குறளிசைக்காவியம்
குறள் எண்: 891
குறள் எண்: 236
குறள் எண்: 1271
மேலும் பார்க்க: https://www.youtube.com/@LydianNadhaswaramOfficial/videos
குறள் எண்: 891
குறள் எண்: 236
குறள் எண்: 1271
மேலும் பார்க்க: https://www.youtube.com/@LydianNadhaswaramOfficial/videos
மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா.
written by admin August 3, 2025
மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகுமுறைகள் வரை ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியானது வெறும் ஒப்பனைப் பொருட்களின் மாற்றமல்ல மாறாக, சமூகம், அறிவியல், பொருளாதாரம். மற்றும் மனிதர்களின் உளவியல் சார்ந்த புரிதல்களின் பிரதிபலிப்பாகும்.
நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவர்களாக கருதுகின்றனர். அவர்களின் அழகு முறைகள் பெரும்பாலும் இயற்கையோடு நெருங்கியதாகவும் எளிமையானதாகவும் இருந்தன. அவர்கள் வாழும் சூழலில் கிடைக்கும் மூலிகைகள், பழங்கள், காய்கறிகள், மண், நீர் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு தங்கள் சருமன், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணினார்கள்.
தங்கள் முகத்தின் அழகுக்காக இயற்கை சார்ந்த பராமரிப்பு முறைகளை பின்பற்றினார்கள். சந்தனம், மஞ்சள், முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை, கற்றாழை, தேங்காய் எண்ணெய், தயிர், எலுமிச்சை போன்றவற்றை முகத்தின் பளபளப்பு தன்மைக்காக பயன்படுத்தினார்கள். அங்கு அழகு என்பதை தாண்டி ஆரோக்கியம் பேணப்பட்டது.
தலையில் வைக்கும் எண்ணெய் முறைகள் என்ற ரீதியில் எங்கள் வீட்டில் என் அம்மா தேங்காய் எண்ணெய்க்குள் முருங்கை இலை. கருவேப்பிலை, நொச்சி, செவ்வரத்தை (காய வைத்தது) கற்றாழை, வெந்தயம், கருஞ்சீரகம் போன்றவற்றை விட்டு நன்றாக முறுகக் காய்ச்சி, அதன் பின்னர் சூடார வைத்து தலையில் வைத்து விடுவார்.
“அந்த காலத்தில நாங்க இப்படித்தான் குளிச்சம் இப்ப அப்படி ஒன்றும் இல்லை எல்லாம் மாறிவிட்டது” என்று என் வீட்டு பெரியவர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். மூலிகை வகைகளை சேர்த்து கொதிக்க வைத்து, சுத்தமான நல்லெண்ணெய் நன்றாக சூடாக்கி மெல்லிய சூட்டில் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அதனை பூசி மசாஜ் செய்து அதன் பின்னரே குளிப்பம் என்று சொல்லுவார்கள்.
உணவு பழக்க வழக்கங்களில் என் அத்தைமார்கள் ஆரம்ப காலத்தில் வேறுபட்டு காணப்பட்டனர். அரிசி, ஓடியல் போன்ற அனைத்து பொருட்களையும் கையினால் உரல் உலக்கையை பயன்படுத்தி இடித்துத் தான் சமைப்பார்கள். உணவில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி உட்கொண்டார்கள்.
பாரம்பரியமாக காணப்பட்ட இவ்வாறான அனைத்து பழக்கவழக்கங்களும் இன்று தலைகீழாக மாறிவிட்டது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழியின் அர்த்தமே இன்று மாறிவிட்டது. இம்மாற்றத்தினை எடுத்துரைக்கும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் எமது ஆசானான சி.ஜெயசங்கர் அவர்கள் பெற்றுத் தந்த வாய்ப்பிலும், வழிகாட்டலிலும் மருத்துவ பீடம் (MEDICAL FAUCITY) நடாத்திய “Holistic health camp” நிகழ்ச்சிக்காக “அழகினையும் உடல் ஆரோக்கியத்தையும் வைத்து” இன்றைய காலத்தில் அது இவ்வாறு மாறமடைந்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு காரணமாகின்றது” என்பதை பாடல் ஒன்றின் மூலம் அபிநயத்து அதற்கு இடையில் அது சார்ந்த உரையாடல்கள் மூலமும் ஆற்றுகை செய்திருந்தோம்.
பாடல்
நிறம் மாற வேண்டுமா சொல்
வெள்ளையாக வேண்டுமா சொல்
வெளிறிடக் கிறீம் இருக்கு – உன்னை
மாற்றிடக் கிறீம் இருக்கு
நிறம் மாற மாட்டோம் நாங்கள்
நோயில் விழவும் மாட்டோம் நாங்கள்
ஏமாற மாட்டோம் நாங்கள் – இனியும்
ஏமாற மாட்டோம் நாங்கள்
கருப்பு நிறமே காப்பாத்தும்
வெயிலில் வந்து எமை மூடும்
அதனை அழிக்க மாட்டோம் நாங்கள்
அழிந்து போக மாட்டோம்
இயற்கை தந்த நிறம் இதுவே
கடவுள் தந்த நிறம் இதுவே
மாற்றிட மாட்டோம் நாமே
இயற்கையை மாற்றிட மாட்டோம் தானே
திரிசா போல மாறனுமா
ஐஸ்வரியாராய் போல் ஆகணுமா
உங்களுக்காய் கொண்டு வந்தோம் – கிறீம்கள் உங்களுக்காய் கொண்டு வந்தோம்
அவர்கள் அழகு வேறு வேறு
எங்கள் அழகு வேறு வேறு
ஒன்றாக ஆக்க வேண்டாம் – எங்கள்
இயற்கை அழகு காப்போம்
ஒருவர் மாதிரி ஒருவர் மாறும் – அழகுப்
பொருள் விற்போர் உங்கள்
தந்திரம் புரியும் தானே – உங்கள்
வியாபாரம் தெரியும் தானே
வாயில் போட குலுசை உண்டு
வாங்கிக் கொள்ள கடைகள் உண்டு
தோலில் போட ஊசி உண்டு
போட்டுக் கொள்ள இடங்கள் உண்டு
வாங்க வெள்ளையாக்கலாம் – தோலை
வெள்ளை அழகு ஆக்கலாம்
எங்கள் பிறப்பே எம் அழகு
எம் உடலே எமக்கு நலம் – ஏமாற்ற
வேண்டாம் எம்மை
நாங்கள் ஏமாற மாட்டோம் தானே
(பாடலாசியரியர் :- கமலா வாசுகி)
இந்தப் பாடல் மூலம் இன்றைய காலத்தில் பாவனையில் உள்ள அழக சாதன பொருட்களின் பாதிப்பினை உரையாடல் பாங்கில் எடுத்துரைத்தோம்.
நம் தோலை புற ஊதா (UV) கதிர்வீச்சு போன்று தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து பாதுகாக்கும் முக்கியக் கருப்பொருள் மெலனின் (Melanin) ஆகும். மெலனின் என்பது நம் தோலில் உள்ள மெலனோசைட்டுகள் (Melanocytes) எனப்படும் சிறப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நிறமி (pigment) ஆகும். இது ஒரு பழுப்பு கலந்த கருப்பு நிறப் பொருள். நமது தோல், முடி மற்றும் கண்களின் நிறத்திற்கு மெலனின் தான் முக்கிய காரணம். மெலனின் குறைவாக இருக்கும்போது தோல் வெளுப்பாகவும், அதிகமாக இருக்கும்போது கருப்பாகவும் இருக்கும்.
மெலனின் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சி, அதை வெப்பமாக மாற்றுகிறது. இதனால் UV கதிர்வீச்சு தோலின் செல்களுக்குள் ஊடுருவி, அவற்றின் DNA-it சேதப்படுத்துவதைத் தடுக்கிறது.
இன்றைய நவ நாகரிக உலகில் அழகிற்காக (வெளிறல் நிறம்) ஊசிகள், மருந்துக்களின் பாவனை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொள்ளலாமல் வெளிறல் நிறமாக வேண்டும் எனும் நோக்கத்தோடு மட்டும் இவை உடம்பில் ஏற்றப்படுகின்றன. சருமத்தின் நிறத்தினை மென்மையாக்க “குளுட்டாதயோன் ஊசிகள்” (Glutathione Injections) பாவிக்கப்படுகின்றன.
குளூாட்டாதயோன் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கருமையான நிறத்தைத் தரும் ஈயூமெலனின் (Eumelanin) உற்பத்தியைக் குறைத்து, வெளிர் நிறத்தைத் தரும் பியோமெலனின் (Pheomelanin) உற்பத்தியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் செயல்பாடு, சருமத்தை வெளிர் நிறமாக்கி. ஒட்டுமொத்த நிறத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்பட்டாலும் இது நமது தோலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பின் சில முக்கிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. குஞாட்டாதயோன் ஊசிகளைப் பயன்படுத்தும் நபர்கள் சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகின்றனர். அடிக்கடி சூரியக் கதிர் படுவதால் சருமத்தில் எரிச்சல், சிவத்தல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் முன்கூட்டியே வயதான அறிகுறி, தோல் புற்று நோய் அபாயம், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு. தோல் நோய்கள் போன்ற பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதே வகையினை சார்ந்த இன்னும் சில ஊசி வகைகள் சந்தையில் காணப்படுகின்றன.
தோலின் நிறத்தினை மென்மையாக்குவதற்காக மருந்து பாவனையும் அதிகரித்தே வருகின்றது. அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் மருந்துக்கள் சருமத்தை வெண்மையாக்கும் அல்லது சுத்தப்படுத்தும் என நம்பி அதனை பாவித்து அநேகமான பக்க விளைவுகளுக்குள்ளாகின்றனர். பல ஹெமிக்கல் (Chemical) கலந்த கிறீம்களை பாவித்து தோல் அதிகம் மென்மையாகி கிழிந்து வரும் நிலை சமூகத்தில் அதிகம் நிலவிவருகின்றது.
இயற்கையின் எளிய பரிசுகளைப் பயன்படுத்திய பாரம்பரிய முறைகளில் தொடங்கி, இன்றைய அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொடும் மருத்துவ சிகிச்சைகள் வரை ஒரு நீண்ட மோசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவையாகக் கருதினர். மஞ்சள். சந்தனம். மூலிகைகள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அற்ற தீர்வுகளாக இருந்தன.
ஆனால், வேகமான வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, தீவிரமான சந்தைப்படுத்தல், மற்றும் சமூகத்தின் மாறிவரும் அழகு குறித்த வரையறைகள் போன்றவை இந்த மாற்றத்திற்கு வித்திட்டன. உடனடி முடிவுகளையும், குறிப்பிட்ட அழகியல் இலக்குகளையும் நோக்கிய தேடல், இரசாயனக் கலவைகள், லேசர் சிகிச்சை, ஊசி முறைகள் போன்ற நவீன அனுகுமுறைகளுக்கு வழிவகுத்தது. போடோக்ஸ், டெர்மல் ஃபில்லர்கள், மற்றும் குளூாட்டாதயோன் ஊசிகள் போன்ற சிகிச்சைகள் சில சமயங்களில் உடனடி மற்றும் வியத்தகு மாற்றங்களை வழங்கினாலும், அவற்றின் பக்க விளைவுகள் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டியவை குறிப்பாக, சரும நிறத்தை வெண்மையாக்கும் குளூட்டாதயோன் ஊசிகள், தோலின் இயற்கைப் பாதுகாப்பான மெலனின் உற்பத்தியில் தலையிட்டு, தோல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கைகள் புறக்கணிக்க முடியாதவை.
அழகுப் சந்தனத்தின் வாசனையிலும், மஞ்சள் பூகம் குளுமையிலும் இருந்த நிதானமான பராமரிப்பிலிருந்து, லேசரின் துல்லியத்திற்கும், ஊசிகளின் வேகத்திற்கும் மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், ஒரு முக்கியமான உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது: அழகு என்பது வெளிப்புற பூச்சுகளையும், செயற்கையான மாற்றங்களையும் மட்டும் சார்ந்தது அல்ல. அது ஆரோக்கியமான உடல், தெளிவான மனம் மற்றும் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். எந்தவொரு அழகு முறையையும் தேர்வு செய்வதற்கு முன், அதன் நன்மைகள், அபாயங்கள், மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது இன்றியமையாதது.
“அழகு என்பது வெளிறல் நிறத்தில் மட்டுமல்ல.
உடல் நலத்தில் உண்டு.”
கோபிகா நடராசா,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
நுண்கலைத்துறை.
மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ.
written by admin August 2, 2025
மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றுத்திரண்டு சென்றோம். தப்பிசை ஒலி முழங்க வண்ணமயமான ஒளி அமைப்புகளுடன் வரவேற்றது காமண்டி. மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் அமாவாசை மூன்றாம் நாள் காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்றது. பிரித்தானியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழக மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூறுவதாகவே காமன் கூத்து சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் மாணவர்களால் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. கடந்த வருடம்(2024) இந்த வருடமும்(2025) மலையக மக்களின் கூத்து வடிவங்களில் முக்கியமானதாக விளங்கும் காமன் கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது. இவ்வருடம் 2025ம் ஆண்டு 5ம் மாதம் 23ஆம் திகதி மாலை 6.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை நீடித்தது.
என்னுடைய அனுபவமாக ஆறு வயதில் மஸ்கெலியாவில் கிலண்டில் தோட்டத்தில் மலையக மக்களின் நம்பிக்கை சார்ந்த ஆற்றுகை வடிவமான காமன் கூத்தினை சுமாராக 18 வருடங்களுக்கு பின்னர் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ஒரு பக்கத்தில் நெருப்பில் தப்பு பறைகள் சூடேற்றப்பட்டன. மறுபக்கம் நடன நாடகத்துறை மாணவர்களால் காமன் கூத்துக்கான ஆயத்த வேலைப்பாடுகள் பரபரப்பாக செய்யப்பட்டன. காமன் கூத்தில் தப்பு பறை முக்கியமான இசைவாத்தியமாக விளங்குகின்றது இது காமன் கூத்தை பார்த்து ரசிக்க புத்துணர்ச்சி கொடுத்தது. இதற்கு வாத்தியம் வாசித்த மாணவர்களை பாராட்ட வேண்டும். காமன் கூத்து பாடல்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் கதையை அழகாக எடுத்துக் கூறுவதாக அமைந்திருந்தது. கூத்தில் பக்கப்பாட்டுக்காரர்களே பாடல்களை கூத்து ஆரம்பத்தில் இருந்து நிறைவுறும் வரை பாடினார்கள். மங்கள விளக்கேற்றலுடனும், உரைகளுடனும் தொடங்கிய காமண்டி பார்வையாளர்களை ஆராவாரப்படுத்தியது. ஒரு மாணவரால் ரத்தின சுருக்கமாக காமன் கூத்தினுடைய கதை கூறப்பட்டது. கூத்தில் பங்கு பெற்ற அனைவரும் கம்பம் பாலித்து காப்புகளை கட்டி தயார் நிலையில் இருந்தார்கள். இந்த சுவாரஸ்யத்துடன் நாம் காமன் கூத்து தொடர்பான சில விளக்கங்களுடன் நிகழ்வுக்குள் செல்வோம்.
ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கும் அல்லவா? ஆம் அதுபோல காமன் கூத்து நிகழ்த்தப்படுவதற்கும் காரணம் உண்டு. இதற்கு ஒரு புராண கதையும் உள்ளது. இது கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை பார்க்கலாம். அதாவது தேவர்களை அசுரர்கள் இன்னல்படுத்தினார்கள். சூரன் தலைமையில் தேவலோகம் கைப்பற்றப்பட்டது. இதனை தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் தனக்கும் சக்திக்கும் மகன் பிறப்பான் அவனே அசுரர்களை அழித்து தேவர்களை மீட்பான் என்று கூறினார். பின்னர் நீண்ட ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் தேவர்களின் முறையீடுகளை நிவர்த்தி செய்யவில்லை. ஆகையால் பிரம்மனிடம் தேவர்கள் முறையிட மன்மதனை சிவனுடைய தவத்தை அளிக்குமாறு பிரம்மதேவன் கூறினார். ரதி தடுத்தபோதும் கேட்காத மன்மதன் காமக்கணைகளை தொடுத்ததால் நெற்றிக்கண் திறந்த சிவன் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். இதனை அறிந்த ரதி புலம்பி அழுதாள். இக்காரணத்தினால் சிவன் எவருடைய கண்களுக்கும் தென்படாது ரதிக்கு மாத்திரம் மன்மதனின் உருவம் புலப்படும் வகையில் மன்மதனை உயிர்பித்தார் இதுவே கந்தபுராணம் கூறும் கதையாகும்.
இது மலையகத்தில் ஆடப்படும் காமன் கூத்தில் சற்று வேறுபட்டது. சிவனிடம் தக்கன் சக்தியானவள் என்னுடைய மகளாகவும் சிவன் மருமகனாகவும் இருக்க வேண்டும் என்று கேட்க சிவன் வரமளித்தார். பின்னர் சிவனை தரிசிக்க சென்ற தக்கனை சிவன் தியானத்தில் இருந்ததால் பார்க்கவில்லை. தன்னை பார்க்கவில்லை என்ற கர்வம், கோபம் கொண்டு சிவனை நோக்கி தக்கன் யாகம் செய்கின்றான். தக்கனின் தவத்தை அழித்த சிவன் கோபத்தோடு தவம் இருக்கின்றார். சிவனுடைய கோபத்தின் அனலால் அவதியுறும் தேவர்கள் இந்திரனின் உதவியுடன் சிவனின் தவத்தை அழிக்குமாறு மன்மதனுக்கு தூதோலை அனுப்பினார்கள். கட்டளைக்கிணங்க சென்ற மன்மதன் சிவனின் நெற்றிக்கண் திறக்க காரணமாகி எரிந்து மடிகின்றான். பின்னர் சிவனிடம் ரதி அழுது புலம்பி முறையிடவே மன்மதனை உயிர்ப்பித்தார். இந்த கதையை அடிப்படையாகக் கொண்டே கிழக்கில் காமண்டியும் ஆற்றுகை செய்யப்பட்டது.
காமன் கூத்து நிகழ்த்தப்படும் இடத்தையும் விளங்கிக் கொள்வது அவசியம். காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்ற களத்தினை “காமன் பொட்டல்” என்று கூறுவார்கள். அது அனைவரும் ஒன்று கூடும் பொது இடமாக இருக்கும். இதில் “காமன் பாலித்தல்” என்பது முக்கியமானது காமன் பொட்டலின் நடுவே கம்பம் பாலிக்கப்படும். அதாவது காமன் குழியில் பொன், வெள்ளி, காசு இட்டு காமன் கம்பத்தை (வாழைமரம்) ஊன்றி புனித தன்மையுடன் பூஜை செய்வார்கள். காமன் கம்பத்தை சுற்றி மூங்கில், தடி, மாவிலை என்பவற்றை வைத்து நான்கு மூலையிலும் நட்டு அதற்கு அலங்கார வேலைகளை செய்வார்கள். இதில்தான் காப்பு கட்டுதல், பூஜை செய்தல் போன்ற செயல்பாடுகளை செய்வார்கள். அந்த வகையில் நம்பிக்கைக்கும் ஆற்றுகைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. இருப்பினும் இதை நம்பிக்கை கலந்த ஆற்றுகையாக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கற்கும் நடன நாடகத்துறை மாணவர்கள் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார்கள்.
இவ்வாறு நிகழ்விற்குள் அடியெடுத்து வைப்போம். முதல் நிகழ்வாக தப்பிசை முழங்க மன்மதன், ரதி, சிவன், பார்வதி, தேவசபை ஆகியோர் வெள்ளை துணையால் மறைத்து காமன் பொட்டலுக்கு பாட்டுக்காரர்களால் வரவு பாட வருகை தந்தார்கள். பழங்கள், பூக்கள் கொண்ட தட்டுகளை தோழியர்கள் கொண்டு வர காமன் கம்பத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு தேவர் சபை முன்னிலையில் சிவனும் பார்வதியும் தாலி எடுத்துக் கொடுக்க தேவலோக ஆசீர்வாதத்துடன் மன்மதன் ரதியினுடைய திருமணம் நிகழ்ந்தது. மணமக்கள் காமன் கம்பத்தை சுற்றி வந்து திருமணத்தை இனிதே நிறைவு செய்கின்றார்கள்.
ரதியும் மன்மதனும் தங்களுடைய திருமண நிகழ்வை (உரையாடல் பாங்கில் பக்கப்பாட்டுக்காரர்கள் பாட) தோழர்களுக்கு கூறி ஆடினார்கள். இதில் அகட விகட பாத்திரமான கோமாளி மன்மதன், ரதிக்கு நடுவே இருந்து ஆட்டத்தாலும், உடல், முக பாவனையாலும் பார்வையாளர்களை ஈர்க்கச் செய்தது.
தேவர்கள் தேவ சபைக்கும், சிவன் சக்தி யாகசாலைக்கும் செல்ல ரதி, மன்மதன் காமன் பொட்டலை விட்டு சென்றதன் பின்னர் இடைநிலை பாத்திரமாக “குதிரையும் நோனாவும்” மிகவும் ஆரவாரத்துடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வந்தனர். காமன் பொட்டலை சுற்றி சுற்றி ஆடி பார்வையாளர்களை சந்தோஷ மழையில் மூழ்கச் செய்தனர்.
அத்துடன் குறவன், குறத்தி ஆட்டம் பார்வையாளர்களை சுவாரசியமாக்கியது. இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலில் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இது சற்று நேரம் நீடித்தது. அத்துடன் குறத்தி ரதியின் கையை பார்த்து சிவன் நெற்றிக்கண் திறக்க மன்மதன் எரிந்து மடிவான் என்பதனை கூறி செல்கின்றாள்.
தக்கன் சிவனிடம் வரத்தை பெற்ற பின்னர் சிவனும் பார்வதியும் இருக்கும் இடத்திற்கு சென்று சிவனை பார்த்தப்போது சிவன் தக்கனை பார்க்காததால் கோபம் கொண்ட தக்கன் சிவனுக்கு எதிராக தவம் இருத்தல் நிகழ்வு இடம்பெற்றது. தவத்தின் அக்கினி அனலை தாங்க முடியாததால் தேவர்கள் சிவனிடம் முறையிடுகின்றார்கள். தக்கனுடைய தவத்தை அழிக்குமாறு சிவன் முருகபெருமானை அனுப்புகிறார் ஆனால் முருகனோ கன்னிப்பெண்களை பார்த்து ஏமாந்து விடுகின்றார். பின்னர் கணபதியை அனுப்பிய போது தொந்தி கணபதியோ பழங்களைக் கண்டு ஏமாந்து விடுகின்றார். இதனை அறிந்து கோபம் கொண்ட சிவன் தனது வியர்வையை சிந்தும் போது அதிலிருந்து வீரபத்திரர் உருவாக்குகின்றார். வீரபத்திரரும் காளியும் தக்கனுடைய தவத்தை அழித்து விடுகின்றார்கள். ஆக்ரோஷமாக தீபந்தங்களுடன் வீரபத்திரவரும் காளியும் வரும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
சிவன் தபசுக்கு செல்கின்றார். சிவனுடைய தவத்தின் அனலால் இந்திரலோகம் அவதியுற்றதால் இந்திரனால் மன்மதனுக்கு சிவனுடைய தபசை அழிக்குமாறு ஓலை தூதனால் கொடுக்கப்படுகின்றது. இங்கு தூதனும் தீபந்தங்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றான். தூதன் மன்மதனுக்கு ஓலையை கொடுக்க சிவன் தபசை அழிக்கும் தகவலினை அறிந்த மன்மதன் இவ்வாறு சிவனுடைய தபசையை அளித்தால் சிவனின் நெற்றிக்கண் திறக்க தான் எரிந்து சாம்பலாகி விடுவேன் என்பதையும் அறிந்து கொள்கின்றார்.
இதனைத் தொடர்ந்து ரதி மன்மதன் இருவருக்கும் இடையிலான தர்க்கம் இடம்பெறுகின்றது. அதாவது குறத்தி கூறியதை போலவே அனைத்தும் நிகழ்வதை உணர்ந்த ரதி மன்மதனை சிவனின் தபசை அழிக்க செல்வதனை மறுக்கிறாள்.
மன்மதன் : நான் அலரி மலர்
கணைதொடுப்பனடி – என்
ரதியே மானே ரதியே தேனே
சிவன் தவசை
நான் அழிப்பனடி.
ரதி : அலரி மலர் கணை தொடுத்து
மன்னா மன்னா
சிவன் தபசை நீயழிக்க
வேணா வேணா..
ரதி எவ்வளவு தடுத்தும் கேட்காத மன்மதன் இறுதியில் ரதியை மயங்க செய்துவிட்டு சிவனுடைய தபசை அழிப்பதற்கு செல்கிறார்.
பின்னர் ஆவேசமாக அம்மன் காமன் கம்பத்தை சுற்றி சுற்றி ஆடுகிறாள். இது அசம்பாவிதம் நடக்கப்போவதை கூறும் விதமாக இருந்தாலும் இது ஒரு இடைநிலை பாத்திரமே ஆகும்.
இறுதியாக நந்தி தேவர் வருகை இடம்பெறுகிறது. சிவனுடைய தபசை அழிக்க செல்ல வேண்டாம் என்பதனை மன்மதனுக்கு கூற மன்மதனோ அதனை கேட்கவில்லை.
சிவனுடைய தபசை மன்மதன் அழிப்பதற்கு செல்ல எமதர்மர் எமதூதர்களுடன் காமன் பொட்டலை நோக்கி ஆடி வருகின்றார்கள். கறுத்த நிற தோற்றத்துடனும் கம்பீரமான ஆட்டத்துடனும் சுற்றி வந்து ஆடி செல்கின்றார்கள். மன்மதனோ சிவனுடைய தபசை அழித்து விடுகின்றான். சிவனுக்கு அம்பு தொடுக்க சிவன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரிக்கும் காட்சி இடம் பெறுகின்றது. சிவன் இருக்கும் யாகசாலையிலிருந்து காமன் பொட்டலுக்கு காமன் கம்பத்தை நோக்கி தீப்பொறி வர மன்மதன் எரிந்து சாம்பலாகுகின்றான். (காமன் கம்பமே மன்மதனாக சித்தரிக்கப்படுகிறது) மன்மதன் இறந்த செய்தி அறிந்த ரதி தலையில் முக்காடு போட்டு கொண்ட நிலையில் எரிந்து கொண்டிருக்கும் மன்மதனை சுற்றி சுற்றி அழுது புலம்புகின்றாள் .
இதனைத் தொடர்ந்து மன்மதன் எரியும் காமன் பொட்டலில் மனக்குறைகளை நினைத்து உப்பு போட்டு வேண்டினால் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் உப்பு போட்டு வேண்டுதல்களை கேட்கின்ற நிகழ்வுடன் காமன் கூத்து இனிதே நிறைவடைந்தது.
பரிபூரணமாக அன்று இரவு கிழக்கில் காமண்டி கோலாகலமாக நிகழ்த்தப்பட்டது காமண்டியில் கதாபாத்திரங்களுக்கான தோற்றம் நடை, உடை, பாவனை, பாத்திர அமைப்பு எல்லாம் அந்த பாத்திரமாகவே அவர்களை மாற்றியது. களத்திற்கு வருகை தந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் உணர்வு பூர்வமானதாக அமைந்தது. தேவர்கள் மன்மதன், ரதி, சிவன், பார்வதி, வீரபத்திரர், காளி, குறவன், குறத்தி, எமதர்மர், எமதூதர்கள், தக்கன், தூதன், இடைநிலை பாத்திரங்களான மாரியம்மன், கோமாளி, குதிரையும் நோனாவும் இவ்வாறு பல பாத்திரங்களை உள்ளடக்கியிருந்தது. அவர்களது ஒவ்வொரு பாத்திர அமைப்பும் பார்வையாளர்களை தங்களது கவனத்திற்கு கொண்டு வந்தது.
கிழக்கில் காமண்டி கூத்தில் வந்த அகட விகட பாத்திரங்கள் அனைத்து பார்வையாளர்களையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது. கோமாளி இடைநிலை பத்திரமாக இருந்தாலும் கூத்தினுடைய அங்கமாக இருந்து அனைவரையும் மகிழ்வித்தது. மன்மதனுக்கும் ரதிக்கும் திருமணம் முடிந்த பின்னர் தோழியிடம் ரதி அருந்ததி பார்த்து திருமணம் ஆன செய்தியை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவதாக ஆட்டமும், பாடலுடன் கூடிய தப்பிசையின் முழக்கமும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதாக இருந்தது. இது ஒரு திருமணமான பெண்ணின் பூரிப்பினை வெளிப்படுத்தியது. அதில் மன்மதன் ரதிக்கு இடையிலான உரையாடல் ஒரு பக்கம் கோமாளி பாத்திரம் பார்வையாளர் மத்தியில் மனதில் பதிய வைத்தது.
இதனைப் போலவே குறவன் குறத்தி மற்றும் குதிரையும் நோனாவும் அகட விகட பாத்திரங்களாக பார்வையாளர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது. ஒரு மனிதன் தன் கவலைகளை மறந்து சிரித்து களிப்புற காரணமாக அமைவது இவ்வாறான அகட விகட பாத்திரங்களே ஆகும். குறவன் குறத்தி இரண்டு ஜோடிகளாக வந்து காமன் பொட்டலை ஒரு கணம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த களமாக மாற்றியதாக இருந்தாலும் சிவனின் தபசை அளிக்க சென்றால் மன்மதன் இறந்து விடுவான் என்பதனை குறிச்சொல்லை செல்வதாக அமைந்தது இவ்வாறு ஒரு பாத்திரம் கூறி குறியீட்டு முறையாகவோ நேரடியாகவோ ஒவ்வொரு செய்தியை கையளித்து செல்வதாக அமைந்தது.
காலனித்துவ ஆட்சி காலங்களில் துறைமார்கள் குதிரையில் வருவது வழக்கம். அவருடைய மனைவியை நோனா என்று கூறுவார்கள் இப்பத்திரங்களே கிழக்கில் காமண்டி கூத்தில் அமைகின்றது என்பதனை உணர்கின்றேன். இன்றும் நோனா என்று கூறும் வழக்கம் உண்டு. தாதியர்கள், கங்காணிமார்களது மனைவிமார், கூலி வேலை செய்யும் இடங்களில் உயர் நிலையில் இருக்கும் பெண்களை மலையக மக்கள் நோனா என்றே பெரும்பாலும் அழைக்கின்றனர். கிழக்கில் காமண்டியில் நோனா கையில் குலையுடன் செல்ல அதனைத் தொடர்ந்து குதிரையும் செல்கிறது. குதிரையில் வாள் எடுத்துக்கொண்டு நோனாவை குதிரை ஓட்டுபவர் துரத்துவதாகவும் அமைந்தது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் பல்வேறான வழிகளில் சிந்திப்பதற்கு கூடியதாக இருந்தது. ஆறு வயதில் நான் ஹட்டன் மஸ்கெலியாவில் பார்த்த காமன் கூத்து ஆற்றுகையை நினைவுக்கூறுவதாகவும் அந்த நிகழ்த்துகைக்கும் கிழக்கில் காமண்டி கூத்துக்கும் இடையிலான வேறுபாடு என்பவற்றையும் ஒப்பிட்டு பார்க்க கூடியதாகவும் அமைந்தது. கடந்த பதினெட்டு வருடங்களில் கூத்து வடிவங்களில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகின்றது. இந்த வகையில் குதிரையும் நோனாவும் என்ற பாத்திரம் சிறுப்பராயத்தில் பார்த்த காமன் கூத்தில் இடம்பெறவில்லை.
காமன் கூத்து மலையகத்தில் ஆண்களால் மட்டுமே ஆடப்படுகின்றது. பெண்களின் பாத்திரங்களையும் ஆண்கள் ஏற்று ஆடுவார்கள். கிழக்கில் காமண்டி கூத்தில் பெண்கள் பாத்திரங்களை பெண்கள் ஏற்று ஆடினார்கள். அதுபோல ஆண் பாத்திரங்களையும் மாணவிகள் ஏற்று ஆடியிருந்தார்கள். பிரம்மன், தக்கன், கோமாளி போன்ற இவ்வாறான பாத்திரங்களை பெண்களை ஏற்று ஆடியிருந்தார்கள். இது பெண்களுக்கு சமூகத்தில் முக்கியத்துவம் கொடுப்பதுடன் முன்னுரிமை கொடுப்பதனையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கிழக்கில் காமண்டி கூத்தியில் வீரபத்திரராக வந்த கதாபாத்திரத்தை செய்தவர் களுத்துறை பிரதேசத்தில் காமன் கூத்தில் ஆடும் கலைஞராவார் தீபந்தம் ஏந்தி உருவேறி ஆடினார். அவர் மட்டுமல்லாமல் காளி, ஏமதூதர்கள், மன்மதன், ரதி, மாரியம்மன் போன்ற பாத்திரங்களும் உருவேறியது போன்று சம்பாஷனை செய்து இருந்தார்கள். அது உண்மையில் உருவேறி ஆடுவதைப் போலவே இருந்தது. காளி அம்மன் பாத்திரங்கள் தப்பு மற்றும் உடுக்கு இசைக்கு உண்மையில் உருவேறி ஆடினார்கள் இது காமன் கூத்தை நடிப்பு சார்ந்து இல்லாமல் உணர்வு சார்ந்த வகையில் பார்க்கக் கூடியதாக அமைந்தது.
இவ்வாறு காமன் கூத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது சிறந்ததோர் அனுபவமாக அமைந்தது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆடல், பாடல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. மலையகத்தில் இன்று பல இடங்களில் காமன் கூத்து வருடாந்தம் நிகழ்த்தப்படுவதும் இல்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற ஆற்றுகை வடிவங்களினை நிகழ்த்துவது என்பது அடுத்த தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லக்கூடியதாக அமையும். புதிய தலைமுறையை சேர்ந்தவர்கள் இக்கலை வடிவத்தை சிறந்த முறையில் ஒருமித்து செயற்படுவதும், ஒருங்கிணைந்து நிகழ்த்துவதும், அடுத்த சந்ததியினருக்கு ஆர்வத்தை தூண்டுவதாகவும், கலை சார்ந்த பற்றும் ஏற்படும். கலை என்றும் அழவுக்குட்படுத்தக் கூடாது. ஆரம்ப காலத்தில் இருந்த கலை வடிவம் இன்று மாற்றங்கள் எதுவும் நிகழாமல் உள்ளது என்று கூற முடியாது. கால ஓட்டத்திற்கு ஏற்ப கலப்பு தன்மையும், இயங்கியல் அம்சங்களும் நிறைந்து இருக்கும். இருப்பினும் மாற்றங்கள் மூலம் கலை வடிவத்தை அழியவிடாது பாதுகாத்தல் வேண்டும். இது கிழக்கில் காமண்டி என்ற மலையக காமன் கூத்தினை பார்த்து விளங்கிக் கொண்டதுடன் சிறந்ததொரு அனுபவமாக பார்க்கின்றேன். கலைகளின் நிலைப்பு தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மலையகத்தில் செய்யக்கூடிய காமன் கூத்தினை மலையகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழக்கில் காமண்டி என்ற பெயரில் சுவாமி விபலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் மிகவும் அழகாக நிகழ்த்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.
கிரிஜா மானுஶ்ரீ
கிழக்கு பல்கலைக்கழகம்
இலங்கை