?

சங்கமருவியகால மளவில் பெரு வளர்ச்சியுற்ற வணிக வர்க்கத்தினர் பல்லவர் காலத்தின் முற்பகதியிலே உச்ச நிலையையடைந்தனர். அவர்கள் பொருள் உற்பத்தியிலே நேரடியான பங்கு கொள்ளாத மக்கள் கூட்டமான வர்க்கமாக இருந்தனர். கிராமப் புறத்திலாயினுஞ்சரி. பட்டினங்களிலாயினஞ்சரி வாழ்ந்த விவசாயிகளுக்கும் சிறு கைத்தொழிலாளருக்கும் இடையில் இருந்து கொண்டு "தரகு" வேலை செய்த வர்க்கம் அது. தான் இல்லாமல் பிறருடைய பொருள் பரிவர்த்தனையாகா என்ற ஓர் இன்றியமையா நிலைமையை வணிக வர்க்கம் சிருட்டித்திருந்தது. அதன் சாக்கில் அது ஏராளமாகச் செல்வத்தைக் குவித்து அதற்கேற்ற அளவில் சமுதாயத்திலே செல்வாக்கும் பெற்றிருந்தது. அதுமட்டுமன்று.

பரிவர்த்தனை செய்வதற்கேற்ற வணிகப் பொருள்களை சரக்கை அதிகரிப்பதிலேயும், ஏற்றுமதி செய்யக்கூடிய சரக்குகளையே சிரத்தையுடன் உற்சாகப்படுத்துவதிலேயுமே முழு நோக்கமிருந்ததால், சிறு கைத்தொழில், விவசாயம், உணவுப் பொருள் உற்பத்தி முதலிய வாழ்க்கைக்குத் தேவையான பொருளுற்பத்தியில் அக்கறை செலுத்தவில்லை. சிலப்பதிகாரமும் திருக்குறளும் நாலடியாரும் நமக்குப் பல்வேறு வகைகளில் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. வளர்ந்துவரும் புதிய வணிக வர்க்கத்தின் பண்பு பற்றி பிரெடெரிக் ஏங்கெல்ஸ் தெளிவாக வருணித்துள்ளார்.6

"....அத்துடன் உலோகப்பணம் - அதாவது, நாணயங்கள் உபயோகத்திற்கு வந்தது. இத்துடன் உற்பத்தியிலீடுபடாதவன் உற்பத்தியாளன் மீதும் அவன் செய் பொருள்களின் மீதும் ஆட்சி செலுத்துவதற்கு ஒரு புதிய சாதனமும் வந்து சேர்ந்தது. சரக்குகளுக்கெல்லாம் சரக்காக, மற்றச் சரக்குகளையெல்லாம் தன்னுள் மறைத்து கொண்டிருக்கிற ஒரு சரக்குக் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. விரும்பத்தக்க எந்தப் பொருளாகவும் தேவைப்படுகிற எந்தப் பொருளாகவும் தன்னை உருமாற்றிக் கொள்ளும் தாயத்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. யாரிடம் அது இருந்ததோ, அவனே உற்பத்தி உலகை ஆண்டான்.... செல்வத்தின் அவதாரமாக இருக்கும் இத்துடன் ஒப்பு நோக்கும் போது மற்றச் செல்வ வடிவங்கள் எல்லாம், வெறும் நிழல்களே என்று நடைமுறையில் வியாபாரி நிரூபித்துக் காட்டினான்."

உண்மையிலே "வெறும் நிழல்களாக" இருந்த நிலவுடைமையாளரும், அவருக்கும் கீழே பழைய "நாகரிகத்தின் மிச்ச சொச்சங்களாக இருந்தவர்களுமே வியாபாரிகளுக்கு எதிராகப் போர் தொடங்கினர். இது தென்னகத்திற்குப் பொதுவாக இருந்த வர்க்க நிலைமை; அல்லது பொருளாதார அமைப்பு என்று கூறிக் கொள்ளலாம். இந்தப் போரின் முடிவில் நிலவுடைமை வர்க்கத்தினர் வென்றனர்; சமணர் கழுவேற்றப்பட்டது உண்மையோ, பொய்யோ, அவர்தம் தத்துவத்திற்கு ஆதாரமாக விளங்கிய வியாபாரிகள் வர்க்கம் நிலைகெட்து என்பது உண்மையே. இத்தகைய ஒரு வரலாற்றுக் கட்டத்திலேதான் சோழப் பேரரசு அரும்புகிறது. அதுபேரரசு ஆகுவதற்குரிய அத்தனை தேவைகளும் அங்கேயே காணப்பட்டன. அவை யாவை?

முதலாவது வெற்றிபெற்ற நிலவுடைமை வர்க்கத்திற்கு உறுதியும் நிலைபேறுமுள்ள அரசியல் நிறுவனம் ஒன்று தேவையாக இருந்தது. முத்தரையர் போன்ற பழைய குறுநில மன்னரும், நிருபதுங்கள் போனற பலவீனமான பல்லவரும், சிறீமாற சிறீவல்லபன் போன்ற பாண்டியரும், விசயாலயன் போன்ற சோழச்சிற்றரசரும், கங்கமன்னரும் பிறரும் ஓயாமல் போரிட்டுக் கொண்டிருப்பது பாதகமானச் செயலாக்கப்பட்டது. உறுதியும் பலமும் கொண்ட நிலப்பரப்பு அவசியமாயிருந்தது. பண்டைப் புகழ்படைத்த பாண்டியரால் அதனைச் செய்ய முடியவில்லை. அன்றைய அரசியற் சதுரங்கத்தில் விசயாலயச் சோழனை அடுத்து வந்தவர்கள் அதனைச் செய்தனர். வடக்கிருந்து வந்து வந்து படையெடுத்த இராட்டிர கூடரைத் தடுத்து நிறுத்தி, வேங்கி இராச்சியததை இணைத்து, கங்கநாட்டை அடிபணியச் செய்து, வடக்கேயுள்ள துங்கபத்திரைக்குக் கீழே சோழர் தம் பலத்தைக் காட்டினர். கி.பி.985-ம் ஆண்டில் அரசுகட்டில் ஏறிய அருண்மொழிவர்மன் எனப்பட்ட முதலாம் இராசராசனின் ஆட்சிக் காலத்திலே சோழப் பேரரசு சோழஏகாதிபத்தியமாக மாறத் தொடங்கிவிட்டது. தன்னை எதிர்த்த பாண்டிய-சேர-ஈழ நாடுகளின் ஒருமித்த முயற்சியை அவன் முறியடித்தான். இரண்டு படையெடுப்புகளின் போது அவர் பாண்டியரை வென்று, சேரமன்னர் கர்வத்தையடக்கினான். காந்தளூரிலும் சேரர் பெருந்தோல்வியுள்ளனர். அடுத்துக் கடற்படையெடுப்பின் மூலம் வட இலங்கையைக் கைப்பற்றினான். தலைநகராகிய அனுராதபுரத்தை அழித்துப் புலத்தி நகரத்தை பொலன்னறுவையை ஈழமண்டலத்தின் தலைநகராக்கினான். வடக்கே நுளம்பபாடி, கங்கபாடி, தடிகைபாடி முதலிய பிரதேசங்களையும், இன்றைய மைசூரின் பெரும்பகுதியையும் கைப்பற்றினான். தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் மாதீவுகளையும் வென்றான். கி.பி. 1010-ல் கட்டி முடிக்கப் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் புகழ் மணந்த புவிச்சகரவர்த்தியின் புகழ்ச்சின்னமாக விளங்கியது. கி.பி.1014-ல் பட்டத்திற்கு வந்த முதலாம் இராசேந்திரன் சோழப் பேரரசானது அக்காலததிலே மிகப் புகழ்வாய்ந்த பேரரசாகவும், தலையாய இந்துப் பேரரசாகவும் விளங்கியது.7 இராசேந்திரன் ஆட்சியிலேயே சோழக் கடற்படைகள் ஸ்ரீவிசயப் பேரரசுமீது படையெடுத்து, மலாயா, ஜாவா, சுமாத்திரா முதலிய பகுதிகளில் தமது ஆதிபத்தியத்தை நிலைநாட்டின. žன தேசத்திற்குப் பல 'தூது'க் குழுக்கள் சென்று மீண்டன. வடக்கே கலிங்க நாட்டின் மீது படையெடுத்துக் கங்கைக் கரையில் அவன் படைகள் நீராடி மீண்டன. இத்துணை மகோன்னதமான வரலாற்று நிகழ்ச்சிகளும் சோழப் பேரரசின் அமைப்பைப் பாதித்தன. அவற்றை சற்றுத் தெளிவாக நாம் நோக்குதல் வேண்டும்.

விசயர்லயன், பராந்தன் முதலியோர் காலத்திலே பத்தொடு பதினொன்றாக இருந்த சோழ இராச்சியம் சோழப் பெரு மன்னர்களாகிய இராசராசன், இராசேந்திரன் காலத்தில் ஏகாதிபத்தியமாக மாறியதனை - அதன் படிமுறை வளர்ச்சியை சுருக்கமாகப் பார்த்தோமல்லவா? தென்னக வரலாறு முன்பு கண்டு கேட்டறியாத இம்மாற்றங்கள் பல புதிய சக்திகளுக்கு ஏற்ற களமாக அமைந்தன. முத்தரையர், போன்ற பழைய குடும்பங்கள் மறைந்தன; பாண்டியர், சேரர் இழிநிலை யெய்தினர். நாடுகளின் எல்லைகள் தலைகீழாயின. புதிய பெயர்கள் தோன்றின. இவற்றைச் சோழரின் தரைப்படைகளும், கடற்படைகளும் செய்து முடித்தன. ஆனால் அவை தொடக்கத்திலே இருந்தன அல்லவே. சோழப் பேரரச அகல அகலப் படைகளும் அதிகரித்தன. வீரம் செழிக்க விளை நிலங்கள் தோன்றின. இந்த இடத்திலேதான் தலைதூக்கிய நிலவுடைமையாளரை நாம் மீண்டுஞ் சந்திக்கப் போகின்றோம்.

கடலிலும் தரையிலும் நடந்த பல்வேறு போர்கள் எண்ணரிய வாய்ப்புக்களைப் பலருக்கு அளித்தன. போரிலோ நிர்வாகத்திலோ அரசசேவையில் அநேகம் பேர் ஈடுபடச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.8 பேரெழுச்சி ஒன்றனைத் தொடர்ந்து, தொடர்யுத்தங்கள் நடாத்தப்படும் பொழுது புதிய புதிய சேனைத் தளபதிகளும் நிர்வாகிகளும் சந்தர்ப்பத் தேவைகளினாலும் சூழ்நிலைகளினாலும் உந்தி மேலெறியப்படுவது உலக வரலாற்றிற்குப் புதியதன்று. அலெக்சாந்தர் மன்னனின் தொடர்புத்தங்களின் விளைவாகப் புகழ்பெற்ற படைத்தலைவர் பலர்; நெப்போலியன் காலத்தில் பிரெஞ்சு நாடு அளித்த மகாசேனாதிபதிகள் பலர். அதைப் போலவே இராசராசனும், இராசேந்திரனும் தொடுத்த போர்களின் போது தமது வீரத்தையும் திறமையையும் துலக்கி மன்னர் பாராட்டைப் பெற்றோர் பலர். இவர்களிற் பெரும்பாலானோர் நிலவுடைமைக் குடும்பங்களிலிருந்து சென்ற தீரமிக்க இளைஞர்களே. தத்தம் செல்வாக்கில் இருந்த 'ஆள்பலத்துடன்' போர்முனை சென்று, பின்னர், புகழ்பூத்த படைத்தலைவர்களாக வாகை சூடியோர் பலர். சுருங்கக் கூறின் சோழப் பேரரசு புதியதொரு நிலப்பிரபுத்துவத்தைத் தோற்றுவித்தது. அன்றைய ஆட்சிமுறையிலே நிர்வாகம், இராணுவசேவை, நீதிபரிபாலனம் என்ற வேறுபடுத்தப்பட்ட துறைகள் இருக்கவில்லை. ஒருவரே பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று துறைகளிலும் கடமையாற்ற முடிந்தது. இராசராசன் மகன் குந்தவ்வையை மணந்த வந்தியத் தேவர், கலிங்கப் போரில் களம் வென்ற கருணாகரத் தொண்டைமான், சிதம்பரத்திற்குப் பொன்னோடு வேய்ந்த நரலோக வீரன் முதலிய சோழர் காலப் பெரும் பெயர்ச் சேனைத் தலைவரெல்லாரும் மேற்கூறிய புதிய நிலப்பிரபுத்துவத்தைச் சேர்ந்தவர்களே. தமக்குச் சேவை செய்த அதிகாரிகளுக்கும் படைத்தலைவருக்கும் சோழப் பேரரசர்கள் விருதுகளும், பட்டங்களும் வழங்கி ஊக்குவித்தனர். மாராயன், பேரரையன், மூவேந்த வேளான், காடவராயன், நாடாள்வான், விழுப்பரையன், சேதிராயன், சோழகோன் முதலியன அவற்றுட் சில.9 திறமையுள்ள எவரும் உயர்நிலையடையச் சந்தர்ப்பங்கள் பல இருந்தனவாயினும், உயர்குடிப் பிறப்பும், செல்வ வசதியும் அரச சேவைக்கு ஒருவரை இலகுவில் அருகராக்கின என நாம் நம்ப இடமுண்டு.10 சோழர் காலத்திலே வேளாளர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். நிலவுடைமையாளர் அவரே. நரலோக வீரன். பழுவேட்டரையர் போன்றோரெல்லாம் வேளான் குடி மக்களே. போரிலும், நிர்வாகத்திலும், பிற அரசகருமங்களிலும் சேவை செய்தவர்களுக்குச் சோழப் பெருமன்னர் மானியமாகப் பல நிலங்களை வழங்கினர். சில்லறை (சிறுதரம்) உத்தியோகங்கள் பார்த்தவர்களுக்கச் சம்பளமும் வழங்கப்பட்டதுண்டு. எனினும் பெரிய பிரபுக்கள் யாவரும் அரசனிடமிருந்து தம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கத்தக்க முறையில் "நிலம்" பெற்றவராவர். நடைமுறையில் பேரும் புகழம் பெற்ற நிலவுடைமையாளர் žவிதமான நிலத்தைத் தமது சந்ததியினரும் அனுபவிக்கத்தக்க, இறையிலியாகப்பெற்றனர். அது மட்டுமின்றித் தமக்கேயுரிய காணிகளும் அவர்களக்கிருந்தன. அந்நிலங்களைக் குடியானவரைக் கொண்டு உழுதுவித்தும் வந்தனர். இதன் காரணமாக இவர்களைப் பெருங்குடிகள் என்று அக்காலத்தில் வழங்கினர். பிற்கால உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் உழுதுண்போர், உழுதுவித்துண்போர் எனப் பாகுபடுத்தியிருப்பது அவதானிக்கத் தக்கது.

சோழப் பேரரசின் கீழ் பூரணத்துவம் பெற்ற இந்நிலவுடைமை முறையினையே வரலாற்றாசிரியர் நிலமானிய முறை (Feudal order) என்பர். இந்த அமைப்பு முறையினை நாம் நன்கு அறிந்துணர்ந்து கொண்டாலன்றிப் பேரரசு தோன்றிய அக்காலப் பகுதியிலே பெருந்தத்துவமான சைவசித்தாந்தம் ஏன் தோன்றியது என்பதற்கு விடை காண மாட்டோம்.

நிலமானிய முறை என்றால் என்ன?

'நிலம்' 'மானியம்' என்னும் இரு சொற்களும் இம்முறையில் முக்கியமாயுள்ளன. மனிதன் தன்னுடைய நாகரீகப்படிகளின் பாதையில் சில பிரதானமான படிகளைக் கடந்து வந்துள்ளான்'. புராதன மனித சமூகம் சிறுச்சிறு குழுக்களாக இயற்கையின் மத்தியில் வாழ்ந்த நிலையிலே கூட்டுமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைக் கூட்டாக உபயோகிக்கும் புராதனப் பொதுவுடைமை நிலவியது; பின்னர் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை யொட்டி, அடிமைச் சமூகங்கள் தோன்றின; அங்கே வர்க்க வேறுபாடுகளும் வலுத்தன. மேலோராகக் கருதப்பட்ட ஆளும் வர்க்கத்தினருக்கு எதிராகக் கீழோராக மதிக்கப்பட்ட சாதாரண மக்களின் போராட்டம் நாளடைவில் வென்றது. அதன் விளைவாகவே நிலப் பிரபுத்துவம் தோன்றியது; அங்கே நிலவிய பொருளாதார அமைப்பினையே நிலமானிய முறை என்று கூறுகின்றோம். அது பொருளுற்பத்தியை அடிப்படையாகக் கொண்டதே.

மனிதனுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் மனிதர்கள், பொருள் உற்பத்திப் பணியில் ஒருவரோடு ஒருவர் உறவு கொள்வதனையே சமூக விஞ்ஞானிகள் உற்பத்தி உறவு என்கின்றனர். அது ஒருவருக்கொருவர் மனமார விரும்பி உதவிக் கொள்ளும் உறவாக இருக்கலாம் அல்லது, ஒருவர் பிறிதொருவர் ஆணைக்குக் கீழ்ப்படியும் உறவாகவும் இருக்கலாம். எவ்வாறாயிருப்பினும், மனிதருக்கிடையே பொருள் உற்பத்தித் துறையில் உறவு ஏற்படுகிறது. இவ்வுறவே சமூக உறவாகவும் அமைந்து விடுகிறது. இந்த அடிப்படையின் துணைகொண்டு பார்த்தால் நிலமானிய முறையிலே பொருள் உற்பத்தி உறவானது நிலப்பிரபுவின் உடைமையாக உற்பத்திச் சாதனங்கள் அமைந்திருப்பதிலே தங்கியுள்ளது. உலகெங்கும் நிலவிய நிலமானிய முறையை நன்கு ஆராய்ந்தவர்கள், நிலமானிய முறையானது மன்னர்கள் தமக்குப் பணிசெய்தவர்களுக்கு (தொடக்கத்திலே போரில்) மானியமாகக் கொடுக்கும் நிலவுரிமையினையே குறிக்கும் என்பர். நிலத்தில் உழவுத் தொழில் செய்த பண்ணையாட்கள் அரசனிடமிருந்து மானியம் பெற்ற பிரவுவின் ஆணைக்குள் இருந்தனர். ஆயின் அவர்கள் பிரபுக்களின் அடிமைகளாகக் கூறப்படவில்லை. சில தேசங்களில் பண்ணையடிமைகள், வாங்கி விற்கப்படும் சரக்காகக் கணிக்கப்பட்டனர். எனினும் நிலப்பிரபுத்துவ அமைப்பில் பண்ணையாட்கள், குடியானவர்கள், நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனரே யன்றிப் பெரும்பாலும் அடிமைகளாகக் கொள்ளப்பட்டவர்களல்லர். பழைய அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்காகவே வியாபாரிகளக் கெதிராகவும் குழுத் தலைவகளுக்கெதிராகவும் அடிமைகள் போர்தொடுத்திருந்தனர். நிலமானிய முறையிலே பண்ணை வேலையாள் பழைய அடிமை நிலைக்கும் 'சுதந்திர' நிலைக்கும் இடை நடுவே இருந்தான். நிலத்தில் தனக்கும் ஓரளவு அக்கறைஇருந்தமையால் ஊக்கத்துடன் உழைத்தான்.11 மன்னனுக்குப் பணிந்தும், உதவிகள் செய்தும் நிலப்பிரபு தனது சுகம் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொண்டதைப் போலவே, நிலமானிய முறையில் வாழ்ந்த பண்ணையடிமைகளம், சில கைத்தொழிலாளரும், நிலப்பிரபுவிற்குக் கொடுத்து எஞ்சிய பொருள்களைத் தமதாக்கிக் கொண்டு வாழ்ந்தனர். இவர்களை ஒருவகையான வாரக் குடிகள் என்று இக்கால வழக்கில் வேண்டுமானால் நாம் கூறலாம். சோழர் காலத்திலே இதனைக் காராண்மை என்று வழ ஙகினர்.12 உழவுத் தொழிலையே தொழிலாக (குடும்ப மரபு) மேற்கொண்டு வந்த குடிகளுக்கு உள்ள நிலவுரிமையை "வெள்ளான்" வகை என்றழைத்தனர். அவற்றையெல்லாம் பின்னர் கவனிப்போம். இங்கே நிலமானிய முறையின் முக்கியமான அம்சங்களை நோக்குவோம்.

நிலமானிய முறை அமைப்பிலே உற்பத்தி உறவுகள் செம்மைப்பட்டமையால், உற்பத்தி பெருகியது. விவசாயம் பெருவளர்ச்சியுற்றது; புதிய புதிய நிலங்கள்பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டன. செய்கை முறையிலும் பல அபிவிருத்திகள் ஏற்பட்டன. விவசாய வளர்ச்சியின் அருகருகே சிறு கைத்தொழில்களும் துரித வளர்ச்சியுற்றன. உழவுத் தொழிலுக்குத் தேவையான கருவிகள் பெருகின. பிரபுக்களும் வியாபாரிகளும் பேரரசும் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் பொருட்கள் கூடியளவு உற்பத்தி செய்யப்பட்டன. போர்களையொட்டிப் போர்க்கருவிகளும் தளவாடங்களும் திருந்தின. கப்பற் போக்கு வரத்து முன்னெப்பொழுதும் காணாத பெருநிலையையடைந்தது. இந்த மாற்றங்கள் யாவும் அக்கால வர்க்க அமைப்பைப் பெரிதும் பாதித்தன. நிலத்தை உரிமையாக உடையவர்கள் ஆளும் வர்க்கத்தினராக நிலைபெற்றனர்; அவர்களுக்கு எதிராகப் பண்ணையடிமைகள் மற்றொரு வர்க்கத்தினராக இருந்தனர். சுருங்கக் கூறின் ஆண்டான்-அடிமை உறவு உருவாகியது.

நிலமானிய முறையின் பொருளாதார அடிப்படை இவ்வாறிருக்க, அதன் அரசியல் - ஆட்சிமுறை-வடிவத்தில் இருவளர்ச்சிப் படிகளைக் காணலாம் என்று வரலாற்றாசிரியர் கருதுவர்13. தொடக்கத்திலே - அதாவது முதலாவது கட்டத்திலே - நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழேயுள்ள மக்களுடன் நேரடித் தொடர்புள்ளவராக இருந்தனர். தமது சிறுபடையுடன் போர்க்களங்களுக்குச் சென்று மீண்டனர். தமது சிறிய நிலப்பரப்பின் மீது பூரண ஆதிக்கஞ் செலுத்தினர். சுருங்கக் கூறின் நிலப்பிரபு ஒரு 'குட்டி' இராசாவாக இருந்தான். நாட்டின் வழமைகள் யாவரையும் கட்டுப்படுத்தின. இரண்டாவது நிலையிலே - வளர்ச்சியுள்ள நிலையிலே - ஆட்சி முறையானது அழகாக அமைந்த ஒரு கூர்நுதிக் கோபுரம் போலக் காணப்பட்டது. அரசனுக்கும் பிரபுக்களுக்க மிடையேயிருந்த உறவு நன்கு பிணைக்கப் பெற்றது. உறவுகள் யாவும் சங்கிலிப் பின்னலாகத் தொடர்பு பெற்றன. உச்சியிலே கலசம்போலப் பேரரசன் வீற்றிருந்தான். கீழே வரவர, அகன்று அகன்று ஆகக் கீழ்க்கற்களாகப் பண்ணையடிமைகளும் சாதாரண சிறு கைத் தொழிலாளரும் இருந்தனர். யாவும் மத்திய ஆட்சியின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது. அதே சமயத்தில் கீழே போகப்போக உரிமைகளும் கடமைகளும் தெளிவாக்கப்பட்டன. சோழப் பேரரசின் மகோன்னதமான வளர்ச்சியிலே இவ்விரு வளர்ச்சிப்படிகளையும் தெளிவாகக் கண்டு கொள்ளலாம். விசயாலயன் காலத்துக்கு முன்னிருந்து சுந்தரச்சோழன் ஆட்சிவரை முதற்படிக் காலமெனக் கொண்டால், இராசராசன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் படி தொடங்குகிறது எனலாம். இந்தப் படி முறை வளர்ச்சியானது பெரும்பாலும் சுமுகமான முறையிலேயே நடைபெற்றது என்பர் வரலாற்றாசிரியர்14. அதற்குச் சமயமும் தத்துவமும் வெவ்வேறு வகைகளில் உதவியுள்ளன. மத்திய கால ஐரோப்பாவில் கத்தோலிக்க சமயமும் தத்துவமும் இம்முறைக்குச் சிந்தனைப் பக்கபலமாக அமைந்தன. சில பழைய கருத்துக்களும் புத்துயிர் பெற்றுக் கைக்கொள்ளப்படுவதுண்டு.

நிலமானிய முறை எந்த நாட்டிலே நிலவியிருப்பிலும் அதன் முதிர்ச்சிப் பருவத்திலே சில பாதுப்பண்புகள் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலே முதன் முதலாக நிலமானிய முறை பூரண வளர்ச்சியுற்றது இங்கிலாந்திலாகும். ஏறத்தாழ அதே காலப் பகுதியிலே தென்னிந்தியாவிலும் நிலமானிய முறை பெரு வளர்ச்சியுற்றது. பல வகைகளில் இரண்டினுக்கும் நெருங்கிய ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. உவில்லியம் மன்னன் தலைமையில் நோர்மானியர் பதினோராம் நூற்றாண்டிலே இங்கிலாந்தைக் கைப்பற்றியதோடு, அங்கு நிலமானிய முறை நடைமுறைக்கு வந்தது. குறுகிய காலத்தில் கைப்பற்றப்பட்டு, புதிய ஒரு அரசியல் முறை நிறுவப்பட்டதன் காரணமாகப் பல நாடுகளைவிட இங்கிலாந்தில் நிலமானிய முறை பெருவளர்ச்சியுள்ளது.15 சோழப் பேரரசும் அவ்வாறே; சோழப் பேரரசு சிறப்பாயிருந்த காலத்தே இந்தியாவிலே வேறெந்த இராச்சியத்திலாவது உள்ளூர் ஆட்சி சோழர் ஆட்சியிற் காணப்பட்டது போல வளர்ந்ததில்லை. நிலமானிய முறையின் நலன்கள் அங்கு தலைசிறந்து அமைப்பின் உச்சநிலையிற் காணப்பட்ட சில அம்சங்களைக் கவனிப்பது சுவைபயப்பதாகும். அது நமது ஆராய்ச்சிக்குப் பேருதவி புரிவதாகவும் இருக்கும். மாரியன் கிப்ஸ் என்னும் ஆசிரியர் மேல் வருமாறு சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.16

Link to comment
Share on other sites

"விவசாயிகளை நிலப்பிரபுக்கள் சுரண்டுவதால் சமூகப் பிளவு ஏற்பட்டது. அதுவே முக்கியமான வர்க்கப் பிரிவாக இருந்தது. நிலப்பிரபுக்களின் ஒரு பிரிவினர் போர் வீரர்களாக இருந்தனர். மற்றொரு பிரிவினர் மத குருமாராக இருந்தனர்; வாளும் சிலுவையும் ஏந்தி அவர்கள் மக்களைப் பாதுகாத்தனர்; அதாவது சமூகத்திலே தமக்கிருந்த உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் சமாதானமாக அவ்வாறே கூறினர். பண்ணை விசாயிகள் தத்தம் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்த அதே வேளையில், உழுது வித்துண்போரின் - நிலப்பிரபுக்களின் - பெரிய நிலங்களில் வலாற்காரப் படுத்தப்பட்டு அல்லது கூலிக்கு உழைத்தனர். நிலப்பிரபுக்களும், பெருங்குடிகளும் உற்பத்தியில் காட்டிய ஊக்கத்தினால் சரக்குப் பரிவர்த்தனை வளர்ந்தது; போகப் பொருள்களின் உற்பத்திமுறையும் உடன் வளர்ந்தது. உள்ளூர் வணிகமும், தூரதேச வணிகமும் காணப்பட்டன. ஆனால் நிலமானிய முறையின் உச்சிப்பொழுதிலே கூட, வியாபாரப் பெருக்கம் இராச்சிய ஒருமைப்பாட்டிற்கு அதிகம் உதவவில்லை. குக்கிராமங்களும், சிறு நகர்களும் நிறைந்த அன்றைய இங்கிலாந்‘னது ஆங்காங்குச் சிதறுண்டு கிடந்த, வயல்களையும், பள்ளத்தாக்குகளையும், நாட்டுப்புறங்களையுமே, ஆதாரமாகக் கொண்டியங்கியது. இவையே மக்கள் தம் அன்றாட வாழ்வில் ஒருமைப்பாட்டையளித்தன. மரபு வாழ்க்கையே தலை தூக்கி நின்றது. இதன் காரணமாக இன்றிருப்பதைவிடப் பன்மடங்கு அதிகமாகத் தலவாழ்கையே- தலஉணர்வே-காணப்பட்டன. இதன் விளைவாக வர்க்கப் போராட்டங்களும் கட்டுப்படுத்தப்பட்டன. நகரங்களிற் காணப்பட்ட சிக்கலான பல முரண்பாடுகளம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகப் பண்ணையடிமைகள் காட்டிய எதிர்ப்பும் ஆங்காங்கு வெளிப்படையாகவும் இலைமறைகாயாகவும் தோற்றினும் பொதுவாக வாழ்க்கை இயல்பாக ஓடிக்கொண்டிருந்தது. விவசாயிகள் தனித்தனிப் பிரிவுகளில் வாழ்ந்தமையால் பரந்த இயக்கங்களில்லாமற் போயின. அவரவருக்குரிய இடம் வகுக்கப்பட்டது. பிரிந்து சிதறுண்டு கிடந்த இப்பெரிய விவசாய சமூகத்திற்கு எதிராகவும் நகரங்களிலேதமது பிரத்தியேகமான நலன்களை மட்டும் கவனித்துக் கொண்டிருந்த நகரத்தாருக்கு மேலாகவும், ஒரு வர்க்கம் இருந்தது. பெருங்குடி மக்களும், குருமாரும், மன்னரும் அந்த வர்க்கத்தினராவர். அவர் யாவரும் அரசியல் உணர்வுநிரம்பிய - தமது வர்க்க நலன்களை உணர்ந்த - கூட்டத்தினராக இருந்தனர்.... இந்நிலையில் அவர்கள் கடல் கடந்த நிலப்பரப்புக்களின் மீது பார்வை செலுத்தினர்; இவ்வாறு பிளவுண்டு கிடந்த வர்க்கபேதமுற்றுக்கிடந்த - சமுதாயத்தின் உறவுமுறைகளை அங்கீகரித்தும், இலட்சியபூர்வமானதாகக் காட்டியும்... திகழ்ந்தது நிறுவன வடிவிற் காணப்பட்ட உரோமன் கத்தோலிக்க திருச்சபை. நீதியைப் பற்றி அது கூறியது; சகல துறைகளிலும் கருத்து மயக்கத்தை உண்டு பண்ணியது. சமுதாயத்தில் உயிர்த்துடிப்பைக் காட்டியது. கத்தோலிக்க திருச்சபையும் தன்னளவில் மிகப்பெரும் நிலவுடைமை நிறுவனமாகவே விளங்கியது; நிலப்பிரபுத்துவ அமைப்பின் பொருளாதார, சமூக, அரசியல் அமைப்புக்களினூடே பிரிக்க முடியாதபடி பின்னிப்படர்ந்திருந்தது கத்தோலிக்க திருச்சபை."

ஆசிரியர் கிப்ஸ் இங்கிலாந்து நாட்டிலே நிலவிய நிலமானிய அமைப்பைப் பற்றிக் கூறியுள்ள இக்கருத்துக்கள் சில பெயர் மாற்றங்களுடன் சோழல் காலத் தமிழகத்திற்கும் பொருந்தும் எனத் துணிந்து கூறிவிடலாம். கத்தோலிக்கத் திருச்சபைக்குப் பதிலாகக் "கோயில்" என்று கூறினால், மிகுதியாவும் பொதுவே.

இனி, சோழர்காலத் தமிழகத்தின் நிலப்பிரபுத்துவத்தைச் சிறப்பாக ஆராய்ந்து, உலகப் பொதுப் பண்புகளோடு ஒப்பிட்டு, அதிற் சமயத்தின் பங்கினை நிர்ணயிப்போம்.

சோழப் பேரரசு வளர வளர, நாட்டிலே புதியதொரு நிலப்பிரபுத்துவமும் நிலமானிய முறையும் வளர்ந்தன என்றும், வேளாளர் கை ஓங்கியது என்றும் முன்னர் கண்டோமல்லவா? அதன் விளைவாகச் சோழப்பேரரசிலே நிலவுடைமையாளர் வேளாளர்-வர்க்கமே தலையாய வர்க்கமாகியது. "உடையான்", "கிழான்" முதலிய அக்காலச் சொற்கள் நிலத்தை உடையவன், நிலக்கிழான் என்றே குறித்து நின்றன. புவிச்சக்கரவர்த்திகளாக விளங்கிய சோழப் பெருமன்னரே தம்€ "உடையார்" என்று பெருமையுடன் கல்வெட்டுக்களிற் கூறியுள்ளனர். சோழ அதிகாரிகளைப்பற்றிக் கூறப்படும் இடங்களில், தத்தனூர் மூவேந்த வேளான், கம்பர் மூவேந்த வேளான், வேளான் குடி முதலான (நரலோக வீரன்) என்றெல்லாம் கல்வெட்டுக்கள் சான்று தருகின்றன. கோன், நாடன், கூத்தன், ஏறு அரையன் முதலிய சொற்களைக் கொண்டு முடியும் பெயர்கள் பல அன்று செல்வாக்கோடு விளங்கிய வேளாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையே குறிப்பன.17 வேளாளர் மிகவும் நுண்ணிய முறையிலே தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர். அதற்குக் கருவியாக அமைந்ததே கோயில். உண்மையில் சோழப் பேரரசில் தலையாய வர்க்கமாகத் திகழ்ந்த வேளாளரின் பொருளாதாரச் செழிப்பையும், அரசியல் மதி நுட்பத்தையும் நன்கறிவதற்குச் சோழர்காலக் கோயில்களைப் பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்வது அவசியம்.

சோழர் காலத்திலே நிலப்பிரபுக்கள் žவிதமாகவும் இறையிலியாகவும் பெருவாரியான நிலங்கள் பெற்றதைப் போலவே, சிவன் கோயில்களும், திருமான் ஆலயங்களும், மடங்களும் தானமாகப் பெருமளவு நிலங்களைப் பெற்றன. சிவன் கோயில் நிலங்கள் தேவதானம் எனவும், விட்டுணு கோயில் நிலங்கள் திருவிடையாட்டம் எனவும் மடங்களின் பூமிகாணி மடப்புறம் என்றும் வழங்கப்பட்டன. சோழப் பேரரசு வளர்ந்தகாலையில் கோயில்களுக்குரிய நிலம், சொத்து, பொன் முதலிய செல்வங்களும் பெருகின. மன்னரும் மற்றையோரும் போட்டி போட்டுக்கொண்டு தானங்கள் செய்தனர். பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் கூற்று, கவனித்தற்குரியது.

"அரசனும் அவனது பட்டமகிஷ’களும், அவர்தம் உறவினரும் பெருமளவிவல் தானங்களைச் செய்து வழிகாட்டினர்; நிலப்பிரபுக்கள் பிற்பற்றினர்; வணிகர் தொடர்ந்தனர்; செல்வாக்குள்ள பிறகுலத்தவரும் தாராளமாகத் தானங்கள் செய்தனர்."18

உதாரணமாகத் தஞ்சைப் பெருங்கோயிலை எடுத்துக் கொள்வோம். இராசராசனின் புகழ்ச் சின்னமாகிய அக்கோயில் அக்காலத்திலே இந்தியாவிலேயே அதிக செல்வமுடைய கோயிலாக இருந்தது எனலாம்.19 உலகத்திலே வேறெந்தக் கோயில் கல்வெட்டுக்களிலாவது கோயிற்கணக்கு, வருமானம், பணியாட்கள் செலவு, முதலியன பற்றிய விளக்கம் தஞ்சைக் கோயிற் கல்வெட்டுக்களிற் காணப்படுவதைப்போல விரிவாக இருக்குமா என்று சிலர் ஐயுற்றுள்ளனர்.20 தஞ்சைக் கோயிற் கல்வெட்டுக்கள் உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையனவே.21 தஞ்சைப் பெருக்கோயிலுக்கு இராசராசனின் அருமை "அககன்" குந்தவ்வை மாத்திரம் பத்தாயிரம் களஞ்சுபொன் கொடுத்தார் என்று கல்வெட்டுக்கள் காட்டும் ஏறத்தாழ நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு களஞ்சு கொன் கோயிலுக்குக் கிடைத்தது. இலங்கையிலுள்ள சில கிராமங்களின் நெல் உட்பட (116,000) நூற்றுப் பதினாறாயிரம் களம் நெல் ஒரு வருடத்தில் அங்கோயிலுக்கு வந்தது. தஞ்சைப் பெருங்கோயில் 609 பணியாட்கள் வேலை செய்தனர். இவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் இசைக்கலைஞர். இவர்களைத் தவிர, கோயிலின் நிர்வாகத்திலிருந்த பிற நிறுவனங்களில் பணியாற்றியவரையும் நாம் சேர்த்துப் பார்த்தால் ஆளுஞ் சக்தியும் பொருளாதாரப் பிடிப்பும் - தெளிவாகும். தஞ்சைக்கோயில் தனித்த ஓர் உதாரணமன்று; இராசராசன் காலத்திலே திருவாழீசுவரத்திலிருந்த பெருங்கோயிலும் அதன் பண்டாரமும் பணியாட்களும் சோழப்படையின் ஒரு விரிவான மூன்றுவகை மகாசேனையின் பாதுகாப்பிலிருந்தன. கோலார் மாவட்டத்தில் காணப்பட்ட கல்வெட்டொன்று பிறிதொரு கோயிலுக்கு ஐம்பத்து இரண்டு குடும்பத்தினர் பணியாட்களாக இருந்தமையை விரிக்கும். செல்வந்தர், தானமாகக் கொடுத்தவற்றை விடப் பல்வேறு வழிகளிலும் கோயில்களுக்குச் சொத்து சேர்ந்தது. கோயிலுக்குக் கொடுக்கவேண்டிய வரிகளைக் கட்ட முடியாதவரின் நிலத்தை எடுத்தும், கோயிற் சொத்தைக் களவாடியவர் நிலங்களைப் பறிமுதல் செய்தும், பக்திமான்களுடைய நன்கொடைகளைப் பெற்றும், பணங்கொடுத்து நிலங்களை, வீடுகளை வாங்கியும், கோயில்கள் நிலவுடைமையை அதிகரித்துக் கொண்டன.22 சோழமன்னர்கள் சில சந்தர்ப்பங்களில் தேவதானமாகச் சில ஊர்களைக் கொடுக்கும்போது, அங்க வசித்த குடிமக்களையும் சேர்த்துக் கோயிலுக்கு வழங்கிவிடுவதுண்டு. அதனைக் குடி நீங்காத் தேவதானம் என்றழைத்தனர்.23

இவ்வாறு பலவழிகளில் உடைமை சேர்த்த கோயில்கள் என்ன செய்தன? கலாநிதி டி.வி. மகாலிங்கம் இதற்கு விடையளித்துள்ளார்.

"ஒரு தலத்திலுள்ள மக்களின் சமய வாழ்க்கையில் முக்கியத்துவம்பெற்ற உயிர்த்துடிப்புள்ள இடமாகக் கோயில் விங்கியது மட்டுமின்றி, அது அவ்வூர் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல்வேறு இயக்கங்களிலும் பங்கு கொண்ட சமூக நிறுவனமாக விளங்கியது. கோயில் தானே நிலப்பிரபுவாகவும், முதலாளியாகவும் (பலருக்கு வேலைவசதி கொடுத்ததால்) இருந்தது. கோயில் பண்டாரம் (களஞ்சியம்) வங்கிபோல அமைந்து வைப்புப் பணங்களைப் பெற்றும், கடனுதவி அளித்தும், மக்களுக்கு உதவியது; கிராமக் கைத்தொழில்களின் பெருக்கத்திற்கு உதவியது. அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய வரிகள் கோயில்களால் அறவிடப்பட்டன. தனிப்பட்டவர்கள் தமது நிலங்களுக்குச் செலுத்தவேண்டிய வரிகளும் (மன்னரால்) கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன; இவற்றைவிடக் கோயில்களும் மக்களிடமிருந்து வழக்கமான கடமைப் பணத்தையும் பெற்றன; ஊரிலேயுள்ள பெரிய நிலவுடைமை நிறுவனம் என்ற முறையில் கோயில், ஊரின் விவசாயத்தில் ஊக்கங்காட்டியது; வயல்களிற் பயில் செய்விப்பதோடமையாது புதிய நிலங்களையும் உழவுக்குட் படுத்தியது; பாழ்பட்ட நிலங்களுக்குப் புனர்வாழ்வு அளித்தது;... கோயிற் பண்டாரமானது வங்கிபோலக் கடமையாற்றியபடியால், தனிப்பட்ட நிறுவனங்களுக்கும், ஊராட்சி மன்றங்களுக்கும், வட்டியுடனும், வட்டியின்றியும் உசிதம்போல உதவியது; விவசாயியின் தமது தொழிற்சேவைகளுக்காககக் கடன் பெற்றனர்; தமது பெண்களுக்குச் žதனம் கொடுப்பதற்குக்கூடச் சிலர் கோயிலிலிருந்து கடன்பட்டனர். நாட்டின் பொருளாதார வாழ்விற் கோயில் நடுநாயகமாக வீற்றிருந்தது."24

தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கணக்கில் இருந்த பல்லாயிரக்கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும், பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும், காசு வட்டிக்கோ அன்றிப் பொருள் வட்டிக்கோ கொடுக்கப்பட்டிருந்தன. சாதாரணமாகப் பன்னிரண்டு வீத வட்டி நியாயமானதாகக் கோயில்களினாற் கருதப்பட்டது."25

அன்யை நிலமானியத் தமிழகத்திலே கோயில்களின் தானத்தப் பற்றி எழுதப்புகுந்த பேராசிரியர் நீலகண்ட சாத்திரியர், தனக்கே உரிய நடையில் மேல்வருமாறு கூறியுள்ளார்.

"நில உரிமைக்காரனாகவும், முதலாளியாகவும், பொருள்களை நுகர்வோனாகவும், சேவைகளைப் பெறுவோனாகவும் விளங்கிய கோயில், வங்கியாகவும் பள்ளிக்கூடங்களாகவும் பொருட்காட்சி சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், நாடக மன்றங்காளகவும் விளங்கியது; சுருங்கக்கூறின், அக்காலத்து நாகரிக வாழ்க்கையிலும், கலைகளிலும் சிறந்தனவெல்லாம் தன்னையே சுற்றி இயங்கப்பெற்றது மட்டுமன்றி, அவற்றையெல்லாம் தர்ம உணர்விலிருந்து உதித்த மனிதாபிமானத்தால் செம்மைப்படுத்தியதில், மத்தியகால இந்து கோயிலுக்கு நிகரான நிறுவனங்கள் உல வரலாற்றிலே அருமையாகத்தான் உள்ளன எனலாம்."26

பேராசிரியரின் கவிநயம் வாய்ந்த சொற்களை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் சிறப்பைக் காணும் நாம், அதே வேளையில் அரசியல் பொருளாதாரத் துறைகளில் கோயில் எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து-சில சமயங்களில் ஆளும் வர்க்கமாகவே - காட்சி தருகின்றது என்னும் உண்மையை மறக்க முடியாது. அது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் கருணையும், சாந்தமும், அமைதியும், தெய்வ நீதியும் பூசிய காட்சிகளுக்குப் பின்னாலே பல அநாகரிகச் செயல்களும், மிக மோசமான மனிதக் கொடுமைகளும் அன்று நடந்தேறியுள்ளன. மன்னனும் வேளாளருஞ் சேர்ந்து கோயிலைக் கேடயமாகக் கொண்டனர். அதன் சொத்தும் கணக்கற்ற செல்வமும் வேளாள வர்க்கத்தினரின் செல்வக் குழந்தைகளாக இருந்தன; எந்தச் சமுதாயக் குற்றமும் பொறுக்கப்பட்டது. ஆனால் கோயிற் பணவிஷயத்தில் எள்ளவு கருணையும் காட்டப்படவில்லை. கோயில்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களில் மனிதனை-குடும்பங்களை-விலைகொடுத்து வாங்கின; பஞ்சகாலத்தில் தம்மைத்தாமே கோயிலுக்கு விற்றுக்கொண்ட "அடிமைகள்" பற்றி அநேகம் கல்வெட்டுக்கள் கூறும். "காலஞ் சரியில்லை; மூன்று நாழியரிசி ஒரு காசுக்கு விலையுயர்ந்தது; தன் குழந்தைகள் பட்டினியால் வாடினர்: எனவே கோயிற்காரரிடமிருந்து நூற்றுப்பத்துக்காசு பெற்றுக்கொண்டு அக்குடும்பம் கோயில் அடிமையானது."27 இத்தகைய சம்பவங்கள் பலவற்றைக் கண்ட வரலாற்றாசிரியரும் இவ்வுண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். பொதுவாகப் பண்ணையடிமைகள் நிலை பல இடங்களில் படுமோசமாக இருந்தது என்று நீலகண்ட சாத்திரியார் கூறுவர்.28

"அன்றைய சனத்தொகையில் குறிப்பிடத்தக்களவு பகுதி, சிறப்பாக விவசாயத் தொழிலாளர் மத்தியில் கணிசமானோர், அடிமை வாழ்க்கைக்கு அணித்தான நிலையில் வாழ்ந்தனர் என்று அக்கால இலக்கியம் காட்டும். மக்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு ஒரு புறமிருக்க, அவர்களைப் பொருள்களைப் போல விற்றுவாங்கும் முறை - தனிச் சொத்துரிமையிலேயே சகிக்க முடியாத வழக்கம்- அன்று நிலவியது என்பதற்குப் பல கல்வெட்டுக்கள் சான்று தருகின்றன."

சேக்கிழார் பெருமான் காட்டும் சேரிகள் பல இவ்வுண்மைக்குச் சான்று; அவற்றில் ஆதனூர் ஒன்று. விற்று வாங்கிய ஆண்-பெண் அடிமைகளைத் தவிர, ஆலயங்கள் தேவரடியாராகவும் பல நூற்றுக்கணக்கான மக்களை வைத்திருந்தன. தேவதான நிலங்களுக்குத் திருச்சூலமும், திருவாழியும் அடையாளச் சின்னமாகப் பொறிக்கப்பட்டது போலக்கோயில் அடிமைகளுக்கும் குலத்தால் குறிகடப்பட்டது.29 கி.பி.1235-ல் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டிலிருந்து, வீரட்டானேசுவரர் கோயிலில் நூற்றுக்கு மேற்பட்ட அடிமைகள் இருந்தனர் எனத் தெரிகின்றது.30

கோயில்களும், நிலப்பிரபுக்களும் இவ்வாறு நிலவுடைமையாளராகவும், பொருளுடைமையாளராகவும் நாட்டிலே விளங்கிய அக்காலத்திலே, வணிகரும் பெருஞ்சிறப்புற்றனர். பலர் சமணம், பௌத்தம் முதலாய "புறச்" சமயங்களைக் கைவிட்டுச் சைவத்தை மேற்கொண்டனர். சோழப் பேரரசு புதியதொரு நிலப்பிரபுத்துவத்தை உண்டாக்க ஏதுவாயிருந்ததுபோல உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வியாபாரஞ் செய்யும் பலம் வாய்ந்த நகர வணிகத்தினரையும் தோற்றுவித்தது. தவிர்க்க முடியாத நியதி அது. ஆனால் மாறிய சூழ்நிலைக்கேற்ப அவர்களிற் பெரும் பகுதியினர் சைவராயினர். தமிழ்நாடு முழுவதும் வாணிகம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெறவே அவர்கள் சைவத்தை அனுசரித்தனர்.31 நகரங்களிலும், பேரூர்களிலும், சிற்றூர்களிலும் தொழில் செய்து கொண்டிருந்த வணிகர் பலர், திருக்கோயில்களின் வழிபாட்டிற்கும், விழாவிற்கும், திருவிளக்கினுக்கும் நிபந்தம் வழங்கிய செய்திகள் கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன.32 நிலப்பிரபுக்களைப் போல வணிகர் இக்காலப் பகுதியில் அரசியற் செல்வாக்கோ, ஆதிக்கமோ பெற்றிருக்கவில்லை என்பது உண்மையே. ஆயின் அவர்தம் வாணிபத் தொழிலுக்கான சகல வாய்ப்புக்களையும் பேரரசு அளித்தமையால் அவர்தம் நோக்கு வியாபாரத்திலே யிருந்தது. மன்னர் பட்டயங்கள் வழங்கினர்; நிலப்பிரபுக்கள் இவர்களோடு நல்லுறவு கொண்டிருந்தனர். நகரங்களிலும் பட்டினங்களிலும் வணிகர் ஏறத்தாழப் பூரண செல்வாக்குடையவராய் விளங்கினர். அக்காலத்தில் நகரத்தார் என்று வழங்கப்பட்ட வியாபாரிகள் "நகரர்" என்னும் பட்டினசபை அங்கத்தவராக இருந்தனர். நீலகண்ட சாத்திரியார் இது பற்றி மேல்வருமாறு கூறுவார்.33

Link to comment
Share on other sites

நகரம் என்பது சிறப்பாக வியாபாரிகள் மன்றம் என்று கொள்ளலாம். பிரதான பட்டினங்களில் இருந்த சபைகளில் இதுவும் ஒன்று. வணிகரின் செல்வாக்குத் தலை தூக்கியிருந்த வியாபாரப் பட்டினங்களில் இதுவே முக்கியமான சபையாக இருந்திருக்கும்."

நானாதேசிகள், அஞ்சுவண்ணத்தார், நகரத்தார், வளஞ்சியர், மணிக்கிராமத்தார், திசையாயிரத்தைஞ்நூற்றுவர் என்று பல பிரிவினராய வணிகர் இக்காலப் பகுதியிலே உள் நாட்டிலும் கடல் கடநத தேசங்களிலும் தொழில் செய்தமையால், சோழப் பேரரசில் இறக்குமதி, ஏற்றுமதி பெருகின. வணிகத்தால் சுங்க வரியும் அரசாங்கத்திற்கு நல்ல வருவாயைக் கொடுத்தது.

ஏகாதிபத்திய நாடுகள் யாவும் தமது சொந்த நாட்டிலே அமைதியையே கடைப் பிடிப்பன. யாவருக்கும் கடமைகளும் உரிமைகளும் பகுக்கப்பட்டு, விதிக்கப்பட்டு ஓர் ஒழுங்கு நிலை நாட்டப்படுகிறது. நாட்டின் சக்தி கடலையும், பிற நாடுகளையும் கட்டி ஆள்வதற்குத் தேவையாக இருப்பதால் உள்நாட்டில் சுதந்திரமும், சமரச மனப்பான்மையும் வளர்க்கப்படுகின்றன. தீண்டாதவருக்குஞ்சரி, சிவப்பிராமணருக்குஞ்சரி சட்டங்களும் விதிகளும் வகுக்கப்பட்டிருந்தன. எனவே நிலப்பிரபுக்களும், வணிகரும் முரண்பாடின்றி வாழ்ந்தனர். சைவம் இரு தரப்பினரையும் பின்னிப் பிணைத்தது. பொதுத் தத்துவமாகியது.

ஆயினும் மேல் தோற்றத்தை விட்டுக் கூர்ந்துப் பார்போமாயின், நிலவுடைமையாளரே - நிலப்பிரபுக்களே - தலையாய வர்க்கத்தினராக இருப்பது தெரியவரும். வேளாளர் கை நீதியையும் கட்டுப்படுத்துமளவிற்கு ஓங்கியிருந்தது இதற்குச் சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஒரு சந்தர்ப்பத்திலே, வேளாளன் ஒருவன் குற்றவாளியாகக் கருதப்பட்டு அரசப் பிரதிநிதியொருவர் முன் விசாரிக்கப்பட்டான். அதிகாரி கோயிற் பட்டரை யோசனை கேட்டபோது அவர் வேளாளருக்கு மரணதண்டனை விதித்தல் கூடாது என்றார்.34 இது வேளாளர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதற்குச் சான்று. வேளாளருக்கும் கோயிலுக்கும் எதிராகச் சிறு குற்றஞ் செய்தாலும் பிறர் வன்மையாகத் தண்டிக்கப்பட்டதற்கும் பல சான்றுகள் உள்ளன. ஒரு சந்தர்ப்பத்திலே கீழையூரில் (தஞ்சை) இருவர், வேளாளரு ககும் கோயிலுக்கும் தொல்லை விளைவித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டனர். கலகம் செய்ததற்காக அவர்கள் விசாரிக்கப்பட்டனர். கோயிலுக்கோ அல்லது வேளாளர் வீட்டிற்கோ தீ வைக்க முனைந்த குற்றமும் சுமத்தப்பட்டது. விசாரணை முடிவில் ஆயிரம் காசு அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட எவரும் அவ்விருவருக்கும் உதவி செய்ய முன் வரவில்லை. எனவே அவர் தம் நிலங்கள் கோயிலுக்கு விற்கப்பட்டன. 1060 காசு கொடுக்கப்பட்டன. தண்டம் 1000 காசு. தண்டத்தைக் கொடுக்க முடியாமலிருந்ததற்காக அபராதம் 60 காசு. முழுப் பணமும், நிலமும் கோயிற் சொத்தாகின.

இவ்விரு சான்றுகளும் மிக முக்கியமானவை. ஏனெனில் சோழர் காலத்தைப்பற்றி எழுதும் 'புகழ்பூத்த' வரலாற்றாசிரியர் எல்லாம், அன்றைய நிலையில் வர்க்க முரண்பாடுகள் இருக்கவில்லையென்றும், வர்க்க அமைதியே காணப்பட்டது என்றும், செல்வம் கொழித்த அன்றைய நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத்திலே ஒரு பாத்திரம் இருந்தது என்றும் பலவாறு எழுதியுள்ளனர். நாடு பிடித்தாலும் பிறநாட்டு வணிகத்தினாலும், உற்பத்திப் பெருக்கத்தினாலும் சோழ நாட்டிலே செல்வம் பொங்கி வழிந்தது என்பது உண்மையே. பட்டினியால் மடியும் நிலை பரவலாக இருக்கவில்லை என்பது ஓரளவிற்கு (பஞ்சகாலங்களைத் தவிர) உண்மையே. ஆனால் நாட்டில் வர்க்க முரண்பாட்டோ மோதலோ இருக்கவில்லை என்றும், சுரண்டிய வர்க்கமும் சுரண்டப்பட்ட வர்க்கமும் இருந்தன என்பது ஏற்க முடியாதது என்றும் எழுதுவது ஒப்புக் கொள்ள முடியாததொன்று. பேராசிரியர் நீலகண்ட சாத்திரியார் உட்பட்டவர், சோழர் காலத்தில் வர்க்க அமைதியே இருந்தது என்று எழுதியுள்ளனர்.

சமூகத்திலே அமைதி நிலவியது என்பதை நாம் மறுக்க வேண்டியதில்லை. அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அமைதிக்குப் பின்னால் நோகாத முறையில் சுரண்டல் இருந்தது என்றும், அங்குதான் சமயம் கருவியாகப் பயன்பட்டது என்றும் நாம் நிரூபிக்க முடியும். பேரரசு தோன்றிய காலத்திலே பெருந்தத்துவமும் ஏன் தோன்றியது என்னும் கேள்விக்கு விடையும் அங்கேதானிருக்கிறது.

ஐரோப்பாவிலே நிலமானிய முறை நிலவிய காலத்திலே கத்தோலிக்க திருச்சபை சமூக வாழ்வில் எத்துணை முக்கிய பங்கு வகித்தது என்பதனை முன்னர்ப் பார்த்தோம். திருச்சபை என்பதற்குப் பதிலாகக் கோயில் என்று திருத்தி வாசித்தால் நிலைமை பொதுவாகவே இருக்கும் என்றும் கூறினோம். இக்கருத்து வேறு நில வரலாற்றாசிரியராலும் மேலெழுந்த வாரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"மத்திய காலத்திலே தென்னிந்தியாவில் எழுந்த கோயில்களை, ஐரோப்பிய கிறித்துவ தேவாலயங்களோடு ஒப்பிட்டாராய்வது சுவை பயக்கும். கிறித்துவ தேவாலயங்களைப் பற்றிக் கூறப்படுவன எழுத்துக்கு எழுத்து தென்னிந்தியக் கோயில்களுக்குப் பொருந்தும் எனக் கூறலாம். ஆக ஒரேயொரு வேறுபாடு. ஐரோப்பாவிலே தேவாலயங்களோடு சம்பந்தப்பட்டோர் மத குருமாராக இருந்தனர். இங்கே சாதாரண மக்கள் இருந்தனர்.35

யார் இந்தச் சாதாரண மக்கள்? அவர்களே வேளாளர். நிலமுடைய பெருங்குடிகள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும், நாட்டினராகவும் அதிகாரம் பெற்றிருந்தனர்.36 நிலமானிய அமைப்பு முறை நிலவிய தமிழகத்திலே கோயில்கள் வகித்த தலையாய பாத்திரத்தை விரிவாகவே பார்த்தோம். கோயில்கள் என்று கூறும்பொழுது வெறும் கற்கட்டிடங்களை நாம் கருதுகிறோமா? வட்டிக்குப் பணம் கொடுத்தும், வங்கி நடத்தியும், நிலம் உழுதுவித்தும் ஆயிரந்தொழில் செய்வித்தவர்கள்யார்? கோயில் தர்மகர்த்தாகளே; கோயில் முகாமைக்காரரே; கோயில் மேற்பார்வையாளரே. இவர்களிற் பெரும்பாலோர் வேளாளரே. எனவே கோயிலை ஆட்டிப்படைத்த இவர்கள் சர்வ வல்லமையுள்ளவராக விளங்கினர்; இவ்வாறு இருந்த படியாலேயே கோயிற்பட்டற் வேளாளருக்கு மரணதண்டனை விதித்தல் கூடாது என்றார். கோயிலின்பேரில் சாதாரண மக்களைத் தண்டிக்கவும், நிலங்களை விற்கவும், அடிமைகளாகப் பெறவும், நிலப்பிரபுகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. சோழப் பேரரசிலே மிகப் பெரிய குற்றம் இராசத்துரோகமும் சிவத் துரோகமுமாம். அந்தளவிற்கும் நிலவுடைமையாளர் தமது அக்கறைகளில் கண்ணும் கருத்துமாயிருந்தனர்.

இத்தகைய சூழ்நிலையிலே மன்னன், நிலப்பிரபுக்கள் ஆகியோருடைய நிலைபேற்றிற்கும், தலைமைக்கும் முதன்மைக்கும் சித்தாந்தம் தத்துவ விளக்கம் கொடுத்தது.

வேளாளர் கையோங்கிய அன்றைய அரசியற் பகைப் புலத்திலே - படைத் தலைவரையும், நிர்வாகிகளையும், கோயில் தர்மகர்த்தாக்களையும் அளித்த அதே வேளாளர் வர்க்கம் சித்தாந்தப்பெரு நூலாகிய சிவஞானபோதத்தினை எழுதிய மெய்கண்ட தேவரையும் அளித்ததில் வியப்பு ஏதுவும் இல்லையல்லவா? ஆனால் அதனை நன்கு விளங்கிக் கொள்வதற்குப் பல்லவர் காலத்திலிருந்து வளர்ந்து வந்த சில சமயப் போக்குகளையும் பண்புகளையும் நாம் அறி து கொள்ளல் அவசியம்.

தமிழ், தமிழ்நாடு என்னும் உணர்வுகளை நாயன்மார் மக்களிடையே பரப்பினர் அல்லவா? விதி, சாதி, கர்மம் முதலிய யாவற்றையும் சடந்த பரம்பொருளாகச் சிவன் விளங்குகிறார் என்று அரனடியார்கள் போதித்தனர். சமணரையும் பௌத்தரையும் எதிர்த்த காலத்திலே சாதிப்பிரிவுகளைக் கடந்த - பரந்த - அணியொன்றனை வைதிகர் கட்டி வளர்த்தனர். நிலப் பிரபுத்துவக் காலத்திலே நிலவுடைமையாளரும் வேளாளர், பிராமணர் போன்ற உயர்சாதிக்காரருமே, மேனிலையிருந்தனர். எனினும் சோழப் பேரரசானது தமிழ்த் தேசியத்தினையும் சமூக சமத்துவத்தையும் வற்புறுத்திய இயக்கத்தின் பின் தோன்றியபடியால் அவற்றைப் பொய்மையாகவேனும் உருக்கொடுத்து வளர்த்தல் அத்தியாவசியமாயிற்று. தமிழ்நாடு முழுவதையும் ஒன்றுசேர்ப்பது போலவும் சாதிப்பாகுபாடுகளைக் கடப்பது போலவும் ஒரு பொய்மையினை உருவாக்கிய நூல்களிற் சேக்கிழார்பெரிய புராணத்திற்குத் தனியிடமுண்டு. பக்திச்சுவை நனிச்சொட்டச் சொட்டப் பாடிய கவிவல்லவரான சேக்கிழார் பெருமானும், தொண்டை மண்டலத்திலே குன்றத்தூரில் தோன்றிய வேளாளர் குலப் பெருங்குடி மகனே. தமிழ், தமிழ்நாடு என்ற உணர்வை உண்டாக்கி, அதன் மத்தியில் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை நிறுத்தி எல்லாரும் அவன் அடிமைகளே என்னும் பொய்மையை சிருட்டிக்கப் பெரிதும் உதவியது தொண்டர் புராணம். சாதிப் பாகுபாடு மிகக் கடுமயாக அனுட்டிக்கப்பட்ட சோழர் காலத்தில், விதிகளும், சட்டங்களும் சாதிப் பிரிவினைக்கு அங்கீகாரம் அளித்த காலத்தில், இறைவனுக்கு முன் யாவரும் சமமே என்னும் மனச்சாந்தியை அளிக்க உதவியது பெரிய புராணம் போன்ற நூல். நடைமுறைக்கும் அக்கருத்திற்கும் இமாலய வேறுபாடு இருந்தது. இறைவனே பரம்பொருள் என்ற கருத்தைக் கூறிக்கொண்டு அப்பட்டமான சுரண்டலில் அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தனர் மன்னரும் வேளாளரும். இதனை ஒர் உதாரண மூலம் விளக்குவோம். கோயிற்றருமகர்த்தாக்கள் நிலவுடைமையாளர்-கோயில் நிலங்களைக் குத்தகைக்கு விடும்பொழுது உறுதிகளில் சிவனடியாராகிய சண்டேசுவரர் பெயரே எழுதப்பட்டது. குத்தகைக்கு நிலம் எடுப்போர் தாம் கடவுளின் நிலத்தையே பெற்றிருக்கிறோம் என்று உணர்த்தவும், மனிதருக்கும் இதற்கும் தொடர்பு எதுவும் இல்லையென்றுகாட்டவுமே இம்முறை மேற்கொள்ளப்பட்டது.37 கோயிலுக்கும் கடவுளுக்கும் தலையாய இடத்தைக் கொடுக்கவும், அவற்றுடன் தொடர்பு கொண்டவருக்கும் உயரிடம் கிடைப்பது இயல்பேயல்லவா? பல்லவர் காலப் பக்தியியக்கத்தின்போது தாழ்த்தப்பட்ட மக்கள் பலரும் இறையடியாராக உண்மையில் உயர்ந்து சிறப்பெய்தினர். ஆனால் சோழர் காலத்தில் உயர் சாதியினரே உயரிடம் வகித்தனர். எனினும் கீழ்ச்சாதியினரும் இறையடியாராகப் புகழ் பெறுதல் முடியும் என்னும் நம்பிக்கையை அறித்தது பெரியபுராணம். அந்த நம்பிக்கை பலரை அமைதியாக வாழச் செய்தது என்று வற்புறுத்த வேண்டியதில்லை. இந்தப் பின்னணியிலேயே சோழ மன்னர் பலருடைய திருப்பணிகளையும், சமயத் தொண்டினையும் நாம் துருவிப் பார்த்தல் வேண்டும். சேக்கிழார் பெருமான் காவியத்திற்குச் செய்த பணியை மற்றும் பலர் கல்லிலும் செம்பிலும் செய்தனர். சோழர் காலத்திலே நாயன்மாருடைய திருவுருவங்களும் வழிபாட்டிற்காகக் கோயில்களில் வைக்கப்பட்டன. அரசாங்கம் சமய வளர்ச்சியினைத் தனது முக்கியப் பணிகளுள் ஒன்றாகக் கருதியது. இது சமயத்துறையில் செல்வாக்கோடு விளங்கிய வேளாளருக்குச் செய்த உதவி என்றே நாம் கருதல் வேண்டும். சமயத்தால் நன்மை வரும் என்று கண்டுகொண்டே சோழப்பெரு மன்னர் பல வழிகளில் தம்மைச் சமய பக்தர்களாகக் காட்டிக் கொண்டனர். இது எல்லாக் காலங்களிலும் காணக்கூடிய ஒரு உண்மையாகும். முதலாம் இராசேந்திரன் ஆட்சியில் தேவார நாயகம் என்றொரு அதிகாரி நியமிக்கப்பட்டான். சிவன் கோயில்களில் தேவார பாராயணம் ஒழுங்காக -முறையாக-நடைபெறுகிறதா என்பதனைக் கண்காணிக்கும் அதிகாரியாக அவன் விளங்கினான். சிவன் கோயில்களில் திருப்பதிகம் ஓதவும், பெருமாள் கோயில்களில் திருவாய் மொழி ஓதவும் நிலதானம் விடப்பட்டது.38

நிலவுடைமை நிறுவனமாகிய கோயிலைச் சைவ சித்தாந்தத்தினின்றும், பிரிக்க முடியாத ஓர் அமிசமாக ஆக்கினார் மெய்கண்டார். பல்லவர் காலமுதல் வளர்ந்துவந்த கோயில் வளர்ச்சியினையெல்லாம் மனதிற்கொண்டு சிவ வழிபாட்டில் கோயில் எத்துணை பிரதானமானது என்று விளக்க முனைந்தார் மெய்க்கண்டார்.

"செம்மலர் நோன்றாள் சேர லொட்டா

வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ

மாலற நேய மலிந்தவர் வேடமு

மாலயந் தானு மரனெனத் தொழுமே"39

இதற்குச் சிற்றுரை கண்ட மாதவச் சிவஞான யோகிகள் மேல்வருமாறு கூறுவர்.

"அயராவன்பினன் கழலணைந்த žவன் முத்தனாவான் செங்கமல மலர்போல விரிந்து விளங்கிய முதல் வனது நோன்றாளை அணையவொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும் அவ்வியல்பினையுடைய மும்மல வழுக்கை ஞான நீராற் கழுவி அங்ஙனம் அயராவன்பு மெய்ஞ் ஞானிகளோடு கலந்துந்துகூடி மலமயக்க நீங்குதலான் அன்புமிக்குடைய அவரது திருவேடத்தையு ங சிவாலயத்தையும் முதன்வனெனவே கண்டு வழிபட்டு...காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் காமுகரை வžகரித்து இன்பஞ் செய்யுமாறு போல திருவேடத்தையுஞ் சிவாலயத்தையு மென்பசரித்தார்....அம்முதல்வர் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து மாத்திரையே தயிரினெய் போல விங்கி நிலைபெற்று அல்லுரியெல்லாம் பாலினெய் போல வெளிப்படாது நிற்றலான் இனிப் பத்தரது திருவேடத்தையுஞ் சிவாலயத்தையும் பரமேசுரனெனக் கண்டு வழி படுகவென மேற்கொண்டது."40

சிவ வேடங்களையும் சிவாலயத்தையும் சிவனெனவே கொள்ளல் வேண்டும் என்று சைவசித்தாந்தப் பெருநூலாகிய சிவஞானபோதம போதிக்கும் பொழுதுதான், கோயில்களையும் கோயிலுடன் சம்பந்தப்பட்டவரையும் நன்மை தீமைகளுக்கு அப்பாலே மெய்கண்டார் வைத்து விட்டமை நமக்குப் புலனாகின்றது. இக்கோயில்கள் நிலவுடைமையுள்ள பெரும் பொருளாதார நிறுவனங்களாக இருந்தன என்னும் யதார்த்த உண்மையின் பாதுகாப்பின் பண்பு புலனாகிறது. அதே சமயத்தில் சேக்கிழார் மரபை, மெய்கண்டார் எவ்வாறு பேணுகிறார் - அவர்விட்ட இடத்தில் இவர் எவ்வாறு தொடங்குகிறார்-என்பதும் துலக்கமாகிறது.

நிலப்பிரத்துவத்தின் ஒரு முக்கியமான பண்பு அச்சமூகத்தின் தலைவர்கள் சமய அங்கீகாரத்துடன் நிலை பேறுடையவராய், இயல்பாகவே தலைவர் எனக் கொள்ளப்படுபவராக இருத்தல், "தலைவர் அவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே" என்று கம்பன் தனது காப்பியத்தில் கடவுள் வணக்கத்திற் கூறியுள்ளது அலகிலா விளையாட்டுடைய திருமாலைமட்டுமன்றி, அக்காலத் தலைவரை - வேளாளரையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. முதலிலே மன்னரை எடுத்துப் பார்ப்போம். சோழர் காலத்திற்கு முன்னதாகவே அரும்பத் தொடங்கிய 'அரச உரிமை தெய்வாம்சமானது' என்னுங் கொள்கை சோழர் காலத்திலே பூரணத்துவம் பெற்ற ஆட்சிக் கோட்பாடாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. ஆங்கிலத்திலே இதனை DIVINE RIGHTS OF THE KINGS என்பர். அரசனை கேவலம் மானுடனாகவன்றிக் தெய்வமாகவே பாவிக்க இந்நம்பிக்கை வழி செய்தது. உலகமெங்கும் நிலமானிய அமைப்பிலே காணப்படும் ஓர் அம்சம் இது என்பதனை நாம் மனங் கொள்ளல் தகும். "திருவுடை மன்னரைக் கண்டால் திருமாலைக் கண்டனே என்னும்" என்று பாடிய நம்மாழ்வார் திருவாய் மொழியிலும், "அரிமாசுமந்த அமளியோனைத் திருமாவளவன் எனத்தேறேன் - திருமார்பின்மானால் என்றே தொழுதேன்" என்ற பழம் பாடலிலும் அரசரின் கடவுட்டன்மை சுட்டிக் காட்டப்படுகின்றது. ஆனால் சோழர் காலத்தில் அதுவே பெரு நம்பிக்கையாக உருப்பெற்றிருந்தது.

"சோழ மன்னர்களை அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட சோழ இராச்சியத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் எல்லோரும் திருமாலின் அவதாரமாகவே எண்ணிப் பேரன்பு பூண்டு ஒழுகி வந்தனர்."41

சோழ அரச குடும்பத்தவரின் திருவுருவங்கள் பல கோயில்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டமையும், சோழ மன்னரின் புதைகுழிகளுக்கு மேலே கோயில்கள் எழுப்பப்பட்டமையும் இவ்வுண்மைக்குச் சிறந்த சான்றாயமைந்துள்ள.42 பின்னதைப் பள்ளிப்படைகள் என்பர். சுந்தர சோழன் மகள் குந்தவ்வையார் தஞ்சைக் கோயிலிலே மக்கள் வழிபாட்டிற்காகத் தனது தந்தையார் (திருமேனி) படிமம் ஒன்றை உருவமொன்றனையோ அன்றித் தனது உருவமொன்றனையோ அதே கோயிலில் வைப்பித்தார். இதற்குரிய கல்வெட்டிலே "தம்மையாக எழுந்தருளிவித்த திருமேனி" என்றே காணப்படுகிறது.

இராசராசன், அவன் மனைவி லோகமகாதேவி, இராசேந்திரன், அவன் இராணி சோழமகாதேவி, சோழரின் மனைவி செம்பியன் மாதேவி முதலியோருடைய திருமேனிகளெல்லாம் பல கோயில்களில் எழுந்தருளிவிக்கப்பட்டன. "எழுந்தருளி" என்ற சொற்றொடர் அக்காலத்திலே மன்னருக்கு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதனையும் நாம் நோக்குதல் தகும். கலிங்கத்துப்பரணி போன்ற நூல்களிலும் மன்னரைத் தெய்வ அவதாரங்களாக வருணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதற் குலோத்துங்க சோழன் வரலாற்றைக் காளிதேவி, பேய்களுக்கு உரைக்கு முகமாக அவனது அவதாரச் சிறப்புக் கூறப்படுகின்றது. மும்மூர்த்திகளில் காக்கும் தெய்வமான திருமாலே குலோத்துங்கனாக அவதரித்தான் என்று பாடுவார் செயங்கொண்டார்.

"அன்று இலங்கை பொருது அழித்த அவனே, அப்

பாரதப் போர் முடித்து பின்னை

வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன்

என உதித்தான்; விளம்பக் கேண்மின்."

"இருள் முழுதும் புவியகல, இரவிகுலம்

இனிது ஓங்க, இராசராசன்

அருள் திருவின் திருவயிறாம் ஆலிலையின்

அவதரித்தான் அனவே, மீள."

என்றெல்லாம், முன்னொருகால், தேவர் குறையிரப்பத் தேவகியின் வயிற்றிலே பிறந்ததுபோலக் குலோத்துங்கன் மூவுலகுந் தொழத் திருவவதாரஞ் செய்தான் என்கின்றார் கவிஞர். இதைப்போலவே, பிற்காலச் சோழ மன்னன் ஒருவனாகிய குமார குலோத்துங்கனைப் பாட்டுரைத் தலைவனாகக் கொண்ட 'குலோத்துங்க சோழன்கோவை' என்னும் நூலிலும், அம்மன்னனைத் திருமாலேயாகவும், திருமால் அவதாரமாகவும் சிறப்பிக்கப்படுகின்றது. "பண்டு இராவணனைக் கட்டாண்மை தீர்த்த குலோத்துங்க சோழன்" என்று இராமனையே சோழ மன்னராகக் கண்கின்றார் கோவைப் புலவர். ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலா எனும் நூலின் பிற்சேர்க்கையாகக் திகழும் பழப்பாடல் ஒன்று, திவ்வியப் பிரபந்தச் செய்யுட்களிலே நாரணனைப் போற்றும் மொழியிலே, சோழ மன்னனைப் போற்றுகின்றது.

"கையு மலரடியுங் கண்ணுங் கனிவாயும்

செய்ய கரிய திருமாலே - வையம்

அளந்தா யளங்கா வாலிலை மேற் பற்றி

வளர்ந்தாய் தளர்ந்தாளிம் மான்."

Link to comment
Share on other sites

கோதண்டம் ஏந்திக் குவலயத்தைக் காக்க மானுட வடிவில் வந்த இராமனும், உலகமுய்ய வந்துதித்த ஒரு திருமுருகனும், வென்றிலங்கு கதிராழி விசயதரன் என உதித்த குலோத்துங்கனும் ஒரே சுருதியில் புலவர்களால் போற்றப் படுவதும் கவனிக்கத் தக்கதே.

இரண்டாவதாக, தலையாய வர்க்கத்தினராக - உடையராக இருந்த வேளாளரை எடுத்துக் கொள்வோம். சோழர் காலத்திலே வேளாளரைப் பற்றிய தெய்வீகக் கதைகள் வேகமாக உருப்பெறலாயின. "சிவன் பார்வதி முயற்சியால், நிலத்திலிருந்து மனிதத் தன்மையும் தெய்வத் தன்மையும் சேரப் பொருந்திய ஒருவன் தோன்றினான். அவன் கையில் கலப்பையும் கழுத்தில் மலர் மாலைகளும் காணப்பட்டன. அவன் வழியினரே வேளாளர்" என்னுங் கருத்து உருவாகியது.43 சோழர் காலத்திலே உயர்நிலை எய்திய புதிய நிலப்பிரபுத்துவம் நிர்வாக வர்க்கம் மிகக் குறுகிய காலத்திலே தம்மைப்பற்றிய புராதன மரபுக்கதைகளைச் சிருட்டித்துக் கொண்டது என்பதுபற்றி வரலாற்றாசிரியரிடையே கருத்து வேறுபாடு இல்லை.44

மன்னரும் பிரபுக்களும் சிவப்பேறுடையவராய் - தெய்வாம்சம் பொருந்தியவராய் இருந்தனர். என்று நயம்பட்ட அந்நிலையில் தென். தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது. தூய்மையான சிவலோகத்தில் யாவரும் வாழ்வதுபோன்ற ஒரு பொய்மை (Illusion) உண்டாக்கப்பட்டது. இதன் தத்துவார்த்த வெளிப்பாடே சிந்தாந்தமாகும். மேற்கூறிய பொய்மையினை உண்மையே எனக் கொள்பவர்கள் இன்றும் நம் மத்தியில் உள்ளனர்.

"சிவஞானப் பேற்றில் பேரார்வமும், சிவத்தொண்டில் பேரூக்கமும், திருத்தொண்டர் வரலாற்றில் பேரன்பும் மக்களிடையே பெருகின; நாட்டில் எவ்விடத்தும் சிவன்கோயில்; எவர் நெஞ்சிலும் சிவஞானம்; எவர் மொழியிலும் சிவநாமம்; எவர் மேனியிலும் சிவவேடம்; எவர்பணியும் சிவப்பணி; எங்கும் எல்லாம் சிவமேயாய்ச் சிறந்து நின்றமையின், தென் தமிழ் நாடு சிவலோக மயமாய்க் காட்சியளித்து."45

சிவலோக மயமாய்க் காட்சியளித்தது சமயம் சிருட்டித்த பிரமை என்றே கொள்ளல் வேண்டும்.

ஒவ்வொரு நாகரிக நிலையிலும் மனிதன் தான் வழிபடும் தெய்வங்களுக்குத் தனது கால வாழ்க்கை முறை, அரசியல் அமைப்பு, சமுதாய ஒழுங்கு ஆகியவற்றினைப் பிரதிபலிக்கும் பண்புகளைப் பொருத்தி வழிபடுகிறான். இதன் காரணமாகவே சில காலங்களிலே பெரு வழக்கமாக இருக்கம் தெய்வங்கள் வேறு சில காலங்களிலே இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகிறார்கள். ஆசிரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலப் பகுதியிலே இந்திரன், பிரசாபதி போன்ற வீரமும் தீரமும் நிறைந்த தெய்வங்களை வழிபட்டனர். வச்சிராயுதம் ஏந்திய வேதகால ஆரியக்கடவுளான இந்திரன் மட்பாண்டத்தை உடப்பதுபோல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடும்.46 ஆனால் வேதகாலத்துக்குப் பிற்பட்ட இந்து சமய வளர்ச்சியிலே வேதகாலக் கடவுளர்கள் முக்கியத்துவமிழந்து விடுகின்றனர். சிவன், விட்டுணு, பிரம்மா முதலிய புதிய தெய்வங்கள் முன்வரிசையிற் காணப்படுகின்றனர். அதைப்போலவே புராதனத் தமிழகத்திலே வணங்கப்பட்ட கொற்றவை பிற்காலத்திலே வேறு வடிவமும் குணமும் பெற்றுவிட்டாள். அதைப்போலவே சிவ வழிபாடும் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலுமே நிலப்பிரபுத்துவத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இந்தியா எங்கணும் சைவம் பெருநிலக்கிழார்களின் ஒழுகலாறாகவும், சிவன் அவர்களின் தனிப்பெரும் இட்ட தெய்வமாகவும் அமைந்தமை கவனிக்கத்தக்கது.47 சோழர் ஆட்சியில் இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்த சைவ சமயாசாரியாருக்கும், சைவ சமய நிறுவனங்களுக்கும், தமிழகத்தில் இருந்த பெரியாருக்கும் நிறுவனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு நிலவியது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் காணப்படுகின்றன.48

சோழர் காலத்திலே காணப்பட்ட சமுதாய அமைப்பும் அரசியல் முறையும் வாழ்க்கை ஒழுக்கம் சித்தாந்தம் காட்டும் இறைவனில் சிவனில் - பதியில் - தமது சாயலைப் பொறித்துள்ளன என்று நாம் நிரூபிக்க முடியுமாயின் பேரரசுக்கும் பெருந்தத்துவத்திற்குமுள்ள தொடர்பு மேலும் தெளிவாகுமல்லவா? அறிந்தோ அறியாமலோ திராவிடமாபாடிய கர்த்தராகிய சிவஞானசுவாமிகள் நமக்கு இத்துறையில் வழிகாட்டியுள்ளனர். மெய்கண்டாருடைய சிவஞானபோதச் சூத்திரங்களுக்கு ஈடிணையற்ற மாபாடியம் எழுதியவர் மூல நூலை அனுசரித்துப் பலவிடங்களில் இறைவனையும், ஆன்மாவையும் விளங்குவதற்கு அரசனையும் அவனைச் சார்ந்தோரையும் உருவகப்படுத்தியிருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. எட்டாஞ் சூத்திர உரையிலே மேல்வருமாறு கூறியுள்ளார்.49

"வெண்கொற்றக் குடையும், நவமணி முடியும், சிங்காதனமும் மன்னவர்கேயுரிய சிறப்படையாளமாம். அதுபோலப், பிரபஞ்சமெல்ல வற்றிற்கும் மூல காரணமாகிய ஒருபெரு வெண்கொற்றக் குடையும் எவற்றையும் ஒருங்கே ஓரியல்பான் அறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ்சுடர் முடியும், எவற்றினையும் அங்கங்கே உயிர்க்குயிராய் நின்று செலுத்துமியல்பாகிய ஒரு பெருஞ் சிங்காதனமும் பிறர்க்கின்றித் தனக்கே உரிமையாகச் சிறந்தமை பற்றிப் பசுக்களுக்குப் பாசங்களை அரித்தலான் அரனென்னுந் திருப்பெயருடைய முதல்வனை மன்னவனாகவும், அம்முதல்வனது பேரானந்தப் பெருஞ் செல்வமுழுந் தனதேயாகக் கொண்டு, அனுபவிக்குஞ் சுதந்தர முடைமையுஞ் சித்தெனப்படுஞ் சாதியொப்புடையும் பற்றி ஆன்மாவை மன்னவ குமாரனாகவும், அவ்வான்மாவை அறிவுப் பெருஞ்செல்வம் முழுவதும் ஆறலைத்து இழி தொழிலில் நிற்பித்தலுமாகிய இயல்பு பற்றி ஐம்பொறிகளை வேடராகவும் உருவகஞ் செய்தார். இஃதே கதேசவுருவகம்."

மெய்கண்டார் சூத்திரங்களுக்கு மூலத்தையொட்டி நின்று விரிவுரைகூறும் சிவஞானமுனிவர் கூற்றுக் கவனிக்கத்தக்கது. 'உருவகஞ் செய்தார்' என்னும்பொழுது மெய்கண்டார், 'காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூறுகின்றார்.' என்றே உரைகாரார் உரைக்கின்றார். ஆனால் முதனூலாசிரியர் கண்ட உலகம் எது? அதிலேதான் காணப்படாத பொருளின் தன்மையும் தங்கியுள்ளது. ஒட்டக்கூத்தரும், கம்பரும், செயங்கொண்டாரும், சேக்கிழாரும் வாழ்ந்த அதே ஏகாதிபத்தியப் பேரரசின் பண்புகளைக் கொண்டே வேளாளராகிய மெய் கண்டார் மெய்ப்பொருளுண்மைகளை விளக்குகிறார் என்னும் உண்மையினை நாம் இலகுவில் மறுத்தல் இயலாது. சங்க காலத் தமிழகத்திற் காணப்பட்ட சின்னஞ்சிறு நிலப் பரப்புகளை ஆண்ட "குட்டி" மன்னர்களல்லர் சோழச் சக்கரவர்த்திகள். அவர்கள் அவனி முழுதுமாண்டவர்கள்; திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்று தம்மைத் தாமே, தமது கல்வெட்டுக்களிற் குறிப்பிட்டுக் கொண்டவர்கள். அவர்களைப் பெரும்பாலான மக்கள் தெய்வமாகவே தொழுதவர்கள். அத்தகைய சூழலில் மெய்கண்டார் தெய்வத்தை விளக்குதற்குச் சோழமன்னரை உருவகஞ் செய்தது பொருத்தமானதன்றோ. பல்லவர் காலக் கவிஞர் சிற்றின்ப உறவுகளின் வடிவத்திலே பேரின்பக் குருத்துக்களைக் கூறி முடித்ததுபோல இதனை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். சாத்திர நூல்கள் முதல்வனாக இறைவனுக்குக் கூறும் பண்புகளைத் தலைமைபற்றி அவனுக்குள்ள இயல்பைக் கூறுவன. அக்கருத்துக்கள் மக்கள் நெஞ்சிலே, பொதுவாகத் தலைமை பற்றியும், நல்லெண்ணத்தையும் உண்டாக்குவன. எனவே அவ்வுணர்வு தலைவராக இருந்து நாடாண்டவருக்குச் சாதகமாக இருந்து உதவின. அரசனுடைய இல்லத்துக்கும் பெயர் கோயில்; தெய்வம் உறையும் ஆலயத்திற்கும் பெயர் கோயில்; எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காசனமும் பெயர் கோயில்; எத்துணை ஒற்றுமை. நிலப்பிரபுத்துவத்திலே சிங்காசனமும் தேவாலயங்களும் பரஸ்பரம் ஒன்றிற்கொன்று உதவிசெய்து வாழ்ந்தன என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர் கூறுவதில் எத்துணை உண்மை பொதிந்துள்ளது! கோயிலின் இரட்டைத் தோற்றங்கள் எவ்வளவு பொருத்தமாயுள்ளன!!

மற்றோர் உதாரணத்தைப் பார்ப்போம். தலைவனுக்கு எண்குணங்களைக் கூறுகின்றன சைவாகம50 நூல்கள். எண் குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவுஇல் ஆற்றல் உடைமை, வரம்புஇல் இன்பம் உடைமை என இவை, ஆளும் வர்க்கத்தினருக்கு ஆற்றலும், அறிவும் இன்பமும் உடையவனாயிருத்தல் என்று சித்தாந்த சாத்திரங்கள் விதிக்கும்பொழுது, தலைமைப் பதவியிலிருந்து சமயச்சார்புடன் ஆட்சி புரிந்தவர்களுக்கு அச்சாத்திரத் தத்துவங்கள் தோன்றாத் துணையாக இருந்தன என்பதைக் கூறுவேண்டுமோ? சித்தாந்த சாத்திர நூல்களிலே பதியிலக்கணம் கூறப்படுமிடங்களில் அரசனை - பேரரசனை - மனத்திலிருத்திப் பார்ப்போமாயின் இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும்.

தலைவனை உயர்த்திய அச்சமுதாயம் சாதாரண ஏழை உழவர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்தது. இது அக்காலப் பொருளாதார முறையின் - சமூக உறவின் - பண்பு என்பதை முன்னர்க் கண்டோம். இதன் சாயல் தழுவிய முறையில் ஆன்மாக்களைப் பற்றிக் கூறியது சிவஞானபோதம். அதன் வழி நூல்களும் சார்பு நூல்களும் அதனையே மீட்டும் மீட்டும் வலியுறுத்தின. சுருங்கக் கூறின் பொருளாதாரத் துறையிலே காணப்பட்ட பிரதானவர்க்க வேறுபாட்டினையே - ஆண்டான் அடிமை உறவினையே - இறைவனுக்கு உயிருக்குமுன் உள்ள உறவாக வருணித்தது தத்துவம். சிற்றுரை மேல்வருமாறு கூறும்.51

"......முதல்வனது வியாபகத்தை நோக்கி வியாப்பியமாகலின், அப்பாசங்கள் உடைமையாம்; பசுக்களாகிய நாம், அடிமையாவேம் அம்முதல்வன் மாட்டு..."

இறைவனின் அடிமைகள் பசுக்களாகிய ஆன்மாக்கள் என்று சித்தாந்தம் தத்துவார்த்த விளக்கம் கொடுத்தது. நிலப்பிரபு தனது அடிமைகளை வைத்து வேலை வாங்க இத்தத்துவம் எத்துணை உதவியாயிருந்தது என்பதனை மேலும் எடுத்து விளக்கத் தேவையில்லை. ஆனால் அத்துடன் நின்றுவிடவில்லை சித்தாந்தம். அற்புதமான அதன் தருக்க இயல்பு ஆன்மாவின் சார்புத் தன்மையையும் அழுத்தத்திருத்தமாக வற்புறுத்தியது. விரும்பியோ விரும்பாமலோ உழவுத் தொழிலே உவமையாகக் கொள்ளப்பட்டுள்ளது.52 மீண்டும் சிவஞான யோகிகள் சொற்களையே துணைக்கொள்வோம்.

"....அற்றேல், அவ்வினையே பயனாக வருமெனவமையும், முதல்வன் ஏற்றுக்கெனின்:- உழவர் செய்யுந் தொழிற்குத் தக்கபயனை விளைநிலம் விளைவிப்பதன்றி அத்தொழிறானே விளைவிக்கமாட்டாதது போல, உணவும் வித்துமாய்த் தொன்றுதொட்டு வரும் அவ்வினைகளை வள்ளலாகிய முதல்வனே அவ்வுயிர்கட்குக் கூட்டுவன்; அவ்வாறன்றி வினைதானே உயிர்கட்குப் பயனாய் வந்து பொருத்தமாட்டாது வள்ளல் என்றார், தற்பயன் குறியாது வேண்டுவோர் வேண்டியவாறே நல்கும் அருளுடைமை நோக்கி... மேல் முதல்வனுக்கு வினைவேண்டப் படுமென்பதற்கு அரசனையுவமை கூறினார்; ஈண்டு வினைமுதல்வனை இன்றியமையாதென்பது உணர்த்துதற்கு உழவுத் தொழிலை யுவமை கூறினாரெனக் கொள்க."

அடிமையின் இயல்பினைக் கூறப் புகுந்தவர் அவனது செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முடியாது. ஆண்டானால் கட்டுப்படுத்தப்பட்டவனுக்கு

Link to comment
Share on other sites

சித்தாந்தத்திற் காணப்படும் சமயக் கருத்துக்களான "உண்மைகள்" சோழர் கால இலௌகிக - உலகியல் இலக்கியங்களிலும் வேறு வடிவத்திற் காணப்படுகின்றன. சமயத்துறையில் ஆண்டானுக்கு உயர்ச்சி கூறியது சித்தாந்தம், அப்பணியையே சோழர் காலத்தெழுந்த பெரும்பாலான சிற்றிலக்கியங்களும் செய்தன. உதாரணமாகத் தண்டயாசிரியருடைய 'காவ்யாதர்சம்' சோழர் காலத்தின் தொடக்கத்திலே பெயர்க்கப்பட்டது. நாற்பொருளையும் பயக்கும்நீதி நெறிகளையுடைய தாயும் சிறந்த நாயகன் ஒருவனை யுடையதாயும், மலை, கடல், நாடு, நகர், பருவம் என்பவைகளையும் இவை போன்ற பிறவற்றையும் கொண்ட காப்பியங்கள் போன்று இது வழிவகுத்தது. தண்டியலங்காரத்திலே 'தன்னிகரில்லாத் தலைவன் என்றே கூறப்படும். இவ்விலக்கணத்தை விளக்கும் சாகித்திய தர்ப்பணம் என்னும் நூல் 'நாயகனாவான் அழகு, இளமை, புகழ், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், அருள், பிரதாபம், கொடை, குலம் முதலிய குணங்களுடையவனாய் இருத்தல் வேண்டும் என்று கூறும்63. இத்தகைய இலக்கணங்கள் பொருந்திய "ஒரு இதிகாசபுருஷனை அல்லது சிறந்த நாயகனைக் குறித்துள்ள சரிதத்தைப் பொருளாகக் கொண்டு, உலகினர்க்கு நன்மை புரியும் நோக்குடன் சுவைபட விரிவாகக் கூறிச் செல்லும் நூலே காப்பியமாகும்.64

கோவை பிள்ளைத்தமிழ், உலா, பரணி முதலிய சிற்றிலக்கிய வடிவங்களும், சாசனச் செய்யுட்களும், பெருங்காப்பியங்களும், தேவராயினும், மானுடராயினும் "தலைவர்" புகழே பாடின. நிலமானிய முறையும் பேரரசும் வளருமிடங்களில் இது இயல்பான தோற்றமே. நரலோக வீரனும் கம்பர் மூவேந்த வேளானும், கருணாகரத் தொண்டைமானும், சடையப்பவள்ளலும், திரிபுவனச் சக்கரவர்த்திகளோடு சேர்ந்து நாட்டாட்சி செய்தவர் தாம். அந்த வர்க்கத்திற்குத் துதிபாடவே காப்பியங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவின. žவகசிந்தாமணியானது அடியெடுத்துக் கொடுக்கப் பின்வந்தவர்கள் பெருந்தலைவரைப் பாடினர். வணிகரைப் பாடினர். அவதார புருடர்களைப் பாடினர். தெய்வங்களைப் பாடினர். காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களம், கதாநாயகரது பண்புகளம் அவன்றின் வர்க்கச்சார்பைத் தெளிவாக்ககின்றன.65 அதுமட்டுமன்று. மெல்ல மெல்லக் காவியங்கள் மக்களின் கருத்துலகையே முற்றுகையிடலாயின. பருப்பொருள்களையும் இயக்கவியலையும் விடுத்து, கருத்துக்களையும் இயக்க மறுப்பியலையும் இக்காப்பியங்கள் கைக்கொண்டன. இதனை வையாபுரிப் பிள்ளையவர்கள் "காவிய நிகழ்ச்சிகளின் நிலைக்களம் செய்கை உலகினின்று, கருத்துலகத்திற்கு மாறிவிடுகிறது" என்கிறார்.66 இதனையே சைவசித்தாந்த நூல்களும் செய்தன என்னும் உண்மையை நாம் உணரும் போது அக்காலக் கருத்துக்களின் வர்க்கச் சார்பு புலனாகின்றது. "ஏர்எழுபது" "திருக்கை விளக்கம்" முதலிய உழவரைச் சிறப்பிக்கும் நூல்கள் தோன்றிய காலம் அது என்பதன் முழுப் பொருளும் நமக்குத் தெளிவாகி விடுகின்றன.

இவ்வாறு தமிழ் நாட்டின் பௌதீக அடிப்படைகளினாற் சிறப்பாகவும், இந்தியா முழுவதிலும் ஏற்பட்ட சில மாற்றங்களினாலே பொதுவாகவும் பாதிக்கப்பட்டுப் பிற்காலச் சோழர் ஆட்சியிலே கனிந்த சைவ சித்தாந்தம், தமிழர் தம் தனிச் சிறப்பின் விளைபொருளாகவும் அமைந்துள்ளது என்பது பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடில்லை67 அனவரத விநாயக பிள்ளையவர்கள் இது குறித்து எழுதுகையில் "சைவ சித்தாந்தம் தமிழ் மரத்தில் காய்த்துக் கனிந்த கனியென்றுரைத்தலே சாலும்" என்றார்.68 தொன்று தொட்டுத் தமிழர் தம் மரபில் வந்த உணர்ச்சிகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் முதலிய யாவற்றையும் ஒட்டியும் வெட்டியுமே சித்தாந்தம் உருப்பெற்றது. அதற்கு ஒரு தார்மீக பலம் இருந்தது. அது முக்கியமான வகையில் இன்னும் செயற்பட்டு வருகின்றது. அதுபற்றி ஐயமில்லை. ஆனால் எந்தத் "தத்துவத்தையும் குறிப்பாக அதன் சகல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு அவை சரித்திரத்தில் என்ன பாத்திரம் வகிக்கின்றன என்று நாம் பார்க்க விரும்பினால், தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரித்து வைக்காமல் பரிžலனை செய்ய வேண்டும். தத்துவத்தைச் சரித்திரத்திலிருந்து பிரிக்காமல் பார்ப்பது என்று சொன்னால் தத்துவத்தைச் சமுதாய வாழ்விலிருந்து தொடங்கி, சமுதாயத்துக்குள் நின்று, தத்துவம் வகிக்கும் பாத்திரத்தையும் அதன் காரணப் பொருள்களையும் வடிவங்களையும் நாம் பரிžலிக்க வேண்டும்.69

அதனையே இக்கட்டுரையிலே செய்ய முயன்றுள்ளோம். பிரமஞானமும், மாயாவாதமும், ஏகான்மவாதமும் பிறவும் காட்டும் இயக்க மறுப்பியலையும் கருத்து முதல் வாதத்தையும் சித்தாந்தம் காட்டும் பதிஞானத்தையும், முப்பொருளுண்மை வாதத்தையும், சத்காரிய வாதத்தையும் žவன் மூத்த நிலையையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது சித்தாந்தம் குறிப்பிடத்தக்க அளவு மெய்ம்மை வாதப் பண்பு பொருந்தியது என்பது உறுதியாகும். ஆரியருக்க முற்பட்ட இந்தியாவிலே வாழ்ந்த திராவிடரிடையே நிலவிய புராதனப் பொருள் முதல் வாதமும், பிற்காலத்தின் மெய்ம்மை வாதமும் பன்மை வாதமும் துலங்கப் பலவழிகளில் உதவியுள்ளன. எனினும் அது பற்றி இங்கு ஆராயப்புகுவது வேண்டற் பாலதொன்றன்று. அது மட்டுமன்றி அது நம்மைப் பூரணமான இயக்க மறுப்பு இயல் வாத ஆராய்ச்சியிற் கொண்டு நிறுத்தி விடும்.

அடிக்குறிப்புகள்

1. எஸ்.அனவரதவிநாயகம்பிள்ளை-சைவசித்தாந்த வரலாறு: ம.பாலசப்பிரமணியம்-சித்தாந்த சாத்திரம் (சமாஜ பதிப்பு).

2. கி.லட்சுமணன் - இந்திய தத்துவ ஞானம்.

3. அனவரதவிநாயகமபிள்ளை -Ibid. p-7

4. K.A. Nilakanta Sastri-Cholas. Vol. part 1, p.472-475.

5. க.கைலாசபதி-நாடும் நாயன்மாரும் (இளங்கதிர்) பேராதனைப் பல்கலைக் கழக தமிழ் மாணவர் மன்ற வெளியீடு 1961.

6. பிரெடரிக் ஏங்கெல்ஸ்...குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் பக். 370...371 (தமிழ் மொழிபெயர்ப்பு)

7. K.A. Nilakanta Sastri - A History of South India, p.174.

8. K.A. Nilakanta Sastri - STUDIES IN CHOLA HISTORY AND ADMINISTRATION, P.176.

9. டி.வி. சதாசிவ பண்டாரத்தார்-பிற்காலச் சோழர் சரித்திரம் (மூன்றாம் பகுதி), பக் 17.

10. Nilakanta Sastri, op.cit. பக்78-79

11. எஸ்.ராமகிருஷ்ணன்-மாக்ஸ“யப் பொருளாதாரம் (முதற்பாகம்), பக்,20.

12. சதாசிவபண்டாரத்தார், op,citடக்.78-79

13. FEUDALISM IN HISTORY (ed.) R.Coulbron p.18-20.

14. Ibid. p.20-21.

15. A.L. Morton - A PEOPLES'S HISTORY OF ENGLAND, p.59-61.

16. Marion Gibbs - Feudal Order (past and Present Series p.7.9.

17.Nilakanta Sastri op.cit. p.182

18. CHOLAS Vol.2, part 1, p. 219-20

19. Ibid. p.502

20. A. Appadorai - ECONOMIC CONDITIONS IN SOUTHERN INDIA Vol.p.275

21. S.I.I Vol. II p.66

22. Appadorai - Ibid 283.

23. S.I.I. Vol.VIII No. 244

24. T.v. Mahalingan - SOUTH INDIAN POLITY ; p. 173-80

25. CHOLAS: op cit.p. 502.

26. CHOLAS: Ibid: p.504-505

27. Appadorai: Ibid: p.315

28. CHOLAS, Ibid : p.363

29. 141 of 1922, A.R.E. 1922 part II, para 19.

30. 223 of 1917, A.R.E. 1918, part II, para 49.

31. நா. வானமாமலை -மூடுதிரை-தாமரை; மே 1962

32. சதாசிவ பண்டாரத்தார். op.cit. p. 107.

33. CHOLAS, Ibid. p.294

34. CHOLAS, Ibid p.264

35. Appadorai, Ibid, p.300-1

36. வானமாமலை, Ibid, ப.9.

37. Trav Arch. Series, III P. 164

38. மா.இராசமாணிக்கனார், தமிழக ஆட்சி, பக்.160.

39. சிவஞானபோதம் சூ.12

40. சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்; திருவாவடுதுறை ஆதீனப் பதிப்பு, 1954, பக், 257-67

42. CHOLAS (2nd Ed) p.452?53; THE HISTORY AND CULTURE OF THE INDIAN PEOPLE vol.V. `THE STRUGGLE FOR EMPIRE` p.281.

43. மா.இராசமாணிக்கனார், தமிழக வரலாறு, பக்.139

44. CHOLAS. Ibid. p.462-63

45. ஓளவை,சு. துரைசாமிப் பிள்ளை- மெய்கண்டார், பக்.7

46. க.கைலாசபதி, 'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி..."(இந்து தர்மம் 1961, பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் வெளியீடு) பக்.44

47. D.D. Kosambi- AN INTRODUCTION TO THE STUDY OF INDIAN HISTORY, p.245-46

48. CHOLAS; Ibid. p.642-43.

49. சிவஞானபோதமும், சிவஞானபாடியமும் - (கழகப்பதிப்பு-1963) பக்.416-17.

50. திருக்குறர்: 9 பரிமேலழகர் உரை.

51. சிவஞானபோதமும் சிற்றுரையும் - Ibid. பக். 60-61.

52. சிற்று€டிர - பக்.46.

53. நாடும் நாயன்மாரும் - பக்.21-22

54. ஜோர்ஜ் பொலிட்ஸர்-மார்க்ஸ“ய மெய்ஞானம், (மொழிபெயர்ப்பு), பக் 181-85

55. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-தமிழா நினைத்துப் பார், 88-89.

56. சிவஞானபோதம், 10-ம் சூத்.

57.சித்தாந்த மாணவன்-சிவஞானபோதாசாரம், பக்.112

58. சிற்றுரை, பக் 223.

59. மாபாடியம், Ibid. பக்.479-81

60. சிவப்பிரகாசம், உண்மை; (திருவிளங்கம், பதிப்பு, 1933) பக். 116-17

61. CHOLAS. Ibid. p. 462

62. CHOLAS. Ibid. p.491

63. தண்டியலங்காரம் மூலமும் உரையும் (குமார சுவாமிப் புலவர் பதிப்பு 1926), பக். 4-5.

64. எஸ்.வையாபுரிப் பிள்ளை, காவியகாலம், பக்.267-68.

65. நா வானமாமலை, காவியக் கதைத்தலைவர்கள் (தாமரை).

66. காவிய காலம், பக். 302-303.

67. V.A. Devasenapathi- SAIVA SIDDHANTA (Madras), 1960, p.2

68. சைவசித்தாந்த வரலாறு, பக்.8.

69. மார்க்ஸ“ய மெய்ஞ்ஞானம், பக்,227.

..........

http://noolaham.net/library/books/01/97/97b.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் இருந்தாலும் நான் இவ் இணையதள முகவரியை தருகிறேன் அதில் ஈழத்து அறிஞர் தமிழ் பெளத்தத்தை பற்றி விஞ்ஞான ரீதியாக விளக்கம் தந்துள்ளார்

www.tamilsociety.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.