பிரபாகரனின் சமார்த்தியமும்... இந்திய உளவுப்பிரிவை அலற வைத்த புளொட்டும்!
யோ. கர்ணன்
---------------------------------
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) அமைப்பின் ஸ்தாப தலைவர் உமா மகேஸ்வரன் கொலை தொடர்பான விடயங்களை 2 பாகங்களாக எழுதியிருந்தேன். இதை படித்த சில நண்பர்கள், உமா மகஸ்வரனின் மரணத்தின் பின்னணியை முழுமையாக விளங்க முடியவில்லை, புளொட் அமைப்பின் தோல்வியில் அவரது பங்கு என்ன என கேட்டிருந்தனர்.
அவர்களிற்காக, உமா மகேஸ்வரனின் கொலையை தொடர்ந்து, பின்னிணைப்பாக, புளொட் அமைப்பின் தோல்வி குறித்தும் சில விபரங்களை பதிவு செய்யலாம் என நினைக்கிறேன். புளொட் அமைப்பினரும், அதன் வரலாற்றை புரிந்தவர்களும் கருத்து பகுதியில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால், இது பற்றிய பல பரிமாணங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
இனமுரண்பாடு முற்றி, தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய முப்பது சொச்ச விடுதலை இயக்கங்கள் அனைத்துமே தோல்வியடைந்தவைதான். பல அமைப்புக்கள் அழிந்து விட்டன. இப்போதும் சில அமைப்புக்கள் இருக்கின்றன. அவை ஆயுத வழியை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் குளித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு அமைப்பு தொடர்ந்து நிலைத்திருப்பதால் மட்டுமே அந்த அமைப்பு வெற்றிபெற்ற அமைப்பென கருத முடியாது. இதனால், புளொட் அமைப்பினர், தமது அமைப்பை தோல்வியடைந்த அமைப்பென குறிப்பிட்டு, அதன் பின்னணியை ஆராய புறப்பட்டு விட்டீர்களா என கோபப்பட வேண்டியதில்லை. நான் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பும் தோல்வியடைந்த அமைப்புத்தான். அதன் பின்னணியையும் வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
என்றாலும், விடுதலைப் புலிகளையும், புளொட் அமைப்பையும் ஒப்பிடும் போது, அமைப்பு ரீதியிலும், செயல்திறன் அளவிலும் விடுதலைப் புலிகள் சிறப்பாக இருந்தைமைக்கு, உமா மகேஸ்வரன் மற்றும் பிரபாகரன் ஆகிய இரு தனி மனிதர்களுக்கிடையில் இருந்த ஆளுமை வேறுபாடு மட்டுமே காரணமாக இருந்தது.
கலை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் தமிழ்நாட்டுடன் பின்னியும், தங்கியும் இருந்த சிறிய இனமான ஈழத்தமிழர்களிற்கு ஆயுதப் போராட்டத்திலும் இந்தியாவின் உதவி தவிர்க்க முடியாமல் தேவைப்பட்டது. அப்போதைய அரசியல் சூழலில் இந்தியாவும் ஆதரவளித்து, போராட்ட இயக்கங்களை வளர்த்தும், உருவாக்கியும் விட்டன.
இந்த பின்னணியில்- இந்தியாவின் ஆதரவு தேவையான கட்டம் வரையில் புலிகள் அதை கச்சிதமாக பயன்படுத்தினார்கள். புளொட் அதை பயன்படுத்த தவறியது. இடதுசாரிகளை போல, புளொட் தலைவர் சிந்தாந்தங்கள் பேசினாரே தவிர, அவரால் ஆயுதப் போராட்ட இயக்க தலைமையாக செயற்பாட்டு தலைமை வகிக்க முடியவில்லை. இதுவே புளொட்டின் வீழ்ச்சிக்கு முதன்மை காரணம்.
உமா மகேஸ்வரன் கொல்லப்பட்டு, பல வருடங்களின் பின்னர்- புளொட்டின் மூத்த தலைவர் ஒருவரை, இலங்கை விவகாரங்களிலும் செயற்பட்டு, தற்போது பா.ஜ.க அரசில் முக்கிய அதிகாரம் மிக்க ஒருவராக விளங்கும் ஒருவர் சந்தித்து பேசிய போது- புளொட்டின் தோல்விக்கான காரணங்களாக எவற்றை கண்டறிந்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்.
புளொட் பிரமுகர்- ஆயுதங்கள் இல்லாததே முதன்மைக்காரணம், இந்தியா மற்றைய இயக்கங்களிற்கு ஆயுதம் கொடுத்தது போல தமக்கு தரவில்லையென்றார்.
இந்திய தலைவர் அதை மறுத்து, தான் ஆவணங்களை பின்னர் பார்த்த போது, புளொட் அமைப்பிற்கும் ஆயுதங்கள் தாராளமாக கொடுத்ததாக பதிவுகள் இருக்கிறதேயென்றார்.
புளொட் பிரமுகர் அதை மறுத்த போது, இந்திய தலைவர் சீரியசாக சிந்தித்து கொண்டு, மௌனமாகி விட்டார் என்றார்.
இதன் பொருள்- புளொட் அமைப்பிற்கும் ஆயுதங்களை வழங்குவதாக குறிப்பிட்டு, இந்திய உளவுப்பிரிவு பிரதானிகள் யாரேனும் விளையாடியுள்ளனர் என்று இருக்கலாம்.
அதற்கு வாய்ப்பும் உள்ளது. அப்போது, தமிழ் போராட்ட இயக்கங்களை , இந்திய உளவுத்துறை சார்பில் கையாண்ட சு.சந்திரசேகரன், பிரபாகரன் மீது வாஞ்சை கொண்டிருந்தார். அவரது காலத்தில் விடுதலைப் புலிகள் அதிகளவு ஆயுதங்களை இந்தியாவிடமிருந்து பெற்றனர். புளொட்டிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் என ஒரு பட்டியல் தயாரித்து, அதையும் சந்திரசேகரன் புலிகளிற்கு வழங்கி விட்டார் என புளொட் பிரமுகர்கள் நம்புகிறார்கள்.
தமிழ் இயக்கங்களை கையாண்ட சந்திரசேகரனிற்கு, புளொட் தொடர்பான எதிர்மறை அபிப்ராயம் உருவாகிய சம்பவமொன்று உள்ளது.
1980களின் தொடக்கத்தில், தமிழ் போராட்ட இயங்களின் தலைமைகளை றோ உளவுப்பிரிவு சந்திக்க ஆரம்பித்த சமயம். புளொட் அமைப்பின் சந்ததியாரை, றோ சந்திரசேகரன் சந்தித்தார். றோ அமைப்பு, புளொட்டின் உயர்மட்ட தலைவர் ஒருவரை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இது.
அந்த சந்திப்பின் நடந்த உரையாடலை, சந்திரசேகரன் பின்னாட்களில் புளொட் பிரமுகர்களுடன் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.
தமிழ் இயக்கங்களை போராட ஊக்குவித்து, ஆயுதம் கொடுத்ததுதானே அப்போது இந்தியா செய்த வேலை. சந்ததியாருக்கும், சந்திரசேகரன் குழை அடித்திருப்பார் போல.
சந்ததியார் கேட்டாரம்- “நீங்கள் (இந்தியா) எம்மை போராடச் சொல்லி ஆயுதம் தருவதன் உள்நோக்கம் என்ன? புற நோக்கம் என்ன?“ என்று.
இவர்கள் வேலைக்கு ஆகார்கள் என றோ அப்போதே கணக்கிட்டுள்ளது.
இதேபோல, தமிழகத்தின் தர்மராஜா பண்ணையார் புளொட் அமைப்பினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான பின்னர், எம்.ஜி,ஆர் புளொட் அமைப்பின் மீது காவல்த்துறை நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.
இந்த கொலையின் பின்னர், உமா மகேஸ்வரனை சந்திக்க வருமாறு எம்.ஜி.ஆர் அவசரமாக அழைத்திருந்தார். ஆனால் உமா மகேஸ்வரன் செல்லவில்லை. அடுத்தடுத்த நிலையிலிருந்த இருவரை அனுப்ப முயற்சித்த போது, எம்.ஜி.ஆர் அதை நிராகரித்து விட்டார்.
இதேபோல, புளொட் உறுப்பினர் ஒருவர் கொள்ளைச்சம்பவமொன்றுடன் தொடர்புபட்ட போது, கியூ பிரிவுக்கு பொறுப்பான டிஐஜி தர அதிகாரி உமா மகேஸ்வரனை சந்தித்து பேச வந்திருந்தார். அவரை மரியாதை குறைவாக திட்டிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார் உமா மகேஸ்வரன். அந்த டிஐஜி பேயறைந்த் போல திகைத்து உட்கார்ந்திருந்து விட்டு, எழுந்து சென்று விட்டார்.
இப்படி, தமிழகத்துடனும், மத்திய உளவுப்பிரிவுடனும் உமா மகேஸ்வரன் முரண்பட்டுக் கொண்டார். ஆனால், இந்திய அமைதிப்படையுடன் மோதல் வெடிக்கும் வரை புலிகள் சாமர்த்தியமாக செயற்பட்டு, இந்தியாவிடம் ஆயுதம் வாங்கி தம்மை வளர்த்துக் கொண்டனர். பின்னர், வெளிநாட்டு ஆயுத இறக்குமதி மூலம் சொந்தக்காலில் நின்றனர்.
புளொட், புலிகள் இடையேயான இன்னொரு வித்தியாசம் உள்ளது.
புளொட் அமைப்பில் ஒரு கட்டத்தில் 15,000 வரையான போராளிகள் இருந்தனர். இந்தியாவில் மட்டும் 7,000 வரையான போராளிகள் இருந்தனர். அவர்களை பராமரிக்க பெரும் நிதி வசதி தேவைப்பட்டது. அதை எப்படியோ புளொட் பெற்றது.
புலிகள் தமது ஆரம்ப கட்டத்தில் இப்படி பெருந்தொகையான ஆட்சேர்ப்பில் அக்கறை காட்டவில்லை. கட்டுக்கோப்பான ஆட்கள், ஆயுதங்கள் என அக்கறை காட்டினர். ஆனையை கட்டி வைத்து தீனி போடாமல், பணத்தை ஆயுதங்கள் வாங்குவதில் செலவிட்டனர். அதனால்தான் புலிகள் இராணுவ ரீதியாக வளர்ச்சியடைந்தார்கள்.
மும்மொழி அறிவு, கல்வித்தகுதியென்பன இருந்த போதும், ஒரு அமைப்பை கட்டியெழுப்பும் திறன் உமா மகஸ்வரனிடம் இருக்கவில்லை. உமா மகேஸ்வரனிடம் இருந்த கல்வித்தகுதிகள் பிரபாகரனிடம் இல்லாத போதும், அமைப்பை கட்டியெழுப்பும் திறன் பிரபாகரனிடம் இருந்தது.
புளொட் அமைப்புக்குள் ஏராளம் போராளிகள் இருந்து, ஆயுதங்கள் இல்லாமலிருந்தது. அதற்கு உமா மகேஸ்வரனின் வரட்டு பிடிவாதங்களே காரணம் என புளொட் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் நம்பினார்கள்.
உமா மகேஸ்வரனின் இறுதிக்காலங்களில், மாணிக்கதாசன் புளொட் அமைப்பில் கடுமையாக விரக்தியடைந்திருந்தார். அவர், உமா மகேஸ்வரன் தலைவராக தொடர்ந்தால், தான் அமைப்பிலிருந்து விலகப் போவதாக நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார்.
அத்துடன், “நமது தலைவர் டெலஸ்கோப்பை மறுவளமாக வைத்து பார்க்கிறார். இதுதான் நமது இயக்கத்தின் பிரச்சினை“ என்றும் குறிப்பிட்டு வந்தார்.
மறுவளமாக, பிரபாகரனின் தலைமைத்துவத்தின் மீது போராளிகளிற்கு அதிருப்தியேற்படவேயில்லை. கருணா பிரிவும், இயக்கம் தொடர்பான அதிருப்தி பிரிவல்ல. கருணா பிளவின் பின் அதற்கு தத்துவார்த்த முலாம் பூச முயன்றிருந்தாலும், அது நிதி மற்றும் தனிமனித பலவீனங்களால் ஏற்பட்ட முரண்பாடு மாத்திரமே.
https://www.facebook.com/share/p/19k4AC2ZKY/?mibextid=wwXIfr
By
கிருபன் ·