அறிவியல் தொழில்நுட்பம்

தோல் செல் மூலம் உங்கள் மரபணு கொண்ட குழந்தையை உருவாக்கலாமா?

1 week 2 days ago

உங்கள் தோல் மூலம் கூட கருத்தரிக்க முடியும்

பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் கல்லாகர்

  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • 1 அக்டோபர் 2025, 11:25 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர்.

இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின தம்பதிகளும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம்.

ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்.

இதை ஒரு முக்கிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும், இதுபோன்ற அறிவியல் முயற்சிகள் குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

பொதுவாக குழந்தை பெறுவது எளிதான ஒன்று. ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையைச் சந்தித்து, கரு உருவாகி, ஒன்பது மாதங்களில் குழந்தை பிறந்துவிடும்.

இப்போது விஞ்ஞானிகள் இந்த விதிகளை மாற்றுகின்றனர். இந்தப் புதிய முயற்சி மனித தோலில் இருந்து தொடங்குகிறது.

ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உடலை உருவாக்கத் தேவையான முழு மரபணு (டிஎன்ஏ) இருக்கும் தோல் செல்லின் நியூக்ளியஸை (nucleus) எடுக்கின்றனர்.

பின்னர், அதை மரபணு தகவல்கள் நீக்கப்பட்ட ஒரு கருமுட்டையில் வைக்கின்றனர்.

இந்த கட்டம் வரை, 1996-ல் உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி ஆட்டை உருவாக்கிய முறையைப் போன்றது இது.

இந்த முறை, 1996-ல் உருவாக்கப்பட்ட உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி ஆட்டை உருவாக்கிய முறையைப் போன்றது.

பட மூலாதாரம், OHSU

படக்குறிப்பு, பெரிய வட்டம், நுண்ணோக்கியில் பார்க்கப்படும் கருமுட்டையைக் குறிக்கிறது. கீழே உள்ள வெள்ளைப் புள்ளி, தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்டு கருமுட்டையில் வைக்கப்பட்ட மரபணு பொருளாகும்.

46 குரோமோசோம்கள்

ஆனால், விந்தணுவால் இந்த கருமுட்டையை கருத்தரிக்க முடியவில்லை. ஏனெனில் தானமாக பெறப்பட்ட இந்த கருமுட்டைக்குள் ஏற்கெனவே முழு குரோமோசோம்களும் உள்ளன. ஒரு குழந்தை உருவாக, தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் தலா 23 குரோமோசோம்கள் (மொத்தம் 46) தேவை. ஆனால், இந்த முட்டையில் ஏற்கெனவே 46 குரோமோசோம்கள் இருக்கின்றன.

அதனால், கருமுட்டை தனது குரோமோசோம்களில் பாதியை வெளியேற்ற வேண்டும். அதன் பின் தான் கருமுட்டையால் விந்தணுவுடன் சேர முடியும். இந்தச் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் "மைட்டோமியோசிஸ்" என்று அழைக்கின்றனர். (இது "மைட்டோசிஸ்" மற்றும் "மியோசிஸ்" என்ற செல்கள் பிரியும் இரண்டு முறைகளின் கலவை).

'எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும்'

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு, 82 செயல்படும் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டதாக கூறுகிறது. அவை விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்டன. சில கருமுட்டைகள் கருவின் ஆரம்ப கட்டத்துக்கு வளர்ந்தன. ஆனால், ஆறு நாட்களுக்கு மேல் எதுவும் வளரவில்லை.

"சாத்தியமற்றது என்று நினைக்கப்பட்ட ஒன்றை நாங்கள் செய்துவிட்டோம்," என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கரு உயிரணு மற்றும் மரபணு சிகிச்சை மைய இயக்குநர் பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ்.

ஆனால், இந்த செயல்முறை இன்னும் முழுமையாகவில்லை. கருமுட்டை எந்த குரோமோசோம்களை வெளியேற்றுவது என்பதை தற்செயலாகத் தேர்ந்தெடுக்கிறது. நோய் வராமல் இருக்க, 23 வகைகளில் ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒரு குரோமோசோம் இருக்க வேண்டும். ஆனால், சில வகைகள் இரண்டாகவும், சில வகைகள் எதுவும் இல்லாமலும் இருக்கின்றன.

மேலும், இந்த முறையின் வெற்றி விகிதம் 9% மட்டுமே. குரோமோசோம்கள் 'கிராசிங் ஓவர்' என்ற முக்கியமான டிஎன்ஏ மறுசீரமைப்பு செயல்முறையையும் தவறவிடுகின்றன.

"இந்த முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும்," என்கிறார் உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மிட்டாலிபோவ்.

"எதிர்காலத்தில் இது முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் குழந்தை பெற முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது."

இந்தப் புதிய தொழில்நுட்பம், ‘இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ்’ எனப்படும் ஒரு வளர்ந்து வரும் துறையின் பகுதி. இதில், உடலுக்கு வெளியே விந்தணுவும் முட்டைகளும் உருவாக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks

படக்குறிப்பு, பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ்

இந்தப் புதிய தொழில்நுட்பம், 'இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ்' எனப்படும் ஒரு வளர்ந்து வரும் துறையின் பகுதி. இதில், உடலுக்கு வெளியே விந்தணுவும் கருமுட்டைகளும் உருவாக்கப்படுகின்றன.

இது இன்னும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) மூலம் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாக உள்ளது.

வயதான பெண்கள், விந்தணு குறைவாக உற்பத்தி செய்யும் ஆண்கள், அல்லது புற்றுநோய் சிகிச்சையால் மலட்டுத்தன்மை அடைந்தவர்களுக்கு இந்த முறை நம்பிக்கை தரும்.

இந்தத் தொழில்நுட்பம் பெற்றோராவதற்கான பாரம்பரிய விதிகளை மாற்றுகிறது. இதற்கு பெண்ணின் தோல் செல்கள் மட்டுமல்ல, ஆணின் தோல் செல்களையும் பயன்படுத்தலாம்.

இதனால், தன்பாலின தம்பதிகள் இருவரும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற முடியும். உதாரணமாக, ஆண் தம்பதிகளில் ஒருவரின் தோல் செல்களால் கருமுட்டை உருவாக்கி, மற்றவர் விந்தணுவால் கருத்தரிக்கலாம்.

"போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் குழந்தை பெற முடியாத கோடிக்கணக்கான மக்களுக்கு இது நம்பிக்கை தருவதோடு, தன்பாலின தம்பதிகளுக்கு இருவருடனும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெறும் வாய்ப்பையும் கொடுக்கும்," என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பவுலா அமடோ.

பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்

ஹல் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியர் ரோஜர் ஸ்டர்மி, இந்த அறிவியல் முயற்சி "முக்கியமானது" மற்றும் "சிறப்பானது" என்று தெரிவித்தார்.

"இதுபோன்ற ஆராய்ச்சிகள், இனப்பெருக்கத்தில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மக்களுடன் திறந்த உரையாடல் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றன," என்று அவர் கூறினார்.

"மக்களின் நம்பிக்கையை வளர்க்கவும், பொறுப்பை உறுதி செய்யவும் வலுவான நிர்வாகம் தேவை என்பதை இது நமக்கு உணர்த்துகிறது."

எடின்பரோ பல்கலைக்கழகத்தின் எம்ஆர்சி இனப்பெருக்க சுகாதார மையத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் ரிச்சர்ட் ஆண்டர்சன், புதிய கருமுட்டைகளை உருவாக்கும் இந்தத் திறன் "பெரிய கண்டுபிடிப்பு" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாதுகாப்பு குறித்து சில கவலைகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆய்வு பல பெண்கள் தங்கள் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தைகளைப் பெற உதவும் ஒரு முக்கிய படியாக இருக்கும்,"என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgqze2pq4vo

1972-க்கு பிறகு நிலவுக்கு மனிதனை அனுப்பாத நாசா, இப்போது மீண்டும் அதற்கு திட்டமிடுவது ஏன்?

2 weeks 1 day ago

ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன்.

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன்.

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • அறிவியல் செய்தியாளர்

  • 25 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா, இப்போது இந்தப் பணியை முன்கூட்டியே செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது.

50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தை மேற்கொண்டதில்லை. நாசா நான்கு விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பி, அமைப்புகளைச் சோதிக்க உள்ளது.

ஆர்டெமிஸ் II திட்டம் என்பது ஆர்டெமிஸ் திட்டத்தின் இரண்டாவது ஏவுதல் ஆகும். இந்த திட்டத்தின் நோக்கம் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்க வைப்பதும், இறுதியில் நிலவின் மேற்பரப்பில் நீண்ட கால இருப்பை ஏற்படுத்துவதுமாகும்.

வரைபடம்: ஆர்டெமிஸ் II

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்: ஆர்டெமிஸ் II, பல ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் செல்லும் முதல் நிலவுப் பயணமாக இருக்கும்.

நாசாவின் (பொறுப்பு) துணை நிர்வாகி லாகீஷா ஹாக்கின்ஸ், இது மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று கூறினார்.

"வரலாற்று நிகழ்வுக்கு மிக நெருக்கமான ஒரு தருணத்தில் நாம் உள்ளோம்," என்று அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"ஏவுதலுக்கான வாய்ப்பு பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவே ஏற்படலாம், ஆனால் பாதுகாப்புதான் எங்கள் முதன்மை முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்."

விண்வெளி வீரர்களை நிலவுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS), "ஏறக்குறைய ஏவுவதற்குத் தயாராக உள்ளது" என்று ஆர்டெமிஸ் ஏவுதல் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் விளக்கினார்.

எஸ்எல்எஸ் உடன் இணைக்கப்படும் ஓரியன் (Orion) எனப்படும் விண்வெளி வீரர் காப்ஸ்யூல் தயாரிப்பு மற்றும் தரைவழி சோதனைகளை நிறைவு செய்வது மட்டுமே மீதமுள்ளது.

ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் பணி 25 நாட்கள் நீடித்தது. அது 2022 நவம்பர் மாதம் ஆட்கள் இல்லாத விண்கலத்தை ஏவியது. அந்த விண்கலம் நிலவைச் சுற்றி பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது.

அந்தப் பணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இருப்பினும், விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வெப்பக் கவசத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது சரி செய்யப்பட்டுள்ளன.

ஆர்டெமிஸ் 2 திட்டம்

ஆர்டெமிஸ் II ஏவுதலில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுவர பத்து நாள் பயணம் மேற்கொள்வார்கள். நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த ஜெரெமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இருப்பினும், 1972-ஆம் ஆண்டு அப்போலோ 17-க்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் பயணிக்கும் முதல் குழுவினர் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஆர்டெமிஸ் II இன் தலைமைப் பயண இயக்குநர் ஜெஃப் ரடிகன், விண்வெளி வீரர்கள் இதுவரை யாரும் சென்றிராத அளவு தொலைவுக்கு விண்வெளியில் பயணிப்பார்கள் என்று விளக்கினார்.

"அவர்கள் நிலவுக்கு அப்பால் குறைந்தது 5,000 கடல் மைல்கள் (9,200 கி.மீ) பயணம் செய்வார்கள், இது முந்தைய பயணங்களைவிட மிக அதிகம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திட்டத்தின் நோக்கம்

நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ராக்கெட் மற்றும் விண்கலத்தின் அமைப்புகளைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

விண்வெளி வீரர்கள் ஓரியன் காப்ஸ்யூலில் நுழைவார்கள். இது அவர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு வீடாக இருக்கும். இது எஸ்எல்எஸ்-இன் உச்சியில் அமர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இது, இரண்டு திட ராக்கெட் பூஸ்டர்களின் உதவியுடன் புவி சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படும். அவை கனமான உந்துவிசையை அளித்த பின் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு வந்துவிடும்.

ஏவப்பட்ட உடன் என்ன நடக்கும்?

ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டின் பிரமாண்டமான கோர் ஸ்டேஜ், இடைக்கால க்ரையோஜெனிக் உந்துவிசை அமைப்பு (Interim Cryogenic Propulsion System - ICPS) மற்றும் ஓரியன் விண்வெளி வீரர் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும். ஓரியனின் சூரிய மின் தகடுகள் விரிந்து விண்கலத்தின் பேட்டரிகளுக்குச் சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் வழங்கத் தொடங்கும்.

தொண்ணூறு நிமிடங்களுக்குப் பிறகு ஐசிபிஎஸ் தனது என்ஜின்களை இயக்கி வாகனத்தை ஒரு உயர் புவி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும். அடுத்த 25 மணி நேரத்துக்கு ஒரு முழு அமைப்புகள் சரிபார்ப்பு நடைபெறும்.

எல்லாம் சரியாக இருந்தால், ஓரியன் ஐசிபிஎஸ்-இலிருந்து பிரிந்து செல்லும்.

விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்குவதற்கான ஒரு வாகனத்துடன் இணைக்கும் செயல்முறைகளை ஒத்திகை பார்க்க, ஓரியனின் நகர்வுக்கான உந்துகருவியை (Manoeuvring thruster) கட்டுப்படுத்தி ஐசிபிஎஸ்-ஐ நோக்கிச் செல்வார்கள்.

இருபத்தி மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஓரியனின் சேவை அமைப்பு ஒரு 'நிலவு நோக்கி உந்துதல் (TLI) எரியூட்டலை' நடத்தும் - இது விண்கலத்தை நிலவை நோக்கி குறிவைக்கும் ஒரு உந்துவிசையாகும். அதற்குப் பிறகு ஓரியன் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 2,30,000 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லும்.

பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அமைப்புகள் சரிபார்ப்புகளை மேற்கொள்வார்கள்.

ஆர்டெமிஸ் 2 திட்டம்

ஒரு வகையில், குழுவினர் சோதனை எலிகளாக இருப்பார்கள்.

அவர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்கும் சோதனைகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களின் ரத்தத்திலிருந்து அவர்களின் பயணத்துக்கு முன்னும் பின்னும் பெறப்பட்ட திசு மாதிரிகளை அதாவது ஆர்கனோய்ட்ஸை, வளர்ப்பார்கள்.

விண்வெளி வீரர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஆர்கனோய்ட்ஸின் இரண்டு தொகுப்புகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் தெரிவித்தார்.

"எங்களிடம் அந்த விண்வெளி வீரர்களே இருக்கும்போது ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த மாதிரிகளின் மீது புவியீர்ப்பு விசை இல்லாத சூழல் மற்றும் கதிர்வீச்சின் விளைவை ஆழமாக ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். நான் நிச்சயமாக ஒரு விண்வெளி வீரருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை! ஆனால், இந்தச் சிறிய ஆர்கனோய்ட் மாதிரிகளை அறுத்து, வித்தியாசத்தை உண்மையில் பார்க்க முடியும்." என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார்.

விண்கலம் நிலவைத் தாண்டி செலுத்தப்பட்டபின் பூமியின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் பூமி திரும்பும் நான்கு நாள் பயணத்தைத் தொடங்குவார்கள்.

பூமியை வந்தடைந்ததும், விண்கலத்தின் முதன்மை உந்துவிசையமைப்பைக் கொண்ட சேவை அமைப்பு, குழு அமைப்பிலிருந்து பிரிந்துவிடும். விண்வெளி வீரர்கள் பின்னர் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து, கலிபோர்னியாவின் கடற்கரையில் பாராசூட் மூலம் தரையிறங்குவார்கள். இது பயணத்தின் மிகவும் ஆபத்தான பகுதியாகும்.

ஓரியன் விண்கலத்திற்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை விண்வெளி உடைப் பொறியாளர்கள் விளக்குகிறார்கள்.

பட மூலாதாரம், NASA/Robert Markowitz

படக்குறிப்பு, ஓரியன் விண்கலத்துக்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை பொறியாளர்கள் (spacesuit engineers) விளக்குகிறார்கள், இவர்களே விண்வெளி வீரர்களுக்கான உயிர்காக்கும் கருவிகளை வடிவமைக்கின்றனர்.

இந்தப் பயணத்தின் வெற்றி, நாசா எப்போது ஆர்டெமிஸ் III-ஐ ஏவ முடியும் என்பதையும், உண்மையில் நிலவில் தரையிறங்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும். ஆனால், இந்தப் பயணம் சரியாக நடந்தாலும் கூட, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக இல்லை" என்ற இலக்கு, ஓபன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிமியோன் பார்பரின் கூற்றுப்படி, யதார்த்தமற்றது.

"'முன்னதாக இல்லை' என்பது நாசாவுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல்தான், அதற்கு அதுதான் அர்த்தம். அதுதான் மிக விரைவான சாத்தியமாக உள்ளது," என்று அவர் கூறினார். ஆர்டெமிஸ் III-ஐ சரியான பாதையில் வைத்திருப்பதற்கான செலவு காரணமாக அது கூட அதிக நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார்.

"[ஈலோன் மஸ்க்கின்] ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும் தேவைப்படும். சமீபத்திய மாதங்களில், பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைப் பயணத்தை அடையவே ஸ்டார்ஷிப் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனும் நிலையில் விண்வெளி வீரர்களை அதில் அமர்த்துவது மிகவும் கடினம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czrpkd625m0o

அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

2 weeks 3 days ago

AI-human-heads.jpg?resize=750%2C375&ssl=

அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களே சுயமாக ஒரு பணியைச் செய்யும்போது பங்கேற்பாளர்களின் நேர்மை 95% ஆக இருந்ததாகவும், அதே பணியை AI உதவியுடன் செய்யும்போது நேர்மை 75% ஆகக் குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம், AI மீது அதிகம் சார்ந்திருக்கும் சூழலில் பொய் பேசும் பழக்கம் கூடும் என்பதையும், ஒழுக்கப்பாட்டில் (integrity) குறைபாடு தோன்றும் அபாயமும் அதிகம் காணப்படுவதாகவும்  ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்களில் AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் ஏற்படக்கூடிய நேர்மைச் சவால்கள் மற்றும் ஒழுக்கக் குறைபாடுகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதோடு, AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவும், தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்படவும் வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1448416

அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? - உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?

2 weeks 4 days ago

ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலையாக ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும்.

கட்டுரை தகவல்

  • பாமினி முருகன்

  • பிபிசி தமிழ்

  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா?

நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை.

அவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நாளையும், சிறிய விவரங்களைக் கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். உதாரணமாக அந்த நாளில் அவர்கள் அணிந்திருந்த உடை, சாப்பிட்ட உணவு, கேட்ட பாடல்கள் என அனைத்தையும் மூளையில் படம்பிடித்து வைத்திருப்பதைப் போல நினைவில் வைத்திருப்பார்களாம். மருத்துவ ரீதியாக இது ஹைப்பர்தைமீசியா (Hyperthymesia) எனக் குறிப்பிடப்படுகிறது.

ஹைப்பர்தைமீசியா என்றால் என்ன? ஒரு மனிதனுக்கு அதீத ஞாபக சக்தி இருப்பது வரமா? அல்லது சாபமா?

ஹைப்பர்தைமீசியா என்பது நோயா?

இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருவருக்கு வழக்கமான நினைவாற்றலை விட, மிகவும் துல்லியமான விவரங்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (Autobiographical Memory) இருப்பதை ஹைப்பர்தைமீசியா என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது மிகவும் அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (HSAM) எனவும் குறிப்பிடப்படுகிறது.

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' எனவும் குறிப்பிடுகின்றனர்.

"புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு, அதை நினைவில் கொள்ளும் பொதுவான நினைவாற்றலில் (superior memory) இருந்து இது வேறுபடுகிறது. மாறாக சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களையே எளிதாக நினைவில் கொள்ள முடியும்" என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இர்வின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UCI), இதுபோல தங்கள் வாழ்க்கையின் தருணங்களை எளிதாக நினைவுகூரும் ஒரு குழுவின் மூளை மற்றும் மனதின் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்தனர்.

இந்த அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு UCI நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் மற்றும் சக ஊழியர்களால் ஆவணப்படுத்தப்பட்டது.

அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் கொண்டவர்கள் வழக்கமான ஆய்வக நினைவாற்றல் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெறவில்லை. "இருப்பினும், அவர்களின் வாழ்க்கையில் 10½ வயதிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்வதில் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்தவர்களாக உள்ளனர்" என மெக்காக் கூறியதாக 2012ஆம் ஆண்டு வெளியான நியூரோசயின்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர்

படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர்

இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் தலைமை மருத்துவர் விஜய சங்கரை தொடர்பு கொண்டோம்.

"தைமீசியா என்பது கிரேக்க வார்த்தை. இதற்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுதல் என்பது பொருள். ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமாக ஞாபகம் வைத்துக்கொள்ளுதல். முதலில் இது ஒரு நோய் கிடையாது. இது நரம்பியல் அறிவாற்றல் (neuro cognitive) தொடர்பான ஒரு மருத்துவ நிலை ஆகும்." என விளக்கினார்.

மேலும் "இது மிகவும் அரிதான ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு 10 - 12 வயது முதலே தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பொரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவர்களின் ஞாபகம் மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கும்." என்றார்.

இந்த ஞாபக சக்தி கல்விக்கு உதவுமா?

தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார்.

அப்படியென்றால் இவ்வளவு ஞாபக சக்தி இருக்கும் ஒருவரால் தாங்கள் படிக்கும் விஷயங்கள், புதிய தகவல்களை எளிதாக நினைவில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் எளிதாக நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.

இதுகுறித்து மருத்துவர் விஜயசங்கர் கூறுகையில், "இதுபற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களால் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைதான் துல்லியமாக நினைவில் கொள்ள முடியும். அதேசமயம் படிப்பிலோ, புதிய தகவல்களை அறிந்துகொள்வதிலோ இது உதவாது. அவர்களும் மற்றவர்களைப்போல படித்து, மனப்பாடம் செய்ய வேண்டும்." என்கிறார்.

"ஆனால் படித்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டுவருவது வேண்டுமானால், மற்றவர்களை விட இவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும்." எனக் கூறினார்.

இதற்கான அறிகுறிகள் என்ன?

இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருவேளை உங்களுக்கும் இந்த மருத்துவ நிலை இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி,

  • வழக்கத்திற்கு மாறான நினைவாற்றல் - உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை அதீத விவரங்களுடன் நினைவில் கொள்வது

  • தானாக நினைவுகொள்தல் - உங்களை அறியாமலேயே கடந்தகால தருணங்கள் நினைவில் தோன்றுவது. குறிப்பாக தேதி அல்லது சில குறிப்புகளை பார்க்கையில் இது தோன்றலாம்.

  • காலண்டரைப் போன்ற திறன் - ஒரு குறிப்பிட்ட தேதியில், பல தசாப்தங்களுக்கு முன்பும் கூட என்ன செய்து கொண்டிருந்தீர் என்பதையும் உடனடியாகக் கூறிவிடுவீர்கள்.

  • வலுவான உணர்வு பிணைப்பு - அந்த தருணம் நிகழும்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ, அதை நினைவில் கொள்ளும்போதும் அதே உணர்வு தோன்றும்.

  • நேரம் - சராசரி மக்களை விட கடந்த காலத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பீர்கள்.

அச்சு பிசகாத நினைவாற்றல்

HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ்.

இதுபற்றி 2017ஆம் ஆண்டு பிப். 8ஆம் தேதி 'தி கார்டியன்' இதழில் ஒரு கட்டுரை வெளியானது. பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் லிண்டா ரோட்ரிக்ஸ் மெக்ராபி இதனை தொகுத்திருந்தார். அதில் 1974ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ் என்ற பெண்ணுக்கு HSAM எனப்படும் இந்த மருத்துவ நிலை முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1965-ல் பிறந்தவர்.

இந்த கட்டுரையின் படி, இவரிடம் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று என்ன நடந்தது எனக் கேட்டபோது, "அது ஒரு வெள்ளிக்கிழமை" என தனது நினைவில் தோன்றியதை விவரிக்கிறார். தொடர்ந்து "எனது இரட்டை சகோதர நண்பர்களான நினா மற்றும் மைக்கேல் உடன் பாம் ஸ்பிரிங்ஸ் சென்றேன். அதற்கு முன்பாக அவர்கள் வாக்ஸிங் செய்துகொண்டனர். அப்போது வலியால் கத்திக்கொண்டே இருந்தார்கள்" என சிறிய விவரங்களையும் நேற்று நடந்ததைப் போல அச்சுப் பிசகாமல் விரிவாக விவரித்தார்.

இவர் தனது 51 வயதிலும், 1980 முதல் என்ன நடந்தது என்பதை அவ்வளவு நுணுக்கமாக நினைவில் வைத்துள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில சமயங்களின் அவரின் விருப்பமின்றியே நிறைய விஷயங்கள் அவரின் நினைவில் உதிப்பதாகவும் கூறினார்.

51 வயதிலும் இவரின் நினைவுகள் துல்லியமாக இருப்பது பற்றி மருத்துவர் விஜய சங்கரிடம் கேட்டபோது, "இந்த நிலை கொண்டவர்களுக்கு வயதாக ஆக ஞாபகங்கள் மறைந்துவிடும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. 70 - 80 வயதுகளில் கூட இவர்களால் துல்லியமாக கடந்த காலத்தை நினைவுகூர முடியும்" என்றார்.

ஜில் பிரைஸ் தொடர்பான மெக்காக்-ன் ஆய்வறிக்கை வெளியான பின்பு, 2007ல் பிராட் வில்லியம்ஸ் என்பவருக்கு இந்த நிலை இருப்பதாக மெக்காக்-ஐ நாடினார். 2வதாக இவருக்கு இந்த நிலை உறுதி செய்யப்பட்டது. பின் 3வதாக ரிக் பாரன், 4வதாக பாப் பெட்ரெல்லா என அவரின் ஆய்வறிக்கை வெளியான பிறகு பலரும் இந்த மருத்துவ நிலை இருப்பதாக தன்னை தொடர்புகொண்டதாக மெக்காக் குறிப்பிடுகிறார்.

2011ஆம் ஆண்டில் இந்த HSAM மருத்துவ நிலை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும். அப்போதுவரை உலகிலேயே 22 பேருக்கு மட்டுமே இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக தி கார்டியனில் வெளியான கட்டுரை கூறுகிறது.

இதற்கு காரணம் என்ன?

பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக்

"ஒரு தருணம் எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தளவிற்கு அது நினைவில் கொள்ளப்படுகிறது" என நினைவாற்றல் பற்றி பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் ஆய்வு கூறுகின்றன.

நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சுவாரஸ்யத்தை சற்று தூண்டும் விதமான உணர்வு ஏற்படும்போது, அது அட்ரீனல் ஸ்ட்ரெஸ் (adrenal stress) ஹார்மோன்களை வெளியேற்றும்.

இந்த ஹார்மோன்கள் மூளையில் உணர்வுகளை செயல்படுத்தும் பகுதியான அமிக்டலாவை (amygdala) செயல்படுத்தும். இந்த அமிக்டலா இது முக்கியமான தருணம் எனவும், இதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் மூளையின் மற்ற பகுதிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இந்த முறைதான் நமது நினைவுகள் எவ்வளவு வலிமையாகின்றன என்பதை தீர்மானிக்க உதவுகிறது." என மெக்காக் விளக்குகிறார்.

"சாதாரண நினைவாற்றல் கொண்ட நபர்களை விட HSAM நிலை கொண்டவர்களால் எளிதில் பழைய நினைவுகளை நினைவுகூர முடியும்" என UCI நரம்பியல் பட்டதாரி மாணவர் அரோரா லிபோர்ட் மற்றும் நரம்பியல் நிபுணரும், டாக்டர் க்ரைக் ஸ்டார்க் மே 12ஆம் தேதி வெளியிட்ட கற்றல் மற்றும் நினைவாற்றல் பற்றிய நியூரோபயாலஜி இதழ் (The Journal Neurobiology of Learning and Memory) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த நினைவுகளை சரிபார்த்தால் இவை 87% உண்மையானதாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளையின் அமிக்டலா பகுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளையின் அமிக்டலா பகுதி

ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள்

சமீபத்தில் பிரான்ஸை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இந்த மருத்துவ நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக செப்டம்பர் 1ஆம் தேதி PsyPost செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சிறுமியை பாரிஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

"சிறுவயதில் தனக்கு கடந்த கால நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்க்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது இவரை யாரும் நம்பவில்லை. பின் தனது 16 வயதில்தான் இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்" என அந்த கட்டுரை கூறுகிறது.

இது பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH), ஆராய்ச்சியாளர் வாலண்டினா லா கோர்டேவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் குறிப்பிட்ட நாளின் வானிலை முதற்கொண்டு துல்லியமாக கூறும் இவரின் இந்த திறன் கல்வியறிவில் எடுபடவில்லை. படிப்பு சார்ந்தவை என வரும்போது அதன் நினைவுகள் தானாக வருவதில்லை. தாமாக முயன்றால் மட்டுமே ஞாபகம் வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, இவரின் சுயசரிதை நினைவாற்றலை மதிப்பிட இருமாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தனது வாழ்நாளில் 5 கட்டங்களில் இருந்து 4 தருணங்களை நினைவுகூரச் செய்தனர். இதில் இவருக்கு எந்தளவுக்கு துல்லியமாக தருணங்களை நினைவில் கொள்ள முடிகிறது என பரிசோதிக்கப்பட்டது.

இரண்டு முக்கிய மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. ஒன்று ஒட்டுமொத்த நினைவக மதிப்பெண். மற்றொன்று குறிப்பிட்ட மற்றும் விரிவான நினைவுகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு எபிசோடிக் மெமரி (EM).

"இந்த பரிசோதனையில் இவருக்கு கடந்த கால நினைவுகள் தெளிவாக இருந்தன. அவை மீண்டும் நடப்பது போல் அடிக்கடி அவர் உணர்கிறார். மனம் சார்ந்த இவரின் காலத்தை கடக்கும் ஆற்றல் கடந்த காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் செல்கின்றன. இவரால் தனது எதிர்கால நிகழ்வுகளையும் விரிவாக கணிக்க முடிகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது. இது அந்த சிறுமிக்கு வலுவான சுய விழிப்புணர்வு மற்றும் முன் அனுபவ உணர்வுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிடுகிறது.

வரமா? சாபமா?

இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ்

ஹைப்பர்தைமீசியா நிலையைக் கொண்டவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதுபற்றி என்ன கூறுகிறார்கள்?

"பலரும் இதை ஆசிர்வாதம் என நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு சுமை" என்கிறார் ஜில் பிரைஸ். "தினமும் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது என்னை பைத்தியமாக்குகிறது" என்கிறார்.

"இது பிளவு திரை (Split Screen) உடன் வாழ்வது போல இருக்கும். இடதுபுறம் நிகழ்காலமும், வலதுபுறத்தில் கடந்த கால நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்கும்" என தி கார்டியன் கட்டுரைக்கு விவரித்திருந்தார்.

"நாம் நினைவில் இல்லாததை மறதி எனக் கூறுகிறோம். ஆனால் சிறிய தகவல்களை சேமித்து வைப்பதால் என்ன பயன். அதன்மூலம் ஏதாவது பயனுள்ளதை வெளிக்கொணர வேண்டும். அப்போது தான் அது அறிவு அல்லது ஞானமாக மாறும்" என நரம்பியல் மருத்துவர் க்ரைக் ஸ்டாக் கூறுகிறார்.

"நினைவு என்பது கடந்த காலத்தை நோக்கியது. உங்கள் கடந்தகால அனுபவங்கள் இங்கே, இப்போது மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாற்றும் வகையில் இருக்கிறது." என ஆராய்ச்சியாளர் லிபோர்ட் கூறுகிறார்.

"ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நிலை இருப்பதால், ஹைப்பர்தைமீசியாவை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவது கடினம். வயதாக ஆக இவர்களின் நினைவாற்றல் குறையுமா? இவர்களின் இந்த மனம் சார்ந்த டைம் டிராவல் வயதை பொருத்ததா? நினைவுகள் தோன்றுவதை இவர்களால் கட்டுப்படுத்த முடியுமா? என எங்களுக்கு இதில் பல கேள்விகள் உள்ளன. இவை இன்னும் கண்டறியப்பட வேண்டும்." என லா கோர்டே தெரிவித்துள்ளார்.

இதற்கு தீர்வு உண்டா?

இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

"இந்த நிலை இருப்பவர்களால் எதையும் மறக்க முடியாது என்பதே இவர்களுக்கு பின்னடைவாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

மேலும் பேசிய அவர், "சாதாரணமாக நம்மை பொறுத்தவரை காலப்போக்கில் சில விஷயங்களை மறந்துவிட முடியும். ஆனால் இவர்களால் ஒரு இழப்பையோ, மறக்க நினைக்கும் விஷயங்களையோ, அதிர்ச்சியளிக்கும் தருணங்களையோ இவர்களே நினைத்தாலும் மறக்க முடியாது. இதனால் இவர்களால் அந்த துயரில் இருந்து மீளவே முடியாமல் போகும்" என்கிறார்.

"இதனால் Obsessive compulsion ஏற்படும். அதாவது மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே யோசிக்கத் தோன்றும். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது." எனவும் கூறினார்.

இந்த மருத்துவ நிலையை சரிசெய்ய வழி உண்டா என அவரிடம் கேட்டபோது, "இது நோய் இல்லை என்பதால் இதற்கு தனியாக மருத்துவமோ, தீர்வோ கிடையாது. பொதுவாக இந்த நிலை இருப்பவர்கள் யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் மனதை சற்று தளத்த் முடியும். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, தூங்க வேண்டும் என பரிந்துரைப்போம். மேலும் அவர்கள் மன அழுத்தத்திற்கு சென்று விடாமல் இருக்க, ஆலோசனைகளும் வழங்கப்படும்." என்றார்.

மேலும், "ஒரு வகையில் அவர்களின் நினைவாற்றல் வரம் என்றாலும், அதிலும் சில கஷ்டங்கள் இருக்கும். சில சமயங்களில் மனநல ஆலோசனைகள் வழங்குவது அவர்களுக்கு உதவியாக இருக்கும்." என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn4wwyz82d0o

விண்வெளியில் போர் மூளுமா? அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் யார் வலிமையானவர்?

3 weeks 3 days ago

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

9 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது.

இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது.

இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது.

தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது.

மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார்.

விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார்.

ஆனால் இதுவரை எந்தப் போரும் விண்வெளியில் நடக்கவில்லை. அமெரிக்காவும் இதை விரும்பவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

செயற்கைக்கோள் போர் உலகுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மிகவும் முக்கியம்

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூமியின் சுற்றுப்பாதையில் 11,700 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் இருப்பதாக கூறுகிர் முனைவர் ராஜி ராஜகோபாலன்

ஆஸ்திரேலிய மூலோபாய நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் விண்வெளி பாதுகாப்பு விஷயங்களில் நிபுணருமான முனைவர் ராஜி ராஜகோபாலன், தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் 11,700 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகள் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் தொடர்பு மற்றும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த செயற்கைக்கோள்களில் சுமார் 630 செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

மொத்த செயற்கைக்கோள்களில் பாதியளவு ராணுவ செயற்கைக்கோள்கள் என்று ராஜி ராஜகோபாலன் குறிப்பிட்டார்.

இவற்றில் சுமார் 300 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானவை.

ரஷ்யாவும், சீனாவும் பல ராணுவ செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளன.

இந்த செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளில் ராணுவத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுகின்றன. இவை ராணுவத்தின் செயல்திறனை அதிகரிக்கின்றன.

1990ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில் நேச நாட்டுப் படைகளின் நடவடிக்கைகளில் செயற்கைக்கோள்கள் மிக முக்கிய பங்கு வகித்தன.

பாலைவனத்தில் வீரர்கள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல செயற்கைக்கோள் மூலம் இயக்கப்படும் ஜிபிஎஸ் பயன்படுத்தப்பட்டது.

உலகின் முதல் விண்வெளிப் போர் என்றும் இது அழைக்கப்படுகிறது.

"இப்போதெல்லாம் அரசாங்கங்கள் உளவுத்துறை தகவல்களைச் சேகரிக்கவும் இலக்குகளைக் கண்காணிக்கவும் இதைப் பயன்படுத்துகின்றன. எதிர்காலத்தில் அனைத்து முக்கியப் படைகளும் இந்த அமைப்பை பயன்படுத்தும். செயற்கைக்கோள் உதவியுடன், இலக்கு கண்டறியப்படுவது மட்டுமல்லாமல், இலக்கைத் துல்லியமாகத் தாக்க ஆயுதங்களும் வழிநடத்தப்படுகின்றன" என்று முனைவர் ராஜி ராஜகோபாலன் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியா 2029 ஆம் ஆண்டுக்குள் 52 செயற்கைக்கோள்களை விண்வெளியில் அனுப்பும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக அறிவித்தது.

அப்படியானால் ஒரு நாடு செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன்பு தகவல்களை வழங்குவது அவசியமா?

எந்தவொரு நாடும் செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறார் முனைவர் ராஜி ராஜகோபாலன்.

அந்த செயற்கைக்கோள்

  • என்ன வகையானது?

  • எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

  • எவ்வளவு காலம் செயல்படும்?

  • அதை மீண்டும் எப்படிக் கொண்டு வருவார்கள்?

  • விண்வெளியில் எங்கு வைக்கப்படுகிறது? என்பன போன்ற அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இது செயற்கைக்கோள்கள் ஒன்றோடோன்று மோதுவதைத் தடுக்கும்.

ஆனால் இப்போது பல நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதில்லை.

1962 ஆம் ஆண்டில், அமெரிக்கா விண்வெளியில் ஒரு அணுகுண்டை சோதித்தது, அதன் கதிர்வீச்சு பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை சேதப்படுத்தியது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், விண்வெளியில் அணு மற்றும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது.

ஐக்கிய நாடுகள் விண்வெளி நிறுவனம் இப்போது அதைக் கண்காணித்து வருகிறது.

இந்த அமைப்பு விண்வெளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அதிகம் பங்களித்திருக்கிறது என்கிறார் ராஜி ராஜகோபாலன்.

இந்த ஒப்பந்தத்தில் விண்வெளியில் உள்ள வழக்கமான ஆயுதங்களைப் பற்றி எந்தத் தடையும் இல்லை. அவை கூட பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என்பதால், இது ஒரு முக்கியமான பாதுகாப்பு சிக்கல்.

அதேபோல், கடந்த சில ஆண்டுகளில் விண்வெளியில் வணிக செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உட்பட பல தனியார் நிறுவனங்களின் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பிராட்பேண்ட் இணைய வசதி மற்றும் பிற வசதிகளுக்காக விண்வெளியில் உள்ளன.

அதேபோல், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடுகளுக்கு இடையிலான பதற்றமும் அதிகரித்து வருகிறது.

விண்வெளியில் என்ன நடக்கிறது?

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்வெளி போட்டியில், ரஷ்யா 1957 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கைக்கோளை ஏவி அமெரிக்காவைத் தோற்கடித்தது.

ஜெர்மன் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ஜூலியன் சூஸ், பூமியில் எங்காவது தாக்குதல் நடந்தால், அதை நாம் பார்க்க முடியும் என்கிறார்.

ஆனால் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் என்ன செய்கின்றன என்பது பற்றிய தகவல்களை செயற்கைக்கோள்கள், ரேடார் அல்லது செயற்கைக்கோள் கண்காணிப்பு தரவுகளால் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் பெறுகிறோம்.

ஒரு நாடு வேண்டுமென்றே மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழிக்க முயன்றால் என்ன நடக்கும்?

"இது ஒரு லட்சுமண ரேகை, இதுவரை யாரும் அதைக் கடக்கவில்லை. ஆம், செயற்கைக்கோள்கள் சிக்னல்களை சீர்குலைத்து தவறான சிக்னல்களை உருவாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன" என்கிறார் ஜூலியன் சுஸ்.

தற்போது விண்வெளி வளங்கள் நேட்டோவின் வாஷிங்டன் ஒப்பந்த பிரிவு 5 இல் சேர்க்கப்பட்டுள்ளன.

அதாவது, நேட்டோ உறுப்பினரின் செயற்கைக்கோளை யாராவது தாக்கினால், நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் கீழ் தாக்குதல் நடத்தும் நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் விளக்குகிறார்.

ஆனால் செயற்கைக்கோள் சேதமடைவதற்கான காரணம் குறித்த உடனடித் தகவல் கிடைக்காததும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

ஒரு செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோளுக்கு அருகில் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் சூஸ்.

இது ஒரு செயற்கைக்கோளைப் படம் எடுப்பதற்கான முயற்சியாகவோ அல்லது அதைப் பற்றிய உளவுத்துறை தகவல்களைப் பெறுவதற்கான முயற்சியாகவோ இருக்கலாம்.

குறிப்பாக, அந்த செயற்கைக்கோளின் செயல்பாடு பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றால், அது மிக முக்கியமான விஷயமாகும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலகில் பெரிய ராணுவங்களை கொண்டுள்ளன. இந்த அனைத்து ராணுவங்களும் விண்வெளியில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை உருவாக்கியுள்ளன.

இவை பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்ல, எனவே விண்வெளியில் அவற்றின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை.

விண்வெளியில் அமெரிக்கா மிகப்பெரிய சக்தியாக உள்ளது என்று ஜூலியன் சூஸ் கூறுகிறார்.

2008 ஆம் ஆண்டில், அது அதன் செயற்கைக்கோள்களில் ஒன்றை அழித்தது. இதைத் தவிர, அமெரிக்கா மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்கிறது.

உதாரணமாக, அமெரிக்கா மற்ற செயற்கைக்கோள்களைப் போலவே ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்வெளியில் செலுத்தக்கூடிய X-37 விண்வெளி விமானத்தை உருவாக்கி வருகிறது. இந்த விமானம் இரண்டு ஆண்டுகள் விண்வெளியில் தங்கி பின்னர் தானாகவே பூமிக்குத் திரும்பும்.

அதேபோல், தகவல் தொடர்புகளுக்கான ஜிபிஎஸ்-க்கு மாற்றாக லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

விண்வெளி பந்தயத்தில், ரஷ்யா 1957 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வரும் முதல் செயற்கைக்கோளை ஏவி அமெரிக்காவை முந்தியது.

ஆனால் அதன் பின் வந்த காலத்தில் ரஷ்யாவின் விண்வெளித் திட்டம் அமெரிக்காவை விட பின்தங்கி விட்டது.

யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் அதன் விண்வெளித் திட்டங்களையும் பாதித்துள்ளன.

மறுபுறம், உளவுத்துறை மற்றும் தகவல் தொடர்புகளைச் சேகரிப்பதற்கு செயற்கைக்கோள்களையே அமெரிக்கா பெருமளவில் சார்ந்துள்ளது.

ரஷ்யா இதை அமெரிக்காவின் பலவீனமாகக் கருதி, செயற்கைக்கோள்களை குறிவைத்து ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. சீனாவும் இந்தத் துறையில் பின் தங்கிவிடவில்லை.

"2024 ஆம் ஆண்டில் 100 செயற்கைக்கோள்களை ஏவுவதே சீனாவின் இலக்காக இருந்தது, ஆனால் அதனால் 30 செயற்கைக்கோள்களை மட்டுமே அனுப்ப முடிந்தது. செயற்கைக்கோள்களை குறிவைக்கும் ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில், அதன் செயற்கைக்கோள்கள் மற்ற செயற்கைக்கோள்களைச் சுற்றி வேகமாக நகரும் திறனைப் பெற்றுள்ளன. சில செயற்கைக்கோள்கள் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தான முறையில் அருகில் சென்றன," என்று கூறுகிறார் ஜூலியன் சுஸ்.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் அதிக வேகத்தில் சுழல்கின்றன, அவை ஒன்றுடன் ஒன்று மோதினால், அவற்றின் துண்டுகள் விண்வெளியில் சிதறக்கூடும்.

ஒரு சென்டிமீட்டர் துண்டு கூட, அதிவேகத்தில் நகர்ந்தால், ஒரு வெடிகுண்டை போலவே சேதத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்படியான சூழ்நிலையில் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தினால் அது பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கிறார் ஜூலியன் சுஸ்.

உதாரணமாக, ரஷ்யா விண்வெளியில் அத்தகைய ஆயுதத்தைப் பயன்படுத்தினால், செயற்கைக்கோள் சிதைவதால் உருவாகும் துண்டுகள் அதன் சொந்த செயற்கைக்கோள்களையும் சேதப்படுத்தும்.

சமீபத்தில், சீனாவும் ரஷ்யாவும் நிலவில் ஒரு அணு உலையை நிறுவ ஒப்புக்கொண்டன. இது எதிர்கால ஆராய்ச்சிப் பணிகளுக்கு மின்சாரம் தயாரிக்கப் பயன்படும்.

தொழில்நுட்ப திட்டங்கள்

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images

படக்குறிப்பு, கோல்டன் டோம் அமெரிக்காவை வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முடியும்.

சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் விண்வெளிச் சட்டம் மற்றும் தரவு திட்டத்தின் இயக்குனர் சாடியா பெக்கரானன், விண்வெளித் தொழில்நுட்பம் என்பது ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களை விண்வெளியில் ஏவுவது மட்டுமல்ல என்கிறார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் ஈடிடி (EDT) எனப்படும் தானியங்கி ரோபாட்டிக்ஸ்(autonomous robotics) போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும் என்று சாடியா கூறினார்.

தானியங்கி ரோபாட்டிக்ஸ் மூலம், இயந்திரங்கள் விண்வெளியில் தானாகவே வேலை செய்ய முடியும்.

"இது எதிர்காலத்தில் விண்வெளி பாதுகாப்பின் முழு கட்டமைப்பையும் மாற்றக்கூடும். இது அமெரிக்காவை வான் தாக்குதல்கள் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு பாதுகாப்புக் கவசத்தையும் (Golden Dome) கொண்டுள்ளது."

ஸ்டார்ஷீல்ட் என்பது பல செயற்கைக்கோள்களை பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பு அமைப்பு.

இது அமெரிக்க அரசாங்கத்தாலும் ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஜனவரி மாதம் அதிபர் டிரம்ப் கோல்டன் டோம் திட்டத்தை முன்மொழிந்தார். எதிரி ஏவுகணைகளைக் கண்டறிய ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் தேவைப்படும்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை விரைவாக பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் திறனை ராணுவம் பெறும் என்கிறார் சாடியா பெக்கரானேன் கூறுகிறார்.

இது பாதுகாப்புத் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கலாம்.

இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அமெரிக்காவும் சீனாவும் மற்ற நாடுகளை விட முன்னிலையில் உள்ளன என்கிறார் சாடியா பெக்கரானன்.

"விண்வெளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அவர்கள் இதில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்."

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ராணுவ செயற்கைக்கோள்களின் செயல்பாட்டுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று கேள்வி எழுப்பினால், எந்த தொழில்நுட்பமும் நிலைத்திருக்க முடியாது என்கிறார் சாடியா பெக்கரானன்.

விண்வெளியில் இந்த உபகரணங்களின் ஆயுட்காலம் காலாவதியாகும் தருவாயில், அவற்றை சரிசெய்ய வேண்டியிருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், புதிய தொழில்நுட்பம் அவற்றை விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக அகற்றவும் உதவும்.

உலகில் அவற்றின் தாக்கம் எத்தகையது?

விண்வெளியில் போர், அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்துவிட்டால், அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகளால் அதன் சொந்த செயற்கைக்கோள்களும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது.

முனைவர் பிளெவின்ஸ் போவன், பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆஸ்ட்ரோ பாலிடிக்ஸ் துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார். செயற்கைக்கோள் போர் தொடர்பான விஷயங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு அவர் ஆலோசனை வழங்கி வருகிறார்.

விண்வெளியில் ஒரு செயற்கைக்கோள் போர் நடந்தால், அதனால் ஏற்படும் சேதம் மற்றும் தாக்கத்தை துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்று அவர் நம்புகிறார், ஏனெனில் விண்வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் உள்ளன, அவற்றின் உதவியுடன் மக்களுக்கு பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.

எந்த செயற்கைக்கோள்கள் அழிக்கப்படுகின்றன என்பதையே இது பெரும்பாலும் சார்ந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது வழியைக் கண்டறிய அல்லது உணவை ஆர்டர் செய்ய உதவும் ஜிபிஎஸ் சிக்னல்களை அனுப்பும் செயற்கைக்கோள்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், பொருளாதாரச் சேவைகளில் இன்னும் கடுமையான பாதிப்பு ஏற்படும், ஏனெனில் செயற்கைக்கோள்களில் அணு கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன, வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் பரிவர்த்தனையின் நேரம் என்ன என்பதை யாருடைய நேரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த சேவைகள் நிறுத்தப்படலாம்.

விவசாயிகள் மற்றும் வானிலை துறைகள் விவசாயம் அல்லது இயற்கை பேரழிவுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள்களிலிருந்து தகவல்களைப் பயன்படுத்துகின்றன.

இது மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

உதாரணமாக, புயல்கள் அல்லது பிற பேரழிவுகள் பற்றிய துல்லியமான தகவல்களை மக்கள் சரியான நேரத்தில் பெறவில்லை என்றால், பலர் இறக்க நேரிடும்.

ஒரு நாடு ஒரு செயற்கைக்கோளின் இழப்பை எவ்வாறு சமாளிக்கிறது என்பது அது எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைப் பொறுத்தது.

விண்வெளியில் நேரடித் தாக்குதலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிக்க நாடுகளுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவைப்படும் என்றும் முனைவர் பிளெவின்ஸ் போவன் நம்புகிறார்.

அவர்கள் விண்வெளியில் மாற்று செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த வேண்டும், அல்லது செயற்கைக்கோள்கள் இல்லாமல் வேலை செய்யக்கூடிய உபகரணங்களின் வலையமைப்பை பூமியில் உருவாக்க வேண்டும்.

அவை செயற்கைக்கோள்களைப் போல பயனுள்ளதாக இல்லாவிட்டாலும், அவசரகாலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் செயற்கைக்கோள்கள் எப்போது, எப்படி தாக்கப்படும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்.

விண்வெளியில் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன என்கிறார் பிளெவின்ஸ் போவன்.

"பூமியில் நாடுகளுக்கு இடையிலான மோதல் கட்டுப்பாட்டை மீறும் போதுதான் விண்வெளியில் போர் பரவும். வெளிப்படையாக பலர் அதில் இறந்துவிடுவார்கள். இது மிகவும் தீவிரமான விஷயம், எனவே பூமியில் நடக்கும் மோதல்களைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கவலைப்படுகிறீர்கள் என்றால், அதை விட விண்வெளிப் போரைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படக் கூடாது என்பதே எனது கருத்து."

எனவே செயற்கைக்கோள் போரினால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது?

விண்வெளியில் உள்ள இயற்கையாலோ அல்லது மனிதனாலோ உருவாக்கப்பட்ட மிகச்சிறிய பொருள் கூட ஆபத்தானதாக இருக்கலாம்.

செயற்கைக்கோள்களை ஆயுதமாக்குவது எப்போதும் நோக்கமாக இருக்காது. ஆனால் தொழில்நுட்பம் இப்போது வணிக மற்றும் ராணுவ செயற்கைக்கோள்களுக்கு இடையிலான கோடுகளை மங்கலாக்கியுள்ளது.

பல நாடுகள் தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை தாக்கி அழித்து தங்களத திறனை பரீட்சித்துப் பார்த்துள்ளன.

ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்துவிட்டால், அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகளால் அதன் சொந்த செயற்கைக்கோள்களும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது.

அதேபோல், விண்வெளியில் தாக்குதல் நடந்தால், அது பூமியிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgj5vv3kq5o

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா? செவ்வாயின் 'சிறுத்தை' தடத்தில் நாசா தீவிர ஆய்வு

4 weeks ago

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், NASA/JPL

படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன.

கட்டுரை தகவல்

  • ரெபேக்கா மோரல்

  • அறிவியல் ஆசிரியர்

    13 செப்டெம்பர் 2025, 01:53 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன.

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன.

இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது.

இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள்.

"இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

"நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

"இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே.

நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது.

2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள்.

"இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது.

"நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார்.

பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன.

"இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது"

விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை.

"உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம், NASA/JPL

படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது.

பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும்.

நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர்.

"இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார்.

"உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xr4vzrkqpo

தக்காளியின் கலப்பு இனப்பெருக்கத்தில் உருளைக்கிழங்கு உருவானது எப்படி? சுவாரஸ்யமான அறிவியல் கதை

1 month ago

ஒரு விவசாய சந்தையில் வைக்கப்பட்டிருக்கும் தக்காளிகள் மற்றும் உருளைக்கிழங்குகளின் காட்சி

Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கட்டுரை தகவல்

  • டலியா வென்சுரா

  • பிபிசி முண்டோ

    10 செப்டெம்பர் 2025, 04:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT

சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை.

அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solanum etuberosum) எனப்படும் ஒரு தாவர வகையின் முன்னோடிகள். இதன் தற்போதைய மூன்று இனங்கள் சிலி மற்றும் ஜுவான் ஃபெர்னாண்டஸ் தீவுகளில் காணப்படுகின்றன," என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தாவரவியல் நிபுணர் சாண்ட்ரா நாப் கூறினார்.

அவற்றின் பெயர்களில் இருந்து அவை தொடர்புடையவை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், அவை ஒன்றோடொன்று கலந்து இனப்பெருக்கம் அடைந்தன. "இவ்வாறு உருவாகியது புதிய தாவரம் ஒன்றை உருவாக்கிய மரபணுக்களின் மறுசீரமைப்பு," என்றும் இது "அந்த தாவரத்தை குளிர் மற்றும் வறண்ட ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் செழித்து வளர அனுமதித்தது" என்றும் நாப் கூறுகிறார்,

நிபுணர்கள் இதை இனங்களுக்கு இடையிலான கலப்பு இனப்பெருக்கம்( இன்டர்ஸ்பெசிஃபிக் ஹைப்ரிடைசேஷன் - interspecific hybridisation) என்று அழைக்கிறார்கள், இவ்வகை இனப்பெருக்கம் அடிக்கடி நிகழ்கிறது, சில சமயங்களில் இதன் விளைவுகள் துரதிர்ஷ்டவசமாக இருந்தன.

உதாரணமாக, பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் இடையிலான இனச்சேர்க்கை காரணமாக கோவேறு கழுதை பிறக்கிறது. இது வெற்றிகரமான கலப்பினமாக இருந்தாலும், பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கே தம்மை இனப்பெருக்கம் செய்யும் திறன் இல்லை.

தாவர உலகில், இனங்களுக்கிடையேயான கலவைகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று நாப் கூறுகிறார் - இப்படித்தான் நாம் தோட்டத் தாவரங்களைப் பெரும்பாலும் பெற்றுள்ளோம். இந்த கலப்பு இயற்கையாகவோ அல்லது மனிதர்களின் தலையீட்டாலோ நடக்கலாம், இரண்டு வகை பெற்றோரின் கலவையான தாவரங்களை உருவாக்குகிறது.

"சில சமயங்களில் அவை மலட்டுத்தன்மை கொண்டவையாக இருக்கும், எனவே அவை ஒரு புதிய இனமாக உருவாகாது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சூழ்நிலைகளின் சேர்க்கைக்கு பொருத்தமாக இருக்கும்போது, அந்த கலவையின் விளைவு எதிர்பார்ப்புகளை விஞ்சுவதாக அமையும்.

அப்படித்தான் அன்று நடந்தது. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சோலானேசியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இனங்களுக்கு இடையிலான தற்செயலான கலப்பில் இருந்து உருளைக்கிழங்கு பிறந்தது.

ஒரு சோலனம் எட்யூபெரோசம் (Solanum etuberosum) தாவரம் அருகே ஒரு சோலனம் லைகோபெர்சிகம் (Solanum lycopersicum) தாவரத்தின் விளக்கப்படம்

LOC/Biodiversity Heritage Library சோலனம் லைகோபெர்சிகம்(இடது) மற்றும் சோலனம் எட்யூபெரோசம் (வலது), இவை உருளைக்கிழங்கை உருவாக்கின.

"நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமாக உள்ள உருளைக்கிழங்குக்கு இப்படி ஒரு பழமையான, அசாதாரணமான துவக்கம் இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது," என்று நாப் கூறுகிறார்.

"தக்காளி அதன் தாய், எடூபரோசம் தந்தை" என்று சீன வேளாண் அறிவியல் அகாடமியின் பேராசிரியர் சான்வென் ஹுவாங் அறிவித்தார், அவர் ஜூலை மாதம் செல் (Cell) இதழில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.

நீண்டகால மர்மம் எப்படி அகன்றது?

சந்தையில் பார்க்கும்போது, கடினமான, மாவுத்தன்மை கொண்டதாக அமைந்த உருளைக்கிழங்கு, சிவப்பான, சாறுள்ள தக்காளியைப் போன்று தெரியவில்லை என்றாலும், "அவை மிகவும், மிகவும் ஒத்தவை," என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாப் கூறுகிறார்.

அந்த விஞ்ஞானியின் கூற்றுப்படி, இரண்டு தாவரங்களின் இலைகளும் பூக்களும் மிகவும் ஒத்தவை, மேலும் உருளைக்கிழங்கு தாவரத்தின் பழம் கூட ஒரு சிறிய பச்சை தக்காளி போலத் தெரிகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

"நாம் பார்ப்பதைத் தாண்டி, உருளைக்கிழங்குகள், தக்காளிகள் மற்றும் எடூபரோசம் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை என்று நமக்கு நீண்ட காலமாகத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உருளைக்கிழங்குக்கு எது மிக நெருக்கமானது என்பது நமக்குத் தெரியாது, ஏனென்றால் வெவ்வேறு மரபணுக்கள் நமக்கு வெவ்வேறு தகவல்களைக் கூறின."

ஒரு நீளமான டாம்டேடோ தாவரம், அதன் மேல் தக்காளிப் பழங்களும், கீழே உருளைக்கிழங்குகளும் உள்ளன.

Thompson & Morgan உருளைக்கிழங்குகளும் தக்காளிகளும் மிகவும் ஒத்தவை, அவற்றை ஒட்டுவதால், இந்த டாம்டேடோ (TomTato) என்று அழைக்கப்படும் தாவரம் போன்ற இரண்டையும் உருவாக்கும் ஒரு தாவரம் பிறக்கிறது. இதை தாம்சன் & மோர்கன் என்ற தோட்டக்கலை நிறுவனம் உருவாக்கியது.

பிரபலமான உருளைக் கிழங்கின் தோற்றம் குறித்த புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக முயற்சித்துள்ளனர், ஆனால் அவர்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டனர்.

உருளைக்கிழங்கின் மரபியல் அசாதாரணமானது. மனிதர்கள் உட்பட பெரும்பாலான உயிரினங்களுக்கு ஒவ்வொரு செல்லிலும் இரண்டு குரோமோசோம்களின் நகல்கள் இருக்கும் நிலையில், உருளைக்கிழங்குக்கு நான்கு உள்ளன.

எனவே, இந்த முரண்பாட்டைத் தீர்க்க, ஆராய்ச்சியாளர்கள் குழு, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எடூபரோசம் உட்பட டஜன் கணக்கான இனங்களிலிருந்து 120க்கும் மேற்பட்ட மரபணுக்களை (ஒரு செல்லில் உள்ள மரபணுக்களின் முழுமையான தொகுப்பு) பகுப்பாய்வு செய்தனர். அவர்கள் வரிசைப்படுத்திய உருளைக்கிழங்கு மரபணுக்கள் கிட்டத்தட்ட அதே தக்காளி-எடூபரோசம் பிளவைக் காட்டின.

உருளைக் கிழங்கின் முன்னோடி "இதுவும் இல்லை, அதுவும் இல்லை: அது இரண்டும்," என்று நாப் வலியுறுத்துகிறார்.

அப்படியாகத்தான், தென் அமெரிக்க மலைகளின் அடிவாரத்தில் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த காதல் உறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

"இது ஒரு வெற்றிகரமான கலவையாகும், ஏனென்றால் இது ஆண்டிஸ் மலைத்தொடரின் புதிதாக உருவாக்கப்பட்ட உயரமான வாழ்விடங்களில் இந்த புதிய இனம் செழிக்க அனுமதித்த மரபணு சேர்க்கைகளை உருவாக்கியது" என்று நாப் விளக்குகிறார்.

உருளைக்கிழங்கு தாவரத்தின் தரைக்கு மேல் இருக்கும் பகுதி அதன் பெற்றோரை ஒத்திருந்தாலும், அதில் ஒரு அம்சம் மறைந்திருந்தது, அது வேறு எந்த தாவரத்திற்கும் இல்லை: அதுதான் கிழங்குகள்.

கிழங்குகள் இருப்பது என்பது எப்போதும் கைவசமாக ஒரு உணவுக் கூடை வைத்திருப்பது போன்றது: அவை ஆற்றலைச் சேமித்து, குளிர்காலம், வறட்சி அல்லது வேறு எந்தச் சாதகமற்ற சூழ்நிலைகளிலும் உயிர்வாழ உதவுகிறது.

சிறிய தக்காளி போன்ற பழங்களைக் கொண்ட ஒரு Solanum tuberosum (உருளைக்கிழங்கு) தாவரத்தின் விளக்கப்படம்.

Getty Images வரைகலையில் உள்ள "c" எழுத்து, சிறிய தக்காளிகள் போன்ற உருளைக்கிழங்கின் பழங்களைக் காட்டுகிறது.

நடந்திருக்கும் மரபணு குலுக்கல்

விஞ்ஞானிகள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் கண்டுபிடித்தனர்: கிழங்குகளை உருவாக்கிய தாவரம், ஒரு மரபணு குலுக்களில் வென்றதன் மூலம் அவ்வாறு செய்தது.

அவற்றின் முன்னோடிகளில் ஒவ்வொன்றும் கிழங்குகள் உருவாக முக்கியமான ஒரு மரபணுவைக் கொண்டிருந்தன.

ஆனால் அவற்றில் எதுவுமே தனியாகப் போதுமானதாக இல்லை, எனவே அவை இணைந்தபோது, அவை நிலத்தடி தண்டுகளை சுவையான உருளைக்கிழங்குகளாக மாற்றுகிற செயல்முறையைத் தூண்டின.

நாப் உடன் பணிபுரிந்த சீனக் குழுவால் இதை நிரூபிக்கவும் முடிந்தது.

"அவர்கள் தங்கள் கருதுகோளை உறுதிப்படுத்த இந்த மரபணுக்களை நீக்கி, பல நேர்த்தியான பரிசோதனைகளைச் செய்தனர்," என்று அவர் கூறுகிறார், "அவை இல்லாமல், கிழங்குகள் உருவாகவில்லை."

உருளைக்கிழங்கை உருவாக்கிய இனக்கலப்பு ஒரு மகிழ்ச்சியான விபத்தை விடவும் கூடுதலானதாகும். அது ஒரு புதிய உறுப்பையே உருவாக்கியது. உருளைக்கிழங்கு என்ற இந்த உறுப்பு ஒரு பரிணாம சாதனையாகக் கருதப்படுகிறது.

அந்த கிழங்கின் இருப்பு காரணமாக விதை அல்லது மகரந்தச் சேர்க்கைகளின் தேவை இல்லாமல் தாவரம் இனப்பெருக்கம் செய்துகொள்ள அனுமதித்தது.

பல்வேறு உயரங்களுக்கும், சூழ்நிலைகளுக்குத் தகவமைத்துக் கொள்ள முடிந்தது, இது பன்முகத்தன்மையில் ஒரு அதிரடிக்கு வழிவகுத்தது.

இன்றும், "அமெரிக்காவில் மட்டுமே தென்மேற்கு ஐக்கிய மாகாணங்கள் முதல் சிலி மற்றும் பிரேசில் வரை 100க்கும் மேற்பட்ட காட்டு இனங்கள் காணப்படுகின்றன" என்று நாப் கூறுகிறார்.

எடூபரோசம் மற்றும் டியூபரோசம் தாவரங்கள் அருகருகே உள்ள ஒரு புகைப்படம்.

Shenzhen Institute of Agricultural Genomics, Chinese Academy of Agricultural Sciences மேலோட்டமாகப் பார்த்தால், எடூபரோசம் (இடது) மற்றும் டியூபரோசம் (வலது) ஆகியவை ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் பிந்தையதின் மாவுத்தன்மை கொண்ட கிழங்குகள்தான் உருளைக்கிழங்கை மிகவும் பிரபலமான பயிராக மாற்றுகின்றன.

மரபணுவால் ஏற்படும் பலவீனங்கள்

இருப்பினும், பாலின தொடர்பு இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் இந்த திறன் உருளைக்கிழங்கிற்கு தீங்கையும் விளைவித்துள்ளது.

"அவற்றை வளர்க்க, நீங்கள் ஒரு உருளைக்கிழங்கின் சிறிய துண்டுகளை நடவு செய்கிறீர்கள், அதாவது நீங்கள் ஒரே வகையை கொண்ட ஒரு வயலை வைத்திருந்தால், அவை அடிப்படையில் பிரதிகள்," என்று டாக்டர் நாப் விளக்குகிறார்.

மரபணு ரீதியாக ஒரே மாதிரியாக இருப்பதால், உருளைக்கிழங்கு தாவரங்களில் புதிய நோய்க்கு எதிராக எந்தத் தடுப்பு சக்தியும் இருக்காது.

இது விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை நடத்தியதற்கான காரணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

நாப்பின் கூற்றுப்படி, சீனக் குழு, விதைகளிலிருந்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய மற்றும் மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்படக்கூடிய உருளைக்கிழங்குகளை உருவாக்க விரும்புகிறது.

காட்டு இனங்களிலிருந்து மரபணுக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் சவால்களை சிறப்பாகத் தாங்கக்கூடிய வகைகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

"இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்ற பரிணாம உயிரியலாளர்களும் நானும், உருளைக்கிழங்குகளின் மிக நெருங்கிய உறவு எது என்பதையும், அவை ஏன் இவ்வளவு பன்முகத்தன்மை கொண்டவை என்பதையும் கண்டறிய விரும்பினோம்," என்று அவர் கூறுகிறார்.

"எனவே, நாங்கள் மிகவும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் இருந்து ஆராய்ச்சியை அணுகினோம், மேலும் எங்கள் ஒவ்வொரு கண்ணோட்டத்திலிருந்தும் கேள்விகளைக் கேட்க முடிந்தது, இது ஆய்வில் பங்கேற்கவும் பணியாற்றவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1dq30qlzreo

விக்ரம் 3201 சிப் இஸ்ரோவின் ராக்கெட் மற்றும் விண்கலங்களில் எவ்வாறு பயன்படும்?

1 month ago

VIKRAM 3201

பட மூலாதாரம், ISRO

கட்டுரை தகவல்

  • த.வி. வெங்கடேசுவரன்

  • பேராசிரியர், ஐஐஎஸ்இஆர் மொஹாலி

  • 4 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான சந்திரனை நோக்கிய அடுத்த பயணம், ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் மின்னணு (electronics) கருவிகளின் இருதயமாக இந்த 'சிப்' (chip) தான் அமையும்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனரான விக்ரம் சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் 3201 செயலி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) வடிவமைக்கப்பட்டு, சண்டிகரில் அமைந்துள்ள அரைக்கடத்தி ஆய்வகத்தால் (Semi-Conductor Laboratory - SCL) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி இணைப்பு சோதனை (Space Docking Experiment - SpaDeX) தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய 30 டிசம்பர் 2024 இல் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி60 (PSLV-C60) திட்டத்தில் இந்த கணிப்பி பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

விண்வெளிச் சூழலில் இந்த 'சிப்' சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்திக் கொண்ட இஸ்ரோ, 2009 முதல் அதன் விண்கல இயக்க மின்னணு கருவிகளில் பயன்பட்டு வந்த 16-பிட் கணிப்பி விக்ரம் 1601க்கு பதிலாக, இனி வரும் திட்டங்களில் மேம்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 3201 செயலியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

VIKRAM 3201

பட மூலாதாரம், X/@DrLMurugan

செல்போன் சிப்பை விட குறைந்த திறன் கொண்ட விக்ரம் 3201

நவீன ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் கணிப்பி செயலிகளுடன் மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால், விக்ரம் 3201 செயலி மிகவும் பழைய தொழில்நுட்பம் என்று தான் கருதத் தூண்டும்.

எடுத்துக்காட்டாக, விக்ரம் 3201 ஒரு 32-பிட் செயலி, அதே நேரத்தில் சமீபத்திய மடிக்கணினிகள் பெரும்பாலும் 64-பிட் செயலிகள் (64-bit processors) கொண்டு இயங்கும். எளிய சொற்களில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், 32-பிட் அமைப்பு 2^32 நினைவக முகவரிகளை (memory addresses) ஒரே கணத்தில் அணுக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறன் கொண்ட கணிப்பியைப் பொருத்திய கணினிகளில் 4 ஜிபி ரேம் (RAM) வரை கையாளும் திறன் கொண்டு இயங்கும். மாறாக, 64-பிட் செயலி 2^64 நினைவக முகவரிகளைக் கையாளும்; எனவே 8 ஜிபி முதல் 16 ஜிபி ரேம் வரை அல்லது அதற்கும் மேற்பட்ட ரேம் நினைவகத்தைக் கையாளும் திறன் படைத்ததாக அமையும்.

64-பிட் செயலி கொண்டு இயங்கும் கணினியில் வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல லாவகமாக அனிமேஷன் படங்கள் கொண்ட கேமிங் செயல்படும்; ஆனால் 32-பிட் அமைப்பில் அதே கேமிங் திரையில் காட்சிகள் விட்டுவிட்டுத் தென்படும். நவீன 64-பிட் செயலி, 32-பிட் செயலியை விட சந்தேகத்துக்கு இடமின்றி அதிக திறன் கொண்டது தான்.

மேலும், விக்ரம் 3201 ஒரு 180 நானோமீட்டர் (180nm) நுணுக்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 'சிப்'. இது 1990களின் பிற்பகுதி முதல் 2000களின் தொடக்கம் வரை புழக்கத்தில் இருந்த பழைய தொழில்நுட்பமாகும். இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்யும் தனது எளிய மற்றும் மலிவான நவீன கணினியில் உள்ள 11-ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5 (11th-generation Intel Core i5) செயலி மேம்பட்ட 10 நானோமீட்டர் (10nm) நுணுக்கம் கொண்டது.

'நானோமீட்டர்' (nm) என்பது ஒரு மீட்டரின் பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கிறது. சிப் உற்பத்தி (chip manufacturing) சூழலில், எவ்வளவு நுணுக்கமாக சிலிக்கான் சிப்பில் (silicon chip) நுண்ணளவு கொண்ட டிரான்சிஸ்டர்களை (transistors) எவ்வளவு அடர்த்தியாக (density) வடிவமைத்து உற்பத்தி செய்கிறோம் என்பதைக் குறிக்கும். குறைவான nm என்றால் அதே அளவு திறன் கொண்ட கணிப்பியின் அளவு மேலும் சிற்றளவாக்கம் (miniaturisation) கொண்டிருக்கும் என்று பொருள்.

சிலிக்கான் சிப்பின் கூடுதல் அடர்த்தி கணிசமான நன்மைகளை வழங்குகிறது. அருகருகே டிரான்சிஸ்டர்கள் உள்ளதால் எலக்ட்ரான்கள் (electrons) குறுகிய தொலைவு பயணம் செய்தால் போதும்; எனவே கணினியின் வேகம் கூடும். சிறிய நுணுக்கமான டிரான்சிஸ்டர்கள் செயல்படுவதற்குக் குறைவான மின் ஆற்றல் போதும்; எனவே மின்கலங்களில் உள்ள மின்னாற்றல் நீண்ட காலத்துக்கு இயங்கும். அடர்த்தி கூடுதல் என்றால் அந்த மின்னணுக் கருவியின் அளவும் கூடுதல் சிற்றளவாக்கம் கொள்ளும்; எனவே, மேலும் கையடக்க கருவிகள் சாத்தியம் ஆகும்.

வணிகப் பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், இன்று அதிநவீன தொழில்நுட்பம் வழியே ஆய்வகத்தில் 3nm முதல் 2nm சிப்பு வடிவாக்க தொழில்நுட்ப நிலையை உலகம் அடைந்துவிட்டது. இந்தச் சூழலில் 180nm என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போலதான் தென்படும்.

VIKRAM 3201

பட மூலாதாரம், @GoI_MeitY

ஆனால் ஸ்மார்ட்போன்களின் தேவைகளிலிருந்து விண்வெளி மின்னணுவியலின் (space electronics) தேவைகள் அடிப்படையில் மாறுபடுகின்றன. விண்ணை நோக்கி ஏவூர்தி சீறிப் பாயும்போது பெருமளவில் அதிர்வுகள் ஏற்படும். புவியின் வளிமண்டலத்தைக் கடந்து விண்வெளிக்குச் சென்றால் அங்கே கதிரியக்கம், வெப்பத் தாக்கம் போன்ற பல்வேறு இடர்களைச் சமாளிக்க வேண்டிவரும். இந்த இடர் மிகு சூழலில் விண்வெளித் தொழில்நுட்ப மின்னணுக் கருவிகள் நம்பகமாக செயல்படவேண்டும்.

விண்வெளியில் விண்கலங்கள் மீது வெகு தொலைவில் உள்ள விண்மீன்கள், கருந்துளைகள் போன்ற விண்பொருள்களிலிருந்து வேகமாகப் பாய்ந்து வரும் மின்னேற்றம் கொண்ட காஸ்மிக் கதிர்கள், சூரியன் உமிழும் சூரியக் காற்று போன்ற கதிரியக்கத் துகள்கள் அடைமழை போல விழுந்துக்கொண்டே இருக்கும். டிரான்சிஸ்டர்களுக்குள் நுண்ணளவில் மின்னேற்றம் உள்ள நிலை, ஏற்றம் அற்ற நிலை என்பதே பூச்சியம் அல்லது ஒன்று என்கிற டிஜிட்டல் தரவாக (digital data) பதிவு ஆகும். மீஉயர் ஆற்றல் கொண்ட கதிர்கள் விழும்போது, மழைத்துளி பட்டு நுண்மண்துகள் தெறிப்பது போல, டிரான்சிஸ்டர்களுக்குள் உள்ள மின் ஏற்ற நிலையை மாற்றிவிட முடியும்.

அதன் தொடர்ச்சியாக பூஜ்ஜியம் இருந்த இடத்தில் ஒன்று அல்லது ஒன்று இருந்த இடத்தில் பூஜ்ஜியம் என மாறுதல்கள் இயல்பில் ஏற்படும். இந்த நிகழ்வு தனி-நிகழ்வு நிலைகுலைவு (Single-Event Upset - SEU) என அழைக்கப்படுகிறது, இது ஒரு சிறிய, சீரற்ற மாற்றம் (random change). இதன் விளைவாக விண்கலத்தின் கணினியில் உள்ள டிஜிட்டல் தரவு சலனம் அடையும்.

இயல்பில் ஏற்படும் இத்தகைய SEU தனி-நிகழ்வு நிலைகுலைவுகளைச் சமாளிக்க செக்சம் போன்ற சரிகாண்-சரிசெய் தொழில்நுட்பங்கள் (error correction techniques) உள்ளன. ஆயினும், குறிப்பிட்ட அளவு தரவு நிலைகுலைவை மட்டுமே நம்பகமாக சீர் செய்யமுடியும்.

VIKRAM 3201

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, செமிகான் இந்தியா 2025 நிகழ்வில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 3201 சிப்பை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோதியிடம் வழங்கினார்.

டிரான்சிஸ்டர்களின் அளவு சுருங்கும்போது அவற்றில் நிலைப்படுத்தப்படும் மின்னேற்ற அளவு குறையும்; எனவே சற்றே ஆற்றல் குறைவான காஸ்மிக் கதிர்கள் கூட இந்தச் சூழலில் தனி-நிகழ்வு நிலைகுலைவுகளை ஏற்படுத்த முடியும். எனவே, கூடுதல் தரவு நிலைகுலைவுகளைச் சமாளிக்க வேண்டும்; இதன் விளைவாக கணிப்பின் நம்பகத்தன்மை இயல்பில் குறையும். அடர்த்தி குறைவான, அளவில் கூடுதலான சிப்பு ஏற்பாட்டில், தரவு நிலைகுலைவு வாய்ப்பு குறைவாக அமையும்; எனவே கணிப்பின் நம்பகத்தன்மை கூடும். எனவேதான் இஸ்ரோ தற்போது பழைய 180nm சிப்பு வடிவமைப்பையே பயன்படுத்தி வருகிறது.

மேலும், விண்கலம் பூமியைச் சுற்றிவரும்போது ஒருசமயம் பளீர் என்ற சூரிய ஒளியிலும், பூமிக்கு மறுபுறம் செல்லும்போது பூமியின் நிழலில் கும்மிருட்டையும் சந்திக்கும். சூரிய ஒளி படரும் தருணத்தில் சுட்டெரிக்கும் +125°C வெப்ப நிலையும், பூமியின் நிழலில் புகும்போது விறைப்பான -55°C உறைகுளிர் நிலையையும் சந்திக்கும். மேலும் கணநேரத்தில் இந்த வெப்ப மாறுதல் ஏற்படும். விண்வெளிக்குச் செல்லும் மின்னணுக் கருவிகள் இந்த வெப்ப அதிர்வைத் தாங்கிச் செயல்படும் வகையில் அமையவேண்டும். -55°C முதல் +125°C வெப்ப நிலையில் இயங்கும் திறன் கொண்டதாக விக்ரம் 3201 சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விண்கலத்தில் 1.8V முதல் 5V மின்னழுத்த நிலையில் வேலை செய்யும் படியும் இந்தச் 'சிப்' உள்ளது.

கூடுதல் வேகம், மேலும் சிற்றளவு என்பது பூமியில் பயன்படுத்தப்படும் கையடக்க மின்னணுக் கருவிகளின் தேவை. வெப்பம், கதிரியக்கம் முதலியவற்றால் பாதிப்பு அடையாத, நினைவகத்தில் நிலைகுலையாத, நம்பகமான தரவு சேமிப்புத் திறன் தான் விண்வெளி மின்னணுக் கருவிகளின் அடிப்படைத் தேவை. நமது திறன்பேசிகளில் உள்ள அதிநவீன 'சிப்'கள் விண்வெளி நிலையில் சட்டென்று செயலிழந்துவிடும், ஆனால், விண்வெளிப் பயனுக்கு உகந்த மின்னணு கணிப்பியாக விக்ரம் 3201 அமைகிறது.

2009 இல் விண்ணில் ஏவப்பட்ட CARTOSAT-3 செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவிய PSLV-C47 திட்டத்தில் தான் இந்தியா சுயமாகத் தயாரித்த விக்ரம் 1601 சிப்பு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. அதுமுதல் இன்று வரை இந்தச் சிப்பு தான் இஸ்ரோ ஏவூர்திகளிலும் விண்கலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விக்ரம் 3201 அதன் முன்னோடியான விக்ரம் 1601 இலிருந்து ஒரு கணிசமான வகையில் முன்னேற்றம் கொண்ட கணிப்பி ஆகும். மிதவை-புள்ளி ஆதரவு, Ada போன்ற உயர்-நிலை மொழிகளுடனான இணக்கத்தன்மை உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை இது உள்ளடக்கியது. மேலும், நவீன 70nm சிப்பு வடிவமைப்பில் இஸ்ரோ ஆய்வைத் துவங்கியுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்து சண்டிகரில் அமைந்துள்ள அரைக்கடத்தி ஆய்வகம் உற்பத்தி செய்யும் இந்தச் சிப்புகள் விண்வெளித்துறைக்கு மட்டுமல்ல, ரயில்வே போன்ற பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. மின்சார ரயில்களை இயக்கப் பயன்படும் மின்னணுக் கருவிகள், மெட்ரோ ரயில்களில் பயன்படுத்தப்படும் தன்னிறைவு தானியங்கி ரயில் மேற்பார்வை (indigenous Automatic Train Supervision - i-ATS) நுட்பக் கருவிகள் போன்ற பல்வேறு துறைகளிலும் விக்ரம் 1601 சிப்பு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், விக்ரம் 3201இன் வருகை காரணமாக பல்வேறு உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மேலும் மேம்படும்.

விக்ரம் 1601 தயாரிப்புக்கு முன்னர் மோட்டரோலா, இன்டெல் போன்ற நிறுவனங்களிடமிருந்து தனக்கு வேண்டிய கணிப்பி சிப்புகளை இஸ்ரோ இறக்குமதி செய்து வந்தது. இறக்குமதியை நம்பி இருந்த இந்தியா விநியோகச் சங்கிலி அபாயங்கள் (supply chain risks), ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் (export restrictions), தேசிய பாதுகாப்புச் சவால்களை (national security challenges) சந்தித்தது. 1998 போக்ரான் சோதனைகளைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட தடைகள் (sanctions), நீண்டகால முக்கியத்துவம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை (home-grown strategic tech) சுயமாக உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டின. இதைத் தொடர்ந்துதான் விக்ரம் வரிசை சிப்வடிவமைப்பு உற்பத்தி எனும் தற்சார்பு நிலையை இஸ்ரோ கைக்கொண்டது. அதன் முதிர்ந்த நிலையே விக்ரம் 3201 உருவாக்கம்.

செமிகாண் இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் அளிக்கப்பட்ட விக்ரம் 3201 சிப், தடைகளை முறியடித்துத் தன்னிறைவுக்கு எடுத்துச் சென்ற இந்திய அறிவியல் தொழில்நுட்பச் சாதனையைப் பறைசாற்றுகிறது எனலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy8r4jz0dgmo

டைனோசர்களை அழித்தொழித்த விண்கல் மோதல் - மீண்டும் பூமியில் நிகழுமா?

1 month 1 week ago

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

  • முன்னாள் விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியின் மேலே நாசாவின் செயற்கைக்கோளான லான்சாட் 8 பறந்தது. அப்போது அதில் திகைக்க வைக்கும் ஒரு காட்சி பதிவானது.

அங்கு 1.8 கி.மீ விட்டம், 6 மீட்டர் ஆழம் கொண்ட, கின்னம் போன்ற ஒரு பள்ளம் இருப்ப அந்த செயற்கைக்கோள் பதிவு செய்தது. கிட்டத்தட்ட துல்லியமான வட்ட வடிவில் இயற்கையான பள்ளம் உருவாகாது.

பின்னர் அது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தபோது, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் ஏற்படுத்திய குழியே அந்தப் பள்ளம் என்பது தெரிய வந்தது.

இத்தகைய விண்கல் மோதல்கள் பூமியில் எவ்வளவு அதிகமாக நிகழ்கின்றன? அவற்றால் என்ன ஆபத்து? பூமியில் டைனோசர்களின் இருப்பை அழித்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தவல்ல விண்கல் மோதல் மீண்டும் நிகழுமா?

ரஷ்யாவை நிலைகுலைய வைத்த விண்கல் வெடிப்பு

Play video, "பூமியில் மீண்டுமொரு பேரழிவை உண்டாக்கும் விண்கல் மோதல் நிகழ வாய்ப்புள்ளதா?", கால அளவு 7,57

07:57

p0lzy0fz.jpg.webp

காணொளிக் குறிப்பு,

கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் திடீரென வானத்தில் பிரகாசமான நெருப்புக் கோளம் தெரிந்தது.

அதை மக்கள் அனைவரும் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பூமியின் வளிமண்டலத்திற்குள் பறந்து வந்த அந்த நெருப்புக் கோளம் சுமார் 30கி.மீ உயரத்தில் வெடித்தது.

அந்த வெடிப்பினால் காற்று விரிவடைந்து, அதிர்வலைகள் உருவாகிப் பரவின. சுமார் பல கிலோமீட்டர் பரப்பளவில் 8,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின, கட்டடங்கள் அதிர்ந்தன, கூரைகள் பிய்ந்து பறந்தன.

உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், 1,500 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இதன் பின்னணியை ஆராய்ந்தபோது, சுமார் 9,000 டன் எடைகொண்ட, 20 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்துள்ளது.

சுமார் 100கி.மீ சுற்றளவில் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சி தெளிவாகத் தென்பட்டுள்ளது. அதில் சிலர் சூரியனைவிட அதிக பிரகாசத்தில் அது தெரிந்ததாக தெரிவித்தார்கள். அதன் பாதைக்கு அருகில் இருந்த சிலர், அது கடந்து சென்றபோது வெப்பமாக உணர்ந்ததாகக் கூறினார்கள்.

அந்தப் பகுதியில் பிறகு தேடிப் பார்த்தபோது, கோழிகுண்டு அளவிலான, வெடிப்பில் சிதறிய அந்த விண்கல்லின் சிறுசிறு துண்டுகள் கிடைத்தன.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ரஷ்யாவில் 2013ஆம் ஆண்டு 100 கி.மீ பரப்பளவுக்கு இந்த விண்கல் வெடிப்பு தெளிவாகத் தெரிந்தது

வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றிக்கொண்டிருந்த ஒரு விண்கல்தான் பாதை மாறி பூமியை நோக்கி வந்தது என்றும், அதுவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

வியாழன் கோளின் ஈர்ப்புவிசையால் சிறிதளவு தள்ளப்பட்ட அந்தப் பெரிய விண்கல், பாதை விலகி பூமியை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 30கி.மீ தொலைவில் இந்த விண்கல் வெடித்த நிகழ்வில், கிட்டத்தட்ட 400-500 கிலோ டன் டி.என்.டி வெடிபொருட்களுக்கு நிகரான ஆற்றல் இதிலிருந்து வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

இதேபோல, 1908ஆம் ஆண்டில் சைபீரிய பகுதியில் உள்ள துங்குஸ்கா என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.

துங்குஸ்காவில் மோதிய விண்கல் 65 மீட்டர் விட்டம் கொண்டது. செல்யாபின்ஸ்க் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்திய விண்கல் 20 மீட்டர் விட்டமுள்ளது.

இவை, நியுயார்க் நகரின் 443 மீட்டர் உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், பாரிஸில் உள்ள 324 மீட்டர் உயரமான ஐபில் டவர் ஆகியவற்றைவிடச் சிறிதாகத் தெரியலாம்.

ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப, மிக அதிக அளவிலான ஆற்றலை வெளிப்படுத்தி, சேதங்களை விளைவித்தன.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

படக்குறிப்பு, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றி வந்த ஒரு விண்கல் பாதை மாறி பூமியை நோக்கி வந்ததே 2013 ரஷ்யா நிகழ்வுக்குக் காரணம்

டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட சம்பவம்

பூமியில் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது இவ்வாறான விண்கற்கள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது, மெக்சிகோவின் கிழக்கு கடல் பகுதியில் 10-15கி.மீ விட்டம் கொண்ட ஒரு மிகப் பிரமாண்டமான விண்கல் பூமியில் மோதியது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரளயத்தில் அதுவரை கோலோச்சி வந்த டைனோசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

அவை மட்டுமல்ல, 25 கிலோவுக்கும் மேல் எடை இருக்கக்கூடிய நீர், நிலவாழ் பெரிய உயிரினங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. ஆனால், விண்கல் மோதலால் இதுபோன்ற பிரளயங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் கூறிய குஜராத் பள்ளத்தைப் போல பூமியில் சுமார் 200 இடங்களில் விண்கல் விழுந்தமைக்கான வடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றை ஆராய்ந்து, பூமியில் விண்கல் விழுவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.

பல தருணங்களில் வானத்தில் எரிகல் நிகழ்வுகளைக் கண்டிருப்போம். அதாவது வானில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்படுவதைப் பார்த்திருப்போம். அவை எரிகல் பூமியில் விழும் நிகழ்வின் விளைவு.

சின்னச் சின்ன அளவிலான எரிகற்கள் பூமியில் வந்து விழுவதையே எரிகல் நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியான எரிகற்கள் ஒரு நாளைக்குப் பல வந்து விழும். ஆனால், புவி வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மீது உராயும்போது அவை எரிந்துவிடுகின்றன.

எடுத்துக்காட்டாக, உங்கள் இரு கைகளையும் சேர்த்து நன்கு தேய்த்துப் பாருங்கள். கை சூடாவதை உணர்வீர்கள் அதுதான் உராய்வு. அதேபோல எரிகற்கள் காற்றுடன் உராய்கின்றன. அப்போது ஏற்படும் வெப்பம் அவற்றை எரித்து விடுகின்றன. அப்படி எரிவதுதான் ஒளிக்கீற்றாக வானில் தென்படுகிறது.

பூமியில் டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட விண்கல் மோதல் மீண்டும் நடக்குமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட அளவிலான விண்கல் சில கோடி ஆண்டுகளில் ஒருமுறை என மிக மிக அரிதாகவே நடப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பூமியில் தினசரி விழும் விண்கற்கள்

ஒரு நாளைக்கு 44,000 கிலோ விண்கற்கள் பூமியில் வந்து விழுகின்றன. சின்னச் சின்ன மணல், கல் போன்ற எரிகற்கள் பூமியில் தினசரி வந்து விழுகின்றன.

ஆனால், 50 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தாலும்கூட, அது வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அதுதான் ரஷ்யாவிலும் நடந்தது.

ஒருவேளை சுமார் 75மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியில் மோதினால், அதனால் ஒரு சிறிய நகரை தரைமட்டமாக்க முடியும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடும்.

அதேநேரம், நூறு முதல் ஆயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்தவல்ல சுமார் 160 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட ஒரு விண்கல் பூமியில் மோதினால், சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களே தரைமட்டமாகிவிடும்.

இருப்பினும் கணிப்புகளின்படி, இத்தகைய சம்பவங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்க வாய்ப்புள்ளது.

பூமியில் விழுந்தால் ஒரு மாவட்டத்தையே அழித்துவிடும் அளவிலான, சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமெனில், ஒரு விண்கல் 350 மீட்டருக்கும் மேல் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு 15,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் என்று கணிப்புகள் கூறுகின்றன.

பூமியின் அரணாகச் செயல்படும் நிலா

இதுபோன்ற விஷயங்களில் பூமியின் பாதுகாப்பு அரணாக நிலா செயல்படுகிறது. பூமிக்கு வரும் அடிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் பெரும் பகுதி விண்கல் மோதல்கள் நிகழாமல் அது தடுக்கிறது.

பூமியின் பக்கமாக வரக்கூடிய விண்கற்களைத் தன் பக்கம் ஈர்த்து, அந்த அடிகளைத் தானே தாங்கிக் கொள்கிறது. அதனால்தான் நிலவில் விண்கல் மோதல்களால் உருவான கின்னக் குழிகள் இருக்கின்றன.

புவியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலாவின் மறுபக்கத்தில் பார்த்தால் பிரமாண்டமான கின்னக் குழிகள் இருக்கின்றன. அவையெல்லாம் பூமியில் மோதிவிடாமல் நிலா பாதுகாத்து நிற்கிறது.

இந்தக் காரணத்தால், டைனோசர்களையே அழித்த 10-15கி.மீ விட்டம் கொண்ட பிரமாண்ட விண்கல் பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் சில கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்.

ஆனாலும், அப்படிப்பட்ட ஓர் ஆபத்து வர வாய்ப்புள்ளதா என்பதை முன்னமே தெரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விஞ்ஞானிகள் உள்ளனர்.

அதற்காக, பூமிக்கு அருகிலுள்ள விண்கற்கள் அனைத்தும், எந்தத் திசையில் நகர்கின்றன, பூமியில் மோத வாய்ப்புள்ளதா என்பனவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czxplqyk096o

உயிர்கள் வாழ இன்னொரு இடம்? - பூமிக்கு அருகே வாயு கோளத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்

1 month 3 weeks ago

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், NASA, ESA, CSA, STSCI, R. HURT (CALTECH/IPAC)

படக்குறிப்பு, ஆல்ஃபா சென்டாரி ஏ-வைச் சுற்றி வரும் ஒரு வாயு கோளின் மாதிரி படம். வலது மற்றும் இடது புறம் உள்ள இரு பிரகாசமான நட்சத்திரங்களின் மத்தியில் புள்ளியாக உள்ள சிறிய ஒளி தான் நமது சூரியன்

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரன்னார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உயிரற்ற கோள், வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் உயிரைத் தாங்கக்கூடிய நிலவுகளைக் கொண்டிருக்கலாம்.

இந்த அறிகுறிகள், ஆல்ஃபா சென்டாரி நட்சத்திர அமைப்பில், சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டன.

இந்த சாத்தியமான கோள் கடந்த ஆண்டு (2024 ஆகஸ்ட்) கண்டறியப்பட்டது, ஆனால் அதன் பின்னர் பார்வையிட்டபோது அது மறைந்துவிட்டது. இந்தக் கோள் நிச்சயமாக இருப்பதை உறுதிபடுத்த வானியலாளர்கள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

சூரிய குடும்பத்தைச் சேராத இந்தக் கோளின் நட்சத்திரத்திற்கும் நமது சூரியனுக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

"நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட தூரம், ஆனால் பால்வெளி அளவில் இது மிக அருகில் உள்ளது - இது நமது அண்டைப் பகுதியில் உள்ளது," என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் விண்வெளி கருவிகள் இணைப் பேராசிரியர் டாக்டர் கார்லி ஹோவெட் கூறினார்.

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வியாழனின் நிலவான யூரோப்பாவின் சித்தரிப்புப்படம், இதன் கடல் பகுதியில் உயிரின் அறிகுறிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

மேலும் அவர், "இது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உள்ளது, அதே வெப்பநிலையும் பிரகாசமும் கொண்டது. வாழக்கூடிய உலகங்களைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பினால் இது மிகவும் முக்கியமானது," என்று தெரிவித்தார்.

இந்தக் கோள், நமது சூரிய மண்டலத்தின் வாயு கோள்களான சனி மற்றும் வியாழனைப் போன்று இருக்கும், மேலும் அடர்த்தியான வாயு மேகத்தால் சூழப்பட்டிருக்கும்.

அதாவது, இந்தக் கோளில் உயிர்கள் இருக்க முடியாது. ஆனால் அதைச் சுற்றி வரும் நிலவுகள் உயிர்கள் வாழக்கூடியவையாக இருக்கலாம்.

நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் மற்றும் பிற கோள்களில் பனியால் ஆன நிலவுகள் உள்ளன, அவை உயிரைத் தாங்கக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த சாத்தியத்தை தற்போது யூரோப்பா கிளிப்பர் மற்றும் ஜூஸ் என்கிற விண்வெளி ஆய்வு திட்டங்களின் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த கோள்கள் நமது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஆனால், இந்த "புதிய" கோள் ஒப்பீட்டளவில் அதன் நட்சத்திரத்திற்கு அருகில் உள்ளது.

புதிய கோள் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (கோப்புப்படம்)

தொலைதூரப் பொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு தற்போது விஞ்ஞானிகள் வசம் இருக்கும் கருவியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் நேரடி படமாக்கல் மூலம் இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

"இந்த நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகவும், அருகிலும் வானத்தில் வேகமாக நகரக்கூடியவையாகவும் இருப்பதால், உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தினாலும் இந்த அவதானிப்புகளை மேற்கொள்வது மிகவும் சவாலானது," என்று நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் இணை ஆசிரியருமான சார்லஸ் பைச்மேன் கூறினார்.

இந்த நட்சத்திரங்கள் பெருமளவு பிரகாசமான ஒளியை உருவாக்குகின்றன, இது அருகிலுள்ள பொருட்களை மறைக்கக்கூடும்.

அதனால் தான் இந்தக் கோள் 2024 ஆகஸ்டில் ஒரு முறை கண்டறியப்பட்ட பிறகு மீண்டும் தேடியபோது மறைந்துவிட்டதாகத் தோன்றியிருக்கலாம்.

"ஒருவேளை அந்த கோள் நட்சத்திரத்தின் பின்னால் இருந்திருக்கலாம் அல்லது பார்க்க முடியாத அளவுக்கு அருகில் இருந்திருக்கலாம். இதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை," என்று டாக்டர் ஹோவெட் கூறினார்.

வானியலாளர்கள் இப்போது இந்தக் கோளை பற்றிய புதிய அறிகுறிகளைத் தேடுவார்கள். இதற்கு, 2027இல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய நாசா தொலைநோக்கியான கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் எதிர்கால ஆய்வுகள், ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்கிற முறை மூலம் இந்த கோள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நமக்கு தெரிவிக்க முடியும்.

இது, கோளின் தோற்றம் மற்றும் அதைச் சுற்றி வரும் நிலவுகளின் வாழக்கூடிய தன்மை பற்றி மிகவும் விரிவான தகவல்களை வழங்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0j9vygzn60o

விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு

2 months ago

வீராங்கனைகளின் மார்பகங்களும் மாதவிடாயும் விளையாட்டு திறனை எப்படி பாதிக்கின்றன?

யூரோ 2022 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் பிரிட்டன் வீராங்கனை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, UEFA மகளிர் யூரோ 2022 இறுதிப் போட்டியில் தனது கோலை கொண்டாடுகிறார் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி

5 மணி நேரங்களுக்கு முன்னர்

பெண்கள் விளையாட்டில் ஒரு முக்கிய கோடையில் யூரோ கோப்பை போட்டிகள் முடிவை எட்டிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், ஆடுகளத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் உற்சாகத்திலிருந்து விலகி, ஒரு அறிவியல் புரட்சியும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

உயர் அளவில் விளையாடப்படும் விளையாட்டுகள் பெண் உடலில் தனித்துவமான வகையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. மார்பகங்கள் ஒருவர் ஓடும் விதத்தை எப்படி மாற்றுகின்றன, ஆனால் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா உங்களுக்கு சற்று சாதகத்தை தரலாம்; செயல்திறன் மீது மாதவிடாய் சுழற்சியின் தாக்கம், மாதவிடாய் கண்காணிப்பு கருவிகள் என்ன பங்காற்றமுடியும்; சில காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் கூடுதலாக இருப்பதற்கு காரணம் என்ன, அவற்றை தவிர்க்க என்ன செய்யலாம்?

தொழில்முறை விளையாட்டு வீராங்கனைகள் தாங்கள் "மினி ஆண்களாக" கருதப்பட்டதாக என்னிடம் கூறிய காலத்திலிருந்து இது மிகவும் வேறுபட்டது.

மார்பக இயங்கியல் (Breast biomechanics)

கால்பந்தாட்ட வீராங்கனைகள் கொண்டாட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

2022ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியின் பிரபலமான காட்சியை நினைவுகூருங்கள்.

வெம்ப்லி மைதானத்தில் போட்டியின் கூடுதல் நேரத்தில் பிரிட்டன் வீராங்கனை க்ளோய் கெல்லி ஜெர்மனிக்கு எதிரான வெற்றி கோலை அடித்தார்.

இதைத் தொடர்ந்த வெற்றிக்கொண்டாட்டத்தில், அவர் தனது பிரிட்டன் சட்டையை கழற்றி தனது ஸ்போர்ட்ஸ் பிராவை உலகுக்கு காட்டினார்.

இதை வடிவமைத்தவர் "பிரா ப்ரொஃபசர்" என்ற புனைப்பயரால் அழைக்கப்படும் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனா வேக்ஃபீல்ட்-ஸ்கர்.

இதோ மார்பகங்கள் பற்றிய அவரது தகவல்கள்

  • ஒரு கால்பந்தாட்ட போட்டியின் போது மார்பகங்கள் சராசரியாக 11,000 முறை மேலும்கீழுமாக அசையக்கூடும் (bounce)

  • உரிய ஆதரவு இல்லாவிட்டால் ஒரு பவுன்ஸின் சராசரி அளவு 8 சென்டிமீட்டர் (3 அங்குலம்)

  • அவை 5ஜி விசையுடன் (புவியீர்ப்பு விசையைவிட ஐந்து மடங்கு அதிகம்) நகர்கின்றன. இது ஃபார்முலா 1 கார் ஓட்டுநரின் அனுபவத்துக்கு ஒப்பானது.

மார்பின் மீது நகர்வுகளை அளவிடும் மோஷன் சென்சார்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், நகரும் மார்பக திசுக்களின் எடை உடலின் மற்ற பாகங்களின் செயல்பாட்டை எப்படி மாற்றுகின்றன என்பதையும், அவ்வாறு மாற்றப்படும் செயல்பாடு விளையாட்டு திறனை எப்படி பாதிக்கிறது என்பதையும் காட்டியுள்ளன.

"சில பெண்களுக்கு அவர்களது மார்பகம் அதிக எடையுள்ளதாக இருக்கலாம், அவை நகர்ந்தால், அது அவர்களது உடல் நகர்வை மாற்றக்கூடும், களத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் விசையின் அளவைக் கூட அது மாற்றக்கூடும்," என வேக்ஃபீல்ட்-ஸ்கர் என்னிடம் தெரிவித்தார்.

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

பட மூலாதாரம், UNIVERSITY OF PORTSMOUTH

படக்குறிப்பு, போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகம், உடற்பயிற்சியின் போது மார்பக திசு இயக்கத்தைக் கண்காணிக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

உடலின் மேற்பகுதி நகர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகங்கள் மேலும்கீழுமாக அசைவைதை ஈடுகட்டுவது, இடுப்பு இருக்கும் நிலையை மாற்றி, எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டின் நீளத்தை குறைக்கிறது. அதனால்தான் ஸ்போர்ட்ஸ் பிராக்கள் வசதிக்கும், ஃபேஷனுக்கும் மட்டுமல்லாது செயல்திறனை அதிகரிக்கும் ஒரு கருவியாகவும் இருக்கின்றன.

"மார்பகங்களுக்கு குறைவான ஆதரவு இருந்தால், அது எடுத்துவைக்கும் அடியின் நீளத்தை நான்கு சென்டிமீட்டர் குறைத்ததை நாங்கள் பார்த்தோம்," என விளக்குகிறார் வேக்ஃபீல்ட்-ஸ்கர்.

"ஒரு மாரத்தானில் நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான்கு சென்டிமீட்டரை இழந்தால் அது மொத்தமாக ஒரு மைலாக கணக்காகிறது."

ஸ்போர்ட்ஸ் பிராக்கள் மார்பின் உள்ளே இருக்கும் மென்மையான அமைப்புகளையும் பாதுகாக்கின்றன, "நாம் அவற்றை நீட்டினால் அவை நிரந்தரமாகிவிடும்," என்கிறார் அந்த பேராசிரியர், எனவே "இது குணப்படுத்துவதைவிட, நிகழாமல் தடுப்பதில் இருக்கிறது."

மாதவிடாய் சுழற்சியும், செயல்திறனில் அதன் தாக்கமும்

காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனை

பட மூலாதாரம், CALLI HAUGER-THACKERY

படக்குறிப்பு, காலி ஹாகர்-தாக்கரி, பிரிட்டன் தொலைதூர ஓட்ட வீராங்கனை

மாதவிடாய் சுழற்சி உடலின் மீது தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது உணர்வுகளையும், மனநிலையையும், தூக்கத்தையும் பாதிக்கக்கூடும் என்பதுடன் களைப்பு, தலைவலி மற்றும் பிடிப்புகளை (cramps) உண்டாக்கலாம்.

ஆனால், விளையாட்டின் மீது மாதவிடாயின் தாக்கத்தை பற்றி பேசுவது "இன்னமும் விலக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இன்னமும் அதனுடன் போராடிக்கொண்டிருப்பதால் அதை பற்றி பேசுவது விலக்கிவைக்கப்பட்டதாக இருக்கக்கூடாது," எனவும் ஒலிம்பிக்கில் கிரேட் பிரிட்டன் சார்பாக பங்கேற்ற தொலைதூர ஓட்ட வீராங்கனை காலி ஹாகர்-தாக்கரி சொல்கிறார்.

மாதவிடாய் நெருங்கும்போது தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்போதும் உணர்வதாக சொல்கிறார் காலி.

"நான் சோர்வாக உணர்கிறேன், கால்கள் கனமாக இருக்கின்றன, சில நேரங்களில் கிட்டத்தட்ட சேற்றில் ஓடுவதைப் போல் உணர்கிறேன், எல்லாமே வழக்கத்தை விட கூடுதல் முயற்சி தேவைப்படுவதாக இருக்கின்றன," எனகிறார் அவர்.

தனது மாதவிடாய் கண்காணிப்பு கருவியின் அடிப்படையில் தனது வாழ்க்கையை வாழ்வதாகவும், மாதவிடாய் நேரம் "குறிப்பாக பெரிய பந்தயங்கள் வரும்போது" தனக்கு கவலையளிப்பதாகவும் உணர்கிறார்.

அப்படி ஒரு பெரிய பந்தயம், பாஸ்டன் மாரத்தான், ஏப்ரலில் நடைபெற்ற போது அவரது மாதவிடாய் காலம். அப்போட்டியில் அவர் ஆறாவது இடத்தை பிடித்தார். "அதிர்ஷ்டவசமாக அதை கடந்ததாக" நினைவுகூரும் அவர், அதே நேரம் தன்னால் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை என கூறுகிறார்.

மாதவிடாய் சுழற்சி. இரண்டு ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது விளையாட்டு செயல்திறன் மீது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்?

"அது தனிநபர் சார்ந்தது என்பதுடன் இதில் பல நுணுக்கங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி செயல்திறனை பாதிக்கிறது என வெறுமனே சொல்லிவிடும் அளவு எளிதானது அல்ல," என்கிறார் மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் பெண் உட்சுரப்பியல் மற்றும் உடற்பயிற்சி உடலியல் நிபுணரான பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்.

"போட்டிகள், தனிப்பட்ட சிறந்த செயல்பாடு, உலக சாதனை, எல்லாம் படைக்கப்பட்டுள்ளன, மாதவிடாய் காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வெல்லப்பட்டு, இழக்கப்பட்டுள்ளன," என்கிறார் அவர்.

இதில், 2022 சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் மாதவிடாயால் ஏற்பட்ட பிடிப்புகளுடன் ஓடி உலக சாதனையை முறியடித்த பவுலா ராட்கிளிஃப்பும் அடங்கும்.

மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்

படக்குறிப்பு, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிர்ஸ்டி எலியட்-சேல்

மாதவிடாய் சுழற்சி விளையாட்டு திறனை பாதிக்கிறதா என்பதை அறிய, ஹார்மோன்களால் உடல் முழுவதும் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மாதவிடாய் அறிகுறிகளுடன் செயல்படுவதிலுள்ள சவால், மாதவிடாய் நேரத்தில் போட்டியிடும் மன உளைச்சல் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் இவை அனைத்தைப் பற்றிய பார்வைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

"ஒருவர் வலுவாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்கும் ஒரு கட்டமோ, அவர் வெல்வார் அல்லது தோல்வியடைவார் என்ற கட்டமோ கிடையாது என பேராசிரியர் எலியட்-சேல் சொல்கிறார். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் எலும்பு, தசை அல்லது இதயம் போன்ற உடல் பகுதிகளை மாற்றலாம்.

"நாம் இன்னமும் புரிந்துகொள்ளாதது இதுதான்: இது உண்மையில் செயல்திறனை பாதிக்கும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?," என்கிறார் அவர்.

"தூக்கமின்மை, களைப்பு மற்றும் பிடிப்புகள் செயல்பாட்டை பாதிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு, தங்கள் மாதவிடாயின்போது ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடவுள்ள வீராங்கனைகளுக்கு ஏற்படும் பயமும் கவலையும் "முற்றிலும் உணரக்கூடிய நிலையில் உள்ள ஒன்று என அந்த பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

கசிவு அபாயம் மற்றும் அதனால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க மும்மடங்கு மாதவிடாய் உள்ளாடைகளை அணிந்துகொள்ளும் வீராங்கனைகளுடன் பேசியிருக்கும் அவர், "அது ஒரு பெரிய மன பாரம்." என கூறுகிறார்.

கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின்  மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனை

படக்குறிப்பு, கேட்டி டேலி-மெக்லீன், பிரிட்டனின் மிக அதிக புள்ளிகளைப் பெற்ற ரக்பி வீராங்கனை

சேல் ஷார்க்ஸ் வுமென் ரக்பி அணி, மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

நான் முன்னாள் பிரிட்டன் ரக்பி கேப்டனும், இங்கிலாந்து அணியின் மிக அதிக புள்ளிகளை குவித்தவருமான கேட்டி டேலி-மெக்லீனை சந்தித்தேன்.

மாதவிடாய் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கத்தைப் பற்றியும் அதற்கு எப்படி திட்டமிடுவது என்பது பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள அணி வெளிப்படையான ஆலோசனைகளை நடத்திவருகின்றன. "இதைப்பற்றி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை." என நினைப்பதற்கு பதிலாக மூன்று நாட்களுக்கு முன்பே இப்யூபுரூஃபன் மாத்திரிகளை எடுத்துக்கொள்வது இதில் அடங்கும்." என்கிறார் டேலி-மெக்லீன்.

"இந்த புரிதல் மற்றும் தகவல் மூலம்தான் நாம் இதைப் பற்றி பேசமுடியும், திட்டங்களை வகுத்து, ஒருவரை மேலும் சிறந்த ரக்பி வீரராக மாற்ற அவரது நடத்தையை மாற்றலாம்," என அவர் சொல்கிறார்.

காயங்களை தவிர்ப்பது எப்படி?

பெண்கள் விளையாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதால் தெரியவந்திருக்கும் ஒரு விஷயம் சில காயங்கள் ஏற்படுவதற்கான் வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றம்.

காலின் மேல் மற்றும் கீழ் பகுதியை இணைக்கும் பகுதியான முன்புற சிலுவை தசைநார் (ACL) மீதுதான் பெரும்பகுதி கவனம் செலுத்தப்படுகிறது. இதில் ஏற்படும் காயங்கள் மிகவும் மோசமானதாக இருப்பதுடன், இவற்றிலிருந்து மீண்டுவருவதற்கு ஓராண்டு ஆகலாம்.

பங்கேற்கும் விளையாட்டைப் பொறுத்து இந்த காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் ஆண்களை விட பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகம் என்பது மட்டுமல்லாமல், அவை மிகவும் சாதரணமாகி வருகின்றன என்கிறார், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு இயங்கியல் ஆய்வாளர் தாமஸ் டாஸ்'சான்டோஸ்.

ஆனால், பெண்களுக்கு அதிக அபாயம் ஏற்படுவதை விளக்க "எளிதான விளக்கம்," ஏதும் இல்லை, என்கிறார் அவர்.

உடற்கூற்றில் இருக்கும் வேறுபாடுகள் இதற்கு காரணமாக இருக்கலாம். பெண்களுக்கு பெரிய இடுப்புகள் இருப்பதால், தொடை எலும்பின் மேற்பகுதி மேலும் அகலமான ஒரு நிலையிலிருந்து தொடங்குவதால் முழங்காலில் காலின் கீழ்பகுதியுடன் இணையும் கோணத்தை மாற்றுகிறது, இது காயங்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

பெண்களில் ACL சற்றே சிறியதாக இருக்கிறது, எனவே அது சற்றே பலவீனமாக இருக்கலாம்," என முனைவர் டாஸ்'சான்டோஸ் விளக்குகிறார்.

முனைவர் தாமஸ் டாஸ்’சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்

படக்குறிப்பு, முனைவர் தாமஸ் டாஸ்'சான்டோஸ், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்

ACL காயங்கள் மாதவிடாய் சுழற்சியின் அனைத்து கட்டத்திலும் ஏற்படலாம், ஆனால், உலக அளவில் கால்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் ஃபிஃபா நிதியுதவியுடன் நடத்தப்படும் ஆய்வு உட்பட பல ஆய்வுகளால் ஹார்மோன் மாற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மாதவிடாய்க்கு முன் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருப்பது தசைநார்களின் பண்புகளை மாற்றலாம். இது அவற்றின் நீட்டிக்கப்படக்கூடும் தன்மையை அதிகரிக்கிறது, அதனால் காயமடையும் அபாயம் கோட்பாட்டளவில் அதிகமாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், ஆண்களுக்கு இணையான தரத்தில் ஆதரவும், வலுப்படுத்தும் பயிற்சிகளையும் பெண்கள் இன்னும் பெறுவதில்லை என்பதால் தூய உடற்கூறியலைத் தாண்டி சிந்திப்பது முக்கியம் என்று டாஸ்'சான்டோஸ் வாதிடுகிறார்.

அவர் அதை நடன கலைஞர்கள் தரமான பயிற்சியை பெறும் பாலே நடனத்துடன் ஒப்பிடுகிறார், "ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான காய விகிதத்தில் இருக்கும் வேறுபாடு அடிப்படையில் பொருட்படுத்தத்தக்கதல்ல," என்று டாஸ்'சான்டோஸ் கூறுகிறார்.

சற்றே வித்தியாசமான முறைகளில் நகர விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சியளிப்பதன் மூலம் ACL காயங்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் இருக்கின்றன.

ஆனால், இதன்மூலம் செயல்திறன் குறையும் அபாயம் உள்ளது. தடுப்பாட்டக்காரரை ஏமாற்ற தோளை தாழ்த்திவிட்டு பிறகு வேறொரு திசையில் பாய்வது கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் அவசியமானது. இதைப் போன்ற நுட்பங்கள் ACL மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

"நாம் அவற்றை மறைத்துவிட்டு விளையாட்டு விளையாடுபவரை தவிர்க்க வேண்டும் என சொல்ல முடியாது," என்கிறார் டாஸ்'சாண்டோஸ்.

"அந்தச் சுமைகளை தாங்குமளவு அவர்கள் வலிமையாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதுதான் நாம் செய்யவேண்டியது, நாம் 100% ACL காயங்களை நீக்கிவிடலாம் என சிலர் சொல்வதைப்போல் அது அவ்வளவு எளிதானதல்ல, நம்மால் முடியாது."

இனியும் 'மினி ஆண்கள் அல்ல'

இன்னமும் பதில் இல்லாத பல கேள்விகள் இருந்தாலும், சேல் ஷார்க்ஸ் வுமென் அணியை சேர்ந்த கேட்டி டேலி-மெக்லீனுக்கு இதுவே ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

2007-ல் அவர் அணிக்காக முதல்முறையாக விளையாட தொடங்கியபோது, அவரது உடல் எப்படி செயல்படும் என்பது பற்றிய அனைத்து அனுமானங்களும் ஆண் ரக்பி வீரர்களின் தரவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தன என்பதை நினைவுகூருகிறார்.

"நாங்கள் மினி-ஆண்களாகவே நடத்தப்பட்டோம்." என்கிறார் டேலி மெக்லீன்.

இப்போது சிறுமியரும், பெண்களும் விளையாட்டில் வெளிநபர்கள் போன்று உணருவதில்லை என்கிறார் அவர். விளையாட்டு உயர்மட்ட அளவில் திறனை அதிகரிப்பதுடன் மேலும் அதிக பெண்களை விளையாட்டில் வைத்திருக்க உதவுகிறது.

"இது அற்புதமானது, இதை கொண்டாட வேண்டிய ஒன்று, புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இளம்பெண்கள் விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று உடல் தோற்றம், இது மாதவிடாயை சார்ந்தது மற்றும் சரியான ஸ்போர்ட்ஸ் பிரா இல்லாதது, இவை மிக எளிதாக தீர்க்கப்படக்கூடியவை."

ஜெரி ஹோல்ட் தயாரித்த பிபிசியின் 'இன்சைட் ஹெல்த்' நிகழ்ச்சியிலிருந்து

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3v3xql41weo

நிலவில் அணு உலை அமைக்கும் நாசா – சந்திரனை சுற்றி வல்லரசு நாடுகள் போட்டி

2 months ago

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நாசா ஃபிஷன் பரப்பு ஆற்றல் திட்டத்தின் மாதிரி புகைப்படம்

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரானார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 7 ஆகஸ்ட் 2025, 02:11 GMT

நாசா நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நிலவில் மனித குடியேற்றத்துக்கான அடிப்படையாக இது பார்க்கப்படும் நிலையில் வல்லரசு நாடுகளில் போட்டிகளமாக நிலவு மாறிவிடுமோ என ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால் இதே போன்றதொரு அறிவிப்பை ரஷ்யாவும் சீனாவும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலை அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த உள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஒரு நிரந்தர தளத்தை உருவாக்குவது அமெரிக்காவின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது.

மறுபுறம் சீனாவும், ரஷ்யாவும் நிலவில் மனிதர்கள் வாழும் நிரந்தர தளங்களை உருவாக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாசாவின் செயல் தலைவர் பொலிடிகோ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த நாடுகள் நிலவில் 'தடைசெய்யப்பட்ட மண்டலம்' ஒன்றை அறிவிக்கக்கூடும் என்றும் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சமீபத்தில் நாசாவுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த இலக்கும் காலக்கெடுவும் நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியமானது என்பது பற்றிய கேள்விகள் இன்னும் உள்ளன.

மேலும், இந்தத் திட்டங்கள் புவிசார் அரசியல் நோக்கங்களால் தூண்டப்படுகின்றன என்று சில விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் நிலவின் மேற்பரப்பை ஆராய விரைந்து செயல்படுகின்றன. அதேபோல் அங்கு நிரந்தர மனித குடியிருப்புகளை உருவாக்கவும் சில நாடுகள் திட்டமிடுகின்றன.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி

"எதிர்கால நிலவு பொருளாதாரத்தையும், செவ்வாயில் அதிக ஆற்றல் உற்பத்தியையும், விண்வெளியில் அமெரிக்காவின் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டுமெனில், இந்த முக்கிய தொழில்நுட்பத்தை விரைவாக மேம்படுத்த வேண்டும்," என நாசாவுக்கு அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி எழுதியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரை நாசாவின் தற்காலிக தலைவராக நியமித்துள்ளார்.

குறைந்தபட்சமாக, 100 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அணு உலையை உருவாக்கும் வகையிலான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு வணிக நிறுவனங்களுக்கு டஃபி அழைப்பு விடுத்துள்ளார்.

இது ஒப்பீட்டளவில், குறைந்த அளவிலான ஆற்றல்தான். ஒரு வழக்கமான கரையோர காற்றாலை 2 முதல் 3 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

ஆனால், சந்திரனில் மின்சாரத்துக்காக அணு உலையைக் கட்டும் யோசனை என்பது புதிதல்ல. 2022இல், அணு உலையின் வடிவமைப்புக்காக நாசா மூன்று நிறுவனங்களுக்கு தலா 5 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தங்களை வழங்கியது.

2035-க்குள் நிலவில் தானியங்கி அணு மின் நிலையம் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை சீனாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு மே மாதம் அறிவித்திருந்தன.

நிலவின் மேற்பரப்பில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான சிறந்த வழியாகவோ அல்லது ஒரே வழியாகவோ இது இருக்கலாம் எனப் பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு நிலவு நாள் என்பது பூமியில் நான்கு வாரங்களுக்கு சமம். இதில் இரண்டு வாரங்களுக்கு சூரிய ஒளி கிடைக்கும், மற்ற இரண்டு வாரங்கள் இருள்சூழ்ந்து இருக்கும். அதனால் சூரிய சக்தியை மட்டும் நம்பி இயங்குவது மிகவும் கடினமாகிறது.

"ஒரு சிறிய குழுவினரை தங்க வைக்கும் வகையில், சாதாரணமான ஒரு இருப்பிடத்தைக் கட்டுவதற்குக் கூட மெகாவாட் அளவிலான மின்சாரம் தேவைப்படும். சூரிய மின்கலங்கள் மற்றும் பேட்டரிகளால் மட்டுமே இந்தத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்ய முடியாது" என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு மற்றும் கருவிகள் துறையின் மூத்த விரிவுரையாளரான முனைவர் சங்வூ லிம்.

"அணுசக்தி விரும்பத்தக்க ஒன்றாக மட்டுமில்லாமல் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் ஆகிவிட்டது" என்றும் அவர் கூறுகிறார்.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள்

பட மூலாதாரம், CNSA/CLEP

படக்குறிப்பு, 2020-இல் சான்ஜ்-இ திட்டத்தில் சீனா தனது கொடியை நிலவில் நிறுவியது.

லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பூமி மற்றும் கோள் அறிவியல் பேராசிரியராக உள்ள லியோனல் வில்சனைப் பொருத்தவரை, "போதுமான நிதி ஒதுக்கப்பட்டால்" 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு உலைகளை அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானது ஒன்று தான்.

வில்சனின் கூற்றுப்படி, சிறிய அணு உலைகளுக்கான வடிவமைப்புகள் ஏற்கெனவே உள்ளன.

"அந்த நேரத்துக்குள் நிலவில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு, நாசா போதுமான 'ஆர்ட்டெமிஸ்' ஏவுதல்களைச் செய்தால் அது முடியும்," என்கிறார்.

ஆர்ட்டெமிஸ் என்பது நாசா செயல்படுத்தும் சந்திரவெளிப் பயண திட்டம். இது மனிதர்களையும், உபகரணங்களையும் நிலவுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால் இவ்வகை அணு உலை ஏவுதல்களில் பாதுகாப்பு குறித்தும் சில கேள்விகள் எழுகின்றன.

"பூமியின் வளிமண்டலம் வழியாக கதிரியக்கப் பொருட்களை விண்ணுக்கு அனுப்புவது பாதுகாப்பு பிரச்னைகளை எழுப்புகிறது. அதற்கு சிறப்பு உரிமம் தேவை, ஆனால் அது ஒன்றும் முடியாத காரியம் இல்லை," என்கிறார் ஓபன் பல்கலைக்கழகத்தின் கிரக அறிவியல் நிபுணரான முனைவர் சிமியோன் பார்பர்.

2026ஆம் ஆண்டில் நாசாவின் நிதி ஒதுக்கீட்டில் 24% குறைக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்த பிறகு, நாசாவில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து டஃபியின் உத்தரவு எதிர்பாராதவிதமாக வந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து பூமிக்கு மாதிரிகளைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 'மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்' போன்ற பல முக்கியமான அறிவியல் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலவை அடைவதற்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இந்த முடிவு அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நாசா, நிலவு, அணு உலை, நாசா ஆராய்ச்சி, நிலாவில் மனிதர்கள், சீனா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் நிலவு ஆராய்ச்சி

"விண்வெளிக்குச் செல்வதில் போட்டி நிலவிய பழைய காலத்துக்கு, நாம் மீண்டும் திரும்புவது போல் தெரிகிறது. இது அறிவியல் ரீதியாக சற்று ஏமாற்றத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது," என முனைவர் பார்பர் கூறுகிறார்.

"போட்டி, புதுமைகளை உருவாக்கலாம். ஆனால் தேசிய நலன்கள் மற்றும் உரிமையை நிலைநாட்டுவது என்கிற குறுகிய நோக்கம் இருந்தால், சூரிய மண்டலம் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள பகுதிகளை ஆராயும் பெரிய நோக்கத்தை நீங்கள் மறந்து விடுவீர்கள்," என்றும் தெரிவித்தார்.

சீனாவும் ரஷ்யாவும், சந்திரனில் "ஒரு தடை மண்டலத்தை அறிவிக்க" வாய்ப்புள்ளது என்பது குறித்த டஃபியின் கருத்துக்கள், ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

2020 ஆம் ஆண்டில், நிலவின் மேற்பரப்பில் நாடுகள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்த கொள்கைகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஏழு நாடுகள் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தில், நாடுகள் நிலவில் உருவாக்கும் தளங்கள் மற்றும் சொத்துக்களைச் சுற்றி 'பாதுகாப்பு மண்டலங்கள்' அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"நீங்கள் சந்திரனில் ஒரு அணு உலையையோ அல்லது வேறு எந்த தளத்தையோ கட்டினால், அதைச் சுற்றி பாதுகாப்பு மண்டலம் இருக்கிறது என்று சொல்லலாம். ஏனெனில் அங்கு உங்களுடைய உபகரணங்கள் இருக்கும்," என்கிறார் முனைவர் பார்பர்.

"சிலருக்கு இது, 'நாங்கள் நிலவின் இந்தப் பகுதியை சொந்தமாக வைத்திருக்கிறோம். இங்கே நாங்கள் செயல்படப் போகிறோம், நீங்கள் வர முடியாது' என்று சொல்வதற்கு சமமாகத் தோன்றும்," என்றும் அவர் விளக்குகிறார்.

மனிதர்கள் பயன்படுத்தும் நோக்கில் நிலவில் அணு உலை அமைப்பதற்கு முன் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும் என்று முனைவர் பார்பர் குறிப்பிடுகிறார்.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 3 திட்டம் 2027 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவில் அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது பல தடைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு தளத்திற்கு அணுசக்தி இருந்தாலும், அங்கு மனிதர்களையும் உபகரணங்களையும் கொண்டு செல்ல வழியில்லை என்றால், அது பயனுள்ளதாக இருக்காது என்று கூறிய பார்பர், தற்போது இந்த திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் நடப்பதாக தோன்றுவில்லை என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crm4301jp79o

கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை - மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்

2 months 1 week ago

கரு தத்து கொடுக்கும் திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்பு படம்

கட்டுரை தகவல்

  • டானாய் நெஸ்டா குபெம்பா

  • பிபிசி செய்திகள்

  • 3 ஆகஸ்ட் 2025, 07:20 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

35 வயதான லிண்ட்சே மற்றும் 34 வயதான டிம் பியர்ஸ் தம்பதிக்கு 2025 ஜூலை 26 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் பேசிய டிம் பியர்ஸ், "இது அறிவியல் புனைக்கதை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவத்தைப் போல் இருக்கிறது" என தனது குடும்பத்தினர் நினைப்பதாகக் கூறினார்.

கருவை உறைய வைத்து பின்னர் அதை பயன்படுத்தி குழந்தை பெறும் தொழில்நுட்பத்தில், நீண்ட காலமாக உறைநிலையில் இருந்து, நேரடி பிரசவம் மூலம் வெற்றிகரமாக பிறந்த குழந்தை இது என்று நம்பப்படுகிறது.

இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கருவிலிருந்து 2022 ஆம் ஆண்டு பிறந்த இரட்டைக் குழந்தைகள்தான் நீண்ட காலமாக உறைநிலையில் இருந்த கருவில் இருந்து பிறந்த குழந்தைகள் என்ற சாதனையை படைத்திருந்தனர் .

1994ஆம் ஆண்டில் லிண்டா ஆர்ச்சர்டு என்பவர் தனது கணவருடன் இணைந்து உருவாக்கிய கரு இது. தற்போது 62 வயதாகும் லிண்டா ஆர்ச்சர்டு, தனது அப்போதைய கணவருடன் இணைந்து ஐ.வி.எஃப் IVF மூலம் குழந்தை பெறும் முயற்சியில் நான்கு கருக்களை உருவாக்கினார்.

அதில் ஒன்றை பயன்படுத்தி பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தை வளர்ந்து தற்போது 30 வயது அடைந்துவிட்டது. மற்ற மூன்று கருக்கள் சேமிப்பிலேயே இருந்தன.

கருவுறுதல், ஐவிஎஃப்

பட மூலாதாரம், Reuters

லிண்டா ஆர்ச்சர்டுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன பிறகும், அவர் தனது கருக்களை அகற்றவோ, ஆராய்ச்சிக்காக தானம் செய்யவோ அல்லது பெயர் குறிப்பிடாமல் வேறு குடும்பத்திற்கு கருவை தானமாக கொடுக்கவோ விரும்பவில்லை.

ஏனென்றால், உறைநிலையில் இருக்கும் கரு, குழந்தையாக பெற்றெடுக்கப்பட்டாலும், அந்தக் குழந்தையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில் தன்னுடைய மகளுடன் அந்தக் குழந்தைக்கு தொடர்பு இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

நைட்லைட் கிறிஸ்டியன் அடாப்ஷன்ஸ் என்ற கிறிஸ்தவ கரு தத்தெடுப்பு நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படும் வரை, லிண்டா ஆர்ச்சர்ட், தனது கருக்களை சேமிப்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக செலுத்தி வந்தார்.

லிண்டா ஆர்ச்சர்ட் தேர்ந்தெடுத்த ஸ்னோஃப்ளேக்ஸ் என்ற திட்டம், நன்கொடையாளர்கள் கருவை தத்தெடுக்கும் ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. அதாவது, கருவை நன்கொடையாக கொடுப்பவர், தத்தெடுப்பவர்களின் மதம், இனம் மற்றும் எந்த நாட்டவராக இருக்கவேண்டும் என்று தங்கள் விருப்பத்தின்படி நன்கொடை பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

திருமணமான, காகேஸியன், கிறித்தவ தம்பதிக்கு தனது கருவை தத்துக் கொடுக்க லிண்டா ஆர்ச்சர்டு விரும்பினார். அந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஏனெனில் தனது குழந்தை "நாட்டை விட்டு வெளியே செல்வதில்" தனக்கு விருப்பமில்லை என்று அவர் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார்.

லிண்டா ஆர்ச்சர்டின் விருப்பப்படியே நன்கொடையாளர்களாக லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதியர் தத்தெடுக்க முன்வந்தனர். லிண்டா ஆர்ச்சர்டின் கருவை தத்தெடுக்க முடிவு செய்வதற்கு முன்பு, பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தம்பதியர் குழந்தை பெறும் மருத்துவ நடைமுறையை மேற்கொண்ட டென்னசியில் உள்ள ரிஜாய்ஸ் கருத்தரித்தல் மையம் (Rejoice Fertility) என்ற ஐவிஎஃப் மருத்துவமனை, கரு எத்தனை ஆண்டுகளாக உறைநிலையில் இருந்தது அல்லது அதன் நிலைமையை பொருட்படுத்தாமல், கிடைத்த எந்தவொரு கருவையும் பயன்படுத்தி தம்பதிக்கு வெற்றிகரமாக குழந்தை பெறச் செய்வதே தங்களது நோக்கம் என்று கூறியது.

தானும் தனது கணவரும் "எந்தவொரு சாதனையையும் முறியடிக்க" விரும்பவில்லை, மாறாக "ஒரு குழந்தையைப் பெறவே விரும்பினோம்" என்று லிண்ட்சே பியர்ஸ் கூறினார்.

தனது கருவிலிருந்து உருவான குழந்தையை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்றும், ஆனால் தனது மகளைப் போலவே இருப்பதை காண முடிந்தது என்றும் லிண்டா ஆர்ச்சர்ட் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn47zq2p8wko

விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம் விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்

2 months 1 week ago

images-7.jpg?resize=299%2C168&ssl=1

விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்.

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris)  எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து  (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில்  14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”  இந்த சோதனை, நாட்டின் விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ”இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இரண்டாவது சோதனை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓர்பிடல் ரொக்கெட் சோதனை முயற்சி, அவுஸ்திரேலியாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441284

வான்பொருள்களை கருந்துளை விழுங்குவது எப்படி? - ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டிய இந்திய விஞ்ஞானிகள்

2 months 2 weeks ago

கருந்துளை ஒரு வான்பொருளை விழுங்கும்போது என்ன நடக்கும்? கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், NASA/CXC/A.HOBART

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கருந்துளை. விண்வெளியில் இருக்கும் மர்மமான வான்பொருள்களில் ஒன்று. அவற்றைப் புரிந்துகொள்வது பேரண்டத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு கருந்துளையை இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் என்ற விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

GRS 1915+105 எனப்படும் அந்தக் கருந்துளை, பால்வீதி கேலக்சியில், பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

GRS 1915+105 கருந்துளை பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறைகொண்டது.

ஆஸ்ட்ரோசாட் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அந்தக் கருந்துளையை ஆய்வு செய்து வந்தனர். அப்போது அதிலிருந்து வெளியான சமிக்ஞைகளைப் பதிவு செய்ததன் மூலம், அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஐஐடி கௌஹாத்தி, ஹைஃபா பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, கருந்துளைகள் பற்றி ஆழமான புரிதலை ஏற்படுத்துவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் GRS 1915+105 கருந்துளையில் கண்டுபிடித்தது என்ன?

இந்திய விஞ்ஞானிகள் உணர்ந்த கருந்துளையின் சமிக்ஞைகள்

ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாள் முடியும்போது அது தனக்குள்ளேயே சுருங்கி கருந்துளையாக உருவெடுக்கிறது. அதீத ஈர்ப்பு விசை காரணமாக, ஒளியைக்கூட அவை விழுங்கிவிடும். எனவே, கருந்துளைகள் கண்ணுக்குத் தெரியவில்லை.

பொதுவாக, பெரிய நட்சத்திரங்களின் வாழ்நாள் முடியும்போது அவற்றில் இருந்து கருந்துளைகள் உருவாகின்றன.

கருந்துளைகளின் விடுபடு திசைவேகம் (Escape Velocity), ஒளியின் வேகத்தைவிட சற்று அதிகம் என்பதால், அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்ப முடியாது. எனவே, கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது.

ஆனால், கருந்துளையால் விழுங்கப்படும் வான்பொருட்கள் மிகவும் சூடாகி, எக்ஸ்ரே கதிர்களை வெளியிடுகின்றன. அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும்.

கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை அவதானிப்பதன் மூலம் அதன் அருகிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் பிற வான் பொருட்களில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால், அவை விழுங்கும் வான் பொருட்கள் வெப்பமடைந்து, எக்ஸ் கதிர்களை வெளியிடும். அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும்.

அத்தகைய ஆய்வு ஒன்றை, GRS 1915+105 கருந்துளையில் ஆஸ்ட்ரோசாட் விண்வெளித் தொலைநோக்கி மூலமாக இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கருந்துளை சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறை கொண்டது. அதன் சுழற்சி வேகமும் சூரியனைவிடப் பல மடங்கு அதிகம். அதை ஆய்வு செய்து வந்த இந்திய விஞ்ஞானிகள், அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகளை' பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, கருந்துளை ஆய்வில் மிக முக்கியமானது என்றும், அவற்றின் செயல்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

GRS 1915+105 கருந்துளையில் விஞ்ஞானிகள் கண்டது என்ன?

GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சில நூறு நொடிகளுக்கு ஒருமுறை, பிரகாசமாக, மங்கலாக என மாறிக்கொண்டே இருந்தது. ஒளி பிரகாசமாக இருக்கும்போது அதில் ஒரு நொடிக்கு 70 மினுமினுப்புகள் உருவாவதும், மங்கும்போது அது மறைவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

GRS 1915+105 கருந்துளையை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறது.

கருந்துளைகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், அவை வான்பொருட்களை விழுங்கும்போது உருவாகும் எக்ஸ் கதிர்கள் மூலம் அவற்றை அவதானிக்க முடியும் என்று முன்னமே பார்த்தோம்.

அந்த எக்ஸ் கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சிறிது நேரத்திற்குப் பிரகாசமாக, சிறிது நேரத்திற்கு மங்கலாக என மாறிக்கொண்டே இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாற்றம் ஒவ்வொரு சில நூறு நொடிகளுக்கும் நடப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மேலும், எக்ஸ்-ரே ஒளி பிரகாசமாக இருக்கும்போது மினுமினுப்புகள் உருவாவதும், மங்கலாக இருக்கும்போது மறைவதும் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஒரு நொடிக்கு சுமார் 70 முறை என்ற அளவுக்கு அதிவேகமாக மின்னுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இவற்றை கருந்துளையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகள்' என்று விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர்.

கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மின்னுவது ஏன்?

கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் வெப்பம் மற்றும் ஆற்றல் மிக்க வாயு மேகம் உள்ளது. அதுவே, எக்ஸ்-ரே ஒளியில் உருவாகும் மினுமினுப்புக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ்-ரே ஒளி இவ்வாறு அதிவேகமாக மின்னுவது ஏன்?

கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் மிகவும் வெப்பமான, ஆற்றல் மிக்க வாயு மேகம் இருக்கிறது. அதுவே, அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வின்படி, "கருந்துளை பிரகாசமான கட்டத்தில் இருக்கும்போது, கொரோனா படலம் சிறியதாக, அதீத வெப்பத்துடன் இருக்கும். அதுதான், எக்ஸ்-ரே ஒளியில் அதிவேக மினுமினுப்புகளை உருவாக்குகிறது.

இதற்கு மாறாக, எக்ஸ்-ரே ஒளி மங்கலாக இருந்த நேரத்தில், கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ச்சியடைகிறது. ஆகையால், மினுமினுப்புகள் ஏற்படுவதில்லை."

GRS 1915+105 கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மங்கும்போது கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ந்துள்ளது.  அதற்கு மாறாக, ஒளி பிரகாசமாக இருக்கையில், கொரோனா படலம் சிறிதாக, அதீத வெப்பத்துடன் இருந்தது. அதுவே மினுமினுப்புகள் உருவாகக் காரணம் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு கருந்துளைக்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. ஒளியைக்கூட விட்டுவைக்காத கருந்துளையின் இயக்கம் மற்றும் அது தனது சுற்றுப்புறத்துடன் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை இது காட்டுகிறது.

"இது, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம். அதோடு, மனித இனம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கும் முக்கியமான பங்கையும் இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் என்பது என்ன?

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது, கருந்துளைகள், நட்சத்திரங்கள் போன்ற வான் பொருட்களை ஆய்வு செய்வதற்காக 2015ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவியது.

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது நட்சத்திரங்கள், கருந்துளைகள், விண்மீன் திரள்கள் போன்ற வான்பொருட்களை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

இது இஸ்ரோவால், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் எடை சுமார் 1,515 கிலோ. அது பூமியில் இருந்து சுமார் 650கி.மீ. உயரத்தில் நிலைகொண்டு சுற்றி வருகிறது.

ஒரே நேரத்தில் புறஊதாக் கதிர், எக்ஸ்-கதிர், காமா கதிர் எனப் பல வடிவங்களில் விண்வெளியைக் கவனிக்க முடியும் என்பது ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் தனிச்சிறப்பு.

இந்தக் கதிர்களை வெறும் கண்களால் காண இயலாது என்றாலும், அவை பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்த பல முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளன.

விண்வெளியில் காணப்படும் வான் பொருட்களைப் படம் பிடிக்கவும், அவற்றின் பிரகாசம் மற்றும் நிறத்தில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை ஆராயவும் உதவக் கூடிய ஐந்து கருவிகள் ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியில் இருக்கின்றன.

அவற்றின் உதவியுடன், பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதிகளை அவதானித்து, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு மற்றும் அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பன பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இந்திய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c05ej664er5o

நாசா – இஸ்ரோ கூட்டுத்திட்டம் நிசார் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி – பதில்கள்!

2 months 2 weeks ago

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, நாசா, இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும்.

நிசார் திட்டம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான படி என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதி தெரிவித்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், விண்வெளியில் இருந்து பூமியில் மாறி வரும் நிலைமைகளைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இது காடுகள், பனிக்கட்டிகள், பனிப்பாறைகள், பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கண்டத்தட்டுகளின் நகர்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும்.

இந்தச் செயற்கைக்கோள் சேகரிக்கும் தரவுகள் இயற்கைப் பேரிடர்களுக்கு எதிர்வினையாற்றுவது, உள்கட்டமைப்பைச் சரிபார்ப்பது, விவசாயிகளுக்கு உதவுவது எனப் பலவிதங்களில் பயன்படும் என்றும் நேற்று வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா, இஸ்ரோவின் கூட்டுத்திட்டமான இந்த நிசாரின் முக்கியத்துவம் என்ன? அதன்மூலம் இரு நாடுகளும் சாதிக்கப் போவது என்ன?

இந்தத் திட்டம் பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு காண்போம்.

1. நிசார் திட்டத்தின் நோக்கம் என்ன? எப்படிப் பயனளிக்கும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, நிசார் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், பூமியின் தெளிவான ஒளிப்படங்களைப் பதிவு செய்யும்.

நாசாவும் இஸ்ரோவும், நிசாரை ஏவிய பிறகு, அது பூமியை மிகவும் விரிவாக, தெளிவாகப் படம் பிடிக்கும். அவற்றால் ஒரு அங்குல நிலத்தில் நிகழும் சிறிய அசைவுகளைக்கூட மிகத் துல்லியமாகக் காட்ட முடியும். அதாவது, ஒரு நிலத்தின் சிறு பகுதியளவு சில சென்டிமீட்டர் அளவுக்கு மூழ்கினாலும் அல்லது இடம் மாறினாலும், அந்த மாற்றத்தைக் கண்டறிய இதனால் முடியும்.

நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை முழுவதுமாக ஸ்கேன் செய்யும். அதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படங்கள் மூலம்,

  • நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு முன்னரும் பின்னரும் நிலப்பரப்பில் நடக்கும் மாற்றங்களைப் பார்க்க முடியும்

  • பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளில் மெதுவாக நிகழும் நகர்வுகளைக் காணலாம்

  • காடு உருவாக்கம் அல்லது காடழிப்பு என காடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க இயலும்

  • வளர்ச்சித் திட்டங்கள் போன்ற காடுகளில் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணிக்க முடியும்

நிசார் திட்டத்தில் பயன்படுத்தப்படும் செயற்கைத் துளை ரேடார் (SAR) எனப்படும் சிறப்பு தொழில்நுட்பம்தான் இந்தத் துல்லியமான படங்களைப் பெற உதவுகிறது.

2. செயற்கைத் துளை ரேடார் (SAR) என்றால் என்ன?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, நிசார் செயற்கைக்கோளில் உள்ள ஆன்டனா 12 மீட்டர் நீளமுடையது.

செயற்கைத் துளை ரேடார் அல்லது SAR என்பது ஆற்றல் சிக்னல்களை பூமியின் மேற்பரப்பை நோக்கி அனுப்பி, அவை மோதிய பிறகு அவற்றில் எவ்வளவு ஆற்றல் திரும்புகிறது என்பதை அளவிடுவதன் மூலம் தரவுகளைச் சேகரிக்கும் ஒரு செயல்முறை.

வழக்கமான ரேடாரை போலவே, SAR மைக்ரோவேவ் சிக்னல்களை அனுப்பி, அவை மீண்டும் எதிரொலிப்பதைப் பதிவு செய்கிறது. ஆனால் இந்த செயற்கைக்கோள் நகரும்போது பல அளவீடுகளை எடுத்து மேம்பட்ட கணினி செயலாக்கத்தைப் பயன்படுத்தி அவற்றை இணைக்கிறது. இதுதான் இறுதி படங்களை மிகவும் தெளிவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பம் இல்லாமல் அதே அளவுக்குத் தெளிவான ஒளிப்படங்களைப் பெறுவதற்கு, ஒரு செயற்கைக்கோளுக்கு 19 கிலோமீட்டர் அகலமுள்ள ரேடார் ஆன்டனா தேவைப்படும். நிசார் செயற்கைக்கோளின் ஆன்டனா சுமார் 12 மீட்டர் அகலம் கொண்டது. அதாவது ஒரு பேருந்து அளவுக்கு நீளமானது.

ஆனால், இந்த செயற்கைக்கோள் மூலம் 10 மீட்டர் வரை சிறிய பகுதிகளைக்கூட மிகத் தெளிவாகவும், கூர்மையாகவும் படம் பிடிக்க முடியும். அதோடு, அந்தச் சிறிய நிலப்பகுதியில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட இந்தத் தொழில்நுட்பத்தில் துல்லியமாக அடையாளம் காண முடியும்.

இதுகுறித்துப் பேசியுள்ள நாசாவின் முன்னாள் நிபுணர் சார்லஸ் எலாச்சி, "பூமியின் மாற்றங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் காண SAR உதவுகிறது. பூமி எவ்வாறு செயல்படுகிறது, காலப்போக்கில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்துகொள்ள நிசார் உதவும்," என்று தெரிவித்துள்ளார்.

3. செயற்கைத் துளை ரேடார் எவ்வாறு செயல்படும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, பூமியின் ஒளிப்படங்களை துல்லியமாகப் பதிவு செய்வதற்காக விஞ்ஞானிகள் சாமர்த்தியமான ஒரு தீர்வை கண்டுபிடித்தனர்.

சூரிய ஒளியைச் சார்ந்து செயல்படும் வழக்கமான கேமராக்களை போலன்றி, இது அதன் சொந்த சிக்னல்களை அனுப்பிப் படம் பிடிக்கிறது. இந்த சிக்னல்கள் மலைகள், காடுகள் அல்லது ஈரமான மண்பரப்பு ஆகியவற்றில் மோதிய பிறகு, மீண்டும் சென்சாரை நோக்கிப் பிரதிபலிக்கிறது.

இந்தப் பிரதிபலிப்பு, தெளிவான படங்களை எடுப்பதற்கு உதவுகிறது. SAR-ஐ அண்டார்டிகாவின் பனிப்பாறைகள், எண்ணெய்க் கசிவுகள், ஈரநிலங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யப் பயன்படுத்தலாம்.

இதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படத்தின் தரம், அதிலுள்ள ஆன்டனா எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதைப் பொறுத்தது. ஆன்டனா பெரிதாக இருந்தால் படம் தெளிவாக இருக்கும். ஆனால், ஒரு செயற்கைக்கோளில் 4 கி.மீ நீளம்கொண்ட ஒரு பிரமாண்ட ஆன்டனாவை வைப்பது சாத்தியமில்லை.

எனவே, விஞ்ஞானிகள் இதற்கு சாமர்த்தியமான ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். ஒரு பிரமாண்ட ஆன்டனாவுக்கு பதிலாக சிறிய ஆன்டனாவையே பயன்படுத்தி, செயற்கைக்கோள் நகரும்போது அதிக அளவிலான அளவீடுகளைப் பதிவு செய்கிறார்கள். பின்னர் அந்த அளவீடுகளை மொத்தமாக இணைத்து ஒரு பிரமாண்ட ஆன்டனாவில் இருந்து கிடைத்தது போலச் செய்கிறார்கள். இதுவே, இந்தச் செயல்முறை 'செயற்கை' துளை ரேடார் என அழைக்கப்படுவதற்குக் காரணம்.

இதன்மூலம், இந்தச் செயற்கைக்கோள் பல சிறிய அளவீடுகளைப் பயன்படுத்தி, ஒரு பெரிய கட்டமைப்பின் தேவையின்றியே, அதில் கிடைக்கக்கூடிய தெளிவான, உயர்தர ஒளிப்படங்களை எடுக்கிறது.

4. நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விவசாயத்திற்கு எப்படி உதவும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மண்ணின் ஈரப்பதம், பயிர்களின் ஆரோக்கியம் போன்ற தகவல்களை நிசார் செயற்கைக்கோள் மூலம் பெறுவது, விவசாயிகள் திட்டமிட்டுப் பயிரிடுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் துல்லியமான படங்கள், உலகெங்கும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது. அதாவது, பயிர்களின் வளர்ச்சி, தாவரங்களின் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம் போன்ற முக்கியமான தகவல்களை வழங்கும்.

இந்தத் தகவல்கள் விவசாயிகளுக்குப் பயிர்களை நடவு செய்வது, தண்ணீர்ப் பாய்ச்சுவது, அறுவடை செய்வது ஆகியவற்றுக்குச் சரியான காலகட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். இது நேரத்தை மிச்சப்படுத்தவும், தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவுவதோடு, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து செயல்படவும் வழிவகுக்கும்.

"விவசாயத்தில் சரியான திட்டமிடல் முக்கியம். நடவு, பாசனம் என அனைத்திற்குமே சிறந்த நேரம் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும்," என்று கூறியுள்ளார் நிசார் திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானி நரேந்திர தாஸ்.

நிசார் செயற்கைக்கோளில், பயிர்கள் மற்றும் மண்ணின் தன்மையை ஆராய ஒரு சிறப்பு ரேடார் பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம், மண்ணிலும் தாவரங்களிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது, பயிர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சொல்ல முடியும்.

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களில் வாரந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பார்க்கலாம். பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வதன் மூலம் அரசுகள் அதிக நன்மை பயக்கும் விவசாயக் கொள்கைகளை வகுக்கலாம்.

எடுத்துக்காட்டாக, இதில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி, நெல் எப்போது நடப்பட்டது, செடிகள் எவ்வளவு உயரமாக உள்ளன, அவை பூக்கின்றனவா என்பனவற்றை அறிய முடியும். இதில் நெல் வயல்களின் ஈரப்பதம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம், வயல் நிலம் வறண்டிருப்பதாகத் தோன்றினால் அல்லது பயிர்கள் ஆரோக்கியமற்று தோற்றமளித்தால், விவசாயிகள் தங்கள் அணுகுமுறையை விரைவாக மாற்றிக்கொள்ள முடியும்.

5. நிசார் திட்டத்தில் நாசா, இஸ்ரோவின் பங்கு என்ன?

நிசார் திட்டம் தொடர்பாக இஸ்ரோ, நாசா இடையே 2014 செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2024இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் செயற்கைக்கோள் உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது நடக்காமல் போனது.

கடந்த டிசம்பர் 2024இல் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 12 மீட்டர் நீளமுள்ள ஆன்டனாவில் சில முன்னேற்றங்களைச் செய்வதற்காக நாசா வல்லுநர்கள் அதைக் கடந்த அக்டோபரில் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றனர்.

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதோடு, செயற்கைக்கோளின் சில பாகங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு எல் பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான ஒரு தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் (இது தான் செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை நாசா வழங்கியுள்ளது.

மறுபுறம், இந்தச் செயற்கைக்கோளில் எல் பேண்ட் எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் பேண்ட் எஸ்.ஏ.ஆர் என்கிற இரண்டு ரேடார் கருவிகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கருவிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமைப்பு மற்றும் இதர விஷயங்களை இஸ்ரோ பராமரித்து வருகிறது.

நிசார், ஜூலை 30ஆம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும்.

இந்த செயற்கைக்கோளின் மையப்பகுதி 5.5 மீட்டர் நீளமுடையது. இதில், 12 மீட்டர் நீளமுள்ள ரேடார் ஆன்டனா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 5.5 மீட்டர் நீளத்திற்கு இரண்டு சூரிய மின்தகடுகள் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன.

மூன்று ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிசார் திட்டத்தில், நாசா 1.1589 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இஸ்ரோ இந்தத் திட்டத்தில் 91.167 மில்லியன் டாலர் (ரூ.7.88 பில்லியன்) முதலீடு செய்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg12vxd5lyo

மூன்று பேரின் மரபணுவில் பிறக்கும் குழந்தைகள் - ஆபத்தான நோயை தவிர்க்கும் அற்புதம்

2 months 3 weeks ago

மூன்று பேரின் மரபணுவில் பிறக்கும் குழந்தைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் கல்லாகர்

  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மூன்று பேரின் மரபணு கூறுகளை பயன்படுத்தி பிரிட்டனில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இந்த முறை மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டன் விஞ்ஞானிகளால் முன்னோடியாகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில், ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவுடன், மற்றொரு பெண்ணிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இரண்டாவது கருமுட்டையை இணைக்கின்றனர்.

இந்த நுட்பம் ஒரு தசாப்த காலமாக பிரிட்டனில் சட்டப்பூர்வமாக இருந்தபோதிலும், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய் பாதிப்பு இல்லாமல் குழந்தைகள் பிறக்க இந்த முறை உதவும் என்பதற்கான முதல் ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியல் நோய் நிலைமைகள் பொதுவாக தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுகின்றன. இதனால் உடலில் சக்தி இல்லாமல் போகும்.

இந்த நோய் கடுமையான இயலாமைக்கு வழிவகுக்கும். சில குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் இறந்துவிடும்.

தம்பதிகளுக்கு முதலில் பிறந்த குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது தாய் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் அடுத்தக் குழந்தைக்கு ஆபத்து இருக்கும் என்பதை தம்பதிகள் அறிவார்கள்.

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்று-நபர் நுட்பத்தின் (three-person technique) மூலம் பிறக்கும் குழந்தைகள் தங்களுடைய அசல் பெற்றோரிடமிருந்து தங்கள் டிஎன்ஏவின் பெரும்பகுதியையும் அவர்களின் மரபணு வரைபடத்தையும் (genetic blueprint) பெற்றாலும், இரண்டாவது பெண்ணிடமிருந்து ஒரு சிறிய அளவிலான (சுமார் 0.1% மட்டுமே) மரபணுவைப் பெறுகிறார்கள்.இந்த மாற்றம் பல தலைமுறைகளை கடந்து செல்லும்.

இந்த செயல்முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட குடும்பங்கள், தங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக இந்த விஷயத்தை பகிரங்கமாகப் பேசவில்லை.

ஆனால் மூன்று நபர் நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கச் செய்த நடைமுறைகளை மேற்கொண்ட நியூகேஸில் கருவுறுதல் மையம் மூலம் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இந்த நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பிறந்ததை மட்டும் அறிவித்தனர்.

'நன்றியுணர்வால் நெகிழ்கிறோம்'

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான இரண்டு அறிக்கைகள், நியூகேஸில் கருவுறுதல் மையத்தில் 22 குடும்பங்கள் இந்த கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்டதாக கூறுகின்றன.

"பல வருட நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு இந்த சிகிச்சை எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. புதிய நுட்பம் எங்களுக்கு குழந்தையைக் கொடுத்தது," என்று ஒரு பெண் குழந்தையின் தாய் கூறினார்.

"வாழ்க்கையில் அனைத்து சாத்தியக்கூறுக்களும் இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறோம், நன்றியுணர்வால் நெகிழ்ந்து போய் இருக்கிறோம்" என்று அந்தத் தாய் கூறினார்.

இந்த நுட்பம் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஒரு தாய், "இந்த நம்பமுடியாத முன்னேற்றத்திற்கும் எங்களுக்குக் கிடைத்த ஆதரவிற்கும் நன்றி. எங்கள் சிறிய குடும்பம் தற்போது முழுமையடைந்துள்ளது" என்று கூறினார்

"மைட்டோகாண்ட்ரியல் நோயினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிவிட்டது. தற்போது, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் ஆழ்ந்த நன்றியுணர்வால் மனம் நிரம்பியுள்ளது."

மைட்டோகாண்ட்ரியா என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ள சிறிய கட்டமைப்புகள் ஆகும். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை பயன்படுத்தி நாம் சாப்பிடும் உணவை எரிசக்தியாக மாற்றுவதற்கு இவை உதவுகின்றன.

மைட்டோகாண்ட்ரியா குறைபாடு ஏற்பட்டால், இதயத்தைத் துடிக்க வைக்க உடலுக்குப் போதுமான சக்தி கிடைக்காது. மேலும், மூளை பாதிப்பு, வலிப்பு, பார்வை இழப்பு, தசை பலவீனம், உறுப்பு செயலிழப்பு என பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

பிறக்கும் குழந்தைகளில் ஐந்தாயிரத்தில் சுமார் ஒரு குழந்தை மைட்டோகாண்ட்ரியல் நோயுடன் பிறக்கிறது. நியூகேஸிலில் உள்ள நிபுணர் குழு, ஆண்டுதோறும் மூன்று நபர் முறை மூலம் 20 முதல் 30 குழந்தைகள் பிறக்க வேண்டிய தேவை இருக்கும் என எதிர்பார்க்கிறது.

தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பல இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் வேதனையை பெற்றோர்களில் பலர் எதிர்கொண்டுள்ளனர்.

மைட்டோகாண்ட்ரியா என்பது, தாயிடமிருந்து குழந்தைக்கு மட்டுமே பரவுகிறது. எனவே இந்த நவீன கருவுறுதல் நுட்பம், பெற்றோர் மற்றும் ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவை தானம் செய்யும் ஒரு பெண் என மொத்தம் மூன்று பேரை பயன்படுத்துகிறது.

இந்த முறை, ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸில் அபான் டைன் ஹாஸ்பிடல்ஸ் என்.எச்.எஸ் ஃபவுண்டேசன் டிரஸ்ட்டால் உருவாக்கப்பட்டது.

கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்ட 22 குடும்பங்கள்

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,BBC/JOSH ELGIN

படக்குறிப்பு, கேட் கிட்டோ (வலது) தனது மகள் லில்லி மற்றும் செல்லப்பிராணி மோன்டியுடன்

தாய் மற்றும் தானம் செய்பவரின் கருமுட்டைகள், தந்தையின் விந்தணுக்களுடன் ஆய்வகத்தில் கருத்தரிக்கப்படுகின்றன.

விந்து மற்றும் முட்டையிலிருந்து வரும் டிஎன்ஏ, புரோ-நியூக்ளியஸ் எனப்படும் ஒரு ஜோடி அமைப்புகளை உருவாக்கும் வரை கருக்கள் உருவாகின்றன. இவை, முடி நிறம் மற்றும் உயரம் என மனித உடலை உருவாக்குவதற்கான வரைபடங்களைக் கொண்டுள்ளன.

இரண்டு கருக்களிலிருந்தும் சார்பு கருக்கள் அகற்றப்பட்டு, ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவால் நிரம்பிய கருவுக்குள் பெற்றோரின் டிஎன்ஏ வைக்கப்படுகிறது.

இதன் விளைவாக, பிறக்கும் குழந்தை பெற்றோருடன் மரபணு ரீதியாக தொடர்புடையதாகவும் இருக்கும், அதே நேரத்தில் மைட்டோகாண்ட்ரியல் நோயிலிருந்து விடுபடவும் முடியும்.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான இரண்டு அறிக்கைகள், நியூகேஸில் கருவுறுதல் மையத்தில் 22 குடும்பங்கள் இந்த கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்டதாக கூறுகின்றன.

இந்த செயல்முறையில் நான்கு ஆண் குழந்தைகளும் நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தன, அதில் ஒரு இரட்டைக் குழந்தையும் அடங்கும், மேலும் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார்.

"நீண்ட காத்திருப்பு மற்றும் பின்விளைவுகள் குறித்த பயத்திற்குப் பிறகு இந்தக் குழந்தைகளின் பெற்றோரின் முகங்களில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் காண முடிகிறது. இந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக சாதாரணமான குழந்தைகளாக வளர்வதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது" என்று அரிய மைட்டோகாண்ட்ரியல் கோளாறுகளுக்கான NHS (தேசிய சுகாதார சேவை) உயர் சிறப்பு சேவையின் இயக்குனர், பேராசிரியர் பாபி மெக்ஃபார்லேண்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.

அனைத்து குழந்தைகளும் மைட்டோகாண்ட்ரியல் நோயின்றி பிறந்து, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மைல்கற்களை எட்டின.

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட மைட்டோகாண்ட்ரியனின் படம் - ஒரு கருவுற்ற முட்டையில் அரை மில்லியன் வரை இருக்கும்.

ஒரு குழந்தைக்கு வலிப்பு நோய் இருந்தது, அது தானாகவே சரியாகிவிட்டது, ஒரு குழந்தைக்கு அசாதாரண இதயத் துடிப்பு உள்ளது. அதற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த குழந்தைகளின் உடல்நலக் குறைவுகள், குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியாவுடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை.

இது செயற்கை கருத்தரிப்பின் அறியப்பட்ட அபாயங்களின் ஒரு பகுதியா, மூன்று நபர் முறை கருவுறுதல் நுட்பத்தினால் ஏற்பட்ட குறிப்பிட்ட பிரச்னையா அல்லது இந்த நுட்பத்தின் மூலம் பிறக்கும் அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியமும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் மட்டுமே கண்டறியப்பட்ட ஒன்றா என்பது தெரியவில்லை.

குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியமான கருவிற்குள் மாற்றப்படுமா, அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது இந்த அணுகுமுறை தொடர்பான மற்றொரு முக்கிய கேள்வியாக இருக்கிறது.

ஐந்து நிகழ்வுகளில் நோயுற்ற மைட்டோகாண்ட்ரியா கண்டறிய முடியாததாக இருந்ததாக முடிவுகள் காட்டுகின்றன. மற்ற மூன்றில், ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் 5% முதல் 20% வரை மைட்டோகாண்ட்ரியா குறைபாடு காணப்பட்டது.

இந்த அளவானது, நோயை உண்டாக்கும் என்று கருதப்படும் 80% அளவை விட மிகக் குறைவு. இது ஏன் ஏற்பட்டது, அதைத் தடுக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படும்.

நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேரி ஹெர்பர்ட் "கண்டுபிடிப்புகள் நம்பிக்கைக்கு அடித்தளம் அமைக்கின்றன. இருப்பினும், மைட்டோகாண்ட்ரியல் நன்கொடை தொழில்நுட்பங்களின் வரம்புகளை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் மேலும் தேவை. இது, சிகிச்சை விளைவுகளை மேலும் மேம்படுத்த அவசியமாக இருக்கும்." என்கிறார்.

இந்த முன்னேற்றம் கேட் என்ற பெண்ணின் குடும்பத்திற்கு நம்பிக்கையைத் தருகிறது. கேட்டின் இளைய மகள் பாப்பிக்கு (14) இந்த நோய் உள்ளது. அவளுடைய மூத்த மகள் லில்லி (16) அதை தன் குழந்தைகளுக்கும் கடத்தக்கூடும்.

சக்கர நாற்காலியில் இருக்கும் பாப்பியால் பேசமுடியாது, குழாய் வழியாகவே உணவு வழங்கப்படுகிறது.

"இந்த நோய் பாப்பியின் வாழ்க்கையை பெருமளவில் பாதித்துள்ளது," என்று கேட் கூறுகிறார்.

பல தசாப்தங்களாக முயற்சி செய்தும், மைட்டோகாண்ட்ரியல் நோய்க்கு இன்னும் சிகிச்சை இல்லை, ஆனால் அது பரவுவதைத் தடுக்கும் வாய்ப்பு இருப்பதால் லில்லியின் கவலை குறைகிறது.

"என்னைப் போன்ற எதிர்கால சந்ததியினர், அல்லது என் குழந்தைகள், அல்லது உறவினர்கள் போன்றவர்கள் சாதாரண வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கமுடியும்," என்று லில்லி கூறுகிறார்.

'இதை பிரிட்டன் மட்டுமே செய்ய முடியும்'

மூன்று நபர் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் அறிவியலை உருவாக்கிய பிரிட்டன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குப் பிறகு, அவற்றை உருவாக்க அனுமதிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக மாறியது.

மைட்டோகாண்ட்ரியாக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் அவற்றின் சொந்த டிஎன்ஏவும் அவற்றிடம் இருப்பதால் சர்ச்சை எழுந்தது.

இதன் பொருள், குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து டி.என்.ஏவைப் பெறுகின்றனர். அதேபோல கருமுட்டை தானம் செய்த பெண்ணிடமிருந்து சுமார் 0.1% டி.என்.ஏவைப் பெறுகின்றனர்.

இந்த நுட்பத்தின் மூலம் பிறக்கும் பெண்கள், இதை தங்களுக்குப் பிறக்கும் சொந்தக் குழந்தைகளுக்குக் கடத்துவார்கள், எனவே இது மனித மரபணு மரபின் நிரந்தர மாற்றமாகும்.

இந்த தொழில்நுட்பம் விவாதிக்கப்பட்டபோது, இது சிலருக்கு அதீதமான படியாக தோன்றியது, இது மரபணு மாற்றப்பட்ட "வடிவமைப்பாளர்" குழந்தைகளை பிறக்கச் செய்வதற்கு கதவுகளைத் திறக்கும் என்ற அச்சத்தையும் எழுப்பியது.

நியூகேஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சர் டக் டர்ன்புல் "உலகில் இங்கு மட்டும்தான் இப்படி நடந்திருக்கும் என நினைக்கிறேன், நாம் இருக்கும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல முதல்-தர அறிவியல் இருந்தது, மருத்துவ சிகிச்சைக்கு அதை நகர்த்தவும் அனுமதிக்கவும் சட்டம் இருந்தது. இப்போது மைட்டோகாண்ட்ரியல் நோயிலிருந்து விடுபட்ட எட்டு குழந்தைகளைப் பெற்றுள்ளோம், என்ன ஒரு அற்புதமான முடிவு!"என்றார்

லில்லி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் லிஸ் கர்டிஸ் கூறுகையில், "பல வருட காத்திருப்புக்குப் பிறகு, இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். இந்தக் குழந்தைகள் அனைவருக்கும் மிட்டோவின் அறிகுறிகள் எதுவும் இல்லை."

"பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு, இந்த மரபுவழி நிலையின் சுழற்சியை உடைப்பதற்கான முதல் உண்மையான நம்பிக்கைக்கீற்று இதுவாகும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77vgjl0p4ro

5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘

2 months 3 weeks ago

66f78fcc7f98c96f442f7fb86aea82d8eae21c69

5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘

செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோகிராம் எடையுடைய அரிய விண்வீழ்கலொன்று  5.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு Sotheby’s நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது எனவும், அதில்  நிகழ்நிலை மூலமாக பலர் பங்கேற்றிருந்தனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘NWA 16788’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த  விண்வீழ்கல்லானது 2023ஆம் ஆண்டு சஹாரா பாலைவனத்தில் உள்ள நைஜர் நாட்டின் அகாடெஸ் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த விண்வீழ் செவ்வாய்க் கோளிலிருந்து பிரிந்த மிகப்பெரிய துண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து Sotheby’s நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசேண்ட்ரா ஹெட்டன் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்த அரிய விண்வீழ்கல் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது எனவும்,  அது பெருங்கடலுக்குப் பதிலாக பாலைவனத்தில் விழுந்தது மிகப் பெரிய அதிசயம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439682

சூரிய குடும்பத்தைவிட பல கோடி ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

2 months 3 weeks ago

3I/Atlas - மிக பழமையான வால்மீன்

பட மூலாதாரம்,ESO/O. HAINAUT

படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரென்னார்ட்

  • அறிவியல் & காலநிலை செய்தியாளர்

  • 17 ஜூலை 2025, 11:40 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது.

நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை விஞ்ஞானிகள் கண்டறிவது மூன்றாவது முறை. டர்ஹாமில் நடைபெற்ற பிரிட்டனின் ராயல் வானியல் சங்கத்தின் தேசிய கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று இந்த முதல்கட்ட கண்டுபிடிப்புகள் விளக்கப்பட்டன.

"நாங்கள் அனைவரும் 3I/Atlas வால்மீன் பற்றி அறிந்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வானியலாளர் மேத்யூ ஹாப்கின்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நான் எனது முனைவர் பட்டத்தை முடித்துவிட்டேன், அதில் நான்கு ஆண்டுகள் விண்மீன்களுக்கு இடையிலான பொருட்களைக் கணித்து ஆய்வு செய்தேன். இறுதியாக, எனது ஆய்வுகளில் முதல் முறையாக ஒரு வான்பொருளைக் கண்டுபிடித்தோம்," என்று அவர் கூறினார்.

3I/Atlas எனும் பொருளின் வேகத்தை ஆய்வு செய்த மேத்யூ ஹாப்கின்ஸ், இது ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு (700 கோடி ஆண்டுகள்) மேல் பழமையானதாக இருக்கலாம் என்கிறார்.

மேலும், இதுவரை காணப்பட்ட வால்மீன்களுக்கு இடையிலான பொருட்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 3I/Atlas, ஜூலை 1, 2025 அன்று சிலியில் உள்ள அட்லஸ் சர்வே தொலைநோக்கி மூலம் முதலில் காணப்பட்டது. அப்போது அது சூரியனில் இருந்து 670 மில்லியன் கி.மீ. தொலைவில் இருந்தது.

இப்போது, மிகப்பெரிய தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே பார்க்க முடியும் இந்த வான்பொருள், தனது மண்டலத்தில் உள்ள சூரியனிடம் இருந்து, பூமியில் இருந்து வியாழன் கோள் அமைந்திருக்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. அந்த வால்மீன் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் அதன் பாதையைக் கண்டறியவும், அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும் முயன்று வருகின்றனர்.

அது பால்வீதி மண்டலத்தின்(Milky way galaxy) "தடிமனான வட்டில்" (thick disk) இருந்து வந்திருக்கலாம் என்கிறார் ஹாப்கின்ஸ். இந்தத் தடிமனான வட்டு என்பது, பெரும்பாலான நட்சத்திரங்கள் உள்ள பகுதியில் மேலும் கீழுமாகச் சுற்றி வரும் ஆதிகால நட்சத்திரங்களைக் குறிக்கிறது.

3I/Atlas - மிக பழமையான வால்மீன்

பட மூலாதாரம்,MATTHEW HOPKINS

படக்குறிப்பு, 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

பால்வீதியை மேலிருந்து பார்க்கும்போது, 3I/Atlas நமது சூரிய மண்டலத்தைச் சுற்றி எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், நமது சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

3I/Atlas ஒரு பழைய நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகியிருக்கலாம் என்பதால், இது பெரும்பாலும் உறைந்த நீரால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் இது அதன் சூரியனை நெருங்கும்போது, சூரிய ஆற்றல் இதன் மேற்பரப்பை வெப்பமாக்கி, நீராவியையும் தூசியையும் வெளிப்படுத்தலாம். இதனால் ஒரு ஒளிரும் வால் உருவாக வாய்ப்பு உள்ளது.

ஹாப்கின்ஸ் உருவாக்கிய மாதிரியைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர்.

"இது நாம் இதுவரை நெருக்கமாகப் பார்க்காத விண்மீன் மண்டலப் பகுதியில் இருந்து வந்த பொருள்," என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர் பேராசிரியர் கிறிஸ் லிண்டாட்.

"இந்த வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தைவிட பழமையானதாக இருப்பதற்கும், விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணித்து வருவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்புள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

விண்மீன்களுக்கு இடையிலான பொருட்கள், நட்சத்திரங்கள் உருவாகும்போது அவற்றைச் சுற்றி உருவாகின்றன என்று விளக்கும் ஹாப்கின்ஸ், "அவற்றின் தாய் நட்சத்திரங்களுடனான இந்தத் தொடர்பு, பால்வீதியின் நட்சத்திரக் கூட்டத்தை ஆராய உதவுகிறது" என்று கூறுகிறார்.

இந்த ஆண்டு இறுதியில், 3I/Atlas தொடக்கநிலை தொலைநோக்கிகளால் பூமியில் இருந்து தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3I/அட்லஸ் தோன்றுவதற்கு முன், வேறு இரண்டு விண்மீன் பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. அவை 2017இல் கண்டறியப்பட்ட 1I/'ஓமுவாமுவா மற்றும் 2019இல் கண்டறியப்பட்ட 2I/போரிசோவ் என்று அழைக்கப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள், சிலியில் வேரா சி. ரூபின் என்று அழைக்கப்படும் ஒரு புதிய, சக்தி வாய்ந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தெற்கு இரவு வானத்தை முழுமையாக ஆய்வு செய்யத் தொடங்கும்போது, விண்மீன்களுக்கு இடையிலான 5 முதல் 50 புதிய பொருட்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg57lr4v82o

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

2 months 3 weeks ago

iss073e0249461large.jpg?resize=750%2C375

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்துக்குள் சுபான்ஷு சுக்லா உடன் ஏனைய 3 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர்.

இன்று மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கிய தனது 24 மணி நேர பயணத்தை தொடங்குகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, அக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த ஜூன் 25ம் திகதி விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

இவர்கள் அங்கு பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய விண்வெளி வீரர் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார்.

இந்நிலையில் இன்று ( ஜூலை 14) பூமிக்கு திரும்புகின்றனர்.

இன்று மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கியுள்ளது.

டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பின்னர், நாளை மதியம் 3 மணிக்கு பூமி வந்தடையும்.

வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில், விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவை வரவேற்க அவரது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

https://athavannews.com/2025/1439126

Checked
Sat, 10/11/2025 - 14:51
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed