நல்ல தமிழ் கற்போம்
பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன ?
ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்
பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன ?
ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்
“வலியின் புனைபெயர் நீ”
பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )
தமிழ்ப் பேராசிரியர்
“தீப்பிடித்து எரிகிறது
அந்தச் செங்கொன்றை என்று
பயமுறுத்தமாட்டேன்
அது உனக்கான ஆராதனை” (’வலியின் புனைபெயர் நீ)
சங்க இலக்கிய மரபில் காதலிக்குக் காதலன் உவமை சொல்லுகிறபொழுது, நீர்த்தடாகத்தில் பூத்திருக்கின்ற செங்கொன்றை மலர்களை எல்லாம் பார்க்கிறபொழுது, தீப்பற்றி எரிந்த காட்சிபோல் என் கண் முன்னதாகக் காட்டுகிறது என்று காதலியிடம் கூறிச் செல்லுகின்றான்.
அந்தக் காட்சி வண்ணத்தின் அடிப்படையாக உவமித்துச் சொன்னதாகும். ஆனால், பூப் போன்ற காதலியிடம் சொல்லுகிறபொழுது, “தீ” என்கிற வார்த்தை, அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயத்தை உண்டு செய்து விடலாம். அப்படியாக, உவமைகள் கூடக் காதலியிடம் பயமுறுத்த நான் விரும்புவதில்லை என்று கூறுகிற இந்த நவீன காதல் உணர்வுகள் எவ்வளவு மேன்மையானதாக இருக்கின்றது என்பதை உணர்கிறோம்.
காதலியின் மேலான அளவு கடந்த அன்பு காதலனை இவ்வாறு சொல்லச் சொல்கிறது. இவ்வாறான காதல் இருந்தால் போதும் உலகத்தில் எந்தக் காதலியும் மனைவியாகிறபொழுது உலகத்தைப் பார்த்துப் பயப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எனவே எதற்க்கும் பயப்படவே மாட்டாள்.
காதலிக்கும், காதலிக்குச் சொல்லப்போகும் உவமையிலும் கூட மென்மையை பதிவிக்கும் காதல் மனநிலைக்கு என்ன பரிசு தருவது?
அன்பு நிறைந்திருக்கும் உலகில் பூவின் மென்மையோடுக் காதலியை வாழ்விக்க எவ்வளவு மனத்தூய்மை வேண்டும். கூறும் வார்த்தைகள், பார்க்கும் காட்சிகள், கேட்கும் ஓசைகள், தொடும் தென்றல் இவை யாவும் காதலியைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்ட மோகன நிலையை ஒப்பிடக்கூடிய வார்த்தைகள் புவியில் வேறு எங்கு உள்ளது?
கூறப்படும் யாவும் யார் புதிதாய் பேசியது? இருந்த வார்த்தைகளை, இருந்த சிந்தனையை நாமே பேசியதாகவும், சிந்தித்ததாகவும் இறுமாப்புக் கொள்கின்றோம். அவ்வளவு தானே?
ஆழமாய் பதிந்து போனவைகள். சங்கம் தொட்டு இன்றுவரை காதல் எண்ணங்களில் விரிந்து கிளை பரப்பிக் கொண்டுதான் நிற்கின்றன.குதூகலத்தின் மையப் புள்ளியிலிருந்து பீறிட்டு வருகின்றன காதல் உணர்வுகள். அதைச் சாய்த்து விட எத்தனைக்கும் எவையும் அதற்குள்ளேயே ஜீரணித்து போய் விடுகின்றன.
உடலும், மனமும் துகள் துகளாய்ப் பிரிந்து பிரபஞ்சம் கலக்கும் சுகத்தை ஒவ்வொரு நொடியும் காதல் தருகிறது. காதலனும் தலை சுமந்து தூக்கிக் கிடக்கத் தவம் இருக்கிறாள் காதலி. உலகம் மறந்து அவளின் ஒற்றைச் சிரிப்பில் மனதைக் சிக்க வைத்துப் போய்க் கிடக்கின்றதில் நீண்ட தூரம் பிரயாணம் செய்கிறான் காதலன்.
ஆராதனை செய்து, ஆராதனை செய்து வரம் கேட்டுக் கிடக்கின்றான் அளவு கடந்த பக்தியோடு பக்தனாய்…
(கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களின்வலியின் புனைபெயர் நீ என்னும் கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை.... அதற்கான விமர்சனம்)
பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் )
தமிழ்ப் பேராசிரியர்
திருநின்றவூர்.
9283275782
பட மூலாதாரம்,GETTY IMAGES
இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் காதல் கவிதைகளையும் திரைப்பாடல்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழில் காதலைப் பேசும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன. குறுந்தொகையில் காதலைப் பாடும் அழகிய பத்து பாடல்களை பொருளுடன் இங்கே படிக்கலாம்.
1. யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே -
பொருள்: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் ஒருவருக்கொருவர் எந்த வகையில் உறவு? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப்போது பிரிவின்றி இருக்கும் நீயும் நானும் ஒருவரையொருவர் எவ்வாறு அறிந்தோம்? செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவது போல, அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்று கலந்துவிட்டன. பாடியவர்: செம்புலப் பெயல் நீரார்.
2. கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமைக் கவினே.
பொருள்: நல்ல பசுவிந் இனிய பாலானது அந்தப் பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல் கறக்கும் பாத்திரத்திலும் விழாமல் தரையில் சிந்தி வீணாவதைப் போல, எனது அழகும் எனது நிறமும் உதவாமலும் என் தலைவனுக்கும் இன்பம் பயக்காமலும் பசலை நோயால் வீணாகிறது. பாடியவர்: கொல்லன் அழிசி
3. கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பிந் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே
பொருள்: மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த மலர்களில் என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போன்ற மென்மையும் நெருங்கிய பற்களையும் உடைய பெண்ணின் கூந்தலைவிட நறுமணமுடைய பூக்களும் உள்ளனவா? நீ என் நிலத்து வண்டாதலின் நான் விரும்பியதை கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததைச் சொல்வாயாக. பாடியவர்: இறையனார்
4. வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
பொருள்: மூங்கிலை வேலியாகக் கொண்ட மலை நிலத்தில் வேரிலே பலாப் பழங்கள் தொங்குகின்ற மலை நாடனே! பலா மரத்தின் சிறிய கொம்பிலே பெரிய பலாப்பழம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல, தலைவியின் உயிரோ மிகச்சிறியது; அவள் உன்மேல் கொண்ட ஆசையோ மிகப் பெரியது. அந்த நிலையை அறிந்தவர் யார்? அவளை அடைந்துகொள்ளும் பருவத்தை உண்டாகிக் கொள்க. இரவிலே வந்து செல்லும் தலைவனைப் பார்த்து, தலைவியின் தோழி சொல்வதைப் போல அமைந்த பாடல் இது. "சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே" - என்ற வரிகளுக்காக புகழ்பெற்ற பாடல் இது. எழுதியவர் - கபிலர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
5. ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீர ளாரணங் கினளே;
இனைய ளென்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.
பொருள்: அழகிய, ஒடுங்கிய, அடர்த்தியான கூந்தலை உடையவள், பிறை போல் வளைந்த வாசனை நெற்றியை உடைய சிறு பெண், சுவையான குளிர்ந்த நீரைப் போன்றவள் என் தலைவி. அவளைப் பிரிந்தால் பொறுக்க முடியாத வருத்தம் தருகிறாள். அவள் இப்படிப்பட்டவள் என புனைந்து உரைக்கும் எல்லை எனக்குத் தெரியவில்லை. அவள் சொற்கள் மென்மையானவை. நான் அவளை அணையும்போது பஞ்சணையைப் போன்ற மென்மையை உடையவள். தலைவியோடு இன்புற்று, வெளியேறும் தலைவன் "இவள் ஐம்புலத்திற்கும் இன்பத்தைத் தருபவள்" என தன் நெஞ்சை நோக்கி கூறி மகிழ்வதைப் போல அமைந்த பாடல் இது. எழுதியவர் ஓரம் போகியார்.
6. பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல்
கேளே மல்லேங் கேட்டனம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே.
பொருள்: ஊரில் எல்லோரும் உறங்கும் இந்த இரவில், வலிமை உடைய யானையைப் போல வந்து, தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதால் உண்டான ஒலியைக் கேட்டேன். நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல, என்னுடைய தாய், நான் வருந்தும் அளவுக்கு என்னைத் தழுவியிருக்கிறாள். (அதனால், என்னால் வர இயலவில்லை). தலைவன் தன்னை அழைப்பதற்காக கதவைத் தட்டும் ஒலி கேட்டாலும், தன் தாய் உறக்கத்தில் தன்னைத் தழுவியிருப்பதால் வர முடியவில்லை என்று தலைவி சொல்வதைப் போல அமைந்த பாடல். எழுதியவர் கண்ணன்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
7. முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே.
பொருள்: காதலனைப் பிரிந்த பெண் படும் பாட்டைக் கூறும் பாடல் இது. அசைந்து வரும் தென்றல் காற்று எனை வருத்தாமல் இருக்க வேண்டும். என் காமநோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளோரை முட்டுவேனா, தாக்குவேனா? ஆவென்றும் ஓவென்றும் கூவுவேனா? என்ன செய்வதென்று தெரியவில்லை. எழுதியவர்: ஔவையார்.
8. காதல ருழைய ராகப் பெரிதுவந்து
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே.
பொருள்: காதலன் அருகில் இருந்தால் திருவிழா நடக்கும் ஊரைப் போல மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர் என்னைப் பிரிந்து சென்றால், அழகிய சிறு ஊரில் மனிதர் நீங்கிச் சென்ற பிறகு, அணில் விளையாடுகின்ற முற்றத்தை உடைய தனிமையுள்ள வீட்டைப் போல பொலிவு அழிந்துபோய் வருந்துவேன். இந்தப் பாடலில் உள்ள "அணிலாடும் முன்றில்" என்ற வார்த்தைகள் மிகுந்த கவித்துவமுடையவை. எழுதியவர் அணிலாடு முன்றிலார்.
9. கவவுக் கடுங்குரையள் காமர் வனப்பினள்
குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே
யாங்குமறந் தமைகோ யானே ஞாங்கர்க்
கடுஞ்சுரை நல்லா நடுங்குதலைக் குழவி
தாய்காண் விருப்பி னன்ன
சாஅய்நோக் கினளே மாஅ யோளே.
பொருள்: மாமை நிறமுடைய தலைவி வேகமாகத் தழுவுவாள். விரும்பத்தக்க அழகை உடையவள், குவிந்த மெல்லிய மார்பை உடையவள். நீண்ட கூந்தல் உடையவள். தன் தாயைக் காண வேண்டும் என்ற விருப்பத்தோடு இருக்கும் இளங்கன்றைப் போல, தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் மெலிந்த பார்வை உடையவள். அவளை மறந்து எப்படி இருப்பேன்? இந்தப் பாடலை எழுதியவர் சிறைகுடியாந்தையார்.
10. நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
பொருள்: மலைகளின் அருகில் குறிஞ்சி மலரின் தேனை வண்டுகள் எடு்கும் நாட்டை உடைய தலைவனோடு நான் கொண்ட நட்பானது பூமியைவிடப் பெரிது. வானத்தைக் காட்டிலும் உயர்ந்தது. கடலைக் காட்டிலும் ஆழமானது. தன் காதலனோடு தான் கொண்ட நட்பு எல்லாவற்றையும்விடப் பெரியது என்கிறாள் தலைவி. இந்தப் பாடலைப் பாடியவர் தேவகுலத்தார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
"என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்."
இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும்.
ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான்.
2021ஆம் ஆண்டு இறுதியில், இளவரசர் ஆண்ட்ரூ குறித்து டேனியெல்லா எல்சர் எழுதிய ஒரு கட்டுரையில், "பறையா" என்று அவரைக் குறிப்பிட்டிருப்பார்.
இதேபோல், ஏன்.என்.ஐ செய்தியின்படி, 2021ஆம் ஆண்டு ஜூலை மாத கடைசியில் ஆப்கானிஸ்தான் தாலின்பகளால் கைப்பற்றப்பட்ட நேரம். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆன்டனி ப்ளிங்கன், "தனது சொந்த மக்களுக்கு எதிராகவே அட்டூழியங்களைச் செய்யும் ஆப்கானிஸ்தான், தனது மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படாத ஆப்கானிஸ்தான், ஒரு பறையா நாடாக மாறிவிடும்," என்று குறிப்பிட்டார்.
இப்படியாக இந்தச் சொல், ஆங்கில மொழியில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல் பயன்படுத்தப்படுவது சரியா என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.
2018-ம் ஆண்டு, டைம் இதழ் வெளியிட்ட ஓர் அட்டைப்படத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுடைய படத்தைப் போட்டு, "தயாரிப்பாளர், வேட்டையாடி, பறையா," என்று குறிப்பிட்டிருந்தது.
அதைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் டைம் இதழுக்குக் கடிதம் எழுதினார். அதில், "இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பறையா என்று அழைக்கப்பட்டார்கள், அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய வழியில் வந்த பலரும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். உங்கள் நாட்டில் பயன்படுத்தப்படும் 'N (நிக்கர் அல்லது நீக்ரோ என்ற சொல் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பயன்படுத்தப்பட்டது)' என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லைப் போலவே மோசமாக, அவமானப்படுத்தும் விதமாக இது பயன்படுத்தப்படுகிறது" என்று கண்டித்திருந்தார்.
சாதிய பாரபட்சம் கொண்ட இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதைக் கண்டித்து அவர் கடிதம் எழுதியபோது, இதன் பயன்பாடு குறித்துப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதன் பிறகும் இந்தச் சொல்லின் பயன்பாடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஒரு குழுவில் இருந்தோ, பொதுச் சமூகத்திடம் இருந்தோ, ஏதோவொரு காரணத்திற்காக ஒதுக்கப்படுபவரைக் குறிக்க, "பறையா" என்ற சொல் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. தனி மனிதரைக் குறிப்பதற்காக மட்டுமின்றி, சர்வதேச அளவில் மற்ற நாடுகளால் ஒதுக்கப்படும் நாட்டை கூட "பறையா ஸ்டேட் (Pariah State)" என்று குறிப்பிடுகிறார்கள்.
உலகின் ஒரு குறிப்பிட்ட மொழி பேசக்கூடிய ஒரு மக்களிடையே இருக்கின்ற சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக, ஒதுக்கப்பட்ட சாதியாக பறையர் இன மக்கள் வகைப்படுத்தப்பட்டனர். அதன் விளைவாக சொல்லவொண்ணா கொடுமைகளுக்கும் உள்ளானார்கள்.
இந்நிலையில், இத்தகைய சொல் பயன்பாடு அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே பல்வேறு மன உளைச்சலை உண்டாக்குவதாக சமூக ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் மானுடவியல் ஆய்வாளர் முனைவர்.அ.பகத் சிங் கூறுகிறார்.
மேலும், இந்தியா முழுக்கவே இருக்கும் சமூகக் கட்டமைப்பில் நூற்றுக்கணக்கான சாதிகள் பட்டியலினத்தவர்களாக இருந்துள்ளனர், இருக்கின்றனர். ஆனால், தெற்கே இருக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் ஒரேயொரு சாதியின் பெயர் மட்டும் எப்படி, உலகளவில் ஒருவரையோ, ஒரு நாட்டையோ இழிவுபடுத்துவதற்குரிய அடையாளச் சொல்லாக மாறியது?
அதன் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொள்ள, ஆங்கிலப் பேராசிரியர் முனைவர்.அழகரசனிடம் பேசினோம்.
"பாப்லா நெரூடா, டிம் மொராரி போன்ற எழுத்தாளர்கள்கூட தங்கள் எழுத்துகளில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். இது ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயராக உள்ளது. ஆனால், இதை வேறு மொழி பேசுபவர்கள் பயன்படுத்தும்போது, இழிவானவர்களை, ஒதுக்கப்படுபவர்களைக் குறிக்கக்கூடிய பொதுச் சொல்லாக மாறுகிறது.
வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் மானுடவியல் ஆய்வாளர்களின் குறிப்புகள், இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், இனவியலாளர்களின் குறிப்புகள் போன்றவற்றில், இந்தச் சொல்லின் பயன்பாடு, அதன் பின்னணி போன்றவை 300 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது.
பட மூலாதாரம்,ARCHIVE.ORG
இந்தச் சொல் முதன்முதலாக போர்ச்சுகீசிய மொழியில் தான் உலா வரத் தொடங்குகிறது. 1500 முதல் 1517 வரை போர்ச்சுகீசிய அரசரின் சார்பாக இந்தியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த டுவர்டே பர்போஸா (Duarte Barbosa) என்பவரின் எழுத்துகளில் தான் முதன்முதலில் 'பறையாஸ் (Pareas)' என்ற சொல் பயன்பாடு தெரிகிறது.
அங்கிருந்து பிரெஞ்சு மொழிக்குச் சென்ற இந்தச் சொல், பிறகு, ஜெர்மன், ஸ்பானிய மொழிகளுக்கும் பின்னர் ஆங்கிலத்திற்கும் சென்றது" என்று கூறினார்.
அவரிடம், இந்த ஒரு குறிப்பிட்ட சொல், எப்படி இவ்வளவு மொழிகளில் இத்தகைய ஓர் அர்த்தத்தில் பயன்பாட்டிற்கு வர முடிந்தது என கேட்டபோது, "வேறு நாடுகளைச் சேர்ந்த இனவியலாளர்களின் குறிப்புகள் மற்றும் பயணக் குறிப்புகளில் தான் முதலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களுக்கு இது மிகவும் புதிரான, புதிதான விஷயமாக இருந்ததுதான், அதைக் குறிப்பிடக் காரணம்.
இங்கிருந்த தீண்டாமை அவர்களுக்குப் புதிதாகவும் இவ்வளவு கட்டுப்பாடுகளை ஒரு சமூகத்தின் மீது எப்படிச் செலுத்த முடிகிறது என்று அவர்களுக்குப் புதிராகவும் இருந்தது," என்று கூறுகிறார்.
மேலும், இந்தியாவில் பல்வேறு சாதிகள் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கும்போது, ஏன் இந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பெயர் மட்டும் வேறு மொழிகளுக்குச் சென்றது என்ற கேள்வியை அவரிடம் எழுப்பியபோது, "சுப்புராயலு போன்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், பட்டன் ஸ்டெயின், நொபோரு கராஷிமா போன்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரின் குறிப்புகளின்படி பார்த்தால், 12-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் 'தீண்டா' என்ற சொல் பிரயோகமே வருகிறது.
அப்படி நடைமுறையில் பின்பற்றப்படத் தொடங்கிய தீண்டாமை சார்ந்த சொல் பிரயோகம் இதில் பங்கு வகிக்கிறது. துடைப்பத்தை பின்னால் கட்டிக்கொண்டு, நடக்கும் பாதையைச் சுத்தம் செய்துகொண்டே செல்லுதல், செருப்பைக் கையில் எடுத்துச் செல்லுதல் போன்ற நடைமுறை பழக்க வழக்கங்கள் ஒரு வகை. அதேபோல் சாதியக் குறியீடு நிறைந்த சொல் பிரயோகம் ஒரு வகை.
அயோத்திதாச பண்டிதர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
கறுப்பாக இருக்கும் காக்கையை 'பற காக்கா', சொறி பிடித்த நாயை 'பற நாய்' என்று அழைப்பதை அவர் குறிப்பிடுகிறார். அதாவது இந்தச் சமுதாயத்தில் எவையெல்லாம் இழிவாகக் கருதப்பட்டனவோ அவற்றுக்கு எல்லாம் பற, பறை என்ற அடைமொழி வைக்கப்பட்டன.
மேலும், ஒருவரை வசைபாடும்போதும் கெட்ட வார்த்தைகளில் சாதியக் குறியீடு வைக்கப்பட்டன.
பட மூலாதாரம்,GETTY IMAGES
இதைப் போல, ஒட்டுவைத்துப் பேசக்கூடிய பழக்கம் இந்தியாவில் பிற பண்பாடுகளில் இல்லை. கொல்கத்தாவிலோ, ஆந்திராவிலோ, மத்தியப் பிரதேசத்திலோ இதைப் பார்க்க முடியவில்லை. திராவிடக் கழகத்தில் தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காக மிகவும் பாடுபட்டவர் சாமி நாயுடு. அவரை பற நாயுடு என்று அழைத்தார்கள்.
இந்த மாதிரியான போக்கு, மாலா, மதியா, வால்மீகி போன்ற சமூகங்களுக்கு வரவில்லை.
வால்மீகி என்றொரு தாழ்த்தப்பட்ட சமூகம் இருக்கிறது. அதற்காக, வால்மீகி என்று கூறித் திட்டும் பழக்கம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் தான் பற நாய் என்று பறையர் சாதியக் குறியீட்டை வைத்துத் திட்டும் பழக்கம் இருக்கிறது.
அதுமட்டுமின்றி, அயோத்திதாசப் பண்டிதரின் குறிப்புகளின்படி, பறை என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓரிடத்தில் ஒரு செயலைக் குறிக்கப் பயன்படும் அதேநேரம், இன்னோரிடத்தில் ஒரு நபரையோ உயிரினத்தையோ குறிக்கவும் அது பயன்படுத்தப்படுகிறது.
இப்படியாக ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரை அடிப்படையாகக் கொண்ட சொல் பிரயோகம் பொதுத் தளத்தில் பயன்பாட்டில் இருப்பது, வேறு மாநிலங்களில் இல்லை. அதனால் இங்கிருந்த இந்தக் குறிப்பிட்ட வார்த்தைப் பயன்பாட்டின் மீது வெளிநாட்டவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இப்படியாக, ஒரு வார்த்தையைப் பொதுவான இழிவுக்குப் பயன்படுத்துவதைப் பார்த்தவர்கள், அதை ஒரு பொதுவான இழிசொல்லாகவே ஆரம்பத்தில் கருதினார்கள். அதனால், அதைத் தம் மொழியிலும் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.
அடையாளப்படுத்திய ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி
அப்படிப் பயன்படுத்திய வெளிநாட்டவர்கள், 18, 19-ம் நூற்றாண்டு வரை, பறையா என்ற சொல்லை தீண்டப்படாதோருக்கான ஒரு பொது சொல்லாகவே புரிந்திருந்தார்கள். அதன்பிறகுதான் முழுமையாகத் தெரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால், அதேநேரத்தில் அந்தச் சொல்லின் பயன்பாடும் பெருமளவு வளர்ந்துவிட்டது," என்று கூறினார் முனைவர்.அழகரசன்.
முனைவர் அழகரசன் கூறியதைப் போல, போர்ச்சுகீசிய மொழிக்குச் சென்ற பறையா என்ற சொல், பிரெஞ்சு, ஜெர்மன் எனப் பல்வேறு ஐரோப்பிய மொழிகளுக்கும் பரவியது. 1823-ம் ஆண்டில், டெர் பறையா (Der Paria), என்ற தலைப்பில் பெர்லினில் ஜெர்மனியிலுள்ள யூதர்கள் எதிர்கொண்ட பாகுபாடுகளைப் பற்றிய நாடகத்தை மைக்கேல் பீர் என்ற யூதக் கவிஞர் உருவாக்கினார். அது பின்னர், 1826-ம் ஆண்டில் பாரீஸிலும் இயற்றப்பட்டது.
பறையா என்ற சொல்லை, வெறுமனே அரசியல் ரீதியிலான சொல்லாக மட்டுமின்றி, மானுடவியல் ரீதியாக, சமூக ரீதியாக ஒருவரை, ஒரு குழுவைச் சிறுமைப்படுத்த பயன்படுத்தப்பட்டது என்று எலெனி வரிகாஸ் தன்னுடைய தி ஃபிகர் ஆஃப் தி அவுட்காஸ்ட் (The Figure of the Outcast) ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியாகத் தொடங்கிய இந்தச் சொல்லின் பயன்பாடு, பிற்காலங்களில் இந்தச் சொல்லின் வரலாற்றுப் பின்னணி குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்த பிறகும், இப்போதும்கூட பொதுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
2011-ம் ஆண்டு அமெரிக்காவில் "பறையா" என்று பெயரிடப்பட்டு ஒரு படம் வெளியானது. தன்பால் ஈர்ப்பாளராக இருக்கும் ஓர் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் குடும்பத்தாலும் சுற்றத்தாலும் ஒதுக்கப்படுவது குறித்த அந்தப் படத்திற்கு இட்ட பெயர் தான் இது.
இப்படியாக தமிழ்நாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் குறிக்கும் சொல்லை, உலகின் பல்வேறு பகுதிகளில் இழிசொல்லாக, மோசமான நிலையிலுள்ள ஒருவரைக் குறிக்கும் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, இந்தச் சொல்லை அவமதிப்பான சொல் என்று அடையாளப்படுத்தியது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
2011-ம் ஆண்டு வெளியான 'பறையா'
இருப்பினும் இதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட உலகச் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவில் ஒருவருடைய சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், உலகளவிலான ஒரு சொற்பிரயோகம், அந்த மக்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
இத்தகைய சொற்பிரயோகம், என்ன மாதிரியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துகிறது எனத் தெரிந்துகொள்ள, மானுடவியல் ஆய்வாளர் முனைவர்.அ.பகத் சிங் பிபிசி தமிழுக்காகப் பேசியபோது, "எந்த ஒரு மொழியிலும், ஒரு கலாச்சாரத்தை வரையறுப்பதற்கான அவசியம் இருக்கும். பிரிட்டிஷ்-இந்திய சமூகத்தில் ஆங்கில மொழி நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியதால் தான், அதன் முதன்மைத்துவம் இன்றும் இருக்கிறது.
உள்ளூர் நிர்வாகத்திற்கு, இங்கிருக்கும் கலாச்சாரத்தை, சமூக அமைப்பை வரையறுக்கக்கூடிய சொற்கள் தேவைப்பட்டன. இந்திய கலாச்சாரத்தில் இருக்கக்கூடிய சாதிய அமைப்பை, அதில் இருக்கும் பாகுபாட்டை விவரிக்கக்கூடிய வகைப்பாட்டில் இருந்து வரக்கூடிய சொல்தான் பறையா.
அம்பேத்கர் இருக்கின்ற தனிப்பட்ட சாதிய அடையாளங்களை நீக்கவே பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் என்ற வகைப்பாட்டை உருவாக்கினார்.
ஆனால், ஒரு மொழியை நிர்வகிக்கக்கூடிய இடத்தில் மேல்தட்டைச் சேர்ந்த, மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர் இருக்கையில், அவர் இந்தக் குறிப்பிட்ட சொல், இழிவுபடுத்தக்கூடியதாக இருக்கிறது என நினைக்கப்போவதில்லை. ஏனெனில், அந்தச் சொல் அவரைப் பாதிக்கப்போவதில்லை. அவருக்கும் அந்தச் சொல்லுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆனால், உலகளவில் மக்கள் பரவி வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற பேச்சுவழக்கு அந்தச் சமூகத்தினரிடையே மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆகவே, இத்தகைய வார்த்தைப் பயன்பாடுகள், இத்தகைய பாகுபாடுகளை எதிர்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவரை அது எந்தளவுக்குப் பாதிக்கக்கூடும் என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது. அதுவும், இந்த ஒரு சொல்லுக்கு மட்டுமல்ல, இதுபோல் வேறுமொழிகளில் இருந்து பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் அனைத்திற்குமே உள்ளது. இதைப் போலவே, ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை, திருநங்கைகளை இழிவுபடுத்தும் சொற்களைச் சரிசெய்யும், மொழியைச் சீர்திருத்தும் முயற்சிகளில் பல்வேறு மொழியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இதைச் சீர்திருத்துவதற்கான தேவையும் அதிகமாகவே உள்ளது.
ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான அமைப்புகள் வெகுவாக வளர்ச்சியடையத் தொடங்கிய பிறகு தான், நீக்ரோ என்ற சொல்லின் பயன்பாடு மாறத் தொடங்கியது. இந்தியாவிலேயே, அழியும் நிலையில் இருந்த பழங்குடிக் குழுக்களைக் குறிக்க, பின்தங்கிய பழங்குடிக் குழு (Primitive tribal group)என்று குறிப்பிடப்பட்டது. அதை மாற்றி தற்போது, அழியும் நிலையிலுள்ள பழங்குடியினக் குழு (PVTG) என்று மாற்றப்பட்டது.
அதேபோல், இந்திய சமூகத்திலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற இழிவுபடுத்தக்கூடிய சொற்களையும் விவாதித்து, சீர்திருத்தவேண்டும். சமூக செயல்முறையில், இவை அனைத்துமே ஒரு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, தவறு என்று நிரூபிக்கப்படும்போது, அடுத்த கட்டத்தில் அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்கக்கூடிய சமூக சூழலை நோக்கி நகரமுடியும்," என்று கூறினார்.
இதுகுறித்துப் பேசிய பட்டியல் சாதி மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்பட்டுவரும் சமூக ஆர்வலர் புனித பாண்டியன், "2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களிடையே திருமணத்திற்கு வரன் பார்க்கும் ஷாதி டாட் காம் என்ற ஓர் இணையதளம் சாதியரீதியிலான பாகுபாட்டை மேற்கொள்வதாகக் கூறி கடுமையாகச் சாடப்பட்டது.
சாதிரீதியாக வரன் பார்ப்பது குறித்த வசதியைக் குறிப்பிட்டு, அது தன் நாட்டு சமத்துவச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இங்கிலாந்தின் சமத்துவச் சட்டத்தின் கீழ் சாதியரீதியிலான பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதும் உள்ளடங்கியுள்ளது. அதைப் போல, மொழியிலுள்ள வார்த்தைப் பயன்பாட்டிலும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சமுதாயத்தின் அனைத்துத் தரப்பிலும் இத்தகைய பயன்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அதுதான், சமூகப் புரிதலுக்கு வழிவகுக்கும்," என்று கூறினார்.
இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.
தர்மத்தின் மனிதன் என்று ஒருவனையாவது உங்களால் சுட்ட முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒன்றிலோ அல்லது மற்றொன்றிலோ அவர்கள் தம் தர்மத்தை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் மகாபாரதத்தில் தர்மத்தின் மனிதன் என்று சுட்டிக்காட்டும்படி ஒருவன் இருந்தான். இராமாயணத்தில் கும்பகர்ணனைப் போலத் தன் அண்ணன்களிடம் அபரிமிதமான பாசம் கொண்டவன், கர்ணனைப் போலச் செஞ்சோற்றுக் கடன் கழித்தவன், தன் குடும்பப் பாரம்பரியத்தின் மேல் கொண்ட மரியாதையால் தன் அண்ணிக்கு ஒரு அக்கிரமம் நிகழ்ந்த போது அதைத் தட்டிக் கேட்டவன் அவன். அப்படிப்பட்ட தர்மவான் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
திருதராஷ்டிரனின் மகன்களில் ஒருவர் விகர்ணன். இவரது காதுகள் பெரிதாக இருந்தமையால் இப்பெயர் பெற்றார். பேருக்கேற்றாற்போல் நல்ல விஷயங்களைத் தன் விசாலமான காதுகளால் உட்கிரஹித்துக் கொள்ளக் கூடியவர். இவரும் அர்ஜுனனைப் போல வில் வித்தையில் சிறந்து விளங்கியவர். இவரது மனைவி காசிராஜனின் மகள் சுதேஷ்ணவதி. இவர்களது மகள் துர்கா. இவள் கர்ணனின் மகன் சத்யசேனனை மணந்தாள்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில் வித்தையைக் கற்பித்தவர் துரோணாச்சாரியார். இவர்களுக்குப் பயிற்சி முடிந்தபின் குரு துரோணர் தன்னை அவமானப்படுத்திய துருபதனை குருதட்சிணையாகக் கொண்டுவரும்படிக் கேட்டார். துரியோதனன் துச்சாதனன் யுயுத்சு ஆகிய சகோதரர்களுடன் விகர்ணனும் பாஞ்சாலத்துக்குப் படை எடுத்துச் சென்றார். ஆனால் அவர்கள் தாக்குதல் முறியடிக்கப்பட்டதால் பின்வாங்கினர். அதன் பின் அர்ஜுனன் துருபதனை வென்று துரோணருக்குக் குருதட்சணையாக்கினான். துருபதன் மகள் பாஞ்சாலியைப் பாண்டவர்கள் ஐவரும் மனைவியாகப் பெற்றனர்.
எதற்கும் உதவாத நிலத்திப் பண்படுத்தி இந்திரப் ப்ரஸ்தமாக்கி பாண்டவர்கள் இருந்து வந்தபோது அங்கே அவர்கள் அழைப்பின் பேரில் விருந்துகுச் சென்றனர் கௌரவர்கள். அப்போது அதன் அழகில் மயங்கி துரியோதனன் நிலம் என்று நினைத்து நீரில் காலை வைக்கக் குப்புற விழுந்தான். அதைக்கண்டு பாஞ்சாலி நகைக்க அவளைப் பழிவாங்க எண்ணினான். அதற்குத் தோதாய்த் தங்கள் அஸ்தினாபுரத்துக்கு பாண்டவர்கலை மறு விருந்துக்கு அழைத்து வந்தார்கள் கௌரவர்கள்.
வந்து விருந்து முடிந்ததும் சும்மாயிராமல் துரியோதனன் பகடைவிளையாட்டுக்கு அழைக்க தர்மனும் ஒப்புக் கொண்டு விளையாடினான். அப்போதே விகர்ணன் அவ்விளையாட்டினை எதிர்த்தான். ஆனால் விளையாட்டு வினையாகி தர்மர் பாஞ்சாலியையும் பிணையாக சூதில் வைத்துத் தோற்றுப் போனார். அதனால் ஓராடையில் இருந்த அவளைச் சபைக்கு இழுத்து வந்து மானபங்கப்படுத்துமாறு துரியோதனன் ஆணையிட துச்சாதனன் பாஞ்சாலியைச் சபைக்கு இழுத்து வந்தான்.
எண்ணற்ற சான்றோரும் ஆன்றோரும் பிதாமகர் பீஷ்மரும் அமைந்திருந்த சபையில் பாஞ்சாலி “தன்னைத் தோற்றபின் தர்மர் என்ன உரிமையில் என்னையும் வைத்துத் தோற்றார்?” எனக் கேள்வி எழுப்பினாள். அதற்கு யாரும் பதிலளிக்காதபோதும் விகர்ணன் அவளது கூற்று சரி என அவளுக்காகப் பரிந்து பேசினான். அவளுக்கு அச்சபையில் மானபங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என அவன் எவ்வளவோ முயற்சித்தும் அது நிகழ்ந்தேவிட்டது.
பின்னர் கர்ணன் விகர்ணனிடம் ” அத்தனை பேர் நிறைந்த சபையில் நீ மட்டும் கௌரவர்களுக்கு மாற்றாக, திரௌபதிக்கு ஆதரவாக ஏன் பேசினாய்?”” எனக் கண்டித்தார். அதற்கு விகர்ணன் “ என்னதான் இருந்தாலும் பாண்டவர்கள் எங்கள் சகோதரர்கள். எங்கள் அண்ணியார் பாஞ்சாலி. அவர்களுக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால் அது குருவம்சத்துகு நிகழ்ந்த அவமானமே ஆகும். இது எங்கள் குலமே நாசமடைய வழிவகுக்கும். அதனால்தான் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன்” என்றான். அவ்வளவு தர்மநெறி மிக்கவன் விகர்ணன்.
அவன் உரைத்தது போல் பாஞ்சாலிக்கு நிகழ்ந்த அவமானமே குருக்ஷேத்திரப் போர் ஏற்படக் காரணமாயிற்று. இப்போரில் தன் சகோதரன் துரியோதனனுக்காக விகர்ணன் போரிடுகிறான். சிறந்த போர்வீரனான விகர்ணன் போரின் ஏழாம் நாளில் துருபதனையும் சிகண்டியையும் தாக்கிப் பின்வாங்கச் செய்தான். பத்தாவது நாளில் அர்ஜுனனும் சிகண்டியும் பீஷ்மரை அடையாமல் தடுக்கிறான். பதிமூன்றாம் நாள் போரில் அபிமன்யு கொல்லப்படுகின்றான்.
பதினான்காம் நாள் போர் ஆரம்பமானது. கௌரவர்கள் அனைவரையும் தான் ஒருவனே கொன்றழிப்பதாக சபதம் செய்த பீமன்முன் நிற்கின்றான் விகர்ணன். கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய ஒரே மனிதன் என்பதால் அவனைக் கண்டதும் கருணை மிகுகிறது பீமனுக்கு. ” தர்மத்தின் மனிதனே! ஒதுங்கிப் போ நீ என் முன்னிருந்து. அதர்மத்தின் பக்கம் நிற்காதே. அதற்குத் துணை போகாதே “ என்று அறிவுறுத்துகின்றான்.
“ அது முடியாது பீமா. அதர்மவாதிகள் என்றாலும் நாங்கள் வெற்றிபெற மாட்டோம் என்றாலும் நான் எனது சகோதரர்களைக் கைவிடமாட்டேன். ”. என்கின்றான். அதற்கு பீமன் “ அன்றைக்கு சபையில் பாஞ்சாலிக்கு நடந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தாயே! ” என்று கேட்கிறான். அதற்கு விகர்ணன்” அன்று அண்ணியாருக்காக குரல் கொடுத்தேன். இன்று என் அண்ணன்களுக்காகப் போரிட வந்து நிற்கின்றேன். இரண்டுமே என் கடமைதான். இக்கட்டில் இருப்பவர்களைக் கைவிடுவதல்ல என் தர்மம். வா பீமா.போரிடுவோம்” என்று அறைகூவுகின்றான்.
வேறுவழியில்லாமல் பீமனுக்கும் விகர்ணனுக்கும் இடையே யுத்தம் நிகழ்கிறது. விகர்ணன் தாக்கப்பட்டு இறக்கும் தருவாயில் பீமனிடம் தன் இறுதிக் கடன்களைச் செய்யுமாறு கேட்கிறான். பீமனின் கண்களில் நீர் பொங்கி வழிகிறது. அவன் தலையை மடியில் வைத்தபடி பீமன் புலம்புகிறான். ” தர்மத்தின் மனிதனே.. அதர்மத்தின் பக்கம் நின்றதால் உன்னைக் கொல்ல வேண்டி வந்ததே. அல்லவர்களை அழிக்கும்போது நல்லவர்களையும் அழிக்க நேர்கிறதே. இதுவே குருவம்சத்தைப் பீடித்த கேடு. என் செய்வேன் விகர்ணா” என்று மாபெரும் உருவமுடைய பீமன் சிறுகுழந்தையைப் போலக் கலங்கி அழுகின்றான்.
எத்தகைய சூழலிலும் தன் தர்மத்தை விட்டு விலகக்கூடாது என்று வாழ்ந்து சென்ற விகர்ணனின் கதை நாமும் பின்பற்றக்கூடியது தானே குழந்தைகளே.
தாய்மொழியும் தாய்மண்ணும் ஒவ்வொரு மனிதனுள்ளும் எத்தனை திட்பமான உணர்வுகளால் நெய்யப்பட்டுள்ளது என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. அதன்படி தமிழ் என்ற சொல்லே நமக்குள் ஒரு தித்திப்பை உருவாக்குவதை நாம் உணர்ந்திருப்போம். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல் உலகின் ஏதோ ஒரு மூலையில் நம் செவியில் தமிழ் விழுந்தால் நம்முள் ஏற்படும் மாற்றங்கள் தாய்மொழியின் வீரியத்திற்கு ஒரு உதாரணம். மொழியையும் மண்ணையும் ஒரே சொல்லால் சுட்டுவது என்பது “கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா…” என்பது போன்ற இரட்டிப்பு மகிழ்வு தருவது. தமிழ் என்னும் சொல் அத்தகையதே. நம் முன்னோர்கள் தந்த இலக்கியங்களில் தமிழ் மொழியையும் அது பேசப்படும் இடத்தையும் எவ்வாறு அழைத்தார்கள்? அதில் எத்தகைய உணர்வுகள் பிரதிபலித்தன?
உணர்வு என்பதே ஒரு அற்புதமான சொல். நேர்மறையான, உன்னதமான, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அகத்தை ஊடுருவும் பொழுது ஏற்படுவதே உணர்வு. தொன்மையில் இருந்தது போலன்றி தற்காலத்தில் சொற்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு பொருளின் அடர்த்தி நீர்த்துப் போய்விட்டது. பள்ளி செல்லும் வயதில், 80களின் முற்பகுதியில், மதுரை மேம்பாலங்கள் அனைத்திலும் “இன உணர்வு கொள்” என்று கரியினால் எழுதப்பட்ட வாசகத்தை பார்த்தபடி கடந்ததுண்டு. அறியாமையில் ஈர்ப்பு ஏற்படுத்திய வாசகம். ஆனால் அதிலுள்ள உணர்வு என்னும் பொருள் விரிவடைவதற்குரிய உன்னதம் இல்லாமல் சுருங்குதற்குரிய சுயநலம் மிக்கது என்று அறிய சிலவருடங்கள் ஆனது. தமிழ் சார்ந்த சொல்லாடல்கள் பலவும் தற்போது அத்தகைய நிலையில் தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டு இலக்கியம் பக்கம் நகரலாம்.
தமிழ்நாடு என்ற பெயர் எப்போது வந்தது என்றவுடன் சட்டென்று பதிலாய் தோன்றுவது அறுபதுகளில் நடந்தவையே. ஆனால் அதற்குச் சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னால், மூவேந்தர்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, அவர்களின் நிலப்பரப்பை எல்லாம் ஒன்றடக்கி “தமிழ்நாடு” என்றார் இளங்கோ அடிகள். சிலப்பதிகாரத்தில் காட்சிக் காதையில் ஒரு பாடல்:
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்டலை யேற்ற வரைக வீங்கென…”
காட்சிக் காதை என்பது வஞ்சிக்காண்டத்தில் குன்றக் குரவையின் பின்னே வருவது. குன்றக் குரவையில், கோவலன் இறந்தபின், அவன் தேவர்களுடன் வந்து கண்ணகியை விமானம் மூலம் வானுலகம் அழைத்துச் செல்லும் காட்சியை குறவர்கள் பார்க்கின்றனர். தாங்கள் கண்டதை காட்சிக் காதையில் அவர்கள் சேரன் செங்குட்டுவனிடம் விவரிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, காட்சிக் காதையில், கண்ணகிக்காக கல் நடும் பொருட்டு இமயத்திலிருந்து கல் எடுத்து வர திட்டமிடுகிறான் செங்குட்டுவன். ஆனால் வடக்கில் இருக்கும் மன்னர்கள் அவனை தடுக்கக்கூடும் என்ற தன் எண்ணம் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசிக்கிறான். அப்போது வில்லவன் கோதை என்னும் அமைச்சர், கடலை எல்லையாகக் கொண்ட இந்நிலம் முழுவதையும் (இமயம் முதல் குமரி வரை) உன் ஆளுகையின் கீழ் “தமிழ்நாடு” என கொண்டுவர எத்தனித்திருக்கும் உன்னை எவரும் தடுக்க இயலாது என்று சொல்வதே இப்பாடல்.
இதே சிலப்பதிகாரத்தில், அரங்கேற்று காதையில், மாதவியின் ஆசிரியர் எப்படிப்பட்ட தன்மை கொண்டவர் என்பதற்கு ஒரு பாடல் வருகிறது:
“இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி
வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து…”
தமிழ் முழுமையாய் கற்றறிந்த, கடலை எல்லையாகக் கொண்ட தமிழகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவன் என்கிறது இப்பாடல். தமிழ்நாடு, தமிழகம் என்ற இரண்டையும் ஒரே பொருளில் தனது படைப்பில் கொடுத்திருக்கிறார் இளங்கோ அடிகள். சாதாரண தமிழ்நாடா என்ன? இவர் இன்னும் ஒருபடி மேலே போய், நாடுகான் காதையில் “தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரை…” என்கிறார். அதாவது வெறும் நாடு இல்லை, “தமிழ் நன்னாடு”!
காலத்தால் இன்னும் சற்று பின்னோக்கி, சங்கத்துள் நுழைந்தோமென்றால், பெரும்பாலும் நாம் காண்பது “தண்டமிழ்” என்னும் பிரயோகத்தையே…நம் மண்ணையும் மொழியையும் ஒரே சொல்லில் சொல்வது எத்தனை இன்பம்! “நான் தண்டமிழாக்கும்…” என்று சொல்லும் போது எத்தனை விதமான பொருளில் உவப்பு மிகுகிறது! தண்டமிழ் என்றால் தண்மை உடைய தமிழ். தண்மை என்பது குளிர்ச்சியைக் குறிக்கும். எனினும், குளிர்ச்சி என்பதை “பதப்படுத்தப்பட்ட” என்றும் கொள்ளலாம். அதாவது “முதிர்ச்சி பெற்ற”… நான் பக்குவப்பட்ட மக்கள் வாழும் நாட்டைச் சேர்ந்தவன், நான் இதமான மொழி பேசுபவன், நான் முதிர்ச்சியடைந்த மூத்தோர் வழி வந்தவன்…அடடா…
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஒருவனை ஐயூர் முடவனார் என்னும் புலவர் பாடும் பாடலொன்று புறநானூற்றில் உண்டு. அதில் “சினப்போர் வழுதி தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்…” என்கிறார். புறத்தில் இருந்து தொகையைத் தொட்டால் பதிற்றுப்பத்தில் ஒரு பாடலைப் பார்க்கலாம். பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. பத்து சேரமன்னர்களைப் பற்றி, அவர்கள் ஒவ்வொருவர் குறித்தும் பத்து பாடல்கள் பாடப்பட்டதால் இது பதிற்றுப்பத்து. ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு புலவரால் பாடப்பட்டவை. கபிலருடன் கரம் குலுக்காமலா கவின்மிகு தமிழ் பற்றி எழுதுவது? செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனின் குணங்களை வாழ்த்தும் ஏழாம் பத்தை பாடியவர் கபிலர். இதில் “அருவியாம்பல்” என்றொரு பாடல். அதில் வரும் இரண்டு வரிகள்:
“சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்து…”
என்கிறார் கபிலர். உழிஞை என்பதற்கு முடக்கத்தான் கொடி என்றும் அர்த்தம் உண்டு. தெரியல் என்றால் மாலை. உழிஞை மாலை சூடி செய்யும் போர் உழிஞைப் போர் எனப்படும். உழிஞைத் திணை என்றொரு திணை வகையே உண்டு. “எயில் காத்தல் வெட்சி அது வளைத்தல் ஆகும் உழிஞை” என்றொரு பாடல் வரி இதன் பொருளை எளிதாக்குகிறது. எயில் என்றால் மதில். மதிலை வளைத்து பகைவரை வெல்லுதல் உழிஞைத் திணைக்குரிய போர் முறை. கொண்டி என்றால் வென்று கொண்டு வரும் பொருள். இருவரி பொருளையும் சேர்த்தால், சிறிய இலைகளை உடைய உழிஞை மாலை சூடிய நீ பகையரசர்களின் செல்வங்கள் அனைத்தையும் கொணர்ந்து செறிவேற்றிய தமிழ்நாடு உனது என்று பொருள் கொள்ளலாம். மூத்தோர் எழுதிய உரைகளில் தண்டமிழ் என்பது தமிழ் மறவர் படை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது என்பதையும் நாம் நினைவில் கொண்டாக வேண்டும்.
வைகை பாய்ந்த மண்ணில் வளர்ந்து விட்டு நான் பரிபாடலிடம் பாராமுகம் காட்ட முடியுமா?
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.”
என்னும் பாடலின் முதல் வரி தமிழை எல்லையாகக் கொண்டது தமிழ்நாடு என்கிறது….
இப்படியாக தமிழகம், தமிழ்நாடு, தண்டமிழ் என்று தமிழன்னையின் வசிப்பிடங்களுக்குத்தான் எத்தனை பெயர்கள்! கபிலரும் இளங்கோவும், தமிழ் கண்ட புலவர் யாரும் “நான் ஒன்றைக் குறிக்க பயன்படுத்திய சொல் தான் சரி. நீங்களும் நான் பயன்படுத்திய சொல்லை வைத்துத்தான் பாட வேண்டும்” என்று மற்ற புலவர்களிடம் சண்டையிட்டதாக குறிப்புகள் இல்லை :). எனவே தான், படித்து முடிப்பதற்கே பல ஜன்மம் எடுக்கவேண்டும் என்கின்ற அளவு சொற்செறிவுள்ள, பொருட்செறிவுள்ள அற்புதமான இலக்கியங்கள் நமக்குக் கிட்டின. அரசியல் பிழைப்போர், மாநிலத்தை எப்படி அழைப்பது என்று அவர்களுக்குள் ஆயிரம் சண்டையிட்டுக் கொள்ளட்டும். நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும், வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியதும் ஒன்றே:
தண்டமிழ் இன்பம் பெற, தமிழ் நாடும் ஒவ்வொருவரின் தன்மையாய் உறைவதே தமிழின் அகம் ஆகும் என்பதே அது.
https://solvanam.com/2023/01/22/தமிழகம்-தமிழ்நாடு-சர்ச்ச/
தவறவிடாதீங்க.. பிறகு வருத்தப்படுவீங்க.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
சென்னை: தமிழ் நூல்களை மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் Translation grant வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எழுத்தாளர்களுக்கு - பதிப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்றும் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
மொழிபெயர்ப்பு மானியம்
தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் Translation grant வழங்கப்படும் என்பதையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.
புத்தக் காட்சி
முதன்முறையாக நடந்து முடிந்த இந்த பன்னாட்டு புத்தக் காட்சி மூலம் தமிழ் மொழியிலிருந்து பிற இந்திய மற்றும் உலக மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையே 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்பதையும் பெருமிதத்துடன் அறிவிக்க நான் விரும்புகிறேன்.
மிகப்பெரிய வாய்ப்பு
உலகலாவிய அறிவு பரிமாற்றத்திற்கான தளமாக சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். எழுத்தாளர்களுக்கு - பதிப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. இதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி, தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் உலக அரங்கில் உயர்ந்த நிலையில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையோடுதான் அரசு இந்த நிதி ஒதுக்கீட்டைச் செய்தது.
அறிவுச் சக்தி
அறிவுச் சக்தியை உருவாக்குவது என்பதை ஆக்கபூர்வமான முதலீடாகவே நாங்கள் நினைக்கிறோம். இதனை அறிவுலகத் தொண்டாகக் கருதி நாங்கள் செய்து வருகிறோம். இதனை தமிழ்நாடு அரசு தனது கடமையாகக் கருதுகிறது. யாரும் கோரிக்கை வைத்து இதை நாங்கள் செய்யவில்லை. இப்படிச் செய்வதுதான் எங்களது வாடிக்கை! தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இதனை நன்கு அறிவார்கள். இந்த அறிவுலகப் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பை நல்க வேண்டும். இது தொடர்பான ஆலோசனைகள் இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளவும், திறந்த மனதுடன் தமிழ்நாடு அரசு தயாராகவும் இருக்கிறது.
டிஸ்கி
மொழிக்கு யார் நல்லது செய்தாலும் பாராட்டுவம் என்ன.?👍
கார் மயக்கம்
-சுப.சோமசுந்தரம்
களவியலிலும் கற்பியலிலும் பிரிவாற்றாமை எனும் நோய் தரும் வலி அக இலக்கியங்கள் முழுவதும் விரவிக் கிடப்பது. குறிப்பாக இலக்கியங்களில் அந்நோய் பெண்ணையே தாக்குவதாய் உணர்கிறோம். நிதர்சனமும் அவ்வாறே இருக்கலாம். அது ஆணாதிக்க சிந்தனையின் விளைவு என எளிதாய்ப் புறந்தள்ளுவதற்கில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் வேறுபாட்டைப் போல் உளவியல் வேறுபாடும் உண்டே! பொருளாதாரம், பாதுகாப்பு முதலியவை குறித்து ஆணுக்குப் பொறுப்புணர்வு அதிகமாகவும் பெண்ணுக்கு மென்மையான உள்ளுணர்வுகள் அதிகமாகவும் அமைந்தது இயற்கையே. எனவே நாட்டிற்கும் வீட்டிற்கும் தனது பொறுப்புணர்வு காரணமாக அவன் அவளை அவ்வப்போது பிரிந்ததும், அவள் அவனது பிரிவினால் வருந்தி உழன்றதும் உலகோர்க்குப் பேசுபொருளாகவும் பாவலர்க்குப் பாடுபொருளாகவும் அமைந்ததில் யாதொரு வியப்புமில்லை.
திணையின்பாற்பட்டு பிரிவாற்றாமை வகைப்படுத்தப்படலாம். இக்கட்டுரையில் நாம் எடுத்தாள எண்ணுவது முல்லைத்திணை நவிலும் பிரிவாற்றாமையாம். முல்லைத் திணையில் முதற் பொருளில் கார்காலமும், உரிப்பொருளாக (ஆற்றி) இருத்தலும் இருத்தல் நிமித்தமும் அமைந்த பின்னணியில் முல்லை நிலத்தின் பிரிவாற்றாமையும் அமையக் காணலாம். கார்காலத்திற்குள் மீண்டு வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் கார்காலத்திலும் திரும்பாததால் தலைவி பெருந்துயருற்று ஆற்றி இருத்தலும் அது தொடர்பானவையும் 'இருத்தலும் இருத்தல் நிமித்தமும்' என்று குறிக்கப்பெற்றன.
விலங்கினங்கள் தம் இணைகளைத் தேடும் காலம் குறிப்பாகக் கார்காலம் என்பது சான்றோர் மட்டுமின்றி இயற்கையறிவு பெற்ற பாமரரும் அறிந்ததே. சமூக விலங்கான மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன! ஏனைய விலங்கினங்களுக்கு இதனை வெறும் உடலியல் சார்ந்த ஒன்றாகக் கொள்ளுவதும், தனக்கு மட்டும் 'உளவியலும் சார்ந்த ஒன்றாக்கும்!' எனும் மானிடக் கற்பனையும் மனிதனுக்கான உரிமை, பெருமை, இன்பம் அனைத்தும். தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பொறுத்தமட்டில் இப்பெருமையையும் இன்பத்தையும் இலக்கியங்களில் வலை வீசித் தேட வேண்டியதில்லை. முன்னர் கூறியது போல் அக இலக்கியங்கள் முழுவதும் காணக் கிடைப்பது. தமிழ் இலக்கிய உலகத்தின் ஆழமும் அகலமும் தமிழுக்கான சிறப்பு. எனவே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தொட்டுச் செல்வதே உலகளவைக் காட்டும் கையளவுக் கட்டுரையாய் அமையும். இக்கட்டுரையின் நோக்கமும் அதுவே.
கருதுபொருள் சிறு சிறு தலைப்புகளாய் மனத்திரையில் ஓடுகிறது. சிறுவயதில் கட்டுரைகள் எழுதிப் பழகிய பள்ளி நாட்களின் மலரும் நினைவுகளோ என்னவோ!
கார் வந்தது காதலன் வரவில்லை :
கார்காலம் வந்தமைக்குக் கட்டியம் கூறுகிறது முல்லைப்பாட்டின் இறுதியில் அமைந்த இரு வெண்பாக்களில் ஒன்று.
"...................துன்னார் முனையுள்
அடல்முகந்த தானை அவர்வாரா முன்னம்
கடல்முகந்து வந்தன்று கார்".
பொருள்: செறுகளத்தில் (துன்னார் - பகைவர்; துன்னார் முனை - போர் முனை) பகைவரின் அழிவினை முகந்த சேனை (அடல் - அழிவு; தானை - சேனை) திரும்பி வரும் முன் கடலினை முகந்து வந்தது கார்மேகம்.
தலைவன் பிரிந்து செல்வது போர் மேற்கொண்டு அல்லது பொருள் தேடக் கடல் கடந்தும் வாணிகம் செய்யும் பொருட்டு என அமைவது இயல்பு. நாம் முன்னம் கண்ட முல்லைப்பாட்டு சுட்டும் தலைவி போர்க்களம் சென்ற தலைவனால் பிரிவுத் துயரம் கொண்டாள். இப்போது நாம் காணப்போகும் குறுந்தொகைத் தலைவி இரண்டாவது ரகம். வேனிற்காலத்தில் பிரியும் போது கார்காலத்திற்குள் மீண்டு விடுவதாய் வாக்களித்த தலைவன் திரும்புவதற்குள் கார் சூழ்ந்து கலக்கமுற்றாள் தலைவி. மழைக்காலம் தொடங்கியதும் முல்லைக்கொடியில் மொட்டுகள் அரும்பின. அம்மொட்டுகளை ஒளி பொருந்திய முத்துப் போன்ற பற்களாகக் கொண்டு கார்காலமே தனது துயர நிலை கண்டு நகையாடுமே என்று தோழியிடம் புலம்புகிறாள் தலைவி.
"இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோஎனப்
பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்குஎயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே"
---------- குறுந்தொகை 126.
பொருள்: இளமைப் பருவம் வீணாவதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை. பொருள் வளம் விரும்பிச் (நசைஇ) சென்றவர் இங்கும் (இவணும்) வரவில்லை. எங்கு இருக்கிறாரோ (எவணரோ)? மழை (பெயல்) முல்லை நிலமெங்கும் (புறம்) முல்லைப் பூங்கொடியில் கொத்துக் கொத்தாக (தொகு) அளித்த அரும்புகளை (முகை) ஒளிரும் (இலங்கு) பற்களாகக் (எயிறு) கொண்டு நறுமணமும் குளிர்ச்சியும் பொருந்திய கார்காலம் (நறுந்தண் கார்) நகையாடுமே தோழி! ("எனது நிலை கண்டு நகையாடுமே!" எனக் கொள்க).
தலைவன் வாராத காலம் நீண்டு கொண்டிருக்க மேலும் மேலும் துயர் உருகிறாள். "நான் உயிர் பிழைக்க மாட்டேனோ!" என்று தோழியிடம் மறுகுகிறாள்.
"மழைவிளை யாடும் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படரப் புறவிற்
பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று
உய்யேன் போல்வல் தோழி யானே"
------ (குறுந்தொகை 108)
பொருள்: மழை மேகம் விளையாடும் குன்று அமைந்த தலைவியின் சிற்றூரில் (சிறுகுடி) கறவைப் பசு தன் கன்றின் இடத்தை (கன்று வயின்) நோக்கிச் செல்கின்றது (படர). அம்முல்லை நிலத்தில் (புறவில்) பசுமையான இலைகளை (பாசிலை) உடைய முல்லைக்கொடியின் தூய்மையான (ஆசு இல் - குற்றமற்ற) வெண்பூக்கள் (வான் பூ) செவ்வானம் தோன்றிய மாலை வேளையில் (செவ்வான் செவ்வி) பூத்திருக்கின்றன. (கார்ப் பருவத்தின் இக்காட்சிகள் என்னை வாட்டுவதால்) நான் உயிர் வாழ மாட்டேன் (உய்யேன்) போல் தோன்றுகிறது தோழி!
பிரிவுத் துயரம் வாட்ட தலைவியின் உடலில் பசலை படர்வதும், உடல் மெலிந்து கைவளைகள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் சங்க காலத்திலும் சங்கமருவிய காலத்திலும் இலக்கிய உலகில் பரவலாய்க் காணக் கிடைப்பவை. பிரிவுத் துயரினால் அவள் உயிர்வாழாள் என்னும் எச்சரிக்கை மணி அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்கலாம். மேற்கூறிய குறுந்தொகைப் பாடல் ஒரு சான்று.
"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை"
------------------------ (குறள் 1151)
என்று தலைவி கூற்றாக வரும் பிரிவாற்றாமை குறளும்,
"வருவை யாகிய சின்னாள்
வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே"
-----------(நற்றிணை 19; ஈற்றடிகள்)
என்று தோழி கூற்றாக வரும் நற்றிணைப் பாடலும் இவ்வகை வருவன.
இல்லை இல்லை கார் வரவில்லை :
அல்லலுற்ற மனம் ஆறுதல் தேடும். தன் மனமே தனக்கு ஆறுதல் சொல்வதும், தன்னைச் சார்ந்தோர் தேற்ற ஆறுதல் கொள்வதும் உளவியல் மற்றும் உலகியல் நடைமுறை. பொய்யான தேறுதல் கூட மெய்யான ஆறுதல் தரும். அவ்வாறே குறுந்தொகைத் தலைவியொருத்தி, "கொன்றை மரம் சூழ்ந்த காடு புதிதாய்ப் பூத்துக் குலுங்கி கார்காலத்தை அறிவித்தாலும் நான் நம்பப் போவதில்லை. கார்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்று சொல்லிச் சென்ற என் தலைவன் பொய் சொல்வதில்லை" என்று அரற்றுகிறாள். பிரிவாற்றாமையின் வலி அவளுக்குதானே தெரியும்!
"..............புதுப்பூங் கொன்றைக்
கானம் கார்எனக் கூறினும்
யானோ தேறேன்அவர் பொய்வழங்கலரே"
------------------------ குறுந்தொகை 21
தன்னைத்தானே தேற்ற முயன்றும் தேறாத மனதுக்குத் தேர்ந்து தெளிந்த நட்புதானே மருந்து! ஆங்கே இடுக்கண் களைய தோழி முற்படுகிறாள்.
"மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடிஇணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் கார்என மதித்தே"
-------------------- குறுந்தொகை 66
பொருள்: பரந்த அடியினையுடைய (தடவுநிலை) கொன்றையானது, ஏதும் விளையாத கற்கள் நிறைந்த பாலை நிலம் (கல்பிறங்கு அத்தம்) சென்ற தலைவன் திரும்பி வருவதாகக் கூறிய கார்ப்பருவம் வரும் முன்பே (சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை), உறுதியாகப் (மன்ற) பேதலித்தது (மடவ). கொம்புகளில் சேர்ந்த கொடி போல் நெருக்கமாய், சரம்சரமாகப் (நெரிதர) பூத்துக் குலுங்கியது (இணர் ஊழ்த்த). காலமல்லாத காலத்தில் பெய்த மழையினை (வம்பமாரி) கார் என மதித்ததால் இப்பேதைமை கொன்றைக்கு ஏற்பட்டது.
தலைவியைத் தேற்றுவதில் ஐங்குறுநூறில் வரும் முல்லை நிலத் தோழியும் சளைத்தவளா என்ன!
"ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி
எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின்
தகையெழில் வாட்டுநர் அல்லர்"
------------------ ஐங்குறுநூறு 462
பொருள்: காரணமின்றிப் பெய்யும் மழை (ஏதில பெய்ம்மழை) கண்டு கார்காலம் என மயங்கிய பேதையான கொன்றை பூத்த நிலை (கொன்றைக் கோதை நிலை) நோக்கி நீ வருந்துவதால் (நின் கலிழ்வே) என்ன பயன் (எவன் இனி), மடந்தையே? உன்னிடம் அமைந்த (நின் வயின்) மேதகு அழகினை (தகை எழில்) அவர் வருத்துபவர் அல்லர்.
அவன் வருவான் தோழி!
தலைவியை மேலும் தேற்றுகிறாள் தோழி.
"இனையல் வாழி தோழி எனையதூஉம்
நின்துறந்து அமைகுவர் அல்லர்"
------------------ ஐங்குறுநூறு 461.
பொருள்: அழாதே! (இனையல்). நீ நீடூழி வாழ்க, தோழி! என்ன நடந்தாலும் (எனையதூஉம்) உன்னை மறந்து (நின் துறந்து) வாழ மாட்டார் (அமைகுவர் அல்லர்).
கார் வந்த பின்பும் தலைவன் வாராது சிறிது காலம் தாழ்த்தியமைக்குக் காரணமும் ஊகித்து இயம்பலானாள் ஐங்குறுநூறு காட்டும் தோழி.
"புதல்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்
நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய
வாராது அமையலோ இலரே நேரார்
நாடுபடு நன்னலம் தரீஇயர்
நீடினர் தோழிநம் காத லோரே"
------------------ ஐங்குறுநூறு 463.
பொருள்: புதர்களில் பூத்திருக்கும் நறுமணம் பொருந்திய மலர்களை (புதல்மிசை நறுமலர்) அழகுறத் தொடுத்து (கவின் பெறத் தொடரி) உன் நலம் மிக்க கூந்தலில் மேலும் அழகு பெறச் சூட (தகைகொளப் புனைய) வாராது இருக்க மாட்டார் (வாராது அமையலோ இலரே). தோழி! பகைவர் நாட்டின்கண் உள்ள (நேரார் நாடுபடு) நற்செல்வங்களைக் கொணரும் பொருட்டே (நன்னலம் தரீஇயர்) காலம் நீட்டித்தார் காதலர்.
கார் வந்தது காதலனும் வருகிறான்:
மெல்லியலார் தலைவியும் தோழியும்தான் வருந்துவர் என்றில்லை. தலைவியின் துயர் இத்தன்மையது என உணர்ந்த தலைவனும் தலைவிக்காகப் பெரிதும் வருந்துகிறான்.
"எவன்கொல் மற்றுஅவர் நிலைஎன மயங்கி
இகுபனி உறைக்கும் கண்ணொடு இனைபுஆங்கு
இன்னாது உறைவி தொல்நலம் பெறூஉம்
இதுநற் காலம் .................."
------------- அகநானூறு 164; 8-10.
பொருள்: அவர் நிலை என்னவாயிற்றோ (எவன்கொல்) எனக் கலக்கமுற்று நீர் வழியும் (இகுபனி உறைக்கும்) கண்ணோடு அங்கு அழுது (இனைபு ஆங்கு) துன்பத்துடன் வாழ்பவள் (இன்னாது உறைவி) தனது முந்தைய பொலிவினைப் (தொல்நலம்) பெறும் நற்காலம் இது (அஃதாவது அவன் கார்காலத்தில் திரும்பி விடுவதாய் முன்பு வாக்குரைத்தமையால் அது அவளுக்கு நற்காலம்தானே!).
போர் முடிந்து அல்லது கார்காலத்திற்காகப் போர் நிறுத்தம் ஏற்பட்டு தலைவன் தனது முல்லை நிலம் நோக்கித் தேரில் புறப்படுகிறான். அப்போது தேரினை விரைவாய்ச் செலுத்துமாறு தேரோட்டியைப் பணிக்கிறான். அவன் அவசரம் அவனுக்கு!
"அரும்படர் அவலம் அவளும் தீரப்
பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க
ஏமதி வலவ தேரே
மாமருண்டு உகளும் மலரணிப் புறவே"
------------------ ஐங்குறுநூறு 485.
பொருள்: பிரிவினால் பெரிதும் துயருற்ற அவளது அவலம் (அரும்படர் அவலம்) தீரவும், தொய்வுற்ற அவளது பெருந்தோள் நலம் பெறுமாறு யான் அவளை அணைக்கவும் (முயங்க) விலங்கினங்கள் மருண்டு திரியும் (உகளும்), மலர்களால் பொலிவு பெற்ற முல்லை நிலத்தின் (புறவு) வழியே தேரினை ஏவுவாயாக (ஏமதி), தேரோட்டியே (வலவ)!
அவ்வாறு செல்லும்போது சோலைப் பூக்களில் கலவயின்பம் கொள்ளும் வண்டினங்கள் தேரின் மணியொலியில் கலக்கமுறும் என அஞ்சி அந்த மணியில் உள்ள நாவினைக் கட்டி வைத்துத் தேரினைச் செலுத்துகிறான். இதுவயின் தலைவியைக் கண்டடையச் செல்லும் தலைவனின் மனநிலையைப் படம் பிடிக்கிறான் புலவன். பிறிதின் நோய் தந்நோயென உணரும் சூழலும் அது.
"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்"
----------------- அகநானூறு 4; 10-12.
பொருள்: பூத்துக் குலுங்கும் சோலையின்கண் (பூத்த பொங்கர்) தன் துணையோடு இணைந்த (வதிந்த), மலரின் மகரந்தத்தை உண்ணும் பறவையாகிய (தாது உண் பறவை) வண்டு கலக்கமுறும் (பேதுறல்) என அஞ்சி தேரின் மணியிலுள்ள நாவினைக் கட்டி வைத்த (மணிநா ஆர்த்த) மாட்சிமை பொருந்திய வினை செயல்வகை கொண்ட தலைவன் (மாண்வினைத் தேரன்).
மேற்கூறிய பாடலில், "இத்தகைய கருணையுள்ளம் கொண்டவன், நீ பிரிவாற்றாமையால் வாட எங்ஙனம் பொறுப்பான்? அவன் உறுதியாய் விரைவில் வருவான்" என்று தோழி தலைவியைத் தேற்றுவதாகத்தான் இருக்கிறது. எனவே இதற்கு முந்திய தலைப்பிலேயே இப்பாடல் பொருந்தி அமையும். எனினும் கடந்த காலத்தில் அவனது மேன்மையான செயல்பாடு தற்போது அவனது மாண்பினை முன்னிறுத்துவதால் ஈண்டு இறந்தகாலம் நிகழ்காலமாய் ஆக்கப்பட்டது எனலாம். தோழி கூறுவதாய் உள்ளது மறைக்கப்பட்டு அவளது கூற்றில் உள்ள நிகழ்வே முன்னிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு இக்கட்டுரைக்கு நிறைவுரையாய் அமைவது ஏற்புடைத்தே.
கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகத்தினும் பெரிதென வள்ளுவப் பெருந்தகை கூறி அனைவரும் அறிந்ததே. முல்லைத் திணையில் காமத்தில் கார் கொள்ளும் சிறுபாகமும் உணர்ந்து நோக்கற்பாலதே.
1.1 அறம் - விளக்கம்
அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. அறம் என்ற சொல்லின் பொருள் என்ன? ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.
மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. (திருக்குறள் - நீதி இலக்கியம் - பக் 23)
நம் முன்னோர் அறம் என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு எதிக்ஸ் (Ethics) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக உள்ளது. நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலையே ‘எதிக்ஸ்’ என்பதாகும். இதைத் தமிழில் அறவியல் எனலாம்.
எதிக்ஸ் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும். முதன் முதலில் இச்சொல் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களையே உணர்த்தி வந்தது. பின்னர் நடத்தை என்னும் பொருளே போற்றப்பட்டது. ஒழுக்கத்தைக் குறிப்பிடும் Moral என்னும் ஆங்கிலச் சொல்லும் பழக்க வழக்கம் என்னும் பொருளையே குறித்தது. இதனால் மனித நடத்தை குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் வழக்கமாகக் கொள்ளும் முடிவையே ஒழுக்கமாகக் (Morality) கொண்டனர் என்பது புலனாகின்றது.
இதனால் தனி மனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டபொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம்.
இனி அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா என்று பார்ப்போம். செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். மன மாசு என்பது யாது? மன மாசினைப் போக்குவது எவ்வாறு? பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் ஆகியவை மனமாசுகளாகும். அவை இல்லாமல் இருப்பதே அறம். இதையே குறளாசிரியர்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
(மாசு = குற்றம், இலன் = இல்லாதவன், ஆகுலநீரபிற = பிற ஆரவாரிக்கும் தன்மை உடையன)
என்றும்,
(அழுக்காறு = பொறாமை, அவா = பேராசை, வெகுளி = கோபம், இன்னாச்சொல் = கடும் சொல், இழுக்கா (இழுக்கி) = நீக்கி)
என்றும் கூறுகிறார். இவ்விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அறம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்று என்று கொள்ளலாம். இத்தகைய அறம் பற்றிப் பேச எழுந்தவையே அறநூல்கள். அறநூல்களுக்கு உயிராக இருப்பது கருத்து. அறக் கருத்துகளையும் இலக்கியச் சுவை என்னும் இனிப்பிலே கலந்து கொடுக்கப்படும்பொழுது அவை அற இலக்கியங்கள் ஆகின்றன.
https://www.tamilvu.org/courses/degree/c012/c0121/html/c012111.htm
மட்டக்களப்புச் சொல்லாட்சி
ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு. வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில் வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் தவறாகக் கருதக் கூடாது. பரந்தளவில் சமைக்கப்படும் `பரத்தை` போல, `மருங்கை`என்ற ஒன்றுமுண்டு. `மருங்கை’ என்ற பெயரில் உறவினர் மட்டும் கலக்கும் விருந்தும் ஒன்றுமுள்ளது. `கட்டாடி` என்றால் வண்ணான் என்ற பொருள் வேறிடங்களிலுண்டு, மட்டக்களப்பில் பூசாரியினையும் (குறிப்பாக பெண் கடவுள்களுக்கான பூசாரி) கட்டாடி என்பார்கள். அவ்வாறான ஒரு சொற் பட்டியலினைக் கீழே பார்ப்போம். {இவை வேறு பகுதிகளிலும் பயன்பாட்டிலிருக்கலாம்}.
• புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று}
• கால்வாங்குதல் என்பது மகனைக் குறிக்கும்.
• போடியார் = நெற் செய்கைக்கு வேண்டிய முதலைப் போடுபவர்.
• குருவிக்காரன் = வயலிற் குருவிகளை ஓட்டிக் காத்தல் போன்ற குற்றேவல்களுக்காக நியமிக்கப்படும் சிறுவன்
• குருவிமூலை வரவை = குருவிக்காரனுக்கு வயலிலேயே தங்க வழங்கப்பட்ட சிறு குடில்/ இடம்.
• வட்டை வளைத்தல் = வயற் காவல் (வட்ட வடிவமாக வயலினைச் சுற்றி சுற்றிக் காவல் காத்தல்)
• அவுரி திரித்தல் = நெல் தூற்றுதல்
• `களவெட்டி` அல்லது `களவட்டி’= சூடு மிதிக்கும் களம்.
{ களவட்டி - வட்டமாக அமைந்த சூடுபோடும் நிலப் பரப்பு. (களம்+வட்டி. வட்டி = வட்டமானது)}
• ஆயம் = காணிக்குரிய குத்தகை
• அத்திமடக்கு = அரிக்கன்சட்டி (அரித்துக் கல்லே நீக்கும் வகையில் உள்வரிகளமைந்த சட்டி)
• அளைதல் - கைவிரலால் தொடுதல்
• ஆணம் = நீர்த்தன்மையான கறி (சொதி போன்ற)
• ஆண்டார் = நிலா (இரவினை ஆளுபவர்)
• இட்டறுதி = (இட்ட+அறுதி) கடைசிக் காலம்
• எழுவான் = கிழக்கு (எழுவான் கரை- படுவான் கரை ஊர்ப் பெயர்கள்).
• படுவான் = மேற்கு
• கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)
• கட்டுச் சொல்லுதல் = தெய்வ வாக்குச் சொல்லுதல் (`கட்டுவிச்சி`பழந் தமிழ்ச்சொல்)
• உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
• கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.
• கப்புகன் = மண்டூர் முதலிய குறிப்பிட்ட சில ஊர்க் கோவில்களிற் பூசை செய்யும் பார்ப்பனரல்லாத பூசாரி
{ தெய்வத்தினிடம் மக்கள் வேண்டிய தைப் பெறுதற்கு வழிசெய்து கொடுக்கும் `கற்பகதரு` போன்றவன்}
• கப்புகக்குடி = கப்புகன் தோன்றும் மரபு (சாதி அல்ல)
• கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.
• கலத்தில் போடுதல் = மண மகனுக்கு மணமகள் முதல் முதல் சோறு உண்பித்தல்.
• கள்ளறை = வீட்டில் மறைவிடமாக உள்ள சிறிய அறை.
• கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன்.
• கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}
• குச்சிக்குடில் =சிறியவிடு.
• குஞ்சப்பு=சிறிய தந்தை.
• குஞ்சாத்தை =சிற்றன்னை.
• குடக்குழி = கிணற்றின் நடுவில் (நீர் குறைந்த காலத்து) குடம்/ வாளி.
• குமுதம் = பேரொலிசெய்து விளையாடுதல்
• குளையடித்தல் = ஒருவரது மனத்தை மாற்றுதல்.
• கெளித்தல் = கவிழ்த்து ஊற்றுதல் (கெளுத்தி – கெளிற்றுமீன்..)
• சூம்புதல் = மெலிதல்
• செக்கல் = மாலைநேரம்.
• செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.
• தப்பிலி = தப்புள்ளவன் { தப்பு+இலி}.
['மங்கலம்' எனப்படும் வழக்கு]
• தயிலாப்பெட்டி = மரத்தாற் செய்யப்பட்டதும் கள்ள அறைகள் உள்ளதுமான சிறுபெட்டி
• தாயதி = வழிவழி வந்த பழஞ் சொத்து; (`தாயம்` என்பதிலிருந்து வந்த சொல்).
• தாயம் = நல்ல தருணம்
• துமித்தல் = மழை தூறுதல்
• ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}
• முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்).
👉👉👇சில சொற்கள் திரிபடைந்த நிலையிலும் இன்று காணப்படுகின்றன. அவை வருமாறு.
** தலை வழித்தல் >> `மழித்தல்’ என்பதின் சிதைவு
`மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’
** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு
** வட்டை>> (வயற் பரப்பு முழுவதும்) வெட்டை என்பதின் சிதைவு
** அத்தக்கூலி >> அற்றைக் கூலி என்பதன் திரிபு ((அன்று + ஐ+கூலி) = நாட்கூலி
**கம்மாலை >> கம்மசாலை என்பதன் திரிபு (பட்டறை)
** கலம்பக்கயிறு >> கதம்பைக்கயிறு என்பதன் திரிபு (தென்னம் தும்பினல் செய்த கயிறு)
**காத்தாடி >> காவுதடி ’ என்பதின் சிதைவு. (கா+தடி)
சுமையினைத் தோளில் வைத்துச் சுமக்க உத வும் கம்பு. இதுவே இன்றைய மதம் சார் `காவடி` ஆக்கப்பட்டுவிட்டது.
🙏🙏🙏
நன்றி - மட்டக்களப்புத் தமிழகம்
இலங்கநாதன் குகநாதன்
#சும்மா என்பது சும்மா #இல்ல !
நாவலர் நெடுஞ்செழியன்ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் பேசினார்.
அதை இப்போது படிங்க!
*உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன!*
*தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப் படுத்திக்கொண்டிருக்கின்றது*.
*"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை!!*
*அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா".*
*அதுசரி "சும்மா" என்றால் என்ன?*
*பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".*
*"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15 க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்...*
*வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது...*
1. கொஞ்சம் *"சும்மா"* இருடா?
*(அமைதியாக / Quiet)*
2.கொஞ்சநேரம் *"சும்மா"* இருந்துவிட்டுப் போகலாமே? *(களைப்பாறிக் கொண்டு / Leisurely)*
3.அவரைப் பற்றி *"சும்மா"* சொல்லக் கூடாது!
*(அருமை / infact)*
4.இது என்ன *"சும்மா"* கிடைக்கும் என்று
நினைத்தாயா?
*(இலவசமாக / Free of cost)*
5. *"சும்மா"* கதை விடாதே?
*(பொய் / Lie)*
6. *"சும்மா"* தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்.
*(உபயோகமற்று / Without use)*
7. *"சும்மா", "சும்மா",* கிண்டல் பண்ணுகிறான்.
*(அடிக்கடி / Very often)*
8. இவன் இப்படித்தான், *சும்மா* சொல்லிக்கிட்டே இருப்பான்.
*(எப்போதும் / Always)*
9.ஒன்றுமில்லை *"சும்மா"* தான் சொல்லுகிறேன்-
*(தற்செயலாக / Just)*
10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா"* தான் இருக்கின்றது.
*(காலி / Empty)*
11. சொன்னதையே *"சும்மா"* சொல்லாதே.
*(மறுபடியும் / Repeat)*
12. ஒன்றுமில்லாமல் *"சும்மா"* போகக்கூடாது .
*(வெறுங்கையோடு / Bare)*
13. *"சும்மா"* தான் இருக்கின்றோம்.
*(சோம்பேறித்தனமாக / Lazily)*
14. அவன் *"சும்மா"* ஏதாவது உளறுவான்.
*(வெட்டியாக / Idle)*
15. எல்லாமே *"சும்மா"* தான் சொன்னேன்.
*(விளையாட்டிற்கு / Just for fun)*
*நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த *"சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் 15 விதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை.*
*படித்ததில் ரசித்தது*😎