ஊர்ப்புதினம்

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

4 weeks 1 day ago

tourists.jpg?resize=750%2C375&ssl=1

ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் (LGBTQ+) சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த வழக்கில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எடுத்துள்ள முக்கிய கொள்கை முடிவு இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அல்லது மேம்படுத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலாத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ‘தேச ஹிதைஷி தேசிய இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர்களில் ஒருவரான வைத்தியர் வசந்த பண்டாரவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இத்தகைய சுற்றுலாத் திட்டங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் சட்டதிட்டங்களுக்கு முரணானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

அதிகாரசபை இத்தகைய திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை எனத் தற்போது கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளதால், இது தொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பரிசீலித்து வருகிறது.

https://athavannews.com/2026/1467161

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 200 முழுமையான புலமைப்பரிசில்கள்: விண்ணப்பங்கள் கோரல்

4 weeks 2 days ago

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 200 முழுமையான புலமைப்பரிசில்கள்: விண்ணப்பங்கள் கோரல்

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 12:59 PM

image

இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்காக 200 முழுமையான நிதியுதவியுடனான (Fully-funded) புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் சட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடத்துறைகளிலும் இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் திட்டங்கள்

அனைத்து மட்டங்களிலுமான கற்கைகளுக்காக பின்வரும் நான்கு பிரதான திட்டங்களின் கீழ் மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம் (Nehru Memorial Scholarship): பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், கலை மற்றும் மானுடவியல் ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) பட்டப்படிப்புகளுக்கு இது பொருந்தும்.

மௌலானா அசாத் புலமைப்பரிசில் திட்டம் (Maulana Azad Scholarship): பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலைப் பட்டப்படிப்புகள் (Masters).

ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் (Rajiv Gandhi Scholarship): தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இளங்கலை பொறியியல் (B.E) மற்றும் தொழில்நுட்ப (B.Tech) பட்டப்படிப்புகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காமன்வெல்த் திட்டம்: பொறியியல், அறிவியல், வணிகம் உட்பட பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளுக்குப் பொருந்தும்.

மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்:

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதுடன் பின்வரும் மேலதிக வசதிகளும் வழங்கப்படும்:

மாதாந்த வாழ்வாதாரக் கொடுப்பனவு

புத்தகங்கள் மற்றும் எழுதுகருவிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு.

இந்தியாவுக்கான விமானப் பயணச் சீட்டு.

கல்விச் சுற்றுலாக்களுக்கான விசேட நிதி உதவி.

பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே தங்குமிட வசதி (Hostel facility).

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரிகள் இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் மெரிட் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தகுதி அளவுகோல்களை www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவை (eduwing.colombo@mea.gov.in) அல்லது இலங்கை கல்வி அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/240123

நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல்

4 weeks 2 days ago

நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல்

04 Mar, 2026 | 10:00 AM

image

மாலைதீவு கடற்படை கப்பலான 'HURAVEE' 02 ஆம் திகதி நாட்டுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர்.

அதன்படி, கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Offshore patrol vessel வகை 'HURAVEE' என்ற  கப்பலானது 48.9 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் குறித்த கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் அஹமட் நபியு மொஹமட் செயல்படுகின்றார்.

மேலும், இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2026-03-04_at_09.38.42.jp

WhatsApp_Image_2026-03-04_at_09.38.43.jp

WhatsApp_Image_2026-03-04_at_09.38.43__1

நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல்

2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

4 weeks 2 days ago

2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 04:29 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2019 ஆம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை மீண்டும் செயற்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சின் கீழ் இயங்கி வரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 350 இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் பல தசாப்தங்களாக பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக இயங்கி வந்தன.

இந்நிறுவனங்கள், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு சமய ஒழுங்குகளை பாதுகாத்தல்,கலாசார விழுமியங்களை நிலைநிறுத்தல், இளைஞர் மற்றும் பெண்கள் முன்னேற்றம், கல்வி விளையாட்டு மற்றும் சமூக சேவைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான சமரச மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வந்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும். சமூக நல்லிணக்கத்தினை பேணவும் இந்நிறுவனங்கள் முன்னனியில் செயல்பட்டன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு,அப்போது இருந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய. பதிவு செய்யப்பட்டிருந்த இந்நிறுவனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து செய்யப்பட்டன. இவ்வாறு. எந்தவிதத் தனிப்பட்ட விசாரணை அறிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், நாடு முழுவதும் செயல்பட்டு வந்த சுமார் 350 இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டிருப்பது, குறித்த நிறுவனங்களை பல்வேறு நிர்வாக மற்றும் சட்ட சிக்கல்களுக்கு உள்ளாக்கியதுடன் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது.

இந்த தீர்மானத்தின் காரணமாக, பல சமூக சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. கல்வி மற்றும் கலாசார திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இளைஞர் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் தடைப்பட்டன, சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் குறைந்துள்ளன. இவ்வாறான பல காரணங்களால் இந்த நாடும் நாட்டின் குடிமக்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை பெற்றுக் கொள்வதிலும் நிலையான அபிவிருத்திகளை அடைவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

ஒரு சில நிறுவனங்கள் தொடர்பாக சந்தேகங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை தனித்தனியாக விசாரித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களும் இல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகளையும் ஒரே நேரத்தில் ரத்துச் செய்திருப்பதை ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக கருதுவதுடன் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகவும் துரோகமுமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த நிலைமையில், நாட்டின் ஒட்டுமொத்த நலனையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு முன்பு சிறப்பாக இயங்கி வந்த இந்நிறுவனங்களின் பதிவுகளை உடனடியாக மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும். அவர்கள் தங்களது பணிகளை சட்டபூர்வமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றும் வகையில் வழிகாட்ட தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

4 weeks 2 days ago

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் 

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 04:12 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு 071 859 8888 என்ற வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 118 என்ற துரித இலக்கம் ஊடாக முறைப்பாடுகளை நேரடியாக அமைச்சுக்கு சமர்ப்பிக்க ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் தேசிய கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையில் தற்போது 608 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. இன்றளவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண சேவையில் 71,424 உத்தியோகத்தர்கள், 7,256 விசேட அதிரடிப்படையினர், ஆதரவு சேவையில் 1,032 உத்தியோகத்தர்கள், உப சேவை அடிப்படையில் 70 உத்தியோகத்தர்கள், என்ற அடிப்படையில் மொத்தமாக 79,782 பேர் சேவை புரிகிறார்கள்.

பொலிஸ் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அரசாங்க சேவை ஆணைக்குழுவின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறை விதிகள் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வழிகாட்டல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பதவி உயர்வுகள் செய்யப்படுகின்றன.

2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 துப்பாக்கிதாரிகள், 14 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்,கூர்மையான ஆயுதத் தாக்குதல்கள் அல்லது ஏனைய தாக்குதல்களில் தொடர்புடைய 50 பேர், குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்த 142 பேர்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 57 பேர், துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த 22 பேர், ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்ட 08 பேர் என்ற அடிப்படையில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் திணைக்களத்தில் நிகழும் முறைகேடுகள் இனங்காணப்பட்டுள்ளன. பொலிஸ் அதிகாரிகள் தவறான நடத்தைகளில் ஈடுபட வழிவகுக்கும் சூழ்நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை அடையாளம் காண்பதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளத. அதன்பிரகாரம் அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும்,அத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உகந்த மட்டத்துக்கு அதிகரிப்பதற்கும்,நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குற்றம் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதிகாரிகளை அடையாளம் கண்டு பொறுப்புடனும் , நேர்மையுடனும் விசாரணைகளை மேற்கொள்வாற்கும் அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பும் வழங்கப்படும்.

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 118 என்ற துரித இலக்கம் ஊடாக முறைப்பாடுகளை நேரடியாக அமைச்சுக்கு சமர்ப்பிக்க ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் தேசிய கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார்.

பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் 

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

4 weeks 2 days ago

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

Mar 4, 2026 - 11:40 AM

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமானப்படை கண்காணிப்பு விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையே, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த கப்பல் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை என்று தெரிவித்தார்.

குறித்த கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

4 weeks 2 days ago

New-Project-4-1.jpg?resize=750%2C375&ssl

மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

துபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானங்களும், துபாயிலிருந்து கொழும்புக்கு UL232 விமானங்களும் இன்று இயக்கப்படும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமலில் இருக்கும்.

சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்படுவதால், பயணிகளின் பாதுகாப்பு அதன் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று விமான நிறுவனம் வலியுறுத்தியது. 

https://athavannews.com/2026/1467109

ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்தார் கியூபா தூதுவர்

4 weeks 2 days ago

ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்தார் கியூபா தூதுவர்

03 Mar, 2026 | 03:47 PM

image

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கியூபாவின் புதிய தூதுவர் பட்ரிசியா பெகோ குவேரா (Patricia Pego Guerra) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (03) முற்பகல் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துதல், கியூபா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பி க்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வளர்த்தெடுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் இடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கியூபா தூதுவர் இதன்போது கருத்து வெளியிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போது, ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, புதிய தூதுவரின் இலங்கையுடனான இராஜதந்திர பணிகள் வெற்றியளிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

3b4a415d-7648-438e-8bb6-53c0bad798ff.jpg

21f3d1fc-9ced-437b-a4a8-71a27ff42987.jpg

7e8d9b4d-9f1b-42c1-bf37-d289104d66ea.jpg

ed52b0e9-86b6-4815-8745-dffc0f1d4803.jpg

ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சந்தித்தார் கியூபா தூதுவர்

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு..!

4 weeks 2 days ago

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு..!

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 03:10 PM

image

நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (03) சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு–கிழக்கு பகுதிகளின் நிலவரம், மக்களின் வாழ்வாதார சவால்கள், ஜனநாயக செயல்முறைகள், மற்றும் நீடித்த அரசியல் தீர்வின் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து திறந்த மனதுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் கலந்துரையாடப்பட்டதாக இரா.சணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நீடித்து வரும் அரசின் பொறுப்புணர்வு தொடர்பான கேள்விகள், நீதியை நிலைநிறுத்தும் செயல்முறைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வது, மற்றும் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டிய சூழல் குறித்து விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அத்துடன், அரசியல் அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் அவசியம், மற்றும் தமிழர் மக்களின் நீண்டநாள் அரசியல் உரிமைகளை மதிக்கும் வகையில் அர்த்தமுள்ள மற்றும் நிலையான தீர்வை உருவாக்குவதின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நோர்வே நாட்டுடன் தொடர்ச்சியான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஜனநாயக மதிப்புகள், மனித உரிமைகள், மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது.

எமது பிரச்சினைகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் தொடர்ச்சியான கவனம் செலுத்தி வருகிற நோர்வே அரசாங்கத்திற்கும், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் பணியில் செயற்பட்டு வரும் தூதர் மே–எலின் ஸ்டெனெரின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்கும் நன்றி கூறியதாக இரா.சணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழரசின் சந்திப்பு..!

எரிவாயு நெருக்கடியின் பின்னணி குறித்து ஜனாதிபதி விளக்கம்

4 weeks 2 days ago

எரிவாயு நெருக்கடியின் பின்னணி குறித்து ஜனாதிபதி விளக்கம்

Mar 3, 2026 - 02:47 PM

எரிவாயு நெருக்கடியின் பின்னணி குறித்து ஜனாதிபதி விளக்கம்

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இன்று (03) பாராளுமன்றத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டிற்கான தீர்வுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, எரிவாயுவைச் சேமித்து வைப்பதில் நெருக்கடி காணப்படுவதால் அதற்கான தேவையான தீர்வுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். 

நாட்டில் அதிகபட்சமாக ஒரு வார காலத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியும் என்பதையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். 

எதிர்காலத்தில் எரிவாயு மற்றும் எரிபொருளில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனத் தெரிவித்த ஜனாதிபதி, மார்ச் 12ஆம் திகதியளவில் ஒரு இலட்சம் புதிய எரிவாயு சிலிண்டர்களுடன் கப்பல் ஒன்று நாட்டிற்கு வரவுள்ளதாகவும் கூறினார். 

"நாம் எதிர்கொள்ளும் ஒரு விசேட பிரச்சினை எரிவாயு பிரச்சினை. எமது முழுமையான சேமிப்புத் திறன் 8,000 மெட்ரிக் தொன்களாகும். லிட்ரோ நிறுவனத்தின் எமது தினசரி எரிவாயு தேவை 1,000 முதல் 1,200 மெட்ரிக் தொன்களுக்கு இடைப்பட்டதாகும். எம்மால் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமிக்க முடியும். எனவே, கையிருப்பு முடியும் வரை காத்திருந்து எரிவாயுவைக் கொண்டுவர முடியாது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 8,000 மெட்ரிக் தொன் வீதம் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இதுதான் நிலைமை. இதனை மாற்ற வேண்டும். தற்போதும் மாலைதீவில் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து சிறிய கப்பல்கள் மூலம் 8,000 மெட்ரிக் தொன் வீதம் கொண்டு வரப்படுகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். லிட்ரோ எரிவாயு ஒரு இலட்சம் புதிய சிலிண்டர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. மார்ச் 12ஆம் திகதி அந்த கப்பல் வருகிறது. ஏனெனில் சிலிண்டர் தட்டுப்பாடும் நிலவியது. மஞ்சள் நிற சிலிண்டர் வைத்திருப்பவர்கள் நீல நிறத்திற்கு மாற விரும்பினர். ஆனால் போதிய சிலிண்டர்கள் இல்லை. இப்படியேதான் இதனைச் சரிசெய்கிறோம். எரிவாயு தட்டுப்பாடு என்று கூச்சலிட்டார்கள், முதலில் இந்த நெருக்கடியைப் புரிந்துகொள்ளுங்கள்... 

8,000 மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் இருந்து, லிட்ரோவால் 1,000 - 1,200 வரை வழங்க முடியுமான நிலையில், திடீரென தேவை 1,800 ஆக அதிகரித்தால், எஞ்சியுள்ள கையிருப்பை 5 நாட்களுக்கும் குறைவாகவே வழங்க முடியும். அப்போது ஒரு நெருக்கடி ஏற்படலாம். அந்த நெருக்கடிக்குத் தீர்வுகளைக் காண முடியும்." என்றார்.

எரிவாயு நெருக்கடியின் பின்னணி குறித்து ஜனாதிபதி விளக்கம்

கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்!

4 weeks 2 days ago

கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்!

03 Mar, 2026 | 09:35 AM

image

கண்டி, பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் சிறுவர் பராமரிப்பு இல்லம் ஒன்றை 183 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் அடிக்கல் நாட்டி வைத்தார்.

மத்திய மாகாண சமூக நலன்புரி, நன்னடத்தை, சிறுவர் பராமதரிப்பு திணைக்களத்தினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் மூடப்பட்ட ஒரு பாடசாலையே இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது பெப்புல்வத்த என்ற இடத்தில் அமைந்துள்ளது. புதிதாக இருமாடிக்கட்டிடம் மற்றும் சுற்று மதில்கள் என்பன அமைப்பதற்கான அடிக்ல் நாட்டு விழாவில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

Poojapitiya-__3_.jpg

Poojapitiya-__1_.jpg

கண்டியில் 183 மில்லியன் ரூபா செலவில் சிறுவர் பராமரிப்பு இல்லம்: ஆளுநர் அடிக்கல் நாட்டினார்!

அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!

1 month ago

a0.jpg?resize=750%2C375&ssl=1

அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!

அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன.

உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச மக்களின் கவனத்தை ஈர்த்தது.

https://athavannews.com/2026/1466963

மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக கொழும்பில் இன்றும் 57 விமானங்கள் ரத்து!

1 month ago

Katunayake-Airport.jpg?resize=700%2C375&

மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக கொழும்பில் இன்றும் 57 விமானங்கள் ரத்து!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் என மொத்தமாக 57 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நாளை (04) தினத்திலும் 4 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள், அதேபோன்று அந்தப் பிராந்தியத்தின் ஊடாக ஏனைய இடங்களுக்குப் பயணிக்கும் விமானங்கள் தொடர்ந்தும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கேப்டன் தமிந்த ரம்புக்கெவ்ல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று காலை சில விமானப் பயணங்கள் மாத்திரம் அந்தப் பிராந்தியத்தின் ஊடாகப் பயணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2026/1466988

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

1 month ago

IMG-20260303-WA0003.jpg?resize=750%2C375

இலங்கை கடற்படையினர் கச்சதீவில் தமிழக இளைஞர்களை தாக்கினர் – தமிழகத்தில் இருந்து குற்றச்சாட்டு!

கச்சதீவு திருவிழாவின்போது இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கினார் எனவும்
இதன்போது தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும், குறித்த கடற்படை அதிகாரியை தண்டிக்க வேண்டும்” என எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர் எனவும் அதன்பின்னர் கடற்படை உயர் அதிகாரி ஒருவர் வந்து மக்களை சமாதானம் செய்ததாக தமிழக, கச்சதீவு பாரம்பரிய திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் சே.நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

கச்சதீவு திருவிழா குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நாங்கள் ஆரம்பத்தில் கச்சதீவுக்குள் உள்நுளையும் போது அங்கிருந்த கடற்படை மற்றும் பொலிசார் வரம்பு மீறி செய்யப்பட்டனர்.

கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்.

இதன் போது எனக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழ்நிலை கூட ஏற்பட்டது.

இதன்போது இந்திய தூதரகத்துடன் நான் பேச முயற்சித்தாலும் பின்னர் அங்கிருந்த சூழ்நிலையுயும், ஏனையோரது நிலையையும் கருத்தில் கொண்டு சமாளித்துக் கொண்டு உள்ளே சென்றோம்.

திரும்பி வரும்போதும் அதே மாதிரியான சூழ்நிலையே ஏற்பட்டது.

அங்கிருந்த சிறு வயதுடைய கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக இளைஞர்களுடன் மோதலில் ஈடுபடுவது போன்ற நிலையை கடைப்பிடித்தார்.

பலர் மயக்கமுறுகின்றார்கள், மூச்சு திணறல் ஏற்படுகின்றது எனவே மக்களை சிறிது நேரம் கடற்கரையில் பரவலாக அமர்ந்திருப்பதற்கு அனுமதிக்குமாறு இளைஞர்கள் கடற்படையிடம் கோரியவேளை இந்த முரண்பாடு ஏற்பட்டது.

இதன்போது சிறிய கடற்படை அதிகாரி ஒருவர் இளைஞர்களை தாக்கினார்.

பின்னர் இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் அங்கு வந்த கடற்படை உயர் அதிகாரி ஒருவர் நிலைமையை சமாளித்து மக்களை கடற்கரையில் உட்கார அனுமதித்தார்.

கச்சதீவு திருவிழாவானது வருடா வருடம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இருப்பினும் சில குளறுபடிகள் அதில் இருக்கத்தான் செய்கின்றன.

இந்திய பக்தர்கள் உள்நுழையும்போது அங்கே நான்கு வழிகளே காணப்படுகின்றன.

அங்கே பெருமளவான கூட்டம் வரும்போது அதனை சமாளிக்க கூடிய நிலைமை காணப்படவில்லை.

திருவிழா முடிந்து திரும்பும் போதும் பிரச்சினை ஏற்பட்டது.

திருவிழாவிற்கு வந்த அதிகாரிகள், விருந்தினர்கள் என அனைவரும் செல்லும்வரை மக்கள் அங்கே ஓரிடத்தில் மறித்து வைக்கப்படுகின்றனர்.

அவர்கள் கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் கப்பல்களில் திரும்பி செல்கின்றனர்.

ஆகையால் அவர்களின் பாதுகாப்பு கருதியே மக்கள் இவ்வாறு மறித்து வைக்கப்படுகின்றனர்.

இதனால் 10 தொடக்கம் 12 மணிவரை மக்கள் கடுமையான வெயிலில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் மணிக்கணக்காக இருக்கும்போது அங்கு காற்று வசதியும் இல்லாத காரணத்தினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது இருப்பினும் தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

மீள்திரும்பும் போது 12 மணிவரை தடுத்து வைக்கின்ற அந்த முறையை சற்று பரிசீலனை செய்ய வேண்டும்.

அதேபோல இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் தனித்தனியாக வழியை பிரித்து விட்டால் அவர்கள் அவர்களது பாதையில் இலகுவாக செல்வார்கள்.

இந்த விடயத்தில் இந்திய அரசும் இலங்கையின் வெளியுறவுத் துறையும் கரிசினை செலுத்தி, அடுத்த ஆண்டு இதே பிரச்சினை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவை அனைத்தும் நிர்வாக பிரச்சினையாகவே காணப்படுகிறது.

எதிர்காலத்தில் இந்த திருவிழாவை ஏற்பாடு செய்யும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏற்பாட்டுக் குழுவானது நிர்வாக முறைகளை சீர் செய்ய வேண்டும் என்றார்.

IMG-20260303-WA0002.jpg?resize=338%2C600&ssl=1 IMG-20260303-WA0004.jpg?resize=338%2C600&ssl=1

https://athavannews.com/2026/1466973

அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது ஏன் என அரசாங்கத்துக்கு தெரியாதா? - முன்னாள் அமைச்சர் சம்பிக கேள்வி

1 month ago

அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது ஏன் என அரசாங்கத்துக்கு தெரியாதா? - முன்னாள் அமைச்சர் சம்பிக கேள்வி

Published By: Vishnu

03 Mar, 2026 | 04:25 AM

image

(எம்.மனோசித்ரா)

அமெரிக்கா கடந்த ஜனவரி மாதத்திலேயே தனது பாரிய போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது. கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு அமைதியாக இருப்பதற்காகவா அந்தப் போர்க்கப்பல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன? அமெரிக்காவின் இந்த முன்னெடுப்புக்கள் குறித்து அரசாங்கத்துக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லையா என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் பல பகுதிகளில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே மக்கள் இவ்வாறு வரிசைகளில் காத்திருக்கின்றனர். சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் இந்த விழிப்புணர்வும் அச்சமும் அரசாங்கத்திடம் ஏன் இல்லை?

அமெரிக்கா கடந்த ஜனவரி மாதத்திலேயே தனது பாரிய போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது. கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு அமைதியாக இருப்பதற்காகவா அந்தப் போர்க்கப்பல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது எவருக்கும் புரியும் விடயமாகும். கடந்த காலங்களில் வெனிசுவேலா போன்ற நாடுகளிலும் இவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். உலகளாவிய ரீதியில் இவ்வாறான போர் அபாயங்கள் தெரிந்திருந்தும், அதற்கு முகங்கொடுக்க அரசாங்கம் போதிய எரிபொருள் இருப்புகளை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு இதுவே பிரதான வழியாகும். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் இளைஞர், யுவதிகள் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். போர் வெடித்தால் அங்குள்ள எமது மக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. ஈராக் - குவைத் போரின் போது இலட்சக்கணக்கான இலங்கையர்கள் அகதிகளாக மாறியதையும், இந்தியா போன்ற நாடுகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பித் தமது மக்களை மீட்டெடுத்த போது, இலங்கை அரசாங்கம் முறையான திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை. இம்முறையும் அத்தகையதொரு இக்கட்டான நிலை ஏற்பட்டால் அரசாங்கத்திடம் என்ன திட்டம் இருக்கிறது?

அரசாங்கம் இயற்கை அனர்த்தங்களை கையாண்ட விதம் அதிருப்திக்குரியது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் கூட முறையான தங்குமிடங்கள் இன்றி கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கம் சமூக ஊடகங்களில் வீடுகள் கட்டுவது போலவும், பாதைகளை அமைப்பது போலவும் விளம்பரம் செய்தாலும், கள நிலைவரம் முற்றிலும் வேறாக உள்ளது. சுனாமி அனர்த்தத்தின் போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத நிறுவனங்கள் ஒன்றிணைந்து மிக விரைவாக வீடுகளைக் கட்டி முடித்தமை அனைவருக்கும் நினைவில் இருக்கும். தற்போது அரசாங்கம் அத்தகைய உதவி வழங்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பதில்லை. தாமே அனைத்தையும் செய்வதாகக் கூறி எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இறுதியாக, வீதியில் மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் எரிபொருளுக்காகக் காத்திருக்கும் சாதாரண மக்களுக்கு இருக்கும் அறிவு கூட அரசாங்கத் தலைவர்களுக்கு இல்லை. ஜனவரி மாதத்திலிருந்தே அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவாகவே இன்று மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வரும் நாட்களில் நாடு ஒரு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் என எச்சரிக்கின்றோம் என்றார்.

அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது ஏன் என அரசாங்கத்துக்கு தெரியாதா? - முன்னாள் அமைச்சர் சம்பிக கேள்வி

நாட்டில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு ; ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

1 month ago

நாட்டில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு ; ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

Published By: Vishnu

03 Mar, 2026 | 04:37 AM

image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அமுலிலிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பிப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு, பொது அமைதியைப் பேணுதல் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய அவசரகாலச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நீடிப்பு அவசியமானது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என ஜனாதிபதி முன்னதாகவே உறுதியளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதற்கு முன்னர் 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருந்த தனித்துவமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல், உணவு விநியோகம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு, தபால் மற்றும் ஊடக சேவைகள், நிலச்சரிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதிச் சேவைகள் ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாகத் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளன.

இந்த மீளறிவித்தல் மூலம், அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் குறித்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் தடையின்றி இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/240001

ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன்

1 month ago

ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன்

02 Mar, 2026 | 06:50 PM

image

(நா.தனுஜா)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார்.

ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஜனாதிபதி வெறும் 'கண்காட்சியை' விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது :

ஊடகத்துறையில் எனது நல்ல நண்பரான பாரதியும் நானும் இணைந்து எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கிறோம். அவரது மிகப்பெரிய பலம் அவரது மௌனம் தான். நாமனைவரும் இணைந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பாரதி மாத்திரம் மௌனமாக இருப்பார். ஆனால் பேசி முடித்த பின்னர் தான், நாம் பேசிய சகல விடயங்கள் தொடர்பிலும் முகத்திலேயே பாவனைகளை வெளிப்படுத்தி அவர் தான் அதிகம் பேசியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும்.

தமிழ்த்தேசியக்கட்சிகளின் ஒற்றுமை என்பது பாரதிக்கு எப்போதுமே இருந்த கனவாகும். அவர் எத்தகைய கனவு, நம்பிக்கை மற்றும் இலக்கில் விடாப்பிடியாக இருந்தார் என்று நினைத்துப்பார்க்கையில், இன்று வட, கிழக்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் மத்தியில் நிலவும் முரண்பாடுகள் கவலையளிக்கின்றன.

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று கட்சிகளை உள்ளடக்கிப் பதிவுசெய்து சுமார் 12 வருடங்களாக தமிழ் முற்போக்குக்கூட்டணியாக இயங்கிவரும் நாம் இந்த ஒற்றுமை விடயத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறோம். அந்த ஐக்கியம் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படும் கட்சிகள் மத்தியிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

மறுபுறம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார்.

ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளடங்கலாக தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இப்போது வெறுமனே காண்பிக்கப்படும் கண்காட்சியை விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் காண்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன்

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

1 month ago

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன் ; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

02 Mar, 2026 | 06:48 PM

image

(நா.தனுஜா)

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி அவசியம் என்ற தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருப்பதன் காரணமாகவே நான் அதனை நிராகரித்தேன் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நானறிந்தவரை பாரதி மிகப்பண்பானவர். யாருடைய மனமும் நோகாதபடி நடந்துகொள்ளக்கூடியவர். நான் கூறியதாக ஏதேனும் செய்திகள் வரும்போது எல்லாம், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'இப்படி ஒரு செய்தியைப் பார்த்தேன். நீங்கள் இவ்வாறு கூறினீர்களா?' எனக் கேட்பார். அவ்வாறு அவர் கேட்ட பல சந்தர்ப்பங்களில் எனது பதில் 'இல்லை' என்பதாகவே இருந்திருக்கிறது. எனவே ஒரு செய்தியைப் பிரசுரிப்பதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மை பற்றி உரிய நபரிடமே கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் பண்பு அவரிடம் இருந்தது.

அடுத்தது பொதுவாக அஞ்சலிக் கூட்டங்களில் நான் அரசியல் பேசுவதற்கு விரும்புவதில்லை. ஆனால் இங்கு எம்மை நோக்கி சில மோசமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையினால், அவற்றுக்குப் பதிலளிக்கவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது.

அதாவது மலையக அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவதாகக்கூறி அவர்களுக்கு வெள்ளை அடிக்கப்பட்டதுடன் மாத்திரமன்றி, தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது சுயதேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்தும் இணையாமலும் செயற்படுவதாக மிக அபாண்டமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கும் மனோகணேசன் முன்னைய அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ரவூப் ஹக்கீம் பல்வேறு அரசாங்கங்களில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளான நாங்கள் எந்தவொரு அரசாங்கத்திலும் அமைச்சர்களாகப் பதவி வகித்ததில்லை.

மாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமக்கென ஒரு சுயாட்சி இருக்கவேண்டும் என்ற தமிழ்மக்களின் அபிலாசையில் நாம் எப்போதும் உறுதியாக நின்றிருக்கிறோம். தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம்.

நாம் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் சுமுகமான அறிமுகத்தைப் பேணியிருந்தாலும் அவர்களுக்கும் எமக்கும் இடையில் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக ஆரம்பத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணி இருந்தது.

ஆனால் 1989 ஆம் ஆண்டு கட்சிக்குள் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக மாற்றிக்கொண்டது.

அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையையும் கடுமையாக எதிர்த்தது. இன்று அக்கொள்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் தான் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

உண்மையைக் கூறவேண்டுமானால், அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் எனக்கு நீதியமைச்சர் பதவியை வழங்குவதாகக் கூறினார். நாங்கள் சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய விரும்புபவர்களாக இருந்திருந்தால், நான் அந்த அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் தமிழ்மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்வது ஒன்றே எமது இலக்காக இருந்திருக்கிறது என்றார்.

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்

மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி - பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம்

1 month ago

மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி - பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம்

02 Mar, 2026 | 06:46 PM

image

தனித் தமிழ் மக்கள் வாழும் வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் என தெரிவித்து எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என அபகரிப்பதற்காக செயற்படுகின்றனர். இதனை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கிண்ணியடியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் வாழைச்சேனை பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வட்டார எல்லைகளின் எல்லை நிர்ணயத்தை அடையாளப்படுத்தும் பிரேரணை ஒன்று தவிசாளரால் கொண்டுவரப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த பிரதேசம் கடந்த காலத்தில் எல்லை நிர்ணய பிரச்சினை. ஒரு தீர்க்கப்படாத இந்த பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு காணப்படாமல் இந்த எல்லை நிர்ணயங்களை தங்களுக்கு தாங்களே தீர்க்கமாக தீர்மானித்து ஒரு வருமானத்தை நோக்கமாகக் கொண்டு எமது சமூகத்தின் எல்லையை பின்னுக்குத் தள்ளுகின்ற செயற்பாட்டை செய்யக் கூடாது என வலியுறுத்தினேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

கோறளைப்பற்று பிரதேசத்தில் 14 வட்டாரங்கள். இதில் 4 முஸ்லிம் வட்டாரங்கள், 10 வட்டாரங்களில் தமிழர்கள் வாழ்கின்றனர். இருந்தபோதும் 8 வட்டாரங்கள் முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்கின்ற சூழல் இருக்கின்ற நிலையில் 2 வட்டாரங்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் எதேச்சையாக குடியேற்றப்பட்டு வாழந்து வருகின்ற வட்டாரங்களாகும்.

இதில் எங்களுக்கான ஒரு எல்லை நிர்ணயம் வகுக்கப்படாமல் பிரதேச சபையால் அவர்களாகவே எல்லை நிர்ணயங்களை தயாரித்து அதில் வருமானங்களை அதிகரிக்க வேண்டும் என்பது எதிர்காலத்திலே தமிழ் கிராமங்கள் சுருங்கிப் போகக்கூடிய அளவிற்கு ஆதாரங்களாக அமைந்துவிடும்.

எனவே வாழைச்சேனை வட்டாரம், கறுவாக்கேணி வட்டாரம் என்பது இரண்டு தமிழ் கிராமங்கள். இந்த கிராமங்களிலே தான் இந்த பிரச்சினைகள் இருக்கின்றன. கறுவாக்கேணி வட்டாரம் என்பது வாழைச்சேனை இலங்கை மின்சார சபையின் வீதியை ஒட்டியதாக அமைந்திருக்கிறது.South Asians & Diaspora

ஆனால், அது அடையாளப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக குழப்பங்கள் எழுப்பப்பட்டபோது அவை அனைத்தும் இடை நடுவில் விடப்பட்டது. இந்த நிலையில் பிரதேச சபையின் நிர்வாகம் எதனூடாக கறுவாக்கேணி 10ஆம் வட்டாரத்தை பிரித்து, இது தான் கறுவாக்கேணி 10ஆம் வட்டாரம் என அறிவிக்கப்போகிறது என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது.

கோறளைப்பற்று பிரதேச சபை என்பது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேச சபையாக இருந்தாலும் மக்களுக்கான ஒரு சரியான தீர்வுகளையும் முடிவுகளையும் எடுக்க முடியாமல் இருக்கும் ஒரு பிரதேச சபையாக இருக்கின்றது.

இந்த கறுவாக்கேணி 10ஆம் வட்டாரத்தில் கிராம சேவகர் பிரிவு தனித்தமிழ் மக்களை சேர்ந்த பிரிவு. ஆனால், இதே கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவுடன் உள்ள கொண்டையன்கேணி என்கின்ற கிராமம் இன்று கொண்டயன்கேணி முஸ்லிம் கிராமம் என உருவாக்கப்பட்டு கொண்டயன்கேணி கிராம அபிவிருத்தி சங்கம், மற்றும் பள்ளிவாசல், சனசமூக நிலையம் என அரசு சார்ந்த சங்கங்கள் அனைத்தும் கொண்டயங்கேணி முஸ்லிம் கிராமம் என உருவாக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக கொண்டையன்கேணி கறுவாக்கேணி இணைந்து கறுவாக்கேணி கிராம சேவகர் பிரிவில் இயங்குகின்ற ஒரு கிராமம். இந்த கொண்டையங்கேணி என்று உருவாக்கப்பட்டுள்ள பெயர் மட்டும்தான் கொண்டையங்கேணி முஸ்லிம் என்று இருக்கின்றதே தவிர அவர்களுடைய அனைத்து நிர்வாக செயற்பாடுகள் ஓட்டுமாவடி பிரதேச செயலகத்திற்கு உள்ள செம்மண் ஓடை கிராம சேவகர் பிரிவுக்குள் நடைபெறுகின்றது.

ஓட்டுமாவடி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள செம்மண் ஓடை கிராம சேவகர் பிரிவில் நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமானால் ஏன் கொண்டையங்கேணி முஸ்லிம் கிராமம் என இந்த கிராமத்துக்கு பெயர் சூட்டவேண்டும். இது மிகவும் ஆபத்தான விடயம்.

தமிழர்கள் வாழ்ந்துவரும் பூர்வீக கிராமங்களின் பெயர்களை தங்களுடைய கிராமங்கள் இன்றி தெரிவித்து, எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்ற ஆதாரத்தை காட்டுவதற்காக செயற்படுகின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

கல்குடா தேர்தல் தொகுதி என்பது முஸ்லிம்களுடனும் தமிழர்களுடனும் ஒரு தேர்தல் நோக்கத்துக்கான தொகுதி. ஆனால், ஓட்டமாவடியில் இருந்து உருவாக்கப்படுகின்ற இந்த சங்கங்கள், அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், வெளிநாடுகளில் இருந்து உருவாக்கப்படுகின்ற சங்கங்கள் எல்லாமே தங்களுடைய விலாசத்தை, அடையாளத்தை கல்குடா என்று பதிவு செய்து வருகின்றனர். இது ஏன் தேவை?

இது இன்னொரு 20 வருடங்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தின் பிள்ளைகள் சொல்லும் இது முஸ்லிம்களின் பூர்வீக நிலம் என்பர். எனவே, கோறளைப்பற்று பிரதேசத்தில் எங்கள் சமூகம், மக்கள் சார்ந்து யாரும் பேசுவதில்லை.

அரசியல் ரீதியாக பிரதேச சபைகளில் இருக்கின்ற அவர்கள் அனைவரும் வாய்மூடிகளாக தங்களுடைய அற்ப சொற்ப பிரதேச சபை ஆசனத்தை பாதுகாப்பதற்காக பேசாமல் இருக்கின்றனர் அல்லது பேசத் தெரியாமல் மடந்தையாக இருக்கின்றனர்.

நாங்கள் அப்படி இருக்க முடியாது. எனவே கல்குடா தொகுதிக்குள் இருக்கும் மக்களே உன்னிப்பாக சிந்திக்க வேண்டும்.

அதேவேளை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது வாழைச்சேனை வட்டாரம், கறுவாக்கேணி வட்டாரம் ஆகிய இரண்டு வட்டாரம் என்பது பரிசீலனை செய்யப்பட்டு எல்லை நிர்ணயம் ஒழுங்காக செய்யப்பட்டதன் பின்னர் தான் பிரதேச சபைக்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை கல்குடா என்று அழைப்பது தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கவனத்துக்கு கொண்டுவந்து, இவ்வாறு இயங்குகின்ற அமைப்புக்களை தடைசெய்து, அவர்கள் அவர்களுடைய பிரதேசத்தில் அவர்களுடைய அமைப்புக்களை நடாத்துவதில் எந்தவித பிரச்சினையும் இதற்கு இல்லை. தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ளேன்.

அதேவேளை கல்குடா என இன்னொரு கிராம சேவகர் பிரிவை அடையாளப்படுத்தி அவர்களுடைய அடையாளம் என இனிவரும் காலங்களில் காட்டக்கூடாது. ஒரு இனத்தின் மொழியும் அடையாளமும் முகவரியும் எங்கு களவாடப்படுகிறதோ, அங்கே இந்த இனத்துக்கு எதிராக வன்முறையும் பயங்கரவாதமும் தோற்றுவிக்கப்படுகிறது என்றார்.

மட்டு. கொண்டையங்கேணி தமிழர்களின் பூர்வீக கிராமத்தை முஸ்லிம் கிராமம் என பெயர் சூட்டி அபகரிக்க முயற்சி - பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம்

புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு

1 month ago

புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு

02 Mar, 2026 | 10:16 AM

image

அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு–கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த பின்னடைவை கருத்தில் கொண்டு, மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதை அவதானித்தும், தமிழ் மக்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் தீர்மானம் காலத்தின் அவசியமாகியுள்ளது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்தேசியத்தை பலவீனப்படுத்தக்கூடிய அக மற்றும் புறச் சூழல்கள் பலமடைவதையும், கடந்த காலங்களில் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுநிலைப்பாட்டை எடுப்பதில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் அதன் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு, தமிழ் மக்களை ஒருமுக தீர்மானத்தை நோக்கி நகர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பாராளுமன்றத்தில் தமிழ்தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், தமிழ்தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்தேசிய பரப்பில் செயற்படும் பொது அமைப்புக்கள் ஆகியவை ஒன்றிணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் எதிர்காலத் தீர்மானங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்க்கட்சிகளின் பொதுநிலைப்பாடு, நீண்டகால அரசியல் எண்ணக்கோட்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த கலந்துரையாடலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை விடுத்துள்ளது.

இந்தக் கலந்துரையாடல், இன்று திங்கட்கிழமை ( 02.03.2026 ) பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா வரவேற்பு மண்டபத்தில் ( Dwaraka Restaurant Reception Hall, Bambalapitiya) பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பான ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு

Checked
Fri, 04/03/2026 - 09:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr