ஊர்ப்புதினம்

புதிய சட்டம் பன்மடங்கு மோசமானது

1 hour 18 minutes ago
’புதிய சட்டம் பன்மடங்கு மோசமானது’ செந்தூரன் பிரதீபன்

“தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மேலாக உள்ள பன்மடங்கு மோசமான சட்டமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் காணப்படுகின்றது” என்று, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன் தெரிவித்தார்.

“பொலிஸ் நிலையத்தில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஆதாரமாக வழக்கு தொடர்ந்தால் அதை பாவிக்க முடியும். இதனால்தான் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்” என்றும் சுட்டிக்காட்டினார்.

சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மற்றும் பொது அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இராணுவத்துக்கு மிகவும் பலத்தை வழங்குகின்றது.  இராணுவ கைது செய்வதற்கு உரிமையை வழங்குகின்றது, ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிமை வழங்குகின்றது.

அத்துடன் தடுப்பணை, தற்போது உள்ள சரத்தின் படி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்க முடியும், தற்போது உள்ள புதுச் சட்டம், ஜனாதிபதிக்கான அதிகாரத்தில் மேலும் மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு மீது தடை விதிக்கின்றது.

அதனை வருத்தமானியில் பிரசுரிக்க முடியும் அது நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக வர்த்தமானி மூலம் பிரசுரிக்க முடியும். ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழுவினை, தடை செய்யப்பட்ட அமைப்பாக தீர்மானிக்க முடியும் அத்துடன் வர்த்தமானியில் வெளியிட முடியும்.

அதற்கு பொலிஸ் அதிபர் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. உண்மையில் இந்த சட்டம் நீதித்துறையின் ஏற்பாடுகள் அன்றி காணப்படுகின்றது” என்றார்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/புதிய-சட்டம்-பன்மடங்கு-மோசமானது/150-315090

ரணிலை சந்தித்தார் மகிந்த - இனப்பிரச்சனை தீர்வில் தலைமை

3 hours 1 minute ago

இன்று காலை ஜனாதிபதி ரணிலை சந்தித்த மகிந்த, நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தேசசத்தின் சிதைந்து போயுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னாலான அணைத்தையும் செய்வதாக உறுதி அளித்தார்.

கடன் வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதால், நாடு வேறு வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும்என்றார்.

மகிந்தவின்இந்த முன்னெடுப்பு, அரசியல், ராஜதந்திர வட்டாரத்தில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

முன்னர் போல இனவாத அரசியல் செய்து கொண்டே, சர்வதேச ராஜதந்திர அரசியலுக்கு வாய்ப்பில்லை என்பதால், அரசியல் ஜாம்பவனான மகிந்த, பசுத்தோல் போர்த்தியவாறு கிளம்புகிறாரோ என்ன தமிழ் பத்திரிகையாளர் கருத்து தெரிவித்தார். 

எதுவாயினும் நல்லது நடந்தால் சரிதான்.

10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!

4 hours 37 minutes ago
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்!
Vhg ஏப்ரல் 01, 2023
Photo_1680330250918.jpg

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் உடன்பிறந்த சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பாலியல் வன்புணர்வுகையும் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆசிரியர் சம்மந்தப்பட்ட மாணவியிடம் சம்பவத்தின் உண்மை தன்மையை விசாரித்து அறிந்துக்கொண்டு உடனடியாக, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அவர்கள் வவுனியா காவல் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மூவரால் கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து துரிதமாக செயல்பட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவத்துடன் தொடர்பான மூவரை கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலகர பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர், மாணவியின் உடன் பிறந்த சகோதரனான சமனங்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞர், உறவினரான வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும், சிறுமியை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
 

https://www.battinatham.com/2023/04/10.html

நித்தியானந்தாவின் "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது.

4 hours 41 minutes ago

Godman Nithyananda's Own Country

நித்தியானந்தாவின்  "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு... சுவாமி நித்தியானந்தா கைலாசா நாடு என்று நாட்டை உருவாக்கி,
அதற்கு என தனியே... கடவுச்சீட்டு, நாணயம் போன்றவற்றை அறிமுகப் படுத்தி இருந்த போது...
இந்திய அரசு அந்த நாடு எங்கே இருக்கும் என்ற தேடுதலில் தனது உளவுத் துறை மூலம் 
பல இடங்களிலும் இரகசியமாக தேடுதல் நடாத்தி வந்தது.

குறிப்பாக... பசிபிக் சமுத்திரத்தில் எங்காவது ஒரு நாட்டில் 
அவர் தனியே ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என்ற பெயரை வைத்திருக்கலாம் 
என்ற சந்தேகத்தில்  அங்கு இந்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தியது.
அங்கு பல வருடம் தேடியும் கண்டு பிடிக்காத நிலையில்...
தென்னாபிரிக்கா, மாலைதீவு பகுதிகளில் தனது தேடுதல் நடவடிக்கையை தீவிரப் படுத்தியும் 
பலன் கிடைக்காத நிலையில், தேடுதல் நடவடிக்கையை கைவிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில்... கிளிநொச்சியில் உள்ள உருத்திரபுரம் கிராமத்தில் 
30 ஏக்கர் நிலத்தில் ஒரு பண்ணை மாதிரி இயங்கிய இடத்தில்...
பல வெளிநாட்டு, உள்நாட்டு,  இந்தியர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக 
இலங்கை புலனாய்வுத்துறைக்கு தகவல் தெரிய வர... அந்த இடத்திற்கு சென்ற அவர்கள்,
அவ்விடத்தை சோதனையிட்ட 30 பேருடன் நித்தியானந்தா இருந்தது கண்டு பிடித்து 
இலங்கை பொலிஸாரின் துணையுடன் கைது செய்தார்கள்.

கைது செய்யும்  போது... நித்தியானந்தா எந்த எதிர்ப்பையும் காட்டாமல், 
பொலிஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவிக்கப் படுகின்றது.  

நித்தியாந்தாவை கைது செய்த இலங்கை பொலிஸாருக்கு,
இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்து... 
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி அரச உயர் மட்டத்தில் 
பேச்சு நடத்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றது.

https:// Suya aakkam. Com

ஒரு காலின் பாதத்தை இழந்த முன்னாள் போராளி மகனின் பார்வைக்காக கையேந்தும் அவலம்

7 hours 9 minutes ago
ஒரு காலின் பாதத்தை இழந்த முன்னாள் போராளி மகனின் பார்வைக்காக கையேந்தும் அவலம்

Published By: Nanthini

01 Apr, 2023 | 11:11 AM
image

(எஸ்.றொசேரியன் லெம்பேட்) 

லங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால போர் தமிழர் வாழ்வியலில் பல மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. இந்த கொடூர யுத்தத்தினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் மரணித்தனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்; இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனாலும், யுத்தத்தின் வடுக்களினாலும், நேரடியாக யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி, தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள 'சிலுவைராசா' என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலையை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

IMG_3829.jpg

மன்னார், விடத்தல் தீவு பகுதியை சேர்ந்த தமிழ் கீதன் 'யாழ் செல்லும் படையணியை' சேர்ந்த முன்னாள் போராளி ஆவார்.

மாங்குள யுத்தம், ஓயாத அலைகள் போன்ற சமர்களில் கலந்துகொண்ட இந்த போராளி, தற்போது தோட்டவெளி ஜோசேவாஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்க வீட்டுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடொன்றில் வாழ்ந்து வருகிறார்.

1999ஆம் ஆண்டில் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தனது ஒரு காலின் பாதத்தை முழுவதுமாக இழந்த நிலையில் தமிழ் கீதன் மாற்றுத்திறனாளியானார்.

IMG_3827.jpg

ஒழுங்காக நடக்க முடியாத நிலையில், தனது 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை பராமரிப்பதற்காக தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் இவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

குடும்ப வறுமை காரணமாக இவரின் மனைவி தனியார் நிறுவனமொன்றில் சிறிய சம்பளத்துக்காக சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்து வருகின்றார்.

இத்தகைய துன்பகரமான நிலையிலேயே தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கிறார். ஒரு மகன் விபத்தொன்றினால்  எலும்பு முறிவு ஏற்பட்டு, அவரும் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். இளைய மகனும் பார்வையற்ற குழந்தையாகவே பிறந்துள்ளமை அந்த குடும்பத்தின் பேரவலமாக காணப்படுகிறது. 

இவ்வாறு தானும், தனது இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் அன்றாடம் தவித்து வருவதாக தமிழ் கீதன் தெரிவித்துள்ளார். 

IMG_3832.jpg

இவர் தனது மகனின் பார்வைக்காக தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துக்களை விற்று சிகிச்சை மேற்கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை.

தொடர்ந்தும் மகனுக்கு மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார். 

மகனின் கண்களை விழித்திரை மறைப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், அவ்விழித்திரையை சரி செய்யும் சிகிச்சையை மேற்கொள்ள வசதியின்றி துன்புற்று வருகிறார்.

தனக்கு ஆடம்பர உதவிகளை செய்யாவிட்டால் கூட வாழ்வாதாரத்தை முன்னேற்றும் சிறு உதவிகளையேனும் புலம்பெயர் உறவுகள் வழங்க முன்வந்தால், தன் குடும்பத்தையும் மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும். 

வாழ்வாதார உதவிகளை வழங்க விரும்பாவிடினும், தனது மகன் பார்வை பெறுவதற்கான சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளையாவது யாரேனும் வழங்க முன்வாருங்கள் என தமிழ் கீதன் கண்ணீர் சிந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

IMG_3830.jpg

  •  

 


 

 

https://www.virakesari.lk/article/151879

கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது

7 hours 12 minutes ago
கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - கரடியனாறு, மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தேரர் ஒருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த குழுவினர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இராணுவத்திற்குரிய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கரடினாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். R
 

 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கேணல்-உட்பட-நான்கு-பேர்-அதிரடி-கைது/73-315084

கோட்டாபயவின் வீட்டிற்கு அருகில் குவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்.

9 hours 14 minutes ago

கோ ஹோம் கோட்டா” போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதையொட்டி மீரிஹான பகுதியில் வெள்ளிக்கழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

நேற்று (31.03.2023) மாலை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னணி செயற்பாட்டாளர்களான டானிஸ் அலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு செல்லும் வீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

https://tamilwin.com/article/tense-situation-at-mirihana-paper-news-1680319596

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை கிழக்கு ஆளுனரோ, சாணக்கியனோ, எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது ; அமைச்சர் ஹாபிஸ் நசீர்

22 hours 21 minutes ago

FB_IMG_1680218247864.jpg

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாத்திரம் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாளோ எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது...
 
அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
 
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்கள் ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்ற எடுத்த நடவடிக்கையில் மூக்குடைபட்டார்.
 
ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் இன்று வெளிவந்த வீடியோ காட்சியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் என்னை விமர்சிக்கும் துணியில் பேயாட்டம் ஆடி இருந்தார்.
 
 
கௌரவ சாணக்கியன் அவர்கள் முடியுமானால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு சூறையாடபட்டு இன்னும் கள்வர்களுடைய கையில் இருப்பதை வாய் திறந்து பேச முடியுமா??
 
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு தைரியம் இருந்தால் சிறுபான்மை சமூகத்திற்காக பேசவேண்டும் என்றால். உங்களுடைய நடிப்பை மூட்டை கட்டி விட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு இருந்து 240 சதுர கிலோமீட்டர் காணியையும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் இருந்த 176 சதுர கிலோமீட்டர் காணியையும் முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு கொடுக்க பேச முடியுமா ??அதேபோல் காத்தான்குடி பூநொச்சிமுனையினை மட்டக்களப்பு மண்முனை பிரதேச சபைக்கு இணைத்து வைப்பதனை காத்தான்குடி பிரதேசசபைக்கு இணைக்க வேண்டும் என்று பேச முடியுமா?? காத்தான்குடி அண்டிய பகுதியில் முஸ்லிம்கள் பெருமபான்மையாக வாழும் காணிகளையும் ஏப்பமிட்ட நிலையில் இருக்கின்ற நிலையை சாணக்கியன் வாய் திறந்து பேச முடியுமா?? தளவாய் முஸ்லிம் எல்லைக் காணிகளை பிரித்ததை மீண்டும் முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டும் என பேச முடியுமா??
 
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா ?முடிந்தால் திட்டமிட்டு களவாடிய இக்காணிகளையும் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்க உங்களால் பேசமுடியுமா??
 
கௌரவ சாணக்கியன் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் முடிந்தால் முஸ்லிம்களிடம் இருந்து களவாடிய அத்தனை காணியையும் முஸ்லிம்களுக்கு கொடுப்பதுதான் நியாயம் என்று உண்மையையும் சத்தியத்தை உரத்து இந்த நாட்டுக்கு சொல்லுங்கள்..

எரிக் சோல்ஹேம் மன்னாருக்கு விஜயம்

22 hours 29 minutes ago
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சோல்ஹேம் வியாழக்கிழமை (30)  மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தலைமன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட எரிக்சோல்ஹேம் தலைமன்னார் விஜயத்தின் பின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுடன் மன்னார் ஆயர் இல்லத்தில் சிநோக பூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தில்  அமைந்துள்ள மறைந்த முன்னால் மன்னார் மறைமாவட்ட ஆஜர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னால் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவு நாள் பேருரை நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

குறித்த நினைவுநாள் நிகழ்வில் எரிக்சோல்ஹேம், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாடோ ஆண்டகை, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சால்ஸ்நிர்மலநாதன் உட்பட்ட அரச திணைக்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எரிக் சோல்ஹேம் மன்னாருக்கு விஜயம் | Virakesari.lk

டியோகோ கார்சியாவில் தற்கொலை செய்ய முயன்ற இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு மூன்றாம் நாடொன்றில் புகலிடம் - பிரிட்டன் அனுமதி

22 hours 31 minutes ago
image

டியோகோ கார்சியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் ருவண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு மூன்றாவது நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.

 

இலங்கையை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் மூன்றாம் நாடொன்றில் புகலிடம் பெறுவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளமைக்கான ஆவணங்களை பார்வையிட்டுள்ளதாக நியுஹியுமானேட்டேரியன் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் துன்புறுத்தல் குறித்து அச்சமடைந்துள்ளதால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பபோவதில்லை என அந்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

எனினும் மீள்குடியேற்றப்படும் நாடு எது என பிரிட்டன் தெரிவிக்கவில்லை.

ஹம்சிகா கிருஸ்ணமூர்த்தி 22 அஜித்சஜித்குமார் 21 என்ற இரண்டு இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கே பிரிட்;டன் மூன்றாம் உலக நாட்டில் புகலிடம் பெறுவதற்கான  அனுமதியை வழங்கியுள்ளது.

2021 இல் டியாகோ கார்சியா தீவிற்கு சென்ற இரண்டு 89 புகலிடக்கோரிக்கையாளர்களில் இவர்களும் காணப்பட்டனர் , இவர்கள்  சென்ற படகு சேதமடைந்த நிலையில் பிரிட்டிஸ் படையினர் அவர்களை காப்பாற்றியிருந்தனர்.

இதன் பின்னர் 2022 இல் டியாகோ கார்சியாவில் தீவில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்தது. இவர்களில் பலர் பின்னர் பிரிட்டனிடமிருந்து நிதிஉதவியை பெற்று இலங்கை திரும்பினர்,அல்லது படகுகளில் பிரான்சின் ரீயூனியன் தீவிற்கு சென்றனர்.

எஞ்சியுள்ள ஏனைய 68 புகலிடக்கோரிக்கையாளர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான தொடர்புகளிற்காக தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக பாலியல்ரீதியில் வன்முறைகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

இதுவரை சுமார் 50 புகலிடக்கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பிரிட்டனின் உள்துறை அமைச்சு ஆராய்ந்துள்ளது. இதில் அனேகமானவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது பிரிட்டன் அவர்களிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவுவிரைவில் வெளியாகும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது..

டியோகோ கார்சியாவில் தற்கொலை செய்ய முயன்ற இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு மூன்றாம் நாடொன்றில் புகலிடம் - பிரிட்டன் அனுமதி | Virakesari.lk

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!

22 hours 37 minutes ago
image

 

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் தந்தையை வெட்டி படுகொலை செய்த குற்றத்தில் இரு மகன்களும், மேலும் ஒருவரும் என மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமது தந்தையை தாமே கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த  பாடசாலை மாணவர்களான கொலையுண்டவரின் இரு மகன்கள் மற்றும் அவர்கள் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அவர்களது நண்பர் ஆகிய மூவருமே  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவர் இன்று (31) காலை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றினை அமைத்து, அங்கு தங்கி வந்துள்ளார்.

r__3_.jpg

இந்நிலையிலேயே இன்று அவர் தனது தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவரின் இரு மகன்களும் தந்தையை கொன்ற குற்றத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.

அத்துடன் இந்த கொலைக்கு உதவிய மகன்களின் நண்பர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதனையடுத்து கைதான மூவரும் கொடிகாமம் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

கைதான இரு மகன்களையும் தொடர்ந்து விசாரித்தபோது தெரியவருகையில்,

இரண்டு மகன்களும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் ஆவர். இருவரும் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

தந்தை தம்மிடம் மிக மோசமாக நடந்துகொண்டமையால் அவரை கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் அருகில் உள்ள குளத்தினுள் வீசப்பட்டிருந்த நிலையில் விசாரணையின்போது சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கத்திகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். 

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது! | Virakesari.lk

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு ஒத்துழைப்பு - இந்திய ஜப்பான் தூதுவர்கள் கருத்து

1 day 1 hour ago
பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு ஒத்துழைப்பு - இந்திய ஜப்பான் தூதுவர்கள் கருத்து

Published By: Rajeeban

31 Mar, 2023 | 04:15 PM
image

இலங்கைக்கான இந்திய ஜப்பான் தூதுவர்கள் பிராந்திய இணைப்பை  மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

பாத்பைன்டர் மன்றம் தொகுத்துள்ள அறிக்கையை வெளியிட்டு வைக்கும்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இந்திய ஜப்பான் தூதுவர்கள் இதனை தெரிவித்;துள்ளனர்.

FsiK6cnXwAAml6e.jpg

இந்தியாவும் ஜப்பானும் அமைதியான முற்போக்கான வளமான இந்தோபசுபிக் குறித்து பரந்துபட்ட நலன்களை பகிர்ந்துகொள்கின்றன என இலங்கைக்கான இந்திய தூதுவர் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐஆர்ஓஏ அமைப்பில் இந்தியாமுக்கியமானதொரு நாடு என்பதை வலியுறுத்தியுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இங்குள்ள மக்களின் செழிப்பிற்காகவும் அனைத்து தரப்பினரினதும் நன்மைக்காகவும் இந்தியா ஜப்பான் இலங்கை இணைந்து செயற்படுவதற்கான பல வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் முன்னுரிமைகளின் அடிப்படையில் காணப்படவேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் மூன்று முக்கியமான தூண்களின் சங்கமத்தில் இலங்கை உள்ளது என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் ஜப்பானும் இந்தியாவும் பிராந்தியத்தில் சாதகமான தாக்கத்தை செலுத்தியுள்ளன என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்  மிசுகோசி ஹிடியாகி தெரிவித்துள்ளார்.

FsiK6cmWAAMgmxU.jpg

இரண்டுநாடுகளும் இலங்கை உட்பட பிராந்தியத்திற்கு எவ்வாறு நன்மைகளை கொண்டுவரமுடியும் என்பதை வெளிப்படுத்துவதற்கு  இணைப்பு சிறந்த விடயமாகும் என கருதுவதாக தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் இந்த நோக்கத்திற்காக பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் முன்னோக்கு நுண்ணறிவு மேலும் முக்கியமானது  இந்த அறிக்கை அதனை துல்லியமாக குறிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமரின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களும் இலங்கையுடனான ஒத்துழைப்பு குறித்து கருத்து பரிமாறிக்கொண்டனர் இலங்கையின் கடன் விவகாரம் உட்பட அனைத்து விடயங்களிலும் நெருக்கமாக இணைந்து செயற்பட இணங்கினார்கள் எனவும் ஜப்பான்  தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடன் விவகாரத்தை பொறுத்தவரை மார்ச் 20 திகதி சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு நிதி உதவி வழங்க இணங்கியது,இலங்கையின் பொருளாதாரத்திற்கு  புத்துயிர் கொடுப்பதற்கு இது மிக முக்கியமான நடவடிக்கை எனவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

FsiK6cpWAAAFg_0.jpg

இந்தியாவின் நிதி உத்தரவாதம் குறித்த கடிதத்தை ஜப்பான் பாராட்டுகின்றது எனவும் தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவும் ஜப்பானும்  தொடர்ந்தும் பங்களிப்பு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

https://www.virakesari.lk/article/151863

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

1 day 1 hour ago
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Vishnu

31 Mar, 2023 | 12:46 PM
image

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

01__3_.jpg

யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

01__2_.jpg

இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

01__4_.jpg

01__5_.jpg

  •  

 

https://www.virakesari.lk/article/151833

 

 

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்

1 day 1 hour ago
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாளை விசேட கலந்துரையாடல்

Published By: T. Saranya

31 Mar, 2023 | 04:29 PM
image

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் பாரிய அளவினால் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

நாளை (01) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பங்களிப்போடு இடம் பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள், தொழிற்சங்கங்கள், மத அமைப்புகள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

கலந்துரையாடலில் தமிழின அடையாளங்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராகவும் இந்துமத ஸ்தலங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் பாரிய அளவிலான எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்கவும் மேலும் எமது மத அடையாளங்களையும் இன அடையாளங்களையும் வருகின்ற காலங்களில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது. அனைவரையும் தவறாது சமூகமளிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/151864

 

தொல்பொருள் திணைக்களத்தின் இன, மதரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

1 day 7 hours ago
தொல்பொருள் திணைக்களத்தின் இன, மதரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 5

31 MAR, 2023 | 10:34 AM
image

(நா.தனுஜா)

மத்திய அரசின்கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துவரும் இன, மதரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில் அழிக்கப்பட்டமையையும் கடந்த சில மாதங்களாக குருந்தூர் மலை, கண்ணியா உட்பட பல வணக்கஸ்தலங்களில் சிவவழிபாடு தடுக்கப்பட்டு, குறித்த இடங்களை பௌத்த மரபுரிமைகளாக, விகாரைகளாக மாற்றுவதற்குத் தொல்பொருள் திணைக்களமும் படையினரும் இணைந்து நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமையையும் நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

அரசாங்க தொல்பொருள் திணைக்களத்தினரும் படையினரும் முக்கியமானதொரு விடயத்தை மறந்துவிட்டார்கள். தற்போது இந்துக்கள் வணங்கும் வணக்கஸ்தல வளாகங்களில் பௌத்த எச்சங்கள் இருப்பது உண்மை என்றால், அவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த காலத்தவையாக இருக்கவேண்டும். 

அதனை முதலில் தொல்பொருள் திணைக்களம் ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழ்மக்கள் தமது பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று எண்ணாத நிலையில், சிங்கள பௌத்தவர்கள் இந்தக் காரியத்தில் இறங்கியமையானது குறித்த சின்னங்கள் உள்ள இடங்கள் சிங்கள பௌத்த காலத்துக்குரியவை என்று காண்பிப்பதற்கேயாகும். 

ஆனால் சிங்கள பௌத்தர்கள் குறித்த இடங்களில் என்றென்றுமே வாழ்ந்ததில்லை. தமிழ் பௌத்தர்கால எச்சங்களை சிங்கள பௌத்தகால எச்சங்கள் என்று காண்பிக்க முயலும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கை உடனே நிறுத்தப்படவேண்டும்.

முதலில் குறித்த எச்சங்கள் எந்தக் காலத்துக்குரியவை என்று அறிந்து, அக்காலப்பகுதியில் சிங்களமொழியும் சிங்கள இனமும் இருந்ததா என அறிந்தபின்னர், இவை தொடர்பில் தமிழ் மக்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளில் ஈடுபடலாம். 

அவை தமிழ் பௌத்தகால சின்னங்கள் எனில், அவைகுறித்து மாகாணசபைகளின் ஊடாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதேபோன்று மத்திய அரசின் கீழான தொல்பொருள் திணைக்களம் இத்தகைய இன, மதரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும்.

அதேபோன்று எமது மக்கள் அனைவரும் ஒன்றுகூடிய நடாத்துகின்ற கண்டனப்போராட்டத்துக்கு நாம் எமது ஆதரவை வெளிப்படுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/151798

இலங்கையிலிருந்து சென்னை சென்றவருக்கு கொரோனா

1 day 7 hours ago
இலங்கையிலிருந்து சென்னை சென்றவருக்கு கொரோனா

Published By: RAJEEBAN

31 MAR, 2023 | 09:50 AM
image

இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நபர் ஒருவர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இலங்கையிலிருந்து சென்னை விமானநிலயைத்திற்கு சென்ற பயணியொருவரும் சிங்கப்பூரிலிருந்து சென்ற ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.சென்னை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டவேளை இது தெரியவந்துள்ளது.

முன்னர் விமானநிலையத்தில் மூன்று அல்லது நான்கு கொவிட்நோயாளிகள் இனம் காணப்படுவார்கள் தற்போது ஆறுஏழு பேர் இனங்கானப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது ஆரோக்கியமான விடயமல்ல என  அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/151796

இலங்கை ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கு: இங்கிலாந்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்!

1 day 13 hours ago

போர்க்காலப் பகுதியில் தமிழ் - சிங்கள ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தின் செய்தியாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக இங்கிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, கைது செய்யப்பட்ட அவர், போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நோர்த்தம்டன்ஷெயார் (Northamptonshire) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2000ஆம் ஆண்டு இலங்கையில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொல்லப்பட்ட வழக்கில் 49 வயதான நபரை கடந்த வருடம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கு: இங்கிலாந்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்! | Sri Lankan Journalist Nimalarajan Murder Case

சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டம்

 

இனப்படுகொலை, மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களை உள்ளடக்கிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டபோதும், அவர் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன என்றும் மெட்ரோபொலிட்டன் பொலிஸாரை கோடிட்டு நொதம்டன்ஷெயார் டெலிகிராப் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் நிமலராஜன், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு கொல்லப்பட்டுள்ளார். இதன்போது துப்பாக்கிதாரிகள் அவரது தந்தையைக் கத்தியால் தாக்கினர்.

 

வீட்டில் இருந்த ஏனைய குடும்ப உறுப்பினர்களைக் காயப்படுத்தியுள்ளனர். நிமலராஜன் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மொழி சேவைகளுக்காக பணியாற்றினார் மற்றும் நாட்டின் பொதுத் தேர்தலைச் சீர்குலைத்த வன்முறைகள் குறித்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கு: இங்கிலாந்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்! | Sri Lankan Journalist Nimalarajan Murder Case

நோர்த்தம்டன்ஷெயார் பொலிஸார் 

 

தமிழ்ப் போராளிக் குழுவொன்று மனித உரிமை மீறல்கள் மற்றும் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சுமத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மரணத்திற்குப் பிறகு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், 2017ஆம் ஆண்டில் நோர்த்தம்டன்ஷெயார் பெருநகர பொலிஸார் கொலை தொடர்பாக ஒரு பரிந்துரையைப் பெற்று விசாரணையை ஆரம்பித்தது.

இலங்கை ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கு: இங்கிலாந்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்! | Sri Lankan Journalist Nimalarajan Murder Case

பிரித்தானியாவில் இலங்கை சமூகம்

 

நிமலராஜனின் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நோர்த்தாம்டன்ஷையரில் வசிப்பதாகக் கூறப்படுபவரின் தகவல்களின் ஆவணமும் 2020 இல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை இந்த விசாரணையின் புலனாய்வுக்கு உதவக்கூடிய, குறிப்பாக பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து தற்போது வசிக்கும் இலங்கை சமூகத்தின் உறுப்பினர்கள் எவரும் தகவல்களைக் கொண்டிருந்தால், அவற்றைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக நோர்த்தம்டன்ஷெயார் பொலிஸார் அறிவித்துள்ளனர்.   

https://tamilwin.com/article/sri-lankan-journalist-nimalarajan-murder-case-1680152193

விரைவில் அறிமுகமாகவுள்ள மற்றுமொரு QR குறியீட்டு முறைமை !

1 day 19 hours ago

 

farming.jpg

விரைவில் விவசாயிகளுக்காக QR குறியீட்டு அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த QR முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறமுடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் விவசாய தொழில்முனைவோர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர், உரப்பிரச்சினையினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடமும் உரங்களுக்கு மேலதிகமாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய விவசாயக் கொள்கையை எதிர்வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், வரைவு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ள தேசிய விவசாயக் கொள்கையை அமைச்சரவையின் அனுமதியின் பிறகு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கங்கள் அல்லது அமைச்சர்கள் மாறினாலும் மாறாத விவசாயத்திற்கான தேசிய அடையாளத்தை தயாரிப்பதே தனது நோக்கம்
எனவும் தெரிவித்தார்.

தேசிய விவசாயக் கொள்கைக்காக அனைத்து விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/247161

பசுமைப்புரட்சியில் இணையுமாறு எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்பு

1 day 19 hours ago
image

 

(நா.தனுஜா)

'பசுமைப்புரட்சியில்' இணைந்துகொள்ளுமாறு நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்புவிடுத்துள்ளார். 

கொழும்பில் அமைந்துள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற 'இலங்கையின் தூய சக்திவலு மாநாடு - 2023' இல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார்.

மேலும் உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்துவரும் இருபெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவுமே பசுமைப்புரட்சிக்குத் தலைமைதாங்குவதாகத் தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம், இலங்கை பசுமைப்பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

'நாட்டின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறையில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அழைப்புவிடுத்ததைத்தொடர்ந்து கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து நான் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றிவருகின்றேன். 

அதேபோன்று யுத்தத்தின் விளைவாகப் பலவருடகாலத் துன்பத்துக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் இலங்கை முகங்கொடுத்திருந்தமையினை நான் நன்கு அறிவேன். இருப்பினும் இந்நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுவதற்கான இயலுமையையே இலங்கை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்' என்றும் எரிக் சொல்ஹெய்ம் அவரது உரையில் தெரிவித்துள்ளார். 

அதேவேளை புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியில் இலங்கை மிகச்சிறப்பான இயலுமையைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், காற்றாலை மற்றும் சோலார் முறைகளிலான சக்திவலு உற்பத்தியின் மூலம் 'பசுமை உற்பத்தியை' நோக்கி நகரமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று 'சீனாவும் இந்தியாவும் இம்முறைகளிலான உற்பத்தியில் ஏன் ஈடுபடுகின்றது? ஏனெனில் அது சூழலுக்கும், மக்களின் சுகாதாரநலனுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் சிறந்ததாகும். அவர்களால் சந்தைகளைக் கைப்பற்றமுடியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். 

எனவே சீனாவுடன் சிறந்த நல்லுறவைப் பேணுகின்ற, அதேவேளை இந்தியாவுடனும் மிகநெருக்கமாக இருக்கின்ற இலங்கைக்கு இதில் பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன' எனவும் நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசுமைப்புரட்சியில் இணையுமாறு எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்பு | Virakesari.lk

தமிழர்களுக்கு எதிரான கலாசார ரீதியிலான இனவழிப்பில் ஈடுபடுகின்றதா இலங்கை ? - தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு கடும் கண்டனம்

1 day 19 hours ago
image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டமானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை மீண்டும் இலங்கைக்கு வழங்கியிருப்பதுபோல் தெரிவதாக ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

அண்மையகாலங்களில் நீராவியடி பிள்ளையார் கோயில், குருந்தூர்மலை சிவன்கோயில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் என்பன உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் சைவசமய வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டுவரும் சம்பவங்களை அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டமையானது, தமிழ்மக்களுக்கு எதிராகக் கலாசார ரீதியிலான இனவழிப்பை மேற்கொள்வதற்கான வலுவான உந்துசக்தியை இலங்கைக்கு மீண்டும் வழங்கியிருப்பதுபோல் தெரிகின்றது என்றும் அக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டுமொருமுறை சர்வதேச சமூகத்தை வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ள ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு, இந்த அட்டூழியங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் பாராமுகமாக இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறும் அக்குழு அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழர்களுக்கு எதிரான கலாசார ரீதியிலான இனவழிப்பில் ஈடுபடுகின்றதா இலங்கை ? - தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்குழு கடும் கண்டனம் | Virakesari.lk

Checked
Sat, 04/01/2023 - 12:45
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr