ஊர்ப்புதினம்

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

4 hours 29 minutes ago

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

18 Dec, 2025 | 05:48 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மலையகம் எமது தாயகம். நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அனத்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களிலும் பாடசாலைகளிலும் தங்கிவரும் நிலையல், அவர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் தற்போது அவர்களை தங்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அரசாங்கம் தெரிவித்து  வருகிறது.  தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமையவே  அவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு முகாம்களுக்கு வந்தார்கள்.அதனால்  கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் முறையான அறிக்கையை பெற்றுகொண்ட  பின்னரே அந்த  மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது பொருத்தமாகும்.

 வேவெண்டன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது  வேறு பாடசாலைகளுக்கு செல்லுமாறு அல்லது  தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்கு போங்கல் என  தெரிவிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அந்த மக்களின் நிலமையை புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.

மேலும் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது, மலையக மக்களுக்கு தனியான வீடு நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தெரிவித்து வந்தார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மாறாக நாங்கள்  மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. மலையகம் எமது தாயகம்.  நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும்.

தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். எமது காலத்தில் அதனை மேற்கொள்ள நாங்கள் முயற்சித்தோம். அது  சாத்தியமாகவில்லை. அதனால் அதனை தற்போது  நீங்களாவது செய்யுங்கள்.

நாட்டில் இன்று தேயிலை, இறப்பர் போன்றவை ஒரு லட்சத்தி 3ஆயிரம் ஹெக்டயர்களில்  பயிர்ச் செய்யப்படுகின்றன. அகவே பெருந்தோட்ட மக்களுக்கு அதிலே 7பேர்ச் காணி ஒதுக்குவதாக இருந்தால், வெறும் 5ஆயிரம் ஏக்கர் காணியே தேவைப்படுகிறது.

அதனை ஒதுக்கிக்கொடுப்பதால் எந்த  நட்டமும் ஏற்படப்போவதில்லை. அந்த மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என அரசாங்கத்தில் இருக்கும் 159பேரும் பேசி இருக்கிறார்கள்.அதனால்  அந்த மக்களுக்கு காணிகளை பிரித்துக்கொடுப்பதற்கு  நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், இந்த  சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும்.

அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைவிட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/233750

கண்டி உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

5 hours 20 minutes ago

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

Dec 18, 2025 - 07:57 PM

உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் உடுதும்பரை பகுதியில் 308 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

மேலும், உடுதும்பரை பிரதேச செயலகப் பிரிவின் பொப்பிட்டிய பகுதியில் 234 மி.மீ, நுகதென்ன பகுதியில் 221 மி.மீ மற்றும் கைகாவல பகுதியில் 218 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. 

உடுதும்பரை பகுதியில் மண்சரிவுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுவதால் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும், அப்பகுதி மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கோரிக்கை விடுத்துள்ளது. 

நிலவும் மழை நிலைமையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான 'வெளியேற்றல்' (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். 

இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பரை, மெததும்பரை மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த நாட்களில் பெய்த கடும் மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் அல்லது கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். 

அப்பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அல்லது மண்மேடு சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்விடங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjbjbw6b02w2o29nu17fjd93

119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

5 hours 42 minutes ago

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

Dec 18, 2025 - 04:48 PM

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்

119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 

'119' அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த அழைப்பு மையத்திற்கு வழங்கி, அதனைத் தவறாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, உண்மையான அவசர சந்தர்ப்பங்களில் 119 அவசர அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவடைவதுடன், இவ்வாறான தேவையற்ற முறைப்பாடுகளுக்காக நேரத்தைச் செலவிடுவதன் மூலம், பொலிஸாரின் உடனடி உதவி தேவைப்படும் அத்தியாவசிய அவசர முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் திறன் பாதிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும், இந்த 119 அழைப்பு இலக்கத்திற்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரச உத்தியோகத்தர் ஒருவருக்குத் தெரிந்தே பொய்யான தகவல்களை வழங்குவது இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, பொலிஸாரின் நேரடி உதவி அவசியமில்லாத ஏனைய நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கு அந்தந்த நிறுவனங்களுக்குரிய குறுந்தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறும், இந்த அவசர அழைப்பு இலக்கத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

01. Police Emergency Service - 119

02. Ministry Of Child Development and Women's Affairs (Women Help Line) - 1938

03. Ministry Of Child Development and Women's Affairs (Child Help Line) - 1929

04. Fire and Rescue Service - 110

05. National Transport Commission - 1955

06. Drug Organized Crime Issues Emergency Notification unit - 1997

07. The Bureau for the Prevention and Investigation of Abuse of Children and women - 109

08. Emergency Call Center (Tamil Medium) - 107

09. Commission to Investigate Allegations of Bribery or Corruption - 1954

10. Expressway Emergency - 1969

11. Department of Immigration and Emigration - 1962

12. National Dangerous Drug Control Board - 1984

13. Sri Lanka Bureau Of foreign Employment - 1989

14. National Help Desk (Ministry of Defance) - 118

15. Disaster Management Call Center - 117

16. Sri Lanka Tourism - 1912

17. Government Information Center - 1919

https://adaderanatamil.lk/news/cmjbckst002voo29n0l3czd9u

அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

6 hours 40 minutes ago

Editorial   / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0     - 60

 

image_6da9aacce1.jpg

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம்  கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று  விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அப்பிரதேச மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கண்டி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருநாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மொய்னுடீன்,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி, பஸால் உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

image_7e36fbd0eb.jpgimage_abeb2a210a.jpgimage_b6083ca7bc.jpgimage_5713e8681f.jpgimage_e6df0714af.jpgimage_ba95c407c6.jpg

 Tamilmirror Online || அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

6 hours 43 minutes ago

18 Dec, 2025 | 02:29 PM

image

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (18) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவதுருகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்ட மாஅதிபரால் வழங்கப்பட்டன. 

அதில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை மீண்டும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார். 

ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி, சட்ட மாஅதிபரால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில், 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் ஏற்பாட்டாளராக இருந்த தற்போதைய அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய கோப்புகள் சட்ட மாஅதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 

இதற்கமைய, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், சட்ட மாஅதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Virakesari.lk

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!

6 hours 46 minutes ago

18 Dec, 2025 | 02:10 PM

image

இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்கும் நிகழ்வாக இச்சந்திப்பு நிகழவுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா (வேந்தன்) மற்றும் சமத்துவ கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் குறித்த சந்திப்பில் இணையவுள்ளனர்.

இச்சந்திப்பில் ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக தயாரித்த மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இச்சந்திப்பில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்குவதோடு நிலையான சமஷ்டி தீர்வினை அடைவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை சுட்டிக்காட்டியும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும் வடபகுதியில் அமைந்துள்ள பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக நீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்படவுள்ளது.

உயர்ஸ்தானிகருடன் பேசப்படுகின்ற விடயங்கள் மகஜர் வடிவில் தயாரிக்கப்பட்டு ஆறு  கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இம்மாத இறுதிக்குள் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இன்னொரு புறம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்! | Virakesari.lk

முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

6 hours 47 minutes ago

18 Dec, 2025 | 02:18 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது.

கோட்டைகட்டிய குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத் தமது கிராமத்துக்கு வருகை தந்தமை குறித்துப் பொதுமக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வுகளும் வழங்கப்பட்டன.

தென்னியன்குளம் சந்தி முதல் அம்பலப்பெருமாள்குளம் சந்தி வரையிலான பிரதான வீதி முற்றாகச் சிதைவடைந்துள்ளமையை மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதற்குத் தீர்வாக, அவ்வீதியின் ஒரு பகுதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாகவும், எஞ்சிய பகுதியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாகவும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கிராமத்தினுள் அமைந்துள்ள பாடசாலை வீதி, கோட்டைகட்டியகுளம் பாடசாலைப் பின்வீதி மற்றும் விடத்தை வீதி ஆகியவற்றை உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஊடாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அமைதிபுரம் முதல் துணுக்காய் பிரதேச செயலகம் வரை ஏழு கிராமங்களை இணைக்கும் அரச பேருந்து சேவைக் கோரிக்கை தொடர்பில், தற்போது வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தனியார் பேருந்துச் சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அம்பலப்பெருமாள்குளம் பகுதியில் சிதைவடைந்து ஆபத்தான நிலையிலுள்ள கலிங்குக்குப் பதிலாக நிரந்தர மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அதனைத் தற்காலிகமாகத் திருத்தியமைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

அத்துடன், கோட்டைகட்டியகுளம் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் கலிங்கு நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமையால் ஏற்படும் வெள்ள பாதிப்பைத் தடுக்க, வனவளத் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று, நீர்பாசனத் திணைக்களத்தின் ஊடாகச் சீர்செய்ய மாவட்டச் செயலர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

அவசர மருத்துவத் தேவைகளுக்குத் தொலைதூர மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளமைக்குத் தீர்வாக, முதற்கட்டமாக வாரத்தில் ஒரு நாள் பொதுக்கட்டடம் ஒன்றில் மருத்துவ நிலையம் இயங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேலும், இரு கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளூராட்சித் திணைக்களம் அல்லது மாற்று வழிகள் ஊடாக அமைத்துத் தருவதாக ஆளுநர் உறுதியளித்தார்.

பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்புத் தேவைகளைச் சாதகமாக அணுகுவதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

அம்பலப்பெருமாள்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் களஞ்சிய அறையுடன் கூடிய மண்டபம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீட்டுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முதல்கட்டமாக அந்த மைதானத்துக்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் பதிலளித்தார். குடியிருப்புக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க யானை வேலி அமைப்பது தொடர்பில் கவனத்தில் கொள்வதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

“அபிவிருத்திகள் கிராமங்களை நோக்கித் திரும்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிடும்போதே அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதனாலேயே அதிகாரிகளுடன் உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். இப்பகுதி இளைஞர்கள் மதுபாவனை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள்” எனத் தெரிவித்தார். 

இச்சந்திப்பில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலர், பிரதேச சபை தவிசாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் குளங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்! | Virakesari.lk

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்!

6 hours 48 minutes ago

18 Dec, 2025 | 05:28 PM

image

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது.

இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

மக்களின் நலன், மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தி மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டிய அவசியம் என்பதே இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அமைந்தது.

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கலந்துரையாடல்! | Virakesari.lk

யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!

7 hours 20 minutes ago

18 Dec, 2025 | 05:44 PM

image

யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்பதால் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக் கல்லின் அளவிற்கு குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அனுமதி எடுத்த பின்னரே இவ்வாறு எல்லைக் கல் நாட்டுவதாக கூறினர்.

வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியில் நாங்கள் நினைவேந்தல் செய்வது வழமை. அந்த வளாகத்திற்கு உள்ளே சென்று நாங்கள் நினைவேந்தல் செய்ய வேண்டும். ஆகையால் அந்த பகுதியை விட்டு எல்லை இடுமாறு கோரினோம்.

அதன்படி வாயிலின் சிறிய பகுதியை விட்டுவிட்டு, எல்லைக்கல் நாட்டப்படுகிறது. வாயிலுக்கு கதவு போடுமாறு அவர்கள் கூறினர்.

இது தொல்பொருள் திணைக்களத்தின் பகுதி, ஆகையால் யாரும் இதனை தடுக்க முடியாது என்று கூறுகின்றனர். யாழ். மாநகர சபை இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறதா என பார்ப்போம் என்றார்.

IMG-20251218-WA0054.jpg


யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்! | Virakesari.lk

வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர்

7 hours 21 minutes ago

18 Dec, 2025 | 05:56 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சேதமடைந்த புகையிரத பாதைகள் வெகுவாக புனரமைக்கப்படுகின்றன. 2026.01.01ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும். 2026 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த  சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா சூறாவளி தாக்கத்தினால் மத்திய  மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான மற்றும் சிறு வீதிகள், பாலங்கள்,புகையிரத  வீதிகள், பாலங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

  நாடளாவிய ரீதியில் உள்ள ஏ மற்றும் பி கட்டமைப்பிலான வீதிகள் சேதமடைந்துள்ளன.  அண்ணவளாக 1450. 6.4 கிலோமீற்றர் தூர வீதிகள் சேதமடைந்துள்ளன. மத்திய மாகாணத்தில் பெருமளவிலான வீதிகள் சேதமடைந்துள்ளன.  மலைகளுக்கு நடுவில் வீதிகளை அமைத்ததன் விளைவையே  நாடு இன்று எதிர்கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தியின் போது எதிர்க்கால திட்டமிடல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும்.  சேதமடைந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு  69 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சூறாவளி தாக்கத்தால் புகையிரத திணைக்களம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. புகையிரத பாதைகள், பாலங்கள், சமிஞ்சை கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மலையக புகையிரத பாதையில் புகையிரத வீதியின் இருப்புகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன.  புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கு மாத்திரம் 6 பில்லியன் ரூபா செலவாகும் என்று  மதிப்பிடப்பட்டுள்ளது.

சேதமடைந்த புகையிரத பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படுகின்றன.இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பு  வழங்குகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் 2026.01.01 ஆம் திகதி முதலும், தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் 2026 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்தும் முழுமையாக ஆரம்பிக்கப்படும்.

 மலையகத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பிக்கும் பணிகள் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நட்டஈடு மற்றும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அதனை விடுத்து அரசியல் இலாபம் தேடக்கூடாது என்றார்.

வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர் | Virakesari.lk

தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர்

7 hours 26 minutes ago

18 Dec, 2025 | 06:55 PM

image

மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா நகரில் பெய்த அதிக மழை காரணமாக நுவரெலியா பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும்  தலகலஓயா நீரோடை பெருக்கெடுத்தமையே கடந்த மாதம் 27ஆம் திகதி நுவரெலியா நகரில் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாகும்  என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேக்கர தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை  (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது உபாலி வணிகசேக்கர இதனை தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் பிரதி நகர முதல்வர் சிரேஸ்ட  சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர் உட்பட மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அங்கு மாநகர முதல்வர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாநகர சபை கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கட்டு வான்கதவுகள் திறக்கப்படாததால் நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியதாக ஒரு சில ஊடகங்களில் நுவரெலியா பொது மக்கள் கூறியதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதில் எந்தவித உண்மையும் இல்லை.

நுவரெலியா நகரம் நீரில் மூழ்வதற்கு முன்பே நுவரெலியா கிரகரி வாவியின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களும் இடைவிடாது பெய்த கன மழையினால் பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகல ஓயா நீரோடையில் நீர் பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது.

அத்துடன் நுவரெலியாவில் அதிகரித்த சட்டவிரோத கட்டடங்கள், கால்வாய்கள் குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக் காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.

மேலும், நுவரெலியா நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதி, நுவரெலியா குதிரைப்பந்தய திடல் (ரேஸ்கோஸ்) நுவரெலியா கொல்ப் மைதான லயம், நுவரெலியா யுனிக் கிராமம் உட்பட பல இடங்களில் இயற்கை அனர்த்தத்தால் மழை நீர் நிரம்பியும் மண்சரிவு ஏற்பட்டும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை நுவரெலியா மாநகர சபை முன்னின்று செய்து வருகிறது.

மேலும் நுவரெலியா நகரில் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையையும், சுற்றுலாத் துறையையும், பாதிக்கப்பட்ட வர்த்தகத் துறையையும் அபிவிருத்தி செய்து மீண்டும் பழைய நிலைக்கு  நுவரெலியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் நுவரெலியா நகரில் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தயாராக இருப்பதாகவும் மாநகர சபை முதல்வர் மேலும் தெரிவித்தார்.

தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர் | Virakesari.lk

டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல்

10 hours 30 minutes ago

டித்வா பேரிடர்: மலையக மக்களின் நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்தில் உடனடி நடவடிக்கை தேவை - மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தல்

18 Dec, 2025 | 02:04 PM

image

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக மலையகப் பிரதேசங்கள், குறிப்பாக தோட்டப்பிரதேசங்களில் வாழும் மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறுமை மற்றும் அபாய நிலைகளில் வாழ்ந்துவந்த இம்மக்கள், இந்தப் பேரிடரால் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண, புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணத் திட்டங்கள் மலையக மக்களைச் சென்றடைவதில் பல்வேறு சவால்கள் நிலவுவதாகவும், அவற்றை உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தெளிவான தகவல் தொடர்பாடல் அவசியம்

பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தற்போது முகாம்கள், பாடசாலைகள், உறவினர் வீடுகள் மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் தங்கியுள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கான நிவாரணம், மீள்குடியேற்றம், நிரந்தரத் தீர்வுகள் என்ன என்பது குறித்த தெளிவான தகவல் இல்லாததால், மக்களிடையே அச்சம் மற்றும் மன உளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அனைத்து அனர்த்த நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களும் ”தமிழ் மொழியில், உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் வெளியிடப்பட வேண்டும்“ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக ஆளணி நியமனம் தேவை

தோட்டப்பிரதேசங்களில் கிராம சேவையாளர் பிரிவுகள் மிக அதிகமான சனத்தொகையை கொண்டுள்ள நிலையில், ஒரே கிராம சேவையாளருக்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொறுப்பாக இருப்பது நிவாரணப் பணிகளை தாமதப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ் பேசும் மேலதிக அரச உத்தியோகத்தர்களை தற்காலிகமாக நியமித்து, நிவாரண விண்ணப்பங்கள், சேத மதிப்பீடு மற்றும் சிபாரிசு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிவாரணத் தகுதிகளில் நெகிழ்வு அவசியம்

காணி உரிமை இல்லாமை காரணமாக தோட்ட மக்களுக்குப் பயிர் சேதம், கால்நடை இழப்பு, சிறுதொழில் பாதிப்பு போன்றவற்றிற்கான இழப்பீடுகளைப் பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.

இதனால், மலையக மக்களின் தனித்துவமான நிலைமைகளை கருத்தில் கொண்டு விசேட சுற்றுநிருபங்கள் மற்றும் நெகிழ்வான தகுதி நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்ட உட்கட்டமைப்பு மீள்கட்டமைப்பு – அரச பொறுப்பு

டிட்வா பேரிடரால் தோட்டப் பிரதேசங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் வீதிகள், பாலங்கள், வடிகால்கள், பாதுகாப்புச் சுவர்கள், முன்பள்ளிகள், மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட சமூக உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இவை பெரும்பாலும் தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இருந்ததால், மீள்கட்டமைப்பு தாமதமடையும் அபாயம் இருப்பதாகவும், இப்பணிகளை நேரடியாக அரச பொறுப்பில் எடுத்துக் கொண்டு போதிய நிதி ஒதுக்க வேண்டும்** என கோரப்பட்டுள்ளது.

காணி மற்றும் வீட்டு உரிமைக்கு நிரந்தரத் தீர்வு

மலையக மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வீடு நிர்மாணத்தில் காணி உரிமை இல்லாமை முக்கிய தடையாக இருப்பதாகவும், இதற்கான தெளிவான கொள்கை தீர்மானங்களை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என சிவில் சமூக கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாற்று இடங்கள் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத் தொடர்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக பிரதியமைச்சர் பிரதிப் சுந்தரலிங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மலையக பிரதிநிதிகள் மனோ கணேசன், இராதாகிருஷ்ணன், ஜீவன் தொண்டமான் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சாதகமான ஆதரவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடி தீர்மானங்களைப் பெற அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233717

மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !

14 hours 9 minutes ago

மக்களின் செயற்பாட்டில் அதிருப்தி : 8 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் !

18 Dec, 2025 | 11:17 AM

image

நாட்டில் 8 மாவட்டங்களில் மீண்டும்  டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

டெங்கு பரவலைக் குறைப்பதற்கான பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதே நோய் அதிகரிப்பதற்கு காரணமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன தெரிவித்துள்ளார்.

பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்குவை உருவாக்கும் நுளம்பு குடம்பிகளின் பரவல் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றி சுத்தம் செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்துள்ளதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம்  ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் டெங்கு நுளம்புகளின் அபாயம் அதிகரித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில், நுளம்புகள்  இனப்பெருக்கம் செய்யும் இடங்களை  சுத்தம் செய்யுமாறு குடியிருப்பாளர்களுக்கு

அறிவிக்கப்பட்டதாகவும்,  இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் போது, சுமார் 25-30 சதவீதம் பேர் இதில் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், டெங்கு நோயை கட்டுப்படுத்த  மக்களிடையே ஆர்வம் இல்லாத காரணத்தினால், ஜனவரி முதல் வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நாடு முழுவதும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் , சுகாதார ஊழியர்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு பொது மக்களின் பங்களிப்பு வேண்டும் எனவும்  சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித சுமனசேன மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/233701

யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்

14 hours 18 minutes ago

யாழ். பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு தடை - மாநகர சபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்

18 December 2025

1766028956_4141108_hirunews.jpg

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது. 

இதனையடுத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தாங்கள் செயற்படப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியிருந்தனர். 

தொடர்ந்து சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர், சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்கலாம் என யோசனை ஒன்றையும் முன்வைத்தார். 

குறித்த யோசனையை சபையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

https://hirunews.lk/tm/436365/jaffna-ban-on-construction-in-the-old-park-action-resolution-passed-in-the-municipal-council

பிள்ளையானின் நெருங்கிய சகா கைது

14 hours 25 minutes ago

பிள்ளையானின் நெருங்கிய சகா கைது

image_d7ef207333.jpg

கனகராசா சரவணன்

சி ஐ டி யினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாட்களின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் என்பவரை மட்டக்களப்பு கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து   புதன்கிழமை (17) கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் (சிஜடி) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 8ம் திகதி (4-8-2025) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கும் பிள்ளையானிடம் மேற்கொண்டுவரும் விசாரணையின் அடிப்படையில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் பிள்ளையானின் சகாக்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் பிள்ளையான் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன் என்பவரை சிஜடி யினர் தேடி வந்துள்ள நிலையில் அவர் குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்துள்ள அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மீண்டும் திரும்பி நாட்டிற்கு வந்துள்ள நிலையில் சம்பவ தினமான   புதன்கிழமை காலையில் அவரது வீட்டிற்கு கொழும்பில் இருந்து சென்ற சிஐடியினர் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையானின்-நெருங்கிய-சகா-கைது/175-369698

உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு

14 hours 28 minutes ago

உடைந்த நாயாறு பாலம் புனரமைப்பு

image_a32a37a978.gif

image_742127ab17.gif

image_e88b5f3bd3.gif

சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் முற்றாக உடைந்த முல்லைத்தீவு நாயாறு பிரதான பாலத்தை, இராணுவ பொறியாளர்கள் புனரமைத்து, பிரதேசத்தின் அத்தியாவசிய போக்குவரத்து இணைப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளனர்.

பாலம் இடிந்து விழுந்ததையடுத்து முல்லைத்தீவு-வெலியோயா, முல்லைத்தீவு-திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு-கொக்கிலாய் உள்ளிட்ட முக்கிய பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடைபட்டு, பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து அவசர நடவடிக்கையாக, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இராணுவ பொறியாளர் படையினர் உடனடி பழுதுபார்ப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

120 அடி நீளமுடைய, 12 பேகள் கொண்ட, இரு வழி போக்குவரத்திற்கான ‘Compact 100’ கனரக பாலம் அமைக்கப்பட்டு, மக்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் துரிதமான பங்களிப்பினால், நாட்டின் வட பிராந்தியத்திலுள்ள இந்தப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயல்புநிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/உடைந்த-நாயாறு-பாலம்-புனரமைப்பு/175-369735

எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்! - ரணில் விக்ரமசிங்க

14 hours 31 minutes ago

எவ்வேளையிலும் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் தாம் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள்  ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக  கொழும்பு தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க . நேற்று (17) இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில்   இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நேற்று பிற்பகல் பிட்டகோட்டேயில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடியது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்காக பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது, அதே நேரம் ஐக்கிய மக்கள் சக்தி விவகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையாண்டு வருகிறார்.

அந்தக் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்றும், தொடர்புடைய கலந்துரையாடல்களை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்றும், இனி அவற்றை இழுத்தடிக்க நேரமில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க செயற்குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்த ஆண்டு முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதால் மேற்கண்ட விடயங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அந்த விவாதங்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அதனை ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு விரும்பினால், அது தனக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று இங்கு குறிப்பிட்ட ரணில் , ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைய வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரணில் தலைமைப் பதவியில் இருந்து விலகி சஜித் அல்லது வேறு ஒருவருக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் இங்கு கூறினார். “நான் நீண்ட காலமாக கட்சித் தலைவராக இருந்து வருகிறேன்.

நாட்டின் ஜனாதிபதியானேன். நான் மிக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டேன். மேலும், நாடு ஒரு கடினமான தருணத்தில் இருந்தபோது, நான் பொறுப்பேற்றுக் கொண்டு நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தேன்.

எனவே, இந்த இராஜினாமாவில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.samakalam.com/எவ்வேளையிலும்-தலைமைப்-ப/

இந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க இராணுவ திடீர் ஆதிக்கம்

1 day 2 hours ago

யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது.

தமிழர் பகுதிகளில் திருகோணமலை, பலாலி விமானநிலையம், யாழ் கடல்வழி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி பாதைகளை பயன்படுத்தவும், கண்காணிக்கவும் மிக திடமான இடங்களாக அமெரிக்காவால் உணரப்படுகின்றது.

அமெரிக்கா அதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

அமெரிக்கா, இந்தியா, சீனா என மூன்று நாடுகளும் போட்டிப் போடும் இடங்களாக பலாலி மாறியுள்ளமை தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த காலங்களில் அம்பாந்தோட்டை மற்றும் Port City Colombo போன்ற இடங்கள் மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது மாற்றம் பெற்றுள்ளது அவதானிக்ககூடியதாக உள்ளது.

எனினும் சீனா வடபகுதி மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாது. எனவே தற்போது பலாலி விமானத்தளம் மற்றும் நெடுந்தீவு என்பவை சக்திவாய்ந்த இடங்களாக மாறபோகின்றன.

இலங்கையுடன் இந்தியா மற்றும் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விளைவுகளாலேயே தற்போது அமெரிக்கா விமானங்கள் குறித்த பகுதிகளில் தரையிறங்குவதை தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது.

Tamilwin
No image previewஇந்தியாவின் வரலாற்றுப் பிழையால் தமிழர் பகுதியில் அமெரிக்க...
யாழ்ப்பாணம் என்பது உலகபுவியியல் மையத்தின் மிக முக்கியமான பொதுவுடமை பகுதியாக கருதப்படுகின்றது. தமிழர் பகுதிகளில் திருகோணம...


இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி!

1 day 5 hours ago

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி !

Published By: Digital Desk 3

17 Dec, 2025 | 04:50 PM

image

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டுள்ளது.

அதேபோல இலங்கையின் தென்பகுதியில் ஒரு வளிமண்டல உறுதியற்ற நிலைமையும் காணப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

இதன் காரணமாக தற்பொழுது நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை இரவு முதல் (18) வடக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் கிழக்கு ஊவா, மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

காற்றுச்சுழற்சி இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருப்பதனாலும் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல உறுதியற்ற தன்மையினாலும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் இன்று முதல் (17) எதிர்வரும் 19 ஆம் திகதி வரை சற்று கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மாவட்டங்களில் கனமழையோடு இணைந்த நிலச்சரிவு தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமானதாகும்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளுக்கும் மழை தொடர்ந்து கிடைத்து வருவதாலும் கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மழை கிடைக்கும் என்பதனாலும் கிழக்கு மாகாணத்தில் குளங்களுக்கு நீரை கொண்டு வருகின்ற நீரேந்துப் பிரதேசங்களுக்கும் மழை தொடரும் என்பதனாலும் கிழக்கு மாகாண குளங்களுக்கு அதிகளவான நீர்வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கிடைத்து வருகின்ற மிதமான மற்றும் கனமான மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் பல குளங்கள் வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகின்றது. எனினும் நாளை (18) இரவு முதல் வடக்கு மாகாணத்திற்கு மழை குறைவடையும் வாய்ப்புள்ளது. அதேவேளை கடந்த சில நாட்களாக நிலவிய குளிர் மீண்டும் நாளை மறு தினம் (19) முதல் அதிகரிக்கும் என்பதோடு இந்த குளிரான வானிலை 26 ஆம் திகதி வரைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/233662

hurican-2025-12-17.jpg

weather-17-12.jpg

wether-17-12.jpg

டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்

1 day 5 hours ago

டித்வா சூறாவளி சவால்களைத் தோற்கடித்து இலங்கை விரைவில் மீண்டெழும் – சீன தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர்

17 Dec, 2025 | 04:11 PM

image

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவு குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த உப தலைவர் , பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அனர்த்த சமயத்தில் இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சீனா இலங்கைக்கு வழங்கிய பொருள் மற்றும் நிதி உதவியையும் அவர் மனப்பூர்வமாக பாராட்டினார்.

குறிப்பாக சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை எதிர்கொண்ட அனர்த்த நிலைமை மற்றும் மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் குறித்து சீன பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதே அரசாங்கத்தின் பிரதான பிரயத்தனமாக இருந்தாகவும் பின்னர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அவர்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக திட்டமிடப்பட்ட வகையில் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வள பாதுகாப்பு குழுவின் தலைவரான LU XINSHE, வெளிநாட்டலுவல்கள் குழுவின் உப தலைவரும் தேசிய மக்கள் காங்கிரஸின் சீன-இலங்கை நட்புறவுக் குழுவின் உப தலைவருமான WANG KE, சமூக அபிவிருத்திக் குழுவின் உப தலைவரான TAN TIANXING, நிலைக்குழுவின் பொதுச் செயலகத்தின் வெளியுறவுக் குழுவின் உப பணிப்பாளர் TANG JIAN,வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள ஆலோசகர் YANG YIN , வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசிய விவகாரத் திணைக்கள மூன்றாவது செயலாளர் SHA LONG மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் QI ZHENHONG ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில்  அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி  அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி  நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

WhatsApp_Image_2025-12-17_at_2.48.57_PM.

WhatsApp_Image_2025-12-17_at_2.48.58_PM.

WhatsApp_Image_2025-12-17_at_2.48.57_PM_

WhatsApp_Image_2025-12-17_at_2.48.58_PM_

WhatsApp_Image_2025-12-17_at_2.48.59_PM.

WhatsApp_Image_2025-12-17_at_2.49.00_PM.

WhatsApp_Image_2025-12-17_at_2.49.00_PM_

WhatsApp_Image_2025-12-17_at_2.49.00_PM_

https://www.virakesari.lk/article/233645

Checked
Thu, 12/18/2025 - 20:15
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr