நலமோடு நாம் வாழ

மது, சிகரெட் மட்டுமல்ல, இந்த பழக்கங்கள் இருந்தாலும் உங்கள் கல்லீரல் பாதிக்கப்படலாம் என்று தெரியுமா?

2 months ago

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரலுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் பேசினார் .

அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கல்லீரலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முதல் விசயம் என்ன?

உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் செயல்பாடும் நமக்கு தெரியும். ஆனால், கல்லீரல் குறிப்பாக என்ன செய்கிறது என்று பலருக்கு தெரியாது. ஏனென்றால் கல்லீரல் உடலில் 500 வகையான வேலைகளை செய்கிறது. நாம் சாப்பிடும் உணவை வடிகட்டுகிறது, புரதம் உற்பத்தி செய்கிறது, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை கவனமாக எடுத்துக் கொண்டாலே கல்லீரலை பாதுகாக்கலாம்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன்

கல்லீரல் பாதிப்புக்கு பொதுவாக மது பழக்கமே காரணம் என்று கூறப்படுகிறது. அது உண்மையா?

அப்படி இல்லை. முழு உடல் பரிசோதனை செய்யும் போது, பலருக்கும் ஃபேட்டி லிவர் (Fatty-Liver) இருப்பது தெரியவருகிறது. இதில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று நான்கு நிலைகள் உள்ளன. இப்போதுள்ள சூழலில் தமிழ்நாட்டில் 30-40% பேருக்கு கிரேட் 1 ஃபேட்டி லிவர் இருக்கும் என்று கூறலாம். ஆனால் அவர்களில் சுமார் 18% பேர் மட்டுமே குடிப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அந்த பழக்கம் கிடையாது.

Nonalcoholic steatohepatitis என்ற வகையிலான, குடிப் பழக்கம் அல்லாத காரணங்களினால் கல்லீரல் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதற்கு காரணம் நமது மந்தமான வாழ்க்கை முறை. நாம் உடலின் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் சிலர் அதிகமாக குளிர்பானங்கள் குடிக்கலாம், இனிப்புகள் எடுத்துக் கொள்ளலாம், பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடலாம். இவை எல்லாம் ஃபேட்டி லிவருக்கு இட்டுச் செல்லும்.

ஃபேட்டி லிவர் என்பது பலர் நினைத்துக் கொள்வது போல கொழுப்புச் சத்து அல்ல. ஃபேட்டி லிவருக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து தான். மாவுச்சத்தை கொழுப்பாக மாற்றும் திறன் கல்லீரலுக்கு உண்டு. எனவே அதிக மாவுச் சத்து, அதிக சர்க்கரை, இவை எல்லாமே கொழுப்பாக மாறி கல்லீரலில் சேரும்.

மிக எளிமையாக இதை சொல்ல வேண்டும் என்றால் - எந்த உணவாக இருந்தாலும் அது முதலில் கல்லீரலில் தான் சேரும். கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நல்ல உணவை வடிகட்டி அதை மட்டும் இருதயத்துக்கு அனுப்பும். இருதயம் அதனை உடல் முழுவதும் பகிர்ந்து கொடுக்கும்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரோக்யமற்ற உணவு பழக்கத்தினால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டா?

100% வாய்ப்பு உள்ளது. கல்லீரல் பாதிப்பில் தொடங்கி, கல்லீரல் செயல்பாடு முற்றிலும் முடங்கிப் போய் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் சில நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாடுடன் இருக்கவில்லை என்றால் மிக விரைவில் கிரேட் 4 வரை அவர்களின் கல்லீரல் பாதிப்பு தீவிரமாகலாம்.

உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இது பொருந்தும். அவர்கள் மாதத்துக்கு ஒரு முறை குடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கல்லீரல் பாதிப்புக்கு குடிபழக்கத்தை காரணம் சொல்ல முடியாது. சொல்லப்போனால், குடிப்பழக்கம் அல்லாத காரணங்களினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் சதவிகிதம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனாவுக்கு பிறகு கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் விதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

வாழ்க்கை முறை மாறியுள்ளது. அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாகியுள்ளனர். குறிப்பாக ஐடி துறையில் இருப்பவர்கள் இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது, பசித்த உடன் உணவு டெலிவரி ஆப் மூலம் உடனடியாக ஆர்ட செய்து சாப்பிடுகின்றனர். அந்த உணவை எப்படி சமைக்கிறார்கள், அது என்ன மாதிரியான கடை என்றெல்லாம் பார்ப்பதில்லை, அருகில் இருப்பது எது என்று மட்டுமே பார்க்கிறார்கள். இவை எல்லாம் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது.

இரவு நேரத்தில் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமா?

யார் அதிக நாட்கள் வாழ்கிறார்களோ அவர்கள் ஆரோக்யமானவர்களாக கருதப்படுகிறார்கள். அப்படி பார்க்கும் போது கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சராசரி வாழ்நாள் 85 ஆண்டுகள் ஆகும். நம்மை விட 20 ஆண்டுகள் அதிகம். அவர்களின் உணவுப் பழக்கத்தின் முக்கிய அம்சம் – இரவு உணவை அவர்கள் மாலை 6.30 மணிக்கு சாப்பிட்டுவிடுவார்கள். நாம் இரவு 10மணி, 11 மணிக்கு கூட சாப்பிடுவோம். இப்போது இரவு 2 மணி, 3 மணிக்கு கூட பிரியாணி கிடைக்கிறது.

வயிறு முட்ட பிரியாணி சாப்பிடும் போது உடலில் தேவைக்கு மீறிய கலோரிகள் சேர்கின்றன. அவ்வளவு உணவை சாப்பிட்டு விட்டு, உடனே தூங்கிவிடுவார்கள், எந்த வேலையும் செய்ய போவதில்லை. அந்த உணவு நமது கல்லீரலில் தான் சென்று தங்கும்.

இரவு நேரத்தில் சாப்பிடும் போது உணவு செரிக்க நேரமாகும். அவை குடல் பகுதியிலேயே தங்கிவிடும். அப்போது பாக்டீரியாக்கள் செயல்பாடு அதிகரிக்கும். அதாவது பாலை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது கெட்டுபோய்விடும் இல்லையா, அதே போல தான். உணவு செரிக்காமல் அதே இடத்தில் நீண்ட நேரம் தங்கியிருந்தால் அதுவும் கெட ஆரம்பித்துவிடும். அதனால் தான் பலருக்கு Irritable Bowel Syndrome போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது அவை வாயு உற்பத்தி செய்யும். அந்த வாயு குடலை விரிக்கும். குடலை விரிக்கும் போது கழிப்பறைக்கு செல்லும் உந்துதல் ஏற்படும்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு குடல் ஆரோக்கியம் (gut health) எவ்வளவு முக்கியம்?

கல்லீரலும் குடல் கிட்டத்தட்ட ஒரே உறுப்பு போல தான். நாம் சாப்பிடும் உணவில் உள்ள பாக்டீரியா, அவை உடலில் சென்ற பிறகு எப்படி வளர்கின்றன, அவற்றுடன் நமது உறவு எப்படி உள்ளது இவை எல்லாம் பற்றி பேசுவது தான் குடல் ஆரோக்கியம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே சமையலறையிலிருந்து சமைத்த உணவை தான் ஒவ்வொருவரும் சாப்பிட்டு வந்தனர். காலை உணவு வீட்டில் சாப்பிடுவோம், மதிய உணவு வீட்டிலிருந்து எடுத்துச் செல்வோம், இரவு உணவையும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இதே வழக்கமாக இருக்கும். அப்போது நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் நமக்குமான தொடர்பு சீராக இருக்கும். ஆனால் இப்போது வெவ்வேறு வேளைகள் வெவ்வேறு இடத்திலிருந்து சாப்பிடுகிறோம். உடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் செல்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. அப்போது வாயு உற்பத்தியாகும். இவை எல்லாம் குடலுக்கு உகந்தது அல்ல.

மன அழுத்தம், கல்லீரல், குடல் ஆரோக்கியம் இவற்றுக்கான தொடர்பு என்ன?

சாலையில் நீங்கள் நடந்து செல்லும் போது திடீரென ஒரு லாரி உங்கள் மீது இடிப்பது போல வந்து, நின்றுவிட்டது என்று வைத்துக் கொள்ளலாம். "எனக்கு வயிறு கலக்கிவிட்டது" என்று கூறியிருப்பீர்கள். பதட்டமடையும் போது ஏன் வயிறு கலக்கிறது? நாம் பதட்டம் அடையும் போது வெளியாகும் சில சுரப்பிகள் குடலில் மாற்றங்களை உண்டாக்கும். நிறைய பேருக்கு தற்போது வேலை சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களது உடலில் அதிகபடியான சுரப்பிகள் வெளியாகின்றன. அவை குடலை பாதிக்கும். குடல் சாப்பாட்டை உடனே வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைக்கும். எனவே தான் சிலருக்கு சாப்பிட்ட உடன் கழிவறை பயன்படுத்த வேண்டிய உந்துதல் ஏற்படும். இவை எல்லாமே மன அழுத்தம் தொடர்பானது தான்.

பாராசிட்டமால் அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா?

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாராசிட்டமாமல் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பு, சில நேரங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். குழந்தைகளில் பாராசிடாமல் பாய்சனிங் (paracetamol poisoning) அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் குறையவில்லை என்ற காரணத்தினால் பெற்றோர்கள் அறியாமையினால் மருத்துவர் கூறியதை விட அதிகமாக கொடுப்பார்கள். அதனால் கல்லீரல் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படுகிறது. மருந்துகள் கொடுத்து நிலைமை சீராகவில்லை என்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தவிர வேறு வழியில்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு பாராசிடாமல் எடுத்துக் கொள்ளலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்தது. ஏற்கெனவே குடிபழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ள நபருக்கு ஒரு சில மாத்திரைகள் கூட ஆபத்தாக இருக்கலாம். ஆரோக்யமாக இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு பல மாத்திரைகள் சாப்பிட்டால் கூட பாதிப்பு இருக்காது. கல்லீரல் பாதிப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு வலியை குறைக்கக் கூட பாராசிடாமல் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்த்துவிடுவோம். அந்த அளவுக்கு பாராசிட்டமாலும் கல்லீரல் பாதிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

அதே போன்று உடல் எடை குறைப்பதற்கான பவுடர்களை உட்கொள்வதால் தீவிர கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனக்கு தெரிந்த இரண்டு மருத்துவர்கள் அதனை எடுத்துக் கொண்டனர். ஒருவர் இறந்துவிட்டார் . மற்றொருவருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு தற்போது மெல்ல குணமாகிவருகிறார். அந்த பவுடரை எடுத்துக் கொள்ளும் போது திருப்தியாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். எனவே அந்த நாளில் நமக்கு தேவையான சத்துக்கள் எதையும் நாம் உட்கொள்ள மாட்டோம். அந்த பவுடரால் உடல் எடை குறையும். ஆனால் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து பல ஆய்வுகள் உள்ளன.

பாதிப்படைந்த கல்லீரல் முழுவதும் பழைய நிலைக்கு திரும்ப வழி உண்டா?

கல்லீரல் நமது உடலின் மிக அற்புதமான உறுப்பாகும். கிரேக்க புராணங்களில் வரும் ப்ரோமதியஸ் என்பவருக்கு உடலிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் கல்லீரலை காகம் ஒன்று தினமும் வந்து சாப்பிட்டுச் செல்லும். ஆனால் காகம் ஒவ்வொரு முறை வரும் போதும், கல்லீரல் பழைய நிலையில் வளர்ந்திருக்கும்.

கல்லீரலுக்கு மீண்டு வளரும் திறன் உள்ளது, ஆரோக்யமாக இருப்பவரின் கல்லீரலில் 70% வெட்டி எடுத்துவிட்டாலும், அந்த 30% கல்லீரல் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 80% ஆக வளர்ந்திருக்கும். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்கள், அந்த பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டால் அப்போது வரை ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும். ஆனால் இதை தான் குடிப்பவர்கள் சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குடிப் பழக்கத்துக்கு அடிமையான எனது நோயாளி ஒருவர், அதிகமாக குடிக்கும் போது கண்கள் மஞ்சள் ஆகின்றன, தனக்கு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது என்று அவருக்கு தெரியும். ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தால் சரியாகிவிடும் என்று கூறி கூறி குடித்துக் கொண்டே இருந்தார். இப்போது உயிரிழந்துவிட்டார். கல்லீரல் மீண்டு வளரும் திறன் கொண்டது என்றாலும் அதை தவறாக பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy7n54q4pyo

நீரிழிவு நோயில் மேலும் ஒரு புதிய வகை: டைப்-5 நீரிழிவு யாருக்கெல்லாம் வரக் கூடும்?

2 months 1 week ago

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்

  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

  • 15 ஏப்ரல் 2025, 03:03 GMT

உடல் பருமனாக இருப்பவர்களுக்கே நீரிழிவு நோய் வரும் என்ற எண்ணம் பலரது மனதிலும் உள்ளது. மெலிந்த தேகம் கொண்டவர்கள் மத்தியில் எந்தவிதமான நோயும் வருவதில்லை என்ற எண்ணமும் நம்மிடம் உள்ளது.

ஆனால் குறைவான பி.எம்.ஐ கொண்டவர்கள் மத்தியிலும் நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் அது ஏற்கனவே மக்கள் மத்தியில் காணப்படும் டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் அல்ல என்றும் சமீபத்தில் பாங்காங்கில் நடைபெற்ற நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (பிஎம்ஐ- உடல் எடையையும், உயரத்தையும் கொண்டு கணக்கிடுவது. உலக சுகாதார நிறுவனம் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ இருந்தால், அது உடல் பருமன் பிரச்னை என்கிறது)

இந்த வகை நீரிழிவு நோய் குறிப்பாக மத்திய மற்றும் குறை வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பருமனாக இல்லாத, அதே நேரத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நபர்களிடம் ஏற்படும் நீரிழிவு நோயை டைப்-5 நீரிழிவு நோய் என்று வகைப்படுத்தி, அதற்கான ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார் பேராசிரியர் மருத்துவர் பீட்டர் ஸ்வார்ஸ். அவர் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

டைப்-5 நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படுகிறது? அது எவ்விதம் ஏற்படுகிறது? அதனை கட்டுக்குள் கொண்டு வர எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதை ஆய்வு செய்ய சர்வதேச அளவில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன? முதன்முறையாக எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? எந்தெந்த சமூகக் குழுக்கள் மத்தியில் இந்த நோய் அதிகமாக பரவுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன?

<19 என்ற அளவில் குறைந்த பி.எம்.ஐ எண் கொண்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயே வகை ஐந்து நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீரிழிவு உடல் பருமன் குறைவாக இருக்கும் மக்களிடம் ஏற்படுகிறது.

"டைப்-2 நீரிழிவு நோய் உடைய, உடல் பருமன் அதிகமாக இருக்கும் நோயாளிகளிடம், இன்சுலின் சுரந்தாலும் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள அந்த இன்சுலின் சுரப்பு போதுமானதாக இருக்காது. அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு அதிகப்படியாக இருக்கும்.

ஆனால், டைப்-5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது. இவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை இருக்கும்.

ஆனால் டைப்- 2 நீரிழிவு நோய்க்கு ஊசி செலுத்துவது போன்று இல்லாமல், மாத்திரைகள் மூலமாகவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இயலும்," என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ். இவர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வகை 5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது (<19) என்ற அளவில் பி.எம்.ஐ கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது

யாருக்கெல்லாம் இத்தகைய நீரிழிவு நோய் வரக் கூடும்?

குறைவான மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டக் கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • சிறுவயதில் இருந்தே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்ட மக்கள்

  • கருவில் இருக்கும் போதே குறைவான பிஎம்ஐ கொண்ட பிரிவினர்

  • 30 வயதிற்கு உட்பட்டவர்கள்

  • ஆண்கள்

  • கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்தும் கேட்டோனூரியா அல்லது கேட்டோசிஸ் குறைபாடு உள்ளவர்கள்

  • நாள் ஒன்றுக்கு அதிக அளவு இன்சுலின் தேவைப்படும் நபர்கள்

ஆகியோருக்கு டைப்-5 நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் என்கிறது வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி நடத்திய ஆராய்ச்சி முடிவுகள்.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

டைப்-5 நீரிழிவு 1955-ல் கண்டுபிடிப்பு

குறைவான பி.எம்.ஐ. கொண்ட மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயை ஹூக் - ஜோன்ஸ் 1955-ஆம் ஆண்டில் உறுதி செய்தார். ஜமைக்காவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் அவர்களுக்கு டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பதையும் அவர் உறுதி செய்தார்.

குறைவான மற்றும் மத்திய வருவாய் ஈட்டக்கூடிய நாடுகளில் இந்த நோய் இருப்பது அப்போது கண்டறியப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், கொரியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் எத்தியோபியா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை நீரிழிவு நோய் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டது.

உலக சுகாதார அமைப்பால் இந்த வகை நீரிழிவு நோய் 1985-ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. அதனை ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் (malnutrition-related diabetes mellitus (MRDM)) என்று வகைப்படுத்தியது உலக சுகாதார அமைப்பு.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு.

WHO பட்டியலில் இருந்து டைப்-5 நீரிழிவு நீக்கப்பட்டது ஏன்?

பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீரிழிவு நோய் பிரிவுகளை முதன்முறையாக 1980-ஆம் ஆண்டு வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு. 1985-ஆம் ஆண்டு அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வெளியிடப்பட்டது.

1980-ஆம் ஆண்டில் நிபுணர் குழு நீரிழிவு நோயின் இரண்டு பிரிவுகளான ஐ.டி.டி.எம் அல்லது டைப்-1 மற்றும் என்.ஐ.டி.டி.எம். அல்லது டைப்-2 நீரிழிவு நோயை பட்டியலில் இணைக்க பரிந்துரை செய்தது. 1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை பட்டியலில் இடம் பெற்றது.

ஆனால் 1999-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அல்லது புரத பற்றாக்குறை காரணமாக ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் என்பதை நிரூபிக்க போதுமான சான்றுகள் ஏதும் இல்லை என்பதால் MRDM வகை நீரிழிவு நோயை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது உலக சுகாதார அமைப்பு.

ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக நீரிழிவு நோயில் ஏற்பட்டிருக்கும் திரிபு என்று கூறி அந்த வகையை நீக்கியதோடு மட்டுமின்றி, அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,1985-ஆம் ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஏற்படும் நீரிழிவு நோய் (MRDM) வகை உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இடம் பெற்றது

முக்கிய அறிவிப்புக்கு வழிவகுத்த ஆராய்ச்சி

கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் குறைவான உடல் பருமன் கொண்ட, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயானது டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1955-ல் முதன் முறையாக கண்டறியப்பட்ட, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயாக (MRDM) இது இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஆராய்ச்சி முடிவில் உறுதி செய்தனர்.

இது தொடர்பாக அதே ஆண்டு "An Atypical Form of Diabetes Among Individuals With Low BMI," என்ற தலைப்பில் ஆராய்ச்சி முடிவுகளையும் வெளியிட்டனர். அதன்படி, பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியில் இருந்து, குறைவாக உடல் பருமன் கொண்ட 73 இந்திய ஆண்களிடம் சோதனை செய்யப்பட்டது. அதில் 20 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது.

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பணியாற்றி வரும் மூத்த பேராசிரியரும் மருத்துவருமான நிஹல் தாமஸ், அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மெரிடித் ஹாகின்ஸும், இதர துறை சார் நிபுணர்களும் சேர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

"இது தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில் பிரகடனம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற 'வேலூர் எண்டோகிரைனாலஜி சர்வதேச மாநாட்டில்' அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சமீபத்திய அறிவிப்பு பாங்காங்கில் வெளியிடப்பட்டது," என்று தெரிவிக்கிறார் மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ்.

வேலூரில் நடைபெற்ற மாநாட்டிற்கு பேராசிரியர்கள் நிஹல், மெரிடித் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைப்பு செயலாளராக பேராசிரியர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் செயல்பட்டார்.

டைப்-5 நீரிழிவு நோய், வேலூர் சிஎம்சி, உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம்,PROFESSOR PETER SCHWARZ/LINKEDIN

படக்குறிப்பு,சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்ற பேராசிரியர் பீட்டர் ஸ்வார்ஸ் மற்றும் இதர துறைசார் நிபுணர்கள்

டைப்-5 நீரிழிவு நோய் தொடர்பான ஆராய்ச்சி ஏன் அவசியமாகிறது?

"பொதுவாக இத்தகைய நபர்களுக்கு நீரிழிவு நோய் வராது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும். அவர்களுக்கு, டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொதுவான சிகிச்சை முறையை கையாள்வது தீங்காக போய் முடியக்கூடும். இன்றைய காலத்தில் ஆதாரங்கள் அடிப்படையில்தான் மக்கள் எந்த ஒரு சிகிச்சையையும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே இது தொடர்பாக அதிக அளவு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டைப்-5 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை முறையை உருவாக்கவும் இத்தகைய ஆராய்ச்சிகளை தொடர்வது முக்கியமானது," என்று மருத்துவர் ஃபெலிக்ஸ் ஜெபராஜ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0jz91lvgnlo

மாதவிடாய் நின்ற பிறகான பெண்களின் வாழ்க்கை முறை மாற்றம்

2 months 1 week ago

மாதவிடாய் நின்ற பிறகும் பெண்கள் கலவி இன்பத்தை பெறுவது எப்படி?

மெனோபாஸ், உடலுறவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

11 ஏப்ரல் 2025

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உடலுறவு கொள்வதில் குறைவான ஆசை, பெண்ணுறுப்பில் வறட்சி மற்றும் தீவிர மனநிலை மாற்றங்கள்...

இவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது (மெனோபாஸ்) பெண்கள் அதிகம் அனுபவிக்கும் சில அறிகுறிகள்.

பலருக்கு, இந்த மாற்றங்கள் மாதவிடாய் இறுதியாக நிற்பதற்கு பத்து ஆண்டுகள் முன்பிருந்தே தொடங்கலாம். இந்தக் காலகட்டம் பெரிமெனோபாஸ் என்று அழைக்கப்படுகின்றது.

கனடாவில் உள்ள வான்கூவரில் தனது 40களில் இருக்கும் சூசன் வசித்து வருகிறார். அவர் தற்போது பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிறார்.

"இந்த நேரத்தில் உடலுறவு கொள்வதென்பது வலி மிகுந்ததாகிவிட்டது. உடலுறவு கொள்ள எனக்கு இன்னும் ஆசை இருக்கிறது. ஆனால் இந்த வலி எனது ஆசைக்குத் தடையாக இருக்கிறது. எனக்குள் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியாமல் இருந்தது. உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இந்த விஷயத்தைப் பற்றி மருத்துவரிடம் சொல்ல எனக்கு நீண்ட காலம் எடுத்தது" என்று கூறுகிறார் சூசன்.

மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், பெண்கள் தங்கள் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை மாதவிடாய் நின்றதற்குப் பிறகு கழிக்கக் கூடும்.

மெனோபாஸ், உடலுறவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹார்மோன் சுரக்கும் அளவு குறைவதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி நின்று போவதே மெனோபாஸ் எனப்படுகிறது. இந்தக் காலத்துக்குப் பிறகு பெண்களால் குழந்தை பெற முடியாது. பெண்களுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைவதுதான் பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படக் காரணமாக இருக்கிறது. இதனால்தான் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுகிறது என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே. இவர் பிரிட்டனில் பொது மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வியை மக்களிடையே ஊக்குவித்து வருகிறார்.

ஆனால் பெண்கள் உடலுறவு பற்றிப் பேசுவது இன்னும் பல கலாசாரங்களில் ஒரு தடையாக இருக்கிறது. "உடலுறவின்போது வலி ஏற்படுவது இயல்பானது என்று கருதும் பெண்கள் இருக்கிறார்கள். அதோடு எதிர்பால் ஈர்ப்பு உறவுகளில் உடலுறவுகொள்ளும்போது ஓர் ஆணை மகிழ்விக்க இந்த வலியைத் தாங்கிக் கொள்வது தனது பொறுப்பு என்று நம்பும் பெண்களும் இன்னும் இருக்கிறார்கள்" என்று கூறுகிறார் மருத்துவர் அஸிசா ஸெஸே.

இதுபோன்ற நம்பிக்கைகள் காரணமாகப் பல பெண்கள் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க மருத்துவர்களிடம் வருவதைத் தவிர்த்து அமைதியாக அவதிப்படலாம் என்று மருத்துவர் அஸிசா கூறுகிறார்.

ஹார்மோன்களும் மறைந்திருக்கும் அறிகுறிகளும்

மாதவிடாய் நின்ற பிறகு உடலுறவு கொள்வது ஏன் சிரமமாக இருக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடலுறவு கொள்ள ஆசையைத் தூண்ட ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (இதையும் கருப்பைகள் சுரக்கின்றன) ஹார்மோன்கள் காரணமாக இருப்பதாக மருத்துவர் அஸிசா விளக்குகிறார்.

இந்த ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும்போது உடலுறவின் மீதான ஆசையில் மாற்றங்களை அனுபவிப்போம் என்கிறார் அவர்.

ஜெர்மனியில் வசிக்கும் ரோஸிக்கு 45 வயதாகிறது. அவரது 30 வயதில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அவருக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு கட்டாய மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் தான் அனுபவித்த மாற்றங்கள் தீவிரமானவை என்று அவர் பிபிசியிடம் அவர் கூறினார்.

"எனக்கு உடலுறவு கொள்ள மிகவும் பிடிக்கும். ஆனால் திடீரென்று அந்த ஆசை போய்விட்டது. அதனால் என்னால் எந்த உடல் ரீதியான தூண்டுதலையும் அனுபவிக்க முடியவில்லை," என்றார்.

உடலுறவில் ஆசை குறைவது மற்றும் உடலுறவு கொள்ளும்போது வலி ஏற்படுவது ஆகிய இரு பிரச்னைகளுக்காகத்தான் மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்கள் தன்னிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருவதாகக் கூறுகிறார் கலிஃபோர்னியாவில் மனநல மருத்துவராகவும் உடலுறவு சார்ந்த சிகிச்சையாளராகவும் பணியாற்றும் மருத்துவர் நசானின் மாலி.

''பல சந்தர்ப்பங்களில் அவர்கள் முடங்கிப் போகிறார்கள். பல பெண்களுக்கு உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இல்லை. ஆனால், ஆணுறுப்பை தன்னுள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளும் ஆர்வம் பெண்களுக்கு இல்லாமல் போகிறது" என்று அவர் விவரிக்கிறார்.

ஆனால் பெண்ணுறுப்பில் வறட்சியோ, உடலுறவு கொள்வதில் ஆசை குறைவதோ மட்டும் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்து போவதற்குக் காரணமாக இருப்பதில்லை.

பிரிட்டனில் வசிக்கும் 49 வயதான யாஸுக்கு தொடர்ந்து சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுவது அவருக்கு உடலுறவு மீதான ஆசை குறையக் காரணமாக இருந்தது.

''ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும், அதன் பிறகு மிகவும் வலி மிகுந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதால், உடலுறவு கொள்வதில் எனக்கு சுத்தமாக ஆசை இல்லை. இந்தப் பிரச்னை மெனோபாஸுடன் தொடர்புடையது என்று மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கண்டறியவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதன் விளைவாக சிறுநீர்ப் பாதையில் தோற்றுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர் ஸெஸே தெரிவிக்கிறார்.

"ஈஸ்ட்ரோஜன் வெறும் மாதவிடாய் சுழற்சி மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த ஒன்று என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் ஈஸ்ட்ரோஜன் என்பது நமது உடல் முழுவதும் செயல்படும் ஓர் அற்புதமான ஹார்மோன்".

"பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர்க் குழாயை வழுவழுப்புத் தன்மையுடன் வைத்திருக்க உதவுவது ஈஸ்ட்ரோஜன்தான். ஈஸ்ட்ரோஜனின் அளவு குறையும்போது , சிறுநீர்க் குழாயைச் சுற்றியுள்ள திசுக்களை மெல்லியதாகவும், வறண்டதாகவும் மாற்றி நோய்தொற்றுக்கு ஆளாக்குகிறது" என்று அவர் விவரிக்கிறார்.

பல கலாசாரங்களில் பெண்கள் உடலுறவு கொள்வது என்பது இனப்பெருக்கத்தோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலுறவு கொள்வது நின்றுவிடும் என்ற தவறான ஒரு கருத்து இருக்கிறது.

பெண்களின் இளமைக்காக அவர்களை மதிப்பது என்பது அவர்கள் வாழ்வின் இந்தக் காலகட்டத்தைக் கடினமாக்கிவிடும் என்று கூறும் மருத்துவர் மாலி, "சில பெண்களுக்கு இது கஷ்டத்தை தரக் கூடியதாக இருக்கலாம்" என்கிறார்.

ஆனால் மாதவிடாய் முடிந்த பிறகு தங்கள் வாழ்க்கையின் சிறந்த உடலுறவை வைத்துக்கொள்ளத் தொடங்கும் பெண்களும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

என்ன சிகிச்சைகள் இருக்கின்றன?

மெனோபாஸ், உடலுறவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) மாத்திரைகள், பேட்ச்கள், ஜெல்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.

"மெனோபாஸ் சார்ந்த எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. பெண்கள் உடலுறவு கொள்ளவும், கூடுதல் இன்பத்தை அனுபவிக்கவும் பல்வேறு மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராத தீர்வுகள் இருக்கின்றன" என்று மருத்துவர் மாலி கூறுகிறார்.

லண்டனில் வசிக்கும் ஹால்டிடாவுக்கு 65 வயதாகிறது. அவரது மெனோபாஸ் காலகட்டத்தை ஒட்டி அவருக்கு விவாகரத்து ஆனதால், அதன் பிறகுதான் அவரது பாலியல் வாழ்க்கை சிறப்பாக மாறத் தொடங்கியது.

"எனக்கு 43 வயதானபோது எனக்கு விவாகரத்தானது. எனது 45-46 வயதில் பெரிமெனோபாஸ் காலகட்டம் தொடங்கியது. அதன் பிறகுதான் நல்ல ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக உடலுறவு கொள்ளத் தொடங்கினேன். நான் சந்தோஷமாக உணர்ந்தேன். ஒருவழியாக எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசையை மீண்டும் தூண்டுவதற்கான வழிமுறையைப் பற்றிப் பேசும் மருத்துவர் மாலி, "உடலுறவு குறித்த உங்களது எண்ணத்தை மறுமதிப்பீடு செய்யுங்கள்" என்று கூறுகிறார்.

"நம் எல்லாருக்குமே உடலுறவு எப்படி இருக்க வேண்டும், மகிழ்ச்சிகரமான உடலுறவு எப்படி இருக்கும் என்று ஓர் எண்ணம் இருக்கும். ஆனால் நம் உடலில் மாற்றம் ஏற்படும்போது, அதற்குத் தகுந்தாற்போல் நமது எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான உடலுறவு என்றால் என்ன என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்?" என்று அவர் கூறுகிறார்.

ஃபோர்ப்ளே மற்றும் ஆணுறுப்பை உள்ளே செலுத்தி உடலுறவு கொள்ளாமல் பாலியல் இன்பத்தை அனுபவிக்கும் வழிகள் குறித்து அவர் வலியுறுத்துகிறார்.

"பெண்ணுறுப்பின் திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அதன் உணர்திறன் குறையலாம். அதனால் வைப்ரேட்டர் போன்ற பாலியல் சாதனங்களைப் பயன்படுத்தலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாதவிடாய் அறிகுறிகள் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்றால், "மருத்துவ உதவியை நாடுங்கள், தேவைப்பட்டால் மருத்துவரை மாற்றுங்கள், மனம் தளரவேண்டாம், இதைக் கண்டு கூச்சமடையவும் வேண்டாம்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே கூறுகிறார்.

மாதவிடாய் நின்ற பிறகு உடலுறவு கொள்வது ஏன் சிரமமாக இருக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) முதலில் வழங்கப்படும். அவை மாத்திரைகள், ஜெல், ஒட்டக்கூடிய பேட்ச்கள் எனப் பல வடிவங்களில் கிடைக்கின்றன. சிலரால் ரத்த ஓட்டத்தில் ஹார்மோன்களை கலக்கும் மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். சிலருக்கு பெண்ணுறுப்பில் நேரடியாக பூசிப் பயன்படுத்தக்கூடிய மருந்துகளும் இருக்கின்றன" என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார்.

நியூசிலாந்தில் வசிக்கும் நெடா, தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக ஹார்மோன் மாற்று சிகிச்சை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

"எனது பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த எனக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை வேண்டும் என்று கேட்டபோது பெண்ணுறுப்பில் பூசும் க்ரீம் எனக்குத் தரப்பட்டது. எனக்கு மிக மோசமான புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்ததால் மருத்துவர்கள் எனது பாலியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை,'' என்கிறார் அவர்.

கடைகளில் கிடைக்கும் லூப்ரிக்கன்ட்கள் மற்றும் பெண்ணுறுப்பில் பயன்படுத்தும் மாய்ஷரைஸர்களையும் வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அந்தப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் இருக்கிறதா என்று சரிபார்த்து வாங்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் ஸெஸே.

இடுப்பு தசைகளில் (pelvic muscles) வலு குறைந்தவர்கள் அதற்காக இருக்கும் ஃபிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் மாதவிடாய் நின்றாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றுவது, உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவது, மது அருந்துவதைக் குறைப்பது அல்லது முற்றிலுமாக நிறுத்துவது, புகை பிடிக்காமல் இருப்பது, உடல் எடையைப் பராமரிப்பது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஸெஸே கூறுகிறார்.

"நமது உடல்நலத்தின் மீது நாம் அக்கறை கொள்வது சுயநலமான விஷயமல்ல. உங்கள் சுற்று வட்டாரத்தில் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் விஷயங்களை நீக்க முயற்சி செய்யுங்கள். நாம் ஒரு சூப்பர்வுமன் என்று நினைத்துக்கொண்டு பல விஷயங்களை நம்மீது போட்டுக்கொள்கிறோம். உதவி கேட்பதில்லை என்பதே முக்கியப் பிரச்னை. உதவி கேளுங்கள். உதவி கேட்கப் பிடிக்காவிட்டால் வேறொருவர் தாமாக உதவி செய்ய முன்வரும்போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மருத்துவர் அஸிசா ஸெஸே தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c87p15131plo

பெரியவர்கள் தாய்ப்பால் குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

2 months 3 weeks ago

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி, தாய்ப்பால் வங்கி, தாய்ப்பால் சேகரிப்பு, தாய்ப்பாலை எப்படி சேகரிப்பது, தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சோஃபியா பெட்டிஸா

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை நிபுணர்கள், மாய சக்தியின் பிறப்பிடம் என்றும் கூறுகின்றனர்.

தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பலை, அதில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர்.

மூன்று குழந்தைகளுக்கு அப்பாவான ஜேம்சன் ரைடெனூர் அவருடைய 39 வயதில் முதன்முறையாக தாய்ப்பாலை அருந்தினார். அவருடைய துணைவி மெலிசா குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவந்தார். அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை ஜேம்சன் தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக சேர்த்து வந்தார்.

"மெலிசா இதனை 'ஒருவிதமாக' நினைத்தாலும் கூட, நான் இதனை 'ஷேக்கில்' பயன்படுத்துகிறேன்," என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

தாய்ப்பாலை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, 'பாடி பில்டர்' ஒருவர் யூடியூபில் பேசியதை பார்த்த பிறகு ஜேம்சன் தாய்ப்பாலின் நன்மை குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார்.

"அந்த உடற்பயிற்சி செய்யும் நபர் பெரிய பலசாலியாக இருந்தார்," என்று ஜேம்சன் தெரிவித்தார்.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம்,JAMESON RITENOUR

படக்குறிப்பு,தாய்ப்பாலை உட்கொள்வதில் அதிக கவனம் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்ற போதும், ஜேம்சன் தாய்ப்பால் அவருக்கு தேவையான உத்வேகத்தை ஜிம்மில் வழங்குகிறது என்று நம்புகிறார்.

தாய்ப்பாலை உணவில் சேர்த்துக் கொள்வது ஜேம்சனின் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நாள் ஒன்றுக்கு 226 கிராம் (8 அவுன்சஸ்) நிறை கொண்ட இரண்டு தாய்ப்பால் 'பாக்கெட்டுகளை' அவர்கள் பயன்படுத்துகிறார்.

"என் வாழ்வின் மிகவும் சிறந்த தோற்றத்தில் நான் தற்போது இருக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"தசை வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் உதவுகிறது. 8 வாரங்களில் என்னுடைய தசை வளர்ச்சி மேம்பட்ட அதே நேரத்தில் உடல் எடையும் எனக்கு குறைந்தது," என்று அவர் தெரிவிக்கிறார்.

தாய்ப்பாலை தன்னுடைய உணவில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்த காலத்தில் இருந்து அவருக்கு உடல் நலக்குறைவோ, காய்ச்சலோ ஏற்பட்டதாக நினைவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

"நான் குழந்தை போலவே வளர்ந்து, குழந்தை போலவே தூங்க விரும்புகிறேன். எனவே நான் குழந்தை போலவே சாப்பிட விரும்பினேன். நான் நன்றாக உணருகிறேன். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கிறேன்," என்று ஜேம்சன் தெரிவிக்கிறார்.

ஆன்லைனில் வாங்குவது ஆபத்தானது!

தாய்ப்பால் அருந்துவதால் பெரியவர்களின் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த அறிவியல் ரீதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் அதனால் பயன்கள் சில இருக்கின்றன என்று நிகழ்வுச் சான்றுகளை (anecdotal evidence) குறிப்பிடுகின்றனர் நிபுணர்கள்.

"தாய்ப்பாலில் அதீத புரதம் இருக்கிறது. இதனால் குழந்தையின் உடலில் தசை வளர்ச்சியானது வேகமாக இருக்கிறது. 'பாடி பில்டர்களுக்கு' இது தான் தேவை," என்று கூறுகிறார் மருத்துவர் லார்ஸ் போட். அமெரிக்காவின் சாண்டியாகோவில் அமைந்திருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மனித பால் நிறுவனத்தின் (Human Milk Institute) இயக்குநராக போட் பணியாற்றி வருகிறார்.

"பாடி பில்டர்களுக்கு அவர்களின் உடலைப் பற்றிய நல்ல புரிதல் என்பதால், அந்த பயன்பாட்டில் எதோ ஒன்று உள்ளது. இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்னவென்று தெரியவில்லை," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் முகநூல், க்ரைக்லிஸ்ட் மற்றும் ரெட்டிட் சமூக வலைதளங்கள் மூலம் வாங்கப்படும் தாய்ப்பால் எங்கிருந்து வருகிறது என்பதில் சந்தேகம் நிலவுவதால் இந்த விசயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார் போட்.

"அந்த பால் சோதனைக்கு உட்படுத்தப்படாதது. அதில் குறிப்பிடத்தக்க சுகாதார ஆபத்துகள் இருக்கலாம். எச்.ஐ.வி. மற்றும் ஹெபாடிடிஸ் போன்ற நோய்களின் தொற்று காரணிகள் அதில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன," என்று எச்சரிக்கிறார் போட்.

தாய்ப்பாலை வழங்கும் பெண்ணின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் பொது ஆரோக்கியத்தைப் பொறுத்தே தாய்ப்பால் நல்லதாக இருக்கலாம். மேலும் அதில் பல தொற்றுகளுக்கான காரணிகளும் இருக்கலாம்.

முறையாக கிருமி நீக்கம் செய்யப்படாத, ஆரோக்கியமற்ற சூழல்களில் தான் பெண்கள் பெரும்பாலும் தாய்ப்பாலை 'பம்ப்' செய்து சேமித்து வைக்கின்றனர். எனவே தாய்ப்பால் எளிதில் நஞ்சாக மாறலாம்.

அமெரிக்காவில் உள்ள நேஷன்வைட் குழந்தைகள் மருத்துவமனை 2015-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின் போது ஆன்லைனில் வாங்கப்படும் தாய்ப்பாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 101 மாதிரிகளில் 75% மாதிரிகளில் ஆபத்தை விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 10% மாதிரிகள் மாட்டுப்பால் அல்லது குழந்தைகளுக்கு வழங்கப்படும் தாய்ப்பால் 'ஃபார்முலாக்கள்' என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம்,JAMESON RITENOUR

படக்குறிப்பு,ஜேம்சன் ஆன்லைன் மூலம் வாங்கிய தாய்ப்பால் பாக்கெட்டுகள்

மெலிசாவுடனான உறவில் இருந்து ஜேம்சன் வெளியேறிய பிறகு அவருக்கு தாய்ப்பால் கிடைக்கவில்லை. எனவே அவர் ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்க ஆரம்பித்தார்.

கெட்டுப்போன தாய்ப்பாலால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவருக்கு போதுமான விழிப்புணர்வு அப்போது இல்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

"இணையத்தில் யாரோ ஒரு நபரிடம் இருந்து நான் தாய்ப்பாலை வாங்கினேன். நான் முகநூலில் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் ஒரு சாதாரண பெண்ணாகவே இருந்தார்," என்று தெரிவித்த ஜேம்சன்,"என்னுடைய வாய்ப்புகளை நான் தவறவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன்," என்று கூறுகிறார்.

போதுமான அறிவியல் ஆதாரம் ஏதும் இல்லாதது அவருக்கு வருத்தம் அளிக்கவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, அவருடைய சொந்த அனுபவம் மிகவும் நேர்மறையாக இருக்கிறது என்று கூறுகிறார்.

"நான் சந்திக்கும் அவமானங்கள் தான் நேர்மறையாக இல்லை," என்று தெரிவித்த அவர், "மக்கள் என்னை அசௌகரியமாக பார்க்கின்றனர். ஏன் என்றால் தாய்ப்பாலானது குழந்தைகளுக்கானது. ஆனால் அவர்கள் நினைப்பது போன்று அவ்வளவு மோசமானதாக இல்லை," என்று கூறுகிறார் ஜேம்சன்.

தாய்ப்பாலை பெரியவர்கள் அருந்துவது சரியா?, தாய்ப்பால் நன்மைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது

ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் என்ன ஆவார்கள்?

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்று ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் மருத்துவர் மேகன் அசாத், "நான் ஒரு போதும் பெரியவர்கள், தாய்ப்பாலை அருந்த வேண்டும் என்று கூற மாட்டேன்," என்று தெரிவிக்கிறார்.

"இது அவர்களுக்கு ஆபத்து விளைவுக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் உண்மையாகவே தாய்ப்பால் தேவை உள்ள குழந்தைகளுக்கு இது சாத்தியமான ஆபத்தை ஏற்படுத்தலாம்," என்று கூறுகிறார்.

மருத்துவர் போட் இது குறித்து பேசும் போது, "தேவைக்கு அதிகமாக இருக்கும் தாய்ப்பாலை லாபத்திற்காக விற்பதற்கு பதில் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்," என்று கூறுகிறார்.

"வறுமையில் வாடும் தாய்மார்கள் ஆன்லைனில் தாய்ப்பாலை விற்பனை செய்வதன் மூலமாக பணம் ஈட்டலாம் என்று நினைத்தால், அது பெரியவர்கள் மத்தியில் தாய்ப்பாலை உணவாக எடுத்துக் கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும்," என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் அசாத்.

ஆனால் இதில் எந்த விதமான குற்ற உணர்வும் ஏற்படவில்லை என்று ஜேம்சன் தெரிவிக்கிறார்.

"பசியோடு இருக்கும் குழந்தைகளைப் பற்றி கவலைப்படும் மக்கள் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நான் ஒன்றும் மருத்துவமனைகளின் முன்பு பாலூட்டும் தாய்மார்களிடம் போய் பால் வேண்டும் என்று கேட்கவில்லை."

உண்மையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களிடம் சுரக்கும், தேவைக்கு மிஞ்சிய தாய்ப்பாலை வழங்குவதற்காக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கிறார்.

சாத்தியமான சுகாதார பலன்கள்

தாய்ப்பால் இதுவரை அதிகம் ஆய்வுக்குட்படுத்தப்படாத பகுதியாகும்

"ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கிய மக்கள் நீண்ட காலமாக தாய்ப்பால் குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை. தேவையற்ற பெண்களின் பிரச்னையாக இதைக் கருதினார்கள்," என்று கூறிய மருத்துவர் அசாத், இது ஒரு "ஆணாதிக்கப்பார்வை," என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் அது மாறிவருகிறது.

தாய்ப்பால் குடிப்பதால் பெரியவர்களுக்கு ஏற்பட இருக்கும் சாத்தியமான ஆபத்துகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்படும் கீல்வாதம், இருதய நோய், புற்று நோய் மற்றும் 'இரிட்டேடபிள் பவுல் சிண்ட்ரோம்' உள்ளிட்ட நோய்களுக்கு எவ்வாறு தாய்ப்பாலை கொண்டு சிகிச்சை அளிக்கலாம் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தாய்ப்பால், நன்மைகள், தீமைகள் , சரிவிகித உணவு, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம், உடல்நலம், உடற்பயிற்சி

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,உருகுவேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புட்டிகளில் அடைத்து சேமித்து வைக்கப்பட்டுள்ள தாய்ப்பால்

தாய்ப்பாலில் காணப்படும் ப்ரீபையோடிக் நாரிழையான எச்.எம்.ஓ-வின் (Human Milk Oligosaccharides) பலன்கள் குறித்து ஆர்வம் தெரிவிக்கிறார் மருத்துவர் ஆசாத்.

இந்த நாரிழையை மனிதர்களால் செரிமானம் செய்ய முடியாது. ஆனால் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் பாக்டீரியா இந்த நாரிழையை பயன்படுத்திக் கொள்கிறது.

"ஆராய்ச்சியாளர்கள் இந்த நாரிழையை பயன்படுத்தி பெரியவர்கள் மத்தியில் குடலில் வீக்கம் மற்றும் அழற்சியை உருவாக்கும், 'அழற்சி குடல் நோய்க்கு (inflammatory bowel disease)' சிகிச்சை அளிக்க இயலுமா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு 'மைக்ரோபையோம்கள்,' மிகவும் முக்கியமானது என்று நம் அனைவருக்கும் தெரியும். எனவே குடல் பகுதியில் இருக்கும் மைக்ரோபையோம்களை மேம்படுத்த புதிய வழிகளை நாம் கண்டுபிடித்தால் அது அனைத்து வகையான நன்மைகளையும் வழங்கும். தாய்ப்பாலில் காணப்படும் எச்.எம்.ஓ நாரிழை சாத்தியமான வாய்ப்புகளை கொண்டிருப்பதாக தெரிகிறது," என்று அவர் தெரிவித்தார்.

2021-ஆம் ஆண்டு எலி மீது நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு ஒன்றில், ஒரே ஒரு எச்.எம்.ஓ இதயத்தில் உள்ள ஆர்ட்டரிஸில் உருவாகும், அதேரோஸ்க்லேரோசிஸ் (atherosclerosis) என்ற அடைப்பை குறைக்க உதவியதை கண்டறிந்தார் மருத்துவர் போட். இந்த அடைப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

"தாய்ப்பாலில் உள்ள மூலக்கூறுகள் தனித்துவமானவை. மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்படும் ஒரே பொருள் இது தான்," என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் போட்.

செயற்கை மூலக்கூறுகளைக் கொண்டு உருவாக்கப்படும் மருந்துகள் போன்றில்லாமல், தாய்ப்பால் பாதுகாப்பானது. அதிக திறனுடன் செயல்படும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கிறார் அவர்.

சாத்தியமான நன்மைகள் குறித்து இவர்கள் பேசினாலும், உண்மையில் ஆய்வக தரவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

மருத்துவர் போட் நம்பிக்கையுடன் இருப்பது போன்று, தற்போது நடைபெற்று வரும் ஆய்வக ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால், ஆண்டுக்கு லட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களை தடுக்கும் மிகப்பெரிய பொறுப்பை தாய்ப்பால் மூலக்கூறுகள் வகிக்கும்.

"மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கையை குறைக்க இதனால் முடியும் என்று யோசித்துப் பாருங்கள். இது மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும்," என்று மருத்துவர் போட் தெரிவிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cvgql54g456o

இலங்கையில் மீண்டும் சிக்குன் குனியா

2 months 3 weeks ago

எச்.ஹுஸ்னா

நாட்டில் 2024 ஆம் ஆண்டு டெங்கு நோயினால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன்,  24 உயிரிழப்புகளும் பதிவான நிலையில் இந்த ஆண்டின் 3 மாத  நிறைவில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் டெங்கு நோயினால் மக்களும் டெங்கு நோயாளர்களினால் வைத்தியசாலைகளும் திண்டாடிவரும் நிலையில், டெங்குவின் குடும்பத்தை சேர்ந்த சிக்குன் குனியாவும் தற்போது ஜோடி சேர்ந்து மக்களை மிரட்டத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன்,  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எனவே இலங்கை முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ ஆலோசகர் டொக்டர் அச்சலா பாலசூரிய எச்சரித்துள்ளார்.

அதேபோன்றே நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் சிக்கன்குனியா நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகளும்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே, சிக்குன்குனியா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் நுளம்புகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இது பரவுகிறது. எனவே  சிக்குன்குனியா நோய் ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

ஏற்கனவே கொரோனாவின் பிடியில் சிக்கி இதுவரையில் அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டெழ முடியாத நிலையில் தவித்துவரும் மக்களை டெங்கு நோய் புரட்டி எடுத்துவருவதுடன், இப்போது டெங்குவுடன் சிக்குன் குனியாவும் கை கோர்த்துள்ளதால் வைத்தியசாலைகள் டெங்கு, சிக்குன் குனியா நோயாளர்களினால் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே டெங்கு நோய் தொடர்பில் பல தடவைகள் விளக்கமளிக்கப்பட்டுள்ளதனால் இம்முறை சிக்குன்குனியாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என பார்ப்போம்.

சிக்குன்குனியா என்றால் என்ன?

சிக்குன்குனியா என்பது ஆபிரிக்க மொழியான ‘மகோண்டீ’யில் (Makonde) இருந்து வந்தது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள், பல்வேறு மூட்டுகளின் வலியால் அவதிப்பட்டு, வளைந்து சுருண்டு படுத்துக்கொள்வார்கள். சிக்குன்குனியா என்றால், அந்த மொழியில் ‘வளைந்துவிடுதல்’ என்று பொருள். இந்தக் காய்ச்சலின் பாதிப்பு 1779-ல் தான் முதன்முதலில் ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால், இந்தக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கி விவரித்தவர்கள், மரியன் ரொபின்சன் மற்றும் லம்ஸ்டன் ஆகியோர்தான். இவர்கள்தான், 1952இல்  மோஸாம்பிக் மற்றும் தன்ஸானியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இக்காய்ச்சல் குறித்து ஆராய்ந்தார்கள். 1955ஆம்  ஆண்டு இக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கினார்கள்.

இலங்கையில் சிக்குன் குனியா

இலங்கையைப்  பொறுத்தவரை, இவ்வகைக் காய்ச்சலின் பாதிப்பு முதன்முறையாக 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அப்போது இலங்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. இலங்கையுடன் சேர்ந்து பிற தெற்காசிய நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு, மீண்டும் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் இந்தக் காய்ச்சலின் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர்  2005, 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டு வரை இதன் தாக்கம் தொடர்ந்த்து. ஆனால், 2011 ஆம்  ஆண்டில் இருந்து இதன் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் இலங்கையில் பரவத் தொடங்கியுள்ளது

 எப்படிப் பரவுகிறது?.

இந்த சிக்குன்குனியா காய்ச்சலையும் டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் வகை பெண் நுளம்புகள்தான் பரப்புகின்றன. எங்கெல்லாம் டெங்கு பரவும் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் சிக்குன் குனியாவும் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏடிஸ் ஈஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் இன நுளம்புகள் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்து விட்டு இன்னொருவரை கடிக்கும்போது வைரஸ் பரவுகின்றது. இந்தக் காய்ச்சல் சிக்குன்குனியா (CHIK-V) வகை வைரஸ் வகையால் ஏற்படுகிறது. இந்த வைரஸில் இரண்டு உள்பிரிவுகள் உள்ளன. ஒன்று, ஆசிய பிரிவிலும், மற்றொன்று ஆபிரிக்கா பிரிவிலும் காணப்படுகிறது. இது ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ் வகை. டோகோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், ஆரம்பத்தில் தசைகளிலும் மூட்டுகளிலும் பெருகுவதால்தான் மனிதர்களுக்குப் பல்வேறு தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இவை 60 முதல் 70 நானோமீட்டர் அளவு கொண்டவை. கோள வடிவத்தில் காணப்படும். நுளம்பு  கடித்த 3 முதல் 7 நாள்களுக்குள் நோயாளிக்கு சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்படும்.

பாதிப்புக்கள் என்ன?

காய்ச்சல், மூட்டுவலி இருக்கும். உடல் வலி, தலைவலி, மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு டெங்கு போல், தோல் சிவந்து போகலாம்.  சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படலாம். பெரும்பாலும், ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், மூட்டுவலி, தசைவலி இரண்டும் பல மாதங்கள் வரைகூட நீடிக்கலாம். தாங்க முடியாத உடல்வலி, தசைவலி, மூட்டுவலி மற்றும் வீக்கம்தான் இக் காய்ச்சலின்முக்கிய பாதிப்புக்கள். இவ்வகைக் காய்ச்சலின் பல பாதிப்புக்கள்  டெங்கு காய்ச்சலைப் போலவே இருக்கும். மேலும், ஜிக்கா  வைரஸ் காய்ச்சலும்  இதுபோன்ற பாதிப்புக்களை  ஏற்படுத்தலாம். இதில் விசேஷம் என்னவென்றால், டெங்கு என்றாலும், சிக்குன்குனியா என்றாலும், ஜிக்கா என்றாலும், இந்த மூன்று வைரஸ் வகைகளையும் பரப்புவது ஏடீஸ் வகை பெண் நுளம்புகள் தான்.

அறிகுறிகள்

சிக்குன்குனியாவின் அறிகுறிகள் பொதுவாக ஏடீஸ் வகை பெண் நுளம்புகள் கடித்த 4 முதல் 8 நாட்களுக்குப் பிறகு தோன்றும். பொதுவான அறிகுறிகளாக அதிக காய்ச்சல்,  102°F (39°C) வரை காய்ச்சல் அடிக்கும், மூட்டு வலி,  தசை வலி,  தலைவலி,  குமட்டல் , களைப்பு,  தோல் அலர்ஜி போன்றன காணப்படும் . இந்த அறிகுறிகள் மிகப் பொதுவாக தெரிந்தாலும் வேறு பல காரணங்களாலும் உண்டாகக்கூடும், சில நாட்களுக்குத் தொடர்ந்து நீடித்தால், ஒரு மருத்துவ நிபுணரிடம் உங்களை பரிசோதனை செய்வது சிறந்ததாக அறிவுறுத்தப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், கண்கள் அதோடு நரம்புகள் மற்றும் இதயம் சார்ந்த சிக்கல்கள் போன்ற பெரும் பாதிப்புகளை அது உண்டாக்கலாம். வயதான நோயாளிகளில், சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் இது இறப்புக்குக் கூட வழி வகுக்கலாம்

 எவ்வாறு தவிர்ப்பது?

நம்மால் இயன்றவரை வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு வெளியேவும் நீர் சிறிய அளவு கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் வகை நுளம்புகள் நன்னீரில் முட்டை இட்டு குஞ்சு பொரிப்பவை. மேலும் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவிக்கலாம். நுளம்பு வலை உபயோகித்து உறங்கலாம். நுளம்பு  எதிர்ப்பு களிம்புகளை பூசிக் கொள்ளலாம்.   அதீத காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். வந்திருப்பது சிக்குன் குனியா இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டும். சிக்குன்குனியா நோயில் வலி நிவாரணிகள் – ரத்தக் கசிவு தன்மையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவப் பரிசோதனை 

நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது என்ன வகைக் காய்ச்சல் என்பதைக் கண்டறிய மருத்துவரை நாட வேண்டும். அவரது பரிசோதனைக்குப் பின் சில ஆய்வுக்கூடப் பரிசோதனைகளைச் செய்து சிக்குன்குனியா காய்ச்சலைப் கண்டுபிடிக்கலாம்..பொதுவாக, காய்ச்சலுக்குச் செய்யும் ரத்தப் பரிசோதனைகள்  , சிறுநீர் பரிசோதனைகள், நெஞ்சுப் பகுதி எக்ஸ்ரே ஆகிய அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மேலும், சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை மூலம் (RT – PCR – Reverse Transcriptase – Polymerase Chain Reaction) இந்தக் காய்ச்சலைப் பிற வகை வைரஸ் காய்ச்சலில் இருந்து எளிதாக அடையாளம் காணமுடியும்..சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை,  காய்ச்சல் ஏற்பட்ட 6 நாள்களுக்குள் செய்வது நல்லது. ஆறு நாள்களுக்குப் பிறகும் காய்ச்சல் இருந்தால், மேக்-எலிசா (MAC-ELISA) பரிசோதனை செய்யவேண்டி இருக்கும். இதன்மூலம், இவ்வகை வைரஸ் வகைக்கு எதிராக உருவான எதிர்ப்பாற்றல் புரதங்களை  அளவிட முடியும்.

சிகிச்சைகள்

சிக்குன்குனியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், இந்த வைரஸை அழிப்பதற்கும் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இவ்வகைக் காய்ச்சலுக்கும் பொதுவான சிகிச்சைகள், தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் என்ற அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வகை சிகிச்சையில், நோயாளிக்கு முதலில் ஓய்வு எடுக்க வலியுறுத்தப்படுகிறது. காய்ச்சல் அதிகமாக இருந்தால், புற நோயாளியை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய கஞ்சி, பழரசம், இளநீர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். இது, அவர்கள் சோர்வைப் போக்கும். வாய்வழி உணவு உட்கொள்ள முடியாமல் போனால், மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்குத் தேவையான திரவ மருந்துகள், விட்டமின் ஆகியவற்றை   குழாய்கள் வழியாகச் செலுத்தி சிகிச்சை செய்ய வேண்டும்.

தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சை. நோயாளியின் காய்ச்சல், உடல் வலியைக் குறைப்பதற்காக பரசிட்டமோல் மருந்து உட்கொள்ள கொடுக்கலாம். இந்த மருந்தை உட்கொள்ள முடியாத நிலையில், காய்ச்சலை குறைப்பதற்கான திரவ மருந்தை குழாய்  வழியாகச் செலுத்த வேண்டும்.

இதேபோன்றே, நோயாளிக்கு குமட்டல், வாந்தி ஆகியவற்றைக் குறைப்பதற்கான மருந்துகளையும் தொடர்ந்து கொடுப்பதுடன், நோயாளியின் காய்ச்சல் அளவு, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசத் துடிப்பு, உள்செல்லும் நீர் மற்றும் வெளியேறும் நீரின் அளவு போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த நோயாளிகளுக்கும் அஸ்பிரின் (NSAIDS), பிற வலி குறைப்பான் மருந்துகளை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்து அஸ்பிரின் மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், அதுகுறித்து மருந்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். சிக்குன்குனியா தொற்றுகளைத் தவிர்க்க உடல் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.

சிக்குன் குனியா தொடர்பில் பொது மருத்துவர் டொக்டர் பரூக் அப்துல்லா கூறுகையில்,

வருடம் தோறும் நுளம்புகளினால் பரவும் காய்ச்சல்களான டெங்கு, சிக்குன் குனியா போன்றவை மழை காலங்களில் கூடும் என்பது நாம் அறிந்ததே. ஆயினும் இம்முறை சிக்குன் குனியா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்  மரபணு மாற்றங்களுடன் வெளிப்பட்டு வருவதாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. பொதுவாக காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி ஆகியவற்றுடன் மட்டுமே சிக்குன் குனியா வெளிப்படும். ஆனால் இம்முறை  நரம்பியல் பாதிப்புகள் கூடவே பக்கவாதம் ஏற்படுதல் – மூக்கு கறுப்பாக மாறுதல் (இரண்டு வாரங்கள் கழித்து திரும்ப பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது) – கால் பாத எரிச்சல் – நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் – மூன்றில் ஒருவருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படுவது போன்ற விசித்திர புதிய அறிகுறிகளுடன் வெளிப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்கின்றார்.

எனவே டெங்கு. சிக்குன் குனியாவிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் நுளம்புகள் கடிக்காமல் தடுப்பது, நுளம்புகளை  ஒழிப்பது , சுற்றுப்புறத்தைச் சுற்றி நீர் தேங்காமல் தடுப்பது, தூய்மையாக வைத்துக்கொள்வது போன்றவைதான் ஒரே வழி.

https://thinakkural.lk/article/316681

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

3 months 1 week ago

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

மார்ச் 16, 2025

-கு.கணேசன்

32-9.jpg?resize=678%2C395&ssl=1

சிகரெட், பீடி, மது… இவற்றுக்கு மட்டும்தான் இதயத்தோடு தொடர்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நம் உடல் எடைக்கும் இதயத்துக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. பெற்றோரிடம் பொதுவான ஒரு குணம் உண்டு. குழந்தைகள் ஒல்லியாக இருந்தால், “Tonic எழுதிக் கொடுங்க, டொக்டர். சீக்கிரம் உடம்பு வைக்கணும்” என்று டொக்டர்களிடம் ஓடிவருவார்கள்.

“நோய் எதுவும் இல்லாமல் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் போதும்; குண்டாக இருக்க வேண்டும் என்பதில்லை” என்று டொக்டர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஊடக விளம்பரங்களில் வரும் குழந்தைகளைப் போன்று தங்கள் குழந்தைகளும் குண்டு குண்டாக இருந்தால்தான் அழகு, ஆரோக்கியம்!

அதே பெற்றோர், குழந்தை பருவ வயதுக்கு வந்த பிறகு ஒல்லியாகிவிட வேண்டும் என்பார்கள். “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான், டொக்டர். எப்பவும் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கான். ஏதாவது மருந்து கொடுத்து உடம்பைக் குறைங்க” என்று மறுபடி டொக்டரிடம் வருவார்கள்.

அதிலும் பெண் குழந்தையாக இருந்தால் இந்தப் பரபரப்பு அதிகமாகிவிடும். குழந்தை குண்டாக இருப்பதால் வரக்கூடிய திருமணத் தடை, கேலி, கிண்டல் போன்ற சமூகக் கவலைகள் பெற்றோருக்கு அதிகரித்துவிடும். அதேநேரம், உடல் எடை அதிகமானால் சமூகக் கவலைகளைத் தாண்டி மருத்துவரீதியாகக் கவலைப்படுவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன.

மறந்துபோகும் திசுக்கொழுப்பு:

மை இல்லாமல் பேனாவால் எழுத முடியாது. அது மாதிரிதான், கொழுப்பு இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதேநேரம், வெள்ளைத்தாளில் பேனாமை கொட்டிவிட்டால் பார்க்கச் சகிக்காது. அது மாதிரிதான், கொழுப்பின் அளவு கூடினாலும் அது தரும் ஆரோக்கிய ஆபத்துகளைத் தடுக்க முடியாது. கொழுப்பு என்றதும் வயிற்றுக் கொழுப்புதான் நம் நினைவுக்கு வருகிறது.

உள்ளுறுப்புகளில் உறவாடிக்கொண்டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம். குறிப்பாக, இரைப்பை, குடல், கல்லீரல், கணையம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளைச் சுற்றித் தேவையில்லாமல் படர்ந்திருக்கிற திசுக்கொழுப்பும் நமக்கு எதிரிதான் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

கொழுப்பைச் சுமப்பவர் யார்?

உடலில் கொழுப்பு கூடுகட்டுவதைப் பொறுத்து நம் உடல் அமைப்பை ‘Apple, pear, inverted triangle, ruler, hour-glass’ என ஐந்து வகையாகப் பிரிக்கிறது நவீன மருத்துவம். இவற்றில் நான்காவது வகையினர்தான் (Ruler) சரியான உடல் அமைப்பைப் பெற்றவர்கள்; தலையிலிருந்து பாதம்வரை அளவெடுத்து வடித்த சிலை மாதிரி இருப்பவர்கள். அதாவது, தேவை இல்லாமல் கொழுப்பைச் சுமக்காதவர்கள். மற்றவர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் உடலில் கொழுப்பைச் சுமப்பவர்கள்தான் (Obesity). இவர்களில்கூடக் கொழுப்பை வயிற்றில் சுமக்கிறார்களா, இடுப்பில் சுமக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.

ஏனெனில், இடுப்பில் கொழுப்பு சேருகிறவர்களுக்குத்தான் இதய நோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் அதிகச் சாத்தியம் இருப்பதாகச் சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ‘இடுப்பின் அளவு அதிகரித்தால் வாழும் நாள் குறைந்துவிடும்’ (Increase in waist line will decrease the life line) என்கின்றன இந்த ஆய்வுகள். இதனால்தான் இப்போதெல்லாம் “வயிற்றில் சேரும் கொழுப்பை மட்டும் பார்க்காதீர்கள்; உங்கள் இடுப்பின் அளவையும் கவனியுங்கள்” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

33-11.jpg?resize=450%2C453&ssl=1

உங்கள் எடை சரியா?

மருத்துவத்துறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் உயரத்துக்கு இருக்க வேண்டிய சராசரி எடை அளவு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு கணக்கு இருக்கிறது: ஆண்களுக்கு: உயரம் சென்ரி மீட்டரில் மைனஸ் 100. பெண்களுக்கு: உயரம் சென்ரி மீட்டரில் மைனஸ் 105. உதாரணமாக, நீங்கள் ஆணாக இருந்தால், உங்கள் உயரம் 157 செ.மீ. என்றால், அதிலிருந்து 100ஐக் கழியுங்கள். 57 கிலோ கிராம் என்பது உங்கள் சராசரி உடல் எடை. இதில் 20% எடை அதிகமாக இருந்தால் அதை ‘உடல் பருமன்’ என்கிறோம்.

எது உடல் பருமன்?

ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை சரியாக இருக்கிறதா என்று தெரிவிப்பதற்கு மூன்றெழுத்துச் சமன்பாடு ஒன்றும் இருக்கிறது. அது தான் ‘பி.எம்.ஐ’ (BMI – Body Mass Index). அதாவது, உடல் திண்மக் குறியீடு. பி.எம்.ஐ (BMI) = உடல் எடை (கிலோ கிராமில்) / உயரம் 2 (மீட்டரில்). உலக சுகாதார நிறுவனத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, இந்தியர்களுக்கு ‘பி.எம்.ஐ’ அளவு 23-24.9க்குள் இருந்தால், அது அதிக உடல் எடை (Over weight); 25 இற்கும் அதிகமாக இருந்தால், அது உடல் பருமன் (Obesity). ஆனால், உடல் பருமனை இப்படிக் கணிப்பது துல்லியமானதா என்பது இப்போது விவாதப் பொருள் ஆகியிருக்கிறது.

ஏன்? என்ன காரணம்?

ஒருவருடைய ‘பி.எம்.ஐ’ அளவானது, அவருடைய தசை எடை எவ்வளவு, திசுக்கொழுப்பு எவ்வளவு என்பதைத் தெரிவிப்பதில்லை. உதாரணமாக, எடை தூக்கும் வீரருக்கு அதிக எடை இருந்தால், அதற்கு அவரது கட்டுக்கோப்பான தசைகள் காரணமாகலாம்; திசுக்கொழுப்பு காரணமாகச் சாத்தியமில்லை. இன்னொன்று, ‘பி.எம்.ஐ’ அளவு சரியாகவே இருக்கிறவர்களுக்கும் திசுக்கொழுப்பு கூடுதலாக இருக்கச் சாத்தியம் இருக்கிறது. ஒருவர் உடலில் 10% திசுக்கொழுப்பு இருப்பது இயல்பு.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) 2023 இல் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ஒல்லியாகவும் இருந்து, ‘பி.எம்.ஐ’ ஆரோக்கிய வரம்புக்குள் இருந்த பலருக்கும் திசுக்கொழுப்பு 20%க்கும் கூடுதலாக இருப்பது தெரிந்தது. இப்படி இருப்பவர்களுக்கு ‘டோஃபி’ (TOFI) என்று தனிப்பெயர் உண்டு. அதாவது, Thin Outside and Fat Inside. இப்படி ஒல்லியாக இருப்பவர்கள், தங்கள் ‘பி.எம்.ஐ’ அளவு சரியாக இருந்தாலும், உடல் பருமன் உள்ளவர்கள்போலவே இதய ஆரோக்கியம் காப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறது அந்த ஆராய்ச்சி.

கவனம் கோரும் ஒல்லி உடம்பு:

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவை உறுதிப்படுத்தும் விதமாக என்னிடம் வந்தவர் 50 வயதுள்ள மந்திரமூர்த்தி. அவர் ஒல்லியாக இருப்பதால் உடலில் திசுக்கொழுப்பு சேரவும், இதயப் பிரச்சினைகள் ஏற்படவும் தனக்குச் சாத்தியம் இல்லை என்று நம்பினார். அதனால், அவரது வயதுக்குத் தேவையான உடல் பரிசோதனை எதையும் செய்துகொள்ளவில்லை. ஒரு நாள், நடு நெஞ்சில் வலிக்கிறது என்று என்னிடம் வந்தார் மந்திரமூர்த்தி. ‘இசிஜி’ (Electrocardiogram – ECG) எடுத்துப் பார்த்தேன். மாரடைப்பு பாதிப்பு அதில் தெரிந்தது. மற்ற பரிசோதனைகளையும் பார்க்கச் சொன்னேன். அவருக்கு ‘பி.எம்.ஐ’ அளவு 22.

இது இயல்பான அளவுதான். ஆனால், இடுப்புச் சுற்றளவு அதிகமாக இருந்தது. இரத்தப் பரிசோதனைகளில் அவருக்குச் சர்க்கரை நோய் இருந்தது; கெட்ட கொலஸ்டிரால் (LDL) கூடியிருந்தது; நல்ல கொலஸ்டிரால் (HDL) குறைவாக இருந்தது. இரத்த அழுத்தமும் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. ஆக மொத்தத்தில், ஒல்லியாக இருந்த மந்திரமூர்த்தி தன்னுடைய உடலைக் கவனிக்கத் தவறியதால், உடலுக்குள் பல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணரத் தவறிவிட்டார். இதன் விளைவால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

சரியான நேரத்தில் கிடைத்த சிகிச்சையில் அவர் உயிர் பிழைத்தார். “ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொழுப்புத்தன்மை இருக்கும்; கொலஸ்டிரால் கூடும்; சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை வரக்கூடும்; இதயம் பழுதாகிற சாத்தியமும் உண்டு” என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மந்திரமூர்த்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

35-2.jpeg?resize=678%2C285&ssl=1

சரியான இடுப்புச் சுற்றளவு:

உடல் பருமனை நிர்ணயிப்பதில் ‘பி.எம்.ஐ’ பிரச்சினை ஆனதால், இப்போது இடுப்புச் சுற்றளவைக் (Waist circumference) கணிப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த அளவுக்கும் வயிற்றுக் கொழுப்பு, உறுப்புக் கொழுப்பின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

ஆகவே, இனிமேல் ‘பி.எம்.ஐ’ அளவோடு இடுப்புச் சுற்றளவையும் கவனிப்பது அவசியமாகிறது. ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 90 செ.மீ. பெண்களுக்கு இந்த அளவு 80 செ.மீ. இந்த அளவைத் தாண்டுபவர்களையும் உடல் பருமன் உள்ளவர்களாகவே கருத வேண்டும். இன்னும் சொன்னால், இவர்கள் இதய பாதிப்பு, சர்க்கரைநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இன்னும் 3 அளவுகள்!

‘பி.ஆர்.ஐ’ (BRI – Body Roundness Index): உங்கள் உயரம், எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவற்றை, இணையத்தில் இதற்கென உள்ள கல்குலேட்டரில் பதிவேற்றினால், ‘பி.ஆர்.ஐ’ அளவைக் காண் பிக்கும். இது 4.45 – 5.46க்குள் இருக்க வேண்டும். இது 10ஐத் தாண்டினால் உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய பாதிப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்குச் சாத்தியம் உண்டு.

‘பிசிஏ’ (BCA – Body Composition Analysis): எடை பார்க்கும் இயந்திரம் போன்று இருக்கும் இந்த இயந்திரத்தின் மீது நீங்கள் ஏறி நின்றால், உங்கள் உடலுக்குள் இருக்கும் உறுப்புக் கொழுப்பு, தசைக் கொழுப்பு, வயிற்றுக் கொழுப்பு எனத் தனித்தனியாகத் திசுக் கொழுப்பின் அளவைச் சொல்லிவிடும்.

வயிற்றுப் பகுதி எம்.ஆர்.ஐ (MRI) பரிசோதனையிலும் வயிற்றுக் கொழுப்பின் அளவை அறியலாம்.

https://chakkaram.com/2025/03/16/நீங்கள்-கொழுப்பைச்-சுமப்/

உலக தூக்க தினம்: இரவு படுத்தவுடன் தூங்க பகலில் இந்த 5 உத்திகளை பின்பற்றுங்கள்

3 months 1 week ago

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப் பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அமண்டா ருகேரி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இரவு தூக்கத்திற்குப் பிறகு சுறுசுறுப்பாக உணர்வதற்கான ரகசியம், உங்களது பகல் நேரப் பழக்க வழக்கங்களில் இருந்து தொடங்குகிறது.

உங்கள் தூக்கத்தை மேம்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும் சில குறிப்புகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன.

சோர்வாக உணர்கிறீர்களா? நீங்கள் மட்டுமே அவ்வாறு உணர்வதில்லை.

அதோடு, உங்களது தூக்கப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம்.

இதுகுறித்து அடிக்கடி நமக்குச் சொல்லப்படும் உத்திகள் பெரும்பாலும், இரவுநேரப் பழக்கங்களைக் குறித்தானதாகவே இருக்கும்.

அதாவது வழக்கமாக உறங்கும் நேரம், படுக்கையில் கைப்பேசியை உபயோகப்படுத்தாமல் இருப்பது போன்ற உத்திகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஆனால் ஒரு நல்ல இரவுத் தூக்கம் என்பது உங்கள் இரவுநேர பழக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல. புத்துணர்ச்சி என்பது எப்போதும் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவது மட்டும் அல்ல.

ஏனென்றால், நீங்கள் விழித்திருக்கும்போது, அந்த நாள் முழுவதும் செய்யக்கூடிய பிற விஷயங்களும் நன்கு தூங்குவதற்குப் பலனளிக்கலாம்.

உங்கள் தூக்கப் பழக்கங்களை மாற்றாமல், அதிக சுறுசுறுப்புடன் உணரவும், ஆற்றலை அதிகரிக்கவும், உங்கள் தூக்கத்தையும் மேம்படுத்தவும் உதவும் ஐந்து எளிய வழிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் உடலின் இரும்புச்சத்து அளவை கவனியுங்கள்

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உடலால் எளிதாக உறிஞ்சப்படும் ஹீம் இரும்புச்சத்து (Heme Iron) இறைச்சி, மீன் மற்றும் முட்டையில் கிடைக்கிறது

உலகளவில் மூன்று பேரில் ஒருவருக்குப் போதுமான அளவு இரும்புச் சத்து இல்லை என அறியப்படுகிறது. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகள் முதல் சிறுமிகள், பெண்கள் மற்றும் பருவ வயதுடைய பெண்கள், கர்ப்பிணிகள், தடகள விளையாட்டு வீரர்கள், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அடிக்கடி ரத்த தானம் செய்பவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படுகிறது.

ஆனால், இரும்புச்சத்துக் குறைபாட்டின் விளைவாக ஏற்படும் ரத்தசோகை (Anaemia) யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். இதன் அறிகுறிகளில் உடல் சோர்வு மற்றும் களைப்பைத் தவிர, அமைதியின்மை மற்றும் இரவில் அடிக்கடி விழித்துக்கொள்வது போன்றவையும் அடங்கும்.

உங்கள் தூக்க பழக்க வழக்கங்களை மாற்றிய பிறகும் நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் என்றால், உங்கள் உடலில் இரும்புச்சத்தை சேமிக்க உதவும் புரதமான ஃபெரிடின் (Ferritin) அளவையோ அல்லது உடலெங்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின் அளவையோ பரிசோதிக்க மருத்துவரை அணுகுவது பயனுள்ளதாக இருக்கும்.

இரும்புச்சத்துக் குறைபாடு இல்லாவிட்டாலும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம்.

மனித உடல் எளிதில் உறிஞ்சிக்கொள்ளும் ஹீம் இரும்புச்சத்து (Heme Iron) இறைச்சி, மீன் மற்றும் முட்டையில் கிடைக்கிறது.

ஹீம் அல்லாத இரும்புச்சத்து (Non-Heme Iron) பட்டாணி வகைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளில் இருந்தாலும், வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும்போது, அவற்றையும் சேர்த்து உட்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.

அதிக காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெரியளவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுபவர்கள் நன்றாக உறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வோர் குறைவாகத் தூங்குவதாகவும், அவர்களுடைய தூக்கத்தின் தரம் மோசமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, மத்திய தரைக்கடல் உணவுமுறையை (Mediterranean Diet) பின்பற்றுபவர்கள், அழுத்தமின்றி, நிலைத்த மற்றும் தரமான தூக்கத்தை அனுபவிப்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த உணவுமுறையில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்கள் அடங்கும்.

அதேநேரத்தில், இரவு ஐந்து மணிநேரத்துக்குக் குறைவாகத் தூங்கும் நபர்கள், அதிக நேரம் தூங்கும் நபர்களோடு ஒப்பிடும்போது, இரும்பு, துத்தநாகம், செலீனியம், பாஸ்பரஸ், மக்னீசியம், விட்டமின் சி, லூட்டின், செலீனியம் ஆகிய ஊட்டச்சத்துகளைக் குறைவாக உட்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் மற்றும் அதன் விளைவு ஆகியவற்றின் தொடர்பைப் புரிந்துகொள்வது எப்போதுமே கடினம்தான். குறிப்பாக ஊட்டச்சத்து மற்றும் தூக்கத்தைப் போன்ற ஆய்வு செய்வதற்குச் சிக்கலான தலைப்புகளில் இது மிகவும் சவாலானது.

இதனால், அதிகம் தூங்கும்போது மக்கள் நல்ல உணவுகளைச் சாப்பிடுகிறார்களா, அல்லது நல்ல உணவுகளைச் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கிறதா, அல்லது இரண்டும் சேர்ந்து நடக்கிறதா என்பது பெரும்பாலான ஆய்வுகளில் தெளிவாகத் தெரியவில்லை.

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாம் சோர்வாக இருக்கும்போது, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் விரும்புவது மட்டுமல்லாமல், அது நம்முடைய தூக்கத்தின் தரத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஸ்வீடனில் 15 இளைஞர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில், அதிக கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவை உட்கொண்டபோது, அவர்கள் தூங்கும்போது மூளையின் அலைகளில் மாற்றம் ஏற்பட்டது மற்றும் அவர்களின் ஆழ்ந்த தூக்கத்தின் தரம் குறைந்தது தெரிய வந்தது.

பின்னர் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட ஆரோக்கியமான உணவுக்கு மாறிய பிறகு, அவர்களுடைய தூக்கத்தின் தரம் மேம்பட்டது. சில ஆய்வுகள், தினமும் ஐந்து (அல்லது பத்து) வகை காய்கறிகளை உட்கொள்வது நம் தூக்கத்தை மேம்படுத்தும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், அவர்கள் தினம் மூன்று வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உட்கொண்டு வந்தனர் எனத் தெரிய வந்தது.

அவர்கள் உண்ணும் காய்கறிகள், பழங்களின் அளவை அதிகரித்த பின்பு அவர்களின் தூக்கத்தின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, தினமும் குறைந்தது ஆறு வகை பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்ட பெண்களுக்கு, (ஆண்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) தூக்கமின்மை அறிகுறிகளைக் குறைக்கும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகவும், தூக்கத்தின் தரம் சற்று மேம்பட்டதாகவும், சரியாக உறங்காதவர்களுடன் ஒப்பிடும்போது அவர்கள் வேகமாக உறங்கியதும் கண்டறியப்பட்டது.

அதே நேரத்தில், மற்றோர் ஆய்வில், வாரத்திற்கு ஐந்து முறை பச்சைக் காய்கறிகளை உட்கொள்ளும் குழந்தைகள், தங்களுக்கு அதிக ஓய்வு கிடைத்ததாகவும், தூக்கத்தின் தரம் மேம்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பச்சைக் காய்கறிகளில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இரும்பு போன்ற உறக்கத்தை ஆதரிக்கும் தாதுக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துவதால், உடலுக்கு நன்மை ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர்.

உடற்பயிற்சி செய்யுங்கள் (அது மாலை நேரமாக இருந்தாலும் சரி)

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடற்பயிற்சி, தூக்கம் ஆகிய இரண்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் உடற்பயிற்சி செய்வது நம்மை அதிக நேரம் நன்றாகத் தூங்க உதவுவதாக அறியப்படுகிறது.

அதற்காக நீங்கள் கற்பனை செய்யும் வகையில், அளவுக்கு அதிகமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, 2015ஆம் ஆண்டில் வெளியான முக்கியமான ஒரு பகுப்பாய்வில், 66 ஆய்வுகளின் முடிவுகள் பகிரப்பட்டுள்ளன.

அதில், சில நாட்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்தாலும், மக்கள் விரைவாக உறங்கத் தொடங்கி, அதிக நேரம் உறங்கியது கண்டறியப்பட்டது. மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தவர்களிடையே தூக்கத்தின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்கங்கள் பெரும்பாலும் சிறிய அளவில் இருந்தாலும், தூக்கக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரிதாக இருந்தது.

குறிப்பாக, தூக்கக் குறைபாட்டால் பாதிக்கப்படுவோருக்கு, உடலைச் சிறிது வியர்க்க வைக்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் அதிக நன்மை கிடைக்கும்.

மற்ற ஆய்வுகள், உடற்பயிற்சிகள் தீவிரமானதாகவோ அல்லது ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகவோ இருக்க வேண்டியதில்லை என்பதைக் குறிக்கிறது. தினமும் அல்லது வாரத்தில் ஒரேயொரு முறை உடற்பயிற்சி செய்வதைவிட, ஒரு வாரத்தில் மூன்று முறை உடற்பயிற்சி செய்வது தூக்கத்திற்குச் சிறந்த பலன்களை வழங்கும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மிதமான உடற்பயிற்சி, தீவிர உடற்பயிற்சியைவிட தூக்கத்திற்கு அதிக உதவியாக இருக்கும். தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால்கூட மாற்றத்தைக் காண முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, இரவு நேரத்தில் தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னர் உடற்பயிற்சி செய்வது தூக்கத்தைப் பாதிக்காது என்று மற்றோர் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு வேறு நேரம் கிடைக்காதவர்களுக்கு இதுவொரு நல்ல செய்தி.

உடற்பயிற்சி தூக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்ல, அது நம்மை மேலும் புத்துணர்ச்சி பெறச் செய்து, அதிக ஓய்வை உணரவும் உதவும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்வதால், உண்மையாகவே எவ்வளவு நன்றாக உறங்கினோம் என்பது குறித்துக் கவலைப்படாமல், நன்றாக உறங்கியதாக நம்மால் உணர இயலும்.

மது மற்றும் புகையிலையைக் குறைக்கவும்

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மது மற்றும் புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று பலர் புத்தாண்டுக்காகத் தீர்மானங்கள் எடுப்பதுண்டு. ஆனால் மது அருந்தும் அல்லது புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அதைத் திடீரென நிறுத்துவது கடினமாக இருக்கலாம்.

ஏனென்றால், முழுமையான மதுவிலக்கை மையமாகக் கொண்ட இலக்குகளைவிட நேர்மறையான பழக்க வழக்கங்களை அல்லது அளவிடக் கூடிய மாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்தும் இலக்குகள் மிகவும் வெற்றிகரமானவையாக இருக்கலாம்.

அதேபோல் இந்த ஆண்டு நீங்கள் மது அல்லது புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட முயற்சி செய்யலாம், இது அதிக ஓய்வை உணர உதவும். புகைப் பிடிப்பது, தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவும், மேலும் ஓய்வளிக்கும் 'மெதுவான அலை தூக்கத்தை' குறைக்கவும் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், மது அருந்துவதும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இதில் ஓர் எச்சரிக்கையும் உள்ளது. தூங்கச் செல்வதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை மது அருந்துவது தொடக்கத்தில் தூக்கம் வருவது போல் உணர வைக்கலாம். ஆனால், இதை மூன்று நாட்கள் (அல்லது அதற்கு அதிகமாக) தொடர்ந்தால், அந்த விளைவு எதிராக மாறுகிறது.

மேலும் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பது தூக்கமின்மை ஏற்படும் ஆபத்தைக்கூட அதிகரிக்கிறது. மற்றோர் ஆய்வில், படுக்கைக்கு முன்னால் வெறும் ஒரு கோப்பை மது அருந்துவதும் நம்முடைய தூக்கத்தின் இயல்பை மாற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மது அருந்துபவர்கள் உறங்க ஆரம்பிக்கும்போது விரைவாகவும், முதல் பாதி இரவில் ஆழ்ந்த தூக்கத்தையும் பெறலாம். ஆனால் இரவின் இரண்டாம் பாதியில் அவர்கள் விழித்துவிடக்கூடும்.

அதே போல், மது அருந்துவது நமது உயிரியல் கடிகாரத்தையும் பாதிக்கக்கூடும். இது நாம் பெறக்கூடிய மொத்த தூக்கத்தின் நேரத்தைக் குறைக்கலாம் மற்றும் மூச்சுத் திணறலுடன் தொடர்புடைய தூக்கக் கோளாறுகளை மேலும் மோசமாக்கலாம்.

காலை உணவைத் தவிர்க்காதீர்கள்

உடற்பயிற்சி, தூக்கம், உடல்நலம், உணவுப்பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல் பருமனைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதற்கும் காலை உணவு உதவுமா என்ற கேள்விக்கு, பதிலாகக் கிடைக்கும் ஆதாரங்கள் குழப்பமானவையாகவே உள்ளன என்று பிபிசி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, காலை உணவை உண்ணுதல் அல்லது தவிர்த்தல் ஆகியவை உடல் எடைக்கான விளைவுகளில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஓர் ஆய்வு கண்டறிந்தது.

மனரீதியான விழிப்புணர்வையும் கூர்மையையும் அதிகரிப்பதில் காலை உணவின் நன்மைகள் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. 43 ஆய்வுகளின் மறு ஆய்வு ஒன்று, காலை உணவு உண்பதால் நினைவாற்றல் மற்றும் கவனம் மேம்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறது. இந்த விளைவுகள் பொதுவாகச் சிறியதாக இருந்தாலும், அவை சீரானதாக இருந்தன.

குழந்தைகளுக்கும் இது பொருந்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. காலை எழுந்த பிறகு உணவு உண்ணும் குழந்தைகளுக்குக் கவனம், நினைவாற்றல் மற்றும் முடிவெடுத்தல் திறன் மேம்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் காலை உணவு எடுத்துக்கொள்வது சோர்வைக் குறைக்க உதவக்கூடும் என்று மற்ற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, 127 மருத்துவப் பள்ளி மாணவர்களின் ஓர் ஆய்வு, காலை உணவைத் தவிர்த்தவர்களைக் காட்டிலும், காலை உணவை உட்கொண்டவர்களுக்கு சோர்வு குறைவாக இருப்பதாகக் கண்டறிந்தது.

அதேபோன்று ஒழுங்கான நேரத்தில் உணவு உண்பதும் பயனளிக்கலாம். 127 மருத்துவ மாணவர்களைப் பற்றிய ஆய்வும், தைவானில் 1,800க்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் பற்றிய மற்றோர் ஆய்வும், சீரற்ற நேரங்களில் உணவு உண்பவர்கள் அதிக சோர்வாக உணர்ந்தனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில், ஒழுங்காக உணவு உண்ணும் நேரத்தைக் கடைபிடித்தவர்கள் குறைவான சோர்வை உணர்ந்துள்ளனர்.

வேறு எதுவுமே உதவவில்லை என்றால், நீண்ட நேரம் சோர்வுடன் போராடுகிறீர்கள் என்றால், வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் இரண்டு முட்டைகள் அல்லது ஒரு கோப்பைக் கஞ்சியைச் சாப்பிட நேரம் ஒதுக்குவது சோர்வைப் போக்குவதற்கான இன்னொரு எளிதான தீர்வாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crknrr3zejjo

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு மீண்டும் சாப்பிட்டால் உடலில் பாதிப்பு ஏற்படுமா?

3 months 1 week ago

இறைச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், வெரோனிக் கிரீன்வுட்

  • பதவி,

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் சாப்பிட தொடங்கும் போது உடலில் சில மோசமான விளைவுகளை சந்தித்ததாக சிலர் தெரிவித்தனர். இறைச்சியை செரிமானம் செய்வது எப்படி என்பதை உங்கள் உடல் மறந்துவிடுமா?

வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் கார்பனின் அளவை குறைப்பதற்கு உட்கொள்ளும் இறைச்சியை குறைத்துக்கொள்வது ஒரு எளிமையான வழி.

பிரிட்டனில் உள்ள அனைவரும் நாளொன்றுக்கு 50 கிராமுக்கு குறைவான இறைச்சியை உட்கொள்ளும் உணவுமுறைக்கு மாறினால், 8 மில்லியன் கார்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கும்போது சேமிக்கப்படும் அதே அளவிலான கார்பன் வெளியீட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் மதிப்பீட்டுள்ளனர்.

1980 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் செம்மறி ஆட்டிறைச்சி ஆகியவற்றை உட்கொள்ளும் அளவு 62% சதவீதம் சரிந்துள்ளதாக அடைந்துள்ளதாக பிரிட்டன் அரசின் தரவுகளின் காட்டுகின்றன.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் இயற்கை சூழல் மீதான அக்கறையை விட, அதிகரிக்கும் விலைகளே காரணமாக இருக்கக்கூடும். மேலும் மேலும் அதிகமானோர் இறைச்சி வேண்டாம் என கூறிவருகின்றனர்.

ஆனால் அதை சாப்பிடுவதை நீண்டகாலம் தவிர்த்து விட்டால், இறைச்சியை செரிமானம் செய்யும் உடலின் தன்மை மாறிவிடுகிறதா?

சைவம் மற்றும் வீகனாக (vegan) இருப்பவர்கள், மீண்டும் இறைச்சி சாப்பிடுவதால் வயிற்று வலி, வயிறு உப்புசம் மற்றும் பிற அறிகுறிகள் ஏற்படக்கூடுமா? என்ற கேள்வியை சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றனர்.

மற்றவர்கள் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள, ஆர்வமிகுதியால் தேடல் தொடங்குகிறது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் இறைச்சியை சாப்பிடுவது வயிற்று உபாதைகளை ஏற்படுத்துகிறதா என்பதை பற்றி பெரிய அளவில் ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை என்கிறார் அமெரிக்காவின் கானெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறையில் பேராசிரியராக இருக்கும் சான்டெர் கர்ஸ்டென்.

"ஆதாரங்கள் இல்லை என்பதால், அது இல்லையென்றாகிவிடாது, மக்கள் அதை ஆய்வுசெய்யவில்லை," என்கிறார் அவர்.

சில அரிதான சமயங்களில், இறைச்சிக்கு ஒவ்வாமை ஏற்படுவது சாத்தியமே. ஆல்பா- கால் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் நிலையில் விலங்குகள் சார்ந்த புரதங்களை உட்கொள்ளும்போது, நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அவற்றை தீங்கு விளைவிக்கும் பொருளாக பார்க்கும்.

இதனால் அனாபிலாக்ஸிஸ் (உடலில் அதிகமான அமிலங்கள் சுரக்கும் நிலை) மற்றும் இறப்பு கூட ஏற்படலாம். பல ஆண்டுகள் நன்றாக இறைச்சி சாப்பிட்டவர்களுக்கு கூட இந்த ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கும் குறைவான இறைச்சி உணவுமுறைக்கு மாறுவதற்கும் தொடர்பு இல்லை. உதாரணமாக உண்ணி கடித்த பிறகு கூட இம்மாதிரியான நிலை ஏற்படலாம்.

இறைச்சியை தவிர்ப்பவர்களில் பலருக்கு, தங்களை அறியாமல் அதை உட்கொண்டுவிட்டது தெரியவந்தால் உணர்வுப்பூர்வமாக வேதனையளிப்பதாக இருக்கலாம்.

சைவ உணவு உட்கொள்பவரான கெர்ஸ்டன், "இது சிலரை மிகவும் சோகமடையச் செய்யும்," என்கிறார். "ஆனால் இதனால் உடலில் அறிகுறிகள் ஏற்படுமா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அது அவர்களை மிகுந்த கோபத்திற்கு- உள்ளாக்க வாய்ப்புள்ளது," என்கிறார் கர்ஸ்டென்.

செரிமான செயல்முறையை கருத்தில் கொள்ளும்போது, நீண்டகால இடைவெளியில் இறைச்சியை செரிக்கும் திறன் குறைந்துவிடுவது சாத்தியமானதுதான் என நீங்கள் நினைப்பது அவ்வளவு சரியல்ல.

பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகளில் இருக்கும் நார் சத்தைப் போல இல்லாமல் இறைச்சியை மிக எளிதில் நமது உடல் செரிமானம் செய்துவிடும். இதை சாத்தியமாக்க நமது உடலில் உள்ள நுண்ணுயிரிகள் உதவுகின்றன.

தாவர புரதங்களை செரிக்கும் அதே என்ஜைம்கள்தான் இறைச்சியில் உள்ள புரதங்களையும் செரிமானம் செய்கிறது. உட்கொள்ளப்படும் புரதத்தில் உள்ள வேதி பிணைப்புகளை அடையாளம் கண்டு அவற்றை இந்த என்ஜைம்கள் பிரிக்கும். தாவரங்களிலிருந்து வந்தாலும், விலங்குகளிடமிருந்து வந்தாலும், புரதங்கள் அமினோ ஆசிட்களால் உருவாகியுள்ளன. எனவே எங்கிருந்து வந்தாலும் என்ஜைம்களால் புரதங்களை உடைக்கமுடியும்.

இறைச்சி

பட மூலாதாரம்,ALAMY

இதிலிருந்து மாறுபட்டு இருப்பது விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பாலில் உள்ள லாக்டோஸ் போன்ற சர்க்கரைகள். லாக்டோஸை செரிக்க லாக்டேஸ் என்ற என்ஜைம் தேவைப்படும். ஒருவருக்கு இது குறைவாக சுரக்கும் போது அவரால் பால் சார்ந்த உணவுகளை உட்கொள்ள முடியாது (lactose intolerent). இவர்கள் பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

ஆனால் இறைச்சி புரதங்களை பொறுத்தவரை, ஒரு ஹேம்பர்கரை செரிமானம் செய்ய தேவையான என்ஜைம்களை உற்பத்தி செய்வதை உடல் நிறுத்திவிடும் என நினைப்பது அர்த்தமற்றது- அந்த என்ஜைம்கள் எப்போதும் இருக்கின்றன. ஏனென்றால் பட்டாணி, சோயா பீன் ஆகியவற்றை செரிக்க உதவும் அதே என்ஜைம்கள்தான் இதற்கும் தேவைப்படுகிறது, என்கிறார் கர்ஸ்டென்.

மனித குடலில் உள்ள நுண்ணுயிரிதொகுதி, தனி நபரின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்றார் போல மாற்றமடையும். இதனால் சில நேரங்களில் நமது உடலில் உள்ள சில பாக்டீரியா மற்றமடையலாம். அதே போல நுண்ணுயிரிகளும் வேறுவிதமான என்ஜைம்களை வெளியிடலாம்.

உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றம், நுண்ணுயிரிதொகுதியில் உடனடியாக மாற்ற முடியும். ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்கள் முழுமையாக இறைச்சியை சார்ந்த உணவு முறைக்கு மாறினர். இதன் விளைவாக அவர்களின் நுண்ணுயிரிதொகுதியில் ஒரே நாளில் மாற்றம் தெரிந்தது(இந்த உணவுப்பழக்கம் முடிந்தவுடன் நுண்ணுயிரிதொகுதியும் விரைவில் பழைய நிலைக்கு திரும்பியது). இதில் ஈடுபட்டவர்கள் உடலில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் தெரிவிக்கும்படி கூறப்பட்டிருந்தது. ஆனால் ஏதும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

இறைச்சி

பட மூலாதாரம்,ALAMY

சொல்லப்போனால், நீண்ட இடைவேளைக்கு பிறகு அதிக அளவிலான நார் சத்தை உட்கொள்வதால்தான் செரிமான பிரச்னைகள் ஏற்படலாம். இது போன்ற உணவு மாற்றங்களை படிப்படியாக கொண்டுவருவது நல்லது.

"உட்கொள்ளும் நார்சத்தை பொறுத்து, சில கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்," என்கிறார் கர்ஸ்டென்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் இறைச்சி சாப்பிட்டதால் வயிறு உபாதை உங்களுக்கு ஏற்பட்டால், இது இன்னமும் அதிகம் ஆய்வு செய்யப்படாததாக இருந்தாலும்,என்ஜைம்கள் குறைப்பாடு காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் கர்ஸ்டென்.

"மனித உடல் என்பது சூழ்நிலைக்கு ஏற்றார் போல மாற்றம் அடையக்கூடியது. நீங்கள் நினைப்பதை விட அதிகமான செயல்களை அதனால் செய்யமுடியும்,".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cp3yz974190o

ரேபிஸ் நோய் முற்றிய நோயாளிகளை கையாளும் வழிமுறைகள் - மருத்துவர் விளக்கம்

3 months 1 week ago

ரேபிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.

நாய்க் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி முற்றிய நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வட மாநிலத் தொழிலாளி ஒருவர், நோயின் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்பு, அவருடைய செயல்பாடுகள் குறித்த வீடியோ, வைரலாக பரவியுள்ள நிலையில், ரேபிஸ் முற்றிய நோயாளிகள் குறித்த அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது. அதேவேளையில், ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று காலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், சிகிச்சைக்காக வந்துள்ளார். தனது பெயர் ராம்சந்தர் (வயது 35) என்றும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தான் கோவை சித்ரா பகுதியில் தங்கி, கார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தன்னை தெருநாய் கடித்ததாகவும், அதற்கு எந்த சிகிச்சையும் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளை வைத்திருக்கும் தனி வார்டில் (Isolation Ward) அவரை வைத்துள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார். இறப்பதற்கு முன்பு, ரத்தத்தால் தன்னுடைய உறவினரின் தொடர்பு எண்ணை எழுதி வைத்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அந்த நோயாளி நடந்து கொண்ட விதத்தை சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்துப் பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.

ரேபிஸ் நோய் தாக்கியவர்களின் இறுதி நிலை குறித்து, பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அந்தக் காணொளி அமைந்துள்ளது. இதனால் ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வது எப்படி என்பது குறித்த கேள்விகளும் பலரிடமும் எழுந்துள்ளன.

இதுகுறித்த சந்தேகங்களுக்கு, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தார்.

நாய் கடித்துவிட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா

படக்குறிப்பு,கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா

நாய் கடித்த இடங்களை முதலில் நன்கு சோப்புப் போட்டு குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கழுவ வேண்டும். அதன் பிறகு தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்றால் அங்கு ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

அந்தத் தடுப்பூசி, குறிப்பிட்ட கால இடைவெளியில் மொத்தம் 4 முறை போடப்படும். அதைச் சரியான தேதிகளில் செலுத்திக் கொள்வது அவசியம். அதுபோக, மருத்துவர் கூறும் சில வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியம்.

ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட வீட்டு நாய்கள் கடித்தால் சாதாரண தடுப்பூசி (TT-Tetanus Toxoid) போட்டுக் கொண்டால் போதுமா?

தன்னிச்சையாக இப்படி முடிவெடுப்பது தவறு. அதனால் வீட்டு நாய்க்கும் ரேபிஸ் தாக்குதல் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது மிக முக்கியம். அப்படி வீட்டு நாய்க்கு ரேபிஸ் தாக்குதல் இல்லை என்பதை உறுதி செய்யும் பட்சத்தில், ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசி தேவைப்படாது.

ஆனால், அப்படி உறுதி செய்ய முடியாத பட்சத்தில் ரேபிஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதே சரியான முடிவாக இருக்கும்.

ஏனெனில், ஒவ்வொரு நாய்க்கும் அதன் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையின் (Antibody level) அளவைப் பொருத்து, ரேபிஸ் தடுப்பூசி செயலாற்றும்.

அது குறைவாக இருக்கும்பட்சத்தில், ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், வேறு ஏதாவது நாயிடம் இருந்து அதற்கு அந்த நோய் தாக்க வாய்ப்புண்டு. அதேபோன்று போடப்படும் ரேபிஸ் தடுப்பூசியும் தரமுடையதாக இருக்க வேண்டும்.

ரேபிஸ் நோய் தாக்கியும் வீட்டு நாய்களிடம் அது வெளிப்படாமல் இருக்கலாம். அத்தகைய நேரங்களில் வீட்டு நாய்கள் கடிக்கின்ற நபருக்கும் ரேபிஸ் தாக்கும் அபாயம் அதிகமிருக்கிறது.

எனவே, நாய்க்கடியால் அச்சப்படவும் கூடாது; அதே நேரத்தில் அசட்டையாகவும் இருக்கக்கூடாது. ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆரோக்கியமான வீட்டு நாய்கள் கடித்தால் மட்டுமே, கடிபட்டவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

நாய்க்கடி காயம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

ரேபிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காயமான இடத்தை நன்கு கழுவிய பிறகு, அரசு மருத்துவமனைக்குச் சென்றால், காயம்பட்ட இடத்தை மேலும் நன்கு சுத்தம் செய்து, அந்த இடத்தைச் சுற்றிலும் Rabies immune globulin என்ற தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மருந்தின் வீரியம் சில ஆண்டுகள் வரையிலும் உடலில் தங்கியிருக்கும். இதைச் செலுத்தினால் மட்டுமே, நாயால் ஏற்பட்ட காயம் விரைவில் குணமாகும்.

நாய் கடித்துவிட்டால் எவ்வளவு நேரத்துக்குள் தடுப்பூசி போட வேண்டும்? குறிப்பிட்ட நேரத்துக்குள் போடாவிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்?

ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படாத தெருநாய்கள் கடித்துவிட்டால் எந்த வகையிலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதைத் தாமதிக்கவே கூடாது. வழக்கமாக, 24 மணிநேரத்துக்குள் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருப்பது தவறு. நாய் கடித்த இடம், பாதிப்பின் அளவைப் (VIRAL LOAD) பொருத்து, ரேபிஸ் வைரஸ் மூளையைத் தாக்கும்.

அதை யாராலும் கணிக்க முடியாது என்பதால் எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட முடியுமோ அதற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்லது. சீக்கிரமாக தடுப்பூசி போடாவிட்டால், அதற்குள் ரேபிஸ் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாகிவிடும்.

ஒரு வேளை ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதன்பின் உயிரைக் காப்பாற்றவே இயலாது. மருத்துவப் பரிசோதனையில் ரேபிஸ் உறுதி செய்யப்பட்டுவிட்டால், அதன் பிறகு அந்த நோயாளியைத் தனிமைப்படுத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை.

ரேபிஸ் நோயின் இறுதிக் கட்டத்துக்கான அறிகுறிகள் என்ன?

  • இதை ரேபிஸ் நோயின் நான்காம் நிலை என்பார்கள். இதுதான் நோயின் முற்றிய நிலை.

  • அப்போது நோயாளிகளுக்கு காய்ச்சல், உடல் வலி ஏற்படும்.

  • தண்ணீரைக் கண்டால் கடுமையான அச்சம் ஏற்படும்.

  • நுரையீரல் செயலிழந்து விடும், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும்.

  • சிலர் கோமா நிலைக்குச் சென்றுவிடுவர். இந்த நிலைக்கு வந்துவிட்டால், அதிகபட்சமாக 4 அல்லது 5 நாட்களுக்குள் மரணம் ஏற்படும்.

ரேபிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கலாமா?

அது மிகவும் ஆபத்தானது. ரேபிஸ் நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களின் உடல் தன்மையும், செயல்பாடுகளும் மிகவும் விநோதமாகிவிடும்.

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினால், அதிலும் அந்த வைரஸ் இருக்கும். அப்போது எதிரில் இருப்பவரின் வாய் அல்லது மூக்கு வழியாக உடலுக்குள் சென்றால் அவர்களுக்கும் ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது.

அதேபோல், நோயாளிகளைப் பராமரிப்பவருக்கு உடலில் ஏதும் காயம் இருந்து, அதன் வழியாக நோயாளியின் எச்சில் உடலுக்குள் சென்றாலும் இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆகையால், ரேபிஸ் நோயாளிகளை வீட்டிலேயே வைத்திருப்பது ஆபத்தானது.

அவர்களை எங்கே எப்படி வைத்திருந்தாலும் உயிரைக் காப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால், அவர்களை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிப்பதே சிறந்தது.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9vyjvx70yyo

டைப் 2 நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் அரக்கப் பல்லியின் விஷம்

3 months 1 week ago

மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் கிலா அரக்கப் பல்லியின் விஷம்

கிலா மான்ஸ்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த பல்லியின் விஷம், செமிக்ளூடைடு எனும் மருந்துக்கு ஆதாரமாக விளங்குகின்றது

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,ரஃபேல் அபுசைபே

  • பதவி,பிபிசி முண்டோ

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

வட அமெரிக்காவின் பாலைவனங்களில் பளபளக்கும், செதில்களைக் கொண்ட, மெதுவாக நகரும் அந்தச் சிறிய உயிரினம்தான் மருந்துகள் துறையில் புரட்சியை ஏற்படுத்த மறைமுகமாக உதவியுள்ளது.

அதன் அறிவியல் பெயர் ஹெலோடெர்மா சஸ்பெக்டம் (Heloderma suspectum), ஆனால், பெரும்பாலானோர் அதை கிலா மான்ஸ்டர் என்கின்றனர்.

அதன் விஷம், பல தீவிரமான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். 2024 நவம்பரில் கொலோரடோ மாகாணத்தில் இந்த கிலா அரக்கப் பல்லியின் குட்டி ஒன்று கடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சிறிய, விகாரமான உயிரினம்தான் வருங்காலத்தில் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றப் போகும் மருத்துவக் கண்டுபிடிப்பின் பின்னால் உள்ளது.

அதன் விஷத்தில், ஜிஎல்பி-1 ஏற்பி (GLP-1 receptor) எனும் புரதத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் மருந்துகளை உருவாக்க உதவக்கூடிய ஊக்குவிக்கும் நொதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புரதம், தற்போது ஓஸெம்பிக் (Ozempic), வெகோவி (Wegovy), மௌஞ்சரொ (Mounjaro) எனும் பெயரில் மருந்துகளாக விற்கப்படுகின்றன. இவை, டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த மருந்துகளை உருவாக்குவதில் கிலா மான்ஸ்டர் முக்கிய உயிரினமாக உள்ளது. விலங்கின் நஞ்சை மக்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்துவது புதிதல்ல, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் முதல் ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கான மருந்துகளில் அவை முக்கியப் பங்கு வகித்துள்ளன.

ஆனால், இந்தப் பல்லி எந்த அளவுக்குச் சிறப்பானது? நம்பிக்கைக்குரிய மருந்துகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அதன் நஞ்சை எப்படிப் பெறுவது?

கிலா மான்ஸ்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செமிக்ளூடைட் டைப் 2 நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது

அரக்க பல்லியின் நஞ்சு

"தன்னை வேட்டையாட வருவதிலிருந்து காத்துக்கொள்வது மற்றும் தன்னுடைய இரையை முடக்குவது என குறிப்பாகச் செயல்படும் வகையில் இத்தகைய நஞ்சுக்கள் பரிணமிக்கின்றன," என உயிரினங்களின் நஞ்சு குறித்து ஆராய்ந்து, அதன் மாற்றுப் பயன்பாடுகள் குறித்து ஆராய்ந்து வரும் பேராசிரியர் கினி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

வட அமெரிக்காவை சேர்ந்த இரண்டு விஷப் பல்லி இனங்களில் ஒன்றான இந்த கிலா அரக்க பல்லியைப் பொறுத்தவரையில் அதனால், வேகமாக நகர முடியாது என்பதால் தன் இரை வேகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் விஷம் பரிணமித்துள்ளது.

இரையின் மீது ஏற்படுத்தும் இந்த விளைவைத் தவிர்த்து, அதன் விஷத்தில் உள்ள ஹார்மோன் ஒன்று, இந்தப் பல்லி வெறும் ஆறு வேளை உணவின் மூலம் ஓர் ஆண்டு வரை வாழும் வகையில் அதன் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைப்பதில் உதவுவதாக, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் எக்ஸென்டின் - 4 (exendin-4) எனப் பெயரிட்டுள்ள இந்த ஹார்மோன், மனிதர்களில் ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உற்பத்தியாகும் ஜிஎல்பி 1-ஐ ஒத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

எனினும், எக்ஸென்டின் - 4 ஜிஎல்பி 1-ஐ விட முக்கியமான ஒரு விஷயத்தில் வித்தியாசமானதாக உள்ளது. மனித உடலில் உள்ள ஜிஎல்பி 1 இயற்கையாகவே கழிவாக வெளியேறும் நிலையில், எக்ஸென்டின் - 4 உடலில் நீண்ட காலம் தங்குகிறது, இதனால், குளுக்கோஸ் அளவைச் சீராக வைத்திருப்பதில் இது நீண்ட கால விளைவைக் கொண்டிருக்கிறது.

இதுதான் ஜிஎல்பி-1 ஏற்பியாகச் செயல்படும் மருந்துகளை உருவாக்குவதன் அடிப்படையை வழங்குகிறது.

நஞ்சு மருந்தாக மாறுவது எப்படி?

கிலா மான்ஸ்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இதன் விஷம் மற்ற உயிரினங்களைத் தாக்குவதைவிட தன்னைப் பாதுகாப்பதிலேயே அதிகம் செயலாற்றுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

எக்ஸெண்டின்-4 முதன்முதலில், டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பையெட்டா (எக்ஸெனாட்டைட்) (Byetta -exenatide) எனும் மருந்துக்காகத்தான் பெரியளவில் பயன்படுத்தப்பட்டது.

இந்த மருந்து குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் உதவியது. மேலும், சில மாற்றங்களுடன் செமக்ளூடைடு(semaglutide - Ozempic, Wegovy) போன்ற மிகவும் வலுவான மற்றும் நீடித்த சேர்மங்களுக்கு அடித்தளத்தை அமைத்தது.

"ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், அவற்றை ரத்த ஓட்டத்தில் நீடித்த விளைவுடன் மாற்றுவதால், அதன் சிகிச்சைத் திறனை சீராக நிர்வகிப்பது அல்லது அதிகப்படுத்துவது அற்புதமான விஷயம்," என பேராசிரியர் கினி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

செமக்ளூடைடை பொறுத்தவரை கொழுப்பு அமில சங்கிலியை ரத்தத்தில் ஹார்மோன்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகளை உடலில் கடத்துவதற்குப் பயன்படுத்தும் ஆல்புமின் எனும் புரதத்துடன் இணைப்பதன் மூலம், ரத்த ஓட்டத்தில் மருந்தின் விளைவை நீடித்ததாக ஆக்குவதாக அவர் விளக்கினார்.

எனினும், ஒரு மருந்தைத் தயாரிப்பதற்கு இத்தகைய நஞ்சு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுவதற்கு செமிக்ளூடைடு மட்டும் உதாரணம் அல்ல என்கிறார் பேராசிரியர் கினி.

மற்ற உயிரினங்கள்

மருந்துகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போத்ரோப்ஸ் ஜராராகா எனும் இனத்தின் பெப்டைட் ரத்தம் உறைதலை நிர்வகிப்பதற்குப் பயன்படும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது

பேராசிரியர் கினி சுட்டிக்காட்டுவது போன்று, கடந்த பல்லாண்டுக் காலமாக பல்வேறு விதமான உயிரினங்களின் நஞ்சை உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்மூலம் தயாரிக்கப்படும் மருந்து சேர்மங்கள், சந்தையில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

"கடந்த 1970களின் முற்பகுதிக்கு முன்பே பிரேசில் நாட்டு பாம்பு இனமான போத்ரோப்ஸ் ஜராராகா (Bothrops jararaca) எனும் இனத்தின் நஞ்சில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பெப்டைட் எனும் அமினோ அமிலங்கள், ஏசிஇ (angiotensin-converting enzyme) எனப்படும் மருந்துகள் தயாரிக்கப்பட வழிவகுத்தது," எனக் கூறும் அவர், அந்த மருந்துகள் தற்போது ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு ஆகியவற்றில் அத்தியாவசியமான மருந்துகளாக உள்ளன என்றார்.

காலப்போக்கில் கேப்டோப்ரில் (captopril) மற்றும் எனலாப்ரல் (enalapril) போன்ற மருந்துகள், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.

கடல் நத்தைகளின் நஞ்சு, நாள்பட்ட வலிக்கு சிகிச்சை அளிப்பதில் பயன்படுத்தப்படுகிறது, மேலும், இயற்கையான ரத்த உறைவு எதிர்ப்பு மருந்தாக விளங்கும் அட்டைப் பூச்சிகள், ரத்தக் குழாய் அடைப்பு ஆபத்தைக் குறைக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

"தன் இரை அல்லது வேட்டையாட வரும் உயிரினங்கள் மீது மிகவும் குறிப்பான விளைவுகளை இந்த நஞ்சுகள் கொண்டிருக்கின்றன. இதைப் புரிந்துகொண்டு, நாம் பிரித்தெடுத்தால் அந்த நஞ்சை சிகிச்சை மருந்தாக மாற்ற முடியும்," என கினி விளக்குகிறார்.

பாம்பின் நஞ்சு, கொசுவின் எச்சில் ஆகியவற்றிலிருந்து மாரடைப்புக்குப் பிறகான இதய செயலிழப்பைத் தடுப்பது அல்லது சிறுநீரகத்தில் இருந்து அதிகப்படியான சிறுநீர் உற்பத்தியாதல் (diuresis) ஆகிய பிரச்னைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் நோக்கத்துடன் அவற்றை ஆய்வு செய்து வருகிறார் கினி.

அவரது அனுபவத்தில், இந்த நச்சுகளில் பலவற்றில், ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்களில் சிறிய மாறுபாடுகளைக் கொண்டுள்ளன. அவை மிகவும் குறிப்பிட்ட உடலியல் விளைவுகளைத் தூண்டுகின்றன, மேலும் புதிய சிகிச்சைகளை உருவாக்க அவற்றைத் தனிமைப்படுத்தி மாற்றியமைக்க வேண்டும்.

நஞ்சுகளின் எதிர்காலம்

உயிரினங்களின் விஷம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பல வகையான உயிரினங்களின் நஞ்சு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன

மூலக்கூறு உயிரியல், மருந்தியல் மற்றும் நஞ்சுகள் குறித்த விரிவான ஆய்வுகளை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கிலா அரக்க பல்லி மீதான சோதனைகள் வழங்குகின்றன.

மிகவும் மெதுவாக நகரும், பெரிதாக ஆபத்து இல்லாத, சில வேளை உணவுகளில் மட்டும் உயிர் பிழைக்கும், நிலையான நஞ்சைக் கொண்டுள்ள இந்த உயிரினம், புரட்சிகரமான மருந்துகளைத் தயாரிப்பதற்கான அடிப்படையை வழங்கும் என்கிறார் கினி.

"முன்பைவிட மிக வேகமாக இயங்குவதற்கு அனுமதிக்கும் புதிய சாதனங்கள் உள்ள யுகத்தில் நாம் வாழ்கிறோம். எனினும், இப்போதும் நிதி என்பது பெரும் சவாலாக உள்ளது. ஆய்வக கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக சந்தைப்படுத்துவதற்குப் பல ஆண்டுக்கால மனிதர்கள் மீதான சோதனைகள் மற்றும் பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன," எனக் கூறுகிறார் அவர்.

ஆனால், இந்த முயற்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் முடிவுகள் இருப்பதாக அவர் நம்புகிறார். குறிப்பாக, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது இந்த முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக அவர் கூறுகிறார்.

இந்த ஆய்வில், "அடுத்த சில பத்தாண்டுகளில் இன்னும் புதிய ஆச்சர்யங்கள் ஏற்படும்" என்கிறார் கினி. மேலும், "இன்னும் பல விலங்குகளின் நஞ்சில் இருந்து அதிக திறன் வாய்ந்த மருந்து சேர்மங்களை நம்மால் கண்டுபிடிக்க இயலும் அல்லது, நோய்களைப் புதிய கோணத்தில் எதிர்க்கக்கூடிய செயற்கையான நஞ்சுகளை உருவாக்க முடியும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2nw92gz97o

உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் - ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?

3 months 2 weeks ago

எண்ணெய், உடல் பருமன்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,சஜித் ஹுசைன்

  • பதவி,பிபிசி ஹிந்திக்காக

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது.

இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

"ஆரோக்கியமான நாடாக மாறுவதற்கு நாம் உடல் பருமனை சமாளிக்க வேண்டும். அதிக உடல் எடை பல வித பிரச்னைகள் மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கிறது," என்றும் அந்நிகழ்ச்சியில் மோதி பேசினார்.

ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது என்ன?

'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஓர் ஆய்வின்படி, எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

"குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. உலக சுகாதார மைய தரவுகளின்படி, 2022-ல் உலகளவில் சுமார் 250 கோடி பேர் உடல் எடை அதிகமாக உள்ளனர். அதாவது, சரியான எடையை விட அவர்கள் அதிக எடையுடன் உள்ளனர்," என்றார்.

2024-ம் ஆண்டில் 'தி லேன்செட்' ஆய்விதழ் ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-ம் ஆண்டில் இந்தியாவில் 5 முதல் 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுள் ஒரு கோடியே 25 லட்சம் குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர்.

அவர்களுள் 73 லட்சம் ஆண் குழந்தைகள். 52 லட்சம் பெண் குழந்தைகள் 1990-ல் இந்த எண்ணிக்கை வெறும் 4 லட்சமாக இருந்தது. குழந்தைகள் மட்டுமல்லாமல் வயது வந்தோரிடையேயும் உடல் பருமன் கவலைக்குரிய பிரச்னையாக மாறியுள்ளது.

அந்த ஆய்வறிக்கையின்படி, 2022-ல் இந்தியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட 4.4 கோடி பெண்கள் மற்றும் 2.6 கோடி ஆண்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990-ல், இந்த எண்ணிக்கை 24 லட்சம் பெண்களாகவும் 11 லட்சம் ஆண்களாகவும் இருந்தது.

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வும் இந்தியாவில் உடல் பருமன் பிரச்னையை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட 23% ஆண்கள் மற்றும் 24% பெண்கள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், 2015-16ல் இந்த எண்ணிக்கை 20.6% பெண்கள் மற்றும் 18.9% ஆண்கள் என இருந்தது.

எண்ணெய் எப்படி பங்காற்றுகிறது?

எண்ணெய், உடல் பருமன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,எண்ணெய் பயன்பாடும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது

நொறுக்குத் தீனிகள் மற்றும் உடல் உழைப்பில்லாத வாழ்வியல் முறை போன்றவை உடல் பருமன் பிரச்னைக்கு முக்கிய காரணங்களாக பெரும்பாலும் கூறப்படுகின்றன. ஆனால், நம்முடைய உணவில் நாள் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்படும் எண்ணெய் உடல் பருமனை அதிகரிப்பது குறித்து புறந்தள்ளிவிடுகிறோம்.

அனைத்து இந்திய மேம்பட்ட ஆய்வு மற்றும் உடல் பருமன் சங்கத்தின் தலைவர் டாக்டர் மகேந்திர நர்வாரியா, "இந்திய உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எண்ணெய் ஆகியவை அதிகளவில் உள்ளன. எந்தவொரு உணவையும் சுவையானதாக மாற்ற எண்ணெய் மற்றும் நெய் பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக, நமது உடலில் கொழுப்பு அதிகமாகிறது. நாம் அதிகமாக உடற்பயிற்சி செய்யாததால், உடலில் உள்ள கொழுப்பு கரைவதில்லை." என்கிறார்.

"நம் உணவில் அதிகமாக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலில் நுழைந்ததும் கொழுப்பாக மாறுகின்றன. மேலும், கொழுப்பும் நம் உடலில் சேருகிறது. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதற்கான ஆபத்து ஏற்படுகிறது."

"நமது உடலில் கொழுப்பின் அளவு எப்போதும் அதிகமாக இருக்கும். உடல் மெலிந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் அவருடைய உடலிலும் 30-40% கொழுப்பு இருக்கும், அதுவே மிக அதிகம். மற்றொருபுறம், விளையாட்டு வீரர்களின் உடலில் 7-8% கொழுப்பு இருக்கும்."

"நமது உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால், நம்முடைய வளர்சிதை மாற்றம் குறையும். இதனால், நமது உடல் எடை அதிகமாகும்."

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் டாக்டர் பர்மீத் கௌர் கூறுகையில், "பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எண்ணெயை எடுத்துக்கொண்டால், நம்முடைய வளர்சிதை மாற்றம் குறையும். இதனால், நம் உடலில் கொழுப்பு அதிகரித்து, உடல் பருமனும் அதிகமாகும். மேலும், இது நமக்கு நார்ச்சத்து, தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தராமல், கூடுதல் கலோரிகளையே தரும்." என்றார்.

மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையின் பேரியாட்ரிக் (உடல் பருமனுக்கான சிகிச்சை) அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமன் கோயல், "எண்ணெயில் பொதுவாகவே கொழுப்பு அதிகமாக இருக்கும். நமது உடல் பெரும்பாலான கலோரிகளை கொழுப்பிலிருந்து தான் பெறும். புரதச் சத்திலிருந்து நான்கு கலோரிகளை பெற்றால், கொழுப்பிலிருந்து 9 கலோரிகளை நாம் பெறுவோம். எனவே, அதிகமான கலோரிகளுடன் நாம் உண்ணும் எதுவாக இருந்தாலும், உடல் பருமனுக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஏற்கெனவே உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடை மேலும் அதிகமாகும்." என தெரிவித்தார்.

எண்ணெய் எந்தளவு எடுக்க வேண்டும்?

எண்ணெய், உடல் பருமன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,எண்ணெயை அதிகமாக சூடுபடுத்துவது அதன் தரத்தை பாதிக்கிறது

எண்ணெயை குறைவாக உபயோகிப்பதன் மூலம் உடல் பருமனை கட்டுப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் மகேந்திர நர்வாரியா. அதிகளவு எண்ணெயை மக்கள் பயன்படுத்துவதால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது.

டாக்டர் பர்மீத் கௌர் கூறுகையில், "நம் உடலில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, இ, கே ஆகிய வைட்டமின்களை ஜீரணிக்க கொழுப்பு நமக்கு உதவுகிறது. எனவே, நம் உடலுக்கு குறிப்பிட்ட அளவு கொழுப்பு தேவை." என்றார்.

மேலும், "வயதுக்கேற்ப மக்கள் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதிக உடலுழைப்பு இல்லாத ஒருவர் ஒரு நாளைக்கு 4-5 தேக்கரண்டி எண்ணெய் தான் எடுக்க வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு 20-25 கிராம் எண்ணெய். இதுவே ஒருவருக்கு அதிகமான அளவுதான்." என கூறுகிறார்.

எனினும், உடல் பருமனுக்கு எண்ணெய் மட்டுமே காரணம் அல்ல. டாக்டர் ராமன் கோயல் கூறுகையில், "உடல் பருமனுக்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் எந்தளவுக்கு இனிப்புகள் உட்கொள்ளப்படுகின்றன தெரியுமா? இனிப்புகளும் உடல் பருமனை அதிகரிக்கும்" என்றார்.

என்ன எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

எண்ணெய், உடல் பருமன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,எண்ணெய் தரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்

பர்மீத் கௌர் கூறுகையில், "இந்தியாவில் அந்தந்த பிராந்தியங்களில் கிடைக்கும் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டாலான எண்ணெய் (rice bran oil) ஆகியவை தென்னிந்தியாவில் கிடைக்கும். கடலை எண்ணெய் குஜராத்திலும் மற்ற மாநிலங்களில் கடுகு எண்ணெயும் கிடைக்கும்." என்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, பொறிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெயை நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. மேலும், ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களையும் நாம் தவிர்க்க வேண்டும்.

மேலும், எண்ணெயின் தரமும் முக்கியமானது. சமையல் எண்ணெயை நாம் அதிகமாக சூடுபடுத்துவது உடலுக்கு நல்லதல்ல.

ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) கூறுகிறது. ஏனெனில், அந்த எண்ணெயில் கெட்ட கொழுப்புகள் (trans fat) அதிகமாக இருக்கும்.

ஹார்வர்டு பொது சுகாதார பள்ளியின் இணையதளத்தில், இத்தகைய கெட்ட கொழுப்புகள் உடலுக்கு மோசமானவை என குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய கொழுப்புகள் எல்.டி.எல் போன்ற தீய கொழுப்புகளை அதிகரித்து ஹெச்.டி.எல் போன்ற நல்ல கொழுப்புகளை குறைக்கும். இதனால், உடலில் வீக்கம் அதிகரித்து, இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு, நோயெதிர்ப்பு ஆகியவற்றை பாதிக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cevx0m0dww7o

பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை!

3 months 2 weeks ago

New-Project-76.jpg?resize=750%2C375&ssl=

பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை!

இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் குளோபோகன் 2022 தரவுகளின்படி, சர்வதேச அளவில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1.9 மில்லியன் ஆகும், இறப்புகளின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியுள்ளது.

இந்த நோயின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவது பெரும்பாலும் முழுமையான குணப்படுத்துதலுக்கு வழிவகுக்கும் என்று தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் ஹசராலி பெர்னாண்டோ கூறினார்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

இதற்கிடையில், 2040 ஆம் ஆண்டு அளவில் சுமார் 3.5 மில்லியன் நோயாளிகள் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் வசந்த விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

– எந்தவித காரணமும் இன்றி இரத்தத்துடன் மலம் வெளியேறுவது. இரத்தம் பிரகாசமான சிவப்பு அல்லது அடர் சிவப்பாக இருக்கலாம்.

– அடிக்கடி கழிவறைக்குச் செல்வது மற்றும் மலம் அதிக திரவமாகவோ அல்லது கடினமாகவோ வெளியேறுவது என குடல் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும்.

– வயிறு நிரம்பியிருக்கும் போது அடிவயிற்றில் வலி அல்லது வீக்கத்தை உணர்தல்.

– உடல் எடை குறைதல்.

– மலம் கழித்த பிறகும் முழுமையாக மலம் கழிக்காத உணர்வு ஏற்படுதல்.

– வழக்கத்திற்கு மாறாக சோர்வு அல்லது மயக்கத்தை உணர்தல்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அவை குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், மூன்று வாரங்களுக்கு மேல் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது.

ஏனென்றால் தொடக்க நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், எளிதாக குணப்படுத்திவிடலாம்.

சில நேரங்களில் பெருங்குடல் புற்றுக்கட்டிகள் குடல் வழியாக கழிவுகள் வெளியேறுவதைத் தடுத்துவிடும். இதன் காரணமாக தீவிர வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்படும்.

இது மாதிரியான சூழல்களில் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

https://athavannews.com/2025/1424228

Checked
Tue, 06/24/2025 - 13:11
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed