அறிவியல் தொழில்நுட்பம்

'நெஞ்சை நோக்கி நேராக சுடுவது போல' பூமியை நோக்கி கதிர்களை வீசும் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு - முக்கியத்துவம் என்ன?

2 months 3 weeks ago

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்

  • பதவி, பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சுமார் 12.9 நூறு கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸி ஒன்றின் மையத்தில் 700 பத்து லட்சம் சூரியன் நிறையைக் கொண்ட ஒரு ராட்சத கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை நெஞ்சை நோக்கி நேராகச் சுடுவது போலப் பூமியை நோக்கி ஆற்றல் வாய்ந்த கதிர்களை வீசுகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் தொடர்ச்சியாக வானியலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பிக் பாங் எனும் பிரபஞ்சம் தோன்றிய பின்னர் வெறும் 800 பத்து லட்சம் ஆண்டு இளம் வயதாக இருந்தபோதே VLASS J041009.05-013919.88 என்கிற (சுருக்கமாக J0410-0139 ) இந்த வினோதப் பெயர் கொண்ட கருந்துளை உருவாகியுள்ளது.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 'பிளேசர்' வகை ராட்சத கருந்துளைகளில் இதுதான் ஆகத் தொன்மை வாய்ந்தது, ஆகத்தொலைவில் உள்ளதும் கூட.

மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் அஸ்ட்ரோனமியின் குழுத் தலைவரான எடுவார்டோ பனாடோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, டிசம்பர் 2024இல் 'தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் அண்ட நேசர் அஸ்ட்ரோனமியில்' தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

அட்டகாமா லார்ச் மில்லிமீட்டர் அர்ரே, மாமல்லன் தொலைநோக்கிகள் மற்றும் சிலியில் அமைந்துள்ள ஐரோப்பியத் தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள நாசாவின் சந்திரா விண்வெளி தொலைநோக்கி உள்ளிட்ட பல தொலைநோக்கிகளின் தரவுகளை ஆராய்ச்சிக் குழு பயன்படுத்தியது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் இந்த வான் பொருளின் தொலைவு உட்படப் பல்வேறு தரவுகளை இனம் கண்டனர்.

கடந்த காலம்

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

ஆகப் பெரிய தொலைநோக்கிகள் உள்ளபடியே கடந்தகாலத்தைக் காட்டும் மாயக்கண்ணாடி போலத்தான். நொடிக்குச் சுமார் மூன்று லட்சம் மீட்டர் என ஒளி பயணம் செய்கிறது. எனவே ஒரு பொருளிலிருந்து நம் கண்களுக்கு ஒளி வந்து சேர குறிப்பிட்ட கால இடைவெளி ஏற்படும்.

எடுத்துக்காட்டாக இப்போது சூரியனைப் பார்த்தல் அது எட்டு நிமிடம் முன்பு இருந்த சூரியன். இப்போது காட்சி தரும் நிலவு 1.3 நொடிக்கு முன்பு இருந்த நிலவு. இரவு வானில் மிகப் பிரகாசமான விண்மீன் சிரியஸ் சுமார் 8.6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில்தான் காட்சி தரும். அதாவது தொலைவில் உள்ள பொருளைக் காணும்போது கடந்த காலத்தைக் காண்கிறோம்.

ஐம்பது அறுபது வயதில் தலைமுடி நரைப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் பிறந்த கைக்குழந்தையின் தலைமுடி நரைக்கிறது என்றால் நாம் அதிர்ச்சி அடைவோம் அல்லவா? அதுபோலத் தான் இந்தக் கண்டுபிடிப்பு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை பிக் பாங் நிகழ்வுக்குப் பிறகு 800 பத்து லட்சம் ஆண்டுகள் என்பது சிறு கைக்குழந்தை நிலை. பிரபஞ்சத்தின் இளம் வயதிலேயே இவ்வளவு நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளை எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என விஞ்ஞானிகள் மலைத்து நிற்கின்றனர்.

'பிளேசர்' வகை ராட்சத கருந்துளை

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிலர் யானையின் வாலை தடவி கயிறு என்றும், காலை பிடித்துப் பார்த்து தூண் போல என்றும், காதை தடவிப் பார்த்து முறம் போல என்றும் தந்ததைப் பிடித்துப் பார்த்து ஈட்டி போல என்றும் தவறாகக் கருதுவது போல இதுகாறும் பிளேசர் குவாசர் மற்றும் துடிக்கும் ரேடியோ கேலக்ஸி முதலியவற்றைத் தனித்தனியான மூன்று வகை வான் பொருள்கள் எனத் தவறாகக் கருதி இருந்தனர்.

இவை மூன்றும் சூரிய நிறைபோல பத்து லட்சம் நூறு கோடிக் கணக்கில் நிறை கொண்ட குண்டு ராட்சச கருந்துளை கொண்ட உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் தாம்.

பெரும் அளவு நிறை அடர்த்தியாகச் சிறு வெளியில் சுருங்கும்போது கருந்துளை உருவாகிறது. கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் மிக வலுவானது. ஒளி கூட கருந்துளையிலிருந்து வெளியே வரமுடியாது.

சூரியனைப் போலப் பத்து இருபது மடங்கு நிறைகொண்ட குட்டி கருந்துளை முதல் சூரியனைப் போல பத்து லட்சம்- நூறு கோடி நிறை கொண்ட ராட்சத கருந்துளைகள் வரை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன.

சூரியனைப் போலப் பல பத்து லட்சம் நிறை கொண்ட குண்டு ராட்சத கருந்துளைகள் அவற்றின் மீ நிறையின் காரணமாக ஈர்ப்பு புலம் வலுப் பெற்று அருகில் உள்ள பொருள்களைக் கவர்ந்து இழுக்கும். வாயு தூசு நிரம்பிய இந்தப் பொருள்கள் கருந்துளையை மிக வேகமாகச் சுற்றிச் சுழலும்.

தலைச்சுற்றும் வேகத்தில் இவை சுழலுவதால் ரேடியோ அலைகள், காமா கதிர்கள், எசஸ் கதிர்கள் எனப் பல்வேறு வகை மின்காந்த அலைகளை உமிழும்.

சுழலும் இந்தக் கருந்துளையைச் சுற்றி உருவெடுக்கும் காந்தப் புலத்தின் காரணமாகக் கருந்துளையின் இரண்டு துருவங்கள் அருகே ஜெட் போல மீ ஆற்றல் வாய்ந்த கதிர்கள் வெளிப்படும்.

கருந்துளை சுழல்வதால், கலங்கரை விளக்கு சுழல்வது போல் இந்த ஜெட் கதிர் சுழலும். சுழலும் இந்தச் சமதளத்தில் தற்செயலாகப் பூமி அமைந்தால் சுழலும் ஜெட் கதிர் பல்ஸ் துடிப்பு போலப் பூமியில் படும். இதுவே 'பிளேசர்' வகை ராட்சச கருந்துளை.

இதே கருந்துளையின் ஜெட் பூமி நோக்கி இல்லை என்றால் அதை குவாசர் என்றும் மைய கருந்துளை தூசியினால் மறைக்கப்பட்டால் ரேடியோ கேலக்ஸி என்றும் மயங்கிவிடுகிறோம் எனச் சமீபத்தில் விஞ்ஞானிகள் புரிந்து தெளிந்துள்ளனர்.

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

என்ன பெயர் வைக்கலாம்?

இந்தக் கருந்துளையின் பெயரில் உள்ள VLASS என்பது "வெரி லார்ச் அர்ரே ஸ்கை சர்வே" (The Very Large Array Sky Survey) என்பதன் சுருக்கம் ஆகும்.

செப்டம்பர் 2017 முதல் வாகனத்தில் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ச் அர்ரே வானொலி தொலைநோக்கி கொண்டு வானில் உள்ள வானொலி அலைகளை உமிழும் வான் பொருட்களின் கணக்கெடுப்பு செய்கிறனர்.

இதில் இனம் காணும் வான் பொருள்களைப் பட்டியல் செய்கின்றனர். எனவே இந்தக் கருந்துளை VLASS பட்டியலில் உள்ள வன்பொருள் என நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆங்கில எழுத்து J என்பது 2000 ஆண்டு சம இரவு பகல் புள்ளியிலிருந்து கணிதம் செய்து இந்த வான் பொருளின் இடத்தை நிர்ணயம் செய்துள்ளார் என்று பொருள். பூமியில் ஒவ்வொரு புள்ளியையும் அட்சரேகை தீர்க்கரேகை கொண்டு அடையாளப்படுத்துவது போல வான் மண்டல அட்சரேகை தீர்க்கரேகை தான் 041009.05-013919.88 என்கிற எண்கள். இதைப் பார்த்ததுமே வானவியலாளர்கள் இந்த வான் பொருளின் இருப்பிடம் என்ன என எளிதில் அறிந்துகொள்வார்கள்.

வானில் தோன்றிய ஒளிரும் சுழல் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் காரணமா?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனிதர்கள் போடும் குப்பைகள் என்ன ஆகும்?

மோதியை விமர்சிப்பவர்கள் விரும்பும் ஈலோன் மஸ்கின் 'க்ரோக்' எவ்வாறு இயங்குகிறது?

ஆகத்தொலைவான பிளேசர்

ராட்சச கருந்துளை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

VLASS கணக்கெடுப்பை சாடையாகத் தேடியபோது சுமார் இருபது இடங்களில் பிளேசர் வகைக் கருந்துளை இருக்கலாம் என முதற்கட்டத் தகவல் கூறியது.

இவற்றைக் கூர்ந்து ஆய்வு செய்தபோது J0410−0139 என்கிற ரேடியோ அலைகளை உமிழும் வான் பொருள் பிளேசர் வகைக் கருந்துளை எனவும், இது பிரபஞ்சத்தின் குழந்தைப் பருவத்தைச் சார்ந்தது எனவும் புலனாகியது.

இதுவரை பல்லாயிரக்கணக்கான உயிர்ப்புள்ள கோலடி கருக்களை இனம் கண்டிருந்தாலும் அதில் வெறும் 3000 சொச்சம் மட்டுமே பிளேசர் வகை சார்ந்தது. எனவே ஒரு பிளேசர் கண்டால் பல ஆயிரம் உயிர்ப்புள்ள கோலடி கருக்கள் இருக்கலாம் என முடிவுக்கு வரமுடியும்.

இவற்றில் 2020இல் இனம் காணப்பட்ட SO J0309+27 என்கிற வான்பொருள்தான் இதுவரை ஆகலின்மையான பிளேசர் வகைக் கருந்துளையாக அறியப்பட்டது. இது பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவானது.

பிரபஞ்சம் தோன்றி 800-900 பத்து லட்சம் ஆண்டுக்காலத்தில் மீ நிறை கொண்ட ராட்சச கருந்துளை வளரமுடியும், ஆனால் வெறும் 700 பத்து லட்சம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட ராட்சத கருந்துளை வளர்ந்தது மர்மமே. கருந்துளைகள் குறித்தும் அவை எப்படி சடசடவென உருவாக்கி வளர்கின்றன என்பது குறித்தும் ஏற்கனவே நமக்கு இருந்த கருதுகோள்களை நீக்கி புத்தாக்கம் செய்யவேண்டும் என்கின்றார் சிலர்.

ராட்சத கருந்துளையின் ஜெட் திசை எதுவாகவும் இருக்கலாம். எனவே நம்மை நோக்கி நேராக ஜெட் திசை அமைவது என்பது பரிசுச்சீட்டு பரிசு போல. பல கோடி பேர் பரிசுச்சீட்டு சீட்டு வாங்கி இருந்தால் தானே பத்து கோடி பரிசுச்சீட்டு பரிசு ஒருவருக்குக் கிடைக்கும். எனவே பிரபஞ்சத்தின் குழந்தை நிலையில் நம்மை நோக்கி ஜெட் உள்ள பிளேசர் இருந்தால் வேறு திசை நோக்கி ஜெட் கொண்ட பல லட்சம் ராட்சத கருந்துளைகள் இருக்கவேண்டும்.

எனவே குழந்தைப் பருவப் பிரபஞ்சத்தின் தற்போதைய புரிதலை இந்தக் கண்டுபிடிப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. குறிப்பாகக் கருந்துளைகளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி; அவை எவ்வளவு பெரியதாக இருக்கும், எவ்வளவு விரைவாக வளர்ச்சியடையும், எத்தனை இருந்திருக்கலாம் முதலிய குறித்த நம்முடைய அனுமானங்கள் அனைத்தும் சவால் செய்யப்பட்டுள்ளன.

(த வி வெங்கடேஸ்வரன், முன்னாள் முதுநிலை விஞ்ஞானி, அறிவியல் எழுத்தாளர், தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வருகை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8x407d9z4no

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் வளர்த்த செடி எது? பூமியை விட அங்கே வேகமாக வளர்வது ஏன்?

2 months 4 weeks ago

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 24 மார்ச் 2025, 05:44 GMT

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் தேதி பூமிக்கு திரும்பினார். அவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது, விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.

'பிளான்ட் ஹேபிடட் -07' என்ற திட்டத்தின் கீழ், புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் அவர் 'ரோமெயின் லெட்யூஸ்' எனப்படும் ஒரு வகை கீரைச் செடியை வளர்த்தார்.

விண்வெளியில் தங்கும் வீரர்கள், தங்களுக்கான உணவை பூமியில் இருந்து எடுத்துச் செல்லும் போதிலும், விண்வெளியில் தாவரங்களை வளர்க்க ஏன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? விண்வெளியில் தாவரங்கள் வளருமா?

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் ஆய்வு ஏன்?

விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களில் விண்வெளி விவசாயமும் ஒன்று. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விவசாயம் குறித்த பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்வெளி வீரர்களுக்காக, பூமியில் இருந்து வரும்போதே அவர்களுக்கு தேவையான உணவுகள் முன்கூட்டியே பதப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீர்ந்துவிடும்.

பிற கோள்கள் மற்றும் பூமியில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள விண்வெளிப் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வாரங்கள், மாதங்கள் மற்றும் பல வருடங்கள் கூட ஆகலாம். அது போன்ற சூழலில்தான் இந்த விண்வெளி விவசாயம் கைகொடுக்கும்.

நாசாவின் கூற்றுப்படி, நீண்ட கால விண்வெளிப் பயணங்கள் மற்றும் பிற கோள்களில் மனிதர்கள் குடியேறுவதற்கு தேவையான தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பது ஒரு நிலையான உணவு ஆதாரமாக இருக்கும்.

விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களில் ஆக்ஸிஜன் மற்றும் நீரை மறுசுழற்சி செய்வதற்காகவும் அங்கே தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன?

ஒரு தாவரம் வளர, சூரிய ஒளி, நீர், ஆக்ஸிஜன், மண் ஆகியன தேவைப்படுகின்றன. அதை விட முக்கியமாக புவியீர்ப்பு விசை தேவைப்படும். இந்த புவியீர்ப்பு விசைதான் வேர்களை கீழ்நோக்கி வளரச் செய்கிறது. இது தாவரங்கள் மண்ணில் உறுதியாக நிற்க உதவுகிறது. நிலத்திற்கு அடியில் இருந்து உறிஞ்சப்படும் நீர் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், தாவரங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன?

நாசாவின் முயற்சிகள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் முன்னோடியாக உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு பிரத்யேக ஆய்வுகளை நாசா செய்துள்ளது. அதன் மூலம், விண்வெளியில் பல்வேறு வகையான தாவரங்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதல்படியாக, நாசா 2015 ஆம் ஆண்டு விண்வெளியில் எந்தெந்த மாதிரியான தாவரங்களை வளர்க்க முடியும் என்று சோதனை செய்ய தொடங்கியது. அமெரிக்காவின் ஃபேர்சைல்ட் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து 'கிரோயிங்க் பியாண்ட் எர்த்' என்ற திட்டத்தை நாசா தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ், விண்வெளி நிலையத்தில் உள்ளதைப் போன்ற ஒரு சூழலில் வெவ்வேறு தாவரங்களின் விதைகளை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் தோட்டங்களை அமைக்கவும் நாசா சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 'வெஜ்ஜி' என்று அழைக்கப்படும் காய்கறி உற்பத்தி அமைப்பு, விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் ஓர் அறையாகும்.

பூமியில் ஒரு தோட்டத்தைப் போலவே இங்கும் தாவரங்கள் விதையில் இருந்து தலையணை போன்ற ஒரு சிறிய அமைப்பில் வளர்க்கப்படுகின்றன. இந்த அமைப்பில் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருக்கும். இதற்கு தேவையான தண்ணீர் மட்டும் பரமரிப்பாளர்களால் ஊற்றப்படும். இந்த அமைப்பின் மூலம் , கீரை, தக்காளி உள்ளிட்ட பல வகை பயிர்களை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

வெஜ்ஜி திட்டத்துடன் இணைந்த எக்ஸ்-ரூட்ஸ் என்ற திட்டத்தின் மூலம் தாவரங்கள் வளர தேவையான மண் மற்றும் பிற காரணிகள் இல்லாமல் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) அல்லது ஏரோபோனிக்ஸ் (Aeroponics) முறைப்படி விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.

ஹைட்ரோபோனிக்ஸ் முறைப்படி, தாவரங்கள் மண்ணில் இல்லாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்து கரைசலில் வளர்க்கப்படுகின்றன. ஏரோபோனிக்ஸ் முறையில், தாவரங்களின் வேர்கள் காற்றில் தொங்கவிடப்பட்டு, நீர் மற்றும் ஊட்டச்சத்துகள் தெளிக்கப்படுகின்றன.

மேம்பட்ட தாவர வாழ்விடம் எனப்படும் Advanced Plant Habitat என்ற மற்றொரு திட்டத்தின் மூலமாகவும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்களை நாசா வளர்த்து வருகிறது. இந்த அமைப்பில், தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சூழல்களும் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் போன்ற தாவர வளர்ச்சிக்கு தேவையான உகந்த சூழல் இந்த அமைப்பில் உருவாக்கப்படுகிறது. LED விளக்குகள், நீர்ப்பாசன அமைப்பு போன்ற வசதிகள் கொண்ட இந்த அமைப்பில் குறைந்த அளவிலான பராமரிப்பே தேவைப்படும். விண்வெளி வீரர்கள் இதற்கென அதிக உழைப்பையும், நேரத்தையும் செலவிட வேண்டியதில்லை. இந்த அமைப்பின் மூலம் சிலி பெப்பர்ஸ் எனப்படும் குடை மிளகாயையும், முள்ளங்கியையும், சில பூக்களையும் நாசா விளைவித்துள்ளது.

இந்தியாவின் பங்கு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) இந்த ஆண்டின் தொடக்கத்தில் PSLV-C60 POEM-4 என்ற ராக்கெட்டில் "CROPS" எனப்படும் Compact Research Module for Orbital Plant Studies எனப்படும் விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த சோதனைக்காக, தாவரங்கள் வளர உகந்த சூழலில் 8 காராமணி விதைகள் முளைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. நான்காவது நாளில், இந்த விதைகள் முளைப்பது காணப்பட்டது. ஐந்தாவது நாளில், முளைத்த விதைகளில் இரண்டு இலைகள் தெரிந்தது. இதுவே இஸ்ரோவின் வெற்றியாக கருதப்பட்டது.

விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை உருவாக்குவதிலும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) மற்றும் மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும் முயற்சி செய்து வருவதாக இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர் பாண்டியன் கூறுகிறார்.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு,இஸ்ரோவின் CROPS திட்டத்தில் விண்வெளியில் முளைத்த காராமணி பயிர்கள்

பூமியை விட விண்வெளியில் தாவரங்கள் வேகமாக வளர்வது ஏன்?

"விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க ஃபிரெஷ் உணவுகளை இதன் மூலம் வழங்க முடியும். விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய இந்த தாவரங்கள் உதவும். இவை குறைவான அளவே இருந்தாலும் இயற்கையான முறையில் இருப்பதால் அவர்களின் உடல்நலனுக்கு நன்மை மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும்", என்கிறார் பாண்டியன்.

விண்வெளியில் தாவரங்களை விரைவாக விளைவிக்க முடியும் என்று தெரிவிக்கிறார் அவர்.

"உதாரணமாக பூமியில் பயிரிடும் போது, தாவரங்களுக்கு வைக்கப்படும் உரம் மழை போன்ற காரணிகளால் அடித்து செல்லப்படலாம் அல்லது தாவரங்கள் அதனை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கலாம். ஆனால் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் திட்டங்களின் மூலம், தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதனால் தாவரங்கள் அவற்றை வேகமாக உறிஞ்சி இயல்பைவிட விரைவாகவே அவை வளர்கின்றன", என்று விளக்கினார் பாண்டியன்.

இந்த திட்டங்கள் மூலம் பூமியில் உள்ள விவசாய முறைகளை மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். Spin-off technology முறையில் விண்வெளியில் தாவரங்களை வளர்க்க உதவும் புதுவித முயற்சிகளை பூமியில் செய்யப்படும் விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் விவசாயத்தை மேம்படுத்தலாம் மற்றும் விளைச்சலை பெருக்கலாம் என்றும் பாண்டியன் கூறினார்.

Spin-off technology என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக வகுக்கப்பட்ட ஒரு திட்டம், பின்னர் மற்ற துறைகளிலும் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும். உதாரணமாக நாசாவால் விண்வெளி வீரர்களின் இருக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட "மெமரி ஃபோம்" (Memory Foam) தொழில்நுட்பம், இன்று மெத்தைகள் மற்றும் தலையணை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி, தாவரங்கள்

பட மூலாதாரம்,NASA

"எப்போதும் இயந்திரங்களைச் சுற்றியே இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி செய்வதைத் தவிர இந்த தாவரங்களை பராமரிப்பது மனதை அமைதிப்படுத்த உதவும். விண்வெளி வீரர்களின் பணிச் சுமை, மற்றும் தனிமை உணர்வை குறைத்து அவர்கள் மகிழ்ச்சியடைய இது ஒரு காரணியாக இருக்கும்" என்று உளவியல் ரீதியாகவும் விண்வெளி வீரர்களுக்கு இது பலன் தருவதாக கூறுகிறார் பாண்டியன்.

தற்போது வெறும் சோதனைக்காக சிறிய அளவிலே விண்வெளியில் தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

"இந்த திட்டங்கள் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை. அவ்வாறு முழு வீச்சில் இது நடந்தால் விண்வெளிக்கு செல்லும் போது, அதிக அளவிலான உணவு பொருட்களை எடுத்துச் செல்வதை குறைக்க முடியும். மனிதர்கள் விண்வெளியிலும், மற்ற கோள்களிலும் வாழ்வதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை முழுமையாக சோதனை செய்து செயல்படுத்த முடியும்", என்று பாண்டியன் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c0jg3zl6zx6o

ஹிட்லர் படையின் ராக்கெட் தொழில்நுட்பம் மூலம் அமெரிக்கா நிலவில் கால் பதிக்க வித்திட்ட விஞ்ஞானி

3 months ago

வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 22 மார்ச் 2025, 01:31 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர்.

அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில், ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்சியில்தான் வி2 என்ற ஏவுகணை உருவானது. இந்த ஏவுகணையை பயன்படுத்திய ஹிட்லரின் படை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களையும் சோவியத் படைகளையும் கதி கலங்க செய்தது.

இந்த விஞ்ஞானி போருக்கு பின் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்க்கை பல வியத்தகு சாதனைகளை உள்ளடக்கியது.

வார்னர் வான் ப்ரான், மனித குலம் ஒரு நாள் நட்சத்திரங்களை அடையும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், நடைமுறையில் அவர் போருக்கான ராக்கெட் தயாரிக்க தொழில்நுட்பம் வகுத்துக் கொடுத்தார். நாஜி ஜெர்மனியிலிருந்து நாசா வரையிலான அவரது வாழ்க்கைப் பயணம் இலக்கும், அறநெறியும், புவிசார் அரசியலும் சந்திக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.

நாஜி பொறியாளர்

ஜெர்மனியின் விர்சிட்ஸ் நகரில் 1912 ஆம் ஆண்டு பிறந்த வான் ப்ரானுக்கு விண்வெளி மீதான ஆர்வம் சிறு வயதிலிருந்தே தொடங்கியது.

"ஒரு புத்திசாலி இளைஞராக இருந்த அவர் கவனம் சிதறியதால் கணிதத்திலும், இயற்பியலிலும் தோல்வியடைந்தார். அதனால் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தனது பதின்ம வயதுகளில் விண்வெளி ராக்கெட்டுகள் குறித்து கனவு காண தொடங்கினார். 22 வயதில் இயந்திரவியல், வானூர்தி பொறியியலில் பட்டங்களையும், இயற்பியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டின் ராணுவத்தின் ராக்கெட் திட்டத்தின் சிவிலியன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 25 வயதில் அவர் பால்டிக் கடற்கரையில் உள்ள பீனெமுண்டே ராக்கெட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தளத்தின் சிவிலியன் தொழில்நுட்ப இயக்குனராக இருந்தார்" என்று ப்ரானின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய பாப் வார்ட் குறிப்பிடுகிறார்.

1928-ல், அவர் ஜெர்மனியின் விண்வெளி பயண சமூகத்தில் இணைந்தார். விரைவில் ஜெர்மன் ராணுவத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப்போரில் பல நாடுகளை மிரட்டிய வி2 என்ற ஏவுகணையை இவரே உருவாக்கினார். இந்த வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். வி2 என்றால் அது 'vergeltungswaffen' (பழிவாங்கும் ஆயுதம்) என்ற பொருள் ஆகும்.

வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY

படக்குறிப்பு,வி2 ஏவுகணை உலகின் முதல் நீண்ட தூர வழிகாட்டப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

V2 ராக்கெட் தொழில்நுட்பம்

இரண்டாம் உலகப் போரில் லண்டன், அண்ட்வெர்ப், பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்குவதற்கு, V2 ராக்கெட்டை நாஜி ஜெர்மனி பயன்படுத்தியது.

ஒவ்வொரு V2 ராக்கெட்டும் 14 மீட்டர் உயரம் கொண்டது ஆகும். அவை கிட்டத்தட்ட ஒரு டன் வெடிபொருள்களை சுமந்து சென்றன. 1944-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி லண்டன் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 மீட்டர் பரப்பளவில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி மூன்று பேரை கொன்று 22 பேரை அது காயப்படுத்தியது.

இவை ஹிட்லரின் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன.

V2 ராக்கெட் திரவ எத்தனால் மற்றும் ஆக்சிஜனால் உந்தப்படும். சுமார் 190 கி.மீ எறிபாதையில், பூமிக்கு மேலே 80 கி.மீ உயரத்தில் செல்லக் கூடிய V2 , உலகின் முதல் நீண்ட தூர பாலிஸ்டிக் ராக்கெட் ஆகும். அதுவரை உலகம் இதைப் போன்று வேறு எதையும் பார்த்ததில்லை.

வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம்,SPL

'ஆபரேஷன் பேப்பர்கிளிப்'

இரண்டாம் உலகப் போரின் முடிவில், V2 தொழில்நுட்பத்தை வசப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகள் போட்டி போட்டன.

1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியை தழுவியது. அதன் பின்னர் ப்ரான் அமெரிக்காவிடம் சரணடைந்தார்.

" ஸ்டாலினுக்கு வேலை செய்ய விருப்பம் கொள்ளாத வான் ப்ரான் அமெரிக்கர்களிடம் சரணடைவது என்ற முடிவை எடுத்தார். அதேநேரம், ரஷ்யர்கள் V2 தொழிற்சாலையை கைப்பற்றினர்" என்று பிபிசியின் செய்தியாளர் ரிச்சர்ட் ஹாலிங்மன் தெரிவிக்கிறார்.

சோவியத்துக்கு எதிராக நாஜி விஞ்ஞானிகளின் திறனை பயன்படுத்தும் அமெரிக்காவின் 'ஆப்பரேஷன் பேபர்கிளிப்' திட்டத்தில் வான் ப்ரானுடன் சேர்ந்து 125 நாஜி விஞ்ஞானிகள் அமெரிக்காவிடம் சரணடைந்தனர்.

நாசா விஞ்ஞானியாக

அமெரிக்காவில் ப்ரானுக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன. அவரது குழு அமெரிக்காவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணையான ரெட்ஸ்டோனை உருவாக்கியது. இந்த ஏவுகணை ஒரு அணு ஆயுதத்தை 250 மைல்கள் வரை வீசக்கூடியது ஆகும். ரெட்ஸ்டோனின் மாற்றியமைக்கப்பட்ட புதிய பதிப்பான ஜூபிடர்-சி, 1958 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்ப்ளோரர் 1-ஐ விண்ணில் ஏவியது.

அவர் 1960-ல் நாசாவில் மார்ஷல் விண்வெளி பயண மையத்தின் இயக்குநராக பொறுப்பேற்றார். அங்கே, அமெரிக்காவின் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு உந்திச் சென்ற சாட்டர்ன் V (Saturn V) ராக்கெட் அவரது தலைமையில் உருவாக்கப்பட்டது.

1950 களில் வால்ட் டிஸ்னியுடன் இணைந்து விண்வெளிப் பயணத்தை பிரபலப்படுத்திய Man in Space (விண்வெளியில் மனிதன்) என்ற தொலைக்காட்சி தொடரில் பணியாற்றினார். "மனிதன் எங்கு செல்ல விரும்புகிறானோ அங்கெல்லாம் அவன் சொந்தமாகிறான்" என்று ப்ரான் கூறுவார். பனிப்போர் கால விண்வெளிப் போட்டியின் போது அவரது இந்த நம்பிக்கை அமெரிக்காவை உற்சாகப்படுத்தியது.

1969-ல் அமெரிக்காவின் அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு வரலாற்றின் மிகச் சிறந்த ராக்கெட் பொறியாளர்களில் ஒருவராக ப்ரானை நிலை நிறுத்தியது. அப்போதும் அவரது கடந்த காலம் குறித்த கேள்விகள் நீடித்தன. "இயற்கை அழிவை அறியவில்லை; அதற்குத் தெரிந்ததெல்லாம் உருமாற்றம்" என்று கூறிய ப்ரான் இந்த சந்தேகங்களை மறைமுகமாக ஒப்புக் கொண்டார் என்றே கூறலாம்.

வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த காலம் அவரை விடவில்லை

ப்ரான் ஆராய்ச்சியில் உருவான V-2 பொறியியல் அதிசயமாக இருந்தது, ஆனால் ஒரு இருண்ட வரலாற்றையே கொண்டிருந்தது. வதை முகாம்களில் இருந்து கட்டாய உழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு மிட்டல்வெர்க் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் - முன்னேற்றத்தையும், மனிதத் துயரத்தையும் ஒருசேர அடையாளப்படுத்தியது.

"வான் ப்ரான் இந்த கொடூரங்களை அரிதாகவே எதிர்த்தார்" என்று குறிப்பிடுகிறார் வான் ப்ரான்: ட்ரீமர் ஆஃப் ஸ்பேஸ், இன்ஜினியர் ஆஃப் வார் என்ற புத்தகத்தின் ஆசிரியரான மைக்கேல் நியூஃபெல்ட்.

அவர் நிலவுக்கு அப்பால் செல்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த 1964ஆம் ஆண்டில், அவர் சமர்ப்பித்த மாநாட்டு அறிக்கை ஒன்று என்னிடம் உள்ளது. இந்த அறிக்கையில் அவர் நிலவில் மனிதனை தரையிறக்குவதற்கான ஜெமினி திட்டத்திற்கு முன்பே, அவர் தனது சகாக்களிடம் செவ்வாய்க்கு பயணம் செய்வதற்கான திட்டமிடலை தொடங்க வேண்டும் என கூறியதை உள்ளடக்கியிருந்தது," என்று, மார்ஷல் விண்வெளி மையத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுனரான ஜான்சன் குறிப்பிடுகிறார்.

"இன்று நாம் செய்யும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது, 1964ஆம் ஆண்டிலேயே இன்று நாம் தீர்க்க முயற்சிக்கும் பல பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்" என்று அவர் கூறினார்.

வரலாற்று ஆசிரியரும், வான் ப்ரான் குறித்து நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ள மைக்கேல் நியூஃபெல்ட், "வான் ப்ரான் முழுவதுமாக வில்லனும் இல்லை, முழுவதுமாக ஹீரோவும் இல்லை. அவர் லட்சியமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட மனிதர்" என தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yx4xz8jllo

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

3 months ago

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர்.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.

ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக்கு வந்தடைய முடியும்.

ஒரே இடத்திலிருந்து புறப்படும் இரண்டு விண்கலன்களுக்கு இடையே பயண நேரத்தில் ஏன் 14 மணி நேர வித்தியாசம் உள்ளது?

விண்கலன் பூமிக்குத் திரும்பும் நேரத்தை எவை தீர்மானிக்கின்றன?

விண்வெளிப் பயணங்கள் இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை. விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது, விண்கலன்கள் விண்வெளியில் இருந்து நேரடியாகக் கீழே இறங்கி விடுவதில்லை.

அவர்கள் மெதுவாக வர வேண்டும், பத்திரமாகத் தரையிறங்க வேண்டும். இதற்குத் தேவையான நேரம் என்பது விண்கலத்தின் வடிவம், தரையிறங்கப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

டிராகன் மற்றும் சோயுஸ் விண்கலன்கள் இருவேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறுவது முதல் தரையிறங்குவதை வரை வெவ்வேறு கால அவகாசங்களை இரு விண்கலன்களும் கொண்டுள்ளன.

சோயுஸ் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் 1960களில் வடிவமைக்கப்பட்டது. விண்வெளி வீரர்களை விரைவாக பூமிக்குக் கொண்டு வரும் சிறிய கடினமான விண்கலன் வடிவத்தைக் கொண்டது. இதில் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்யலாம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, அந்த விண்கலன் செங்குத்தான பாதையில் பூமியை நோக்கிப் பயணிக்கும். அதன் மூலம், மூன்றே மணிநேரத்தில் விண்வெளி வீரர்களை பூமியில் தரையிறக்கிவிடும்.

"கஜகஸ்தானில் உள்ள புல்வெளிப் பரப்பில் தரையிறங்குவது மிகவும் விரைவாக மூன்றரை மணிநேரத்துக்கு உள்ளாக நடைபெறும் நிகழ்வு," என்று ஐரோப்பிய விண்வெளி மையம் சோயுஸ் விண்கலன் குறித்துக் கூறுகிறது.

சோயுஸ் விண்கலனில் உள்ள மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகள் பூமிக்குள் நுழையும்போது எரிந்துவிடும். ஒரு பகுதி மட்டுமே தரையிறங்கும். தரையிறங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக நான்கு பாராசூட்கள் விரியும்.

முதலில் இரண்டு பாராசூட்கள் விரியும். பிறகு பெரிதாக உள்ள மூன்றாவது பாராசூட் விரியும். இதன் மூலம் விண்கலனின் வேகம் நொடிக்கு 230 மீட்டர் என்பதில் இருந்து நொடிக்கு 80 மீட்டர் என்று குறையும்.

கடைசியாக நான்காவது பாராசூட் விரியும். இது மூன்றாவது பாராசூட்டைவிட 40 மடங்கு பெரியது. விண்கலன் நேராகத் தரையிறங்கும் வகையில் அதன் சாய்வு சரி செய்யப்படும். மேலும் விண்கலனின் வேகம் நொடிக்கு 7.3 மீட்டராகக் குறைக்கப்படும்.

இருப்பினும், இதுவும் தரையிறங்கப் பாதுகாப்பற்ற அதிக வேகம்தான். அதைக் குறைப்பதற்காக, தரையிறங்குவதற்கு ஒரு நொடி முன்பாக, விண்கலனின் அடிப்பகுதியில் இரண்டு இயந்திரங்கள் எரியத் தொடங்கும். இவை விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும்.

சோயுஸ் விண்கலன் தரையிறங்கும்போது என்ன ஆகும்?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலன் கடலில் இறங்கிய காட்சி

சோயுஸ் தனது இயந்திரங்களை எரியூட்டி வேகத்தைக் குறைத்து, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகுகிறது. பிறகு பூமியின் வளிமண்டலத்துக்குள் செங்குத்தான கோணத்தில் நுழையும்.

செங்குத்தாக உள்ளே நுழையும்போது, காற்றின் எதிர்ப்புவிசை காரணமாக அதிவேகமாக வந்து கொண்டிருக்கும் விண்கலனின் வேகம் குறைக்கப்படும்.

இந்தச் செயல் அதிக வெப்பம் மற்றும் விசைகளை விண்கலத்தின் மீது உருவாக்கும். இந்த வெப்பத்திலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க வெப்பப் பாதுகாப்பான் உதவும். ஆனால் அந்தப் பாதுகாப்பான்கள் ஈர்ப்பு விசையைவிடப் பல மடங்கு வலுவான சக்தியை எதிர்கொள்ளும்.

வளிமண்டலம், விண்கலனின் வேகத்தைக் குறைத்த பிறகு, சோயுஸ் தனது பாராசூட்களை விரிக்கத் தொடங்கும். இது விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும். சோயுஸ் விண்கலனைப் பொறுத்தவரை, அதன் சாதகமான அம்சம் அதன் வேகம். விண்வெளி கதிர்வீச்சு மற்றும் குறைந்த ஈர்ப்பு விசையின் தாக்கத்தை விண்வெளி வீரர்கள் குறைவான நேரமே அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், அதன் தரையிறக்கம் மிகக் கடுமையாக இருக்கும்.

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY

படக்குறிப்பு, சோயுஸ் விண்கலன் தரையிறங்கும் நிகழ்வு

டிராகன் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்?

ஏழு பேரை ஏற்றிச் செல்லும் வகையிலான டிராகன் விண்கலம் தரையிறங்குவதில் வேறு மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பூமிக்குத் திரும்பும்போது வேகமான, செங்குத்தான பயணத்திற்குப் பதிலாக, மெதுவாக, படிப்படியான பயணத்தை அது மேற்கொள்கிறது.

பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, பூமிக்குத் திரும்பும் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராகன் விண்கலன் தனது சுற்றுவட்டப் பாதையைச் சரி செய்ய மட்டுமே பல மணிநேரம் எடுத்துக் கொள்ளும். டிராகன் விண்கலனில் உள்ள 16 டிராகோ த்ரஸ்டர்கள் எனும் இயந்திரங்கள் இதைச் செய்யும். இதனால் திட்டத்தைக் கட்டுப்படுத்துவோர் தரையிறங்குதலின்போது சீரான நிலைமைகள் இருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது.

சோயுஸ் விண்கலன் போலன்றி, டிராகன் விண்கலன் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது சாய்வான கோணத்தில் இருக்கும். இதனால், வளிமண்டலத்தை எதிர்கொள்ளும்போது உருவாகும் வெப்பம் பரவலாகவும், நீண்ட நேரமும் கிடைக்கும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள் மீதான தாக்கம் குறைவாக இருக்கும். அதோடு, விண்கலன் தனது வேகத்தை மெதுவாகக் குறைத்துக் கொள்ளும்.

வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு விண்கலனை நிலையாக வைத்துக் கொள்ள இரண்டு பெரிய பாராசூட்கள் உள்ளன. இது தவிர, தரையிறங்குவதற்கு முன்பாக விண்கலனின் வேகத்தைக் குறைக்க நான்கு பாராசூட்கள் உள்ளன.

தரையிறங்குதல் உத்தியில் உள்ள வேறுபாடுகள் என்ன?

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம்,NASA

சோயுஸ் விண்கலன் நிலபரப்பில் தரையிறங்கும், ஆனால் ட்ராகன் கடல் மீது தரையிறங்கும். சோயுஸ் வழக்கமாக ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கஜகஸ்தான் நாட்டின் பரந்த புல்வெளிகளில் தரையிறங்கும்.

டிராகன், கடலின் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பரப்பில் தரையிறங்கும்.

நிலத்தில் அல்லாமல் நீரில் தரையிறங்குவதற்கு அதிக ஏற்பாடுகள் தேவைப்படும். கடலில் இருந்து விண்கலனையும் விண்வெளி வீரர்களையும் மீட்பதற்கு நிறைய ஏற்பாடுகள் தேவை.

தண்ணீரில் விண்கலன் எங்கு தரையிறங்கும் என்று கணிக்கப்படுகிறதோ அதற்கு அருகில் படகுகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவர்கள் விண்கலனுக்கு அருகில் வந்து, விண்கலன் மீது ஏதேனும் நச்சுக் கதிர்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய வேண்டும். பிறகு விண்கலனை அருகிலுள்ள மீட்புத் தளத்திற்குக் கொண்டு சென்று, அங்கு வைத்து விண்வெளி வீரர்களை வெளியே கொண்டுவர வேண்டும். தரையிறங்கும் இடத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும் என்பதே இதன் சாதகமான அம்சம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cedl4635d19o

ஒளியை “சூப்பர்சொலிட்” ஆக மாற்றிய அதிசய கண்டுபிடிப்பு – இத்தாலிய விஞ்ஞானிகள் புரட்சிகர சாதனை..!

3 months 1 week ago

அண்மையில் இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை “சூப்பர்சொலிட்” (Supersolid) எனப்படும் அதிசயமான திண்ம நிலையாக மாற்றியுள்ளனர்…

இது குவாண்டம் இயற்பியலில் (Quantum Physics) ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் பல தொழில்நுட்ப புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது... மேலும், இது ஒளியின் நடத்தை பற்றிய புதிய புரிதல்களை வழங்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..

சரி இப்போ “சூப்பர்சொலிட்” என்றால் என்னவென்று பார்ப்போம்..

“சூப்பர்சொலிட்” என்பது ஒரு விநோதமான திண்ம நிலை… இது ஒரு பொருள் திண்மமாக (solid) இருக்கும் போதும், அதே நேரத்தில் திரவமாக (liquid) பாயும் தன்மை கொண்டிருக்கும்..

சூப்பர்சொலிடில் உள்ள அணுக்கள் (atoms) ஒழுங்காக (crystalline) ஒருங்கிணைந்து இருக்கும் போதிலும், அவை எந்த தடையுமின்றி (without friction) நகர முடியும்...

சூப்பர்சொலிட் தன்மை 1969 ஆம் ஆண்டு முதலில் முன்மொழியப்பட்டது... ஆனால், இதை ஆய்வகத்தில் உருவாக்கி, கண்கூடாக காண்பது கடினமானது...

இதை வெற்றிகரமாக உருவாக்கும் முயற்சியில்தான் இத்தாலிய விஞ்ஞானிகள் அண்மையில் வெற்றி கண்டுள்ளனர்… அதுவும் ஒளியை..

சாதாரணமாக, சூப்பர்சொலிட் நிலை, குறைந்த வெப்பநிலையிலான அணுக்கள் (ultracold atomic gases) மூலம் உருவாக்கப்பட்டன… ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் இதை ஒளி (light) மூலம் உருவாக்கியுள்ளனர் என்பது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு ஆகும்...

சரி இப்போ இவர்கள் எப்படி ஆய்வுகூட மட்டத்தில் இதைச் சாதித்தார்கள், அதுவும் தன்னைவிட இந்த பிரபஞ்சத்தின் உள்ளே யாரும் வேகமாக போகமுடியாது என்று அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கும் ஒளியை என்பதைப் பார்ப்போம்…

large.974F7EAA-698B-4E19-A50F-8BEA02ED4F74.jpeg

சூப்பர்சொலிட் உருவாக்கத்தில் பயன்படுத்திய உயர் துல்லிய படமெடுப்புக் கருவி(high resolution imaging system)

large.E0AD1E5B-9A6A-4D2A-B18F-9AB96A5BF3EB.jpeg

சூப்பர்சொலிட் தன்மை கொண்ட ஒளியின் ஒழுங்கமைப்பு…

large.0F2CA5A7-5601-414B-AA74-10DE5271917F.jpeg

விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்யும் தருணம்…

விஞ்ஞானிகள் ஒளியை ஒரு சிறப்பான செமிகண்டக்டர் (semiconductor) கட்டமைப்பில் சிறப்பாக கட்டுப்படுத்தினர்…

ஒளியின் துகள்கள் (photons) ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் (interact) விதமாக அமைக்கப்பட்டது…

இதன் விளைவாக, ஒளி திண்மமாகவும் (solid-like) திரவமாகவும் (fluid-like) நடந்துகொள்ளும் நிலை உருவானது...

இவ்வாறு ஒளி “சூப்பர்சொலிட்” ஆக மாறியது... இதை முதன்முறையாக வெற்றிகரமாக உருவாக்கியுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள், இது எதிர்காலத்தில் குவாண்டம் இயற்பியலுக்கு (quantum physics) புதிய வாசல்கள் திறக்கும் என நம்புகின்றனர்...

இந்த கண்டுபிடிப்பு மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள்..👇

1. குவாண்டம் கணிப்பொறிகள் (Quantum Computing):

சூப்பர்சொலிட் ஒளி (supersolid light) புதிய வகை குவாண்டம் பிட்டுகள் (qubits) உருவாக்க உதவும்… இது மிகுந்த செயல்திறன் கொண்ட குவாண்டம் கணிப்பொறிகளை உருவாக்க வழிவகுக்கும்...

2. அளவீட்டு கருவிகள் (Precision Measurement):

சூப்பர்சொலிட் ஒளியின் தன்மை, மிகுந்த துல்லியத்துடன் (high precision) அளவீடுகளை மேற்கொள்ள உதவும்…இது அடிப்படை இயற்பியல் மாறிலிகளை (physical constants) கண்டறியவும், gravitational waves களை கண்டறியவும் உதவும்...

3. புதிய பொருட்கள் (Advanced Materials):

ஒளியை சூப்பர்சொலிட் நிலை வரை கட்டுப்படுத்தும் திறன், புதிய வகை பொருட்கள் (materials) உருவாக்க உதவும்… இது புதிய மெக்கானிக்கல் (mechanical) மற்றும் ஒளி (optical) பண்புகளைக் கொண்ட பொருட்களை உருவாக்க வழிவகுக்கும்...

இந்த கண்டுபிடிப்பின் எதிர்கால தாக்கம்..

இது குவாண்டம் கணிப்பொறிகள், தகவல் தொடர்பு, மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத்தில் (medical technology) புதிய புரட்சிகளை ஏற்படுத்தும்…

புதிய அளவீட்டு கருவிகள் மற்றும் அதிக செயல்திறனுள்ள தகவல் தொடர்பு முறைகளை உருவாக்கும்…

விஞ்ஞான உலகத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது…

ஆக மொத்தத்தில் அறிவியல் உலகில் ஒளியின் புதிய வடிவம் – இது ஒரு புதிய அதிசயம்..!

இத்தாலிய விஞ்ஞானிகள் சாதித்துள்ள இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இது ஒளி பற்றிய மனிதரின் புரிதலை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை…!

-பாலபத்திரஓணாண்டி

விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?

3 months 2 weeks ago

'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்?

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,சிராஜ்

  • பதவி,பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?'

ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும்.

ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது.

ஹைப்பர்லூப் (Hyperloop) என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை 2013இல் முன்மொழிந்தார் ஈலோன் மஸ்க். இதுதொடர்பாக 'ஹைப்பர்லூப் ஆல்பா' என்ற பெயரில் ஒரு 58 பக்க ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

அவரது ஹைப்பர்லூப் திட்டத்தின் மூலம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையிலான தூரத்தை (563 கிமீ) வெறும் 35 நிமிடங்களில் கடக்க முடியும் என்றும், இந்த திட்டத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் (இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 52,266 கோடிகள்) என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உலகில் நடைமுறையில் இருக்கும் ரயில், சாலை, நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்தைக் காட்டிலும், இந்த ஹைப்பர்லூப் மூலம் அதிவேகமாகவும் குறைவான செலவிலும் மக்களையும் பொருட்களையும் கொண்டுசெல்ல முடியும் என்று மஸ்கின் ஆய்வறிக்கை கூறியது.

இந்த ஹைப்பர்லூப் ஒரு ஓபன்சோர்ஸ் தொழில்நுட்பம் என்றும், இதில் பங்களிக்க பலரும் முன்வரவேண்டும் என்றும் அப்போது ஈலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்திருந்தார். 12 வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது, உலகின் மிகச் சில நிறுவனங்களே இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இதுவரை ஆர்வம் காட்டியுள்ளன. காரணம், இந்தத் திட்டத்தில் இருக்கும் சவால்கள்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Boringcompany

ஹைப்பர்லூப் என்றால் என்ன?

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, 410 மீட்டர் தொலைவுக்கு ஒரு ஹைப்பர்லூப் சோதனைப் பாதையை நிறுவியுள்ளது, ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம். செங்கல்பட்டு மாவட்டத்தின் தையூர் எனும் கிராமத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸின் டிஸ்கவரி வளாகத்தில் இந்த பாதை நிறுவப்பட்டுள்ளது.

எஃகு குழாய்களைக் கொண்டு, முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ஒரு வலையமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் குறைந்த அழுத்தச் சூழலில் பாட்களை (Pods- பயணிகள் அமர்வதற்கான, ரயில் கோச்கள் போன்ற ஒரு வசதி) அதிவேகமாகச் செலுத்துவதே இதன் முக்கிய அம்சம்.

"ஹைப்பர்லூப் ஒரு நவீன போக்குவரத்து அமைப்பாகும், அங்கு அதிவேக பாட்கள், காற்றின் உராய்வு இல்லாத குறைந்த அழுத்த குழாய்கள் வழியாக பயணிக்கின்றன. அதாவது வெற்றிடச் சுரங்கப்பாதையில் (Vaccum tunnel), விமானத்தின் வேகத்தில் நகரும் ஒரு ரயில் போல" என்கிறார் ஐஐடி மெட்ராஸ் பேராசிரியரும் ஹைப்பர்லூப் குழுவுக்கான ஆலோசகருமான சத்ய சக்கரவர்த்தி.

"இதில் சக்கரங்களுக்கு பதிலாக, மேக்னடிக் லெவிட்டேஷன் (மாக்லேவ்- Maglev) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாட்கள் மிதக்கின்றன. பின்னர் அவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. இதனால் அதிவேகமாக, குறைந்த ஆற்றலுடன், குறைந்தபட்ச உராய்வு விசையுடன் ஹைப்பர்லூப்பை இயக்க முடியும்" என்றும் சத்ய சக்கரவர்த்தி கூறுகிறார்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,IIT-Madras

படக்குறிப்பு,இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு, ஐஐடி மெட்ராஸ் நிறுவியுள்ள 410 மீட்டர் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை

இந்த மேக்னடிக் லெவிட்டேஷன், அதாவது காந்த சக்தியைக் கொண்டு பாட்களை பாதையிலிருந்து சற்று மேலே மிதக்க வைத்து, பிறகு அதை அதிவேகமாக செலுத்தும் மாக்லேவ் தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்.

உதாரணமாக சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில், உலகின் 'அதிவேக ரயில் சேவைகளில்' ஒன்று. இது மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டக்கூடியது.

ஆனால், ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு 1000 கிமீ என்ற வேகத்தைக் கூட எட்டமுடியும் என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

இருப்பினும், மாக்லேவ் ரயில்கள் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் பயணிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, அவை பொதுப் போக்குவரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயம் அதில் அதிகமான மக்கள் பயணிக்க முடியும்" என்கிறார்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சீனாவின் 'ஷாங்காய் மாக்லேவ்' ரயில்

ஹைப்பர்லூப் திட்டத்தில் இருக்கும் சவால்கள் என்ன?

நீண்ட தூரத்திற்கு சீல் செய்யப்பட்ட 'வெற்றிடக் குழாய் அமைப்பை' உருவாக்குவது அல்லது அதற்கான பிரத்யேக மாக்லேவ் பாதைகளை நிறுவுவது பொருளாதார ரீதியில் மிகவும் சவாலான ஒன்று.

"நகர அமைப்புகள் அல்லது இயற்கையை சீர்குலைக்காமல் ஹைப்பர்லூப்பிற்கு ஏற்ற நிலத்தைக் கண்டுபிடிப்பதும், கையகப்படுத்துவதும் எளிதல்ல. இதற்கு தீர்வு, ஏற்கனவே இருக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு அருகிலேயே ஹைப்பர்லூப் பாதைகளை உருவாக்குவது தான்," என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

ஹைப்பர்லூப்பில் இருக்கும் மற்றொரு சவால், அதன் அதீத வேகத்தைக் கருத்தில் கொள்ளும்போது, பயணிகள் பாதுகாப்புக்கு என எவ்வித விதிமுறைகளும், மத்திய அல்லது மாநில அரசுகளால் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

"ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் நமக்கு மட்டுமல்ல உலகிற்கே புதிது. அது இன்னும் எங்கும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தியாவில் அப்படி வர தயாராக இருக்கும்போது, அதற்கு என புதிய விதிகளை அரசு கொண்டுவரும்" என்கிறார் அவர்.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள்

ஹைப்பர்லூப் என்பது காற்றுப் புகாத, சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக அதிவேகத்தில் செல்லும் ஒரு போக்குவரத்து அமைப்பு எனும்போது, அவசர காலத்தில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் எழுவது இயற்கையே.

"அதிக வேகத்தில் பாட் நகர்ந்தாலும், ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் அவற்றின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். எனவே அது மோதுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழாயின் உள்ளே அவசரகால வெளியேற்ற அமைப்புகளும் நிறுவப்படும்.

மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மூலம் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, அவை ஆபத்தாக மாறுவதற்கு முன்பே தீர்க்கப்படும்" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

சீலிடப்பட்ட குழாய்கள் வழியாக செல்வதால், பெருமழை, வெள்ளம் போன்றவற்றால் ஹைப்பர்லூப் போக்குவரத்து பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு என்று அவர் கூறுகிறார்.

"இங்கே 1000 கி.மீ வேகம் ஒருசில வினாடிகளில் எட்டப்படாது. உள்ளே பயணிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு, படிப்படியாக அந்த வேகம் எட்டப்படும். அதேபோல நிறுத்தும் போது ஒரு குறிப்பிட்ட முறையில் வேகம் குறைக்கப்படும். இதனால் உள்ளே இருக்கும் பயணிகள் அதன் அதிர்வுகளை உணர மாட்டார்கள்" என்றும் அவர் கூறுகிறார்.

மற்றொரு முக்கியமான கேள்வி, ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வந்தால், அதில் பயணிப்பதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும்? சாமானிய மக்களால் பயணிக்க முடியுமா?

"நிச்சயமாக முடியும். கட்டணம் குறித்த முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், ரயில் பயணத்திற்கு இணையான கட்டணத்தை நிர்ணயிப்பதே இலக்கு" என்கிறார் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி.

உலகில் இதற்கு முன் செய்யப்பட்ட ஹைப்பர்லூப் சோதனைகள்

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829இல் வரையப்பட்ட ஓவியம்

ஹைப்பர்லூப் என்ற பெயரில் ஒரு தொழில்நுட்பத்தை முதலில் முன்மொழிந்தவர் ஈலோன் மஸ்க் தான் என்றாலும், ஒரு குழாய் வழியாக மக்கள் பயணிப்பது என்ற யோசனை மிகவும் பழமையானது.

வில்லியம் ஹீத் என்ற ஓவியரால், 1829-இல் வரையப்பட்ட ஓவியம் ஒன்று, வங்கத்தில் இருந்து (இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த போது) லண்டனுக்கு ஹைப்பர்லூப் போன்ற ஒரு அமைப்பில் மக்கள் பயணம் செய்வதைச் சித்தரித்தது.

ஆனால் அது, எதிர்காலத்தில் இத்தகைய போக்குவரத்து அமைப்புகள் இருக்கலாம் என்ற யோசனையை பகடி செய்து, கற்பனையின் அடிப்படையில் வரையப்பட்ட ஒரு ஓவியமே.

2013இல் ஈலோன் மஸ்க் வெளியிட்ட 'ஹைப்பர்லூப் ஆல்பா' ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அவரது 'தி போரிங் கம்பெனி' என்ற நிறுவனம் ஹைப்பர்லூப் சோதனையில் ஈடுபட்டது.

இதற்காக 2016இல், கலிபோர்னியாவில் அந்நிறுவனம் 1287 மீட்டருக்கு ஒரு சோதனை ட்ராக்கையும் வடிவமைத்தது. சில சோதனைகள் நடைபெற்று, ஹைப்பர்லூப் பாட்கள் மணிக்கு 463 கிமீ என்ற வேகத்தை எட்டின என்று அந்நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.

ஆனால், தற்போது வரை அதன் ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வரவில்லை. நகரங்களில் ஹைப்பர்லூப் அமைப்பை கொண்டுவருவதற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதன் இணையதளம் கூறுகிறது.

ஹைப்பர்லூப், ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம், இந்திய ரயில்வே, ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம்,Virginhyperloop

படக்குறிப்பு,'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது

இந்தியாவில் ஹைப்பர்லூப் எப்போது சாத்தியம்?

2020இல் 'ஹைப்பர்லூப் ஒன்' எனும் நிறுவனம் (2022 வரை விர்ஜின் ஹைப்பர்லூப் என்ற பெயரில் இயங்கியது), தனது இரு ஊழியர்களை பயணிகளாகக் கொண்டு, உலகின் முதல் ஹைப்பர்லூப் சோதனையை நடத்தியது. அமெரிக்காவின், நெவெடா பாலைவனத்தில் இதற்காக அமைக்கப்பட்ட பிரேத்யேக 500 மீட்டர் நீள பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனையில் 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனத்தின் ஹைப்பர்லூப் பாட் அதிகபட்சமாக மணிக்கு 172 கிமீ என்ற வேகத்தையே எட்டியது. ஆனாலும், ஹைப்பர்லூப் போக்குவரத்து, உலகின் அதிவேக மாக்லேவ் ரயில்களை விட 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்டது என அந்த நிறுவனம் கூறியது.

அதன் பின்னர் 2022இல் பயணிகளுக்காக அல்லாமல், ஹைப்பர்லூப் மூலம் பொருட்களை (Cargo) கொண்டுசெல்வதில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அந்நிறுவனம் அறிவித்தது. பிறகு, 2023 டிசம்பரில் பல்வேறு காரணங்களுக்காக 'ஹைப்பர்லூப் ஒன்' நிறுவனம் மூடப்பட்டது.

ஹைப்பர்லூப் போக்குவரத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், அதை இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து மெட்ராஸ் ஐஐடி-யின் குழு சாதித்தால், உலக அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம் அது அவ்வளவு எளிதல்ல என்பதையும் பேராசிரியர் சத்ய சக்கரவர்த்தி ஒப்புக்கொள்கிறார்.

"இன்னும் சோதனை கட்டத்தில் தான் இருக்கிறோம். எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 10-15 ஆண்டுகளில் இந்தியா தனது முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பைப் பெறும்," என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c93k0wll19po

பூமிக்கு பயம் காட்டுகிறதா 2024 YR4 விண்கல்? இது மோதும்போது உயிருக்கே பாதிப்பு ஏற்படுமா? Explained

3 months 2 weeks ago

2024 YR4 என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய Asteroid பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்கல் பூமியைத் தாக்கக்கூடும் என்று Scientists ஆரம்பத்தில் கவலைப்பட்டனர். பின்னர் அவ்வாறு நடக்க வாய்ப்பு குறைவாக இருப்பதாக அறிவித்தனர்.

இந்த Asteroid பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 3.1 சதவீதம் உள்ளது என ஆரம்பத்தில் மதிப்பிட்ட விஞ்ஞானிகள், பின்னர் 2032ஆம் ஆண்டில் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 0.28 சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறினர்.

ஆனால் இது Moon-ஐ தாக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக NASA மதிப்பிட்டுள்ளது.

#NASA #Earth #Space

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Checked
Tue, 06/24/2025 - 10:06
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed