ஊர்ப்புதினம்

அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1 month 3 weeks ago

அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: Vishnu

07 Feb, 2026 | 05:53 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க  அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற  முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே. இது பார்க்கப்படுகிறது. நாங்கள் இதற்கு எதிராகவே வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற  பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  அவர் மேலும் உரையாற்றியதாவது,

அவசரகால சட்டம் தொடர்பான  அரசாங்கத்தின்  தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் வாக்கெடுப்பை கோருவோம். இதன்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களிப்போம். நாங்கள் இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கு தமிழர்களின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் புதிதாக பதிவு செய்யத் தேவைப்படாது.

இப்போது கூட தையிட்டியில் நாங்கள்  போராடும் போது பொலிஸார் வழமைப் போன்று நடவடிக்கை எடுக்கின்றனர். அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ள காலத்தில் இதனை காட்டி நடவடிக்கை எடுக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கொடூரமான சட்டம் இதனை நீக்கப் போகின்றோம் என்று கூறிக்கொண்டு இப்போது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வடக்கு மற்றும்  கிழக்கில் அரசியல் ரீதியில் அரசாங்கத்தை எதிர்க்கும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

டித்வா புயல் சேதங்கள் தொடர்பான திட்டங்கள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற அனர்த்தங்கள் நடந்துள்ளன. வடக்கு மற்றும்  கிழக்கும்  பாதிக்கப்பட்டுள்ளன.

பேரிடர்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை பேய் காட்ட முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் உங்களுக்கு தேவைப்படும் அதிகாரமாகவே பார்க்கப்படுகின்றது.

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகள் எமது மீனவர்களின் சொத்துக்களை அழிப்பது தொடர்பில் ஒவ்வொரு மாதமும் கூறியுள்ளனர். அடிக்கடி இந்த பாராளுமன்றத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த அரசாங்கம் எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2025ஆம் ஆண்டில் 15 ரோலர்களும்,  இந்த வருடத்தில் 6 ரோலர்களை மட்டுமே பிடித்துள்ளீர்கள். ஆனால் ஆயிரக்கணக்கான படகுகள் வந்து எமது மீனவர்களின் சொத்துக்களை அழிக்கின்றன.

கடந்தகால  ஆட்சியாளர்களும் இவ்வாறே செயற்பட்டனர். 2013ஆம் ஆண்டில் இருந்து 500 இந்திய ரோலர் படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதுடன், 319 படகுகள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன. 30 வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2871 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2779 பேர் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியொரு நிலைமை இருக்கையில் அரசாங்கமும் ஏன் இப்படி நடந்துகொள்கிறது. இராஜதந்திரம்,  இந்தியாவை பகைக்கக்கூடாது என்று கூறுகின்றீர்கள். இதுபோன்று தெற்கில் நடந்தால் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருப்பதாலேயே இவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள். படகுகளை பிடிக்க முடியாவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க முடியதா?

இதேவேளை திருகோணமலையில் கடந்த முதலாம் திகதி கோகன்ன ரஜமகா விகாரையின் காலமான விகாராதிபதியின் உடல்  ஹேய்சர்  விளையாட்டு மைதானத்தில் எரிக்கப்பட்டது. அந்த மைதானத்தை தமிழ் சிறுவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களின் கலாச்சாரத்திற்கமைய எரிக்கப்பட்ட இடங்களில் மக்கள் கால் வைப்பதில்லை. ஆனால் தேரர் ஒருவர் அவ்விடத்தில் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களால் விளையாட முடியாது.

இதேவேளை விடுதலைப் புலி போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றின் மீது நடக்கின்றனர். அந்த இடங்களை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238037

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

1 month 3 weeks ago

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

Feb 6, 2026 - 09:30 PM

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு அபாயகரமான கோடாலி உள்ளிட்ட ஏனைய சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவுப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlb2mzj0000g356nm8c6opol

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

1 month 3 weeks ago

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

Published By: Digital Desk 3

06 Feb, 2026 | 05:19 PM

image

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

https://www.virakesari.lk/article/237980

அம்மணிகளே உங்களை நம்பித்தான் எதிர்கால இ.போ.ச இயங்கும் போல! பார்த்து கவனமாக வாகனத்தை செலுத்துங்கள்.

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

1 month 3 weeks ago

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

Feb 6, 2026 - 04:10 PM

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி குறித்த பாடசாலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அன்று மாலை மாணவி நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். எனினும், இன்று (06) மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

தொடர்ச்சியான தலைவலி, தலைச்சுற்று, குமட்டல் மற்றும் உடல் வலி அதிகரித்துள்ள நிலையில், அவரை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்துத் தெரிவிக்கையில்:

"குறித்த ஆசிரியர் வழமையாகவே மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அடிப்பதுமே வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 05 ஆம் திகதி எனது பெற்றோரை இழுத்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டியவர், எனது கன்னம் மற்றும் செவிப்பகுதிகளில் கடுமையாகத் தாக்கினார். இறுதியில் எனது தலையைப் பிடித்து மேசையில் மோதியதுடன், முழங்கையால் முதுகுப் பகுதியிலும் பலமாகத் தாக்கினார். வலியின் உச்சக்கட்டத்தால் எனக்குத் தானாகவே சிறுநீர் கசிவு ஏற்பட்டது. பாடசாலை முடியும் வரை அதே நிலையிலேயே நான் இருந்தேன்." என குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த ஆசிரியர் முன்னரும் பல மாணவர்களை இவ்வாறே மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு மாணவனை தும்புத்தடியால் தாக்கிய சம்பவமும் பதிவாகியுள்ளது.

மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, நானுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ஆசிரியரை விசாரணைக்கு உட்படுத்தவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

-நுவரெலியா நிருபர் செ.திவாகரன்-

https://adaderanatamil.lk/news/cmlar78ol000a356ngjyrq2g4

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

1 month 3 weeks ago

articles2FJ0dad6HCQMmnhM1QWxvv.jpg?resiz

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். இராணுவத்தினரை புகழ்வதை இந்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாங்கள் துறைமுகங்களை நிர்மாணிக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை செய்தவர்கள் இப்போது அது நல்ல விடயம், அதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கூறுவது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இதேவேளை சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும், போதைப்பொருள் இருந்த கொள்கலன்களும் வெளியில் அனுப்பப்பட்டுள்ளன. அவை தொடர்பில் உங்களிடம் விசாரணை இல்லை. எங்களைத் தான் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள அழைக்கின்றீர்கள். நீங்கள் பணச் சலவை மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தை இணைத்து அரசியல் வழிவாங்கல் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வந்தால் அதிகாரிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தலாம்.

சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் யுத்தத்தை வென்றவர்கள் தொடர்பில் கூற முடியவில்லை. எமது நாட்டில் குறைந்தது. இராணுவத்தினர் பெற்ற வெற்றிகள், பங்களிப்புகள் தொடர்பில் பெருமையாக அரசாங்கத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை இனவாதம் என்றாலும் அது அவ்வாறு இல்லை. நாங்கள் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளுடன் தான் யுத்தம் செய்தோம். இராணுவத்தினர் தொடர்பில் ஆட்சியாளர்களால் பேச முடியாவிட்டால் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கதைத்து பலனில்லை.

அத்துடன் மதத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதும் இல்லை. இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மதத்தலைவர்களை அவமதிக்கின்றனர். இது தவறாகும். தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். மதத் தலைவர்களுக்கு செவி சாய்க்க அரசாங்கம் பழக வேண்டும். மகா சங்கத்தினரை சிறைகளில் போடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தில் ஹர்த்தால் போராட்டம் நடத்துகின்றனர். ஆட்சியாளர்கள் அதனை காணாதது பேன்று செயற்படுகின்றனர். இனவாதத்தை தூண்டமாட்டோம் என்று ஜனாதிபதி கூறினாலும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

பெரும்பான்மையினத்தவரை விமர்சிப்பதன் மூலம் புலம்பெயர் அமைப்புக்களையும், வடக்கு மக்களினதும் மனங்களை வெற்றிக்கொள்ள முடியுமென்று அரசாங்கம் நினைத்தால் அது நடக்காது. இவ்வாறு செய்யவும் முடியாது.

சுதந்திர தினத்தில் கடனுக்கு பெற்ற ஆயுதங்கள், யுத்த தளவாடங்களை கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கெப்களை வாங்க முடியும். எமது தேசிய பாதுகாப்பு பலத்தை உலகத்துக்கு காட்டுவதில் வெட்கப்படுகின்றனர் என்றார்.

https://athavannews.com/2026/1463495

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்

1 month 3 weeks ago

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம்

February 5, 2026

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும் அந்த வீட்டை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அந்த வீட்டின் பாதுகாப்பு மற்றும் நடத்துகைக்காக அந்த வீட்டை புனரமைப்புப் பணிகளின் பின்னர் பிரபாகரனின் சகோதரிக்கு வழங்குவது மிகவும் ஏற்புடைய செயற்பாடாக இருக்குமென சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டி முன்வைத்துள்ள அந்த யோசனைக்கு சபையில் ஏகமனதாக விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.ilakku.org
No image previewதலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமை...
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின்

மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!

1 month 3 weeks ago

மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.!

Vhg பிப்ரவரி 05, 2026

AVvXsEiSBT-2Tq6vxSKoYc68wacZNgzIDodb9Gm-4FUZZfzTejqFFfXnrDtRzRaRo-c5hRTwtOIVE1YXHpX-9p9iOrPjwM43li-Wka_oPwEV91ViXktS0qJRHf_g8x9wTovrXxmrcgkF0LRrPj-H-YCeDd7KTuktJ5y1dS2EGL7MdlN2UGuY5XlK7zA_G-HDspQd

மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கறடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை எனும் இடத்தில் கடந்த (16) ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று, குறித்த நபர் அவரது வயலில் இருந்தபோது குழுவாகச் சென்ற நபர்கள் சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் அடித்தும் உள்ளனர்.

இதில் படுகாயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 20 நாட்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04.02.2026)ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (05.02.2026)ஆம் திகதி  உயிரிழந்தவரின் சடலத்தை சுமந்தவாறு அவரது உறவினர்கள் மரணித்தவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அச்சத்தில் உதவாத அயலவர்கள்

 சம்பவத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து, வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் வந்தாறுமூலை பொது மயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

https://www.battinatham.com/2026/02/blog-post_170.html

நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை

1 month 3 weeks ago

நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை

06 Feb, 2026 | 12:55 PM

image

இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கையின் முதன்மை ஆய்வகமான வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) நிபா வைரஸைக் கண்டறியும் திறனை அதீத தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும். இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் வட்டாரம் தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகை நச்சுயிரி (Zoonotic disease) ஆகும்.

முக்கியமாக 'பழம் தின்னும் வௌவால்கள்' (Fruit bats) மூலம் பரவுகிறது. அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களுடனான நேரடித் தொடர்பின் மூலமும் இது பரவக்கூடும்.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 40% முதல் 75% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தற்போது இந்த வைரஸிற்குச் சிகிச்சையளிக்கத் தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ இல்லை. தீவிரமான மருத்துவக் கண்காணிப்பு (Supportive care) மட்டுமே ஒரே வழி ஆகும்.

https://www.virakesari.lk/article/237974

🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்

1 month 3 weeks ago

🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா்

adminFebruary 6, 2026

Global-1.png?fit=940%2C788&ssl=1

யாழ்ப்பாணத்தில் காவல்துறையினாின் கட்டளையை மீறி 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் செல்லப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைகாவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.  பருத்தித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் நிறுத்தச் சொன்னபோது, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி தப்பியோடியுள்ளார்.

சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினா்  அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் வாகனத்தை வீதியில் நிறுத்திவிட்டு சாரதி ஓட முயற்சித்தபோது காவல்துறையினா் அவரை மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை விசாரித்தபோது, அவர் ஒரு முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே சட்டவிரோத செயல்களுக்காக அவர் காவல்துறை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்பதும் அம்பலமானது.

கைது செய்யப்பட்ட நபர், தனக்கு காவல்துறை திணைக்களத்தில் இருந்த பழைய தொடர்புகள் மற்றும் செல்வாக்கைப் பயன்படுத்தி நீண்டகாலமாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://globaltamilnews.net/2026/228485/

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

1 month 3 weeks ago

1-1.jpeg?resize=750%2C375&ssl=1

யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்!

யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தார்கள்.

இதில் கிராம சேவையாளர் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

https://athavannews.com/2026/1463439

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

1 month 3 weeks ago

Court.jpg?resize=750%2C375&ssl=1

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சட்டமூலத்துக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் படி, இந்தத் உயர் தீர்ப்பு சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இன்று (6) நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை என்பதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இது அதை நிறைவேற்றுவதற்கான வழியைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனவரியில் வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு அனுமதிக்கும் தற்போதைய சட்ட விதிகளை நீக்குவதற்கு இந்த சட்டமூலம் வழிவகுக்கிறது. நீண்டகாலமாக பொதுமக்களின் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருந்த இந்த சலுகையை ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய இந்த சட்டமூலம் பரிந்துரைக்கிறது.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், தற்போது ஓய்வூதியம் பெற்றுவரும் முன்னாள் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய, அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1463455

அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் ; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு

1 month 3 weeks ago

அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு

05 Feb, 2026 | 05:45 PM

image

(நா.தனுஜா)

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பதிவான தன்னிச்சையான தடுத்துவைப்புகள், பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்குக் காரணமாக அமைந்த கட்டமைப்பு ரீதியான நிலைவரங்கள் இன்னமும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் அரச அதிகாரிகளினாலேயே காணி உரிமைகள் மற்றும் மத உரிமைகள் என்பன மீறப்படுகின்றன.

அதேவேளை 1983 - 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. தேசிய நல்லிணக்கம் சார்ந்த வாக்குறுதிகளின் இடையே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மிகச்சொற்ப விடயங்களையே செய்திருக்கிறது.

அதேபோன்று சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையின் பிரகாரம் ஓரினச்சேர்க்கை மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் குற்றமாக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத்திட்டத்தின் தரவுகளின் பிரகாரம் மூன்றில் ஒன்று பங்கு சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தில் சமூகப்பாதுகாப்பு செலவினங்கள் மிகக்குறைந்த மட்டத்திலேயே பேணப்படுவதனால், பல்வேறு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைவாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள், ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் மீதான நிதியியல் மீட்சி சார்ந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஊழலை முறியடிப்பதில் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரச நிதியின் முறைகேடான பயன்பாட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அடுத்ததாக இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற 26 வருடகால யுத்தத்தில் சுமார் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் அரச படையினர் சித்திரவதைகள், சட்டவிரோதப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறைகள், வலிந்து காணாமலாக்கல் மற்றும் பொதுமக்கள் மீதான ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டனர். அதேபோன்று தற்கொலைக்குண்டுத்தாக்குதல், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் போராளிகள் உள்ளிட்ட மீறல்களில் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஈடுபட்டது.

இம்மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நம்பத்தகுந்த உள்ளகப்பொறிமுறைகள் இன்மை மற்றும் பாதிக்கப்பட்ட சில சமூகங்களுக்கு எதிராகத் தற்போதும் தொடரும் ஒடுக்குமுறைகள் என்பவற்றின் காரணமாக இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் இரு வருடங்களுக்குத் தொடர்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தக் குற்றங்களை புதியதொரு உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அணுகுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அதுபற்றிய விபரங்கள் எதனையும் அறிவிக்கவில்லை. அதேவேளை மறுபுறம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகப்பொறிமுறைகள் தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னைய அரசாங்கங்களினால் குறைந்தபட்சம் சுமார் 10 ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும், அவை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதற்கோ வழிவகுக்கவில்லை.

அதுமாத்திரமன்றி 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு அரசு உடந்தையாக செயற்பட்டதாக சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆதரித்திருப்பினும், அத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் நம்பத்தகுந்த விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைந்தமையானது மீறல்கள் தொடர்வதற்கு இடமளித்தது.

அத்தோடு மனிதப்புதைகுழிகள் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை. அதேவேளை கடந்த காலங்களில் நிலவிய அரசியல் தன்முனைப்பின்மையானது இதுபற்றிய விசாரணைகள் மழுங்கடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதன் அர்த்தம் எந்தவொரு எலும்புக்கூடும் யாருடையவை எனக் கண்டறியப்படவோ அல்லது ஏனைய ஆதாரங்கள் முறையாகப் பேணப்படவோ இல்லை.

மேலும் நீண்டகால யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிக்காகப் போராடும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தும் வருகின்றனர்.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு 38 வழக்குகளிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 49 வழக்குகளிலும் பொலிஸாரால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/237930

புத்தளம் - மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன்

1 month 3 weeks ago

புத்தளம்-மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன்

05 Feb, 2026 | 05:32 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புத்தளம் -மன்னார் வீதியில் பாரிய அணை ஒன்றை கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் அந்த பாதை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த தவறான தீர்மானத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திவிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

புத்தளம் -மன்னார் வீதி 100 வருடம் பழைமைவாய்ந்த வீதி அதிகாரசபைக்கு சொந்தமானதாகும். நான் அமைச்சராக இருந்தபோது அந்த பாதையை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தேன். என்றாலும் காலப்போக்கில் இந்த பகுதியில் இருக்கும் ஒருசில சிங்கள மக்கள் அந்த பாதையை மூடிவிடுமாறு தெரிவித்து வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கில் பிரதிவாதியாக வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம், விடயத்துக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அந்த பிரதேச அமைச்சர் என்றவகையில் எனது பெயரும் தெரிவிக்கப்பட்டிருந்தது.நாங்கள் எல்லோரும் அந்த வழக்குக்கு முகம்கொடுத்துவந்தாேம்.

மஹிந்த ராஜபக்ஷ் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அந்த பாதை பொது மக்கள் பயன்படுத்திய பாதை அதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அன்று வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம், வீதி அதிகாரசபை இருந்தன. கோட்டாபய ராஜபக்ஷ்வின் காலத்தில் அந்த பாதையில் பயணிக்க முடியாமல் இருந்ததால் அந்த பாதை மூடப்பட்டது. இந்த பாதை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணிக்க 100 கிலோ மீட்டர் குறைவாகும். மன்னாரில் இருந்து புத்தளத்துக்கு வருகின்றபோது 100 கிலோ மீட்டர் குறைவு.

இவ்வாறான நிலையில் இந்த பாதையை மூடிவிடுவதற்கு எந்த ஜனாதிபதிகளின் காலத்திலும் இணக்கம் தெரிவிக்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இருக்கும் வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம் நீதிமன்றத்துக்கு சென்று, வழக்கு தொடுத்த துராேகிகளுடன் இணைந்து, நாங்கள் இந்த வழக்குகளுடன் உடன்படுகிறோம். அதனால் இந்த வழக்கை விடுவியுங்கள் என நீதிமன்றில் சென்று தெரிவித்திருக்கிறது. இது நியாயமான நடவடிக்கையல்ல.

முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இனவாதமில்லாத அரசாங்கம் என்றே நாங்கள் தெரிவித்து வருகிறோம். அப்படிப்பட்ட அரசாங்கம் இந்த பாதையை நிரந்தமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றிருந்தால், அந்த துராேகத்தனத்தை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அநுரகுமார திஸாநாயக்க அன்று மன்னாருக்கு வந்து, தான் ஜனாதிபதியாக தெரிவானால் மன்னார் புத்தளம் பாதையை திறந்துவிடுவதாக தெரிவித்திருந்தார். இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான பாதையல்ல. இந்த நாட்டுக்கான பாதை. விலங்குகளை பாதுகாப்பதாக தெரிவித்து மக்களை கஷ்டப்படுத்துகின்ற ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கக்கூடாது.

நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. எங்களது மண்ணுக்கு செல்வதற்கான பாதையை திறந்து தருமாறே கேட்கிறேம். அரசாங்கத்தில் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இரு்கிறீர்கள். தமிழ், முஸ்லிம் மக்களை நாங்கள் பார்ப்போம் என்று சொல்கிறீர்கள். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களுக்கான வரப்பிரசாதமே இந்த பாதை. அதனால் இந்த பாதைய மூடிவிட எடுத்த முடிவை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/237920

2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

1 month 3 weeks ago

2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

05 Feb, 2026 | 02:53 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2026 ஆம் ஆ ண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலவச கல்வி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அக்கறை கொண்டுள்ளதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் கடந்த காலங்களில் இவ்வாறான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தற்போது மாற்றமடைந்துள்ளதையிட்டு அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பீடத்தை மூடுவதற்கும், கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

முறையான வழிமுறைகள் மற்றும் வளங்கள் இல்லாமலேயே கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இது குறித்து ஆராய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

https://www.virakesari.lk/article/237890

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் - கல்வி அமைச்சர்

1 month 3 weeks ago

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் - கல்வி அமைச்சர்

05 Feb, 2026 | 05:35 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

2025 ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர் என கல்வி மற்றும் பிரதமர் அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவுகளின்படி பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் 'சுரக்ஷா' காப்புறுதி என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக,6-13 தரங்களில் பயிலும் மாணவிகளுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் கொள்வனவு செய்ய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 'அஸ்வெசும' நன்மைகளைப் பெறாத மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காகத் தேவையான தரவுகளைத் திரட்டி வருகின்றது.

2025 ஆண்டுக்கான .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவும் , க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து உரிய கால அட்டவணைப்படி பரீட்சைகளை நடத்த முயற்சித்து வருகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/237927

தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 month 3 weeks ago

தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

05 Feb, 2026 | 02:52 PM

image

நாட்டின் தனியார் பேருந்துத் தொழில்துறையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்த மிகப்பாரிய சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2026 ஜனவரி 17ஆம் திகதியிடப்பட்ட 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயணிகள் சேவை அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள் இதற்கான அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்குகின்றன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இரு தரப்பினரும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் பேருந்து உரிமையாளர்கள் தமது போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை மற்றுமொருவருக்கு சட்டபூர்வமாக கைமாற்ற முடியும் என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில்

1991ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை சட்டபூர்வமாக வேறொருவருக்கு மாற்ற முடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிலவி வந்த சட்டதிட்டங்களின்படி ஒருவருக்கு வழங்கப்பட்ட பேருந்து அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக வேறொருவருக்குப் பெயரிடவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது இருந்தது.

இதனால் பேருந்து உரிமையாளர்கள் இத்தொழிலிலிருந்து விலகும்போதும் பேருந்தை விற்பனை செய்யும்போதும் அந்த அனுமதிப்பத்திரத்தை மாற்ற முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இதன் விளைவாக திரைமறைவில் பல்வேறு சட்டவிரோத முறைகள் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட்டு வந்தன. உண்மையான உரிமையாளர் ஒருவராகவும் தொழிலை நடத்துபவர் வேறொருவராகவும் இருந்தமையால் இத்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதில் பாரிய சவால்கள் காணப்பட்டன.

பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் நாம் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்களது பிரதான கோரிக்கையான அனுமதிப்பத்திர மாற்றத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2026 ஜூன் மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதற்கான சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் உரிய நிபந்தனைகளின் கீழ் எவரும் தமது அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக மற்றுமொருவருக்குப் பெயரிட முடியும்.

இனிவரும் காலங்களில் இத்துறைக்குள் நுழைவதற்கு அரசியல் செல்வாக்குகளோ தனிப்பட்ட அறிமுகங்களோ அல்லது கடிதங்களோ அவசியமில்லை. எவரும் பகிரங்க கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றி இத்தொழிலுக்கு வர முடியும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற ஒரு போக்குவரத்து சேவையை உருவாக்குவதே எமது இலக்காகும்.

குறிப்பாக நவீன தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இளைஞர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இத்துறைக்கு வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த புதிய சட்ட நடைமுறையானது இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன். என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/237889

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்

1 month 3 weeks ago

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஆரம்பக் கட்ட அனுமதி

2023 ஆம் ஆண்டில் 3,882,688 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை, 2024 இல் 3,816,234 ஆகவும், 2025 இல் 3,747,544 ஆகவும் குறைந்துள்ளது.

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் | Fall In First Year Student Admissions Moe

இது 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3.48 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும். பாலின ரீதியாகப் பார்க்கும்போது, மாணவர்களின் விகிதம் 49.5% ஆகவும் மாணவிகளின் விகிதம் 50.5% ஆகவும் அனைத்து ஆண்டுகளிலும் நிலையாகக் காணப்படுகிறது.

முதலாம் தர அனுமதி - ஒரு பெரும் சரிவு பாடசாலைகளின் ஆரம்பக் கட்ட அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

2023 இல் 287,639 ஆக இருந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை, 2025 இல் 266,281 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 7.42 சதவீத பாரிய வீழ்ச்சியாகும்.

குறிப்பாக, மாகாணப் பாடசாலைகளில் முதலாம் தர அனுமதி 260,845 இலிருந்து 239,714 ஆகக் குறைந்துள்ளது.

மாவட்ட ரீதியிலான மாணவர் அனுமதி மாற்றங்கள் அதிக மாணவர் சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது.

https://ibctamil.com/article/fall-in-first-year-student-admissions-moe-1770278171

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்!

1 month 3 weeks ago

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்!

05 Feb, 2026 | 11:13 AM

image

 (ஸ்டெப்னி கொட்பிறி)

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

“இந்திய கலாசார உறவுகளுக்கான சபை”யின் விசேட அழைப்பின் பேரில் டில்வின் சில்வா தலைமையிலான  குழு இன்று வியாழக்கிழமை (5) இந்தியாவின் புதுடில்லி நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்த குழு இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விஜயம் றே்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த குழு, இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவுடன் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகிய தோழர் கலந்துகொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/237855

நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி

1 month 3 weeks ago

நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி

Published By: Vishnu

05 Feb, 2026 | 04:38 AM

image

ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026 புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாகக் கருதி அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளித்தாருந்தால் இவ்வாறான போராட்டங்களே இடம்பெற்றிருக்காது.

ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பரப்புக்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வது, பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பது, வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதென அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரையோகித்துவந்தனர்.

இவ்வாறு தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த காலங்களில் எம்மவர்கள் அகிம்சைவழியில் போராட்டங்களை மேற்கொண்டதுடன், அந்த அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில் எமது இளையோர் ஆயுதங்களை ஏந்திப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு புள்ளிவிபரத்தை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் 222006 ஏக்கர் காணிகளே வனவளத்திணைக்களத்திடம் காணப்பட்டது. ஆனால் தற்போது வனவளத்திணைக்களத்திடம் 432000 ஏக்கருக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வன இலாகாவிடம் மாத்திரமுள்ளன.

குறிப்பாக்தமிழர் தாயகப் பரப்புகளில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, படையினர் உள்ளிட அரச இயந்திரங்களைப் பயன்படுத்தி மிகப்பாரிய அளவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எமக்கு நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. தமிழர்களின் நிலங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால் அந்த நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் எங்கு போவது.

தமிழர்களுக்கு உதவிகளைச்செய்கின்றோமென ஆட்சியாளர்கள் ஒருபுறம் நாடக நடிகர்களைப்போல செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்கின்றனர்.

எமது கடற்பரப்புக்களில் எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாத நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகின்றனர்.

நில அபகரிப்புக்களின்மூலம் எமது தமிழ் மக்கள் சுதந்திரமாக விவசாயத்தை மேற்கொள்ளமுடியாதநிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்பாளர்களுக்குரிய மேச்சல் தரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால் நடைவளர்ப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆட்சியாளர்கள் உரிய கவனஞ்செலுத்துவதில்லை.

இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தவறிவருகின்றனர்.

இவ்வாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் வாழும் எமது தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் ஆட்சியாளர்களால் துன்பப்படுகின்றனர்.

தற்போது தமிழர்தாயகப் பரப்பில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அளவில் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கனவே தமிழர் தாயகப்பரப்பில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறான திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அங்கு திட்டமிட்டு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தியதன்மூலம் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கத்தின்கீழ் தற்போது ஆட்சியாளர் கொண்டுவந்துள்ளனர்.

ஆட்சியாளர்களின் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களின் அடுத்தகட்ட செயற்பாடுகள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை நோக்கி நகர்கின்றன.

எனவே இவ்வாறாக தமிழர்களுக்கு ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்படும்போது நாம் அதற்கெதிராக நீதிக்குரல் எழுப்பாமல் இருக்கமுடியாது.

இவ்வாறு தமிழர்கள்மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்போது, இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழர்களால் எவ்வாறு பங்கேற்கமுடியும்.

ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறாக அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றபோது, தமிழ் மக்கள் அதற்கெதிராக போராடுவதற்காக வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

எனவே ஆட்சியாளர்கள் தமிழர்களை இந்தநாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும்.

ஆட்சியாளர்களால் இவ்வாறு பலவழிகளிலும் தமிழர்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றநிலையில், சிலஅமைச்சர்கள் வேடிக்கையான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்வதாகவும், உதவிகளைச் செய்வதாகவும் பாரிய பொய்களைக் கூறிவருகின்றனர்.

தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் இல்லை. எனவே தமிழ் மக்களுக்குரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளியுங்கள். தமிழர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வைவழங்க முன்வாருங்கள். உரிமைகளை வழங்குங்கள். கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குங்கள். தமிழ் மக்களை இந்தநாட்டில் சுதந்திரமாகவாழவிடுங்கள்.

இந்தநாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லை. ஆட்சியாளர்களால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதாலேயே இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களால் வீதியில் இறங்கி இவ்வாறான மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பில் தமிழ் மக்கள் தமக்குரிய அதிகாரங்கள், உரிமைகளுடன் எப்போது தன்நிறைவுபெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்களோ அன்று தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரநாள் - என்றார்.

https://www.virakesari.lk/article/237840

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

1 month 3 weeks ago

New-Project-15.jpg?resize=750%2C375&ssl=

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க தேவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியானது இன்றைய தினம் (05) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான வசதிகளும், ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, பிரதமர் மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனத்தின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில் புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.

Image

Image

Image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தின் அரவல்லி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேவ்னி மோரி தொல்பொருள் தளத்தில் உள்ள புத்த மடாலய வளாகத்தில் உள்ள ஸ்தூபியின் அருகே 1960 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த புனிதச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த இடத்தில் இரண்டு புனிதச் சின்ன கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவற்றில் ஒன்றில் இந்த புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைத்தன. 

அங்கு காணப்பட்ட கலசத்தில் உள்ள கல்வெட்டு, “புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடம்” என்று எழுதப்பட்டிருந்தமை, இவற்றின் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் வலுவான சான்றாகும்.

Image

இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இலங்கை மக்கள் இந்த புனிதச் சின்னங்களை தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புனிதச் சின்னங்கள் நேற்று (04) பிற்பகல் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், அங்கு சிறப்பு மத வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், புனிதச் சின்னங்கள் ஹுணுபிட்டி கங்காராம விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னர், மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில், புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசன நிகழ்வை ஆரம்பித்து வைத்து, புனித சின்னங்களுக்கு ஜனாதிபதி முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.

அதன்படி, இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளதுடன், இதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய-இலங்கை நட்பை வலுப்படுத்தும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில், குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்விரத்திற்கு ஜனாதிபதி விசேட நினைவுப் பரிசையும் இதன்போது வழங்கினார்.

ஹுணுபிட்டி, கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர்,  சிறப்பு நினைவுப் பரிசொன்றையும் ஜனாதிபதிக்கு கையளித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி புனித சின்னங்களை இந்நாட்டிற்கு தரிசனத்திற்காக கொண்டு வருதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையே பரிமாற்றப்பட்டது.

சியம் மகா நிகாயவின் மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண. திம்புல்கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் Shartse Khensur Rinpoche Jangchup Choeden தேரர், இந்தியாவிலிருந்து வருகை தந்த மதிப்பிற்குரிய மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, உட்பட இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுகளின் செயலாளர்கள், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2026/1463278

Checked
Fri, 04/03/2026 - 18:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr