ஊர்ப்புதினம்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம் - பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு

2 hours 14 minutes ago
28 MAR, 2024 | 09:33 PM
image
 

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் . 

இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.  

குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.   

குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது . 

DSC_0009.JPG

https://www.virakesari.lk/article/179920

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய துணைத்தூதர்

2 hours 35 minutes ago
28 MAR, 2024 | 09:36 PM
image
 

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார். 

அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

01__7_.jpg

01__1___1_.jpg

https://www.virakesari.lk/article/179913

McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்

3 hours 46 minutes ago

Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67

facebook sharing button
twitter sharing button
print sharing button
whatsapp sharing button

அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர்.

“இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது.

கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது.

Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை

3 hours 49 minutes ago

28 MAR, 2024 | 12:07 PM

சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.  

இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.   

மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.   

கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .  

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு

3 hours 52 minutes ago

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு. 

(புதியவன்)

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.

அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள்.

இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். 

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். 

அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார். 

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ)

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)

முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

12 hours 56 minutes ago
முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு
March 28, 2024
 

18 முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு நேற்றுமுன் தினம் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் வகையில் முகநூலில் அரவிந்தன் பதிவிட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டியே அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
 

https://www.ilakku.org/ex-militant-detained-for-3-days-and-ordered-to-be-interrogated/

 

ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

12 hours 58 minutes ago
ரஷ்ய – உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் – அல் – ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
March 28, 2024
 

555 ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்கும் இலங்கையர்கள் - அல் - ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் மட்டுமல்லாது இருதரப்பிலும் இலங்கையர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அல் – ஜசீரா அறிக்கை யொன்றையும் தயார்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், உக்ரைனில் ரஷ்யாவுக்காக போரிட்டதில் குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.

டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த சக இலங்கையர் ஒருவரால் அவர் அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், கடந்த ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்காக போராடிய மூன்று இலங்கையர்களுடன் இந்த இரண்டு இறப்புகளும் சேர்ந்துள்ளன என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இப்போது உக்ரேனில் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவில் மாதாந்தம் 3,000 டொலர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமையை எதிர்பார்த்து ஆயுதமேந்தி போராடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கைப் படையினர் – ரஷ்ய இராணுவத்தில் சேர தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இலங்கையில் உள்நாட்டில் கடுமையான வறுமையின் மத்தியில் மொஸ்கோவின் பணத்திற்கு ஈடாக உக்ரேனியப் படைகளின் கைகளில் மரணத்தைப் பணயம் வைக்கத் தயாராக இருப்பதாகவும் அல் ஜசீரா மேலும் தெரிவித்துள்ளது.

டிசெம்பரில், சிறப்புப் போராளிகள் பிரிவுக்கு தலைமை தாங்கிய கப்டன் ரனிஷ் ஹேவகே மற்றும் எம்.எம். பிரியந்த மற்றும் ரொட்னி ஜெயசிங்க ஆகிய இரு இலங்கையர்களும் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்டனர்.
டிசெம்பர் 15 அன்று பல உக்ரேனிய வீரர்களுடன் கீவ் நகருக்கு கிழக்கே 400 கி.மீ. (240 மைல்) தொலைவில் உள்ள மிலினோவ் என்ற இடத்தில் ஹேவகே புதைக்கப்பட்டார், ஆனால் மற்ற இரண்டு இலங்கையர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.

உக்ரேனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் பணியாற்றிய சுமார் 20 இலங்கையர்கள் ஹேவகேவின் மரணத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு வெளியேறினர், 25 வயதான லஹிரு ஹத்துருசிங்க, காயமடைந்த ரனிஷ் ஹேவகேவை பல கிலோமீற்றர்கள் தாண்டி பாதுகாப்புக்காக அழைத்துச் சென்றனர். ஆனாலும் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

உக்ரேனுக்காகப் போரிடுவதற்காக இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறிய ஹத்துருசிங்க, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பக்கம் இன்னும் இணைந்திருக்கும் ஒரே இலங்கையர் என நம்பப்படுகிறது.

https://www.ilakku.org/sri-lankans-participating-in-the-russo-ukraine-war/

திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள்

13 hours 2 minutes ago
திருகோணமலையில் சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள்
Vhg மார்ச் 28, 2024
Photo_1711586805190.jpg

 

திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால் நேற்று(27-03-2024) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்.

துறைமுக அதிக அபிவிருத்தி மற்றும் நகர அபிவிருத்தி ஊடாக இதுவரை 4445 குடும்பங்களை திட்டம் என்ற நோக்கில் விரட்டி அடிப்பதற்கு தற்போது செயற்திட்டங்கள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள்

கடந்த காலங்களில் திமுதுகம கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விரட்டும் நடவடிக்கையில் நீதிமன்ற கட்டளைகளை எடுத்துக்கொண்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்தோம்.

அதேபோன்று சமன்புற கிராமத்தில் உள்ளவர்களுக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை எழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்படி எங்களை மக்களுக்கு தெளிவூட்டும் விதத்திலேயே திருகோணமலை கோகனபுர காக்கும் அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

மேலும் திருவண்ணாமலையில் பௌத்த மக்களுக்கு இடம்பெற்று வரும் நிகழ்ச்சி நிரல்களும்மாவட்டத்தில் 1008 சிவலிங்கங்களை வைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் சிங்கள மக்களின் காணிகளுக்குரிய உறுதி பத்திரங்கள் வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும் தொல்பொருளுக்குரிய இடங்களை சேதமாக்குவதை கண்டித்தும் எங்களுடைய எதிர்ப்பினை மேற்கொண்டு வருகின்றோம்.

திருகோணமலையில் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடம் அளிக்க மாட்டோம் எனவும் திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பின் பிரதானி இதன் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்தப்பிக்குகளுக்கு வலுவூட்டும் விதத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.
 

https://www.battinatham.com/2024/03/blog-post_160.html

ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள்

13 hours 9 minutes ago
ஒட்டுசுட்டானில் பாரிய குழாய்க் கிணறு; போராடத் தயாராகும் மக்கள்
168542315.jpeg

(செல்வன்) 

ஒட்டுசுட்டானில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அமைக்கப்படவுள்ள பாரிய குழாய்க் கிணறு  போராடத் தயாராகும் மக்கள் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள ஒட்டுசுட்டான் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் அலுவலக காணிக்குள் 300 அடி ஆழம் கொண்ட குழாய் கிணறு தோண்டப்படுவதால் அருகில் உள்ள விவசாயிகளின் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் என தெரிவித்து விவசாயிகள் மக்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான், சிவநகர் ,காதலியார் சமணங்குளம்,போன்ற கிராமங்களில் வசிக்கும் குடும்பங்கள் விவசாயத்தினை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள் நிலக்கடலை,மிளகாய்,பப்பாசி போன்ற தோட்டங்களை அவர்களின் கிணற்று நீரினை பயன்படுத்தி செய்கை பண்ணிவருகின்றார்கள்.

இந்தநிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச குடிநீர் திட்டத்திற்காக நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை ஒட்டுசுட்டான் நீர்ழங்கல் விநியோகத்திட்ட அலுவலக காணிக்குள் அனுமதியற்ற முறையில் 300அடி ஆழத்தில் நிலத்தடி நீரினை உறுஞ்சி ஏனைய பிரதேச மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் விநியோகத்திட்ட அலுவலகம் அமைக்கும் போது பேராற்றில் இருந்து நீரினை கொண்டுவந்து சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தே நீர்வழங்கல் திட்டத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் அலுவலகம் அமைந்த காணிக்குள் 300 அடி அழம் கொண்ட நிலத்தடி நீரினை உறுஞ்சும் குழாய் கிணறுஅமைக்கும் பணிகள் அண்மை நாட்களாக நடைபெற்று வந்ததை அறிந்த கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று 26.03.2024 ஒன்று கூடியபோது அங்கு கிராம சேவையாளர் மற்றும் பொலீசார் வருகைதந்து மக்களின் பிரச்சினையினை கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.

எவரின் அனுமதியும் இன்றி நிலத்தடி நீரினை உறுஞ்சும் இந்த செயற்பாட்டிற்கு அருகில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் இந்த குழாய் கிணறு அமைக்கு நடவடிக்கையினை கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.

பொலிசாரின் பிரசன்னத்துடன் குழாய்கிணறு அமைக்கும் இயந்திரம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பில் அரச மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியபின்னர் முடிவிற்கு வருவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.(ஏ) 
 

https://newuthayan.com/article/ஒட்டுசுட்டானில்_பாரிய_குழாய்க்_கிணறு;_போராடத்_தயாராகும்_மக்கள் 

 

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

13 hours 38 minutes ago
tero.jpg ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!

இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

https://athavannews.com/2024/1375370

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் - அமைச்சர் டக்ளஸ்

14 hours 40 minutes ago
28 MAR, 2024 | 09:56 AM
image
 

வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தில் முன்னர் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் வீடுகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டு, அவற்றில் நிறைவு செய்யப்படாத வீடுகளுக்காக பதிவு செய்தவர்களும், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்களும், சொந்தக்காணி இருந்தும் இதுவரை வீடு கிடைக்காதவர்கள் மற்றும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இந்த விசேட திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

download.jpg

https://www.virakesari.lk/article/179870

தமது சொந்த காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

1 day 3 hours ago

Published By: DIGITAL DESK 3.   27 MAR, 2024 | 03:25 PM

image
 

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று புதன்கிழமை (27) கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு இலங்கையின் இராணுவ தளபதி முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இராணுவ படை தலைமையகத்திற்கு வருகை தந்திருந்தார். அவரிடம் தமது சொந்த காணிகளை விடுவித்து தருமாறு கோரி மகஜர் கையளிக்க  குறித்த இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் இராணுவ தளபதியை தற்போது சந்திக்க முடியாதெனவும் இன்றைய தினம் மாலை 3 மணியளவில் 5 நபர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொண்டு தருவதாகவும் இராணுவத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த கவனயீர்ப்பினை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தனர்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி ஜனாதிபதிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கும் கடந்த 11.03.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தனர். இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி  பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (25) கேப்பாபிலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடிய போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபிலவு  மக்கள் தெரிவித்திருந்தனர்.

கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம், ஆலயங்கள், தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.

குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன. 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்திருந்த நிலையிலே இன்றையதினம் கேப்பாப்பிலவு இராணுவ படை தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179835

 

 

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்கள் – கல்வி அமைச்சர் தகவல்

1 day 3 hours ago

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு உதவும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ரூ. 1 பில்லியன் மற்றும் ஒவ்வொரு வவுச்சரின் மதிப்பும் சுமார் ரூ. 1,200 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/297256

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன் வீதி விபத்தில் உயிரிழப்பு

1 day 3 hours ago
27 MAR, 2024 | 08:59 PM
image

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புதன்கிழமை (27 ) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மருத்துவ நிர்வாக முதுமாணிப் பட்டதாரியான இவர்  வவுனியா வைத்தியசாலை மற்றும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் முன்னாள் பணிப்பாளரும் ஆவார்.

https://www.virakesari.lk/article/179845

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது - நாமல்

1 day 4 hours ago
27 MAR, 2024 | 03:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது. கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் வெளியேறலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (27) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார நெருக்கடிக்கு 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். சர்வதேச பிணைமுறிகளில் இருந்து 12 பில்லியன் டொலர் கடன்களை பெற்றது. இந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவில்லை. மறுபுறம் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படடது. அந்த நிதியும் மாயமானது.

நல்லாட்சி அரசாங்கம் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இறக்குமதி, பொருளாதாரத்தில் மாத்திரம் கவனம் செலுத்தியது. தேசிய பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் ஏதும் நிர்மாணிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் தான் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் ஊடாக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். இதற்கு அவருக்கு மக்களாணை கிடையாது. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதாக இருந்தால் ஜனாதிபதி புதிதாக மக்களாணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. கட்சி ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக செய்படுபவர்கள் கட்சியில் இருந்து தாராளமாக வெளியேறலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/179829

இலங்கையில் 30,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுகின்றனர்!

1 day 11 hours ago
27 MAR, 2024 | 01:24 PM
image

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இந்நிலைமை எதிர்காலத்தையும் பாதிக்கலாம். 

இது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் வீதியில் யாசகம் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து போதைப்பொருள் விற்பனை, திருட்டு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்த சிறுவர்களில் சிலர் தங்களது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினால் யாசகம் பெறுவதற்கும் பணம் சம்பாதிக்கும் பிற நடவடிக்கைகளுக்கும் தள்ளப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.

4 முதல் 15 வயதுக்கு உட்பபட்ட பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீதிகளிலும் புனிதத் தலங்களிலும் சன நெரிசல் மிக்க இடங்களிலும் யாசகம் பெறுகின்றனர்.

சில பெற்றோர்கள் இந்த சிறுவர்களை கூலி வேலைகளுக்காகவும் வீதியோர வியாபாரங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த சிறுவர்களில் சிலர் போதைப்பொருள் பாவனைக்கும் பல்வேறு குற்றச்செயல்களுக்கும்  அடிமையாகி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/179819

வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம்

1 day 13 hours ago
mahinda-amaraweera.jpg

விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை. எனவே, வட மாகாண விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் போது ஓரளவு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைவாக, விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அமைச்சரவை யோசனை முன்வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/297199

மீனவர் பிரச்சினையை ஆராய இந்திய - இலங்கை கூட்டு செயற்குழு விரைவில் கூடவுள்ளது!

1 day 13 hours ago

மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய-இலங்கை கூட்டு செயற்குழு விரைவில் கூடவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Fishermen Care என்ற தனியார் அமைப்பு தாக்கல் செய்த பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் பிரமாணப் பத்திரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் மீன்பிடி தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தை நடத்த முன்மொழியப்பட்ட போதிலும், உள்நாட்டு பிரச்சினைகளால் அந்த திட்டம் பலனளிக்கவில்லை என இந்திய மத்திய அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சு இந்த கூட்டத்தை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக, இந்திய மீன் வளத்துறை அமைச்சு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, இந்திய-இலங்கை கூட்டு செயற்குழு உருவாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2017-18 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழகத்தின் பாரம்பரிய மீனவர்களுக்கு இழுவைமடி படகுகளுக்குப் பதிலாக 750 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கொள்வனவு செய்ய உதவியாக தமிழக அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் 300 கோடி இந்திய ரூபாவை விடுவித்தமையும் இதன்போது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில், இராமேஸ்வரம் குந்துகால் பகுதியில் மீன்பிடி இறங்கு தளமொன்றை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும், இந்திய மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ள
பதில் சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதில் சத்தியக்கடதாசியை ஆராய்ந்த நீதிபதிகள், பொதுநல வழக்கினை ஜூன் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.

https://thinakkural.lk/article/297172

வர்த்தக நிலையங்களில் உணவு வகைகளை பரிசோதிக்க 3000 பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!

1 day 13 hours ago
27 MAR, 2024 | 10:44 AM
image

பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளைப்  பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, பண்டிகைக் காலத்துக்காக தயாரிக்கப்பட்ட பல உணவுகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக   அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

உணவு உற்பத்தி நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்கள் மருத்துவ பதிவுகளைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும்  உபுல் ரோஹன மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/179798

கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் எம்.எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

1 day 14 hours ago
27 MAR, 2024 | 11:01 AM
image
 

இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட "எம்.எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

91d99b21-6aa4-4602-b2cb-2b3d6cd5b3af.jpg

70e7f686-2f56-4410-ac36-d55ce1a33add.jpg

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு வருகைதந்த ஜனாதிபதியை, வைத்தியசாலையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட கல்லீரல் சத்திர சிகிச்சையின் மூலம் குணமடைந்த சிறுமியொருவர் வரவேற்றது விசேட அம்சமாகும்.

இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நாட்பட்ட கல்லீரல் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கல்லீரல் செயலிழப்புக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே பயனுள்ள சிகிச்சையாகும். இந்த சிக்கலான கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைக்கு விசேட அறிவு மற்றும் விலையுயர்ந்த உபகரணங்கள் அவசியம்.

5d459c29-ca00-4c08-b8bb-afa07ecfecb3.jpg

கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்வது ஒரு நாட்டின் சுகாதார பாதுகாப்பின் வளர்ச்சியின் குறிகாட்டியாகும்.  பட்டப்பின்படிப்பு பயிற்சி மையமாகவும் வடகொழும்பு கல்லீரல் நோய்களுக்கான மையம் செயற்படுவதோடு கல்லீரல் நோய்களில் உயர்தர ஆராய்ச்சியை நடத்தி, இலங்கையில் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையின் மிகப்பெரிய தரவுத்தளத்தை பேணுகிறது.

இந்த கல்லீரல் நோய் விசேட சிகிச்சை நிலையத்தை நிர்மாணிப்பதற்காக எம்.எச். ஓமார் நிதியம் இரண்டரை பில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

1e0a4ae8-f6fd-4392-870b-fc8022f02b68.jpg

இது இலங்கையின் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளுக்கு இலங்கையில் தொழில்முனைவோர் வழங்கிய மிகப்பெரிய நன்கொடையாகும். எம்.எச். ஓமார் இந்த நாட்டில் புகழ்பெற்ற பிராண்டிக்ஸ் குழுமத்தின் ஸ்தாபகர் ஆவார்.

பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து எம். எச்.ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அதன் வசதிகளை அவதானிக்கவும் இணைந்துகொண்டார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்தில் குறிப்பு ஒன்றையும் இட்டார்.

a160c775-4e5e-4f55-89ef-aa21c7a354f1.jpg

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓமார் குடும்பத்தினர் வழங்கிய தனித்துவமான நன்கொடை மற்றும் பிராண்டிக்ஸ் வர்த்தகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார்.

கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளுக்கு பிராந்தியத்தில் சிறந்த நாடாக இன்று இலங்கை மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த குழு நாட்டுக்கு வழங்கிய நற்பெயருக்கு நன்றி தெரிவித்தார். 

அத்துடன், இந்நாட்டில் சுகாதாரத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவித்தார்.

0911b9bf-a908-4248-a307-317a6a60a2db.jpg

சிசு இறப்பு மற்றும் தாய் இறப்பு விகிதங்களின் அடிப்படையில் நமது நாடு புள்ளிவிபர அடிப்படையில் சிறந்த நிலையில் உள்ளது என்றும், கொவிட் தொற்றுநோய் காலத்திலும் அதைத் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி காலத்திலும் இலங்கை வலுவாக முன்னேற முடிந்ததாக இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் இந்த வசதிகளுக்காக 2.5 பில்லியன் ரூபாய் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய எம்.எச்.ஓமார் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், எம்.எச். ஓமாரின் பேரனும்  பிராண்டிக்ஸ் குழுமத்தின் பணிப்பாளருமான ஹாசிப் ஓமார், களனி பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் பி.ஜி. மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

286c77a6-0c2f-45fb-bc5b-29a42b213747.jpg

https://www.virakesari.lk/article/179801

Checked
Thu, 03/28/2024 - 19:25
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr