கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள்
-------------------------------------------------------------------
மேய்ந்து கொண்டும்
சாணம் இட்டும்
புரண்டு விட்டு
சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும்
ஆநிரைகளைப் பார்க்க
கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள்
அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று
குட்டிகளுடனும் கருக்களுடனும்
ஆடாமல் அசையாமல்
கடவுள் வரும் வழியில்
ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன
நாள் முழுதும்
காவலர்களுடன் வரும் கடவுள்கள்
கையை அசைப்பார்கள்
எழுதி வைத்து வாசிப்பார்கள்
இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள்
மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள்
கடவுள்களின் முன்னேயே
ஏதோ நடந்து
ஆநிரைகள் சில
குட்டிகள் சில
கருக்களில் சில
எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று
இறந்து போகின்றன
அன்று வந்த கடவுள்
ஓடித் தப்பி மறைந்து விடுகின்றார்
மிச்சமான கடவுள்கள்
தங்களுக்கு மிகவும் வேண்டாத ஒரு கடவுளே
கொன்று குவித்தது என்கின்றார்கள்
கடவுள்களின் போதகர்களும்
தங்களின் கடவுள்களின் சொற்களையே போதிக்கின்றார்கள்
இது தான் தருணம் என்று
ஆநிரைகளின் இடம் வரும் சில கடவுள்களிடம்
'அவங்கள சும்மா விடாதீங்க................' என்று கதறுகின்றன
எரியாமல் நசியாமல் மூச்சுடன்
இன்று உயிர் தப்பிய ஆநிரைகள்
அடுத்த கடவுள் வருகையிலும்
இன்று தப்பிய ஆநிரைகள் சில
இறக்கப் போகின்றன
சும்மா விடப் போவதில்லை இந்தக் கடவுள்கள்.