அறிவியல் தொழில்நுட்பம்

விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம் விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்

1 day 21 hours ago

images-7.jpg?resize=299%2C168&ssl=1

விண்ணில் செலுத்தப்பட்டு 14 செக்கன்களில் வெடித்து சிதறிய ரொக்கெட்; அவுஸ்திரேலியாவில் சம்பவம்.

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் (Eris)  எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் (orbital rocket) தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் குவீன்ஸ்லாந்தில் உள்ள போயன் ஓர்பிடல் ஸ்பேஸ் போர்டிலிருந்து  (Bowen Orbital Spaceport in North Queensland) விண்ணை நோக்கி செலுத்தப்பட்டிருந்த நிலையில்  14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”  இந்த சோதனை, நாட்டின் விண்வெளி துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ”இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இரண்டாவது சோதனை ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓர்பிடல் ரொக்கெட் சோதனை முயற்சி, அவுஸ்திரேலியாவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1441284

வான்பொருள்களை கருந்துளை விழுங்குவது எப்படி? - ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டிய இந்திய விஞ்ஞானிகள்

5 days 10 hours ago

கருந்துளை ஒரு வான்பொருளை விழுங்கும்போது என்ன நடக்கும்? கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், NASA/CXC/A.HOBART

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கருந்துளை. விண்வெளியில் இருக்கும் மர்மமான வான்பொருள்களில் ஒன்று. அவற்றைப் புரிந்துகொள்வது பேரண்டத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் என்று வானியல் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு கருந்துளையை இஸ்ரோவின் ஆஸ்ட்ரோசாட் என்ற விண்வெளித் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.

GRS 1915+105 எனப்படும் அந்தக் கருந்துளை, பால்வீதி கேலக்சியில், பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

GRS 1915+105 கருந்துளை பூமியில் இருந்து சுமார் 28,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறைகொண்டது.

ஆஸ்ட்ரோசாட் மூலம் இந்திய விஞ்ஞானிகள் அந்தக் கருந்துளையை ஆய்வு செய்து வந்தனர். அப்போது அதிலிருந்து வெளியான சமிக்ஞைகளைப் பதிவு செய்ததன் மூலம், அதைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஐஐடி கௌஹாத்தி, ஹைஃபா பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, கருந்துளைகள் பற்றி ஆழமான புரிதலை ஏற்படுத்துவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் GRS 1915+105 கருந்துளையில் கண்டுபிடித்தது என்ன?

இந்திய விஞ்ஞானிகள் உணர்ந்த கருந்துளையின் சமிக்ஞைகள்

ஒரு நட்சத்திரத்தின் வாழ்நாள் முடியும்போது அது தனக்குள்ளேயே சுருங்கி கருந்துளையாக உருவெடுக்கிறது. அதீத ஈர்ப்பு விசை காரணமாக, ஒளியைக்கூட அவை விழுங்கிவிடும். எனவே, கருந்துளைகள் கண்ணுக்குத் தெரியவில்லை.

பொதுவாக, பெரிய நட்சத்திரங்களின் வாழ்நாள் முடியும்போது அவற்றில் இருந்து கருந்துளைகள் உருவாகின்றன.

கருந்துளைகளின் விடுபடு திசைவேகம் (Escape Velocity), ஒளியின் வேகத்தைவிட சற்று அதிகம் என்பதால், அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்ப முடியாது. எனவே, கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது.

ஆனால், கருந்துளையால் விழுங்கப்படும் வான்பொருட்கள் மிகவும் சூடாகி, எக்ஸ்ரே கதிர்களை வெளியிடுகின்றன. அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும்.

கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை அவதானிப்பதன் மூலம் அதன் அருகிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் பிற வான் பொருட்களில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

கருந்துளைகளை நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால், அவை விழுங்கும் வான் பொருட்கள் வெப்பமடைந்து, எக்ஸ் கதிர்களை வெளியிடும். அந்தக் கதிர்களை தனித்துவமான விண்வெளித் தொலைநோக்கிகள் மூலமாகக் காண முடியும்.

அத்தகைய ஆய்வு ஒன்றை, GRS 1915+105 கருந்துளையில் ஆஸ்ட்ரோசாட் விண்வெளித் தொலைநோக்கி மூலமாக இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கருந்துளை சூரியனைவிட 12 மடங்கு அதிக நிறை கொண்டது. அதன் சுழற்சி வேகமும் சூரியனைவிடப் பல மடங்கு அதிகம். அதை ஆய்வு செய்து வந்த இந்திய விஞ்ஞானிகள், அதன் இயக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகளை' பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு, கருந்துளை ஆய்வில் மிக முக்கியமானது என்றும், அவற்றின் செயல்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

GRS 1915+105 கருந்துளையில் விஞ்ஞானிகள் கண்டது என்ன?

GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சில நூறு நொடிகளுக்கு ஒருமுறை, பிரகாசமாக, மங்கலாக என மாறிக்கொண்டே இருந்தது. ஒளி பிரகாசமாக இருக்கும்போது அதில் ஒரு நொடிக்கு 70 மினுமினுப்புகள் உருவாவதும், மங்கும்போது அது மறைவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

GRS 1915+105 கருந்துளையை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி பல ஆண்டுகளாகக் கண்காணித்து வருகிறது.

கருந்துளைகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும், அவை வான்பொருட்களை விழுங்கும்போது உருவாகும் எக்ஸ் கதிர்கள் மூலம் அவற்றை அவதானிக்க முடியும் என்று முன்னமே பார்த்தோம்.

அந்த எக்ஸ் கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கி மூலம் இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் கருந்துளையில் இருந்து வெளிப்படும் எக்ஸ்-ரே ஒளி சிறிது நேரத்திற்குப் பிரகாசமாக, சிறிது நேரத்திற்கு மங்கலாக என மாறிக்கொண்டே இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாற்றம் ஒவ்வொரு சில நூறு நொடிகளுக்கும் நடப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

மேலும், எக்ஸ்-ரே ஒளி பிரகாசமாக இருக்கும்போது மினுமினுப்புகள் உருவாவதும், மங்கலாக இருக்கும்போது மறைவதும் இந்த ஆய்வில் அவதானிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, ஒரு நொடிக்கு சுமார் 70 முறை என்ற அளவுக்கு அதிவேகமாக மின்னுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இவற்றை கருந்துளையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் 'சமிக்ஞைகள்' என்று விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர்.

கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மின்னுவது ஏன்?

கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் வெப்பம் மற்றும் ஆற்றல் மிக்க வாயு மேகம் உள்ளது. அதுவே, எக்ஸ்-ரே ஒளியில் உருவாகும் மினுமினுப்புக்கு காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

GRS 1915+105 கருந்துளையில் இருந்து வெளியாகும் எக்ஸ்-ரே ஒளி இவ்வாறு அதிவேகமாக மின்னுவது ஏன்?

கருந்துளையைச் சுற்றி கொரோனா எனப்படும் மிகவும் வெப்பமான, ஆற்றல் மிக்க வாயு மேகம் இருக்கிறது. அதுவே, அதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த ஆய்வின்படி, "கருந்துளை பிரகாசமான கட்டத்தில் இருக்கும்போது, கொரோனா படலம் சிறியதாக, அதீத வெப்பத்துடன் இருக்கும். அதுதான், எக்ஸ்-ரே ஒளியில் அதிவேக மினுமினுப்புகளை உருவாக்குகிறது.

இதற்கு மாறாக, எக்ஸ்-ரே ஒளி மங்கலாக இருந்த நேரத்தில், கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ச்சியடைகிறது. ஆகையால், மினுமினுப்புகள் ஏற்படுவதில்லை."

GRS 1915+105 கருந்துளையின் எக்ஸ்-ரே ஒளி மங்கும்போது கொரோனா படலம் விரிவடைந்து, குளிர்ந்துள்ளது.  அதற்கு மாறாக, ஒளி பிரகாசமாக இருக்கையில், கொரோனா படலம் சிறிதாக, அதீத வெப்பத்துடன் இருந்தது. அதுவே மினுமினுப்புகள் உருவாகக் காரணம் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு கருந்துளைக்கு அருகில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. ஒளியைக்கூட விட்டுவைக்காத கருந்துளையின் இயக்கம் மற்றும் அது தனது சுற்றுப்புறத்துடன் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதை இது காட்டுகிறது.

"இது, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம். அதோடு, மனித இனம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதில் இந்திய விஞ்ஞானிகளுக்கு இருக்கும் முக்கியமான பங்கையும் இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ரோசாட் என்பது என்ன?

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது, கருந்துளைகள், நட்சத்திரங்கள் போன்ற வான் பொருட்களை ஆய்வு செய்வதற்காக 2015ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவியது.

ஆஸ்ட்ரோசாட் என்பது இந்தியாவின் முதல் விண்வெளித் தொலைநோக்கி. இது நட்சத்திரங்கள், கருந்துளைகள், விண்மீன் திரள்கள் போன்ற வான்பொருட்களை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

இது இஸ்ரோவால், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் எடை சுமார் 1,515 கிலோ. அது பூமியில் இருந்து சுமார் 650கி.மீ. உயரத்தில் நிலைகொண்டு சுற்றி வருகிறது.

ஒரே நேரத்தில் புறஊதாக் கதிர், எக்ஸ்-கதிர், காமா கதிர் எனப் பல வடிவங்களில் விண்வெளியைக் கவனிக்க முடியும் என்பது ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியின் தனிச்சிறப்பு.

இந்தக் கதிர்களை வெறும் கண்களால் காண இயலாது என்றாலும், அவை பிரபஞ்சத்தின் இயக்கம் குறித்த பல முக்கியமான தகவல்களைக் கொண்டுள்ளன.

விண்வெளியில் காணப்படும் வான் பொருட்களைப் படம் பிடிக்கவும், அவற்றின் பிரகாசம் மற்றும் நிறத்தில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை ஆராயவும் உதவக் கூடிய ஐந்து கருவிகள் ஆஸ்ட்ரோசாட் தொலைநோக்கியில் இருக்கின்றன.

அவற்றின் உதவியுடன், பிரபஞ்சத்தின் தொலைதூரப் பகுதிகளை அவதானித்து, நட்சத்திரங்களின் பிறப்பு, இறப்பு மற்றும் அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பன பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள இந்திய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c05ej664er5o

நாசா – இஸ்ரோ கூட்டுத்திட்டம் நிசார் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி – பதில்கள்!

1 week 1 day ago

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, நாசா, இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரை தகவல்

  • க.சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும்.

நிசார் திட்டம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான படி என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதி தெரிவித்தனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், விண்வெளியில் இருந்து பூமியில் மாறி வரும் நிலைமைகளைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இது காடுகள், பனிக்கட்டிகள், பனிப்பாறைகள், பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கண்டத்தட்டுகளின் நகர்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும்.

இந்தச் செயற்கைக்கோள் சேகரிக்கும் தரவுகள் இயற்கைப் பேரிடர்களுக்கு எதிர்வினையாற்றுவது, உள்கட்டமைப்பைச் சரிபார்ப்பது, விவசாயிகளுக்கு உதவுவது எனப் பலவிதங்களில் பயன்படும் என்றும் நேற்று வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா, இஸ்ரோவின் கூட்டுத்திட்டமான இந்த நிசாரின் முக்கியத்துவம் என்ன? அதன்மூலம் இரு நாடுகளும் சாதிக்கப் போவது என்ன?

இந்தத் திட்டம் பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு காண்போம்.

1. நிசார் திட்டத்தின் நோக்கம் என்ன? எப்படிப் பயனளிக்கும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, நிசார் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், பூமியின் தெளிவான ஒளிப்படங்களைப் பதிவு செய்யும்.

நாசாவும் இஸ்ரோவும், நிசாரை ஏவிய பிறகு, அது பூமியை மிகவும் விரிவாக, தெளிவாகப் படம் பிடிக்கும். அவற்றால் ஒரு அங்குல நிலத்தில் நிகழும் சிறிய அசைவுகளைக்கூட மிகத் துல்லியமாகக் காட்ட முடியும். அதாவது, ஒரு நிலத்தின் சிறு பகுதியளவு சில சென்டிமீட்டர் அளவுக்கு மூழ்கினாலும் அல்லது இடம் மாறினாலும், அந்த மாற்றத்தைக் கண்டறிய இதனால் முடியும்.

நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை முழுவதுமாக ஸ்கேன் செய்யும். அதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படங்கள் மூலம்,

  • நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு முன்னரும் பின்னரும் நிலப்பரப்பில் நடக்கும் மாற்றங்களைப் பார்க்க முடியும்

  • பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளில் மெதுவாக நிகழும் நகர்வுகளைக் காணலாம்

  • காடு உருவாக்கம் அல்லது காடழிப்பு என காடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க இயலும்

  • வளர்ச்சித் திட்டங்கள் போன்ற காடுகளில் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணிக்க முடியும்

நிசார் திட்டத்தில் பயன்படுத்தப்படும் செயற்கைத் துளை ரேடார் (SAR) எனப்படும் சிறப்பு தொழில்நுட்பம்தான் இந்தத் துல்லியமான படங்களைப் பெற உதவுகிறது.

2. செயற்கைத் துளை ரேடார் (SAR) என்றால் என்ன?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, நிசார் செயற்கைக்கோளில் உள்ள ஆன்டனா 12 மீட்டர் நீளமுடையது.

செயற்கைத் துளை ரேடார் அல்லது SAR என்பது ஆற்றல் சிக்னல்களை பூமியின் மேற்பரப்பை நோக்கி அனுப்பி, அவை மோதிய பிறகு அவற்றில் எவ்வளவு ஆற்றல் திரும்புகிறது என்பதை அளவிடுவதன் மூலம் தரவுகளைச் சேகரிக்கும் ஒரு செயல்முறை.

வழக்கமான ரேடாரை போலவே, SAR மைக்ரோவேவ் சிக்னல்களை அனுப்பி, அவை மீண்டும் எதிரொலிப்பதைப் பதிவு செய்கிறது. ஆனால் இந்த செயற்கைக்கோள் நகரும்போது பல அளவீடுகளை எடுத்து மேம்பட்ட கணினி செயலாக்கத்தைப் பயன்படுத்தி அவற்றை இணைக்கிறது. இதுதான் இறுதி படங்களை மிகவும் தெளிவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பம் இல்லாமல் அதே அளவுக்குத் தெளிவான ஒளிப்படங்களைப் பெறுவதற்கு, ஒரு செயற்கைக்கோளுக்கு 19 கிலோமீட்டர் அகலமுள்ள ரேடார் ஆன்டனா தேவைப்படும். நிசார் செயற்கைக்கோளின் ஆன்டனா சுமார் 12 மீட்டர் அகலம் கொண்டது. அதாவது ஒரு பேருந்து அளவுக்கு நீளமானது.

ஆனால், இந்த செயற்கைக்கோள் மூலம் 10 மீட்டர் வரை சிறிய பகுதிகளைக்கூட மிகத் தெளிவாகவும், கூர்மையாகவும் படம் பிடிக்க முடியும். அதோடு, அந்தச் சிறிய நிலப்பகுதியில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட இந்தத் தொழில்நுட்பத்தில் துல்லியமாக அடையாளம் காண முடியும்.

இதுகுறித்துப் பேசியுள்ள நாசாவின் முன்னாள் நிபுணர் சார்லஸ் எலாச்சி, "பூமியின் மாற்றங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் காண SAR உதவுகிறது. பூமி எவ்வாறு செயல்படுகிறது, காலப்போக்கில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்துகொள்ள நிசார் உதவும்," என்று தெரிவித்துள்ளார்.

3. செயற்கைத் துளை ரேடார் எவ்வாறு செயல்படும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, பூமியின் ஒளிப்படங்களை துல்லியமாகப் பதிவு செய்வதற்காக விஞ்ஞானிகள் சாமர்த்தியமான ஒரு தீர்வை கண்டுபிடித்தனர்.

சூரிய ஒளியைச் சார்ந்து செயல்படும் வழக்கமான கேமராக்களை போலன்றி, இது அதன் சொந்த சிக்னல்களை அனுப்பிப் படம் பிடிக்கிறது. இந்த சிக்னல்கள் மலைகள், காடுகள் அல்லது ஈரமான மண்பரப்பு ஆகியவற்றில் மோதிய பிறகு, மீண்டும் சென்சாரை நோக்கிப் பிரதிபலிக்கிறது.

இந்தப் பிரதிபலிப்பு, தெளிவான படங்களை எடுப்பதற்கு உதவுகிறது. SAR-ஐ அண்டார்டிகாவின் பனிப்பாறைகள், எண்ணெய்க் கசிவுகள், ஈரநிலங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யப் பயன்படுத்தலாம்.

இதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படத்தின் தரம், அதிலுள்ள ஆன்டனா எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதைப் பொறுத்தது. ஆன்டனா பெரிதாக இருந்தால் படம் தெளிவாக இருக்கும். ஆனால், ஒரு செயற்கைக்கோளில் 4 கி.மீ நீளம்கொண்ட ஒரு பிரமாண்ட ஆன்டனாவை வைப்பது சாத்தியமில்லை.

எனவே, விஞ்ஞானிகள் இதற்கு சாமர்த்தியமான ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். ஒரு பிரமாண்ட ஆன்டனாவுக்கு பதிலாக சிறிய ஆன்டனாவையே பயன்படுத்தி, செயற்கைக்கோள் நகரும்போது அதிக அளவிலான அளவீடுகளைப் பதிவு செய்கிறார்கள். பின்னர் அந்த அளவீடுகளை மொத்தமாக இணைத்து ஒரு பிரமாண்ட ஆன்டனாவில் இருந்து கிடைத்தது போலச் செய்கிறார்கள். இதுவே, இந்தச் செயல்முறை 'செயற்கை' துளை ரேடார் என அழைக்கப்படுவதற்குக் காரணம்.

இதன்மூலம், இந்தச் செயற்கைக்கோள் பல சிறிய அளவீடுகளைப் பயன்படுத்தி, ஒரு பெரிய கட்டமைப்பின் தேவையின்றியே, அதில் கிடைக்கக்கூடிய தெளிவான, உயர்தர ஒளிப்படங்களை எடுக்கிறது.

4. நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விவசாயத்திற்கு எப்படி உதவும்?

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மண்ணின் ஈரப்பதம், பயிர்களின் ஆரோக்கியம் போன்ற தகவல்களை நிசார் செயற்கைக்கோள் மூலம் பெறுவது, விவசாயிகள் திட்டமிட்டுப் பயிரிடுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் துல்லியமான படங்கள், உலகெங்கும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது. அதாவது, பயிர்களின் வளர்ச்சி, தாவரங்களின் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம் போன்ற முக்கியமான தகவல்களை வழங்கும்.

இந்தத் தகவல்கள் விவசாயிகளுக்குப் பயிர்களை நடவு செய்வது, தண்ணீர்ப் பாய்ச்சுவது, அறுவடை செய்வது ஆகியவற்றுக்குச் சரியான காலகட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். இது நேரத்தை மிச்சப்படுத்தவும், தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவுவதோடு, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து செயல்படவும் வழிவகுக்கும்.

"விவசாயத்தில் சரியான திட்டமிடல் முக்கியம். நடவு, பாசனம் என அனைத்திற்குமே சிறந்த நேரம் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும்," என்று கூறியுள்ளார் நிசார் திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானி நரேந்திர தாஸ்.

நிசார் செயற்கைக்கோளில், பயிர்கள் மற்றும் மண்ணின் தன்மையை ஆராய ஒரு சிறப்பு ரேடார் பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம், மண்ணிலும் தாவரங்களிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது, பயிர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சொல்ல முடியும்.

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களில் வாரந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பார்க்கலாம். பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வதன் மூலம் அரசுகள் அதிக நன்மை பயக்கும் விவசாயக் கொள்கைகளை வகுக்கலாம்.

எடுத்துக்காட்டாக, இதில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி, நெல் எப்போது நடப்பட்டது, செடிகள் எவ்வளவு உயரமாக உள்ளன, அவை பூக்கின்றனவா என்பனவற்றை அறிய முடியும். இதில் நெல் வயல்களின் ஈரப்பதம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம், வயல் நிலம் வறண்டிருப்பதாகத் தோன்றினால் அல்லது பயிர்கள் ஆரோக்கியமற்று தோற்றமளித்தால், விவசாயிகள் தங்கள் அணுகுமுறையை விரைவாக மாற்றிக்கொள்ள முடியும்.

5. நிசார் திட்டத்தில் நாசா, இஸ்ரோவின் பங்கு என்ன?

நிசார் திட்டம் தொடர்பாக இஸ்ரோ, நாசா இடையே 2014 செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2024இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் செயற்கைக்கோள் உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது நடக்காமல் போனது.

கடந்த டிசம்பர் 2024இல் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 12 மீட்டர் நீளமுள்ள ஆன்டனாவில் சில முன்னேற்றங்களைச் செய்வதற்காக நாசா வல்லுநர்கள் அதைக் கடந்த அக்டோபரில் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றனர்.

நிசார்: நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதோடு, செயற்கைக்கோளின் சில பாகங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு எல் பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான ஒரு தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் (இது தான் செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை நாசா வழங்கியுள்ளது.

மறுபுறம், இந்தச் செயற்கைக்கோளில் எல் பேண்ட் எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் பேண்ட் எஸ்.ஏ.ஆர் என்கிற இரண்டு ரேடார் கருவிகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கருவிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமைப்பு மற்றும் இதர விஷயங்களை இஸ்ரோ பராமரித்து வருகிறது.

நிசார், ஜூலை 30ஆம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும்.

இந்த செயற்கைக்கோளின் மையப்பகுதி 5.5 மீட்டர் நீளமுடையது. இதில், 12 மீட்டர் நீளமுள்ள ரேடார் ஆன்டனா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 5.5 மீட்டர் நீளத்திற்கு இரண்டு சூரிய மின்தகடுகள் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன.

மூன்று ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிசார் திட்டத்தில், நாசா 1.1589 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இஸ்ரோ இந்தத் திட்டத்தில் 91.167 மில்லியன் டாலர் (ரூ.7.88 பில்லியன்) முதலீடு செய்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg12vxd5lyo

மூன்று பேரின் மரபணுவில் பிறக்கும் குழந்தைகள் - ஆபத்தான நோயை தவிர்க்கும் அற்புதம்

2 weeks ago

மூன்று பேரின் மரபணுவில் பிறக்கும் குழந்தைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் கல்லாகர்

  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மூன்று பேரின் மரபணு கூறுகளை பயன்படுத்தி பிரிட்டனில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இந்த முறை மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டன் விஞ்ஞானிகளால் முன்னோடியாகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில், ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவுடன், மற்றொரு பெண்ணிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இரண்டாவது கருமுட்டையை இணைக்கின்றனர்.

இந்த நுட்பம் ஒரு தசாப்த காலமாக பிரிட்டனில் சட்டப்பூர்வமாக இருந்தபோதிலும், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய் பாதிப்பு இல்லாமல் குழந்தைகள் பிறக்க இந்த முறை உதவும் என்பதற்கான முதல் ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியல் நோய் நிலைமைகள் பொதுவாக தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுகின்றன. இதனால் உடலில் சக்தி இல்லாமல் போகும்.

இந்த நோய் கடுமையான இயலாமைக்கு வழிவகுக்கும். சில குழந்தைகள் பிறந்த சில நாட்களுக்குள் இறந்துவிடும்.

தம்பதிகளுக்கு முதலில் பிறந்த குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது தாய் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் அடுத்தக் குழந்தைக்கு ஆபத்து இருக்கும் என்பதை தம்பதிகள் அறிவார்கள்.

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்று-நபர் நுட்பத்தின் (three-person technique) மூலம் பிறக்கும் குழந்தைகள் தங்களுடைய அசல் பெற்றோரிடமிருந்து தங்கள் டிஎன்ஏவின் பெரும்பகுதியையும் அவர்களின் மரபணு வரைபடத்தையும் (genetic blueprint) பெற்றாலும், இரண்டாவது பெண்ணிடமிருந்து ஒரு சிறிய அளவிலான (சுமார் 0.1% மட்டுமே) மரபணுவைப் பெறுகிறார்கள்.இந்த மாற்றம் பல தலைமுறைகளை கடந்து செல்லும்.

இந்த செயல்முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட குடும்பங்கள், தங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக இந்த விஷயத்தை பகிரங்கமாகப் பேசவில்லை.

ஆனால் மூன்று நபர் நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பிறக்கச் செய்த நடைமுறைகளை மேற்கொண்ட நியூகேஸில் கருவுறுதல் மையம் மூலம் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இந்த நுட்பத்தின் மூலம் குழந்தைகள் பிறந்ததை மட்டும் அறிவித்தனர்.

'நன்றியுணர்வால் நெகிழ்கிறோம்'

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான இரண்டு அறிக்கைகள், நியூகேஸில் கருவுறுதல் மையத்தில் 22 குடும்பங்கள் இந்த கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்டதாக கூறுகின்றன.

"பல வருட நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு இந்த சிகிச்சை எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. புதிய நுட்பம் எங்களுக்கு குழந்தையைக் கொடுத்தது," என்று ஒரு பெண் குழந்தையின் தாய் கூறினார்.

"வாழ்க்கையில் அனைத்து சாத்தியக்கூறுக்களும் இருக்கின்றன என்பதை இப்போது உணர்கிறோம், நன்றியுணர்வால் நெகிழ்ந்து போய் இருக்கிறோம்" என்று அந்தத் தாய் கூறினார்.

இந்த நுட்பம் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஒரு தாய், "இந்த நம்பமுடியாத முன்னேற்றத்திற்கும் எங்களுக்குக் கிடைத்த ஆதரவிற்கும் நன்றி. எங்கள் சிறிய குடும்பம் தற்போது முழுமையடைந்துள்ளது" என்று கூறினார்

"மைட்டோகாண்ட்ரியல் நோயினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிவிட்டது. தற்போது, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் ஆழ்ந்த நன்றியுணர்வால் மனம் நிரம்பியுள்ளது."

மைட்டோகாண்ட்ரியா என்பது நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ள சிறிய கட்டமைப்புகள் ஆகும். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை பயன்படுத்தி நாம் சாப்பிடும் உணவை எரிசக்தியாக மாற்றுவதற்கு இவை உதவுகின்றன.

மைட்டோகாண்ட்ரியா குறைபாடு ஏற்பட்டால், இதயத்தைத் துடிக்க வைக்க உடலுக்குப் போதுமான சக்தி கிடைக்காது. மேலும், மூளை பாதிப்பு, வலிப்பு, பார்வை இழப்பு, தசை பலவீனம், உறுப்பு செயலிழப்பு என பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

பிறக்கும் குழந்தைகளில் ஐந்தாயிரத்தில் சுமார் ஒரு குழந்தை மைட்டோகாண்ட்ரியல் நோயுடன் பிறக்கிறது. நியூகேஸிலில் உள்ள நிபுணர் குழு, ஆண்டுதோறும் மூன்று நபர் முறை மூலம் 20 முதல் 30 குழந்தைகள் பிறக்க வேண்டிய தேவை இருக்கும் என எதிர்பார்க்கிறது.

தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் பல இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் வேதனையை பெற்றோர்களில் பலர் எதிர்கொண்டுள்ளனர்.

மைட்டோகாண்ட்ரியா என்பது, தாயிடமிருந்து குழந்தைக்கு மட்டுமே பரவுகிறது. எனவே இந்த நவீன கருவுறுதல் நுட்பம், பெற்றோர் மற்றும் ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவை தானம் செய்யும் ஒரு பெண் என மொத்தம் மூன்று பேரை பயன்படுத்துகிறது.

இந்த முறை, ஒரு தசாப்தத்திற்கும் முன்னர் நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் நியூகேஸில் அபான் டைன் ஹாஸ்பிடல்ஸ் என்.எச்.எஸ் ஃபவுண்டேசன் டிரஸ்ட்டால் உருவாக்கப்பட்டது.

கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்ட 22 குடும்பங்கள்

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,BBC/JOSH ELGIN

படக்குறிப்பு, கேட் கிட்டோ (வலது) தனது மகள் லில்லி மற்றும் செல்லப்பிராணி மோன்டியுடன்

தாய் மற்றும் தானம் செய்பவரின் கருமுட்டைகள், தந்தையின் விந்தணுக்களுடன் ஆய்வகத்தில் கருத்தரிக்கப்படுகின்றன.

விந்து மற்றும் முட்டையிலிருந்து வரும் டிஎன்ஏ, புரோ-நியூக்ளியஸ் எனப்படும் ஒரு ஜோடி அமைப்புகளை உருவாக்கும் வரை கருக்கள் உருவாகின்றன. இவை, முடி நிறம் மற்றும் உயரம் என மனித உடலை உருவாக்குவதற்கான வரைபடங்களைக் கொண்டுள்ளன.

இரண்டு கருக்களிலிருந்தும் சார்பு கருக்கள் அகற்றப்பட்டு, ஆரோக்கியமான மைட்டோகாண்ட்ரியாவால் நிரம்பிய கருவுக்குள் பெற்றோரின் டிஎன்ஏ வைக்கப்படுகிறது.

இதன் விளைவாக, பிறக்கும் குழந்தை பெற்றோருடன் மரபணு ரீதியாக தொடர்புடையதாகவும் இருக்கும், அதே நேரத்தில் மைட்டோகாண்ட்ரியல் நோயிலிருந்து விடுபடவும் முடியும்.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியான இரண்டு அறிக்கைகள், நியூகேஸில் கருவுறுதல் மையத்தில் 22 குடும்பங்கள் இந்த கருவுறுதல் செயல்முறையை மேற்கொண்டதாக கூறுகின்றன.

இந்த செயல்முறையில் நான்கு ஆண் குழந்தைகளும் நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தன, அதில் ஒரு இரட்டைக் குழந்தையும் அடங்கும், மேலும் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார்.

"நீண்ட காத்திருப்பு மற்றும் பின்விளைவுகள் குறித்த பயத்திற்குப் பிறகு இந்தக் குழந்தைகளின் பெற்றோரின் முகங்களில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் காண முடிகிறது. இந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக சாதாரணமான குழந்தைகளாக வளர்வதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது" என்று அரிய மைட்டோகாண்ட்ரியல் கோளாறுகளுக்கான NHS (தேசிய சுகாதார சேவை) உயர் சிறப்பு சேவையின் இயக்குனர், பேராசிரியர் பாபி மெக்ஃபார்லேண்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.

அனைத்து குழந்தைகளும் மைட்டோகாண்ட்ரியல் நோயின்றி பிறந்து, எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மைல்கற்களை எட்டின.

குழந்தைகள், மைட்டோகாண்ட்ரியாக்கள், டி.என்.ஏ, கருமுட்டை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட மைட்டோகாண்ட்ரியனின் படம் - ஒரு கருவுற்ற முட்டையில் அரை மில்லியன் வரை இருக்கும்.

ஒரு குழந்தைக்கு வலிப்பு நோய் இருந்தது, அது தானாகவே சரியாகிவிட்டது, ஒரு குழந்தைக்கு அசாதாரண இதயத் துடிப்பு உள்ளது. அதற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த குழந்தைகளின் உடல்நலக் குறைவுகள், குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியாவுடன் தொடர்புடையதாக கருதப்படவில்லை.

இது செயற்கை கருத்தரிப்பின் அறியப்பட்ட அபாயங்களின் ஒரு பகுதியா, மூன்று நபர் முறை கருவுறுதல் நுட்பத்தினால் ஏற்பட்ட குறிப்பிட்ட பிரச்னையா அல்லது இந்த நுட்பத்தின் மூலம் பிறக்கும் அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியமும் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் மட்டுமே கண்டறியப்பட்ட ஒன்றா என்பது தெரியவில்லை.

குறைபாடுள்ள மைட்டோகாண்ட்ரியா ஆரோக்கியமான கருவிற்குள் மாற்றப்படுமா, அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது இந்த அணுகுமுறை தொடர்பான மற்றொரு முக்கிய கேள்வியாக இருக்கிறது.

ஐந்து நிகழ்வுகளில் நோயுற்ற மைட்டோகாண்ட்ரியா கண்டறிய முடியாததாக இருந்ததாக முடிவுகள் காட்டுகின்றன. மற்ற மூன்றில், ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளில் 5% முதல் 20% வரை மைட்டோகாண்ட்ரியா குறைபாடு காணப்பட்டது.

இந்த அளவானது, நோயை உண்டாக்கும் என்று கருதப்படும் 80% அளவை விட மிகக் குறைவு. இது ஏன் ஏற்பட்டது, அதைத் தடுக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படும்.

நியூகேஸில் பல்கலைக்கழகம் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மேரி ஹெர்பர்ட் "கண்டுபிடிப்புகள் நம்பிக்கைக்கு அடித்தளம் அமைக்கின்றன. இருப்பினும், மைட்டோகாண்ட்ரியல் நன்கொடை தொழில்நுட்பங்களின் வரம்புகளை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சிகள் மேலும் தேவை. இது, சிகிச்சை விளைவுகளை மேலும் மேம்படுத்த அவசியமாக இருக்கும்." என்கிறார்.

இந்த முன்னேற்றம் கேட் என்ற பெண்ணின் குடும்பத்திற்கு நம்பிக்கையைத் தருகிறது. கேட்டின் இளைய மகள் பாப்பிக்கு (14) இந்த நோய் உள்ளது. அவளுடைய மூத்த மகள் லில்லி (16) அதை தன் குழந்தைகளுக்கும் கடத்தக்கூடும்.

சக்கர நாற்காலியில் இருக்கும் பாப்பியால் பேசமுடியாது, குழாய் வழியாகவே உணவு வழங்கப்படுகிறது.

"இந்த நோய் பாப்பியின் வாழ்க்கையை பெருமளவில் பாதித்துள்ளது," என்று கேட் கூறுகிறார்.

பல தசாப்தங்களாக முயற்சி செய்தும், மைட்டோகாண்ட்ரியல் நோய்க்கு இன்னும் சிகிச்சை இல்லை, ஆனால் அது பரவுவதைத் தடுக்கும் வாய்ப்பு இருப்பதால் லில்லியின் கவலை குறைகிறது.

"என்னைப் போன்ற எதிர்கால சந்ததியினர், அல்லது என் குழந்தைகள், அல்லது உறவினர்கள் போன்றவர்கள் சாதாரண வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கமுடியும்," என்று லில்லி கூறுகிறார்.

'இதை பிரிட்டன் மட்டுமே செய்ய முடியும்'

மூன்று நபர் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் அறிவியலை உருவாக்கிய பிரிட்டன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்குப் பிறகு, அவற்றை உருவாக்க அனுமதிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக மாறியது.

மைட்டோகாண்ட்ரியாக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் அவற்றின் சொந்த டிஎன்ஏவும் அவற்றிடம் இருப்பதால் சர்ச்சை எழுந்தது.

இதன் பொருள், குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து டி.என்.ஏவைப் பெறுகின்றனர். அதேபோல கருமுட்டை தானம் செய்த பெண்ணிடமிருந்து சுமார் 0.1% டி.என்.ஏவைப் பெறுகின்றனர்.

இந்த நுட்பத்தின் மூலம் பிறக்கும் பெண்கள், இதை தங்களுக்குப் பிறக்கும் சொந்தக் குழந்தைகளுக்குக் கடத்துவார்கள், எனவே இது மனித மரபணு மரபின் நிரந்தர மாற்றமாகும்.

இந்த தொழில்நுட்பம் விவாதிக்கப்பட்டபோது, இது சிலருக்கு அதீதமான படியாக தோன்றியது, இது மரபணு மாற்றப்பட்ட "வடிவமைப்பாளர்" குழந்தைகளை பிறக்கச் செய்வதற்கு கதவுகளைத் திறக்கும் என்ற அச்சத்தையும் எழுப்பியது.

நியூகேஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சர் டக் டர்ன்புல் "உலகில் இங்கு மட்டும்தான் இப்படி நடந்திருக்கும் என நினைக்கிறேன், நாம் இருக்கும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல முதல்-தர அறிவியல் இருந்தது, மருத்துவ சிகிச்சைக்கு அதை நகர்த்தவும் அனுமதிக்கவும் சட்டம் இருந்தது. இப்போது மைட்டோகாண்ட்ரியல் நோயிலிருந்து விடுபட்ட எட்டு குழந்தைகளைப் பெற்றுள்ளோம், என்ன ஒரு அற்புதமான முடிவு!"என்றார்

லில்லி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் லிஸ் கர்டிஸ் கூறுகையில், "பல வருட காத்திருப்புக்குப் பிறகு, இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன என்பது நமக்குத் தெரியும். இந்தக் குழந்தைகள் அனைவருக்கும் மிட்டோவின் அறிகுறிகள் எதுவும் இல்லை."

"பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு, இந்த மரபுவழி நிலையின் சுழற்சியை உடைப்பதற்கான முதல் உண்மையான நம்பிக்கைக்கீற்று இதுவாகும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77vgjl0p4ro

5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘

2 weeks ago

66f78fcc7f98c96f442f7fb86aea82d8eae21c69

5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘

செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோகிராம் எடையுடைய அரிய விண்வீழ்கலொன்று  5.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு Sotheby’s நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது எனவும், அதில்  நிகழ்நிலை மூலமாக பலர் பங்கேற்றிருந்தனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘NWA 16788’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த  விண்வீழ்கல்லானது 2023ஆம் ஆண்டு சஹாரா பாலைவனத்தில் உள்ள நைஜர் நாட்டின் அகாடெஸ் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த விண்வீழ் செவ்வாய்க் கோளிலிருந்து பிரிந்த மிகப்பெரிய துண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து Sotheby’s நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசேண்ட்ரா ஹெட்டன் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்த அரிய விண்வீழ்கல் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது எனவும்,  அது பெருங்கடலுக்குப் பதிலாக பாலைவனத்தில் விழுந்தது மிகப் பெரிய அதிசயம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439682

சூரிய குடும்பத்தைவிட பல கோடி ஆண்டுகள் பழமையான வால் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

2 weeks 1 day ago

3I/Atlas - மிக பழமையான வால்மீன்

பட மூலாதாரம்,ESO/O. HAINAUT

படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கட்டுரை தகவல்

  • ஜார்ஜினா ரென்னார்ட்

  • அறிவியல் & காலநிலை செய்தியாளர்

  • 17 ஜூலை 2025, 11:40 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது.

நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை விஞ்ஞானிகள் கண்டறிவது மூன்றாவது முறை. டர்ஹாமில் நடைபெற்ற பிரிட்டனின் ராயல் வானியல் சங்கத்தின் தேசிய கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று இந்த முதல்கட்ட கண்டுபிடிப்புகள் விளக்கப்பட்டன.

"நாங்கள் அனைவரும் 3I/Atlas வால்மீன் பற்றி அறிந்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வானியலாளர் மேத்யூ ஹாப்கின்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நான் எனது முனைவர் பட்டத்தை முடித்துவிட்டேன், அதில் நான்கு ஆண்டுகள் விண்மீன்களுக்கு இடையிலான பொருட்களைக் கணித்து ஆய்வு செய்தேன். இறுதியாக, எனது ஆய்வுகளில் முதல் முறையாக ஒரு வான்பொருளைக் கண்டுபிடித்தோம்," என்று அவர் கூறினார்.

3I/Atlas எனும் பொருளின் வேகத்தை ஆய்வு செய்த மேத்யூ ஹாப்கின்ஸ், இது ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு (700 கோடி ஆண்டுகள்) மேல் பழமையானதாக இருக்கலாம் என்கிறார்.

மேலும், இதுவரை காணப்பட்ட வால்மீன்களுக்கு இடையிலான பொருட்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 3I/Atlas, ஜூலை 1, 2025 அன்று சிலியில் உள்ள அட்லஸ் சர்வே தொலைநோக்கி மூலம் முதலில் காணப்பட்டது. அப்போது அது சூரியனில் இருந்து 670 மில்லியன் கி.மீ. தொலைவில் இருந்தது.

இப்போது, மிகப்பெரிய தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே பார்க்க முடியும் இந்த வான்பொருள், தனது மண்டலத்தில் உள்ள சூரியனிடம் இருந்து, பூமியில் இருந்து வியாழன் கோள் அமைந்திருக்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. அந்த வால்மீன் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் அதன் பாதையைக் கண்டறியவும், அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும் முயன்று வருகின்றனர்.

அது பால்வீதி மண்டலத்தின்(Milky way galaxy) "தடிமனான வட்டில்" (thick disk) இருந்து வந்திருக்கலாம் என்கிறார் ஹாப்கின்ஸ். இந்தத் தடிமனான வட்டு என்பது, பெரும்பாலான நட்சத்திரங்கள் உள்ள பகுதியில் மேலும் கீழுமாகச் சுற்றி வரும் ஆதிகால நட்சத்திரங்களைக் குறிக்கிறது.

3I/Atlas - மிக பழமையான வால்மீன்

பட மூலாதாரம்,MATTHEW HOPKINS

படக்குறிப்பு, 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

பால்வீதியை மேலிருந்து பார்க்கும்போது, 3I/Atlas நமது சூரிய மண்டலத்தைச் சுற்றி எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், நமது சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.

3I/Atlas ஒரு பழைய நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகியிருக்கலாம் என்பதால், இது பெரும்பாலும் உறைந்த நீரால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் இது அதன் சூரியனை நெருங்கும்போது, சூரிய ஆற்றல் இதன் மேற்பரப்பை வெப்பமாக்கி, நீராவியையும் தூசியையும் வெளிப்படுத்தலாம். இதனால் ஒரு ஒளிரும் வால் உருவாக வாய்ப்பு உள்ளது.

ஹாப்கின்ஸ் உருவாக்கிய மாதிரியைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர்.

"இது நாம் இதுவரை நெருக்கமாகப் பார்க்காத விண்மீன் மண்டலப் பகுதியில் இருந்து வந்த பொருள்," என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர் பேராசிரியர் கிறிஸ் லிண்டாட்.

"இந்த வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தைவிட பழமையானதாக இருப்பதற்கும், விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணித்து வருவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்புள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

விண்மீன்களுக்கு இடையிலான பொருட்கள், நட்சத்திரங்கள் உருவாகும்போது அவற்றைச் சுற்றி உருவாகின்றன என்று விளக்கும் ஹாப்கின்ஸ், "அவற்றின் தாய் நட்சத்திரங்களுடனான இந்தத் தொடர்பு, பால்வீதியின் நட்சத்திரக் கூட்டத்தை ஆராய உதவுகிறது" என்று கூறுகிறார்.

இந்த ஆண்டு இறுதியில், 3I/Atlas தொடக்கநிலை தொலைநோக்கிகளால் பூமியில் இருந்து தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3I/அட்லஸ் தோன்றுவதற்கு முன், வேறு இரண்டு விண்மீன் பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. அவை 2017இல் கண்டறியப்பட்ட 1I/'ஓமுவாமுவா மற்றும் 2019இல் கண்டறியப்பட்ட 2I/போரிசோவ் என்று அழைக்கப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள், சிலியில் வேரா சி. ரூபின் என்று அழைக்கப்படும் ஒரு புதிய, சக்தி வாய்ந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தெற்கு இரவு வானத்தை முழுமையாக ஆய்வு செய்யத் தொடங்கும்போது, விண்மீன்களுக்கு இடையிலான 5 முதல் 50 புதிய பொருட்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg57lr4v82o

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

2 weeks 3 days ago

iss073e0249461large.jpg?resize=750%2C375

விண்வெளி சென்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்!

விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்புவதற்காக டிராகன் விண்கலத்துக்குள் சுபான்ஷு சுக்லா உடன் ஏனைய 3 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர்.

இன்று மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கிய தனது 24 மணி நேர பயணத்தை தொடங்குகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, அக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த ஜூன் 25ம் திகதி விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

இவர்கள் அங்கு பல்வேறு முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்திய விண்வெளி வீரர் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார்.

இந்நிலையில் இன்று ( ஜூலை 14) பூமிக்கு திரும்புகின்றனர்.

இன்று மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கியுள்ளது.

டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பின்னர், நாளை மதியம் 3 மணிக்கு பூமி வந்தடையும்.

வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில், விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.

இந்திய விண்வெளி வீரர் சுக்லாவை வரவேற்க அவரது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

https://athavannews.com/2025/1439126

பூமியின் சுழற்சி வேகம் குறையும் போக்கு மாறி, கடந்த 20 ஆண்டுகளில் வேகமெடுத்து சுழல்வது ஏன்?

2 weeks 6 days ago

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 12 ஜூலை 2025, 08:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

2025 ஜூலை 9-ஆம் தேதி, பூமி வழக்கத்தைவிட 1.38 மில்லி விநாடிகள் வேகமாக சுழன்றது. இதனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடித்தது. இது வரலாற்றில் பதிவான மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

பன்னாட்டு பூமி சுழற்சி & குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் மேலும் அடுத்தடுத்து குறுகிய நாட்களை எதிர்பார்க்கிறார்கள். ஜூலை 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025- ஆகிய நாட்களில் ஒரு நாளின் நீளம் முறையே 1.388 மில்லி விநாடிகள் மற்றும் 1.4545 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும். இது கண் சிமிட்டும் நேரத்தைவிட (சுமார் 100 மில்லி விநாடிகள்) கணிசமாகக் குறைவு.

'ஒரு நாள்' என்றால் என்ன?

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் ஆகும்.

நாம் பொதுவாக ஒரு நாளை 24 மணி நேரம் - அதாவது பூமி தன்னைத்தானே சுழல எடுக்கும் காலம் எனக் கருதுகிறோம். ஆனால் இது முழுமையான உண்மை அல்ல. வெகு தொலைவில் உள்ள விண்மீனின் கிரகம் ஒன்று 360 டிகிரி சுழன்ற பின்னர் அதே வான் நிலைக்கு திரும்ப சுமார் 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடிகள் ஆகும். இந்த கால அளவு 'நட்சத்திர நாள்' (Sidereal Day) என அழைக்கப்படுகிறது, இது நமது வழக்கமான 24 மணி நேரம் கொண்ட நாளை விட 4 நிமிடங்கள் குறைவாக உள்ளது.

சூரியனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு (ஒரு மதியம் முதல் அடுத்த மதியம் வரை) நாம் நாளின் நீளத்தை அளந்தால், இந்த 'சூரிய நாள்' (Solar Day) வருடம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும்.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுவதால், சூரியனுக்கு அருகில் இருக்கும் ஜனவரி மாதத்தில் வேகமாகவும், சூரியனிடமிருந்து தொலைவில் இருக்கும் ஜூலை மாதத்தில் மெதுவாகவும் நகர்கிறது. மேலும் பூமியின் சாய்ந்த அச்சும் சூரிய நாளின் நீளத்தை பாதிக்கிறது.

இதன் விளைவாக, உண்மையான சூரிய நாள் டிசம்பர் இறுதியில் 24 மணி 30 வினாடிகள் வரை நீளமாகவும், செப்டம்பர் நடுப்பகுதியில் 23 மணி 59 நிமிடங்கள் 38 வினாடிகள் எனக் குறுகியும் இருக்கும்.

நடைமுறை நேரக் கணக்கீட்டிற்காக, இந்த எல்லா மாறுபாடுகளின் சராசரியான 'சராசரி சூரிய நாளை' (Mean Solar Day) பயன்படுத்துகிறோம். இதுவே 24 மணி நேரம் (அல்லது 86,400 வினாடிகள்) என நாம் வரையறை செய்கிறோம். இதுவே நமது நாள்தோறும் பயன்படுத்தும் நேர அமைப்பின் அடிப்படையாகும். இதன் தொடர்ச்சியாகக் கடிகாரம் சரியாக 86,400 வினாடிகளைக் கடக்கும்போது ஒரு நாள் முடிந்துவிட்டது எனக் கருதுகிறோம்.

இதன் பொருள், 9 ஜூலை 2025 அன்று உண்மையான நாளின் நீளம் 23 மணி 59 நிமிடங்கள் 59.9985793 வினாடிகள் அல்லது 86,399.9986154 வினாடிகள் மட்டுமே இருந்தது; கடிகார நாளின் நீளமான 86,400 வினாடிகள் (24 மணி நேரம்) அல்ல.

அறிவியல் பார்வையில் நாளின் நீட்சி

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது.

அன்றாட பேச்சுவார்த்தைகளில் "நாளின் நீட்சி" என்று குறிப்பிடும் போது, சூரியன் உதயமாகி அஸ்தமிக்கும் பகல் நேரம் அல்லது நமது கடிகாரங்களில் காணப்படும் 24 மணி நேரம் என புரிந்துக்கொள்கிறோம்.

ஆனால் பூமியின் சுழற்சியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுக்கு இது நமது கிரகம் வழக்கத்தைவிட வேகமாக அல்லது மெதுவாக சுழல்வதை அளவிடும் ஒரு அலகு வரையறையாகும்.

பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) வெரி லாங் பேஸ்லைன் இன்டர்ஃபெரோமெட்ரி (VLBI) ரேடியோ தொலைநோக்கிகளை பயன்படுத்தி தொலைதூர ரேடியோ மூலங்களான குவாசர்களைக் கண்காணிக்கிறது.

இந்த ரேடியோ மூலங்கள் வானத்தில் அதே துல்லியமான நிலைக்குத் திரும்புவதற்கான நேரத்தை அவர்கள் மிகத் துல்லியமாக அளக்கின்றனர். இதிலிருந்து பூமியின் மெய்யான சுழற்சி வேகம் கணக்கிடப்படுகிறது. இந்த அளவீடு யுனிவர்சல் டைம் (UT1) எனப்படும்.

விஞ்ஞானிகள் இந்த உண்மையான அளவீட்டை (UT1) நாம் நேரக் கணக்கீட்டில் பயன்படுத்தும் கடிகார நாளின் நீட்சியான 86,400 வினாடி நீண்ட சராசரி நாளுடன் ஒப்பிடுகின்றனர். இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, மில்லி வினாடிகளில் அளவிடப்படும் போது, அதைத்தான் விஞ்ஞானிகள் "நாளின் நீட்சி" (LOD) என்று அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடுகின்றனர்.

நாளின் நீட்சி நேர்மறை மதிப்பைக் கொண்டிருக்கும் போது, பூமியின் சுழற்சி மெதுவாகிறது; ஒரு நாளின் நீட்சி கூடுகிறது என்பது பொருள். அதே போல எதிர்மறை மதிப்பு காணப்படும்போது, அது வேகமாக சுழல்கிறது, நாளின் நீட்சி குறைந்து விட்டது என்று பொருள்.

காலத்தைக் கணிக்கும் புதைபடிவங்கள்

இன்றைய வானியலாளர்கள் பூமியின் சுழற்சி மாறுபாடுகளைக் கண்டறிய தொலைதூர குவாசர்களைப் பயன்படுத்தினால், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுழற்சியைப் கண்டுபிடிக்க புதைபடிவ மரங்களையும் பவளப்பாறைகளையும் தொல்லுயிரி வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர்.

மரங்களின் அடிமரத்தில் ஆண்டுதோறும் வளரும் வருடாந்திர வளையம் போலவே, ருகோஸ் (rugose) மற்றும் ஸ்க்ளராக்டினியன் (scleractinian) போன்ற பவளங்கள் தங்கள் கால்சியம் கார்பனேட் கூடுகளில் தினசரி மற்றும் வருடாந்திர வளையங்களை உருவாக்குகின்றன. இவற்றில் தினசரி வளையங்கள் இரவு-பகல் சூரிய ஒளிச் சுழற்சியின் மாறுபாடுகளால் உருவாகின்றன.

அதேநேரம், தடித்த வருடாந்திர வளையங்கள் பருவமாற்றங்களைக் காட்டுகின்றன. இந்தத் தினசரி வளையங்களை எண் தொகை செய்து ஆராய்ச்சியாளர்கள் பூமி ஒரு வருடத்தில் எத்தனை சுழற்சிகளை முடித்தது என்பதைக் கணக்கிடுகின்றனர்.

உதாரணமாக, மத்திய டெவோனியன் காலத்திய (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளப் புதைபடிவங்கள் வருடத்திற்கு 400 தினசரி வளையங்களைக் கொண்டுள்ளன. இதன் பொருள் அக்காலத்தில் பூமி வருடத்திற்கு 400 முறை சுழன்றுள்ளது.

இதைவிட இளைய கார்பனிஃபெரஸ் காலத்திய (சுமார் 330 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) பவளங்களில் வருடத்திற்கு 390 வளையங்கள் மட்டுமே காணப்படுகின்றன. அதாவது அன்று ஒரு வருடம் என்பது 390 நாட்கள். இது காலப்போக்கில் பூமியின் சுழற்சி வேகம் மெதுவாகியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பூமி சுமார் 365.25 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது.

பூமியின் மாறும் சுழற்சியை வெளிப்படுத்தும் புராதன பதிவுகள்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது.

வரலாற்றாசிரியர்களும் இந்த ஆராய்ச்சிப் பயணத்தில் இணைந்துள்ளனர். கிமு 8-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த சூரிய, சந்திர கிரகணங்களின் வரலாற்று பதிவுகளை ஆய்வு செய்து அந்த கால பூமியின் சுழல் வேகத்தை கணக்கிட முனைந்துள்ளனர்.

எடுத்துக்காட்டாக, பாபிலோனிய களிமண் பலகை ஒன்று கிமு 136-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி பாபிலோனில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை விவரிக்கிறது. நவீன கணினி மாதிரிகள் மூலம், ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகணத்தின் சரியான பாதையை மீண்டும் உருவாக்க முடிந்தது. எந்த வேகத்தில் பூமி சுழன்றால் பதிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி பாபிலோனிலிருந்து கிரகணம் புலப்பட்டிருக்கும் என கணினி மாதிரி கொண்டு ஆய்வு செய்தனர்.

இதன் வழியே அன்று பூமி தன்னைத்தானே சுழல எடுத்துக் கொண்ட நேரத்தை கணக்கிட முடிந்துள்ளது. இதுபோன்ற வரலாற்று ஆய்வுகளிலிருந்து இந்த வரலாற்றுக் காலப்பகுதியில் நாளின் நீட்சி (LOD) ஒரு நூற்றாண்டுக்கு சுமார் 1.74 முதல் 1.8 மில்லி வினாடிகள் வரை அதிகமாக இருந்துள்ளது என்பதாகும். அதாவது பூமி சுழலும் வேகம் குறைந்துள்ளது; நாளின் நீட்சி அதிகரித்துள்ளது.

நாளின் நீட்சி அதிகரித்து வருகிறது

மத்திய டெவோனியன் காலத்தில் (சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), ஒரு நாள் வெறும் 22 மணி நேரம் (78,891 வினாடிகள்) மட்டுமே நீண்டிருந்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்குள் (50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), இது 23 மணி நேரமாக நீளமடைந்தது.

சீன எழுத்தர்கள் விலங்கு எலும்புகளில் பொறித்த வானியல் குறிப்புகள் மற்றும் கிரகண பதிவுகளை ஆய்வு செய்த விஞ்நானிகள், கிமு 1200-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இன்றைய நாட்கள் 0.047 வினாடிகள் நீளமாகியுள்ளன எனக் கணக்கிட்டுள்ளனர்.

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் 25 மணி நேரம் வரை நீளக்கூடும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர். பூமியின் சுழற்சி நிலவின் ஈர்ப்பு விசை (tidal forces) மற்றும் பிற காரணிகளால் படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருக்கிறது என்பதே இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை.

பூமியின் மாறும் சுழற்சியும் நேரத்தைச் சரிகட்டும் முறைகளும்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1955இல் பிரிட்டனில் உருவாக்கப்பட்ட அணு கடிகாரம்

1960களில் உருவாக்கப்பட்ட நவீன அணு கடிகாரங்கள், நமது கிரகம் துல்லியமான நிலை வேகத்தில் சுழலவில்லை என்பதை வெளிப்படுத்தின. விஞ்ஞானிகள் தொலைதூர ரேடியோ சிக்னல்களைக் கண்காணிக்கும் போது, பூமியின் சுழற்சி வேகம் நாளுக்கு நாள் சிறிது மாறுபடுவதை கண்டறிந்தனர்.

பொதுவாக ஒரு நாளில், அதாவது 86,400 வினாடிகளில் ஒன்று அல்லது இரண்டு மில்லிவினாடிகள் வரை மட்டுமே மாறுபடுகின்றன என்றாலும், நமது கிரகம் சில நேரங்களில் எதிர்பாராத வகையில் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ சுழல்கிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

நாளின் நீட்சி (LOD) என அளக்கப்படும் இந்தச் சிறிய தினசரி மாறுபாடுகள் முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஆண்டுக்கணக்காகக் கூட்டிப்பார்க்கும்போது, இந்த வேறுபாடு கணிசமாக கூடிக்கொண்டே போகின்றது.

சூரியனைச் சுற்றி பூமியின் 365.2422 நாள் சுற்றுப்பாதையுடன் நமது 365 நாள் காலண்டரை சீரமைக்க ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு நாளை (லீப் டே) சேர்க்கிறோம். அதேபோல், இந்த சுழற்சி மாறுபாடுகளுக்கான திருத்தமும் தேவைப்படுகிறது. இங்குதான் 'லீப் செகண்ட்' (தாவல் வினாடி) பங்களிக்கிறது.

1972ல் அறிமுகப்படுத்தப்பட்ட லீப் செகண்ட்கள், நமது அதிநவீன அணு கடிகாரங்களை பூமியின் உண்மையான சுழற்சியுடன் ஒத்திசைக்க உதவுகின்றன. பூமியின் சுழற்சி மெதுவாகும் போது, நாள் நீட்சி கூடும்போது நாம் நேர்மறை லீப் செகண்ட் சேர்க்கிறோம். வேகமானால் (இது இதுவரை நடக்கவில்லை), எதிர்மறை லீப் செகண்ட் நீக்க வேண்டியிருக்கும்.

இதுவரை செய்யப்பட்ட 27 சரிசெய்தல்களும் நேர்மறை வகையைச் சேர்ந்தவையே. 2016ல் இடம்பெற்ற கடைசி சரிசெய்தல், சமீபத்திய சில தசாப்தங்களில் நமது கிரகம் சுழலும் வேகம் படிப்படியாக மெதுவாகி வருவதைக் காட்டுகிறது.

பூமியின் சுழற்சி ஏன் ஒழுங்கற்று தள்ளாடுகிறது?

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமி சுழலும் வேகம் படிப்படியாக குறைந்து தேய்ந்து, நாளின் நீட்சி கூடுதலடைந்து கொண்டே வருகின்றது.

பல மில்லியன் ஆண்டுகளாக, நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் சுழற்சியை மெதுவாக்கி வருகிறது. இந்தத் தொடர்ச்சியான இழுபறி, பூமியின் சுழற்சி ஆற்றலை நிலவுக்கு மாற்றுகிறது.

இதன் விளைவாக, பூமி சுழல் வேகம் படிப்படியாக குறைந்து தேய்ந்து, நாளின் நீட்சி அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதேநேரம், நிலவு வருடத்திற்கு சுமார் 3.8 செ.மீ தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வே கடந்த 30-40 ஆண்டுகளில் லீப் செகண்ட்களை (தாவல் வினாடிகள்) சேர்த்துக் கொண்டே வர வேண்டிய காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் பூமியின் தினசரி சுழற்சி மாறுபாடுகளுக்கு என்ன காரணம்?

விஞ்ஞானிகள் இரண்டு முக்கிய காரணிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்: வானியல் மற்றும் புவியியல் காரணிகள். நிலவு பூமியை ஒரு எளிய வட்டத்தில் சுற்றுவதில்லை; அதன் பாதை சாய்ந்தும் தடுமாறியும் உள்ளது.

நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை காலப்போக்கில் மாறுகிறது. அதன் ஈர்ப்பு விளைவுகள், அது பூமியின் பூமத்திய ரேகையின் வடக்கில் அல்லது தெற்கில் இருக்கும்போது மாறுபடுகின்றன.

ஜூலை 9, 23 மற்றும் ஆகஸ்ட் 6, 2025 அன்று நிகழும் "லூனார் ஸ்டாண்ட்ஸ்டில்" போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது, நிலவு பூமத்திய ரேகையிலிருந்து அதன் அதிகபட்ச தொலைவில் (ஒரு துருவத்தை நோக்கி) இருக்கும் போது, பூமியின் சுழற்சிக்கு ஒரு கூடுதல் "தள்ளுதலை" அளிக்கிறது. வியாழன் போன்ற தொலைதூர கிரகங்களும் சிறிய ஈர்ப்பு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமியின் நிறை அமைப்பு மாறும்போது எல்லாம் பூமியின் சுழல்வேகம் மாறுபடும்.

பூமியும் ஒரு நிலையான மேடை அல்ல. 2004 சுமத்ரா பூகம்பம் போன்ற பெரும் பூகம்பங்கள், பூமியின் நிறை மறுபகிர்வு மூலம் அதன் சுழற்சியை மாற்றியமைக்கின்றன. அந்தப் பூகம்பம், பூமியின் நிறையை உள்நோக்கி மாற்றியதன் விளைவாக, நாட்களை 2.68 மைக்ரோவினாடிகள் குறைத்தது.

ஒரு சுழலும் அலுவலக நாற்காலியை கொள்வோம்: அதில் அமர்ந்து சுழலும்போது உங்கள் கைகளை உடலுக்கு அருகில் கொண்டு வரும்போது மேலும் வேகமாகச் சுழல்கிறீர்கள்; கைகளை விரிக்கும்போது மெதுவாகிறீர்கள். இதே போல பூமியின் நிறை அமைப்பு மாறும்போது பூமியின் சுழல் வேகமும் மாறுபடும்.

பூகம்பங்கள், காற்று அல்லது கடல் நீரோட்டங்கள் மூலம் பூமியின் நிறை மறுபகிர்வு ஏற்படும்போது, பூமியும் இதேபோல் செயல்படுகிறது. வளிமண்டலமும் அதன் பங்கை வகிக்கிறது. பருவக்காற்றுகள் மற்றும் எல் நினோ போன்ற காலநிலை முறைகள், மலைகள் மற்றும் கடல்களுக்கு எதிராக மோதி, பூமியின் சுழற்சியில் கண்ணுக்குத் தெரியாத வேகத்தடை அல்லது வேகமுடுக்கிகளாகச் செயல்படுகின்றன.

கடல் நீரோட்டங்கள் கூட, பெரும் நீர்ப்பகுதிகளை நகர்த்துவதன் மூலம் நமது கிரகத்தின் சுழற்சி விகிதத்தை மாற்றுகின்றன. இந்த அனைத்து சக்திகளும் சேர்ந்து, ஒவ்வொரு நாளையும் முந்தைய நாளிலிருந்து சற்று வித்தியாசமாக்குகின்றன.

நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு எதிரொலிக்கும்?

மனிதர்களுக்கு ஒரு மில்லிவிநாடி என்பது பொருட்டே அல்ல; கண் சிமிட்டக் கூட சுமார் 100 மில்லிவினாடிகள் தேவை.

ஜூலை 9 ஆம் தேதி, பூமியின் சுழற்சி வழக்கத்தைவிட 1.38 மில்லிவினாடிகள் குறைவாக இருந்தபோது, நமது நாள் 23 மணி 59 நிமிடங்கள் மற்றும் 59.9985793 வினாடிகள் நீளமாக இருந்தது. இது மிகச் சிறிய மாற்றமாகத் தோன்றலாம்; இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்?

நவீன உயர் தொழில்நுட்ப உலகில், இந்தச் சிறிய நேரப் பகுதிகள் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. வெறும் 1.38 மில்லிவிநாடிகளில், பூமத்திய ரேகையில் பூமி சுமார் 62.66 சென்டிமீட்டர் சுழல்கிறது. ஏவுகணை வழிகாட்டி அமைப்புகள் அல்லது விண்கலங்களின் இணைப்புக்கு, நானோ வினாடி அளவிலான துல்லியம் கூட மிக முக்கியமானது - இல்லையெனில் இலக்குகள் தவறவிடப்படும் மற்றும் பணிகள் தோல்வியடையும்.

நாம் தினசரி பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு இந்தத் துல்லியம் இன்னும் முக்கியமானது. ஜிபிஎஸ் செயற்கைக்கோள்களில் உள்ள அணு கடிகாரங்கள் நானோவினாடி (வினாடியின் பில்லியனில் ஒரு பகுதி) துல்லியத்தில் இருக்க வேண்டும், ஏனெனில் ஒரு மைக்ரோவினாடி பிழை கூட உங்கள் இருப்பிடத்தை 300 மீட்டர் வரை தவறாகக் காட்டலாம். ஒரு மில்லிவினாடி பிழை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் வரை வழிநடத்தல் அமைப்புகளை தவறாக வழிநடத்தும்.

டிஜிட்டல் உலகில், மில்லிவினாடி துல்லிய கணிப்பு மிகமிக அவசியம். கணினி வலையமைப்புகள் செயல்திறனைக் கண்காணிக்கவும் சிக்கல்களைத் தீர்க்கவும் மில்லிவினாடி நேர முத்திரைகளைப் பயன்படுத்துகின்றன.

இணைய வங்கியியல் அமைப்புகள் மோசடியைத் தடுக்க ஒரு மைக்ரோவினாடி வரை பரிவர்த்தனைகளைப் பதிவு செய்கின்றன. ஆகவே, பூமியின் சுழற்சியில் மைக்ரோவிநாடிகள் அளவுக்கு ஏற்படும் சிறு மாறுபாடுகள் கூட நம் அன்றாட வாழ்க்கையில் எதிரொலிக்கக் கூடும். வானியலில் கூட, மில்லிவினாடி துடிப்புகளின் (pulsars) ஆய்வுக்குச் சரியான நேர அளவீடுகள் தேவைப்படுகின்றன.

நேரத்தின் அரசியல்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1999இல் நடந்த கார்கில் போர்

பல ஆண்டுகளாக, இந்தியா தன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்காக (ஏவுகணை வழிகாட்டுதல் போன்றவை) அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் புவிசார் வழிகாட்டி அமைப்புகளை (ஜிபிஎஸ் போன்ற) முறைமைகளை நம்பியிருந்தது. கார்கில் போரின்போது ஒரு வல்லரசு நாடு துல்லிய சேவைகளைத் திடீரென மறுத்ததால், இந்தச் சார்பு ஆபத்தானது என்பது தெளிவானது.

இந்தக் கடினமான பாடம் இந்தியாவை தனது சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி முறைமையான IRNSS (இந்தியப் பிராந்திய வழிகாட்டி செயற்கைக்கோள் முறைமை) என முன்னர் அழைக்கப்பட்ட நாவிக்-ஐ (NavIC - Navigation with Indian Constellation) உருவாக்கத் தூண்டியது.

ஆனால் தற்சார்பு வழிகாட்டி முறைமையை உருவாக்குவது தனிச் சவால்களைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு செயற்கைக்கோளிலும் மிகத் துல்லியமான அணு கடிகாரங்கள் தேவைப்பட்டன.

ஆரம்பத்தில், இஸ்ரோ மேற்கு நாடுகளிலிருந்து அணு கடிகாரங்களை இறக்குமதி செய்தது. ஆனால் பல செயற்கைக்கோள்களில் இவை தோல்வியடைந்தன. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதியெனச் சிலர் கூறுகின்றனர். இந்தத் தோல்வி இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தன்னிறைவு அடைய உறுதி பூண்ட இஸ்ரோ, அணு கடிகாரங்களை இந்தியாவிலேயே உருவாக்கும் சவாலை ஏற்றது. ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர் தலைமையில் நாட்டின் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள், சொந்தமாக ருபிடியம் அணு கடிகாரங்களை வெற்றிகரமாக உருவாக்கினர்.

முதல் "மேட் இன் இந்தியா" அணு கடிகாரம் 2023 மே மாதம் ஏவப்பட்ட 10வது நாவிக் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டது. அதன் பின்னர், புதிய என்விஎஸ் தொடர் நாவிக் செயற்கைக்கோள்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த அணு கடிகாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

விரைவில், இந்திய கணினிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் தொலைபேசிகள், வெளிநாட்டு வழிகாட்டி மற்றும் நேர சேவைகளை நம்பாமல், இந்தச் சொந்த அணு கடிகாரங்களைப் பயன்படுத்தி தங்கள் நேரத்தை ஒத்திசைக்க்கும் அமைப்பு உருவாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பூமியின் சுழற்சி மர்மம்

பூமி, விண்வெளி, சுழற்சி, அறிவியல், நிலவு, நேரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி வேகமெடுத்து சுழல்கிறது.

பல மில்லியன் ஆண்டுகளாக, பூமியின் சுழற்சி படிப்படியாக மெதுவாகிக் கொண்டிருந்தது, இதன் விளைவாக நமது நாட்கள் நீளமாயின. ஆனால் சமீபத்தில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்து வருகிறது. 2020 முதல், பன்னாட்டு பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை சேவை (IERS) விஞ்ஞானிகள் நமது கிரகம் வேகமெடுத்து சுழல்வதை கவனித்துள்ளனர்.

உண்மையில், 1960களில் அணு கடிகாரங்கள் நேரத்தை அளவிடத் தொடங்கியதிலிருந்து, 2020 ஆம் ஆண்டு வரலாற்றில் மிகக் குறுகிய 28 நாட்களைப் பதிவு செய்துள்ளது.

இந்த எதிர்பாராத வேகமயக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கது. கடந்த 27 முறைகளில் செய்ததுபோல் லீப் செகண்ட் சேர்ப்பதற்குப் பதிலாக, முதல் முறையாக ஒரு வினாடியை கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆனால், பூமி ஏன் திடீரென வேகப்படுகிறது? விஞ்ஞானிகள் நமது கிரகத்தின் உருகிய இரும்பு-நிக்கல் கோர் (மையம்) பகுதியில் நிறை மறுபகிர்வு ஏற்பட்டு, சுழற்சியைப் பாதிக்கிறது எனச் சந்தேகிக்கின்றனர். எனினும், நமது உலகம் ஏன் வேகமாகச் சுழல்கிறது என்பதை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.

கடந்த இரு தசாப்தங்களில் திடீர் என வழமைக்கு மாறாக பூமி ஏன் வேகமெடுத்து சுழல்கிறது என்பது இன்னமும் மர்மம் தான்.

(கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm208zp2dg7o

சூரிய மண்டலத்தின் நீண்டகால மர்மத்தை தீர்க்க முயலும் உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கி

4 weeks ago

ரூபின் ஆய்வகம் மற்றும் ரூபின் துணை தொலைநோக்கி

பட மூலாதாரம்,RUBINOBS

படக்குறிப்பு, சிலியில் உள்ள செரோ பச்சனில் அமைந்துள்ள ரூபின் ஆய்வகம் மற்றும் ரூபின் துணைத் தொலைநோக்கி

கட்டுரை தகவல்

  • ஐயோன் வெல்ஸ்

  • தென் அமெரிக்க செய்தியாளர்

  • ஜார்ஜினா ரானார்ட்

  • அறிவியல் செய்தியாளர்

  • 3 ஜூலை 2025

சிலியில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த புதிய தொலைநோக்கியில் பதிவு செய்யப்பட்ட முதல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் புதிய தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் ஆழமான இருண்ட பகுதியை, இதற்கு முன் வேறு எந்தத் தொலைநோக்கியும் வெளிப்படுத்தாத முறையில் உற்றுநோக்கும் திறனைக் கொண்டுள்ளது.

அந்தத் தொலைநோக்கி பதிவு செய்த ஒரு படத்தில், பூமியில் இருந்து 9,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் உருவாகும் பகுதியில், பரந்து விரிந்த வண்ணமயமான வாயு மற்றும் தூசு மேகங்கள் சுழல்கின்றன.

உலகின் அதிசக்தி வாய்ந்த டிஜிட்டல் கேமராவை வேரா சி ரூபின் ஆய்வகம் கொண்டுள்ளது. அது, பிரபஞ்சத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றுவதாக உறுதியளிக்கிறது.

நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோள் இருந்தால், இந்தத் தொலைநோக்கி அதைத் தனது முதல் ஆண்டிலேயே கண்டுபிடிக்கும் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

வேரா ரூபின் தொலைநோக்கி

பட மூலாதாரம்,NSF-DOE VERA C. RUBIN OBSERVATORY

படக்குறிப்பு, வேரா ரூபின் தொலைநோக்கி எடுத்த முதல் படம் டிரிஃபிட் மற்றும் லகூன் நெபுலாக்களை நுணுக்கமான விவரங்களுடன் காட்டுகிறது.

இந்தத் தொலைநோக்கி பூமிக்கு அருகிலுள்ள ஆபத்தான சிறுகோள்களை கண்டறிந்து, பால்வீதியை வரைபடமாக்கும். மேலும், நமது பிரபஞ்சத்தின் பெரும்பகுதியை உருவாக்கும் மர்மமான இருண்ட பொருள் (டார்க் மேட்டர்) குறித்த முக்கியக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்.

இந்தத் தொலைநோக்கி 10 மணிநேரத்தில் 2,104 புதிய சிறுகோள்களையும், பூமிக்கு அருகில் உள்ள ஏழு விண்வெளி பொருட்களையும் கண்டறிந்ததாக, திங்கள் கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரூபின் ஆய்வகம் தெரிவித்தது.

மற்ற அனைத்து விண்வெளி ஆய்வுகளும், பூமியில் இருந்து செய்யப்படும் ஆய்வுகளும் கூட்டாக ஓர் ஆண்டில் சுமார் 20,000 சிறுகோள்களைக் கண்டுபிடிக்கின்றன.

வேரா சி ரூபின் ஆய்வகம் தெற்குப் பகுதியின் இரவு வானத்தைத் தொடர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான 10 ஆண்டுக்கால பணியைத் தொடங்கி இருப்பதால், வானியலில் இதுவொரு வரலாற்றுத் தருணமாகக் கருதப்படுகிறது.

"நான் தனிப்பட்ட முறையில் இந்தக் குறிக்கோளை அடைய சுமார் 25 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். பல வருடங்களாக இந்த அற்புதமான தளத்தை உருவாக்கி, இதுபோன்ற ஆய்வைச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம்," என்கிறார் ஸ்காட்லாந்தின் ராயல் வானியலாளர் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கேத்தரின் ஹேமன்ஸ்.

இந்த ஆய்வில் பிரிட்டன் முக்கியப் பங்காளியாக உள்ளது. தொலைநோக்கி விண்வெளியைப் படம்பிடிக்கும்போது, அதில் கிடைக்கும் மிகவும் விரிவான புகைப்படங்களை ஆராய பிரிட்டனில் தரவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வேரா ரூபின் நமது சூரிய மண்டலத்தில் அறியப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை பத்து மடங்கு அதிகரிக்கக்கூடும்.

ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம்.

பட மூலாதாரம்,NSF-DOE VERA C. RUBIN OBSERVATORY

படக்குறிப்பு, பால்வீதியைவிட சுமார் 100 பில்லியன் மடங்கு பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள சுழல் நட்சத்திரக் கூட்டங்கள் உள்பட ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம்

அந்தத் தொலைநோக்கி பதிவு செய்த படங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பு பிபிசி வேரா ரூபின் ஆய்வகத்தைப் பார்வையிட்டது. சிலியின் ஆண்டிஸ் மலைத்தொடரில், செரோ பச்சோன் என்ற மலையில் இந்த ஆய்வகம் அமைந்துள்ளது. அங்கு, விண்வெளி ஆய்வுக்காக தனியார் நிலத்தில் பல ஆய்வகங்கள் உள்ளன.

அந்த ஆய்வகம் மிக உயரமான வறண்ட சூழலில், மிகவும் இருட்டான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களைப் பார்க்க இதுவொரு சரியான இடமாக உள்ளது.

இந்த ஆய்வில், இருளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இரவில் காற்று வீசும் சாலையில் பேருந்து செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தத் தொலைநோக்கி அமைந்துள்ள இடத்தில், முழு வெளிச்சம் கொடுக்கும் ஹெட்லைட்களை பயன்படுத்தக் கூடாது.

ஆய்வகத்தின் உட்புறமும் இதேபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு வானத்தை நோக்கித் திறக்கும் தொலைநோக்கியின் குவிமாடம் முற்றிலும் இருட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு தனி பொறியியல் குழு பணியாற்றுகிறது. வானியல் ஆய்வுக்குத் தடையாக இருக்கக்கூடிய எல்ஈடி விளக்குகள் மற்றும் பிற வெளிச்சங்களை அணைக்க அந்தக் குழு உதவுகிறது.

தொலைநோக்கியின் மூலம் ஆய்வு செய்ய, நட்சத்திரங்களின் ஒளியே "போதுமானதாக" இருக்கிறது என்று திட்டத்தை மேற்பார்வையிடும் விஞ்ஞானி எலானா அர்பாக் கூறுகிறார்.

பிரபஞ்சத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதே இந்த வானியல் ஆய்வகத்தின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று என்று கூறும் அவர், அதற்காக, "பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மங்கலான விண்மீன் திரள்கள் அல்லது சூப்பர்நோவா வெடிப்புகளைப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்" என்று குறிப்பிடுகிறார்.

"எனவே, நமக்கு மிகவும் கூர்மையான படங்கள் தேவை," என்கிறார் அர்பாக். ஆய்வகத்தின் ஒவ்வொரு வடிவமைப்பும் மிகுந்த துல்லியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

வேரா ரூபின் ஆய்வகத்தின் 3,200 மெகாபிக்சல் கேமரா.

பட மூலாதாரம்,SLAC NATIONAL ACCELERATOR LABORATORY

படக்குறிப்பு, வேரா ரூபின் ஆய்வகத்தின் 3,200 மெகாபிக்சல் கேமரா, அமெரிக்க எரிசக்தி துறையின் SLAC தேசிய ஆக்ஸலரேட்டர் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது.

இந்தத் தொலைநோக்கி, அதன் சிறப்பு வாய்ந்த மூன்று-கண்ணாடி வடிவமைப்பின் மூலம் செயல்படுகிறது. இரவு வானத்தில் இருந்து தொலைநோக்கிக்குள் வரும் ஒளி முதலில் 8.4 மீ விட்டமுள்ள முதன்மைக் கண்ணாடியில் விழுகிறது. பின்னர் 3.4 மீ விட்டமுள்ள இரண்டாம் நிலை கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. அதன் பிறகு, 4.8 மீ விட்டமுள்ள மூன்றாவது கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்டு, அந்த ஒளி கேமராவுக்குள் செல்கிறது.

அந்த கண்ணாடிகளைச் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு துளி தூசிகூட படத்தின் தரத்தை மாற்றிவிடும். இந்தத் தொலைநோக்கியின் அதிக பிரதிபலிக்கும் திறனும், அதனுடைய வேகமும், அதிக அளவிலான ஒளியைப் பிடிக்க உதவுகிறது. இது "மிகவும் தொலைவில் உள்ள பொருட்களைப் பார்க்க முக்கியமானது" என்று ஆய்வகத்தின் தீவிர ஒளியியல் நிபுணரான கில்லெம் மெகியாஸ் கூறுகிறார்.

வானியலில், வெகுதொலைவில் உள்ளன என்பதற்கான அர்த்தம், அவை பிரபஞ்சத்தின் முந்தைய காலங்களைச் சார்ந்தவை என்பதாகும். விண்வெளி மற்றும் நேரத்தின் மரபு ஆய்வின் (Legacy Survey of Space and Time) ஒரு பகுதியாக, இந்தத் தொலைநோக்கியின் கேமரா ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும், பத்து ஆண்டுகள் தொடர்ந்து இரவு வானத்தைப் படம் பிடிக்கும். 1.65 மீ x 3மீ அளவுடைய இந்த கேமரா 2,800 கிலோ எடையுடன், பரந்த பார்வையை வழங்குகிறது.

நகரும் குவிமாடமும் தொலைநோக்கியின் ஏற்றமும் விரைவாக இடமாற்றம் செய்யும் திறன் கொண்டவை என்பதால், இந்த கேமரா இரவில் சுமார் 8 முதல் 12 மணிநேரம் வரை, தோராயமாக ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒரு படத்தைப் பதிவு செய்யும்.

டெலஸ்கோப் மவுண்ட் அசெம்பிளி

பட மூலாதாரம்,RUBINOBS

படக்குறிப்பு, கேமராவின் மிகப்பெரிய கண்ணாடிகள், விண்வெளியில் வேகமாக நகரும் பொருட்களில் இருந்து வெளிவரும் மிக மெல்லிய ஒளி மற்றும் சிதைவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன

இந்த கேமரா 3,200 மெகாபிக்சல்களை கொண்டுள்ளது (ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் ஃபோனின் கேமராவைவிட 67 மடங்கு அதிகம்). அதாவது, ஒரு புகைப்படத்தை முழுமையாகக் காண, 400 அல்ட்ரா HD டிவி திரைகள் தேவைப்படும்.

"முதல் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அது ஒரு மறக்க முடியாத சிறப்புத் தருணமாக இருந்தது" என்று பகிர்ந்துகொண்டார் மெகியாஸ்.

"இந்தத் திட்டத்தில் நான் முதன்முதலில் பணியாற்றத் தொடங்கியபோது, 1996 முதல் இதில் பணியாற்றி வந்த ஒருவரைச் சந்தித்தேன். நான் 1997இல் பிறந்தவன். இதைப் பார்த்தபோது, இது ஒரு தலைமுறை வானியலாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்த முயற்சி என்பதை உணர முடிந்தது" என்றும் அவர் கூறினார்.

ஓர் இரவில் சுமார் 10 மில்லியன் தரவுகள் பதிவு செய்யப்படும் நிலையில், உலகமெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் அந்தத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும்.

"தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அம்சம் தான் உண்மையில் புதியதும் தனித்துவமானதும். இது நாம் இதுவரை கற்பனைகூட செய்யாத விஷயங்களை நமக்குக் காண்பிக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது" என்று பேராசிரியர் ஹேமன்ஸ் விளக்குகிறார்.

ஆனால், பூமிக்கு அருகில் திடீரென வரும் ஆபத்தான விண்வெளி பொருட்களை, குறிப்பாக YR4 போன்ற சிறுகோள்களைக் கண்டறிந்து எச்சரிக்கையூட்டுவதன் மூலம் நம்மைப் பாதுகாக்கவும் இது உதவக்கூடும். YR4 சிறுகோள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஒரு கட்டத்தில் கவலை தெரிவித்தனர்.

கேமராவின் மிகப்பெரிய கண்ணாடிகள், விண்வெளியில் வேகமாக நகரும் பொருட்களில் இருந்து வெளிவரும் மிக மெல்லிய ஒளி மற்றும் சிதைவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து அவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன.

"இதுவொரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நமது விண்மீனை ஆய்வு செய்ய இதுவரை கிடைத்ததிலேயே இது மிகப்பெரிய தரவுத் தொகுப்பாக இருக்கும். இது பல ஆண்டுகளுக்குப் பிறகும் நமது ஆராய்ச்சிகளை முன்னேற்றும் சக்தியாக இருக்கும்" என்கிறார் டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலிஸ் டீசன்.

பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களின் எல்லைகளைப் பகுப்பாய்வு செய்ய, அவர் அந்தப் படங்களைப் பெறுவார். தற்போது கிடைக்கும் பெரும்பாலான தரவுகள் சுமார் 1,63,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவற்றை மட்டுமே காட்டுகின்றன. ஆனால், வேரா ரூபின் தொலைநோக்கியின் உதவியுடன், விஞ்ஞானிகள் 12 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பொருட்களையும் காண முடியும்.

பால்வீதியின் நட்சத்திர ஒளிவட்டம் (stellar halo), அதாவது காலப்போக்கில் அழிக்கப்பட்ட நட்சத்திரங்களின் தொகுப்பையும், இன்னும் உயிருடன் இருப்பினும் மிக மங்கலாகவும், கண்டுபிடிக்க கடினமாகவும் இருக்கும் சிறிய விண்மீன் திரள்களையும் காண முடியும் என பேராசிரியர் டீசன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இவற்றோடு, நமது சூரிய மண்டலத்தில் ஒன்பதாவது கோள் இருக்கிறதா என்ற நீண்டகால மர்மத்துக்கு விடை காணும் அளவுக்கு வேரா ரூபின் தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது வியக்கத்தக்கது.

அது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தைவிட 700 மடங்கு தொலைவில் இருக்கக்கூடும். இது, பூமியில் இருந்து ஆய்வு செய்யப் பயன்படும் மற்ற தொலைநோக்கிகளால் அடைய முடியாத அளவுக்கு அப்பாற்பட்ட தொலைவு.

"இந்தப் புதிய அழகான ஆய்வகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள நமக்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனால் அதற்காக நான் முழுமையாகத் தயாராக இருக்கிறேன்" என்கிறார் பேராசிரியர் ஹேமன்ஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjd2ej1g275o

மனிதர்களையே செயற்கையாக உருவாக்க உதவுமா விஞ்ஞானிகளின் புதிய டி.என்.ஏ ஆய்வு?

1 month ago

மனித டிஎன்ஏ,  அறிவியல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பகுதிகளை புதிதாக ஆதியில் இருந்து உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • அறிவியல் செய்தியாளர்

  • க்விண்டாஃப் ஹ்யூக்ஸ்

  • அறிவியல் ஒளிப்பதிவாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

மனித உடலின் கட்டுமானத் தொகுதிகளான டிஎன்ஏவை புதிதாக உருவாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு திட்டம் உலகிலேயே முதன்முறையாக தொடங்கப்படுவதாக நம்பப்படுகிறது.

எதிர்கால சந்ததியினரை தங்கள் விருப்பம் போல வடிவமைத்துவிடலாம் மற்றும் எதிர்பாராத மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் காரணமாக டிஎன்ஏ ஆராய்ச்சிகள் இதுவரை தடைசெய்யப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது உலகின் மிகப்பெரிய மருத்துவ தொண்டு நிறுவனமான வெல்கம் டிரஸ்ட், இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பத் தொகையாக 10 மில்லியன் யூரோ வழங்கியுள்ளது. பல குணப்படுத்த முடியாத நோய்களுக்கான சிகிச்சைகளை விரைவுபடுத்துவதன் மூலம் செயற்கை டிஎன்ஏ, தீமைகளைவிட நன்மைகளையே அதிகமாகச் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக வெல்கம் டிரஸ்ட் கூறுகிறது.

இந்தத் திட்டத்தில் முக்கிய உறுப்பினரும், கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஆர்.சி மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜூலியன் சேல், இந்த ஆராய்ச்சியானது உயிரியலில் அடுத்த மிகப் பெரிய முன்னெடுப்பு என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

"வானமே எல்லை. முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சிகிச்சைகள் தேவை. வயதாகும்போது நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான முதுமைக்கு வழிவகுக்கும் சிகிச்சைகளை நாம் தேடுகிறோம்."

"அதற்கு செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்தலாம், சேதமடைந்த உறுப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். எடுத்துக்காட்டாக கல்லீரல், இதயம், நோய் எதிர்ப்பு மண்டலம் உள்பட, நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க செயற்கை டிஎன்ஏவை பயன்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.

மனித மரபணுவை செயற்கையாக உருவாக்கும் முயற்சி

ஆனால், மேம்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட மனிதர்களை உருவாக்க முயலும் நேர்மையற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவி செய்துவிடும் என்பதே இந்தத் திட்டத்தை விமர்சிப்பவர்களின் கவலையாக இருக்கிறது.

Beyond GM என்ற பிரசாரக் குழுவின் இயக்குநர் டாக்டர் பாட் தாமஸின் கருத்துப்படி, "விஞ்ஞானிகள் அனைவருமே நல்லதுதான் செய்வார்கள் என்று நம்ப வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தீமைக்கும், போருக்கும்கூட அறிவியலைப் பயன்படுத்த முடியும்."

மனித டிஎன்ஏவில் உள்ள மூலக்கூறுகளை வரைபடமாக்கிய மனித மரபணு திட்டம் நிறைவடைந்த 25வது ஆண்டு விழாவில் இந்தத் திட்டம் தொடர்பான தகவல்கள் பிபிசிக்கு வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு வெல்கம் டிரஸ்ட் பெருமளவில் நிதியுதவி அளித்துள்ளது.

நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் டிஎன்ஏ எனப்படும் ஒரு மூலக்கூறு உள்ளது. அதில் மரபணு தகவல்கள் இடம் பெற்றிருக்கும். ஏ, ஜி, சி, டி எனக் குறிப்பிடப்படும் நான்கு மிகச் சிறிய தொகுதிகளில் இருந்து டிஎன்ஏ கட்டமைக்கப்படுகிறது. அவை பல்வேறு சேர்க்கைகளில் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.

உடல் ரீதியாக நாம் யார் என்பதை உருவாக்கும் அனைத்து மரபணு தகவல்களையும் டிஎன்ஏ கொண்டுள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் அறிவியல் உண்மை.

விஞ்ஞானிகள் அனைத்து மனித மரபணுக்களையும் ஒரு பார் குறியீடு போலப் படிக்க, மனித ஜீனோம் திட்டம் உதவியது. செயற்கை மனித ஜீனோம் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய திட்டம், இதை மிகப் பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் செல்லும். இது, டிஎன்ஏவின் மூலக்கூறுகளை ஆய்வாளர்கள் படிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, மூலக்கூறின் பகுதிகளை, (ஒருவேளை அனைத்தையும்) புதிதாக உருவாக்க அனுமதிக்கும்.

மனித டிஎன்ஏ-வை புதிதாக உருவாக்கும் விஞ்ஞானிகளின் நோக்கம் என்ன?

மனித டிஎன்ஏ, விஞ்ஞானிகள்

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவின் பெரிய பகுதிகளை உருவாக்குவதற்கான கருவிகளை விஞ்ஞானிகள் உருவாக்கத் தொடங்குவார்கள்

மனித டிஎன்ஏவின் பெரிய தொகுதிகளை உருவாக்குவதற்கான வழிகளை உருவாக்குவதே விஞ்ஞானிகளின் முதல் நோக்கம். அவை செயற்கையாக மனித குரோமோசோமை உருவாக்கும் வரை இது தொடரும். டிஎன்ஏவின் தொகுதிகள், நமது வளர்ச்சி, பழுது மற்றும் பராமரிப்பை நிர்வகிக்கும் மரபணுக்களைக் கொண்டுள்ளன.

பின்னர் இவற்றை ஆய்வு செய்து பரிசோதித்து, மரபணுக்கள் மற்றும் டிஎன்ஏக்கள் நம் உடல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துகின்றன என்பதைப் பற்றி மேலும் அறியலாம்.

"மரபணுக்கள் தவறாகச் செல்லும்போது பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே ஆய்வுகள், நோய்களுக்குத் தேவையான மேம்பட்ட சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும்" என்று கூறுகிறார், மனித மரபணுவின் மிகப்பெரிய விகிதத்தை வரிசைப்படுத்திய வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மேத்யூ ஹர்ல்ஸ் கூறுகிறார்.

"புதிதாக டிஎன்ஏவை உருவாக்குவது என்பது டிஎன்ஏ எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் சோதிக்கவும் புதிய கோட்பாடுகளைச் சோதிக்கவும் அனுமதிக்கிறது. ஏனெனில் தற்போது வாழும் அமைப்புகளில் ஏற்கெனவே இருக்கும் டிஎன்ஏவில், புதிய டிஎன்ஏவை மாற்றுவதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்."

செயற்கை மனிதர்கள் உருவாக்கப்பட்டால்...

மனித டிஎன்ஏ, இயந்திரங்கள்

பட மூலாதாரம்,BBC NEWS

படக்குறிப்பு, மனித டிஎன்ஏவை படிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்கள் விரைவில் டிஎன்ஏவின் பகுதிகளை எழுதவும் பயன்படுத்தப்படலாம்

இந்தத் திட்டத்தின் பணிகள் சோதனைக் குழாய்கள் மற்றும் கருவிகளுடன் மட்டுமே இருக்கும். செயற்கை உயிர்களை உருவாக்கும் எந்த முயற்சியும் இந்தத் திட்டத்தில் இருக்காது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கு மனித வாழ்க்கை அமைப்புகள் மீது இதுவரை இருந்திராத கட்டுப்பாட்டை வழங்கும்.

இந்தத் திட்டம் மருத்துவ ரீதியிலான நன்மைகளை இலக்கு வைத்து செய்யப்பட்டாலும், நேர்மையற்ற விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வழிமுறைகள் எதுவும் இல்லை.

உதாரணமாக, உயிரியல் ஆயுதங்கள், மேம்பட்ட மனிதர்கள் அல்லது மனித டிஎன்ஏ கொண்ட உயிரினங்களை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று மரபணு விஞ்ஞானி பேராசிரியர் பில் எர்ன்ஷா கவலை தெரிவிக்கிறார்.

இவர், செயற்கை மனித குரோமோசோம்களை உருவாக்குவதற்கான செயல்முறை ஒன்றை வடிவமைத்தவர். அதோடு, எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பிரபல மரபணு விஞ்ஞானி ஆவார்.

"பூதம் பாட்டிலுக்கு வெளியே வந்துவிட்டது," என்று அவர் இதுகுறித்து பிபிசியிடம் விவரித்தார். மேலும், "இப்போது நமக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கலாம், ஆனால் பொருத்தமான இயந்திரங்களை அணுகக்கூடிய ஓர் அமைப்பு இதைச் செய்ய முடிவு செய்தால், அதைத் தடுக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்" என்றார்.

ஆராய்ச்சிகள் மூலம் உருவாக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருந்துகளை உருவாக்கும் சுகாதார நிறுவனங்களால் தொழில்நுட்பம், வணிகமயமாக்கப்படும் என்பது குறித்து டாக்டர் பாட் தாமஸ் கவலைப்படுகிறார்.

"செயற்கை உடல் பாகங்களையோ அல்லது செயற்கை மனிதர்களையோ நம்மால் உருவாக்க முடிந்தால், அவை யாருக்குச் சொந்தமானவை. இந்தப் படைப்புகளில் இருந்து வரும் தரவுகள் யாருடையது?" என்று அவர் கேள்விகளை எழுப்புகிறார்.

தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் ஏன் இந்த ஆராய்ச்சிக்கு நிதியளிக்கிறார்கள் என்பதுதான் தற்போது வெல்கம் நிறுவனத்திடம் கேட்கப்படும் கேள்வி. இந்த முடிவு இலகுவாக எடுக்கப்படவில்லை என்று நிதியுதவி அளித்த வெல்கம் நிறுவனத்தின் டாக்டர் டாம் காலின்ஸ் கூறினார்.

"இதற்கு நிதியளிக்காவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வியை எங்களிடம் நாங்களே கேட்டுக்கொண்டோம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இந்தத் தொழில்நுட்பம் கண்டிப்பாக ஒரு நாள் உருவாக்கப்பட உள்ளது. எனவே இப்போதே அதைச் செய்வதில் தவறேதும் இல்லை. குறைந்தபட்சம் பொறுப்பான முறையில் அதைச் செய்ய முயல்கிறோம். அத்துடன், நெறிமுறை மற்றும் தார்மீக கேள்விகளை முடிந்தவரை வெளிப்படையாக எதிர்கொள்ள முயல்கிறோம்."

ஒரு பிரத்யேக சமூக அறிவியல் திட்டமும், இந்தத் திட்டத்தின் அறிவியல் வளர்ச்சியுடன் இணைந்து இயங்கும். கென்ட் பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் பேராசிரியர் ஜாய் ஜாங் தலைமையில் இந்த சமூக அறிவியல் திட்டம் நடைபெறும்.

"செயற்கை மனித மரபணு திட்டம் தொடர்பாக, நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் குறிப்பாக பொது மக்களின் கருத்துகளை அவர்கள் தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்கள், அது அவர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றியும், முக்கியமாக அவர்களுக்கு எழும் கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்தும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gdm68j4gdo

கொடிய டைரனோசர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த புதிய வகை விலங்கு கண்டுபிடிப்பு

1 month 1 week ago

டைனோசர்கள், புதிய வகை கண்டுபிடிப்பு, டைரசோசர்கள்

பட மூலாதாரம்,JULIUS CSOTONYI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விக்டோரியா கில்

  • பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

  • 18 ஜூன் 2025, 03:12 GMT

மங்கோலிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், ஒரு புதிய வகை டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை டைரனோசர்களின் (Tyrannosaurs) பரிணாம வரலாற்றை 'மாற்றி எழுதக்கூடியவை' என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள், 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகளை பகுப்பாய்வு செய்தனர். அவை, டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராகக் கருதப்படும் ஒரு உயிரினத்திலிருந்து வந்தவை என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்தனர். இது டி ரெக்ஸ் (T rex) எனும் பிரபல விலங்கையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும்.

ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்துக்கு கான்கூலூ மங்கோலியென்சிஸ் என்று பெயரிட்டனர், அதாவது மங்கோலியாவின் டிராகன் இளவரசன்.

நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, டைனோசர்களின் அழிவு காலம் வரை, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவை அச்சுறுத்திய சக்தி வாய்ந்த வேட்டை விலங்குகளாக டைரனோசர்கள் எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

டைனோசர்கள், புதிய வகை கண்டுபிடிப்பு, டைரசோசர்கள்

பட மூலாதாரம்,DARLA ZELENITSKY

படக்குறிப்பு, புகைப்படத்தில் உள்ளது போன்ற டி-ரெக்ஸின் அழகான, முழுமையான படிமங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், இதன் மூதாதையர்கள் மர்மம் நிறைந்தவர்களாகவே உள்ளனர்.

"'பிரின்ஸ்' என்பது இது ஒரு ஆரம்பகால, சிறிய டைரனோசராய்டு என்பதைக் குறிக்கிறது," என்று கனடாவின் கால்கரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டார்லா ஜெலெனிட்ஸ்கி விளக்கினார். டைரனோசராய்டுகள் என்பது இரண்டு கால்களில் நடந்த மாமிச உண்ணி டைனோசர்களின் 'சூப்பர் ஃபேமிலி' வகையாகும்.

முதலில் தோன்றிய டைரனோசராய்டுகள் சிறியவையாக இருந்தன. பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கியுடன் இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய பிஹெச்டி மாணவர் ஜாரெட் வோரிஸ் பின்வருமாறு விளக்கினார்.

"இவை சிறிய, ஆனால் வேகமாக வேட்டையாடும் விலங்குகள். உணவுச் சங்கிலியின் முதன்மை வேட்டை விலங்குகளாக இருந்த பெரும் டைனோசர்களின் நிழலில் இவை வாழ்ந்தன."

டைனோசர்கள், புதிய வகை கண்டுபிடிப்பு, டைரசோசர்கள்

பட மூலாதாரம்,MASATO HATTORI

படக்குறிப்பு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைரனோசரஸ் மூதாதையரான கான்கூலூ மங்கோலியென்சிஸை ஒரு கலைஞர் வரைந்துள்ளார்.

ஜுராசிக் காலத்தில் சுற்றித் திரிந்த சிறிய வேட்டை விலங்குகள் என்பதிலிருந்து, டி ரெக்ஸ் உள்ளிட்ட வலிமைமிக்க ராட்சத விலங்குகள் என மாறியது வரை 'கான்கூலூ' - ஒரு பரிணாம மாற்றத்தைக் குறிக்கிறது.

"இது சுமார் 750 கிலோ எடையுள்ளதாக இருந்திருக்கும், அதே நேரத்தில் ஒரு பெரிய டி ரெக்ஸ் அதை விட எட்டு மடங்கு எடையுள்ளதாக இருந்திருக்கலாம். எனவே, இது முந்தைய மூதாதையர்களுக்கும் வலிமைமிக்க டைரனோசர்களுக்கும் இடையிலான ஒரு இடைநிலை புதைபடிவம்" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறுகிறார்.

"இது டைரனோசர்களின் பேரின வரிசையைத் (Family Tree) திருத்தவும் டைரனோசர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நமக்கு இதுவரை தெரிந்ததை மாற்றி எழுதவும் உதவியது," என்று அவர் கூறினார்.

டைனோசர்கள், புதிய வகை கண்டுபிடிப்பு, டைரசோசர்கள்

பட மூலாதாரம்,RILEY BRANDT/UNIVERSITY OF CALGARY

படக்குறிப்பு, முனைவர் பட்ட மாணவர்களான ஜாரெட் வொரிஸ் மற்றும் டார்லா ஜெலெனிட்ஸ்கி டைரனோசர்களின் படிமத்தை ஆய்வு செய்கின்றனர்.

இந்தப் புதிய இனம், டைரனோசர்களின் கொடுங்கோன்மைக்கு முக்கியமான பண்புகளாக இருந்தவற்றின் ஆரம்பகால பரிணாமக் கட்டங்களையும் எடுத்துரைக்கிறது. உதாரணத்துக்கு, வலுவான தாடையைக் கொண்ட மண்டை ஓடு கட்டமைப்பு.

"அதன் மூக்கு எலும்பில் சில விஷயங்களை கவனிக்க முடிகிறது. அவை பிற்காலத்தில் டைரனோசர்களுக்கு அவற்றின் இரையைக் கடிக்கக் கூடிய அதீத சக்தியைக் கொடுத்தன" என்று ஜாரெட் வோரிஸ் கூறுகிறார்.

இத்தகைய சக்தி வாய்ந்த தாடைகளின் பரிணாம வளர்ச்சி தான், பெரிய இரைகளின் மீது பாய்ந்து, அதன் எலும்பைக் கூட கடிக்கும் சக்தியை டி ரெக்ஸ் விலங்குகளுக்கு அளித்தது.

இந்த ஆராய்ச்சியில், குழு ஆய்வு செய்த இரண்டு (பகுதியளவிலான) எலும்புக்கூடுகள் முதன்முதலில் 1970களின் முற்பகுதியில் மங்கோலியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஆரம்பத்தில் 'அலெக்ட்ரோசொரஸ்' என்று அழைக்கப்படும் ஒரு இனத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்பட்டன. ஆனால், வோரிஸ் அவற்றை ஆய்வு செய்தபோது, அதன் தனித்துவமான டைரனோசொரஸ் தொடர்பான அம்சங்களை அவர் அடையாளம் கண்டார்.

"அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது எனக்கு நினைவிருக்கிறது. 'அதில் இதுவொரு புதிய இனம் என நினைக்கிறேன்' என வோரிஸ் கூறியிருந்தார்" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி நினைவு கூர்ந்தார்.

அந்த காலத்தில் சைபீரியா மற்றும் அலாஸ்காவை இணைத்திருந்த தரைப்பகுதி வழியாக வட அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையே இந்த டைனோசர்களால் இடம்பெயர முடிந்தது. அது புதிய வாழ்விடங்களைக் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பதில் அவற்றுக்கு உதவியது.

"கண்டங்களுக்கு இடையேயான இத்தகைய பயணங்கள், லட்சக்கணக்கான ஆண்டுகளில் பல்வேறு டைரனோசர் குழுக்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது." என வோரிஸ் விளக்கினார்.

"கொடும் ஆட்சி புரிந்த அரசர்களாக மாறுவதற்கு முன்பு, 'டைரனோசர்கள்' இளவரசர்களாக இருந்தனர் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு நமக்குக் காட்டுகிறது" என்று பேராசிரியர் ஜெலெனிட்ஸ்கி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly8wzwqxl4o

விமான விபத்தில் தந்தையை பறிகொடுத்த மகனின் அசாதாரண கண்டுபிடிப்பு 'கருப்புப் பெட்டி'

1 month 2 weeks ago

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு விமான விபத்தில் ஹூபர்ட் வாரன் (இடது) இறந்தார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபேக்கா சீல்ஸ்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

1934ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மிஸ் ஹோபார்ட் என்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது.

அதில் பயணித்த 8 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என அனைவரும் உயிரிழந்தனர். டாஸ்மேனியாவிற்கும் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள பாஸ் நீரிணை பகுதியில் அந்த விமானம் விழுந்ததாக நம்பப்படுகிறது.

விமானத்தின் சிதைவுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அந்த விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் 33 வயதான ஆங்கிலிகன் மிஷனரி ரெவரெண்ட் ஹூபர்ட் வாரன். அவர் சிட்னியின் என்ஃபீல்டில் உள்ள தனது புதிய திருச்சபைக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது மனைவி எல்லி மற்றும் 4 குழந்தைகள் அவருடன் பயணிக்கவில்லை.

தனது எட்டு வயது மகன் டேவிட்டிற்கு, ஹூபர்ட் கடைசியாக ஒரு பரிசு அளித்திருந்தார். அது ஒரு கிரிஸ்டல் வானொலிப் பெட்டி, அதை அந்தச் சிறுவன் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.

டாஸ்மேனியாவில் உள்ள லான்செஸ்டன் ஆண்கள் பள்ளியில் தங்கியிருந்த டேவிட் வாரன், வகுப்புகளுக்குப் பிறகு அந்த வானொலியை ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வானொலி மூலம் கிரிக்கெட் போட்டிகளைக் கேட்க நண்பர்களிடம் ஒரு பைசா என கட்டணம் வசூலித்தார். சில வருடங்களுக்குள் தான் சொந்தமாக தயாரித்த சிறு வானொலிகளை ஒவ்வொன்றும் ஐந்து ஷில்லிங் என்ற விலையில் விற்றார்.

டேவிட் ஒரு துடிப்பான இளைஞனாகவும் அற்புதமான பேச்சாளராகவும் இருந்தார். ஆழ்ந்த மதப்பற்று கொண்ட அவரது குடும்பத்தினர், அவர் ஒரு சுவிசேஷப் பிரசாரகர் ஆக வேண்டும் என்று கனவு கண்டனர்.

ஆனால் அது நடக்கவில்லை. தந்தை ரெவ் ஹூபர்ட் அளித்த அந்தப் பரிசு, டேவிட்டிற்கு அறிவியல் மீது பெரும் காதல் ஏற்பட வழிவகுத்தது.

வருங்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் அந்தக் காதல் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.

ஏஆர்எல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணி

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, டேவிட் பள்ளி மாணவனாக இருந்தபோது, மின்னணு சாதனங்களால் ஈர்க்கப்பட்டு, சொந்தமாக வானொலி பெட்டிகளை உருவாக்கக் கற்றுக்கொண்டார்.

டேவிட் வாரன் தனது இருபதுகளின் நடுப்பகுதியில், சிட்னி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வியில் டிப்ளமோ மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் வேதியியலில் முனைவர் பட்டம் ஆகிய படிப்புகளை முடித்தார்.

அவரது நிபுணத்துவம் ராக்கெட் அறிவியல். எனவே அவர் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமான விமான ஆராய்ச்சி ஆய்வகங்களில் (ARL- ஏஆர்எல்) ஆராய்ச்சியாளராகப் பணியாற்றச் சென்றார். அத்துறை விமானங்களில் கவனம் செலுத்தியது.

ஏஆர்எல் துறை 1953ஆம் ஆண்டில், ஒரு முக்கியமான மர்மத்தைத் தீர்க்க முயற்சிக்கும் ஒரு நிபுணர் குழுவிடம் டேவிட்டை அனுப்பிவைத்தது.

உலகின் முதல் வணிக ஜெட் விமானமும் புதிய ஜெட் யுகத்தின் பெரும் நம்பிக்கையுமான, பிரிட்டிஷ் டி ஹாவிலேண்ட் காமெட் (de Havilland Comet) விமானம் ஏன் தொடர்ந்து விபத்துகளை சந்தித்தது? என்பதே அந்த மர்மம்.

அதற்கு காரணம் எரிபொருள் டேங்காக இருக்கலாம் என்று டேவிட் நினைத்தார். ஆனால் பல்வேறு சாத்தியமான காரணங்கள் இருந்தன.

இருப்பினும், மனித உடல்கள் மற்றும் விமான பாகங்கள் தவிர ஆதாரம் என வேறு எதுவும் இந்த விபத்துகளில் இருந்து கிடைக்கவில்லை.

"விமானியின் தவறுகளா, ஊழியர்களுக்கான பயிற்சி போதவில்லையா, விமானத்தின் வால் பகுதி உடைந்ததா என எனக்குத் தெரியாத பிற விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்," என்று டாக்டர் டேவிட் வாரன் 50 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

"ஒரு வாரத்திற்கு முன்பாக தான், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய முதல் வர்த்தக கண்காட்சி சிட்னியில் நடைபெற்றது. அதில் நான் பார்த்த ஒரு பொருளைப் பற்றி அந்த கூட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். அதுதான் - முதல் பாக்கெட் ரெக்கார்டர் (Pocket recorder) என்று கூறப்படும் மினிஃபோன். ஒரு ஜெர்மன் சாதனம். அதற்கு முன்பு அது போன்ற ஒரு சாதனம் இருந்ததில்லை."

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,DEFENCE SCIENCE AND TECHNOLOGY, AUSTRALIA

படக்குறிப்பு, 1958 ஆம் ஆண்டு ஏஆர்எல் அமைப்பில் டேவிட்

வணிகர்களுக்கான ஒரு 'டிக்டேஷன்' இயந்திரமாக மினிஃபோன் சந்தைப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் ஒருவர் தனது பேச்சை அல்லது தகவலை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம், பின்னர் அவர்களின் உதவியாளர்களால் அது தட்டச்சு செய்யப்படும்.

ஸ்விங் இசை ரசிகரான டேவிட், ஜாஸ் இசைக்கலைஞர் வூடி ஹெர்மனின் இசையைப் பதிவு செய்ய ஒரு மினிஃபோன் கிடைத்தால் போதுமென விரும்பினார்.

இருப்பினும், அவரது சக விஞ்ஞானிகளில் ஒருவர், கடைசியாக விபத்துக்குள்ளான காமெட் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறிய போது, அவருக்கு ஒரு யோசனை எழுந்தது.

ஒரு ரெக்கார்டர் விமானத்தில் இருந்து, அது தீ விபத்தில் இருந்து தப்பித்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் வானத்தில் பறக்கும் ஒவ்வொரு விமானத்தின் காக்பிட்டிலும் ஒரு மினி ரெக்கார்டர் இருந்தால்?

அது சாத்தியம் என்றால், விபத்து குறித்து புலனாய்வு செய்பவர்கள் மீண்டும் ஒருபோதும் இவ்வளவு குழப்பமடைய மாட்டார்கள். ஏனென்றால் விபத்து நடந்த தருணம் வரை பதிவான அவர்களிடம் ஆடியோ இருக்கும். குறைந்தபட்சம், விமானிகள் என்ன சொன்னார்கள், என்ன கேட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்த யோசனை அவரை மிகவும் கவர்ந்தது. ஏஆர்எல்-க்கு திரும்பியதும், அதைப் பற்றி தனது மேலதிகாரியிடம் சொல்ல விரைந்தார்.

ஆனால், மேலதிகாரி அவரது உற்சாகத்தைப் புரிந்து கொள்ளவில்லை. "இது வேதியியலோ அல்லது எரிபொருட்களோ சம்பந்தப்பட்டதல்ல. நீங்கள் ஒரு வேதியியலாளர். எனவே இந்தப் பிரச்னையை கருவிகள் குழு கையாளட்டும்" என்று தன்னிடம் கூறப்பட்டதாக டாக்டர் டேவிட் வாரன் சொல்கிறார்.

'இதை வெளியே பேசினால், வேலை பறிக்கப்படும்'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION

படக்குறிப்பு, டேவிட், அவரது மனைவி ரூத் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் (1958)

காக்பிட் ரெக்கார்டர் குறித்த தனது யோசனை சிறப்பானது தான் என்று டேவிட் அறிந்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வ ஆதரவு இல்லாமல், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த யோசனையை மனதில் இருந்து அகற்றவும் முடியவில்லை.

அவரது மேலதிகாரி பதவி உயர்வு பெற்று சென்றபிறகு, டேவிட் மீண்டும் தனது யோசனையை முன்வைத்தார். அவரது புதிய மேலதிகாரியும், ஏஆர்எல்-இன் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் லாரி கூம்ப்ஸும் இதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் அவரை அதில் தொடர்ந்து பணியாற்றுமாறு வற்புறுத்தினர் - ஆனால் ரகசியமாக.

இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முயற்சியோ அல்லது போரில் வெற்றிபெற உதவக்கூடிய ஒரு ஆயுதமோ இல்லை என்பதால், அதற்கென ஆய்வக நேரத்தையோ பணத்தையோ ஒதுக்க முடியாது.

"இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் யாரிடமாவது பேசுவதைக் கண்டால், நான் உங்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்" என்று தலைமை கண்காணிப்பாளர் தன்னை எச்சரித்ததாக டாக்டர் டேவிட் வாரன் கூறினார்.

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளைஞனுக்கு அது சற்று கவலைக்குரியதாகவே இருந்தது.

ஆனால் அவரது மேலதிகாரியின் ஆதரவுடன், புதிய டிக்டேஷன் ரெக்கார்டர்களில் ஒன்றை மறைமுகமாக வாங்கி, அதை 'ஆய்வகத்திற்குத் தேவையான ஒரு கருவி' என்ற பட்டியலில் சேர்த்தார் டேவிட்.

அதன் பிறகு உற்சாகமடைந்த டாக்டர் டேவிட் வாரன், "விமான விபத்துகள் பற்றிய விசாரணைக்கு உதவும் ஒரு சாதனம்" என்ற தலைப்பிட்ட ஒரு அறிக்கையில் தனது யோசனையை எழுதி, அதைத் துறை முழுவதும் அனுப்பினார்.

விமானிகள் சங்கம் அதற்கு கோபத்துடன் பதிலளித்தது, அந்த ரெக்கார்டரை ஒரு உளவு பார்க்கும் சாதனம் என்று முத்திரை குத்தியது. "இந்த உளவு சாதனம் பொருத்திக் கொண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து எந்த விமானமும் புறப்படாது" என்றும் வலியுறுத்தியது.

ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த சாதனத்திற்கு 'உடனடி முக்கியத்துவம் இல்லை' என்று அறிவித்தனர். இத்தகைய யோசனை 'விளக்கங்களை விட அதிக அவதூறுகளுக்கே வழிவகுக்கும்' என்று விமானப்படை அஞ்சியது.

அனைத்து முயற்சிகளையும் நிறுத்தி விடலாமா என்ற எண்ணம் டாக்டர் வாரனுக்கு எழுந்தது.

டேவிட்டின் பிடிவாத குணம்

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,AFP/GETTYIMAGES

படக்குறிப்பு, கருப்புப் பெட்டி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

இருப்பினும், டாக்டர் டேவிட் வாரனின் மூத்த மகனான பீட்டரின் கூற்றுப்படி, "டேவிட் பிடிவாத குணம் கொண்டவர். அவரின் சுதந்திர மனப்பான்மை, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஆதிக்கம் செலுத்தியது".

அந்த குணம் தான் டேவிட் வாரனை தொடர்ந்து முயற்சி செய்ய வைத்தது. தனது கேரேஜுக்கு சென்ற டேவிட், தனது 20 வருட பழைய வானொலி பாகங்களை ஒன்று சேர்த்தார். தன் மீதான விமர்சனங்கள், கேலிகள் மற்றும் சந்தேகத்தைப் போக்க ஒரே வழி, ஒரு வலிமையான முன்மாதிரி சாதனத்தை உருவாக்குவதுதான் என்று அவர் முடிவு செய்தார்.

அதுதான் உலகின் முதல் விமான ரெக்கார்டர் அல்லது கருப்புப் பெட்டி.

ஒரு சிறிய விமான ரெக்கார்டர் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பிறகு, 1958ஆம் ஆண்டில், ஒருநாள் ஏஆர்எல் ஆய்வகத்திற்கு எதிர்பாராத ஒரு விருந்தினர் வந்தார். தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் கூம்பஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு ஆய்வகத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார்.

"டேவிட், நீ என்ன செய்கிறாய் என்பதை என் நண்பரிடம் சொல்" என கூம்பஸ் கூறினார்.

அதைத் தொடர்ந்து டாக்டர் டேவிட் வாரன் விளக்கினார்.

தான் உருவாக்கிய உலகின் முதல் முன்மாதிரி விமான ரெக்கார்டர் கொண்டு, நான்கு மணிநேர விமானிகளின் உரையாடல்கள் மற்றும் கருவிகளின் தரவுகளை சேமிக்க முடியும் என்றும், அதற்கு எஃகு கம்பியைப் பயன்படுத்துவதாகவும் டேவிட் கூறினார்.

இது பழைய பதிவுகளை தானாகவே அழித்துவிடும் என்பதால், இந்த ரெக்கார்டர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது என்பதையும் அவர் விளக்கினார்.

அந்த நண்பருக்கோ பெரும் ஆச்சரியம்.

"கூம்ப்ஸ் இதுவோரு நல்ல யோசனை. இந்த பையனை அடுத்த கூரியரில் லண்டனுக்கு அனுப்பு. இதை லண்டனில் உள்ளவர்களுக்கு காண்பிப்போம்." என்றார் அவர்.

இங்கு அவர் குறிப்பிட்ட கூரியர் என்பது, பிரிட்டனுக்கு வழக்கமாக பறந்துகொண்டிருந்த 'ஹேஸ்டிங்ஸ் போக்குவரத்து விமானம்'. ஆனால் அதில் ஒரு டிக்கெட்டை பெற வேண்டும் என்றால், மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விமானத்தின் டிக்கெட்டுகளை தன் இஷ்டத்திற்கு வழங்கும் இந்த மனிதர் யார் என்று டாக்டர் வாரன் யோசித்தார்.

அதற்கு பதில், ராபர்ட் ஹார்டிங்ஹாம் (பின்னர் சர் ராபர்ட்), பிரிட்டிஷ் விமானப் பதிவு வாரியத்தின் செயலாளர் மற்றும் பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸின் முன்னாள் ஏர் வைஸ்-மார்ஷல்.

பிரிட்டனுக்கு ரகசிய பயணம்

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு மினிஃபோனுடன் டேவிட் வாரன் (2002)

டேவிட்டின் வார்த்தைகளில், "ராபர்ட் ஒரு ஹீரோ. அவர் கூம்ப்ஸின் நண்பர். அவர் ஒரு இடத்தைக் கொடுத்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள்."

சில வாரங்களுக்குப் பிறகு, டாக்டர் வாரன், பிரிட்டன் செல்லும் விமானத்தில் ஏறினார். ஆனால், அவர் உண்மையில் என்ன செய்யப்போகிறார் என்பதை ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையிடம் சொல்லக் கூடாது என்ற கடுமையான உத்தரவுகளுடன் அவர் பயணித்தார்.

நம்பமுடியாத ஒரு முரண்பாடாக, அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பயணத்தபோது அதன் ஒரு இயந்திரம் செயலிழந்தது.

டாக்டர் வாரன் நினைவு கூர்ந்தார்: "விமானத்தில் இருந்தவர்களிடம் 'அன்பர்களே, நாம் ஒரு இயந்திரத்தை இழந்துவிட்டோம் - யாராவது திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டேன். ஆனால் துனீசியாவில் சுமார் 45 டிகிரி வெப்பநிலை நிலவியது என்பதால், அந்த நரகத்திற்குத் நாங்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை."

தொடர்ந்து விமானத்தை இலக்கை நோக்கி இயக்கினால் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

தடுமாறிக் கொண்டிருந்த அந்த விமானத்தில் தான் இறந்தாலும் பரவாயில்லை, ஆனால் தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மீதமுள்ள விமானப் பயணத்தை ரெக்கார்டரில் பதிவு செய்தார் டேவிட்.

"ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டோம்." என்றார் டேவிட்.

பிரிட்டனில், 'ஏஆர்எல் விமான நினைவக அமைப்பு' என்ற பெயரில் ராயல் ஏரோநாட்டிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் மற்றும் சில வணிக கருவிகள் தயாரிப்பாளர்களுக்கு தனது கண்டுபிடிப்பை முன்வைத்தார்.

பிரிட்டிஷ்காரர்கள் இதை விரும்பினர். பிபிசி இதை ஆய்வு செய்யும் வகையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது. பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சிவில் விமானங்களில் இந்த சாதனத்தை கட்டாயமாக்கும் பணியைத் தொடங்கியது.

மிடில்செக்ஸ் நிறுவனமான 'எஸ் டேவல் அண்ட் சன்ஸ்', உற்பத்தி உரிமைகள் குறித்து ஏஆர்எல் அமைப்பை அணுகி, உற்பத்தியைத் தொடங்கியது.

இந்தக் கருவி 'கருப்புப் பெட்டி' என்று அழைக்கப்பட்டாலும், விபத்துக்குப் பிறகு அவற்றைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவை ஆரஞ்சு நிறத்தில் உருவாக்கப்பட்டன. இன்றும் அவை அப்படியே இருக்கின்றன.

'கருப்புப் பெட்டி'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, டேவிட் வாரனின் இறுதிச் சடங்கு

1958ஆம் ஆண்டு தனது தந்தை டேவிட் வாரன் பிபிசிக்கு அளித்த பேட்டியிலிருந்து 'கருப்புப் பெட்டி' என்ற இந்தப் பெயர் தோன்றியதாக பீட்டர் வாரன் நம்புகிறார்.

"ஒரு பத்திரிகையாளர் இதை 'கருப்புப் பெட்டி' என்று குறிப்பிட்டார். இது மின்னணு பொறியியலில் இருந்து வந்த ஒரு பொதுவான சொல், அந்தப் பெயர் அப்படியே ஒட்டிக்கொண்டது."

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட விவரிக்க முடியாத ஒரு விமான விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விமான காக்பிட் குரல் பதிவுகளை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆனது. நீதித்துறை விசாரணையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்தது. அது சட்டமாக மாற மேலும் மூன்று ஆண்டுகள் ஆயின.

இன்று, கருப்புப் பெட்டிகள் நெருப்பு மற்றும் கடல் நீரால் பாதிக்கப்படாத வகையில், எஃகு கவசத்தால் மூடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. அவை ஒவ்வொரு வணிக விமானத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

விபத்தைச் சந்தித்த விமானங்களின் இறுதித் தருணங்களில் இருந்து கிடைத்த தரவுகள் மூலம் பல குறைபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. இந்த கருப்புப் பேட்டி மூலம் எத்தனை பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதைச் சொல்ல முடியாது.

'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'

விமானங்கள், கருப்புப் பெட்டி, வரலாறு, விமானப் போக்குவரத்து

பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES

டேவிட் வாரன் 1983இல் ஓய்வு பெறும் வரை ஏஆர்எல் அமைப்பில் பணியாற்றினார், அதன் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானியானார். அவர் ஜூலை 19, 2010 அன்று தனது 85 வயதில் இறந்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக, கருப்புப் பெட்டி தொடர்பான அவரது முன்னோடிப் பணி கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்படாமல் போனது. இறுதியாக 1999ஆம் ஆண்டில், அவருக்கு 'ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவன பதக்கம்' வழங்கப்பட்டது, பின்னர் 2002 ஆம் ஆண்டில் விமானத் துறைக்கு அவர் செய்த சேவைக்காக 'ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' (AO) அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டபோது, அவரது மகள் ஜென்னி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "மந்தநிலைதான் அவரது எதிரி. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானி, நுட்பமாக ஆய்வு செய்யும் மனதைக் கொண்டவர், விஷயங்கள் எப்படி வெளிப்படும் என்பதை அவரால் முன்னரே கற்பனை செய்ய முடிந்தது."

"அவர் 1958ஆம் ஆண்டிலேயே, 'இந்த சாதனம் இதைச் சாத்தியமாக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்."

ஆனால், "நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் பிரிட்டன், ஜெர்மனி அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்படும், வேறு இடங்களில் இருந்து வராது என்ற 1950களின் காலனித்துவ மனநிலை தான் அதற்கு காரணம்" என பீட்டர் வாரன் குற்றம் சாட்டுகிறார்.

ஏஆர்எல்-இன் பணியைச் சுற்றியுள்ள வரலாற்று ரகசியம், இப்போது பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது மற்றொரு சாத்தியமான காரணியாகும்.

2008ஆம் ஆண்டு, குவான்டஸ் நிறுவனம் ஒரு ஏர்பஸ் A380 விமானத்திற்கு டாக்டர் டேவிட் வாரன் பெயரைச் சூட்டியது.

ஆனால் 'கருப்புப் பெட்டி' தொடர்பான ராயல்டியாக ஒரு ரூபாய் கூட டாக்டர் டேவிட் வாரனுக்கு கிடைக்கவில்லை.

இது குறித்து எப்போதாவது டேவிட் வாரன் வருத்தப்பட்டது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த பீட்டர், "ஆம், நான் செய்த வேலைக்கான பலன்கள் அரசுக்கு கிடைத்தது. அதே நேரம், தோல்வியில் முடிந்த எனது பல முயற்சிகளுக்கு அவர்கள் என்னிடம் பணம் கேட்கவில்லை அல்லவா?" என டேவிட் வாரன் கூறியதாகச் சொல்கிறார்.

விமானத்தில் பயணிக்கும் போது உங்கள் தந்தையைப் பற்றி எப்போதாவது நினைத்து பார்ப்பது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜென்னி மற்றும் பீட்டர், "ஒவ்வொரு முறையும்" என்றார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c201xd2573no

"பூமியை நெருங்கும் 6வது பேரழிவு" : அழிந்து போன உயிர்களை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமா?

1 month 3 weeks ago

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

7 ஜூன் 2025

ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது.

கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன.

ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமான டயர் ஓநாய் இனத்தின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி, மரபணு பொறியியல் நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.

குளோனிங் மற்றும் மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்த பிறகு, இது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இது அவசியமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

கொலோசல் பயோசயின்சஸின் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் பெத் ஷாபிரோ, 2015 இல் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் குளோனிங் பற்றி விவாதித்ததைக் குறிப்பிடுகிறார். அழிந்துபோன எந்த உயிரினத்தையும் குளோனிங் செய்ய முடியாது என அவர் அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புதிய சாதனை அவரது கருத்தை மாற்றியுள்ளதாக அவர் கூறுகிறார்.

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் டயர் ஓநாய்கள் முக்கியக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தன. டாக்டர் பெத் ஷாபிரோவின் கருத்துப்படி, டயர் ஓநாய் என்பது நரிகள் மற்றும் நாய்களுடன் தொடர்புடைய ஒரு இனமாகும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, டயர் ஓநாய் இனத்தின் ஆரம்பகால புதைபடிவம் சுமார் 2.5 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இந்த விலங்குகள் வட அமெரிக்காவில் காணப்பட்டன. கடந்த பனி யுகத்தில், அதாவது சுமார் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டயர் ஓநாய் அழிந்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தின் கூட்டத்தில், எந்த உயிரினத்தை மீண்டும் உருவாக்கலாம் என்பது பற்றிய விவாதம் நடந்ததை டாக்டர் பெத் ஷாபிரோ நினைவு கூர்கிறார்.

உயிரினத்தை மீண்டும் உருவாக்குவதில், தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான சவால்களும் விவாதிக்கப்பட்டன. ரோமியோலஸ் மற்றும் ரெமுஸ் ஆகிய இரு டயர் ஓநாய் குட்டிகள், மரபணு மாற்ற செயல்முறை தொடங்கிய 18 மாதங்களுக்குள் பிறந்துவிட்டன.

ஒரு உயிரினத்தின் அனைத்து டிஎன்ஏக்களின் முழுமையான தொகுப்பே மரபணுத் தொகுப்பு ஆகும். இதற்காக, கொலோசஸ் பயோசயின்சஸுக்கு டயர் ஓநாயின் டிஎன்ஏ தேவைப்பட்டது.

"72,000 ஆண்டுகள் பழமையான டயர் ஓநாயின் மண்டை ஓடு மற்றும் 13,000 ஆண்டுகள் பழமையான பல் ஒன்றும் கிடைத்தது. அதிலிருந்து டிஎன்ஏ கிடைத்தது. அதைப் பயன்படுத்தி இந்த இரு டயர் ஓநாய்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்கினோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இந்த மரபணு வரிசை, டயர் ஓநாய் இனத்தின் நெருங்கிய இனமான சாம்பல் ஓநாய் இனத்துடன் ஒப்பிடப்பட்டது. பண்டைய டயர் ஓநாய் இனத்துடன் ஒத்த ஒரு இனத்தை உருவாக்க இந்த மரபணுவில் சில மாற்றங்களைச் செய்ததாக டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில், டயர் ஓநாயின் டிஎன்ஏவில் சாம்பல் ஓநாயின் ஜீன்கள் இணைக்கப்பட்டு கரு உருவாக்கப்பட்டது.

கருவை வளர்க்க, வளர்ப்பு நாய்கள் வாடகைத் தாய்களாக பயன்படுத்தப்பட்டன. நாய்களின் கருப்பையில் கரு செலுத்தப்பட்டது.

கருவுற்ற நாய்கள் அறுவை சிகிச்சை மூலம் ஓநாய்களை பிரசவித்தன. ஆனால், ஏன் சாம்பல் ஓநாய்களை வாடகைத் தாயாக பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறதா?

நாய்களை, வாடகைத் தாய்களாகப் பயன்படுத்துவதில் தங்களுக்கு அதிக அனுபவமும் அறிவும் இருப்பதால் இது செய்யப்பட்டது என்று கூறும் டாக்டர் பெத் ஷாபிரோ, நாய்கள் உண்மையில் சாம்பல் ஓநாய்களின் மற்றொரு வடிவம் என்று சொல்கிறார்.

கடந்த காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள்

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,COLOSSAL BIOSCIENCES

இப்போது, இந்த 'டயர் ஓநாய் குட்டிகள்' உண்மையில் என்ன என்றும் என்னவாக இல்லை என்றும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

"அவை டயர் ஓநாய்கள் இல்லை என்பது உண்மைதான். நாங்கள் அவற்றை டயர் ஓநாய்கள் என்று அழைக்கிறோம், ஆனால் நீங்கள் அவற்றை Proxy Direwolf அல்லது Colossal Direwolf என்றும் அழைக்கலாம். நாங்கள் அவற்றுடன் சாம்பல் ஓநாயின் பண்புகளையும் சேர்த்துள்ளோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார்.

குளோனிங் தொழில்நுட்பத்தில் இரண்டு ஓநாய் குட்டிகள் அக்டோபர் 2024 இல் பிறந்தன, மூன்றாவது இந்த ஆண்டு ஜனவரியில் பிறந்தது. நிறுவனம் அவற்றை காட்டுக்குள் விட விரும்பவில்லை என்றும், இந்த குட்டிகள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார்.

இனப்பெருக்கம் செய்வதற்கு இவற்றைப் பயன்படுத்த தனது நிறுவனம் விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்ட சூழலில் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதே நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறுக்றார்.

இந்த செயல்முறையைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தவே நிறுவனம் விரும்புகிறது. பல அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உயிரினங்கள் எவ்வாறு அழிந்து போகின்றன?

இங்கிலாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் பேராசிரியர் டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கூறுகையில், வாழ்க்கையின் வரலாற்றைப் பார்த்தால், 3.7 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் இருந்த உயிரினங்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிந்துவிட்டன.

"மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பூமியில் இருக்கும் 48 சதவீத விலங்கு இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் பொருள், இன்று பாதுகாப்பாக இருக்கும் அந்த உயிரினங்கள் அருகிக் கொண்டே வந்தால் சில தசாப்தங்களில் அழிந்துவிடும்."

அழிவு என்பது பகுதியளவு நிகழ்வாகவும் இருக்கலாம், அதாவது ஒரு இனம் உலகின் ஒரு பகுதியில் அழிந்துவிடும், ஆனால் மற்றொரு இடத்தில் உயிர்வாழலாம். இருப்பினும் அந்த இனம் எல்லா இடங்களிலும் அழிந்து போகும்போது, அந்த உயிரினம் அழிந்துவிடும்.

உயிரினங்கள் அழிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ சொல்கிறார். உதாரணமாக, வேட்டையாடுதல், அல்லது அவற்றை அழிக்கும் உயிரினங்களை அவற்றின் பிரதேசத்தில் குடியேற்றுதல் மற்றும் அந்த இனங்களின் மெதுவான இனப்பெருக்க விகிதம் என ஒரு உயிரினம் அழிவதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம்.

பூமியில் உயிரினங்கள் அழிவதற்கு வழிவகுத்த பெரிய அளவிலான ஐந்து சம்பவங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது, வெகுஜன அழிவுக்கு (பெரும்பாலான உயிரினங்களின் அழிவுக்கு) காரணமான சம்பவங்கள் இவை.

"இதற்கு முன்னர் நடந்த ஐந்து பேரழிவு நிகழ்வுகள், எரிமலை வெடிப்புகள், பூமியைத் தாக்கும் விண்கற்கள் அல்லது பிற இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, மெக்சிகோவை விண்கல் தாக்கியதால் டைனோசர்கள் அழிந்தன" என்று டாக்டர் டேனியல் பின்செரா டோனோசோ கூறினார்.

அந்த சம்பவம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதேபோன்ற நிகழ்வுகள் 205 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் 90 சதவீத உயிரினங்களை அழித்தன.

இந்த ஐந்து பேரழிவு சம்பவங்களுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் தற்போது ஆறாவது பேரழிவு நம்மை நெருங்கிவிட்டது. டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோவின் கூற்றுப்படி, பூமியில் உள்ள உயிரினங்களில் குறைந்தது 70 சதவீதமாவது அழிக்கப்படும்போதுதான் வெகுஜன அழிவு ஏற்படுகிறது.

அழிந்த விலங்குகளை மீட்டல்

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்றும், ஆனால் பல்லுயிர் பெருக்கம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், இப்போது நாம் பெருமளவில் அழிந்து வரும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார். வெகுஜன அழிவுக்குப் பிறகு, பூமியில் வாழ்க்கை மாறும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் எந்த இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன?

பல பெரிய பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கருதுகிறார். அவற்றில் திமிங்கலங்களில் சில வகை மற்றும் பெரிய ஆப்பிரிக்க பாலூட்டிகள் அடங்கும். ஆனால் தவளை இனங்களுக்குத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறுகிறார். காலநிலை மாற்றம், நில இழப்பு மற்றும் நோய்கள் காரணமாக, தவளைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் பிற உயிரினங்களை விட மிக வேகமாக அழிந்து வருவதாக அவர் கூறுகிறார்.

அவற்றின் பல இனங்கள் அழிந்துவிட்டன, மேலும் பல அழிவின் விளிம்பில் உள்ளன. ஒரு இனத்தின் அழிவு என்பது சங்கிலித் தொடர் எதிர்வினையைத் தொடங்குகிறது. அத்துடன், அவற்றுடன் தொடர்புடைய உயிரினங்கள் பலவும் அழிந்து போகத் தொடங்குகின்றன. இதைப் பல பாகங்களைக் கொண்ட ஒரு காரின் எஞ்சினுடன் ஒப்பிடலாம். எஞ்சினில் இருந்து ஒரு சிறிய திருகு கழன்று விழுந்தால், முழு எஞ்சினுமே வேலை செய்வதை நிறுத்திவிடும். இதைப் போலவே, ஒரு உயிரினம் அருகும்போதும், அழியும்போதும் அதன் சங்கிலித் தொடர் விளைவாக பல உயிரினங்களின் இருப்பும் பாதிக்கப்படும்.

அழிந்துபோன உயிரினங்களின் மீட்சி

மரபணு எடிட்டிங் குறித்த புத்தகங்களை எழுதிய அறிவியல் பத்திரிகையாளரான டோரில் கோர்ன்ஃபெல்ட், மரபணு திருத்தம் மூலம் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் குறைந்தது பத்து திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன மாமூத் யானை போன்ற விலங்குகளை மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன அல்லது இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை உருவாக்கும் சில திட்டங்களும் தற்போது செயலில் உள்ளன.

"மீண்டும் விலங்குகள் உருவாக்கப்படும் முயற்சிகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, மாமூத், டயர் ஓநாய், டோடோ பறவை மற்றும் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் வட வெள்ளை காண்டாமிருகம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால் அறிவியலின் உதவியுடன், ஒரு லட்சம் வெள்ளை காண்டாமிருகங்கள் உருவாக்கப்பட்டு அவை காட்டில் விடப்பட்டால், வேட்டைக்காரர்கள் ஒரே வாரத்தில் அவற்றைக் கொன்றுவிடுவார்கள். உண்மையில், இதுபோன்ற விலங்குகளின் அழிவுக்கு காரணம் வேட்டை தான். இந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை."

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் அசாத்தியங்களும் சாத்தியமாகின்றன என்றாலும், வேலை எளிதானது அல்ல.

பனியில் உறைந்து இருக்கும் மாமூத் ஒன்று கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அதன் டிஎன்ஏ கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் டோரில் கோர்ன்ஃபெல்ட் கூறுகிறார்.

"கடுமையாக சேதமடைந்துள்ள டிஎன்ஏவை மறுகட்டமைப்பது என்பது ஆயிரக்கணக்கான கிழிந்த பக்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு நாவலைப் படிக்க முயற்சிப்பது போன்றதாகும்" என்று அவர் விளக்குகிறார்.

1980களில், டிஎன்ஏவை மறுகட்டமைத்து ஆய்வு செய்யக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. 1990களில், குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட டோலி என்ற செம்மறி ஆடு பிறந்தது மிகப் பெரிய சாதனையாக நிரூபிக்கப்பட்டது. அதாவது ஒரு உயிரினத்தின் சரியான நகல் உருவாக்கப்பட்டது. இதைச் செய்வதற்கு உயிருள்ள செல்கள் தேவை.

2012 ஆம் ஆண்டில், மரபணு திருத்தத்திற்கான ஒரு புதிய கருவி 'CRISPER Cas9' கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உதவியுடன், கொலோசல் பயோசயின்சஸ் டயர் ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.

என்னென்ன சந்தேகங்கள் உள்ளன?

அழிந்துபோன விலங்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் கருவியின் காரணமாக, மரபணு திருத்தம் மிகவும் துல்லியமானது, புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமானது என்று கூறும் டோரில் கோர்ன்ஃபெல்ட், 'CRISPR Cas 9' விவசாய அறிவியலிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் முயற்சிகளால் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் கனவு நனவாகும். ஆனால் அழிந்துபோன விலங்குகளை மீண்டும் உருவாக்க முயற்சிப்பது ஏன்?

"இதற்கு முக்கிய காரணம் அறிவியல் ஆர்வம் என்று நினைக்கிறேன். விஷயங்களைப் பரிசோதித்து உலகை நன்கு புரிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக, உலகில் பல நல்ல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை நமக்கு பயனளித்துள்ளதும் கண்கூடான விஷயம் தான். ஆனால் பல நெறிமுறை கேள்விகளும் இந்த சோதனைகளுடன் தொடர்புடையவை" என்று டோரில் கோர்ன்ஃபெல்ட் கருதுகிறார்.

அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதால் என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்?

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள லூயிஸ் & கிளார்க் கல்லூரியின் தத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜே. ஓடென்போ, மரபணு திருத்தம் நிச்சயமாக ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்று கூறுகிறார், ஆனால் அழிவு நீக்கம் செய்வதன் மூலம், அதாவது அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம், நாம் கடவுளாக மாற முயற்சிக்கவில்லையா? என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

"தத்துவார்த்த ரீதியில், அதன் நன்மைகள், தீமைகளை விட அதிகமாக உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும். மேலும், அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்களை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதில் நெறிமுறை சிக்கல்களும் உள்ளன. இதில் பக்க விளைவுகளும் உள்ளன" என்று அவர் கூறுகிறார்.

இந்த விஷயத்தில் வெளிப்படுத்தப்படும் முக்கியமான கவலை என்னவென்றால், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவு குறையக்கூடும்.

"ஒரு இனம் அழிந்துவிட்டாலும், அதை மீண்டும் உருவாக்க முடியும் என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள், இதுவொரு கவலை. அழிவு என்பது நிரந்தரமானது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கருத்து மாறக்கூடும். எனவே அழிவு நிலையில் இருக்கும் உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் உணரத் தொடங்குவார்கள்" என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார்.

எந்த இனத்தை மீண்டும் உலகில் அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானிப்பதும் முக்கியமான கேள்வி.

மாமூத் போன்ற உயிரினங்களை மீண்டும் உருவாக்கலாம் என்றால் அதற்கான காரணம், அவை பனி உருகுவதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்பதாக இருக்கும் என டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார்.

ஆனால் அழிவு தொடர்பான அடுத்த கேள்வி என்னவென்றால், மீண்டும் உருவாக்கப்படும் விலங்குகளின் இனங்கள் அசலானதாக இருக்காது, மாறாக அவற்றை ஒத்தது போலவே இருக்கும்.

இந்த நிலையில் உயிரினங்களை மீட்டெடுப்பதன் அடிப்படை நோக்கம் நிறைவடையாது என்று டாக்டர் ஜே. ஓடென்போ நம்புகிறார். மேலும், அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கையும் தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.

மரபணு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் அசல் உயிரினங்களைப் போன்றவையா இல்லையா என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறினார். அவை பாதுகாக்கப்பட்ட கூண்டுகளில் வைக்கப்படும். இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால், அவை மீண்டும் அழிந்துவிடும்.

"இந்தத் திட்டம் பாதுகாப்பிற்காக அல்ல, ஆர்வத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது. இந்தப் பணியை மேற்கொள்வது தனியார் நிறுவனங்கள் என்பதால், பிற விஞ்ஞானிகளால் இதைப் பார்க்க முடியவில்லை."

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொலோசல் பயோசயின்சஸ், டயர் ஓநாய் மீளுருவாக்கம் பரிசோதனை குறித்த தனது ஆராய்ச்சியை மதிப்பாய்வுக்காக ஒரு கல்வி இதழில் சமர்ப்பித்ததாகக் கூறியது. ஆனால் அது வெளியாக பல மாதங்கள் ஆகும்.

சரி, உயிரினங்களை மீட்டெடுப்பது சுலபமானதா? அவை அழிந்து போன உயிரினங்களாவே இருக்குமா? இந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.

தற்போது, Colossal Biosciences உருவாக்கி வளர்த்துவரும் ஓநாய்கள் முழுமையான டயர் ஓநாய்கள் அல்ல. இருப்பினும், இது அழியாத்தன்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நிச்சயமாக முக்கியமானது என்று சொல்லலாம்.

ஒருவேளை, இதுவும் பாதுகாப்பிற்கான ஒரு புதிய ஊடகமாக மாறக்கூடும். ஆனால் அழிந்துபோன உயிரினம் ஒன்றை மீண்டும் உருவாக்குவதற்கு கடின உழைப்பும் தொழில்நுட்பமும் மட்டுமல்ல அதிக பணமும் தேவை.

அதுமட்டுமல்ல, சரியா தவறா என பல தார்மீகப் பிரச்னைகளும் இத்துடன் இணைத்து பார்க்கப்படும். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும், ஆனால் இந்த அறிவியலைப் பாதுகாப்போடு பயன்படுத்துவது உலகில் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்க உதவும் என்றும் டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c39xjl8zk03o

விஞ்ஞானிகள் விளக்க முடியாமல் தவிக்கும் வினோதமான விண்வெளி வெடிப்புகள்

2 months ago

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன்

  • பதவி,

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா?

வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது.

அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர்.

அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பைவிட வேகமாகவும் பிரகாசமாகவும் இருந்தது. அது சூப்பர்நோவாவாக இருக்கும் எனக் கருதப்பட்டாலும், அதன் தன்மை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

இந்த அதிநவீன விண்மீன் வெடிப்பு AT2018cow என அழைக்கப்பட்டது. இதில் உள்ள "cow" என்பது ஒரு சீரான குறியீட்டின் ஒரு பகுதி மட்டுமே. அதற்கும் பசுவைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'cow' என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எளிய பயன்பாட்டிற்காக மட்டுமே இது உலகமெங்கும் சுருக்கமாக "தி கௌ" (The Cow) என அறியப்படுகிறது.

இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுக்குப் பிறகு, வானியலாளர்கள் பேரண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதே போன்ற சில வெடிப்புகளைக் கண்டறிந்துள்ளனர்.

இவை "ஒளிரும் வேகமான நீல ஒளியியல் நிலையற்ற வெடிப்புகள்" (Luminous Fast Blue Optical Transients - LFBots) என விவரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டுள்ளன.

"அவை மிகவும் பிரகாசமாக இருக்கின்றன" என்கிறார் நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழக வானியலாளர் அன்னா ஹோ.

அதனால்தான் LFBot எனும் சுருக்கத்தில் உள்ள 'L' என்பது 'luminous' (ஒளிர்வான) என்பதைக் குறிக்கிறது.

இந்த வெடிப்புகளின் நீல நிறம், சுமார் 40,000°C (72,000°F) என்ற அதீத வெப்பத்தால் ஏற்படுகிறது. இந்த வெப்பம் ஒளியை நிறமாலையின் நீல நிறப் பகுதிக்கு மாற்றுகிறது. அந்த LFBot எனும் சுருக்கத்தின் கடைசி எழுத்துகளான 'O' மற்றும் 'T' என்பவை இந்த நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியும் ஒளி நிறமாலையில் (optical) தோன்றி, மிகக் குறுகிய நேரத்தில் மறையும் (transient) தன்மையைக் குறிக்கிறது.

வெற்றிகரமாக வெடித்துச் சிதறாத சூப்பர் நோவாக்களா இந்த LFBots?

தொடக்கத்தில், LFBots என்பது வெற்றிகரமாக வெடிக்க முடியாமல் போன சூப்பர்நோவாக்களாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

அதாவது, வெடிக்க முயன்ற நட்சத்திரங்கள், உட்புறமாக வெடித்து, அவற்றின் மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அதன் வெளிப்புறத்தை உள்நோக்கி விழுங்கும் செயல்முறை.

இருப்பினும், இவை குறித்த மற்றொரு கோட்பாடு தற்போது பிரபலமடைந்து வருகிறது. இடைநிலை நிறை கருந்துளைகள் (intermediate mass black holes) எனப்படும் நடுத்தர அளவிலான கருந்துளைகளின் கண்டுபிடிக்கப்படாத ஒரு வகை, அவற்றுக்கு மிக அருகில் செல்லும் நட்சத்திரங்களை விழுங்கும்போது "கௌ" (Cow) எரிப்புகள் தூண்டப்படுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை, இந்தக் கோட்பாட்டுக்குப் புதிய ஆதாரங்களை விவரித்தது.

இது இப்போது பொருந்தக்கூடிய விளக்கமாகக் கருதப்படலாம். "பொதுவான நிலைப்பாடு இப்போது அந்தத் திசையை நோக்கி நகர்கிறது" என்று லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் டேனியல் பெர்லி கூறுகிறார்.

இது சரியானது என நிரூபிக்கப்பட்டால், பிரபஞ்சத்தில் காணப்படும் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய கருந்துளைகளுக்கு இடையே காணாமல் போன இணைப்புக்கும், பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றான இருண்ட பொருள் (dark matter) குறித்துப் புரிந்து கொள்வதற்கும் ஒரு முக்கியமான ஆதாரங்களை இது வழங்கக்கூடும்.

எப்போது இத்தகைய வெடிப்பு பதிவு செய்யப்பட்டது?

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,வெடிப்பதற்காக முயன்ற நட்சத்திரங்கள் வெடிக்காமல், மையத்தில் ஒரு கருந்துளையை உருவாக்கி, பின்னர் அவற்றை வெளிப்புறத்தை உள்நோக்கி இழுத்து விழுங்குகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த முதல் "தி கௌ" (The Cow) வெடிப்பு, ரோபோ ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு, பூமியை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கியான அட்லஸ் (Asteroid Terrestrial-impact Last Alert System) மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வெடிப்பு, பூமியிலிருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு விண்மீன் மண்டலத்தில் பதிவானது. வழக்கமான சூப்பர்நோவாவைவிட இது 100 மடங்கு அதிகமாகப் பிரகாசித்தது. மேலும், தோன்றிய சில நாட்களிலேயே மறைந்தும்விட்டது.

சாதாரண சூப்பர்நோவாக்கள் முழுமையாக நிகழச் சில வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகும். இத்துடன், பிரிட்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அவதானிப்புகளின்படி, இந்த வெடிப்பு ஒரு விசித்திரமான மற்றும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருந்தது என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

அதன் பிறகு, வானியலாளர்கள் இதேபோன்ற சுமார் 12 நிகழ்வுகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அவற்றை முதலில் கண்டறிந்த வானியல் ஆய்வுகளின் விளைவாகத் தரப்படும் எழுத்துக் குறியீடுகளின் அடிப்படையில், விலங்குகளை மையமாகக் கொண்ட புனைப்பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அவை,

  • ZTF18abvkwla, 2018-ல் கண்டறியப்பட்டது – இது "கோலா" என அழைக்கப்படுகிறது.

  • ZTF20acigmel, 2020-ல் கண்டறியப்பட்டது – "ஒட்டகம்" எனப்படுகிறது.

  • AT2022tsd, 2022-ல் கண்டறியப்பட்டது – "டாஸ்மேனிய டெவில்" என்று அழைக்கப்படுகிறது.

  • AT2023fhn, 2023-ல் கண்டறியப்பட்டது – "ஃபின்ச்" அல்லது "ஃபான்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத்தகைய வெடிப்புகளைத் தேடும் முயற்சியில் வானியலாளர்கள் தொலைநோக்கியின் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளைப் பயன்படுத்தி வானத்தின் பெரிய பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வகையான நிகழ்வுகளைக் கண்டறிய வானியலாளர்கள் தற்போது விண்வெளியின் பரந்த பகுதிகளை ஆய்வு செய்யும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய ஒரு வெடிப்பு எப்போது நிகழ்ந்தாலும், அதைப் பற்றி மற்ற வானியலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க Astronomer's Telegram எனப்படும் ஆன்லைன் தளத்தில் அவர்கள் தகவல் அனுப்புகின்றனர். இது மற்ற தொலைநோக்கிகளை உடனடியாக அந்த நிகழ்வை உற்றுநோக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நவம்பரில், ஹோ மற்றும் பெர்லி மற்றொரு புதிய LFBot வெடிப்பைக் கண்டறிந்தனர். இது AT2024wpp என அழைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை இதற்குப் புனைப்பெயர் வைக்கப்படவில்லை. "நாங்கள் இதற்கு 'குளவி' (Wasp) என்ற பெயரை யோசித்தோம்," என்கிறார் ஹோ.

இந்த வெடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஏனெனில் இது "தி கௌ" வெடிப்புக்குப் பிறகு கண்டறியப்பட்ட மிகவும் பிரகாசமான LFBot.

மேலும், இது தனது பிரகாச நிலையின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டதால், வானியலாளர்கள் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி உள்படப் பல தொலைநோக்கிகளை அதை நோக்கித் திருப்பி, அதிகமாகக் கவனிக்க முடிந்தது. "தி கௌ வெடிப்புக்குப் பிறகு இதுவே சிறந்தது" என பெர்லி கூறுகிறார்.

'இவை அனைத்தும் ஆரம்பக் கால கண்டுபிடிப்புகளே'

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,PERLEY ET AL

படக்குறிப்பு,பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நிகழ்ந்த "தி கௌ" வெடிப்பு 2018இல் கண்டறியப்பட்டது

ஆரம்பக்கால கண்டுபிடிப்புகள், 'குளவி' வெடிப்பு என்பது தோல்வியடைந்த சூப்பர்நோவாவால் ஏற்படவில்லை என்பதைக் குறிக்கின்றன.

அந்தக் கோட்பாட்டின்படி, ஒரு நட்சத்திரம் வெடிக்க முயலும்போது தானாகவே சரிந்துவிடும். அதன் வெளிப்புற ஓட்டுக்குள் ஒரு கருந்துளை அல்லது அடர்த்தியுள்ள நியூட்ரான் நட்சத்திரம் உருவாகி, அந்த ஓட்டைக் கிழித்து வெளியில் கதிர்வீச்சுகளைச் சுழற்றும். இதுதான் மைய இஞ்சின் எனப்படும் நிலையை உருவாக்கும்.

இது பூமியில் காணக்கூடிய சுருக்கமான 'கௌ' வெடிப்பை விளக்குகிறது. ஆனால் அந்த வெடிப்பில் இருந்து பொருட்கள் வெளியே செல்லும் எந்தத் தடயமும் 'குளவி'யில் காணப்படவில்லை என்று பெர்லி கூறுகிறார். இதுபோன்ற நிகழ்வுகளில் அப்படிப்பட்ட தடயங்கள் இருக்குமென விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பார்கள்.

இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்தவை மட்டுமே. "நாங்கள் இன்னும் அந்தத் தரவுகளை விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்," என்கிறார் பெர்லி.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில், நெதர்லாந்து விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜெங் காவ் மற்றும் அவரது குழுவினர் முதன்முதலில் கண்டறியப்பட்ட LFBot வெடிப்பை மீண்டும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், தோல்வியடைந்த சூப்பர்நோவா என்ற கோட்பாட்டை சவால் செய்யும் புதிய ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த நிகழ்வின் எக்ஸ்-கதிர் தரவுகளை ஆய்வு செய்ததில், வெடிப்பைச் சுற்றி வட்டத்தட்டு வடிவில் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர், அந்த வெடிப்பின் கணினி மாதிரியை உருவாக்கிப் பார்த்தனர். அதில், அது இடைநிலை நிறை கருந்துளையால் விழுங்கப்படும் நட்சத்திரத்தின் எச்சங்கள் போல் இருப்பதாகத் தெரிந்தது.

அந்த வகையான கருந்துளைகள், நமது சூரியனின் நிறையைவிட நூறு முதல் ஒரு லட்சம் மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும். மற்றொரு பக்கம், சில பெரிய கருந்துளைகள் சூரியனைவிட மில்லியன் கணக்கிலும, பில்லியன் கணக்கிலும் அதிக நிறை கொண்டதாக இருக்க முடியும்.

நட்சத்திரம், கருந்துளையால் உண்ணப்படும்போது, அதன் பெரிய துண்டுகள் கருந்துளையைச் சுற்றி விழுந்து, கருந்துளையின் பிரகாசத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும். இதனால் பூமியில் வானியலாளர்கள் கண்ட 'கௌ எரிப்புகள்' நிகழ்கின்றன.

"எங்கள் ஆய்வு AT2018cow மற்றும் அதேபோன்ற LFBots வெடிப்புகளின் இடைநிலை நிறை கருந்துளைகளின் தன்மையை ஆதரிக்கிறது என்று நான் நம்புகிறேன்," என்கிறார் ஜெங் காவ்.

LFBots பற்றி நிலவும் மற்றொரு கருத்து

விண்வெளி வெடிப்புகள், அரிய வெடிப்புகள், கருந்துளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சூப்பர்நோவா வெடிப்பு

மற்றொரு கருத்து என்னவெனில், LFBots என்பவை உண்மையில் வுல்ஃப்-ரேயெட் (Wolf-Rayet) எனப்படும் ராட்சத நட்சத்திரங்களின் ஒரு வகை. அவை நமது சூரியனோடு ஒப்பிடும்போது 10 முதல் 100 மடங்கு குறைவான நிறையுள்ள சிறிய கருந்துளைகள் மூலம் உடைக்கப்படுகின்றன.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவார்த்த வானியற்பியல் வல்லுநரான பிரையன் மெட்ஸ்கர் இந்த யோசனையை ஆதரிப்பவர்களில் ஒருவர். இவை உருவாகும் விதம், ஈர்ப்பு அலைகளை உண்டாக்கி கண்டறியப்பட்ட ஜோடி கருந்துளைகள் உருவாகும் முறைக்கு ஓரளவு ஒத்ததாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள முக்கிய வித்தியாசம் என்னவெனில், இதில் பல நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றுதான் கருந்துளையாக மாறுகிறது.

இடைநிலை நிறை கருந்துளைகள் பற்றிய கோட்பாடு தற்போதைய நிலையில் மிகவும் கவர்ச்சிகரமாகவும், விரும்பத்தக்க கருத்தாகவும் இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், LFBots நமக்கு மர்மமான நடுத்தர அளவிலான கருந்துளைகளை ஆய்வு செய்யும் ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும். பிரபஞ்சத்தில் இடைநிலை நிறை கருந்துளைகள் இருப்பதாக வானியலாளர்கள் பெரும்பாலும் நம்புகின்றனர். ஆனால் அவற்றுக்கான உறுதியான ஆதாரம் இதுவரை எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவை மிகவும் முக்கியமானவையாக இருக்கலாம், ஏனெனில் இவை அண்டத்தில் உள்ள சிறிய கருந்துளைகளுக்கும், நமது விண்மீனின் மையத்தில் உள்ள பெரிய கருந்துளைகளுக்கும் இடையில் காணாமல் போன இணைப்பாகச் செயல்படுகின்றன. LFBots மூலம் இடைநிலை நிறை கருந்துளைகள் எங்கே இருக்கின்றன மற்றும் அவை எவ்வளவு பரவலாக உள்ளன என்பதை அறிய முடியும்.

"இடைநிலை நிறை கருந்துளையின் மாதிரி மிகவும் சுவாரஸ்யமானது" என்கிறார் பெர்லி. "இடைநிலை நிறை கருந்துளைகள் உண்மையில் உள்ளதா என்பது ஒருவித விவாதமாகவே உள்ளது. இதற்கு ஆதாரங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை."

LFBots என்றால் உண்மையில் என்ன என்பதை உறுதியாக அறிய, அவற்றின் மாதிரிகள் அதிக எண்ணிக்கையில் நமக்குத் தேவை. "துரதிர்ஷ்டவசமாக, அவை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன," என்று பெர்லி கூறுகிறார். "அவற்றில் குறைந்தது 100 மாதிரிகள் குறித்த தரவுகள் கிடைத்தால், அது எங்களுக்கான அடுத்த முக்கியப் படியாக இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த ஆண்டு இஸ்ரேலிய சுற்றுப்பாதை தொலைநோக்கி அல்ட்ராசாட் (அல்ட்ரா வயலட் டிரான்சியன்ட் வானியல் செயற்கைக்கோள்) ஏவப்பட உள்ளதால், தோராயமாக நூறு மாதிரிகளின் தரவுகள் கிடைக்கக்கூடும்.

தொலைநோக்கியின் பார்வை பரப்பளவு 204 சதுர டிகிரியாக இருக்கும். இது ஒரே நேரத்தில் 1,000 முழு நிலவுகளைப் பார்ப்பதற்குச் சமம். எனவே, இது விண்வெளியில் நடைபெறும் பிற நிகழ்வுகளுடன் சேர்த்து, மேலும் பல LFBots வெடிப்புகளைக் கண்டறியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) போன்ற தொலைநோக்கிகளால், LFBot வெடிப்பு பிரகாசமாகும் தருணத்தில் அதன் திசையில் கவனம் செலுத்த முடிந்தால், அந்த நிகழ்வைப் பற்றிய மேலதிக தகவல்களைச் சேகரிக்க உதவக்கூடும்.

"ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) இதற்காக மிகச் சிறந்ததொரு கருவியாக இருக்கும்," என்கிறார் மெட்ஸ்கர். ஆனால், இதுபோன்ற அவதானிப்புகளைச் செய்ய நேரம் கிடைப்பது சுலபமல்ல.

"நான் இருமுறை முயன்றேன், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, இந்த ஆண்டில் மீண்டும் முயலப் போகிறேன்" என்று ஹோ கூறுகிறார்.

கூடுதல் தரவுகள் கிடைக்கும் வரை, இந்த விசித்திரமான வெடிப்புகள் பற்றிய மர்மம் தொடரும். LFBots யாரும் எதிர்பார்த்ததைவிட மிகவும் அசாதாரணமானது என்பது தெளிவாகிறது.

"இதுவொரு சுவாரஸ்யமான, ஒருமுறை நிகழும் சம்பவம் என நினைத்திருந்தேன். ஆனால் இது முற்றிலும் வேறு வகையான நிகழ்வாக மாறியது. மேலும் இவை நாளுக்கு நாள் இன்னும் சுவாரஸ்யமானதாகவே மாறிகொண்டிருக்கின்றன," என்கிறார் பெர்லி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdr531z8md3o

ஆக்ஸியம் 4: 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு செல்லும் 2வது இந்தியர் அங்கு என்ன செய்வார்?

2 months ago

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,'ஆக்ஸியம் 4' திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிராஜ்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அமெரிக்காவின் நாசா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள், ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள்.

இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழையப் போகும் முதல் இந்தியர் என்ற பெருமையை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு, ஏப்ரல் 3ஆம் தேதி, இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா, சோயுஸ் டி-11 எனும் சோவியத் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றார். விண்வெளியில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த சல்யூட் 7 (Salyut 7) எனும் சோவியத் விண்வெளி நிலையத்தில் 7 நாட்கள், 21 மணிநேரம் தங்கியிருந்து அவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

அதன் பிறகு, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராஜா சாரி உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் விண்வெளிக்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வது இதுவே முதல்முறை.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,'ஆக்ஸியம் நிலையம்' நிறுவத் தேவையான மாட்யூல்கள் பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும்.

ஆக்ஸியம் 4

பூமியின் கீழ்வட்டப் பாதையில் (Low earth orbit - பூமியிலிருந்து 160-2000 கிமீ வரையிலான உயரம்), மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கி விண்வெளி ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே சர்வதேச விண்வெளி நிலையம்.

இந்த விண்வெளி நிலையம் 2031இல் செயலிழந்து, பூமியில் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வளிமண்டல மறுநுழைவின்போது அதீத வெப்பத்தின் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் பூமியில் விழும் முன்பே எரிந்துவிடும்.

அதற்கு மாற்றாக ஒரு புதிய விண்வெளி நிலையத்தை தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவ நாசா விரும்புகிறது. அதன் ஒரு பகுதியே 'ஆக்ஸியம் நிலையம்'.

அதை நிறுவத் தேவையான 4 மாட்யூல்கள் (Modules) பல கட்டங்களாக விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும். பின்னர் ஐஎஸ்எஸ் செயலிழக்கும்போது இந்த மாட்யூல்கள் பிரிந்து, ஒரு புதிய விண்வெளி நிலையமாகச் செயல்படும். ஆனால், 2031 வரை காத்திருக்காமல், 2028ஆம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் விரும்புகிறது.

அடுத்த ஆண்டில்(2026), முதல் மாட்யூல் விண்வெளிக்கு அனுப்பப்படும் என நாசா கூறுகிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், 'ஆக்ஸியம் நிலையம்' உலகின் முதல் வணிக நோக்கிலான விண்வெளி நிலையமாக இருக்கும்.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆக்ஸியம் 4 குழுவினர்

இந்தப் புதிய விண்வெளி நிலையத்தை நிறுவுவது தொடர்பான பணிகளுக்கு மட்டுமல்லாது, எதிர்காலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மாற்றாகவும், வணிக விண்வெளி நிலையமாகவும் செயல்பட வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு முன்னோட்டமாக 2022இல் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிவருகிறது ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம்.

அதன் நான்காவது கட்ட மிஷன் தான் இந்த ஆக்ஸியம் 4. இதில் பயணிக்கப் போகும் நால்வர் யார்?

  • அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனையும், இந்த 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கமாண்டருமான பெக்கி விட்சன்

  • இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, இவர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் விமானி

  • போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விச்நியெவ்ஸ்கி, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர்

  • ஹங்கேரியை சேர்ந்த டிபோர் கபு, இவர் 'ஆக்ஸியம் 4' திட்ட நிபுணர்

இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,சுபான்ஷு சுக்லா, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார்.

அக்டோபர் 10, 1985, உத்தர பிரதேசத்தின் லக்னௌவில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. நேஷனல் டிஃபன்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு, 2006ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் 'ஃபைட்டர் விங்' பிரிவில் (Fighter Wing- போர் விமானப் பிரிவு) இணைந்தார்.

சுபான்ஷு, 2000 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். இதில் இந்திய விமானப் படையின் சுகோய் எஸ்யு-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டோர்னியர், ஏஎன்-32 போன்ற போர் விமானங்களை ஓட்டிய அனுபவமும் அடங்கும்.

கடந்த 2019ஆம் ஆண்டு, இஸ்ரோவில் இருந்து வந்த ஒரு முக்கியமான அழைப்பு சுபான்ஷுவின் வாழ்க்கையை மாற்றியது. அதன் பிறகு, ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ஓர் ஆண்டு பயிற்சி பெற்றார். பின்னர் 2024இல், இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார்.

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AXIOM SPACE

படக்குறிப்பு,கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது.

அதற்கு சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்த நால்வரில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் கேரளாவை சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் பேக்-அப் குழுவில் இருக்கிறார். அதாவது, ஆக்ஸியம் 4 திட்டத்தின் பிரதான 4 உறுப்பினர்களைப் போலவே இந்த பேக்-அப் குழுவின் உறுப்பினர்களுக்கும் அனைத்துப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

ஒருவேளை, இறுதிக் கட்டத்தில் பிரதான உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரால் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால், அவரது இடத்தை இந்த பேக்-அப் குழு உறுப்பினர் ஒருவர் நிரப்புவார்.

விண்வெளியில் என்ன பணிகளை மேற்கொள்வார்கள்?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,ஆக்ஸியம் 4 குழுவினர், 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

வரும் ஜூன் 8ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 6.41 மணிக்கு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் உந்தப்படும் டிராகன் விண்கலத்தில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணிக்க உள்ளனர்.

ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பயணம், 14 நாட்களுக்கு நீளும்.

'ஆக்ஸியம் 4' திட்டத்தின் நோக்கம் "அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி, சௌதி அரேபியா உள்பட 31 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 60 விண்வெளி ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது" என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது.

அவற்றில் முக்கியமானவை,

  • குறுகிய கால விண்வெளிப் பயணங்களின்போது இன்சுலினை சார்ந்திருக்கும் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு எந்தெந்த வழிகளில் உதவலாம் என்பது குறித்து ஆய்வு செய்தல்.

  • விண்வெளியில் நிலவும் குறைவான ஈர்ப்பு விசையே மைக்ரோகிராவிட்டி எனப்படுகிறது. அத்தகைய சூழல் மனித மூளையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்தல்.

  • மனிதர்கள் விண்வெளிக்கு ஏற்றவாறு எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விண்வெளி வீரர்களிடம் இருந்து உடலியல் மற்றும் உளவியல் தரவுகளைச் சேகரித்தல்.

  • குறுகிய விண்வெளிப் பயணங்கள் மூட்டுகள் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்தல்.

  • விண்வெளியில் புற்றுநோய் வளர்ச்சியை ஆராய்தல், குறிப்பாக டிரிபிள்-நெகட்டிவ் மார்பக புற்றுநோயை ஆராய்தல்.

  • விண்வெளிப் பயணத்தின்போது ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வது.

'ஆக்ஸியம் 4' திட்டத்தில் இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள்

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட சில இந்திய வம்சாவளியினர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றிருந்தாலும், ஒரு இந்திய குடிமகன் அங்கு செல்வது இதுவே முதல்முறை.

ஆக்ஸியம் திட்டத்தில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து இஸ்ரோ தலைமையிலான ஆராய்ச்சிப் பணிகளும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்படும். அவை பின்வருமாறு:

  • கணினித் திரைகள் மீது மைக்ரோகிராவிட்டி சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்தல்.

  • மைக்ரோகிராவிட்டி சூழலில் மூன்று நுண்பாசி திரிபுகளின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபியல் ஆகியவற்றை ஆய்வு செய்தல். பிறகு அதை பூமியில் கிடைத்த தரவுகளுடன் ஒப்பிடுவது.

  • மைக்ரோகிராவிட்டி சூழலில் எலும்புத்தசை செயலிழப்பு (Skeletal muscle dysfunction) குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்வது.

  • ஆறு வகையான பயிர் விதைகளில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல்.

  • பயிர் விதைகளின் முளைத்தல் செயல்முறை மற்றும் வளர்ச்சியில் விண்வெளிப் பயணத்தின் தாக்கங்களை ஆராய்தல்.

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா, விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பதோடு, இது அடுத்த தலைமுறை இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் என ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் கூறுகிறது.

ராகேஷ் ஷர்மா கூறுவது என்ன?

ஆக்ஸியம் 4, விண்வெளி, நாசா, இஸ்ரோ, சர்வதேச விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராகேஷ் ஷர்மா

கடந்த 25 ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 270க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் சென்றிருந்தாலும், அதில் ஒருவர்கூட இந்திய குடிமகன் கிடையாது.

ஒரு இந்தியர் மீண்டும் விண்வெளிக்குச் செல்வது குறித்த செய்திக்காகவே தான் 41 வருடங்களாகக் காத்திருந்ததாகக் கூறுகிறார் முன்னாள் இந்திய விமானப் படை விமானியும், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியருமான ராகேஷ் ஷர்மா.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய விண்வெளித் துறைக்கு இது மிக முக்கியமான தருணம்" என்றார்.

மேலும், "நான் விண்வெளிக்குச் சென்றபோது எல்லாமே புதிய விஷயமாக இருந்தது. உலகின் கவனம் எங்கள் மீது இருந்தது, குறிப்பாக மொத்த இந்தியாவின் கவனமும்.

இப்போது தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியடைந்துள்ள காலத்தில், விண்வெளிப் பயணத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் சவால்கள் இல்லாமல் இல்லை" என்று கூறினார்.

கடந்த 1984இல், ராகேஷ் ஷர்மா மற்றும் இரு சோவியத் விண்வெளி வீரர்கள் கொண்ட மூவர் குழு கிட்டத்தட்ட 8 நாட்கள் சோவியத் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தியது.

குறிப்பாக உயிரி மருத்துவம் மற்றும் ரிமோட் சென்சிங் சார்ந்த ஆய்வுகளை ராகேஷ் ஷர்மா மேற்கொண்டார்.

அந்தப் பயணத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய 14வது நாடாக இந்தியா மாறியது. இப்போது 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்தியர் விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn5ylklrgklo

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட் இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!

2 months ago

space.jpg?resize=750%2C375&ssl=1

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்  இந்திய பெருங்கடலில் வீழ்ந்தது விபத்து!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதத்தின்  ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. 

பிரபல தொழிலதிபரும் Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைவருமான எலோன் மஸ்க் தனது   ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஊடாக விண்வெளி சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

2.jpg?resize=600%2C355&ssl=1

அந்தவகையில் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து நேற்றைய தினம் விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் ரொக்கெட்டானது  விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டு இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் கசிவே இத்தோல்விக்கு முக்கிய காரணமாகும்  என ஸ்பேஸ்எக்ஸ் செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார்.

33.jpg?resize=600%2C335&ssl=1

இதேபோன்று, கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஏழாவது முயற்சி மற்றும் மார்ச் 6 ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது முயற்சிகளும் வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான இத்தகைய தோல்விகள், ஸ்பேஸ்எக்ஸின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் விண்வெளி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1433527

ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்!

2 months ago

1363065.jpg

அங்குமிங்கும் ஆர்ப்பரித்துப் பறக்கும் பறவைகள், வேலையும் இல்லை; நிற்க நேரமுமில்லை என்பதுபோல் பரபரப்பாகத் திரியும் நாய்கள், அசைபோட்டுக் கொண்டே அமர்ந்திருக்கும் கால்நடைகள், பொழுதுக்கும் தூங்கும் பூனைகள் இவையெல்லாம் இரை தேடுதலைத் தாண்டி தம் மனதில் என்ன யோசிக்கும் என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்து சிரித்துச் சென்றிருப்போம். சில நேரங்களில் விளையாட்டாக அதற்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்து கிண்டலும்கூட செய்து மகிழ்ந்திருப்போம். இப்போதைய ஏஐ உலகில், பூனை, நாய்கள் பேசுவது போல் ரீல்ஸ் கூட நாம் டூம்ஸ்க்ரால் செய்யும்போது பார்த்து அடடே நல்லாயிருக்கே என்று லைக்ஸ் போட்டுக் கடந்திருப்போம்.

ஆனால், உண்மையிலேயே பறவைகள் என்ன நினைக்கின்றன என்பதை, அவற்றின் உணர்வு நிலை எத்தகையது என்பதை முழுவீச்சில் ஆராய்ச்சியாக செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்லாது, 1980-களில் தொடங்கி 2003-ம் ஆண்டில் தனது இறப்பு வரை டொனால்டு க்ரிஃபின் என்ற விஞ்ஞானி, விலங்குகளின் உணர்வு நிலை (Animal Consciousness ) பற்றி ஆய்வு செய்துள்ளார்.

இந்தத் துறையில் டொனால்டு க்ரிஃபினை ஒரு முன்னோடி என்றே துறையினர் விதந்தோதுகின்றனர். அவர் தனது இறுதி மூச்சு வரை வலியுறுத்தியது, பறவைகள், விலங்குகளின் உணர்வு நிலை பற்றி அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே. அதை சுட்டிக்காட்டி இந்தக் கட்டுரையில், சில வாதங்களை, சுவாரஸ்யமான ஆய்வு விவரங்களைப் பகிர்ந்துள்ளனர் இரண்டு பேராசிரியர்கள். ஹீதர் பிரவுனிங், பேராசிரியர், சதாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் வால்டர் வெய்ட், பேராசிரியர் ரீடிங் பல்கலைக்கழகம் ஆகிய இருவரும் ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சாரம்சம் வருமாறு:இந்த உலகை ஒரு தத்துவ ஞானி பார்க்கும் பார்வை இருக்கும், அது சமூக நலன் சார்ந்ததாக இருக்கும். அதுவே இந்த உலகை பறவைகளும், விலங்குகளும் எப்படிக் காண்கின்றன, அணுகுகின்றன என்ற பார்வையும் இருக்கும் அல்லவா? அது சூழழியல் சார்ந்ததாக இருக்கும். அந்தப் பார்வையை அறிந்து கொள்வது சூழலைப் பேணுவதில் அவசியமானது என்கின்றனர் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர்.

ஆற்றலில் தனித்து நிற்கும் காக்கை இனம்: காகம், மனிதர்கள் மத்தியில் வாழும் மிகப் பொதுவான ஒரு பறவை இனம். காக்கை இனத்துக்குள் அடங்கும் ரேவன்ஸ், க்ரோஸ், ஜேஸ், மேக்பைஸ் போன்ற பறவையினங்கள் மத்தியில் மேற்கூறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக புத்திசாலித்தனம் குறைவாக இருப்பவர்கள் பறவை மூளைக்காரன் என்று வசைபாட அடைமொழியாக்குவதுண்டு. நம்மூரில் வாத்துமூளைக் காரன், மடையன் என்றெல்லாம் வசவு மொழிகள் உண்டு. ஆனால் காக்கை வகையறாக்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றை ‘ஃபெதர்ட் ஏப்ஸ்’ (feathered apes), அதாவது நமக்கான முன்னோடி என்று அழைக்கின்றனர்.

காக்கை இனத்தைச் சேர்ந்த பறவைகளுக்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. வேகமாகப் பறக்கும்போது கூட அதன் இரையை கூர்மையாக கவனித்துவிடும் திறன் கொண்டவை. அவற்றின் செவித்திறன் அபாரமானது. ஓசைகளில் இருந்தே எச்சரிக்கையாக இருந்து கொள்ளக் கூடியவை. அதேபோல் அவற்றிற்கு நினைவாற்றலும் அதிகம். இந்த வகைப் பறவைகள் தாங்கள் சேகரிக்கும் உணவை பதுக்கிவைக்கும் திறன் கொண்டவை. இதை ஆங்கிலத்தில் கேச்சிங் (caching) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எந்த உணவை எங்கு பதுக்கி வைத்தோம் என்பது மட்டுமல்லாது, அதை எப்போது பதுக்கிவைத்தோம் என்பது வரை அவை நினைவில் கொள்கின்றன. அதன்மூலம் புழு, பூச்சிகள் போன்ற சீக்கிரம் அழுகிப்போகும் உணவை எங்கு, எப்போது வைத்தோம், நீண்டகாலம் இருக்கக் கூடிய தானியங்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டு பயன்படுத்திக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாது ஒருவேளை அந்த உணவுப் பொருளை வேறொரு பறவையிடமிருந்து திருடியிருந்தால் ஒளித்து வைத்த இடத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன.

அதேபோல் பறவைகளுக்கு ஆழமான நுகர்ச்சியுணர்வும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தியும் மறைத்துவைத்த உணவை கண்டு கொள்கின்றன.இது மட்டுமல்லாது இந்த வகைப் பறவைகள் மனிதர்களைப் போல் உணர்ச்சிகளையும் கொண்டுள்ளன. உதாரணத்துக்கு எதிர்மறை எண்ணங்கள் இவற்றிற்கு எழுகின்றன. சக பறவை வாட்டமாக இருந்தால் அதையே தானும் பிரதிபலிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மனிதர்களைப் போலவே புதிய பொருட்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றன. அறிமுகமில்லாத மனிதர்கள் ஏதேனும் உட்கொள்ள கொடுத்தால் அதைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதும் இந்த நியோஃபோபியாவால் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக பாலூட்டி விலங்குகளிடம் இதுபோன்ற உணர்வுகள் இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் காக்கை வகை பறவைகளில் காணப்படும் இந்த வகையிலான உணர்ச்சிகள் பறவைகளின் உணர்வுகள், மனம் பற்றி மேலும் ஆராய்ச்சிகளைத் துண்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜே (jay bird) என்ற காக்கை வகையறா பறவைகளில் ஆண் பறவை தன் இணையைத் தேர்வு செய்ய பெண் பறவையின் உணவுப் பழக்கவழக்கத்தை கூர்ந்து கண்காணித்து, அதற்குப் பிடித்தமான உணவை சேகரித்துச் சென்று கொடுத்து அத்துடன் இணையும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக திறன்கள் பாலூட்டி விலங்குகளிடமே பெரும்பாலும் தென்படும் நிலையில் ஜே பறவைகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

இதுபோன்ற ஆராய்ச்சிகள் கோர்விட் (Corvidae) இன பறவைகளின் நலனைப் பேண உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அவற்றுக்கு எது உகந்தது, எது ஒப்பாதது என்பதை அறிந்து கொள்வது அவற்றிற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நலன் சேர்க்கும் என்கின்றனர் கட்டுரையாளர்கள்.

இயற்கையின் சமநிலைக்காகவே...! - இந்தக் கட்டுரை குறித்த பார்வையை ‘இறகுகள் அம்ரிதா இயற்கை’ அறக்கட்டளை நிறுவனரான ரவீந்திரன் நடராஜன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பறவைகள் ஆய்வாளரான அவர் கூறுகையில், “பறவைகளின் அறிவுத்திறன் என்பது அதன் உயிர்வாழ்தலை உறுதி செய்து கொள்வதற்கானதும், அதன் அடுத்த தலைமுறைக்காக தான் வாழும் சூழலை சரியாக தகவமைத்துக் கொள்வதற்குமாகவே இருக்கிறது.

காகங்களின் வாழ்க்கை அதை நமக்கு தெளிவாக உணர்த்தும். காகங்கள் நம் மத்தியில் சர்வ சாதாரணமாக, மிக அதிகமான அளவில் இருக்கக் கூடியவை. அவற்றின் உயிர்வாழ்தலும் பாதிக்கப்படக் கூடாது, அதே வேளையில் அவற்றின் இனப்பெருக்கமும் அதிகமாகிவிடக் கூடாது. ஏனெனில் காகங்கள் மிக வேகமாக இனப்பெருக்கும் செய்து கொண்டே இருக்கக் கூடிய பறவைகள்.

அப்படியிருக்க, இயற்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த இயற்கையே அதற்கு ஒரு வழியும் செய்து வைத்திருக்கிறது. அதுதான் குயில்கள். குயிலினங்கள் கூடு கட்டாது, காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கச் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் பின்னணியில் இந்த இயற்கை சமநிலையைப் பேணும் தன்மை தான் மறைந்திருக்கிறது என்பதே பலரும் அறியாதது.

17482641872027.jpeg

காகங்கள் கூடு கட்ட குச்சிகள் சேர்க்கும் போதே, குயில்கள் இணை சேர திட்டமிட்டு சேர்ந்துவிடும். காகம் கூடு கட்டி முட்டையிட்டதும், ஆண் குயில் அந்தக் கூட்டிலிருந்து முட்டையை தள்ளிவிட்டு உடைத்துவிடும். பொதுவாகவே கூட்டில் முட்டையிட்டுவிட்டால் ஆண், பெண் காகங்கள் மாற்றி மாற்றி அதற்கு காவலாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி அந்தக் கூட்டில் பெண் குயில் முட்டையிட ஆண் குயில் மிகப் பெரிய வேலைகளைச் செய்யும்.

விளையாட்டாகச் சொல்வதென்றால் கில்லாடி வேலைகளைச் செய்யும். ஆண் குயில் காகங்களிடம் வேண்டுமென்றே சண்டையிழுத்து அவற்றை அங்குமிங்கும் அலைக்கழித்து அவற்றின் கவனத்தை திசை திருப்பிவிடும். அந்த நேரத்தில் பெண் குயில் வந்து முட்டையிட்டுச் சென்றுவிடும். இப்படி அந்த முட்டையை வளர்க்கும் காகம் ஒரு கட்டத்தில் அது தன்னுடையது அல்ல என்பதைத் தெரிந்தவுடன் கூட்டிலிருந்து விரட்டிவிடும்.

17482637682027.jpg

பறவைகள் ஆய்வாளர்/ ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன்

இப்படித்தான் பல்கிப் பெருகக்கூடிய ஒரு பறவையினத்தை, கூடுகட்டும் திறனில்லாத இன்னொரு பறவையினம் சர்வைவலுக்காக கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் இயற்கை சமநிலைக்கு இயற்கையே அளித்த திறமைகள் என்று கூறுகின்றேன்.

காகங்கள் அனைத்துண்ணிகளாக இருந்து நகரத் தூய்மையைப் பண்ணுவதாக இருந்தாலும் கூட அவற்றின் எண்ணிக்கை அதிகமானால் மனிதர்களுக்கு தொல்லையாகிவிடும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காகங்களை தீங்கினமாகவே காண்கின்றனர். அங்கே காகங்களை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை செய்துள்ளனர். அதன்படி சில வழிமுறைகளையும் பின்பற்றி காகங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளும் வைத்திருக்கின்றனர்.

காகங்கள், குயில்களின் நெஸ்டிங் முறையை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்ததுபோல், வாத்துகளையும் நான் உற்று நோக்கி ஆய்வு செய்துள்ளேன். வாத்துகளை அறிவற்ற பறவைகள் என்று நாம் சொல்வதுண்டு. மடை எனப்படும் குறுகிய நீரோட்டங்களில் வாழும் சின்ன அளவிலான வாத்துகளை மடை வாத்து என்றழைப்போம். அதுவே மருவி மடவாத்து என்ற வார்த்தையாகிவிட்டது. அவை எப்போதும் கூட்டமாக வாழக்கூடியவை.

சம்பை புல்களுக்கு இடையே வாழும் ஸ்பாட் பில்ட் டக்ஸ் என்ற வாத்துகளை ஒருமுறை நெருங்கி ஆய்வு செய்ய முடிந்தது. அப்போது அருகிலிருந்து வயலில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யக்கூடாது என்று வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். அதற்கு பயந்துபோன சம்பை வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அந்த வாத்து குஞ்சுகளை சுற்றிச்சுற்றி வந்தது. அது எத்தனை வாத்துகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவே இருந்தது.

பின்னர் மீண்டும் அந்த புல் பகுதிக்குச் சென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பின் வெடிச்சத்ததால் பயந்து பதுங்கியிருந்த இன்னொரு வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. உடனே மற்ற வாத்துகளுடன் அதையும் சேர்த்துக் கொண்டு வேறிடத்துக்குச் சென்றது அந்த வாத்து. இப்படி, வெளிநாடுகளிலும் கூட வாத்துகளின் எண்ணும் திறனை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.

17482641012027.jpg

கடல் ஆலா பறவைகள் பல மைல்கள் கடந்து ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இருந்து எப்படி இடம்பெயர்ந்து வருகிறது என்ற சூட்சமம் இன்றுவரை முழுமையாக ஆராய்ச்சிகளால் கண்டு கொள்ள முடியாததாகவே இருக்கிறது. குறிப்பிட்ட கழுகு வகைகள் அதன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு இணையோடு மட்டுமே வாழும், இன்னொரு பறவையினம் தனது இணை இறந்துவிட்டால், பட்டினியிருந்து அதுவும் உயிர் துறந்துவிடும். இப்படி இயற்கை நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது.

இவையெல்லாம் இயற்கையின் சமநிலையைப் பேணவே நடைபெறுகிறது. பறவைகள் தம் உயிர் வாழ்தலை உறுதி செய்து கொள்ள சமநிலையைப் பேண ஒவ்வொரு விதமான உணர்வு நிலைகளுடன் இயங்குகின்றன. பறவைகளின் உணர்வு நிலைகளை, உள்ளுணர்வுகளை ஆய்வு செய்தல் சுவாரஸ்யமானதே.” என்றார்.

ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்! | What’s going on inside the mind of an animal or a bird explained - hindutamil.in

ஒரே இடத்தில் இறந்து புதைந்த ஆயிரக்கணக்கான டைனோசர்கள் - ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்பட வைத்த வரலாற்று நிகழ்வு

2 months 1 week ago

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா

பட மூலாதாரம், KEVIN CHURCH / BBC

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபாக்கா மொரெல்லே & ஆலிசன் ஃப்ரான்சிஸ்

  • பதவி,

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடாவின் அல்பெர்டாவில் அமைந்துள்ள ஒரு பசுமையான காட்டின் சரிவில் அதிகளவில் டைனோசர்கள் புதைந்து போன இடம் ஒன்று இருக்கிறது.

ஒரு நாள் நடந்த மோசமான நிகழ்வில், ஆயிரக்கணக்கான டைனோசர்கள் கொல்லப்பட்டு அங்கே புதைந்து போயின.

தற்போது புதைப்படிவ பொருட்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ரிவர் ஆஃப் டெத், என்று அழைக்கப்படும் பைப்ஸ்டோன் க்ரீக்குக்கு ஆராய்ச்சி செய்ய வந்துள்ளனர்.

டைனோசர்கள் எவ்வாறு இறந்தன என்ற 7.2 கோடி ஆண்டுகால புதிருக்கு பதில் தேட அங்கே தற்போது முகாமிட்டுள்ளனர்.

கனமான சுத்தியலின் உதவியைக் கொண்டு, தொல்பொருட்கள் மீது படிந்திருக்கும் மண்ணைத் தட்டி ஆராய்ச்சி மேற்கொள்ளும் அவர்கள், இந்த டைனோசர்கள் எப்படி இறந்தன என்பதை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சியை வழிநடத்தும் பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் இந்த படிமப் பொருளை 'தொன்மத் தங்கம்' (Palaeo Gold) என்று அழைக்கிறார். ஆனால் இதில் இருக்கும் சவால் என்னவென்றால், இந்த டைனோசர்களின் படிமங்களை ஆய்வு செய்ய அதன் மீது இருக்கும் கடினமான பாறைகளை உடைக்க வேண்டும்.

அவருடைய குழு கொஞ்சம் கொஞ்சமாக அங்கே இருக்கும் மண்ணை, அடுக்கடுக்காக அப்புறப்படுத்த, அந்த டைனோசர்களின் எலும்புகள் மேலே தெரிய ஆரம்பித்தன.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா

பட மூலாதாரம்,KEVIN CHURCH / BBC

படக்குறிப்பு,பைப்ஸ்டோன் சிற்றோடை அருகே கண்டுபிடிக்கப்பட்ட பேச்சிரினோசரின் இடுப்பெலும்பு

ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, இந்த ஆய்வில் எமிலியின் நாயான ஆஸ்டரும் இணைந்துள்ளது. ஆஸ்டர் எங்கேனும் எலும்பு இருப்பதை கண்டுபிடித்தால் உடனே குரைக்க வேண்டும். அதற்கு அது தான் வேலை. அந்த நாயைப் பார்த்துக் கொண்டு பிபிசியிடம் பேசிய பேராசிரியர் எமிலி, "அங்கே ஒரு பெரிய எலும்பு உள்ளது. இடுப்பு எலும்பின் ஒரு பகுதி என்று நாங்கள் நினைக்கின்றோம்," என்று கூறினார்.

"இங்கே நீளமான, ஒல்லியான எலும்புகளையும் பார்க்கின்றோம். இவை மார்புக்கூட்டில் காணப்படும் எலும்புகள். இது கால் பாதத்தில் காணப்படும் எலும்பு. இந்த எலும்பு என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று ஒவ்வொரு எலும்பாக சுட்டிக்காட்டி அதுகுறித்து விளக்கம் அளிக்கும் எமிலி, "இது தான் பைப்ஸ்டோன் சிற்றோடையின் பின்னே மறைந்திருக்கும் மர்மம்," என்று கூறுகிறார்.

கனடாவின் பைப்ஸ்டோனுக்கு சென்ற பிபிசி, அங்கே உள்ள வரலாற்றுக்கு முந்தைய புதைகாட்டின் அளவு மற்றும் அங்கே ஆராய்ச்சியாளர்கள் டைனோசரின் அழிவு குறித்து தெரிந்து கொண்ட ஒவ்வொரு தகவலையும் இணைக்கின்றனர் என்று நேரில் கண்டது.

ஆயிரக்கணக்கான புதைப்படிமங்கள் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அது இந்த பெரியளவிலான டைனோசர்களின் இறப்பு குறித்து புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,பேராசிரியர் எமிலியும் அவருடைய நாய் அஸ்டரும்

2 டன் எடை கொண்ட ராட்சத விலங்கு

இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புகள் அனைத்தும் பேச்சிரினோசரஸ் வகை டைனோசரை சார்ந்தது. பேராசிரியர் எமிலியின் அகழ்வாராய்ச்சி, பிபிசியின் 'வாக்கிங் வித் டைனோசரஸ்' என்ற தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையை காட்சிப்படுத்த அறிவியலையும், காட்சி தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகை டைனோசர்கள் கடைசி கிரிடேசியஸ் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவை ட்ரைசெராடாப்ஸ் (Triceratops) வகை டைனோசர் இனத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டவை. ஐந்து மீட்டர் நீளமும், 2 டன்கள் எடையும் கொண்ட இந்த தனித்துவமான போனி ஃப்ரில்கள் மற்றும் மூன்று கொம்புகளைக் கொண்ட நான்கு கால் மிருகமாகும். போனி ஃப்ரில்கள் என்பது தலைக்குப் பின்னால் கழுத்துப் பகுதியில் எலும்புகளோடு மயில் தோகை போன்று இருக்கும் உடல் பகுதியாகும்.

மற்றொரு தனித்துவமான ஒரு அம்சம் என்பது அதன் மூக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கட்டி போன்ற அமைப்பாகும். இது 'பாஸ்' என்று அழைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகின. தற்போது ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றிவரும் சிறிய அளவிலான நிலப்பரப்பில் புதைப்படிமங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு சதுர மீட்டரிலும் 300 எலும்புகள் உள்ளன என்று பேராசிரியர் எமிலி கணித்துள்ளார்.

ஒரு டென்னிஸ் மைதானம் அளவிலான பகுதி தற்போது வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த எலும்புகளின் படுகையானது கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு மலைப்பகுதியில் நீண்டுள்ளது.

மிகவும் ஆச்சர்யப்படுத்தும் முக்கிய அம்சம் இதில் என்னவென்றால், இந்த எலும்புகளின் அடர்த்தி என்று எமிலி கூறுகிறார்.

"வட அமெரிக்க பிராந்தியத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய எலும்புப்படுகை இது என்று நாங்கள் நினைக்கின்றோம். இதுவரை கண்டறியப்பட்ட டைனோசர்கள் வகைகளில் பாதிக்கும் மேலானவை, ஆங்காங்கே கிடைத்த ஒரே ஒரு டைனோசரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரியைக் கொண்டு வகைப்படுத்தப்பட்டவை. ஆனால், இங்கே ஆயிரக்கணக்கான பேச்சிரினோசரஸ் இருக்கின்றன," என்றும் விவரிக்கிறார் அவர்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன்

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,பைப்ஸ்டோன் ஓடையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்கள்

குளிர்காலத்தில் தென் அமெரிக்காவுக்கு வலசை சென்ற இந்த டைனோசர்கள், கோடை காலத்தை கழிப்பதற்காக, பிரமாண்ட அணியாக நூற்றுக்கணக்கான மைல்கள் வலசை மேற்கொண்டு வடக்கு நோக்கி வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

தற்போது இருப்பதைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக வெதுவெதுப்புடன் இருந்த இப்பகுதி பசுமைப் போர்த்தியதாக இருந்திருக்க வேண்டும். தாவர உண்ணிகளாக இந்த பெரிய டைனோசர்களுக்கு தேவையான உணவை வழங்கக்கூடிய அளவுக்கு அது பசுமையாக இருந்திருக்க வேண்டும்.

"இது ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்கின் ஒரே கூட்டம். இது மிகப்பெரிய மாதிரி அளவு. தொன்ம ஆராய்ச்சியில் இது போன்ற பதிவு இதற்கு முன்பு நடந்ததில்லை," என்று பேராசிரியர் எமிலி பாம்ஃபோர்த் தெரிவிக்கிறார்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ்

பட மூலாதாரம்,WALKING WITH DINOSAURS/BBC STUDIOS

படக்குறிப்பு,கணினி மூலம் உருவாக்கப்பட்ட பேச்சிரினோசரஸின் தோற்றம்

ஆச்சர்யங்களை வாரி வழங்கும் ஆராய்ச்சி

அல்பெர்டாவின் வடமேற்கில் அமைந்திருக்கும் இந்த பகுதி பேச்சிரினோசரஸ்களின் வீடு மட்டும் அல்ல. இவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவிலான டைனோசர்கள் இங்கே உலவிக் கொண்டிருந்தன. பேச்சிரினோசரஸ்களைப் பற்றி அறிந்து கொள்வது என்பது பழங்கால சுற்றுச்சூழல் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவும் முக்கிய அம்சமாகும்.

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நாங்கள் டெட்ஃபால் மலைத்தொடரை அடைந்தோம். அங்கே செல்வது என்பது அடர்ந்த காட்டுக்குள் நடந்து, அலைந்து, ஆஸ்டர் இருந்தால் அதனையும் பாதுகாத்து, நதியைக் கடந்து, வழுக்கும் பாறைகளில் பாதுகாப்பாக நடப்பது என்று ஆயிரம் சவால்களை உள்ளடக்கியது.

இங்கே எதையும் தோண்ட வேண்டாம். கரையை ஒட்டியே பெரிய அளவிலான எலும்புகளைக் காண இயலும். பாறைகளால் இழுத்துவரப்பட்டு, ஆற்று நீரால் கழுவப்பட்ட இந்த எலும்புகள் நாம் கண்டுப்பிடிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

அங்கே சென்றதும் ஒரு முதுகெலும்பின் (Vertebra) ஒரு கண்ணியைக் கண்டறிந்தோம். மார்புக் கூட்டின் சில பகுதிகளும், பற்களும் ஆங்காங்கே சேற்றில் சிதறிக் கிடந்தன.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,எட்மோண்டோசரஸ் உயிர்வாழ்ந்த பகுதியான டெட்ஃபால் மலைத்தொடரில் காணப்பட்ட டைனோசரின் பாத எலும்பு

புதைப்படிம ஆராய்ச்சியாளர் ஜாக்‌சன் ஸ்வேடருக்கு ஆர்வத்தை அளிப்பது என்னவென்றால், பார்ப்தற்கு டைனோசரின் மண்டையோட்டைப் போல காட்சியளிக்கும் எலும்புகளின் குவியல்.

"எங்களுக்கு இங்கே கிடைத்த புதைப்படிமங்களில் பெரும்பாலானவை எட்மோண்டோசரஸ் (Edmontosaurus) வகையைச் சேர்ந்தது. தற்போது நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி வரும் பகுதியானது மண்டையோடு என்பது உறுதியானால், இந்த டைனோசரஸ் 10 மீட்டர் நீளம் கொண்ட தலையைக் கொண்டது என்று கூற இயலும்," என்று தெரிவிக்கிறார் ஜாக்சன்.

எட்மோண்டோசரஸ் என்பது மற்றொரு தாவர உண்ணி. பேச்சிரினோசரஸைப் போன்றே காடுகளில் வலம் வந்த வகை. இந்த புதிய ஆய்வு முடிவுகள், பூமியின் தொன்மையான நிலம் எப்படி இருந்திருக்கக் கூடும் என்பதை கற்பனை செய்து பார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.

கிராண்டே ப்ரேரீயில் செயல்பட்டு வரும் பிலிப் ஜே க்யூரி டைனோசர் அருங்காட்சியகத்தில் ஸ்வேடர் 'கலக்‌ஷன்' மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

அகழ்வாய்வு செய்யப்பட்டு பெறப்பட்ட இந்த இரண்டு டைனோசர்களின் மிகப்பெரிய எலும்புகளும் இங்கே தான் சுத்தம் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

தற்போது ஸ்வேடர், 1.5 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய பேச்சிரினோசரஸ் மண்டையோட்டை ஆய்வு செய்து வருகிறார். அந்த டைனோசருக்கு அவருக்கு, "பிக் சாம்" என்று பெயரிட்டுள்ளார் ஸ்வேடர்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,பண்டைய உலகம் குறித்து அறிந்துகொள்ள ஜாக்சன் ஸ்வேடர் அருங்காட்சியகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்

ஃப்ரிலின் எந்த பகுதியில் மூன்று கொம்புகளும் இடம்பெறும் என்பதை சுட்டிக்காட்டிய அவர், அதில் ஒன்று காணவில்லை என்பதை தெரிவித்தார். "அனைத்து மண்டையோடுகளிலும் முழுமையான கொம்புகள் அந்த இடத்தில் இருந்தன. ஆனால், இந்த ஒற்றைக்கொம்பு மட்டும் அங்கே இல்லை," என்றார் ஸ்வேடர்.

பல ஆண்டுகளாக களத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் அருங்காட்சியகக் குழு இதுவரை 8 ஆயிரம் டைனோசர் எலும்புகளை சேகரித்துள்ளது. அதன் ஆய்வகம் முழுவதும் புதைப்படிமங்களால் நிறைந்துள்ளது.

டைனோசரின் பல இனங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள், டைனோசரின் உயிரியல் குறித்து அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. மேலும் இந்த விலங்குகள் எப்படி வளருகின்றன, அவை எப்படி ஒரு குழுவாக இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ள உதவுகிறது.

ஒரு பெரிய கூட்டத்தில் விலங்குகள் தனித்து தெரிவதற்கு தேவையான வித்தியாசங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பிக் சாம் விவகாரத்தில் இல்லாமல் இருக்கும் ஒற்றைக் கொம்பை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம்,WALKING WITH DINOSAURS/BBC STUDIOS

படக்குறிப்பு,இயற்கைப் பேரிடரின் காரணமாக இந்த விலங்குகள் கொல்லப்பட்டிருக்கலாம்

அழிவுக்குக் காரணம் என்ன?

அருங்காட்சியம் மற்றும் இரண்டு தளங்களில் நடத்தப்படும் இந்த ஆராய்ச்சிகள், முக்கியமான இந்த ஒரு கேள்விக்கான பதிலைப் பெற உதவுகின்றன: ஒரே நேரத்தில், பைப்ஸ்டோன் க்ரீகில், அளவுக்கு அதிகமான டைனோசர்கள் உயிரிழந்தது எப்படி?

"வலசை சென்ற பெரிய குழு ஒன்று மோசமான பேரிடரை சந்தித்து அதன் மூலம் இறந்திருக்கக் கூடும் என்று நாங்கள் நம்புகின்றோம். முழுமையான குழு இல்லையென்றால் அதில் பாதி அந்த பேரிடரில் இறந்திருக்கலாம்," என்று பேராசிரியர் எமிலி கூறுகிறார்.

திடீரென ஏற்பட்ட வெள்ளத்தினாலோ, அல்லது மலையின் மேலே ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் விளைவாகவோ இது ஏற்பட்டிருக்கலாம். தடுத்து நிறுத்த இயலாத நீர்ப்பெருக்கு, அடித்துவரப்பட்ட மரங்கள், பாறைகள் இவை அனைத்தும் ஒன்றாக அந்த விலங்கினத்தின் மறைவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அப்படி நிகழ்ந்திருந்தால் பேச்சிரினோசரஸ் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறார் பேராசிரியர் எமிலி. "இவை அனைத்தும் முதலில் கூட்டமாக வலசை வந்திருக்கின்றன. மேலும், அவை அதிக எடை கொண்டவை. அந்த இனத்தினால் நன்றாக நீச்சல் அடிக்க முடியாது. இது போன்ற காரணங்களால் அவை வேகமாக நகர முடியாமல் இருந்திருக்கலாம்," என்று கூறுகிறார் அவர்.

ஆய்வு நடக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாறைகளில், வேகமாக பாய்ந்து வரும் நீரில் சுழலும் வண்டல் மண் படிமங்களைக் காண இயலும். அழிவை அப்படியே உறைய வைத்தால் எப்படி இருக்குமோ அது போன்று கல்லில் அலை அலையாக அவை படிந்துள்ளன.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம்,KEVIN CHURCH/BBC NEWS

படக்குறிப்பு,ஆய்வு செய்யப்படும் இடத்தில் இருந்து பெறப்பட்ட பாறையில் காணப்படும் அலையோட்டம்

அந்த டைனோசர்களுக்கு மோசமாக இருந்த நாள் ஒன்று புதைபடிம ஆராய்ச்சியாளர்களின் கனவு ஆராய்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது.

"நாங்கள் இங்கே வரும்போதெல்லாம், இங்கே நாங்கள் எலும்புகளை கண்டுபிடிப்போம் என்று 100% உத்தரவாதத்தோடு வருவோம். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் இந்த விலங்கினம் குறித்து புதிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்," என்று எமிலி கூறுகிறார்.

"நாங்கள் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தகவல்களை இங்கே கண்டறிகின்றோம் என்பதால் அடிக்கடி நாங்கள் இங்கே வருகிறோம்," என்று கூறுகிறார் அவர்.

டைனோசர்கள், ரிவர் ஆஃப் டெத், கனடா, பைப்ஸ்டோன் ,பேச்சிரினோசரஸ் , பைப்ஸ்டோன் க்ரீக்

பட மூலாதாரம், WALKING WITH DINOSAURS/BBC STUDIOS

படக்குறிப்பு, கூட்டமாக வலசை சென்ற பேச்சிரினோசரஸின் குழு

தங்களின் கருவிகளை எடுத்துக்கொண்டு மற்றொரு நாள் வரத் தயாராகும் போது, இன்னும் பார்ப்பதற்கு பல வேலைகள் இருக்கின்றன என்று அவர்களுக்குத் தெரியும்.

இங்கும் அங்கும் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இதுவரை மேற்பரப்பை மட்டுமே ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர். ஆனால், வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் ரகசியத்தை வெளிப்படுத்த பல முக்கிய அம்சங்கள் அங்கே காத்திருக்கின்றன.

வாக்கிங் வித் டைனோசரஸ் (Walking With Dinosaurs) இந்த மாதம் 25-ஆம் தேதி அன்று ஞாயிறு பிபிசி ஒன் - இல் ஒளிபரப்பப்பட உள்ளது. பிபிசி ஐப்ளேயரில் அனைத்து எபிசோட்களையும் காண இயலும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3e5v098knno

பிரபஞ்சம் ஏன் இருக்கிறது? விடையை கண்டுபிடிக்க போட்டி போடும் உலக விஞ்ஞானிகள்

2 months 1 week ago

நியூட்ரினோ, பிரபஞ்சம்

பட மூலாதாரம்,MATTHEW KAPUST / SURF

படக்குறிப்பு,தெற்கு டகோடாவில் விஞ்ஞானிகள் அமைத்த இந்த பெரிய குகை, வெளியுலகத்திலிருந்து முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ துகள்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான டிடெக்டர் கருவி இங்கு பொருத்தப்படும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பல்லப் கோஷ்

  • பதவி, அறிவியல் செய்தியாளர்

  • 22 மே 2025, 05:38 GMT

தெற்கு டகோடாவின் காடுகளின் மூடுபனிக்கு மேலே அமைந்துள்ள ஆய்வகத்துக்குள்ளே, விஞ்ஞானிகள் அறிவியலின் மிகப்பெரிய கேள்வி ஒன்றுக்கான விடையை தேடி வருகின்றனர்: இந்த பிரபஞ்சம் ஏன் இருக்கிறது?

அவர்களை விட இந்த ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் முன்னிலையில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் அடங்கிய குழுவுக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஏன் தோன்றின என்பன குறித்து தற்போதுள்ள வானியல் கோட்பாடுகளால் விளக்க முடியாது. இந்த கேள்விக்கான விடையை கண்டறியும் நம்பிக்கையில் நியூட்ரினோ எனப்படும் துணை அணுத் துகள்கள் (sub-atomic particle) குறித்து ஆராயும் டிடெக்டர் (detector) கருவியை இரு குழுக்களும் உருவாக்கி வருகின்றன.

இதற்கான விடை நிலத்துக்கடியில் அதிக ஆழத்தில் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர், நிலத்துக்கடியில் நியூட்ரினோ குறித்து ஆராயும் இந்த ஆய்வுக்கு டியூன் (Dune - டீப் அண்டர்கிரவுண்ட் நியூட்ரினோ எக்ஸ்பிரிமெண்ட்) என பெயரிடப்பட்டுள்ளது.

நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1,500 மீட்டர் ஆழத்தில், மூன்று பரந்துவிரிந்த குகைகளுக்கு விஞ்ஞானிகள் பயணித்துள்ளனர். இதில் ஈடுபடும் கட்டுமான குழுக்களும் அதன் புல்டோசர்களும் சிறிய பிளாஸ்டிக் பொம்மைகள் போன்று தெரியும் அளவுக்கு இந்த குகைகள் மிகப்பெரியவை.

டியூனின் அறிவியல் இயக்குநர் முனைவர் ஜேரெட் ஹெயிஸ், இந்த பிரம்மாண்ட குகைகள் எந்தளவுக்கு அளவில் பெரியவை என்பதை விளக்கும் பொருட்டு, அவை "அறிவியலின் தேவாலயங்கள்" (cathedrals to science) போன்றவை என்றார்.

பிரபஞ்சம் குறித்த புரிதலை மாற்றும் முயற்சி

இந்த குகைகளின் கட்டுமான பணியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஹெயிஸ் ஈடுபட்டு வருகிறார். நிலத்துக்கு மேலேயிருந்து இரைச்சல் மற்றும் கதிர்வீச்சை தடுக்கும் பொருட்டு டியூன் அமைப்பை முழுவதுமாக அவர்கள் மறைத்துள்ளனர். தற்போது அதன் அடுத்த கட்டத்துக்கு செல்ல டியூன் தயாராக உள்ளது.

"பிரபஞ்சம் குறித்த நம் புரிதலை மாற்றும் வகையில், (நியூட்ரினோவை ஆராய்வதற்கான) டிடெக்டர் கருவியை வடிவமைப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். நாம் ஏன் பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்ற கேள்விக்கான விடையை கூறுவதற்கு ஆர்வமாக உள்ள 1,500 விஞ்ஞானிகள் இணைந்து பல்வேறு கருவிகளை பயன்படுத்தி இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன," என்றார் அவர்.

பிரபஞ்சம் உருவானபோது இருவிதமான துகள்கள் உருவாகின: நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ள எல்லாமும் உருவான பருப்பொருள் மற்றும் பருப்பொருளுக்கு நேரெதிரான எதிர்ப்பொருள் (antimatter).

கோட்பாட்டு ரீதியாக இரண்டும் பரஸ்பரம் அதன் திறனை இழக்கச் செய்திருக்க வேண்டும், அப்படி செய்யும்போது பெரும் ஆற்றல் வெடிப்பு மட்டுமே மிஞ்சியிருக்கும். எனினும், பருப்பொருள் இன்னும் மிச்சம் இருக்கிறது.

எதனால் பருப்பொருள் வெற்றியடைகிறது மற்றும் நாம் எப்படி இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்வதற்கான பதில், நியூட்ரினோ துகள் மற்றும் எதிர் நியூட்ரினோ (anti-neutrino) ஆகியவற்றை ஆராய்வதில் தான் இருக்கிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இல்லினாய்ஸின் ஆழமான நிலத்தடியிலிருந்து விஞ்ஞானிகள் இரு விதமான துகள்களின் கற்றைகளையும் 800 மைல்கள் தொலைவில் உள்ள தெற்கு டகோட்டாவுக்கு அனுப்புகின்றனர்.

ஒரு மாபெரும் ஆய்வு திட்டம்

ஏனெனில், நியூட்ரினோ மற்றும் எதிர் நியூட்ரினோக்கள் பயணிக்கும் போது சிறிதளவு மாற்றங்களுக்கு உட்படுகின்றன.

இந்த மாற்றங்கள் நியூட்ரினோக்களுக்கும் எதிர் நியூட்ரினோக்களுக்கும் வெவ்வேறானதாக உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க விரும்புகின்றனர். அப்படி இரண்டுக்கும் வித்தியாசங்கள் இருந்தால், பருப்பொருளும் எதிர்பொருளும் ஏன் ஒன்றையொன்று அதன் திறனை இழக்கச் செய்வதில்லை என்பதற்கான விடைக்கு அவர்களை இட்டுச் செல்லும்.

30 நாடுகளைச் சேர்ந்த 1,400 விஞ்ஞானிகள் இணைந்த ஒரு சர்வதேச ஆய்வுத் திட்டமாக டியூன் உள்ளது. அவர்களுள் ஒருவர் தான் சசக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் கேட் ஷா. பிரபஞ்சம் மற்றும் மானுடம் குறித்த நம்முடைய புரிதலை, இந்த ஆய்வில் இதுவரையில் தெரிந்த தகவல்கள் மாற்றக்கூடியதாக உள்ளன என அவர் என்னிடம் தெரிவித்தார்.

"இப்போது தொழில்நுட்பம், பொறியியல், கணினி மென்பொருள் திறன் ஆகியவற்றின் மூலமாக இத்தகைய பெரிய கேள்விகளை தீர்க்க முடிவது உண்மையில் உற்சாகமளிக்கிறது," என அவர் தெரிவித்தார்.

நியூட்ரினோ, பிரபஞ்சம்

பட மூலாதாரம்,KAMIOKA/ICRR/TOKYO UNIVERSITY

படக்குறிப்பு,ஜப்பானில் ஏற்கெனவே உள்ள சூப்பர் கே நியூட்ரினோ ஆய்வகத்தை விட பெரிய மற்றும் சிறந்த ஆய்வகமாக ஜப்பானின் புதிய ஆய்வகம் இருக்கும்

ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வு

இதே கேள்விக்கான பதிலை பெரும் தொலைவில் உள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள் மின்னும் தங்க நிற உலக உருண்டையில் (நியூட்ரினோ ஆய்வகம்) தேடுகின்றனர். இது, 'அறிவியலின் கோவில்' போன்று பிரகாசிக்கிறது. இந்த விஞ்ஞானிகள் ஹைப்பர் கே எனும் நியூட்ரினோ ஆய்வகத்தை வடிவமைத்து வருகின்றனர், இது, ஏற்கெனவே ஜப்பானில் உள்ள நியூட்ரினோ ஆய்வகமான சூப்பர் கே-வை விட மிகப்பெரியதும் சிறந்ததும் ஆகும்.

இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குள் நியூட்ரினோ கற்றையை ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு செயல்படுத்த உள்ளது, இது அமெரிக்காவின் திட்டத்தை விட முன்னிலையில் உள்ளது. லண்டன் இம்பெரியல் கல்லூரியின் முனைவர் மார்க் ஸ்காட், தன்னுடைய குழு பிரபஞ்சம் குறித்த இதுவரையிலான கண்டுபிடிப்புகளில் மிகப்பெரியதை நிகழ்த்துவதற்கு சாதகமான நிலையில் உள்ளதாக நம்புகிறார்.

"நாங்கள் முன்னதாகவே இதை கண்டுபிடிப்போம், எங்களிடம் மிகப்பெரிய டிடெக்டர் கருவி உள்ளது, எனவே டியூன் திட்டத்தை விட எங்களிடம் அதுகுறித்து அதிக தகவல்களை விரைவிலேயே பெறுவோம்," என்றார் அவர்.

இரண்டு சோதனைகளை ஒன்றாக நடத்தும்போது, ஒரு சோதனை மூலமாக கிடைப்பதை விட அதிகளவில் விஞ்ஞானிகளுக்கு தகவல் கிடைக்கும். ஆனாலும், "நான் தான் அதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என விரும்புகிறேன்!" என்றார் அவர்.

நியூட்ரினோ, பிரபஞ்சம்

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு,நமது தற்போதைய புரிதலின்படி, நமது பிரபஞ்சம் கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களாக உருவாகியிருக்கக் கூடாது.

மர்மம் நீடிக்கிறது

ஆனால், அமெரிக்காவின் ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றும், லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் முனைவர் லிண்டா கிரெமோனெசி, முதலில் அந்த இடத்தை ஜப்பானிய குழு அடையும்போது, என்ன நடக்கிறது என்பது தொடர்பான முழு தகவல்களை அவர்களுக்கு அளிக்காமல் போகலாம் என்கிறார்.

"இதில் போட்டி இருக்கிறது, ஆனால் நியூட்ரினோக்களும் எதிர் நியூட்ரினோக்களும் வித்தியாசமாக செயலாற்றுகிறதா என்பதை புரிந்துகொள்வதற்கான அனைத்து விஷயங்களும் ஹைப்பர் கே திட்டத்தில் இல்லை".

விஞ்ஞானிகளுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் முதல்கட்ட முடிவுகள் கிடைக்க இன்னும் சில ஆண்டுகாலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நாம் இருப்பதற்கு முன்பான ஆரம்பகாலத்தில் என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce80nk9wgzpo

தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!

2 months 2 weeks ago

New-Project-81-1.jpg?resize=600%2C300&ss

தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (18) அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ (ISRO), இன்று PSLV-C61 மூலம் EOS-09 என்ற 101ஆவது
விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

குறித்த விண்கலம் 4 கட்டங்களாக செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது அதில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

232 வது கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான ஆய்வுக்கு பின்னர் விரிவான அறிக்கை வழங்கப்படும் என இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விண்கலத்தில் சரியாக 8 நிமிடம் 13 செக்கன்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1432197

Checked
Sat, 08/02/2025 - 02:38
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed